cOmEcar mutumozi veNpA
of civanjAna munivar
(in tamil script, unicode format )

சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர்: சிவஞான முனிவர் )




Etext input & Proof-reading: Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu, India
web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu & Mr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source acknowledgement: Publication from M/s vAviLLa rAmasvAmi cAstrulu & sons 292, Esplanade Chennai
' Akshaya Thai ' printed at ' The Sri Rama Press ' 15, Broadway Madras. 1927.
Editor ' mani tirunAvukkaracu mutaliar ' paccaappan kallUrit tamizAciriyar".

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.


சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர் : சிவஞான முனிவர்)

அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி நூல்

காப்பு

மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்
முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்
கடம்பொழி முக்கட் களிறு.

1. கடவுள் வாழ்த்து

சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு

2. வான்சிறப்பு

நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

3. நீத்தார் பெருமை

அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

4. அறன்வலியுறுத்தல்

தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்
தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

5. இல்வாழ்க்கை

இல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.

6. வாழ்கைத்துணை நலம்

மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசுயை சோமேசா - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

7. புதல்வரைபெறுதல்

பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்
சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்
தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

8. அன்புடைமை

தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து
தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

9. விருந்தோம்பல்

பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்
சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

10. இனிவை கூறல்

இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்
துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

11. செய்நன்றி அறிதல்

பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்
கொள்வர் பயன்தெரி வார்.

12. நடுவு நிலைமை

வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

13. அடக்கமுடைமை

எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்
சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

14. ஓழுக்கமுடைமை

தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்
ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

15. பிறனில் விழையாமை

ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

16. பொறையுடைமை

ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.

17. அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்
துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

18. வெஃகாமை

நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

19. புறங்கூறாமை

கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே
தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தோறா தவர்.

20. பயனில சொல்லாமை

சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே
துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

21. தீவினையச்சம்

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

22. ஒப்புரவறிதல்

பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்
தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை
செய்யா தமைகலா வாறு.

23. ஈகை

மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்
தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

24. புகழ்

போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்
தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்
ஈத லிசைபட வாழ்த லதுவல்லது
ஊதிய மில்லை யுயிர்க்கு.

25. அருளுடைமை

மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்
சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த
பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்
அற்றார்மற் றாத லரிது.

26. புலால் மறுத்தல்

மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

27. தவம்

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

28. கூடாவொழுக்கம்

மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி
தூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

29. கள்ளாமை

நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.

30. வாய்மை

பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு
துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

31. வெகுளாமை

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

32. இன்னா செய்யாமை

பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்
துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

33. கொல்லாமை

வேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீங்கும் வினை.

34.நிலையாமை

ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்
தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

35. துறவு

கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்
தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

36.மெய்யுணர்தல்

காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

37. அவாவறுத்தல்

தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

38. ஊழ்

முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.

39.இறைமாட்சி

பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு.

40. கல்வி

சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப
தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

41. கல்லாமை

மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

42. கேள்வி

ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே
தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தி னூற்றாந் துணை.

43. அறிவுடைமை

அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்
துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்
அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவது
அஞ்ச லறிவார் தொழில்.

44. குற்றங்கடிதல்

ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்
வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

45. பெரியோரைத் துணைகோடல்

எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே
சுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

46. சிற்றினஞ் சேராமை

அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்
சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

47.தெரிந்து செயல்வகை

சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

48. வலியறிதல்

சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

49. காலமறிதல்

வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு
தூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

50. இடனறிதல்

காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.

51. தெரிந்து தௌிதல்

தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

52. தெரிந்து வினையாடல்

தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்
தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.

53. சுற்றந்தழால்

ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்
சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

54. பொச்சாவாமை

முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே
துப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

55. செங்கோன்மை

மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்
சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.

56. கொடுங்கோன்மை

ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

57. வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.

58. கண்ணேட்டம்

மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

59. ஓற்றாடல்

வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்
சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.

60. ஊக்கமுடைமை

வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

61. மடியின்மை

பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி
தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

62. ஆள்வினையுடைமை

கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே
தோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

63. இடுக்கண்ணழியாமை

என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்
துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

64. அமைச்சு

கால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்
தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லதமைச்சு.

65. சொல்வன்மை

நித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்
துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்
ஆக்கமும் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு

66. வினைத்தூய்மை

தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்
எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று

67. வினைத்திட்பம்

செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்
துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னாருடைத்து.

68. வினைச்செயல்வகை

வெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்
துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள
முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

69. தூது

தன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி
துன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது.

70. மன்னரைச்சேர்ந்தொழுகல்

மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

71. குறிப்பறிதல்

அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்
துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்
ஐயப் படாஅ தகத்த துணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

72. அவையறிதல்

ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்
சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்
கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்
சொற்றெறிதல் வல்லா ரகத்து.

73. அவையஞ்சாமை

வாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்
சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல
ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

74. நாடு

மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

75. அரண்

வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.

76. பொருள் செயல்வகை

உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்
றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

77. படைமாட்சி

நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

78. படைசெருக்கு

மன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்
துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

79. நட்பு

வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.

80. நட்பாராய்தல்

போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்
தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

81. பழைமை

இல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்
தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

82. தீநட்பு

ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்
தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

83.கூடாநட்பு

தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.

84. பேதைமை

வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்
துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.

85. புல்லறிவாண்மை

இல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்
தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்
ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

86. இகல்

எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்
துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னை மென்னுஞ் செருக்கு.

87. பகைமாட்சி

ஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்
தூநறும்பூ வாளியான் சோமேசா - மான
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார் மென்மேக பகை.

88. பகைதிறந்தௌிதல்

நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

89. உட்பகை

மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.

90. பெரியாரைப்பிழையாமை

கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்
ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

91. பெண்வழிச்சேரல்

கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

92. வரைவின் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

93. கள்ளுண்ணாமை

தக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்
தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

94. சூது

முற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு
சொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.

95. மருந்து

நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்
சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய
நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

96. குடிமை

மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்
துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்
வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைபிரித லின்று.

97. மானம்

அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்
துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

98. பெருமை

தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்
சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

99. சான்றாண்மை

வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்
தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

100. பண்புடைமை

உன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்
துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று

101. நன்றியில் செல்வம்

எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்
சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

102.நாணுடைமை

புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்
துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்
நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்

103. குடிச்செயல்வகை

மற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே
சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி

104. உழவு

வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்
சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.

105. நல்குரவு

நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்
சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

106. இரவு

கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.

107. இரவச்சம்

எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.

108. கயமை

ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்
தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லாத வர்க்கு.

109. தகையணங்குறுத்தல்

வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்
தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்
உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

110. குறிப்பறிதல்

காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்
தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்
உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப்படும்.

111. புணர்ச்சி மகிழ்தல்

மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்
சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணானுலகு.

112. நலம்புனைந்துரைத்தல்

ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்
தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.

133. காதற்சிறப்புரைத்தல்

கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்
தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்
வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து.

114. நாணுத்துறவுரைத்தல்

காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்
சோமநுதற் பரவை சோமேசா - ஆமே
கடலென்ன காமமுழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.

115. அலரறிவுறுத்தல்

ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

116. பிரிவாற்றாமை

வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்
சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு
இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்
இன்னா தினியார்ப் பிரிவு.

117. படர்மெலிந்திரங்கல்

இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.

118. கண்விதுப்பழிதல்

தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்
சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்
கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

119. பசப்புறு பருவல்

கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்
சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை துற்றா ரெனின்.

120. தனிப்படர்மிகுதி

பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்
துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

121. நினைத்தவர் புலம்பல்

தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்
துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.

122. கனவுநிலையுரைத்தல்

அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்
சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ யினிது.

123. பொழுதுகண்டிரங்கல்

வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே
தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

124. உறுப்பு நலனழிதல்

ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்
சூதரா வான்மீகி சோமேசா - கோதில்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

125. நெஞ்சொடுகிளத்தல்

அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.

126. நிறையழிதல்

கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்
தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

127. அவர்வயின் விதும்பல்

சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்
சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.

128. குறிப்பறிவுறுத்தல்

சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்
துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

129. புணர்ச்சிவிதும்பல்

யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்
தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

130. நெஞ்சொடுபுலத்தல்

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்
தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே
நீயெமக் காகா தது.

131. புலவி

கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்
றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.

132. புலவிநுணுக்கம்

சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே
தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீர ராகுதி ரென்று.

133. ஊடலுவகை

காயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்
தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்
ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்
கூடலிற் காணப் படும்.
This file was last revised on 20 Feb. 2002
Please send your comments to the webmasters of this website.