கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
தியாக பூமி

tyAka pUmi (novel)
of kalki kirushNamUrti
In tamil script, unicode/utf-8 format





கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
தியாக பூமி


தியாக பூமி
மூன்றாம் பாகம் - பனி



"புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை" - நாலடியார்

3.1. நல்ல சேதி


தலை தீபாவளிக்குப் பிறகு இன்னும் இரண்டு தீபாவளிகள் வந்துவிட்டுப் போயின. கார்த்திகை முடிந்து, மார்கழி மாதம் பிறந்தது.

பருவ காலங்கள் எந்தப் பஞ்சாங்கம் அல்லது காலெண்டரை வைத்துக் கொண்டு தேதி பார்க்கின்றனவோ, தெரியவில்லை. அதிலும் மற்றப் பருவங்கள் கொஞ்சம் முன் பின்னாக வந்தாலும் வரும். பனிக்காலம் மட்டும் தேதி தவறி வருவது கிடையாது. கார்த்திகை எப்போது முடியப் போகிறது, மார்கழி எப்போது பிறக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்து மார்கழி பிறந்ததும், பனியும் தொடங்கிவிடுகிறது. ஜனங்களும், கம்பளிச் சொக்காய், பனிக் குல்லாய் காஷ்மீர்ச் சால்வை, கோரைப் பாய் ஆகியவற்றைத் தேடத் தொடங்குகிறார்கள்.

அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்திருப்பதற்குச் சாதாரணமாய் யாருக்கும் மனம் வருவதில்லை. பட்சிகளின் உதய கீதத்தைக் கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளத்தான் தோன்றும். ஆனால், மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பதை நினைத்து அதிகாலையில் பஜனை செய்ய விரும்பும் பக்தர்களும், குடுகுடுப்பாண்டிகளும் மட்டும் பனியையும் குளிரையும் இலட்சியம் செய்யாமல் எழுந்து விடுவார்கள்.

ஒரு நாள் அதிகாலையில் சம்பு சாஸ்திரி வழக்கம் போல் விழித்துக் கொண்டார். ஆனால், உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவசரமாய் எழுந்து என்ன ஆகவேண்டுமென்று தோன்றியது. மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் மார்கழி மாதம் என்றால், நெடுங்கரை கிராமத்தில் பிரமாதமாயிருக்கும். அதிகாலையில் வீதி பஜனை நடக்கும். பிறகு சம்பு சாஸ்திரியின் வீட்டில் பூஜை, ஹாரத்தி, பொங்கல் பிரஸாத விநியோகம் எல்லாம் உண்டு. அதெல்லாம் இப்போது பழைய ஞாபகமாகி விட்டது. சாஸ்திரியைச் சாதிப் பிரஷ்டம் செய்த வருஷத்தில், வீதி பஜனை நின்று போயிற்று. காலை வேளையில் பொங்கல் பிரஸாதத்துக்காகவும் அவர் வீட்டுக்கு யாரும் போகவில்லை. 'ஊரார் சாதிப்பிரஷ்டம் பண்ணியது இந்த ஒரு காரியத்துக்கு நல்லதாய்ப் போயிற்று' என்று மங்களம் மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள்.

அடுத்த வருஷத்தில் சாதிக் கட்டுப்பாடு தளர்ந்து விட்டது. ஊரில் தீக்ஷிதருடைய கிருத்திரிமங்களைப் பொறுக்க முடியாத சிலர் பகிரங்கமாகவே சம்பு சாஸ்திரியின் கட்சி பேசத் தொடங்கினார்கள். பிறகு, பெயருக்கு ஏதோ பிராயச்சித்தம் என்று நடந்தது. இப்போது அக்கிரகாரத்தில் அநேகர் சாஸ்திரி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஆனால், முன்னைப் போல் சம்பு சாஸ்திரிக்கு வாழ்க்கையில் உற்சாகம் இல்லை; முன் மாதிரி பணச் செலவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் இல்லை. சாவித்திரி, புருஷன் வீட்டுக்குப் போகாமலிருந்தது அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாரமாய் இருந்து கொண்டிருந்தது. ஆகவே, ஏகாதசி பஜனை, மார்கழி பஜனை எல்லாம் நின்று போயின.

ஆனால் சாஸ்திரி அதிகாலையில் எழுந்திருப்பது மட்டும் நிற்கவில்லை. தாம் எழுந்திருக்கும்போது சாவித்திரியையும் எழுப்பி விட்டு விட்டுத் தடாகத்துக்குப் போவார். பனிக் காலத்தில், அதிகாலையில் வெத வெத என்று சூடாயிருக்கும் குளத்து ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஓர் ஆனந்தமாயிருக்கும். பிறகு, சூரியோதயம் வரை காத்திருந்து சூரிய நமஸ்காரம் செய்வார். பனிக் காலத்தில், சூரியன் கிளம்பிக் கொஞ்ச நேரம் வரையில் பனிப் படலம் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கும். 'இப்படித்தானே மாயையாகிற பனி ஆத்ம சூரியனை ஜீவனுடைய கண்ணுக்குப் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது?' என்று வேதாந்த விசாரணை செய்வார்.

அவர் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், சாவித்திரி எழுந்திருந்து, படங்களுக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி வைத்து, பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். சாஸ்திரி வந்ததும் பூஜை செய்துவிட்டு வேறு காரியங்களைப் பார்ப்பார்.

---------------

3.2. சதியாலோசனை


ராஜாராமய்யரும் அவருடைய நண்பர்களும் நடத்திய ஆவி உலகச் சோதனை அகால மரணத்துக்கு உள்ளான விஷயத்தை நாம் துயரத்துடன் தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. மேஜை ஒரு முழ உயரம் கிளம்பியதற்கு மேல் அவர்களுடைய சோதனையில் வேறு எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. ஆகவே, எல்லோரும் ஒருவாறு சலிப்பு அடையும் தருணத்தில், இங்கிலாந்திலிருந்து மிஸ் மேரியா ஹாரிஸன் என்னும் பெண்மணி வந்து சேர்ந்தாள். இவள் ஒரு பிரசித்தி பெற்ற 'மீடியம்'; அதாவது, ஆவி உலகவாசிகளைத் தன்னுடைய தேகத்தின் மீது ஆவிர்ப்பவிக்கச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவள். ராஜாராமய்யர் - பீடர்ஸன் சங்கத்தார் இந்த 'மீடியம்' அம்மாளுக்கு வரவேற்பு அளித்தார்கள். இவர்களுடைய ஆராய்ச்சியில் அந்த அம்மாள் மிகவும் சிரத்தை காட்டி, தானே அவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னாள்.

பலநாள் முயற்சிக்குப் பிறகு ஒரு நாளைக்கு அந்த அம்மாள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதாவது, அவள் பேரில் ஆவிகள் ஆவிர்ப்பவித்து, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலாயின. ஆனால், பதில் வாயினால் சொல்லவில்லை; 'மீடிய'த்தின் கையைப் பிடித்துப் பதில்களை எழுதிக் காட்டின.

முதலில், மிஸ்ஸஸ் பீடர்ஸனுடைய ஆவி ஆவிர்ப்பவமாயிற்று. பீடர்ஸன் துரை பூலோகத்தில் தங்களுடைய வாழ்க்கையைப்பற்றிக் கேட்டதற்கு, "அதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது; இந்த உலகத்துக்கு வந்த பிறகு பூலோக விஷயங்கள் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை" என்று ஆவி சொல்லிற்று. பிறகு, தான் இருக்கும் உலகம் அற்புதமான அழகு வாய்ந்தது என்றும், எங்கே பார்த்தாலும் புஷ்பக் காட்சியாயிருக்கிறது என்றும், வானவில்லின் வர்ணங்கள் எங்கும் காணப்படுகின்றன என்றும், எப்போதும் சுகந்தம் வீசுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆச்சரிய உலகத்துக்குப் பீடர்ஸன் துரையும் சீக்கிரத்தில் வந்து சேரவேண்டுமென்றும் எழுதித் தெரிவித்தது.

இந்த எழுத்து ஒருவாறு தம் மனைவியின் கையெழுத்தைப் போல் இருக்கிறதென்று பீடர்ஸன் துரை சொன்னார்.

பிறகு, ராஜாராமய்யருடைய தகப்பனார், 'மீடியம்' அம்மாளின் மீது ஆவிர்ப்பவித்தார். அவர் எழுதிய கையெழுத்து மிஸ்ஸஸ் பீடர்ஸனின் எழுத்துக்கு முற்றும் மாறாக, ஆண்பிள்ளைக் கையெழுத்தைப் போல் இருந்தது. இதைப் பார்த்ததுமே அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அதிசயப்பட்டுப் போனார்கள். ஆனால் ராஜாராமய்யருக்கு அதைவிட ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், தம்முடைய தகப்பனார் ஓர் அட்சரங்கூட இங்கிலீஷ் தெரியாதவராயிருந்தும், இப்போது இவ்வளவு சுத்தமான் இங்கிலீஷ் எப்படி எழுதுகிறார் என்பது தான். மேலும் வைத்தீசுவரய்யர் தாம் வசிக்கும் உலகத்தைப் பற்றி வர்ணித்ததும், மிஸ்ஸஸ் பீடர்ஸன் வர்ணித்ததும், ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. மேலும் அவர், "இந்த உலகத்தில் சாதி, மத வித்தியாசம் ஒன்றும் கிடையாது. கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ஒன்றுதான். எல்லாரும் பர மண்டலத்திலுள்ள ஏசு பிதாவைத்தான் வணங்குகிறோம்" என்றார். தம் தகப்பனார் உயிர் வாழ்ந்த போது, அவர் கிறிஸ்தவர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்தார் என்பது ராஜாராமய்யருக்கு ஞாபகம் வந்தபோது, பரலோகத்தில் அவருடைய மாறுதல் ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஆனால் இது எல்லாவற்றையும் விட, அவரை அதிசயத்தினால் திகைக்கப் பண்ணிய விஷயம் வேறொன்று: "வருஷாவருஷம் நான் தங்களை உத்தேசித்து சிராத்தம் பண்ணுகிறேனே, அன்று தாங்கள் பூலோகத்துக்கு வருவதுண்டா?" என்று ராஜாராமய்யர் கேட்டதற்கு, வைத்தீசுவரய்யரின் ஆவி எழுதிய பதிலாவது:-"ஆமாம்; வருஷம் ஒரு தடவை நான் என்னுடைய கல்லறைக்கு வருகிறேன். அங்கே நீ போட்டிருக்கும் புஷ்பங்களின் சுகந்தத்தை உட்கொண்டு விட்டுத் திரும்புகிறேன்!"

---------------

3.3. சாவித்திரியின் பயணம்


மேலே சொன்ன தங்கம்மாளின் கடிதத்தைப் படித்தவுடனே தான், சாஸ்திரியார் அவ்வளவு சந்தோஷத்துடன் வந்து, "சாவித்திரி! உன் கலி தீர்ந்துவிட்டது, அம்மா!" என்றார்.

சாவித்திரிக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. திடுக்கிட்டு எழுந்திருந்து, "ஏதாவது கடுதாசி வந்திருக்கா, அப்பா!" என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.

"ஆமாம்மா! சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்குப் பொண்ணைப் பார்க்கிறதுக்கு வர்றாளாம். திரும்பிப் போறபோது கல்கத்தாவுக்கு உன்னைக் கூட்டிண்டு போறாளாம்" என்றார்.

சாவித்திரி நம்ப முடியாத சந்தோஷத்துடன், "நிஜமாகவா, அப்பா!" என்று கூவினாள்.

இந்தச் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சமையலறைக்குப் போனாள் மங்களம்.

"அடி அம்மா! இந்தப் பொண்ணுக்கு விமோசனம் பிறந்துட்டாப்பலேயிருக்குடி!" என்றாள்.

"விமோசனம் பிறந்திருக்கா? அது என்ன?" என்றாள் சொர்ணம்மாள்.

"சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்கு வர்றாளாம். இவளைக் கூட்டிண்டு வந்து விடச் சொல்லி எழுதியிருக்காளாம்."

"அந்தப் பெரிய மனுஷிக்கு இங்கே வந்து அழைச்சுண்டு போக முடியலையாக்கும்! உன்னையும் என்னையும் பார்க்க
வேண்டியிருக்கலையாக்கும்."

"அது போனால் போகட்டுண்டு, அம்மா! இந்தப் பொண் எப்படியாவது புக்காத்துக்குப் போய்ச் சௌக்கியமாயிருந்தால் சரி! அரசமரத்துப் பிள்ளையாரே! சாவித்திரி புக்காத்துக்குப் போனா, உனக்கு 108 கொழக்கட்டை பண்ணி நைவேத்யம் பண்றேன்" என்றாள் மங்களம்.

"அடி அசடே! புக்காத்துக்குப் போய்த் திரும்பி வராதிருந்தா நைவேத்யம் பண்றேன்னு வேண்டிக்கோ. இது வாயையும் கையையும் வச்சிண்டு, அங்கே போய் வாழணுமே! உன் சம்பந்தி இலேசுப்பட்டவள்னு நெனச்சுக்காதே. என்னத்துக்குத் தான் வராமே இவரைக்
கூட்டிண்டு வந்து விடச் சொல்லியிருக்கா, தெரியுமா? அப்பத்தானே இந்தப் பிராமணனை இன்னும் நன்னா மொட்டையடிக்கலாம்!..."

இந்தச் சமயத்தில், செவிட்டு வைத்தி, "அக்கா! அம்மா என்ன சொல்றா?" என்று கேட்டான்.

மங்களம் ஜாடை காட்டிக் கொண்டே, "சாவித்திரி புக்காத்துக்குப் போகப் போறாளாண்டா!" என்றாள்.

"சாவித்திரிதானே? ஆமாம்; கதவைச் சாத்திண்டு ஆம்படையானுக்குக் கடுதாசி எழுதறா, எழுதறா, அப்படியே எழுதறா!"

சொர்ணம்மாள், தாலி கட்டுவதுபோல் ஜாடை காட்டிக் கொண்டு, "இல்லேடா! அவள் ஆம்படையானாத்துக்குப் போகப் போறா!" என்றாள்.

"அதான் நானும் சொல்றேன். அப்பவே எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா, ராஜாத்தியாட்டமா வச்சிண்டிருப்பனே!"

"சீச்சீ! வாயை மூடிக்கோ!" என்றாள் மங்களம்.

-----------

3.4. பனி மறைந்தது


சாவித்திரிக்குச் சம்பு சாஸ்திரி எழுதிய கடிதத்தில் நாகப்பட்டினத்தில் தமக்குக் காரியம் இருப்பதாக எழுதியிருந்ததைப் படித்து, "அது
என்ன அவ்வளவு முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம் நாகப்பட்டினத்தில் இருந்தது.

சாஸ்திரியார், சாவித்திரியின் கல்யாணத்துக்காக வாங்கிய கடன் ரூபாய் பத்தாயிரம் வட்டியுடன் சேர்ந்து இப்போது ரூ.13,500 ஆகியிருந்தது. குடமுருட்டி உடைப்பு, அதன் பயனாக ஏற்பட்ட மகசூல் நஷ்டம், மற்ற உபத்திரவங்கள் காரணமாக, வருஷா வருஷம் வட்டி கூடக் கொடுக்க முடியவில்லை. இத்துடன், சாஸ்திரியின் நிலத்திலும் இரண்டு வேலி மண்ணடித்துப் போய்விட்டதென்பது தெரிந்த பிறகு, கடன்காரன் பணத்துக்கு நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தான். அது ஒன்றும் பயன்படாமல் போகவே, நாகப்பட்டினம் கோர்ட்டில் தாவா செய்து விட்டான்.

மகசூலை விற்றுக் கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கை சாஸ்திரிக்கு இப்போது கிடையாது. 'நிலத்தை விற்க வேண்டியதுதான், வேறு வழியில்லை' என்று அவர் எண்ணிக் கொண்டிருந்த சமயம், சம்பந்தியம்மாளை நரசிங்கபுரத்தில் போய்ப் பார்க்கும்படி கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது. அந்தப்படியே சாஸ்திரி நரசிங்கபுரம் போய், சம்பந்தியம்மாளைப் பார்த்தார். அந்த அம்மாள் சாஸ்திரியார் செய்திருக்கும் குற்றங்களுக்கெல்லாம் ஜாபிதா கொடுத்து, அவரைத் திணற அடித்த பிறகு, "என்ன இருந்தாலும், இனிமேல் அவள் எங்காத்துப் பெண். நான் அழைச்சுண்டு போறேன். ஆனால், ஆடி ஆறா மாதம் தீபாவளி முதல் சாந்திக் கல்யாணம் வரையில் செய்ய வேண்டியதுக்கெல்லாம் சேர்த்து, மூவாயிரம் ரூபாய் கையில் கொடுத்துடணும். இல்லாட்டா பெண் உங்காத்திலேயே இருக்க வேண்டியதுதான்" என்று கண்டிப்பாய்ச் சொன்னாள்.

நிலம் விற்பதைப் பற்றி சாஸ்திரிக்கு இருந்த சிறிது சந்தேகமும் இப்போது நிவர்த்தியாகி விட்டது. வேறு வழியில் ரூ.3,000 சம்பாதிக்க முடியாது. மேலும், குழந்தை சாவித்திரி மட்டும் புருஷன் வீட்டுக்குப் போய் விட்டாளானால், அப்புறம் நிலம், நீச்சு, வீடு வாசல் எல்லாம் யாருக்கு வேணும்? தமக்கும் மங்களத்துக்கும் அரை வயிற்றுச் சாப்பாட்டுக்குப் பகவான் படி அளக்காமல் போகிறாரா?

இவ்வாறு எண்ணி சாஸ்திரி நரசிங்கபுரத்திலிருந்து நேரே நாகப்பட்டினத்துக்குப் போனார். கடன் கொடுத்த முதலாளியையும், முதலாளியின் வக்கீலையும் கண்டு பேசினார். கோர்ட்டில் கேஸ் நடத்தி ஏகப்பட்ட பணச் செலவு செய்து கட்டிக்கப் போகிற நிலத்தை இப்போதே கட்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அந்த முதலாளியும் வக்கீலும் ஏற்கெனவே சம்பு சாஸ்திரியிடம் மதிப்பு வைத்திருந்தவர்கள். ஆகவே, சம்பு சாஸ்திரி, அடியோடு அழிந்து போவது அவர்களுக்கும் திருப்தியளிப்பதாயில்லை. கடைசியில், சாஸ்திரிக்கு இன்னொரு ரூ.3,000 ரொக்கம் கொடுத்து, வீட்டையும் முக்கால் வேலி நிலத்தையும் ஒதுக்கி விட்டு, பாக்கியையெல்லாம் கடனுக்கு ஈடாக வாங்கிக் கொள்வதென்று முடிவாயிற்று. அந்தப்படியே பத்திரமும் எழுதி முடிந்து, சாஸ்திரியார் ரொக்கம் ரூ.3000-த்துடன் நெடுங்கரைக்குத் திரும்பினார். நாகப்பட்டினத்தில் அவருக்கிருந்த முக்கியமான காரியம் இதுதான்.

ஆனால் இந்த விவரம் எதுவும் சாவித்திரிக்குத் தெரியாது. வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது. சாஸ்திரியார் "இதைச் சொல்வதற்கு இப்போது என்ன அவசரம்? எப்படியாவது குழந்தை முதலில் சந்தோஷமாய்ப் புக்ககத்துக்குப் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று இருந்தார். ஆகவே, நரசிங்கபுரத்தில், சம்பந்தியம்மாளிடம் சாஸ்திரி ஒரு கவரைக் கொடுத்து. "அம்மா! ரூபாய் மூவாயிரம் மூணு நோட்டாயிருக்கு. பத்திரம்! ஜாக்கிரதையாய் எண்ணி எடுத்து வச்சுக்குங்கோ!" என்று சொன்னபோது சாவித்திரிக்குப்
பகீர் என்றது. அப்பா பணம் என்னத்திற்குக் கொடுக்கிறார் என்பதே அவளுக்கு முதலில் புரியவில்லை. "ஏற்கெனவே அப்பாவுக்குக் கடன் உபத்திரவமாயிற்றே! இப்போது இது வேறு சேர்ந்ததா? ஆனால் என்னத்திற்காகப் பணம்?" என்று திகைத்தாள். பிறகு நடந்த சம்பாஷணையின் போது ஒருவாறு அவளுக்கு விஷயம் புரிந்தது.

----------------

3.5. நல்லானின் கோபம்


சாவித்திரியை ரயிலேற்றி அனுப்பி விட்டுச் சம்பு சாஸ்திரி நெடுங்கரைக்குத் திரும்பி வந்தபோது, அவருடைய வீடு ரகளைப்பட்டுக் கொண்டிருந்தது.

அவர் வருவதற்குச் சற்று முன்னால்தான் நல்லான் வியர்க்க விருவிருக்க விரைவாக நடந்து வந்து அவருடைய வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது கூடத்தில் உட்கர்ந்து ஏதோ காரியம் செய்து கொண்டிருந்தாள் மங்களம்.

"இது என்ன அம்மா அக்கிரமம்? வயத்தைப் பத்திக்கிட்டு எரியுதே?" என்று நல்லான் அலறினான்.

மங்களத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லான் எப்போதும் எஜமானுக்கும் குழந்தைக்கும் பரிந்து பேசுவதுதான் வழக்கம். மங்களத்திடம் சில சமயம் அவன் சண்டை பிடிப்பதும் உண்டு. 'பெரியம்மா'வை அதாவது மங்களத்தின் தாயாரை அவனுக்குக் கட்டோ டே பிடிக்காது. 'சொர்ணம்மாள்' என்பதற்குப் பதிலாக 'சொரணை கெட்ட அம்மாள்' என்பான். அவள் வீட்டில் இருக்கும்போது, தாகத்துக்கு மோர்த் தண்ணி கூடக் கேட்க மாட்டான். அப்படிப்பட்டவன் இப்போது வந்து இப்படி அலறியதும், மங்களம் தன்னுடைய தாயார் பேரில் ஏதோ புகார் சொல்லத்தான் வந்திருக்கிறான் என்று எண்ணினாள்.

முகத்தைக் கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு "என்னடா அக்கிரமம் நடந்து போச்சு! யார் குடியை யார் கெடுத்திட்டா?" என்று கேட்டாள்.

"குடி கெட்டுத்தானுங்க போச்சு! உங்க குடியும் போச்சு; என் குடியும் போச்சு! நன்செய் புன்செய் பத்து வேலியையும் சாஸனம் பண்ண
எப்படித்தான் ஐயாவுக்கு மனசு வந்ததோ தெரியலைங்களே!" என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டே சொர்ணம்மாள் கையிலே வைத்திருந்த தயிர்ச்சட்டியுடன் அங்கு வந்து, "ஐயையோ! பொண்ணே இதென்னடி அநியாயம்?" என்று ஒரு பெரிய சத்தம் போட்டாள். அவள் கையிலிருந்த தயிர்ச் சட்டி தொப்பென்று கீழே விழுந்து சுக்கு நூறாய் உடைந்தது.

மங்களத்துக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. "என்னடா, நல்லான்? என்ன சொல்கிறாய்?" என்று திகைப்புடன் கேட்டாள்.

"ஆமாங்க; எசமான் நிலத்தையெல்லாம் வித்துட்டாராம்! இனிமேல், அந்த வயல்வெளிப் பக்கம் நான் எப்படிப் போவேனுங்க?" என்று நல்லான் மறுபடி அலறினான்.

சொர்ணம்மாள், "ஐயையோ! குடி முழுகித்தா? - கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுப்பதுபோலே, இந்தப் பிராமணனுக்கு உன்னைக் கொடுத்தேனே? வேறே ஒண்ணும் இல்லாட்டாலும், சோத்துக்குத் துணிக்காவது பஞ்சமில்லைன்னு நினைச்சுண்டிருந்தேனே! - அதுவும் போச்சே! - இப்படியாகும்னு நான் நினைக்கலையே! - மோசம் பண்ணிட்டானே பிராமணன்!" என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு தடவை வயிற்றில் அடித்துக் கொண்டாள்.

இதைப் பார்த்ததும் நல்லானுக்கு, "இதென்னடா சனியன்? இவர்களிடம் வந்து சொல்லப் போனோமே?" என்று தோன்றிவிட்டது.

இந்தச் சமயத்தில், ஏற்கெனவே பாதி திறந்திருந்த வாசற் கதவு நன்றாய்த் திறந்தது. சம்பு சாஸ்திரி வாசற்படியண்டை நின்றார்.

"நல்லான்! இது என்ன இது?" என்று உரத்த குரலில் கேட்டார்.

----------------

3.6. கிரகப் பிரவேசம்


ராஜாராமய்யர் மிகவும் கோபமாயிருந்தார். இது என்ன உலகம், இது என்ன வாழ்க்கையென்று அவருக்கு ரொம்பவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மனோவசிய சக்தியானது ஸ்ரீதரன் விஷயத்தில் சிறிதும் பயன்படாமற் போனதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம்.

மாட்டுப் பொண்ணை அழைத்து வருகிறேன் என்று தங்கம்மாள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதிலிருந்து ராஜாராமய்யருக்கு ஸ்ரீதரனைப் பற்றிய கவலை அதிகமாயிற்று. 'அவள் பாட்டுக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகிறாள்! இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே!' என்பதாக அவருடைய மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. மாட்டுப் பெண் வருவதற்குள் இவனைச் சீர்திருத்தி விடவேண்டும் என்று தீர்மானித்தார்.

ஆகவே, ஒரு நாள் ஸ்ரீதரனை அழைத்துத் தம் எதிரில் நிறுத்திக் கொண்டு, தம்முடைய காந்தக் கண்களின் சக்தியை அவன் பேரில் பிரயோகிக்கத் தொடங்கினார். அவனை விழித்துப் பார்த்த வண்ணம், "ஸ்ரீதரா! உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது!..." என்று அவர் ஆரம்பித்ததும், ஸ்ரீதரன் குறுக்கே பேச ஆரம்பித்தான்.

"ஆமாம் அப்பா! எனக்கு புத்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுக்குத்தான் புத்தி கெட்டுப் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் முழிக்கிறதைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. நான் சொல்றதைக் கேளுங்கள். ஸ்பிரிட் மீடியம், மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் இந்த கண்றாவியையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த மாதிரி மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் எங்கே போய்ச் சேர்கிறார்கள் தெரியுமா? லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை!" என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, ராஜாராமய்யர் பிரமித்து போய் நின்று கொண்டிருக்கையிலேயே வெளியேறினான்.

அதற்குப் பிறகு ராஜாராமய்யர் இரண்டு, மூன்று தடவை ஸ்ரீதரனுக்குத் தர்மோபதேசம் செய்யலாமென்று முயன்றார். ஒன்றும் பயன்படவில்லை. அவன் நின்று காது கொடுத்துக் கேட்டால்தானே?

இதனாலெல்லாம் ராஜாராமய்யரின் மனது ரொம்பவும் குழம்பிப் போய் இருந்தது. அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபத்தை யார் மேல் காட்டுவது என்றும் தெரியவில்லை. கடைசியில் ஹிந்து சமூகத்தின் மேல் காட்டத் தீர்மானித்தார். ஹிந்து சமூகத்திலுள்ள பால்ய விவாகம், வரதக்ஷணை முதலிய வழக்கங்களைப் பலமாகக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுத வேண்டுமென்று முடிவு செய்தார்.

ராஜாராமய்யர் இத்தகைய மனோ நிலையில் இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென்று தங்கம்மாள் சாவித்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்களைப் பார்த்ததும் ராஜாராமய்யர், "என்ன தங்கம் வருகிறதைப் பத்தித் தகவலே கொடுக்கலையே! ஒரு கடுதாசி போடக் கூடாதா?" என்றார்.

இதற்குள் சாவித்திரி மாமனாரின் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள்.

அதைப் பார்த்த ராஜாராமய்யர், "வாடி அம்மா, வா! இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ? எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ!" என்றார்.

தங்கம்மாள், "சரிதான்; வரத்துக்கு முன்னாலேயே அவளை காபரா பண்ணாதேங்கோ! அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா!" என்றார்.

தன்னுடைய மாமனார் பெரிய தமாஷ்காரர் என்றும் எப்போதும் வேடிக்கையும் பரிகாசமுமாய்ப் பேசுவார் என்றும் சாவித்திரி கேள்விப்பட்டிருந்தாள். ராஜாராமய்யர் சொன்னதை அந்த மாதிரி பரிகாசம் என்று அவள் நினைத்தாள். வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவள் மாடிப்படி ஏறிச் சென்றாள்.

----------------

3.7. அக்னயே ஸ்வாஹா!



சாவித்திரி புக்ககம் போன பிறகு நடுவில் ஒரு பனிக் காலம் வந்து போய்விட்டது. மறுபடியும் மாரிக் காலம் சென்று இன்னொரு பனிக் காலம் வந்தது.

கடந்த நாலு வருஷத்தில், சோழ நாட்டிலுள்ள எல்லாக் கிராமங்களையும் போல் நெடுங்கரையும் பெரிதும் க்ஷீணமடைந்திருந்தது. நெல் விலை மளமளவென்று குறைந்து போகவே, ஊரில் அநேகம் பேர், 'இனிமேல் கிராமத்தில் உட்கார்ந்திருந்தால் சரிப்படாது' என்று பிழைப்புத் தேடிப் பட்டணங்களுக்குப் புறப்பட்டார்கள்.

இங்கிலீஷ் படித்து விட்டுச் சும்மா இருந்த வாலிபர்கள் உத்தியோகம் தேடுவதற்காகப் போனார்கள். இங்கிலீஷ் படிக்காதவர்கள், ஏதாவது வெற்றிலைப் பாக்குக் கடையாவது வைக்கலாம், இல்லாவிட்டால் காப்பி ஹோட்டலிலாவது வேலை பார்க்கலாம் என்று எண்ணிச் சென்றார்கள்.

இப்படிப் போகாமல் ஊரிலே இருந்தவர்களின் வீடுகளில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று.

இந்த மாறுதல் சம்பு சாஸ்திரியின் வீட்டிலேதான் மிகவும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. எப்போதும் நெல் நிறைந்திருக்கும் களஞ்சியத்திலும் குதிர்களிலும், இப்போது அடியில் கிடந்த நெல்லைச் சுரண்டி எடுக்க வேண்டியதாயிருந்தது.

மாட்டுக் கொட்டகை நிறைய மாடுகள் கட்டியிருந்த இடத்தில் இப்போது ஒரு கிழ எருமையும், ஒரு நோஞ்சான் பசுவும் மட்டும் காணப்பட்டன.

தென்னை மரம் உயரம் பிரம்மாண்டமான வைக்கோற் போர் போட்டிருந்த இடத்தில் இப்போது ஓர் ஆள் உயரத்திற்கு நாலு திரை வைக்கோல் கிடந்தது.

நெல் சேர் கட்டுவதற்காக அமைத்திருந்த செங்கல் தளங்களில், இப்போது புல் முளைத்திருந்தது.

ஆனால், குறைவு ஒன்றுமில்லாமல் நிறைந்திருந்த இடம் ஒன்று நெடுங்கரையில் அப்போதும் இல்லாமற் போகவில்லை. அந்த இடம் சம்பு சாஸ்திரியின் உள்ளந்தான். தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலைக் குறித்துச் சாஸ்திரி சிறிதும் சிந்திக்கவில்லை. முன்னை விட இப்போது அவருடைய உள்ளத்தில் அதிக அமைதி குடி கொண்டிருந்தது. பகவத் பக்தியில் முன்னைவிட அதிகமாக அவர் மனம் ஈடுபட்டது.

குழந்தை சாவித்த்ரியைப் பற்றி இடையிடையே நினைவு வரும்போது மட்டும் அவருடைய உள்ளம் சிறிது கலங்கும். ஆனால் உடனே, "குழந்தை புருஷன் வீட்டில் சௌக்கியமாயிருக்கிறாள். நாம் ஏன் கவலைப்படுகிறோம்?" என்று மனத்தைத் தேற்றிக்கொள்வார்.

சாவித்திரி கல்கத்தாவுக்குப்போய் ஐந்தாறு மாதம் வரையில் அடிக்கடி அவளிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. அப்புறம், இரண்டு மாதத்துக்கொரு தரம் வந்தது. இப்போது சில மாதமாய்க் கடிதமே கிடையாது. அதனால் என்ன? கடிதம் வராத வரையில் க்ஷேமமாயிருக்கிறாள் என்றுதானே நினைக்க வேண்டும்? மேலும் இனிமேல் சாவித்திரிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அவளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்குத் தான் அவளால் என்ன ஆகவேண்டும்? "இனி உனக்கு மாதா பிதா தெய்வம் எல்லாம் புருஷன் தான்" என்று நாம் தானே உபதேசம் செய்து அனுப்பினோம்? எப்படியாவது குழந்தை சந்தோஷமாயிருந்தால் சரி. கடிதம் போடாமல் போனால் என்ன? - இப்படி எண்ணியிருந்தார் சம்பு சாஸ்திரி.

அன்று தை வெள்ளிக்கிழமை. சாஸ்திரி அம்பிகையின் பூஜைக்குப் புஷ்பம் சேகரித்து வைத்துவிட்டு ஸ்நானம் செய்யக் குளத்துக்குப் போயிருந்தார்.

வாசலில் "தபால்" என்ற சத்தம் கேட்டது. சமையலுள்ளில் கைவேலையாயிருந்த சொர்ணம்மாள், "மங்களம்! மங்களம்! சுருக்கப் போய்த் தபாலை வாங்கிண்டு வா!" என்றாள்.

மங்களம் போய்த் தபாலை வாங்கிக் கொண்டு வந்தாள். வரும்போது வாசற்கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வந்தாள்.

-------------

3.8. கோட்டை இடிந்தது



கல்கத்தாவில் ஸ்ரீதரனுடைய வீட்டில் ராஜாராமய்யர் தம்முடைய வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புறத்திலிருந்து 'லொக்கு லொக்கு' என்று இருமுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது, ராஜாராமய்யரின் கவனம் பத்திரிகையில் செல்லவில்லை. "தங்கம்; தங்கம்!" என்று கூப்பிட்டார்.

"ஏன் கூப்பிட்டேள்?" என்று கேட்டுக் கொண்டே தங்கம் அறைக்குள் வந்தாள்.

"ஏண்டி! இந்தப் பொண்ணு இப்படி வாய் ஓயாமல் இருமிண்டிருக்கே! பிள்ளைத்தாச்சிப் பொண்ணை இப்படிக் கவனிக்காம வச்சுண்டிருந்தா, ஏதாவது இசை கேடா முடியப்போறதேடி!" என்றார் ராஜாராமய்யர்.

"இதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அந்த எழவு, சம்பந்திப் பிராம்மணன் வந்து பொண்ணை அழைச்சுண்டு போனான்னா தேவலை? உலகத்திலே ஒரு தகப்பனும் இப்படி இருக்கமாட்டான். இந்தப் பொண்ணு பத்து நாளைக்கு ஒரு கடுதாசி போடறதிலே குறைச்சலில்லை. ஒண்ணுக்காவது பதில் கிடையாதாம்.

"அங்கே அவருக்கு என்ன தொல்லையோ, என்னமோ?"

"என்ன தொல்லை வந்துடுத்து, உலகத்திலே இல்லாத தொல்லை? பணச்செலவுக்குச் சோம்பிண்டுதான் இப்படி வாயை மூடிண்டு இருக்கார்! வீட்டிலே இரண்டு லங்கிணிகள் இருக்காளே, அவா போதனையாயிருந்தாலும் இருக்கும்."

"சரி, அதுக்காக நாம் என்ன பண்றதுங்கறே?"

"நாக்பூர்லேருந்து செல்லத்தை வேறே இங்கே பிரசவத்துக்கு அனுப்பப் போறாளாம்! இரண்டு பிள்ளைத்தாச்சிகளை வைச்சிண்டு நான் என்ன பண்றது? சாஸ்திரத்துக்கும் விரோதம். இந்தப் பொண்ணானா, என்னை ரயிலேத்தி விட்டுடுங்கோ, நான் ஊருக்குப் போறேன்னு சொல்லிண்டிருக்கா, அனுப்பிச்சுடலாமான்னு பார்க்கறேன்."

"என்னடி இது? நிஜமா தானே போறேன்னு சொல்றாளா?"

"நிஜமா வேறே, அப்புறம் பொய்யா வேறயா? உங்களோட எழவு, பொய் சொல்லி இப்ப எனக்கு என்ன ஆகணும்?"

"கோவிச்சுக்காதேடி! அந்தப் பொண்ணு தைரியமாய்ப் போறேன்னு சொன்னா, திவ்யமாப் போகச் சொல்லு, அது ரொம்பத் தேவலை. இங்கே இருந்தா நீங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து அவளைக் கொன்னே விடுவயள். குரங்கு கையிலே பூமாலையாட்டமா, உன் கையிலும், உன் பிள்ளை கையிலும் ஆப்புட்டுண்டாளே பாவம்! பெண்டாட்டியாம், பிள்ளையாம்! தூத்தேரி!" என்று சொல்லிக் கொண்டே ராஜாராமய்யர் எழுந்திருந்து கையிலிருந்த பத்திரிகையைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டு வெளிக் கிளம்பிச் சென்றார்.

தங்கம்மாள் அங்கிருந்து நேரே பின்கட்டுக்குப் போனாள். அங்கே அடிக்கடி இருமிக் கொண்டே, இரும்பு உரலில் மிளகாய்ப் பொடி இடித்துக் கொண்டிருந்தாள் சாவித்திரி.

"ஏண்டி அம்மா, என்னத்திற்காக இப்படி வாய் ஓயாமே இருமறே? வேணும்னு இருமறாப்பலேன்னா இருக்கு?" என்றாள் தங்கம்மாள்.

"இல்லேம்மா! ஏற்கனவே, இருமிண்டிருக்கோன்னோ? ஏன் மிளகாய்ப் பொடி இடிக்கலைன்னு கேட்டேளேன்னு இடிச்சேன். மிளகாய்க் காரத்தினாலே ஜாஸ்தியா இருமறது."

----------------

3.9. அநாதைக் கடிதம்



இந்த இரண்டு வருஷ காலத்தில் சாவித்திரியின் விஷயமாக ஸ்ரீதரனுடைய மனோபாவம் இரண்டு மூன்று தடவை மாறுதல் அடைந்துவிட்டது.

ஆரம்பத்தில் கொஞ்ச நாள், தன்னைக் கேட்காமல் தங்கம்மாள் அவளை அழைத்துக் கொண்டு வந்த காரணத்தினால் அவனுக்கு வெறுப்பும் கோபமுமாயிருந்தது. போகப் போக, "சரிதான்; இந்தப் பிராரப்தத்தைக் கட்டிக் கொண்டுதான் மாரடித்தாக வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நமக்கென்ன கஷ்டம் வந்தது? அவள் பாட்டுக்கு வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாயிருந்து விட்டுப் போகிறாள்" என்று ஒரு மாதிரி முடிவுக்கு வந்திருந்தான்.

சில நாளைக்கெல்லாம் சாவித்திரியிடம் அவனுக்கு கொஞ்சம் சிரத்தை உண்டாகத் தொடங்கிற்று. சிரத்தை உண்டானதும், அவளைத் தன் தாயார் படுத்துகிற கஷ்டத்தைப் பார்த்து இரக்கமும் ஏற்பட்டது. ஸ்ரீதரனுடைய இரக்கம் சாவித்திரிக்கு ஆபத்தாய் முடிந்தது.

ஒரு தடவை சாவித்திரி கஷ்டமான காரியம் செய்வதைப் பார்த்து, ஸ்ரீதரன் அம்மாவிடம், "ஏனம்மா இந்த வேலையெல்லாம் அவளைச் செய்யச் சொல்கிறாய்?" என்றான். தங்கம்மாளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமாண்டாப்பா, உன் ஆம்படையாள் காரியம் செய்யலாமோ? தேஞ்சுன்னா போயிடுவள்? நீ வேணா பூட்டி வைச்சுட்டுப்போ! இல்லாட்டா, பின்னோட அழைச்சுண்டு போயிடு" என்று கத்தினாள். அவன் வெளியே போன பிறகு, சாவித்திரியிடம், "ஏண்டி பொண்ணே! ஆம்படையானிடம் கோழி சொல்ல ஆரம்பிச்சுட்டயோல்லியோ? நீ காரியம் செய்யலாமோடி? மிராசுதார் பொண்ணாச்சே! போய் மெத்தையை விரிச்சுப் போட்டுண்டு படுத்துக்கோ! நான் தான் ஒத்தி இருக்கேனே இந்த வீட்டிலே காரியம் செய்யறதற்கு!..." என்று சரமாரியாய்ப் பொழியத் தொடங்கினாள்.

இம்மாதிரி சாவித்திரிக்கு ஸ்ரீதரன் பரிந்து பேசிய ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அதனால் கஷ்டமே நேர்ந்தது. ஒரு நாள் சாவித்திரி மாவு இடித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீதரன் பார்த்துவிட்டான். "உன்னை யார் மாவு இடிக்கச் சொன்னது? வீட்டிலே வேலைக்காரியில்லையா?" என்று ஸ்ரீதரன் கோபமாய்க் கேட்டான். சாவித்திரி, அவனுடைய கோபத்தைத் தணிக்கும் நோக்கத்துடன், "அம்மாதான் இடிக்கச் சொன்னார்" என்று சொல்லி விட்டாள். ஸ்ரீதரன் அம்மாவிடம் போய், "இதென்ன அம்மா நான்ஸென்ஸ்? இவளை என்னத்துக்காக மாவு இடிக்கச் சொன்னாய்?" என்று கேட்டான். "அப்படிச் சொல்லு தகடிகை!" என்றாள் தங்கம்மாள். "நான் என்னடா அப்பா சொன்னேன்! கொஞ்ச நாள் போனா, ஆம்படையானும் பொண்டாட்டியும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸாப் போயிடுவேன்னு சொன்னேனோ இல்லையோ? என் வாக்குப் பலிச்சுதா?" என்று கூச்சலிட்டாள். பிறகு, சாவித்திரியைக் கூப்பிட்டு, "ஏண்டி பொண்ணே! நானாடி உன்னை மாவு இடிக்கச் சொன்னேன்; என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்லடி!" என்று கேட்டாள். சாவித்திரி பயந்துபோய்ப் பேசாமல் இருந்தாள். பார்த்தயோல்லியோடா கள்ள முழி முழிக்கிறதை!" என்றாள் தங்கம்மாள். ஸ்ரீதரனுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. "ஏண்டி! பொய்யா சொன்னே?" என்று சாவித்திரியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டுப் போய்விட்டான்.

சாவித்திரி அழுதுகொண்டே மாவு இடிக்கத் தொடங்கினாள். தங்கம்மாள், "என் பிள்ளைக்கும் எனக்கும் ஆகாமலடிக்க வந்துட்டயாடி அம்மா, மகராஜி! என்ன சொக்குப் பொடி போட்டிருக்கயோ, என்ன மருந்து இட்டிருக்கயோ, நான் என்னத்தைக் கண்டேன்!" என்று புலம்பத் தொடங்கினாள்.

இந்த நாளில் சாவித்திரி சரியான வழியில் முயற்சி செய்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதரனுடைய அன்பைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தச் சரியான வழி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாமியாரைத் திருப்தி செய்வது தான் கணவனைத் திருப்தி செய்யும் வழி என்று அவள் நினைத்தாள். அவன் பகலில் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவள் அடுப்பங்கரையில் ஏதாவது காரியம் செய்து கொண்டிருப்பாள். இரவில் அவன் வரும் போது அவள் ஒன்று, பகலெல்லாம் உழைத்த அலுப்பினால் படுத்துத் தூங்கிப் போய் விடுவாள்; அல்லது மாமியார் சொன்னது எதையாவது நினைத்து அழுது கொண்டிருப்பாள். "சனியன்! சனியன்! எப்ப பார்த்தாலும் ஒரே அழுகைதானா? மூதேவி! பீடை!" என்று ஸ்ரீதரன் எரிந்து விழுவான். இதனால் அவளுடைய அழுகை அதிகமாகும். ஸ்ரீதரனுடைய வெறுப்பும் வளரும்.

------------------

3.10. சாவித்திரியின் கனவு



சாவித்திரியை அழைத்துக்கொண்டு போகிறோமென்று சொன்ன திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள் உண்மையிலேயே ரொம்பவும் நல்ல மனுஷர்கள். புருஷன், மனைவி, குழந்தை, புருஷனுடைய தாயார் இவர்கள்தான். தாயார் விதவை. புருஷனுக்கு முப்பது வயதும், மனைவிக்கு இருபது வயதும் இருக்கும். குழந்தை மூன்று வயதுப் பையன். அவர்களில் யாரும் பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாயில்லை. கணபதி அவனுடைய பெயருக்கு ஏற்றது போலவே கட்டைக் குட்டையாயும், கொஞ்சம் இளந் தொந்தி விழுந்தும் காணப்பட்டான். கறுப்பு நிறந்தான். முகம், கன்னமும் கதுப்புமாய்ச் சப்பட்டையாயிருந்தது. ஜயம் அவனைவிடச் சிவப்பு; ஆனால் முகத்தில் அம்மை வடு. போதாதற்கு, மேல் வாய்ப்பல் இரண்டு முன்னால் நீண்டு வந்திருந்தது. இதை மறைப்பதற்காக ஜயம் அடிக்கடி உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் நாலைந்து மாதமாக 'ஸ்நானம் செய்ய'வில்லையென்றும் தோன்றிற்று. இந்தக் குடும்பத்தார் ஒருவரோடொருவர் கொண்டிருந்த அந்யோந்யம் சாவித்திரிக்கு அளவிலாத ஆச்சரியத்தை அளித்தது. என்ன அன்பு! என்ன அக்கறை!

ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை, "ஜயம்! ஏதாவது வேணுமா?" என்று கணபதி கேட்டுக் கொண்டிருந்தான். "ஏண்டாப்பா! பிள்ளைத்தாச்சிப் பொண் பட்டினியாயிருக்காளே! ஏதாவது வாங்கிண்டு வந்து கொடேண்டா!" என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். "நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே! அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ!" என்பாள் ஜயம்.

ஜயம் எதற்காவது எழுந்து நின்றால், சொல்லி வைத்தாற்போல், கணபதி, அவனுடைய தாயார் இரண்டு பேரும் எழுந்திருந்து, "என்ன
வேணும், ஜயம்?" என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், "இந்தாடி அம்மா! ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ!" என்பாள் மாமியார். அஸ்தமித்தால் போதும்; ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிடச் சொல்வாள். வண்டியிலுள்ள மற்றவர்கள் ஆட்சேபித்தால், "கொஞ்சம் கோவிச்சுக்காதீங்கோ. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு. பனி உடம்புக்காகாது" என்பாள்.

அவர்கள் ஒருவரோடொருவர் அந்யோந்யமாயிருந்ததல்லாமல், சாவித்திரியையும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சில சமயம் அந்த அம்மாள், சாவித்திரியின் கஷ்டங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவாள். "ராஜாத்தி மாதிரி இருக்கா. இவளை ஆத்திலே வச்சுட்டு அந்த மூடம் எங்கெல்லாமோ சுத்தி அலையறானே?" என்றும், "நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு! இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?" என்றும் சொல்வாள். கணபதி, "பேசாமலிரு, அம்மா!" என்று அடக்குவான். "நீ சும்மா இருடா! என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே? உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம்? இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது! பாவம்! இவளுக்குப் பொறந்தகமும் வகையில்லைபோல் இருக்கு. அவாதான் வந்து தலைச்சம் பிள்ளைத்தாசியைப் பாத்துட்டு அழைச்சுண்டு போகவேண்டாமோ?" என்பாள்.

மாமியார் இப்படி ஏதாவது பேசும்போதெல்லாம், மாட்டுப் பெண்ணின் முகத்தில் பெருமை கூத்தாடும். அவளுக்குப் புக்ககத்தைப் போலவே பிறந்த வீடும் நன்றாய் வாய்த்திருந்தது என்று சம்பாஷணையில் சாவித்திரி தெரிந்து கொண்டாள். ஜயத்தின் தகப்பனாருக்கு இரண்டு மாதமாய் உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததாம். "ஒரு வேளை நான் பிழைக்கிறேனோ, இல்லையோ, என் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை பார்த்துவிட்டால் தேவலை" என்று அவர் சொன்னாராம். அதன் பேரில்தான் இப்போது இவர்கள் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

--------------

3.11. "அப்பா எங்கே?"


சாவித்திரி அதிகாலையில் புதுச் சத்திரம் ஸ்டேஷனில் வந்து இறங்கினாள். இன்னும் பனிபெய்து கொண்டிருந்தபடியால், ஸ்டேஷன் கட்டிடம், அதற்கப்பாலிருந்த சாலை, தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் மங்கலாகக் காணப்பட்டன.

தன்னை அழைத்துப் போக அப்பா வந்திருக்கிறாரோ என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தாள். பிளாட்பாரத்தில் ஒரு பிராணியும் இல்லை. வெளியே ஒரு வண்டி மட்டும் கிடந்தது. அதிகாலையானதால் ஒரு வேளை நல்லானை மட்டும் வண்டியுடன் அனுப்பியிருப்பார் என்று சாவித்திரி எண்ணினாள்.

நல்ல வேளையாக, அவளிடமிருந்த கொஞ்சம் பணத்தையும், டிக்கட்டையும் பெட்டியில் வைக்காமல் ஒரு பர்ஸில் போட்டு இடுப்பில் செருகிக் கொண்டிருந்தாள். ஆகையால் அவை கெட்டுப் போகாமல் பிழைத்தன.

சாவித்திரி, டிக்கட்டை எடுத்துக் கொடுத்தபோது, தனக்குத் தெரிந்த பழைய ஸ்டேஷன் மாஸ்டரோ என்று ஒரு க்ஷணம் உற்றுப் பார்த்தாள். இல்லை. அவர் இல்லை. இவர் யாரோ புதுசு! மீசையும் கீசையுமாயிருக்கிறார். சாவித்திரி வெளியில் போன பிறகு அவர் டிக்கட் குமாஸ்தாவிடம், "வர வரப் பெண்பிள்ளைகள் எல்லாம் துணிந்து போய்விட்டார்கள்! கொஞ்ச நாள் போனால், நாமெல்லாம் சேலை கட்டிக்க வேண்டியதுதான்" என்றார்.

அதற்கு டிக்கட் குமாஸ்தா, "ஆமாம், ஸார்! ஆனால் குழந்தை பெறுகிற காரியம் மட்டும் அவர்கள்தானே செய்ய வேண்டும் போலிருக்கு!" என்று நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

இதைக் கேட்டுக்கொண்டே வெளியில் போன சாவித்திரி, அங்கே கிடந்த ஒரே வண்டியின் அருகில் சென்றாள். வண்டிக்காரன், "எங்கே, அம்மா, போகணும்? வண்டி பூட்டட்டுமா?" என்றான். அவன் நல்லான் இல்லை. வண்டி, நெடுங்கரை வண்டியும் இல்லை. அது ஓர் ஒற்றை மாட்டு வண்டி.

"ஏனப்பா, நெடுங்கரையிலிருந்து வண்டி ஒன்றும் வர்றலையா?" என்று சாவித்திரி கேட்டாள்.

"இன்னிக்கு வர்றலீங்க; ஒருவேளை நாளைக்கு வருமோ, என்னமோ!" என்றான் வண்டிக்காரன்.

சாவித்திரிக்கு ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. அப்பாவா இப்படி அலட்சியமாயிருக்கிறார்? நம்பவே முடியவில்லையே? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்தாயிருக்குமோ? இல்லாமற் போனால் இப்படி இருக்கமாட்டாரே?

வண்டியைப் பூட்டச் சொல்லி, சாவித்திரி அதில் ஏறிக் கொண்டு நெடுங்கரைக்குப் பிரயாணமானாள்.

வண்டி நெடுங்கரை அக்கிரகாரத்துக்குள் நுழைந்த போது, சாவித்திரிக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. நெடுங்கரையை மறுபடி பார்க்க வேண்டுமென்று அவள் எவ்வளவு ஆவல் கொண்டிருந்தாள்? புறப்படும்போது எவ்வளவு குதூகலமாயிருந்தாள்? அந்தக் குதூகலம் இப்போது எங்கே போயிற்று? நெடுங்கரைக்கு வந்ததில் ஏன் கொஞ்சங் கூடச் சந்தோஷம் உண்டாகவில்லை?

சாவித்திரியின் கண்களுக்கு நெடுங்கரை அக்கிரகாரம் இப்போது பழைய தோற்றம் கொண்டிருக்கவில்லை. வீடுகள், தென்னை மரங்கள், கோவில், மண்டபம் எல்லாம் முன் மாதிரியேதான் இருந்தன. ஆனாலும், வீதி மட்டும் களை இழந்து காணப்பட்டது.

வீடு நெருங்க நெருங்க அவளுடைய மனம் அதிகமாகப் பதைபதைத்தது. அப்பாவை எப்படிப் பார்ப்பது, என்ன சொல்வது? சித்தியின் முகத்தில் எப்படித்தான் விழிப்பது? ஒரு வேளை ஆத்தில் பாட்டியும் இருப்பாளோ? இருந்தால், அவள் ஏதாவது வெடுக்கென்று சொல்வாளே? அப்புறம் ஊரார்தான் என்ன சொல்வார்கள்? என்ன நினைத்துக் கொள்வார்கள்? தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்த பசங்களை ஏறிட்டுப் பார்க்கக்கூடச் சாவித்திரிக்கு வெட்கமாயிருந்தது.

இதோ, வீடு வந்து விட்டது, "நிறுத்தப்பா!" என்றாள் சாவித்திரி. வண்டி நின்றது. தன்னுணர்ச்சி இல்லாமலே சாவித்திரி வண்டியிலிருந்து இறங்கினாள். சற்று விரைவாகவே வீட்டை நோக்கிச் சென்றாள்.

--------------------

3.12. பாட்டு வாத்தியார்


சம்பு சாஸ்திரி நெடுங்கரையை விட்டுக் கிளம்பிய போது அவருடைய மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.

அவரை ஊரார் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்து, தீபாவளிக்கும் மாப்பிள்ளை வராமற் போனதிலிருந்து சாஸ்திரி மனம் சோர்ந்து போயிருந்தார். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அனுப்பிய பிறகு அவருடைய மனச் சோர்வு அதிகமாயிற்று. வீட்டிலே சாவித்திரி இல்லை. வெளியிலே நல்லான் இல்லை. முன்னைப் போல் பஜனைகளும் உற்சவங்களும் நடப்பதில்லை. இதனாலெல்லாம் நெடுங்கரை வாசமே அவருக்கு வெறுத்துப் போயிருந்தது. ஆனாலும் ஊரை விட்டுக் கிளம்பும்போது, அவருடைய இருதயம் ஏன் இவ்வளவு வேதனை அடையவேண்டும்?

'கூடாது; இத்தகைய பாசம் கூடாது, நம்மை இந்தப் பாசத்திலிருந்து விடுவித்து ரக்ஷிப்பதற்காகத்தான் அம்பிகை இவ்வாறு மாமியாரின் வாக்கின் மூலமாக ஆக்ஞாபித்திருக்கிறாள்' என்று எண்ணி மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு கிளம்பினார்.

க்ஷேத்திர யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பம் சாஸ்திரிக்கு வெகு காலமாக இருந்தது. அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இப்போது சந்தர்ப்பம் வாய்த்தது. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அங்கெல்லாம் இரண்டு மூன்று நாள் தங்கி ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு கடைசியாகச் சென்னைப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

சென்னையில் முதலில் அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. அப்புறம், கோவில்களை வைத்து ஒருவாறு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டார். கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோவில், கந்தசாமி கோவில், ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமி தரிசனம் செய்து பரவசமானார். அப்புறம் வந்த காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

சம்பு சாஸ்திரி கிராமத்தில் பெரிய மிராசுதாராயிருந்தவர். எல்லாருக்கும் உதவிசெய்து அவருக்குப் பழக்கமே தவிர, ஒருவரிடம் போய் நின்று ஓர் உதவி கேட்டு அறியாதவர். மேலும் இயற்கையிலேயே சங்கோச சுபாவமுடையவர். அடித்துப் பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது.

அப்படிப்பட்டவர், முன்பின் தெரியாதவர்களின் வீடு ஏறிச்சென்று அவர்களிடம் ஒரு காரியத்தைக் கேட்பது என்றால், இலேசான காரியமா? ஆனாலும், சாஸ்திரி பகவான்மேல் பாரத்தைப் போட்டு, நெஞ்சைத் திடப் படுத்திக் கொண்டு, இந்தக் காரியத்தைத் தொடங்கினார்.

காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லை. "நாகரிகம் மிகுந்த இந்தப் பட்டணத்திலேயாவது, பட்டிக்காட்டு மனுஷனாகிய நமக்குப் பாட்டு வாத்தியார் வேலை கிடைக்கவாவது?' என்ற அவநம்பிக்கை அவருடைய மனத்துக்குள் கிடந்தது. அவருக்கே தம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகப் போகிறது?

சிலர் சம்பு சாஸ்திரியின் தோற்றத்தைப் பார்த்ததுமே அவருக்குச் சங்கீதம் எங்கே வரப்போகிறது என்று தீர்மானித்துவிட்டார்கள். ஒரு பெரிய மனுஷர் சம்பு சாஸ்திரியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "ஏன் ஸ்வாமி உங்க ஊரிலே சங்கீதத்தைத் தராசிலே நிறுத்துக் கொடுக்கிறதா, மரக்காலிலே அளந்து கொடுக்கிறதா?" என்று கேட்டார்.

இந்தக் கேள்வி சம்பு சாஸ்திரியின் மனத்தை ரொம்பவும் உறுத்திற்று. கர்நாடக சங்கீதத்தின் ஜீவஸ்தானமாகிய சோழநாட்டில் அவர் பிறந்தவர். குழந்தைப் பிராயத்திலிருந்து மகா வித்வான்களுடைய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தவர். அப்படிப்பட்டவரைப் பார்த்து, இந்த மெட்ராஸ்காரன், தன்னிடம் பணம் இருக்கிற திமிரினால் தானே இப்படிக் கேட்டான்? "ஆமாம்; சங்கீதத்தைப் பணங் கொடுத்து வாங்குகிற இடத்திலே, மரக்காலில் அளந்தோ தராசில் நிறுத்தோதான் கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இப்படிக் கிடையாது." - இந்த மாதிரி சம்பு சாஸ்திரி சொல்லவில்லை; அந்த வீட்டைவிட்டுப் போகும் போது மனத்திற்குள் நினைத்துக் கொண்டு போனார்.

இன்னொரு பெரிய வக்கீலின் வீட்டில் பாட்டு வாத்தியார் வேண்டுமென்பதாகக் கேள்விப்பட்டுச் சம்பு சாஸ்திரி அந்த வீட்டுக்குள் சென்றார்.

--------------

3.13. மீனாக்ஷி ஆஸ்பத்திரி


சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பி இருபது நாளைக்கு மேலாயிற்று. இப்போது அவள் சென்னையில் மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த சிறு தொட்டிலில் கையால் இலேசாக ஆட்டக்கூடிய தொட்டிலில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. கனவில் அல்ல; உண்மையாகவேதான். மூக்கும் முழியுமாய்க் குழந்தை நன்றாயிருந்தது. பிறந்து பத்து நாள்தான் ஆகியிருந்தாலும் ஒரு மாதத்துக் குழந்தை போல் தோன்றியது.

குழந்தை அப்போது தன்னுடைய வலது கையின் விரல்களை ருசி பார்த்து அநுபவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உண்டான 'த்ஸு' 'த்ஸு' என்ற சப்தம் சாவித்திரியின் காதில் விழுந்தபோது அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. உடனே, திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். மலர்ந்த முகம் சுருங்கிற்று. இந்தக் குழந்தையின் காரணமாக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அநுபவிக்க நேர்ந்தது? அவையெல்லாம் ஒரு மகா பயங்கரமான சொப்பனத்தைப் போல் சாவித்திரியின் நினைவில் வந்தன. அந்தச் சம்பவங்களை மறந்து விடுவதற்கு அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவற்றை நினைத்துப் பார்ப்பதில்லையென்று பல்லைக் கடித்துக்கொண்டு மனத்தை உறுதி செய்து கொண்டாள். அது ஒன்றும் பயன்படவில்லை. திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் வந்து கொண்டுதான் இருந்தன.

நெடுங்கரையிலிருந்து சாவித்திரி உடனே திரும்பிச் சென்னைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறியபோது அவளுடைய மனத்தில் கவலையும் பயமும் இல்லாமலில்லை. 'அந்தப் பெரிய பட்டணத்தில் போய் அப்பாவை எப்படித் தேடுவோம்? அதுவும் இந்தப் பலஹீனமான ஸ்திதியில்?' என்று அவளுடைய நெஞ்சு பதைபதைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இவ்வளவு பயங்கரமான கஷ்டங்களை எல்லாம் அநுபவிக்க நேரிடுமென்று லவலேசமும் அவள் எதிர்பார்க்கவில்லை.

"பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு தெரியுமா?" என்று எத்தனை இடங்களில் எத்தனை பேரைக் கேட்டிருப்பாள்? அவர்களில் சிலர், "பாட்டு வாத்தியாரையும் தெரியாது; சம்பு சாஸ்திரியையும் தெரியாது; போ! போ!" என்று கடுமையாகப் பதில் சொன்னார்கள். இம்மாதிரி பதில்களைக் கேட்கும்போதெல்லாம், 'ஜனங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவர்களாயிருக்கிறார்கள்?' என்று சாவித்திரி ஆச்சரியப்படுவாள். பட்டணங்களிலே வசிக்கும் ஜனங்களின் இடைவிடாத வேலைத் தொந்தரவும், அதனால் சின்னஞ் சிறு விஷயங் கூட அவர்களுக்கு எரிச்சல் உண்டு பண்ணிவிடுவதும் சாவித்திரிக்கு எவ்வாறு தெரியும்? மேலும், பூரண கர்ப்பவதியான ஓர் இளம் பெண் இந்த மாதிரி தன்னந்தனியாக அலைவதைக் கண்டவுடனேயே, ஜனங்களுக்கு அவள் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்டு அருவருப்பு உண்டாவது சகஜம் என்பதைத்தான் சாவித்திரி எப்படி அறிவாள்?

ஆனால், எல்லாருமே இப்படி நடந்து கொள்ளவில்லை, சிலர் அவளிடம் இரக்கமும் காட்டினார்கள். "நீ யாரம்மா? எந்த ஊர்? இந்த நிலைமையிலே ஏன் இப்படி அலையறே?" என்றெல்லாம் விசாரித்தார்கள். ஜனங்களுடைய கோபத்தையும் கடுமையையுமாவது சகித்துக்கொள்ளலாம் போல் இருந்தது; ஆனால், இந்த இரக்கத்தைச் சாவித்திரியினால் சகிக்கமுடியவில்லை. அவர்களுடைய விசாரணைக்குப் பதில் சொல்லவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

'அப்பா இருக்கிற இடந்தெரிந்தால் சொல்லட்டும்; இல்லாமற்போனால் பேசாமலிருக்கட்டும். இவர்களை இதையெல்லாம் யார் விசாரிக்கச் சொன்னது?' என்று எண்ணினாள்.

கடைசியில், அவளை அந்த மாதிரி விசாரித்த இடம் ஒரு போலீஸ் ஸ்டேஷன், இங்கே அவள் எப்படி வர நேர்ந்தது என்பதும், ஸ்டேஷனில் நடந்தவையும் அவளுக்கு ஏதோ பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் தெளிவின்றித் தோன்றின.

-----------------

3.14. சாவித்திரியின் சங்கல்பம்



ஆஸ்பத்திரியில் சாவித்திரிக்கு நன்றாய்ச் சுயஞாபகம் வந்ததிலிருந்து, அவள் தான் ஏற்கெனவே பட்ட கஷ்டங்களைப்பற்றி எண்ணியதோடு வருங்காலத்தைப் பற்றியும் எண்ணத் தொடங்கினாள். இந்தத் துர்ப்பாக்கியவதியின் தலையில் பகவான் ஒரு குழந்தையை வேறே கட்டி விட்டார். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?

கல்கத்தாவுக்குப் போவது என்ற நினைப்பே அவளுக்கு விஷமாக இருந்தது! குழந்தைப் பிராயத்தில் அவளை ஒரு சமயம் ஒரு தேனீ கொட்டிவிட்டது. அப்போது அது ரொம்பவும் வலித்தது. இன்று சாவித்திரி கல்கத்தாவில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டால், ஏக காலத்தில் ஆயிரம் தேனீக்கள் தன் தேக முழுவதும் கொட்டிவிட்டது போல் அவளுக்கு அத்தனை வேதனை உண்டாயிற்று. போதும், ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். மறுபடியும் கல்கத்தாவுக்குப் போய் அவர்களுடைய முகத்தில் விழிப்பது என்பது இயலாத காரியம். முடியவே முடியாது!

நெடுங்கரையிலோ வீடு பூட்டிக் கிடக்கிறது. திறந்திருந்தால் தான் என்ன? அங்கே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? அப்பா சம்மதித்தாலும் சித்தியும் பாட்டியும் தன்னை வைத்துக்கொண்டிருக்கச் சம்மதிப்பார்களா? ஒவ்வொரு நிமிஷமும் தன்னை ஏசிக் காட்ட மாட்டார்களா? "போ! போ!" என்று பிடுங்கி எடுத்துவிட மாட்டார்களா? அப்பாவையும் அவர்கள் வதைத்து விடுவார்களே? தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாதா?

அப்பாவுக்குக் கஷ்டம்! தன்னால்! - இதை நினைத்துச் சாவித்திரி தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள். தன்னால் அப்பாவுக்குக் கஷ்டம் என்ற எண்ணம் இந்த நிமிஷம் வரையில் அவள் மனத்தில் இருந்தது. இப்போது அது மாறிற்று. 'என்ன? அப்பாவுக்கு என்னால் கஷ்டமா? அவரால் எனக்குக் கஷ்டம் இல்லையா?' என்று எண்ணினாள். தான் அநுபவித்த இத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம்? அப்பாதான் இல்லையா? 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடு என்று நான் அழுதேனா? இந்த ஸ்ரீதரனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று இவரிடம் சொன்னேனா? இவரை யார் என்னை இப்படிப்பட்ட புருஷனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கச் சொன்னது? அறியாத பிராயத்தில் என்னை இப்படிப்பட்ட கதிக்கு ஆளாக்கினாரே? கல்யாணம் செய்ததற்குப் பதில் என்னைப் படிக்க வைத்து இதோ இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸுகளைப்போல் என்னையும் ஒரு நர்ஸாகச் செய்திருக்கப்படாதா?..."

ஆம்; சாவித்திரிக்கு உணர்வு தெளிந்ததிலிருந்து அவள் இந்த நினைவாகவே இருந்தாள். ஆகா! இந்த நர்ஸுகள் எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்? எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? சுயமாகச் சம்பாதித்து ஜீவனம் செய்வதைப் போல் உண்டா? இவர்களுக்குக் கவலை ஏது? பிறருடைய கையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? ஒருவரிடம் பேச்சுக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை யல்லவா? பெண் ஜன்மம் எடுத்தவர்களில் இவர்கள் அல்லவா பாக்கியசாலிகள்?

இப்படிச் சதாகாலமும் சிந்தனை செய்துகொண்டிருந்தாள் சாவித்திரி. சிந்தனை செய்யச் செய்ய அவர்களைப் போல் தானும் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை அவள் மனத்தில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருந்தது. இனிமேல், தான் பிறந்த வீட்டிலேயோ, புகுந்த வீட்டிலேயோ போய் வயிறு வளர்ப்பதில்லையென்னும் திடசங்கல்பம் அவளுடைய மனத்தில் ஏற்பட்டது. உயிர் வாழ்ந்தால், இந்த நர்ஸுகளைப் போல் சுய ஜீவனம் செய்து சுதந்திரமாக வாழவேண்டும்; இல்லாவிடில் எந்த வகையிலாவது உயிரை விட்டுவிடவேண்டும். பிறர் கையை எதிர்பார்த்து, பிறருக்கு அடிமையாகி வாழும் வாழ்க்கை இனிமேல் வேண்டாம். சாவித்திரி இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்ளும் சமயத்தில் தொட்டிலில் கிடக்கும் குழந்தை விரலை ருசி பார்த்துச் சப்புக்கொட்டும் சத்தம் கேட்கும். 'ஐயோ! இந்தச் சனியன் ஒன்றை ஸ்வாமி நம் தலையில் கட்டி விட்டாரே? நாம் செத்துப் போவதாயிருந்தால் இதை என்ன செய்வது?' என்ற ஏக்கம் உண்டாகும்.

--------------------

3.15. சாவடிக் குப்பம்


நல்லானின் மச்சான், சம்பு சாஸ்திரியைப் பார்த்த அன்று இரவு வெகு உற்சாகமாகச் சாவடிக் குப்பத்தில் தன் வீட்டுக்குப் போனான். அந்தச் செய்தியை நல்லானுக்குச் சொன்னால் அவன் ரொம்பவும் சந்தோஷமடைவானென்று அவனுக்குத் தெரியும்.

"இன்னிக்கு நான் ஒத்தரைப் பார்த்தேன்! அது யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்றான் நல்லானிடம்.

"நீ யாரைப் பார்த்தா என்ன, பாக்காட்டி என்ன? எனக்குச் சாஸ்திரி ஐயாவைப் பார்க்காமே ஒரு நிமிஷம் ஒரு யுகமாயிருக்கு. நெடுங்கரைக்கு ஒரு நடை போய் அவங்களைப் பார்த்துட்டு வந்தாத்தான் என் மனசு சமாதானம் ஆகும். இல்லாட்டி, நான் செத்துப் போனேன்னா என் நெஞ்சு கூட வேவாது" என்றான்.

"அப்படியானா, நெடுங்கரைக்குப் போயிட்டு வர்ற பணத்தை எங்கிட்டக் கொடு" என்றான் சின்னசாமி.

"என்னத்திற்காக உங்கிட்டக் கொடுக்கிறது?"

"கொடுத்தேன்னா, சாஸ்திரி ஐயாவை நான் இவ்விடத்துக்கே வரப் பண்றேன்."

"என்னடா ஒளற்றே!" என்று நல்லான் கேட்டான்.

"நான் ஒண்ணும் ஒளறலை. சாஸ்திரி ஐயா இப்போது நெடுங்கரையில் இல்லை. இந்த ஊரிலேதான் இருக்காரு. இன்னிக்கு அவரைத்தான் பார்த்தேன்" என்றான்.

நல்லான் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். "அடே இந்த வெஷயத்திலே மட்டும் எங்கிட்ட விளையாடாதே! நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு!" என்றான்.

சின்னசாமி விவரமாகச் சொன்னான். அவன் எதிர் பார்த்தபடியே நல்லானுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. கடைசியில் "போவட்டும்; இந்த மட்டும் ஐயாவைப் பார்த்துப் பேசறத்துக்கு ஒனக்குத் தோணித்தே; அது நல்ல காரியந்தான். ஐயா எவ்விடத்திலே இறங்கியிருகாருன்னு கேட்டுண்டாயா?" என்றான்.

"அது கேக்க மறந்துட்டேன்; ஆனா, ஐயாவைத்தான் நான் சாவடிக் குப்பத்துக்குக் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்கேனே?"

"அட போடா, முட்டாள்! நீ சொன்னதுக்காக ஐயா வந்துடுவாங்களா? அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக? என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு?" என்றான் நல்லான்.

ஆகவே, முடிவில் சின்னசாமிக்கு அவன் சாஸ்திரியாரைப் பார்த்து வந்ததன் பலனாக வசவுதான் கிடைத்தது. நல்லானுடன் அவனுடைய மனைவியும் சேர்ந்து கொண்டு தன் தம்பியைத் திட்டினாள். "மறந்துட்டேன், மறந்துட்டேங்கறயே வெக்கமில்லாமே? சோறு திங்க மறப்பயா?" என்று அவள் கேட்டாள்.

பிறகு இரண்டு நாள் நல்லானும் அவன் மச்சானுமாகச் சேர்ந்து, அந்தப் பக்கத்திலுள்ள பிராம்மணாள் ஹோட்டலில் எல்லாம் போய், "நெடுங்கரை சம்பு சாஸ்திரியார் இருக்காரா?" என்று கேட்டார்கள். "நெடுங்கரையையும் காணும், சம்பு சாஸ்திரியையும் காணும்" என்ற பதில் தான் வந்தது.

--------------

நான்காம் பாகம் - இளவேனில்


"செந்தா மரை விரியத் தேமாங் கொழுந்தொழுக
மைந்தா ரசோகம் மடலவிழ...."
"மன்னுயிரெல்லா மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில்." - இளங்கோவடிகள்

4.1. சாருவின் பிரார்த்தனை

கீழ் வானம் வெளுத்தது. காலைப் பிறை, ஒளி இழந்து மங்கிற்று. அதனருகில் தோன்றிய சுக்கிரன் 'இதோ மறையப் போகிறேன்' என்று கண் சிமிட்டிச் சமிக்ஞை செய்தது.

கோழி கூவிற்று; குருவி சிலும்பிற்று; காகம் கரைந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நானாவிதமான பட்சி ஜாலங்கள் பற்பல ஸ்வரங்களில் பாடத் தொடங்கின.

விருட்சங்களிலும் செடிகளிலும் இருந்த பூ மொக்குகள், பட்சிகளின் இனிய கானத்தைக் கேட்டு ஆனந்தத்தினால் சிலிர்த்தன.

அந்தக் குளிர்ந்த அதிகாலை நேரத்தில் வீசிய இனிய இளந்தென்றல் சற்று விரிந்த பூ இதழ்களின் மீது தவழ்ந்து சென்று நாலு பக்கமும் நறுமணத்தைப் பரப்பிற்று.

பட்சிகளின் கீதத்துக்குச் சுருதி போடுவதுபோல் தூரத்தில் கடலின் 'ஹோ' என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

சம்பு சாஸ்திரி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மனோகரமான பூபாள ராகத்தில், "கௌஸ்ல்யா ஸுப்ரஜா ராமா" என்ற ராமாயண சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"தாத்தா! தாத்தா!" என்றாள் சாரு.

"முழிச்சுண்டயா, அம்மா! எங்கே, எழுந்து உட்காரு" என்றார் சம்பு சாஸ்திரி.

"நான் முழிச்சுக்கலை; இன்னும் தூங்கிண்டு தான் இருக்கேன்" என்றாள் சாரு.

"அப்படின்னா, தூங்கினபடியே, நேத்திக்கு ஸரஸ்வதி ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தேனே, அதைச் சொல்லு, பார்க்கலாம்" என்றார் சாஸ்திரி.

சாரு, உடனே எழுந்து உட்கார்ந்தாள். "எங்கே, சொல்லிக் கொடு தாத்தா, சொல்றேன்" என்றாள்.

சாஸ்திரிகள், "ஜய ஜய தேவி தயாலஹரி" என்ற கீதத்தை ஆரம்பித்துச் சொல்லிக் கொடுத்தார். சாருவும் சொல்லிக் கொண்டு வந்தாள். ஆனால், பாதிப் பாட்டில் திடீரென்று அவள் நிறுத்திவிட்டு, "தாத்தா! தாத்தா! கொஞ்சம் இரு, தாத்தா வர்றேன்!" என்று கூறிவிட்டு, வாசலில் ஓடினாள்.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "தாத்தா! இங்கே வாயேன், சீக்கிரம் வாயேன்" என்று சாரு வாசலிலிருந்து கூவுவதைக் கேட்டு, சாஸ்திரிகள் குடிசைக்கு வெளியே வந்தார்.

"பார்த்தாயா, தாத்தா! நம்மாத்துச் செடியிலே ரோஜாப்பூ பூத்திருக்கு. நேத்தி சாயங்காலம் மொட்டாயிருந்தது. இப்பப் பூவாய்ப் போயிடுத்து, தாத்தா!" என்று கூச்சலிட்டாள்.

சம்பு சாஸ்திரி, வைகறையின் மங்கிய வெளிச்சத்தில், அந்த மலர்ந்த ரோஜாவையும், சாருவின் மலர்ந்த முகத்தையும் மாறி மாறிப் பார்த்துச் சந்தோஷப்பட்டார்.

சாரு, பூவைத் தொடுவதற்குப் போனாள். கையை சுருக்கென்று முள் குத்தவே, "அப்பப்பா!" என்று கையை உதறினாள்.

"தாத்தா! நேத்திக்கு எங்க டீச்சர் கூடச் சொன்னா, ரோஜாப் பூவிலே முள் இருக்காப்பலே, சுகத்திலேயும் கஷ்டம் இருக்கும்னு. ஸ்வாமி என்னத்துக்காக, தாத்தா, இவ்வளவு அழகான பூச்செடியிலே கொண்டு போய் முள்ளை வைச்சிருக்கார்?" என்று கேட்டாள்.

-----------------

4.2. உமாராணி விஜயம்

சென்னைப் பட்டணம் சில நாளாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து ஸ்ரீமதி உமாராணி என்னும் சீமாட்டி சென்னைக்கு விஜயம் செய்யப் போகிறாள் என்னும் செய்தி தான் அதற்குக் காரணம். டிராம் வண்டிகளிலும், மோட்டார் பஸ்களிலும், கிளப்புகளிலும், காப்பி ஹோட்டல்களிலும், பீச் மணற் கரையிலும், பார்க் புல் தரையிலும் இன்னும் ஜனங்கள் எங்கெங்கே கூடுகிறார்களோ, அங்கெல்லாம், உமாராணியின் வரவைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

"ஏன், ஸார்! என்னிக்கு வர்றாளாம்?"

"அடுத்த புதன்கிழமை வர்றதாகப் பத்திரிகையிலே போட்டிருக்கு."

"எந்த ரயில்லே-பம்பாய் எக்ஸ்பிரஸிலேதானே?"

"நான் சொல்றேன், கேளுங்கோ! அவள் சென்ட்ரல் ஸ்டேஷனிலே வந்து இறங்கமாட்டா. சென்ட்ரல்லே இறங்கினா, கூட்டம் தாங்காது. பேஸின் பிரிட்ஜிலேயே இறங்கிக் காரிலே போயிடுவா."

"கார்ப்பரேஷனிலே உபசாராம் நடக்கிறதோ இல்லையோ?"

"ஆகா! மீட்டிங் நடந்து தீர்மானங்கூடப் பாஸாயிடுத்தே!"

இந்தச் சமயத்தில், அந்த டிராமிலோ பஸ்ஸிலோ உலக விஷயங்களை அதிகமாய்க் காதிலே போட்டுக் கொள்ளாத மனுஷர் யாராவது இருந்தால், "ஏன், ஸார்! யாரோ வர்றா, வர்றா என்கிறயளே? அது யாரு?" என்று கேட்டு வைப்பார்.

"யாரு, உமாராணிதான்" என்று பதில் வரும்.

"உமாராணியா! அவள் யார், ஐயா, அப்படி ஒருத்தி கிளம்பியிருக்காள்? ஸினிமா ஸ்டாரோ?"

உடனே கலகலவென்று சிரிப்பு.

"என்ன, சிரிக்கறயளே? அவள் யாருதான் பின்னே? காங்கிரஸிலே சேர்ந்தவளோ?"

"என்ன, ஐயா, நிஜமா உமாராணி யாருன்னு தெரியாமயா கேட்கிறீர்?"

"தெரியாமல் தான் கேட்கிறேன். பின்னே, தெரிஞ்சால் கேட்பாளோ?"

"உமாராணிங்கறவள் பம்பாயிலே ஒரு பெரிய பணக்காரி. அவள் நம் ஊர் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறாள்."

"என்ன? என்ன?"

"அவரைக் கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ, ஐயா! மூர்ச்சை போட்டு விழுந்துடப் போறார்."

"என்ன பரிகாசம் பண்றயளா? அஞ்சு லட்சம் ரூபாயாவது, கொடுக்கவாவது?"

"கொடுக்கவாவதுன்னா? - கொடுத்திருக்காளே!"

"ஐம்பதினாயிரமாயிருக்கும்; பத்திரிகைக்காரன் ஒரு பூஜ்யத்தைச் சேர்த்துப் போட்டிருப்பன்."

"அஞ்சு லட்சம்னு இலக்கத்திலும் போட்டு, எழுத்திலும் எழுதியிருக்கு. அப்புறம்?"

"நம்பறதுக்கு முடியாமேன்னா இருக்கு? அஞ்சு லட்சம்! அடேயப்பா!"

"அஞ்சு லட்சமான்னு வாயைப் பிளந்துடறீரே, ஐயா! நமக்குன்னா அஞ்சு லட்சம் பெரிது! பம்பாயிலே அஞ்சு லட்சம் என்கிறது அஞ்சு ரூபாய் மாதிரி."

"ஆமாமாம்; நம் ஊரிலே பெரிய ரூபாய்ன்னா ஓர் ஆயிரம்; அங்கே, ஒரு லட்சம்."

---------------------

4.3. 'ஸ்ரீமதி சாருமதி தேவி'

"வலது கையால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி கொடுக்க வேண்டும்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? இது எவ்வளவு அருமையான ஆப்த வாக்கியம் என்பதை உமாராணி வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொண்டாள். புகழ்ச்சிக்கு ஆசைப் பட்டுத் தர்மம் செய்வதில் பலன் குறைவு என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் உண்மைக் கருத்து. ஆனால், வேறொரு விதத்திலும் அது மிகவும் உபயோகமான உபதேசமாகும். இந்த நாளில் ஒருவர் செய்யும் தர்மம் பிரசித்தியாகிவிட்டால் அதைக் காட்டிலும் அவருக்கு உபத்திரவம் உண்டாக்கக் கூடியது வேறொன்றுமில்லை. அப்புறம் அவருக்கு மனநிம்மதி என்பதே இல்லாமற் போய் விடுகிறது. இந்த ஏழைத் தேசத்தில் தர்மத்தை எதிர்பார்க்கும் ஸ்தாபனங்களும், காரியங்களும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நடத்துவோரெல்லாம் மேற்படி தர்மப் பிரபுவைத் தேடி வருகின்றனர்.

'இவர்தான் இந்தப் பெரிய தர்மத்தைச் செய்தாரே வேறு தர்மங்களுக்கு வேறு மனுஷர்களைத் தேடிப் போவோம்' என்று யாரும் நினைப்பதில்லை. ரயிலில் ஏற்கெனவே கூட்டமாயுள்ள வண்டியிலேயே இன்னும் கூட்டமாக ஜனங்கள் ஏறுவதைப் பார்த்திருக்கிறோமல்லவா? அந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்குப் பணம் கொடுத்தவரிடமேதான் மற்றவர்களும் வருகிறார்கள். உண்மையான தர்மத்தை நடத்துவோரைத் தவிர, போலி மனிதர்களும் மோசக்காரர்களும் வருகிறார்கள். வந்து அவருடைய பிராணனை வாங்கிவிடுகிறார்கள். அந்தத் தர்மப் பிரபு இல்லையென்று சொன்னாலோ வருகிறவர்களுக்குக் கோபம் பொங்குகிறது. "ஒரு நாளும் கொடுக்காத மகாலக்ஷ்மிதான் இன்றைக்கும் இல்லை என்று சொல்லிவிட்டாள், தினமும் கொடுக்கிற மூதேவி, உனக்கென்ன வந்தது?" என்ற கொள்கையின்படி, தர்மம் செய்தவர்களுக்கு முடிவில் எப்போதும் வசவுதான் கிடைக்கிறது.

உமாராணியின் அநுபவமும் இந்த மாதிரிதான் இருந்தது. 'அடாடா! நாம் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு ஐந்து லட்சம் கொடுத்ததை ஏன் விளம்பரப்படுத்தினோம்? அநாமதேயமாகக் கொடுத்திருக்கக் கூடாதா?' என்று அடிக்கடி அவள் எண்ணமிட்டாள்.

சென்னையில் எவ்வளவு தர்ம ஸ்தாபனங்கள், பொது நலக் கழகங்கள் உண்டோ அவ்வளவிலிருந்தும் நன்கொடை கோரி அவளுக்குக் கடிதங்கள் வந்தன. ஒரு நகரத்தில் இவ்வளவு அநாதாசிரமங்களும், இலவசக் கல்வி ஸ்தாபனங்களும், மாதர் முன்னேற்றக் கழகங்களும், அமெச்சூர் நாடக சபைகளும், சங்கீத சபாக்களும், ஜீவகாருண்ய சங்கங்களும் இருக்கக் கூடுமென்று உமாராணி கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தினந்தோறும் புதிய புதிய ஸ்தாபனங்களிலிருந்து அவளுக்குக் கடிதங்கள் வந்து குவிந்தன. திறப்பு விழாக்கள், வருஷபூர்த்திக் கொண்டாட்டங்கள் முதலியவற்றுக்கு அவளுக்கு வந்த அழைப்புக் கடிதங்களுக்கோ அளவில்லை. கடிதங்களை அனுப்பிவிட்டு, அந்தந்த ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் உமாராணியை நேரில் பார்ப்பதற்கும் வந்தார்கள். உண்மையாக வந்தவர்களுடன் போலி மனிதர்களும் வந்தார்கள். சிலர், ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு உமாராணியுடன் பேசிவிட்டு வரலாமென்று வந்தார்கள்.

இம்மாதிரி ஒரு இளம்பெண் - பெரிய பணக்காரி - நவநாகரிகத்தில் சிறந்தவள் - அழகோ சொல்ல வேண்டாம் - ஒரு புன்சிரிப்புக்கு உலகம் மூன்றையும் கொடுக்கலாம் - இப்படிப்பட்டவள் புருஷன் முதலிய தொந்தரவு ஒன்றுமில்லாதவளாய், சுதந்திரமாயிருக்கிறாள் என்றால், அவளைப் பார்ப்பதற்கும் அவளுடன் சிநேகம் செய்து கொள்வதற்கும் இஷ்டப்படுகிறவர்கள் ஒரு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ பேர் இருப்பார்கள் அல்லவா?

ஆகவே, உமாராணியின் பங்களாவில் எப்போதும் வருகிறவர்களும் போகிறவர்களுமாய் ஜே ஜே என்று இருந்தது.

------------------

4.4. பசுவும் கன்றும்


அட்வகேட் ஆபத்சகாயமய்யர் தமக்கு இந்த மாதிரி அதிர்ஷ்டம் வரப்போகிறதென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உமாராணி இப்போது குடியிருந்த பங்களா ஆபத்சகாயமய்யருடைய கட்சிக்காரன் ஒருவனுக்குச் சொந்தமானது. அந்தப் பங்களாவுக்கு வாடகைப் பத்திரம் எழுதுவது சம்பந்தமாக, அவர் உமாராணியைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவருடைய நல்ல சுபாவத்தைக் கண்ட உமாராணி அவரையே தன்னுடைய மற்ற காரியங்களையும் கவனிப்பதற்கு வக்கீலாக அமர்த்திக் கொண்டாள். இதன் காரணமாக ஆபத்சகாயம் அடைந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. 'உலகத்திலே பெண்ணாய்ப் பிறந்தால் உமாராணியைப் போல் பிறக்கவேண்டும்! வக்கீலாயிருந்தால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவனாயிருக்க வேண்டும் என்பது தற்சமயம் அவருடைய தீர்ந்த அபிப்பிராயமாயிருந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கிடைப்பதாயிருந்தால் கூடத் தயங்காமல் மறுத்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜு ஆகிவிட்டால், உமாராணிக்கு வக்கீலாயிருக்கும் பாக்கியத்தை இழந்து விட வேண்டுமல்லவா? இதைக் காட்டிலும் அது என்ன ஒசத்தி?

அன்று காலை உமாராணி டெலிபோனில் கூப்பிட்டதன் மேல் ஆபத்சகாயமய்யர் அவளுடைய பங்களாவுக்கு வந்திருந்தார்.

"ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று உமாராணி கேட்டாள்.

"இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை; நானும் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார் வக்கீல்.

"உங்க கிட்டச் சொல்லி ஒரு மாதம் போலிருக்கிறதே; இன்னுமா கண்டுபிடிக்க முடியலை?" என்றாள் உமா.

ஆபத்சகாயமய்யர் புன்னகை புரிந்தார்.

"என் மேலே தான் தப்பு என்று உங்கள் எண்ணம் போல் இருக்கு. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறாப் போலே, சென்னைப் பட்டணத்திலே சம்பு சாஸ்திரி எங்கே இருக்கார் என்று கேட்டால் யாருக்குத் தெரிகிறது? ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை" என்றார்.

இதைக் கேட்ட உமாராணி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஏதோ பழைய ஞாபகங்கள் அவள் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததாக முக பாவத்திலிருந்து தெரிந்தது.

பிறகு, தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, "என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டாள்.

"ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை என்றேன்."

"ஓர் அடையாளங் கூடத்தான் சொல்லியிருக்கிறேனே? ஆறு ஏழு வயதிலே அவரோட ஒரு குழந்தையிருக்கும்னு சொல்லலையா?" என்றாள் உமா.

அதற்கு வக்கீல், "இந்த அடையாளம் போதுமா அம்மா? முதலிலே சம்பு சாஸ்திரியைக் கண்டுபிடிச்சின்னா, அப்புறம் அவர்கிட்டக் குழந்தை இருக்கான்னு பார்க்கணும்? எனக்குத் தெரிந்த வரையிலே, இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணிப் பார்க்கலாம்" என்றார்.

"வக்கீல் ஸார்! இந்த யோசனை எனக்குத் தெரியாதுன்னா நினைச்சுட்டேள்; பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணக்கூடாது. பண்ணினால், யார் விளம்பரம் பண்ணினா, எதுக்காகப் பண்ணினா என்கிற கேள்வியெல்லாம் கிளம்பும். நான் யாரைத் தேடறேனோ, அவருக்கு நான் தேடுகிறேன் என்கிற விஷயம் தெரியக் கூடாது. அப்படித் தெரியாமல் அவரைக் கண்டு பிடிக்கிறதற்கு வழி என்ன என்று தான் பார்க்கவேணும். இந்தச் சென்னைப் பட்டணத்திலே அவர் இல்லாவிட்டால், வேறு எங்கே இருந்தாலும் கண்டு பிடித்தாக வேணும்" என்றாள் உமா.

-------------------

4.5. முல்லைச் சிரிப்பு

"நான் தான் சாருமதி" என்று சாரு சொன்னபோது அவளுடைய முகத்தில் குறுநகை தவழ்ந்தது. அதைப் பார்த்த உமாராணியின் முகத்திலும், சற்று முன்பு தோன்றிய சோகக் குறி மறைந்து புன்னகை மலர்ந்தது.

"அடி சமர்த்து! இங்கே வா! எல்லாரும் கிட்ட வாங்கோ!" என்றாள் உமா.

குழந்தைகள் எல்லாம் அவள் அருகில் வந்து சூழ்ந்து கொண்டன. அவர்களில் ஒரு பெண் "மாமி! உங்க வீட்டு தர்வான் இருக்கானே அவன் வந்து... எங்க மேலே..." என்று புகார் சொல்ல ஆரம்பித்தாள். சாரு உடனே அவளுடைய வாயைப் பொத்தினாள்!

"ஏம்மா அவளுடைய வாயைப் பொத்தறே! அவள் சொல்ல வந்ததைச் சொல்லட்டுமே?" என்றாள் உமா.

அதற்குச் சாரு, "இல்லை, மாமி! உங்க தர்வான் விளையாட்டுக் கோசறம் எங்க மேலே நாயை அவிழ்த்து விடறேன்னு சொன்னான். அதைப் போய் லலிதா உங்க கிட்டப் புகார் சொல்றாளே, அது சரியா?" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டுச் சாரு கடைக் கண்ணால் தர்வானைப் பார்த்தாள். அந்த தர்வானுடைய கடுவம் பூனை முகத்தில் கூட அப்போது புன்னகை தோன்றியது.

உமா அவனைப் பார்த்து, "ஏண்டா! குழந்தைகள் மேலேயா நாயை அவிழ்த்துவிடறேன்னு சொன்னே? சீ, போ!" என்றாள். தர்வான் வெட்கித் தலை குனிந்து கொண்டு கீழே சென்றான்.

பிறகு உமா, "எல்லாரும் எங்கேயம்மா வந்தேள்?" என்று கேட்டாள்.

அதற்கு லலிதா, "மாமி! எங்கள் பள்ளிக்கூடத்து பில்டிங் பண்டுக்காக ஒரு டிராமா போடப் போகிறோம். அதுக்கு டிக்கெட் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், அரை ரூபாயில் இருக்கு. உங்களுக்கு எது வேணுமோ அது வாங்கிக்குங்கோ" என்றாள்.

அப்போது சாரு, "ஆனா, உங்களைப் பார்த்தால், நீங்க ஓர் இரண்டு ரூபாய் டிக்கெட்டுதான் வாங்கிக்குவேள் என்று எனக்குத் தோணுகிறது" என்றாள்.

உமா சாருவைப் பார்த்து, விஷமமாக 'அடே அப்பா! இரண்டு ரூபாய்க்கா டிக்கெட் வாங்கணும்? அப்படி என்ன அதிசயமான டிராமா போடப்போறேள்?" என்று கேட்டாள்.

சாரு, "கிருஷ்ண லீலா போடப் போறோம். நான் தான் கிருஷ்ண வேஷம். இப்ப என்னமோ போலே இருக்கேனேன்னு நினைக்காதீங்கோ. வேஷம் போட்டுண்டு வந்தேன்னா நீங்க பிரமிச்சுப் போயிடுவேள்" என்றாள்.

உமாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், சிரித்தால் அந்தக் குழந்தை, பரிகாசம் என்று நினைத்துக் கொண்டு வருத்தப்படப் போகிறதென்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"இதுவரையில் எத்தனை டிக்கெட் வித்திருக்கேள்?" என்று கேட்டாள்.

சாரு, "ஒண்ணுகூட விக்கலை மாமி! எல்லாரும் ஏதாவது வேலையிருக்கு, கீலையிருக்குன்னு சாக்குப் போக்குச் சொல்றா. குழந்தைகள் டிராமாதானேன்னு அவாளுக்கு அலட்சியம் போலேயிருக்கு" என்றாள். இப்படிச் சொன்னபோது சாருவின் குழந்தை உள்ளத்தில் உண்மையாகவே துக்கம் பொங்கி வந்தது. அவள் கண்ணில் ஜலம் துளித்தது.

உமாவுக்கு இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உடனே குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு முத்தமிட்டாள்.

"அவா கிடக்கா, நீ வருத்தப்படாதே, கண்ணு! பெரியவாள்ளாம் சுத்த அசடுகள். நீங்க தான் சமத்து. உங்ககிட்ட இருக்கிற டிக்கெட்டையெல்லாம் கொடுத்துடுங்கோ. நானே வாங்கிக்கிறேன். நீங்க இந்த வெயில்லே அலையாமே வீட்டுக்குப் போங்க" என்றாள்.

----------

4.6. பூர்வ ஞாபகம்

குழந்தைகள் போன பிறகு உமாவுக்கு அடிக்கடி அவர்களுடைய ஞாபகம் வந்து கொண்டிருந்தது. முக்கியமாக, சாருவின் மலர்ந்த முகமும், கலீரென்ற சிரிப்பும், வெடுக்கென்ற பேச்சும், கண்ணீர் ததும்பிய கண்களும் உமாவின் மனக்கண்ணின் முன்னால் எப்போதும் தோன்றிக் கொண்டிருந்தன.

அந்தக் குழந்தையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று இருந்தது. டிக்கெட் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். நாடகம் நடப்பதற்கு இன்னும் மூன்று நாள் இருப்பது தெரிய வந்தது. 'அடாடா! இன்று ராத்திரியே இருக்கக் கூடாதா?' என்று தோன்றிற்று.

சாருவின் பேச்சுக்களும் செய்கைகளும் ஒவ்வொன்றாய் உமாராணிக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன. அவை அவ்வளவு தூரம் தன்னுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டன என்பது உமாவுக்கு அதிசயமாயிருந்தது. குழந்தை எதிரில் இருந்தபோதும், அவள் போனபோதுங்கூட அவ்வளவு தெரியவில்லை. அவள் போய்விட்ட பிறகு தான் தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்து விட்டாள் என்பது நன்றாய்த் தெரிந்தது.

குழந்தை தான் என்ன சமர்த்து! என்ன சூடிகை! முகத்திலே எவ்வளவு களை! எவ்வளவு சாதுர்யமாய்ப் பேசுகிறது! - இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கே சமர்த்து அதிகம்.

அந்த வயசில் தான் எப்படி இருந்தாள் என்பதை உமா யோசித்துப் பார்த்தாள். அதை நினைக்கவே அவளுக்கு வெட்கமாயிருந்தது. கிழிச்சல் பாவாடையைக் கட்டிக்கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்து வீடு கட்டி விளையாடியதெல்லாம் ஞாபகம் வந்தது. சிவராத்திரிக்குக் கண் விழிப்பதற்காக, "சீசந்தி அம்பாரம் சிவராத்திரி அம்பாரம்" என்று பாடிக் கொண்டு வீடு வீடாகப் போய் எண்ணெய் தண்டியதும் நினைவு வந்தது. அப்போது தனக்கு அ, ஆ என்று எழுதக் கூடத் தெரியாது. இந்தக் காலத்துக் குழந்தைகளோ ஏழு, எட்டு வயதில் டிராமா போடுகின்றன!

ஆமாம்; சாருவுக்கு ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். ஆறு, ஏழு, வயது! ஆறு - ஏழு-! அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயது தான் இருக்கும்.

உமாவுக்கு, சொப்பனத்தில் கண்டது போல், ஏழு வருஷத்துக்கு முந்தி நடந்த அந்த அதிசயச் சம்பவம் ஞாபகம் வந்தது.

ஒரு யுவதி கையில் ஒரு சின்னஞ் சிறு குழந்தையுடன் சென்னை நகரின் வீதிகளில் வெறி பிடித்தவள் போல் ஓடுகிறாள். கொஞ்ச நேரம் வரையில் அவள் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய தேகத்துக்கும் பலம் அளித்து வருகிறது. திடீரென்று அவளுடைய சக்தி குன்றுகிறது; மூச்சு வாங்குகிறது. இனிமேல் ஓடினால் உயிர் போய் விடுமென்று தோன்றுகிறது.

அவளுக்கு உயிரை விடுவதைப் பற்றிக் கவலையில்லை. உண்மையில் அவள் மரணத்தை மனப்பூர்வமாக வேண்டுகிறாள். ஆனால், தனக்குப் பின்னால் அந்தக் குழந்தையை இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போக மட்டும் மனம் வரவில்லை. ஆகவே, இரண்டு பேரும் ஏக காலத்தில் மரணமடைய வேண்டுமென்று தீர்மானிக்கிறாள். ஜன சஞ்சாரமில்லாத ஜலப் பிரதேசத்தைத் தேடிச் செல்கிறாள்.

உலகந்தான் எவ்வளவு ஆச்சரியமானது! எப்போது நாம் யாராவது மனுஷ்யர்களைப் பார்க்க மாட்டோ மா, யாரேனும் வந்து உதவி செய்யமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கிறோமோ, அப்போது நம் கண்ணில் யாரும் எதிர்படுவதில்லை. கண்ணில் எதிர்ப்படுகிறவர்கள் கூட நம்மருகில் வராமல் தூரமாய் ஒதுங்கிப் போகிறார்கள். ஆனால், எப்போது நாம் ஒருவரையும் பார்க்க வேண்டாம். ஒருவர் கண்ணிலும் படவேண்டாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோமோ, அப்போது எங்கிருந்தோ மனுஷ்யர்கள் வந்து சேர்கிறார்கள்.

-------------------------

4.7. புனர் ஜன்மம்

அன்று சாயங்காலம் சாரு சாவடிக் குப்பத்துக்குத் திரும்பியபோது குதித்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள். "தாத்தா! தாத்தா! இன்னிக்கு ஒரு சமாசாரம் நடந்தது; உனக்கு அதைச் சொல்லவே மாட்டேன்" என்றாள்.

"நீ சொல்லாமே போனா, நானும் கேட்கவே மாட்டேன்" என்றார் சாஸ்திரி.

"நீ கேக்கா போனா, நான் அழுவேன்" என்றான் சாரு.

அவரது மடியில் உட்கார்ந்து கொண்டு, "தாத்தா! இன்னிக்கு ஒரு மாமியைப் பார்த்தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி" என்று சொல்லிவிட்டு, சற்று மெதுவான குரலில், "அந்த மாமி வந்து என்னைக் கட்டிண்டு முத்தமிட்டா, தாத்தா!" என்றாள்.

"அந்த மாமி யார், சாரு? அவள் பேர் என்ன?" என்று சாஸ்திரி கேட்டார்.

"அவ ரொம்பப் பணக்கார மாமி தாத்தா! பணக்காரா நல்லவாளா இருக்க மாட்டான்னு நீ சொல்லுவயோன்னோ? அது சுத்தப் பொய்!"

"நான் அப்படி எங்கேயம்மா சொல்லியிருக்கேன்? நல்ல மனுஷாளைக் கூடப் பணம் கெடுத்துடும்னுதானே சொன்னேன்? அதனாலே, பணக்காரா எல்லாம் கெட்டவான்னு அர்த்தமா!"

"அதென்னமோ, நாங்க இன்னிக்குப் பார்த்த மாமி ரொம்ப நல்ல மாமி. எங்க கிட்ட இருந்த டிக்கெட் அவ்வளவையும் வாங்கிண்டு, 'அலையாமே வீட்டுக்குப் போங்கோ' அப்படின்னா, தாத்தா! முப்பது ரூபாய் டிக்கெட், தாத்தா!"

"யாரம்மா, அவ்வளவு தாராள மனஸுடையவாள் இந்த ஊரிலே? அவ பேரென்ன?"

"அவ பேரு ஸ்ரீமதி உமாராணியாம்."

இந்தப் பெயர் சம்பு சாஸ்திரி காதிலும் விழுந்திருந்தது. ஒரு தர்மத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த பெண்மணியின் பெயர் காதில் படாமல் இருக்க முடியுமா?

"ஓஹோ! சரிதான்; அந்த அம்மா பம்பாயிலிருந்து வந்திருக்கிறவள். அதனாலே தான் அவ்வளவு தாராளம். இந்த ஊரிலே அந்த மாதிரி யார் இருக்கா? அவ்வளவு பணந்தான் யாரிடத்திலே இருக்கு" என்றார்.

பிறகு, சாரு அன்று நடந்ததெல்லாம் விவரமாகச் சொன்னாள். அவள் கூறியதில் சாஸ்திரியின் மனத்தில் நன்கு பதிந்த விஷயம், உமாராணி குழந்தையை அணைத்து முத்தமிட்டது தான். குழந்தை அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் சந்தோஷப்பட்டாள். 'ஐயோ! இந்தக் குழந்தை, அம்மாவுக்காக எப்படி ஏங்கிப் போயிருக்கிறது?' என்று சாஸ்திரி எண்ணினார். ஒரு வேளை தான் செய்ததெல்லாம் தவறோ? தான் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தது பிசகோ? உடனே போலீஸிலே கொண்டுபோய்க் கொடுத்து அதன் தாயாரைக் கண்டு பிடித்துச் சேர்க்கும்படி சொல்லியிருக்க வேண்டுமோ?

இந்தக் குழந்தையின் காரணமாகத் தம்முடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட மாறுதலைச் சாஸ்திரி எண்ணிப் பார்த்தார். தேச யாத்திரை செய்ய வேண்டும், ஊர் ஊராய்ப் போய் இந்தப் புண்ணிய பூமியிலுள்ள க்ஷேத்திரங்களையெல்லாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆசை நிறைவேறும் என்று தோன்றிய சமயத்தில், இந்தக் குழந்தையைப் பராசக்தி அளித்தாள். அதன் காரணமாக அவர் சாவடிக் குப்பத்திற்கு வரவும் இங்கேயே தங்கவும் நேர்ந்தது.

இது மட்டுமா? இந்தக் குழந்தை காரணமாகவே, அவர் நெடுங்கரையையும், கல்கத்தாவையும் அடியோடு மறந்திருந்தார். சாவித்திரி குழந்தையாயிருந்த போது அவளை வளர்ப்பதற்கென்று மங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், பிறகு, 'ஐயோ! எப்படிப்பட்ட தவறு செய்தோம்?' என்று பல முறை வருந்தியதும் அவர் ஞாபகத்தை விட்டு அகல முடியாதல்லவா? எனவே, இந்தக் குழந்தையை அந்தக் கதிக்கு ஆளாக்கக் கூடாதென்று தீர்மானித்திருந்தார். 'வேண்டாம்; மங்களமும் அவள் தாயாரும் சௌக்கியமாயிருக்கட்டும். நாம் இல்லை என்பதற்காக அவர்கள் ஒன்றும் உருகிப் போக மாட்டார்கள். நல்ல வேளையாய், அவர்கள் நிராதரவாக இல்லை; சாப்பாட்டுக்குத் துணிக்குப் பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறோம். எப்படியாவது அவர்கள் சௌக்கியமாயிருக்கட்டும்.'

----------------

4.8. கதம்பக் கச்சேரி


"குழந்தைகள் டிராமா தானேன்னு அவாளுக்கெல்லாம் அலட்சியம் போல் இருக்கு" என்று சாரு கண்ணில் நீர் ததும்ப உமாராணியிடம் சொன்னாளல்லவா? அவள் சொன்னது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், மியூஸியம் தியேட்டரில் அன்று சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கு குழந்தை சொன்னதில் நம்பிக்கை ஏற்படாது. அவ்வளவு கனதனவான்களும் சீமாட்டிகளும் தியேட்டரில் வந்து நிறைந்திருந்தார்கள்.

இவ்வாறு கூட்டம் சேர்ந்ததற்குக் காரணம் குழந்தைகளின் கதம்பக் கச்சேரியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மட்டுமல்ல என்பதைச் சொல்ல வேண்டும். அத்துடன் உமாராணியைப் பார்க்கலாமென்ற ஆசையும் சேர்ந்திருந்தது. உமாராணி இருபது டிக்கெட் வாங்கிக் கொண்ட செய்தியைக் குழந்தைகள் போய் வாத்தியாரம்மாளிடம் சொல்ல, அவள் பள்ளிக்கூட நிர்வாகிகளிடம் சொல்ல, அவர்கள் நேரில் போய் உமாராணியை அழைத்துவிட்டு வந்ததோடல்லாமல் நகரில் பிரஸ்தாபமும் செய்து விட்டார்கள். இந்தச் செய்தி பரவிவிடவே, அன்று மாலை மியூஸியம் தியேட்டரில் சென்னை நகரின் பிரசித்தி வாய்ந்த ஸ்திரீ புருஷர்கள் பெரும்பாலோரைக் காணும்படியிருந்தது.

ஐந்து மணிக்குக் கச்சேரி ஆரம்பமாக வேண்டும். ஆனால், ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆகியும் ஆரம்பமாகவில்லை. சாதாரணமாய், இந்த மாதிரி தாமதமானால், சபையோர் கைதட்டி ஆரவாரிப்பது வழக்கம். இன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை. "இன்னும் உமாராணி வரவில்லை; அவள் வந்தவுடன் ஆரம்பிப்பார்கள்" என்று சபையோர் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவராவது மேடைப் பக்கம் திரை தூக்குகிறார்களா என்று கவனிக்கவில்லை. எல்லாரும் வாசற் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக, வாசலில் ஏதோ கலகலப்புச் சப்தம் கேட்டது. அடுத்த நிமிஷம், பள்ளிக்கூடத்தின் முக்கிய நிர்வாகியாகிய ராவ்சாகிப் கஜகுல ஆஜாநுபாகு அவர்கள் வழி காட்டிக் கொண்டு வர, பின்னால் வக்கீல் ஆபத்சகாமய்யர் தொடர, உமாராணி உள்ளே பிரவேசித்தாள். சொல்லி வைத்தாற்போல் சபையில் எல்லாரும் கரகோஷம் செய்தார்கள். உமாராணி கும்பிட்டுக் கொண்டே போய், முன்னால் தனக்காகப் போடப்பட்டிருந்த தனி ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.

உடனே திரை தூக்கப்பட்டது. "ஜன கண மன" என்ற தேசிய கீதத்துடன் கதம்பக் கச்சேரி ஆரம்பமாயிற்று.

புரோகிராமில் மொத்தம் ஒன்பது அங்கங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றுள் மூன்றில் சாருமதியின் பெயர் காணப்பட்டது. முதலில், சாருமதியின் பரத நாட்டியம். பிறகு, கிருஷ்ண லீலா நாடகத்தில் சாருமதி கிருஷ்ண வேஷம். கடைசியில், சாருமதியும் யமுனாவும் ராதா கிருஷ்ண நடனம்.

ஒவ்வொரு தடவையும் சாரு மேடைக்கு வரும் போதெல்லாம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருக்கும். சபையோரின் கவனத்தை அவள் அவ்வாறு கவர்ந்து விடுவாள். சாரு உள்ளே சென்றதும் சபையில் கலகலப்பு ஏற்படும். பெரும்பாலோர் உமாராணி என்ன செய்கிறாள் என்பதைக் கவனிக்கத் தொடங்குவார்கள். இதற்காகச் சிலர் தலையைத் தூக்கிப் பார்ப்பதும், எழுந்து நிற்பதும், பின்னாலிருபப்வர்கள் அவர்களை அதட்டி உட்காரச் செய்வதும் சர்வ சாதாரணமாயிருந்தது.

ஆனால், உமாவோ இவை ஒன்றையும் கவனிக்கவில்லை. குழந்தை சாருவின் பரத நாட்டியத்தைப் பார்த்ததுமே அவளுக்கு மெய்ம்மறந்து போய்விட்டது. நாட்டியம் முடிந்ததும் உமா, பக்கத்திலிருந்த வக்கீல் ஆபத்சகாயமய்யரைப் பார்த்து, "இந்தக் குழந்தை எவ்வளவு நன்றாய் நாட்டியம் ஆடுகிறது, பார்த்தீர்களா? முகத்தில் என்ன களை! இந்தக் குழந்தை யார் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்.

"எனக்குத் தெரியாதே?" என்றார் வக்கீல். பிறகு "நீங்கள் மெட்ராஸுக்குப் புதிசல்லவா? அதனாலே அப்படித் தோணுகிறது. இந்த மாதிரி குழந்தைகள் நாட்டியம் செய்யறது ரொம்ப சாதாரண விஷயம். பாருங்கோ, என்னுடைய குழந்தைக்குக் கூட நாட்டியத்திலே ரொம்ப 'டேஸ்ட்'. சொல்லிக் கொடுத்தா நன்னா வரும் என்று எல்லாரும் சொல்றா. ஆத்திலே கூட அடிக்கடி டான்ஸ் டீச்சர் வைச்சுச் சொல்லிக் கொடுக்கணுமின்னு சொல்றா. ஆனால், எனக்கென்னமோ இந்தப் பைத்தியக்காரத்தன மெல்லாம் ஒண்ணும்
பிடிக்கிறதில்லை" என்றார்.

உமாராணி பிற்பாடு வக்கீலிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்கவில்லை. மேடை மீதே கவனம் செலுத்தத் தொடங்கினாள். சாரு மேடை மீது இல்லாத சமயங்களில் அவள் எப்போது வருவாள் என்றே அவளுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவள் வந்துவிட்டாலோ உமாவுக்குப் பரவசமாயிருந்தது. அவளுடைய ஒவ்வொரு சைகையும் பேச்சும் உமாவுக்கு மயிர்க் கூச்சம் உண்டாக்கிற்று.

-----------------------

4.9. பராசக்தி குழந்தை


அன்றிரவு உமா குழந்தையின் நினைவாகவே இருந்தாள். தூக்கத்தில் சாருவைப் பற்றித்தான் கனவு. மறுநாள் பொழுது விடிந்த பிறகும் அந்த ஞாபகம் மாறவில்லை. இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்ற பாக்கியசாலிகள் யாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். 'வக்கீலை விசாரிக்கச் சொன்னோமே, அவர் விசாரித்தாரோ என்னமோ தெரியவில்லையே?' என்று யோசித்தாள். காலை ஒன்பது மணி வரையில் தகவல் ஒன்றும் வராமல் போகவே, டெலிபோனை எடுத்து வக்கீலைக் கூப்பிட்டாள்.

வக்கீல், "யாரு? - ஓஹோ! நீங்களா? - நமஸ்காரம்" என்றார்.

"நேற்று ராத்திரி டான்ஸு பண்ணின குழந்தையைப் பற்றி விசாரிக்கச் சொன்னேனே, விசாரிச்சீர்களா?" என்று உமா கேட்டாள்.

"நீங்கள் ஒரு காரியம் சொன்னால் அதை நான் செய்யாமல் இருப்பேனா?" என்றார் வக்கீல்.

"அப்படின்னா ஏன் உடனே தெரிவிக்கலை?" என்றாள் உமா.

"இல்லை; வந்து... விஷயம் அவ்வளவு அவசரமாகத் தோணலை. அதனாலேதான் மத்தியானம் வந்து நேரில் தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன்."

"போகட்டும்; இப்பத்தான் சொல்லுங்கள்."

வக்கீல் தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டது.

"என்ன ஸார்! ஆர்ப்பாட்டம் பலமாயிருக்கே. இதுவும் கேஸ் விசாரணையா என்ன? நிஜத்தைச் சொல்றதுக்கு இவ்வளவு யோசனை என்னத்திற்கு?"

"யோசனை ஒண்ணுமில்லை - வந்து பழம் நழுவிப் பாலிலே விழுந்ததுன்னு கேட்டிருக்கிறீர்களோல்லியோ?..."

"அதுக்கென்ன இப்போ வந்தது?"

"அந்த மாதிரி - நேற்று ராத்திரி நீங்க போனவுடனே தியேட்டரிலேயே விசாரிச்சுட்டேன். விசாரிச்சதிலே, ஒரு கல்லிலே இரண்டு பழம் விழுந்தாப்பலே ஆச்சு."

"விஷயத்தைச் சொல்லுங்கோ, ஸார்!"

"அதுதானே சொல்லிண்டிருக்கேன். நீங்க முன்னே சம்பு சாஸ்திரின்னு ஒருத்தரைப் பத்தி விசாரிக்கச் சொன்னீர்களோ, இல்லையோ?"

"ஆமாம்?" என்று உமா சொன்னபோது அவள் குரல் கொஞ்சம் நடுங்கிற்று.

"குழந்தையைப் பற்றி விசாரிச்சதிலே சம்பு சாஸ்திரியையும் கண்டுபிடிச்சுட்டேன். இந்தக் குழந்தை சாவடிக் குப்பத்திலே சம்பு சாஸ்திரிங்கறவர் வீட்டிலேதான் இருக்காளாம். அவர் தான் கார்டியனாம். வேறே தாயார் தகப்பனார் கிடையாதாம்."

"என்ன, என்ன! வக்கீல் ஸார்! நிஜமாவா சொல்றேள்?"

"நிஜமாத்தான் சொல்றேள். அந்த சம்பு சாஸ்திரிங்கறவரைக் கூடப் பார்த்தேன். நல்ல ஒண்ணாம் நம்பர் மடிசஞ்சிப் பிராமணன்!"

உமா தன் வாய்க்குள், "இடியட்!" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள். அது அந்த மனுஷர் காதில் விழுந்ததோ என்னவோ தெரியாது. உடனே அவள் உரத்த குரலில், "இந்த சமாசாரத்தை நேத்து ராத்திரிலேயிருந்து சொல்லாமலா வச்சிண்டிருந்தேள்? ரொம்ப பேஷ்! அவர் எங்கே இருக்கார்னு சொன்னேள்?" என்று கேட்டாள்.

"சாவடிக் குப்பத்திலே..."

உமா, டக்கென்று டெலிபோன் ரிஸீவரை வைத்துவிட்டு விரைவாகக் கீழே இறங்கினாள். "டிரைவர்! டிரைவர்! வண்டியை எடு ஜல்தி!" என்றாள். வண்டி வந்ததும், "சாவடிக் குப்பத்துக்குப் போ! சீக்கிரம்!" என்றாள்.

டிரைவர் சிறிது தயங்கி "சாவடிக் குப்பம் எங்கேயிருக்குங்க?" என்று கேட்டான்.

----------------

4.10. 'ஜில்லி! ஜில்லி!'

சாரு அன்றிரவு நன்றாய்த் தூங்கவில்லை. இரண்டு மூன்று தடவை விழித்துக் கொண்டு, "தாத்தா! பொழுது விடிந்துடுத்தோ?" என்று கேட்டாள்.

உமாவோ இராத்திரி தூங்கவேயில்லையென்று சொல்லலாம். வெகு நேரம் வரையில், குழந்தைக்கு என்னென்ன உடைகள் வாங்குவது, என்னென்ன ஆபரணங்கள் அணிவிப்பது, எந்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது, எப்படி எப்படியெல்லாம் வளர்ப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இரவு சுமார் இரண்டு மணிக்குத் தூங்கியவள் அதிகாலையில் எழுந்திருந்து, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்குமென்று ஜன்னலண்டை வந்து பார்த்தாள். 'சரி, வெள்ளி முளைத்துவிட்டது; இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் பொழுது விடிந்து விடும். சாருவை அழைத்து வர வண்டி அனுப்ப வேண்டும்' என்று எண்ணினான்.

சாருவை விட்டு இனி மேல் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று உமா தீர்மானித்துக் கொண்டாள். அவளை இனி மேல் தன்னுடன் வைத்துக் கொண்டு தான் வளர்க்க வேண்டும். ஆனால், இந்த எண்ணம் எப்படி நிறைவேறும்? அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாமா? அதை நினைத்தால் உமாவுக்குப் பயமாயிருந்தது. தன்னுடைய செய்கைகளை அவர் ஒப்புக் கொள்வாரா? பாவி, பதிதை என்று நிராகரிக்க மாட்டாரா? எப்படியும் ஒன்று நிச்சயம்; தான் யார் என்று தெரிந்தால், உடனே இனிமேலாவது புருஷனுடன் வாழ்ந்திரு என்று தான் உபதேசிப்பார் - முடியாது, முடியாது!

ஆகவே, தான் யார் என்று அப்பாவிடம் தெரிவிக்கும் விஷயம் யோசித்துத் தான் செய்ய வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். இது எப்படிச் சாத்தியம்? - குழந்தையை நம்முடன் விட்டு வைக்கச் சம்மதிப்பாரா? - ஏன் மாட்டார்? அவருக்கு என்ன பாத்தியதை குழந்தையின் மேல்? - ஆறு வருஷம் வளர்த்தால் குழந்தை அவருடையதாகி விடுமா? - "இந்த ஐசுவரியத்தையெல்லாம் குழந்தைக்குக் கொடுக்கிறேன்; என்னோடே இருக்கட்டும்" என்று சொன்னால், வேண்டாம் என்று சொல்வதற்கு இவர் யார்?-போதும், போதும். என்னை இவர் வளர்த்துப் பாழுங் கிணற்றில் தள்ளினாரே, அது போதும்! சாருவையும் வளர்த்து அப்படித் தானே செய்வார்? - இம்மாதிரியெல்லாம் எண்ணி எண்ணி அவள் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.

கடைசியாகப் பொழுது விடிந்தது. வண்டியும் சாவடிக் குப்பத்துக்குப் போயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரியும் சாருவும் 'வஸந்த விஹார'த்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

உமா பங்களாவின் வாசலில் காத்திருந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். பங்களா, தோட்டம் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டினாள். தோட்டத்திலிருந்த புஷ்பச் செடிகள் சாருவின் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் செடிகளை விட்டு வருவதற்கே சாருவுக்கு மனம் வரவில்லை.

கடைசியாக, பங்களாவின் டிராயிங் ரூமில் வந்து உட்கார்ந்தார்கள்.

சாஸ்திரி உபசாரமாக, "பங்களாவும் தோட்டமும் ரொம்ப அழகாயிருக்கு. மயன் மாளிகையிலே துரியோதனன் தரையை ஜலமென்றும், ஜலத்தைத் தரையென்றும் நினைச்சுண்டு திண்டாடினானே, அந்த மாதிரி நானும் திண்டாடிப் போய்ட்டேன்" என்றார்.

உமா, "ஆமாம் சாஸ்திரிகளே! இவ்வளவு பெரிய பங்களாவிலே நான் ஒண்டிக்காரி தனியாயிருக்கேன், எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும், பார்த்துக்குங்கோ!" என்றாள்.

அதற்கு சாஸ்திரி, "உலகமே இப்படித் தான் இருக்கு, அம்மா! சில பேர் இருக்க இடமில்லாமே திண்டாடறா; சில பேர் இருக்கிற இடத்தை என்ன செய்யறதுன்னு தெரியாமே திண்டாடறா" என்றார்.

-----------------

4.11. சங்கம் ஒலித்தது!

அந்த வருஷத்தில் பாரத நாட்டில் ஒரு யுகப் புரட்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரம் வருஷங்களாக அறியாமையில் மூழ்கி, சோம்பலுக்கு ஆளாகி, வீரமிழந்து, அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருந்த பாரத மக்கள் விழித்தெழுந்து கொண்டிருந்தார்கள். காந்தி மகானுடைய அஹிம்சா மந்திரத்தின் சக்தியால் அவர்களை மூடியிருந்த மாயை ஒரு நொடியில் பளிச்சென்று விலகிப் போனது போல் இருந்தது. அவர்களைப் பீடித்திருந்த அடிமைத்தளைகள் படீர் படீர் என்று முறிந்து விழும் சப்தம் நாலு பக்கங்களிலும் எழுந்தது.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?"

என்னும் ஆவேசம் தேசமெங்கும் உண்டாயிற்று. நாட்டின் விடுதலைக்காக ஜனங்கள் எந்த விதமான கஷ்டங்களையும் அநுபவிக்கவும், எவ்விதத் தியாகங்களையும் செய்யவும் தயாரானார்கள். தேசப் பணியில் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்வதற்கும் சித்தமானார்கள்.

அன்னையின் கைவிலங்குகளைத் தகர்க்க முயன்றவர்கள் அதே சமயத்தில் தங்களைப் பிணைத்திருந்த தளைகளையும் அறுத்தெறிந்தார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற மடமை தகர்ந்தது. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள்" என்னும் உணர்ச்சி பரவிற்று.

ஒரு தன்னந் தனி மனுஷர் தள்ளாத கிழவர் கையில் கோல் ஊன்றி - "சத்தியமே ஜயம்" என்று சொல்லிக் கொண்டு சுதந்திர யாத்திரை தொடங்கினார். அவரைப் பின்பற்றி அந்தப் புண்ணிய வருஷத்தில் பாரத மக்கள் ஆயிரம், பதினாயிரம் லட்சம் என்ற கணக்கில்,
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்"

என்று பாடிக்கொண்டு கிளம்பினார்கள்.

இத்தகைய சுதந்திர சங்கநாதத்தின் ஒலி சாவடிக் குப்பத்துக்கும் வந்து எட்டித்தான் இருந்தது. சம்பு சாஸ்திரிக்குச் சில காலமாக மனத்தில் அமைதி கிடையாது. 'தேசத்தில் இப்படிப்பட்ட மகத்தான இயக்கம் நடக்கின்றது. என்னவெல்லாமோ ஆச்சரியங்கள், கனவிலும் எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்கின்றன, - நாம் மட்டும் இந்தச் சாவடிக் குப்பத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே?' என்ற தாபம் அவர் மனத்தில் அடிக்கடி உண்டாகும். அப்போதெல்லாம், 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இந்த ஆசைகளெல்லாம் நமக்கு எதற்கு? எவ்வளவோ பெரிய மகான்கள், வீர புருஷர்களெல்லாம் சேர்ந்து செய்யும் காரியத்தில் நாம் ஈடுபட்டு என்ன செய்து விடப் போகிறோம்? நம்மால் என்ன முடியும்? ஏதோ இந்தச் சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு நம்மாலான ஊழியம் செய்து கொண்டிருந்தால், அதுவே பெரிய காரியம்' என்று எண்ணி மனஸை சமாதானப்படுத்திக் கொள்வார்.

இந்த மாதிரி சம்பு சாஸ்திரி நினைத்ததற்கு அவருடைய இருதய அந்தரங்கத்தில் குழந்தை சாருவினிடம் கொண்டிருந்த அளவிலாத அபிமானமும் ஒரு முக்கிய காரணமாகும். ஒவ்வொரு சமயம் அவர் இது விஷயமாகத் தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்வதுமுண்டு. 'என்ன? உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவா பார்க்கிறாய்? உன்னைவிடப் பலவீனர்கள் எத்தனையோ பேர் தேச சேவை செய்யவில்லையா? சிறைக்குப் போகவில்லையா? உயிரையும் கொடுக்கவில்லையா? உனக்கு மட்டும் என்ன வந்தது? இந்தக் குழந்தை மேலுள்ள பாசத்தினால் தானே நீ வெளியே கிளம்பாமல், தேசப் பணியில் ஈடுபடாமல் உட்கார்ந்திருக்கிறாய்?' என்று அவருடைய ஒரு மனஸு சொல்லும். உடனே இன்னொரு மனஸு, "ஆமாம்; அதனால் என்ன? இந்தக் குழந்தையைப் பராசக்தி என்னிடம் ஒப்புவித்தாள். அந்தப் பொறுப்பை நான் எப்படித் தட்டிக் கழிக்க முடியும்? 'ஸ்வதர்மந்தான் செய்வதற்குரியது; பரதர்மம் விநாசத்தை அளிக்கும்' என்று கீதாசாரியன் சொல்லியிருக்கவில்லையா?" என்று தேறுதல் கூறும்.

--------------------

4.12. 'வஸந்த விஹாரம்'

உமா தேவியின் இருதய அந்தரங்கத்தில் இத்தனை நாளும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அன்பின் வெள்ளம் இப்போது கரை புரண்டோ டத் தொடங்கியது. அந்தப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்ட சாரு திக்குமுக்காடிப் போனாள்.

ஆறு வருஷமாகக் குழந்தையை கைவிட்டிருந்ததற்கெல்லாம் இப்போது உமா ஒரேயடியாக ஈடு செய்யலானாள். சாருவுக்கு விதவிதமான விலையுயர்ந்த உடைகளை வாங்கிக் குவித்தாள். பாதாதிகேசம் வரை நகைகளாக வைத்து இழைத்தாள். தினம் மூன்று தடவையாவது குழந்தைக்குப் புதுப் புது அலங்காரம் செய்தாலொழிய அவளுக்குத் திருப்தி உண்டாவதில்லை.

முதல் தடவை இம்மாதிரி அலங்காரம் செய்து விட்டபோது, சாரு, "மாமி! மாமி! தத்ரூபமாய் டிராமாவிலே வேஷம் போட்டுண்டாப்பலேயே இருக்கே! இதற்கு என்ன வேஷம் என்று பேரு?" என்று கேட்டாள்.

இப்படியெல்லாம் பளபளப்பாக அலங்கரித்துக் கொள்வது டிராமாவில்தான் என்பது குழந்தையின் எண்ணம். உமாவுக்கு இந்தக் கேள்வி ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அவள் புன்னகையுடன், "இது என்ன வேஷம்னா கேக்கறே? இதற்குச் சாவித்திரி பொண் வேஷம்னு பேரு" என்றாள். அப்போது சாரி, "சாவித்திரி பொண்ணா? சாவித்திரி சத்தியவான் கதை எனக்குத் தெரியும். ஆனால், சாவித்திரிக்கு ஒரு பொண்ணு இருந்ததா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம், இருந்தது; அந்தக் கதையை உனக்கு இன்னொரு நாளைக்குச் சொல்கிறேன்" என்றாள் உமா.

சாருவுக்கு அலங்காரம் செய்து பார்ப்பதுடன் உமா திருப்தியடைந்து மகிழ்ந்துவிடவில்லை. அவளுடைய படிப்பையும் கவனித்தாள். சென்னையில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கான்வெண்ட் ஸ்கூலுக்கு அவளை அனுப்பினாள். வீட்டில் அவளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வெள்ளைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.

பங்களாவில் சாருவுக்கென்று ஒரு தனி அறை. குழந்தை உட்கார்ந்து படிக்கவும் புத்தகங்கள் வைத்துக் கொள்ளவும் மேஜை நாற்காலி பீரோக்கள் மட்டும் ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கப்பட்டன.

சாருவுக்காக வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நூறு குழந்தைகள் விளையாடுவதற்குப் போதுமானவை. சென்னைக் கடைகளில் எத்தனை விதமான பொம்மைகள் உண்டோ , அவ்வளவும் வந்துவிட்டன. அந்தப் பொம்மைகளுக்கு உடைகள் தைப்பதற்கே ஒரு தையற்காரனுக்கு வேலை சரியாக இருந்தது.

பொம்மைக் குதிரையில் ஏறிக் குழந்தை சந்தோஷமாக விளையாடுவதைப் பார்த்த உமாவுக்கு, நிஜக் குதிரையே வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றிற்று. அவ்வளவு தான். மறு நாளைக்கு மட்டக் குதிரை ஒன்று வந்துவிட்டது. பெயர் தான் மட்டக் குதிரையே தவிர, விலையில் மட்டமல்ல; 1200 ரூபாய்! சாரு அன்று முதல் குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.

சாரு ஒவ்வொரு விதத்திலும் சாவடிக் குப்பத்தில் இருந்ததைவிடத் தன்னிடம் மேன்மை பெற வேண்டும் என்று உமா எண்ணினாள். பாக்கி எல்லாவற்றிலும் இந்த நோக்கம் நிறைவேறிற்று. ஆனால், குழந்தையின் நாட்டியத் திறமையைப் பற்றி என்ன? அதை முன்னைக் காட்டிலும் மேன்மை பெறச் செய்வதற்கு தன்னால் என்ன செய்ய முடியும்? - இந்த எண்ணம் உமாவுக்குச் சங்கடத்தை அளித்தது. சாவடிக் குப்பம் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த வாத்தியார் அம்மாள் மீது உமாவுக்குப் பொறாமை கூட உண்டாயிற்று. கடைசியாக அதற்கும் ஒரு யோசனை கண்டு பிடித்தாள். பரத நாட்டியமாவது, ராதாகிருஷ்ண நடனமாவது? அதெல்லாம் தோற்றுப் போகும்படியாகக் குழந்தைக்கு இங்கிலீஷ் டான்ஸ் சொல்லிக் கொடுக்கத் தீர்மானித்தாள் உமா.

சாருவின் மனோநிலை எப்படியிருந்தது? உமாராணியின் பங்களாவில் அவள் தொடங்கிய புதிய வாழ்க்கை அவளுக்கு சந்தோஷமாயிருந்ததா? சாவடிக் குப்பத்தைக் காட்டிலும் 'வஸந்த விஹாரம்' அவளுக்கு அதிகம் பிடித்திருந்தா? வெளித் தோற்றத்தைப் பொறுத்த வரையில் அப்படித்தான் காணப்பட்டது. புதிய வீட்டில் அவள் கண்ட புதுமைகள் எல்லாம் குழந்தைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன.

காலையில் எழுந்ததும், தான் படுத்திருந்த வெல்வெட் மெத்தையையும் தலையணைகளையும் சாரு கையினால் தடவித் தடவிப் பார்ப்பாள். பெரிய நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று, தான் செய்யும் சேஷ்டைகளைப் போலவே தன்னுடைய பிரதிபிம்பமும் செய்வதைக் கண்டு சிரிப்பாள். குளிக்கும் அறையில், 'ஷவர் பாத்'தைத் திறந்து விட்டு, அதிலிருந்து சலசலவென்று ஜலம் கொட்டுவதைப் பார்ப்பதில் அவளுக்கு அளவிலாத ஆனந்தம். எதிர்பாராதபோது தன் மேலேயே அப்படிப் பொழிய ஆரம்பித்துவிட்டால், விழுந்து
விழுந்து சிரிப்பாள்.

----------------

4.13. குருட்டுக் கிழவன்

ஒரு நாள் சாரு தான் கற்றுக்கொண்டிருந்த இங்கிலீஷ் நடனத்தை உமாராணிக்கு ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள். உமா அதைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து, 'இப்படிப்பட்ட குழந்தையைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் செய்தோம்!' என்று எண்ணினாள். அதைத் தொடர்ந்து, 'இந்தப் பாக்கியம் நமக்கு நீடித்திருக்க வேண்டுமே? நம்முடைய ஜன்மம் துரதிர்ஷ்ட ஜன்மமாயிற்றே!' என்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்போது வாசலில், "அம்மா! கண்ணில்லாத கபோதி! ரெண்டு பிச்சை போடுங்கோ!" என்று ஒரு குரல் கேட்டது. அது கிழவனுடைய குரல்; அதிலிருந்த நடுக்கம் கேட்பவர்களுடைய உள்ளத்தை உருக்குவதாயிருந்தது.

பிறகு, அந்தக் கிழவனின் குரலும் இன்னொரு சிறு பெண்ணின் குரலுமாகச் சேர்ந்து பாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது;

"தில்லையம்பல ஸ்தல மொண்டிருக்குதாம்-அதைக் கண்டபேர்க்கு
ஜனனமரணப் பிணியைக் கருக்குதாம்."

சாரு ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஜன்னலோரமாகச் சென்று பார்த்தாள். அப்போது வாசல் 'கேட்'டுக்கு அருகில் ஒரு கிழவனும் ஒரு சிறு பெண்ணும் நின்று பாடுவது தெரிந்தது. சாரு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பங்களாவின் தர்வான் அங்கே வந்து, "போ! போ!" என்று அவர்களை விரட்டினான். "மாமி! மாமி! இங்கே சுருங்க வாங்கோ!" என்று அடித்துக் கொண்டாள் சாரு. உமா அவள் அருகில் வந்ததும், "மாமி! மாமி! அந்தக் கிழவனையும் பெண்ணையும் தர்வான் விரட்டுகிறான். ஐயையோ! அவா போறாளே! திரும்பி வரச் சொல்லுங்களேன்!" என்று சாரு கூவினாள்.

உமா, "நல்ல பொண்ணடி நீ!" என்று சொல்லிச் சிரித்துவிட்டு, "தர்வான்! அவர்களைக் கூப்பிடு" என்று உத்தரவிட்டாள். தரவான் ஓடிப் போய், "இந்தாங்க; இங்கே வாங்க. உங்க பாடு யோகந்தான்" என்றான். கிழவனும் பெண்ணும் திரும்பினார்கள். கிழவன் ஒரு கையில் கோல் ஊன்றிக் கொண்டிருந்தான். இன்னொரு கையை அந்தச் சிறு பெண் பிடித்துக் கொண்டு முன்னால் வர, கிழவன் பின் தொடர்ந்து வந்தான்.

"மாமி! அந்தப் பொண்ணு ஏன் அந்தக் கிழவன் கையைப் புடிச்சுண்டே வர்றது?" என்று சாரு கேட்டாள்.

"உனக்குப் பார்த்தாத் தெரியலையா, என்ன? அந்தக் கிழவனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டை. அதனாலேதான் அந்தப் பொண் எங்கே போனாலும் அவன் கையைப் புடிச்சு அழைச்சுண்டே போறது" என்றாள் உமா.

"அதுதான் நானும் நெனைச்சேன். கண் பொட்டையாப் போனா ரொம்பக் கஷ்டமில்லையா, மாமி!" என்றாள் சாரு.

அதற்குள் கிழவனும் பெண்ணும் மறுபடியும் 'கேட்'டுக்குப் பக்கத்தில் வந்து நின்று,

"உயருஞ்சிகரக் கும்பம் தெரியுதாம்-அதைப் பார்த்தபேர்க்கு
உள்ளங்குளிர கருணை புரியுதாம்"

என்று பாடினார்கள். கண் தெரியாத ஒருவன் இந்த மாதிரி பாடியதால் அதனுடைய உருக்கம் அதிகமாயிற்று. நந்தனுக்கு, தூரத்தில் நின்று கோபுர சிகரத்தைக் காணலாமென்ற நம்பிக்கையாவது இருந்தது. இந்தக் குருடனுக்கு அந்த நம்பிக்கைக்கும் இடமில்லையல்லவா? ஆகையால் பாட்டைக் கேட்டு உமாராணிக்குக் கண்ணில் ஜலம் வந்து விட்டது.

சாரு இதைக் கவனிக்கவில்லை. அவள் வெளியில் பார்த்தவண்ணமே, "மாமி! அந்தப் பொண்ணைப் பார்த்தா எனக்குப் புடிச்சிருக்கு. எவ்வளவு நன்னாப் பாடறது? அவளையும் நம்மாத்திலே கூப்பிட்டு வச்சுக்கலாமா?" என்று கேட்டாள்.

இந்தக் கேள்வியினால், உமாவின் மனத்தில் ஏற்பட்டிருந்த உருக்கம் மறைந்து விட்டது. சிறிது கடுமையான குரலில், "ரொம்ப அழகாத்தானிருக்கு! தெருவோடு போகிற குழந்தைகளையெல்லாம் நாம் அழைச்சு வச்சுக்கறதா என்ன?" என்றாள்.

--------------

4.14. கண் திறந்தது!


அதே அர்த்தராத்திரிப் போதில் இன்னொர் ஆத்மா கண் விழித்துக் கொண்டிருந்தது. சம்பு சாஸ்திரி அன்றிரவு சாவடிக் குப்பத்திலிருந்து பிரயாணப்பட்டுப் போவதென்று தீர்மானித்திருந்தார். நல்லானிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு போவதென்பது அசாத்தியமான காரியம்; இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின் தொடர்ந்த அயோத்திவாசிகள் தூங்கும் போது போனது போல் தாமும் அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போய்விட வேண்டியது தான் என்று அவர் முடிவு செய்திருந்தார்.

சாவடிக் குப்பத்துக் குடிசையில் கடிகாரம் கிடையாது. ஆனாலும், ஏறக்குறைய நடுநிசியில் சாஸ்திரி கண் விழித்தெழுந்தார். வாசலில் போய்ப் பார்த்தார். அன்று பௌர்ணமி; சந்திரன் உச்சி வானத்தை கடந்து கொஞ்சம் மேற்கே சாய்ந்திருந்தது. உலகம் அப்போது தான் பாற்கடலில் முழுகி எழுந்திருந்தது போல் காணப்பட்டது. தென்னை மரங்களின் மட்டைகள் இளங்காற்றில் அசைந்த போது, முத்துச் சுடர் போன்ற நிலவின் ஒளியில் அவை பளிச் பளிச்சென்று மின்னின.

சாவடிக் குப்பத்தில் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. ஏழை உழைப்பாளி ஜனங்கள், பகலெல்லாம் உடலை வருத்தி வேலை செய்து விட்டு வந்தவர்கள், இரவில் அசந்து தூங்கினார்கள்.

சாஸ்திரி திரும்பவும் உள்ளே சென்றார். அம்பிகையின் முன்னால் கைகூப்பிக் கொண்டு உட்கார்ந்தார். "தாயே! ஜகதம்பிகே! உன்னையே தஞ்சமாக அடைந்த என்னை இப்படியா கஷ்டப்படுத்துவது? எத்தனையோ துக்கங்களை நானும் பொறுத்திருக்கிறேன்; ஆனால் இந்தக் குழந்தையைப் பிரிந்த துக்கத்தைப் பொறுக்க முடியவில்லையே? ஏன் இப்படிப்பட்ட பாசத்தைக் கொடுத்தாய்? ஏன் இப்படி என்னை வருத்துகிறாய்? எதற்காக இப்படி என் இருதயத்தைப் பிழிகிறாய்?"

சாஸ்திரியின் கண்ணில் ஜலம் ததும்பிப் பிரவாகமாய் ஓடிற்று. சட்டென்று அவர் எழுந்திருந்து நின்றார்.

"அம்மா! இந்த ஏழையாலே உனக்கு ஏதோ காரியம் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படித் துன்புறுத்த மாட்டாய். உன்
ஆக்ஞையை நான் மீற வில்லை. இதோ புறப்படுகிறேன். இந்தத் தடவை உன்னை கூட நான் எடுத்துப் போகவில்லை. நீ இங்கேயே இருந்து இந்த நல்ல ஜனங்களைக் காப்பாற்றிக் கொண்டிரு!"

இப்படிச் சொல்லிச் சம்பு சாஸ்திரி அம்பிகைக்கு நமஸ்காரம் செய்து விட்டு எழுந்தார். அந்தக் குடிசையின் முன் புறத்து அறைக்குள் வந்தார். கொடியில் கிடந்த வேஷ்டி அங்க வஸ்திரங்களை எடுத்து மடிசஞ்சிக்குள் அடைக்கத் தொடங்கினார்.

அப்போது பின்னால், "தாத்தா! தாத்தா!" என்று குழந்தையின் குரல் கேட்டது.

சாஸ்திரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தார். அளவிலாத ஆச்சரியத்தினால் திக்பிரமை கொண்டார்.

"இதென்ன அதிசயம்? யார் இது? குழந்தை சாரு தானா?" என்று சொல்ல்விட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தார்.

அப்போது சாரு, "ஐயோ! தாத்தா! நான் கண்ட சொப்பனம் சரியாப் போயிடுத்தே! உனக்குக் கண் தெரியலையா? - நான் சாரு தான். என்னைத் தொட்டுப் பாரு" என்று சொல்லித் தாத்தாவின் அருகில் வந்தாள். கீழே கிடந்த அவருடைய அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொடுத்து, "இதோ உன் மேல்வேஷ்டி; தடவிப் பாரு; மேலே போட்டுக்கோ! தாத்தா! என் கையைப் பிடிச்சுக்கோ! உனக்கு எங்கெல்லாம் போகணுமோ அங்கெல்லாம் நான் அழைச்சுண்டு போறேன்" என்றாள்.

சாஸ்திரி குழந்தையை அணைத்துக்கொண்டு மேலெல்லாம் தடவிக் கொடுத்துவிட்டு, "நிஜமா, என் கண்மணி சாருதான். எப்படியம்மா இந்தப் பாதி ராத்திரிலே வந்தே? தனியாவா வந்தே?..." என்றார்.

"உனக்குக் கண் பொட்டையாப் போனது சொப்பனத்திலே தெரிஞ்சு போச்சு. நான் இல்லாத போனா உன்னை யாரு கையைப் புடிச்சு அழைச்சுண்டு போவான்னு ஓடி வந்துட்டேன்."

---------------------

4.15. சாரு எங்கே?


தொட்டிலில் படுத்துத் தூங்குவதுபோல், கட்டை வண்டியில் ஆனந்தமாகத் தூங்கிய சாரு அதிகாலை நேரத்தில் பட்சிகள் பாடிய திருப்பாவையைக் கேட்டுத் துயிலெழுந்தாள். பக்கத்தில் கையால் தடவிப் பார்த்தாள். தாத்தா இல்லாமற் போகவே, "தாத்தா!" என்று அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ஏற்கெனவே எழுந்திருந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த சம்பு சாஸ்திரி, "ஏன், சாரு! இன்னும் சற்றுத் தூங்கேன்" என்றார். சாரு அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "நான் பயந்து போய் விட்டேன், தாத்தா! முன்னே மாதிரி எங்கே என்னை விட்டுட்டுப் போய்விட்டயோன்னு பார்த்தேன்" என்றாள்.

சம்பு சாஸ்திரி சிரித்துக் கொண்டார்.

"தாத்தா! உன்னை விட்டுட்டு நான் அந்த மாமி வீட்டுக்குப் போனதிலிருந்து, அடிக்கடி உன்னைப் பத்தி சொப்பனம் கண்டுண்டிருந்தேன். நீ என்னைச் சொப்பனத்திலே பார்த்தாயோ?" என்றாள் சாரு.

"இல்லை, சாரு! நான் உன்னைச் சொப்பனத்திலே பார்க்கலை. ஆனால், ஏன் தெரியுமா?" என்று சாஸ்திரி கேட்டார்.

"ஏன்னா, உனக்கு என் மேலே ஆசை இல்லை."

"அதுதான் தப்பு. சொப்பனம் எப்ப காணுவா எல்லாரும்? தூங்குகிற போது தானே? உன்னைப் பிரிஞ்ச அப்புறம் நான் தூங்கவே இல்லை, சாரு!" என்று சாஸ்திரி சொன்னார்.

அதைச் சரியாய்க் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல், "தாத்தா, தாத்தா! அதோ 'ரிகிங் ரிகிங்' என்று ஒரு பட்சி கத்தறதே, அது என்ன பட்சி, தாத்தா?" என்று சாரு கேட்டாள்.

இந்த மாதிரி ஒவ்வொரு பட்சியின் குரலையும் தனித்தனியே கண்டுபிடித்துத் தாத்தாவை அது என்ன பட்சி என்று கேட்டு வந்தாள்.
அவரும் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டு வந்தார்.

கிழக்கே சூரியன் தகதகவென்று புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம், சாலை ஓரத்தில் ஓர் அழகான குளம் தென்பட்டது. வண்டியை
நிறுத்தச் சொல்லி, சாஸ்திரியும் சாருவும் இறங்கி அந்தக் குளக்கரைக்குச் சென்றார்கள்.

சாரு, இந்த மாதிரி நாட்டுப் புறத்தையும், குளத்தையும் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. ஆகையால், அவளுக்கு அளவிலாத சந்தோஷம் உண்டாயிற்று. குளத்தில் பூத்திருந்த தாமரையையும், அதைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்த வண்டையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். குளக் கரையிலிருந்த மரங்களின் மீது அணிற்பிள்ளைகள் துள்ளி ஓடுவதைப் பார்த்தபோது, அவளுக்குத் தானும் ஓர் அணிற் பிள்ளையாக மாறி மரத்தின் மீது துள்ளி ஓட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. குளத்தில் வாத்துக்களைப்போல் நீந்த வேண்டுமென்றும், வானத்தில் பட்சிகளைப் போல் பறக்க வேண்டுமென்றும் ஆசை கொண்டாள். வண்டாக மாறித் தாமரைப் பூவைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமென்று விரும்பினாள். குளத்து ஜலத்தில் காலை வைத்ததும் மீன்கள் சுற்றிக் கொண்டு கொத்தின. அப்போது உண்டான குறுகுறுப்பு அவளுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்தது. ஜலத்தில் காலை வைப்பதும், மீன்கள் கொத்த ஆரம்பித்தவுடன் எடுப்பதும் அவளுக்குப் பெரிய விளையாட்டாயிருந்தது.

சாஸ்திரியார் இதற்குள் காலைக் கடன்களையெல்லாம் முடித்துவிட்டு, சாருவை அருகில் அழைத்து உட்கார வைத்தார். "குழந்தை! பாரதத் தாயைப் பற்றி உனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன், கற்றுக் கொள்ளுகிறாயா?" என்று கேட்டார்.

"பேஷாய்க் கத்துக்கறேன்" என்றாள் சாரு.

"இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரு நாடு
கனியுங் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு"

என்று சம்பு சாஸ்திரி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

காலையில் குளக்கரைக்கு வந்த கிராமவாசிகள் சிலர் சம்பு சாஸ்திரி சாருவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய், "யாரோ ஒரு பெரியவரும் குழந்தையும் வந்திருக்கிறார்கள்" என்ற செய்தியை ஊரில் பரப்பினார்கள்.

------------------

4.16. 'ஸுலோச்சு விஷயம்'


வக்கீல் ஆபத்சகாயமய்யர் தமது ஆபீஸ் அறையில் உட்கார்ந்து சட்டப் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தை ஸுலோசனா அருகில் நின்று மேஜை மீதிருந்த இங்கிப் புட்டியின் மூடியைத் திறப்பதற்கு முயன்று கொண்டிருந்தாள்.

"ஏன்னா, ஸுலோச்சு அங்கே இருக்காளா?" என்று கேட்டுக் கொண்டே அவருடைய தர்மபத்தினி உள்ளே வந்தாள்.

"இதோ இருக்காளே, கண்ணு! ஏண்டி அம்மா, ஆபீஸ் ரூமிலே வந்து அப்பாவைத் தொந்தரவு படுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்றது?" என்று சொல்லிக் கொண்டே தானும் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"குழந்தை தொந்தரவு படுத்தினால் படுத்தட்டும். நீ தொந்தரவு படுத்தாதிருந்தால் போதும். இப்போ என்னத்துக்கு இங்கே வந்தே?" என்றார் வக்கீல்.

"இதென்ன ஆபத்தான்னா இருக்கு? வர வர என்னைப் பார்க்கறதுக்கே உங்களுக்கு பிடிக்கலையா என்ன?"

"ஆபத்துத்தான்; என் பேரே ஆபத்துத்தானே? இப்ப தானா உனக்கு அது தெரிஞ்சுது?"

"போரும், போரும். இந்த அரட்டைக் கல்லியெல்லாம் அந்தப் பம்பாய்க்காரியண்டே கத்துண்டிருக்கேளாக்கும். பேச்சு மட்டும் கிழியறதேயொழியக் காரியத்திலே உப்புக்குப் பிரயோஜனம் இல்லை. நான் சொன்னேனே, அந்த விஷயத்தைப்பத்தி ஏதாவது பேசினேளோ, இல்லையோ?"

"என்ன விஷயம் சொன்னே? ஞாபகம் இல்லையே?"

"அட ஏன் ஞாபகம் இருக்கப் போகிறது? ஊரிலே இருக்கிறவாளெல்லாம் சொன்னா நினைவிருக்கும். நான் சொன்னா நினைவிருக்குமா?"

"கோவிச்சுக்கறயே? என்ன விஷயம்னு இன்னொரு தடவைதான் சொல்லேன்."

"நம்ம ஸுலோச்சு விஷயந்தான்."

"என்ன ஸுலோச்சு விஷயம்?"

"உங்களுக்கு எல்லாம் பிரிச்சுப் பிரிச்சுச் சொல்லியாகணும். எங்கேயோ குப்பத்திலே கிடந்த பெண்ணைக் கொண்டு வந்து அந்தப் பம்பாய்க்காரி வச்சிண்டிருக்காளே, நம்ம ஸுலோச்சுவை வேணும்னா வச்சுக்கட்டும்னு சொன்னேனே?"

"வேணும்னாத்தானே வச்சுக்கணும்? அவவேணும்னு சொல்லலையே?" என்றார் வக்கீல்.

"அவளா வந்து வேணும்னு சொல்லுவாளா என்ன? நம்ம காரியத்துக்கு நாம் தான் சொல்லணும். சம்பு சாஸ்திரியா, சொம்பு சாஸ்திரியா, அந்தப் பிராமணனுக்கு இருக்கிற துப்புக்கூட உங்களுக்கு இல்லை. நீங்களுந்தான் வைக்கல் பண்ணறயள், வைக்கல்! மாட்டுக்குப் போடற வைக்கல்தான்!" என்றாள் ஸுலோச்சுவின் தாயார்.

-----------------------

4.17. 'அவள் என் மனைவி'

வக்கீல் ஆபத்சகாயமய்யர் உமாராணியின் பங்களாவை அடைந்ததும், உமாராணி அவருக்கு விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்டாள். "உடனே போய்ப் போலீஸிலே எழுதி வைப்பதுதான் சரி" என்று ஆபத்சகாயமய்யர் சொன்னதும் இருவரும் போலீஸ் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குச் சென்றார்கள்.

உமாராணியைப் பற்றித் தெரியாதவர்கள் சென்னையில் இல்லையாதலால், டிபுடி கமிஷ்னருக்கும் உமாராணியைத் தெரிந்திருந்தது. எனவே, அவர்களை அவர் மரியாதையுடன் வரவேற்று உட்காரவைத்து, அவர்கள் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார். வக்கீல் விவரங்களைச் சொன்னார். கடைசியாக, உமாராணி கமிஷ்னரைப் பார்த்து, "தாத்தாவும் பேத்தியுமாகத்தான் எங்கேயோ போயிருக்கிறார்கள். எப்படியாவது அவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அதற்காக என்ன செலவானாலும் நான் ஒத்துக் கொள்கிறேன். இந்த ஒத்தாசை எனக்காகச் செய்யவேணும்" என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு டிபுடி கமிஷ்னர், "உங்களுக்கு ஒத்தாசை செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம், அம்மா! ஆனால் இந்த விஷயத்திலே எனக்கு ஒன்றும் அதிகாரமில்லையேயென்றுதான் பார்க்கிறேன். நீங்கள் சொல்கிற சம்பு சாஸ்திரி குற்றம் ஒன்றும் செய்து விடவில்லை. அவர் வளர்த்த குழந்தையைத் தான் அவர் அழைச்சிண்டு போயிருக்கிறார். நகை, கிகை ஒன்று கூட எடுத்துக் கொண்டு போகவில்லை. அப்படியிருக்கிறபோது 'அரெஸ்ட்' பண்ணியோ வேறு விதத்திலோ அவர்களைக் கொண்டு வருவதற்குச் சட்டம் இடங்கொடுக்காதே!" என்றார்.

"அரெஸ்ட்" என்று சொன்னதும் உமாவுக்குப் பகீர் என்றது.

"நீங்கள் அப்படியெல்லாம் அரெஸ்ட் கிரஸ்ட் ஒன்றும் பண்ண வேண்டாம். அந்தக் குழந்தை சௌக்கியமாயிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சால் போதும். அவா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ! அதற்குமேலே அவாளை அழைச்சுண்டு வர்றதற்கு நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்றாள்.

டிபுடி கமிஷ்னர், "ஆகட்டும், அம்மா! நீங்க மட்டும் 'பார்மல் பெடிஷன்' ஒன்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போங்கோ" என்றார்.

உமா, வக்கீலை விண்ணப்பம் எழுதும்படி கேட்டுக் கொண்டாள். வக்கீல் விண்ணப்பம் எழுத ஆரம்பித்ததும், டிபுடி கமிஷ்னர், "இந்தக் காலத்திலேயே நல்லது ஆகிறதில்லை, பாருங்கள். ஏதோ ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கப் போக, இந்த மாதிரி தொல்லை நேர்ந்தது" என்றார். அதற்கு உமா பதில் சொல்வதற்குள் டெலிபோனில் மணி அடித்தது.

டிபுடி கமிஷ்னர் டெலிபோனில் பின் வருமாறு பேசினார்: "ஹலோ - எஸ்! - பாங்கி போர்ஜரி கேஸா? - கல்கத்தாக்காரனா? - ஐஸீ! - சென்ட்ரல் ஸ்டேஷன்லேயா 'அரெஸ்ட்' ஆச்சு? - பேரென்ன? ஸ்ரீ...? ஓஹோ! - ஸ்ரீதரன்..."

இதுவரையில் மேற்படி பேச்சை அசட்டையாக கவனித்துக் கொண்டிருந்த உமாராணி, "ஸ்ரீதரன்!" என்று அழுத்தந்திருத்தமாய் டிபுடி கமிஷ்னர் சொன்னதும், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

டிபுடி கமிஷ்னர், மேஜை மீதிருந்த நோட் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டு, மறுபடியும் டெலிபோனில், "ஆல் ரைட்! - இங்கே அனுப்பு - ரிமாண்டுக்கு ஆர்டர் பண்றேன்!-" என்று சொல்லிவிட்டு, டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்தார். வக்கீலைப் பார்த்து, "பெடிஷன் எழுதியாச்சா?" என்று கேட்டார்.

உமாவின் உள்ளமோ அளவிலாத குழப்பத்தை அடைந்திருந்தது. அவளால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை. 'ஸ்ரீதரன்...பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்...' - இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தன. இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவள் மனத்தில் தெளிவாகத் தோன்றியது. தான் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடவேண்டும். அவரை இங்கே கொண்டு வரப் போகிறார்கள்! அப்போது தான் இங்கே இருக்கக்கூடாது! - இப்படி அவள் மனம் பரபரப்பு அடைந்திருக்கையில், வக்கீல் ஆபத்சகாயமய்யர் தாம் எழுதிய விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தார். கையெழுத்துப் போடப் போகையில் உமாவின் கை நடுங்கிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு கையெழுத்துப் போட்டாள். அதை டிபுடி கமிஷ்னரிடம் கொடுக்கக்கூட அவளுக்குத் துணிவு இல்லை. அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு எழுந்திருந்தாள்.

-----------------------

4.18. உமாராணியின் பழி

உமாராணி அன்றெல்லாம் ஒரே மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். குழந்தையையும் தந்தையையும் பிரிந்த துன்பம் இப்போது அவ்வளவு பெரியதாயில்லை. அவர்களுடைய நினைவையே மறக்கச் செய்யக்கூடியதான சம்பவம் வேறொன்று நேர்ந்துவிட்டது.

விதியின் விசித்திரத்தை நினைக்க நினைக்க அவளுக்கு வியப்பாயிருந்தது. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காக டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போன இடத்தில், இந்தச் சந்திப்பு ஏற்பட்டது. குழந்தையும் தாத்தாவும் இராத்திரி இப்படித் தன்னை ஏமாற்றிவிட்டுப் போகாதிருந்தால், தான் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போக நேர்ந்திராது. அவரைச் சந்திக்கவும் நேர்ந்திராது.

ஒரு வேளை பகவானுடைய செயல் இதில் ஏதேனும் இருக்குமோ?

பைத்தியந்தான்! பகவானாவது மண்ணாங்கட்டியாவது? உலகில் தற்செயலாக இந்த மாதிரி சம்பவங்கள் எத்தனையோ நிகழ்கின்றன. தன்னுடைய வாழ்க்கையிலேயே நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் சுவாமி பேரில் பாரத்தைப் போடுவதில் என்ன பிரயோஜனம்? அப்பாவாயிருந்தால், 'எல்லாம் பராசக்தி செயல்' என்று சொல்லிக் கொண்டிருப்பார். மனுஷ்யர்களுடைய காரியங்களையெல்லாம் பராசக்தி நடத்துவதாயிருந்தால், உலகம் இவ்வளவு கேவலமாயிருக்குமா? இவ்வளவு அநியாயங்களும் கொடுமைகளும் நடக்குமா? தானும் குழந்தையுமாகச் சாகப் போகும் சமயத்தில் அப்பாவின் குரல் கேட்டது தன்னுடைய வாழ்க்கையில் ஓர் ஆச்சரியமான விஷயம்! அப்பாவிடம் சொன்னால், அது பகவானுடைய செயல் என்றுதான் சொல்வார். அது பகவானுடைய செயலாயிருந்தால், கல்கத்தாவில் தான் பட்ட கஷ்டங்களும் பகவானுடைய செயல் தானே? சென்னையின் வீதிகளில் தான் அலைந்து திரிந்ததும் பராசக்தியின் செயல்தானே?

அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்பாவினுடைய வீண் பிரமை. வாழ்க்கையில் மனுஷ்யர்களுடைய முயற்சியினால் சில காரியங்கள் நடக்கின்றன; தற்செயலாகச் சில காரியங்கள் நடக்கின்றன. அந்த மாதிரி தற்செயலாக நடந்திருக்கும் சம்பவம் இது. தன்னுடைய வாழ்க்கையிலேயே இதற்கு முன் நடந்திருப்பதையெல்லாம் நினைக்கும் போது இது ஒரு பிரமாத அதிசயங்கூட இல்லை.

சரி; ஆனால் தான் இப்போது செய்ய வேண்டியது என்ன? எக்கேடாவது கெட்டுப் போகட்டுமென்று சும்மா இருந்துவிடலாமா?
விலங்கு பூட்டிய கையுடன் கூடிய ஸ்ரீதரனுடைய தோற்றம் அடிக்கடி உமாவின் மனக் கண்ணின் முன்னால் வந்து நின்றது. அதை நினைக்கும் போதெல்லாம் ஒரு பக்கம் அவள் மனத்தில் அளவிலாத வேதனை உண்டாயிற்று; மற்றொரு பக்கத்தில் திருப்தியும் ஏற்பட்டது. தன்னை எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிய மனுஷர் இப்போது சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேண்டும், நன்றாய் வேண்டும்!

அதே சமயத்தில் தான் அவருக்கு உதவி செய்யக் கூடிய நிலைமையில் இருப்பதை நினைத்து உமா கர்வமும் குதூகலமும் கொண்டாள். அது தான் சரி! இந்த ஆபத்துச் சமயத்தில் அவருக்கு உதவி செய்து பழிவாங்க வேண்டும்; அப்படித்தான் புத்தி கற்பிக்க வேண்டும். தன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்குக் கூட தைரியம் வராதபடி அடிக்க வேண்டும். ஆம்; எப்படியாவது அவரைக் கேஸிலிருந்து தப்பித்து விடுதலை பண்ண வேண்டும். விடுதலையான பிறகு நன்றி செலுத்த வருவாரல்லவா? "உமது நன்றி எனக்கு வேண்டாம்! போய்வாரும்! உமது முகத்தில் விழிக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை" என்று சொல்ல வேண்டும்.

-----------------

4.19. ஸ்ரீதரன் சபதம்

வக்கீல் ஆபத்சகாயமய்யருக்கு உண்மையாகவே உமாவின் மீது சகோதர விசுவாசம் ஏற்பட்டிருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவர் ஊகித்திருந்தார். ரொம்பவும் கஷ்டப்பட்டவளாயிருக்க வேண்டும்; பிறகு திடீரென்று நல்ல காலம் பிறந்து பணக்காரியாகியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார். இந்தச் செல்வம் அவளுக்கு எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றி அவருக்குச் சந்தேகங்கள் தோன்றியதுண்டு. ஏதாவது 'அவ்யாகிருதமான' வழியில் எண்ணமிட்டார். ஆனாலும் அவளுடைய உத்தமமான குணத்தை உத்தேசித்து அவளிடம் எந்த விதமான குற்றம் குறையிருந்தாலும் மன்னித்து விடத்தயாராயிருந்தார்.

இந்த மாதிரி ஒரு ஸ்திரீ, உற்றார் உறவினர் யாருமில்லாதவள், பணக்காரி என்பதைத் தவிர மற்றபடி நிராதரவான நிலைமையில் இருப்பவள் - அவளுக்கு ஒத்தாசை செய்யும் படியான சந்தர்ப்பம் தமக்கு ஏற்பட்டது பற்றி ஆபத்சகாயமய்யருக்கு ரொம்பவும் பெருமையாயிருந்தது. கோர்ட்டிலும் அட்வகேட் சங்கத்திலும் அவருடைய நண்பர்கள் சாதாரணமாக அவர 'மிஸ்டர் ஆபத்!' என்று கூப்பிட்டுப் பரிகாசம் செய்வது வழக்கம். அவரிடம் அகப்பட்டுக் கொள்ளும் 'கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆபத்துத்தான்' என்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் ஸ்ரீமதி உமாராணியின் விஷயத்தில் தம்முடைய பெயரின் பின்பகுதியை உண்மையாக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆபத்சகாயமய்யர் தீர்மானித்திருந்தார்.

ஆகவே, இப்போது உமாராணி தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்து ஒரு முக்கியமான வேலையைக் கொடுக்கவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய முயற்சி கடைசியில் பயன் அளித்தது. ஸ்ரீதரன் கையாண்டதாகச் சந்தேகிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு கே அண்டு ஓ பாங்கிக்காரர்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார்கள். சமீபத்தில் நடந்த ஒரு பாங்கி மோசடி வழக்கில் ஏராளமான பணச் செலவுக்குப் பின்னர் குற்றம் ருசுவாகாமல் கைதி விடுதலையடைந்திருந்தபடியால், பாங்கிக்காரர்கள் இதற்கு எளிதில் இணங்கினர். போலீஸ் இலாகாவினர் முதலில் இதை ஆட்சேபித்த போதிலும், கடைசியில் குற்றம் ருசுவாவது கஷ்டம் என்று கண்டு அவர்களும் சம்மதித்து விட்டார்கள். எனவே, ஸ்ரீதரனுடைய குற்றம் மோசடி இல்லையென்றும், கவனக் குறைவுதான் என்றும் தீர்மானிக்கப்பட்டு, ஸ்ரீதரன் சில தினங்களில் விடுதலையடைந்தான்.

சிறையில் ரிமாண்டு கைதியாக இருந்த ஸ்ரீதரனை வக்கீல் ஆபத்சகாயமய்யர் பார்த்துப் பேசியபோது, உமா கூறிய நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தார். ஸ்ரீதரனும் அவற்றுக்கு உடனே இணங்கினான். ஆனால் நிபந்தனைகளை நிறைவேற்றும் உத்தேசம் அவனுக்குக் கிடையவே கிடையாது. பணங்கொடுப்பது யார் என்று கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. சாவித்திரிதான் தன்னை விடுதலை செய்ய முயற்சி எடுக்கிறாள் என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை. வேறு யார் தன்னிடம் இவ்வளவு அக்கறை காட்டிக் கேஸிலிருந்து தப்புவிக்க முயற்சி எடுக்கப் போகிறார்கள்?

ஆனால் விடுதலையானதும் சென்னையை விட்டுப் போக வேண்டும் என்ற நிபந்தனை அவன் மனத்தைப் புண்படுத்திக்
கோபமூட்டியது. இதற்கு முக்கிய காரணம், சாவித்திரியை அன்று பார்த்ததிலிருந்து அவள் பேரில் அவனுக்கு ஏற்பட்டிருந்த பாசமேயாகும். ஏற்கெனவே, சாவித்திரியின் விஷயத்தில் தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்து அவன் பல தடவைகளில் பச்சாத்தாபப் பட்டிருக்கிறான். அவளைப் பூரண கர்ப்பவதியாயிருக்கையில் வழிப்போக்கர்களுடன் கூட்டி அனுப்பி, அப்புறம் தகவல் ஒன்றுமே தெரியாமல் போன பிறகு, தாயார் தகப்பனார்களுடன் அவன் அதைக் குறித்துச் சில சமயம் சண்டை பிடித்ததும் உண்டு. கொஞ்ச நாளைக்குப் பிறகு, ராஜாராமய்யர் மனநோயும் உடல் நோயும் அதிகமாகிக் காலஞ் சென்றார். பிறகு, தாயாருக்கும் பிள்ளைக்கும் ஒத்துக் கொள்ளவேயில்லை. தங்கம்மாள் பிள்ளையைச் சீர்திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் கடைசியில் மனம் வெறுத்து ஹைதராபாத்தில் இருந்த தன் பெண்ணுடன் வசிக்கப் போய்விட்டாள். அம்மாவுடன் ஸ்ரீதரன் சண்டை போட்ட போதெல்லாம், "படுபாவி! ஒன்றுந் தெரியாத சாதுப் பெண்ணை அநியாயமாய்க் கொன்றுவிட்டாயே?" என்று திட்டுவது வழக்கம். இம்மாதிரி, சாவித்திரியைப் பிரிந்த பிறகு அவள் விஷயத்தில் அவனுடைய மனம் மாறியதோடு கூட, "ஐயோ! இந்த மாதிரி செய்துவிட்டோ மே!" என்று அடிக்கடி வருத்தப்பட்டதும் உண்டு. மறுபடியும் ஒரு தடவை சாவித்திரி தன்னைத் தேடி வந்தாளானால் முன்னால் செய்ததற்கெல்லாம் பிராயச்சித்தமாக அவளை ரொம்ப நன்றாக நடத்தவேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான்.

-----------------

4.20. வந்தாரே தீக்ஷிதர்!

இதற்கிடையில், சம்பு சாஸ்திரியும் சாருவும் தமிழ் நாட்டின் கிராமங்களில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கால் நடையாக நடந்தும், சாலையில் போய்க் கொண்டிருந்த போக்கு வண்டிகளில் ஏறிக்கொண்டும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும், சாஸ்திரி குழந்தையுடன் ஊர்ச் சாவடியிலோ, கோவிலிலோ அல்லது குளக் கரையிலோ உட்கார்ந்து கொள்வார். யாரோ பெரியவர் வந்திருக்கிறாரே என்று ஜனங்கள் வந்து சேர்வார்கள். அவர்களிடம் பேசத் தொடங்குவார். நமது பாரத தேசம் முன்னே எவ்வளவு மேன்மையாக இருந்தது என்பதை எடுத்து விவரிப்பார். இந்தக் காலத்தில் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வையும் ஜனங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தீய பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டுவார். சாதி, மத துவேஷங்களினால் விளையும் தீங்குகளையும், மதுபானத்தினால் உண்டாகும் கெடுதிகளையும் விவரிப்பார். தாம் சொல்வதற்கெல்லாம் ஆதாரமாக, புராண இதிகாசங்களிலிருந்தும், திருமந்திரம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவார். இடையிடையே, குழந்தை சாருவும் தாத்தா சொல்லிக் கொடுத்த பாட்டு ஏதாவது சொல்வாள்.

சீக்கிரத்தில் இவர்களுடைய கீர்த்தி நெடுகப் பரவத் தொடங்கியது. "ஒரு பெரியவரும் குழந்தையுமாக ஊர் ஊராக வருகிறார்களாம், அந்தப் பெரியவர் ரொம்பப் படித்தவராம். சாஸ்திரங்களில் கரை கண்டவராம். தேசிய விஷயங்களை அவர் சொல்கிறது போல் அவ்வளவு மனத்தில் படியும்படி பெரிய பெரிய தலைவர்கள் கூட சொல்கிறதில்லையாம்" என்று கிராமங்களில் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்.

"தீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா சொல்கிறாரோ, இல்லையோ? அதைப்பற்றி மற்றவர்கள் யாராவது பேசினால் ஜனங்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சம்பு சாஸ்திரி பேசுகிறபோது எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கத்துக்கு நம்ம சாஸ்திரங்களிலே இடங் கிடையாதென்று அவர் அவ்வளவு தெளிவாய் எடுத்துச் சொல்கிறார்" என்று சீர்திருத்தப் பற்றுள்ளவர்கள் சொன்னார்கள்.

"அவரோடு ஒரு குழந்தை வருகிறதல்லவா? அதைப் பார்க்கிறதற்குப் பதினாயிரங் கண் வேணும். அந்தக் குழந்தை காந்தி பாட்டுப் பாடுகிறது. அந்தப் பாட்டைக் கேட்கிறதற்கு இருபதாயிரம் காது வேணும்" என்று வேறு சிலர் சொன்னார்கள்.

"சம்பு சாஸ்திரிதானே? ஓஹோஹோ! அவர் சாதாரண மனுஷரா என்ன? யோகின்னா அவர்? மந்திர சக்தியுடையவராச்சே? அவர் வாயாலே சாபங் கொடுத்தாலும் கொடுத்ததுதான்; அநுக்ரஹம் பண்ணினாலும் பண்ணினதுதான்" என்ற வதந்தி ஒரு பக்கத்தில் பரவிக் கொண்டிருந்தது.

"அந்தப் பெரியவரும் குழந்தையும் ஒரே சமயத்தில் மூன்று ஊரில் இருந்திருக்காளாம். மூன்று ஊரிலும் பொதுக் கூட்டத்திலே பேசியிருக்காளாம். கலியுகத்திலே இந்த மாதிரி அதிசயத்தை இதுவரையில் பார்த்ததில்லை" என்றும், "சம்பு சாஸ்திரியை அரெஸ்ட் பண்ணி ஜெயிலிலே போட்டுடறதுன்னு சர்க்காரிலே ஆன மட்டும் பார்த்தாளாம்; முடியலையாமே? போலீஸ்காரன் வந்தானோ, இல்லையோ, தாத்தாவும் பேத்தியும் மாயமாய் மறைஞ்சுடறாளாமே?" என்றும், இம்மாதிரி அவர்களுக்கு ஆச்சரியமான சக்தியெல்லாம் கற்பித்துப் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், "சேச்சே! அதெல்லாம் சுத்தப் பிசகு. இந்த மாதிரி குருட்டு நம்பிக்கைதான் தேசத்தைக் கெடுக்கிறது. சம்பு சாஸ்திரியை என்னத்துக்காகச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வர்றா? அவர் தான், கவர்ன்மெண்ட் பேச்சையோ, வெள்ளைக்காரன் பேச்சையோ எடுக்கறதேயில்லையே? நம்ம ஜனங்கள் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது, சாதி வித்தியாசமெல்லாம் போகணும், தீண்டாமை ஒழியணும், கள்ளுக் குடிக்கக்கூடாது. கதர் கட்டிக்கணும் - இவ்வளவு தானே அவர் சொல்றது. இதுக்காக அவரைச் சர்க்காரிலே அரெஸ்ட் பண்ண வருவாளா, என்ன?" என்று உண்மையை எடுத்து விளக்கினார்கள்.

-------------------


4.21. நெடுங்கரைப் பிரயாணம்

பதினாறு மாடு பூட்டிய ரதத்தில் சம்பு சாஸ்திரி கழுத்தில் பூமாலைகளுடனும், பக்கத்தில் ஒரு குழந்தையுடனும் ஊர்வலம் வருவதைக் கண்டதும் தீக்ஷிதருக்கு ஒரே பிரமிப்பாய் போய்விட்டது. "எப்படியும் தஞ்சாவூர் ஜில்லாக்காரனுடைய மூளையே மூளை! எப்படி ஊரை ஏமாத்திண்டிருக்கான் பார்த்தாயா?" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். "இந்தப் பொண்ணு ஒண்ணை எங்கே போய்ப் பிடிச்சான்?" என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டார்.

ஊர்வலம் முடிந்து எல்லாரும் ஊர்ச் சாவடியை அடைந்தார்கள். அங்கே பொதுக் கூட்டம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. மரத்தடியில் பெரிய மேடை கட்டி, பாரத மாதா படத்தை வைத்து அலங்கரித்திருந்தார்கள். சம்பு சாஸ்திரியும் சாருவும் இன்னும் சிலரும் மேடையின் மீது அமர்ந்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் தீக்ஷிதர் கூட்டத்தில் புகுந்து இடித்துப் பிடித்துக் கொண்டு போய் மேடையருகில் வந்து சேர்ந்தார். சம்பு சாஸ்திரியைப் பார்த்து, "சாஸ்திரிகளே! சௌக்கியமா?" என்று கேட்டார்.

"அடடா! தீக்ஷிதர்வாளா? இங்கே எங்கே வந்தது? எதிர்பாராத விஜயமாயிருக்கிறதே?" என்றார் சம்பு சாஸ்திரி.

தீக்ஷிதரைப் பார்த்ததில் சம்பு சாஸ்திரிக்கு வெறுப்பும் சந்தோஷமும் கலந்தாற்போல் உண்டாயின. 'இந்த மனுஷர் இங்கே எங்கு வந்து சேர்ந்தார்?' என்று ஓர் எண்ணம்; 'இவரிடம் நெடுங்கரையைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளலாமே' என்று ஓர் ஆசை.

"ஆமாங்கணும்! உலகமெல்லாம் இப்ப உம்ம பேச்சாத்தானே இருக்கு? தமிழ்நாட்டு மகாத்மா காந்தின்னு கூட உம்மைப் பத்திச் சொல்றாளே? அப்பேர்ப்பட்டவர் நம்மூர்க்காரராச்சே. அவரைப் பார்க்கணும்னுதான் வந்தேன். உம்மகிட்டத் தனியா ஒரு விஷயமும் பேச வேண்டியிருக்கு."

"அதுக்கென்ன! கூட்டம் முடிந்ததும் பேசலாம்" என்றார் சம்பு சாஸ்திரி.

கூட்டத்தில் வழக்கம் போல் வரவேற்புப் பேச்சுக்கள் முடிந்ததும், சாரு எழுந்திருந்து காந்தி பாட்டு ஒன்று பாடினாள். கூட்டத்திலிருந்தவர்கள் குழந்தையின் பாட்டை ரொம்பவும் ரஸித்து ஆனந்தித்தார்கள்.

பின்னர், சம்பு சாஸ்திரி எழுந்திருந்து பேசினார். பழைய நாட்களில் பாரத தேசம், எவ்வளவு பெருமையுடன் இருந்தது என்பதை
எடுத்துச் சொன்னார். தேசம் தற்சமயம் க்ஷீணமடைந்திருப்பதை எடுத்துக் காட்டினார். இந்தத் தேசத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கு மகாத்மா காந்தி அவதாரம் செய்திருக்கிறார் என்று சொன்னார். ராமாயணம், கீதை முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருப்பதைத்தான் காந்தி மகானும் சொல்கிறார் என்று எடுத்துக் காட்டினார். பிறகு வர்ணாசிரம தர்மம் என்பதை நம் பெரியோர்கள் என்ன நோக்கத்துடன் ஏற்படுத்தினார்கள் என்பதை விவரித்தார். சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கிடையாதென்றும், ஒரு வகுப்பாரைத் தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைக்க சாஸ்திரத்தில் இடமில்லையென்றும்
ருசுப்படுத்தினார். கடைசியில் மதுபானத்தின் தீங்கை எடுத்துச் சொல்லிப் பேச்சை முடித்தார். உள்ளூர்க்காரர்கள் வந்தனோபசாரம் சொன்ன பிறகு பிரமாதமான உற்சாகத்துடனும் ஜய கோஷங்களுடனும் கூட்டம் கலைந்தது.

பிறகு சம்பு சாஸ்திரி, தீக்ஷிதரைத் தனியாக அழைத்துச் சென்று, "என்ன சமாசாரம் தீக்ஷிதர்வாள்! தனியாய்ப் பேசவேணும் என்றீர்களே?" என்று கேட்டார்.

"ஓய் சம்பு சாஸ்திரி! உம்ம குட்டை எல்லார் மத்தியிலும் உடைச்சுவிடலாம்னு பார்த்தேன். போனால் போறது, நம்ம ஊர்க்காரனாச்சேன்னு விட்டேன்; தெரியுமாங்கணும்?" என்றார் தீக்ஷிதர்.

"குட்டை உடைக்கிறதா? என்ன சொல்றேள், தீக்ஷிதர்வாள்? எனக்கு ஒன்றுமே புரியலையே?"

"உமக்கு ஏங்காணும் புரியும்? பெரிய அழுத்தக்காரராச்சே நீர்? ஆமாம், எவ்வளவு ரூபாய்ங்காணும் சேர்த்திருக்கிறீர் இதுவரையிலே? ரொக்கமாய்ப் பத்தாயிரமாவது இருக்குமா?"

"ரொக்கமாவது, பத்தாயிரமாவது? நான் பணஞ்சேர்க்கறதுக்காக இப்படிக் கிளம்பினேன்னு நினைச்சுண்டயளோ?"

"அப்பாடா! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு பேசமாட்டீரா நீர்? சொல்லாத போனால் போம்... பொண் ஒண்ணை அழைச்சுண்டு வந்திருக்கிறீரே? அதை எங்கே புடிச்சீர்? அதையாவது சொல்வீரோ, மாட்டீரோ?"

"குழந்தையா? பராசக்தி கொடுத்தாள், தீக்ஷிதரே!" என்று சாஸ்திரி சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையில், இதை இந்த மனுஷர் எங்கே நம்பப் போகிறார் என்ற பாவம் தோன்றிற்று.

---------------------


4.22. ராஜி யோசனை

சென்னைப்பட்டணம் 'கொல்'லென்றிருந்தது. உமா ராணியின் புருஷன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்திருக்கிறானாம் என்றும், அவன் உமாராணியின் பேரில் தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுக்கப் போகிறானாம் என்றும் செய்தி பரவிற்று. எங்கே பார்த்தாலும் ஜனங்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். உமாராணியின் பூர்வ ஜீவியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஏற்கெனவே ரொம்பப் பேருக்கு ஆவல் இருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறதென்று எல்லாருமே நினைத்தார்கள். அது என்னவாயிருக்கலாமென்று பலர் பலவிதமாய் ஊகம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது உண்மை வெளியாவதற்கு ஹேது உண்டாகவே, நகரில் பிரமாதமான பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

கடைசியில், ஒரு நாள், பத்திரிகைகளில், கேஸ் தாக்கலாகிவிட்டது என்ற விவரம் வெளியாயிற்று. அந்தச் செய்தியைப் பெரிய தலைப்புக்களுடன் முக்கியமான இடத்தில் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன:

கலியுக அதிசயம்!

திடீரென்று வந்தவர் தாம்பத்ய உரிமை கோருகிறார்!
உமாராணியின் மேல் வழக்கு! என்னும் இது போன்ற தலைப்புகள் பத்திரிகைகளின் இடத்தை அடைத்தன. 'போஸ்டர்' விளம்பரங்களிலும் இந்தக் கேஸ் விவரந்தான் காணப்பட்டது.

மறுநாள் காலையில், ஆபத்சகாயமய்யரின் பாரியை, கையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையுடன் அவருடைய ஆபீஸ் அறைக்கு வந்து சேர்ந்தாள்.

"ஏன்னா? இதென்ன அவமானம்? உங்க உமாராணி மேலே ஏதோ கேஸாமே?" என்றாள்.

"அதிலே உனக்கு என்ன வந்தது அவமானம்?" என்று வக்கீல் கேட்டார்.

"நீங்க அங்கே போயிண்டு வந்திண்டு இருக்கேளேன்னுதான்; இல்லாட்டா, ஊரிலே எந்த நாய் எப்படிப் போனா எனக்கென்ன?
ஆமாம்; என்னமோ தாம்பத்திய உரிமைக் கேஸுன்னு போட்டிருக்கே, அப்படின்னா என்ன?"

"அப்படின்னா, 'Suit for Restitution of Conjugal Rights' என்று அர்த்தம்."

"போருமே பரிகாசம்! இப்படியெல்லாம் நீங்க கிருதக்காப் பேசறதைக் கேட்டாத்தான், எனக்கு எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு தோணறது."

"நீ இப்பச் சொல்றயோல்லியோ? அந்த மாதிரி நிஜமாகவே ஒரு மனுஷனுக்கு அதிர்ஷ்டம் வந்து அவன் பெண்டாட்டி அவனை விட்டு ஓடிப்போயிடறாள்னு வச்சுக்கோ. அந்த மடையன் அது தனக்கு அதிர்ஷ்டம்னு தெரிஞ்சுக்காமே, அவளைத் தன்னோடு வந்து இருக்கச் செய்யணும்னு கோர்ட்டிலே கேஸ் போட்டான்னா, அதுக்குத்தான் தாம்பத்திய் உரிமை வழக்குன்னு சொல்றது."

"இதென்ன வெட்கக்கேடு? இப்படிக்கூட ஒரு கேஸ் போடறதுண்டா, என்ன?"

"பின்னே சட்டம், கோர்ட்டு எல்லாம் என்னத்துக்காக இருக்குன்னு நினைச்சுண்டிருக்கே? வக்கீல் ஆம்படையாளாயிருந்துண்டு இன்னும் இது தெரிஞ்சுக்காமே இருக்கயே?"

-----------------


4.23. மங்களத்தின் மரணம்

சம்பு சாஸ்திரி நெடுங்கரையை அடைந்ததும், தீக்ஷிதர் மங்களத்தைப் பற்றிச் சொன்னது உண்மைதானென்று அறிந்தார். அப்போது, பகவானுடைய கருணையின் ஒரு முக்கியமான அம்சம் அவருக்குப் புலப்பட்டது. இந்த உலகத்தில் சம்பு சாஸ்திரி யாராவது ஒரு மனிதரை வெறுத்தார், தம்முடைய சத்துருவாகக் கருதினார் என்றால், அந்த மனிதர் சங்கர தீக்ஷிதர்தான். அப்பேர்ப்பட்ட சங்கர தீக்ஷிதர் மூலமாக ஈசன் தம்மை மங்களத்தின் மரணத்தறுவாயில் அவளிடம் கொண்டு சேர்த்ததை நினைத்து நினைத்துச் சாஸ்திரி மனம் உருகினார். இந்த ஓர் உதவி செய்ததன் பொருட்டு, தீக்ஷிதர் தமக்கு ஏற்கெனவே செய்துள்ள அபசாரங்களையெல்லாம் அவர் மன்னித்துவிடவும், அவரிடம் நன்றி பாராட்டவும் தயாராயிருந்தார். ஆறு ஏழு வருஷமாக மங்களத்தைத் தாம் கை விட்டுவிட்டு இருந்ததே பிசகு. ஐயோ! இந்தச் சமயத்திலாவது தாம் வந்திராவிட்டால், அவள் கதி என்ன ஆகியிருக்கும்? தமக்குத்தான் அப்புறம் அடுத்த ஜன்மத்திலாவது மனச்சாந்தி உண்டாக முடியுமா?

தாம் பட்டணத்துக்குப் போன பிறகு மங்களத்தின் வாழ்க்கை எப்படி நடந்தது என்பதைப் பற்றி அவளே சொல்லிச் சாஸ்திரி தெரிந்து கொண்டார். சாஸ்திரியின் வாழ்க்கை எவ்வளவு விசேஷ சம்பவங்கள் நிறைந்ததோ, அவ்வளவு மங்களத்தின் வாழ்க்கை விசேஷமற்றதாயிருந்தது. நாலைந்து மாதத்துக்கெல்லாம் அவள் தன் தாயாருடனும் செவிட்டு வைத்தியுடனும் நெடுங்கரைக்குத் திரும்பி வந்தாள். அப்போதிருந்து நெடுங்கரையில் தான் வசித்தாள். தான் இல்லாதபோது சாவித்திரி பூரண கர்ப்பவதியாய் நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செய்தியை ஊரார் சொல்லத் தெரிந்து கொண்டபோது அவள் மனம் ரொம்பவும் புண்பட்டது. சாஸ்திரியிடமிருந்தும் கடிதம் ஒன்றும் வராமல் போகவே, தானும் தன் தாயாருமாகச் சேர்ந்து செய்த சதியை அவர் தெரிந்து கொண்டு தான் அடியோடு தன்னை வெறுத்து விட்டார் என்று மங்களம் எண்ணத் தொடங்கினாள். அது முதலே, மங்களத்துக்கும் அவள் தாயாருக்கும் ஒத்துக் கொள்ளாமல் போயிற்று. "பாவி! பழிகாரி! நீதானே அவரை ஊரைவிட்டு விரட்டினாய்!" என்று மங்களம் அடிக்கடி அம்மாவை வைவதும், "நன்றியற்ற நாயே! எல்லாம் உனக்காகத்தானேடி செய்தேன்?" என்று அம்மா திருப்பி வைவதும் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. இந்த மாதிரி சண்டையினால், சொர்ணம்மாள் சில சமயம் மங்களத்தினிடம் கோபித்துக் கொண்டு ஊரைப் பார்க்கப் போய்விடுவதும் உண்டு. அந்த மாதிரியே இந்தச் சமயமும் அவள் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தாள். செவிட்டு வைத்தி மட்டுந்தான் அக்காவுக்குத் துணையாயிருந்தான்.

சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பினாள் என்னும் செய்தி சம்பு சாஸ்திரியைக் கதிகலங்கச் செய்தது. ஆனாலும், சாவித்திரியைப் பற்றி நினைக்க இப்போது தருணமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். படுத்த படுக்கையாய்க் கிடக்கும் மங்களத்தைப் பராமரிப்பதுதான் இப்போது தம்முடைய முதன்மையான கடமை என்று கருதி, அந்தக் கடமையில் பூரணமாய் ஈடுபட்டார்.

மங்களம் சென்ற இரண்டு வருஷ காலமாக மிகக் கொடிய தலைவலியினால் அடிக்கடி பீடிக்கப்பட்டு வந்தாள். அதற்குச் செய்து கொண்ட நாட்டு வைத்தியங்கள் ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. தான் செய்த கர்மத்தினால் தான் இந்த வியாதி தன்னைப் பீடித்திருக்கிறது என்று அவள் நம்பியபடியால், வைத்தியம் சாதாரணமாய்ப் பலிக்கக்கூடிய அளவுகூடப் பலிக்கவில்லை. இப்போது தலைவலியுடன் சுரமும் சேர்ந்து அவளைப் பீடித்திருந்தது. ரொம்பவும் துர்பலமாயுமிருந்தாள்.

அந்த நிலைமையில் தன் கணவர் வந்து சேர்ந்தது அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம் அளித்தது. சாஸ்திரியும் மிகவும் சிரத்தையுடன் அவளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார். ஆனால், இதனாலெல்லாம் அவளுடைய வியாதி குணப்படவில்லை; அதிகமே ஆயிற்று.

"சாகிறதற்கு முன்னால் அவரை ஒரு தடவை பார்க்கும்படி கிருபை செய்யவேணும், ஸ்வாமி!" என்று மங்களம் பகவானை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அந்தப் பிரார்த்தனைக்குப் பகவான் மனமிரங்கித்தான் இப்போது சாஸ்திரியைக் கொண்டு வந்து சேர்ந்ததாக அவள் நினைத்தாள். ஆகவே, இனிமேல் தான் பிழைக்கப் போவதில்லையென்றும், சீக்கிரம் மரணம் நேர்ந்துவிடும் என்றும் அவளுக்கு நம்பிக்கை உண்டாயிற்று.

சம்பு சாஸ்திரி வந்ததிலிருந்து அவளுடைய அலட்டலும் அதிகமாயிற்று. ஓயாமல் தான் சாவித்திரிக்குச் செய்த கெடுதலைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினாள். அப்போதெல்லாம் சாஸ்திரி அவளுக்குக் கூடியவரையில் சமாதானம் சொல்ல முயன்றார்.

---------------

4.24. 'மாட்டேன்! மாட்டேன்!'

சாரு, மங்களத்துக்கு முன்னால் சாவித்திரியின் ரூபமாகத் தோன்றி, "எனக்கு உன் பேரில் கோபமில்லை" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில், உண்மையான சாவித்திரி சென்னை ஐகோர்ட்டில் சாட்சிக் கூண்டில் கோபமே உருவெடுத்தவள் போல் நின்றாள்.

ஸ்ரீதரன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டான். உமாராணியின் மேல் நிஜமாகவே தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுத்து அவளைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

கோர்ட்டில் அப்போது உமாராணியின் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல் மிஸ்டர் நாராயணன், பி.ஏ., பி.எல்., குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். இந்த நாராயணன் தான் ஸ்ரீதரனுடைய பழைய சிநேகிதனாகிய நாணா என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. நாணாவின் மாமனார் காலஞ்சென்ற பிறகு அவன் பாடு ரொம்பவும் கஷ்டமாய்ப் போயிருந்தது. பெரிய பெரிய வக்கீல்கள் எல்லாம், "காலங்கெட்டுப் போச்சு; கேஸுகள் குறைஞ்சு போச்சு!" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், கத்துக்குட்டி நாணாவை யார் கவனிக்கிறார்கள்? "எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்" என்ற தோரணையில்தான் அவன் கோர்ட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட நிலைமையில், ஸ்ரீதரனுடைய கேஸ் அவனுக்குப் பெரியதொரு வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது. இதன் மூலம் தான் பெயரும் பிரஸித்தியும் அடையலாம் என்றெண்ணினான். "ஸ்ரீதரா! இப்போதைக்கு, பீஸ், கீஸ் ஒன்றும் நான் கேட்கவில்லை. கேஸ் ஜயிச்சுதோ, அப்புறம் என்னைக் கவனிச்சுக்கோ, போரும்-ஓ! இந்தக் கேஸ் மட்டும் ஜயிச்சுதுன்னா அப்புறம் உனக்கு என்ன குறைச்சல், எனக்குத்தான் என்னடா குறைச்சல்?" என்று ஸ்ரீதரனை உற்சாகப்படுத்தினான்.

இப்படியாக, இந்தத் தாம்பத்திய உரிமை வழக்கு ஜயமடைய வேண்டுமென்பதில் ஸ்ரீதரனுக்கு இருந்த கவலையைக் காட்டிலும் நாராயணன், பி.ஏ.,பி.எல்., அவர்களுக்குக் கவலை அதிகமாயிருந்தது. ஆகவே, மிகவும் சிரத்தையுடன் கேஸை நடத்தினார். அந்தச் சிரத்தையை இப்போது, உமாராணியைத் தாறுமாறாகக் கேள்வி கேட்டு, அவளுடைய மனம் கலங்கும்படி அடிப்பதில் காட்டினார்.

"புருஷன் வீட்டிலே நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதாகச் சொல்கிறீர்களல்லவா? அந்தக் கஷ்டங்களை அந்தக் காலத்திலேயே யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா? உதாரணமாக, உங்கள் தகப்பனார் சம்பு சாஸ்திரியிடமாவது சொல்லியதுண்டா?" என்று கேட்டார்.

உமா சற்று யோசித்துவிட்டு, "இல்லை" என்று பதில் சொன்னாள்.

"அவ்வளவு கஷ்டம் நீங்கள் பட்டிருந்தால் ஏன் ஒருவரிடமும் அப்போது சொல்லவில்லை?"

"இஷ்டமில்லை; அதனால் சொல்லவில்லை."

"நீங்கள் கஷ்டப்பட்டதாகச் சொல்வதெல்லாம் பொய்; அதனால் தான் சொல்லவில்லையென்று நான் ஊகிக்கிறேன்."

"எனக்குப் பொய் சொல்ற வழக்கம் கிடையாது; உங்களுக்குத்தான் அதுவே தொழில்" என்று உமாராணி பளீரென்று பதில் கூறினாள். இதைக் கேட்டு, கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.

நீதிபதி கோபமாக மேஜையைத் தட்டினார்.

ஆனால், அட்வகேட் நாராயணன் ஒரு ஸ்திரீக்குச் சளைத்து விடுவாரா? அவர் ஒரு கோணல் புன்னகை புரிந்து, "ஆனால், உங்கள் பெயரே ஒரு பொய்யாச்சே?" என்றார். அப்போது, வக்கீல்களிடையே சிரிப்பு உண்டாயிற்று.

"அநாவசியமான விவாதம் வேண்டாம்; குறுக்கு விசாரணையை நடத்தும்!" என்று வாதி வக்கீலைப் பார்த்து நீதிபதி சொன்னார்.

-------------------

4.25. பராசக்தி லீலை

நெடுங்கரை வந்ததிலிருந்து சம்பு சாஸ்திரியார் ஈசனுடைய கருணைத் திறத்தை மேலும் மேலும் உணரும்படி நேரிட்டது.
அக்கிரகாரத்து ஜனங்களின் மனோபாவத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு மிகவும் வியப்பை அளித்தது. தீக்ஷிதர் நெடுங்கரைக்கு இன்னும் திரும்பி வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் சம்பு சாஸ்திரியை இப்போது மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார்கள். சாஸ்திரி புரிந்து வந்த தேசத் தொண்டைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்குச் செய்தி எட்டியிருந்தது. அவருக்கு வந்த பெருமையெல்லாம் தங்கள் ஊருக்கு வந்ததாகவே கருதி அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட மகானை ஒரு காலத்தில் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தோமே என்பதைக் குறித்து அவர்களில் பலருக்கு வெட்கமாயும் இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாக, இப்போது மங்களத்தின் அந்தியக் கிரியைகளை நடத்துவதற்கு அவர்கள் சம்பு சாஸ்திரிக்கு வேண்டிய ஒத்தாசை புரிந்தார்கள். அது விஷயமாக அவருக்கு அவர்கள் ஒரு கவலையும் வைக்கவில்லை. அக்கிரகாரத்து ஸ்திரீகளுடைய மனோபாவமும் பெரிதும் மாறிப் போயிருந்தது. வீட்டுக்கு ஒரு நாளாகச் சமையல் செய்து சாஸ்திரிக்கும் சாருவுக்கும் கொண்டு வந்து வைத்தார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு, குழந்தை சாருவுக்கு வேண்டியதெல்லாம் செய்து வந்தார்கள்.

குடியானத் தெருவையும், சேரியையும் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. சாஸ்திரி ஐயா திரும்பி வந்ததைப் பற்றி அவர்களுக்கெல்லாம் ஒரே உற்சாகம். "அந்த அம்மா சாகப் போகிற சமயத்துக்கு வந்துட்டாங்க பாத்தியா? ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது?" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் பார்த்த சம்பு சாஸ்திரியார் இனி நெடுங்கரையிலேயே தங்கி விடலாமா என்று யோசித்தார். இதற்கு ஒரே ஓர் எண்ணந்தான் குறுக்கே நின்றது. சாவித்திரியின் க்ஷேமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவருடைய உள்ளம் துடிதுடித்தது. ஏழு வருஷத்துக்கு முன்னால் நெடுங்கரைக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றவள் என்ன ஆனாள்? எங்கே போனாள்? சௌக்கியமாய்க் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருப்பாளோ?...

சாவடிக் குப்பத்துக்குப் போன புதிதில் தாம் அங்கே இருப்பது நெடுங்கரைக்குத் தெரியக் கூடாதென்று சாஸ்திரி எண்ணினாரல்லவா? ஆகையினால், அந்தச் செய்தி, கல்கத்தாவுக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைத்து, சாவித்திரிக்கும் கடிதம் போடவில்லை. ஆனாலும், அவளுடைய க்ஷேமசமாசாரத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு ரொம்பவும் ஆவல் இருந்தது. நல்லானைக் கொண்டு கடிதம் எழுதச் சொன்னார். நல்லானுக்கு சாவித்திரி கட்டாயம் பதில் எழுதுவாளென்று அவர் நினைத்தார். ஆனால் நல்லான் எழுதிய இரண்டு மூன்று கடிதத்துக்கும் கல்கத்தாவிலிருந்து பதில் வரவில்லை. பிறகு, தாமே கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை. ஆகவே, ஒரு வேளை ஜாகை மாற்றிக் கொண்டு போயிருப்பார்கள், அதனால் தான் பதில் வரவில்லையென்று தீர்மானித்து,
பகவானுடைய அருளால் எப்படியாவது சௌக்கியமாயிருந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார். நல்லான் முதன் முதலில் உமாராணியைப் பார்த்தபோது, "பெரிய குழந்தைதான் நம்மை அடியோடு மறந்துடுத்துங்க" என்று சொன்னதில், தன்னுடைய கடிதங்களுக்குச் சாவித்திரியிடமிருந்து பதில் வராத தாபத்தைத்தான் வெளியிட்டான்.

சாஸ்திரி அதையெல்லாம் இப்போது நினைவுபடுத்திக் கொண்டார். 'ஐயோ! சாவித்திரி! புக்ககத்தில் நீ சௌக்கியமாயிருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே? உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா? இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ?
என்னவெல்லாம் கஷ்டப்பட்டாயோ? இப்போது எவ்விடத்தில் என்னமாய் இருக்கிறாயோ? ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ?..."

--------------------

4.26. சந்திப்பு

சம்பு சாஸ்திரி முன் தடவை நெடுங்கரையிலிருந்து கிளம்பிச் சென்றதற்கும், இப்போது கிளம்பியதற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருந்தது. முன்னே அவர் தன்னந்தனியாகக் கிளம்பிச் சென்றார். ஊரிலுள்ளவர்கள் யாரும் ஏனென்று கேட்கவில்லை. ஆனால் இம்முறை அவர் சாருவுடன் கிளம்பியபோது, கிராம ஜனங்கள் பாதிப்பேர் அவர் பின்னோடு வெகு தூரம் வந்து வழி அனுப்பினார்கள்.
சாஸ்திரிகள், "நில்லுங்கள், நில்லுங்கள்" என்று பல தடவை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

"இனிமேல் நீங்கள் குழந்தையோடே இங்கேயே இருப்பயள், முன்மாதிரி பஜனையெல்லாம் நடத்தலாம்னு இருந்தோம்; அதுக்கு
நாங்கள் கொடுத்து வைக்கலை" என்று முத்துசாமி ஐயர் சொன்னார்.

"அதுக்கென்னடா செய்யறது? நாம் செய்த பாக்கியம் அவ்வளவுதான்" என்றார் சாமாவய்யர்.

முத்துசாமி அய்யரும் சாமாவய்யரும் இவ்வளவு அன்பு காட்டினார்களென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும், குடியானவர்களுக்குத்தான் சாஸ்திரி ஐயா போவது ரொம்பவும் மன வருத்தத்தை அளித்தது.

"சாமி, எங்களை மறந்துடாதீங்க!"
"திரும்பிக் கட்டாயம் வந்துடணும்!"

"பட்டிக்காரர் கிட்டே, நாங்க ரொம்ப அவரை விசாரிச்சோம் என்று சொல்லுங்க, சாமி!" என்று இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு குடியானவர்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார்கள்.

கடைசியாக, ஊரின் எல்லையைத் தாண்டும் சமயத்தில், சாஸ்திரியார் அவர்களைப் படிவாதமாக நிற்கச் சொன்னார். பிற்பாடு, வண்டி துரிதமாகச் சென்றது.

வண்டி போய்க்கொண்டிருக்கையில், சாரு, "நான் போன ஜன்மத்திலே ரொம்பப் பாவம் பண்ணியிருப்பேன் போலிருக்கு, தாத்தா! இத்தனை நாளைக்கப்புறம், என்னை இடுப்பிலே எடுத்துக்கறதற்கு ஒரு பாட்டி கிடைச்சான்னு நினைச்சுண்டிருந்தேன். அவளையும் ஸ்வாமி அழைச்சுண்டுட்டாரே!" என்றாள்.

"உன் வாக்குப் பலிக்கட்டும், சாரு! ஸ்வாமி மங்களத்தினுடைய பாவத்தையெல்லாம் மன்னித்துத் தன்கிட்ட அழைச்சுக்கட்டும்"
என்றார் சாஸ்திரி.

"என்ன தாத்தா, பாட்டியும் அப்படியே சொன்னா; நீங்களும் அப்படியே சொல்றேள்? பாட்டி என்ன பாவம் பண்ணினா?" என்று சாரு
கேட்டாள்.

இதையெல்லாம் எப்படிக் குழந்தையிடம் சொல்வது என்று சாஸ்திரி தவித்தார். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு சொன்னார்: "ரொம்ப நாளைக்கு முன்னாலே உன்னைப்போல் ஒரு குழந்தை எனக்கு இருந்தா, அவ பேர் சாவித்திரின்னு சொன்னேனோ, இல்லையோ, அந்தக் குழந்தையைப் பாட்டி ரொம்பக் கஷ்டப்படுத்திண்டிருந்தா. அது அவள் மனத்திலே உறுத்திண்டே இருந்திருக்கு. அதனாலே தான் ஸ்வாமி என்னை மன்னிப்பாரான்னு கேட்டுண்டே இருந்தா. சாகிற சமயத்திலே உன்னைப் பார்த்ததும், சாவித்திரி
குழந்தையாயிருந்தது மாதிரி அவளுக்குத் தோணித்துப் போலிருக்கு. அதனாலேதான், தன் மேலே கோபமில்லைன்னு உன்னைச் சொல்லச் சொன்னாள்..."

இப்படிச் சிரமத்துடன் கூறிவந்த சாஸ்திரி சட்டென்று நிறுத்தினார். அவர் மனத்தில் பளீரென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. சாருவை உற்றுப் பார்த்தார். அப்படியும் இருக்குமோ? அப்பேர்ப்பட்ட அதிசயம் நடக்கக் கூடியதா?...

----------------

4.27. 'ஜட்ஜு மாமா!'

சாருவுக்கு ஜில்லி கிடைத்ததில் உண்மையாகவே சந்தோஷந்தான். ஆனாலும், முன்னையெல்லாம் போல் அவளுடைய மனத்தில் குதூகலம் ஏற்படவில்லை. 'மாமியும் தாத்தாவும் உறவாய்ப் போய்விட்டார்கள்; நாம் தனியாய்ப் போய்விட்டோ ம்' என்ற எண்ணம்
அவளுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. தானும் தாத்தாவுமாய் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டேயிருக்கக் கூடாதா, எதற்காக இங்கே வந்தோம் என்று கூடத் தோன்றியது.

முன்னைப்போல் சாரு இப்போது பங்களாவின் தோட்டத்தில் திரிந்து விளையாடுவதில்லை. பங்களாவுக்குள் தனியாக எங்கேயாவது
ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள். சோகபாவம் ததும்பும் முகத்தோற்றத்துடன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாள். அல்லது, ஜில்லியை மடியில் வைத்துக் கொண்டு அதனிடம் தன்னுடைய மனக்குறையை வெளியிடுவாள். "மாமியும் தாத்தாவும் ஒண்ணு; நீயும் நானும் ஒண்ணு" என்பாள்.

இந்த மாதிரி ஒரு நாள் சாரு ஜில்லியை வைத்துக் கொண்டு சோகமான குரலில் அதனுடன் பேசிக் கொண்டிருந்த போது சாவித்திரி அங்கே வந்தாள். "சாரு! ஏன் இப்படித் தனியாகத் தனியாக வந்து உட்கார்ந்து கொள்கிறாய்? ஓடித் திரிந்து விளையாடறதுக்கென்ன?" என்று கேட்டாள்.

"என்னோடு விளையாடறதுக்கு யார் இருக்கா? நான் தான் தனிப்பட்டவளாய்ப் போய்ட்டேனே?" என்றாள் சாரு.

"என்ன சாரு! பெரிய பாட்டி மாதிரி பேசறே! நீ தனிப்பட்டவளாய்ப் போகவாவது? உன்னோட விளையாடறதற்கு நான்
இருக்கேனே! வா! நாம் இரண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள் சாவித்திரி.
"இதோ பாரு! என் கண்ணைக் கட்டிவிட்டு, முன்னே ராத்திரியிலே எழுந்து ஓடிப் போனயே, அந்த மாதிரி ஓடிவிடக் கூடாது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். மறுபடியும், "ஆனால் இப்ப நீ எங்கே ஓடறது! தாத்தாதான் இங்கேயே இருக்காரே?" என்றாள்.

சாரு, இதற்குள் கண்ணைக் கட்டிவிட்டு, "ஊம்; ஒண்ணு, இரண்டு சொல்லுங்கோ!" என்றாள். சாவித்திரி, "ஒண்ணு, இரண்டு, மூணு..." என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, சாரு அந்த அறையிலிருந்து ஓடி ஆபீஸ் அறைக்குள் போனாள். அங்கே வக்கீல் ஆபத்சகாயமய்யர் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சாரு அவருக்குத் தெரியாமல் சத்தமில்லாமல் நடந்து ஒரு ஸோபாவுக்குப் பின்புறத்தில் ஒளிந்து கொண்டாள். ஒளிந்து கொண்டவள் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். 'தாத்தாவும் மாமியும் ஒண்ணாய்ப் போய்விட்டா. எனக்கு இப்போ ஓடறதுக்குக் கூட இடமில்லை' என்று எண்ணி அவள் மனம் ஏங்கிற்று.

சற்று நேரத்துக்கெல்லம் அந்த அறைக்குள் சாவித்திரி வந்தாள். "வக்கீல் ஸார்! சாரு இங்கே வந்தாளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

"இல்லையே, இங்கே வரலையே?" என்றார் வக்கீல். பிறகு, "பத்திரம் எழுதியாச்சு; கையெழுத்துப் போடலாம்" என்றார்.

உமா மேஜைக்கருகில் உட்கார்ந்து, "எங்கே வாசிங்கோ! கேட்கிறேன்" என்றாள்.

ஆபத்சகாயமய்யர் அடிக்கடி, "என்னிடம் நம்பிக்கை வையுங்கள்" என்று உமாராணியிடம் சொல்லிக் கொண்டிருந்தாரல்லவா? அதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வந்திருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல், கோர்ட்டில் குழந்தையைப் பற்றிக் கேள்வி கேட்டதிலிருந்து சாவித்திரி பெரிதும் கலக்கமடைந்து போயிருந்தாள், யாரிடமாவது யோசனை கேட்டே ஆகவேண்டுமென்று தோன்றிற்று.

--------------

4.28. கர்வ பங்கம்

பாரத் விலாஸ் ஹோட்டலின் அறையொன்றில் ஸ்ரீதரன் முன்னும் பின்னுமாக உலாத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனம் பெரிதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது என்பது நன்றாய்த் தெரிய வந்தது. அவனுடைய தலைமயிர் எப்போதும் போல் படிந்து அழகாக வாரிவிடப் பட்டிருக்கவில்லை. முகத்திலும் கவலைக் குறி காணப்பட்டது. அடிக்கடி வாய்க்குள்ளாக, "என்ன முட்டாள்தனம்! என்ன முட்டாள்தனம்?" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் மேஜையருகில் நின்று மேஜைமீது கிடந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் பார்த்தான். அதில், சம்பு சாஸ்திரி, சாரு இவர்களுடைய படங்கள் வெளியாகியிருந்தன. படங்களுக்குக் கீழே பின்வருமாறு எழுதியிருந்தது:

"நேற்று உமாராணி - ஸ்ரீதரன் வழக்கில் ஒரு முக்கியமான விஷயம் வெளியாயிற்று. சம்பு சாஸ்திரியின் வளர்ப்புக் குழந்தையான சாரு உண்மையில் அவருடைய பேத்தி, அதாவது உமாராணியின் குழந்தை என்று தெரிய வந்தது. விசாரணையின் போது, உமாராணிமேல் குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சமயத்தில், குழந்தை சாருவே மேற்படி இரகசியத்தை வெளிப்படுத்தியதும் கோர்ட்டில் பெரிய கலகலப்பு ஏற்பட்டது..."

ஸ்ரீதரன் இதைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடி நடக்கத் தொடங்கினான். சுவரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய பிரதிபிம்பத்தைப் பார்த்துவிட்டு, "ஸ்ரீதரா! நீ மகா கெட்டிக்காரன்! உன்னைப் போன்ற கெட்டிக்காரன் உலகத்திலேயே கிடையாது. உன் குழந்தையேதான் உனக்கு சர்டிபிகேட் கொடுத்து விட்டாளே? இனிமேல் உனக்கு என்ன குறை?" என்றான்.

நேற்று கோர்ட்டில் சாரு, "நானும் எத்தனையோ அப்பா பார்த்திருக்கேன். ஆனா, உங்களைப்போலே, அம்மா மேலே கேஸ் போட்ட அப்பாவைப் பார்த்ததேயில்லை" என்று சொன்னது அவன் மனத்தை அப்படி உறுத்திக் கொண்டிருந்தது.

இதே சமயத்தில், உமாரணியின், வீட்டு டிராயிங் ரூமில் இதே விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. உமாவும், சம்பு சாஸ்திரியும் ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். நல்லானும், அவனுடைய மனைவியும் கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.

நல்லான், உமாவைப் பார்த்து, "குழந்தையைக் கொன்னுட்டேன்னு ஒரே புளுகாய்ப் புளுகினீங்களே! எப்படி அம்மா உங்களுக்கு மனஸு வந்தது?" என்று கேட்டான்.

"இருக்கட்டும், நல்லான்! நான் ஊரைவிட்டுக் கிளம்பறபோது, இனிமேல் நீதான் ஐயாவைக் கவனிச்சுக்கணும்னு சொன்னேன், நீயும் சரி இன்னயே, அந்த வாக்கை நீ காப்பாத்தினயா?" என்றாள் உமா.

"அது எம்மேலே தப்புத்தான். எஜமான் நிலத்தை வித்துட்டாங்க என்கிற கோபத்திலே புறப்பட்டு வந்துட்டேங்க. ஆனா, நீங்கமட்டும் இத்தனை நாளாய் அப்பாவை அடியோடு மறந்துட்டு இருந்தீங்களே? அது மாத்திரம் சரியா?" என்றான் நல்லான்.

அப்போது சம்பு சாஸ்திரி குறுக்கிட்டு, "சரியாப் போச்சு! மறுபடியும் பழைய கதையையே எடுத்துட்டேளா? சந்தோஷமாயிருக்கிற சமயத்திலே போனதையெல்லாம் பத்தி ஏன் பேசறே, நல்லான்?" என்றார்.

"எல்லாம் சந்தோஷந்தாங்க. ஆனா, கோர்ட்டு, கீர்ட்டு, கேஸு, கீஸுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்களே அதுதான் நல்லா இல்லைங்க. மாப்பிள்ளை ஐயா முன்னப் பின்னே எதுவாச்சும் செய்திருந்தாலும், அதையெல்லாம் கொழந்தை பொறுத்துக்கிட்டுத்தான் போகணுங்க" என்றான் நல்லான்.

அப்போது நல்லான் மனைவி, "சரிதான், சும்மா இரு, அவங்களுக்குத் தெரியாததுக்கு நீதான் ரோசனை சொல்ல வந்துட்டே!"
என்றாள்.

"இந்தா! உன்னை யாரு கேட்டா? நீ வாயை மூடிக்கிட்டிரு" என்றான் நல்லான்.

"அடாடா! எனக்காக பாவம், நீங்க சண்டை போட்டுக்காதேங்கோ" என்றாள் உமா.

--------------------

4.29. மீனாவின் கணவன்


'அந்த அம்மாள் என் அத்தை மீனாதான்!' என்று சாவித்திரி சொன்னதும், சம்பு சாஸ்திரி, "குழந்தை! கொஞ்சம் இரு! என்னமோ
பண்ணுகிறது" என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார்.

சாவித்திரி கலவரமடைந்து, "டாக்டரை அழைச்சுண்டு வரச் சொல்லட்டுமா, அப்பா?" என்றாள். "வேண்டாம் அம்மா! எனக்கு உடம்பு ஒன்றுமில்லை; நெஞ்சுதான் படபடக்கிறது" என்றார்.

அப்போது சம்பு சாஸ்திரியின் மனக் கண்ணின் முன்பு சரியாக முப்பது வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் எதிரில் அப்போது நடப்பது போல் தோன்றியது. மீனாவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருஷம் ஆகிவிட்டது. அவளுடைய புருஷனைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. சிலர் அவன் அக்கரைச் சீமைக்குப் போய் விட்டானென்று சொன்னார்கள். வேறு சிலர் அவன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினார்கள். ராமச்சந்திரன் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபடியாலும், அந்தக் கல்லூரியை நடத்திய ரோமன் காதலிக் பாதிரிமார்கள் அப்போது மதமாற்றும் வேலையில் ரொம்பவும் தீவிரமாயிருந்தபடியாலும், அவன் கிறிஸ்தவனாகிவிட்டான் என்னும் வதந்தி நம்பக் கூடியதாயிருந்தது.

இந்த நிலைமையில், பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வரும் பிரசித்தமான மகாமக உத்ஸவம் வந்தது. சம்பு சாஸ்திரி தம்முடைய குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு கும்பகோணத்துக்குப் போனார். குடும்பத்தார், என்றால் சாஸ்திரியின் முதல் மனைவி பாக்கியம், தங்கை மீனா, வயதான அத்தை இவர்கள் தான். கும்பகோணத்தில் கடலங்குடித் தெருவில் சம்பு சாஸ்திரி ஜாகை போட்டிருந்தார். மகாமகத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே போய்விட்டார். மகாமகத்தன்று எல்லாரும் மாமாங்கக் குளத்திற்கு ஸ்நானம் செய்யப் போனார்கள். ஜனக் கூட்டம் ரொம்ப அதிகமாயிருந்தபடியால், ஒருவருக்கொருவர் பிரிந்து போனாலும் தனித் தனியாக ஜாகைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் திருட்டுப் பயத்தை உத்தேசித்து ஸ்திரீகள் நகை நட்டுகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வந்தார்கள். மாமாங்கக் குளத்தில் ஸ்நானம் செய்யும் வரையில் எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். கரையேறும்போதும் ஒன்றாக ஏறினார்கள். ஆனால், ஜாகைக்குப் போய்ச் சேர்ந்ததும் பார்த்ததில், மீனாவை மட்டும் காணோம்! கூட்டத்தில் பிரிந்து போயிருப்பாள், ஜாகைதான் தெரியுமே, தானே வந்துவிடுவாள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் வரையில் வராமற் போகவே கவலை உண்டாயிற்று. சாஸ்திரி மீனாவைத் தேடுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மனைவி பாக்கியம் ஓடி வந்து ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். கழற்றி வைத்த நகைகளை எடுத்துப் பூட்டிக் கொள்வதற்காக டிரங்குப் பெட்டியைத் திறந்ததாகவும், அதில் இந்தக் கடுதாசி இருந்ததாகவும் சொன்னாள். கடுதாசியில் பின் வருமாறு எழுதியிருந்தது:

'அண்ணா! இந்த ஜன்மம் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. நான் போகிறேன். நீயும் மன்னியும் என்னை மன்னித்து விடுங்கள். - மீனா.'

இதைப் படித்த சாஸ்திரி பைத்தியம் பிடித்தவர் போலானார். அந்த மகாமகக் கூட்டத்தில் கும்பகோணத்தின் வீதிகளில், "மீனா! மீனா!" என்று கூவிக்கொண்டு அலைந்தார். கூட்டத்தில் இடிபட்டோ , குளத்தில் மூழ்கியோ செத்துப் போனவர்களைப் போலீஸார் எடுத்துப் போட்டிருந்த இடத்துக்கெல்லம் ஓடி, மீனாவின் பிரேதமாய் இருக்குமோ என்று பதைபதைப்புடன் பார்த்தார். ஆனால், மீனாவோ அவளுடைய உயிரில்லாத உடலோ கிடைக்கவேயில்லை.

---------------

4.30. தீர்ப்பு


சென்னை ஹைகோர்ட்டின் சரித்திரத்தில், இந்த உமாராணி-ஸ்ரீதரன் வழக்கைப்போல் ஜனங்களின் மனத்தைக் கவர்ந்த வழக்கு வேறு நடந்ததில்லையென்று சொல்லலாம். நாலுபேர் கூடுமிடங்களிலெல்லாம் இதே பேச்சாகத்தான் இருந்தது. கேஸ் நடக்கும் தினங்களில் மாலை வேளையில் கடற்கரைக்குப் போனால், வெண் மணலில் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களுடைய பேச்சில் உமாராணி-ஸ்ரீதரன் என்ற பெயர்கள் அடிக்கடி கேட்கக் கூடிய நிலையில் இருந்தன. அநேகம் பேர், கையில் அன்று வந்த பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தினசரிகளில் 'லீகல் காலம்' என்று சொல்லப்படும் கோர்ட் நடவடிக்கைகள் பிரசுரிக்கும் பத்திக்கு இவ்வளவு முக்கியம் இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.

இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு விஷயத்தில் ஸ்திரீகள் காட்டிய சிரத்தையேயாகும். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெண்மணிகள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தால், உடனே உமாராணியின் பேச்சுத்தான் கிளம்பும். அபிப்பிராய பேதங்கள் வாதப் பிரதி வாதங்கள் இல்லாமலில்லை. பொதுவாக, இளம் பெண்கள் எல்லாரும் உமாராணியின் கட்சி பேசினார்கள். "ஆமாம்; அவள் கேட்பது நியாயந்தானே? புருஷர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், அதற்குக் கேள்வி முறை கிடையாது; பொம்மனாட்டிகள் மட்டும் எப்போதும் அடிமையாயிருக்க வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? அது என்ன நியாயத்தில் சேர்ந்தது? நன்றாய்ச் சொன்னாள், 'புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறே'னென்று!" - இம்மாதிரி படித்த யுவதிகளும், மாதர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த மாது சிரோமணிகளும் பேசினார்கள். பழைய கர்நாடகத்தில் பற்றுள்ள வயதான ஸ்திரீகளோ, "இது என்ன அநியாயம்? புருஷனுக்குப் பெண்டாட்டி ஜீவனாம்சம் கொடுக்கிறதாமே? அப்படி அந்த உமாராணி நடுக்கோர்ட்டிலே சொன்னாளாமே? என்ன இருந்தாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் ஆகுமோ?" என்றார்கள். இந்த மாதிரி வாதப் பிரதிவாதங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தன.

சுதந்திர ஸ்திரீ சமாஜத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் சிலர் உமாராணியிடம் அநுதாபம் காட்டுவதற்காகப் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டுமென்றும், உமாராணியின் பக்கம் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்பதாக நீதிபதிக்கு ஒரு மகஜர் அனுப்ப வேண்டுமென்றும் முயற்சி செய்தார்கள். இம்மாதிரியெல்லாம் செய்வது 'கண்டெம்ப்ட் ஆப் கோர்ட்', அதாவது கோர்டை அவமதிக்கும் குற்றமாகும் என்று சிலர் எடுத்துக் காட்டியதன் மேல் மேற்படி முயற்சி கைவிடப்பட்டது.

இப்படி ஜனங்களிடையில் அளவில்லாத ஆவலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியிருந்த வழக்கில் கடைசியாகத் தீர்ப்புச் சொல்லும் நாள் வந்தது. அன்று சாயங்காலம் தினசரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, காந்திமகான் கைதியான அன்று ஏற்பட்ட கிராக்கிக்குச் சமமாக இருந்தது.

நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் சாங்கோபாங்கமாக எடுத்து அலசி ஆராய்ந்து விட்டுக் கடைசியில் பின் வருமாறு தீர்ப்பை முடித்திருந்தார்.

"பிரதிவாதியாகிய ஸ்ரீமதி உமாராணி தம்முடைய கட்சியை மிகவும் பாராட்டத் தக்க முறையில் எடுத்துச் சொன்னார். அவருடைய வாழ்க்கை வரலாறு கல் நெஞ்சையும் உருக்கக் கூடியதாகும். ஹிந்து சமூக வாழ்க்கையிலுள்ள அநீதிகளுக்கு அவர் ரொம்பவும் உள்ளானவர் என்று நிச்சயமாய்த் தெரிகிறது. எல்லாவிதத்திலும் அவர் நம்முடைய அநுதாபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறார். தர்மமும் நியாயமும் பிரதிவாதியின் கட்சியில் தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக, சட்டம் அவர் கட்சியில் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேணுமென்று அவர் கேட்பது தர்ம நியாயமாயிருக்கலாம்; ஆனால் அவருடைய கோரிக்கையை இப்போதுள்ள சட்டம் அங்கீகரிக்கவில்லை. சட்டம் பிசகானதாயிருந்தால், அதைத் திருத்த வேண்டியது சட்ட நிபுணர்கள் - அரசியல் வாதிகள் இவர்களுடைய கடமை. நான் இப்போது அமுலிலுள்ள சட்டத்தின்படிதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். சாதாரணமாக, ஒரு புருஷன் தன்னுடைய மனைவி தன்னுடன் வசிக்க வேண்டுமென்று கோருவதற்குப் பாத்தியதை உண்டென்று சட்டம் சொல்கிறது. இந்த வழக்கில் பிரதிவாதியை வாதி கொடூரமாக ஹிம்ஸித்ததாய் ருசுவாகவில்லை. ஆகவே, உமாராணி என்கிற சாவித்திரி அம்மாள் அவளுடைய புருஷன் ஸ்ரீதரன் என்பவருடன் சேர்ந்து வசிக்க வேண்டும் என்பதாகத் தீர்ப்பளிக்கிறேன்."

--------------------

4.31. தியாகம்


அந்தப் புகழ்பெற்ற வருஷத்தில் பாரத புண்ணிய பூமியில் நிகழ்ந்து வந்த அதிசயங்களைப்பற்றி முன் ஓர் அத்தியாயத்தில்
கூறினோமல்லவா? அந்த அதிசயங்களில் எல்லாம் மகா அதிசயம், பாரத நாட்டின் நாரீமணிகள் அந்த வருஷத்தில் கண் விழித்தெழுந்த அற்புதமேயாகும். அதற்கு முன்னாலும் தேசத்தில், "ஸ்திரீகளுக்குச் சுதந்திரம் வேண்டும்", "பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்" என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அந்த வருஷத்தில் அந்த மாதர் உரிமைக் கிளர்ச்சி ஒரு புதிய ஸ்வரூபம் பெற்றது. அதற்கு அந்தப் புதிய ஸ்வரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான் தான் என்று சொல்ல
வேண்டியதில்லையல்லவா?

அதுகாறும், பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன் வந்தவர்கள், "உங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்", "ஆண்களுடன் சம உரிமைக்காகச் சண்டை பிடியுங்கள்" என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள். இந்த உபதேசங்களைக் கேட்ட பாரதப் புதல்விகள் சிலர்,

"கற்புநெறி யென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்றும்,

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்றும் சொல்லிப் பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.

இத்தகைய மனப்பான்மை பரவிக் கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி தோன்றி, தேசத்துக்கு எல்லாத் துறைகளிலும் புதிய வழி காட்டினார். "உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும்; நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள்" என்று அவர் சொன்னார். "தேச சேவையில் ஈடுபடுங்கள்; சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள். விலங்கில் விடுதலையை அடையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். "தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள்; உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும்" என்று அவர் உறுதி கூறினார்.

காந்தி மகானுடைய போதனைக்குப் பாரத நாட்டின் பெண்குலம் செவி சாய்த்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் தாய்நாட்டின் தொண்டில் ஈடுபட்டார்கள்; அவர்களில் பலர் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்; சிறை புகுந்தார்கள்; இன்னும் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.

இதனால், சாதாரணமாய் நூறு வருஷத்தில் நடக்கக் கூடிய பெண்குலத்தின் முன்னேற்றம் இந்த ஒரே வருஷத்தில் ஏற்பட்டது. வேறு நாடுகளில் எத்தனையோ காலம் ஸ்திரீகள் ஆண் மக்களுடன் போராடி, சண்டை பிடித்துப் பெற்ற உரிமைகளையெல்லாம் பாரதப் பெண்கள் அநாயாசமாகப் பெற்றுவிட்டார்கள். ஆண்களுடன் சரி நிகர் சமானமாக நின்று தேச விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்க எவ்விதம் மறுக்க முடியும்?

கோர்ட்டில் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், பொது ஜனங்களுடைய அநுதாபமெல்லாம்
உமாராணியின் பக்கம் இருந்ததற்கு முக்கிய காரணம் மேற்கூறிய தேச நிலைமையேயாகும். இது உமாராணிக்கும் தெரியாமலில்லை.
நாட்டில் நடந்து கொண்டிருந்த தேச விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்று சிறை புகுந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் உமாராணி அறிந்து தான் இருந்தாள். வழக்கில் தோற்றுப் போனால் என்ன செய்வது என்று அவளுடைய இருதய அந்தரங்கத்தில் தீர்மானம் செய்திருந்தாள்.

வேண்டாத புருஷனுடன் சேர்ந்து வாழும்படி சட்டம் நிர்ப்பந்தப்படுத்தலாம்; கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளிக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் அமுலுக்குக் கொண்டு வர முடியுமா? அது முடியாமல் செய்யும் வழி தனக்குத் தெரியும்! தேச சேவிகையர் படையில் சேர்ந்து சிறை புகுந்துவிட்டால், சிறைக்குள்ளே வந்து தன்னைச் சட்டம் கட்டாயப்படுத்தாதல்லவா? "சிறைக்குள்
சுதந்திரத்தைக் காணுங்கள்" என்று மகாத்மா காந்தி சொன்னது மற்றையோர் விஷயத்தில் உண்மையோ, என்னமோ, தன் விஷயத்தில் அது முற்றும் உண்மையாயிருக்கும் என்று அவள் உறுதி கொண்டாள். சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் கட்டுப்பட்டு, ஸ்ரீதரனுடன்
கூடிவாழ்ந்தால் அதுதான் அடிமை வாழ்வு; அதுதான் கொடிய சிறை வாழ்க்கை. இதற்கு மாறாக, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகச்
சிறை புகுந்தால், அந்தச் சிறை வாழ்க்கையே உண்மையான சுதந்திர வாழ்க்கையாகும்.
----------------


4.32. சாந்தி

சென்னை நகரில் அப்போது அஹிம்சைப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தேசீய பஜனை ஊர்வலமும் சாத்துவிக
மறியலும் தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை உத்தரவுகளை மீறி தேசத் தொண்டர்களும் தேச சேவிகளும் சிறை புகுந்து
கொண்டிருந்தார்கள்.

அன்று சிறை புகுவதற்குத் தயாராய்க் கிளம்பிய தேச சேவிகைகளுடன் சாவித்திரியும் சேர்ந்து கொண்டாள். அவர்கள் தேசியக்
கொடி பிடித்துக் கொண்டும், தேசிய பஜனை செய்து கொண்டும் சென்னை நகரின் வீதிகளில் ஊர்வலம் வந்தார்கள். கொஞ்ச
நேரத்துக்கெல்லாம் அவர்களுக்கருகில் போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியுடன் வந்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் தேச
சேவிகைகளைக் கைது செய்து வண்டியில் ஏறச் சொன்னார்கள்.

வண்டி கிளம்பிக் கொஞ்ச தூரம் சென்றதும், கடை வீதியில் இன்னொரு போலீஸ் உத்தியோகஸ்தர் கையைக் காட்டி வண்டியை
நிறுத்தினார். அந்த இடத்தில் ஜனக் கூட்டம் சேர்ந்திருந்தது. "இந்த வீதியில் தான் மறியல் நடக்கிறது" என்று கைதியான தேச
சேவிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

வண்டி நின்ற இடத்தில், போலீஸ்காரர்களால் சூழப்பட்டுச் சில தேசத் தொண்டர்கள் நின்றார்கள். அவர்களையும் அந்த வண்டியில்
ஏற்றிக் கொள்ள முடியுமா என்று கீழே நின்ற போலீஸ் உத்தியோகஸ்தர் கேட்டார். வண்டியோடு வந்த போலீஸ் ஸார்ஜெண்ட்,
'இடமில்லை' என்று சொல்லவே, வண்டி மறுபடியும் கிளம்பியது.

இப்படி போலீஸ் வண்டி அங்கே நின்ற ஒரு நிமிஷத்தில், சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு மகத்தான சம்பவம் நடந்துவிட்டது.
வீதியில் கைது செய்யப்பட்டு நின்ற தேசத் தொண்டர்களின் மீது சாவித்திரியின் பார்வை சென்றபோது, அவர்களுக்கு மத்தியில்
ஸ்ரீதரனும் நிற்பதைக் கண்டாள். அவனுடைய உடை மாறியிருந்தது போலவே முகத்தோற்றமும் மாறியிருப்பதைப் பார்த்தாள்.
சாவித்திரியின் தேகம் புளகாங்கிதம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் துளித்தது.

அதே சமயத்தில் ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் பார்த்தான். அங்கே தேச சேவிகைகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு
அளவிலாத வியப்படைந்தான்.

சொல்ல முடியாத ஆதுரத்துடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். "பிரிந்தவர் கூடினால் பேசவும்
வேண்டுமோ?" என்ற கவியின் வாக்குக்கு அப்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பொருத்தமாயிருந்தது. உண்மையில்,
இத்தனை நாளும் பிரிந்திருந்தவர்கள் அந்த நிமிஷத்திலே தான் ஒன்று கூடினார்கள். அதாவது, அவர்களுடைய இருதயங்கள்
ஒன்றுபட்டன. இரண்டு ஜீவன்களுடைய இதயங்கள் ஒன்றுபட்டனவென்றால், அவர்களுடைய தேகங்கள் வட துருவத்திலும் தென்
துருவத்திலும் இருந்தால் தான் என்ன? அவர்களை யாரால் பிரித்து வைக்க முடியும்?

அந்த நிமிஷத்தில் ஸ்ரீதரனுக்கும் சாவித்திரிக்கும் புனர் விவாகம் நடந்தது என்று சொல்லலாம். ஏற்கெனவே, பெரியோர்களுடைய
வற்புறுத்தலினால் தேக சம்பந்தமான விவாகம் அவர்களுக்கு நடந்திருந்தது. இன்றைய சுபதினத்தில், அவர்களுடைய ஆத்மாக்கள்
ஒன்றையொன்று மணந்து கொண்டன. இந்த ஆத்மீக விவாகத்துக்கு பாரத மாதாவும் காந்தி மகாத்மாவுமே சாட்சிகளாயினர்.

போலீஸ் வண்டிக்குள்ளிருந்த தேச சேவிகைகள், "ஜய ஜய பாரத!" என்று கோஷித்தார்கள். வெளியில் நின்ற தேசத் தொண்டர்கள்,
"மகாத்மா காந்திகி ஜே!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

மறுநாள் 'வஸந்த விஹார'த்தில் குழந்தை சாரு தனியாக உட்கார்ந்து சாவித்திரியின் படத்தை வைத்துக் கொண்டு, "அம்மா!
என்னையும் நீ அழைச்சுண்டு போயிருக்கக்கூடாதா? நானும் உன்னோடே வந்து ஜெயிலிலே இருக்க மாட்டேனா?" என்று சொல்லிக்
கொண்டிருந்தாள். அவளைத் தேடி வந்த சம்பு சாஸ்திரி, குழந்தையைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, "கண்ணே சாரு! ஒரே
சமயத்தில் உனக்கு அப்பாவும் அம்மாவும் கிடைத்தார்கள். அவாள் இரண்டு பேரையும் ஒரே நாளில் இழந்துட்டே! ஆனால், நீ
இதுக்காக வருத்தப்படாதே, குழந்தை! நல்ல காரியத்துக்குத்தான் அவாள் போயிருக்கா. சீக்கிரத்திலே திரும்பி வந்துடுவா.
அதுவரைக்கும் நாம் நம்முடைய பழைய இடத்துக்கே போகலாம் வா, அம்மா! இந்தப் பங்களா எல்லாம் நமக்கு லாயக்கில்லை. சாவடிக்
குப்பம் தான் நமக்குச் சரி!" என்றார்.

---------------------

தியாக பூமி முடிந்தது.


This file was last updated on 6 December 2010
Feel free to send corrections to the webmaster