tirukkOvaiyAr (aka as tirucciRRampalakkOvaiyAr)
of mAnikkavacakar, in Tamil Script, Unicode/utf-8 format

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்க வாசகர் அருளியது)




Etext Preparation (input, proof-reading): K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

tirukkOvaiyAr (aka as tirucciRRampalakkOvaiyAr)
of mAnikkavacakar, in Tamil Script,unicode format

திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)
(மாணிக்க வாசகர் அருளியது)

கட்டளைக் கலித்துறை யாப்பு

விநாயகர் வணக்கம்
எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு 1

நூற்சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 2

களவியல் (1 முதல் 18 அதிகாரங்கள்)

முதல் அதிகாரம்
1. இயற்கைப் புணர்ச்சி

1. காட்சி
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. .. 1
கொளு
மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது

2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2
கொளு
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

3. தெளிதல்
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. .. 3
கொளு
அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.

4. நயப்பு
அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
புகல்கின்ற(து) என்னைநெஞ்(சு) உண்டே இடைஅடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசன்எம் மான்எதிர்த்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே. .. 4
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

5. உட்கோள்
அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே. .. 5
கொளு
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக்கருத்து வள்ளல் அறிந்தது.

6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே. .. 6
கொளு
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

7. புணர்ச்சி துணிதல்
ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு) ஆய்வந்(து) அகப்பட்டதே. .. 7
கொளு
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

8. கல்வியுரைத்தல்
சொற்பால் அழுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி(து) ஓட்ட களவகத்தே. .. 8
கொளு
கொலைவேலவன் கொடியிடையடு
கலவியன்பம் கட்டுரைத்தது

9. இருவயின் ஒத்தல்
உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாள் அல்குல் போல வளர்கின்றதே. . . 9
கொளு
ஆராஇன்பத்து அன்புமீதூர
வாரார்முல்லை மகிழ்ந்துரைத்தது.

10. கிளவி வேட்டல்
அளவியை யார்க்கும் அறி(வு )அரி யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
பிள(வு)இயல் மின்இடை பேரமை தோளிது பெற்றியென்றால்
கிளவியை யென்றோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. .. 10
கொளு
அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
மென்மொழி கேட்க விருப்புற்றது.

11. நலம் புனைந்துரைத்தல்
கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்(பு) ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. .. 11
கொளு
பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்(து)
அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.

12. பிரிவுணர்த்தல்
சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்(று) ஆற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே. .. 12
கொளு
பணிவரல்அல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த்தியது.

13. பருவரல் அறிதல்
கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலம் அனையாள்
நீங்கின் புணர்(வு)அரி(து) என்றோ நெடி(து)இங்ங னேயிருந்தால்
ஆங்குஇற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. .. 13
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
பருவரலின் பரிசு நினைந்தது.

14. அருட்குணம் உரைத்தல்
தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வால்திருவே
யாவரின் பெற்றினி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்ப்
பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே. .. 14
கொளு
கூட்டிய தெய்வத் தின்அ ருட்குணம்
வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.

15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்(து)
இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் களங்குழையே. .. 15
கொளு
மடவரலை வற்புறுத்தி
இடமணித்துஎன்று அவன்இயம்பியது.

16. ஆடு இடத்து உய்த்தல்
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
அளிவளர் வல்லிஅன் னாய் முன்னி யாடுபின் யான்அளவா
ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. .. 16
கொளு
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியை அருகு அகன்றது.

17. அருமை அறிதல்
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ(து) அணிசூழல் ஏழைதன் நீர்மைஇந் நீர்மையென்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. .. 17
கொளு
கற்றமும் இடனும் சூழலும் நோக்கி
மற்றவன் அருமை மன்னன் அறிந்தது.

18. பாங்கியை அறிதல்
உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே. .. 18
கொளு
கடல்புரை ஆயத்துக் காதல் தோழியை
மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.

இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
-------

இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்

1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்(டு)இப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே. 19
கொளு
எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப்
பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.

2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே. 20
கொளு
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

3. உற்றது உரைத்தல்
கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே
தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள்
ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. .. 21
கொளு
மற்றவன் வினவ, உற்றது உரைத்தது.

4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. .. 22
கொளு
வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையில் கழறியது.

5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. .. 23
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.

6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. .. 24
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.

7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. .. 25
கொளு
நிறைபொறை தேற்றம் நீதியடு சால்பு
மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது.

8. விதியடு வெறுத்தல்
நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யால்துய ரும்என(து) ஆருயிர் துப்புறவே. .. 26
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

9. பாங்கன் நொந்துரைத்தல்
ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா(து) ஒழிவதென் தீவினையே. .. 27
கொளு
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது நன்மை நினைந்திலை என்றது.

10. இயல் இடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி(து) என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. .. 28
கொளு
கழுமலம் எய்திய காதல் தோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.

11. இயலிடங் கூறல்
விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி லாம்எங் குலதெய்வமே. .. 29
கொளு
அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்புகண்(டு) யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. .. 34
கொளு
பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.

13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. . 35
கொளு
அறைகழல் அண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

14. குறிவழிக்காண்டல்
வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்(கு) அம்பலம்போல்
படிச்சந் தமும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே. .. 36
கொளு
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையாலக் கண்டது.

15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. .. 37
கொளு
நயந்த உருவம் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.

16 கண்டமை கூறல்
பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. .. 38
கொளு
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.

17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து)
அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின்
இயலுள வேபிணைச் செப்புவெற் பாநின(து) ஈர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. .. 37
கொளு
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.

18. அவ்விடத்து ஏகல்
எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையத்துக்
குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து)
அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும்
மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. .. 36
கொளு
அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
எரிகதிர் வேலோன் ஏகியது

19. மின்னிடை மெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. .. 37
கொளு
மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.

20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றும்என் சிந்தனைக்கே. .. 38
கொளு
மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு)
அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது.

21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல்
தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி இதோவந்து நின்ற(து)என் மன்னுயிரே. .. 39
கொளு
வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியறு குழலி நிலைமை கண்டது.

22. தளர்வு அகன்று உரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்(து) அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே. .. 40
கொளு
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது.

23. மொழிபெற வருந்தல்
காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன் றேஅறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என்
ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்(று) அழிகின்றதே. .. 41
கொளு
கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது.

24. நாணிக் கண் புதைத்தல்
அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. .. 42
கொளு
ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

25. கண் புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. .. 43
கொளு
வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.

26. நாண்விட வருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. .. 44
கொளு
ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி
நீங்கன நாணொடு நேரிழை நின்றது.

27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அ·தே குறைப்பவர்தம்
சீலத் தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. .. 45
கொளு
ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.

28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்ரும் பும்அமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46
கொளு
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு)
இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.

29. ஆயத்து உய்த்தல்
சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. .. 47
கொளு
தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29

30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுரை வாளர வத்(து) அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48
கொளு
பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன்
நீங்கற்(கு) அருமை நின் று நினைந்தது.
------------

மூன்றாம் அதிகாரம்
3. இடந்தலைப் பாடு

நூற்பா
பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியடு கூட்டி வருந்திசி னோரே.

1. பொழிலிடைச் சேறல்
என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. .. 49
கொளு
ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.
-----------

நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்

பேரின்பக் கிளவி
மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருஅறி வித்த திருவருள் அதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.

1. பாங்கிடைச் சேறல்
எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று)
ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே. .. 50
கொளு
கரந்துறை கிளவியின் காதல் தோழியை
இரந்துகுறை உறுவல்என்(று) ஏந்தல் சென்றது. 1

2. குறையுறத் துணிதல்
குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண்
உவளைத் தனதுயிர் என்றது தன்னோ(டு) உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. .. 51
கொளு
ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.

3. வேழம் வினாதல்
இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்(கு)அளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்(கு)
ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும் மதத்(து)இரு கோட்(டு)ஒருநீள்
கருக்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. .. 52
கொளு
ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.

4. கலைமான் வினாதல்
கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே. .. 53
கொளு
சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.

5. வழி வினாதல்
சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் செல்நெறியே. .. 54
கொளு
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமான் அண்ணல் வழிவி னாயது.

6. பதி வினாதல்
ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே
வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு. .. 55
கொளு
பதியடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.

7. பெயர் வினாதல்
தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
காரென்ன ஆரும் கறைமிடற்(று) அம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல்
பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. .. 56
கொளு
பேரமைத் தோளியர் பேர்வி னாயது.

8. மொழி பெறாது கூறல்
இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர்
வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே. .. 57
கொளு
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.

9. கருத்தறிவித்தல்
வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தன(து) அம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ மணிநிறப் பூந்தழையே. .. 58
கொளு
உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.

10. இடை வினாதல்
கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற் றா(து)அன்(று) இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. .. 59
கொளு
வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
---------------

ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
மையறு தோழி அவன்வர வுணர்தல்.

பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.

1. ஐயறுதல்
பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்இலன் நாகத்தோ(டு) ஏனம் வினாஇவன் யாவன்கொலாம்
வில்இலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்இலன் ஆகற்ற வாகட வான்இச் சுனைப் புனமே. .. 60
கொளு
அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித்
தையல் பாங்கி ஐயம் உற்றது.

2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. .. 61
கொளு
வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.
-------------------

ஆறாம் அதிகாரம்
6. முன்னுற வுணர்தல்

நூற்பா
வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல்
கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.

பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇ·து ஒன்றும்
சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.

1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலும் கனைகுடைந்(து) ஆடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. .. 62
கொளு
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது.
--------------------

ஏழாம் அதிகாரம்
7. குறையுற வுணர்தல்

நூற்பா
குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வ) எண்ணல்
கூறிய நான்கும் குறையுற உணர்வெனத்
தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.

பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.

1. குறையுற்று நிற்றல்
மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 63
கொளு
கறையற்ற வேலவன் குறையுற்றது.

2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடியச் செல்ல நிற்பின் கிளர்அளகத்(து)
அளியமர்ந்(து) ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. .. 64
கொளு
பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

3. அவள் குறிப்பறிதல்
பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. .. 65
கொளு
ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது.

4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும்
பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய்
எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்(டு) எழில்தருமே. .. 66
கொளு
அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து)
இன்புறு தோழி எண்ணியது.
-------------------

எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்

பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து
மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின்
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது.

1. பிறை தொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. .. 67
கொளு
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது 1

2. வேறுபடுத்துக் கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே
ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. 68
கொளு
வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு)
ஆய்வளைத் தோழி அணங்கென்றது.

3. கனையாடல் கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. .. 69
கொளு
மாண நாட்டிய வார்குழல் பேதையை
நாண நாட்டி நகைசெய்தது.

4. புணர்ச்சி உரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. .. 70
கொளு
மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது.

5. மதியுடம் படுதல்
காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர்
ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்பத் துன்பங்களே. .. 71
கொளு
அயில்வே கண்ணியடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென
மயிலியல் தோழி மதியுடம் பட்டது.
----------------

ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்

1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72
கொளு
நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.
--------------------

பத்தாம் அதிகாரம்
10. மடல் திறம்

பேரின்பக் கிளவி
மடல்துறை ஒன்பதும் சிவத்தினுட் மோக
முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.

1. ஆற்றாது உரைத்தல்
பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 73
கொளு
மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது.

2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழ்¢பிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. .. 74

3. தன் துணிபு உரைத்தல்
விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல்
பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றோர் பெண்கொடியே. .. 75
கொளு
மான வேலவன் மடம்மாமிசை
யானும் ஏறுவன் என்ன உரைத்தது.

4. மடலேறும் வகையரைத்தல்
கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
கிழியன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று)
அழிகின்ற(து) ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. .. 76
கொளு
அடல்வேலன் அழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

5. அருளால் அரிதென விலக்கல்
நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத்(து) அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை
உடனாம் பெடைய(டு)ஆண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. ... 77
கொளு
அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
மடல் ஏற்றுனக்(கு) அரிதென்றது.

6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. .. 78
கொளு
அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்டல் இயலா(து) என்றது.

7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
சூழும் எழுதியர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்
போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. .. 79
கொளு
அவயவம் ஆனவை இவைஇவை என்றது.

8. உடம்படாது விலக்கல்
ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசாதில்லைக்
கார்வாய் குழலிக்குன்ஆதர(வு) ஒதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரின்அறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. .. 80
கொளு
அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
மடநடைத் தோழி மடல்வி லக்கியது.

9. உடம்பட்டு விலக்கல்
பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும்
இந்நாள் இதுமது வார்குழ லாட்(கு)என்கண் இன்னருளே. ... 81
கொளு
அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
உள்ளக் கருத்து விள்ளாள் என்றது.
-----------------------------

பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்

பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும்
சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல்.

1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித்
தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர்
மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே. .. 82
கொளு
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு)
உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.

2. மென்மொழியால் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே. .. 83
கொளு
ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

3. விரவிக் கூறல்
நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே. .. 84
கொளு
வன்மொழியன்மனம் மெலிவ(து) அஞ்சி
மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.

4. அறியாள் போறல்
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85
கொளு
அறியாள் போன்று குறியாள் கூறியது.

5. வஞ்சித்து உரைத்தல்
புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. .. 86
கொளு
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது.

6. புலந்து கூறல்
உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே. .. 87
கொளு
திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

7. வன்மொழியாற் கூறல்
மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால்
தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. .. 88
கொளு
கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன்
மடலே றும்என வன்மொழி மொழிந்தது.

8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89
கொளு
அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.
-----------------------

பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை

பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும்
கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
அருமை காட்டி அறியாள் போலப்
பலபல அருமை பற்றி உரைத்த
அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல்.

1. தழைகொண்டு சேறல்
தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்(று) அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம்
காமன் கணைகொண்(டு) அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. .. 90
கொளு
கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
ஆரத் தழையன்(பு) அருளிநின் றோன்சென்ற மாமலயத்(து)
ஆரத் தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. .. 91
கொளு
பிறை நுதற் பே¨¡தயைக் குறைநயப் பித்தது
உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.

3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த தோன்திருந்(து) அம்பலவன்
குன்றகத்(து) இல்லாத் தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்(கு)
இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து மூடும்என்(று) எள்குதுமே. .. 92
கொளு
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக்(கு) ஏலாது என்றது.

4. நினைவறிவு கூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. ... 93
கொளு
மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது
கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.

5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே. ... 94
கொளு
அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.

6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத்
தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இக் குன்றிடத்தே. .. 95
கொளு
வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது

7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96
கொளு
வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.

8. செவ்வியிலள் என்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று)
உற்றிபள் உற்ற(து) அறிந்திலள் ஆகத்(து) ஒளிமிளுரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. ... 97
கொளு
நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.

9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய குன்றமும் தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. .. 98
கொளு
காப்புடைத் தென்று சேட்ப டுத்தது.

10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும் சிலம்ப மனம்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. .. 99
கொளு
அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

11. குலமுறை கூறி மறுத்தல்
தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே. .. 100
கொளு
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தேம் என்வுரைத்தது.

12. நகையாடி மறுத்தல்
சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையன்று மாமுகத்(து) எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும்
கலையன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வா(று)ஐயர் கையிற் கொடுஞ்சிலையே. .. 101
கொளு
வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி இன்னகை செய்தது.

13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. .. 102
கொளு
கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது.

14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்
இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. 103
கொளு
மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது.

15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. .. 104
கொளு
முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.

16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டால் இயலும் வளர்புந் துறைவ மறைக்கின்என்னைக்
கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. .. 105
கொளு
என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
நன்னுதல் தோழி நகைசெய்தது.

17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே
ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு
முத்தகம் சேர்மென் னகைப் பெருந் தோளி முகமதியின்
வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. .. 106
கொளு
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது.

18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்நறுந் தா(து)இவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. .. 107
கொளு
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியேன் என்றது.

19. அவயவம் கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்(கு)
உவவின நாள்மதி போன்றொளிர் கின்ற(து) ஒளிமுகமே. .. 108
கொளு
அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது

20. கண் நயந்து உரைத்தல்
ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. .. 109
கொளு
கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.

21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
ஏலாப் பரி(சு)உள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்(கு) அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம் அன் னாட்(கு)ஐய நீதந்த கொய் தழையே. .. 110
கொளு
அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது

22. குறிப்பறிதல்
கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்(று) அம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. .. 111
கொளு
தழை எதிரா(து) ஒழிவதற்கோர்
சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது.

23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112
கொளு
ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது. 23

24. வகுத்துறைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா
ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்(து) அம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்(து)
ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை யாம்செய்வ(து) ஏந்திழையே. .. 113
கொளு
கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.

25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வா(று)அருளான்
இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. .. 114
கொளு
கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

26. தழை விருப்புரைத்தல்
பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்(று) யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யா தனஇல்லை பூந்தழையே. .. 115
கொளு
விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது.
---------------

பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி

பேரின்பக் கிளவி
பகற்குறித் துறைமுப் பதினோ(டு) இரண்டு
இயற்கைபோல் சிவத்தோ(டு) இயலுறுக் கூட்டிப்
பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.

1. குறியிடங் கூறல்
வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாஇரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகை போல்
தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. .. 116
கொளு
வாடிடத்(து) அண்ணல் வண்தழை எதிர்ந்தவள்
ஆடிடத்(து) இன்னியல்(பு) அறிய உரைத்தது.

2. ஆடிடம் படர்தல்
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. .. 117
கொளு
வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளிய(டு) ஆடிடம் படர்ந்தது.

3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச்
கனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவர்
வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்
புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன காண்டும் புனமயிலே. .. 118
கொளு
அணிவளர் ஆடிடத்(து) ஆய வெள்ளம்
மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது.

4. இடத்துய்த்து நீங்கல்
நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து) உக்கநன் முத்தம்சிந்திப்
பரல்வேய் அறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுன் வார்குழற்(கு)ஈர்ங்
குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. .. 119
கொளு
மடத்தகை மாதரை இடத்தகத்து உய்த்து
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

5. உவந்துரைத்தல்
படமா கணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண்
நெடுமால் எனஎன்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து வைஇற்றுஇவ் வார்பொழிற்கே. .. 120
கொளு
களிமயிற் சாயலை ஒருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோன் உவந்துரைத்தல். 5

16. மருங்கணைதல்
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏர்அளப்பான்
ஒத்(து)ஈர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காள்என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே. .. 121
கொளு
வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

7. பாங்கியறிவுரைத்தல்
அளிநீ(டு) அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
ஒளிநீள் கரிகுழல் சூழ்ந்தஒண் மாலையும் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ அனையபொன் னேபண்ணு கோலம் திருநுதலே. .. 122
கொளு
நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது.

8. உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க் கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. .. 123
கொளு
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந்(து) உரைத்தது.

9. ஆயத்து உய்த்தல்
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
செழுந்தா(து) அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க் திருத்தகவே. .. 124
கொளு
கனைகடல் அன்ன கார்மயில் கணத்துப்
புனைமட மானைப் புகவிட்டது.

10. தோழி வந்து கூடல்
பொன்அனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
மின்னனை யான்அருள் மேலவர் போன்மெல் விரல் வருந்த
மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற்(கு) ஏய்வனவே. .. 125
கொளு
நெறியுறு குழலியை நின்றிடத்(து) உய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்(கு) உரைத்தது.

11. ஆடிடம் புகுதல்
அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயம்மெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்(கு)அரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. .. 126
கொளு
தனிவிளை யாடிய தாழ்குழல் தோழி
பனிமதி நுதலிய(டு) ஆடிடம் படர்ந்தது.

12. தனிகண்டு உரைத்தல்
தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
கிழங்கும் அருந்தி இருந்(து) எம்மோ(டு) இன்று கிளர்ந்துகுன்றர்
முழங்கும் குரவை இரவிற்கண்(டு) ஏகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. .. 127
கொளு
வேயத்த தோளியை ஆயத்து உயத்துக்
குனிசிலை அண்ணலைத் தனிகண்(டு) உரைத்தது.

13. பருவங் கூறி வரவு விலக்கல்
தள்ளி மணிசிந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத்
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. .. 128
கொளு
மாந்தளிர் மேனியை வரைந்(து) எய்தா(து)
ஏந்தல் இவ்வா(று) இயங்கல் என்றது. 13

14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்
மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளவரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. .. 129
கொளு
வரைவு கடாய வாணுதல் தோழிக்கு
விரைமலர்த் தாரோன் மிகுத்துரைத்தது.

15. உண்மை கூறி வரைவு கடாதல்
வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவர் ஏனல்எங் காவல்இத் தாழ்வரையே. .. 130
கொளு
கல்வரை நாடன் இல்ல(து) உரைப்ப
ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது.

16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்(று)
உன்னும் அதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புலன் என்னப் புலம்புவனே. .. 131
கொளு
கினங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.

17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்(று)
இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்(கு) என்றஞ்சும் எம்அனையே. .. 132
கொளு
மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது.

18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலைப்
போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. .. 133
கொளு
விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.

19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர்
கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்(டு)
எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. .. 134
கொளு
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்(று)
ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது.

20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்(து) எந்தையும்நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்னேவயம் அம்பலத்துக்
குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலமுற் றும்அறியக்
கெழி உம்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே. .. 135
கொளு
ஏந்திழைத் தோழி ஏந்தலை முன்னிக்
கடியா மாறு நொடிதுஏ(கு) என்றது.

21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்
இடையார் மெலிவுகண்(டு) அண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்முர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது போலும் உருவினதே. .. 136
கொளு
என்னையர் துணிவு இன்ன(து) என்றது.

22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன்(று) உரித்(து)உர ஊர்எரித்த
நெருப்பனை அம்பலத்(து) ஆதியை உம்பர்சென்(று) ஏத்திநிற்கும்
திருப்பனை யூர்அனை யாளைப்பொன் னாளைப் புனைதல் செப்பிப்
பொருப்பனை முன்னின்(று) என் னோவினை யேன்யான் புகல்வதுவே. .. 137
கொளு
கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது.

23. தினை முதிர்வு வரைவு கடாதல்
மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கஎன்று
தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடம் கொண்(டு)இதுஎம் மைக்கெடு வித்தது தூமொழியே. .. 138
கொளு
ஏனல் விளையாட்(டு) இனிஇல் லையென
மானல் தோழி மடந்தைக்(கு) உரைத்தது.

24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்(கு) என்னுரைக்கேன்
தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தண்புனமே. .. 139
கொளு
அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது.

25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்
நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்து இருந்(து)அம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. .. 140
கொளு
தண்புனத் தோடு தளர்வுற்றுப்
பண்புனை மொழிப் பாங்கி பகர்ந்தது.

26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறும்உண் டோஇத் திருக்கணியே. .. 141
கொளு
நீங்குக இனிநெடுந் தகையென
வேங்கை மேல்வைத்து விளம்பியது

27. இரக்கமுற்று வரைவு கடாதல்
வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும்
செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவ(து)இத் தொல்புனத்தே. .. 142
கொளு
செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது.

28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
பொருப்பர்க்(கு) யாம் ஒன்று மாட்டோம் புகலப் புகல்எமக்காம்
விருப்பர்க்(கு) யாவர்க்கும் மேலவர்க்கு மேல்வரும் ஊர்எரித்த
நெருப்பர்க்கு நீ(டு)அம் பலவருக்(கு) அன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்பினமே. .. 143
கொளு
நீடிரும் புனத்தினி ஆடேம் என்று
வரைவு தோன்ற வுரைசெய்தது.

29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
பரிவுசெய்(து) ஆண்(டு)அம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத்(து) ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே
பிரிவுசெய் தால்அரி தேகொள்க போயடும் என்றும்பெற்றி
இருவிசெய் தாளின் இருந்(து)இன்று காட்டும் இளங்கிளியே. .. 144
கொளு
மறைப்புறக் கிளவியின் சிறைப்புறத்(து) உரைத்தது.

30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
மணியார் பொழில்காள் மறத்திற்கண் டீர்மன்னும் அம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே. .. 145
கொளு
நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது.

31. வறும்புனம் கண்டு வருந்தல்
பொதுவினில் தீர்த்(து)என்னை யாண்டோன் புலியூர் அரன்பொருப்பே
இதுவெனில் என்னின்(று) இருக்கின்ற வா(று)எம் இரும்பொழிலே
எதநுமக்(கு)எய்திய(து) என்உற் றனிர்அறை ஈண்டருவி
மதுவினில் கைப்புவைத் தாலொத்த வாமற்(று)இவ் வான்புனமே. .. 146
கொளு
மென்புனம் விடுத்து மெல்லியல் செல்ல
மின்பொலி வேலோன் மெலிவுற்றது.

32. பதி நோக்கி வருந்தல்
ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூர் இதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி அழும்மழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. .. 147
கொளு
மதிநுதல் அரிவை பதிபுகல் அரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
------------------------------

பதினென்காம் அதிகாரம்
14. இரவுக் குறி

பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்திமூன்றும்
அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை
தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்
இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல்.

1. இரவுக் குறி வேண்டல்
மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்
இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப்
பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148
கொளு
நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது.

2. வழியருமை கூறி மறுத்தல்
விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு)
அசும்பினில் துன்னி அளைநுழைந் தால் ஒக்கும் ஐயமெய்யே
இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்(கு) அரி(து)எழில் அம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்(து)எம் வாழ்பதியே .. 149
கொளு
இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப்
பருவரல் பாங்கி அருமை உரைத்தது.

3. நின்று நெஞ்சுடைதல்
மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த
கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. .. 150
கொளு
பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து
மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. .. 151
கொளு
தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது.

5. உட்கோள் வினாதல்
வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
நிரையன்(று) அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர்
விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போ(து)
உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. .. 152
கொளு
நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

6. உட்கொண்டு வினாதல்
செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும்
மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்(து)
எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து) அணிந்(து)என்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. .. 153
கொளு
தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து)
என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது.

7. குறியிடங்கூறல்
பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
கனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று) ஆடும் செழும்பொழிலே. .. 154
கொளு
இரவுக் குறியிவண் என்று பாங்கி
அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது.

8. இரவுக் குறி ஏற்பித்தல்
மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால்
செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ(டு)
அலவன் பயில்வது கண்(டு)அஞர் கூர்ந்(து)அயில் வேல்உரவோன்
செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து) ஆங்கொல்மன் சேர்துயிலே. .. 155
கொளு
அரவக் கழலவன் ஆற்றானென
இரவுக் குறி ஏற்பித்தது.

9. இரவரவு உரைத்தல்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம்
வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. .. 156
கொளு
குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது.

10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. .. 157
கொளு
இழுக்கம் பெரி(து)இர வரின்என
அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.

11. குறை நேர்தல்
ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று
தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
வீங்கும் கனைபுனல் வீழ்ந்(து)அன்(று) அழங்கப் பிடித்தெடுத்து
வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. .. 158
கொளு
அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.

12. குறை நேர்ந்தமை கூறல்
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. .. 159
கொளு
குறைந யந்தனள் நெறிகு ழலியென
எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது.

13. வரவுணர்ந்து உரைத்தல்
முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்
பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. .. 160
கொளு
வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி
செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.

14. தாய் துயில் அறிதல்
கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. .. 161
கொளு
ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில்
தாய துதுயில் தான் அறிந்தது.

15. துயிலெடுத்துச் சேறல்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின்
வண்ணக் குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின்
கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. .. 162
கொளு
தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.

14. இடத்துய்த்து நீங்கல்
நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எ·கம்
தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. .. 163
கொளு
மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

17. தளர்வகன்று உரைத்தல்
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்(து)என் னோவந்து வைகி நயந்ததுவே. .. 164
கொளு
வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத்
நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது.

18. மருங்கணைதல்
அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத்
தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலும் அவரில் தளரும்இத் தேம்பல்இடைஞெமியப்
புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. .. 165
கொளு
அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.

19. முகங்கொண்டு மகிழ்தல்
அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்(டு)
எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர் வானத்(து) இளமதியே. .. 166
கொளு
முகையவிழ் குழலி முகமதி கண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.

20. பள்ளியிடத்து உய்த்தல்
கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழிய(டு) ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. .. 167
கொளு
பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியடு பள்ளிகொள் கென்றது.

21. வரவு விலக்கல்
நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து) இவளின் மெய்யேஎளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. .. 168
கொளு
தெய்வம் அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.

22. ஆற்றாது உரைத்தல்
பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து) என்றும்என் இன்னுயிரே. .. 169
கொளு
வரைவு கடாய வாணுதல்தோழிக்(கு)
அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது.

23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்
செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. .. 170
கொளு
அதிர்க ழலவன் அகன்றவழி
எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது.

24. நிலவு வெளிப்பட வருந்தல்
நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்
நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள்
நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. .. 171
கொளு
தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.

25. அல்லகுறி அறிவித்தல்
மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
என்அங்(கு) அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப்
பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலா(து) அழுங்கினவே. .. 172
கொளு
வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு
அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது.

26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)
ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள
ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ
பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. .. 173
கொளு
எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம்
அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது.

27. காமம் மிக்க கழிபடர் கிளவி
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள்
ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்(கு) இவளோ
தீதுற்ற(து) என்னுக்(கு)என் னீர்இது வோநன்மை செப்புமினே. .. 174
கொளு
தாமம் மிக்க தாழ்குழல் ஏழை
காமம் மிக்க கழிபடர் கிளவி.

28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்
பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. .. 175
கொளு
மெய்யறு காவலில் கையறு கிளவி.

29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா(று) அளவில் நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும்
சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. .. 176
கொளு
நாறு வார்குழல் நவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.

30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177
கொளு
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையாறு எய்திடு கிளவி.

31. நிலைகண்டு உரைத்தல்
பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற
புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவந் தித்திலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. .. 178
கொளு
நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென
வரைவு தோன்ற வுரை செய்தது.

32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத்
தீங்கணைந் தோர்அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்உள ரோசென்(று) அகன்றவரே. .. 179
கொளு
எறிவேற் கண்ணி இரவரு துயரம்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.

33. அலர் அறிவுறுத்தல்
அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்(கு)அள வில்ஒளிகள்
அலரா யிருக்கும் படைகொடுத் தோன்தில்லை யான்அருள்போன்(று)
அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம் மிக்(கு)ஐய மெய்யருளே. .. 180
கொளு
அலைவேல் அண்ணல் மனம கிழருள்
பலரால் அறியப் பட்ட(து) என்றது.
-----------------------------

பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித் தணத்தல்

பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றும்
சிவனது கருணை அருள்தெரி வித்தது.

1. அகன்று அணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின்அல் லால்இது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோன்அடிப் போதுசென்னித்
திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. .. 181
கொளு
வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது.

2. கடலொடு வரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பல் சுற்றி எற்றிச் சிறந்தார்க்கும் செறிகடலே. .. 182
கொளு
மணந்தவர் ஒருவழித் தணந்ததற்(கு) இரங்கி
மறிதிரை சேரும் எறிகடற்(கு) இயம்பியது.

3. கடலொடு புலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. .. 183
கொளு
செறிவளைச் சின்மொழி எறிகடற்(கு) இயம்பியது.

4. அன்னமோடு ஆய்தல்
பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து)
அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. .. 184
கொளு
மின்னடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது.

5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந் தான்குனி கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய்
புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. .. 185
கொளு
மீன்தோய் துறைவர் மீளும் அளவும்
மான்தேர் வழியை அழியேல் என்றது.

6. கூடல் இழைத்தல்
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்(து)
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்(று)
ஆழி திருத்திச் சுழிக்கணக்(கு) ஓதிநை யாமல்ஐய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே. .. 186
கொளு
நீடலந் துறையில் கூடல் இழைத்தது.

7. சுடரொடு புலம்பல்
கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்த(ரு)அங் கம்துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தர்அங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங் கம்செய்யு மால்உய்யு மா(று)என்கொல் ஆழ்சுடரே. .. 187
கொளு
குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.

8. பொழுது கண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோன்எவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங்(கு) இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. .. 188
கொளு
மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

9. பறவையடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய்
இன்னும் அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. .. 189
கொளு
செறிபிணி கைம்மிகச் சிற்றிடை பேதை
பறவைமேல் வைத்துப் பையுள்எய் தியது.

10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றஒற் றைச்சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும்என் றூழ்என்(று) அலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. .. 190
கொளு
முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது.

11 அன்னமோடு அழிதல்
மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
நாவல் தழீஇயஇந் நானிலம் துஞ்சும் நயந்த இன்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிர்எம்
காவல் தழீஇயவர்க்(கு) ஓதா(து) அளிய களியன்னமே. .. 191
கொளு
இன்ன கையவள் இரவரு துயரம்
அன்னத்தோ(டு) அழிந்துரைத்தது.

12. வரவு உணர்ந்து உரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை யான்இன்(று) இரக்கின்றதே. .. 192
கொளு
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்(து) உரைத்தது.

13. வருத்தமிகுதி கூறல்
வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்
தளரும் தடவரைத் தண்சிலம் பாதன(து) அங்கம்எங்கும்
விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்(று)
ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. .. 193
கொளு
நீங்கி அணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.
--------------------------

பதினாறாம் அதிகாரம்
16. உடன் போக்கு

பேரின்பக் கிளவி
உடன்போக்(கு) ஐம்பதோ(டு) ஆறு துறையும்
அருள்உயிர்க்(கு) அருமை அறிய உணர்த்தலும்
ஆனந் தத்திடை அழுத்திற் திரோதை
பரைவழி யாக பண்புணர்த் தியது.

1. பருவங் கூறல்
ஓராகம் இரண்டெழி லாய்ஒளிர் வோன்தில்லை ஒண்ணுதல்அங்
கராகம் பயின்(று) அமிழ் தம்பொதிந்(து) ஈர்ஞ்சுணங்(கு) ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரி சேபணத்த
இராகங்கண் டால்வள்ள லேஇல்லை யேஎமர் எண்ணுவதே. .. 194
கொளு
உருவது கண்டவள்
அருமை உரைத்தது.

2. மகட் பேச்சுரைத்தல்
மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ(து) இன்றே துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. .. 195
கொளு
படைத்துமொழி கிளவில் பணிமொழிப் பாங்கி
அடற்கதிர் வேலோற்(கு) அறிய உரைத்தது.

3. பொன்னணி உரைத்தல்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற்
காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ
கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. .. 196
கொளு
பலபரி சினமலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவர் என்றது.

4. அருவிலை உரைத்தல்
எலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடர்அம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பல்ஒட்டார்
கலம்பா வியமுலை யின்விலை என்நீ கருதுவதே. .. 197
கொளு
பேதையர் அறிவு பேதைமை உடைத்தென
ஆதரத் தோழி அருவிலை உரைத்தது.

5. அருமை கேட்டழிதல்
விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ(டு) அலறாய் கிடந்(து)அரன் தில்லையன்னாள்
குயம்புற் றர(வு)இடை கூர்எயிற்(று) ஊறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. .. 198
கொளு
பெருமை நாட் டத்தவள் அருமைகேட்(டு) அழிந்தது.

6. தளர்வறிந்துரைத்தல்
மைதயங் கும்திரை வாரியை நோக்கி மடல்அவிழ்பூங்
கைதை அங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்(டு)எங் கண்டர்தில்லைப்
பொய்தயங் கும்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்அர வம்புரை யும்அல்குல் பைந்தொடியே. .. 199
கொளு
தண்துறைவன் தளர்வறிந்து கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது.

7. குறிப்புரைத்தல்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாள்என்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித் தாள்இன்றென் பைந்தொடியே. .. 200
கொளு
நறைக் குழலி குறிப்புரைத்தது.

8. அருமை உரைத்தல்
மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடும் தீக்கற்று வானம்எல்லாம்
சொல்லிய சீர்ச்சுடர் திங்கள் அங் கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாய்எல்லை சேய்த்துஎம் அகல்நகரே. .. 201
கொளு
கானின் கடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென உரைத்தது.

9. ஆதரங் கூறல்
பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவும் இல் லாஇறை யோன்உறை தில்லைத்தண்பூம்
பணையும் தடமும்அன் றேநின்னோ(டு) ஏகின்எம் பைந்தொடிக்கே. .. 202
கொளு
அழல்தடம் புரையும் அருஞ்சுரம் அதுவும்
நிழல்தடம் அவட்கு நின்னொ(டு)ஏகின் என்றது.

10. இறந்துபாடு உரைத்தல்
இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து) ஏந்தல் இணைப்பதில்லாக்
கங்கைஅம் செஞ்சடைக் கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீஅப் படர்தடத்துச்
செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணித் திருநுதலே. .. 203
கொளு
கார்த் தடமும் கயலும் போன்றீர்
வார்த்தட முலையும் மன்னனும் என்றது.

11. கற்பு நலன் உரைத்தல்
தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்(கு)அந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் தோளி திண் கற்பின் விழுமிதன்(று)ஈங்
கோயில் சிறந்துசிற் றம்பலத்(து) ஆடும்எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே. .. 204
கொளு
பொய்யத்தஇடை போக்குத்துணிய
வையத்திடை வழக்குரைத்தது.

12. துணிந்தமை கூறல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதோர் தீவினை வந்திடின் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே. .. 205
கொளு
பொருவேல் அண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது.

13. துணிவொடு வினாவல்
நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்
அழல்தலை வெம்பரற் றென்பர்என் னோதில்லை அம்பலத்தான்
கழல்தலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போல்
குழல்தலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும் நம்கொற்றவர்க்கே. .. 206
கொளு
சிலம்பன் துணிவொடு செல்கரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.

14. போக்கு அறிவித்தல்
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவரல் என்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினும் கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடும்இல் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. .. 207
கொளு
பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை
அரிவைக்(கு) அவள் அறிய உரைத்தது.

15. நாணிழந்து வருந்தல்
மற்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. .. 208
கொளு
கற்பு நாணினும் முற்சிறந் தமையின்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.

16. துணிவெடுத்து உரைத்தல்
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுரம் ஆகும்நம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்(டு)அரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. .. 209
கொளு
செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.

17. குறியிடங் கூறல்
முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்(து)
உன்னா தவர்வினை போல்பரந்(து) ஓங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவியன் னாய்அருள் ஆசையினால்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. .. 210
கொளு
மன்னிய இருளில் துன்னிய குறியில்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.

18. அடியடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்
இனிச் சந்த மேகலை யாட்(கு)என்கொ லாம்புகுந்(து) எய்துவதே. .. 211
கொளு
நெறியுறு குழலியடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.

19. கொண்டு சென்று உய்த்தல்
வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்உள்ளம்
தெய்வம் தரும்இருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய்வந்த வாவி தெளியும் துயிலும்இம் முதெயிலே. .. 212
கொளு
வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது.

20. ஒம்படுத் துரைத்தல்
பறந்திருந்(து) உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
சிறந்(து)எரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா
அறம்திருந்(து) உன்னரு ளும்பிறி தாயின் அருமறையின்
திறம்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே. .. 213
கொளு
தேம்படு கோதையை ஓம்ப டுத்தது.

21. வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் ஒர்கவ்வைதீர்த்(து)
ஆண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின்(று)
ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன் சிற்றம் பலம்நிலவு
சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. .. 214
கொளு
மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது.

22 மெல்லக் கொண்டேகல்
பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும்
காணத் திருத்திய போலும் முன் னாமன்னு கானங்களே. .. 215
கொளு
பஞ்சி மெல்லடிப் பணைத் தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவு அகற்றியது.

23. அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடின்என்கை
வடித்தேர் இலங்கெ·தின் வாய்க்குத வாமன்னும் அம்பலத்தோன்
அடித்தேர் அலரென்ன அஞ்சுவன் நின்ஐயர் என்னின்மன்னும்
கடித்தேர் குழன்மங்கை கண்டி(டு)இவ் விண்தோய் கனவரையே. .. 216
கொளு
வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதரு குழலிக்(கு) அருளுவன் உரைத்தது.

24. அயர்வு அகற்றல்
முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும்
இன்னாக் கடறி(து)இப் போழ்தே கடந்தின்று காண்டும்சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. .. 217
கொளு
இன்னல் வெங்க டந்தெறி வேலவன்
அன்னம் அன்னவள் அயர்(வு)அ கற்றியது.

25. நெறி விலக்கிக் கூறல்
விடலைஉற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க்கு
அடலையுற் றாரின் எறிப்(பு)ஒழிந் தாங்(கு)அருக் கன்கருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. .. 218
கொளு
சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.

26. கண்டவர் மகிழ்தல்
அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன்
பின்பணைத் தோளி வரும்இப் பெருஞ்சுரம் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற(வு) உண்அளி போன்றொளிர் நாடகமே. .. 219
கொளு
மண்டழற் கடத்துக் கண்டவர் உரைத்தது.

27. வழிவிளையாடல்
கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே
விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே. .. 220
கொளு
வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல்
மின்தங்(கு) இடையடு விளையாடி யது.

28. நகரணிமை கூறல்
மின்தங்(கு) இடையடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்கமலம்
துன்(று)அம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
சென்(று)அங்(கு) அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. .. 221
கொளு
வண்டமர் குழலியடு கண்டவர் உரைத்தது.

29. நகர் காட்டல்
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடைஅன்னம் துன்னிமுன் தோன்றும்நல் நீள்நகரே. .. 222
கொளு
கொடுங்கடம் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடம்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.

30. பதிபரிசுரைத்தல்
செய்குன்(று) உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்கள்எய்ப்(பு) ஆறும் பொழில்அவை ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை அம்பல வற்(கு)இடம் ஏந்திழையே. .. 223
கொளு
கண்ணிவர் வளநகர் கண்டுசென்(று(அடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி(சு)உரைத்தது.

31. செவிலி தேடல்
மயிலெனப் பேர்ந்(து)இள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசும்எங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாய்என் கொலாம்இன்(று) அயர்கின்றதே. .. 224
கொளு
கவலை யுற்ற காதல் தோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.

32. அறத்தொடு நிற்றல்
ஆளரிக் கும்அரி தாய்த்தில்லை யாவருக் கும்எளிதாம்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேல்
கோளரிக் கும்நிகர் அன்னார் ஒருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்டல் ஆயத்(து)எம் வாணுதலே. .. 225
கொளு
சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியல்
சிறப்புடைச் செவிலிக்கு அறத்தொடு நின்றது.

33. கற்பு நிலைக்கு இரங்கல்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்(று)
எடுத்தாற்(கு) இனியன வேயினி யாவன எம்மனைக்கே. .. 226
கொளு
விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக்
கோடா யுள்ள நீடாய் அழுங்கியது

34. கவன்றுரைத்தல்
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தஎல் லாம்முழு தும்திதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகம் தான்படர் வானாம் ஒளியிழையே. .. 227
கொளு
அவள் நிலை நினைந்து செவிலி கவன்றது.

35. அடிநினைந்திரங்கல்
தாமே தமக்(கு)ஒப்பு மற்றில் லவர்தில்லைத் தண்அனிச்சப்
பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங் காய் எரியும்
தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. .. 228
கொளு
வெஞ்சுரமும் அவள் பஞ்சுமெல் அடியும்
செவிலி நினைந்து கவலை யுற்றது.

36. நற்றாய்க்கு உரைத்தல்
தழுவின கையிறை சோரின் தமியம்என் றேதளர்வுற்(று)
அழுவினை செய்யும்நை யாஅம்சொல் பேதை அறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்(டு)அம் பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. .. 229
கொளு
முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய(து) அறியத்
திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது.

37. நற்றாய் வருந்தல்
யாழியல் மென்மொழி வன்மனப் பேதையர் ஏதிலம்பின்
தோழியை நீத்(து)என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. .. 230
கொளு
கோடாய் கூற நீடாய் வாடியது.

38. கிளி மொழிக்கு இரங்கல்
கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் எனஅயரா
என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடும்என்(று)
என்னனை போக்கன்றிக் கிள்ளைஎன் உள்ளத்தை ஈர்க்கின்றதே. .. 231
கொளு
மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்லத்
தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.

39. சுடரோடு இரத்தல்
பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேள் மொழியழல் கான்நடந் தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்(து)இரந் தேன்சுடர் வானவனே. .. 232
கொளு
வெஞ்சுரத் தணிக்கெனச் செஞ்சுடர் அவற்கு
வேயமர் தோளி தாயர் பராயது.

40. பருவம் நினைந்து கவறல்
வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யும்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்(று) எண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்கும்எம் கார்மயிலே. .. 233
கொளு
முற்றா முலைக்கு நற்றாய் கவன்றது.

41. நாடத் துணிதல்
வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத்
தீயின(து) ஆற்றல் சிரம்கண்இழிந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. .. 234
கொளு
கோடாய் மடந்தையை நாடத் துணிந்தது.

42. கொடிக்குறி பார்த்தல்
பணங்கள்அஞ் சாலும் பருஅர(வு) ஆர்த்தவன் தில்லையன்ன
மணங்கொள்அஞ் சாயலும் மன்னனும் இன்னஏ வரக்கரைந்தால்
உணங்கல்அஞ் சா(து)உண்ண லாம்ஒள் நிணப்பலி ஒக்குவல்மாக்
குணங்கள்அஞ் சாற்பொலி யும்நல சேட்டைக் குலக்கொடியே. .. 235
கொளு
நற்றாய் நயந்து சொற்புட் பராயது.

43. சோதிடங் கேட்டல்
முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன் னோன்அருளால்
இன்னும் கடியிக் கடிமனைக் கேமற்(று) யாம்அயர
மன்னும் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறும்உண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே. .. 236
கொளு
சித்தம் தளர்ந்து தேடும் கோடாய்
உய்த்துணர் வோரை உரைமின் என்றது.

44. சுவடு கண்டறிதல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அக்
கள்வன் பகட்டுர வோன்அடி யென்று கருதுவனே. .. 237
கொளு
சுவடுபடு கடத்துச் செவிலி கண் டறிந்தது.

45. சுவடு கண்டிரங்கல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கின் பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரல் கானத்தின் நின்றோர் விடலைபின்போம்
காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. .. 238
கொளு
கடத்திடைக் காரிகை அடித்தலம் கண்டு
மன்னருள் கோடாய் இன்னல் எய்தியது.

46. வேட்ட மாதரைக் கேட்டல்
பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக்(கு) அலமரும் வல்லியப் பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் கரத்தய லானொ(டு)இன்(று) ஏகினள் கண்டனையே
போதிற் பொலியும் தொழிற்புலிப் பல்குரல் பொற்றொடியே. .. 239
கொளு
மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரு செவிலி பெற்றி வினாயது.

47. புறவொடு புலத்தல்
புயலன்(று) அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி
பயலன் தலைப்பணி யாதவர் போல்மிகு பாவம்செய்தேற்(கு)
அயலன் தமியன்அம் சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன்(று) எனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. .. 240
கொளு
காட்டுப் புறவொடு வாட்டம் உரைத்தது.

48. குரவொடு வருந்தல்
பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே
காயும் கடத்திடை யாடிக் கடப்பவும் கண்டுநின்று
வாயும் திறவாய் குழைஎழில் வீசவண்(டு) ஓலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே. .. 241
கொளு
தேடிச் சென்ற செவிலித் தாயர்
ஆடற் குரவொடு வாடி உரைத்தது.

49. விரதியரை வினாவல்
கத்திய பொக்கணத்(து) என்(பு)அணி கட்டங்கம் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூர்அம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
பித்திதன் பின்வர முன்வரு மோஓர் பெருந்தகையே. .. 242
கொளு
வழிவரு கின்ற மாவிர தியரை
மொழிமின்கள் என்று முன்னி மொழிந்தது.

50. வேதியரை வினாவல்
வெதிரேய் கரத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான் எனஒரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலோடே. .. 243
கொளு
மாதின்பின் வரும்செவிலி வேதியரை விரும்பி வினாவியது.

51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டார் எனஉவந் §ன்கண்டு நும்மைஇம் மேதகவே
பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்(று)
ஆண்டான் அருவரை ஆளியன் னாளுக்கண்டேன்அயலே
தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே. .. 244
கொளு
புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்
அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.

52. வியந்துரைத்தல்
பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற(து) இவ்விடம் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்னகம் மடுத்துக் கிடந்தலற
ஆங்(கு)அயி லாற்பணி கொண்டது திண்திறல் ஆண்தகையே. .. 245
கொளு
வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
நாடா வரும் கோடாய் கூறியது.

53. இயைபு எடுத்துரைத்தல்
மின்தொத்(து) இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்(று)ஒத் திடவுடை யாள(டு)ஒன் றாம்புலி யூரன்என்றே
நன்(று)ஒத் தெழிலைத் தொழவுற் றனம்என்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனம்அன்னை நீசொன்ன கொள்கையரே. .. 246
கொளு
சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கன்என்(று) அயிர்த்தேம் என்றது.

54. மீள உரைத்தல்
மீள்வது செல்வதன்(று) அன்னைஇவ் வெங்கடத்(து) அக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாள்இந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. .. 247
கொளு
கடுங்கடம் கடந்தமை கைத்தாய்க்(கு) உரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமின் என்றது.

55. உலகியல்பு உரைத்தல்
கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு)அணி யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
கரும்பன மென்மொழி யாரும்அந் நீர்மையர் காணுநர்க்கே. .. 248
கொளு
செவிலியது கவலை தீர
மன்னிய உலகியல் முன்னி உரைத்தது.

56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்
ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொ(டு) எற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. .. 249
கொளு
செழும்பணை அணைந்தமை
அழுங்கு தாய்க்(கு) உரைத்தது.
------------------------------

பதினேழாம் அதிகாரம்
17. வரைவு முடுக்கம்

பேரின்பக் கிளவி
வரைவு முடுக்கம் ஒருபதி னாறும்
சிவனது கருணை தெரிய உரைத்தல்
இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது.

1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
எழுங்குலை வாழையின் இன்கனி தின்(று)இள மந்திஅந்தண்
செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்(கு)என் னோநின் னருள் வகையே. .. 250
கொளு
இரவுக் குறியிடத்(து) ஏந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.

2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தின் என்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடம் தோன்றும்இக் குன்றிடத்தே. .. 251
கொளு
குலம்புரி கொம்பர்க்குச் சிலம்பின் செப்பியது.

3. உள்ளது கூறி வரைவு கூடாதல்
சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும்என்(று)
இறால்கழி வுற்(று)எம் சிறுகுடில் உந்தும் இடமி(து)எந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர்
பெறாஅருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. .. 252
கொளு
இன்மை உரைத்த மன்னனுக்கு
மாழை நோக்கி தோழி உரைத்தது.

4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல்
இடம்தொறும் பார்க்கும் இயவொரு நீஎழில் வேலின்வந்தால்
படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின்எம்மைத்
தொடர்ந்தொறும் துன்(பு)என் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. .. 253
கொளு
இரவரு துயரம் ஏந்தலுக்(கு) எண்ணிப்
பருவரல் எய்திப் பாங்கி பகர்ந்தது.

5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்
களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ(டு)
ஒளிறுற்ற மேனியின் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. .. 254
கொளு
ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலைப்
பாங்கி ஐய பகல்வரல் என்றது.

6. தொழுதிரந்து கூறல்
கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
குழிகண் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே. .. 255
கொளு
இரவரவின் ஏதம் அஞ்சிச்
சுரிதருகுழல் தோழி சொல்லியது.

7. தாய் அறிவு கூறல்
விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டாம் எனச்சிறிது
கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே. .. 256
கொளு
சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குறல் பாங்கி மெல்லியற்(கு) உரைத்தது.

8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்தோய்த்(து) அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான்
வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. .. 257
கொளு
வரிவளையை வரைவு கடாவி
அரிவை தோழி உரை பகர்ந்தது.

9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர்
பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. .. 258
கொளு
நகர்காவலின் மிகுகழி காதல்.

10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன்
பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்இல்லை யோநும் வரையிடத்தே. .. 259
கொளு
விரைதரு தாரோய் இரவரல் என்றது.

11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்(று) எழிலியுன்னிக்
குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ்(சு) உறாதவர்போல்
உறவரை மேகலை யாட்(கு)அலராம்பகல் உள்ளருளே. .. 260
கொளு
இகலடு வேலோய் பகல்வரல் என்றது.

12. இரவும் பகலும் வரவு விலக்கல்
கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்(து) ஐயமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர(வு) ஏதும் பயனில்லையே. .. 261
கொளு
இரவும் பகலும் வரவொழி கென்றது.

13. காலங் கூறி வரைவு கடாதல்
மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா(து) அயின்றன மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. .. 262
கொளு
முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.

14. கூறுவிக் குற்றல்
தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயின்என்னாம் சொல்லும் தன்மைகளே. .. 263
கொளு
ஒத்த(து) ஒவ்வா(து) உரைத்த தோழி
கொத்தவிழ் கோதையால் கூறுவிக் குற்றது.

15. செலவு நினைந்து உரைத்தல்
வல்சியின் எண்கு வளர்புற்(று) அகழமல் கும்இருள்வாய்ச்
செல்(வு)அரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல்
கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே. .. 264
கொளு
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைபுறக் கிளவி.

16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக்(கு) அளிக்கும் விழுமலை நாட விரிதிரையிண்
நாரிக்(கு) அளிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞைஇந் நீர்மைஎன் எய்துவதே. .. 265
கொளு
வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
-----------------------

பதினெட்டாம் அதிகாரம்
18. வரை பொருட் பிரிதல்

பேரின்பக் கிளவி
வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து
மூன்றுங் கருணை தோன்ற அருளே
உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும்
தெரிசன மாகித் திவ்விய இன்பம்
கூடும் குறியும் குலவி யுணர்தல்.

1. முலை விலை கூறல்
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. .. 266
கொளு
கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது.

2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்(கு)
அடுத்தன தாம்வரின் பொல்லா(து) இரவின்நின் ஆரருளே. .. 267
கொளு
தொடுத்தன விடுத்துத் தோகை தோளெய்(து)
இடுக்கண் பெரிது இரவரின் என்றது.

3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்
குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும் வந்து மேவுவன் அம்பலம்சேர்
மன்தங்(கு) இடைமரு(து) ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னச்
சென்(று)அங்(கு) இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே. .. 268
கொளு
ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.

4. நீயே கூறு என்றல்
கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று
வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித்
தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே. .. 269
கொளு
காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு
நீயே உரை நின்செலவு என்றது.

5. சொல்லாது ஏகல்
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குரு கார்மனம் போன்(று)
இருட்டிற் புரிகுழ லாட்(கு)எங்ங னேசொல்லி ஏகுவனே. .. 270
கொளு
நிரைவளை வாட உரையா(து) அகன்றது.

6. பிரிந்தமை கூறல்
நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று) உரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர் இறைஞ்சும்
மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழற்கடம் இன்றுசென் றார் சிறந்தவரே. .. 271
கொளு
தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது.

7. நெஞ்சொடு கூறல்
அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும்முன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாம்இனி வாழ்வகையே. .. 272
கொளு
கல்வரை நாடன் சொல்லா(து) அகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்து.

8. நெஞ்சொடு வருந்தல்
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார்
தேர்ப் பின்னைச் சென்றஎன்
நெஞ்(சு)என் கொலாம்இன்று செய்கின்றதே. .. 273
கொளு
வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது.

9. வருத்தம் கண்டு உரைத்தல்
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. .. 274
கொளு
அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது. 9

10. வழியழுகி வற்புறுத்தல்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்(கு)என் னோவந்த வாறென்பர் ஏந்திழையே. .. 275
கொளு
சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.

11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்
வந்(து)ஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி
பந்தா(டு) இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல்
சிந்தா குலமுற்றப் பற்றின்றி நையும் திருவினர்க்கே. .. 276
கொளு
வன்கறை வேலோன் வரைவு நீட
வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது.

12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட்
செய்என் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்என்ப தேகருத்தாயின் புரிகுழற் பொற்றொடியாய்
மெய்என்ப(து) ஏதுமற்(று) இல்லைகொலாம்இவ் வியவிடத்தே. .. 277
கொளு
வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.

13. தேறாது புலம்பல்
மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாஎன(து) இன்னுயிரும்
பொன்செய்த மேனியன் தில்லை யுறாரின் பொறைஅரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. .. 278
கொளு
தீதறு குழலி தேற்றத் தேறாது
போதுறு குழலி புலம்பியது.

14. காலம் மறைத்துரைத்தல்
கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. .. 279
கொளு
காந்தள் கருவுறக் கடவுள் மழைக்கென்(று)
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

15. தூது வர உரைத்தல்
வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. .. 280
கொளு
ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது.

16. தூது கண்டழுங்கல்
வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மை
இருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே. .. 281
கொளு
அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.

17. மெலிவு கண்டு செவிலி கூறல்
வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்(கு) அமரன்சிற் றம்பலத்தான்
சேயின(து) ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே. .. 282
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய
வாடா நின்ற கோடாய் கூறியது.

18. கட்டு வைப்பித்தல்
கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறு காஅசுரர்
நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோய்அறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. .. 283
கொளு
மால்கொண்ட கட்டுக் கால்கொண்டது.

19. கலக்கமுற்று நிறுத்தல்
மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப(து) ஓடிய வா(று)இவள் உள்ளமெல்லாம்
காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன்(று) ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. .. 284
கொளு
தெய்வத்தில் தெரியுமென
எவ்வத்தின் மெலிவுற்றது.

20. கட்டுவித்திக் கூறல்
குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே. .. 285
கொளு
கட்டு வித்தி விட்டு ரைத்தது.

21. வேலனை அழைத்தல்
வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்(து)அவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. .. 286
கொளு
வெறியாடிய வேலனைக் கூஉய்
நெறியார் குழலி தாயர் நின்றது.

22. இன்னல் எய்தல்
அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான(து) அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே. .. 287
கொளு
ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது
நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.

23. வெறி விலக்குவிக்க நினைதல்
சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா அழகிதன் றேஇறை தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல் லேன்மொழி யாதும்உய்யேன்
குன்றார் துறைவர்க்(கு) உறுவேன் உரைப்பன் இக் கூர்மறையே. .. 288
கொளு
அயல்திரு வெறியின் மயல்தரு மென
விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது.

24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்
யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. .. 289
கொளு
வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்(கு)
அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது.

25. அறத்தொடு நிற்றல்
வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதோர் போழ்(து)உடை யான்புலியூர்க்
கொண்டலுற்(று) ஏறும் கடல்வர எம்உயிர் கொண்டுதந்து
கண்டலுற்(று) ஏர்நின்ற சேரிச்சென் றான்ஓர் கழலவனே. .. 290
கொளு
செய்த வெறியின் எய்துவது அறியாது
நிறத்தொடித் தோழிக்(கு) அறத்தொடு நின்றது.

26. ஐயந்தீரக் கூறல்
குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்
முடிக்(கு)அல ராக்கும்மொய் பூந்துறை வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாய்அறியும்
படிக்கல ராம்இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே. .. 291
கொளு
விலங்குதல் விரும்பு மேதரு தோழி
அலங்கற் குழலிக்(கு) அறிய உரைத்தது.

27. வெறி விலக்கல்
விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின்
மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. .. 292
கொளு
அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
வெறி விலக்கப் பிறிதுரைத்தது.

28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்
மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. .. 293
கொளு
சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது.

29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்
இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு
முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. ... 294
கொளு
கற்பினின் வழாமை நிற்பித்து எடுத்தோள்
குலக்கொடி தாயர்க்(கு) அறத்தொடு நின்றது.

30. தேர் வரவு கூறல்
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கள்தம்
வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே. ... 295
கொளு
மணிநெடுந் தேரோன் அணிதிணின் வருமென
யாழியல் மொழிக்குத் தோழி சொல்லியது.

31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. ... 296
கொளு
நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.

32. ஐயுற்றுக் கலங்கல்
அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்
படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில்
கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. ... 297
கொளு
நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத்
தெரிவ ரிதென அரிவை கலங்கியது.

33. நிதி வரவு கூறா நிற்றல்
என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. ... 298
கொளு
மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ் நிதி மடந்தைக்குத் தெரிய உரைத்தது.
-----------------------------

கற்பியல் ( 19 - 25 அதிகாரங்கள்)

பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணம் சிறப்புரைத்தல்

பேரின்பக் கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும்
உயிர்சிவ மணம்பெற்(று) உண்மைஇன் பாகிய
பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல்.

1. மணமுரசு கூறல்
பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. ... 299
கொளு
வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி
நிரைவ ளைக்கு நின்று ரைத்தது.

2. மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதும்உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வால்எரி முன்வலம் செய்(து)இடப்பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே. ... 300
கொளு
மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது.

3. வழிபாடு கூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
வேரியம் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பர்அன்னே
காரியல் கண்டவர்வண் தில்லை வணங்கும்எம் காவலரே. ... 301
கொளு
மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.

4. வாழ்க்கை நலங்கூறல்
தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில்
கண்டின மேவும்இல் நீஅவள் நின்கொழு நன்செழுமெல்
தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்அயலே. ... 302
கொளு
மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக்(கு) அதன்சிறப்(பு) உரைத்தது.

5. காதல் கட்டுரைத்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்பக் கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதல் அஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. ... 303
கொளு
சோதி வேலவன் காதல்கட் டுரைத்தது.

6. கற்பறிவித்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரி(சு)இன்ன பான்மைகளே. ... 304
கொளு
விற்பொல நுதலி கற்பறி வித்தது.

7. கற்புப் பயப்புரைத்தல்
சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச் சிற்றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாதவன் ஈர்ங்களிறே. ... 305
கொளு
கற்புப் பயந்த அற்புதம் உரைத்தது.

8. மருவுதல் உரைத்தல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே(று)
அன்னவன் தேர்புறத்(து) அல்கல்செல் லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்துசிற்றம் பலம் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவல்அன் னாளும்மற்(று) ஓர் தெய்வம் முன்னலளே. ... 306
கொளு
இருவர் காதலும் மருவுதல் உரைத்தது.

9. கலவி இன்பம் கூறல்
ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக் கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத்(து) அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றா(து)இவ் வணிநலமே. ... 307
கொளு
நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங்(கு) உளத்தோ(டு) இகுளை கூறியது.
------------------

இருபதாம் அதிகாரம்
20. ஓதற் பிரிவு

பேரின்பக் கிளவி
கல்வியில் பிரிவொரு நான்கும் காதல்
புல்லும் ஆனந்த இன்பப் பூரணம்
சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.

1. கல்வி நலங்கூறல்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றார்அம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஓருவன் இருங்கழல் உன்னினர்போல்
ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே. ... 308
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக்(கு) அறிவறி வித்தது.

2. பிரிவு நினைவுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு
ஓதலுற் றார்உற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. ... 309
கொளு
கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.

3. கலக்கம் கண்டுரைத்தல்
கற்பா மதில் தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
விற்பா விலங்கல்எங் கோனை விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. ... 310
கொளு
ஓதற்(கு) அகல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண்(டு) உரைத்தது.

4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்
பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும்
தரியா மையும்ஒருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர்அன்ன
புரியா மையும்இது வேயினி என்னாம் புகல்வதுவே. ... 311
கொளு
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது.
---------------------

இருபத்தொன்றாம் அதிகாரம்
21. காவற்பிரிவு

பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும்
இன்பத் திறத்தை எங்கும் காண்டல்.

1. பிரிவு அறிவித்தல்
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்கயற்கண்
பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே. ... 312
கொளு
இருநிலம் காவற்(கு) ஏகுவர் நமரெனப்
பொருகடர் வேலோன் போக்(கு)அறி வித்தது.

2. பிரிவு கேட்டு இரங்கல்
சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகண் தழலுடை யோன்உறை அம்பலம் உன்னலரின்
துறுகள் புரிகுழ லாய்இது வோஇன்று சூழ்கின்றதே. ... 313
கொளு
மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது. 2
-----------------

இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகை தணி வினைப் பிரிவு

பேரின்பக் கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
எங்கும் இன்பக் கனமென் றியறல்.

1. பிரிவு கூறல்
மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்(கு)என்னை ஆண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்(கு)அரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. ... 314
கொளு
துன்னு பகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

2. வருத்தம் தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே. ... 315
கொளு
மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
----------------

இருபத்திமூன்றாம் அதிகாரம்
23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு

பேரின்பக் கிளவி
உற்றுழிப் பிரிவார் எட்டும் ஆனந்தம்
பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.

1. பிரிந்தமை கூறல்
போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காதுகுலாய குழைஎழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாவிளை கின்ற(து)இன்(று) ஒன்னார் இடுமதிலே. ... 316
கொளு
விறல்வேந்தர் வெம்முணைக்கண்
திறல் வேந்தர் செல்வர் என்றது.

2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. ... 317
கொளு
வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக்(கு) எடுத்து ரைத்தது.

3. வான் நோக்கி வருந்தல்
கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயில்இரவின்
மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே
போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே. ... 318
கொளு
மானோக்கி வடிவு நினைத்தோன்
வானோக்கி வருந்தியது.

4. கூதிர் கண்டு கவறல்
கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்(று) அல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நடு மால்எழில் தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. ... 319
கொளு
இருங்கூதிர் எதிர்வு கண்டு
கருங்குழலி கவலை யுற்றது.

5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று
பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ
மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே. ... 320
கொளு
ஆன்றபனிக்(கு) ஆற்றா(து) அழிந்(து)
ஈன்றவளை ஏழை நொந்தது.

6. பின்பனி நினைந்து இரங்கல்
புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம்அனையாள்
பரம்அன்(று) இரும்பனி பாரித்த வாபரந்(து) எங்கும்வையம்
சரமின்றி வான்தரு மேலாக்கும் மிக்க தமியருக்கே. ... 321
கொளு
இரும்பனியின் எதிர்வு கண்டு
கரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
வாழும் படியன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. ... 322
கொளு
இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னல் எய்தியது.

8. பருவங் காட்டி வற்புறுத்தல்
பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பதென் றேஎன வானின் மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாய்எழில் வாய்த்த பனிமுகிலே. ... 323
கொளு
கார்வருமெனக் கலங்கு மாதரைத் தேர் வருமெனத் தெளிவித்தது.

9. பருவம் அன்று என்று கூறல்
தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. ... 324
கொளு
காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது.

10. மறுத்துக் கூறல்
தேன்திக்(கு) இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்(து)எங்
கோன்திக்(கு) இலங்குதிண் தோள் கொண்டல் கண்டன் குழைஎழில்நாண்
போன்(று)இக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல் போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே. ... 325
கொளு
பருவம் அன்றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.

11. தேர் வரவு கூறல்
திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம்
கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னாகர்க்கே. ... 326
கொளு
பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது.

12. வினை முற்றி நினைதல்
புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங்கு இருங்களி யானை வரகுணண் வெற்பின்வைத்த
கயலோங்(கு) இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும்
செயலோங்(கு) எயில்எரி செய்தபின் இன்றோர் திருமுகமே. ... 327
கொளு
பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

13. நிலைலமை நினைந்து கூறல்
சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங் கும்ஒளியார்
நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்
இறப்பின் துயின்றுமுற் றத்(து)இரை தேரும் எழில் நகர்க்கே. ... 328
கொளு
பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர் பாகற்கு வருந்து புகன்றது.

14. முகிலொடு கூறல்
அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று) ஓல மிடும்இமையோர்
மருந்(து)ஏர் அணிஅம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்(து)ஏர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்(கு)என்
வரும்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. ... 329
கொளு
முனைவற்கு உற்றுழி வினைமுற்றி வருவோன்
கழுமல் எய்திச் செழுமுகிற்(கு) உரைத்தது.

15. வரவெடுத்துரைத்தல்
பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுரம் கொண்டுவண்தேர்
அணிவார் முரிசினொ(டு) ஆலிக்கும் மாவோ(டு) அணுகினரே. ... 330
கொளு
வினைமுற்றிய வேந்தன் வரவு
புழையிழைத் தோழி பொற்றொடிக்(கு) உரைத்தது.

16. மறவாமை கூறல்
கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோ(டு)
ஒருங்கு வளைக்கரத் தான் உண ராதவன் தில்லையப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. ... 331
கொளு
பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து
மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.
------------------

இருபத்திநான்கம் அதிகாரம்
24. பொருள் வயின் பிரிவு

பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
ஆனந்த மாகி அதுவே தானாய்த்
தானே அதுவாய்ப் பேசிய கருணை.

1. வாட்டங் கூறல்
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி(து) என்னென்று தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோஎன்று வந்திக்கும் நன்னுதலே. ... 332
கொளு
பிரிவு கேட்ட அரிவை வாட்டம்
நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது.

2. பிரிவு நினைவுரைத்தல்
வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைக் செவ்வாய்த் திருநுதலே. ... 333
கொளு
பொருள்வயின் பிரியும் பொருவே லவனெனக்
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

3. ஆற்றாது புலம்பல்
சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்(கு)
எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவ(து) அஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்(று) அம்ம கொடியவளே. ... 334
கொளு
பொருள்தரப் பிரியும் அருள்தரு பவளெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.

4. ஆற்றாமை கூறல்
வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள்
மானக் கனகம் தரும்மலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ இனிச் சென்று தேர்பொருளே. ... 335
கொளு
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.

5. திணை பெயர்த்து உரைத்தல்
கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்(து)
இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ
பொருள்தரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. ... 336
கொளு
துணைவன் பிரியத் துயருறு மனத்தோடு
திணை பெயர்த்திட்டுத் தேமொழி மொழிந்தது.

6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
மூவர்நின்(று) ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமுல்லைத்
தேவர்சென்(று) ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தாப்
பாவர்சென்(று) அல்கும் நரகம் அனைய புனையழற்கான்
போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே. ... 337
கொளு
பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

7. பிரிந்தமை கூறல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. ... 338
கொளு
எதிர் நின்று பிரியின் கதிர் நீ வாடுதற்கு
உணர்த்தா(து) அகன்றான் மணித்தேரோன் என்றது.

8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
ஆழியன்(று) ஈர்அடி யும்இலன் பாகன்முக் கண்தில்லையோன்
ஊழியன் றாதன நான்கும்ஐம் பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்எண் திசையும் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. ... 339
கொளு
அயில்தரு கண்ணியைப் பயில்தரும் இரவினுள்
தாங்குவ(து) அரிதெனப் பாங்கி பகர்ந்தது.

9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியார் எழில்அழிக் கும்எழில் அம்பலத் தோன்எவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. ... 340
கொளு
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ் குழலி வாடியது.

10. உறவு வெளிப்பட்டு நிற்றல்
சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க் கடல்நஞ்(சு)
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்னல்லாம்
காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. ... 341
கொளு
பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

11. நெஞ்சொடு நோதல்
பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இப் பொங்குவெங்கா
னின்னணி நிற்கும்இ(து) என்னென்ப தேஇமை யோர்இறைஞ்சும்
மன்னணி தில்லை வளநகர் அன்னஅன் னந் நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. ... 342
கொளு
வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

12. நெஞ்சொடு புலத்தல்
நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்அரி தாகும் பிரி(வு)எளி தாக்குவித்துச்
சேய்வயின் போந்தநெஞ் செஅஞ்சத் தக்க(துஐஉன் சிக்கெனவே. ... 343
கொளு
அழறகடத்(து) அழுக்க மிக்கு நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது.

13. நெஞ்சொடு மறுத்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. ... 344
கொளு
நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

14. நாள் எண்ணி வருந்தல்
தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்கண்
உண்ணீர் உகஒளி வாடிய நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நிலனுங் குழி யும்விரல் இட்டறவே. ... 345
கொளு
சென்றவர் திறத்து நின்றுநணி வாடும்
குழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.

15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங்(கு) உதர்த்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே. ... 346
கொளு
நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.

16. பருவங் கண்டு இரங்கல்
கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்(கு)
எண்ணுழை யாத்தழை கோலிநின்(று) ஆலும் இனமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன(து) இன்னருள்போல்
பண்ணுழை யாமொழி யாள்என்ன ளாங்கொல்மன் பாவியற்கே. ... 347
கொளு
மன்னிய பருவம் முன்னிய செலவின்
இன்னல் எய்தி மன்னன் ஏகியது.

17. முகிலொடு கூறல்
அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற் ற்ம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்(து)அய ராநிற்கும் நீள்நகர்க்கே. ... 348
கொளு
எனைப்பல துயரமோ(டு) ஏகா நின்றவன்
துனைக்கார் அதற்குத் துணிந்துசொல் லியது.

18. தேர் வரவு கூறல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமெனப் போய்
மேவிய மாநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து மேவினதே. ... 350
கொளு
வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கிஇனி(து)இயம் பியது.

19. இளையர் எதிர்கோடல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த
ஊழின் வலியதொன்(று) என்னை ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன
சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து தோன்றியதே. ... 351
கொளு
செறிக ழலவன் திருநகர் புகுதர
ஏறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.

20. உள் மகிழ்ந்து உரைத்தல்
மயில் மன்னு சாயல்இம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதெல்லாம் விடை யோன்புலியூர்க்
குயில் மன்னு சொல்லிமென் கொங்கைஎன் அங்கத் திடைகுளிப்பத்
துயில் மன்னு பூவணை மேலணை யாமுன் துவள் உற்றதே. ... 352
கொளு
பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ(டு) உள்மகிழ்ந்(து) உரைத்தது.
---------------

இருபத்தைந்தாம் அதிகாரம்
25. பரத்தையிற் பிரிவு

பேரின்பக் கிளவி
பரத்தையிற் பிரிதல் எண்ணா(று) ஒன்றும்
உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
எப்பதம் எவ்வுயிர் எவ்வுல(கு) யாவும்
அப்படி யேகண்(டு) அறிவு பூரணம்
ஆகி நின்(று) அளவில் அனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை உரைத்தது.

1. கண்டவர் கூறல்
உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரஓருங்கே
எடுத்தணி கையே றினவளை ஆர்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலர் அம்பு
அடுத்தணி வாள்இளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. ... 352
கொளு
உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

2. பொறை உவந்து உரைத்தல்
கரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யுரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகும்என் ஆலியும் தேய்வுற்(று) அழிகின்றதே. ... 353
கொளு
கள்ளவிழ்க் கோதையைக் காதல் தோழி
உள்ளவிழ் பொறைகண்(டு) உவந்து ரைத்தது.

3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்
அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றத்தம் மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே. ... 354
கொளு
பொற்றிகழ் அரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த ஊரனோ(டு) இருந்துவா டியது.

4. கன விழந்து உரைத்தல்
தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
ஆவாகனவும் இழந்தேன் நனவென்(று) அமளியின்மேல்
பூவார் அகலம்வந்(து) ஊரன் தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன் விழித் தேன்அரும் பாவியனே. ... 355
கொளு
சினவில் தடக்கைத் தீம்புனல் ஊரனைக்
கனவில் கண்ட காரிகை உரைத்தது.

5. விளக்கொடு வெறுத்தல்
செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தம்அன்(று) என்றில்லையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. ... 356
கொளு
பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ(டு) அழுங்கிச் செஞ்சுடர்க்(கு) உரைத்தது.

6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்
பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனும் கொள்கநள் ளார் அரணம்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோம்மன் உறாவரையே. ... 357
கொளு
வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயின்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.

7. பள்ளியிடத்து ஊடல்
தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்(கு)எள்ளா(து)
எவம்செய்து நின்(று)இனி இன்(று)உனை நோவ(து)என் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவம்செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல்விடு நற்கலையே. ... 358
கொளு
பீடிவர் கற்பின் தோடிவர் கோதை
ஆடவன் தன்னோ(டு) ஊடி உரைத்தது.

8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்
தணியுறப் பொங்கும்இக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென்(று) இன்றெய்து மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. ... 359
கொளு
பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.

9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்
இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ் செய்து
குரவணை யுங்குழல் இங்(கு)இவ ளால்இக் குறியறிவித்(து)
அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி
தரஅணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே. ... 360
கொளு
உலகியல் அறியச் செலவிடல் உற்ற
விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது. 9

10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி ஊரற்(கு) உலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதும் அம் செம்மலர்ப் பட்டும்கட் டார்முலைமேல்
சிவந்தஅச் சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே. ... 361
கொளு
மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்
குராப்பயில் கூழை இவளின்மிக்(கு) அம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யார்அடங் கார்எவ ரேயினிப்பண்(டு)
இராப்பகல் நின்றுணங்(கு) ஈர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன் புகும்இக் கடிமனைக்கே. ... 362
கொளு
கடனறிந்(து) ஊரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவர்ஆய்ந்(து) உரைத்தது.

12. முகமலர்ச்சி கூறல்
வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற்றம்பல வன்அருளான்
முந்தா யினவியன்நோக்கெதிர் நோக்க முகமடுவின்
பைந்தாள் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. ... 363
கொளு
பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிறர் உரைத்தது.

13. கால நிகழ்வு உரைத்தல்
வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில்
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்(டு) ஊதவிண் தோய்பிறையோ(டு)
எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்(கு) எதிர் கொண்டதே. ... 364
கொளு
இகழ்வ(து) எவன்கொல் நிகழ்வதில் வாறெனச்
செழுமலர்க் கோதை உழையர் உரைத்தது.

14. எய்தல் எடுத்துரைத்தல்
புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்பக்
கலவிக்கடலுள் கலிங்கஞ் சென்(று) எய்திக் கதிர்கொள்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்(து)அம் பலத்துநின்றோன் அருள்போன்(று)
உலவிய லாத்தனம் சென்றெய்தல் ஆயின ஊரனுக்கே. ... 365
கொளு
சீரியல் உலகில் திகழ்கரக் கூடி
வார்புனல் ஊரன் மகிழ்வுற்றது.

15. கலவி கருதிப் புலத்தல்
செவ்வாய் துடிப்பக்கருங்கண் பிறழச்சிற் றம்பலத்(து)எம்
மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா(று) அருள்பிறர்க்(கு) ஆகு மென நினைந்து இன்னகையே. ... 366
கொளு
மன்னிய உலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி எய்தியது.

16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்
மலரைப் பொறாஅடி மானும் தமியன்மன் னன்ஒருவன்
பலரைப் பொறா(து)என்(று) இழிந்துநின் றாள்பள்ளி காமன்எய்த
அலரைப் பொறா(து)அன்(று) அழல்விழித் தோன்அம்பலம் வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாள்என்னை கொல்லோ கருதியதே. ... 367
கொளு
குறப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.

17. வாயிலவர் வாழ்த்தல்
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்தும்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்பலம்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்யேதக்க வாய்மையனே. ... 368
கொளு
தலை மகனது தகவுடைமை
நிலைதரு வாயில் நின்றோர் உரைத்தது.

18. புனல் வரவுரைத்தல்
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்(கு) இல்துணைச் சேவல் செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்குதர் செம்ம லூரன் திண்தோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யான் அருளே
போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. ... 369
கொளு
புனலா டுகஎனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையம் உரைத்தது.

19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோள்இணைகள்
தோயீர் புணர்தவம் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகோலம்
தீயே எனமன்னு சிற்றம்பலவர்தில்லைந்நகர் வாய்
வீயே எனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. ... 370
கொளு
பயில்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயல் மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.

20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்
அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்அவள் அன்(று)உகிரால்
சிரம்அங்(கு) அயனைச் செற்றோன் தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதுஐய காத்துநம் பொற்பரையே. ... 371
கொளு
தீம்புனல் வாயில் சேயிழை வருமெனச்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

21. தன்னை வியந்துரைத்தல்
கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோன் அருள்பெற் றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பால் அருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப் பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே. ... 372
கொளு
அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.

22. நகைத்துரைத்தல்
இறுமாப்(பு) ஒழியும்அன் றேதங்கை தோன்றின்என் எங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்தோள்
பெறு மாத் தொடும்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியனோ(டு)
இறுமாப்(பு) ஒழிய இறுமாப்(பு) ஒழிந்த இணைமுலையே. ... 373
கொளு
வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.

23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்
வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயன்அன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்(று)
ஏயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயாம் இயல்பிவள் கற்புநற் பால இயல்புகளே. ... 374
கொளு
மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுதல் உரைத்தது.

24. பாணன் வரவுரைத்தல்
விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறைஅமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்மன்னோ
அறலியல் கூழைநல் லாய் தமியோமை யறிந்திலரே. ... 375
கொளு
இகல்வே லவன் அகல்(வு) அறியாப் பாணனைப்
பூங்குழல் மாதர்க்குப் பாங்கி உரைத்தது.

25. தோழி இயற்பழித்தல்
திக்கின் இலங்குதண் தோள்இறை தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக(து) அணிந்துநின் றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்ததிலன் நின்றசெவ்வேல் எம் தனிவள்ளலே. ... 376
கொளு
தலைமகனைத் தகவிலன்எனச்
சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.

26. உழையர் இயற்பழித்தல்
அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்
என்பிடை வந்(து)அமிழ்(து) ஊறநின்(று) ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்(து) அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. ... 377
கொளு
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக்(கு) உழையர் உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

27. இயற்பட மொழிதல்
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தார்அவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும்உண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண் டோஎம் பயோதரமே. ... 378
கொளு
வரிசிலை யுரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.

28. நினைந்து வியந்துரைத்தல்
தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகும்ஒரு காற்பிரி யாதுள்ளி உள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்(று)அகத் தேவரும் பான்மையளே. ... 379
கொளு
மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியற் கோதையை அகனமர்ந்(து) உரைத்தது.

29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்
தேன்வண்(டு) உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான்வள் துறைதரு வாய்மையன் மன்னு குதலை யின்வா
யான்வள் துறைதரு மால்அமு தன்னவன் வந்தணையான்
நான்வண்(டு) உறைதரு கொங்கைஎவ் வாறுகொல் நண்ணுவதே. ... 380
கொளு
பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.

30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம்என் மாமதியின்
அயல்வந்த ஆடர(வு) ஆடவைத் தோன்அம் பலம்நிலவு
புயல்வந்த மாமதில் தில்லைநன் னாட்டுப் பொலிபவரே. ... 381
கொளு
பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக்(கு) அறிய உரைத்தது.

31. வாயில் வேண்டத் தோழி கூறல்
கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள்இழித்தால்
போல்தான் செறியிருள் பொக்கம்எண் ணீர்கன்(று) அகன்றபுனிற்(று)
ஈற்றா வெனநீர் வருவது பண்(டு)இன்(று)எம் ஈசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடுவீதியில் போதிர்அத் தேர்மிசையே. ... 382
கொளு
வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையரவு அல்குல் பாங்கி பகர்ந்தது.

32. தோழி வாயில் வேண்டல்
வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர் அரன்இருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. ... 383
கொளு
வாயில் பெறாது மன்னவன் நிற்ப
ஆயிழை அவட்குத் தோழி சொல்லியது.

33. மனையவர் மகிழ்தல்
தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்(கு) ஒகையுய்ப்பான்
மேவியம் கண்டனை யோவந் தனன்என வெய்துயிர்த்துக்
காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. ... 384
கொளு
கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

34. வாயின் மறுத்துரைத்தல்
உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்நம்
கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே. ... 385
கொளு
மடவரல் தோழி வாயில் வேண்ட
அடல்வே லவனார் அருளு ரைத்தது.

35. பாணனொடு வெகுளுதல்
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. ... 386
கொளு
மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.

36. பாணன் புலந்துரைத்தல்
கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செல் வாய்துடிப்பக்
கல்லாண்(டு) எடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று
பல்லாண்(டு) அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே. ... 387
கொளு
கருமமலர்க் கண்ணி கனன்றுகட் டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப்பட்டது.

37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்
மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும்
தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம்
இந்தக் கருங்குவ ளைச் செவ்வி யோடிக் கெழுமினவே. ... 388
கொளு
பல்வளை பரிசுகண்டு இல்லோர் இயம்பியது.

38. ஊடல் தணிவித்தல்
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
கவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. ... 389
கொளு
தோன்றலைத் துணையடு தோழி கண்டு
வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.

39. அணைந்த வழி யூடல்
சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பால்தான் திகழும் பரிசினம் மேவும் படி(று)உவவேம்
கால்தான் தொடல்தொட ரேல்விடு தீண்டல் எம் கைத்தலமே. ... 390
கொளு
தெளிபுனல் ஊரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி ஊடி உரைத்தது. 39

40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன் றாய்நிற்கும் ஆறென் வளமனையில்
கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. ... 391
கொளு
ஆங்கதனுக்(கு) அமுக்கம் எய்தி
வீங்கு மென்முலை விட்டுரைத்தது.

41. கலவி கருதிப் புலத்தல்
மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்றுன் னிய கழற் சிற்றம் பலவன்தென்னம் பொதியில்
நன்றும் சிறியவர் இல்எம(து) இல்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே. ... 392
கொளு
கலைவளர் அல்குல் தலைமகன் தன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது.

42. மிகுத்துரைத்து ஊடல்
செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்(று) அன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்
வழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. ... 393
கொளு
நாடும் ஊரும் இல்லும் சுட்டி
ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது.

43. ஊடல் நீட வாடி உரைத்தல்
திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந்(து) இணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்(து) ஆண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தேல் அதுவன்(று) இதுவோ வருவதோர் வஞ்சனையே. ... 394
கொளு
வாடா ஊடல் நீடா வாடியது.

44. துனியழிந்து உரைத்தல்
இயல்மன்னும் அன்புதந் தார்க்(கு)என் நிலைஇமை யோர்இறைஞ்சும்
செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
புயல்மன்னு குன்றில் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய்
அயல்மன்னும் யானை துரந்(து)அரி தேரும் அதரகத்தே. ... 395
கொளு
தகுதியின் ஊரன் மிகுபதம் நோக்கிப்
பனிமலர்க்கோதை துனிய ழிந்தது.

45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்
கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்(து)
எதிர்த்(து)எங்கு நின்(று)எப் பரிசளித் தான்இமை யோர்இறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை ஈசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வர் எம்மைப் பூசிப்பதே. ... 396
கொளு
புதல்வனது திறம்புகன்று
மதரரிக் கண்ணி வாட்டந் தவிர்ந்தது.

46. கலவி இடத்து ஊடல்
சிலைமலி வாணுதல் எங்கைய(து) ஆகம் எனச் செழும்பூண்
மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்தலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை ஊரனின் கள்வர்இல் என்ன உன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. ... 397
கொளு
சீறடிக்(கு) உடைந்த நாறிணர் தாரவன்
தன்மை கண்டு பின்னும் தளர்ந்தது.

47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்
ஆறூர் சடைமுடி அம்பலத்(து) அண்டர்அண்டம்பெறினும்
மாறூர் மழலிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடிநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளில்தங்கு கங்குற் சிறுதுயிலே. ... 398
கொளு
முன்னி கழ்ந்தது நன்னுதற்(கு) உரைத்து
மன்னு புனலூரன் மகிழ்வுற்றது.

48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்
ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர் உருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்(று) உன்மகனே
மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. ... 399
கொளு
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற்(கு) உரைத்தது. 48.

49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்
காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று) யாவர்க்கும் ஊதியமே. ... 400
கொளு
இரும்பரிசில் ஏற்றவர்க்(கு) அருளி
விரும்பினர் மகிழ மேவுதல் உரைத்தது.

திருச்சிற்றம்பலக்கோவையார் முற்றுப் பெற்றது.
திருச்சிற்றம்பலம்


This page was first put up on March 9, 2000
Please send your comments and corrections to the Webmaster(s) of this site