pm logo

சு. சமுத்திரம் எழுதிய
தாழம்பூ ( நாவல்)
பாகம் 2 (அத்தியாயம் 16-34 )


tAzampU (novel), part 2 (chapters 16- 34)
by cu. camuttiram
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a PDF copy of this work
The text for this work was generated using Google OCR tool and subsequent proof-reading of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சு. சமுத்திரம் எழுதிய
தாழம்பூ (நாவல்) -பாகம் 2 (அத்தியாயம் 16- 34)

Source:
தாழம்பூ
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600017.
முதற் பதிப்பு: டிசம்பர், 1992; இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2001
விலை ரூ.60.00
Printed By : BALAJI OFFSET PRINTERS. Chennai - 106.
------------

அத்தியாயம் 16

பூக்கார ருக்குமணி போட்ட கூச்சலில் வரவேற்புக்காரி வசந்தா திடுக்கிட்டு எழுந்தாள். அதற்குள் ஒரு டெலிபோன், அதுவும் காதலனிடமிருந்து. அந்த டெலிபோன் குமிழை ஆசைப்பட்டவனின் முகமாக அனுமானித்துக்கொண்டு அதைக் கன்னத்தில் போட்டுப் புரட்டி சிரிப்பும் சிணுங்கலுமாய் "நீங்க ஒண்ணும் பேச வேண்டாம்" என்று பேசியபடியே மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள். காதல் பேச்சுக்கு முன்னால் எந்தக் கூச்சல் எடுபடும்?

சரோசாவும் மாடிப்படிகளில் தாவிக்குதித்துப் போனாள். கோபமாகப் பார்த்த ருக்குமணியை அவள் கூனிக்குறுகிப் பார்த்தாள். ‘ஏன் இப்படிக் கத்துறேன்னு' திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால் வாய்க்குள் நாக்குப் புரளவில்லை. என்றாலும், ருக்குமணியின் தோளைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தாள். இதற்குள் சத்தம் கேட்டு கீழே வந்த நோஞ்சானிடம் “இது எங்க குடும்ப விவகாரம், முதல்ல இந்தப் பிள்ளாண்டான கவனிண்ணே” என்றாள். சிறிது தயங்கிய அந்த ஆசாமி வாசல்படியில் ரகளை ஏற்பட்டால் வெளியே தெரியும் சிவப்புத் தொப்பிகள் உள்ளே வரலாம் என்று பயந்து, தானும் அந்த ஸ்டெச்சரில் கைகொடுத்து இளங்கோவை மேலே தூக்கிக்கொண்டு போனான். அவனைக் கொல்வதற்கு அப்படி ஒரு சதி நாடகம் நடப்பதாக நினைத்த ருக்குமணி கூப்பாடு போடப்போனாள். இதற்குள் பழமும் தின்று கொட்டையும் போட்ட சரோசா, அவள் வாயைப் பொத்திக் கொண்டு மாடிப்படிகளில் நகர்த்தி அந்தப் படி தட்டிய சமதளத்தில் அவளை நிறுத்தினாள். அவள் பிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிய ருக்குமணியை தோளை அழுத்தி, கீழே உட்கார வைத்துவிட்டு இவளும் உட்கார்ந்தாள். அவளைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டுக்கொண்டும், அவள் கத்தப்போனால் வாயை மீண்டும் பொத்துவதற்காக ஒரு கையை அகப்பை மாதிரி வைத்துக்கொண்டும் அவளிடம் மன்றாடினாள்:

"இந்தா பாரும்மா, நானுதான் அந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சேன். அவன் துடிக்கிற துடிப்பப் பார்த்து ரசிக்கணும்னுதான் அந்தப் பக்கமா வந்தேன். நான் நினைச்சிருந்தா ஒரு விசிலடிச்சி என் தோஸ்துகள வரவழைச்சி ஒன்னையும் அவன மாதிரியே செய்திருக்கலாம். செய்யக்கூடியவதான். அப்படியே இல்லாட்டியும் வேன்ல போகறப்போ, கோவில் பக்கமா ஒரு சத்தம் போட்டிருந்தா, என் தோஸ்துங்க வந்து வேனை மறிச்சிருப்பாங்க. இப்பக்கூட எங்கண்ணனுக்கு ஒரு போன் போட்டா, நீ தான் இவன கொன்னேன்னு போலீசுலே ஒன்னையே என்னால உள்ள தள்ளமுடியும். ஆனால், நீ எப்போ இந்தக் குழந்தப் பையன் ‘இந்தப் பாவிக்காக பெரிய அதிகாரிய பார்த்தான்னு சொன்னியோ அப்பவே, நான் மனசு மாறிட்டேன். இந்த பிள்ளாண்டான் கேவலம் ஒரு குப்பத்துக்காரிக்கு - அதுலயும் தன்னையே அடிச்சிப்போட்ட ஒர்த்திக்கி - போலீசுல வாதாடினார்னா அது மனுஷன் செய்யற காரியமில்ல; கடவுளாலதான் அப்படிச் செய்யமுடியும். இது சத்தியமான வார்த்த. முதல்ல அந்தப் பிள்ளாண்டான காப்பாத்தணும். அவரு சரியாகட்டும். அப்புறம் நீ வேணும்னாலும் என்னை செய்துக்கோ. நான் எங்கயும் போகலை. இங்கதான் இருக்கப் போறேன்.”

ருக்குமணி, அவளையே உற்றுப் பார்த்தாள். அவள் சொல்வதில் ஏதோ உண்மை ஒலிப்பதுபோல் இருந்தது. இதற்குள் இளங்கோவை ஒரு அறைக்குள் கொண்டு போவதை, இரு பெண்களும் பார்த்தார்கள். உடனே அங்கே ஓடிப் போனார்கள்.

முதல் மாடியில், முனையில் உள்ள அறை. ஒரு கட்டிலில், ஒரு ஸ்பிரிங் சாய்வுப் பலகையில் அவனை சாய்த்துப் போட்டார்கள். மெத்தை போடப்பட்ட இரும்பு ஸ்பிரிங் கட்டில். பக்கத்திலேயே இருநாற்காலிகள். ஒரு வாஷ்பேஸின். வசதியாகத்தான் இருந்தது.

இளங்கோ மல்லாந்து கிடந்தான். மூக்கில் ரத்தம் கசிந்து அதன் துவாரங்களை அடைத்தது. கண் விழிக்கப் பார்ப்பதுபோல் இமைகள் துடித்தன. சரோசா அவனையே பார்த்தாள். அதைத் தாங்க முடியாததுபோல் சுவரில் முகம் போட்டாள். அந்த மஞ்சள் சுவரில், கண்ணீர் வெண்கோலம் போட்டுக் கீழிறங்கியது. இந்தச் சமயத்தில் நடுத்தர வயது டாக்டர் ஒருவர், கூட வந்த நோஞ்சானைத் திட்டிக்கொண்டே உள்ளே வந்தார் :

"கண்டவனை எல்லாம் உள்ளே கொண்டு வாறியே, உனக்கு பொறுப்பு இருக்கா? ஏம்மா, கவுர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாம என் பிராணனை எதுக்கு வாங்கறே? போலீஸ் கேஸ்... போலீஸுக்கு முதல்ல தகவல் கொடுக்கணும்.”

"முதல்ல இவர கவனியுங்க டாக்டர். நான் கீழே போய் டெலிபோன்ல போலீஸுக்கு சேதி செல்லிட்டு வாறேன்.”

“நீ இருக்கியே... நீ எப்போ இங்க சேந்தியோ, அப்பவே, இந்த ஆஸ்பத்திரி உருப்படாமப் போயிட்டு. நர்ஸிங் ஹோம் லாட்ஜா மாறிட்டு. இதுக்கு முன்னாடி தாலுகா ஆபீஸ்ல பியூனா இருந்தியோ?”

டாக்டர், இப்போது சிரித்து விட்டார். கையில் வைத்திருந்த சிரிஞ்சையும் ஊசியையும் அலாவுதீன் மந்திரம் மாதிரி ஏதோ செய்துவிட்டு, இளங்கோவின் கையில் ஊசி போட்டார். நரம்பு ஊசியோ, சதை ஊசியோ? சுரணையற்றுக் கிடந்தவன், இப்போது வலி தாங்க முடியாமல் அங்குமிங்குமாய் தலையை ஆட்டினான். டாக்டர், வார்டுப் பையன் கொடுத்த பெரிய வட்டக் கண்ணாடி ஒன்றை இளங்கோவின் தலைக்குமேல் படரவிட்டு உற்றுப் பார்த்தார். “அடடே, எவ்வளவு முள்ளுங்க” என்று அவரே சொல்லிக் கொண்டார். பிறகு, எவர்சில்வராய் மினுமினுத்த ஒரு இடுக்கியை தலைக்குள் விட்டு ஒவ்வொரு முள்ளாக எடுத்துப் போட்டார். அந்தச் சமயம், வார்டுப் பையன் (அவன்தான் அங்கே நர்ஸ்) டிஞ்சரையோ அல்லது வேறு எதையோ நனைத்த பஞ்சை வைத்து இளங்கோவின் காயங்களைத் துடைத்து விட்டான். நெற்றிப் பொட்டை “எம்மாடி” என்று சொன்னபடியே பார்த்துவிட்டு, பஞ்சை அதனருகே கொண்டு போனான். இளங்கோ வலி பொறுக்க முடியாமல் கைகால்களை அங்குமிங்குமாய் ஆட்டினான். டாக்டர் அங்கே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்து, "பணத்தைக் கட்டிட்டிங்களா? அப்படியாவது எனக்கு சம்பளம் வருதான்னு பார்க்கலாம். சரி வெளியில நில்லுங்க" என்று சொல்லி அவர்களை விடாக்கண்டராய் வெளியேற்றிவிட்டு, கதவைத் தாழிட்டார்.

அந்த அறைக்கு வெளியே வந்த சரோசாவிடமும் ருக்குமணியிடமும்'ஸ்பெஷல்' மனிதர் கண்டிப்போடு பேசினான் :

"ஆபத்துக்குத் தோஷமில்லேன்னு சேர்த்துட்டேன். நான் இருந்ததால டிபாசிட் பணம் கட்டாமலே சேர்த்தாச்சு. ஆனால் அப்படி டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. குறைஞ்சது ஆயிரம் ரூபா கறந்துடுவாங்க. என்ன சொல்றே சரோசா?”

“அந்தக் கவலையே உனக்கு வேண்டாமண்ணே. இன்னும் ஒரு அவர்ல தந்துடறேன். நீ ஸ்பெஷலுக்கு வரப்போ தலையை அடகு வச்சாவது தாறேன். அண்ணன் என்ன உதவாமலா போயிடுவாரு? என்னவோ என் போதாத காலம்."

சரோசா மேற்கொண்டு பேச முடியாமல் அரைகுறை வார்த்தைகளோடு விக்கி நின்றாள். உள்ளே பயங்கரமான சத்தம். ருக்குமணிக்கு, டாக்டர் விஷ ஊசி போடுகிறாரோ என்று இன்னும்கூட சந்தேகம். சரோசாவை முறைத்தாள். ஸ்பெஷல் பேர்வழி விளக்கம் கொடுத்தார் :

"நெத்திக் காயத்துக்கு டாக்டர் தையல் போடுறார்னு நெனைக்கேன். எப்படியோ ஆசாமி தப்பிச்சிட்டான். ஏன் சரோசா, இவனப் பார்த்தா பட்டைக் கேஸாத் தெரியல... நல்ல பையனாய் தோணுது. அப்படி இருக்கையில் உன் வழில எப்படி வந்தான்.”

"அது பெரிய கதை அண்ணாத்தே. சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது. அந்தச் சக்களத்தி, பொறம்போக்கு முண்டை, என்னை எந்த நேரத்துல பெத்துப்பூட்டாளோ, அப்பவே..."

"சரி சரி, நான் கீழே போய், வசந்தாவை சமாளிக்கேன். காசுன்னு வந்துட்டா காதலனையும் மறந்துடறவள். சீக்கிரமா வா; ஸ்பெஷல் போட்டாப்போலவும் ஆச்ச... ஆஸ்பத்திரி காச வாங்கினாப்லயும் ஆச்சு.”

இப்போதே சரக்கை மோப்பம் பிடித்தபடி நோஞ்சான் ஆசாமி போனதும், தனித்து விடப்பட்ட ருக்குமணியும் சரோசாவும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. பிறகு பூக்காரியின் ருத்ரப்பார்வையை சாராயக்காரி தவிர்த்தாள். இறுதியில் ருக்குமணி மறக்கக்கூடாததை மறந்துவிட்டு இப்போ அது நினைவுக்கு வந்ததுபோல் திடுக்கிட்டுப் பேசினாள்:

"நல்லவேளை, இப்போதாவது ஞாபகம் வந்துட்டு... இளங்கோவோட வீட்ல போயி சேதி சொல்லி, அவங்களைக் கூட்டிட்டு வரணும். இங்கயே இரு; அவங்களுக்கு நீ ஜவாப் சொல்லியாகணும். அப்புறம் உன்பாடு, அவங்கபாடு. அந்த கஸ்மாலம் சாரு ரமணன், நீ சத்தா சமுத்திரத்துக்குள்ள போனாலும் போலீஸ் வலையால வீசிப் பிடிச்சுடுவான். அவங்க வாரது வரைக்கும் இங்கயே நில்லு. சொல்றது காதுல விழுதா?"

சரோசா, காதில் விழுந்ததை கண்ணீராகக் காட்டினாள். பிறகு அதை லேசாகச் சுண்டிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டாள். நடக்கது நடக்கட்டும் என்பது மாதிரி சிறிது நின்றுவிட்டு, பிறகு ருக்குமணியைப் பார்த்துப் பதிலளித்தாள்:

“நீ நெனைக்கிறது மாதிரி நடக்காதுன்னாலும், நான் போகப் போறதில்லே. அனுமார், லவகுசாகிட்ட கட்டுப்பட்டது மாதிரி நானும் அண்ணன்கிட்டப் போகாமல், இங்கயே கட்டுப்பட்டு நிக்கேன். இளங்கோ மன்னிச்சிடுவார்னு ஒரு நம்பிக்கை. எதுக்கும் அவரு கண்விழிச்ச பிறகு நீ போ; இல்லாட்டி நானே கொன்னுட்டேன்னு நீ சொன்னாலும் சொல்வே."

"ஆனாலும் உனக்கு இவ்வளவு ரப்பு ஆகாதுடி. பாவி! உன்னைக் காட்டியும் கொடுக்க முடியல. காட்டாமலும் இருக்க முடியல. உனக்கு நான் உடந்தைன்னு கடைசியில நானுகூட ஜெயிலுக்குப் போகணும். என்னவோ, அந்தப் புள்ளாண்டான் நல்ல காலம், நான் அந்தப் பக்கம் வந்தேன். என்னோட வீட்டுக்காரனத் தேடி அங்கே வந்தேனோ, இதுவப் பார்த்தேனோ... பாவி மனுசன், பஜார்ல ஒரு பங்களாம்மா விசயதசமிக்குன்னு நாலு தேங்காயும் ஒரு சீப்பு வாயப் பயமும் மூணு ஆப்பிளும் வாங்கி எங்கிட்டக் கொடுத்தாங்க. 'அவசரமா கொஞ்சம் வெளியில போறேன். உன் வீட்ல வச்சுக்க, ஒரு அவருக்குப் பிறகு பங்களாவுல வந்து கொடுத்துடு'ன்னு அந்தம்மா சொல்லிச்சு. வீட்டுக்குக் கொண்டு வந்தால், நானு மீனு கழுவிக்கிட்டு இருக்கப்போ அந்த சோமாறி அவ்வளத்தையும் தூக்கிக்கினு சாராயத்துக்கு விலை கொடுக்கப் பூட்டான். அந்தம்மா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? அதுங்கிட்டருந்து தேங்காய மீட்கறதுக்கு வந்தா நீ இந்தப் புள்ளாண்டானை தேங்காயை உடைச்சது மாதிரி உடைச்சுட்டே."

"அப்போ நீ கோவிந்தோட சம்சாரமா?"

"அது பேரு கோவிந்து இல்ல; என்ன கோவிந்தா பாட வைக்கிற கஸ்மாலம்."

அப்படியும்,இப்படியுமாய் ஒருமணி நேரம் ஆகிவிட்டது. இரண்டு பெண்களும் இளங்கோவின் அறைக் கதவை அவ்வப்போது பார்த்துக் கொண்டார்கள். திறந்தபாடில்லை. ருக்குமணி அவ்வப்போது 'வீட்ல போய் சொல்லப் போறேன்' என்று முருங்கை மரத்தில் ஏறியபோது, சரோசா, பெண் விக்ரமாதித்யையாக மாறினாள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த டாக்டரை இரண்டு பெண்களும், அவசர அவசரமாய் முண்டியடித்த அவரை உள்ளே தள்ளிக்கொண்டே அந்த அறைக்குள் போனார்கள். டாக்டர் "சீ... சீ..." என்று சொன்னபடியே கைக்குட்டையால் ஸ்டெத்தாஸ்கோப்பை துடைத்து விட்டார். பிறகு தான் குணப்படுத்திய பேஷண்டை பெருமிதம் தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டே நின்றார்.

கட்டிலில் கிடந்த இளங்கோவின் தலையில் சில இடங்களில் மொட்டை போடப்பட்டு, பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நெற்றிமேட்டுத் தோல் இழுத்துக் கட்டப்பட்டு வெள்ளைக் கயிறு மாதிரி ஒன்று தெரிந்தது. வாய்க்குள்ளும் நான்கைந்து பிளாஸ்டர்கள். கால்களில் சின்னச் சின்னக் கட்டுக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வலது கை கழுத்தோடு சேர்த்து வெள்ளைத் தூளியில் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ருக்குமணி “ஐயையோ" என்றபோது, டாக்டர் “பயப்படாதே. கை முறியலே. பிசகி இருக்கு; சரியாயிடும். இது என்ன உன் வீட்டுக்காரனா?” என்றார்.

“எனிக்கு தம்பி சாரே..."

“அப்போ இந்த அம்மாவோட வீட்டுக்கார மச்சானா?"

அந்த இரண்டு பெண்களும் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபோது அவர்கள் நன்றியில்லாமல் தன்னைக் கிண்டல் செய்வதாய் அனுமானித்த டாக்டர், இன்னும் நன்றி தெரிவிக்காத அந்தப் பெண்களைப் பார்த்து, "பேஷண்டை டிஸ்டர்ப் செய்யக்கூடாது. கெட் அவுட்” என்றார். பிறகு அவரே வெளியேறி விட்டார்.

இளங்கோ, கண்விழித்தான். எல்லோரும், எல்லாமும் மங்கல் மங்கலாய்த் தெரிந்தன. அவனைப் போல் அடிபட்டுக் கிடப்பது போல் தோற்றம் காட்டின. கண்களைக் கசக்கினான். விவகாரம் மெல்ல மெல்ல விரிந்தது. அடிபட்ட வரலாறும் தெரிந்தது. ஆனால் இப்போது இருக்கும் இடம்தான் புரியவில்லை. 'அம்மா' என்று ஒரு தடவையும், 'பாமா' என்று இன்னொரு தடவையும் மனதுக்குள் கூவியபடியே, தலையைத் தூக்கினான். ருக்குமணிதான் கண்ணில் பட்டாள். "எப்படியோ, மாரியாத்தா உன் கண்ணத் தெறந்துட்டா; பிழைச்சுக்கிட்டே” என்றும், “நானுதான் உன்னை இங்கு கொண்டு வந்தேன் சாரே... தோ, இந்த கஸ்மாலம் யாருன்னு சொல்லுப் பார்க்கலாம்?" என்று சொன்னபோது இளங்கோவுக்குப் புரிந்தது.

இளங்கோ, ருக்குமணியைப் பார்த்து சோகமாகப் புன்முறுவல் செய்தான். சரோசாவைப் பார்த்ததும் புன்முறுவலை அடக்கிக் கொண்டான். சரோசா அவன் அருகே போய், கைகளால் கண்களை மூடிக் கொண்டாள். அவள் உடம்பு முகத்தோடு சேர்ந்து குலுங்கியது. ருக்குமணி இளங்கோவிடம் விளக்கமளித்தான் :

"ராத்திரில எதுக்கும்மே சூரிய நமஸ்காரம்? சாரே! இந்த தத்தேரிதான் ஒன்னை ஆள் வெச்சு அடிச்சுப் போட்டது. நானு, நீ இவளுக்காகப் பட்டபாட்டைச் சொன்னாலும் சொன்னே அம்மாவுக்கு பொத்திக்கிறயுகை வருது. வீட்ல போய் சொல்லிட்டு வரட்டுமா சாரே?”

இளங்கோ சரோசாவை சிரமப்பட்டு முகம் திருப்பிப் பார்த்தான். அவளோ, அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தக் கைகளை விரித்து அதற்குள்ளேயே முகம் புதைத்து விம்மினாள். பிறகு அவனருகே போய் நின்று, “நானும் போலீஸ்ல சரண்டர் ஆகப் போறேன் சாரே. எனிக்கா பாடுபட்ட ஒன்ன இப்படி படாது பாடுபடுத்திட்டு நானு வெளில திரிய விரும்பல சாரே. உன் கைக்கி வெள்ளத்துணி போட்ட இந்தப் பாவி கைக்கு, இரும்பு விலங்கு போடணும் சாரே" என்று அழுதழுது சொன்னாள். அவன் ஏதாவது பேச வேண்டும் என்பதுபோல் அவன் வாயையே பார்த்தாள். இதற்குள் ருக்குமணி வெளியேறப் போனாள்.

இளங்கோ தட்டுத்தடுமாறி தலையாட்டியபடியே சொன்னான் :

"ஆக்சிடெண்டுன்னு சொல்லு. பாமாவுக்கும் சொல்லச் சொல்லு. மறந்துடாதே! ஆக்ஸிடெண்டுதான் பைக்கிலே இருந்து கீழே விழுந்துட்டேன்."

ருக்குமணி, இளங்கோவைப் பெருமையாகவும், சரோசாவை சிறுமையாகவும் பார்த்தபடி வெளியேறினாள். இளங்கோ முக்கல் முனங்கலோடு, சரோசாவைப் பார்த்து லேசாய் சிரிக்கப் போனான். அவள், ஏதோ பிராயச்சித்தம் செய்யப் போகிறவள்போல் மேஜையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணியை அவன் வாயருகே கொண்டு போனாள். அவள் மனம் நோகக்கூடாது என்பதற்காக அதைக் குடித்துவிட்டு, இளங்கோ, அவளைப் போகும்படி சைகை செய்தான். அப்படியும் அவள் போகாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு ஒடியாத கையால் அவளை லேசாகத் தள்ளிவிட்டான். அவன் எதற்காகப் போகச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட சரோசா, அவன் கால்களைப் பிடித்தபடியே விம்மினாள். அவன் அடிவயிற்றிலிருந்து ஒரு மூச்சை வாய்க்குக் கொண்டு வந்து, “போம்மா” என்று சத்தம் போட்டுச் சொன்னான்.

சரோசாவோ, போகுமிடமில்லாததுபோல், போக வேண்டிய இடம் பிடிக்காததுபோல் அங்கேயே நின்றாள்.
-----------------

அத்தியாயம் 17

நாய்கள் கூடக் குரைக்காத நடு நிசி...

துரையின் சாராயக் கொட்டடிக்குக் கிழக்கே மண்டிக் கிடக்கும் குடிசைப் பகுதி. ஒன்றின் சுவர் இன்னொன்றுக்கு சுவரான தொடர் குடிசைகள். தொடர் தொடராய் சோடி சேர்ந்த குடிசைகளுக்கும், நான்கு கம்பிகள் அகல வாய்ப்பில் செருகப்பட்ட ‘ஜன்னல்கள்’. இந்த குடிசை வரிசைக்கு அங்கேயும் இங்கேயும் தாறுமாறாய் சிதறிக்கிடந்த தகர டப்பாக் குடிசைகள்; கோணிக்கதவுப் பொந்துகள்; ஒன்றோடு ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்த குடில்கள். இதற்கு மத்தியில் ஒரு பொட்டல் வெளி. அங்கேயும் ஒரு குடிசை இருந்ததுக்கு அடையாளமாக மூங்கில் பட்டைகளும், ஓலைக் கசிவுகளும் சிதறிக்கிடந்தன. அக்கம் பக்கத்து குடிசை மகுடங்களும், அருகே இருந்த ஒரு வாகை மரமும் ஆகாயக் கூரையாக, அந்தப் பொட்டல் ‘தலைமறைவாக' இருந்தது. அதற்கு இருந்த ஒரேயொரு வழியையும் ஒரு அம்பாசிடர் கார் கதவு போல வழிமறித்து நின்றது.

அந்தப் பொட்டல் வெளி புகைந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அடுப்பின் மேல் மூன்றடுக்குப் பானைகள் மண்கரகங்கள்போல் அடுக்குடுக்காய் வைக்கப்பட்டிருந்தன. கீழே முதுமக்கள் தாழி மாதிரியான பெரிய பானை. அது கீழே வீசிய நெருப்பில் களிமண்ணே சிவந்து கல்லானது போல் அடிவாரத்தைக் காட்டியது. சென்னைப் புறநகர்ப் பகுதி ஒன்றில் நாட்கணக்கில் முகமூடி வாய்களோடு புதைக்கப்பட்டிருந்த மண் பானைகள், சிறிது தொலைவில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் கலக்கல்கள். இவற்றில், போன வாரம் இட்டு நிரப்பப்பட்ட வார்னிஷ், சின்னச் சின்ன பாட்டரிகள், ஒயர்கள், அழுகிப் போன பழங்கள், வெல்லம், கருவேலம் பட்டை போன்ற பொருட்கள் இப்போது நீரோடு சேர்ந்து நீர்த்துப் போயிருந்தன. ஒரு டவுசர்காரப் பையன், அந்தப் பானைகளுக்குள், கையில் வைத்திருந்த ஒரு கண்ணாடிக் குப்பியிலிருந்து இரண்டு மூன்று துளிகளைத் தெளித்துக் கொண்டிருந்தான். இப்படி 'போஷாக்கு'ச் செய்யப்பட்ட ஒரு பானைதான், அந்த அடுப்புக்கு மேல் இருந்தது. இதைவிடச் சிறிய ஒரு பானை அதற்குமேல் இருந்தது. சிறியது என்றால் கீழே இருப்பதை விடச் சிறியது; ஆனால் சாதாரணப் பானையைவிடப் பெரியது. இந்தப் பானைக்குள் ஒரு அலுமினியப் பாத்திரம் எப்போதோ வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பானைக்கு வெளியே குழந்தையின் தொப்புள் கொடி போல் ஒரு டியூப்; அந்தப் பானையின் குழாயடி டேப்புக்குள் இருந்து வெளிப்பட்ட இந்த டியூப், வெளியே வைக்கப்பட்ட தார் நிறத்தில் உள்ள ஒரு கேனுக்குள் ஊடுருவி இருந்தது. இந்த நடுப்பானைக்குமேல் இன்னொரு பானை. அதன் வாய் ஒரு மண் ஜாடியால் மூடிக்கிடந்தது. இந்த மூன்று பானைகளுக்கும் இடையே உள்ள, இடைவெளி மண்ணால் பூசப்பட்டு, அவற்றிற்கு ஒரே பானைபோல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது.

துரை, பத்தடி தள்ளி, ஒரு நாற்காலியில் சோர்ந்து கிடந்தான். அங்கே காய்ச்சப்படுவதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், கண்மூடிக்கிடந்தான். ஆனால் அம்மைத் தழும்பனான கோபால், அவனுடைய கூட்டாளிகளான இன்னாசி, மணி, மொட்டை, ராக்கப்பன், சந்திரன் போன்ற வகையறாக்கள் அங்கும் இங்குமாகச் சுழன்றார்கள். சரோசா, தனது இஷ்டத்துக்கு விரோதமாக நிற்பவள் போல், அந்த வாகை மரத்தில் சாய்ந்து, அருகே உள்ள ஆழ்கடலையும் மேலே ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அடுப்புத்தீ, நட்சத்திரப் பொறிகளாக மேலோங்கி மேலோங்கி, ஊறல் பானையின் அடிவாரத்தையே திரவமாக்கப்போவது போல் எரிந்தது. 'சடசட' என்ற நெருப்புச் சத்தம். அதன் சினப்பொறிகள் ஓலைத்துகள்களோடு உரசி, உரசி அங்கும் இங்குமாய் நாட்டியம் ஆடின. ஆகாயமும், பூமியுமாய் ஒரே சமயத்தில் தாவுவது போல் தோன்றின. அடுப்புப் போட்ட கத்தல், எதிரே ஆர்ப்பரித்த கடலுக்கு ஜால்ரா போடுவது போல் இருந்தது.

இந்தப் பின்னணியில், ரத்தச் சதைபோலான தாழிப்பானையின் அடிவாரச்சூடு தாங்கமுடியாது, ஆவியான ஊறல், அடுத்த பானைக்குள் புகுந்து அதற்கு மேலே தாவி, முதல் பானையின் ஈரக்கசிவான அடிவாரத்தில் மேகமண்டலமாகி,பின்னர் தலைக்காவிரி போல் மெல்லியத் துளிகளாகி, அந்தப் பானையின் அடிவாரத்தில் பிறப்பெடுத்து; அலுமினியப் பாத்திரத்தில் விழுந்து கர்ப்பக்குழாய் மாதிரியான ரப்பர் குழாய் வழியாய் சாராய காவிரியாகி, அந்த கேன் கடலுக்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தது.

துரை, சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு முடங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இருந்த இடத்தில் இருந்தபடியே அதட்டினான்:

"இன்னாங்கடா, ஒரு அவுரு ஆவுது, வேடிக்கை காட்டுறீங்க."

‘குருதோஸ்து'வின் சிக்னலைப் புரிந்து கொண்ட இன்னாசி, மேல் பானையை டவலைக் கொடுத்துத் தூக்கிய பொழுது, கோபால் அடுப்பு விறகை சிறிது வெளியே எடுத்தான். இதற்குள், இன்னொருத்தன் அந்தப் பானையை வாங்கி, அதில் கொதித்த நீரை கீழே கொட்டிவிட்டு, மீண்டும், அதை மத்திய பானைக்குமேல் மல்லாக்க வைத்தான். இன்னொருத்தன் கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் கேனை தூக்கி அதற்குள் இருந்த தண்ணீரை அந்தப் பானையின் வாய்க்குள் தாரை வார்த்தான். அப்போது பானைத் தண்ணீர் கீழே சிந்தி நெருப்புமேல் பட்டு, அந்த நெருப்பை நாகப்பாம்பாய் சீறவைத்து, பின்னர் பூனைக்குட்டியாய் ஒப்பாரி போட வைத்தது.

துரை, உடம்பை நெளித்தபடியே கத்தினான் :

"அசல் நாட்டுப்புறண்டா நீ... தொழிலில் சுத்தம் வேணுண்டா சோமாறி"

"நாட்டுப்புறமுன்னா, அசமந்தமுன்னு நினைக்காதண்ணா... இப்போ நமக்கே கத்துக் கொடுப்பாங்க. இந்த காச்சலையே எடுத்துக்கோ. நாம அடிக்கடி மேல்பானை தண்ணிய மாத்தறோம். ஆனா நாட்டுப்புறத்துல பம்பு செட்டு தண்ணியையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை மேல விடுறாங்கோ. அந்தப் பானையோ நம்ம அண்ணாத்தே வீடு மாதிரி சும்மா கும்முன்னு குளுராவே இருக்குது. சிலரு நிலத்துலயே ஊறல ஊத்தி வைக்கிறாங்க."

துரை, இப்போது பலமாகச் சிரித்தான்; சத்தம் போட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில், எல்லோரும் சேர்ந்து அதன் ஒலி அடர்த்திக்கு, ஒரு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் சரோசா மட்டும் சும்மாவே நின்றாள். துரை, அவளை செல்லமாக அதட்டினாள்:

"இன்னாமே ஒனிக்கி கேடு? ஜல்தியா, ஸ்பெஷல் தயாரிமே. அம்மாம் பெரிய கார எவ்வளவு நேரம் காக்க வைக்கிறது? இந்தா வாங்கிக்கோ."

அடித்துப்போட்ட இளங்கோவையும், அவன் துடித்த துடிப்பையும், மனதுக்குள் உள்வாங்கி, மருவிக் கொண்டிருந்த சரோசாவுக்கு, துரையின் பேச்சு காதுகளை உரசவில்லை. அதோடு அவளைப் போலவே ஏழ்மையில் இருந்தாலும், பாசமும், நேசமும் கொண்ட ருக்குமணியை நினைக்க நினைக்க, அவள் அண்டமாகவும், இவள் அணுவாகவும் பெருகிக்கொண்டும், சருங்கிக் கொண்டும் இருப்பதுபோல் தோன்றியது. இந்தக் கோலத்தில், இளங்கோ தன்னைப் பார்த்தால் அவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் அவளை சாராயம் போடாமலேயே 'கிக்காக்கியது'. துரை, மீண்டும் அதட்டினான் :

“ஒனக்கு இன்னாமே ஆச்சுது? நானே உயிரோட கீறேன். உனிக்கு என்ன கேடு? இந்தா, இத பட்டும் படாமலும் தட்டுமே. முக்கிடாதே."

சரோசா மெல்ல மெல்ல நகர்ந்து, துரை நீட்டிய ஈரப்பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள். அதற்குள் இருந்த ஊமத்தை விதைகள், அந்த வெள்ளைத் துணிக்குள் மாரியாத்தாவின் ஆயிரங்கண்கள் போல் சிமிட்டின. அதை வாங்கிக்கொண்ட சரோசா ஒரு 'தெவசாவில்' ஊற்றப்பட்டிருந்த திரவத்தின்மீது அந்தப் பொட்டலத்தை பட்டும் படாமலும் தட்டிக் கொடுக்கத்தான் போனாள். ஆனாலும், தன்னை அறியாமலே, அந்தப் பொட்டலத்தை அந்தத் திரவத்திற்குள் முக்கி முக்கி எடுத்தாள். சாதாவாக இருந்த அந்தச் சாராயம், இப்போது 'ஸ்பெஷல்' ஆகிவிட்டது. இதன் விலையும் கிக்கும் இரண்டு மடங்காம்.

சரோசா அந்த ஸ்பெஷல் சாராயத்தை இன்னொருவனுடன் சேர்ந்து கேனில் ஊற்றினாள். அப்போது கார் டிக்கியை த் திறந்த மணி ஆச்சரியம் தாங்காமல் கத்தினான்:

“துரண்ணே! இந்தண்டே வந்து பாரு. காரோட டிக்கி அசல் மாட்டுத்தொட்டி மாதிரி கீ துண்ணே. டயர் கியர் எதுவுமில்லாமே சதுரமா அசல் தரை மாதிரி இருக்குதுண்ணே."

"அடப்போடா எட்டன். அண்ணாத்தைக்கு டிக்கிய தொட்டியாக்குற ஐடியாவ கொடுத்ததே நானுதான்டா."

"சரக்கு எங்கண்ணே போகுது?"

"எங்கே போனால் உனக்கு என்னடா கயிதே?"

“ஏண்ணே இப்படி லொள்ளு லொள்ளுனு கத்தறே?"

"பின்னே இன்னாடா... அண்ணாத்தே, சர்க்கார் லைசன்சுல ஓடுற ஒயின் சாப் அல்லாத்திலேயும் விஸ்கி, பிராந்தி, ரம் இருக்கவேண்டிய பாட்டல்ல இந்த சரக்க ஊத்தி விக்கிறார்ன்னு டமாரம் அடிக்க முடியுமா? கம்மனாட்டி; என் வாயை கிளறிட்டான் பாரு."

‘அதனாலதான் இப்போ பார்ல குடிக்கிறவங்க எல்லாம் மார்ல கை வைக்காங்களா?"

"ஏய் சரோ, கார்ல ஏத்தேமே.”

சரோசா, அந்தக் கேனை தூக்கப்போனபோது, செட்டில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராக்கப்பன் அங்கே வந்து கீழே மண்டியிட்டு, அந்த கேன் மூடியைத் திறந்து, கையை அதற்குக் கீழே வைத்துக்கொண்டு கேனை கவிழ்த்துக் கொஞ்சம் குடித்தான். சரோசா அவனைக் குப்புறத் தள்ளினாள். கையை ஓங்கப்போனவள்... பின்னர் அதே கையால், ஒவ்வொரு கேனாகத் தூக்கிக்கொண்டு போய் கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் இளங்கோ, அவளை வழிமறிப்பதுபோல் இருந்தது. ருக்கு, அவளை பின் பக்கமாய்ப் பிடித்துத் தன் பக்கம் இழுப்பது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் ராக்கப்பன் கூப்பாடு போட்டான் :

"அய்யோ, என் கண்ணு பூட்டே! வயிறு எரியுதே! அய்யய்யோ என் கண்ணு! அய்யோ என் வயிறு!”

எல்லோரும் அவன் பக்கமாக ஓடி வந்தார்கள். அவன் தரையில் சுருண்டு சுருண்டு நெளிந்தான். மேற்கொண்டு கத்த முடியாமல் வாய் கோணியது... கைகால்கள் வெட்டின. கழுத்து பின்பக்கமாய் திரும்பப் போனது... எல்லோருக்கும் புரிந்துவிட்டது. துரை கத்தினான்; சரோசாவை அடிக்கப்போவது போல் கைகளை ஓங்கிக்கொண்டு அதே சமயம் அந்தக் கைகளை அவள் தலையில் இறக்காமல் சத்தம் போட்டான் :

“நான் நெனச்சபடியே, அந்தப் பொட்டலத்த முக்கி முக்கி விஷச் சாராயமா ஆக்கிட்டியமே... தோ பார்! அந்தப் பொட்டலம் ஈரமா நனஞ்சிருக்கு பார். நீயல்லாம் ஒரு தொழில்காரியா? இப்போ இவன் குடும்பத்துக்கு யார் ஜவாப்பு?"

சரோசா திருப்பிக் கத்தினாள்:

"நானு மொத்துனதுல விஷமாகல. அதோ அந்த ஓணா மூஞ்சி விஷத்துல இரண்டு துளிய ஊத்துறதுக்குப் பதிலா சொட்டுச் சொட்டா ஊத்துனான். அப்பவே எனிக்கு சந்தேகம்.”

"அப்போ நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கே?"

"சரிதாம்பா, உன்கையாலேயே எனிக்கும் ஒரு கிளாஸ் தந்துடு. அவனைப் போலவே நானும் ஆயிடுறேன். இந்தத் தொழிலு எனக்கு வேணா வேணான்னு சாயங்காலம் வாயிலும் வயித்துலுமா அடிச்சி உன்கிட்ட சொன்னேன்... நீ கேட்டாத்தானே!”

இதற்குள், கீழே கை கால்களை வெட்டிக் கொண்டிருந்தவன் ஆடி அடங்கி விட்டான்; அப்படியே விறைத்துக் கிடந்தான். அவன் வாயோ ‘சொல்லாதே யாரும் கேட்டால்' என்பதுபோல் கோணிக் கிடந்தது. கண்கள் பாடை போல் வெளுத்து இருந்தது. சரோசா முகத்திற்கு கைகளை மூடியாக்கிக்கொண்டு விம்மினாள். துரை இப்பொழுது அவளுக்கு ஆறுதல் சொன்னான்:

"படுகளத்துல ஒப்பாரி கூடாதுமே. இன்னாசி, கோணி கொண்டுவா. பிணத்த தூக்கினு போயி கடலுல போடணும் நானு அண்ணாத்தைக்கு போன்ல விஷயத்தை சொல்லிட்டு வாறேன். எதிர்கோஷ்டி அங்கப்பன், ஆளுங்கட்சியில சேர்ந்த ஜோர்ல, நாம காய்ச்சிற வழக்கமான இடத்துல வம்பு பண்றான்னு இங்க வந்தால், இங்கேயும் இப்படி ஆயிட்டுதே."

சரோசாவுக்கு, இப்போது தன்னை முன்னாலும், பின்னாலும் ருக்குவும், இளங்கோவும் நின்றுகொண்டு ஆளுக்கொரு பக்கமாக இழுப்பது போல் இருந்தது. இப்படிப்பட்ட பல சாவுகளைப் பார்த்தவள்தான் அவள். ஆனால் இன்றோ அந்தப் புது தோஸ்து விறைத்துக் கிடந்ததைப் பார்க்கப் பார்க்க, அவள் மனமே அந்த ரூபத்தில் கிடப்பது போல் இருந்தது. திடீரென்று அவளே செத்து ஆவியாகி பேயுருவம் கொண்டது போல் எழுந்தாள். அந்தக் கார் பக்கம் ஓடினாள். அந்த டிக்கி தொட்டியில் இருந்த கேன்களை எடுத்து, கடல் பக்கமாக ஓடி ஓடி வீசிப் போட்டாள். துரை வந்து, அவளைப் பிடித்துக் கொண்டான். மற்ற தோஸ்துகளும், அந்தப் பிணத்தைக் கோணிக்குள் செருகப்போன இதர தோஸ்துகளும், அங்கே வந்து நின்றபோது, துரை கத்தினான்:

“என்னமே ஆச்சி ஒனக்கு? எதுக்காக கேனை கடல்ல எரியுற?”

சரோசா திருப்பிக் கேட்டாள்: "அப்போ அல்லாரும் இத குடிச்சிட்டு சாகணுங்கறியா?"

'அது அண்ணாத்தையோட விஷயம். அவர் என்ன சொல்றாரோ அதைச் செய்றதுக்குத்தான் நாம இருக்கோம். ஒருவேளை எதாவது முறிவு மாத்திரை போட்டுக்கூட அண்ணாத்தே மாயாஜாலம் செய்யலாம். உனிக்கி இன்னாமே வந்தது?”

“துரை அண்ணே! துரை அண்ணே! ஒன்னை கையெடுத்துக் கும்பிடறேன்; எனிக்கி இந்தத் தொழில் வேணாம்; என்ன விட்டுடு, விட்டுடு."

சரோசா, அந்தக் காரை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு, தலைவிரி கோலமாக ஓடினாள்.
------------------

அத்தியாயம் 18

ஐந்தாறு நாட்கள் அடங்கி, ஆறாவது நாள் துவங்கியது.

இந்த இடைவெளிக்குள், இளங்கோவுக்கு வேண்டியவர்கள் எல்லோருமே அவனைப் பார்த்துவிட்டார்கள். பெற்றோர், உற்றோர், அலுவலக சகாக்கள் அனைவரும் அவனுக்கு ஏற்பட்ட ‘விபத்தை’ தலைக்குப் பதிலாக தலைப்பாகையோடு போனதாய் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அவனுடைய அம்மா கிட்டத்தட்ட அங்கேயே கிடந்தாள். எல்லோரையும்விட அலறி அடித்து, அவனை முதல் தடவையாய் மருத்துவ மனையில் பார்த்த பாமாவும் அங்கேயே தவம் கிடப்பதுபோல் கிடந்தாள். ஆனால் பாக்கியம் பார்த்த பார்வையில் லேசாய் ரோஷப்பட்டு, இப்போது தாய்க்காரி இல்லாத சமயமாய் பார்த்து வந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மட்டும், இளங்கோவுக்கு ஏற்பட்டது விபத்தா அல்லது ஆபத்தா என்கிற சந்தேகம் இன்னும் போகவில்லை. அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்திருந்தால் இளங்கோ சொல்லி இருப்பார் என்ற நம்பிக்கை; அப்படியான ஒரு உரிமை...

அந்த மாடிக்குக் கீழே வரவேற்பு வளையத்திற்குள் நோஞ்சானின் தயவில், சரோசா தன்னை மறைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். மேலே பாமா போயிருக்கிறாள். அவள் போன பிறகுதான், இவள் போக வேண்டும். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாமாவும், நோஞ்சான் பாணியில் சொல்லப்போனால் அவளுடைய 'கிடாத்தலை' அப்பன் மிஸ்டர்.ரமணனும் கீழே படியிறங்கினார்கள். சரோசா, தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் மருத்துவமனையை விட்டு மறைந்ததும், அவளுடைய தலை வரவேற்பு வட்டத்திற்கு மேல் மூன்றடி உயரத்தில் எழுந்தது. வழிகொடுக்கும் சாய்வுப் பலகையை நிமிர்த்திக் கொண்டு, வெளியேறி மாடிப்படிகளில் ஏறினாள். இதற்குள், அவனை, அவள் மூன்று நான்கு தடவை பார்த்து விட்டாள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவள் பேச நினைக்கும் போதெல்லாம், பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள். அவர்களது ஆடை ஆபரணங்களைப் பார்த்துவிட்டு, இவளே தனக்குள்கூசிக்கொண்டு வெளியே வந்துவிடுவாள்.

சரோசாவின் உருவம் வாசலில் தெரிந்தவுடனேயே, இளங்கோ அவளை அடையாளம் கண்டு "வா சரோசா" என்றான். அவளும் சொல்லப் பொறுக்காதவளாய் அந்த அறைக்குள் தாவினாள். அவன் முகத்தைப் பார்த்தாள். நெற்றிப்பொட்டின் வீக்கம் குறைந்திருந்தது, காதைப் பார்த்தாள்; பிளாஸ்திரி இன்னும் எடுக்கப்படாமல் இருந்தது. ஒரு கை, இப்போதும் ஒரு மாதிரி தெரிந்தாலும், அது தூளியில் தொங்கப்போடாமல், அவன் மடியில் கிடந்ததில், அவளுக்கு மகிழ்ச்சி.

சரோசா கையில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் தயங்கியபடியே நீட்டினாள். பலர் இப்படி அவனுக்குக் கொடுப்பதை தொலைவில் நின்று பார்த்த அவளுக்கு, நோயாளிகளுக்கு இப்படி பழவகைகளைக் கொடுக்க வேண்டும் என்பது இப்போதுதான் புரிந்திருக்க வேண்டும். அவனுக்கு ஏதோ ஒரு டெலிபோன் வந்தது. யாரோ அலுவலக ஆசாமி. இவனும் “தேங்க்யூ ஸார்..தேங்க்யூ ஸார்... உடம்பை ஜாக்கிரதையாகத்தான் பாத்துக்கறேன் ஸார்; இனிமேல் கண்டபடி வண்டியை ஓட்டமாட்டேன் ஸார்” என்று அவன் அப்படிக் குழைந்து பேசியதைப் பார்த்தால் டெலிபோனில் அடுத்த முனையில் பெரிய அதிகாரி ஒருவர் பேசியிருக்க வேண்டும். டெலி போனை கீழே வைத்துவிட்ட அவன், சரோசாவைப் பார்த்தான். அவளது ஈரப்பட்ட முகத்தைப் பார்த்தபடியே ஒரு சந்தேகம் கேட்டான்: "ஆமா சரோ, நானும் உன்னை கவனிச்சுட்டுத்தான் வரேன். இங்கே ஆளுங்க வரும்போதும் போகும்போதும் கண்ணை கசக்குறயே, ஏம்மா?”

சரோசா அவனை சங்கடத்துடன் பார்த்தாள். பிறகு அவனிடமே ஆலோசனை கேட்பதுபோல் ஒப்பித்தாள் :

"கண்ணை கசக்கலே சாரே; கண்ணே கசங்குது! அதென்னமோ எனிக்குத் தெரியலே, இங்கமட்டுமில்லை, எங்கேயும் ரெண்டுபேரோ மூணுபேரோ அன்னியோன்யமாய் பேசிட்டிருந்தால் எனிக்கு அயுகை வந்துடும். நேத்து பாரு... இந்த கஸ்மாலம் புடிச்ச மழையிலே ஒரு பொடிப்பயலும், ஒரு பொண்ணு தன்னோட முந்தானையை எடுத்து அவன் தலையில மூடனாய். இந்த பாசத்தை பார்த்துட்டு நான் அழுதுட்டேன் சாரே. யாராவது கொயந்தைய கொஞ்சறதப் பாத்துட்டாப் போதும், அயுதுடுவேன். யாராவது ‘சொகமா இருக்கிறியானு' மெய்யாவே கேட்டாப் போதும், அயுதுடுவேன். எனக்கே ஏன் இப்படினு புரியல. எதுக்கும் ஆஸ்பத்திரி தோஸ்துக்கிட்டே சொல்லி இங்கே வார பைத்தியக்கார டாக்டரண்டே என்னையும் தோவுண்டு டெஸ்ட் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன். சர்தானே சாரே?”

இளங்கோ, அவளை இப்போது புதுமாதிரியாகப் பார்த்தான். அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கே அழுகை வரும்போல் தோன்றியது. ஆகையால் அவள்மீது ஏவிவிட்ட பார்வையை தவிர்த்துவிட்டு, அங்குமிங்குமாய் பார்த்தான். அவளைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவள் கல்லுள் மறைந்த சிற்பம்போல் தோன்றினாள். அந்த தடிப்பேறிய உடம்பிற்குள் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதுபோல் தென்பட்டது. அவளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பிசகாத கையை ஊன்றி இருக்கையின் முனைக்கு வந்தான். அவளை உட்காரச் சொன்னான். அவளோ நின்றுகொண்டே உட்காருவதுபோல் உடம்பை வளைத்துக் கொண்டாள். இளங்கோ, அவளை அனுதாபமாய் பார்த்தபடியே கேட்டான்:

"உன்னைப் பற்றி விவரமா சொல்லேன் சரோ."

"போலீஸ் சொல்லி இருக்குமே.”

"சொல்லுச்சு. ஆனால் அந்தப் போலீசுக்கு ஒருத்தரோட காரியங்கள் தான் முக்கியமே தவிர, காரணங்கள் அல்ல. ஏழைகளை வேரோடு பிடுங்கி எறியத்தான் தெரியுமே தவிர, அவுங்களோட வேரையோ, வேரடி மண்ணையோ தெரிஞ்சுக்க மாட்டாங்க. போகட்டும்; ஒன்னைத் தேடி ஸ்டேசனுக்கு ஒரு பெரியவர் வந்தாரே, அவரு யாரு?"

சரோசா, உடனடியாகப் பேசவில்லை. கண்களை உள்நோக்கிச் செலுத்தினாள். அதை நெஞ்சுக்குள் விட்டதுபோல் இமைகளை முழுமையாகக் காட்டினாள். மனதிற்குள் மூன்று வயதுக் குழந்தையாக அழுதாள். கத்தியுடன்கூடிய கொலைகாரியாகத் தாண்டவம் ஆடினாள். பிறகு முடங்கிப் போனவள்போல்-மூலையில் கிடப்பதுபோல் பாவித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இமைகள் மெல்லத் திறந்தன. இளங்கோவை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, முதல் தடவையாக ஒரு தோழனைப் பார்க்கிற துயரமும் மகிழ்ச்சியும் கலந்த கலவைக் குரலில், தனது வாழ்க்கைச் சுருக்கத்தை சொன்னாள்:

"பெரிசா சொல்றதுக்கு எதுவுமே இல்லே-சாரே. என் நயினா, அதான் நீ சொன்னியே - ஸ்டேசனுக்கு வந்தவர் - அவரு பர்மாவுல பெரிய கில்லாடியா இருந்திருக்கார். காரு வச்சிருக்கார், பங்களா வச்சிருக்கார்; கண்ணுக்கு அயகா பொண்டாட்டி வச்சிருக்கார். ஒரு பொண்ணையும்,புள்ளாண்டானையும் பெத்திருக்கார். அப்போ ஏதோ ஒலகப் போரோ ஏதோ வந்துதாமே - அதுல சப்பான்காரன் ரங்கூன்லே குண்டு போட்டிருக்கான். உடனே எல்லாரையும் போலே நயினாவும் துண்டக் காணோம். துணியக் காணோம்னு அடிச்சுப் புரண்டு குடும்பத்தோட நம்ம நாட்டைப் பார்த்து நடந்திருக்கார். காடு மலை வழியா, சனங்களோட சனமா வந்திருக்கார். கார் வைச்ச மனுசன் காலுவீங்கி நடந்திருக்கார். காட்டு வழியிலே எத்தனையோ பேர், வயசான நயினாக்களையும், ஆத்தாக்களையும், கொயந்தைங் களையும் வழியிலேயே விட்டுட்டு, கண்ணீரும் கம்பலையுமா ஓடி வந்திருக்காங்க. ஆனா என்னோட நயினா வூட்டுக்காரியை இடுப்பிலேயும், கொயந்தைங்களை தோளிலயுமா தூக்கிட்டு வந்திருக்கார். ஆனாலும் வழிலே சப்பான்காரன் மேலே, குண்டு போடறதா நினைச்சு, வெள்ளைக்காரன் போட்ட குண்டுல பொண்டாட்டியும் பூட்டாள். புள்ளாண்டானும் பூட்டான். நயினா மூணு வயசு பொட்டக் குயந்தயோட தப்பிச்சுட்டார். இந்த மெட்ராசுக்கு வந்து சமையல்காரனா, ரிக்ஷாக்காரனா வேலை பார்த்து, தாம் பெத்த பொண்ணை ஒருத்தனுக்குக் கட்டி வச்சிருக்கார். நான் பிறந்த ஒரு வருஷத்திலேயே, அவரோட பொண்ணு என்னோட ஆத்தா - அந்த தத்தேறி முண்டை, - எவனோ ஒரு கோல்மாலை இஸ்துக்குன்னு பூட்டாளாம். அவள் மட்டும் என் கையிலே கெடச்சா, பீஸ் பீஸா கிழிச்சிடுவேன்."

“ஏன் உடம்பை இப்படி ஆட்டறே சரோ? பொறுமையாச் சொல்லு. நடந்ததை இனிமேல் மாத்த முடியாது. உன்னோட அம்மா எந்த நிலைமையிலே அப்படிப் போனாளோ?"

"அது இன்னா சாரு நிலைமை? கொயுப்பு எடுத்த நிலைமை? பயங்கரமான காட்டுலே இருந்து தோளுல தூக்கிட்டு வந்த அப்பாவை வுட்டுட்டுப் போறதுக்கு எப்படி சாரே மனசு வரும்? பெத்த கொயந்தயை விட்டுட்டுப் போறவள் பொம்மனாட்டியா? போ சாரே... அவள் பேச்சை எடுக்காதே."

“அம்மா மேலே இந்த அளவுக்கு வருகிற கோபத்தை உன் அப்பா மேலே காட்டணுமுன்னு ஏன் தோணலே?"

“என்னை அவனுக்குப் பெத்தாளோ, இல்லை எவனுக்குப் பெத்தாளோ?"

“அந்தக் கஸ்மாலப் பயலும் ஒரு வருஷத்துக்குப் பிறகு இன்னொருத்தியை இஸ்துக்குன்னு ஓடிட்டானாம். ரெண்டு பேரும் எத்தனை கை மாறினாங்களோ? விட்டுத்தள்ளு சாரே எச்சிக்கலங்கள. ஏதோ நாயினாவுக்காக காலத்தைத் தள்ளிட்டு இருக்கேன். நான் விட்ற ஒவ்வோர் மூச்சும் அவருக்குத்தான். இரும்பைத் திருடி அவருக்கு வடையா மாத்திக் கொடுக்கேன்; சாராயம் கடத்தி அவரை சாகாம பாத்துக்கறேன். எப்படியோ பொயப்பு ஓடுது. ஆனாலும் ஒன்னை நானு அப்படி படுத்தியிருக்கப்படாதுதான்."

இளங்கோ, சரோசாவை கண்களை ஆட்டாமல் பார்த்தான். தோள் பக்கம் நைந்துபோன அவள் ஜாக்கெட்டையும் முட்டிக் கால்களைக் காட்டிய அவளது கிழிந்த பைஜாமாவையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு மனம் நைந்தது. அவளையே உற்றுப்பார்த்தவன், பிறகு ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்ததுபோல் அவளைப் பிரகாசமாகவும், பிரகாசப் படுத்தியும் கேட்டான் :

"ஒன்னோட எதிர்காலத்தைப்பற்றி எப்பவாவது நெனச்சுப் பாத்தியா?”

"எப்போ ஒருநாள் நினைச்சேன் சாரே... தலை சுத்திச்... விட்டுட்டேன். என்னை மாதிரி குப்பத்துப் பொண்ணுங்க குப்பத்துல திரியற நாயிங்க மாதிரி. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியாமக் கீறதுதான் எனிக்கு நல்லது. ஏதோ பண்ணி மாதிரி ஒரு பொய்ப்பு... விட்டுத் தள்ளு."

“அப்படி இல்ல சரோசா..பன்றி மிருகம்... ஆனால் நாம் மனுசன் மாதிரி. இப்போ ஒனக்கு இருபத்தோறு வயசுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன். எல்லோரும் இப்போ உன்னைக் கொஞ்சுவாங்க, தலையிலே வச்சுக் கூத்தாடுவாங்க. ஆனால், இன்னும் இருபது வருசத்துக்குப் பிறகு ஒன்னோட நிலைமை எப்படி இருக்குமுன்னு யோசித்தியா? அந்த மாதா கோயிலுக்கு முன்னாலே தரையோட தரையா உடம்புகளைக் கிடத்திக்கிட்டு கிடக்குதே ஒரு அனாதைப் பட்டாளம், அதுலதான் நீ போய் சேரணும். ஒன்னோட தோஸ்துங்க, உன்னை, காலால எத்துவாங்களே தவிர, ஏறிட்டுப் பார்க்க மாட்டாங்க. அவங்களோட அலட்சியத்துல நீ அல்லாடணும். பிச்சக்காரியா கையேந்தணும். கை செத்து காலு செத்து கண்கெட்ட அனாதைக் கிழவிங்களைப் பார்க்கேமே அது மாதிரி நீ ஆயிடுவே. நீ கடைசிக் காலத்துலே கை கால வெட்டிக்கிட்டு இருக்கப்போ உன்னை ஆஸ்பத்திரியிலே சேர்க்கிறதுக்குக் கூட ஒருத்தரும் வர மாட்டாங்க. நம்ம எதிரில் வருகிற ஒவ்வொரு அனாதைக் கிழவியோ, இல்ல குஷ்டரோகியோ நமக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறாங்க. என்ன தெரியுமா? 'என்னை மாதிரி ஆயிடாதேன்னு' புரியுதா?"

சரோசா, முதலில் சிரித்தாள்; பிறகு பேசாது இருந்தாள். அப்புறம் அவனை ஆழமாகப் பார்த்தாள். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு அங்குலம் வீதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இளங்கோ அனுமானித்தவைகளை நினைக்க நினைக்க, அவளுக்குத் தன்னைவிட பன்றிகளும், நாய்களும் உயர்ந்தவைகளாகத் தெரிந்தன. காரணம், அவைகளுக்கு உடல் வாதைதானே தவிர மனவாதை கிடையாதே!

சரோசா எதிர்காலத்தைப் பார்க்கப் பயந்தவள் போல் முகத்தை, விரல்களால் திரையிட்டபோது, இளங்கோ அவளை ஆற்றுப் படுத்தினாள் :

"கவலைப்படாதே சரோ! உனக்குன்னு ஒரு திட்டம் வைத்திருக்கேன். ஆமாம்மா... நான் வேலை பார்க்கிற கவர்ன்மென்ட் ஆபீசிலேயே உன்னை கேஷுவல் லேபரா அதாவது அன்றாடக் கூலியாளா சேர்க்கப் போறேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கவர்ன்மென்ட் ஆளா ஆயிடலாம். கழுதையை மேய்ச்சாலும் சர்க்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது ஒனக்குத் தெரியுமா?”

சரோசா, அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தாள். கோணலாக இருந்த மேனியை நேர்கோடாக ஆக்கிக் கொண்டாள். அவளுக்குள்ளே பிரகாசமான ஒன்று, எதிர்காலமோ, அதுபோட்ட கோலமோ, கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது வெந்து தணிந்து சாம்பலானது. எதையோ ஒன்றை - அழுகையோ அல்லது ஆத்திரத்தையோ - அடக்கிக்கொண்டு, அவள் இளங்கோவிடம் விரக்தியோடு சொன்னாள் :

"இப்படி ஆசை காட்டாதே சாரே. சாராயத் தொழிலில் இருந்து யாரும் கழட்டிக்க முடியாது. எங்க அண்ணாத்தை வெட்டிடிடுவார். எனிக்கி தெரிஞ்சே அவரு அஞ்சு கொலை செய்திருக்கார். நானு உன் பேச்சைக் கேட்டால் நானே அவருக்கு ஆறாவது கொலை, நீ ஏழாவது..."

சரோசாவும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் சங்கடத்தோடும், இயலாமையோடும் பார்த்துக் கொண்டார்கள்.
-----------------

அத்தியாயம் 19

சரோசா, பல்லவன் பேருந்துக்குள் ஏறியவர்களை முண்டியடித்து, அவர்களை இறக்கியபடியே, கீழே இறங்கினாள். அடி கனத்த காகிதக் கவரை அணைத்துப் பிடித்தபடியே கோவில் வளாகத்திற்குள் விழுந்தடித்து ஓடினாள். அங்கே குத்துக்காலிட்டுக் கிடக்கும் நாயினாவைக் காணவில்லை. கோவில் வளாகத்திற்கு வெளியே மீண்டும் வந்து, கண்களை அங்குமிங்குமாக அலையவிட்டாள். அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே சாத்தி வைக்கப்பட்ட பிணங்கள்போல் கிடந்த பிச்சைக் கூட்டத்தைப் பார்த்தாள். இளங்கோ, தனக்குத் தெரிவித்த எதிர்காலக் கணிப்பை மனதில் நிறுத்தியபடியே பார்த்தாள். அவிந்து போனது போல் கிடக்கும் பறட்டைத்தலை ஆயா, கால்கள் வேப்பங்குச்சியாய் வளைய, தரைதட்டிய வயிற்றுடன் கிடக்கும் சப்பாணிப் பையன், ரோகமே வடிவாய் புழுத்துக் கிடக்கும் தொழு நோயாளி இவர்களைப் போன்றவர்களில் ஒருத்தியாக, தான் அங்கே ஒரு காலத்தில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து, நினைத்து, அவள் நினைவற்று நின்றாள். அந்தப் பகுதியில் இப்போதே இடம் பிடிக்கப்போவது போல் பார்த்துவிட்டு அது தாளமாட்டாது கண்னை மூடிக்கொண்டாள்.

இந்தச் சிந்தனை பயத்தில் அவள் கரம் அந்தக் காகிதத் தூக்கின் நுனிக்கு வர, அதற்குள் கிடந்த கோழி பிரியாணிப் பொட்டலமும், ஆம்லேட் பார்சலும், தனியாகக் கட்டப்பட்ட தயிர் நனைத்த வெங்காயப் பச்சடியும் கீழே விழுந்தன. கையில் கனமற்றுப் போனதை உணர்ந்து கண்திறந்த சரோசா, கீழே கிடப்பதை எடுத்து பைஜாமாக்குள்ளும், சட்டை முந்தானைக்குள்ளும் திணித்தபோது, பெரிய பொட்டலம் பிதுங்கி சிறிது சோறும், ஒரு கறித் துண்டும் கீழே விழுந்தன. அவ்வளவுதான்... அந்த மதிலோரக் கூட்டம் வாய்பிளந்து அந்த இறைச்சித் துண்டையே கோரஸாகப் பார்த்தது. இதற்குள் அங்கே ஓடிவந்த சொறி நாய் அதைக் கௌவியபோது, அந்தப் பிச்சைக் கூட்டம் அந்த நாயைப் பொறாமையாகப் பார்ப்பதுபோல் பார்த்தது. சரோசாவையும் அண்ணாந்து பார்த்தது. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட பறட்டைத்தலை ஆயா, அவள் நயினா போன இடத்தை கைநீட்டி சுட்டிக்காட்டினாள். பஸ் நிலையம் இருக்கும் திசை.

சரோசா உடனடியாக நகரவில்லை. அந்தக் கூட்டத்தையே வெறித்துப் பார்த்தாள். வருடக்கணக்கில் பார்த்துப் பழகிய அந்தக் கூட்டம், இப்போது வேறு விதமாய் தோன்றியது. அவர்கள் பார்வையில், இவள் பார்வை இருளாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இடது கையை ஜாக்கெட்டுக்குள் விட்டு இருபது ரூபாய் நோட்டை வெளியே கொண்டு வந்தாள். அந்தக் கூட்டத்தில் வஸ்தாவாகத் தோன்றிய ஒரு குச்சிக் கிழவனிடம் அந்த நோட்டைத் திணித்து, “அல்லாருக்கும் சில்லரை மாத்தி சரிசமமாகக் கொடு” என்றாள். சிலர் இரண்டு ரூபாய் கிடைக்கும் ஆனந்தத்தில் முகம் தூக்கினார்கள். சிலர், அந்தப் பிரக்ஞையே இல்லாமல் அப்படியே கிடந்தார்கள்.

சரோசா, பஸ் நிலையம் பக்கம் வந்தாள். அப்படி வரும்போது இளங்கோவை நினைத்துக் கொண்டாள். அந்தப் பிச்சைக் கூட்டத்தின் ஆனந்தத்துக்கு அவனே காரணம். இன்றைக்கு, டிஸ்சார்ஜ் ஆகப் போவதால், அவனைப் பழைய இளங்கோவாக முழுமையாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆள் இல்லாத சமயமாய் அவன் அறைக்குப் போயிருந்தாள். அவனோ, பழையபடியும் கவர்மென்ட் வேலைக்கு வரும்படி, அவளிடம் பத்துத் தடவை சொல்லியிருப்பான். இவள், 'கல்லுளி மங்கி மாதிரி' அவனுக்குப் பதில் சொல்லாமல், இறுதியில் "நாய்னா பசியில துடிப்பார். துரை அண்ணன்கிட்ட காசு வாங்கணும். அவுரு தலமறைவா ஆகுமன்னாலே போயிடணும்” என்று சொன்னாள். உடனே இளங்கோ, சட்டைப் பைக்குள் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவள் மடியில் போட்டான். அவள், அதை எடுத்து இளங்கோவிடம் நீட்ட, அவன் மறுக்க, இறுதியில் அவன் சட்டைப்பைக்குள் அதைப் போடப் போனாள். அவனோ, "இதைக் கடனாத்தான் தாறேன். என் ஆபீசிலே சேர்ந்து, மாசக்கடசியிலே சம்பளம் வாங்கும்போது நீ தர வேண்டாம்; நானே பிடிச்சுடறேன்" என்றான். அவன் அன்பை கவுரவப்படுத்துவதற்காக, சரோசா, அதை வாங்கிக் கொண்டாள். அவன், அவளை வேலையில் சேர்த்தால், அவனும் கொலை செய்யப்படலாம் என்று தான் கூறிய பிறகும், இளங்கோ பிடிவாதமாக இருப்பதில், அவள் புல்லரித்துப் போனாள்.

அந்தப் பஸ் நிலையத்தில், அவள் நாய்னா அங்கே நிற்பவர்களின் முழங்கால்களில் முகம் படும்படி பார்த்தார். அவர் தனது கிழிந்த காக்கிச் சட்டையின் மேலே துண்டு மாதிரி ஒரு துக்கடா கோணியைப் போர்த்தியிருந்தார். கீழே குனிந்து தலையை நிமிர்த்திப் பார்த்தார். அவர் தோளில் ஒரு பை. தட்டு, தம்ளர், ஈயப்போணி ஆகியவற்றால் துருத்திய பை. இந்த அரிய பொக்கிஷத்தை இருந்த இடத்தில் வைத்திருந்தால், அதையும் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற அனுபவ பயம். எவரோ ஒருத்தர் அவரது கையில் ஒரு நாலணாவைத் திணித்தபோது, சரோசா, நாய்னாவை பாய்ந்து பிடித்தாள். "இன்னா நாய்னா, நான் உயிரோட இருக்கபோவே பிச்சை எடுக்கிறியா? காச, அவரண்ட நீட்டு” என்றாள். அப்போதுதான், அந்தக் காக கையில் விழுந்த உணர்வைப் பெற்ற நாய்னா, ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும், கொக்கின் மூக்குபோல் ஆக்கிக்கொண்டு, காசைக் கொத்தினார். பிறகு, எவரிடம் கொடுப்பது என்று தெரியாமல் அவர் புலம்பியபோது, சரோசா, அந்தக் காசை எடுத்து பிச்சை இட்டவரிடமே பிச்சைபோல் கொடுத்தாள்.

தாத்தாவும், பேத்தியும், கோவில் வளாகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவரோ, தான் பிச்சை எடுக்கப்போகவில்லை என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக “ஒன்னை பாக்கே” என்றார். அதைப் புரிந்து கொண்ட சரோசா, அவரது தலையை செல்லமாகக் குட்டிக்கொண்டே, அவரை இருந்த இடத்தில் உட்கார வைத்தாள். பெரிய பொட்டலத்தைப் பிரித்து, கோழி பிரியாணியைக்கிளறி, ஒரு கவளத்தை அவர் வாய்க்குள் போட்டாள். இதற்குள் பல சொறி நாய்கள் அங்கே கூடிவிட்டன. இந்தப் போட்டியை தவிர்ப்பதற்காக, அந்த வளாகத்தின் உட்பக்கம் உள்ள ஒரு தேவாலயக் கட்டிடத்திற்குள் நாய்னாவை அழைத்துப் போனாள். சின்னக் கட்டிடம்.. உள்ளே, ஒரு கதவு. அதற்கு வெளியே சின்ன செவ்வக வழி. இதன் முடிவில் இரும்புக் கிராதிக்கதவு. சரோசா, கிராதிக் கம்பியின் வழியே உள்ளே கைபோட்டு, தாழ்ப்பாளை நீக்கி தாத்தாவை உள்ளே நகர்த்தியபோது ஒரு ஏவல் பையன், அவள் வரவுக்கு வாயால் தாளிட்டான் :

"எக்கோ, என்ன தப்பா நினைக்காதே. இனிமேகாட்டி இந்த இடத்திலே நீங்க குந்தினால் என்னோட வேல போயிடுமுன்னு பாதர் சொல்லிட்டார். நானு வேலையிலே இருக்கது, இல்லாதது உன்னோட பொறுப்பு."

பெரிய மனிதன்போல் பேசிய அந்தப் பையனைத் துணுக்குற்றுப் பார்த்த சரோசா, நாய்னாவை கீழே இறக்கினாள். இரவில், அந்த இடத்தில்தான், அவரை அவள் படுக்க வைப்பாள். அஞ்சாறு வருடமாய் நடக்கிற சமாச்சாரம். இப்போ, புதுசா ஒரு பாதர் வந்திருக்காராம்; பேருதான் 'பாதா'.

சரோசா, நாய்னாவை நாய்கள் அண்ட முடியாத ஒரு ஒதுக்குப்புறமாகக் கொண்டுபோய் பிரியாணியை ஊட்டினாள். இதற்குள், அம்மைத் தழும்பன் அந்தப் பக்கமாக வந்தான்.

"ஒன்ன எங்கெல்லாம் தேடறதாம்? தொரண்ணன் ஒன்ன அர்ஜண்டா கூப்பிடுறார். எங்கம்மே பூட்டே?"

"போய்க்கினே இரு; இதோ வாரேன்."

சரோசா, நாய்னாவை நகர்த்தி, கார்ப்பரேசன் குழாய் பக்கம் கொண்டுபோய், அவரது வாயைக் கழுவிவிட்டு, மணல் சிம்மாசனத்திலேயே அவரை உட்கார வைத்தாள். எதிரே, இரண்டு பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். தெரிந்தவர்கள்... சர்க்கார் வேலைக்காரர்கள்; ஆகையால் பத்து மணி ஆபீசுக்கு பதினோரு மணிக்குப் புறப்பட்டார்கள்.

'எப்படி அசத்தலா போகுதுங்க. தலையாட்றதிலையும், ஒரு இது... கை ரெண்டும் அப்படிச் சுத்தம், கடசல் உருளை மாதிரி. என் கை இருக்கே, துடப்பக் கட்ட... எனிக்கு என்ன குறயாம்? நானும் வேலைக்குப் போனா, அதுங்க மாதிரி, கொண்ட போடலாம்; ரெட்ட சடை போடுவேன். நாய்னாவுக்கு தீனி போடறதுக்கு இரும்புக் கம்பியை தூக்கவும் வாணாம், போலீசிலே பிடிபடவும் வாணாம். சர்க்கார் வேலையிலே சேர்ந்திட்டா வீடு குடுப்பாங்களாம்மே! நாய்னாவை அந்த மாதிரி வீட்லே வச்சுப் பாக்கிறதுக்கு எவ்வளவு ஆசையா கீது. ஆனால் அண்ணாத்தே...'

சரோசா, இத்தகைய சிந்தனை அழுத்தத்துடன், துரை அண்ணன் வீட்டுக்குப் பின்புறமாய் வந்து, பந்தல் வளாகத்திற்குள் நுழைந்தாள். பந்தலின் மணல் பரப்பில் ஒருவன் சுருண்டு கிடந்தான். இன்னொருத்தன் அவன்மேல் படுத்துக் கிடந்தான். ஒருத்தன், நண்டு இருந்த தட்டை நக்கினான்; இன்னொருத்தன் காலி கிளாசையே வாய்க்குக் கொண்டு போனான். சரோசாவுக்கு இளங்கோ சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. நண்டுத் தட்டை நக்குகிறவன் முகத்தைப் பன்றி முகமாகக் கற்பனை செய்து பார்த்தாள். வெறும் கிளாசை வாய்க்குக் கொண்டு போகிறவனை மனித முகத்தோடு கூடிய நான்குகால் நாயாக உருவகித்துப் பார்த்தாள். சிரிப்பும் வந்தது; சினமும் வந்தது; கூடவே சிறுமையும் ஏற்பட்டது.

சரோசா, செருப்புச் சத்தம் கேட்டு, வாசலைப் பார்த்தாள். ஒரு கையில் தேங்காயையும், மறு கையில் தூக்குப்பையையும் பிடித்தபடி, ஒருத்தன் உள்ளே வந்தான். பைக்குள் இரண்டு கிலோ அரிசி. சரோசா, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியபடியே திட்டினாள்:

"இந்தாப்பா கோவிந்து! இனிமேக்காட்டி இந்தப் பக்கம் இப்டி வந்தே, நானே ஒன்னை ஒதைப்பேன். சரக்கு வேணும்னா, இதோ ஒன் பேண்ட மார்வாடிகிட்ட அடகு வை. வீட்ல அரிசி, தேங்காயை ஏய்யா திருடுற? போப்போ!"

இதற்குள், துரை அண்ணன் சத்தம் கேட்டு, அவள் வீட்டுக்குள் போனாள். ஊஞ்சல் பலகையில் துரை; அவனை உரசியபடி, அவன் தர்ம பத்தினி. அவள், இவளை அதட்டினாள்:

"ஆமா, அவனை எதுக்கு இப்படி அதட்றே? குடிக்க வர்றவன் எதோடு வந்தா ஒனிக்கு என்ன?”

"எக்கோ! ஒனக்கும் எனக்கும் பேச்சு இல்லை. என்ன விஷயம் துரை அண்ணே.”

"கும்மாளம்மனுக்கு விசேஷமாம். கூட்டம் அதிகமா வரும். சரக்கு எடுத்துட்டு வந்திடு."

"இந்தத் தொழிலே இனிமே வேண்டான்னு நினைக்கேண்ணே. மாதச் சம்பளம் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையிலே சேரலாம்னு...."

துரை, அவளிடம் பேசப் போனபோது, அவன் தர்மபத்தினி கொதித்தாள். கட்ட நண்டு போல் அவள் முகம் சுருங்கியது. இவளை - இந்த கிழிஞ்சபைஜாமா, கீறல் கையோட பார்க்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது.

"இந்தா பாரும்மா, அவர எட்டன்னு நினைக்காதே. தண்ணிக்குள்ளேயே தடம் காணுறவரு அவரு.

"எவரும்மே?"

"ஒனிக்கி, இன்னுந் தெரியலையா? அவருன்னா, அவருதான்; ஒன்னோட அண்ணாத்தே. இந்த பதினஞ்சி நாளா, இந்த சரோசா, எங்கே எங்கே போராள், யாரைப் பார்க்காள்னு அவருக்கு அத்துபடி."

"அவருக்குத் தெரியுமுன்னு ஒனக்கு எப்படிம்மே தெரியும்?"

தர்மபத்தினி, குறுஞ்சிரிப்போடு சிரித்தாள். துரைக்கு, சரோசா, யாரை எல்லாமோ பார்த்தாள் என்பதைவிட, அண்ணன், அந்த சமாச்சாரங்களை தன்னிடம் சொல்லாமல், தனது தர்மபத்தினியிடம் சொன்னதில், ஒரு இஸ்கு-தொஸ்கு இருப்பதை உணர்ந்தான். லேசாய் தெரிந்த சங்கதிதான். ஆனால், அப்படி இருக்காது என்று ஒரு அற்ப ஆசை, இதுவரை இருந்தது. இப்பப் பூட்டுது.

துரையின் உடம்பு படபடத்தது. ஏதோ ஒன்று தலைக்குள் துவாரம் போட்டு, கனமாகக் கீழிறங்கி, தொண்டைக்குள் சிக்கி நெஞ்சுக்குள் விழுவது போல் இருந்தது. ஏதோ இன்னொன்று பிடரிக்குள்ளே இருந்து பிராண்டுவது போல் இருந்தது. மனைவியையே வைத்த கண் வைத்தபடி பார்த்தான். அவள் உதடுகள் விரிய விரிய, இவன் உதடுகள் குவிந்தன. அவள் கண்கள் மலர மலர, இவன் கண்கள் சுருங்கின. அந்த வீடே ஆதாரமற்று அவளோடு சேர்ந்து அதல பாதாளத்தில் விழுவது போன்ற அல்லாடல்...

இதைப் புரியாமல், சரோசா, வேண்டா வெறுப்பாய் நின்றாள். ஸ்பெஷல் சாராயம், பிடிச் சாம்பலாய் போனதால், அண்ணாத்தை கோபப்பட்டதாக தோஸ்துகள் சொன்னார்கள். ஆகையால் காச்சல், மீண்டும் பக்குவப்பட்ட அதாவது பழிபாவத்தைப் பற்றிக் கவலைப்படாத கரங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணாத்தையும் தனக்கு எதிராக 'தாம் தூம்' என்று குதித்த அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரை மாற்றி விட்டதாகவும் கேள்வி. இந்தச் சமயத்தில் சரக்கு எடுக்கப் போய், அண்ணாத்தைக்கு, தன் மீது இருக்கக்கூடிய சந்தேகத்தைப் போக்க வேண்டும். வேறு வழியில்லை.

"சரி, குயிக்கா போயிட்டு குயிக்கா வாறேண்ணே.''

சரோசா, தர்மபத்தினியை நோட்டம் போட்டபடியே, வெளியே வந்தாள். பந்தலுக்குள் கோவிந்து, இடுப்பில் வெறும் டவுசரோடும், கையில் கிளாசோடும் கிடந்தான். அவன் காலில் சாய்ந்து கிடந்த தூக்குப் பையை எடுத்துக் கொண்டு சரோசா புறப்பட்டாள்.
----------

அத்தியாயம் 20

குறுக்கு வழியாக நடந்து, சரோசா பூக்கார ருக்குமணியின் குடிசைக்குள் வந்தாள். ஓட்டைக் கதவுதான்; கரடு, முரடு தரைதான்; தில்லு முல்லு கூரைதான்; ஒழுகல் காவாதான். ஆனாலும், அந்தக் குடிசையில் ஒரு கத்தம், ஒரு பூவாடை.

சரோசா நீட்டிய தூக்குப் பையை அதன் தாத்பரியத்துடன் வாங்கிக் கொண்ட ருக்குமணி கொதித்தாள்:

"நீயே அதுக்கு விஷச்சாராயம் குடிச்சுக் குடுமே; பாவி, கஸ்மாலம், அழிஞ்சு போவான்."

“சரி எனக்கு நேரமாயிட்டது, சரக்கு எடுக்கப் போறேன்.”

"இளங்கோ சொல்லச் சொன்னாருமே... சர்க்கார்வேலையிலே சேர்ந்தா ஒனிக்கும் நல்லதாம், ஒன் நயினாவுக்கும் நல்லதாம்.”

சரோசா, ருக்குமணியிடம் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைக்கப் போனபோது ஒருவன் ஓடிவந்தான். கோவிந்து என்று திட்டப்போன ருக்குமணி. முனுசாமியைப் பார்த்துவிட்டு கேள்விக்குறியுடன் நின்றாள். அவன் பாதி கிறக்கத்தோடு சொன்னான் :

"சரோசா! நீ வரப்போ நான் குடிக்கப்போனேனா... துரை சம்சாரம் டெலிபோன்லே, உன் பேரைச் சொல்றத கேட்டுட்டு ஒட்டுக் கேட்டேன். யார்கிட்டேயோ அவள் பேசிட்டு, அப்பாலே துரைகிட்டே ஒப்பிச்சாள். எவனோ அண்ணாத்தையோ, கிண்ணாத்தையோ, நீ வேலையில சேர்ந்தா ஆபத்துன்னு சொன்னாராம். அதனால நீ இன்னிக்கி சரக்கு எடுத்து வறப்போ ஒன்னை போலீஸ் மடக்குமாம். ஏற்பாடு செய்திட்டாராம். அவள், துரைகிட்டே சொன்னதும், அவன், அவள, போட்டுப் போட்டு உதைச்சான். வேடிக்கை பார்க்க நினைச்ச மனசை அடக்கிட்டு, உன்னே பாலோ பண்ணி வந்திட்டேன். ஏன்னா, நீ என்னோட தோஸ்து இளங்கோவுக்கு தோஸ்தாச்சே... சொம்மா இருக்க முடியுமா?"

முயல்போலப் பாயப்போன சரோசா, ஆமை போல் நின்றாள்.எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி ஏதோ ஒரு வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறியது போன்ற தடுமாற்றம். அது தலைக்குள்ளே சுழலுவது போன்ற அதிர்வு. அந்தத் தலையும், கழுத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுற்றுவது போன்ற அவள் உணர்வுச் சுற்றல். அரைக்கண் பார்வையோடு, அப்படியே நின்றாள். முனுசாமி அவளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே, அதே சமயம் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் ‘தண்ணிப்பட்டபாடாய்' நடையைக் கட்டினான்.

அம்மாவின் ஆணைப்படி பலசரக்குக் கடையிலிருந்து, கால் கிலோ தக்காளியை மறைக்கும்படி கருவேப்பிலை ‘கொசுரை’ கவரில் போட்டுக் கொண்டு வந்த ஆறுமுகப் பயலை, ருக்குமணி, அவன் முதுகைப் பிடித்து வளைத்து, காரணமில்லாமலேயே இரண்டு போடு போட்டாள். சரோசாவின் முன்னால் வந்து அவள் முகத்தையே பார்த்தாள். அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். அப்படியும் சரோசாவின் கண்கள் அங்குமிங்கும் சுழலாமல் நின்ற இடத்திலேயே நிலைத்திருப்பதைப் பார்த்து, அவள் தலையைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள்:

"ஒன்ன, கடாவ வளக்கது மாதிரிதான் வளர்த்துருக்காங்கமே. ஒனிக்கி நாய்க்கி தீனி போடறதுமாதிரிதான் போட்டுருக்காங்கமே. நாய்க்கி வெறி வந்தா அத வளர்க்கிறவன் மருந்துபோட்டு காப்பாத்தறான். ஆனாங்காட்டி, கையாளுக்குப் புத்தி வந்தா, அதோட எசமான் கொலை கூட செய்வான். இப்பவாவது ஒனக்கு புரியுதாமே? ஏம்மே பேச மாட்டேங்குற?"

பூக்கார ருக்குமணி சொல்லச் சொல்ல, சரோசா அகலமாய் கிடந்த கண்களை ஆழப்படுத்தி, அப்படியே நின்றாள். ருக்குமணி, தக்காளிகளை எடுத்து தன்மீது எறிந்து கொண்டிருந்த மகனைப் பற்றி பிரக்ஞை இல்லாமலே, சரோசாவின் பிரச்சினைக்கு விடை கண்டவள் போல் அவள் தோளில் கை போட்டபடி, உபதேசித்தாள்.

"விட்டுத்தள்ளு கஸ்மாலத்த, இதுவும் நல்லதுக்குத்தான். ஒன்கிட்டே விசாரிக்காமலே குழி பறித்தான் பாரு கஸ்மாலம் அண்ணாத்தே... அவன் வாடையே வாணாம். பேசாம இளங்கோ சாரு சொல்ற வேலைல சேர்ந்திடு. இன்னாமே! நானு பேசிக்கினே போறேன், நீ சொம்மாவே நின்னா இன்னா அர்த்தம்?”

சரோசா, இன்னும் அசைந்து கொடுக்காமல் இருப்பதைப் பார்த்த ருக்குமணிக்கு லேசாகப் பயம் பிடித்தது. இதற்குள் ஆறுமுகப்பயல் அம்மாமேல் குறிவைத்த ஒரு அழுகிய தக்காளி, சரோசாவின் நடுமூக்கில் பட்டு இரண்டு கண்களிலும் சிதறியதால் அவள் சுயவுணர்வுக்கு வந்தாள். ஆனாலும், தலையில் கைவைத்தபடியே, அந்த வீட்டின் இற்றுப்போன கதவில் அற்றுப்போனவள் போல சாய்ந்தாள். ருக்குமணி, அவளை ஆதரவாய் பிடித்து நார்க்கட்டிலில் உட்கார வைத்தாள். பிறகு அவள் சோகம் தனக்கும் தொத்த, கேட்பாரற்ற குரலில் பேசினாள் :

"அல்லாம் நல்லதுக்குதாம்மே. நடந்தத கெட்டகனவா நினைச்சுடு. இளங்கோ சார் நாளிக்கே வேலையில சேருறதா மல்லி சொல்லிச்சு. நீயும் சேர்ந்திடு. இல்லாட்டி ஆறின சோறு பழஞ்சோறுதான். ஏண்டா, பொறம்போக்கு! எல்லா தக்காளியையும், அக்குவேறு ஆணிவேறா பண்ணிட்டியே. நானு கொயம்புக்கு இன்னடா பண்ணுவேன்? ஏம்மே சரோசா, ஏதாவது பேசி என் வயித்திலே பாலு வாருமே."

ருக்குமணி, மகன் குதறிப்போட்ட தக்காளி சதைகளை பொறுக்கிக் கொண்டே, சரோசாவைப் பார்த்தாள். அவள் பிரச்சினை மட்டும் குறுக்கே வரவில்லையானால், இந்நேரம், அருமை மகனை தக்காளி மாதிரியே பிதுக்கியிருப்பாள். அதைப் புரிந்து கொண்டது போல் அந்தப் பயலும் அம்மாவுக்குப் பயந்து சரோசாவின் மடியில்போய் உட்கார்ந்து கொண்டான். ஏதோ ஒரு பொருள் தன் மடியில் உட்கார்ந்திருக்கிறது என்ற உணர்வு மட்டுமே உந்த, சரோசா ருக்குமணியைப் பார்த்தாள். பிறகு விரக்தியோடு பதிலளித்தாள் ;

"நீ நினைக்கது மாதிரி இளங்கோ சொல்ற வேலையில சேர்ந்திட்டா, அண்ணாத்தே என்ன விட்டுவைக்க மாட்டாரு ருக்கு.”

"இப்ப மட்டும் விட்டுவைக்கானா? அதென்ன கூத்து? எவனோ பொறுக்கிக்கி நீ ஏன் பயப்படறே? கண்றாவியா இருக்கு."

சரோசா, நார்க்கட்டிலில் சாய்ந்து சுவரில் தலையை போட்டுக் கொண்டு, அந்தத் தலையை அங்குமிங்குமாய் புரட்டிக் கொண்டு, ருக்குமணிக்குக் கதை சொல்வது போல் சொன்னாள்:

'அண்ணாத்தைய பத்தி சரியா தெரிஞ்சா இப்படிப் பேசமாட்டே ருக்கு. அவரோட அஞ்சு வருஷமா இருக்கிற பழக்கத்த அறுத்துக்கினுபோறது, என்னையே நான் அறுத்துக்கிறதுமாதிரி. போன மாசம் துரையண்ணே வீட்டுல எங்க கோஷ்டியில ஒருத்தன் தண்ணியில மிதந்தான். அப்போ பார்த்து அண்ணாத்த வந்தாரு. அவருகிட்டயே 'நாளைக்கி கோர்ட்டுல ஒன் பேரையும் சொல்லப்போறேன் அண்ணாத்தேன்னு' சொம்மா தமாஷுக்குச் சொன்னான். அண்ணாத்தையும் சிரிச்சாரு. அண்ணாத்தே ஆள் வச்சி ஒருத்தர வெட்டின கோஷ்டியில அவனும் ஒருத்தன். மறுநாளு பார்த்தா... அந்த தோஸ்து கடலுல மிதக்கான். பொணமா மிதந்தான். அண்ணாத்தே எதுவும் தெரியாதது போல அந்தப் பொணத்த ஜோரா அடக்கம் பண்ணினாரு. 'பாவம் நல்லவன்'னு வேற துக்கமாச் சொன்னாரு. அப்பேர்ப்பட்டவரு அண்ணாத்தே.”

ருக்குமணியே பயந்துவிட்டாள். சரோசாவின் ‘அண்ணாத்தே’ எங்கும் வியாபித்திருப்பது போல் ஒரு பிரமை. அந்தக் குடிசைக் குள்ளும், அவர் வந்து நிற்பது போல் ஒரு அனுமானம். சரோசாவிற்கு சப்போர்ட் செய்ததற்காக தன்னையும் பட்டாக்கத்தியோடு குறிபார்ப்பது போன்ற ஒரு அச்சம். சிறிது நேரம் தடுமாறினாள். பிறகு குடிகாரக் கோவிந்துடன் குடித்தனம் செய்வதை விட, அப்படி வெட்டுப்பட்டாவது சாகலாம் என்று தெளிந்தாள். எல்லாவற்றையும்விட, இயல்பான மனிதாபிமான வேகம். அண்ணாத்தையை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு அசட்டுத் துணிச்சல். இப்போது, தானே சரோசா என்பது மாதிரி ருக்குமணி பேசினாள் :

"வல்லவனுக்கு வல்லவன், வையகத்துல உண்டுமே. ஒன் அண்ணாத்தே சாராயக் கொம்பன்னா, பாமாவோட அப்பா ரமணன் போலீஸ் கொம்பன். நீ வேலைக்குப் போகாமலேயே அண்ணாத்தே கூட இருந்தாலும், அவன் ஒன்ன ஏதாவது செய்யத்தான் போறான். இளங்கோவோட கவர்ன்மெண்ட் வேலையில சேர்ந்திட்டா, ஒனிக்கி அதுவே ஒரு பாதுகாப்பு. நம்ம கார்ப்பரேஷன் எச்சில் லாரி ஆளுங்க கூட ரோட்ல வண்டிய குறுக்கா வெச்சிட்டு பெரிய பெரிய கார்ல வர்றவங்களக் கூட எப்படி முறைக்காங்க! இதுக்கப் பேருதான் சர்க்கார் வேல. ஒண்ணாத்த பருப்பு ஒண்ணும் வேகாது."

"நீ நெனக்கிது மாதிரி எனக்குக் கொஞ்சம் பாதுகாப்புத்தான். ஆனால் அந்தப் படுபாவி இதுக்குக் காரணம் இளங்கோன்னு, பாவம் அந்த மனுஷன எதுவும் செய்திடப்பிடாதே. நானு பாவி, அவர ஆளுவெச்சி அடிச்ச காயமே இன்னும் முழுசா ஆறலே; அதுக்குள்ளே அண்ணாத்தே..."

‘அண்ணாத்தே... எவன்மே ஒனக்கு அண்ணாத்தே? தென்னமரம் காத்துல ஆடுறப்போ, அதுல இருக்கிற ஓணான், மரத்த தான்தான் ஆட்டுறதா நினைச்சி தலைய ஆட்டுமாம். அப்படிப்பட்ட ஓணான் பய உங்கண்ணாத்த, அவன், எங்க இளங்கோவ ஒண்ணும் ஆட்ட முடியாது. அவருக்குப் பக்கபலமாக அந்த கஸ்மாலம் சார் ரமணன் இருக்காரு. அவருக்கு அல்லா போலீசுமே சல்யூட் அடிக்காங்கோ. பாமாவோட அங்கிளோ, கிங்கிளோ பெரிய போலீஸ்காரரு. ஒனிக்கு வேண்டாமுன்னா சொல்லு, நானு சேர்ந்திடறேன். பூக் கட்டிக் கட்டி கைதான் கட்டியாப் பூட்டு.''

“ஒனக்கென்ன சொல்லிட்டே. கட்டிக்கிட்டுப் போக நல்ல புடவகூட இல்ல. எனிக்கி இருந்த ஒரு புடவையும் இப்போ நாயினாவுக்கு பெட்ஷீட்டா ஆயிட்டு! சீவிச் சிங்காரிக்க ஒரு சீப்பு கூட இல்ல."

"கவலைய வுடுமே. சீவுறதுக்கு ஒனக்கு முடியிருக்கு. சிங்காரிக்க முகமிருக்கு. நானு என்னோட புடவயத் தாறேன். இரண்டு மொயம் பூவும் தாறேன். நாளிக்கி வந்து இங்க டிரெஸ் பண்ணிக்கிட்டுப்போ. நானும் பால்ராஜ் பேன்சி கடையில ஒரு கில்ட்டு செயினு பத்துரூவா தானாம் வாங்கி வச்சிட்றேன். நல்ல காரியத்த தள்ளப்புடாதுமே."

சரோசா, என்ன நினைத்தாளோ, ருக்குமணியின் தோளில் சாய்ந்து குலுங்கினாள். காலாட, கால் விரல்கள் தனித்தனியாய் ஆட, முதுகு மேலும் கீழுமாய் நகர, குலுங்கிக் குலுங்கி அழுதாள். பிறகு அவள் கையிரண்டையும் தனது தோளில் போட்டுக் கொண்டு, ருக்குமணியின் முகத்தில் மாறிமாறி முத்தமிட்டபடியே "எங்கம்மாவ பார்த்துட்டேன் எங்கம்மாவப் பார்த்துட்டேன்" என்று தன்பாட்டுக்குப் புலம்பினாள். ருக்குமணி, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். குழந்தையை தாலாட்டுவது போல் அவளை மார்போடு சேர்த்து ஆட்டினாள். அவள் முகத்தைத் துடைத்து தனது கைகளை ஈரமாக்கிக் கொண்டாள். இந்த இடைவேளையில் சரோசா சுதாரித்துக் கொண்டாள். ருக்குமணியின் தோளை ஆதரவாகப் பிடித்தபடியே கம்பீரமாக எழுந்தாள். கூடவே எழுந்த ருக்குமணி சிறிது பதட்டத்தோடு வினவினாள் :

"சரக்கு எடுக்கவா போறே?"

"இனிமே எடுக்கப் போனா, என்ன நானே ஜோட்டால் அடிக்க முகத்தக் கொடுத்ததா அர்த்தம்."

"எனிக்கி ஒரு யோசனை தோணுது. பேசாம இன்னிக்கி நைட்டுல என் வீட்டுலேயே படுத்துக்கோ. நீ படுத்தாலும் படுக்காட்டியும் கோவிந்த வெளியில போட்டுத்தான் கதவ சாத்துவேன். இன்னா சொல்றே?"

"கவலைப்படாதே ருக்கு! எனிக்கி சமாளிக்கத் தெரியும். காத்தால வாறேன்."

"கண்டிப்பா வாறே. இல்லாட்டி நீ ஆரோ... நான் ஆரோ."

"அபசகுனமாப் பேசாதே. நானு ஒரு சொல்லுல நிக்கற பொம்மனாட்டி."
-------------

அத்தியாயம் 21

சரோசா, போக மனமின்றி, போவது போல் போனாள். இப்போது குறுக்கு வழியில் நடக்காமல் பஸ்கள் போகும் சாலை வழியாக நடந்தாள். தனிமையில் நடக்க நடக்க, அவளுக்கு கால்கள் துண்டித்து தரையில் விழுவது போல் இருந்தது. மலைபோல நம்புன அண்ணாத்தே இப்படிச் செய்திட்டாரே. நேர்ல கூப்பிட்டு கன்னத்துலகூட இரண்டு போட்டு புத்திமதி சொல்லியிருக்கலாம். போலீஸ்ல அநியாயமாய் மாட்ட வைக்கிறதுக்குத் திட்டம் போட்டுருக்காரே... இன்னா மனுஷன்? அண்ணாத்தே காலுல போய் விழலாமா, வேணாமா? இவரு இன்னா அண்ணாத்தே? நானு நினைக்கிற மாதிரி அவரு நினைச்சிருந்தா இப்படிச் செய்வாரா? அண்ணாத்தே என்கிறது - நாய், நரி, பண்ணி என்கிறது மாதிரி ஒரு பேரு.

சரோசா, வேகவேகமாய் நடந்தாள். அவன் வாழும் இடத்திற்கே சென்று அங்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம். அந்தச் சமயம் பார்த்து 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்ற பாட்டு; அவள் அழுது விட்டாள். துக்கம் தாங்காது சிற்சில இடங்களில் நின்று நின்று அழுகை சுமையை இறக்கி வைத்தாள். "நாயினா, நாயினா, நானு வெட்டுப்பட்டுப் போயிட்டா ஒனக்கி யாரு இருக்கா நாயினா?"

சரோசா, துரையின் வீட்டுக்குப் போகத்தான் நினைத்தாள். அவன் மனைவியின் தலைமுடியைப் பிடித்து, தன் பங்குங்கும் இரண்டு சாத்துச் சாத்த வேண்டும் என்று நினைத்தாள். துரையைப் பார்த்து "பொட்டப் பையா” என்று கேட்க வேண்டும் என்று நடந்தாள். ஆனாலும், துரை அண்ணன் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவன், இடுப்பு லுங்கி அவிழ்ந்து கிடக்க, டவுசர் பட்டை வெளியே தெரிவது தெரியாமல் கடற்கரையோ மேடு ஒன்றில் இரண்டு கைகளையும், பின்னால் ஊன்றியபடி, முதுகை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்தான். அவன் முன்னாலும், பின்னாலும் சிகரெட் துண்டுகள் கருப்பு முகமும், வெள்ளை உடலுமாகிக் கிடந்தன. ஆள்காட்டி விரலில் உள்ள சிகரெட் சுடுவது தெரியமலே அவன் அல்லாடினான்.

தனக்குத்தானே, பேசிக்கொண்டான் :

"இனிமேல் யாருக்காக வாழ வேண்டும்? எதுக்காக வாழ வேண்டும்? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். பெட்டிக்கடை வெச்சி பிழைப்பு நடந்தப்போ இவள் பெட்டிப் பாம்பாத்தான் கிடந்தாள். ஒரு தடவ, நெருங்கின தோஸ்து ஒருத்தன் வீட்டுக்கு வந்திருந்தான். வெளியில் புயல் மழை. நாலு) வருஷத்துக்கு முன்னாடி நல்லா ஞாபகம் இருக்கு. அவனுக்கு என்னோட லுங்கிய கொடுத்தேன். மறுநாளு வீட்டுக்காரி 'எப்படிய்யா, அவன் கட்டின லுங்கியை நான் துவைக்கிறது? ஒன் லுங்கிய அந்த முடிச்சுமாறி கட்டுவதப் பார்க்கும் போது எனக்குக் கூச்சமா இருந்தது. பேசாம லாண்டரியில போடு' இப்படிச் சொன்ன என்னோட பத்தினியை அண்ணாத்த மயக்கிட்டானே. இஸ்திரிக்குப் போடுன்னு சொன்னவள் என் நெஞ்ச இஸ்திரி போட்டுட்டாளே. யாருக்கிட்ட சொல்லுவேன்? பெண்டாட்டி அடங்காப்பிடாரின்னு சொல்லலாம். வாயாடின்னு சொல்லலாம். அடுத்தவன்கிட்ட போகிறவள்னு எப்படிச் சொல்லுறது? நான் படுத்த கட்டிலிலேயே இன்னொருத்தன் படுக்கான்னு எப்படிச் சொல்லுறது? ' அவரு என்கிட்டத்தான் சொல்லுவாரு... ஒன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லே. புரிஞ்சா புரிஞ்சுக்கோ, புரியாட்டி இருந்துக்கோ'ன்னு ரப்பேரி முண்ட எப்படிச் சொல்லிட்டா! அண்ணாத்த வீட்ல டெலிபோன் வச்சப்பவே தெரியும், அது அவன், அவளுக்குப் போட்ட தாலிண்ணு. நானு இருக்கப்போகூட, அந்த முண்ட முகத்த டெலிபோனுல மறைச்சிட்டு ரகசியமா பேசினது இப்போதுதான் புரியுது. கலக்கலில சிக்கி கலங்கிட்டேனே. அண்ணாத்தேகிட்ட சாராயத்துக்கு உதவிக்குப் போனா, அவன் என்னோட சம்சாரத்துக்கே உதவியா வந்துட்டானே. அய்யோ, அய்யய்யோ.''

முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தேகம் வரும்போது, அதை. சாராயத்தால் கழுவிய துரைக்கு, இப்போது மனைவி வெளிப்படையாகவே சொல்லி விட்டது உள்ளத்தை வேர்க்க வைத்தது. வீடுகூட அவள் பேரில்தான் இருக்கு. இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்கப் போன துரை, கருகிய சிகரெட் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அதை விரல் நுனியிலேயே கசக்கினான்.

சரோசா, அவன் கையை எட்டிப் பிடித்தாள்.

“ஒன்ன எப்படியோ நினைச்சேன். கட்சில என் கையில விலங்கு போட்டுப் பார்க்கிறதுக்கு ஆசைப்பட்டுட்டியே பாவி, படுபாவி."

துரை, அவளை அரைக்கண் பார்வை போட்டுப் பார்த்தான். பிறகு அவள் கைகளில் முகத்தைப்போட்டு ஏங்கி ஏங்கி அழுதான். அழுத கண்களை அவள் புறங்கையாலேயே துடைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமலேயே பேசினான் :

“எய்தவன் எங்கேயோ, நானு அம்புவட இல்லமே. அந்த அடங்காப்பிடாரி காட்டேரி நாய்தான், ஒன் அண்ணாத்தேயோட அம்பு. நானுயாரு, எனக்கே புரியல. இந்தாமே சரோ, நீ கேக்காக்காட்டியும் நானே சொல்லியிருப்பேன். ஒன்னத்தாம்மே, இங்கிருந்து தப்பிச்சுப் போம்மே. இல்லாட்டி ஒன் உசிரு உனக்கில்லே. என் நிலைமை, கரையான் புத்தெடுக்க கருநாகம் குடியிருக்கிற கதையாப் போச்சும்மே. என் வீட்டிலேயே எனக்கு ஒரு எதிரிய உண்டுபண்ணி, அவளையும் அபேஸ் பண்ணிட்டாம்மே. இந்த அண்ணாத்தே உருப்படுவானா?”

துரை மீண்டும் அழுதான். அவளை ஆறுதல் படுத்துவதற்குப் பதிலாக ஆறுதல் தேடுவது போல் ஏக்கமாகப் பார்த்தான். சரோசாவிற்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஒரு பூதம் தனியாய், பூதாகாரமாய் அண்ணாத்தை ரூபத்தில் பயங்கரப் பற்களோடு, அந்தப் பற்களே ஆயுதங்களாகத் தோன்றும்படி வெடிச் சிரிப்பாய் சிரிப்பது போல் தோன்றியது. அவளுள்ளும் ஒரு உறுதி பிறந்தது.
---------------

அத்தியாயம் 22

அந்த மருத்துவமனைக்கு எத்தனை தடவை சென்றாளோ, அத்தனை தடவையும் அவள் கேளாமலேயே, இளங்கோ தெரிவித்த அந்த அலுவலகத்தின் சாமுத்ரிகா லட்சணங்கள் சரோசா மனத்தில் அழமாகப் பதிந்துவிட்டன. ஆகையால், அந்த அலுவலகத்தை கேட்பார் பேச்சைக் கேட்டு லெப்டில் திரும்பி ரைட்டிலோ, ரைட்டில் திரும்பி லெப்டிலோ போகாமல் சொந்த முயற்சியிலேயே கண்டு பிடித்துவிட்டாள்.

காலையிலேயே பூக்காரத் தோழியின் வீட்டுக்குப் போனவள், "அந்த கஸ்மாலம் மாருவாடிக்கிட்ட வைக்கிறதுக்கு முன்னாடி நீ கட்டிக்கோ" என்று சொல்லி ருக்குமணி கொடுத்த புடவையையும், அதற்கேற்ற ஜாக்கெட்டையும் வாங்கிக்கொண்டாள். இதர இரண்டு, மூன்று சேலைகள் கொடியில் தொங்கியபோது, இந்தப் புடவை மட்டும் கரப்பான் பூச்சி வில்லைகள் போடப்பட்ட டிரங்க் பெட்டியிலி ருந்து வெளிப்பட்டது. எலுமிச்சை நிறம். பைஜாமாவை லேசாகச் சுருட்டி, அதையே பாவாடையாக அனுமானித்துக் கொண்டு, அதற்குமேல் புடவையைக் கட்டலாமா என்று சரோஜா சிறிது யோசித்தாள். பிறகு புடவையை சுற்றிக் கொண்டு பைஜாமாவைச் சுருட்டி ஒரு மூலையில் போட்டாள். ருக்குமணி அவள் நெற்றியில் பிளாஸ்டர் குங்குமத்தை ஒட்டினாள். சினிமாக்காரி மாதிரி ஜொலி த்த கில்டு செயினை பூட்டிவிட்டாள். இந்த அன்பைப் பொறுக்க முடியாமல், சரோசா கண்ணீர் விட்டபோது “பவுடர் நனைஞ்சு திட்டுத்திட்டா ஆயிட்டுப்பாரு. பவுடர் கொஞ்சமாத்தான்கீது. அதனால இதுக்குமேல் அழாதே” என்றாள் ருக்கு. “ஏம்மே கலங்குறே? நானிருக்கேன், இளங்கோ இருக்கார். ஒன் அண்ணாத்தே இன்னாப் பண்ணுறான் பார்க்கலாம். கண்ணாடி முன்னால போமே. எப்படி ஜொராக்கீறே தெரியுமா?” என்று ஆற்றுப் படுத்தினாள்.

சரோசாவை, ருக்குமணி பஸ் நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தாள். அந்தப் பல்லவன், இளங்கோ குறிப்பிட்ட அலுவலகத்திற்கு முன்னால் பஸ் நிலையத்தில் இருந்து அனைவரையும் ஓட்டப்பந்தயத்தில் பார்க்க விரும்பியது போல், இருபதடி தள்ளி நின்றது. சரோசா இறங்கினாள்.

அந்த இலுவலக முகப்பில் இரண்டு பிரிவுகளான இரும்பு கேட்டுகளில் ஒன்று மூடியிருந்தது. இன்னொன்று அரைக்கண் பார்வை போட்டது. அந்த ஒருகண் வழியாக உள்ளே போனாள். அங்குமிங்குமாய் பார்த்தாள். வலதுபக்கம் ஒரு தூக்கலான இடத்தில் சின்ன மணிக்கூண்டு மாதிரியான கட்டிடத்தில் காக்கிச்சட்டைக்காரர்கள் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் கிடந்தார்கள். துப்பாக்கிகளும் அப்படியே. உள்ளே பிரம்மாண்டமான கட்டிடம். சரோசாவுக்கு மகிழ்ச்சி. ஏழை பாழைகளை கூண்டில் அடைச்சுப் பார்க்கிற போலீஸை இப்போது கூண்டுக்குள்ளேயே பார்ப்பதில் ஒரு அகரத் திருப்தி. அவர்கள் ஏதாவது தன்னிடத்தில் கேட்பார்கள் என்றபடி நின்றாள். தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக ஏ.கே. 47 எதுவுமில்லாமல் உள்ளே கிடந்த அந்த போலீஸ்காரர்கள், அவளை கண்டுக்கவில்லை. அந்த அலுவலக செக்யூரிட்டி ஆபீசர் ஒரு சிவிலியன். இவர்களுக்கும், அவருக்கும் ஒரு உள்நாட்டு யுத்தம். யாராவது போகட்டும். அந்த குள்ளப்பையன் செக்யூரிட்டி மாட்டிக்கட்டும். இப்படிப்பட்ட ஒரு நல்லெண்ணம்.

சரோசா, அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை நோக்கி நடைவேகத்தை அதிகப் படுத்தினாள். மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது. பத்துமணிக்கு முன்பே வரத்தான் நினைத்தாள். ஆனால், ருக்குமணிதான், ராவுகாலம், எமகண்டம் என்று இழுத்தடித்து விட்டாள். சரோசா, வேகவேகமாக அந்த அலுவலகப் உள்வாசலை நோக்கி கால்வீசி, கைநீட்டி நடந்தபோது, அவள் முன்னால் ஒரு உருவம் வந்து நின்றது. வாட்டசாட்டமான நாற்பது. உச்சி வழுக்கை; காக்கி யூனிபார்ம், தோளில் முளைத்த வட்டவட்டமான சங்கிலிச்சுருள் மாதிரியான துணிக்கயிறு அவரது பைக்குள் போய் முடிந்தது. அவளைப் பார்த்து பயபக்தியோடு கேட்டார்:

"மேடம், நீங்க யாரைப் பார்கணும்? நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யலாமா? சொல்லுங்க மேடம்."

சரோசாவுக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், அந்த மேடத்திற்கு உரிய கம்பீரத்தோடு அவரைப் பார்த்தாள். இப்படியொரு ஆம்பளை இதுநாள் வரைக்கும் இப்படியொரு மரியாதை கொடுத்ததில்லை. 'யோவ், அண்ணாத்தே... இரு இரு...' சரோசா காக்கியை நெருங்கி முழங்கையை நீட்டினாள். அவர் மோவாய் இடிபடும் இடைவெளியில் நின்றுகொண்டு, கம்பீரத் தன்னம்பிக்கை யோடு. அதே சமயம் அப்பாவித்தனமாக விவரம் சொன்னாள் :

"எனிக்கி இந்த ஆபீசுல வேல போடுறாங்க சாரே, கேசுவலையோ, கொசுவலையோ, ஏதாவதொரு வேல. இளங்கோ சார் வரச் சொன்னார்."

அவள் பேச்சைக் கேட்டதும், மலர்ந்த முகத்தை உலறவைத்த காக்கிக்காரர் அருகே, இரண்டு மூன்று பெண்கள் உள்ளே வந்தார்கள். ஒருத்தி கால்முட்டிகளைக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்கர்ட்காரி. இந்த லட்சணத்தில் அதுவும் இடையிடையே கத்தரிக்கப்பட்டு இருந்து. மற்றொருத்தி கையில்லாத ஜாக்கெட் காரி. பொம்பளை உடம்பு, ஆம்பளை முகம். இன்னொருத்தி ஆம்பளை உடம்பு, பொம்பளை முகம். ஆனாலும் அவர்கள் ஹாண்ட்பாக்குகளை ஆட்டியவிதத்தில், காக்கிக்காரர் அவர்களிடம் பணிவன்பாக நின்றார். இதற்குள் சரோசா தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தாள். அப்போது ஒரு விசில் சத்தம். முதலில் விட்டுவிட்டும், அப்புறம் விடாமலும் ஒலித்தது. அவள் யாருக்கோ, எதுக்கோ என்பது மாதிரி நடந்தபோது, "ஏய்... ஏய்... கேசுவலு, ஒன்னத்தான், - உய்ங்... உய்ய்” என்ற குரலும், குரலுக்குரிய விசிலடிச் சத்தமும் கேட்டன.

சரோசா, நடந்தபடியே முகத்தைத் திருப்பினாள். அவளுடன் இரண்டு நிமிடத்திற்கு முன்பு எந்த வாய் பணிவாகப் பேசியதோ, அந்த வாயே இப்போது அவளை 'வா... வா... என்று கையை ஆட்டி அட்டகாசமாய் கூப்பிட்டது. விசிலடித்தபடியே கூப்பிட்டது. குப்பத்தில் கூட இப்படி விசிலடிச்சி பொம்மனாட்டிய கூப்பிடமாட்டாங்களே... சரோசா ரிவர்சில் நடந்து, அந்த ஆசாமி முன்னால், முகச்சுருக்கங்களோடு நின்றபோது அவர் விசிலை எடுத்துவிட்டு அவளை வீசிக் கடாசினார்.

“ஏய், என்ன நினைச்சிக்கிட்டே? தொறந்த வீட்டுல ஏதோ நுழையுறதுமாதிரி நுழையுறே... நான் ஒருத்தன் இங்க நிற்கிறேனே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி நீ உள்ளே போகலாம்? 'ஒங்கள இல்ல மேடம், நீங்க போங்கோ. இந்தப் பொண்ணத்தான், "உங்களச் சொல்வேனா?' இந்தாம்மா! மொதல்ல வெளியில போ”

சரோசா, மன்றாடினாள்.

“அண்ணாத்தே, தப்பா நினைக்கப்பிடாது அண்ணாத்தே. ஒரு வேல கொடுக்கிறதா இளங்கோ சார் சொன்னாரு, நானும் ஆபீஸ்கீபீஸ் போனதில்லே. தப்பா நடந்திருந்தா மன்னிச்சுக்கோ”

"ஆங்... அப்படி வா வழிக்கி. ஆபீசுன்னா ஒரு முறை இருக்குது ஆனாலும் இப்போ நீ வெளியில நிக்கணும். நான் இளங்கோவ பார்த்துட்டு ஒன்கிட்ட சொல்றேன்.”

சரோசா என்ன செய்யலாம் என்று திக்கிமுக்கித் திணறிய போத அந்தக் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் - அல்லி அரசாணி மண்டபம் மாதிரியிருந்த உயரமான அறையிலிருந்த ஒருவன் கர்ஜித்தான். இடமும், உயரமும், அந்தஸ்தும் அந்த விசிலைவிட அதிகம்.

"யோவ்! நான் ஒருத்தன் செக்யூரிட்டி ஆபீஸர் நிக்கேன்ல... நீயே குறுக்கே புகுந்தால் அப்புறம் நான் எதுக்கு? அந்தப் பொண்ண இங்க அனுப்பு.'

விசிலடிச்சான், வேறு வழியில்லாமல் சரோசாவுக்கு வழிவிட்டார்.நாளைக்கி மாட்டிக் கொள்ளாமலா போவாள் என்று மனதிற்குள்ளேயே அவளைப் பகையாளியாக்கிப் பார்த்தார். இதற்குள் சரோசா மேல்நாக்கிப் பார்த்த கண்களை, அந்தக் கட்டிடத்தை நோக்கி கீழ்நோக்கிப் பார்த்தபடியே மேலே மேலே போனாள். செக்யூரிட்டி ஆபீஸர், அவளிடம் பேசுவது தனது தகுதிக்குக் குறைவு என நினைத்து, ரிசப்ஷன் ஆபீசரிடம் பேசு என்பது மாதிரி சைகை செய்துவிட்டுப் போய்விட்டார். உடனே அவள் அந்த ரிசப்ஷன் இருக்கைக்கு ஓடப்போனபோது, அங்கே மேஜையைவிட உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தரப் பெண், தான் ஊமை என்பது போல் அவளை அங்கே உட்காரும்படி கையால் தடுத்தது.

அந்த விசாலமான மொசைக் தரையில் வரவேற்பு வளைவு மேஜையிலிருந்து சிறிது தொலைவில் நீளவாக்கிலான இரும்புக் கிராதிகளில் வரிசைவரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகள் பொருத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட வகுப்பறை மாதிரி அது தோற்றம் காட்டியது. அப்போது அந்த அறையை இரண்டு பெண்கள்... பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது பதினொரு மணிக்குப் பெருக்குவதால் அவர்கள் காலையில் பெருக்கியதை மீண்டும் பெருக்குகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். சர்க்கார் பெண்கள் பதினொரு மணிக்குப் பெருக்குவதே பெரிய விஷயம். அவர்கள் துடைப்பங்களை தரையில் ஏவிவிட்டபோது, அங்கே அமர்ந்திருந்த பத்துப் பதினைந்து பேர்கள் எழுந்து நின்றார்கள். கைக்குட்டைகளால் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஆனால், சரோசா மட்டும் இரண்டு முட்டிக் கால்களையும் நாற்காலி முனையில் வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வரவேற்புக் குமரிக்கிழவி அதைக் கவனிக்கத் தவறவில்லை.

இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அந்தப் பக்கமாக வந்தான். கன்னங்களோடு நீண்ட மீசை, முப்பது வயதிருக்கும். முகம் கிழடுதட்டியது. அங்கேயிருந்த பெண்களை ஓநாய், ஆட்டைப் பார்ப்பது போல பார்த்தான். பிறகு சரோசா இருந்த நாற்காலிக்கு அடுத்த நாற்காலியை விட்டுவிட்டு அமர்ந்தான். அங்கே போய்க் கொண்டிருந்த பெரிய மனிதர்களை அவர்களை தனக்குத் தெரியும் என்கிற முறையில் ஏதேதோ கேட்டான். அவர்களில் சிலர், அவனுக்கு நின்று பதிலளித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு சரோசாவை நோட்டமிட்டான். தற்செயலாய் கேட்பதுபோல் கேட்டான் :

"ஒங்க பேரு என்ன?”

"சரோசா.'

"பேருக்கு ஏத்தாப்புலதான் இருக்கீங்க. என்ன விசயம்?” “எனிக்கி தெரிஞ்சவரு, இளங்கோன்னு பேரு. ஒரு வேல போட்டுத் தரதா சொன்னார்!”

“அவரு என்ன அவரு, நானே கூட உனக்கு வேல போட்டுத் தர ஏற்பாடு செய்யறேன். டோண்ட ஒர்ரி. இந்தப் புடவ நல்லாயிருக்கே. அப்புறம் ஒன்னோட குடும்ப பேக்ரவுண்ட சொல்லு பார்க்கலாம்."

மீசைக்காரன், தான் உட்கார்ந்திருந்த நாற்காலி சரியில்லை என்பதுபோல் எழுந்து, அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். அவனிடம் தன்னைப் பற்றிய சில விவரங்களை மட்டும் சொல்ல நினைத்த சரோசா, அவன் பார்த்த பார்வையும், பேசிய பேச்சும் பிடிக்காதவள் போல் முகம் சுழித்தாள். அவனது வலது கை, அவளது நாற்காலிக்குப் பின்னால் தாளம் போட்டது. அந்த பிளாஸ்டிக் நாற்காலியை தட்டியபடியே அவளைத் தட்டுவது போல் அனுமானித்தக்கொண்டான். சரோசா அதிர்ந்து போனாள். எத்தனைவாட்டி ஒண்ணாப் படுத்தாலும் பேஜாரு செய்யாத குப்பத்து தோஸ்துகளை நினைத்தபடியே சட்டென்று எழுந்தாள். அவனோ, இன்னும் "டோன்ட் ஒர்ரி, டோண்ட் ஒர்ரி” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

சரோசா, அந்த வரவேற்பு நாற்காலிக்கு முன்னால் வந்து நின்றாள். அந்த நாற்காலிக்காரி டெலிபோனைக் குடைந்து ஒவ்வொருவரிடமும் ஏதோ பேசினாள். பிறகு அங்கேயிருந்த ஒருசிலரை உள்ளே போகச் சொன்னாள். பிறகு கேண்டினில் இட்லி இருக்கிறதா என்று விசாரித்தாள். தளபதிக்கு டிக்கெட் வேண்டும் என்றாள். அதேசமயம் அங்கேயிருந்த ரிஜிஸ்டரில் எழுதிக் கொண்டிருந்த ஆண்களையும், பெண்களையும் சைடில் பார்த்தாள். இந்தச் சமயத்தில் குதிரை மூக்கு மாதிரி முகத்தைத் திணித்த சரோசாவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள் :

"என்ன வேணும்?”

"இளங்கோ சார்."

"இளங்கோ சார்ன்னு யாருக்கும் பேரு கிடையாது. எஸ். இளங்கோ, ஜி. இளங்கோ, எல். இளங்கோவன், இதுல யாரு வேணும்?"

"நானு அடிச்சுப் போட்டேனே?”

“என்ன ஒளறுறே?"

'இளங்கோ, அதுதான், அறியாத புள்ளாண்டான்; பதினைந்து நாளா ஆசுபத்திரியில பேஜாரு பட்டவரு. எனிக்கி வேல போட்டுத் தாரேன்னார்.”

"நீயும் ஒன் தமிழும். கேஷுவலா? உட்காரு."

"அது வந்திருக்குதா?"

"எனக்கு ஜோசியமா தெரியும்? உட்காருன்னா உட்காரு. இல்லாட்டி நடையக்கட்டு."

வரவேற்புக்காரி வாட்டசாட்டமானவள். அங்கே வருகிறவர்களை குசலம் விசாரித்து, அவர்களது உறவையே முதலீடாக்கி நான்கைந்து டாக்சிகளை விட்டிருப்பதாகக் கேள்வி. இவள் தேறாதவள் என்பதால் அலட்சியமாக அடிக்கடி டெலிபோனில் பேசிப்பேசி அங்கேயிருந்தவர்களை ஏலத்தில் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாள். சரோசா என்ற வார்த்தை வாயில் வரவில்லை. இதற்குள், சரோசா படியமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன், வரவேற்புக்காரியின் காதில் உதடுகள் படும்படி கிசுகிசுத்தான். ஒருமணி நேரத்திற்கும்மேல், சரோசாவுக்கு, காலம் காலன் போல் கடந்தது.

சரோசா மீண்டும் அங்கே போனாள். 'தத்தேறி முண்ட, அது வந்திருக்கா, வரலியான்னாவது சொல்லாமே... கீறாள்... இவள்லாம் அண்ணாத்தேகிட்ட சிக்கணும், அப்போ தெரியும் சேதி.'

இவளின் துடிப்போ, அல்லது பதைப்போ புரியாத அந்தக் குமரிக்கிழவி கத்தினாள் :

"இந்தா பாரு. என் மூட அவுட்டாக்காதே. எனக்கு ஒன்னய எப்போ கூப்பிடணுமுன்னு தெரியும். அப்புறம், யோவ் மீசை, இன்னிக்கி அந்த பார்ட்டி இருக்குதா?"

சரோசா, ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி அந்த நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். ஒருமணி நேரம், ஒன்றரை, இரண்டு. மீண்டும் அவள் அங்கே போனபோது வரவேற்புக்காரி டம்பப் பையோடும், மீசைக்காரனோடும் வெளியேறினாள். இப்போது ஒரு ஆம்பளை கிழடு உட்கார்ந்தது. சரோசா அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். "இளங்கோ சாரு.. இளங்கோ சாரு..." என்றாள். அவர் கத்தினார் : "வந்ததும், வராததுமாய் என்னம்மா இது? என்றார். சரோசா கலங்கிபோனாள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சே...!

சரோசா வந்த வேளை என்ன வேளையோ? அலுவலாக இடைவேளை வந்துவிட்டது.

அந்த வரவேற்புக் கிழடு, ஆற அமர உட்காரட்டும் என்பதுபோல் அவள் பல்லைக் கடித்துக் கொண்டே நின்றாள். அதுவோ கையோடு கொண்டுவந்த டிபன் பாக்ஸை மேஜையில் போட்டுத் திறந்தது. எலுமிச்சப்பழ சாதம், எண்ணெய்கத்திரிக்காய். அந்த வரவேற்பு வட்ட மேஜையிலேயே கரங்களை கால்கள் மாதிரி நீட்டிக்கொண்டது. கிடைக்காத தீனி கிடைத்துவிட்டால், ஒரு நாய், இரண்டு கால்களையும் முன்னால் நீட்டிக்கொண்டு அதற்கு மத்தியில் உள்ள இரையை தலையை சாய்த்துச் சாய்த்துத் தின்னுமே அப்படி.

இந்தச் சமயம் பார்த்து மீசைக்காரன் அங்கு வந்தான். கிழடுக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, அவளை நோட்டமிட்டான், இப்பவாவது என் அருமை புரிஞ்சுதா என்பது மாதிரி. இதற்குள் மீசைக்காரன் அந்தக் கிழட்டைப் பார்த்து "வி.ஐ.பி. ரூம்ல போய் சாப்பிட்டுட்டு வழக்கம்போலத் தூங்குங்க சார்; ரிசப்ஷனை நான் பார்த்துக்கிறேன்” என்றான். கிழடு அவனை விருப்போடும், சரோசாவை வெறுப்போடும் பார்த்துக் கொண்டது. பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வி.ஐ.பி. ரூமிற்குள் படுக்கப் போய்விட்டது. மீசைக்காரன் அவரது நாற்காலியில் ஏறிக்கொண்டான். சரோசாவைப் போலவே ஒருசில தலை காய்ந்த பெண்களும், ஆண்களும் மீசைக்காரனை மதுரை வீரனாகப் பார்த்துக் கொண்டு அவன் பக்கமாகப் போனார்கள். சரோசா மட்டும் வீறாப்பாக நின்றாள். மீசைக்காரன் மற்றவர்களை மிரட்டினான். "போங்க... போங்க... அந்தப் பக்கமாகப் போங்க... டைரக்டர் வர்ற நேரம், நான் கூப்பிடுவேன், எனக்கு எப்பக் கூப்பிடணுமுன்னு தெரியும்."

சரோசா, ஒன்றைப் புரிந்து கொண்டாள். இவனுக்கு விட்டுக்கொடுக்க வில்லையானால், உள்ளே விடமாட்டான். அடக்கண்றாவியே, சர்க்கார் ஆபீசுலயா இந்தக் கூத்து... சாராயக் கடையில இல்லாத கூத்து. பேமானிப் பயலுக. பேசாமப்பூடலாம். நாளிக்கி இளங்கோவோடயே வரலாம். அய்யய்யோ! அதுக்குள்ளே வேல ஆருக்கும் பூட்டா? போனாப் போகட்டும். வெளியிலயே இப்படின்னா உள்ள எப்படியோ? சாட்சிக் காரனைவிட சண்டைக்காரனே தேவல. பேசாம, அண்ணாத்தக்கிட்டயே சரண்டராயிடலாம். சின்னவீடுதான் கோள் மூட்டியிருப்பாள். காலுல விழுந்தா தூக்கிவிடுவாரு.

சரோசா, வாசலுக்கு வெளியே போவதும், உள்ளே வருவருமாக இருந்தாள். அந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து வெளியே வந்த ஒருத்தியிடம் “இளங்கோ சார் இருக்காரா?" என்று கேட்டாள். அவள் பக்கத்தில் இருப்பதாலேயே, தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்ட அந்தப் பெண் ஊழியை, அவளிடம் அலட்சியமாக ஏதோ சொல்லப்போனாள். இதற்குள் எவனோ ஒருவன் அவளோடு சோடி சேர்ந்துவிட்டான். சரோசாவுக்குப் பதிலளிக்காமலேயே அவளும் அவனோடு போய்விட்டாள். அந்தச் சமயம் பார்த்து உள்ளே வந்த, ஒரு வெத்தலைப் பாக்கு ஆசாமியிடம் கேட்டாலோ, அவர் மீசைக்காரனிடம் கை காட்டினார். பேசாம மீசை சோமாரியை தாடையில ஒண்ணு போடலாமா...?

சரோசாவின் உள்வாங்கிய கண்கள் திடீரென்று இமைகளைத் தூக்கியபடி வெளிப் பட்டன. ஒடுங்கிய உதடுகள் பிரிந்தன. கன்னத்தில் குவிந்த கைகள் நீண்டன. இளங்கோ சார்... அதோ அந்த மீசைக்காரனுக்குப் பக்கத்திலேயே, நீலக்கலர்பேண்ட், அதுக்குள்ளே டக்கு வெச்ச சட்ட. சும்மா சொல்லக்கூடாது, பிள்ளாண்டான் நல்லாத்தான் கீறாரு. மீச மட்டும் வச்சாருன்னா குயந்த முகம் மாதிரி தோணாது.

சரோசா, துள்ளிக்குதித்து இளங்கோவின் முன்னால் போய் நின்றாள். மீசைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த அவனது கவனத்தைக் கவர்வதற்காக இருமிக்காட்டினாள். அப்படியும் அவன் திரும்பாததால், அவன் முழங்கையில் லேசாய் ஒரு தட்டுத் தட்டியபடியே "சாரே... சாரே... வந்துட்டேன் சாரே”... என்றாள். இளங்கோவும் மீசைக்காரனிடம் சொன்ன ஒரு வார்த்தையை நடுவிலேயே விட்டுவிட்டு, அவளைப் பார்த்து 'ஹலோ' என்றான். அவன் தன்னிடம் பேசாமல் டெலிபோனில் பேசுகிறானோ என்பது மாதிரி பார்த்த சரோசாவை, நேருக்கு நேராய் பார்த்தபடி, ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்பு எதிர்ப்புகளுக்கு நடுவே நிறைவேறியது மாதிரியான கோபத்தனமான திருப்தியுடன் கேட்டான் :

"உன்ன பத்துமணிக்கே வரச்சொன்னேனே. இரண்டரை மணிக்கு வந்து நிக்கறியே."

"வந்துட்டேன் சாரே! பதினொரு மணிக்கெல்லாம் டான்னு வந்துட்டேன. இங்கேதான கணக்குல நிக்கறேன். உள்ள யாரும் விடல."

"ஏம்ப்பா இந்திரன்! உன்கிட்ட காலையிலேயே சொல்லி விட்டுத்தானே போனேன் : சரோசான்னு ஒரு பொண்ணு வரும், 'சேரி வாசனையை கண்டு விரட்டாமல் உள்ளே விடுன்னு, சொன்னேனே. கடைசியில நான் எதிர்பார்த்ததுமாதிரி ரிசப்ஷனையே ஜெயிலா மாத்திட்டியே."

“அய்யோ சாரே, நீங்க சொன்ன பொண்ணு இதுதானா? ஏம்மா, ஒன் பேர சொல்லப்புடாதா? சாரு கிட்ட கெட்டபேரு வாங்கிக் கொடுத்திட்டியே.'

இளங்கோ, மீசைக்காரனுக்குப் பதில் சொல்லாமல், எலுமிச்சைச் சாத எச்சங்களும், சட்னி துளிகளும் ஆக்கிரமித்த வரவேற்பு ரிஜிஸ்டரை எடுத்தான். நாள், நட்சத்திரம் போன்ற வகையறாக்களை எழுதிவிட்டு, சரோசாவை ஒரு கையெழுத்துப் போடச் சொன்னான். சரோசாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. 'அடேயப்பா! எம்மாம் பெரிய கவர்மெண்ட் ரிஜிஸ்டருல நானு கையெழுத்துப்போடறேன்; நைட்டு போய் நாயினாகிட்ட சொல்லணும்.'

இளங்கோ முன் நடக்க, சரோசா பின் நடந்தாள். வரவேற்பு வளையத்தைத் தாண்டி, பத்தடி இடைவெளி போன்ற பாதையில் நடந்து, எதிரேயுள்ள இரண்டு கண்ணாடிக் கதவுகளில் இளங்கோ ஒன்றைத் தள்ளினான். முரண்டுபிடித்த அந்தக் கதவு சரோசா மீது மோதாமல் இருப்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டான். சரோசா ஜம்மென்று நடந்தாள். வாசல் வளாகத்திலும், வரவேற்பு அறையிலும் அனுபவித்த சிறுமை, இப்போது சிறுத்துவிட்டது. மீசைக்காரனைப் பற்றி இளங்கோவிடம் சொல்லப் போனாள். பிறகு, வாயை மூடிக்கொண்டாள். எந்தக் காரணத்தைக் கொண்டும், துரை அண்ணன் சம்சாரம் அண்ணாத்தைக்கிட்ட சொன்னாப்பல, கோள் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்றது, 'நீ இருந்தும் நடக்குது பாரு' என்கிற அர்த்தமா ஆயிடும்.

இருவரும், கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி மெயின்ரோட அளவுக்கான அகலமான பாதையில் நடந்தார்கள். இருபுறமும் பெரிய பெரிய அறைகள், ஒவ்வொரு அறையிலும் மத்தியிலோ அல்லது ஒரு ஓரத்திலோ ஒரு கிருதாமீசை, வஸ்தாது நாற்காலி. மற்ற மேஜை நாற்காலி வகையறாக்கள் 'மற்றும் பலர்' மாதிரி. அத்தனை அறைகளிலும் ஆண்களும், பெண்களுமாய் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சந்தைச் சத்தம். டெலிபோன் முணுமுணுப்பு, வானொலியின் கிரிக்கெட் வர்ணனை. ‘டப்பு டப்பு' டைப்ரைட்டரின் சத்தம், 'டொக்கு டொக்கு' மின்விசிறிச் சத்தம். சரோசாவுக்கு ஒரு சின்ன ஆசை. ‘அதோ சொரசொரப்பான கம்பளத்துமேலே கீற நாற்காலி நல்லாத்தான் கீது. நாயினாவ ஒரு நாளக்கிக் கூட்டிவந்து அதோ அந்த மெத்த நாற்காலியில குந்தவைக்கணும். நாயினா... நாயினா... பாரு நாயினா, ஒன் பேத்தி மனுஷியாயிட்டா.'

இளங்கோ இடதுபக்கமாக இருந்த ஒரு அறைக்குள நுழைந்தான். இரண்டு கூறுகளான கதவுகள் திறந்தபடியே இருந்தன. உள்ளே நுழைந்தவன், வெளியே லேசாய் தயங்கி நின்றவளை லேசாய் தலையாட்டிக் கூப்பிட்டான். அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள். அந்த அறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். நீளவாக்கிலான செவ்வக அறை. அறுபதுக்கு முப்பது. கிழக்குப் பக்கம் ஓரமாக பிளைவுட் தடுப்புகளைக் கொண்ட ஒரு சின்ன அறை. இருபதுக்கு இருபது. அந்த அறையை மூடிய கதவு. வெளியே வடக்குப் பக்கம் நடுவில் பெரிய மேஜை. அதில் கழுத்தை சாய்த்துக் கொள்ளும் அளவிற்கான நாற்காலி. அந்த இருக்கைக்கு முன்னால் இருபுறமும் ஐந்தாறு இரும்பு நாற்காலிகள். சன்மைக்கா மேஜைகள். தெற்கு முனையில் ஒரு பாடாவதி மேஜை. அதன் மேல் பைல்கள், மைக்கூடுகள், ரப்பர் ஸ்டாம்புகள்... ஒரு வீராப்பான பேர்வழி.

நடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் சரோசாவை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்க்காமலேயே "உடம்பு சரியாயிட்டா" என்றார். அவனும் அவசர அவசரமாய் ஆமாம் போட்டுவிட்டுச் சொல்ல வேண்டியதைச் சொன்னான். "நீங்க என்னப் பார்க்க வந்தப்போ சொன்னேனே... கஷ்டப்படுற பொண்ணு... அது இதுதான்."

"ஓகே ஓகே நீ சொன்னால் நான் தட்டுவேனா? எதுக்கும் டெப்டி டைரக்டர் கிட்டயும் சொல்லிடு."

"காலையிலேயே சொல்லிட்டேன். ஓகே சொல்லிட்டார்." "எலக்ஷன் நம்பி பணத்தப் போடாதே, எலக்ட்ரிசிட்டிய நம்பி இலையப் போடாதே ஆபீசர நம்பி ஆமாம் போடாதே... எதுக்கும் அவரே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லட்டும்.”

தலைமை கிளார்க் சொல்வது கொஞ்சம் அதிகப்படியாக, இளங்கோவிற்குத் தோன்றியது. ஆனாலும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் தெரிந்தவர்கள் போல் பார்த்துக் கொண்டு ஆபீசர் கதவைத் தள்ளினான். அந்தக் கதவு அவனை உள்வாங்கிக் கொண்டு, மீண்டும் தானாய் மூடப்போனபோது, இளங்கோ அதைப் பிடித்துக் கொண்டான். சரோசாவும், தயங்கித் தயங்கி உள்ளே போனாள். உடனே அந்த ஸ்பிரிங் கதவு அலிபாபா குகைக் கதவு மாதிரி மூடிக் கொண்டது. உள்ளே போன சரோசா, முதுகை நிமிர்த்தினாள். இன்னா ஜில்லுன்னுக்கீது. அண்ணாத்த வீட்டுக்குப் போனப்போ குளிர் அடிச்சாப்புல இருந்துதே, அதேபோல ஜிலுஜிலுப்பாக கீது. அட தரையப் பாரேன், நடந்தா காலு உள்வாங்குது. காலுக்கு செருப்பே வாணாம் போல.

தலைக்கு மேல் நீண்ட ரப்பர் மெத்தை நாற்காலியின் பின்பக்கம் பிடரியில் கை போடுவதுபோல் போட்டுக்கொண்டு ஏதோ ஒரு பைலை குடைந்து கொண்டிருந்த டெப்டி டைரக்டர். அருணாசலம், கடாமுடா சத்தம் கேட்டு நிமிர்ந்தார். வயது, உடம்பு, நிறம் ஆகிய மூன்றிலும் நடுத்தரம். அடித்தொண்டையில் பேசக்கூடியவர்.

“உடம்பு இப்போ எப்படி இருக்குதப்பா?"

"ஒங்க ஆசீர்வாதத்துல சரியாயிட்டு சார்."

'அப்புறம் நான் சொன்னேன் பாருங்கோ கேஷ்வல் பொண்ணு. அது இந்தப் பொண்ணுதான் சார். பாவம், தள்ளாத அப்பாவ காப்பாத்துறதுக்கு அல்லாடுது."

“அப்படியா! ஒன் பேரு என்னம்மா?"

"சரோசாங்க, அய்யா!"

"காலையில ஒன்பது மணிக்கே, வந்து, டூட்டி ஆபீசருக்கிட்ட சாவி வாங்கி இந்த செக்க்ஷன் திறக்கணும். என் ரூம நல்லாத் தொடைக்கணும். இந்த ஜாடிய வெளியில கொண்டுபோயி கூலர்ல தண்ணி பிடிச்சு வைக்கணும். நான் வர்றதுவரைக்கும் வாசலிலேயே நிக்கணும். நான் வர்றதப் பார்த்தும் கதவத் தொறக்கணும். சூட்கேச சுமக்கணும். ஒரு நாளைக்கி பத்துப் பதினைந்து தடவ கேண்டீனுக்குப் போக வேண்டியிருக்கும். அலைச்சலுக்கு அலுக்கப்படாது. நாலு வருஷம் இப்படித் தள்ளிட்டியானால், அப்புறம் அதோ வெளியில உட்கார்ந்திருக்கானே அப்துல்லா, அவன மாதிரி காலுமேல காலு போட்டு வேல பார்க்காமயே சம்பளம் வாங்கலாம். நான் சொல்றது புரியுதா?"

"புரியுதுங்க அய்யா! அய்யா காலால் இட்ட வேலையை கையால...

"சினிமா அதிகமா பார்ப்ப போலுக்கு. இளங்கோ முகத்துக்காக இப்போ ஒன்ன சேர்க்கிறேன். அப்புறம் ஒன்ன இங்க வைக்கிறதும், வைக்காததும் உன் திறமையையும், விசுவாசத்தையும் பொறுத்திருக்கு."

"சார், ஹெட் கிளார்க் கிட்ட ஒரு வார்த்த..."

"இண்டர்காமில் சொல்லிடறேன். இந்தப் பொண்ணு முன்னால அவருக்கு உத்தரவு போடக்கூடாது பாரு."

"சாரி சார், வாறேன் சார்."

சரோசாவும், இளங்கோவும் வெளியே வந்தார்கள். அப்போது பார்த்து இண்டர்காம் குமிழை கீழேவைத்த தலைமை கிளார்க் ராமசாமி, இளங்கோவைப் பார்த்து தலை ஆட்டினார். இளங்கோவும் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு லேசாய் திடுக்கிட்டவன் போல், தோளைக் குலுக்கிவிட்டுப் புறப்படப் போனான். சரோசாவும் அவன் பின்னால் புறப்படப் போனபோது, அவன் அவளுக்குச் சொல்வது போல எல்லோருக்கும் சொன்னான்:

“நான் மாடியில இன்னொரு செக்ஷனில இருக்கேன். இந்த செக்ஷன்தான் உனக்கு எல்லாம். யார் சொல்லையும் தட்டப்படாது. என்ன வேல கொடுத்தாலும் செய்யணும்.”

சரோசா தலையாட்டினாள்.

இளங்கோ அங்கே இருந்தவர்களிடம் லேசாய் அரட்டை அடித்து விட்டுப் போய்விட்டான். தனித்துவிடப்பட்ட சரோசா, அங்குமிங்குமாய், மலங்கமலங்கப் பார்த்தாள். டைப்பிஸ்ட் கனகா, அவளை ஏறிட்டுப் பார்த்தாள். 'உடம்பு இருக்கு பார் இரும்புமாதிரி. நானும் இருக்கேனே, தயிர்ச்சாதம்.' அக்கவுண்டண்ட் ராமசாமி அவளை அண்ணாந்து கோபமாகப் பார்த்தான். 'என்னோட வேலைக்காரிய கேஷ்வலா வைக்கலாம்னு இருந்தால். இளங்கோ முந்திக்கிட்டாரே. பார்க்கலாம், பார்க்கலாம். இந்த முண்டக்கண்ணிய விரட்டணும்.' எல்லோரையும் விட, தெற்குப்புற மேஜையில் குரங்கு மாதிரி கால்களைத் தூக்கிவைத்துக் கொண்டு மேஜையையே மரமாகப் பாவித்து உட்கார்ந்திருந்த பியூன் அப்துல்லா பொறிந்தான். ஒல்லி உடம்பன், முப்பதைத் தாண்டாதவன்.

“நான் ஒருத்தன் இருக்கப்போ, எதுக்கு கேஷ்வல்?"

"டீ வாங்கிக் கொடுக்கறது ஒன் வேலையில்லங்கற. மேஜையைத் தொடைக்கறது ஒன் வேலையில்லங்கறே. ஒரு டம்ளர் தண்ணி குடிக்கறதுக்கே மூச்சு வாங்க வைக்கிற. இந்த வேலையைச் செய்யறதுக்கு ஒரு ஆள் வேண்டாமா?"

"எனக்கு ஓட்டி கேட்டா இல்லைன்னு சொல்றீங்க. அதுக்குக் காரணம் கேட்டா, அரசாங்கம் சிக்கனமா இருக்கச்சொல்லி சர்க்குலர் போட்டதாச் சொல்றீங்க. ஆனா இந்த மாதிரி சாவுகிராக்கிங்கள, கேஷ்வலா போட்டு பணத்த விரயம் பண்றீங்க."

தலைமை கிளார்க்கோடு மோதிய அப்துல்லா இப்போது சரோசா மீது பாய்ந்தான்.

“இந்தாம்மா ஒன்னத்தான், பெரிய சினிமா ஸ்டார்மாதிரி ஏன் போஸ் கொடுக்கிறே? என்னோட இந்த எச்சில் கிளாச கழுவிக் கிட்டுவா."

சரோசா சப்த நாடிகளும் அற்றுப் போனவளாய் நின்றாள். எல்லோருமே, அவன் விரட்டுவதை, வேடிக்கை பார்ப்பதைப்போல் பார்த்தார்கள். 'அல்லாரும் என்னை ஏன் ஜென்மப் பகையா பார்க்கிறாங்கோ? ஒவ்வொருத்தனும் அண்ணாத்த மாதிரி தோணுதே.”
-------------------

அத்தியாயம் 23

சரோசா, அந்த வேலையில் சேர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அந்த வேலையின் தலைகால் அவளுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், தலை கழுத்தில் இல்லாதது போலவும், கால் தரையில் படாதது போலவும் ஆடுகிற 'ஆபீஸ் கம்மனாட்டிங்க' போக்குத்தான் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும், நாயின் மீது ஒரு கண்ணை வைத்தபடியே, அதன் அருகில் அமரும் காக்கா போல, எங்கிருந்தோ பறந்துவரும் அண்டங்காக்காவின் முட்கால்கள் உடம்பில் படாதபடி நகர்ந்து கொள்ளும் சிட்டுக்குருவி போல, சரோசா அவர்களின் இருபொருள் படும்படியான பேச்சுக்களையும், தன்னைத் தாழ்த்தும் இளக்காரமான பார்வைகளையும் தாங்கிக்கொண்டாள். வேலையில்‘காயம்' ஏற்பட வேண்டும் என்பதற்காக, உள்ளத்தின் காயங்களை ஊதிவிட்டுக் கொண்டாள். கோப்புக்களை தூக்கிக்கொண்டு, செக்ஷன் செக்ஷனாகப் போகும்போது பெருமையாக இருந்தது. எச்சில் டம்ளர்களை கழுவும்போது சிறுமையாக இருந்தது. அவளுக்கும் ஒரு முகம் இருப்பதை அனுமானிக்காமலே, அவளுக்கு எதிராக கிண்டலடிக்கும் பேர்வழிகளைப் பார்க்கும்போது அடித்து நொறுக்கலாம் என்பதுபோன்ற ஆவேசம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டாள். இப்போது நாயினா அவளை சந்தோஷமாகப் பார்க்கிறார். ஆகையால் அலுவலகத்தில் தானும் சந்தோஷமாக இருப்பதாக அவரிடம் ஒரு பாவனை செய்து கொள்கிறாள். இளங்கோ, பல தடவை அவளைப் பார்த்து குசலம் விசாரித்தான். அவளுக்குப் பணம் தேவையா... என்று கூடக் கேட்டான். அவள் தன்னை அறியாமலே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அழுத்திக் கேட்டிருந்தால், கையை நீட்டியிருப்பாள்.

கடந்த பத்து நாட்களாக, அவளுக்கு எந்த வருமானமும் இல்லை. சரக்கு எடுக்கப் போகாததால், பைசா தேறவில்லை. துரை அண்ணனிடம் கேட்கலாம் என்றால், அவன், ஆந்திராவிற்கு சரக்கு வாங்கப் போய் விட்டான். கடைசியில் பூக்கார ருக்குமணிதான் இவள் கேட்காமலேயே கொஞ்சம் இவளுக்கும், இவள் நாயினாவுக்கும் 'நாஷ்டாவுக்கு' ஏற்பாடு செய்தாள். இவளும், தினமும் மாலையில் அந்தப் புடவையை ருக்குமணி வீட்டில் மடித்துவைத்துவிட்டு பைஜாமா வகையறாவை போட்டுக்கொள்வாள்.

அன்றும், அவள் வழக்கம்போல் பைஜாமா கோலத்தோடு நாயினாவுடன் கோவில் வளாக மண்மேட்டில் படுத்துக்கிடந்தாள். ஆபீசில் மொசைக் தரையில் நடந்துவிட்டு, சோபா செட்டில் அக்கம் பக்கம் பார்த்து உட்கார்ந்துவிட்டு, அந்தத் தரையில் இப்போது படுப்பதற்கு அவளுக்கு என்னமோபோல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். இந்த மாதச் சம்பளம், நாஷ்டா ஆயாவுக்கும், ருக்குமணியின் கடனுக்கும் சரியாயிருக்கும். அடுத்த மாதச் சம்பளத்தில், ஒரு குடிசைக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடித்தனம் போயிடலாம். எம்மாடி! ஒரு நாளைக்கி 30 ரூபா கொடுப்பாங்களாம். பள்ளிக்கூடத்துல ரொம்பவும் படிச்சிட்டு டீச்சரா போற பொண்ணுங்க கூட 300, 400 ரூபாதான் வாங்குறாங்கோ. எனிக்கி முள்ளங்கிப் பத்தமாதிரி 900/- ரூபா.

அம்புபோலான அவள் முழங்கை மடிப்பையே தலையணையாக வைத்தபடி நாயினா தூங்கிக் கொண்டிருந்தார். அவர்-கை ஏன் இப்படிக் குலுங்குகிறது என்று அவள் பார்த்தபோது காரணம் கண்டு கொண்டாள். அவள் நாயினாவின் தலை அங்குமிங்குமாய் ஆடியது. அவர் உடலெங்கும் மலேரியா படையெடுத்தது போன்ற ஆட்டம். மார்கழிப் பனி அவர் தொண்டைக்குள் ஊடுருவி, ஈளை-இருமலாக அவரை உலுக்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, துரை அண்ணனின் தர்ம பத்தினியைப் போல் நம்பமுடியாத மழை. ஆலங்கட்டி விழுவதுபோல் அடாவடி மழை, அவள் முகத்தை பேயாய் அறைந்தது. நாயினாவின் காக்கிச்சட்டையை காகிதமாகக் குழைத்தது. அவரை 'ஊ.. ஊ..' என்று ஊளையிட வைத்தது.

சரோசா, நாயினாவை தூக்கிப்பிடித்து நிறுத்தினாள். அவரோ நிற்கமுடியாமல் நிலைதடுமாறி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தானும் ஆடி, அவளையும் ஆட்டுவித்தார். 'அய்யோ... நாயினா' இப்படியே இத வெச்சா செத்துடம். எங்கே கூட்டிப்போறது? துரை அண்ணன் கொட்டடிக்கப் போலாமா? அந்த தர்ம பத்தினி இன்னாப் பண்ணுவாளோ? அதானே... அப்பவே பெரிய கார்ல டம்பப் பைய வச்சுகினு, இரண்டு பிரா போட்டாப்புல, உடம்ப நெளிச்சுக்கிட்டுப் போயிட்டாளே. ஆபத்துக்குத் தோஷமில்ல. அதோட ஒருவாரமா தோஸ்துங்கள பார்க்காம தலை சுத்துது. எப்படியில்லாமோ பேசிக்கினு இருப்போம். இப்போ கஸ்மாலங்க கண்டுக்க மாட்டேங்கிறானுங்க. நல்லவேளை, அண்ணாத்தே கண்டுக்கல. நானு பயந்ததுமாதிரி ஏடாகூடமா ஏதும் செய்யல. பெரிய மனுஷன்தான்.ஏதோ அந்த வேளையில கேட்பார் பேச்சுக் கேட்டு, போலீஸ்ல மாட்ட வைக்க, நெனச்சிருக்கார்.

சரோசா, தந்தையின் தலை நனையாமல் இருப்பதற்காக, தனது சட்டையின் பின்புறத்தில் கழுத்துப் பகுதியைத் தூக்கி, அவரது தலையில் முக்காடு மாதிரி போட்டுப் போர்த்தியபடியே நகர்த்தினாள்.நடக்கும்போதே அவரது சட்டையையும் வேட்டியையும் பிழிந்துவிட்டாள். அவர் உடம்பைத் தொட்டால் ஆபீசில் பிரிஜ்ஜை தொட்டது மாதிரி இருந்தது. முக்கி முனகிய நாயினாவை, அவள் துரை அண்ணன் வீட்டின் கொல்லைப்புறப் பந்தலுக்குள் கொண்டு போனாள். அங்கே படிக்கட்டில் உட்கார்ந்தபடி, முட்டிக்காலில் ஊன்றிய கைகளில் முகம் போட்டு, பக்கத்தில் இருந்த இருவர் மாறிமாறிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த துரை அவளைப் பார்த்து லேசாகத் தலையாட்டினான். ஆனால், பக்கத்தில் பாதி கிளாசோடு இருந்த அம்மைத் தழும்பன், அதட்டினான்:

"நீ ஆரோ, நாங்க ஆரோ? எதுக்கும்மே வந்தே, ரோசங்கெட்ட கயிதே?"

இன்னொரு வஸ்தாவான இன்னாசி, அவளைப் பார்த்து, எழப்போன அம்மைத் தழும்பனை அழுத்தி உட்கார வைத்தான். சரோசாவைப் பார்த்து ஒரு இடத்தைக் காட்டி மோவாயை ஆட்டி உட்காரச் சொன்னான். அவளும் தந்தையை அந்தத் தரையில் படுக்கப் போட்டபடி அவரது உடைகளைத் தளர்த்தி விட்டாள். துரை சாக்களிடம் புலம்பினான் :

"அப்போ, நானு ஆந்திராவுக்கு சரக்கு எடுக்கப் போகிற போதெல்லாம், இங்கேயே சல்சா நடந்ததுன்னு சொல்றே!. ஒரு வருஷமா நடக்கிற விவகாரத்த... நீ துரோகி, என்கிட்ட - இந்த தோஸ்துகிட்ட - சொல்லல. இன்னாய்யா பிரெண்டு நீ?"

"விட்டுத் தள்ளுப்பா... விஷயம் அதவிட முத்திட்டு. அண்ணாத்தே கார் அனுப்புறார். அக்கா ஜம்முனு புறப்படறாள். மட்டுமரியாத இல்லாம பூட்டு. சே, பொம்மனாட்டியா அது?"

சரோசா வாயைக் கொடுத்தாள்:

"யோவ் இன்னாசி, அந்தப் பொம்மனாட்டிய திட்டிறீயே, ஆனாங்காட்டி தொரண்ணன் கிட்டருந்து அவள அப்பிடி பிரிச்சு மயக்கின அண்ணாத்தைய பத்தி ஏம்ப்பா பேசமாட்டேங்கிற? ஒரு குடும்பத்தையே கலிஜி பண்ணிட்டாரே."

"இந்தாம்மே எயிந்திரு. எயிந்திரு. சரியான கபீரிச்சி நீ!''

துரை, இரண்டாவது தோஸ்தின் தோளையும் தட்டி அமைதிப் படுத்தினான். ஒரு கையால் அவன் தோளை அழுத்தியபடி முன்னால் இருந்த கிளாஸை இன்னொரு கையால் எடுத்து வாய்க்குள் தடதட வென்று விட்டான். பிறகு சற்றுத் தொலைவிலிருந்த இரண்டு கிளாஸ்களை எக்கிஎக்கி எடுத்தான். கண்ணாடி ஜாடியிலிருந்த மண் நிற திரவத்தை அவற்றில் முழுமையாக நிரப்பி, இன்னாசியிடம் கொடுத்து அவற்றை சரோசாவிடமும் அவள் நாயினாவிடமும் கொடுக்கச் சொன்னான். சரோசாவும் கொடுக்கப் பொறுக்காமல், அவற்றை வாங்கிக் கொண்டாள். ஒன்றை எடுத்து படுத்துக்கிடந்த நாயினாவின் தலையைத் தூக்கி, வாயை அகலப்படுத்தி ஒரு கிளாசை தலைகீழாகக் கவிழ்த்தாள். அது 'தடா' சட்டம் மாதிரி வேகமாகப் பாய்ந்தது. இன்னொரு கிளாசை எடுத்து, தனது வாயருகே கொண்டுபோனாள். ஒரு வாரமாய் கிடைக்காத அமிர்தம்... உள்ளே போனால் அது செய்யும் மாயாஜாலமே தனி. நிஜமே இல்லாத நிழல்களைக் காட்டும் மாய மருந்து; துக்கத்தைக் கரைத்து அதையே சந்தோஷமாகக் காட்டும் சர்வ வல்லப திரவம்.

சரோசா, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல், அரசியல்வாதி பதவியைப் பார்ப்பதுபோல், அதைப் பார்த்தாள். அந்தச் சமயத்தில் இளங்கோ அவள் முன்னால் வந்து நிற்பதுபோல் இருந்தது. அவளை முகம் சுழித்துப் பார்க்கிறான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது போல், அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவனது அலுவலக சகாக்கள் அவனை ஏளனமாகப் பார்த்தபடியே 'குடிகாரிய வச்சிட்டியே' என்று ஏசுவதைக் கேட்கிறாள். 'அடப்பாவி... படுபாவி... இளங்கோ! என்னோட சுகத்தைக் கெடுத்திட்டியே. இந்தக் குளிருல ஒரு நண்டுத் துண்டக் கடிச்சுக்கினு, ஒரு கிளாய பூட்டா எப்படி ஜோரா இருக்கும்! இன்னிக்கி மட்டும் கொஞ்சமா தவோண்டு போட்டுக்கிறேன்பா... நாளக்கி வாணாம்.'

சரோசா, மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். சாராய வாடை மூக்கில் கிக்-ஐ ஏற்படுத்தாமல் இருக்க அதைப் பொத்திக்கொண்டாள். அந்தக் கிளாசையே ஆசையோடு பார்த்த நாயினாவின் பக்கம் அதை நகர்த்திவிட்டாள். அவர் பதிலுக்கு அதை அவள் பக்கம் நகர்த்தியிருந்தால், வாய் வாய்க்காலாகி, அந்தத் திரவம் உள்ளுக்குள் உருண்டோடியிருக்கும். ஆனாலும், அவளோ ஒரு வைராக்கியத்தோடு, நாயினா குடித்த கிளாசைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.

துரை, தனது சுமையில் அவள் சுவைக்காமல் போனதை உணரவில்லை. அந்த தோஸ்துகள் இருவரும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் இப்போது சிறிது மரியாதை தெரிந்தது. இந்தச் சமயத்தில் பாதி திறந்திருந்த பின்வாசல் கதவு சத்தம்போட்டது. துரை அண்ணனின் தர்ம பத்தினி அங்கே தாம்தூமாய் நின்றாள். தலையிலுள்ள பூக்கள் கசங்கியிருந்தன. நெற்றிப் பொட்டில் பாதியைக் காணவில்லை. கையில்லாத ஜாக்கெட். இரண்டு தோள்களும், 'ரொட்டி' சுடும்போது உப்புமே, அப்படி உப்பிநின்றன. சரோசாவை அதட்டலோடு கேட்டாள் :

"இங்கே எதுக்குமே வந்தே? என் புருஷன் ஒனிக்கி கள்ள ஆம்படையானா?"

"எக்கோவ், ஒன்ன மாதிரி என்னை நினைக்காதே."

“ நீ பெரிய ஒழுங்குதான்.”

“நானு அப்பிடி ஒண்ணும் சொல்லல..! தொட்டு இருக்கேன், கெட்டிருக்கேன். ஆனா, எனக்குன்னு ஒரு ஆம்புடையான் வந்துட்டா, அதுவும் துரை அண்ணன் மாதிரி நல்லவனா வந்துட்டா, நானு ஏரியா விட்டு ஏரியா போயி மேயமாட்டேன்.”

"ஏய், இதுக்குமேல் பேசினே, ஜோடு பிஞ்சிடும். 'அவரும்' ஒன்ன கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்காரு. அந்தப் பிள்ளாண்டானோட நீ ஆகபத்திரியில கொஞ்சினது, அவருக்குத் தெரியும். எப்பேர்ப்பட்ட மனுஷன்... அவர அவ்வளவு சீப்பா நினைச்சிட்டியா? இருக்கட்டும்... இருக்கட்டும். மொதல்ல இடத்தக் காலி பண்ணு.”

துரை, குடிவெறியோடு எழுந்தான். தர்ம பத்தினியின் தலை என்று நினைத்து ஒரு நாயின் தலையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சுத்தினான்:

"ஏம்மே! வீடுவிட்டு வீடு போறதுதான் போறே, நானு போட்ட தாலிய அறுத்துட்டுப் போறதுதானம்மே! சரோ, நீ உட்கார். மொதல்ல நீ வீட்டவிட்டு காலி பண்ணும்மே.”

தர்ம பத்தினி அதிகமாய் வெடித்தாள்:

"இந்தா பாருய்யா, இப்போ சொல்றதுதான். இந்த வீடு என் பேர்ல கீது. இருந்தா இரு.. போனா போ. என்னால தனியா சரக்குப் போட முடியும். இனிமே என்ன ஒதச்சே, அப்புறம் அவருகிட்ட ஒத தின்னுவே. போகணும்னா போயேன். என்னால சரக்குப் போட முடியும். பெரிய வஸ்தாதுன்னு நெனப்பா? மானங்கெட்ட பையா! நான் அண்ணாத்தய வச்சிட்டுத்தான் இருக்கேன்; இன்னாடா செய்வே பொட்டப் பையா?"

தர்மபத்தினியை அடிப்பதற்காக எழப்போன துரை அப்படியே கீழே விழுந்தான். அந்த மணல் தரையில் ‘அய்யோ, அய்யய்யோ' என்று அங்குமிங்குமாய்ப் புரண்டான். தன் தலையிலேயே அடித்துக்கொண்டான். மீண்டும் எழுந்து உட்கார்ந்து, வாயிலும் வயிற்றிலும் மாங்குமாங்கென்று அடித்தான். அவன் கையை சரோசா பிடித்தபோது, 'ஏம்மே... இவனுக்கு இங்கயே முந்தானை விரிக்கியா... விரி... விரி...' என்று தர்மபத்தினி கத்திவிட்டு, பின் கதவை அவர்கள் முகத்திலடிப்பது போல் சாத்தினாள். சரோசாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதவுக்குள் மறைந்துகொண்டவளை, ஜன்னல் வழியாகப் பார்த்தபடியே கத்தினாள் :

“துரை அண்ணன இந்த நிலைக்கிக் கொண்டுவந்த நீ, வாயில புழு வச்சி சாகப்போறே. இதுக்கு துரோகம் பண்ணின ஒன் கள்ளப் புருஷன் நொள்ளக்கண்ணு அண்ணாத்த எய்டுன்னு ஏதோ ஒண்ணு புச்சா வந்திருக்காமே, அதால சாகப்போறான். அழாத துரையண்ணே. அழாதே; பேய்க்கி தாலி கட்டினா புளியமரத்துலதான் ஏறணும்."

இந்தச் சமயத்தில் தோஸ்து கோபாலு, பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் பேசினான் :

"நீ வேற, ஏம்மே பிராணன வாங்குறே? துரையண்ணன் காலையில் சரியாயிடுவார். புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் இருக்கும். ஒனிக்கி என்னம்மே வந்துது? ஒன்னால அண்ணாத்தே எங்களையும் சந்தேகப்படப்போறாரு.பழகின தோஷத்துல சொல்றேன், நாயினாவைக் கூட்டிக்கினு போயிடும்மே."

"ஆமாம்! கோபாலு சொல்றது மாதிரி ஜல்தியா போயிக்கினே இரு.'

சரோசா, குப்புறக் கிடந்த துரை அண்ணனையும், தன்னை அந்நியமாகப் பாவித்த, ஒரு காலத்தில் அன்யோன்யமான தோஸ்துகளையும் பார்த்துப் பொருமினாள். கீழே கிடந்த தந்தையை தூக்கினாள். அவர் துள்ளலாய் எழுந்து நீராவி எஞ்சின்போல் நடந்தார். சரோசாவை, இப்போது கேரேஜ்போல இழுத்துக்கொண்டு போனார். துரையின் தர்ம பத்தினி வீட்டுக்குள் டெலிபோனைச் சுழற்றி, கோபம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்புறம் அழுதாள், இன்னிக்கே வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணுமாம்.

சரோசாவும், நாயினாவும் கோவில் வளாகத்திற்கு வந்தார்கள். நாயினா வந்ததும், வராததுமாக அந்த ஈரமண்னில் அப்படியே குடைசாய்ந்தார். மழை விட்டிருந்தது. வானம் பன்னீர் தெளிப்பதுபோல் மட்டும்தான் தூறியது. சரோசாவுக்கு தூக்கம் வரவில்லை. பாவம் துரை அண்ணன்! பெண்டாட்டிய கள்ளுமாதிரி வெள்ளையா நினைச்சான். ஆனா, அது விஷச் சாராயமாயிட்டு..!

சரோசாவுக்கும் கண் அயர்வு ஏற்பட்டது. நாயினா குறட்டைபோடும் சத்தம் அவள் தூக்கத்திற்கு தாலாட்டு போல் கேட்டது. திடீரென்று ஒரு சத்தம். இன்னாது, ஆட்டோ? யாரும் சினிமாவுக்குப் போயிட்டு வாறாங்களா?

சரோசா படுத்தபடியே தலையைத் தூக்கியபோது, அந்த ஆட்டோவிலிருந்து நான்கைந்து பேர்கள் குதித்தார்கள். இரண்டுபேர்கையில் பட்டாக் கத்திகள், ஒருவன் கையில் சைக்கிள் செயின்... மீதி இருவருக்கு உடம்பே ஆயுதம். ஆறுபேரும் டார்ச் லைட்டை அடித்தபடியே அங்கமிங்குமாய் பார்த்தார்கள்.
--------------

அத்தியாயம் 24

சரோசா அந்தக் கும்பலை உணர்வற்றபடியே பார்த்தாள். இன்றைக்கு எப்படியும் ஒருவழியாகிவிடப் போகிறோம் என்ற உணர்வு, அவளைத் தப்பிக்கும் வழியை நினைக்க முடியாமல் தடைபோட்டது. உயிரற்றவள் போல் கீழே கிடந்தாள். இதற்குள், அந்த ஆசாமிகள் சேரிக்கு இட்டுச் செல்லும் இடுக்குவழிக்குப் போனார்கள்.

சரோசாவுக்கு என்றே புதிய பங்குத் தந்தையால் தாளிடப்பட்ட அறையை நோக்கிப் போனார்கள். ஒன்றாய்ப் போய்க்கொண்டிருந்த, அனைவரும் பிறகு ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து அங்குமிங்குமாய் தேடினார்கள். பிறகு எல்லோருமாய் ஒன்றாகக் குனிந்து அவள் இருந்த பக்கமாக ஆறு தலைகளையும் ஒரே தலைகளாக நிமிர்த்தினார்கள். சரோசா பம்மிக்கொண்டே பார்த்தாள். பழக்கப்பட்ட இருவர் குரல், பழகாத நால்வர் குரலுடன் கலந்திருந்தது. காவல்நிலைய வளாகத்திற்குள் இளநீர் குடித்துக்கொண்டிருந்த இளங்கோவை அடிப்பதற்காக எகிறினானே ஒரு தோஸ்து-மணி அவன் இப்போது பட்டாக்கத்தி அந்த இருட்டில் மின்ன, கோர தாண்டவம் ஆடுவதுபோல் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

சரோசா நாய்னாவை உற்றுப் பார்த்தாள். அவர் தானில்லாமல் வாழப்போகும் நிலையை நினைக்க நினைக்க, அவளுக்கு ஒரு தற்காப்பு உணர்வை ஏற்பட்டது. உயிர் காக்கும்படி அக்கம்பக்கம் எழும்படி அலறலாமா...? வேறு வினையே வேண்டாம்.எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை! அவர்கள் மெல்ல நகர்ந்தபோது, லேசாய் குறட்டை விட்ட தந்தையின் வாயை அவள் அழுத்த, அவர் மூச்சுத் திணறலில் கண்விழித்தார். ஏதோ பேசப்போன அவர் வாயை ஒரு கையால் அடைத்தபடியே "ஆபத்து! ஆபத்து! அதோ, அண்ணாத்தேயின் கொலைகார கோஷ்டி" என்று கிசுகிசுத்ததும், அவர் அவளைத் தப்பிப் போகும்படி சைகை செய்தார். அவளுக்குத் தெரியும் - இந்த மாதிரி சமயத்தில் குறிபார்க்கப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால், கொலைகாரக் கோஷ்டியினர் அந்தக் குறியின் துணையைப் பழி வாங்கி விடுவார்கள். அவள், தான் தப்பித்து, நாய்னாவுக்குக் கொலைத் தண்டனை வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நாயினாவை தன் பக்கமாக இழுத்து, அவள் தரையில் தவழ்ந்தாள். மூச்சைக்கூட மெல்ல விட்டபடியே ஊனமுற்றவனைப் போல், இரண்டு கைகளையும் கூட கால்களாக ஆக்கி, நாயினாவையும் இழுத்து இழுத்து தவழச் செய்து, அந்தக் கோயில் வளாக வாசலுக்கு வெளியே வந்து விட்டாள். உடனடியாக நாயினாவை தூக்கி நிறுத்தி, தாங்கிப் பிடித்து, தேநீர் பக்கக் கடைகளின் சுவர்கள் வழியாக நகர்த்தி, நகர்த்தி, அவற்றில் சாய்த்து, சாய்த்து, சில இடங்களில் இருந்து,இருந்து, அவர் “அய்யோ வலிக்கி, வலிக்கி” என்று போட்ட அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாது, இழுத்துக்கொண்டே ஓடினாள். கும்மிருட்டான அந்தக் கடலோரச் சாலையில், இருளின் நிழல்போல் பாய்ந்தாள்.

திடீரென்று ஒரு பிளிறல் -ஒரு கர்ஜனை ஒரு அட்டகாசச் சிரிப்பு பிறகு அத்தனையும் சேர்ந்த ஒரு சவால்.

"டபாய்க்கவா பார்க்கிறே? ஒம்மாள... ஒன்ன விடப்போறதா இல்ல. டாய் தாமஸ், மடக்குடா. மொதல்ல அந்த கெயவன பிடிங்கடா. அவள் தானாய் கிடப்பாள். ஏய்... ஆய்... ஊய்..."

சரோசா, திரும்பிப் பார்த்தபோது, அந்த ஆறுபேரும், இன்னும் எங்கேயோ நின்ற இரண்டு பேரும் எட்டாகி, அவர்களை நோக்கி எட்டடி எட்டடியாய் பாய்வதுபோல் ஓடிவந்தார்கள். அவளையும் நாயினாவையும், அந்தச் சாலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களை விடப்போவதில்லை என்பதுபோல் மூன்று பேர் பக்கவாட்டிலும், எஞ்சியவர்கள் பின்னாலும் ஓடிவந்தார்கள்.

சரோசா, கத்திக் கத்திக் கதறினாள் : "எங்களைக் காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... கொல்றதுக்கு முன்னாடி காப்பாத்துங்கோ! கும்மாளம்மா... மாரிம்மா... வேளாங்கண்ணி... காப்பாத்துங்கோ!"

அந்தச் சாலையோரமாய் இருந்த குடியிருப்புகளில் சில விளக்குகள் அந்த வீடுகளை எரியவைப்பது போல் எரிந்தன. ஆனால், கதவுகளோ, ஜன்னல்களோ திறக்கப்படவில்லை. பாவம் சில சொரி நாய்கள்தான் அவளுக்கு உதவிக்கு வருவது போல் ஓடிவந்து, பின்னால் துரத்தும் கும்பல்களையும், பக்கவாட்டில் கொலைத்தனமாய் நடந்த பேர்வழிகளையும் பார்த்துக் குலைத்தன. பிறகு அவர்கள் கீழே எதையோ எடுப்பது போல் குனிந்து நிமிர்ந்தபோது, அந்த நாய்கள் வால்களை பின்னங்கால்களுக்கு இடையே செருகிக்கொண்டு ஓடிவந்த வழியிலேயே திரும்பி ஓடின.

சரோசா, தன்னை அறியாமலேயே உயிர் காக்கும் அனிச்சை உணர்வில், நாயினாவை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினாள். அரைநிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஒன்று புரிந்தது. திரும்பிப் பார்த்தால், அவளை "போ... போ..." என்று நாயினா குரலிடுவது கேட்டது. பிறகு அவர் அந்த கொலைகாரக் கும்பலை நோக்கியே, அவளுக்காக அவர் வழிமறிக்கப் போவது போல் நடப்பது தெரிந்தது. சரோசா மனதில் ஒரு வாயுவேக எண்ணம். பர்மா காடுகளில் குழந்தை குட்டிகளை விட்டுவிட்டு ஓடிவந்த மனிதர்களுக்கு மத்தியில், மனைவியையும், பிள்ளைகளையும் தலையிலும், தோளிலும் தூக்கிப் போட்டுக் கொண்டு விடாப்பிடியாய் வந்தவர் இந்த நாயினா... அவரை அப்படியே விட்டுவிட்டு ஓடுவது, அம்மாக்காரி அடுத்தவனை இஸ்துக்குன்னு போனதுக்கு சமானம். சரோசா நாயினாவை நோக்கி ஓடினாள். “நாயினா... நில்லு நாயினா, நில்லு. ரெண்டு பேரும் ஒண்ணாவே வெட்டுப்படலாம்" என்று கூக்குரல் இட்டபடியே அவரை நோக்கி ஓடினாள். அவள் போட்ட கூச்சலில் புதருக்குள் கிடந்த ஒரு பெருச்சாளி ரோட்டுக்கு வந்தது. துரத்தி வரும் கும்பல் சிறிது நின்று பார்த்தது. சொரி நாய்களே மீண்டும் குலைத்தன.

சரோசா, தப்பிக்கும் திசையிலிருந்து தாக்குதல் திசையை நோக்கி ஓடிஓடி, நாயினாவை நெருங்கி, அவரை அப்படியே கட்டிப்பிடிக்க, அந்த வேகத்தில் இருவரும் கீழே விழுந்தார்கள். “நாயினா... நாயினா..." என்ற அலறல். "மவளே... மவளே” என்ற முனங்கல். பிறகு அலறலும், முனங்கலும் அற்றுப்போன நிசப்தம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்பதுபோல் அந்தப் பட்டமரத்தில் துளிர்த்த கொடி அதிலேயே படர்ந்தது. கொடி முளைத்த மரமும் அந்த கொடிக்குள்ளேயே முடங்கிக் கொண்டது. ‘என்ன செய்யணுமோ... செய்யுங்கடா!"

அந்த இருவரையும் சுற்றி, பட்டாக்கத்தியோடு மூன்றுபேர் நிதானமாக ஒரு வெளி வட்டம் போட்டார்கள். ஓணானை கடித்துக் கடித்து விளையாட நினைக்கும் நாய் போல, அவர்களை நிதானமாகக் கூர்ந்து பார்த்தார்கள். தென்கிழக்கில் ஒரு இரும்புத்தடியன், வடமேற்கில் ஒரு கம்புக்காரன். இரை கிடைத்த திருப்தியில், நிதானமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் நடந்தார்கள். ஆனாலும்-

திடீரென்று ஒரு விசில் சத்தம் ; மூன்று தடவை மூச்சு விடும் அளவுக்கான ஒரு நெடுஞ்சத்தம். அந்த விசில் சத்தம் நின்றதும் ஒரு வாய்ச் சத்தம் :

"டேய்... அப்படியே நில்லுங்க... இந்தப் பக்கம், அந்தப் பக்கம் அசைஞ்சிங்கோ நான் பேச மாட்டேன், துப்பாக்கிதான் பேசும்."

அந்தக் கொலைக் கும்பல் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தது. தொலைவில் கடற்கரை மணல் மேட்டில் 'உங்கள் நண்பன்' காவல் கூண்டிலிருந்து ஒரு டார்ச் ஒளி தெரிந்தது. இன்னொரு கையில் ஏதோ கனமான ஒன்று. நின்றால் பிடிப்பான். ஓடினால் கடுவான். லோக்கல் போலீசையும், குவாட் போலீசையும் சரிக்கட்டிட்டதாய் அண்ணாத்தே சொன்னாரே... இவன் தலையிலயும் தொப்பிகீது.

"டேய்... பேமானிப் பசங்களா! ஆம்பளையின்னா நில்லுங்கடா."

மிரண்டு நின்ற அந்தக் கும்பல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டது. இப்போது ' சுடுவேன்' என்ற சத்தம் வரல. தப்பிப் போறதுக்கு வழி சொல்றது மாதிரி தோணுது.

உயிர் கொல்ல வந்த கும்பல் உயிர் காக்க ஓடியது. அந்த ஒற்றைப் போலீசின் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பிடறிகளில் கைகளைக் கோத்தபடியே ஓடியது.கீழே உட்கார்ந்து உட்கார்ந்தும், எழுந்து எழுந்தும் ஓடியது.

அந்த போலீஸ்காரரும் ஓடிவந்தார். அவர்கள் ஓடுவதையோ, அந்த போலீசின் பூட்ஸ் சத்தத்தையோ சட்டை செய்யாமல், கீழே அசைவற்றுக் கிடந்த உருவங்களை அவர் உற்றுப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். 'டக்... டக்...' என்ற அவரது காலடிச் சத்தம், அந்த உருவங்களுக்குள் அவர்களே கேட்ட இதயத் துடிப்புச் சத்தங்களில் முங்கிப் போனது.

மதுரைக்கு விடுமுறைக்குப் போய்விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு டூட்டியில் சேர்ந்த கான்ஸ்டபிள் திருமலையப்பன்தான் அவர். லத்திக்கம்பால் அந்த உருவங்களைத் தட்டினார். பிறகு, அவர்கள் கொலை செய்யப்பட்டு அப்படிக் கிடக்கிறார்களோ என்று பயந்துபோய் கீழே குனிந்தார். இதற்குள், சரோசா உடம்பை அசைக்காமலே கண்களை அசைத்தாள். ஒருசாய்த்துப் படுத்துக்கிடந்த தந்தையை தன் மடியிலே போட்டுக்கொண்டு போலீஸ்காரரை மலங்கமலங்கப் பார்த்தாள். அவர் அதட்டினார் :

"ஏய், ஒன் பேரு சரோசாதானே? இளங்கோன்னு ஒருத்தனோட விவகாரம் பண்ணிட்டு லாக்கப்ல இருந்தது நீதானே? என்ன நடந்தது?"

சரோசா, மெல்ல மெல்ல சுய உணர்வு பெற்றாள். நாயினாவை உற்றுப் பார்த்தாள். அவரும் சரி, தானும் சரி, இன்னும் வெட்டுப் படவில்லை என்ற மெய்யுணர்வு உந்த, மெல்ல எழுந்தாள். சுடப்பட்ட கொக்கோடு சுடாமலே செத்துப் போனதாய் அனுமானித்துக் கீழே விழும் கொக்கு போல், கைகளை விரித்து தரையில் கிடந்த நாயினாவை உசுப்பினாள். பிறகு அந்த போலீஸ்காரரின் இரண்டு கால்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவர் முட்டிக்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டே விம்மி, விம்மிப் பேசினாள்.

"பேசாம என்னை இன்ஸ்பெக்டர் சொன்னாப்போல வேலூருக்கு அனுப்பிடுங்க சாரே; வாழ்ந்தும் பிரயோசனமில்ல. இருந்தும் பிரயோசனமில்ல சாரே. அண்ணாத்தே என் ரத்தத்தக் குடிக்கத் துடிக்கான் சாரே. நாயினா! நாயினா! நாம நாளைக்கி எப்படியோ, இன்னிக்கி பிழைச்சிட்டோம், நாய்னா!"

திருமலையப்பன், அவளின் நாயினாவை தூக்கி நிறுத்தினார். கீழே கிடந்த கோணிப்பையை எடுத்து அவர் முதுகில் போர்த்தினார். அந்தப் போர்வையின் மேல் தன் உடம்போடு கிடந்த கம்பளியை எடுத்துப் போட்டார்.

"நல்ல வேளை, பீட்டுக்கு டூட்டி போட்டதுனால பிழைச்சிங்க. சரி, என் பின்னால நடங்க. சாப்பிட்டீங்களா?"

சரோசா எதுவும் பேசாமல் நாயினாவை தோளில் சாய்த்துக் கொண்டு திருமலையப்பனைத் தொடர்ந்தாள். மூவரும் மணல் மேட்டுக்கு வந்தார்கள். அவர் 'உங்கள் நண்பன் கூண்டை'த் திறந்தார். நாயினாவை தோளைப் பிடித்து அழுத்தி, அவரே கீழே உட்கார வைத்து, மரச்சுவரில் சாய வைத்தார். பிறகு சரோசாவை ‘நடந்ததைச் சொல்' என்பது மாதிரி பார்த்தார். கீழே உட்கார்ந்திருந்த சரோசா அவரை அண்ணாந்து பார்த்தாள். பார்க்கப் பார்க்க பயம் போய் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. மனச்சுமையை சொல்லிக் சொல்லி அதை குறைத்தாள். இளங்கோவிடம் சுருக்கமாகச் சொன்ன தனது வரலாற்றை, அவரிடம் விலாவாரியாகச் சொன்னாள். ஒவ்வொரு கட்டத்திலும் ‘ஆருமே இல்லாமே பூட்டோமே சாரே' என்று மூச்சு முட்டச் சொன்னாள். அத்தனையும் சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அவரை வெறுமையோடு பார்த்தாள். அவள் கதையை பேச்சற்றுக் கேட்ட திருமலையப்பன், ஐந்து நிமிட மவுனத்திற்குப் பிறகு அறிவுரை சொன்னார்:

"இனிமேல் இந்தப் பக்கம் இருந்தீங்கன்னா, ஒங்க உயிருக்கு ஆபத்துதான். எங்கே இருக்கப் போறதா உத்தேசம்?"

“அதான் சார் புரியலே"

"ஒரு வாரத்துக்கு நீ சொல்றியே ருக்குமணி அவள் வீட்டுல உன்னால தங்க முடியுமா? அப்படி முடிஞ்சா, நல்லது. அதுக்குள்ளே நானும், கமிஷனர் ஆபீஸ் க்ரைம் செக்ஷனுக்கு ஒன் பேர்ல ஒரு மனு

தயாரிக்கிறேன். லோக்கல நம்பிப் பிரயோசனமில்ல... தின்னிப் பசங்க. ஒன் அண்ணாத்தைய பத்தி விவரமா எழுதறேன்."

"அப்போ, எங்க உயிருக்கு கேரண்டிதானே சாரே?"

"தலைவருங்க உயிருக்கே கேரண்டி இல்லாத காலத்துல, பாவம் ஒன்னமாதிரி தலை காஞ்சவங்களுக்கு எந்தப் போலீஸ், பாதுகாப்பு கொடுக்கும்? என் லெவல்ல ஏதோ செய்யறேன். நீங்க எச்சரிக்கையா இருக்கதுலதான் ஒங்க பாதுகாப்பு இருக்குது. உயிரகையில பிடிச்சிருக்கதா சொல்லுவோமே. அது ஒங்களுக்கு நிசமாயிட்டு."

ஒரு போலீஸ்காரரே, இப்படிப் பேசுவதைப் பார்த்து, மீண்டும் உயிர்ப்பயம் கொண்ட சரோசா, முட்டிக்கால்களில் முகம் போட்டபடியே கிடந்தாள். நாயினா, அவள் முதுகைத் தட்டிக் கொடுப்பதுபோல் தோன்றியது. அதுவே அவளுக்கு தாலாட்டுப் போலவும் ஒரு சோகச் சுவையைக் கொடுத்தது.

கதிரவன் நீரில் குளித்து, நிலத்தில் ஏறி, ஆகாயத்தில் தாவியது. சரோசாவும், நாயினாவும் முன்னால் நடக்க திருமலையப்பன் அவர்களுக்கு இடைவெளி கொடுத்து பின்னால் நடந்தார். பட்டப்பகலில் அவர்களுக்கு ஆபத்தில்லை என்றாலும், அங்குமிங்கும் பார்த்தபடியே நடந்தார். பூக்கார ருக்குமணியின் தெருவிற்கு வந்தபோது அவர் தெரு ஓரத்திலேயே நின்றுகொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு போய்விட்டார்.
---------------

அத்தியாயம் 25

ருக்குமணி, தெருவிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு அகலமான பொம்மனாட்டி. அட்டே அந்த தடிச்சியா? இளங்கோ சாரோட அம்மாவா?

சரோசா, அவளை அடையாளம் கண்டதுபோல், பாக்கியம்மாளும் அவளை அடையாளம் கண்டுகொண்டாள். ருக்குமணி சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திக்குமுக்காடியபோது, அவள் புருஷன் கோவிந்து, வெளியே வந்து சரோசாவைப் பார்த்து சந்தோஷமாகப் பேசினான் :

"இன்னாம்மே, சரோ, புடிச்சாலும் புடிச்சே புளியங்கொம்பாப் புடிச்சே! பிடிய விட்டுடப்பிடாது... அந்த பிள்ளக்கா பையன் இளங்கோ, ஒன்ன லாக்கப்புல வச்சாலும் வச்சான், அப்பால அதுக்கு அபராதம் கட்டுறாப்புல ஒன்ன கவருமென்டு வேலையிலயும் வச்சுட்டான். நினைக்க, நினைக்க ஒரே கிக்காக்கீது.'

பாக்கியம்மா, சரோசாவையும், ருக்குமணியையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு ருக்குமணியை அடிக்கப்போவது போல் கைகளை ஆட்டியபடியே கத்தினாள்.

"ஏண்டி, சில்லாட்டே, நேத்துக்கூட இவள் வேலூர்ல இருக்காள்னு சொன்னே; வெளியில வாரதுக்கு ஆறு வருஷம் ஆகும்னு இளங்கோ சொல்லும்போது, நீயும் ஆமாம் போட்டே. இவள் என்னடான்னா தேங்கா கொழுக்கட்ட மாதிரி இப்படி நிக்கா. என்னடி மூடுமந்திரம்? என் அப்பாவி மவன எதுக்குடி இப்படி மடக்கிப் போட்டு இருக்கீங்க? சொல்லுடி! சொல்லுங்கடி!”

இயல்பிலேயே யானை மாதிரி தோற்றம் கொண்ட பாக்கியம்மா, அதற்கு ஏற்றாற்போல் இரண்டு கைகளையும் தும்பிக்கை மாதிரி ஒன்றாக்கிக்கொண்டு 'கராமுரா' சத்தத்தோடு நின்றாள். 'பூக்காரி பய மவள் பேசட்டும்' என்று கர்ஜனையோடு காத்திருந்தாள். ருக்குமணியோ, செய்வதறியாது திகைத்தாள். இரண்டு நாட்களுக்குமுன் பாக்கியம்மா வீட்டுக்கு சாயங்காலமாய் வாடிக்கை பூ கொண்டு போனபோது, தாய்க்காரி, இவளுக்குக் கேட்கும் குரலில் இளங்கோவிடம், "ஏண்டா, என்னையும், ஒன்னையும் அடிச்சுப் போட்டுட்டுப் போன சேரிக்காரிய, ஒன்னோட ஆஸ்பத்திரி ரூம்ல பார்த்ததாய் ஒங்கப்பா இவ்வளவு நாளைக்கிப் பிறகு இன்னிக்கிச் சொல்றார்” என்று கேட்டாள். ருக்குமணி கூட திடுக்கிட்டு கூடையிலிருந்து எடுத்த பூவை பாம்பு மாதிரி சுருட்டி வைத்தாள். இளங்கோ சிறிது அசந்துவிட்டு பிறகு “அப்பாவைப் பத்தி ஒனக்குத் தெரியாதம்மா? அரை மணி நேரத்தில் சாப்பிட்டது என்னன்னு கேட்டாக்கூட அவருக்குத் தெரியாதே. அந்த சரோசா நம்மக்கிட்ட தப்பிச்சிட்டாலும் ஒரு கொல கேசுல மாட்டிக்கிட்டு வேலூர்ல இருக்காள். திரும்பி வர்றதுக்கு ஆறு வருஷம் ஆகும்” என்றான். அதோடாவது அவன் விட்டிருக்கலாம்; "வேணுமுன்னா நம்ம ருக்குமணியைக் கேளு” என்றான். உடனே ருக்குமணியும் 'ஆமாம்' போட்டாள்.

அப்போது பாக்கியம்மாளும், அவர்கள் பதிலில் சமாதானம் ஆனவள்போல், அங்கில்லாத கணவனை ஒரு பிடிபிடித்தாள். "பாவி மனுஷன் எனக்குன்னு வாய்ச்சாரு பாரு. ஆட்கள அடையாளம் காணுறது அவருக்குக் குதிரக்கொம்பு மாதிரி. ஒரு தடவ கோயிலுக்குப் போனோம். நானுன்னு நினைச்சி, அம்பாள் குங்குமத்த இன்னொருத்தி நெத்தியில வெச்சி, கைய ஒடிக்க கொடுத்தவரு. இவரையும் வேலூருக்கு அனுப்பணும். அப்பதான் என் மனசு ஆறும்."

இந்தப் பின்னணியை யோசித்துக் கொண்டி டிருந்த பாக்கியம்மாளுக்கு, இப்போது கோபம் கொந்தளித்தது. கணவனே கை நீட்டாத தன்னை அடித்துப் போட்டவள், வேலூரில் இருக்காமல் இதோ விலாப்பக்கம் நிற்கிறாள்! இந்தப் பூக்கார முண்டையும், அந்தப் பையித்தியக்காரப் பய இளங்கோவும் தன்னைப் பைத்தியமாக்கி விட்டதில் ஆவேசம். பேசாத பூக்காரியைப் பார்த்து, இவளே பேசினாள். ஆசை மகளுக்கு நிச்சயமாகி விட்டதால், நாளை நிச்சயதாம்பூலத்திற்காக, பூவுக்குச் சொல்ல வந்தவள், இப்போது சாவுக்குச் சொல்பவள்போல் சொன்னாள்:

"ஏண்டி பூக்காரி, ஒய்யாரக் கொண்ட! எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். எதுக்குடி பொய் சொன்ன? அந்த அப்பாவிப் பயலுக்கு இவள நீ கூட்டிக்குடுத்தியா, இல்ல இவள் ஒன்னைக் கூட்டிக் குடுத்தாளா? சொல்லுடி. எதுக்குடி என் அப்பாவிப் பையனோட சேர்ந்து நாடகம் போட்டே?"

பூக்கார ருக்குமணி, சரோசாவைப் பார்த்தாள். அவளோ, இப்படிப் பேசியதற்கு பழையவளாக இருந்திருந்தால், கெய்வியை பின்னியிருப்பாள் பின்னி. இப்போது முடியவில்லை. ஆனாலும், இளங்கோ சாரோட அம்மாவாச்சே. பால பார்க்கிறதா, இந்த பாலுப் பானை வயித்தப் பார்க்கிறதா? சரோசா நாயினாவின் முதுக்குப் பின்னால் தலையை குனித்துக் கொண்டாள். கோவிந்துதான், பாக்கியம்மா கண்ணுக்கு முன்னால் விரல்களை ஆட்டியபடியே பேசினான். இப்போது அவன் வயிற்றுக்குள் சாராயம் இல்லை, பசிதான் இருந்தது. அதுவும் கோபத்தைக் காட்டியது.

"பெரிய மனுஷி பேசற பேச்சா இது? ஒன் வயசுக்காக விட்டு வைக்கேன். எனிக்குக் கோபம் வர்றதுக்கு முன்னாடி மரியாதையா பூடு."

ருக்குமணி, கணவனைப் பிடித்து ஒரு ஓரமாகத் தள்ளினாள். அப்போது பாக்கியம்மாள் போட்ட கத்தலில் அக்கம் பக்கம் சந்தோஷப்பட்டுத் திரண்டது. பாக்கியம்மா, கோவிந்தை இளக்காரமாய் பார்த்தபடியே பதிலடி கொடுத்தாள்.

"பெண்டாட்டி பவுக தெரியல, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? என் மகனப் பார்க்கும் பொதெல்லம், இவள் எதுக்கு கிசுகிசுன்னு பேசினாள்னு கேளு. இதோ, கோவில் மாடு மாதிரி தெருவில் திரியுறவள, எதுக்காக ஜெயிலுல இருக்கறதா பொய் சொன்னாள்னு கேட்டுப்பாரு. அப்போதான் நீ நெசமான ஆம்புள."

கோவிந்துக்கு, லேசாய் கலக்கம் ஏற்பட்டது. ஆமாம், இந்தப் பெரியம்மா சொல்றாப்புல இந்த ருக்கு எதுக்குப் பொய் சொல்லணும்? அறியாத பிள்ளாண்டானோட எதுக்கு இவள் கிசுகிசுக்கணும்? பழைய பாடாதி படமனாலும் நேத்துப் பார்த்த தூக்குத் தூக்கி சினிமாவுல கொலையும் செய்வாள் பத்தினின்னு நிரூபிச்சாங்களே; அப்படிப்பட்ட பத்தினியா இவள்? அதான் நான் நைட்டுல ஆசையா கூப்பிட்டா, கழுத்தப் பிடிச்சி வெளியில் தள்ளுறாளா?

கோவிந்து கோபமாகப் புலம்பினான் : “ஏம்மே, பெரிம்மா பேச்சுக்கு பதில் சொல்லும்மே. இல்லாட்டி அந்தம்மா கேட்டதெல்லாம் நானு கேட்டதா அர்த்தம். ஏம்மே சொம்மா வாய்செத்து நிக்கே? ஒனிக்கி அந்தப் பிள்ளக்காப் பையன், ஒசத்தியா பூட்டான், ஒரு பவுனு தாலிபோட்ட நானு மட்டமா பூட்டேனா?"

ருக்குமணி, இடுப்பிலிருந்த கையை எடுத்து கன்னத்தில் வைத்தாள். சொன்னால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அதுவே மீண்டும் போலீஸ் விவகாரமாகி, சரோசாவுக்கு விகாரமாகும். சொல்லாவிட்டால் இதுவரைக்கும் குடிகாரனாய் மட்டும் இருக்கும் ஆம்புடையான், கொலைகாரனாய் மாறுவான். “ஏய் ஒன்னத்தாம்மே, ஒனிக்கு யாருமே புருஷன்?"

“அவள் எப்படிப்பா பதில் சொல்லுவா? திருடனுக்குத் தேள் கொட்டினதுமாதிரி இருக்கும். ஏண்டி, போயும் போயும் என் அப்பாவி மகன்தானா ஒனக்குக் கிடைச்சான்? கெடக்க முடியாட்டி வேறு எவனையாவது பிடிக்க வேண்டியதுதானேடி. ஒன் மூடு மந்திரத்த கட்டுன புருஷன்கிட்டயாவது காட்டுடி."

கோவிந்து, பாக்கியம்மாளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அடியாய் கீழே குனிந்து, அரிவாள்மனையை எடுத்தபடி நிமிர்ந்தான். அதைப் பார்த்த ருக்குமணியோ சிறிதும் அலட்டிக்காமல் வீறாப்புடன் நின்றாள். இதைப் பார்த்த சரோசா, நாயினாவின் முதுகுப் பக்கத்தலிருந்து அவரது மார்புப் பக்கம் வந்தாள். பாக்கியம்மாளின் ஒரு கையை கெஞ்சுதலாய் பிடித்தபடியே, விவரம் சொன்னாள் :

"நானு சொல்றேன் பெரிம்மா. பாவம் இந்த ருக்கு... எனிக்காக பழி சொமக்காள். நடந்ததைச் சொல்றேன் கேள். ஒன் பிள்ளாண்டான் ஒத்தாசையிலதான் நானு விடுதலையானேன். எனக்குத் தெரியாது. அதனால், அது என்னோட ஏரியாவுல என்ன பாலோ பண்ணுறதா நெனச்சு, அதை ஆளுங்க வச்சு அடிக்க வச்சேன். அதுக்கு ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டதாச் சொன்னது பொய். பாவம், இந்த ருக்குமணி என்ன மொதல்ல போலீசுல பிடிச்சுக் குடுக்கப் போனாள். அவ கையில காலுல விழுந்து, ஒன் மவன ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அதுவும் என்ன மன்னிச்சி, இப்போ கவர்மெண்ட் வேல கொடுத்திருக்கு. இந்த ருக்குமணி மட்டும் இல்லாட்டி, ஒன் பிள்ளாண்டானிக்கி போட்டோவுல இன்னேரம் நீ பூப் போட்டு இருப்பே. ஒன் பிள்ளாண்டானுக்கும் எனக்கும் கூடப் பொறக்காத பொறப்பாப் பழகின இந்த ருக்கு, ஒழுக்கம் கெட்டவள்னா, பூலோகத்துல எந்தப் பொம்மனாட்டியும் ஒழுக்கமா இருக்காது. தடிமாடு மாதிரி திரிஞ்ச எனக்கி, வழிகாட்டுனது இளங்கோ சாரும், இந்த ருக்கும்தான். நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் ஒன்னோட இஷ்டம். இந்த ருக்குவையும் ஏகநாதர மாதிரி சிலுவையில அறைஞ்சிடாதே."

பாக்கியம்மா, சரோசாவை கண் ஆடாமலே பார்த்தாள். ஆனாலும், அவளுக்கு ஏசுநாதர் சிலுவை என்பதெல்லாம், மனோ எல்லைக்குள் பிரவேசிக்க முடியாத விவகாரங்கள். இந்த சேரிப் பிசாசு, தன் மகனை ஆள் வச்சு அடித்திருக்கிறாள் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கியது. எதிரி இளக்காரமாய் நினைக்கும்படி அவளுக்கே வேலையும் வாங்கிக்கொடுத்த மகனின்மீது எரிச்சல் வந்தது, அந்த எரிச்சல் அந்தப் பெண்களை எரிக்காமல் எரித்தது :

"ஆகக்கூடி, ரெண்டு தட்டுவாணிகளும் தர்மரு மாதிரி இருந்த என் மவன பாடாபடுத்தி இருக்கீங்க. ஏண்டி ருக்கு, எல்லாமே முடிச்சிட்டியா, இனிமேத்தானா?"

"இந்தா பாரு பெரிம்மா, என்னப் பேசு, வேணாங்கலே. காறித் துப்பு, கண்டுக்கல. இந்த ருக்கப் பத்திப் பேசின, மரியாதையில்ல. எனிக்கி ஒன் மகன் கொடுத்த வேலையைவிட இந்த ருக்குவோட மானம்தான் பெரிக."

“என்னடி செய்வே எருமைமாடு?”

"எங்கே இன்னொருவாட்டி இந்த எருமைமாடு கேக்கும்படியா சொல்லு பார்க்கலாம்; வாயி வெத்துல பாக்கு போடுதா, இல்லியான்னு பாத்துடலாம்."

பாக்கியம்மாளுக்குப் பயம் வந்தது. பழைய அனுபவத்தை மனதில் வைத்தபடி, வேகவேகமாய் நடந்தாள். திரும்பிப் பார்க்காமலே போலீஸ் நாய் போவதுபோல் போனாள். தெருமுனையில் மட்டும் நின்று ஆங்காரமாகத் திரும்பினாள். ருக்கு சரோசாவின் மார்பில் தலை போட்டுப் புரண்டாள். கோவிந்து தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். அக்கம்பக்கங்கள், பாக்கியம்மாவை விட்டிருக்கக் கூடாது என்று உபதேசித்தன.
------------------

அத்தியாயம் 26

பாக்கியம்மா, கால்களை குலுக்கிக் குலுக்கி நடக்கவிட்டு வீட்டுக்குள் வந்தபோது, வெளியே சட்டைப் பட்டன்களைப் போட்டபடியே புறப்பட்ட கணவன் சுப்பையாவை, உள்ளுக்குள் தள்ளினாள்.

"பாவி மனுஷா! ஒம்ம புத்தியாலதான், நான் நாயிகிட்டயும், பேயிகிட்டயும் சீரழியறேன். ரமணன் அண்ணாச்சிய உடனே வரும்படி, டெலிபோன் செய்யும்."

'ஒரு காலு ஒரு ரூபாய். கவர்மெண்டு சிக்கனத்தக் கடைபிடிக்கச் சொல்லி இருக்காங்கோ. நானே போயி கூட்டிக்கிட்டு வாறேன். ஏன் இப்படி தங்குதங்குன்னு குதிக்கிறே?”

‘அதையாவது தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே. முதல்ல சொன்னதச் செய்யுங்க. டெலிபோன்ல நான் சொன்னேன்னு ரமணன் அண்ணாச்சிய வரச்சொல்லுங்க.”

“ஏன், நான் சொன்னேன்னா வரமட்டாரோ?”

“என் தலைவிதி, ஒம்ம மாதிரி லூசு மனுஷன கட்டி, பயித்தியக்கார மவனப் பெத்து சீரழியறேன். இன்னுமாய்யா, டெலிபோன் பண்ணல?"

சுப்பையா, மிரண்டுபோய் டெலிபோன் இருக்கும் அறைக்குள் போனார். நாளை நடைபெறவுள்ள நிச்சயதாம்பூலத்திற்கு கதாநாயகியாகும் செல்லமகள் மல்லிகா, அம்மா போட்ட கூச்சலில் மிரண்டு போய் தன்னைப் பிடிக்கவில்லை என்று பிள்ளை வீட்டார் சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழ, பதில் கூச்சல் போட்டாள்:

“எனக்குத் தெரியும் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு. நேத்து நீ போட்ட சத்தத்திலேயே அவரு பயந்து ஒருமாதிரி ஆயிட்டாரு."

"இந்த வீடே ஒரு பயித்தியக்கார ஆஸ்பத்திரி. ஒனக்கு இப்பவே புருஷனப் பத்தின அவ்வளவு அக்கறை. எனக்கு வாய்ச்ச இடிச்சபுளி மாதிரி ஒனக்கு வாய்ச்சிடப்பிடாதேன்னு எனக்கு அக்கறை. யோவ் பாவி மனுஷா, டெலிபோனை ஏய்யா, தோளுல வச்சிக்கிட்டு பித்துப்பிடிச்சி நிக்குறீங்க? டேய் இளங்கோ, நில்லுடா. அப்படியே நில்லு, ஒரு ஒடி நகரப்படாது."

இளங்கோ, குளியலறையில் இருந்து வெளிப்பட்டு, அப்படியே நின்றான்.

"ஏண்டா முளைச்சி மூணு இலை விடல, பெத்தெடுத்த தாய்கிட்டயே நாடகம் போட்டுட்டியே. எதுக்குடா அந்த சேரி ரவுடி என்ன ஆள்வெச்சு அடிச்சத என்கிட்ட சொல்லல? அதுக்குப் பிறகும் அவளுக்கு ஒன் ஆபீசுலயே வேலை வாங்கிக் கொடுத்திருக்கே. அப்பதான் அவள் பழையபடி ஒன்ன அடிக்கமாட்டான்னு நினைக்கிறியா? நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? ஒங்கப்பன் புத்திதானே ஒனக்கும் இருக்கும்.”

பாக்கியம்மா, மேலும் அடுக்கிக்கொண்டே போயிருப்பாள். அதற்குள் மிஸ்டர். ரமணன் அவசரத்தில் லுங்கி பனியனோடு வந்தார். அவருடன் பாமா ஆபீஸ் மேக்கப்போடு வந்தாள். பாக்கியம்மா, அவரிடம் முறையிட்டாள்:

"தப்புப் பண்ணிட்டியளே அண்ணாச்சி, தப்புப் பண்ணிட்டியளே. இந்தப் பயல அந்த சேரி ராட்சசி ஆளு வச்சு அடிக்சிருக்காள். அத அந்த தட்டுவாணி

தட்டுவாணி ருக்குமணி ஆக்ஸிடெண்டுன்னு சொல்லிட்டாள். நீங்களும் நம்பிட்டியளே, மோசம் போயிட்டியளே."

மிஸ்டர் ரமணன் திடுக்கிட்டார். இந்தம்மா எதுக்காக, தான் ஏதோ தப்பு செய்தமாதிரி குதிக்கிறாள்? வாட் இஸ் திஸ்?

“என்னம்மா நடந்தது? படபடக்காம சொல்லுங்க. எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. எந்த முடிவுக்கும் ஒரு பிரச்சினை உண்டு."

“நான் பெத்த பிள்ளைய ஏன் பெத்தோம்னு ஆயிட்டுதே அண்ணாச்சி. இவன், தன்ன ஆளு வச்சி அடிச்ச அரக்கிக்கு, அவள் காலுல விழறதுமாதிரி வேலையும் வாங்கிக் கொடுத்து, ஒங்களையும் என்னையும் காலால இடறிட்டானே."

“விவரமா சொல்லும்மா, நானிருக்கேன். சொல்லுங்கோ! படபடப்பு கூடாது. மிஸ்டர் சுப்பையா, என்ன இது? இந்தச் சமயத்தில வெளியில போகப் பார்க்கிறீங்களே, உட்காருங்கோ."

பாக்கியம்மாவால் நின்றுகொண்டு பேச முடியவில்லை. சோபா செட்டில் உட்கார்ந்தாள். அருகில் உட்கார்ந்த மல்லிகாவின் தோளில் கையைப் போட்டபடியே, பூக்காரி வீட்டில் நடந்தவற்றை விவரித்தாள். அதேசமயம், அங்கே தான் பேசியதை 'எடிட்' செய்து தன்னை நாகரீகமாகவும், அப்பாவியாகவும் காட்டிக்கொண்டு, சரோசா பேசியதை கொஞ்சம் பொய் கலந்து ஒப்பித்தாள். பிறகு, ரமணனிடம் முறையிட்டாள்.

“என் தர்மப்பிரபுவ - அதான் இந்த அப்பாவிப் பயல - கொலை செய்யப்போன அந்த சேரி முண்டைய இப்பவே போலீசுல பிடிச்சுக் குடுக்கணும் அண்ணாச்சி. உடனே உங்க ஆபீஸர் ஆளுக்கு போன் போடுங்க அண்ணாச்சி. ஏண்டா இளங்கோ, இப்பவே நீயும் டெலி போன்ல பேசி அவா வேலையை நிறுத்தலைன்னா, நான் ஒனக்குத் தாயும் இல்ல, நீ எனக்கு மவனுமில்ல. ரமணன் அண்ணாச்சி, ஏன் பேசமாட்டேங்கிறீங்க?"

இப்போது ரமணனின் முகம் விறைப்பானது. மகள் பாமாவையே பார்த்தார். உடனே அவள், முந்தானையை அது அத்துப் போவதுபோல் எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டு தள்ளாடி எழுந்தாள். பிறகு கம்பீரமாக நின்றாள். வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு, நீதிபதியின் தீர்ப்புக் குரலில் பேசினாள்:

"வாங்க டாடி. இனிமேல் இந்த வீட்டுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. எப்போ நான் மலையா நம்பின ஒருத்தர், என்கிட்ட எதுவுமே சொல்லாமல், என்னை முட்டாளாக்கினதா தெரிஞ்சுதோ, அதுக்குப் பிறகும் உறவு வச்சுக்கறது நம்ம சுயமரியாதைக்கி சரியா வராது. நான் சுயமரியாதைக்காரி. நாளைக்கி அந்த சேரி கேர்ள் என்னையும் அடிப்பாள். இவரு அதுக்காகவே அவளுக்கு வேலையில பிரமோஷன் போட்டுக் கொடுப்பார். ஒருதலை நம்பிக்கை ரொம்ப மோசம். டாடி! இன்னுமா அந்த வீட்டுக்குள்ள இருக்கீங்க? உங்களுக்கு சுயமரியாதை இல்லியா?"

ரமணன், தனது சுயமரியாதையை நிரூபிக்க எழுந்தார். எவரையும் திரும்பிப் பார்க்காமலேயே வாசலுக்கு வெளியே வந்தார். பாமா அவரை இழுத்துக்கொண்டு போவது தெரிந்தது. இளங்கோ பல்லைக் கடித்தான். கடைசியில் இந்த சரோசா, நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்ச கதையா ஆகிட்டுதே!
------------

அத்தியாயம் 27

சரோசா தோளில் கறுப்புக் கயிறு போட்ட சிவப்பு பிளாஸ்கை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்த பிளாஸ்க் வயிற்றுக்கு மேலே அங்குமிங்குமாய் ஆடியது. அவளது இரண்டு கரங்களிலும் இரண்டு பொட்டலங்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ்காரி மாதிரி உடம்பை பாலன்ஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்குள் போனாள். அரசாங்க காண்டின் சரியில்லை என்று வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓட்டலில் வாங்கிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள். அவள் அலுவலகத்திற்குள் வந்ததும் வராததுமாக பலர் நச்சரித்தார்கள். அவள் ஏற்கனவே குடித்து முடித்துக் கிடந்த எச்சில் கிளாஸ்களை ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொன்றாக எடுக்கப் போனபோது கிரேடு -டூ கிளார்க்கும், டைபிஸ்டுமான கனகா மேஜையைத் தட்டியபடியே கத்தினாள்:

"ஏய் சரோ, இந்த மொட்ட டைப்ரைட்டர் சரிப்படல. ஜெனரல் செக்ஷன்ல போய் வேற டைப்ரைட்டர எடுத்துட்டு வரச்சொன்னேனே, ஏன் கொண்டுவரல?"

"போனேம்மா, ஒரிஜினல் பியூன் போனால்தான் கொடுப்பாங்களாம்."

"ஒன்னப் பார்த்தாலே யாருக்கும் கொடுக்கணுமுன்னு தோணாது. அப்துல்லா, இவள கூட்டிக்கிட்டுப் போ."

"எனக்குக் கல்யாணம் ஆயிட்டும்மா, ஆனாலும் பாதகமில்ல."

"அது ஒங்க இரண்டு பேரோட இஷ்டம். நீதான் பெரிய ஆளுன்னு எல்லாருக்கும் தெரியுமே. சரி, இவள கூட்டிக்கிட்டுப் போய் தோளுல டைப்ரைட்டர ஏத்திவிடு.”

“இப்பத்தானே மணி பதினொண்ணு ஆகுது. இதுக்குள்ளயா ஆளுங்க வந்துடுவாங்க? அப்படியே வந்திருந்தாலும் காண்டினுக்குப் போயிருப்பாங்க. அப்புறமா பார்க்கலாம்."

"ஏய் சரோசா, இதோ பாரு என்னோட நாற்காலி எப்படி இருக்குதுன்னு, ஏன் தொடைக்கல?”

வேலைக்காரப் பெண்ணின் சம்பளப் பாக்கியை, அந்த அலுவலகம் மூலமாக சரிக்கட்ட முயன்ற இன்னொரு கிளார்க் வனஜா, சும்மா சொல்லிவைப்பது போல் சொன்னாள்:

"இது தேறாத கேஸ்ப்பா, ஒழுங்கா இருந்த இளங்கோவுக்கு ஏன்தான் இப்படி புத்தி கெட்டுப் போச்சோ?"

எச்சில் கிளாஸ்களோடு நின்ற சரோசா, அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அவற்றை அவர்கள் மேலே வீசக்கூடிய அளவுக்கு அவள் கைகள் உயர்ந்தன. செம்மண் நிறத்தில் அடியும் தலையும் ஒரேமாதிரி ஆங்காரமாகப் பார்த்த அப்துல்லாவை நோக்கினாள். டைப்ரைட்டரைத் தட்டுவதற்குப் பதிலாக உதடுகளில் விரலை வைத்துத் தட்டிய வனஜாவைப் பார்த்தாள்.

அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒன்றை அவசர

அவசரமாக டைப் அடித்துக் கொண்டு பிடரியை மட்டும் பூவோடு சேர்த்துக் கட்டிய கனகாவைப் பார்த்தாள். நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அக்கௌண்டன்ட் ராமசாமியை தனித்துப் பார்த்தாள். பிறகு அடைக்கலம் தேடுவது போல், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், ஒரு டெலிபோனை குடைந்து கொண்டிருந்த தலைமை கிளார்க் எட்வர்ட்டைப் பார்த்தாள். எல்லாரும் எல்லாமும் எதிரித்தனமாகத் தோற்றம் காட்டின. ஆனாலும், அவள் தலையை தொங்கப் போட்டபடியே எச்சில் டம்ளர்களோடு குளியல் அறைக்குள் போனாள். பத்து நிமிடம் கழித்து கப்புகளிலிருந்து நீர் சொட்டச் சொட்ட உள்ளே வந்தாள். தலை தாழ்த்தியபடியே பிளாஸ்கைத் திறந்து காபி டம்ளர்களை நிரப்பினாள். இதுவரைக்கும் அந்த அலுவலகத்திற்கும், தனக்கும், குறிப்பாக அவளுக்கும் தனக்கும் ஒட்டோ உறவோ கிடையாது என்பதுபோல் வஸ்தாது நாற்காலியில் உட்கார்ந்திருந்த எட்வர்ட் இப்போது கத்தினார்

"ஒரு காபி கொடுக்கிறதுக்கு எவ்வளவு நாழிம்மா? இப்படியிருந்தா கட்டுபடியாகாது."

"ஏய் சரோ, பேரு மட்டும் பெரிசா வச்சா போதுமா? டம்ளருக்கு வெளியில கைய வச்சுப் பிடி. உள்ள விரல விட்டுக் கொண்டுவர்றியே, ஒன் டீயே வாணாம்.”

"இந்தாம்மா, காபி ஏன் ஐஸ் மாதிரி இருக்குது? ஒன் கை பட்டாலே எல்லாமே கோளாறாயிடும் போலிருக்கே. ஒன்ன மாதிரி காபிக்கும் சூடு சொரணை இல்லாமப் போச்சே."

சரோசா கடைசியாகப் பேசிய பியூன் அப்துல்லாவை கடைசியாகப் பார்ப்பதுபோல் கோபத்தோடு பார்த்தபோது, இன்னொரு கிரேடு டூ கிளார்க் மோகன் பொதுப்படையாக விளக்கமளித்தான் :

"இந்த பிளாஸ்க் சரியில்லாட்டா, அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? சர்க்கார் தலையின்னா எல்லா காண்ட்ராக்ட்காரன்களும் மொட்டையடிச்சிடுறான். எழுதாத பால்பாயிண்ட்; இங்க் உறிஞ்சுற பேப்பரு; முனை இல்லாத குண்டூசி. தட்டிக்கேக்க நாதியில்ல. எனக்கு எதுக்கு வம்பு. கமிஷன் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாலும் அதை நிரூபிக்க முடியாதே."

மோகன் தன்னை குறிவைப்பதைப் புரிந்துகொண்ட அக்கௌண்டன்ட் ராமசாமி அவனிடம் ஏற்பட்ட செல்லாக் கோபத்தை சரோசாவிடம் செலாவணியாக்கினார்:

"இந்தாம்மா, ஸ்டேஷனரி சாமான்களை வாங்கிக்கிட்டு வரச்சொன்னேனே... ஒன் காது செவிடா?"

"எங்க போயி வாங்கணும்னு தெரியல சார். ஒரு வாட்டி காட்டினா போதும்."

"ஒனக்கு எல்லாமே நான் கத்துக்குடுக்கணும்னு சொல்லுவ போலிருக்கே!"

அக்கௌண்டன்ட் ராமசாமியைப் பார்த்து, வனஜாவும், கனகாவும் செல்லமாகச் சிரித்தார்கள். தலைமை கிளார்க் மட்டும் அவர்களை லேசான கோபத்தோடு பார்த்து, பிறகு கனகாவின் முக அழகில் மயங்கியதுபோல் சிரித்தார்.

சரோசா ஆடையற்றுப் போனவள் போல் அவமானப்பட்டு நின்றாள். பல்லைக் கடித்துக் கோபத்தையும் கண்களில் தேங்கிய நீரையும் வெளிப்படுத்தாமல், அனைவருடைய மேஜைகளிலும் இருந்த எச்சில் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு டம்ளர் மீதும் அவள் கரம் நீண்டு அதை எடுப்பதற்கு அதிகமாகக் காலம் தாழ்த்தியது. சேரியில் பழகிய ஒவ்வொருவரும், அவள் மனதில் நிழலாடினார்கள். இப்படித்தான் ஒருதடவை ராசு சரக்கப் போட்டுட்டு "பிரா எங்கேம்மே வாங்கினேன்னு" கேட்டப்போ, துரையண்ணன் அவன போட்டுப் போட்டு ஒதச்சான். அப்புறம் செட்டுல இருந்தே தள்ளி வச்சான். அங்கே ஒருத்தன்தான் இப்படின்னா, இங்கே ஒட்டுமொத்தமாக அல்லாப் பசங்களும் பொம்மனாட்டிங்களும்... அடக் கண்றாவியே... அடி ஆத்தே! இதுக்குப் பேருதான் கவர்ன்மென்ட் ஆபீசா?

சரோசா,யந்திர கதியில் இயங்கினாள். அப்துல்லா நாற்காலி யை துடைத்துவிட்டாள். அவனோடு போய் டைப்ரைட்டரை சுமந்து வந்தாள். மீண்டும் வெளியே உள்ள ஓட்டலுக்கப் போய் வந்தாள். எச்சில் கிளாஸ்களை மூணாவது தடவையாகக் கழுவி விட்டாள். இதற்குள் கிளிக்கூண்டு மாதிரி இருந்த பிளைவுட் அறைக்குள் இருந்து ஒரு காலிங்பெல் சத்தம். சரோசா உள்ளே ஓடிப்போனாள். அங்கே மெத்தை போட்ட நாற்காலியில் உடம்பு முழுவதையும் பரப்பி வைத்திருந்த அசிஸ்டென்ட் டைரக்டர் அருணாசலம், அவளிடம் ஒரு பில்லையும், இருபது ரூபாய் நோட்டையும் கொடுத்தபடியே உத்தரவிட்டார்:

"ஒரு பேண்டையும், சர்ட்டையும் இந்த லாண்டரியில் போட்டிருக்கேன்... அப்புறம் ஒனக்கு பாஸ் தந்தார்களா?"

“தருவாங்க சார்"

"கேட்டதுக்கு பதில் சொல்; தந்தாங்களா, தரலியா?”

"தர்ல; தருவாங்க!"

"இந்தாப்பா சுந்தரம்! இந்தப் பொண்ணுக்கு பாஸ் போட்டுக் குடுன்னு சொன்னேனே... ஏன் போடலே? ஒன்னத்தாம்பா சுந்தரம். மூணுதடவ கேக்கிறேன்ல, ஒரு தடவையாவது பதில் சொல்லேன்.."

"நேற்று போட்டுக் கொடுக்கிறதா இருந்தேன். அதுக்குள்ள ஒங்க எல்.ஐ.சி பணத்த கட்டப் போயிட்டேனா, இன்னிக்கி காலையில் போடலாமுன்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒங்க டெலிபோன் பில்ல கட்டப் போயிட்டேனா..."

சரோசா லாண்டரி பில்லோடு வெளியே வந்தபோது, 'பி.ஏ.' கந்தரம் எரிந்து விழுந்தான் :

"ஒன் மனசுல என்னம்மா நினைப்பு? வேலையில சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள ஒன் புத்திய காட்டிட்டியே! ஆபீசருகிட்ட போய் ஏன் கம்ப்ளைண்ட் செய்யுறே?”

"நான் வேணும்னு சத்தியமா..."

"இனிமே ஒனக்குப் பாஸே தரமாட்டேன். வேணுமுன்னா நான் சொன்னேன்னு உள்ளே கிடக்கறதுகிட்ட சொல்லு. ஒன் மினுக்கத்த பார்த்தால் நீயே ஒரு பாஸ் மாதிரிதான்."

எல்லோரும் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். சரோசா தனக்குத்தானே புரியாத புதிராய் தவித்தாள். அந்தச் சமயம் பார்த்து, உயரம், கனம், வயது ஆகிய முப்பரிமாணங்களிலும் நடுத்தரமான ஒருவர் உள்ளே வந்தார். அனைவரும் அவருக்கு சல்யூட் அடித்தார்கள். அவர், அவற்றை தலையாட்டி அங்கீகரித்தபடியே பிளைவுட் அறையின் புஷ் கதவைத் திறந்தார். அது, அவரது கையை இடுக்குப்பிடி போட்டுக் கொண்டு தலையில் ஒரு போடு போட்டது. அவர் தலையை தடவியபடியே புதுப்பெண் போல் நின்ற சரோசாவை சுட்டிக்காட்டி "இது யாரு" என்றார்.

"புது கேஷ்வல் சார்..."

'இந்தாம்மா, கேஷ்வலு. நான் உள்ளே இருக்கிறவர் மாதிரியே ஒரு ஆபீசரு. என்னப் பார்த்துட்டு அந்தக் கதவ திறந்து வச்சிக்கிட்டு நிக்கணும்னு ஒனக்கு ஏன் தோணல? நானே கதவ திறந்துக்கிட்டு போகணும்னா அப்புறம் நீ எதுக்கு? ஒனக்கு எதுக்குத் தண்டச் சம்பளம்?”

சரோசா, குறுக்கே வந்த பூதம்போன்ற அவரைப் புரியாமல் பார்த்தபோது, அந்த மனிதர் அவள் கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்தார். அவள் சும்மா நின்றதைப் பார்த்துவிட்டு மீண்டும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். ஒரு நிமிடத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், "சரோ" என்று காலிங்பெல் தாள நயத்தோடு சொன்ன வார்த்தையை, அவர் முடிக்கும் முன்பே சரோசா அங்கே போனாள். அவர் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்தார்:

"இந்தாம்மா, நீ சரிப்படாதுன்னு தோணுது. இவர் சொன்னப் பிறகும் கதவத் தொறந்து விடலைன்னா ஒனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்? இன்னொருவாட்டி இப்படிச் செய்தே. சீட்டக் கிழிச்சிடுவேன். அப்புறம் ஏ.வோ. சார்! இந்த மோகன் பயல் சரிப்பட மாட்டேங்கறான்; தண்ணியில்லா காடாய் பார்த்து...."

சரோசா, அதிகாரியின் அறையிலிருந்தும், அவர் செங்கோலோச்சும் செக்ஷனிலிருந்தும் வெளிப்பட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவமானப்பட்டு விட்டோமே என்பதைவிட, அவர்களை ஒன்றும் செய்யமுடியாமல் கையும், காலும் கட்டிப் போடப்பட்டிருக்கிறதே என்பதற்கு அதிகமாக வருந்தினாள். அந்தப் பக்கமாய் படியேறிக் கொண்டிருந்த இளங்கோவைப் பார்த்ததும், அவளுக்கு கவலைகள் கழன்று ஒரு உற்சாகம் ஏற்பட்டது. "சாரே.. சாரே...!” என்று சொன்னபடியே அவனைக் கூப்பிட்டாள். அவன் நடுப்படியில் நின்றபடி அவளை ஏறயிறங்கப் பார்த்தான். ஏதோ சொல்லப்போவது போல் உதடுகளைக் குவித்தான். பிறகு, அவள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்துக்கொண்டு மேலே சென்றான். சரோசா, புதைகுழிக்குள் மூழ்குகிறவள் போல் புதைந்தாள். அவனிடம் ருக்கு வீட்டில் நடந்த அனைத்தையும் காரண காரியங்களோடு சொல்ல வேண்டும் என்றுதான் அவள் துடித்தாள். அவனோ, அவளுடைய தோஸ்தாக நடந்துகொள்ளாமல், பாக்கியம்மாளின் மகனாகவே நடந்து கொள்கிறான். இல்லையானால், படிகளில் அப்படி நடந்து போயிருக்க மாட்டான்.

சரோசா வெளியே போய், லாண்டரித் துணிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது செக்ஷனுக்குள் வந்தாள். அப்போது தலைமை கிளார்க் எட்வர்ட் முன்னால் நாற்பது வயது பெண் ஒருத்தி கண்ணீரும், கம்பலையுமாய் அழுது கொண்டிருந்தாள். பரட்டைத் தலை, பழுப்பேறிய முகம், காய்ப்புக்கள் கொண்ட கைகள், திக்கற்ற பார்வை, திக்குமுக்காடும் குரல். எட்வர்ட் அவளை விரட்டினார்:

"இங்க வந்து ஏம்மா ஒப்பாரி போடுறே? ஒன்கிட்ட எத்தனை தடவ சொல்லுறது? ஒன் புருஷன் செத்தா நான் என்ன செய்ய முடியும்? தாசில்தாரோட வாரிசு சர்ட்டிபிகேட்ட திருத்தாமல், பென்ஷனையோ, பிராவிடன்ட் பணத்தையோ தரமுடியாது. என்கிட்ட அழுகிறத, தாசில்தார் கிட்ட போய் அழு."

"தாசில்தார் கிட்ட போனேன் சார். பல தடவை காத்திருந்து ஒருதடவை பார்த்தேன். என்னோட மாமியார் அவரோட புருஷன் பென்ஷன வாங்கிக்கிட்டிருக்கார். அதோட அவருக்கு என் புருஷன் மாதிரி ஆறு பேர் இருக்காங்க. அதனால் அவரு வாரிசுகள்ல ஒருத்தரா ஆகுமுடியாதுன்னு படிச்சுப்படிச்சு சொன்னேன். ஆனால், அந்த ஆளு 'கொடுத்தது கொடுத்ததுதான், செய்யுறத செய்துக்கோ'ன்னு கத்துறாரு."

"அதுக்கு ஏம்மா, என் பிராணன வாங்குறே? வாரிசு சர்ட்டிபிகேட்டுல தாசில்தார் வில்லங்கம் செய்தால், நான் என்ன செய்ய முடியும்? அந்த சர்ட்டிபிகேட்ட திருத்தாத வரைக்கும் நாங்க ஒனக்கு ஒரு பைசா தர முடியாது!'

"அப்போ, பியூனா வேல பார்த்த என் புருஷன் செத்து இந்த ஒன்பது மாசமா வயது வந்த மகளோட, படிக்கிற பையனோட பட்டினி கிடக்குறேனே, அது மாதிரி கிடக்கணும்னு சொல்றீங்களா?"

தலைமை கிளார்க் எட்வர்ட், அவளுக்குப் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தார். அந்தப் பாவிப் பெண்ணும், ஆறுதலுக்காக அங்குள்ள அத்தனை முகங்களையும் பார்த்தாள். ஒன்றுகூட ஒரு அனுதாபப் பார்வையை வீசவில்லை. இவ்வளவுக்கும் அவள் கணவன் அந்த செக்ஷனிலேயே கொத்தடிமை போல் வேலை பார்த்தவன். அனுதாபமாகப் பார்த்த சரோசாவிடம் ஒரு தோழியைக் கண்டுவிட்ட தோழமையில், அந்தப்பெண் “நீங்களே சொல்லுங்கம்மா புருஷன் இருக்கப்பவே, அரப்பட்டினி. அவரும் செத்து, அதோட அவரு சம்பளமும் செத்துப் போனால் எப்படிம்மா பொழப்ப ஓட்டுறது?” என்றாள். இதற்குள் அக்கௌண்டன்ட் ராமசாமி சரோசா மீது எரிந்துவிழுந்தார்.

“ஏய் சரோசா, பெரிய ஆபீசருமாதிரி கேட்டுகிட்டா நிக்கே? ஒன் வேலையை பாறேன். சரியான கழுத்தறுப்பு. இந்தாம்மா! ஒன் புருஷனோட வாரிசு சர்ட்டிபிகேட்டை தாசில்தார் திருத்தணும். இல்லாட்டி நீ தலைகீழா நின்னாலும் பணிக்கொடை பணமோ, சேமநிதியோ, பென்ஷனோ வராது. பேசாமப் போ. தலைக்கு மேல வேலையிருக்கு.''

அந்தப் பெண் தலையில் கை வைத்தபடியே வெளியேறினாள். வாசலைத் தாண்டியபோது , ஒரு விம்மல், வெடிச்சத்தம் போலக் கேட்டது. அவளை விக்கித்துப் பார்த்து நின்ற சரோசாவும், நிலைகுலைந்து போனாள்.

அன்று மாலைப் பொழுது முழுவதும் சரோசா மனதில் அந்த அப்பாவி விதவைப் பெண்ணே குடியிருந்தாள். இதற்குள், அனைவரும் போகத் துவங்கினார்கள். மாடிப்படிகளில் சந்தோஷமான பேச்சும், சரளமான காலடிச் சத்தங்களும் கேட்டன. அந்த செக்ஷனில் இருந்த பெண் கிளார்க்குகளும், மோகனும் போய்விட்டார்கள். ஆனால், தலைமை கிளார்க் எட்வர்ட், கணக்காளர் ராமசாமி உட்கார்ந்திருந்தார்கள். வேறு செக்ஷனிலிருந்து இரண்டு மூன்றுபேர் உள்ளே வந்தார்கள். வெளியே போகப்போன சரோசாவை, எட்வர்ட் அங்கே நிற்கும்படி சைகை செய்தார். இதற்குள் அப்துல்லா, கதவை மூடினாள். ஜன்னல்களை சாத்தினான். போதாக்குறைக்கு ஸ்கிரீன் துணிகளை இழுத்துவிட்டான். எட்வர்ட், ஒரு தாளில் வரிசை வரிசையாக எழுதி, சரோசாவிடம் ரூபாய் நோட்டுகளையும் நீட்டியபடியே உத்தரவிட்டார்.

"இந்தாம்மா, ஒரு புல் பாட்டில் பிராந்தி, நாலு பீர், கொஞ்சம் நொறுக்குத் தீனி... எட்டு பாய்ல்டு முட்டை... குயிக்கா வாங்கிக்கிட்டு வா."

சரோசா திகைத்துப் போனாள். ஒருவேளை, தான் ஒருமாதத்திற்கு முன்புவரை சரக்கு வாங்கியது அவர்களுக்குத் தெரியுமோ என்று கூட நினைத்தாள். இங்கேயுமா சரக்கு? அடக்கண்றாவியே! ஒரு நிமிடம் மலைத்து நின்றவள், பிறகு மலைபோன்ற உறுதியுடன் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்:

“இந்த வேலைக்கி வேற ஆளப் பாருங்கோ சாரே..."
-----------------

அத்தியாயம் 28

இன்ஸ்பெக்டர் கோபதாபமாக எழுந்தார். அருகே உட்கார்ந்திருந்த ‘எல் அன்டு ஒ' இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர்தான் தனது நிலைமைக்குக் காரணம் என்பது போல் தன்னை அறியாமலே கத்தினார்:

"என்னப்பா இது, பொல்லாத செக்யூரிட்டி டியூட்டி. இந்த வாரத்திலேயே இது மூன்றாவது தடவை. குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் மணிக்கணக்கில் திண்டாடணும். போன சமயம் இப்படித்தான்: எவனோ தலகாஞ்சவன்னு ஒருத்தனத் திட்டிட்டீங்க. அவ்வளவுதான், அவன் குதியோ குதின்னுகுதிச்சான்.பிரஸ்மேனாம். அப்பப் பாத்து டெபுட்டி கமிஷனர் வந்தார். அடாபடியாப் பேசுற அவனைத் திட்டப் போறார்னு நெனைச்சேன். அவர் என்னடான்னா 'தொப்பியை கழத்தணுமாயா'ன்னு என்னைத் திட்டிக்கிட்டு அந்த ஜிப்பாப் போட்ட பிரஸ்காரன் தோளிலே கையைப் போட்டுக்கிட்டுப் போறார். வசவு வாங்குறதுக்குப் பெயரே செக்யூரிட்டி டியூட்டின்னு ஆகிப்போச்சு."

இந்தச் சமயத்தில், ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சபாரி உடைக்காரர் ஒருவர், ஐம்பது வயதுப் பெண்ணோடு உள்ளே வந்தார். அவர் கெஞ்சிய கெஞ்சல், அந்த உடைக்குச் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. முகமெல்லாம் வியர்த்து தரையில் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அம்மா கணவனைப் பிடித்துக் கொண்டே ஏங்கி ஏங்கி அழுதாள்; அந்த மனிதர் அழுகைக் குரலில் புலம்பினார்;

"இன்ஸ்பெக்டர் சார்! நீங்கதான் சார் எங்களைக் காப்பாற்றணும். நீங்கதான் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கணும். நாற்பது வருஷமா டெல்லியிலே இருந்திட்டேன். செக்கரட்டேரியேட்டில் செக்ஷன் ஆபீஸரா போனமாசம்தான் சார் ரிட்டெயர்டு ஆனேன் . மூணு வருஷத்திற்கு முன்னால வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டலாமுன்ன வந்தால் அய்யோ..."

அவரால் மேற்கொண்டு பேசமுடியவில்லை; அதற்குள் இன்ஸ்பெக்டரும் அதட்டினார்:

"இது என்ன துஷ்டிவீடா ஒப்பாரி போடுறதுக்கு? சட்டுப்புட்டுன்னு விஷயத்தைச் சொல்லுங்க.”

எதையோ பெரிதாய் எதிர்பார்த்து ஒப்பிக்கப் போன அந்த அம்மா, தனது மெல்லிய தேகத்தை லேசாய் ஒடுக்கிக் கொண்டு, இன்ஸ்பெக்டரை திடுக்கிட்டுப் பார்த்தாள். பிறகு எந்திரக் குரலில் விஷயத்தைச் சொன்னாள்:

"நாங்க வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தில் எவனோ ஒருத்தன் மல்ட்டிப் பிளாட் கட்டியிருக்கான் சார். உண்ணாம தின்னாமல் சேமிச்சப் பணத்தில் வாங்கின நிலத்தை, எந்தப் பாவியோ வாயில போட்டுட்டான் சார்.''

அந்த இன்ஸ்பெக்டரும் உண்மையிலே கொதித்துப் போனார்.

“அடக்கடவுளே! எந்த இடத்தில கட்டினாங்க? கட்டின பயல் கையில விலங்கு போட்டு இழுத்திட்டு வாறேன். எந்த இடத்தில?”

"சிக்னல் பக்கத்துல சார்... பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்குக் கிழக்குப் பக்கம்..."

இன்ஸ்பெக்டர் முன்வைத்த மூளையை பின்வைத்தார். முன் யோசனையை பின் யோசனையாக்கினார். இதற்குள், எல் அண்டு ஓவும், அவரைப் பார்த்துக் கண்ணடித்தார். அது தேவையே இல்லை. இந்த கிரைம் இன்ஸ்பெக்டருக்கும் அதில் பிளாட் கட்டியது யார் என்று தெரியும். சரோசாவுக்கு அண்ணாத்தையான சாராய சக்ரவர்த்தி; அந்த பிளாட்டுக்கு கிரஹப்பிரவேசத்திற்கு இவரே போயிருக்கிறார். இப்போது பட்டும் படாமலும் பேசினார்:

"எதுக்கும் நாளைக்கு வாங்க. நான் கவர்மென்ட் லாயரை கன்செல்ட் பண்ணணும். இது சிவில் விவகாரம். கிரிமினல் விவகாரம் இல்ல. போலீசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. தாசில்தார் தீர்க்க வேண்டிய விவகாரம்.”

"தாசில்தாருக்கிட்டே போனேன் சார். அவரு போலீஸ் விவகாரம் என்கிறார். சார், எங்கள மாதிரி வெளி நகரத்தில் இருந்து தமிழ் மண்ணையே நேசிச்ச ஆட்களுக்கு நீங்கதான் சார் ஆதரவு கொடுக்கணும்; நீங்கதான் சார் காப்பாற்றணும்.”

"நீங்க சொல்றது சரிதான். அதேசமயம் ‘மல்டிப் பிளாட்' கட்டுறவர், எம் எம் டி யே அப்ரூவல் வாங்கித்தான் கட்டுவார். அந்த அப்ரூவல், பட்டா இல்லாமல் கிடைக்காது. அதனால்தான் தாசில்தாருக்கிட்டே போகச் சொல்லுறேன்.”

"இதோ இருக்கு சார் என் பட்டா."

இது பட்டாவா, பட்டமான்னு தாசில்தார் தான் தீர்மானிக்கணும். அவர் சரிப்படாட்டால், கோர்ட்டுக்குப் போங்க."

"அப்போ போலீஸ் எதுக்கு சார்?"

“என்னையா நீ பெரிய மனிதன்னு மரியாதை கொடுத்தால் சின்னத்தனமா நடந்துக்கிடுறீயே. நிலத்தை வாங்கும் போது போலீஸ்ல கேட்டா வாங்குன? முதலில் இடத்தைக் காலி பண்ணுய்யா.”

இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டறியாத அந்த ஓய்வு பெற்ற மத்திய அதிகாரி, அப்படியே அசைவற்று நின்றார். இன்ஸ்பெக்டர் அடித்தாலும் அடித்து விடுவாரோ என்று அந்த அம்மா பயந்து போனாள். கணவனை இழுத்துக் கொண்டு படிப்படியாய் இறங்கிய போது, இன்ஸ்பெக்டர் விரலைச் சுண்டி அவர்களை நிற்க வைத்தார். சிவகாசி வெடிபோல் வெடித்தார் :

“அந்த பிளாட் பக்கம் கலாட்டா கிலாட்டா செய்யாதிங்க. அப்புறம் நாங்க எங்க கடமையைச் செய்ய வேண்டியது இருக்கும். போலீசுக்கு ஒரு உடைமை யாருக்குச் சொந்தம் என்பது முக்கியம் இல்ல; யாருக்கிட்ட அந்தப் பொருள் இருக்கோ அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறதுதான் முக்கியம். நான் சொல்லுறது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கேன்; நீங்க போகலாம்."

இன்ஸ்பெக்டர், அவர்களைப் போகவிடுவதே, தான் செய்யும் மிகப்பெரிய சேவை என்பது போல் பெருமிதமாய் நின்றார். அந்த பழுதடைந்த ஆபீஸர்பித்துப் பிடித்து, செத்துப் பிழைத்தவர் போல் மனைவியோடு வெறுமையாக நடந்தார். மேலே கைகளை நீட்டி "கடவுளே கடவுளே” என்றார். இதற்குள் எல் அன்டு ஓ குற்றம் சாட்டும் குரலில் பேசினார்:

“ஆனாலும் நம்ம சாராய சக்ரவர்த்தி ரொம்பத்தான் ஆட்டம் போடுறான். கோவில் நிலத்தை மடக்கினான்; பேசாமல் இருந்ததோம். புறம்போக்கு நிலத்தை முடக்கினான்; சும்மா இருந்தோம் மாதச் சம்பளக்காரங்க குருவி சேர்க்கிறது மாதிரி சேர்த்த பணத்தில் வாங்குற நிலத்தை மடக்குறது என்ன நியாயம்? நீ அந்தப் பெரியவங்கள அப்படி விரட்டி இருக்கக் கூடாது!"

"என்னப்பா நீ, பிரச்சினை உன் சம்பந்தப்பட்டது இல்லை என்கிறதால, சிந்தித்துப் பார்க்கவே மறுக்கிறீயே. நம்ம போலீஸ் கமிஷனரால கூட அவனை ஒன்றும் பண்ண முடியாது. அரசாங்கமே அவன் பையில இருக்குது. செல்லாக் கோபத்தை பொறுமையா காட்டிக்க வேண்டியதுதான். அப்படி அடக்கி வைக்கிற கோபம் ஏலாத ஆசாமிங்கக்கிட்ட பாயுது. சப்ரெஜிஸ்டிராரும் சாராயக்காரன் பெயரில் ஒரு போலிப் பத்திரத்தை பதிஞ்சிருக்கான். தாசில்தாரும் பட்டாக் கொடுத்திருக்கான். நாம என்ன செய்ய முடியும்? நாளைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினால், அதை விசாரிக்கப் போறதே இந்த தாசில்தார்தான். யார் நிலத்தையும் யாரும் அபகரிக்கலாம் என்பது மாதிரி ஆகிப்போச்சு."

"போகிற போக்கைப் பார்த்தால் நம்ம யூனிபாரத்தைத் திருடி எவனாவது அதை உடுத்திக்கிட்டு நம்ம நாற்காலியில் வந்தே உட்கார்ந்து, தான்தான் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிவிடலாம்; அப்பமும் நம்மால ஒன்றும் செய்ய முடியாது."

இரண்டு இன்ஸ்பெக்டர்களும் ஒருவரையொருவர் இயலாமையில் பார்த்தார்கள். அதே சமயம் கிரைம் இன்ஸ்பெக்டர் சிந்தித்தார். திடீர் என்று மார்க் டிவைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் பெண்களுக்கு 'உபதேசித்தது' நினைவுக்கு வந்தது. 'கற்பழிப்பை எதிர்க்க முடியாவிட்டால், அதை ரசித்து அனுபவி.."

இன்ஸ்பெக்டர், சாராய சக்ரவர்த்திக்கு டெலிபோன் செய்து, அவரது மல்ட்டிப் பிளாட் கட்டிடத்திற்கு வந்த ஆபத்தையும் அதைத் தாம் முறியடித்ததையும் சொல்லப் போனார். டெலிபோன் அருகே போனவர் திடுக்கிட்டார். எதைச் சொல்லப் போனாரோ அதை அந்த எல் அண்டு ஓ இன்ஸ்பெக்டரே சாராய சக்ரவர்த்தி 'பி.ஏ.'விடம் ‘அய்யா அய்யா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையே வெறுத்தப் போன கிரைம் இன்ஸ்பெக்டர், படிகளில் இறங்காமல் அந்த அறையிலிருந்து கீழ்த்தரைக்குக் குதிக்கப் போனபோது, மேஜையில் இருந்த ரேடியோ மைக் அலறியது. எடுத்தார்.

"எஸ் சார், கிரைம்தான் சார் பேசுகிறேன்... எஸ் சார்... நோ சார்... எஸ் எஸ் சார்... விசாரிக்கேன் சார்... அவளும் பெரிய ரவுடிதான் சார்... எஸ் சார்.. சாரி சார்..."

மைக்கில் பேசி முடித்த இன்ஸ்பெக்டர், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மீது இருந்த கோபத்தை மறந்து, தாபத்தோடு பேசினார்:

"அந்த சாராயக்காரி சரோசாவுக்கு திமிரப் பாரு. யாரோ ரவுடிங்க, அவளை ஏதோ ஒரு நைட்டுல கொலை செய்யப் போனாங்களாம். லோக்கல் போலீஸ்ல நம்பிக்கை இல்லன்னு, கமிஷனரே விசாரிக்கணும்னு மனுக் கொடுத்திருக்கிறாளாம். டெப்டி கமிஷனர் கத்துறார். 'எப்படிய்யா அவளை கமிஷனர் லெவலுக்கு விட்டு வைக்கலாமு'ன்னு சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொல்லுறார். இவளை அப்பவே விட்டது தப்பாப் போச்சு."

"லோக்கல் போலீஸ், கமிஷனர் ஆபீஸ், கிரைம் பிராஞ்ச், இந்த மாதிரி வார்த்தைகள் சாதாரணமானவங்களுக்குத் தெரியாது. இவளுக்குப் பின்னாலே எவனோ ஒரு போலீஸ்காரன் இருக்கிறான்.”

“எவனோ என்ன எவன்; இந்த திருமலையப்பனாத்தான் இருக்கும்."

“பாத்திடலாம். இந்த சரோசா எங்க போயிடப் போறாள்?" கிரைம் இன்ஸ்பெக்டர், சரோசா எதிரே நிற்பதுபோல் அனுமானித்துக்கொண்டு 'இரு இரு' என்பது மாதிரி தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார்.
---------------

அத்தியாயம் 29

சரோசா, சர்க்கார் வேலையில் கேஷ்வலாகச் சேர்ந்து அப்படியும், இப்படியுமாய் ஒருமாதமாகி விட்டது. அன்று சம்பள நாள்

அந்தச் சம்பள நாளே பலருக்குத் துக்க நாளாகத் தோன்றியது. ஈட்டிக்காரர்களக்கும், அந்த ஈட்டியைவிட பயங்கரமான பார்வையில் மிரட்டும் மனைவிகளுக்கும் சம்பளம் வரட்டும் என்று அதையே சர்வ கடன் நிவாரணியாகச் சொல்லி வந்த ஊழியர்களில் பெரும்பாலோர் இப்போது பேயறைந்து காணப்பட்டார்கள். அதுமட்டுமல்ல; போதாக் குறைக்கு, வருமான வரி பிடித்தம் செய்யும் வருடக் கடைசி. மாதச் சம்பளத்தை குறைவாகக் காட்டி, வீட்டுப்படி, பயணப்படி, மருத்துவப்படி ஆகிய அனைத்தையும் படிப்படியாக வாங்கிக் கட்டும் கம்பெனிக்காரர்களும், பெரிய பெரிய முதலாளிகளும், வருமான வரி வலையை கிழித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும்போது, இந்த அரசு ஊழியர்களின் வருமான வரி அவர்களது சம்பளப் பில்களிலேயே பிடிக்கப்பட்டு விடுகிறது. லட்சக்கணக்கான வருமான வரி ரூபாயை பாக்கி வைத்திருக்கும் சினிமா நடிகர், நடிகைகளை விட்டு வைத்திருக்கும் அரசு, அரசு ஊழியர்களுக்கு இடது கையால் சம்பளம் கொடுத்து, வலது கையால் பிடுங்கிக் கொள்கிறது. ஆகையால், கிட்டத்தட்ட எல்லோருமே 'வாழ்வே மாயம்' என்ற பிரமையில் இருந்தார்கள். அன்று சம்பளம் வாங்கப்போகும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவ மதத்தில் கூறப்படும் ‘பாவத்தின் சம்பளத்தை' நினைத்தபடியே படியேறினார்கள்.

ஆனால், சரோசாவோ சந்தோஷமாக இருந்தாள். காலையிலேயே ருக்குவின் குடிசையில் அவளைப் பார்த்து "ஒனிக்கி இன்னா வாங்கிட்டு வரணும்” என்று கேட்டாள். உடனே ஆறுமுகப்பயல் “ஒரு கமர்கட்” என்றான். கோவிந்து ‘ஒரு குவார்ட்டர்’ என்று சொல்லப்போன வார்த்தையை தொண்டைக்குள்ளேயே குவாட்டராக்கிக் கொண்டான். ருக்குதான் "அது இதுன்னு வாங்கிடாதே மவளே, புது குடிசைக்கு 200 ரூபா கொடுக்கணும். இளங்கோ சாருக்கு கடன் திருப்பிக் கொடுக்கணும். நாஷ்டா ஆயாவுக்குத் தரணும்” என்று அறிவுறுத்தினாள்.

சரோசா மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

'அவள் கிடக்காள். ருக்குவுக்கு பாவாடை தாவணி மாதிரி ஒரு சேல வாங்கிக் கொடுக்கணும். எதுக்குக் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நாளைக்கே புது குடிசைக்கி போயிடணும். ருக்குவோட வூட்டுக்காரி தத்தேரி முண்ட, ஆளு அதிகமா ஆயிட்டுதுன்னு கரண்ட கட் பண்ணுறாள். குட்சய காலி பண்ணச் சொல்லிருக்குவ நச்சரிக்கிறாள். ஆமாம், எம்மாம் சம்பளம் தேறும்? ஒரு நாளைக்கி 34 ரூபா நாற்பது பைசா. லீவு நாளு இல்லாம 24 நாளு வேல பார்த்திருக்கேன். நாற்பது பைசா... கஸ்மாலம் விட்டுத்தள்ளு. இருபத்தி நாலு நாளுல முப்பத்திநாலு ரூபா எம்மாம் தொகை? கோவிந்துகிட்ட கணக்குக் கேட்டா ஒரு புல் பாட்டிலே கேப்பான். அடடே, இந்தக் கணக்கு கூட எனக்குத் தெரியலியே.

சரோசா, முகத்தை துடைத்துக் கொண்டே, மோகன் அருகே போனாள். அவன் கேள்வி பாவனையோடு முகம் காட்டியபோது கேட்டாள்:

"சாரே, சாரே! இருபத்தி நாலு... முப்பத்தி நாலு எம்மாம் சாரே? அதாம சாரே, ஒரு நாளிக்கி முப்பத்தி நாலு ரூபா. அப்போ, இருபத்திநாலு நாளிக்கி? பிளீஸ் சாரே."

மோகன் மனதுக்குள் முனங்கினான். விரலை மடக்கினான். முடியாமல் போகவே கால்குலேட்டரை எடுத்துக் கணக்குப் போட்டான். “816 ரூபாய்... என்ன விஷயம்?”

"என்னோட சம்பளம் சாரே! இன்னிக்கி, நம்ம செக்ஷன்ல அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப் போறேன். ஏதோ ஓங்க புண்ணியத்துல இப்பதான் லைப்புலயே முதல் தடவையா எட்டு நூறு ரூபா நோட்டுங்கள சொந்தமா பாக்கப் போறேன்.”

தலைமை கிளார்க் எட்வர்ட் பேனாவை உதறி உதறி வெள்ளை சுவரை கறுப்பாக்கியபோது, சரோசா ஓடிப்போய் அவரது பேனாவைப் பறித்தாள். அந்த ஒல்லிப் போனவில் தடித்த பாட்டிலை எடுத்து இங்க் ஊற்றினாள். டைப்ரைட்டரில் இருந்த தூசியை வனஜா ஊதிவிடுவதைப் பார்த்து விட்டு, அவள் அருகே ஓடிப்போய், டஸ்டர் துணியை எடுத்து அதைத் துடைத்து விட்டாள். வாய்க்கு வெளியே தெரிந்த பற்கள் உள்ளே போகவில்லை. 'சம்பளம் வாங்கினவுடனேயே இளங்கோ சாரப் பார்த்து அது பேசுதோ இல்லியோ, அது காலுல பணத்த வச்சி எடுக்கணும்'

‘ஆனானப்பட்ட அநியாயக்கார இன்ஸ்பெக்டரு கூட ஒப்புக்காவது ஒரு விசாரணை நடத்துறார். ஆனால் இந்த இளங்கோ சாரு, ஒரு சின்ன விசாரணை கூட நடத்திலேயே... பாவம் அவரு. பாமா காயப்போட்டதுல ஒலர்ந்து போயிட்டார். அடடே, காதலுக்கு இம்மாம் சக்தியா? பாவம் அவருக்கு கன்னங்கூட குழிவிழுந்துட்டு. பாமா, அவர திரும்பிக்கூடப் பார்க்கறது இல்லன்னு ருக்கு வேற சொல்லுறாள். எல்லாம் என்னால. அப்படி நான் சொல்லாட்டி ருக்கு கோவிந்துக்கு, பொண்டாட்டியா தெரிந்திருக்காது. எதுக்கும் பாமாவப் பார்த்து விசயத்த எடுத்துச் சொல்லணும். தேவைப்பட்டா அவள் கன்னத்துல இரண்டு போடுபோட்டு, வலுக்கட்டாயமா கையப்பிடிச்சி இழுத்து, இளங்கோ சாரு முன்னால நிறுத்தணும். பாமா... கண்ணால பார்த்ததும் பொய், காதால் கேட்டதும் பொய்யும்மா... கண்ணு...!”

சரோசா, தலைமை கிளார்க் எட்வர்ட்டையும், அக்கவுண்டன்ட் ராமசாமியையும் பயபக்தியோடும், சிறிது அனுசரணையோடும் பார்த்தாள். இருபது நாளைக்கி முன்னால் அவர்கள் பிராந்தி வாங்கிக் கொண்டு வரச்சொன்னபோது முகத்தில் அடித்தாற்போல் முடியாது என்று சொல்லிவிட்டாள். அன்றிரவு நாயினாவிடமும், ருக்குவிடமும் நடந்ததைச் சொல்லப் போனாள். பிறகு, தனது சந்தோஷத்தையே தங்களது சந்தோஷமாகக் காணும் அவர்களது மகிழ்ச்சியை குலைக்க அவள் விரும்பவில்லை. மறுநாள் ஓலை கிழியப்போகிறது என்ற பீதியோடு அலுவலகம் போனாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக தலைமை கிளார்க், அவளை முதல்தடவையாக ஒரு மனுஷி போல் பார்த்தார். அக்கவுண்டண்ட் ராமசாமி "ஏன் இப்படி அடிச்சுப்பிடிச்சு வாரே? ஈவினிங்கில லேட்டாய் போகிறவள், காலையில டைமுக்கு வரணும்னு அவசியமில்லே...” என்றார். அசிஸ்டென்ட் டைரக்டர் 'பி.ஏ.' சுந்தரம் கூட தனது நாற்காலியை தானே துடைத்துக் கொண்டு “சரோ பிளீஸ் காபி வாங்கி வறியா” என்று கெஞ்சுவது போல் கேட்டான். பீளிஸாமே? எப்பாடி, நல்லாத்தான் கீது!

அவளுக்கு அந்த பிளீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை என்றாலும், அது ஒரு மரியாதைக்குரிய வார்த்தை என்று மகிழ்ந்து போனாள். அடாவடி பியூன் அப்துல்லா கூட "பாவம் அது இப்போதானே வந்திருக்கு, நான் போயி வாங்கீட்டு வாறேன்” என்று சொன்னான். சரோசா, பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு, சம்பளச் சிந்தனைக்குத் திரும்பினாள்.

மத்தியான வேளை வந்தது. பலர் படிகளில் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள். வயது பிரம்மச்சாரிகளின் சிரிப்புச் சத்தம், வால் அறுந்த நடுத்தரங்களின் நிசப்தம், டம்பப் பை பெண்கள். கைகளில் கவர்களைப் பிடித்தவர்கள், சைடுபாக்கெட் பெருத்தவர்கள், மாடிப் படிகளிலேயே பலருக்கு ஒவ்வொரு நோட்டாக உருவிக் கொடுப்பவர்கள், அனைவரையும் ரசித்துப் பார்த்த சரோசா, சம்பளம் வாங்குவதற்காகப் போகப் போனாள். அந்தச் சமயத்தில், சுந்தரேசனும், ராமசாமியும் தத்தம் லெதர் பைகளைத் தூக்கிக் கொண்டு ஒன்று போல் எழுந்ததால், அவள் ஒரு முக்காலியில் உட்கார்ந்தாள். 'அவங்க இல்லாதப்போ பொறுப்பான, நானும் போயிட்டா எப்படி? ஏடி ஏன் போகல? அவர்கிட்டே ஏன்னு கேப்போமா? வேற ரோதனையே வேணாம். கழுதைக்குப் பின்னாடியும், ஆபீசருக்கு முன்னாடியும் காரணம் இல்லாமப் போகப்படாதுன்னு காஷ்வல் முனியம்மா சொல்லி இருக்காளே!

அரைமணி நேரத்தில், கந்தரேசனும் ராமசாமியும் அவர் இவரிடம் கடன் கேட்க, இவர் அவரிடம் கடன் கேட்க, கடனே என்று உள்ளே வந்தார்கள். இதற்குள் சரோசா சம்பளம் வாங்க எழுந்திருக்கப் போனாள். அதற்குள் கனகாவும், வனஜாவும் எழுந்தார்கள். "எனக்கு ஒருத்தர் போன் பண்ணுவார். அவரோட நம்பரை வாங்கி வச்சுக்கோ" என்று அந்த 'ஒருத்தருக்கு' ஒரு அழுத்தம் கொடுத்தபடியே கனகா முன்னால் நடக்க, வனஜா கண்ணடித்து பின்னால் சென்றாள்.

சரோசா விரல்களுக்கு சொடக்குப் போட்டபடியே உட்கார்ந்திருந்தாள். நாயினாவுக்கு ஒரு கம்பளி வாங்கோணும். நாளைக்கி புது குடிசையில் பால் காய்ச்சணும். இளங்கோ சார் அங்க வந்தால் எப்படி இருக்கும்? 'சாரே-சாரே- நீ இல்லாட்டி நான் இப்படி மனுஷியா ஆயிருக்க முடியாது சாரே. நீ அடிச்சாக்கூட பேசாம நின்னுக்குனே இருப்பேன் சாரே. ஒங்கம்மா தடிச்சி கூட தப்புத்தப்பு, ஒன்னோட மதரு திட்டுனாக்கூட பொறுத்துக்குவேன் சாரே.'

வனஜாவும் கனகாவும் செக்ஷனுக்குள் வந்தபோது, மணி நாலரை; சரோசா அவசர அவசரமாக எழுந்தாள். கனகா டெலிபோன் பற்றிக் கேட்டதை காதில் வாங்காததுபோல் ஓடினாள். பிறகு மனசாட்சி உறுத்த மீண்டும் அங்கே வந்து "ஆரும் போன் போடலம்மா” என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். ஆமாம், எங்க சம்பளம் கொடுக்குறாங்கோ? அதோ வாறாளே முனியம்மா, நல்லவ... கூப்டலாம்.

சரோசா மீண்டும் உள்ளே வந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமப் போறது எவ்வளவு பெரிய தப்பு. ஆனாலும் எனக்கு இப்பிடி தெனாவுட்டு ஆகாதுப்பா. அவள் தலைமை கிளார்க்கின் முன்னால் நின்று தலையை சொறிந்தபடியே சொன்னாள் : "சம்பளம் வாங்கிட்டு வாறேன் சாரே. கொஞ்சம் லேட்டானாலும் போகாதீங்கோ... அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப்போறேன். கேண்டீன்ல இனிப்புக்கும் மிச்சருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்.''

தலைமை கிளார்க் எட்வர்ட், அவளை ஏறிட்டுப் பார்த்து, பிறகு ஏற்றிய தலையை இறக்கினார். எதுவும் பேசவில்லை. அதையே மவுன அனுமதியாக எடுத்துக் கொண்ட சரோசா, உடம்பு குலுங்க ஓடினாள். இடையிலே படியிறங்கி வந்த முனியம்மாவை வழிமறித்தாள். அவள் இவளைப் பார்த்து பயந்தது போல் கையில் இருந்த கவரை ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள். இவளை விட ஐந்து வயது பெரியவள். இன்னும் கேஷ்வல்தான். ஆனால் அடுத்தமாதம் பெர்மனன்ட் ஆகிவிடுவாளாம். அடேங்கப்பா... நானும் இரண்டு வருஷம் பெர்மனன்ட் ஆகாம பேஜாருல இருக்கணும் போலிருக்கே.

"ஏய், முனிம்மாக்கா! எங்கே சம்பளம் கொடுக்காங்கோ? எனிக்கி 800 ரூபாய்க்கி மேல வரப் போகுது. நீயும் என்னோட வா. நான் பணம் கொடுக்குற இடத்த தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால போயிடப் போறாங்க. அப்பாடி, எட்டு நூறு ரூபா நோட்ட கையில பிடிக்கப்போறத நினைச்சி எம்மாம் சந்தோஷமா இருக்கு தெரியுமா முனிக்கா."

"முதல்ல ஒன்னோட 800 கிடக்கட்டும், மொதல்ல இருபது பைசா வச்சிருக்கியா?"

"இஸ்டாம்புக்கு. இருபது பைசா கொடுக்காட்டி அந்தக் கொள்ளிக்கட்ட முந்திரி கண்ணன் சம்பளம் தரமாட்டான்! அப்புறம் எனிக்கிக் கொஞ்சம் தாயேன். அடுத்த வாரம் கொடுத்துடறேன்.”

சரோசா, அவளைக் கண்டிப்புடன் பார்த்தாள். அப்படிப் பார்க்கப் பார்க்க அவளது தொய்வு விழுந்த முகமும், நெஞ்செலும்புக் கூடம் அவளை வருத்தின. பாவம் பிள்ளைகுட்டிக்காரி. 'ஆனாலும் தனக்குப் போகத்தான் தானம்.' "எக்கா, ஒரு நூறு ரூபா வேணும்னா தாறேன். ஆனால் அடுத்த வாரம் கொடுத்துடணும்.”

முனியம்மா, சரோசாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இப்போது அவளே இவளை இழுத்துக் கொண்டு படியேறினாள். முதல் மாடியில் மூச்சிரைக்க நின்றார்கள். பிறகு மேல்மாடிக்கு ஏறி இரண்டாவது மாடிக்கு வந்தார்கள். ஒரு மூலை அறை, பாதிச்சுவருக்கு மேல் பாங்கில் இருப்பது மாதிரி வலை பின்னிய கதவு... அரைவட்ட வழி. உள்ளே மேஜைடிராவுக்குள் கத்தை கத்தையாய் நோட்டுக்கள். மேஜைமேல் ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட ஒரு பெரிய ரிஜிஸ்டர். காஷியர், முனியம்மா சொன்னது மாதிரியே ஒரு முந்திரிக் கண்ணன். கண்ணில் கருவிழியையும் வெண்மைப் பகுதியையும் கண்டுபிடிக்க முடியாத கண்ணன். ஆனால், படுசுட்டி. ஒருத்தருக்கு ஒரு கத்தை நோட்டை எடுத்து முதலாவது நோட்டின் நம்பரையும், இறுதி நோட்டின் நம்பரையும் பார்த்துவிட்டுக் கொடுத்தான். அவரையே, கண் வாங்காமல் பார்த்தான். அந்த ஆசாமி அதை பைக்குள் வைக்கப்போன போது "எண்ணிப் பாருங்கள்" என்றான். அவர் "சரியாய்த்தான் இருக்கும்” என்று சொன்னபோது, அந்தக் கத்தை நோட்டை அவரிடமிருந்து கைப்பற்றி அவனே எண்ணிக் காட்டினான். இந்தச் சமயத்தில் வளையல் போட்ட கரம் ஒன்று, அந்தத் திரைவழிக்கு அடிக்கோலாய் ஆனபோது, அவன் எரிந்து விழுந்தான். “இந்தாம்மா, கொஞ்சம் எட்டி நில்லு. இன்னும்... இன்னும்... ஒனக்கு எதுக்கு பழிபாவம்."

சரோசா சற்று விலகி நின்றாள். முனியம்மா அவளை முன்னால் பிடித்துப் பிடித்துத் தள்ளினாள். ஆனாலும் எங்கிருந்தோ வந்த நான்கைந்து பேர் போவதற்காக அவள் காத்திருந்தாள். எல்லோருடைய கணக்கும் முடிக்கப்பட்டு, காஷியர் அந்தப் பிறைவடிவை மேலே இருக்கும் ஒரு பலகையை இழுத்து மூடிவிட்டு அந்தக் கம்பிவலைக் கண்கள் வழியாக சரோசாவைப் பார்த்துக் கேட்டார்:

“என்னம்மா... விஷயம்?"

"எனிக்கும் இன்னிக்கு சம்பள நாள் தானே சாரே? 810 ரூபா தேறும். ஏன் கொடுக்க மாட்டேங்கே?"

“ஒனக்கா, ஒனக்கு ஏது சம்பளம்? ஒன் செக்ஷனிலிருந்து பில்லே வரலியே. நானே எட்வர்கிட்ட வலியக் கேட்டேன். எனக்குத் தெரியுமுன்னு முகத்துல அடிச்சாப்புல சொன்னாரே. அதுக்கு மேல நான் கேட்டிருந்தா என்னை 'சம்திங்கா' பார்த்திருப்பார். சரி... சரி... இடத்த காலி பண்ணு!"

"நல்லா பார்த்துச் சொல்லு சாரே... அவரு நல்லவரு சாரே..."

“அப்ப நான் என்ன கெட்டவனா? ஒனக்கு வந்த சம்பளத்த கொடுக்காம இருக்கிறதுல எனக்கு என்னம்மா லாபம்? போயி அவருக்கிட்டயே கேளு... பில்லே வரல."

சரோசாவுக்கு தலை கீழே விழுவது போல் இருந்தது. தான் நின்ற கட்டிடமே அற்றுப் போய், வெட்ட வெளியில் நிற்பது போலிருந்தது. இருதயம் இப்படி அடித்துக் கொண்டதை அவள் எப்போதுமே உணர்ந்ததில்லை. காலில் வெட்டுப் பட்டால் முதலில் ரத்தக்கசிவு இல்லாமலும், வலி ஏற்படாமலும், பிறகு அவை படிப்படியாக ஏறுவது போல், அவள், படிப்படியாய் அதிர்ந்து போய் நின்றாள்.

அந்த செக்ஷன்காரர்கள் அவளிடம் பிராந்தி பெற முடியாத காரணத்தால் அவளையே ஒரு போதைப் பொருளாக்கிவிட்ட உண்மை, இப்போது புலப்பட்டது. ரணகாயத்துக்கு ‘முதலுதவி' செய்தது போல் திடீரென்று ஒரு வைராக்கியம். அந்த மாடி சமதளத்தில் ஓடினாள். அப்போது தான் முனியம்மா ஞாபகம் வந்தது. அவள் அங்கே இல்லை. ஏதோ ஒரு அறைக்குள் இருந்து கொண்டு அவளைப் பார்த்து விட்டு முனியம்மா ஒளிவது தெரிந்தது. சரோசா கம்பீரமாகச் சொன்னாள் : "முனிக்கா... முனியம்மா... வெளியே வா முனியம்மா... ஒன்னண்ட கடன்கேட்க மாட்டேன் முனிக்கா..."

சரோசா, நான்கு நான்கு படிகளாய் தாவித்தாவி, இறங்கினாள். இன்றைக்கு என்ன ஆனாலும் சரி, இந்த எட்வர்ட் - ராமசாமியை இன்னான்னு பார்த்துடணும்.

சரோசா அந்த அலுவலகப் பிரிவிற்குள் பொறி கலங்கி நுழைந்தபோது, அங்கே இருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்; சிரிப்பும், கும்மாளமுமாய், சட்டைப் பைகளையும், ஜாக்கெட்டின் உட்புறத்தையும் பிடித்துக் கொண்டே, புறப்படப் போனார்கள்.

தலைமைக் கிளார்க் மட்டும், தலையைத் தடவியபடியே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். 'ஐயையோ, ஆசாமி விடமாட்டேங்கானே' என்பது மாதிரி தலையில் லேசாக அடித்துக் கொண்டே, பேசினார்.

அக்கவுண்டன்ட் ராமசாமி எதையோ அதிகமாய் தின்று தீர்த்து விட்டு ஏப்பம் விட்டபடியே எழுந்தார். கள்ள உப்பலோடு, வனஜா, டைப்ரைட்டர் மேல் ஒரு பிளாஸ்டிக் துகிலை முக்காடு போட்டாள். அப்போது, வசூலுக்கு வந்த ஒரு புடவை வியாபாரி, ‘நரசிம்மாவதாரம்' மாதிரி வெளியேயும் நிற்காமல், உள்ளேயும் போகாமல் வாசலுக்கு வாய் உள்ள கதவு போல் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பயந்து பியூன் அப்துல்லா தனது பெரிய மேஜைக்குள் ‘நெருப்புக் கோழி' மாதிரி தலையை மட்டும் மறைத்துக் கொண்டான்.

சரோசா, டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த எட்வர்ட் முன்னால் போய் நின்று அவர் முகத்தை நோக வைத்தபடி கத்தினாள்:

"எனக்கு ஏம்பா சம்பளம் போடலை? ஒன்னத்தாம்பா, செக்ஷன் வஸ்தாது! எனக்கு ஏன் பில் போடல?”

தொலைபேசிக் கருவிக்குள் கிட்டத்தட்ட வாயைச் செருகிக் கொண்டு பேசிய எட்வர்ட்டுக்கு, சரோசா கத்துவது கேட்டதே தவிர அதன் கருத்து கேட்கவில்லை. அவளைச் சட்டை செய்யாமல் தொடர்ந்து பேசினார். உடனே சரோசா அவர் பேசிய டெலிபோன் குமிழை பிடித்திழுத்து, “ஏம்பா ஒன்னத்தான்! என்னோட சம்பளம் என்னாச்சு?” என்று கேட்டபோது எதிர்முனையில் இருந்தவர் "ஹலோ அங்கே என்னப்பா நடக்குது?” என்று கேட்பது ஒலித்தது. சரோசா, அந்தக் குமிழை பலவந்தமாகப் பறித்து கீழே வைத்தாள். எல்லோரும் அந்தப் பூனைப் புலியை ஆச்சரியமாகவும் அதிர்ந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின்னர் அவள் பக்கமாக வந்தார்கள். அப்துல்லாவுக்கு மட்டும் சந்தோஷம். இந்த ரகளையில் பெரிதாக்கும் வகையில் கத்தினான் : "இந்தாம்மா சாரோ! இது ஆபீஸ், நீ இருக்கிற சேரி இல்ல. எது பேசினாலும் முறையாப் பேசு. இல்லாட்டி..."

“இல்லாட்டி என்னடா செய்வே பிராண்டிப் பையா?"

அப்துல்லா, கடந்த கால ஏவலை மனதில் நினைத்துக் கொண்டு அதிர்ந்து போய் நின்றபோது, துணி வியாபாரி, அதுதான் சாக்கு என்று அவன் பக்கமாய் நகர்ந்தார்.

வனஜா, அப் துல்லா சொன்னதைச் செயல்படுத்தும் வகையில் பதறிப் பதறிப் பேசினாள் :

"செக்யூரிட்டி கார்டு கிட்ட இவளை ஒப்படையுங்க. செக்யூரிட்டி ஆபீஸரையும் வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில என்ன செய்யப் போறாளோ?"

தலைமைக் கிளார்க்கை முறைத்துக் கொண்டு நின்ற சரோசா, வனஜா பக்கம் முகம் திரும்பினாள். அவளைக் கடித்துக் குதறப் போகிறவள்போல் பற்களைக் குவித்தபடியே சவாலிட்டாள்:

"நீயே செக்யூரிட்டி கார்டை வரச் சொல்லுமே. ஆளுக்கு ஆள் பேப்பர் வெயிட்டுங்களையும், எழுதாத ரிஜிஸ்டரையும், பால் பாயிண்ட் பேனாக்களையும், பிளாஸ்க்குங்களையும் கொண்டு போறதை செக் பண்ணாத கார்டு என்னை என்ன செய்துடுவான்னு பார்த்துடறேன்."

வனஜா அதிரிந்து போய் வாய்க்கு உதடுகளால் தாழிட்டு, அக்கௌண்டன்ட் ராமசாமியின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போது சிறிது சுதாரித்துக்கொண்ட தலைமை கிளார்க் அசட்டையாகப் பேசுவது போல் சட்டையெல்லாம் வேர்வையால் நனைய தட்டுத் தடுமாறிப் பேசினார்:

"இந்தா பாரும்மா, எது பேசணுமுன்னாலும் உள்ளே இருக்கிற ஆபீஸர்கிட்ட பேசு; உனக்கும் எங்களுக்கும் பேச்சு இல்லை."

"ஆபீஸரு மட்டுமாய்யா வேலை கொடுத்தார்? நீ கொடுக்கலை? தப்புத்தண்டா செய்யாத போதே என்னைத் திட்டலை? நான் வாங்கிக் கொடுத்த டீயையெல்லாம் குடிச்சியே, அது டீயா, இல்லாட்டி வேற எதுவுமா?"

தலைமை கிளார்க் வாயை அசூசையாக சப்புக் கொட்டியபோது, சரோசா மேலும் தொடர்ந்தாள்:

“ஏய்யா பெரிய மனுஷங்காளா... மனுஷிகளா! நான் சம்பளம் வாங்கப் போறேன்னு, ஒங்க கிட்ட சொன்னேன்னே, அப்போகாட்டி பில்லு போடலைன்னு சொன்னா ஒங்க வாயி அயிகிப் போயிடுமா? எந்த நாறிப்படையாவது வாய் தொறந்தீங்களாய்யா? உங்களுக்கு பிராண்டி வாங்கிக் கொடுக்காட்டி என்னைப் பிராண்டுவீங்க. அப்படித்தானே? யாரும் வெளியே போகக் கூடாது. எனக்குப் பதில் சொல்லாம யாரும் அப்பால இப்பால போகக் கூடாது; இல்லாட்டி கொலை நடக்கும்."

சரோசா, அந்த செக்ஷனின் அறைக் கதவைக் காலால் உதைத்துச் சாத்தினாள். அவளை எதிர்க்கும் திராணி கொண்ட அப்துல்லாவோ, துணிக்காரரிடம் ஒரு ஓரமாக டூயட் பேசிக் கொண்டிருந்தான். அனைவரும், அந்த புதிய சரோசாவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். எதற்கும் கவலைப்படாதவன் போல், நடப்பதை ரசித்துக் கொண்டிருந்த கிளார்க் மோகன் மீது ஆபத்துக்குத் தோஷமில்லை என்பதுபோல், கனகா ஒட்டிக் கொண்டாள். வனஜாவோ, 'பி.ஏ' சுந்தரத்தின் பின்னால் போய் நின்று கொண்டாள். தலைமை கிளார்க்கின் பாண்ட், இடுப்புக்குக் கீழே நனைந்திருந்தது. வெளியே நடக்கும் விவகாரங்கள் நன்றாகப் புரிந்தாலும், அவை தானாகச் சரியாகிவிடும் என்ற நப்பாசையுடன் இருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம் இப்போது மெல்ல ஆமை மாதிரி கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினார். பிறகு, உடம்பு முழுவதையும் வெளிப்படுத்திக் கொண்டு அரண்டு போனதைக் காட்டிக்காமலே அதட்டினார் :

“என்ன சத்தம் இங்கே? என்ன ரகளை? சரோசா, முதல்ல கதவைத் திற.”

"உன்னோட சூட்கேஸை வாங்கிட்டு உனக்கி நல்லாத்தான் கதவைத் தெறந்து விட்டேன். ஆனர், இன்னிக்கு இப்படிநானு திறந்த கதவுக்கு பைசல் தெரியாமல் போனதால் அதை மூடிட்டேன். எனக்கு ஏன் சார் சம்பளம் கொடுக்கலை? அல்லா கேசுவலுங்களும் வாங்கறப்போ எனிக்கு ஏன் தரலை?”

டெப்டி டைரக்டர் எதுவும் தெரியாதவர்போல வாயும் வயிறும் மாறி மாறி ஆட தலைமைக் கிளார்க்கைக் கேட்டார்:

"இந்தப் பொண்ணுக்கு ஏன் சம்பளம் கொடுக்கலை? எட்வர்ட்... உங்களைத்தான், பதில் சொல்லுங்க.”

எட்வர்ட், அஸிஸ்டெண்ட்-டைரக்டரை,

தனது அஸிஸ்டெண்ட் போல் முறைத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தின் அங்கீகாரத்திற்காக அவர்களையும் பார்த்துக் கொண்டு பதிலளித்தார் : "காஷுவல்னு யாரையும் நியமிக்கப்படாதுன்னு போன வாரம் சர்க்குலர் வந்ததைக் காட்டினேனே... நீங்க அதைப் படித்ததுக்கு அடையாளமாய் கையெழுத்து வேற போட்டிருக்கீங்களே..."

அரசாங்கத்தின் சிக்கன நெறிகளை வகைப்படுத்தி பெரிய புராணம் போல் வந்த ஒரு கற்றைத்தாள்களை படிக்கச் சோம்பல்பட்டு, படித்தது போல் கையெழுத்துப் போட்ட அருணாசலம், இப்போது அரண்டு போனார். இந்தச் சமயத்தில் மோகன், சரோசாவுக்கு ஆதரவாக, இருந்த இடத்தில் இருந்தபடியே விவரம் சொன்னான் :

"அதே சமயம், அந்த சர்க்குலர்ல மேலிடத்தின் பெர்மிஷன் வாங்கி காஷுவல் லேபர் வச்சுக்கலாமுன்னும், வச்சிருக்கவங்களை எடுக்காண்டாமுன்னும் ரெண்டு வரி இருந்துதே... எட்வர்ட் சாருக்கு அதைப் படிக்கும்போது கண்ணு குருடாயிட்டா? இந்தப் பொண்ணு சம்பளம் வாங்கப் போறேன்னு சொன்னாளே, அப்ப மட்டும் காது செவிடாயிட்டா?"

எட்வர்ட் கண்களை வெட்டுக்கிளி போல் துள்ளவிட்ட போது, டெப்டி டைரக்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கேட்டார் :

"பெர்மிஷன் கேட்டு நீ ஒரு டிராப்ட் வச்சிருக்கலாமே எட்வர்ட்? நான் கையெழுத்துப் போட மாட்டேன்னா சொல்லுவேன்?”

"ஏற்கனவே ரெண்டு மூணு பேரு பெர்மிஷன் கேட்டு எழுதுனதுக்கு முடியாதுன்னு வந்துடுத்து."

"பத்து நாளைக்கு முன்னால் வேலைல சேர்ந்த ஹரிஹரனுக்கு கரெக்டா பணம் வந்துதே... அவரு சுந்தரேசன் சாருக்கு சொந்தக்காரன் என்கிறதுனாலயா?”

மோகன், இப்போதும் இருந்த இடத்தில் இருந்தபடியே தன்பாட்டுக்குப் பேசுவது போல் பேசினான். சரோசா ஏடி அருணாசலம் முன்னால் போய் நின்று பொறிந்து தள்ளினாள்:

"சார்! நீயும் நன்னாத்தான் நடிக்கே... எல்லா பில்லுக்கும் கையெழுத்துப் போட்டியே, என் பில்லு ஏன் வரலைன்னு கேட்டியா? ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரி பேசுறியே, ஒரு ஆபீஸ்ல எப்பேர்ப்பட்டவனுவ இருக்கானுவ... என்னென்ன சமாச்சாரம் நடக்குதுன்னு உன்னால பார்க்க முடியாட்டி நீயெல்லாம் என்ன ஸார் ஆபீசரு?"

எல்லோரும் கசாமுசாவாய் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுவரை குனிந்த தலையோடு - சொல்லப் பொறுக்காத ஏவல் செய்யும் தோரணையில் நடுங்கியபடியே பதிலளித்த சரோசா, இப்போது, அனைவரையும் நடுங்க வைத்ததில், அந்த அலுவலகப் பிரிவு அதிர்ந்தது. இந்த அனுபவம் அவர்களுக்குப் புதிது. இப்படிப்பட்ட கேஷுவல்களிடமும் அவர்கள் 'வாங்கி’ப் பழகியவர்கள்தான். ஆனால் இப்படியல்ல. இந்தச் சமயத்தில் சரோசா சாத்தப்பட்ட கதவுக்கு நீண்ட நெடிய தாழ்ப்பாள் போல் அதன் மேல் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அப்போது வெளியே ஒரு ‘டொக்கு டொக்கு' சத்தம், "சரோசா... கதவைத் திற... எனக்காகத் திற."

சரோசா, அந்தக் குரலைக் கேட்டவுடன் மகுடியால் மயங்கும் பாம்பு போல் மயங்கினாள். உடம்பை எதிர்ப்புறமாய் நிமிர்ந்து, ஒரே இழுப்பில் கதவுகளை இரண்டு கூறுகளாக்கியபோது, இளங்கோ முன்னாலும், முனியம்மா பின்னாலுமாய் நின்றார்கள். அவ்வளவுதான்... சரோசாவின் கோபம் அழுமையாகியது. அழுத்தம் அவலமானது. அக்னித் துண்டுகள் பனிக்கட்டிகளாயின. இளங்கோவின், இரண்டு கைகளையும் எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டு, அரற்றினாள் :

"அல்லாப் பழக்கத்தையும் விட்டுட்டு மனுஷியானதா சந்தோஷப்பட்ட சமயத்துல என்னை இப்படிப் பண்ணிட்டாங்களே சாரே...நாயினாவை சாகற காலத்திலியாவது வாய வைக்கலாம்னு சந்தோசப்பட்டேன். அல்லாத்தையும் கெடுத்துட்டாங்களே சாரே... பழைய தோஸ்துங்க சிரிக்கும்படியா ஆயிட்டே சாரே... எனிக்கி சம்பளம் வாங்காததுகூட பெரிசில்ல... அது கெடைக்கப் போறது மாதிரி ஒரு பாவலா பண்ணி, அம்போன்னு விட்டுட்டாங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல சாரே."

இதற்குள், அங்கேயும் இங்கேயுமாய் போய்க் கொண்டிருந்த ஊழியர்கள் அங்கே கூடிவிட்டார்கள். மேலே இருந்து டைரக்டர் வரும் நேரம். அவருக்கும் விஷயம் போய்விட்டால், தனக்கு வரவேண்டிய பிரமோஷன் வராமலே போய்விடும் என்று, ஏடிக்கு ஒரு உதறல். இந்தச் சமயத்தில் இளங்கோவே சரோசாபோல் பேசப் போனபோது, தலைமை கிளார்க் மெல்லிய குரலில் பேசினார் :

"இந்த நியூசென்சுக்குக் காரணமே இந்த இளங்கோதான். தராதரம் தெரியாதவங்களை- யெல்லாம் ஆபீசுல சேர்த்ததாலே ஆபீஸ் தரம்தான் போச்சு.”

இளங்கோ வெடித்தான் : "இந்தப் பொண்ணு நியூசென்ஸ் காரின்னா, நாமெல்லாம் அரசாங்கக் கேடிங்க. ஒரு மாசமா நாய் படாத பாடா உழைச்சிட்டு அதுக்குப் பலன் கிடைக்கலன்னு அவள் குலைக்கத்தான் செய்வாள். நாமா இருந்தால் கடிச்சிருப்போம். நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீங்களே! இந்தாம்மா சரோசா. ஏன் அழுவுறே? இந்தா, என் சம்பளம் முழுசும் ஒனக்கு வேலைக்குக் கூலியாயும், இவங்களோட அகம்பாவத்துக்கு அபராதமுமாவும் தாறேன்.”

இளங்கோ, ஆவேசப்பட்டு தனது சட்டைப் பையைக் கிழித்தான். அந்த வேகத்தில் இடது கையிலிருந்த பை அவனது வலது கைக்குள் ஒரு சதுரத்துணியாக நூறு ரூபாய் நோட்டுக்களோடு வெளிப்பட்டது. அந்தத் துணியோடு அந்த நோட்டுக்களை சரோசாவின் கைக்குள் திணித்தான். அவளோ, அவற்றை அவனது வலப்புறச் சட்டைப் பைக்குள் திணித்தாள். பிறகு அவன் காலடியில் அப்படியே விழுந்தபடி கதறினாள்:

'நீ சொன்னதே போதும் சாரே. இந்த கவர்ன்மெண்டு பொறுக்கிங்க இடத்திலே, நீ கண்டிஷனா இருக்கதே போதும் சாரே. சத்தியமா சொல்றேன் சாரே, நான் மட்டும் உங்கம்மாவை அப்படி திட்டாட்டால், கோவிந்து ருக்குவக் கொன்னுருப்பான். நீயும், பாமாவும் பழையபடியும் சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்கு சம்பளம் கிடைச்சது மாதிரி சாரே! ஆனாலும், என்னால தாங்க முடியலையே சாரே. அநாவசியமா உன் பேரு இழுபடுமேன்னு பார்த்தேன்; இல்லாக்காட்டி இவனுவ சுறாப்புட்டு செய்திருப்பேன்."

முனியம்மாவும் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள். அவளுக்காக தான் ஒளிந்து கொண்டரை நினைத்தபோது அவள் அழுகை அதிகமாய் வலுத்தது. இந்த விபரீத நிலையிலிருந்து எப்படிக் கழட்டிக்கொள்ளலாம் என்று புரியாமல் அஸிஸ்டெண்ட்-டைரக்டர் அருணாசலம் அங்கும் இங்குமாய் 'வாக்கிங்' போனார். சரோசா, இளங்கோவின் பாதங்களை ஆதாரமாய் பிடித்தபடியே எழுந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவனுக்காக அவர்களை விட்டுவிட்டதுபோல் வெளியேறினாள்.
-----------------

அத்தியாயம் 30

எப்படியோ, சரோசா தாக்குப்பிடித்துவிட்டாள். அந்த அலுவலகத்தில் வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டாள். இதற்கு முன்னதாக பத்து நாட்களுக்குள், அவளுக்காக தனியாகப் பில் போடப்பட்டு, பதினைந்து நாட்களுக்குள் அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு மாற்றாக, அவள் செக்ஷனை 'பிராண்டி' தொல்லை கொடுக்கக்கூடாது என்றும் உடன் பாடாயிற்று.

அந்த சம்பள நாளும் வந்தது... சரோசா, கற்பனைகளை பாதியாக குறைத்துக்கொண்டுதான் அலுவலகம் போனாள். ஆனால் பழைய செக்ஷன் மோகன் வந்து, அவளிடம் ‘ஸ்வீட்' கேட்டான். கேஷியரிடம் அவள் கூலி சம்பளம் சொளையாய் தயாராய் இருப்பதாகவும், அவள், அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அவனே அவளுக்கு ஒரு லட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்..

சரோசா, ஆனந்த பைரவியாகி, 'பணக்கார' மாடிக்கு, புறப்பட தயாரானபோது -

ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார். அரசு அலுவலகங்களுக்கு காவல்துறை கடமையாற்றும் போது எப்படி வர வேண்டுமோ அப்படி வரவில்லை. அதாவது 'மப்டியில்' வரவில்லை. கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட காக்கி யூனிபாரத்திலேயே உள்ளே வந்தார். லத்திக் கம்பு வேறு அங்குமிங்கும் ஆடியது. ஒரு வருட காலமாக கைகளில் கிடைத்தவற்றை அவர் 'கைமாறாமலேயே' வைத்திருந்தார் என்ற ஆத்திரத்தில் ஏதோ ஒரு தலைவருக்கு மழையால் நனைந்து வெயிலால் உலரும் செக்யூரிட்டி கார்டாக நியமிக்கப்பட்டிருந்தார். எவருடைய கையையோ காலையோ பிடித்து இப்போதுதான் 'ஸ்டேஷனுக்கு' வந்திருக்கிறார். ஆகையால் ஒரு வருட வனவாசத்தை அந்த ஒரே நாளில் ஈடுகட்ட விரும்பினார்.

இங்கே சரோசா என்கிறது யாரு என்று அதட்டலாக கேட்டார்.

சரோசாவை, யாரோ ஒருவர் சைகையால் சுட்டிக்காட்ட போலீஸ்காரர், அவள் முன்னால் போய் நின்று அதட்டினார்.

"நீதானே சரோஜா என்கிற கேடி? உன்ன முன்னிப் பின்ன பார்க்காமல் எப்படிக் கண்டு பிடிச்சுட்டேன்னு நினைக்கிறியா? அதுதான் உன் மூஞ்சியிலயே எழுதி இருக்கே?"

சரோசாவுக்கு சம்பளம் கிடைத்துவிட்டதா என்று அவளிடமே கேட்பதற்காக, உள்ளே வந்த இளங்கோ, வாசலில் சிறிது நின்றுவிட்டு, பின்னர் போலீஸ்காரரை நெருங்கிக் கேட்டான்.

"அப்படி என்ன சார் இந்தப் பொண்ணு தப்புப் பண்ணிட்டு?”

“தப்புக்கும் தவறுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இவள் செய்தது தப்பும் இல்ல, தவறும் இல்ல... ஒரு கொலை; துரை என்கிற கள்ளச்சாராய வியாபாரியைக் கொன்னு, கோணி மூட்டையில் கட்டி மகாபலிபுரம் கடலுல போட்டிருக்காள். ஏய்! நடடி ஸ்டேஷனக்கு. நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு கவர்மெண்டு வேலையா?"

அதுவரை அந்த போலீஸ்காரரை முகம் மாறாமல் பார்த்தபடி நின்ற சரோசா, அப்படியே சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் எடுத்து தன்னை அறியாமலேயே தலையில் வைத்து அசைவற்றிருந்தாள். பிறகு அவள் கண்முன்னால் ஆடிய லத்திக் கம்பின் ஊசலாட்டத்தைக் காணும் சுரணை இன்றி ஒப்பாரியிட்டாள் :

"தொரண்ணே! அய்யய்யோ, தொரண்ணே! கட்சியிலே அந்த தட்டுவாணி தடிச்சியும், அண்ணாத்தேயும் சேர்ந்து உன்னைத் தீர்த்துக் கட்டிட்டாங்களே. நானு பாவிண்ணே. இந்த ஒரு மாசத்துல ஒரு வாட்டியாவது ஒரு நட நடந்து உன்னைப் பார்க்காமப் பூட்டேனே. நீ அருண்டு மருண்டு துடிச்சப்போ ஒனிக்கு ஆறுதல் சொல்லாம இருந்துட்டேனே. ஏய் அண்ணாத்தே, நீ உருப்படுவியா? ஒன்னையும் உன் வப்பாட்டியயும் இதே மாதிரி அடிச்சுக் கொல்ற காலம் வராதா? அய்யோ... அய்யய்யோ...!"

சரோசா, வாயில் அடித்துக் கொண்டாள். எல்லோரும் அவளைக் கொலைகாரியாகப் பார்த்தபோது இளங்கோவின் கண்கள் கலங்கிவிட்டன. சிலர் பிரமிப்போடு எழுந்தார்கள். போலீஸ்காரர் லத்திக் கம்பை தரையில் தட்டியபடியே அதட்டினார்:

"இன்னும் ரெண்டு கொலை செய்வேன்னா சொல்றே? நல்லாத்தான் நடிக்கே? இல்லாட்டி ஒரு ஆம்பளைய பதினாறு இடத்தில் வெட்டி கடலுல போடுவியா? எழுந்திருடி."

போலீஸ்காரர், அவள் முடியைப் பிடித்துத் தூக்கப் போனபோது, இளங்கோ அந்தக் கையை லேசாகப் பிடித்தான். இதற்குள் அவர் கை அவள் முடியைப் பற்றியபடி மேலே வந்தது. ஏதோ பேசப் போன இளங்கோவை பேச முடியாதபடி சில அலுவலக வாசிகள் உலுக்கினார்கள்:

“என்ன மிஸ்டர் இளங்கோ! இந்த மாதிரி ஒரு கிரிமினல் கேர்ள எங்க தலையில கட்டிட்ட பாரு. உன்னை நல்லவன்னு நெனத்தா. என்னப்பா... இதெல்லாம்... ஊமை ஊரை கெடுக்கும். பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பது சரியா இருக்கே..."

போலீஸ்காரரும் இளங்கோவைச் சந்தேகமாகப் பார்த்தார். வார்த்தைகளில் மரியாதை போட்டு அதே சமயம் அவமரியாதைக் குரலில் கேட்டார்:

"உங்களுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்ன சார் சம்பந்தம்? நீங்களும் அநேகமா ஸ்டேஷனுக்கு வரவேண்டியது இருக்கும்."

இதற்குள் நடப்பதை கேள்விப்பட்டு, பழைய செக்ஷன் ஆட்களும் கூடிவிட்டார்கள்.

அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், இளங்கோவைப் பார்த்துக் கொலை பழிக்கு சாட்சியாய் போகவேண்டியது வருமோ... என்கிற பயத்தில் உண்மையை கொட்டுவதாக நினைத்து உளறிக் கொட்டினார்.

"என்னப்பா இளங்கோ! உன்னோட உல்லாச சல்லாபத்தை யெல்லாம் வெளில வச்சுக்காம எங்களையே புரோக்கர் மாதிரி ஆக்கிட்டியே. கவர்மெண்ட் சர்வண்ட் காண்டக்ட் ரூல்படி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறோம். நல்லவேளை, போலீஸ்காரர் சரியான சமயத்துக்கு வந்துட்டார். இல்லாட்டி, இவள் எங்களையும் ஒரு வழி பண்ணியிருப்பாள். ஆப்டர் ஆல் ஒரே ஒரு மாதச் சம்பளம் கிடைக்கலேன்னு எப்படிக் குதிச்சா?"

"இளங்கோ! உன்னை விடப்போறதில்ல மேன்...”

பித்துப் பிடித்து நின்ற இளங்கோவின் தோளில், மோகன் கை போட்டாள். "டோண்ட் ஒர்ரி இளங்கோ. என்கொயரி இல்லாம உங்களை எதுவும் செய்ய முடியாது. அதுல நான் உங்களுக்கு டிபன்ஸ் அஸிஸ் டெண்டா இருந்து, இவங்களை நார் நாராகக் கிழிக்கப் போறேன் பாருங்க."

சரோசா அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இளங்கோவை உற்றுப் பார்த்தாள். 'துரைண்ணே' என்று மீண்டும் கத்தப் போனாள். பிறகு எதுவோ நெஞ்சில் கத்த, அதன் உந்தலில் அவள் வாயாடியது.

"அடப்பாவிங்களா! ஒண்ணுமே அறியாத இந்த கொழந்தப் பையன் மேல பழி போடறீங்களே; இந்த அல்பத்துக்காக படாத பாடுபட்டவரு அவரு. போலீஸ் அண்ணாத்தே, வாரியா போகலாம். அடேய் அல்பங்களா, இளங்கோ சாரை விட்டுடுங்கடா."

இளங்கோ,இன்னும் பிரமை கலையாமல் நின்றபோது, சரோசா சித்தப்பிரமை பிடித்தவள் போல் வாசலுக்கு வெளியே வந்தாள்.போலீஸ்காரர்பின்தொடர்ந்தார். இவள் என்னவோ பெண் போலீஸ் போலவும், அவர் என்னமோ யூனிபாரத்தில் தப்பு செய்தவர் போலவும் தோன்றியது. சரோசா, மீண்டும் அந்த அறைக்குள் ஓடிப்போய் இளங்கோவின் இரண்டு கன்னங்களுக்கும் இரண்டு கைகளையும் உறையாகப் போட்டுக் கொண்டு “உன்னால நானு புதுசா பெறப்பெடுத்த சரோசா சாரே! உன்னோட சரோசா கொலைகாரியும் இல்ல, குடிகாரியும் இல்லன்னு நம்பு சாரே. நீ நம்பினா போதும் சாரே. போலீஸ் நம்புறதும் நம்பாததும் அவங்க இஷ்டம். அந்த அண்ணாத்தையோட இஷ்டம்” என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பி நடந்தாள்.

அவள் வேகவேகமாக நடந்ததால், போலீஸ்காரர் எக்கி எக்கி ஓடினார். அவள் மூலம் தங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று நினைத்து ஆங்காங்கே நின்ற கேஷுவல் ஊழியர்கள் அநாதைகள் போல தவித்தார்கள். இனிமேல் நிரந்தர ஊழியர்களிடம் தாங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும், பிராண்டி கிராண்டி கேட்டால் சொந்தக் காசில்கூட வாங்கிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தப் போலீஸ்காரரும், இந்த சரோசாவும் அலுவலக வளாகத்திற்கு வெளியே வந்தார்கள். சரோசா, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள், ஆண்டவன் இருக்கிறானா என்பது மாதிரி. அவள் மனதில் எந்தப் பயமும் ஏற்பட்டது போல் தோன்றவில்லை. உணர்வுகள் இருந்தால்தானே பயம் என்ற உணர்வு ஏற்படும்? இதற்குள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை போலீஸ்காரர் அதட்டிக் கூப்பிட்டார். அது அவர்கள் முன்னால் வந்து உறுமியபோது, சரோசா போலீஸ்காரர் அதட்டும் முன்னாலேயே ஏறிக் கொண்டாள்.

ஆட்டோவிற்கு, போலீஸ்காரர்கையால் வழிகாட்டியபோது, முனியம்மா அங்கே ஓடிவந்து, போலீஸ்காரர் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அதிசயமாகப் பார்த்த அவர், ஆச்சரியத் தொனியில் கேட்டார்:

“அடடே... முனியம்மா, என்ன இப்படி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி?"

“அப்போ நீ என்ன ஆபீஸ்ல பார்க்கலியா?”

“எந்த ஆபீஸ்ல?"

"அதே அந்த கேடி ஆபீஸ்ல; திருட்டு ஆபீஸ்ல; தெனாவட்டு ஆபீஸ்ல; அங்கதான் வேலை பாக்கேன். சொந்தப் பெரியப்பா பிள்ளையா இருந்தும், நீ என்னை கண்டுக்கலியேன்னு எனக்கு எப்படி அழுகை வந்தது தெரியுமா?"

"தப்பா நினைக்காதே தங்கச்சி. ஒரு போலீஸ்காரனுக்கு எப்பவுமே குற்றவாளிமேலதான் கண்ணு இருக்கும். வீட்டுல வந்து ஆற அமர பேசறேன். இப்ப நீ இறங்கு."

"வழியிலேயே இறங்கிக்கறேன் அண்ணே."

"ஆட்டோ, நீ பாட்டுக்கு ஓட்டுப்பா.'
-------------------

அத்தியாயம் 31

அந்த ஆட்டோ அதுபாட்டுக்கு ஓடியது. முனியம்மா தனது அண்ணன் - போலீசிடம் சரோசாவைப் பற்றி தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டே வந்தாள். “பாவமண்ணா... என்ன மாதிரி கேஷுவல். அடுத்தவங்க கஷ்டப்பட பொறுக்காதவள். இவளோட குடும்ப நிலமை எனக்குத் தெரியும். கொலை செய்யக்கூடியவள் இல்லண்ணா. அவளோட முகத்தை உத்துப்பாரு, உனக்கே தெரியும்!”

‘அதனாலதான் சொல்றேன், நீ இதுல தலையிடாதேன்னு. அதோட, பெரிய பெரிய ஆளுங்க கிட்ட இருந்து போன் மேல போனா வருது. இவள் ஸ்டேஷன்ல கொண்டு ஒப்படைக்கதுதான் என்னோட வேலை."

சரோசா, அவர்கள் பேசுவதை காதில் வாங்காமலும், கண்ணில் விழும்படி ஏறெடுத்துப் பார்க்காமலும் ஆட்டோவுக்குப் பின்புறமாக இரண்டு கைகளையும் நீட்டியபடி அப்படியே கிடந்தாள். இதற்குள் அந்த ஆட்டோ கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும், மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிவிட்டது. இடது பக்க ஒரு மாடிக் கட்டிடத்தைப் பார்த்த முனியம்மா, அதை அந்த ஆட்டோ சிறிது கடந்த பிறகு, ஆட்டோவை நிறுத்தும்படி டிரைவரின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அது நின்றதும், போலீஸ் அண்ணனிடம் முறையிட்டாள் : “என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியுமுண்; தலையை அடகு வச்சாவது சொல்லுற சொல்லைக் காப்பாத்துறவள். இந்தப் பொண்ணு அதோ அந்த வீட்டில் ஐநூறு ரூபாய் கடன் வாங்குனாள். இவளுக்கு நான்தான் ஜாமீன் போட்டேன். ஜெயிலுக்குப் போற இவளோட கடன கொஞ்சம் கொஞ்சமா அடைக்கேன்னு கடங்காரம்மாகிட்டே சொல்லணும். அதுக்கு இந்தப் பொண்ணு என்னோட வரணும். வேனுமுன்னா நீயும் வா, அஞ்சே நிமிஷம்தான். ஒருவேளை அந்த அம்மா இல்லாட்டி ரெண்டே ரெண்டு நிமிஷம்தான். குளிச்சிட்டுகிளிச்சிட்டு இருந்தால் பத்து நிமிஷம்; ஒன் தங்கச்சி மேல நம்பிக்கை இருந்தா விடு."

அந்த போலீஸ்காரர் பதில் பேச முடியாமல் வாய் மட்டும் திறந்து காட்டினார். முனியம்மாவைப் பற்றித் தெரியும். அவளால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால், இவள் அவளைத் தட்டிவிட்டுப் போயிட்டா?

"நான் பிள்ளை குட்டிக்காரன் தங்கச்சி. நீ ஆயிரம் சொல்லு கேப்பேன், ஆனா. இந்த விஷயத்துல என் போக்குல விட்டுடு. யூனிபாரம் போயிட்டா கோமணம் கூட கெடையாது. உன் நாத்தானரும் கொழுந்தைகளும் இன்னிக்குக்கூட சமைக்க அரிசி இல்லாம தவிக்குதுங்க. பேருதான் போலீஸ்; தனக்குப் போகத்தான் தானம்.”

முனியம்மா, இடுப்பில் தொங்கிய சுருக்குப் பையை, அவருக்குக் காட்டாமலே மாராப்பு சேலைப் பக்கம் கொண்டு போனாள். வயிற்றின் இரண்டு பக்கமாக இரண்டு கைகளையும் உள்ளே விட்டாள். அந்த சுருக்குப் பையைத் திறந்து ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அந்தப் பையின் வாயை அடைத்துவிட்டு, மீண்டும் அதை இடுப்பில் சொருனாள். வலது கையை வெளியே கொண்டு வந்து, அது பிடித்திருந்த ஒரு நூறு ரூபாய் நோட்டை அண்ணனின் பைக்குள் அவரது கண்ணில் படும்படியாகக் காட்டினாள். அவர் அதை பத்து ரூபாய் நோட்டு என்று நினைத்து விடக்கூடாதே என்பதற்காக 'வரவர நூறு ரூபாய் நோட்டுங்க கூட சின்னதா இருக்கு' என்றாள். பிறகு ஆட்டோவிலிருந்து கீழே குதித்து சரோசாவைக் கையைப் பிடித்துக் கீழே இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பிற்கு சரோசாவும் பொம்மை போல தரைக்கு வந்தாள்.

போலீஸ்காரரும் இறங்கினார். வீடு பக்கத்தில்தான் இருக்கு; ரூபாயோ பையில; ரெண்டு எட்டு நடந்து காலைல உதைபட்ட மனைவியோட கன்னத்தை அந்த நோட்டால் தடவலாமா என்று யோசித்தார். இந்தச் சாக்கில் சரோசா ஓடிவிடக்கூடாதே என்று ஒரு பயம். ஆகையால் முன்னால் நடந்த அந்தப் பெண்களின் பின்னால் இவரும் நடந்தார்.

சரோசா, தன் கையைப் பிடித்திருக்கும் முனியம்மாவைத் தட்டி விட்டுவிட்டு ஓடினால், அவளைத் தாவிப் பிடிப்பதற்குத் தயாராக போலீஸ்காரர் பக்கவாட்டில் நடந்தார். ஒருவேளை, தங்கச்சியும் இதற்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அவளையும் பார்த்தார். இன்சூரன்ஸ் ஏஜெண்ட் 'எல்லார் உயிருக்கும் ஆபத்து' என்று நினைக்கிற மாதிரி, 'என் புத்தியும் போலீஸ் புத்தியிலிருந்து மாற மாட்டேங்கே' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார்.

இதற்குள், சரோசா நடந்த நடையும், பார்த்த பார்வையும் அவள் விழுந்தாலும் விழுவாளே தவிர, ஓடமாட்டாள் என்று அவரது அனுபவ அறிவு உணர்த்தியது. அந்த இரண்டு பெண்களும் அந்தத் தெருமுனையை திரும்பியபோது அது ஒரு முட்டுச்சந்து என்பதாலும், இவருக்குப் பசி வயிற்றை முட்டியதாலும், "சீக்கிரமா வந்துடு தங்கச்சி, சீக்கிரமா கூட்டிட்டு வந்துடு தங்கச்சி” என்று சொல்லியபடியே ஆட்டோ பக்கம் வந்தார்.

இதற்குள், முனியம்மா சரோசாவை கூட்டிக்கொண்டு ஒரு கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறினாள்.
----------------

அத்தியாயம் 32

சரோசா, முனியம்மாவிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் பின்னாலேயே போனாள். ஆட்டோவிலும் அவளும் போலீஸ்காரரும் பேசிய பேச்சுக்கூட அவளுக்குக் கேட்கவில்லை. இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தெளிவும் இல்லை. தெரிந்து கொள்வதற்குரிய அக்கறையுமில்லை. ஒரே ஒரு சமயத்தில் மட்டும் கொலைக்காரர்களை விசாரிக்கும் தனிப்பட்ட காவல் நிலையம் அந்த மாடியில் இருக்குமோ என்று லேசாய் நினைத்துக் கொண்டாள்.

முனியம்மாவும் அவள் முதுகைப் பிடித்து லேசு லேசாகத் தள்ளினாளே தவிர அவளிடம் எதுவும் பேசவில்லை.

மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பில் வடக்கு தெற்கான சாலையின் முனையில் உள்ள இரண்டாவது கட்டிடத்தின் முதலாவது மாடி, விசாலமான பெரிய அறை. அதன் இரு முனைகளிலும் சின்னச் சின்ன அறைகள். கதவுக்கு மேலேயும், அந்த அறைச்சுவர் ஒன்றிலும் ‘சமதர்ம மாதர் மன்றம்' என்ற போர்டுகள் தொங்கின. உள்ளே ஒரு பக்கமாய் ஒரு சாதாரண நாற்காலி; அதன் முன்னால் சராசரி மேஜை. கட்டுக்கட்டான பேப்பர்கள். ஒவ்வொன்றும், ஒன்றின் மேல் ஒன்றாக இல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜை முனையின் இருபுறமும் பிரம்பு நாற்காலிகள். அதன் முன்னால் இரண்டு வரிசையில், சின்னச் சின்ன இரும்பு நாற்காலிகள். பக்கவாட்டில் பெஞ்சுகள். மேஜையோடு ஜோடி சேர்ந்த ‘எஸ்' வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்ணிற்கு, நாற்பது வயதிருக்கலாம். பொட்டில்லாத நெற்றி. நகை நட்டுக்களால் சின்னாபின்னமாகாத கூரிய மூக்கு. எவரையும் பார்த்ததும் மோவாயை கீழே தள்ளி, கண்களை முன்னால் தள்ளிப் பார்க்கும் ஒரு ஆர்வப் பார்வை. பெஞ்சுகளில் பஞ்சையாய் - பராரியாய்ப் போன பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களது ஆடைக்கு அப்பால் வெளிப்பட்ட முதுகுகளிலும், முகங்களிலும் வரதட்சணைத் தழும்புகள்; பெற்ற பிள்ளைகள் கொடுத்த நன்றிக் கடன்கள். இவர்களில் சிலர் தள்ளாடும் மூதாட்டிகள். சிலர், தாலாட்டும் இளம் பெண்கள். ஒவ்வொருத்தி தலையும் ஏதோ சுமக்க முடியாத ஒரு பெருஞ்சுமையை சுமப்பது போல் தாழ்ந்து கிடந்தது. முனியம்மாவை அங்கீகாரத்துடனும், அவளோடு வந்தவளை அழுத்தமாகவும் பார்த்த தனி நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த அம்மா, கும்பிட்ட முனியம்மாவிற்கு பதில் கும்பிடு போட்டுவிட்டே கேட்டாள்:

"எப்படி இருக்கே முனியம்மா? உன் வீட்டுக்காரன் மாசா மாசம் தர வேண்டியதைத் தரானா?”

“கழுதப் பய தாராம்மா."

"இன்னும் உனக்குக் கோபம் போகலையா?”

“என் வயித்துல எரியறது அணையா அக்னிம்மா. அதை மூட்டுனவனாலகூட இப்ப அணைக்க முடியாது. ரெண்டாவது ஒருத்திய சேர்த்து அவளுக்கும் மூணு வருஷத்துல ரெண்டு பிள்ளையைக் கொடுத்திட்டான். அவள்தான் என் வாழ்க்கையில அறிவில்லாம குறுக்கிட்டாள்; எனக்கு உரிமை இருந்தாலும், நான் அவள் வாழ்க்கையில குறுக்கிட விரும்பலம்மா. அதோட, ஒப்புக்கு வாழறவனோட வாழுகிற வாழ்க்கை உப்பில்லாத சாப்பாடு மாதிரின்னு உங்களுக்குத் தெரியாதா என்ன ஏதோ நீங்க தலையிட்டு இந்த அடாவடிக்காரனை அரட்டி உருட்டி அவங்கிட்டருந்து பொண்டாட்டியா, ரிட்டயரான எனக்கு பென்சன் வாங்கிக் கொடுத்திட்டீங்க. நீங்க நல்லா இருக்கணும். அப்பதான் என்னை மாதிரி இவள மாதிரி இருக்கற பொண்ணுங்க நல்லா இருக்க முடியும்."

அந்த அம்மாவுக்கு அவள் சொன்னதில் பெருமைப்படுவதா அல்லது சிறுமைப்படுவதா என்று தெரியவில்லை. முழுமையாகப் பலன் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், பாதி அளவுக்காவது பலிக்கிறதே என்ற திருப்தியும் முகத்தில் ஒருசேரத் தெரிந்தது. பிறகு இதற்கெல்லாம் தான் மட்டும் காரணமல்ல; அதோ தன் முன்னால் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு பெண்களும், அந்த அமைப்பும் காரணம் என்பதுபோல் அவர்களைப் பார்த்தாள்.

அந்தப் பெண்களில் இருவர், அந்த அம்மாவைப் போல் நடுத்தரங்கள். அவர்கள் முகங்களிலும் தீட்சண்யப் பார்வை. எஞ்சிய மூவரில் இருவர் இளம் பெண்கள். ஆனாலும், ஒருவித முதிர்ச்சியான பார்வை. ஒரே ஒருத்தி மட்டும் அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தை வைத்து எதுவும் அனுமானிக்க முடியவில்லை. முனியம்மா, சரோசாவையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மாவுக்குக் கோடி காட்டினாள்.

"இதோ பித்துப் பிடிச்சு நிக்குதே பாவிப்பொண்ணு, இது பட்டபாடும், படும் பாடும் கொஞ்சநஞ்ச மில்லம்மா. செய்யாத ஒரு குற்றத்தை, அதிலும் கொலைக் குற்றத்தை செய்ததா போலீஸ், ஒரு பெரிய மனுஷன் தூண்டுதல்ல பழி போட்டிருக்கும்மா. இப்பவும் கீழ போலீஸ்காரரை ஆட்டோவில் காக்க வைச்சுட்டு வந்திருக்கேம்மா. நீங்க மட்டும் இப்ப எங்ககூட வராட்டா, இவள, ராத்திரியோட ராத்திரியா ஏதாச்சும் செய்துடுவாங்கம்மா. ஏய் சரோ, நான் முன்னால ஒன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன் பாரு, அந்த அம்மா இவங்கதான். இன்னிக்கு என்னை என் ஆம்படையான் தெருவில போட்டு உதைக்காம இருக்கான்னா, இதுக்கு இவங்கதான் காரணம். இப்பக்கூட இவங்க பேர் எனக்குத் தெரியாது; ஆனா, அம்மாவுக்கு பேர் எதுக்கு?"

"தப்பும்மா! எனக்கும் உனக்கும் இதோ இங்க இருக்கவங்களுக்கும் அம்மா நம்ம மன்றம்தான். என்றைக்கு தனிப்பட்டவங்க ஒரு அமைப்பைவிட உயரமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ, அப்பவே அந்த அமைப்போட உயிர்த்துடிப்பு போயிடும். நாங்க அரசியல் கட்சிகள் மாதிரி இல்ல. நாங்க எல்லோரும் ஒருவர் தலைமேல் ஒருவர்ஏறி நின்னாலும் இந்த மன்றம் தான் அதிக உயரம்.”

"சரிம்மா. இந்தப் பொண்ணுக்கு..."

அந்தம்மாவும், அங்கு இருந்த இதரப் பெண்களும், பெஞ்சிகளில் இருந்த பஞ்சைப் பராரிகளும் சரோசாவை ஒருசேரப் பார்த்தார்கள். எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்பதுபோல் நாற்காலிப் பெண்கள் அவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பார்த்தபோது, பெஞ்சிப் பெண்களோ, கஷ்டம் என்பது தங்களுக்கு மட்டும் உரியதல்ல என்பது போல், அவளை கண்சாய்த்துப் பார்த்தார்கள். ஆனால் சரோசாவோ, "தொரண்ணே, தொரண்ணே” என்று வாய் கூவிக் கொண்டிருக்க, அதில் மட்டும் உயிரை வைத்திருப்பவள் போல் அசைவற்று நின்றாள்.

அவளையே பார்த்தபடி அந்தம்மா மேஜையில் கையூன்றி எழுந்தாள். அவள் அருகே போனாள். அவள் மோவாயை நிமிர்த்தினாள்.வெறுமையாய் கிடந்த அவள் கண்களை தலையோடு சேர்த்துத் தடவி விட்டாள். அவள் தோளில் கை போட்டபடியே மேஜையோரம் இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டு ஆவேசமில்லாமலும், அதே சமயம் ஏனோ தானோ என்று இல்லாமலும் தன்னம்பிக்கையோடு ஆறுதல் சொன்னாள்:

"இந்தா பாரும்மா, உன் மேல தப்பில்லன்னா எந்த போலீசும், எந்த ரவுடியும், எந்த கோர்ட்டும் உன்னை தண்டிக்க முடியாது. ஒருவேளை நீ இந்த மன்றத்துக்கு வராமல் இருந்தா அது பேற விஷயம். எப்போது எங்க கிட்ட நீ வந்திட்டியோ அப்போ நீ செய்யாத குற்றத்துக்குத் தண்டனை வாங்க முடியாது. அதைத் தடுக்கிற சக்தி எங்க மன்றத்துக்கு உண்டு. இது சத்தியம். வாயைத் திறந்து உன் வாழ்க்கை முழுசையும் நல்லதோ கெட்டதோ அப்படியே கொட்டு. நீயே உனக்கு சாட்சி சொல்லாட்டால், என் பேச்சோ, இந்த முனியம்மா பேச்சோ எடுபடாது. நீ மட்டும் கொலை செய்யாட்டால் உன் மேல ஒரு துரும்பு கூட விழாது. சொல்லும்மா."

சரோசா, லேசாய்க் கண் விழித்தாள். அந்த இடத்தை அப்போதுதான் பார்ப்பது போல் பார்த்தாள். அந்த அம்மாவை நம்பாதது போலும் பார்த்தாள். லேசு லேசாய் உறைந்துபோன அவள் உடம்பினுள், ஏதோ ஒரு சூடு உட்பரவி, உள்ளத்துள்ளும் பரவியது. பனிக்கட்டியாய் உறைந்து போன மனம் மெல்ல மெல்ல கசிந்தது. மனக்கட்டி உடைந்து, மனோவாதை குணமாகவில்லை என்றாலும், குறைவது போன்ற ஒரு மாற்றம். மனதுக்குள் இருந்த பனிக்கட்டியை ஏதோ ஒரு நெருப்புக்கட்டி எரித்துவிட்டு ஜோதி மயமாய் ஒளிர்ந்தது. அதில் அண்ணாத்தே எரிந்து கொண்டிருந்தான். துரை அண்ணனின் ‘தர்மபத்தினி’ கரிந்து கொண்டிருந்தாள். சரோசா அந்த அம்மாவையே உற்று உற்றுப் பார்த்தாள். லேசாய் சிரித்தாள். அதைவிட, சிரிக்கப் போனாள் என்று சொல்லலாம். இதற்குள் நாற்காலிகளில் இருந்த பெண்கள், ‘சொல்லும்மா,' 'சொல்லும்மா' என்று மாறி மாறிச் சொன்னார்கள். சரோசா அந்த அம்மாவையே பார்த்தாள். 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்பது மாதிரியான தோரணை இல்லாமல், ‘எல்லாம் தெரிய வேண்டும்' என்பது மாதிரியான நளினமான முக இறுக்கம். அதே சமயம், பயபக்தியை உருவாக்காமல் தோழமை உணர்வை ஏற்படுத்தும் பார்வை.

சரோசாவின் தலை, அந்த அம்மாவின் தோளில் விழுந்தது. ஒரு குழந்தையாகி அந்தத் தோளே ஒரு தொட்டில் என்பதுபோல், அங்குமிங்குமாய் தலையை புரட்டி அரற்றினாள். அவளை, அவள் போக்கில் சில நிமிடங்கள் விட்டு வைத்த அந்த அம்மாள், அவள் தலையை நிமிர்த்தினாள். பிறகு "நீ இங்கே வைச்சு சொல்லணும் என்றாலும் சொல்லு. இல்ல, அந்த அறைக்குள்ள வந்து சொல்லணும் என்றாலும் சொல்லு” என்றாள்.

சரோசா, தன் பார்வையில் பட்ட அனைவரையும் பார்த்தாள். அத்தனை முகங்களிலும் அவளுக்கான ஒரு ஆறுதல் பார்வை இருப்பதைக் கண்டுகொண்டது போல் முகத்தைத் துடைத்தாள். தன்னாலும் மீள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாத்தைக்கும் சவால்விட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. மண்ணில் பிறந்தது, பெண்ணாய்ப் போனது, ஆத்தா ஓடியது, அவள் தாத்தா வளர்த்தது, எடுபிடி வேலை செய்தது, ஏளனமாய் நடத்தப்பட்டது, போலீஸ் தொல்லைகள், போக்கிரிகளின் சீண்டல்கள், அதனால் துரையண்ணன் மூலம் அண்ணாத்தையிடம் அடைக்கலமானது, சாராய உறவுகள், இளங்கோவுடன் போட்ட சண்டை, அவனை ஆளை வைத்து அடித்துப் போட்ட அடாவடித்தனம், அவனால் மனுஷியாகி, இப்போது ஆபீஸ்காரர் களால் மீண்டும் பழைய நிலைக்கப் போக வேண்டும் என்ற எண்ணமும், அப்படிப் போய்விடுவோமோ என்ற அச்சமும் கலக்க, அவள் ஒன்று விடாமல் சொன்னாள். அவள் அனுபவித்த துயரங்களைக் கேட்கக் கேட்க அங்குள்ள அத்தனை பேருக்கும் காதுகள் போதாது என்பது போல், பலர், இரண்டு கைகளையும் தத்தம் காதுகளுக்கு மேல் காதுகளாகக் குவித்துப் போட்டார்கள்.

அவள், தனது கதையை, சுருக்கியும் சொல்லாமல், விரியவும் விடாமல் ஒப்பித்தபோது, அவள் சொல்வதை ஆரம்பத்தில் இப்படித்தான் எல்லோருக்கும் நடக்குது என்ற தோரணையில் பார்த்த அந்த அம்மா, இறுதியில் முகம் வெளிறிப் போனாள். அவள் வார்த்தையில் தொனித்த சத்திய ஒலியில் கட்டுண்டவள் போல், சரோசாவின் முகத்தைத் துடைத்துவிட்டு, கண்ணீரைச் சுண்டி விட்டாள். பிறகு, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டாள்:

“நீங்க என்ன நினைக்கீங்க?”

தாழம்பூ

"அந்த அண்ணாத்தையை இப்பவே கழுத்தை நெறிச்சுக் கொன்னு போடணும் போலத் தோணுது."

"கதையில வாரது மாதிரியே வருதே?"

அந்தம்மா, சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் :

“இந்தப் பெண்ணோட பிரச்சினை நமக்கு ஒரு சவால் பிரச்சினை மாதிரி. இதுவரைக்கும் கொலை செய்யப்பட்ட பெண்களைப் பற்றியும், அப்படி கொலை செய்யப்படப் போன பெண்களைப் பற்றியும்தான், நாம் விவகாரம் செய்திருக்கோம். இப்போத கொலைப்பழியை சுமந்து நிக்கிற ஒரு பெண்ணோட பிரச்சினையை நாம சந்திச்சுத்தான் ஆகணும். இந்தமாதிரி தெருவில நிக்கிறவள், சாராயம் காய்ச்சுறவள், இப்படி ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு சமூக மேடு பள்ள வரலாறு நிக்குது. சரியம்மா, இனிமே இது உன் பிரச்சினை இல்ல, எங்க பிரச்சினை. முனியம்மா! நீ சரோசாவைக் கூட்டிட்டு ஸ்டேஷனுக்குப் போ; நாங்க பின்னாலயே வந்துடறோம். என்ன யோசிக்கே?"

“கண்டிப்பாய் வரணும்மா” என்ற வார்த்தைகளை வாயில் வைத்திருந்த முனியம்மா, அவற்றை "ஒண்ணுமில்லேம்மா” என்று ஆக்கிக்கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்திருந்த சரோசாவை சந்தோஷமாய் தூக்கிவிட்டாள். அலுவலகத்தில் கடன் கேட்பாள் என்பதற்காக தன்னை மறைத்துக்கொண்ட அவளுக்கு குற்ற உணர்வு இப்போது முழுவதுமாக மறைந்து விட்டது. போர்டை பக்தியோடு பார்த்துக்கொண்டே சரோசாவை படிகளில் இறக்கிக்கொண்டு கீழே வந்தாள்.

இதற்குள் ஆட்டோ பக்கம் நின்ற போலீஸ்காரர் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் மேலும் காலவிரயத்தைத் தடுப்பது போல், அவர்களைக் கையாட்டிக் கூப்பிட்டார். அந்த மூவரோடும் ஆட்டோ பறந்தது.
----------------

அத்தியாயம் 33

அந்த ஆட்டோ போலீஸ் வளாகத்திற்குள் பாய்ந்தது. ஆட்டோவிற்குள் சரோசாவிடம் கரிசனம் காட்டிய அந்த போலீஸ்காரர், இப்போது லத்திக் கம்பாலேயே சரோசாவை நெட்டித் தள்ளி கீழே இறக்கினார். கூட வரப்போன முனியம்மாவை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டார்.

சரோசா, அந்தப் போலீஸ்காரரோடு முதல் மாடிக்கு வந்தாள். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே அவளுக்கு வேண்டியவர்களும், வேண்டாத ஒருத்தியும் சுவரோடு சுவராய் நின்று கொண்டிருந்தார்கள். தலையை தொங்கப்போட்டு நின்றருக்குமணி, அவள் தோளைத் தட்டிக் கொடுக்கும் கோவிந்து, அவள் கையைப் பிடித்து வீட்டுக்குப் போகலாம் என்பது மாதிரி தன்பக்கம் இழுக்கும் ஆறுமுகப்பயல், பத்துப் பதினைந்து குடிசை வீடுகளுக்குச் சொந்தக்காரியான ஒரு கிழவி, எல்லாவற்றுக்கும் மேலாக தரையில் முட்டிக்கால்களை மேலே தூக்கி, முகத்தைக் கீழே வளைத்துக் கிடக்கும் நாயினா.

வீட்டுக்காரி, சரோசாவைப் பார்த்துக் கத்தினாள் : "பாவி, கெடுத்தியேடி. கொலைகாரிக்கு என் வீடுதானா கெடைக்கணும்? ஆமை புகுந்த வீடு மாதிரி என் வீட்டை ஆக்கிட்டியேடி. போலீஸ்காரங்க உன்னால என்னையும் பிடிச்சு வைக்கிறது என்னடி நியாயம்? உடனே போய் அந்தக் கொலைக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னு போலீஸ்ல போயிச் சொல்லுடி."

சரோசா, வீட்டுக்காரியை விநோதமாகப் பார்த்தாள். ருக்குவைப் பார்த்த போது பீறிட்ட அழுகை நாயினாவைப் பார்த்தபோது வெறும் ஒலி வடிவங்களாய் உருமின.

அதே போலீஸ் இருக்கையில் இன்ஸ்பெக்டர் முன்பு மாதிரியே உட்கார்ந்திருந்தார். மீசை மட்டும் கொஞ்சம் தடித்திருந்தது. அவர் அருகே பழைய கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்; இன்ஸ்பெக்டர் ஊதிக் கக்கிய புகையால் கண்ணீர்ப் புகை பிரயோகத்திற்கு ஆளானதுபோல், கண்ணெரிய உட்கார்ந்திருந்த சப், தனது எரிச்சலைக் காட்டுவதற்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார். கோபம் வந்தால், இவர் உதடுகளையே பற்கள் மாதிரி சில மடிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவற்றை முன்பக்கமாகக் குவித்துக் கொள்கிறவர். இது 'கரும்பு மாமூல்' கான்ஸ்டபிளுக்குப் புரியும். ஆகையால் உள்ளே எட்டிப் பார்த்தவர் பின்வாங்கிக்கொண்டார்; சுவரோடு சுவராய் பதுங்கிக்கொண்டார். இந்தச் சமயத்தில்தான், சரோசா ஒப்பாரி போட்டாள். புகைத் தாக்குதலில் புகைந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் கத்தினார் : "இந்தாப்பா, ஒப்பாரி போடுறவள இழுத்துட்டு வா."

கரும்பு கான்ஸ்டபிள், சரோசாவை ஒரு கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அந்த அதிகார அறைக்குள் வந்ததும், அவள் முதுகில் வலது கையை ஊன்றி ஒரு தள்ளுத் தள்ளினார். இதனால் இன்ஸ்பெக்டர் மேல் முட்டி மோதப்போன சரோசா, தன்னை அறியாமலேயே மேஜையில் கையூன்றி, தன்னை சரிப்படுத்திக் கொண்டபோது, வெளியே ருக்கு, வீட்டுக்காரி முகங்களும், இந்த இரண்டிற்கும் இடையே கோவிந்து முகமும் உடம்புகளைக் காட்டாமல் மூன்று தலைகளையும், ஒரு உடம்பின் தலைகளாகக் காட்டின. சப்-இன்ஸ்பெக்டர், சரோசாவைப் பார்த்து கேலியும் கிண்டலுமாய் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் அவளைப் பார்க்காதது போல் எங்கேயோ பார்த்து புகைவிட்டார்.

"வாம்மா, வா. நீ அங்க சுற்றி, இங்க சுற்றி, எப்படியும் எங்கப் பக்கம் வருவேன்னு தெரியும். ஒன் மூஞ்சிக்கு கவருமென்ட் வேல வேற கேக்குதா? சொல்லுடி, துரைய நீ மட்டுமா கொன்னியா, இல்ல ஆட்கள வச்சிக் கொன்னியா? ஸார்! இவௗயெல்லாம் வெளியில விட்டுருக்கப்பிடாதுன்னு நான் அப்பவே சொன்னது, சரியாப் போச்சுது பாருங்கோ சார்."

சரோசா, எதுவும் பேசாமல், நின்று கொண்டே செத்துப் போனவள் போல் தோன்றினாள். இன்ஸ்பெக்டர், துண்டு சிகரெட்டை ஆஷ்டிரேயில் வைத்து அழுத்திவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். கோபம் வந்தால் அவர் செய்கிற முதல் காரியம் இதுதான். செயின்-ஸ்மோக்கிங். 'என்ன நினைச்சிருக்கான் இந்த சப்-இன்ஸ்பெக்டர்? அப்போ ஒரு பேச்சு, இப்போ ஒரு பேச்சு. பிரமோஷன்ல போகட்டும்... அதுக்காக பேச்சை மாத்துறதா? இவள விடும்படி சொன்னதே இவன்தானே?"

இன்ஸ்பெக்டருக்கு, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேல் கோபம் கூடியதால், சரோசா மீதிருந்த கோபம் குறைந்தது. ஆனாலும் அவள் போட்ட அந்த பெட்டிஷனை நினைத்துக் கொண்டார். 'எவ்வளவு தைரியம் இருந்தா கமிஷனருக்கு கம்ப்ளைண்ட் எழுதுவாள்? அதுவும் ஏ.சி-யா பிரமோஷன் வரப்போற சமயத்துல. டெப்டி கமிஷனருக்கு ஒரு போன் போட்டு, அவர ‘விடுவிடு'ன்னு விடலாமா? ‘நீங்க அப்ப விடச் சொன்னீங்க... இப்போ அப்படிச் சொல்ல முடியுமா'ன்னு சவால் விடலாமா?

"இந்தாப்பா, இவள அந்த ரூமுக்குள்ள கொண்டு போ; விசாரிக்கிறபடி விசாரிச்சா சரியாயிடுவாள்."

சரோசாவை, அங்கிருந்து உடம்பையும், உள்ளத்தையும் விசாரிக்கிற ஒரு நீண்ட, நெடிய இருண்ட அறைக்குள் இட்டுப் போவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வந்தபோது, நான்கைந்து பெண்கள் வாசலில் சிறிது நேரம் நிதானித்து நின்றுவிட்டு, பிறகு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி கறுப்புக் கோட்டுப் போட்டிருந்தாள். சரோசாவிடம் 'குசலம்' விசாரிப்பதற்காக இருக்கையை விட்டு எழப்போன இன்ஸ்பெக்டர், இப்போது அங்கே வந்தவர்களுக்காக மரியாதையின் பொருட்டு, அப்படி எழுந்ததுபோல் ஒரு சிரிப்புச் சிரித்தபடியே, "வாங்கம்மா... வாங்க" என்று சொன்னபடியே உட்கார்ந்தார். பிறகு ஐந்தாறு விநாடி இடைவெளி விட்டுவிட்டு, "இந்தாப்பா, இவள வெளியில கொண்டு போய் நிறுத்து" என்றார். உடனே, அங்கு வந்த பெண்களில் தலைவி மாதிரியான அந்தம்மா, உட்காரப்போன நாற்காலியைப் பிடித்துக்கொண்டு நிதானமாகச் சொன்னார்:

"இந்த சரோசாவும் இங்கேயே நிற்கட்டும் சார்... நாங்க வந்ததே இவளுக்காகத்தான்."

இன்ஸ்பெக்டருக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அந்த வேகத்தில் ஒரு சிகரெட்டை எடுக்கப் போனார். பிறகு எடுத்ததைக் கீழே போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே முந்திக் கொண்டார்:

"இந்த மாதிரி கொலைகாரிங்களுக்கு ஒங்கள மாதிரி ஆட்கள் வரப்படாதும்மா."

நாற்காலியில் லேசாய் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்தம்மா, இன்ஸ்பெக்டரின் இருக்கைக்கு எதிரான நாற்காலியின் முனைக்குத் தன்னை நகர்த்திக் கொண்டு, அவரை, உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை தாளமாட்டாது, அவர் அல்லாடினார். நியாயம் கேட்க வரும் வக்கீல்களைக்கூட அடித்துப் பிடித்து உள்ளே போட்டவர்தான். காவலில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக நிராயுதபாணிகளாக - அதுவும் வெறுங்கையோடு வருகிற சொந்தக்காரர்களைக் கூட குற்றவாளிகளுக்கு உடந்தை என்று உள்ளே தள்ளியவர்தான். ஆனால், இந்தம்மாவை அப்படிச் செய்ய முடியாது. தொலைக்காட்சியை சாட்சியாக வைத்து, அமைச்சர்களை கதாநாயகர்களாக்கி, பெண்களுக்கு ஏதோ பாடுபடுவது போல பாவலா செய்து, அரசாங்க மானியத்தை வாங்கித் தின்னும் டைப் அல்ல இவர். மந்திரிகளையும், பெரிய மனிதர்களையும் கைக்குள் போட்டு, ஏற்கனவே குழந்தை பெற்று, கணவன்களோடு வாழும் பெண்களுக்கு மேடையில் அதே கணவன்களோடு போலிக் கல்யாணம் செய்து வைக்கும் அமைப்பும் அல்ல, இவரது அமைப்பு. ஓசைப்படாமல் ஆங்காங்கே உதவி செய்கிறவர்கள். இவர்கள் எப்போதாவது ஓசை எழுப்பினால், அதை துப்பாக்கி ஓசையாலும் தடுக்க முடியாது என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். ஆகையால், "ஒன் மினிட் மேடம்" என்று சொல்லிவிட்டு யாருக்கோ அவசர அவசரமாய் டெலிபோன் செய்வதுபோல், டயலில் ஒன்பது எண்களைச் சுழற்றினார். பிறகு லைன் கிடைக்காதவர்போல் முகத்தைச் சுளித்துக்கொண்டே அந்தம்மாவைப் பார்த்தபோது, அவள், நேரிடையாகவே கேட்டாள் :

"இந்தப் பெண்ணோட பேக்ரவுண்ட் எனக்கு நல்லாவே தெரியும் சார். பாவப்பட்டவள். இவளோட அண்ணாத்தே, அதான் ஒங்களுக்கும் தெரிஞ்ச பெரிய மனுஷன் இருக்காரே..."

இதற்குள் எஞ்சிய நான்கு பெண்களில் வாய் தூக்கலான ஒருத்தி இடைமறித்தாள்:

"எதுக்காக, ஒரு தாதாவுக்கு 'ரே' போடுறீங்க?”

"நீ சும்மா இரும்மா. அந்தப் பெரிய மனுஷன் இந்தப் பெண்ணை, ராத்திரியோட ராத்திரியா வேட்டையாடி இருக்கான். எப்படியோ தப்பித்து இந்தப் பொண்ணு, கமிஷனருக்குப் புகார் செய்திருக்காள். ஒங்களுக்கு நேரடியாய் எழுதாதது தப்புத்தான். அதுக்காக இவ்வளவு பெரிய குற்றத்த அவள்மேல் சுமத்தப்படாது. ஒங்களுக்கும் பிள்ளகுட்டி இருக்கு."

இன்ஸ்பெக்டருக்கு, இப்போதும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல் இருந்தது. அதை, அந்தம்மா ஆட்சேபிக்கப் 19 போவதில்லை; ஆனாலும் ஒரு தயக்கம். இந்தச் சமயம் பார்த்து நழுவப் போன கிரைம் சப்-இன்ஸ்பெக்டரை ‘சிட்-டவுன்' என்றார். பிறகு பட்டும், படாமலும் பார்த்தபடியே, நீதிமன்றங்களில் கூறப்படுமே கசங்கிப்போன வார்த்தை, "சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற தொனியில் பேசினார் :

"நீங்க நினைக்கிறது மாதிரி இல்லம்மா. இந்தப் பொண்ணோட புகார் கமிஷனர் கிட்டேயிருந்து என்கிட்டே என்கொயரிக்கு வந்தது. நான் விசாரிக்கப் போனேன். அப்போதுதான் ஒரு அக்கிரமம் தெரிஞ்சுது. துரை என்கிற கள்ளச்சாராயக் காரனோட பிணம், ஒரு கோணிப்பையில் மகாபலிபுரம் கடலுல மிதந்ததுக்கும், இவளுக்கும் சம்பந்தம் இருக்குது. நாங்காளா தேடாமல் தானாக கிடச்ச கேஸ்."

"தொரண்ணா, அய்யோ... தொரண்ணா..."

“ஏய், சும்மா இருடி..."

இன்ஸ்பெக்டர் அப்படிக் கத்திவிட்டு, முகம் குன்றிய அந்தம்மாவை, குற்ற உணர்வோடு பார்த்தார். நீண்டகாலப் பழக்கம் அப்படிப் பேச வைத்து விட்டது. அதைச் சரிக்கட்டும் வகையில், "இந்தாப்பா, ஏழு கப் டீ வாங்கிட்டு வா” என்று சத்தம் போட்டார். வெளியே நிற்கும் எந்த சிபாரிசுக்காரரின் காதுலயாவது விழுந்து அவன் வாங்கிக்கிட்டு வருவான் என்கிற நம்பிக்கை. பிறகு அவர், கதை சொல்வது போல் சொன்னார்:

"நான் நேரடியா விசாரிக்கலதான். எங்கம்மா இந்த செக்யூரிட்டி காலத்துல டைம் இருக்குது? ஊருக்கு இளைச்சவன் இன்ஸ்பெக்டர். சரி அந்தக் கதையை விடுங்க. இவரு கிரைம் சப்-இன்ஸ்பெக்டர். அவரை விசாரிக்கச் சொன்னேன். இவர் விசாரணையில் இந்த சரோசா கள்ளச் சாராயம் கடத்தினவள் என்கிறதும், இவளுக்கும் கொலையான துரைக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு, இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஒருநாள், நைட்ல இவள், நாயினா வெளியில கிடக்கிறானே ஒரு கிழவன், அவனோட, துரை வீட்டுக்குப் போயிருக்காள். அவனைக் கண்டபடி திட்டியிருக்காள். துரை பொண்டாட்டி இதைத் தட்டிக் கேட்டிருக்காள். உடனே இவள், அவளையும் பிடிபிடின்னு பிடிச்சிருக்காள். அந்தம்மா, கொஞ்சம் நாகரிகமானவள். கதவைப் பூட்டிக்கிட்டாள். அன்னிக்கி ராத்திரியே கொலை நடந்திருக்கு. சூழ்நிலை சாட்சியங்கள் இவளைத்தான் கொலைகாரின்னு சுட்டிக்காட்டுது."

இன்ஸ்பெக்டர், தான் பேசியது சரியா என்பதுபோல், சப்-இன்ஸ்பெக்டரை கண்ணசைத்துப் பார்த்தார். அவரும் தலையாட்டினார். அப்போது சிறிது நிசப்தம். அதைக் கலைத்து தேநீர் கோப்பைகளின் சலசலப்புக்களில், அந்த அம்மாவுடன் வந்த பெண்கள், சுவரில் சாய்ந்தபடி, சுவாசிப்பதில் மட்டுமே உயிரை வைத்திருப்பது போல் தோன்றிய சரோசாவையே பார்த்தார்கள். அந்த அம்மாவும் தம்மிடம் நீட்டப்பட்ட தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ஆனால், வாயருகே கொண்டு போகவில்லை. சரோசா குற்றமற்றவள் என்று நம்பிக்கை ஏற்பட்டாலும், அவள் கண்ணீரும், கம்பலையுமாய், அவசர அவசரமாய் தன்னிடம் கூறிய தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் போல் இருந்தது. சரோசாவையே இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பேசச் சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்று அந்தம்மாள் யோசித்தாள். இந்த யோசனை வேளையையே தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்வது என இன்ஸ்பெக்டர் உபதேசிதார்:

"பேசாமல் வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, விதவைப் பிரச்சினை, பெண் தொழிலாளர் சம்பளம் இந்த மாதிரியான பிரச்சினைகளை மட்டும் எடுத்துக்கங்கோ மேடம். சேரிப் பொண்ணுங்கக் கிட்ட வராதீங்கோ. இவளுக ஒங்களையும் பார்ப்பாளுங்க; எங்களையும் பார்ப்பாளுங்க."

"நீங்க சொல்றது, 'ராமன் கெட்டதும் பெண்ணாலே, ராவணன் கெட்டதும் பெண்ணால' என்கிறது மாதிரி ஒரு தப்பான அணுகுமுறை.”

“அப்படியில்லம்மா! கேளுங்க, இவளப்பத்தி... ஒங்களவிட எங்களுக்கு நல்லாத் தெரியும். அசல் கேடி. அதனாலதான் சொல்லுறேன். நீங்க இப்போ எந்த அபலைப் பெண்ணுக்காவது உதவி செய்யணுமுன்னா அது துரை பெண்டாட்டிக்குத்தான். பாவம் படுத்த படுக்கையா கிடக்காள்."

இதற்குள் அந்தம்மாவுடன் வந்த பெண்கள் மத்தியில் லேசான சிரிப்பு. இன்ஸ்பெக்டர் அப்படிச் சொன்னதும் அவர்களில் ஒருத்தி “யாரோடயாம்” என்று தோழிகளிடம் கிசுகிசுப்பாய் சொல்லி விட்டாள். இந்தச் சிரிப்பு பெரிதானதும், அந்தம்மா அப்போதைய சூழலை நினைவுபடுத்துவது போல் அவர்களை எரிச்சலோடு பார்த்தாள். அந்தச் சிரிப்பு அண்ணாத்தேக்கு துணைபோன தன்னைப் பற்றிய சிரிப்பாய் இருக்கும் என்று உடனடியாக நினைத்துக்கொண்ட இன்ஸ்பெக்டருக்கு, இப்போது கோபம் வந்தது. அந்த அம்மாவிடம் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற தோரணையோடு பேசினார் :

"அப்போ போயிட்டு வாரீங்களா? செய்த கொலையை மறைக்கிறதுக்குத்தான், இந்த சரோசா, கமிஷனருக்கு பெட்டிஷன் போட்டிருக்காள். இவள் செட்டுல எவனோ ஒருத்தன், எவரையோ வச்சு எழுதிக் கொடுத்த புகார அனுப்பியிருக்காள். துரையை கொன்னது இவள்தான். அதுக்கு முன்னால, இளங்கோன்னு, ஒரு அப்பாவி இளைஞனை கிட்டத்தட்ட உயிர் போகிற அளவுக்கு அடித்துப் போட்டிருக்கிறாள். இதுவும் விசாரணையில தெரிய வந்திருக்கு. அதனால, இவள்தான் துரையை கொன்னாள் என்பதை யாராலயும் மறுக்க முடியாது."

"ஆனா, என்னால மறுக்க முடியும் சார்"

அங்கிருந்தவர்களும், இன்ஸ்பெக்டரும் குரல் வந்த திசையை நோக்கியபோது, அவர்கள் கண்களில் முட்டுவதுபோல் கான்ஸ்டபிள் திருமலையப்பன் உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டரை அடிக்கப்போவது போல் ஒரு சல்யூட் போட்டார். பிறகு, தண்ணீர் கொட்டுவது போல் ஒப்பித்தார்:

"துரை கொலை செய்யப்பட்டதாய் கூறப்படும் ராத்திரி, எனக்கு நைட்டுல பீச்சுல பீட்டு சார். இந்த சரோசாவ, ஐந்தாறு ரவுடிங்க தொரத்தி வந்தாங்க. நான்தான் ஓடிப்போய் இவளையும், இவள் நாயினாவையும் காப்பாத்தினேன். ரெண்டு பேரையும், என் பாதுகாப்புல வச்சிட்டு, மறுநாள் காலையில பூக்காரி ருக்குமணி வீட்டுல விட்டுட்டு வந்தேன்.”

இன்ஸ்பெக்டர், திகைத்துப் போனபோது கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தன்னையும், அறியாமலேயே கத்தினார்:

"ஆக நீ ஒரு கொலைகாரிக்கு புகலிடம் கொடுத்திருக்கே. ஒன்னை சர்வீஸிலிருந்து சஸ்பெண்ட் செய்து, ஒன் யூனிபாரத்தை நானே கழட்டுறேன் பார்.”

திருமலையப்பன் வீறாப்பாய் நின்றார். இதற்குள் கறுப்பு அங்கி போட்ட பெண் எழுந்தாள். அத்தனை சட்டங்களையும் வாய்க்குள் வைத்திருப்பது போல் கன்னங்களை பலூன்கள் மாதிரி உப்பவைத்தாள். பிறகு சராமாரியாகப் பேசினாள் :

"இந்தியன் பினல் கோட் சட்டத்தின்படி...”
---------------

அத்தியாயம் 34

அன்பு மனைவி பிரசவிக்கும் அறைக்கு உள்ளேயும் போக முடியாமல், அதே சமயம் வெளியேயும் நிற்க முடியாமல் தவிக்கும் கணவன்போல் இளங்கோ தவித்தான். அந்தக் காவல் நிலையத்திற்கு வந்து விட்டான். ஆபீஸ்காரர்களை மேலும் கொஞ்சம் திட்டிவிட்டு, அடித்துப் பிடித்து ஓடி வந்தான். சரோசாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால், ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேகமான வேகத்தில் வந்தவன், அந்தக் காவல் நிலையத்திற்கு அருகே அங்குமிங்குமாய் அல்லாடினான். அப்போது சரோசாவுடன், ஆட்டோவில் போலீஸ்காரர் சகிதமாய் வந்த முனியம்மா, அவனைப் பார்த்து லேசாய் சிரித்தபடி கையாட்டி விட்டுச் சென்றது, அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரோசாவும் அவனைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. ஆனால், பார்த்தாளா என்பது சந்தேகமே. எப்படியும் முனியம்மா வெளியே வந்ததும், அவளை விசாரித்துக் கொள்ளலாம் என்று உள்ளே போகாமலேயே நின்றான். சரோசாவை ஜாமீனில் எடுப்பதற்குத் தனக்குத் தெரிந்த வக்கீல்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் இல்லாமல், நட்பின் அடிப்படையில் மனதிற்குள் வரிசைப்படுத்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில், பாமா ஒரு 'ஜே' பேருந்தில் இருந்து இறங்கினாள். அவள் முகம் தெளிவற்றுக் கிடந்தது. கன்னங்கள் லேசாய் குழிபட்டுக் கிடந்தன. ஆடை அக்கறையற்ற வகையில் தென்பட்டது. ஒற்றைச்சடையின் முடிவில் படர்ந்து விரிந்து மெல்லிய இரும்புக் கற்றைகள் போல் தோற்றம் காட்டும் முடி, இப்போது ஒரே ‘சடையாய்’, பூவற்று அங்குமிங்குமாய் பிசிறு தட்டி ஆடியது.

இருவரும் ஒருவரையொருவர் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள். பழக்க தோசத்தில் மெல்ல நெருங்கினார்கள். இறுதியில் பாமா பின்வாங்கினாள். அவன் சட்டையில் ஒரு பை கிழிந்து பனியனைக் காட்டிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு நடந்தாள். ஆனாலும், குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி கால்களை மட்டும் அங்குமிங்குமாய் தரையில் தேய்த்தாள். இப்போதுதான் ஒருவரையொருவர் முதன்முதலாக நேருக்கு நேராய் சந்தித்துக் கொள்கிறார்கள். அவனையே பார்த்த பாமா, முகத்தைக் குவித்து அங்குமிங்குமாய் தாழ்த்தி, தோள்பட்டைகளை ஈரப்படுத்தினாள். தந்தை ரமணனுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறும்போது இளங்கோவின் பார்வையைத் தவிர்த்தவள், இப்போது அதைத் தடுக்க முடியாமல் தடுமாறி நின்றாள். "நல்லா நாலு கேள்வி நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்கணும். அவர் மட்டும் என்கிட்ட பேசட்டும், அப்போ தெரியும் சேதி” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, இனிமேலும் ஏமாற மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு நின்றாள்.

இளங்கோ, அவளை வேகவேகமாக நெருங்கினான். பிறகு அவளருகே போக வேண்டாம் என்பதுபோல் பாதியிலேயே நின்றான். அப்புறம் அதை ஈடு செய்யும் வேகத்தில் நடந்தான். அவளோ, அவனைப் பார்த்தும் பாராததுபோல் முந்தானை முனையைத் தூக்கி முகத்தில் வீசிக்கொண்டு, அவனிடம் நாலு கேள்வி நல்லாக் கேட்கணும் என்ற தோரணையில் சாய்வாகப் பார்த்தபடியே நின்றாள். அந்தப் பார்வைச் சரிவாலோ என்னமோ, இளங்கோ அவளிடம் முன்னைப்போலவே நெருங்கி நின்றான். உடனே அவள் ஒரு அந்நியனிடமிருந்து விலகுபவள் போல் சிறிது விலகினாள். பிறகு இவனும் மரியாதைக்குரிய தூரத்திற்கு பின்வாங்கிக் கொண்டே, மரியாதையற்ற குரலில் கேட்டான் :

“அந்தப் பாவிப் பொண்ணு சரோசா, நீ நெனைச்சது மாதிரியே ஒரு கொலை கேசுல சிக்கிட்டாள். அதோ அந்த அறைக்குள்ளேதான், ஒருவேளை இந்நேரம் உதை வாங்கிட்டிருப்பாள். நீங்க எல்லாரும் விரும்பினதுமாதிரி அவளுக்கு ஆறு வருஷம் கிடைக்காது. தூக்குத் தண்டனைதான் கிடைக்கும். இப்போ ஒனக்கு திருப்திதானே? ஒங்கப்பா கிட்டயும் சொல்லு... எங்கம்மாக்கிட்டயும் சொல்லு. சந்தோஷப்படுவாங்க. பிறத்தியார் கஷ்டத்துல சந்தோஷம் பிறக்கும் என்கிறதை ஒங்க மூலம் தெரிஞ்சுக் கிட்டேன்."

பாமா, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவன் முகத்தின் ஒவ்வொரு சுருக்கமும், வேதனையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி வைத்திருப்பதுபோல் தோன்றியது. அவளுக்கும் என்னமோ போலிருந்தது. ஆனாலும், வீம்பாகப் பதிலளித்தாள் :

"யாரும் யாரைப் பற்றியும் என்கிட்டப் பேசவேண்டிய அவசியமில்லை."

"நானும் இப்போ ஒன்கிட்ட ஆசையில பேச வரல. ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு உதவி செய்தால், அது காதலின் சமிக்ஞைன்னு நினைக்கிற உன்னை மாதிரி பெண்கள் கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்ல. ஆனாலும், அவளோட மனிதாபிமானத்தை உன்கிட்ட சொல்லியாகணும். நானும் அவள்கிட்ட இன்-டிப்பரண்டா நடந்துக்கிட்டேன். ஆனாலும், அவள் போலீஸ்கூடப் போகிற நேரத்துல கூட, நாம ரெண்டு பேரும் ஒண்ணாச் சேரணுமுனு சொல்லிட்டுப் போறாள்; அப்படிச் சேரணும் என்கிறதுக்காக நான் சொல்லல. காலேஜ்காரியான ஒன்னையும், என்னையும் ஒரு சேரிக்காரி மனிதாபிமானத்துல மிஞ்சிட்டான்னு சொல்ல வந்தேன். சரி... இதையெல்லாம் ஒனக்குப் புரிஞ்சுக்க முடியாது."

“இருக்கலாம், ஆனாலும் சரோசாவ இரண்டு பேருமா சேர்ந்துதான் மீட்டினோம். நீங்க ஆஸ்பத்திரியில் கிடக்குறபோது பக்கத்திலேயே பழிகிடந்தேன். ஒங்களுக்காக ஏயேசு, கிருஷ்ணன், அல்லா-ன்னு மனசுக்குள்ளேயே பல தடவை மதம் மாறினேன். ஆனாலும் நீங்க என்கிட்ட உண்மையைச் சொல்லல. உயிருக்கு உயிராப் பழகின ஒருத்திக்கிட்ட உண்மையைச் சொல்லாத ஒருவரு இப்பக்கூட சொல்றேன் - எனக்குத் தேவையில்ல.”

இளங்கோ, அவனை விக்கித்துப் பார்த்தான். அவள் சொல்வதில் நியாயம் இருப்பது புரிந்தது. "தப்புத்தான்” என்று சொல்லிவிட்டு, அதற்காக அவள் மன்னிக்க வேண்டும் என்பதுபோல் தலைக்கு மேல் ஒரு கும்புடு போட்டுவிட்டு அவளையே தழுதழுத்துப் பார்த்தான். பிறகு கண்களை அங்குமிங்குமாய் ஆட்டிப் பன்னீர் தெளிப்பது போல் தெளித்தபடி மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தான். அவனுள் இப்போது, சரோசாவே முழுமையாக நின்றாள். 'சரோசாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். சரோசா வலியப் பேசும்போது, நான் முகம் கொடுத்திருந்தால், அவள் பிரச்சினைகளைச் சொல்லியிருப்பாள். என்மூலம் அவளுக்கு ஒரு வழிகூடக் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது வழியற்று நிற்கிறாள். போலீஸ்காரன், அவளை அடிப்பதைவிட நான் அவளிடம் பேசாமல் இருந்தது பெரிய கொடுமை. அவளை, அவள் மனசிற்குள்ளேயே சிறை போட்டுட்டேன். அதிலேயே அவள் சந்தோஷத்தையும் தூக்குப் போட்டுட்டேன்..'

இளங்கோ, அந்தப் போலீஸ் வளாகத்தையே வெறித்துப் பார்த்தான். இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல், அந்தக் காவல் நிலையத்திற்குள் போனான். யாரோ ஒருவர் தோளில் கை போடுவது போலிருந்தது. முகத்தைத் திருப்பினால் ஒரு வளைக்கரம். பின்பக்கமாய் திரும்பினால் பாமா... நீர் முட்டும் கண்களுடன் அவன் தோளில் சாய்ந்தாள். இளங்கோ, அவள் தலையை நிமிர்த்தினான். அவள் தோளைப் பிடித்திழுத்து தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு அவள் கைகளைப் பற்றினான்.

சரோசா, ஐந்தாறு பெண்களுக்கு மத்தியில் அலுங்காமல், குலுங்காமல், அங்கேயும் இங்கேயுமாய் பார்க்காமல், படியிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்திருந்த கும்பலுக்குப் பின்னால் அவள் நாயினாவும், ருக்குவும் கோவிந்தும், வீட்டுக்கார அம்மாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

சரோசா, இளங்கோவைப் பார்த்ததும். இறங்கிய படியில் அப்படியே நின்றாள். அவனோடு சேர்ந்து அர்த்தநாரீஸ்வரி போல் நின்றவளைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிரிச்சியில் அவள் மெல்ல மெல்ல சுயஉணர்வு பெற்ற, அவர்கள் பக்கமாய் குதித்தாள். முன்னால் காம்பவுண்ட் சுவரிலிருந்து ஏறிக் குதித்தாளே அப்படிப்பட்ட குதிதான்; ஆனால், எவ்வளவு வித்தியாசம்! சரோசா இளங்கோவைக் காட்டி, அந்தம்மாவிடம் ஏதோ பேசப் போனாள். உணர்ச்சிக் குவியலில் பேச முடியவில்லை. முனியம்மா, அவளுக்கு வாய் கொடுத்தாள் :

'இதுதாம்மா இளங்கோ என்கிற தம்பி. பாவம் இவரையும் ஆபீசுல ‘ஒருமாதிரி' பார்க்கிறாங்க. ஆயிரத்துல ஒரு தம்பி. இன்னிக்குத்தான் இவரு அதிர்ந்து பேசினத பார்த்திருக்கிறேன். கேஷுவல், பர்மனெண்டுன்னு வித்தியாசம் காட்டாதவரு. சாரே! உனிக்கி எப்போ கல்யாணம் ஆச்சு? கடைசியில கேஷுவல்னு நீயும் எனக்கு இன்விடேஷன் கொடுக்கல பாரு."

பாமா, நாணிக்கோணிய போது, முனியம்மா சொன்னதன் தாத்பரியம் புரியாத மனோநிலையில், இளங்கோ “என்ன ஆச்சுது” என்று ருக்குவைப் பார்த்துக் கேட்டான். பிறகு தனது கேள்விக்குரியவள் அந்த அம்மாதான் என்பதுபோல் அவளைப் பார்த்தான். அந்தம்மா, சரோசாவின் கையைப் பின்பக்கமாகப் பற்றி, தன் தோளில் போட்டுக் கொண்டு, அவள் மூக்கைத் தடவி விட்டு, அந்தத் தள்ளாடும் மனிதரை சிறிது நேரம் பார்த்தபடி நின்றவள், இளங்கோவைப் பார்த்து தன்னிலை விளக்கமளித்தாள்:

"நாங்க சமதர்ம மாதர் மன்றத்தைச் சேர்ந்தவங்க. எங்களால ஒரு அண்ணாத்தைக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. ஆனால், சரோசாவை மாதிரி எளியவங்கள மீட்க முடியும். இனிமேல் இவள யாரும் தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கேன். அப்படிச் செய்யறது எங்கள மட்டுமில்ல, எங்க அமைப்பையும் எங்க அமைப்புக்குப் பின்னால இருக்கிறத

இருக்கிறத ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளையும் வம்புக்கு இழுக்கிறதுக்கு சமானமுன்னு போலீசுக்கும் தெரியும், அண்ணாத்தைக்கும் தெரியும்."

சரோசா, முன்பின் அறியாத அந்தப் புதிய பெண்களின் அன்புப் பார்வையில் நெகிழ்ந்தாள். சற்றுத் தொலைவில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த ருக்குமணியை கையாட்டி, தன் பக்கம் கூப்பிட்டாள். மெல்ல மெல்ல நடந்தவளை வேகவேகமாய் பிடித்திழுத்து, அவள் முதுகுக்கு சுவர்போல் ஆனாள். இளங்கோவைப் பார்த்துவிட்டு, அவன் அருகே இருக்கும் பாமாவையும் பார்த்துவிட்டு, அவர்கள் இருவரையும் கண்களால் சோடி சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சியில் லேசாய் தலையாட்டினாள். உடனே, அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டவள்போல், பாமா, இளங்கோவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சரோசாவின் பக்கம் போய் நின்று கொண்டாள்.

அந்தம்மா, தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். புறப்படுவதற்கு ஆயத்தமாக கால்களை செருப்பு நுனிவரை நகர்த்திவிட்டு, பிறகு முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்ததுபோல், செருப்புக்களை அகற்றிவிட்டு, சரோசாவைப் பார்த்துக் கேட்டாள் :

“ஒனக்கு ஆபீசுல வேலையும் போயிட்டுது. இனிமேல் நிச்சயம் சேர்க்க மாட்டாங்க... ஒரு மாசம் வரைக்கும் மட்டும்தான் கேஷுவலா இருந்த ஒனக்கு எங்களால் அந்த ஆபீசுல எதுவும் செய்யவும் முடியாது. அமைச்சர்கிட்ட சொன்னாலும் கடைசியில அதுல ஒரு கிளார்க்தான் முடிவெடுப்பான்."

ருக்கு, சரோசாவை தன் பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் கெஞ்சுவதுபோல் பேசினாள்:

"ஆமாம்மா... அந்த ஆபீசுல செத்துப் போன ஒரு டிரைவரோட சம்சாரத்துக்கே ஒன்பது மாசம் ஆகியும் பாடாதிப் பசங்க பென்ஷன் தரலயாம். சரோசா அதுக்காக எவ்வளவு வருத்ததப்பட்டா தெரியுமா? அப்புறமா, நாயினாவோட தனி மரமா நிக்கிற இந்த தற்குறிக்கி, நீங்கதாம்மா, ஒரு வழி காட்டணும். அவளுக்கு யாருமே இல்லம்மா. திருந்தினவங்களுக்கு சரியான வழி கிடைக்காட்டி, அப்படித் திருத்துறது, பாதிக்கிணறு தாண்டினது மாதிரிம்மா. பல்லும் பூடும்; சொல்லும் பூடும். இல்லியா கோவிந்து மச்சான்?"

கோவிந்து மச்சானுக்கு இல்லியா என்பது 'மில்லியா' என்று கேட்டது; உடனே, அதற்காக அவன் மகிழ்ந்து போய் தலையாட்டினான். அந்தம்மா சற்று விலகிப் போய் நின்று கொண்டு தன்னுடன் வந்த பெண்களை அங்கே வரும்படி முகம் ஆட்டினாள். அந்தப் பெண்கள் அவள் அருகே போனார்கள். எல்லோரும் கும்மி அடிப்பது போல் வட்டமாய் நின்று கொண்டு தலைகளைக் குவித்தார்கள். சிறிது நேரத்தில் அந்தம்மா சிறிது, முன் நடந்து, சரோசாவின் தோளில் கை போட்டபடியே அபயம் அளித்தாள். அவன் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் பிரச்சினைக்கு, விடையளித்தாள்:

"எங்க அமைப்புக்கு ஒன்ன மாதிரி பல அபலைப் பெண்கள் வராங்க. பெரிய இடத்து அபலைகள், சிறிய இடத்து அபலைகள்னு... இதில் சாதி பேதமோ, அந்தஸ்து வித்தியாசமோ கிடையாது. அபலைங்க என்கிற ஒரோயொரு அந்தஸ்துதான். இவங்களுக்காக பல இடங்களில் பல ஆபீசர்களுக்கு லட்டர் எழுதுறோம். அதுகளை கொண்டு கொடுக்கணும். எங்க சங்கத்துக்கு பல கிளைகள் இருக்குது. அவங்களுக்கு சர்க்குலர் கொண்டு போகணும். அவங்க எழுதுற லட்டர்ங்களை கொண்டு வரணும். ஆபீசையும் பார்த்துக்கணும். ஆபீசுக்கு இப்போ கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்குறோம். அதுல ஒரு குடியிருப்பும் கட்டுறோம். அது தயாரானதும், நீ அங்கேயே ஒன் தாத்தாவோட தங்கிக்கலாம். நான் சொன்ன வேலையெல்லாம் செய்யறதுக்கு ஒனக்கு மாசம் 700 ரூபா தாறோம். உன்ன வேலைக்காரியா கூப்பிடல. எங்களில் ஒருத்தியாகத்தான் கூப்பிடுறோம். நானே இப்படி வந்தவள்தான். உன்ன, பணிவிடைக்காகக் கூப்பிடல. எங்க பணிகளைப் பங்கிட்டுக்கத்தான கூப்பிடுறோம். எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை, 'தோழர்', 'தோழியர், என்கிறதுதான்; வேலைக்காரன், வேலைக்காரி என்கிறதில்லை. என்ன சொல்றே சரோசா?''

பல பொதுக்கூட்டங்களை இஷ்டத்துக்கு விரோதமாகக் கேட்டுப் பழகிய ருக்குமணி, தன்னையும் அறியாமலேயே கை தட்டினாள். சரோசாவை தூக்கிப் பிடித்து அவள் கன்னத்திலும், உச்சியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

சரோசாவுக்கு உச்சி முதல் பாதம் வரை எதோ ஒன்று, பூப் பூவாய் விழுவதுபோல் இருந்தது. மனதிற்குள் இதயம் என்று சொல்லுகின்ற இடம் பிரபஞ்சம்போல் விரிவது மாதிரி தோன்றியது. இதுதான் மகிழ்ச்சி என்று ஏதோவொன்று முதன்முறையாய் அவளிடம் உணர்த்திக் கொண்டிருந்தது. இதயத்தை யாரோ பூவால் வருடிவிடுவது போல் இருந்தது. அங்கிருந்து வாய்க்குள் சிரிப்புச் சிரிப்பாய் ஏதோவொன்று வந்தது. அதுவே அழுகை அழுகையாயும் நின்றது. அவள் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள ஆள் தேடுபவள் போல் இளங்கோவையும், பாமாவையும் ஒருசேரப் பார்த்தாள். ருக்குவை தனித்துப் பார்த்தாள். பின்பக்கமாய் நின்ற நாயினாவை முன்பக்கமாய் நகர்த்திக் கொண்டாள். பின்னர் அந்தம்மாவை கண்ணீரும் கம்பலையுமாகப் பார்த்து, "நான் சேரிக்காரிம்மா. படிக்காத முண்டம்மா” என்றாள். இப்படிச் சொன்னதினால் ஒருவேளை வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்று கைகளை உதறிக்கொண்டே, "ஆனாலும், நானு சாவுறது வரைக்கும் விசுவாசமா இருப்பேம்மா...” என்றாள்.

அந்தம்மா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவள் மட்டுமே அங்கே நிற்கிறாள் என்ற அனுமானத்துடன் அமைதியாகப் பேசினாள்:

"இந்தக் கால:ததுல படிச்சவங்கதான், ஏன் படிச்சோமுன்னு தலைகுனியணுமே தவிர, படிக்காத நீ தலைய நிமிர்த்த முடியாட்டாலும் அப்படியே வச்சுக்கலாம். சேரிக்காரி என்கிறதுக்காக நீ பெருமைப்படணும். காரணம், கூடிக்கிட்டே அடிச்சுக்கிறவங்க ஆபீசுக்காரங்க. அடிச்சிக்கிட்டே கூடிக்கிறவங்க சேரிக்காரங்க. சரி, அதவிடு...யாரு கண்டா, நம்ம மன்றத்துக்கு நீயே, ஒரு காலத்துல தலைவியாகலாம். எல்லாத்தையும் விட ஆயிரக்கணக்கான ஆட்களைக்கொண்ட ஒரு பெரிய குடும்பச் சங்கிலியில் நீ ஒரு வளையமா இருக்கப் போறே! இந்தக் கூட்டுக் குடும்பத்துல இனிமேல் நீயும் ஒருத்தி."

சரோசா, அந்தம்மாவை, அம்மாவாக நினைத்து மார்பில் சாயப்போனாள். இதற்குள், அவள் நாயினா, பேத்தியை இழுத்துப் பிடித்து தன் தோளில் போட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் வீட்டுக்காரம்மா, ஒரு பாயிண்டைக் கொண்டு வந்தாள்.

"இந்தப் போலீஸ்காரன் என்னை எப்படிம்மா கூட்டிக்கிட்டு வரலாம்? இந்தப் பாயிண்ட அந்தக் கறுப்புக் கோட்டுப் பொண்ணு ஏம்மா கேட்கல?”

"ஆயா, நீ எப்படி கரண்ட, சாப்பிடும்போது கட் பண்றியோ, அப்படி, அந்த போலீஸ்காரங்க செய்ததும் தப்புதான்."

பூக்கார ருக்குவை, வீட்டுக்காரம்மா கோபத்தோடு பார்த்துவிட்டு, பிறகு சிரித்தாள். இந்தச் சமயத்தில் போலீஸ் மாடி மேடையில் திருமலையப்பன் தோன்றினார். எல்லோரும் அவரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். அது அவருக்கு விடை கொடுப்பது போலவும், அதே சமயம் அவரை ஒருமித்து வணங்குவது போலவும் இருந்தது. அந்தக் கைகள் நிமிர்ந்தவை நிமிர்ந்தவைகளாக நின்றன.

சரோசா, கோழி முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சு போல் மனதாலும், உடலாலும் லேசுப்பட்டாள். தாய் கோழியின் இறக்கைகளுக்குள் அடைக்கலமாய் நிற்கும் குஞ்சு போல் அவளுக்குள் ஒரு தன்னம்பிக்கை; பிறகு அண்ணாத்தே என்ற கழுகைப் பார்த்தபடியே, தாயின் இறக்கைக் கைகளில் நம்பிக்கை வைத்து, வெளியே நகரும் குஞ்சுபோல் ஒரு எண்ணம். படிப்படியாய் பெரியதொரு கோழியாகி அந்தப் பருந்தையே துரத்தப்போவது போன்ற ஒரு ஆளுமை உணர்வின் முளைக்கீற்று, அவள் உளத்துள் துளிர்த்ததைப் பார்த்தாள்.

வாசனைப் பூக்களை மட்டுமே சூடியும், சூட்டியும் மகிழும் சமூகத்தில், தாழம்பூவான தன்னை எடுத்து அலங்கரித்துக்கொண்ட அத்தனை பேரையும் தோழமையோடு பார்த்தாள்.
--------------------

This file was last updated on 07 December 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)