manOnmaNIyam (a poetrical play)
by cuntaram piLLai (in Tamil Script, unicode format)

மனோன்மணீயம்
ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை (1855-1891)




Etext Preparation and Proof-reading: Mr. Siva Kumar Pillai,.Shangai, Republic of China
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

manonmaNIyam by cuntaram piLLai ( in TSCII format)
மனோன்மணீயம் (ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை, 1855-1891)

பாயிரம்

கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)

வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர்
போதமும் போய் தீண்டாப் பூரணமே - பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

எனவாங்கு

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.

(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.

பாயிரம் முற்றிற்று.


மனோன்மணீயம்
முதல் அங்கம் : முதற் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
1ம் சேவ: புகழ்மிகு அருமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின். சீரிதே
2ம் சேவ: அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர்
எவ்விடம் வைத்தனை?
3ம் சேவ: ஈதோ! நோக்குதி.
4ம் சேவ: அவ்விடத் திருப்பதென்?
3ம் சேவ: ஆரம் பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்,
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
"சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது, கேண்மின்!"
2ம் சேவ: முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்!
4ம் சேவ: எத்தனை பத்தி! எத்தனை கூட்டம்!
எள்விழற் கிடமில்லை. யான்போய்க் கண்டேன்!
3ம் சேவ: உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம்.
1ம் சேவ: அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர்!
ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்!
[ஜீவகன் வர]
யாவரும்: (தொழுது) ஜய! ஜய! விஜயே! பவரா ஜேந்திரா!!
[சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன்,
நகரவாசிகள் முதலியோர் வர]
ஜய! ஜய! விஜய! தவராஜேந்திரா!!
ஜீவகன் வருக! வருக! குருகிரு பாநிதே!!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்? தீதற வாதனத்து
இருந்தருள் இறைவ! என்பவ பாசம்
இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்
[ஜீவகன் பாதபூஜை செய்ய]
சுந்தர: வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க!
சுகமே போலும், மனோன்மணி?
ஜீவ: சுகம். சுகம்.
சுந்தர: இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?
ஜீவ: உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்.
கூடல் மாநகர் குடிவிட்டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன நின்வரண். இமைப்பரு தேவருங்
கடக்கரும் இதன் றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித்தேன் நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமெக்கெலாம்
அத்த! நின் அருள்போல் அரணெது! குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே.
குடிலன் ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தி!
நீயறி யாததொன் றில்லை; ஆயினும்.
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ;

தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர்; அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது

மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
ஒருதலை யாக, உருவஞ் சிறிய

குருமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்து செவிவழித் தந்த கங்கையும்,
பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்.

வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழ்வெண் மருப்பும் வீசிக் காழகிற்
சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்

குங்கும முறித்துச் சங்கின மலருந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,

எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பொலிவுறல் கண்டனை
தொடுகடலோவெனெத்துணுக்குறும் அடையலர்
கலக்கத் தொல்லையுங் கட்செவிச் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவகழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந்தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம்,
உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும்.
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந்த் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங்கிறிகளு மெண்ணில.
சுந்தர: (எழுந்து) சம்போ! சங்கர! அம்பிகா பதேஎ!
நன்று மன்னவ! உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெலாம் கண்டுளேம்.
அல்லா துறுதி யுளதோ? சொல்லுதி!
ஜீவ: என்னை! என்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகை
கொள்ளுவ ரென்பதும் உள்ளற்பா ற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே
சுந்தர: காலம் என்பது கறங்குபோற் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முன்மனம்
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்
உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்
அத்திரு வுறையும் அப்புறம் போதல்
கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.
ஜீவ: ஆம்! ஆம்!சேவக அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே.
[அரசனும் முனிவரும், சீடரும் அப்புறம் போக]
குடிலன்: (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல!
(சேவகனை நோக்கி)
சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி
சேவ: சுவாமி!
[குடிலன் முதலியோர் போக]
முதல் நகர்வாசி : கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை ஆ!ஆ! வியப்பே மிகவும்
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?
2ம் நக: கேட்டோம்; கேட்டோம் நாட்டிற் கென்குறை
விடு!விடு! புராணம் விளம்பினன் வீணாய்.
3ம் நக: குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே
1ம் நக: ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.
2ம் நக: முனிவரங் கோதிய தென்னை? முற்றுந்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்
3ம் நக: யாதோ
மனோன்மணி எனப்பெயர் வழங்கினர், அறிவைகொல்?
4ம் நக: வாழ்த்தினர் போலும், மற்றென்?
2ம் நக: பாழ்த்த இத்
தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்.
3ம் நக: ஐயமற் றதற்கேன்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா அழகே யாக்கையா
மன்பே ருலகுசெய் மாதவம் அதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையு னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரோ?
2ம் நக: அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர், தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே
4ம் நக: ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே
[நகர்வாசிகள் போக]
முதல் அங்கம்: முதற் களம் முற்றிற்று


முதல் அங்கம்: இரண்டாம் களம்

(ஆசிரியத் தாழிசை)
மனோன்மணி: (கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூற்பவன்
அணைகில னரன்மின்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றனானென் றாடாய் கழல்
வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்
மனோன்: இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்
வாணி: எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்ததது பாதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்
மனோன்: தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல்.
வாணி: உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
(அந்நட ராஜரென்) றாடாய் கழல்
[பெருமூச்செறிய]
(நேரிசை ஆசிரியப்பா)
மனோன்: (சிரித்து) ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து
நன்று! நன்று! நின் நாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே!
வாணி: ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே.
மனோன்: மறையேல்! மறையேல் பிறைபழி நுதலாய்!
திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபொற்
சிவந்தவுன் கபோல நுவன்று நின்மனக்
களவெலாம் வௌியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.
வாணி: ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான்கண் டேநாள் நாலைந் தாமே.
மனோன்: ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேனெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணோய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.
வாணி: (கண்ணீர் ச்ிந்தி)
எதனையான் இயம்புகோ! என்றலை விதியே
வா விளை யாடுவோம் வாராய்
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே
மனோன்: ஏனிது! ஏனிது! வாணி! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக
மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.
வாணி: எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா
தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய
அனுபவித் தன்றோ அகலும் மனையில்
தந்தையுங் கொடியன்! தாயுங் கொடியள்!
சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை
என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்
யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கடல் உலகில் வாழ்கிலன்
மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.
மனோன்: முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
காட்டுங் கைரவ வாயாய்? உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
சூடிடிற் கேடென்? காதால்
வள்ளையி னழகெலாங் கொள்ளைகொ ளணங்கே!
வாணி: அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்
இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரே?
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள வளவுமென் உளமே!
மனோன்: வலம்புரிப் புறத்தெழு கலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய்! வாணீ!
பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன்மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்ன னுக்கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
பேய்கொண் டனையோ? பேதாய்?
வேய்கொள் தோழி விளம்பா யெனெக்கே.
வாணி: அறியாயொன்றும், அம்மா! அரிவையர்
நிறையழி காதல் நேருந் தன்மை.
ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
ஆற்றவும் ஒக்குமென் றறைவர்
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே!
மனோன்: புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
காதல் கொள்ளுதற் கேதுவும் இல்லையாம்!
தானறி யாப்பே யாட்டந் தானாம்!
ஆயினும் அமைந்துநீ ஆய்ந்திணர்ந்தோ துதி
உண்டோ இவர்தமி லொப்பு?
கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே!
வாணி: ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்மா!
அம்மா போயிறந் ததுவே
மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே
மனோன்: பித்தே பிதற்றினை. எத்திறமாயினும்
தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்.
காந்தள் காட்டுங் கையாய்!
தவிர்ந்து சாடியோடும் வகையே?
வாணி: ஈதெல்லாம் உனக்குயா ரோதுதற் கறிவர்!
மாதர்க்குறியதிக் காதல்,
என்பதொன் றறியும் மன்பதை யுலகே.
மனோன்: மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே
சுந்தர முனிவன் சிந்துர அடியும்.
வாரிசம் போல மலர்ந்த வதனமும்
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால் போல்
நரைதரு தலையுன் புரையறும் உடலும்,
மாந்தளிர் வாட்டு மேனி வாணி
எண்ணுந் தோறுங் குதித்து
நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே.
வாணி: சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம் மட்டள வின்றிக்
காதல் கதவுங் காலை
ஓதுவை நீயே யுறுமதன் சுவையே.
மனோன்: வேண்டுமேற் காண்டி அவையெலாம் வீண், வீண்
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினால் நாய்போ லோடிடும் வெருவில்
துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை
அடிக்கடி முனிவரிங் கணுகுவர் அஃதோ
அடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை
படர்சுழி யோடு பாய்திரை காட்டும்
வடதள வுதர வாணீ! மங்காய்!
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே
வாணி: நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்?
நீறா கின்றதென் நெஞ்சம். நாளை
என்னுயில் தாங்குவ தெவ்விதம்
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?
மனோன்: உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும்
மன்றல் வழுதிக் குரைக்க வருவதும்
மையின் புறச்சார் பலவ னொதுங்குவது
ஏயு மெழிற்கால் வாணி!
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே?
வாணி: அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது
வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்
ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி.
நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை
பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே!
இனியென் செய்வேன்? என்நினைப் பாரோ?
மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள்
ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன்
யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்?
உயிரே யெனக்கிங் கொருதுணை
அயிரா வதத்தனும் அறியா வமுதே!
(அழ)
மனோன்: அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெரிஞ்சிலா
அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண்
அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கருத்தே! ஏனிது! கருணைக் கடவுள் நின்
கருத்தே முடிப்பக் காண்டி. அஃதோ
மணங்கமழ் கோதையர் வந்தனர்.
அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே!
[செவிலியும் தோழிப் பெண்களும் வர]
செவிலி: தாயே! வந்துபார் நீயே வளர்த்த
முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை
காதலிற் கவிழ்வை போலும்!
போதுநீத் தெம்மனை புகுந்த நற்றிருவே!
மனோன்: போடி! நீ யாது புகன்றனை? தவத்தை
நாடிநா னிருக்க நணுகுமோ என்மனத்
துச்சமாம் இச்சையாற் சோர்வு?
நெருப்பையுங் கறையான் அரிக்குமோ நேர்ந்ததே!
முதற்றோழி: பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு சந்தமார் முல்லை
நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை
இன்றிரா வலரு மெல்லாம்.
துன்றிரா நிகர் குழற்றோகாய்! வருகவே.
[எல்லோரும் போக]

முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


முதல் அங்கம்: மூன்றாம் களம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவகன்: நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
தமக்குச் சரியா மிடத்திற் றங்குக.
எங்கே யாகினுந் தங்குக நமக்கென்?
ஆவலோ டமைத்த நம் புரிசைய யவர்மிகக்
கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்?
குறைவென்? குடில! கூறாய் குறித்தே.
குடிலன்: குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ!
நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
கூட லன்றெனுந் குறையொன் றுளது
நாடி லஃதலா னானொன் றறியேன்.
மேனுந் தவசிகள் வேடந் தாங்கினோர்
ஆலயம் ஒன்றையே அறிவர் முன்னொரு
கோவி லமைத்ததிற் குறைவிலா உற்சவம்
ஓவ லிலாதே உஞற்றுமி னென்றவர்
ஏவினர். அஃதொழித் தியற்றின மிப்புரி.
தலா லிங்ஙனம் ஓதினர். அதனை
அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
ஒழுக்க மன்றோ குருவன் றோவவர்?
ஜீவ: ஐயரும் அழுக்க றடைந்தார் மெய்ம்மை
கோவில் தானா காவலர் கடமை?
கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ!
குடில: அதிசய மன்றுபூ பதியே! இதுவும்
துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர்.
மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
மனோகர மாகிய சினகர மொன்றில்
உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
நிலைபெறா நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னவர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்
கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன்
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்
இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?
ஜீவ: : ஒவ்வும்! ஒவ்வும்! நீ உரைத்தது முற்றும்.
நாராயணன்: (தனதுள்)
ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப்
பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை, தடுப்பார் யாரோ?
(நேரிசை வெண்பா)
நாரா: (அரசனை நோக்கி)
கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா
வெறுமெலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
உறுமுவதென் நீயே யுரை
[சேவகன் வர]
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
சேவகன்: மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
ஜீவ: வரச்சொல் சேவக!
(நாராயணனை நோக்கி)
உரைத்தநின் உவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா!
குடில: (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்.
(அரசனை நோக்கி)
வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
குற்றங் காணக் குறுகுதல் முற்றும்
மணற்சோற் றில்கல் தேடுதல் மானும்
[சகடர் வர]
ஜீவ: (சகடரை நோக்கி)
சுகமோ யாவரும் முதிய சகடரே!
மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
ஆயின தன்றோ?
சகடர்: ஆம்! ஆம்! அடியேன்.
ஜீவ: : மேயின விசேடமென்? விளம்புதிர். என் குறை
சகடர்: அறத்தா றகலா தகலிடங் காத்துப்
பொருத்ததோட் புரவல! உன்குடை நீழற்
பொருந்து மெங்கட் கரந்தையு முளதோ?
சுகமிது காறும் அகமகிழ் வுற்றுன்
மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது
முடிக்கநின் கருணையே முற்றும் வேண்டுவனே.
ஜீவ: சீலஞ் சிந்தை கோல் மனைத்துஞ்
சாலவும் பொருந்தும் சகடரே! அதனால்
களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில!
ஒளித்ததென் நீ உரையா தெமக்கே?
குடில: ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?
ஜீவ: இடையூ றென்கொல்? இடியே றன்ன
படையடு பலதே வன்றான் ஏதோ
விரும்பினன் போலும் வேறோர் கரும்பே!
குடில: இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்!
சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக
ஜீவ: என்னை? சகடரே இடையூ றென்னை?
சகட: பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும்
அடியனேன் சொல்பழு தாயின தில்லை.
முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள்.
ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
விரிதலைப் பேய்போல் வேண்டிய விளம்பியும்.
ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்;
நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை;
என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்
மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்
எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ!
உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்.
நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல்
தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை.
என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின்
இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச்
[கண்ணீர் துளிக்க]
செல்ல விடையளி செல்லதுங் காசி.
ஜீவ: ஏனிது சகடரே! என்கா ரியமிது!
தேன்மொழி வாணி செவ்விய குணத்தான்
காணி லுரைப்பாம் வீணிவ் வழுகை.
நாராயணன்: (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற்காக
ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்,
ஓதுவங் குறிப்பாய், உணரி னுணர்க.
(நேரிசை வெண்பா)
(அரசனை நோக்கி)
மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
ஏற்றியநாண் விற்பூட்டுமேந்தலே- சோற்றதற்காய்த்
தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்
என் மகிமை யுள்ளா னினி.
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
ஜீவ: தனிமொழி யென்னை?
நாரா: சற்றும் பிசகிலை.
நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும்.
ஜீவ: காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய்
கிழவனின் அழுகை.
நாரா: சிலவரு டந்தான்
நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை
ஜீவ: விடு,விடு, நின்மொழி யெல்லாம் விகடம்.
[நாராயணன் போக]
(சகடரை நோக்கி)
அறிவிர்கொல் அவளுளம்?
சகட:
சிறிதியா னறிவன்
திருநட ராசனென் றொருவனிங் குள்ளான்
பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.
குடில: (அரசனை நோக்கி)
நல்லதப் படியே நடக்கிலேன்? இவர்க்கும்
பொல்லா முரண்டேன்?
சகட: (குடிலனை நோக்கி)
போம்! போம்! உமது
குழந்தையேல் இங்ஙனங் கூறீர்! முற்றும்,
இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
பூவையை வளர்த்துப் பூனைக்கீயவோ?
(அரசனை நோக்கி)
காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான்;
தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்;
எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில்
அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்;
பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்
ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்;
பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
ஜீவ: ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சிலகால்
நின்றால் நின்ற படியே; அன்றி
இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்;
சிரிக்கினும் விழிக்கினும் நலமலை தீயதே.
அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில்..
குடில: அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்.
ஜீவ: அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே;
எங்கவன் இப்போது?
குடில:
இங்குளன் என்றனர்.
சிதம்பரத் தனுப்பினேன்; சென்ரிலன் நின்றான்;
இதந்தரு நின்கட் டளையெப் படியோ?
ஜீவ: மெத்தவும் நன்மை அப்படி யேசெய்
குடில: சித்தம்; ஆயினும் செல்கிலன்; முனிவர்
பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்,
ஜீவ: சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
(சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
படியிது நடத்துவம் விடுமினித் துயரம்;
சகட: இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி;
திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
[சகடர் போக, செவிலி வர]
ஜீவ: (செவிலியின் முக நோக்கி)
என்னை இவள் முகம் இப்படி இருப்பது
தோற்றம்நன் றன்றே!
செவிலி: நேற்றிரா முதலா-
ஜீவ: பிணியோ என் கண்மணிக்கு?
செவிலி:
பிணியா
யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்
ஜீவ: சுரம்! சுரம்! ஓ! ஓ! சொல்லுதி யாவும்
அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்
வந்துவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி: அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
நம்மனை புகுந்த செல்வி, எம்முடன்

மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
நிலவொளி நீந்திநம் நெடுமுற் றத்துப்

பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
துணைபுண ரன்னத் தூவி யணை மிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ -
"நண்ப! என்னுயிர் நாத' வென் றேங்கிப்
புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்

துண்ணென யாந் துயி லகற்றப் புக்குழி
குழலுஞ் சரியும்; கழலும் வளையும்;
மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்;
விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெரியும்;

நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்;
இவ்வழி வவ்வயிற் கண்டுகை நெரியா;
தெய்வம் நொந்தேம்; செய்கட நேர்ந்தேம்;
அயினிநீர் சுழற்றி அணிந்தேம்; பூதி;
மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்,
எரிமே லிட்ட இழுதா யவட்கு
வரவா மம்மர் வளர்க்கக் கண்டு
நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
"கா கா இவளைக் கா' வெனக் கரைந்த;
சேவலுந்த் திகைத்துத் திசை திசை கூவின;
கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
சற்றுஞ் சாந்த முற்றில ததனால்
அரச! நீ அறியிலெஞ் சிரசிரா வென்றே
வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்;
பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்;
எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்;

பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்;
ஏது மறியாப் பேதை! நேற்றுத்
தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
காதனோய் காணவோ ரேதுவு மில்லை,
எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ

வந்தே காண்குதி மன்னவ ரெறே!
ஜீவ: ஆ! ஆ! நோவிது காறுமொன் றறிகிலள்
இதுவென் புதுமை? என்செய் கோயான்?
குடில: தவஞ்செய சை யென்றுதாய் நவின்ற
வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்

செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்
நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
அறியலாந் தகைத்தோ?
ஜீவ:
வறிதவ் ஐயம்
மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி
அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்;
ஆசி பேசியங் ககலுங் காலை
ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
அறையுட நங்கணந் திறவுகோ லோடு
தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே.
நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
என்னோ அறியேன் விளைவு?
[ஜீவகனும் செவிலியும் போக]
குடில: (தனதுள்)
யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்
எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின்
இத்திறங் காமம் என்பதிங் கறியான்;
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.
[குடிலன் போக]
முதல் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.



முதல் அங்கம்: நான்காம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே!
உனக்குறு துயரம் எனக்குரை யாததென்?
விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்;
வருத்துவ தென்னென வழக்கின் மாய்ப்பன்
உறுத்துங் கூற்றுவ நாயினும் ஒறுத்தே
தாய்க்கு மொழித்த சூலோ? தையால்!
வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்!
ஏதா யினுமெனக் கோதா துளதோ?
பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங்

களங்கம் வந்த காரண மெதுவோ?
பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
இசையது விரித்தோர் பிசித மரமேல்
இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன்
திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிய

போயது கண்டு, சேயதோர் போந்தையில்
தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன்
பாடிய இசையே கூவிட உன்னி
நாடி நாடிப் பாடியும் வராது
வாடி வாயது மூடி, மௌனமாய்

வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில்
தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
பேதாய்! இன்றெனக் கென்னோ
ஓதா யுன்றன் உளமுறு துயரே!
செவிலி: உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச்
சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச்
சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில்
யாம்படுந் துயரம் அறிந் துங்,
காம்படு தோளீ! கருதாய் போன்மே.
ஜீவ: ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ!
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி

நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்!
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
கனியென வுனையான் கண்டநாள் தொட்டு

நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
என்மிகை நீக்கி இன்பமெய்தி,
உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
உயிர்தரித் திருந்தேன்; செயிர்தீ ரறமும்
வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந்

தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன்
எங்குங் கலந்த இயல்பா லன்றோ
மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!
உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்,
எதுவோ வுறுதி யியம்பாய்?

மதிகுலம் விளங்க வருமனோன் மணியே
மனோன்: (கண்ணீர் தளும்பி)
> எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு
வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை;
உரைக்கற் பாற்றதொன் றில்லை;
உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே?
ஜீவ: குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ
அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரை
கண்டது மிலை; யான் கேட்டது மிலையே;
பெண்களின் பேதமை யென்னே! தங்களைப்
பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும்,
விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.

(வாணியை நோக்கி)
என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய்!
மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்
அருங்கலை யாய்ந்தநின் தந்தை சொன்மதியும்,
உன்புத் தியுமுகுத் திழல்வதென் வம்பில்?

நலமே சிறந்த குலமே பிறந்த
பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்
தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
நச்சிய தென்னை? சீச்சீ!
நகை யாகும்நீ செயும் வகையே.
வாணி: அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே
நிகழுமென் சிறிய நினைவெலாம் விரிந்து
விநயமாய் நின்பால் விளம்ப எனது
நாணம் நாவெழா தடக்கு மாயினும்
பேணி யொருமொழி பேசுவன்,
நேசமில் வதுவை நாசகா ரணமே.
ஜீவ: புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப்
பெற்றா ராற்றுவர்! ஆற்றிய வழியே
தையலார் மையலாய் நேயம் பூண்டு
வாழ்வது கடமை; அதனில்
தாழ்வது தகுதியோ தருமமோ சாற்றே.
வாணி: கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்;
ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும்
ஆக்கப் படும்பொரு ளாகுமோ? நோக்கில்
துன்பே நிறையும் மன்பே ருலகாம்

எரியுங் கானல் விரியும் பாலையில்
திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
தங்கி அங்கவர் அங்கங் குளிரத்
தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்
நேருந் தாகம் நீக்குவான் நிமல

ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்
ஆறலை கள்வர் அறுபகை மீறில்
உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும்
இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி,
இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,
நின்ற காதலின் நிலைமை, நினையில்,

இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
இருவர் சிந்தையும் இயல்பா யுருகி
ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
ஆக்கப் படும்பொரு ளாமோ?
வீக்கிய சுழற்கால் வேந்தர் வேந்தே!
ஜீவ: ஆமோ அன்றோ யாமஃ தறியேம்;
பிஞ்சிற் பழுத்த பேச்சொழி; மிஞ்சலை;
மங்கைய ரென்றுஞ் சுதந்தா பங்கர்;
பேதையர்; எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர்;
முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ

பெரிது?மற் றவர்தமில் உன்னயம் பேண
உரியவர் யாவர்? ஓதிய படியே
பலதே வனுக்கே உடன்படல் கடமை
வாணி: இலையெனில்?
ஜீவ: கன்னியா யிருப்பாய் என்றும்.
வாணி: சம்மதம்.
ஜீவ: கிணற்றிலோர் மதிகொடு சாடில்
எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்!
கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்?
அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?
வாணி: விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்?
ஜீவ: நானே பிடித்த முயற்கு மூன்றுகால்
ஆனால் எங்ஙனம்?
வாணி: அரிவையர் பிழைப்பர்? (சேடி வர)
சேடி: சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.
கால நோக்கினர்
ஜீவ: சாலவு மினிதே;
ஆசனங் கொணர்தி.

(வாணியை நோக்கி)
யோசனை வேண்டாம்
எப்படி யாயினிஞ் சகடர் சொற்படி
நடத்து வம்மன்றல்; நன்குநீ யுணர்தி;
ஆயினுந் தந்தனம் ஐந்துநாள்;
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே.
வாணி: இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்;
பொறுத்தருள் யானிவண் புகன்ற
மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே.
[சுந்தர முனிவர் வர]
ஜீவ: (முனிவரை தொழுது)
வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி;
இருந்தரு ளுதியெம் இறைவ!
பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே.
சுந்தர: (மனோன்மணியை நோக்கி)
தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்
ஏதோ மனோன்மணி, ஓதாய்
வேறுபா டாய்நீ விளங்குமாறே
மனோன்மணி: (வணங்கி)
கருணையே யுருவாய் வருமுனீ சுரரே
எல்லா மறியும் உம்பாற்
சொல்ல வல்லதொன் றில்லை சுகமே.
செவிலி: (மனோன்மணியை நோக்கி)
கரும்பே, யாங்கள் விரும்புங் கனியே!
முனிவர் பாலுநீ யொளிப்பையே னிலிங்கு
யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்?
(முனிவரை நோக்கி)
ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள்
தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்
மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்
மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்;
நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்;
முடியாள் குழலும்; படியாள் இசையும்;

தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்;
அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்;
மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்;
தூங்குவல் போன்றே ஏங்குவள்; எளியை
நோக்குவள் போன்றே நோக்குவள் வௌியை;

கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்;
மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்;
தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்!
விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்;
இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ?

வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள்
அரசன் கேட்டும் உரைத்திலள் அன்பாய்!
முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின்
எவருடன் இனிமேல் இசைப்பள்?
தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே!
சுந்தர: (ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாதருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகுங்
காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும்; தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில் நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள தருவை யவாவும் அடையின்
முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும்; அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே.
ஜீவ: எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே
சுந்தர: உலகுள மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய
சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து
புகழ்மணங் கமழும் குணம்பல பூத்து
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
கனியுங் கருணையே கனியாக் காய்த்து;
தருமநா டென்னும் ஒருநா மங்கொள்
திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்
நீங்கி லில்லை நினது
பூங்கொடி படரப் பாங்காந் தருவே.
ஜீவ: நல்லது தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த இறைவ!
நடத்துவன் யோசனை பண்ணை நன்றே
சுந்தர: யோசனை வேண்டிய தன்று நடேசன்
என்றுள னொருவன்; ஏவில்;
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கலே
ஜீவ: கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி...
சுந்தர: (எழுத்து)
அரகர! குருபர! கிருபா நிதியே!
காவாய் காவலன் ஈன்ற
பாவையை நீயே காவாய் பசுபதே!
[சுந்தர முனிவர் போக]
ஜீவ: தொழுதோம்; தொழுதோம்; செவிலி யவ்வறைக்
கெழுதுங் கருவகள் கொணராய்
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே
[ஜீவகன் முதலியோர் போக]
முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.



முதல் அங்கம்: ஐந்தாம் களம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
குடிலன்: (தனிமொழி)
புத்தியே சகல சக்தியும்! இதுவரை
நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே
உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த
மதுரையாம் முதுநகர விடுத்து மன்னனை
புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங்
கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே;
நாமே யரசும் நாமே யாவும்;
மன்னவன் நமது நிழலின் மறைந்தான்;
பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்
மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ?
இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே
அரச ராகுவர்?
[மௌனம்]
புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்
வெருளுவர். வெல்லார். ஆயினும் -
முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ?
கருவியுங் காலமும் அரியில் அரியதென்?
ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்
மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும்
அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக்
கண்டு காமங் கொண்டவ ளல்லள்;
பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள தெட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும் பலதே வனையவள்
இடமே பலமுறை யேவி லுடன்படல்
கூடும். கூடிலென் கூடா?
யாவன் அஃதோ வருமொரு சேவகன்?
[சேவகன் வர]
சேவகன்:ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திர!
[திருமுகம் கொடுக்க]
குடில: (வாசித்து நோக்கி)
நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ!
சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்.
(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)
அடுத்தது போலும் இம்மணம், அவசியம்
நடக்கும் நடக்கிலென்? நமக்கது நன்றே
அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்;
பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்
வாழான் வழுதி வஞ்சி நாட்டார்க்குத்
தாழார் இந்நாட்டுள்ள ஜனங்களும்

அதுவும் நன்றே - ஆயினுங்
கால தாமதஞ் சாலவு மாகும்;
வேறொரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ!
மாறன் மாண்டான்; மன்றலும் போனது;
சேரன் இறுமாப் புடையதோர் வீரன்

ஆமெனப் பலரும் அறைவர். அதனால்
நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன்
மெள்ள அவன்றான் செருக்கினைக் கிள்ளிற்
படைகொடு வருவன்; திண்ணம்; பாண்டியன்
அடைவதப் போதியாம் அறிவம்.

போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம்
யார்இற வார்கள் யார் அறிவார்கள்?
முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
இப்படி யேமுத லுற்பவம் இருக்கும்

சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும். யாரே
நாடுவர் ஆதியை? நன்றி நன்றிது!
தோடம்! - சுடு! சுடு!

தீது நன்றென ஓதுவ தெல்லாம்
அறியார் கரையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி என்பது போலாம்;
மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க்

கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்;
அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை இத்தனை நன்மையெப்படி வரும்
பார்க்குதும் ஒருகை சுந்தரன் யந்திரங்

காக்கும் வகையுங் காண்போம்; சுவான
சக்கரங் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான்
பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே
உத்தம உபாயம் ஓகோ! சேவக!

சித்தம் மெத்தக் களித்தோம் இந்த
மணவுரைக் கேட்டென மன்னன் துணியப்
பாவனை பண்ணுவோம் எ! ஏ! சேவக!
[சேவகன் எழுந்து வர]
இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல்
என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே.
(நேரிசை ஆசிரியப்பா)
சேவகன்: வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல்
ஏழுல கெவற்றிலும் உண்டோ?
வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே.
குடில: நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில்
[சேவகன் போக]
(தனிமொழி)
மதியிலி! என்னே மனிதர் மடமை!
இதுவும் உதாரமாய் உண்ணினன்; இங்ஙனம்
தருமந் தானம் என்றுல கறியுங்
கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக்
காணின் நாணமாம்; அவரவர் தமக்கா
எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும்
பண்ணுவர் புண்ணியம் போல எல்லாந்
தந்நயங் கருதி யன்றித் தமைப்போற்
பின்னொரு வனையெணிப் பேணுவருளரோ?
புண்ணியஞ் ஜீவகா ருண்ணிய மெனப்பல
பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல்
யாத்திரை போன நூற்றுவர் சோறடு
பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக
ஒருவரு யொருவர் ஒளித்துப் பருமணல்
இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு
எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி?
ஆயினும், அரசனைப் போலிலை
பேயர் பெரிய மேதினி யெங்குமே.
முதல் அங்கம்; ஐந்தாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

முதல் அங்கம் முற்றிற்று.


இரண்டாம் அங்கம் : முதற் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே!
புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு
மருமா னாகமதித் ததும் அவரே;
என்றுங் குழந்தை யன்றே; மன்றல்
விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது
வரையும் மறதியா யிருந்தது தவறே
யாம்இனித் தாமத மின்றியிம் மணமே
கருமமாய்க் கருதி முடிப்பாம்;
வருமுன் கருதும் மந்திர வமைச்சே!
குடிலன்: இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம்
அறைவதெப் படியான்? அநேக நாளாப்
பலமுறை நினைந்த துண்டிப் பரிசே;
நலமுறப் புரிசை நன்கு முடியும்
அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்
சற்றும் மறந்தே னன்று; தனியே
கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை
விட்டுள தோஇனி வேறொரு காரியம்?
புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன்
காண்டரும் ஆண்டகை யென்றும் ஞானம்
மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந்
திரியுந் தவசிகள் உரைசெய யானுங்
கேட்டதுண்டு; மற்றவன் நாட்டிற்கு
இன்றே தூதுவ ரேவின், மங்கையை
மன்றல் செய்வான் மனதோ வன்றோ
என்றியாம் அறியலாம் எளிதில்; அறியார்
பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும்
இலை இன் றேதூ தேவுவம்
பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே
பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?
ஜீவ: பகருதி வௌிப்படப் பண்பாய்
நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே!
குடில: எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்;
கண்ணகன் ஞானங் கழறும் பலவிதம்.
மணஞ்செய முதன்முதற் பேசி வருதல்
இணங்கிய ஆடவ ரிலுள் ளாரே;
அன்றி யாடவர்த் தேடி மன்றல்
சாற்றிதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்
முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும்
ஜீவ: கூடா தஃதொரு காலும்; குடில!
கேடாம் நமது கீர்த்திக் கென்றும்;
மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்;
என்னே ஆத்திரம்? நமது
கன்னியை விழையும் மன்னருங் குறைவோ?
குடில: குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ!
மூவரும் தேவரும் யாவரும் விரும்புங்
கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்
கணக்கிட லாமோ? கலிங்கன் சோழன்,
கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர்
மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன்
குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்
கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;
வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில்
நேரான்; மகதன் தீராத் தரித்திரன்;
இன்னம் பலரும் இங்ஙனம் நமது
கன்னியை விழைந்துங் கல்வி வடிவு
குணம்பபலங் குலம்பொரு ளொன்றிவை பலவும்
இணங்கா ரேமாந் திருந்தார் அரசருள்
கொங்கன் றனக்கே இங்கிவை யாவும்
பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன்
ஆகையில் இவ்வயின் அணைந்திலன் எங்ஙனத்
திருத்தமா யவன் கருத் தறிந்திடு முன்னம்
ஏதுவுந் தூதரை? ஏதிலனன்றே.
ஜீவ: படுமோ அஃதொரு காலும்? குடில
மற்றவன் கருத்தினை யுணர
உற்றதோ ருபாயம் என்னுள துரையே
குடில: உண்டு பலவும் உபாயம்; பண்டே
இவனைக் கருதியே யிருந்தேன்; புதிய
கடிபுரி முடியும் முன்னர்க் கழறல்
தகுதி யன்றெனக் கருதிச்
சாற்றா தொழிந்தென் மாற்றல ரேறே.
ஜீவ: நல்லது! குடில! இல்லை யுனைப் போல
எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்
பங்கமி லுபாயம் என்கொல்? பகரே.
குடில: வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும்
புரையறு செல்வம் நிலைபெற வளரும்;
மழலைவண் டானம் புலர்மீன் கவர,
ஓம்பு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி
புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற
எருவையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும்
அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்
கேடகை மலர் நிழல் இனமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே;
வால்வளை சூலுளைந் தீன்றவண் முத்தம்
ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற்
பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும்
கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்
கூம்பீய நெய்தற் பூந்தளிர் குளிர
மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்;
அலமுகந் தாக்குழை யலமரும் ஆமை
நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில்
வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்;
பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில்
நளிமீன் கோட்பறை விளிகேட் குறங்கா;
வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில்,

உப்பார் பஃறி யொருநிறை பிணிப்பர்.
இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன்கடன் தவறா.
கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி

வடியும்நீ ரேநம் இடிதீர் சாரல்
நன்னீர்ப் பெருக்கமும் முந்நீர்த் நீத்தமும்
எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில்
நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்
மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருக்கால்;

வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்
ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ
நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்;
நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும்
படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித்

தாமரைத் தூமுகை தூமமில் விளங்கா,
நிலவொளி முத்துங் கவடியும் பணமா,
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண,
துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ்
செங்கட் போத்துங் கம்புட் கோழியுங்

கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும்
பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்
என்றிவை பலவும் எண்ணில் குழீஇச்
சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்,
அந்தியங் காடியின் சந்தங் காட்டித்

தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்
பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்;
வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி
ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்
பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்

போற்றிய குரவையே பொலிதரு மொருசார்;
சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர்
நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர்
நடுவர் களைப்பகை யடுபவ ராதியாக்
கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும்

தருமொலி பரந்தே தங்குவ தொருசார்;
குன்றென அரித்துக் குவித்திடுஞ் செந்நெற்
போர்மிசைக் காரா காரெனப் பொலியக்
கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும்
மங்கல வொலியே மல்குவ தொருசார்;

தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ்
சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைத் தெங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நல்குவள்,

எனிலினி யானிங் கியம்புவதென்னை?
அனையவந் நாடெலாம் அரச! மற்றுனக்கே
உரித்தென அங்குள பாடையே உரைக்கும்.
சின்னா ளாகச் சேரனாண் டிடினும்
இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை

கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை.
பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே
கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம்
மணத்திற் குதவியாய் வந்ததது நன்றே.
ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக்
கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில்
நாட்டிய நமது நகர்வலி கருதி
மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி
வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம்
ஒப்புர வாகா தொழியான்; பின்னர்,
அந்நியோந் நியசமா தானச் சின்னம்
ஆகவோர் விவாக மாயின் நன்றெனக்
குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின்
மறுத்திடா நுடன்மண முடிக்குதும் நன்றே
ஜீவ: மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம்
இதுவே! குடில! இதனால்
வதுவையும் நடந்தா மதித்தேம் மனத்தே.
குடில: அப்படி யன்றே செப்பிய உபாயம்
போது மாயினும் ஏகுந் தூதுவர்
திறதாற் சித்தி யாகவேண் டியதே
வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃது
தனைநன் காற்றலே யாற்றல். அதனால்
அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந்
துணிவுங் காலமுங் களமுந் துணியுங்
குணமும், மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதனென் றோதினர்
அன்ன தூதரை யனுப்பின் மன்னவ!
உன்ன தெண்ண முறுமே யுறுதி;
அன்றெனி லன்றே; அதனால்
வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.
ஜீவ: அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக்
குரிமை பூண்டநின் அருமை மகன்பல
தேவனே யுள்ளான். மேவலர் பலர்பால்
முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான்
அன்னவன் றன்னை அமைச்ச
ஏவிடத் தயையா யிசைவாய் நீயே.
குடில: ஐய மதற்கென்? ஐய என்னுடல்
ஆவியும் பொருளும்மேவிய சுற்றமும்
நினதே யன்றோ! உனதே வலுக்கியான்
இசையா தொழிவானோ! வசையறு புதல்வன்
பாலியன் மிகவும்; காரியம் பெரிது.
ஜீவ: பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம்
விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில்
நலமா யுரைப்பன் நம்பல தேவன்
வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது
உரைத்தனர் முனிவர், உதிய னவைக்கே
யோசனை யின்றி நடேசனை யேவில்
நன்றாய் முடிப்பனிம் மன்றல்
என்றார் அவர்க்குத் திருந்த வாறே!
குடில: குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர்
அறிந்ததவ் வளவே யாகும். ஏழை!
துறந்தா ரறிவரோ தூதின் தன்மை?
இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும்
எல்லா மில்லை; ஆதலால் எவருங்
கட்டுக கோவில், வெட்டுக ஏரி
என்று திரிதரும் இவர்களோ நமது
நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்?
இராச்சிய பாண சூத்திரம் யார்க்கும்
நீச்சே யன்றி நிலையோ? நடேசன்!
யோசனை நன்று! நடேசன்! ஆ!ஆ!
ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர்
உள்ளம் மெள்ள உண்டு மற்றவர்
அம்மை யப்பரை அணுகா தகன்று
தம்மையும் மறந்தே தலைதடு மாறச்
செய்யுமோர் சேவக முண்மற் றவன்பால்
ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல்
மாதர்பாற் றூதுசெல் வல்லமை கூடும்.
பித்த னெப்படிச் சுந்தரர்க்கு
ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே!
முனிவரும் வரவர மதியிழந் தனரே.
ஜீவ: இருக்கும். இருக்கும். இணையறு குடில!
பொருக்கெனப் போயும் புதல்வற் குணர்த்தி
விடுத்திடு தூது விரைந்து;
கால விளம்பனஞ் சாலவுந் தீதே
குடில: ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில்
தூது செல்வான் தொழுதுன் அநுமதி
பெறவரு வான்நீ காண்டி
இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே!
[குடிலன் போக]
ஜீவ: (தனதுள்)
நல்லது! ஆ!ஆ! நமது பாக்கியம்
அல்லவோ இவனைநாம் அமைச்சனாய்ப் பெற்றதும்?
என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?
[சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க]
(பிரபுக்களை நோக்கி)
வம்மின் வம்மின் வந்து சிறிது
கால மானது போலும் நமது
மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு
இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும்
அருந்திறற் சூழ்ச்சியன்.
முதற்பிரபு: அதற்கெ னையம்
சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி
இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர்
எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ!
வல்லவன் யாதிலும்.
நாரா: (தனதுள்)
நல்லது கருதான்
வல்லமை யென்பயன்
2ம் பிரபு:
மன்னவ! அதிலும்
உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில்
வைத்த பரிவும் பக்தியு மெத்தனை!
குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட
ஆஞ்ச னேயனோ அறியேம்!
நாரா: (தனதுள்)
வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன்
விடுப்பனோ விடமென? குடிப்பனே!
சேவகன்:
கொற்றவ!
நேற்று மாலையில் நின்றிரு வாணையிற்
சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ
சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால்
தந்தன னெக்கித் தரள மாலை.
நாரா: (தனதுள்)
எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம்.
ஜீவ: பார்மின், பார்மின், நம்மிசை வைத்த
ஆர்வமும் அன்பும் ஆ!ஆ!
நாராள் (தனதுள்)
பேசா திருக்கி லேசுமே நம்மனம்
குறியாற் கூறுவம்; அறிகி லறிக.
[நாராயணன் செல்ல]
3ம் பிரபு: சாட்சியு மொகண் காட்சியாம் இதற்கும்!
அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ?
எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி
பத்தி பண்ணுநர் சுமித்திரை பயந்த
புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய
எத்திறத் தவரும் இறைவ! இவனுக்
கிணையா தன்னய மெண்ண்ணாப் பெருமையில்?
[நாராயணன் மூக்கிற் கரி தேய்த்து வர]
ஜீவ: (நாராயணனை நோக்கி)
ஏ!ஏ! நாரணா கரியா யுன்மூக்
கிருந்தவா றென்னை? ஏ!ஏ! இதுவென்!
நாரா: மூக்கிற் கரிய ருளரென நாயனார்
தூக்கிய குறளின் சொல்படி எல்லாம்
உள்ளத்தின் னருகவ ரில்லா ராவரோ?
ஜீவ: ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்?
யாவரும்: ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ!
[யாவரும் நகைக்க]
ஜீவ: (பிரபுக்களை நோக்கி)
நாரணா! நீயும் நடேசன் தோழனே
நல்லது விசேடமொன் றில்லை போலும்.
முதற்பிரபு: இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின்
வாகுவே தாங்க! மங்கலம் வரவே!
[பிரபுக்கள் போக]
ஜீவ: நாரா யணா! உனக் கேனிப் பித்து?
தீரா இடும்பையே தௌிவி லையுறல்.
நாரா: எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை
கோடிய மாந்தர் கோடியின் மேலாம்
ஜீவ: எதற்குந் திருக்குறள் இடந்தரும்! விடுவிடு.
விரும்பி யெவருந் தின்னுங்
கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே.
[அரசனும் சேவர்களும் போக]
நாரா: ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன்,
உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான்.

(தனிமொழி)
வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை
யுளத்தான்! களங்கம் ஓரான், குடிலனோ
சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான்
ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந்
தன்னயங் கருதி யன்றி மன்னனைச்

சற்று மெண்ணான் முற்றுஞ் சாலமா
நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா
வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை
நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார்
இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர்

வடித்து வடித்து மாற்றொலி போன்றே
தடுத்து மெம்மை சாற்றுவர் யாரே?
என்னே யரசர் தன்மை? மன்னுயிர்க்
காக்கமும் அழிவும் அவர்தங் கடைக்கண்
நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப்

பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம்
உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ?
கருப்போ தேனோ என்றவர் களிப்பது
நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ?
விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை

கொட்டிற் கோடி பிறழுமே கொட்டும்
வாலாற் றேளும், வாயாற் பாம்புங்
காலும் விடமெனக் கருதி யாவும்
அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து
பாரா ராளும் பாரென் படாவே?

யாரையான் நோவ! அதிலுங் கொடுமை!
அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ?
உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண
ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம்
மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங்

கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்?
குடிலன் செய்யும் படிறுகள் வௌியாப்
பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க
என்றால், நோக்க நின்றார் நிலையில்
தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ்

சான்றோடு காட்டுந் தன்மைய வலவே
சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை
காட்டினுங் கீறிய வரையலாற் காணார்
என்செய? இனியான் எப்படிச் செப்புவன்
நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ்

சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும்
ஓரில் யாதோ பெரிய உறுகண்
நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும்
என்னே யொருவன் வல்லமை!
இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.
[நாராயணன் போக]

இரண்டாம் அங்கம்: முதற்களம் முற்றிற்று.



இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நடராசன்: பரிதியி னுதயம் பார்க்கக் கருதில்
இவ்விடஞ் சாலவு மினிதே உதயஞ்
செவ்விதிற் கண்டுபின் செல்வோம்
ஓவியந் தொழில்வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்

தூரியந் தொடத் தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதா யுறுப்புகள் தௌியத்

தோன்றுமித் தோற்றம் நன்றே!
சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ்
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்
இருசிறை யடித்து நெடுவா யங்காந்து
ஒருமுறை கூவி உழையுளார் புகழ

உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும்,
இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங்
கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக்
கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி
மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம்

பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும்
பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி
தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய்
அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை
அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில்

இசையறி மாக்களின் ஈட்டம் போல
வசையறு பாடல் வழங்கலும் இனிதே
அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி
ததைய்ந் தஞ்சிறை தடவி விளக்கிக்
கதுவுங் காத லாணையிட் டறைந்து

பின்புசென் றோயோ தன்புபா ராட்டும்
இவ்விரு குருகுங் காதலர்
கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த்
துண்டங் கொண்டு பாலைச் சொரிந்த
பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி

உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக்
கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே.
ஆடவர் காத லறைதலுந் தையலர்
கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்
வாணீ! மங்காய்! வாழி நின் குணம்!

ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி
முருகவிழ் குவளை நின் மொய்குழற் சூட்டத்
தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு
வாங்கியும்; மதியா தவள் போ லாங்கே.
ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச்

சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை
ஏதியா னெண்ணுவ னோவெ னவுடன்நீ
கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும்
அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்!
உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர்

வியர்த்தமே செய்கையும் மொழியும்
(உற்றுச் செவி கொடுத்து)
"வாணி" என்றபேர் கேட்டனன்! யாரது?
காணின் நன்றாம். காரிகை யார்கொல்?
[பலதேவனும் ஒரு நற்றாயும் தோழனும் தொலைவில் வர]
சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து
(ஆசிரியத் துறை)
நற்றாய்: நாணமு மென்மகள் நன்னல முமுகுத் துன்னை நம்பி
வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே
பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால்
வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ.
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நட: (தனதுள்)
ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்!
(ஆசிரியத் துறை)
நற்றாய்: நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன்
ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம்
காணப் பிறர்பொருள் கள்ளல மாதலினால்
வாணிக்குரித் தெனக்கேட்ட பின் வௌவலம் வாரலையோ
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நட: (தனதுள்)
நாராயணன் அன் றுரைத்தது மெய்யே!
(ஆசிரியத் துறை)
நற்றாய்: நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள்களில்லை
காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்ளலை
பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால்
வாணி யொளித்து நீவாசித் தறிந்துகொள் வாரலையோ
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
நட: (தன்னுள்)
ஆயினும் இத்தனை பாதகனோ இவன்!
பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை
சவமவ ளெனக்கேன்? இவள்சுக மெங்கே?
பொய்பொய் நம்பலை, ஐயமெல் லாம்விடு.
பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது.
சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காகச்
சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன்
இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு
வருகுவன் ஈதோ! மறக்கன்மின் என்னை!
[நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க]
தோழன்: செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை!
ஐந்தோ? ஆறோ?
பல: அறியேன். போ! போ!
இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில்
தோழன்: வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு
பல: வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்?
அதைவிடப் படித்த அலகையா யினுமென்?
கணிசத் திற்கது; காரியத் திற்கிது;
வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ்
சேவக ராதியர் செய்குவ ரையம்.
எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு!
ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை.
[பலதேவனும் தோழனும் போக]
நட: கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல்
கடுவெனப் பரந்தென் கைகால் நடுங்கின
கைத்ததென் கண்ணுங் காதும்
இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்?
ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்!
நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க
மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி?
இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்!
ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க
ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை!
தீண்டவும் வேண்டுமோ தீயனை?
என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்?
யாருடன் வினவ? நாரணனோ அது?
[நாராயணன் வர]
வா! வா! நாரணா!
நாராயணன்:
ஏ! ஏ! என்னை!
சினந்தனை தனியாய்?
நட:
ஏன்இத் தீயவன்
அனந்தைக் கேகுங் காரணம்?
நாரா:
யார்? யார்?
நட: அறிவை! நீவிளை யாடலை; அறைதி
நாரா: வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட
நட; அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்!
நாரா: அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன்
நட: விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவேன்;
விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன் நொடி.
உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை
நாரா: முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன்
வதுவை யவ்வழியே யாற்றிட வாணியை
அதட்டினன்
நட: அதற்கவள்?
நாரா: மறுத்தனள்?
நட: எங்ஙனம்?
நாரா: 'இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள்.
நட: அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி
நாரா: என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல்
நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்?
மாறி நாடொறும் வேறுபா டுறுமதி
யெண்ணுட் பட்டு நுண்ணயங் கூடலாற்
பெண்கள் நிலையிர் பெரிதுந் திடனே.
புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக.
காதலா மூழிக் கனன்முன் வையாய்
மாதராற் கட்டுரை மாயா தென்செயும்?
அக்கண முற்ற துக்கந் தூண்டக்
கன்னியா யிருப்ப நென்றா ளன்றி
யன்ன தவள்கருத் தாமோ?
நட:
அறியாய்!
புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்;
இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்;
ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன்
தந்நய மன்றிப் பின்னொன் றறியாக்
காதகர்; கடையர்; கல்வியில் கசடர்.
நாரா: ஓதி யுணரினும் மாத ருள்ளம்
அலையெறி கடலினுஞ் சலன மென்ப.
நட: திரைபொரல் கரையிலும் வௌியிலு மன்றி
கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை
தியக்கமும் மயக்கமுஞ் செறிவ திரிவையர்,
உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி
பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை
விள்ளா முரணும், மெய்ம்மையில் தௌிவும்,
உள்ளார், அவர்தம் உறுதிநீ யுணராய்
சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப்
பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர்.
கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண்
டலைதருங் கொடியஇவ் வலகைகள் வழியே
புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய்
மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர்
அவாவிற் கனவிலை, அன்போ அறியார்
மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ!
சீ! சீ! என்இத் தீயவர் செய்கை!
மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை
ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம்
ஆடவர் நெஞ்சும், அறத்துறை யகன்று
நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம்
நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச்
சென்றுழிச் சென்று நன்றறி வின்றி
அலையா வண்ணம் அறத்துறைக் குடாவில்
நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ்
செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக்
கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி
ஆசையாந் திசைதொறும் அலைந்து திரிந்து
கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர்
அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச்
சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய்,
நின்றது மங்கையர் நிலைமை யென்று
நினையா மனிதர், விலங்கினுங் கீழாய்
அனையார் தருசிற் றின்பமே யவாவி
வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத்
தாழ்த்துஞ் சேறா மாற்றுவர் தவத்தால்
மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது
அந்தோ! தம்மெய் யரிவார் போலத்
தனியே தளருந் தமக்குத் துணையாய்
வருபவர் தமையும் பகைவரா நலிந்து
பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம்
மதிகே டென்ன! துதிபெறு மன்புநற்
குணமு முளாரில் துணைவ ராயின்
இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர்
நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம்
பெற்றவா றன்றோ? எற்றே மடமை!
கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங்
கற்பகத் தருவென அற்பமுங் கருதாது
அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக்
கரிபெற முயன்ற கம்மிய னேயென,
தனக்கென வாழுந் தனிமிரு கத்தின்
மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந்
துன்பமுந் தந்தா அன்புபா ராட்ட,
மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப்
பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச்
சிறிது சிறிதுதன் சித்தந் தௌித்துத்
தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும்
ஓய்வுறச் செய்து, மற் றொன்றாய் நின்ற
எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம்
முங்கி யதனுள் மூழ்கிட யாரையும்
பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ்
இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி
உடற்றின வடக்குமா உரைஞ்சிடு தடியென
மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங்
கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே!
நாரணா! இவ்வவயிற் கேட்டதுங் கண்டதுந்
தீராத் துயரமே செய்வது, செல்குவன்
ஏதா யினுமினி எய்தில்,
ஓதாய் முனிவர் உறையு ளுற்றே.
[நடராசன் போக]
(நேரிசை ஆசிரியப்பா)
நாரா: (தனிமொழி)
நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங்
கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்?
புதுமையுங் கிதுவும்! பொருந்துவ
தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே
[நாராயணன் போக)
இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
புருடோ: (தனிமொழி)
யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்!
வார்குழல் துகிலோடு சோர மாசிலா
மதிமுகங் கவிழ்ந்து நுதிவேற் கண்கள்
விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப
பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு
விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து
விண்ணணங் கனைய கன்னியர் பலரென்
கண்முன் நின்றங் கிரக்கினுங் கலங்காச்
சித்தம் மத்துறு தயிரில் திரிந்து
பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ?
எவ்வுல கினளோ? அறியேம் இணையிலா
நவ்வியும் நண்பும் நலனு முடையவள்
யார்கொலோ? நாள்பல வானவே. ஆ!ஆ!
விழிப்போ டென்கண் காணில்! வீண்! வீண்!
பழிப்பாம் பிறருடன் பகர்தல் பகர்வதென்?
கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ?
நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும்
பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை,
நாடொறும் ஒருதலை கூடி வளரும்
மதியென எழில்தினம் வளர்வது போலும்
முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில்
ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது
நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம்
பருகின தையோ! கரிய கூந்தலின்
கிறுசுருள் பிறைநிகர் நறுதற் புரளப்
பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச்
செவ்வரி படர்ந்த மைவிழி நெடுவிழி
உழுவலோ டென்முகன் நோக்க எழுங்கால்
என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி
வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய
சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம்
நாணோடு சிவக்க ஊர்கோள் நாப்பண்
தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி
சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி,
அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து
மந்தா காசந் தந்தவள் நின்ற
நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே!
தேவ கன்னியர் முதலாந் தெரிவை யர்
யாவரே யாயினும் என்கண் தனக்கு
மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ?
அறியுமா றிலையே! அயர்க்குமா றிலையே!
உண்டெனிற் கண்டிடல் வேண்டும் இலையெனில்
இன்றே மறத்தல் நன்றே. ஆம்! இனி
மறத்தலே கருமம் மறப்பதும் எப்படி?
போரெவ ருடனே யாயினும் புரியிலவ்
ஆராவா ரத்தில் அயர்போ மன்றி...
[சேவகன் வர]
சேவகன்: எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில்
வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான்
புரு: யாரவன்?
சேவகன்:
பேர்பல தேவனென்றறைந்தான்
புரு: (தனதுள்)
சோரன்!
(சேவகனை நோக்கி)
வரச்சொல்!
(தனதுள்)
தூதேன்? எதற்கிக்
கயவனை கைதவன் அனுப்பினான்?
நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே.
[பலதேவன் வர]
பலதேவன்: மங்கலம்! மங்கலம்! மலய மன்னவ!
பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்
தன்தோள் தாரணி தாங்க எங்கும்
ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக்
குடங்கை யணையுறி குறும்பர் தூங்க
இடம்பார்த் தொதுங்குந்தடமுற் றத்து
மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்
வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த
தூதியான், என்பே ரோதில் அவ்வழுதியின்
மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன்
பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன்
குடிலேந் திரன் மகன்.
புரு: (தனதுள்)
மடையன் வந்ததென்?
பலதே: அப்பெரு வழுதி யொப்பறு மாநகர்
நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும்
அரவின தரசும் வெருவி ஞெரேலெனப்
பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம்
ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந்
தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க்
கட்டிய மதிற்கணங் காக்க விடியத்து
எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின்
யந்திரப் படைகள் எண்ணில இயற்றி...
புரு: வந்த அலுவலென்?
பலதே: மன்னவா! நீயாள்
வஞ்சி நாடதற்கு தென்கீழ் வாய்ந்த
நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே?
எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு
பரவு பாடையும் விரவுமா சாரமும்
நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா...
புரு: நல்லது! சொல்லாய்,
பலதே: தொல்லையாங் கிழமைபா
ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த
வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு
எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள்
சதியாய் நீயர சாண்டாய்.
புரு: அதனால்?
பலதேவ: அன்னதன் உரிமை மீட்க உன்னியே
முதுநக ராமெழில் மதுரை துறந்து
நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி
கண்டினன் ஆங்கே.
புரு: வேண்டிய தென்னை?
உரையாய் விரைவில்.
பலதேள் உதியனும் செழியனும்
போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்?
பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி
எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள்
மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும்
அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள்
தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ்
சமர்செயி லுலகம் தாங்கா தென்றே
எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை
நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன்செய்நாடு
உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே
கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து
அறிந்து மீளவே விடுத்தான்.
புரு: ஆ! ஹா!
முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய்
பலதே: மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே!
சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம்
ஆழ்துயர் மூழ்கலும் அன்றி உங்கட்கு
ஏது விளையுமோ அறியேம் ஆதலின்
அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன்
வெஞ்சமர் விளைத்தல் நன்றல.
புரு: (பயந்தாற் போல்) ஆ! ஆ!
பலதே: நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும்
எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில்
உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில்
திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல்
ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண
விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது.
அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில்
தென்னவன் மனமும் திருந்தும் நன்செய்நா
டுன்னதும் ஆகும்.
புரு: உண்மை! ஓஹோ!
வண்டு மலரிடை யணையஉன் நாட்டில்
கொண்டு விடுவரே போலும். நன்று!
கோதறு மிருபுறக் காதல் அன்றியெம்
நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம்
அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி.
பலதே: (தனதுள்)
சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!
புரு: ஆதலின் முடிவில்நீ ஓதிய தொழிக.
நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற
வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே
அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து
நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து
முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப்
புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க,
அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல
நாணே இறந்து நாணம் துறந்து
கெஞ்சுமெஞ் சபையில் அஞ்சா தெமது
நன்செய்நா டதனை நாவுகூசாமற்
பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும்
ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன்
என்றபே ரொன்றால் என்றே அறிகுதி.
கருதா துனையிங் கேவிய கைதவன்
ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி
யார்பகை இன்மையால் இதுகா றணிந்து
பார்வகித் தாளெனப் பகரா தறிவன்
விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும்
அரிக்குதே ரென்னநீ யறைந்த அரசனும்
இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும்
[சேவகனை நோக்கி]
அருள்வர தனையிங் கழையாய்! சேவக!
[அருள்வரதன் வர]
பலதே: (தனதுள்) சிந்தனை முடிந்தது.
அருள்வரதன்: வந்தனம்! வந்தனம்!
புரு: நல்லது! செழியன் நெல்லையை நோக்கி
நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ்
வேளையா யத்தமாய் வைப்பாய்.
அருள்: ஆஞ்ஞை
புரு: (பலதேவனை நோக்கி)
செல்வாய் விரைவில். தென்னன் போர்க்கு
வல்லா னென்னில் வாரமொன் றிற்குள்
துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன
கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல்
முடிநம் அடியில் வைத்து நாமிடும்
ஆணைக் கடங்கி யமர்க எமதிடம்
வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு
வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே
எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்!
[பலதேவன் போக]
(தனதுள்)
முட்டாள் இவனை விட்டவன் குட்டுப்
பட்டபோ தன்றிப் பாரான் உண்மை.
பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம்.
எண்ண மேகினும் ஏகும் இனியே.
[புருடோத்தமன் போக]
(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அருள்: தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;
நேர்ந்து வெம்போர்.
யாவரும்: வாழ்கநம் வேந்தே!
1-ம் படை: நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி.
யாவரும்: உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழிக உன்சொல்!
2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.
3-ம் படை: தெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்.
4-ம் படை: யாவரோ, பகைவர்? அருளா பரணா!
தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?
அருள்: பாண்டியன்.
யாவரும்: (இகழ்ச்சியாய்)
பாண்டியன்! சீச்சீ! பகடி
அருள்: ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்...
யாவரும்: வியப்பு! வியப்பு!
3-ம் படை: வேற்றா ளொருவனென்
அயற்புறம் போனான். அவன் முகம் நோக்குழி
வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன்.
முதற்படை: அவன்றான்! அவன்றான்! அவன்றான் தூதன்.
4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய் தலைவ!
2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ
செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சி!
அருள்: நல்லது வீரரே! நாளை வைகறை
நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச்
செல்லற் குரியன திட்டம் செய்வான்
வல்லையில் ஏகுதும், மங்கலம் உமக்கே.
[அருள்வரதன் முதலியோர் போக]

இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

இரண்டாம் அங்கம் முற்றிற்று.


மூன்றாம் அங்கம் : முதற் களம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவ: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்சநின்! தனையன்
பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக்
குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும்
உபாயுமும் யாவும் உடையான்; அதனாம்
அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்!
குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக்
கிலையிலை ஐயம் சிறிதும் உலகத்து
இயற்கை யறியா இளையோ னாகிலும்
முயற்சியின் மதியின் முதியோன் எனவே
மொழிகுவர். அவனாற் பழுதில கொற்றவ!
வஞ்சி நாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார்
நஞ்சினும் கொடிய நெஞ்சினர். அவர்தாம்
கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்;
என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால்
மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம்.
அன்றியும் புருடோத் தமனெனும் அரசன்
கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.
ஜீவ: சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம்
மனத்தே அவாவி மயங்கு நம் மனோன்மணி
திருவும் வெருவும் உருவும், பெருகும்
அருளுறை யகமும், மருளறு முணர்வும்,
முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன்
அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக்
குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்
செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்
தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால்
தலையா லோடி வருவன். உனக்கு
மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே!
குடில: முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர்
என நாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின்
எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்?
துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்?
சிறந்தநூல் உணர்வும் தௌிந்ததோர் உளமும்
செப்பினர் என்றிடில் ஒப்பெலாந் தகைத்தே,
ஆயினும், மலைய நாட்டரசன் நமது
தாயின் தன்மை சகலமும் இப்போது
அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை
நெறிமுறை சிறிதும் பிறழா நினது
தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம்
அம்மா! தனியே அவன்பல பொழுதும்
மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி
அவயவத் தழகெலாம் மாறா தறைந்தறைந்து,
இமையவர் தமக்கும் இசையுமோ இவளது
பணிவிடை? நமது பாக்கிய மன்றோ?
அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்?
என்றுமிப் படியே இவள்பணி விடையில்
நின்று நம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?
என்றவன் பலமுறை யியம்பல் கேட்டுளனே.
ஜீவ: ஐயமோ? குடிலா மெய்மையும் இராஜ
பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன்
பரிவுறல் இயல்பே, அரிதாம் நினது
புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு
ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்
குடில: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ!
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம்
அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன்
ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ,
யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும்;
அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம்
உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே
நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும்
ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப்படைந்த
தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை
வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையல்
சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவேன்;
ஒருவன் தனதடி யிணையடைந் துறவே
பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவான்;
மற்றோர் மனிதன் சற்று மெண்ணாதே
செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்;
மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்;
பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர்
உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும்
உன்னான் ஆயினும் இன்னவை யாவும்
பிரபுத் துவமலாற் பிறவல குடிலா!
குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது
முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந்
துணிவுறா உளனும் பணிகிலா உறனும்
உனைவிட எவர்க்குள? ஓதுவாய், உன்வயின்
தினையள வேனும் சேரா தாகும்
ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
உரைதா உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்
மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன்
அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும்
நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான்
என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம்
நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே.
ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும்.
குலகுரு கூறுதல் கொண்டில மென்னில்
நலமென் றென்றே நாடி யனுப்பினோம்
நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்?
இயைந்த கணவர்வே றாயிரம், காண்குதும்.
குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்!
இதுமாத் திரமன் றிறைவ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ
என்றே யென்மனம் பதறும் ஏவுமுன்
உரைக்க உன்னினேன் எனினும் உன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன்.
ஜீவ: வெருவல குடிலா! அரிதாம் நமது
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்
செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்!
விடுவனோ சிறிதில்? குடில! உன் மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின் என்மகட்கும்
பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.
[ஒற்றன் வர]
ஒற்றன்: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா!
ஜீவ: எங்குளார்? நமது தூதுவர்?
ஒற்றன்:
இதோ! இம்
மாலையில் வருவர், வாய்ந்தவை முற்றுமிவ்
ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே!
[ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க]
குடிலன்: (தனக்குள்)
ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம்
முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை
போரும் வந்தது; நேரும் புரவலற்
கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன
ஜீவ: (தனதுள்)
துட்டன்! கெட்டான் விட்டநந் தூதனை
ஏசினான்; இகழ்ந்தான்; பேசிய வதுவையும்
அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப்
படியில் விடுவானாம்; படைகொடு வருவனாம்;
முடிபறித் திடுவனாம்; முடிபறித் திடுவன்!
(குடிலனை நோக்கி)
குடிலா! உனைப்போற் கூரிய மதியோர்
கிடையார், கிடையார், அடையவும் நோக்காய்;
கடையவன் விடுத்த விடையதி வியப்பே!
[குடிலன் ஓலை நோக்க]
குடில: நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே!
உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற்
குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்!
யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும்
வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய
உருவினாள் தனக்கிங் குரைத்தோர் குற்றமும்
இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்!
ஜீவ: பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும்
ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங்
கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி
குடில: செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்?
ஒருமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான்.
வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும்,
ஆலவா யுள்ள படைகளை யழைக்கில்
சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே.
ஜீவ: வேண்டிய தில்லை யீண்டவர் உதவி
தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்
ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன்
பின்னழைத் திடுவோம்; அதுவே நன்மை
புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி
எலிவேட் டைக்கும் இசையுமோ? இயம்பாய்.
குடில: அன்றியு முடனே அவன்புறப் படலால்
வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால்
ஜீவ: இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்?
பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம்
ஆயத்த மாக்குதி; யாமிதோ வந்தனம்.
[ஜீவகன் போக வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து]
சேவகன்: விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற்
பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்
நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே
குடிலன்: நல்லது! நல்லது! செல்லா யப்பால்.
[சேவகன் போக]
(தனதுள்)
சொல்லிய தென்னை? சோரன் நமது
நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ?
இளையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி
நாரண னோர்ந்து நவின்றனன் போலும்
காரணம் அதற்கும் கண்டிலம், ஆ! ஆ!
மாலைக் காசு வாழ்த்தினன் இவனும்!
புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல
"கள்ள மனந்தான் துள்ளு" மென்பதும்
"தன்னுளந் தன்னையே தின்னு" மென்பதும்
"குற்றம் உள்ளோர் கோழையர்" என்பதும்
சற்றும் பொய்யல; சான்றுநம் மிடத்தே
கண்டனம், அவனெம் அண்டையில் அம்மொழி
விளம்பியகாலை விதிர்விதிர்ப் பெய்தி
உளம்பட படத்தென் னூக்கமும் போனதே
சீச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ!
வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே!
நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக்
கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத்
தன்னுளே பன்முறை சாவடந் தடைந்து
பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை
எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!..
நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள!
ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது!
கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்
வா வா காலம் வறிதாக் கினையே
ஓவா திவையெலாம் உளறுதற் குரிய
காலம் வரும்வரும். சாலவும் இனிதே!
[குடிலன் போக]

மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.


மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
நடராஜன்: (தனிமொழி)
காலையிற் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும் வேண்டின் விரைவா
இன்றிரா முடிக்கினும் முடியும் துன்றராக்
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதம்
பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம்
என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி.
அதனால் அன்றோ இதுபோல விரைவில்
இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது?
எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை
இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு
வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம்
ஈண்டெப் பொருள்தான் இலக்கற் றிருப்பது
இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை யடியோன் றுயர்த்தி
இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என்
தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே.
"இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில்
தழைப்பதற் கிடமிலை. சிறார்நீ பிழைப்பதற்கு
ஏகுமின் புள் ஆ எருதுஅயத் தொருசார்
சிக்கிநீர் சென்மின்!" எனத்தன் சிறுவரைப்
புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும்
பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும்
சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு
தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,
ஆர்த்தெழு மன்பினாம் அனைத்தையும் கலந்துதம்
என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்.
தமக்கூண் நல்கும் வயற்குபயோகம்,
எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்!
பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
தன்வலிக் கடங்கிய மண் கல் புல்புழு
இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தரும்இவை எனவோர்ந் துருட்டிக்
கொண்டு சென்று இட்டுமற் றையா!
அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாத் தூங்கியும், குகைமுகம்
இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும்
கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும்
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்,
மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
பற்பல படியான் பட்டங் கீட்டியது
அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்;
இன்னமு மீதோ ஏகுவன் எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவண் அடைந்துமற் றிராப்பகல் மறந்து
நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?

(நீரைக் கையாற் றடுத்து)
நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!
இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி
நீரே! நீரே! என்னையுன் நிலைமை?
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?

(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)
ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை.

விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை,
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வௌிகொணர்ந் தும்புகழ் வேண்டார்போல
ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்

இப்புற் பயிர்நீ இங்ஙனமே உழாயேல்
எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள

(நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)
விழுப்புகழ் வேண்டலை, அறிவோம் ஏனிது?
துதிக்கலம். உன் தொழில் நடத்துதி. ஆ!ஆ!
எங்கு மிங்ஙனே இணையிலா இன்பம்
பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக்
காணார் பேணும் வாணாள் என்னே!

அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற்
சிதறிய குணக்கதிர் செறிந்து திரள
வைத்தசிற் றாடியின் மையமே யொத்த
உள்ளமும் உடலும் பெற்றுங் கள்வர்..
நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே!

சினக்கனல் எழும்பும் நமக்கேன் இச்சினம்?
கிருபணன் தீனன். விடுவிடு அஃதென?
என்கொல் அத்தோற்றம்? புகையோ? - மங்குலுக்கு
இந்நிறமில்லை. செந்நிறப் படாமென,
பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற்

கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன்
உருக்கிவிடுதற் குயர்த்திய ஆடகப்
பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப்
பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே
இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ

பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்?
இடியுருண் டதுபோல் எழுமொழி தேரொலி?
அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்?
வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்...
பொருதற் கன்றவன் வருவது சரிசரி

வதுவைக் கமைந்து வந்தான் போலும்
இதுவென்? ஓகோ? மணப்பாட்டன்றிது.
[வஞ்சி நாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம்
போகப் படைப்பாணர் பாட]
(வஞ்சித் தாழிசை)
படைப்பா: அஞ்சலி லரிகாள்! நும்
சஞ்சிதப் பெருவாழ்வெம்
வஞ்சியன் சினத்தாற் கண்
துஞ்சிய கனவேகாண்
படைகள்:
ஜே! ஜே! ஜே!
பாணர்: எஞ்சலில் பகைகாள்! நும்
மஞ்சுள மணிமகுடன்,
வஞ்சியன் சினத்தானீர்
கஞ்சியுண் கடிஞையேகாண்
படை:
ஜே! ஜே! ஜே!
பாணர்: மிஞ்சிய பகைகாள்! நும்
துஞ்சிய பிதிர்க்கூட்டம்
வஞ்சியன் சினத்தாலென்
நெஞ்சிலும் நினையார்க்காண்
படை: ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே!
(நேசிரியை ஆசிரியப்பா
தொடர்ச்சி)
நட : பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்,
வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும்
பாடிய பாட்டின் பண்ணும் தலைமிசைச்
சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை

பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில்
உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும்
இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில்
மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை

காட்டிய முகக்குறி யாவும் நன்றல.
வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ!
நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த
கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத
மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப்

பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச்
செல்லும் அசலத் திரளும் செறிந்து,
நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம்.
அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை
வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!
[இரண்டுழவர்கள் வர]
1வது உழ: வியப்பென்? சுவாமி!
நட : வயப்படை வந்தது
அறிவையே நீயும்?
1வது உழ: அறிவேன், போருக்கு
அழைத்திடில் யாவர் அணுகார்?
நட : வழுதி
மணமொழி வழங்க அன்றோ விடுத்தான்?
2வது உழவ: மணமொழி பிணமொழி யானது; குடிலன்
கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே!
நட: செய்ததென்?
1வது உழவ: ஐயா! அதுநாம் அறியோம்!
குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்
முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி
தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான்;
மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச்
சூதாய்த் துணைவரக் கூவினான்.
நட : சீச்சீ!
ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்;
பொய்பொய்; புகன்றதார்?
1வது உழ:
பொய்யல, பொய்யல
ஐய! நானறைவது கேட்டி; எனது
மைத்துன னவன்தாய் மரித்த மாசம்
உற்றதால் அந்தத் திதியினை யுணரச்
சென்றனன் புரோகித சேக்ஷைய னிடத்தில்,
அன்று நாள் ஆதித்த வாரம்; அன்றுதான்
(இரண்டாவது உழவனை நோக்கி)
சாத்தன் உன்னுடன் சண்டையிட்டது.
(நடராசனை நோக்கி)
மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில்..
(நாற்புறமும் நோக்கி, செவியில்)
இருந்து பலபல இரகசியம் இயம்புவர்..
நட: திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்
2வது உழ: இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு
உற்ற ஜோசியர்.
1வத் உழ: பொறு! யான் உரைப்பன்.
மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி
அருகே நின்றனன். அப்போ தறைவர்;
'மருகா! நேற்று மந்திரி மனைவி
பலபல பேச்சுப் பகருங் காலை,

பலதே வன்றன் ஜாதக பலத்தில்
அரச யோகம் உண்டென் றறைந்தது
விரைவில் வருமோ என்று வினவினள்;
வரும்வரும் விரைவில் என்றேன் யானும்
மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி

வதுவைக் கரியம் பேசினள் மற்றுஅது
நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள்
நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு
வருத்தமுற் றவள்போல் தோற்றினும் கருத்திற்
சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்".

எனப்பல இரகசியம் இயம்பி வலியோர்
மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள்
இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?"
எனஉரைத் திருவரு வெழுந்துபின் நகைத்தான்,
பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே

எனக்கிங்கிவையெலாம் இயம்பினன் உனக்குச்
சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும்
உண்டுமற் றவனைக் கண்டுநீ வினவே.
2வது உழ: வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு
மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த்
தூதுவர் போகும் காலைத் தாக
ஏதுவால் இரும்படி இராமன் என்றவன்
தங்கை மனைக்கு வந்தவத் தருணம்
அங்கியான் இருந்தேன். "அரண்மனைச் செய்தி
என்ன?" என்றேற்கவன் இயம்பும், "மன்னன்
தெத்தெடுத் திடும்படி யத்தன் முண்' டென
"எப்போது யாரை?" என்றதற்கு ஒன்றுஞ்
செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான்.
1வது உழ: பலதே வற்கிவன் நலமிகு சேவகன்.
2வது உழ: குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம்
1வது உழ: ஆயினும், நமக்க திழிவே; மேலும்
தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்
குறுதுயர் ஒருவரும் ஆற்றார்
2வது உழ:
அறிவிலாத்
தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்;
சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை
விடுமோ? சொல்லாய்.
1வது உழ:
விதியெனப் பலவும்
படியோர் பாவனை பண்ணித் தமது
கடமையின் விலகுதன் மடமை; அதனால்
நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி
எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி.
2வது உழ: அரசன், அரசனேற் சரியே; சுவாமி!
உரையீர் நீரே திருவார் வாணியை
அறியீர் போலும்,
நட : அறிவோம், அறிவோம்
நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர்..
[உழவர் போக]
(தனதுள்)
ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில்
தோற்றுவ தனைத்தும் சாற்றுவர் அவர்தம்
தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல்,
சுகம்தரு மொழிபோல், சுகந்தரும் சூழ்ச்சியும்
அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும்
கூட்டிக் காரண காரியக் கொள்கைகள்
காட்டலும், காணக் களிப்பே! ஆயினும்
பழுதல பகர்ந்தவை முழுதும் முன்னோர்
ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர்.
அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம்
வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர்

புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல்,
அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள்
சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள்
விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி
ஒழுகிடும் அவைகளை உழையுளார் தமக்குத்

தோற்றிய பலவோடும் தொடுத்துக் காற்றில்
தூற்றுவர் எனினும் சொன்னவை முற்றும்
குடிலன் குணமுடன் கூடலாம் அவையும்,
படையிவண் வரநாம் பார்த்ததும்,
அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.
[நடராசன் போக]

மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
செவிலி: (படுத்தபடியே)
ஏதம்மா! நள்ளிரா எழுந்து லாவினை?
தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம்
மனோ: உடலால் என்பயன்? சுடவே தகுமது
வேர்க்கிற திவ்விடம்; வௌியே இருப்பல்
போர்த்துநீ தூங்கு
[செவிலி தூங்க]
வாணீ! உனக்கும்
உறக்க மில்லையோ?
வாணி:
எனக்கது பழக்கம்
மனோ: வருதி இப்புறம். இருஇரு..
[இருவரும் நிலாமுற்றத்திருக்க]
இதுவரை
எங்கிருந் தனவில் அன்றிற் பேய்கள்!
நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும்
உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டை கேள்
கையறு நித்திரை! வாணீ! மற்றிது
வைகறை யன்றோ!
வாணி:
நடுநிசி அம்மா!
மனோ: இத்தனை யரவமேன்? முனிவ ரறையில்
நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல்
தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன்
ஊரிலென் இன்றிவ் உற்சவ அரவம்?
வாணி: (தனதுள்)
போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ?
மனோ: கண்டதோ நகருங் காணாக் கனவு?
வாணி: கண்டது கனவோ தாயே?
மனோ:
கண்டது...
கனவெனிற் கனவு மன்று; மற்று
நனவெனில் நனவு மன்று.
வாணி:
நன்றே!
கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம!
மனோ: கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்!
வாணி: எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை!
மனோ: எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்!
வாணி: புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு?
மனோ: இதுவென வொண்ணா உவமையி லொருவரை
எத்திற மொன்றியான் இயம்ப! நீயுஞ்
சித்திரரேகை யலையே. விடுவிடு!
பண்ணியல் வாணீ! வாவா! உன்றன்
பாட்டது கேட்டுப் பலநாளாயின!
வாணி: என்பா டிருக்க! யாவரு மறிவார்!
உன்பா டதுவே ஒருவரு மறியார்
மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே!
நீக்குக இத்தீ நினைவு! யாழுடன்
தேக்கிய இசையிர் செப்பொரு சரிதம்
[வாணி வீணை மீட்ட]
அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்!
[வாணி பாட] சிவகாமி சரிதம்

(குறள்வெண் செந்துறை)

வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவா!
மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில்
பாழடவி இதிற்கழன்று பாதைவிடுத் தலையும்
பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே.

சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந்
தன்மையென நான்நடக்கத் தான்வளரும் அடவி,
ஆரிருள் இனி நடக்க ஆவதில்லை உடலம்
ஆறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்."

என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்;
"ஏகாந்தப் பெருங்ககனம்; இதுலுவக ரணையார்;
சென்றுறைய மடமுமிலை; திகழ்வௌியென் வீடு;
சிந்தையற நொந்தவர்க்குச் சேவிலை பந்தம்.

அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த
அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார்
உறங்க அவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார்
உண்ணவெனில் பாலமிழ்தும் ஒன்றாக மதியார்.

ஆதலின் பாலுறுவ தியாதெனினு மைந்த!
அன்புடன் நீ யென்பிறகே யணையிலஃ துனதாம்.
வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும்
விடியும். உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்ீ.

என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர,
ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து
நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா
நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான்.

இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க
இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய
அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள்
அரியரக சியந்தமக்குள் ளறைந்து நகை புரிய;

என்புருகப் பிணைந்த அன்றில் இணைசிறிது பிரிய
ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ,
அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள்
அலர்மலர்க்கண் நீரருவி அகமுடைந்து தூவ;

விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல்
விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட;
இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும்
இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட

பொறியரவின் கடிகையுறு பொன்மணியி னொளியும்
பொலிமதத்தின் கறையடியின் புலைமருப்பி னொளியும்
அறிவரிய சினஉழுவை அழல்விழியி னொளியும்,
அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே

பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல்
பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன்,
அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும்
அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான்.

ஒருங்கார நிறைமுளரி உழையொதுக்கி நுழைந்தும்,
உயர்மலையின் குகைகுதித்தும் ஓங்கார ஒலியே
தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார்
சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே

நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண்
நிறுவதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி
வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும்
மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி,

நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன்
நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி
ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார்
ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பஇவை உரைக்கும்;

இனி நடக்க வழியுமில்லை; இனித்துயரு மில்லை.
இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே
பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து
பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே.

தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல்
சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார்.
என்னேயிம் மனிதர்மதி!" என நகைத்து முனிவன்
இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான்.

இருந்தமுனி "வருந்தினவ! ஏதுனது கூச்சம்?
இருவருமே யொருவரெனி லெவர் பெரியர் சிறியர்?
திருந்தஅன லருகினிச் செறிந்துறைதி மைந்த!
சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே"

எனஇரங்கி இரண்டுமுறை இயம்பியுந்தன் னருகே
யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே
மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த
மகன்மலைவு தௌிந்துவௌி வரும்வகைகள் பகர்ந்தான்.

பகர்ந்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில்;
பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத்
திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச்
சிந்தைதனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான்.

செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி
திகைக்கஎலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே
விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி
மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே.

மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய
முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும்;
"எழிலாரு மிளமையினில் இடையூறா திகவால்
இல்லமகன் றிவ்வுருவமெடுத்திவண்வந் தனையோ?

ஏதுனது கவலை? உளத் திருப்பதெனக் கோதாய்
இழந்தனையோ அரும்பொருளை? இழந்தனரோ நண்பர்
காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க்
கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய்

ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும்
அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய்
கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக்
காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே.

நண்பரு வினர்கள்நமை நாடியுற வாடல்
நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென எண்ணாய்!
பெண்களகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே!
பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்!"

எரியுமுளம் நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு
ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து
விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும்
வௌிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான்.

இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி
இருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி
விசைத்தியங்கு மெரியெழும்பி மீண்டுமவன் நோக்க
வேஷரக சியங்களெல்லாம் வெட்டவௌி யான,

நின்மலவி பூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி
நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும்
உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும்
உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும்.

கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச
குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும்
வீசுலையின் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு
வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும்

இவ்விதந்தன் மெய்விளங்க இருந்தமக ளெழுந்தே
யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்;
தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த
தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே!

மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ
வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை.
எண்ணரிய குணமுடையள், இவள்வயிற்றி லுதித்தோர்
இருமகளி ரொருபுருட ரென்னஅவர் மூவர்

ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார்,
ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி
செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்;
செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர்

உடல்பிரியா நிழல்போல ஓதியஅப் புதல்வர்
உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன்.
அடல்பெரியர் அருளுவர் அலகில்வடி வுடையர்.
அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்"

உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி
ஊறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க
எரிக்கவிற் கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான்
இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள் முன் தொடுத்தே.

"மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம்
மடமகளென் றெனக்களித்தான். மயங்கியதின் மகிழ்ந்து
தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும்
தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன்.

குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன்.
குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன்.
வெறுப்பாக நினைத்தேன்மேல் வேதனைப்பட் டவரும்
வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே.

பொருள் விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பி வந்தோர்
பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை
அருளரும்பி யெனைவிரும்பி ஆளுமென ததிபர்
அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன்.

ஒருவாரம் ஒருமாதம் ஒருவருட காலம்
ஓயாமல் உன்னியழிந் தேன்உருவங் காணேன்.
திருவாருஞ் சேடியர்க்குச் செப்ப அவர் சேரும்
0
திசைதேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்.

ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார்.
அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து
தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்;
திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன.

கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக்
கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க?
உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால்
உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையும் காணேன்.

உண்டெனிலோ கண்டிடுவன்; இல்லையெனில் ஒல்லை,
உயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி
கண்துயிலும் இல்லிடந்தீ கதுவவௌி யோடும்
கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன்.

தீர்த்தகுலம் மூர்த்தி தலம் பார்த்துடலம் சலித்தேன்.
திருக்கறுபற் குருக்கள்மடம் திரிந்து மனம் அலுத்தேன்
வார்த்தை கத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய
மறுத்து றங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே.

மான்மறவாக் கலையினமே! வாழ்பிடிவிட் டகலா
மதம்பெருகு மாகுலமே! வன்பிகமே! சுகமே!
நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரரோ?
நவில்வெரென பிந்தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன்.

இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஓடி
இதுவரையும் தேடியுமென் அதிபரைக்கண் டிலனே.
எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண?
இக்காயம் இனியெனக்கு மிக்கஅரு வருப்பே.

ஐயோவென் உள்ள நிலை அறியாரோ இனியும்?
ஆசைகொண்டு நானைலைந்த தத்தனையும் பொய்யோ?
பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த
போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதே?

நல்லர்அரு ளுடையரென நம்பி இதுவரையும்
நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ?
இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும்
எந்நலமும் கொல்லவென எடுத்தசுடுகாடே

என்னுடைய உயிர்த் துணைவர் எண்ணரிய அருளில்
ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு
மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால்
வகுத்தாறி னேன்சிறிது, மறுசாட்சி யில்லை.

இனியிருந்து பெறும்பயனென்? இவ்வழலே கதி" யென்று
எரியுமழல் எதிரேநின் றிசைத்தமொழி முழுதும்
முனிசெவியிர் புகுமுனமே மூதுருவம் விளக்கி
முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி.

'சிவகாமி யானினது சிதம்பரனே' என்னச்
செப்புமுளம் இருவருமற் றோருருவம் ஆனார்!
எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம்.
இருவருமொன்றாயினரென் றேயறையும் சுருதி.

பரிந்துவந்து பார்வதியும் கஞ்சப்
பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த
அருந்ததியும் அம்ம! இஃது அருங்கதியென் றஞ்ச
ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த

ஆழியுடை சூழுலகம் யாவுநல மேவ!
அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவௌம் மூழ்க!
பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த
பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க!

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
மனோன்: வாணி! மங்காய்! பாடிய பாட்டும்
வீணையின் இசையும் விளங்குநின் குரலும்
தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து
ஊனையும் உயிரையும் உருக்கும் ஆ! ஆ!
[இருவரும் மௌனமாய் இருக்க]
உனதுகா தலனெங் குளனோ? உணர்வைகொல்?
வாணி: எனது சிந்தையில் இருந்தனர்; மானார்.
மனோன்: ஆயினும் வௌியில்?
வாணி: அறியேன் அம்ம!
மனோன்: போயின இடம்நீ அறியாய்?
வாணி:
நாரணன்
முனிவர் தம்மடத் தேகினர் தனியென
ஓதினன் ஓர்கால்
மனோன்:
ஓகோ! ஓகோ!
[மௌனம்]
கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய்
வாணி: அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்!
ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக்
கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும்
ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே,
பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன்
தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற்
சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று
சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து
அழுவது போல விழுமிய பரல்மேல்
ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப்
பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி
இருவரும் மௌனமாய் நெடும்பொழுதிருந்தோம்
கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென்
அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர்
வருவதிங் கறியா மதியிலி அதனைக்
கண்ணினை ஒற்றிலன்; உள்மனம் உகந்திலன்;
மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்;
ஆர்வமும் அன்பும் அறியார் மான்
ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச்
சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன்.
முறுவலோ டவரும் ஏதோ மொழிய
உன்னும் முன்னரென் அன்னையங்கடைந்தாள்;
தீமொழி பலவும் செப்பினள். யானோ?
நாவெழல் இன்றி நின்றேன். நண்பர்
மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர்.
அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ!
கண்டிலேன் இனிமேற் காண்பனோ? அறியேன்
ஒருமுறை கண்டேன் உளக்கருத் தவருடன்
உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே!
மனோன்: உரைப்பதென் வாணீ! உளமும் உளமும்
நேர்பட அறியா என்றோ நினைத்தாய்?
வாணி: ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர்.
மனோன்: ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே!
பூதப் பொருட்கே புலன்துணை அன்றி
போதப் பொருட்குப் போதும் போதம்
இரவியை நோக்கற் கேன்விளக் குதவி?
கருவிநுண் மையைப்போற்காட்சியும் விளங்கும்
பட்டே உணரும் முட்டா ளர்கள்போல
தொட்டே உணரும் துவக்கிந் திரியம்,
நுண்ணிய கருவியாம் கண்ணோ உணரும்
எண்ணறச் சேய்த்தோம் நுண்ணிய ஒளியை!
கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்!
களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும்
உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம்
அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும்
எத்தனை பெட்டியுள் வைத்து நாம் பூட்டினும்
வானுள மின்னொளி 'வடக்கு நோக்கி'யைத்
தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை!
போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பை
பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்!
வாணி: கூடும் கூடும்! கூடுமக் கொள்கை;
நம்பலாம் தகைத்தே!
மனோன்:
நம்புவ தன்றி மற்று
என்செய நினைத்தாய்? இவ்விரும் பொருள்கள்
தருக்கவா தத்தால் தாபித் திடுவார்
கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்!
அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத்
தரும்பக் குவமிலார் தமதுளம் போய்
வழியே வாளா மனக்கணக் கிட்டு
மொழிவார் முற்றும் துணிவா யெனயான்
இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால்
நிச்சயித் துணர்ந்தேன் வாணீ! ஐயோ!
நம்பெலென் பதுவே அன்பின் நிலைமை
தௌிந்தவை கொண்டு தௌிதற் கரியவை
உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச்
சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே
அனுபவ வழியாய் அறிவதை அந்தோ!
அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம்
அலதெனில் இலையென அயிர்ப்போம் எனத்திரி
வாதியர் அன்பொரு போதுமே அறியார்
தாய்முலைப் பாலுள்நஞ்சு ஆய்பவ ரவரே!
முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ!
[உடல் புளகாங்கிதமாய் நடுங்க]
ஏதோ வாணி! இப்படி என்னுடல்? ...
வாணி: சீதமோ? தாயே!
மனோன்:
சீ! சீ! இன்றெலாம்
இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்!
வாணி: இக்குளிர் காற்றின் இடையே இருத்தல்
தக்க தன்றினி தாயே பாராய்!
அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம்.
மனோன்: நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல்? [எழுந்து மேகம் பார்க்க]
வாணி: (தனதுள்)
ஐயோ! ஏன் நான் அத்திசை காட்டினேன்?
போயெப் படியான் புகல்வன்!
மனோன்:
வாணீ!
ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ!
ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அரைகுதி
போர்க்குறி போலும், புகலுதி உண்மை
[மழை இரைந்து பெய்ய]
அஞ்சலை அஞ்சலை இதோஎன் நெஞ்சிடை
வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு
வாணி: இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன்...
விளம்புவன் வீட்டுள் வருக!
தௌிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே!
[இருவரும் போக]

மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.


மூன்றாம் அங்கம்: நான்காம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
நிஷ்டாபரர்: ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்!
வேதவே தாதந்தம் ஓதிநீர் தௌிந்தும்
இரவெலாம் இப்படி இமையிமை யாதே
பரிதபித் திருந்தீர்! கருணா கரரே!
பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது!
போரிலை ஆயினென்? யாருறார் மரணம்?
எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்?
இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்?
ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில்,
எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள்
உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்?
சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும்.
குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி!
பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து
அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண்
தீயெழுத் திரித்துப் பேழ்வாய் திறந்து
கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி
விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின்
முன்னிரு கையில் வெந்நுறக் கிடத்தி,
மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப்
பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ
நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி
எய்யா தையோ! என்றழு குரலிங்கு
யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?
கைகால் மிகில்நம் மெய்வே றாமோ?
நோவும் சாவும் ஒன்றே. அன்றியும்
உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ?
பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற
எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும்
இரவியின் மண்டலத் தொருசிறு திவலை
பரவிய வானிடை விரவிய மீனினம்
இரவியில் எத்தனை பெரியதுஒவ் வொன்றும்!
இரவியும் இம்மீன் இனங்களும் கூடில்
ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல்
ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர்
ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே.
இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால்
உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில்
வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில்
ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த
நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை
ஏன்மிக? நாமிங் கோதிய மாலும்
ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப
அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில்
எப்படிப் பார்க்கினும் மிசையப் பேய்த்தேர்!
இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்?
நீர் யார்? நான் யார்? ஊரெது? பேரெது?
போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்!
மருவறு மாயா மகோததி யதனிற்
புற்புதம் அனைய பற்பல அண்டம்
வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி அதனைத்
தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்?
விடுத்திடும், விடுத்திடும், வீணிவ் விசனம்
இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம்
தன் தொழில் சலிப்புற இயற்றும்மற் றதனுள்
படுபவர் திரிகையுட் படிசிறு பயறே.
விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர்
அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர்.
யாரென் செய்வார்! யாரென் செயலாம்!
அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை
பிடித்திடிற் பின்நும் படிப்புன் ஞானமும்
குருட்ட ரசனுக்குக் கொளுத்திய விளக்கும்
இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன
ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்?
பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம்
மிக்கொளும் அதனால் விடுமுல கெண்ணம்
சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத்
துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ!
மறக்கிற் சுயமே மறையும் மறைய
இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே
பிறக்கும் பிரத்தியப் பிரபோ தோதயம்!
நீரும் உலகமும் நிகழ்த்திய போரும்
யாருமங் கில்லை அகண்டசித் கனமாய்
எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்!
உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான்
உரைதரல் பிறவிக் குருடற் கொருவன்
பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த
கதையாய் முடியும்! அதனாற் சற்றே
பதையா திருந்துநீர் பாரும்
சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே.
கருணாகரர்: சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற்
றிகம்பரம் இரண்டும் இல்லையெனில் ஏகுக.
யானென ஒருபொருள் உளதாம் அளவும்
ஞானதயாநிதி நங்குரு நாதன்
ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த
வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால்
ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு
மோனநற் சித்தியிம் முத்தியும் யாவும்
ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்!
பொய்யோ பாரும்! புரையறு குரவன்
பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை!
இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது!
செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும்
எப்படி நீரிங் கெய்தினேர் எல்லாம்
ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்
அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே!
சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம்
பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு
நிட்டையா யினுமென்? நிமலவ்ிீ டாய்ினென்?
ஆவா! யாம்முன் அல்லும் பகலும்
ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும்
ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும்,
பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும்;
மகிழ்கினும் துயருந் தழுகினும் சினகரம்
தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும்
எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும்
'நாமே உலகின் நடுநா யகம்நம்
சேமமே சகசிருட் டியினோர் பெரும்பயன்'
என்னஅங் கெண்ணி எமக்கெமக் கென்னும்
தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி
முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்!
தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத்
தீயிடைத் துடைத்தும்; சயஞ்சிறி தடையில்
வாய்மண் நிறைய மதக்குழி அதனுள்
குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்;
பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்
பிறர்பழி காண பெரிதக மகிழ்ந்தும்;
சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக்
காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்;
எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம்
நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம்
கொடும்பேய் ஆயிரம் கூத்தாட்டியவழி,
விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள்
"ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி
வா! வா! இங்ஙனம்" என மனம் இரங்கிக்
கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த
காமமா திகளுடன் கடும்போர் விளைக்க
ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள்
மேவிய காலை மெலிந்துகை யறுநம்
ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்?
சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை?
உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவௌி;
கோட்டையும் இல்லை. பூட்டுதாழ் அதற்கிலை;
நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்,
அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்;
அரைநொடி அதனுள் நரகென நம்முளம்
மாற்றிடக் கணந்தோறும் வருந்தீ நினைவோ
சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை.
இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்?
அருளா தரவால் யாதோ இங்ஙனம்
இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது?
விட்டதும் தொட்டதும் வௌிப்படல் இன்றி
நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்!
கட்டம்! கட்டம் காதலா மலகமாய்க்
கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்!
"யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?"
என்றீர் நன்றாய் நண்பரே! நம்நிலை
கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து
தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை
நமக்கென உரித்தோ? நானா உயிர்கள்
எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர்.
எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம்
தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில்,
அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று
விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம்
அறியில் அருளலாற் பிற்ிதெதுஆ கருஷணம்?
ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில்
நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை
பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக்
குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ?
பாரும்! பாரும்! நீரே கூறிய
சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை!
பூரிய உயிரிஃ தாயினும், தனது
சீரிய வலையிற் சிக்குண் டிறந்த
ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள்
ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி
மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தௌிய
அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்!
இப்படி முதற்படி இதுமுத லாநம்
ஒப்பரும் யாக்கையாம் உயர்படி வரையும்
கற்பதிங் கிந்நூற் கருத்தே, அதனால்
இத்தனி உலகில் எத்துயர் காணினும்
அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச்
சுற்றநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க
வைத்த அக்கினியென மதித்தலே, உயிர்கட்கு
உத்தம பக்தியென் றுள்ளுவர் ஒருகால்
காரண காரியம் காண்குவம் அல்லேம்,
யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்?
பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின்
அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர
நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென
நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர்
நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன்
உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மனம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம்
ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?
இவ்விதம் நோக்கிடில் எவ்விதத் தோற்றமும்
செவ்விதிற் பற்பல காரணச் செறிவால்
அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும்
சிற்றறி வாதலான் முற்றுநாம் உணரோம்.
அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங்
கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம்
உளதென நம்பலே யூகம் அதனால்
உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது
நலமுற நமக்கிங் கிலகா ததினாற்
பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர்
இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்?
யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்?
பாருமிங் கீதோ! பரம தயாநிதி
நங்குரு நாத னென்பார் ஒவ்வார்?
நம்புவன் நீரும் நானுமிங் கொருப்போல்
ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி
ஏதோ ஊழ்வினை இசைவால் தனது
காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும்
இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள்,
அல்லல் இதுவே போதும் அஃதுடன்,
அப்புரு டன்றான் ஆரென ஆயில்
ஒப்பரு புருடோத் தமனே என்ன
எப்படி நோக்கினும் இசையும், அப்படியே
செப்பினர் யாவும் தெரிந்த நம் குருவும்
ஏதோ ஒருவன் சூதா ஏவிய
தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்!
போர்புரிந் திடவரு புருடோத் தமனும்
வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில்
நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்!
இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை
ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில்
வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும்
இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும்.
இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க
அப்படி ஒன்றும் அடிக ளெண்ணாமல்
சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு
அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே.
சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும்
நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை?
ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே.
என்றுநான் எண்ணி எம்குரு நாதன்
திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே
பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய
இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும்
செவ்வி திதுவெனத் தௌிதலோ தகுதி?
இப்படியேயாம் இவ்வுல கின்நிலை
அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற்
றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக்
கைப்படு கனியெனக் கண்டபின், உலகில்
எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள்
தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை?
இல்லா மாயை என்செய வல்லதாம்?
எல்லாம் அவனருள் அல்லா தில்லை.
என்னனு பவமிது. மன்னிய இவ்வருள்
தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து
நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி
இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர்
ஒருபயன் கருதார், அருள்கரு துவதென்?
அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச்
சகலமும் செய்வர். அஃதவர் சமாதி.
எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம்
அங்கம் கரையநின் றரற்றி "ஐயோ!
எம்மையும் காத்த இன்னருள் இவரையும்
செம்மையிற் காக்க" எனமொழி குளறி
அழுதுவேண் டுவதே அன்றி
விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே.
[சுந்தர முனிவரும் நடராசரும் வர;
கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க]
சுந்தர: எல்லாம் நடராசரே! உமது பேரருளே!
அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை
இத்தினம் எப்படி முடியும் நீர் இலரேல்?
எத்தனை கருணை? என்னைகைம் மாறு?
நட : நல்லது! நல்லது! சொல்லிய முகமன்!
வேலை எனதோ? உமதோ? விநோதம்;
ஏவிய வழியான் போவதே அல்லால்
ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே!
சுந்தர: கருணா கரரே! களைப்பற நீரிங்கு
ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ
இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும்
செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ!
எத்தனை நாளா யினநீர் தூங்கி!
இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்!
பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர்;
எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்?
கருணா: அடியேற் கலுப்பேன்? அருளால் அனைத்தும்
முடிவது மேலும், யான்வரும் வேளை
இட்டமாம் நிட்டா பரரும் தனியாய்
நிட்டைவிட் டெழுந்தார்; இருவரும் அதனால்
ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம்;
ஈதோ உதயமும் ஆனதே; இனியென்?
சுந்தர: விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம்
படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம்.
உங்கள் பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே!
இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும்
சமயிகட் காம்சச் சரவு?
அமையும் உங்கட் கவரவர் நிலையே.
[யாவரும் போக]

மூன்றாம் அங்கம் : நான்காம் களம் முற்றிற்று.

(கலித்துறை)


நான்காம் அங்கம் : முதற் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
குடிலன்: (தனிமொழி)
பருதியும் எழுந்ததது; பொருதலும் வந்தது...
[பெருமூச்செறிந்து]
கருதுதற் கென்னுள காணுதும். ஆ!ஆ!
ஒருவன தாசைப் பெருக்கால் உலகில்
வருதுயர் கடலிற் பெரிதே! வானின்
எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்

ஈண்டணி வகுக்கமிக் காண்டகும் இளைஞரில்
மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே!
மாண்டிடல் அன்றே வலிது மடுவுள்
இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை
வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல்,

நின்றவல் வீரரை ஒன்றிய மனைவியர்
உற்றார் பெற்றார் நட்டார் என்றிப்
படியே பரவுமே படியெலாம் துயரம்!...
[சற்று நிற்க]
என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி
என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சீச்சீ!

மன்னவர்க் காக மாள்வ திவர்கடன்.
மன்னவன் என்போன் மதியில் வலியோன்,
அன்றியும் பலநா ளாகநம் அன்னம்
தின்றிங் கிருந்திவர் செய்ததென்? அவர்தம்
உடன்பா டிதுவே. தடம்பா டாற்றும்

காலம் விடுவதார்? மேலும் இயல்பாப்
பலபெயர் துக்கப் பட்டால் அன்றி
உலகில் எவரே ஒருசுகம் அணைவார்?
இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்?
வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து

ஆடை நெய்வோர் பீடையும் வாகனம்
தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி
உலகிடை வாழா தோடுவா ரோபிறர்?
அலகிலா மானிடர் யாவரும் அவரவர்
நலமே யாண்டும் நாடுவர் மதிவலோர்

களத்தோடு காலமும் கண்டுமீன் உண்ணக்
குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச்
சம்பவம் சங்கதி என்பவை நோக்கி
இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர்
நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம்.
எண்ணார் துணிந்தபின், பண்ணார் தாமதம்
ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்?
கோழையர் எங்ஙனம் கூடுவார் இன்பம்?
வந்தனன் அஃதோ மன்னனும்.
[ஜீவகன் வர]
வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஜீவகன்: குடிலா? நமது குறைவிலாப் படைகள்
அடையவும் அணிவகுத் தானவே?
குடில:
அடியேன்.
நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு!
சொன்னதப் படியென உன்னினன்.
ஜீவ:
ஆமாம்
அதற்கேன் ஐயம்?
குடில:
அவர்க்கது முற்றும்
இதக்கே டென்றனர். ஆயினும் போயினர்.
[படைகள் வணங்கி]
படைகள்: ஜயஜய! ஜீவக வேந்த! விஜயே!
குடில: அதிர்கழல் வீரரும் அரசரும் ஏதோ
எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின்வரவே.
நாற்றிசை தோறும் பாற்றினம் கழல
நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும்
நெய்வழி பருதி வைவேல் ஏந்திக்
கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து
மாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும்
உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக்
காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின்
பல்லினும் கூரிய பகழி மல்கிய
தூணி தோளில் தூக்கி, நாண் நின்று
எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர்
கடிபுரி காக்குநின் காற்படை யாளர்.
இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக்
கருத்தும் விரைவு கற்கும் குரத்தால்
பொடியெழப் புடைக்கும் புரவிகள் போர்க்கு
விடைகேட் டுதடு துடித்ததும் வியப்பே.
நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து
மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம்
பொழியும் வாரணப் புயலினம் தத்தம்
நிழலொடு கறுவி நிற்பதும் அழகே.
முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய
புரந்தரன் கைபடாப் பொருப்புகள் போன்ற
கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து
"வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி
இம்மெனும் முன்னவவ் விந்திர லோகமும்
செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!" எனப்பல
கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி...
ஜீவ: கண்டோம், கண்டோம் களித்தோம் மிகவும்
உண்டோ? இவர்க்கெதிர்? உனக்கெதிர் ஓ!ஓ!
[படைகளை நோக்கி]
வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே!
கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம்
நோக்கியாம் மகிழ்ந்தோம் நுமதுபாக் கியமே
பாக்கியம். ஆ!ஆ! யார்க்கிது வாய்க்கும்?
யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே!
தாயினும் சிறந்த தயைபூண் டிருந்ததும்
தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத்
துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தோறும் எணுந்தோறும்
அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து,
புகைந்துயிர்ப் பொறியப் பொறிகண் பொரிய
நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப
வளங்கெழு மீசையும் கிளந்தெழுந் தாடக்
களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ
கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை
அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்!
முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா!
படைகள்: தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே!
ஜீவ: ஒருதுளி யேனும்நீர் உண்டுளீர் ஆயின்
கருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை.
"மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு
மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து
முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி,
இதுபரி ணமித்து உம் இதயத் துறைக!
அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு
இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப்
பொழிகநீர் பொன்றிடும் அளவும்!" என்றன்றோ
வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை
தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம்
பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள்
படைகள்:
ஜே! ஜே!
ஜீவ: விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி
தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ?
படைகள்:
தமிழ்மொழிக்கு ஜே!ஜே!
ஜீவ: பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும்
மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி
நித்திரை வருவகை ஒத்தறுத் துமது
தொட்டில்தா லாட்ட, அவ்இட்டமாம் முன்னோர்
தீரமும் செய்கையும் வீரமும் பரிவும்
எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக்
கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட
வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம்
"ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே
தோற்றனம்" எனச்சொலத் துணிபவர் யாவர்?
படைகள்:
சீச்சீ!
ஜீவ: பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்
படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று
"அடியேம்" எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு!
படைகள்:
ஹே! ஹே!
ஜீவ: பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்
படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று
"அடியேம்" எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு!
படைகள்:
ஹே! ஹே!
ஜீவ: கோட்டமில் உயிர்ப்போ கூறீர்; அன்ன
நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்?
படைகள்:
சீச்சீ! சீச்சீ!
ஜீவ: சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும்
திருவனை யார்களும் சேய்களும் கொண்ட
வெருவெரு நித்திரைக் குறுகண் விளைத்துநும்
பாஷாபி மானமும், தேசாபி மானமும்
பொருளெனக் கருதா தருணிறை நுமது
தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல்
ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே
நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம்
முற்றும் இயல்பே மற்றுத்தன் குகையுள்
உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக்
குறும்பால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே!
உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சாந்தம்.
பெருமையில் பிணத்திற் பிறந்தோர் சீதம்.
அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னினும்
நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு!
வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய
வெந்தழற் கவரே இந்தனம் ஆகுக!
படைகள்:
ஆகுக! ஆகுக!
ஜீவ: இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும்
நின்றுலகம் பலவும் நிகழ்த்துமே "இந்தப்
பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்;
தீண்டமின் திருந்தலீர்! அவர்தம் செருக்கு,
சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று
நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை"..
எனமுர சறையுமே எத்திசை யார்க்கும்.
இத்தனிப் போரில் நீர் ஏற்றிடும் காயம்
சித்தங் களித்து, ஜயமா துமக்கு
முத்தமிட் டளித்த முத்திரை ஆகி
எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்!
படைகள்:
ஜே! ஜே!
ஜீவ: போர்க்குறிக் காயமே புகழின் காயம்
யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்!
அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள்,
தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம்
தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச்
சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர்,
என்றால் அப்புண் 'இரந்துகோட் டக்கது'
அன்றோ? அறைவீர், ஐயோ! அதுவும்
புண்ணோ? புகழின் கண்ணே எவரே
புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்?
புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்?
கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும்
பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ?
உதும்பர தருவில் ஒருகனி அதனுட்
பிறந்துறும் அசகம் இவரிலும் கோடி
பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்.
அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ!
சுலபமாய் நமக்கெதிர் அணுகலால்; துதித்துப்
பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம்.
ஒழுக்கம்மற் றன்றது வெனினும், உம்மேல்
அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம்.
இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ்
எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட்
டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே
ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்!
நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள்
யாரே ஆயினும் சீராம் தங்கள்
உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச்
சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின்
வஞ்சகம் இல்லைஎன் வார்த்தையீீ துண்மை
மானமோ டவரையிம் மாநக ரதனுட்
சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம்
உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே
எத்தனை யோபேர் இவர்க்கவர் துணையாம்.
படைகள்: இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்!
ஜீவ: குறைவெனக் கருதன்மின் எம்புகழ்க் கூறு
சிறிதாம் எனவுனிச் செப்பினோம் அதனாற்
பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை.
படைத்தலைவர்: இல்லையெம் இறைவ! இந்நா டதனுள்
இல்லையத் தகையர்
யாவரும்:
இலையிலை! இலையே!
ஜீவ: நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய
நாட்டில்நல் உரிமைபா ராட்டும், பெரிய
மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும்
மறுக்கிலம், பொறுக்குமின். வம்மின்! விஜய
இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும்
ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று
ஓய்கிலன் நோன்புநம் தாய்மனோன்மணியே.
படைவீரர்: மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே!
யாவரும்: இளவரசிக்கு ஜே! ஜே! ஜே!
(குறளடி வஞ்சிப்பா)
ஜீவ: நந்தாய்தமர் நங்காதலர்
நஞ்சேய்பிறர் நந்தாவரை
நந்தேயமேல் வந்தேனி
நொந்தாழ்துயர் தந்தேஇவண்
நிந்தாநெறி நின்றாரிவர்
தந்தாவளி சிந்தாவிழ,
அடிப்போமடல் கெடுப்போ முகத்
திடிப்போங்குட லெடுப்போமிடுப்
பொடிப்போஞ்சிர முடைப்போம் பொடி
பொடிப்போம்வசை துடைப்போமுயிர்
குடிப்போம்வழி தடுப்போம்பழி
முடிப்போமினி நடப்போம்நொடி.
எனவாங்கு,
பெருமுர சதிரப் பெயருமின்
கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே.
[படைகள் முரசடித்து நடக்க படைப்பாணர் பாட]
(கலித்தாழிசை)
படைப்பாணர்: தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவார் ஊதுமிந்தச்
சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்!
சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல்,
இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே
படைகள்:
ஜே! ஜே!
படைப்பாணர்: மறுகுறுதம் ஊர்காக்கும் வய்வர்புய மேவிஜயை
உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்!
உறைவிடமா? இவர்வாளென் றோடீர் ஆயினினி
மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே.
படைகள்:
ஜே! ஜே!
பாணர்: ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச்
செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்!
செல்லு முறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள்
இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே
படைகள்:
ஜே! ஜே!
[படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக]
நான்காம் அங்கம்: முதற்களம் முற்றிற்று.


நான்காம் அங்கம்: இரண்டாம் களம்

நேரிசை ஆசிரியப்பா
1ம் படைஞன்:இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்?
எப்படி இருந்த திராஜன் பேச்சு!
கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப்
புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு
2ம் படை : முற்றும் கேட்டை கொல்?
1-ம் படை:
முற்றும் கேட்டேன்.
சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு
சரியல ஆணையில் தவறுதல் என்றே
வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென்
றொருகை பார்ப்பேன் ஓகோ! சும்மா
விடுவேனா! பார்க்கலாம் விளையாட் டப்போது
என்செய! என்செய! எத்தனை பேரையான்
பஞ்சாப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில்
வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்?
நெஞ்சகம் பிறந்திந் நெடுவாள் தனக்குக்
கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய!
நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே!
பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்!
2-ம் படை : பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி
குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன்
சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித்
தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.
3-ம் படை : கெடுத்தான் அவனே என்னையும், அன்றேல்
முடித்தே விடுவனென் சபதம் முற்றும்
சண்டிஅச் சங்கரன் வந்துள்ளான் சமர்க்கு.
கண்டேன் கையிற் கிடைக்கிற் பண்டென்
தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த
வாயினை வகிர்ந்து மார்பினை பிளந்து
[வாய்மடித்து பற்கடிக்க]
4-ம் படை : வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள்
பிஞ்சிற் பழுத்த பேச்சினர்; யானெலாம்
நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன்
சென்றுளேன் ஜனார்த்தனம், கண்டுளேன் வைக்கம்
2-ம் படை: விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும்
நடுநிசி ஆயினும் அடுகள முழுதும்
தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும்
நாடி யவன்தலை நசுக்கி மிதித்து
வாயிடை நெடுவேல் இறக்கி...
முதற்படை:
சீ! சீ!
சேவக னாநீ! செப்பிய தென்னை!
யாவரே பிணதோ டாண்மைபா ராட்டுவர்
பிணமோ பிணத்தோ டெதிர்க்க!
3-ம் படை:
போ! போ!
பெருமைநீ பேசேல், பெற்றவுன் தாயேல்
அருமைநீ அறிகுவை.
1-ம் படை:
யாரா யினுமென்?
பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும்
ஒருவன் தனக்கா உண்டா குரோதம்
கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம்
மாதா இவ்வயின் மகாநா டிதுவே.
ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ்
வஞ்சியர் வஞ்சமாய் வந்தனர் அதனால்
நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம்
தனக்காய் உயிரையும் உவப்போ டளிக்கத்
துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம்.
என்னில் அவரவர் இழுக்குஆர் கருதுவர்?
உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா
வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால்
இதேஅங் கெய்தினோர் யாரே ஆயினும்
சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப்
பலவாம் தமது பழம்பழி மீட்போர்
கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம்.
[நாரயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர]
2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணிரிதோ...
நாரயணன்: உன்பெயர் முருக னன்றோ?
1-ம் படை:
அடியேன்.
4-ம் படை: என்பெயர் சாத்தன் சுவாமி.
நாரா: ஓகோ!
எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்?
1-ம் படை: பத்தைஞ் ஞூறுளர், மெத்தவும் உத்தமர்
மிகுதிறத் தார், போர் விரும்பினர். இவர்தம்
தகுதிக் கேற்ப தன்றிக் காதல்
நாரா: பொறு! பொறு! முருகா புரையற் றோர்க்குமற்
றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும்
சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச்
செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும்
திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு.
2-ம் படை : வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல்
நாணமும் நோவுமாம் நாரா யணரே!
நாரா: வேண்டுமென் றாரே விடுப்பர் சிச்சீ
அப்படியேதான் ஆயினும் நமக்குக்
கைப்படு கடமையே கடமை...
முருகா!
எத்தனை பேரால் ஏலுமிக் காவல்?
1-ம் படை : நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி.
நாரா: அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல்
ஏற்றிட வல்லரை மாற்றுநீ நிறுத்திக்
காட்டுதி எனக்கு.
1-ம் படை:
காட்டுவன் ஈதோ
[அணிவகுத்துக் காட்ட]
நாரா: (தனதுள்)
நல்லணித் தலைவன்; வல்லவர் இவரும்.
1-ம் படை: ஈதோ நின்றனர்!
[காவற்படைகளை விலக்கி நிறுத்திக் காட்ட]
நாரா:
போதுமோ இவர்கள்?
காவற்படைகள்: போதுமே யாங்கள்...
நாரா: எண்ணுமின் நன்றா யேற்குமின்! பின்புநீர்
பண்ணும் தவறுநம் பாலாய் முடியும்
காவற்படை: தவிர்கிலம் கடமையில் சத்தியம் தலைவ
நாரா: தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க
மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?
காவற்படை: மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்
நாரா: சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல்.
பரிமற் றையர்க்கெலாம் உளவோ?
3-ம் படை:
ஓகோ!
4-ம் படை: பெரியதென் பரிபோற் பிறிதிலை.
நாரா:
காணுதும்
அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா!
மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்
வைத்துள படையும் அழைத்திப் புறநீ
நொடியினில் வருதி.
1-ம் படை:
அடியேன், அடியேன்
[முதற்படைஞன் போக]
நாரா: ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின்;
[கோட்டை மேல் உலாவி நின்று]
(தனதுள்)
அரும்படை இரண்டும் அதோ!கை கலந்தன.
வரும்பழி யாதோ? மன்னர்க் கேதோ?
ஆவதிங் கறியேன் ஜீவக! ஜீவக!

முற்றுநான் அறிவன்நின் குற்றமும்
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத்தையோ!
வறிதாக் கினையே வாளா அனைத்தும்

அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?
வாய்த்ததுங் குனைப்போல் வாணாள் வறிதாத்

தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே!
சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ?
கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்?
அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை

ஆயிரம் ஆயினும் தாய்மனோான் மணிநிலை
கருதுவர் உன்ன்லம் கருதா தென்செய்வர்?
வருவது வருக! புரிகுவம் நன்மை.
[2ம் படைஞனை நோக்கி]
முருகன் வரவிலை?
2-ம் படை: வருவன் விரைவில்
நாரா: அதுவென்? ஆ! ஆ!
2-ம் படை:
ஆ! ஆ! அறியேம்!
நாரா: பலதே வன்படை அலவோ?
2-ம் படை: ஆம்! ஆம்!
நாரா: மன்னவன்?
2-ம் படை: நடுவே.
நாரா: வலப்புறம்?
2-ம் படை: குடிலன்.
நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்?
2-ம் படை: எதோ!
நாரா: வருவது முருகன் போலும். முருகா!
[முருகன் வர]
வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம்
(படைவீரரை நோக்கி)
இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும்.
இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்!
1-ம் படை: வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்
நாரா: தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில்
வலம்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம்.
இருபுறம் காக்குதும். வருகவென் அருகே!
(முருகன் காதில்)
குடிலனை நம்பலை.
1-ம் படை: அடியேன் அறிவேன்.
நாரா: அறிந்தவா றாற்றுதி! மறந்திடல் மெய்ம்மை!
வம்மின் வீரரே! வம்மின்!
உம்வயின் உளதுநம் செம்மல துயிரே.

[யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல]
நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


நான்காம் அங்கம்: மூன்றாம் களம்

(நேரிடை ஆசிரியப்பா)
1-ம் சேவ: செய்வதென்? செப்பீர். கைவதற் கியாமோ
ஆறுதல் கூறுவம்?
2-ம் சேவ:
கூறலும் வீணே!
பெருத்த துயரிற் பேசும் தேற்றம்
நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
3-ம் சேவ: பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித்
துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
4-ம் சேவ: நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
3-ம் சேவ: மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய்.
4-ம் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
4-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன்.
2-ம் சேவ: சகிப்பளோ கேட்கில் தமியள்...
3-ம் சேவ:
ஆயினும்
மகளால் அன்றி மன்னவன் தேறான்
அதற்கே சென்றனர் போலும் ஆ! ஆ!
2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர்.
4-ம் சேவ: பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம்,
இன்றியாம் பிழைத்ததிங் கிவரால் அன்றே..
[ஜீவகன் எழுந்து நடக்க]
3-ம் சேவ: அரசன் அஃதோ எழுந்தான் காணீர்.
1-ம் சேவ: உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின்.
அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி!
ஜீவகன்: கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன் நாணம்
விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன்.
ஆ!ஆ! என்போல் யாருளர் வீணர்!
யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்!
பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற்
றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே!
மறுவறு நறவே! மாசறு மணியே!
அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது
வழியாய் உதித்தேன் மதியிலா யானும்!
அந்தோ! இந்து முதலா வந்த
முன்னோர் தம்முன் இன்னார்க் கிரிந்து
மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ?
யாதினி செய்குவேன்! ஐயோ பொல்லாப்
பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.
[பற்கடித்து]
போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக்
கார்முகம் என்செய! கடிவாள் என்செய!
[வில்லும் வாளும் எறிந்து]
ஓ!ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன்.
[மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர]
போ! போ! வௌியே போரிடைப் பொலியாது
வாளா இருந்த வாளுக்கீதோ
[நாராயாணன் வர]
எனதுயிர் ஈவேன் வினாவுவர் யாவர்?
நாரா: மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்.
ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!
[விழுந்து மூர்ச்சிக்க]
சேவகர்: கொற்றவா! கொற்றவா!
நாரா: பேசன்மின்!
[அரசனை மடியில் தாங்கி]
1-ம் சேவ: பேசன்மின்!
நாரா: வீசுமின்! அகன்மின்!
1-ம் சேவ: வௌியே!
4-ம் சேவ: பனிநீர்.
நாரா:
தௌிந்தே சிறிது
ஜீவ: குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!
[எழுந்து சோர்வாயிருக்க]
நாரா: இழந்தால் இருப்பாளோ? என்செயத் துணிந்தாய்?
ஜீவ: நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி
இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே!
செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்
உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு
மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா.
பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி
மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா!
நாரா: மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல்
அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக்
கருதிய தமரைக் காட்டிவிட் டோடி
ஒளிப்பதோ வீரமென் றுன்னினை?
ஜீவ:
ஓ!ஓ!
போரிடை ஓடுவேன் வீரம் நாடுவனோ?
நாரா: காலமும் களமும் கண்டு திரும்புதல்
சாலவும் வீரமே. தக்கவை உணரும்
தன்மையில் சௌரியம் மடமே. சூழ்ச்சிசேர்
வன்மையே வீரத் துயிராம் மன்னவ!
ஜீவ: போதும்! போதும்நின் போலி நியாயம்!
சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச்
சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன்
மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்.
[சேவகரை நோக்கி]
என்னுடன் இருமின்! ஏன் நிற்கின்றீர்!
1-ம் சேவ: இறைவ! ஈதென்னை!
ஜீவ: இறைவனென் றென்னை
இசைப்பது வசையே! அஃதோ காண்மின்!
அசைந்த தொருநிழல், அஃதோ யானெனப்
பாருமின் பாண்டியன் போரிடைப் பட்டான்.
வாரும்! வாரும்! இருமின் யாவரும்.
நாரா: வீணாய் வேற்றுரை விளம்பலை வேந்தே!
காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர்.
[சேவகர் அழுதலை நோக்கி]
ஜீவ: வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது?
1-ம் சேவ: பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்?
அரசநீ துயருறில் அழுங்கார் யாரே?
ஜீவ: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்!
இழந்தனம் முற்றும் ஒன்றோ எண்ணினீர்!
அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை?
மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம்.
வெல்லுவம் இனியும் மீட்போம் நம்புகழ்
அல்லையேற் காண்மின்!
நாரா:
அதற்கென் ஐயம்?
இறைவ! இப் போதுநீ இசைத்தவை சற்றும்
குறைவிலை, தகுதியே, கூறிய படியே
ஆவது காண்குவம், அழகார் அம்புயப்
பூவின துயர்வு பொய்கையின் ஆழத்
தளவா வதுபோல், உளமது கலங்கா
ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத்
துணிவார்க் குறுதுயர் தொடுமுன் எவ்வும்
அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில்
இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும்
சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ?
ஆதலின் இறைவநீ ஓதிய படியே
உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும்
தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும்,
[குடிலனும் பலதேவனும் வர]
உண்டேல் ஊழையும் வெல்லுவம் மண்டமர்
அடுவதோ அரிது வடிவேல் அரசே!
குடில: இப்பரி சாயர சிருப்பது வியப்பே!
(தனக்குள்)
தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ!
[அழுவதாக பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க]
ஜீவ: ஏனிது குடில! ஏன்பல தேவ!
ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!
குடில: அடியேன்.
ஜீவ: வருதி இப்புறம்! வருதியென் அருகே!
குடில: (அழுது)
திருவடிச் சேவையில்
ஜீவ: செய்தவை அறிவோம்.
குடில: (ஏங்கி)
ஜனித்த நாள் முதலா...
ஜீவ: உழைத்தனை! உண்மை!
குடில: உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே...
ஜீவ: விடுத்தனை உண்மை, விளம்பலென்?
குடில: உண்மையில்
பிசகிலன் என்பது...
ஜீவ: நிசம்! நிசம்! அறிவோம்!
குடில: (விம்மி)
எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு
அல்லால் இல்லை...
ஜீவ: அனைவரும் அறிவர்
குடில: அருமை மகனிவன் ஒருவன்...
ஜீவ:
அறிகுவம்
குடில: (பலதேவன் மார்பினைச் சுட்டிக் காட்டி)
பாராய் இறைவ!
ஜீவ: (பலதேவனை நோக்கி)
வாராய்.
குடில:
இப்புண்
ஆறுமா றென்னை? தேறுமா றென்னை?
உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே..
<
ஜீவ: அம்பின் குறியன்று, யாதிது?
குடில:
அடியேம்.
அன்பின் குறியது!
ஜீவ:
ஆ!ஆ!
குடில:
ஆயினும்
பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...
இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை
[அழ]
ஜீவ: வெல்வோம் நாளை! விடுவிடு துயரம்.
குடில: (தனதுள்)
அறிந்திலன் போலும் யாதும்.
[சிறிதுளம் தௌிந்து]
ஜீவ:
அழுங்கலை.
வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில்
வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே,
அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்!
குடில: (தனதுள்)
சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்!
ஜீவ: முற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா
ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர்
நணுகினும் நாளை...
குடில:
நாயேற் கதனில்
அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு.
நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே.
உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும்
கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில்
விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க்
கொடியோர் சிலர்செய் கொடுஞ்சூ ததனால்
தடுமா றடைந்தென் தகைமையும் புகழும்
கெடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே
கருத்திடைநினைதொறும் கண்ணிடு மணல்போல்
உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும்
பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம்
கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்!
அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன் ஐயோ!
வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல்
[பலதேவனைக் காட்டி]
படிமா றில்லாப் பாவியேன் எங்ஙனம்
நோக்குவன் நின்முகம்? காக்குதி ஐயோ!
தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர்
போக்கில. நீயே போக்குதி! காக்குதி!
இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ்
உரத்திடை ஊன்றிடில் உய்வன் அன்றேல்...
[அழுது]
ஜீவ: உத்தம பத்தியில் உனைப்போல் யாரே!
நாரா: (தனதுள்)
மெத்தவுன் நன்றிந் நாடகம் வியப்பே!
மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்?
போரிடை உளதன் றியார்செய் தனர்பின்?
உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை
[நாராயணன் போக]
குடில: சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில்.
இத்தனை கருணையும் எனக்கென அருளுதி
பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா
யாதுமொன் றெனக்கா இரந்திலன், உணர்வை
ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல்
போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர்
மன்னுல குள்ளார் என்னுள நிலைமை!
உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும்
என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி
இருப்பதுன் உண்மையோ இலையோ என்பது
பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே.
[முழந்தாளூன்றி நின்றழ]
ஜீவ: அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்!
உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும்.
என்னனு பவங்கேள். குடில! ஈதோ
சற்றுமுன் யானே தற்கொலை புரியத்
துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன்
அணைந்திலன் ஆயினக் காலை...
குடில:
ஐயோ!
ஜீவ: தடுத்தான்; விடுத்தேன்!
குடில: (தனதுள்) கெடுத்தான் இங்கும்!
ஜீவ: அரியே றன்ன அமைச்ச! பெரியோர்
தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும்.
ஆயினும் அத்தனை நோவதற் கென்னே?
வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக்
கருதினோம்! உறுதி! வெறுவியோ மீண்டோம்?
குடில: வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு
மீண்டதிற் குறைவென்? ஆ!ஆ! யாரே
வெருவினார்? சீ!சீ! வீணவ் வெண்ணம்!
இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென்
றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்
[நாராயணன்ன் நின்றவிடம் நோக்கி]
சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி
அதுவலால் என்குறை மதிகுல மருந்தே!
சென்றுநாம் இன்று திரும்பிய செயலே
நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர்,
செவ்விதில் ஓடிநாய் கௌவிடும் சிறந்த
மடங்கலோ எதற்கும் மடங்கியே குதிக்கும்
குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம்
நாளை நீபாராய்! நாந்தூ தனுப்பும்
வேளையே அன்றி விரிதலை அனந்தை
ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச்
சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்!
மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென
ஈண்டவன் இருக்குக; இருக்குக, வைகறை
வரும்வரை இருக்கில் வந்தவிவ் வஞ்சியர்,
ஒருவரும் மீள்கிலர், ஓர்கால் இக்குறி
தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே
எனக்குள துயரம், அதற்கென் செய்வோம்!
ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு
போதுமே நினையார் போர்முறை அறிந்தோர்.
ஜீவ: எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை
இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும்
அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும்
குடில: வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில்
அதுவுமாம் விதமெது?
[சேவகன் வர]
சேவகன்:
உதியன் தூதுவன்
உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே.
குடில: சரி! சமாதனம் சாற்றவே சார்ந்தான்.
ஜீவ: பெரிதே நிம்மதி! ஆ! ஆ! வரச்சொல்.
[வஞ்சித் தூதன் வர]
தூதன்: தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா!
[வணங்கி]
அருளே அகமாத் தெருளே மதியா
அடலே உடலாத் தொடைபுக ழேயா
நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம்
ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே
விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா.
இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர்
வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே.
பொருதிட இனியும் கருதிடில் வருவதும்
அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண்
டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே
உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு
கும்ப நீருமோர் நிம்ப மாலையும்
ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை!
மதிற்றிற மதித்திறு மாப்பையேல் நதியிடை
மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே
ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம்
யாதெனிற் கைதவா! வைகறை வருமின்
தாரும் நீரும்நீ தருவையேற் போரை
நிறுத்துவன், அல்லையேல் நின்புரம் முடிய
ஒறுத்திட உழிஞையும் சூடுவன், இரண்டில்
எப்படி உன்கருத் தப்படி அவற்கே.
ஜீவ: நன்று! நன்று! நீ நவின்றனை, சிறுவன்
வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக்
கருதித் தன்னுளே வெருவியோ உன்னை
விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே
அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும்,
மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை
சாற்றுதும் கேட்டி, தன்பொருள் ஆயின்
ஏற்றிரந் தவாக்கியாம் யாதுமீந் திடுவோம்
அருந்திடச் சேரம் அவாவிய புனலும்
விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம்
வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே
உளவல்; அதனால் ஒருவனீந் திடுதல்
களவெனக் காணுதி மற்றுநீ கழறிய
உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில்
நொச்சியும் உளதென நிச்சயம் கூறே.
தூதன்: ஐயோ! கைதவ! ஆய்ந்திலை உன்றன்
மெய்யாம் இயல்பு மிகுமுன் சேனையின்
தீரமும் திறமும் உனதரும் வீரமும்
கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம்
மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை?
என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்!
குடில: நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை
சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள்
தரும்விடை கொடுப்போய்ச் சாற்றலே அன்றி
விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே.
அதனால் உன்னுயிர் அவாவினை யாயின்
விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே.
தூதன்: குடிலா உன்மனப் படியே வந்தனம்;
மருவிய போரினி வைகறை வரையிலை.
இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே.
[தூதுவன் போக]
குடில: தூதிது சூதே, சொன்னேன் அன்றோ?
ஜீவ: ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை?
நீரும் தாரும் யாரே அளிப்பர்?
எனவோ அவைதாம்? யாதே வரினும்
மனவலி ஒல்கலை மானமே பெரிது.
சிதைவிடத் துரத்துவோர் பதையார் சிறிதும்
புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல்
மதிகுல மிதுகா றொருவரை வணங்கித்
தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று!
மாற்றார் தமக்கு மதிகுல மாலையும்
ஆற்றுநீ ருடன் ஆண்மையும் அளித்து
நாணா துலகம் ஆளல்போல் நடித்தல்
நாணாற் பாவை உயிர்மருட் டுதலே
ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும்
கெட்டன் எனப்படல் அன்றே கீர்த்தி!
அதனாற் குடில! அறிகுறி துணிபாய்.
எதுவா யினும்வரில் வருக ஒருவனை
வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல்.
[எழுந்து]
வருவோம் நொடியில் மனோன்மணி நங்குலத்
திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம்
கருதுவ பலவுள, காணுதும்.
இருநீ அதுகா றிவ்வயின் இனிதே.
[ஜீவகன் போக]
குடில: கருதுதற் கென்னே! வருவது கேடே,
தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன்
கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே
(பலதேவனை நோக்கி)
அதற்கெலாம் காரணம்!
பலதே:
அறிகுவை, ஒருவன்
இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில்
குடில: உன்நடக் கையினால்!
பலதே:
உன்நடக் கையினால்!
மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை!
என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை?
<
குடில: பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை!
பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன்.
பலதே: பகையோ? பிரியப் படுகையோ? பாவி
குடில: பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்!
எரிவதென் உளமுனை எண்ணும் தோறும்
அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று!
பலதே: பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே!
நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற்
கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே!
[பலதேவன் போக]
குடில: விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்?
இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின!
புதுவழி கருதுவம்! போயின போகுக!
[மௌனம்]
எதுவுமிந் நாரணன் இருக்கில்,
அபாயம். ஆ!ஆ! உபாயமிங் கிதுவே.
[குடிலன் போக]

நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.


நான்காம் அங்கம்: நான்காம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்: ஆதி இன்னதென் றோதுதற் கரிய
வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா
எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில!
இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது?
சற்றும் அறிந்திலேந் தையலர் புகலுமுன்,
மாற்றார் நமது மதிற்புறத் தகழைத்
தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்!
குடில: (தனதுள்)
ஓரிடம் அன்றே உணர்ந்திலை போலும்.
வேரறக் களைகுதும் இதுவே வேளை.
ஜீவ: என்னை! என்னை!
குடில:
மன்னவா! யானிங்
கென்னென ஓதுவன் இன்றையச் சூது?
ஜீவ: மருவரு மதிலுள கருவியென் செய்தன?
குடில: கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே!
ஜீவ: காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்?
குடில: ஏவலின் படியாம் எண்ணா யிரவர்
ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம்.
ஜீவ: ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்?
குடில: இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ!
ஜீவ: செவ்விது! செய்ததென்?
குடில :
எவ்விதம் செப்புகேன்?
நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம்
போரிடைக் கண்டனை நாரணர் தம்மை
ஜீவ: மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்?
குடில: ஐயா! யான் அறிகிலேன். அவரிலும் நமக்கு
மெய்மையர் யாவர்? வேலியே தின்னில்
தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர்.
ஜீவ: துரோகம்! துரோகம்!
குடில:
துரோகமற் றன்று!
விரோதம்! அடியேன் மேலுள விரோதம்.
திருவடி தனக்கவர் கருதலர் துரோகம்.
ஜீவ: கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில்.
குடில: மடையன்! ஐயோ! மடையன்! சுவாமி
எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில்
நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது.
விருப்பம்மற் றவர்க்குள் வெகுமதி ஆயின்
திருத்ததமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில்
அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்
அத்தனை அன்புநீ வைத்துளை!
[அழுது]
ஜீவ:
ஆ!ஆ!
எத்தனை துட்டன்! எண்ணிலன்! சற்றும்!
குடில: ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது!
தெய்வமே அறியுமென் சித்த நிலைமை!
வௌிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே
களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும்
விடுவோம் அதற்கா வேண்டிலெம் உயிரும்!
போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி?
[பலதேவன் மார்பைக் காட்டி]
ஜீவ: யார்? யார்? நாராணன்? [பலதேவனை நோக்கி]
பலதே:
ஆம்! அவன் ஏவலில்
வம்பனங் கொருவன்...
ஜீவ:
நம்பகை அன்றுபின்!
குடில: நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ!
ஜீவ: உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியவன்!
செய்குவன் இப்போ தேசிரச் சேதம்!
இடங்குழம் பியதங் கிதனாற் போலும்?
குடில: அடங்கலும் இதனால் ஐய! அன்றேல்,
இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்?
மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்
ஒருமொழி அல்லா திருமொழி ஆயின்
வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்!
ஜீவ: அழை நாரணனை.
[முதற் சேவகனை நோக்க]
1-ம் சேவ:
அடியேன்.
ஜீவ:
நொடியில்.
[சேவகன் போக]
பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம்; பாவி!
இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?
குடில: சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள்,
என்னதே அப்பிழை மன்ன! நீ காக்குதி!
வருபவை உன்திரு வருளால், வருமுன்

தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம்
நிலவிய படியே பலதே வனைப் படைத்
தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன்.
எனதே அப்பிழை. இலதேல் இவ்விதம்
நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி!

அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா
இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து
கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய்
இடம்வலம் என்றிலை; அடையவும் கலைத்து,
கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை
[விம்மி]
ஜீவ: கண்டனம் யாமே.
குடில: காலம்! காலம்!
ஜீவ: கொண்டுவா நொடியில்.
[2-ம் சேவகனை நோக்க]
2-ம் சேவ: அடியேன்! அடியேன்!
[2-ம் சேவகன் போக]
குடில: சென்றது செல்லுக. ஜயிப்போம் நாளை
ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம்.
நெடுநா உடையான். கேட்டினி என்பயன்?
ஜீவ: விடுவேம் அல்லேம் வௌிப்படை கேட்பதென்?
எழுமுன் அவன்கழு ஏறிடல் காண்குதும்.
குடில: தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்!
சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை!
ஜீவ: எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம் பொறுக்கிலம்
எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்!
குடில: சுத்தன்!
ஜீவ:
சுத்தனோ? துரோகி! துட்டன்!
[நாராயணன் உள்ளே வர]
இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே?
[முருகன் முதலியோர் வாயிலில் நிற்க]
நாரா: எப்போ திறைவ?
ஜீவ:
இன்று போர்க் கேகுமுன்!
நாரா: அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை
கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன்.
ஜீவ: குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்!
நாரா: குடிலனைக் குடினலென் றேயுட் கொண்டுளென்.
ஜீவ: கெடுவாய் இனிமேல் விடுவாய் பகடி!
குடிலனென் அமைச்சன்.
நாரா:
நெடுநாள் அறிவன்!
ஜீவ: நானே அவனிங் கவனே யானும்.
நாரா: ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை.
ஜீவ: கேட்டது உறுதி.
நாரா: கேட்டிலை போலும்.
ஜீவ: கடிபுரி காத்தைகொல்?
நாரா: காத்தேன் நன்றாய்.
ஜீவ: காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்?
நாரா: தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம்.
பார்த்துமேற் பகருதி.
ஜீவ: பார்த்தனம் உன்னை
ஆர்த்தபோர்க் களத்திடை அதுவோ காவல்?
நாரா: உன்னையும் காத்திட உற்றனன் களத்தில்.
ஜீவ: என்னையுன் கபட நாடகம்? இனிதே!
அவனுரம் நோக்கி அறிவைகொல்?
[பலதேவனைக் காட்டி]
நாரா:
அறிவேன்
ஜீவ: எவனது செய்தவன்?
நாரா: அவனே அறிகுவன்
ஜீவ: ஒன்றும் நீ உணர்கிலை?
நாரா: உணர்வேன். இவன்பால்
நின்றதோர் வீரன்; இப் பொற்றொடியுடையான்
"என் தங்கை கையினிழி விப்படி எனக்கே"
பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன்.
ஜீவ: நன்றுநன் றுன்கதை!
குடில: நன்றிது நன்றே!
[பொற்றொடி காட்டி]
பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி
காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துள்ளாள்.
இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி.
அடியேம் தமக்கினி விடையளி, அகலுதும்
அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம்.
வஞ்சகர் கெடுப்பர். வந்தனம்.
[தன் முத்திரை மோதிரம் கழற்றி நீட்ட]
ஜீவ:
நில்! நில்!
(நாராயணனை நோக்கி)
இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்?
உத்தமன் போலமற் றெத்தனை நடித்துள்ளாய்?
சோரா! துட்டா! சுவாமித் துரோகி!
வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்!
[முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர]
நாரா யணனிந் நன்றிகொல் பாதகன்,
இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும்
நன்றியு மறந்து நன்னகர் வாயிற்
காவல் கைவிடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும்,
மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும்,
ஏவலர்க் கதனையீந் தேபல தேவன்
ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும்,
அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக்
கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச்
சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப்
பலவழி இராசத் துரோகமே பண்ணியும்

நின்றுளான். அதனால் நீதியா யவனை
இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்!
அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின்!
சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம்
இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு.
நாரா: வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே!
அறியாய் ஆயின் இதுகா றாயும்
வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்!
ஜீவ: நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை
அற்பமும் அகலோம். ஆதலில் இவனை
[படைத்தலைவரை நோக்கி]
நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்!
முருகன்: அடியேம், நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை.
குடிலரே வாரும்!
ஜீவ:
மடையன் இவன்யார்?
முருக: கூறிய பலவும், குடிலரோ டொவ்வும்.
வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே?
குடில: (காதில்)
கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி
மூட்டினன் உட்பகை!
நாரா:
முருகா! சீ! சீ!
[முருகனை அருகிழுத்து]
ஜீவ: மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில்.
[சேவகனை நோக்கி]
முருக: ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.
[வாயிற்சேவகன் வர]
சேவ: சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை
சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம்
ஜீவ: வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா!
நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில்.
குடில: மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்;
விடுத்திட அருளாய்!
ஜீவ:
விடுகிலம்.
குடில:
ஆயின்,
அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம்.
ஜீவ: (தன் சேவகனை நோக்கி)
அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில்.
[ஜீவகன் போக]
குடில: சடையா! கொடுபோய் அடையாய் சிறையில்.
[சடையன் அருகில் செல்ல]
முருக: அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம்.
[சடையன் பின்னும் நெருங்க]
வேணுமோ கோணவாய் விக்கா!
சடையன்:
கொக் கொக்.
[விக்கி]
சேவகர் யாவரும்: சேவலோ! சேவலோ! சேவலோ! சேவலோ!
[கைதட்டிச் சிரித்து]
குடில: ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்!
வீதியிற் செல்லலை வீணர் அபாயம்
ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா!
[குடிலனும் பலதேவனும் மறைய]
சேவர்களில் சிலர்: பிடிமின் சடையனை! [சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட,
சில படைஞர் துரத்திட, சிலரார்த்திட]
மற்றைய
சேவகர்: பிடிமின்! பிடிமின்!
சேவகர்ளில் சிலர்: குடிலனெங் குற்றான்?
குடில: கொல்வரே! ஐயோ!
[நன்றாய் மூலையில் மறைய]
சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை!
மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்!
[கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக]
நாரா: முருகா! நிகழ்பவை சரியல சிறிதும்.
(ஒரு திண்ணையிலேறி நின்று)
அருகுநில் சீ! சீ! அன்பரே அமைதி
[குழப்பம் குறைந்து அமைதி சிறிது பிறக்க]
முருக: அமைதி! கேண்மின்!
முதற்சேவகன்: அமைதி! அமைதி!
நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பர் ஒருமொழி
சொல்லிட ஆசை! சொல்லவோ!
[குழப்பந் தீர]
சேவகரிற் சிலர்: சொல்லுதி. [சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ]
சேவகர் யாவ: சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்!
நாரா: நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம்
முன்பின் அறியா என்போ லிகள்மேல்
அன்புபா ராட்டீர் அநேக வந்தனம்!
[கைகூப்பி]
சேவகர்: அறியா ருனையார்? அறிவார் யாவரும்.
[முற்றிலும் அமைதி பிறக்க]
நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்?
என்செய வல்லவன்! என்கைம் மாறு!
பாத்திர மோநும் பரிவிற் கித்தனை!
சேவகர்: காத்தனை! காத்தனை! காவற் கடவுள்நீ!
நாரா: கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை!
ஆயினும், வீரர்நீ ராதலின் நும்முடன்
ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை
அளிப்பீரோ அறியேன்?
[படைஞர் நெருங்கிச் சூழ]
சேவகர்: அளிப்போம் உயிரும்.
குடில: (பலதேவன் காதில்)
ஒளித்ததிங் குணர்வனோ ஓ!
பலதேவ!
நாரா: ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன்
கருதுமின் என்னவ மானமும் சிறிதே.
சேவகர்: உரியதே எமக்கது பெரிதன் றுயிரும்!
[யாவரும் கவனமாய்க் கேட்க]
குடில: (தனதுள்)
எரியிடு வானோ இல்லிடை? ஐயோ!
நாரா: அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின்
என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத்
தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்!
சேவ: யாதே ஆயினும் சொல்லுக!
நாரா: சொல்லுதும்!
போர்க்களத் துற்றவை யார்க்கும் வௌிப்படை
ஊர்புறத் தின்னம் உறைந்தனர் பகை
நாற்புறம் நெருப்பு நடுமயிர்த் தூக்கின்
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை
இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை
நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும்
சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும்
இத்தகை நிலைமையில் என்னை நும் கடமை!
மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே!
எண்ணுமின் சிறிதே! என்னை நம் நிலைமை!
களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ?
வௌிக்களத் துளபகை வீண்கூக் குரலிதைக்
கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்
கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர்
பெரிதுநம் அபாயம் பேணி அதற்குநீர்
உரியதோர் கௌரவம் உடையராய் நடமின்
விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும்.
படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல்
அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம்
உடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில்
கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும்
பெருநெருப் பன்றோ? பின்யார் தடுப்பர்.
அதனால் அன்பரே! ஆணைக் கடங்குமின்!
குடில: (மூச்சு விட்டு) ஆ!
நாரா: இதுபோல் இல்லை யெனக்குப காரம்
இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா!
1-ம் சேவ: நாரா யணரே! நவின்றவை மெய்யே!
ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி!
நாரா: ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே!
ஓதிய அரசன் ஆணையை மீறி
எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா
மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த
தண்டனை யோவநி யாயம்? அலதியான்
உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற்
றண்டிய அரச குலத்திற் கபாயம்
உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக்

குற்றமில் பாண்டிக் கற்றமிக் கேடு
பண்ணினேன் என்னப் பலதலை முறையோர்
எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை
ஆளாக் கிடநீர் வாளா முயலலோ
யாதே அநீதி? ஓதுமின். அதனால்
என்புகழ் விரும்புவி ராயின் நண்பரே!
ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே!
1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே?
2-ம் சேவ: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி?
நாரா: கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த
கருமமே உலகம் காணற் குரிய!
ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது?
கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை
செல்லுமின், நில்லீர்! செல்லிலென் றனக்கு
நல்லீர் மிகவும்!
சேவகர்:
நாரா யணரே
உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும்
நன்றே என்றே நின்றோம் அன்றிக்
கெடுதியொன் றெண்ணிலம் கொடுமதற் கநுமதி
நாரா: தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால்
இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான்
சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில்
இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன்.
வல்லைநீர்! செல்லுமின்! செல்லுமின்! வந்தனம்.
செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்!
நல்லது! நல்லது!
[படைஞர் விடைபெற்றுப் போக]
முருக: நாரா யணரே!
நுஞ்சொல் என்சிரம் ஆயினும் நுஞ்செயல்
சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம்
சத்தியம் செயிக்கும் என்றீர், எத்திறம்
குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும்
முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை!
நாரா: பொறு! பொறு! முடிவில் அறிகுவை.
முருக:
முடியும்
தருணம் யாதோ? மரணமோ என்றால்,
மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர்
யாதோ உண்மை?
நாரா: (இருவரும் நடந்து)
ஓதுவம் வாவா!
நன்றிது தீதிது என்றிரு பான்மையாய்த்
தோற்றுதல் துணிபே. அதனால்
தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே.
[நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக]
பலதே: என்னையும் பீதி? எழுவெழு இவர்க்குன்
பொன்னோ பொருட்டு?
[பலதேவனும் குடிலனும் வௌியே வந்து]
குடில:
போ!போ! மடையா
உன்னினம் சூதே.
பலதே: உன்குணம் நாரணன்
சொன்னது கேட்டிலை?
குடில: சொல்லிற் கென்குறை
முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன்,
[சேவகன் வர]
சேவகன்: மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம்
குடில: வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்?
சேவ: போயினர்.
குடில: ஓ! ஓ! போ இதோ வந்தோம்
[சேவகன் போக]
(தனதுள்)
செயினும் எளியன் திருப்புவம் நொடியே
[குடிலனும் பலதேவனும் போக]

நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.


நான்காம் அங்கம்: ஐந்தாம் களம்

(நேரிசை ஆசிரியப்பா)
சுந்தரர்: வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம்
கிளையுடன் கெடுமே கிளற்காற் றதனில்!
ஜீவ: முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்
களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள்
சேணுயர் தேக்கு திசையறி சூறையில்
ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்
பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே
காணுவர் காழறு நாணமில் நாணலை?
ஓருயிர்ப் பேனும் உண்டேல் அடிகாள்!
போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே!
சுந்தரர்: பொறு! பொறு! ஜீவக! வெறுமொழி புகலேன்!
அரியது செய்வதே ஆண்மையும் புகழும்!
அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி
வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி
நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத்
தனதுகண் காணாத் தன்மையர் பிறரும்
தனதுடல் காணார் எனநினை வதுபோல்
என்னையிம் மயக்க மன்னவ! உனக்கும்
சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்
அறவழி இதுவென அறியாக் கயவர்;
பிறர்பொருள்வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும்
அலையும் தீமையர் அநேகர் அகப்படின்
மலைவற மரணமும் வெருவார் மான,
கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல்
புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே
துரத்திடும் துயர்க்கணம் வருந்திடும் காலை
மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி?
தன்னியிர் ஈவர் தக்கோர் சார்ந்த
மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்
வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர்
ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற்
சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான்
களமும் காலமும் கருதித் தனக்குறு
தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து, மற்
றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து,
தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை
சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால்
உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி
தவித்திட மரக்கலம் துரப்பனோ சாற்றாய்.
தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே!
முக்கியம் புகழோ தக்கவன் கடமையோ!
அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு.
மதிகுலம் வந்த மதிவலோர் பலரும்
செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய்
உலாவிய சுழல்காற் றொடொரு சுழியிடைப்
பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது
விட்டிடிக் கோட்டையாம் வௌிக்கட லோட்டம்
மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும்
அண்டையில் உளதோர் கைவழி அதனில்
ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம்
துவாத சாந்தத் துறைபோய்
நிவாதமா நிலைபெற லேநெறி முறையே!
ஜீவ: என்குல முனிவ! இயம்பிய மாற்றம்
நன்கே உன்றன் நயப்பிற் கென்செய!
கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே.
பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை!
வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக
வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொற்
சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்
வேற்றுமை உருவாய் விளங்கிய காலம்
காற்றினும் கடுகிய சுடுநடை உடைய
தன்றோ அதிகலப் பட்டார் முந்திச்
சென்றா னின்றார்! சிறிதுசிந் தித்து
நிற்பரேன் பெரிதும் பிற்பட் டொழிவர்
ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த
மேதையின் மிகுந்த மானிடர்க் கரசராய்
வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம்
எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக்
கால கதிக்கநு கூலமாய் நவீன
சீர்பல திருந்தி ஓரியல் புதிதா
நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா
ராட்டில ரேலவர் ஆண்டநாட் கெல்லை
காட்டுமோ கொடிய காலக் கரப்பே!
இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே
அவ்வர சனுக்காம் யாக்கை அஃதின்
அழிவே யவன் தொழிலாம் அதனால்
எல்லாம் அறிந்த இறைவ! இவ்விடத்தியான்
பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே
அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும்
நன்றே ஆயினும் ஆகுக அன்றிப்
பொன்றினும் பொன்றுக; பொறித்தவென் அரசியல்
மற்றவை தம்மொடு மாண்டிடும்; மாண்டபின்
அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும்
பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும்
நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப்
பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!
சுந்தர: எடுத்ததன் முயற்சி யாதே யாகுக!
முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால்
தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின்
வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப,
தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர்
சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர்
ஆதலால் ஜீவக! தீதென வருதற்
கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல்
எனவின் றெய்திய வற்றால் உனது
மனத்திடை மயக்கறை மதித்துளை ஆயின்.
ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த
மருங்கே அணைந்து வாழவே கருமம்.
வேறிலை தேறு மார்க்கம்.
கூறுதி அதனால் உன்மனக் கோளே.
ஜீவ: ஐய! யான் உரைப்பதென்? அடுத்தவை இவையெலாம்
கைவிடில் என்னுயிர் கழியும். அதனில்
இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும்
பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ
சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல்
மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே.
சுந்தர: சங்கரா! சற்றோ தாதான் மியபலம்!
வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே!
நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய
அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும்
பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல்
கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி.
இவ்வுயிர் இயலுக கியற்கையென் றெண்ணினேன்
செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம்
வருவது அதனால், மதிகுலம் வந்த
ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர்
ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்; நீ
காவா யாகிற் காப்பதெம் கடனே.
ஜீவ: இதுபோ லில்லை அடிகள் செய்யும்
உதவி தமியேற் குளதுயர் இதுவே;
கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம்
அருளுதி காக்கும் உபாயம்
இருணிறை இடுக்கணிக் கியைந்திடு மருந்தே.
சுந்தர: நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர்
விட்டான் முதலையும், விரும்பிய திலகப்
பட்டாற் களிறும் பலமில ஆகி
விடுமென அறிந்த கெடுவினை யாளர்
தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி
இடமது பெயர்ந்துழி, எடுத்தவெவ் வினைக்கும்
கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும்
அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட்
கொடுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி
தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை
அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி,
சதமென நம்புமிச் சாலிபுரமும்,
அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும்,
அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை
மறந்திடா மாபதி அடைந்திடாச் செயுமே.
ஜீவ: தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா
றாவதும் உளதோ? ஆ! ஆ! அடிகாள்
வழுதியர் பலர் பலர் வழிவழி காக்கும்
முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும்.
பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது
திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே!
சுந்தர: நல்லது! முகமன் நவின்றனை, நிற்க
சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கனில்
உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே
ஜீவ: அடியேன் ஆசை திருவடி அறியும்
கடிபுரி விடிலுயிர் நொடி யுமிங் கிராது
பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த
காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு
உளபடி கொடுபோய் அளித்தரு ளுதியேல்,
இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச்
சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும்.
நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த
தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலாம், யானும்
ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ
ஆற்றுவன் அரும்போர் அதனிடை யமபுரம்
ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை;
வென்றிடின் மீளுவன் அன்றெனிற் பண்டே
அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும்
தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன
வியாகுல மறவே விடுவனென் உயிரே.
சுந்தர: விடுகிலை, ஆகினும் வௌிக்கடல் ஓட்டம்
நடுநிசி நாமினி வருகுதும், கொடிய
கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன்
சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும் சிறந்த
அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே.
[எழுந்து]
ஜீவ: கட்டளைப் படியே! கட்டிய கடற்படை
கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு
சுந்தர: காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை
ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்;
இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப.
கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள்
வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே.
[முனிவர் போக]
ஜீவ: (தனிமொழி)
வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம்.
என்னே! என்னே! இந்நாள் இயன்றவை!
கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும்.
குருநாள் மழையொடு மிகுகாற் றேறிந்த

பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே
இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ?
தாயே! தாயே! சார்வன சற்றும்
ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்?
விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக்

கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது
தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம்
பொறுக்குமா றெவனிப் பொல்லா வல்லுயிர்
துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே?
அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி!
நாற்புற நெருப்புறி னளியும் தனது
வாற்புற நஞ்சால் மாய்த்திடும் என்ப,
நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந்
தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே!
பிரிவென என்னுளம் கருதிடு முனமே
பிரையுறு பாலென உரைவதென் உதிரம்
நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்?
நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி
முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண்
தங்குவன் யானும்! தங்குவை நீயும்!
இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே!
[மௌனம்]
கற்படை இதுதான் எப்புறத் ததுவோ!
உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும்
உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்?
முனமே முனிவன் மொழிமணம் அன்றோ
இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது!
கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை.
[சேவகன் வர]
ஓடியிங் கழையாய்!
[சேவகன் போக]

உண்மையெப் படியென
நாடுமுன் வாடி நலிதல் என்பயன்?
நம்புதல் எல்லாம் துன்பமே தருவது.
நம்பினோம் நாராயணனை, அதற்கா
வம்பே செய்தான் மாபா தகனவன்.
நட்பே நமக்கிங் குட்பகை யானது!
முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா
களவழி இதுமுனி கட்டற் பாற்றோ
மனத்திடைக் களங்கம் வைத்துளர் அஃதவர்
விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய்
ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே
[குடிலன் வர]
வாராய் குடில! மந்திரி உனக்கு
நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்!
சுந்தர முனிவரோ சுருங்கைதொட் டுளராம்;
நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி;
மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென
ஒறுத்தவர் வேண்டினர் உரியநம் குலமுனி
ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி
யாதென வினாயதற் கோதா தேகினர்;
பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை
மெய்யோ பொய்யோ? மெய்யெனில் எவ்வயின்
உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது
இளவர சியையங் கனுப்புதல்?
குடில:
இறைவ!
முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண
அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை
இழைத்திட வோரறை இரந்தனர்
ஜீவ:
ஆம்! ஆம்!
குடில: அவ்வறை எவ்வறை?
ஜீவ:
அதுயான் அறிவேன்.
செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்
மறுமுறி மணவறை.
குடில: (தனதுள்)
அறிவிது வெகுநலம்;
(ஜீவகனை நோக்கி)
உறுவதங் கென்னன உணர்ந்தனை?
ஜீவ:
உணர்ந்திலேன்.
குடில: அதுவே கற்படை அறிந்துளேன் பழுது
செயத்தகு வினையல ஆதலில் திருவுளம்
உணர்த்திலேன் முனிவர் ஓதிய திதுவே.
இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச்
செவ்விதில் இதுவோ செய்தற் கரியது?
சுந்தரர் நமையெலாம் புத்தியற் றவரென
நொந்துதாம் உழைத்ததை நோக்கிடில் நகைப்பே!
ஜீவ: நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்;
பண்டே கண்டுளோம் பாங்கோ அனுப்புதல்?
குடில: பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப
மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?
அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய
பினையிலை கவலையும் பீதியும் பிறவும்,
உட்பகை வௌிப்பகை எப்பகை ஆயினென்?
கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்?
ஆதலால் முனிவர் ஓதியபடியே
அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே
ஆனால் அறியா அரசகன் னியர்கள்
தேனார் தெரியல் சூடுமுன் இரவில்
தனிவழி யநியர்பால் தங்குதல்..?
ஜீவ:
தவறே!
குடில: முனிவரே ஆயினும், அநியரே. உலகம்
பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது.
ஜீவ: மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல்!
குடில: அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே?
மனத்துள் கவலை மாறுமோ? கவலை
முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்
ஜீவ: அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை.
வதுவைக் கிதுவோ தருணம்?
குடில:
மன்னவ!
அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே!
கொடிதே நம்நிலை குற்றமெப் புறமும்.
அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில்
உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி
தப்பிடின் நங்குலம் எப்படி ஆகுமோ?
வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே?
திருமா முனிவரோ கருநா உடையர்
நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர்.
இத்துணை பொழுதுமங் கெத்தனை கூச்சல்!
எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்!
முருகனும் நாரா யணனும் மொழிந்த
அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம்
சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல்
ஏவினர்; அதற்கவர் இசைந்திலர் பிழைத்தேன்!
வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர்
ஜீவ: காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை.
குடில: சேரா திவரைமற் றியாரே விடுவர்
ஆயினும் தலைவர் நிலைமை இஃதே
வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால்
இல்லை அவர்துணை என்பது தௌிவே.
அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும்
வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன்.
கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு
கல்லறை நன்றே கடிமண முடியின்..
கடிமண மதற்கோ, முடிபுனை மன்னர்
வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை?
வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே
ஒருநலம் காணின் ஒருநலம் காணேம்
ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல்
மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?
பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின்
பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்!
பூருவ புண்ணியம் அன்றோ மன்றல்
நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம்
வௌியா யினதும்? எளிதோ இறைவ!
வேந்தராப் பிறந்தோர்க்குனைப்போற் சாந்தமும்
பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
அறம்நிறை அகமும் அறிவும் அமைதல்;
பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின்! என்செய!
ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை.
ஐயோ! இனிநாம் அந்நிய ராயின்
நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும்;
அன்றேற் பெரும்பிழை!
ஜீவ:
ஆ!ஆ! சரியே!
குடில: ஆதலின் இறைவ! ஆய்விடத் தெங்கும்
ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை?
ஜீவ: அரசல எனினமக் காம்பிழை என்னை?
குடில: திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்?
உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
முடிமன் னவர்பலர் அடிதொழ நினது
தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும்
வீரமும் மேதையும் தீரமும் திறமும்
குலமும் நலமும் குணமும் கொள்கையும்
நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய்
நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்?
அற்பமோ ஐய?நின் அடிச்சே வகமே?
ஜீவ: என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்!
குடில: மன்னோ மற்றது வௌிப்படை அன்றோ?
அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும்
இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு
விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற்
பேணியே கலுழுநள் போல் பிறர்பால்
நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள்.
ஜீவ: உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்!
பலதே வந்தன் நலமவள் கண்டுளாள்?
குடில: பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும்
ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண்
'மனோன்மணி மனோன்மணி' எனுமந் திரத்தால்
ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன்
சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன்.
ஆயினும், அரச! பேயுல கென்குணம்
அறியா ததனால் வறிதே பலவும்
சாற்றும் தன்னயம் கருதல்போற் பிறர்க்குத்
தோற்றும். அதனால் தூற்றுவர் அதுவும்
மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி
ஆதலின் இறைவ! அவைக்களத் தநேக...
ஜீவ: ஓதலை ஓதலை உனதன் றத்தொழில்
தனையக் குரியது தந்தையே உணருவன்.
இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும்
அரசனா யாய்கினும் சரியிம் முடிபு.
மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும்
தகைமையில் தகுவதும் இதுவே. அதனால்,
குடிலா! மறுக்கலை.
குடில:
அடியேன். அடியேன்
ஜீவ: இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ
முன்னநாம் வைத்த முகூர்த்தம்?
குடில:
ஆம்! ஆம்!
ஜீவ: செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே!
ஆவா! எவ்வள வாறின தென்னுளம்!
ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.
குடில:
பிரிந்துநீர்
இருந்திடல் எல்லாம் ஒருநாள் அதற்குள்
வெல்லுதும் காண்டி! மீட்குதும் உடனே.
ஜீவ: நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம்
ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ
வருகுதும் அதற்குள் வதுவைக்
கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே!
[ஜீவகன் போக]
குடில: (தனிமொழி)
தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை.
இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்?
முனிவரன் வந்ததும் நனிநலம் நமக்கே!
மறுப்பளோ மனோன்மணி? சீசீ மனதுள்
வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
மொழியாள் சம்மதக் குறியே மௌனம்
அழுவாள்; அதுவும் பிரிவாற் றமையே
ஆயிவிடும், அரச னாய்விலா உளத்துள்
நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம்
முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?
ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்
வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை
[மௌனம்]
ஊகம் சென்றவா றுரைத்தோம் உறுதி
யாகமற் றதனிலை அறிவதார்? உளதல
துரைப்பரோ முனிவர்? உளதெனில் உரைத்தவா
றிருத்தலே இயல்பாம் எதற்குமீ துதவும்
[மௌனம்]
சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு
செய்த தெற்கெலாம் உய்வகை ஆனதே!
எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்!
அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர்
நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்
உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன.
என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
எளியனென் றெண்ணினேன், வழிபல தடுத்தான்
கெடுபயல்! பாக்கியம், கடிமணம் இங்ஙனம்
நடுவழி வந்ததும்! விடுகிலம்.
கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே.
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

ஐந்தாம் அங்கம் : முதற் களம்

நேரிசை ஆசிரியப்பா
குடிலன்: (தனிமொழி)
திருமணம் கெடினும் தீங்கில்லை ஈங்கினி
இருசரம் இன்றி எப்போ ரிடையும்
ஏகார் மதியோர். இதில்வரு கேடென்?
ஆகா வழியும் அன்றிது, சேரனை
அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர்
சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே
இசைவனேற் காட்டுதும் இன்றேல் மீள்குதும்
பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்!
பாண்டி நாடாளவோ படையெடுத் தானிவன்
போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன்
எடுத்தெறிந் தெடுவனிப் போதே நம்மொழி
அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக்
கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்
ஆதலின் இஃதே தீதறு முறுதி...
என்னை நம் ஊகம்! என்னை நம் ஊக்கம்!
முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
துன்னிருள் வழிதனி தொடர்திவண் சேர்ந்தோம்
ஊக்கமே பாக்கியம் உணர்விலார் வேறு
பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ்
சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும்
திறமுள ஊகமே யோகம்; அன்றி
(நட்சத்திரங்களை நோக்கி)
வான்கா டதனில் வறிதே சுழலும்
மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்?
மதியிலா மாக்கள் விதியென நிம்மேற்
சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும்,
யுக்தியும் ஊக்கமும் பக்தியும் பகைமையும்,
ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்?
வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
வருந்தோறும் சிலமொழி வருவ அஃதோ
திரும்பினன்! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம்
[புருடோத்தமன் தனியா யுலாவி வர]
(குறள்வெண் செந்துறை)
புரு: (பாட)
உன்னினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருந்தும்
உயிரே என்றன்
கண்ணினைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம்
காட்டாய் காட்டாய்
அவத்தைபல அடையுமனம் அனவரதம் புசித்திடினும்
அமிர்தே என்றன்
செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம்
செப்பாய் செப்பாய்
பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர்
பொருளே உன்னை
அறியவா வியகரணம் அலமாக்க அகத்திருந்தாய்
அச்சோ அச்சோ.
[புருடோத்தமன் சற்றே அகல]
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடில: (தனிமொழி)
மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!
தேவரும் உளரோ? யாதோ? அறியேன்.
இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்
மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
உருவிலை என்பர். ஓசையும் உருவும்!
பாடிய பாட்டின் பயனென்! அஃதோ!
நாடி அறிகுதும். நன்று. நன்று.
[புருடோத்தமன் திரும்பி வர]
(குறள்வெண் செந்துறை
தொடர்ச்சி)
புரு: (பாட)
புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப்
புன்மை யோர்க்கிங்
குலவாதென் உளநிறையும் உனதுண்மை உணர்த்தும் வகை
உண்டே உண்டே
பெத்தமனக் கற்பிதமே பிறங்கு நினை வெனப் பிதற்றும்
பேதை யோர்க்கோர்
யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமனது நிலையுரைப்ப
தென்னே யென்னே.
தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை
தேரா திங்ஙன்
ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென்
ஊழே ஊழே.
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடில: சேரனே யாமிது செப்பினேன் போரினில்
ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி
நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்,
ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே
ஊரிவன் விடுத்ததும் போரிவன் தொடுத்ததும்
உண்ணிய கொள்கைக் கிசையும் புகன் றாவை.
நண்ணுதும் நெருங்கி நல்லது! திரும்பினன்.
[புருடோத்தமன் திரும்பி வர]
புரு: (தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்று கண்டது போல்.
எத்தனை முகத்திடைத் தத்தறு துயரம்!
இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக்
கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
[குடிலன் எதிர்வர]
(குடிலனை நோக்கி)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தக்க்ஷணம்!
குடில: அடியேன் அடியேன்! குடிலன்! அடிமை!
புரு: வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்
குடில: வெந்திறல் வேந்தநின் வென்றகொள் பாசறை
சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர்
வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி
வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம்
உன்றன் திருவடி தரிசனம் உடனே!
சிந்தையெப் படியோ அப்படி என்செயல்!
புரு: செப்புதி விரைவில். செப்புதி வந்தமை!
குடில: ஒப்பிலா வீர! எப்புவ னமுநின்
மெய்ப்புகழ் போர்த்துள ததனால் இப்புவி
நீவரு முனமே நின்வசப் பட்டுத்
தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப்
பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி
ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய்
அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற்
செறிந்திரு படையும் சேர்தரு முனமே
முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற்
களிப்படை யாமலே கைகலந் தமையும்
வௌிப்படை யன்றோ? வேந்த! இப் புவியோர்
வெல்லிட மும்வெலா இடமும் யாவும்
நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்?
வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம்
அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை?
என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்!!!
நின்புகழ் மயக்கா மன்பதை உலகம்
யாண்டும் இன்றெனில், அனிதாம் இந்தப்
பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே!
ஒருவா றறமே யாயினும், மருவாக்
கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
கருணையோ காய்தல்?தருமநல் லுருவே!
புரு: (தனதுள்)
யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம்.
(குடிலனை நோக்கி)
வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
குடில: ஆண்டகை யறியா ததுவென்? இன்று
மாண்டவர் போக மீண்டவ ரேனும்
மாளா வழிநீ ஆளாய் என்னக்
கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா
அடியேன் என்சொல! ஆ!ஆ! விடியில்
வாளும் மாளும் மனிதர் தொகுதி
எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்
எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு
புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
நொந்த சூலினர் நோவுபா ராது
வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ?
தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு
சேய்முகம் மறவாச் செருநரெத் தெனையோ?
செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
புரு: சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு
சாற்றா தொழிந்ததென்?
குடில:
சாற்றெலென்?
போற்றான் யார்சொல்லும் புந்தியும் சற்றும்
அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும்
அறியா வெறியன்; அன்போ டிம்மாலை
குறியா நீவிடு தூதையும் கொண்டிலன்.
அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும்
மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே
இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன்.
பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ்
நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே.
ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
யுருவே அடியேற் கொருமொழி தருவையேல்
ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி
அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலும்
கரதல மாமொரு கௌசலம்
காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
புரு: (தனக்குள்)
பாதகா! விசுவாச காதகா!
(சிரித்து)
ஆ! ஹோ!
குடில: அரசன் கைப்படி லாங்குளார் யாமென்
உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்.
மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
உன்னா ணைக்கீ ழொதுங்குதல் திண்ணம்
தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை
மல்கிய புவியிஃததனால், "மன்னவன்"
என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்,
நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர்
வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
றீண்டுள எவையே யாயினும் வேண்டிடி
சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்
கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.
பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா
றின்றுநீ வென்றநா டினிகாத் திடுவேன்,
புரு: சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?
குடில: அரசன தந்தப் புரமது சேர
யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
ஒன்றுள தவ்வழி சென்றிடி லக்கணங்
கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.
புரு: உண்மை?
(சேவகரை நோக்கி)
யாரது?
குடில:
உதியன் கண்முன்
மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?
[அருள்வரதன் வர]
அருள்: அடியேன்!
புரு: கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்,
[அருள்வரதன் போக]
(குடிலனை நோக்கி)
எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
குடில: அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
எளியேற் கபய மியம்புதி யிறைவ!
புரு: அவ்வழி யோநீ யணைந்தனை?
குடில:
ஆம்! ஆம்!
செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே
காட்டுவ னடியேன்.
[அருள்வரதனும் சேவகரும் விலங்கு கொண்டு வர]
புரு: (குடிலனைச் சுட்டி)
பூட்டுமின்! நன்றாய்!
குடில: ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!
[அருள்வரதன் விலங்கு பூட்ட]
புரு: எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
குடில: (அழுது)
தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ உறுதி
முந்தியே தந்திடில்...
புரு:
மூடிநின் பாழ்வாய்
சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி
(சேவகரை நோக்கி)
சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி)
நடவா யுயிர்நீ நச்சிடில் கெடுவாய்!
எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
[யாவரும் சுருங்கை நோக்கிப் போக]

ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.

ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கிழவி: எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.
முதற்றோழி: என்னடி கிழவி! சொன்னால் அறிகிலை.
போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்!
மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி?
காது மில்லை கண்ணு மில்லை!
ஏது மில்லை! ஏனுயிர் இருப்பதோ!
கிழவி: கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
படும்போ தறிவை! இப் படியே பண்டு
முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்
ஓடினோம் ...
முதற்றோழி: போடி! உன்கதை அறிவோம்
[கிழவி போக]
சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!
[நகைக்க]
2-ம் தோழி: அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின்.
எப்படி அரசன் மீண்டான். செப்பாய்!
முதற்றோழி: எப்படி செப்பயான்? ஏந்திழை பட்டபா
டய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்!
மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம்
தன்னிலை தளர்ந்தாள். சாய்ந்தாள் வாணியும்
அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம். பாங்குள அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை
இட்டகை இட்டகால் இட்டவப்படியே
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்!
தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம். தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம்.
2-ம் தோழி: ஐயோ தெய்வமே! அப்போதவளுயிர்
பட்டபா டெதுவோ! கட்டம்! கட்டம்!
முதற்றோழி: விதியிது! அலதிது கதையிலும் உளதோ?
நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் துன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினள். வந்ததித் தளர்ச்சி
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்.
2-ம் தோழி: எத்தனை வேதனை! எத்தனை சோதனை!
யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும்
நவிலுதி அக்காள்!
முதற்றோழி:
நங்கைநன் மொழியென்
செவியிடை இனியும் மணிபோல் திகழும்!
அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி
நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும்
காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற
தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே!
"என்னோ இதற்கும் யோசனை எந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா
நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல, பேருல கதற்குத்
துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய
பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும்
சமமெனிற் சுந்தர விமலம் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினும் அத்தனை அவசரம் ஆயின்,
ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை.
அன்னையும் நின்னை அன்றிவே றறியேன்,
உன்னதே இவ்வுடல், உன்திரு உள்ளம்
உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம்
கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை!
அன்பாம் உன்பால் ஐய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டு மிவ்வொன்றே"
2-ம் தோழி: மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாம் காணவோ எழுதினான் பிரமன்?
முதற்றோழி: எதுவெலாம் காணவோ இருப்ப திக்கண்?
2-ம் தோழி: என்செய் கின்றனள் இப்போ தேழை?
முதற்றோ: வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை!
ஏதோ எழுதுகின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.
2-ம் தோழி: நீராடினளோ இந்நிசி?
முதற்றோ:
ஆம்! ஆம்!
எழுந்து வாசநீ ராடி முன்சுரத்
தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து
நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி.
நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோல் அன்றோ இன்றன் நிலைமை!
என்று சிறுமுறு வலித்தனள். என்சொல!
உருவமும் உடையும் உரையும் நடையும்
சருவமும் பாவனை பண்ணியும்...
[முதற்றோழி அழ, மனோன்மணியும் வாணியும் வர]
2-ம் தோழி:
அஃதோ!
வந்தனள், காணுதி. வாணியும் பின்னுளள்
மறைகுவம் அவ்வறை, வருக இவ்வழியே!
[தோழிமார் போக]
மனோன்: எந்தைபோல் தயாநிதி எங்ஙணும் இல்லை,
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!
ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க!
வாணி! உன் மணத்திற் கிசைந்தான் மன்னன்.
காணா யீதோ அதற்குள கட்டளை.
[திருமுகங்காட்ட; வாணி வாசிக்க]
சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே
அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார்.
வாணி: இத் தருணத்தில் இதுவென்? அம்மணீ!
சத்தியம் எனக்கிது சம்மதம் அன்று
நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த
எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே!
உன் மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.
மனோன்: என் மனப் படியெது? எனக்கெரு மனதோ?
எந்தையின் மனப்படி என் மனப்பட்யே.
வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.
வாணி: ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்?
பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய
வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும்
பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப்
பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க.
என்னையுன் நினைவோ! என்னையுன் துணிபோ?
இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை!
மனோன்: வருந்தலை வாணீ! வா வா இன்னும்
தெரிந்திலை ஐயோ! சிறுமியோ நீயும்?
உண்மையான் உரைத்தேன்; உணருதி உறுதி.
என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை.
ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை?
தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில்
ஈதல அதற்காம் உலகம். இமையவர்
வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்
யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம்
எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும்
மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும்
தேய்த்தவை மாற்றித் திகழொழி யேற்றி
மண்ணிய மணியாப் பண்ணிட என்றே
வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையை
பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க
யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல
என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச்
சுகவிருப் பேநமைத் தொழிம்புசெய் பந்தம்.
தவமே சுபகரம். தவமென் உணருவை?
உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து
செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல்
ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத்
தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர்.
இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம்,
ஐயோ! போதா தென்றோ அன்னோர்
போனகம் துறந்து கானகம் புகுந்து
தீயிடை நின்று சாவடைகின்றார்?
தந்தை யாதியா வந்ததன் குடும்ப
சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க்
கெந்த்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின்
முந்துகின் றவரே முதற்றவ முனிவர்.
வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும்
ஒத்ததே அன்றோ?
மனோன்: மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும்.
அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு
எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின்,
நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும்
விடாதெனை அடுத்த வீரநா ரணன் றன்
கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி
எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான்
என்கடன் இதுவரை! இனியுன் இச்சை.
வாணி: ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள்
கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய்
நீயிவண் இருக்க நின்னுளம் வாரி
வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம்
வேதகம் செய்த போதக யூதபம்;
பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான்
யாரே ஆயினும் ஆகிக, அவனை நீ
அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல்
இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும்
பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு
கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை
மடமையே ஆயினும் மறுக்கலை மணியே!
மனோ: பேதமை அன்றோ ஓதிய சபதம்!
ஏதிது வாணி! என் மணம் தனக்கோ,
இனியரை நாழிகை, இதற்குள் ஆவதென்?
அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும்.
மன்பதை உலகம் வாஞ்சா வசமே.
வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும்
கடபட சடமலாற் கடவுளும் இலையேல்
வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற்
காண்டியவ் வேளை கருணையின் இயல்பே.
[இருவரும் போக]
ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.


ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம்

(நிலைமண்டில ஆசிரியப்பா]
முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்
2-ம் படை: நடரா சனைநீர் அறியீர் போலும்?
முதற்படை: அறிவேன். ஆ!ஆ! அரிவையர் யாரே
வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக்
கெடுத்தான் கிழவன்.
3-ம் படை:
அடுத்ததம் மணமும்!
தெரியீர் போலும்!
1-ம் படை: தெரியேன், செய்தியென்?
3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும்
வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும்
இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட
அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன்.
1-ம் படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன்
ஒருதிரை வாணிக் கொருதிரை மணிக்கே.
3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம்.
1-ம் படை: இத்திரை தாய்க்காம்.
3-ம் படை:
சீ! சீ! அத்திரை.
2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்?
1-ம் படை: இருதிரை வந்தவா றிதுவே ஆயினும்
ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்?
3-ம் படை: அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன்.
[3-ம் படைஞன் மற்றோரிடம் போல]
1-ம் படை: ஐயோ! பொய்யறும் அன்னையும் மணிக்கும்
பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்?
2-ம் படை: வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக்
கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை.
[3ம் படைஞன் மீண்டும் வர]
3-ம் படை: (முதற்படை நோக்கி)
இப்புறம் வருதி, செப்புவன் ரகசியம்.
சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும்
எத்திறத் தோர்க்கும் இயம்பல. பத்திரம்!
அத்திரை மணத்திற் கன்றுமற் றப்புறம்
நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி
செல்லில் வெகுதொலை செல்லுமாம். இப்போர்
வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர்
இருவரும் எய்தி வாழ்ந் திருப்பராம்
1-ம் படை:
சரி! சரி!
பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை
விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான்
3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம்
எப்போ தப்போ தேவரும் துயரம்
கருதிமுன் செய்தனன்.
1-ம் படை: ஒருவரும் அறிந்திலம்
[முருகன் வர]
3-ம் படை: யாரது? முருகனோ? நாரணன் எங்கே?
முருகன்: நாரணன் அப்புறம் போயினன்; வருவன்.
3-ம் படை: பிழைத்தீர் இம்முறை
முருகன்:
பிழைத்திலம் என்றும்!
3-ம் படை: அத்திரைச் செய்தி அறிவாய் வைத்ததார்?
முருகன்: வைத்ததா ராயினென்? வெந்தது வீடு!
[இருவரும் நகைக்க]
2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன்.
முருகன்: ஈயோ வாயில் ஏறிட நாயே!
1ம் படை: அரசனும் முனிவரும் அதோ வருகின்றார்!
[ஜீவகன், சுந்தர முனிவர், கருணாகரர், நிஷ்டாபரர்,
பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர]
ஜீவகன்: இருமின் இருமின்! அமர்காள் யாரும்!
[ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடமிருக்க]
கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின்
பலதேவ ரேநும் பிதாவிது காறும்
வந்திலர் என்னை?
பலதேவன்:
மன்னவர் மன்ன!
அந்தியிற் கண்டேன் அடியேன், அதன்பின்
ஒருவரும் கண்டிலர், தனிபோ யினராம்
ஜீவ: இருமிரும் நீரும், எங்கேனும்நம்
காரிய மேயவர் கருத்தெப் பொழுதும்
(நாராயணனை நோக்கி)
பாரீர் அவர்படும் பாடு.
நாராயணன்: பார்ப்பேன்!
சத்தியம் சயிக்குமேற் சாற்றியபடியே!
ஜீவ: இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை.
எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம்
பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள்
தந்தனன் முகூர்த்தம் வந்ததோ?
சுந்தர:
வந்தது!
[புருடோத்தமனும், குடிலனும், அருள்வரதன் முதலிய
மெய்க்காப்பளருடன் கற்படை வழிவர]
புருடோ: நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்!
[கற்படையில் அருள்வரதனை நோக்கி]
என்பின் இருவர் வருக.
(தனதுள்)
இதுவென்?
இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ
மன்னவை போலும்! மந்திராலோசனை!
இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்!
இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி?
இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ?
இத்தனைக் கோலா கலமென் சபைக்கு?
மாலையும் கோலமும் காணின் மணவறை
போலாம். அறிந்தினிப் போவதே நன்மை.
மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம்.
இந்த நல்திரை நமக் கெத்தனை உதவி!
[திரைக்குப் பின் மறைந்து நிற்க]
ஜீவ: என்குலம் காக்க எனவருள் பழுத்துக்
கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்!
மனத்திறத் தாழ்ந்த மதிமந் திர்காள்!
எனக்கென உயிர்வாழி என்படை வீரர்காள்!
ஒருமொழி கூறிட அனுமதி தருமின்.
ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே
பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே
எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம் எமர்காள்!
கள்ளமின் நும்முனோர் காப்பின் சிறப்பே,
ஆதலின் உமக்குப சாரம்யான் ஓதுதல்,
மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும்.
ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும்
மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி
விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக்
காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை
சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவிர்.
இன்று நாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை
பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம்.
ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை
அப்படி அன்று நம் கற்பகச் சிறுகனி!
தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும்.
அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின்.
இருந்திடச் சிறியள். அபாயம்! தனியே
பிரிந்திடப் பெரியள். பிழை!அஃ தன்றியும்
குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற்
கிலையத னாலோர் இயல்சமா தானம்
ஆதலில் அரியதற் காலத் தியல்பை
யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ
தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும்
தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்!
குடிலனை அறியார் யாரிக் கொற்றவை?
2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும்.
ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்?
மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்?
நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்?
யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்?
உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்!
சத்திய வித்து; பத்தியும் மத்தன்.
ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன்,
ஏன்மிக? நமர்காள்! இந்நடு நிசியிலும்
யானறி யாதுழைக் கின்றவன் எனக்கா,
நன்றே இங்கவன் இலாமையும் அன்றேல்
தற்புகழ் கேட்க அற்பமும் இசையான்.
புரு: (தனதுள்)
எத்தனி களங்கமில் சுத்தன்! கட்டம்!
ஜீவ: பற்பல பாக்கியம் படைத்துளர் பாண்டுளோர்
ஒப்பரும் அமைச்சனை இப்படை ஒருவரும்
முன்னுமுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும்
ஐயமென் றுரைப்பேன், அன்னவன் புதல்வன்
மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும்
பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும்
உடையனாய் உடையவும் தற்பிர திமைபோல்,
இனியொரு தலைமுறை நனிசே வகஞ்செய
இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்!
எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற்
பலதே வனைப்போர் பலிதமாம் சிறுதரு?
2-ம் படை: இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்?
ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும்
தமதார் உயிர்போல் தாம்நினைந் திதுவரை
எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச்
செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர்.
இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா
டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால்
தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம்
கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம்
எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் நுமக்கும்
மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர்
இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர்
தாபதம் சென்று தங்குவர். இத்தகை
ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள்
தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம்
போமா றொருசிறு புரையறு சுருங்கை.
அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக்
கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால்,
வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம்
சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே.
இதுவே என்னுளம், இதுவே நமது
மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும்
அருளினர் ஆக்ஞை! ஆயினும் நுமது
தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே.
(நேரிசை ஆசிரியப்பா)
உரையீர் சகடரே உமதபிப் பிராயம்
சகடன்: அரசர் குலமன்று. ஆயினென்? சரி? சரி
நாராயணன்: (தனதுள்)
மருமகன் தப்பிய வருத்தம் போலும்.
ஜீவ: குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே
பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான்
பெயரால் அரசன்! செயலாற் புலையன்!
2-ம் படை:செய! செய! சரிசரி! தௌிந்தோம்! தௌிந்தோம்!
நாரா: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா!
இனியெலாம் ஈசன திச்சை.
சகடன்: சரி! சரி!
யாவரும்: சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே!
ஜீவ: வாராய்! நாரணா! ஆனால் அப்புறம்
சென்று நம் மனோன்மணிச் செல்வியை யழைத்து
மன்றல் திரைப்பின் வரச்செய்
[நாராயணன் போக]
யார்க்கும்
சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம்
வம்மின்! இனியிது மங்கல மணவறை.
கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த்
திவலை சிதறுமின்! சிரிமின்! களினின்!
இன்று நாம் வென்றோம் என்றே எண்ணுமின்!
இனிநாம் வெல்லற் கென் தடை? தினமணி
வருமுன் ஏகுவம், அரைநா ழிகைத்தொழில்!
ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச
நாளைநல் வேளை; நம்மணி பிறந்தநாள்
ஓரோர் மங்கல விசேடம்!
சகடன்:
ஓ! ஓ!
சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்!
[நாராயணன் திரும்பிவர - மனோன்மணி, வாணி
முதலிய தோழியருடன், திரைப்பின் நிற்க]
நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர்.
ஜீவ: (நாராயணனை நோக்கி)
மற்றவர் கவலை மாற்றிட ஒருபா
சாற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி!
வாணி: (பாட)
(கொச்சகக் கலிப்பா)

நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த கரிமுன்
ஓர்முறையுன் பெயர்விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்;
ஆர்துயர அளக்கர் விழும் அறிவிலியான் அழைப்பதற்குன்
பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ.
பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை
சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் என் உரைப்பர்;
ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலில்யான் அழைப்பதற்குன்
ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே.
மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக்
குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்;
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே.

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
சுந்தர: எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை?
மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம்
யாவையும் இதுவே பாவாய்! மனோன்மணி?
வருதி இப்புறம் வாங்குதி மாலை.
[மனோன்மணி மணமாலை கொண்டு பலதேவனெதிர் வர]
ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம்
உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன்.
[புருடோத்தமன் திரைவிட்டு வௌிவந்து நிற்க]
1-ம் படை: ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம்.
3-ம் படை: ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண்.
4-ம் படை: அமையா நோக்கமும் இமையா நாட்டமும்
ஏங்கியம் உகமும் நீங்கிய இதழும்
உயிரிலா நிலையும் உணர்விலா நடையும்
பார்த்திடிற் சூத்திரப் பாவையே, பாவம்!
[மனோன்மணி புருடோத்தமனைக் காண; உடன் அவன்
நிற்குமிடம் விரைவில் நடக்க]
யாவரும்: எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?
புரு: இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே!
[புருடோத்தமன் தலைதாழ்க்க; மனோன்மணி மாலைசூட்டி]
அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க]
சுந்தர: மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே
சோரன்! சோரன்! சேரன்! சேரன்!
நிஷ்டாபரர்: கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!
[கருணாகரரைத் தழுவ]
யாவரும்: பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!
பலதே: கொன்மின்! கொன்மின்!
[யாவரும் புருடோத்தமனைச் சூழ; சுந்தரர் கூட்டம் விலக்க]
சுந்தர:
நின்மின்! நின்மின்!
[அருள்வரதனும் மெய்க்காப்பளரும் வர]
அருள்வர: அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்!
[புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து
நின்று காக்க]
யாவரும்: படையுடன் பாதகன்!
[யாவரும் பின்னிட விலங்குடன் குடிலனைக் காட்டி]
அருள்:
பாதகன் இங்குளான்,
ஜீவ: குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ!
அடிகாள்! இதுவென்! இதுவென் அநீதி
அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்!
சுந்தர: பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்!
புரு: வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல்
அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை
சுருங்கையின் தன்மை சொல்லியென் னையிங்
கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர.
உன்னர சுரிமையும் உன்னகர் நாடும்
என்னிடம் இரந்தான். இச்சூ திதற்கா!
ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன்
சூதும் துரோகமும் சொலியுனைத் தெருட்ட
எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும்
பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும்
தூண்டிட ஈண்டுமற் றடையவும் யாண்டும்
எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை
நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன்.
பிரிகிலம் இனிமேல், உரியநின் உரிமை
யாதே ஆயினும் ஆகுக. ஈதோ!
மீள்குவன் விடைகொடு. நாளையும்
வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நட்பே!
ஜீவ: உண்மையோ? குடில! உரையாய்!...
[குடிலன் முகங்கவிழ்ந்து நிற்க]
நாரா: இதுவுநின்
உண்மையோ! மௌனமேன்?
யாவரும்: ஓகோ! பாவி!
நாரா: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!
சுந்தர: விடு! விடு! விசாரணைக் கிதுவன்றமையம்!
நன்மையே யாவும் நன்மையாய் முடியின்,
வாராய் ஜீவக! பாராய் உன்மகள்
தாராத் தன்னிரு காதோட் சூட்டி
எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை.
இருமனம் ஏனினி! என்றுமிப் படியே
மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.
ஜீவ: கண்மணீ! அதற்குட் கண்வள்ர்ந் தனையோ!
உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல்
என்னையுங் கெண்ணுவை! இறும்பூ திருவரும்
ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!
[மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க]
வெருவலை! மணியே! பிரியீர் இனியே.
வாழ்த்து - மருட்பா
பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
உள்ளம் உவந்தோடி ஒன்றாய் - விள்ளா
மணியின தொளியும் மலரது மணமும்
அணிபெறு மொழியின் அருத்தமும் போல,
இந்நிசி யாகவெஞ் ஞான்றும்
மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!
[யாவரும் வாழ்த்த]

ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

கலித்துறை

ஐந்தாம் அங்கம் முற்றிற்று.

மனோன்மணீயம் - முடிவுற்றது.


This page was first put up on February 23, 2001

Please send your comments and corrections to the Webmaster(s) of this site