pm logo

கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி:
1. சிராமலை அந்தாதி,
2. கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2,
3. கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி -3


Verses discovered inEpigraphical Inscriptions :
1. cirAmalai antAti,
kalvETTup pATalkaL manjari 2 & 3



Acknowledgements:
Our sincere thanks go to Mr. N.D. Logasundaram and his sister N. D. Rani of Chennai
for their assistance in the preparation of this work (text input , proof-reading and HTML).
PDF version : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script-UTF-8 encoding.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

1. வேம்பையர்கோன் தமிழ்நாராயணன்
இயற்றிய "சிராமலை அந்தாதி"

நூல் அறிமுகம் ::
திருச்சிராப்பள்ளிநகர்க் குன்றுப்பாறைகளின்மேல் கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் படிவழியில் காணப்படும் பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலின் பின்புறச்சுவர்தனில் பொளித்துள்ள கல்வெட்டாகக் காண்பது இந்நூல். தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி IV எண் 167, பக்கங்கள் 21-27(A R 62 of 1888). இ·து 102 கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. பலபாடல் வரிகள் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளதால் பொருளறி இடர்பாடுடன், கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற் பிழைகளுடன் படியின் பதிப்பினில் கண்டவாறே ஈங்கு படைக்கப்பட்டுள்ளது. சிதைந்த பகுதி [. . . .] எனவும் () என உடுக்குறிக்குள் காண்பவை படிஎடுத்தோரோ பிறரோ ஐயமுடன் சேர்த்த பகுதி ஆகலாம். இக்கல்வெட்டின் காலம் 900-950 ஆகலாம் என கணித்துள்ளனர்.

இதன் ஆசிரியர் மணியன்மகன் வேம்பையர்கோன் தமிழ்நாராயணன் என இதன் 90 வது மற்றும் 103, 104 பாயிரப் பாடல்களால் அறியலாகும். மாடமதிரை-மணலூர், மதில்வேம்பை, சேய்ஞலூர், குண்டூர் எனும் நான்கு ஊர்களுக்குத் தலைவராக சொல்லப்பட்ட இவர் சைவ சமயப் பற்றுடையவரென்பது தேற்றம். 34, 35 பாடல் வரிகள் பரிசில் வாழ்கையரோ என ஐயம் தோற்றுவிக்கிறது.

'பாட்டியல்' மரபிலேயே 'உலகமடந்தை' என மங்கலச் சொல்லால் தொடங்கி, அந்தாதித் தொடையமைந்து, 'உலகத்துளே' என 102 பாடலில் மண்டலித்து, கட்டளைக்கலித்துறை யாப்பும் உள்ளமையால் இந்நூல் ஓர் அந்தாதியாம். அக்காலத்து கல்வெட்டு பொளிக்கும் மரபினிலேயே 'ஸ்வஸ்தி ஸ்ரீ' என தொடக்க எழுத்து பொறிக்கப்பட்து போலும்.

பாடல்களில் பல கோவைத் துறைகள் பொருந்தக் காண்கின்றன. இயற்கை வருணனை, மற்றும் சொல்-பொருள் அணிகள் பலவற்றினில் பயின்று வந்துள்ளன. சிவன்தன் வீரச் செயல் போற்றும் பாடல்கள் சைவத்திருமுறை வரிகளை நினைவு கூர்கின்றன. பாடல் பெற்ற 'சிராப்பள்ளி'க்குன்றினில் அமர்ந்த சிவபெருமானை போற்ற எழுந்த இந்நூல் சிறிதே மேற்கினில் ஓர் அறைமேல் உள்ள 'கற்குடி' எனும் மூவர் தேவாரப் பாடல்பெற்ற தலம் மற்றும் 'மருதாடு' எனும் தலப் பெருமானையும் 75 வது பாடலில் குறிக்கின்றது. 67 ஆம் பாடலில் தில்லைநகரில் சோழ மன்னர்மாளிகை, 'முடிகட்டிய' மூவாயிரவர் என்பன குறிக்கப்படுகின்றன.
      --- நூ. த. லோகசுந்தரமுதலி.
-----
ஸ்வஸ்தி ஸ்ரீ

நூல்

உலக மடந்தை நுதலுறைந் தைப்பதி யந்நுதற்குத்
திலதம் பரமனமருஞ் சிராமலை யம்மலைவா
யலகின் னிறைந்த கதிர்மணி பாய . . மேல் வந்ததந்தாதி
. . ப் பொன்னி பரன்கழுத்திற் கொண்ட வெள்வடமே.       1


வடகயி லாயமுந் தென்மான் மலயப் பொருப்புமென்னுந்
தடவரை தாமிதன் றன்மைய வாவது தாம் உணர்ந்துங்
கடவரை மேக முழக்குஞ் சிராமலை கண்ட (கண்)
முடவரை ய(க்கு மறுசான்) றெண்ணி மொழிகின்றதே.       2


மொழிந்திடு மெய்மை முனிந்திடும் பொய்மை முயன்றிடுமின்
கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான்
பொழிந்திடு மெல்லருவிச் சிராமலை புகுந்திடுமி
னிழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே.       3


படும்பொழு தாயிற்று வெங்கதிர் கூற்றுவன் பற்றிநம்மை
யடும் பொழு தாவஞ் சலென்பான் சிராமலையர் ஏரிவந்
திடும்பொழு தாயிற் றெதிர்கண் டிடிலெ மருங்கொடியர்
நெடும்பொழு தாலென்கலோ அந்பர் நீர்வந்து நிற்கின்றதே.       4


நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சனுங்கி
தெற்கும் வடக்குந் திரித்தே வருந்திச் சிராமலைமேற்
பொற்குன் றனைக்கண்டு கொண்டே னினிப்புறம் போகலொட்டேன்
கற்குன் றனையநெஞ் சிற்செல்வ ராலில்லை காரியமே.       5


காரி(க் குதவார்) கடவுட் கிறைச்சியுங் கள்ளுநல்கு
மோரிக் குரற்பெண்க ளன்றறி யீரொரு பால்குறவர்
சேரிக் கொடுமுடித் தெய்வச் சிராமலைத் தெண்மணிநீர்
வாரிக் குளிக்க வொளிக்கு மெய்(ந்நோ)யி மடவரற்கே.       6


மடக்கோல் வளையிடத் தான்றன் சிராமலை வாழ்த்திலர்போல்
படக் கோ நிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார்
விடக்கோ கிடந்த(ன) வேளர் (வரையார்) கொள் வாள்¨ணைந்தார்
தடக்கோ வெள்ளிப்படுத் தார்மற வீர்நுங்கள் சுற்றத்தையே.       7


சுற்றத்தை நீயத்திநின்ற சூள்புணை யாகச் சுரம்படர்ந்த
நற்றத்தை பெரலிக்கு நல்குகண் டாய்பண்டு நாடறியப்
பெற்றத்தை யேறும் பெருமான் சிராமலை மேலோர்சேர்
குற்றத்தை நீக்குங் குணத்துர வோர்தங்கள் கோளரியேய்.      8


கோளரி யேறு போலக்கொல் யானையைக் கொன்றுதிங்கள்
வாளரி யேறு கண்ணா யிருந்தவன் மால்கடல்வா
யாளரி யோறிடத் தாண்டான் சிராமலை ஐவனமாந்
தோளரி யேறு (தஞ்சம)¡ ரிதற்கு தலைமகளே       9

தலைமக . . பரனொரு வன்னவன் தம்பி கொம்பார்
குலைமுக யானைத் தலையின் னவர்தா யலைமலையாள்
முலைமுக நீயமயங்கி மயங்கிற்றுன் முன்மையென்னோ
சிலைமுக நீடு திருமலை மேய திகம்பரனே.       10


பரந்தெரி . . . . ன்றுக ளாகிப் பகையுறனச்
சரந்தெரி கானவர் தம்யை . . . க தடமலரோன்
சிரந்தொயா வொள்வலி சதித்த வீரன் சிராமலைபோலுந்
. . . . . . . . வானுடன் போன வொள்வளைக்கே.       11


வளைவர . . ய வந்து காணமணி நாளில்வந்த
முளைவா யெயிற்று முதவச் சிராமலை முடியிலவிள்
களைவாய் சொரிந்த பெருந்தேன் சுடர்தோய் நறுங்கமலத்
தளைவாய்த் தேனருந் தச்சுரும் பார்க்கின்ற தண்பரணியே.       12


பரணித் தலையா வலவர்கள் பெறுகுரு ரம்பைக் கிளைமல்லழுத்தங்
கரணத் தடங்கண் மலர்கா தளவும்முன் காரதிருந்
திரணைத் தடஞ் சாரற் பரமன் சிராமலை சூழ்சுளை
திரணைத் தாங்கப் பிடித்துடி யறுகேநின்ற பாயமயிற்கே.       13


மயிலார் . . க . . மென்று பேரகில் வஞ்சி யென்று
பயிலாக் கிளியும் மயிலும் படைக்குணகன் பார்த்துழைமா
னயிலா தொழிகி லவைவளங் காவலெவ் வாறமைந்தார்
வெயிலார் மழுவன் சிராமலை வாழ்நர்தம் மெல்லியற்கே.       14


மெல்லிய . . க . . மலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச்
சொல்லிய கோவிற் கருள்செய் தவன்சூ ழலும்முகிலை
வல்லிய மால்களி றென்றுதன் வாளுகி ராற்கதுவச்
செல்லிழிச் சாரற் சிராமலை மேய திருவடியே.       15


வடிக்குங் கருங்குழல் மேலுமைத் தாள்மொய்த்த வண்டகற்றிக்
கொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள்கொண் டலந்திமந்தி
பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போல நன்றுந்
தடிக்குங் கலையல்கு லாள்லின்ப நீதந்த தண்ட¨ழுயே.       16


தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு
பிழைகொண்டு மெய்யென்று பேசிவிட் டோற்கவர் பேரருளான்
மழைகொண்ட கண்டர்தம் மானீர்ச் சிராமலை வந்து நின்றா
ருழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றுடிலே.       17


உற்றார் தலையிட வொன்னார் முகந்த உண்டுமிக்க
துற்றா ரிடுவ ரெனத்தொழு தோங்குந் தெழார்புரங்கள்
செற்றார் சிராமலை சேரவல் லார்திரு நாமமெல்லாங்
கற்றார் கனைகழல் கண்டிறைஞ் சாதவர் கைத்தலமே.       18


கைத்தலை கராமலை நெல்லிக் கனிபோல் கலைகளெல்லா
மெத்தலைப் பாடு விதியுணர்ந் தோர்தங்கள் வீதியெங்குஞ்
செய்த்தலை நீல மலருஞ் செழுநீர் சிராமலையான்
பைத்தலைப் பாம்புகண் டீரரை மேற்கொண்ட பட்டிகையே.       19


பட்டிப் பசுமுன் படரத் துடர்ந்துநின் பாடுசொல்லின்
முட்டித் திரியு முகில்போ லதிரு முரட்கயிற்றாற்
கட்டிக்கொ டாளுங் கருமஞ்சொன் னோங்கண்ணி காரமெங்குங்
மட்டிக் கமழுஞ் சிராமலை யீர்நும் மதவிடையே.       20


மதவிடைப் பாகன் மதியிடைப்பாகன் மழைநிறத்தோர்க்
குதவிடப் பாக னுமையிட பாக னுயர்கலிங்கு
கவிடப் பாகு கமுகெழக் காமர் கடிநகர்வாய்ப்
புதமடப் பாய்புனற் பொன்னிச் சிராமலைப் பொன்வண்ணனே.       21


பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட
மன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான்தன்
வண்ணந்தி வண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான்
மின்வண்ண நுண்ணிடை யாளெங்ங னேசெயு மெய்ப்பணியே.       22


பணியா வதுநஞ் சிராமலை மேய பரமற்கென்று
துணியா டையு மணிவாய் நன்றுந்துவ ரூட்டிக்கொங்கை
பிணியா தொழிந்தனை §உ¡ர்மனத் தேய்ப்பிணிப் பான்றுடையா
யணியா ரடிகள் பழந்தவஞ் சால வயிர்ப்புடைத்தேய்.       23


அயிர்ப்புடை யாய்நெஞ்ச மேயினித் தேறர மங்கையல்லள்
செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்
பயிர்ப்புடை யா ளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கு
முயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே.       24


கிடைவாய் மடந்தையும் மைந்தனுங் கேட்கிற் சிராமலையா
ளடைவா யவரை யணையார் கிளைபோ லழிந்துபட்டார்
கடைவாய் நிணந்தன்ற பாவிதன் காதற் கரும்பொடையின்
முடைவாய் புகச்சொரி முண்மாக் களத்து முன்பினரே.       25


முன்வந்து நின்றனை யென்னுரைக் கேன்முகிழ் மென்முலைக்கீழ்
மின்வந்து நின்றனன் நுண்ணிடை யாய்விதி யேவலிந்த
பொன்வந்த கொன்றையார் பூந்தண் சிராமலை போற்றலர்போல்
பின்வந்து வன்கா னவர்கைய்ப் பாடும் பெருஞ்சுரத்தே.       26


பெரஞ்சிலை யாற்புர மூன்றெரித் தோன்பிறைக் கோட்டுக்கைம்மா
வுரிஞ்சிலை தேங்கமழ் பாங்கற் சிராமலை யுள்ளலர்போல்
வருஞ்சிலை யோர்நும ராகின் மறைவன்வன் கானவரேற்
கருஞ்சிலை யாலழிப் பன்கலங் காதுநிற் காரிகையே.       27

காரிகத் தாழ்பொழிற் கண்ணார் சிராமலைக் காமர்கொன்றைக்
தாரிகத் தாழ்சடைச் சங்கர னேசதி ரொப்பனகோ
பாரிகத் தாழுநின் பாதம் பணிந்தவ ரேமதஞ்ச
வோரிகத் தாவருங் கானகத் தாடி யுறைகின்றதே.       28br>
உறைவாய் சிராமலை யுள்ளுமென் சிந்தையி னுள்ளுமென்றும்
பிறைவாய் மழுவாட் பெரியவ னேநுன் பியற்கணிந்த
கறைவா யரவங் கடியா வகையடி யேனறியே
னறைவா யழலுமி ழும்புரிந் தாடி யலருமே.       29

அலமரு வெஞ்சத் தரிவைகண் டாற்றுங்கொல் போற்றலர்தங்
கலமரு முப்புரங் கொன்றவன் கோலச் சிராமலைசூழ்
நிலமரு தென்றுளி நித்திலங் கோப்ப நெடும்பொழில்கள்
சலமரு வெள்வடம் பூணத்தண் கானெடுந் தாழ்பனியே.       30

புனிப்படம் போர்த்னள் பார்மகள் யானும் பசலையென்னுந்
துணிப்படம் போர்த்திங்குத் தேனங்குத் தாரன்பர் துங்கக்கைம்மா
முனிப்படம் போர்த்த பிரான்சிராப் பள்ளியு மூரிக்கொண்மூத்
தனிப்படம் போர்க்கும் பரவமன் றோவந்து சந்தித்ததே.       31

வந்துசந் தித்திலர் காதலர் பேதையை வாதைசெய்வா
னந்திசந் திப்பவெழுந்த தரன்றன் சிராமலைவாய்க்
கொந்துசந் தித்தசெங் காந்தண் முகைகொண்டு கொண்டிடுவான்
மந்திசந் திப்பவர் வென்றுள வாடு மதிப்பகையே.       32

மதியும் பகைமுன்னை வாயும் பகைமனை யும்மனைசூழ்
பதியும் பகைபகை யன்றில்என் றும்பகை பான்மைதந்த
விதியும் பகையெனி லும்மன்ப தன்பினர் வெள்ளக்கங்கை
பொதஒயுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே.       33

குழனெறி காட்டிய கொம்பனை யாரொடுங் கொண்டசுற்ற
மழனெறி காட்டு மிடத்தெனக் குத்தனக் கன்பர்சென்ற
பழநெறி காட்டும் பரன்சிராப் பள்ளி பரவக்கற்றேன்
முழுநெறி யாகிலுஞ் செல்லே னினிச்செல்வர் முன்கடைக்கே.       34

இனிச்செல்வர் முன்கடைக் கென்செயக் சேறு மினையனெஞ்சேய்
கனிச்செல்வ மாம்பொழிற் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும்
முனிச்செல்வர் சேருஞ் சிராப்பள்ளி மேய முக்கட்சுடரை
தனிச்செல் வனைப்பணிந் துள்ளமிர் தூரித் தடித்தனமே.       35

தடித்தசுற தங்கமழ் சாரற் சிராமலைச் சங்கரன்தன்
கொடிக்கண்ட வள்ளேறென்ன வெற்றிணைக் கரங்கொடி ழைத்தரண்சூழ்
படிக்கண்விட் டார்த்தன ராயர் தளைப் பருவலியாற்
பிடித்தமொய்ம் பர்க்கின் றெளியளன் றோஎங்கள் பெண்ணமிர்தே.       36

பெண்ணமிர் தைப்பார் பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை
வண்ணப் பயலை தணிவித் திரேல்வம்மின் செம்மனத்துக்
கண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு
விண்ணப் பமுஞ்செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே.       37

வேறுகண் டாய்நெஞ் சமேதள ரேல்விளை மாங்கனியின்
சேறுகண் டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ்சென்னால்
யாறுகண் டாயவன் றேவியல் லம்பல மேற்பதைய்ய
மேறுகண் டாயவ னேறிப் பல் காலம் இயங்குவதே.       38

காலால் வலஞ்செய்து கையால் தொழுதுகண் ணாரக்கண்டு
மேலா னவருடன் வீற்றிருப் பாலெண்ணில் மெய்ப்பலவீர்
சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப்
பாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே.       39

பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர்
தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் மொய்ம்மை தவம்புகுநாள்
கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த
மணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி வள்ளலுக்கே.       40

வள்ளலுக் கும்மலை மாதர்தங் கோனுக்கு வாட்சடைமேல்
வெள்ளெருக் கும்மதி யும்பொதிந் தானுக்கு வெண்பளிங்கு
தெள்ளலைக் கும்மரு விச்சிராப் பள்ளிச் சிவனுக்கன்பா
யுள்ளலுக்கு நன்று நோற்றதன் றோவென் றுணர்நெஞ்சமே       41

நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு
தஞ்சப் பெருக்குள தானஞ் சிராமலைச் சாரலுண்டு
துஞ்சுந் துணையுஞ் சிவனைத் தொழுது துறக்கமெய்தார்
பஞ்சந் நலியப் பலிதிரி வார்சிலர் பாவியரே       42

பாவிய ராக புரத்திற்பட் டார்பசுஞ் சந்தனத்தி
னாவிய ராவு சிராமலை யா¨னையு நல்லனென்னோ
மோவிய ராலு மெழுதப் படாஉரு வத்தசுரர்
தேவிய ராயுங் கொண்டதன் றோவவன் செஞ்சுரமே       43

சரங்கலந் தோரைப் புணர்விக்க வேயார்வமென் றார்க்கணவன்
னிரங்கலந் தோடெரி சேர்கின்ற வாறென் சிராமலையா
யிரங்கலந் தோவிலை யால்வினை யேற்கென் றிரதிமண்மேற்
கரங்கலந் தோலிடக் கண்டதன் றோநின்றன் கண்மலரே       44

கண்மலர் நீலங் கனிவாய் பவழங் கருங்குழல்கார்
எண்மலர் மூக்கிளங் கொங்கைகள் கோங்கிடை யென்வடிவென்
உண்மல ராசையி னொப்புடைத் தல்கிலொண் பொன்மலையான்
றண்மலர் சேர்தனிச் சங்கிடு வாளரு பெண்கொடிக்கேய்       45

பெண்கொடி யாரிற் பிறர்கொடி யாரில்லை பேரிடவத்
திண்கொடி யாரைச் சிராமலை யாரைத் திருநுதன்மேற்
கண்கொடி யாரைக் கனவினிற் கண்டு கலைகொடுத்த
வொண்கொடி யாரை வுணர்வழிந் தாரென் றுரைப்பார்களேய்       46

கள்ளும் முருகுந் தருமல ரான்மிக்க சந்திறைஞ்சி
யுள்ளும் புறமும் மொருக்கவல் லார்கட் குலகறியக்
கொள்ளும் மடிமை கொடுக்குந் துறக்கம் பிறப்பறுக்குந்
தெள்ளும் மருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே       47

கொழுந்தார் துழாய்முடிக் கொற்ற கருடக் கொடித்தேவுஞ்
செழுந்தா மரையிற் றிசைமுகத் தாதியுஞ் சேவடிக்கீழ்த்
தொழுந்தா ரியர்தந் துணிவைப் பணியச் சுடர்பிழம்பா
யெழுந்தான் சிராமலைக் கேறநம் பாவம் மிழிந்தனவே       48

இழியுந் நரகமு மேறுந் துறக்கமு மிவ்விரண்டும்
பழியும் புகழும் தரவந் தனவினைப் பற்றறுத்துக்
கழியும் முடம்பும் கழித்தவர் காணுங் கழலன்கண்டீர்
பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனேய்       49

புண்ணியன் வேதம் முதல்வன் புரமூன் றெரித்தவன்று
திண்ணியன் றேவர் பிரானென்ன நின்றான் சிராமலைவாய்க்
கண்ணியன் றண்ணந் தழையன் கனைபொற் கழலம்பாற்
றண்ணியன் இன்றும் வரும்மன்று போன தனிவில்லியே.       50

வில்லிபின் செல்லமுன் செல்லா அரிவையு மென்கிளிப்போல்
சொல்லிபின் சொல்லமுன் செல்லா விடைலையுட் சொல்லிம்மான்
வல்லிபின் செல்லமுன் செல்லா திடங்கொண்ட மாதவர்போ
லெல்லிபின் செல்லமுன் செல்லார் சிராப்பள்ளி யெய்துவரேய்.       51

எய்துவ ராயமுந் தாமும் இரும்பொழி லென்னைமையல்
செய்தவர் வாழ்வுஞ் சிராமலை யென்பது சென்றுகண்டால்
மெய்தவர் மான்விழி மென்முலை தண்ணிய வம்முலைக்கீ
ழைய்தவர் நுண்ணிடை யல்கிலுஞ் சால வளவுடைத்தேய்.       52

உடைத்தேய் வருதுன்ப வெம்பகை நீக்கி உலகளிக்குஞ்
சடைத்தே வர்முடித் தேவருந் தாடொழத் தானவரைப்
படைத்தேய் கெடுத்த பரமன் சிராமலைப் பாடிருந்துங்
கடைத்தே வனைத்தொழு மோவினை யேயென் கரதலமேய்.       53

கரம்பற் றியவில்லி கைபற் றியவில்லி காலலைக்குஞ்
சுரம்பற் றியசெழு மம்பொன் சுடர்கம லயத்தயன்றன்
சிரம்பற் றியமழு வாளிதன் சாரற் சிராமலைசேர்
வரம்பற் றியபெரி யோரிற்சென் றேகினி வாழ்பதியே.       540

பதியிலந் நாடிலம் பைம்பொற் குடைபெறப் பண்டுசெய்த
விதியிலம் . . . . இலம்வியன் கங்கையென்னு
நதியிலங் குஞ்சடை நாதன் சிராமலை நண்ணவென்னும்
மதியிலம் வாழ்வா னிருந்துமென் னோநம் மனக்கருத்தேய்.       55

மனக்கருத் தாகிய . ரவலை கண்சே . பற்றின
. . க் கருத்து . . இருந்தென் . . . . . .
. . . . கெலாம் . . . . . . . . . .
. . . கொட்டிற் றளைக்கு . . . சிராமலையே.       56

மலையாள் மடந்தையோர் பாகத்தன் மாகத் துமானதஞ்
சிலையா லழிவித்த நாதன் சிராமலை தேவர் . வ
முலையா யருவர் . . . குயிர்க்க . . . .
மிலையா . ழிருணர்ந் தெமைவி னாவி யியங்குவரேய்.       57

இயங்கிய காலு நிலனும் எரியு மிருவிசும்பும்
மயங்கிய நீரும் மறையும் பிறவு மருவியரந்
தயங்கிய சோதியுந் தானாந் திருமலைத் தத்துவன்றாள்
முயங்கிய சிந்தை யினார்களெந் நாளு முடிவிலரே.       58

முடியரை சாளுமுந் நீரகல் ஞாலந்தன் முன்னணிந்த
வடியரை யாள்விடு வான்சிரா மலை ஐயநிலயிற்
பிடியரை சாளி பிடிப்ப நடுக்குறும் பெய்புனத்தேய்
குடியரை சாளுங் குறவருஞ் சாலக் கொடுமையரே.       59

கொடும்பற் றுயங்கிக் குழிகண் ணிடுங்கிக் குரனடுங்கி
இடும்பைக் கொதுங்கி யிறுமற் பகைகொல்ல இல்லிபட்ட
நெடும்பற் களைய நிலையா உடலை நிலையுமென்னார்
திடும்பற் கலுழிச் சிராமலை யாளியைச் சேர்ந்தனரேய்.       60

ஆளியைச் சேர்ந்த வகலத் தவனுக் கிளையவம்மென்
றோளியைச் சேர்ந்த பிரான்றன் சிராமலை துன்னலர்போல்
மீளியைச் சேர்நாதனம் செய்தளை யெய்வினை யேன்பயந்த
வாளியைச் சேர்ந்த சிலைபோல் லுருவத்து வாணுதலே.       61

நுதன்மிசைச் செங்கண் மலர்ந்தனங் கோடையின் மன்மதவேள்
மதனுகப் போந்தழற் சிந்துவித் தான்வண் சிராமலைவெற்
பிதன்மிசை சாரலில் யாமா டிடமிள வண்டுறங்கும்
புதன்மிசைத் தோன்றியும் காந்தளும் பூக்கும் பொழிலிடமே.       62

பொழிலுடை யார்பணி பொன்னடி வானவர் முன்முடிசேர்
கழலுடை யானது காமர் சிராமலைக் காரனைய
குழலுடை யாணசைய ராற்குறவர் கொல்லியானைக் கொள்ளித்
தழலுடை யாநெறி யம்பொறி போர்க்குந் தயங்கிருளே.       63

இருளின் படலம் மிவைகார் முகிலில் லைவென்னின்
மருளு மயர்வும் பெரிதுடை யாரில் லைவல்லி .
. ருணோய் தெரும் மனத்தார்க் கருளும் பிரான்றன் சிராமலைபோல்
பொருளும் மவிரும் பொன்னகர் வீதி புகுந்தாரேய்.       64

வீதிவந் தாருடன் வெள்களந் தான்னிள ராலிவடன்
சோதிசேர்ந் தான்சிந் தை . ரல்லி . வுண்ணா . ரதருவின்
. . சிந்தா மந்தியா டுஞ்சிரா மலைப்போ
லாதிசெந் தாமரை வண்ணங்கண் டானங் கள்இழையே.       65

இழையிடங் கொண்ட தடமுரண் . . திளங் கோமதலை
விழைவிடங் கொண்ட வெண் . ரனாறி . ர்தன்றி . ன்னி . ழவி
மழையிடங் கொண்ட சிராமலை யாரளி மிறந்தவர்போல்
பிழையிடங் கண்டது . . . . . ன் பெண்கொடிக்கே.       66

கொடிகட் டியமணி மாளிகைத் தில்லையுட் கொற்ற மன்னர்
முடிகட்டி யமுகைசேர்கழல் மூவாயிரவர் முன்னின்
றடிகட் டியகழ லார்க்கநின் றம்பலத் தாடுமைய்யர்
வடிகட் டியபொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே.       67

வான்தோய் சிராமலை வந்திறைஞ் சாதவர் மையல்வைகுந்
தேன்றோய் மொழியவர் செவ்வாய் நினைந்துவெள் வாய்புலர்ந்து
மீன்றோய் கடலன்ன வேட்கைய ராகத்தம் மெய்ம்மைகுன்றி
ஊன்றோய் உடகிங் கொழித்துயிர் போக்கும் உறைப்பினரே.       68

உறைப்புடைக் கூற்றை யுதைத்துயிர் மாற்றி யுலகறிய
மறைப்புடை மார்கண் டயற்கருள் செய்தவன் வானெரிவாய்க்
கறைப்புடைப் பாம்புறை திங்கட் கரைக்கங்கை நீரலைக்குஞ்
சிறப்புடைச் செஞ்சடை யான்உறை கோயில் சிராப்பள்ளியே.       69

பள்ளியம் மாதுயி லெற்கின் றிலை பாவிப் பிழைத்தாய்
வள்ளிதம் . . சிலைவேடன் உட்கா . . . . . . .
வெள்ளியம் மாமலை யாளன் சிராமலை மேல்மலையன்
உள்ளியம் மாவிரந் தாலுகந் தியபத முன்மத்தமே.       70

மத்தமைத் தான்சென்னிப் பொன்னிம வான்பெற் றமாதுதன்
. . . . . . . . . . . . . முழுதும்
பித்தமைத் தாய்சிந்தை நொந்து குலமந்து பேரமர்க்கண்
முத்தமைத் தாய்கங்கை . ¡கில் . நின் முதிர்ச்சியையே.       71

முதிரும் பரவை முகந்தகொண் மூமுக டேறிமுன்னி
யதிரும் மா . . . ப்பது . . . . . வ்வமுங்
கதிருன் மலந்த சிராமலை யாளி கழனோம்பு
கதிர்த்திரு வருள்போ லினியா னையின் றெய்துவனே.       72

யானையின் றெய்த பிடியா மட . . . . . .
. . யன் பர்தம் வாழ்நா ளை . . றென்றுவிட் டார்சிந்தை
. . னெறுங் கொன்ற வீரன் சிராமலை யேவினப்பாற்
பூனை நின்றெங்கும் பொரியதிர் தினம்பு குந்தனரே.       73

தினம்புகு கின்றது தண்பணை யாகத் தன் . . மா
வினம்புகு தேர்நின் றிழிந்துபுக் காரன் பரென்று . வுஞ்
சினம்புகு திண்விடைப் பாகன் சிராமலைத் தெய்வமன்னான்
மனம்புகு வெம்பணிக் கோ . . ணந்திட் டமாமருந்தேய்.       74

மருந்தேய் சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய்
கருந்தெய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரேய்
முருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின்
றிருந்தேய் நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே.       75

ஏழைப் புதல்வ னெனக்குத் துணையுமக் கெங்கையுங்
கோழைக் குரற்பெரும் பாணனை யுங்கொளக் குன்றர்கொன்ற
வாழைக் குலைமண நாறுஞ் சிராமலை வாழ்த்தலர்போல்
மோழைப் பெரும்பேய் சொல்லேலு நில்லெனுமென் முன்கடையே.       76

கடையகத் துச்சென்று கானிமித்து நின்று கைவிரித்து
நடையகத் துப்பெரி தென்னத் திரிவர் நகுமதிசேர்
சடையகத் துக்கங்கை வைத்தான் சிராமலை சார்வொழிந்து
படையகத் துச்செல் வராய்நல் லாரான . . . . ரே.       77

களகன் னிவனெனப் பாரோர் நகப்பனை யின்மடன்மே
லகளந் நுதலி பொருவந் நாட லியானைக்கன்று
மிளகு மடமையின் முளையும் மிளகமென் றேன்பருகி
குளகுந் நுகருஞ் சிராமலை சூழ்ந்த குலப்பதிக்கேய்.       78

பதியற் றிடராற் படுதலை யிற்பலி கொள்வதெங்குங்
கதியற்றி ஊர்வது காசின மால்விடை காதலியுந்
நதியற்றி யூர்நகர் நஞ்சுண் பனதந் தலை . . ஞ்ச
மதியற்றி யூருஞ் சிராமலை மாதவர் வாழ்வகையே.       79

மாதவர் வாழுஞ் சிராமலை மாமணி கண்டாங்கேய்
போதுவ ராகிலும் போமடவா யென்ன நிலநடுவே
யீதவர் விதியன் றென்பர் போலிருந் தோங்குணத்தோய்
. . யா விசொல் லாயவர் பாற்சென்று சொல்லுதற்கேய்.       80

சொல்லும் பொருளும் சுவையும் பயனு மிலவெனினும்
அல்லும் பகலும் மிகதா மெனக்குப் புரமெரிப்பான்
வில்லுங் கணையுந் தெரிந்த பிரான்தன் சிராமலைமே
லெல்லுங் கனைகழ லின்குணம் பாரித்த வென்கவியே.       81

கவியலைத் துண்ணுங் கலைஞர்தங் காமரறு கார்களிற்றின்
செவியலைத் துண்ணுஞ் சிராமலை வாழ்நனைச் சேரகில்லார்
புவியலைத் துண்ணும் போர்வண் . . . . . வலராய்
நவியலைத் துண்ணுமங் காடுநங்கை . ராடு நண்ணுவரே.       82

நண்ணு தலர்கா நற்படு மலரு நறுங்குடுமி
விண்ணுதல் போழுஞ் சிராமலை வெற்பனை வேறிருந்து
மண்ணுதல ரடிப்பணிந்த னாம மதை. . டக்காயன்
. . . வல்லார்க் கெளிதிமை யோர்த மிரும்பொழிலே.       83

இரும்பிடைச் சேர்ந்ததெண் நீர்வளண்மை பெற்றிமை யோரிருக்கப்
பொரும்படைக் கூரெய்த பொன்மலை யாயை புணர்ந்தபின்னைக்
கரும்பா . . . . . . மிர்துங் கனிவளனுஞ்
சுரும்பிடைத் தேனுநன் பாலுநின் போலச் சுவையில்லையே.       84

இல்லையென் பார்பொரு ளுண்டெனப் பரிவ விரதிபழஞ்
சொல்லுந் தளையா லவர்இரணங் கள்மூன்றின் சுடர்விளக்காத்
தில்லையென் பர்தென் சிராமலை யாயென்று சென்றிறைஞ்சி
வல்லையன் பர்க (நெஞ்சே) யடு . . னியின வன்பழிக்கே.       85

பழிக்கும் இருட்படலம் பேரரு ளன்கையு மஞ்செழுதயு
விழிக்கும் இளமையவ ரேறும் மிடத்தெதிர் வந்தருவி
தெழிக்குஞ் சிராமலைச் சித்தரைத் தீர்த்த . . யங்
கழிக்கும் மிதுமெய்ம்மை கைகொண்ட யோகங் கடலிடத்தே.       86

இடங்கொண்ட வேலையு மேழுமலை யும்திசை யானையெட்டும்
படங்கொண்ட நாகஞ் சுமந்தவிப் பாருமே படருங்கொலோ
திடங்கொண்ட சாரணற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்சேர்
நடங்கொண்ட சேவடி குஞ்சித் தருள்செய்த நானகத்தே.       87

அருள்செய் வதும்படை யென்மெய்ம்மை யேயடி யேனுக்கின்மை
பொருள்செய் துதவும் புதல்வரைத் தந்தென்பொல் லாதசொல்லால்
மருள்செய்த மாலைகொண் டானைவண் டாருஞ் சிராமலைவா
யிருள்செய்த கண்டனை யேதொண்டர் காள்வந் திறைஞ்சுமினே.       88

வந்திறைஞ் சித்தளர்ந் தேன்செல்லு மோசிந்தை மாதவர்மேற்
சந்திறைஞ் சிப்படர் சாரற் சிராமலைத் தாழ்பொழில்வாய்
கொந்திறைஞ் சிக்கமழ் கோதைக் குலாவி குழலவிழப்
பந்திறைஞ் சிப்பிடி பாளிடைக் கேசென்று பற்றுண்டதே.       89

தேறுசொல் லாததமிழ்த் தென்வேம் பயரண்ணற் செங்குவளை
நாறுமல் லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும்
ஏறுமல் லோனைச் சிராமலை யாளியை யிங்கு . . த்த
னீறுமல் லோர்தம்மை நோக்கவல் லார்க்கென்று நோயில்லையே.       90

நோயிலங் காதலு டையநெஞ் சேய்நுரை வெண்கடலுட்
போயிலங் காபுரமஞ் செற்றபொற் றேரவன் போந்திருந்து
வியிலங் கார்தரு மந்திரத் தால்வணங் கிப்பணிந்த
சேயிலங் கார்கழற் றீர்த்தன் சிராமலை சென்றடைந்தே.       91

அடைக்குங் கதிர்மணி யாரல் முலைக்கணிந் தல்கின்மெல்லம்
புடைக்குங் கலைபுனைந் தோதியிற் போது பொதிந்துவிட்டார்
விடைக்கும் முமைக்கு நற்பாகன் சிராமலை மெல்லியலீ
ரிடைக்கும் இளையவர்க் கும்பகை யோநும்மை யீன்றவரே.       92

ஈன்றாள் வருந்தவிம் மைப்பிறந் தம்மைக் கிரங்கினைய்யு
மூன்றா முடிகொண் டொப்போ மெளிப்பட் டொரிங்கிநின்றோந்
தேன்றாழ் சிராமலை வாரியின் மூரித்தெய் வக்களிறேய்
தோன்றா யெமக்கொரு நாள்வினைப் பாசத் துடரறவே.       93

துடரிடை யாத்த ஞமலியைப் போலிருந் தேனிச்சுற்றத்
திடரிடை யாப்பவிழ்ந் தென்னைப் பணிகொள்பொன் னைப்புரைஞ்
சுடரிடை யாத்த பைங் கொன்றையு மத்தமுஞ் சூழ்சடையின்
படரிடை யாத்த பரமன் சிராமலைப் பால்வண்ணனே.       94

பால்வண்ண நீற்றெம் பரன்சிராப் பள்ளிப் பரஞ்சுடர்தன்
பால்வண்ணங் கண்டுநம் பல்வண்ண நீங்கிப்பக் கத்திடஞ்சேர்
மால்வண்ணங் கண்டுதம் மால்வண்ணங் கொண்ட வளைச்சரிந்து
மால்வண்ணங் கொண்டுவந் தார்சென்று காண்மின்கள் மங்கையிரே.       95

மங்கையம் பார்கண்ணி பெண்ணுக் கரைசி மலைமடந்தை
கொங்கையம் பாரங்கள் போல்வா னெழுந்து குவிந்தழிந்து
பங்கயம் பாதங்கள் பொன்மலர் பெறாதவர்ப் பொன்மலைமேற்
புங்கவன் பாதந் தொழுதொழிப் போமெங்கள் பொய்யுடம்பே.       96

பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த
மெய்யினைக் காத்து வெறுத்தொழிந் தேன்வியன் பொன்மலைமே
லையனைத் தேவர்தங் கோனையெம் மானையெம் மான்மறிசேர்
கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே.       97

கழலும் மருளுநஞ் சென்னிவைத் தோன்கன கச்சிலம்பிற்
கழலும் மலரும் மசோகும் பலாசுந்துட ராதெழந்திட்
டழலின் புறுத்து வெண்ணீறொத் தணநம் மணிவளையார்
குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே.       98

குராமலைகொண்ட உலகொளிம் மதியமுங் கோளரவும்
இராமலை வான்பகை யென்பது பொய்மெய்ம்மை யோர்க்கருளுஞ்
சிராமலை வானவன் சென்னியின் மேற்கொண்ட சீர்மையினாற்
கராமலை நீர்க்கங்கை பாலுடன் வாழ்கின்ற கண்டனரே.       99

கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன வைம்பொறி யுள்ளு முயிர்தழைப்பக்
கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன பொன்மலை யாளர்க் கோக்கினவே.       100

ஓக்கிய கையோ டொருக்கிய யுள்ளத்தி யோகியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்மே
லாக்கிய சிந்தை யடியார்க்கென் னோவின் றரியனவே.       101

அரியன சால வெளியகண் டீரரு வித்திரள்கள்
பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக்
கரியன செய்யன நுண்சுடர்ப் பைங்கட் கடாக்களிற்றி
னுரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே.       102
சிராமலை அந்தாதிமுற்றிற்று (பயன் கூறும் பாயிரம்)
மற்பந்த மார்வன் மணியன் மகன் மதிள் வேம்பையர்கோ
னற்பந்த மார்தமிழ் நாரா யணனஞ் சிராமலைமேற்
கற்பந்த நீழலில் வைத்த கலித்துறை நூறுங் கற்பார்
பொற்பந்த னீழ லரன்திருப் பாதம் பொருந்துவரே.       103

வெண்பா (மேற்படி நூல் முடிவில் காண்பது)
மாடமதிரை மணலுர் மதிள் வேம்பை
யோடமர் சேஞலுர் குண்டூர் இந்-நீடிய
நற்ப்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற்
கற்பதித்தான் சொன்ன கவி.       104
------

கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-2

முற்காலத்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட மண்ணகத்தில் தற்காலத் 'தமிழ்நாட்டு' எல்லையில் அமையாத புலங்களின்று முன்பு அரசு தொல்லியல் துறையினரால் படிஎடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பு.

(பாடல்களைப்பற்றி சிறுகுறிப்புகள் இப்பக்க கடையில் காண்க)
இலங்கை கொழும்புநகர் காட்சிசாலை கல்ஒன்றில் காண்பது.
தெ.இ.க.தொ. IV # 1413
(நேரிசை வெண்பா)

கங்கணம்வேற் கண்ணிணையால் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேல்திலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்
சிங்கைநக ராரியனைச் சேரா அனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.       1
------

இலங்கை அனுராதபுர தொல்லியல் அலுவலகத்தில் பாதுகாத்துள்ள கல்வெட்டொன்றில் காண்பது
தெ.இ.க.தொ. IV # 1405
(நேரிசை வெண்பா)

போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்
தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி
வருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை
ஒருதன்ம பால னுளன்.       2
----------

ஆந்திரத்தில் கோதாவரி வட்டம் திராட்சாராமம்
பீமேசுரர் கோயில் கிழக்கு மதிலில் காண்பது
தெ.இ.க.தொ. IV, # 1026 (நேரிசை வெண்பா)
இம்பர் நிகழ விளக்கிட்டான் இடர்கரம்பைச்
செம்பொனணி வீமேச் சரந்தன்னில் - உம்பர்தொழ
விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்
மண்ணுய்ய நின்றாடு வான்.       3
----------

மேற்படி கோயில் இரண்டாம் கோபுரத்தில் காண்பது
தெ.இ.க.தொ. IV, # 1338 (416 of 1893)
(ஆசிரிய விருத்தம்)

புயன்மேவு பொழில்தஞ்சை முதல்பஞ்ச
நதிவாணன் புதல்வன் பூண்ட
வயமேவு களியானை முடிகொண்டான்
மாநெடுவேல் வத்தர்வேந்தன்
இயல்மேவு தோளபயற் கிருபத்தை
யாண்டதனின் இடர்க்கரம்பைச்
செயல்மேவு ஈசற்குத் திருநந்தா
விளக்கொன்று திருத்தினானே.       4
----------

கருநாடக மாநிலம் சித்தலகட்டம் ஜங்கமகோட்டை கொல்லஹள்ளியில் பைரவன் நிலத்துக்கல்லில் கண்டது
கர்நாடக கல்வெட்டுகள்-தொகுதி X # 9
(ஆசிரியப்பா)

பூமகள் புணர புகழது வளரப்
புவியோர் போற்ற வெங்கலி கடிந்து
செங்கோல் ஓச்சி பூழி வேந்தன்
கோழியர் குலபதி ஸ்ரீராஜ ராஜன்
ஸ்ரீவிக்கிரம சோழதேவர்க்(கு) யாண்(டு)இரண் டதனில்     5

நீரார் நிகரிலி சோழமண் டலத்துக்
காரார் வயல்சூழ் கைவர நாட்டுள்
மாட மாளிகை மண்டபம் ஓங்கிய
கூட- - - - - - - - கொற்ற
வாயதில் பாகட்டூர் - - - - - ம்     10

பாவையர் நடம்பயில் சூகுட் டூரில்
தொன்னில நிகழத் தருமமே நல்கும்
தன்மபாலன் அருமொழிச் சதுர்வேதி மங்கலத்து
பல்லோர் புகழும் நல்லூர் முதல்வன்
மாத்திரை அதனில் மாநிதி நல்கும்     15

ஆத்திரை யர்கோன் ஆதுலர் சாலை
புராணம் ஓதும் பார்ப்பனப் பெருமாள்
சாமுண் டையன் தன்பெருந் தேவி
பூச்செறி குழலாள் வீச்சமை பயந்த
தண்டமிழ் மாலையன் தாரணி ஏத்தும்     20

எண்டிசை நிகழும் இருபிறப் பாளன்
கொண்டல் அன்ன குவலய தந்திரன்
ஓங்கு புகழான் உதயமார்த் தாண்ட
பிரம்ம ராயன் தேம்கமழ் தாரோன்
செழுமறை வாணன் தன்திருத் தமையன்     25

தன்பெய ராலே பொன்புரி சடைஅணி
புண்ணியன் விண்ணவர் நாமீச்சர - - -
- - னி(து) ஏத்தியசோ மீச்சரந் திருக்கோயில்
எடுப்பித் - - சிறந்து - லாணம் இசைப்ப
திருப்பிர திஷ்டை நிகழப் பண்ணி     30

திருவடி நிலையும் செம்பொனால் அமைத்துத்
துருவது வளர உமாசகி தன்திருமேனி
இருநிலம் போற்ற எழுந்தருளி வித்துக்
கேதகை மல்லிகை கிஞ்சுக மஞ்சரி
பாதிரி புன்னை (பலாசம்) ஆர்மகிழ்     35

சிதலை மௌவல் செருந்தி சண்பகம்
மாதவி என்றிவை வளம்பெற அமைத்துச்
செங்கண் விடையோன் சென்னி மன்னும்
கங்கை நீரும் மண்ணும் கொணர்ந்து
குருக்கள் குளிர கோயில் மேற்பால்     40

திருக் குளமாய்த் தீர்த்தம் கண்டு
செழுநிம் ஏத்தக் . . . . . . . .
கொட்டும் தட்டும் குலவி நிலவ
விருப்புறும் அடியார் மேவி சிறக்கத்
திருப்பணி ஆற்றித் தேவர் தானமாகப்     45

பெரிஏரி யில்நிலம் ஓரா யிரமும்
சிற்றேரி யில்நிலம் ஓரா யிரமும்
சீரார் செந்தமி ழோர்களிப் பார
ஈரா யிரம்குழி . . னிற் திகழக்
குணபதி யாய்எம் குற்றம் கடியும்     50

கணபதி யார்குமரர்க்(கு) இருநூறு குழியும்
மாராய னான பிரா . . . . . .
சூரிய தேவர்க்(கு) இருநூறு குழியும்
அஞ்சொல்லா . . த்தவ . . செய்வான்
திருக்களத் துமேல்பால் பாலை நன்நிலம்    55

ஒருவே லியும்நற் பண்ணையும் . . ழிந . .
பண்ணை மேல்பால் பசுஊர் நாற்பால்
எல்லை யுள்பட நஞ்சை புஞ்சை
நன்நில நிகழு நால்மறை அவர்பால்
பொன்னற விட்டு மண்ணறக் கொண்டு     70

தாரணி நிகழத் தண்கிளை வளரச்
சந்திரா தித்தர் தாம்உள் அளவும்
ஊழூழி உரவுபெற அமைத்தனன்
வாழி வாழி வையகத்(து) இனிதே.       5
---------

கருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம் சிதைந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் காண்பது
கருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 132

தமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில் (CE1179)
(ஆசிரியப்பா)

திருமகள் துணைவன் ஜயமகள் நாயகன்
இருநிலம் காவலன் இளங்கோன் தழைசைமன்
வடதிசை மேருவில் வாரணம் பொறித்தோன்
குடதிசை இந்துவின் குலமுதல் சிறந்தோன்
தென்திசைக் காவிரிச் செழுநீர்க் கடந்தோன்     5

வந்திசைப் புரிந்தான் வானவன் கோன்தன்
சென்னியில் (கைவளை கோத்[து]அவன் திருக்கிளர்)
பொன்னின் ஆரமும் ஈரமும் புனைந்தோன்
எண்திசை அமரரும் இயமனும் நடுங்கிப்
பண்டுவெங் காளி பரிகலம் பறித்தோன்     10

நீள்நெடும் குன்றகம் துணித்து நாகர்
கீழ்நிலை யாலக மேப(ட) யாண்மையில்
அர(சை)ப் பொடியத் தாக்கி ஆங்கவர்
மு(ர)சம் கவர்ந்(த) மாடகலத் தமராயன்
முத்தி(ற) பருணிதன் முசுகுந்த கிரிநாதன்     15

வண்டர் பா(ல)ன் விக்கண் (டனவாத்சன்)
புரவா தீசன் செல்வன் பெயரால்
மற்றவன் திருமகள் (போல்)வழங்கு கற்பின்
மாதேவி என்பாள் பஞ்சவர் தூதன்
பானாரி புத்திரன் வெஞ்சிலை தடக்கை     20

வீர கங்கன் நடு{[வு]ற்ற சிந்தனன்
சூ}ரமன் தொடுகடற் றானைத் தோன்றற்(கு)
இளையவன் வெங்கணான் விக்ரமா தித்தற்குத்
தங்கை கூத்தற்கு தான்முன் சிறந்தவன்
ஓடக் கொ(ல்ல)த் தோங்கிய முக்கட(ல்     25

நேடிடு)ங் கோன்கச்சி காவல (னன்று)
தென்னனை அடுகளத் திட்டு வென்ற
மாகடந்த பணவிரி யுர வேந்தன்
பொன்பன பொ(ள்)புண் (நெடுவேல் புறங்காக்கும்)
எழிற்கங் கப்பெருமாள் அத்தை வாழி     30

அகலிடத் தெல்லாச் செல்வமும் தோற்றமும்
யாவையும் நில்லா (எனும்) நிலைஓதி
அருந்தவம் புரிந்த சிந்தையன் ஆகி
இருந்தறம் செய்வ(து) இயல்பென எண்ணி
சுற்றும் புரிசையும் தோரண வாயிலும்     35

கற்றளி அதுவும் கவின்பெற அமைத்து
நந்த வனமும் திருமடைப் பள்ளியும்
அமைத(ளி)க் குளமும் மடைவி ளாகமும்
ஒற்றைச் சங்கும் இரட்டைத் தாரையும்
மற்றும் பலப்பல வாச்சி(யம்) பட்டமும்     40

மணிபூம் பாரி(வர் பகடுமா புற்கட்டும்)
பலபடி நி(வந்த பரிசி லருளியன்று)
எழில்சக ரிற்றாயிரத் தொருநூற் றொன்றென
அறிஞரும் உரைத்த நாளில் அணியும்
சந்தமும் அகிலும் ஆரமும் மணியும்     45

பொன்னும் வருபுனல் சாரல் கொங்கலர்
கூ(வி)ளை கூற்றிடை உமையடு
சங்கரன் தன்னை தாபித் தனனே.       6
---------

கருநாடக மாநிலம் கோலார் வட்டம் விபூதிபுரம் சிதைந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் காணும் மற்றொரு பாடல்

கருநாடகக் கல்வெட்டுகள் தொகுதி-X # 131

தமிழ்மொழி, கிரந்த-தமிழ் எழுத்துக்களில். (CE1198)
(மருட்பா)

அலைகடல் உடுத்த மலர்தலை உலகத்(து)
எண்ணருங் கீர்த்தி இசையார் அதிபன்
அண்ணல்எம் குளந்தை அமரன் காதலன்
கோதில்புகழ் குவலாள மாநகரம் குடியேற்றிய
ஆதி அணிகேசன் அளகைப்பதி தானுடையோன்     5

திரைலோக்ய பட்டண ஸ்வாமி ஐயனருள்
சீராசைத் தேவ னுடனவ தரித்த
ஆயிடையாளுய்ய (த)ண்டைஅருந் ததியேஅனை யாள்தந்தாய்
திருவயிற் றுதித்த துளங்குமணி திருமார்பன்
செங்கமலப் புனல்புடைசூழ் செழுந்தொண்டை வளநாடன்     10

எங்கள்பெரி யாற்கிளைய பெரியான்மற் றீண்டுலகில்
ஒப்பரிய சகரையாண் டோரா யிரத்துமேல்
செப்பரிய நூறுகடந் திருபதுதான் சென்றதன்பின்
வென்றிபுனை கடாக்களிற்று விக்கிரம கங்கன்
குன்றெறிந்த கூரிலைவேல் கொற்றவனை யிடுவித்துக்     15

கொத்தலரும் பூம்புனல்சூழ் குவலாளத் தோரிதனில்
உத்தமத்தே நீர்நில மற்றொரு வேலையு மாளும்
சோலை அதனுக்கு வடமேற்கே விடுவித்து
திருச்செல்வம் பலபெருக்கி சி(னக்கலி)யு முப்பொழுதும்
கருத்தமைய எழுந்தருளும் படிநி(வ)ந்தம் கட்டுவித்துச்     20

சந்திரா தித்தர்வரை திருப்புகழ் நிறுத்
திந்த நானிலத்(து) இனிது வாழ்கெனவே.       7
---------


ஆந்திரமாநிலம் திருப்பதி திருமலை மேளமண்டப தென்புறச்சுவரரில் காண்பது
தேவஸ்தானக் கல்வெட்டுத் தொகுதி-1, #-80
(நேரிசை வெண்பா)

எத்தலமும் ஏத்தும் ராசகண்ட கோபாலன்
கைத்தலத்தின் கீழோர் கையில்லை - இத்தலத்தில்
உண்ணாதா ரில்லைஇவன் சோறுணும் இவன்புகழை
எண்ணாதா ரில்லை இனி.       8
---------

கீழ்த்திருப்பதி அலிபிரி பெரியாழ்வார் கோயில் மேல்பால் உள்பக்க சுவரினில் காண்பது (நேரிசை வெண்பா)
கைப்பயலாம் பூவைநகர்க் காமவில்லி சர்ப்பகிரி
அப்பனுக்கு நற்பொலியூட் டாக்கினான் - ஒப்பாவால்
என்னம்மை முப்பத் திரண்டறமும் கற்பித்த
தன்னம்மை ஏரி தனை.       9
---------

திருப்பதி திருமலைசீனுவாசர் கோயில் முதல்சுற்று தென்பக்க சுவரில் காண்பது (நேரிசை வெண்பா)

ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ இனிதூழி - போத
மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு
திருக்கைமலர் தந்தான் சிறந்து.       10
---------

சித்தூர் (அருகு) மேல்பாடி சோமநாதீசுவரர் கோயில் மகாமண்டபத் தென்பக்கச் சுவரில் காண்பது
(நேரிசை வெண்பா)

பொத்தப்பிச் சோழன் புடோலிஅர சன்புவிமேல்
எத்திசையும் செல்லும்எழில் மேல்பாடி - மெய்த்தவத்தால்
சோளேந்திர சிங்க நாயகற்குக் தூங்குமணி
வாளேந்து மண்டபம்செய் தான்.       11
---------

கேரள மன்னன் இரவிவர்மன் காலம் (CE1620)
(?) பகவதிஅம்மன் கோவில்-திருவுண்ணாழி-சுற்றி
முகமண்டபம்-முல்லைமங்கலவன்-திருவிக்கிரமன் பணி
திருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி VI பாகம் 11 # 125,126

(கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்)
ஆதியெழு நூற்றுடன்தொண் ணூற்றையா மாண்டி லற்பசியேழ் முற்றசமி அவிட்டம் வெள்ளி
மாதிசைசே ரின்னாளி லிரவி வேந்தன் மனமகிழப் பகவதிவாள் வைத்த கோட்டத்
தோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை யுறும்முக மண்டபமா மதற்கு நாப்பண்
முதறிவா லொருகலின்மண் டபஞ்செய் வித்தான் முல்லைமங் கலவன்திரு விக்கிரமன் தானே.       12
---------

எத்திசையும் புகழ்பெறவே மருவு கொல்லம் எழுநூற்றுத் தொண்ணூற்றோ டெட்டா மாண்டில்
ஓத்துவளர் பங்குனிநா லாறோ டொன்றில் லொத்துநிற்கும் கார்த்திகைமுன் மூன்றாம் பக்கம்
சத்தியவா சகன்முல்லை மங்கலத்து தரணிதர னெனும்தாமோ தரனன்பாக
பத்தியனால் திருப்பணிகள் பலவும்செய்தே பரலோக மடைந்தான் பொற்பாதம் பெற்றானே.       13
---------

அடிக்குறிப்புகள் - பாடல் வரிசையில்

(1) ஓர் அகப்பொருள் பாடல்.
"பொங்கி ஒலிக்கின்ற நீருடைய (மலை வீழ் அருவி)ஆற்றின் கரையமைந்த சிங்கைநகர் ஆரியனைச் சேராத அனுரை ஈசனின் மடமாதர், கையில் அணியும் கங்கணத்தை, (ஏந்தி) வேலொத்த இருகண்களால், (அதனைக்) காட்டினர். தங்கள் வளையணிந்த தாமரைநிற கைமேல் திலதம் எழுதி காட்டினர்." (தில்=எள். பெண்கள் நெற்றியில் இடும், எள் வடிவ பொட்டினை திலகம் என்பர். இக்காலத்து மக்கள் கீறும் இருதய வடிவின் தலைகீழ் நிலையை போல்வது.)
(2) தன்மபாலன் எனும் ஓர் மாதவனைக் (பிட்சு) பேசுகின்றது. அவன் ஓர் மாக்கோதை என்பதால் சேர மன்னர் மரபுத் தொடர் இழையோடுகின்றது இளங்கோவடிகளும் ஓர் சேரமன்னர் மரபினர் என அறிவோம்.

(3)
தற்காலத்து திராட்சாராமம் முன்பு இடர்கரம்பை எனக் கூவப்பட்டமை தெளிவு வீமேச்சரம் பழம்பெரும் கோயில்களில் ஒன்றாதலும் அ·து செம்பினால் அணி செய்யப்பட்டுள்ளதும் (செம்பொன் வேய்ந்தது?) ஆங்கு 'நின்றாடுவானுக்கு' (ஆடல் வல்லானுக்கு?) மன்னன் விளக்கிடும் பணி செய்வித்தான் என்பதறிகிறோம். அடுத்து வரும் பாடலில் மன்னன் 'அபயன்' எனப்படுதலால் வடநாடுகளை கடந்த சோழ மன்னர் காலத்தில் அவர்தளபதிகள் இப்பணிகளை செய்தனராகலாம்.

(4) மேற்கண்டபடி 'அபயன்' (சோழமன்னனின்) இருபதாவது ஆண்டில் தஞ்சையைச் சார்ந்த பஞ்சநதிவாணன் மகன் (தண்டுசென்ற தளபதி போலும்) திருநந்தாவிளக்கு அமைவித்தான் இவ்வபயன் அநபாயனெனும் விக்ரமசோழனானால் இதன் காலம் 12 ஆம் நுற்றாண்டாகலாம்.

(5)
கோயில் திருப்பணி நடந்தமை விவரம் கூறுவது.
விக்கிரம சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (CE1120) நிகரிலிசோழமண்டலத்து, கைவார நாட்டு, பாகட்டூர் கூற்றம்(?), சூகட்டூரில், சாமுண்டையன் மருத்துவச்சாலையன்-புராணமோதும் பிராமணன்-தாய் வீச்சமை பெற்ற உதயமார்த்தாண்ட பிரமராயன் எனும் விக்கிரம சோழனின் அரசியல் அதிகாரி தன் தமையன் (தந்தை) பெயரால் சோமீச்சரம் எனும் சிவன் கோயிலை, செம்பினால் ஓர் நிலை, உமையுடன் அமர்ந்த சிவமூர்த்தம், மணமலர் நந்தவனம், கங்கைநீர் மண், மேற்கே திருக்குளம், இவைகளுடன் மற்றும் பலப்பல நஞ்சை புஞ்சை பண்ணை நிலம் பசு, ஊர், ஏரி, நிவந்தங்களும் பரிகலங்களும் காலகாலமாக சீர்பெற நடைபெற அமைத்தான்..

(6)
வீரகங்கன் எனும் கங்கப்பெருமாள் (கீழை கங்கமன்னன்?) தழைசை (இன்றைய தலைக்காடு?) எனும் நாட்டுத்தலைவன் யானைக்கொடி உடையவன் காவிரிகடந்து நாடு கொண்டவன் பானாரி(கொங்குநாடு)புத்திரன், நாகர் நாடு உட்பட நாடுபல கடல்கடந்தும் (விக்ரம சோழ னுக்காக) வென்றவன் தன் கடைவாழ்நாளில் நிலையாமை உணர்ந்து அறம்செய நினைந்து சகம் 1101 (C E 1179) ஆண்டில் (இங்கு) ஆற்றங்கரையில் கல்லினால் கோயில், சுற்று, மடவளாகம், மடைப்பள்ளி, தளிக்குளம், கோயில் பூசைக்கு நிவந்தங்கள் என்பன எல்லாம் சீர்பெற அமைய ஓர் சிவன் கோயிலை நிறுவினான்.
[இதில் காணும் 'மாடகலத்த மராயன்' எனும் சொல் மாடங்கள் உடையதான மரக்கலங்களை செலுத்தியவனைக் குறிக்கலாம். மாராயன் என்பது அரசர் அதிகாரிகளின் ஓர் பட்டப்பெயராதலால் அவர்களும் கடற்தானை செலுத்தியவர் என்பது பெறப்படும். இங்கும் நாகர் நாடு (தூரகிழக்கு) கடல்தானை பேசப்படுதல் காண்க
மரக்காயர் எனும் சொல்லும் மரக்கலம் தொடர்புடையதே].

(7)
சகஆண்டு 1120 (C E 1198) பலகுடிகளை குவளாபுரத்திற்கு குடிபெயரச்செய்து அளகேசனாக வாழ்பவன் திரைலோக்கிய ஐயனருளால் உதித்த சீராசதேவன் உடன் பிறந்தான் ஆயிடையாள் திருமகன் பெரியானெனும் பெயரியன் தொண்டை நாட்டினன் விகரமகங்க மன்னனின் உதவியினால் குளந்தை ஊரின் (தற்காலம்-கோலார்) வடமேற்கே நிலம் நீர் சோலை என நிவந்தம் பல இக்கோயிலுக்கு செய்வித்து வாழ்வித்தான்

(8)
இராசகண்ட கோபாலன் (காகதீய மன்னன் ?) திருமலை கோயிலில் பலருக்கும் உணவளித்து உண்ணாதார் இல்லை என செய்து புகழ்படைத்தான்

(9)
பூவைநகர் (பூந்தண்மலி?) சார்ந்த காவவில்லி என்பார் சர்ப்பகிரி (சேஷாசலம்) நாதனுக்கு சக்தியாக அம்மை செய்யும் 32 அறங்களைப்போல் நற்பலிக்கான ஏற்பாடுகள் அழகாக செய்தருளினான்

(10)
கடல்போல் தாளாண்மை மிக்க யாதவர் தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான்.

(11)
படோலி எனும் நாட்டுற்கு தலைவனான பொத்தப்பிச்சோழன் தெலுங்கு சோழ வம்சத்தினன்) மேல்பாடி கோயிலுக்கு உயரத்தில் ஒலிமணியும் ஏந்துவாள் உயரத்திற்கு மேலாக ஓர் மண்டபமும் செய்வித்தான். அக்காலத்தில் இக்கோயிலீசனுக்கு சோளேந்திர சிங்கன் எனும் ஓர் சோழஅரசன் பெயர் அமைக்கப் பட்டுள்ளது [மேல்பாடி எனும் ஓர் ஊர் தற்காலம் சித்தூருக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லைக்குள் திருவலம் வள்ளிமலைக்கு இடையே பொன்னையாற்றின் கரைமேல் உள்ளது. எல்லை மீள்திருத்தமைப்பில் தமிழ்நாட்டுற்குள் வந்ததாகலாம்].

(12)
முல்லைமங்கலம் திருவிக்ரமன் எனும் தலைவன் கேரள மன்னன் இரவிவர்மன் மகிழ (?)பகவதி அம்மைக்கு கல்லினால் கோயிலும் அதனைச் சுற்றி முகமண்டமும் 795 கொல்லமாண்டில் (CE 1615) ஐப்பசி, ஏழில், அவிட்டம், முன் தசமி, வெள்ளிக்கிழமை நாளில், செய்தருளினான். 'நாப்பண்' (நடுவிருக்க) எனும் மிகப்பழமைவாய்ந்த சங்கத்தமிழ்ச் சொல் 1600 ஆண்டுகள் கழிந்தும் மலைநாட்டு புலவர்
ஒருவரால் பயன் படுத்தப்பட்டுள்ளமை காண்க.

(13)
மேற்கண்ட கொடையாளி முல்லை மங்கலத்து தரணிதரன் தாமோதரன் திருப்பணி முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்து கொல்லம் 798ல் பங்குனி கார்த்திகை மூன்றாம் பக்கம் 5ம்நாள்,பூதஉடலை நீத்துபரலோகம் அடைந்தமை பொளிக்கப்பட்டுள்ளது.
--- நூ.த.லோகசுந்தரமுதலி ------

கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-3

இப்பகுதியில்
(1) சிதம்பரம் சபாநாதர் கோயிலில் கண்டது - 17 பாடல்கள்
(2) தென்காசி விசுவநாதர் கோயில் கண்டது - 17 பாடல்கள்


கோயிலுள் பலஇடங்களில் அரசினர் கல்வெட்டாய்வாளர் தம்மால் படி எடுக்கப்பெற்ற, பல்வேறு மன்னர் காலத்தனவாக, பல்வகை யாப்பினில் அமைந்து ஒன்றிரண்டாக, பற்பலப் பொருள் மற்றும் கருத்தில் காணும் தனிப்பாடல்களின் தொகுப்பு.

(இவைபற்றிய சில குறிப்புகள் இப்பக்கக் கடையில் காண்க)

(1) சிதம்பரம் சபாநாதர் கோயில்


கீழ்கோபுர வலப்பக்கச் சுவரில் தெ.இ.க.தொ. IV # 621
(நேரிசை வெண்பா)
1.1
ஓதும் சகரஆண்(டு) ஓர்ஒருபத் தெட்டின்மேல்
ஆதி மூலநாளில் ஆனிதனில் - சோதி
துளங்கிட மேல்சோழன் சோழ குலவல்லி
களங்கமற வைத்தான் கரு

கீழ்கோபுர உள்வலப்பக்கச்சுவரில்,
தெ.இ.க.தொ. IV # 621, AR-173 0f 1892
(நெடிலடி ஆசிரி விருத்தம்)
1.2
வண்ணம் திகழும் கொடிமாடம் மன்னும் சோழ குலவல்லி
நண்ணும் தலைமை உடையாரை நாமார் புகழ்ப் பாமாலை
எண்ணும் படிஇல் புகழாளர் என்றே அன்றே என்னுடைய
கண்ணும் பழனக் கழுமலமும் கலந்தார் திருவு மலர்ந்தாரே

உள்சுற்று வடபக்கச்சுவரில்
இ.க.தொ. V பக்.105 (கழிநெடிலடி ஆசிரி விருத்தம்)
1.3
நானிலத்தை முழு(து)ஆண்ட சயதரற்கு நாற்பத்து நாலாம் ஆண்டில்
மீனநிகழ் ஞாயிற்று வெள்ளிபெற்ற உரோகிணிநாள் இடபம் போதால்
தேனிலவு பொழில்தில்லை நாயகர்தம் கோயில்எலாம் செம்பொன் வேய்ந்தாள்
ஏனவரும் தொழு(து) எத்தும் ராசராசன் குந்தவைபூ விந்தை யாளே

இரண்டாம் சுற்று வாயில் மேல் பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228 (நேரிசை வெண்பா)
1.4
மாறுபடு மன்னர்தம் கைபூண்ட வாள்இரும்பு
வேறுமவர் கால் பூண்டு விட்டதே - சீறிமிக
வேட்டம் திரிதரு களிற்று விக்கிர பாண்டியன்தன்
நாட்டம் கடைசிவந்த நாள்

கீழ்கோபுர தெற்கு கதவுநிலையில்
தெ.இ.க.தொ. IV # 228 (நேரிசை வெண்பா)
1.5
மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தர்இடும்
யானை திருஉள்ளத்(து) ஏறுமோ - தானவரை
வேன்றதல்ல மேனிநிறம் வெள்ளைஅல்ல செங்கனக
குன்ற(து)அல்ல நாலல்ல கோடு

கீழ்கோபுர வடபக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228 (நேரிசை வெண்பா)
1.6
ஏந்து மருவி இரவி புரவியின்முன்
பூந்துவலை வீசும் பொதியிலே - காய்ந்துசின
வேணா(டு) தனைவென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப்
பூண்ஆரம் பூண்டான் பொருப்பு

கீழ்கோபுர வடபக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228 (நேரிசை வெண்பா)
1.7
வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிசையில் போகாதே - அங்கிருப்பாள்
பெண்என்று மீண்ட பெருமாளே பேர்இசையாழ்ப்
பண்ஒன்றும் வேய்வாய்ப் பகை

கீழ்கோபுர தெற்கு கதவுநிலையில் (நேரிசை வெண்பா)
1.8
கொங்கர் உடல்கிழியக் குத்திஇரு கோட்(டு)எடுத்து
வெங்கண் அழலில் வெதுப்புமோ - மங்கையர்கள்
சூழத் தாமம்புனையும் சுந்தரத்தோள் மீனவனுக்(கு)
ஈழத்தான் இட்ட இறை

இரண்டாம் சுற்று மேல்பக்கச் சுவரில்
தெ.இ.க.தொ. IV # 228 (கழி நெடிலடி ஆசிரி விருத்தம்)
1.9
சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கில் செவ்வாறு பட்டோட அவ்வாறு சென்றப்
போர்வென்று வனப்பேய் நடங்கண்ட தற்பின் புலியூர் நடங்கண்ட புவனேக வீரா
பார் பண்(டு)அளந்(து)உண்டோர் ஆலில்கிடக்கும் பச்சைப் பசுங்கொண்டலே பத்மநாபா
கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றும் கடல்அல்ல என்பேதை கண்தந்த கடலே

கீழ்கோபுர வடபக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 619 (சந்த விருத்தம்)
1.10
வட்ட வெண்குடை மன்னர் தம்புகல் காண்டு மாமுடி கொண்டுபோர் மாறு கொண்டெழு போச ளன்தடை கொண்டு வாணன் வனம்புகத்
தொட்ட வெம்படை வீரன் வெற்றி(யே) புனைந்த சுந்தர மாறன்முன் சூழிவிட்டதெ லிங்கர் சேனை(யை) துணித்து வென்ற களத்துமேல்
விட்ட வெம்பரி பட்ட பொழுதெழு சோரி வாரியை ஒக்கு நீர் மேல் மிதந்தநி ணப்பெ ருந்திரள் வெள்நு ரைத்திரள் ஒக்குமுன்
பட்டவெங்கரி யந்த வீர(ரே) படிந்த மாமுகில் ஒக்கும்வீழ் படுமணிக் குடை அங்கு வந்(து)எழு பரிதி மண்டலம் ஒக்குமே

கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 618 (கலித்துறை)
1.11
காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவும்
தேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து
தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டுபடத் தனியே
போரேற்று நின்ற பெருவார்த்தை இன்றும் புதுவார்த்தையே

கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 619 (கலித்துறை)
1.12
பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கையர்க் கவைமேல்
கண்பட்ட முத்த வடம்கண்டு காக்கிலன் காடவர்கோன்
எண்பட்ட சேனை எதிர்பட் டொழுக எழுந்த புண்ணீர்
விண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே

கீழ்கோபுர வலப்பக்கச்சுவரில்
தெ.இ.க.தொ. IV # 620 (கலித்துறை)
1.13
இனவ(ரிக் கி)ம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெம்கடும்கண்
சினமத்த வெம்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொல் திருவை மணந்ததொக்கும்
கனகத் துலைஉடன் முத்தத் துலையில் கலந்ததுவே

கீழ்கோபுர தெற்குக் கதவுநிலையில்
(கலித்துறை)
1.14
மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்ற தடம்
தோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி
ஆளான மன்னவர் தன்ஏவல் செய்ய அவனி முட்ட
வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே

கீழ்கோபுர தெற்குக் கதவுநிலையில்
(கலித்துறை)
1.15
வாக்(கு)இயல் செந்தமிழ் சுந்தர பாண்டியன் வாள்அமரில்
வீக்கிய வன்கழல் கண்ட கோபாலனை விண்ணுலகில்
போக்கிய பின்(பு)அவன் தம்பியர் போற்றப் புரந்(து)அரசில்
ஆக்கிய வார்த்தை பதிநா லுலகமும் ஆகியதே

கீழ்கோபுர வடப்பக்கச்சுவரில்
(கலித்துறை)
1.16
புயலும் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்
வயலும் தரளம்தரு கொற்கைக் காவல வாரணப்போர்
முயலும் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்(து)இரண்டு
கயலுண்(டு) எனும்அதுவோ முனி(வு)ஆறிய காரணமே

சிதம்பரம் கோயிலில் (?)
தெ.இ.க.தொ. XII. பக்.10
(கலித்துறை)
1.17
சுந்தரத் தோரணம் நாட்டித் துகில்கொடி சூட்டிமுத்துப்
பந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன்
செந்தளிர்க் கைகொத் தபையன் மகளுடன் தில்லைஉலா
வந்(து)அளிந்தளிக் கும்பெரு மாள்வெற்பர் மாதை மணம்செயவே
-----------
தென்காசி விசுவநாதர் கோயில்

மேற்படி கோயிலில்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.1
அணிகொண்ட விந்த அணங்கும் ஒன்றேஅடி யேற்குனக்கு
மணிகொண்ட வாசன் மணியும் ஒன்றே பகைமன்னரையும்
பிணிகொண்ட காரையும் முந்நீரையும் பெரும் பூதத்தையும்
பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே

முன்புறவாயிலிலுள்ள (இடிந்த) கோபுரச் சுவரில்
திருவிதாங்கூர் கல்வெட்டுத் தொகுதி I பக்.96
(ஆசிரிய விருத்தம்)
2.2
அன்பினுடன் சகாத்தம் ஆயிரத்து முந்நூற்(று) அறுபத் தெட்டின்மேல் வைகாசித் திங்
மன்தியதி ஈரைந்தில் பூருவ பக்க மருவு தசமியில் வெள்ளிவாரம் தன்னில்
மின்திகழ் உத்திரநாள் மீனத்தில் வாகை வேல்அரிகே சரிபராக் கிரம மகிபன்
தென்திசையில் காசிநகர் கோயில் காணச் சென்று நின்று தரிசனைதான் செய்வித்தானே

இதுவுமது (ஆசிரிய விருத்தம்)
2.3
பன்னுகலி யுகநாலா யிரத்(து)ஐஞ் ஞூற்(று)ஐம் பத்தெட்டின் மேல்எவரும் பணிந்து போற்றச்
சென்னெல்வயல் தென்காசி நகரின் நல்கார்த் திகைத்திங்கள் தியதிஐந்தில் செம்பொன்வாரம்
மன்னியமார் கழிநாளில் மதுரைவேந்தன் வடிவெழுத(ஒ) ணாதபராக் கிரம மகிபன்
சொன்னவரை போல்திருக்கோ புரமும் காணத் துடியிடையாய் உபானமுதல் தொடங்கினானே

மேற்படி கோயிலில்
தி.க.தொ. I பக். 96-97 (கலித்துறை)
2.4
மென்காசை மாமலர் அன்ன மெய்யோற்கும் விரிஞனுக்கும்
வன்காசு தீர்த்திடும் விச்சுவநாதன் மகிழ்ந்திருக்கப்
பொன்காசைத் மெய்என்று தேடிப் புதைக்கும் இப்பூதலத்தில்
தென்காசி கண்ட பெருமான் பராக்கிரம தென்னவனே

இடிந்தகோபுரச்சுவர்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.5
ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து
வாராத தோர் குற்றம் வந்தால் (அ)ப்போ(து) அங்கு வந்(து) அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அணியப் பணிந்தென் பராக்கிரம பாண்டியனே

இடிந்தகோபுரச்சுவர்
தி.க.தொ. I பக். 96-97
(கலித்துறை)
2.6
சேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய
லாலே சமைத்தது இங்கு என்செயல்(அ)ல்ல (அ)தனை இன்னும்
மேலே விரிவுசெய்தே புரப்பார் அடி வீழ்ந்(து) அவர்
பால் ஏவல்செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.7
அரிகேசரி மன் பராக்கிம மாறன் அரன் அருளால்
வரிசேர் பொழில் அணி தென்காசிக் கோயில் வகுத்து வலம்
புரிசேர் கடல் புவி போற்ற வைத்தே அன்பு பூண்டு இதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பர் பொற்பாதம் என் சென்னியதே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.8
சாத்திரம் பார்த்தங்ஙன் யான்கண்ட பூசைகள் நடாத்தி
ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற் கோயில் என்றும் புரக்கப்
பார்த்திவன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன் அங்(கு)
கோத்திரம் தன்னில் உள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.9
மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்
எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்றும் மண்மேல்
நினைத்து ஆதரம் செய்து அங்கு ஆவல் புனையும் நிருபர்பதம்
தனைத்தான் இறைஞ்சி தலை மீது யானும் தரித்தனனே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை)
2.10
பூந்தண்பெழில் புடைசூழுந் தென்காசியைப் பூதலத்தில்
தாம் தன் கிளையுடனே புரப்பார்கள் செந்தாமரையாள்
காந்தன் பராக்ரம கைதவன் மான கவசன் கொற்கை
வேந்தன் பணிபராகி எந்நாளும் விளங்குவரே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.11
காண்தகு நீர்புனை தென்காசிக் கோபுரக் கற்பணி ஆ(று)
ஆண்டில் முடித்துக் கயிலை சென்றான் அகிலேசர்பதம்
பூண்டுறை சிந்தை அரிகேசரி விந்தைப் போர் கடந்த
பாண்டியன் பொன்னின் பெருமான் பராக்கிரம பாண்டியனே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.12
ஏரார் சகாத்தம் முந்நூற்றுடன் ஆயிரத்து எண்பத்தைஞ்சில்
சீராரும் மார்கழி சித்திரை நாளில் சிறந்து குற்றம்
வாராத பூரணையில் பராக்கிரம மாறன் (எங்கோன்)
காராரும் கண்டத்தரன் கயிலாயத்தான் கண்டனனே

இடிந்தகோபுரச்சுவரில்
(கலித்துறை) (இறங்கற்பா)
2.13
கோதற்ற பத்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் அம்பலத்தோ
வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிர பாண்டியனே

இடிந்தகோபுரச்சுவரில்
தி.க.தொ. I பக்.105
(கலித்துறை) (இறங்கற்பா)
2.14
ஏடியல் மாலை அணிந்தாலும் வாடும் எனப் புலவர்
பாடிய வீர வெண்பாமாலையைப் பொன்னின் பாண்டியன் போர்
தேடியவேல்செழியன் குலசேகரத் தென்னனைப்போல்
சூடிய வேந்தருண்டோ ஒருவேந்தரைச் சொல்லுகிலே

முன் மண்டப வடபுறச்சுவரில்
தி.க.தொ. I பக். 103
(கலித்துறை)
2.15
விண்ணாடர் போற்றும் தென்காசிப் பொற் கோபுரம் மீதில்எங்கள்
அண்ணாள்வி செய்த பணிஇப்படிக்குறையாய்கிடக்க
ஒண்ணாதெனக் கண்டுயர்ந்த தட்டோடெங்கும் ஊன்றுவித்தான்
மண்ணாளும் மாலழகன் குலசேகர மன்னனே

தென்பக்கச் சுவரில்
தி.க.தொ I பக்.105
(ஆசிரிய விருத்தம்)
2.16
ஏறிய சகாத்தமாயி ரத்துநானூற் றெழுபதின் னாலில் வருஷம்பரி தாபிதனில் மாதம்
தேறிய சித்திரை இருபத் தொன்பதாகும் தேதிஇரண் டாம்பக்கம் திங்கள்உ ரோகிணிநாள்
வீறுயர்ந்த மிதுனத்து நெல்வேலிமாறன் வீரவேள் குலசேகர செழியனென்று சுரர்
ஆறுபுனை அகிலேசர் காசியிலே விளங்க அணிமவுலி தரித்தனன் பரராசர் பணிந்தனரே

பெரிய கோபுர வடபக்கச் சுவரில் (ஆசிரிய விருத்தம்)
2.17
அத்தர்தென் காசிக்கண் டோன்கண்ட ஆலயமும் அடியாரும் வாழ்வு பெறவந்(த) அழகன்அதி வீரரா மன்சருவ மானிய மதாகக் கொடுத்த படிதான்
சித்திரைப் பரணியூர்த் தெண்ட தோஷப்பொன் திரும்பக் கொடுத்(து)அவ் வூரில் செங்கோட்டை யார்கொண்ட பகுதியு நிறுத்தித் திருக்கோயிலின் பகுதியாய்
வைத்ததை அறக்கழித்(து) ஆயங் கணக்குடன் மகாநவமி திருநாளிடை வந்த காணிக்கைப் பாட்டப்பகுதி காணம்பல் வரிஇவை எல்லாம் கழித்துப்
பத்தியாய்க் குணராம நாதற்கு மேற்படி பணம்கழித்(து)அடியர் வீட்டுப் பணமும் கழித்(து)இப் படிச் சருவ மானியப் பட்டையமும் அருளினானே
----------
மேல்கண்ட பாடல்களுக்கு சிறுகுறிப்புகள் -- பாடல் எண்வரிசையில்

சிதம்பரம் சபாநாதர் கோயில்
1.1
சக ஆண்டு 1018 ல் (CE 1096)ஆனிமாத மூல நாளில் சோழகுலவல்லி என்னும் ஓர் சோழமன்னனின் அதிகாரி தன் மேல் வந்த களங்கத்தை மாற்ற இக்கோயிலுக்கு தானம் செய்து வேண்டிக்கொண்டான். (CE 1096)ல் ஆட்சி செய்த சோழ மன்னன் குலோத்துங்கன்-I
1.2
மேற்கண்ட சோழ குலவல்லி எனும் அதிகாரியைப் அவர்பால் பொருள் பெற்ற கழுமலம் எனும் ஊர்ச் சேர்ந்த (அரச குலம்/கணிகை?) ஒரு பெண் போற்றுவது.
1.3
இராசராசன் (?) குந்தவை எனும் சோழகுல அரசி மன்னனின் 44 ம் ஆண்டில் தில்லை சபாநாதர் கோயில் முழுதும் செம்பினால் கூறை வேய்ந்தாள். மன்னனின் 44 ம் ஆண்டு குறிக்கப்படுதலால் 50 ஆண்டுகள் ஆண்ட முதல்குலோத்துங்கனே (1070-1120) ஆதல் வேண்டும். எனவே செம்பொன் வேய்ந்த காலம் (1112) ஆகும்.
1.4
விக்கிரம பாண்டியன் (1283-96) எனும் பாண்டியன் சீற்றம் கொண்ட போது அவன்முன் மற்ற மன்னர் யாவரும் பயந்து வாட்களை தங்கள் காலடிலேயே போட்டு விட்டனர்
1.5
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியற்கு அவன்பால் தோற்ற மன்னர் திறையாக கொடுக்கும் யானை நிரை கருப்பு நிறமுடையதே, இருகொம்புகளை(அயிராவதங்கள் அல்ல) உடையதே, பலபோர்களில் தோற்றதே, (இவன் வீரத்திற்கு பொருந்தாத அற்பமானதே).
1.6
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியன் கோபமடைந்து வென்றது அருவிகளின் தூவாலை வீசும் பொதியில் சேர்ந்த வேணாடு
1.7
(மேற்கண்ட) விக்கிரம பாண்டியனே மேலும் வடதிசையில் செல்லாது திரும்பியதேன்? அங்கு வீரம் குறைந்தவரே (பெண் ஒப்பவர்) ஆட்சியில் இருப்பவர் என்பதாலா?
1.8
சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டவரின் யானைப் படையை வென்றவன். இவன் வீரத்தை கண்டு ஈழ மன்னன் போரிட பயந்து இறை செலுத்த விரும்பினான். மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239) சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271) சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1296 - 1310)
என 3 சுந்தர பாண்டியர்கள் ஆண்டனர். முதல் இருவரின் மெய்கீர்த்திகள் ஈழத்தையும் வென்ற வர்களாகவும் தில்லையில் வணங்கினராகவும் குறிக்கின்றன. இவ்வெண்பா 1.14, 1.15 (கலித்துறை) பாடல்களுக்கு அடுத்து உள்ளதாகலாம். என அவ்விரு பாடலுக்குரியவரே இப்பாடல் குறிப்பவராகும். அவைகளில் கண்டகோபாலன் கணபதி எனும் இரு தெலுங்கு நாட்டு மன்னர்கள் தோற்றதைக் குறிப்பதால் வடவர்களை வென்றதாக உள்ள முதலிருவரில் யாரேனுமாகலாம்
1.9
புவநேக வீரா (பாண்டியன் மன்னா !) சோழர் படையை வென்ற குருதியில் பேய்கள் களித்து நடமாட கண்டபின் தில்லை மன்றில் சிவன்தன் திருநடம் காண வந்தனையோ !.திருமால் போல் மக்களைப் பேணுபவனே எங்கள் (நாட்டு) பெண்களின் கண்கள் வற்றாத கடலேயாகும் (அழவிடாதே என்பது)
1.10
சுந்தர பாண்டியன் போசள மன்னன், வாணன், தெலிங்கர் முதலியோரை வென்ற பொது அவர் குருதியில் நிணம் நுரை மிதந்தது வானிலெழு மேகக்கூட்டத்திடை தோன்றும் ஞாயிறு வட்டம் போல் திகழ்கின்றது
1.11
பாண்டிய மன்னன் சோழனை வனம் புகவைத்து (வென்று) வடநாட்டு ஆரியருடன் தனியாக நின்று போர் (அன்று) புரிந்ததை பலர் புகழ்ந்து பேசியது இன்றும் ஒலிக்கிறது
1.12
காடவர்களை (பல்லவகுலத்தோன்றல்களை) சுந்தரபாண்டியன் வென்றதால் மங்கையர் மார்பின் பிளவிடை தொங்கும் முத்து மாலைகளை அவர் காத்துக் கொள்ளா விட்டால் தான் என்ன?
1.13
யனைப்படையுடைய சுந்தரபாண்டியன் தில்லையில் வென்று ஆள்வது திருமகளையும் (பசும்பொன் வேய்த கோயில் மற்றும் வளநாடு அதனால்) கலைமகளையும் (வெண்மை நிற முத்துகள் விளையும் நாடுடையன் ஆதலால்) ஒருசேர மணம்புரிந்தது ஒக்கும் (சோழ பாண்டியநாடு என இருநாட்டினை ஆள்கிறான்)
1.14
சுந்தரபாண்டியன் வடமன்னரை வென்றமை குறிக்கப்படுகின்றது
1.15
சுந்தர பாண்டியன் கண்டகோபாலன் எனும் தெலுங்கமன்னனை வென்று அவன் இளவல்களுக்கு தன்கீழ் இருந்தாள அரசுரிமை தந்தமை குறிக்கப்படுகின்றது
1.16
புவநேக வீரன் (பாண்டியன்) கணபதி எனும் வடுகமன்னனின் மேல் இருந்த கோபத்தை அடக்கிக் கொண்டான் ஏனெனில் அவன் முகத்தில் (தன் கொடி) மீன்களைப்போல் கண்களைக் (வீரமற்ற பெண்ணாக)கண்டதாலோ? (பணிந்ததனால் என்க)
1.17
பல்லவர் குலத்துதித்த மன்னவனொருவன் அபயனின் (சோழன்) மகளுடன் கைகோத்து வந்து மலைநாட்டார் மகளை திருமணம் செய்ய தில்லைநகர் வீதிகளில் உலா வரப் போகிறான் அதற்கு முத்துப்பந்தல் கொடி தோரணம் முதலிய நாட்டி விளக்கு பாலிகை வைத்து வரவேற்க தயாராகுங்கள் என்கிறது இப்பாடல்
------------
தென்காசி விசுவநாதர் கோயில்

2.1
மண்தலத்தை எல்லாம் வென்று ஆளும் சண்பகராமனான பராக்கிரம பாண்டியனே உனக்கு பிரமனின் கைஅக்குமணியும் அணிகளணிந்த கலைமகள் கடைக்கண் பார்வையும் ஒன்றே (கல்வி ஞானம் என இரண்டையும் ஒன்றாக காண்பவன்)
2.2
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்(CE1422-63)மரபுடை அரசருள் கடைக்கால பாண்டியர் தொடர்ச்சியில் ஆண்டவன். சகம்1368ல் (CE1446) வைகாசி மாதம், 10 ம் தேதி, வளர்பிறை தசமியாகும் வெள்ளிக்கிழமை, உத்திர நாளில் மீன லக்கினத்தில் தென்காசிக் கோயில் வழிபாடு செய்ய வந்திருந்து பலரும் இந்த ஆலயத்தை தொழும் பேற்றினை அளித்தான். (அக்கலத்தில் பெருமைமிகு வழிபாட்டாளர் வருகையை மிகநுண்ணியமாக எழுதி வைக்கும் எண்ணம் இருந்துள்ளமைக்கு இப்பாடலும் ஓர் சான்று) [ கல்வெட்டாளர் படிஎடுக்கும் காலத்து இக்கோயில் கோபுரம் இடிந்த நிலையிலிருந்தாக குறிக்கப் பட்டுள்ளது.1960 ல் யான் பார்த்த போதும் மின்னல் தாக்கி இடிந்து பலகாலம் இப்படியே உள்ளதாக கூறினர்.ஆனால் தற்காலம் (2008) ஆங்கு புதிதாக கோபுரம் கட்டி ஏறக்குறைய 10=15 ஆண்டுகள் கடந்துள்ளது ]
2.3
மேற்கண்ட பராக்கிரம பாண்டியன் கலியுகம் 4558ல் (CE 1457)
(அ·தாவது 11 ஆண்டுகள் கழித்து) கார்த்திகைத் மாதம் ஐந்தாம் தேதி செவ்வாயன்று இந்த தென்காசி விசுவநாதர் கோயிலில் பொன்மலை போல் ஒரு கோபுரம் கட்ட தன் அரசியுடன் வந்து யாவரும் போற்ற தொடக்கவிழா நடத்தினான்.
2.4
அழிந்துபடும் செல்வத்தினை சேர்த்து புதைத்து வைத்து மடியும் இவ்வுலகில் பலகாலம் அழிமாலிருக்கும் கற்கோயிலை கட்டி பராக்கிரம பாண்டியன் புகழ்பெற்றான்
2.5 >>>> 2.10
பாண்டியன் தான் கட்டிய கோயிலை தன்காலத்திற்குப்பிறகு அதனை காப்பாற்றி போற்றி வர தானே பலவாறு பணிந்து பிற்காலத்தோரைக் கோட்டுக்கொள்வதாக உள்ள இப் பாடல்கள் காலம் செல்வம் எனபல இடர்பாடுகளுக்கிடையே முடிக்கப்பற்ற கோயிலின்பால் அவனுக்கு இருந்த ஈடுபாட்டினைக் காட்டுகின்றன.

பராமரிப்பதில் குறைவரும்போது அதனை நீக்குபவர்கள் அதனை விரிவுசெய்வோர் எரி விளக்குச்சுடர்போல் அணையாமல் காப்பவர்கள் இவ்வகையில் பலவிதத்தில் ஆதரவும் ஊக்கமும் கொடுப்பவர்கள் என பலவிதமாகப் புரப்வர்கள் மன்னரால் போற்றப்படுவர் எனவும் மற்றும் அதற்கும் மேல் அவர்தம் பாதங்கள் என்தலைமேல் என மனமுருக கேட்டுக்கொள்வது கண்ணீர் மல்க வைப்பதாகும்
2.11 >> 2.14
இவை இரங்கற்பாக்கள் மன்னன் சகம் 1385 (C E 1463) விண்ணுலகம் எய்தினான் என்கின்றது
2.15
பாண்டியனுக்குப் பிறகு முடிசூடிய அவன் இளையோன் காலத்திலும் குறையாக நின்ற சில கோயில் பணிகள் முற்றுப்பெற்றன
2.16
சகம் 1470 (CE 1457) பரிதாபி ஆண்டு, சித்திரை மாதம் 29 தேதி வளர்பிறை(இருண்ட பட்சம்) திங்களாகிய உரோகிணிநாள் மீன லக்கினத்தில் பாண்டியன் வீரவேள் குலசேகரசெழியன் என வீறு பெருபெயருடன் தென்காசி விசுவநாதர் கோயிலில் பல அரசர் போற்ற பணிய முடிசூடினான்
2.17
முன்பு (பராக்கிரம) பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் கோயிலுக்கு (பின்னாளில் ஆட்சியில் வந்த) அதிவீரராமபாண்டியன் (முன்னோர் அக்கோயிலுக்கு)சர்வமான்யமாக கொடுத்திருந்த சொத்துக்களை உரிமைகளை, (ஓர்)சண்டையில் வெற்றி (பரணி)கண்டோனுக்கு நஷ்டஈடாக பொன் கொடுத்து மீட்டு (அடுத்துள்ள கேரளர் எல்லையில் படும்) செங்கோட்டையை ஆளும் தலைவர்கள் கொள் உரிமைகளையும் நிறுத்தி நல்லறத்தை நாட்டி மகாநவமி திருநாள் (ஓர் கேரளமன்னன் நினைவுநாள்?) வந்த காணிக்கை, பாட்டம், காணம் இவை கழித்து குணராமநாதன்பெறுவது கழித்து அடியார் வீட்டுப் பணமும் கழித்து (மற்றதை) சர்வமான்யமாக கொள்ள (செப்புப்)பட்டயம் எழுதிக் கொடுத்தான்.

{நாளது வரை தென்காசி செங்கோட்டை எனும் தமிழ்மொழி பேசும் சிறு பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சின்குட்பட்டு இருந்தது 1956 ல் இந்திய மொழிவாரி மாநில அமைப்பு முறையில் கன்னியாகுமரி மாவட்டம் சேர்க்கப்பட்டததைப் போல் 'தமிழ்நாடு' மாநிலத்திற்குள் >திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதியானது} ஆகவே திருவிதாங்கூர் கல்வெட்டு தொகுதி என குறிக்கப்பட்டுள்ளது

-------(நூ.த.லோகசுந்தரமுதலி)

This file was last revised on 12 Nov. 2021.
Feel free to send the corrections to the webmaster.