Tamil Works of Contemporary Sri Lankan Authors - I
"EzANTu ilakkiya vaLarcci" (by M. Thalaiyasingam )
in Tamil script, unicode/utf-8 format

மறைமலை அடிகள் (1876-1950)
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

Commentary on mullaip pAttu by maRaimalai atikaL







Etext Preparation (input) : Ms. Padma Ganesh, Flushing, N.Y., U.S.A.
Etext Preparation (proof-reading) : Ms. Padma Ganesh, Flushing, N.Y., U.S.A.
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

முல்லைப்பாட்டு
மறைமலை அடிகள்

முல்லைப்பாட்டு
ஆராய்ச்சியுரை

1. பாட்டினியல்பு

முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவாராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.

உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டுவியந்த வண்ணமாய் மீன்வலையடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத் தாம் மரநழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தொறுந் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளி லிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந்தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர் தலையும் விரும்பிக்கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.

அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், "பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்"1 என்று உரை கூறினார். இது நிற்க.

இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப்பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னவென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொறு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திரிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின் மேல் மிக வருந்தி முயன்று எழுதிக் காட்டல் வேண்டும். இ·து அவனுக்குப் பெருநாள் வினையாக முடியும். நல்லிசைப்புலவனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெரு வியப்புணைர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இ·து இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லராயின நற்பெரும்புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் "சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்" காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப்படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.
1. Areopagitica, 2. Homer, 3. Dante, 4. Shakespeare, 5. Milton, 6. Goethe



2. பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு

இனிப், பண்டைக் காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை நுணுகி ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனனுணர்விற்கு இசைந்த வண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவு செய்து விளக்கி மகிழ்ந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாமைச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர்1 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்ல வந்தவிடத்து "அவர் தமதுணர்வின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக் கொள்ளாமல், அவ்வுலக இயற்கையின் வழியே தமதுணர்வினை நிறுத்தி நின்றார்" என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழி நின்று பாட்டுப் பாடுதலே அருமையா மென்பதும், அதுவே நல்லிசைப் புலவர்க்கு அடையாளமாம் என்பதும் இதனால் நன்கு பெறப்படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந் நுணுக்கம் இனிதறிந்து விளங்கினார்களென்பதற்குப் பழைய தமிழ்ப் பாட்டுக்களே சான்றாகும். எனினும், இதனை ஒரு பழைய செய்யுள் முகத்தானும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.
"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."

என்பது குறுந்தொகை2 என்னும் பழைய தமிழ் நூலில் உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படியிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க நேயமுடையராய் வாழ்வது கண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து சொல்லியதாக இது பாடப்பட்டிருக்கின்றது. " என்மகள் வற்றக்காய்ச்சின கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கைகழுவாமலே உடுத்துக் கொண்டு, குவளைப் பூப்போன்ற மை தீட்டிய தன் கண்களிலே தாளிப்புச் செய்யும் புகைபட்டு மணக்கவும் அதனையும் பாராது, தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த சுவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும் இனிதாயிருக்கின்றதென்று சொல்லிக்கொண்டே உண்ணுதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினையுடைய என் மகளின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி அடைந்தது" என்பது தான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கையழகும், இதன்கட் காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன!

காதற்கணவனும் மனைவியுங் கெழுமி இருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் முல்லை எனப்படுமாகலின், இவ்வொழுக்கம் நடைபெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப 'முளிதயிர் பிசைந்த' என்றார்; என்னை? தயிர்பால் முதலியன ஆனிரைமிக்க முல்லை நிலத்திற்கே உரியனவாகலின் தன் கணவன் மேலுள்ள காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவி விட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும் போது மேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந் திரும்பினால் பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன் விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றாம்.

உள்ளமுவக்கும் நிலத்திற் கணவனும் மனைவியும் நேயமாய் மருவிவாழும் இயற்கை இப் பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற் போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது! இப் பொருளருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழு மொழுவென்று ஓடுவது போல் ஓசையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுமுழுச் சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற்பாலனவாகும் என்பது.

இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குஹ்ட் திரிந்து கண்டு பெருங்களிப்பும் பெருகிய மன வெழுச்சியும் உடையராய், வருத்தமின்றி இனிதாகப் பாட்டுகள் பாடினார் என்பது அவர் தாம் விரித்துச் சொல்லும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டும் உவமைகளால் நன்கு புலனாம். ஓரிடத்தில் மான் கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி, 'இரும்பை முறுக்கினாற் போலுங் கரிய பெரிய கொம்பு' என்னும் பொருள் பட "இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பு" (அகநானூறு, 4) என்றும், ஓரிடத்தில் இருவர் நேய ஒற்றுமையினைச் சொல்ல வந்த போது 'கத்தியுறை செய்யுஞ் சிறிய தொழிலாளன் அரக்கொடு சேர்த்த கல்லைப் போலப் பிரியோம்' என்னும் பொருள்படச் "சிறுகாரோடன்3 பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம்" (அகநானூறு, 1) என்றும், ஓரிடத்திற் புறந்துருத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவமையாக எடுத்து "வேப்பு நனையன்ன நெடுங்கட்கள்வன்" (ஐங்குறுநூறு, 30) என்றும், ஓரிடத்தில் 'வயல் நெல் புதிது ஈன்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக் கட்டிய தையல் மூட்டுள்ள கவரி மயிரை' உவமையாக எடுத்து "முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும், மூட்டுறு கவரி தூக்கியனன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்" (அகநானூறு, 156) என்றும், ஓரிடத்தில் 'மழையில்லாத வானம் பூத்தது போல இலை நெருங்கிய முசுண்டைச் செடிகள் வெள்ளி மலர்களைப் பூக்க' என்னும் பொருள் போதர "மழையில் வானம் மீன் அணிந்தன்ன, குழையமல் முசுண்டை வாலிய மலர" (அகநானூறு, 264) என்றும், ஓரிடத்தில் 'பஞ்சின் றொடர்நுனிபோலுந் தலையினையுடைய புதர்களின்மேல் ஏறிப்படரும் இண்டைக் கொடிகளின் நீரில் நனைந்த தளிர்கள் நெய்யில் தோய்த்தன போல விளங்கி இரண்டாக இருளைக் கூறுபடுத்தினாற்போல் ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரிய நிறத்துடன் அசைய' என்னும் பொருள்படத் "துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெய்தோய்த்தன்ன நீர்நனை அந்தளிர், இருவகிர் இருளின் ஈரிய துயல்வர" (அகநானூறு, 294) என்றும், ஓரிடத்திற் 'பச்சை மஞ்சளின் பசிய முதுகைப்போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையனவாகக் கழியிற் கிடக்கும் இறாமீன்' என்பது விளங்க "முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச், சுற்றிய பிணர சூழ்கழி யிறவு" (நற்றிணை, 101) என்றும், ஓரிடத்தில் 'மயிலின் அடிபோல் மூன்று பிளவாய் இருக்கும் இலைகளுடைய பெரிய கதிருள்ள நொச்சி' என்பது தோன்ற "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி" என்றும், ஓரிடத்திற் 'கதிர் அரிந்துவிட்ட தினைப்பயிரின் தாள் போன்ற சிறிய பசுங்காலையுடையவாய் ஓடும் நீரில் ஆரல்மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாரை' என்பது புலப்படத் 'தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குறுகு" (குறுந்தொகை, 25) என்றும், போந்த தன்மை நவிற்சியணிச் சொற்றொடர்களானே பழைய தமிழ்ப் புலவரின் விழுமிய உலகியற்பொருள் அறிவினை இனிது அறிந்து கொள்ளலாம். இன்னும் இவைபோன்ற எடுத்துக்காட்டுகள் நூறு நூறாகப் பெருக்கலாமேனும், இங்கு அதற்கு இடம்பெறுதல் கூடாமையின் இதனை இவ்வளவில் நிறுத்துகின்றாம்.

இத்துணை நுட்பமான உலகியற்பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப் பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற் பொருட்காட்சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம்பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். ஆண்டுக் கண்டு கொள்க.

தி.மு. நானூறு ஆண்டு முதல் தி.பி. நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில், இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அந் நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும்.

இனித் திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றாண்டுகளிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின் நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுஞ் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகுமென்று அறிதல் வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்தபின் ஒரு ஐந்நூறாண்டுந் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப் புலவர்களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர்பலரும் வள்ளல் பலரும் ஆங்காங்கு மிக்கிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வவளத்தாலும் மேம்பட்டும், போர் வல்லமையிலும், பெருமையடைந்து, தமிழ்மொழியினைப் பலவிடங்களிலும் பெருகச் செய்வதிற் கருத்தூன்றினராய் இருந்தார்.

இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்காநிற்குந் திருக்குறள் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான சிறந்த தமிழ்க்காப்பியங்களும், பழமொழி, நான்மணிக்கடிகை முதலான அறநூல்களுந் தோற்றமுற்று எழுந்தன. இவ்வைந் நூறாண்டுகளுக்கு முன்னும் பின்னு மிருந்த தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்களெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன. பண்டைக் காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரியபெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனை வடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் மனவியற்கை நூல் பன்னெடுங்காலமாக மறைந்து கிடந்து பின்னர் இக்காலத்திலே தான் வெளிவந்துலாவலாயிற்று.

இன்னும் இக் காலத்திலே இன்றியமையாது அறியற் பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாந் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகி வந்தது; மற்று இக்காலத்திலோ அதனோடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடங்கிற்று; சொல் விழுப்பமும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியதோர் உரை மிக நுணுக்கமான அறிவினையுடைய நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் இறையனாரகப் பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத்திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்பட்டதாயினும், மற்றை உரைகள் போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற்பாலனவாம் அருட்பெருந் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக் காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ் மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப் பயிற்சியைப் பெருகச் செய்து வந்த நற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கீரனார் தாமென்று அறியற்பாற்று. இதற்குப் பிற்காலத்தே வடமொழிக் கலப்பாற் புதிது தோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வைந் நூறாண்டுகளும் விரிந்து பெருகி வழங்கிய தமிழ் நூல்களில் எட்டுணையுங் காணப்படாமை பெரிதும் நினைவு கூரற்பாற்று.

பௌத்த சமயத் தோற்றமும் பெருக்கமும்

இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங்காங்கு விளக்க முற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும்.

பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்4. தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங், குளிர் மிகுந்த ஆசியாக் கண்டத்தின் வடக்கேயுள்ள ஆரிய மக்களைப் போல் அத்துணை உடல் வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றி யிருந்தமையால் தமிழர் தமக்குள்ளே கலாம் விளைவித்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட்கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையிலுள்ள அழகினைக் கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ்வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப் பொருளினிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ்வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர் இடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட் பொருளை மனத்தாற் பலகால் உறைத்து நினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர்.

இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப் பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப் பெறாமல், தொகுதி தொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்து போய் அங்கங்குள்ளாரொடு போர் புரிந்தும் அல்லாதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர் இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த் துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்று வந்த பலவகையான விலங்குகளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்வி செய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர்.

(இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள)

(-33-)
"இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்

களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக் கொண்டு எம்முடன்
வாணிகஞ் செய்யாதே! (3)
செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலிசப்
படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன்
ஏகுகின்றாய்!

தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள்,
வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாகத் தப்பியோடி
அழிந்தனர். (4)

(-51-)
ஆரியர்களையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து
கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத்,
தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8)

(-53-)
இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த
அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டைகளையும்
நீ அழித்தன்றோ! (8)

துணைவ ரில்லாத சுசரவர்களுடன் போர்புரியும் பொருட்டு,
அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது காலாட்
களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான

இருபதின்மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய்,
நீ எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால்
அழித்துளையன்றோ! (9)

(-103-)
இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை
ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப்படுத்துக!(9)

(-163)
தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய், வலிய குதிரை
வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது.

அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்கு முன் ஓட்டப்பட்டு
வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (12)

அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது. தன்
தாய் தன் தந்தையின் பால் வந்திருக்கின்றது.

நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற்
செல்லும்: அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது
பல நன்கொடையினைத் தரும்." (13)

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணிப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்த போது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை "மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலத்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலுந் தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர்; சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம்விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத் தாந் தழுவியுந், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத் தொடங்கினர். இவ் விருவகை இனத்தாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழ்த்தி விடாமல், அவை தம்மிற் பெரும்பான்மையவற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார்.

இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விச் சடங்குகள் செய்ய வேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருமார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் "இங்ஙனந் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை?" என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம்வழிப்படுத்திக் கொண்டனர்.

இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்துபோந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன5. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமை யானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தின மையானும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன் பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூய நிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலும் மேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின.

மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சுதேயத்திற்6 றோன்றியதை யத்த ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்று வரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரியபெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரிய முயற்சியில் தலைநின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ் மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரண மாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

இனி, இப் பொருள்களெல்லாம் பௌத்த சமய நூல்களிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவநாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கௌதமர் என்னுந் தமிழ்ப் பெரியார் விளக்க வந்தமையால் அவ்வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோன்றோர், தமக்குந் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக்களையே பௌத்த சமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம்பெற்றாராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌதம சாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக.
"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்து போந்த மற்றை வினைச்சடங்குகளையும் மறுத்துக் கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூறாண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கில மொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவிலியம் மிண்டோ7 என்னும் ஆராய்ச்சி உரைகாரர், "காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அ·து அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலுங், கொத்து வேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குந் தொழிற்களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது * * * ஒரு புலவனும் ஒரு கால இயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்"8 என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர்தோன்றி விளங்கப்பெறும் ஒரு தன்மையுடையவாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரிய மக்கள் செய்துபோந்த வீணான வெறுஞ்சடங்குகளிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்து நின்ற தமிழ்மக்கள், தம் பண்டையாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத் தன்மையாகுமென்றுணர்ந்து கொள்க.

இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல்லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் 'அகப்பொருள்' என்பது ஆண்பெண் என்னும் இருபாலரையுஞ் செறியப் பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின் மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்றுதற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந் திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்9 என்பதனை அடிப்படையாகக் கொண்டு மக்களியற்கை முழுவதூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், 'புறப்பொருள்' என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமை யாதவன பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெருவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார்,
"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்"10

என்று கிளந்து கூறினார்.

இனி, இதுபோற், பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்புச் செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப் பண்பு செயல்கட்கு உரியார் பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார்,
"புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது
அகத்திணை மருங்கின் அளவுத லிலவே"11

என்று கூறினார்.

இனி, அகம், புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவருமாயின் அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும்.
  1. Ruskin: Modern Painters, Vol. III, p. 284
  2. குறுந்தொகை, 167
  3. "காரோடர் உறைகாரர்" - திவாகரம், மக்கட் பெயர்த் தொகுதி
  4. There can be little doubt that Dravidian Languages were actually flourishing in the western regions of Northern India at the period when languages of the Indo-European type were introduced by the Aryan invasions from the north west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit, in the Prakrits or early popular dialects, and in the modern vernaculars derived from them." pp. 41, 42, Ch. ii 'The Cambridge History of Ancient India.'
  5. வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் இதற்குச் சான்றுகள் காண்க.
  6. The French Revolution
  7. Professor William Minto
  8. The Literature of the Georgian Era, pp. 42-43
  9. Love
  10. தொல்காப்பியம், பொருள், 54
  11. தொல்காப்பியம், பொருள், 55



3. முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும்

இனி, இங்கு ஆராய்தற்பொருட்டு எடுத்துக்கொண்ட முல்லைப்பாட்டில் "தன் மனையாளைப் பிரிந்து பகைவேந்தரொடு போர்செய்யப் போவானொரு தலைவன் தான் பிரிவதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் 'கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அதுகாரும் நீ ஆற்றியிரு' என்று சொல்லிப் பிரிய, அச் சொல்வழியே ஆற்றியிருந்தவள், அவன் சொன்ன கார்காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பிரிதும் ஆற்றாளாயினள்; பின்னர்ப் பெருமுது பெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றதவள் 'இங்ஙனம் ஆற்றாது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றுதலே செயற்பாலது' என்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவியிடத்துச், சென்ற தலைவன் மீண்டு வந்தமை" ஆகிய அகப்பொருள் இருப்புச் சொல்லப்பட்டமையால், இப் பாட்டின்கட் டலைமகன் தலைமகள் சிறப்புப்பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனந் தலைமகன் தலைமகளைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போனபின் அவன் வினைமுடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத்தலும் இங்கு சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக் கடவதோர் இழுக்கு ஒன்றுமில்லையென்றுணர்க.

இனி, முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம். 'வஞ்சி தானே முல்லையது புறனே'1 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். வஞ்சி என்பது ஓர் அரசன் நாடு கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வது. வஞ்சித்திணை முல்லைத் திணைக்குப் புறனானவாறு யாங்ஙனமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனையின்கண் இருப்பது போல, அவள் கணவனும் அவளைப் பிரிந்து பாடிவீட்டின்கண் இருப்பன் ஆகலானும், தலைமகள் வீடு காட்டின்கண் இருப்பது போலப் பாடிவீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும் முல்லையும் வஞ்சியுந் தம்முள் இயைபு உடைய ஆயின என்க.

இனி, நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவர் 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்றுகின்றார். ஆகலின், அதனோடு இயைபுடைய வஞ்சியழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன்கண் அமைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறுபொருளை இதன்கட் பொருத்தி உரைக்கும் நுணுக்கம் மிகவும் வியக்கற்பாலதொன்றாம்.

இன்னுந் தாங் கூறல்வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்றொகுதியினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல்லும்போது, அப்பொருளின் இடையே அதனோடு இயைபுடைய வேறொரு பொருளை இயைத்துச் சொல்லல் வேண்டுவது நேருமாயின் அப்பொருளின்பங் கெடாமல் இடன் அறிந்து அதனைப் பிணைப்பது நல்லிசைப் புலவரிடத்துக் காணப்படும் அரிய வினைத்திறனா மென்பது அறியற்பாற்று. இவ்வரிய வினைத்திறன் நப்பூதனார் இயற்றிய இச் செய்யுளின்கண் ஆழ்ந்தமைந்து விளங்கிக் கிடக்கின்றது. 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றுங் கூறி முடித்தபின், அதனோடு இயைபுடைய அரசன் போர்மேற் செல்வதான வஞ்சியைக் கூறுவாராயிற், கற்பவர்க்குப், பின் ஒட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டலிற் கருத்து ஊன்றாமையே யன்றி, இருவேறு ஒழுக்கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கே உரிய முல்லை என்னும் பெயர் மட்டுமே சூட்டிய குற்றமும் உண்டாம். அவ்வாறன்றி முல்லைப் பொருளுக்கு நடுவே எங்கேனும் ஓரிடத்திற் பொருத்தமின்றி அவ் வஞ்சிப் பொருளை மாட்டிவிடினுங் கற்போர் உணர்வு இளைப்படையுமாகலின் அதுவுங் குற்றமேயாகும். இனி, இக்குற்றமெல்லாம் அணுகாமல், இணங்கப் பொருத்து மிடந்தான் யாதோ வெனிற் கூறுதும். எடுத்துச் சொல்லப்படும் முதன்மைப் பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்திற் கூடி நின்று, கற்பார்க்கு 'இனி இ·து எங்ஙனம் முடியும்! எங்ஙனம் முடியும்!' என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங் கற்றுத் துறைபோகும் வண்ணம் அப்பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிற பொருளை இணைப்பதற்கு இசைவான இடுக்கு வெளியாம் என்க.

இவ்வாறு இப்பாட்டின்கண் முல்லைப் பொருள் இடையறுந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற் கூறுதும்; தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர், " நாங்களும் படைத்தலைவருங் கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத்துப்போன போர் வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்" என்று பலகாலுஞ் சொல்லி வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கேளாளாய், மைதீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப் போல் துளித்துளியாய் விழக் கலுழ்ந்து வருந்தினாள் என 23 ஆவது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவு பெறாமல் இடையறுந்து நிற்பது காண்க. இப்பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங் கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப்பெண்மணி பின் எவ்வாறு ஆயினள் எனப் பின்னும் அறிதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறியும் விழைவால் மேலுங் கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இளைப்படையாது, அவ்விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்சென்று பொருள்முடிவு காண்பாரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப் பொருளை மறித்து, அதனோடு இயைபுடைய வஞ்சிப் பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப் பொருளை 80 ஆவது வரியிலே "இன்துயில் வதியுநற்காணாள் துயர் உழந்து " என்பதுடன் கொண்டு போய் இணங்கக் கொளுத்தி, ஆசிரியர் அச் செய்யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்து கொள்க.

இன்னும் இவ் வகப்பொருள் முல்லை யழுக்கத்தினை அவ்வாறு நடாத்திக் கொண்டு சென்று, 88 ஆவது வரியில் "இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்" என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலைமகன் மீண்டு வந்தமை சொல்லவேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு 'இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவி நிறைய ஆரவாரித்தன' என்று மேல் ஓட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான 'ஆரவாரித்தன' என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழியான 'கிடந்தோள்' என்பதுடன் சேர்த்தி, அதன் எழுவாயான 'வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே' என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்திற் 'கிடந்தோள் செவிநிறைய ஆலின' என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்ஙனம் பிறழக் கூறுதல் பொருள் வலிவு தோன்றுதற் பொருட்டுங், கற்பார்க்கு மேலுமேலும் விழைவுள்ளந் தோற்றுவித்தற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கிலமொழியிற் பெயின்2 என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நூலிலுங் கண்டுகொள்க. இந் நுணுக்கமெல்லாம் நன்கறிந்து செய்யுளியற்றிய நப்பூதனார் பேரறிவும் பேராற்றலும் பெரிதும் வியக்கற்பாலனவாம் என்க.
1. தொல்காப்பியம், பொருள், 61
2. Alexander Bain's English Composition and Rhetoric, Part I, Rules 10-14



4. முல்லைப்பாட்டில் நீளச்சென்று பொருந்தும் சொற்றொடர் முடிபு: மாட்டு

இனி, மேற்கூறியவாறு முல்லைப்பொருள் ஒழுக்கம் 23 ஆவது வரியிலே இடையறுந்து நிற்ப, நடுவே வஞ்சிப் பொருள் புகுத்தப்பட்டுத் திரும்பவும் 80 ஆவது வரியிலே தன்பொருள் பொருந்தி, 88 ஆவது வரியில் அது முற்றுப் பெருந்தறுவாயிற் பின்னும் முடிவு பெறாதது போல் நின்று இடையே வேறு பொருள் தழுவி 103 ஆவது வரியிலே பொருள் முதிர்ச்சி பெற்று முடிந்தது உற்றுணரற் பாலதாம் என்க. இங்ஙனம் ஒருபாட்டின் முதன்மைப் பொருள் இடையிடையே அறுந்து அகன்றுபோய்ப் பொருந்தி முடிதல் இம்முல்லைப்பாட்டிற்கும் இதனொடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களுக்கும் பொதுவியற்கையாகும். இவ்வாறு அகன்று கிடக்கும் பொருளை அணுகப் பொருத்திக் காட்டுதலையே ஆசிரியர் தொல்காப்பியனார் 'மாட்டு' என்பர்.

"அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும், இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" என்பது சூத்திரம் (தொல்காப்பியம், செய்யுளியல், 211)

பெருங் காப்பியங்களும் இத்தகைய பெரும் பாட்டுக்களும் இயற்றுகின்ற பெரும்புலவர் இவ்வாறு அகன்று பொருள் முடிய வைத்தல் உயர்ச்சியடைந்த எல்லா மொழிகளிலுங் காணப்படும். ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான மில்டன் (Milton) என்பவரும் இவ்வாறே தம்முடைய செய்யுட்களில் அகன்று பொருள் முடியவைத்தல் கண்டு கொள்க.


5. முல்லைப்பாட்டின் மேல் நச்சினார்க்கினியருரை

இனி, இதுவே 'மாட்டு' என்னுஞ் செய்யுளுறுப்பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மாராதல், பின்னேயிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம். மேலும் நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞானயோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட் பொருளை அணுகவைத்துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக வைத்து உரைப்பது அ·து அன்றாம் என்பது கடைப்பிடிக்க. அற்றன்று, நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், அவர் எவ்வளவு தான் சிறந்த உரை உரைப்பினும் அது செய்யுட்பொருளைக் கௌவிக் கொண்டு செல்லாமல் வேறுபடுமாயின், அது கொள்ளற்பாலதன்று என மறுக்க. செய்யுளுக்கு இசைய உரை யெழுதுதல் வேண்டுமேயன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டுமென்றல் "முடிக்குத் தக்க தலைசெய்து கொள்வேம்" என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையும் சிதற வைத்துப் பாடினாராகலின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்ஙனம் பொருளுரைத்துக் கொண்டார் என்னமோ வெனின்; அறியாது கடாயினாய், உலகவியற்கையும், மக்களியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ்வாறு ஓரொழுங்கு மின்றிப் பாடினாரென்றல் உலகில் எங்குங் காணப்படாமையானும், அது நல்லிசைப் புலமை ஆகாமை யானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க.

அற்றாயின், மிக்க செந்தமிழ் நூற் புலமையும் நுணுகிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இணங்காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒரு பக்கமும் உரை ஒருபக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னே யிருந்த நச்சினார்க்கினியர், வடமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப்புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச்சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்துமிடங்களிலெல்லாம் ஏற்றுக் கோடற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஓரோவிடங்களில் நலிந்துரை எழுதுதல் பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்துகின்றாம். இனி இம் முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேறொரு புத்துரை பின்னர் எழுதுகின்றாம். அங்கு அதனைக் கண்டுகொள்க.


6. பாட்டின் வரலாறு

இனித், திருமுருகாற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்தமையால், இம்முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப்படவில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்று துணியப்படும். இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற் பொருட்டுச் சென்றபோது, அவன்றன் மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும், அவன் அவ் வரசரையெல்லாம் வென்று தான் சொன்னவண்ணங் கார்காலத் துவக்கத்தில் மீண்டு வந்தமையுங் கண்டு நப்பூதனார் இதனைப் பாடினாரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர் நக்கீரனார், நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச்,

"செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோரென
முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் செர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை"

என்று கூறுதலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்க.

வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக்காலத் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின் 1 வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற தலைவன் திரும்பி மனையாள்பால் வந்து சேர்தற்குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலைவியின் முல்லையழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம்முல்லைப்பாட் டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர் மேற்செல்லத், தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்துகொள்க. வேனிற் காலத்திற் பெரும்போர் துவங்கி நடைபெறுகையில் வேனில் கழிந்து கார்காலந் தோன்றியதாக இருபடை மக்களும் அக்காலங் கழியுந் துணையும் போர் விட்டிருந்து, மறித்துங் கூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவாராகலின், அக்காலத்திலே அரசர் தம் மனைக்கு மீண்டு வந்து தங்கிப் பின்னருங் கூதிர் காலத்திலே போரை நச்சிப் போவது வழக்கமாகும் என்க.

இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத பேராண்மை வாய்ந்தவன் என்பது புறநானூற்றில் அவன் பாடிய ' நகுதக்கனரே' என்னுஞ் செய்யுளால் இனிது விளங்கலானும், தமிழ்ப்புலவர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளப்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலியவற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற்புடைமனைவியையுஞ் சிறப்பித்துப் புலவர்பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப் பொருளழுக்கம் பயின்று வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சுட்டிச் சொல்லப்படமாட்டாதென்பதை முன்னரே காட்டினாம். இங்ஙனமே நெடுநல்வாடை யுள்ளுந் தலைவன் பெயர் குறித்துச் சொல்லப்படாமை காண்க.

இனி, இச்செய்யுள் இல்லோன் றலைவனாக வைத்துப் புனைந்து கட்டி இயற்றப்பட்டதென உரை கூறினாருமுளர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும்பெருந் தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறுங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என்றற்கு அக்காலத்து இயற்றப்பட்ட நூல்களே சான்றாமாகலின், அவர் கூறியது பொருந்தா வுரை என்க. அற்றாயின், இறையனார்களவியலுரையில் இல்லோன் தலைவனாக வரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென்னையெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறிவுறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதே யல்லாமல், அக்காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்பதூஉம் அதனாற் பெறப்பட்டதில்லையென்றொழிக.

செய்யுட்பொருள் நிகழும் இடம் 89 ஆவது அடியிற் காண்க

இனிப், பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல்லான் மலிந்த முல்லைநிலக் காட்டில் மிகவும் அழகிதாகக் கட்டப்பட்ட எழுநிலை மாடமாகும். பரிய மரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் பயப்பவுங், காட்டுக் கோழிகள் பேட்டுடனுங் குஞ்சுடனும் முல்லைக்கொடிகள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளினங்கள் செய்யும் ஓசையன்றி வேற்றொலி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் முல்லைக்காடு காதல் இன்பம் நுகருந் தலைமக்கட்குக் கழிபெருஞ்சுவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழைய நாளிற் பெருஞ் செல்வ வளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம்.

(24 - 79) அடிகாறுங் காண்க

இனித், தலைமகளைப் பிரிந்து வினைமுடிக்கப் போன தலைமகன் இருக்கும் இடம்: பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணாயிருக்கும் முல்லைக்காட்டிற் பாடி வீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தம் நகரத்திற்குக் காவலாக மதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி, அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடுகளையுங் காவலரணாக வைப்பர். இவ்வாறு சமைக்கப்பட்ட பகைவரது காட்டிற் சென்று பாட்டுடைத்தலைவன் பாசறை யிலிருக்கும் இருப்புச் சொல்லப்படுகின்றது.

செய்யுட்பொருள் நிகழுங்காலம் (5 - 6) அடிகளைக் காண்க

இனித், தலைமகள் முல்லைநிலத்து மாளிகையில் இருக்குங்காலங் கார்காலத்தில் மாலைப்பொழுதாகும். கார்காலத்து மழை பொழிந்த முல்லைக்கானம் மரஞ்செடிகொடிகளில் இலைகள் நீரைத் துளிப்பப், பறவைகள் ஆணும் பெண்ணுமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஒடுங்கிக் கிடப்ப, வானத்திற் கரியமுகில்கள் பரவி எங்கும் மப்பும் மாசியுமாய் இருப்ப, அதனொடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழைக்காலத்தின் இருண்ட இயல்பை மிகுதிப் படுத்தித் தோன்றும் போது, தனியளாய் இருக்குந் தலைவிக்கு ஆற்றாமை மிகுதலுங் கணவன் கற்பித்த சொற்றவறாமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்ஙனம் இருப்போளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டு வருதலும் போல்வன எல்லாம் இசைவாய் நடைபெறுதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க.

50 ஆவது அடியைக் காண்க

இனித், தலைமகன் பாசறைவீட்டில் இருக்குங்காலம் வேனிற்காலத்து இறுதி நாளில் இடையாமம் என்க. வேனிற்காலத்துப் பகைவயிற் பிரிந்த தலைமகன், வெஞ்சுடர் வெப்பந் தீர நால்வகைப் படையும் நீரும் நிழலும் பெறும்பொருட்டுக் கான்யாறு ஓடும் (24 ஆவது அடி) காட்டில் தங்கிப் பகைவரொடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப்பாட்டில் அவன் பெரும்பான்மையும் போர்வினை முடித்து அவ்வேனிற்காலத்தின் கடை நாள் இரவிற் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றைநாள் தொடங்குங் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் மாலைப் பொழுதில் மீண்டுந் தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார், "கூதிர்வேனில் என்றிரு பாசறைக், காதலின் ஒன்றியக் கண்ணிய மரபினும்" என்பதனாற் குளிர் காலத்துப் பாசறையும் வேனிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்படுதலானுந், தலைமகட்குக் கார்காலங் குறித்துவந்த தலைமகன் அது கண்ட வளவானே தான் எடுத்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம்பாடாகலானும், இச்செய்யுள் செய்கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாகலானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இருபடை மக்களும் போர்விட்டிருத்தலே உலகவியற்கையகலானும் அவர் பாசறையிருப்பிற்குக் கார்காலமும் உரித்தென்றது பொருந்தாதென மறுக்க, எடுத்தவினை முடியாதாயின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்றறிக.

  1. "கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
    காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்" - புறத்திணையியல் 21



7. முல்லைப்பாட்டு


நனந்தலை யுலகம் வளைஇ நேமியடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்,
பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி -5
பெரும்புயல் பொழிந்த சிறுபுன் மாலை,
யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது -10
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்,
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் "கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர -15
வின்னே வருகுவர் தாய" ரென்போ
ணன்னநர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது, நீநின் -20
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப் பக்;
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி -25
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி,
யுவலைக் கூரை யழுகிய தெருவிற்
கவலை முற்றங் காவ நின்ற -30
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுளை மருப்பிற்றங் கையிடை கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் -35
கல்லா வினைஞர் கவளங் கைப்பக்,
கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்,
கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் -40
பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவில் லரண மரணமாக,
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு,
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் -45
திரவுபகற் செய்யுந் திண்பிடி யள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
நெடுநா வெண்மணி1 நிழத்திய2 நடுநா, -50
ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்,
பொழுதளந் தறியும் பொய்யா மாக்க -55
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
"யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்" தென்றிசைப்ப,
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து -60
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு,
ளுடம்பி நுரைக்கு முரையா நாவிற் -65
படம்புகு மிலேச்ச ருழையராக,
மண்டமர் நசையடு கண்படை பெறாஅ,
தெடுத்தெறி யெ·கம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் -70
தேம்பாய் கண்ணி நவ்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யற்றி யருகை -75
முடியடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை,
யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து, -80
நெடுஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல -85
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ,
ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர்
வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தாநையடு -90
விசயம் வெல்கொடி யுயர், வலனேர்பு
வயிரும் வளையு மார்ப்ப, வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்,
கோடற் குவிமுகை யங்கை யவிழத், -95
தோடார் தோன்றி குருதி பூப்பக்,
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையடு மாடமா னுகள,
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் -100
முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.


  1. 'ஒண்மணி' என்பதும் பாடம்.
  2. 'நிழற்றிய' எனவும் பாடம் உண்டு; ஆனால் அது பொருந்தாது; ஓசையடங்குதல் எனப் பொருள்படும் ஈண்டைக்கு 'நிழத்திய' என்பதே பொருத்தமாம். 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருள்படும் வேறு ஒரு சொல்லாம்.



8. பொருட்பாகுபாடு

(1-6) கார்காலம் மாலைப்பொழுது
கார்காலம் இப்போதுதான் தொடங்கியதாகலின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. 'பெரும் பெயல், என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற்பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்னுஞ் சொல்லுவர். இங்ஙனம் முதற்பெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிய சொல்லப்பட்டது. தலைவன் குறித்துப் போன கார்காலம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைந்து மயங்கி இருத்தலும், அவ்வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சொல்லப்படுதலின், அவற்றிற்கு இசைந்த மாலைப்பொழுதை முதலிற் கூறினார் என்றறிக.

(7-24) தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும்

வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வந்தும் அவன் வந்திலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தே யுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந் தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக்கொட்டிலில் நின்ற ஓர் இடைப்பெண், புல் மேயப்போன தாய் இன்னும் வராமையால் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கன்றுகளைப் பார்த்து ' நீங்கள் வருந்தாதீர்கள், நுங்கள் தாய்மார் கோவலரால் ஓட்டப்பட்டு இப்பொழுதே வந்துவிடுவர்' என்று சொல்லிய நற்சொல்லை அம்முதுபெண்டிர் கேட்டு வந்து, "அன்னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந் தறுவாயில் அவன் படைமறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல்லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர்வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தாதே" என்று அம் முதுபெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்துகின்றாள்.

(24-78) பாட்டின் பொருட்காட்சி தலைமகன் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது;
(24-28) பாசறையின் அமைப்பு

இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ் செடிகளையும் பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடிவீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது.

(25-79) பாடிவீட்டினுள் அமைதிகளுந், தலைமகனுடைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடிவீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குந் தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணாம, அவற்றினால் நெற்றியைத் துடைத்துக் கொண்டுங், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பறிக் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியும் கவளம் ஊட்டுகின்றார்கள்.

இனி, அப்பாடி வீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்களுக்கு இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு சமைக்கப்பட்டதையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப்புட்டிலை அதில் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களை யெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத்துச் செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை ஊன்றி, அவற்றொடு படல்களை நிரைத்து வளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக்காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலநிறமுடைய மதில் திரையை வளைத்துச் செய்த வீட்டின் வைப்புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத்திளைய பெண்கள் கச்சிலே கட்டப்பட்ட திண்ணிய வாளினை உடையராய் நெய்யைக் கக்குகின்ற திரிக் குழாயினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின்சுடர் குறையுந்தோறுந் திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப் போன நடுயாமத்தில் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்ஙனம் நடுயாமம் ஆதலும், பொழுது அளந்தறிவோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வழ்த்ஹ்டிக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகைவட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலிவிட்டு அழகிதாக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற் போய்ப் படுக்கையில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனந் தலைவன் பள்ளி கொள்ளும் உள்ளறையின் முன்திரைக்குப் புறத்தேயுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் ஊமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நாளைக்குச் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங்கொள்ளானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட்டியுந் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்து போன போர்மறவரை நினைந்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும், மிகுந்த இரக்கம் உடையோனாய் ஒருகையை அமளி மேல்வைத்து ஒரு கையினால் முடியைத் தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றான்.

(72-80) தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும்

இனி, இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலையோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச் சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன் பாசறை வீட்டில் இனிது துயில் கொண்டிருக்கின்றான்.

(80-88) பாட்டின் பொருட்காட்சி துயரமுந் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குந் தலைமகளின் முல்லைக்காட்டு மாளிகைக்குத் திரும்பவும் மாறுகின்றது.

இனி, இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணாத தலைமகள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சொற் கேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையுங் கேளாமற் வருந்துகின்றவள், "இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுங்கொலோ" என்று நெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக் கொண்டுஞ், சுழன்று விழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றாமை யுணர்வும் அதனைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்று சேர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் பெருமூச்செறிந்து நடுங்கியும், அந்நடுக்கத்தால் உடம்பிற் செறித்த அணிகலங்கள் சிறிது சுழலப் பெற்றும், ஏழடுக்குமாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலே மழை சொரியும் ஓசை காதில் விழ இம்மாலைக் காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றாள்'

(89 - முதல் கடைசிவரையில்) தலைவன் மீண்டு வருதலு,ம், நாட்டின் மழைக்காலச் சிறப்பும்

இனித், தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்து கொண்ட பெரும் படையடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊது கொம்புஞ் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீலமலர்களைப் பூக்கவுங், கொன்றை மரங்கள் பொன்போல் மலரவுங், காந்தள் அழகிய கைபோல் விரியவுந், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரகங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவுங், கார்காலத்து முற்றுங் காயினையுடைய வள்ளிக்காடு பின்போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஓசையானது ஆற்றிக் கொண்டு அங்ஙனங் கிடக்குந் தலைமகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது என்க.


9. பாட்டின் பொருள் நலம் வியத்தல்

கடலில் முகந்த நீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிலிற்கு, மாவலி வார்த்த நீர் ஒழுகுங் கையுடனே ஓங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறியது மனனுணர்விற்கு இசைந்த உவமையாகப் பொருந்தி நிற்கின்றது. நிலத்தில் ஊன்றிய வில்லிலே அம்புறாத் துணியைத் தொங்கவிட்டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முக்கோலிற் றொங்கவிட்டிருப்பதை உவமை கூறியது மிகவும் பொருத்தமாக விருக்கின்றது. இதனால் இவ்வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடையர் என்பதுந், துறவொழுக்கத்தில் வேட்கையுடைய ரென்பதுங் குறிப்பாக அறியப்படும்.

மெய்காப்பாளர் பாடிவீட்டில் இடையாமத்திலே தூக்கமயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனலிக் கொடி படர்ந்த தூறு வாடைக்காற்றில் அசைவது போல் இருக்கின்றது என்பதனாலுங், காயாமலர் கறுப்பாகவுங், கொன்றை பொன்னிறமாகவுந், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதனாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்றைத் தாங்கண்டவாறே சொல்வதிலுந் திறமை மிக்குடையரென்பது இனிது விளங்கும்.

இன்னும், முதுபெண்டிர் நற்சொற் கேட்கும்பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய் நாழி நெல்லும் முல்லையுந் தூவி வணங்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைப்பெண் ஆன்கன்றுகட்குத் தேற்தல் சொல்லுதலுங், காட்டிலே பாடிவீடு அமைத்தலும், அப்பாடி வீட்டினுள் நாற்சந்தி கூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்லினால் வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட்டிருத்தலும், அவ்வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதிரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில் அடங்கிவிட்டதும், மெய்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிதலும், பொழுதறிவோர் கொப்பரை நீரில் இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்து வந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றலும், யவனர்களாற் புலிச்சங்கிலி விட்டு மிக அழகியதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குக் காட்டச் சென்று அரசன் பள்ளிகொண்டிருத்தலும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறுநாட்போரை விரும்பும் உள்ளத்தோடு உறக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிந்த அரிய போர்மறவரையும் நினைந்து வருந்தி ஒரு கையை மெத்தையின் மேலும் மற்று ஒரு கையைத் தலையின் கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்கு மாளிகையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக் கொண்டு பாவையின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல்வாயிலிலே வந்துவிழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்திருத்தலும், அப்போது தலைவன் தன்றேரினை விரைவாகச் செலுத்திக் கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றது போலவும், ஓவியம் எழுதி நங்கண்ணெதிரே காட்டுகின்றது போலவும் மிக்க அழகுடன் சொல்லப்படுதல் காண்க.

இனி, இவ் வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப் புனைந்துரைக்கின்றா ரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்றாகும். ஆயினும், இவரையழிந்த ஏனைப்புலவ ரெல்லரும் நம் உள்ளத்தின் கற்பனையுணர்வு தளர்வடையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள்களையே விரித்துரைக்கின்றனர் ; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற் சுவைப்படாத ஓரொவொன்றினையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார் ; பாடிவீடு அமைக்கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சுருக்கிக் கூறியிருந்தால் இப் பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச் சில பாட்டுக்களுக்கு இம் முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒரு சிறிது தாழ்ந்ததுபோலுமென அவை தம்மை ஒப்பு நோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுந் தோன்றும். என்றாலும் இப் பாட்டின்கட் கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கின்றமை காண்மின்!


10. பாவும் பாட்டின் நடையும்

இனி, இச் செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப்பட்டதொன்றாம். இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சீரும் இரண்டு அசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புலவன் தான் கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வகவற்பாவினும் இசைவானது பிறிதில்லை. எதுகை யின்பமும் மோனையின்பமுந் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றை மொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ் வெதுகைநயம் மோனைநயங்களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப் புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே சொற்கள் தொடர்கள் நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாராயினர். பொருளழுங்கு முதிரத் தங் கருத்துக்களை இணக்கி வைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளியவாய்த் தோன்றும் எதுகை மோனைகளையே அமைப்பர்; எதுகை மோனைகளுக்கு ஏற்பப் பொருள் பொருத்துவாரல்லர்.

பிற்காலத்தில் அகவற்பாப் பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடியிலும் முதற்சீரும் மூன்றாஞ் சீரும் எதுகை பொருந்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை இணையக்கொளுவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதி வரையில் ஒரே ஓசையாய் நடந்து கேட்போர்க்கு வெறுப்புணர்வினைத் தோற்றுவியா நிற்கின்றன.

மற்றுப், பண்டைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இணங்க ஓசை மாறி மாறி நடந்து கேட்பார்க்குக் கழிபேர் உவப்புணர்வினைப் பயந்து நிற்கின்றன. இவ் வாசிரியர் நப்பூதனார், சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்தவைத்தும், வேறுசிலவற்றில் முதலும் நான்கும் எதுகை பொருந்தச் செய்தும், மற்றுஞ் சிலஅடிகள் இரண்டடியாய் முதற்சீரில் அவ்வாறு எதுகை பொருந்தக் கொளுவியும், பின்னுஞ் சிலவற்றில் அதுதானுமில்லாமல் யாத்தும் இப்பாட்டினைப் பலவகையால் ஓசையின்பம் மாறி மாறி வரத் தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இணங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும், இடையிடையே தெற்றுப்பட்டுஞ் செல்கின்றது; பாடிவீடு இயற்றும் இடத்தில்மோசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையினுள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசை மெதுவாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்து வருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி ஆராய்ந்து உணர்ந்துகொள்க.

இனி, இப் பாட்டினுளின் இடைச்சொற்களையும் வேற்றுமையுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக்குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் 'நேமி' 'கோவலர்' 'படிவம்' 'கண்டம்' 'படம்' 'கணம்' 'சிந்தித்து' 'விசயம்' 'அஞ்சனம்' என்னும் ஒன்பதும் வடசொற்கள் ; 'யவனர்' 'மிலேச்சர்' இரண்டும் திசைச்சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேதாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிறசொற்கள் புகுந்தன என்றறிக; ஏனைய வெல்லாந் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்.

இனி, இம் முல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இ·து ஏனையவற்றைப்போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை யென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப்படையில் வந்த,

"துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை"

என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது, மதுரைக்காஞ்சியிற் போந்த,

"மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப"

என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம் முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இ·து ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாயிருக்கின்றது. ஏனைப் பாட்டுக்களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றோம். இப்பாட்டின் நடையினால் இதனை யியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையுந், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யத்தமையானுந், துறவோர் கருவிகளை உவமை எடுத்துக்காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும்.

இப்பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள்

இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன. இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங் கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற்சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர். அரசன் போர்மேற் செல்லும் போது பெண்களும் வாள்வரிந்த கச்சுடனே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இங்ஙனம் அரசரோடு உடன் சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கம்மவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவகசிந்தாமணியிலுந் "தம்புலன்களால் யவனர் தாட்படுத்த பொறியே" என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமை காண்க. மிலேச்ச தேயத்திலுள்ள ஊமைகளை வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறை அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லாரை அங்கு வைப்பின் அரசன் பல்ளியறைக்கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளியிடுவரெனவும், ஒருவரோடொருவர் சிற்சில பொழுது கூடி முணுமுணுவென்று பேசுதலுஞ் செய்வாராதலால் அதனால் அரசன் துயில் கெடுவுமெனவுங் கருதிப்போலும் ஊமைகள் அங்ஙனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாராயினர்! இன்னும் ஏழடுக்கு மாளிகை முதலிய உயர்ந்த கட்டிடங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும்பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிறவளங்களும் பழந்தமிழ்நாட்டு மன்னர் உடையராய் இருந்தனரென்பதும் பிறவும் இப்பாட்டினால் இனிது விளங்குகின்றன.

11. விளக்க உரைக்குறிப்புகள்

இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் 'மாட்டு' என்னும் இலக்கணமாமென அதனியல்பைப் பிறழ உணர்ந்து வழுவினா ரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப் பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றோம்.

(1-6 அடிகள்) பெரிய கையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுந்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த மாலைக்காலம் என்க.

கரிய நிறம் பற்றியும், உலகமெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப நிமிர்ந்தமை பற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமை கூறினார். மாவலி வார்த்த நீர் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க.

நனந்தலை - அகன்ற இடம். நேமி - சக்கரம். வலம்புரி பொறித்த - வலம்புரிச் சங்கை வைத்த; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" என்றார் சீவகசிந்தாமணியிலும். 'மாதாங்கு' என்பதனை 'மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க. தடக்கை - பெரியகை; "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் - உரியியல். 24. பாடுஇமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குங் குளிர்ந்த கடல். கொடுஞ்செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரிந்தார்க்குத் துன்பம் விலைக்குஞ் சிறு பொழுதான மாலை.

(7-11) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும் மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர் நற்சொற் கேட்டுநிற்ப என்க.

அருங்கடி மூதூர் - பகைவர் அணுகுதற்கரிய காவல் அமைந்த பழைய ஊர். யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப - யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க; இவை தூவும் முல்லை மலற்றேனை நச்சி வந்தன. நாழிகொண்ட - நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ - நன்மணங் கமழும் மலர். முல்லை - முல்லைக்கொடி. அரும்பு அவிழ்அலரி - அரும்பு விரிந்த மலர். " நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்குஞ், செம்முது பெண்டிர்" என்றார் புறத்திலும், 280

(12-17) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவிற் பசிய கன்றின் வருத்தம் மிக்க சுழலுதலை நோக்கிய ஓர் இடைப்பெண்: 'கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்' என்று சொல்வோளுடைய நற்சொல்லைக் கேட்டனம் என்க.

புதிது ஈன்ற கன்று ஆதலாற் 'பசலைக்கன்று' என்றார்; 'பசலை' பசுமை என்னும் பண்படியிற் பிறந்து குழவித் தன்மையை யுணர்த்திற்று, மிக இளைய கன்று என்றபடி; "பசலை நிலவின்" என்றார் புறத்திலும்(392); நச்சினார்க்கினியர் 'வருத்தத்த யுடைத்தாகிய கன்று' என்றது கூறியது கூறலாகும். உறு துயர் - பாலுண்ணாமையால் உற்ற துன்பம்.

நடுங்கு சுவல்அசைத்த கையள் - குளிரால் நடுங்குந் தோள்களின் மேற் கட்டின கையளாய். கைய - கையிற் பிடித்த, கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக்கோல். நன்னர் நன்மொழி - நன்றாகிய நல்லமொழி, நன்மைப் பொருளையுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் இருங்கு வந்தமை "ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றானமக்கப்படும். (சொல், எச்சவியல், 64)

(18) அதனாலும், நின் தலைவன், படைத்தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர் கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தனவாதலாலும் என்க.

நல்லோர் - படையுள் நற்சொற்கேட்டதற் குரியோர். வாய்ப்புள் - வாயிற்பிறந்த நிமித்தச்சொல்.

பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண்கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச்சி கேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப்பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் 18 ஆவது அடியிலுள்ள ' நல்லோர்' என்பதனை 7 ஆவது அடியிலுள்ள 'போகி' என்னும் வினையடு கூட்டி இடர்ப்பட்டும் இப் பொருளே கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப்போன கார்ப்பருவ வரவினைக் கண்டு ஆற்றாளான தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றார் என்பது நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டதற்கு உரியோர், ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன் றாகலானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புகளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித்தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப்படுதலானும் நச்சினார்க்கினியருரை போலியுரையா மென்று மறுக்க.

(19-23) 'நின்றலைவன் பகைவர் இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந் தான் எடுத்த போர்வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின் துயரத்தை விலக்கு' என்று அவர் வற்புறுப்பவுந் தலைமகள் ஆற்றாளாய்க் கலுழ்ச்சிமிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க.

இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க்கினியர் மறுக்கின்றார். அவர் கூறிய மறுப்பின் பொருள் வருமாறு : - முல்லை என்பது கதலனைப் பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும். நப்பூதனார் இதற்கு 'முல்லைப்பாட்டு' என்று பெயரமைத்தமையால் இதன்கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம். ஆகலின், இவ் விரங்கல் ஒழுக்கம் போதரப் பொருளுரைத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகலின் இப் பாட்டுக்கு நேரே பொருள் கூறுதலாகாது; என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை வரைகின்றார்.

இனி, அவர் நிகழ்த்திய தடையினைப் போக்கியுரைக்கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது 'யான் கார்காலந் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப் பாவாய்! நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்' என்று கற்பித்தவண்ணமே, ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினள்; இ·துலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டு வந்து வற்புறுப்பவும் ஆற்றாது வருந்துந் தலைவி பின் ' நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்' என்று நெடுக நினைந்து பார்த்து 'அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது.' என்று தன்னைத் தேற்றிக் கொண்டு கிடந்தாள் என்பது 82 ஆவது அடி முதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின், இப்பாட்டின்கண் முல்லை யழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்டதென்பது அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடந்தது. அற்றன்று, முல்லையழுக்கமே பயின்று வரும் இப்பாட்டின்கட் "பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப" என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையழுக்கமே தொடர்ந்து வரும் இச்செய்யுளின் அகத்து இடையே தோன்றிய அவ்விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற்பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங்காலெல்லாம் இடைஇடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனந் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் 'அகநானூறு', 'கலித்தொகை' முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக் கிடத்தலின், இம்முல்லைப்பாட்டினிடையே வந்த அவ்வடிபற்றி ஈண்டைக் காவதொரு குற்றமுமில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இரங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும், செய்தலொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் நூலகளிற் காண்க 1 ஆற்றுவிப்பார் உள்வழி யெல்லாம் நிகழும் ஆற்றாமை 'னெய்தல்' ஆவதில்லை யாகலின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற் றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக.

பருவரல் - துன்பம், துயரம், எவ்வம் - வருத்தம். மாயோள் - வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடையவள்; "மாயோள் முன்கை யாய்தொடி" என்னும் பொருநராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி - அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த் துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட்டாதல் "புலம்பே தனிமை" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக.

(24-28) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத்தலைவர் பகைப்புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக்காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற் கோட்டைகளையும் அழித்து, முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க.

இன்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச் சென்ற வேந்தன் பாடிவீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறையமைப்பு இதன்கட் சொல்லப்பட்டதெனக்கொண்டு சில எழுதினாரும் உளர். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தாவுரையாம் என்க.

கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டியாறு சூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்நாறு - நீளமணங்கமழும்; இவ் அடை மொழியைப் 'பைம்புதல்' என்பதனொடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - அழித்து. புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை, 'இடுமுட்புரிசை' முள் இடு புரிசை என மாற்றுக; காட்ட - காட்டின் கண் உள்ள, இது முள்ளுக்கு அடை; புரிசை - மதில். 'ஏமம்உறு' இடைக்குறைத்து ஏமுறு எனவாயின; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி - ஒலிக்கின்ற நீரையுடைய கடல்.

(29-36) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாக நின்ற மதயானை, கரும்பொடு கதிரும் நெருங்கக் கட்டிய அதிமதுரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது நெற்றியைத் துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்றதாகப் பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற்பல்காற் கூறிக் கவளம் ஊட்ட என்க.

உவலைக் கூரை - தழைகள் வேய்ந்த கூரை ; பாடி வீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை. ஒழுகிய தெரு - இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒழுங்காக இருக்கும் தெருக்கள். கவலை - நாற்சந்தி கூடும் இடம். பாடியினுட் புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போகல் வேண்டுதலின், இங்கே யானை காவலாக நிறுத்தப்பட்டது. தேம்படு கவுள - மதநீர் ஒழுகுங் கன்னத்தினையுடைய. ஓங்குநிலைக் கரும்பு - உயர்ந்து வளர்ந்து நிற்றலையுடைய கரும்பு. கதிர் மிடைந்து யாத்த - நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய. வயல் விளை - வயலில் விளைந்த. இன்குளகு - அதிமதுரத் தழை. அயில்நுனை - கூரிய முனை. கவைமுள் கருவி - கவர்த்த அல்லது பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் - யானை பழக்குஞ் சொற்களையன்றி வேறு வடசொற்களைக் கல்லாத இளைஞர். கைப்ப - ஊட்ட.

(37-44) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன்கட் காவியுடையைத் தொங்கவிட்டு வைத்தாற்போலப், போரிற் பின்னிடாமைக்கு ஏதுவான வலிய வில்லில் தூணியைத் தொங்கவிட்டுப் பின் அவ்விற்களை யெல்லாம் படங்குக்காக ஊன்றிப், பின்னர் அவை தம்மை யெல்லாங் கயிற்றால் வளைத்துக் கட்டிச் செய்த இருக்கையிற் குந்தங்கோல்களை நட்டு, அவற்றொடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய வளைந்த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வேறுவேறான பல்பெரும் படைகளின் நடுவில், நீண்ட குத்துக் கோல்களோடு சேர்த்துச் செய்த பலநிறம் வாய்ந்த மதிட்டிரையை வளைத்து வேறோர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லோரும் உடன்பட்டுச் செய்து என்க.

கல் - காவிக்கல். கல்தோய்த்து உடுத்த - துகிலைக் காவிக்கற் சாயத்தில் தோய்த்து. படிவம் - தவவேடம்; "பல்புகழ் நிறுத்த படிமையோனே" என்னும் பனம்பாரனார் பாயிரச் செய்யுளிலும் இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. அசைநிலை - தங்க வைத்த தன்மை; என்றது காவியுடையை. கடுப்ப - ஒப்ப; இச்சொல் மெய்உவமத்தின் கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூணி நாற்றி - அம்பறாப் புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிளவிகள். பூந்தலைக் குந்தம் - பூச்செதுக்கின தலையையுடைய கைவேல். கிடுகு - படல். நிரைத்து - வரிசையாக வைத்து. நாப்பண் - நடு. காழ் - கம்பு; கோல். கண்டம் - கூறு, கூறுபட்ட பல நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்: " நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த" என்றார் சிலப்பதிகாரத்திலும்2.

(45-49) வாளினைத் தமது கச்சிலே சேரக் கட்டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள் கெடுந்தோறுந் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக் கொளுத்த என்க.

இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த என்னுரைப்பின், 'மங்கையர்' என்னுஞ்சொல் தழுவும் வினையின்றி நின்று வற்றுமாகலின் அப்பொருள் பொருந்தாதென்க.

தொடி - கைவளை; இப்பொருட்டாதல் "கங்கணங் கைவளை யருபலந் தொடியே" என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. கூந்தல் அம் சிறுபுறத்து - கூந்தல் கிடக்கும் அழகிய சிறிய முதுகினையுடைய, என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக்கும் வலிய பிடியமைந்த ஒளியுடைய வாள். விரவு - கலந்த, சேர்ந்த; 'விரவ' எனத்திரிக்க. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; 'வரி' - நிறம் எனினுமாம். நிறத்தினையுடைய கச்சு என்க. குறுந்தொடியணிந்த முன்கையினையுங் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையுடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சையணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை - நெய்யை ஒழுக விடுந் திரிக்குழாய். நந்து தொறும் - கெடுந்தோறும்.

(50-54) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடி யேறிய சிறு தூறுகள் துவலையடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற் போலத், தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரியவென்க.

நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளிய மணி, நிழத்திய - நுணிகிய; அ·தாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ''ஓய்தல் ஆய்தல் நிகழ்த்தல் சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள" என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க. இனி 'நிழற்றல்' எனப் பாடமோதுவாருமுளர்; 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அ·தீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் ''நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலு மாகும்" என்று அ·து இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவாறென்னையெனின்; அது காப்பியத்தொடு முரணுவதாகலிற் கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரையானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழிலவிதற்குத் திரிகுறியாக அடித்துவிட்ட மணியென்றுரைப்பினும் அமையும். 'பூத்த ஆடு அதிரற்கொடி' எனச் சொற்களை மாற்றிக் கூட்டுக. படார் - சிறுதூறு. சிதர் - திவலை. துகில்முடித்துப் போர்த்த - கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக் கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது; "மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர்" என்னும் பரிபாடற் பத்தாஞ் செய்யுளடிகள் ஈண்டு ஒப்பிடற்பாலன. ஓங்குநடைப் பெருமூதாளர் - உயர்ந்த நல்லொழுக்கத்தினை யுடைய மெய்காப்பாளர்; தம் அரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல்களுக்கு இடங் கொடாது தம் அரசர் மாட்டு மெய்யழுக்க முடையராதல் பற்றி 'ஓங்குநடை' யுடையரெனச் சிறந்தெடுத்துக் கூறினார்; 'பெருமூதாளர்' என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற்றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்பரென்பதூஉம் பெற்றாம்.

(55-58) பொழுதினை இத்துணையென்று வரம்பறுத்து உணரும் பொழுதறி மக்கள், அரசனைத் தொழுது கொண்டே காணுங்கையினராய், விளங்க வாழ்த்தி 'நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே! நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க.

தம் அரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார் போலாது, என்றுந் தம் அரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யா மாக்கள்' என்றும், பொழுதளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் பொழுதறியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற்றொடரை 'மாக்கள் பொழுதளந்தறியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிநீர் வையகம் - வீசுகின்ற கடல் நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர் - சிறிய நீர்; இது நாழிகை வட்டிலினுட் கசிந்த நீர். 'குறுநீர்' என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க்கினிய ருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அது பொருந்தாதென விடுக்க. கன்னல் - நாழிகைவட்டில்; இ·திப் பொருட்டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகை வட்டில்" என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. "குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர்" என்றார் மணிமேகலையிலும் (7, 64-65). ஒரு கடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளையுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப் புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.

(59-66) உடையினையும் மெய்ப்பையினையுந் தோற்றத்தினையும் யாக்கையினையுமுடைய யவனர், புலிச் சங்கிலி விட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணிவிளக்கினை ஒளிரவைத்து வலிய கயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர் அருகே காவலிருப்பரென்க.

மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளை இயஉடை - குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்து வீங்கு செறிவுஉடை - மடங்கிப் புடைக்க நெருங்குதலுறக் கட்டின உடை. மெய்ப்பை - சட்டை. வெருவருந் தோற்றம் - காண்பார்க்கு அச்சம் வருவதற்கேதுவான தோற்றம். வலிபுணர்யாக்கை - வலிமைகூடிய உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர்( Ionians). மணிவிளக்கம் - பளிங்கு விளக்கு; மணிபோதலிற் பளிங்கும் மணி எனப்பட்டது; "மணியிற் றிகழ்தரு" என்பதற்குப் பரிமேலழகரும் 'பளிக்கு மணி' என்று பொருளுரைத்தார். திருக்குறள் 1273. எழினி - திரை. 'உடம்பின் உரைக்கும் நாவினுரையா' என மாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்க மாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர், பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின் வழியாகப் பரத நாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் "மிலேச்சர் ஆரியர்" எனப் போந்தமை காண்க.

(67-79) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானைகளையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்றுவிழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக் கொண்டு அப்புகள் அழுந்தினமையாற் செவியைச் சாய்த்துக் கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின் மேல் வைத்து மற்றொரு கையால் முடியைத் தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக் கழித்துப் பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன் வலிய விரலாலே அவர் தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல்வெற்றியினை நிலைநிறுத்திப், பின்னாளில் தன் மனைவியைக் காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க.

'மண்டு' என்பதனை அமர் என்பதனோடாதல் நசையென்பதனோடாதல் கூட்டி மிக்குச் செல்லும் போர், மிக்குச் செல்லும் நசை என்க. பாம்பு பதைப்பு அன்ன - அடியுண்ட பாம்பின் துடிப்பை யத்த ; இது வெட்டுண்டு விழுந்து துடிக்கும் யானைத் தும்பிக்கைக்கு உவமம். தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த்தல் - செஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் 'சிறந்ததிதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப" என்னும் புறப்பொருள் வெண்பா மாலை யுரையிலுங் காண்க. கடகம் - கங்கணம், தொடி, வளை; இவ் அணிகலன் ஆண்மக்களும் அணிதலுண்டென்பது 'கண்ணெரி தவழ அவ்ண்கை மணிநகு கடகம் எற்றா" என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடியிற் சேர்த்தி என்றார். நகைதாழ் கண்ணி - ஒளி தங்கு மாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சி மாலையை. அரசு இருந்து பனிகும் முரசு முழங்கு பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும்.

(80-103) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது. ஆண்டுக் காண்க.

நிறைதபு புலம்பு - நிறை கெடுதற்கு ஏதுவான தனிமை. "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை" என்றார் கலியிலும். ஏஉறுமஞ்ஞை - அம்பு தைத்த மயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய - இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை - வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன் கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை - கூடல்வாய்; கூரையின் இருபகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரள் அருவி - பெரிது திரண்டு விழும் அருவிநீர். இன்பல் இமிழ் இசை - இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள் - செவியிற் கேட்பவளாய்க் கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின - உட்செவி நிரம்ப ஒலித்தன. பிறர் வேண்டுபுலம் - பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர் - ஊதுகொம்பு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேன் வளர்தலின் 'அயிரகாயா' என்றார். அஞ்சனம் - மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன்கால - பொன் நிறமான பூவைத் தர. முறிஇணர் - தளிருங் கொத்தும். தோடுஆர் - இதழ் நிறைந்த; 'தொகுதி நிறைந்த' என உரைப்பினுமாம். கானம் நந்திய செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லை நிலத்தின் வழியிலே. வானம் வாய்த்த - வேண்டும் பருவத்து மழை பெய்யப்பெற்ற. வாங்கு கதிர்வரகு - வளைந்த கதிரினையுடைய வரகு. திரிமறுப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினை யடைய புல்வாய்க் கலைகள். எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்கள் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண்புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித் திங்கள் முதலில்; இதற்கு நச்சினார்க்கினியர் முன் பனிக்காலம் என்று பொருள் கொண்டு இப்பாட்டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காதவாறு உரை கூறினார். பிறக்கு - பின். துனைபரி துரக்கும் - விரைந்து செல்லுங் குதிரையை மேலுந் தூண்டிச் செலுத்தும். வினை விளங்கு - போர்வினைக்கண் தமதுதிறம் மிக்கு விளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை.
  1. திருச்சிற்றம்பலக் கோவையாரில், "ஆரம்பரந்து திரைபொரும்" என்னுஞ் செய்யுள்முதல் "மூவறழீஇய அருண்முதலோன்" என்னுஞ் செய்யுள் ஈறாகத் தலைமகள் யாரும் இல் ஒரு சிறைத் தனியளாயிருந்து கடலை நோக்கியும் அன்னம் முதலியவற்றை நோக்கியும் வருந்திக் கூறிய பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலால் 'திணைநெய்தல்' என்று பேராசிரியர் "மூவறழீஇய" என்னுஞ் செய்யுளுரையிற் கூறியதூஉம் உற்று நோக்கற்பாலது.
  2. நீர்படைக்காதை, 151 ஆம் அடி.

12. வினை முடிவு

எழிலி பெரும்புயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், "யாம் ஊர் மருங்கிற்போகி நெல்லொடு முல்லையுந் தூஉய்த் தொழுதுநிற்ப, ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி ' நுந்தாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர்' என்போள் நன்மொழி கேட்டனம் அதனாலும், நின் தலைவர் திறையராய் வினைமுடித்து வருவது வாய்வது, மாயோய்! நீ நின் எவ்வங் களை எனக் காட்டவுங் காட்டவுங் கலுழ்ந்து கண்முத்து உறைப்ப ஆற்றாது வருந்துந் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுந் தலைவனைத் தன் மருங்கிற் காணாளாய் மேலும் வருந்திப், பின் தன் நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப்படுத்தித், தான் தனியளாய் இருக்கும் நிலைமையினை நீளநினைந்து பார்த்து, " நாம் நங் காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை" எனத்தேற்றியும், ஓடுவளை திருத்தியும், மையல்கொண்டும், உயிர்த்தும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்சுடர் அழல, மாடத்து முடங்கிறைச் சொரிதரும் அருவி ஓர்ப்பனள் கிடந்தோள் செவிநிறைய ஆலின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுந்தேர் பூண்டமா என்று வினைமுடிவு செய்க.

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

[எண் : பாட்டு வரி எண்] அகம் - உள்வீடு, 44; பிங்கலந்தை

அங்கை- அழகியகை; அகம்கை - உள்ளங்கை, 15; தொல்காப்பியம், எழுத்தியல், 315

அசை நிலை - தங்கவைத்த தன்மை, 38; 'அசைதலடலுந் தங்கலு முரித்தே' திவாகரம்
அசைத்த - கட்டிய, 14; பிங்.

அஞ்சனம்(வடசொல்) - மை: மைபோன்ற நீலமலர், 13

அஞ்செவி - அகம் செவி - உட்செவி, 89

அதிரல் - மோசி மல்லிகை, 51; சிலப்பதிகார உரை, 13, 156; 'புனலி' என்பர்
நச்சினார்க்கினியர்

அமர் - போர், 67

அயிர் - நுண்மணல், 92; திவாகரம்

அயில் - கூர்மை, 34; திவாகரம்

அரசு - அரசன், 79

அரணம் - காவலான இடம், 42; காவல், 4 ஆம் பரிபாடலுரை

அருங்கடி - அரிய காவல், 7

அருப்பம் - அரண், 26; 'வியலருப்பம்' என்புழியும் இப்பொருட்டாயிற்று, புறநா. 17

அலமரல் - சுழலல், 13; தொல்காப்பியம் உயிரியல் 13

அலரி - பூ, 10

அவிழ் - மலர்ந்த, 10

அழல - எரிய, 85

அன்ன - ஒத்த, 70

ஆய்மகள் - இடைப்பெண், 14

ஆர் - நிறந்த, 96; திவாகரம்

ஆர்ப்ப - பேரொலி செய்ய, 8, 92; 'ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி' என்பர் திவாகரர்

ஆலின - ஒலித்தன, 89; திவாகரம்; புறநானூற்றுரை, 128

ஆற்றுப்படுத்த - வழிச் செலுத்திய, 81

இசை - ஒலி, 7, 88

இசைப்ப - சொல்ல, 58

இணர் - கொத்து, 94; திவாகரம்

இமிழ் - முழங்கும், 4, 88; 'ஏறுமாறிமிழிப்ப' என்பதனுரையைக் காண்க, பரிபாடல், 22

இரலை - ஆண்மான், புல்வாய், 99; தொல்., மரபியல், 44

இருக்கை - இருப்பிடம், 40

இல் - வீடு, பாடிவீடு, 62

இழை - அணிகலன், 84; திவாகரம்

இன்குளகு - இனிய அதிமதுரத்தழை, 33

இன்னே - இப்பொழுதே, 16

இனம் - கூட்டம், 8; 'சுறவினத் தன்ன வாளோர்', புறநா., 13

இனைத்து - இவ்வளவு, 58

ஈண்டு - திரண்ட, 10; புறநா., 17

உகள - தாவ, 99; புறநானூற்றுரை, 15

உண்கண் - மையுண்ட கண், 23; புறப். வெண். உரை, பொது, 7; திருக்குறள் பரிமேலழகருரை 1091

உய்த்தர - செலுத்துதலைச் செய்ய, 'உள்' முதனிலை வினைப் பெயர், 15

உயங்கும் - வருந்தும், 74; திவாகரம்

உயரி - உயர்த்து, 91; புறநா. 56; புறப்பொருள் வெண்பா மாலை 8, 17

உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும், நெட்டுயிர்ப் பெறிந்தும், 83

உவலை - தழை, 29; பதிற்றுப்பத்து, 28

உழந்து - வருந்தி, 80; பரிபாடலுரை, 9

உழையர் - அருகிலுள்ளவர், 66; 'உழை யிருந்தான்' என்பழியும் இப் பொருட்டாதல் காண்க, திருக்குறள் 638

உள்ளியும் - நினைத்தும், 72; திருக்குறளுரை 1316

உறுதுயர் - மிக்க வருத்தம், உறுகின்ற துயர் என உரைப்பினுமாம், உறுதல் - அடைதல், 13

உறைப்ப - துளிப்ப, 23; உறை - நீர்த்துளி, திவாகரம்

எ·கம் - வேல், 68; திவாகரம்

எருக்கி - அழுத்தி, 25; பதிற்றுப்பத்து, 83; கொல்லுதல், திவாகரம்

எவ்வம் - வருத்தம், 21; எவ்வம் மானம் என்பர் புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர்; கைக்கிளை, 7

எழிலி - மேகம், 5

எழினி - திரை, 64; சிலப். 3, 109

எறிநீர் - வீசும்நீர்; கடல், 54; எறிதல் - வீசுதல், பிங்கலந்தை

ஏ - அம்பு, 84; ஏத்தொழில் - 'அம்பின்றொழில்' பரிபாடல், 18

ஏமம் - காவல், 54; திவாகரம்

ஏமுற - 'ஏமம் உற' என்பன ஏமுற என்றாயின. ஏமம் - காவல், 27; புறநானுறு, 3

ஒய்யென - விரைய, 83; ஞானாமிர்தப்பாயிரவுரை, 6; புறநா. 98

ஒழிந்தோர் - இறந்தோர், 72; 'ஈரைம் பதின்மரும்பொருது களத்தொழிய' என்றார் புறத்திலும், 2

ஒழுகிய - ஒழுங்குபட்ட, 29

ஒள் - விளங்கிய, 46; புறநா. 11

ஒற்றி - சேர்த்தி, 75; சீவகசிந்தாமணியுரை, 1746

ஓங்கு - உயர்ந்த, 53; புறநா. 13

ஓர்ப்பனள் - செவியிற் கேட்பவளாய், 88; புறநானூறு, 157; 'கருதினவளாய்' என்றுரைப்பினுமாம்.

கச்சு - முலைக்கச்சு; இரவிக்கை, 47; பிங்கலந்தை

கடகம் - கங்கணம், தொடி, வளை, 76; திவாகரம்

கடுப்ப - ஒப்ப, 38; மெய் உவமத்தின் கண் வருவது இச்சொல், தொல்காப்பியம், உவம. 15

கண்டம் (வடசொல்) - கூறுபாடு, கூறுபட்ட பல நிறத்தினையுடய மதிட்டிரை, 44; சீவகசிந்தாமணி, 64

கண்ணி - மாலை; வஞ்சிமாலை, 71, 78; திவாகரம்

கண்படை - உறக்கம், 57; திருக்குறள், 1049; பிங்கலந்தை

கருவி - பரிக்கோல்; குத்துக்கோல், தாறு, 35; படைக்கலம், திவாகரம்

கலுழ் - அழுதல், 22; திவா. கலக்கம் எனினுமாம், 6 ஆம் பரிபாடலுரையையுங் காண்க.

கவர்ந்த - கைக்கொண்ட, 10; கொள்ளை கொண்ட, புறப்பொருள் வெண்பா உரை, 2, 6

கவலை - நாற்சந்தி கூடும் இடம், 30; சந்தி, திவாகரம்; கவர்த்த வழி, புறநானூற்றுரை, 3

கவளம் - உணவு, 36; சோறு, திவாகரம்

கவுள - கன்னத்தை உடைய, 31; கவுள் - கதுப்பு; கன்னம், திவாகரம்

கவை முட்கருவி - கவர்த்த முள் உள்ள பரிக்கோல், 35; மணிமே. 18. 165, கவை - கவர், பிங்கலந்தை

களை - விலக்கு, 21; பிங்கலந்தை

கன்று - ஆன்கன்று, 12

கன்னல் - நாழிகைவட்டில், 58; திவாகரம்

காட்ட - காட்டில் உள்ள, 26

காயா - காசாஞ்செடி, 93; திவாகரம்

கால - கக்க; சொரிய; மலர, 94; திவாகரம்

காழ் - கோல், 44; திவாகரம்

கான்யாறு - காட்டியாறு, 24

கானம் - காடு, 97

கிடுகு - படல், 41

குந்தம் - கைவேல், 41; திவாகரம், புறப்பொருள் வெண்பா மாலை, 4, 7; சிறுசவளம் பெருஞ்சவளம் என்பர்
பிங்கலந்தையார்

குருதி - உதிரம், 76; திவாகரம்

குளகு - தழை, 33; 'இலைநுகர் விலங்கின் உணவு' என்பர் திவாகரர்; 'மறி குளகு உண்டன்ன' நாலடியார் 16

குறுநீர் - சிறிய நீர், 58

கூடம் - படங்கு; கூடாரம், 40; பிங்கலந்தை

கூர்ந்த - மிக்கு, 68; தொல்காப்பியம், உயிரியல், 18

கூரை - இல்லின் மேற்பகுதி, 29

கைப்ப - ஊட்ட, 36; தீற்ற, மதுரைக்காஞ்சி, 659

கைய - கையிலுள்ள, 14

கொடுங்கோல் - வருத்துந் தாற்றுக் கோல், 15

கொடுஞ்செலவு - விரைந்து செல்லல், 5

கொண்டென - கொண்டனவாக, 34

கொளீஇ - கொளுத்தி, 48

கோடல் - காந்தள், 15; புறப்பொருள் வெண்பா மாலை, 8, 16

கோடு - மலைமுகடு, மலையுச்சி, 5; பிங்கலந்தை

கோலி - வளத்து, 44; திவாகரம்

கோவலர் - இடையர், 15

சிதர் - துவலை, மழைத்திவலை, 52; பிங்கலந்தை

சிந்திதும்(வடசொல்) - நினைந்தும் 74

கட்டிய - குறித்த, 77; புறநானூறு, 32

சுடர் - கனலி; தீக்கொழுந்து, 85; திவாகரம்

சுரை - திரிக்குழாய், 48; பதிற்றுப்பத்து, 47 ஆம் பாடலுரை

சுவல் - தோள், 14; திவாகரம்

செந்நிலம் - செவ்விய நிலம், 17

செறி - நெருங்கின, 93

செறிவு - நெருங்குதல், 59; பிங்கலந்தை

சேண் - தொலைவு, நீளம், 25; திவாகரம்

ஞாண் - நாண்; கயிறு, 63; பதிற்றுப்பத்துரை, 60

தட - பெரிய, 2; 'தடவுங் கயவும் நளியும் பெருமை' தொல். உரி. 24

தபு - கெடு, 81: திவாகரம்

தழீஇய - சூழ்ந்த, 24

தாம்பு - தாமணி, 12; திவா.; கயிறு, பிங்கலந்தை.

தாழ் - தங்கும், 78; 'தாழ்தல் - தங்குதல்' அடியார்க்கு நல்லாருரை, சிலப்பதிகாரம், 4

தானை - சேனை, 10; காலாட்படை, திவாகரம்

திங்கள் - மாதம்; ஆவணி மாதம், 100

திண் - வலிய, 46; திவாகரம்

திரி - முறுக்குண்ட, 99

திரு - அழகு, 63; பரிமேலழகருரை, திருக்குறள், 1011; ஞானாமிர்த உரை, 22; பேராசிரியருரை,
திருச்சிற்றம்பலக் கோவையார் 1

திருத்தி - செவ்விதாக்கி, 71, 78; புறநானூற்றுரை, 17

திறை - கப்பம், அரசிறை, 19; திவாகரம்

துகில் - பெரும்பாலும் வெள்ளிய ஆடையினை உணர்த்தும், 53; பரிபாடல் 10 ஆஞ் செய்யுளிலுங் காண்க;
'துகில் வெண்மை செம்மை இரண்டற்கும் பொது' என்பர் நச்சினார்க்கினியர், சீவகசிந்தாமணி, 34

துமிபு - அறுத்து, 72; திவாகரம்

துமிய - அற்றுவிழ, 70; துணிபட, பிங்கலந்தை; புறநா. 19

துயர் - துன்பம், 80; திவாகரம்

துயில் - உறக்கம், 80

துரக்கும் - செலுத்தும், 102; புறநானூறு, 8

துனை - விரைவு, 102; தொல். உயிரியல் 17

தூங்கல் - தூக்கமயக்கம், 53

தூஉய் - தூவி 10

தூணி - அம்புபெய் கூடு, 39; திவாகரம்

தெவ்வர் - பகைவர், 18; 'தெவ்வுப் பகையாகும்' தொல். உரி. 50

தேம் - மதநீர், 31; தித்திப்பு, பிங். தென், 71; தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 46

தொடர் - சங்கிலி, 62; புறநா. 74

தொடி - கைவளை, 45; பிங்.

தொடுத்த - கட்டப்பட்ட, 12; 'தொடுகழன் மன்னன்' என்பதனுரையுங் காண்க. புறப். வெண்., பாடாண், 9

தொழுது - கும்பிட்டு, 10, 56; பிங்கலந்தை

தோடு - தொகுதி, பூவின் இதழ், 36; திவாகரம்; புறநானூறு, 238, 22

தோய்த்து - நனைத்து, ஊற வைத்து, 37

தோல் - கேடகம், பரிசை, 72; புறநானூறு, 4, 16; தோற்பலகை, திவாகரம்

தோன்ற - விளங்க, 56

தோன்றி - செங்காந்தள், 96; திவாகரம்

நகை - ஒளி, 78; பிங்கலந்தை

நசை - விருப்பம், 67

நடை - ஒழுக்கம், 53; பிங்க.

நந்துதல் - கெடுதல், 49, தழைத்தல், 97; ' நந்தல் கேடும் ஆக்கமுமாகும்' என்பது திவாகரம்

நறு - நல்லமணம், 9

நன்னர் - நன்மை, 17; திவாகரம்

நனந்தலை - அகன்ற இடம், 1; தொல்., உரி. 78

நாப்பண் - நடு, 43; பிங்கலந்தை

நாற்றி - தொங்கவிட்டு, 39

நாழி - அளக்குநாழி; படி, 9; பிங்கலந்தை

நாறும் - மணக்கும், 25; இப்பொருட்டாதல் ' நாற்ற நாட்டத்து' என்புழியுங் காண்க, புறநானூறு, 70

நிமிர்ந்த - உயர்ந்த, 3

நிரைத்து - வரிசையாக வைத்து, 41; பட்டினப்பாலை, 78

நிலை - தன்மை, 38; திவாகரம், நிற்குந்தன்மை எனினுமாம்

நிழத்திய - நுணுகிய; ஓசை அடங்கிய, 50; தொல்., உரி., 34

நிறை - 'மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதல்' என்பர் நச்சினார்க்கினியர், நெய்தற்கலி
உரை 16

நுதல் - நெற்றி, 33

நுனை - முனை, 36, 73; புறநானூறு 42

நெகிழ்ந்து - கழன்று, 84; திருக்குறள், 1236

நெடிது - நீள, 76; நெடுங்காலம், திருக்குறள், பரிமேலழகருரை, 562

நேமி(வடசொல்) - சக்கரம், 1

நேர்பு - உடன்பட்டு, 44

நோன் - வலிய, 77

பகழி - அம்பு, 74; திவாகரம்

பசலை - பசிய நிறம், மிக்க இலமைத் தன்மைக்குரியது 12; ' நெருஞ்சிப்பசலை வான்பூ' என்புழியுங்
காண்க. புறநானூறு, 155

படம் - சட்டை; குப்பாயம், 66; 'குப்பாய மிலேச்சனை' என்றார் சீவகசிந்தாமணியிலும், 431

படார் - சிறுதூறு, 51

படிவம் - தவவேடம், விரதம் எனினுமாம், 37; 'படிவம் வேடம்' புறப்பொருள் வெண்பாமாலை உரை, 9, 42;
விரதம், பதிற்றுப்பத்து, 74; பரிபாடல், 5, 75

படுநீர் - ஒலிக்கும் நீர், 28; படுமணி - ஒலிக்கும் மணி, புறப்பொருள் வெண்பா மாலை, வெட்சி, 6

படை - படைக்கலம்; வாள், 77; பிங்கலந்தை

பதைப்பு - பதைத்தல், 70; மெலிவுறுதல், பரிபாடலுரை 10

பயிற்றி - பலகாற் கூறி, 35; புறநானூற்றுரை, 34

பரந்த - அகன்ற, பரவிய, 28

பரி - குதிரை, 102; திவாகரம்

பருகி - குடித்து, 4

பருவரல் - துன்பம், 21; திவாகரம்; துயரம், புறப்பொருள் வெண்பா மாலை உரை, கைக்கிளை, 7

பரூஉ - பரிய; 70, 85

பள்ளி - படுக்கை, 64, 75; பிங்கலந்தை

பனிக்கடல் - குளிர்ந்த கடல், 4

பனிக்கும் - நடுங்கும், 79; புறநானூறு, 5

பாசறை - பாடிவீடு, 79; புறநானூறு, 31

பாடி - பாசறை, 28; படைவீடு, திவாகரம்

பாடு - ஒலி, 4; திவாகரம்

பாவை - பிரதிமை, 85

பிடவம் - நறுமணங் கமழும் வெள்ளிய பூக்களையுடைய ஒரு காட்டுச் செடி, 25; மணிமேகலை, 3, 163;
பதிற்றுப்பத்து, 66; ஐங்குறு. 435, 461; குறிஞ்சிப்பாட்டு, 78

பிடி - பெண்யானை, 69; திவாகரம்

பிறக்கு - பின், 101; புறநானூற்றுரை, 15; 'பிறக்கடி ஒதுங்கா' என்றார் பதிற்றுப்பத்து, 80

புக்க - புகுந்த, இட்ட, 60

புணர் - கூடின, 61

புனரி - கடல், 28; திவாகரம்

புதல் - சிறுதூறு, 25

புரிசை - மதில், 27; புறநானூறு, 17

புலம் - இடம், 90; திருக்குறளுரை 43

புலம்பு - தனிமை, 23, 81; தொல். உரி. 35

புலித்தொடர் - புலிச்சங்கிலி, 62

புழை - சிறுவாயில், 26; திவாகரம்

புறவு - முல்லைநிலக் காடு, 24; பிங்கலந்தை

புன் - துன்பம், 6; இப்பொருளில் 'புன்கண்' என்னுஞ் சொல் 'புன்' என நின்றது.

புனை - கைசெய்த, அழகு செய்த, 62; புறநானூறு 14

பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர், 11

பெருமூதாளர் - காவற்ரொழிலிற் பெரிது முதிர்ந்தோர், 54; பெரிய முதுமையுடையோர், புறநானூறு, 243

பொறித்த - வைத்த, 2

மஞ்ஞை - மயில், 84; திவாகரம்

மடம் - மென்மை, 99; புறநானூற்றுரை, 23

மண்டு - மிக்குச் செல்லும், 67; புறநானூற்றுரை, 6; 'மேற்கொண்டு' புறப்பொருள் வெண்பாமாலையுரை, 6,
10

மணி - ஓசைமணி; கண்டை மணி, 50; பிங்கலந்தை; பளிக்கு மணி, 66; திருக்குறளுரை, 1273

மத்திகை - குதிரை சம்மட்டி, 59; திவாகரம்

மருங்கு - பக்கம், 7

மருப்பு - கொம்பு, 4, 99

மறிந்து - மடங்கி, 59; 'கீழ் மேலாய்' என்பர் புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரர், 7, 9;
நச்சினார்க்கினியர் 'வடிம்பு தாழ்ந்து' என்பர்

மா - திருமகள், 2, பெரிய, 87, திவா; குதிரை, 74, 10; பிங்கலந்தை

மாட்ட - கொளுத்த, 49; புறநானூறு, 19

மாட்டி - அழித்து, 26; புறப்பொருள் வெண்பா மாலை உரைகாரர் 'மாளப் பண்ணி' என்பர்.

மாடம் - அழகிய வீடு, 86; 'மாடு' என்னும் முதனிலையிற் பிறந்த சொல்

மாண் - மாட்சிமைப்பட்ட, 62

மாயோள் - கரிய நிறத்தை உடையோள், மாந்தளிரின் நிறத்தை உடையோளெனினுமாம், 21; 'மாமை'
நிறத்தையுணர்த்துமென்பர்' திவாகரரும், புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரரும்

மால் - மாயோன், கரிய நிறத்தினன் என்பது சொற்பொருள், திவாகரம்

மிடைந்து - நெருங்க, 2

முடங்கிறை - முடங்கு இறை; மூட்டப்பட்டு வளைவாய் இருக்கும் வீட்டிறப்பு, என்றது நீர் விழுங் கூடல்வாயை, 87;
திவாகரம்; 'உழவினார் கைம்மடங்கின்' என்னுந் திருக்குறளில் மடங்குதல் இப்பொருட்டாதல் காண்க.

முற்றம் - முன்இடம், 30; புறநானூறு, 170

முல்லை - காட்டு மல்லிகைக் கொடி, 9, திவாகரம்

முறி - தளிர், 94; திவாகரம்

முனை - பகைவரிடம், 19; 'வேற்றுப்புலம்' புறப். வெண். உரை, வெட்சி 17

மூதூர் - பழைய ஊர், 7

மூழ்கல் - அழுந்தல், 7; பரிபாடலுரை, 9

மெய்ப்பை - ச்ட்டை, 60; திவாகரம்

மையல் - மயக்கம், 8; பிங்கலந்தை

யவனர் - சோனகர், 61; திவாகரம். (Ionians or Greeks)

யாக்கை - உடம்பு, 61

யாத்த - கட்டிய, 2

யாழ் - ஒர் இசைக்கருவி, 8

வதியுநன் - தங்குகிறவன், 80; திவாகரம்.

வயிர் - ஊது கொம்பு, 92; திவாகரம்.

வரி - வரிந்துகட்டு; நிறம் எனினுமாம் 47

வலம் - வெற்றி; வென்றி, 71; திவாகரம்.

வலம்புரி - ஓர் உயர்ந்த சங்கு, 2; ஆயிரஞ் சங்கு சூழத் திரிவது வலம்புரிச் சங்கு என்பர்;
சீவகசிந்தாமணி ''வரிசளை சூழும் வலம்புரி'' என்பதன் உரையைக் காண்க, 210

வலன் ஏர்பு - வலமாக, 4; வலன்நேர்பு - வெற்றிக்கு ஒத்து, 91; நேர்பு - ஒத்து, பரிபாடலுரை, 19

வள்ளி - கிழங்கு தருகொடி, 101; பிங்கலந்தை

வளி - காற்று, 51

வளை - சங்கு, 92; திவாகரம்.

வளைஇ - வளைத்து 1

வளைஇய - சூழப்பட்ட, 59; புறநானூறு, 61

வன்கண் - கொடுமை, 61; தறுகண்மை, புறநா. அருளின்மை, அசைவின்மை, திண்மை, திருக்குறள்
பரிமேலழகருரை, 189, 92

வாங்கு - வளைத்த, 40; வளைந்த, 42, 92; பிங்கலந்தை; வாங்கிய - வளைத்த 94

வாய்த்த - தப்பாமற் பெற்ற, 98; புறப். வெண்பாமாலை 8

வாய்த்து - தப்பாமற் கழித்து, புறப். வெண்பாமாலை, வாகை

வாய்ப்புள் - நற்சொல், விரிச்சி, 18; புறப். வெண்பாமாலை பொது, 11

வாய்வது - உண்மை, 20

வானம் - மழை, 98; திருக்குறள் 19

விசயம்(வடசொல்) - வெற்றி, 91; பிங்கலந்தை

விரவு - கலந்த; சேர்ந்த, 47; புறநானூறு, 152

விரிச்சி - நற்சொல், 11; இப்பொருட்டாதல் ''ஆடமைத் தோளிவிரிச்சியுஞ் சொகினமும்"
என்பதனுரையிலுங் காண்க, புறப். பொருள் வெண்பா மாலை, பொது, 11

விளக்கம் - விளங்கு, 9; 'குடியென்னுங் குன்றா விளக்கம்', திருக்குறள், 901

வீ - மலர், 9

வீங்கு - புடைக்கும், 59

வெருவரும் - அச்சம் வரும், 60; திவாகரம்

வெலீஇய - வெல்லுதற்கு, 57

வேட்டு - வேடு, வேட்டுவச் சாதி, 26; சிந்தாமணி 446

வேழம் - யானை; களிற்றியானை, 69; திவாகரம்

வை - கூர்மை, 7; 'வையே கூர்மை' தொல்காப்பியம், உரியியல், 61

வையகம் - நிலவுலகம், 57; 'வையகமும் வானகமு மாற்றலரிது' என்றார் திருக்குறளிலும்