pm logo

nAlAyira divya pirapantam -part IV (2791-3342)
nammAlvAr's tiruvAimozi
(in Tamil Script, unicode/utf-8 format)

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
(பாடல்கள் 2791-3342)
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


Acknowledgements:
Our sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for the preparation of this work for publication.
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and then on TSCII in 1999.
The work is now presented in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
Feel free to send the corrections by email to the webmaster "pmadurai@gmail.com".

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 2791-3342)
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

திருவாய்மொழித் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

வெண்பாக்கள்

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
---------------

ஸ்ரீமதே ராமாநுஜாய நம
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி.
திருவாய் மொழி முதற் பத்து (2791-2900)


2791
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1

2792
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2

2793
இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3

2794
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

2795
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

2796
நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6

2797
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7

2798
சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8

2799
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9

2800
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10

2801
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11

2802
வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. (2) 1.2.1

2803
மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. 1.2.2

2804
நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. 1.2.3

2805
இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. 1.2.4

2806
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

2807
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

2808
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7

2809
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

2810
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

2811
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

2812
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11

2813
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1

2814
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2

2815
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3

2816
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4

2817
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5

2818
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6

2819
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7

2820
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8

2821
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9

2822
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
பு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது ,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10

2823
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11

2824
அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? (2) 1.4.1

2825
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? 1.4.2

2826
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3

2827
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? 1.4.4

2828
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5

2829
அருளாத நீரருளி யவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? 1.4.6

2830
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? 1.4.7

2831
நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்
நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8

2832
நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9

2833
உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10

2834
அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11

2835
வளவே ழுலகின் முதலாய்
      வானோ ரிறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
      கள்வா. என்பன், பின்னையும்,
தளவேழ் முறுவல் பின்னைக்காய்
      வல்லா னாயர் தலைவனாய்,
இளவே றேழும் தழுவிய
      எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1

2836
நினைந்து நைந்துள் கரைந்துருகி,
      இமையோர் பலரும் முனிவரும்,
புனைந்த கண்ணி நீர்சாந்தம்
      புகையோ டேந்தி வணங்கினால்,
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
      வித்தாய், முதலில் சிதையாமே,
மனஞ்செய் ஞானத் துன்பெருமை
      மாசூ ணாதோ மாயோனே. 1.5.2

2837
மாயோ னிகளாய் நடைகற்ற
      வானோர் பலரும் முனிவரும்,
நீயோ னிகளைப் படை என்று
      நிறைநான் முகனைப் படைத்தவன்
சேயோ னெல்லா அறிவுக்கும்,
      திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
      தாயோன் தானோ ருருவனே. 1.5.3

2838
தானோ ருருவே தனிவித்தாய்த்
      தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
      மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
      தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
      வைகுந் தன்எம் பெருமானே. 1.5.4

2839
மானேய் நோக்கி மடவாளை
      மார்வில் கொண்டாய். மாதவா.
கூனே சிதைய வுண்டைவில்
      நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா.
வானார் சோதி மணிவண்ணா.
      மதுசூ தா.நீ யருளாய் உ ன்
தேனே மலரும் திருப்பாதம்
      சேரு மாறு வினையேனே. 1.5.5

2840
வினையேன் வினைதீர் மருந்தானாய்.
      விண்ணோர் தலைவா. கேசவா.
மனைசே ராயர் குலமுதலே.
      மாமா யன்னே. மாதவா.
சினையேய் தழைய மராமரங்கள்
      ஏழும் எய்தாய். சிரீதரா.
இனையா யினைய பெயரினாய்.
      என்று நைவன் அடியேனே. 1.5.6

2841
அடியேன் சிறிய ஞானத்தன்,
      அறித லார்க்கு மரியானை
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி
      புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை யடியாரைச்
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்,
      இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7

2842
உண்டா யுலகேழ் முன்னமே,
      உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
      உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
      மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
      நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8

2843
மாயோம் தீய அலவலைப்
      பெருமா வஞ்சப் பேய்வீய
தூய குழவி யாய்விடப்பால்
      அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன்
      மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மா னென்னம்மான்
      அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9

2844
சார்ந்த இருவல் வினைகளும்
      சரித்து மாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத்
      திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச் சுடராகி
      அகலம் கீழ்மேல் அளவிறந்து,
நேர்ந்த வுருவாய் அருவாகும்
      இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10

2845
மாலே. மாயப் பெருமானே.
      மாமா யனே. என்றென்று
மாலே யேறி மாலருளால்
      மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும்
      வல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11

2846
பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்.
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1

2847
மதுவார் தண்ணந் துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2

2848
ஈடு மெடுப்புமி லீசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3

2849
அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4

2850
கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5

2851
அமுதம் அமரகட் கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6

2852
நீள்கடல் சூழிலங் கைக்கோன்
தோள்கள் தலைதுணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7

2853
கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8

2854
தரும அரும்பய னாய
திருமக ளார்தனிக் கேள்வர்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே. 1.6.9

2855
கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே. 1.6.10

2856
மாதவன் பால்சட கோபன்
தீதவ மின்றி யுரைத்த
ஏதமி லாயிரத் திப்பத்து
ஓதவல் லார்பிற வாரே. 1.6.11

2857
பிறவித்துயரற ஞானத்துள்நின்று,
துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை யாழிப் படையந fதணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே. 1.7.1

2858
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2

2859
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே. 1.7.3

2860
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. 1.7.4

2861
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள்,
விடவேசெய்து விழிக்கும்பிரானையே. 1.7.5

2862
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
மராமரமெய்த மாயவன், என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. 1.7.6

2863
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7

2864
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8

2865
அமரர fமுழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ. 1.7.9

2866
அகலில் அகலும் அணுகில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10

2867
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11

2868
ஓடும்புள்ளேரி, சூடும fதண்டுழாய்,
நீடு நின்றவை, ஆடும் அம்மானே. 1.8.1

2869
அம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான,
வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. 1.8.2

2870
கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,
தண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. 1.8.3

2871
வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4

2872
வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான்,
பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. 1.8.5

2873
கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,
புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6

2874
கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. 1.8.7

2875
ஆனா னானாயன், மீனோ டேனமும்,
தானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8

2876
சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,
எங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9

2877
நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான்,
ஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10

2878
நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,
நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11

2879
இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்,
அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,
அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்,
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1

2880
சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2

2881
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன்,
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,
ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே. 1.9.3

2882
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,
கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4

2883
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5

2884
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே,
காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,
சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,
தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6

2885
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. 1.9.7

2886
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,
காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே. 1.9.8

2887
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9

2888
நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10

2889
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11

2890
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1

2891
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2

2892
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3

2893
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

2894
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5

2895
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6

2896
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7

2897
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8

2898
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9

2899
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10

2900
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்
பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன்,
தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11
-------------

திருவாய் மொழி இரண்டாம் பத்து (2901- 3012)


2901
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1

2902
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2

2903
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3

2904
கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4

2905
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும fமதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5

2906
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6

2907
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7

2908
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8

2909
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9

2910
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10

2911
சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்,
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்,
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11

2912
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1

2913
ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2

2914
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3

2915
தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே. 2.2.4

2916
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5

2917
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6

2918
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7

2919
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8

2920
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9

2921
கள்வா எம்மையு மேழுலகும், நின்
னுள்ளேதோற்றிய இறைவா. என்று,
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10

2922
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11

2923
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1

2924
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2

2925
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3

2926
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4

2927
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5

2928
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6

2929
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7

2930
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8

2931
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9

2932
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10

2933
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11

2934
ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1

2935
வாணுதலிம்மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள், விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்
காண நீரிரக்கமிலீரே. 2.4.2

2936
இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3

2937
இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4

2938
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே. 2.4.5

2939
தகவுடையவனே யென்னும், பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும், என
தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6

2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7

2941
வஞ்சனே, என்னும் கைதொழும், தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8

2942
பட்டபோதெழு போதறியாள், விரை
மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்
வட்டவாய்நுதி நேமியீர், நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9

2943
ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10

2944
வாட்டமில்புகழ் வாமனனை, இசை
கூட்டிவண்சடகோபன் சொல், அமை
பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி
குட்டலாகு மந்தாமமே. 2.4.11

2945
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1

2946
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2

2947
என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3

2948
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4

2949
ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5

2950
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6

2951
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 2.5.7

2952
பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8

2953
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9

2954
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10

2955
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11

2956
வைகுந்தாமணிவண்ணனே, என்பொல்லாத்திருக்குறளா, என்னுள்மன்னி,
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1

2957
சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 2.6.2

2958
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 2.6.3

2959
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,
தெள்கல்தந்த எந்தாய் உ<ன்னையெங்ஙனம்விடுகேன்,
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4

2960
உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,
சிந்தைசெய்தவெந்தாய் உ<ன்னைச்சிந்தைசெய்துசெய்தே. 2.6.5

2961
உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?. 2.6.6

2962
முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்,உகந்துவந்
தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி,
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்,
விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 2.6.7

2963
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 2.6.8

2964
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய், மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா,
கொந்தார்தண்ணந்துழாயினாய், அமுதே,உன்னையென்னுள்ளேகுழைத்தவெf
மைந்தா, வானேறே, இனியெங்குப்போகின்றதே? 2.6.9

2965
போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உ<ன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10

2966
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங்
கண்ணனை, புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 2.6.11


2967
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1

2968
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2

2969
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3

2970
கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி, என்னைக்கொண் டென்
பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும்,
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4

2971
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5

2972
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6

2973
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று, உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7

2974
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க, என்னைத்
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8

2975
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து,
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9

2976
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,
தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10

2977
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,
எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11

2978
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12

2979
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13

2980
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும்தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1

2981
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த,
பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2

2982
புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 2.8.3

2983
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4

2984
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5

2985
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்,
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு,
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 2.8.6

2986
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7

2987
காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு,
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா,
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்,
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8

2988
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9

2989
சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா,
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்,
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற,
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10

2990
கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை,
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்,
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்,
விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11

2991
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1

2992
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்,
எய்தாநின்கழல் யானெய்த, ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2

2993
செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. 2.9.3

2994
எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என்
மனக்கேவந் திடைவீடின்றிமன்னி,
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே,
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4

2995
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்,
இறப்பிலெய்துகவெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5

2996
மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6

2997
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்,
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய், எனக்கென்றுமெக்காலே. 2.9.7

2998
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே. 2.9.8

2999
யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9

3000
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை,
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை,
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10

3001
விடலில்சக்கரத் தண்ணலை, மேவல்
விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல்,
கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்,
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11

3002
கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,
வளரொளிமாயோன் மருவியகோயில்,
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வதுசதிரே. 2.10.1

3003
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,
பதியதுவேத்தி யெழுவதுபயனே. 2.10.2

3004
பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே,
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்,
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை,
அயன்மலையடைவததுகருமமே. 2.10.3

3005
கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே,
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்,
வருமழைதவழும் மாலிருஞ்சோலை,
திருமலையதுவே யடைவதுதிறமே. 2.10.4

3006
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது,
அறமுயல் ஆழிப் படையவன்கோயில்,
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை,
புறமலைசாரப் போவதுகிறியே. 2.10.5

3007
கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே,
உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்,
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை,
நெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6

3008
நலமெனநினைமின் நரகழுந்தாதே,
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்,
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை,
வலமுறையெய்தி மருவுதல்வலமே. 2.10.7

3009
வலம்செய்துவைகல் வலங்கழியாதே,
வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை,
வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 2.10.8

3010
வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது,
அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்,
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை,
தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 2.10.9

3011
சூதென்றுகளவும் சூதும்செய்யாதே,
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்,
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை,
போதவிழ்மலையே புகுவதுபொருளே. 2.10.10

3012
பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்,
மருளில்வண்குருகூர் வண்சடகோபன்,
தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து,
அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 2.10.11
--------------
திருவாய் மொழி - மூன்றாம் பத்து (3013 -3122)


3013
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே. (2) 3.1.1.

3014
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.

3015
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.

3016
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின்
மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? 3.1.4.

3017
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? 3.1.5.

3018
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6.

3019
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? 3.1.7.

3020
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? 3.1.8.

3021
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9.

3022
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10.

3023
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11

3024
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே? (2) 3.2.1.

3025
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ? 3.2.2.

3026
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.

3027
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. 3.2.4.

3028
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே? 3.2.5.

3029
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே? 3.2.6.

3030
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே.
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே? 3.2.7.

3031
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே? 3.2.8.

3032
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே? 3.2.9.

3033
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10.

3034
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3.2.11

3035
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1

3036
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2

3037
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3

3038
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4

3039
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5

3040
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.3.6

3041
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7

3042
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8

3043
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9

3044
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10

3045
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. (2) 3.3.11

3046
புகழுநல் ஒருவன் என்கோ.
      பொருவில்சீர்ப் பூமி யென்கோ,
திகழும்தண் பரவை என்கோ.
      தீயென்கோ. வாயு என்கோ,
நிகழும்ஆ காச மென்கோ.
      நீள்சுடர் இரண்டும் என்கோ,
இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
      கண்ணனைக் கூவுமாறே. (2) 3.4.1

3047
கூவுமா றறிய மாட்டேன்
      குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ.
      விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ.
      ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
      பங்கயக் கண்ண னையே. 3.4.2

3048
பங்கையக் கண்ணன் என்கோ.
      பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
      அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
      திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
      சாதிமா ணிக்கத் தையே. 3.4.3

3049
சாதிமா ணிக்கம் என்கோ.
      சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
      தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
      ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
      அச்சுதன் அமல னையே. 3.4.4

3050
அச்சுதன் அமலன் என்கோ,
      அடியவர் வினைகெடுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ.
      நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ.
      அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.
      கனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5

3051
பாலென்கோ. நான்கு வேதப்
      பயனென்கோ, சமய நீதி
நூலென்கோ. நுடங்கு கேள்வி
      இசையென்கோ. இவற்றுள் நல்ல
மேலென்கோ, வினையின் மிக்க
      பயனென்கோ, கண்ணன் என்கோ.
மாலென்கோ. மாயன் என்கோ
      வானவர் ஆதி யையே. 3.4.6

3052
வானவர் ஆதி என்கோ.
      வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ.
      வானவர் முற்றும் என்கோ,
ஊனமில் செல்வம் என்கோ.
      ஊனமில் சுவர்க்கம் என்கோ,
ஊனமில் மோக்கம் என்கோ.
      ஒளிமணி வண்ண னையே. 3.4.7

3053
ஒளிமணி வண்ணன் என்கோ.
      ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ.
      நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம்
      படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான்
      கண்ணனை மாய னையே. 3.4.8

3054
கண்ணனை மாயன் றன்னைக்
      கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை
      அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை
      ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன்,
      யாவையும் யவரும் தானே. 3.4.9

3055
யாவையும் யவரும் தானாய்
      அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புலனைந் துக்கும்
      சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
      அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில்
      அவனையும் கூட லாமே. 3.4.10

3056
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11

3057
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
      முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த
      கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி
      எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர்
      தண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1

3058
தண்கடல் வட்டத்துள் ளாரைத்
      தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத்
      தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
      பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார்
      வல்வினை மோத மலைந்தே. 3.5.2

3059
மலையை யெடுத்துக்கல் மாரி
      காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச்
      சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத்
      தடுகுட்ட மாய்ப்பற வாதார்,
அலைகொள் நரகத் தழுந்திக்
      கிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3

3060
வம்பவிழ் கோதை பொருட்டா
      மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன்
      சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக்
      கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே
      சாது சனங்க ளிடையே? 3.5.4

3061
சாது சனத்தை நலியும்
      கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை
      அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வனைப் பாடி
      வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஓதி யுணர்ந்தவர் முன்னா
      என்சவிப் பார்ம னிசரே? 3.5.5

3062
மனிசரும் மற்றும் முற்றுமாய்
      மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத்
      தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக்
      கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
      முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6

3063
நீர்மை நூற்றுவர் வீய
      ஐவர்க் கருள்செய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த
      பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி
      நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார்
      உத்தமர்க்கட் கென்செய் வாரே? 3.5.7

3064
வார்ப்புனல் அந்தண் ணருவி
      வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்
      பித்தரென் றேபிறர் கூற,
ஊர்ப்பல புக்கும் புகாதும்
      உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
      அமரர் தொழப்படு வாரே. 3.5.8

3065
அமரர் தொழப்படு வானை
      அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு
      புணர்ந்தவன் தன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள்
      ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி
      அலற்றுவ தேகரு மமே. 3.5.9

3066
கருமமும் கரும பலனும்
      ஆகிய காரணன் தன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
      மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
      உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
      பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10

3067
தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,
நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11

3068
செய்ய தாமரைக் கண்ண னாயுல
      கேழு முண்ட அவன்கண்டீர்,
வையம் வானம் மனிசர் தெய்வம்
      மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்
      பட்டி வைபடைத் தான்பின்னும்,
மொய்கொள் சோதியொ டாயி னானொரு
      மூவ ராகிய மூர்த்தியே. (2) 3.6.1

3069
மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
      மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வானைத்
      தடங்க டல்கிடந் தான்தன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை
      எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங்
      கண்ண னைப்பர வுமினோ. 3.6.2

3070
பரவி வானவ ரேத்த நின்ற
      பரம னைப்பரஞ் சோதியை,
குரவை கோத்த குழக னைமணி
      வண்ண னைக்குடக் கூத்தனை,
அரவ மேறி யலைக டலம
      ருமது யில்கொண்ட அண்ணலை,
இரவும் நன்பக லும்வி டாதென்றும்
      ஏத்து தல்மனம் வைம்மினோ. 3.6.3

3071
வைம்மின் நும்மனத் தென்று யானுரைக்
      கின்ற மாயவன் சீர்மையை
எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது
      நிற்க நாfடொறும், வானவர்
தம்மை யாளும் அவனும் நான்முக
      னும்ச டைமுடி அண்ணலும்,
செம்மை யாலவன் பாத பங்கயம்
      சிந்தித் தேத்தி திரிவரே. 3.6.4

3072
திரியும் கற்றொ டகல்வி சும்பு
      திணிந்த மண்கிடந் தகடல்,
எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்,
      மற்றும் மற்றும் முற்றுமாய்,
கரிய மேனியன் செய்ய தாமரைக்
      கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,
சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்
      சுடர்மு டியண்ணல் தோற்றமே. 3.6.5

3073
தோற்றக் கேடவை யில்ல வனுடை
      யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக்
      கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல்
      ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை
      யானி லேனெழு மைக்குமே. 3.6.6

3074
எழுமைக் குமென தாவிக் கின்னமு
      தத்தி னைஎன தாருயிர்,
கெழுமி யகதிர்ச் சோதி யைமணி
      வண்ண னைக்குடக் கூத்தனை,
விழுமி யவம ரர்மு நிவர்வி
      ழுங்கும் கன்னல் கனியினை,
தொழுமின் தூயம னத்த ராயிறை
      யும்நில் லாதுய ரங்களே. 3.6.7

3075
துயர மேதரு துன்ப இன்ப
      வினைக ளாய்அ வை அல்லனாய்,
உயர நின்றதோர் சோதி யாயுல
      கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,
அயர வாங்கு நமன்த மர்க்கரு
      நஞ்சி னையச்சு தன்தன்னை,
தயர தற்கும கனறன் னையன்றி
      மற்றி லேன்தஞ்ச மாகவே. 3.6.8

3076
தஞ்ச மாகிய தந்தை தாயொடு
      தானு மாயவை அல்லனாய்,
எஞ்ச லிலம ரர்க்கு லமுதல்
      மூவர் தம்முள்ளு மாதியை,
அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்.
      அவனி வனென்று கூழேன்மின்,
நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்
      ஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9

3077
கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு
      மாணிக் கமென தாருயிர்
படவ ரவின ணைக்கி டந்த
      பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,
அடவ ரும்படை மங்க ஐவர்க்கட்
      காகி வெஞ்சமத்து, அன்றுதேர்
கடவி யபெரு மான்க னைகழல்
      காண்ப தென்றுகொல் கண்களே? 3.6.10

3078
கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்
      துக்கு நன்றுமெ ளியனாய்,
மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்
      செய்யும் வானவ ரீசனை,
பண்கொள் சோலை வழுதி நாடன்
      குருகைக் கோன்சட கோபன்சொல்,
பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த
      ராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11

3079
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. (2) 3.7.1

3080
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 3.7.2

3081
நாதனை ஞாலமும் வானமும்
      ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத்
      தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரைப்
      பணியும் அவர்க்கண்டீர்,
ஓதும் பிறப்பிடை தோறெம்மை
      யாளுடை யார்களே. 3.7.3

3082
உடையார்ந்த வாடையன் கண்டிகை
      யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி
      யன்மற்றும் பல்கலன்,
நடையா வுடைத்திரு நாரணன்
      தொண்டர்தொண் டர்க்கண்டீர்,
இடையார் பிறப்பிடை தோறெமக்
      கெம்பெரு மக்களே. 3.7.4

3083
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
      மானை, அமரர்கட்
கருமை யொழியஅ ன் றாரமு
      தூட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப்
      பிதற்றும் அவர்க்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை
      யளிக்கும் பிராக்களே. 3.7.5

3084
அளிக்கும் பரமனை கண்ணனை
      ஆழிப் பிரான்தன்னை,
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி
      வண்ணனெம் மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
      கொள்ளும் அவர்க்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்
      மாந்தரங் காப்பரே. 3.7.6

3085
சன்மசன் மாந்தரங் காத்தடி
      யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பொறுத்தித்தன் தாளிணைக்
      கீழ்க்கொள்ளும் அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப்
      பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்
      கொள்கின்ற நம்பரே. 3.7.7

3086
நம்பனை ஞாலம் படைத்தவ
      னைதிரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
      உணர்வரி யான்தன்னைக்,
கும்பி நரகர்கள் ஏத்துவ
      ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம்
      தொழுகுலம் தாங்களே. 3.7.8

3087
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
      கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
      டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
      மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
      யாரெம் மடிகளே. 3.7.9

3088
அடியார்ந்த வையமுண் டாலிலை
      யன்ன சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி
      யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தமடி
      யார்அ டி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடி
      யாரடி யோங்களே. 3.7.10

3089
அடியோங்கு நூற்றவர் வீயஅ ன்
      றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட
      கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை
      பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய்
      யாமை முடியுமே. (2) 3.7.11

3090
முடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர்
கொடியானே, கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில்
நெடியானே., என்று கிடக்குமென் நெஞ்சமே. (2) 3.8.1

3091
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய
வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே. 3.8.2

3092
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே. 3.8.3

3093
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,
பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. 3.8.4

3094
கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 3.8.5

3095
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே. 3.8.6

3096
ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை,
தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய்,
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே. 3.8.7

3097
கோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற
சீலமே, சென்றுசொல் லாதன முன்நிலாம்
காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே? 3.8.8

3098
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே? 3.8.9

3099
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. 3.8.10

3100
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11

3101
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1

3102
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே? 3.9.2

3103
ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 3.9.3

3104
என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 3.9.4

3105
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 3.9.5

3106
வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6

3107
சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓ ராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்,
மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 3.9.7

3108
வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே? 3.9.8

3109
வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 3.9.9

3110
நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே? 3.9.10

3111
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 3.9.11

3112
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
      சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு
      கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை
      மாளப் படைபொருத,
நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற
      நானோர் குறைவிலனே. (2) 3.10.1

3113
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்
      கோலச்செந் தாமரைக்கண்,
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த
      ஒளிமணி வண்ணன் கண்ணன்,
கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி
      அசுரரைக் காய்ந்தவம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
      யானொரு முட்டிலனே. 3.10.2

3114
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன்
      மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
      கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை
      வணங்கி அவன்திறத்துப்
பட்டபின் னை,இறை யாகிலும் யானென்
      மனத்துப் பரிவிலனே. 3.10.3

3115
பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று
      படையொடும் வந்தெதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
      அங்கியும் போர்தொலைய,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
      ஆயனைப் பொற்சக்கரத்
தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை
      யேனும் இடரிலனே. 3.10.4

3116
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்
      லாவுல கும்கழிய,
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன்
      ஏறத்திண் தேர்க்கடவி,
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
      வைதிகன் பிள்ளைகளை,
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
      ஒன்றும் துயரிலனே. 3.10.5

3117
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி
      நின்ற வண்ணம் நிற்கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
      தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்
      புக வுய்க்குமம்மான்,
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
      யானோர்து ன்பமிலனே. 3.10.6

3118
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
      யாயுல கங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல்
      வான் சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல
      மாய மயக்குகளால்,
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
      றேதுமல் லலிலனே. 3.10.7

3119
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்
      அழகமர் சூழொளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
      ஆகியும் நிற்குமம்மான்,
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல்
      லாக்கரு மங்களும்செய்,
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
      யானோர்துக் கமிலனே. 3.10.8

3120
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி
      துழாயலங் கல்பெருமான்,
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
      வேண்டும் உருவுகொண்டு,
நக்கபி ரானோ டயன்முத லாகஎல்
      லாரும் எவையும்,தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்
      றொன்றும் தளர்விலனே. 3.10.9

3121
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த
      தனிமுதல் ஞானமொன்றாய்,
அளவுடை யைம்புலன் களறி யாவகை
      யாலரு வாகிநிற்கும்,
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்
      ஐந்தை யிருசுடரை,
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
      யானென்றும் கேடிலனே. 3.10.10

3122
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு
      கூர்ச்சட கோபன் சொன்ன,
பாடலோ ராயிரத் துளிவை பத்தும்
      பயிற்றவல் லார்கட்கு,அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
      நலனிடை யூர்தி பண்ணி,
வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்
      தருமொரு நாயகமே. (2) 3.10.11
---------------

திருவாய் மொழி நான்காம் பத்து (3123 -3232 )


3123
ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ. 4.1.1

3124
உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. 4.1.2

3125
அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. 4.1.3

3126
நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. 4.1.4

3127
பணிமின் திருவருள் என்னும்அஞ்சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. 4.1.5

3128
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. 4.1.6

3129
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. 4.1.7

3130
குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. 4.1.8

3131
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 4.1.9

3132
குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே. 4.1.10

3133
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. (2) 4.1.11

3134
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே. (2) 4.2.1

3135
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே. 4.2.2

3136
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே. 4.2.3

3137
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே. 4.2.4

3138
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க்
கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 4.2.5

3139
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே. 4.2.6

3140
மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்.என் மடக்கொம்பே. 4.2.7

3141
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 4.2.8

3142
நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? 4.2.9

3143
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. 4.2.10

3144
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.(2) 4.2.11

3145
கோவை வாயாள் பொருட்டேற்றின்
      எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்.
      குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப்
      போதால் வணங்கே னேலும்,நின்
பூவை வீயாம் மேனிக்குப்
      பூசும் சாந்தென் னெஞ்சமே. (2) 4.3.1

3146
பூசும் சாந்தென் னெஞ்சமே
      புனையும் கண்ணி எனதுடைய,
வாச கம்செய் மாலையே
      வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும்
      என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த
      எந்தை யேக மூர்த்திக்கே. 4.3.2

3147
ஏக மூர்த்தி இருமூர்த்தி
      மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய்
      இரண்டு சுடராய் அருவாகி,
நாகம் ஏறி நடுக்கடலுள்
      துயின்ற நாரா யணனே,உன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி
      ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3

3148
மாய்த்தல் எண்ணி வாய்முலை
      தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த, ஆய மாயனே.
      வாம னனே மாதவா,
பூத்தண் மாலை கொண்டுன்னைப்
      போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்
      புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4

3149
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. 4.3.5

3150
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று,
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6

3151
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,
குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. 4.3.7

3152
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? 4.3.8

3153
உரைக்க வல்லேன் அல்லேனுன்
      உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
      காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே.
      பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
      ஏத்த யானும் ஏத்தினேன். 4.3.9

3154
யானும் ஏத்தி ஏழுலகும்
      முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை
      ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும்
      அமுதுமாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே
      ஏத்தி னேன்யா னுய்வானே. 4.3.10

3155
உய்வு பாயம் மற்றின்மை
      தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழனத்
      தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து
      விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2) 4.3.11

3156
மண்ணை யிருந்து துழாவி
      வாமனன் மண்ணிது என்னும்,
விண்ணைத் தொழுதவன் மேவு
      வைகுந்த மென்றுகை காட்டும்,
கண்ணையுள் நீர்மல்க நின்று
      கடல்வண்ணன் என்னும் அன்னே.என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்
      கென்செய்கேன் பெய்வளை யீரே (2) 4.4.1

3157
பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
      பிரான்கிடக் கும்கடல் என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்
      சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று
      நாரணன் என்னும்அ ன் னே,என்
தெய்வ வுருவில் சிறுமான்
      செய்கின்ற தொன்றறி யேனே. 4.4.2

3158
அறியும்செந் தீயைத் தழுவி
      அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி
      என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும்
      வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
      செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே. 4.4.3

3159
ஒன்றிய திங்களைக் காட்டி
      ஒளிமணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
      நெடுமாலே. வா என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில்
      நாரணன் வந்தான் என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார்
      என்னுடைக் கோமளத் தையே. 4.4.4

3160
கோமள வான்கன்றைப் புல்கிக்
      கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போமிள நாகத்தின் பின்போய்
      அவன்கிடக் கையீ தென்னும்,
ஆமள வொன்றும் அறியேன்
      அருவினை யாட்டியேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன்
      மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5

3161
கூத்தர் குடமெடுத் தாடில்
      கோவிந்த னாம் எனா ஓடும்,
வாய்த்த குழலோசை கேட்கில்
      மாயவன் என்றுமை யாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
      அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்
      பெண்கொடி யேறிய பித்தே. 4.4.6

3162
ஏறிய பித்தினோ டெல்லா
      வுலகும்கண் ணன்படைப் பென்னும்
நீறுசெவ் வேயிடக் காணில்
      நெடுமால் அடியார் என் றோடும்,
நாறு துழாய்மலர் காணில்
      நாரணன் கண்ணியீ தென்னும்,
தேறியும் தேறாது மாயோன்
      திறத்தன ளேயித் திருவே. 4.4.7

3163
திருவுடை மன்னரைக் காணில்
      திருமாலைக் கண்டேனே என்னும்,
உருவுடை வண்ணங்கள் காணில்
      உலகளந் தான் என்று துள்ளும்,
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
      கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்f
      கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8

3164
விரும்பிப் பகைவரைக் காணில்
      வியலிடம் உண்டானே. என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில்
      கண்ணன் என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில்
      பிரானுளன் என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
      அலற்றி அயர்ப்பிக்கின் றானே. 4.4.9

3165
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்
      அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
      வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும் கண் ணா. என்று பேசும்,
      பெருமானே. வா. என்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக்
      கென்செய்கேன் வல்வினை யேனே. 4.4.10

3166
வல்வினை தீர்க்கும் கண்ணனை
      வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல்
      ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள்
      நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும்
      தொழுதெழ வீற்றிருப் பாரே. (2) 4.4.11

3167
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,
போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே? (2) 4.5.1

3168
மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,
செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,
வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. 4.5.2

3169
வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 4.5.3

3170
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. 4.5.4

3171
ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்
ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,
மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. 4.5.5

3172
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே? 4.5.6

3173
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? 4.5.7

3174
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே? 4.5.8

3175
வானத்தும் வானத்துள் ளும்பரும்
      மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி
      ராதுநின் றான்தன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக்
      குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற்
      கினிமா றுண்டோ ? 4.5.9

3176
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
      இடந்தும் கிடந்தும்நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற்
      றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே
      யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன்
      அடியார்க் கின்பமாரியே. 4.5.10

3177
மாரி மாறாத தண்ணம்மலை
      வேங்கடத் தண்ணலை,
வாரி வாறாத பைம்பூம்
      பொழில்சூழ் குருகூர்நகர்,
காரி மாறன் சடகோபன்
      சொல்லாயிரத் திப்பத்தால்,
வேரி மாறாத பூமே
      லிருப்பாள் வினைதீர்க்குமே. (2) 4.5.11

3178
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்
      நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்
      னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை
      வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை
      துழாய்த்திசைக் கின்றதே. 4.6.1

3179
திசைக்கின்ற தேயிவள் நோயிது
      மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும்
      இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர
      மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில்
      பெறுமிது காண்மினே. 4.6.2

3180
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு
      விச்சிசொற் கொண்டு,நீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும்
      இறைச்சியும் தூவேல்மின்,
மதுவார் துழாய்முடி மாயப்
      பிரான்கழல் வாழ்த்தினால்,
அதுவே யிவளுற்ற நோய்க்கும்
      அருமருந் தாகுமே. 4.6.3

3181
மருந்தாகும் என்றங்கோர் மாய
      வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்
      களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும்
      விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில்
      இவளைப் பெறுதிரே. 4.6.4

3182
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,
கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,
தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. 4.6.5

3183
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. 4.6.6

3184
அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. 4.6.7

3185
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 4.6.8

3186
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 4.6.9

3187
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. 4.6.10

3188
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,
தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. 4.6.11

3189
சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,
ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,
காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. (2) 4.7.1

3190
கொள்ள மாளா இன்ப
      வெள்ளம் கொதில தந்திடும்,என்
வள்ள லேயோ. வையங் கொண்ட
      வாமனா வோ. என்றென்று,
நள்ளி ராவும் நண்பகலும்
      நானிருந் தோலமிட்டால்,
கள்ள மாயா. உன்னை
      யென்கண் காணவந் தீயாயே. 4.7.2

3191
ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. 4.7.3

3192
காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,
ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,
நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,
பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே? 4.7.4

3193
அப்ப னே.அட லாழியானே,
      ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னே,உன் தோள்கள்
      நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,
எப்பொ ழுதும் கண்ண
      நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,
இப்போ ழுதே வந்தி
      டாயென் றேழையேன் நோக்குவனே. 4.7.5

3194
நோக்கி நோக்கி உன்னைக்
      காண்பான் யானென தாவியுள்ளே,
நாக்கு நீள்வன் ஞான
      மில்லை நாடோ று மென்னுடைய,
ஆக்கை யுள்ளூ மாவி
      யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,
நீக்க மின்றி யெங்கும்
      நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. 4.7.6

3195
அறிந்த றிந்து தேறித்
      தேறி யானென தாவியுள்ளே,
நிறைந்த ஞான மூர்த்தி
      யாயை நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றிடறும்
      பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி
      யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே. 4.7.7

3196
கண்டு கொண்டென் கைக ளார
      நின்திருப் பாதங்கள்மேல்,
எண்டி சையு முள்ள
      பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,
தொண்ட ரோங்கள் பாடி
      யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,
வண்டு ழாயின் கண்ணி
      வேந்தே. வந்திட கில்லாயே. 4.7.8

3197
இடகி லேனோன் றட்ட
      கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந்
      தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல்
      கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக்
      காண்பன் சக்கரத் தண்ணலையே? 4.7.9

3198
சக்க ரத்தண் ணலேயென்று
      தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற
      லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி
      யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க
      ளாலே கண்டு தழுவுவனே. 4.7.10

3199
தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,
குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்
வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,
தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. (2) 4.7.11

3200
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. (2) 4.8.1

3201
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 4.8.2

3202
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 4.8.3

3203
நிறையினாற் குறைவில்லா
      நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான்
      பொருவிடைஏழ் அடர்த்துகந்த,
கறையினார் துவருடுக்கை
      கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத
      தளிர்நிறத்தால் குறைவிலமே. 4.8.4

3204
தளிர்நிறத்தால் குறைவில்லாத்
      தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக்
      கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல்
      கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத
      அறிவினால் குறைவிலமே. 4.8.5

3205
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 4.8.6

3206
கிளரொளியால் குறைவில்லா
      அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன
      தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி
      வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத
      வரிவளையால் குறைவிலமே. 4.8.7

3207
வரிவளையால் குறைவில்லாப்
      பெருமுழக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூதி
      யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன்
      அமரர் கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத
      மேகலையால் குறைவிலமே. 4.8.8

3208
மேகலையால் குறைவில்லா
      மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை
      விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல்
      உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத
      வுடம்பினால் குறைவிலமே. 4.8.9

3209
உடம்பினால் குறைவில்லா
      உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா
      அசுரர் குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன்
      தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத
      உயிரினால் குறைவிலமே. 4.8.10

3210
உயிரினால் குறைவில்லா
      உலகேழ்தன் உள்ளொடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத்,
      தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை
      யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து
      வைகுந்தம் நண்ணுவரே. (2) 4.8.11

3211
நண்ணாதார் முறுவலிப்ப
      நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும்
      இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா. கடல்கடைந்தாய்.
      உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவா தடியேனைப்
      பணிகண்டாய் சாமாறே. (2) 4.9.1

3212
சாமாறும் கெடுமாறும்
      தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும்
      இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான்
      அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய்
      அடியேனைக் குறிக்கொண்டே. 4.9.2

3213
கொண்டாட்டும் குலம்புனைவும்
      தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும்
      மனையொழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை
      கடல்வண்ணா. அடியேனைப்
பண்டேபோல் கருதாதுன்
      அடிக்கேகூய்ப் பணிகொள்ளே. 4.9.3

3214
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
      பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும்
      இவையென்ன உலகியற்கை?
வள்ளலே. மணிவண்ணா.
      உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை
      உனதருளால் வாங்காயே. 4.9.4

3215
வாங்குநீர் மலருலகில்
      நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப்
      பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
ஈங்கிதன்மேல் வெந்நரகம்
      இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா.
      அடியேனை மறுக்கேலே. 4.9.5

3216
மறுக்கிவல் வலைப்படுத்திக்
      குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார்
      இவையென்ன உலகியற்கை?
வெறித்துளவ முடியானே.
      வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா
      ரமுதே.கூய் அருளாயே. 4.9.6

3217
ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,
கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே. 4.9.7

3218
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே? 4.9.8

3219
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
      தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய்.
      அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
      திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள்
      கூட்டினைநான் கண்டேனே. 4.9.9

3220
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. 4.9.10

3221
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே. (2) 4.9.11

3222
ஒன்றுந் தேவு முலகும்
      உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு
      தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம்
      நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
      மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2) 4.10.1

3223
நாடி நீர்வ ணங்கும்
      தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,
வீடில் சீர்ப்புக ழாதிப்பி
      ரானவன் மேவி யுறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனைப்,
பாடி யாடிப் பரவிச்
      செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 4.10.2

3224
பரந்த தெய்வமும் பல்லுல
      கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி
      டந்தது கண்டும் தெளியகில்லீர்,
சிரங்க ளால்அ மரர்வ
      ணங்கும் திருக்குரு கூரதனுள்,
பரன்திற மன்றிப் பல்லுலகீர்.
      தெய்வம் மற்றில்லை பேசுமினே. 4.10.3

3225
பேச நின்ற சிவனுக்
      கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும்
நாய கனவ னே,க
      பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்,
தேச மாமதிள் சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனுள்,
ஈசன் பாலோர் அவம்ப
      றைதலென் னாவதி லிங்கியர்க்கே? 4.10.4

3226
இலிங்கத் திட்ட புராணத்
      தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய் வீர்களும்
      மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி
      வீசும் திருக்குரு கூரதனுள்,
பொலிந்து நின்றபி ரான்கண்டீ
      ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. (2) 4.10.5

3227
போற்றி மற்றோர் தெய்வம்
      பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும்
      வீடு பெற்றாலுல கில்லையென்றே,
சேற்றில் செந்நெல் கமலம்
      ஓங்கு திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம்
      கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. 4.10.6

3228
ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,
பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,
ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே. 4.10.7

3229
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
      மார்க்கண்டேயன் அவனை
நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது
      நாராயணனருளே
கொக்கலர் தடந்f தாழை வேலித்
      திருக்குருகூரதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
      தெய்வம் விளம்புதிரே 4-10-8

3230
விளம்பும் ஆறு சமய
      மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்,
அளந்து காண்டற் கரிய
      னாகிய ஆதிப்பி ரானமரும்,
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனை,
உளங்கொள் ஞானத்து வைம்மின்
      உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9

3231
உறுவ தாவ தெத்தேவும்
      எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,
மறுவில் மூர்த்தியோ டொத்தித்
      தனையும் நின்றவண் ணம்நிற்கவே,
செறுவில் செந்நெல் கரும்பொ
      டோ ங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய
      நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. 4.10.10

3232
ஆட்செய்த தாழிப்பி ரானைச்
      சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை
      மார்பினன் மாறன் சடகோபன்,
வேட்கை யால்சொன்ன பாடல்
      ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,
மீட்சி யின்றி வைகுந்த
      மாநகர் மற்றது கையதுவே. (2) 4.10.11
---------------

திருவாய் மொழி ஐந்தாம் பத்து (3233- 3342)


3233
கையார் சக்கரத்தெங்கருமாணிக்க மே. என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான். அறையோ இனிப்போனாலே. (2) 5.1.1

3234
போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே,
தேனே. இன்னமுதே. என்றென்றேசில கூற்றுச்சொல்ல,
தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,
வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே. 5.1.2

3235
உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே? 5.1.3

3236
என்கொள்வ னுன்னைவிட்டென்
      னும்வாசகங் கள்சொல்லியும்,
வன்கள்வ னேன்மனத்தை
      வலித்துக்கண்ண நீர் கரந்து,
நின்கண் நெருங்கவைத்தே
      என்தாவியை நீக்ககில்லேன்,
என்கண் மலினமறுத்
      தென்னைக்கூவி யருளாய்கண்ணனே. 5.1.4

3237
கண்ணபி ரானைவிண்ணோர்
      கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன்
      நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப்
      பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந்
      தெனைப்போரவைத் தாய்புறமே. 5.1.5

3238
புறமறக் கட்டிக்கொண்டிரு
      வல்வினை யார்குமைக்கும்,
முறைமுறை யாக்கைபுகலொழியக்
      கண்டு கொண்டொழிந்தேன்,
நிறமுடை நால்தடந்தோள்
      செய்யவாய்செய்ய தாமரைக்கண்,
அறமுய லாழியங்கைக்
      கருமேனியம் மான்தன்னையே. 5.1.6

3239
அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்?யானார்?,
எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,
கைம்மா துன்பொழித்தாய். என்றுகைதலை பூசலிட்டே,
மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே. 5.1.7

3240
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8

3241
ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே. 5.1.9

3242
ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே. 5.1.10

3243
கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,
ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,
சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே. 5.1.11

3244
பொலிக பொலிக பொலிக.
      போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
      நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
      யாடி யுழிதரக் கண்டோ ம். (2) 5.2.1

3245
கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம்
      கண்ணுக் கினியன கண்டோ ம்,
தொண்டீர். எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுதுநின் றார்த்தும்,
வண்டார் தண்ணந்து ழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப்
      பரந்து திரிகின் றனவே. 5.2.2

3246
திரியும் கலியுகம் நீங்கித்
      தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப்
      பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி
      எங்கும் இடங்கொண் டனவே. 5.2.3

3247
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
      எடுத்துக் களைவன போல,
தடங்கடல் பள்ளிப் பெருமான்
      தன்னுடைப் பூதங்க ளேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
      கீதம் பலபல பாடி,
நடந்தும் பறந்தும் குனித்தும்
      நாடகம் செய்கின் றனவே. 5.2.4

3248
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
      ஒக்கின்ற திவ்வுல கத்து,
வைகுந்தன் பூதங்க ளேயாய்
      மாயத்தி னாலெங்கும் மன்னி,
ஐயமொன் றில்லை யரக்கர்
      அசுரர் பிறந்தீருள் ளீரேல்,
உய்யும் வகையில்லை தொண்டீர்.
      ஊழி பெயர்த்திடும் கொன்றே. 5.2.5

3249
கொன்றுயி ருண்ணும் விசாதி
      பகைபசி தீயன வெல்லாம்,
நின்றிவ் வுலகில் கடிவான்
      நேமிப்பி ரான்தமர் போந்தார்,
நன்றிசை பாடியும் துள்ளி
      யாடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்.
      சிந்தையைச் செந்நி றுத்தியே. 5.2.6

3250
நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்
      தெய்வங்க ளும்மையுய் யக்கொள்
மறுத்து மவனோடே கண்டீர்
      மார்க்கண் டேயனும் கரியே
கறுத்த மனமொன்றும் வேண்டா
      கண்ணனல் லால்தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
      யாயவர்க் கேயி றுமினே. 5.2.7

3251
இறுக்கு மிறையிறுத்துண்ண
      எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,
நிறுத்தினான் தெய்வங்க ளாக
      அத்தெய்வ நாயகன் றானே
மறுத்திரு மார்வன் அவன்றன்
      பூதங்கள் கீதங்கள் பாடி,
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்
      மேவித் தொழுதுய்ம்மி னீரே. 5.2.8

3252
மேவித் தொழுதுய்ம்மி னீர்கள்
      வேதப் புனித இருக்கை,
நாவிற்கொண் டச்சுதன் றன்னை
      ஞான விதிபிழை யாமே,
பூவில் புகையும் விளக்கும்
      சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழுமடி யாரும்
      பகவரும் மிக்க துலகே. 5.2.9

3253
மிக்க வுலகுகள் தோறும்
      மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,
நக்கபி ரானோ டயனும்
      இந்திர னும்முதலாக,
தொக்க அமரர் குழாங்கள்
      எங்கும் பரந்தன தொண்டீர்,
ஒக்கத் தொழுகிற்றி ராகில்
      கலியுக மொன்றுமில் லையே. 5.2.10

3254
கலியுக மொன்றுமின் றிக்கே
      தன்னடி யார்க்கருள் செய்யும்,
மலியும் சுடரொளி மூர்த்தி
      மாயப்பி ரான்கண்ணன் றன்னை,
கலிவயல் தென்னன் குருகூர்க்
      காரிமா றன்சட கோபன்,
ஒலிபுக ழாயிரத் திப்பத்து
      உள்ளத்தை மாசறுக் கும்மே. (2) 5.2.11

3255
மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,
பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,
ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே? (2) 5.3.1

3256
என்செய்யு மூரவர் கவ்வை தோழீ. இனிநம்மை,
என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,
முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,
என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே. 5.3.2

3257
ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,
தீர்ந்தவென் தோழீ. என்செய்யு மூரவர் கவ்வையே? 5.3.3

3258
ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ. கடியனே. 5.3.4

3259
கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட
அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,
துடிகொ ளிடைமடத் தோழீ. அன்னையென் செய்யுமே? 5.3.5

3260
அன்னையென் செய்யிலென் ஊரென்
      சொல்லிலென் தோழிமீர்,
என்னை யினியுமக் காசை
      யில்லை யகப்பட்டேன்,
முன்னை யமரர் முதல்வன்
      வண்துவ ராபதி
மன்னன், மணிவண் ணன்வாசு
      தேவன் வலையுளே. 5.3.6

3261
வலையுள் அகப்பட்டுத் தென்னைநன்
      நெஞ்சம் கூவிக்கொண்டு,
அலைகடல் பள்ளி யம்மானை
      ஆழிப் பிரான்தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ.
      நம்கண்க ளால்கண்டு
தலையில் வணங்க மாங்கொலோ
      தையலார் முன்பே? 5.3.7

3262
பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்
போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,
தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,
யாமுறு கின்றது தோழீ. அன்னையர் நாணவே? 5.3.8

3263
நாணும் நிறையும் கவர்ந்தென்னை
      நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,
சேணுயர் வானத் திருக்கும்
      தேவ பிரான்தன்னை,
ஆணையென் தோழீ. உலகு
      தோறலர் தூற்றி,ஆம்
கோணைகள் செய்து
      குதிரியாய் மடலூர்துமே. 5.3.9

3264
யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,
நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே. 5.3.10

3265
இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,
விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
நிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,
உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம். (2) 5.3.11

3266
ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,
பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,
ஆரெல்லே. வல்வினையேன் ஆவிகாப் பாரினையே? (2) 5.4.1

3267
ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே. நீயும்பாங் கல்லையே? 5.4.2

3268
நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே. நீளிரவும்,
ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,
காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே. 5.4.3

3269
பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம் மண்ணளந்த
கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே? 5.4.4

3270
ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,
நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,
காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,
பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே. 5.4.5

3271
பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே? 5.4.6

3272
காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள். என்செய்கேன்? 5.4.7

3273
தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிரவேழ் ஊழியாய்,
மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே. 5.4.8

3274
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே. 5.4.9

3275
நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,
சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,
அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,
ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே. 5.4.10

3276
உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,
சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,
நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,
இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ? 5.4.11

3277
எங்ஙனேயோ அன்னை மீர்காள்.
      என்னை முனிவதுநீர்?,
நங்கள்கோலத் திருக் குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும்
      தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
      செல்கின்ற தென்நெஞ்சமே. (2) 5.5.1

3278
என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர்
      என்னை முனியாதே,
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும்
      மார்வில் திருமறுவும்,
மன்னும் பூணும் நான்குதோளும்
      வந்தெங்கும் நின்றிடுமே. 5.5.2

3279
நின்றிடும் திசைக்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
      வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.5.3

3280
நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று
      அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
பூந்தண் மாலைத் தண்டுழாயும்
      பொன்முடி யும்வடிவும்,
பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
      பாவியேன் பக்கத்தவே. 5.5.4

3281
பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்,
தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
தொக்கசோதித் தொண்டை வாயும்
      நீண்ட புருவங்களும்,
தக்கதாமரைக் கண்ணும் பாவியேf
      னாவியின் மேலனவே. 5.5.5

3282
மேலும் வன்பழி நங்குடிக்கிவள்
      என்றன்னை காணக்கொடாள்
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக்
      கண்ணும் கனிவாயும்,
நீலமேனியும் நான்கு தோளுமென்
      நெஞ்சம் நிறைந்தனவே. 5.5.6

3283
நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
      என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
      நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
      நேமியங் கையுளதே. 5.5.7

3284
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
      சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
      பாவியேன் முன்னிற்குமே. 5.5.8

3285
முன்னின் றாயென்று தோழிமார்களும்
      அன்னைய ரும்முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
சென்னி நீண்முடி யாதியாய
      உலப்பி லணிகலத்தன்,
கன்னல் பாலமு தாகிவந்தென்
      நெஞ்சம் கழியானே. 5.5.9

3286
கழியமிக்கதோர் காதல ளிவளென்
      றன்னை காணக்கொடாள்,
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்,
குழுமித் தேவர் குழாங்கள்தொழச்
      சோதிவெள் ளத்தினுள்ளே,
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும்
      ஆர்க்கு மறிவரிதே. 5.5.10

3287
அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11

3288
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,
கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே? 5.6.1

3289
கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்
கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,
கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,
கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்
கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே? 5.6.2

3290
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?
காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே? 5.6.3

3291
செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வானின் றனகளும் யானே என்னும்,
செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்
செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்யகம லக்கண்ண னேறக் கொலோ?
செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
செய்ய கனிவா யிளமான் திறத்தே? 5.6.4

3292
திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே? 5.6.5

3293
இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,
இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவாநிரை காத்தேனும் யானே என்னும்,
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,
இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்
இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே? 5.6.6

3294
உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,
உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்
உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றனவே? 5.6.7

3295
உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,
உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்
உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே? 5.6.8

3296
கொடிய வினையாது மிலனே என்னும்
கொடியவினை யாவேனும் யானே என்னும்,
கொடியவினை செய்வேனும் யானே என்னும்
கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,
கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்
கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,
கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே? 5.6.9

3297
கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?
கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே. 5.6.10

3298
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்
ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்
அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 5.6.11

3299
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே. 5.7.1

3300
அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்.தமி யேனுக் கருளாயே. 5.7.2

3301
கருள புட்கொடி சக்க ரப்படை
      வான நாட.எங் கார்முகில் வண்ணா,
பொருளல் லாத என்னைப் பொருளாக்கி
      அடிமை கொண்டாய்,
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
      சிரீவர மங்கலநகர்க்கு,
அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே. 5.7.3

3302
மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு
      ஆயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்
      சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே? 5.7.4

3302
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?
எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச்
சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே. 5.7.5

3304
ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே.
கண்ணா. என்று மென்னை யாளுடை,
வானநா யகனே. மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத்
தவர்க்கை தொழவுறை
வான மாமலை யே.அடி யேன்தொழ வந்தருளே. 5.7.6

3305
வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்
கொழுந்தே, உலகுக்கோர்
முந்தைத் தாய்தந்தை யே.முழு ஏழுலகு முண்டாய்,
செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச்
சிரீவர மங்கலநகர்,
அந்தமில் புகழாய். அடியேனை அகற்றேலே. 5.7.7

3306
அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம்
      அவை நன்கறிந்தனன்,
அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை
      வாணனே, என்றும்
புகற்கரிய எந்தாய்.புள்ளின்வாய் பிளந்தானே. 5.7.8

3307
புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய்.
      எருதேழ் அடர்த்த,என்
கள்ள மாயவனே.கருமாணிக்கச் சுடரே,
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்
      மலிதண் சிரீவர மங்கை,
உள்ளிருந்த எந்தாய். அருளாய் உய்யுமா றெனக்கே. 5.7.9

3308
ஆறெ னக்குநின் பாதமே சரணாகத்
      தந்தொழிந்தாய், உனக் கோர் கைம்
மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,
சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும்
      மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்.தெய்வ நாயகனே. 5.7.10

3309
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை
      மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே. 5.7.11

3310
ஆரா அமுதே. அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய். கண்டேன் எம்மானே. 5.8.1

3311
எம்மா னே.என் வெள்ளை மூர்த்தி. என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே. 5.8.2

3312
என்நான் செய்கேன். யாரே களைகண்?
      என்னையென் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும்
      ஒன்றும் குறைவேண்டேன்,
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்.
      அடியேன் அருவாழ்ணாள்,
சென்னா ளெந்நாள். அந்நா ளுன்தாள்
      பிடித்தே செலக்காணே. 5.8.3

3313
செலக்காண் கிற்பார் காணும் அளவும்
      செல்லும் கீர்த்தியாய்,
உலப்பி லானே. எல்லா வுலகும்
      உடைய ஒருமூர்த்தி,
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்.
      உன்னைக் காண்பான்நான்
அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி
      அழுவன் தொழுவனே. 5.8.4

3314
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
      பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
      நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
      மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
      வகையே சூழ்கண்டாய். 5.8.5

3315
சூழ்கண் டாயென் தொல்லை வினையை
      அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து
      எனைநாள் அகன்றிருப்பன்?,
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்.
      வானோர் கோமானே,
யாழி னிசையே. அமுதே. அறிவின்
      பயனே. அரியேறே. 5.8.6

3316
அரியே றே.என் அம்பொற் சுடரே.
      செங்கட் கருமுகிலே,
எரியே. பவளக் குன்றே. நாற்றோள்
      எந்தாய். உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய்
      குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென்
      சன்மம் களையாயே. 5.8.7

3317
களைவாய் துன்பம் களையா தொழிவாய்
      களைகண் மற்றிலேன்,
வளைவாய் நேமிப் படையாய். குடந்தைக்
      கிடந்த மாமாயா,
தளரா வுடலம் என்ன தாவி
      சரிந்து போம்போது,
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து
      போத இசைநீயே. 5.8.8

3318
இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ்
      இருத்தும் அம்மானே,
அசைவில் அமரர் தலைவர் தலைவா
      ஆதி பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழுமா மணிகள்
      சேரும் திருக்குடந்தை,
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்.
      காண வாராயே. 5.8.9

3319
வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை
ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? 5.8.10

3320
உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு
      அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட
      குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே. 5.8.11

3321
மானேய் நோக்குநல்லீர். வைகலும்வினை யேன்மெலிய,
வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,
தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்
கோனா ரை,அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ? 5.9.1

3322
என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,
தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே? 5.9.2

3323
சூடும் மலர்க்குழலீர். துயராட்டியே னைமெலிய,
பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,
மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே? 5.9.3

3324
நிச்சலும் தோழிமீர்காள். எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,
மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே. 5.9.4

3325
நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே? 5.9.5

3326
காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,
பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,
மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே? 5.9.6

3327
பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,
ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோ றுமே? 5.9.7

3328
நாடொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,
நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே? 5.9.8

3329
கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,
சுழலின் மலிசக்கரப் பெருமானது தொல்லருளே? 5.9.9

3330
தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல்
      தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே? 5.9.10

3331
நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,
சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,
நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே. 5.9.11

3332
பிறந்த வாறும் வளர்ந்த வாறும்
      பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்
திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,
நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று
      உருக்கி யுண்கின்ற,இச்
சிறந்த வான்சுட ரே.உன்னை யென்றுகொல் சேர்வதுவே. 5.10.1

3333
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்,
அதுவிது உதுவென்ன லாவன வல்ல
என்னையுன் செய்கை நைவிக்கும்,
முதுவைய முதல்வா.உன்னை யென்று தலைப் பெய்வனே? 5.10.2

3334
பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட
      பிள்ளைத் தேற்றமும், பேர்ந்தோர் சாடிறச்
செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,
நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள
      நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,
பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே. 5.10.3

3335
கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க
      வாறும், கலந்தசுரரை
உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
      விளங்க நின்றதும்,
உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே. 5.10.4

3336
உண்ண வானவர் கோனுக் காயர்
      ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,
வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,
மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து
      மணந்த மாயங்கள்,
எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்
மெழு கொக்குநின்றே. 5.10.5

3337
நின்ற வாறு மிருந்த வாறும்
      கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,
நின்று நின்று நினைக்கின் றேனுன்னை
      எங்ங னம்நினை கிற்பன், பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே. 5.10.6

3338
ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்
      உண்மையோ டின்மையாய் வந்து,என்
கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,
எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய
      மாணிக்க மே.என் கண்கட்குத்
திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே. 5.10.7

3339
திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச்
      செந்தா மரைமேல், திசைமுகன்
கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,
பொருவி லுந்தனி நாயகமவை கேட்குந்
      தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,
அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே. 5.10.8

3340
அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாம்
      கடலும் மண்ணும் விண்ணும்
முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,
நொடியு மாறவை கேட்குந் தோறுமென்
      நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே? 5.10.9

3341
கூடி நீரை கடைந்த வாறும்
      அமுதம் தேவர் உண்ண, அசுரரை
வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,
ஊடு புக்கென தாவியை யுருக்கி
      யுண்டிடு கின்ற, நின்தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே. 5.10.10

3342
நாகணைமிசை நம்பிரான் சரணே
      சரண் நமக் கென்று, நாடொறும்
ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,
ஆக நூற்ற அந் தாதி யாயிரத்துள்
      இவையுமோர் பத்தும் வல்லார்,
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 5.10.11
-------------

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி தொடர்ச்சி


This webpage was last revised on 15 September 2021.
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com).