pm logo

பிரபந்த வகை நூல்கள் - மாலை ஐந்து
கயற்கண்ணி மாலை,
களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை,
திருக்காளத்தி இட்டகாமிய மாலை,
பழனி இரட்டைமணி மாலை &
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை



Acknowledgment.
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input) : Ms. Deeptha Thattai, South Carolina, USA
Etext Preparation (proof-reading) : Mr. S. Baskaran, Chennai, India
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This file was last revised on 15 Feb 2003

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிரபந்த வகை நூல்கள் - மாலை ஐந்து

1. 1 கயற்கண்ணி மாலை,
1.2 அங்கயற்கண்ணி மாலை,
1.3 கடம்பவன வல்லி பதிகம்,
1.4 ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி
2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை
3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை
4. பழனி இரட்டைமணி மாலை
5. மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
-------

1.1. கயற்கண்ணி மாலை

காப்பு
(தரவு கொச்சகக் கலிப்பா)

செம்மைவள மல்கு திருக்கூட லங்கயற்கண்
அம்மை யடியிணையை யன்பினுடன் யான்பாடத்
தம்மை மறந்த தபோதனர்முன் வந்தருளும்
வெம்மைதவி ரருட்சித்தி வேழத்தைப் போற்றுவமே.

நூல்
(கட்டளைக் கலித்துறை)

தடையேனைத் தீயவர்ச் சார்ந்துதுன்
      மார்க்கஞ் சரிக்கவிழை
நடையேனை வஞ்சமுஞ் சூதும்பொல்
      லாங்கு நறுமொறுப்பும்
உடையேனை நின்னை யொருகாலத்
      தேனு முரைத்தறியாக்
கடையேனைக் காத்தரு டென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே.       [1]

மாத்தரு நீழ லிடத்தா
      னிடத்து வளர்ந்தகிலம்
பூத்தருள் வாயருள் பூண்டருள்
      வாயன்பர் புந்திவிழை
வீத்தருள் வாயன்பு சற்றுமில்
      லேனையு மெண்ணலின்றிக்
காத்தருள் வாய்வையைத் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே.       [2]

நாவார நின்னை நவிலாது
      சைவநல் லாரியர்சொல்
தேவார பாரணஞ் செய்யாது
      வீணரைச் சேர்ந்தொழுகித்
தீவாய் நரகுக் கிரையாகு
      வேனைத் தியங்கவிடேல்
காவாய் புனல்வையைத் தென்கூடல்
      வாழும் கயற்கண்ணியே.       [3]

வேஞ்சின மாதி மிகுத்தே
      சிதடரை மேவிநிதம்
தாஞ்சிவ பூசை செயாதே
      திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
      மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே.      [4]

படித்தேன் படித்தவை சொல்லும்
      திறமை படைத்தலின்றித்
துடித்தேனி னன்பர்கள் போலே
      யெவரும் சொலும்பொருட்டு
நடித்தே னினிச்சகி யேனென்னைக்
      காத்தரு ணாரணிபூங்
கடித்தே னுகுபொழிற் றென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே.       [5]

வஞ்சன் பிறரை யிகழ்ந்தேசுந்
      தீமை மலிந்தியலும்
நெஞ்சன் கொடியரைக் கொண்டாடி
      வாடுபு நின்னைவிட்ட
தஞ்சனென் றாலுநின் மஞ்சனன்
      றோவெற் றளரவிடேல்
கஞ்சன் புகழ்வுறு தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே.       [6]

வாரணி கொங்கை மடவார்
      கலவி மயலிற்பட்டே
தாரணி யேசத் தளர்வேனைத்
      துன்பிடைத் தள்ளிவிடேல்
நாரணி யாருயிர் நாயக
      மேமுன் நரலைதந்த
காரணி கண்ட ரிடத்தாய்தென்
      கூடற் கயற்கண்ணியே.       [7]

நிந்தனைக் கொள்கல மானேனை
      நீசனை நேயமிலாப்
பந்தனைப் பாவியை மக்கட்
      பதடியைப் பார்த்தருள்வாய்
சிந்தனை வாக்கினுக் கெட்டாத
      சிற்பரன் றேவிசெவ்வேற்
கந்தனை யீன்றரு ளன்னேதென்
      கூடற் கயற்கண்ணியே.       [8]

பண்ணே னெனினும் நினைத்துதி
      பூசனை பண்ணிப்பின்னர்
உண்ணே னெனினு முனதடி
      யார்தமக் குற்றசெய்ய
நண்ணே னெனினும் நினைவலஞ்
      செய்து நலமடையக்
கண்ணே னெனினு மருள்வாய்தென்
      கூடற் கயற்கண்ணியே.       [9]

சையந் தனக்கு நிகராகும்
      யான்செ யதன்மமிந்த
வையந் தனக்குப் பெரும்பார
      மாமென் வடிவமந்தோ
உய்யந்த மார்க்க மறியா
      துழிதரு கிற்குமிந்தக்
கையன் றனைவிட் டிடாதேதென்
      கூடற் கயற்கண்ணியே.       [10]

பெரியா னெவனம்மி னென்றே
      தருக்குபு பேரறத்தில்
தரியா துழலும் தமியனை
      யாளத் தகுமுனக்கே
கிரியா ளரசன் றவத்தா
      லுதித்தருள் கேகயமே
கரியா னனத்தனைத் தந்தாய்தென்
      கூடற் கயற்கண்ணியே.      [11]

மெய்யா வுரைக்கின் றனனா
      லவையிடை மேவுதற்கும்
நையாத செம்பொருட் பாவோது
      தற்கு நவிலுதற்கும்
எய்யா துழலுவ னின்னன்றி
      யோர்துணை யானறியேன்
கையா வமுதக் கடலேதென்
      கூடற் கயற்கண்ணியே. [12]

மாணாத புல்லர்கள் கூட்டங்
      கெழுமி மகிழ்ந்துநின்னைப்
பேணாத நாயிற் கொடியே
      னெனினும் பெரிதுமஞ்சி
நாணாது நின்னைச் சரண்புக்
      கமையினிந் நாயினுக்குக்
காணாத காட்சி யருள்வாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [13]

இன்னம்ப ராதி யிடந்தோறு
      நாளு மெழுந்தருளும்
நின்னன் பருக்குப்பிச் சாடன
      நாமமென் நீக்கிலைநீ
முன்னம் படிதனை யீந்து
      மிதனை மொழிந்திடுவாய்
கன்னன் மொழியுடைக் கிள்ளாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [14]

மருவழி யாத்தளிர் மாநிழ
      லூடென்றும் வாழ்பவன்சொல்
இருபடி முன்ன மளித்தா
      னெனின்மற் றியைபறச்சொல்
ஒருபடி நீயளித் திட்டதென்
      னேயிஃ துரைத்தருள்வாய்
கருவழித் தாளு மமுதேதென்
      கூடற் கயற்கண்ணியே. [15]

எல்லா வுலகு மளித்தர
      சாளு மியல்புடைநீ
மல்லார் திணிபுயப் பாண்டிய
      னாட்டினை மட்டுமணி
வில்லார் முடியணிந் தேயர
      சாளும் விதமென்கொலோ
கல்லார்க் கணுகருந் தேனேதென்
      கூடற் கயற்கண்ணியே. [16]

மலையத் துவச வழுதிக்குப்
      பின்னலை வாரிதிசூழ்
வலையத்தை நீபரித் தாண்டருள்
      செய்த வகையறிந்தும்
அலையத்தை மேவு மறிவோ
      ரபலையென் பாரதென்னே
கலையத்தை நானவி லேன்வையைக்
      கூடற் கயற்கண்ணியே. [17]

புவிபாலர் முன்னம் பொருந்தியஞ்
      சாது புகன்றிடவும்
குவியாதென் புந்தி குசைநுனி
      போன்மிகக் கூர்ந்திடவும்
தவியாது கேட்பவர்க் கெல்லா
      மினிதுறச் சாற்றவுநாற்
கவிபா டவுமருள் செய்வாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [18]

தனிவா யமல னிடம்பிரி
      யாதென்றுந் தங்கியநீ
பனிவா யிமயப் பருப்பத
      ராசன்றன் பாவையென
நனிவாய் விறற்பஞ்ச வன்பாவை
      யென்ன நணுகியதென்
கனிவாய் மலர்ந்தருள் செய்வாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [19]

நாவலன் றோழமை வாய்ந்தே
      கவிஞர்க ணாயகனாம்
பாவல னென்றும் வருவா
னளகைப் பதியரசற்
காவல னாயர சர்க்கர
      சாயு மணைகுவனின்
காவலன் யாவுநின் சீரேதென்
      கூடற் கயற்கண்ணியே. [20]

புனல்வாய் பவர்சடைச் செம்மேனிப்
      பன்னகப் பூண்டிசைத்தூ
சனல்வாய் விழிமுத் தலைவா
      யயிற்படை யண்ணலென
இனல்வாய் மலையத் துவசன்
      பெருமகிழ் வெய்துறவெங்
கனல்வாய் உதித்தனை யன்றோதென்
      கூடற் கயற்கண்ணியே. [21]

முனைவாய்க் கவைச்சிகை யங்கியி
      னூடு முளைத்ததுதான்
தினைவாய் புனத்துச் சிலம்பன்
      மகிழச் சிமயமலைச்
சுனைவாய்ச்செந் தாமரை யூடுறு
      தோற்றந் துலக்கியதால்
கனைவாய் அளிமுரல் பூங்காத்தென்
      கூடற் கயற்கண்ணியே. [22]

சென்னி யிடைவிண் ணதிசூடு
      மண்ண றிருக்கரத்து
வன்னிவைத் தானென்ன வோநீயுஞ்
      செங்கையில் வன்னிகொண்டாய்
உன்னி வழிபடு வார்க்கொரு
      வாதரு ளுத்தமியே
கன்னி யிளங்குயி லேபுனற்
      கூடற் கயற்கண்ணியே. [23]

வரைவேந்தன் புத்திரி யாய்மரை
      யூடுமுன் வந்ததற்கும்
தரைவேந்தன் புத்திரி யாய்த்தழ
      லூடு சனித்ததற்கும்
நிரைவேந் துரிமைபெற் றேயர
      சாள னினக்குறுமால்
கரைவேந்தர் போற்றும் பதத்தாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [24]

அறையணி சார லிமவான்
      புரிந்த வருந்த வம்போல்
நிறையணி செல்வச் செழியற்
      கிலைகொ னிகழ்த்திடுவாய்
மறையணி நின்மணங் காணாமை
      யாற்பய வாரிவரு
கறையணி கண்ட ரிடத்தாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [25]

அனகப் பரமனுன் சாயற்கு
      நெஞ்சக மஞ்சுமென்றோ
பனகப் பணியையஞ் சாதணிந்
      தானிதைப் பன்னியருள்
எனகத் துயர்ப்பிணிக் கோர்மருந்
      தேயன்ப ரெய்ப்பில்வைப்பே
கனகச் சிலம்படித் தேனேதென்
      கூடற் கயற்கண்ணியே. [26]

எண்ணி னயனத் தினுக்குப்
      மானங்க ளெண்ணிலவால்
மண்ணி னவற்றுட் கயலென்ன
      தன்மம் வகுத்ததுவோ
பெண்ணின் மணிநின் றிருவிழி
      யோடுறப் பெற்றமையால்
கண்ணின் மணியுறை பாவாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [27]

முற்றா தரவு படைத்தேநின்
      பாத முளரிதனைப்
பற்றா வனுதின மெண்ணுபு
      போற்றுமிப் பாதகன்பாற்
சற்றா தரவும் படைத்தா
      யிலையித் தரணியுளோர்
கற்றாவென் பார்நினை யென்னேதென்
      கூடற் கயற்கண்ணியே. [28]

சீதங் கமழும் பிறையணி
      செஞ்சடைச் செல்வரொடும்
ஏதங் கமழு மிருளாரென்
      னுள்ளத் தெழுந்தருள்வாய்
வேதங் கமழும்செவ் வாயர்க்குப்
      பாலருள் வித்தகியே
காதங் கமழும் பொழில்சூழ்தென்
      கூடற் கயற்கண்ணியே. [29]

அண்டார் புரஞ்செற்ற வெம்மானோ
      டுன்னை யபேதமென
விண்டார் சமழ்ப்புற நீகன்னி
      யாகி விரிதிரைசூழ்
ஒண்டா ரணியை நெடுங்கால
      மாண்ட வுதுவென் கொலோ
கண்டார் மொழியுடைக் கிள்ளாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [30]

முன்ன மதனின் மணக்கோலங்
      கண்டிட முப்புவனம்
மன்னு மனைவரும் வந்து
      மகத்திய மாதவன்றான்
என்னந்த வுத்தரத் தேகா
      திருந்தன னென்றெய்வமே
கன்னங் கறுத்த குழலாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [31]

செய்தவ மேது மறியே
      னினைத்துதி செய்தறியேன்
வெய்தவ மாற்ற விழைவே
      னினதருள் மேவுவனோ
மைதவழ கோதண்ட வெற்பண்ணல்
      வாமம் வளர்கரும்பே
கைதவன் செய்தவப் பேறேதென்
      கூடற் கயற்கண்ணியே. [32]

மாட்சி பெறுகவி வல்லோர்கள்
      யாரும் வணங்கியுனை
ஆட்சி யடைந்தனர் நாயடி
      யேனு மதுநினைந்தே
நீட்சி பெறுமின் புறுகவி
      பாட நிகழ்த்துதற்குக்
காட்சி யளித்தரு டென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [33]

முளைமதி வேணிய னீயர
      சாளு முறைமையுன்னா
தளைமணி மாட மறுகூடு
      பாத வலர்வெதும்ப
வளைவிற்று மிந்தனம் விற்று
      முழன்ற வகையென்கொலோ
களைதவிர்த் தாளு மமுதேதென்
      கூடற் கயற்கண்ணியே. [34]

எல்லாஞ்செய் சித்த ரெனவேயக்
      காலத் தெழுந்தருளும்
அல்லார் களத்தர்க்கிப் பொல்லானை
      யாளுமென் றன்னவரோ
டுல்லாச மாக விருக்கும்
      பொழுதி லுரைத்தருள்வாய்
கல்லார் தமையும் புரப்பாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [35]

அற்பக னின்ற னடித்தா
      மரையிணைக் கன்புசெய
நிற்பதன் றால்நெஞ்ச மென்செய்கு
      வேனிதை நிற்கவருள்
வெற்பக மேய கிளியே
      வருண்மழை மின்னிடையே
கற்பக மேதெள் ளமுதேதென்
      கூடற் கயற்கண்ணியே. [36]

வெள்ளிப் பிறங்கலை யில்லாவில்
      லாக்கொண்டு மேருவினைத்
துள்ளித் திரிவிடைச் சொக்கேசர்
      வீதிக டோறுமிரந்
தள்ளிக் கொடுமென வேற்றிடு
      வாரைய மாங்கதென்னே
கள்ளக் கயவர்க் கரியாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [37]

ஒண்ணுதன் மங்கையர் போர்க்கோலந்
      தாங்கி யுடன்வரப்போய்
விண்ணுதல் வெள்ளி விலங்கற்
      கணங்களை வென்றுபின்னும்
அண்ணுதல் செய்து சினங்காட்டி
      நின்றிடு மாற்றல்கண்ட
கண்ணுத லுண்மகிழ் வென்னோதென்
      கூடற் கயற்கண்ணியே. [38]

மனையொடு மக்களு நிச்சய
      மென்று மனங்கொடுன்னைத்
தினையள வேனு நினையாத
      பாவியைச் சிந்திப்பையோ
வனைமறை யந்தமு மன்பர்க
      ணெஞ்சமும் வாழ்மணியே
கனைகடல் சூழ்புவி யேத்துதென்
      கூடற் கயற்கண்ணியே. [39]

உயல்விளை யாடு மனத்தாரை
      யென்று முறுதலின்றி
அயல்விளை யாடு மனவண்டுன்
      பாத வலர்பற்றுமோ
புயல்விளை யாடு மிமவான்
      பயந்திட்ட புத்தமுதே
கயல்விளை யாடும் வயல்சூழ்தென்
      கூடற் கயற்கண்ணியே. [40]

வண்டேன் முடியிம வானுக்கும்
      வீர வழுதிக்குநீ
ஒண்டே னலர்வா யெரிவாய்
      மகளா யுதித்தமையால்
பண்டே யுறுமடி யார்க்கௌி
      யாயெனப் பன்னுவதைக்
கண்டேனுன் பாலடி யேன்புனற்
      கூடற் கயற்கண்ணியே. [41]

திரையற்ற தோற்றக் கடல்வீழ்ந்து
      வான்கரை சேர்தலின்றி
வரையற்ற துன்ப மடைந்தேனுக்
      காரருள் வைப்பதென்றோ
உரையற்ற மாற்றுயர் பொன்னேமின்
      னேரிடை யுத்தமியே
கரையற்ற வின்பக் கடலேதென்
      கூடற் கயற்கண்ணியே. [42]

ஏகுற்ற வென்மன வானர
      முன்ற னிருகமல
வாகுற்ற பாத மலர்பற்று
      மோவிம வான்மகளாய்ப்
போகுற்ற செல்வி புராதனன்
      வாமம் பொருந்தனமே
காகுத்தன் சோதரி தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [43]

குயவாய் மகளிர் நலவாய்
      நுடங்கு கொடியிடைவாய்
நயவா யுறுசெய்ய வாய்நசை
      மேவுபு நான்மெலிந்தேன்
பயவாய் விழுந்து வருந்தா
      வணமருள் பாலிப்பையே
கயவாய்க்கு முத்தி தருங்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [44]

கூற்றான தொன்றுண்டென் றெண்ணாது
      வீணசை கொண்டுநல்லோர்த்
தூற்றா வுழலுமிந் நாயேனை
      யாளத் துணிவைகொல்லோ
நீற்றா னிடமுறு நின்மலை
      யேபன் னியமமுந்தென்
காற்றான் மணங்கமழ் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [45]

சென்னித் தலத்து மதியணிந்
      தாடுஞ் சிவபெருமான்
வன்னித் திருநய னத்தான்
      மதன்றனை மாய்த்ததுதான்
என்னித் திலவெண் ணகையா
      யியம்புதி யென்றனக்குக்
கன்னிப் பெடையனப் பூந்தடக்
      கூடற் கயற்கண்ணியே. [46]

ஆரா வமுத மனையநின்
      சீரை யடிக்கடியான்
பாரா யணஞ்செயச் செய்வாய்பின்
      னாற்கவி பாடச்செய்வாய்
நாரா யணனுக் கருமைச்
      சகோதரி நாரணிநீர்க்
காராருஞ் சோலை புடைசூழ்தென்
      கூடற் கயற்கண்ணியே. [47]

ஆண மிலாத மடவோர்கள்
      கூட்டத் தகப்பட்டுளக்
கோணன் மரீஇக்குலை வுற்றன
      னாலைய கோவென்செய்வேன்
பேண வருமருந் தேயிம்
      மயக்கப் பிசாசொழியக்
காண விழைந்தனன் றென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [48]

திருவளிப் பாய்மிடித் தீர்வளிப்
      பாயெனைச் சேர்ந்தவருக்
குருவளிப் பாய்நல் லுணர்வளிப்
      பாய்கவி யோதத்திறம்
மருவளிப் பாய்நன் மனமளிப்
      பாய்மிக வாதைசெயும்
கருவழிப் பாய்புனற் றென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [49]

எண்ணிற் கடங்குத லின்றாற்
      றுயர மிருமிடியும்
புண்ணிற் றழற்சுடு கோல்நுழைந்
      தாங்குப் புகுந்தலைக்கும்
மண்ணிற் றுணையுனை யல்லாம
      லாரிதை மாற்றியருள்
கண்ணிற் பருகுசெந் தேனேதென்
      கூடற் கயற்கண்ணியே. [50]

தீதுந் துயர்செயுங் காமாதி
      யாறுமென் சிந்தைநின்று
போதும் படிக்குக் கருணைசெய்
      வாய்முப் புவனமுமீன்
றேது முதுமை யுறாதுறை
      கன்னி யிளமயிலே
காதும் பவப்பகை யேபுனற்
      கூடற் கயற்கண்ணியே. [51]

ஓயாது பாழுக் குழைத்தே
      நலத்தை யொழித்துநன்னூல்
ஆயாது வீயு மடியேனைச்
      சீறி யகற்றிவிடேல்
தேயா மதிமுகச் செவ்வா
      யருள்விழிச் சிற்றிடையாய்
காயா மலர்நிறத் தாயேதென்
      கூடற் கயற்கண்ணியே. [52]

ஆவா மனத்திற் கடிமைப்பட்
      டேபுல னைந்தின்வழி
ஓவா துழலு மடியேற்குன்
      சேவை யுறுதலுண்டோ
நீவா வருள்புரி வாயெனப்
      போற்றி னிலத்தொருவர்
காவாருண் டோமலர்க் காவார்தென்
      கூடற் கயற்கண்ணியே. [53]

வெங்கைக் கடகளி றன்னாரோ
      ரைவர் மெலிவுறுத்தச்
சங்கைக் கரிய துயரடைந்
      தேனெனைத் தாங்குதியால்
செங்கைப் பசுங்கிளித் தாயே
      யடியர்கள் சிந்தையுறை
கங்கைச் சடாதரன் வாழ்வேதென்
      கூடற் கயற்கண்ணியே. [54]

வானேய் கரமுடை யாயென
      மூடரை வாழ்த்திநொந்து
யானேய் துயரத்திற் கெல்லையுண்
      டோமுக்க ணெந்தையிடத்
தேனே திசைதொறுஞ் சென்றே
      யமரர்ச் செயித்தவிறற்
கானேய் குழற்குயி லேகூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [55]

சமலனின் றாளிணை தன்னை
      யுளத்திற் றரித்துறையும்
அமலரை யிம்மி யளவேனுங்
      கூடி யறிந்திலனால்
விமல மடைகுவ தென்றுகொ
      லோவலை மெல்லியல்வாழ்
கமல மனையகண் ணாய்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [56]

தெம்முகஞ் சென்று சிறுநகை
      செய்து சினந்தெரித்த
ஐம்முகன் றன்னோ டமரேற்ற
      மேன்மை யறிவன்கொலோ
வெம்முக வேற்கை யறுமுகத்
      தானையும் வெய்யதுதிக்
கைம்முகத் தானையு மீன்றாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [57]

ஊனப் பிறவி பலகோடி
      மேவி யுறுகணடைந்
தேனப்பிறவித் துயர்தனை
      மாற்றிடத் தெண்டனிட்டேன்
வானப் பிறைநுத லன்னா
      யிராவணன் வாழ்த்துமறைக்
கானப் பிரிய னிடத்தாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [58]

மட்டுறு கூந்தல் மடவார்
      நயன மயல்வலையிற்
பட்டுறு நெஞ்சம் பலவிடத்
      தோடுதல் பன்னவும்யான்
எட்டுணை யேனு மிரங்கா
      திருந்தனை யீதழகோ
கட்டுரைத் தேனினிக் கூறேன்றென்
      கூடற் கயற்கண்ணியே. [59]

பேணா தவனின் றிருவடித்
      தாமரை பேணியன்பு
பூணா தவனின் னடியார்க்கண்
      டேயச்சம் பூண்டுமிக
நாணா தவனெனி னுந்துணை
      வேறிலை நாயன்றுயர்
காணாத வாறென் கொலோகூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [60]

அசடர்கள் கூட்டங் கெழுமி
      யவருள் ளவாவலுற
நிசமணு வேனு மிலாம
      னவின்று நிதநிதமும்
வசைமிகத் தேடி மெலிந்தேனந்
      தோநல் வழியறியாக்
கசடனை ஆள்வைகொல் லோகூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [61]

இரியாத தீப்பழி யெய்தின
      னானின்னன் பெள்ளளவும்
தரியாத பாவி யெனினும்
      விடேல்விடிற் றாரணியில்
உரியா ரெவர்நின்னை யல்லாது
      பின்னு முரைப்பதென்னே
கரியா னனத்த னனையேதென்
      கூடற் கயற்கண்ணியே. [62]

எண்ணிய வெண்ணிய வெல்லாந்
      தவிரவிவ் வேழைதனைப்
பண்ணிய கூத்திவை போதுமன்
      னேயினிப் பார்த்தருள்வாய்
புண்ணியர் முச்சுடர்க் கண்ணினர்
      வாமத்துப் புத்தமுதே
கண்ணிய பல்வளத் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [63]

ஆமனை நீரென் றுலுத்தரைப்
      பாடி யவர்வசிக்கும்
மாமனை தோறும் புகுந்தே
      சலிக்கும் வறியவனை
யோமனை நின்னை மணவாள
      ரைக்கவி யோதச்செய்வாய்
காமனைக் காய்ந்தவர் வாழ்வேதென்
      கூடற் கயற்கண்ணியே. [64]

ஓதிய துன்பங்கட் கெல்லையுண்
      டோவிவை யுற்றடியேன்
நீதி யணுவு மிலாதே
      யொழிந்தன னீயருள்வாய்
வேதியர்க் காதியன் வாமத்து
      வாழ்விளக் கேயவுணர்க்
காதிய வேற்கர னன்னாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [65]

வாய்ந்த மதுர கவிபா
      டவுமவ் வளக்கவியை
ஏய்ந்த புலவ ரிடைப்பிர
      சங்கம் மியற்றவுஞ்சீர்
வேய்ந்த வவர்கள்கொண் டாடவு
      நீயருள் வெய்யவரைக்
காய்ந்த கருணைக் கடலேதென்
      கூடற் கயற்கண்ணியே. [66]

பொருத்த முறுதமிழ்ப் பன்னூலு
      மாய்ந்தென்னோர் போதுநில்லா
துருத்த மறவிக் கடற்படிந்
      தேயல்ல லுற்றுமிக
வருத்த மடைந்தன னற்கவி
      பாடிட வாஞ்சையுற்றேன்
கருத்தை முடித்திகண் டாய்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [67]

திடனார் தமிழ்மொழிப் பன்னூல்க
      ளாய்ந்துந் தௌிவின்றியுள்
மடனார்ந்த வென்னை விடாதே
      யுனையுமிம் மண்சுமக்கும்
படநாகம் பூண்ட பரனையும்
      பாடும் படிக்கருளல்
கடனா முனக்கனை யேகூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [68]

மாவித் தகமுறு நின்றிருக்
      கோல மனம்பொருந்தல்
ஓவிப் புவியி லுழல்வேனை
      யாள வுறுவைகொல்லோ
வாவித் தனிப்பெரு வாளைதென்
      றாற்றின் வகையுதிர்க்கும்
காவித் தடம்புடை சூழுந்தென்
      கூடற் கயற்கண்ணியே. [69]

ஊனம் புரியும் பொறியைந்தின்
      சேட்டை யொழித்துநித்தம்
மோனம் புரியும் படிக்குறு
      மோவிந்த மூடனுக்கு
வானம் புரியு மலர்ப்பதத்
      தாய்மது வண்டருந்திக்
கானம் புரியு மலர்ப்பொழிற்
      கூடற் கயற்கண்ணியே. [70]

சீருந் தளையுஞ் சிறந்தே
      பொருட்சுவை சேரகத்தின்
நாரு நவரச மும்பெறு
      பாடல் நவின்றிடுதற்
கோரு முனம்வர நீயருள்
      வாய்மிசை யொண்பிறையும்
காரும் படியு மதில்சூழ்தென்
      கூடற் கயற்கண்ணியே. [71]

ஆவா பிறவிக் கடல்வீழ்ந்து
      மாழ்கி யவலமுறீஇக்
காவா ரிலாது வருந்துமிந்
      நாயைக் கடைக்கணிப்பாய்
தேவாதி தேவ ரிடத்தே
      வளருந் திகழொளியே
காவார் மதுரைத் திருநகர்
      வாழுங் கயற்கண்ணியே. [72]

விஞ்சத் தனங்களை யீட்டிட
      வாசையில் வீழ்ந்துழலும்
நெஞ்சத்த னின்னை யடுத்தேன்
      புலவர்த நேரினின்று
செஞ்சொற் றமிழ்க்கவி யோதிட
      வாரருள் செய்திடன்னே
கஞ்சத் தடம்புடை சூழுந்தென்
      கூடற் கயற்கண்ணியே. [73]

பொய்யன்புல் லோர்கள் குழுவதை
      நாளும் புகன்றுழலும்
வெய்யன்பொல் லாத வினைபுரி
      வீணன் விழைந்தியற்றும்
குய்யன் கரிய விழிமாத
      ராசையைக் கொண்டுழலும்
கையனென் றாலு மருள்வாய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [74]

விண்ணெதி ரின்பமுஞ் சும்மை
      மிகுத்த விரிகடல்சூழ்
மண்ணெதி ரின்பமும் வேண்டேனின்
      பாத மரைமலரை
எண்ணெதி ரெண்ணி யிருப்பே
      னருளொடு மேழையின்றென்
கண்ணெதிர் தோன்றுவ தென்றோதென்
      கூடற் கயற்கண்ணியே. [75]

வன்னெஞ்சர் தம்மை மதித்தேநின்
      பேரை மறந்துழலும்
புன்னெஞ்சன் மாதர்கள் போகத்தை
      நித்தம் புகன்றவர்பாற்
சென்னெஞ்சன் மூவகைத் துன்ப
      நினைத்தல்செய் யாதிருக்கும்
கன்னெஞ் சனைக்கை விடாதேதென்
      கூடற் கயற்கண்ணியே. [76]

தண்டேன் மொழிமனை யன்னை
      பிதாதமர் தம்முறவை
விண்டேன்மற் றொன்றையும் வேண்டே
      னிவர்தமை மேவுதலால்
உண்டே யெனிற்பெருந் துன்பமுண்
      டாலென் றுறுதியதாக்
கண்டேனெஞ் சூடுநிற் கொண்டேன்றென்
      கூடற் கயற்கண்ணியே. [77]

நாவார நின்னை நவிலா
      திருந்துபுன் னாரியர்பால்
ஓவா திருப்பினு மிவ்வீ
      ணனையரு ளோடிங்ஙனே
நீவா வெனவழைத் தானந்த
      வாரி நிறையச்செய்து
காவா யெனிற்றுணை யாவர்தென்
      கூடற் கயற்கண்ணியே. [78]

வானா தரித்திலன் மண்ணக
      மேவி மருவுமின்பம்
தானா தரித்திலன் சாதுகை
      மாந்தர்கள் சங்கமுற
நானா தரித்தனன் மெய்ம்மையி
      தேயிங்ங னல்கு கண்டாய்
கானார் பொழில்புடை சூழுந்தென்
      கூடற் கயற்கண்ணியே. [79]

சீரினை மேவிய செந்தமிழ்
      கற்றுந் தௌிதலின்றிப்
போரினை மேவிய வீணனைக்
      காத்தருள் புத்தமுதே
ஆரினை மேவிய வேணியன்
      வாமத் தமரனமே
காரினை மேவிய கூந்தாறென்
      கூடற் கயற்கண்ணியே. [80]

மெய்யாக நானவில் விண்ணப்ப
      மீதிந்த மேதினிமேல்
வையா தினியென்னை நின்பாதப்
      போதிடை வைத்தருள்வாய்
நெய்யார் கருங்குழன் மானே
      பசுந்தத்தை நித்தமுறை
கையாயை யானனன் வாழ்வேதென்
      கூடற் கயற்கண்ணியே. [81]

மெச்சிப் பதிதர் செயறனை
      வீண்வழி மேவலுறும்
துச்சன் றனையு னருட்கிலக்
      காக்கித் துயர்களையாய்
உச்சிப் பிறையுடை யானிட
      மேய வொருகுயிலே
கச்சிப் பதியிற் கரும்பேதென்
      கூடற் கயற்கண்ணியே. [82]

பேண வமைபுயற் கூந்தலும்
      பாதிப் பிறைநுதலும்
மாண வமைகணை நோக்கமுஞ்
      சாந்த மதிமுகமும்
ஏண மமைந்த வபய
      வரத விருகரமும்
காண வருள்புரி தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [83]

ஆவா மிகவு மவமதிப்
      பாரோ டலைந்தலைந்து
நாவாய் புலர்ந்து திரிவே
      னொருவழி நண்ணச்செய்து
நீவா வெனக்கவி மாரி
      பொழிந்திட நீயருளிக்
காவா திருப்பதென் றென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [84]

அத்தனைக் கொன்ற வழிதகை
      யாளனை யன்றருளும்
நித்தனைக் கூறிடு நீயருள்
      சற்றிந்த நீசன்றன்பால்
வைத்தனை யென்னி லெனைப்பொரு
      வாரெவர் மாமயிலூர்
கத்தனை யீன்ற வனையேதென்
      கூடற் கயற்கண்ணியே. [85]

போற்ற வறிந்தில னின்னைமுன்
      னோர்கள் புகன்றதுதி
சாற்ற வறிந்திலன் றாழ
      வருந்திலன் றண்மலர்கள்
தூற்ற வறிந்தில னென்னையு
      மாளத் துணிகுவையோ
காற்ற லறுவளத் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [86]

வஞ்ச மலரு முளத்தார்கள்
      கூட்ட மருவிப்பின்னும்
நஞ்ச மலரும் விழியா
      ரெழிலை நயந்துதுயர்
நெஞ்ச மலருங் கொடியேனைக்
      காத்திட னின்கடனே
கஞ்ச மலரும் புனற்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [87]

குன்றைக் குழைத்த பரனா
      ரகலங் குழைத்தருணீ
இன்றைக் கடியன் மனங்குழை
      யாமைமற் றென்னையெனைப்
பின்றைப் புரப்பவர் யாவர்கண்
      டாய்பசுப் பேசிடிற்றன்
கன்றைப் புரத்தல் கடனேதென்
      கூடற் கயற்கண்ணியே. [88]

மிடியாது மின்றி யிருப்பவுங்
      கல்வி விதமனைத்தும்
வடியாது நித்தம் பெருகவுஞ்
      செந்தமிழ் வான்கவிதை
ஒடியாது நித்தம் நவிலவுஞ்
      செய்தெனை யுத்தமிநீ
கடியா தருள்புரி தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [89]

மாப்பது மாசனி தவ்வையின்
      சார்பையென் மாட்டினிநீ
சீப்பதென் றோவென்றன் வல்வினை
      யாய திரள்வனத்தைத்
தீப்பதென் றோநின்றன் சீரடி
      யாரிடைச் சேர்த்தெனைநீ
காப்பதென் றோவருட் டென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [90]

எல்லாச் செயலு முனதரு
      ளாகவு மென்னையென்னே
அல்லாப்ப விட்டனை யென்செய்கு
      வேனினி யையங்கொலோ
பொல்லாக் கொடுமன நின்றில
      தாலருள் பூண்டமனம்
கல்லாச் சமைந்ததென் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [91]

சாணாம் வயிற்றுக்குப் பல்கோடி
      தீமைக டாம்புரிந்து
மாணா வுலுத்தரை வள்ளன்மை
      யீரென்று வாழ்த்திச்சற்றும்
நாணா துழல்கின்ற நாயேன்
      படுதுய ரங்கனைத்தும்
காணா திருப்பதென் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [92]

வன்னெஞ்சக் கள்வருக் குள்ளே
      யொளித்து வழிபட்டுறு
நன்னெஞ்ச வன்பர்க்குத் தோன்றுமன்
      னேயிந் நலமிலியாம்
புன்னெஞ்சத் தீய னினைந்தே
      பணிந்து புகழவுநீ
கன்னெஞ்சை யாகிய தென்னோதென்
      கூடற் கயற்கண்ணியே. [93]

செற்றார் புரஞ்செற்ற தேவேச
      னோடென்றன் சிந்தையிடை
உற்றா தரவி னுறைந்தருள்
      வாய்விண் ணுலகுரிமை
பெற்றானைத் தாக்கும் விருத்திரப்
      பேயைப் பெயர்த்ததென்று
கற்றார் வழுததுறுந் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [94]

விரிசா கரத்தி னிடைத்துரும்
      பென்ன மிகவலையும்
பரிசார்ந்த நெஞ்சை நினையே
      நினைக்கப் பணித்தருள்வாய்
தெரிசாது சங்க சிரோமணி
      சீறிடத் தேய்ந்துழலும்
கரிசாபந் தீர்த்தருள் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [95]

தாமம் வனைகுழன் மங்கையர்
      கொங்கைச் சயிலநினைந்
தேம மிலேனைப் புரந்தாள
      நீசிறி தெண்ணுவையோ
தேமலர்ச்சோலை மணவூ
      ருறைகுல சேகரன்செய்
காமர் நகரெனுந் தென்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [96]

சௌரியம் பேசி யுடல்பொரு
      ளாவி சதமென்றெங்கும்
பௌரிகொ டீய கொடியேனை
      யாண்டருள் பண்ணுவையோ
ஒளரச னாக வயில்வே
      லனைப்பெற்ற வன்னைநலக்
கௌரிய னீன்ற மயிலேதென்
      கூடற் கயற்கண்ணியே. [97]

எண்களிக் குந்நின தம்புயத்
      தாளினை யெண்ணியெண்ணி
மண்களிக் குஞ்சுவை சேர்கவி
      பாட வரந்தருவாய்
விண்களிக் குங்கயி லைக்கிரி
      நாதனை மேவிமணம்
கண்களிக் கச்செயுங் கண்ணேதென்
      கூடற் கயற்கண்ணியே. [98]

சாலாத தீயரைச் சார்ந்தே
      துதிபல சாற்றிநின்றன்
பாலா தரவு சிறிதுமி
      லேனைப் பதைப்பவிடேல்
மேலா மமல னிரசத
      மன்றில் வியாக்கிரத்தின்
காலானுக் காடி யருள்கூடல்
      வாழுங் கயற்கண்ணியே. [99]

கண்டோ மொழிமுலை செண்டோ
      வெனமங் கையரைநிதம்
விண்டோய் விலாதுழல் வீணணை
      நீகை விடேலமலாய்
குண்டோ தரன்பசி தீரவெண்
      சோறு கொடுத்துணலைக்
கண்டோ விலாமகிழ் கொண்டோய்தென்
      கூடற் கயற்கண்ணியே. [100]


1.2 அங்கயற்கண்ணி மாலை

(தரவு கொச்சகக்கலிப்பா)

சீறுதரு மூடர்கடஞ் சேவைகளே செய்தொழுகிப்
பேறுதரு நின்னருளைப் பேணேனை யாள்குவையோ
கூறுதரு குறட்கன்னக் குழியினொடு வையையெனும்
ஆறுதரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [1]

குன்றுவரு கொங்கையுடைக் கோதையர்கள் மேனிதொறும்
சென்றுவரு தீமைமிகு சிந்தையனை யாள்குவையோ
கன்றுவரு மானணிகைக் கண்ணுதலா லெழுகடலும்
அன்றுவரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [2]

உண்ண லுடுத்த லுறங்கன் முதலியவே
நண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ
விண்ணடைந்தாங் கின்பநுகர் வீரன்மல யத்துவச
அண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [3]

குன்றுவளை மலர்க்கரத்துக் கோவையுநின் னையுமதியா
தின்றுவளைக் கரமடவார்க் கிரங்குமெனை யாள்குவையோ
சென்றுவளை புகழ்மிகுமோர் செழியனிந் திரன்முடிமேல்
அன்றுவளை யெறிகூடல் அங்கயற்க ணாயகியே. [4]

கடித்தவெயி றுடைச்செங்கோற் காலன்றண் டனைகருதா
தொடித்தவற வினைமிகவு முடையேனை யாள்குவையோ
கடித்தபொழில் மேருவினைக் கைச்செண்டி னுக்கிரன்முன்
அடித்தபெரும் பொழிற்கூடல் அங்கயற்க ணாயகியே. [5]

வெங்கணர்கண் டீவினையே விழைந்துன்சந் நிதியணுகா
திங்கணுக ரறக்கடைசெய் திருப்பேனை யாள்குவையோ
எங்கணரு ளெனுமுனிவர்க் கீரிருவே தப்பொருளை
அங்கணனா ரருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [6]

குயிலோ கிளியோவிக் கோதையர்கள் மாற்றமென்று
மயலே மிகுத்துழலிவ் வஞ்சகனை யாள்குவையோ
வெயிலாரும் பூணணிகள் மேவுக் கிரவரசா
அயிலோன் வருகூடல் அங்கயற்க ணாயகியே. [7]

இன்பினொடு நின்பெருமை யெண்ணியொழு குதலின்றித்
துன்பினொடு நாளகற்றுந் துன்மதியை யாள்குவையோ
வன்பினொடு மெம்பெருமான் வளைசெண்டு வேலொருசேய்க்
கன்பினொடு மருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [8]

வெயில்விடுத்த செம்மேனி விமலனொடு நினைநினைப்போர்ப்
பயில்விடுத்த முழுமூடப் பாதகனை யாள்குவையோ
மயில்விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல்சுவற
அயில்விடுத்த திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [9]

முக்காலங் களுமுணரும் மூதறிஞர் தமைச்சார்தல்
எக்கால மெனநினையா திருப்பேனை யாள்குவையோ
நக்கால நுகர்ந்தபிரா னவமணியி னியலமைச்சர்க்
கக்காலம் பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [10]

வெம்புபசி பிணிதாகம் வெவ்வறுமை யடைந்துன்னை
நம்புதலி லாதுழலு நாயேனை யாள்குவையோ
பம்புதிரைக் கடலதனைப் பசுபதிவே ணியினுறுநான்
கம்புதமார் தருகூடல் அங்கயற்க ணாயகியே. [11]

பாகியலு மொழிமடவார்ப் பற்றிநினைப் பற்றாது
போகியபுல் லருக்கரசாம் புன்மையனை யாள்குவையோ
வாகியல்விண் மழைதடுக்க மழைமுகில்கள் நான்மாடம்
ஆகியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [12]

பாடியலுந் தமிழ்நூல்கள் பலபடித்து மறிவின்றி
வாடியநெஞ் சகமுடைய மாண்பிலியை யாள்குவையோ
தேடியமா றனக்கரியர் சித்தரென வந்தெல்லாம்
ஆடியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [13]

தேனையுறழ் சுவைமிகுத்த செய்யுளினின் றனைத்துதியா
தேனையதி பாதகனை யீனனைநன் காள்குவையோ
மானையணி மலர்க்கரத்து வள்ளலார் கழையினைக்கல்
லானையுணப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [14]

குன்றெய்து கொங்கையுடைக் கோதையர்கட் காளாகி
இன்றெய்தும் பழியினனா யிருப்பேனை யாள்குவையோ
மன்றெய்து நடமுடையார் வல்லமணர் விடுகளிற்றை
அன்றெய்து செறுகூடல் அங்கயற்க ணாயகியே. [15]

மருத்தகுழன் மடவார்கள் வாஞ்சைமரீஇ மனமலையும்
ஒருத்தனைக்கா சினிச்சுமையா வுற்றேனை யாள்குவையோ
விருத்தன்முதல் மூன்றுருவ மேவியருட் பரனாடும்
அருத்தியுறு வளக்கூடல் அங்கயற்க ணாயகியே. [16]

வாடிமன மயங்காதுன் மலர்ப்பதத்தை யின்கவியாற்
பாடிநிதங் களித்திடுமா பயிற்றியெனை யாள்குவையோ
தேடிவரு புகழரச சேகரற்குப் பரன்மாறி
ஆடியருள் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [17]

வெஞ்சினக்கூற் றுவன்புரியும் வெந்தண்டம் மருவாதுன்
கஞ்சமலர்ச் சேவடியைக் கருதேனை யாள்குவையோ
நஞ்சினழ குறுகளத்து நம்பனொரு பெண்பழிக்கா
அஞ்சினவான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [18]

நீண்டவிழி மங்கையரை நேசித்து நினைவணங்கா
தீண்டவறக் கடைபுரிந்தே யிழிந்தேனை யாள்குவையோ
மாண்டதிருத் தந்தைதனை மாய்த்தனையைப் புணர்ந்தோனை
ஆண்டருளுந் திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [19]

துங்கமுறு குருவடியைத் தொழலின்றி நாள்கழியாப்
பங்கமுறு பழிமிகுத்த பதகனையு மாள்குவையோ
புங்கமுறு குருமனையைப் போற்றாது விழைந்தோன்றன்
அங்கமறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [20]

இரவைநிகர் குழல்வாட்க ணேந்திழையார் தமைவிழைந்தே
உரவையகன் றலக்கணுறீஇ யொழியேனை யாள்குவையோ
பரவையமண் பதகர்விறற் பாண்டியன்மேல் விடுத்தவிட
அரவையறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [21]

பாவையுரைத் துனதுமலர்ப் பதம்பணித லொழிந்திந்த
நாவைவறி தேசுமக்கும் நாயேனை யாள்குவையோ
கோவைவெறுத் தேயமணக் கொடியர்விடுத் திடவந்த
ஆவையொழித் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [22]

குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்
இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ
தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா
அழைத்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [23]

இளித்த செயலு மிழிவுடையோர்ச் சேர்ந்து
களித்த மனமுமுடைக் கள்வனையு மாள்குவையோ
ஒளித்த நிதிய முலவாக் கிழியொருவற்
களித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [24]

இடைந்த செயலுநனி யேக்கறவும் புல்லருக்
குடைந்த மனமு முடையேனை யாள்குவையோ
மிடைந்த வளைகடமை மெய்ப்பர மன்வீதி
அடைந்து பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [25]

பொருளும் மனையும் புதல்வரும் மெய்யென்று
மருளுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
தெருளுமட வார்க்கட்ட சித்தி களைப்பெம்மான்
அருளுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [26]

படையாள் விழியவரைப் பார்த்துருகி நின்னை
உடையா ளெனமதியா துற்றேனை யாள்குவையோ
நடையாள் வளவனுக்கு நாத னருளிவிடை
அடையாளஞ் செய்கூடல் அங்கயற்க ணாயகியே. [27]

கருத்து மொழியுமிந்தக் காயமும் வேறாகி
இருத்துந் துயர்க்கிடமா மீனனையு மாள்குவையோ
செருத்துன் படைபடைக்குத் தேவன் புனல்வைத்
தருத்தும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [28]

பாற்றுங் கொடுமை படைத்தே யறவழியை
மாற்றுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ
போற்றுந் தெரிவை பொருட்டமலன் செம்பொன்மிக
ஆற்றுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [29]

பாழ்த்த புறச்சமயப் பாழை யடைந்துபிறர்
தாழ்த்த வருந்தும் தமியேனை யாள்குவையோ
காழ்த்த பகையுடைய காவலனைப் பாம்புரியில்
ஆழ்த்தும் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [30]

பலவா தனைமருவிப் பற்றிகந்து நெஞ்சம்
சுலவா வுழலுமிந்தத் துட்டனையு மாள்குவையோ
உலவாநெற் கோட்டை யொருவற் கொருவனருள்
அலையார் புனற்கூடல் அங்கயற்க ணாயகியே. [31]

காமனென்ன வீனர்தமைக் கட்டுரைத்து மிக்குழலும்
தீமனத்த னாய சிறியனையு மாள்குவையோ
மாமனென வந்து வழக்குரைத்த வேணியிடை
ஆமணிவோன் மணிக்கூடல் அங்கயற்க ணாயகியே. [32]

மருளார் மனத்துன் மலரடியைப் பேணா
திருளார் குழுவோ டிணங்குமெனை யாள்குவையோ
தெருளார் வரகுணர்க்குச் சிவலோகங் காட்டியோர்
அருளாளர் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [33]

சித்திர மென்னத் திகழ்மடவார்க் காளாகிக்
குத்திர மேய கொடியேனை யாள்குவையோ
பத்திரற்கு வீணை பரிந்தே பகைவெலுமால்
அத்திரர்வாழ் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [34]

நேரலர்கட் கஞ்சியுனை நிமிடப் பொழுதேனும்
ஓரலனாய்த் தீமைமிக வுற்றேனை யாள்குவையோ
சேரலன்பாற் செல்லத் திருமுகம்பா ணர்க்கருளி
ஆரணிகோ வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [35]

நையமன நின்றனுரு நாடிப் பணிந்துதுதித்
துய்ய வறியா துழல்வேனை யாள்குவையோ
செய்யமனப் பாணர்க்குச் சேர்மழையிற் பொற்பலகை
ஐயனிடு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [36]

வசையாருந் தீய வழிமருவி நின்பால்
நசையாது மின்றியுறை நாயேனை யாள்குவையோ
இசைவாது வெல்லவோ ரேழைக் கருள்செய்
தசையா னுறைகூடல் அங்கயற்க ணாயகியே. [37]

உன்னை யுனதருளை யுன்னா தனுதினமும்
தன்னை மதித்துத் தருக்குமெனை யாள்குவையோ
மன்னை வுறச்செய்த வன்றிக் குருளைகளுக்
கன்னையனை யான்கூடல் அங்கயற்க ணாயகியே. [38]

தேக்கிய வின்பவழி தேராது துன்பவழி
ஆக்கிய வொப்பரிய வற்பனையு மாள்குவையோ
பாக்கிய வேனப் பறழ்களை மந்திரியா
ஆக்கிய கூடனகர் அங்கயற்க ணாயகியே. [39]

நின்னாம மென்று நியம முறச்செபியா
துன்னா ரருளைவிழை வுற்றேனை யாள்குவையோ
கொன்னாருங் காரிக் குருவிக் கருள்புரிந்த
அன்னான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [40]

காரை யுறழ்கரத்தா யென்று கசடர்கடம்
பேரை யியம்பியலை பேதையனை யாள்குவையோ
நாரை யுறமுத்தி நல்கி யருள்புரிந்த
ஆரையணி வார்கூடல் அங்கயற்க ணாயகியே. [41]

பாலவாய் மேவுதமிழ்ப் பாக்களினுன் றாள்பரவா
தேலவா யோதியரை யேத்துமெனை யாள்குவையோ
சாலவா யொருவழுதி தான்காணப் பாம்புசுலாய்
ஆலவா யாங்கூடல் அங்கயற்க ணாயகியே. [42]

வம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றியுனை
நம்பெய்த லில்லாத நாயினையு மாள்குவையோ
கும்பெய்து தானையுடைக் கோனஞ்சச் சுந்தரப்பேர்
அம்பெய்த கோன்கூடல் அங்கயற்க ணாயகியே. [43]

தேன்றோய் சுவைத்தமிழைத் தெள்ளித் தௌியாது
மான்றோய் விழியால் மயங்குமெனை யாள்குவையோ
ஏன்றோ ருயர்ந்தோ ரிழிந்தோ ரெனும்பலகை
ஆன்றோர்க் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [44]

களித்த வுளமுங் கசடர்தமைச் சொல்வாயும்
ஒளித்த நடையு முடையேனை யாள்குவையோ
தளித்ததொடைப் பெம்மான் றருமிக்குப் பொற்கிழியன்
றளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [45]

சித்தநா வுடல்நின்பாற் செலுத்திவழி படலின்றி
மத்தனாய்த் திரிந்திடுமிம் மாண்பிலியை யாள்குவையோ
கத்தனார் கீரனைநீர்க் கரையேற்றி யாண்டருளும்
அத்தனா ருறைகூடல் அங்கயற்க ணாயகியே. [46]

இகத்தியலும் வழியிதுவென் றெண்ணாம லின்பனைத்தும்
உகத்தியங்கி நாள்கழிக்க லுற்றேனை யாள்குவையோ
மிகத்தியங்கு கீரனுக்கு விமலரரு ளாலியலைந்
தகத்தியனார் நவில்கூடல் அங்கயற்க ணாயகியே. [47]

துங்கத்தார் நின்கோயில் தொண்டுசெயா துட்டருக்கிப்
பங்கத்தார்க் காளாமிப் பாவியினை யாள்குவையோ
சங்கத்தார் மாறு தணித்தே யராவணிந்த
அங்கத்தார் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [48]

இணங்குமற வாற்றினிடை யேகாத மூடர்
கணங்குழுமி நிற்பாடக் கல்லேனை யாள்குவையோ
பிணங்குமிடைக் காடனுளப் பேதகற்றி ஆண்டவனோ
டணங்கரசாய்க் கூடல்வளர் அங்கயற்க ணாயகியே. [49]

மலைவீசு முத்தே மயிலே மரகதமே
உலைவீசு பொன்னேயென் றோதேனை யாள்குவையோ
வலைவீசி முன்ன மணந்தபெரு மானுயிரே
அலைவீசு நீர்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [50]

கந்தடருங் களியானைக் காவலனே யெனச்சிதடன்
முந்தணவித் துதித்தலையும் முழுமகனை யாள்குவையோ
மந்தணத்தைப் பெருந்துறையின் மாணிக்க வாசகப்பேர்
அந்தணருக் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [51]

நயமாக்குஞ் செஞ்சுவைப்பா நான்கினையு மூடர்கடம்
வயமாக்கி மிகவருந்திம் மாண்பிலியை யாள்குவையோ
சயமாக்கும் பரசணிந்த சம்புமுனஞ் சம்புவினை
அயமாக்கும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [52]

குன்றோடு வல்லிரும்பாங் குணமருவி யெவ்விடத்தும்
சென்றோடுஞ் சிந்தையுடைச் சிறியனையு மாள்குவையோ
மன்றோடு மன்பர்மனம் வாழ்பரமன் பரிநரியா
அன்றோடப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [53]

எண்சுமந்த செந்தமிழை எண்ணிஎண்ணித் துன்பமரீஇப்
புண்சுமந்த நெஞ்சமுடைப் புல்லியனை யாள்குவையோ
மண்சுமந்து பின்னர் வடுச்சுமந்த மாதேவன்
அண்சுமந்த கூடனகர் அங்கயற்க ணாயகியே. [54]

பரசிற் சுகமருணின் பாதம் பணிந்துன்பால்
விரசற் குளந்துணியா வீணனைநீ யாள்குவையோ
வரசண் பையர்தலைவர் வந்தே சுரந்தீர்த்
தரசற் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [55]

துளிக்குஞ் சுவைத்தமிழைச் சொல்லித் துதியாதே
களிக்கும் பயனறியாக் கள்வனை நீ யாள்குவையோ
தௌிக்கு மறைச்சிறுவர் தீச்சமணை மாற்றி
அளிக்குந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [56]

மறம்பயனாக் கொண்டசில மானிடரைப் போற்றித்
திறம்புமதி பாதகனாந் தீயனைநீ யாள்குவையோ
புறம்பயத்துச் சான்றாம் பொருளை யழைத்த
அறம்பயனார் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [57]

வம்போடு நெஞ்சு மழையோடு கண்களுமாய்த்
துன்போடு பாவாற் றுதிக்குமெனை யாள்குவையோ
.............................மெல்லோரும் பூசையுவந்
................................................ [58]


1.3 கடம்பவன வல்லி பதிகம்

(கட்டளைக் கலித்துறை)

தூமேவு வீரந் திருஞான
      மூன்றையுந் தொண்டரெல்லாம்
தாமேவு வண்ண மளிப்பாயென்
      றான்றவர் சாற்றுதல்கேட்
டேமேவு நின்சரண் சார்ந்தே
      னிவற்றை யௌிதருள்வாய்
மாமேவு வானவர் வாழ்த்துங்
      கடம்ப வனவல்லியே. [1]

வலக்கண் டிருவிடக் கண்வாணி
      நெற்றியில் வாய்த்தொளிரும்
புலக்க ணறிவு மகளென
      நூல்கள் புகல்வதுகேட்
டலக்கண் விலக்குநின் றாளடைந்
      தேனரு ளன்பர்கள்மும்
மலக்கண் ணடையுறு கண்டீர்
      கடம்ப வனவல்லியே. [2]

விந்தா டவிக்கின்றி நின்பாத
      தாமரை மேவுறலென்
சிந்தா டவிக்கியை யாதுகொ
      லோசெக மீன்றவன்னே
சந்தா டவிசண்ப காடவி
      கற்ப தருவடவி
வந்தா ரடவி பலசூழ்
      கடம்ப வனவல்லியே. [3]

தாயா முனக்குத் தமியேன்
      குறைகளைச் சாற்றனன்றே
ஈயார் தமிழ்ச்சுவை யாயா
      ரிறுமாந் திருப்பவர்பாற்
போயா சகஞ்செய விட்டுவிடே
      லென்றன் புத்தமுதே
வாயார வாழ்த்த வருள்வாய்
      கடம்ப வனவல்லியே. [4]

புத்தியி லேன்விழ லுக்கிறைப்
      பேனின்றன் பொன்னடிசேர்
பத்தியி லேனெனி னுஞ்சரண்
      சார்ந்தனன் பார்த்தருளெண்
சித்தி தருமமிழ் தக்கட
      லின்மணித் தீவகத்தின்
மத்தியில் வில்வ வனஞ்சார்
      கடம்ப வனவல்லியே. [5]

ஊனார் மயறீர் வியாத
      னுதிட்டிர னோங்குவிறற்
கூனார் சிலைவிச யன்னன்றி
      நின்புகழ் கூறுவதற்
கியானா ரெனினுஞ் சரண்புகுந்
      தேனகற் றென்குறையை
வானார் முகில்படி யுஞ்சீர்க்
      கடம்ப வனவல்லியே. [6]

ஆவா நினதடி யெண்ணாமல்
      வீண்செய லாற்றிவெய்ய
தீவாய் விழுபுழுப் போலநொந்
      தேனின்று தேர்ந்தடைந்தேன்
தேவாதி தேவ னிடத்தாய்
      நினையன்பிற் சேவைசெய
வாவா வினிதரு ளீவாய்
      கடம்ப வனவல்லியே. [7]

பாரிற் றருவென மாந்தரைப்
      பாடிப் பயனின்றியே
தாரித்த லின்றிநின் பாலே
      யடைக்கலஞ் சார்ந்தனனால்
ஏரிப் புனலன்ன பொன்னே
      யருட்புய லேயமிழ்த
வாரித் தடமணித் தீவக்
      கடம்ப வனவல்லியே. [8]

அன்பே யிலாதவர் செய்யுங்
      கொடிய வவமதிப்பால்
துன்பே யடையு மனத்தேனை
      யாளத் தொடங்குவையோ
இன்பே செறிமது ராபுரி
      யன்ப ரிதயமுற்றோய்
வன்பே சமைமணித் தீவக்
      கடம்ப வனவல்லியே. [9]

காணிக்கை வைத்தம ரேசர்
      வணங்குநின் கான்மலரைப்
பேணித் தொழுது நினைக்க
      வருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கமிழ்
      தேயகி லாண்டம் பெற்ற
மாணிக்க மேமணித் தீவக்
      கடம்ப வனவல்லியே. [10]

நற்றவர் கற்றவர் நாவலர்
      காவலர் ஞானமிகப்
பெற்றவர் தம்முண் மகிடனைப்
      போற்றவப் பேறுதனை
உற்றவ ராரவன் சென்னிநின்
      றாள்பெற் றுரைக்குமல்லால்
மற்றவ ரார்சொல வல்லார்
      கடம்ப வனவல்லியே. [11]


1.4 ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பொற்றா மரைப்பூந் தடமுமரி
      பூசித் தரிய பேறுமிகப்
பெ ற்றா னெனவான் றோரெடுத்துப்
      பேசு மமலன் சினகரமும்
அற்றார்க் குதவு மங்கயற்க
      ணம்மை திருக்கோ யிலுங்கண்டோர்
உற்றார் பாசப் பிணியறவே
      யுடையா ரகில வுலகமுமே. [1]

வையை நதிசூழ் தென்மதுரை
      வாழு மமலன் றிருவருளால்
மெய்யை யுறுவீட் டின்பமெலாம்
      மேவ லாகும் விழைநெஞ்சே
பொய்யை விழையிற் பயனெவனீ
      புகலா யவனைப் பொருந்தாயேல்
வெய்யை பின்னை யுய்யைமிக
      வீணே யுடையாய் விளம்பிடிலே. [2]

தாயைப் புணர்ந்து தந்தைதனைத்
      தடிந்திட் டோனு மாரியன்றன்
வேயை யுறுதோண் மனைவிழைந்த
      வெய்ய பாவி தானுமருள்
மேய கதைநீ கேட்டறிந்தும்
      விளங்கு கூட னாயகன்சீர்
தூயை யாக வுரைத்துரைத்துத்
      தொழாமை யென்னே சொன்னெஞ்சே. [3]

என்ன வென்ன சொற்றிடினு
      மெனக்கு வசமா காதுதிரிந்
தன்ன மென்னத் தனமென்ன
      ஆடை யென்ன வாவன்மரீஇத்
துன்ன வென்ன துயருற்றாய்
      சோதி மதுரைச் சீர்கேட்கக்
கன்ன மென்ன புண்ணியஞ்செய்
      தனவோ வுரைத்தி கடைநெஞ்சே. [4]

மாயா மயமிவ் வுடலமென
      மதியா தரிவை மாரைவிழைஇ
நோயா னுடங்கி வருந்தினையால்
      நுவலக் கேட்டி மடநெஞ்சே
தாயா யுயிர்க்குத் தண்ணளிசெய்
      தாணு வேணு புரத்தலைவன்
தேயா வளமார் தென்மதுரை
      சேறி நலங்கள் சேருதற்கே. [5]

கூட னகரி னன்பருக்காக்
      குணங்கள் கடந்த வமலனெட்டெட்
டாடல் புரிந்தா னியாவரையு
      மாடல் புரிந்தான் அடியவரை
நாடல் புரிந்தான் மடநெஞ்சே
      நவிலக் கேட்டி சிறிதேனும்
வாடல் புரியா திருத்தியவன்
      மலர்ப்பூந் தாளை வணங்குதியே. [6]

வளமார் மதுரை யரன்சீரை
      வாயால் வழுத்தி யவன்பதத்துத்
தளமார் மலரிட் டருச்சித்துத்
      தகைசால் துதியாற் றோத்தரித்தே
உளமாங் கவன்பா லுறுத்தினருக்
      குறுகண் ணியாது மிலையாமால்
களமார் தீயர்ச் சேர்பாவங்
      கலவார் கலப்பார் கவின்றிருவே. [7]

திருவு முருவுந் திறமுமெங்குஞ்
      சேருங் கீர்த்தி யோடறிவும்
மருவு மருவார் துயரமிலை
      வண்மை யாவு மருவுவரால்
கருவுங் குறியுங் குணமுமுக்
      காலங் கடந்தே யருவுருவோ
டருவு முருவுங் கடந்தொளிரு
      மமலன் மதுரை யணைந்தவரே. [8]

ஆல வாயி லமர்ந்தருளு
      மமல னருளை யன்றிநெஞ்சே
சால வாயின் வேறுதுணை
      சாற்றற் குண்டோ வவன்பெயரைக்
கோல வாயி னுரைத்துரைத்துக்
      குறித்தே யவன்றாண் மலரிருப்பின்
சீல வாயி னருள்புரிவன்
      றீர்ப்பன் றுயர மியாவையுமே. [9]

செல்வக் கூட னகருறையுஞ்
      சிவனைப் பணிந்து செழுஞ்சோதி
வில்வத் தளிரோ டிளமதியம்
      வேய்ந்த வேணி விகிர்தனே
எல்வத் திரமைந் துடையாயெம்
      மீசா வாச விதழியுள்ளாய்
மல்வக் கரையா வெனநிதமும்
      வாழ்த்தி வணங்கு மடநெஞ்சே. [10]


2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை

[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு
வெண்பா

பூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்
வாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்
பொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை
என்கருத்த ரென்கருத்த ரே.

நூல்

அணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்
பிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா
மருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்
திருமாலை யேசத் தினம். [1]

தினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்
மனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்
இனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்
கனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே. [2]

கண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்
கண்ணுதலைக் காணாத காட்சிபோற்-கண்ணுதலை
எட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால் [3]
எட்டியிருந் தேனாகு மே.

ஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்
பாகத்தி லேயொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்
தேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே
ஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே. [4]

என்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்
பொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்
இடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்
இடத்தாளை யஞ்சாதே யின்று. [5]

இன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்
கோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்
அன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்
என்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே. [6]

யான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்
தான்புணை காண்சத்ய வாசகன்மீ-கான்காண்
அடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்
கொடிப்படங் கம்பமே கூம்பு. [7]

கூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே
னாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்
வேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்
பாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே. [8]

பரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற
பிரம்படிபோ லுன்னடியான் பெற்றேன்-நிரம்பும்
குதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான
மதுரைகளக் காடாகு மற்று. [9]

மற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்
உற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்
சொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்
கற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே. [10]

களந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்
களந்தை வருமரனைக் காணான்-வளர்ந்தவொரு
மாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு
மாலைக்கண் டானென்னும் வந்து. [11]

உம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த
அம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்
நம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா
வம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே. [12]

வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
ஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே
அன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை
தென்புன்னைக் காட்டனடி சேர். [13]

சேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்
ஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா
டாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்
கூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே. [14]

கொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்
கொண்டாடு வேன்களந்தைக் கொற்றவா-புண்டாவக்
கைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை
நச்சிலை யாலடியே னை. [15]

அடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ
குடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்
கடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்
வடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே. [16]

வைத்த பொருளு மனையாளு மைந்தருமே
கைத்த பொருளென்று கைவிட்டுப்-பத்திபண்ணும்
ஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே
சோரா ரணியர் துணை. [17]

துணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்
கணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்
அணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்
பணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. [18]

பன்னுமறை யோனேபரமன் முடிதேட
உன்னு மதியா லுனைத்தாங்கும்-அன்னமாய்ச்
சேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்
கோணங் களந்தையோ கூறு. [19]

கூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்
சாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே
மாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மேன்மருந்தாய்
ஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே. [20]


3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை

காப்பு
(நேரிசை வெண்பா)

தேமிகுகா ளத்திச் சிவக்கொழுந்தைப் போற்றுமிட்ட
காமிய மாலைக் கலித்துறைக்கு-நேமிபுகழ்
தாளத் தடைவுகொள்பா தாளக் கணபதிதாள்
மேளத் துடன்றுணையா மே.

நூல்
(கட்டளைக் கலித்துறை)

திருமான் மலரயன் றேடுமெம் மானன்பர் தேக்கவின்பம்
தருமா நடம்புரி பெம்மான் கயிலைத் தலத்தன்றக்கன்
மருமான்வில் வேடர்தங் கோமா னிடுங்கண் வலையிற்சிக்கும்
பெருமா னிடத்திற் சிறுமானொ ரானையைப் பெற்றதுவே. [1]

தமரக் கடலைக் கடைந்த முகுந்தன் றனக்குமெய்க்கே
பமரக்கண் ணாயிரத் தாற்குமெட் டாது பனிக்கதிர்வேற்
குமரக் கடம்பன்முன் னத்தியை யீன்ற கொடியையுங்கொண்
டமரர்க் கரசொரு கல்லா லடியி லமர்ந்ததுவே. [2]

தருமந் தவஞ்சற் றறியாத வேடுவன் றன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிமா மலரவன் வாயுதகத்
திருமஞ் சனக்குடம் பல்லா லவன்மென்று தின்றதசை
அருமந்த போனக மன்றோநங் காளத்தி யப்பருக்கே. [3]

ஆகாச மாநட்ட மாடீ பரிந்துமை யாளுறைந்த
பாகா செகத்திற் பிறவாம லுக்குன் பதந்தருவாய்
வாகா தவரு மரற்றமால் யானை வதைத்ததன்றோல்
ஏகாச மிட்ட சொருபாதென் காளத்தி யீச்சுரனே. [4]

மச்சிட்ட வீடு சுடலைபன் மாலை மலரவன்கம்
நச்சிட்ட மாகிய கற்பம்வெம் பேய்படை நன்றுதின்ற
உச்சிட்டம் போனக மென்பா பரண முடைபுலித்தோல்
அச்சிட்டர் போற்றுங் கயிலையிற் காளத்தி யப்பருக்கே. [5]

அணியேன்வெண் ணீறு துதியேனின் னாமமெய் யன்பினுன்றாள்
பணியேனின் றொண்ட ருடனணு கேன்பெரும் பாவஞ்செய்த
திணியேன் றவமிலி யானாலுங் காத்தரு டெய்வசிகா
மணியே சிவக்கொழுந் தேகயி லாய மலைக்கொழுந்தே. [6]

போதுசெய் வேன்மனம் புன்மைசெய் வேனம்பிப் போந்தவர்க்குச்
சூதுசெய் வேனுந்தி தான்வளர்க் கைக்குத் தொடங்கிப்பல
தீதுசெய் வேனென் பெரும்பாவந் தானின்று தீருகைக்கிங்
கேதுசெய் வேனிறை வாதிருக் காளத்தி யீச்சுரனே. [7]

அங்கணத் தாரெழுந் தற்புதத் தாமரை யாதரிப்போர்
வங்கணத் தாலெனை யஞ்சலென் பாய்மத னைச்செயித்த
செங்கணத் தாரத்ன மிட்டிமை யாநிற்குஞ் சித்ரபணிக்
கங்கணத் தாய்பொன் முகரிக்கல் லாலடிக் காளத்தியே. [8]

பெருக்க மலக்குடி லைப்பேணி யேயுழல் பித்தனென்கை
சுருக்க மனம்பொறுத் தானாலு மென்மிடி தூளெழப்பார்
மருக்கம லத்துறை வேதற்கெட் டாத வடிவினனே
எருக்க மலர்ச்சடை யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [9]

பெண்ணப்பன் வேள்வி தனிலே யுகந்து பெருகப்பிடித்
துண்ணப் புகுந்த சுரரையெல் லாந்துரந் தோடச்செய்தாய்
விண்ணப்ப மொன்றுண்டு கேளடி யேன்மெய்ப் பிணிகளைவாய்
கண்ணப்ப னெச்சி லுகந்தவ னேதிருக் காளத்தியே. [10]

துறைவாரி நஞ்சண்ட கோளத்தை முட்டத் தொடங்கியநாள்
நிறைவா னவர்களுந் தாமிற வாமன்முன் னின்றதுபோற்
பிறைவார் சடைமுடிப் பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்
இறைவா வுனைநம்பி னேன்றிருக் காளத்தி யீச்சுரனே. [11]

பாலிலுவண்டான சுடைமட்கி நஞ்சம் பரந்ததுபோல்
வாலிப ரூபஞ்சிங் காரத்தின் றீமை மயக்கிடவென்
மேலினில் வந்திடும் பொல்லாப் பிணிதனின் மீட்டருள்வாய்
சேலுகள் வாவி செறிகயி லாயச் சிவக்கொழுந்தே. [12]

நெருப்புக் குகையைப் புழுமொய்க்கு மோவிந்த நீணிலமேல்
இருப்புக் கபாடத்தைச் செல்லெய்து மோவிமை யோர்க்கரசே
விருப்புற்றுன் றாளைத் தியானித்த பேர்க்கு மிடிவருமோ
செருப்புச் சடையண்ண லேகயி லாயச் சிவக்கொழுந்தே. [13]

நொச்சியுங் கொன்றையுஞ் சூழ்சடை யாயென்னை நோவுசெய்யும்
மெய்ச்சிலு கான பிணிதொலைப் பாயன்று வேடனிட்ட
எச்சிலுந் தின்று பசியுங் கெடாம லிருந்தென்மனக்
குச்சி லுறைபவ னேகயி லாயச் சிவக்கொழுந்தே. [14]

சிந்தை வியாகுலந் தந்தடி யேன்மெய்யிற் றீங்குசெய்யும்
இந்த வியாதி தனைக்களை வாயியற் சுந்தரனா
கந்தவி யாமற் பரவைக்குத் தூதுசெல் காரணனே
தந்த வியாளப் பணியாய்கை லாயச் சதாசிவனே. [15]

எலிதான் கலக்கண்ணி னீர்களிற் பூனை யிரங்குமதோ
கிலிதான் பிடித்து மனமே தியங்கிப்பற் கெஞ்சியிட்டால்
வலிதாய பாவம் விடுமோதென் காளத்தி வானவனம்
புலிதாழ் சடையன் கடாட்சமுண் டாயிடிற் போய்விடுமே. [16]

மேலடி வைக்குஞ் சினமாறன் றன்சுர மீட்டகதை
போலடி யேன்மெய்ப் பிணிகளை வாயண்டர் போற்றநெடு
மாலடி தேட வயன்முடி தேட மறைந்தொருகல்
லாலடி தேடி யமர்தரு காளத்தி யாண்டவனே. [17]

கோழைச் சவலை யடியேனைக் காத்தருள் குற்றமிலா
மாழைச் சயிலத் தனுவுடை யாயுன்னை வாழ்த்தப்பொறா
மோழைச் சமணைக் கழுவேற் றினாற்கு முலைகொடுத்த
ஏழைச்சி பங்கின னேதிருக் காளத்தி யீச்சுரனே. [18]

நாவுக் குருசி தனைத்தேடிப் பல்லுயிர் நாடியந்த
ஆவுக்குத் தீங்குசெய் யும்பஞ்ச பாதக னாமென்றனைக்
கோவித்துக் கீழ்நர கிற்படுத் தாமற் குறித்தருள்வாய்
காவித் தடவயல் சூழ்கயி லாபுரிக் காளத்தியே. [19]

மாரக் கடம்பனைப் பெற்றகண் ணாவுனை வாழ்த்துமென்மேற்
கோரப் பிணிகெடப் பார்த்தருள் வாய்நின்சொற் குற்றமென்ற
கீரற்கு நின்சொரு பங்காட்ட வேண்டிக்கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடி யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [20]

நின்பணி தன்னின் முயலேனின் னாம நினைந்தருள்வார்
முன்பணி யேன்றிரு நீறணி யேன்வஞ்ச மூர்க்கனியான்
மின்பணி தொண்டர் தலைமண்டை கொண்டது மீட்டதுபோல்
என்பிணி யைக்களை வாய்திருக் காளத்தி யீச்சுரனே. [21]

வீணுந் தகைமையு மேம்பாடுங் கற்று மிகவுழன்று
சாணுந்தி பேணித் திரிதனன் றோசெஞ் சடாமுடியும்
பூணுமுந் நூலுந் திருமார்புந் தூக்கிய பொற்பதமும்
காணும் பதந்தரு வாய்கயி லாபுரிக் காளத்தியே. [22]

தூற்று மருந்தும்பொய் சோலை மருந்தும்பொய் சூழ்கடலில்
ஏற்று மருந்தும்பொய் மானிடர் காளஞ் செழுத்தையன்பாற்
சாற்று மருந்தவ மில்லாத வன்மெய் தனிற்பிணியை
மாற்று மருந்துதென் கைலாய மேய மலைமருந்தே. [23]

பணிக்கு மருந்து கருட னலாதில்லை பாரிலிருள்
அணிக்கு மருந்து தவனன லாதில்லை யானபசி
தணிக்கு மருந்தன்ன தானமல் லாதில்லை சாற்றுகிலென்
பிணிக்கு மருந்து கயிலாய ரன்றிப் பிறரில்லையே. [24]

நெஞ்சடை யாமுன் னினைவழி யாமுன் னெடும்புலன்கள்
அஞ்சடை யாமுன் னறிவழி யாமு னயர்ந்துகண்கள்
பஞ்சடை யாமுன் னடியேனைக் காத்துன் பதந்தருவாய்
செஞ்சடை யாய்பர மாகயி லாயச் சிவக்கொழுந்தே. [25]

தீக்கிரை யாயெறும் புக்கிரை யாய்மண் டினற்கிரையாய்
நாய்க்கிரை யாய்வன் னரிக்கிரை யாயுட னான்சுமந்தேன்
வாய்க்கிரை தேடி வருந்தாம லாண்மன் மதனையுங்கட்
டீக்கிரை யாக்கிய தேவே கயிலைச் சிவக்கொழுந்தே. [26]

குச்சித்த னன்னெறி யில்லாத வன்வெய்ய கோபனின்பால்
மெய்ச்சித்த மற்றவ னானாலுங் காத்தருள் வேதப்பிரான்
உச்சித் தலைகொய் தவனேகண் ணப்ப னுமிழ்ந்ததசை
இச்சித் தமுதுசெய் தோனேதென் காளத்தி யீச்சுரனே. [27]

நேர்ந்தாரை வாழ்வித்து நேராரைத் தாழ்விக்கு நின்மலனே
பூந்தாரை யிந்து முடித்தவ னேயுனைப் போற்றிவந்து
சேர்ந்தேனை வாழ்வித்தென் மெய்யிற் பிணிதனைத் தீர்த்தருள்வாய்
சார்ந்தாரைக் காப்பவ னேகயி லாபுரிச் சங்கரனே. [28]

அப்புரத் தத்தசை யென்பாற் சமைத்தவென் னாகத்துற்ற
துப்புரத் தைக்குலைக் கும்பிணி தீர்த்தருள் சோபனனீ
செப்புரத் திற்பெண் ணழுத்துங் கணையுஞ் சிலையுங்கொண்டு
முப்புரத் தைச்செற்ற காளத்தி யீச முழுமுதலே. [29]

நாகரை யாகத்திற் பூண்டவ னேயந்த நாட்புரத்தைச்
சேகரை யாடலிற் செற்றவ னேமலர்த் தேமுதலாம்
மாகரை யாளும் பரனேயென் மெய்ப்பிணி மாற்றிவலி
யேகரை யாமல்வைப் பாய்திருக் காளத்தி யீச்சுரனே. [30]

கூற்ற நமனை யுதைத்தவ னேவெங் கொடியபுலித்
தோற்றங் கரையுள்ள சோதியென் னோவைத் தொலைத்தருள்வாய்
போற்று நரையுகந் தாள்பவ னேதெய்வப் பொன்முகரி
யாற்றங் கரையி லமர்ந்தருள் காளத்தி யற்புதனே. [31]

32, 33, 34 (காணவில்லை) **********

வெங்களை மூடி முளைதனில் வாடுமென் மெய்ப்பிணிநீத்
தங்களைந் தேயெனை யாண்டருள் வாய்கொன்றைத் தாரினை
யும்திங்க ளையுமர வங்களை யுந்திருத் தார்களையும்
கங்களை யுங்கட்டு செஞ்சடை யாய்திருக் காளத்தியே. [35]

பல்லாலொர் மாத்தசை மென்றிட்ட வற்குன் பதமளித்தாய்
வில்லா லசுரரைச் செற்றா யெனது மிடிதொலைப்பாய்
சொல்லா லமரர் துதிக்குங் கயிலைச் சுடர்க்கொழுந்தே
கல்லான் மரத்தி னிழலுறை வாய்திருக் காளத்தியே. [36]

பெரும்புனல் கொன்றை சிறுபிறை சூடிய பிஞ்ஞகனே
இரும்பனைப் பித்தளை யாகாமற் காத்தரு ளேமனென்னும்
துரும்பனைத் தூணி லவதரித் தேசெற்ற சோதிபெற்ற
கரும்பனை வெம்பொடி செய்தவ னேதிருக் காளத்தியே. [37]

அருமந்த வாலிப மெல்லா நடுங்கவென் னாகந்தன்னில்
வருமந்த மான பிணிதொலைப் பாய்நச்சு வாயரவம்
தருமந்த மாணிக்கந் தன்னைக்கை யாலள்ளித் தன்கதிராற்
கருமந்தி செம்மந்தி யாகுங் கயிலையிற் காளத்தியே. [38]

நேமியன் றன்னைக் கலையாக்கி யிந்தை நிலத்தரைத்துத்
தோமிய றக்கன் றலைவெட்டிப் பாரதி துண்டங்கொய்து
மாமிதன் காதை யரிந்தவ னேயென் மனத்துக்கிட்ட
காமியந் தந்தருள் வாய்கயி லாபுரிக் காளத்தியே. [39]

காமத் தளவின் முயல்பஞ்சு பாதகன் கள்வன்செயும்
தோமத் தனையு மிடியத் தனையுந் தொலைத்தருள்வாய்
சேமத்தைச் சேர்சடைப் பாகீ ரதிபொங்கிச் சிந்தச்சிந்த
ஈமத் திருநடஞ் செய்பவ னேயேழிற் காளத்தியே. [40]

குலைமதி யென்றுளம் பேணேன் விரகக் கொடுமையிற்பட்
டலைமதி கேட னெனினு மடியனை யாண்டருள்வாய்
விலைமதி யாத கழையீன்ற முத்தம் வெயிலைத்தள்ளிக்
கலைமதி காட்டுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [41]

புழைக்கை மலைவெங் கராவாயிற் பட்டுப் புராதனவென்
றழைக்கும் பொழுதரி காத்தது போலெனை யஞ்சலென்பாய்
உழைக்கண் பிதுங்கப் புலிதண்டை மோத வுறவினர்போல்
கழைக்கண்கள் முத்துதிர்க் குங்கயி லாபுரிக் காளத்தியே. [42]

பண்ணிடந் தான்செவி யாகிடப் பாணர்ப் பரித்தவனே
பெண்ணிடந் தான்வைத்த பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்
மண்ணிடந் தானயன் காணாத நின்றன் வடிவையெல்லாம்
கண்ணிடந் தானுக் கிருப்பாக நல்கிய காளத்தியே. [43]

அல்விளக் குந்திங்க ளங்கமுந் தேயச்செல் லாதவதனார்
பல்விழக் கண்டவ னேயெனை யாண்டருள் பைந்தொடியார்
இல்விளக் கப்புது மாலைக்கு நாகங்க ளீன்றுவைத்த
கல்விளக் கேற்றுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [44]

சிலம்பார்க்கத் தூது நடந்தவ னேயென்றன் சிந்தைவியா
குலம்பாற்றி மெய்யிற் பிணிகளை வாய்பெருங் கோலவெண்ணித்
திலம்பார்த் தெடுத்தரி பற்காட்டுங் கொள்கை சிறுபடிமக்
கலம்பார்ப்ப தொக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [45]

செல்வைத்த புற்றிற் பணிவந்த தென்னமெய் தேம்பச்சொட்டைச்
சொல்வைத் துறையும் பிணிதொலைப் பாய்புனஞ் சூழ்கிளியை
வில்வைத்த நன்னுதல் வேடிச் சியர்கவண் மீதுரத்னக்
கல்வைத்து வீசுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [46]

நண்டா னதுகட்டும் வானரம் போல நடுங்கியுள்ளம்
திண்டாட வந்தெனைச் சாதிக்கு மெய்ப்பிணி தீர்த்தருள்வாய்
அண்டாத மாலயன் றான்முத லான வமரர்குழாம்
கண்டா தரிக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [47]

மிடிக்கே யலுத்து மெலிகின்ற பாதகன் மீண்டுமிந்தக்
கடிக்கே யிளைத்துமெய் நோவாமற் காமின் கனத்தனத்தார்
மடிக்கே கிடத்த வுழல்கின்ற மாயன் வணங்கக்கல்லால்
அடிக்கே யுறைந்த பரனேதென் காளத்தி யற்புதனே. [48]

நிரைப்பண் ணளியிசை மேவிய பூங்குழ னேரிழைமா
தரைப்பின் றொடர்ந்து துயர்படு வேனெனைத் தாங்கியருள்
திரைப்பெண்ணைத் தாங்கு சடையாய் திருவுந்திப் பொன்முகரிக்
கரைப்புண்ணி யாபர மாகயி லாபுரிக் காளத்தியே. [49]


4. பழனி இரட்டைமணி மாலை

[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு

ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்
வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை
வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்
கன்றானை மாமுகத்தோன் காப்பு.

நூல்
பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத
பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத்
தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட
இனிவேலை கண்டீ ரெமக்கு. [1]

எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்
செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி
யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்
வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]

வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு
கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க்
கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்
உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]

ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா
நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்
போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி
மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]

நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்
தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத்
தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு
தோளுடையாய் நீயே துணை. [5]

துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்
தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்
கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்
பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]

பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்
தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக்
கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்
தூரகமோ தென்பழனி யோ. [7]

ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து
நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு
வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்
தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]

சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்
ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து
நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்
கும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]

அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த
நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்
பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்
கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]

கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த
காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக்
கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்
மடவீர் மொழிவீரென் மால். [11]

மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்
நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்
வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்
காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]

காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட
மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம். [13]

செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை
அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே
நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்
முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]

முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ
மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ்
பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண்
ஏற்பானைக் காவென்றா யே. [15]

ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற
பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற
வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்
கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]

குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை
ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி
மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை
எம்மூர்த் தியுமான தென். [17]

என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா
உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்
பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா
பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]

பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்
சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத்
தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்
நந்தா வளமெனக்கு நல்கு. [19]

நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்
வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்
சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்
பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]


5. நாராயண தீக்ஷிதர் இயற்றிய
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை


காப்பு
நம்மாழ்வார்
(கட்டளைக்கலித்துறை)

அடியேங்க டுன்ப மகல்வதற் காவந்த நான்மறையின்
முடியே பரவுங் குழைக்காதர் மீது முதுதமிழாற்
படியேழு மோங்கிய பாமாலை யீரைம் பதுமளிப்பான்
கடியே றிலஞ்சித் தொடைஞான முத்திரைக் கைத்தலனே. [i]

பெரிய திருவடிகள்

பொன்சிறை நீக்கி விரித்தே பறக்கின்ற புள்ளரசே
என்சிறை நீக்குவித் தாயில்லை யேயிக லாடரவ
வன்சிறை நீக்கினை வானவர்க் காக மகிழ்விநதை
தன்சிறை நீக்கினை யாரா வமுதமுந் தந்தனையே. [ii]

நூல்

கன்றுக் கிரங்கிய கற்றாவைப் போலக் கருணையுடன்
என்றைக் கிரங்குவ ரோவறி யேனெழு பாருமுய்யக்
குன்றைக் கவிகை யெனத்தரித் தோர்குழைக் காதரைநாம்
சென்றெப் பொழுது தொழுவதும் பாவங்க டீர்வதுமே. [1]

எப்போது நின்னை நினைப்போமங் கேவந் தெதிர்முகமாய்
அப்போது நீயும்வந் தஞ்சலென் பாயடி யாருளத்தில்
மெய்ப்போத ஞான விளக்கே கராங்கௌவ வீரிட்டந்தக்
கைப்போத கஞ்சொன்ன மாலேதென் பேரையிற் காகுத்தனே. [2]

நூற்றெண் மருக்கிடர் வந்தாலு மவ்விடர் நோயகற்றி
மாற்றும் பரஞ்சுடர் நீயல்ல வோதமிழ் வாணர்தினம்
போற்றுஞ் சுருதிப் பொருளே மதுரம் பொழிந்துநறை
ஊற்றுந் துளவப் புயத்தாய்தென் பேரையி லுத்தமனே. [3]

உத்தம னைத்தமிழ்ப் பேரையம் மானையன் புற்றவர்க்கு
நித்த மனத்தந் தவிர்க்குஞ்செஞ் சோதியை நீண்டசுடர்
அத்த மனம்பட வாழிதொட் டானை யனுதினமும்
தத்த மனத்து ணினைப்பார்க் கொருதுயர் தானிலையே. [4]

எந்தெந்த வேளை யினுமலங் காம லிருசரணம்
தந்தந்த கார வினைதவிர்ப் பாயிந்தத் தாமதமென்
உன்றன் றிருவடிக் காளான வெங்கட் குவகைநல்காய்
கொந்துந்து தாமப் புயனே மகரக் குழைக்கொண்டலே. [5]

பூரண சந்த்ர முகமுங்கத் தூரியும் பொற்புயமும்
ஆரணந் தேடுநின் பாதாம் புயமு மபயமென்றே
வாரணங் காத்த கரபுண்ட ரீகமும் வந்துதொழாக்
காரண மேதென் றறியேன்றென் பேரரையிற் காகுத்தனே. [6]

அன்னையல் லாமன் மகவுக்கு வேறில்லை யாதுலர்க்குப்
பொன்னையல் லாமற் புகல்வே றிலையிப் புலைதவிர்க்க
நின்னையல் லாமன்மற் றாரையுங் காண்கில னீதியுடன்
நன்னயஞ் சேருந் தமிழ்ப்பேரை வாழ்கின்ற நாரணனே. [7]

பொல்லாத வஞ்சனை வாராமற் போக்கினை போக்கினதும்
அல்லாம லெங்கட் கபயமென் றாயடி யேங்கள்வினை
எல்லா மகற்றிநின் சந்நிதிக் கேவர ரட்சிகண்டாய்
நல்லார் தொழுந்தென் றிருப்பேரை வாழ்கின்ற நாரணனே. [8]

வஞ்சம் புணர்ந்த கொடுவினை யாவையு மாற்றியெங்கள்
நெஞ்சங் கலங்கி யழியாமற் காத்தரு ணின்னையெந்நாள்
கொஞ்சுங் குழந்தையுங் கூடத் தொழுவது கோவியர்பால்
துஞ்சுந் தயிருண்ட மாலேதென் பேரையிற் றூயவனே. [9]

காவா யெனப்பல தேவரை வாழ்த்திக் கவலையுடன்
நாவா யுலர்ந்ததல் லாற்பய னேதெம்மை நாடிவந்த
தாவா வினையைத் தவிர்ப்பா யினியுன் சரணங்கண்டாய்
தேவா தியர்தொழுந் தேவேதென் பேரையிற் சீதரனே. [10]

பித்தனைப் போன்மன மேங்காம லிந்தப் பிணியகல
எத்தனை நாட்செல்லு மோவறி யேனிசை தேர்குருகை
முத்தனைப் போற்று மகிழ்மாறன் கூறு முகுந்தமலர்க்
கொத்தலர் பேரைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. [11]

அடியா ரிடத்தில் வினைகள்வந் தாலு மவையகற்றி
நொடியாகத் தீர்ப்பது நீயல வோமின் னுடங்குவஞ்சிக்
கொடியா ரிடைச்சியர் மத்தா லடிக்கக் குழைந்துநின்ற
வடிவா கருணைக் கடலேதென் பேரையின் மாதவனே. [12]

ஆயிரங் கோடி வினைகள்வந் தாலு மவையகற்றி
நீயிரங் காவிடின் மற்றாரு மில்லை நிறைந்ததமிழ்ப்
பாயிர மாறன் கவிகேட் டுருகும் பரமவிசை
வேயிரங் குங்கனி வாயா தென்பேரையில் வித்தகனே. [13]

அவலப் படாப்பழி வாராமற் காத்தடி யேங்கண்மனம்
கவலைப் படாமற் கடாட்சிகண் டாய்கற்ற நாவலரும்
நுவலப் படாவரை மத்தாக நாட்டி நுடங்குதிரைத்
திவலைக் கடலைக் கடைந்தாய்தென் பேரையிற் சீதரனே. [14]

உனையா தரிக்கு மடியேங்கண் முன்செய்த வூழ்வினையால்
நினையாமல் வந்த நெடுந்துயர் தீர்த்தரு ணேமிசங்கம்
புனையா ரணப்பொரு ளேபல காலன்பு பூண்டவர்பால்
அனையா கியகுழைக் காதா வினியு னடைக்கலமே. [15]

நெஞ்சினு நீயென் னினைவினு நீநெடும் பூதமெனும்
அஞ்சினு நீகலை யாறினு நீயறி வோடிருகண்
துஞ்சினு நீயன்றி வேறறி யேனித் துயர்தவிர்ப்பாய்
மஞ்சினு மேனி யழகா கருணை வரோதயனே. [16]

வண்ணங் கரியன் கனிவாய் முகுந்தன் மலர்ப்பதமும்
கண்ணுங் கரமுங் கமலமொப் பான்கஞ்ச மாமயிலை
நண்ணுங் கருணைத் திருப்பேரை மாதவ னாமஞ்சொன்னால்
எண்ணுங் கவலையுந் துன்பமுந் தீரு மெமக்கினியே. [17]

நிலையாக் கயத்துட் படிந்தவர் போலெங்க ணெஞ்சழிந்து
மலையாம லித்துயர் மாற்றுகண் டாய்மலர்ச் சேவடியாற்
சிலையா ரணங்கி னுருவாக்குந் தெய்வ சிகாமணியே
அலையாழி சூழுந் தமிழ்ப்பேரை வாழச்சு தானந்தனே. [18]

எண்ணாத வெண்ணி யிடைந்திடைந் தேங்கி யிருந்துமனம்
புண்ணாய் மெலிந்து புலம்பாம னீயிப் புலைதவிர்ப்பாய்
பண்ணார் மதுரத் தமிழ்ப்பா வலரும் பழமறையும்
விண்ணாட ருந்தொழு மெந்தாய்தென் பேரையில் வித்தகனே. [19]

இழைக்குங் கொடிய வினையா வையுமாற்றி யெங்களுயிர்
பிழைக்கும் படிக்கருள் செய்தனை யேசுவை பெற்றபசுங்
கழைக்கண்டு செஞ்சொல் வசுதேவி கண்டிரு கண்களிக்கும்
மழைக்கொண்ட லேயண்டர் வாழ்வேதென்பேரை மணிவண்ணனே. [20]

திங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி
எங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின்
சங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்
பொங்குதென் பேரைப் புனிதா கருணைப் புராதனனே. [21]

இன்றாகு நாளைக்கு ணன்றாகு மென்றிங் கிருப்பதல்லால்
ஒன்றா கிலும்வழி காண்கில மேயுன் னுதவியுண்டேல்
பொன்றாம னாங்கள் பிழைப்போங் கருணை புரிந்தளிப்பாய்
அன்றா ரணந்தொழ நின்றாய்தென் பேரைக் கதிபதியே. [22]

வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே
விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்பாற்
கள்வா வருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே. [23]

பறவைக் கரசனைக் கண்டோடும் பாம்பெனப் பாதகமாம்
உறவைக் கரங்கொண் டொழிப்பதென் றோபவத் தூடழுந்தித்
துறவைக் கருது மவர்க்கருள் பேரையிற் றூயவமா
சறவைத்த செம்பொற் றுகிலுடை யாயச்சு தானந்தனே. [24]

வீயாம னாங்கண் மெலியாம லிந்த வினையகற்றி
நாயா கியவெங்க ளைக்காத் தருணவ நீதமுண்ட
வாயா வொருபத்து மாதஞ் சுமந்து வருந்திப்பெற்ற
தாயா கியகுழைக் காதாதென் பேரைத் தயாநிதியே. [25]

கண்டோ மிலைமுனங் கேட்டோ மிலையவன் கைப்பொருளால்
உண்டோ மிலையிவ் வினைவரக் காரண மொன்றுளதோ
தண்டோடு சக்கரஞ் சங்கேந்து மும்பர் தலைவநெடு
விண்டோய் பொழிற்றடஞ் சூழ்பேரை வந்தருள் வித்தகனே. [26]

நாவையண் ணாந்தசைத் துன்றிருநாம நவிலமற்றோர்
தேவையெண் ணோமித் துயர்தீர்த் திடாத திருவுளமென்
கோவைவண் ணாகமுடிமே லொருபதங் குந்திநின்ற
பூவைவண் ணாவிண் ணவர்போற்றும் பேரைப் புராதனனே. [27]

ஒருநாளு நின்னை வணங்காதி ரோங்கண் ணுறங்கினுநின்
திருநாம மன்றிமற் றொன்றறி யோமிந்தத் தீங்ககற்றாய்
பொருநா கணையொன்றி வேரோடு மைம்மலை போற்பொலிந்த
கருநாயி றேயன்பர் கண்ணேதென் பேரையிற் காகுத்தனே. [28]

உரகதங் கொண்ட கொடியோனை நீக்கி யுறுதுணையாய்ப்
பரகதி யாகவந் தஞ்சலென் பாய்பவ ளக்கதிர்பூங்
குரகத மாமுகம் போற்கவி பேரைக் குழக செம்பொன்
மரகத மேனி யழகா கருணை வரோதயனே. [29]

சிந்தா குலந்தவிர்த் தெங்களை யூரிற் றிரும்பவழைத்
துன்றா மரைச்சர ணந்தொழ வேயரு ளும்பர்தொழும்
எந்தாய் பொருநைத் துறைவா வரிவண் டிசைபயிற்றும்
கொந்தார் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. [30]

உய்வண்ண மெங்கட் குதவியஞ் சேலென்று றுதுணையாய்
எவ்வண்ண மித்துய ரந்தவிர்ப் பாய்கதி ரீன்றுபுனற்
செய்வண்ணப் பண்ணை வளமே செறிந்ததென் பேரைவளர்
மைவண்ண மேனி யழகா கருணை வரோதயனே. [31]

பலகா லிருந்து மெலிந்தூச லாடும் பழவினையை
விலகா திருந்த திருவுள மேதுகொல் விண்ணவர்க்கா
உலகா ளிலங்கையர் கோமா னுயிர்க்கும்வண் டோதரிக்கும்
குலகால னாகிய கோவே மகரக் குழைக்கொண்டலே. [32]

அடங்காத் தனம்புதைத் தார்போன் மெலிந்தடி யேங்களிந்த
மடங்காத் திருந்து சலியாம லித்துயர் மாற்றுகண்டாய்
தடங்காத் திகழுந் தமிழ்ப்பேரை வாழுந் தயாபரபொற்
குடங்காத்து வெண்டயிருண்டாய் மகரக் குழைக்கொண்டலே. [33]

பங்கே ருகத்தை யிரவி புரந்திடும் பான்மையைப்போற்
செங்கேழ்க் குமுதத்தைத் திங்கள் புரக்குஞ் செயலினைப்போற்
கொங்கே கமழு மிருசர ணாம்புயங் கொண்டுதினம்
எங்கே யிருந்துங் குழைக்காத ரெம்மை யிரட்சிப்பரே. [34]

எங்களை யுந்தொண்ட ரென்றே யிரங்கி யினியெங்கள்பா
வங்களை யும்படிக் கேயருள் வாய்கனி வாயமுதம்
பொங்களை யுண்டு தெவிட்டியன் பாற்பரி பூரணமாம்
திங்களை வென்ற முகத்தாய்தென் பேரையிற் சீதரனே. [35]

விடனட வாது கருமஞ்செய் தானை விலக்கினியெம்
முடலடு மாதுயர் தீர்த்தெமை யாண்டரு ளுண்மையிது
திடனட மாத ருடனே பதாம்புயஞ் சேப்பநின்று
குடநட மாடு முகுந்தா மகரக் குழைக்கொண்டலே. [36]

இரவும் பகலு மெலியாம வெங்கட் கிரங்கியுனைப்
பரவும் படிக்கிவ் வினைதீர்த் தருணெடும் பாரதப்போர்
விரவுங் கொடுந்துயர் நூற்றுவர் மாள விசயனுக்கா
அரவுந்து தேர்முன மூர்ந்தாய்தென் பேரையி லச்சுதனே. [37]

பாற்கொண்ட நீரன்னம் வேறாக்கு முன்னைப் பரவுமெங்கள்
மேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ
சூற்கொண்ட செந்நெல் வயற்பேரை யந்தணர் சூழ்ந்துதொழும்
கார்க்கொண்ட லேகுழைக்காதா கருணைக் கருங்கடலே. [38]

அறிவு மறமுந் தரும்பல பூதமு மாரணத்தின்
பிறிவும் பிறிதொரு தெய்வமு நீயிப் பெருவினையாற்
செறியுந் தமியர் துயர்தீர்த் திடாததென் றெண்டிரைநீர்
எறியும் பொருநைத் துறைவாதென் பேரைக் கிறையவனே. [39]

நெருங்கடர் தீவினை நீக்கியுன்னாம நினைப்பதற்குத்
தருங்கட னெங்களைக் காப்பதன் றோதளர்ந் தேமெலிந்த
மருங்கட வீங்கும் படாமுலைப் பூமட மான்றழுவும்
கருங்கட லேகுழைக் காதாதென் பேரையிற் காகுத்தனே. [40]

செழுந்தா மரையிலைத் தண்ணீ ரெனநின்று தீவினையால்
அழுந்தாம னாங்கண் மலங்காமற் காத்தரு ளாரணத்தின்
கொழுந்தாதி மூலமென் றேதௌிந் தோதிய கொண்டல்வண்ணா
கழுந்தார் சிலைக்கை யரசேதென் பேரையிற் காகுத்தனே. [41]

பெய்யுங் கனமழை கண்டபைங் கூழெனப் பேருதவி
செய்யுங் கடவுளர் வேறிலை காணிந்தத் தீங்ககற்றி
உய்யும் படிக்கெங் களைக்காத் தருணற வூற்றிருந்து
கொய்யுந் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. [42]

பஞ்சின்மென் சீறடிப் பாண்டவர் பாவை பதைபதையா
தஞ்சலென் றேயன் றவண்மானங் காத்தனை யப்படியிவ்
வஞ்சகந் தன்னையும் தீர்த்தருள் வாய்கர வால்வருந்தும்
குஞ்சரங் காத்த முகிலே மகரக் குழைக்கொண்டலே. [43]

மறுகாம னாங்கண் மனஞ்சலி யாமலிவ் வஞ்சகர்வந்
திறுகாம லெங்களைக் காத்தருள் வாய்துண ரீன்றமணம்
பெறுகாவில் வாசச் செழுந்தேற லுண்டிளம் பேட்டுவரி
அறுகால் வரிவண் டிசைபாடும் பேரையி லச்சுதனே. [44]

காக்குங் தொழிலுனக் கல்லாது வேறு கடவுளரை
நாக்கொண்டு சொல்லத் தகுவதன் றேநணு காதுவினை
நீக்கும் படிக்கருட் கண்பார்த் திரட்சி நிறைந்தபுனல்
தேக்கும் பொழிற்றென் றிருப்பேரை வாழும் செழுஞ்சுடரே. [45]

கண்ணுக் கிடுக்கண் வரும்போ திமைவந்து காப்பதுபோல்
எண்ணுக்கு ணீங்கு துயர்தவிர்த் தேயெங்க ளுக்கருள்வாய்
விண்ணுக்கு ளோங்கும் பொழிற்குரு கூரன் விரித்ததமிழ்ப்
பண்ணுக் கிரங்கும் பரமாதென் பேரைப் பழம்பொருளே. [46]

சத்துரு வைத்தள்ளி யெங்களைக் காத்துத் தயவுபுரிந்
தித்துரு வத்தையு மாற்றுகண்டா யிலங் காபுரியோன்
பத்துரு வங்கொண்ட சென்னிக டோறும் பதித்தமுடிக்
கொத்துரு வக்கணை தொட்டாய் மகரக் குழைக்கொண்டலே. [47]

இரும்பான கன்னெஞ்ச வஞ்சக னார்க்கு மிடர்விளைப்போன்
திரும்பாம னீக்கி யெமைக்காத் தருணறை தேங்குமுகை
அரும்பாரு மென்மல ராராமந் தோறு மமுதம்பொழி
கரும்பாருஞ் செந்நெல் வயற்பேரை வாழ்கரு ணாநிதியே. [48]

முன்னிற் புரிந்த பெருவினை யான்முற்று மேமலங்கி
இன்னற் படாம லெமைக்காத் தருளிறை தீர்த்தருள்பூங்
கன்னற் றடமுங் கமுகா டவியுங் கதிர்ப்பவளச்
செந்நெற் பழனமுஞ் சூழ்பேரைத் தெய்வ சிகாமணியே. [49]

தீதாம் பரத்தர்செய் தீவினை யாவையுந் தீர்த்தளிக்கும்
மாதாம் பரத்துவ னீயல்ல வோமறை யோர்பரவும்
வேதாம் பரத்தி னடுவே யரவின் விழிதுயின்ற
பீதாம் பரத்தெம் பெருமான்றென் பேரையிற் பேரொளியே. [50]

ஆலமென் னோருருக் கொண்டானை நீக்கி யகற்றவிது
காலமன் றோவெங் களைக்காத் தருளக் கடனிலையோ
ஞாலமென் றோகையும் பூமாது மேவிய நாததும்பி
மூலமென் றோதிய மாலே நிகரின் முகில்வண்ணனே. [51]

மெய்கொண்ட பொய்யென வித்துயர் மாற்றி விலக்கமுற்றும்
கைகண்ட தெய்வ முனையன்றி வேறிலை கான்றவிடப்
பைகொண்ட நாக முடிமேற் சரணம் பதித்துநடம்
செய்கண் டகர்குல காலாதென் பேரையிற் சீதரனே. [52]

முத்தித் தபோதனர்க் குங்கலை வேத முதல்வருக்கும்
சித்தித்த நின்பதஞ் சேவிப்ப தென்றுகொ றேவகிமுன்
தத்தித்த தித்தி யெனநடித் தேயிடைத் தாயர்முனம்
மத்தித்த வெண்ணெய்க் குகந்தாய்தென் பேரை மணிவண்ணனே. [53]

நிம்ப வளக்கனி போற்கசப் பாகிய நீசனுளம்
வெம்ப வளத்த வினையணு காமல் விலக்கிவிடாய்
கும்ப வளத்தயி ருங்குடப் பாலும் குனித்தருந்தும்
செம்ப வளத்தெம் பெருமான்றென் பேரையிற் சீதரனே. [54]

ஊழ்வே தனைசெய்ய வாராதுன் னாம முரைத்தவர்க்குத்
தாழ்வேது மில்லை மிகுநன்மை யேவரும் சஞ்சரிகம்
சூழ்வேரி தங்கும் துழாய்ப்புய லேயெங்கள் துன்பகற்றும்
வாழ்வே மரகத வண்ணாதென் பேரையின் மாதவனே. [55]

முன்னம் பழகி யறியோ மவனை முகமறியோம்
இன்னம் பழவினை வாராமற் காத்தரு ளேற்றசெங்கால்
அன்னம் பழன வயறோறுந் துஞ்சு மடர்ந்தபசும்
தென்னம் பழஞ்சொரி யுந்திருப் பேரையிற் சீதரனே. [56]

ஆக நகைக்கும் படிதிரி வோன்கடந் தப்புறமாய்ப்
போக நகத்திற் புகுந்தோட வேயருள் போர்க்களத்தில்
மாக நகப்பெயர் கொண்டானை மார்வம் வகிர்ந்தசெழும்
கோக நகச்செங்கை யானே மகரக் குழைக்கொண்டலே. [57]

பொய்யா னிறைந்த கொடியவெம் பாதகன் பொய்யும்வம்பும்
செய்யாம லெங்களைக் காத்தருள் வாய்செழுந் தாரரசர்
மொய்யாக வந்தனிற் பாண்டவர்க் காக முழங்குசங்கக்
கையா கருமுகில் மொய்யாதென் பேரையிற் காகுத்தனே. [58]

இகலிட மான புலையனை மாற்றினி யெங்களுக்கோர்
புகலிட நீயன்றி வேறுமுண் டோபுகல் கற்பமெலாம்
பகலிடமான சதுமுகத் தேவொடு பண்டொருநாள்
அகலிட முண்ட பிரானேதென் பேரைக் கதிபதியே. [59]

கையக நெல்லிக் கனிபோ லெமைத்தினங் காத்தளிக்கும்
துய்யகண் ணன்செழுங் காயா மலர்வண்ணன் சுக்கிரனார்
செய்யகண் ணைத்துரும் பாலே கிளறிச் சிறுகுறளாய்
வையக மன்றளந் தான்றமிழ்ப் பேரையின் மாதவனே. [60]

கலகக் கொடிய புலையனெம் பாற்செய்த காரியத்தை
விலகக் கடனுனக் கல்லாது வேறிலை வேலைசுற்றும்
உலகத் தனிமுத லென்றறி யாம லுபாயம் செய்த
அலகைத் துணைமுலை யுண்டாய்தென் பேரையி லச்சுதனே. [61]

கைச்சக டைத்தொழில் கொண்டே திரியுங் கபடன் செய்த
இச்சக டத்தையு மாற்றி விடாயிடை மாதருறி
வைச்ச கடத்தயி ருண்டே தவழ்ந்தன்று வஞ்சன்விட்ட
பொய்ச்சக டத்தை யுதைத்தாய்தென் பேரையிற் புண்ணியனே. [62]

புண்ணிய நந்தகு மாராமுன் னாட்செய்த புன்மையினார்
பண்ணிய நந்தம் வினைதவிர்ப் பாய்பல காலுமுளம்
கண்ணி யனந்தன் முடிமே னடிக்கும் கருணைமுகில்
எண்ணி யனந்த மறைதேடும் பேரைக் கிறையவனே. [63]

இறையவ னெம்பெரு மானெடு மாலெறி நீர்ப்பொருநைத்
துறையவ னேழை யடியார் சகாயன் சுடரிரவி
மறைய வனந்திகழ் நேமிதொட் டானென் மனக்கருத்தில்
உறைய வனஞ்சுடும் தீப்போலப் பாதகக மோடிடுமே. [64]

அக்கணஞ் சாதெந்த வேளையென் றாலு மளித்தனைநீ
இக்கணஞ் சால வருந்துமெம் பாலிரங் காததென்னோ
மைக்கணஞ் சாயன் மடமாதுக் காக வளர்மிதிலை
முக்கணன் சாப மிறுத்தாய்தென் பேரை முகில்வண்ணனே. [65]

ஆடகச் சேவடி யாலெம தாவி யளித்தனைகார்க்
கோடகப் பாவிகள் வாராமற் காத்தனை கோசலநன்
னாடகத் தோர்சிலை தாங்கிவெங் கூற்றை நகைக்குமந்தத்
தாடகைக் கோர்கணை தொட்டாய்தென் பேரைத் தயாநிதியே. [66]

பரனே பராபர னேபதி யேபதி கொண்டசரா
சரனே நெடும்பர தத்துவ னேசமர் வேட்டெழுந்த
கரனே முதற்பதி னாலாயி ரங்கண் டகரைவெல்லும்
உரனே நிகர் முகில் வண்ணாவிந் நாள்வந் துதவினையே. [67]

காலிக் கொருவரை யேந்தினை நெஞ்சங் கலங்குமெங்கள்
மேலிக் கொடுவினை வாராமற் காத்தனை மேன்மைதரும்
பாலுக் கினிய மொழியாளைத் தேடிப் பகையையெண்ணா
வாலிக் கொருகணை தொட்டாய்தென் பேரை மணிவண்ணனே. [68]

அராமரி யாதை யறியாத வஞ்ச னதட்டவெமைப்
பொராமர ணாதிகள் வாராமற் காத்தனை பூதலத்தில்
இராமா வெனும்படிக் கேநீ யொருகணை யேவிநெடு
மராமர மேழுந் துளைத்தாய்தென் பேரையின் மாதவனே. [69]

மாதவ னேகரு ணாகர னேயென் மனவிருட்கோர்
ஆதவ னேகரு மாணிக்க மேமல ராசனத்திற்
போதவனேக மெனவே பரவிப் புகழ்ந் தகுழைக்
காத வநேகம் பிழைசெய்த வெங்களைக் காத்தருளே. [70]

அதிபாவஞ் செய்து பிறந்தாலு மப்பொழு தஞ்சலென்னல்
விதிபார மன்றுனக் கெங்களைக் காப்பது வேரிமடற்
பொதிபாளை மீறி நெடுவாளை யாளைப் பொருதுவரால்
குதிபாய் பொருநைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. [71]

மகரக் குழையு முககாந்தி யும்மணி மார்பமும் பொற்
சிகரக் குழையும் புயபூ தரமுநற் சேவடியும்
பகரக் குழையுந் திருநாம முந்நெடும் பாதகநோய்
தகரக் குழையும் படியுரை யீருயிர் தாங்குதற்கே. [72]

ஓருரு வாயிரண் டாய்மூவ ராகி யுபநிடதப்
பேருரு நான்கைம் புலனா யறுசுவைப் பேதமதாய்ப்
பாருரு வேழெட் டெழுத்தாய்ப் பகரும் பிரணவமாய்க்
காருரு வாங்குழைக் காதருண் டேயெமைக் காப்பதற்கே. [73]

இடைந்தோ ரிருப்பிட மில்லாத வஞ்சக னேங்கிமனம்
உடைந்தோட நோக்கி யெமைக்காத் தனையுயர் வீடணனொந்
தடைந்தே னெனவன் றரசளித் தாயறு காற்சுரும்பர்
குடைந்தோகை கூரு மலர்ப்பொழிற் பேரையிற் கோவிந்தனே. [74]

கோவிந்த னாயர் குலத்துதித் தோன்செழுங் கொவ்வைச் செவ்வாய்
மாவிந்தை நாயகன் பூமாது கேள்வன் பொன் வானவர்தம்
காவிந்த நானிலத் தாக்கிய பின்னை கணவன் பொற்றாள்
மேவிந்த நாளெண்ணு நெஞ்சேதென் பேரை விமலனையே. [75]

விண்டலத் தாபத ரும்மிமை யோருநல் வேதியரும்
பண்டலத் தால்வருந் தாதவர்க் காகப் பகைதவிர்த்தாய்
மண்டலத் தாதவன் போற்கதிர் வீசு மணிமகர
குண்டலத் தாய்தண் டமிழ்ப்பேரை யெங்கள் குலதெய்வமே. [76]

புராதனன் மாயன் புருடோத் தமன்பரி பூரணன்வெவ்
விராதனை மாய வதை செய்த காரணன் விண்ணவர்கோன்
சராதன மாய மெனவே யிறுத்தவன் றன்றுணையாம்
கிராதனை மாலுமி கொண்டான்றென் பேரையிற் கேசவனே. [77]

வலையுற் றினம்பிரி யுங்கலை போல மறுகிமனம்
அலைவுற்று நைந்து மெலியாமற் காத்தனை யம்புவிக்கே
நிலையுற்ற தெண்டிரை முந்நீரைச் சீறு நெடும்பகழிச்
சிலையுற்ற செங்கை முகிலேதென் பேரையிற் சீதரனே. [78]

சீதர னேமது சூதன னேசிலை யேந்துபுய
பூதர னேபுல வோரமு தேபுவி தாங்கியகா
கோதர னேயன்றொ ராலிலை மேற்பள்ளி கொண்டருள்தா
மோதர னேகுல நாதா நிகரின் முகில்வண்ணனே. [79]

சேரீர் செனன மெடுத்தவந் நாண்முதற் றீங்கு செய்வ
தோரீர் சடைப்பட் டுழலுந்தொண் டீர்நற வூற்றிதழித்
தாரீச னார்க்கு மிரவொழித் தேயொரு சாயகத்தால்
மாரீச னைவென்ற மால்குழைக் காதர் மலரடிக்கே. [80]

புங்கவ னெம்பெரு மானெடி யோன்புடை தோள்புனையும்
சங்கவ னம்பெரு மாநிலம் போற்றுந் தயா பரன்மா
துங்க வனந்திரி யுஞ்சூர்ப் பணகை துணைமுலைகள்
வெங்க வனத்தி லறுத்தான்றென் பேரையில் வித்தகனே. [81]

வித்தக னேமிப் பிரான்றிரு மாறிரி விக்கிரமன்
பத்தர்க ணெஞ்சுறை யும்பர மானந்தன் பண்டொருநாள்
மத்தக மாமலைக் கோடொடித் தான்முகில் வண்ணனென்றே
கத்தக மேயிக மேபெற லாநற் கதியென்பதே. [82]

கூசுங்கண் டீர்முன் வரக்கொடுங் கூற்றுங் குளிர்ந்தமணம்
வீசுங்கண் டீர்நறுந் தண்ணந் துழாய்விதி யால்விளைந்த
மாசுங்கண் டீர்வினை யும்மருண் டோடு மகிழ்ந்தொருகாற்
பேசுங்கண் டீர்தண் டமிழ்ப்பேரை வானப் பிரானெனவே. [83]

அன்பர்க் கருள்வ துனக்கே தொழிலடி யேங்களிந்தத்
துன்பப் படாமற் றுணைசெய்வ தென்றுகொல் சூட்டுமணி
இன்பப் பஃறலைப் பாம்பணை யிற்கண் ணிணை துயிலும்
என்பற்ப நாப முகுந்தாதென் பேரைக் கிறையவனே. [84]

முராரி கராவை முனிந்தான் றயாபர மூர்த்திமுக்கட்
புராரி கபால மொழித்தான் சதுமறை போற்றநின்றான்
பராரித யத்தி லிரானன்ப ரேத்தும் படியிருப்பான்
சுராரி களைப்பட வென்றாறென் பேரையிற் றூயவனே. [85]

வேலிக்கு ணின்று விளைபயிர் போல விரும்புமெங்கள்
பாலிக் கொடுந்துயர் தீர்த்தளித் தாய்பகை வென்றபுய
வாலிக்கும் வேலைக்கு மானுக்கு மாய மயன்மகடன்
தாலிக்குங் கூற்றுவ னானாய்தென் பேரைத் தயாநிதியே. [86]

பாரதி நாவி லுறைவோனுந் தேவர் பலருமன்பு
கூரதி காந்தி மலர்ச்சே வடியினை கூறுமைவர்
சாரதி பேரை வளர்சக்ர பாணி சரணமென்றே
மாருதிக் கீந்த திருநாம நாளும் வழுத்துவனே. [87]

பேராழி வையக மெல்லா மனுமுறை பேதலியா
தோராழி யோச்சி யரசளித் தேபின் னுறுவர்பதம்
கூராழி யேந்துந் தமிழ்ப்பேரை வாழ்குல நாதனெழிற்
காராழி நீர்வண்ணன் பேரா யிரத்தொன்று கற்றவரே. [88]

சிகரந் திகழுநின் கோபுர வாசலிற் சேவிக்கநாம்
பகருந் தவமுனம் பெற்றில மோமடப் பாவையர்தம்
தகரந் தடவு மளகா டவியிற் றவழ்ந்திளங்கால்
மகரந்த மொண்டிறைக் குந்திருப் பேரையின் மாதவனே. [89]

மந்தர மாமலை மத்தாக வேலை மதித்தனைகா
மந்தர மீது புரியாம னூற்றுவர் மாயவைவர்
மந்தர ஞால மரசாள வைத்தனை வான்பகைமுன்
மந்தர சூழ்ச்சியின் வென்றாய்தென் பேரையின் மாதவனே. [90]

வாமன னூற்றெண்மர் போற்றும் பிரான்மல ராள்கணவன்
பூமனை நாபியிற் பூத்தோ னடங்கப் புவியிடந்தோன்
காமனைத் தந்த திருப்பேரை வாழ்கரு ணாநிதிதன்
நாமனைச் சிந்தையில் வைத்திலர் வீழ்வர் நரகத்திலே. [91]

அருங்கொடிக் கோர்கொழு கொம்பென வெம்மை யளிப்பதுஞ்செய்
திருங்கொடி யோனையு மாற்றிவிட் டாயிறு மாந்துவிம்மி
மருங்கொடித் தோங்கு முலைச்சா னகியை வருத்தஞ்செய்த
கருங்கொடிக் கோர்கணை தொட்டாய்தென் பேரையிற் காகுத்தனே. [92]

அரந்தரும் வேல்விழி யாரனு ராக மகற்றியுயர்
வரந்தர வல்லவன் வானப் பிரானெங்கள் வல்வினையைத்
துரந்தர னாகவந் தஞ்சலென் றோன்றன் றுணைமலர்த்தாள் [93]
நிரந்தரம் போற்று மவரே புரந்தரர் நிச்சயமே.

காண்டா வனமெரித் தான்றரித் தானென் கருத்திலன்பு
பூண்டா னெழின்மணிப் பூணா னறிவற்ற புன்மையரை
வேண்டா னடியவர் வேண்டநின் றான்விரி நீர்ப்புடவி
கீண்டான் றமியனை யாண்டான்றென் பேரையிற் கேசவனே. [94]

கேசவன் பேரை வளர்வாசு தேவன்கை கேசிசொல்லால்
நேச வனம்புகுந் தோர்மானை வீட்டி நிசாசரரை
வாசவன் செய்த தவத்தாற் றொலைத் தருண் மாதவன் பேர்
பேச வனந்த லிலும்வரு மோபெரும் பேதைமையே. [95]

கழகா ரணத்தின் பயனறி யாத கபடனெம்மைப்
பழகாத வஞ்சனை நீக்குவித் தாயிடைப் பாவையர் தம்
குழகா வழுதி வளநாட கோவர்த் தனமெடுத்த
அழகா மகரக் குழையாய்தென் பேரையி லச்சுதனே. [96]

அச்சுதன் பேரை யபிராமன் செஞ்சொ லசோதக்கன்பாம்
மெய்ச்சுத னெங்களை யாட்கொண்ட மாயன் விசயனுக்கா
அச்சுத நந்தைக் குறித்தா னரவிந்த லோசனன்முன்
நச்சு தனஞ்சுவைத் துண்டானென் பார்க்கு நரகில்லையே. [97]

இல்லைப் பதியென் றிருந்துழல் வீரௌி யேங்கள் சற்றும்
தொல்லைப் படாதருள் பேரையெம் மான்பதத் தூளிகொடு
கல்லைப்பெண் ணாக்குங் கருணா கரன்முன்பு கஞ்சன்விட்ட
மல்லைப் பொருதவ னென்றோதத் துன்பம் வராதுமக்கே. [98]

வாரா யணுவெனு நெஞ்சேயஞ் சேல்வஞ் சகமகலும்
கூரா யணிந்தவன் சேவடிக் கேயன்பு கூர்ந்துமறை
பாரா யணம்பயி னூற்றெண்மர் நாளும் பரிந்துதொழும்
நாரா யணன்றிருப் பேரையெம் மான்றனை நண்ணுதற்கே. [99]

பதமும் பதச்சுவை யுங்கவிப் பாகமும் பாகச்செஞ்சொல்
விதமும் விதிவிலக் கில்லா விடினும் வியந்தருளற்
புதமென் றளிரிளந் தேமாவும் பூகப் பொழிலுமழைக்
கிதமென் பசுந்தென்றல் வீசுந்தென் பேரைக் கிறையவனே. [100]

வாழ்த்து

பார்வாழி நூற்றெண்ப பதிவாழி மாறன் பனுவலியற்
சீர்வாழி நூற்றெண்மர் நீடூழி வாழியிச் செந்தமிழ்நூல்
ஏர்வாழி மன்ன ரினிதூழி வாழியெந் நாளுமழைக்
கார்வாழி பேரைக் குழைக்காதர் வாழியிக் காசினிக்கே.
--------------

This webpage was last revised on 8 September 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).