pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 1
துதிகவிகள் & ஸ்ரீ மணவாள மாமுனிகள் நான்மணிமாலை

tiruvallikkENi pArtacAratip perumAn mAlai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 1
துதிகவிகள் & ஸ்ரீ மணவாள மாமுனிகள் நான்மணிமாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----

இப்புத்தகம் வேண்டியவர்கள் புரசைப்பாக்கத்தில் வினை தீர்த்தான் முதலியார்
வீதியில் கீழண்டைவாடை 12-வது கதவிலக்க முள்ள வீட்டிலும், சூளையில் சாமி
பிள்ளை வீதியில் மேலண்டைவா டை 25 - வது கதவிலக்கமுள்ள வீட்டில்
சே. முத்துகிருஷ்ண நாயுடவர்களிடத்திலும், முத்தியாலுபேட்டையில் பவளக்காரத்
தெருவில் மேலண்டைவாடை 42-வது கதவிலக்கமுள்ள வீட்டில்
அ . இரத்தின வேலு பிள்ளையவர்களிடத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.
புத்தகம் ஒன்றுக்கு விலை அணா 12.
--------------
பிரபந்தத்திரட்டின் விவரண அட்டவணை.


1. துதிகவிகள்
2. ஸ்ரீ மணவாள மாமுனிகள் நான்மணிமாலை
3. எதிராசமாமுனிகள் நான்மணிமாலை
4. முதலாழ்வார்கள் மும்மணிக்கோவை
5. நம்மாழ்வார் நான்மணி மாலை
6. கோதைநாயகித்தாயார் மாலை
7. வேதவல்லித் தாயார் மாலை
8. உருப்பிணித்தாயார்மாலை
9. அணிமாமலர்மங்கைத்தாயார் மாலை
10. என்னைப் பெற்றதாயார் மாலை
11. கனகவல்லித் தாயார் மாலை
12. பெருந்தேவித்தாயார் மாலை
13. அலர்மேன்மங்கைத்தாயார் மாலை
14. அரங்கநகரன்னையடைக்கலமாலை
15. பார்த்தசாரதிப்பரஞ்சுடர் மாலை
16. பார்த்தசாரதிமாயவன் மாலை
17. பார்த்தசாரதிப்பெருமான் மாலை
18. வீரராகவப்பெருமான்மாலை
19. அத்திகிரியந்தாதி
20. சேடகிரியந்தாதி
21. அரங்கநகரப்பனடிப்புகழ்ச்சிமாலை
22. தொண்டை நாட்டுத் திருப்பதிப் பஞ்சரத்தினங்கள் -22
22.1. திருக்கச்சி - அத்திகிரி, 22.2. திருவட்டபுயகரம்
22.3. திருத்தண்கா, 22.4. திருவேளுக்கை
22.5. திருப்பாடகம். 22.6. திருநீரகம்
22.7. திருநிலாத்திங்கட்டுண்டம், 22.8. திருவூரகம்
22.9. திருவெஃகா, 22.10. திருக்காரகம்
22.11. திருக்கார்வானம், 22.12. திருக்கள்வனூர்
22.13. திருப்பவளவண்ணம், 22.14. திருப்பரமேச்சுர விண்ணகரம்
22.15. திருப்புட்குழி, 22.16. திருநின்றவூர்
22.17. திருவெவ்வுளூர், 22.18. திருநீர்மலை
22.19. திருவிடவெந்தை, 22.20. திருக்கடன்மல்லை
22.21. திருவல்லிக்கேணி, 22.22. திருக்கடிகை
------------------

1. சாத்துகவிகள்


ஸ்ரீ, ஸ்ரீமதே ராமாநுஜாயநம :
சாத்துகவிகள்

ப்ரபந்ந வித்வான் காஞ்சிபுரம்,
ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்கள் இயற்றிய
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தங்கள்.


பொன்பூத்த நறுங்கமலப் பொகுட்டுறையு நான்முகத்துப் புத்தே ளீன்ற,
மன்பூத்த மன்பதைக ளீடெடுப்பில் லாவிறைவன் மலர்த்தாட் கன்பாய்த்,
தென்பூத்த வீறிலின்பச் சிந்துவிலாழ்ந் திடுமுரிமை தேறா தென்றுங்,
கொன்பூத்த பவப்புணரி வீழ்ந்தயருங் கொடுமையினைக் குறித்து நோக்கி,       (1)

பரிவொடுமன் னவைமோக்க பாரமதை யடைந்திடற்கோர் பஃறி யாக,
அரியபெருங் கருணையினம் முலக்குரு வருளியநூ லனைத்தி னுஞ்சீர்,
பெரியர்திருப் பவளம்வந்து பிறங்கிடுநா லாயிரத்தும் பேசு சீர்த்திக்,
குரியகுரு பரம்பரையென் றுரவோர்கள் கொண்டாடு மொருநூ லுள்ளும்,       (2)

பகரருஞ்சீர்ப் பாகவதம் பளகில்விண்டு புராணமெனும் பனுவ லுள்ளும்,
நிகரறுபா ரதராமா யணவிதிகா சங்களினு நெறிமை யார்ந்து,
தகைமையுறு மானவநூ லினுமேனை நூல்களினுஞ் சாற்றும் பற்பல்,
வகையமைநற் பொருள்கடம்மின் வாய்ப்புடையவாங்காங்கே வரித்தெடுத்தே,       (3)

தொடுகடல்சூழ் நிலப்புலவர் தொக்கிருந்துண் டுளமகிழ்வான் றூய்மை யார்ந்த,
படுமதுமா மலர்மகள்சீர் நிலமகணீ ளைகடமக்குப் பரிவார் கொண்கன்,
நெடுமைநிறை குணக்கடலிற் றிளைத்தாடு மாரியர்க்கு நிலமேல் வந்த,
வடுவறுசீ ராழ்வார்க டமக்குமெழின் மாறனக்கும் வனப்பு வாய்ந்த,       (4)

துதிநலம்வாய்ந் திடுமாலை யொன்றுமநந் தன்கூற்றிற் றுலங்க வந்த,
மதிநலமார் மணவாள மாமுனிக்கும் வைகுந்த மன்ன மக்கட் ,
கதிநலமந் திரராஜ மளித்தருளெம் மெதிபதிக்கு மமல சேனா,
பதிகலையிற் றென்குருகைப் பதிவந்த பராங்குசனாம் பண்ண வற்கும்,       (5)

நலனமைநான் மணிமாலை யொவ்வொன்று மெவ்வெவரு நயக்குஞ் சீர்சால்,
குலனமைவெஃ காவினினற் பொய்கைதனிற் பொன்னிறமார் குசேச யத்தும்,
பொலனமைசீர்க் கடன்மல்லைப் புனிதமா தவிபூத்த புதுவீ யுள்ளும்,
புலனமைமா மயிலையிலோர் கிணற்றெழிலார் சேதாம்பற் பூவி னுள்ளும்,       (6)

வந்தருளெம் மாதியோ கிகளாய மூவருக்கும் வனப்பு வாய்ந்த,
பந்தமறு மும்மணிக்கோ வையும்புத்தூர்த் திருத்துழாய்ப் படப்பை வந்து,
நந்தமருங் கரத்தாற்கு நற்பாப்பூ மாலைதரு நங்க டாயாம்,
நந்தமர்முன் கரக்கோதை நாயகிக்கும் பற்பலநன் னயங்கள் வாய்ந்த,       (7)

அல்லியங்கே ணியிற்கிள்ளை யமர்பூவை யமிழ்தயிர்கண் டாதி நேருஞ்,
சொல்லியெழி லார்வேத வல்லியாய் தனக்குமெமைத் துரிச றுத்தாள்,
நல்லியலா ருருப்பிணியா நாயகிக்கு நீர்மலையி னண்ணி வாழும்,
வல்லியுறழ் தருமணிமா மலர்மங்கை யாய்க்கு நின்றை வாய்ந்திலங்கும்,       (8)

எனைப்பெற்ற தாய்தனக்கு மெவ்வுளில்வாழ் கனகவல்லி யெனுமன் னைக்குந் ,
தனைப்பொருவு மத்திகிரிப் பெருந்தேவித்தாய்தனக்குஞ் சசிமேற் றாவும்,
நனைப்பொழில்சூழ் சுகனூரி னண்ணுமலர் மேன்மங்கை நாயகிக்குங் ,
கனைப்புனற்பொன் னிக்கிடைவா ழரங்கநக ரன்னைக்குங் காதல் கூர்ந்தே       (9)

அந்தமுறும் பதப்பொருள்க ளமைந்திலங்கு சதச்செய்யு ளலங்கல் வேய்ந்து,
சந்தமுறீஇத் திகழல்லிப் பல்வலஞ்சார்ந் துறைபார்த்த சார திக்கும்,
பந்தமறச் சாலியவி முனிக்கருளி யெவ்வுள்வாழ் பரம னுக்கும்,
நந்தமையா ளரங்கநக ரப்பனுக்கு மொவ்வொர் கண்ணி நயந்து நல்கி.       (10)

வாரணமா மலையுறையும் வரதனுக்கு நாகமலை வாழெந்தைக்குஞ்,
சீரணவு மந்தாதி மாலையொவ்வொன் றளித்தென்றுந் திகழுந் தொண்டை,
ஏரணவு திருப்பதிக ளிருபானோ டிரண்டினுள்ளு மிலங்கிநிற்குங்,
காரணவெம் மடிகளுக்குத் தனித்தனியைம் மணிமாலை கவினச் சூட்டி,       ( 11)

பிறவிநர லையைக்கடந்து பேரின்ப முத்தியெனும் பெரியதீரத்,
துறவியைந்து முத்தாப வுருப்பமொழிந் துய்ந்திட்டா னுயர்சூர் மாளத்,
தெறுகுமரன் றென்பொதியிற் குறுமுனிவற் கிசைத்ததமிழ்ச் சீர்சால் பாடை,
யுறுகடலை யொருங்குண்டு தேக்கெறிந்த வுரவோனல் லொளிகு லாவும்,       (12)

புலவர்பெரு மானென்ன வவதரித்துப் பூவுலகிற் பொருந்துமுப்பால்,
நலமுலவ வளித்தபெரு நாவலர்வாய்மை யைமறுத்த நாப்பூச் செல்வன்,
அலகறுநற் குணங்களா மணிமணிப்பூ ணெஞ்ஞான்று மணிந்த சீலன்,
இலகுபொழிற் புரசைவரு மெழிற்சபா பதிக்குரவ னிறும்பூ தெய்த,       (13)

அட்டாவ தானமியற் றரும்புலவர் திலகனன்னோ னலர்த்தாட் பத்தி,
தட்டாது செய்துநனி யிலக்கியங்க ளிலக்கணங்க டவாது கற்றோன்,
மட்டாரும் பொழிற்கச்சிக் கட்டாம்பியிரா மாநுசன்மா மலர்த்தாள்பூண்டு,
கட்டாரும் பிரபத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்துக் களித்து வாழ்வோன்,       (14)

அருணிதியாந் திருமாறன் னடித்தொண்டே யியற்றியென்று மஃகாச் சீர்த்திக்,
கருணிகர்நற் குலவிளக்கா யொளிர்நாரா யணக்குரிசில் கவினச் செய்த,
தெருளுறுநற் றவப்பயனே யுருத்ததென வுலகர்புகழ் செம்ம றேசார் ,
பருணிதரே றெழிற்புரசைப் பள்ளிகொண்டா னெனுமியற்பேர்ப் பாவ லோனே.       (15)
-------------

திரிசிரபுரம் - மஹாவித்வஜ்ஜநசேகரர்
ஸ்ரீமாந் கோவிந்தப்பிள்ளையவர்கள் குமாரரும்
பெங்களூர் சென்ட்ரல் காலீஜ் தமிழ்த்தலைமைப் பண்டிதருமாகிய
ஸ்ரீ மாந்-தி-கோ - நாராயணசாமி பிள்ளையவர்கள் இயற்றியவை.


சீரார் சங்கந் தவவமருந் திருவார் தொண்டை நன்னாடாம்,
பாரா ரிரத்தி னாகரத்திற் பண்பொற் பணிநீர் கவினாக்கம்,
நேரார் பொகுட்டுச் சததளந்தண் ணிலைத்தா திசைமுத் தமிழ்கீதந்,
தாரார் சென்னை நகராகுஞ் சரோசஞ் சார்ந்த புரசைவயின் ,       (1)

குலவு செல்வக் கருணீகர் குலத்தி னாரா யணக்குரிசில்,
நிலவு தவத்தில் வந்துதித்து நிகழும் கச்சிக் கடாம்பி நலம்,
உலவி ராமா நுஜாரியன்றா ளுற்றுப்பற்றி யிதம் பெற்றாழ்ந்,
தலகி லாத தரிசனநூ லாய்ந்து ப்ரபந்ந ருடன்கலந்தோன்.       (2)

வேறு
வள்ளிகொண்ட வரனைநிகர் சபாபதியா மஷ்டாவதானி மன்பால்,
நள்ளிகொண்ட விலக்கியத்தோ டிலக்கணங்க ணன்குகற்ற நல்லோன் வல்லோர்,
புள்ளிகொண்ட பத்திவயி ராக்கியநன் ஞானநலம் புகுந்த நெஞ்சன்,
பள்ளிகொண்டா னெனும்பெயராற் பரவுகொண்ட பெருந்தகைய பாக்ய யோக்யன். (3)

புன்னெறிய சமயங்கள் புறங்கண்டு விண்டுவிண்டு புகன்ற சீர்சால்,
நன்னெறிய சமயமிது சமயமிது கொண்மினென நவின்று கொண்டோன்,
கன்னெறிய கடுங்கானங் கடந்துவரி யணைகட்டிக் கண்டம் பத்தும்,
வன்னெறியு முடையானை வதைத்தவனைத் தன்மனத்தில் வைத்துவாழ் வோன். (4)

வேறு
பரனிலை யுயிர்க டந்நிலை நெறியாய்ப் பகர்நிலை தடைசெயூழ் வாழ்வின்,
றிரனிலை கூறுஞ் செவ்வியோர் மொழிகள் சிக்கறத் தெரிந்துபக் குவர்க்கு,
வரனிலை யாகத் தெரிப்பவன் றூய்மை வாய்மையே யாதியாங் குணங்கள்,
உரனிலை யாக வுறைதரு மிடனா யுற்றவன் வித்தகத் தோன்றல். (5)

வேறு
ஆறனைத்தும் புகழ்கங்கை யடியானை யடியாரை யகலா துள்ள,
ஆறனைத்து முடையானை யன்றியய லறியாத வறிவை யார்ந்தோன்,
மாறனைப்பா டினரந்த மதுரகவி யெனப்பட்டார் மற்றின் னோனம்,
மாறனைப்பா டியவதனான் மதுரகவி யென்கோயான் வழுத்து மாறே. (6)

வேறு
ஆரிய ராழ்வா ரச்சுதன் றுதியே யாதியா யிருபதோ டொன்றுந் ,
தேரிய லணிகொ டொண்டைநன் னாட்டுத் திருப்பதி யிருபதோ டிரண்டிற்,
கேரியல் பஞ்ச ரத்தின மெனும்பா விலம்பக மியம்பினன் சிறப்புக்,
கூரிய லாக வெம்மனோர் கூறுங் கொள்கைய தன்றெவன் குறிப்பாம். (7)
------------------

ஸ்ரீமாந் - தி - செல்வகேசவராய முதலியார் M.A.
இயற்றிய நிலைமண்டில வாசிரியப்பா


வடவேங்கடம்புகழ் வாய்ந்ததென்குமரி
குடபாற்குடகங் குணபாற்குரைகடல்
என்றநான்கெல்லைத் திருந்தமிழ்நாடு
நின்றவந்நாட்டிடை துன்றித்தோன்றிய
புத்தமுஞ்சமணமும் புகலுமற்றும்பல
புத்தம்புதியவாப் புகன்றிடுமதங்களும்
பிறையெனவுவாவெனப் பெருகியுங்குறைந்தும்
நிறைவிலவாகி நீங்கிக்கரந்தன
வழிவரும்வைணவம் வயங்குசைவம்மென
மொழிபடுமதங்களிம் மூதுலகந்தனில்
இன்றுகாறு நின்றுநிலைத்தன
மன்னிவழங்குறூஉ மன்னவைதம்முள்
ஆரியாவர்த்தத் தரியராமுனிவரர்
சீரியபுலவர்கள் செழுநிலத்தரசர்கள்
என்றிவர்த்தழீஇ யேழையோர்த்தணந்து
தென்றிசையண்மி நன்றிசைகெழுமிய
விசிட்டாத்துவிதமாம் விண்டுவினமதந்தனை
விசிட்டநல்லொழுக்குரை வேதவித்துக்களாம்
ஆழ்வார்களுந்தெரு ளமைந்தவாரியர்களும்
வீழ்நாள்படாது விழைந்துவளர்த்தனர்
காரணப்பொருளா நாரணப்பரமனைத்
தாழ்வொன்றிலரா மாழ்வார்பதின்மரும்
ஒருமிடறாக வுவந்துபழிச்சிய
பெருமைசான்மறைப்பொருள் பிறங்கிடுந்தமிழ்மறை
உரையொடும்வியாக்கியை தருபொருளுணர்ந்தும்
ஐம்பொருடம்மையுஞ் செம்மையிற்றெரித்திடுஞ்
சீரியவாரியன் றிருவடிகளையடைந்
தோரியல்ஞானத் தாருயிருயத்தகும்
ஐந்துகிரியையு மடைவுடனடைந்து
மும்மறையின்பொருள் செம்மையிலுணர்ந்து
முத்தத்துவநூன் மொழிந்திடுமரும்பொருள்
சித்தந்தன்னிற் றெளிவுறத்தேர்ந்து
புல்லொழுக்கந்தடைவிடான்றன்னைப்
சாத்து கவிகள்.
புல்லொழுக்கெல்லாம் பொட்டெனப்போக்கி
நல்லொழுக்கந்தனை நல்லணியெனக்கொண்
டிரவுநன்பகலு மிடைவிடாதென்றும்
படியெலாந்தாயநம் பரம்பரன்றன்னையும்
அடியர்கடம்மையு மகமலர்தனினிறீஇப்
புலனுறுமன்புடன் பூசனை புரிந்திடும்
நலமுடையவர்வை ணவசிகாமணிகளாம்
இன்னனோர்தந்தொகை யெஞ்சுமிந்நாடனில்
தன்னனோர்தந்தொகை தழைப்பானினைந்து
அரிசரணடைந்தவ ரவித்தையாதிகளை
அரிசமயக்கலை யதன்பொருள்கட்குத்
தருப்பணமாகவுந் தரிசனந்தனைநல்
விருப்புடனுணர்வார் விழைபழம்பாடம்
ஆகவுமென்னனோ ரவாவினைமேற்கொண்
டோகையினடியர்தம் மொள்ளடியேத்தெடுத்
தந்தமிலாதொளி ரந்தாமத்திரு
மாமணிமண்டபம் வழிமுறையடைந்து
மாமணிமார்பினன் மாணடிதொழுதுய
ஆரியராழ்வா ரசசுதன்றுதிகளும்
வாரிநேரருண்மண வாளமாமுனிக்குந்
தெருணிதியெதிபதிச் செல்வன்றனக்கும்
அருணிதியாகுநம் மாழ்வார்தமக்கும்
உதித்தபேரன்புடன் றுதித்திடவொவ்வோர்
வான்மணிபோலொளிர் நான்மணிமாலையும்
நீதியினுறையுளா மாதியோகிகள்
மூவர்கடமக்குமோர் மும்மணிக்கோவையுந்
தேவர்கணாயகன் றிருவருளாலுறூஉம்
மேதையோர்புகழ்திருக் கோதைநாயகிக்கும்
இமிழ்திரைக்கடல்வரு மமிழ்தினுமினியதாஞ்
சொல்லியாம்வேத வல்லியாய்தனக்குந்
திருப்பணிதிகழுரத் துருப்பிணித்தாய்க்கும்
மன்னணிமாமலர் மங்கையாய்தனக்கும்
பின்னமிலாதெனைப் பெற்றதாய்தனக்கும்
மெல்லியற்கனக வல்லியன்னைக்கும்
ஓவியவியற்பெருந் தேவியன்னைக்கும்
பொங்கொளியலர்மேன் மங்கையம்மனைக்கும்
நிகரில்சீரரங்க நகரன்னைக்கும்
எவ்வெவருந்தொழ வொவ்வொர்பாமாலையும்
பார்த்தசாரதியெனப் பகர்ந்திடும்பரஞ்சுடர்
மூர்த்திக்கினியவா மூன்றுசொன்மாலையும்
உலகினில்வாழ்தரு மலகிலாவுயிர்கள்பால்
வாரமருளத்தெம் வீரராகவப்
பெருமான்றனக்கு மிருமாநிலத்திற்
றிகழ்புகழரங்க நகரப்பனுக்குந்
தேற்றமாயொவ்வொரு மாற்றமாலையும்
அத்திகிரியிசை யமைசேடகிரிக்
கொத்தவந்தாதியென் றுரையிசைமாலையுந்
தொண்டைநன்னாட்டினிற் சுரக்குநல்வளங்கெழூஉம்
பண்டையவாந்திருப் பதிகளோரிருபான்
இரண்டினுக்குந்தவத் திரண்டபேரன்புடன்
மனத்தினிற்றொழுதெழத் தனித்தனியொவ்வோர்
பஞ்சரத்தினப் பனுவனன்மாலையும்
இயற்றியுடனே யியற்றியாங்கிலியத்
தேசந்திகழ்ந்திடச் செங்கோல்செலுத்திடும்
அறனையுந்திறனையு மறிஞர்கணாடொறும்
பேசுபெரும்புகழ் பெறும்பேரரசியாம்
அன்னைவிக்டோரியா வென்னுநற்பெயரினாள்
இந்துதேசத்துவர் விந்துவினொளிர்தருஞ்
சக்கரவர்த்தினி புக்கரசியற்றிடுங்
காலையிற்கருவியாங் கருமுகிறவழ்பல
சோலைசூழ்புரசைத் தொல்பதியதன்கண்
வியனுறுமயோத்தியா ளயனெனும்பெருமகன்
றருமகன்றசரத சக்கரவர்த்திதன்
றிருமகன்சார்ங்கவிற் சேவகனமரர்கள்
தந்நிதியடியர்க டயாநிதிவாழ்தருஞ்
சந்நிதிமுன்னெணத் தகுங்கலியுகச்சமை
ஒன்றுமையாயிரத் தொன்றினில்விகாரி
வருடங்கடக மதியமுன்பக்கம்
செப்புமேழாந்திதி முப்பதாந்தெய்தியில்
ஆதிவாரம்வருஞ் சோதிநாடன்னிற்
கவியரங்கேற்றினன் கவிவல்லுநர்களும்
புவியரும்புகழ்தமிழ்ப் புலமைசான்றோன்
எழுங்கதிரவரொளி மழுங்கவெஞ்ஞான்று
நந்தாதொளிர்திரு நாடுபெற்றுய்வான்
ஐந்தாமுபாயமே யரணெனக்கொண்டோன்
தப்பொழுக்கினரைநற் றவவொழுக்கினராச்
செப்பமாச்செய்திடுஞ் சித்தகுளிகையிந்
நிலம்புகழ்சீர்கரு ணீகர்குலப்பதி
நலம்பெறுநாரா யணநன்னாவலன்
தவப்பயனெனவரு தநயனல்விநயன்
நிவப்புறவோங்கி நீடுறுவளம்பெறும்
புரசையம்பதியினிற் புலவர்தந்திலகனாய்
முட்டொன்றின்றியே யட்டாவதானம்
இயற்றியிசைகெழூஉ மியற்றமிழ்ச்சபாபதிக்
குரவன்றனையடுத் துரநல்குவதாங்
கனவிலக்கியவிலக் கணநூல்கற்றோன்
மாடகூடங்களார் கூடலூர்வாழ்தரும்
முதலியாண்டானென நுதல்பெருந்தகையுழித்
தரிசனக்கலைப்பொருள் கரிசறக்கற்றோன்
விரிபயோத்தியிடை வரியராவணைமிசைப்
பள்ளிகொண்டருளெம் பரம்பரன்பதந்தொழும்
பள்ளிகொண்டானெனும் பாவலோனே.
-----------------

புவனகிரி ப்ரபந்நவித்வான் ஸ்ரீமாந்
அழகியமணவாள தாசரவர்க ளியற்றிய
பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்


மதிமேவு மாரியர்க ளாழ்வார்கண் மாதவன்
      மலரடி முனந்துதித்து
மறைமுதற் றனிமுதல்வ னாமெந்தை மலர்மங்கை
      மதுபமுரல் கோதையாண்டாள்
கதிமேவு பிரபத்தி நெறிகாட்டு மெதிராசர்
      கருணைபொழி வரவரமுனி
கன்னித் தமிழ்ச்சுருதி யோகிமுத லாழ்வார்கள்
      கண்ணுமிவர் கழலிணைகண்மேற்
றுதிமேவு பாவணிகள் சொன்னயம் பொருணயந்
      தோன்றத் தொகுத்தணிந்தான்
தூயமா றரிசனத் தொல்கலைப் பொருளோர்ந்த
      சுகுணன்வள மேவுபுரசைப்
பதிமேவு செம்மன்மெய் யுணர்வுற்ற பாகவதர்
      பண்பே பழிச்சுமுரவோன்
பாமகள் விலாசனம் பள்ளிகொண் டானெனப்
      பகர்பெயர்கொள் பருணிதனரோ.
----------------

கோயம்புத்தூரைச்சார்ந்த பூளைமேட்டிலிருக்கும்
வித்வான் ஸ்ரீமாந் வேணுகோபாலசாமி நாயுடவர்கள் இயற்றிய
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தங்கள்.


உலகமெலா மோதத்தி னுறுவலுறா துகந்துண்டஃதொழியுங் காலை,
இலகவுமிழ்ந் தளிக்குமெம்மா னிறைவர்தமக் கிறைவனென விழிபொன் றில்லா,
அலகறுசீ ராரணத்தி னந்தமறை தலையறிந்த வறிஞர் தம்மிற்,
றிலகமெனத் திகழ்பெரியர் சேவடியே தஞ்சமெனத் தெளிந்த சீலன் (1)

மாதவன்போ னீண்டபெரு மாப்புகழோ னவன்கழனீர் மானுந் தூயோன்,
ஆதவன்போல் வாய்மை யுள்ளோ னரிந்தமன்ற னடிக்கன்பி லம்ப ரீடன,
நீதவன்போ டருண்முதலா நிகழ்த்திடுநற் குணங்களுக்கோர் நிலய மானோன்,
தீதவன்போழ் செல்வத்திற் கயிங்கரியச் செல்வமே சிறந்த தென்போன். (2)

உத்தமதத் துவமூன்றி னுட்பொருளி னுண்மைநிலை யுணர்ந்தோன் வேத,
வித்தமர்சொல் விசிட்டாத்து விதசித்தாந் தத்தையெங்கும் விளங்கச் செய்வோன்,
மத்தமதா வளத்தினிரு மருப்பொசித்தோன் மலரடியை மறவா தென்றுஞ்,
சித்தமத னிடையிருத்தித் திறம்பாமற் றினந்தோ றுஞ் சிந்தை செய்வோன். (3)

ஆழ்வார்க ளாரியர்க ளருளிச்செய் யருங்கலையி னமைந்த மோக்க,
வாழ்வார்மந் தணப்பொருடேர் வைணவர்தாட் டூளியாம் வாழ்வு கப்போன்,
ஊழ்வாட்டு முலக்குரு வுரைத்தவொண்ணூற் பொருளெலா மொளிரு ளத்தோன்,
கேழ்வானோர் குருவேபோற் கேள்வியுள்ளோ னனுட்டானக் கிரமம் வாய்ந்தோன். (4)

சீரகத்தின் மும்மைமறை நூல்கடமிற் செறிந்தபொருட் டேர்ச்சி மிக்கோன்,
பேரகத்தி யந்தொல்காப் பியமுமவைக் கிலக்கியமாம் பெருநூல் யாவும்,
ஓரகத்தினுற ககற்ற வொள்ளியோ ருழிக்கற்ற வுரவோன் வேலைப் ,
பாரகத்திற் பண்டையா ரியாகணடை பாராட்டும் பண்பின் மிக்கோன். (5)

இத்தகையார் பள்ளிகொண்டா னெனும்பெயரெம் மேந்தலிரு மறையு மோர்ந்த,
சித்தன்வர யோகியெதி பதிகுருகைச் செம்மலிவர் சிறந்த சீர்த்திக்,
கொத்தநான் மணிமாலை முதலாழ்வார் மூவர்கட்கு முரவோ ரென்றும்,
நத்துமும் மணிக்கோவை நற்புதுவை வருகோதை நாயகிக்கும் (6)

அல்லியங்கே ணிப்பதிவாழ் வேதவல்லி யுருப்பிணியா மன்னை மார்க்கும்,
நல்லியனீர் மலைநின்றை யெவ்வுள்கச்சி நகர்சுகனூர் நல்ல ரங்கம் ,
புல்லிவா ழன்னையர்க்குந் தனித்தனியே தமிழ்ச்சொன்மணம் பொங்கு மாலை,
சொல்லியற்கை ரவக்கேணிப் பார்த்தன்றன் சாரதியாந் தொல் லோனுக்கும், (7)

எவ்வுளரங் கப்பதிவா ழிறைவர்கட்குந் தனித்தனியோ ரின்சொன் மாலை,
அவ்வுளரும் பொருளத்தி யரவமலை யார்களுக்கந் தாதி மாலை,
இவ்வுலகிற் றொண்டைநன்னாட் டிருக்குமிரு பானிரண்டென் றிசைக்குஞ்சீர்சால்,
செவ்விபெறும் பதித்திருமால் களுக்கொவ்வோர் பஞ்சரத்நச் செய்யுண்மாலை, (8)

குழுவல்வினை மற்றவற்றின் காரணகா ரியங்கணனி குலைந்து நீங்கி,
வழுவலில்சீ ரந்தாம வாணர்குழுக் கூடியென்றும் வாழும் வண்ணம்,
உழுவலன்பி னியற்றியவ ரவருபயத் திருவடியி லுகந்த ணிந்தான்,
நழுவலிலா நவச்சுவையா ரம்மாலை களினணுகு நயங்க ணாடின், (9)

புவிப்புலவர் தொழும்பதின்மர் தமிழ்மறையின் சாரமெலாம் பொதிந்த வென்கோ ,
கவிப்புலவர் புகழ்கம்பன் கவிகளினன் னயங்களெலாங் கலந்த வென்கோ ,
செவிப்புலனுக் கினியவிதி காசவற நெறிகளெலாஞ் செறிந்த வென்கோ ,
அவிப்புலவ ரமிழ்தென்கோ வின்னவென வறையகிலே னவனி யீரே. (10)
-------------------

வித்வான் பென்னலூர் - நாராயணசாமி நாயுடு புத்திரரும்
இந்நூலாசிரியர் மாணாக்கரு ளொருவருமாகிய நாதமுநி நாயுடவர்கள்
இயற்றிய நிலைமண்டிலவாசிரியப்பா.


உலககுருவரு ளுதவியபதினெண்
கலைகடம்மினுங் காட்சியாங்கண்பெறு
மேலோராய்ந்திடு நாலாயிரத்தினுங்
கருவரைந்தொழிக்குங் குருபரம்பரையினும்
மோகவதஞ் செயும் பாகவதத்தினும்
புராணமாம்விண்டு புராணந்தன்னினும்
இதிகாசங்களென் றிசைக்குமிரண்டினும்
மதிகாசொன்றிலா மானவநூலினுங்
குற்றமற்றனவா மற்றநூல்களினும்
பாற்படப்பகுத்துறை பற்பலபொருள்களில்
ஏற்பனசிற்சில வெடுத்தெடுத்தாங்காங்
கணிபெறவமைத்திம் மணிபடுகடல்சூழ்
நாட்டோர்நாடொறுங் கூட்டுண்டுப்பான்
பார்மகள்விரைச்செம் பதுமாதனையெனுஞ்
சீர்மகணீளைச் செல்வி நறகொண்கன்வண்
புகழெனும்புணரியிற் புக்கென்றுங்குடைந்
தகமகிழாரிய ராழ்வார்களுக்கும்
ஆரியமறைச்சிரத் தச்சுதன்றனக்குஞ்
சீரியதுதிகளாஞ் செய்யுண்மாலையும்
அரவரசாகிய வநந்தன்கலைவரும்
வரகுணனாமண வாளமாமுனிக்குங்
கவித்தவவித்தையிற் காலதத்துவமெலாந்
தவித்தலமருமித் தராதலத்தோர்தமைத்
திருத்திசசீதரன் றிருவடிக்காட்படும்
விருத்தியினமைக்கவிவ் விபுலைவந்தவனென
உள்ளியோருள்ளத் தெள்ளியோருரைத்திடுந்
துதிபதிபாதத் தெதிபதிதனக்குந்
தெருட்சேநேசன் செழுங்கலைதனில்வரும்
அருட்சடகோபனென் றறைமுனிவரற்கும்
வலம்பெறும்வானவர் வைகுமந்தாம்
நலம்பெறவொவ்வோர் நான்மணிமாலையும்
அஃகாவளத்திரு வெஃகாப்பதியுழி
அமலத்தடப்பொற் கமலக்கருவினும்
எல்லையிலிசைக்கடன் மல்லைமாநகர்வயின்
மாதவிபூத்ததோர் தாதவிழ்மலரினும்
வளங்கெழுமயிலையில் விளங்குமொர்கிணற்றறல்
பூத்தசெவ்வல்லியின் மாத்தகைக்கருவினும்
ஆவலினுதித்தரு ளாதியோகிகளாம்
மூவர்கடமக்குமோர் மும்மணிக்கோவையும்
நத்தூர்வளவயற் புத்தூர்வந்தருள்
போதநாயகியெனுங் கோதைநாயகிக்கும்
நல்லியலார்திரு வல்லியங்கேணிநற்
சொல்லியாம்வேத வல்லியாய்தனக்குங்
கருப்பிணிகளைந்திடு முருப்பிணியனைக்குந்
துங்கமாநீர்மலை தங்கணிமாமலர்
மங்கையம்மனைக்குநீர் மாவளநின்றையில்
உற்றுறையென்னைப் பெற்றதாய்தனக்கும்
எல்லிசேர்பொழிற்றிரு வெவ்வுள்வாழ்கனக
வல்லியன்னைக்குநல் வாரணமாமலை
மன்னிவாழ்பவளாய் மன்னுயிர்தமக்கெலாம்
ஆவியாகியபெருந் தேவியாய்தனக்கும்
அரிச்சிகன்றவழ்பொழிற் றிருச்சுகனூருறை
பொங்குசீரலர்மேன் மங்கையம்மனைக்கும்
நிகரறுமரங்க நகரன்னைக்குந்
தனித்தனிப்படிப்போர்க் கினித்திடவொவ்வோர்
பதமுறுபொருணயச் சதமணிமாலையும்
நல்லிக்காதிய நாடொறும்விளைவயல்
அல்லிக்கேணியென் றறைந்திடும்பதியுறை
தீர்த்தர்கடீர்த்தராந் தெளிவிசும்போர்தொழும்
பார்த்தசாரதிப் பரம்பரன்றனக்கும்
படர்ந்தசீரெவ்வுட் கிடந்தமாறனக்கும்
நிகரில்சீரரங்க நகரப்பனுக்கும்
எவ்வெவர்தமக்கு மினித்திடவொவ்வொரு
நூறுமாமணியெனக் கூறுமாமாலையுங்
கைந்நாகச்சிலைக் கரிவரதனுக்கும்
பைந்நாகச்சிலைப் பரந்தாமனுக்கும்
நந்தாதிப்புவி நயந்திடச்சதத்தொகை
அந்தாதிப்பே ரணிமணிமாலையுந்
தொண்டைநாட்டின்கண் மண்டிவிளங்குறூஉம்
ஐந்நான்கிரண்டென வறைதிருப்பதிகளில்
எஞ்ஞான்றும்முறை யெம்பெருமான்களுக்
கிம்மணிக்கடலுல கிசைத்திடவொவ்வோர்
ஐம்மணிமாலையு மணிபெறவியற்றிப்
பணிந்தவரவர்திருப் பாததாமரைகளிற்
றிணிந்தபேரன்புடன் பணிந்தனனணிந்தனன்
கரைசெயற்கரியதோர் கல்வியங்கடலாய்ப்
புரசையம்பதிவாழ் புலவர்தந்திலகனாய்
அட்டாவதானந் தட்டாதியற்றிடுஞ்
சுபாகரனெனச்சொலுஞ் சபாபதிமாலுழி
இலக்கியவிலக்கண விருநூற்பொருளெலாம்
அடுத்துச்செவியான் மடுத்துக்கற்றோன்
திருமாறரிசனச் செழுங்கலைப்பொருள்களுங்
கருமாலறுத்துநற் காட்சிதந்தருள்வதாஞ்
செந்தமிழாரணந் தந்தருள்பொருள்களுந்
தக்கோரறிவான் மிக்கோர்தாள்களுக்
கற்றோனாகி யருந்தொண்டியற்றிப்
பெற்றோன்பெரியரைப் பேணிடும்பெற்றியன்
சசக்கூடென்றுந் தவழ்தண்டலைசூழ்
கொசப்பூரெனும்பெயர் கொண்டநற்பதியினன்
அன்னக்கொடியின ரம்புயமாலையர்
என்னப்புவியோ ரிசைத்திடுமிசைகெழூஉஞ்
சீர்கருணீகரென் பேர்கெழுகுலத்தினன்
திவ்யாங்கமாமுனிச் செழும்பெயர்க்கோத்திரன்
செவ்வியதாய்த்திகழ் திரியாங்கசூத்திரன்
உய்வழிக்குரியவா மெய்வழிநூல்களே
பாராயணஞ்செயும் பண்பினனாகிய
நாராயணமா னல்கியநந்தனன்
நாற்பொருட்பயத்தவா நூற்பொருளடியனேன்
கருத்தினிலமைந்திட வருத்தியிற்பன்முறை
யோதகாரியெனும் போதகாசிரியன்
பாலலைதன்னினு மாலிலைதன்னினும்
பள்ளிகொண்டருளெம் பரம்பரன்பதம்பணி
பள்ளிகொண்டானெனப் பகரியற்பெயரும்
நேசமாயெவரு நிகழ்த்தெதிராச
தாசனெனச்சொலுந் தாசியநாமமும்
பெற்றோனென்னுழிப் பெருகன்பென்றும்
பெற்றோரெனச்செயும் பெருந்தகையோனே.
---------------------------

இந் நூலாசிரியர் மாணாக்கரும் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீபாதரேணுவுமாகிய
திருவல்லிக்கேணி சே. முத்துகிருஷ்ண நாயுடு இயற்றியவை.


சீரோங்குசெங்கமலை கேள்வனருளுற்பவச்
      செவ்வியிற் பெறுசிறப்பாற் –
    றிகழ்சாத்துவீகனாய்த் திடஞானமுடையனாய்த்
      தெளிவிசும்பெய்தவெண்ணுஞ்
சிந்தனையையுடையனா யாரியர்களாழ்வார்கள்
    சீதரன்று திகண்முன்னாச் –
    சீர்த்திபெறுமணவாள மாமுனிக்குந்தெருட்
    செல்வனா மெதிபதிக்குந்
தென்குருகைமாறனுக் குந்தனித்தனியே
    சிறந்தநான் மணிமாலையுந் -
    தீர்த்தர்முதலாழ்வார்கண் மூவர்கடமக்குமோர்
    திகழ்மும்மணிக்கோவையுஞ்
சீவில்லிபுத்தூரி னற்றுளவினடிவந்த
    சீர்க்கோதைநாயகிக்குந் -
    திருவலிக்கேணிமறை வல்லியாய்க்குங்கருணை
      சேருருப்பிணியனைக்கும்
நீரோங்குமலைவாழு மணிகொண்மாமலர்மங்கை
    நித்தியைக்குஞ்சோலைசூழ் –
    நின்றையென்னைப்பெற்ற தாய்க்கும்வளனோங்கெவ்வு
    ணிலவுபொற்கொடியனைக்கும்
நீர்மைபெறுகச்சிப் பெருந்தேவியாய்க் குநில
    நீர்வளச்சுகனூரில்வாழ் –
    நிமலையலர்மேன்மங்கை யன்னைக்குநிகரில்புகழ்
    நீடரங்கத்தனைக்கும்
நிகமவொலிநீங்காது நிகழ்கைரவக்கேணி
    நிலையகங்கொண்டபார்த்தன் –
    நெடுந்தேருகைத்தபெரு மானுக்குமுரையெவ்வு
    ணிகழ்வீரராகவற்கும்
நிறைசீரரங்கநக ரப்பனுக்கும்பெருமை
    நேர்ந்தபொருண்மணமாப்பயன் –
    நிலவுசொன்மலராத் தனித்தனியமைத்தநன்
    னிலைமைசேர்மாலைவகையும்

காரோங்குசேடகிரி மாலுக்குமத்திகிரி
      கரிவரதமாயனுக்குங் –
    கவினோங்குமந்தாதி யுந்தொண்டை நாட்டிற்
      கலந்தவிருபானிரண்டாக்
கரைதிருப்பதிகடொறும் வாழுமெம்பெருமான்
    களுக்கொவ்வொர் பஞ்சரத்நக் –
    கண்ணியுமியற்றியவ ரவர்திருக்கழல்களிற்
      கரையிலன்பாற்புனைந்தான்

கருணீகர்குலதிலக னென்னுநாராயணக்
    கலைவலோன்கா தன்மைந்தன் –
    சுடிப்புரசையட்டாவ தானச்சபாபதிக்
      கவிஞர்பெருமானுழியிலக்
கணவிலக்கியநூல்கள் கற்றுணர்ந்தோன்கணக்
    காவளக்கூடலூர்வாழ் –
    கருணைநிதி முதலியாண் டான்பாங்கர்மான்மதக்
    கலைகளின்பொருளுணர்ந்தோன்
பாரோங்குகச்சிக் கடாம்பிராமாநுசப்
      பகவனடிபற்றியுந்தோன் –
    பரவுமகிழ்மாலைப் பராங்குசன்முதற்பதின்மர்
    பவளவாயவதரித்த
பழையதமிழாரணப் பொருள்வைணவக்கலைப்
    பண்டிதர்கள்பாற்றெளிந்தோன் –
    பளகில்சீர்ப்பெரியவாச் சான்பிள்ளையுலககுரு
    பன்னுமவரிளவலென்னும்
பரஞானிமணவாள யோகிவரயோகியாம்
    பண்டையாரியர் கலைகளிற் –
    பதிந்தபொருள்யாவும் பதிந்தவுளனென்னுழிப்
    பரிவினன்னையினுமிக்கோன்
பகர்முதலியாண்டா னெனும்பரமபாவனன்
      பாலென்னையுய்த்தவள்ளல் –
    பள்ளிகொண்டானெனும் பேர்கொ ளெம்மாரியன்
      பைந்தமிழ்ப்பாவலனரோ.

வேறு.

தண்டுழாய்மோலியருள் பெறும்விசிட்டாத்துவித
    சமயத்தினான்சமமுடன் –
    றமமாதியாத்தும குணத்தினானூல்வழித்
    தழைஞானமுடனொழுக்கங்
கொண்டிலகுதூயவன் பிரபத்திநெறியினான்
    குருநிட்டையான்மும்மறை –
    கூறுமூன்றாகார மேவிநவவிதமாக்
      குறிக்குமுறவுந்தெளிந்தோன்
பண்டைமறைசொல்லுமுத் தத்துவத்துண்மையைப்
    பளகறத்தேர்ந்தருத்த –
    பஞ்சகமதன்பகுப் பைந்தினையுமோர்ந்தவன்
    பாரதந்திரியவிரதன்
புண்டரிகவாவிசூழ் பூதபுரிவாழுமெதி
    புங்கவன்றாள்புகலெனப் –
    புக்குவாழ்பள்ளிகொண் டானடித்துணைசிரம்
      புந்திவைத்தேத்து வெனரோ.
------------
இஃது பூர்வம் ஸ்கூல் இன்ஸ்பெக்டராயிருந்த வ. லஷ்மண நாயுடவர்கள் இயற்றியது. - வெண்பா .

தேனாதி யாயுலகிற் செப்புசுவைப் பல்பொருளும்
வானா ரமுது மதியேனே- ஆனாச்சீர்ப்
பள்ளிகொண்டா னென்னும்பேர்ப் பாவலர்கோன் பாமாலைத்
தெள்ளமுதத் தேக்கையுளந் தேர்ந்து.

அவையடக்கம்
விண்டுதரி சனநூனால் வேதவீரை
    வேலைகண்ட வேதியரும் வேலைவண்ணன்
தொண்டிரதந் துய்க்குமே னையகுலத்துத்
    தொண்டர்களுந் தத்தந்தாட் டூளியென்னுந்
தொண்டனிழை நூற்றுகளைச் சுரபிவற்சத்
    துரிசையின்பிற் கொண்டதனைத் தூயதாக்கிக்
கொண்டிடல்போற் கொண்டெனையுந் தூயோனாக்கிக்
    கொள்ளுவர்தம் பெருந்தகைமைக் குணத்தினானே.

மூலவிலக் கணவிலக் கியமுன்னீரை
    முற்றுமுண்ட மூதறிவான் முளைத்ததான
சீலமுறுஞ் சீரியர்காள் சிறியேன்செய்யிச்
    சின்னூல்க ளனைத்தினுள்ளுஞ் செறிந்திருக்குங்
கூலமிலாக் குற்றங்கள் கண்டுநுங்கள்
    குழவிமிழற் றுங்குதலைக் குயில்கள்கேட்டுச்
சாலவுளங் களித்தலெனக் களித்தனுங்கள்
    சான்றாண்மைச் சாயலுக்குத் தக்கதாமே.

உலகினினூ லனைத்துமுணர்ந் தோருமில்லை
    யொன்றுமுண ராதோரு மிலையுடற்கண்
உலவுகுணங் கண்மூன்றுங் கவியுரைப்போர்க்
    குறுமேத நான்குமொழித் தோருமில்லை
நிலவுமிந்த நியாயவகை நெஞ்சத்தோர்ந்த
    நெடுந்தகைமைப் பெரியரிந்நூ னிகிலத்துள் ளுங்
குலவுகுற்றங் குறியார்க ளெனுங்குறிக்கோள்
    கொண்டவரைக் களைகணாக் கொள்கின்றேனே.

அரங்கேற்றிய காலமும் இடமும்

அணிமேவுகலியாண்டு மாறனவதாரவாண்
    டையாயிரத் தொன்றினில் –
    அறைதரும்விகாரியாண் டாடிமுப்பான்றெய்தி
    யதனில்வருசுக்லபக்கம்
நணிமேவுசத்தமித் திதியிரவிநாள்சோதி
    நாடனில்வளங் கொள்புரசை –
    நற்பதியிலிசைகெழூஉ மஞ்சனையின்
      மைந்தனிரு நயனங்களிக்கவந்த
மணிமேவுமுடியுடைத் தயரதன்புதல்வனெம்
    வைதேகி மகிழ்மணாளன் –
    வானவர்கடனிமுதல்வன் மேவிவாழ்சந்நிதியில்
      வண்டமிழ்ப்பள்ளிகொண்டான்
றிணிமேவுமன்பினொடு மாரியர்களாழ்வார்கள்
      செங்கமலை மாலிவர்கண்மேற் –
    செப்புபாமாலைக ளரங்கேற்றினான்புலவர்
      செவிமனங்களிகொள்ளவே.
-----------------

ஸ்ரீ ஸ்ரீ மதேராமாநுஜாய நம:

அடியில் வருவன, அவற்றுடன் சேர்த்திருக்கும் நூல்களை இயற்றிய கொ. பள்ளிகொண்டான் பிள்ளை என்பவர் அந்நூல்கள் இனிது முடிதற் பொருட்டுத் தன் தந்தையும் பிரதம குருவுமாகிய கொ - நாராயணபிள்ளை, இலக்கிய இலக்கண நூல்களைப் பயிற்றின புரசை - அஷ்டாவதானம் - சபாபதி முதலியார், இரகசிய கிரந்தங்களை ஓதுவித்த கூடலூர் - முதலியாண்டான் தாஸர், பஞ்சசமஸ்கார பூர்வகமாக மந்திரமந்திரார்த்தங்களையுபதேசித்தருளிய ஸ்ரீமத் - உ - வே - கச்சிக்கடாம்பி - இராமாநுஜாசாரியார் முதலிய ஆசாரியர்கள், ஆழ்வார்கள், அநந்தகருடவிஷ்வக்ஸேநர், பெரியபிராட்டியார், பரத்துவாதி பஞ்சகங்களாகிய பரவாசுதேவன் என்னும் இவர்கள் விடயமாகச் செய்த துதிகவிகள்.

கொ - நாராயணபிள்ளை.
அரியோமென்றாதியிலக்கரமாதியடைவுடன் சொல்
பெரியோனையான்வினைப் போகத்திற்கிம்மையிற் பெற்றவுடற்
குரியோனைநாராயணனையுருளொற்றையூர்திகொளேழ்
பரியோனெனவுட்டிகழ்வானைப்பேணிப்பழிச்சுவனே. (1 )

புரசை - அஷ்டாவதானம் - சபாபதிமுதலியார்.
புரசைப்பதிவளரட்டாவதானப்புலவர்கணத்
தரசைத்தமிழ்க்கல்விவேட்டோர்திளைக்குமளக்கரினீள்
சரசைச்சபாபதிமாலையெப் போதினுந்தாழ்ந்து தொழுஞ்
சிரசைக்கரத்தைப்படைத்தேனிதுவுமென்செய்தவமே. (2)

புரசைச்சபாபதிக்கோமான்பொருவில்புலவர்கணத்
தரசினமக்கன்புடையாரிலையென்றதிர்மணி நா
முரசறைந்தன்னோன்முகிற்கடப்பாட்டைமொழிந்திடமெய்ப்
பரசெடுப்பான்வம்மினென்னுடன்கல்விபயின்றவரே. (3)

கூடலூர்- முதலியாண்டான் தாஸர்.
தீண்டானைத்தீச்செயனற்செயலாகுந்திகழ்மணிப்பூண்
பூண்டானைமான்மதநூற்பொருளுள்ளம்புகுத்தியெனை
யாண்டானையாத்தனையங்கூடலூரண்ணலாமுதலி
யாண்டானைநெஞ்சேயணிவிளக்காநின்னகத்திருத்தே. (4)

கச்சிக்கடாம்பி- இராமாநுஜாசாரியார்.
ஏராராத்ரேயமரபமுதாழியெழுமதியைச்
சீரார்பரமாரியன் சீநிவாசன்றன்சேய்மணியைத்
தாரார்புயனையிராமாநுசனெனுஞ்சற்குருவை
நாரார் நின்பால்வைத்துப்போற்றுதியென்றுமென்னன் னெஞ்சமே. (5)

மெச்சிச்சகம்புகழ்மேம்பாடுடையனைமெய்ம்மைமறை
உச்சிப்பொருளெற்குரியனசெய்துரைத்தானைவளக்
கச்சிக்கடாம்பியிராமாநுசாரியக்கற்பகத்தை
இச்சித்தவெற்கென்குறைநல்விபூதியிரண்டினுமே. (6)

அஷ்டதிக்கஜங்கள்.
எட்டுக்ககுபத்திபங்களினாங்காங்கிருந்திரும்பைத்
தொட்டுப்பொன்செய்திடும்வேதியிற்சேதநர்தோந்துடைத்துக்
கட்டுப்படுத்திநங்கண்ணனுக்காட்செயக்கண்டிடுவான்
இட்டுப்பிறந்தநம்மாரியரெண்மரையேத்துநெஞ்சே. (7)

ஸ்ரீமணவாளமாமுனிகள்.
பணவாளரவணைப்பள்ளிகொண்மாயன்பரத்துவத்தைக்
குணவாளர்நெஞ்சிற்குறித்திடவந்தகுருமணியைத்
தணவாதுசீசயிலேசத்தனியனைச்சாற்றிநெஞ்சே
மணவாளயோகிமலரடிவாழ்த்துதிமாண்புறவே. (8)

திருவாய்மொழிப்பிள்ளை ..
மருவார்மலர்க்குழன்மானாரகட்டின்மறவினையாற்
கருவாய்பிறவிகழிப்பானிருக்கின்கடையுரைசெய்
பெருவாய்மையோர்ந்தபெரியோர்கள்பேசும்பெரும்புகழார்
திருவாய்மொழிப்பிள்ளைசேவடிசிந்தனைசெய்குவனே. (9)

பிள்ளை லோகாசார்யர்.
இலகாரியந்தமிழ்நூல்களினின்றுலகோர்களுய்யப்
பலகாரியகாரணங்கடொகுத்துப்பன்னூலியற்றத்
திலகாரியர்கள்செறிந்திடுங்கோயில்செனித்தபிள்ளை
யுலகாரியனடியென்னுளத்தென்றுமொளிர்தருமே. (10)

வேதாந்த தேசிகர்.
வேதாந்தசூத்திரத்துக்கெம்மெதிபதிமெய்விளங்கப்
பாதாந்தமாகப்பணித்தநற்பாடியமாம்பயிர்க்கு
வாதாந்தகாரப்பகடழியாதுவன் காப்பினின்ற
வேதாந்ததேசிகன்றாணம்முளத்திருள்வீட்டொளியே (11)

வடக்குத்திருவீதிப்பிள்ளை .
கருவீதிநீக்குந்திருவாய்மொழியின்கருத்துணர்த்தும்
பெருவீதியாமுப்பத்தாறாயிரப்படிப்பேருரையைத்
தருவீதராகர்தலைவனங்கோயிலைச்சார்வடக்குத்
திருவீதிப்பிள்ளைதிருத்தாள்கருத்துடன்சேவிப்பனே . (12)

பெரியவாச்சான்பிள்ளை.
ஒளியுருவாகுந்திருவாய்மொழிப்பொருளோர்ந்திடுவான்
தெளியுருவாகுமிருபானான்காயிரச்செவ்வுரைசெய்
அளியுருவாநம்பெரியவாச்சான்பிள்ளையங்கழலைக்
களியுருவாகுநெஞ்சேநின்கண்வைத்திநற்காப்பென்னவே. (13)

நம்பிள்ளை.
உலகாரியப்பெயரோனடுத்தோர்கட்குரன்கொளுத்தி
நலகாரியஞ்செய்யுநம்பூர்நம்பிள்ளைநளினமென
இலகாரியவடியேயென்னிதயத்திலேய்ந்திருக்கும்
அலகாரஞ்ஞானமிரிக்குமெய்ஞ்ஞானவலரியன்றே. (14 )

நஞ்சீயர்.
விழுமியஞானநிதியாம்வேதாந்தியிம்மேதினிமேற்
கெழுமியகீர்த்திநஞ்சீயரெந்நாளுங்கிளர்மதியோர்
தொழுமியற்சேவடிநெஞ்சே நினைநமைத்தொன்றுதொட்டுக்
கழுமியபாவக்கடல்கடத்துங்கடமைக்கலமே. (15)

ஸ்ரீபராசரபட்டர்.
கஞ்சத்துணையெனவென்றுமென்கட்டுணைகாண்டுணையென்
நெஞ்சத்துணைநந்நிமலனருட்டுணைநீடுபொறி *
வஞ்சத்துணைவரைவாட்டுந்துணைமுத்திவான்வழிக்கோர்
தஞ்சத்துணைநம்பராசரபட்டர்தந்தாட்டுணையே. (16)

எம்பார்.
அம்பார்கண்ணங்கனையாராசைநீத்தவறிஞர்கள்கோன்
எம்பாரெனுநம்மடிகளிவறலிலாரிறைஞ்சும்
வம்பார்மலரடிவைகுந்தமீந்திடவல்லதென்று
நம்பாரைநம்பாதிருத்தனலமென்றனன்னெஞ்சமே. (17 )

எம்பெருமானார்.
எதிபதியெண்ணுமிரண்டுவிபூதியியனடத்தும்
அதிபதியாரணத்தந்தப்பொருட்கோரகலுரைசெய்
மதிபதிமாசுணமன்னவதாரிமறையவர்தந்
துதிபதிபாதநெஞ்சேநமக்கென்றுந்துணைநிற்குமே. (18)

பெரியநம்பிகள்.
நம்பிவழிபடுவோர்க்கெளியோன்பிறர்நண்ணரிய
அம்பியடியச்சுதற்குநமையென்றுமாட்படுப்பான்
தும்பிமுரல்பொழில்சூழ்கோயில்வந்ததொல்சீர்ப்பெரிய
நம்பியடிகளடிகணமக்கென்றுநற்றுணையே. (19)

ஸ்ரீ ஆளவந்தார்.
சூளவஞ்செய்திலையென்றபயன்பன்னி சொல்லித் தன்னை
ஆளவந்தாரென்றழைத்தசிறப்பாக்கியர்பிறவிக்
கோளவந்தீர்க்கும்யமுனைத்துறைவர்குரைகழலை
நாளவம்போகாதிறைஞ்சிவழுத்துதிநன்னெஞ்சமே. (20)

மணக்கால் நம்பி.
குணக்காதிதிக்கினர்கொண்டாடுங்கீர்த்திக்குவாலுடைய
மணக்கானம்பிப்பெயர்மாதவன்பாதத்தைமத்தகத்தின்
வணக்காலுரையால்வளர்வீண்கருமம் வரைந்தமனத்
திணக்காற்றொழுதுவழுத்திநினைப்பனிடரறவே. (21)

உய்யக்கொண்டார்.
மண்டரிக்கஞ்சக்கண்ணுய்யக்கொண்டார்தம்மலரடியைக்
கண்டரிச்சந்தனக்கண்ணிகொண்டேத்திக்களிக்குமனத்
தொண்டரிச்சன்மத்தொடர்பறுத்துப்பரஞ்சோதிமய
விண்டரிப்பற்றவிழுப்பதங்காண்குவர்மெய்ம்மையிதே . (22)

ஸ்ரீமந்நாதமுனிகள்.
அமிழ்தினுமாற்றவினிதாந்தமிழ்மறையாவுமுன்போல்
இமிழ்திரைஞாலத்திலங்கச்செய்நாதமுனிகளென்னும்
சிமிழ்திமிராரிநஞ்சிந்தையல்சீத்தொளிச்சின்மயமாய்
இமிழ்திவத்தேற்றுங்கண்ணேணியெனவறியென்மனனே. (23)

பொய்கையாழ்வார்.
செய்கைதிருந்திமுச்செம்பொருண்ஞானஞ்செறிந்துலகோர்
உய்கையடையவுயரிசைக்கச்சிவெஃகாவுதித்த
பொய்கைமுனிவனைப்போற்றுநெஞ்சேயவன்பொங்கருள்வாள்
கொய்கைசெயுநம்பவஞ்செய்வினையின்குழுவினையே. (24)

பூதத்தாழ்வார்.
கடன்மல்லை வந்த நம்பூதத்தடிகள் கழறொழினஃ
தடன்மல்லைமாய்த்தோனடிக்காட்படுத்தியைம்பூதமய
உடன்மல்லைநீக்கிப்பஞ்சோபநிடண்மயமாயொளிரும்
உடன்மல்லைத்தந்துநமைமோக்கவீட்டின்பத்துய்த்திடுமே. (25)

பேயாழ்வார்.
அயிலைப்பழிவிழியார்போகவாஞ்சையிலாழ்த்தவித்தைத்
துயிலைத்துடைத்துச்சுகம்பெறவெண்ணினென்றூயநெஞ்சே
மயிலைப்பதிமகதாக்கியமாமுனிமாமலர்த்தாள்
எயிலைத்துணைகொணமக்குப்பிறவியிடரில்லையே. (26)

திருமழிசையாழ்வார்.
பாரனைத்துள்ளினும்பண்புடைத்தென்னப்பகர்மழிசை
யூரனைத்தன்புகழோராதுதன்னொடுடன்றவரை
மாரனைவென்றுநம்மாயனையேத்திமகிழும்பத்தி
சாரனைச்சார்தியென்னெஞ்சேநஞ்சன்மத்தவற்றுமே. (27)

குலசேகராழ்வார்.
வில்லவர்கோன்மணியாரம்வவ்வாரெங்கள்விண்டுசித்தர்
நல்லவரென்றுநன்னாகக்குடத்தத்தநம்பியிட
வல்லவனாமெங்குலசேகரப்பெருமாள்புகழைச்
சொல்லவல்லார்மனனே மோக்கமார்க்கத்துணைவர்களே. (28)

பெரியாழ்வார்.
சிட்டர்துதிசெகத்காரணன்றன்னைச்செழுமறையால்
எட்டர்புகழ்பஞ்சவனவைதன்னிலெடுத்துரைத்த
பட்டர்பிரான்றன்பதபங்கயத்தைப்பணிந்துதொழார்
இட்டர்களாயினுமன்னோர்களைவிட்டிருத்தனன்றே. (29)

ஸ்ரீ ஆண்டாள் ..
கருக்கோதைநீத்திடக்காசினியீர்நீர்கருதுதிரேல்
இருக்கோதையோவாப்புதுவையில்வந்தவிறைவியென்றாய்
திருக்கோதைநாயகிசெந்தாமரைமலர்ச்சேவடியின்
மருக்கோதைசூடிவணங்கிவழுத்துதிர்வைகலுமே. (30)

தொண்டரடிப்பொடியாழ்வார்.
அண்டங்குடிகொளகட்டோற்குநம்மையிங்காட்படுப்பான்
மண்டங்குடிவந்தமாதவன்மாணடிவாழ்த்துநெஞ்சே
துண்டங்குடிகளங்காதுகண்ணாதியதொக்கிடுமிப்
பிண்டங்குடிபோம்பெயர்த்தும்வருமெனும்பீரில்லையே. (31)

திருப்பாணாழ்வார்.
பாகனவேதப்பசுந்தமிழாலிப்படருலக
மோகனரங்கன்றன்பாதாதிகேசமுறைதுதித்த
மாகனயோகிநம்பாண்பெருமாண்மறையோர்ந்தமுனி
வாகனபோகர்மலரடியெற்கென்றும்வான்றுணையே (32)

திருமங்கையாழ்வார்.
திருமங்கைகேள்வற்குமாறன்செய்செந்தமிழ்ச்செய்யமறைக்
கருமங்கமாறுமறையவவனிக்கவதரித்த
திருமங்கைமன்னன்றிருவடிசிந்தனை செய்யின் முத்தித்
தருமங்கைகூடும்பிறப்பாதித்துன்புந்தவிர்ந்திடுமே .(33)

மதுரகவியாழ்வார்.
செந்தாமரைக்கண்ணற்போற்றாதுதன்னைத்திருக்குருகை
வந்தாண்டமாறனையேதெய்வமென்றுவழுத்தியநம்
ஐந்தாமுபாயத்தமைந்தோன்மதுரகவியடிகள்
அந்தாரடிகள்மனனேபவநோய்க்கருமருந்தே. (34)

நம்மாழ்வார்.
ஆயிரஞ்சாகைகொளாரணத்தந்தமடுத்துரைக்கும்
ஆயிரநாமனுக்காயிரமோலியரிந்தமனுக்
காயிரஞ்செய்யுளளித்தகுருகையமலனடி
ஆயிரமாகவிரிபவநோய்தீரதகநெஞ்சே. (35)

சேனைமுதலியார்.
ஐங்கோலனந்தகனாரணனாணைகளற்றொழியும்
ஐங்கோலத்தெந்தையைச்சேவிக்கவீண்டுமமரர்களுக்
கங்கோலத்தாட்சடகோபஞ்சித்திக்கவணிக்கரங்கொள்
செங்கோலர்சேனைத்தலைவரடியிணைசேர்பவர்க்கே. (36)

பெரிய திருவடிநாயனார்.
போதத்துருவற்குப்பொன்றாப்பதந்தந்தபூமகள்கோன்
நீதத்துலவமென்பண்பூண்டுவகைநிறைந்துநிற்கும்
வேதத்துருவன்வியாளாபரணன்விநதைமைந்தன்
பாதத்துணைதுணைநெஞ்சேநாஞ்செல்லும்பரகதிக்கே.(37)

திருவநந்தாழ்வார்.
குருவனந்தாழ்பஃறலைமணித்தீகுலமமைத்து
மருவனந்தாமமணிந்தென்றுந்தொண்டின்மகிழ்ந்துநிற்கும்
திருவனந்தாமத்தமரர்கள்கோட்டித்திலகனெனுந்
திருவனந்தாழ்வான்றிருவடிசிந்தனைசெய்திநெஞ்சே. (38)

பெரிய பிராட்டியார்.
பங்கயத்தாள்மலராதனம்வாழ்ந்தருள்பார்க்கவிசெம்
பங்கயத்தாளைப்பரிவுடன்போற்றிப்பணிதிநெஞ்சே
பங்கயத்தாரலர்த்துங்கதிர்ச்சூனுபரமனுந்திப்
பங்கயத்தான்செய்யழிப்புப்படைப்புப்பயமிலையே. (39)

பரத்துவாதிபஞ்சகங்கள்.
ஐவகையாயிரஞ்சென்னிப்பணியேந்தவனியரை
ஐவகையானவினையிற்றிருத்தியடிமைகொள்வான்
ஐவகையானவடிவத்தமைந்தநம்மாதிதனை
ஐவகையானபொறியவித்தேத்தெனவலநெஞ்சே. (40)

அர்ச்சை.
அடியாருகந்தவுருக்கொண்டருச்சகனண்டுமுள்ளப்
படியேயொழுகியிப்பார்த்தளிவீட்டிற்பரிவுடனே
குடியேறியன்பர்குறித்தனநல்கிக்குலவுமர்ச்சை
வடிவாகுநம்பெருமானடிவாழ்த்திவணங்குநெஞ்சே (41)

அந்தரியாமி.
நிலையாமுயிர்க்குட்சொரூபத்தினண்ணிநிறைந்துநின்றும்
நிலையாந்தன்விக்கிரகத்துடனுள்ளத்தினேர்ந்துநின்றும்
நிலையாநியமிக்குமந்தரியாமிநிமலன்பொற்றாள்
நிலையாநினைதிநெஞ்சேநித்யமுத்திநிலைபெறவே. (42 )

விபவம்.
அலகிலதாய்க்கெளணமுக்கியமாகியவந்தரத்தால்
அலகில்முமூக்குக்களாதரஞ்செய்வனவல்லனவாய்
அலகிலிசைகொள்விபவாவதாரவடிகளடி
அலகில்விடயத்துழன்மனனேநின்னகத்திருத்தே. (43)

விபவபேதம்.
தாபாதிநீங்கியித்தாரணியோர்கடழைக்கும்வண்ணந்
தீபாதிதோன்றிடுந்தீபத்தினோங்கித்திகழ்பதும
நாபாதிநாலொன்பதுபேதமாம்விபவங்களைநம்
பாபாதிநீங்கிப்பரகதிநண்ணப்பணிதிநெஞ்சே. (44)

வியூகவாசுதேவர்.
கார்கொணித்யோதிதர்கட்டோன்றிநற்சங்கருடணனென்
பேர்கொள்வியூகத்தின்காரணமாகிப்பிறங்கிநிற்குஞ்
சீர்கொள்வியூகவசுதேவனாகியசெல்வனைநம்
ஏர்கொள்சாந்தோதிதப்பேரானையேத்தியிறைஞ்சுநெஞ்சே. (45)

சங்கர்ஷணாதி வியூகமூர்த்திகள்.
மும்மைத்தொழில்களுமற்றுங்கருமமுமுற்றுவிக்கும்
அம்மைபெறுசங்கருடணப்பேர்கொளமலன்முதற்
செம்மைவியூகநன்மூர்த்திகள்மூவர்திருவடியை
எம்மையுமேத்துதிநெஞ்சேபிறவியிடரறவே. (46)

கனவுநனவாதி வியூகபேதம்.
புல்லுமுபாசகராதியர்க்காப்பான்புகனனவு
வல்லகனவுசுழுத்திதுரியவடிவமைந்து
சொல்லும்வியூகங்கணான்கினும்வேறெனத்தோன்றியென்றும்
நல்லருணண்ணும்வியூகத்தின்பேதத்தைநாடுநெஞ்சே. (47)

கேசவாதி வியூகபேதம்.
ஒண்பாலமாதியுழிநின்றுடற்புரந்துன்னுமவர்
நண்டாபமாதியநீக்கிடநான்குவியூகநின்றும்
எண்ணார்மும்மூன்றென்றிசைமூர்த்திகளாயிலங்கிவந்த
வண்கேசவாதிவியூகாந்தரத்தைவணங்குநெஞ்சே. (48)

பரவாசுதேவர்.
அரவாதனமிசையந்தாமந்தன்னிலமரர்தொழ
விரவாரியைகணம்மன்னையர்தம்முடன்வீற்றிருக்கும்
பரவாசுதேவனெனுநித்தியோதிதப்பாவனனைக்
கரவாதென்னெஞ்சேகருதிவழுத்திநின்கண்ணிருத்தே. (49)

திருமாமணிமண்டபம்.
மணிமண்டொளித்திருநாட்டெட்டிதழ்ப்பதுமப்பொகுட்டார்
மணிமண்டரவணைமீதெம்பெருமான்மகிடியொடும்
மணிமண்டரிநித்தியர்முத்தர்சூழ்ந்திடவாழ்திருமா
மணிமண்டபமென்மனமண்டபத்தென்றும்வாழியவே. (50)

துதிகவிகள் முற்றிற்று.
-------------


2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நான்மணிமாலை


ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:
ஸ்ரீமணவாளமாமுனிகள் நான்மணிமாலை

காப்பு.

மணிமாலைவாழ்த்து மணவாளமாமுனிவற்கொருநான்
மணிமாலைபாடிவனையமகிழ்ந்துநல்வாக்களிப்பன்
மணிமாலைமாய்த்திம்மகியோரைவாழ்விக்கவந்தமகிழ்
மணிமாலைமாறன்மறைத்தமிழ்செய்தநம்மாதவனே.

விதிகட்கிடமாம்வரவரயோகிதன் மெல்லடிக்கோர்
துதிகட்கிடத்ததொர் நான்மணிமாலையைச்சூட்டவெற்கு
நதிகட்கிறைசுற்றிஞ்ஞாலத்தைக்காக்கநயந்துவந்த
எதிகட்கிறைவனிராமாநுசன்செய்வனின்னருளே.

நூல்.

வெண்பா .
திங்கடவழ்தண்டலைசூழ்தென்குருகைவந்துதித்த
எங்கண்மணவாளமுனியேந்தலே - பொங்குபுகழ்ச்
சாகரனேமும்மையாந்தத்துவத்தினுண்மைநிலைக்
காகரனேமுத்தியருள். (1 )

கட்டளைக்கலித்துறை.
அருளே யுருக்கொண்டதென்னுங்குருகையடிகள்சொற்ற
தெருளேய்மறையின்சிரப்பொருளாந்திருவாய்மொழியின்
பொருளேபுவியோர்ப்புரக்கும்பொருளெனும்புண்ணியவென்
மருளேமடித்தருள்வாய்வரயோகியென்மாதவனே. (2)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
தவத்தோர்கள்வணங்குபெருந்தவத்தினானே
    தண்டாதவவித்தையெனுஞ்சலதியாழ்ந்த
அவத்தோரையந்தாமக்கரைசேர்ப்பிக்க
    வணைந்தவருளம்பியேயனையநீராய்
திவத்தோர்கடிலகனேசீர்த்தஞான
    தேசிகனேமணவாளயோகியேயென்
பவத்தோங்கொள்பவப்பிணியைப்பாற்றவல்ல
    பண்டிதனென்றுன்பதத்தைப்பற்றினேனே. (3)

நேரிசையாசிரியப்பா.
பற்றியபிறவிப் பற்றற்றவரும்
முற்றியஞான மூதுவர்குழுவும்
எல்லையிலன்பொடு மென்றுமேத்தெடுக்குந்
தொல்லைமாமறைத் துழனித்தெனவும்
மாயிருஞால மகிழ்தரத்தோன்றிடும்
ஆயிரமருக்கரி னவிரொளித்தெனவுந்
துன்னியவண்டத் தொகுதிகளழியினுந்
தன்னியல்பழியாத் தகைமைத்தெனவும்
ஈறுறுபதங்களி னின்பமாறுதல்போல்
மாறுதலிலாச்சுக மயத்ததென்னவும்
மித்தையொன்றிலதாய் மிளிர்பரியங்க
வித்தைவிளம்பிய வீதம்விளங்குறூஉம்
மாட்சிமைத்தெனவு மயர்வற்றடைந்தோர்
மீட்சியைத்தடுக்கு மிடுக்குடைத்தெனவும்
பன்னும்பரம பதத்திலெஞ்ஞான்று
மன்னுமலர்மகள் மகிணன்முத்தொழிற்கும்
மூன்றுருவாகிய முதல்வனெவ்வுயிர்க்குஞ்
சான்றுருவாகிய தலைமகன்மெய்யுரை
நூற்பயனாக நுவலறம்பொருண்முதல்
நாற்பயன்களையு நயந்தோர்க்களிப்போன்
ஓல்கிளர்மறைக ளுரைக்குமார்த்தாதி
நால்வருநயக்கு நளினமென்றாளோன்
ஆரணத்தாரணத் தந்தத்தொளிர்தருங்
காரணவாக்கியக் கருப்பொருளானோன்
அலகிலா வண்டமு மவற்றுள்ளுறைதரும்
உலை விலாவுயிர்களு முடலமாக்கொண்டோன்
வேதவேதாந்த விழுப்பொருளான
நாதனாரணனென நன்கறிபுலவன்
ஊனமின்ஞானமு முறு பத்திமையும்
நூனவிராகமு நுவலுமெய்ந்நூல்களும்
உலகினர்க்குதவுவா னுள்ளுவந்தொருப்பட்
டிலகுமோர்வடிவ மெடுத்தெனத்தகைய
திருமலையாழ்வார் திருவடிப்புணையோய்
கருமலைஞானமுங் கைதூவாமையுங்
குண்டுநீர்க்குரவைக் குவலயத்தோர்கைக்
கொண்டுவாழ்தரச்செயுங் குரவர்தம் பெரும் ,
புண்ணியபுரிவொடு புந்தியினினைப்போர்க்
கண்ணியவாத்த வளக்கரினளவலா
அருள்குடிகொண்ட வகத்தவேதாந்தத்
தெருள்குடிகொண்டநற் சிந்தையசிற்பர
வரவரமுனிவ வயதுநாண்முதிர்ந்து
வரவரஞான வரம்பினைநனியிகந்
துவர்க்கத்தக்கவா முண்பொருளுவந்து
பவர்க்கத்தடையுமிப் பாவியேனுநின்
ஆட்சிக்கிழமைக் கமைந்தமெய்யடியவர்
மாட்சிப்பேரபி மாநத்தொதுங்கி
நல்வழிநடந்து நாளுமைம்பொறிகளை
வெல்வழிநின்றுநின் மேதகுசீர்த்தியைப்
பாடிக்கண்கள் பனித்துடல்புளகித்
தாடிக்களிப்பி னவசனாகி
உய்யும்விரகொன் றொல்லை
செய்யுங்கடமைநின் றிருவருட்குரித்தே. (4)

வெண்பா.
உரித்தாவர்நின்னடியரொள்ளகியைப்பொன்னாத்
திரித்தாக்கும்வேதியினென்றீங்கை-யிரித்து
மணவாளயோகியெனைமாத்தூயோனாக்கித்
தணவாதடிமைகொள்ளத்தான். (5)

கட்டளைக்கலித்துறை.
தானவர்தன்மையைத்தாங்கியுயிர்கடமைச்சவட்டி
மானவவேடத்தின்வைகுறுமென்னையும்வாழ்விக்கும்பூ
வானவர்நான்மறைவண்பொருள்வாய்ந்தமனமுடையோர்
ஆனவர்போற்றுமணவாளயோகியடிநிலையே. (6)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
அடிநிலையையளவிலாத்தவத்தளான
    வந்தணத்தியாய்ச்சியெனுமபிதானத்தி
முடிநிலையிலிறைப்பொழுதுமுடித்தெஞ்ஞான்று
    மூவாதபெருஞானமுற்றிநின்றாள்
படிநிலையார்புகழ்கொண்மணவாளயோகிப்
    பண்ணவவப்பாதுகையின்பாழிச்சீர்மை
கடிநிலைகொள்கமலவணைக்கடவுளுக்குங்
    கட்டுரைக்குந்தரத்ததன்றுகணிக்குங்காலே. (7)

நேரிசையாசிரியப்பா.
காலவாணை கடக்ககிலாவிஞ்
ஞாலவாணர்க ணாற்கதிப்பிறப்பிற்
பிறந்துபிறந்து பேரஞர்தலைப்பெய்
திறந்துபடுந்துய ரிரித்துக்காப்பான்
காரணகாரிய காரணனான
நாரணன்சைய நகத்தினின்றிழிதரு
பொன்னியாற்றிடைக்குறைப் புகறிருமந்திர
மன்னெழுத்தெட்டு மதிலோரேழுஞ்
சமானமுமதிகமுந் தலத்தெங்கணுமிலா
விமானமொன்றுமாய் மிளிர்திருவரங்கம்
பெரியகோயிலிற் பிரமனாதியர்க்கும்
அரியனாயரவணை யறிதுயிலமர்தரும்
பூதநாயகன் புவிமகணாயகன்
வேதநாயகன் விழைவுறுமருச்சனை
நித்தமுநிரப்புக ணேர்ந்திடவியற்றிய
உத்தமநம்பியென் றுரைபெயரோனையும்
பூவிரிபொழில்களின் பொற்புடைத்தாய
காவிரியுந்தியிற் காலையினாளுநீர்
ஆடப்படர்கா லன்புடனின்னுடன்
கூடப்படர்ந்துநீ குளிர்புனல்குடைந்திடும்
நீர்நிலைக்கண்ணே நீராட்டயர்தரு
நார்நிலைகொண்ட நற்சீவைணவன்
ஒப்பாவொருவரை யுறுபவனல்லா
அப்பாவெனும்பெய ரந்தணன்றன்னையுந்
திடத்தவன்பொடு செழுங்காய்கிழங்குகள்
மடத்துக்குதவி வந்தநன்மறையோன்
சித்தசனாணையைச் செல்லாதடக்கிய
சித்தசுத்தனாஞ் சிங்கரையனையுங்
கண்ணன்கழலிணை கருதுகந்தாடை
அண்ணன்முதல்வந் தடுத்தோர்தம்மையும்
வருத்தமின்றிநல் வழிபடர்ந்துய்வான்
திருத்தியாட்கொண்டரு டேசிகர்தேசிக
வரவரமுனிவநூல் வரம்பினிற்போர்க்குத்
திரவரமருள்செயுஞ் சிந்தாமணியே
தீயவழியிற் றிரிதந்துழலுமிந்
நாயனையேனையு நல்வழிப்படுத்தி
நின்னடிக்கன்பர்க ணீரசநிகர்த்தநற்
பொன்னடிக்கன்பரைப் பொருவுவோரெங்கணும்
இலரென்றவருழி யென்றும்
அலர்தருமன்பினை யருண்மதியெனக்கே. (8)

வெண்பா.
எனக்குமணவாளமுனியேந்தலேயென்று
மனக்கினியதந்தைதாய்மற்றுங் - கனத்தகுரு
தெய்வமவன்சேவடியைச்சிந்தித்திருத்தலெனக்
குய்யும்வழியென்பனோர்ந்து. (9)

கட்டளைக்கலித்துறை.
ஓர்திவரவரயோகியொண்பாதமுபாயமென்று
தேர்திநெஞ்சேயதுதிண்ணநற்பேறென்றுசிக்கெனவே
சார்தியவனடியாரைநிதநற்றகைப்பணவ
வூர்திவருநமையந்தாமவீட்டின்பத்துய்த்திடவே . (10)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
உய்த்துணர்ந்தின்றொன்றுரைப்பனோர்திநெஞ்சே
    யுந்திபூத்தவனையுற்றோர்க்கொளிர்வீட்டின்பந்
துய்த்தறொலையினுந்தொலையுமன்னோன்றொண்டர்த்
    தொழுமவர்கட்கொருகாலுந்தொலையாதென்ப
மொய்த்தமுரண்வினையுணிற்குநீமுப்போதும்
    முதமுடனம்மணவாளமுனிவன்பாதம்
எய்த்தலிலாதேத்துதியேலிணையின்மாயை
    யிகல்வெல்வோமெழுபிறவியிடர்வெல்வோமே.(11)

நேரிசையாசிரியப்பா.
வென்றைம்பொறியெனும் வேடரையாள்பவர்
நின்றவாநில்லா நெஞ்சகந்தன்னையும்
ஒருங்கிடச்செய்யு முபாயம்வல்லுநர்
ஒருங்கிருசெருக்கையு மொழித்தநல்லுரவோர்
அவச்செல்வத்தி னவாவினையறுத்தோர்
தவச்செல்வத்தின் சால்பினைப்பொறுத்தோர்
பத்திநெறியிற் படர்குநர்பழிப்பிலா
முத்திநெறியின் முயல்குநர்சூழ்ந்திடக்
கும்பமுனிவரன் குடிகொண்டிருக்கும்
வம்பவிழ்சோலைகள் வான்றொட்டோங்கும்
பொதியநின்றிழிதரு பொருநைப்பெயர்த்தாம்
நதியமர்கரைக்க ணல்லோர்பலருறை
குருகூருதித்த குணநிதிபராங்குசன்
முருகூர்மகிழ்த்தொடை மொய்ம்பினன்மாறன்
ஈனமின்மறைகளை யிருந்தமிழ்செய்த
ஞானதேசிக னாண்மடமச்சம்
பயிர்ப்பெனுங்குணங்கள் படைத்தோள்கற்பெனும்
அயிர்ப்பொன்றில்லா வரும்பெறற்பேற்றோள்
உடையநங்கைப்பெய ருத்தமிமுன்னர்
நடைபெறுநூலுரை நல்வழிநின்று
தொல்லைமாயவன் சுடரடிதமைநினைந்
தெல்லையில்கால மியற்றியதவத்துடன்
காலினுமுருளினுங் கறங்கூசலினுஞ்
சாலவுமலமரு தன்மைத்தாகிய
பவப்பிணியொழியவிப் பரவைசூழ்பாருளோர்
தவப்பலநாள்செய் தவத்தொகைகூடியோர்
திருக்கிளருருவாய்த் திரண்டெனத்தகைய
தருக்கிலாஞானச் சடகோபன்றாள்
நிறைதருமன்புட னிச்சலும்வழிபட்
டுறைதருகாலையி லோர்நள்ளிரவில்
இழுக்காறிலாநின் னிரும்பெருமையைக்கண்
டழுக்காற்றொழுகிடு மசுரயோனிகளாய்
மருளற்றிம்மகி மாந்தர்களுய்வான்
அருளிச்செயல்களி னரும்பொருள்விளங்கநீ
காலக்கேபக் கடன்கழித்தநுதினம்
ஓலக்கத்துட னுவந்தினிதிருக்குந்
திருமடந்தன்னிற் றீயைவைத்துத்தம்
பெருமடங்காட்டிய பிசுனராய்ப்பேர்க்கொணாப்
பரக்கழிபூண்டவப் பதகர்களுய்பாக்
கிரக்கமிக்குடையநல் லிதயத்தவர்க்குங்
கச்சிமாநகரிற் கலைத்தொகைகற்றோர்
மெச்சுசீபாடிய மேதகவுரைத்த
[*]ஆரியன்றனக்கு மரங்கமாநகர்க்கட்
சீரியஞானச் செல்வியாகுமோர்
[#]அம்மையார்தமக்கு மநந்தனாகுநின்
செம்மையாங்கோலச் சேவைகாட்டிய
திருவருட்குறையுளாந் தெள்ளிய சிந்தைய
வரவரமுனிவநின் வண்கழற்றுணைக்கன்
புடையேன்போனடித் தொழுகாநிற்குங்
கடையேன்றனக்குமக் காட்சிதந்தெனது
பண்டைவல்வினை பாற்றித்
தொண்டுகொண்டருளத் துணிதனின்கடனே. (12)
---
[*]கடாம்பிநாயனார். [#] சடகோபக்கொற்றியார்.
---

வெண்பா.
நின்னைவழுத்திநெடிதுவழிபடுமென்
முன்னைவினையின்முதறடிந் - தென்னை
மணவாளமாமுனிவமாண்புடனிற்போற்றுங்
குணவாளர்தங்குழுவிற்கூட்டு. (13)

கட்டளைக்கலித்துறை .
கூட்டந்தளர்ந்துளமேநங்கொடுவினைகூசியுட்கி
ஓட்டந்தொளிக்கவுழிநேடுநம்மதுடற்பிறவி
வாட்டந்தவிர்க்கவரும்வரயோகியைவாழ்த்துந்தொண்டர்
ஈட்டந்தனைக்கண்டுநாட்டங்களின்பெய்துமெல்வையினே. (14)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
எல்வையெலாமிளையவர்சிற்றின்பமிச்சித்
    திகந்தனனிப்போதியமனேவனிற்போர்
வல்விரைந்துவந்தென்னைவதைக்குங்கால
    வரையறையுமணித்தாயிற்றைவர்தம்மை
வெல்விரகமணவாளமுனிவநின்கேழ்
    விரைமலர்த்தாள்வேட்டடைந்தேன்வெறுக்காதென்னை
நல்வைகுந்தநகர்கொடுபோய்நாளுமம்மா
    னற்பணிசெய்திருக்கவருணல்கிடாயே. (15)

நேரிசையாசிரியப்பா.
ஆய்ந்தநூலறிவின ரதற்கியைநடையினர்
தோய்ந்தநூன்மார்பினர் தொகையிறந்தோர்கள்
வழுவாத்தரிசனம் வளர்ப்போரான
எழுபானான்கெனு மெறுழறியாதனர்
துன்னிருசெருக்கையுந் துடைத்தவரான
பன்னீராயிரம் பரமேகாந்திகள்
சித்தசனைங்கணைச் செருக்கினையடக்கிய
உத்தமாச்சிரமிக ளோரெழுநூற்றுவர்
புணைநம்பிறவிப் புணரிக்கெனவந்
திணையடியடைந்தவ ரெண்ணிறந்தோர்கள்
தற்புடைசூழ்தரத் தரணியோர்ப்புரக்கும்
அற்பினோலக்கத் தமர்ந்துவீற்றிருந்த
படிவர்சிகாமணி பற்றறுஞான
வடிவர்சிகாமணி வைணவசிகாமணி
நேடியமுறைப்படி நிகமாந்தசூத்திர
பாடியம்பகர்ந்தருள் பண்டிதசிகாமணி
தெரியாவுயிர்ப்பொரு டெரிக்குங்கண்மணி
இரியாவவித்தை யிருடெறும்விண்மணி
ஆரியர்நனந்தலை யமரரதநமணி
பூரியர்கைப்படாப் போதசிந்தாமணி
அன்புடையோர்கட் கருளம்புயநிதி
துன்புடையோர்துயர் துடைவலம்புரிநிதி
துதிகட்கிடந்தருஞ் சுகுணவாரிதியாம்
எதிகட்கிறைவ னிறைக்கரத்தேந்துமுத்
தண்டமெனும்பெயர் கொண்டபெருந்தகை
எண்டிசையும்புக ழிலங்குறுமாண்டகை
நுதலியஞானமு நுண்ணொழுக்கமுமுள
முதலியாண்டான்றன் முதுமரபினராம்
அண்ணன்முதலோ ரனைவருங்குடும்பமும்
அண்ணலெறும்பியி லமரப்பாவும்
ஒப்பில்லவரா யுலகெடுத்துரைக்கும்
அப்பிள்ளான்முத லறிஞர்கள்யாவரும்
முற்றியவன்பினின் மூழ்கினராகிப்
பற்றியபெரும்புகழ்ப் பாதபங்கேருக
வரவரமுனிவவல் வஞ்சகன்பொய்யன்
கரவடனாகிய கயவனேனையும்
நின்னருளென்ன நிகழ்த்தும்வேதகப்
பொன்னினாற்றொட்டுறப் புனிதனாக்கியென்
விடியாவல்லிருள் விடிந்திடச்செய்து
வடியாப்பவக்கடல் வற்றுவித்தடியவர்
நார்த்துதிசேர்திரு நாட்டிற்
சேர்த்தனின்கடனெனத் திண்ணநம்பினனே. (16)

வெண்பா.
நம்பினோர்க்குண்டுதிருநாடென்றனன்னெஞ்சே
நம்பலிலார்க்கென்றுமந்தநாடில்லை - கம்பின்
மணியுருவத்தெந்தைமணவாளயோகிப்
பணியுருவத்தோங்கும்பதம். (17 )

கட்டளைக்கலித்துறை .
பதமாம்பதத்தொடுபாறயிரூட்டிப்பருக்கச்செய்புற்
புதமாம்புரத்துயிர்ப்புந்திசெய்நெஞ்சேபுதவரர்கட்
கிதமாம்பொருள்சொன்மணவாளயோகியையெண்ணுதியேற்
சதமாம்பதந்தருந்தத்துவஞானந்தலைப்படுமே. (18)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
தலைப்பட்டபெருமாயைதானேயுட்கித்தணக்குந்தருணிமார்கண்
வலைப்பட்டநீயுமுயர்வாழ்வடைந்துவாழ்தியினிவருமோரன்னை
முலைப்பட்டபாலருந்தமுயல்பிறவிவாராதுமுத்தியுண்டாம்
நிலைப்பட்டநீர்மைகொணம்வரயோகிபதநிதமுநினைதிநெஞ்சே. (19)

நிலைமண்டிலவாசிரியப்பா.
நெஞ்சகநிறையிரு ணீக்கிடுஞ்சவிதா
வஞ்சகர்வாதமாம் வைப்போர்க்கனற்பொறி
துறவுச்சுடரினைத் துலக்குந்தூண்டுகோல்
பிறவிப்பிணிதனைப் பேர்த்திடுநல்லுறை
சுருதிசாரஞ்சுகத் தூவொழுக்காதிசொல்
மிருதிசாரந்தமின் மிக்கதொன்றில்லதாம்
புராணமறைப்பொருள் பொதிதரும்பதினெண்
புராணசாரம்புகழ்ப் பூடணத்தனவெனக்
கற்றவர்புகழிதி காசசாரம்மெனற்
குற்றனவாக வுலகாரியனெனும்
எந்தையெம்மடிக ளிலங்குமெவ்வுயிர்க்குந்
தந்தைபோற்பரிவுறூஉந் தண்ணளிக்கடலனான்
அந்தணர்முதலியோ ரறிந்துயவியற்றிய
மந்தணப்பதினெண் மாக்கலைதம்மின்
முத்தத்துவநூல் மூவிரகசியநூல்
புத்தமுதாஞ்சொற் பூடணப்பெருநூல்
வாயழகிய மணவாளப்பெருமா
ணாயனாரருளிய நல்லாசாரிய
இதயமென்ன வியம்புநூல்ஞான
உதயமிலார்க்கஃ துதிப்பிப்பவரென்
றம்புவிபோற்றரு ளாளப்பெருமா
ளெம்பெருமானா ரிருங்கலையாவையும்
பன்முறையாய்ந்து பயன்படுபொருளெலாந்
தொன்முறையெடுத்துத் தொகுத்துத்திரட்டியிந்
நானிலமுயச்செய் ஞானசாரநூல்
மேனிலைதருபிர மேயசாரநூல்
என்னுமிவற்றுக் கினியவியாக்கியை
பன்னியிப்பரவைசூழ் பாரோர்க்குதவிய
வள்ளற்றன்மைகொள் வரவரமுனிவவெற்
கள்ளற்றுன்பினை யடைவிப்பவராம்
நவ்விநோக்கியர்சுக நரலையிற்படிந்தென்
செவ்வியெலாம்வீண் செய்தனனந்தோ
செய்வதொன்றறியேன் றீவினைதனினின்
றுய்வதொன்றறியே னுத்தமநின்னடி
அடைக்கலமாக வடைந்தனனமன்றமர்
படைக்கலங்காட்டிப் பற்களைக்கறித்துத்
திட்டித்தெழித்தெனைத் திரப்பாசத்தாற்
கட்டிப்பிடிக்கக் கனன்றெழூஉவருங்கால்
எந்தாய்நின்றம ரீட்டத்துடன்வந்
தந்தாமத்தெனை யடைவுடன்கொடுபோய்
அடியார்பணியி னமைத்தனல்லருளால்
நெடியாய்சாலவு நினக்கறமாமே. (20)

வெண்பா.
அறத்தாற்றிற்செல்லவழுங்குவேனின்னா
மறத்தாற்றிற்செல்லமகிழ்வேன்- றிறத்தில்
அருத்தியெதிராசமுனிக்கன்பவெவன்செய்ய
இருத்தியோவின்றெற்கிசை . (21)

கட்டளைக்கலித்துறை .
இசையோங்குமுத்தர்தமேற்றமும்பத்தரிழிதகவும்
மிசையோங்கிடும்புருடோத்தமன்மேன்மைமிகுநிலையும்
நசையோங்குநெஞ்சேநமக்குப்புலப்படுநன்னரெட்டுத்
திசையோங்கியபுகழ்நம்வரயோகியைச்சிந்திக்கினே. (22 )

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
சிந்தித்துத்தொழுஞ்சேடச்சிலம்பினாற்குச்
    செற்றார்தம்பயங்கரனாமண்ணன்மேனாள்
வந்தித்துமஞ்சனநீர்வழங்குநாளின்
    மணவத்துவிரவாதுவறிதிருக்கச்
சந்தித்தோனின்பெருமைசாற்றக்கேட்டுத்
    தானிருக்கமணவாளவள்ளாலந்நீர்
கந்தித்ததெற்றையினுங்கழிமிக்கென்று
    கட்டுரைக்குந்திறனெவனோகாண்கிலேனே. (23)

நிலைமண்டில வாசிரியப்பா.
காணற்கவணமே பேணற்குரியராம்
உயர்ந்தோர்தம்மை யயர்ந்திகழாமை
புகழ்பெறவேண்டி யிகழ்விலறத்தினை
நயந்துசெய்யாமை பயந்தநுதினமும்
மனமொழிமெய்களாற் கனவினும்பிறர்கட்
குயவுசெய்யாமை யயலவர்நம்மை
வருத்தினுமனத்தில் வருத்தமுறாமை
ஆத்துமஞானம் பூத்தொளிர்தரவருள்
ஆரியன்றனைநிதஞ் சீரியவன்புடன்
வழிபடல்வாழ்த்துதல் விழிபடகில்லா
உயிருணர்வுக்குமச் செயிரிலாவுணர்வைப்
பெறுவதற்குரித்தா யுறுநெறிதனக்கும்
வேண்டியதாகநூல் மாண்டகவுரைத்த
பெற்றியின்மனமொழிக் குற்றதாகிய
செப்பமுடைமையவ் வொப்பிலாநூலுரை
நுட்பமாம்பொருள்களிற் றிட்பநன்குடைமை
உயிர்ப்பொருளொழிந்த செயிர்ப்பொருளனைத்தினும்
உலாவுமனத்தைச் செலாதுநிறுத்துகை
அழியுமாலையவா மிழிதகவுடைய
பொருள்களினாளும் பெருகுவர்ப்புடைமை
தேகமேயுயிரெனு மோகமின்மை
தனதலாப்பொருளைத் தனதுதனதெனுஞ்
செருக்கடையாமை யிருக்குநாளளவும்
மூவகைத்துன்பமு மோவிடாவென்னும்
நினைப்புமாகியகுண மனைத்துநினைத்தொழும்
எனக்குண்டாக நினக்கருள்வருமேல்
வரவரமுனிவ சுரவரர்தொழுதெழும்
ஒளிமயமாகிய தெளிவிசும்பெனது
கையதாமெனுமிது பொய்யலமெய்யே. (24)

வெண்பா.
மெய்யாகவைம்பொருளின்மேதைப்பைங்கூழ்விளையுஞ்
செய்யாகவென்மனத்தைச்செய்தனனால் - பொய்யாது
மண்ணவர்கள்போற்றுமணவாளமாமுனியாம்
பண்ணவன்றன்னுள்ளம்பரிந்து . (25)

கட்டளைக் கலித்துறை .
பரிந்ததிருவுளத்தோனென்றுபாதலம்பார்விண்ணெங்கும்
விரிந்தபுகழ்மணவாளமுனிவன்விரைமலர்த்தாள்
முரிந்தபின்னற்றிரைமோதுமுந்நீர்வைப்பின்மொக்குட்டன்மை
தெரிந்தநெஞ்சேநம்புதிசேமவைப்பிற்சிறந்ததென்றே. (26)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
சிறந்தஞானமுமொழுக்குஞ்சிறிதுமில்லேன்
    செய்துதிகள்கணிகைகுலத்தெரிவைமார்கட்
கறந்தெரிக்குமாறவலமாகுமென்றே
    யழுங்குகின்றவெனக்கிரங்கியருளல்வேண்டுங்
கறந்தநறும்பாலிழுதுகண்டுமும்மைக்
    கனிபோலண்ணித்தெனுளக்கமலம்வாழுந்
துறந்தநிலைமணவாளமுனிவநின்றன்
    றுணையடியல்லால்வேறுதுணையிலேனே. (27)

இணைக்குறளாசிரியப்பா.
துணைக்கட்டழகார் கணைக்கட்காந்தையர்
மால்வலையறுத்து மேல்வழிகாட்டும்
முருகூர்மகிழ்த்தொடைக் குருகூர்ப்பராங்குசன்
அருளியவருமைத் திருவாய்மொழிக்கோர்
நூற்றந்தாதியும்
சீர்த்திசேர்தரு மார்த்திப்பிரபந்தமுஞ்
சுபதேசுதவிடு முபதேசரத்தின
மாலையும்படிப்பவர் மாலையொழித்திடுங்
காட்டிற்பொலிதரு சேட்டீட்டிற்குஞ்
செம்மையாந்தத்துவ மும்மைமாநூற்கும்
அளவைத்திரட்டும்
மாயத்திரிபினை மாய்க்கும்பிரபன்ன
காயத்திரியெனக் கட்டுரைக்கின்ற
ஏற்றந்தாலத் திலங்கிராமாநுச
நூற்றந்தாதிக் கேற்றதோருரையும்
இயற்றியுடனே யியற்றியுதவிய
அருணிதமுடைய பருணிதர்தலைவ
எதிபதிபாதத் துதிபதியுளத்த
வரவரமுனிவ சுரர்நரர்துதித்திடும்
அரவரசானவ குரவர்தங்குரவ
கொடியேனாயினு மடியேனினது
திருக்கிளர்கமலத் துருக்கிளரடிகளில்
அடைக்கலமாக வடைந்தனன்முடைக்கலம்
சாயுங்காலைத் தாயுந்தந்தையும்
அத்தனுங்கத்தனு நித்தனுமாகிய
எம்பெருமானு மெம்பெருமாட்டியுஞ்
சுவணத்தூவி யுவணப்புள்ளின்
பண்ணுறுதோண்மேல் விண்ணுறவரக்குழீஇ
நீயுநிறைபுகழ் மேயநின்னடியரும்
அன்னவர்தம்மொடு துன்னிப்போந்துநுங்
காட்சியை யெற்குக்காட்டி
மீட்சியில் பெரும்பதத்தாட்சிதந்தருளே. (28 )

வெண்பா.
தந்தருள்வனெஞ்சேநீசார்ந்தென்றுந்தோத்திரிக்கின்
எந்தைவரயோகியிருவினையால் - வந்த
அறப்பெரியநந்தாபமாற்றவல்லதான
நிறப்பெரியதன்றாணிழல். (29)

கட்டளைக்கலித்துறை.
நிழற்குரித்தாகியநீசப்பிறவிகணேர்ந்தெடுத்து
விழற்கிறைத்தாரின்வெறுவியனாமெனைமென்கருணை
நிழற்குரித்தாக்குமணவாளயோகிநிமலநின்றன்
கழற்குரித்தாக்குங்கருணையும்வேண்டினன்காத்தருளே. ( 30)

பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
காக்கின்றசெல்வநல்குரவுகடுவமுதங்
    கனத்தநேயம்விரோதங் –
    கரிசறுசுவர்க்கநரகந்துன்பமின்பங்
    கலக்கமொடு தேற்றமிங்ஙன்,
வீக்கமாவென்றும் விருத்தமா மியல்புடை
    விபூதியில்விடாவிரண்டு –
    வினையினான்மேன்மேலும் வெருவுபவம்வரு
      மென்னின்வெட்கியுட்கித்திடுக்கிட்,
டேக்கமுறுகின்ற தென்னெஞ்சமென்செய்கு
    வேனினியநின்னிணைகொள் சரணத் -
    தில்லடை புகுந்தனனிழுக்
    கினைத்தருகின்றவிருசெருக்கினையுநீக்கி,
மோக்க நெறிநிற்பவர்க்கருள்செய்யுமணவாள
    முனிவவென்பிறவிமூலம் –
முழுது மற்றென்னிலை விளங்கநல்லுப
    தேசமொழியொன்றுரைத்திடாயே. (31)

இணைக்குறளாசிரியப்பா.
ஆயுங்காலைக் காயம்வாக்கு
மனமிவற்றாற்செய் கனவினைக்கெல்லாம்
பூதக்குழாத்தா மேதக்குரம்பையுங்
கத்தனெனச்சொலு நித்தனாமுயிரும்
இந்தியக்கூட்டமு மைந்துவாயுவும்
கரந்தசில்லிடந்தொறும் பரந்துளவொருவனுங்
காரணம்
ஆமெனமொழியுமிக் கோமொழிக்கருத்தினைத்
திருத்தமாய்த்தமியே னருத்திசேருளத்தில்
ஓர்தரச்செய்தது பேர்தராவணநீ
திண்ணப்படுத்திச்
சழக்கறுவிழுப்ப வொழுக்கமுந்தந்தது
சாம்பிப்போகா தோம்பிவளர்த்திடும்
அறிவையுமளித்துநன் னெறிபடர்வித்தெனைத்
திருமலையாழ்வார் திருவருட்குரியோய்
நின்னடிக்கடியவர் பொன்னடிக்கன்பனாய்
உய்யும்படிக்கரு ணொய்தினிற்செய்தியேல்
இலகெவ்வுலகினு மிலதாம்
அலகினின்பெரும்புகழ்க் காவதோரீடே. (32)

வெண்பா.
ஈடுமுப்பத்தாறாயிரப்பெருக்கநின்னடியேன்
வீடுபெறநீவிரும்பினால்- நாடுமெனைப்
போர்த்தவினைபொன்றவருள்பொங்குங்கடைவிழியாற்
பார்த்தருளனின்றன்பரம். (33)

கட்டளைக்கலித்துறை.
பரம்புளகித்துன்பதஞ்சேர்ந்தகூடற்பதிக்*கிறைவன்
வரம்பெறுமாமணிக்கஞ்சிகைதாங்கிவரவவனுக்
குரம்பெறுநல்லருள்செய்வரயோகியுனையுன்னுவோர்
திரம்பெறுமுத்திப்பெருஞ்செல்வமெய்துவர்திண்ணமிதே. (34)
---
[*] மஹாபலிவாணநாதராயன்.
---

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
திண்ணியஞானச்செல்வஞ்சிறந்தவாழ்வார்
    திருநகரிசேவிக்கச்செல்லுமெல்வை
தண்ணிழறந்துபகரித்தவெகினத்தாருத்
    தனுவிருந்தவவ்வுயிர்க்கந்தாமந்தந்த
புண்ணியவெம்மணவாளமுனிவநின்னம்
    போருகத்தாளடைந்துய்ந்தபுலவர்கோட்டிக்
கண்ணியனாயநவரதமவர்கடாட்டொண்
    டன்புடன்செய்துய்யவருளளித்திடாயே (35)

நேரிசையாசிரியப்பா.
அளியுருவாகிய வமரவைந்தருவே
களியுருவாகிய காமதேநுவே
பயக்கடல்படாத நயச்சுவையமுதே
வியப்புலனட்டு விளையாக்கரும்பே
ஆக்கறவாத தேக்குறுபாலே
தோய்தயிரெழாத சுரநறுநெய்யே
ஆய்கழைச்சாற்றா லடாதகற்கண்டே
பரமஞானத்தருப் பழுத்தபைங்கனியே
பிரமஞானிகளுணும் பீடுடைத்தேனே
தலத்தினுஞ்சலத்தினுந் தலைப்படாமுத்தே
அலைக்கடற்படாத வரும்பெறற்றுகிரே
இருநீர்ப்படாத பெருநீர்மணியே
பூரணஞானிகள் பூணுறும்பொன்னே
ஆரணஞானிக ளணிந்திடுமணியே
நரரொடுபிறவுய நானிலம்வந்தருள்
வரவரமுனியெனும் வண்மைப்பெயரோய்
வச்சையர்தலைமகன் மிச்சையர்பெருந்தகை
காமுகர்க்கதிபதி தீமுகர்க்கேந்தல்
கையர்கள்சிகாமணி பொய்யர்கள்பூபதி
ஆனவித்தகைத் தீனனேனிதுவரை
எடுத்தபிறவிக ளிருநிலமுடுத்த
நுணித்தசீகரக்கட னுதிக்கரைமணலினைக்
கணிக்கினுஞ்சிறிதுங் கணிக்கப்படாவாம்
அருந்தியதாய்முலை யமுதமோவென்னில்
பொருந்துமேழ்புணரியின் புனலினும்பெரிதால்
இப்பொழுதிருந்திடு மெண்கணன்கற்பமுந்
தப்பாதினிவருஞ் சதுமுகர்கற்பமுங்
கழியினுமென்வினை கழியாதாதலின்
சுழிபடுபிறவியுந் தொலையாதென்செய்கேன்
பவப்பிணியொழித்திடும் பண்டிதனீயெனத்
தவத்துயரறிஞர்கள் சாற்றலாலடைந்துன
கமலமாமலர்புரை விமலமாம்பதங்களின்
முடைக்கலம்விழுமுன் னடைக்கலம்புகுந்தனன்
சரணவரணத் தருமந்தனக்கோர்
அரணமாகநின் றளிப்போயென்பிழை
அனைத்தையும்பொறுத்தெனை யமலனாக்கநீ
தினைத்துணையளவளித் திருட்டியினோக்குறின்
அற்றனனென் வினையாவும்
பெற்றனன்யாவரும் பெறாப்பெரும்பேறே. (36)

வெண்பா.
பேறுபெறவேண்டினென்றும்பீழையுறும்பேதைநெஞ்சே
வேறுகதியிவ்விபூதிதனிற் - றேறுங்கால்
இல்லைவரயோகியிணையடியல்லாலீது
தொல்லைமறையோர்துணிபு. (37)

கட்டளைக்கலித்துறை .
துணித்திடத்தக்கதுதொல்லைவினையின்றொடர்புநிதம்
பணித்திடத்தக்கதுபட்டாரகன்பெயர்பாறுநெஞ்சம்
பிணித்திடத்தக்கதுபேர்த்திடத்தக்கதுபெட்குமவா
குணித்திடத்தக்கதுநம்வரயோகியுட்கொள்குறிப்பே. (38)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
குறிக்கொண்டுநின்றனையேனெஞ்சமே
    நித்தர்குழுக்கூடலாகும்
உறிக்கொண்டவெண்ணெயுணவுவந்தவம்மா
    னுரைகீதையுறுபின்பாக
நெறிக்கொண்டவாழ்வார்களாரியர்க
    ணிகழ்த்திவந்தநியமம்வாய்ந்த
கிறிக்கொண்டவரயோகிபதநிதமுந்
    தொழனமக்குக்கிழமையென்றே. (39)

நிலைமண்டிலவாசிரியப்பா.
என்றுநின்பொன்னடி யிறைஞ்சிடுந்தொண்டரை
என்றுவாயிலா யியக்கிக்கொடுபோய்க்
கண்ணுறற்கரியதா நுண்ணுடறன்னையும்
அடுத்தநீர்விரசையில் விடுத்திடச்செய்ததன்
கரைவாழமாநவர் கரப்பரிசத்தாற்
சுப்பிரமாகிய திப்பியதேகமும்
பெறுவித்தென்று முறுவித்தகமயம்
ஒளிமயமாயொளிர் தெளிவிசும்பதனிற்
றூமணித்தூணஞ் சுமந்திடுந்தகைத்திரு
மாமணிமண்டப மன்னிவாழ்குநராம்
நித்தியமுத்தர்கள் பத்தியின்வைத்திடும்
அரவரசாகிய வரவரமுனிவவெற்
கவித்துக்கவற்றிய வவித்தைத்தமந்தபும்
இருவினைக்கள்வர்கள் வெருவியோட்டெடுப்பர்கள்
பாவப்பிறவிமுத் தாவமுந்தணிந்திடுஞ்
செயிரறுபத்திமைப் பயிர்தழைத்தோங்கும்
உருகுறாமனக்கடல் பெருகிக்கலித்தெழும்
புந்திக்குமுதமுங் கந்தித்தலர்தரும்
வாக்கெனுஞ்சகோரமுந் தூக்கதிருணவெழும்
ஒண்கழற்கமலமென் றிண்மனங்கவர்தர
வெண்கழைத்தொடைகளென் கண்களிற்றோன்றிட
இடைசுற்றியசெவ் வுடையுடனிலங்க
முப்புரிநூனிறஞ் செப்பமாய்த்திகழ்ந்திட
முக்கோலேந்துமங் கைக்கோலந்தர
வளனுறுவலம்புரிக் களனழகொளிர்தரச்
சவிதருகுண்டலச் செவிகடயங்கிட
விதுப்புறுமாடிக் கதுப்புகடுலங்கிட
ஊர்த்துவபுண்டரஞ் சேர்த்தியபாலமும்
பூத்தளிபொழிதரு நேத்திரக்கமலமும்
முத்தமுளைத்தென முறுவனிரம்பிய
முத்தவாய்பூத்தபுன் முறுவலுமவிர்தரத்
தேய்தலும்வளர்தலு மேய்தலிலாநின்
மங்கலத்திருமுகத் திங்கடோன்றிடினே.       (40)
-----

சூன்மணிச்சங்கநிறச்சேடன்றோற்றமெனப்படுவோன்
வான்மணிபோலொளிர்வண்சீர்வரவரமாமுனிக்கோர்
நான்மணிமாலைநவிற்றினனன்னூனறும்பொருளாம்
மேன்மணிசேருளன்பள்ளிகொண்டானெனும்விற்பனனே.       (41)

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நான்மணிமாலை முற்றிற்று.
--------------

This file was last edited on 25 Nov. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)