pm logo

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 4
திருவெழுகூற்றிருக்கை & மதுரைக்கோவை
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு


ciRRilakkiyat tiraTTu, part 4
tiruvezukkURRirukkai & maturaik kOvai
edited by vaiyApurip piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Our sincere thanks go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிற்றிலக்கியத் திரட்டு - பாகம் 4
திருவெழுகூற்றிருக்கை & மதுரைக்கோவை
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுப்பு

Source :
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த
சிற்றிலக்கியத் திரட்டு
பொதுப்பதிப்பாசிரியர் இ. சுந்தரமூர்த்தி
பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக் கழகம்
நூலகத்திற்கு அன்பளிப்பு
சென்னைப்பல்கலைக்கழகம் , 2001
Chitrilakkiyath thirattu
First Edition: November - 2001
University of Madras
வடிவமைப்பு: வே.கருணாநிதி
PRINTED IN INDIA
The PARKAR , 293, Ahamed Complex 2nd Floor
Royapettah High Road, Chennai - 600 014.
----------------
IV. எழுகூற்றிருக்கை
11. திருவெழுகூற்றிருக்கை (1937)
V. கோவை
12. மதுரைக்கோவை (கூடற்கோவை) (1934)
------------

11. திருவெழுகூற்றிருக்கை

ஒருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
யொன்றா யொன்றி இருவரிற் றோன்றி
மூவா தாயினை
இருபிறப் பாளரி லோருவ ராயினை       5
யோராச் செய்கையி னிருமையின் முன்னா
னான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
வொருசிறை விடுத்தனை

யொருநொடியதனிலிருசிறை மயிலின       10
முன்னீ ருடுத்த நானில மஞ்ச
நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
யொருகைப்பொருப்பான் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினிருவகைத் தாகிய       15
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்த னைந்துகைக் கடவுள்
அறுகு சூடிக்கிளையோ னாயினை
அஞ்செழுத்ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினிருவினை மருந்துக்       20
கொருகுரு வாயினை
யொருநா ளுமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரக நாற்கவி ராய
னைப்புலக் கிழவ னறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை       25
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக
ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவியகுருகிரி, இருந்த       30
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவனெனஇருந் தனையே.

திருவெழுகூற்றிருக்கை முற்றும்.
~~~~~~~~~

நிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய
12. மதுரைக் கோவை

சிறப்புப்பாயிரம்
தேவுக் கரசு திருவால வாய்க்கொரு தீபமென்னுங்
கோவுக் கருந்தமிழ்க் கோவைசெய் தான்கொண் டெழுமொருசொற்
காவிற் படிதடஞ் சூழ்நிம்பை காவலன் கற்றுணர்ந்தோர்
நாவுக் கினியனன் சொற்பாடற் சங்கர நாரணனே.

சிவமயம்
மதுரைக் கோவை
காப்பு
அடிக்குந் தொடைக்கு மடங்காத கோவை யலங்கலந்தை
முடிக்கும் படிவந்தென் முன்னின்ற வாசங்க முத்தமிழ்நூல்
வடிக்குங் கடவுள் மதுரேசர் கோபுர வாயினின்று
நடிக்குங் கடாசலந் தூக்கிய தாமரை நாண்மலரே.       1

வாழ்த்து
மறைவாழி யெங்கள் மதுரைப் பிரானடி வாழிசைவத்
துறைவாழி தானத் தொகையவர் வாழி துழனிவிழா
நறைவாழி யேடெதிரு(ந்)நதி வாழியந் நாடளிக்கு
மிறைவாழி மூவரியல்வாழி வாழி யிருநிலமே.       2

குமரன் துணை: ஞானதேசிகன் துணை: வடிவே துணை.

நூல்
1. இயற்கைப் புணர்ச்சி

காட்சி
கார்பூத்த சிந்துர வார்பிறை சூடுங் கமலம்பண்டு
பார்பூத்த மின்னொன்று பூத்ததுண் டோபணைத் துப்பெருத்து
வார்பூத்த கோல முலையுமை பாகர் மதுரைவையை
நீர்பூப்ப தன்றியுங் கண்டனங் காவி னிலைபெறவே.       3

ஐயம்
காழ்பட்ட கண்டர் கடம்பா டவிநின்ற கன்னியிடம்
ஊழ்பட்ட தெண்டிரை யோவரை யோபொன் னுலகுமற்றோ
வீழ்பட்ட தாமரை யோவிவர் தாமிங்கு மேவவங்குப்
பாழ்பட்ட தெவ்விட மவ்விடம் யாதென்று பார்த்திலமே.       4

தெளிதல்
ஆளிற் றமியரை யாளால வாய ரணிவரைமான்
றாளிற் புறநின்று தாழுநெஞ் சேகுழை தாவிவடி
வாளிற் சிறந்த விழியுந்தண் டாரு மதிப்பதொன்றோ
தோளிற் கரும்பருந் துங்கரும் பாகத் துணிவித்ததே.       5

வியத்தல்
புடைகொண்ட வல்குற் பரப்புஞ்சந் தாடுபொருப் புங்கண்டிங்
கிடைகண் டிலமென் றிரங்குநெஞ் சேவெள் ளெருக்கிதழித்
தொடைகொண்ட செஞ்சடை யார்சொக்கர் தாளைத்தொ ழுதுகற்பக்
கடைகண் டவனொன்று கண்டல்ல வோவொன்று காண்பதுவே.       6

புணர்ச்சி துணிதல்
சுணங்கா ரிளமுலைத் தோகைபங் காகிய சொக்கர்வெற்பி
லிணங்கா திதுநமக் கென்னுநெஞ் சேதிரு வென்பவர்தங்
கணங்காத லிக்குமிக் காரிகை பாலன்பு கந்திருவ
மணங்காண் மணங்க ளனைத்துமொவ் வாதிம் மணந்தனக்கே.       7

குறிப்பறிதல்
பெண்பாற் படும்வந்தி பிட்டா லகிலம் பிரம்புபட
மண்பாற் சுமந்துநிற் பார்மதுரே சர்முன் வாதுவென்ற
பண்பார்த்த சொல்லி பராமுகப் பார்வையிற் பார்த்தகடைக்
கண்பார்க் கிலைநெஞ்ச மேயதி லேயுண்டு காதலுமே.       8

கலந்துழிமகிழ்தல்
குலமுத் தமிழ்தெரி வார்சொக்கர் கூடலிற் கூடியிந்த
நலமிப் படிபின்னை யார்பெறு வாரின்ப நாயகியைப்
புலவிக் களவு படாப்பெரும் போக புரந்தரையைக்
கலவிக் கனியையின் கோது படாத கரும்பினையே.       9

தெய்வத்தை வியத்தல்
சேரித் தமருந் தனதாய வெள்ளமுஞ் சேரவிட்டிங்
காரித் தனிவந் தெதிர்ப்படு வாரால வாயற்கன்பு
பூரித்த நன்னெஞ்ச மேயெமக் காகவிப் பூங்கொடியைப்
பாரித்த தெய்வமன் றோதெய்வ மாகவும் பாவிப்பதே.       10

கிளவி விரும்பல்
கொல்லிற் சிறந்தறி யாதடு சூலத்தர் கூடலன்னார்
சொல்லிற் கவாநின்று சோறுநெஞ் சேதுணைத் தோளொருகாற்
புல்லிக் குழைந்தது கண்டா லினிநம் புதுமொழியின்
வல்லிக் கிவனுள்ள மென்படு மோவென்று வஞ்சித்ததே.       11

இருவயி னொத்தல்
சினைச்சங் கிளமணற் குன்றேறி வையைத் திரைதவழ்ந்து
மணத்தண் டரளஞ் சொரிமது ரேசர் வரையிலிந்த
நனைக்கொந் தளவல்லி நன்பால் விழித்த நலத்தைநெஞ்சில்
நினைக்குந் தொறுமது செந்தமிழ்ப் பாடல்நினை வொக்குமே.       12

நன்னய முரைத்தல்
விள்ளா மயல்தந் திருப்பார் முகமதி வீதிபுக்குத்
துள்ளா மறியுந் துணைக்கண்கள் போற்சொக்கர் வெற்பினறுங்
கள்ளாசை வண்டினங் காளனங் காகமங் கட்டுரைக்கு
முள்ளாசை வெள்ளந் தரவல்ல தோவுங்க ளுற்பலமே.       13

பிரிவுணர்த்தல்
வயிர்போ யிரங்கு மனமேயி வர்தந்த வாழ்வுக்கிந்த
வுயிர்போ லுடலுமொன் றாகிலன் றோபிறை யூற்றமிர்தத்
தயிர்போதுந் தண்டுறை யாரால வாய்நமக் கானவின்பப்
பயிர்போல் வளர்ந்து விளைந்தனு ராகம் பயன்படுமே.       14

பருவர லறிதல்
கூராடல் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
வேராட வானனம் வாடநிற் பீருமை மேவிநமக்
கோராவி யன்றிருந் தேனிரு வேமுள் ளளவுமினி
யீராவி யாமென வேயிங்ங னேதுன்ப மெய்துவதே.       15

பிரியே னென்றல்
கவளக் கடக்களிற் றார்கடம் பாடவிக் காவில்வளர்
பவளக் கொடிமடப் பாவை நல்லாயுன் பயோதரமுந்
துவளத் தனிமருங் கும்பிரி வேனன்று சோர்வதென்னோ
குவளைக்கு வாசம் பிரிந்ததெங் கேபண்டு கூறெமக்கே.       16

அருட்குண முரைத்தல்
துறந்தவர் நெஞ்சிற் றுறவா தவர் தமிழ்ச் சொக்கர்வெற்பில்
அறந்தரு தெய்வ மருளுநங் கேண்மை யகலிடத்துப்
பிறந்தவ ரோதவிர்ப் பார்தவிர்ப் பாரெனிற்[1] பின்னுமஃதே
இறந்தது வோவணங் கேயிற வாதி கெழுமையுமே.       17

பிரியிற் றனதாற்றாமை கூறல்
கொல்லாது போலறங் கொல்வார் சமையக் குறும்பறுக்குஞ்
சொல்லா ரழகிய சொக்கர்தண் சாரல்மை தோய்ந்தகன்ற
கல்லார வாள்விழி யாலனங் காகமங் கட்டுரைக்க
வல்லாருற வெங்ஙனே மறப் பாயென் மடநெஞ்சமே.      18

இடமணித்தென்றல்
வாதுந் தமிழுந் தெரிவையை நாடர் மதுரைவண்டு
கோதும் புரிகுழற் கோமள மேபொற் குழையிணைக்குன்
காதுங் கயல்விழி யெத்தனை போதுங் கருதிலது
போதுந் தமிய னகர்க்குங்கள் சாரலும் பொற்குன்றுமே.      19

பிரிந்து வருகென்றல்
செகத்தா தரிக்குந் திருவால வாயர் சிலம்பைவிட்டுப்
புகத்தா ளெழுந்தின்று போகநிற் பீரெப் பொழுதுமென்னெஞ்
சகத்தா மரையி லினிதிருப் பீரலல் காணுமிந்த
முகத்தா மரையழ கென்றொரு நாள்வந்து முன்னிற்பதே      20

உயிரென வியத்தல்
காவிக் கயர்வும் வெயரா னனமுங் கலந்தொருவர்
பாவிக்கரிய புளகித சோபையும் பையப்பைய
மேவித் தளருநடையுமெல் லாம்வெள்ளி மன்றர்வெற்பில்
ஆவிக்கு முண்டுகொல் லோவிது காணு மதிசயமே.       21

அருமை யுரைத்தல்
பூவிற் புகுந்த மணம்போல வும்புதுப் பூங்கனியி
னாவிற் கினிமை புகுந்தது போலவு ஞாலமெண்ணுந்
தேவுக் கினிய திருவால வாயர் சிலம்பிலிளங்
காவிற் புகுந்தி வரென்னகண் மாயங் கலந்ததுவே.       22
____
(பிரதி பேதம்) [1] பின்னுமத்தே,

இயற்கைப் புணர்ச்சி முற்றும்
----------------

2. இடந்தலைப்பாடு

தலைவன் தலைவியை நினைதல்
முற்றிற் புறங்கொழித் திட்டமுத் தாரமுகந் திழைத்த
சிற்றிற் புறநிற்ப ரோசெல்வ ரோவிசை தேக்கிவண்டு
சுற்றிப் பயில்கொன்றை யார்சொக்கர் மால்வரைத் தோகையன்னார்
வெற்றிச் சிலைமத வேளையென் போல விலையுங்கொண்டே.      23

தலைவி தலைவனை நினைதல்
காலையிற் காவியங் கண்ணிநண் பாளர் கடம்பவனத்
தாலையிற் பாகை யடுஞ்சொனல் லாய்விளை யாடுமந்தண்
சோலையிற் றேடுவ ரோமது மாலை தொடுத்தணியும்
வேலையிற் றேடுவ ரோதெரி யாதுநம் வெற்பர்வந்தே.       24

தந்த தெய்வந் தருமெனச் [1]சேறல்
மைவந்த கண்டர் மதுரையஞ் சாரல் மயிலளிக்கு
நைவந்து வாடுமெ னன்னெஞ்ச மேயிற்றை நாளளவுங்
கைவந்த தெய்வந் தரவந்த காமக் கலவியந்தத்
தெய்வந் தருமின்ன முஞ்செல்லு வோமச் செழும்பொழிற்கே.      25

பொழில் கண்டு மகிழ்தல்
கலத்தற் கினியவு மாய்க்கலந் தாலொரு காலத்திலும்
புலத்தற் கரியவு மாகிய தாலன்பு புண்டவர்பாற்
செலத்தக்க சோதித் திருவால வாயர் சிலம்பினிகர்
சொலத்தக்க தோநெஞ்ச மேவல்லி போலுமிச் சோலையுமே.      26

தனிநிலை காண்டல்
இரவித் தொழுங்கதி ரெந்நாள் வருமென்றெதிர் கொண்டுதேன்
விரவித் தளையவிழ் தாமரை போல்விடங் கொப்புளிக்கு
மரவிற் றிகழ்சடை யாரால வாயெம்மொ டானவின்பம்
பரவித் தனிநின்ற வாதமி யேனுயிர்ப் பாவையின்றே.      27

மெய்தொட்டுப் பயிறல்
ஆமே முலையிணைக் கிந்தமுத் தாரமு மல்குலுக்கும்
போமே [2]பருமம் பொறுக்கவென் றால்மண் புரக்கவைத்த
கோமே தகமுடி யார்சொக்க நாயகர் கூடலிவை
தாமே தமியனிளைப்பாறு நீழலுந் தாழ்குழலே.      28

பொய் பாராட்டல்
பருவத் தளவி விடுமிந்த்ர சாபமிப் பாவையிரு
புருவச் சிலைகண்ட நாணியன் றோமுப் புராதிபரை
வெருவச் சிலைதொட்ட வெள்ளிமன் றாளர்தம் வெற்பிலென்று
முருவப் பிறந்து மிறந்து மொவ்வாம [3]லொளிக்கின்றதே.      29

இடம் பெற்றுத் [4]தழாஅல்
மல்லற் பழன வயமது ரேசர் வரையணங்கே
வெல்லப் பிறந்தவை வேற்படை யேவிமென் காவிலின்னம்
புல்லக் கிடைக்குங்கொ லென்றயர் வேனைப் புகலறநீ
கொல்லத் துணிந்து குறையாவியுங் கொள்ளை கொண்டனையே.      30

கொடியிடம் புகுதல்
கடங்குதிக் குங்களிற் றார்கடம் பாடவிக் காவல்கொண்ட
விடங்கொதிக் குங்கண்டர் வண்டமிழ்ச் சாரலில் வெண்டாள
வடங்கிடக் கும்முலை யார்மட னாணுக்கு மாதிமைக்கு
மிடங்கொடுப்பாரெவரோவுனைப் போல விளங்கொடியே.      31
கொடியிடம் புகுதல் கிரங்கல்
பிறைத்தாம நீள்முடி கன்றமெய் வேர்வு பெருகவன்று
குறைத்தாய வை(யை)க்கு மண்சுமப் பார்சொக்கர் கூடலிலிக்
கறைத்தாரை வேல்விழி யாலென்னை யாளுங் கரும்பையின்று
மறைத்தா யிளங்கொடி யேயுனக் கேணிந்த வன்கண்மையே.      32

கண்புதைத் திரங்கல்
கொலையிட்ட முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
முலையிட்ட முத்த முகிணகை யீர்நும் முரிபுருவச்
சிலையிட்ட காவலுக் குள்ளே கிடந்து தெளிவித்தெம்மை
நிலையிட்ட வர்தம்மை யோமறைப் பீரென் னிலையுங்கண்டே.      33

நீடுநினைந் திரங்கல்
காம்பாடு சோலைக் கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பி
னாம்பா தகமென்செய் தோநெஞ்ச மேநறை தேக்கெறியுந்
தேம்பா யளக நிழற்கே நிறையைத் திறைகவர்ந்த
பூம்பாவை நாணுமென் காதலு மாகப் பொருகின்றதே.      34

நாண்விட வருந்தல்
வாராசை கொண்ட வனமுலை பாகர் மதுரைவெற்ப
ராராயும் பேரறி வுக்கடங் காம லளிவிறந்த
பேராசை வெள்ளந் தலைப்படும் போதொரு பெண்மடனா
ணேரா வெதிர்நிற்கு மோநெஞ்ச மேயென் னினைவதுவே.      35

வறிதுநகை தோற்றல்
தளைக்குஞ் செழுங்கொன் றைபோதா திளம்பிறைத் தாமங்கொண்டு
வளைக்குஞ் சடாடவி யார்சொக்க நாதர்மது ரையன்னார்
இளைக்குந் துடியிடை யார்சிந்து ரானனத் தின்றவமே
முளைக்குஞ் சிறிய முறுவலென் னாக முடிவிக்குமே.       36

முறுவற் குறிப்பறிதல்
கவளக் கடகளிற் றார்கடம் பாடவிக் கன்றிளமாம்
பிளவைப் பொருத பிணைவிழி யாரருள் பெற்றுமின்ன
மளவெத் தனையென் றறியவொண் ணாதின் னமுதரும்புந்
தவளத் திருநகைக் கேயுள தாமொரு தண்ணளியே.      37

மருங்கணைதல்
மாகீத வண்டினங் காளுமை பாகர் வளமதுரைப்
பாகீர் மொழிச்சின் மருங்குகண் டீர்முலைப் பாரங்கண்டீர்
ஏகீர மர்கின்றி லீர்மது வாசைக்கு மென்னுரைக்கு
மாகீ [5]ருழலுகின் றீரென்ன கேண்மையு மாவலுமே.       38

கூடுதலுறுதல்
[#]மடைக்கண் டரளஞ் சொரிவையை [6]நாடென்ன வையமொரு
குடைக்கண் டனிபுரப் பார்சொக்க நாயகர் கூடுலன்னார்
கடைக்கண் கருணையுண் டாருமி லாதபொற் காவுமுண்டு
புடைக்குந் தருண வனமுலை யாமின்று [7]புல்லுதுமே.      39

கலந்துழி மகிழ்தல்
கொடும்போர் வரிசிலை யார்கூடல் மால்வரைக் கொம்பினங்கந்
தொடும்போது கன்று மெனவிருந் தேம்புல்லித் தோள்குழைவு
படும்போ தெரியும் புளகஞ்சற் றேய பனிமலர்க்கை
விடும்போ துயிர்விடும் போலுமென் னாக வியந்தனமே.      40

நலம்பா ராட்டல்
கண்ணுக் கனங்கன் கரும்பாகி யின்னிசை காதலித்தாற்
பண்ணுக் கொருவடி வாயுயி ராய்த்தம் பரப்படங்கா
மண்ணுக் கடங்கு புயத்தார் மதுரை மதுமலர்ப்பூம்
பெண்ணுக் கருங்கல மாய்நின்ற வாவென் பெருந்தவமே.      41
பயந்தோர் பழிச்சல்
மல்லிற் றிகழ்புயத் தார்மது ரேசர் வரையிலிந்தக்
கொல்லித் தனியணங் கென்னநிற் பாரைக் கொழிக்குநறை
யல்லிக் கமலத் திருப்பா னிருக்கு மளவுமெம்மைப்
புல்லிக் கொளத்தரு வார்வாழி வாழி புகழொடுமே.      42

தீராத் தேற்றம்
வாளுற வானகண் ணாய்தமி யேன்சொல்லும் வாய்மையென்னுஞ்
சூளுற வாவ தயிந்திலை யேயலை தூற்றுகங்கை
யாளுற வாமுடி யாரால் வாயிலெ னாதரவோர்
நாளுற வாகில் வரலெவற் கோபழி ஞாலத்திலே.       43

ஏற்புற வணிதல்
துடைத்தார் படைத்தளிப் பார்சொக்கர் தாளைத் தொழுதுனைமுன்
கிடைத்தா ரமைத்த படியணிந் தேனிரு கெண்டையங்கட்
கடைத்தாரை கொண்டிது பாரணங் கேயன்று கைவருந்தப்
படைத்தார் தமக்கும் படைக்கவொண் ணாதென் படைப்பினையே.      44

விடுத்தல்
வாவிக் கயலுகளு{ம்} மது ரேசர் வரையமுதே
யாவித் துணை யென்னு மாயம் புகீரடியேனுமது
காவித் துணைவிழி யின்கடைப் பார்வையுங் கண்டுகண்டு
சேவித் துடன்வர வும்பெற்றி லேன்முன்செய் தீவினையே.       45

இன்னங் கூடுங்கொலென் வரு(ந்)தல்
வாளக் கிரிபுரப் பார்மது ரேசர் வரையிலிந்தத்
தோளத் தனையு மிருதன பாரமுந் தோய்ந்திவர்வந்
தாளத் தவஞ்செய்த நெஞ்சமெஞ் சாதெம்மை யாளவின்ன
மீளத் தவஞ்செய்த தோதெரி யாது விதிவசமே.       46

நீங்கற் கருமைகூறல்
மணக்கும் படிவருளங் காலுளங் கூரு மகிழ்வுஞ்சற்றே
தணக்கும் பொழுது தளர்வுங்கண் டாற்பொற்றருவை முட்டி
யணக்குந் தடம் பொழில் சூழால வாயரன் றாய்ந்துசங்கத்
திணக்குந் தமிழென்ன லாம்வல்லியாடு மிளம் பொழிலே.       47

-----------------
(பிரதி.) [1] சென்றல்; [2]பருவம், [3]லொழிக்கின்றதே, [4]தளர்தல்.
(பிரதி) [5] லுழலுகின் (பி-ம்.) [6] நாடன்ன, [7]புல்லுவமே
[#]இச்செய்யுள் இலக்கண விளக்க வுரையுல் (பக் 399) இடம் பெற்றுத் தழா அற்குக் காட்டப் பெற்றுள்ளது.

இடந்தலைப்பாடு முற்றும்
-----------------

3. பாங்கற்கூட்டம்

தலைவன் பாங்கனை நினைதல்
வாமத் துமைநண்ப னார்மது ராபுரி வல்லிநண்பு
போமத் தனையென் றயருநெஞ் சேபுலம் பாகொணமக்
கேமத் துணையுயிர்ப் பாங்கனுண் டேயவ னின்பவெள்ளக்
காமக் கடலின் கரையுது காணென்று காட்டுவனே.       48

பாங்கன் வாட்டம் வினாதல்
சுளியுங் கழைமதத் தெட்டானை யாலையச் சொக்கர்வெற்பி
னெளியுஞ் சிலைத்தொழிற் போரண்ண லேநெஞ்சு மாண்மையுந்தண்
ணளியும் பொறையு மழகுஞ்செங் கோன்மையு மாயொருவர்
தெளியும் பொருளைத் தெளிவிக்கு நீயென்கொல் தேம்புவதே.      49

உற்றதுரைத்தல்
உன்னெஞ் சறியுமென் கல்வியு மாண்மையு மூறுபட்ட
தென்னஞ் சறியுமற் றாரறி வாரற மென்றறியா
வன்னெஞ் சறைபுகு தார்சொக்க நாதர் மதுரையன்னார்
தன்னெஞ் சறியு மவர்கண்க ளாலெம்மைச் சாதித்ததே.       50

பாங்கன் கழறல்
இலங்காடல் வேற்படை யெத்தனை கோடி யெதிர்பொரினுங்
கலங்காத நீயுங் கலங்கினை யேகற்ப காலத்தினு
மலங்கார் வரிசிலை யார்சொக்க நாதர் மதுரையன்னார்
அலங்கார வார்குழைக் கும்புறம் போமிரண் டம்பினுக்கே.       51

கழற்றெதிர் மறுத்தல்
தேனா ரிதழித் திருவால வாயர் சிலம்பிலொரு
வேனா யொருமயில் கைப்பட்ட பாவமொ ரேழைக்குநீ
தானாக வேணுந் தலைவனண் பாவின் றனக்குநண்ப
னானாக வேணுமந் நாளல்ல வோவுன்னை நான்சொல்வதே.      52

பாங்கன் கவன்றுரைத்தால்
கூலத் திரைவையை மண்கூறு கொண்டொரு கூடைகட்டு
மாலக் களத்தர னாரால வாய ரடக்குமந்த
காலக் கடையன்ன கண்ணார் நெடுங்கடைக் கண்களென்னு
மோலக் கடல்கொண்டதோவண்ண லாண்மையு [1]மொண்மையுமே.      53

விதியொடு வெறுத்தல்
செறுக்கும் புரத்தர் திருவால வாய்நவ்வி செவ்விகண்டு
மறுக்குந் தகையறி யாநெஞ்ச மேபல வாசகத்தால்
ஒறுக்குந் துணையை வெறுத்தென் கொலோபய னூழ்வினையால்
வெறுக்குந் தகைமை விதியன்றி யாரை வெறுப்பதுவே.      54

பாங்கன்நொந்து கூறல்
வார்க்கோல நீல முலைத்தழும் பாளர் மதுரையினம்
போர்க்கோல வார்சிலை யண்ணலுக் கோவொரு பூங்கொடித
னீர்க்கோல மேக குழற்காடு கண்டு நிறையழியும்
யார்க்கோ வறிவு படுமறி வாளிக் கிதுவரிலே.       55

இடமும் வடிவும் வினாதல்
எங்கே யிருப்பதுன் வல்லிக்கென் [2]னாம்வடி வெய்துமிடம்
பங்கே ருகமலர் மாளிகை யோவிண் பரப்படங்காக்
கொங்கே{ர்} நெடுஞ்சடை யார்சொக்க நாயகர் கூடல்வெற்பா
அங்கே செலவு [3]மவருளப் பாடென் றறியவுமே.       56

இடமும் வடிவு முரைத்தல்
காளக் களத்தர் கடம்பா டவியிடங் கட்கடைகள்
வாளைப் பொருது குழைகிழித் தோடு மருங்கறியேன்
பாளைக் கமுகிளஞ் சோலைநிற் பார்தம் பணிவினவில்
வேளைப் பணிகொண்டு நிற்பதல் லாதொரு வேலையின்றே.      57

பாங்கன் வற்புறுத்தல்
விண்ணும் [4]பவன நிலையுஞ் செந்தீயும் விரிபுனலு
மண்ணுங் கரந்துநிற் பார்மது ரேசர் மணிவரைமைக்
கண்ணுங் குழையு முறவாடு கண்ணியைக் கண்டுனைநான்
நண்ணுந் தனையுமன் றோவண்ண லேயிங்ங னைவதுவே.      58

பாங்கன் குறிவழிச் சேறல்
மண்ணின் புறம்புரப் பார்சொக்க நாதர் மதுரைவெற்பை
நண்ணும் பொழுதெங்ஙன் காண்குவ மோநம்மை நம்புமண்ண
லெண்ணின் புறஞ்சென்ற கல்விபல் கோடி யிரண்டுகயற்
கண்ணின் கடையிற் கடத்திநிறப் பாரையக் காவகத்தே.      59

பாங்கன் தலைவியைக் காணுங்கொலென வருந்தல்
இந்நேரங் காவினிடை புகு மோவங் கெழுந்தருளு
மந்நேர மாவதறியும தேவால வாயர் வெற்பின்
முன்னே யியங்கு முளரியங் கோதை முகம்புகுந்து
தன்னேரறியு முயிரென் கொலோ சென்று சாதிப்பதே.       60

இணையுருக்கண்டவன் துணைவனுக்கிரங்கல்
கல்லார நீழற் கடம்பா டவியிளங் காவிடத்து
நில்லாது நீரிங்கு வத்துநின் றாலெளி னைவறிய
வல்லா னொருவன் வினையே னிடமும் வடிவுஞ்சொன்ன
தெல்லா மறிந்தெங்ங னேயும்மை நாடு மிளங்கொடியே.      61

பாங்கன் தலைவியைக் காண்டல்
சொல்லித் தகரத்தர் சொக்கர்தண் சாரலெந் [5]தோன்றனெஞ்சைச்
செல்வித் தவரிவர் தாமல்ல வோசென்ற நெஞ்சுருகப்
புல்வித்த காவுமிக் காவல்ல வோவென் புகல்வதவர்
கல்விப் பரப்பிவர் கண்ணிரு கோடியிற் கண்டனமே.       62

பாங்கன் தலைவியை வியத்தல்
செண்டா டல்வெற்பர் திருவால வாயெழிற் செவ்விவிண்ட
தண்டா மரையிற் றிருவறி வேனண்ணல் தண்டலையிற்
கண்டா சைபூணக் கொழுங்கா வியங்கட் கடைகொடுத்த
வண்டாடு கோதைக் கெவர்நிக ராக மதிப்பதுவே.      63

பாங்கன் தலைவனை வியத்தல்
கோணாத [6]நாணிடும் வெஞ்சிலை யார்சொக்கர் கூடனெடுந்
தூணார் புயத்தண்ண லாண்மைநன் றேபுடை தூர்த்தடங்காப்
பூணார வெற்பைக் கடந்தாலு மந்தப் பொருப்பிருக்குங்
காணா வெளியை யொருவனெவ் வாறு கடந்தனனே.       64

இகழ்ந்ததற் கிரங்கல்
அகழும் புரிசையுஞ் சூழால வாய ரணிவரைநாம்
இகழுந் தகைமைய தோவண்ண லாண்மை யிமையவரும்
புகழுந் திருவனை யார்கண்க ளாலிடும் பூசல்வெள்ளம்
திகழும் பரிசல் கண்டாலென் படாதொரு சிந்தையின்றே.      65

பாங்கன் தலைவியைக் கண்டமை செப்பல்
கழைகிழிக் குங்களிற் றார்கடம் பாடவிக் கண்ணுதனாட்
டிழைகிழிக் குங்கொலை வேலண்ண லேவண் டிரைக்குமலர்
மழைகிழிக் கும்பொங்கர் நின்றுன தாவி மறுக்கங்கண்ட
குழைகிழிக் குங்கண்ணிக் கார்நிக ராமென்று கூறுவதே.       66

தலைவன் தலைவியை வியத்தல்
துளிகொண் டொழுகு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்வெற்பிற்
கிளிகண்ட சொல்லியை நீகண்ட போதெழு கீதவண்டு
களிகொண்ட வாச மலர்ப்புய லூடலர் காவியிற்றண்
ணளிகண் டனையென்கி லோவமை யாதுன் னதிசயமே.      67

தலைவன் குறிவழிச் செல்லத் துணிதல்
சினவிற் கரத்தர் திருவால வாயர் சிலம்பிற்கஞ்ச
மனையிற் புகுந் தெனினும் நண்ப னேயிந்த மாயஞ்செய்த
வினையிற் புருவத் திருப்பாவை செவ்வியை மேவுதற்கே
நினைவிற்கு முன்செலு மேபுல்லு மேயன்பு(நேர்) நெஞ்சமே.      68

தலைவன் தலைவியை முகம்புகுதல்
மந்தார மாலை மதுரேசர் வெற்பிலென் மையனெஞ்சு
பந்தாட வந்துற வாடநிற் பீர்முகம் பார்த்தொருவர்
சிந்தா குலமு மயர்வுங்கண்ட லொரு தீங்கிளவி
தந்தாள வேணு மதுகாணும் பெண்மையுஞ்சாயலுமே.       69

கலந்துழி மகிழ்தல்
தாழுஞ் சுருளிரு ளோதியங் காவிலுஞ் சந்த்ரகலை
வாழுங் குவளையி லும்பெரி தாய்மது ரேசர்வெற்பிற்
சூழுங் கலாப மயிலனை யாரல்குல் தோய்ந்தலைந்து
வீழுங் கலாபமன்றோவின்ப வாரி விளைவித்ததே.      70

நலம் பாராட்டல்
வம்புங் குவடும் பொருமிரு கோல வரையும்வஞ்சிக்
கொம்பும் படவர வும்புகழ் வேன்சொக்கர் கூடலளி
பம்புங் குழலி யனுராக போகத்திற் பார்க்குமிரண்
டம்புந் தருவிர கோவடங் காததென் [7]னறிவினுக்கே.       71

பாங்கியொடு வருகென்றல்
குனிவரும் பான்மதி யார்சொக்க நாயகர் கூடற்செந்தேன்
கனிவரு காமக் களிமயி லேயிளங் காவிடைநீர்
தனிவருந் தோறுந் தரியாத வாவி தரிப்பதற்கிங்
கினிவரும் போது பிரியாது வாரு மிருவருமே.       72

ஆயத் துய்த்தல்
கந்துங் கழையும் பொருதிரு பாலுங் கடைக்கணங்கி
சிந்துங் களிற்றர் திருவால வாயர் சிலம்பில்வண்டு
கொந்துங் குழலுஞ் சுழலணங் கேமலர் கொய்துமது
பந்துங் கழங்கும் பயிலாய வெள்ளம் பயிலுகவே.       73
தலைவி பாங்கியை யறிவித்தல்
விண்ணோக் கினுந்தெரி யாதபொன் மேனியிம் மேனியென்று
மண்ணோக்கி யேத்திநிற் பார்மது ரேசர் வரையினின்ற
பண்ணோக்கு மின்சொற் பரிபுரப் பாவை பணிந்தகடைக்
கண்ணோக்கி னின்றுகண் டேன்வளர் காதற் கரும்பினையே.      74

-----
(பிரதி) 1 முண்மையுமே, [2]னாமழை கெய்துமிடம், [3] மவாருளப்பாடன்
[4] பவனி, [5]தோன்ற நெஞ்சைச்
[6] னாணிடும்.
; [7] ற்றிவினுக்கே,

பாங்கற் கூட்டம் முற்றும்
------------

4. மதியுடன் படுத்தல்

பாங்கிமை நினைதல்
வம்பே ரளக முலையுமை பாகர் மதுரையன்னார்
தம்பே ரளியை விரும்புநெஞ் சேமுகத் தாமரையில்
அம்பேர் விழிகொண்ட வர்மலர்க் காவி லறிவுறுத்த
கொம்பேநங் காதற் கொடிபடர்ந் தேறுங் கொழுகொம்புமே.      75

புளங்கண்டு மகிழ்தல்
கூனும் பிறைமுடி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
யானுந் தனியு மிருந்தழி யாமலென் னெஞ்சும்வண்டுங்
கானுஞ் சுழலுஞ் சுருளிரு ளோதியைக் காணவைத்த
மானுந் தினையும் புனமுமன் றோவெம்மை வாழ்வித்ததே.      76

கிள்ளை வாழ்த்து
தேன்வாழு மாலைத் திருவால வாயர் சிலம்பிலிந்தக்
கான்வாழ வாழும் புனத்தய லேவந்து கைகலந்து
யான்வாழ் வதுபொருட் டாவிள மானையி கெய்துவித்த
மான்வாழி கிள்ளை யினம்வாழி யேனலும் வாழியவே.       77

புனத்திடைக் கண்டு மகிழ்தல்
[*]தினைக்காவ லிந்தத் திருவைவைப் பாரந்தச் செங்கமல
மனைக்கா ருளரென்ற றிந்தல்ல வோவருள் மாரிவெள்ளச்
சுனைக்கா வியங்கண்ணி தோய்வா ரழகிய சொக்கர்வெற்பில்
வினைக்கா னவரறி விப்படி யோமுன் விதித்ததுவே.       78

குறைகூறத் துணிதல்
தோயவெள் ளந்துளும் புஞ்சடையார் சொக்கர்தொண்டர் பண்டைக்
காயவெள் ளங்கழற் றுங்கழலாளர் கடம்பவனத்
தாயவெள் ளஞ்சென் றணுகுமுன் னேயவரா ருயிர்க்கென்
னேயவெள் ளஞ்சொல்லி நிற்பதன் றோபின் னிலையெமக்கே.      79

ஊர் வினாதல்
சோருந் திருநதி சூடுஞ் சடாடவிச் சொக்கர்வெற்பில்
வாருங் குவடும் பொருமுலை யீர்வந்து வந்துநின்று
தேரும் பரியுந் தியங்கா மலுங்கள் திருமுன்றிலு
மூரும் பகரு மினிவினை யேனெஞ் சொருப்படவே.      80

வழி வினாதல்
சுழியா மணிகொழிக் கும்வையை நாயகர் சொக்கர்வெற்பில்
வழியா தெனவறி யேன்மட வீர்கனி வாய்திறந்து
மொழியா லுரைக்க முடியா தெனில்முகம் பார்த்துமது
விழியா லுரைத்தரு ளீரிது போதும் வினையனுக்கே.       81

பேர் வினாதல்
கோட்டைப் புறங்கண்டு வில்வேள் மகுடங் குலைத்திடையை
வாட்டப் புகுதும் வனமுலை யீர்கொன்றை மாலைதும்பை
சூட்டப் பொலிந்த சுடர்ச்சொக்கர் மால்வரைத் தொல்லைதும்பேர்
கேட்டெத் தனையிரந் தேனுரை யீருங்கள் கேண்மைநன்றே.      82

வேழம் வினாதல்
தூர்க்கடங் காதசெஞ் சாலிவண் கூடலஞ் சொக்கர்வையை
நீர்க்கடங் காத கயல்விழி யீருங்க ணீலமணி
வார்க்கடங் காத வனமுலை போலென் வரிசிலையின்
போர்க்கடங் காவிபம் வந்ததுண் டோதும் புனத்தயலே.       83

கலை வினாதல்
அருங்கலைச் சங்கத் தமிழால வாய ரணிவரையின்
மருங்கலைக் குங்கொங்கை வல்லிநல் லிருங்கள் வார்குழையை
யொருங்கலைக் குங்கண்கள் மான்பினை யோவென வோடியொரு
கருங்கலைக் கன்று புகுந்ததுண் டோவிக் கடிபுனத்தே.       84

மொழிபெறாது வருந்தல்
கொன்னாடர் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மின்னா தரிக்கு மருங்குனல் லீரிந்த வேதனையு
மென்னா தரவுநிலையுங்கண் டீர்நெஞ் சிளகியொன்று
சொன்னா லினிச்சிந்து மோவுங்கள் வாயிற் றுவர்முத்தமே.      85

இடை வினாதல்
மன்றுகண் டாடு மதுரேசர் வெற்பில் வளருமுலைக்
குன்றுகண் டாமிடை கண்டிலம் யாம்பொற் குழைகுதித்துச்
சென்றுகண் டாருளங் கொண்டாளு மைக்கட் டிருவனையீர்
ஒன்றுகண் டாலொன் றிலையென்ப தோவுங்க ளுதியமே.      86

மனம் வினாதல்
[#]கனம் வந்திறைஞ்சுங் கடம்பா டவியர் கருணையென்னத்
தனம்வந் தரும்புஞ் சரிகுழ லீரென் சரத்தொடுமா
னினம்வந்த தோவந்த மான்பிணை தேடி யிளைத்துமற்றென்
மனம் வந்த தோவுரை யீருங்கள் காவல் மலிபுனத்தே.      87

தோழி வினாவெதிர் மறுத்தல்
விழிக்கஞ் சனமல்ல மைக்காவி யோதியின் மேல்முடித்துக்
கழிக்குந் தொடையல்ல கைவளை யோவல்ல கங்கைவெள்ளஞ்
சுழிக்குஞ் சடாதரர் சொக்கர்வெற் பாளர் சுழித்துமதங்
கொழிக்குங் கடாசல மெங்களுக் காவதென் கூறுவதே.      88

நகைத்துரை
கனங்காவல் கொண்ட கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பில்
அனங்காள் பிணையிங்கு வந்ததென் பீரலல் காணுமித்தப்
புனங்காவ லோவெமக் கித்தழை யாலெய்து போம்பிணைமா
னினங்காவ லோவண்ண லேயெங்கள் காவ லியம்புகவே.       89

கையுறை காட்டல்
மழையா தரிக்க வளர்பொங்கர் சூழ்மது ரேசரிளங்
கழையா தரித்தபொற்றோளுமை பாகர் கடம்பவனத்
துழையா தரிக்குந் தடங்கணல் லீரினி யோலிடுந்தண்
டழையாகு மிந்தத் தழையிது வேபதஞ் சாத்துவதற்கே.       90

கருத்தறிவித்தல்
முருந்துண் டமூரலம் பானல்பொ னாக முழுதுமன்று
விருந்துண் டழைப்பவர் வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பில்
அருந்தொண் டைவாய்மட வீர்வண்டல் மாளிகைக் காமவிருந்
திருந்துண் டுபோமென் கிலீரிது வோவுங்க ளில்லறமே.      91

குறை கூறல்
அரம்பார்த்த வேல்விழி யீர்கழங் காடுகைக் காகமுத்தந்
தரம்பார்க்க வோவண்டல் தானிழைக் கோசரணென் பவர்க்கு
வரம்பார்த்த சொக்கர் மதுரேசர் வெற்பிலென் மாதவத்தால்
நிரம்பாய் பணியுமக் கேததற் கேசென்று நேர்படவே.       92
-----
[*] இச்செய்யுள் இலக்கணவிளக்கவுரையில் (பக்கம் 421) இத்துறைக்கே காட்டப் பெற்றுள்ளது.
[#] இச்செய்யுள் இலக்கணவிளக்க வுரையில் (பக்கம் 419) மனொடு மனம்வினாதற்குக் காட்டப்பெற்றுள்ளது.
மதியுடன் படுத்தல் முற்றும்
----------------

5. குறையுறவுணர்தல்

தோழி ஐயுறுதல்
மலைபெற்ற செஞ்சிலை யார்மது ரேசர் வரையில்வஞ்சக்
கொலைகற்ற விற்புரு வக்கொடி யீர்குறை கோடியென்பர்
கலைகெட்ட தென்பரி டைதெரி யாதென்பர் கட்டுரைக
ணிலைபட்ட தொன்றல வானினை வேதிவர் நெஞ்சினுக்கே.      93

இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்
கலையென் றனரொரு காலொரு கால்வெங் கடங்கொழிக்கு
மலையென் றனர்மனம் வந்ததென் றார்மது ரேசர்வெற்பா
முலையென் றனர்சொன்ன தெல்லா மறைத்து முடிவிலிடை
யிலையென் றனர்வெளிக் கேநல்ல மாய மிவர்கற்றதே.       94

நாற்றம்
[*]கங்கைச் சடிலர் மதுரா [1]புரேசர் கடம்பவனத்
தெங்கட் குளதன்றியெங்குள [2]தோவிவட் காரமும்பூந்
தொங்கற் புதுமண முந்திருப் பாவைபொற் றோளுமிரு
கொங்கைக் குவடு மளகா டவியுங் குடிகொண்டதே.       95

தோற்றம்
தோளிற் குழைவுங் களபா சலந்தரு [3]சோபையுமை
வாளிற் [4]புகுந்த விரகுங்கண் டாற்சந்த்ர வட்டங்கொண்ட
கோளிற்றிகழ்குடை யார்கூடல் வாழுங் கொடியிடைக்கு
நாளிற் சிறந்து [5]சிறந்தொரு கோடி நலந்தருமே.       96

ஒழுக்கம்
கந்தா டியகளிற் றார்கடம் பாடவிக் [6]காவிடையே
வந்தா [7]ரொழுக்க வழக்கென்சொல் வேன்வண்ட லாடலும்பூஞ்
சந்தாடு சோலை மணியூச லாடலுந் தண்டரளப்
பந்தா டலுமறந் [8]தார்நினைந் தாரென் பயில்வதற்கே.      97

உண்டி
பெருந்தா மரைப்பதம் போற்றிநிற் பார்பிற விப்பிணிக்கு
மருந்தா கியபெரு [9]மாள்மது ரேசர் வரையிலிந்தக்
கருந்தாரை வேற்கண்ணிக் கென்னகண் மாயங் [10]கலந்ததண்ட
ரருந்தா வமுதருந் தப்புகுந் தாலு மருந்திலளே.       98

செய்வினை மறைத்தல்
யாமேயு மின்றி யினவாய வெள்ளமு மின்றியிவர்
தாமே புரியுந் தவமென் கொலோதண் டரளமணி
வாமே [11]1கலைத்தம் பிரான்மதுராபுரி வையை சுற்றும்
பூமேவு சோலையுஞ் செய்குன்று மாகப் [12]பொலிந்துநின்றே.      99

செலவு
கரிக்கும்ப கம்பக் கடாசலத் தார்கடம் பாடவிமான்
பரிக்கும் [13]பரிபுர மார்ப்பமுன் னோடும் பதமலர்கள்
விரிக்குந் தவிசுங் கொடுங்காள கூட விடவரவந்
தரிக்குந் திருவி னுடலுங்கன் றாநடை தந்தனவே.      100

பயில்வு
வன்னந் தருமவு லிச்சொக்க நாதர் மதுரையிள
வன்னந் தனிநடை [14]கற்பநிற் பாடன் னமுதச்செவ்வாய்
இன்னந் துணைமுலைப் பால்மணம் போயின தில்லையிவள்
தன்னந் 5தனி(யே) துயில்கற்ற வாவென்பர் தாயருமே.      101

தலைவன் குறிப்பறிதல்
மகங்கண்ட வாசவன் பொற்புண்ட ரீகமலர் கொண்டெண்ணி
யுகங்கண் டிடையை வணங்கிநிற் பார்தென்ன ரோடுறவாய்ச்
செகங்கண்ட நீதித் திருவால வாயர் சிலம்பில்வல்லி
முகங்கண்ட போது முடிவென்சொல் வெனண்ணல் மோகத்தையே.      102

தலைவி குறிப்பறிதல்
கனத்தே யணவுங் கடம்பா டவியர் கவுரிசெம்பொற்
றனத்தே கடைக்கண் டரவிருப் பார்தடஞ் சாரலினம்
புனத்தே குரிசில் தலைப்படும் போது பொருமிவல்லி
மனத்தே துளும்பும் விரகெங்ங னேசொல்ல வாய்திறந்தே.       103
இருவர் குறிப்பு முணர்தல்
மங்கைப் பருவத் திவள்காவ லேனலிவ் வள்ளலிரு
துங்கக் களபப் புயாசலத் தேயலை தூற்றுபுனற்
கங்கைச் சடிலர் கடம்பா டவியிலிக் கன்னியிரு
கொங்கைக் குவட்டிடை யேயவர் தேடிய குஞ்சரமே.       104
---
[ *] இது முதல் 'வன்னந்தரு (செய் 101) என்பதன் இறுதியாகவுள்ள செய்யுட்கள் இலக்கண விளக்கவுரையில் (பக் 417) எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன
(பி-ம்) [1] புரீசர், [2] தோவிள, [3] சோபையும் வை, [4] சிறந்த விழியுங் கண்டாற் சசிவட்டமென்னுங்,
[5] புதுமை, [6] காவின் மின்போல், [7] ளொழுக்க, [8] தாளென்னபாவம் பலித்ததுவே
[9] மான்மது, [10] கலந்ததென்று - மருந்தா ரமுதருந்
[11] கலைப்பங்கர் வாழ்மதுராபுரி, [12] புகுந்து நின்றே, [3] சிலம்பு சிலம்பு பொற்பாதம் பதும மலர் - விரிக்குந் தவிசின் மெலநடந்தாலு மெலிவதராத்
தரிக்குந் திருவுடலுங் கன்றவே நடைதந்ததுவே,
[14] கற்ப நின்றாடன் [15] தனிபயிலக் கற்றவாறென்கொல் சாற்றுவதே,

குறையுற வுணர்தல் முற்றும்
------------------

6. முன்னுற வுணர்தல்

தோழி தலைவியை வாட்டம் வினாதல்
கனையா வரிவண் டறைகொன்றை யார்பொற் கடம்பவனத்
தெனையா ளுமீச ரியல்வரை வாய்நில வீன்றமணிப்
புனையா வரிப்பந்தும் பொன்னூச லும்புரிந் தாடிமற்றோர்
சுனையாடி யோதிரு வேதிரு மேனி துவண்டதுவே.      105

முன்னுற வுணர்தல் முற்றும்
----------------

7. நாணநாட்டம்

பிழைதொழு கென்றல்
கூனார் பிறைச்சொக்கர் வண்டமிழ்ச் சாரற் குவிந்தகொண்ட
றானா யிருண்ட சரிகுழ லாயன்று தாய்முகம்பார்த்
தானா தழுது விளையாட நீநின் றழைத்தகன்று
மானா கிலுந்தரு மேவணங் காயிந்த வான்பிறையே.       106

வேறுபடுத்திக் கூறல்
செவ்விக் கமல வெயருமைக் காவிச் சிவப்புமிந்தக்
கொவ்வைக் கனியில் வெளுப்புமல் லாலியற் கூடல்வந்த
நவ்விக் கரத்தர் திருவால வாயின்று நானகன்ற
பவ்வத் திருவென்ன லாமணங் கெநின் படிவத்தையே.       107

வேறுபாடென்னெனக் கூறல்
பருவஞ் சிறிது முலையரும் பான பருவமிரு
புருவங் [1]குழைமறி யாவிழி பூணலருக்
கருவந் தருபர னாரால வாயினி லன்னமின்று
னுருவந் திரிந்து பலவித மான துரையெமக்கே.      108

நெறிப்படு நாட்டத்து நிதழ்ந்{த}து மறைத்தல்
சூடும் பிறைமதி யாகநின் றாடிய சொக்கரியல்
கூடும் பொதியம லையிடை யேகுழற் பந்திமட்டு
நீடுங் கயற்கணல் லாய்தமி யேனின்னை நீங்கியங்ங
னாடுஞ் சுனைதந்த திந்தமெய் பூணு மவசங்களே.       109

சுனைவியந்துரைத்தல்
அலைந்து சரிந்த குழலுமைக் காவியயர்வுஞ்சற்றே
கலைந்து நெகிழ்ந்த [2]துகிலுந்தந் தாலும்விற் காமனங்கந்
தொலைந்த ருவஞ்செய் கண்ணார்சொக்கர் மால்வரைத் தொண்டைநிறங்
குலைந்து வருந்தித ழுந்தரு மோநின் கொழுஞ்சுனையே.       110
________
(பிரதி) [1] குழையறிவாவிழி, [2] துயிலுகந்
________
நாண நாட்டம் முற்றும்.

8. நடுங்க நாட்டம்
கோடுங் குடருங் குருதியு மாயலை குங்குமநீ
ராடுங் கடமலை யொன்றுகண் டேனய லேயிருவர்
தேடுங் கடவுள் திருவால வாய்தனிற் சென்றுவஞ்சி
சூடுஞ் சுடரிலை வேல்துரந் தானொரு தோன்றலுண்டே.      111

நடுங்க நாட்டம் முற்றும்.

9. மடற்பகுதி

தலைவன் முகம்புகுதல்
நறைக்கா வணமல ரோதிநல் லீருமை நாளுமொரு
குறைக்கா விரந்து வருந்தல்கண் டாற்சொக்கர் கூடல்மண
வறைக்காகு மீதிது முன்றிலுக் காமென் றமைத்தசிற்றி
லிறைக்கா வணநிழல் நில்லென்கி லீர்புரிந் தின்னமுமே.       112

தழைக் கையுறை காட்டல்
மழையுங் கொடியு மிகல்மது ரேசர் வரையில்வண்டும்
உழையும் பிணங்குந் தடங்கணல் லீர்நெஞ் சுருகிநின்று
குழையுந் தமியனைப் போற்சந்த னாடவி கொய்துவந்த
தழையும் பிழைசெய்த தோவிது காலஞ் சருகெழவே.       113

தழை தகாதென்றல்
மாந்தழை மேனி யுமைபாகர் சொக்கர் மதுரையன்னாட்
காந்தழை யீதென்ற றிந்திலை யேயிள காரவண்ட
லேந்திழை யார முலையார் வடிவுக் கிணங்குவதிப்
பூந்தழை யோவண்ண லேவெளிதோ வண்டர் பொற்றழையே.      114

முத்தக் கையுறை காட்டல்
மாகந் திறையிட்ட வெண்பிறை யாளர் மதுரையிலென்
னாகந் திறையிட் டடிமைநிற் பேனள காடவிக்கு
மேகந் திறையிட்ட முத்தன்று காணுமிவ் வெண்முத்தமென்
மோகந் திறையிட்ட தாலணி வீரு{ம்}முகிண்முலைக்கே.       115

முத்தக் கையுறை மறுத்தல்
மைத்தா மரைக்கண் ணுமைபாகர் சொக்கர் மதுரையிலுன்
கைத்தா மரைமுத்த மாரறி வார்நறை கான்றமலர்க்
கொத்தா ரளக முகிண்முலை யார்பொற் குமுதநல்கு
முத்தாரங் கண்டிலே யோவடல் வாகை முடிமன்னனே.       116

மாணிக்கக் கையுறை காட்டல்
இழைக்காய் வளரு மிளமுலைக் காம்வளை யேந்துபசுங்
கழைக்கா மலதுங்கள் மேகலைக் காம்வெயில் கான்றமணிக்
குழைக்கா டரவணி வார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மழைக்கா ரளகநல் லீர்குழைக் காமிந்த மாணிக்கமே.       117


குலவிக் குறுநகை யாடுமப் போது கொழிக்குமந்த
நிலவிற் கிளவெயி லொக்கும் தோவுமை நேமிமுலை
கலவிக் கினிய கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பா
நலவித் தகனல்லை யோமணி யோவணி நல்குவதே.       118

காவியம்போது கையுறை காட்டல்
அக்கு வளைக்குந் தொடையால வாயரன் றாடல்மதன்
இக்கு வளைக்க வெரிவளைப் பார்வரை யீன்றசுனை
மைக்குவ ளைக்கண் மடந்தைநல் லீருங்கள் வார்குழற்கென்
கைக்குவ ளைக்கொழும் போதணி யீர்கண் [1]களிப்பதற்கே.      119

இல்லை யென்று மறுத்தல்
இக்காலை தோறுங் கொழும்பா கொழுகி யிருகரையுஞ்
செய்க்கால் பெருகுந் திருவால வாயர் சிலம்பில்வல்லி
மைக்காவி யன்றித் தொடைக்கா வியந்திரு மார்பமற்றோர்
கைக்காவி யென்பது கண்டறி யோமொரு காலத்துமே.       120

படைத்துமொழி கிளவி
கருங்குஞ் சரமுரித் தோர்கடம் பாடவிக் காமர்வெற்பைப்
பொருங்குங் குமந்திகழ் தோளண்ண லேபுடை போயடங்கா
நெருங்கும் பணைமுலைக் காற்றாத நுண்ணிடை நேரிழைக்கோர்
மருங்குந் தரவல்லை யோமணி மாலிகை வாங்குதற்கே.      121

அறியே னென்றல்
சுருப்பார வார மறாமது ராபுரிச் சொக்கர்வெற்பில்
மருப்பாயு மாலிகைத் தோளண்ண லேவண்ட லாட்டயர்ந்து
திருப்பாவை கோடி யிருப்பா ரெனுமித் தெரிவையரில்
விருப்பா யரரெவ ரோதிரு மேனி மெலிவதற்கே.      122

அறியே னென்றவட் கறி(ய)வுரைத்தல்
செல்லாறு சோலைத் திருவால வாயர் சிலம்பில்வல்லி
நல்லா யுனையன்றி யாரறி வார்நளி னாரவிந்தைக்
கல்லார மைக்கண் கடைக்கே கிடக்குமென் காதலென்பால்
நில்லாது சென்றவர் பின்னே யலம்வரு நெஞ்சமுமே.       123

பெருமையிற் பெயர்த்தல்
மல்லற் பழன வயல்மது ரேசர் வரையிலுலம்
புல்லப் பொருத புயத்தண்ண லேமுறை பூண்டதங்க
ளில்லத் தவரன்றி யென்போல் பவரு மினையவெல்லாஞ்
சொல்லச் சிறியளன் றேயெம்மை யாளுஞ் சுரிகுழலே.       124

குலமுறை கிளத்தல்
உலம்பார்த்த தோளண்ணல் நீயர சாள்வ தொருகுலமெங்
குலம்பார்க்கி லென்ன குலமுரைப் போங்குறு மூரல்கொண்டு
வலம்பார்த்த செஞ்சிலை யார்சொக்க நாதர் மதுரையிலிச்
சிலம்பார்க்குஞ் சீறடி வல்லி யெவ்வாறுனைத் தீண்டுவதே.      125

குலமுறை கிளத்தற் கெதிர்மொழி கொடுத்தல்
உண்ணா வுவரிய முதுமுத் தாரமு மும்பருக்கு
மண்ணாளும் வேந்தர்க்கும் வீறல்ல வோமது ரேசர்வெற்பிற்
பண்ணாகி வண்டமி ழின்பய னாகுமிப் பாவையுமோர்
பெண்ணா ரமுதல்ல வோபிறப் போவின்று பேசுவதே.       126

உலகுரைந் தொழித்தல்
கடம்பா(ர்)த்த வெங்களிற் றார்கடம் பாடவிக் கானல்முத்த
வடம்பா(ர்)த்த மாலிகைத் தோளண்ண லேகடல்மத் திட்டநாள்
விடம்பா(ர்)த்த கண்ணியு நீயுமெங் கேளிர் விரும்புவதோ
ரிடம்பா(ர்)த்த பின்பல்ல வோகொண்ட காத லிணங்குவதே.      127

வரைவு மறுத்தல்
கரும்பயர்க் குங்கனி வாய்வல்லி பால்வைத்த காதலுக்குப்
பெரும்பணைத் தோளி வரைவுநன் றேயிளம் பேடணைத்துச்
சுரும்பரற்றுந் தொங்க லார்மது ராபுரிச் சொக்கர்வெற்பிற்
பொரும்படைக் கின்றரும் பும்பனை யாமுன் புனைந்துரையே.      128

அருமையி னகற்சி
மின்னங் கொடியை யருகக லார்பெற்ற மெல்லியலா
ரென்னம் பியென்னை யிரந்துநின் றாயிமை யோர்பரவு
மன்னஞ் சலிபுரி வார்மது ரேசர் வளைத்தெடுத்த
பொன்னஞ் சிலைவெற்பி னேதமி யேனென் புகலுவதே.      129

தலைவன் ஆற்றாதுரைத்தல்
மலையுஞ் சிலைகுனிப் பார்மது ரேசர் வரையிலிந்த
வலையுங் குழலியு மஞ்சலென் னாள்விர கானலத்தால்
நிலையுந் தளர்ந்தொரு பாவிநெஞ் சேசென்று நின்றுநின்றீங்
குலையுந் தயாவுனக் கெத்தனை நாளென் றுணர்கிலமே.       130

அவளறிவுவறுத்துப் பின்வாவென்றல்
கானேர் சடையர் கடம்பா டவியிடைக் கங்குல்வந்து
போநேர நீவரு நேரம்வந் தாலென் பொலன்கொடியைத்
தேனே திரைபெற்ற தெள்ளமு தேயென்று சென்றிரந்து
நானே தொடுத்தணி வேனண்ண லேயுன் னறுந்தழையே.       131

நின்குறை நீயே கூறென்றல்
தேன்போது மாலைத் திருவால வாயர் திசையளக்குங்
கான்போ தணிகடம் பாடவி யார்பொற் கரத்திருக்கு
மான்போலுங் கண்ணி மனம்போல நின்றொரு வார்த்தைசொல
நான்போது மோநண்ப னேயுனைப் போல நலம்புனைந்தே.       132

தலைவனைப் பேதைமை யூட்டல்
காதமை சங்கக் குழையாளர் சொக்கர் கடம்பவனத்
தேதமை வாவென் றறிகிலை யேயுன தெண்ணிறந்த
சூதமை கல்விப் பரப்பிது வோமுன் றுணிந்ததெல்லாம்
பேதமை யோவண்ண லேயினியானென் கொல்பேசுவதே.       133

இளமைத்தன்மை கூறல்
நீரிற் குளிப்பித்து வண்டலம் பாவையை நீர்புகுந்து
வாரித் தருகில தென்றழு வாள்மது ரேசர்வெற்பில்
வேரித் தொடை யண்ணல் நீகொண்ட காமவிரகுக்கிவ
ளாரித் தரமுமுண் டோகொண்ட காத லறிபவரே.       134

இளையவ ளென்றவட் கெதிர்மொழி கூறல்
துளவுக் கிணங்கு முகில்தொழு வார்சொக்கர் சூடுமதிப்
பிளவுக் கிணங்குந் திருநுத லாயிவள் பெண்பருவத்
தளவுக் கிளையவ ளானாலு மால மளந்தவிழிக்
களவுக் கிளமையுண் டோவென்கொ னீசொன்ன கட்டுரையே.       135

விளைவில ளென்றல்
நீயழிப் பாய்கட லேமணற் பாவையை நின்னையுமென்
றாயழிப் பாளென்று தான்முனி வாளன்பர் தங்கள்வினைத்
தீயழிப் பார்தந் திருவால வாயுறை செம்மலுற
வாயளிப் பாளிவளோ கொண்ட காதல் வருந்துயரே.       136

மூதறிவுடைமை கூறல்
தன்சிற்றில் வாசலு மூசலு மாகத் தவிக்குமிந்த
நெஞ்சிற் கிடக்கு நினைவறி வாளை நினையுமெழுத்
தஞ்சிற் றெளிபர னாரால் வாயி லளவறநீ
வஞ்சித் தனையணங் கேயறி யாளென்ற வாசகமே.       137

என்னை மறைப்பி னெண்ணிய தரிதென நகுதல்
தூர்க்குந் தரள வயல்மது ராபுரிச் சொக்கர்வெற்ப
[2]ரேற்குங் கலவி யெனைமறைத் தார்சங் கெடுத்துவதறி
யார்க்கும் படுதிரை முத்தறி வார்தர மாய்ந்தறிந்து
சேர்க்கும் பொழுதினல் லாலிணங் காதுதெரியலுக்கே.       138

நகையாற்றுமை கூறல்
மறையால் வடித்த தமிழ்மைந்த னேடெதிர் வையையந்தண்
டுறையாளர் சொக்கர் வரையணங் கேயுன் றுணைவிமைக்கட்
கறையாடல் வேலின் கடையா லெறிந்து கவர்ந்துகொண்ட
குறையா வியுமுன் குறுநகைக் கேகொள்ளை கொண்டனையே.       139

அஞ்சி யச்சுறுத்தல்
காலம்பொல் லாதினிக் கங்குல்பொல் லாதுவிற் கானவர்தஞ்
சீலம்பொல் லாதையர் செய்கைபொல் லாது திரிபுரத்தை
மாலம்பொல் லாதெரிப் பார்சொக்க நாதர் மதுரையிலிக்
கோலம்பொல் லாதண்ண லேகுறு காகொளெங் கோப்புனமே.       140

தலைவி(யை) நொந்து கூறல்
காலந் தெரிந்து மிளங்கா விடைசென்று கண்டுமிவர்
சீலந் தெரிந்தும் பயனென் கொலோதிரை சிந்துவையை
கூலம் படச்சுமப் பார்சொக்க நாயகர் கூடலிலென்
போலந் தரம்படு வாருள ரோமயல் பூண்டவரே.       141

மடற்றிறம் நினைத்தல்
சேதித்த போந்தை மடல்மாவை மேல்கொண்டு சென்றவரூர்
வீதித் தலைபுக்கு மீட்கைநன் றேகொள்ளை வேரிவண்டு
கோதிக் கமழ்கொன்றை யார்சொக்க நாயகர் கூடல்வஞ்ச
நீதிக் கயல்விழி யார்கவர்ந் தேகிய நெஞ்சினையே.       142

மடலேற்றையுலகின் வைத்துரைத்தல்
தொடியுங் குழையும் பணியணி வார்தமிழ்ச் சொக்கர் புயம்
படியும் படியிலி ளைஞரெல் லாமெம் பரனணியும்
பொடியுந் திருத்தொங்க லுஞ்சங்க மேனிப் புதுநிறத்தோன்
கொடியுங் கிடைத்தல்ல வோபிழைத் தார்மயல் கொண்டபின்பே.       143

தலைவன் மடலேறுவே னென்றல்
செய்ப்பட்ட காவித் திருவால வாயர் சிலம்பில்வெறும்
பொய்ப்பட்ட நுண்ணிடைப் பூந்திருவே யொருபூங் கிழிபோர்
மைப்பட்ட கோல மதர்விழி யார்தம் வடிவொடுமென்
கைபட்ட போதவர் கற்பென தாமென்று காண்குவனே.       144

தன்னொடு மவளொடுஞ் சாற்றி வெளிப்படக்கூறல்
வன்னத் தருமவு லிச்சொக்க நாதர் மதுரைசுற்றும்
புன்னைப் பொதும்பர் விரகறி யாது புகுந்தழியு
மென்னைக் கிழியி லெழுதா தென்பேரு மெழுதிமற்றுன்
மின்னைத் தனியெழு திப்புகு வேனுங்கள் வீதியிலே.       145

தோழி எழுதவரிதென்றல்
விண்ணிற் றிரிநதி வீறாளும் வேணியர் வெள்ளிமன்றி
லுண்ணிற் பவர்பொற் கயிலைவெற் பாசுரு ளோதிமொழிப்
பண்ணிற் சுவையு மெழுதிமுத் தோலையைப் பாயுமிரு
கண்ணிற் களவு மெழுதுவை யாகிலுன் கல்விநன்றே.       146

எழுத வெளிதென்றல்
சினைத்தா ரிதழித் திருவால வாயர் சிலம்பில்வண்டு
கனைத்தா தரிக்குங் கனங்குழ லாயின்றுன் கன்னிகள்ள
வினைத்தாரை வேல்விழியா லென்னை யாளும் விரகொருகால்
நினைத்தா லெழுதவ ரியதொன் றோவிந்த நெஞ்சினுக்கே.      147

அருட்குணங் கூறி மறுத்தல்
எழுதா மறையை யெழுதவென் றாலு மிடங்கொடுத்து
முழுதாளு மொன்றை முனியும் தோநிண முக்கலகை
தொழுதாடு மூவிலை வேற்சொக்கர் மால்வரைத் 3]தோன்றலென்னைப்
பழுதாக வெண்ணினை யோயிது வோவுன் பயனறிவே.       148

தோழி மடல் விலக்கல்
மானின்ற செங்கை மதுரேசர் சுந்தர மாறர்வெற்பிற்
கானின்ற கூந்தற் கயல்விழி யாளிதங் கண்டிங்ஙனே
நீநின்ற சோகமு முன்னா தரவு நிலையுஞ்சொல்லி
யானின்று வந்தல்ல வோநண்ப னேமட லேறுவதே.       149
________________
(பிரதி) [1] கழிப்பதற்கே. [2] ரேற்றுங். [3]தோன்றலென்னப்

மடற்பகுதி முற்றும்
----------------

10. குறை நயப்பு

தலைவனைக் கண்டமை கூறல்
மழைக்கோல மாட மதுரா புரேசர் வயிரமணிக்
குழைக்கோல வல்லிக் கிடங்கொடுப் பார்பொற் குலகிரியி
லுழைக்கோல நீல விழியா யொருவர்கை யோடுணங்குந்
தழைக்கோ லமுமவர் கோலமுங் காணத் தகாதெனக்கே.       150

மறுத்த லரிதென்றல்
எனைப்பார்ப் பரன்றி [ 1]லளகோட வல்கற் கிறுகுங்கல்வி
தனைப்பார்ப் பருள்ளந் தளர்வர்தள் ளாடுவர் தண்டிவரால்
சினைப்பா(ர்)த்த வாவித் திருவால வாயர் சிலம்பில்வஞ்சி
யுனைப்பார்ப்ப தன்றி யினிவினை யேனென் னுரைப்பதுவே.       151

மறைத்தவ ளருகல்
சங்கத் தமிழுந் தமிழே டெதிர்சென்ற [2]தண்டுறையுந்
திங்கட் கலையமு தந்தரு பேருந் திரையெறியுங்
கங்கைச் சடிலர் கடம்பா டவிநின்ற காட்சியும்போல்
மங்கைப் பருவநல் லாயுள தேயொரு மாநகரே.       152.

தோழி புலந்து கூறல்
வெற்புஞ் சிலைகொண்ட வெள்ளிமன் றாளர் வியன்கிரியென்
சொற்புன் கிழமை பொறுத்தணங் கேயுங்கள் தொல்குலத்தின்
பொற்பும் புகழு மடனாணு மில்லறம் பூண்டுவிடாக்
கற்புந் தரமு நிலைபெறு மாறு கருதுகவே.       153

தலைவன் மடலேறுவ னென்றல்
கிளிக்கே மதுரந் தருமின்சொ லாய்கொண்ட கேண்மையினி
[3]யொளிக்கே னெனுந்தர மல்லகண்டாய் கொன்றையூறு செந்தேன்
துளிக்கே யலம்புஞ் சடைச்சொக்கர் மால்வரைத் தோன்றல்கையில்
வெளிக்கே வருவை கிழிக்கே தெரியநம் வீதியிலே.       154

தலைவி [4]நேர்தல்
தொல்லைத் தனிமர பும்பெரு நாணமுஞ் சோர்வுபடா
தெல்லைப் படுநமக் கென்றுகண் டாய்தரை யேழுங்கொண்டு
மல்லைப் பொருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவெற்பில்
முல்லைக் குழலி யெனையய லாக மொழிந்தனையே.       155
-----
(பிரதி) [1]லலகோட லற்குற், [2] தண்டுழையும்.
[3] மொழிக்கே, [4]நோதல்.

குறைநயப்பு முற்றும்
-------------------

11. தழையேற்பித்தல்

தோழி தழை யேற்றல்
மருப்பார் சடைமுடி யார்மது ரேசர் வடித்ததமிழ்ப்
பொருப்பா வுனக்கினி யாவரொப் பார்புதுப் பூங்கமலத்
திருப்பாவை செவ்வியும் யான்செய்குற் றேவலுஞ் சேரநிற்கச்
சுருப்பார வண்டழை யின்றல்ல வோவந்து சோபித்ததே.       156

கூறுவன (வ)றியாது வந்தேனெனத் தழையேற்பித்தல்
விண்டார் புரஞ்செற்ற வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்
றண்டா மரைத்திரு வெயென்சொல் வேன்சரு காயுணங்கும்
வண்டார் தழையு மவர்நின்ற சோகமும் வாசகமுங்
கண்டா லதற்கு மறுமொழி யாதொன்றுங் காண்கிலனே.       157

கைம்மாறு செய்ய வேண்டுமெனத் தழையேற்பித்தல்
வெறிக்குங் குமப்புய வெள்ளிமன் றாளர் வியன்கிரிமான்
மறிக்குங் கிளிக்கும் புனம்புக்க நாள்மதி யாதுநம்மைக்
குறிக்குங் கடகரிக் கோடுபுய்த் தாளக் குறித்தகையா
னெறிக்குந் தழையல்ல வோவணங் கேயென் னினைவதுவே.       158

தலைவியைத் தழை யேற்பித்தல்
கழைக்குந் தறிக்கு மடங்கா திருகவு ளுங்கரடங்
கொழிக்குங் கடாசலத் தார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்
மழைக்கொந் தளக மயிலேயுன் கோல வனப்பனைத்துந்
தழைக்குந் தழையித் தழையிது வாடுந் தழையல்லவே.       159

தழைவியந் துரைத்தல்
ஆயுந் தமிழறி வாரால வாய ரணிவரைத்தேன்
பாயுந் தழைபட்ட பாடுகண் டால்மடப் பாவைகொங்கை
தோயும் பொழுதுன் நிருமார்பு மின்பத் துறைதெளிந்த
நீயும் புயமுமங் கேதுபடாது நெடுந்தகையே.       160.

தழை யேற்பித்தல் முற்றும்
------------------

12. பகற்குறி

பகற்குறியிடங் கூறல்
மால்விரிக் கும்புக ழார்மது ரேசர் வடித்ததமிழ்
நூல்விரிக் குஞ்செம்மல் யாம்விளை யாடிட நொந்துவளை
சூல்விரிக் குந்தர ளக்குவை தோறுஞ் சொரியுநிலாக்
கால்விரிக் கும்பக லேவண்ட றாமலர்க் காவகமே.       161

குறியிடத்துக்கொண்டு சேறல்
சுனைபார்த்த நீலமுஞ் செங்கழு நீருஞ் சொருகிமுல்லை
நனைபார்த் துதறு நறுங்குழ லா(ய்)மட நாரைநந்தின்
சினைபார்க்கும் வாவித் திருவால வாயர் சிலம்பில்வண்டல்
மனைபார்த் திழைக்கவு நீர்விளை யாடவும் வந்தருளே.       162

குறியிடத்துய்த்து நீங்கல்
யாய்க்கோலங் கொண்டழும் புல்வா யிளங்கன்றின் [1]யாய்ப்புலியார்
தீக்கோல மேனித் திருவால வாயர் சிலம்பின்மின்னே
சாய்க்கோல வல்லிக்கு நீமணக் கோலந் தரித்திருநான்
போய்க்கோல நாண்மலர் கொய்திங்ங னேவரும் போதளவே.       163

இடத்துய்த்து நீங்குத் தோழி தலைவனொடு கூறல்
எறிக்கும் படையண்ண லேவிடுப் பாய்விரைந் தெங்களை நீ
குறிக்குங் குறிவழி வந்தனம் யாஞ்சொக்கர் கூடல்வெற்பி
னெறிக்குங் கருங்குழல் வண்டலம் பாவையை நீர்முகந்து
தெறிக்குந் திவலை [2]கெடுத்தழி யாமுன்னஞ் செல்வதற்கே.       164

பகற்குறி யெதிர்ப்பாடு
தேமென் குதலைத் திருவே யுமைப்பெற்ற தெண்டிரையிப்
பூமென் றழையிவர் பொங்கர்மற் றோவன்பு பூண்டடிமை
யாமென் பவர்க்குற வாரால வாய ரணிசிலம்பி
னாமென் பரிபுரத் தாமரை நோவ நடந்தனமே.       165


கலந்துழி மகிழ்தல்
கவட்டா யிரம்பொங்கர் சூழ்கடம் பாடவிக் காவலர்விற்
குவட்டா டகப்பொருப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பின்
றெவிட்டா வமுதத் திருவனை யார்முலைச் செப்பிணையின்
சுவட்டா நிறையத் தவஞ்செய்த வாவென் றுணைப்புயமே.       166

நலம் பாராட்டல்
மயல்புக்க நெஞ்சுக் கயல்புக்க [3]வாறு மதுரைப்பிரா
னியல்புக்க வெற்பி லெதிர்ப்பட்ட நாளென்னை யீடழிக்குஞ்
செயல்புக்க கண்ணி யளகாடவி கண்டு தேம்பிநெடும்
புயல்புக் கொளித்து துயர்சக்ர வாளப் பொருப்பெங்குமே.       167

ஆயத் துய்த்தல்
மஞ்சுக் கிணங்கும் பொழில்மது ரேசர் வரைபுகுது
மஞ்சொற் குதலை யயில்விழி யீரெமை யாளவந்த
பஞ்சுக் கிணங்கு மடிக்கே கிடந்து பரதவிக்கு
நெஞ்சுக் கொருநிலை சொல்லியன் றோவின்று நீர்செல்வதே.       168

மறைந்தவற் காண்டல்
விரிந்திருக் காய்நின்ற வெள்ளிமன் றாளர்பொன் வெற்பிலெம்மைப்
பிரிந்திருப் பாரையும் போலிங்ங னேமுகம் பின்புரிந்து
புரிந்திருப் பாருமிப் பொற்றேரு மின்னமிப் [4]பூம்புனமுந்
தெரிந்தொருக் கால்வரு மோதெரியா துமுன் செய்தவமே.       169

தோழி கையுறை காட்டல்
மகம்பார்த் தயரும் வலாரிபொற் காமலர் மாலையிதென்
முகம்பார்த்து வாங்கி முடித்தருள் வாய்முடி மாறனுமாய்ச்
செகம்பார்த்த நீதித் திருவால வாயர் சிலம்பிடையஞ்
சுகம்பார்க்கு மின்சொ(ன)ல் லாய்புறந் தாழுஞ் சுரிகுழற்கே.       170

விருந்து விலக்கல்
திரைப்பால் வளைமூக் கெறிந்த நிலாமுத்தஞ் சிந்தியிரு
கரைப்பாயும் வையையந் தண்டுறை யார்கடம் பாடவிச்செம்
மரைப்பாலுந் தேனும் பசுந்தினை மாவு மகிழ்ந்துதழைப்
புரைப்பானுகர்ந்தண்ண லேதங்கி யேகுன பொன்னகர்க்கே.       171

விருந்திறை விரும்பல்
பெருந்தாரை நெஞ்சன்றி யன்புசெய் வார்பிற விப்பிணிக்கு
மருந்தாகிய மதுரைப்பெரு மாள்செம் பொன்மால் வரையிற்
பொருந்தாரை வேற்கணல் லீர்கொடுப் பீரெனிற் புக்கிருந்தங்
கருந்தாதவரு முண்டோ வுங்கண் மாளிகை யாரமுதே.       172
_______________
(பிரதி)(பிரதி) [1] யாய்ப்புலியூர்த். [2] கொடுத்தழி, (பிரதி) [3] வாளு. [4]பூம்புனமத்

பகற்குறி முற்றும்
---------------

13. பகற்குறிப் பிழைப்பு

பொழுதுநீட வருந்திக் கூறல்
பொன்னந் திகிரிப் பொருப்புமண் ணேழும் புரக்கவைத்த
சொன்னந் தருமவு லிச்சொக்கர் மால்வரைத் தோகைநல்லாய்
தன்னந் தனிக்கு மெனதாவி நின்று தவிப்பதற்கு
மின்னந் தலைவர் வருகில ராகிலிங் கென்செய்வதே.       173

தோழி கழறல்
துறக்கத் தவர்தொழு வார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி
லறக்கற் பனையவ ரோகடப் பாருன் னளவிலன்பு
சிறக்கத் தருநெஞ் சொழியநண் பாளர் திருவுளத்தே
மறக்கக் கொடுத்தனை யோவணங் கேயொரு வன்னெஞ்சமே.       174

தலைவியொடு பாங்கி தலைவன் வந்தமைகூறல்
கார்மணி நீழற் கடம்பா டவிக்கறைக் கண்டர்கொன்றை
தார்மணி மார்ப(த்) தடங்கிரி வாயிடை சாய்த்தடங்கா
வார்மணி யார வனமுலை யாய்நம் மவுணர்வருந்
தேர்மணி யோசைசி லம்புநஞ் சாரற் சிலம்பெங்குமே.       175

தலைவி பொறுத்தமை கூறல்
தானுந் தனிமையு மாகியிவ் வாறொரு தஞ்சமற்றென்
மானுந் தளர மறந்தனை யேபிறை வாயமுதுங்
கானுங் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானவண்டுந்
தேனுந் தருந்தொங்க லாயிது போலுமுன் சிந்தனையே.       176

வரைவுகடாதல்
வனக்கொன் றையஞ் சடையார் மதுரேசர் வளைத்தசெம்பொற்
கனக்குன் றிரண்டன்ன தோளண்ண லேயுன் கரும்பனையாள்
தனக்குங் குடிமை யழகழி யாதுங்கள் சார்பினின்ற
வெனக்கும் பழுதுபடா தினிநீ யெண்ணிலெண் ணநன்றே.       177

பகற்குறிப் பிழைப்பு முற்றும்
------------------

14. செறிப்பறிவுறுத்தல்

செவிலி மையந் தலைவற் குணர்த்தல்
நாவிக் கருங்குழல் வாசங்கண் டோவல்லி நாணயனக்
காவிக் கடையின் விரகுகண் டோகஞ்ச யோனிமுதல்
சேவிக்கு நாதர் திருவால வாயர் சிலம்பிலினி
மேவித் தனிவிளை யாடலென் றாளன்னை வேலவனே.       178

தினைவிளைந்தமை கூறல்
மாலாற் புரப்பதை மாற்றிவிண் ணேழுமண் ணேழுமொரு
கோலாற் றனிபுரப் பார்சொக்க நாயகர் கூடலிளஞ்
சூலாய்ப் பசுங்கதி ராயண்ண லேகுரல் தூங்கியநீ(ள்)
காலாய்க் கிடக்கவுங் காலங்கண் டாயெங் கருத்தினையே.       179

களவொழுக்கத்தை வேங்கை நீக்கிற்றெனத்
தோழி தலைவற் குரைத்தல்
குழைபூட் டியகுறுங் கட்செவியார் தமிழ்க் கூடல்வெற்பை
விழைப்பூட் டியதிருத் தோளண்ண லேகொலை வேங்கைவந்து
மழைப்பூட் டியகொடுங் கண்ணியு மாகவளைந்துகொண்டா
லிழைபூட் டியகன்று மாவெங்ங(னே)யிங் கிடைநிற்பதே.       180

சிறைப்புறமாகத் தலைவி யிரங்கல்
தாங்கத் தலைதள ருங்குலை வாழையின் றாறுசெந்நெல்
தூங்கத் தலைமணக் குங்கூடல் நாயகர் சொக்கர்வெற்பில்
வேங்கைக் கொழுஞ்சினை நீமுகை யாகப்பின் வெற்பரெம்மை
நீங்கப் பருவமு மாயல ராகி நிறைவதற்கே.       181

தோழி சிறைப்புறமாக வருந்திக்கூறல்
உணங்கிச் சருகு படுந்தழை யாகிலு மோலவண்டு
பிணங்கிச் சுழலுமிச் சந்தனச் சோலை பிணங்கசுரர்
வணங்கிச் சரணம் புகுமது ரேசர் மலையவெற்பி
லிணங்கப் பிரியு மனமெமக் காகு மிளங்கொடியே.       182

தினைகொய்தமை கூறிவருத்தல்
நையுஞ் சிறுமருங் கிற்றிருப் பாவையு நானுமன்றே
கொய்யுந் தினையென் றறிந்தில மேயிளங் கூன்பிறையு
மையுந் தவழு மதில்மது ரேசர் வரையினில்நான்
செய்யும் பரிசெது வோவிது வோமுன்செய் தீவினையே.       183

புனம்விட் டகல்வோர் புலம்பிக் கூறல்
கோடும் பிறைமவுலிச் சொக்க நாயகர் கூடல்வெற்பி
னீடுந் தனிநெஞ்சு நின்றுரு காமல்முன் னின்றதினை
தேடும் பசுங்கினி காளெமைத் தேடித் திகைத்துநொந்து
வாடும் புரவலற் குத்துணை யாக வரவிடுமே.       184

அனமென் சொலுங்கிள்ளை யென்சொலு மோவது வன்றிநவ்வி
யினமென் [1]சொலும் பிகனென் சொலுமோபுன லேற்றிருண்ட
கனமென் களத்தர னார்கடம் பாடவிக் காவுடுத்த
புனமென் சொலுமறி யேன்வந்து வாடும் புரவலற்கே.       185

தலைவற் கிடங்கூறிற்றிலமென வருத்தல்
என்னேநங் கேள்வற்கிடமுஞ்செல் காலமு மின்னதென்று
முன்னே யறிய மொழிந்தில மேசங்க முத்தமிழுஞ்
சொன்னே [2]ரமுதுந் தெரிசொக்கர் கூடலிற்றோய்வரு
மன்னேர மும்வெற்றிதணுங்கண் டாலெங்ங னாகுவரே.       186

வறும்புனத் தழங்கல்
மருவிற் பொலிகொன்றை போலமண் ணேழு மதுரையுந்த
மிருபொற் [3]புயம்பரிப் பார்சொக்க நாதரியல் வளர்க்கு
மருவிச் சிலம்பு மிதணும்பொன் னூசலுமா யிருந்துந்
திருவைப் புறந்தந்த தாமரை போலுந் தினைப்புனமே.       187

மனமழிந் திரங்கல்
அலையுந் திருநதி யுஞ்சந்த்ர ரேகையு மாடரவு
மலையுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பில்
வலையுங் கணியுமில் லாமலென் னேயொரு மானுமெண்ணெண்
கலையுங் கவர்ந்தன ரோவஞ்ச ரோசிலைக் கானவரே.       188

பதிநோக்கி வருந்தல்
வானாடரு மறியாமது ரேசரை வந்தி றைஞ்சா
தானாடும் பேரின்ப வீடல்ல வோசந்தத முமொரு
வேனாக நின்று மறுகியுள் ளாசைகொண் டீடழிந்து
தேனார் குதலையின் சொல்லிசிற் றூர்செலச் சிந்திப்பதே.       189
_____________
(பி-ம்) [1] சொலுமிக, [2] யமுதந், [3] பரமபுயப்.

செறிப்பறிவுறுத்தல் முற்றும்.
--------------

15. இரவிற்குறி

இரவிற்குறி வேண்டல்
கொங்கைத் துணைகொண் டனங்காபி ஷேகங் குறைபடுத்து
மங்கைப் பருவ மடந்தைநல் லாய்மது ரேசர்வெற்பிற்
கங்குற் பொழுது புயலள காடவிக் காடுபுக்க
தொங்கற் கொடிநெடுந் தேரையெவ் வாறின்று தூண்டுவதே.       190

ஆற்றது தீமையால் இரவுக்குறி மறுத்தல்
கடங்கொழிக் குங்கைப் பொருப்பொரு பாலொரு பாலடங்கா
விடங்கொழிக் கும்பைப் பணியொரு பால்முத்த வெள்ளைநிலா
வடங்கொழிக் கும்புயத் தார்மது ரேசர்வரை யிலிந்தத்
தடங்கொழிக் கும்பகை வெள்ளமெவ் வாறண்ணல் சாதிப்பதே.       191

ஆறெளிதென்றல்
குலவும் பொருபரித் தேர்ச்சொக்க நாயகர் கூடலினா
லுலவுங் கருங்கங் குலுஞ்சரி சாரலு முங்கணகை
நிலவுங் கருணை விழிவேலு நீர்தந்த நெஞ்சும்பெற்றாற்
பலவெம் பகையு மொருபொருளோ மடப்பாவை யின்றே.       192

நினக் கேதமுறத் தலைவி யிறந்து(படு)மென்றல்
வாருக் கிணங்கு முலையுமை பாகர் மதுரையிலுன்
போருக் கடுகளி றஞ்சுமென் றாலும் பொருவரிய
தாருக் கிணங்கும் புயபூ [1]தரர்தடஞ் சாரனின்ற
சூருக் கிவளஞ்சு மஞ்சுமென் னோவந்துசூ ழுமென்றே.       193

தலைவ னாற்றாதுரைத்தல்
வரிக்குங் குமமுலை தோயாத காதல் மதனவிடாய்
பரிக்குஞ் சலம்புரி பாவிநெஞ் சேயிளம் பானிலவங்
குரிக்குஞ் சடாடவி யார்சொக்க நாயகர் கூடலினான்
தரிக்குந் தகைமைய தோமடப் பாவை தருமயலே.       194

தோழி யுடம்படுதல்
சுணங்குக் கிணங்கு முலையிட மாகிய சொக்கர்வெற்பி
னிணங்கக் குஞ்செஞ்சுடர் வேலண்ண லேநிரை வெங்களிற்றின்
கணங்கெட் டிரிய வரிதிரி சாரலிற் கங்குல்வந்தால்
அணங்குக் கிணங்குவ தோவறி யேனு னவமதியே.       195

தோழி தலைவியோடு இரவுக்குறி வேண்டல்
வள்ளத் தமுதனை யாய்கிலை யாளி வடித்தமயல்
வெள்ளத் தளவின்மையே துசொல்வேன் கொள்ளை வேரிவண்டு
கொள்ளக் கமழ்கொன்றை யார்கூடல் வாய்நெஞ்சு கொண்டொருவர்
உள்ளப் பவனிவருங் கங்குல் தானொன் றுரைத்திலரே.      196

வருந்தொழிற் கருமைநினைந்து தலைவி வருந்தல்
மஞ்சுஞ் கடகரி யுந்தெரி யாமல் வயவரிதன்
னெஞ்சுங் கலையுங் கருங்கங்குல் வாய்நெடும் போர்மறலி
யஞ்சுஞ் சரணத்த னாரால வாயி லரும்புமதிப்
பிஞ்சும் பொருநுத லாயன்ப ரோவரும் பேறெமக்கே.       197

தலைவி இரவுக்குறி நேர்தல்
மறியாளர் செங்கை மழுவாளர் சொக்கர் மதுரைவெற்பர்
குறியா நெடுங்கங்குல் வந்துநின் றாலவர் கொள்கையொன்று
மறியாக் களவில்லை நீயறி யாத வறிவுமில்லைச்
சிறியா ளொருதமியேன ணங்கேயென் கொல்செப் புவதே.       198

தலைவி இரவிற்குறி நேர்ந்தமை தோழி தலைவற் குரைத்தல்
கணைக்கோ டுலவுங் கடம்பா டவியர் கனகவெற்பி
லிணைக்கோ டுசீறுமிள முலை(?)யாளென ரென்ற தந்திப்
பணைக்கோ டுபாயும் புயகே சரியெனைப் பார்த்துரைத்த
துணைக்கோ லவாய்மை மறுத்துள தோவொன்று சொல்லுவதே.      199

இரவிற் குறியிடம் வினாதல்
மற்குன் றடுபுயத் தார்மது ரேசர் வரையிலிரு
பொற்குன் றடுமுலைப் பூவைநல் லாய்விண் புகுந்தடங்காக்
கற்குன் றருகுங்கள் சீறூர் வருகருங் கங்குல்வந்து
நிற்கின்ற சூழலில் நீர்விளை யாடு நிலையதுவே.       200

இரவிற் குறியிடங் கூறல்
மண்ணும் புனலுமறா முடி மாறர் மதுரைவெற்பி
லெண்ணும் பிரிவோ டிரவுநின் றாடி மெக்கலையு
நண்ணுங் குருசி லருகுசென் றார்தனி நன்னெஞ்சமுங்
கண்ணுங் கவரும் புதுமலர்ச் சோலையுங் கைதையுமே.       201

தாய் துயிலறிதல்
வல்லையஞ் சாத முலையுமை பாகர் மதுரையிலோ
ரெல்லையஞ் சாத களிமத யானை யிருளிடையே
கொல்லையஞ் சாரல் கடந்தணங் கேநங் குரம்பைமுன்றில்
முல்லையஞ் சாது பரிந்திடி போல முழங்கிநின்றே.       202

தோழி தலைவன் வந்தமை கூறல்
தொங்கற் சடாடவி யார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி
லங்கட் கயலம் புயத்திரு வேவண் டலையொழிவாய்
வங்கக் கடலும் வளர்தாரு வுங்கண் வளருமிந்தக்
கங்குற் பொழுது துயிலெழுந் தாலுங் களிமயிலே.       203

இரவிற் குறியிடத்துத் தலைவியைக் கொண்டுசேறல்
காமே தகுதடஞ் சூழகடம் பாடவிக் கவலர்நாட்
டாமே யினியணங் கேயின்ப வாரிநம் மன்பர்கங்குல்
தாமே வரவு மவற்கெதி ரேயிளந் தண்டலைவாய்
நாமே செலவுந் தவந்தந்த வாவிற்றை நாணமக்கே.       204

குறியிடத்து நீங்கல்
கொத்தலர் கொன்றையந் தார்ச்சொக்க நாயகர் கூடல்வெற்பிற்
புத்தலர் கொய்து வருவலின் னேயிமைப் போதளவுந்
தொத்தலர் மாலைச் சுழிகுழ லாயுன் றுணைமுலைமே
னித்தில மாலை நிலவினில் லா(ய்)புன்னை நீழலிலே.       205

குறியெதிர்ப்பாடு
திரிபுரத் தாடற் றிருவால வாயர் சிலம்பிலின்பஞ்
சொரிபுரத் தாம வனமுலை யீர்கங்குல் தோடவிழ்க்கு
மரிபுரத் தாமரை யோவரை யாமத்தென் னாவிதந்த
பரிபுரத் தாமரை யோவினிப் பாவி பணிவதுவே.       206

கலந்துழி மகிழ்தல்
மல்லுங் குழைபுயத் தார்மது ரேசர் வரையில்வல்லிப்
புல்லும் புளகமு மானன சோபையும் புல்லப்புல்லக்
கல்லுங் குழையு நயமுமெய் யாத கலவியுநான்
சொல்லுந் தரமல்ல வேயெளி தோவது சொல்லுதற்கே.       207

நலம் பாராட்டல்
மண்ணிற் பரக்கும் புகழ்மது ரேசர் வரையினகை
வெண்ணித் திலத்தில் மகிழ்ந்தன மேயின்ப வீடளிக்கும்
பண்ணிற் கனிந்த குதலையஞ் சீறடிப் பாவைகடைக்
கண்ணிற் கிடக்கு மொருகோடி நேயமுங் காதலுமே.       208

விடுத்தல்
துறக்குந் தகைஞர் தொழுமது ராபுரி(ச்) சொக்கர்வெற்பின்
மறக்கும் படியல்ல நீ(ர்)தந்த காதல் மருங்கிறுக்கும்
நிறக்குங் குமமுலை யீர்தலை நாளையில் நீர்பிறந்த
சிறக்குஞ் சரோருகந் தேடுமுன் னேசெல்லுஞ் செல்லுமின்றே.       209

வரைவுகடாதல்
புனங்காவல் போனது கங்குலென் றாலெங்கள் பொன்னகர்யாய்
மனங்காவல் போலல்ல வேயையர் காவல் வணங்கலர்பாற்
சினங்காலும் வேற்கைத் திருவால வாயர் சிலம்பமற்றுன்
றனங்காவல் கொண்டிவள் போற்றனங் காவல் சமையின்றே.       210

ஊர்புகு குறி கூறென்றல்
சிங்க முழக்குஞ் சிலநெறி நீநகர் சென்றுபுக்கா(ற்)
சங்க முழக்குந் தடஞ்சிலம் பாசல ராசிபுக்க
வங்க முழக்கைத் திருமது ரேசர் வரையிலெங்கள்
அங்க முழக்கு மிடர்க்கது காணின் றருமருந்தே.       211

அவனளி சிறத்தல்
காதள வானகண் ணயவர் பால்வைத்த காதனெடும்
போதள வாக விரித்தூரைத் தாலும் பொருப்பரசின்
சூதள வாமுலை தோய்வா ரழகிய சொக்கர்வெற்பி
லேதள வாமறி யேனறி யேனிதற் கென்சொல்வதே.       212
-----br> (பிரதி) [1] தரர்கடஞ்

இரவிற்குறி முற்றும்.
---------------

16. இரவிற்குறிப் பிழைப்பு

அல்லகுறி தோழி தலைவிக் குரைத்தல்
ஓடைக் குவளையங் கண்ணியென் னோவென் றுணர்கிலமண்
கூடைச் சடாதரர் கூடலங் கானலிற் குன்றெழுந்த
வாடைக் கொசியு மிளமடற் றாழை வனத்தொதுங்கும்
பேடைக் குருகொன்று துஞ்சில காணும் பெருங்கங்குலே       213

அல்லகுறி தலைவன் சிறைப்புறமாகத் தலைவி கூறல்
வளைக்கும் பிறையர் மதுரேசர் தாளை வணங்கலர்போ
லிளைக்குஞ் சிறிய மருங்குனல் லாய்சங் கெறிதரளம்
விளைக்குங் கருங்கழிப் புன்னையங் கானலில் வெள்ளிவந்து
முளைக்குந் தனையுமென் கண்ணும்புள் வாயு முகிழ்த்திலவே.       214

காவல் கடுகுதல்
வாயுறங் காகலை சூழ்மது ரேசரை வாழ்த்தலர்போற்
பேயுறங் காதபெரு(ங்) கங்குல் வாயெனைப் பெற்றெடுத்த
தாயுறங் காளிந்த வூருறங் காதலை சாய்த்தொருகா
னீயுறங் கா(ய்)துடி யேயென் கொலாமன்பர் நெஞ்சுமின்றே.       215

காட்சியாசையினிற் களம்புக்குக் கலங்கல்
போரம் பழிய விருகுழை யோடிப் பொருதெனக்கு
வாரந் தருகண் மடமயிலே வணங் காதவர்க்குக்
கோரந் தருமழு வார்சொக்க நாயகர் கூடலிற்கல்
லாரந் தருவதுண் டோகழிக்க கான லலைக்கண்டலே.       216

தலைவி புறம்போதல் கண்டு செவிலி யையுறுதல்
வாம்பாய் பரிநெடுந் தேர்ச்சொக்க நாதர் மதுரைநறுந்
தேம்பாய் கமலத் திருவனை யாள்துயில் சேரவிந்தப்
பூம்பா யலுமென் புணர்முலைப் பாயலும் போலமற்று
மாம்பா யலுமுள தோவென்ன மாய மறிகிலமே.       217

செவிலி தோழியை முனிதல்
ஊரார வாரந் தவிராத கங்குலி லூடுருவத்
தேரார வார மனையுள தாம்புணர்ச் செப்பைவென்ற
வாரார வார முலையுமைப் பாகர் மதுரையிலிப்
பேரார வாரம் பெருகவென் றோமகப் பெற்றதுவே.       218

அய்யச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென
மாற்றி மெய்வழிக் கொடுத்தல்
தீயாடு செங்கைத் திருவால வாயர் சிலம்பின்முன்றிற்
போயாட வும்பக லஞ்சிநிற் பாடன்னைப் போக்கிநெடும்
பேயாடுங் கங்குற் கடைகடந் தாளென்று பெற்றெடுத்த
தாயா னவளுரைத் தாலினி யேனொரு சான்றிதற்கே.       219

செவிலியையந் தலைவன் சிறைப்புறமாகத்
தோழி தலைவிக் குரைத்தல்
கடித்தா தவிழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிலோர்
வடித்தாரை வேலண்ணல் வந்ததுண்டோ வென்பள் வாய்மடிப்பள்
அடித்தா மரையின் சுவடிதன் றோவென்ப என்னைகள்ளம்
பிடித்தா ளெனவணங் கேசிவந் தாடன் பிணைவிழியே.       220

இரவு வார லென்றல்
நிறங்கடை வேலண்ண லேகங்குல் வாய்வந்து நீநின்றெங்கள்
புறங்கடை பற்றிப் பொலிவழிந் தாலுமைம் பூதமுத
லறங்கடை நின்ற பிரானால வாயிலெம் மன்னைநெஞ்சின்
மறங்கடை நின்றுகொண் டாலென்செய் வேனிவ்வர வினுக்கே.       221

பகல் வார லென்றல்
எழுங்காள கூட விடங்கால நின்றெதி ரேன்றமர்புக்
குழுங்கால கண்டவை வேலண்ண லேயுள மொன்றுபட்டுத்
தொழுங்காத லர்க்குற வார்கடம் பாடவிச் சொக்கர்வெற்பிற்
கொழுங்கா விரவி யெழுங்கால் வருவது கொள்கையன்றே.       222

இரவும் பகலும் வாரலென்றல்
ஒருபோ தலரொரு போதையார் காவல்மற் றுன்வரவுக்
கிருபோதும் போதல்ல காணண்ண லேகல் லிபங்குழையக்
குருபோத ராயிருப் பார்கூட னாயகர் கொண்டவிடந்
தருபோர யில்வழி யாளெங்ங னேவுயிர் தாங்குவதே.       223

தோழி தலைவனை நொந்துகூறல்
எவர்க்கா யினுநல் லறிவொரு கோடி யெடுத்துரைக்கு
மவர்க்கா ரறிவு சொலத்தகு வாரவர் தாம்வணங்குங்
கவர்க்கால மூவீலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
துவர்க் காமவல்லி துயரறியா ரென்கொல் சொல்லுவதே.       224

இரவிற் குறிப்பிழைப்பு முற்றும்
----------------

17. ஒருவழித் தணத்தல்

அலரறிவுறுத்தல்
மலர்மாலை யம்புயத் தார்மது ரேசர் வரையிலெங்கள்
குலமாலை வல்லி குவிமுலை மேல்வஞ்சிக் கொம்பனையார்
சிலமாலை முத்த மணிவதல் லாது தெரிந்துதெரிந்
தலமாலி கைபுனைந் தாலண்ண லேயென்கொ லாவதுவே.       225

ஒருவழித் தணப்புக் கூறல்
கூடிற் பெருங் குவிமுலை போல்வசைக் குன்றகன்று
நீடிச் சுருங்கு மருங்குலைப் போற்பிறை நீரரவஞ்
சூடிச் சிறந்த முடிச்சொக்கர் மால்வரைந் தோன்றலினி
நாடித் தெரிவை பழிபிறங் காம னயந்தருளே.       226

பிரிந்தவழிக் கலங்கல்
மாகந் தரிக்கும் பிறைமுடி யாளர் வளர்மதுரைப்
போகந் தரிக்கும் புணர்முலை யாயுயிர் போய்விடவெற்
றாகந் தரித்திருந் தாலுநண் பாள ரறமறந்த
சோகந் தரித்தெங்ங னேயிருப் பாரொரு தோகையரே.       227

ஆடிட மறந்தமை கூறல்
கோட்டும் புதிய வரிமணற் பாவையைக் கோலஞ்செய்யச்
சூட்டுந் தொடைகொண்டு வந்துநிற் பார்சொக்கர் கூடல்வெற்பிற்
பூட்டுந் தரள வடமும்பொன் னாணும் பொறாதிடையை
வாட்டுந் துணைமுலை யாய்மலர்க் காவு மறந்தனரே.       228

பெற்றவழி மகிழ்தல்
கொன்றைச் சடாடவி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பி
லன்றைத் தலையளி செய்தகன் றார்குங்கு மாசலமு
மன்றற் றொடையு நிரம்பிய வாசம் வழங்குமிளந்
தென்றற் கொழுங்கன்றுக் கென்னகைம் மாறுகொல் செய்வதுவே.      229

தற்காட்டுறுத்தல்
[1]காளக் கவிக்கருள் வார்கடம் பாடவிக் காவிலெம்மை
யாளுத் தகுநண்பர்க் கார்சொல்லு வார்குழைக் கப்புறம்போய்
மீளப் பிறழுங் கடற்கே பிறந்து [2]விரைகளபத்
தாளச் சயிலத்தின் முத்தின் சலாபந் தலைப்பட்டதே.       230

பலவகையொடு புலம்பல்
கழிக்கானலங்கம்புள் காள்கண்டல்காள்வண்டு [3]காள்வருடச்
சுழிக்கா லமருங் கருநெய்தல் காள்முடி சூடித்தென்னர்
வழிக்கா யரசிப் பார்சொக்க நாதர் மதுரையிற்பெண்
பழிக்கார் பரமறி யேனென்செய் தார்சென்ற பாதகரே.       231

மதியொடு புலம்பல்
நிலையா [4]வுயிர்கொண்டு நீத்தகன் றாரை நினைந்துநினைந்
துலையா தவர்வர நாளுரை யாயும்ப ருண்ணவுண்ணத்
தொலையாத வாரமு தேமதுராபுரிச் சொக்கர்செம்பொற்
சிலையாளர் கண்மணி யேயவர் சூடுஞ் சிகாமணியே.       232

கடலொடு புலம்பல்
மறங்காலுங் கூரிலை வாய்மழு வாளர் மதுரைநகர்ப்
புறங்காவல் சூழும் புரிகட லேயொரு போதுகண்க
ளுறங்கா துழன்றொரு பெண்பாவி யிங்ங னுயிரழிவ
தறங்காவ லோவுரை யாய்நெடுங் கால மகன்றவர்க்கே.       233

கடலொடு முனிதல்
சுழித்தாரை யங்கங்கை யார்சொக்கர் தாளைத் தொழாரெனவென்
விழித்தாரை வெள்ளஞ் சொரிதல்கண் டாயன்பர் மீண்டுசென்ற
வழித்தாரை யுஞ்சுவ டுந்தெரி யாது மறுதிரைகொண்
டழித்தாய் கடலுன்னை யோதிரு [5]மாலுக் கணையென்பதே.       234

கானலொடு புலம்பல்
தேக்கும் பெரும்பழி வெள்ளமுங் காதற் றிரைக்கடலுங்
கோக்கும் புறவெள்ளத் தார்பிழைப் பார்வெண் குடைநிழல்மண்
காக்குஞ் சடையர் கடம்பா டவிநறைக் கானல்முத்தம்
பூக்குந் தடம்புன்னை சூழ்கழிக் கானற் புளினங்களே.       235

புள்ளொடு புலம்பல்
உள்ளே நிரம்பி வரம்பழி காத லொருவருக்கும்
விள்ளே னெனவிருந் தேனிது நாள்வண்டு வீழவண்டு
கள்ளே கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிற்கம்
புள்ளே யினியடங் காதடங் காதென் பொருமலுமே.       236

தன்படர் பிறர்மேற் சாற்றல்
அலராகி யாவி தளர்ந்துதள் ளாடி யலைந்துகண்ணீர்
புலராது மெய்பசந் தாய்நெய்த லேபொய் புரிந்தநெஞ்சிற்
கலரா னவரறி யாக்கடம் பாடவிக் கானலிலன்
பிலரா யகன்றன ரோவுன்னை யாளு மிறைவருமே.       237

இவற்றோடு தலைவற் குரைத்தது
குனியார் வளர்பிறை(சேர்) சொக்க நாயகர் கூடல்சுற்றும்
பனியார் மலர்ப்பொழில் காளளி காள்பெரும் பாவிபெருந்
தனியாக நெஞ்ச மழிந்தறை போகத் தவிப்பதெல்லாம்
இனியா கிலுமுரை யீரெம்மை யாளு மிறைவருக்கே.       238

உரைத்திலையென நெஞ்சொடு நொந்து கூறல்
ஆயுஞ்சொல் லாள ரபிஷேகச் சொக்க ரடையலர்போற்
றேயும் பொய் யாவியின் செய்தியெல்லாமென் செயலறிவாள்
போயுஞ் சொல்லாள் செல்லும் பூவைசொல்லா தன்பூண்டநெஞ்சே
நீயுஞ்சொல் லாதுவந் தாயினி யார்சொல்லி நிற்பவரே.       239

கூடலிழைத்தல்
ஆருங் கருத்தறி வாரில்லை யேயுன்னை யன்றியன்பர்
சேருங் கருத்துள தோவுரை யாயிடை தேயவிம்மி
வாருஞ் செறுத்த முலையுமை பாகர் மதுரைபெற்ற
பேருந் தரித்தனை யேமட மாதர் பெருந்தவமே.       240

தோழியொடு புலம்பல்
எனக்குந் தலையெ ழுத்திப்படி யாலெனக் கேற்றநெஞ்சு
தனக்குங் கருணை சிறிதில்லை யாற்புரஞ் சாய்த்தசெங்கைக்
கனக்குன்ற வில்லி கடம்பா டவியிவை கண்டுமுள்ளன்
புனக்குஞ் சிறிதில்லை யாலுன்னை யோவென் னுயிரென்பதே.      241

தோழி யாற்றுவித்தல்
கவரோல முத்தலைச் சூலா யுதர்கடம் பாடவியிற்
றுவரோ டிணங்கிதழ் வாயணங் கேயுனைத் தோய்ந்தவன்றே
யுவரோத ஞாலஞ் சிறிதாக வுள்ளன் புடையநண்ப
ரவரோ பிரிந்திருப் பாரவர்க் கோநெஞ் சழிவதுவே.       242

ஆற்றாமை யுறுப்பு முதலியவற்றாற் கூறல்
மல்லார் புயத்தர் மதுரா புரிநண்பர் மாவின்பின்னே
செல்லா மறுகுமென் சிந்தனை போலெனைத் தேற்றுமிந்தச்
சொல்லா லமைந்துயிர் கொண்டிருந் தாலுந் துணைக்கைவளை
நில்லா ததற்கென்செய் வேனணங் கேயென்கொ னீசொல்வதே.      243

மாலைப்பொழுது கண்டிரங்கல்
மைம்மாலை வேல்விழி யீரன் பிலாத மவுணரொரு
கைம்மா றிதற்கினி யென்செய்வ ரோவறு கால்வருடுஞ்
செய்ம்மாலை மார்பர் [6]திருவால வாயிலென் றீவினைபோ
லிம்மாலை யும்பொரு தென்செய்ய வோவந் தெதிர்ப்பட்டதே.       244

இரவி னீட்டம்
கற்றைச் சடிலர் கடம்பா டவியிலிக் கங்குலைநா
னற்றைப் படுகங்கு லென்றிருந் தேனென் னளவிலிந்த
வொற்றைத் திகிரியஞ் செல்வனெங் கேபுக் கொளித்தனனோ
விற்றைப் படுங்கங்கு லோகஞ்ச யோனிக் கிடுகங்குலே.      245

தோழியொடு விட்டுயிர்த் தழங்கல்
ஆயிந் துயரி னியல்பறி யாளென் னியலறிந்த
நீயுங் கவலுமென் னெஞ்சறி யாய்கங்கை நீர்பெருகித்
தோயுஞ் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாதவர்போன்
மாயும் படியின்றி யாரறி வாரென் மயல்வெள்ளமே.       246

நொந்து தோழி மொழிதல்
மூளுங் கொடுங்கனல் வெண்ணகை யால்முப் புரமுங்கண்ணால்
வேளும் படவென்ற வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பி
னாளுங் கலவி யனுராக போக நலந்தருவார்
சூளுந் தெரிந்தன மாலினி யேதென்று சொல்லுவதே.       247
_______________
(பிரதி.) [1] தாளக், [2] விரைகளப்பத், [3] கால்வருடச், [4] யுயிர்கொண்டு.
[5] மாலக். [6] திருமாலை.

ஒருவழித்தணத்தல் முற்றும்
------------------

18.வெறியாட்டு

செவிலி தலைவி மெலிவுகண்டு ஐயுற்று மொழிதல்
விழியும் பசந்து கழைத்தோ னிணையு மெலிந்துதளர்ந்
தழியுந் தனிநெஞ்ச மாகிநின் றாள்வையை யாறுசென்ற
வழியுந் தமிழ்மணக் கும்மது ரேசர் வரையிலின்னம்
பழியுந் தரவொழி யாதென்செய் தாள்குலப் பாவையின்றே.       248

கட்டுவிச்சியை வினாதல்
முலையோ பசலைமற் றோவறி யேன்றான் முகிழ்த்ததின்றென்
சிலையோ வெனும்புரு வத்திருப் பாவைக்குச் செங்களப
மலையோ வெனுமுலை யாரொரு பாகர் மதுரையிலுன்
கலையோ தெளிந்ததம் மேவந்த மாயமென் கட்டுரையே.       249

கட்டுவிச்சி கூறல்
பீலிச் சுமடு சடைக்கா டணிந்துதிர் பிட்டருந்திக்
கூலிக்கு மண்சுமப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பி
லாலிக்கு மஞ்ஞையுஞ் செயவா ரணமு மயிலுமுறச்
சாலிக்கு ணின்று சுழலுமென் னோகுறி சாற்றுவதே.       250

வெறியாடு கென்றல்
செறியால கண்டர் திருவால வாயர் [1]சிலம்பில்விளை
வறியாள் துயருக் கருமருந் தாவ தளவறியா
மறியா ருயிரிவ ளுக்குயி ராய (வ)ரமுருகன்
வெறியா டுவதன்றி வேறுமுண் டோசில மெய்மருந்தே.       251

வெறியாட்டிடத்து வெருவிக் கூறல்
சூராடல் மூவிலை வேற்சொக்கர் கூடனந் தொன்மரபுக்
கேரா வெறியென்னை யேற்குமென் றாளென் னிடரிதனாற்
றீரா தெனிலய லாரென்சொ லாரின்று தீருமென்றாற்
கூராடல் வேலவர் கொள்கையென் னாமென்று கூறுவதே.       252

தலைவி தோழிக் கறத்தொடு நிற்றல்
துதிக்குஞ் ̆சதுமறை யார்சொக்கர் மால்வரைத் தோகைமுன்னா
மதிக்கும் புனத்தில் வழங்கிய நாள்மதம் பாயவந்து
சதிக்குங் கடகரி கையற்ற சோரித் தடவருவி
குதிக்கும் புனலிற் குளித்தளித் தானொரு கோளரியே.       253

வெறி விலக்கல்
மருமுகங் கொண்டதண் டார்ச்சொக்க நாதர் மதுரைவெற்ப
ரொருமுகங் கண்டு தெளிவதல் லால்வெற் புருவத்தொட்ட
பொருமுக வேலண்ண லோராறு செவ்வியம் பூங்கமலத்
திருமுகங் கண்டு தெளிவதுண் டோதுயர் சேயிழைக்கே.       254

தோழி செவிலிக் கறத்தொடு நிற்றல்
குருமலர்க் கோதை வென்வேற் சொக்கநாயகர் கூடற்செந்தேன்
றருமலர்க் காவி லிவளரு ளாண்மைத் தடங்கணல்லாய்
மருமலர்க் கோயிலவ் வண்டலம் பாவையை மற்றொருபாற்
றிருமணக் கோலம் புகுத்துநின் றானொரு செம்மலுண்டே.       255

செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்
பொற்பா லிவளொரு பேதையென் றாலும் பொருவரிய
கற்பா லருந்ததி யுந்தர மோகட் செவிபுனைந்த
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வரையணங்கே
யிற்பா மரபின் மணிவிளக் காநமக் கெம்மனையே.       256
----
(பிரதி.) [1] சிலம்பில்வழை.

வெறியாட்டு முற்றும்.
-----------

19. வரைவு முடுக்கம்

ஒருவழித் தணந்துவந்த தலைவனொடு தோழிபுலந்துகூறல்
காயுங் கவட்டிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
தாயுங் கலவி யழுந்திய நாள்நெஞ் சழன்றுபட்டுத்
தோயும் பருவக் கரும்பைநண் பாகழைத் தோளகன்று
போயுந் தரித்தணை யோதரி யாரன்பு பூண்டவரே.       257

அயன்மண முரைத்தல்
வாளைப் பொருகண்ணி தன்மணம் பேசி வரைபொருளு
நாளைத் தருகைக்கு நாளுமிட் டாரிசை நாவலர்க்கு
வேளைப் படுசொக்கர் வெள்ளிமன் றாளர்வெற் பாளமற்றுன்
றோளைப் பிரிந்துயிர் வாழ்வதெவ் வாறிவள் சொல்லெமக்கே.       258

முலைவிலை கூறல்
கொலைக்குத் தலைப்படுஞ் சூலாயுத(ர்) சொக்கர் கூடலிலுன்
னிலைக்குத் தரமென்று சொல்வதல் லாது நிரைநிரைவண்
டலைக்குச் சுரிகுழல் வல்லிமுத் தார மலம்புமிள
முலைக்குத் தரமல்ல வேயண்ண லேநெடு முதண்டமே.       259

தலைவ னாற்றாதுரைத்தல்
தோயந் துளும்புஞ்சடைச் சொக்கர் தாளைத் தொழாதவர்போல்
மாயம் புகுந்தடங் காமன மேயரை மாத்திரையிற்
காயந் தனதென்னு மாவியொப் பாகவிக் கன்னிதந்த
நேயந் தனதென்று நின்றயர்ந் தாயென் னினைவுனக்கே.       260

வரைவுமுடுக்கம் முற்றிற்று.
--------------------

20. உடன்போக் கொருப்படுத்தல்

தோழி தலைவற்குத் தலைவி கருத்தறிவித்தல்
சுரும்பாடு கொன்றையந் தார்ச்சொக்கர் மால்வரைத் தோகைநெஞ்சந்
தரும்பா வனையென்ன தாமறி யேன்வண்டு தாதருந்த
வரும்பா யலில்வளர் வண்டலம் பாவையை மார்பிலணைத்
தரும்பா முலைகொடுத் தஞ்சன வார்புன லாட்டினளே.       261

தலைவன் அதரதியல்பு கூறி மறுத்தல்
வெல்லுங் [1]கொடிவிடை வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பும்
வல்லும் பொருத வனமுலை யாய்கட வாரணமுங்
கல்லுங் குதிகொண் டுருகும்வெம் பாலைக் கடங்கடந்து
செல்லும் படிவல்ல தோதிருப் பாவைசெஞ் சீறடியே.       262

ஆதரங் கூறல்
கள்ளந் தருகயற் கண்ணிவெம் பாலை கடப்பதற்கு
னுள்ளங் கவலைப் படுவதென் னோபகை யோடவென்று
துள்ளம் பொருவிடையார் சொக்கர் மால்வரைத் தோன்றலருள்
வெள்ளந் தலைப்படும் [2]போதெளி தாமந்த வெஞ்சுரமே.       263

பிரியின் உயிர்வாழா ளென்றல்
குருக்குஞ் சிறுபிறை யார்சொக்க நாயகர் கூடலன்னார்
பெருக்கும் பழிபொறுத்த தாற்றுமென் றாலுமுன் பிள்ளைவண்டார்
மருக்குங் குமபுய முந்திரு மார்பு மறந்துயிர்கொண்
டிருக்குந் தகைமைய ளோவண்ண லேயென் னிளங்கொடியே.       264

உடன்போக்கைத் தோழி தலைவிக் கறிவித்தல்
ஆன்பா லருந்துங் கிளிகன்று தேடி யழுங்கவரி
மான்பாலு நாளை யருந்துமென் றார்வரி வண்டுமுரல்
கான்பாயு மாலைக் கடம்பா டவியிறைக் கானவெற்பில்
மீன்பாயும் வேல்விழி யாரன்பர் காதல் விளைவதுவே.       265

தலைவி வருந்திக் கூறல்
காம்போடு காம்பள விக்கடுங் கானங் கனல்கொளுந்தி
வேம்போ திடைநின்ற மானமும் பாலை விசைபரியின்
வாம்போர் வயவர் மதுரேசர் தாளை வணங்கலர்போற்
றாம்போ கவுநெஞ்(சு) சென்றதந் தோநந் தலைவருக்கே.       266

கற்புநிலை கூறி ஒருப்படுத்தல்
மற்புக் கலம்பெறு கோளாளர் சொக்கர் மதுரைவளை
விற்புக் கணிபுரு வத்திரு வேபெண் விரும்பியநாண்
பொற்புக் கயல்படும் பேருள ராகிலும் பூண்டதங்கள்
கற்புக் கயல்படும் பேருள ரோகுலக் கன்னியரே.       267

நாணழி(வு)க் கிரங்கல்
கொள்ளத் தகுமட நாண்குலப் பால்வருங் கோதையர்க்கு
மெள்ளக் களைய விதித்தில வேமெய் யுணர்ந்தவர்க்கு
வள்ளத் தமுதர் மதுரா புரிக்கற்பு வந்துவந்து
தள்ளத் தளர்ந்து தளர்ந்தழி யாநின்று சாதித்ததே.       268

தலைவி யுடன்போக் கொருப்பட்டுக் கூறல்
காமாரி வேரிக் கடம்பா டவிமலர்க் காவினறுந்
தேமாலை யோதிச் செழுந்திரு வேயித் தெரிவையர்முன்
னேமாறி வம்பல ருக்கிலக் காகி யிராமலின்று
போமா றொருப்பட்ட நெஞ்சல்ல வோமறம் பூண்டநெஞ்சே.       269

தலைவி போக்குடன்பட்டமை தலைவற் குரைத்தல்
மழுவிற் பொலிகரத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்
டெழுவிற் பொலிதிருத் தோளண்ணலே கொள்ளையிற் றுவண்டு
கொழுதிக் குழல்புறஞ் சோரமைமாரி கொழிப்ப வென்னைத்
தழுவித் தழுவித் தழும்பு கொண்டாள்மைத் தடங்கண்ணியே.       270

வண்ட டற் கையடை
தொழும்போ தருக்கருள்வார் சொக்கர் கூடற் சுழிக்கழிவாய்க்
கொழும்போ தவிழுந் தடங்கைதை காள்குட பாலிரவி
விழும்போது துண்ணென்று வண்டலம் பாவை விளித்துவிம்மி
யழும்போ தரவணைப் பீர(ளியால்)வந் தருகிருந்தே.       271

தோழி குறியிடங் கூறல்
மையுண்ட கண்டர் மதுரேசர் தாளிணை வந்திறைஞ்சார்
பொய்யுண்ட நெஞ்சிற் புகுமிருள் வாயிளம் பொங்கரிலுன்
மெய்யுண்ட நெஞ்சின் விரும்பிய காதல் விளைவதற்கு
நெய்யுண்ட கூரிலை வேலண்ண லேவந்து நின்றருளே.       272

தலைவியைத் தோழி குறியிடத்துக் கொண்டுசென்று
தலைவற்குக் காட்டியுரைத்தல்
விள்ளாத காதலுன் மின்னனை யாளன்னை மெய்யுணர்ந்து
கொள்ளாது கங்குலில் வந்துநின் றாள்சொக்கர் கூடலிளம்
புள்ளார வாரந் தருமுன்னே மேயெம் புரவலனீ
துள்ளா நடவு பரிநெடுந் தேர்செலத் தூண்டுகவே.       273

தோழி தலைவியை ஓம்படுத்தல்
கங்குற் சுருளை நிகர்த்தற லோதி கலைநிரம்புந்
திங்கட் கதிரின் விரியுமந் நாளுந் திளைத்துமையாள்
கொங்கைக் கிளகும் புயபூ தரர்சொக்கர் கூடல்வெற்பா
மங்கைப் பருவ மெனவிரும் பாயிந்த வல்லியையே.       274

வழிப்படுத் துரைத்தல்
திருவே திரைபெற்ற தெள்ளமு தேயுமைச் செல்லவிட்டிங்
கொருவே னுயிர்தரித் தாற்றும தோவிறந் தோடிவரு
மருவே தனைதவிர்ப் பாரால வாயி லலரடக்கி
வருவே னொளித்தவெய் யோனலை யாள வருமுன்னமே.       275
_________________
(பிரதி.) [1] கொடியிடை. [2]போதென.

உடன்போக் கொருப்படுத்தல் முற்றும்.
-----------------

21. உடன்போக்கு

சுரத்திடைக் கொண்டேகல்
களினக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிளம்
புளினத் தனமென்னும் பூந்திரு வேநறும் போதவிழ்தேன்
றுளிநக் கொழுகும் பொழிலிருப் பாலுந் துயரகற்றி
நளினப் பரிபுரப் பாதங்கன் றாம னடந்தருளே.       276

தமர் வருவரென் றஞ்சிய தலைவியைத் தேற்றல்
விளையுங் கதிதந்த வெள்ளிமன் றாளர் வியன்கிரிநாட்
டளையுங் கிளைவண்ட லைகுழ லாயென் னடுசிலைக்கால்
வளையும் பொழுது புறஞ்சாய்வார் கோடி மறவர்மற்றுன்
கிளையும் பொரினுமஞ் சேனஞ்சுவேனொரு கேண்மை கொண்டே.       277

சுரத்திடை நலம் பாராட்டல்
மல்லொன் றிருபுயத் தார்மது ரேசரை வாழ்த்தலர்போங்
கல்லென்ற பாலைக் கொடுமைகண் டாய்கனி வாயமுது
மெல்லென்ற கொங்கை யிளநீருந் தந்து விடாய்தணிய
நில்லென் றருளணங் கேயள காடவி நீழல்தந்தே.       278

கண்டோர் விருந்து விலக்கல்
மாதையும் பார்திரு மாதையும் பாரிந்த மாதினடிப்
போதையும் பார்சென்ற போதையும் பார்பொற் பொருப்பையும்பார்
சூதையும் பாரென் றெழுமுலை யாளன்பர் சொக்கர்வெற்பில்
யாதையும் பாரண்ண லேயெண்ண மேதெரிந் தேகுதற்கே.       279

தலைவன் தலைவிக்கு நகரணிமை கூறல்
குழைக்கா னிடையிடை யேயிரு பாலுங் குலைவிழும்நெற்
றழைக்கா னமித்தனை யுங்கடந் தால்வண்டு கால்பரப்பித்
தழைக்கா னிசைக்குங் குழலணங் கேசொக்கர் சந்தனப்பூ
மழைக்கா ரணிபொங் கருந்தமிழ் நாடு மதுரையுமே.       280

தலைவன் தலைவிக்கு நகர்காட்டல்
தேம்பாய் கழனித் திருவால வாயர் சிலம்பிலினி
நாம்பாலை விட்டு நகர்புகுந் தேமண நாறுபச்சைக்
காம்பாடு தோளியுன் மங்கல நாணுங் களமுந்தந்த
பூம்பாளை வீசிளம் பூகா டவிநம் புறநகரே.       281

பதிவள முரைத்தல்
கொத்தம் புயமலர்க் கோதாயுன் பொன்னடிக் கொப்புளங்கொ
ளத்தஞ் செலமுன் விதித்தன வாயினு மாகமத்தின்
சுத்தம் பயில்சொக்கர் கூடலும் வீதியுந் தோரணமு
முத்தம் படுதிரு வாசலுங் காண முயன்றனமே.       282

உடன்போக்கு முற்றும்
----------------

22. தாயர் புலம்பல்

செவிலி தோழியை வினாதல்
நற்றா(ய்) மனமுமென் னெஞ்சும்பின் னாக நடைபயிலும்
பொற்றா மரைமங்கை போனதெங் கேபிறைப் போதணிந்த
வற்றா நதிச்சடை யார்மது ரேசர் வரையில்வளை
விற்றா வியநுத லாயென்கொ னீகொண்ட வேதனையே.       283

தோழி யறத்தொடு நிற்றல்
மருளாத கற்பு மரபுமெண் ணாது மனம்பொருந்தப்
பொருளா சையையர் புரிதல்கண் டாளன்பு பூண்டவருக்
கருளாளர் நம்பெரு மாளால வாயரணி வரையிற்
சுருளா ரளகத் திருப்பாவை யென்கொல் துணிந்தனளே.       284

செவிலி தலைவி தொழி(ல்) நினைந்திரங்கல்
முகைத்தா மரைவிரிக் குங்கதி ரோனை முழுதுங்கண்டு
திகைத்தாடன் சீறடிக் குந்திகைத் தாணறுந் தேனொழுகும்
வகைத்தாம நீண்முடி யார்மது ரேசர் வரைவடவைத்
துகைதா ளலைப்பரப் புஞ்சுரம் போன சுரிகுழலே.       285

செவிலி தலைவி பருவம் நினைந்திரங்கல்
துப்பிற் றிகழும் வரிமணற் பாவையைத் தோழியர்பா
லெப்பிக்க வாவென்ற ழைத்துநிற் பாள்கொல்லு லைமுகவாய்க்
கப்பித்த மூவிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்
தெப்பித்த தெனவறி யேன்சுரம் போகவு மெண்ணினளே.       286

செவிலி நற்றாய்க் குரைத்தல்
முலைவாய் நழுவிற் றழுவியெ யாதழ மூண்டுநெஞ்சு
கலைவாள் முதுக்குறை வேதுசொல் வேன்வெண் கதிர்பரப்பும்
மலைவாணர் மாறர் மதுரா புரிநம்மை வாடி நின்று
குலைவா யெனவி(ட்) டருந்ததி நாணக் குறித்தனளே.       287

நற்றாய் புலம்பல்
துஞ்சுந் துயிலொழிந் தன்னையெங் கேயென்று சொல்லிநினைந்
தஞ்சுந் சிறுகிளிக் கேதுசொல் வேனரும் பும்பிறையு
மஞ்சுத் தவழு மதில்மது ரேசர் வரையமுது
நஞ்சுத் தருமயற் கண்ணிவெம் பாலை நடந்தனையே.       288

செவிலி கற்புநிலை கூறித் தேற்றல்
சுழிக்கும் புனலி லெடுத்தளித் தானொரு தோன்றல்கைம்மா
றளிக்கும் புதுநினை வுக்கரு கான தருந்தமிழைக்
கொழிக்குந் திருநதி யார்கூடல் மாதுங்கள் கொள்கையெல்லா
மொழிக்கும் பரிசல்ல வோவல்லி போக வொருப்பட்டதே.      289

நற்றாய் மழைமுகிற் பரவல்
புயல்கா ளுமக்குப் பொறாமையுண் டாகிலும் பூங்குழல்கண்
டயல்சாய்வ துங்க ளறிவல்ல வேயய னாரைத்தொண்டர்
செயல்காணுங் கூடற் றிருவால வாயர் சிலம்பிற்சென்று
கயல்காயுங் [1]கண்ணி தனக்கிடு வீர்நிழற் காவணமே.       290

நற்றாய் புட் பரவல்
மண்பா வியசடை யார்மதுராபுரி வள்ளலுமென்
பெண்பாவியும் வர நீகரைந் தாலுணைப் பேணியுண
வுண்பா யெனமேம் பலிதரு வேன்பின்னை யுன்னிரண்டு

கண்பா வையும்பெறு வாய்கிளை பேணுங் கருங்கொடியே.      291

நற்றாய் வேதியரை நிமித்தம் வினாதல்
ஆலைத் தடவயல் சூழால வாய ரடிதொழுமுக்
காலைக் கடனறி யந்தணர் காள்மை கலந்தகன்ற
வேலைத் தடங்கண்ணியுஞ்சிலைக் காளையு மீளவந்து
மாலைப் புதுமணஞ் செய்வதுண் டோவென் வளமனைக்கே.       292

நாடத் துணிதல்
வடிக்கே வடிவு தருங்கணல் லாயுண் மயிலையொரு
நொடிக்கே தருவ னினிவருந் தேலுமை நோற்றுப்பெற்ற
கொடிக்கே யிணங்கும் புயபூ தரர்சொக்கர் தூண்டும்விடை
யடிக்கே யமைந்த தன்றோகட லாடையகலிடமே.       293
_______________
(பிரதி.) [1] கண்களினக்கிடு.

தாயர் புலம்பல் முற்றும்
---------------

23.செவிலி கூற்று

கழையொடு வெறுத்தல்
கண்பெற்ற நெற்றிக் கடவுளல் லாதொரு காலமுநீ
பெண்பெற்ற பேறல்ல வேகழை யேவெண் பிறையொடந்தி
விண்பெற்ற செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியென்
பண்பெற்ற சொல்லி பதம்பெற்ற பேறொன்றும் பார்த்திலையே.       294

குரவொடு வெறுத்தல்
வண்டோ லுறுத்த வுறங்கினை யோவென் மயில்வரவு
கண்டோ கையிலுட் [1]கரைந்தனை யோமழைக் கார்தவழ
விண்டோய் நெடுமதில் வெள்ளிமன் றாளர் பொன்வெற்பிலெது
கொண்டோ தடுக்கிலை நீவெறும் பாவை கொடுங்குரவே.       295

சுவடு கண்டிரங்கல்
அந்தச் சுவடண்ணல் விற்கோடி நாணிட்ட தம்புபட்ட
தந்தக் கடாசலம் பட்டதிங் கேமுத்தி தங்குமர
விந்தச் சரணத்தர் வெள்ளிமன் றாளர்தம் மேருவெற்பி
லிந்தச் சுவடென் மடந்தைகண் மாரி யிடைநின்றதே.       296

சுரத்தியல் கண்டு வருந்தல்
தீராக் கடுங்கனல் தன்னுரு மாறித் திசையடங்கப்
பாராய்ப் பரந்தவெம் பாலையி லேவெம் பராகமெழத்
தூரப் பகைதூரக் குஞ்சொக்கர் மால்வரைச் சூதளக்க
வாராத் தடங்கண்ணி யோவடித் தாமரை வைப்பதுவே.       297

செவிலி புணர்ந்துடன் வருவாரை வினாதல்
உனைப்போ லொருதிரு வுந்திரு வேயுன் னுயிரனையான்
றனைப்போ லொருவனும் வந்ததுண் டோசினைச் சங்குளைந்து
மனைப்போத வீதி புகுமது ரேசர் வரையிலிந்த
நினைப்போ ருளஞ்சுடும் வெவ்வழற் பாலை நிலங்கடந்தே.       298

செவிலிதனக் கெதிர்வருவோர் கூறல்
எதிராய் வருந்திரு வேயிது நேர [2]மீளங்களப
முதிரா முலைவல்லி யுஞ்சிலைக் காளையு முரிமுன்னீர்
அதிரால காலமுண் பாரால வாய ரரசிருக்கும்
மதுரா புரியிளம் பூங்கா டவிசென்று வைகுவரே.       299

முனிவரை வினாதல்
கவளக் கடகளிற் றார்சொக்க நாதர் கடம்பவனத்
தவளப் பொடியணி யுந்தவத் தீர்தன் றனிமருங்குல்
துவளத் துவள விருதன பாரஞ் சுமர்ந்துவரு
மவளைக் குருசில்பின் கண்டதுண் டோவிவ் வருஞ்சுரத்தே.       300

வேதியரை வினாதல்
மண்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தமறைப்
பண்பாடு நீதிப் பனுவல்வல் லீர்பெற்ற பாவிநைய
விண்பாயும் வேலையு நீரழற் பாலையில் மெல்லடிப்பூம்
பெண்பாவை வந்ததுண் டோசிலைக் காளையைப் பின்பற்றியே.      301

உலகியல்கூறி மறுத்தல்
வடித்தாரை வேல்விழி யாய்நறுங் காவி மலரெடுத்து
முடித்தார தன்பயன் கொள்வதல் லால்மண் முழுதுங்கொண்ட
கொடித்தாம நீள்புயத் தார்சொக்கர் கூடற் சுனைகளும்பின்
பிடித்தா தரிப்பதுண் டோமக வாசை பெரும்பிழையே.       302
____________________
(பிரதி) [1] களைந்திலவோ, [2] மினங்களப.

செவிலி கூற்று முற்றும்.
------------------

24. மீட்சி

பின்சென்ற தலைவிவருத்தங் கண்டு தலைவன் மீட்சி கூறல்
தேடற் கரிய திருவேயுன் பூவையைத் தேடிநெஞ்சில்
வாடற் கவலை யொறுமறு காலும் வயப்புரவி
யாடற் கொடிநெடுந் தேரால வாய ரரசிருக்குங்
கூடற் றடம்பொழில் சூடுங்க ணாடு குறுகுவமே.       303

மீண்ட தலைவிக்குத் தலைவன் வளநகர் காட்டல்
பூம்பாளை யுஞ்செழுங் காவியம் போதும் புனைதிருவே
மேம்பாடு பூணு மிளமரக் காவிது மீனவற்கு
வாம்பாய் பரியிடுவார் மது ரேசர் வரையிலிணைக்
காம்பாடு தோளணங் கேயது போய்நுங் கடிநகரே.      304

மீண்ட தலைவி தன்வரவை யாயத்தார்க் குரையுமென
அந்தணர்க் குரைத்தல்
செந்தோ னலங்கற் றிருவால வாய்நகர் சென்றரனார்
தந்தே சுரைக்குஞ் சதுமறை யீர்தந் தயாவடங்கப்
பைந்தே னலர்கொய்ய வுஞ்சுனை யாடல் பயிலவுநான்
வந்தே னெனவுரை யீரென தாய மடந்தையர்க்கே.       305

தலைவி மீண்டமை கண்டோர் தோழிக் குரைத்தல்
செய்க்காவி நாறுந் திருவால வாயர் சிலம்பில்வல்லி
யெக்கால மிந்த வுவகை பெற்றாய்நெட் டிதழ்விரிந்த
மைக்கா வியங்கண்ணி யுஞ்சிங்கக் காளையும் வந்துநகர்
புக்கா ரினியெய்து மோவொரு நாளிப் புதுவிருந்தே.       306

தோழி சுரத்தியல் வினாதல்
குழலாற்ற ருமின்சொற் கோமள மேயக் கொடுஞ்சுரத்தின்
அழலாற்றி யேநடந் தாயரு(ள்) கூர்வெள்ளி யம்பலத்தே
சுழலாய்ப் பரிவு கொள்வார் சொக்கர்தாளைத் தொழார்புரம்போ
னிழலாற்றி டையிலை யேயிளைப் பாறவு நிற்கவுமே.       307

தலைவி தோழிக்குச் சுரத்தியல் புரைத்தல்
மண்ணளிக் கும்புயத் தார்மது ரேசர் வரையில்வண்டு
பண்ணளிக் குங்குழற் பாவைநல் லாய்கடற் பாரிலொரு
விண்ணளிக் குந்தரு நீழலொப் பான விடலைதருந்
தண்ணளிக் கெந்தத் தழற்சுர மாகிலுந் தண்ணெனுமே.       308

மீட்சி முற்றும்.
உடன்போக்கு முற்றும்.
------------------

25. வரைபொருட் பிரிவு

வரைபொருட்குப் பிரிகின்றமை தலைவன்
தோழிக் குரைத்தல்
சீறுந் தழற்சுரஞ் சென்றணங் கேநுமர் சிந்தைசெய்து
கூறும் பொருள னைத்துங்கொணர் வேன்கொடிக் கூடைமண்ணு
மாறும் படச்சுமப் பார்மது ரேசர் வரையில்வல்லி
யாறும் பரிசுரைத் தாற்றுவிப் பாய்சென் றருகிருந்தே.       309

தோழி தலைவனை நீயே கூறென்றல்
குருநாண் மலர்த்தொடை யார்சொக்க நாயகர் கூடற்செம்பொன்
றருநா ணுமருவக் குந்திரு நாளத் தமனியங்கொண்
டொருநா ளெனினும் பிரியே னெனவு முரைத்தண்ணனீ
வருநாளுங் கூறிலன் றோதெளி வாளுன் மடமயிலே.       310

தலைவன் தோழியோ டாற்றுவித்தலரிதெனப் பிரிதல்
விரியுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பிற்
சரியுஞ் சுரிகுழுற் றையனல் லாய்மெய் தழுவியன்பு
புரியும் பொழுதுகை சற்றே நெகிழப் பொறாதவல்லி
பிரியும் பரிசுரைத் தாலெங்ங னேயுயிர் பேணுவதே.       311

தலைவன் வரைபொருட்குப் பிரிந்தமை
தோழி தலைவிக் குரைத்தல்
போகப் புளக முலைப் பொருப்பாளும் புரவலரின்
றேகத் துணிந்தகன் றாரணங் கேதிசை யெட்டுமெட்டி
மாகத் தளவும் புகழ்மது ரேசர் வரையினிமா
தாகத் தளவுந் தனந்தரு மாறு தனிநெறியே.       312

தலைவி புலம்பல்
வீறாக்கி நின்று வியனாடு வோர்வெள்ளி வெற்பிலிங்ங
னாறாத் துயர்கொண் டொழியுநெஞ் சேபொரு ளாதரிப்பார்
பேறாக் குவதன்றி யின்றுநண் பாளர் பிரிவுநம்பால்
மாறாக் கலவி தருவதென் றாலென் வருந்துவதே.       313

பருவங் கண்டிரங்கல்
தீவந்த செங்கைத் திருவால வாயர் சிலம்பிலிள
வேய்வந்த வெள்வளைத் தோளணங்கேகடல் வெள்ளமொண்டு
தோய்வந் ததிர முழங்கியந் நாள்வந்து சொன்னகொண்டல்
போய்வந்ததின்னமும் வந்திலர் காணம் புரவலரே.       314

தோழி தலைவன் வரவுரைத்தல்
வேர்வந் தணிந்த திருநீறிலங்க வியனடஞ்செய்
வார்வந்து துங்க வனமுலைப் பாகர் மதுரைவெற்பிற்
கார்வந்த தென்று கலங்காகொ ளுன்னைக் கலந்தகன்றார்
தேர்வந் ததுதிரு வேயினி வேறேன்கொல் சிந்தனையே.       315

தலைவிமணமுரசொலி கேட்டு வருந்தல்
வேலிக் கிடைமள்ளர் செஞ்சாலி முற்றி விளைவளவுஞ்
சூலிக் கெறிமது ரைச்சொக்கர் மால்வரைத் தும்பிவென்றும்
பாலிக்கும் வேலவர்க் கோவன்றி யேயையர் பாலவர்க்கோ
வாலிக்கு மிந்த முரசெவர்க் காகநின் றார்க்கின்றதே.       316

தோழி நிதிவரவுரைத்துத் தலைவியைத் தெளிவித்தல்
முறைநின் றடுகரி முன்னின்ற காளைக்கு முன்றிலினின்
றறையுங் கடிமுர சாரணங் கேநச் சராவுமதிக்
குறையுந் திகழ்முடி யார்கூட னாயகர் கூடலர்தந்
திறையுங் கொணர்ந்துதந் தாரிது காணுன் றிருமணமே.       317

வரைபொருட் பிரிவு முற்றும்.
களவு முடிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கற்பு

1. மணவணி

நகரணிமி னென்றல்
கடம்பா டவிச்சொக்கர் கன்னிநன் னாட்டன்ன கன்னிமண
முடம்பா டணிமுர சார்க்கின்ற தாலமு தூறுநிறை
குடம்பா ரியுமணி மாளிகை கோடியுங் கோவைமுத்த
வடம்பா டலம்பு நெடுந்தோ ரணநடும் வாசலிலே.       318

எரிவலஞ் செய்யு மியல்புகண்டு
தோழி யுரைத்தல்
கொத்தார மாலை முடிச்சொக்க நாயகர் கூடல்சுற்று
மித்தா ரணியி லெவர்க்கெய்து மோதன் னிறைவன்மலர்க்
கைத்தா மரைமங்கை காட்டா மரைதொடுங் காட்சியிந்த
மைத்தா மரைமலர்க் குள்ளே குடிகொண்டு வாழுவதே.       319

உழையர் வாழ்த்து
விடம்பா வியகண்டர்வெள்ளிமன் றாளர் வியனடஞ்செய்
கடம்பா டவியுள்ள காலமெல் லாமெய்க் கலவியின்ப
முடம்பா மெனவு முயிரா மெனவு மொளிருமுத்த
வடம்பாய் முலைவல்லி யுஞ்சிலைக் காளையும் வாழியவே.       320

நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி கூறல்
தலைநா ளிவர்தந்த பேரின்ப வாரிக்குந் தண்ணளிக்கும்
விலைநா ணமருல கென்றிருந் தேன்சங்க மெய்த்தமிணூற்
கலைநா வலர்தம் பிரான்கடம் பாடவிக் கன்னிமண
முலைநாண் முயக்கின் விலைக்கினி யேது மொழிவதுவே.       321

மணவணி முற்றும்.
-----------------

2. இல்லிருத்தல்

மணமனைச் சென்ற செவிலிக்குத்
தோழி கூறல்
கொலைத்தலை மூவிலை வேற்சொக்க நாயகர் கூடல்முற்ற
முலைத்தலை வல்லிகற் பேதுசொல் வேன்கனல் முக்குளிக்கும்
உலைத்தலை வேல்விழி யாய்வட மீனு மொதுங்கும்வெய்யோன்
மலைத்தலை செல்லிற் கடைத்தலை யாமன்னல் வாரணமே.       322

மணமனைச் சென்ற செவிலி நற்றாய்க் குரைத்தல்
காயுங் கனல்வழு வார்கடம் பாடவிக் கானவர்பொன்
மாயுந் துடியிடை வல்லிநல் லாயுன் வயிற்றுதித்த
யாயுந் துணைவனு மென்போல் பவரு மெழினகரு
நீயுந் தலைவனும் யானுமிவ் வூரு நிகர்க்குமன்றே.       323

இருவர் காதலு மருவுத லுரைத்தல்
அலைப்பட்ட வாருதி மந்தா கினியிரண் டன்றியொன்றாய்த்
தலைப்பட்ட துதரம் போதும தோசடைக் காடுசந்த்ர
கலைப்பட்ட நாதர் கடம்பா டவியிடைக் கைகலந்து
நிலைப்பட் டிவர்பெற்ற பேரின்ப வாரிக்கு நீணிலத்தே.       324

இல்லிருத்தல் முற்றும்.
---------------

3. மணஞ் சிறப்பு

கருப்பைத் தமைதிகண்டு இறைமகிழ்தல்
மங்கைக் கழகு வளரா லிலையிடை வந்துகுலச்
சிங்கக் குழவி குடிகொண்ட தால்நறுந் தேனொழுகுந்
தொங்கற் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாரின்முகங்
கொங்கைக் களிறு கருகியுள்ள ளேபயங் கொண்டனவே.       325

வெள்ளணி வியந்து கூறல்
அணிபூத்த கூட [1]லபிஷேகச் சொக்க ரரசிருக்கும்
பணிபூத்த [2]பாருக் கொருவிளக் காகப் பசும்புனிற்றுப்
பிணிபூத்த சாய லொருபிடி நாகம் பிறங்குசெக்கர்
மணிபூத்த தந்த மணியுல கேழும் வயங்குவதே.       326

மணஞ்சிறப்பு முற்றும்.
------------------

4. பரத்தையிற் பிரிவு

கண்டோர் கூறல்
துரக்கும் பரிநெடுந் தேர்ச்சொக்கர் கூடற் றொடுகடல்மண்
புரக்குந் தலைவர் புகுந்தன ராகம் பொருதுகரை
பரக்கும் புதுப்புனல் கண்டெதி ரேறு பனிக்கயல்போல்
வரக்குங் குமமுலை யாரணி கோலி வனைந்தனரே.       327

தோழி தலைவியைப் புகழ்தல்
விற்போர் வலவன் கொடுமைதன் னேவல் விடாமலொன்றாய்
நிற்போ மையுமறி யாதொளித் தாள்வெள்ளை நீறணிந்து
மற்போ தருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவல்லி
கற்போ வவனளி யோபொறை யோகரை[3] காண்பரிதே.       328

சுடரொடு புலம்பல்
சிலைநாடு தோளண்ண லோடுசெந் தீவலஞ் செய்யுமந்தத்
தலைநாளில் நீயொரு சான்றல்ல வோவெண் டரளநிலாக்
கலைநாண் மதியர் கடம்பா டவியிற்க் கலந்தகலப்
பொலநாண் மணிவிளக் கேவிலக் காது பொருந்தினையே.       329

இறைவன் பரத்தமைக் கிரங்கல்
நறுமாந் தழையென்ன மேனிமுத் தாநகை யென்னவனப்
புறுமாண் டகைசெய்த மாயமெல் லாமழு வோடுகொண்ட
சிறுமான் கரத்தர் திருவால வாயிற் றெளிந்துமெய்யென்
றிறுமாந் திருப்பவ ராரெனைப்போலவொ ரேழையரே.       330
____________________________________________________________
(பிரதி) [1] லபிஷேபிகர், [2] தாருக், [3] காண்கரியே.
____________________________________________________________
கனவுகள் டழுங்கல்
தோடிற் பொலியு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்நன்னாட்
டேடிற் பொலிதொங்கல் மார்பமென் கோனல்க வின்றுதுயில்
கூடிக் கருணைசெய் தீர்விழி காள்பயங் கொள்ளுமுன்னே
யூடிக் கெடுத்துவிட் டேனிது வோமுன்னை யூழ்வினையே.       331

தோழி தலைவனை இயற்பழித்தல்
ஆகம் பராயிருப் பாரால வாயில்நம் மன்பரின்பம்
போகம் பொறாதளிக் குந்திரு மார்பம் புணரவென்று
தாகம் பொறாதிருப் பார்க்கரி தாகித் தனதளவும்
மோகம் பெறாதிருப் பார்க்கெளிதாய்வரமுன் னின்றதே.       332

தலைவி இயற்பட மொழிதல்
கண்ணு மனமுங் கலந்தக லார்கற்ப காடவியு
எண்ணுங் கனவு நனவு மொன்றாக விளமுலையுங்
மண்ணும் புகழும் பிரான்மது ராபுரி வல்லியவர்
நண்ணும் பழுதுள தோவவற் கேபழி நான்சொல்வதே.       333

தலைவன் தலைவியை நினைதல்
அனமா யிளமயி லாயரங் காடு மரிவையர்பொற்
றனமார் படங்கத் தழுவுநெஞ் சேசலங் கொண்டெழுந்த
கனமா களத்தார் கடம்பா டவிமனைக் கற்பொடுநம்
மனமா ளிகையிருப் பாரென்செய் வாரிந்த வஞ்சனைக்கே.       334

தலைவன் தோழியை வாயில் வேண்டல்
விள்ளா மயல்கொண் டளியாது நீயன்று மீட்டவென
துள்ளா ருயிர்க்குயிர் வேறுமுண் டோபிறை யோடலர்ந்த
கள்ளாவி யங்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னியினம்
புள்ளா ரலங்கலங் கோதையல் லாலொரு போதெமக்கே.       335

தோழி வாயின் மறுத்தல்
தெளியுங் கலவி யழுந்திய நாளன்பு சென்றுநெஞ்சு
சுளியுங் கருக்கங்கு லும்பக லானது சூடரவும்
அளியுஞ் சுழல்கொன்றை யாரால வாயினம் மன்பர்க்கின்று
வெளியுங் கருங்கங்கு லாய்விட்ட வாமெள்ள மெள்ளவந்தே.       336

தோழி தலைவியை வாயி னேர்வித்தல்
வாட்(டாரை காலு)மகுடா டவித்தொங்கல் வாசமறாத்
தாட்டா மரைமலர் தானல்ல வோமதத் தாரையறாக்
கோட்டானை யாலயத் தார்கூடல் வாயுன் கொழுங்கடையிற்
றோட்டாழ் நடைகொண்டு மென்மெலவந்து துவளுவதே.       337

தலைவி வாயினேர்தல்
வாதுக் கிணங்குந் தமிழ்வையை நாடர் மதுரைநண்பர்
சூதுக் கிணங்கும தோநெஞ்ச மேவிடந்த தோய்ந்திரண்டு.
காதுக் கிணங்கு விழிமாத ருண்டு களித்தவின்பக்
கோதுக்கு நாமிருந் தாலிது வோவந்து கூடுவதே.       338

தலைவி தலைவனோடு ஊடியுரைத்தல்
பொன்னிற் கலவி நிறுப்பா ரிளமுலைப் போகமுண்பார்க
கென்னிற் கலவி யிணங்கு மதோமது ரேசரெங்கள்
கன்னித் துறைவர் கடம்பா டவிவள்ளல் காதலித்துன்
சென்னிக் கணிவ தெல்லாமவர் தாமரைச் சீறடியே.       339

வாக்குந் துணிவு மளவும் பரவியல் வாணர்தெள்ளிக்
கோக்குந் தமிழ்புனை வார்கூட னாடர்பொற் குன்றிலின்பந்
தேக்கும் பருவ மறிந்திது காலந் தெளிவித்தெம்மைத்
காக்குங் கடவு ளழிக்குமென் றாலெவர் காப்பவரே.       340

கலந்துழி மகிழ்தல்
துன்றுங் குழலி யனுராக போகந் தொலைவறநா
மன்றுந் தெளிந்தன மேமன மேவெள்ளி யம்பலமுங்
குன்றும் புகுந்து குடியிருப் பார்தமிழ்க் கூடலின்ப
மின்றுந் தெளிந்தன மேயின்ன மேதென் றியம்புவதே.       341

விருந்தொடு வந்தமைகண்டு ஆறிய
தலைவியைக் கண்டோர் கூறல்
மருந்தாய்ப் பிறவி தவிர்த்தபொற் றாளர் மதுரையிற்செம்
பருந்தார்க்கும் வேலன் வரவுகண் டாள்முகம் பார்த்தொருவ
ரிருந்தாற் றரியவெங் கோபா னலம்விருந் தென்னுமந்த
வருந்தாப் புனல்கண் டவிந்தது காணு மருந்துதிக்கே.       342

புதல்வனொடு வந்தமை தோழி தெளிவித்தல்
கோடாத கோல்கொண்டு மண்புரப் பார்நங் குலமணியைத்
தேடா வகலத் தணிதல்கண் டாய்செழுந் தீவடிவில்
வாடா தணிகொன்றை யார்சொக்க நாதர் மதுரையினீ
யூடா மருந்தல்ல வோவணங் கேயவ் வொளிமணியே.       343

தலைவனை முனிதல்
அலைப்பாவை யஞ்சடை யாரால வாயெம் மழகழிந்த
முலைப்பால் முடையுங் கலையுங் கண்டாய்கடை முன்னர்நின்று
கொலைப்பால் விழியின் கொழுங்கடை யானலங் கூறுவிக்கும்
விலைப்பா வையர்செல்வ மேதொடு மோவெங்கள் மேகலையே.      344

இன்னாத் தொலையச் சூளெடுத்தற்கண் தலைவிகூறல்
நொதுமலர் வாழ்வுக்கு நோற்பார் கலவிக்கு நோற்றுநிற்கு
மதுமற வாயிங் கெழுமையு நீகொன்றை யாடகப்பூ
மதுமலர் மார்பர் மதுரா புரியந்த வல்லிநல்லார்
புதுமண வாளவுன் பொய்ச்சூளி லென்னெஞ்சு புண்பட்டதே.       345

தலைவி பரத்தையை யானையாக விசேடித்தல்
அடுக்குந் தலைவற் கபாயமெண் ணாநிற்கு மன்புசென்று
கொடுக்கும் பொருளுக் கலம்பிற வாது கொழித்தளந்து
தொடுக்குந் தமிழறி வார்சொக்கர் கூடற் றொடுத்ததொடர்
விடுக்கும் பொழுதடங் காதண்ணல் மேல்கொண்ட வேழநன்றே.      346

தலைவி தலைவனொடு புலந்து கூறல்
வீதித் தலையில் வியனாடு வாரிட்ட வெம்பரிக்குப்
போதித்த தேசிகர் நாமல்ல வோவெறும் பொய்யடங்க
வோதித் தமிய னுலைமெழு காகு முபாயமண்ணல்
சாதித் ததுநன்று நின்றின்ன மேதுகொல் சாதிப்பதே.       347

தலைவி புலவி தீர்தல்
பொய்யைக் கலவியந் தேன்மாலை யாகப் புனைந்துவஞ்சஞ்
செய்யச் சமைந்தொரு செம்மனின் றால்வெண் டிரையலம்பும்
வையைத் தலைவர் மதுரா புரியிலம் மாயமெய்யா
நையப் படைத்தன ளேயென்செய் தானந்த நான்முகனே.       348

பாலனைப் பழித்தல்
[*]வலத்தியல் சூல மதுரேசர் கோயில் வலஞ்செயப்போய்ச்
சலத்தியல் செய்து வருங்களி றேவிலை சாற்றிவிற்கு
நலத்தியல் சேரிக்கு நல்விருந் தாவது நாளுமுங்கள்
குலத்தியல் பாயிருந் தாலுன்னை யோநொந்து கூறவதே.       349
______________
[*] இச்செய்யுள் இலக்கண விளக்கவுரையிற் (பக் 500) காட்டப்பெற்றுள்ளது

புதல்வனை முனிதல்
கனக்குன்ற வில்லி கடம்பா டவிநின்று கண்பிசைந்து
சினக்குந் தொறுமழுந் தெள்ளமு தேசிந்தை சென்றுருலகிற்
றனக்கென் றவரன்பை யாசைகொண் டாடுமுன் றந்தைக்கல்லா
லுனக்குங் களிதந்த தோவெங்கை மார்கொங்கை யூற்றின்பமே.       350

புதல்வனை வினாதல்
மின்பூட்டு செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்
பொன்பூட்டி யுன்றந்தை மார்பையுந் தோளையும் புல்லிப்புல்லி
யன்பூட்டி விட்டதும் போதாம லுன்னையு மாதரித்தங்
கென்பூட்டி விட்டன ரோவன்னை மாரென் னிளங்களிறே.       351

புதல்வனை வற்புறுத்தல்
கொங்கோல வண்டிமிர் தார்சொக்க நாயகர் கூடலுங்கள்
செங்கோல் முறைமை முழுதுங்கொள் வாய்பொற் சிறுசதங்கை
பொங்கோடை வாரண மேயுந்தை போலவெம் போலொருவர்
தங்கோல முந்தனி யுங்கண்டு போகை தவிர்ந்தருளே.       352

செவ்வணி விடுத்தற்குத் தலைவி யிரங்கல்
வாருங் குவடு பொருமுலைப் பாகர் மதுரைநல்லார்
சேரும் பொதுமனை வாசலெல் லாமொரு செவ்வணிபூண்
டூருந் தெருவுஞ் சிறுநகை யாடி யொருத்திசென்று
தாருந் தலைவரையென்கில்நன் றேநந் தலையேழுத்தே.       353

செவ்வணி யியற் பழித்தல்
வடிபூத்த வேற்கணல் லீர்மட னாணை வனப்பழிக்கும்
படிபூத்த விற்பிறப்போது சொல்வேன் தொண்டர் பண்டைமுத்தி
யடிபூத் தருளும் பிரானால் வாயி லரும்புமுல்லைக்
கொடிபூத்த தென்றொரு கொம்புசெம் போது கொடுவந்ததே.       354

பாணன் வரவு கண்டு தோழியுரைத்தல்
கனிப்பாட லின்னிசைப் பாணனங் காதற் கணவர்நண்பாற்
றனிப்பாயல் தந்த தறிந்தில னோபொற் றடங்கிரிவிற்
குனிப்பா ரரசிருக்குங்கூடல் மாநகர்க் கொம்பனையாய்
தொனிப்பா டல்கொண்டு துயிலெடை பாடத் தொடங்கினனே.       355

பாணனை முனிதல்
மகிழ்வாச மாலைப் புனலூரனுக் குங்கள் வாசலன்றிப்
புகுவாச லில்லை யெனும்புலைப் பாண பொறியறுகாற்
றொகுவா சிகைச்சொக்கர் பேரிசை யாழினைச் சூளுறநீ
தகுவா யலையிது காணுங்கள் வாழ்வுந் தலைமையுமே.       356

பாண னிரந்து கூறல்
நடைக்கரும் பென்று பலர்கூற வண்பொரு ணாடிநிற்குங்
கடைக்கரும் புஞ்செம்மல் காமிக்கு மோவண்டு கால்வருடக்
தொடைக்கரும் புங்கொன்றை யார்சொக்கர் கூடற்று வளுநுண்ணூ
லிடைக்குரும் பேயடி யேனிசைப் பாணனிங் கென்செய்வதே.       357

தலைவி இற்பரத்தையைப் பழித்தல்
வண்டார் கழனி மதுரேசர் மாட மறுகிலெங்கைத்
தண்டாத வீறென தாமறி யேன்தழு வித்தழுவிக்
கொண்டாடு மின்பத் தரம்போ யலைந்தது கொங்கையெங்கை
யுண்டா மினியி வற்கும்பெற லாமென்று லகையுமே.       358

இற்பரத்தை தலைவியை யிகழுதல்
கற்புக் கரசிவ ளானாலு மின்பக் கலை தெரியும்
பொற்புக் கெனக்கெவர் போதுங்கொல்லோ பொருப் போடிகலி
மற்புக் கணிபுயத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்
டிற்புக் கிருந்தவ ளோபழிப் பாளென் னெழினலமே.       359

சேரிப் பரத்தையர் புனலாடுமிடத்துக் கூறல்
அளகந் திருத்தி யிளகார வண்ட லணிந்துகொங்கைப்
புளகம் படுத்திப் பயனென்கொலோ மெய்ப்புலத் தமிழ்நூல்
குளகம் படப்புனை வார்சொக்கர் கூடற் கொடிடைவந்

துளகம் படத்துவ ளாகில்வண் டார்புன லூரனையே.       360
இற்பரத்தை மேம்பாடு கூறல்
தூணூங் கழையுஞ் சுளியானை யாலையச் சொக்கர்வென்ற
பாணும் பனிமொழிப் பாவைநல் லார்தம் பரப்படங்கப்
பூணுங் கலவிப் புனலூர னென்னைப் புனல்விழியிற்
காணுந் தனையுமன் றோவெங்கை மார்தங்கள் காதலனே.       361

புனலாடிவந்த தலைவனொடு தலைவி யூடியுரைத்தல்
நாணத் தலையன்றி நீபுன லாட நயந்தலம்
பூணத் தவம்புரி வாரெங்கை மார்புனல் பூத்தசெங்கட்
கோணச் சரவணி யார்கூட னாடவிக் கோலமுன்னைக்
காணத் தவஞ்செய்த வாதமி யேனிரு கண்களுமே.       362

தலைவி தலைவனொடு புலத்தல்
கோணும் பிறையர் திருவால வாய்நம்பர் கூடலெங்கை
நாணும் பெருமையும் நன்றுநன் றேயொரு நாளெனினும்
பேணுங் கொழுநரெம் மோடின்பவாரி பெருகி யொன்றாய்ப்
பூணுங் கலவி யிடைமதி யாது புகுந்தனளே.       363

புலவி நுணுக்கம்
கன்னாக மாகக் கருணைசெய் வார்பொற் கடம்பவன
மன்னா ரருளுக் கழியுநெஞ் சேகள பாசலமென்
பொன்னாகம் பூணத் தழுவுமப் போதும் புலப்பரென்றால்
என்னாகு மென்றறி யேனிவ ராசையு மின்பமுமே.       364

கலவி நலமுவத்தல்
நிலவித் திகழ்பிறை யுங்கங்கை மாதும் நிலைதளரக்
குலவிக் குலவி விறகுவிற் பார்தமிழ்க் கூடலன்னார்
புலவிக் கெனவி மளவு படாத புதுமைதருங்
கலவிக் களவுநெஞ் சேயெங்ங னேகரை காண்பதுவே.       365

பரத்தையிற் பிரிவு முற்றும்.
------------------

5. வினைமேற் பிரிவு

வினைமேற் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்
காலைக் கடிமுர சொன்னார் முரசென்று காணிலிந்த
மாலைக் குடையை மதியென்ப ரோமது மாரியறாச்
சோலைப் புறம்பணை சூழ்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டோலைக் குழைபொருங் கண்ணி யெண்ணாதன வொன்றிலையே.       366

வினைமேற் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்
குறைவந்த வையைக்கு மண்சுமப் பார்சொக்கர் கூடலந்திப்
பிறைவந் தரும்பு நுதற்றிரு வேயறம் பேணிமனு
முறைவந்த தங்க ளரசாளு நீதி முதன்மைக்கொன்னார்
திறைவந்த தில்லையென் றார்தெரி யாதன்பர் சிந்தனையே.       367

தலைவன் பிரிந்தமை கேட்டுத் தலைவி புலம்பல்
ஈட்டுஞ் சிறிய குருகா கிலும்பிரி வென்றுநெஞ்நிற்
கோட்டும் பொழுது பொறாதென்ப ரேசொக்கர் கூடலின்பம்
பூட்டுங் கலவி தருவார் பிரிவெனும் புன்சொலின்று
கேட்டும் பொறுத்தனை யேபாவி யாவிநின் கேண்மைநன்றே.       368

கூதிர்க்காலங் கண்டு வருந்தல்
சுழிக்கும் புனல்வையை சூழ்மது ராபுரிச் சொக்கரஞ்சும்
பழிக்கஞ் சலர்சென்ற நாட்டில்லை யோபகி ரண்டமுண்டு
தெழிக்குங் கடையுகக் காலவெங் கோபச்செந் தீயெழுந்து
கொழிக்கும் பொறியென்ன லாமிள வாடைக் கொடுந்துளியே.       369

பனிக்காலங் கண்டு வருந்தல்
துரகாது லாடிய மாறிநின் றாடிய சொக்கர்செம்பொற்
கரகால வேலன்ன கண்மடவா யென்ன காலவண்மை
யுரகா டவிமுடிப் பார்காவல் பூண்ட வொருவர்தந்த
விரகா னலம்வந்து வெம்பனி யாக வெளிப்பட்டதே.       370

இளவேனிற் காலங்கண்டு வருந்தல்
கந்தார வண்டிமிர் தார்க்கடம் பாடவிக் காவலர்நாட்
டுய்ந்தார் தனியிருந் தாற்றவல் லார்மல ரோடையும்பூஞ்
சந்தா டவியுந் தழையுளஞ் சூகமுந் தைவந்ததோர்
மந்தா நிலமுங் கொணர்ந்திள வேனில் வழிப்பட்டதே.       371

கார்கண்டு வருந்தல்
அன்னம் பனிநடை யாயடி மாறிநின் றாடல்கண்டு
தென்னன் பரவிந் திருவால வாயர் திரையலம்பும்
பொன்னஞ் சடிலமு மைக்காள கண்டமும் போலெழுந்து
மின்னம் புயல்வந்த தன்பர்பொற் றேரின்ன மீண்டிலதே.       372

பருவ மன்றென்றல்
கறையிட்ட வேல்விழி யாய்பிரிந் தார்சொன்ன காலமுமன்
றுறையிட்ட காருமக் காரன்று காணுமை பாகர்தொல்லை
மறையிட்ட பாடல் மதுரேசர் சுந்தர மாறரன்று
சிறையிட்ட நாண்மு தற்றிங் கண்மும்மாரி திளைப்பதுவே.       373

பாசறை யுருவெளி
சுற்றத் தொடுந்தொலை யத்தொலை யாரைத் தொலைத்தகள
முற்றத் தனிவந்து தோன்றுத லாலன்பர் மோகவெள்ளம்
வற்றக் கடை{க்}கணிப் பார்மதுராபுரி வாகைதருங்
கொற்றத் தனிக்கொடி யோவல வாருங் குலக்கொடியே.       374

விரைவது பயன்
கோடாப் புரவி யிரவிபொற் றேரொடு கூட்டி நமக்
புரவியைப் பூட்டினை யேபல வூழிசென்று
மாடாக் கடைமணி யாரால வாய்நண்ப வங்கிருந்து
வாடாத் தளருமடந்தைக்கென் னாமிந்த வஞ்சனையே.       375

தலைவன் தேர்வர வுரைத்தல்
தொடைமணி யார்முலையீரா றெதிர்கொள் ளுஞ்சொக் கர்வெள்ளை
விடைமணியோசை யொலிப்பது போற்கடல் வேலிநிலங்
கடைமணி யோசை கறங்காது காப்பவர் கைக்களிற்றின்
புடைமணி யோசையிரு செவித் தாரையும் பூரித்ததே.       376

மறவாமை கூறல்
மனைக்கற் பகவல்லி யேயொரு காலு மறந்தொருகா
னினைக்கைக் கிடமில்லை யில்லைகண் டாய்சினை நீலவண்டு
கனைக்கக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிநெடும்
பனைக்கைக் கடாசலம் பூச லறாதடும் பாசறைக்கே.       377

வினைமேற் பிரிவு முற்றும்.
-----------------

6. உற்றுழிப்பிரிவு

தலைவ னுற்றுழிப்பிரிந்தமை கூறல்
மருவா முயங்கி மயங்கிவற் றாவின்ப வாரிவெள்ளந்
தருவா ருனையும் பிரிந்தன ரால்முத் தமிழ்மதுரைத்
திருவால வாயர் திருப்பாத ராகிய தென்னர் தெவ்வைப்
பொருவார் புரிசையு நாடுமென் னாமின்று பூங்கொடியே.       378

பிரிவாற்றாமை கூறல்
காருட லாவள ருங்கடம் பாடவிக் காவலர்நாட்
டாருட லாவியகன்றிருந் தாரச லக்கொடிபோ
லோருட லாகத்தவம்புரி யாத வுனக்குநெஞ்சே
யீருட லாயிருந் தாலிது வோவின்ன மெய்துவதே.       379

பருவங்கண் டிரங்கல்
சிந்துஞ் சிறிய துளியரி தாமன்று சென்றவழி
வந்தும் புரவலர் வந்தில ரேமது மாரியும்பூங்
கொந்துந் தருங்கொன்றை யார்கூட னாயகர் கொற்கைமுத்துஞ்
சந்துந் தருமுலையாயெங்ஙனேவுயிர் தாங்குவதே.       380

உற்றுழிப் பிரிவு முற்றும்.
-----------

7. இணங்கலர்ப் பொருத்தல்

இணங்கலர்ப் பொருத்தப் பிரிகின்றமை
தலைவன் தோழிக் குரைத்தல்
போற்றா ரிருவர் பொருதடங் காதவெம் போர்தணிவித்
தாற்றா விடிலுற வாட்சியென் னாம்வையை யாறடைக்க
மாற்றா லடிபடு வார்மது ரேசர்க்கு மாறுபட்ட
கூற்ற மதர்விழி யாய்குடை நீழற் குவலயத்தே.       381

தலைவன் பிரிந்தமை தோழி
தலைவிக் குரைத்தல்
வணங்கா(ர்) வணங்க வனைகழற் கான மவுணர்தம்மி
லிணங்கா ரிணங்கு பரிசகன் றார்தம்மை யேத்துமன்பர்
குணங்கா தலித்திருப் பார்சொக்க நாயகர் கூடல்வண்டின்
கணங்கா தலிக்குஞ் சுருளள காடவிக் காரிகையே.       382

பருவங்கண் டிரங்கல்
தேர்முந் துவதென்று நாமிங்ங னேதவஞ் செய்யவின்று
கார்முந் துவதென்ன கைதவ மோகழைக் கானலில்நெற்
றூர்முந் துதண்பணை சூழ்மது ராபுரிச் சொக்கர்கைவேற்
போர்முந் துவேல்விழி யாய்நன்று காணம் புரவலற்கே.       383

தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
விருந்தாய்ப் பருமணற் சோறந்த நாளுண்டு வெந்துயர்க்கோர்
மருந்தாய்ப் பகுந்த மவுணர்வந் தார்கடல் வாரிவிட
மருந்தாக் களங்கறுப் பாரால வாயி லரிவையென்றுந்
திருந்தாய் பகைமன்னர் தம்மிலொன் றாய்வந்து சேவிக்கவே.       384

இணங்கலர்ப் பொருத்தல் முற்றும்.
------------------

8. பொருண்மேற் பிரிவு

தலைவன் பொருள்வயிற் பிரிகின்றமை
தோழி தலைவிக் குரைத்தல்
கறங்கா ழிவையத் தளவுபடாவின் பங்க காணினுமில்
லறங்கா ணினுமெவர் காண்பவ ரோவிடங் காரடங்கா
மறங்காலும் வேற்படை யார்மது ராபுரி வண்பொருளின்
புறங்காணு நெஞ்சத்த வரன்றி வேறு பொலன்கொடியே.       385

தோழி செலவழங்குவித்தல்
பொறியா டரவம் பொறுத்தமண் ணேழும்பொறுத்த தொங்கல்
வெறியாடு குங்குமத் தோளண்ண லேபுள்ளி வெள்ளைநிலா
மறியாடு செங்கை மதுரைப் பிரான்பொருள் வண்மையையன்
றறியாம லோகொடுத் தாருடல் பாதியு மம்பிகைக்கே.       386

தலைவன் பொருள்வயிற் பிரிந்தமை தோழி
தலைவிக்குரைத்தல்
தொடைக்க டங்காத புயத்தா ரழகிய சொக்கர்கைவேற்
கடைக்க டங்காத கயல்விழி யாயெதிர் கண்டவன்றே
யிடைக்க டங்காத தனந்தள ராமலிருக் கவுங்கள்
கொடைக்க டங்காத தனந்தன மானங் குருசிலுக்கே.       387

மாலைப்பொழுது கண்டு வருந்தல்
திருந்தாத தொண்டு திருத்திய தேசிகத் தெள்ளமுதாய்க்
குருந்தாய நீழல் புகுந்திருப் பார்தமிழ்க் கூடல்விண்ணோர்
அருந்தா வமுதனை யாயன்பர் போகவு மாருயிர்கொண்
டிருந்தா ருயிருண்ண வோவந்தி மாலை யெதிர்ப்பட்டதே.       388

பனிக்காலங் கண்டு வருந்தல்
துறப்பார் தொழுகழற் கால்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டறப்பா தகமென்செய் தோநெஞ்ச மேயறத் தோடுதம்மை
மறப்பார் மறப்பதை முன்னறி யாதமனத் தொடும்பெண்
பிறப்பா ரொருவர்க்கு மோபனிக் காலம் பெரும்பிழையே.       389

இரவினீட்டம்
மீளா விரவி தடந்தேரு மின்னமு மீண்டுசென்ற
கேளா மவர்வருங் காலமு மாய்நவ கீதம்வல்லாற்
காளாய் விறகுவிற் பாரால வாயி லதுவுமொரு
நாளாய் விடிவதுண் டோகங்குல் யாமம் நடந்தெமக்கே.       390

தலைவியைத் தோழி தெளித்தல்
வையும் புலவு மறாமழு வாளர் மதுரையில்நீ
நையுங் கவலைப் படுவதென் னோவொரு நாளிரவி
கொய்யுங் கலியுளை மான்றேர் திரிந்து குடக்கெழினும்
பொய்யும் புகல்வ துண்டோவணங் கேநம் புரவலரே.       391

தலைவியைத் தலைவன் சுரத்திடை நினைதல்
நனையா ரளக நறுங்காரு முத்த நகையுமொன்றும்
புனையாது சோபை தரும்புண்ட ரீகமும் பொற்புயத்திற்
கனையாழி மான்புரப் பார்கடம் பாடவிக் கள்விகொண்டு
நினையாமுன் னெஞ்சம் புகுந்தன ளாலென் னினைவதுவே.       392

தலைவன் சுரத்திடை நெஞ்சொடு கூறல்
மருட்பா லவரறி யாமது ரேசர் மனங்கவலா
வருட்பா லவரொரு நால்வருக் கோதிய வாகமத்தின்
பொருட்பா லறமுத லாகவெல் லாந்தரும் பொன்னைவிட்டுத்
தெருட்பால தோமன மேயிடை யேயொன்று தேடுவதே.       393

தலைவன் தலைவிவருத்தம் நினைந்து கூறல்
ஆலைத் துழனி யறாவால் வாயரணி நகர்சூழ்
சோலைக் குருகிளஞ் சேவலெல் லாந்(தொக்கி)ருக் குங்கங்குல்
வேலைக் கலவி மறவாது சேக்கை விரும்பிச்செல்லு
மாலைப் பொழுதுகண் டாலுய்யு மோவென் மடமயிலே.       394

காரொடு கூறல்
முளையிட்ட முத்த முகிணகை யார்திரு முன்பினந்தே
ருளையிட்ட வாம்பரி முன்செல்வை யோநறை யோதியர்க்கு
வளையிட்ட சொக்கர் மதுரேசர் சுந்தர மாறரன்று
தளையிட்ட வருன்னை விட்டில ராகிற் சலமுகிலே.       395

தோழி தலைவிக்குப் பொருள் வரவுரைத்தல்
இற்பா லறமுந் தொலையாத வின்பமு மெய்துவிக்கும்
பொற்பாய செவ்விப் பொருளுட னேபுலம் பூழிபட
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தசங்கச்
சொற்பா வலர்புகழ் தோன்றல் பொற்றேர்வந்து தோன்றியதே.       396

தலைவன் வருத்தந் தீர்ந்து கூறல்
தோட்டுச் சுரிகுழ லாரின்ப வாரி துளும்புமுலை
மோட்டுத் தடம்படிந் தாடியுய்ந் தேனலை மோதுசடைக்
காட்டிற் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிப்பொருள்
வேட்டுச் சுடுசுரம் போய்வினை யேனுற்ற வெவ்வழற்கே.       397

பொருண்மேற் பிரிவு முற்றும்
---------------

9. ஓதற் பிரிவு

தலைவன் தோழிக் கோதற் பிரிவுணர்த்தல்
நாவித் தகர் சென்றிருந்தமை யாவிய னாடியன்று
பாவித்த சங்கப் பலகையின் கீழுழை பார்த்திரங்குங்
காவித் தடங்கணல் லாய்கடம் பாடவிக் கண்ணுதல்போய்ச்
சேவித்து நிற்குந் தமிழ்கெதி ராயென்கொல் தேடுவதே.       398

தோழி தலைவன் பிரிந்தமை தலைவிக்குரைத்தல்
கொல்லாற் செயலறி யாக்கொடுஞ் சூலத்தர் கூடனல்லாய்
மல்லாற்கு(ந்) தோளண்ணல் வாய்மைநன் றேமுத்தர் வாய்திறந்து
சொல்லாப் பொருளு மறமுமண் ணாளத் துணிபொருளு
மெல்லாப் பயனுந் தருங்கல்வி யாமென்ப தெண்ணினரே       399

தலைவி பிரிவாற்றாமை கூறல்
மணந்தாழ் சடையர் மதுரா புரியின் மனக்கவலை
கொணர்ந்தாவி கொள்ளை கொளும்பிரி வேகுழை யக்குழையப்
புணர்ந்தா ருயிரிரு வர்க்குமொன் றாமென்று பொய்மொழிந்து
தணந்தா ரையுமறி யாயிருந்த தாரையென் சாதிப்பதே.       400

தலைவன் வந்தமை
தோழி தலைவிக்குரைத்தல்
வேய்வந்த தோளி தடாதகை சாபம் விடுத்தவளுக்
காய்வந் தரசிருப் பாரால வாய்முருந் தாயரும்புந்
தூய்வந்த மூரற் றுடியிடை யாயென்ன சோபனமோ
போய்வந்த துன்ற னிறைவர்பொற் றேரும் புரவியுமே.       401

கலந்துழி மகிழ்தல்:
தலைவன் துறவு நினைதல்
வாழிப் புவனந் தொழுமது ரேசர் வரசரணச்
சூழிக் கமலந் தொழுநெஞ்ச மேயுயிர் தொக்கடங்கு
மூழிக் கடைசென்று மானந்த வாரமு தூறவின்ப
வாழிக்கு மான வருங்கல மாமிவ் வருந்ததியே.       402

காழிக் கவுணியக் கன்றுண்ட பான்முலைக் கண்ணியடிச்
சூழிக் கமலமுந் தாமணிந் தார்விண் சுருட்டுதிரை
யாழிக் கடலமைத் தாரால வாயுறை யத்தர்மற்றை
வாழிக் கமல மெனக்களித் தாரடி மாறிவைத்தே.       403

ஓதற் பிரிவு முற்றும்.
கற்பு முற்றும்.

மதுரைக்கோவை முற்றிற்று.

~~~~~~~~~~~~~~~~~

This file was last updated on 02 August 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)