pm logo

நல்லைப் பதிகம் - 3

"nallaip patikam" - author not known
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நல்லைப் பதிகம் - 3

Source:
இவை திருவல்லிக்கேணி இந்து வாலிப பக்தசன சபையார் விருப்பத்தின்படி
கோயமுத்தூர் தமிழ்ப்பண்டிதர் மா – ஸ்ரீ ச - திருச்சிற்றம்பலம்பிள்ளையவர்கள் மாணாக்கர்
க - சுப்பிரமணிய முதலியாரவர்களால் இயற்றப்பட்டு
திருவளவாயல் துரைசாமிமுதலியார் அவர்கள் முயற்சியால்
சென்னை: ஸ்ரீ ஹரி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1899
----------------------------

நல்லைப் பதிகம்.
பதிகம். 1.


திருச்சிற்றம்பலம்.
செங்கனக மேருவரைச் சிலையான் றந்த
      செவ்வேளைச் சினமயிலை யூர்ந்தான் றன்னை
யங்கமலத் தயனொடுமா லமரர் வேண்ட
      வயிற்படையா னசுரரிறை மார்பு கீண்டு
சிங்கமுகன் றன்னொடுதா ரகனுஞ் சாயத்
      திகழ்குலிசம் வேல்விடுக்குஞ் செங்கை யானை
நங்கனக விலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (1)

ஒருருவே மூவிரண்டு வடிவ மாகி
      யொன்பதின்மர் சத்திகளின் றனய ரானோர்
பாருருவப் பூதர்கடம் படையி னோடு
      பாங்காகப் பன்னிரண்டு மொய்ம்பு கொண்டு
ஏருருவக் கொக்கதனை யிருகூ றாக்கி
      யிலங்குமயில் சேவலென விசைவித் தானை
காருருவ விலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (2)

பொன்னாடர் பொருட்டிந்தப் புவியிற் போந்து
      போர் வலிய சூரனுட லலைவாய்ப் போக்கி
யந்நாட்டி னரசுநிலை யமரர்க் கீந்தே
      யடலயிரா வதமீன்ற வஞ்சொன் மின்னைத்
தென்னாட்டிற் சிறந்த திருப்பரங்குன் றத்திற்
      திருமணஞ்செய் திருவுடைய தீர்த்தன் றன்னை
நன்னாடா மிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (3)

சிலை வேடர் தங்குலத்துத் தோகை யான
      சிறுநுதற்சுந் தரிதன்னைச் சிற்றூ ரின்கட்
கலைவேடர் போற்சென்று காதல் காட்டிக்
      கந்தருவத் தாற்கலந்த கந்தன் றன்னை
மலைவேடர் மகிழ்மருந்தை மாணிக் கத்தை
      மன்மதன்றன் மைத்துனனை மயிலூர் வானை
நலமேவு மிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (4)

பன்னிரண்டு கரமுடைய பகவன் றன்னைப்
      பண்ணவர்கட் கருள்புரிந்த பண்பன் றன்னை
மின்னிரண்டு மருங்குறவே மிளிர்வான் றன்னை
      மீமிசைஞா யிற்றினொளிர் மேனி யானை
யென்னிரண்டு கண்மணியா யெங்கு முள்ள
      வெழிலாரு மேரகத்தெம் மிறைவன் றன்னை
நன்னிதிசே ரிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (5)

செந்தமிழை யகத்தியற்குத் தெளிவித் தானைச்
      சேந்தனைச்செங் கடம்பணியும் செவ்வே டன்னை
யந்தமிலா வடியவர்க ளயன்மா லேனோ
      ரடியிணையை யருச்சிக்கு மன்பு கண்டு
சந்ததமு மின்பமரு முத்தி நல்குந்
      தற்பரனைச் சதக்கிரது மருகன் றன்னை
நந்தலிலா விலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (6)

பாவாணர் தாம்போற்றும் பரங்குன் றோடு
      பருப்பதங்கள் பழனிபழ முதிருஞ் சோலை
தேவாதி தேவனமர் திருச்செந் தூருங்
      திருத்தில்லை திருவருணை திகழுங் காசி
பூவாரும் பொழிற்கச்சிக் குமர கோட்டம்
      பொருவரிய வேரகமும் பொருந்தி னானை
நாவார விலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (7)

முன்கீரன் மொழிந்தமுரு காற்றைக் கேட்டு
      முரட்பூதந் தனைமுனிந்த முதல்வன் றன்னை
பின்கீரங் கடைந்தமுது புலவர்க் கீந்த
      பெம்மானை யம்மானாக் கொண்டான் றன்னை
யின்கீர மாட்டுகந்த விறைவன் றன்னை
      யியலிசைநா டகமாகி யிருந்த சேயை
நன்கீயு மிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (8)

பராசரன்றன் சிறாரறுவர் பணிந்து போற்றப்
      பரங்குன்றிற் பணித்தருளும் பண்பன் றன்னைச்
சராசரங்க ளனைத்தினுக்குத் தாயா னானைச்
      சண்முகனைச் சங்கரன்றன் மதலை தன்னைச்
சுராசுரர்க டொழுதேத்துஞ் சுவாமி தன்னைச்
      சுகுணபரி பூரணனைச் சுகிர்தன் றன்னை
நராசுரர்வா ழிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (9)

வானாகி வளியாகி வன்னி யாகி
      வருபுனலாய் வன்னிலமாய் வாய்ந்த வண்டக்
கானாகிக் கதிரவனாய் மதியு மாகிக்
      காதலித்தங் கடியவர்கள் கருத நின்ற
வூனாகி யுயிராகி யுணர்வு மாகி
      யுள்ளத்துக் கப்பாலா யோங்கி னானை
நானாநல் வளஞ்செறியாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (10)

காசியில்வா ழந்தணனாங் கலைவ லோன்றான்
      கதிர்காமங் காதலித்த கருத்த னாகித்
தேசிகனாஞ் சுவாமியையித் தென்னாட் டிற்குத்
      திருந்தியசத் திகளோடுஞ் சேர்த்தா னென்று
பேசிவரும் பெருவார்த்தை கேட்ட மேலோர்
      பேரன்பி னுடனிறைஞ்சும் பெம்மான் றன்னை
நாசியெனு மிலங்கையில்யாழ்ப் பாண மேய
      நல்லூரி னான்றொழுது நயந்த வாறே. (11)

திருச்சிற்றம்பலம்

பதிகம். 2.


திருச்சிற்றம்பலம்.
ஆறுமா முகமுடைய வத்தா போற்றி
      யருள்விழிகள் பன்னிரண்டு முடையாய் போற்றி
தேறுமுக மின்றியே திரிந்த தேவர்
      தெளிந்திடுமா றருள்புரிந்த செல்வா போற்றி
பாறுவீழ் செருக்களத்திற் சூர பன்மன்
      பதைத்திடவே வேல்விடுத்த பண்பா போற்றி
நாறுபூஞ் சோலைசூழ் நகரே யான
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (1)

அஞ்செழுத்து மாறெழுத்து மானாய் போற்றி
      யமரர்குழாந் தொழுதேத்து மண்ணா போற்றி
செஞ்சுடர்வை வேலுடைய செம்மல் போற்றி
      சேவலுடன் மயில்போற்ற வருவாய் போற்றி
யஞ்சேலென் றடியார்கட் கருள்வாய் போற்றி
      யாரன் மாரறுவர்முலை யுண்டாய் போற்றி
நஞ்சேறு கண்டனமர் நகரென் றேத்தும்
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (2)

ஆணாகிப் பெண்ணாகி யருள்வாய் போற்றி
      யலியெனவு மமர்கின்ற வரசே போற்றி
சேணாடர் கோன்மகளாந் தெய்வ யானை
      திருமுலைசேர் புயமுடைய செல்வா போற்றி
வேணாடர் வேந்தாகி நின்றாய் போற்றி
      வேடர்தந் திருமகளை வேட்டாய் போற்றி
நாணாத மலையெடுத்த நம்பன் மேய
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (3)

பொன்னுடனே மெய்ப்பொருளுந் தருவாய் போற்றி
      போகமுடன் வீடருளும் புனிதா போற்றி
யென்னுடைய துயரெவையுங் களைவாய் போற்றி
      யெழுபிறப்பு மெனையாளு மெந்தாய் போற்றி
மின்னுடைய வேல்வீசும் விகிர்தா போற்றி
      மீளாமே யடியென்மேல் வைப்பாய் போற்றி
நன்னுதலார் நடம்பயிலு நத்த மான
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (4)

பாலினுறு சுவையாகி நின்றாய் போற்றி
      பாவிப்பார் பவமறுக்கும் பரனே போற்றி
காலினுறு முறையேபோய் மதியைத் தேக்கிக்
      கருதரிய வொளிகாட்டுங் கடவுள் போற்றி
சேலினுறு கண்ணார் பின்னே செல்லுஞ்
      சிந்தையினைத் தடுத்தருளுந் தீரா போற்றி
நாலினுறு தோற்றத்தை நண்ணார் வாழுந்
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (5)

ஆணவத்தி னுடன்கன்ம மறுப்பாய் போற்றி
      யகன்மாயை யழித்தருளு மன்பா போற்றி
மாணுறுமம் மாயேயம் மாற்றிப் பின்னர்
      மருவுதிரோ தாயியுமே மாய்ப்பாய் போற்றி
காணுறுமூ விருமுகமும் காட்டியே தான்
      கழலிணைகள் கருதுவார்க் களிப்பாய் போற்றி
நாணுறுமிந் திரியமுடை நல்லோர் போற்றும்
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (6)

சரியையினை யருள்செய்யுஞ் சாமி போற்றி
      சரவணத்தி லெழுந்தருள்சண் முகனே போற்றி
கிரியையினை யருள்செய்யுங் கீதா போற்றி
      கிரிகளின்மே னடனஞ்செய் கிரீச போற்றி
யரியதுவாம் யோகினையு மளிப்பாய் போற்றி
      யந்தமிலா ஞானமரு ளமலா போற்றி
நரிபரியாய் வருவிக்கும் நம்பன் மேய
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (7)

ஆளான வடியவரை யாண்டாய் போற்றி
      யருணகிரிக் கருள்புரிந்த வத்தா போற்றி
மீளாத கதியருளும் மேலோய் போற்றி
      மீனவனாய் மதுரையில்வீற் றிருந்தாய் போற்றி
கேளாகித் தமிழினையுங் கிளந்தாய் போற்றி
      கீரன்றன் மொழிதனையும் கேட்டாய் போற்றி
நாளான போகாமே நல்லோர் போற்றுந்
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (8)

தீவினையைத் தீர்த்தருளுந் தீர்த்தா போற்றி
      திருவடியை யென்றலைமேல் வைப்பாய் போற்றி
பாவனைசேர் பழவடியார்க் கருள்வாய் போற்றி
      பரவுவார் பிணிதீர்க்கும் பரனே போற்றி
தேவர்கள் சேனாபதியாந் தேவே போற்றி
      தேவகிரி தனிலமர்ந்த தேனே போற்றி
நாவினைசேர் நாவலர்க ணயந்து போற்றுந்
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (9)

சந்தனமார் பொதியமுனிக் கருள்வாய் போற்றி
      சாந்தவர்கட் கருள்செய்யுஞ் சாமி போற்றி
பந்தனஞ்சேர் சேதுவினிற் பரனைப் போற்றும்
      பார்த்திபனா மிராமனையும் பணித்தாய் போற்றி
கந்தருவத் தவர்கீதங் கேட்பாய் போற்றி
      களவுநூற் பொருள்கேட்டுக் களித்தாய் போற்றி
நந்திதனக் கருள்புரியும் நாதா போற்றி
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (10)

கச்சியப்ப ரிருவர்தமிழ் கொண்டாய் போற்றி
      காதல்புரி வோர்தமிழுங் கொள்வாய் போற்றி
செச்சைமலர் புனைந்தருளுஞ் செவ்வேள் போற்றி
      சேவலமர் கொடியுடைய சேந்தா போற்றி
பச்சைமயி லூர்ந்தருளும் பாலா போற்றி
      பண்ணவரைச் சிறைமீட்ட பண்பா போற்றி
நச்சிநமன் றமர்வரினும் நலிப்பாய் போற்றி
      நல்லையமர் காங்கேய போற்றி போற்றி. (11)

திருச்சிற்றம்பலம்.

பதிகம். 3.

      --------------
திருச்சிற்றம்பலம்.
சந்திரசே கரன்மருவுந் தானந் தோறுஞ்
      சார்ந்திருந்து சார்ங்கமருள் தைய லோடு
மிந்திரன் றன் மகள்தெய்வ யானை யோடு
      மிந்நாட்டிற் புவனேக வாகு கண்ட
மந்திரத்துட் புகுந்தருளும் மைந்தன் றன்னை
      மயிலேறும் பெருமானை மாசி லானை
நந்தரத்தார் நயந்திறைஞ்சுந் நாவ லோனை
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (1)

பங்கயற்குப் பிரணவத்தைப் பகர்ந்தான் றன்னைப்
      பகர்வரிய வப்பொருளைப் பரிந்து கேட்ட
சங்கரற்குத் தெரித்தருளுஞ் சதுரன் றன்னைச்
      சாலோக முதற்பதங்கள் சார்விப் பானைச்
சிங்கயா ரியக்குரிசில் செங்கோ லோச்சச்
      சிறந்திடுமந் திரியாராய்த் திகழ்ந்த மேன்மை
நங்கள்குலப் புவனேக வாகு போற்றுந்
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (2)

சிந்துவின்கண் மகேந்திரத்திற் சூர பன்மன்
      சிறைப்படுத்துந் தேவர்துயர் தீர்ப்பான் முன்னி
யிந்திரைகேள் வன்முதலோ ரிரந்து வேண்ட
      விமயமயி றனைவேட்ட விறைவன் கொண்ட
முந்துதிரு முகங்களவை யாறி னின்றும்
      முழங்கழலாய் நுதல்விழிக்கட் டோன்றி னானை
நந்துசெறி வயல்புடைசூழ் நகர மாகுங்
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (3)

செம்மணியைத் தெள்ளமிர்தைத் தேனைப் பாலைச்
      செழுங்கரும்பி னின்சுவையைச் செந்தில் வாழு
மம்மணியை யரும்பொன்னை யழகார் முத்தை
      யானந்த வீடருளு மம்மான் றன்னை
மும்மணியை முதற்சிந்தா மணி யொப்பானை
      மூவுலகுந் தொழுதேத்து முதல்வன் றன்னை
நம்மணியை நாகரது மணியா னானை
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (4)

பண்ணாகிப் பண்ணினுறு மிசையு மாகிப்
      பாவாகிப் பாவினுறு பொருளு மாகி
யெண்ணாகி யெழுத்தாகி யியல்பு மாகி
      யேழிசையா யெழுநரம்பி னோசை யாகிக்
கண்ணாகிக் கண்ணினுறு மணியு மாகிக்
      காண்பானாய்க் காட்டுபவன் முதலா னானை
நண்ணாருந் நனியிறைஞ்சு நம்பன் மேய
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (5)

வடவரையின் கொடுமுடிகண் மூன்றி லொன்றாய்
      வாயுபறித் தெறிந்திடலும் வந்து வீழ்ந்த
திடமுடைய முக்கோணக் குன்று தானுந்
      திருந்தியகே தீச்சரமுந் திகழு மீழக்
கடல்புடைசூ ழிலங்கையெனுங் கனக நாட்டிற்
      கதிர்காம மேவியமர் கந்தன் றன்னை
நடமுடைய பத்தாநா ணல்லோர் போற்றுந்
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (6)

தத்துவங்க ளாறாறு மாயி னானைத்
      தாண்டவத்தைத் துரியத்தின் றலைசெய் வானை
நித்தமுட ன்நித்தமுறு நீர்மை காட்டி
      நிட்டைநிலை யருள்புரியு நிமலன் றன்னைப்
பத்துறழு நூறுடனே யெட்டின் காறும்
      பகழிபல பரப்பியமர் கருதி னானை
நத்துதிரை யெறிகடல்சூழ் ஞாலந் தன்னி
      னல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (7)

பேசரிய சிவஞ்சத்தி நாதம் விந்தாய்ப்
      பெருகிவருஞ் சதாசிவனாய் மகேச னாகி
யாசரிய வரனரியா யயனு மாகி
      யன்புடைய விஞ்ஞானா கலர்க ளாகிக்
காசரிய பிரளயா கலரு மாகிக்
      காண்டகைய சகலருமாய்க் கவினு வானை
நாசமிலா நற்றவர்கள் நண்ணிப் போற்றுந்
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (8)

சுத்ததத் துவமுமாகித் தொகுவாக் காகிச்
      சூழ்பஞ்ச கலையாகிச் சுருதி யோதச்
சத்திதரு மக்கரங்க ளைம்பத் தொன்றாய்ச்
      சார்பதங்க ளெண்பதனோ டொன்று மாகி
வைத்ததொரு மனுக்களெழு கோடி யாகி
      வானவனா கமங்களெழு நான்கு மாகி
நத்தமுறு முபாகமமு மாயி னானை
      நல்லூரிற் கண்டடியார் நயந்த வாறே. (9)


கடைசி ஒரு பக்கம் கிடைக்கவில்லை எனத் தெரிகின்றது.
---------------------------------------

This file was last updated on 8 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)