pm logo

சு. சமுத்திரம் எழுதிய
தாழம்பூ ( நாவல்)
பாகம் 1 (அத்தியாயம் 1-15 )


tAzampU (novel), part 1 (chapters 1- 15)
by cu. camuttiram
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a PDF copy of this work
The text for this work was generated using Google OCR tool and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சு. சமுத்திரம் எழுதிய
தாழம்பூ (நாவல்)

Source:
தாழம்பூ
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600017.
முதற் பதிப்பு: டிசம்பர், 1992; இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2001
விலை ரூ.60.00

Title ܀ : THAALAMBU
Author ܀ : Su. Samuthiram
Language ܀ : Tamil
subject ܀ : Novel
Edition ܀ : Second Edition, December, 2001
Pages : xii + 292 = 304
Published by THIRUVARASU PUTHAKA NILAYAM
13. Deenadayalu Street, Thyagaraya Nagar, Chennai - 600 017.
Price : Rs. 60.00
Printed at: Malar Printers 044-8224803
---------------
ஜனரஞ்சகமும் சமுத்திரமும்...


தமிழ் இலக்கிய உலகில், ஒரு சிலரின் விமர்சனத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் ஒரு எழுத்தாளர் சு. சமுத்திரம். இவருடைய படைப்புகள் விமர்சனத்திற்கு உட்படும் போதெல்லாம், இவரைச் சாடுபவர்தம் எழுத்தாணியிலிருந்து எம்பிக் குதிக்கும் கேள்வி இதுதான்.

"ஜனரஞ்சகமாக எழுதுவது இலக்கியமாகுமா?”

ஜனரஞ்சகமும் இலக்கியமும் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி சமுத்திரத்தின் ஒவ்வொரு படைப்போடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஜனரஞ்சகம் என்றால் என்ன?

ஜனரஞ்சகம் என்ற சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சொல்லைப் பாமரத் தனத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதோ, பாவிப்பதோ, அல்லது அவ்வாறு செய்து கொச்சைப்படுத்துவதோ சற்றும் சரியல்ல. ஜனரஞ்சகம் என்ற சொல், எல்லாத் தரப்பினரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது என்ற அளவிலேயே இங்குக் குறிப்பிடப்படுகிறது.

ஜனரஞ்சகம் என்ற சொல்லை, ஒரு ஆரோக்கியமான பார்வையில் புரிந்து கொண்டே, சமுத்திரம் என்ற எழுத்தாளரைப் பார்க்க வேண்டும்.

ஜனரஞ்சகமாக எழுதுவது என்பது, படிக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது என்பதுதான். எழுதுகிறவன் சிந்தனையில் தெளிவு இருந்தால், எழுத்தில் தெளிவு இருக்கும். அதை வாசகன் புரிந்து கொள்வான். இப்படி எழுத்தாளனை, வாசகன், உரையாசிரியர் உதவி இல்லாமல் புரிந்து கொள்வதால், அந்தப் படைப்பு 'கனத்தை' இழந்துவிடாது. ஒருவர், தனக்கே தெளிவில்லாமல் எழுதுவது, தன் இலக்கு என்ன என்பது தனக்கே தெரியாமல் எழுதுவது, அதன் விளைவாகப் படிப்பவன் சிரமப்படுவது, இதில் “ஏதோ” இருக்கும் என்ற பிரமையைத் தன்னுள் விரித்துக்கொண்டு, தன் சிரமத்தையே இலக்கியத் தரமாகப் பாவிப்பது இவை எல்லாம் இலக்கிய அதிகாரமாகும்.

இலக்கியத் தெளிவும் இலக்கியத் தரமும் முரண்பட்டவை அல்ல!

படைப்பின் புரிதலும் படைப்பின் கனமும் வெவ்வேறானவை அல்ல!

ஒரு எழுத்தாளருக்கு, தான் நினைப்பதைச் சரியாகச் சொல்லத் தெரியாது போனால், அவர்தேர்ந்த எழுத்தாளனாக இருக்க முடியாது.

ஒருவரது, மொழிப் பலவீனம், அந்த மொழியின் பலவீனமாக மாறும்; அதை மறைக்க அதாவது பலவீனத்தையே பலமாக்கச் செய்யப்படும் முயற்சியே, இலக்கியக் கனம், இலக்கியத் தரம் என்ற கண்டுபிடிப்புகள், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எதிரியின் மீது ஏவும் அஸ்திரமே, தெளிந்த நீரைப் பார்த்து ஆழமில்லை என்பது,

பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் - இவர்கள் எல்லாம் ஜனரஞ்சகமாக எழுதியவர்கள் தான். மக்களை மனதிலேயே வைத்துக்கொண்டு எழுதியவர்கள் தான். ஜனரஞ்சகமாக எழுதியதால், இவர்கள் படைப்புகளில் இலக்கியத் தரம், வறுமையை எய்திடவில்லை.

என்றாலும், ஜனரஞ்சக எதிர்ப்பாளர்கள் எதற்கும் துணிந்தவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாரதி, பாரதிதாசன்,பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் ஆகியோரையும் கைகழுவி விடுவார்கள். அவர்களுக்கும் இலக்கியத் தரம் இல்லை என்று “கத்த” வாதம் செய்து விடுவார்கள். அவசியமானால் “கம்பனுக்கும்” கல்தா கொடுப்பார்கள்.

சுமார்15 ஆண்டுகளுக்கு முன் "கார்க்கி” பத்திரிகையை அன்று நடத்திய கவிஞர் இளவேனில் ஒரு வேடிக்கையைச் செய்தார், வார்த்தைகளை வைத்து விளையாடி, ஒரு புதுக் கவிதை எழுதினார். அதன் பொருள், அவருக்கே தெரியாது. ஆனால், ஏதோ ஒரு கலையம்சமோ அல்லது கருத்து அம்சமோ இருப்பதுபோல் ஒரு பாசாங்கு செய்யும் அந்தக் “கவிதை” கணையாழிக்கு அனுப்பப் பட்டது. எழுதியவரின் பெயர் அசத்தலாக இருந்தால்தான் கவிதைக்கு மவுசு என்று கருதி, கவிஞர். இளவேனில், அருப சொரூபன் என்ற பெயரில் அனுப்பி வைத்தார். எழுதியவருக்கே தெரியாத பொருள், கணையாழி ஆசிரியருக்குப் புரிந்தது. அந்த கவிதையை தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். பின்னர் இளவேனில், இவர்களின் பொய் முகத்தை சுட்டிக் காட்டினார். புரியாமல் எழுதினால், அதை இவர்கள் உயர்ந்தது என்று அங்கீகரிப்பார்கள் என்பது நிரூபித்துக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, இவர்களின் இலக்கியத்தரம், கனம், ஆழம் முதலியவை இவர்களின் போலித்தனத்திற்கு ஒரு அரித்தார அலங்கோலத்தையே காட்டும்.

ஒரு படைப்பு ஜனரஞ்சமாக இருப்பாதலேயே, தன் இலக்கியத் தரத்தை இழந்து விடாது என்பது திண்ணம். ஒரு படைப்பின் ஜனரஞ்சக அம்சம், அதன் இலக்கிய அந்தஸ்துக்கும் குறுக்கே நிற்காது.

இப்படிச் சொல்வதால் ஜனரஞ்சகப் படைப்பெல்லாம் இலக்கியத்தரமானது என்று சொல்வதாக, கோணல்வாதம் செய்யக் கூடாது. ஜனரஞ்சக படைப்புக்களிலும் பல படைப்புகளுக்கு இலக்கியத்தரம் இருப்பதில்லை. இலக்கியத்தரம் என்பது, பல அம்சங்களை ஒருங்கிணைப்பதைப் பொறுத்ததாகும்.

ஜனரஞ்சகமாக எழுதுவதாலேயே, ஒரு எழுத்தாளனை ஓரம் கட்டப்பார்ப்பது இலக்கிய தர்மம் அல்ல என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

சரோசா, ஒரு குப்பத்துக்காரி. திருடுதல், சாராயம் காய்ச்சுதல், அவளுக்குத் தொழில். பெற்றோரை இழந்த அவளுக்கு ஆறுதல், அவள் பாட்டன். அவரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு. இளங்கோ என்ற இளைஞன் வீட்டில் திருடி மாட்டிக் கொள்கிறாள். காவல் துறையில், இளங்கோவின் நண்பருக்கு இருக்கும் செல்வாக்கால், காவல் நிலையத்தில் உதைபடுகிறாள் சரோசா. செய்த குற்றத்துடன் செய்யாத குற்றமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. செய்யாத குற்றத்திற்குச் சரோசா, தண்டிக்கப்படுவதை விரும்பாத இளங்கோ, தன் காதலி பாமா, பூக்காரி ருக்குமணி ஆகியோர் உதவியுடன், சரோசாவைக் காவல் நிலையத்தில் இருந்து சிறை மீட்கிறான்.

ஆனால் இந்தப் பின்னணியை உணராத சரோசா, தன் குப்பத்து ஆட்கள் மூலம், இளங்கோவைப் பழி வாங்குகிறாள். குப்பத்து ரவுடிகள் இளங்கோவை அடித்துக் குற்றுயிராய்த் தூக்கி எறிகிறார்கள். பூக்காரி ருக்குமணி காப்பாற்றுகிறாள். பின்னர் சரோசா உண்மையை அறிகிறாள்.

சாராயத் தொழிலில் இருந்து சரோசாவை விலக வைத்து இளங்கோ, தன் அலுவலகத்திலேயே ஒரு தாற்காலிக வேலை வாங்கித் தருகிறான். தங்களை விட்டுப் போவதை விரும்பாத சாராயக்கும்பலோ, அவளை ஒழிக்க விரும்புகிறது. இதனால், காவல் துறையை அந்த கும்பல் ஏவி விட்டு சரோசா மீது செய்யாத கொலைப் பழியை தலையில் சுமத்துகிறது. என்றாலும், அரசு அலுவலகத்தில் வேலைபார்க்கும் இன்னொரு தொழிலாளியான முனியம்மா, சரோசாவைக் காப்பாற்றச் சமதர்ம மாதர் மன்றத்திற்கு அழைத்துக்கொண்டு செல்கிறாள். அந்த மாதர் மன்றம், சரோசாவை வென்றெடுக்கிறது. அவள் அதில் ஐக்கியமாகிறாள். இதுதான் கதை.

குப்பம், மத்தியதர வாழ்க்கை, அலுவலகம், காவல் துறை இவை அத்தனையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, சமுத்திரம் கண்முன் நிறுத்துகிறார். இந்த நான்கில் சிதைவையும், சீரழிவையும் சித்திரிக்கும் சமுத்திரம், அங்கே மனிதாபிமானம் சுடர்விடுவதையும் சுட்டிக்காட்டுகிறார். குப்பத்தில் ஒரு சரோசா, மத்தியதர வர்க்கத்தில் ஒரு இளங்கோ, அலுவலகத்தில் ஒரு முனியம்மா, காவல் துறையில் ஒரு திருமலையப்பன் - இவர்கள் தத்தம் வாழ்க்கைச் சூழலிலிருந்து "மானுடம்" காப்பவர்கள். அதாவது ‘சமன் செய்து சீர்தூக்குகிறார் சமுத்திரம்.

சமதர்ம மாதர் மன்றம், நாவலில் திணிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது, பின் சிந்தனையாகவும் இருக்கக்கூடும். சரோசாவைச் சமதர்ம மாதர் மாமன்றத்திற்கு முனியம்மாள் அழைத்துச் செல்கிறாள். ஆனால் முனியம்மாள் இத்தகைய சிந்தனையும் பார்வையும் உடையவள் என்பதை முன்னாலே ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

நாவல் முழுவதும் சமுத்திரத்தின் நடையில் ஒரு கிண்டல், குத்தல், கேலி... இந்த 'பாணி' நாவல் முழுவதும் சமுத்திரம் 'இருக்கிறார்' என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாதாரணமாகப் படைப்பிலக்கியத்தில், ஆசிரியர் இருக்கிறார் என்ற உணர்வு துருத்திக்கொண்டு நின்றால் அது கலையம்சத்தைப் பலவீனப்படுத்தும். ஆனால் சமுத்திரத்தின் நாவலில் அந்தப் பலவீனம் இல்லை.

பாத்திரப்படைப்பும், நடையும் நாவலுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள்.

சரோசா, தாழம்பூவாக இருக்கலாம். தாழம்பூவையே தலையில் சூட இயக்கம் இருக்கலாம். ஆனால் சமுத்திரம், மல்லிகைப்பூ தான், அதைத் தலையில் சூடத் தயக்கம் காட்டினால், தலையில் தான் கோளாறு.

டிசம்பர், 1992. ச. செந்தில் நாதன்
சென்னை. தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
-------------

என்னுரை


1992-ஆம் ஆண்டில் இந்த நாவலை, இதே பெயரில் தினத்தந்தியில் தொடர்கதையாக எழுதினேன். ஆகையால், அந்த வாசகர்களுக்குரிய எளிய நடையில் முதல் தடவையாக ஒரு சமூக பிரச்சனை குறித்து எழுதப்பட்டது.

இந்த நாவலுக்கான நிகழ்வு, என் கண் முன்னாலயே நடந்தது. எங்கள் பகுதிப் பக்கம், இந்தப் படைப்பில் வரும் சரோசாபோல இரும்பு இத்தியாதிகளை திருடுவதும், தட்டி கேட்பவர்களை தலைகளில் தட்டுவதுமாக இருந்த ஒரு சேரிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்புதான். இவள், தனது தாத்தாவிடம் காட்டிய பரிவையும் நான் ஒரு தடவை கண்டிருக்கிறேன். அந்த மனிதர், இந்த நாவலில் வருவதுபோலவே காட்சி அளிப்பார்.

சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், இந்த இரு நிறுவனங்களிலும் கேசுவல்கள் எனப்படும் அரசின் அன்றாட கூலி அலுவலர்கள், நிரந்தர அலுவலர்களால் எப்படி பாடாய்ப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிவேன். பெரும்பாலும் இந்த நாவலில் வருவதுபோலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு நான் மனிதாபிமானமிக்க அலுவலராகவே செயல்பட்டேன். இவர்களில் பட்டதாரிகள் உட்பட்ட பலர், இன்னும் என் வீட்டிற்கு வருகிறார்கள். இந்த நட்புரிமைதான் இவர்களை பற்றி எழுத எனக்கு தகுதி வழங்கியுள்ளது.

ஒரு சேரிப் பெண்ணை பற்றிய பரிதாப சித்தரிப்போடு. அரசின் அன்றாடக் கூலி அலுவலர்களின் அனுதாப சித்தரிப்போடும் இரட்டை நோக்கத்தோடு, இந்த நாவலை எழுதினேன். கூடவே, கள்ளச்சாராயம் காய்க்கப்படும் 'கலையை' சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் போய் தெரிந்து கொண்டேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர். செந்தில்நாதன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது குடும்ப நண்பர். அவர் அண்ணன் ச. ராசமாணிக்கமும் நானும், நேருதாசன், பகத்சிங், தமிழ்மணி, தர்மலிங்கம், பலராமன் போன்ற தோழர்களும் சேர்ந்து, 1958-ம் ஆண்டு வாக்கில் தேசிய முழக்கம் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறோம். இவர்களோடு, தோழர் செந்தில்நாதனும் அந்தக் காலகட்டத்தில், என் சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தோழர். செந்தில்நாதனின் அணிந்துரை, அடிப்படை மக்களைப் பற்றிய இந்த படைப்பிற்கு வலிமை சேர்க்கிறது. ஜனரஞ்சகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து, இந்தக் காலகட்டத்தில் ஒரு கருத்துப் போராகவே நடை பெற்று வருகிறது. இது, இப்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. தரமான வாசகர், எந்தப் பக்கம் முகம் திருப்புவது என்று புரியாமல் தவிக்கிறார். மேட்டுக்குடி எழுத்தாளர்கள், இவரது முகத்தை பளவந்தமாக திரும்பப் பார்க்கிறார்கள். என்னைப் போன்ற எழுத்தாளர்களும், தோழர் செந்தில்நாதன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களும் இந்த வன்முறை திருப்பிலிருந்து வாசகர்களை, மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மக்கள் எழுத்து என்பது மலிவு எழுத்தல்ல, மாறாக எந்த மக்களிடம் நிகழ்வுகளையும், மொழியாடல்களையும் உள்வாங்குகிறோமோ, அவற்றை, அந்த மக்களுக்கே. விஞ்ஞான பூர்வமாக, அவர்களின் மானுட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பிக் கொடுப்பதே மக்கள் எழுத்தாளர்களின் பெரும் பொறுப்பாகிறது. இதற்கு, இந்த தாழம்பூ, பத்தாண்டுகளுக்கு முன்பே தாள் திறந்தது.

தோழர் செந்தில்நான் சுட்டிக்காட்டுவதுபோல், சமதர்ம மாதர் மன்றம் இட்டுக்கட்டப் பட்டதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே நடந்த பெண்ணியப் போராட்டங்களை உள்வாங்கித்தான் இந்த 'மன்றத்தை' படைப்பில் கொண்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிய அமைப்புகள்கூட இந்தப் படைப்பைப் பற்றி அலட்டிக்கவில்லை.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் 19-ஆம் நூற்றாண்டில், நம் மூதாட்டிகள் மாராப்பு போட உரிமை கேட்டு முப்பத்தைந்தாண்டு காலம் நடத்திய தோள்சீலைப் போராட்டமே இன்றைய பெண்ணிய இலக்கிய மீட்புகளில் இடம் பெறாதபோது, இந்தப் படைப்பு இடம் பெற வேண்டும் என்று நான் நினைப்பது ஒரு மூடநம்பிக்கை மாதிரிதான்.

இந்தப் படைப்பு வெளியாகக் காரணமாக இருந்த தினத்தந்திக்கு - குறிப்பாக அதன் இயக்குனர் திரு. சிவந்தி திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அப்போதைய செய்தி ஆசிரியரும், மிகச் சிறந்த எழுத்தாளருமான தோழர்.சண்முக நாதனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படைப்பை பல்வேறு கல்வியாளர்கள் தத்தம் ஆய்வுகளுக்காக கருப்பொருளாக எடுத்தாண்டிருக்கிறார்கள். பல்வேறு ஆய்வு அறிக்கைகள், எம்.பில்., -பட்ட அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இவர்களுக்கு, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது படைப்புகள் அனைத்தையும் கொண்டு செலுத்த முன்வந்திருக்கும் பெரியவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும், நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கே நான் குறிப்பிடுவதுபோல் நன்றி ஒரு கடன்தான். காரணம், எனது பழைய படைப்புகளை கொண்டு வருவதன் மூலம் இவர்களுக்கு புதிய வருவாய் வரப்போவதில்லை. ஆனாலும், என் மீதுகொண்ட அன்பாலும், என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மக்கள் வழி படைப்புகள் புதுப்பிக்கபட வேண்டும் என்ற சமூக நோக்காலும் பெரியவர் திருநாவுக்கரசு இந்த நாவலையும், இது போன்ற எனது இதரப் படைப்புகளையும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார். அவருக்கு ஆயிரம் தடவை நன்றி கூறினாலும் அது முழுமையாகாது.

வாசகப் பெருமக்கள் இந்தப் படைப்பு குறித்து தங்களின் விசர்சனத்தை தெரியப் படுத்தினால் அது என்னை ஊக்குவிக்கும்.

சு.சமுத்திரம்
-------------

அத்தியாயம் 1

தோளுக்கு மேலே பின்புறமாய் வளைந்திருந்த ஒரு கையில் தொங்கிக்கொண்டிருந்த கோணிப் பை, அவளது முதுகுக்கு உறைபோல ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஆடியத. கண்ணாடி மாதிரியான கோணி, அடியில் கனத்துக்கிடந்தது. மறு கையோ மூன்றடி நீளமும், முருங்கக்காய் பருமானமும் கொண்ட ஒரு இரும்புக் கம்பியை, அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் சர்தார்ஜி காப்புகள் மாதிரியான 'கங்கண' வளையல்கள். சட்டை என்று தள்ளவோ, ஜாக்கெட் என்று கொள்ளவோ முடியாத மேல் பாக உடுப்பு, முட்டிக் கைகள் வரை, முட்டி, இடுப்பு வரைக்கும் நீண்டு, இடையை பெல்ட்போல் சுற்றிக்கொண்டிருந்தது. அழுக்கே ஒரு நிறமாகக் கொண்டது போன்ற களிமண் நிற ஆடை. இடுப்புக்குக் கீழே இருந்து குதிகால்வரை வியாபித்த சிமெண்ட் நிறப் பாவாடை... அதில் இடையிடையே சதுரஞ் சதுரமான சின்னச்சின்ன கண்ணாடிகள். வாழைக் குலையிலிருந்து மேல்போக்காய் விடுபட்ட வாழை இலை போன்று மார்பில் பட்டும் படாமலும் இருந்த தாவணி. காதுகளில் கம்மல்களும், அந்தக் கம்மல்களில் தொங்கிய வளையங்களுமாய்...

சரோசா, அந்தப் பங்களாவில் ‘படிதாண்டிய' பெண் போல் நாணிக்கோணி நின்ற தென்னை மரத்தில், கைக்கு எட்டாத. உயரத்தில் ஒரு தேங்காய் குலை மீது கண் வைத்து எம்பி எம்பிக் குதித்தாள். அவள் கைபட்டு, கைபட்டு, அது மேலே போனதே தவிர அந்தக் கைக்குள் அடங்கவில்லை. ஏதோ, தப்பு செய்துவிட்டது போல தலையில் அடித்துவிட்டு, பிறகு கையில் இருந்த இரும்புக் கம்பியை ஓங்கி, ஒரு 'குலையில்' ஒரு போடு போட்டாள். ஐந்து தேங்காய்கள் அந்த வீட்டுக்கு உள்ளேயும், ஆறு வெளியேயும் விழுந்தன. ஆறு தோங்காயையும் பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, போகப் போனவளுக்கு, 'அம்மாம் பெரிசு' தேங்காய்களை வீட்டுக்குரியவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போக மனமில்லை. கீழே குனிந்து, இரும்பு கேட்டின் ஓட்டைகள் வழியாக உள்ளே பார்த்தாள். வெளியே நடக்கும் எதையும் பார்க்கப் போவதில்லை என்பதுபோல, அந்த வீட்டுக்குள்ளேயே இருந்த சோபா செட்டு ஆசாமிகள் வாயும், வயிறுமாய், டி.வியும், கண்ணுமாய், சாய்ந்து கிடந்தார்கள்.

சரோசா, ஆமை நகர்வதுபோல, கேட்டை நகர்த்தி, உள்ளே போனபோது, தாழ்வாரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த, சடைநாய், பலமாய் குரைத்தது. சமையல் அறைக்குள் தட்டுமுட்டு சாமான்களோடு, தடுமாறிக் கொண்டிருந்த மாமி, அது 'டி.வி. நாய்' என்று அனுமானித்து, எட்டிப் பார்க்கவில்லை. அந்தச் சமயம் பார்த்து மிக்ஸியை தட்டிவிட, அது போட்ட கூச்சலில், நாய் சத்தம் உள்ளே இருந்தவர்கள் காதில் உரசவில்லை. இதற்குள், சரோசா ஆறு தேங்காய்களோடு மேலும் ஐந்து தேங்காய்களையும் பையினுள் போட்டுக் கொண்டு, கைக்கு எட்டிய ஒரு கொய்யாப் பழத்தைப் பறித்து அணில் மாதிரி கொரித்துக் கொண்டு வெளியேறப் போனாள். அந்தச் சடை நாய் எம்பி எம்பிக் குலைத்தது. உடனே, இவள் உள்ளே கிடந்த தேங்காயை எடுத்து அதன் மேல் எறியப் போவதுபோல் பாவலா செய்தாள். அது நிசமாகவே ஒரு 'சடைதான்'; உடனே பம்மிக் கொண்டு, வாலாட்டியது.

சரோசா, அந்த இரண்டாவது குறுக்குத் தெருவில் தெற்காக நடந்து, கிழக்காகத் திரும்பி நின்றாள். ஒரு குண்டுகுழி காலிமனை, தாலி மாதிரியான வேலிச் சுவரோடு வெறிச்சோடிக் கிடந்தது. அந்தப் பக்கமாகப் போனாள். வேலிச் சுவரைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தாள். இரண்டாவது குறுக்குத் தெருவில், ஆள் அரவம் தெரியவில்லை. பகல் ஒரு மணி என்பதால், அதையே நள்ளிரவாக அனுமானித்து, பங்களாக்காரிகள் தூங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள்.

காலிமனைச் சுவரில் வேல் வடிவத்திலும் சுண்ணாம்பு டப்பா வடிவத்திலும் குத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சிதறல்களை கையை வைத்து ஆட்டி ஆட்டி எடுத்துப் போட்டாள். பிறகு, இரும்புக் கம்பியால் கண்ணாடிச் சிதறல்களை குத்திக் குத்தி சிதறடித்தாள். கோணிப் பை சுவரில் தாவி லாவகமாக நின்றாள். அவளைப் போலவே நின்ற ஒரு பூனை, அவள் வாயில் தொங்கிய கோணிப்பையை மிகப் பெரிய கோரப்பல்லாக அனுமானித்து, அவள் தன்னைத்தான் பிடித்துத் தின்ன நிற்கிறாள் என்று பயந்து கீழே குதிக்க, அந்தப் பூனை தன்னைப் பிடிக்கத்தான் தாவுகிறது என்று ஒரு மைனா குருவி ஆகாயத்தில் பறக்க, சரோசா எதிர் வீட்டுப் பங்களாவை பார்த்துவிட்டு 'அடடே மயிலு' என்று வாய்விட்டுப் பேசினாள். பிறகு, தப்புக்குத் தண்டனை கொடுப்பது போல தலையில் லேசாய் அடித்துக் கொண்டு தன்பாட்டுக்குப் பேசினாள்:

"அட கண்றாவியே.. பங்களாம்மா வீட்டு பச்சைப் புடவையை ஏதோவொரு 'குடச' வேலைக்காரி தோய்ச்சு, மாடிச் சுவர்ல போட்டிருக்காள். அது இன்னாடான்னா, தென்ன ஓல இடுக்கு வழியாய் பார்த்தால், மயிலு மாதிரி கீது. வாழ்வும் இது மாதிரி தானோ? அடடே! நான் கூட சினிமாவுக்கு வசனம் எழுதலாம்போல - சீ.. அந்தப் பொழப்பு சொதப்புற பொழப்பு... எவனாவது காலுல, கையில விழுந்தா, நடிக்கறதப்பத்தி யோசிக்கலாம். இன்னும் ரஜினிகாந்த் மாதிரி பொம்மனாட்டிங்க யாரும் வரலியே.."

சரோசா, அந்தச் சுவருக்கு அடுத்தபக்கம், வாளி மாதிரி இருந்த வட்டச்சுவரில் அதன் குறுக்காய் நின்ற இரும்புப் பிடியை பிடித்ததபடியே ஒரு காலை நீட்டிப் போட்டாள். அப்போது கால் தடுமாறி, அவள் அந்தக் கிணற்றுக்குள்ளேயே விழுந்திருப்பாள். நல்ல வேளை, அடுத்த காலையும், அங்கே போட்டு, கைப்பிடியை நழுவ விடாமல் 'சைடில்' குதித்தாள். ஏதோ ஒரு சினிமா ஸ்டண்ட் நடிகையை மனதில் நினைத்தபடி கைகால்களை உதறி விட்டுக்கொண்டாள். எதிரே, ஒரு பங்களா, கேட்க ஆளில்லாமல் கிடந்தது போல் இருந்தது. அந்த வீட்டுக்கார ஆசாமி குடும்பத்தோடு நேற்று 'தொம்மாந்தூண்டு காரில்' (மாருதி) பெட்டி படுக்கையோடு போனது போல் இருந்தது.

ஆப்பிரிக்க மக்களின் தலைமுடிபோல், தரையோடு சுருண்டு கிடந்த புற்கள் கால் உரச, தங்கரளிச் செடிகள் தோளுரச, கருவேல மரங்கள் தலையுரச, எருக்கம்பூக்கள் இடையுரச, அவள் அந்தப் பகுதி வழியாக நடந்து, மூன்றாவது குறுக்குத் தெருவில், நின்று நிதானித்த பிறகு, அந்தப் பங்களாவை நோக்கிப் போனாள்.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏப்பம் விடப்பட்டு, இப்போது வாங்கியவருக்கு குழி வெட்டக்கூடப் போதாத அளவுக்குக் கிடந்த ஒரு காலி மனை வழியாக இரும்பு வேலி போட்ட அந்தப் பங்களாவை நெருங்கினாள். நான்கைந்து சிமெண்ட் தூண்களுக்கு இடையே, வலைபோல் சன்னஞ் சன்னமாய் பின்னப்பட்ட இரும்புக் கம்பிகளை, கொய்யாக்காயை கடித்துக் கொண்டே பசியோடு பார்த்தாள். தரையில் பலமாகக் கால் ஊன்றி, இரண்டு கைகளால், அந்த இரும்பு வலைக் கம்பிகளை இழுத்தாள். ஏற்கனவே மக்கிப் போயிருந்த இரும்புக் கம்பிகள், தொடப் பொறுக்காதவைபோல் சரிந்தன. கோணல்மாணலாய், வட்ட வட்டமான அந்தக் கம்பி வலைகளை புடவையை மடிப்பது போல் மடித்து, வளைத்து, கோணிப் பையின் வயிற்றுக்குள் போட்டாள். மூன்றடி நீளமுள்ள சிமெண்ட் தூண்களில் பின்னிக் கிடந்த இரும்புக் கம்பிகள் மட்டும் அவள் இழுத்த இழுப்பிற்கு மசியவில்லை. அவள் உள்ளங்கையில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். அவளுக்கும் அதைப் பார்த்து ரத்தக் கோபம் வந்தது. இரும்புத் தடியை எடுத்து, சிமெண்ட் சுவர்களை தட்டித்தட்டி, மட்டந்தட்டி, அவற்றில் சுருண்டு கிடந்த கம்பிகளை குறுக்காகவும், நெடுக்காகவும் மடித்து 'காவலிலிருந்து' விடுவித்து கோணிப் பைக்குள் சிறைப் படுத்தினாள். பின்பக்கமுள்ள கதவைப் பெயர்க்கலாமா என்றும் யோசித்தபடி, தலையை தோளோடு சேர்த்து முன்னும் பின்னுமாக ஆட்டினாள். ஏதோ ஒரு சினிமாக்காரி, ஒரு படத்தில் இப்படி ஆட்டியதாக அவளுக்கு ஒரு ஞாபகம். பிறகு, 'சீ... பாவம்' என்று தனக்குள்ளேயே பேசியபடி, அந்த இடத்தைவிட்டு நிதானமாக வெளியேறப் போனபோது -

“ஏய்... நில்லுடி..."

சரோசா, கோணிப் பையை முதுகில் சாத்தியபடியே குரல் வந்த எதிர்த் திசையை நோக்கி ஏடாகூடமாய் பார்த்தாள். அங்கே குரல் கொடுத்துக்கொண்டிருந்தவளை விட, அந்த வீட்டின் முனையில் சவருக்கு மேலே உயர்ந்த பப்பாளிப் பழங்களே, அவள் கவனத்தைத் கவர்ந்தன.

"ஏய்... தடிமாடு... கோணிக்குள்ளே என்னடி வைச்சிருக்க? இங்க வாடி..!"

சரோசா, எதிர்த்திசையை எதிரித் திசையாகப் பார்த்தாள். பங்களா மாதிரி பெயர்ப் பலகையோ, நாயோ இல்லாமல், கிராமத்து வீடு மாதிரி 'பேஜாரான' சோடனைகளோடு, எருமை மாடு படுத்துக் கிடப்பது போல் இருந்த அந்த வீட்டை உற்றுப் பார்த்தாள். அதிலிருந்து வெளிப்பட்டவளின் தோற்றத்தைப் பார்த்து, சரோசா பதறவில்லை- யானாலும், பயந்து விட்டாள். வழக்கமான பங்களாக்காரிகள் மாதிரி இது தளதள கொழுகொழுக்காரி இல்லை. இறுகிப்போன உடம்பு. இளையராசா மெட்டு மாதிரி அடித் தொண்டைக் குரலு. 'படா காலு, படாகையி ஒரு நாட்டுப்புறம், இந்த வீட்டுப் புறத்துக்கு வந்திருக்கு...

சரோசா, தனது அனுபவங்களை ஒட்டுமொத்தமாக உள்ளத்திற்குள் கொண்டு வந்தாள். முதலில், திருடிய இடத்தைவிட்டு எகிறணும். அப்பால அக்கம்பக்கத்து 'கஸ்மாலங்க' கூடும் முன்னால, கைகால விரிச்சுப்போட்டு ஓடாதது மாதிரியும், நடக்காதது மாதிரியும் போகணும். அதே சமயம், அந்த ‘கெய்விக்கு’ பயப்படாதது மாதிரியும் 'தில்லா'ப் பார்க்கணும். ஆனாலும், அதுக்கு மரியாதி கொடுக்கிறது மாதிரி தலைய ஓரங்கட்டி லேசாச் சிரிச்சு நழுவணும்.

சரோசா, பழைய அனுபவங்களை செயல்படுத்தும் வகையில், அவளை 'தில்லாய்' பார்த்து, சும்மாங்காட்டியும் சிரித்து, நடந்த போது, எதிர்வீட்டு அம்மா, அவளுக்குப் புதிய அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறவள் போல்‘சாலையில்’ வந்து நின்றவளை இரண்டு கையையும் குறுக்காய் நீட்டி வழிமறித்து, வாயைப் பேசவிட்டாள்.

"ஏண்டி திருட்டு முண்ட! இந்த உடம்பை வைச்சுக்கிட்டு, இப்படி ஏண்டி பொழப்பு நடத்தறே? ஏண்டி ஆள் இல்லாத வீட்டுக்குள்ள போய் அடாவடியா இரும்புக் கம்பிய பிடுங்கற? இன்னும் என்னல்லாம் திருடினியோ? கோணிப் பைய திறந்து காட்டுடி. ஒன்ன மாதிரி திருடிங்கள், நடுரோட்டுல நிக்க வைச்சுச் சுடணும்."

எதிர்வீட்டம்மா, பேச்சோடு நிற்கவில்லை. ஐம்பது வயதிலும் அந்த இருபது வயதுக்காரியை வீழ்த்த முடியும் என்ற உறுதியோடு, சரோசாவின் கோணிப்பையை பறிப்பதற்காக கையை நீட்டினாள். உடனே சரோசா கோணி மூட்டையை உடம்புக்கு முன்னாலும் பின்னாலும், தலைக்கு மேலும் கீழும் அங்குமிங்குமாய் ஆட்ட, எதிர்வீட்டம்மா, அது சுற்றிய சுற்றுக்கு ஏற்ப, கைகளை ஆகாயத்தில் துழாவ... அந்தக் கிழமும், இந்த இளமும் குச்சுப்புடி டான்ஸ் ஆடுவது போல் இருந்தது. அக்கம்பக்கத்து பங்களா ஜன்னல்களில் முகம் பதித்து நின்ற கண்கள், வாய்களையும் அகலமாக்கின. ஆனால், கண்கள்தான் தெரிந்தனவே தவிர, கால்கள் தெரியவில்லை. அவை எதிர்வீட்டு அம்மாவுக்கு ஆதரவாக வெளியே வரவும் இல்லை.

பங்களா பொம்மனாட்டிங்களோட பயந்த கண்களைப் பார்த்த சரோசாவுக்கு, லேசாய் தைரியம் வந்தது. 'கெய்விக்கு’ நெத்தியடி கொடுத்தாத்தான், குயிக்கா போகலாம். 'இல்லாங்காட்டி' வம்புதான். சரோசா அவளை அடிக்கப் போவது போல், கையை ஓங்கியபடியே, கத்தினாள்:

“ஏய்... கெய்வி, நெஞ்சுல கீற மஞ்சாஞ் சோறு பிஞ்சிடும் பிஞ்சு. நானு இரும்புக் கம்பிய பொறுக்கறத பாத்தியாமே?"

"அடிப்பாவி! இரும்புக் கம்பிகள, சிமெண்ட் தூண்களை உடச்சி, கோணி மூட்டைக்குள்ள போட்டத நானே பார்த்தேன்! சீ ... ஒனக்கு எதுக்குடி சேல? ஒனக்கு எதுக்குடி ஜாக்கெட்டு?"

“நீ இந்த வயசுல பிரா போடும் போது, நானு சின்னப் பொண்ணு சிங்காரிக்கப்படாதா? நல்ல நினைப்புமே உனக்கு. நானு பாவம் நாலு வீட்ல பேப்பர்ங்க பொறுக்கி கோணிக்குள்ள பூட்டு போய்க்கினே கீறேன். நீ இன்னடான்னா என்னப்போய் திருடின்னு சொல்ற?”

"அப்படின்னா, கோணிய திறந்து காட்டேண்டி..."

"ஏய்... கெய்வி, மரியாதியா அந்தாண்ட போ. இல்லாட்டி நடக்கறது வேற. அந்த வீட்டு, 'பிச்சாத்து', இரும்புக் கம்பிய பிச்சா என்னமே? வழி விடுறியா... இல்ல ஒத தின்னுறியா?"

எதிர்வீட்டம்மாவுக்கு, இன்னும் கிராமத்து மண் வாசனை போகவில்லைதான். ஆனாலும், அவளால் அடாவடியாய் பேசத்தான் முடிந்ததே தவிர, அடிதடியில் இறங்க மனமில்லை. அதோடு, இவள் அசல் ரவுடி மாதிரி தெரியுது. ஆளுதவி கிடைக்குமா என்று அந்தம்மா, அக்கம்பக்கம் பார்த்தாள். அத்தனை ஜன்னல்களும், 'பட்டுபட்டு' என்று மூடின. “அடிப்பாவிகளா" என்று அனைத்து வீடுகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கத்தினாள். பிறகு வீட்டுக்குள், தனது அருந்தவப் புதல்வி மல்லிகா இருப்பது நினைவுக்கு வந்தது. சரோசாவை கோணிப் பையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கத்தினாள். 'திருடி... திருடி... ஓடியாங்க... ஓடியாங்க..!

ஆனாலும், சில வீடுகளில் வாசல்கள் திறக்கப்பட்டு சில பெண்கள் அவற்றை அடைத்து நின்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். ஆனால் வீதிக்கு வரவில்லை. காரணம், அவர்கள் வீடுகள் அசல் காம்பவுண்ட் சுவர்களால் அரண் கொண்டவை. இரும்புக் கம்பிகள் இல்லாத சுவர்க்காரிகள். அவர்கள் வந்த விதமும், பக்கத்து வீட்டுக் காரிகளை கையாட்டிக் கூப்பிட்ட தோரணையும் ஒரு சண்டை சினிமாவைப் பார்க்கப் போகிற ரசனையோடு நிற்பது போல் தோன்றியது. அந்த அம்மாவைப் பார்க்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை, அவளே வெற்றிபெற வேண்டுமென்று நினைப்பது போலவும் இருந்தது. எல்லோரையும் அடக்கி வைப்பது போல் அந்தத் தெருவே குலுங்கும்படி குரலெழுப்பும் அந்த அம்மாவுக்கு எதிர்க்குரல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வது போல் நின்றார்கள். சிலர் தொலைநோக்காய் பிரச்சினையை அணுகி வருத்தப்பட்டாலும், பலர் இந்த மாதிரியான சண்டைக்காக தத்தம் வீடுகளிலும் சில சில்லரைத் திருட்டுகள் நடந்தால்கூட பரவாயில்லை என்பது போல் பார்த்தார்கள்.

"ஏய் மல்லி! போலீசுக்கு போன் பண்ணிட்டு இங்க வாடி. முவள விடப்படாது. முதல்ல போன் போடு."

போலீஸ் என்றதும், சரோசாவுக்கு லேசாய் பயம் பிடித்தது. ‘ஏரியா போலீஸ்' என்றால் பயமில்லை. ஒருவேளை அவசர போலீசுன்னா, ஆபத்தாச்சே.

உள்ளே, ஒரு மாத நாவலை மெய்மறந்து படித்து, ஒரு கற்பனைக் காதலனுடனோ, அல்லது நிசக் காதலனை நினைத்துக் கொண்டோ, ரசித்துக் கிடந்த மல்லிகா, வெளிவந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே அவசர அவசரமாய் ஓடி, டெலிபோன் பக்கம் போனது தெரிந்தது. உடனே, அவள் அம்மாவும் திமிறிக்கொண்டிருந்த சரோசாவை வலுக் கட்டாயமாக, மூச்சுமுட்ட இழுத்துக் கொண்டிருந்தாள்.

சரோசா, வழிமறித்தவளை மல்லாக்கத் தள்ளப்போனாள். பிறகு அது கொலைக் கேசாகிவிடும் என்று அந்த நேரத்திலும் நினைத்து, அவள் ஒரு கையை பிடித்துத் திருகி, ஒரு ஓரமாகத் தள்ளி, அவள் இரண்டு கால்களையும் தனது கால்களால் தட்டிவிட்டு, கீழே ஆரஅமரக் கிடத்திவிட்டு, நடந்தாள்.

ஒரு கையை கீழே ஊன்றியபடி விழுந்த அந்தம்மா, அந்தக் கை ஒடிந்துவிட்டதா, அல்லது பிசகிவிட்டதா என்று தெரியாமல் அந்தக் கையையே பார்த்தபடி “அய்யோ, அம்மா, அய்யோ... அம்மா..." என்று அரற்றினாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. மல்லிகா அங்கே அலறியடித்து வந்து அம்மாவைத்தான் பிடித்தாளே தவிர, "அவளை பிடிடி, பிடிடி" என்று அந்த வேதனையிலும் ஒரு சாதனையை நடத்தச் சொன்ன தாய்காரியின் ஆணையை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. பாதி, பயம்; மீதி, அசல் சோம்பம்.

சரோசா, கை நழுவி விழுந்த கோணி மூட்டையை மீண்டும் தூக்கிக்கொண்டு எகிறிக் குதித்த சுவர் பக்கமாய் ஓடியபோது, அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், அம்மா கீழே கிடப்பதைப் பார்த்து வாகனத்தை ஆப் செய்யாமலேயே, நிறுத்தி வைத்துவிட்டு “என்னம்மா, என்னம்மா" என்று கேட்டுக்கொண்டே, அம்மாவை தூக்கப் போனான். அவளோ, மகன் கிடைத்த மகிழ்ச்சியில் வலியை கரைத்துக்கொண்டு ஆணையிட்டாள் :

"அதோ ஓடுறா பாரு... அவள் திருடி... கேடி... என்ன அடிச்சுப் போட்டுட்டு ஓடுறா. அவனைப் போய் பிடிச்சுட்டு வாடா. பிடிச்ச கையோட இங்க இழுத்துட்டு வாடா."

சரோசாவை, தன் முன்னால் இழுத்துக்கொண்டு வரப்படும் வரை எழுந்திருக்கப் போவதில்லை என்பது போல், அம்மாக்காரி அப்படியே கிடந்தாள். மல்லி, அந்தச் சமயத்திலும், மாத நாவலின் ஒரு உச்சகட்டப் பகுதியை படித்துக் கொண்டு நின்றாள். ஆனால் தாய்சொல் தட்டாத தனயனான இளங்கோ ஓடினான். அவள் ஓடிய பக்கமாக அவளைவிட வேகமாக ஓடினான். இதற்குள், சரோசா அந்தக் கிணற்றுச் சுவரில் ஏறி, வேலிச்சுவரில் தாவி, வெற்றிக்களிப்போடு நின்றபடி அவனைப் பார்த்தாள். அவன் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அட்டகாசமாகச் சொன்னாள் :

“அடச்சீ... போடா... எச்சிக்கலை."

சரோசா, அந்த சுவரிலிருந்து அடுத்த பக்கம் குதித்தாள். ஏற்கனவே அம்மா அடிபட்டதால் ஏற்பட்ட ஆத்திரம், இப்போது சரோசா கொடுத்தபட்டப் பெயரால் ஆவேசமாகி, இளங்கோவும், அடுத்த மூன்றாவது நிமிடம் அதே சுவரில் ஏறி அவளை மாதிரியே அடுத்த பக்கம் குதித்தான்.
-------------------

அத்தியாயம் 2

கண்ணாடி ஊசிகள் கால் செருப்பையும் துளைத்து பாதங்களில் குத்த, சரோசா அந்த குண்டு குழி நிலத்தில் குதித்து எவருக்கும் சந்தேகம் வராதபடி, வேகவேமாய் நடந்து, இரண்டாவது குறுக்குத் தெருவின் விளிம்பை மிதித்தபோது 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவள், திடுக்கிட்டு தோளைக் குலுக்கினாள். அந்த 'எச்சிக்கல' கீழே குதித்து தரையில் விழுந்து, நெளிந்து எழுந்து, அவளை நோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்தாள். அவன் தோற்றத்தைப் பார்த்ததும் லேசாய் பயந்து விட்டாள். உருண்டு திரண்ட உருளை மாதிரியான உடம்பு. பாக்கு மரம் மாதிரி துவங்கி, வேல் கம்புகள் மாதிரி முடிந்த விரல்கள். பேண்ட் சிலாக்கிற்குள் திமிறிக் கொண்டிருக்கும் உடல்வாகு. கசரத் எடுத்தவனோ அல்லது கராத்தே கிராத்தே என்கிறார்களே அப்படிப்பட்டவனோ? பேஜாரு கஸ்மாலமோ?

சரோஜா தனது 'ஏரியா ஆட்கள்' எவரும் அந்தப் பக்கம் திரிகிறார்களா என்பது போல் கண்களைச் சுழல விட்டாள். உடம்பைச் சுற்ற விட்டாள். காணவில்லை. அவனோ 'ஏய்... ஏய்' என்று கத்தியபடி, எகிறி வந்தான். அவள் கண்டுகொள்ளாமல், கால்களுக்கு இடையே மூன்றடி இடைவெளி கொடுத்து நடந்தாள். நடப்பது போல ஓடினாள்.

சரோசா அவசரத்தில் 'ஏரியா' இருந்த திசையைப் பார்த்து நடக்காமல், ரைட்டுக்குப் பதிலாய் லெப்டுக்கு திரும்பி விட்டாள். ஆனால் அது ஒரு முட்டுச் சந்து. இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகளாலும், இறுதியில் அந்த இரண்டு பக்கங்களையும் இணைப்பது போல் மூன்று வீடுகளை வரிசையாய் கொண்டு மேற்கொண்டு போகமுடியாமல் முட்டிப் போன தெரு. சரோசா வலது கை கோணிப் பையை இடது கைக்கு மாற்றிக் கொண்டு, யோசித்தாள். அந்தப் பக்கம் ‘ஜம்ப்' பண்ணமுடியாது. போதாக் குறைக்கு நடு வீட்டுக்கு முன்னால் ஸ்டூல் போட்டு ஒரு கூர்க்கா உட்கார்ந்திருந்தான். அவள் திரும்பி நடந்தாள்.

இளங்கோவை நோக்கி, எதுவுமே நடக்காதது போல் ஓரங்கட்டி நடந்தாள். கீழே கிடந்த ஒரு பேட்டரி செல்லை பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, 'பாவலா' செய்தபடி அவனைப் பார்க்காதது போல் பார்த்து, நடக்காதது போல் நடந்தாள். அவள், அந்த குறுக்குத் தெருவில் தெற்குப் பக்கமாகத் திரும்பப் போனபோது, அவன், அவள் முன்னால் போய் இரண்டு கைகளையும் சிலந்திக்கால்கள் மாதிரி குவித்துக் கொண்டு நின்றான். அவள் பிறருக்குக் கேட்காத - அதேசமயம் அவனுக்குக் கேட்கும் - கிசுகிசுப்புக் குரலில் -

"வழிய விடு சாரே..."

"எச்சிக்கலன்னு சொல்லிட்டு இப்ப சாரா போடுறே... ஒன்ன விடமாட்டேன்."

"என்ன சாரே... வம்பு பண்றே. ஒன்ன எதுக்கு நான் அப்படி சொல்லணும்? நீ...அடையாளம் தெரியாம பேசறேன்னு நினைக்கேன். ஒன்னை எதுக்கு நான் திட்டணும்? நீ என் மாமனா, மச்சானா, எதிரியா?"

"யாருமில்ல! நீ அடிச்சுப்போட்டுட்டு வந்திருக்கியே, அவங்களோட மகன். ஒன்னை போலீஸ்ல ஒப்படைக்கப்போற சமூகத் தொண்டன்.”

சரோசா, அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். தோற்றத்தில் வஸ்தாதுதான். ஆனால், தோரணையைப் பார்த்தால் ஒரு குயந்தே... டபாச்சுடலாம். அவள் இப்போது நாலு பேருக்குக் கேட்கும்படி சத்தம் போட்டாள்.

"யோவ்... பட்டப்பகலுல ஒரு வயசுப் பொண்ணு கிட்டயா வாலாட்டறே? தோ பார்... என்ன தொட்ட அப்புறம் தெரியும் மவனே."

இருவரும் சடுகுடு ஆடுவது போல் ஒருவரையொருவர் ஆழம் பார்த்தார்கள். அவள், அவன் கைகளுக்கு அப்பால் நடக்கப்போனபோது, அவன் கரங்கள் அனுமார் வாலாய் நீளுவது போல் தோன்றியது. உடனே அவள் 'டேய்... டாய்' என்று தெருவோர்க்குக் கேட்காமல் அவனுக்கு மட்டுமே கேட்கும் சின்னக்குரலில் பேட்டைத்தனமாக உறுமினாள். அவனோ முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட கர்மயோகிபோல் சரோசா அசைந்த விகிதாச்சாரத்திற்கு எதிர் விகிதாச்சாரத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான். இதனால் சரோசாவும் ஒரு அசைக்க முடியாத முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.

சரோசா, அவன் நெடுங்கையை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டாள். அவன் பதிலுக்கு அவள் கைகளைப் பிடிக்கப் போனான். பிறகு கூச்சப்பட்டு, அவள் கைபிடித்த கோணியைப் பிடித்து இழுத்தான். அவளோ, அவனை மாறி மாறித் தள்ளினாள். அவளை அப்படித் தள்ள முடியாத கூச்சத்தில் இருந்த அவன், ஒத்தாசைக்கு ஆள் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் பார்த்த போது -

சரோசா, தானே எதிர்பார்க்காத வகையில் தைரியப்பட்டாள். பின்னால் கிடந்த கோணிப் பையை முன்னால் கொண்டு வந்தாள். இன்னும் திரும்பாமல் நின்ற அவன் விலாவில், கோணிப்பையால் விளாசினாள். அவன் துள்ளிக் குதித்துத் திரும்பியபோது, தேங்காய்களால் கனத்து இரும்பு முட்கள் எட்டிப்பார்த்த அந்தக் கோணிப் பையால் அவன் முட்டிக்குக் கீழே இரண்டு கால்களிலும் வாங்கு வாங்கென்று வாங்கினாள்.

கோணிக்குள் கிடந்த இரும்புக் கம்பி அவனை செமத்தியாகக் குத்திவிட்டன. அதனால், அவன் அடிபட்ட காலை தூக்கிப் பிடித்து வலி பொறுக்க முடியாமல் பல்லைக் கடித்து ஒற்றைக் காலில் நின்றான். அவளோ அவனை, ‘இந்த அடி போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா' என்பது போல் பார்த்துவிட்டு, தனது ஏரியா திசையை நோக்கி புலிப் பாய்ச்சலில் நடந்தாள்.

இளங்கோ, திணறிப்போனான். மலைப்பாம்பின் கண்ணின் உக்கிரத்தில் கட்டுப்பட்டு அசைவற்று நிற்கும் மானாய் நின்றான். அந்த ஆண் மானுக்கு, இந்த அனுபவம் புதிது. அம்மாக்காரி காய்கறிக்காரியிடமோ, கார்ப்பரேஷன் குப்பை அம்மாவுடனோ போர் தொடுக்கும் போது, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அந்த வீட்டிலும் அதன் சுற்றுப்புற வளாகத்திலும் ஒரு நிசப்தம் நிலவுவது போல் ஒரு அனுமானத்தைக் கொடுத்துவிட்டு தன் பாட்டுக்கு நடப்பவன். ஆனால் இப்போதோ அப்படி நடக்க முடியாமல் முட்டிக்கால்களுக்குக் கீழே ஊற்றுக் கண்களாய் துளிர்த்த ரத்தத் துளிகளை தலைகுனிந்து பார்த்தபடியே நின்றான். பிறகு அவன் ஒருபொருட்டே அல்ல என்பது போல் அவனுக்குப் புறமுதுகு காட்டி வீரத்தனமாய் நடந்த சரோசாவின் பின்தலையை, பிடரியில் கைவைத்தபடியே பார்த்தான். இப்படியும் நடக்குமா என்ற சந்தேகம். நடந்துவிட்டதே என்ற ஆதங்கம்... ஒரு பெண்ணோடு போட்ட முதல் சண்டை. கலகலப்பு இல்லாத கைகலப்பு... ஏமாற்றம்... எரிச்சல்... இயலாமை.

இளங்கோ, எல்லாம் முடிந்து விட்டது என்பது போல் திரும்பி வீட்டுக்குப் போகத்தான் போனான். இதற்குள் அந்தத் தெருமுனையிலிருந்து நிதானமாக வந்த ஒரு 'பத்துப் பாத்திரம்மா' இன்னும் முடியவில்லை என்பது போல் ஒப்பாரி போடாத குறையாக நடந்து முடிந்த விவகாரத்திற்கு அதிரடி வர்ணனை கொடுத்தாள்.

"அடிப்பாவி! ஒரு ஆம்பிளைய இப்படியா அடிச்சுப் போட்டுட்டுப் போறே? நடுரோட்ல ஒரு அறியாத பையன நாய் மாதிரி அடிச்சுப் போட்டுட்டுப் போறியேடி... பாவி! ஆம்புளய கை நீட்டலாமாடி? என்ன தினாவட்டா நடக்கறாள்? என்ன பிள்ளாண்டாப்பா நீ...? என்ன ஆம்புள நீ?"

இளங்கோ, அடி கொடுத்த வலியைவிட, அவள் கொடுத்த வலியில் அல்லாடினான். போதாக் குறைக்கு, ஜன்னல்கள் வழியாக எல்லோரும் அவனை ஏளனமாய் பார்ப்பது போல் இருந்தது. இப்போது, அவளைப் பார்த்து ஓடினான். அவளுக்கு முன்னால் எதிர் திசையில் வந்த பேண்ட் ஸ்லாக் பேர்வழிகளின் காதுகளில் விழும்படி கத்தினான்:

"அதோ போறாளே... அவள் திருடி... பொம்பள ரவுடி... பிடிங்க சார் ; பிடிடங்க..."

பேண்ட்-ஸ்லாக் பேர்வழிகளும், அவளைப் பிடிக்கப் போவது போல் கடிகாரக் கைகளை செங்குத்தாய் நீட்டி, முன் கைகளை கொக்கிகள் போல் மேலே கொண்டுபோய் குவித்து, சாலையை அடைப்பது போல் வழிமறித்தார்கள்.

உடனே சரோசா, சர்வ சாதாரணமாக, கோணிப் பைக்குள் கையை விட்டு, இரும்புத் தடியை எடுத்து, வலது கையில் பிடித்து, தோளுக்கு மேல் உயர்த்தி, தன்பாட்டுக்கு நடப்பது போல் நடந்தாள். சாலை மறியல்காரர்கள் அவளுக்கு பயபக்தியுடன் வழி விட்டார்கள். 'பிடிங்க பிடிங்க' என்று குரல் கொடுத்து ஓடிவருபவனை எரிச்சலோடு பார்த்தபடி நடையைத் தொடர்ந்தார்கள்.

இதற்குள், ஒரு திட்டிலில் போய் நின்று திரும்பிப் பார்த்தாள் சரோசா. அவனைப் பார்த்து 'டாடா' காட்டிவிட்டு, கார்ப்பரேஷன் மைதானத்திற்குள் நுழைந்து, அதற்கு அப்பால் உள்ள கட்டிடக் குவியல்களுக்குள் மறைந்து கொண்டிருந்தாள்.

முட்கம்பிகள், பேண்டை துவாரங்களாக்கி, அவற்றில் ரத்தத் துளிகளை மேலோங்கச் செய்தபோது, இளங்கோ, அப்படியே திகைத்து நின்றான். பின்னால் கடாமுடா சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

ஒரு ஆட்டோரிக்ஷாவில் இரண்டு சிவப்புத் தொப்பிகளும், அவன் அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டோவை வழிமறித்து 'பத்து பாத்திரக்காரி' ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

ஆட்டோ ரிக்ஷாவும் அவனும் பாதிப்பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள். அம்மாக்காரி, ஆத்திரம் தாங்காமல் கத்தினாள் :

"ஏண்டா அவள்கிட்ட அடிபடறதுக்கா உன்னை வளர்த்தேன்? உங்க தாத்தா எப்பேர்ப்பட்டவர்ன்னு உனக்குத் தெரியுமா...? புலிக்குப் பிறந்து பூனையா போயிட்டியேடா... ஏறுடா, ரிக்ஷாவில ஏறு. இவங்களோட போய், அவள் கையில விலங்கு போட்டு நம்ம வீட்டுப் பக்கமா இழுத்துக்கிட்டு வா. எவ்வளவு செலவானாலும் சரி.”

கடைசி வார்த்தையில் ருசிகண்ட கான்ஸ்டபிள்கள், அவனை ஏறச்சொல்லி, முகத்தை ஏற்ற இறக்கமாக ஆட்டினார்கள். அம்மாக்காரி இறங்கிக்கொண்டாள். இளங்கோ ஏறிக்கொண்டான். ஆட்டோ பறந்தது.
-------------------

அத்தியாயம் 3

“அவள் எப்படி இருப்பாள்?”

"அழகாய் இருப்பாள்."

"இந்த வயசில உங்களுக்கு கிழவிகூட அழகாகத்தான் தெரியும். நாங்க அத கேக்கல... அங்க அடையாளம் எப்படி?"

"உருண்ட முகம்... லேசா ஒரு தூக்கலான பல்லு. கழுத்துல ஒரு மச்சம். தாவணி தொடாத பாவாடை.பேச்சுரவுடி மாதிரி.. ஆனா முகம் ஜென்டில்."

“கழுத்துப் பக்கம் ஒரு வெட்டு இருக்குமா?”

"ஆமா சார். ஆமா."

காவலர்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் பரிபாஷையில்.

அந்த ஆட்டோ அலைமோதி ஓடியது. எதிரே வந்த ஒரு பாவாடை தாவணி இளம் பெண்ணைப் பார்த்து உறுமியபடி நின்றது. அவள் சிவப்புத் தொப்பிகளைப் பார்த்து ஒதுங்கியபோது, இளங்கோ, "இவள், இல்லை” என்றான். ஆட்டோ, அவளைக் கடந்து, ஒரு மல்டி-பிளாட் கட்டிடம் வழியாக வந்து, அங்கே நின்ற ஒரு பெண் குவியலின் முன் நின்றது. இளங்கோவை இறக்கி விட்டார்கள். அவன், அவர்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்துவிட்டு, "இல்லை இல்லை” என்று சொன்னபடியே ஆட்டோவில் மீண்டும் ஏறிக் கொண்டான்.

அந்தப் பெண்கள், ஆட்டோவுக்குள் கால் கைகளை விரித்துப் போட்டுக் கொண்டு அடாவடியாகக் கிடந்த கான்ஸ்டபிள்களைப் பார்த்தார்கள். டயர்கள் வெடிக்கும் படியாய், அவர்கள் உடம்புகளும் வெடிப்பது போல் தோன்றின. ஆனால் முன் இருக்கையிலோ அன்றையப் பிழைப்பு போலீஸ்தனமாகப் போய்விட்டதே என்று அம்பேலாய் உட்கார்ந்திருந்த ஒடிசல் டிரைவரை, கோபங் கோபமாய் பார்த்து, அதே பார்வையை பரிதாபமாய் முடித்தார்கள். இதற்குள் ஆட்டோவின் பின் இருக்கையில் இடம் கிடைக்காமல், டிரைவரின் இருக்கையை பார்த்துப் போன இளங்கோவை கோபமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் குவியலில் ஒரு இளம் பெண்ணால் தாள முடியவில்லை. தளதளப்பான உடம்புக்காரியான அவள் தகராறுக் குரலில் கேட்டாள்:

"நாங்க என்ன ஆடா மாடா? நீ பாட்டுக்கு இறங்றே... நீபாட்டுக்கு பார்க்கிற? ஒரு மரியாதிக்குக் கூட இன்னுதுக்காகப் பார்த்தேன்னு சொல்லப்படாதா? இன்னாயா நாயம்? கூலிக்காரிங்கன்னா திருடிங்கனு நெனைப்பா? இந்த அடாவுடிக் காலம் ரொம்ப நாளைக்கு போகாதையா... சாரத்த கழற்றுரது மாதிரி இந்த மட்டுமரியாதி இல்லாத அம்போக்குத்தனனத்த கழற்றுர காலமும் வருமுய்யா."

இளங்கோ... ‘பே' என்று விழித்த போது, ஒரு போலீஸ்காரர்அவனை உள்ளே பிடித்து இழுத்துப் போட்டுவிட்டு, டிரைவரைப் பார்த்து கையை ஆட்டினார்.

ஆட்டோ பறந்தது.

பிரதானச் சாலை, பிரதானச் சாலையில் இரண்டாவது தெரு, இரண்டாவது தெருவின் முதலாவது குறுக்குத் தெரு என்பது போன்ற புரியாத பெயர் கொண்ட சாலைகள் வழியாய் ஓடி ஓடி, இறுதியில், சந்தடி மிக்க ஒரு தெருவில் போய் நின்றது, அந்தக் காவலர்கள் இளங்கோவுடன் சேர்ந்து இறங்கினார்கள். பக்கத்தில் ஒரு தேநீர் கடை... அதன் வாசலில் போய் நின்று கொண்டு அங்கே இருந்தவர்களை ஒரே பார்வையாய்ப் பார்த்து மிரட்டுவது போல் கேட்டார்கள் :

“இந்தப் பக்கமா எவளாவது ஒருத்தி கோணி மூட்டையோட போனாளா? சொல்லுங்கப்பா... துரமாரே."

எல்லோரும் முகங்களை கேளாக் காதுகளோடு, திரும்பிக் கொண்டபோது, ஒரே ஒரு ஒல்லி மனிதர், 'ஒடக்கு'ப் போன்ற ஜிப்பாக்காரர் எதிர்க் கேள்வி போட்டார்:

“கையில் இரும்புத்தடி வச்சிருந்தவளா? கழுத்துல மச்சமா? முதுகில கோணி மூட்டையா?”

"ஆமா ஆமா...”

"இந்தக் கடையில இஸ்ட்ராங்கா டீ போடச் சொல்லி குடிச்சிட்டு, இப்போதான் அதோ அந்த இரும்புக் கடைக்குள்ள போனாள்."

காவலர்களில் ஒருவர், கடைக்காரரை அதட்டினார் :

“ஏண்டா டேய், உன் கடையிலேயே டீ குடிச்சிட்டுப் போயிருக்காள்; நீ பேமானி மாதிரி பேசாம இருக்கே... கடைய இழுத்து மூடணுமா?”

அவர்களின் வேகத்தைப் பார்த்து உற்சாகப்பட்ட இளங்கோ,சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அவர்கள், பேசாமல் நிற்பதைப் பார்த்து விட்டு அவசர அவசரமாய் பேசினான்:

"வாங்க போகலாம் சார். அந்த கடைக்குள் போய் அவளைப் பிடிக்கலாம் சார்."

"அவசரப்படாத கண்ணு; எங்களுக்குத் தெரியும்.'

அவன் எவ்வளவுக்கெவ்வளவு வேகப்பட்டானோ, போலீஸ்காரர்கள் அவ்வளவுக் கவ்வளவு நிதானப்பட்டார்கள். நேற்று முழுவதும் ஒரு விஐபிக்கு 'பாரா' போனதால், பட்டினி கிடக்கும் வயிறுகளை, ரொட்டிகளாலும், மசால் வடைகளாலும் நிரப்பி விட்டு, இளங்கோவை அர்த்தத்தோடு பார்த்தார்கள். அவன் பைக்குள் இருந்ததை தேனீர் கடைக்காரரின் கைக்குள் வைத்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாய் பார்த்தபோது, ஒரு போலீஸ்காரர் அந்த இரும்புக் கடையை நோக்கி நின்ற ஆட்டோவில் துணி கட்டப்பட்ட மீட்டரை துகிலுரிந்து கொண்டிருந்த டிரைவருக்கு ஆணையிட்டார்:

"இந்தாப்பா... வண்டிய திருப்பு.''

இளங்கோ, பதறியடித்துச் சொன்னான் :

“சார்... சார்... அந்த இரும்புக் கடையில் போய்...”

அவளை எப்போ எப்படி மடக்கணும்னு எங்களுக்குத் தெரியும். ஒரு பொம்மனாட்டிய மடக்கத் தெரியல... பெரிசா பேசற பாரு. எதுக்கும் சாயங்காலமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடு. நீங்க கற்பழிக்கப் போனதா அவள், எதிர் புகார்கூட கொடுப்பாள். நீங்க அதுக்கும் தயாராய் இருக்கணும். ஓகே.. ஈவினிங் வாங்க. ஆட்டோ சார்ஜ்க்கு டிரைவர் கிட்ட காசு கொடுத்திடறீங்களா?"

ஆட்டோ டிரைவர் இளங்கோவை 'பொருள்'படப் பார்த்தான். இளங்கோவும், இவனுக்கு நான் எதுக்குக் காசு கொடுக்கணும் என்று சொல்லப் போனான். பிறகு 'கற்பழிப்பு, பலாத்காரம்' போன்ற பயங்கரவாத வார்த்தைகளை வீசிப்போட்ட காவலர்கள் உருட்டிய கண்களையும் பார்த்தான். ஓசைப்படாமல் பேண்ட் பைக்குள் துழாவி மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வலதுகையின் முகப்பிற்ழக்கு கொண்டு வந்து, டிரைவரிடம் நீட்டப் போனபோது, ஒரு காவலர் அதைப் பறித்துக் கொண்டார். உடனடியாக அந்த ஆட்டோ, இளங்கோ இல்லாமலே இரும்புக் கடைக்கு எதிர்த் திசையில், அந்தக் கடைக்குப் பயந்து ஓடுவது போல் ஓடியது.

தேநீர் கடைக்குள் இருந்த அந்த ஒல்லி ஜிப்பாக்காரர் இப்போது உரக்கப் பேசினார்:

"சூரப்புலிங்க மாதிரி நம்மள மிரட்டுற மாதிரி அதட்டினாங்க. ஆனால், அந்தப் பொண்ணு அதோ அந்த 'இரும்பு' கடைக்குள்ளே போயிட்டான்னு தெரிஞ்சதும் சப்புன்னு அடங்கிட்டாங்க. ஏழைங்க கிட்ட நாகப்பாம்பா சீறுறது; இருக்கப்பட்டவங்கக் கிட்ட பெட்டிப் பாம்பா அடங்கறது. இதுதான் போலீஸ்ன்னு ஆகிப்போச்சு."

வேறு மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்கும் இளங்கோ, இப்போது தலை குனிந்தபடியே வீட்டுப் பக்கமாக நடந்தான். அவள் வேறு வழியாய் போயிருப்பாள் என்று நெஞ்சுக்குப் பொய் சாட்சி சொல்லிவிட்டு வீட்டைப் பார்த்து நடந்தான். வீட்டுக்கும் போய் விட்டான்.

கிராமத்தில் நாட்டாண்மை குடும்பத்தில் பிறந்த அம்மாவின் ஆதிக்க ரத்தம் இப்போது அழுத்தமாகி, அவனுக்கு திட்டு வாங்கிக் கொடுத்தது.

"ஏண்டா, ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அடிவாங்கிகிட்டு வந்து நிக்கிறியே... இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு என்னடா செய்யப்போற? எங்கடா போற?”

இளங்கோ, ஒரு வைராக்கியமாய் தெருவில் நடந்தான்.
----------------

அத்தியாயம் 4

பல்லவ பஸ்களின் முன்னால் விழப்போகிறவன்போல் குவிந்து நடந்து, மல்லாக்கச் சாயப்போகிறவன் போல் வளைந்து நடந்து, இளங்கோ எங்கெல்லாமோ நடந்தான். இறுதியில் தனக்கே தெரியாமல் கடற்கரை மண்ணில் கால் வைத்தான்.

இளங்கோ, அலையடித்த கடல் நீர் முன்னால் நின்றான். பிறகு, அங்கே உட்கார்ந்தபடி, கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி, கால்களை அலை படும்படி முன்னால் நீட்டிக் கொண்டு பின்பக்கமாய் சாய்ந்தான்.

"இன்னா சாமி, ஆகாயம் இடிஞ்சுட்டா? பூமி நொறுங்கிட்டா? ஏன் இப்படி கீற? ஆமா... நான் கேள்விப்பட்டது நிசமா? ஒரு அறியாத பொண்ணு உன்ன கைவெச்சுட்டாளாமே?”

இளங்கோ, ஒரு பக்கமாய் திரும்பி, முனுசாமியைப் பார்த்தான். அவனுக்கு முப்பது வயதிருக்கும். அய்ம்பது வயதைக்காட்டும் ஒடிந்த குரல்; குச்சி மாதிரியான உடம்பு. இடுக்கிப் பார்க்கும் கண்கள்... இளங்கோ பக்கத்தில் அவன் உட்கார்ந்தான்.

"இன்னா சாமி! இன்னா நடந்தது சாமி? நான் இப்ப இன்னா செய்யணும்னு சொல்லு. அவள் தலையை வெட்டி ஒன் காலுல வைக்கணுமா? வெட்டிட்டு வான்னு சொல்லு, கட்டிட்டு வரேன்."

இளங்கோ, முனுசாமியை தெய்வத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தான். அவன் தோளிலே கைபோட்டான். மனதில் இருந்ததை கொட்டிப் போட்டான்.

"முனுசாமி! முனுசாமி! அவளை எப்படியும் பழிக்குப் பழி வாங்கியாகணும்; அப்பதான் எங்கம்மா மனசு குளுரும். என் மனது ஆறும்."

"கவலைய விடு சாரே, அத என் பொறுப்புல விடு. அவள் இருக்குற இடமும் எனிக்கி தெரியும்.

"தெரியுமுன்னா காட்டு. அவள் கழுத்த வெட்டி அம்மா காலுல வைக்கணும்."

“அப்படிச் சொல்லாத சார், போலீஸ் எதுக்கு இருக்கு? அவங்ககிட்ட ஒப்படைக்கணும்.”

"நீ வேற. போலீஸ் காலுல விழறத விட, அவள் காலுலயே விழுந்திடலாம்."

"சும்மா சொதப்பாத சாரே... போலீஸ்காரங்களுக்கு வெள்ளைச் சட்டகாரங்கன்னா, ஒதறல்; எப்பவுமே போலீஸ் காரங்ககிட்ட உத்தரவு போடற மாதிரி நீ பேசணும். படிச்சவன் அப்படிப் பேசினா, அவனுக பல்லக் காட்டுவானுக. என்ன மாதிரி எளியவங்க பேசினா பல்ல ஓடைப்பாங்க."

"சரி அவங்க கிடக்கட்டும், இப்போ அவள எப்படி பழிக்குப்பழி வாங்குறது? எழுந்திரு அவள பிடிக்கப் போகலாம்.''

“போகலாம்தான்... ஆனா அதுல ஒரு சிக்கலு. ஆமா சாரே... அவளோ, கள்ளச்சாராயக்காரி. சாராயம் குடிக்கிற சாக்குலதான் அவகிட்ட போக முடியும். ஒரு டம்ளர் ‘கஞ்சி” மூணு ரூபா. மூணு டம்ளர் போட்டாத்தான் பேசறது பத்தி யோசிப்பா.'

“கஞ்சின்னா என்னப்பா?”

"அதெல்லாம் நீ கண்டுக்கப்படாது. அது சல்பேட்டா சாராயத்துலேயே ஒரு தனி ரகம். மூணு டம்ளர் 15 ரூபா. இன்னா சொல்றே?''

இளங்கோ, பைக்குள் இருந்த ஒரேயொரு இருபது ரூபாய் நோட்டை முனுசாமியின் இடுப்புக்குள் செருகி விட்டு, அவனைப் போகும்படி தள்ளி விட்டான். முனுசாமி அவனுக்குப் பிரியாவிடை கொடுப்பவன் போல் போனான்.

முனுசாமி, அந்த மாதா கோவில் ஆலய வளாகத்திற்குள் போவதை, இளங்கோ தொலைவில் நின்று பார்த்தான். ஐந்து நிமிட அவகாசத்திற்குப் பிறகு அங்கே நெருங்கி நெருங்கிப் போனான். அந்த வளாக வாசல் பகுதிக்குள் ஒரு ஓரமாய் நின்றபடி உள்ளே அவன் எட்டிப் பார்த்தபோது-

அந்த வளாகத்தின் கிழக்குப் பகுதியில் மாதா கோவில்; மேரி மாதா குழந்தை ஏசுவோடு, புன்முறுவலோடு நிற்கிறாள். வருத்தப்பட்டு பாரம் சுமக்காதவர்கள், பட்டுப் புடவைகளோடும், கழுத்துத் தாங்க முடியாத நகைகளோடும், சபாரி உடைகளோடும் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய கண்ணியவான்கள் மனைவிகளை கரம் கோத்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வளாகத்தின் இன்னொரு பகுதி; கல்லும் மண்ணும் கொண்ட கட்டாந்தரை. அங்கே மரித்தெழுந்தது போல், எழுந்த சுவரோடு சுவராக பல்வேறு வகை பிச்சைக்காரர்கள் மண்டியிட்டும், சம்மணம் போட்டும், குத்துக்காலிட்டும், அப்படிப் போடுவதற்கு முழுக்கால்கள் இல்லாமலும் கிடந்தார்கள். ஒவ்வொருத்தர் முன்னால் ஏதோ ஒரு துண்டு, ஏதோ ஒரு தட்டு.

சொர்க்கமும், நரகமும் அருகருகே இருப்பது போன்ற அந்த வளாகத்திற்குள் எட்டிப் பார்த்த இளங்கோ, வறுமையும், வெறுமையும் கூடி கோர தாண்டவம் ஆடும் அந்தக் கட்டாந்தரைப் பகுதியை உற்றுப் பார்த்தான்.

திடீரென்று பார்த்துப் பார்த்துப் பூத்துப்போன அவன் கண்கள் பிரகாசித்தன. சுரக்காய் குடுக்கைபோல் ஒடுங்கிய சந்திற்கு அப்பால், தென்பட்ட குடிசைப் பகுதியிலிருந்து, முனுசாமி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பிடித்தபடியும், அதேசமயம் அவன் தன்மேல் விழும்போது தள்ளியபடியும், சரோசா வந்து கொண்டிருந்தாள். அவள் இடுப்பில் ஒரு சுருக்குப் பை தொங்கியது. அதிலிருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணியபடியே முனுசாமியை நடத்திக் கொண்டிருந்தாள். அவன் தடுமாறி தரையில் விழுந்தபோது, அவனை அங்கேயே போட்டுவிட்டு வெளியே வந்தாள். இளங்கோ ஒதுங்கிக் கொண்டான்.

சரோசா, பஸ் நிலையப் பின்பக்கத்து மதில்மேல் இருந்த ஒரு டீக்கடையில் இரண்டு பன்களை வாங்கி ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு கப் டீ டம்ளரை ஏந்திக்கொண்டு திரும்பிப் போனாள். இளங்கோ சுவரில் முகம் போட்டு அவளுக்கு முதுகு காட்டினான். ஏதோ ஒரு பயம், ஏதோ ஒரு உதறல்; அவனுக்கே அவன் போக்கு வெட்கமாக இருந்தது.

இதற்குள், சரோசா அவன் இருப்பது தெரியாமல், அந்த வளாகத்திற்குள் நடந்தாள். அந்த கட்டாந்தரைப் பகுதிக்குப்போய் அந்த வெயிலிலும் கம்பளியால் மூடி, அப்படியும் குளிர் தாங்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் முன் குத்துக்காலிட்டாள். அவருக்கு பிறப்பினால், எழுபது வயதென்றால், வறுமையோ அல்லது வெறுமையோ மேலும் இருபது ஆண்டுகளைக் கூட்டிவிட்டதைக் காட்டுவது போல் கால்கள் கைகளைப் போலவே இருந்தன. முகத்துக்கும், மார்புக்கும் இடைவெளி தெரியவில்லை. கூனிக்குறுகி கண் இழந்தவர்போல் அங்குமிங்குமாய் கைகளைத் துழாவிய அவர் வாயில், அவள் டீயை ஊற்றினாள். பிறகு கையில் இருந்த ஒரு ‘பன்னை’ பிய்த்துப் பிய்த்து தேநீரில் தோய்த்துத் தோய்த்து, ஈரம் சொட்டச் சொட்ட அவரது வாய்க்குள் திணித்தாள். சற்றுத் தொலைவில் 'தாயப்பாஸ்' ஆடிக்கொண்டிருந்த அவளது தோஸ்துகள் - "இன்னாமே யாரோ ஒருத்தன அடிச்சுப் போட்டுட்டு வந்தியாமே, அந்த பொட்டப்பயல் ஒன்னை திருப்பி அடிக்கலியா?” என்றனர்.

வாசல் பக்கம் பட்டும் படாமலும் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோவிற்கு, தன்னை ஆண் பயல் என்று நிரூபிக்க வேண்டும். போல் இருந்தது. மீண்டும் ரோஷம் வந்தது. அதற்கு வடிகாலாக, அந்தச் சமயம் பார்த்து அந்தப் பக்கமாய் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவனுக்கு ஏற்றாற் போல் மணி கேட்டார். அவன் “ஐந்து நாற்பது" என்று சொல்லிவிட்டு, பேச்சை ஆரம்பித்தான். முனுசாமி சொன்னது போல் சற்று ஆணித்தரமாகப் பேசினான்.

"சார், இதுக்குள்ளே ஒரு கிரிமினல் இருக்காள்... எங்கம்மாவை கொலை செய்ய ‘அட்டம்ட்' செய்தவள். எதிர் வீட்டுக்குள் போய் எதையோ திருடியிருக்காள். தட்டிக்கேட்ட என் 'மதரின்' காலை உடைச்சிருக்காள். ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க அதிகமாக இருக்கிற எங்க ஏரியாவிலேயே பிரிட்ஜ், டி.வி. காணாமல் போகுது. ஒரு ஆறு வயகப் பையன்க்கூட காணல. இவளே இதுக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். நீங்க இப்போ இவள பிடிச்சு ஸ்டேஷனுக்குக் கொண்டு போகணும்."

"நான் 'பீட்டுக்கு' வந்திருக்கேன். எல் அண்ட் ஓ கவனிக்கிறவன்; அதாவது சட்டம் - ஒழுங்கை கவனிக்கிறதுதான் என் வேல. இது கிரைம்; அதனாலதான் யோசிக்கிறேன்."

"ஒரு குற்றவாளி கண்ணில் படும்போது பொதுமக்களில் ஒருத்தர்கூட போலீசில் சொல்லாட்டால், அதுவே குற்றமுன்னு சட்டம் சொல்லுது. நீங்க ஒரு போலீஸ்காரர், அப்புறம் உங்க இஷ்டம்.”

அந்த கான்ஸ்டபிள் யோசித்தார். இவன் முகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குரிய களையோ அல்லது திமிரோ இல்லை. ஆனாலும் இவன் அப்படிப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ்.ஸின் ஒரு அசட்டுப் பையனாகக்கூட இருக்கலாம். எதுக்கு வம்பு, அவர்? அவன், தோளில் தோழமையோடு கை போட்டு "அவளை காட்டுங்க சார்" என்று கூட்டிப் போனார்.

இருவரும் போய் அந்தப் பிச்சைக்காரப் பகுதியில் நின்றனர். அவள், கையில் இன்னும் இருந்த அந்த மிச்ச மீதிப் பன்னை, பிய்த்துப் பிய்த்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

இளங்கோ, போலீஸ்காரரை அவசரப்படுத்தினான். அவர் தனது விருப்பத்திற்கு விரோதமாகவே அவளை லத்திக் கம்பால் தட்டி ஆணையிட்டார்:

"ஏய்... எழுந்திரு, ஒன் பேரென்ன?"

நைனாவின் கையிலிருந்து விடுபட்டு, தலை நிமிர்ந்த சரோசா, அந்தப் புதிய போலீஸ்காரரைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு, “பேருக்கு ஏற்றபடிதான் அரஸ்ட் பண்ணுவீங்களா” என்று கேட்டாள். போலீஸ்காரருக்கு இப்போது கோபம் வந்ததது. லத்திக் கம்பை ஓங்கியபடி நின்றார். அவள் எழுந்தாள்; அப்போதுதான், இளங்கோவைப் பார்த்தாள். அவனை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, "இந்த கேஸ் யாரு சாரே, இதுகூட சேர்ந்து நான் எந்த தப்புத் தண்டாவும் செய்யலயே. இது பிளேடா, இல்ல பிச்சுவாவா" என்றாள்.

இளங்கோ கோபப்படுவதற்கு முன்பே போலீஸ்காரர் பல்லைக் கடித்தார்.

"இந்தாம்மா! மரியாதையா ஸ்டேஷனுக்கு நட. நான் மனுஷனா இருக்கிறது உன் பொறுப்பு."

சுவரில் சாய்ந்து கிடந்த அந்தக் கிழவர், தட்டுத்தடுமாறி எழப்போனார். பிறகு விழப் போனார். பின்னர், கை எழும்பியது போல் கால் எழும்பாத நிலையில், கண்ணுக்குத் தெரியாத அந்த போலீஸ்காரருக்கு ஒரு கும்பிடு போட்டபடியே, குழைந்தார்.

"போன மாசம்தானே, உங்க ஆளுங்க ஒரு கேசுக்காக கூப்பிட்டாங்க, இவளும் அவங்களுக்காக, செய்யாத தப்ப செய்ததா சொல்லி அபராதம் கட்டினாள். இது தாங்காது சாமி." "எது செய்தாலும் சட்டப்படிதான் செய்வோம் பெரியவரே. உம், நடம்மா."

சரோசா, இளங்கோவிற்கும் அந்தப் போலீஸ்காரருக்கும் இடையே கம்பீரமாய் நின்றாள். இதற்குள் தாயப்பாஸ் விளையாடிய அவளது தோஸ்துகள் "சாரு புட்சு போல. நீ போமே, நாங்க பின்னால் வரோம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தாயப்பாஸ் ஆடினார்கள். அவள் ஆணையிடுவது போல் பேசினாள் :

"நாய்னா, ஜாக்கிரதோ. இந்த குயந்த பையன் இன்னாதான் செய்வான்னு பார்த்துட்டு வர்றேன். யோவ், பொட்டை! நடய்யா!”
------------------

அத்தியாயம் 5

அந்தப் போலீஸ்காரரும், இந்த இளங்கோவும், சரோசாவும் சேர்ந்தாற்போல், மாதா கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தார்கள்.

போலீஸ்காரருக்கும் இளங்கோவுக்கும் மத்தியில் வந்த சரோசா, தலைமுடியை விரித்துப்போட்டு, அதுவே கழுத்துக்கு ஒரு ஸ்கிரீன் மாதிரி காட்ட, அங்குமிங்குமாய் பார்த்தாள். ஒரு மேட்டில், இரண்டு பேர் சவலைக் குழந்தை மாதிரி இருந்த கரும்பை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அருகே கரும்புச்சாறு குவளை ஒரு மேஜையில் இருந்தது. ஈக்கள் மொய்த்து, அந்தச் சாறு தன்னை ஒரு நோய்த் திரவமாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. காக்கிச் சட்டையில் மூன்று கோடுகள் போட்ட ஒரு போலீஸ்காரரும், சிவில் உடையில் சிவப்புக்கோடு சட்டை போட்டிருந்த இன்னொருவரும் கரும்புக்காரரிடம் எதையோ கிசுகிசுத்தார்கள். போலீஸ்காரர், லத்திக் கம்பை ஊன்றிக் கொண்டு கம்பீரமாக நின்றபோது, அந்தக் கரும்பு மனிதர் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் நீட்டினார். அவரோ அதை கண்ணால் பார்க்க விரும்பாதது போல் கண்களை மூடிக்கொண்டார். இதற்குள் சிவில் ஆசாமி, அந்த இரண்டு நோட்டுகளையும் பறித்துக் கொண்டு யூனிபாரம் ஆசாமியோடு, ஒரு பேன்சிக் கடையை பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்.

சரோசா, தன் பக்கம் நின்ற போலீஸ்காரரைப் பார்த்துக் கேட்டாள்:

“ஏன் சாரே அதோ மாமூல வாங்குறாரே, அவரை ஒன்னால அரஸ்ட் பண்ண முடிமா?"

சரோசாவின் பக்கத்தில் நின்ற போலீஸ்காரர் சற்றுத் தொலைவில் ஒரு சீப்பை எடுத்து தலைவாரியபடியே, 'சீப்பாக' நடந்து கொள்ளும் தனது போலீஸ் சகாவையே வெறித்துப் பார்த்தார். அவருக்கு, தனது யூனிபாரமே கழன்று அம்மணமாக நிற்பது போல் தோன்றியது. 'நான் அப்படிப்பட்டவன் இல்லை' என்று இவளிடம் எப்படிச் சொல்வது? இதுவரை ஒரு டீ கடையில்கூட, ஓசிடீ, குடித்ததில்லை என்பதையும், இதனாலேயே பல தண்ணி இல்லாக் காடுகளை ஓசியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டதையும், பதவி உயர்வு பறிபோனதையும், இவளிடம் எப்படிச் சொல்வது? சரோசா, அவரது முகச் சுளிப்பைப் பார்த்துவிட்டு சமாளித்தாள்.

"அந்த போலீஸ் அண்ணாத்தைய நான் தப்பா சொன்னதா நினைக்காதே சாரே. நாங்கோளும், நீங்கோளும் தோஸ்துங்க. சாரு வேலைக்குப் புதுசோ?”

"இல்ல, இல்ல, உனக்குத்தான் புதுசு."

அந்தப் போலீஸ்காரர் பேச்சோடு பேச்சாக, அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, அந்த வழியாய் போன ஒரு ஆட்டோ ரிக்ஷாவை கைதட்டிக் கூப்பிட்டார். அந்த ஆட்டோ டிரைவர் யானை வாயில் பட்ட கரும்பும், போலீசிடம் சிக்கிய ஆட்டோவும் ஒன்று என்பது போல் கண்டுக்காமல் ஆட்டோவை ஒடித்து முறித்து வளைத்தார். உடனே இவர் விசிலடித்தார். பயந்துபோன ஆட்டோக்காரர், பம்மிப்பம்மி வந்து ஆட்டோவை அவர் கால் அருகே, அதன் முனைப்பைக் காட்டி நிறுத்தினார். அந்தப் போலீஸ்காரர் உடனடியாய்க் கேட்டார்:

"இந்தாப்பா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல இவங்களை விட்டுட்டு பழையபடியும் இங்கே என்னைக் கொண்டுவந்து விடணும். எவ்வளவு கேக்கிற?"

"சார்... சார், கிண்டல் பண்ணாதீங்க சார். நீங்க கைதட்டிக் கூப்பிட்டது நிசமாவே என் காதுல விழல சார்."

போலீஸ்காரர் ஆட்டோக்காரரை கண்டுக்காமல், இளங்கோவிடம் இப்படிச் சொன்னார்:

"இந்தாங்க மிஸ்டர்! என்னோட டூட்டி உங்களை நடக்கவச்சு கூட்டிப்போறதுதான். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் பத்து ரூபாய் அவர்கிட்ட கொடுங்க, ஆட்டோவில் போகலாம்."

இளங்கோ தலையாட்டினான். பைக்குள் இருந்த இருபது ரூபாய் முனுசாமியின் வயிற்றுக்குள் சாராயக் கஞ்சியாகப் போனது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனாலும், அதே ஆட்டோவில் வீட்டுக்குப் போய் பணம் கொடுத்துவிடலாம்.

அந்தப் போலீஸ்காரரும், இளங்கோவும் அக்கம்பக்கம் பார்த்தபோது, சரோசா அந்த ஆட்டோவில் ஏறி ஜம்முன்னு குந்தினாள். இதற்குள் போலீஸ்காரரும் ஆட்டோவுக்குப் பின்புறமாய் நடந்து ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு சரோசாவை ரைட் சைடில் நகரும்படி சைகை செய்துவிட்டு, இளங்கோவைப் பார்த்தார். அவன் சற்று தயங்கிவிட்டு அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து உட்காருவதற்கு யோசிப்பவன்போல் நின்றான். சரோசா அதட்டினாள்:

"யோவ் உன் பேரு இன்னாயா?"

"இளங்கோ."

"பேருல மட்டும் கொறச்சல் இல்ல. சீக்கிரமா வந்து குந்தேன்யா. உன்ன மாதிரி நான் என்ன வேலை வெட்டி இல்லாதவளா? நானு ரொம்ப பிஸி.”

இளங்கோ, அவர்கள் இருவருக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டான். பிறகுதான், அவள் கேட்டதற்கு தன் பெயரைச் சொல்லி ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவன் மாதிரி நடந்து கொண்டதற்கு அவமானப்பட்டவன் போல் முகத்தை உம்மணா மூஞ்சியாக்கினான். பெற்றெடுத்த அம்மா மீது பயங்கரமான கோபம். ‘அதட்டி அதட்டியே என்ன ஆம்பளையா இல்லாம செஞ்சுட்டாங்க.

ஆட்டோ, பாய்ந்து பறந்தது. இடையிலே ஒரு சைக்கிள். ஆட்டோ டிரைவர் போலீஸ் தைரியத்தில் கத்தினார்:

"ஏண்டா சோமாறி! பொறுக்கி! பொறம்போக்கு! இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? போலீஸ் சார் இருக்காரேன்னு பார்க்கிகேன்.''

கிடாமீசை சைக்கிள்காரர், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு, ஆட்டோ டிரைவரை அடிப்பதற்காக லுங்கியை இறுக்கிக் கட்டப் போனார். பிறகு போலீஸ்காரர் அங்கு இருப்பதைப் பார்த்துவிட்டு, இறுக்கிய லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு, ஏதோ அது தற்செயலாக அவிழ்ந்தது போலவும், அதை அவர் கட்டுவதற்காகத்தான் சைக்கிளை நிறுத்தியது போலவும், பாவலா செய்தார். உடனே ஆட்டோ டிரைவர் “இந்த ஆட்டோவுக்கு முதல் எதிரியே சைக்கிள்தான்” என்றார். சரோசா கத்தினாள்:

"யோவ் இளங்கோ, ஏன்யா என்மேல இப்படி ஒட்டிக்கிறே? நீ எப்பவுமே பொம்மனாட்டி பக்கத்துல குந்துனது இல்லியா? சார், 'இதை' ஒத்தியிருக்கச் சொல்லுங்கோ. கைய எங்கெல்லாமோ கொண்டு வருது."

இளங்கோ, இரண்டு தோள்களும் கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று வட்டம் போல் வளைந்து ஒன்றையொன்று பற்றிக் கொள்ளும்படி மார்பை குறுக்கி, கைகளை குறுக்காக மடித்து, கால்கள் இரண்டையும் பின்னி, கூனிக்குறுகிக் கிடந்தான்.

சரோசா, கன்னங்களை உப்ப வைத்துக் கொண்டாள். அவனைப் பார்த்துக் கண்களை உருட்டினாள். இளங்கோவிற்கு ஓடுகிற ஆட்டோவிலிருந்து கீழே குதித்து ஓடிவிடத் தோன்றியது. ஆனாலும் அந்தப் போலீஸ்காரர் அவளை அதட்டலாகப் பார்ப்பதுபோல் இருந்ததால், சிறிது, பயம் தெளிந்தது. என்றாலும் அவளோ அல்லது அந்தப் போலீஸ்காரரோ தனது குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் தெரிந்ததால், அவனுக்கு மனம் வலித்தது. இது போதாது என்று அந்த ஆட்டோ டிரைவர் போலீஸ்காரர் இருக்கிற தைரியத்தில் எதிரே 'நான்வாரேன்' என்பது மாதிரி லைட்டுப்போட்டுக் காட்டிய ஒரு காரை மோதப்போவது போல் ஓட்டி, ஒரு டிரக் வண்டியை உரசி, ஒரு சைக்கிளை வழி மறித்து தக்காரும் மிக்காரும் இல்லாமல் காவல் நிலையத்திற்குள் ஓடிப்போனது.

அந்தப் போலீஸ்காரர், இளங்கோவையும், சரோசாவையும் கைக்கு ஒரு பக்கமாய் வைத்துக் கொண்டு, நான்கு படிகள் ஏறி, இரும்புக்கிராதி கதவை அங்குமிமாய் தள்ளிவிட்டு, இடது பக்கமாய் போனார். அதன் முதல் அறையில் நுழைந்து ஒரு சல்யூட் அடித்தார். எதிர் நாற்காலியில் உடம்பே பற்றி எரிவது போல் புகை பிடித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த சல்யூட்டை சிகரெட்டை ஆட்டி அங்கீகரித்து விட்டு அவளைப் பார்த்தார்.

"அட சரோசாவா! எப்படி இருக்கே? உன்னோட லேட்டஸ்ட் வம்பு என்ன? - அப்புறம் உங்க ஏரியாவில நெட்டி கோஷ்டியும், பறட்டை கோஷ்டியும் எதுக்காக அப்படி அடிச்சுக்கிறாங்க? விவகாரம் கமிஷனர் வரைக்கும் போயிட்டுது. நீ...அவங்களுக்குக் கொஞ்சம் சொல்லப் படாதா?"

சரோசா, இளங்கோவை ஓரக்கண்ணால் பார்த்தாள். கூட வந்த போலீஸ்காரரையும் ஒரங்கட்டிப் பார்த்தாள். பிறகு, பேசியவரின் முன்னால் இருந்த மேசை மேல் இரண்டு கைகளையும் அட்டகாசமாகப் போட்டபடியே பதில் அளித்தாள்:

“அத ஏன் கேக்கிற சாரே... நாறிப் போச்சு நாறி. அதுவும் அந்த பறட்டை தலையன் வந்தாப்பல."

"விபரமாத்தான் சொல்வேன்."

சரோசா கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். இளங்கோவிற்கு கால்கள் வேர்த்தன. கைகள் நடுங்கின. இதற்குள் அவர்களைக் கூட்டி வந்த போலீஸ்காரர் அவசர அவசரமாய் இடை மறித்துப் பேசினார் :

"சார், இந்தப் பொண்ணு, இவரோட அம்மாவ அடிச்சப் போட்டுட்டு வந்திருக்கா. என்னல்லாமோ திருடியிருக்கிறாள். இவரோட ஏரியாவில், ஒரு குழந்தையக்கூடக் காணுமாம். நிறைய காஸ்ட்லி அயிட்டம், திருட்டுப் போயிருக்காம். இந்தப் பொண்ணு இன்னிக்கி அந்த ஏரியாவில அடாவடியா நடந்ததால், இதை சஸ்பெக்ட்டா கூட்டி வந்திருக்கேன்."

"நீ லா அண்ட் ஆர்டர்செக்ஷன்... இது கிரைம், எல் அண்ட் ஓ-விற்கும், இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?"

"இருக்கு சார், சம்பந்தம் இருக்கு சார். இவரோட ஏரியாவில போகிற திருட்டுக்களை நாம் சீரியஸ்ஸா எடுக்கலைன்னு, இவங்க ஏரியாக்காரங்க, நம்ம போலீஸ் ஸ்டேஷன் முன்னால மறியல் செய்தால் அது லா அண்ட் ஆர்டர்தானே. அப்படியாகாமல் தடுக்கத்தான், இப்பவே ஆக்ஷன் எடுத்தேன்."

"ஓஹோ... மூக்கை பிடறி வழியாத் தொடுறியா? இந்தாப்பா ராமசாமி, எல் அண்ட் ஓ சப்-இன்ஸ்பெக்டர நான் கேட்டுக்கிட்டதாச் சொல்லி கொஞ்சம் கூட்டிக்கிட்டு வா! ஏன் சரோசா, உன்னால கலாட்டா பண்ணாம இருக்க முடியாதா? என்ன இதெல்லாம்?"

"பெரிசா ஒண்ணுமில்ல சாரே, இந்தப் பிள்ளாண்டான், நாலு நாளா ஏன் பின்னாடியே சுத்திக்கினு கீறான். நானும் கண்டுக்கல. இவன் ஏரியா பக்கம் கிருஷ்ணாயில் வாங்கப் போனேன். இவன் இன்னாடான்னாஸைட் அடிக்கிறான். நான் கண்டபடி திட்டுனேன். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப்போறதா கத்துனேன். அதுக்காங்காட்டியும் இவன் முந்திக்கிறான். அய்ய... இந்த ஆட்டோவில் இவன் என்ன படுத்தின ரோதன இருக்கே, அத சொல்றதுக்கே வெக்காமாகீது சாரே."

''சார் சார்! இது அக்கிரமம் சார். எனக்கு இந்த மாதிரியெல்லாம் பழக்கமில்லை சார்."

“வெயிட் மிஸ்டர் வெயிட்... ஒரு பொண்ணு மானத்துக்கு ஏற்படுகிற களங்கத்த பொதுவா சொல்ல மாட்டாள். அதையும் மீறி அவ சொல்றான்னா, அதுல ஏதாவது இருக்கணும். ஒரு சீரியஸ் சமாச்சாரத்த நான் கேக்காமல் இருக்க முடியுமா? சரோசா அப்புறம் மேற்கொண்டு சொல்லு."

இந்த இடைவெளியில் மேற்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்து வைத்திருந்த சரோசா, கதையை தொடரப்போன போது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சப்-இன்ஸ்பெக்டர், அங்கே வந்தார். நேரடி நியமனக்காரர். எல்லா கான்ஸ்டபிள்களும் அயோக்கியர்கள் என்று நினைப்பவர். அவரிடம் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சொல்வதற்கு முன்பே அவரைக் கூட்டிவரப் போனவர் சொல்லிவிட்டதால், தன்னை விட பத்து வயது பெரிய அந்தப் போலீஸ்காரரைப் பார்த்துக் கத்தினார்:

"யோவ் திருமலையப்பா! பீச்சுக்கு டூட்டிபோட்டா இங்க எதுக்குய்யா வந்தே?”

“இந்த சஸ்பெக்ட கூட்டிக்கிட்டு வந்தேன் சார்."

"உன்னை பீச்சுலதான் டூட்டி போட்டேன். நீ ஏன் ஏரியாவிட்டுப் போறே? உனக்கு எதுக்குய்யா வம்பு? இந்நேரம் பீச்சுல ஒரு லா அண்ட் ஆர்டர் பிராப்ளம் ஏற்பட்டிருந்தா யாருய்யா பொறுப்பு? ஏய்யா திமுறா பாக்கே? ஏ.சி. வரட்டும். உன்னமாதிரி ஆளுங்களை கொடுத்துட்டு சட்டம் அமைதி நல்லாயிலலன்னு சட்டம் பேசுறாரு சட்டம்."

திருமலையப்பன், அந்த சப்-இன்ஸ்பெக்டரை அடிக்கப் போவது போல் முறைத்தார். பிறகு அழப்போவது போல் பார்த்தார். கடந்த கால அனுபவங்களையும், குடும்ப நிலையையும் மனதிற்குள் வலுக்கட்டாயமாக நினைத்துக் கொண்டார். கோபம் வந்தால் பத்துவரை எண்ண வேண்டும் என்று ஒருவர் சொல்லிக்கொடுத்தபடி மனதிற்குள் எண்ணினார். எண்ணியதை இடையில் விட்டார். பிறகு அவர்களுக்கு விறைப்பாக ஒரு சல்யூட் அடிக்கும் சாக்கில், வலது புறங்கையால் கண்களைக் துடைத்துவிட்டு, வேகப்பட்டவர் போலவும், பாவப்பட்டவர் போலவும் வெளியேறினார்.

கிரைமும், லாவும் மணிக்கணக்கில் பேசப்போவது போல் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த போது, சரோசா ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, அந்த அறைச்சுவரில் அப்பிக்கிடந்த துப்பாக்கிகளைப் பார்த்தாள். இளங்கோ, கடிகாரத்தையே மாறிமாறிப் பார்த்தான். இதை தற்செயலாகப் பார்த்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், “நீங்க ரெண்டு பேரும், வெளியில நில்லுங்க, கூப்பிட்டு அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

வெளியே வந்த இளங்கோவை, சரோசா கண்ணடித்துச் சிரித்தாள். அவன் ஒதுங்கிப் போய் ஒரு மரத்தோடு மரமாக நின்றான்.

அவளோ கீழே கிடந்த ஒரு பொடிக்கல்லை காலால் தட்டித்தட்டி, அது உருண்டு விழும் இடங்களைப் பார்த்து நிதானமாக நடந்தாள். ஒரு சமயம், அதே கல்லை காலால் இடறி அவன் கணுக்காலில் விழச் செய்தாள். இளங்கோ அப்படியும் அசையாது இருப்பதைப் பார்த்துவிட்டு, நாக்கைத் துருத்தி 'கொன்னுடுவேன்' என்பது மாதிரி கையை ஓங்கி அழகு காட்டினாள். அவன் பதிலழகுகாட்டாமல் சும்மா இருந்ததால் சலித்துப் போய் அவனைப் பார்த்து சிறிது நெருங்கி நேருக்கு நேராய் கேட்டாள்: "இந்தாப்பா, நானு இதோ அந்த கீரைக்காரம்மாவண்ட பேசிட்டு வாரேன். அதுக்குள்ள போலீஸ் கூப்டா ஒரு நட வந்து சொல்லு. பேஜாருபிடிச்ச பிள்ளாண்டாம்பா... இந்நேரம் ஒரு கிலோ இரும்பு கிடைச்சிருக்கும்."

இளங்கோ, முகத்தைத் திருப்பிக் கொண்டான். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்த போது, அது நனைந்துவிட்டது. சரோசாவோ, அலுங்காமல் குலுங்காமல் போய்க்கொண்டிருந்தாள்.

இளங்கோ, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். அரை மணி நேரம் கழித்து சரோசாவும் ஆற அமர வந்தாள். ஆடாமலே அடங்கிப்போன அவனைப் பார்த்து 'ரப்பாகச் சிரித்தாள். "இன்னுமா கூப்பிடல” என்று அவனிடமே சர்வ சாதாரணமாகக் கேட்டாள். அவனோ, அவளைப் பார்க்காமல் அடிக்கடி கீழே தொங்கிய கையைத் தூக்காமலே கடிகாரத்தை குனிந்து பார்த்தான். இப்படிப் பல 'தலைக் குனிவுகள்!"

இளங்கோ பத்துத் தடவைக்கு மேல் கடிகாரத்தைப் பார்த்துவிட்டான். ஒரு தடவைக்கு பத்து நிமிடம் என்பது போல் நூறு நிமிடம் ஆகிவிட்டது. அவன் பொறுமை இழந்து உள்ளே போகப்போனபோது, இரண்டு சப்-இஸ்ன்பெக்டர்களும் வெளியே வந்தார்கள். இளங்கோ குறுக்கே போய் நின்றான். ஒருவர் அதட்டினார். இன்னொருவர் அந்த அதட்டலுக்கு அபிநயம் பிடிப்பவர் போல் தலையை மேலும்கீழும் ஆட்டினார்.

"என்ன மிஸ்டர் உன்னோட பெரிய தொல்ல? அந்தப் பொண்ணு எப்படிப் பொறுமையா நிக்கறா பாரு. உனக்கு என்ன கேடு? அவசரமாக வெளியில போறோம். வெயிட்... வந்து கவனிக்கிறேன்.'

ஜீப்பில் சகாவுடன் ஏறிக்கொண்ட கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், துப்பாக்கியை கண்டும் போது எப்படி விரலை இழுத்து விடுவாரோ, அப்படி அவனைப் பார்த்து விரலைச் கண்டினார். இளங்கோ ஓடோடிப் போய் நின்றபோது-

“ஆல் ரைட்... நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு வந்திரு. வராமல் மட்டும் இருந்துடாதே. அந்தப் பொண்ணு சொல்றது சீரியஸ் குற்றச்சாட்டு. இந்தாப்பா இவரோட அட்ரஸ்ஸ வாங்கிக்கோ, சரோசா உனக்குந்தான், கரைக்டா வந்துடணும்."

"சரி சாரே, அதுவரைக்கும் இந்தப் பிள்ளாண்டான் என்னை..."

ஜீப்காரர்கள், பதில் சொல்லாமலே பறந்துவிட்டார்கள். இளங்கோவிற்கு அந்தக் குளிரிலும் வேர்த்தது.இப்போது விவகாரத்திலிருந்து கழட்டிக்கொண்டால் போதும் என்பது மாதிரியாகிவிட்டது. வீட்டுக்கு ஓடிப்போய் சரணடைய வேண்டும் என்று தோன்றிது. சரோசாவை பார்க்காதது போல நடந்தான். ஆனால் அவளோ, அவனை வழிமறித்துக் கொண்டே வாதித்தாள்:

"யோவ், ஆட்டோவில கொண்டுவந்து விட்டுட்டு, அப்புறமா என்ன நடக்கவைச்சா எப்படி? அதான் நம்மகிட்ட நடக்காதுன்னேன்... என்னை எந்த இடத்துல ஏத்தினியோ அந்த இடத்தில இறக்கிடு டாக்ஸி வேணாம், ஆட்டோ போதும்."
------------------

அத்தியாயம் 6

இளங்கோவின் அம்மா, பாக்கியம் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயுமாய் அல்லாடினாள். ஒன்பது மணிக்கே படுத்துக் கொள்ளும் இளங்கோ, இரவு பத்து மணியை தாண்டியும் வீட்டுக்கு வராதது, அவளுக்கு அந்த வீடே ஒரு காடு மாதிரி தோன்றியது. கேட்டை இழுத்து வெளியே வந்து, தெரு முனை வரைக்கும் கழுத்தை வளைத்துப் பார்த்தாள்.

தேக்கு சோபா செட்டில் கால்மேல் கால்பின்னி அவள் கணவர் சுப்பையா எதிலும் சம்பந்தப்படாதவர் போல், சாய்ந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் சபாரி உடையில் கால் மேல் கால் போட்டு, தலைமுடிக்கு 'மை தீட்டி' உட்கார்ந்திருந்த மிஸ்டர் ரமணனை மனதிற்குள் திட்டிக்கொண்டே ஒப்புக்குச் சிரித்துப் பார்த்தாள். இந்த சோபாசெட்டோடு ஒட்டி, எதிரே போடப்பட்டிருந்த இரண்டு துண்டு நாற்காலிகளில் பாவாடை தாவணி மல்லிகாவும், சேலை கட்டிய பாமாவும் எதையோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கியம், அவர்கள் சத்தம் அடங்கும்படி புலம்பினாள்:

"என் பிள்ளைய காணுமே; எனக்குப் பயமா இருக்கே. ரோஷத்துல எங்கேயும் ஓடிப் போயிருப்பானோ? ஒருவேளை மருந்த சாப்பிட்டுட்டு-இல்லாட்டி அந்தப் பொம்பள ரவுடி அவன அடிச்சுப் போட்டிருப்பாளோ; ஏங்க, உங்களைத்தான், அவனைத் தேடிப் பார்த்துட்டு வாங்களேன்.'

சுப்பையா ஒல்லி மனிதர்; மனைவியின் கனத்தில் பாதிகூடத் தேறாதவர். ஆனாலும் அவளை விட தாம் உயரம் என்று மனதைத் திடப்படுத்திக் கொள்பவர். இப்போது எழுந்து நின்றே கத்தினார்:

"தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளினாளாம், எவளோ ஒரு மூதேவி. அவனைத் தொரத்துனது நீ. அவனும் அப்பன் மாதிரி ரோஷம் கெட்டவனா இருப்பான்னு நீ எப்படி நினைக்கலாம்?”

மிஸ்டர் ரமணன் மட்டும் அங்கே இல்லையானால், பாக்கியம் சுப்பையாவை இந்நேரம் உப்பு வைத்து ஊறவைத்திருப்பாள். பிளட் பிரஷர்க்காரர். அப்படியும் பொறுக்க முடியாமல், அவருக்குத் தனியாக டோஸ் கொடுக்க நினைத்து “ஏங்க, கொஞ்சம் இந்தப் பக்கம் வறீங்களா” என்றாள் பணிவாக -மிகமிகப் பணிவாக. சுப்பையாவா கொக்கா, கண்டுக்கவில்லை. அவருடைய நீண்ட நாள் சிறைபட்ட உணர்வுகள், இப்போது விடுதலை வேகத்தில் வெளிப்படுவதைப் புரிந்து கொண்ட, ரமணன் சமயோசிதமாக சமாளித்தார்.

"சுப்பையா சாருக்கு எப்பவுமே ஜோக்குதான். ஒரு தாயோட மனச ஏன் புரிஞ்சுக்கத் தெரியல? எம் மனசு அவங்கள விட அதிகமாக சங்கடப்படுது. ஏன்னா, என் வீட்டு இரும்புக் கம்பிய எடுக்கிறத தடுத்தவரு எங்க போயிட்டாருன்னு தெரியலையேன்னு, ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு."

மிஸ்டர் ரமணன், தொடர்ந்தார்.

"நானும் இந்த ஏரியாவில் ஒரு கூர்க்கா போடணுமுன்னு ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் கரடியா கத்துறேன். யார் கேட்கிறாங்க? இப்பத்தான் இந்த நாடே குட்டிச்சுவராப் போகுது. ஓட்டுப் போடப் போகமாட்டோம். அதே சமயத்தில் அரசியலை அலசுவோம். சினிமாவுல கஷ்டப்படுகிற கேரக்டர்களுக்குக் கண்ணீர் விடுவோம், ஆனால் வாழ்க்கையில கஷ்டப்படுகிறவங்களுக்கு தண்ணி காட்டுவோம். இதுதான் நம்மோட நேஷனல் கேரெக்டர். நம்ம நேஷன்ல் கேரெக்டர் இருக்குதே... அப்படி ஏதும் இருக்குதா என்ன?”

ரமணனின் மகள் பாமா, தந்தையை வெடுக்கெனப் பார்த்தாள். சந்தனத்தையும், குங்குமத்தையும் கலந்தது மாதிரியான நிறம். அடிக்கடி பிடரி முடியை மேலே தூக்கித் தூக்கி வைப்பாள் என்பதைத் தவிர குற்றம் சொல்லும்படியாக எதுவும் கிடையாது.

“என்ன டாடி... இப்போ போய லெக்சர் அடிக்கிறீங்க! பாவம் ஆன்டி எப்படித் துடிக்கறாங்க பாருங்க. நீங்களும், அங்கிளும் அங்கே இங்கே போய் தேடுங்க.'

"ஓகே.. ஓகே... மிஸ்டர் சுப்பையா, நீங்க வரப்போறீங்களா, அல்லது இருக்கப் போறீங்களா?"

சுப்பையாவும் எழுந்தார். அறைக்குள் போய் ஒரு கோணிப்பை சட்டையை எடுத்துப் போட்டார். அகப்பட்டுக் கொண்டார் என்ற திருப்தியில் அங்கே வந்த மனைவியை விட்டு, லாவகமாக விலகி, வெளியே வந்து, மிஸ்டர் ரமணனோடு சேர்ந்து நின்றுகொண்டு, அவளை இளக்காரமாகப் பார்த்தார். மிஸ்டர் ரமணன் பூட்ஸ்களுக்குள் கால்களை சொருகப் போனபோது -

இளங்கோ உள்ளே வந்தான். பாமாவை பார்க்கும்போதெல்லம், எப்பவும் ஒரு புன்னகை சிந்துவானே, அந்த சிந்தல்கூட இல்லாமல் அங்கிருந்தவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அவர்கள் இருந்த வழியாய் நடந்து, எதிர்ப்பக்கமாய் இருந்த தனது அறைக்குள் போனான். வழக்கம் போல் அவன் உள்ளே போனதும் எரியும் பல்ப் எரியவில்லை. அவன் பீஸாகிக் கிடந்தான். பாக்கியம் ஓடோடிப் போய் லைட்டைப் போட்டாள். "கெட்டவுட், கெட்டவுட் அம்மா ஒங்களால இப்பவும் அவமானப் பட்டுட்டு வாறேன்” என்று அவன் கத்துவது கேட்டு சுப்பையா மகிழ்ச்சியோடு ஓடினார். மல்லிகா மாத நாவலோடும், பாமா தந்தையோடும் ஓடினார்கள். ரமணன் உபதேசித்தார்:

"மை டியர் யங்மேன், என்ன நடந்தாலும், அதையும் அதை நடத்தினவங்களையும் தீர்த்துக்கட்ட இந்த அங்கிள் இருக்கேன். கமான், என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா... அப்புறம் இந்த அங்கிள் என்ன செய்யப் போறேன்னு பாரு, கமான் மை பாய், கமான்."

இளங்கோ கண் விழித்தான். அதில் அம்மா பட்டதால், மீண்டும் மூடிக்கொண்டான். பிறகு கண்களை மெல்லத் திறந்து, அங்கிள் ரமணனை பயபக்தியோடு பார்த்தான். அவரைப் பார்க்கப் பார்க்க ஒரு நிமிர்வு ஏற்பட்டது. முன்பெல்லாம், குண்டோதரன் என்று அவரையே கேலி செய்தவன் இவன். இப்போது, அவரை தனக்கு உதவப்போகிற மிகப் பெரிய ரவுடியாக எண்ணினான். அன்று காலையிலிருந்து இரவு வரை நடந்த விவகாரங்களை அம்மாவைக் கோபமாகப் பார்த்தபடியும், பாமாவை குளுமையாகப் பார்த்தபடியும், மல்லிகாவைப் பார்க்காதபடியும் சொல்லி முடித்தான். கடைசியில், பாமா முன்னால், தனது கதாநாயகத்தனம் குறைந்துவிடாமல் இருக்க, முகத்தை நிமிர்த்தி கம்பீரமாகச் சொன்னான் :

"அவள் வழிமறிச்சவுடனே எப்படித்தான் அப்படி ஆத்திரம் வந்ததோ எனக்கே தெரியல, அவளை ஒரேத்தள்ளா கீழே தள்ளினேன். அப்புறம் அங்கே பிடிச்ச ஓட்டத்தை இங்கே வந்துதான் முடிச்சேன்.''''

அவனை கைகுலுக்கி பாராட்டப் போவதுபோல், பாமா கைகளை நீட்டினாள். அவனும் தனது கையை நீட்டுவது போல் இருந்தது. ஆனாலும் பாமா, தானாகவே வெட்கப்பட்டு, தானாகவே நீட்டிய கைகளை மடக்கிக் கொண்டு அவனை சாய்த்துப் பார்த்தாள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து, குடும்பத்தாரோடு பொதுப்படையாகப் பேசி, அதனாலேயே மண்ணுக்குள் வேராய் மண்டிக் கிடந்த அவளின் காதல் அல்லது நேசம் இப்போது சம்பிரதாயத் தடையை மீறி வெளிப்படப் போவது போல் இருந்தது. மனதுக்குள் தன்னை அறியாமலே பற்றாக்குறையாய் இருந்த ஒரு வேற்றிடம் இப்போது பற்றாலும் பாசத்தாலும் இட்டு நிரப்பப்பட்டது போன்ற ஒரு புதுச்சுமை. அந்த சுமையிலும் ஒரு சுவை.

பாமா, உதடுகளை சுவைப்பது போல் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இனம் தெரியாத ஒன்றுக்கு இனம் கிடைத்த ஏகாந்தம். அரூபமாய் நின்ற உணர்வை ரூபப்படுத்துவது போன்ற திருப்தி, பெண்மையின் மென்மையை அன்றுதான் அடையாளம் கண்டது போன்ற ஒரு பரவசம்.

"அந்த ஊமன் ரவுடிக்கு போலீஸ் இன்ஃபுளூயன்ஸ் அதிகமாக இருக்கும்போலத் தோணுது. போலீஸ், இளங்கோவை விட்டு வைக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். கற்பழிப்பு முயற்சின்னு போலீஸ் சொல்லிட்டால், அப்புறம் நம்ம பக்கமே யாருமே நிக்க மாட்டாங்க. இப்பவே நாம் ஏதாவது செய்தாகணும்.”

ரமணன் யோசிப்பவர் போல், தலையை சொறிந்தபோது, பாக்கியம் ஒப்பாரி போடாத குறையாகக் கேட்டாள் :

"அய்யய்யோ... என் பிள்ளை உள்ளே போயிடுவானா? இந்த போலீஸ்காரனுங்க அட்டூழியத்த அடக்க ஆள் இல்லையா? என் மகனுக்குக் கெட்ட பேரு வந்தால், இவளுக்கும் ஒரு கல்யாணம் நடக்காதே.”

இதுவரை எந்த உணர்வையும் காட்டாமல் மாத நாவல் பாத்திரங்களை மனதில் திரையிட்டுக் கெண்டிருந்த மல்லிகா, லேசாய் கண்களைக் கசக்கினாள். பாமாதான், அப்பாவை சூடாகப் பார்க்க, அவர், வாய் திறந்தார்.

“வேலியே பயிரை மேயுது... நாடு முழுகம் மாமூல் நிலைமை இருக்கோ இல்லையோ, மாமூல்தனம் இருக்குது. இதனாலதான், என் பையன் அமெரிக்காவிலேயே எம்.பி.ஏ. படிச்சுட்டு அங்கேயே செட்டிலாயிட்டான்."

ரமணனுக்கு ஒரு திருப்தி. எந்த வீட்டுக்கு எத்தனை தடவை போனாலும், அந்த வீட்டில் அத்தனை தடவையும் தனது மகன் அமெரிக்காவில் இருப்பதைச் சொல்லாவிட்டால் அவருக்கப் பேச்சே வராது. ஆனால், பாமா அப்பாவை அதட்டினாள்:

"டாடி, நம்ம பிரதரோட அமெரிக்கப் பெருமையை நாளைக்கு வச்சுக்கலாம். போலீஸ்காரங்கள் இளங்கோவை கைது செய்யறதுக்கு முன்னால டூ சம்திங். பிளீஸ். ஏதோ ஒரு டெப்டி கமிஷனர் உங்களோட கிளாஸ்மெட்டுன்னு அலட்டிக்குவீங்களே, அது உண்மையா பொய்யான்னு இப்பவே தெரியணும். இளங்கோவுக்கு மட்டும் நியாயம் கிடைக்காட்டி, நானே போலீஸ் ஸ்டேஷன் முன்னால போய் மறியல் செய்வேன். இதையும் உங்க பிரெண்ட்கிட்ட டெலிபோன்ல சொல்லுங்க டாடி."

மிஸ்டர். ரமணன், கம்பீரமாக எழுந்தார். டெலிபோன் இருந்த அறைக்குள், சுப்பையா அவரை வழிநடத்தினார். டெலிபோன் எண்களைச் சுழற்றினார். இதற்குள் பாமாவின் கண்ணசைவில் இளங்கோவும் அவளோடு அறைக்குள் வந்தான். லைன் கிடைத்ததும் ரமணன் வெளுத்துக்கட்டினார்.

“நீங்க யாரு? டெப்டி கமிஷனரோட பி.ஏ.வா? அவரு இப்ப ரொம்ப பிஸியா? என்னோட கிளாஸ்மெட்டுய்யா; பிரச்சினையும் பெருசுய்யா. இந்த நாடே குட்டிச்சுவராகப் போனதுக்கு உன்னமாதிரி பி.ஏ.க்கள் தான்யா காரணம். என்ன? உன் கிட்ட சொல்லுணுமா? சொல்றேன், சொல்றேன். என்னோட பக்கத்து வீட்டுப் பையன் - குட் பாய் ஒரு பொம்பள ரவுடி அவன அடிச்சது மட்டுமில்லாம, இவன் என்னமோ அந்த அழகிய கற்பழிக்கப் போனதா போலீஸ்ல சொல்றாளம். அந்த மானங்கெட்ட போலீசும் அவள் சொல்றத நம்புதாம். வாட் எ ஷேம்! என்னய்யா சொல்றே? அந்தப் பையனை போலீஸ்ல சரண்டராகச் சொல்லணுமா? நீ யாருய்யா அத சொல்றதுக்கு? டெப்டி கமிஷனர் கிட்ட லைன கொடுய்யா. ஹலோ... ஹலோ...!"

ரமணன், டெலிபோனில் கிலோ கணக்கில் ஹலோ போட்டார். இறுதியில் போனை உடைப்பது போல் வைத்து விட்டு, "லைனை கட் பண்ணிட்டான். இந்த நாடே இப்போ, பி.ஏ.க்களாலதான் ஆளப்படுது. போலீசும் இதுக்கு விதி விலக்கு இல்ல" என்று சொல்லிவிட்டு, பரக்கப் பரக்கப் பார்த்தார். பாமா, ஒரு யோசனை சொன்னாள் :

“ஏன் டாடி... பேசாமல் டெப்டி கமிஷனர் வீட்டுக்கே போயிட்டு வந்திடுங்களேன்."

“போகலாம்தான். அங்கேயும், ஏ.கே-47 துப்பாக்கியோட இருக்கிற ஒருத்தன் தடுப்பானே. டோன்ட் ஒர்ரி... நாளைக்குக் காத்தால எட்டு மணிக்குள்ள அவரை பிடிச்சுடறேன். அப்போ பி.ஏ.-வும் இருக்க மாட்டான்; எம்.ஏ.வும் இருக்க மாட்டான்; கவலைப்படாதே இளங்கோ."

"இவ்வளவு நடந்தும் எப்படி சார், கவலைப்படாம இருக்க முடியும்?"

“ரமணன் ஸார்... நீங்கதான் என் பிள்ளைய மீட்டுத்தரணும். இந்த மனுசனை நம்பிப் பிரயோசனம் இல்லை.”

"கவலைப்படாதீங்க பாக்கியம்மா. இப்படி குழந்தை மாதிரியா அழுவறது? பாருங்க உங்க டாட்டர் மல்லியை... அவளை மாதிரி கம்பீரமாக இருக்கணும்."

"ஆமாம் ஆன்ட்டி, டாடி ஏதாவது செய்யாமல் அவர நான் விடப்போறதுல்ல. ஒருவேளை நான் மட்டும் வீட்ல இருந்து, இந்தப் பொறுக்கிப் பொண்ணை நான் தடுத்திருந்தால் என்னை கொலை பண்ணிட்டு இந்த ஆறு பவுன் செயினை கழுத்தோட சேர்த்து அறுத்துட்டுப் போயிருப்பாளே. எதுக்குச் சொல்றேன்னா, இளங்கோவோட பிரச்சினை, என்னோட பிரச்சினை. அவரோட தியாகம் வீண்போகாது."

மிஸ்டர் ரமணனும், அவர் மகள் பாமாவும் எழுந்தார்கள். இளங்கோ பாமாவை சோர்வோடு பார்த்தபோது, அவளோ, 'யாமிருக்கப் பயம் ஏன்?” என்பது போல் முருக தோரணையோடு உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டினாள். அவர்களோடு சேர்ந்து நழுவப்போன கணவனை “எங்கே போறீங்க” என்று பாக்கியம் அதட்டினாள். அவரோ, "ஒரே இருட்டா இருக்கு. அவங்களை விட்டுட்டு வாறேன்” என்று முன்னால் நடந்தார். இனிமேல் அவள் தூங்கிய பிறகுதான் வருவார்.

இளங்கோ, சாய்வு நாற்காலியையே கட்டிலாக்கினான்.
--------------

அத்தியாயம் 7

இளங்கோ, திடீரென அம்மாவின் சத்தமும், ஒரு அந்நிய சத்தமும், கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒலிப்பதைக் கண்டு எழுந்து பார்த்தான். நடு வீட்டிற்குள் வந்து அந்த வீட்டை ஏற இறங்கப் பார்க்கும் அந்தப் போலீஸ்காரரை உற்றுப் பார்த்தான். அவர் வேறு யாரும் இல்லை. தெருவோர கரும்பு வியாபாரியிடம் செங்கோல் செலுத்தினாரே அவரேதான். அம்மா அழாக்குறையாகக் கத்தினாள்:

"ஒங்கக் கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமாய்யா? அந்த அநியாயக்காரியத்தான் உங்களால ஒண்ணும் செய்யமுடியல. ஒதுங்கிப் போறவனையாவது விட்டுத் தொலைக்கலாமே."

"நீங்க எது சொல்லணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க."

“நான் அனுப்பி வைக்காட்டி?”

"போலீஸ் மீறுறவங்களை எப்படி பிடிக்கணுமுன்னு வேலூர்லேயும், கே.கே. நகர்லேயும் டிரெயினிங் கொடுத்திருக்காங்க."

‘அவனை எதுக்காகக் கூப்பிடுறீங்கன்னு எனக்கு முதல்ல தெரிஞ்சாகணும்.''

"ஏதோ ஒருரு பொண்ணு, சரோசாவோ, ரோசாவோ, இவரு அவள கீழே பிடிச்சுத் தள்ளி ரத்தக் காயம் உண்டு பண்ணிட்டாராம். அதுக்கு முன்னால கற்பழிக்க முயற்சி செய்தாராம். இந்த இரண்டும் சீரியஸ்ஸான விவகாரம். அதனாலதான், இன்ஸ்பெக்டர் இவர கையோட கூட்டிட்டு வரச்சொன்னார். யாரு பக்கம் நியாயம் இருக்கு என்கிறது எனக்கு முக்கியமில்லை. இவர கையோட கூட்டிக்கிட்டுப் போறதுதான், முக்கியம்.”

"கான்ஸ்டபிள் சார், இது அநியாயம் சார். நான் ஒரு பாவமும் அறியாதவன் சார். இப்படி நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தால், ஒதுங்கிப் போயிருப்பேன் சார்.”

"எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க மிஸ்டர்."

“சரி காலையில வாறேன்.”

"இல்ல, இப்பவே வரணும். வந்தாகணும்.”

அந்தப் போலீஸ்காரர் இளங்கோவை அந்த இரவில் கையோடு கொண்டு போகாமல் போகப் போவதில்லை என்பதுபோல், அங்கேயே - அந்த நடு வீட்டுலேயே லத்திக் கம்பை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தார்.

இளங்கோவிற்கு, தலைக்கு மேல் வெள்ளம் போன துணிச்சல்; அதுவும் கரும்புச் சாருக்காரனை சக்கையாக்கிய போலீஸ்காரரே, வீட்டிற்குள் வந்து, டி.வி. செட்டையும், கண்ணாடி பிரேமிற்குள் இருந்த ஓவியப் பொருட்களையும் பார்த்துவிட்டு, திருப்தியுடன் மனதிற்குள் அசைபோட்டபடியே தலையாட்டுவதைக் கண்டு, அவன் கொதித்துப் போனான். அவருக்கு முன்னால் வந்து இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினான் :

"இந்தாங்க சார்... உங்களைத் தான். விலங்கை மாட்டி இழுத்துக்கிட்டு வேணுமுன்னாலும் போங்க. இந்தாய்யா கை. எங்கேய்யா உன் விலங்கு?"

அனுபவப்பட்ட அந்த காவலருக்கு, அவன் ஒரு அப்பாவி என்பது உடனடியாகப் புரிந்தது. அதே சமயம், இந்த மாதிரி கேஸ்கள் காமதேனுவாக மாறும் என்பதும் தெரிந்தது. எதுவும் பேசாமல், அவனை அவன் போக்கிலேயே விட்டார். இதற்குள், இளங்கோ மேலும் அதிகமாய் உணர்ச்சிவயப்பட்டு, அவனே, அவரது கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான். என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசினான் :

"வாங்க சார், போகலாம். நான் அவளை கற்பழிக்க முயற்சி செய்யல... செய்திட்டேன். அதுக்காகவே திட்டம் போட்டு அவள இந்த ஏரியா பக்கம் வரவழைச்சு இரும்புக் கம்பிய திருடச் சொன்னேன். வாங்க சார் போகலாம்... வராட்டால் என்ன செய்வீங்க!”

"இதுக்கெல்லாம் மசியற ஆளு வேற; நான் இல்ல. தேவைப்பட்டால் விலங்குகூட மாட்டி இழுத்துக்கிட்டுப் போவோம். போலீஸ் கிள்ளுக்கீரை இல்லை. எங்களுக்கு பங்களாவும் ஒண்ணுதான். சேரியும் ஒண்ணுதான். ஏதோ கையில, காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டு, அப்படி இப்படி நடந்துகிட்டால், தேறலாம். நீ என்னடான்னா உதவி செய்ய வந்த என்னையே வம்புக்கு இழுக்கிறீயே."

பாக்கியம், பிரமை பிடித்து நின்றாள். இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்த்தே, அதற்குப் பயந்து கணவன் ஓடிவிட்டதாக நினைத்து மனதிற்குள் கணவனைத் திட்டினாள். பிறகு மகனை மலங்க மலங்கப் பார்த்தாள். அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள். போலீஸ்காரர் அபயம் அளித்தார்.

"வழிய விடுங்கம்மா... இப்பவும் எதுவும் குடிமூழுகிப் போயிடல. உங்க பைனை நைட்ல ஜாக்கிரரையா பார்த்துக்க வேண்டியது என்னோடது. நீங்க காலையில வாங்க. பார்க்க வேண்டியவங்களை பக்குவமா பாருங்க. எல்லாம் சரியாயிடும். பாவம் சரோசா பொண்ணு. இவரு தள்ளிப் போட்டதுல அவளுக்குப் பிடரியில ஒரே ரத்தம். எதுல காயம் வந்தாலும் பிடரியில் மட்டும் காயம் வரக்கூடாது. ஏன்னா அது உயிரோட கூட நிக்கும். ஆனாலும், கேஸ் இன்னும் ரிஜிஸ்டர் ஆகல. சரி... நடப்பா."

பாக்கியம், மகனையும் அந்த காவலரையும் ஒருசேரப் பார்த்தாள். அவளுள் இருந்த நகரத்துப் பெண் விலகி, கிராமத்து நாட்டாமைப் பெண்ணுக்கு வழி கிடைத்தது. கணவனைப் பார்த்து கர்ஜிப்பாளே அதேமாதிரி கர்ஜித்தாள் :

"சரி வாங்க போகலாம். நானும் வாரேன். என்னதான் நடக்குதுன்ன பார்த்துடலாம். ஏய் மல்லி, கதவைப் பூட்டிக்கடி. இல்லாட்டி திறந்த வீட்ல யாராவது, 'ஏதோ மாதிரி' நுழைஞ்சு வம்புக்கு இழுப்பாங்க. இரண்டுல ஒண்ண பார்க்காம் நான் இன்னிக்கி விடப்போறதுல்ல. உங்கப்பா வந்தால் கதவ திறக்காதடி. அவரோட புத்திக்கு ரோட்டுல தூங்கணும். டேய் இளங்கோ, நட்டா! என்னதான் நடத்தறாங்கன்னு பார்த்துடலாம்.”

அந்தப் போலீஸ்காரருக்கு கோபம் வரத்தான் செய்தது. ஆனால், அழுது கொண்டே பின்னால் வருவாள் என்று எதிர்பார்த்த அந்த அம்மாள், வயதான கண்ணகி போல் பேசுவது கண்டு அதிர்ந்து போனார்.

போலீஸ்காரர் முன் நடக்க, தாயும் மகனும் பின் நடக்க, முன்னால் நடந்த போலீஸ்காரர் ஆழம் பார்த்துப் பேசினார்.

"இந்த மாதிரி ராத்திரியில தம்பிய கூட்டிக்கிட்டுப் போறது, எனக்கே ரொம்ப சங்கடமாகத்தான் இருக்குது. ஆனால் எங்க ஸ்டேஷனுக்குள்ளேயே, எங்க கண்ணு முன்னாலேயே ஒரு சின்னஞ்சிறு பொண்ண அடிச்சப் போட்டுட்டு அலட்சியமாகப் போகிறவனை நாங்கலட்சியப்படுத்தாமல் இருந்தால், எங்க பேரு போலீஸா? எப்படியோ சமாதானமாப் போனால் எல்லாருக்கும் நல்லது."

அந்த மூவரும்,பிரதான சாலைக்கு வந்தார்கள். வலப்பக்கமாகத் திரும்ப வேண்டியவர்கள், இடப்பக்கமாகத் திரும்புவது கண்டு போலீஸ்காரர் அவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்.

“அடுத்த தெருவில் தெரிஞ்சவர் ஒருத்தர் வீட்ல என் வீட்டுக்காரர் இருக்கார். அவரையும் கூட்டிக்கிட்டு போகலாம்."

"இவரு இங்கேயே நிக்கட்டும். நீங்க போயிட்டு வாங்க.”

"இந்தா பாருய்யா, நான் பனங்காட்டு நரி. இந்த மிரட்டுற வேலைய வெச்சுக்காத. ஒரு பத்து நிமிஷம் உன்னால பொறுக்க முடியல. ஆனால், அடாவடி செய்யறவங்கள வருஷக்கணக்காய் பொறுத்துக்க முடியும். நான் சொன்ன சொல்ல காப்பாத்துறவள். வேணுமின்னால் நீயும் கூடவா. அதே சமயம் நீ தடுத்தால் நாங்க நடக்கத்தான் போறோம். உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ."

மகன், காவல் நிலையத்தில் சிக்கி அவனுக்கு இரவோடு இரவாக ஏதாவது ஆகிவிடக்கூடாதே என்று கோழி போல் தவித்த அந்தத் தாய், இப்போது பருந்து போல் வீறாப்புக் கொண்டாள். இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு இடது பக்கமாக நடந்தாள். வலது பக்கம் கால் வைத்திருந்த போலீஸ்காரரும், அவர்களுக்குப் பின்னால் நடந்தார்.

தாயும், மகனும் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு, போலீஸ்காரர் வருத்தப்பட்டார். கஷ்டப்பட்டார். புத்தியை கடன் கொடுத்து விட்டோமே என்பது போல் தொப்பியை சொறிந்தார். இதற்குள் மிஸ்டர். ரமணனும், பாமாவும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இளங்கோ இப்போது வீறாப்பாய் பேசினான் :

"நான், என்னை வழிமறித்த பொண்ணைத் தள்ளாமல் அவள் முன்னால தோப்புக்கரணம் போட்டிருக்கணுமாம். அவள் இரும்புக் கம்பிய திருடினதத் தடுக்காமல் எங்க வீட்டுல இருக்கிறதையும் எடுத்துக் கொடுத்திருக்கணுமாம். அப்படிச் செய்யாததுனால என்னை, ராத்திரியோடு ராத்திரியா விசாரிக்கப் போறாங்களாம்.'

பாமா கத்தினாள் :

"டாடி, இது டூ மச்... உங்க டெப்டி கமிஷனர் பிரண்டுக்கு போன் செய்யுங்க. இல்லாட்டி கமிஷனர் கிட்ட, நானே பேசப்போறேன்.'

பெரிய பெரிய வார்த்தைகளைக் கேட்ட போலீஸ்காரர் சிறிது சுதாரித்து, கையில் பிடித்திருந்த லத்திக்கம்பை முதுகோடு முதுகாக மறைத்துக் கொண்டார். இதற்குள் இளங்கோவின் தந்தை சுப்பையா, அந்தப் போலீஸ்காரரையே கமிஷனராய் அனுமானித்து ‘பணிவன்புடன்’ சொன்னார்:

"சார் நீங்க வாங்க... தப்பில்ல. எந்த வீட்டுக்கும் எந்த நேரத்திலயும் வர்றதுக்கு உங்களுக்கு ரைட் இருக்கு. இப்படி யூனிபார்ம்ல வராமல் மப்டியில் வந்திருக்கலாம். இதுவும் தப்பில்லதான்."

"என்ன அங்கிள் சம்பந்தம் இல்லாமல் பேசறீங்க! போலீஸ்காரர் காலிலயே விழுந்துடுவீங்க போலிருக்கே. இளங்கோவை கேவலப் படுத்தணுமுன்னுதானே, இவரு யூனிபாரத்துல வந்திருக்கார். டாடி, இன்னுமா உங்களுக்கு லைன் கிடைக்கல?"

ரமணன் டெலிபோனை சுற்றோ சுற்று என்று சுற்றி, டெபுடி கமிஷனரை எப்படியோ, கையும் டெலிபோனுமாகப் பிடித்து விட்டார்.

“ஹலோ! நான்தான் மிஸ்டர் ரமணன். தப்புத்தான்... என்னை நானே மிஸ்டர்ன்னு சொல்லிக்கக் கூடாதுதான். உங்கள மாதிரிதான் அமெரிக்காவில இருக்கிற என்னோட மகனும் அடிக்கடி சொல்லுவான். அப்புறம் ஒரு விஷயம். போலீஸ் எங்க ஏரியாவிலே போலீஸாவே இல்ல. ஓகே! சொல்ல வேண்டியத ஒரு நிமிஷத்துல என்ன, அரை நிமிஷத்திலேயே சொல்லிடறேன்.”

ரமணன், இளங்கோவிற்கு காலையிலிருந்து அந்த இரவு வரை ஏற்பட்ட சோதனைகளை விளக்கினார். அந்த ஏரியாவில் ஒரு குழந்தை காணாமல் போனதையும், பல பொருட்கள் திருட்டுப் போனதையும், இவைபற்றி அவ்வப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தாலும், அவை போன இடம் தெரியவில்லை என்பதையும் விளக்கினார். இப்போது ஒரு கான்ஸ்டபிள் கையும் லத்தியுமாய் நிற்பதையும் சொன்னார். பிறகு , “ஹலோ... தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

"இன்னும் பத்து நிமிஷத்துல திருப்பி டெலிபோன் செய்யறதா சொல்லியிருக்கார்.”

"அப்படின்னா, உங்க டெலிபோன் நம்பரை அவர் கேட்டுருக்கணுமே டாடி! நீங்கதான பேசிக்கிட்டுப் போனீங்க, நீங்க பேசி முடிச்சதும் மூணு செகண்ட்ல அவரு டெலிபோனை வைச்சுட்டாரே"

"போலீஸ் ஆபீசருங்க எப்பவுமே அப்படித்தான். கட் அன்ட் ரைட்டாத்தான் இருப்பாங்க."

இதற்குள் போலீஸ்காரர், அந்த வீட்டையும் அவர்களையும் ஆழம் போட்டார். ஒன்பது நிமிடம் ஐம்பது வினாடி வரை பொறுமையோடு இருந்தார். பத்தாவது நிமிடம் படபடப்பானார்.

“சார், எனக்கு டைம் ஆகுது. குற்றவாளிய என்னோட அனுப்பி வைச்சீங்கன்னா, உங்களுக்கும் நல்லது."

"வேணும்னா விலங்கு போட்டு இழுத்துக்கிட்டுப் போய்யா. நீ இவர ஸ்டேஷன் வரைக்கும்தான் இழுக்க முடியும். நான் உன்ன சிட்டி முழுக்க இழுப்பேன். என்ன நினைச்சுக்கிட்ட?"

ரமணன் போட்ட சத்தத்தில் நியாயம் இருப்பது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு போலீஸ்காரர், பேசாமல் நின்றார். இதற்குள் டெலிபோன் மணி ஒலித்தது. ரமணனும், பாமாவும் போட்டி போட்டு ஓடினார்கள்.

பாமா எடுத்த டெலிபோனை ரமணன் வாங்கிக் கொண்டு "எப்படி என் டெலிபோன் நம்பரை கண்டுபிடிச்சீங்க?” என்றார்.

"ஹலோ, தேங்கயூப்பா. சார், சாரி! தேங்க்யூ சார். எங்க ஸைடுல நியாயம் இருக்கிறதாலதான், நீங்க தலையிடுறீங்கன்னு எனக்குத் தெரியும். என்ன? சரோசாவ பத்தி உங்களுக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கிட்டுமா இவ்வளவு நாளும் விட்டு வைச்சீங்க? சார்... அது உங்க விவகாரம்தான். எங்களுக்கு இப்போ நியாயம் கிடைக்கிறதைவிட அநியாயத்துல இருந்து பாதுகாப்புக் கிடைச்சாலே போதும். இந்த கான்ஸ்டபிள் இன்னும் இங்கேயே நிற்கிறார். ஓகே... ஓகே! அப்புறம் நீங்க ரிடையர் ஆன பிறகாவது வகுப்புல பேசினது மாதிரி உங்கள “டா” போட்டு பேசலாமா? யெஸ்... பிரதர், நீங்க பிஸிதான்... குட் நைட்..."

ரமணன் ஆனந்தப் பள்ளுப் பாடினார்:

"நம்ம ஏரியாவில நடந்த திருட்டுக்களைப் பத்தி இதுவரைக்கும் கொடுத்த புகார்களோட நகல்களை எடுத்துக்கிட்டு நாளைக்கி இன்ஸ்பெக்டரை போய் பார்க்கணுமாம். அப்படியும் நமக்கு திருப்தி வராட்டால், இவரையே போய் பார்க்கலாமாம். இன்ஸ்பெக்டரை தாளிச்சிருப்பார்! அவர் பேச்சுல அப்படி ஒரு வாடை தெரிஞ்சுது..."

ரமணன், மகள் இன்னும் தன்னை பெரிதாக நினைக்கவில்லையே என்று ஏக்கத்தோடு அவளைப் பார்த்தபோது, அவள் இளங்கோவை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். போலீஸ்காரருக்கு இருப்பதா போவதா என்ற சந்தேகம். அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்த போது, மீண்டும் ஒரு டெலிபோன்; கரகரப்பான குரல். ரமணன் அதை வாங்கி, அந்த கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். அவரும் “அய்யா... அய்யா... சார்... சார்... அப்படியே... சார்... அப்படியே... சார்” என்று சொல்லிவிட்டு, டெலிபோனை வைத்தார். பிறகு விறைப்பாக ஒரு சல்யூட் அடித்தார். “அவளை விடப்பிடாது சார். நீங்க கொடுக்கிற கம்ப்ளைன்ட்ல அவளும் தேறப்பிடாது, அந்த சப்-இன்ஸ்பெக்டரும் தேறப்படாது” என்று சொல்லிவிட்டு, இளங்கோவைப் பார்த்து இரண்டு சல்யூட்களும், பாக்கியம்மாவைப் பார்த்து மூன்று சல்யூட்களும் அடித்துவிட்டு, சுப்பையாவை ஒரு முறைப்பு முறைத்து விட்டு கழன்று கொண்டார்.

ரமணன், பெருமை பிடிபடாமல் பேசினார் :

"மிஸ் அண்ட் மிஸ்ஸஸ் சுப்பையா! நீங்க வீட்டுக்குப் போங்க. நான், பாமா, இளங்கோ மூணுபேருமாய் சேர்ந்து ஒரு புகார் மனு தயார் செய்யப் போறோம். இளங்கோ இங்கேயே சாப்பிடுவார். சுப்பையா சார் புறப்படலையா?"

சுப்பையா சாருக்கு போக மனமில்லை. கூடவே, ஒரு எண்ணமும் ஏற்பட்டது. மகன் அன்றிரவு போலீசிடம் சிக்கினால் எப்படியாவானோ, அப்படி அன்றிரவு அவர் மனைவியிடம் சிக்கினால் ஆவார். சிக்க விரும்பாமல், அதேசமயம் சிக்கனமாகப் பேசினார்:

"அந்த கான்ஸ்டபிள் கையில் ஏதாவது கொடுத்துட்டு வந்திடறேன். எங்க பாக்கியத்துக்கு தனியா போகத் தெரியும். தனியா போயிடுவாள். ரொம்ப தைரியசாலி.”

பாக்கியம், அவசரத்துக்குத் தோஷமில்லை என்பது போல், சுப்பையாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே மாட்டைப் பிடித்துக் கொண்டு போவது போல் போனாள். அதை முன்பக்கம் இறுக்கப் பிடிக்க வேண்டும். இவரை பின் பக்கமிருந்து தள்ள வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம் என்பது போல் அவரை நடத்தினாள்.

ரமணன் சுழற் நாற்காலியில் உட்கார்ந்து தனியாய் போகப்போன அந்தச் சின்னஞ் சிறுசுகளை தன்பக்கம் வரவழைத்தார். அந்த ஏரியாவாசிகளின் சங்கத்திற்கு, இதே ரமணன் அவர்களின் தலைவர் - தொண்டர். சந்தாகூட கொடுக்காத தெருவாசிகளுக்காக அவர்கள் வீட்டில் நடந்த திருட்டு சம்பவங்களை விளக்கும் கடிதங்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு டிக்டேஷனைக் கொடுத்துவிட்டு, பாமாவை டைப் அடிக்கும்படி சொன்னார்.

பாமா, இளங்கோவை தனது அறைக்குள் கூட்டி வந்தாள். இயற்கைக் காட்சிகளைக் கொண்ட கட்டவுட் ஒரு பக்கம்; வீணையோடு நாதம் இசைக்கும் சரஸ்வதியின் உருவம் பொறித்த திரைச்சீலை... டூ இன் ஒன். ஒரு சின்ன டி.வி. செட். அறை முழுவதும் ஒரே சென்ட் வாசனை.

சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கேட்கப்போன இளங்கோ, பசியை மறந்தான். தன்னையறியாமலேயே சொன்னான்:

"உங்களுக்கு கொண்டை போட்டால் நல்லாயிருக்கும். ஏன்னா உங்க முகம் ஓவல் இல்லை. அளவுக்கு மீறி ரவுண்ட். அதோட நீங்க கொஞ்சம் குள்ளம், கொஞ்சந்தான். அதனால கொண்டைய மேல்நோக்கிப் போட்டால், உங்களை உயர்த்திக் காட்டும்."

“இதெல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிட்டீங்க?" “இப்போதைக்கு சஸ்பென்ஸ்.”

அவள், அவனையே வைத்த கண் வைத்தபடி சிரித்தாள்.

"சரி புறப்படுங்க. நாளைக்குத்தான் டைப் அடிக்கப் போறேன். இப்போ அடிச்சால் தப்புத்தப்பா வரும். ஆனாலும் ஒன்று, உங்களை அவள் அடிச்சது எனக்கு இன்னும் வலிக்குது. அவளுக்கு ஆறு வருஷம் வாங்கிக் கொடுக்கிறது, என்னோட பொறுப்பு. தைரியமா போங்க."

இளங்கோ, அவளைப் பார்த்தபடியே எழுந்து நடந்தான். அவள் கொடுத்த காதல் சமிக்ஞைகள் அவனுக்கு டூயட் மாதிரியான கற்பனையை தரவில்லை. அந்த சேரிப் பெண் ஆறு வருடம் உள்ளேயிருக்கப் போகிறாள் என்ற ஒரு ஆனந்தத்தில் அன்று நடந்த அத்தகைய சோதனைகளும், சாதனைகளாய் ஆனது போல் ஒரு அகரத் திருப்தியோடு நடந்தான்.
------------

அத்தியாயம் 8

ஒருவர், இரவில் தூங்கும்போது எந்த எண்ணம் கடைசியில் மனதில் நிற்கிறதோ, அதுதான் மீண்டும் கண் விழித்ததும், மனதில் முதலாவதாக வரும் என்பார்கள். அன்று இரவு முழுவதும் அப்படியே தூங்கிப் போன இளங்கோவின் மனதில் காலையில் எடுத்த எடுப்பிலேயே சரோசா இரும்புக் கம்பிகளுக்கிடையே கையில் விலங்கிடப்பட்டு, அவனைப் பார்த்து தலைகவிழ்ந்து நின்றாள். அதற்குப் பிறகு தான், பாமா லேசுலேசாக தலையில் கொண்டை போட்டுக் காட்டும் பாவனையோடு, எட்டியெட்டிப் பார்த்தாள்.

இளங்கோ, அம்மா நீட்டிய இட்லிகளை விழுங்குவது தெரியாமல் விழுங்கிவிட்டு, பேண்ட் சட்டையை அவனைப் போல் வீறாப்பாக இழுத்துக்கொண்டு, வெளியே புறப்பட்டான். அவனுக்கு 'சப்' என்றாகிவிட்டது. பாமா வீட்டிற்குப் போவதற்கு அவன் படியிறங்கியபோது, அவள் அப்பா ரமணனோ, மாருதி காரில் அங்கே வந்தார். கதவைத் திறந்து அவனை ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தார். இதற்குள், பாமா பின்பக்கமாக வந்து கைகளைப் பிடரிக்குக் கொண்டு போய் தலைமுடியை தலைக்குமேல் கொண்டுவந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள். அம்மா ஒருபக்கமும், இன்னொரு பக்கம் பாமாவும் கையசைத்து வழியனுப்ப மாருதி கார் அந்தப் பெயருக்குரிய வேகத்தில் பறந்தது.

அந்தக் கார், காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், நேற்றிரவு வீட்டிற்கு வந்திருந்தாரே அதே போலீஸ்காரர் அவர்களைப் பார்த்து அலறியடித்துக் கதவைத் திறந்தார். எந்தப் போலீஸ்காரராலும் இப்படி ஒரு மரியாதைக்குட்படாத ரமணன் உடம்பை நெளித்து நடப்பதோ அல்லது அக்கம்பக்கம் பார்த்து நடப்பதோ கவுரவக்குறைவு என்று நினைப்பது போல், லகான் போட்ட குதிரைபோல் நேராக நடந்தார். இளங்கோ, அவர் பின்னால் ஆட்டுக்குட்டி போல் போனான். இருவரும் கிரைம் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த அதே சப்-இன்ஸ்பெக்டர் விழுந்தடித்து நின்றார்.

"உட்காருங்க... மிஸ்டர் ரமணன் சார்... இளங்கோ! நீங்களும் உட்காருங்க..."

“ஓயர் ஈஸ் யுவர் இன்ஸ்பெக்டர்...? இன்ஸ்பெக்டரை நான் பார்க்கலாமா...?"

"உங்களுக்காகத்தான் காத்திருக்கார் சார், வாங்க சார்." மூவரும் முதல் மாடியில் உள்ள இரண்டாவது அறைக்குள் வந்தார்கள். ரமணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"ஐ அம் ரமணன்... கம்பெனி எக்ஸிகியூட்டிவ். நீங்க இன்ஸ்பெக்டரா?"

"உட்காருங்க மிஸ்டர் ரமணன்... உட்காருங்க. தம்பி நீயும் உட்காருப்பா”

"இனிமேல் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுங்க சார். டெப்டி கமிஷனரை கஷ்டப்படுத்த வேண்டாம். என்னை கஷ்டப்படுத்துங்க. இனிமேல் உங்க ஏரியாவோட செக்யூரிட்டிக்கு நான் பொறுப்பு. இந்தாப்பா மூணு கப் காப்பி வாங்கி வா."

ரமணனும், இளங்கோவும் அந்த இன்ஸ்பெக்டரையே பார்த்தார்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு சற்று மேலேயோ, கிழேயோ இருக்கும். சற்று கனமான உடம்பு; என்றாலும் காற்றில்கூட பறக்கமுடியும் என்பது மாதிரியான லாவகம். இழுத்துப்பிடித்தது போன்ற தொய்வில்லாத முகம்.

இன்ஸ்பெக்டரை விரட்டுவதற்கென்றே வந்த ரமணன், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் கட்சி மாறிவிட்டார். தோல் பைக்குள் வைத்திருந்த ஒரு கற்றைக் காகிதத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ஒவ்வொரு பேப்பருக்கும் விளக்கம் சொல்வதற்காக அவர் மனத்திற்குள் ஒத்திகை போட்டார். இதற்குள் இன்ஸ்பெக்டர் முந்திக் கொண்டு பேசினார்:

"நீங்க சொல்ல வேண்டியதே இல்ல சார்! நேற்று நைட் முழுவதும் இதே வேலைதான். மூணாவது கிராஸ் தெரு முனையில் ஒரு ஓலைவீட்டுல இருக்கிற ருக்குமணி என்கிற பால்காரியோட ஆறுவயசுப் பையனைக் காணவில்லை. அதே கிராஸ் தெருவில எட்டாம் நம்பர்ல அழகிரி சாமியோட டி.வி. செட் போயிட்டுது, இரண்டாவது கிராஸ்ஸ சம்புலிங்கம் வீட்டுல சம்புல போட்டிருந்த பூட்டும் கைப்பம்பும் போயிடுத்து. இதுங்கதான் உங்களுக்குத் தெரியும். இன்னொன்றை நான் சொல்றேன், கேளுங்க; நேத்து இரவு நைட்ல, மெயின் ரோட்டுல இருக்கிற நியாயவிலைக் கடைய உடைச்சி ஏழுெட்டு மூட்டைகளை எத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அந்த ஏரியாவில இருக்கிறவங்க மனுஷங்களா? மாடுங்களா? மக்களோட ஒத்துழைப்பு இல்லாம குற்றங்களைக் கண்டுபிடிக்க முடியாது ஸார்."

"அப்படியும் சொல்ல முடியாதுங்களே. இந்தப் பையன் இளங்கோ, என்னை மாதிரியே ஒரு சமூகத் தொண்டன். நேற்று உங்க ஆட்கள்கிட்டயே இவன் பட்டபாடு... ஒரே பாடு... இதைப் பார்த்த பிறகு எவன் போலீசிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பான்? இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணு ஒரு குழந்தைய திருடினவள்..."

"நடந்ததை மறந்துடுங்க... இனிமேல் நடக்கப் போறதை கவனிப்போம். இந்தாப்பா அவள் பேரு என்ன சரோசாவா? கூட்டிக்கிட்டு வா, க்விக். என்ன சார் செய்யறது? எல்லாப் போலீசும், விவிஐபி பாதுகாப்புக்குப் போக வேண்டியதிருக்கு. பஞ்ச பாண்டவர் மாதிரி, ஐந்து கான்ஸ்டபிள்களை வைச்சிக்கிட்டு, இந்த ஏரியா முழுவதையும் கவனிக்கணும். எப்படி முடியும்? உங்கள மாதிரி பப்ளிக் பர்ஸ்னாலிட்டிகள் டெப்டி கமிஷனர்கிட்ட இதையெல்லாம் சொல்லணும்”

"கண்டிப்பாய் அடுத்தவாரம் உங்க டெப்டி கமிஷனர் என் வீட்டுக்கு வரான்! சாரி... கிளாஸ்மேட்டாக இருந்தாலும் உங்க முன்னால ‘இர்' போட்டுத்தானே பேசணும்...? - டின்னருக்கு வருகிறாரு. அவர்கிட்ட விவரமா சொல்றேன்.”

சரோசாவை, இரண்டு கான்ஸ்டபிள்கள் கொண்டுவந்து, இன்ஸ்பெக்டர் அறைக்கு வெளியே நிறுத்தினார்கள். நேற்று அவளிடம் தோழமையோடு பேசிய அதே, அந்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், இப்போது அவள் கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளினார். அவள் விழாக்குறையாக இன்ஸ்பெக்டர் முன்னால் குனிந்து நின்றாள். பிறகு அங்குமிங்குமாய் பார்த்தாள். இளங்கோவை திடுக்கிடாமல் பார்த்தாள். பிறகு, அரற்றியபடியே இளங்கோவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவளின் மேல் உதடு வீங்கிப் போயிருந்தது. அழகான மஞ்சள் துண்டுபோல் தோற்றம் காட்டும் அந்த உதடு, இப்போது கோவைப் பழமாய் சிவந்து அதே அளவிற்கு வீங்கி கீழ் உதட்டை மறைத்துக் கொண்டிருந்தது. கீழ் உதடோ நைந்து ரத்தக் கசிவோடு சதைக் கட்டிபோல் தொங்கியது. இரண்டு கண்களின் புருவங்களும், வீங்கிப் புடைத்து முன்பக்கமாய் குவிந்து, கண் இமைகளை மறைத்தன. கன்னங்களும் வீங்கிப் புடைத்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்தன. தலைமுடியை யாரோ இறுக்கிப்பிடித்து, நீண்ட நேரம் வைத்தது போல், கோரம்புல் கட்டுப்போல மேல்நோக்கி நீண்டிருந்தது. நெற்றிப் பொட்டில், குங்குமம் வைத்ததுபோல், ஒரு ரத்தக்காயம். கைகளில் சிராய்ப்புக்கள். அவள் கணுக்கால்களில், பாவாடை பிய்ந்து சிவப்புச் சிவப்பாய் தெரிந்தது.

சரோசா, இளங்கோவை காலில் விழுந்து கும்பிடப்போனாள். அவன் சற்றுத் தள்ளி நின்றதும், கீழே குனிந்தாள். நிமிர்ந்தாள். அலை அலையாய் கண்ணீர்விட்டு அதை அழுகின்ற வாய்க்குள்ளேயே உள்வாங்கியபடி, அவள் ஓலமிட்டாள்:

"சாரே... சாரே... இளங்கோ சாரே! நான் செய்தது அல்லாம் தப்புத்தான்... என்னை மன்னிச்சிடு சாரே. நீ சொன்னாத்தான் என்னை விடுவாங்களாம்."

இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்துவிட்டது.

"அதுக்குள்ள இத எவன்டி உனக்குச் சொல்லிக் கொடுத்தது? மொதல்ல அந்தக் குழந்தையை எங்கே வைத்திருக்கேன்னு இப்போ எனக்குத் தெரிஞ்சாகணும். முன்னால சாராயம் காய்ச்சினே, சரின்னு விட்டுட்டோம். அங்கேயும் இங்கேயும் சிலரை அடிச்சே... கண்ணை மூடிக்கிட்டோம். இப்ப என்னடான்னா, குழந்தையை திருடினதையும் கண்டுக்காம இருப்போமுன்னு நினைச்சால் நீதான் ஒரு குழுந்தை. சொல்லுடி, ரமணன் வாய்விட்டார்க் கொழுந்தையை எங்க வைச்சிருக்கே?”

"இன்ஸ்பெக்டர் சார், டி.வி.செட், பிரிஜ்-ஜப் பத்தியும் கேளுங்க சார்."

"கொஞ்சம் சும்மா இருங்க மிஸ்டர் ரமணன்; முதலில் உயிர்ப்பிரச்சினை, அப்புறந்தான் ஜடப்பிரச்சினை. சொல்லுடி... குழந்தையை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கே?"

“அய்யோ சாரே! நான் அப்படிப்பட்டவள் இல்லீங்க சாரே. நெசமா சாரே, சத்தியமா சாரே”

"இன்னிக்கிக் காலையிலே சப்-இன்ஸ்பெக்டர் கிட்ட குழந்தையை திருடி ஏதோ ஒரு கிராமத்துல வைச்சிருக்கிறதாய் சொல்லியிருக்கே.”

"சொன்னது நிசந்தான் சாரே! அடி பொறுக்க முடியாம அப்படிச் சொன்னேன் சாரே... மொகத்துல விழுந்த குத்துகள தடுக்கிறதுக்கு அப்படிப் பொய் சொன்னேன் சாரே. நான் பொறுக்கிதான்; இல்லங்கல. ஆனால் கொழுந்தையை திருடுகிற அளவுக்கு நான் மோசமானவள் இல்ல சாரே! சத்தியமாச் சொல்றேன் சாரே. பெரிய பெரிய திருட்டெல்லாம் செய்யறவள் இல்லே சாரே!'

“அப்போ... குழுந்தைய கொன்னுட்டே... அப்படித்தானே?"

"நானே தாயில்லாமல் வளர்ந்தவள் சாரே... ஒரு குழந்தையோட கஷ்டம் நஷ்டம் தெரிஞ்சவள் சாரே... நான் அப்படிச் செய்யறவ இல்ல சாரே!”

"சரி, உன்ன விசாரிக்கிற விதமா விசாரித்தாத்தான் சொல்லுவே. ஆனால் ஒண்ணு, இந்தத் தடவை நீ தப்பிக்கவே முடியாது. சாராயத்துக்கு ஒரு வருஷம்; எல்லாத்துக்கும் மேல குழந்தையை கடத்தினதுக்கு அல்லது கொன்னதுக்கு ஆயுள் தண்டனைன்னு உனக்கு வாங்கிக் கொடுக்கிறோமா இல்லையான்னு பாரு! அவள இழுத்துக்கிட்டுப் போய்யா.”

சரோசா, இப்போது இளங்கோவை விட்டுவிட்டு முகத்தை உப்ப வைத்துக் கொண்டு காலாட்டியபடியே அலட்சியமாக இருந்த ரமணனைப் பார்த்துக் கும்பிட்டாள். பெருமூச்சு, நெடுமூச்சாய் விட்டு அழுகின்ற வாயை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் இளங்கோவைப் பார்த்தாள். தட்டுத்தடுமாறி கைகளை தலைக்குமேல் கொண்டு போய் அரற்றினாள் :

''சாரே... சாரே! இரும்பு வலையை பிய்ச்சது தப்புத்தான், ஒன்னோட ஆத்தாவ அடிச்சதும் தப்புத்தான்... உன்னை டபாய்ச்சதும் தப்புத்தான். ஆனால் அத்தனையும் தாத்தாவுக்கு ஒரு பன்னுக்காகவும், ஒரு டீக்காகவும் தான். எனக்குத் தேங்காய் பறிக்கத் தெரியும். ஆனால் தங்கத்தப் பறிக்கத் தெரியாது. நான் போயிட்டா என் தாத்தா ஒரேயடியா பூடுவாரய்யா. ஒனக்குக் கோடிப் புண்ணியம் சாரே. இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட சொல்லு சாரே. வேணுமுன்னா இந்த ஏரியாவவிட்டே ஓடிடுறேன் சாரே..."

"ஒன்ன ஓட்டத்தான் போறோம். வேலூருக்கோ, சென்ட்ரல் ஜெயிலுக்கோ அனுப்பத்தான் போறோம். ஏய்யா அவள பேசவைச்சி வேடிக்கைப் பார்க்கிறீங்க! அவள் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிற விதமா வரவழைங்க!”

கான்ஸ்டபிள்கள், அவளைத் தள்ளப் போனார்கள். அதற்குள் அவள் நடந்தாள். இளங்கோவை வெறுமையோடு ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு இன்னொரு கும்பிடு போட்டபடியே மெல்ல மெல்ல நடந்து, அவர்கள் கண்ணிலிருந்து மறைந்தாள்.

இளங்கோவிற்கு என்னவோ போலிருந்தது. அவளின் ஒவ்வொரு கும்பிடும், அவன் இதயத்தை ஈட்டி போல் குத்தியது. அவளின் ஒவ்வொரு விசும்பலும் அவன் நெஞ்சைக் கசக்கியது. ஏதோ ஒன்று அருவமோ, உருவமோ... ஆணோ, பெண்ணோ, அலியோ... அது அவன் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு உச்சந்தலையை முட்டி அங்குமிங்குமாக தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்து அறையிலோ அல்லது அதற்கு அடுத்த அறையிலோ, “ஐயோ... என்னால தாங்க முடியல, என்ன உதைக்காதீங்க, நாயினா! நாயினா!” என்ற அவலச்சத்தம், அவன் காதுகளைக் குத்தியது.

ரமணனும், இளங்கோவும் இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வழியனுப்ப, கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வாசல்வரை வந்து நிற்க வெளியே வந்தார்கள். ரமணன், மாருதி காரில் ஏறிக்கொண்டு "அப்போ நீ வீட்டுக்குப் போ. எல்லார்கிட்டயும் இந்த சந்தோஷச் செய்தியை சொல்லு" என்று சொல்லிவிட்டு காரை சத்தம் போட வைத்தார். அப்போது

ஒரு முதியவர் - சரோசா ஊட்டி விட்டாளே அந்த மெல்லிய மனிதர் - மூன்று லுங்கிக்காரர்களுக்கு மத்தியில் இருவர்மேல் தோள் போட்டு, ஒருவன் மார்பில் முதுகைப் போட்டு அங்குலம் அங்குலமாய் அந்த காவல் நிலைய வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அவரது பொட்டைக் கண்களில் நீர் கசிந்தது. கூடவே ஈக்களும் மொய்த்தன. அடிக்கடி அந்த ஈக்களை கையாட்டி விரட்டும் அந்த மனிதர் இப்போது அந்த சொரணையே இல்லாமல் “சரோ... சரோ...” என்று முனகிக் கொண்டே நத்தை மாதிரி நகர்ந்து கொண்டிருந்தார்.

இளங்கோவிற்கு, கண்கள் அக்கினிக்கட்டிகளாய்ச் சுட்டன. நாடி நரம்புகள் தெறித்தன. உடம்பு ரத்தம் முழுவதும் வேர்வையாய் வெளியே வந்து கொண்டிருப்பது போல் இருந்தது. ரமணன், காரை நகர்த்தப் போனபோது, அவர் அருகே போனான். மெள்ளக் கேட்டான்:

"இதோட விட்டுடலாம்னு நினைக்கிறேன் அங்கிள். அவளைப் பார்க்கப் பாவமா இருக்கு ஒழிஞ்சு போறாள். அவள விட்டுடச் சொல்லலாம்."

"என்னப்பா... இளங்கோ உனக்கென்ன பைத்தியமா? அப்புறம் நாம் என்ன சொன்னாலும் போலீஸ் கேப்பாங்களா? - என்னோட பிரிஸ்டீஜ் என்னாகிறது? அதோட நீ அவளை கற்பழிக்க முயற்சி செய்துட்டு அது வெளியில தெரியக் கூடாதுன்னு புகாரை வாபஸ் வாங்குறேன்னு போலீஸ் பிளேட்ட திருப்பினால், என்ன செய்வே...? ஓகே... ஓகே... டி.வி.யில போய் ஒலியும் ஒளியும் பாரு. மனசு சரியாயிடும்."

இளங்கோ பிரமை பிடித்து நின்றான். ரமணன் சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகப் பட்டது. அதே சமயம் அவளை அநத் நிலையில் காண்பதும் அநியாயமாகப் பட்டது.

இந்தக் குழப்பம் போதாதென்று கான்ஸ்டபிள் திருமலையப்பன் எங்கிருந்தோ வந்தது போல் அவன் அருகில் வந்து கத்தினார்:

"நீ சரியான பிராடுய்யா! இப்ப நான் ஒன்ன அரஸ்ட் செய்யப் போறேன்; எந்த டெப்டி கமிஷனர் வந்து தடுக்கிறார்னு பார்க்கிறேன். ஒனக்கு இன்புளுயன்ஸ் இருக்கிற திமுறு... ஏய்யா! பெரிய வீட்டுப் பையா! நேற்று என்ன சொன்னே? ஆட்டோ டிரைவர் கிட்டே பணம் கொடுத்துறதாய் சொல்லிவிட்டு, சொன்னபடி கொடுத்தியா? ஆட்டோ ஸ்டாண்டுல நின்ன அந்த டிரைவர நான் கேட்டப்போ, நீ அவனை இந்த ஸ்டேஷனுக்கு வெளியேயே விட்டுட்டு தலைமறைவா போயிட்டதா சொல்றான்?"

இளங்கோ, தன்னை ஒரு தடவை ஆட்டிக்கொண்டான். அப்போதுதான், அவனுக்கு உறுத்தியது, செய்த தவறை எப்படி உற்றாரிடம் சொன்னால், அவர்கள் திட்டி விட்டு விடுகிறார்களோ, அப்படி அந்தப் போலீஸ்காரரை ஒரு உறவினராக நினைத்து, அவரைப் பார்த்துச் சங்கடமாய் சிரித்தான். உடனே திருமலையப்பனுக்குக் கோபம் வந்தது. காக்கிச்சட்டை போனாலும் பரவாயில்லை, அவனையும் கழட்டிவிடுவது என்று தீர்மானித்தார். இதைப் புரியாமல் இளங்கோ, அவர்கைகளைப் பிடித்துக் கொண்டே பதில் அளித்தான்:

"நான் அறிவுகெட்ட முட்டாள் சார். நேற்று நடந்த அமர்க்களத்தில் ஆட்டோக்காரரை மறந்திட்டேன். மன்னிச்சிடுங்க சார்..."சாரி."

"இந்த ‘சாரி, மன்னிச்சிடுங்க' என்கிற வார்த்தைகளை வச்சே நாட்டிலே எல்லோருடைய பிழைப்பும் ஓடுதுய்யா. கொலைகாரனும் இதைத்தான் சொல்றான். அரசியல்வாதியும் அதையே சொல்றான். உன்னோட மன்னிப்பிலே என்னோட இழந்த மானம் திரும்பி வருமா? டிரைவர் கிட்டே, நானாத்தான் வம்பை விலைக்கு வாங்குனேன். உடனே அவன் உன்னோட மோசடியச் சொல்றான். பக்கத்தில இன்னொரு ஆட்டோ டிரைவர், என்ன சொல்றான் தெரியுமா? 'போலீஸ்ல அவனவன், ஆட்டோ வாடகையிலே கொஞ்சத்த மாமூலா வாங்குவான்; இவரோ வாடகையிலே கொஞ்சத்தையும் விடாமே மாமூலாய் வாங்குற டைப்புன்னு' கத்தறான். என்னால எதுவும் செய்ய முடியல. காரணம், அவங்க பக்கம் நியாயம் இருக்கு. இப்படி தைரியமாப் பேசறதுக்கு அவங்களுக்கு யூனியன் இருக்கு. எனக்கு என்னய்யா இருக்குது?"

போலீஸ்காரர்களும் குழந்தையாகலாம் என்பதுபோல், கைது செய்யப்பட வேண்டிய ஒருவன் முன்னாலேயே கைதாகி நிற்பது போல் நின்ற திருமலையப்பனைப் பார்த்து இளங்கோ திகைத்தான். அவருக்கு ஆறுதல் சொல்வது போலவும், தனக்குத் தானே தேறுதல் சொல்வது போலவும் பேசினான்:

"சார், நீங்க என்னை என்ன செய்தாலும் தகும் சார்; ஆனால் நான் வேணுமுன்னு அப்படிச் செய்யல சார். உண்மையைச் சொல்லப் போனால், இப்போதான் அந்த ஆட்டோவே ஞாபகத்துக்கு வருது. நீங்க கைது செய்தாலும் ஒரு உண்மையான குற்றவாளியைத்தான் கைது செய்யப் போறீங்க. போலீஸ்காரங்க லாக்கப்புல என்னை ஜட்டியோட நிறுத்துமுன்னாலே இந்த சட்டைக்குள்ள இருக்கிறதை தந்துடறேன் சார். இந்தாங்க சார், நூறு ரூபாய். அந்த ஆட்டோ டிரைவர்கிட்டே நீங்களே கொடுத்துடுங்க சார்."

"யோவ், யோவ், கையை சுருக்குய்யா. உன்கிட்டே நான் ஏதோ ‘சம்திங்' வாங்குறதாய் எங்க ஆட்களே நினைப்பாங்க. சாயங்காலமாய் அதோ அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வா. நானும் 'பீட்டுக்கு' போயிட்டு வந்துடறேன். என் முன்னாலே நீ அவர்கிட்ட பணத்தைக் கொடுக்கணும்."

"நானே இப்படி நடந்துக்கிட்டது எனக்கு ஆச்சரியமாய் இருக்குது சார். பாவம், நான் கொடுக்கிற பணத்திலேயே வீட்டோட மத்தியான ஸ்டவ்வ எரிய வைக்க நினைச்சிருப்பார் அந்த ஆட்டோ டிரைவர். என்னைப் பற்றி நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குது. ஆனாலும் நீங்க நினைக்கிறது மாதிரி நான் பிராடு இல்லை சார். எவ்வளவு அவமானமா பீல் பண்ணுறேன் தெரியுமா?"

“நான் விளக்கம் சொல்றேன் கேள். நேற்று உன் தலையிலே ஏற்றப்பட்ட சுமையிலே, உனக்கு ஆட்டோக்காரன் பாரம் தெரியல. இப்படித்தான் அந்த சரோசாவும்; அவளுக்கு இருக்கிற பிரச்சினையிலே அவள் மற்றவங்களுக்குக் கொடுக்கிற பிரச்சினைகளை நினைத்துப் பார்க்கல. அவளை மாதிரி ஆட்களுக்கு திரும்பிப் பார்க்க கடந்த காலம் இல்ல. ஏறிட்டுப் பார்க்க எதிர்காலம் இல்ல. நிற்பதற்கு நிகழ்காலமும் இல்ல. முக்காலமும் இல்லாத அஞ்ஞானிப் பொண்ணு. எப்படி கோழியை அடித்துச் சாப்பிடுவதை நாம் இயல்பாய் நினைக்கிறோமோ, அப்படி அவளும், திருடுறதை, தப்பாய் நினைக்கல. அது தப்பு என்கிற உணர்வே இல்லாதவள். இவள மாதிரி ஆட்களுக்கு மனசுன்னு எதுவும் கிடையாது. அது, பிறந்தபோதே வயிற்றுக்குள் போயிடும். இவளோட நிலைமைய யோசிச்சுப் பார். ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கிற நினைப்பில்லாத உன் பின்னணியிலே அவளுக்காகவும் யோசிச்சுப்பார்; நமக்காவது யோசிக்க நேரமிருக்கு; அவளுக்கு அதுக்கு நேரமும் இல்ல, வேளையும் வரல. அவளை மாதிரி ஆளுங்க யோசிக்க ஆரம்பிச்சா, அப்புறம் நாம் இந்த சமுதாய அமைப்பைப் பற்றி பயப்பிராந்தியோட யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

இளங்கோ, யோசிப்பது போல் முகத்தைத் தூக்கினான். அவன் முன்னால் சரோசாவின் உப்பிப்போன முகம் உரசியது. அவள் ரத்தத் துளிகள் அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் இருந்தது. மாடியை அண்ணாந்து பார்த்து, அவள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய இடத்தையே பார்த்தான். பிறகு திருமலையப்பனைப் பார்த்து கைகளைப் பின்னிப் பின்னி எடுத்தான். அவரும் பேச்சால் பின்னினார்:

“நானும் இந்த சரோசாவைப் பற்றி விசாரித்தேன். சாராயக்காரிதான்; சின்னத் திருடி. அப்பனுக்காகத் திருடுறாளே தவிர, நடுத்தர வர்க்கத்தில், ஆபீஸர் அப்பன்களையே அரசாங்கத்தைத் திருட வைக்கிறாங்களே, அப்படி இல்ல. உள்ளே இருக்க வேண்டியவள் தான்; ஆனால், அதுவும் ஒரு வாரம், இரண்டு வாரத்திற்குத்தான். நிச்சயம் அவள் குழந்தையைத் திருடியிருக்க மாட்டாள். அந்தத் தகுதி இன்னும் அவளுக்கு வரல. ஆனால், இப்போவே அவள் மேலே குழந்தையைக் கொன்றதாய் குற்றஞ்சாட்டப் போறாங்க. இந்த நாட்டில் ஒரு ஏழைக்கு குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. பிறத்தியார் செய்த குற்றங்களையும் இவள் தலையில போடுவாங்க. கண்டுபிடிக்க முடியாத குற்றத்திற்கு இவள் காரணமாயிடுவாள். கடைசியில் அவளுக்கு ஆயுள் தண்டனைதான் கிடைக்கப் போகுது. ஒரு சின்னக்குற்றம் செய்து விட்டால் அப்புறம், செய்யாத பெரிய குற்றங்களுக்கு பொறுப்பு வகிக்கணும்; இது தான் இன்றைய நிலைமை.”

“நான் என்ன சார் செய்யணும்? நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் சார்.'"

"எப்படியாவது, அவளைக் காப்பாற்றப் பாரு. அவளுக்காக இல்லாட்டியும் அவள் அப்பாவுக்காகக் கொஞ்சம் விட்டுக் கொடு. எந்த செல்வாக்கைக் கொண்டு வந்தாயோ, அது மூலமே அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடு. இப்பவே... இன்ஸ்பெக்டர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லாம, நீயே கேட்கிற மாதிரி கேளு.''

அடிகொடுத்த சரோசாவை, அடிபட்ட சரோசாவாகப் பார்த்த வேளையிலே இருந்து, இளங்கோ மனமும் அடிபட்டு வீங்கியது. குழந்தையை, அவள் கடத்தியிருப்பாள் என்று அவனும் நம்பவில்லை. மனம் வலிப்பு வந்தது போல் இழுத்தது. நெஞ்சுக்குள்ளே ஒன்றும், கண்ணுக்குள்ளே ஒன்றும், எதிர் எதிராய் இழுத்துக் கொண்டன. திருமலையப்பன் கொடுத்த உந்தலில், அவன் இன்ஸ்பெக்டர் இருந்த மாடிக்கப் படி ஏறினான். அந்த இன்ஸ்பெக்டர் முன்னால் போய் நின்றான்.

இன்ஸ்பெக்டர், ஒரு மைக்கில் எள்ளும் கொள்ளுமாய் பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த மைக் அலறியபோது, அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். பிறகு, "நன் இன்ஸ்பெக்டர் இல்லேய்யா; இந்த ஏசியும், டிசியும் இருக்கிற வரைக்கும், நான் குளோரிபைடு கான்ஸ்டபிள்தான்"

என்று கிரைம் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னார். அந்த கிரைமோ, அப்படியானால் அந்த இன்ஸ்பெக்டர், தனக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் போல் தலையை ஆட்டினார்.

இளங்கோ லேசாய் இருமினான்; இன்ஸ்பெக்டர் கேட்டார்: "என்னப்பா வேணும்?"

"நான் டெபுடி கமிஷனருக்கு வேண்டிய அங்கிளோட அப்போ வந்தேனே... சரோசாவை விட்டுடுங்க சார்."

“ஏய்யா, டெபுடி கமிஷனருக்குத்தான் நான் சல்யூட் அடிக்கணும்... உனக்கும் அடிக்கணுமா? என்னய்யா நீ... பரமசிவம் கழுத்துப் பாம்பு மாதிரி ஆடுறியா? அவளுக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. டெபுடி கமிஷனர் கிட்டே நானே பேசுறேன். சரி இப்போ மரியாதையா வீடு போயிச்சேரு. சரோசாவை எப்படி டீல் பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும்."

இளங்கோ, இன்ஸ்பெக்டரை மருவி மருவிப் பார்த்துவிட்டு, நடந்து வெளியே வந்தான். வலது பக்கம் ஒரு முனகல் சத்தம் கேட்டது. சரோசாதான். 'நாயினா, நாயினா' என்ற குரல்; 'டமால், டமால்' என்ற சத்தம். 'அடிக்காதீங்க, அடிக்காதீங்க' என்ற அலறல். "கொயந்த இருக்கற இடத்தைக் காட்டுறேன். காட்டுறேன்' என்ற கூப்பாடு. “அய்யோ, என் வயிறு போச்சே" என்ற வார்த்தை, அப்புறம் நெடிய மௌனம். மூச்சு முட்டியதோ, மூச்சு அடங்கிப் போனாளோ? இளங்கோ, அந்த ஓலமிட்ட உள்ளறைக்குள் போகப்போவது போல் நடந்தான். இதற்குள் இன்ஸ்பெக்டரின் திட்டுக்களை அவன் வாங்கியபோது, பார்த்துக் கொண்டு நின்ற ஒரு போலீஸ்காரர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள வந்தார். இளங்கோ, கீழே ஓடினான். இதனால் அவர் கெட்ட வார்த்தையில் அவன் அம்மாவை அர்ச்சித்தது அவனுக்குக் கேட்கவில்லை.

இளங்கோ, காவல்நிலைய வளாகத்திற்குவெளியே வந்தான். கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றினான். பிறகு, வீட்டுக்கு வந்தான். வாசலிலேயே, தாய்க்காரி வரவேற்றாள். அவனை பிரமிப்போடு பார்த்தபடி ஒரு சேதி சொன்னாள் :

"பாமாவோட அப்பா, ரமணன் சார், இப்போதான் டெலிபோன் செய்தார். இன்னக்கி, அசோசியேசன் கூட்டம் சாயங்காலம் நடக்கப் போகுதாம். சரோசாவுக்கும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு உறவு இருக்கிறதால, அவள் குழந்தையைக் கொன்ன குற்றத்தை கமிஷனர் ஆபீஸ் கிரைம் பிராஞ்ச் விசாரிக்கணுமுன்னு தீர்மானம் போடப் போறாங்களாம். ஏண்டா, நல்லா உதச்சிருப்பாங்களே? ரத்தம் வரும்படியா அடிச்சாங்களாமே? இப்பதான் என் மனசு நிம்மதியாச்சு. அவளுக்கு, கூடுனது தூக்குத் தண்டனை, குறைஞ்சது ஆயுள் தண்டனை... இரண்டிலே ஒண்ணு கிடைக்காமல் போகாது. ரமணன் சார் சொல்லிட்டாரு... எங்கேடா போறே?"
---------------

அத்தியாயம் 9

மிஸ்டர் ரமணன் வீட்டு மொட்டை மாடி பொங்கி வழிந்தது. வீட்டிற்குக் கீழே, புல்வெளி இல்லாத தரைவெளியில் மாருதிகளும், அம்பாஸிடர்களும், இடைஇடையே ஸ்கூட்டர்களும் அங்கே தரையே இல்லாதது போல் வியாபித்து நின்றன. இடம் போதாமல் சாலையில் கூட ஒரே வாகனக் குவியல், பாமா, சமையல் அறையில் கேசரி கிண்டிக் கொண்டிருக்கும் சமையல்காரர்களை கண்களால் கிளறிவிட்டுக் கொண்டே, மாடிக்கும், மனைக்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவள் அப்படிச் செயல்படுவதைப் பார்த்துவிட்டு மனதுக்குள்ளும், வெளிப்படையாகவும் பாராட்டினார்கள ஆனால், அவளோ சமையல் அறைக்குள் வரும் சாக்கில் அங்கிருந்த ஜன்னல் வழியாக இளங்கோ அகப்படுகிறானா என்று பார்த்தாள். மொட்டை மாடிக்குப் போய் அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்து, வாய் குசலம் விசாரித்தாலும், கண்கள் இளங்கோவைத் தேடின. காதல் கண்மூடித்தனமானது என்பதைக் காட்டுவது போல், அவன் மேலே இருப்பான் என்பது போல் ஆகாயத்தைக்கூடப் பார்த்தாள்.

ரமணன் வீட்டு மொட்டை மாடி அலங்காரம் செய்யப் பட்டது போல் தோன்றியது. சபாரி போட்டவர்கள், தலைக்கு டை அடித்து, காதோரம் நரைமுடி காட்டி, 'சுயமுடி' வெளிப்பட நின்றவர்கள், அறுபது வயது ‘டீசட்'டைகள், பட்டுப் புடவைகள், சல்வார் கம்சுகள், பாவாடைத் தாவணிகள்...

த.வ.ந.ச. வின் கூட்டம் - அதாவது தமிழ்த்தாய் நகர் வசிப்போர் நல்வாழ்வு சங்கத்தின் அவசரக் கூட்டம் அங்கே நடக்கப் போகிறது.

இப்போது இந்த தமிழ்த்தாய் நகர், சென்னை பெருநகர் சீமாட்டிக்கு மையிட்ட கண்ணாய் விளங்குகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், கெஜடட் ஆபீஸர்களாலும், பாரின் ரிட்டன்களாலும் பளபளக்கிறது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி, நகைநட்டுப் போடாத ஒரு நாட்டுப்புறப் பெண்ணாகவே இருந்தது. அப்போது பிழைக்கத் தெரிந்த ஒரு பெட்டிக் கடை மலையாளி, ரெவின்யூ இன்ஸ்பெக்டரை மாமூலாக்கி, இருபது கிரௌண்ட் புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டார். மற்றவர்களையும் அப்படிப் போட வைத்தார்.பிளாட் போட இடம் கிடைக்காத ஒரு ஆசாமி கொடுத்த மனுவின் அடிப்படையில், அரசாங்கம், இந்த பிளாட்டுகளை முடக்கப் போனது. ஆனால், பிளாட்காரர்களோ, அந்த பிளாட்டுகளை, எந்த அதிகாரிகளை மடக்கிப் போட வேண்டுமோ, அவர்களுக்கே பாதியை, மலிவு விலை மது விலையில் கொடுத்துவிட்டார்கள். இதனால், பொது மக்களைத் தவிர எல்லோருக்கும் லாபம். மடக்கிப் போட்டவர்களுக்கு கிரௌண்டுக்கு மூன்று லட்சம் என்றால், முடக்கப் போனவர்களுக்கும் மூன்று லட்சம். ஆகையால் இந்தப் பகுதியை 'வேலியே பயிரை மேய்ந்த நகர்' என்று சொல்லலாம். இங்கே துவக்கத்தில் குடியிருக்க வந்தவர்கள், அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்பதற்காக, ஒரு சங்கத்தை வைத்தார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், வேலை வெட்டி இல்லாத மிஸ்டர் ரமணன், தன்னைத் தானே தலைவராகப் பிரகடனப் படுத்த முடிந்ததது. அடிப்படை வசதிகள் கிடைத்ததும், ரமணனும், அந்தச் சங்கத்தின் லெட்டர் பேடுமே மிஞ்சின. ரமணன் மட்டுமே சந்தா கட்டுகிறார்.

ஆனால், இன்றைக்குப் பார்த்து ரமணனுக்கு மௌக வந்துவிட்டது. 'திடீர் நகர்' மாதிரி, அவரும் திடீர் பிரமுகர் ஆகிவிட்டார். காவல் நிலையத்தில் சரோசாவுக்கு அடிவாங்கிக் கொடுத்து விட்டு, அலுவலகம் போனதும், தமிழ்த்தாய் நகர் மாமிகள் ஒவ்வொருவருக்கும் டெலிபோன் செய்தார். கொலைகாரியான சரோசாவை, போலீசார், விரைவில் விடுதலை செய்துவிடுவார்கள் என்றும், அப்படி அவள் வெளியே வந்தால், ஒவ்வொருத்தியின் குழந்தையும் கடத்தப்படும் என்றும் எச்சரித்தார். "ஒங்க பையன் ரகு, நாளைக்கு உயிரோடு இருப்பான் என்கிறது நிச்சயமில்லை” என்று ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டுக் குழந்தையின் பெயரைச் சொல்லி அபாயம் சொன்னார். இந்த நிலைமையைத் தடுக்க வேண்டும் என்றால், த.வ.ந.ச. வின் அவசரக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்தோடு ஒரு மனு போலீஸ் கமிஷனருக்குப் போகவேண்டும் என்றார். உடனே, தாய்மார்களும், அலுவலகங்களில் இருந்த தத்தம் கணவர்களைப் பயப்படுத்தியும், பயமுறுத்தியும், அவசரக் கூட்டத்திற்கு இணங்க வைத்தார்கள்.

கூட்டம் ஆரம்பமாகப் போனது. அப்போது ஒருத்தர், ஒரு கேள்வியைக் கேட்டார்:

"என் வீட்டுலேயும், இன்னொருத்தர் வீட்டுலேயும் ஜன்னலுக்கு மேலே கொக்கி வச்ச கம்புங்க சாத்தப்பட்டு இருக்கு... காரணம் தெரியுமா?"

“ஆபீஸ்லே தான் குழப்படி செய்யுறீங்க; இங்கேயுமா? சஸ்பென்ஸ் எதுக்கு?"

"சொல்றேன் சார். முன்னால திருட்டுப் பசங்க வந்து ஏதாவது ஒரு கம்ப எடுத்து ஜன்னலுக்குள்ளே விட்டு, துணிமணிகளை எடுத்துட்டுப் போவாங்க. இதைப் பக்கத்து வீட்டுக்காரங்க கண்டுக்கலை... இதனாலே, இப்ப திருடங்க எந்தச் சமயத்திலே வேணுமுன்னாலும், திருடறதுக்கு வசதியாய், ஜன்னலுக்கு மேலே கம்பயே சாத்திட்டுப் போறாங்க. என்னய்யா நகர்... அதுவும் தமிழ்த்தாய் நகரு?'

கம்புக்காரர், கூட்டத்திடம் பதிலை எதிர்பார்த்தபோது, ஒரு ஆடிட்டர் - வம்புக்காரர் - ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

"சங்கம் ஆரம்பிச்சு, பதினைந்து வருஷமாச்சு; ஆனால் தலைவர் ரமணன் கணக்குக் காட்டல."

ரமணன் பொங்கி எழுந்தார்: "நான் ராஜினாமா செய்யப் போறேன்; என்னோட தியாகம் வீணாயிட்டு."

"கூடாது. ஒங்களையும், த.வ.ந.சவையும் யாராலும் பிரிக்க முடியாது. ராஜினாமா செய்யப்படாது. நம்முடைய அரசியல் பாரம்பரியம் மாதிரி, சாகிற வரைக்கும் நீங்கதான் தலைவர்.”

"அப்போ, சங்கம்தான் முதலில் சாகும்."

"நீங்க படிச்சவங்ளா... ஆபீஸருங்களா? உங்களுக்கும், சினிமா தியேட்டர்லே விசில் அடிக்கிறவங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?"

கடையில் சொன்னவர், வேறு உறுப்பினராக இருந்திருந்தால், அவரை உப்பு வைத்து ஊறவைத்திருப்பார்கள். ஆனால், சொன்னவர், போலீஸ் விஜிலென்ஸ் ஆபீஸர்; அதிகாரிகளின் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பூதக் கண்ணாடி. அவரைப் பூதமாக நினைத்து எல்லோரும் வாயை மூடிக்கொண்ட போதும், அவர் அதட்டினார்:

"மிஸ்டர் ரமணன்! தீர்மானத்தைப் படியுங்க.”

உயிரோடு சமாதி கட்டப்பட்டது போல், தலைவர் நாற்காலியில் உட்கார வைத்துக் கொண்டே, தனது பதவியைப் பறித்த அந்த விஜிலென்ஸ் அதிகாரியை வேண்டா வெறுப்பாய் பார்த்துக் கொண்டே, ரமணன் தீர்மான நகலைப் படித்தார். தமிழ்த்தாய் நகரில், கொலைக் குற்றம் உட்பட பல குற்றங்கள் நடப்பதாகவும், அதற்கு அந்த ஏரியா போலீஸ் உடன்போகிறது என்றும், ஆகையால், சரோசா நடத்திய கொலையை போலீஸ் கமிஷனரின் கிரைம் பிராஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வற்புறுத்தியது. அதுவரைக்கும் சரோசாவை ஜாமீனில் வெளிவர முடியாத குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் போட வேண்டும் என்றும் தீர்மானம் வற்புறுத்தியது. எல்லோரும் கைதட்டினார்கள்.

அந்தச் சமயத்தில், இளங்கோவையும், சுப்பையாவையும் 'தள்ளிக் கொண்டு' பாக்கியம் வந்தாள்.

சுப்பையாவை கூட்டிக்கொண்டு வந்தது பாக்கியத்துக்கு ரோதனையாய் போயிற்று. சுப்பையா கர்ஜித்தார்:

"பெரிசாய் தீர்மானம் போட்டுட்டிங்க. அந்த ரவுடிப் பொண்ணு உள்ளே போயிட்டா, என் பையன் வெளியிலே இருக்க முடியுமா? அப்புறம், நான் பிள்ளைக்கு எங்கேய்யா போவேன்? இவனுக்கு பூனைப்படை பாதுகாப்புக் கொடுத்தாலும், சேரி ரவுடிங்க இவனை விட்டு வைப்பாங்களா? வேணுமுன்னா பாருங்க... இங்கே வந்த சோடா பாட்டில் அடிக்கப் போறாங்க. உங்க கண்ணுலே அது விழுந்து ஆஸ்பத்திரியிலே இருக்கப் போறீங்க. என் வாக்குத் தப்பாது."

பாக்கியம்கூட பயந்து போய், கணவனைப் பயமுறுத்துவதை விட்டு விட்டாள். எல்லோரும் அப்போதே கண்ணுக்குள் சோடா பாட்டில் விழுந்த மாதிரி கண்களை மூடிக்கொண்டார்கள். சில பெண்கள் தத்தம் கணவன்மார்களை வீட்டிற்குக் கூப்பிட்டார்கள். இந்த நடுத்தர வர்க்கம் இப்படி அல்லாடிக் கொண்டிருந்தபோது...

பூக்காரி ருக்குமணி மேலே வந்தாள். கையிலே ஒரு வட்டக்கூடை. அதற்குள் பல்வேறு வகைப் பூக்கள், பாம்புகள் மாதிரி சுருண்டு கிடந்தன. கையில் கனகாம்பரப் பூச்சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொருத்திக்கும் பூ அளந்தபடியே வாய் அளந்தாள். முப்பது வயதுக்காரி. முழுசான அழகு.

"போங்கம்மா... ஆட்டோக்காரனுக்குப் பயந்து அஞ்சு ரூபாய் அதிகமா கொடுப்பீங்க; ஆனால் பூக்காரிக்கிட்ட போய், அஞ்சு பைசாவுக்கு பேரம் பேசுவீங்க.”

ருக்குமணி, அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ஒரு பாவாடை, தாவணியிடம் விளக்கம் கேட்டாள். அவள் சொன்னதை உள் வாங்கிக் கொண்டு, அந்தக் கூட்டத்தை வாக்காளர்களாக நினைத்து, வாதிட்டாள்:

"ஏன் சாரே... தெரியாமத்தான் கேக்கேன்... என் கொழந்த, நான் பெத்த ஒரே கஸ்மாலம் காணாமப் பூட்டான்னு சொன்னேன். காது கொடுத்துக் கேட்டீங்களா? நானும் இந்த ஏரியாக்காரிதானே? என் பிள்ளாண்டானுக்கு இப்படி ஒரு கூட்டம் போட்டீங்களா? ஏதோ பிசாத்து இரும்பும், பன்னாட கம்பியும், என் கொயந்தைய விட உங்களுக்குப் பெரிசாப் போச்சா? அதோ, பெரிசா பேசுறாங்களே பாக்கியம் அம்மா, அவங்ககிட்டே கொயந்தய காணலேன்னு அழுதேன்.என் வீட்டில ஒப்பாரி வைக்காதேன்னாங்க. அதோ தலவரு, ரமணன் சாரு, அவர்கிட்டே பஸ் ஸ்டாண்டுலே வச்சு சொன்னேன். அவர் என்னடான்னா... 'பஸ் வருது, அப்புறம் பேசிக்கலாமுன்னார். இப்படி நாறிப்போன உங்க ஏரியாவை இன்னும் பூவாலேயே மணக்க வைக்கேன்."

விஜிலென்ஸ் ஆபீசர், ரமணனின் காதைக் கடித்தார். அவளை வைத்து, போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதச் செய்ய வேண்டும் என்றார். சரோசா தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவள் என்றும், அவள்தான், குழந்தையை கடத்தியிருக்க வேண்டும் என்றும் எழுதி, கையெழுத்துப் போடச்சொல்ல வேண்டும் என்றார். இந்த விஜிலென்ஸ் ஆபீஸர், சங்கத்தின் தலைமைப் பதவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, ரமணன் எழுந்தார். ருக்குமணியை நெருங்கினார். அவள் கோபத்தோடு நின்றபோது, அவள் கையை பட்டும் படாமலும் பிடித்துக் கொண்டே ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தார். அவள், அங்குமிங்குமாய் தலையை ஆட்டி, கத்தப்போன போது, ரமணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, படி இறங்கினார்.

இளங்கோவிற்கு ஏதோ ஒன்று பட்டது. தற்செயலாய் எழுவது போல் எழுந்து சுவர் பக்கம் போய், கீழே எட்டிப் பார்த்தான். அங்கே, மிஸ்டர் ரமணன், அவளுக்கு ஒரு தட்டில் கேசரியை நீட்டிக் கொண்டே காதுக்குள் கிசுகிசுத்தார். அவளோ அந்தத் தட்டை வாங்கித் தரையில் வைத்து விட்டுக் கத்தப் போனாள். பிறகு, அவரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். பூப்போல நடப்பவள் பூகம்பமாய் நடந்து கொண்டிருந்தாள்.
--------------

அத்தியாயம் 10

இளங்கோ, அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகி விட்டது என்பது, அவனைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஏரியாப் பெண்களுக்குத் தெரிந்ததே தவிர, அவனுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 'சின்னதுகள், ‘சிறிசுகளிடம்’ சரோசா என்ற ரவுடிப் பெண்ணிடம், அவன் எப்படி அடிபட்டான் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கதாநாயகனுக்கு எதிர்மாறானவன் போலவும் பார்த்தார்கள்.

இளங்கோவோ, அந்த நீண்ட நெடிய தெருவில், இரு முனைகளையும் மாறி மாறிப் பார்த்தான். பூக்காரி ருக்குமணியைக் காணவில்லை. இந்தக் கோயிலுக்கு ஒரு ஓரமாய் உட்கார்ந்தும், நின்றும் கொண்டே, பூ வாங்காதவர்களையும், அவள் வாங்க வைப்பதைப் பார்த்திருக்கிறான். பத்து பைசா உண்டி யலில் போட்டுவிட்டுப் போகிறவர்களையும், “ஏன் சாமி, இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தியாமே” என்று அந்த வார்த்தையை சங்கடப்பட்டு உச்சரித்துச் சொல்வாள். அவள் பேச்சு காதில் விழாத அளவுக்கு பிள்ளையாரிடம் பரவசத்தோடு ஐக்கியப் பட்டவர்கள் போல், 'பாவலா' செய்பவர்களைப் பார்த்து, "ஏன் சாமி, நான் கையிலதான் பூ வைச்சிருக்கேன், காதுல இல்லை. இந்த பிள்ளையார் பத்துப் பைசா தானா பெறும்” என்பாள். அதனால், இவள் இருப்பதனாலேயே பல பக்தகோடிகள் வருவதில்லை. இன்னும் சிலர் பிள்ளையாரை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள். அவளைப் பார்த்தும் ‘பகுத்தறிவாதிகள்' போல் பிள்ளையாரை ஏறிட்டுப் பாராமலேயே எதிர்த் திசையைப் பார்த்தபடி போவார்கள்.

இதற்கு மேலேயும், அங்கே நிற்பது இளங்கோவிற்கு என்னவோ போல் இருந்தது. அந்த இடத்தை விட்டு, அகலப்போன போது, பூசாரி பிள்ளையார் படம் போட்ட திரைச்சீலையை இழுத்து விட்டு, தன்னையும், பிள்ளையாரையும் மறைத்துக் கொண்டார். உள்ளே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இதற்காகவே காத்திருந்தது போல், அக்கம் பக்கத்துக் கும்பல் கூடி, ஆண் வரிசையாகவும், பெண் வரிசையாகவும் பிரிந்தது. அனைவருடைய கவனமும் அந்தத் திரை எப்போது விலகும் என்பதிலேயே இருந்தது. சிலருக்கு பிள்ளையாருக்குப் பதிலாக 23ஆம் நம்பர் பஸ்ஸே மனதில் வந்த நின்றது. பலர் மனதிற்குள், தாமதப்படுத்தும் அந்த பூசாரியை திட்டிக் கொண்டார்கள். ஆனால், இளங்கோவிற்கோ சற்று நிம்மதி; இன்னும் சிறிது நேரம் அங்கேயே நிற்கலாம்.

இதற்கிடையே, மிஸ்டர். ரமணன் அந்தப் பக்கம் வந்தார். இளங்கோவிற்குத் தெரியும், அவரிடம் மாட்டிக்கொண்டால், சரோசா வழக்கில் கண்டிப்புத் தேவை என்று அசோஸியேஷன் போட்ட தீர்மானங்களை நகல் எடுக்கச் சொல்வார். பிறகு போலீஸ் கமிஷனரிடம் சங்கத்தின் பிரதிநிதிக்குழு உறுப்பினராக அல்ல, உதவியாளனாக வரச்சொல்லுவார். இதில் அவனுக்கு சம்மதமில்லை. நேற்று பூக்காரியிடம் அவர் பேசிய விதமும், அவள் வேகவேகமாய் போன விதமும் சரோசாவை காப்பாற்றக்கூடும் என்று நினைத்தான். ஆகையால், ரமணனின் தலையைப் பார்த்ததும், தனது தலையை நெருப்புக் கோழி மாதிரி இதர மனிதத் தலைகளுக்கு மத்தியில் மூழ்கடித்துக் கொண்டான். ஆனால், ரமணனோ அந்தப் பிள்ளையாரை திரும்பிப் பாராமலேயே போனார். அவருக்கு இந்தத் 'தெரு பிள்ளையார்' பிடிக்காது. பக்கத்துத் தெருவில் இருக்கும் கோபுரம் - கலசம் என்ற பணக்காரப் பிள்ளையாரிடம்தான், போவார். போனார்.

மிஸ்டர். ரமணன் போகவும், பூசாரி திரைச் சீலையை விலக்கி, கர்ப்பூரம் ஏற்றவும் சரியாக இருந்தது.பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரக் குவியல்களோடு, காட்சி காட்டுவது போல் கற்பூர ஜோதி ஒளிர்ந்தது. அதில் அந்த கல்லுப்பிள்ளையார் கரைந்து ஜோதிப் பிள்ளையார் தோன்றியது போல் இருந்தது. இது புரியாத இளங்கோ, வழக்கம் போல் தெருவைப் பார்த்தான். எப்போது இந்த ருக்குமணி வந்தாள்? கோவில் மேட்டுக்குக் கீழே இடுப்பில் உள்ள கூடை தரையிறங்க, ருக்குமணி கண்களை மூடியபடி நின்றாள். அவள் பக்கத்தில் செம்பட்டை முடி கொண்ட ஒரு ஆறு வயதுப் பயல், அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

ருக்குமணி, விபூதி வாங்குவதற்குக் காத்திராமல் தன்னை தானே பிள்ளையார் என்பது போல் அனுமானித்து நின்ற அந்தப் பூசாரியை ஏறிட்டுப் பார்க்காமலேயே ருக்குமணியை பின்தொடர்ந்தான். பல பக்தர்களும், பக்தைகளும் விபூதி குங்குமம் வாங்குவது பற்றிக் கவலைப்படாமல் முன்னால் போன ருக்குமணியையும், பின்னால் பாய்ந்த இளங்கோவையும், கள்ளத்தனமாய் பார்த்தார்கள்.

இளங்கோவால், ருக்குமணியை அந்த சாலையின் முனையில்தான் பிடிக்க முடிந்தது.

அவள், இன்னொரு தெருவுக்குள் திரும்பும் வரைக்கும், அவள் பின்னாலேயே நடந்தான். பிறகு அம்புபோல் கூர்மைப்பட்ட இரண்டு தெருக்களின் முனையில் அவள் நின்றபோது, அவள் முன்னால் போய் நின்றான். ருக்குமணி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். பப்பாளிப் பழத்திற்கு கருப்பு வர்ணம் பூசியது போன்ற முகம். வேல் போல் கூர்மையான விரல்கள். சிரிக்கப் போகிறேன் பார் என்பது மாதிரியான குவிந்த உதடுகள். அவனைப் பார்த்ததும் மாராப்பை, சரி செய்தபடியே,‘அறியாத' பிள்ளை- யாண்டானிடம் பேச விரும்பாதவள் போல், அதே சமயம் அவன் பேசினால் பேசித் தொலைக்கத் தயாராக இருப்பது போல் நின்றாள். இளங்கோ கேட்டான் :

"ஒன்னோட... மன்னிக்கணும், உங்களோட இந்தப் பையன் காணாமல் போனவனா... இல்ல..."

"அப்போ நீ அந்த கஸ்மாலம் சாருக்கு, தூதா வந்திருக்கே, இல்லியா? வழிய விடுய்யா."

"எந்த கஸ்மாலம்?”

“அந்தத் தெருவிலே எல்லாமே கஸ்மாலம்தான். ஆனால் அந்த ரமணன் சாரு இருக்காரே, அவரு கஸ்மாலத்துலேயும் படே கஸ்மாலம். அந்தக் கதையே வாணாம்."

“எந்த கதைய?'

"உயிரோட இருக்கிற என் ராமுப் பயல கொஞ்ச நாளைக்கி மறைச்சுவச்சி, காணாமப் போனதா பழையபடியும் போலீஸ்ல சொல்லணுமுன்னு அந்த பெரிய கஸ்மாலம் சொல்லிச்சே, அந்தக் கதையத்தான். பெரிய மனுசனா அவன்? ஒரு பொண்ண வேற பெத்திருக்கான். உயிரோடிருக்கிற இந்தப் பயல, சரோசா என்கிறவ கொன்னாலும் கொன்னுருப்பான்னு போலீஸ்ல சொல்லணுமாம். எப்படி இருக்குது கத? இதுக்கு நீ ஜால்ராவா?"

"காணாமப் போன உன் பையன் கிடைச்சது எப்படி?"

"ஏன்யா, வருத்தப்பட்டுக் கேக்கிற? ஊட்ல என்னோட 'அது...' பாவி - சாராயத்த குடிச்சா ஒயுங்கா குடிக்கப்புடாது? பாதிய வச்சிட்டு, படுத்திட்டு. இந்தப் பயல் என்னாடான்னா, அது தேங்கா தண்ணின்னு குடிச்சிட்டானாம். சின்னப்பாதேவர் படத்துல ஒரு குட்டி யானை சாராயத்தைக் குடிச்சிட்டு அல்லார்க்கும் 'டேக்கா' கொடுக்குமே, அப்படி கொடுத்துட்டான். எப்படியோ பஸ் ஏறி தொரப்பாக்கத்துல கீற எங்க அண்ணாத்த வூட்டுக்குப் பூட்டான். என் அண்ணி என்னடான்னா, நானு, நாலு நாளைக்கி அவஸ்த படட்டுமுன்னு பயல அங்கேயே வச்சிட்டாள். போன வாரம்தான் உட்டாள். இந்தப் பயல காணலன்னு நான் பட்டபாடு, எனக்குத்தான் தெரியும். போலீசுக்குப் போனா, நானுதான் கொயந்தய கொன்னுட்டு அத மறைக்கிறதுக்குப் போனது மாதிரி பிளேட்ட மாத்துனானுங்க.”

ருக்குமணியின் பையன், பழைய நினைப்பாலோ என்னவோ பக்கத்தில் இருந்த ஒரு ஒயின் ஷாப்பையே ஏக்கத்தோடு பார்த்தபோது, இளங்கோ பரவசமானான். என்ன செய்கிறோம் என்பது புரியாமலேயே, அவள் கரங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு, அவளை தாறுமாறாக இழுத்தான். உடனே அவள் கூச்சலிட்ட போது, அந்தக் கரங்களை விட்டு, குழந்தை மாதிரி கெஞ்சினான்.

"ஒருத்திய நிசமாவே கொலைத் தண்டனையிலிருந்து காப்பாத்திட்டேம்மா. ஒன் பையன கொன்னதா, சரோசா என்கிறவளை போலீஸ் பிடிச்சு வைச்சிருக்குது. இப்போ நீயும், நானுமா டெப்டி கமிஷனரைப் பார்த்து நிசத்த சொல்லணும்.”

"இந்த போலீஸ் கதயே வேணாம். கோர்ட்ல வேணுமுன்னா சாட்சிக்கு வாரேன்."

“அப்படிச் சொல்லப்படாதும்மா. உயிரோட இருக்கிற ஒன் கொழுந்தய கொன்னதா சொல்லி, சரோசாவுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தால் அந்தப் பழி ஒனக்கில்லயா? ஒருத்தி செய்யாத தப்புக்கு அவஸ்த படணுமா? இந்த அநியாயத்த நாம ரெண்டு பேரும் டெப்டி கமிஷனருக்கிட்ட சொல்ல வேண்டாமா?"

"டெபதின்னா அது யாரு?"

“பெரிய போலீஸ் அதிகாரி.”

"போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை விடவா?”

"Cuba Cuba..."

“இன்ஸ்பெக்டரை விடவா?”

"இன்ஸ்பெக்டருக்கும் மேலே ஏ.சி. அதுக்கு மேலே.டி.சி."

“அம்மாடியோ! அவர கண்ணால பார்க்க முடியுமா?"

“நிச்சயமா...”

பூக்கார ருக்குமணிக்கு, இதயம் குதிபோட்டது, சுற்றுப்புறச் சூழலில் கான்ஸ்டபிளை ஜமீன்தாராகவும், சப்-இன்ஸ்பெக்டரை ராசாவாகவும், இன்ஸ்பெக்டரை ராசாதி ராசாவாகவும் நினைத்துப் பழக்கப்பட்டவளான ருக்குமணி, அவர்களுக்கு மேலே மாரியாத்தா ஒருத்திதான் இருக்க முடியும் என்று நம்பினாள். அவர்களுக்கும் மேலேயும் ஓர் ஆசாமி இருந்தால், அவரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்பது போல புடவை தூசியைத் தட்டிவிட்டாள். அதே சமயம் ஒருத்தி செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம் ஆவதற்கு, தானோ தனது குழந்தையோ காரணமாக இருக்கக்கூடாது என்று நினைத்தது போலவும், இளங்கோவையே பார்த்தாள்.

இந்தச் சமயத்தில் பாமா தலைவிரி கோலமாக நடந்து வந்தாள். நொடிக்கு ஒரு தடவை தலை முடியை மேல் நோக்கி தூக்கி விடுகிறவள் கவிழ்ந்த முடியுடன், நிமிர்ந்த பார்வையோடு, அவர்களை நெருங்கி, ருக்குமணியை ஏற இறங்கப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்த்துக் கத்தினாள் :

"நான் ஒருத்தி பிள்ளையார் கோவிலில் கல்லு மாதிரி உங்களையே பார்த்துகிட்டு நிக்கேன். அதுக்கு முன்னால, அப்பா டெலிபோன் செய்தவுடனேயே வீட்டுக்கு வந்திடுவீங்கன்னு வாசலுக்கும், புறக்கடைக்குமா அலைஞ்சேன். இங்க என்ன வேல உங்களுக்கு?"

"ஏம்மா, எது பேசணுமுன்னாலும் பக்கத்துல இருக்கிற பீச்சுல போய் பேசுங்க. நான் ஒருத்தி மூணாவது மனுஷி இங்க இருக்கேன்."

ருக்மணி, பூக்கூடையை தூக்கிக் கொண்டே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் பாமாவுக்குக் கோபமும் போனது, சந்தேகமும் போனது. இதற்குள், இளங்கோ ருக்குமணியின் சாகாத பயல் பற்றியும், மிஸ்டர் ரமணனின் வில்லத்தனம் பற்றியும் பாமாவிடம் விளக்கினான். பிறகு, சரோசாவைக் காப்பாற்ற வேண்டியது, ஒரு தார்மீகக் கடமை என்று வாதாடினான். அவன் சொல்வதை பெரிய மனுஷி போல் கேட்டுக் கொண்டு, பாமா, சம்மா நின்றாள். உடனே ருக்குமணி தனது மகன் தலையை தடவி விட்டுக்கொண்டே ஒரு போடு போட்டாள் :

"சரோசாவோ, கிரோசாவோ... அவ ஜெயிலுக்குப் போனா கடவுளே என்னோட பயல காணாம பண்ணிடுவார். நீங்க ரெண்டு பேரும் கூட சேர்ந்து வாழமுடியாது. என்னம்மா சொல்றே?”

பாமா உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவுக்கேற்ற தோரணையோடு, பேசினாள் :

"சரி! ஆட்டோவ கூப்பிடுங்க."
-----------------

அத்தியாயம் 11

சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குள், அந்த ஆட்டோ ரிக்ஷா பயபக்தியுடன் நின்றது. புலி போன்ற உறுமல் சத்தத்தை நிறுத்தி விட்டு, அது பூனை மாதிரி நின்ற போதும், ஒரு வெள்ளை யூனிபார போலீஸ்காரர், அங்கே ஓடிவந்து டிரைவரை செல்லமாகத் திட்டினார்:

"ஏம்பா, நீ, பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்ததாகவே இருக்கட்டும். அதுக்காக எங்க கண்ணு முன்னாலேயே நாலு பேர ஏத்திட்டு வரணுமா? கேட்டுல ஒருத்தர இறங்கி வரச் சொல்லக்கூடாதா? போலீசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரையாப் போச்சா?"

பாமாவும் இளங்கோவும் டிரைவர் பதில் சொல்லட்டும் என்பது போலவும், அந்த கான்ஸ்டபிளிடம் பேசுவது தகுதிக் குறைவு என்பது போலவும் நினைப்பதாய், வெள்ளைச் சட்டைக்காரர் நினைத்துக் கொண்டார். ஆனால், ருக்குமணியை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு, இடுப்பில் இடுப்பு உரச, தோளில் தோள் மோத, ஜோடி சேர்ந்து அமர்ந்திருந்த அவர்களுக்கு ஆட்டோ அங்கே நின்றதே நினைவில்லை. ருக்குமணிதான், தனது பையனைப் பிடித்துக் கொண்டே, கீழே குதித்தாள். பூ மாலைகள் வைக்கப்படும் மேசையையும், பூக் கூடைகளையும், லத்தியால் தட்டி கீழே இழுத்துப் போடுவது இந்த வெள்ளைச் சட்டைக்காரர்கள் தானே... ஆகையால் அவள் பயந்து போனாள். அவளைப் போலவே அந்த டிரைவரும் தலையைச் சொறிந்து கொண்டே அந்த போலீஸ் மனிதர் முன்னால் பல்லைக் காட்டினார். பாமாவும், இளங்கோவும் போட்டி போட்டுக் கொடுத்த ஆட்டோ கட்டண ரூபாய் நோட்டுகளை வாங்காமல், ஆட்டோவிள நம்பர் பிளேட்டை லாவகமாக டிரைவர் மறைத்து நின்றார். போலீஸ்காரர் தன்னுடைய பரிபாலனத்துக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு போய்விட்டார்.

சென்னை நகருக்கே காவல் சக்ரவர்த்தியான அந்த வளாகம், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது, ருக்குமணிக்கு ஆச்சரியமாக இருந்தது. 'நாயே பேயே' என்று கத்தாமல் ஆங்காங்கே நிற்கும் போலீஸ்காரர்களையும், போலீஸ் வேன்களையும், கராமுரா சத்தம் போடும் ஜீப்புகளையும் பயபக்தியோடு பார்த்தாள். அவளுக்கே சந்தேகம்... அது போலீஸ் ஆபீசா... இல்லை சாதாரண ஏதோவொரு அலுவலகமா என்று. அங்கே நின்ற சிவில் உடைக்காரர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் நிற்பவர்களைப் போல் நிற்காமல் சாதாரணமாக நிற்பதைப் பார்த்ததும், இவளும் தன்னை வழக்கத்திற்கு அதிகமாக தனது தலையை நிமிர்த்திக் கொண்டும், மகன் ஆறுமுகப் பயலின் கையைப் பிடித்துக் கொண்டும், இளங்கோ-பாமா ஜோடியின் பின்னால் நடந்தாள்.

ருக்குமணி, பராக்குப் பார்த்துக் கொண்டே போன போது, பாமா, தனது தந்தையின் நண்பராகக் கருதப்படும் டெப்டி கமிஷனர் அறையை பல்வேறு அறைகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் அவற்றின் பெயர்ப் பலகைகளைப் படித்தாள். அவர் பெயர் தெரியவில்லை. பிறகு அங்குமிங்குமாய் விசாரித்தாள். இரண்டு பேர் ஆளுக்கு ஒரு திசையாகக் காட்டிய போது, சிறிது திகைத்தாள். பிறகு, அவர்களை மாதிரியே அலைந்து குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனரைக் கண்டுபிடித்த ஒருவர் வழியில் அகப்பட்டார். அவர் சுட்டிக்காட்டிய இடத்திற்கு மரப்படிகள் வழியாக ஏறி, இதர எஞ்சிய மூவரையும் பின்னால் வரும்படி சைகை செய்தாள். முதல் மாடியில் மூன்றாவது அறை. அந்த அறையே குட்டி போட்டது போல் ஒரு சின்ன அறை. இந்த இரண்டு அறைக்கும் இடையே ஒரு கதவுத் தடுப்பு.

அந்த சின்ன அறைக்குள் அங்குமிங்குமாக டெலி போன்களை சுற்றிக் கொண்டிருப்பவர் முன்னால் பாமா போய் ஒரு வணக்கம் போட்டாள். அதற்கு அவர் டெலிபோனை ஆட்டியே பதில் வணக்கம் போட்டார். பாமா இனிமையாகக் கேட்டாள்:

"சார், டெப்டி கமிஷனர் அங்கிளை பார்க்கணும், இருக்காங்களா?"

"வெளியே போங்கள்" என்று சொல்லப்போன அந்த நேர்முக உதவியாளர், 'அங்கிள்' என்ற வார்த்தையைக் கேட்டதும் தாத்தாவாகக் குழைந்தார். அதே சமயம், இப்படிப் பல பேர் டூப் அடித்து, உள்ளே போய் ஏடாகூடமாய் பேசிவிட்டு, கடைசியில் டி.சி.யிடம், தான் வாங்கிக்கட்டிக் கொண்டதையும் நினைத்துக் கொண்டார். ஆகையால், இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ சொல்லாமல், அவளையே பார்த்தார். உடனே, பாமா ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டினாள். கான்வெண்டில் படித்தவளான அவள், வெள்ளைக்காரி தோற்றது போல் விளாசினாள். குறிப்பிட்ட அந்த டெப்டி கமிஷனர் தனக்கு அங்கிள் என்றும், தான் வந்திருப்பது தெரிந்தால், அவரே அங்கு ஓடிவந்து விடுவார் என்பது போலவும் பேசினாள்.

எந்த அரசு அலுவலகத்திலும் நடைபெறும், மனிதச் சந்திப்பில் தமிழுக்கு மூடிக்கிடக்கும் கதவு, இங்கேயும் அவளது ஆங்கிலத்திற்கு வழி விட்டது. 'இன்டர்காமை' எடுத்து, டி.சி.யிடம் அவள் வரவைக் குறிப்பிட்டார். பிறகு எதுவும் பேசாமல் தனது வேலையைப் பார்க்கத் துவங்கினார். இப்போது அவருக்கு பாமா உயரத்தில் சிறிது குறைந்தது போல் தெரிந்தது. கால்மணி நேர கால்வலிப்புக்குப் பிறகு, பாமா அவசரப்படுத்தினாள் :

"சார், எப்போ பார்க்க முடியுமுன்னு சொல்லுங்க. இல்லாட்டா முடியாதுன்னாவது சொல்லுங்க. நாங்களும் பிசி தான்."

நேர்முக உதவியாளர், அவளுக்கு எரிச்சலோடு பதில் அளிக்கப் போனார். இவளுக்குத்தான் டெப்டி கமிஷனர் அங்கிளே தவிர, அந்த அங்கிளுக்கு இவளிடத்தில் பங்கில்லை என்பதால், விட்டிருந்தால், விளாசியிருப்பார். அதற்குள், டெலிபோனில் ஒரு கரகரப்பான சத்தம் வந்ததும், அவர் படபடப்பானார். பாமாவை போகலாம் என்பதுபோல் சைகை செய்தார்.

அந்த பிரும்மாண்டமான அறைக்குள் இளங்கோவும், பாமாவும் பக்குவமாகப் போனார்கள். சுழல்மெத்தை நாற்காலியை சுற்றிக் கொண்டே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனரை பார்த்தபடியே, அங்கப்பிரதட்சணம் செய்வது போல் சென்றார்கள். திரும்பிப் பார்த்த பாமா, ருக்குமணி பின்னால் வராததைக் கண்டு பி.ஏ. ரூமிற்குப் போனாள். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பல்வேறு வாக்குவாதங்களை முடித்து விட்டு, அவளையும், அவள் பையனையும் உள்ளே கூட்டி வந்தாள். டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த டெப்டி கமிஷனர் அதன் குமிழை மூடிவிட்டு "என்ன வேண்டும்” என்று கேட்டார். ஏதோ பதில் சொல்லப்போன இளங்கோவின் முதுகைக் கிள்ளிவிட்டு, பாமா சாதாரணமாக, பரபரப்பு இல்லாமல் பதிலளித்தாள்:

"நீங்க பேசி முடிங்க அங்கிள். எங்களுக்கு அப்படியொன்றும் அவசரம் இல்ல.'

அரசியல்வாதிகள், கேடிகள், கிரிமினல்கள் ஆகியோருடன் பழகிப் போன அந்த டெப்டி கமிஷனருக்கு, 'அங்கிள்' என்ற வார்த்தை நெகிழ்வைக் கொடுத்தது. அவளை உட்காரும்படி சைகை செய்தார். அவள் உட்கார்ந்ததும், அவளைப் போல் தானும் உட்காரலாமா என்று யோசித்த இளங்கோ, சிறிது நின்றுவிட்டு பிறகு உட்கார்ந்தான். ருக்குமணி ஜம்மென்று உட்காரப்போன மகனை காதைப் பிடித்துத் திருகி தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டாள். டெப்டி கமிஷனர், ஒரு டெலிபோன் பேச்சை முடித்து விட்டு, அவர்களைப் பார்ப்பதும், மற்றொரு டெலிபோன் அறுக்க வருவதுமாக இருந்தது. ஒன்றில் “எஸ் ஸார்... எஸ் ஸார்” என்று குழைந்த அவர், இன்னொரு போனில், “என்னா மேன் செய்யறே? கொஞ்சமாவது மூளையிருக்கா?” என்று எரிந்தார். இப்படி ஒரே சமயத்தில் மெழுகுவர்த்தி மாதிரி குழைவதும், எரிவதுமாக இருந்த அவரைப் பார்த்த ருக்குமணி ரஜினிகாந்தை விட, இவர் பெரியவராக இருக்கலாமோ என்று சந்தேகப்படுவதுபோல் பார்த்தாள்.

டெலிபோன் மணிகளும், மைக் பிளிறலும் சிறிது நின்ற போது, பாமா குழந்தைத்தனமாகக் கேட்டாள் :

"அங்கிள், என்னை ஞாபகம் இருக்குதா? பத்து வயசுல உங்களைப் பார்த்தது... பட், உங்க அப்போதைய உருவம் இன்னமும் ஞாபகம் இருக்குது. டாடி... அதான் உங்க பிரண்ட் மிஸ்டர். ரமணன், சதா உங்களைப் பத்தியே போரடிப்பார். பரீட்சையில் உங்க பேப்பரைப் பார்த்து அவர் காப்பியடிச்சாராம், இதனால் உங்களுக்கு பெரிய சைபரும், அவருக்கு சின்ன சைபரும் கிடைச்சுதாம்.”

பாமாவின் சிரிப்போடு சேர்ந்து சிரிக்கப் போனார் டெப்டி. இதற்குள் ஒரு மேலிட மிரட்டல் டெலிபோன். கீழிட பிரார்த்தனை டெலிபோன். அதற்குள் பி.ஏ. கொண்டு வந்து கொடுத்த ஒரு பவர் புரோக்கரின் விசிட்டிங் கார்ட். அவரை உடனே பார்க்கா விட்டால் ஆவடி ஆயுத போலீசுக்குத்தான் போக வேண்டும். ஆகையால் அவசர அவசரமாய்க் கேட்டார்.

"சொல்ல வேண்டியதை ஒரு நிமிசத்துல சுருக்கமா சொல்லும்மா."

பாமா சுருக்கமாக எப்படிச் சொல்வது என்பதற்காக கால் நிமிடம் எடுத்துக் கொண்டாள். பிறகு நடந்த விவரத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

டெப்டி கமிஷனர் அவளை இடைமறித்துக் கேட்டார்:

“இந்தப் பையனை கொலை செய்ததாய் கேஸ். ஓகே! பட், அப்படி நடக்கலே, சரிதானே? ஒங்க ஏரியா இன்ஸ்பெக்டரை போய்ப் பாரு. நான் மைக்கில பேசிடுறேன். சரோசாவையும் வார்னிங் கொடுத்து விட்டுடச் சொல்றேன். ஒன் பேரு என்னம்மா, ருக்குமணியா? குழந்தைய சரியா கவனிச்சுக்கத் தெரிஞ்சுக்கோ. பாமா! ஒரு நாளைக்கு சாவகாசமாக வீட்டுக்கு வா. உங்க அப்பாவ அங்கே வந்து என்ன ‘டா' போட்டு பேசலாமுன்னு சொல்லு. ஓகே!''

"தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லப்போன பாமா, அவர் இன்னொரு டெலிபோனில் பேசப் போவதைப் பார்த்துவிட்டு வாயில் அந்த வார்த்தையை சுமந்து கொண்டு நின்றாள். பிறகு அவர் ஒரு மாதிரி டெலிபோனில் பேச்சை இழுப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு ஒரு தாங்க்ஸை சொல்லிவிட்டு மற்றவர்களோடு வெளியேறினாள்.

சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உருண்டோடி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா, சரோசாவுக்கு அடி உதைகளை வாடகையாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் பழைய காவல் நிலையத்திற்குள் வந்தது. இங்கேயும் ஒரு போலீஸ்காரர் வந்து அந்த டிரைவரை திட்டக்கூடாது என்பதற்காக, ருக்குமணி வாசலிலேயே இறங்கிக் கொண்டாள். ஆனாலும், அம்மாம்பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்ததால், அவளுக்கு, இந்தக் காவல் நிலையம், மகுடம் இல்லாத பிசாத்தாய் தோன்றியது.

பாமா, தயங்கித் தயங்கி பின்னால் நடந்த ருக்குமணியை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்தாள். பின்னால் மெல்ல நடந்த இளங்கோவை முதுகைப் பிடித்துத் தள்ளினாள். அந்த மூவரும், ஆறுமுகப் பயலும், மாடிமேல் குடிகொண்ட இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தார்கள். இப்போதும் அங்கே அதே கிரைம் இன்ஸ்பெக்டரும் இருந்தார். அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், இவர்களைப் பார்த்ததும் உடனடியாக வாயை மூடிக்கொண்டு, முறைத்தார். பாமா அதை பொருட்படுத்தாதது போல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இளங்கோவையும் உட்கார வைத்துவிட்டுப் பேசினாள்:

“ஸார், என் பெயர் பாமா. டி.சி.கிட்டே போயிட்டு வாரோம்!" "நாங்களெல்லாம் சின்னவங்க. பெரியவங்கக்கிட்ட போன பிறகு எங்ககிட்ட என்ன வேலை?"

இதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பேசினார்:

“ஒன்று மட்டும் நினைச்சுக்கங்கம்மா. நீங்க டைரக்டர் ஜெனரல்கிட்ட போனாலும், கடைசியில அது நல்லதோ, கெட்டதோ அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட, அல்லது ஒரு கான்ஸ்டபிள்கிட்டதான் வந்து விழும். இந்த இளங்கோ அந்த சரோசாகிட்ட முறை தவறி நடக்கப்போனார்னு அந்த டெப்டி கமிஷனர்கிட்ட நாங்க சொன்னோமுனா, அவரால மூச்சுவிடக்கூட முடியாது. நீங்கள் எங்களப் பார்த்துட்டு, அப்புறம் முடியாட்டால்தான் டெப்டி கமிஷனர்கிட்டே போயிருக்கணும்."

பாமாவும், இளங்கோவும் சும்மாயிருந்தபோது, இன்ஸ்பெக்டர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ருக்குமணியை சுண்டுவிரலை ஆட்டிக் கூப்பிட்டார்.

"இந்தாம்மா! உன் பேர்தான் ருக்குமணியா? இவன் பேரு

தான் ஆறுமுகா?"

"ஆமாங்கய்யா..."

சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கே புகுந்தார் :

"ஏண்டி, ஒனக்கு மூளை இருக்குதா? குழந்தைய காணுமுன்னு போலீஸ்ல ரிப்போர்ட் செய்யத்தெரிஞ்சுதே, அது கிடைச்சுதுன்னு ஏண்டி சொல்லல?"

புருஷன்கூட பேச யோசிக்கும், 'டி'-யை அவர் காப்பி குடிப்பது மாதிரி பேசியதால், ருக்குமணி கூனிக்குறுகினாள். உடனே பாமா இன்ஸ்பெக்டரைப் பார்த்து "சார், இவர்... பேசறது டூ மச்” அந்தம்மாவும் ஒரு கொளரவமான குடிமகள்தான் என்றாள் அழுத்தம் திருத்தமாக. இன்ஸபெக்டர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பேசினார்:

"சரி, விஷயத்துக்கு வருவோம். டெப்டி கமிஷனர், சரோசாவை விடுதலை செய்யச் சொல்லல... குழந்தை கிடைச்ச பேக்ரவுண்டுல விசாரிக்கத்தான் சொன்னார். ஆனாலும், சரோசாவை விடுதலை செய்ய நான் தயாரா இருக்கேன். ஆனால், ஒண்ணு... அவள்கிட்ட பெரிய செட்டே இருக்குது.பழி பாவத்துக்கு அஞ்சாதவங்க. இளங்கோ கையோ, காலோ போனால், அதுக்கு நான் பொறுப்பில்ல. அவள் உள்ளே இருந்தாத்தான், உங்களுக்குப் பாதுகாப்பு. அதுக்குள்ள அவளோட செட்டும் சிதறிப் போயிடும். இல்ல பயந்துடம். ருக்குமணியோட குழந்தைய, சரோசா கடத்திக்கிட்டுப் போனதாயும், நாங்கதான், மீட்டிக் கொடுத்ததாயும் ஒரு கேஸ் போட்டு, அவள ஏழு வருஷம் உள்ளே தள்ளிடலாம். டெப்டி கமிஷனர் முகத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். அவள் விடுதலையாகணுமா, இல்ல இளங்கோ உயிரோட இருக்கணுமா? ரெண்டுல ஒன்றைச் சொல்லுங்க..."

இளங்கோவும், பாமாவும் ஒருவரையொருவர் பீதியோடு பார்த்துக் கொண்டபோது, இன்ஸ்பெக்டர் இளங்கோவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை தனது அனுபவ பின்னணியில் மீண்டும் விளக்கினார்:

"சாராய கோஷ்டிங்க கிட்ட இருக்கிறசெட்டுங்க, மோசமான செட்டுங்க. பொதுவா இவங்களுக்கும், மிருகங்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. ஒரு மிருகத்துக்கு, எப்படி தன்னால் தாக்கப்பட்டவன் ஞாபகம் இருக்காதோ, அப்படி இவங்களுக்கும் தங்களால் பாதிக்கப்பட்டவங்களப் பத்தி பின்னால் நினைப்பே இருக்காது. பெரிய பெரிய பட்டாக்கத்திய வச்சு, எதிராளியை ஒரு வீச்சு வீசணும். அதுல கை விழுந்தாலும், கால் விழுந்தாலும் கவலையில்லை. அதோட சரி. இளங்கோ மேலே ஒரே ஒரு தடவைதான் பட்டாக்கத்திய வீசவாங்க. அதுல, இவரு தப்பிச்சுட்டா அப்புறம் அவங்களும் கவலைப்பட மாட்டாங்க. இவரு தலை போயிட்டால் கொஞ்ச நாளைக்கு தலை மறவைா இருப்பாங்க. அப்புறம் தானா ரோட்டுக்கு வருவாங்க. காரணம் ஒவ்வொரு சாராய கோஷ்டிக்கும் பின்னால், ஒரு அரசியல்வாதி இருக்கான்.. இவங்கள எதுவும் செய்ய முடியாது. பயப்படும்படியா பேசுறேன்னு நினைக்காதீங்க. நீங்க டெப்டி கமிஷனருக்கு வேண்டியவங்க என்பதால விலாவாரியா சொல்லிட்டேன். எதுக்கும் கலந்தாலோசித்து முடிவ சொல்லுங்க."

இளங்கோவின் முகத்தில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு இறுக்கம். பாமா முகத்தில் பல்வேறு சுழிப்புகள். அவனை கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்த அறைக்கு வெளியே கூட்டி வந்தாள். பையனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்த ருக்குமணியும் பதறியடித்து நின்றாள்.

பாமா சிறிது யோசிப்பவள் போல் அங்குமிங்குமாய் சுற்றினாள். ஒவ்வொரு சுற்றும் அவளுக்கு தலைச்சுற்றலைத் தான் கொடுத்தது. குழம்பிப் போய் அவளும் உளறிப் பேசினாள்:

"எனக்குப் பயமாய் இருக்குது இளங்கோ. போலீஸ் முடிவுக்கே விட்டுடுவோம். உங்களுக்கு நாளைக்கு ஏதாவது நடந்துடக்கூடாதேன்னு இன்னிக்கே எனக்குப் பயம் வருது. வம்ப விலை கொடுத்து வாங்க வேண்டாம். என்ன ருக்குமணி நான் சொல்றது?"

இளங்கோ, ருக்குமணியை முந்திக் கொண்டு பேசினான். தோளில் விழுந்த பாமாவின் கையை தனது இடது கையால் எடுத்து, வல்து கைக்குள் சங்கமமாக்கி உறுதிபடப் பேசினான் :

"நமக்கு எதிர்காலத்தில் ஓர் ஆபத்து ஏற்படுறதாய் நினைத்து இப்போ, சரோசாவுக்கு வந்திருக்கிற ஆபத்தை அலட்சியப் படுத்தக் கூடாது... பாமா. என்ன ஆனாலும் சரி, நம்மால அவள் ஜெயிலுக்குப் போகக்கூடாது. இல்லாவிட்டால் நமக்கும் அவளோட செட்டுக்கும் வித்தியாசம் இருக்க முடியாது."

"தனக்குப் போகத்தான் தானம் சாரே... வளர்த்த கடா மார்புல பாயறது மாதிரி ஆயிடப்படாது பாருங்க."

ஒரு கடாயை நாம் வளர்க்கிறதே, அத வெட்டித் தின்கிறதுக்காகத்தானே. அப்போ அது மார்புல பாயுறதுல என்ன தப்பு? நாம் ஒருத்தருக்கு விசுவாசமா உதவினால், அவங்களும் விசுவாசமா நம்மகிட்ட இருப்பாங்க. இதுல, எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதோட யதார்த்தமாய் பார்த்தால், சரோசாவை ஜெயிலுக்கு அனுப்பினால்தான், அவளோட செட்டுக்கு என் மேல கோபம் வரும். இன்ஸ்பெக்டரும், அவள விடுதலையா குறதுக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளை சொல்லதான் போறாரு. இதனால் அவளுக்கும், அவளோட ஆட்களுக்கும் இப்போ கோபம் இருந்தாலும், அப்புறமா தணிஞ்சுடும். என்ன பாமா... நான் சொல்றது...சரிதானே?"

பாமா சரியா, சரியில்லையா என்று அவனையே திருப்பிக் கேட்பது போல் பார்த்தாள். ருக்குமணி மவுனமாய் இருந்ததில் இருந்து அவளுக்கும் இளங்கோ சொல்வது சரிஎன்று பட்டது போல் தோன்றியது. இருந்தாலும் பாமா பதறிப் பதறிப் பேசினாள்.

"எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்குது. இது நாயர் பிடிச்ச புலிவால் மாதிரி தோணுது. விடவும் முடியல, தொடவும் முடியல... இவருக்கு ஏதாவது...”

விம்மப்போன பாமா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். இளங்கோ அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, அவளையும், ருக்குமணியையும் கூட்டிக் கொண்டு உள்ளே போனாள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உரையாடலுக்கு தடங்கல் ஏற்படுத்தியபடி முடிவை அறிவித்தான்:

“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை சார். ஆனால், நியாயத்துக்குத்தான் எதுவும் நடந்துடக்கூடாது. தயவு செய்து சரோசாவை விடுதலை செய்திடுங்க சார்."

மேஜையில் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், அவனைப் பார்க்காமலேயே பேசினார்:

“ஆல் ரைட்... ரைட்டர் கிட்ட போய் உங்க புகாரை வாபஸ் வாங்குறதாய் ஒரு மனு கொடுங்க. ஒன் பேரு என்னம்மா? ருக்குமணியோ, மக்குமணியோ... ஒன் பையன் கிடச்சுட்டதாய் நீயும் எழுதிக் கொடு. இந்தாப்பா, இவங்கள ரைட்டர்கிட்ட கூட்டிட்டுப் போப்பா...ஓ.கே. மிஸ்டர் இளங்கோ! தாங்க்யூ மிஸ்-ஸா, மிஸ்ஸஸ்ஸா... விஷ்யூ... குட்லக் பாமா."

"சரோசாவை எப்போ சார் விடுவீங்க?”

"போலீசுக்கு எந்தச் சமயத்தில் என்ன செய்யணும் என்று தெரியும். எங்க டூட்டிய நீங்க செய்ய வேண்டாம். இனிமேலாவது, குப்பத்து காரிங்ககிட்ட நாசூக்கா நடந்துக்கங்க. டி.சி.கிட்ட இன்னொரு தடவை பேசி, என்ன முடிவு எடுக்கணுமோ அதை எடுப்போம். போயிட்டு வாறீங்காள?"

இன்ஸ்பெக்டர், அவர்கள் அங்கேயே தயங்கி நின்றபோதும், அவர்கள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்து, சப் இன்ஸ்பெக்டரிடம் பேசப் போனார். இதற்குள் அவர்களை ரைட்டரிடம் கூட்டிப் போகும் பொறுப்பை மேற்கொண்ட ‘கரும்பு மாமூல்' கான்ஸ்டபிள் பாமாவை கெஞ்சுவதைப் போலவும், இளங்கோவுக்கு அஞ்சுவது போலவும், ருக்குமணியை மிஞ்சுவது போலவும் ஒரே சமயத்தில் பல பார்வைகளை வீசிக் கொண்டு அவசரப்படுத்தினார். அவர்களும், அவர் பின்னால் போய் விட்டார்கள். உடனே, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து லேசாய் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்ட சப்... அதற்குரிய அர்த்தத்தை அவரிடமே விளக்கினார்.

"பயல் ஆறு மாதத்துக்கு தூங்க மாட்டான் சார். டெப்டி கமிஷனர் கிட்டயிருந்து வந்தங்கிறதுல ஆரம்பத்துல தெனாவட்டா நின்னவனை அப்படியே கூனிக் குறுக வைச்சுட்டீங்களே; அவனை வாழப்பழமா கொழய வச்சு, எல்லாப் பக்கமும் ஊசியாலே குத்திட்டிங்களே. ஆனால், என்ன மாதிரி போலீஸ், கிராமப்புறத்துல இந்த மாதிரி டெக்னிக்கை பயன்படுத்துறது இல்ல சார். பேக்ரவுண்ட் உள்ளவன் முன்னால, பேக்ரவுண்ட் இல்லாதவனை எடுத்த எடுப்பிலேயே 'தேவடியா மகனே'ன்னு கேட்போம். அவனோட பெண்டு பிள்ளைகளையும் வாய்க்கு வந்தபடி திட்டுவோம். பேக்ரவுண்ட் உள்ளவன் பயந்துடுவான். சரி... விஷயத்துக்கு வருவோம்... சுதந்திர தினத்துக்கு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யணுமே?"

“சுதந்திரத்துக்கும் நமக்கும் என்னப்பா சம்பந்தம்? எப்போ போலீசுல சேர்ந்தோமோ அப்போமே, நம்ம சுதந்திரத்தையும், விட்டுட்டோம். அடுத்தவன் சுதந்திரத்தையும் அபகரிச்சுட்டோம். சரோசாவ... நீயே போய் கூட்டிக்கிட்டு வா."

சப்-இன்ஸ்பெக்டர், தனக்குப் பதவி உயர்வு வந்தது போல் துள்ளி எழுந்தார்.

சரோசாவை எப்படியாவது விட்டுவிட வேண்டும் என்று இந்த சப்-இன்ஸ்பெக்டரை கரும்பு மாமூல் கான்ஸ்டபிள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். பதவி ரீதியில் இவர் அவருக்கு முதலாளி, ஆனால் மாமூல் விவகாரத்தில் அவர் இவருக்கு முதலாளி.

இன்ஸ்பெக்டர், சரோசா விவகாரத்தை விட்டு விட்டு, இன்னொரு விவகாரம் கொண்ட எப் ஐ ஆர் ஐ படிக்கத் துவங்கினார். சரோசாவை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அப்போது:

"சார், இதோ சரோசா..."

"ஏய், ஒன் பேரு சரோஜாவா? சரோசாவா?"

"நீங்க கடைசியா சொன்ன சொல்லு வரமாட்டேங்குதே சாரே. போலீஸ் எங்களோட தோஸ்துன்னு பேரு. அப்படியும் என்னை இந்தப் பாடு படுத்திட்டாங்களே. கடவாப்பல்லு ஆடுது சாரே; கையி பிசகிட்டு சாரே.'

முகம் வீங்கி, கை வளைந்து, உடம்பை உண்மையிலேயே காயம் என்று சொல்லலாம் என்று சொல்வது போல் காயப்பட்டு நின்ற சரோசாவை, இன்ஸ்பெக்டர் பற்றற்ற முறையில் பார்த்தபோது, எங்கிருந்தோ ஓடிவந்த கரும்புக்கார போலீஸ்காரர் அவளுக்கு உபதேசம் செய்தார் :

"ஏய், சரோ! இந்த மாதிரியா இன்ஸ்பெக்டர் ஐயா கிட்டே பேசறது? நானும் சப்-இன்ஸ்பெக்டர் ஐயாவும் சொன்னதுக்காக ஐயா, ஒன்ன விடுதலை செய்யறார். இன்ஸ்பெக்டர் ஐயா டெப்டி கமிஷனர்கிட்ட உனக்காக வாதாடி... போராடி ஒன்ன கொலை கேஸிலிருந்து விடுவிச்சிருக்கார்."

"அதுக்காக கொழந்தைய கடத்திட்டுப் போன நிசமான கேடிய விட்டுடாதீங்க சாரே."

"இப்படிக் கூடக் கூடப் பேசக்கூடாதுடி... இன்ஸ்பெக்டர் ஐயா கையில காலுல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிட்டு, முதல்ல வீட்டுக்கு போ."

"இல்ல சாரே, முதல்ல ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும் சாரே."

அங்கே எதுவும் நடக்காதது போல் எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் காலில், சரோசா நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தாள். தரையில் வயிற்றைப் போட்டு மேசையின் அடிக்கம்பில் மார்பைப் போட்டு, அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினாள்:

"இதே மாதிரி இனிமே காட்டியும் நான் தப்பு தண்டா செய்தாலும், சார்தான், என்னை மன்னிக்கணும். எங்கள மாதிரி ஆட்களுக்கு போலீச விட்டா யார் கதி சாரே?”

"இந்தாம்மா எழுந்திரு மொதல்ல. இது போலீஸ் ஸ்டேஷனா, கோவிலா?"

கரும்பு கான்ஸ்டபிள், இமிடியட் பாஸ்ஸான சப் இன்ஸ்பெக்டரை பொருட் படுத்தாமலேயே பேசினார் :

“ஐயா சொன்னத நல்லா கேட்டுக்கோ. சப்-இன்ஸ்பெக்டர் கையிலயும், இன்ஸ்பெக்டர் காலிலேயும் நான் ஒனக்காக விழுந்தேன். இன்ஸ்பெக்டர், டெப்டி கமிஷனர் காலில விழுந்து ஒன்ன விடுவிச்சிருக்கார். நீயுண்டு, ஒன் தொழில் உண்டுன்னு இருக்கணும். சொல்றது புரியுதா?"

இன்ஸ்பெக்டர் கத்தினார்:

"யோவ், உன் மாமா, மச்சான் பேச்சை வெளியே வச்சுக்கய்யா. இவள இமிடியட்டா வெளியில கொண்டு விடுய்யா."

கான்ஸ்டபிள், பயப்பட்டவர்போல் நடந்தபடியே அவரை ஒரு சல்யூட்டால் அடித்துவிட்டு, சரோசாவை கண்களால் இழுத்துக் கொண்டு போய் விட்டார். சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரிடம் கேட்டார் :

“என்ன சார் திடீர்னு சூடாயிட்டீங்க?”

“பின்ன என்னப்பா, டெப்டி கமிஷனர் காலுல நான் விழுந்தேன்னு சொல்றான். அறிவு கெட்ட மடயன். அந்தப் பொண்ண போலீஸ் ஸ்டேஷன்ல வச்சே கொஞ்சிடப் போறான். நீயே போய் அவளை ஸ்டேஷனுக்கு வெளியில விட்டுட்டு வா."

இன்ஸ்பெக்டர் அதற்குமேல் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அங்குமிங்குமாய் உள்ள அறைகளைப் பார்த்துவிட்டு படியிறங்கினார்.

ஒரு புளிய மரத்திற்கு அடியில் சரோசாவை அவள் தோஸ்துகள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே கான்ஸ்டபிள்

அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கை தட்டி, அவர்களது கண்களை தன் பக்கம் இழுத்து, அவர்களை வெளியே போகும்படி சைகை செய்தார்.

சரோசா, தனது தோஸ்துகளோடு, நொண்டிக் கொண்டே வெளியே வந்தாள். ஒருவன் முகவெட்டு... அதோடு குளோஸ்கட்டு... இன்னொருத்தன் அம்மைத் தழும்பன், மற்றவர்கள் ‘மற்றும் பலர்' என்பது மாதிரி சாதாரணங்கள். முகவெட்டுக்காரன், எதிரே இளநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை அடையாளம் காட்டிப் பேசினான்:

"அதோ பாருமே, ஒன்னை கம்பியெண்ண வச்ச, ஒத தின்னவச்ச அந்த இளங்கோப் பயல் இரண்டு குட்டிகளோட எப்படி ஜாலியா நிக்கறான் பாரு. இப்பவே அவன ஒரு சீவு சீவிட்டு வரப்போறேன்."

இதற்குள், அம்மைத் தழும்பன் அவனை ஆற்றுப்படுத்தினான்:

“என் பொறுப்புல விடுடா... நம்ம சரோவுக்கு, ரத்தக் காயத்த வாங்கிக் கொடுத்தவன், ரத்தத்துல மிதக்கணும். நானே அத என் கையால செய்யப் போறேன். டாய்! இளநியா குடிக்கற? உன் ரத்தத்த நான் குடிக்கிறனே பாரு... மவனே..."

சரோசா அவர்கள் கை ஆட்டிய திசை நோக்கிப் பார்த்தாள். இளங்கோ அவளைப் பார்த்துவிட்டு இளநீரால் முகத்தை மறைத்துக் கொண்டது போல் தோன்றியது. சரோசாவால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. போலீஸ் கொடுத்த உதையில் கழுத்து வலித்ததால் மீண்டும் சகாக்களைப் பார்த்தாள். எந்தவித கரணையும் இல்லாமல் தோஸ்துகளிடம் தன்னை ஒப்படைத்தவள் போல வழி நடந்தாள்.
-------------------

அத்தியாயம் 12

சரோசா விடுதலையாகி ஒரு வாரம் ஓடி விட்டது. இளங்கோ, அவளை இப்போது மறந்து விட்டான். அவள் விடுதலையானதைக் கேள்விப்பட்டு, பாமாவின் தந்தை மிஸ்டர். ரமணன்தான், துள்ளினார். அவருக்கு, அவள் விடுதலையாகி விட்டாள் என்பதை விட, புத்திசாலியான தனது மகளும், மக்குசாமியான கப்பையாவின் மகனும், தனது முதுகுக்குப் பின்னால் இப்படியொரு விடுதலையை வாங்கிக் கொடுத்து விட்டார்களே என்ற கோபந்தான். ஒருவேளை இந்த இருவரும் அவரையே இந்திரன் சந்திரன் என்று துதிபாடியிருந்தால், அவரே முன்னால் நின்று சரோசாவை விடுவிக்கப் பாடுபட்டிருப்பார். என்றாலும், பாமா,தனது வருங்காலக் கணவன் மீது பட்டாக்கத்தி பாயக்கூடாது என்ற பயத்தில் சரோசாவை விடுவித்தாக மறைமுகமாய் சொன்னதை ரமணன் நேரிடையாகவே புரிந்து கொண்டார். 'டா' போட்டுப் பேசும் இளங்கோவை ‘நீங்க.. நாங்க' என்று மரியாதை போட்டுப் பேசத் துவங்கி விட்டார். சங்கத்துக்காரர்கள் கமிஷனரிடம் எப்போது போகலாம் என்றார்கள். அதற்கு ரமணனோ, தானே கமிஷனரை நேரிடையாகச் சந்தித்து சங்கத்தின் தீர்மானத்தைக் கொடுத்து விட்டதாக பொய்யளந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உறுப்பினர்களுக்கு ஒரு ஆசை. ஆனால், உறுப்பினர் பதவியை புதுப்பிப்பதற்கு ஐந்தாறு ஆண்டு சந்தாக்களை கட்டியாக வேண்டும். போயும் போயும் ஒரு துப்புக்கெட்ட சங்கத்தின் விவஸ்தைகெட்ட தலைவரான ரமணனை இறக்குவதற்கு அவர்கள் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. பாக்கியம்மாவும், பாமாவின் உபதேசத்திற்குப் பிறகு, முக்கி முனங்கி வழிக்கு வந்தாள். இப்படி எல்லோரும் எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்த போது...

இளங்கோ, வழக்கம்போல் பைக்கில் ஏறினான். அலுவலகங்கள் துவங்கும் நேரம் பஸ் நிலையத்தில் நிற்கும் பாமா இந்நேரம் கத்திக் கொண்டிருப்பாள். கடந்த ஒரு வார காலமாக, இந்த பாமா பஸ்ஸில்தான் போகப் போவது போல ஒரு பாசாங்குடன் வீட்டிலிருந்து புறப்படுவாள். இளங்கோவின் வீட்டைப் பாராமலே போவாள். பிறர் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக எதிரே வருகிற பஸ்களைக் கூட தனது பஸ்தானா என்பது போல் உற்றுப் பார்ப்பாள். இந்தப் பையன் இளங்கோவும், தற்செயலாய் பஸ் நிலையம் பக்கம் பைக்கில் போவது போலவும், அங்கே அப்போதுதான் அவளைப் பார்ப்பது போலவும், வேறு வழியில்லாமல் அவளை ஏற்றிக் கொண்டு போவது போலவும், ஒரு சின்ன செட்அப். இது நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு கொஞ்சம் லேட். அம்மாவும் தங்கையும் நடத்திய வீட்டு பெரும்போரில் அவனே ஒரு ஐ.நா. வாக மாறி, தீர்க்க வேண்டிய நிலைமை.

இளங்கோ, சக்கரங்கள் கழலாமல் அவை அப்படியே நிற்பது போன்ற அசுர வேகத்தில் பைக்கை பாயவிட்டான். அந்த கிராஸ் தெருவைத் தாண்டி, பிரதான சாலைக்கு வந்து, வலது பக்கமாக வண்டியைத் திருப்பியபோது, பழைய முனுசாமி இரண்டு கைகளையும் முறுக்காய் விரித்துப் போட்டு, பிறகு, காக்காய் இறக்கைகளை ஆட்டுவது போல இரண்டு பக்கமும் கைகளை ஆட்டி வண்டியை நிற்க வைத்தான். அவன் தள்ளாடித் தடுமாறி நின்றிருந்தால் இளங்கோ வண்டியை வேறு பக்கம் திருப்பி விரைந்திருப்பான். ஆனால், முனுசாமியோ நிதானம் இழக்காமல் நின்றான். கண்களால் காரணம் கேட்ட இளங்கோவிற்கு அவன் பதிலளித்தான் :

"இன்னடா, சரோசா கொடுத்த சாராயத்துல நம்மள அம்போன்னு விட்டுட்டு அலாக்கா படுத்த முனுசாமி இப்போ முழுசா வந்து நிக்றானேனு பார்க்கிறியா? நானு வேணுன்னுதான் அப்படி நடிச்சேன். ஒரு மூட்டைப் பூச்சியை நாமே நகக்குறப்போ அது செத்தது மாதிரி சுருண்டு கீழே அப்படியே கெடக்குமே... எதுக்காம்? நாம அதை வுட்டுடுவோமுன்னுதானே... இதே போல இந்த முனுசாமி அப்படியே வீந்தா... அவளோட தோஸ்துங்க எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்கணும்பாரு... இல்லாட்டி ஒன்னோட இந்த தோஸ்து இப்போ ஒரு முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்ல முடியாமல் போயிருக்குமே."

முனுசாமி தமாசாய் பேசுவது போல் பேசிவிட்டு, மோட்டார் பைக்கின் கண்ணாடி முன்னால் முகத்தைத் தடவிவிட்டபடியே இளங்கோவின் அருகே நெருங்கிப் போனான். அடித்தொண்டையில் ரகசியம் பேசுவதுபோல் பேசினான் :

"எதுக்கும் போலீஸ்லே சொல்லி ஒரு துப்பாக்கி வாங்கி வச்சுக்கோ."

"துப்பாக்கியா? ஒரு குருவியைச் சுட்டாக்கூடப் பொறுக்காதவன் நான். நரிக்குறவங்க இந்தப் பக்கம் வில்லும் கல்லுமா வந்தால், அவங்களை சத்தம் போட்டு துரத்துறவன் நான். எனக்கு எதுக்குப்பா துப்பாக்கி?'

"ஏதோ உன் தோஸ்து, சொல்றதச் சொல்லிட்டேன். அப்புறம் ஒன்னோட இஷ்டம்.”

"விவரமாத்தான் சொல்லேன் முனுசாமி.”

“வயக்கம்போல பட்டை பூடுறதுக்கு அங்கே போனேனா... சரோசாதான் ஊத்திக் கொடுத்தாள். அப்போ அவளோட தோஸ்துங்க உன்னை பட்டாக்கத்தியாலே ஒரு சொருகு சொருகப்போறதா பேசுனாங்க. நீ வேலை பார்க்கிற ஆபீசு, பாமாவை ஏத்திட்டுப் போற பஸ்டாண்டு, நீங்க டூயட் பாடுற பீச் அல்லா இடத்துலேயும் ஒன்ன வாச் பண்றாங்கோ. இன்னும் நாலு நாளைக்குள்ளே தீர்த்துக் கட்டப் போறதாய் சாராயம் குடிக்காமலே சபதம் போட்டாங்கோ."

"இதுக்கு சரோசா என்ன சொன்னாள்?"

"ஏதோ சொன்னாள். அதுக்குள்ளே சாராயம் என்னோட தலைக்குள்ளே பூட்டு. கிக்காய் படுத்துட்டேன். சரோசா பேசறதை பார்க்க முடிஞ்சது; ஆனால் கேக்க முடியலே. இதுல்லாம் நேற்று நைட்லே நடந்த சமாசாரம்."

"சரி. இந்தா... பத்து ரூபாய். ஒரு கிளாஸ் போட்டுக்கோ."

"நானும் மனுசன்தான். இந்தவாட்டி உன்கிட்டே காசு வாங்கறது நானு உன்மேலே வச்சிருக்கிற பிரண்டுசிப்பை அசிங்கப்படுத்துறமாதிரி. ஜாக்கிரதையா போ. நானும் என் பங்குக்கு அப்பப்போ ஒட்டு கேக்கேன்."

இளங்கோவிற்கு, அவனது புல்லட் வண்டி மாதிரி உடம்பெல்லாம் ஆடியது. முடிந்து போனதாய் நினைத்த ஒன்று, ஒரு முடிச்சோடு வந்திருப்பதை அறிந்ததும், அவன், மூளை மரத்ததுபோல் நின்றான். மெல்ல மெல்ல இன்றோ நாளையோ, தான் தாக்கப்படலாம் என்ற எண்ணம் அச்சமாகி பீதியானது. அதே சமயம் நன்றி மறந்த ஒருத்தி இப்படிப்பட்ட ஒன்றில் ஈடுபட்டால் அதை சந்திக்க வேண்டும் என்ற நொந்துபோன வீராப்புடன் பைக்கை அழுத்தினான். கண்மண் தெரியாமல் ஓட்டினான். என்னதான் தனக்குள்ளே வீரம் பேசிக் கொண்டாலும், எதிரே தற்செயலாக அவனைப் பார்ப்பவர்கள்கூட அவனுக்கு எதிரிகள்போல் தோன்றியது. பாமா நிற்கும் இடத்திற்கு சரியாக முன்னால் நிற்கும் பைக்கை, சிறிது தூரம் தள்ளிப் போய் நிறுத்தினான். தோளில் ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, பாமா அவனைப் பாராதது போல் நின்றாள். பிறகு அவன் அருகே ஓடிவந்து கத்தினாள்:

"ஆமா, பைக்கை அங்கேயே நிறுத்தினால் என்ன? என்னைக் காக்க வச்சது மட்டுமில்லாமே எதுக்காக இப்படி ஓட வைக்கிறீங்க? காதல் இதுக்குள்ளே கசந்துட்டுதா? இளங்கோ ஒங்களத்தான்... ஏன் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கறீங்க?"

இளங்கோ திரும்பிப் பார்த்தான். உறுமிக் கொண்டிருந்த பைக்கை ஆப் செய்து நிறுத்தி விட்டு, அவளையே பேச்சற்றுப் பார்த்தான். அவன் உடலெங்கும் வியர்வைத் துளிகள் வெள்ளமாகிக் கொண்டிருந்தன. அந்த சாலையும், அதன் வாகனங்களும், ஏதோ ஒரு மாய உலகில் போய்க் கொண்டிருப்பது போல தோன்றியது. தலை ஆங்காங்கே அரித்தது. எதிரிகள் நோட்டமிடுகிறார்களோ என்று அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி முனுசாமி சொன்னதை பாமாவிடம் ஒப்பித்தான்.

அவள் பயந்துவிட்டாள். அவன் பேசப்பேச, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அவனை யாருக்கும் பலி கொடுக்கப் போவதில்லை என்பது போல் இடுப்பில் வில் போல் வளைந்த அவன் கைக்குள் தனது கரத்தை சக்கரம் போல் சேர்த்துக் கொண்டாள். அக்கம்பக்கத்தில் சிலர் குளு சிரிப்பாய் பார்ப்பதை அவளும் பார்த்தாள். ஆனால் பொருட்படுத்தவில்லை. அவள் தனக்காக அப்படி அல்லாடுவதில், அவனுக்கும் சுகம் கிடைத்தது. அதே சமயம் "பாமா, பாமா, நீ இப்படி உன் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஆயிரம் பட்டாக்கத்திகள் என்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை” என்பதுபோல் கால நேர சூழல் தெரியாமல் மடத்தனமாகப் பேசப்படும் சினிமா 'டைலாக்'கை பேசாமல் அவள், பேசட்டும் என்பது போல், அவளிடம் ஆறுதல் கண்டது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினாள் :

"அந்த ரவுடிப் பசங்களுக்குத் தான் அறிவில்லை, அந்தக் குப்பத்து ரவுடிப் பொண்ணுக்கு வேண்டாம்? நன்றி கெட்ட நாய்." "நாம்தான் அவள் விடுதலைக்குக் காரணமுன்னு அவளுக்குத் தெரியுமோ, என்னமோ?”

"நீங்க உங்க போலீஸ் பிரண்டு திருமலையப்பன்கிட்டே விசயத்தை சொல்லி, அவள்கிட்ட விளக்கமா சொல்லச் சொல்லி இருக்கலாமே.”

"அதுக்காகவே அவரைத் தேடி அலைந்தேன். பதினைந்து நாள் லீவுலே மதுரைக்குப் போய் இருக்காராம்."

"அடக் கடவுளே! பேசாமல் போலீஸ்லே ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுப்போமா?"

"எந்த முகத்தோட இன்ஸ்பெக்டரைப் பாக்கிறது?"

"அப்போ டெபுடி கமிஷனர் அங்கிளைப் பார்த்து துப்பாக்கி லைசன்ஸ் கேட்போமா?"

"அதுகிடைக்கிறதுக்கு முன்னாடியே என்னைத் தீர்த்துடுவாங்க"

“அப்போ என்னதான் செய்யறது?"

தாழம்பூ

“அதுதான் எனக்கும் புரியவில்லை."

“அப்படியே அவுங்க வெட்டுறதா இருந்தால், நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வெட்டணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாது. ஆமா முடியாது தான். நெசமாத்தான். சத்தியமாத்தான்."

பாமாவால், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தாரின் கவனத்தை அவள் அழுகை கவரப் போவதுபோல் இருந்தது. ஆகையால், இளங்கோ அவர்களின் கண்களில் பாமாவின் முகம் படாதபடி அட்ஜஸ்ட் செய்து நின்றான். அவளை அதிசயத்துப் பார்த்தான். எழுபது வயதுப் பாட்டியை, ஐம்பது வயது அம்மாவை அவளாக அனுமானித்தான். இறுதியில் பாமாவை, பாமாவாக அனுமானித்து அவளை பைக்கில் ஏறும்படி சைகை செய்தான். இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அவனைப் பார்த்து வந்தான். உடனே பாமா பயந்துபோய் அவனை அவசரப்படுத்தினாள். அந்த மீசை இளங்கோவிடம் மணி கேட்க வந்தது, அவர்கள் இருவருக்குமே தெரியாது. எதிரில் ஒருமாதிரி படுகிற அனைவருமே அவர்களுக்கு சரோசாவின் கையாட்களாகத் தோன்றினார்கள். இளங்கோவும் வண்டியை ரவுடி வேகத்தில் ஓட்டினான். யாராவது எதிரே பட்டாக்கத்தியை எடுத்தால் அவர்கள் மீது அப்படியே வண்டியை மோத வேண்டும் என்று முரட்டுத்தனமாக நினைத்தான். உயிர்ப் பயம் அவனைக் கோழையாகவும், வீரனாகவும் மாறி மாறி மாற்றிக் கொண்டிருந்தது.

இதற்குள் சிவப்பு சிக்னல் வந்தது. பச்சை சிக்னலுக்காக பின்னால் காத்திருக்க நிதானமற்ற பேர்வழிகள், வண்டிகளை கோலம் போடுவது மாதிரி அங்குமிங்குமாய் வளைத்து ஒரு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் இருந்த பஸ் நிலையத்தைப் பார்த்த இளங்கோ நிமிர்ந்தான். இதனால் அவன் முதுகில் சாத்தி வைக்கப்பட்ட பாமாவின் மோவாயும் அங்குமிங்குமாய் அவன் முதுகைச் சுரண்டியது. இளங்கோ பார்த்த எதிர்த் திசையில் -

சந்தேகமில்லை. சரோசாதான். எப்படி இவள் சரோசாவாக இருக்க முடியும்? வயிறு முழுப் பானை மாதிரி முன்னுக்குத் தள்ளி இருக்கே? பின்புறம் வேறு ஒரு மாதிரி தெரியுதே. இந்த ஒரு வாரத்திற்குள் அவள் எப்படி ஒன்பது மாதக் கர்ப்பிணியாகி இருப்பாள்? ஒரு வேளை, இவள், அவள் அக்காவாக இருப்பாளோ? தன்னை நோட்டம் பார்ப்பதற்கு வந்திருப்பாளோ? இல்லையானால் போலீஸ் அவள் வயிற்றில் குத்தி வீங்க வைத்திருக்குமோ? அதே முகம்; அதே தோரணை.

இளங்கோ, குழம்பிப் போனான். அதே சமயம், அவள் அவனையே பார்ப்பதுபோல் இருந்தது. அப்படி அவள், தன்னைப் பார்க்கிறாளா என்பதைப் பார்ப்பதற்காக முன்பு கல்லூரிக் காலத்தில் ‘சைட்' அடிப்பவனைக் கண்டு பிடிப்பதற்கு ஒருவன் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கைப் பயன்படுத்தினான். குறுக்காகப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சை அவன் பார்த்தான். உடனே அவளும் அந்தப் பஸ்சைப் பார்ப்பதுபோல இருந்தது. ஆகாயத்தைப் பார்த்தான். அவளும் அண்ணாந்து பார்த்தாள். சந்தேகமில்லை. இவள் பார்வையில் ஏதோ மர்மம் இருக்கிறது.

இதற்குள், பச்சை விளக்கு வந்துவிட்டது. அவன் போவதையே அந்தக் கர்ப்பிணிப் பெண்ணும், முகத்தை சுற்றவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியைத் திருப்பிய இளங்கோ, ஒரு ஸ்கூட்டர்காரனிடம் திட்டு வாங்கினான். அவனை சரோசாவின் கையாளாக அனுமானித்துக் கொண்டு இவனும் பதிலுக்குத் திட்டியபடியே வண்டியை அழுத்தினான். கால்கிலோ மீட்டருக்கு அப்பால் அதை நிறுத்தினான். அவன் தோளில் கைபோட்டிருந்த பாமா அவனது முகத்தை தன் பக்கமாகத் திருப்பிக் கேட்டாள்:

"என்ன ஆச்சு உங்களுக்கு?"

“எங்க ஆபீஸரு. அதோ, அந்த லேபர் இன்ஸ்டிடியூட்லே ஒரு விவரம் வாங்கிட்டு வரச் சொன்னாரு. சுருக்கெழுத்துல தேர்ச்சி பெற்ற ஒரு ஸ்டெனோவ ஆபீஸ்லே நியமிக்கணும். அதுக்கு டைப்பிங் வேகம் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் இருக்கணும். இந்த டைப்பிங் வேகம் சுருக்கெழுத்துலே இருந்து அதை அர்த்தப்படுத்தி டைப் அடிக்கிறதுக்கா, இல்லை ஒரு பாராவைக் கொடுத்து அதை டைப் அடிக்கிறதுக்கா என்கிறது எங்க ஆபீசுல யாருக்குமே தெரியல. இப்படித்தான் பல ஆபீசுலே ஆபீஸர்களோட அறியாமையால், பல தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை.”

"அப்போ நானும் வாரேன். உங்களைத் தனியா விடமாட்டேன்."

"அங்கே நேரமாகும். இப்ப பஸ்ல போயிடு. சாயங்காலமா ஆபீஸ்ல வந்து உன்னை பிக்கப் செய்துக்குறேன்."

"சாக்கிறதையா போங்க. ஆபீசுக்கு வந்ததும் உடனே போன் செய்யுங்க. அதுவரைக்கும் என் மனது கேட்காது."

பாமா, அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டாள். இளங்கோ, அவள் டாட்டாவுக்கு, பதில் டாட்டா போடாமல், வண்டியை ஒடித்து வளைத்து ஒரு சுற்றுச் சுற்றி, அந்தப் பெண் நின்று கொண்டிருந்த பஸ் நிலையத்தை நோக்கி வண்டியைப் பாய்த்தான். இதற்குள் அவள், அவன் வருவது தெரியாமல், ஒரு பஸ் நம்பரை உற்றுப் பார்க்காமலேயே அதில் ஏறிக்கொண்டாள். உடனே அவனும் அந்த பஸ்சை பாலோ செய்தான். அவன் மனதில் அழுத்திய குற்றச்சுமை அந்த பைக்கின் ஆக்சிலேட்டரையும் அழுத்தியது. பாமாவிடம் பொய் சொன்னதை மனம் ஒப்பவில்லை. அவன், ஆபீசர் அப்படி ஒரு விவரத்தை கேட்டுவிட்டு வரச்சொன்னது உண்மைதான். அந்த உண்மையை தனக்குச் சாதகமாக வளைத்து, தர்மர், துரோணரை ஏமாற்றியது போல் தானும் ஏமாற்றி விட்டதாக நினைத்தான். ஆனாலும் அவளுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்ததாய் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதேசமயம், ஒருத்தர் அவரது நோக்கங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக செயல்களாலேயே தீர்மானிக்கப் படுகிறார் என்று யாரோ ஒரு கிரேட்மென் சொன்னதாக ஒரு பத்திரிகையில் வெளியான வாசகங்கள் அவன் மனதை பாம்பாய் கொத்தின. அதையும் மீறி அந்த பஸ்சின் பின்பக்கம் பாம்பு போல் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தான்.

சரோசா இவளோ... அவளோ... எப்படியும் அசல் சரோசாவைச் சந்தித்து... அவள் விடுதலைக்கு தானே காரணம் என்பதை விளக்கி, அவளிடம் இருந்தும், அவள் கும்பலிடம் இருந்தும், தனக்கு விடுதலை வாங்கியாக வேண்டும்.
-----------------

அத்தியாயம் 13

அந்த ‘கர்ப்பிணிப்பெண்' பஸ்ஸிலிருந்து இறங்கி, லேசாய் திரும்பி ஓரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தாள். பிறகு இடுப்பைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றாள். பிள்ளை வயிற்றுக்குள் மோதுகிறானாம் - மீண்டும் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள். பழைய கோவில் வளாகத்தின் முனைக்கு வந்ததும், மீண்டும் நின்றாள். அந்த வளாகத்தின் எல்லையில் மானுடக் கழிவுகளாய் உட்கார்ந்திருந்த மனித வரிசையில் ஒரு கிழவர் எழுந்து சிறு குழந்தைபோல் தத்தித்தத்தி நடந்து அவளிடம் நெருங்கினார். அவரை அந்த நயினாவை - அவள் தன் பக்கமாய் சாய்த்துக்கொண்டே, தன்னையே ஊன்றுகோலாய் பிடித்துவைத்தபடி அவரை நடத்திக்கொண்டே நடந்தாள். “இன்னா நயினா, எத்தனைவாட்டிச் சொல்றது? நாஸ்தா பண்ணினோமா, குப்புற அடிச்சுப் படுத்தோமான்னு இல்லாமே, இங்கே உன்க்கி இன்னாவேல” என்று செல்லமாகக் கோபித்தபடியே, அவர் தலையில் படர்ந்த துரும்புகளைத் தட்டிவிட்டாள். அவரை அவரது வாடிக்கையான இடத்தில் குந்த வைத்துவிட்டு ஒரு ஒடுங்கு பாதைப் பக்கம் வந்தாள்.

ஒரு சின்ன பனித்துளி தன்னுள்ளே முழுப் பனையை பிரதிபலிப்பதுபோல், ஒடுங்கிய சந்தின் முனைக்கு அப்பால் தெரிந்த ஏரியாவை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பாதையைத் தாண்டியதும் அந்தக் கோவில் மறைத்த சேரிப்பகுதி தென்பட்டது. குண்டும், குழியுமான சாலை... ஒற்றைக்கண் பிசாசுபோல் பாதாளச் சாக்கடைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் சைபூன்கள். பெருமூச்சுவிடும் கார்ப்பரேஷன் பம்புகள். வளைந்து நெளிந்து சென்ற அந்தப் பாதையின் இருபுறத்திலும் நாயர்தேநீர்க் கடைகள். நாடாரின் பலசரக்குக் கடைகள்; இண்டர்நேஷனல் முடிதிருத்தகங்கள்; சர்வதேச தையல் கடைகள்; பலரை உருப்படாமல் செய்த ஒரு நடிகரின் மூஞ்சியை பல கோணங்களில் காட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தட்டிகளையே கவர்களாகக் கொண்ட ரசிகர் மன்றம்; மேடு பள்ளமுமான கோடுபோல தென்னங்கீற்று அடைத்த மறைவிடங்கள்; அந்த மறைவிடங்களையே எல்லைச் சுவராகக் கொண்ட சேரிக் குடிசைகள். ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்த பன்றிகள், நோயாளி நாய்கள்-இப்படி சாலையின் எல்லையின் ஓரங்கள் இரண்டும் சமத்துவம் இல்லாத கட்டிடங்களாய் நிரப்பப்பட்டிருந்தன. என்றாலும், அந்த ஒழுங்கீனமான கட்டிட வரிசைகளை புதைப்பது போல் அந்தக் கட்டிடம் கம்பீரமாய் நின்றது. வாசலை மறைக்கும் பால்கனி, அதன் மேல் தளத்தில் டி.வி. ஆன்டனா, உள்ளே அடுக்கடுக்காய் அறைகள், தங்கம்போல் மஞ்சளாய் மின்னும் சோபாசெட். எதிரே ஒரு டிவி செட். கீழே ஒரு விசி ஆர். மேலே ஒரு டூ இன் ஒன்.

அந்தக் கர்ப்பிணிப்பெண், உள்ளே போய் காலிங்பெல்லை அழுத்தினாள். கதவு திறக்கப்படாமலேயே, ஜன்னல் வழியாக ஒரு பெண் முகம், பேய் முகம் போல் அங்குமிங்குமாய் ஆடிக்கொண்டே பேசியது. அப்போது அதன் கழுத்தில் கிடந்த நெக்லஸ், ஜன்னல் கம்பிகளில் மோதி, 'குங்க்குங்' என்ற ஒலி எழுப்பியது.

"ஏய் சரோசா, ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது, பின்பக்கமா போகப்படாது?"

"பந்தலில பிரசவத்தை வச்சுக்க முடியாதே -"

சரோசா, அப்படிச் சொல்லிவிட்டுச் சிரிக்கத்தான் போனாள். ஆனால், சிரிப்பைக் கொடுப்பதற்காக உள்ளடங்கி விலகிப்போக வேண்டிய பற்கள், ஒன்றையொன்று கடித்துக்கொண்டன. இந்தத் தடிச்சி, இந்த வீடு 'குட்சயா' இருக்கப்போ, அந்த ஆசாமிக்கி சின்னவீடா வந்தவள். ஒண்டவந்த இந்தப் பிடாரி, இந்த வீட்டு லட்சுமியை விரட்டிட்டு. ஆரம்பத்துல கலக்கல கத்துக்கொடுத்தவளே இவதான்.பொம்மனாட்டிக்கி பொம்மனாட்டியா உதவிக்கு வந்தவள். இப்ப என்னடான்னா டாவு காட்டுறா டாவு... ‘அடியே கஸ்மாலம், நீ பூட்டிருக்குற கம்மலு, கண்டல் கஞ்சியில வந்ததுடி... கழுத்துல பாம்புமாதிரி தொங்குதே நெக்கலசு 'ஊரலுல' வந்துதுடி. என்னய்யா உள்ள வரவேண்டாம்னு சொல்ற? இதுக்குப் பேருதாண்டி டைம்ங்கறது...

சரோசா, ஜன்னலில் பதிந்த பூசணிக்காய் முகத்தை கொட்டக் கொட்ட பார்த்தபடியே, மனதிற்குள் அவளைக் கண்டபடி திட்டினாள். அந்தத் திட்டு, அவள் காதுகளுக்கு உரக்கவே கேட்டது. ஜன்னல்காரி இன்னும் கதவைத் திறக்காமல் ஏதோ பதில் சொல்லப் போனபோது, இன்னொரு முகம் தோன்றியது. அது உடம்பை நிமிர்த்தியபோது தளதளப்பான வயிறு தெரிந்தது. கழுத்து செயின் தொப்புளை மறைத்தது. சரோசா அந்த முகத்திடம் முறையிட்டாள்:

"பாரு துரையண்ணே! அக்கா கதவ தெறக்கமாட்டக்காள்."

"அடேடே, சரோசாவா? ஒனக்காகக் காத்துக்காத்து கண்ணே நோவெடுத்துட்டுது. வழியிலே பழகாத 'நாய்' ஏதும் மடக்கிட்டோன்னு பயந்துட்டேன். ஏய் சாந்தி, கதவத்தெறமே.”

"சாந்தி, சாந்தியில்லாமல் முனங்கிக்கொண்டே அந்தக் கதவை, வீறிட்டுக் கத்தும்படி இழுத்தபடியே திறந்தாள். சரோசாவோ சொந்த வீட்டுக்குள் நுழைவது போல, உள்ளே போனாள். துரையையும், பெரிய வீடாகிப் போன அவன் சின்ன வீட்டையும் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு, அவர்கள் நின்ற வரவேற்பு அறையைத் தாண்டி, இரண்டாகப் பிரிந்த ஒரு கிளை அறைக்குள் போனாள். வயிற்றில் ரப்பர் கயிற்றால் கட்டியிருந்த கால்பந்து பிளாடரை எடுத்து, அங்கிருந்த ஒரு மேஜையில் வைத்தாள். இதனால், பின்பக்கம் ரப்பர் கயிற்றின் பிடி தளர்ந்தது. பிட்டத்தில் பொருத்தப்பட்ட இன்னொரு பிளாடர் கீழே விழப்போனது. சரோசா அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பிறகு அதை மேஜை தொட்டிலில் கிடத்தினாள். இப்படி தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு, ஜாக்கெட்டை இழுத்துவிட்டு சுருங்கிப்போன பாவாடையை கால்வரைக்கும் பரப்பிவிட்டுக் கொண்டு, புடவையை கட்டினாள்.

சரோசா, பட்டறிவால் பேசினாள் :

"இனிமே ரூட்ட மாத்தணுமுண்ணா! பஸ்சுல ஏறப்போ ஏறுக்கு மாறா பார்க்கிறாங்க. நாவலூர் பக்கமும் ஒரே ரெய்டு. இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். ஸ்பாட்டுக்கு வராண்டாம்னு மணி சொல்லிட்டான். சவுக்குத் தோப்புக்குள்ள போகச் சொன்னான். அங்க வந்து சரக்கக் கொடுத்தான்.”

"நீ சொல்றதும் சரிதான். இனிமே கடல்வழியா சரக்கக் கொண்டு வரணும். கர்ப்பிணிப் பொண்ணுவேடம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிப்போச்சு.'

"எனக்கு பயம்மா கீதுண்ணா... போலீஸ்ல அவ்வளவு ஒத தின்ன பொறகு வாய்க்கையே வெறுத்திட்டு. பழையபடி மாட்டிக்கிட்டா ஒடம்பு தாங்காதுண்ணா.”

“தொழிலுல இதெல்லாம் சகசம்மே.”

துரைக்கு, நாற்பது வயதிருக்கும். கறுப்பு என்றாலும், காக்கா பொன்கறுப்பு, துருத்திய வயிறு என்றாலும் அதைத் தூக்கி நிறுத்தும் உறுதியான மார்பெலும்பு, சரோசாவின் வயிறு மேலே பிரசவித்த சரக்குகளை கரங்களில் ஏந்தி முன் நடந்தான். சரோசா, அவன் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகக் கூட ஒரு வார்த்தை சொல்லாமல், தொழில் தர்மத்தை அவன் சொல்லி க் காட்டியது, ‘வேணுமுன்னா இருந்தா இரு, இல்லாவிட்டால் போ' என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் யோசித்து நடந்ததால் நிலைப்படி நெற்றியில் தட்ட, அதை தடவிவிட்டுக் கொண்டே குனிந்து பின்புற வரவேற்பறைக்கு வந்தாள். அங்கே கிடந்த இரண்டு நாற்காலிகளின் சட்டங்களிலும், இருகால்களையும் ஒருகால் மாதிரி போட்டுக் கொண்டு இரண்டுபேர் அட்டகாசமாய் கிடந்தார்கள். அவளைப் பார்த்ததும் தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவளோ செல்லாக் கோபத்தை பொறுமையாக்கி, புறவாசலில் இருந்து கீழே குதித்தாள்.

புறவாசலையொட்டி ஒரு பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. தென்னங்கீற்றிலான மூங்கில் பந்தல். மூன்று பக்கம் மறைத்து ஒரு பக்கத்தை வாயாகக் காட்டிக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் கடலே ஒரு அடைக்கலம் மாதிரியும் காட்சியளித்தது. இந்தக் கடலிலிருந்து தோணிகளில் சரக்குகள் வருவதும் போவதும் சகஜம். அந்தப் பந்தலுக்குக் கீழே ஓரடி உயரத்திற்கு மணல் பரப்பு. ஏழெட்டுபேர் தாறுமாறாகக் கிடந்தார்கள். ஒருவன் படுத்தக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் குப்புறக் கிடந்தான். ஒருத்தன் கல்லுளிமங்கனாய் சுவரில் சாய்ந்திருந்தான். அத்தனைபேர் முன்னாலும் கண்ணாடிக் கிளாஸ்களில் வெள்ளித்திரவம் நிரம்பியிருந்தது. ஒரு அம்மைத்தழும்பு ஆசாமி வெளியே இருந்து உள்ளே வந்தான். இன்னொருத்தன், வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். வெளியேயிருந்து வந்தவன், வேர்க்கடலைப் பொட்டலங்களையும், சிகரெட் பாக்கெட்டுகளையும் கொடுத்தபோது, உள்ளேயிருந்து வந்தவன் நண்டுகளையும், இரால்களையும், மசாலா முட்டைகளையும் ஆவிபறக்கக் கொண்டு வந்தான். அந்தப் பக்கமாய் வந்த சரோசா முட்டுக்காலிட்டு உட்கார்ந்தாள். இதற்குள் துரை ஒரு கேனை கொண்டுவந்து, ஒரு கடிகார ஆசாமியிடம் ஒரு கிளாஸ் நிறைய ஊற்றினான். அந்த ஆசாமி சந்தேகம் கேட்டான் :

"ஏம்பா, இது நெசமாவே ஸ்பெஷல்தானா?"

துரை பதிலளிக்கப் போனபோது, சரோசா அந்த ஆசாமியின் முன்னாலிருந்த கிளாசைப் பிடுங்கினாள். மணல் இல்லாத வழுக்கைத் தரையில் நான்கைந்து சொட்டுக்களை ஊற்றினாள். ஒரு ஆசாமியின் முன்னால் கிடந்த தீப்பெட்டியை அங்கிருந்து படுத்தபடியே, கையில் கவ்விக்கொண்டு நிமிர்ந்தாள். சாராயத்துளிகள் மேல் தீக்குச்சியை உரசி மேலே பிடித்தாள். அந்தத் திரவம் குப்பென்று பற்றி எரிந்தது. இனந்தெரியாத ஒரு 'கிக்' நெடி - கடல் காற்றும், கருவாட்டு வாடையும், சடசடவென்று சத்தம் போட்டு அந்தத் திரவத்திற்கு ஒரு மவுசைக் கொடுத்தன. சரோசா வியாக்யானம் செய்தாள் :

"எங்கத் தொழிலு மோசந்தான், இல்லங்கல. ஆனால் அதுலயும் ஒரு நியாயம் கீது. ஸ்பெஷல் கிளாஸ் பத்து ரூபா, சாதா அஞ்சு ரூபா. வேணுமுன்னா ரெண்டையும் குடிச்சு, டெஸ்ட் பண்ணிக்கோ; இல்லாட்டி நடையக்கட்டு."

அப்போது முப்பது, முப்பந்தைந்து வயது ஆசாமி ஒருவன் உள்ளே வந்தான். குறுந்தாடிக் காரன். சரோசாவின் அப்போதைய வயிறுமாதிரி அவனுடைய வயிறும் பெருத்திருந்தது. சட்டென்று சட்டையைத் தூக்கி மறைத்து வைத்திருந்த நான்கு தேங்காய்களைக் கீழே வைத்தான். பனியனுக்குள் கிடந்த, ஒரு சீப்பு வாழைப்பழத்தையும், இரண்டு ஆப்பிள் பழத்தையும் எடுத்துவைத்தான். சரோசா சிரித்துக் கொண்டே கேட்டாள்:

“என்ன கோவிந்தண்ணே, கண்டக்கஞ்சி கிடைக்கலியா?”

"அத ஏம்மா கேக்கிறே; அந்த கஞ்சிக்காரன், நானு பத்து வருஷம் சர்வீசு போட்டிருக்கறதையும் கணக்கில எடுத்துக்காம வெரட்டிட்டான். காசு இல்லாகாட்டி என்னம்மா? சரக்குக்கு சரக்கு கொடுக்கிறப்போ வாங்கினா என்னம்மா? சோதாப்பய, என்னைய சாதாப்பயலா நினைச்சிட்டான்... தூ."

சரோசா, என்ன செய்யலாம் என்பது போல் துரையைப் பார்த்தாள். துரை, அந்த சுண்டக்கஞ்சிக் காரனோடு ஒருவார காலமாக நிழல் யுத்தம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு சொம்புக் கஞ்சியை அவன் பதினைந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு இறக்கியதால், இவன் கலக்கல் விற்பனைக்குக் கஷ்டம் வந்திருக்கிறது. இதனால், இரண்டு கோஷ்டிகளும் கம்பு, அரிவாள் இல்லாமல் மோதிக்கொண்டன. ஆகையால் இப்போது அவன் ஜாக்கிரரையாய் பேசினான் :

"இந்தாப்பா, ஊர்க் கத வேணாம். தேங்காய் ரெண்டு ரூபா; வாயப்பயம் அஞ்சு ரூபா; ஆப்பிள் எட்டணா. இஷ்டமிருந்தாக் கொடு. இந்தக் கணக்குப்படி ஒனக்கு ரெண்டு கிளாஸ்கூடத் தேறாது. ஆனாலும் தாரேன், சம்மதமா?"

கோவிந்தின் சம்மதமில்லை என்பது போல் வாயை பன்றி உதடுகள் மாதிரி ஆக்கிக் காட்டினான். பிறகு எகிறப்போனான். எகிறினான்.

"இன்னாடா துரை... பெரிய தொரைன்னு நெனைப்பா? நேத்து பெய்த சாராய மழையில இன்னிக்கி வந்த காளான் பய நீ...நாலு ரூபா தேங்காய ரெண்டு ரூவாய்க்கி கேக்கிறீயே, இந்தக் குப்பத்துல நீ மட்டும்தான் காய்க்கிறேங்கிற திமிரா, இன்னாடா?”

துரை, அவனை அலட்சியமாகப் பார்த்தான். 'நீயெல்லாம் தாங்குவிடாயா' என்பது மாதிரி. இதற்குள் கோவிந்தின் உள்ளே 'சரோ ... சரோ...' என்ற சத்தம் கேட்பதைப் பார்த்து எட்டிப் பார்த்தான். பிறகு வாயை சுருக்கி, தலையை குறுக்கி அவர்களின் கால்பக்கத்திற்கு இணையாக தலையைக் கவிழ்த்துக்கொண்டே கெஞ்சினான்:

“நீங்கோ அந்தண்ட இருக்கத பார்க்கல சாரே; மன்னிச்சிடுங்கோ சாரே."

உள்ளேயிருந்து ஒரு குரல் அதட்டியது:

"ஜல்தியா குடிச்சிட்டு ஜல்தியா போயேன்யா. வெளியில போய் நாங்க இருக்கோம்னு ஔறி வச்சே, கையில காப்புதான்.”

“அய்யோ சாரே, அப்படிச் செய்வேனா? உங்கள் இன்னிக்கி நேத்துமா பாக்கேன், எத்தன வருஷமா பாக்கேன்."

அந்தப் பந்தலில் மரத்தூணில் சாய்ந்தபடி கல்லுளிமங்கனாக இருந்த ஒருத்தர், இப்போது கீழே விழுந்தார். பறவைகள் மாதிரி விநோதமான சத்தங்களை எழுப்பினார். இதற்குள் அம்மைத் தழும்பனும், டவுசர் போட்ட ஒருவனும் துரையைப் பார்க்க, அவன் கண்ணடித்தான். அந்த ஆசாமியின் சட்டைக்குள் கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளில் இரண்டை எடுத்து சுருட்டு மாதிரி காதில் மடித்து வைத்துக் கொண்டு, மூன்று நோட்டுகளை அவரது பைக்குள் திணித்துவிட்டு, அவரை அலாக்காகக் தூக்கிக் கொண்டு வெளியே போனார்கள். இந்தச் சமயத்தில் உள்ளே இருப்பவர்கள் "சரோ... சரோ... கமான்” என்று சத்தமிட்டார்கள்.

சரோசாவுக்கு எரிச்சலாக இருந்தது. கஷ்டப்பட்டு கர்ப்பிணியாய் வந்த தன்னை அலட்சியமாகப் பேசி அந்த உழைப்பை அங்கீகரிக்காத துரையின் மீது ஒரு கோபம். சொந்தப் பெண்டாட்டியைக் கூப்பிடுவது போல கூப்பிடும் போலீஸ் துரைமார்கள் மீது இன்னொரு கோபம். அடிஅடியென்று அடித்துவிட்டு, இப்போது அணைக்கத் துடிக்கும் அந்தக் கரங்கள் அவளுக்கு வெட்டரிவாளாகத் தோன்றின. இவ்வளவுக்கும் காரணம் யார்? அவன்... அந்தக் குயந்தப் பய அவன விடப்பிடாது...

சரோசா தனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள். போதாக் குறைக்கு, துரை அண்ணன் வேறு அவள் கர்ப்பிணி கஷ்டத்தை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது அழுகையை அழுத்தமாக்கிறது. இந்தச் சமயத்தில் அந்தப் பெரியவரை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவர்கள், காதில் மடித்து வைத்த இரண்டு நோட்டுக்களை துரையிடம் கொடுத்துவிட்டு, சரோசாவைப் பார்த்து ஒரு தகவல் சொன்னார்கள்:

"சரோ! நீ சொல்லுவியே கொழந்தப்பய 'இளங்கோ', கோவில் பக்கமா ரவுண்டடிச்சுட்டு நிக்காம்மே”

சரோசா ஆணையிடுவது போல் பேசினாள் :

"நான் பஸ்ல வரும்போதே அந்த கஸ்மாலம் பாலோ பண்ணுவதுபோல தோணிச்சு. வீட்டுக்குப் போறான்னு நினைச்சது எவ்வளவு தப்பாப்போச்சி. என் நிம்மதியக் கெடுக்கத்துக்குன்னே முளைச்சிருக்கான் அந்த சோதாப்பயல். என்ன ஏதாவது செய்யும் முன்னாடி, நீங்க அவன ஏதாவது செய்துட்டு வாங்கோ."

அந்த இருவரும் கீழே கிடந்த இரண்டு உருட்டுக் கட்டைகளை எடுத்துக்கொண்டு புறப்படப்போனார்கள். “பாவம், அல்பாய்சு அவனுக்கு" என்று ஒருவன் சொல்லிவிட்டு வெறிச்சிரிப்பாய் சிரித்தான்.
------------------

அத்தியாயம் 14

அந்தப் பந்தல் மாளிகையிலிருந்து வெளியேறப் போன இரண்டு கிங்கரர்களும் உடம்பை குழைவாக்கிக் கொண்டே குழையடித்தார்கள். “வாங்கண்ணே வாங்கண்ணே” என்று பரபரப்பான குரலோடு, கண்ணுதவி இல்லாமலே பின்னோக்கி நடந்தார்கள். உள்ளே வந்தவர், அந்த மணல் பரப்பில் வளையம் போட்டுக் கிடந்தவர்களை நோட்டமிட்டார். கருவாடும், கிளாசுமாக இருந்த அவர்கள், அவரை கண்டுக்கவில்லை. ஒரேயொருத்தர் நாலு கிளாசுகளை உள்ளே தள்ளியபிறகு ஞானத்தின் உச்சநிலையில் இருந்தார். பரம சாதுவாகத் தோன்றிய அவர், அந்தப் புதிய மனிதரைப் பார்த்து ஆசீர்வாதம் செய்ய கையை தூக்கியபோது, துரை அந்த கைக்குள் இன்னொரு கிளாசை வைத்தான்.

உள்ளே வந்தவருக்கு, ஐம்பது வயதிருக்கலாம். முகம் காய்ப்புக் காய்ப்பாயிருந்தது. தலை பம்மைபோல் தோன்றியது. ஆசாமி கொஞ்சம் குள்ளம்; ஆனாலும் அழுத்தமான உடம்பு. பழுத்த மஞ்சள் நிறத்தில் சபாரி உடை. தலைமட்டும் கொக்கு மாதிரி துண்டாகத் தெரிந்தது. ஆக்கல் (ஊரல்), காத்தல் (காய்ச்சல்) அழித்தல் (விற்றல்) ஆகிய முப்பெரும் தொழில்களைச் செய்யும் மூர்த்திமும். ஒருகாலத்தில் பைசாக்களுக்காக ஏங்கியவரை, இப்போது லட்சங்கள் ஏக்கமாய் பார்க்கின்றன. பேங்கில் உள்ள லாக்கர்கள் ராமனுக்குக் காத்திருந்த அகலிகை போல் காத்திருக்கின்றன. விருகம்- பாக்கத்திற்கு அப்பால் உள்ள காட்டுப் புதர்களில் தலைகளை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பானைகளையும், மகாபலிபுரம் சாலைகளில் மயானப்பகுதிகளில் காய்ச்சும் பானைகளையும், நகரம் எங்கும் நடமாடும் வேன்களையும் ஆதிக்கம் செய்பவர். ஆனாலும், அவரிடம் சில நல்ல குணங்கள் உண்டு. குடிக்க வைப்பாரே தவிர, அடிக்கமாட்டார். அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார். இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு மனிதர் பரமசாது. கேட்பதற்கோ இனிமையான குரல்... பழகுவதற்கு சர்வகட்சி மனிதர். அவரிடம் நன்கொடை வாங்காத கட்சிகளோ, பிரமுகர்களோ இல்லை என்று சொல்லலாம்.

சரோசா, ஏதோ பேசப்போனபோது, துரை அவள் வாயை தன்கழுத்தால் மறைத்தபடி, "வாங்கண்ணே, உள்ளே வாங்கண்ணே! நாய் மாதிரி ஓடிவர நானிருக்கப்போ... நீங்க எதுக்கண்ணே இங்க வந்தீங்க” என்று அசல் நாய்மாதிரி பிட்டத்தை ஆட்டிக்கொண்டு, அவரை நெருங்கிப் போனான். அந்த மனிதர்“ஏன் நான் இங்க வரப்பிடாதுங்கிறீயா” என்று சொல்லி விட்டுச் சிரித்தார். கடிகார தங்கச் செயினையும், அதற்கு இணையாகக் கட்டியிருந்த ஒரு தாயத்தையும் தடவி விட்டுக்கொண்டார்.

"உள்ளே வாங்கண்ணே!"

"இப்போ அதுக்கு நேரமில்லை.”

துரைக்குப் புரிந்துவிட்டது. அண்ணன், கணக்கு வழக்குப் பார்க்க வரல. போலீஸ் ரெய்டப்பத்தி எச்சரிக்கவும் வரல. அப்படி வந்திருந்தா முன்பக்கமாய் வந்திருப்பார். அங்கேயே சோபாசெட்டில் உடம்பைக் கிடத்திக்கொண்டு சாந்தியோடு சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கொண்டிருப்பார். 'துரை எங்கே' என்று அவளிடம் ஒப்புக்குக்கூட கேட்டிருக்க மாட்டார். அண்ணனின் ரத்தக்கண்களைப் பார்க்கும்போது அவர் 'அதுக்குத்தான்' வந்திருக்கார். துரை எண்ணெயும் நெய்யுமாய் குழைந்தான்.

"அண்ணே, நம்ப ஆட்களுக்கு சொல்லியனுப்பட்டுமா?"

"இதை கேட்டுக்கிட்டா செய்யணும்?”

துரை உள்ளே ஓடிப்போய் ஒரு நாற்காலியை எடுக்கப்போனான். பிறகு இந்த மாதிரி சமயங்களில் அண்ணன், ஒற்றைக்காலில் நின்றாலும் நிற்பாரே தவிர, உட்காரமாட்டார் என்று உள்ளே ஓடினான். ஜன்னல் வழியாக அண்ணனைப் பார்த்த தனது வீட்டுக்காரியை, அவர் கண்ணில் காட்டாமலே உள்ளே இழுத்துப்போனான். வெளியே நின்ற அண்ணனின் கண்களில் அப்போதுதான் சரோசா விழுந்தாள். அன்போடு கேட்டார்.

"என்ன சரோசா டல்லா இருக்கே?"

"அண்ணாத்தே இருந்தும், நானு டல்லாப்போற தலைவிதி வந்துட்டு.”

"நானும் கேள்விப்பட்டேன். இந்த துரை கையில என்ன வளையல் போட்டுகினு இருந்தானா?"

"பூட்டுப்பூட்டு நச்சிட்டாங்கண்ணே. முதுக பென்ட் எடுத்துட்டாங்கண்ணே. இன்னும் தலைய திருப்ப முடியலண்ணே. அண்ணன் இப்படிப் பேரும் புகழுமா இருந்தும் நானு பொம்மனாட்டி நாதியில்லாம போயிட்டேண்ணா.''

அண்ணன், சரோசாவின் பக்கம் போகப்போனர். பிறகு அது தனது தகுதிக்குக் குறைவு என்பதுபோல் அவளை தன்பக்கம் வரும்படி கையாட்டினார். அவள் வந்ததும், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே ஆறுதல் சொன்னார்:

“நீ சொல்லிட்டே... நான் சொல்லல. அந்தச் சமயம் பார்த்து அண்ணன்வேற ஆந்திராவுக்கு அரசியல் விஷயமாய் போயிட்டேன். இந்த சோமாரி துரை, ஒரு டெலிபோன்ல எனக்குச் சொல்லி யிருக்கலாம். அனுமார் சஞ்சீவி மலைய தூக்கிக்கிட்டுப் போனதுமாதிரி நீ இருந்த போலீஸ் ஸ்டேஷனையே தூக்கிக்கிட்டு வந்து ஒடைச்சிருப்பேன். இப்பவும் குடிமூழ்கிடல. ஸ்டேஷன்ல ஒன்ன எந்தெந்தப் பசங்க ஒதச்சாங்களோ அவங்க நம்பர்ங்களை என்கிட்டக் குடு... அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு. ஏண்டா துரை ஒன் பொண்டாட்டிய போலீசுல இப்படி கூட்டிக்கிட்டுப் போய் ஒதுச்சா நீ சும்மா இருப்பியாடா கயிதே, கயிதே. சரோசா நம்மப் பொண்ணுடா.'

கையாட்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு மூச்சிறைக்க அங்கு வந்த துரை, அண்ணனை பயந்து பார்த்தான். அவன் சிந்தனையெல்லாம் அண்ணனை சம்சாரம் பார்க்கிறாளா என்பதில்தான் இருந்தது. அந்தக் கணக்கில், சரோசா கணக்கைக் கழித்துவிட்டான்.

அண்ணன், அதட்டலோடு பார்த்தபோது, துரை பேச்சை மாற்றினான். லாக்கப்பிலிருந்த சரோசாவை தான் மீட்பதற்குப் புறப்பட்டபோது தனக்குன்னு வாய்ச்சவள் 'போகாதே போகாதே என் கணவா' என்று தன்னை அழவைத்துப் பேசியதை அண்ணனிடம் எப்படிச் சொல்வது? ஆகையால் அவன் பேச்சை மாற்றினான்.

"ரெய்டு வராங்கன்னு சொல்றாங்கண்ணே!”

"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு எட்டணா என்கிற கதையில பேசுறீயே? என்ன சரோசா! ஏதோ எங்கிட்ட சொல்லணும்போல நிக்கிறே?”

"ஆமாண்ணே... என்ன போலீசுல பிடிச்சுக்கொடுத்த ஒரு பிள்ளாண்டான் ரோதனை தாளலண்ணே. அண்ணன் கம்பெனியில சரக்க எடுத்துக்கிட்டு பஸ்சுல கர்ப்பிணியா சிங்காரிச்சுட்டு வந்தேன்னா, இவன் என்னடான்னா மோட்டர் பைக்கில பாலோ பண்றான். இப்பகூட மெயின் ரோட்ல நிக்கானாம். எனக்கு பயமா இருக்குண்ணே. பழையபடியும் உள்ளே போயிட்டா அப்பால நயினா கதி?"

துரை, சரோசாயை அண்ணன் போனபிறகு தாளிக்க வேண்டும் என்று உடனடியாகத் தீர்மானித்தான். ஆனால், சரோசாவோ கண்கள் துருத்தி நிற்க, லேசாய் விம்மப்போனாள். அதற்குள் அண்ணன், அவள் தலையை தடவியபோது, அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. அவரும், அங்கே நின்ற அம்மைத்தழும்பனை அதட்டினார்:

"ஏண்டா டேய், வெள்ளையா! நம்ம ஏரியாவில, அவன் நம்மள டபாய்க்கிறான்னா என்னடா அர்த்தம்? இன்னுமா பயல அந்தப் விட்டுவச்சிருக்கீங்க? உங்களால முடியாட்டி சொல்லுங்கடா சோதாப்பசங்களா."

'அவன ஒழுங்கு பண்ணத்தாண்ணே புறப்பட்டோம். அதுக்குள்ளே அண்ணன் வந்துட்டீங்க. நாலு நாளைக்கி முன்னேயே முடியவேண்டிய கேசு. சரோசாதான் தடுத்துட்டாள்.”

"நெசந்தாண்ணே, இவங்கோ அவன சாவடியா அடிச்சிட்டால், அப்பால பங்களாக்காரங்க என்னை போலீசுல ஒப்படைச்சிடப் படாதேன்னு பயந்தது நிசந்தாண்ணே. என்னோட பயத்தில நியாயமிருக்குண்ணே. ஏன்னா, பழகின போலீசே பயங்கரமா அடிச்சிட்டாங்கண்ணே."

"போலீஸ், பெரிய போலீஸ்! நானு பார்க்காத போலீசா? பொறுப்ப என்கிட்ட விட்டுடு. அவன் பங்களாவக்கூட இடிச்சிக்காட்டுறேன். சில விஷயங்களுல நாம முந்திக்கணும். அவன ஒன்னை பாலோ செய்யறது, என்னை செய்யறதுமாதிரி. இன்னிக்கே அவன ஒரு வழி பண்ணிடறேன்.”

அண்ணன், சபாரி சட்டையை தூக்கிப்பிடித்து, பனியன் போடாத வயிற்றைக் காட்டியபோது, பத்துப்பதினைந்துபேர் தற்செயலாய் வருவதுபோல் ஒருவர்பின் ஒருவராக வந்தார்கள். உகாய் பேன்ட் போட்டு, சட்டைகளை இன் செய்த மூன்று பேர்... பின்பக்கமாய் முடிவளர்த்த மூன்றுபேர்... அகலவாக்கில் இரண்டு, நீளவாக்கில் நான்கு... அத்தனைபேரும் அண்ணனை ஒரே கண்ணாய் பார்த்தார்கள். ஆனால் அண்ணனோ சுற்றும்முற்றும் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட துரை, இன்னும் குடிக்கக் கேட்ட பரமசாது மனிதரையும், மணலில் புரண்ட ஒருவரையும் கழுத்தைப் பிடித்து தூக்கியபோது நான்கைந்துபேர் அவர்களை மென்மையாகப் பிடித்துக் கொண்டு வெளியே போனார்கள். வெளியே கோவிந்தன் கூப்பாடு போட்டான். "இன்னாய்யா பொண்டாட்டிகூட இப்படி தொடமாட்டாள்... அப்படி தொடறீங்களே. டச் பண்ணாதய்யா. நீயுமாச்சு உன் சரக்குமாச்சு; ஒரு சொம்பு கண்டக்கஞ்சிக்கி ஒன் ஸ்பெஷலு ஜமாய்க்குமா? இன்னாய்யா ஸ்பெஷலு... பொல்லாத ஸ்பெஷலு.'

வெளியே போட்ட கூப்பாட்டை அண்ணன் சிரித்துக் கொண்டே உள்வாங்கினார். பிழைச்சுப் போகிறான் என்பது மாதிரியான சிரிப்பு. எவரையும் தன்னால் எதுவும் செய்யமுடியும் என்றாலும், அப்படி முடியக்கூடியதை செய்யாமல் இருக்கும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு போனதும், அண்ணன் கிசுகிசுப்பாகப் பேசினார்:

"இன்னிக்கி நைட்ல கரைக்டா ஒருமணிக்கு, நம்ம லாரி தியாகராய நகர்ல ஒரு பங்களாவுக்குப் போகுது. அந்த வீட்டுல இருக்கிறவங்கள நாம வழக்கமா செய்யறது மாதிரி செய்துடணும். நம்ம ஆசிரமத்துக்கு எட்டு மணிக்குள்ள வந்திடுங்க. இந்தா துரை, ஆயிரம் ரூபா... பசங்களுக்கு கேக்கறதயெல்லாம் கொடு... ஏழரைக்கெல்லாம் அவங்கள வழியனுப்பி வைக்கிறதுக்கு நீதான் காரண்டி."

"சரிண்ணே! எந்த பங்களா? என்ன விஷயமாய்?"

“ஒனக்கு சம்பந்தமில்லாத விஷயம்... ஆனாலும் சொல்றேன். அந்தப் பங்களாவை ஒரு சேட்டு இருபது லட்ச ரூபா கொடுத்து வாங்கியிருக்கான். ஆனா அந்த வூட்டுல பத்து வருஷமா வாடகைக்கு இருக்கிற சோமாரி பெரிய ஆபீசராம். காலிபண்ண மாட்டானாம். கோர்ட்டுக்குப் போடான்னு சொல்லிட்டானாம். சேட்டு, என்னையே கோர்ட்டா நினைக்கிறான். காலி பண்ணாதவனை 'காலி' பண்ணாம முடியுமா?"

அனைவரும், அண்ணனை அதிசயித்துப் பார்த்தார்கள். சிலர் விசிலடித்துக் கொண்டார்கள். துரை தவிர மற்றவர்களுக்குக் கொண்டாட்டம். ஆசிரமம் என்று சொல்லப்படும் அனாதரவான இடத்தில், உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் உள்ள ஒரு கல் கட்டிட வீட்டுக்குள் இருக்கும் சைக்கிள் செயின்கள், பட்டாக்கத்திகள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு லாரியில் போகவேண்டும். அண்ணன் காட்டுற பங்களாவில இருக்கிற வங்களை ராத்திரியோட ராத்திரியா தூக்கித்தூக்கி லாரியில போடணும். உயிருக்கு ஆபத்து இல்லாம ஊமைக் காயங்களாய் ஏற்படுத்தி, தட்டுமுட்டுச் சாமான்களோட ஏத்தணும். அப்புறம் தெற்கே செங்கல்பட்டுப் பக்கமோ, வடக்கே எண்ணூர் பக்கமோ நடுக்காட்டுல விட்டுடணும். ரோந்து போலீஸ் பார்த்தால், அண்ணன் கவனிச்சுக்குவார். அந்த வாடகைக்கார ஆபீசரு குடும்பத்தோட கோர்ட்டுக்குப் போனால்..? அண்ணனுக்கு அதுக்குன்னே வக்கீலுங்க இருக்காங்க. அப்படிப்பட்ட ஒரு வீட்டுல இப்படிப்பட்ட ஒரு குடும்பம் இல்லவே இல்லன்னு நிரூபிச்சுடுவாங்க.

கையாட்கள், ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆனந்தக் கூத்தாடியபோது, துரை மட்டும் வயிற்றைத் தடவினான். அண்ணனுக்கு இந்த விவகாரத்தில் குறைஞ்சது அய்ந்து லட்ச ரூபாய் கிடைக்கும். இந்தப் பசங்களுக்கு மொத்தம் இருபதாயிரம். எனக்கு அஞ்சே அஞ்சாயிரம்... அற்பக்காசு. அப்புறம் அவ்வளவும் முள்ளங்கிப் பத்தையா அண்ணனுக்கே! அட கண்றாவியே! இன்னாய்யா நியாயம்?

அண்ணன், தனது மோவாயை மோப்பம் பிடிப்பதைப் பார்த்த துரை, சமாளித்தான். “வூட்டுக்குள்ள வாங்கண்ணே" என்று உள்ளே நடமாடிய வீட்டுக்காரியை நோட்டம் போட்டபடியே கேட்டான், நானு இல்லாதப்போ முன்பக்கமா வந்து அந்த முண்டக்கிட்ட குழையுறது. இருக்கப்போ பின்பக்கமா வாரது... இந்த அண்ணன் எந்தப் பக்கத்துல சேர்த்தி?

அண்ணன், லேசாய் புன்முறுவல் செய்தார். பிறகு ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை சரோசாவின் கைகளில் திணித்துவிட்டு, "சீக்கிரமா வாங்கடா, முடிச்சப் பொறவு குடிக்கலாம்; குடிச்சப் பொறவு முடிக்க முடியாது" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

அந்த செட்டு, அண்ணன் பின்னால் இப்போது போகக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயே நின்றது. ஆனால், அண்ணனுடன் உருட்டுக் கட்டைகளோடு நான்கு பேர் புறப்பட்டார்கள். அவர்களுக்கு எதிரே வந்த பன்றிகளையும், கோழிகளையும் விரட்டியபடியே வழியமைத்துக் கொடுத்தார்கள். அண்ணன் கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தபோது, அவர் முன்னால் ஒரு மாருதி கார் வந்து நின்றது. உட்காரப்போன அண்ணனைப் பார்த்துக் கண்ணடித்து, அருகேயுள்ள ஒரு விடுதியில் இளங்கோ ஒரு சர்பத்தையோ, குளிர்பானத்தையோ உறிஞ்சிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அண்ணனும் அங்கே பார்த்து லேசாய் தலையாட்டிவிட்டு, ஒருவன் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மாருதி, காற்று வேகத்தில் பறந்தது.
----------------

அத்தியாயம் 15

அண்ணனை வழியனுப்பி வைத்துவிட்டு, அந்த நால்வரும், அந்த விடுதிப் பக்கமாக வந்தார்கள். வரிசையாக உள்ள மூன்று விடுதிகளில் முக்கியமான விடுதி அது. அங்கே வகுப்பறை போல் திறந்தவெளியில் நாற்காலி மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒரு பாட்டிலுக்குள் கொக்கு மூக்கு மாதிரியான ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சிக்கொண்டிருந்த இளங்கோவை நின்ற இடத்தில் நின்றபடியே “டாய் ஒன்னத்தான், இங்க வாடா” என்றனர்.

விடுதிக்காரர் எதுவும் நடக்காதது போல், முகத்தை முதுகாக்கிக் கொண்டார். அங்கே உட்கார்ந்திருந்த டூரிஸ்ட்கள் அவன் நண்பர்கள் அவனைக் கூப்பிடுவது போல் நினைத்தார்கள். தலைநிமிர்ந்த இளங்கோ, புரிந்துகொண்டான். அதேசமயம் அவர்களிடம் சரோசாவை. தான்தான் மீட்டுக் கொடுத்தது என்று ஆதியோடு அந்தமாகச் சொன்னால், அவர்களை சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினான். ஆனாலும் உள்ளே ஒரே உதறல். மெல்ல எழுந்து அவர்களை சிநேகிதமாகப் பார்த்துக் கொண்டு அருகே போனான். அங்கே நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கில் கையைப் போட்டுக்கொண்டே அவர்களிடம் அவன் பேசப் போனபோது, அந்தக் கும்பல் அவனை மல்லாக்கத் தள்ளியது.

இளங்கோ மட்டும் மல்லாக்க விழவில்லை. அவன் ஆதாரமாகப் பற்றிய பைக்கும் அவன்மேல் விழுந்தது. அவன் அந்த வாகனத்திற்குள் அங்குமிங்குமாய் நெளிந்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் வந்து பைக்கை அவனோடு சேர்த்துத் தரதரவென்று இழுத்தார்கள். பிறகு அந்த பைக்கைத் தூக்கி வேறுபக்கமாய் தள்ளினார்கள். இரண்டு பேர் பெரிய பெரிய கற்களை எடுத்து அந்த பைக்கின் சக்கரங்களிலும், கண்ணாடிகளிலும் போட்டார்கள். கண்ணாடிச் சிதறல்கள் அங்குமிங்குமாய் துள்ளின. ஒருவன் சக்கரங்களின் டயர்களில் காற்றைப் பிடுங்கிவிட்டான். வேலை இல்லாமல் இருந்த இரண்டுபேர் லேசாய் தலையைத் தூக்கிய இளங்கோவை முடியைப் பிடித்துத் தூக்கினார்கள். ஒருவன் வாயில் குத்துவிட்டான். இன்னொருத்தன் அவன் இடுப்பிலும் காலிலும் உருட்டுக்கட்டையால் அடித்தான். இளங்கோ சுருண்டு விழுந்தான். இரண்டு கண்களுக்கும் இடையே இரண்டு முட்டிக் கைகளையும் வைத்துக்கொண்டு விழித்தான். சத்தம் போட வேண்டும் என்றோ, எதிர்த்து அடிக்க வேண்டும் என்றோ அவனுக்கு எண்ணம் வரவில்லை. தட்டுத்தடுமாறி எழப்போன அவனை மீண்டும் தரையில் ஒரு உதை கொடுத்துக் கிடத்தினார்கள்.

அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், சிறிது தொலைவில் ஒன்று சேர்ந்து கும்பலானார்களே தவிர, அந்த ‘உதைக் களத்தை' நெருங்கவில்லை. வேடிக்கை பார்ப்பதுபோல் போன கார்களை, பின்னிருக்கை மனிதர்கள், முன்னிருக்கை டிரைவர்களின் முதுகுகளைத் தட்டி அவசரப்படுத்தினார்கள். பல பெட்டிக் கடைகள் மூடப்பட்டன. சில்லரைக் கடைக்காரர்கள் எதிர்ப்பக்கம் குனிந்து கொண்டார்கள். சில கடைகள் எதுவுமே நடக்காதது போல் அப்படியே திறந்திருந்தன. வீட்டு வேலைகளுக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், விசனத்தோடு நின்றார்களே தவிர, அந்த அடாவடியை தட்டிக் கேட்கவில்லை. தொலை தூரத்து வீடுகளிலும் உன்னிப்பான இரண்டு கால் கூட்டங்கள். இதற்கள் “ஏண்டா வேடிக்கை பார்க்கிறீங்கோ? போங்களேண்டா சோமாறிங்களா, சோதாப்பசங்களா” என்று இளங்கோவை அடித்தவர்களில் ஒருவன் இளைப்பாறும் வகையில் எகிறியபோது, நெருங்கி நின்ற ஒரு சின்னக் கூட்டமும் சின்னா பின்னமாகியது.

ஆட்டோக்களும், கார்களும், ஆங்காங்கே மனித நடமாட்டமும் மொய்த்த கடற்கதைச் சாலைக்கு அருகேயுள்ள புதர்ப் பகுதியை நோக்கி அவனை காலால் எத்தியெத்தி உதைத்துதைத்து, கால்பந்தை அடிப்பதுபோல் அடித்துக் கொண்டே போனார்கள். பிறகு அவனை தூக்கி நிறுத்தி, அவன் கைகளை இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, பின்னால் இரண்டு பேர் முதுகில் காலாலும் கையாலும் எகிற, அவனை புதர்ப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். கருவேல மரச்செடிகள் கொண்ட அந்தப் புதரில் அவனைக் குப்புறத்தள்ளினார்கள். அவன் உடலெங்கும் முட்கள் ஊடுருவின. ஒரு முட்கிளை அவன் வாய்க்குள் புகுந்து பற்களுக்குள் ஊடுருவி நாக்கைத் துளை போட்டது. அப்படியும் விடாமல் அந்தப் ‘போராளிகள்' அவனை பின்பக்க சட்டைக் காலரை கழுத்தோடு சேர்த்துப் பிடித்திழுத்தார்கள். ஒருவன், அவன் தலைமுடியை பிடித்துப் பிடித்து ஆட்டியபோது இன்னொருத்தன் அவனை முட்டிக்கு முட்டி வாங்கினான். போலீசாரிடம் இப்படி சில சமயம் வாங்கிக் கொண்ட அவர்கள், அதே விகிதாச்சாரத்தில் அவனுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். அடிக்கு அடி 'சோமாரி, சோதா' என்ற வார்த்தைகள். 'டேய், டாய்' என்ற பிளிறல்கள். எழுதமுடியாத கெட்டகெட்ட வார்த்தைகள். இளங்கோ மூச்சற்று, முனங்கலற்றுக் கிடந்தபோது, ஒருத்தன் அவன் கை கடிகாரத்தைக் கழற்றிக் கொண்டான். டவுசர் பையன் அவன் சட்டைப்பையை கிழிக்கப் போனான். முடியாமல் போனதால், இளங்கோவின் வயிற்றில் காலைப்போட்டு அதை ஆதாரமாக்கிக் கொண்டு, சட்டைப்பையை இழுத்து, அதற்குள் இருந்த ரூபாய் நோட்டுகளைச் சுருட்டி காதில் வைத்துக்கொண்டு, கால்களை எடுத்தான். இன்னொருத்தன் உருட்டைக்கம்பால் அவன் தலைக்குக் குறிபார்த்தபோது, ஒருத்தன் உஷார்படுத்தினான்.

"வாணாண்டா! அண்ணன், நோவடிக்கொடுங்கோ, சாவடி வேண்டாம்னு சொன்னது தெரியாதா? அவர் அப்படிச் சொன்னா அதுல ஏதாவது அர்த்தமிருக்கும்.”

அனைவரும் இளங்கோவை அந்தப் புதர்ச் செடியிலேயே போட்டுவிட்டு, வீரியமாய் நடந்தார்கள். வேர்வையை துடைத்தபடி, நின்று, நிதானமாகப் போனார்கள். ஒருவன் இளங்கோவை நோக்கி மீண்டும் ஓடிவரப் போனான். சகாக்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். இப்போது அவர்களுக்கு நேரமில்லை. சேட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்ட இப்பவே கொஞ்சம் சாராயத்தைக் குடிக்க வேண்டும்.

இளங்கோ, மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தது போல் முட்படுக்கையில் கிடந்தான். வாயில் ஒருபக்கம் வெள்ளை வெள்ளையான நுரை. மறுபக்கம் சிவப்புச் சிவப்பான ரத்தம். நடுவில் வெள்ளையும், சிவப்பும் கூட்டணி கொண்ட கலவை. நெற்றிப் பொட்டில் பெரிய பள்ளம். அந்தப் பள்ளத்தில் ரத்த ஊற்று. ஒரு கை . அசைவற்றுக் கிடந்தது. இன்னொரு கை அங்குமிங்குமாய் ஆடியது. கால் பாதங்கள் ரத்தச் சேற்றில் நனைந்து கொண்டிருந்தன. துணியை அடித்துத் துவைத்துப் பிழியாமல் காயப்போட்டது போன்ற தோற்றம். அவனுக்கு ஏற்பட்ட அக்கிரமம் தாங்க முடியாதது போல் ஒரு ஆமணக்குச் செடி கடற்கரைக் காற்றில் ஆடி அவன் முகத்தை வருடிவிட்டது. அருகேயுள்ள எருக்கலைச் செடிகள் வெள்ளை பல்பு மாதிரி பூக்களைக் காட்டியபடி ஒப்பாரியிட்டன. அவனோ பேச்சற்று, மூச்சற்றுக் கிடந்தான்.

அவன் மயக்கமாய் கிடந்த புதர்ப்பக்கமாய் வந்து போன ஸ்கூட்டர்கள் திரும்பிப் போயின. சிறிது தூரம் கடந்துபோய் வேடிக்கையாய் நின்றன. சில கார்கள் இதெல்லாம் சகஜம் என்பதுபோல் சகஜமாய் ஓடின. சில சைக்கிள்காரர்கள் "இந்தாங்கப்பா" என்று சொல்லிவிட்டு நின்றபோது, அடித்தவர்கள் திரும்பிப் பார்த்து, "போயிக்கினே இருய்யா” என்று மிரட்டியதும், உருளைச்சக்கரங்களோடு ஓடிவிட்டார்கள். அந்தப் பக்கமாய் போன 'கால்நடை' மனிதர்கள், அவன் குடித்துவிட்டுக் கிடப்பதாய் நினைத்து "இந்த மாதிரி ஆட்கள் இப்படித்தான் கிடக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டே போனார்கள். அருகேயிருந்த பலமாடிக் கட்டிடங்களில் ஆண்களும், பெண்களும் வெளியே பால்கனிகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். ஒரு கால் கூட, கீழே இறங்கவில்லை.

இளங்கோ மெள்ளமெள்ளச் செத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. காகங்கள், அவன் உடம்புக்கு மேலே ஆகாயத்தில் மொய்த்தன. அவனைக் கொத்தித் தின்பதற்காக சில ஆங்காங்கே உட்கார்ந்தன. பிறகு அவன் ஈன முனங்கலாய் முனங்குவதைப் பார்த்துவிட்டு, அது அடங்குவதற்காகக் காத்திருந்தன.

அந்தப் பக்கமாய் பூக் கூடையில்லாமல் தலைவிரி கோலமாய் வந்த ருக்குமணி, அப்படியே வாய் பிளந்து நின்றாள். அவன் இளங்கோதானா என்பதுபோல் கிட்டே நெருங்கிப் போனாள். பிறகு "அய்யய்யோ... அய்யய்யோ..." என்று அரற்றினாள். அங்குமிங்குமாய் சுற்றி, அவன் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள். கை லேசாய் சுட்டது போலிருந்தது. அருகே பலமாடிக் குடியிருப்புகளில் பால்கனிகள் மேல் திடீர் அவதாரம் எடுத்தவர்களை நோக்கி, கைகளை ஆட்டி 'வாங்கோ... வாங்கோ' என்று சமிக்ஞை செய்தாள். அந்தத் தலைகள் உடனே மறைந்தன. அந்தச் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனக்காரர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவர்கள் லாகவமாக ஒதுங்கிக்கொண்டார்கள். சில கார்க்காரர்கள் திட்டிக்கொண்டே போனார்கள். “குடிகாரப் புருஷனுக்கா வக்காலத்து வாங்குறே?” என்று வேறு வக்கணை பேசிக்கொண்டு நிற்காமலே ஓடினார்கள்.

பூக்கார ருக்குமணிக்கு, கண்டும் காணாமல் போன அந்த யந்திர மனிதர்களின் கோழைத்தனம் தனது துணிச்சலுக்கு உரமாகி மனதுள்ளே பூத்திருக்கும் மனித நேயத்திற்கு உருவமாகியது. சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, அவன் தலையை நிமிர்த்தினாள். பிடரியில் துளைத்த முட்களை செடியோடும், கொடியோடும் ஒடித்துப் போட்டாள். ஆனாலும், பல முட்கள் அவன் உடம்பின் பல இடங்களில் கொள்ளுமாதிரி கறுப்புக்கறுப்பாய் கண் சிமிட்டின. ஒரு சப்பாத்திக்கள்ளி முள், செருப்புப் போடாத தனது கால்களைத் துளைப்பதையும் பொருட்படுத்தாது ருக்குமணி அவனை தூக்கப் போனாள். சப்பாத்தி முள்ளால் கால் துடித்தது. அதை எடுப்பதற்குக் குனித்தாள். அப்படிக் குனிந்தால் அவனை அப்படியே மீண்டும் புதர்ச் செடியில் மல்லாக்க வீழ்த்த வேண்டும். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். சப்பாத்திமுள்ளின் கோரப் பற்களில் காலை குடியேற்றிக் கொண்டே, இளங்கோவை தன் பக்கமாய் இழுத்து, அருகில் உள்ள மணற்பரப்பில் போட்டாள். தொலைவில் ஒரு கூட்டம் தென்பட்டது. தலையில் கூடைகளோடு வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்திற்காக, அவள் காத்திருந்தாள்.

ருக்குமணி, 'டப்டப்' என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

பாவாடை தெரிய, சேலையையே தாவணி மாதிரி கட்டியிருந்த ஒருத்தி, அங்கே வந்து நின்றாள். முழங்கை வரைக்கும் நீண்ட சட்டைக்காரி; மோவாயை அட்டகாசமாய் அங்குமிங்குமாய் ஆட்டியபடியே ருக்குமணிக்குப் புத்திமதி சொன்னாள்:

"இந்தாம்மா... இவன் என்ன செய்தானோ, ஏது செய்தானோ? எந்தப் பசங்களோ இவன செம சாத்தா சாத்திட்டுப் போயிட்டானுங்க. உனிக்கி இன்னாச்சு? நீதான் இத அடிச்சுப்போட்டுட்டு அழுகிறது மாதிரி நடிக்கேன்னு போலீஸ் புடுச்சிட்டுப் பூடும்மா; போலீசுக்குக் குற்றவாளி முக்கியமில்ல; குத்தஞ் செஞ்ச இடத்துல நிக்கறவனுகதான முக்கியம். பேசாம போய்க்கினே இருப்பியா... அய்ய! ஒன்னத்தாம்மே..."

கீழே உட்கார்ந்து, இளங்கோவின் உச்சந்தலையிலிருந்து கொட்டிய செந்நீரைத் துடைத்துக் கொண்டிருந்த ருக்குமணி ஆவேசப்பட்டு எழுந்தாள். இடுப்பின் இருபக்கமும் கைகளை வில்போல் வளைத்துக் கொண்டு, வாய்க்கு வெளியே நாக்கை அம்புபோல் நீட்டிக்கொண்டு தெனாவட்டாய் நின்றவளையும், மாடிக் குடியிருப்புகளில் மறைந்து நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் மாறிமாறிப் பார்த்தபடியே கத்தினாள்:

"ஏம்மா, இந்த அநியாயத்த பார்த்துட்டு போயிக்கினே கீறதுக்கு நான் என்ன பங்களாக்காரியா? அடேய்! பங்களா பசங்களா! பண்ணிப் பயல்களா! இந்த உடம்புகள வெச்சிக்கிட்டு ஏண்டா நிக்கிறீங்க? ஒருத்தன் நாய் மாதிரி நடுரோட்ல கெடக்கான்... அவனை என்னான்னு வந்து பார்க்கப்பிடாதாடா? இதேமாதிரி ஒரு நாய் செத்துக் கிடந்தாகூட உடனே கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுவீங்களேடா... ஒரு மனுஷனுக்கு ஏண்டா செய்யமாட்டேங்கிறீங்க? அல்பங்களா!”

பூக்கார ருக்குமணி ஆங்காரியாய், ஓங்காரியாய் நடுச்சாலையில் தாண்டவமாடினாள். மாடி வீட்டுக்காரர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதுபோல் அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு ஓடியோடிப் போய் திட்டினாள். அவள் கையாட்டியும் நிற்காமல் போன ஒரு அம்பாசிடர் கார்மீது கல் எறிவதற்காகக் கீழே கூடக் குனிந்தாள். பிறகு, மேலே தென்பட்ட குடியிருப்புக்காரர்களைப் பார்த்து "நீங்க நாசமாப்போக! நீங்க சாகும்போது ஒங்கப் பொணத்துல ஒரு பூக் கூட விழாது" என்றாள். பின்பு செய்வதறியாது திகைத்து நின்றாள்.

அங்கே வந்துநின்ற பெண், ருக்குமணியின் போக்கால் அதிர்ந்து போனாள். லேசாக இளகிய மனதை பலவந்தப்படுத்திக் கொண்டு, "ஏய், ஒன்னத்தான், பேசாம போயிக்கினே இரும்மே" என்றாள்.

ருக்குமணி வெடித்தாள் : "நான் என்ன எருமக்கடாவாடி ‘மே..'ங்கறே? இந்தப் பிள்ளாண்டானப்பத்தி ஒனக்குத் தெரியுமாடி? இதுக்கும் ஒரு சேரிப் பொண்ணுக்கும் தகராறு வந்து, அந்தப் பொண்ண, இது போலீசுல ஒப்படைச்சுது. போலீஸ்காரனுங்க என்னடான்னா அந்தப் பொண்ணுதான் என் குழந்தையக் கொன்னதா வழக்கு ஜோடிக்கப் போனாங்க. இது அநியாயம்னு தெரிஞ்ச இந்தப் பிள்ளாண்டான், பெரிய போலீஸ் ஆபீசருக்கிட்ட என்னையும், கட்டிக்கப்போற பொண்ணையும் கூட்டிக்கினுப் போயி, அந்தச் சேரிப் பொண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து. இன்னாப் பிரயோசனம்? கட்சீல, அந்த இன்ஸ்பெக்டர் சொன்னாப்புல அந்த ரத்தக்காட்டேரி - நன்றிகெட்ட நரி - அதான் அந்த சரோசாவோ, கிரோசாவோ, இந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சி, இப்படி அக்கிரமம் பண்ணிட்டாள் இந்த மவராசன் கொக்குக் கொத்தின நண்டு மாதிரி துடிக்குது. எப்படி இத அம்போன்னு விட்டுட்டுப் போக முடியும்?"

ருக்குமணி விம்மினாள். அங்கே நின்றவள், கைகளை நெறிப்பதையோ, இளங்கோவின் பக்கம் நெருங்கி அவனை மவுனமாகப் பார்ப்பதையோ, இவள் சரியாகக் கவனிக்க- வில்லை: இதற்குள் மீன்காரப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள். கூடைகளை இறக்கி வைத்துவிட்டு, அவற்றை காகங்கள் துழாவுவதையும் பற்றிக் கவலைப்படாமல், இளங்கோவின் பக்கம் போனார்கள். ஒருத்தி ஆலோசனை சொன்னாள் :

"உசிரு இழுத்துக்கிட்டுக் கெடக்குது. உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போனா பிழைச்சுக்கும். பாவம் இந்த பையனப் பார்த்தா அடாவடி மாதிரி தெரியல. இவன அடிச்சுப் போட்ட கம்மனாட்டிங்க மட்டும் என் கையில கெடச்சா மீன் முள்ளாலேயே அவங்கோ கண்ணக்குத்தி வெளியில இழுத்தப்பூடுவேனாக்கும். இப்போ காட்டி ஆசுபத்திரியில சேக்காக்காட்டி உசிரு பூடும்."

எல்லாப் பெண்களும் சேர்ந்து அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களையும், வாடகைக் கார்களையும் கையாட்டி, காலாட்டிப் பார்த்தார்கள். இறுதியில் ஒரு வேன் வந்து நின்றது. முன்னால் டிரைவர் இருக்கை கொண்ட கூண்டும், பின்னால் தார்பாய் மேல்வாக்கில் படர்ந்த ஒரு சின்ன வேன். அதற்குள் காய்கறிகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்தன. ஏழெட்டுப்பேர் அந்த மூட்டைகளுக்கும், கூடைகளுக்கும் இடையே விரவி நின்றார்கள். மணல்மேட்டில் கிடப்பவனைப் பார்த்ததும், "தூக்கித் தாங்கோ, தூக்கித் தாங்கோ” என்றார்கள். கீழே நின்ற பெண்கள் இளங்கோவை ரத்தம் சிந்தத் தூக்கி மேலே கொடுக்க, அங்கே நின்றவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஒரு மூட்டையில் அவன் தலையை ஒருக்களித்து சாய்த்து உட்கார்ந்த நிலையில் வைத்தார்கள். அந்த டெம்போ வண்டியில் ருக்குமணியும் ஏறிக்கொண்டாள். அங்கே நின்ற பெண்ணும் "நானும் ஒத்தாசைக்கு வாரேன்க்கா" என்று சொல்லியபடியே ஏறிக்கொண்டாள்.

அந்த வேன், கருண்டு வளைந்து ஓடியது. அங்கேயிருந்தவர்கள் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டோம் என்ற பெருமிதமில்லாமல் அவனைப் பார்த்தார்கள். வெயிலில் காய்ந்து உறைந்து போயிருந்த ரத்தத்துண்டுகளைக் கண்டார்கள். கத்தரிக்காய் காம்பு ஒன்று அவன் பிடரியில் குத்தியதைக் கண்ட ருக்குமணி ஒரு கையை பின்னால் கொண்டுபோய் அவன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். வேறுவழியில், போகப் போன வேன் டிரைவரை அந்த இருக்கையின் பிடரியில் தட்டித்தட்டி திரும்ப வைத்துப் பேசினாள்.

"இந்தப் பிள்ளாண்டான் எனக்குத் தம்பி மாதிரி. பெரிய இடத்துப் பிள்ளை. கொஞ்சம் அப்பால இதோட வீடிருக்கு. அங்க போய் அவங்கக்கிட்ட சொல்லணும். அப்புறமா ஆகவேண்டியதப் பார்க்கலாம். அண்ணாத்தே ஒன்னத்தான், வண்டியத் திருப்பு.”

பூக்காரப்பெண்ணுக்கு உதவியாக வேனில் ஏறியவள் இப்போது மிரண்டாள்.

நல்ல வேளையோ, கெட்ட வேளையோ கடிகாரம் கட்டிய ஒரு லுங்கிக்காரன் ருக்குமணிக்குப் புத்தி சொன்னான்:

"முதல்ல, இந்தப் பையன ஆசுபத்திரியில சேர்த்துடணும். நாம லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் இவன் உயிரு போய்கிட்டிருக்கிறதா அர்த்தம். ஏதோவொரு ஆசுபத்திரியில சேர்த்துட்டு, அப்புறமா அவங்க வீட்டுல போய் சொல்லிடு. இப்ப வீட்டப் பார்த்துப் போனா அப்புறம் அந்தப் பையன் காட்டப் பார்த்துப் போக வேண்டியிருக்கும்."

வண்டி லேசாய் நின்றது, பிறகு கடிகாரக்காரன் சொன்னால் சரியாக இருக்கும் என்பதுபோல் அது வேறு பக்கமாய் திரும்பி ஓடியது. ருக்குமணியும் யோசித்தாள். ‘அந்த வீட்டிற்குப் போனால் அந்தம்மா இருக்காங்களோ மாட்டாங்களோ, அதுக்கு வாச்சிருக்கிற பொண்ணு செத்தாக்கூட அழத்தெரியாத மடச்சாம்பிராணி. முதல்ல, இதக் காப்பாத்தணும். அப்பால மற்றத பாத்துக்கலாம்!'

ருக்குமணி, அந்த வேன்வாசிகள் கேட்கும் முன்பே நடந்தவற்றை கோபாவேசமாகக் கண்களைக் கசக்கிக்கொண்டும், இடையிடையே திணறிக்கொண்டும், இதற்குக் காரணமான குப்பத்துக்காரியை வாய்க்கு வந்தபடி வைதுகொண்டும் விளக்கிக் கொண்டிருந்தாள். அதோடு, தனது பையன் எப்படிப் பெரிய போலீஸ் அதிகாரி முன்பு சமர்த்தாக நின்றான் என்பதையும் லேசாகச் சொல்லி வைத்தாள். பிறகு, அவர்களுடைய கதையையும் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்:

"ஆமா, பத்து மணிக்குள்ளே காய்கறி வேனுங்க வந்துடும். நீங்க ஏன் லேட்டு?"

ஒரு பழக்காரம்மா தனது முகத்தை அழுகிய பழம் போல் ஆக்கிக்கொண்டு பதில் சொல்லப் போனபோது, கடிகாரம் கட்டிய லுங்கிக்காரன் முந்திக்கொண்டான் :

“அத ஏன் கேக்குற? அநியாயம் அக்கிரமம்... என்னோட விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இப்படி கூத்து நடக்கிறது தெரிஞ்ச கத தான். ஆனா, இப்போ நடக்குறதோ தாங்க முடியாத கூத்து. இன்னிக்கிக் கோட்டையில சர்வகட்சி தலைவர்களோட கூட்டமாம். தலைவருங்க .வாராங்கன்னு போலீஸ்காரங்க எங்கள தலையெடுக்கவிடாமப் பண்ணுறாங்க. பாரிமுனையில ஒன்பது மணிக்குப் புறப்பட்ட இந்த வேனை, பாலத்துக்குப் பக்கத்துல ஒருமணி நேரமா காக்கப் போட்டாங்க. அப்புறம் ஒருத்தரு கோட்ட ஸ்டேஷனுக்குப் போற பாலம் வழியா போகச் சொன்னாரு. பல் ஆஸ்பத்திரிக்கிட்ட வந்தப்போ ஒரு போலீஸ் ரைட்டுல போகச் சொன்னாருன்னு வேனை விட்டோம். அந்தப் பக்கம் நின்ன இன்னொருத்தர் லெப்டுல போகச் சொன்னாருன்னு வேனை ஒடிச்சோம். லெப்டு போலீசும் திட்டுது, ரைட்டு போலீசும் திட்டுது. நடுவில் வந்தா இன்னொரு போலீசும் டிரைவரை அடிக்க வருது... பதில் சொல்றதை, எதிர்த்துப் பேசுறதாய் நினைத்து. மூணுமணி நேரமா காஞ்ச கருவாடாப் பூட்டோம். அய்யோ, ஏழபாழன்னா இந்தப் போலீஸ்காரங்க குதிக்கிற குதி..."

"எய்தவன் இருக்கப்போ, அம்ப நோகறதுல என்ன பிரயோசனம்?”

"தாய் எட்டடி பாஞ்சால் குட்டி பதினாறு அடி பாயுற கத. தலைவர்களுக்குப் பாதுகாப்புத் தேவதான்... இல்லங்கல. ஆனாலும் சினிமாக்காரன், ஒருத்தன வீரமா காட்டுறதுக்கு ஒன்பது பேரை பேடியாக்குறது மாதிரி, அவங்களோட பாதுகாப்புக்கு தல காஞ்சவங்கதான் கிடைச்சாங்களா? டெய்லி இப்பிடி காக்க வெச்சா, நம்ம பொழப்பு என்னாவறது? இப்பவே மணி ஒன்னு, காய்கறி வாடிப்பேச்சி; பழம் வேற அழுகிடும். அடக்கடவுளே!”

"பேசாம ஒவ்வொரு தலைவருங்க வீட்டுமுன்னாலயும் அழுகிப்போன பழங்களக் கொட்டணும். தலைவருக்காக மக்களா, மக்களுக்காக தலைவரான்னு நேருக்கநேரா கேள்வி கேக்கணும். ஆனா, போலீசு எங்க விடுவான்? இப்படிப் பொலம்பறதோட சரி." "ஆயா, பஸ்சுல வருவே, இப்ப ஏன் வேனுல வரே?”

"லக்கேஜு மூணு ரூபா... டிக்கெட்டு இரண்டு ரூவா. நான் என்ன கூடையில சாராயக்கேன வச்சி, அந்த வாசனைய மறைக்கிறதுக்கு கருவேப்பலையப் போட்டு மூடியா கொண்டு வாரேன், கேக்கிறத கொடுக்கறதுக்கு? பாவம் இந்த வேன் புள்ளாண்டான் பரிதாபப்பட்டு எல்லாத்துக்கும் மூணுரூவா போதும்னு சொல்லிட்டான்"

வேனில் இருந்த அந்த ஏழைபாழைகள் இப்படி பல்வேறுவிதமாகப் பேசிக்கொண்டே போனார்கள். அவ்வப்போது லேசாய் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த இளங்கோவையும் பார்த்துக் கொண்டார்கள். ருக்குமணி அவ்வப்போது இளங்கோ உடம்பில் பீறிட்ட ரத்தங்களை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தாள். கருவேப்பிலையில் சில ரத்தத் துளிகள் பட்டன. ஆயா, அந்த இலைக்காம்பை ஒடித்து வெளியே போட்டாள்.

அந்த வேன், ஒரு மருத்துவமனை முன் நின்றது. அந்த மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாத வண்ணம் கறுப்புக் கண்ணாடிகள் சுவர்களாக இருந்தன. ருக்குமணி, அந்த வேன்வாசிகளை கையெடுத்துக் கும்பிட்டபடியே "பாம்புக்கு பாம்பின்கால் தெரியும் என்பது மாதிரி, ஏழைக்கு ஏழை ஒத்தாசை செய்தீங்க” என்றாள். உடனே கடிகார லுங்கி “ஒன் உதாரணம் சரியில்லே!" என்றான். “நாம என்ன பாம்புங்களா? அரசாங்கப் பூனை பிடிக்கிற எலிங்க...” என்றான்.

அந்த வேனிலிருந்து ருக்குமணியும், அவளுக்குத் தோழியாக வந்தவளும் கடிகார லுங்கியும் இளங்கோவை கீழே இறக்கப் போனபோது, அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்ற காரில் ஏறப்போன ஒரு ஸ்டெதாஸ்கோப் மனிதர், அங்கே வந்தார். அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரே வெளியே வந்தார். பணக்காரர்களுக்கு காலில் ஒரு முள் குத்தினாலும் அவர்களைப் படுக்க வைத்து ரத்தப் பரிசோதனை, சிறுநீர் சோதனை, எச்சில் சோதனை, எக்ஸ்ரே, தேவைப்பட்டால் ஸ்கேனிங் என்று முள்ளை எடுப்பதற்குப் பதிலாக அந்த முள்ளை காலிலிருந்த கண்ணுக்குள் தள்ளிவிட்டு விடும் அந்த டாக்டருக்கு அந்த அன்னக்காவடிகளின் கையிலிருந்த கேஸ் தேறாதது போல் தோன்றியது. கேஸ் தேறினாலும் 'காஷ்' தேறாது. அவர் கத்தினார்:

"என்னய்யா வேணும் உங்களுக்கு?"

"இவருக்குக் காயம், ஆக்சிடென்ட், இல்லயில்ல... அடிபட்டுட்டு... தப்பு தப்பு. அடிச்சிட்டாங்க."

"போலீசுக்குக் கொண்டுபோக வேண்டிய கேச எதக்குய்யா ஆசுபத்திரிக்கி கொண்டு வறீங்க? இவர இங்க சேர்த்துட்டு, நானும் கோர்ட்டு கோர்ட்டா அலையணுமா? இவர நீங்களே அடித்துக் கொண்டு வந்திருக்கு மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம்? போலீசுக்குப் போய் அப்புறமா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ."

"அது எங்களுக்குத் தெரியும்.”

"தெரிஞ்ச பிறகும் இங்க எதுக்கு வந்தீங்க?”

"வேன்ல வந்தா இப்படிப் பேசிடுவீங்க. ஏர்-கண்டிஷன் கார்ல வந்தா இப்படிப் பேசுவீங்களா?”

"யோவ், மரியாதையா போறீங்களா, இல்ல நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்யவா?”

“அந்த வியாபார டாக்டர் அப்படிச் செய்தாலும் செய்வார் என்று பயந்துபோன வேன்காரர்கள், இளங்கோவைத் தூக்கி பழையபடியும் கத்தரிக்காய் மூலையில் கிடத்தினார்கள். ஆனாலும், அந்தக் கடிகார லுங்கிக்காரனுக்கு மனம் கேட்கவில்லை. கோபம் அடங்கவில்லை. வேன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தபோதே அவன் கத்தினான் :

"யோவ் டாக்டரு! நீயெல்லாம் ஒரு டாக்டரா? பேசாம கழுத்துல கிடக்கிற ஸ்டெதாஸ்- கோப்புலயே தூக்குப் போட்டுச் சாகவேண்டிய ஆளு நீ."

அந்த வேன் துள்ளிக்குதித்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் ரக்கைக் கட்டாமலேயே பறந்தது. இருபத்திநான்கு மணிநேர கிளினிக்குகளும், அரிமா சங்கங்கள் நடத்தும் சமூகசேவை மருத்துவமனைகளும் வழியடைத்தன. பெரிய பெரிய மருத்துவ மனைகளை நெருங்குவதற்கு இந்த வேனுக்கு பயம். "இதற்கு மேலும் வண்டியை ஓட்ட டீசல் இல்லை” என்று டிரைவர் உள்ளேயிருந்து கத்தினார். இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ருக்குமணியைப் பார்த்தபோது அவளுக்குத் தோழியாகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டவள் “அந்தண்ட நிறுத்துங்க” என்றாள். அவள் சொன்ன இடத்தில் ஒரு பாடாவதி மருத்துவமனை.

ருக்குமணியும் அந்தப் பெண்ணும் காய்கறிக்காரர்கள் தூக்கிக் கொடுத்த இளங்கோவை தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு அவனை தங்களது தோள்களில் போட்டபடியே அந்த மருத்துவமனையின் ஒரு கல் தூணில் சாய்த்தார்கள். ருக்குமணி அவளைப் பார்த்து சேர்க்காட்டா" என்றாள். உடனே அந்தப் பெண் "சேர்க்க வைக்கிறேன் பார்" என்றாள். இதற்குள் ஒய்யாரமான மூன்று நாற்காலிகளில் ஒரு தலை மேலே தென்பட்டது. வரவேற்புப் பெண் கத்தினாள் :

"என்ன வேணும்? போங்கப் போங்க! இதென்ன சத்திரமா, சாவடியா?"

அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அவளுக்கு அருகேயுள்ள நாற்காலியில் உட்கார்ந்து ஆர்ச் மாதிரி இருந்த மேசையில் தலையைப் போட்டுக்கொண்டிருந்த ஒரு முப்பது வயத ஆசாமி நிமிர்ந்தான்.அவனுக்கு சிகிச்சையளிக்கவே ஒரு முழு மருத்துவமனை தேவை. அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு அவள் பக்கமாக வந்தான்:

"அடேடே, நீயா? என்னம்மா விஷயம்? யார் இது?"

"ஸ்பெஷல் இருக்குண்ணே. ஒனக்குன்னு நாலு கிளாச எடுத்து வச்சிருக்கேன்."

"சித்த நேரத்துலவந்துடறேன். டாக்டர் ரவுண்டு முடியட்டும்."

"அப்புறம் அண்ணே.. இது பெரிய இடத்துப் பிள்ளாண்டான். எப்படியோ ஏடாகூடமா நடந்துட்டு. நீதாண்ணே இங்கசேக்கணும்.”

“அதெப்படி, நான் என்ன டாக்டரா?"

"இந்தாண்ணே ஐம்பது கொடுக்கணும்னா கொடுத்து..."

"சரி, ஓசப்படாம நில்லு. ரூம் ரெடி பண்ணிட்டு, கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்துட்டு வாறேன்.”

அந்த நோஞ்சான் பேர்வழி தூணில் சாய்த்து வைக்கப்பட்ட நோயாளியை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். அந்த ஐம்பது ரூபாயும் அவனுக்குத்தான் என்பது அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவன் சுயமரியாதையை குந்தகப்படுத்தாமல் பேசியதில் அவளே பெருமைப்பட்டாள். 'அடடே... எனிக்கிக்கூட புத்தியிருக்கே...

இதற்குள் ஐந்து நிமிடத்தில் அந்த ஆசாமி கீழே வந்துவிட்டான். அவன் பின்னால், இரண்டு பையன்கள் ஸ்டெச்சரோடு வந்தார்கள். அவர்கள் இளங்கோவை அந்த ஸ்டெச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆசாமி சரோசாவிடம் சாவகாசமாகப் பேசினான் :

"இந்த நர்சிங்ஹோமில் கிரவுண்டுல ரூம் கிடையாது. மாடியிலதான் பேஷன்ட் பார்க்கிறாங்க. யாராவது ஹார்ட் பேஷன்ட்டா இருந்தா அவங்களையும் ஸ்டெச்சர்ல தூக்கிக்கிட்டு மாடிப்படி வழியா நடந்து போகணும். அப்பவே அந்த ஆசாமி டொக்குனு போயிடுவான். லிப்ட் இல்லாம நர்சிங்ஹோம் மாடி இருக்கக் கூடாதுங்கிறது சட்டம். ஆனால் இந்தக் காலத்துல சட்டமா பேசுது? காசில்லா பேசுது? அப்புறம் சரோசா, அந்த ஸ்பெஷல் இருக்குமா இல்ல வேற யாராவது..?"

"ஒனக்குன்னு வெச்சத ஒனக்குத் தாரேண்ணே. சும்மா ‘கும்’முன்னு இருக்கும். அப்புறண்ணே, இந்தப் பிள்ளாண்டான நல்லாக் கவனிக்கணுமுண்ணே.”

பூக்கார ருக்குமணி அவளை இப்போது ஸ்பெஷலாகப் பார்த்தாள். சந்தேகம் இல்லை... அதே தத்தேறி முண்டதான். போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில இதோ ஸ்டெச்சருல கிடக்குற பிள்ளாண்டானும், அதுக்கு சம்சாரமாய் வாரவளும், நானும், இளநீர் குடிக்கப்போ இவள சரியாப் பார்க்கல; அப்போ பைஜாமா, இப்போ சேலை. இவள விடப்பிடாது.

ருக்குமணி ஆகாயம் அதிர்வதுபோல் கத்தினாள் :

"ஏண்டி, எச்சிக்கல நாயே! கொழுந்தையையும் கிள்ளி, தொட்டிலயும் ஆட்டறீயா? அரகொற உயிரோட துடிச்சிக்கிட்டு இருக்கிற இந்தப் பிள்ளாண்டான விஷ ஊசி போடணும்னு இந்த எச்சிக்கல ஆஸ்பத்திரியில சேர்க்கப் பார்க்கிறீயா? மவளே! ஒன்ன விடமாட்டேன்டீ. நீ ஜெயிலுல கம்பி எண்ணாம இருக்க முடியாதுடி."

ருக்குமணி ஆவேசப்பட்டாள். மாடிப்படிகளில் ஸ்டெச்சரில் சவாரி செய்து கொண்டிருந்த இளங்கோவின் பக்கம் ‘குய்யோ முய்யோ' என்று கத்திக்கொண்டே ஓடினாள். அந்த ஸ்டெச்சரைப் பிடித்து இழுத்தாள்.
-----------
end of chapter 15
---------------


This file was last updated on 09 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)