pm logo

கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்

Songs of Gopalakrishna Bharathi (1811 - 1896)
In tamil script, Unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Shaivam.org for providing us with a copy of this work in Unicode format and
for permissions to release the same as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This page was first put up on Sept 12, 2007.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோபாலகிருஷ்ணபாரதியார் (1811 - 1896) பாடல்கள்

S
வ.எண் பாடல் தலைப்பு இராகம் தாளம்
01 உத்தாரந் தாரும் தோடி ஆதி
02 எல்லோரும் வாருங்கள் கேதாரம் ரூபகம்
03 ஐயே மெத்தகடினம் புன்னாகவராளி ஆதி
04 கண்டாமணியாடுது கரகரப்ரியா ரூபகம்
05 காணாத கண்ணென்ன நாதநாமக்ரியை சாபு
06 கோபுர தரிசனமே தன்யாசி ஆதி
07 சற்றே விலகியிரும் பூரிகல்யாணி ரூபகம்
08 தில்லை வெளியிலே யமுனா கல்யாணி ஆதி
09 தில்லையம்பலத் தல உசேனி ரூபகம்
10 நந்தா நீசிவ நாதநாமக்ரியை சாபு
11 பித்தந்தெளிய மருந் செஞ்சுருட்டி ரூபகம்
12 மார்கழிமாதத் திருவாதிரை நவரோசு ஆதி
13 அரகர சங்கர தண்டகம் *
14 ஆடிய பாதத்தைத் அசாவேரி திச்ரம்
15 ஆடுஞ்சி தம்பரமோ பேஹாக் ரூபகம்
16 ஆடியபாதா இருவர் சங்கராபரணம் ரூபகம்
17 ஆனந்தக் கூத்தாடினார் கல்யாணி ரூபகம்
18 இன்னமும் சந்தேகப் கீரவாணி மிச்ர ஏலம்
19 உனது திருவடி சரசாங்கி / வதாங்கி ஆதி
20 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி
21 எப்போ வருவாரோ செஞ்சுருட்டி ஆதி
22 கனகசபாபதி தரிசனம் தன்யாசி ஆதி
23 சங்கரனைத் துதித்தாடு தோடி ஆதி
24 தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் நாதநாமக்ரியை ஆதி
25 தாண்டவ தரிசனந்தாரும் ரீதிகௌன சம்பை
26 திருவாதிரை தரிசனதிற்கு தன்யாசி திரிபுட
27 தில்லையைக் கண்டபோதே விருத்தம் *
28 பக்தி பண்ணிக் தண்டகம் *
29 பாடுவாய் மனமே செஞ்சுருட்டி ஆதி
30 பார்க்கப் பார்க்கத் அபிகாம்போதி ரூபகம்
31 பிறவாத வரந்தாரு ஆரபி ஆதி
32 வேதம் படித்ததும் தண்டகம் *
33 தில்லையக்கண்ட போதே விருத்தங்கள் *
34 ஆடிய பாத தரிசனம் யதுகுல காம்போஜி ஆதி - 2 களை
35 ஆடிய பாதமே அசாவேரி மிச்ர சாபு
36 கண்டேன் கலி கல்யாணி ரூபகம்
37 கண நாதா சரணம் மோகனம் ஆதி
38 கைவிட லாகாது மலஹரி ரூபகம்
39 குஞ்சித பாதத்தை பந்துவராளி ரூபகம்
40 தில்லை தில்லை காபி ஆதி
41 தேவா ஜெகன் கல்யாணவசந்தம் ஆதி
42 நடனம் ஆடினார் மாயமாளவ கௌளை மிச்ர சாபு
43 நந்தா உனக்கிந்த மோகனம் ஆதி
44 பாதமே துணை பூர்ணசந்த்ரிக ஆதி
45 மாதவமே ஓ சாமா ரூபகம்
46 இந்தப் பிரதாபமும் சுத்தசாவேரி ஆதி
47 இது நல்ல தன்யாசி ஆதி
48 சிதம்பரம் போகாமல் செஞ்சுருட்டி ஆதி
59 தொண்டரைக் காண்கிலமே சஹானா ஆதி
50 பேயாண்டி தனைக் சாரங்கா கண்டசாபு
51 போதும் போது கமலாமனோஹரி ஆதி
52 மனது அடங்குவதால் கௌளி பந்து ஆதி
53 மோசம் வந்ததே ஆபோகி ஆதி
54 திருநாளைப் போவான் கமாசு ஆதி
55 பழனம ருங்கணையும் செஞ்சுருட்டி ஆதி
56 சிவனே தெய்வம் சுத்தசாவேரி *
57 செந்தாமரை மலர் யதுகுல காம்போதி திச்ரலகு
58 சிங்கார மான பூரிகல்யாணி திச்ரலகு
59 தலம்வந்து கேதாரம் கண்டலகு
60 சிவலோக நாதன் கேதாரம் கண்டலகு
61 ஒரு நாளும் சங்கராபரணம் கண்டலகு
62 குதித்தார் எக்கலித்தார் மாயமாளவகௌளை ஆதி
63 தடாகம் ஒன்று மோகனம் ஆதி
64 நாளைப் போகாமல் * *
65 காணாமல் இருக்க சக்ரவாகம் மிச்ரம்
66 தில்லையம்பல சங்கராபரணம் மிச்ரம்
67 வாருங்கள் வாருங்கள் நீலாம்பரி ஜம்பை
68 சிதம்பர தரிசனம் யமுனாகல்யாணி ஆதி
69 மீசை நரைத்துப் நாதநாமகிரியை ஏகம்
70 எல்லைப் பிடாரியே நீலாம்பரி *
71 திருநாளைப் போவாரிந்த நாதநாமக்ரியை ஆதி
72 தத்திப் புலிபோலே மோகனம் திச்ரலகு
73 அரகர சிவசிவ நாதநாமக்ரியை / மோகனம் ஏகம் / திச்ரலகு
74 சேதிசொல்ல வந்தோம் சங்கராபரணம் ஏகம்
75 நந்த னாரும் வந்தார் சங்கராபரணம் ஆதி
76 ஆடிய பாதத்தைக் சுருட்டி ஆதி
77 தில்லைச் சிதம்பரத்தை ஆரபி ஆதி
78 ஆசை நேசராகும் மாஞ்சி சாபு
79 மாங்குயில் கூவிய சங்கராபரணம் ஏகம்
80 நந்தனாரே உன்றன் பேகடா சாபு
81 ஏழைப் பார்ப்பான் யதுகுலகாம்போதி ஆதி
82 சிதம்பரம் போய்நீ சாமா ஆதி
83 சிதம்பர தரிசனம் மோகனம் *
84 முக்தி அளிக்கும் நவரோசு சாபு
85 கனக சபேசன் கமாசு ரூபகம்
86 வாராமல் இருப்பாரோ சுருட்டி ஆதி
87 இன்னும் வரக்காணேனே பரசு ஆதி
88 விருதா சன்மமாச்சே தர்பார் ஆதி
89 சந்நிதி வரலாமோ சங்கராபரணம் ஏகம்
90 கனவோ நினைவோ கமாசு சாபு
91 அம்பல வாணனை ஆகிரி மிச்ரசாபு
92 களை யெடாமல் நடபைரவி ரூபகம்
93 திருநாளைப் போவாருக்கு அசாவேரி ஆதி
94 அறிவுடையோர் பணிந்தேத்தும் சக்ரவாகம் ஜம்பை
95 ஆண்டிக் கடிமைகாரன் செஞ்ருட்டி ரூபகம்
96 ஆருக்குப் பொன்னம்பலவன் பைரவி ஆதி
97 இரக்கம் வராமல்போனதென்ன பெஹாக் ரூபகம்
98 எப்போ தொலையுமிந்தத் கௌரிமனோகரி சாபு
99 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி
100 ஏதோ தெரியாமல் அமீர்கல்யாணி ரூபகம்
101 கட்டை கடைத்தேற கரகரப்ரியா சாபு
102 கனகசபாபதிக்கு நமஸ்காரம் அடாணா ஆதி
103 காரணம் கேட்டுவாடி பூர்விகல்யாணி *
104 சபாபதிக்கு வேறு தெய்வம் ஆபோகி ஆதி
105 சம்போ கங்காதரா அபுரூபம் ஆதி
106 சிதம்பரம் அரஹரா பியாகடை ஆதி
107 சிதம்பரம் போவேன் நாளை பெஹாக் ஆதி
108 சிந்தனை செய்து செஞ்சுருட்டி ஆதி
109 சிவலோகநாதனைக் கண்டு செஞ்சுருட்டி / மாயமாளவகௌளை ரூபகம்
110 தரிசனம் செய்தாரே கல்யாணி அட
111 திருவடி சரணம் காம்போஜி ஆதி
112 தில்லை சிதம்பரம் யமுனாகல்யாணி ஓர் சாரங்கா சாபு
113 தில்லைத் தலமென்று பூரிகல்யாணி / சாமா ஆதி
114 நடனம் ஆடினார் வசந்தா அட
115 நந்தன் சரித்திரம் சங்கராபரணம் ஆதி
116 நமக்கினி பயமேது கௌளிபந்து ஆதி
117 நீசனாய் பிறந்தாலும் யதுகுலகாம்போதி சாபு
118 பத்தி செய்குவீரே தோடி ஆதி
119 பத்திகள் செய்தாரே யதுகுலகாம்போதி ஆதி
120 பார்த்துப் பிழையுங்கள் யதுகுலகாம்போதி ரூபகம்
121 பெரிய கிழவன் வருகிறான் சங்கராபரணம் ரூபகம்
122 மற்றதெல்லம் பொறுப்பேன் சாவேரி ரூபகம்
123 வருகலாமோவையா உந்தன் மாஞ்சி ரூபகம் / சாபு
124 வருவாரோ வரம் தருவாரோ ஷ்யாமா ஆதி

  • 1. உத்தாரந்தாரும்...
  • ராகம் : தோடி
    தாளம் : ஆதி


    பல்லவி

    உத்தாரந்தாரும் ஐயே எனக்கு
    ஒருவருமில்லை நான் பரகதியடையா [உத்தார]

    சரணம்

    வித்தைகள் கற்றதுமில்லை யானொரு
    பத்தியிற் சென்று பரகதியடைய [உத்தார]

    குற்றங்க ளெத்தனை கொடியே செய்தேன்
    அத்தனை யும்பொறுத் தாதரவாக [உத்தார]

    பெண்டு பிள்ளையென்று பேயனைப் போலவே
    கண்டு களித்துக் காலங்கழித்தாவனுக்கு [உத்தார]

    தில்லைச்சி தம்பரத்தைத் தரிசித்துவந் துங்கள்
    எல்லையைக் காத்துக் கொண்டிருக்கிறேனையே [உத்தார]

    பாடல் தலைப்பு


    2. எல்லோரும் வாருங்கள்...

    ராகம் : கேதாரம்
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    எல்லோரும் வாருங்கள்
    சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் [எல்லோரும்]

    சரணம்

    நல்லோர்பணிந்திடும் தில்லையம்பல
    நாதன்பாதம் பணிந்துகொள்வோம் [எல்லோரும்]

    பாடல் தலைப்பு


  • 3. ஐயே மெத்தகடினம்....
  • ராகம் : புன்னாகவராளி
    தாளம் : ஆதி


    பல்லவி

    ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்

    அநுபல்லவி

    பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம்
    நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]

    வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப்
    பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)
    ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த

    மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச்
    சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு
    பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே

    சரணம்

    பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம்
    மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று
    சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு

    சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு
    அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே
    நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த

    அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது
    கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது
    பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத

    மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ
    தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ
    தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த

    முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு
    இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்
    ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்

    கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
    அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும்
    அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ
    நேரமாகுதல்லவோ [ஐயே]

    பாடல் தலைப்பு


    4. கண்டாமணியாடுது....

    ராகம் : கரகரப்ரியா
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    கண்டாமணியாடுது கண்டு பிணிவாடுது

    சரணம்

    முத்தி மணிதேடுது நாடுது கூடுது [கண்டா]

    பரவச மாகுது பாவங்கள் போகுது [கண்டா]

    சனன மரணாதிகள் மோகமுந் தீர்ந்தது [கண்டா]

    பாடல் தலைப்பு


    5. காணாத கண்ணென்ன....

    ராகம் : நாதநாமக்ரியை
    தாளம் : சாபு


    காணாத கண்ணென்ன கண்ணோ
    வீணானகண்மயில் கண்ணது புண்ணோ [காணாத]

    சொல்லும் பொருளிறந்த துரியவடிவமாகி
    அல்லும்பகலுமற்ற ஆனந்தப்பேரொளி [காணாத]

    பசியாமருந்தளிக்கும் பரமரகசியத்தில்
    அசையாமலேயாடு மம்பலநாதனைக் [காணாத]

    ஊராருமறியாம லொளிகண்டு பிசகாமல்
    ஈராறுகாற்கொண்டு எழும்பிய மண்டபம் [காணாத]

    அண்டத்துளங்கடாத வாசைவலையைப் பூட்டிப்
    பிண்டத்துளடங்கிய பேரின்பத்தெப்பத்தைக் [காணாத]

    நாசிநடுவிருந்து நாதனே தானென்று
    பேசாமற்பேசிய பெருமையை ஒருநாளும் [காணாத]

    என்னையானறியேனென் றிகழ்ந்திடும் பேயனைத்
    தன்னந்தனிய னாக்கித் தகுவனென்றழைத்தாரைக் [காணாத]

    சோற்றுத் துருத்தியிதைச் சுமந்ததனாலென்ன
    ஆத்திமதியஞ்சடை யழகனமருங்கோயில் [காணாத]

    சீலக்கமல முகச்சிவகாமி மனமகிழ்
    கோலக்கனகன் தில்லைக் குழகனாடியகூத்தைக் [காணாத]

    பாலகிருஷ்ணன்தொழும் பாதத்தைப் பணிந்தொரு
    நாளிலும் பிறவாத நவமிக்கவழிதேடி [காணாத]

    பாடல் தலைப்பு


    6. கோபுர தரிசனமே....

    ராகம் : தன்யாசி
    தாளம் : ஆதி


    பல்லவி

    கோபுர தரிசனமே எந்தன் பாபவிமோசனமே

    சரணம்

    தாபங்கள் மூன்றுந் தணிந்துவிடும் நல்ல
    சோபனமுண்டாஞ் சோதிவிளங்கிய [கோபுர]

    விண்ணணைத்துமே லோங்கியே கண்டுநற்
    கண்ணுளார்க் கெல்லாங் காட்சியளித்திடும் [கோபுர]

    அல்லும்பகலும் அமரர் துதித்திடும்
    தில்லைக்கிறையோன் தினமும் மகிழ்ந்திடும் [கோபுர]

    பாடல் தலைப்பு


    7. சற்றே விலகியிரும்....

    ராகம் : பூரிகல்யாணி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ

    அநுபல்லவி

    நற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்

    சரணம்

    சாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான்
    கோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே]

    வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான்
    பூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே]

    பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன்
    சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]

    பாடல் தலைப்பு


    8. தில்லை வெளியிலே...

    ராகம் : யமுனா கல்யாணி
    தாளம் : ஆதி


    தில்லைவெளியிலே கலந்து கொண்டாலாவணிவர் திரும்பியும் வருவாரோ
    எல்லைக்கண்ட பேரினிப்பிறவாரென்று இயம்புவதறியாரோ

    பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம்
    கண்டுகொள்ளுவார் பெரியோரறிவில் கனகசபையினாட்டம்

    திருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ
    அரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ

    குஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே
    சஞ்சிதரவினையாதிகளுடாடிய சடமுந் தாங்காதே

    சேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே
    சிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே

    இரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா
    இன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா

    பாடல் தலைப்பு


    9. தில்லையம்பலத் தல...

    ராகம் : உசேனி
    தாளம் : ரூபகம்


    தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம் அதைக்கண்டபேர்க்கு
    சனனமரணப் பிணியைக் கருக்குதாம்

    உயர்ந்தசிகரக் கும்பம் தெரியுதாம் அதைப்பார்த்தவர்க்கு
    உள்ளங்குளிரக் கருணை புரியுதாம்

    பண்ணவர் அயன்மாலுந் தேடுமாம்அந்தத் தில்லைக்காட்டில்
    பாம்புபுலிக்கு நிர்த்த மாடுமாம்

    அரியபிரமனெழுத்தைத் தள்ளுமாம்தனை அடைந்தவர்களை
    ஆனந்தமுழுக் காட்டிக் கொள்ளுமாம்

    போய்தரிசித்தோர் புண்ணிய சாலியாம் அதுதருமராஜன்
    புரம்புகாமல் தடுத்த வேலியாம்

    உருவில்லாத குருவொன் றிருக்குதாம்அது மூலக்கனலை
    ஊதியெழுப்பிக் காண உருக்குதாம்

    உருவமாகியவெளியே வருகுதாம் அதுநான் மறைகட்கும்
    உணர்வில்லாத காட்சி தருகுதாம்

    போய்வருக வுத்தாரம் தாருமேதங்கள் பொன்னடித்தூள்
    போற்றுவேன் திருக்கண்ணால் பாருமே [தில்லை]

    பாடல் தலைப்பு


    10. நந்தா நீசிவ..

    ராகம் : நாதநாமக்ரியை
    தாளம் : சாபு


    நந்தா நீசிவ பக்தன் உன்னை
    நம்பாமலே மோசமானேன்நான் பித்தன் [நந்தா]

    பூமிக்குள் நீயொரு சித்தன் இந்தப்
    பூமிக்குநானொரு சாத்திரப்ர சித்தன்
    காமிக்குள்ளே வெகு மத்தன் உன்னைக்
    கண்டு தரிசித்தோ ரனைவரு முத்தன் [நந்தா]

    படித்துமென்ன வெங்கள் வேதம் அதில்
    பார்த்ததில்லையிந்த பகவன்நற் கீதம்
    எடுத்துசொன்னாய் சில போதம் அது
    ஏற்காமற் போச்சுது என்பிடி வாதம் [நந்தா]

    தெவிட்டாத சோகமப் பாநீ உந்தன்
    தேகமுழுதிலுஞ் சிவன்றிரு மேனி
    பகையாகிய வொரு கூனி போல
    பழுத்தேனானாலு நீயே ஆத்ம ஞானி [நந்தா]

    பவசாகரந் தாண்டிச் சென்றாய் உள்ளே
    பார்த்து ணர்ந்துப்பர மானந்தங் கொண்டாய்
    தவமாமுனி போலே நின்றாய்தில்லைத்
    தாண்டவராயனைக் கண்ணால் நீ கண்டாய் [நந்தா]


    பாடல் தலைப்பு


    11. பித்தந்தெளிய மருந்...

    ராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    பித்தந்தெளிய மருந்தொன்றி ருக்குது
    பேரின்பமன் றுள்ளே

    அநுபல்லவி

    மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
    வல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]

    சரணம்

    பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது
    பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு
    பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும்
    பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்]

    பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே
    தத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும்
    தித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என்
    சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்]

    ஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும்
    பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு
    சாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம்
    தீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்]

    பாடல் தலைப்பு


    12. மார்கழிமாதத் திருவாதிரை....

    ராகம் : நவரோசு
    தாளம் : ஆதி

    நிஸரிகமபதநி - நிதபமகரிஸநி


    மார்கழிமாதத் திருவாதிரை நாள்வரப் போகுதையே
    மனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம் போய்வாவென்று சொல்லையே
    கட்டையிருக்கையில் சிதம்பரம் போய்நான் காணவேணுமையே
    கசடனாகிலும் ஆசைவிளையுதுன் காலுக்குக் கும்பிடையே

    காலில் நகமுளைத்த நாள்முதலாயுமக் கடுமைக்காரனையே
    கால பாசத்தில் காட்டிக்கொடாமல் காப்பாற்றிடுமையே
    உள்ளங் காலில் வெள்ளெலும்பாட ஓடியுழைத்தேனையே
    உண்டது முறங்கினது மன்றிவேறே ஒன்றும் காணிலேனையே

    எட்டுமிரண்டும் மறியாதபேதைதான் எளியேனா னெனையே
    இன்னந் தாய்வயிற்றி னுள்ளணுகாமல் இடங்காட்டிடுமையே
    வெள்ளை வெளுத்திடுந் தண்ணீர்குடித்திடும் வெறியோன்நானையே
    மேதினியில்நான் நாயினுங் கடையேன் வழிவிடவேணுமையே

    தானந்தவங்க ளொன்றுங் காணாத அடியேனானையே
    தளரவிடவும் வேண்டா மொருகோடி தருமமுண்டுஐயே
    அல்லும் பகலுமுங்களா தரவாலே ஆளாகினேனையே
    அன்புடனே நல்ல் கதிபெறுவாயென்று அனுப்பவேணும

    பாடல் தலைப்பு


    13. அரகர சங்கர....

    தண்டகம்


    அரகர சங்கர அண்ணலே அம்பலத்தரனே
    நானுந்த னடைக்கலமென்று
    உருகித் துதியாரோ ஆனந்தம்
    பெருகிப் பதியாரோ

    முத்தியளிக்குந்திரு மூலத்தானரைக்கண்டு
    பத்திபண்ணாதவன் பாமரனல்லவோ
    பாருக்குச் சுமையாச்சு அவனிருந்தும்
    ஆருக்குச் சுகமாச்சு

    மங்கையர் மோகமாய் மயங்கித் தினந்தோறும்
    அங்கம்புளகிதமாய் அவரிடுமேவல்கொண்டு
    தோளைக்குழைத்தாரே அநியாயமாய்
    நாளையுங் கழித்தாரே

    வீசிநடைநடந்த மெய்யும் பொய்யாகவே
    ஓசையடங்கும்போ தொருவுமங்கில்லை
    தூசியும் போகாதேகாதறுந்த
    ஊசியும் வாராதே

    சிவசிதம்பரமென்று தில்லைவெளியில் நின்று
    பவசாகரம்வென்று பரமபதமடையுந்
    தவநெறி பொருந்தாரே பொருந்தின
    அவரையும் வருந்தாரே

    சாத்திரங்கற்றாலுஞ் சதுர்மறையு ணர்ந்தாலும்
    சூத்திரம்பெற்றாலும் சொன்னேனகங்காரம்
    மாத்திரம் போகாதே கருணைக்குப்
    பாத்திரம் ஆகாதே

    சரணாகதமென்று சார்ந்தடி பணியாமல்
    வரனாச்சிரமவிதி வழிவாதிருக்கினும்
    சனனாதிகள் விடுமோசிரவண
    மனனாதிகள் படுமோ

    அட்டசித்திகள் பெற்ற ஆண்டாயிரங்கால
    மட்டிருந்தாலுமென் மரணபயமெய்திடும்
    நட்டசன்மமாச்சே மனித சென்மம்
    எட்டி வீணாய்ப் போச்சே

    முப்பாழுந்தாண்டி மூலத்தீமூட்டிக் கொண்டு
    அப்பாலேநின்றால் ஆனந்தங் காணலாம்
    ஒப்பா ரில்லையடா ஊடுருவி
    நிற்பா ரில்லையடா

    ஆலமிடறடக்கி யம்பலக்கூத்தன்கோ
    பாலகிருஷ்ணந் தொழும் பரமசிவனேயென்று
    பாடிப்பாடி யாரோ பருவத்தில்
    தேடிப் பிடியாரோ.

    பாடல் தலைப்பு


    14. ஆடிய பாதத்தைத்.....

    ராகம் : அசாவேரி
    தாளம் : திச்ரம்


    பல்லவி

    ஆடியபாதத்தைத் தாரும் உம்மைத்
    தேடிவந்தேன் இதோபாரும் பாரும் [ஆடிய]

    அநுபல்லவி

    நாடுபுகழ்ந்து தொழும் சிவகாமி மனோகரனே தில்லை
    நடராசரே உமது கையைவிடமாட்டேன் காணும் பாரும் [ஆடிய]

    சரணம்

    பாத்திரமல்லவோ பாலகிருஷ்ணன் பணிஹரனே சிதம்பர
    க்ஷேத்திர தரிசனமே வீடுசேர்க்குமென் றறியேனோ
    மாத்திரைப் பொழுதும்மை மறக்க என் மனது
    வராது என்றறிவீர், தோத்திரம் பண்ன மாட்டேன்
    அதிலென்னசுகம் அம்பலந்தனில் காணும். [ஆடிய]

    பாடல் தலைப்பு


    15. ஆடுஞ்சி தம்பரமோ...

    ராகம் : பேஹாக்
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    ஆடுஞ்சி தம்பரமோஐயன் கூத்
    தாடுஞ்சி தம்பரமோ

    சரணம்

    ஆடுஞ்சிதம்பர மன்பர் களிக்கவே
    நாடுஞ்சிதம்பரம் நமச்சிவாயப் பொருள் [ஆடுஞ்]

    ஆருமறியாமல் அம்பலவாணனார்
    சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கியே [ஆடுஞ்]

    பாலகிருஷ்ணன் போற்று பணிமதிச் சடையினார்
    தாளமத்தளம்போட தத்தித்தத் தெய்யென்று [ஆடுஞ்]

    பாடல் தலைப்பு


    16. ஆடியபாதா இருவர்.....

    ராகம் : சங்கராபரணம்
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    ஆடியபாதா இருவர்கள்நாடும் வினோதா [ஆடிய]

    அநுபல்லவி

    ஆடியபாதா அயனுமாலுந் தினம்
    தேடியுங்காணாமற் றிரைமறைவாகத்
    தித்தித் தித்தித் தித்தித் தியென்று [ஆடிய]

    சரணம்

    வீரவெண்டை யஞ்சிலம் பசைந்திட
    மேவுஞ்சடையும் புலியசைந்திடச்
    சாருந்தொண்டர்கள் மனங்குவிந்திடச்
    தாலோகாதி பதவியுந்
    தந்தோந் தந்தோந் தந்தோந் தந்தோமென நடனம் [ஆடிய]

    வேதமுனிவர்கள் பாடவுஞ் சனகாதியோகிகள்
    கூடவும்வெகு
    நாதமெங்கினு மூடவுஞ் திரலு நந்திமத்தளம்
    போடவுந் தகுந் தகுந் தகுந் தகுமென்று நடனம் [ஆடிய]

    பாலகிருஷ்ணன் துதிகள்செய்திடப் பண்ணவர்
    பூமாரிபெய்திடச்
    சீலமுளசிவகாமி மகிழ்ந்திடந் திருச்சிற்றம்பலத் தரசனுந்
    தாந் தாந் தாந் தாந் தாந் தாமென்று நடனம் [ஆடிய]

    பாடல் தலைப்பு


    17. ஆனந்தக் கூத்தாடினார்....

    ராகம் : கல்யாணி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    ஆனந்தக் கூத்தாடினார் அம்பலந்தனிலே பொன்னம் பலந்தனிலே

    அநுபல்வி

    ஆனந்தக் கூத்தாடினார் அயனும் மாலும் பாடினார்
    அந்தரங்கமாகச் சிந்தித்த பேர்க்கருள்
    நந்தோந் நந்தோம் என்று
    தொந்தோம் தொந்தோமென்று [ஆன]

    சரணம்

    பதஞ்சலிமா முனியை நோக்கிப்
    பார்த்த பேர்கள் குறையைப் போக்கி
    இதமகித மென்றறிவை நீக்கி
    ஏகமாகக் காலைத் தூக்கி [ஆன]

    மத்தளதாள மதிரமுழங்க
    வளரும்ப்ரமத கணங்க னிலங்கத்
    தத்திமிதக் கிடதோமன்றி லங்கச்
    சபையுந் துலங்கச் சதங்கை குலுங்க [ஆன]

    பாலகிருஷ்ணன் பணியும் பாதன்
    பார்த்தபேர்கள் வரப்பிர சாதன்
    ஞாலம்புகழுஞ் சீல போதன்
    நம்பி தூதன் அம்பிகை நாதன் [ஆன]

    பாடல் தலைப்பு


    18. இன்னமும் சந்தேகப்....

    ராகம் : கீரவாணி
    தாளம் : மிச்ர ஏலம்


    பல்லவி

    இன்னமும் சந்தேகப்படலாமோ

    அநுபல்லவி

    பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
    பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்தநீதான் [இன்னமு]

    சரணம்

    அன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல்
    புலையர்வரைக்கும்
    பின்னமறவேதோணுதே இந்தப் பேதமது காணேன்
    தன்னையறி கிறதவமே பெரிதென்று
    தரணியில் கோபாலகிருஷ்ணன்
    சொன்னதெல்லாம் மறந்துஇந்த மாயச்சுழலில்
    வீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமு]

    பாடல் தலைப்பு


    19. உனது திருவடி...

    ராகம் : சரசாங்கி / லதாங்கி
    தாளம் : ஆதி


    பல்லவி

    உனது திருவடி நம்பிவந்தேன் எனக்
    கொருவருமில்லைநா னேழை [உனது]

    அநுபல்லவி

    அனுதினமும் பொன்னம்பலந்தனிலே
    ஆடிபாதரே என்சுவாமி [உனது]

    சரணம்

    இரவும்பகலும் விஷயாதிகளென்னை யிழுக்கும் நானதை
    மரிததுமிபபடிபரி தரித்திடலானேன்

    பார்க்கலாமோ பாலகிருஷ்ணன்போற்றும் பரனே
    பரமதயாநிதியே நின்பக்தியைத்தந்து
    சித்தமகிழ்திடக் கரையேற்றிடுவதுன் பாரஞ்
    சொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் [உனது]

    பாடல் தலைப்பு


    20. எந்நேரமும் உந்தன்...

    ராகம் : தேவகாந்தாரி
    தாளம் : ஆதி


    பல்லவி

    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா

    அநுபல்லவி

    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
    பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]

    சரணம்

    திசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும்
    தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
    பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல்
    பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]

    பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
    கோவிலழகும் அரி தானரகசியமும்
    அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]

    சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும்
    தேரருலகில்கிடை யாதவசியமும்
    பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
    பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர]

    பாடல் தலைப்பு


    21. எப்போ வருவாரோ....

    ராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி

    எப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ

    அநுபல்லவி

    செப்பியதில்லைச் சிதம்பரதேவன் [எப்போ]

    சரணம்

    நற்பவரும்வந்து நாதனைத் தேடும்
    கற்பனைகள் முற்றக் காட்சிதந்தான் [எப்போ]

    அற்பசுகவாழ்வி லானந்தம் கொண்டேன்
    பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன் [எப்போ]

    பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன்
    மேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன் [எப்போ]

    பாடல் தலைப்பு


    22. கனகசபாபதி தரிசனம்.....

    ராகம் : தன்யாசி
    தாளம் : ஆதி


    பல்லவி

    கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

    அநுபல்லவி

    சனகமகாமுனி கைதொழுதேத்திய
    தினகரகோடி தேசோமயமாகிய [கனக]

    சரணம்

    மனதிலொடுங் கியகல்மஷம் போக்கும்
    மாயப்பிணியதனை மறுவடி வாக்கும்
    சனனமரண சமுசாரத்தை நீக்கும்
    திருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக]

    சுருதிமுடிகளிலுஞ் சொல்லிக் கொண்டாடும்
    தூயவொளியை யொளியாகவே கூடும்
    தருமநெறியுந் தவறாதுள நாடும்
    ததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக]

    பற்பலயோசனை செய்வதுந் தொல்லை
    பரகதியடையவு பாயமுமில்லை
    அற்புதமாகவே தானொரு சொல்லை
    அணியுங் கோபாலகிருஷ்ணன் பணியுந்தில்லை [கனக]

    பாடல் தலைப்பு


    23. சங்கரனைத் துதித்தாடு....

    ராகம் : தோடி
    தாளம் : ஆதி


    பல்லவி

    சங்கரனைத் துதித்தாடு இனி
    சனனமில்லை என்று

    அநுபல்லவி

    பொங்கர வணிந்திடும் பொன்னம் பலவனை
    புந்தியில் நினைவாய்ப் போற்றிசிவனை [சங்கர]

    பாரினிற் பெண்கள்மேற் கருத்து போய்
    பற்றவொட் டாமலே திருத்து
    பேரின்ப ஞானத்தை வருத்து சுக
    பெருவெளி நெஞ்சினி லிருத்து [சங்கர]

    நீர்மேற் குமிழியிக் காயம் என்றும்
    நிலையில்லா வாழ்விது மாயம்
    பெரிய மாலயன் நேயம் பெறப்
    பேசுவரீதேயு பாயம் சிவ [சங்கர]

    மனிதச் செனனத்தில் தேடு நல்ல
    மாதவத் தோர்களைக் கூடு
    தனிவெளி யாமொரு வீடு தன்னைத்
    தத்துவத்தால் கண்டு நாடுசிவ [சங்கர]

    பாடல் தலைப்பு


    24. தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத்....

    ராகம் : நாதநாமக்ரியை
    தாளம் : ஆதி


    பல்லவி

    தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் தரிசிக்கவேணும்

    அநுபல்லவி

    தரிசித்தவுடனுடல் கரிசைப்பிணிகளறும்
    பரிசுத்தமாகுமுன் மறுசுத்தமாறவே [தரிசிக்க]

    சரணம்

    பக்தர் பணியுந்திருக் கூத்தன்சந்நிதி தொழு(து)
    ஏத்திப் பிறவித்துய ராத்தியெப்போதும் [தரிசிக்க]

    வேதனை யடியவர் போதனை முனிவர்கள்
    நாதனைக் கரங்குவித் தாதரவாகவே [தரிசிக்க]

    ஈசனே புலியூரில் வாசனே கனகச
    பேசனே யென்றுநட ராசனைப்போற்றி [தரிசிக்க]

    காமத்தை யகல்பவர் வாமத்தி னின்றுசிவ
    நாமத்தைச் சொல்லியர்த்த சாமத்தில்வந்து [தரிசிக்க]

    ஞாலம் புகழுமவன் மாலய ணியுங்கோ
    பாலகிருஷ்ணன் தொழுஞ் சீலபொற்பாதத்தை [தரிசிக்க]

    பாடல் தலைப்பு


    25. தாண்டவ தரிசனந்தாரும்....

    ராகம் : ரீதிகௌன
    தாளம் : சம்பை


    பல்லவி

    தாண்டவ தரிசனந்தாரும் தாமதம் பண்ண
    வேண்டாம் இது சமயம் [தாண்ட]

    அநுபல்லவி

    ஆண்டவனே உன்பெருமையை யாரறிந்துரை செய்வார்
    நம்பியிருக்கிறேன் பேதை யெந்தனுக்கொருதரம் [தாண்ட]

    சரணம்

    ஆசைவலைக்குள் தங்கிப்பொங்கி மயங்கித்
    தடுமாறிமும்மதங்கல்மீறி
    யானெனதென் றுரைக்கும் பாசமகல நெறிநிறுத்திட
    மாயவன் கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் உந்திருவடி
    தாரிதகுகுஜெம்தரிதக ணந்தரிதிரிகுதிரிகுதீம்தீம்
    தக்கிடத்தகதோ மொன்றாடிய [தாண்ட]

    பாடல் தலைப்பு


    26. திருவாதிரை தரிசனதிற்கு....

    ராகம் : தன்யாசி
    தாளம் : திரிபுட


    பல்லவி

    திருவாதிரை தரிசனதிற்கு வந்தேன் உந்தன்
    திருவாதிரை தரிசனத்திற்கு வந்தேன்

    அநுபல்லவி

    திருவாய்திறந் துறவாயினி பிறவாவரந் தருவாயென்று [திருவா]

    சரணம்

    கங்குகரையேது பவக் கரைதண்டவே யுனதுசிவ
    கங்கைதனில் மூழ்கி பவக்கடலுங்குளப் படியாகவே [திருவா]

    அல்லும்பகலுனது சபை அருகில்நின்று கூத்தாடினால்
    கல்லாம முருகும்பர கதியுங்கை வசமாகுமே [திருவா]

    ஆலந்தனைக் கண்டோடி யவமரர்துயர் கெடக்காத்தவன்
    பாலகிருஷ்ணன் பணியுந் திருப்பாதங் கனகசபாபதியே [திருவா]

    பாடல் தலைப்பு


    27. தில்லையைக் கண்டபோதே.....

    விருத்தம்



    தில்லையைக் கண்டபோதே தெளிந்த தென்னுள்ள மெல்லாம்
    பல்லூழி காலஞ்செய்த பாழ்வினை தொலைந்து போச்சு
    நல்லருள் நடனங் காட்டும் நாயனார் சிற்சபைக்குள்
    செல்லுரார் மகிமை செப்பச் சேடனா லாகாதன்றே.

    பாடல் தலைப்பு


    28. பக்தி பண்ணிக்...

    தண்டகம்



    பக்திபண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே

    அநுபல்லவி

    எத்திசையு மெவ்வுயிக்கு மவ்வுயிராய் நிறைந்திருக்கும்
    வத்துமென்று அம்பலவன் மலரடியே தினந்தோறும் [பக்தி]

    சரணம்

    கட்டழகி சாரனிடங் காதலது போலே
    கடுகி வருங்கன்றருகில் கபிலையது போலே
    கட்ட அரைத்துணிகிடையா கசடனொரு காலே
    காவலனார் பதம்வருகில் களிப்பதனைப் போலே
    கண்டுமுறை கீழகலக் கண்டறியார் மதுமயக்கங்
    கற்பனையாமிப் பிரபஞ்சஞ் சொற்பணம்
    போலொப்பிமிகும் [பக்தி]

    தாயடிக்கில் பால்குடிக்கத் தழுவுதல் திருட்டாந்தம்
    சடலம் பொறுக்காமல் துயர்தருகிலு மேகாந்தம்
    ஆயிருந்துவழுத் திலிந்த மாயையுப சாந்தம்
    ஆகுமென்று சாதனங்கள் வழங்குது வேதாந்தம்
    காயஞ்சனிக்கா திருக்கக் கண்டுகொள்ள வேணுமென்றால்
    நேசமுடன் காசுபணம் பாசமது மாசறவே [பக்தி]

    பச்சைமரத் தாணிபோலே பதிந்து மனம்நாடி
    பாலகிருஷ்ணன் பணியும் பொன்னம்பலனைக் கொண்டாடி
    இச்சை யொழிந்தைம் புலன்களையும் பொறிகள்வாடி
    ஏகானந்த மானபரி பூர்ணத்தைத் தேடி
    அச்சமறந் திருவிழியி லானந்தநீர்கரை புரள
    அரனே திரிபுரனே கங்காதரனே பராபரனேயென்று [பக்தி]

    பாடல் தலைப்பு


    29. பாடுவாய் மனமே....

    ராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி

    பாடுவாய் மனமேசிவனைக் கொண்டாடுவாய் தினமே

    சரணம்

    இந்திரன் முதலிய இமையவர்க் கதிகாரி
    நந்தியின் மீதேறும் நம்பன் பதம்போற்றி [பாடுவா]

    ஆல முண்டே அமரரைக் காத்ததிரு
    நீலகண்டன் கழல் நெறியுடன் போற்றி [பாடுவா]

    சீல மாதவர் சித்தம் நின்றாடுஞ்
    சூலபாணி யெனுஞ் சுயம்புதாள் போற்றி [பாடுவா]

    மோகமாம் துன்பம் மூழ்கிக் கெடாமல்
    ஆக முறையாய் அந்தி வண்ணனைப் [பாடுவா]

    பஞ்சாட் சரந்தனைப் பக்தியாயுரு வேற்றி
    மெய்ஞ்ஞானம் பெற்றுய்ய மேலோனைநீ போற்றி [பாடுவா]

    பாடல் தலைப்பு


    30. பார்க்கப் பார்க்கத்....

    ராகம் : அபிகாம்போதி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    பார்க்கப் பார்க்கத் திகட்டுமோஉன்பாத தரிசனம்
    பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ

    அநுபல்லவி


    ஆர்க்குமானந்தம் பொழியுந் தில்லைத் தாண்டவராயா [பார்க்க]

    சரணம்

    தில்லைமூவாயிர முனிவர்கள் தினமும் பூசித்திடும்பாதம்
    சிற்சபையில் திந்திமிதிமி தோமென்றாடிய பாதம்
    எல்லையில் லாதவின்பம் எந்தனுக்கருள் செய்திடும்பாதம்
    இரவும்பகலு மாயன்கோ பாலகிருஷ்ண னேத்தும்பாதம் [பார்க்க]

    பாடல் தலைப்பு


    31. பிறவாத வரந்தாரு...


    ராகம் : ஆரபி
    தாளம் : ஆதி


    பல்லவி

    பிறவாத வரந்தாரு என்னையா
    பிறவாத வரந்தாரும்

    அநுபல்லவி

    அறிவுடையோர் தொழுதேத்திய தில்லைப்பொன்
    னம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]

    சரணம்

    எண்பத்து நாலு லட்சம் ராசிகளில்
    எடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ
    புண்பட்டதுபோதும் போதும்இனிமேல் புத்தி வந்ததையா
    நண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில்
    நாள்க டோறும் மனவி லாசங்களில்
    இன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு
    தேத்திய சக தீசனே நடராசனே. [பிறவா]

    பாடல் தலைப்பு


    32. வேதம் படித்ததும்...


    தண்டகம்



    வேதம்படித்ததும் சாத்திரங்கற்றுதும் மெய்யினில்நீறு பூசுவதும்
    ஆதிசிதம்பர தேசிகன் திருவடிக் காளானாலன் றானந்தம்
    உடனே தொலையும் பலபந்தம்
    ஊணுறக்கமுத லாகியநான்கு முண்டேயுலகில் யாவருக்கும்
    ஆணவமலத்தை நீத்தார்கள்றிவா ரகத்தைச்சுக்கிக் கொள்ளுவரே
    சகத்தைப் பொய்யாத் தள்ளுவரே
    சொன்னேன் சொன்னேன் சொன்னேன்
    அருந்தவமாமுனி யாகிலும் நல்லா
    ராசை பொல்லாதார றிவாரோ
    வருத்தப்படுத்தி மனத்தை மயக்கி
    வைத்திடு மன்ன மயகோசம
    உற்றுப் பார்த்தாலது நேசம்
    சொன்னேன் சொன்னேன் சொன்னேன்
    அரவணைகோ பாலகிருஷ்ண னல்லும்பகலும்
    திருவடிசரணா கதமென் றேண்ணித்
    தெளிந்தார்க் கன்றோ பரபக்தி
    ஒழிந்தார்க் கன்றோ வரமுக்தி
    சொன்னேன் சொன்னேன் சொன்னேன்

    பாடல் தலைப்பு



    விருத்தங்கள்



    தில்லையக்கண்ட போதே தெளியததென் உள்ளமெல்லாம்
    பல்லூழி காலம்செய்த பாழிவினை தெரிந்துபோச்சு
    நல்லருள் நடனம்காட்டு நாயருள் சற்சபைக்குள்
    சொல்லுவார் மகிமை செப்பச் சேடகாலாகாதன்றே

    அன்றுவேளக யங்கியில் வேள்விகள் தொடர்ந்தும்
    குன்றலாத் தவப்புண்ணிய மாமலை குவித்தும்
    என்று மேற்பவர்த் தெரியும் வருவர்க்கனஅகி
    மன்றுளாடியின் பாதத்தில் மனங்கொள வருமோ?!

    பாடல் தலைப்பு


    34. ஆடிய பாத தரிசனம்...


    இராகம் : யதுகுல காம்போஜி
    தாளம் : ஆதி - 2களை

    ஸரிமபதஸ் - ஸ்தபமகஸரீஸ


    பல்லவி

    ஆடிய பாத தரிசனம் கண்டால் - ஆனந்தம் பெண்ணே

    அநுபல்லவி

    தேடிய பொருளும் கூட வராது - தெரிந்து பாரடி பெண்ணே

    சரணம்

    மந்திர தந்திரம் மழலையும் சேரும் - வாரும் சில காலம் தங்கள்
    அந்தக்கரணத் திருகலடங்கி ஆற்றலொழிந்தால் இந்திரஜாலம்

    பாடல் தலைப்பு


    35. ஆடிய பாதமே...


    இராகம் : அசாவேரி
    தாளம் : மிச்ர சாபு

    ஸரிமபதஸ் - ஸ்நிஸ் பதமப ரிகரிஸ


    பல்லவி

    ஆடிய பாதமே கதியென் றெங்கும்
    தேடியும் காண்கிலேன் பதி அவன்

    அநுபல்லவி

    நாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர
    நாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க

    சரணம்

    பக்தியே அருளென்று வரும் தாசன் - கோ
    பால கிருஷ்ணன் தொழும் நட ராசன்
    சக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ
    சாட்சியாய் நிறைந்திடும் ஜகதீசன்
    வெற்றி பெருகிய மதனை வென்றவன்
    வேட னெச்சிலை வாரி யுண்டவன்
    அத்திமா லையை மார் பிற் கொண்டவன்
    அஞ்செழுத்துருவாகி நின்றவன்.

    பாடல் தலைப்பு


    36. கண்டேன் கலி...


    இராகம் : கல்யாணி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    கண்டேன் கலி தீர்ந்தேன்
    கருனைக் கடலை நான் [கண்டேன்]

    அநுபல்லவி

    நின்றேன் சந்நிதியருகில்
    நிர்மலா மிருதம் கண்டேன்
    வென்றேன் பொறிபுலன்களை
    விண்ணவர் போற்றும் பிரானைக் [கண்டேன்]

    சரணம்

    அனாதி கற்பிதமாகிய மாயைகள் யாவையும் வென்றேன்
    அதிச யானந்தம் கொண்டேன் ஆணவமலம் விண்டேன்
    மனாதிகளுக் கெட்டாமல் மகிமை பொருந்திய தில்லையில்
    மாயன் கோ பாலகிருஷ்ணன் தொழும் மாதேவன் திருமேனியைக் [கண்டேன்]

    பாடல் தலைப்பு


    37. கண நாதா சரணம்...


    இராகம் : மோகனம்
    தாளம் : ஆதி

    ஸரிகபதஸ் - ஸ்தபகரிஸ


    பல்லவி

    கண நாதா சரணம் காத்தருள்
    கண நாதா சரணம் [கணநாதா]

    அநுபல்லவி

    பணமார் சேடன் தாங்கிய பார் மீதினிலே
    குணமார் நந்தன் சரித்திரம் கூரக்கிருபைக் கண் பாரும்

    சரணம்

    சொல்லும் பிரணவ மூலா தூய வேதாந்த நாதா
    துலங்கு முனிவர் மனத்துகள் அறுத்தருள் போதா
    நல்ல மோதக முதல் நாடி நுகர் வினோதா
    நாயேன் சொலுந்தமிழை நாடி ரக்ஷ¢க்குந் தாதா [கணநாதா]

    பாடல் தலைப்பு


    38- கைவிட லாகாது...


    இராகம் : மலஹரி
    தாளம் : ரூபகம்

    ஸரிமபதஸ் - ஸ்தபமகரிஸ


    பல்லவி

    கைவிடலாகாது காம தேனு அல்லவோ [கைவிட]

    அநுபல்லவி

    மெய்விடும் பொழுது நேரே வந்துதில்லை
    வெளியைக்காட்டி நல்லவழியில் சேரும் என்னை [கைவிட]

    சரணம்

    ஆதியந்தமில்லாத உன் பெருமை
    ஆரறிந்து துதி செய்ய வல்லவர்
    சோதி மாமறையும் கண்டதில்லையென்று
    சொல்லக் கேட்டதும் இல்லையா
    நாதனே உன் பாத கமலங்களை
    நம்பி வந்தவர் பந்தந் தீரவே
    காதலோடும் கோபாலகிருஷ்ணன்
    கவிக்கருள் புரிந்த நடராஜனே என்னை [கைவிட]

    பாடல் தலைப்பு


    39. குஞ்சித பாதத்தை...


    இராகம் : பந்துவராளி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    குஞ்சித பாதத்தை தாரும்
    சஞ்சல பாவத்தை தீரும் [குஞ்சித]

    அநுபல்லவி

    செஞ்சிலம் பசையக் கனக சபைதனில்
    ஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்தோ மென்றாடிய [குஞ்சித]

    சரணம்

    பாலகிருஷ்ணன் தொழும் பாதா முக்தி
    நால்வர்க்குதவிய நாதா எந்தன்
    மேலே கிருபை செய்து வெற்றியளித்திடும்
    அத்தனே கர்தனே சுத்தனே யித்தனை நிர்தனம் செய்திடும் [குஞ்சித]

    பாடல் தலைப்பு


    40. தில்லை தில்லை...


    இராகம் : காபி
    தாளம் : ஆதி

    ஸரிமபநிஸ் - ஸ்நி பமகரிஸ


    பல்லவி

    தில்லை தில்லை என்றால் பிறவி
    இல்லை இல்லை என மறை மொழியும் [தில்லை]

    அநுபல்லவி

    தொல்லை தொல்லை என்ற கொடுவினை
    வல்லை வல்லை என்ற கலுந்திருத் [தில்லை]

    சரணம்

    வாடி வாடி மாலையன் இருவரும்
    கூடிக்கூடிக் கொண்டல்லும் பகலுந்தாம்
    தேடித் தேடொணாத் திருவடி முடிகளைப்
    பாடிப் பாடிக் கோபாலகிருஷ்ணன் தொழும் [தில்லை]

    பாடல் தலைப்பு


    41. தேவா ஜெகன்...


    இராகம் : கல்யாணவசந்தம்
    தாளம் : ஆதி

    ஸகமதநிஸ் - ஸ்நிதபமகரிஸ


    பல்லவி

    தேவாஜெகன் நாதா சரணம் மஹா [தேவாஜெக]

    அநுபல்லவி

    தேவா சன காதியர்கள் மகிழும் [தேவாசன]
    மூவாயிர வர்கள் நாவால் துதி செய்யும்

    சரணம்

    தில்லை மாநகர் சிவபெருமானே
    எல்லையில்லா இன்பம் தரும் தேனே
    தொல்லை வினை சஞ்சலமுந் தானே
    இல்லை என்றருள் செய் சீமானே [தேவாஜெக]

    பாடல் தலைப்பு


    42. நடனம் ஆடினார்...


    இராகம் : மாயமாளவ கௌளை
    தாளம் : மிச்ரசாபு


    பல்லவி

    நடனம் ஆடினார் ஐயன் - நடனம் ஆடினார் [நடனம்]

    அநுபல்லவி

    நடனம் ஆடினார் தில்லை - நாயகம்
    பொன்னம்பலம் தனிலே [நடனம்]

    சரணம்


    முந்தி மடந்தை சிந்திக்க சிந்திக்க
    மோக வலைகள் பத்திக்க பத்திக்க
    பக்தர்கள் மனது தித்திக்க தித்திக்க
    பாதச் சிலம்புகள் சப்திக்க சப்திக்க [நடனம்]

    மத்யமகாலம்

    பணிமதி சடையாட பதஞ்சலி மாமுனி மறையாட
    பண்ணவர்கள் கொண்டாட பாலகிருஷ்ணன்
    மத்தளம்போட [நடனம்]

    சொற்கட்டு ஸாஹித்யம்


    தத்தீம் ததீம் ஜெணுதக திமித சபையில்
    தக தோம் தரி கனகச பையில்
    தரிஜேகுட ஜெம்ஜெம் தோம்என கனகச பையில்
    ததித்தோம் என கனக சபையில் [நடனம்]

    பாடல் தலைப்பு


    43. நந்தா உனக்கிந்த...


    இராகம் : மோகனம்
    தாளம் : ஆதி

    ஸரிகபதஸ் - ஸ்தபகரிஸ


    பல்லவி

    நந்தா உனக்கிந்த மதி
    தந்த தா ரடா

    அநுபல்லவி - மத்யமகாலம்

    அந்தரங்கம் சொந்தமாயிருந்தது மறந்து போய்
    விந்தையாய் நினைந்த தின்னோ அந்த வேளை புத்த இல்லை.

    சரணம்

    கொல்லை காட்டு கரிபோலே பல்லை காட்டி பேசுவாய்
    கல்லை காட்டி கோபம் கொண்டு செல்லை காட்டி ஏசுவேன்
    தில்லை என்று சொன்னதெல்லாம் இல்லையென்று போச்சுதா
    கல்லையென்று ஐயர்சொன்ன சொல்லே நிசமாச்சுதா
    சித்தமும் தெளிந்ததா கத்தலும் பறிந்ததா
    சட்டம் சட்டம் நல்லது நல்லது மெத்த மெத்த சந்தோஷம்

    பாடல் தலைப்பு


    44. பாதமே துணை...


    இராகம் : பூர்ணசந்த்ரிகா
    தாளம் : ஆதி

    ஸரிகமபதபஸ் - ஸ்நிதபமரிகமரிஸ


    பல்லவி

    பாதமே துணை ஐயனே நின்
    பாதமே துணை ஐயனே

    அநுபல்லவி

    பாதமே துணை யல்லால் [3] - வேறொரு
    சேதிகளும் நானறிந்திலேன்

    சரணம்

    பாலனுக்கருள் செய்த பராபரன்
    பாலகிருஷ்ணன் கவிக்கு தயாபரன்
    சீலமுள்ள சிவகாமி மனோகரன்
    கோலநடம்புரி ரஞ்சித குஞ்சித [பாதமே]

    பாடல் தலைப்பு


    45. மாதவமே ஓ...


    இராகம் : சாமா
    தாளம் : ரூபகம்

    ஸரிமபதஸ் - ஸ்தபமகரிஸ


    பல்லவி

    மாதவமே ஓ குருவாய்
    வந்தது காண் வழி வசமாய் [மாதவமே]

    அநுபல்லவி

    ஆதவனை கண்ட பனிபோல் [2]
    அச்சுது என்றன் குறைகள் தீர

    சரணம்

    நீலகண்டம் என்று ரைத்து என்
    நேரமும் சிவ கதை படிக்கும்
    சீல குணத் தொண்டர் திருச்
    சேவடி கண்டேன் அடியான் [மாதவமே]

    பாடல் தலைப்பு


    46. இந்தப் பிரதாபமும்...


    இராகம் : சுத்தசாவேரி
    தாளம் : ஆதி

    ஸரிமபதஸ் - ஸ்தபமரிஸ


    பல்லவி

    இந்தப் பிரதாபமும் இந்த வைபோகமும் [இந்தப்]
    எங்கெங்கும் காணேன் ஐயா

    அநுபல்லவி

    எந்தெந்த வேளையும் உன்றன் சந்நிதி [எந்தெந்த]
    எவர்களுக்கு முண்டோ சிவ காமி நேசரே

    சரணம்

    சந்திர சூரியர் சகல பூதகணங்கள்
    சண்டே சுரர் தண்டி முந்து வித்யாதரர்

    வந்து போற்றும் அர்த்த சாம வேளை தனிலே
    மகிழும் கோபாலகிருஷ் ணனது திக்கும் நடேசரே. [இந்தப்]

    பாடல் தலைப்பு


    47. இது நல்ல...


    இராகம் : தன்யாசி
    தாளம் : ஆதி

    ஸகமபநிஸ் - ஸ்நிதபமகரிஸ


    பல்லவி

    இது நல்ல சமயமையா ரக்ஷ¢க்க - இது நல்ல சமயமையா

    அநுபல்லவி

    இது நல்ல சமயமையா ரக்ஷ¢த்தாளும்
    ஈசா மகேசா நடேசா சபேசா

    சரணம்

    பாலகிருஷ்ணன் போற்றும் பாதங்களைக் காட்டிச்
    சீலமுள்ள முக்தி சேர்வதற்காக [இது நல்ல]

    பாடல் தலைப்பு


    48. சிதம்பரம் போகாமல்...

    இராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி

    சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
    ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்

    சரணம்

    பக்தியும் மனமும் பொருந்தின தங்கே
    சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே
    ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
    பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.

    பாடல் தலைப்பு


    49. தொண்டரைக் காண்கிலமே...


    இராகம் : சஹானா
    தாளம் : ஆதி

    ஸரிகமபமதாநிஸ் - ஸ்நிஸதபம காமரிகரிஸ


    பல்லவி

    தொண்டரைக் காண்கிலமே தில்லையில் வந்த

    அநுபல்லவி

    அண்ட சராசர மெங்கும் படிய ளந்து
    மன்று ளாடிய மன்னவர்க் கடிமைத்

    சரணம் 4

    பாலகிருஷ்ணன் பணிந்தேத்திய பாதன்
    கோலச் சிலம்பணியுங் குண்டலநாதன் [தொண்டரை]

    பாடல் தலைப்பு


    50. பேயாண்டி தனைக்...


    இராகம் : சாரங்கா
    தாளம் : கண்டசாபு

    ஸரிஸபமபதநிஸ் - ஸ்நிதபமரிகமரிஸ - (ம=சுத்தமத்யமம்)


    பல்லவி

    பேயாண்டி தனைக் கண்டு நீ யேண்டி மையல்
    கொண்டாய் பெண்களுக்க ழகா மோடி

    அநுபல்லவி

    மாயாண்டி சுட லையில் வாழ்வாண்டி காளியுடன்
    வாதாடிச் சூதாடி வழக்காடித் திரிவாண்டி

    சரணம்

    சுந்தரர்க்குத் தூது நடந்தவன் இவன் தாண்டி
    தும்புரு நாரதர் பாட்டைக் கேட்டாண்டி
    சந்தோஷம் வந்தால் உன்னைத் தழுவ வருவாண்டி
    சமயம் வந்தால் ஒரு காலைத்தூக்கு வாண்டி.

    பாடல் தலைப்பு


    51. போதும் போது...


    இராகம் : கமலாமனோஹரி
    தாளம் : ஆதி

    ஸகமபநிஸ் - ஸ்நிதபமகஸ


    சரணம்

    போதும் போது மய்யா எடுத்த ஜன்மம்

    அநுபல்லவி

    மாதவ முனிவர்கள் வந்திருக்கும் தில்லை
    வனத்திலனு தினமும் வளரு மம்பலவா

    சரணம் 5

    அண்ணல் கோபா லகிருஷ்ணன் பணியுந்திரு
    அம்பல மேவும் பொன் னம்பல வாணா [போது]

    பாடல் தலைப்பு


    52. மனது அடங்குவதால்...

    இராகம் : கௌளி பந்து
    தாளம் : ஆதி

    ஸரிமா பநீஸ் - ஸ்நிதபமபதமாகரிஸ - (ம=ப்ரதிமத்யமம்)


    பல்லவி

    மனது அடங்குவதால் முத்தி
    மார்க்கம் பெறலாகும்

    அநுபல்லவி

    அன நடை யாழுமை பாகன் திருச்சிற்
    றம்பல வாணன் பாதார விந்தங்களில்

    சரணம்

    எங்கள் கோபா லகிருஷ்ணன் பதம் பாடி
    இயம நியம வாசனை களிற் கூடிப்
    பொங்கும் சமாதி பொருந்திடத் தேடிப்
    போவதுமில்லை இருந்தது வாடி

    பாடல் தலைப்பு


    53. மோசம் வந்ததே...


    இராகம் : ஆபோகி
    தாளம் : ஆதி

    ஸரிகமதஸ் - ஸ்தமகரிஸ


    பல்லவி

    மோசம் வந்ததே சாமி இந்த

    அநுபல்லவி

    தேசம் புகழ் தில்லைச் சிற்சபையைக் கண்டு
    சிந்தனையல்லல் தீரச் சிவனே யென்றிராமல்

    சரணம்

    தாசன் பாலகிருஷ்ணன் தாழ்ந்து போற்றும் நட
    ராஜமூர்த்தி யென்று நம்பினேனே பாவி
    தேசம் எங்கும் பொருள் தேடிய லைந்தேனே
    ஆசைவலை யாலே அழிந்து நொந்தேனே.

    பாடல் தலைப்பு


    54. திருநாளைப் போவான்...


    இராகம் : கமாசு
    தாளம் : ஆதி


    பல்லவி

    திருநாளைப் போவான் சரித்திரம்
    தேனினும் பாலினும் இனியது கண்டீர்

    அநுபல்லவி

    சித்தமு ருகிய சிவயோகிகளுக்கு
    அர்த்தமிது வென்றே அனுதினம் பணிந்திடும் [திருநாளை]

    சரணம்

    மேதினி புகழும் ஆதனூர் விளங்கும்
    மாதவம் புரிந்தே சாதனை பெருகிய [திருநாளை]

    அநுபல்லவி போல்

    பேதம் இலாதவன் வேதப் பொருளை விரைந்(து)
    ஓதும் கருணைகுரு நாதனைப் பணிந்திடும் [திருநாளை]
    . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    55. பழனம ருங்கணையும்...


    இராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ஆதி


    நொண்டிச்சிந்து

    (உபமன்யு முனிவர் சொல்வது)

    பழனம ருங்கணையும் புலைப்
    பாடியது கூரை வீடுதனில்
    சுரையோ படர்ந்திருக்கும் அதைச்
    சுற்றிலும் நாய்கள் குரைத்திருக்கும்
    . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    56. சிவனே தெய்வம்...


    (நந்தனார் பெரியோர்களுடைய ஒழுக்கத்தைச் சொல்வதும் அதற்கு அவர் சாதியினரின் விடையும்)

    இராகம் : சுத்தசாவேரி
    தாளம் : -


    இருசொல் அலங்காரம்

    (உத்தரப் பிரதியுத்தர தரு)

    சிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம்
    தவமே பெருமை தான்சம்பிர தாயம்

    சேரியே சொர்க்கம் ஏரியே கைலாசம்
    மாரியே தெய்வம் மதசம்பிர தாயம்

    பாடல் தலைப்பு


    57. செந்தாமரை மலர்...


    இராகம் : யதுகுல காம்போதி
    தாளம் : திச்ரலகு


    செந்தாமரை மலர் சூமோடை மேடை
    செறிந்த மாதர்களாட்டம் செறிந்த வேளூர்

    எந்தை பிரான் பிடேககோ ரோசனை
    சந்தொழிந் தார்மன வாட்டம்
    . . . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    58. சிங்கார மான...


    இராகம் : பூரிகல்யாணி
    தாளம் : திச்ரலகு


    சிங்கார மானபள்ளு பாடினார்
    அங்கங் குளிர்ந்து கொண்டாடினார்

    பாடல் தலைப்பு


    59. தலம்வந்து...


    இராகம் : கேதாரம்
    தாளம் : கண்டலகு


    சவாயி


    தலம்வந்து வீதிவலம் வந்து கண்கள்
    சலம்வந்து சோரும் பலம்வந்த தெங்கள்
    குலம்சுத்த மாச்சு மனம்வெந்து போச்சு
    தலம்கண்டோம் என்று நிலம்கொண்டு நின்றார்.

    பாடல் தலைப்பு


    60. சிவலோக நாதன்...


    இராகம் : கேதாரம்
    தாளம் : கண்டலகு


    சவாயி


    சிவலோக நாதன் திருச் சந்நிதானம்
    மலையாகி நந்தி மறைத்திடு திங்கே
    பலகாலம் செய்த பாழ்வினை குவிந்து
    மலையாகி இப்படி மறைத்ததோ வென்றார்.

    பாடல் தலைப்பு


    61. ஒரு நாளும்...


    (திருப்புன்கூர் ஈசன் நந்தியைப் பார்த்துச் சொல்வது)

    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : கண்டலகு


    துக்கடா


    ஒரு நாளும் வாராத பக்தன்
    திருநாளைப் போவார் என்னும் சித்தன்
    உலகெங்கும் பிரசித்தம் கண்டு நீ
    ஒதுங்காமல் இருந்தது உன்பேரில் குற்றம்.

    பாடல் தலைப்பு


    62. குதித்தார் எக்கலித்தார்...


    (திருப்புன்கூர் ஈசனை தரிசித்த நந்தனாரின் நிலை)

    இராகம் : மாயாமாளவகௌளை
    தாளம் இல்லாமல் பாடுவது


    கடுக்கா


    குதித்தார் எக்கலித்தார் உள்ளம் களித்தார்
    பள்ளு படித்தார் கண்ணீர்வடித்தார் பற்களைக்கடித்தார்
    ஒருதரம் துடித்தார் இருதரம் நடித்தார்
    இப்படி தரிசனம் செய்தார் நந்தனார்
    தரி சனம் செய் தாரே.

    பாடல் தலைப்பு


    63. தடாகம் ஒன்று...


    (நந்தனாருக்காக விநாயகர் குளம் வெட்டியது)

    இராகம் : மோகனம்
    தாளம் : ஆதி


    பல்லவி

    தடாகம் ஒன்றுண்டாக் கினார் கணநாயகர்

    அநுபல்லவி

    சடாம குடதரன் சாம்பவி யுடன்வர
    சகலமு னிவர்மனத் தாமரையு மலர
    கடாட்ச மாககுகன் கணபதி யுடன்மன்ன
    காதலெ வருந்துன்ன போதவேயு சிதமென்ன

    சரணம்

    கந்தமுலாவிய தாமரைப்பூத்துக் கதிக்கமி குத்திடும்சேக
    கண்டவ ராலுளு வைக்கணமங்கு குதிக்க
    சுந்தரமி குந்தபற வைகள் முழுதிலும்சூழ
    சோம சூரியர்கள் சுகமுடன் வந்துதாழ
    விந்தை யுடனேபல வேள்வியந் தணர்செய்ய
    விளங்கு சங்கினமுய்ய களங்கமில் லாமற்றுய்ய.
    . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    64. நாளைப் போகாமல்...


    தாளம் : சாபு

    நாளைப் போகாமல் இருப்பேனோ இந்த
    நாற்ற நரம்பை இன்னும் சுமப்பேனோ நான் [நாளை]
    . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    65. காணாமல் இருக்க...


    இராகம் : சக்ரவாகம்
    தாளம் : மிச்ரம்


    ஆனந்தக் களிப்பு



    பல்லவி

    காணாமல் இருக்க லாகாது பாழும்
    கட்டைக்க டைத்தேற வேண்டியி ருந்தால் [காணாமல்]

    சரணம்

    . . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    66. தில்லையம்பல...


    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : மிச்ரம்


    இருசொல் அலங்காரம்

    (உரத்த குரலில்)

    தில்லையம்பல மென்று
    சொல்லச் சொன்னார்

    (தாழ்ந்த குரலில்)

    கள்ளப் பேச்சென்று
    மெள்ளச் சொன்னார்

    . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    67. வாருங்கள் வாருங்கள்...


    இராகம் : நீலாம்பரி
    தாளம் : ஜம்பை


    பல்லவி

    வாருங்கள் வாருங்கள் சொன்னே நீங்கள்
    வாயாடா தோடி வருவீரென் முன்னே

    சரணம்

    அஷ்டமா சித்திகளைப் பெறலாம் தில்லையில்
    ஆனந்தத் தாண்டவன் கோவிலைக் கண்டு
    இஷ்டமுடன் வீதி வலம் வந்து ஈசன்
    இணையாடி தொழு தார்க்கு
    இனிப் பிறப் பில் லை.

    பாடல் தலைப்பு


    68. சிதம்பர தரிசனம்...


    இராகம் : யமுனாகல்யாணி
    தாளம் : ஆதி


    தண்டகம்


    சிதம்பர தரிசனம் காணாவிடில் இந்த
    சென்ம சாபல்ய மாமோ
    செனன மரண சமுசாரம் பெருகவே
    செய்த வினைகள் போமோ.

    பாடல் தலைப்பு


    69. மீசை நரைத்துப்...


    இராகம் : நாதநாமகிரியை
    தாளம் : ஏகம்


    மீசை நரைத்துப் போச்சே கிழவா
    ஆசை நரைக்க லாச்சோ
    பாசம் வருக லாச்சே கிழவா
    பாவம் விலகிப் போச்சோ.

    பாடல் தலைப்பு


    70. எல்லைப் பிடாரியே...


    (தம் சாதியினருக்கும் நந்தனாருக்கும் வாக்குவாதம்)

    இராகம் : நீலாம்பரி
    தாளம் : --


    இருசொல் அலங்காரம்

    (தாளமின்றிப் பாடுவது)

    எல்லைப் பிடாரியே
    எதிரெதிராக வந்தெமது
    கொல்லையுள் ஆவலாய்
    கொள்ளடி

    சொல்லினு மடங்காத
    சோதி பரமானந்தத்
    தில்லை நாயகரை
    தேவர் அறியாரோ.

    பாடல் தலைப்பு


    71. திருநாளைப் போவாரிந்த...


    இராகம் : நாதநாமக்ரியை
    தாளம் : ஆதி


    திருநாளைப் போவாரிந்த சேரிக்கும் ஊருக்கும்
    யாருக்கும் பெரியவன் திருநாளைப் போவார்
    ஒருதர மாகிலும் சிவ சிதம்பரமென்று
    உரைத்திடீர் என்றில் உண்மை கூறிய [திருநாளை]

    பாடல் தலைப்பு


    72. தத்திப் புலிபோலே...


    (நந்தனார் மற்றவர்களைப் பார்த்து சிவநாமத்தைச் சொல்லும்படி சொல்வது)

    இராகம் : மோகனம்
    தாளம் : திச்ரலகு


    தத்திப் புலிபோலே தாண்டிக் குதிப்பார்
    முத்தமிடு வதுபோல முகத்தைக் கடிப்பார்
    . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    73. அரகர சிவசிவ...


    இராகம் : நாதநாமக்ரியை / மோகனம்
    தாளம் : ஏகம் / திச்ரலகு


    அரகர சிவசிவ அம்பலவாணா
    தில்லையம் பலதேசிக நாதா

    புரமூன்றெரித்த பொன்னம் பலனே
    கரியுரி போர்த்த கருணா கரனே

    அனுதினம் மன்றுள் ஆடிய பாதா
    பிழைப்பொறுத் தாளும் புண்ணியம் தாதா

    பாடல் தலைப்பு


    74. சேதிசொல்ல வந்தோம்...


    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : ஏகம்


    பல்லவி

    சேதி சொல்ல வந்தோம் நந்தனார்

    சரணம்

    ஏரைப்பிடித்துச் சற்றே உழுவான் மனத்
    தேங்கித் தள்ளாடியே விழுவான் எங்கள்
    சேரியைப் பார்த்தே அழுவான் சிவ
    சிதம்பர என்றே தொழுவான் ஐயே

    (அநுபல்லவியைப் பெரும்பாலும் பாடுவதில்லை)

    பாடல் தலைப்பு


    75. நந்த னாரும் வந்தார்...


    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : ஆதி


    துக்கடா

    (விரைவாகப் பாடுவது)

    நந்த னாரும் வந்தார் வெகு
    சொந்தமான தங்கள் ஐயரைக் காண [நந்த]

    அங்கமு ழுதிலும் நீறுபூ சியே
    அரகர சிவசிவ என்றுபே சியே
    சங்கை யாருந்திருக் கைகளைவீ சியே
    சாமி சாமிஎன்று தன்னை ஏசியே. [நந்த]

    பாடல் தலைப்பு


    76. ஆடிய பாதத்தைக்...


    இராகம் : சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி


    ஆடிய பாதத்தைக் காணாரே பிறந்
    தானந்தம் பூணா ரே

    அநுபல்லவி


    நாடும் தைபூ ரண பூசத்தி லேதில்லை
    நாயகனார் குரு வாரத்தி லேமன்றுல்

    சரணம்


    சேணும்ச டைப்புனல் பூமியில் சொட்ட
    சேவித்து நாரதர் பாடியே கிட்ட
    கோணங் கிழிந்தண்ட கோளமும் முட்ட
    கோபால கிருஷ்ணனும் மத்தளம் கொட்ட [ஆடிய]

    பாடல் தலைப்பு


    77. தில்லைச் சிதம்பரத்தை...


    இராகம் : ஆரபி
    தாளம் : ஆதி


    (விரைவாகப் பாடுவது)

    பல்லவி

    தில்லைச் சிதம்பரத்தை ஒருதர மாகிலும்
    தரிசித்து வாவென்றுத் தாரம்தாரும் ஐயே

    அநுபல்லவி

    தில்லைச் சிதம்பரத்தைக் கண்டால் பிறவிப்பிணி
    இல்லைஎன்று பெரியோர் சொல்லக்கேட் டிருக்கிறேன்
    . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    78. ஆசை நேசராகும்...


    இராகம் : மாஞ்சி
    தாளம் : சாபு


    பல்லவி

    ஆசை நேசராகும் தோழரே கேளுங்கள்

    அநுபல்லவி

    பேசும் தெய்வங்கள் உண்டோ
    ஈசன் அல்லால் நமக்கு

    சரணம்

    ஆயன் மாயன் அன்று
    அடி முடி காணாத

    நேயன் அழலு ருவாய்
    நின்ற நின்மலன் அல்லல்
    . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    79. மாங்குயில் கூவிய...


    (தில்லைத் தல வர்ணனை)

    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : ஏகம்


    மாங்குயில் கூவிய சோலைகளும்
    வாவி கூப தடாகங்களும்
    தூங்கதிர் மண்டல மெத்தையும்
    சொர்ண சபேசன் துசமரமும்
    . . . . . . . .

    பாடல் தலைப்பு


    80. நந்தனாரே உன்றன்...


    (நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)

    இராகம் : பேகடா
    தாளம் : சாபு


    பல்லவி

    நந்தனாரே உன்றன் பெருமை இன்றுகண்டேன்
    நான் என் வினையை விண்டேன்

    அநுபல்லவி

    விந்தையைக் குறியாமல் விழலன்நான் அறியாமல்
    வீம்புக்குக் கச்சுக்கட்டி வீசினேன் என்னையாளும் [நந்தா]

    சரணம்

    அறியாம னத்திலைலே ஏதோபேசி உந்தன்
    அருமையைத் தெளியாமல் போனேனே மெத்த
    . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    81. ஏழைப் பார்ப்பான்...


    (அந்தணர் நந்தனாரைப் பார்த்துச் சொல்வதும், நந்தனாரது விடையும்)

    இராகம் : யதுகுலகாம்போதி
    தாளம் : ஆதி


    தண்டகம்


    ஏழைப் பார்ப்பான் செய்திடும் பிழையை
    ஏற்றுத் கொள் ளாதே நான்
    இனம றியாதவன் பின்புத்திக் காரன்
    என்ப துவும் பொய் யோ

    பாடல் தலைப்பு


    82. சிதம்பரம் போய்நீ...


    (நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)

    இராகம் : சாமா
    தாளம் : ஆதி


    பல்லவி

    சிதம்பரம் போய்நீ வாருமையா நான்
    செய்ததெல்லாம் அபசாரமையா

    அநுபல்லவி

    சிதம்பரம் போவீர் பதம்பெறும் வீர்வேறே
    சிந்தனை வேண்டாம் நந்தனை இனிமேல் [சிதம்பரம்]
    . . . . . . . .

    பாடல் தலைப்பு


    83. சிதம்பர தரிசனம்...


    இராகம் : மோகனம்
    தாளம் : -


    ஓரடியில் இரண்டு வார்த்தை

    சிதம்பர தரிசனம் கிடைக்குமோ கிடைக்கும்
    . . . . . . .

    பாடல் தலைப்பு


    84. முக்தி அளிக்கும்...


    இராகம் : நவரோசு
    தாளம் : சாபு


    முக்தி அளிக்கும் திருமூலத்தாரைக் கண்டு
    பக்தி பண்ணாதவன் பாமரன் அல்லவோ
    பாருக்குச் சுமையாச்சு அவன் இருந்தும்
    ஆருக்கு சுக மாச்சு
    . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    85. கனக சபேசன்...


    இராகம் : கமாசு
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    கனக சபேசன் சேவடி
    நான் கண்ட தில்லை
    தில்லை கனக

    அநுபல்லவி

    கனக சபாதியை கண்டபேரைக் கண்டால் போதும்
    சனனமரண மோகம் தீர்ந்து சிவனைச் சேரவேணும்

    சொற்கட்டு

    தகணக ஜம்தரிநம்தரி தோம்தோம் தரிகிடதா
    ததிமித திடஜணுகிட தக ததிகிண தோம் என்றாடிய [கனக]

    சரணம்

    அல்லும்பகலும் இந்தவீஷய ஆனந்தத்திலே மூழ்கி
    அறிவுகெட்ட மாடதுபோல் ஆனதும் பொய்யோ
    பல்லுயிரிலும் நிறைந்த பரனைச் சிவஞானிகளே
    பார்த்த தில்லை கேட்ட தில்லையோ

    பால கிருஷ்ணன் பாடும் கவி
    மானிடசாதியில் பிறந்து மங்கையர்மோகதில் வீழ்ந்து
    தானம் தவங்கள்இழந்து தன்னர சாகத்திரிந்து [கனக]

    பாடல் தலைப்பு


    86. வாராமல் இருப்பாரோ...


    இராகம் : சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி

    வாராமல் இருப்பாரோ ஒருக்கால்
    வரு வாரோ அறியேன்

    அநுபல்லவி

    பாராமல் இருப்பேனோ பதஞ்சலி முனிக்குப்பொன்
    பாதம்கொடுத்த பரமேசுவரன் நான் என்று [வாராமல்]
    . . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    87. இன்னும் வரக்காணேனே...


    இராகம் : பரசு
    தாளம் : ஆதி


    பல்லவி

    இன்னும் வரக்காணேனே என்னசெய்குவேன் அவர்

    சரணம்

    இன்னம் வரக்காணேன் தில்லைப் பொன்னம்பலவாணன்
    பண்ணைநட் டென்னையங்கே வாவென்று சொன்னவர் மறந்தாரே.
    . . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    88. விருதா சன்மமாச்சே...


    இராகம் : தர்பார்
    தாளம் : ஆதி


    (விரைவாய்ப் பாடுவது)

    பல்லவி

    விருதா சன்மமாச்சே வந்தும்

    அநுபல்லவி

    சதா காலமும் ஐயன் சந்நிதானத்தில்
    இருந்து நிதா னம் பெறாமல்

    சரணம்

    முக்தி யளித்திடும் மூர்த்தியை கண்டு
    பக்தியைப் பண்ணி பலனடை யாமல்

    பாடல் தலைப்பு


    89. சந்நிதி வரலாமோ...


    இராகம் : சங்கராபரணம்
    தாளம் : ஏகம்

    தண்டகம்



    பல்லவி

    சந்நிதி வரலாமோ சாமி
    தரிசனம் தரலாமோ

    சரணம்

    இல்லற வாழ்வாம் பனிமூடி
    இருந்தே னன்றோ மிகவாடி
    அல்லும் பகலும் கொண்டாடி
    அடியேன் கனக சபைநாடி.

    பாடல் தலைப்பு


    90. கனவோ நினைவோ...


    (நந்தனார் தாம் கண்ட கனவைக் கூறுவது)

    இராகம் : கமாசு
    தாளம் : சாபு


    பல்லவி

    கனவோ நினைவோ கண்டதும் வீணோ

    அநுபல்லவி

    மனதிலு றுதி கொள்ள
    வழி யொன்றும் காணேன் [கனவோ]

    சரணம்

    நித்திரை தனில் ஒரு
    சித்தன் உருவாய் வந்து
    முத்தி தருவேன் என்று
    நந்திப் பேசின துண்டு [கனவோ]

    பாடல் தலைப்பு


    91. அம்பல வாணனை...


    இராகம் : ஆகிரி
    தாளம் : மிச்ரசாபு


    அம்பல வாணனை தென் புலியூரானை
    நம் பணிந்தேனோ அர்ச்சனை செய்து
    கும்பிட்டி ருந்தேனோ . . . . . . . . . . . . . .
    . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    92. களை யெடாமல்...


    இராகம் : நடபைரவி
    தாளம் : ரூபகம்


    களை யெடாமல் சலம் விடாமல்
    கதிர் ஒரு முழம் காணுமாம்
    களிக்குது பயிர் இருக்குது அது
    கட்டுக் கட்டாகத் தோணு மாம்
    . . . . . . . . . . . . . .

    பாடல் தலைப்பு


    93. திருநாளைப் போவாருக்கு...


    இராகம் : அசாவேரி
    தாளம் : ஆதி


    பல்லவி

    திருநாளைப் போவாருக்கு ஜய மங்களம்
    தில்லை மூவாயிர வர்க்கு சுபமங்களம் [திருநாளை]

    அநுபல்லவி

    இருடிகள் இதுவரி தரிததி சயமென
    இருகர முடிமிசை மருவத்து திசெய்கன
    பரவும் உம்பர்சம் பிரமங்கள் துதித்திடும்
    பரமனா டும்அம் பலத்தில் கதித்திடும். [திருநாளை]

    பாடல் தலைப்பு


    94. அறிவுடையோர் பணிந்தேத்தும்...


    ராகம்: சக்ரவாகம்
    தாளம்: ஜம்பை


    பல்லவி

    அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை அம்பல வாணனே எனை ஆளாய் (அறிவுடையோர்)

    அநுபல்லவி

    மறை முடியும் தேடி அறியா முதலே மாணிக்கவாசகர் வாழ்த்து-கண்ணுதலே (அறிவுடையோர்)

    சரணம்

    கனவிலும் நினைவிலும் விஷயாதி சம்சார கடலில் அழுந்தினேன் கரை ஏற வழி காணேன்
    மனமிரங்கி அருள் செய்திட வேணும் மாயன் கோபாலக்ருஷ்ணன் வணங்கும் மலர் பாதனே
    உனை மறந்திடப்போமோ உன்னடியார்களின் உண்மையை இன்னமும் உணராமற்-கெடலாமோ
    மனைவி மக்கள் தன தான்யமென்றிந்த மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன் (அறிவுடையோர்)

    பாடல் தலைப்பு


    95. ஆண்டிக் கடிமைகாரன்...


    ராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே - யான்
    ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே (ஆண்டை)

    அநுபல்லவி

    மூன்று லோகமும் படைத்தளித்திடும்
    ஆண்டவர் கொத்தடிமைக்காரன் (ஆண்டை)

    சரணம்

    ஆசைக் கயிற்றினில் ஆடி வரும் பசு
    பாசம் அறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

    தில்லை வெளிகலன் தெல்லை கண்டேறித்
    தேறித் தெளிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

    சீதப் பிறையணிந் தம்பலத் தாடிய
    பாதம் பணிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

    பாடல் தலைப்பு


    96. ஆருக்குப் பொன்னம்பலவன்...


    ராகம் : பைரவி
    தாளம் : ஆதி


    பல்லவி

    ஆருக்குப் பொன்னம் பலவன் கிருபை யிருக்குதோ
    அவனே பெரியவனாம் (ஆருக்குப்)

    அநுபல்லவி

    பாருக்குள் வீடுகள் மாடுக ளாடுகள்
    பணமிருந்தாலவன் பெரியவனாவனோ (ஆருக்குப்)

    சரணம்

    வேதபுராணங்க ளோதினதாலென்ன வேலைசூழ் பணைமாத ராலென்ன காரியம்
    சாதனையாகவ ராதொருநாளும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது (ஆருக்குப்)

    பாணன்மதங்கள டங்கவேசெய்த கோபாலகிருஷ்ணன் தினந் தொழும்பொன்னம்பல
    வாணனென்றாதர வாய்விரும்பாதவன் வானவராகிலுந் தானவன்சின்னவன் (ஆருக்குப்)

    பாடல் தலைப்பு


    97. இரக்கம் வராமல்போனதென்ன...


    ராகம்: பெஹாக்
    தாளம்: ரூபகம்


    பல்லவி

    இரக்கம் வராமல் போனதென்ன காரணம் ஏன் ச்வாமி

    அநுபல்லவி

    கருணை கடல் உன்றனைக்-காதிற்-கேட்டு நம்பி வந்தேன்

    சரணம்

    ஆலமருந்தி அண்டருயிரை ஆதரித்த உனது கீர்த்தி பாலக்ருஷ்ணன்
    பாடித்-தினமும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி

    பாடல் தலைப்பு


    98. எப்போ தொலையுமிந்தத்...


    ராகம் : கெளரிமனோகரி
    தாளம் : சாபு


    பல்லவி

    எப்போ தொலையுமிந்தத் துன்பம் - சகதீசன்
    கருணையிருந்தாலல்லோ இன்பம் (எப்போ)

    அநுபல்லவி

    கர்ப்பவாசம் துக்கம் ஆனாலும் கேடு
    கெளரிமனோகரனைத் தினம் நாடு (எப்போ)

    சரணம்

    ஆசையுடனலை யாத இடங்களுண்டோ
    அனவரதமும் சுகலேசமிதில் தெரியாமல்போனதன்றோ
    கோபாலகிருஷ்ணன் தாசன் தொழும் நடராசமூர்த்தியைப்
    பூசைகள் செய்யாமற்போனது பாசமற வழியில்லை
    பஞ்சகோசங்களை நானென்று நம்பினது (எப்போ)

    பாடல் தலைப்பு


    99. எந்நேரமும் உந்தன்...


    ராகம் : தேவகாந்தாரி
    தாளம் : ஆதி


    பல்லவி

    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா-
    னிருக்க வேணுமையா (எந்நேரமும்)

    அநுபல்லவி

    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
    பொன்னம்பலத்தரசே யென்னரசே (எந்நேரமும்..)

    சரணம் 1

    திசையெங்கினும்புக ழுஞ்சிவகங்கையும்
    தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
    பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
    பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு (எந்நேரமும்..)

    சரணம் 2

    பஞ்சாட்சரப்படி யுங்கொடிக்கம்பமும்
    கோவிலழகும் அரி தானரகசியமும்
    அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு (எந்நேரமும்..)

    சரணம் 3

    சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும்
    தேவருலகில்கிடை யாதவசியமும்
    பாலகிருஷ்ணன்பணியும் பாதம் பவமெனும்
    பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு (எந்நேரமும்..)

    பாடல் தலைப்பு


    100. ஏதோ தெரியாமல்...


    ராகம் : அமீர் கல்யாணி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    ஏதோ தெரியாமல் போச்சுதே - என் செய்வேன் (ஏதோ)

    அநுபல்லவி

    ஆதி பராத்பரமாகிய தில்லை பொன்னம்பலவரை
    வீதிதோரும் பணிந்து மிக மகிழ்ந்து நலம் பெற (ஏதோ)

    சரணம்

    இரவும் பகலும் பலவித இடர் செய்யும் ஐம்பொரியால்
    அரவின் வாய் சிறு தேரை போல் அந்தோ மனம் நொந்தேன்
    பரிவுடன் கோபாலகிருஷ்ணன் பாடி வணங்கும் குஞ்சித
    திருவடியை தெரிசனம் செய்து தெளிந்து மனம் உருகிட (ஏதோ)

    பாடல் தலைப்பு


    101. கட்டை கடைத்தேற...


    ராகம் : கரகரப்ரியா
    தாளம் : சாபு


    பல்லவி

    கட்டை கடைத்தேறவேணுமே (கட்டை)

    அநுபல்லவி

    கனகசபாபதி நடனங்கண்டு களிக்கவந்த நந்தன் (கட்டை)

    சரணம்

    கட்டைகடைத் தேறட்டுமோ சன்மம்
    கெட்டதல்லவோ இட்டமறியேன் (கட்டை)

    முத்தியளிக்கும் பத்தியிலேயென்
    சிற்றம்பலவன் சித்தமறியேனே (கட்டை)

    பாடல் தலைப்பு


    102. கனகசபாபதிக்கு நமஸ்காரம்...


    ராகம் : அடாணா
    தாளம் : ஆதி


    பல்லவி

    கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே (கனக)

    அநுபல்லவி

    சனக மஹாமுனிவர் தொழும் சந்நிதியடி பெண்ணே (கனக)

    சரணம்

    வீதி வலம் வந்து மேலை கோபுர வாசல் நுழைந்து
    காதலுடன் சிவகாமி களிக்கும் மண்டபம் வந்து
    மாதவன் கோபாலகிருஷ்ணன் வணங்கும் அம்பலம் அடைந்து
    நாதனே உனதடைக்கலம் என நடை மிகிழ்ந்து தலை குனிந்து (கனக)

    பாடல் தலைப்பு


    103. காரணம் கேட்டுவாடி...


    ராகம்: பூர்வி கல்யாணி
    தாளம் :


    பல்லவி

    காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சித்ம்பர நாதன் இன்னும் வராத (காரணம்)

    அநுபல்லவி

    பூரண தயவுள்ள பொன்னம்பல துரை என் பொருமையை சோதிக்க மறைமுகமானத (காரணம்)

    சரணம்

    கல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ கண்ணப்பன் செய்தரு-கனவினில் தீதேனோ
    செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முன்னின்றேனோ (காரணம்)

    பாடல் தலைப்பு


    104. சபாபதிக்கு வேறு தெய்வம்...


    ராகம்: ஆபோகி
    தாளம்: ஆதி


    பல்லவி

    சபாபதிக்கு வேறு தெய்வம்
    சமானமாகுமா [தில்லை சபாபதிக்கு]

    அநுபல்லவி

    கிருபானிதி இவரைப்போல
    கிடைக்குமோ இந்த தரணி தனிலே [சபாபதிக்கு]

    சரணம்

    ஒரு தரம் சிவ சிதம்பரம்
    என்று சொன்னால் போதுமே
    பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமோ
    ஆரியர் புலயர் மூவர் பாதம்
    அடைந்தார் என்று புராணம்
    அறிந்து சொல்ல கேட்டோம்
    கோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை [சபாபதிக்கு]

    பாடல் தலைப்பு


    105. சம்போ கங்காதரா...


    ராகம் : அபுரூபம்
    தாளம் : ஆதி


    பல்லவி

    சம்போ கங்காதரா சந்திரசேகர அர (சம்போ)

    அநுபல்லவி

    அம்பலவாணரே ஆதிரை நாளரே
    அடைகலமென்று நம்பி வந்தேன்
    ஆதரிப்பது உன் பாரம் சொன்னேன் (சம்போ)

    சரணம்

    தாயும் தந்தையும் நீ உன்னைத் தவிர வேறே ஒருவரும் இல்லை
    மாயன் கோபால கிருஷ்ணன் பணியும்
    மலரடி பணிந்தேன் பிறவியைத் தீரும் (சம்போ)

    பாடல் தலைப்பு


    106. சிதம்பரம் அரஹரா...


    ராகம் : பியாகடை
    தாளம் : ஆதி


    பல்லவி

    சிதம்பரம் அரஹரா வென்றொருதரம் சொன்னால்
    சிவ பதம் கிடைக்கும் - தில்லை (சிதம்பரம்)

    அநுபல்லவி

    பதம் பெற வேணும் என்றார்க்கு இதுவன்றி
    இல்லை மற்றெதுவும் தொல்லை - தில்லை (சிதம்பரம்)

    சரணம்

    நல்லுணர்வாகிய வேதியர் ஓதிய
    நால்மறைகளும் துதி நவிழ்ந்திடும் மந்திரம்
    தில்லை மூவாயிரம் பேர் காணும் பூசைகள்
    செய்தபின் யாவரும் பூஜிக்கும் மந்திரம் (சிதம்பரம்)

    பாடல் தலைப்பு


    107. சிதம்பரம் போவேன் நாளை...


    ராகம் : பெஹாக்
    தாளம் : ஆதி


    பல்லவி

    சிதம்பரம் போவேன் நாளைச் - சிதம்பரம் போவேன் நான் (சிதம்பரம்)

    அநுபல்லவி

    சிதம்பரம் போவேன் தேரித் தெளிவேன்
    பார் புகழ் தில்லைப் பதங்களைப் பாடி (சிதம்பரம்)

    சரணம்

    ஒரு தரம் சொன்னால் உலகங்கள் உய்யும்
    இருவினைப் பயன் இல்லை என்னாளும் (சிதம்பரம்)

    பாதி ராத்திரியில் பன் மறை ஓதி
    வேதியர் போற்றி விளங்கிய தில்லைச் (சிதம்பரம்)

    பாடல் தலைப்பு


    108. சிந்தனை செய்து...


    ராகம் : செஞ்சுருட்டி
    தாளம் : ஆதி


    பல்லவி

    சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு
    எந்தவிதமுங் கரையேறலாம் சிவ (சிந்தனை)

    சரணம்

    அந்தண முனிவரும் இந்திரர் அமரரும்
    வந்து பணியுமவர் விந்தை பொற்பாதத்தை (சிந்தனை)

    காமனை யெரித்தவன் காலனை உதைத்தவன்
    சோமனைத் தரித்தவன் தாமரைப் பாதத்தை (சிந்தனை)

    தம்புருவணிந்திடும் தும்புரு நாரதரும்
    பணிந்திடும் பொன்னம்பலவாணனை (சிந்தனை)

    வெம்பிய தும்பிக் கருளிய பாலகிருஷ்ணன்
    பணியும் திருவம்பலநாதனை (சிந்தனை)

    பாடல் தலைப்பு


    109. சிவலோகநாதனைக் கண்டு...


    ராகம் : செஞ்சுருட்டி / மாயமாளவகெளள
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்

    அநுபல்லவி

    பவபயங்களைப் போக்கி அவர்
    பரம பதத்தைக் கொடுப்பா ரந்த (சிவ)

    சரணம்

    அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்
    கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி (சிவ)

    ஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்
    பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் (சிவ)

    மானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்
    தேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு (சிவ)

    பாடல் தலைப்பு


    110. தரிசனம் செய்தாரே...


    ராகம் : கல்யாணி
    தாளம் : அட


    பல்லவி

    தரிசனம் செய்தாரே - நந்தனார் - தரிசனம் செய்தாரே (தரிசனம்)

    அநுபல்லவி

    தரிசனம் செய்தார் தேன்மழை சொரிந்து
    வரிசையுடன் அவர் வாழி வாழியென்று (தரிசனம்)

    சரணம்

    குதித்துக் குதித்துக் கையைக் கும்பிடு போட்டுத்
    துதித்துத் துதித்துத் தன் துன்பங்கள் தீர (தரிசனம்)

    போற்றி போற்றி என்று பொன்னடி வணங்கிப்
    பார்த்துப் பார்த்துப் பரமானந்தம் கொண்டு (தரிசனம்)

    அச்சம் மறந்தவர் அறிவில் உணர்ந்தவர்
    இச்சை இழந்தவர் ஏகாக்ர சித்தராய் (தரிசனம்)

    பாடல் தலைப்பு


    111. திருவடி சரணம்...


    ராகம்: காம்போஜி
    தாளம்: ஆதி


    பல்லவி

    திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி)

    அநுபல்லவி

    மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
    வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)

    சரணம்

    எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது- இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று
    கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே
    அடுத்து வந்த என்னை தள்ளலாகாது அர-ஹராவென்ரு சொன்னாலும் போதாதோ
    தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)

    பாடல் தலைப்பு


    112. தில்லை சிதம்பரம்...


    ராகம் : யமுனா கல்யாணி ஒர் சாரங்கா
    தாளம் : சாபு


    பல்லவி

    தில்லை சிதம்பரம் என்றெ நீங்கள்
    ஒரு தரம் சொன்னால் பரகதி யுண்டு உண்டு (தில்லை)

    அநுபல்லவி

    நல்ல சுருதி முடி கண்டு - சபா
    நாதன் திருத்தாளை சிந்தனையில் கொண்டு (தில்லை)

    சரணம்

    வேரில்லாமல் ஒரு விருட்சம் ஒன்றிருக்கு
    விளையும் வினைகள் எல்லாம் செய்யுந்திருக்கு
    பேரில்லாமல் ஞானத் தீகொண்டு கருக்கு
    பேரின்ப வாணரைப் பிசகாமலே நெருக்கு (தில்லை)

    தேசம் புகழும் தில்லை கோவிலை வளைந்து
    தித்திக்கும் சிவ பஞ்சாட்சரம் புரிந்து
    ஆசையுடனே அர்த்தசாமத்தில் இருந்து
    அங்கும் புளகிதமாய் அடிக்கடியே பணிந்து (தில்லை)

    மாயன் கோபால கிருஷ்ணன் தினம் தேடி
    வந்து செந்தாமரை மலரடியே நாடித்
    தாயை பிரிந்த இளங் கன்றுபோல் கூடித்
    தாளம் போட்டுக் கொண்டாடி (தில்லை)

    பாடல் தலைப்பு


    113. தில்லைத் தலமென்று...


    ராகம் : பூரிகல்யாணி / சாமா
    தாளம் : ஆதி


    பல்லவி

    தில்லைத் தலமென்று சொல்லத் தொடங்கினால்
    இல்லைப் பிறவிப் பிணியும் பாவமும் (தில்லை)

    அநுபல்லவி

    சொல்லத் தகுமிதுவே சிவலோகம்
    எள்ளத்தனையறஞ் செய்யில் அமோகம் (தில்லை)

    சரணம்

    ஆகமவேத புராணங்கள் சாத்திரம்
    அருந்தவம் புரிவார்க்கருளிய பாத்திரம்
    ஆலயமாயிரத் தெட்டினில் நேத்திரம்
    ஆனந்தத் தாண்டவமாடிய சேத்திரம் (தில்லை)

    கணத்திலாடு மணிமாவாதிய சித்தியும்
    ககனத்திலமரும் விண்ணாடர்கள் வெற்றியும்
    இணையில்லாத குருசாத்திர பக்தியும்
    இகத்தில் தானேவரும் சிவபத முக்தியும் (தில்லை)

    பரம ரகசிய மொன்று பார்க்கலாம்
    பாலகிருஷ்ணன் கவிபாடிக் கேட்கலாம்
    கருமவினை களடங்காமற் போக்கலாம்
    கசடர்கட்கு முக்தியுண் டாக்கலாம் (தில்லை)

    பாடல் தலைப்பு


    114. நடனம் ஆடினார்...


    ராகம்: வசந்தா
    தாளம்: அட


    பல்லவி

    நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த

    அநுபல்லவி

    வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்
    தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)

    சொல்கட்டு ச்வரம்

    தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா
    ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச
    ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச

    சரணம்

    அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட
    இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்
    தந்தோமென்று (நடனம்)

    பாடல் தலைப்பு


    115. நந்தன் சரித்திரம்...


    ராகம் : சங்கராபரணம்
    தாளம் : ஆதி


    பல்லவி

    நந்தன் சரித்திரம் ஆனந்தம் - ஆனாலும் அத்தி
    யந்தம் பக்திரச கந்தஞ் - சொலலச் சொல்ல (நந்தன்)

    அநுபல்லவி

    நந்தன் சரித்திரம்வெகு அந்தம் - சிவனாருக்குச்
    சொந்தம் தொலையும் பவபந்தம் - கேட்டபேருக்கு (நந்தன்)

    சரணம்

    ஏது இவனைப்போலே சாது பூமியிலிருக்
    காது அரிது இரு காது - படைத்தபேர்க்கு (நந்தன்)

    வாடி மனதிளகிப் பாடி - அரகராவென்று
    ஆடி கனகசபை நாடிச் - சேருவேனென்ற (நந்தன்)

    அண்டர் கொண்டாடுஞ் சோழ மண்டலந் தனைச் சூழ்ந்து
    கொண்ட மேற்காநாட்டில் விண்ட - ஆதனூரில்வாழ் (நந்தன்)

    பாடல் தலைப்பு


    116. நமக்கினி பயமேது...


    ராகம் : கெளளிபந்து
    தாளம் : ஆதி


    பல்லவி

    நமக்கினி பயமேது - தில்லை - நடராசனிருக்கும் போது

    அநுபல்லவி

    மார்க்கண்டருக்காக மறலியை உதைத்திட்ட
    மான் மழு வேந்தும் மகாதேவனிருக்க (நமக்கினி)

    சரணம்

    இம்மை மறுமை முதல் யாவுக்கும் பரமான
    சின்மயானந்த ரூபச் சிவபெருமானிருக்க (நமக்கினி)

    அரியயனமரரும் ஆலங்கண்டஞ்சமுன்
    பரிவுடனே காத்த பரம சிவனிருக்க (நமக்கினி)

    திருவிக்கிரமனாய் வரும் திண்மாயன் மமதையை
    விரிவுகங்காளனாகி விலக்கும் பரனிருக்க (நமக்கினி)

    ஆதிசேடனுமாலும் அலரோன் இலக்குமியும்
    காதலாய் தவஞ்செய்யக் களித்த பரனிருக்க (நமக்கினி)

    இரணியனால் வெறி கொண்ட நரசிம்மனை
    தரணியில் ரட்சித்த சங்கரனிருக்கவே (நமக்கினி)

    பாடல் தலைப்பு


    117. நீசனாய் பிறந்தாலும்...


    ராகம் : யதுகுல காம்போதி
    தாளம் : சாபு


    பல்லவி

    நீசனாய் பிறந்தாலும் போதும் - ஐயா
    நீசனாய் பிறந்தாலும் போதும் (நீசனாய்)

    அநுபல்லவி

    ஆசையுடன் அம்பலவன் அடியில் இருந்தேத்தும் (நீசனாய்)

    சரணம்

    கோதிலாத் தவங்கள் புரிந்தாலும் - தங்கள்
    குலவண்மை தவறாத நெறியிருந்தாலும்
    வேதமுடி யாவும் உணர்ந்தாலும் - மாயை
    விலகாது ஒருநாளும் தொலையாது துன்பம் (நீசனாய்)

    களவு கொலை செய்து வந்தாலும் - பழி
    காரருடன் என்னேரம் கூடி இருந்தாலும்
    வளமறவே வாழ்வு கெட்டாலும் - நல்ல
    மனிதன் அவனிடமாக மறலி அணுகாது (நீசனாய்)

    ஏத்த கருமங்கள் செய்தாலும் - எங்கும்
    கிடையாத கொடையாளி யென இருந்தாலும்
    கோத்திரக் கீர்த்தி மிகுந்தாலும் - எங்கும்
    கோபாலகிருஷ்ணன் தொழும் பாதம் நினைந்தேத்தும் (நீசனாய்)

    பாடல் தலைப்பு


    118. பத்தி செய்குவீரே...


    ராகம் : தோடி
    தாளம் : ஆதி


    பல்லவி

    பத்தி செய்குவீரே - நடேசனைப் - பத்தி செய்குவீரே (பத்தி)

    அநுபல்லவி

    அத்தி முகனைப் பெற்ற - உத்தமனைவிட
    நித்திய தேவன் போல் - மற்றவர் இல்லை என்று (பத்தி)

    சரணம்

    சாமம் அதர்வணம் ருக் யசுர் வேதம்
    சாற்றும் உபனிடதத்தும் தற்பரன் அரனென்று
    ஏமாறாமற் சொல்லி இன்புறுதலே நின்று
    ஏவர்களும் அறியவே இப்புவி தனில் நின்று (பத்தி)

    ஆகமம் இருபத்தெட்டாதி புராணமும்
    அயன் கீதை முதலான அனந்த ச்மிருதிகளும்
    பாகமாகிய பரமன் ஒருவன் என்று
    பண்புடன் உரைத்திடும் பான்மையதாய் நின்று (பத்தி)

    கௌதமர் முதலான இருடிகள் அனைவரும்
    கேசவன் தொழும் பதம் கதி என்று அனுதினமும்
    புவனத்தில் போற்றியே ஏத்தினதால் இவர்
    புகழும் புண்ணிய பதம் பொருந்தினார் என்பதாம் (பத்தி)

    அரி அயன் இந்திரன் முதலான தேவரும்
    அரனடி தன்னையே அன்பாய்ப் பூசித்தால்
    பரிவுடன் அவர் செல்வம் பழுது வாராமலே
    பாலித்தார் சிவன் என்று பக்தர் சொல்வதனாலே (பத்தி)

    வியாச முனிவரும் அவரடியார்களும்
    விஷ்ணு பரம் என்று விளம்பினதால் முன்னம்
    கயா காசிக் கங்கைக் கரையில் கையிழந்து
    கல்லாய்த் தானேயவர் சமைந்ததனாலேயும் (பத்தி)

    தில்லை யம்பலந்தனில் திரு நடமாடிடும்
    தேவாதி தேவனை தினம் பணிந்தேத்திய
    அல்லல் சம்சாரக் கடலில் அழுந்தாமல்
    ஆனந்தக் கூத்துகள் ஆடிக் கொண்டு நீங்கள் (பத்தி)

    பாடல் தலைப்பு


    119. பத்திகள் செய்தாரே...


    ராகம் : யதுகுலகாம்போதி
    தாளம் : ஆதி


    பல்லவி

    பத்திகள் செய்தாரே - பரமசிவனையே - பத்திகள் செய்தாரே (பத்திகள்)

    சரணம்

    பத்திகள் செய்தார் நற்றவம் புரி நந்தன்
    சித்த மகிழ்ந்திட அத்தனை பேர்களும் (பத்திகள்)

    தொடுப்பான் சிவகதை படிப்பான் பக்தியாய்
    எடுப்பான் தடியொன்று அடிப்பானென் றனுதினமும் (பத்திகள்)

    கல்லாதவன் இங்கே செல்லாதவன் நன்றி
    யில்லாதவன் வெகு பொல்லாதவனென்றே (பத்திகள்)

    பாடல் தலைப்பு


    120. பார்த்துப் பிழையுங்கள்...


    ராகம் : யதுகுல காம்போதி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    பார்த்துப்பிழையுங்கள் - நீங்கள் - பார்த்துப்பிழையுங்கள்

    சரணம்

    பார்த்துப் பிழையிந்தச் சோற்றுத் துருத்தியை
    ஏத்தித் தொழவேண்டாம் காத்துப் போகுமுன்னே (பார்த்துப்)

    ஆத்திமதிசூடுங் கூத்தனிடமாயச்
    சூத்திரத்தையிந்தச் சேத்திரத்துள்ளாடைப் (பார்த்துப்)

    வீற்றிருப்பீர் காலங் காத்திருப் பான்சிவ
    சாத்திரத்தை ஞான நேத்திரத் தாலுற்றுப் (பார்த்துப்)

    மூலக் கனல்தாண்டி மேலக் கரைவந்து
    பாலைக் குடியிருந்த நாலுக்குள் வாராமல் (பார்த்துப்)

    பாலகிருஷ்ணன் தொழுங் கோலப் பதங்களை
    மேலுக்கு மேல்நாடி சாலக் கலியறப் (பார்த்துப்)

    பாடல் தலைப்பு


    121. பெரிய கிழவன் வருகிறான்...


    ராகம் : சங்கராபரணம்
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி (பெரிய)

    சரணம்

    பரவிய மாயையிலிருந்து பார்முதல் பூதங்களைந்து
    பெரியவரென்றுணர்ந்து பேரின்ப லாபத்தை யடைந்து (பெரிய)

    படிபுகழ் நந்தனார் மகிழ்ந்து பரமசிவ பக்தி புரிந்து
    கொடியவன் பாவங்கள் தீர்ந்து கூனிக் குறுகிக் கோணி நடந்து (பெரிய)

    நந்தனார் சொன்ன தத்துவமறிந்து நானென் னகம்பாவ மிழந்து
    பந்தமயக்கம் முழுதும் தெளிந்து பரவெளியாகவே நினைந்து (பெரிய)

    பாடல் தலைப்பு


    122. மற்றதெல்லம் பொறுப்பேன்...


    ராகம் : சாவேரி
    தாளம் : ரூபகம்


    பல்லவி

    மற்றதெல்லம் பொறுப்பேன்
    முத்தினாளும் கொடுப்பேன் (மற்ற)

    சரணம்

    பக்தனுக்கு குற்றம் செய்தால்
    அதைப் பொறுக்க மாட்டேன் (மற்ற)

    திடுக்கென்றவரை துடிக்கப்பேசி
    அடிக்கப் பொறுக்கமாட்டேன் (மற்ற)

    பசிக்குதென்று வருகையில் ஒருவன்
    புசிக்கப் பொறுக்க மாட்டேன் (மற்ற)

    பாடல் தலைப்பு


    123. வருகலாமோவையா உந்தன்...


    ராகம் : மாஞ்சி
    தாளம் : ரூபகம் / சாபு


    பல்லவி

    வருகலாமோவையா உந்தன்
    அருகில் நின்று கொண்டாடவும் பாடவுந்நான் (வருகலாமோ)

    அநுபல்லவி

    பரமகிருபாநிதி யல்லவோ இந்தப்
    பறையனுபசாரஞ் சொல்லவோ உந்தன்
    பரமா நந்தத் தாண்டவம் பார்க்கவோநா னங்கே (வருகலாமோ)

    சரணங்கள்

    பூமியில் புலையனாப்பிறந் தேனே-நான்
    புண்ணியஞ்செய்யாமலிருந் தேனே-என்
    சாமியுன் சந்நிதி வந் தேனே-பவ
    சாகரம் தன்னையும் கடந் தேனே-கரை
    கடந்தேனே சரண மடைந் தேனே-தில்லை
    வரதா பரிதாபமும் பாபமும் தீரவே-நான் (வருகலாமோ)

    பாடல் தலைப்பு


    124. வருவாரோ வரம் தருவாரோ...


    ராகம்: ஷ்யாமா
    தாளம்: ஆதி


    பல்லவி

    வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது (வருவாரோ)

    அநுபல்லவி

    திருவாருந்தென்புலியூர் திருசிற்றம் பலவாணர் குருநாதனாக வந்து குறை தீர்க்கக்-கனவு
    கண்டேன் இருவினைப்-பிணிகளைக்-கருவருத்திடுகிறேன் பயப்படாதே என்று சொல்ல (வருவாரோ)

    சரணம்

    மறையாலும் வழுத்தறியா மஹிமை பெரு நடராஜன் நரையூரும் சேவடியை நம்பினவனல்லவோ
    அனுதினம் சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே (வருவாரோ)

    பணிமார்பும் செஞ்சடையும் பார்க்க மனமுவந்து பணியும் கோபாலக்ருஷ்ணன் துதி
    பரமதயானிதி பவக்கட லடிக்கடி பெருகுது நிலைக்குமோ மலைக்குது கரையேற்ற (வருவாரோ)

    பாடல் தலைப்பு


    This file was last revised on 20 nov. 2021.
    Feel free to send corrections and comments to the webmaster.