 
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பாகம் 4
திருமங்கையாழ்வார் பாசுரங்கள் (பாடல்கள் 2032-2790) 
nAlAyira tivya pirapantam -part 4 (verses 2032-2790) 
tirumangkai AzvAr's periya tirumozi 
In tamil script, unicode/utf-8 format  
 
 
 Acknowledgement: 
Our Sincere thanks go to Dr.K. Kalyanasundaram for his assistance in the preparation of this work.
This webpage presents Etext in Tamil script  in Unicode encoding (utf-8 format).
 
© Project Madurai, 1998-2021.
 
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
 
Details of Project Madurai are available at the website
 
https://www.projectmadurai.org/
 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 4 (பாடல்கள் 2032-2790) 
உள்ளடக்கம் 
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம் (2032-2051)
திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த  திருநெடுந்தாண்டகம் (2052- 2081)
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதற்றிருவந்தாதி (2082-2181) 
பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182 -2281 )
பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381 ) 
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382- 2477) 
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்  (2478-2577)
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்  (2578 - 2584)
நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585 - 2671)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்  (2673-2710)
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2713-2790)
-------------
 திருமங்கையாழ்வார் அருளிச்செய்த  பாசுரங்கள் 
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 
ஸ்ரீ: -  ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
 திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம் (2032-2051) 
2032: 
நிதியினைப் பவளத் தூணை 
      நெறிமையால் நினைய வல்லார், 
கதியினைக் கஞ்சன் மாளக் 
      கண்டுமுன் ஆண்ட மாளும், 
மதியினை மாலை வாழ்த்தி 
      வணங்கியென் மனத்து வந்த, 
விதியினைக் கண்டு கொண்ட 
      தொண்டனேன் விடுகி லேனே (2) 1 
2033: 
காற்றினைப் புனலைத் தீயைக் 
      கடிமதி ளிலங்கை செற்ற 
ஏற்றினை, இமயம் மேய 
      எழில்மணித் திரளை, இன்ப 
ஆற்றினை அமுதந் தன்னை 
      அவுணனா ருயிரை யுண்ட 
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் 
      கூறுநீ கூறு மாறே. 2 
2034: 
பாயிரும் பரவை தன்னுள் 
      பருவரை திரித்து, வானோர்க் 
காயிருந் தமுதங்க் கொண்ட 
      அப்பனை எம்பி ரானை, 
வேயிருஞ்சோலை சூழ்ந்து 
      விரிகதி ரிரிய நின்ற, 
மாயிருஞ்சோலை மேய 
      மைந்தனை வணங்கி னேனே. 3 
2035: 
கேட்கயா னுற்ற துண்டு 
      கேழலா யுலகங்க் கொண்ட, 
பூக்கெழு வண்ண நாரைப் 
      போதரக் கனவில் கண்டு, 
வாக்கினால் கருமந் தன்னால் 
      மனத்தினால் சிரத்தை தன்னால், 
      விழுங்கினேற் கினிய வாறே. 4 
2036: 
இரும்பனன் றுண்ட நீர்போல் 
      எம்பெரு மானுக்கு, என்றன் 
அரும்பெற லன்பு புக்கிட் 
      டடிமைபூண் டுய்ந்து போனேன், 
வரும்புயல் வண்ண னாரை 
      மருவியென் மனத்து வைத்து, 
கரும்பினின் சாறு போலப் 
      பருகினேற் கினிய லாறே 5 
2037: 
மூவரில் முதல்வ நாய 
      ஒருவனை யுலகங் கொண்ட, 
கோவினைக் குடந்தை மேய 
      குருமணித் திரளை, இன்பப் 
பாவினைப் பச்சைத் தேனைப் 
      பைம்பொன்னை யமரர் சென்னிப் 
பூவினை, புகழும் தொண்டர் 
      எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6 
2038: 
இம்மையை மறுமை தன்னை 
      எமக்குவீ டாகி நின்ற, 
மெய்ம்மையை விரிந்த சோலை 
      வியந்திரு வரங்கம் மேய, 
செம்மையைக் கருமை தன்னைத் 
      திருமலை ஒருமை யானை, 
தன்மையை நினைவா ரென்றன் 
      தலைமிசை மன்னு வாரே. 7 
2039: 
வானிடைப் புயலை மாலை 
      வரையிடைப் பிரசம் ஈன்ற, 
தேனிடைக் கரும்பின் சாற்றைத் 
      திருவினை மருவி வாழார், 
மானிடப் பிறவி யந்தோ. 
      மதிக்கிலர் கொள்க, தந்தம் 
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் 
      குறுதியே வேண்டி னாரே. 8 
2040: 
உள்ளமோ ஒன்றில் நில்லாது 
      ஓசையி னெரிநின் றுண்ணும் 
கொள்ளிமே லெறும்பு போலக் 
      குழையுமா லென்ற னுள்ளம், 
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம் 
      தேவரா யுலகம் கொண்ட 
ஒள்ளியீர், உம்மை யல்லால் 
      எழுமையும் துணையி லோமே. 9 
2041: 
சித்தமும் செவ்வை நில்லா 
      தெஞ்செய்கேன் தீவி னையேன், 
பத்திமைக் கன்பு டையேன் 
      ஆவதே பணியா யந்தாய், 
முத்தொளி மரத கம்மே. 
      முழங்கொளி முகில்வண் ணா,என் 
அத்த.நின் னடிமை யல்லால் 
      யாதுமொன் றறிகி லேனே. 10 
2042: 
தொண்டெல்லாம் பரவி நின்னைத் 
      தொழுதடி பணியு மாறு 
கண்டு, தான் கவலை தீர்ப்பான் 
      ஆவதே பணியா யெந்தாய், 
அண்டமா யெண்டி சைக்கும் 
      ஆதியாய் நீதி யான, 
பண்டமாம் பரம சோதி. 
      நின்னையே பரவு வேனே. 11 
2043: 
ஆவியயை யரங்க மாலை 
      அழுக்குரம் பெச்சில் வாயால், 
தூய்மையில் தொண்ட னேன்நான் 
      சொல்லினேன் தொல்லை நாமம், 
பாவியேன் பிழத்த வாறென் 
      றஞ்சினேற் கஞ்ச லென்று 
காவிபோல் வண்ணர் வந்தென் 
      கண்ணுளே தோன்றினாரே 12 
2044: 
இரும்பனன் றுண்ட நீரும் 
      போதரும் கொள்க, என்றன் 
அரும்பிணி பாவ மெல்லாம் 
      அகன்றன என்னை விட்டு, 
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
      அரங்கமா கோயில் கொண்ட, 
கரும்பினைக் கண்டு கொண்டென் 
      கண்ணிணை களிக்கு மாறே 13 
2045: 
காவியை வென்ற கண்ணார் 
      கலவியே கருதி, நாளும் 
பாவியே னாக வெண்ணி 
      அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், 
தூவிசேர் அன்னம் மன்னும் 
      சூழ்புனல் குடந்தை யானை, 
பாவியென் பாவி யாது 
      பாவியே னாயி னேனே. 14 
2046: 
முன்பொலா இராவ ணன்றன் 
      முதுமதி ளிலங்கை வேவித்து, 
அன்பினா லனுமன் வந்தாங் 
      கடியிணை பணிய நின்றார்க்கு, 
என்பெலா முருகி யுக்கிட் 
      டென்னுடை நெஞ்ச மென்னும், 
அன்பினால் ஞான நீர்கொண் 
      டாட்டுவ னடிய னேனே. 15 
2047: 
மாயமான் மாயச் செற்று 
      மருதிற நடந்து, வையம் 
தாயமா பரவை பொங்கத் 
      தடவரை திரித்து, வானோர்க் 
கீயுமால் எம்பி ரானார்க் 
      கென்னுடைச் சொற்க ளென்னும், 
தூயமா மாலை கொண்டு 
      சூட்டுவன் தொண்ட னேனே 16 
2048: 
பேசினார் பிறவி நீத்தார் 
      பேருளான் பெருமை பேசி, 
ஏச்னார் உய்ந்து போனார் 
      என்பதிவ் வுலகின் வண்ணம், 
பேசினேன் ஏச மாட்டேன் 
      பேதையேன் பிறவி நீத்தற்கு, 
ஆசையோ பெரிது கொள்க 
      அலைகடல் வண்ணர் பாலே 17 
2049: 
இளைப்பினை யியக்கம் நீக்கி 
      யிருந்துமுன் னிமையைக் கூட்டி, 
அளப்பிலைம் புலன டக்கி 
      அன்பவர் கண்ணே வைத்து, 
துளக்கமில் சிந்தை செய்து 
      தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே 
விளக்கினை விதியில் காண்பார் 
      மெய்ம்மையே காண்கிற் பாரே 18 
2050: 
பிண்டியார் மண்டை ஏந்திப் 
      பிறர்மனை திரிதந் துண்ணும், 
உண்டியான் சாபம் தீர்த்த 
      ஒருவனூர், உலக மேத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம் 
      கச்சிபேர் மல்லை என்று 
மண்டினார், உய்யல் அல்லால் 
      மற்றையார்க் குய்ய லாமே? (2) 19 
2051: 
வானவர் தங்கள் கோனும் 
      மலர்மிசை அயனும், நாளும் 
தேமலர் தூவி ஏத்தும் 
      சேவடிச் செங்கண் மாலை, 
மானவேல் கலியன் சொன்ன 
      வண்டமிழ் மாலை நாலைந்தும், 
ஊனம தின்றி வல்லார் 
      ஒளிவிசும் பாள்வர் தாமே (2) 20 
--------------
திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம் 
ஸ்ரீ:  -  ஸ்ரீமதே ராமானுஜாயா நம: 
  திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த  திருநெடுந்தாண்டகம் (2052-2081)
 
2052: 
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் 
      விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய், 
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் 
      பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும் 
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் 
      புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி, 
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை 
      தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. (2) 1 
2053: 
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் 
      பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற, 
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, 
      இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது, 
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ 
      ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற, 
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி 
      முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. 2 
2054: 
திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும் 
      திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும், 
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் 
      பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை, 
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா 
      ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால், 
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் 
      கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே? 3 
2055: 
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை 
      இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய், 
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் 
      திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி, 
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா 
      அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த 
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் 
      வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே. 4 
2056: 
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப 
      ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து, 
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி 
      இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத் 
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் 
      தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, 
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை 
      மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. 5 
2057: 
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் 
      அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும், 
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் 
      தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி, 
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த 
      நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி, 
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் 
      பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 6 
2058: 
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள 
      வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, 
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த 
      வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, 
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட 
      கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, 
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற 
      பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7 
2059: 
நீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய். 
      நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி 
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய். 
      உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும் 
காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா. 
      காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு 
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய். 
      பெருமான்உன் திருவடியே பேணி னேனே. (2) 8 
2060: 
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் 
      மல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய், 
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் 
      குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான், 
பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய். 
      பனிவரையி னுச்சியாய். பவள வண்ணா, 
எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி 
      ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. 9 
2061: 
பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட 
      புகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான், 
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் 
      என்னறிவ னேழையேன், உலக மேத்தும் 
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் 
      குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் 
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி. 
      திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. 10 
2062: 
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் 
      பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள், 
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் 
      எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும் 
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் 
      மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே 
கட்டுவிச்சி சொல் , என்னச் சொன்னாள் நங்காய். 
      கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? 11 
2063: 
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் 
      நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள், 
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும் 
      வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும், 
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் 
      அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், 
எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் 
      இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே. 12 
2064: 
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும் 
      காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும், 
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும் 
      வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும், 
,அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும், 
      மாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும், 
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று 
      துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. 13 
2065: 
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா 
      மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, 
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய 
      அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, 
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் 
      வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு 
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று 
      மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. 14 
2066: 
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய 
      களிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும், 
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி 
      அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும், 
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் 
      தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு, 
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே 
      மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. 15 
2067: 
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், 
      கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும், 
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும், 
      வடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும், 
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும், 
      விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும், 
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் 
      துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. (2) 16 
2068: 
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் 
      பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று 
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் 
      சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே 
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் 
      தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, 
நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன 
      நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. 17 
2069: 
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் 
      கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம், 
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் 
      பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன், 
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் 
      எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் 
      இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? 18 
2070: 
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் 
      மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும் 
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் 
      அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும், 
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் 
      பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, 
பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் 
      பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. 19 
2071: 
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் 
      தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி, 
பேராள னாயிரம் வாணன் மாளப் 
      பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க 
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு 
      பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட 
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் 
      பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? 20 
2072: 
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ 
      மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட, 
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே 
      இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் 
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் 
      கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே, 
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ. 
      அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2) 21 
2073: 
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா 
      நாணினார் போலிறையே நயங்கள் பின்னும், 
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி 
      எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால் 
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் 
      கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும், 
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு 
      இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. 22 
2074: 
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் 
      ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே, 
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் 
      சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் 
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் 
      கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது, 
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் 
      என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? 23 
2075: 
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம். 
      இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட, 
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் 
      பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ 
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி 
      உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என் 
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து 
      புனலரங்க மூரென்று போயி நாரே. 24 
2076: 
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் 
      கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், 
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே 
      தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி 
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் 
      என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு, 
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே 
      புனலரங்க மூரென்று போயி னாரே. 25 
2077: 
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் 
      தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும், 
பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த 
      அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை, 
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் 
      அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று, 
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது 
      நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. 26 
2078: 
செங்கால மடநாராய். இன்றே சென்று 
      திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு, 
எங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில் 
      இதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும் 
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப் 
      பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன், தந்தால் 
இங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும் 
      இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2) 27 
2079: 
தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச் 
      சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால், 
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த 
      வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன் 
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு 
      போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி, 
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த 
      எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28 
2080: 
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை 
      அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, 
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் 
      கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து 
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை 
      விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும் 
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை 
         நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2) 29 
2081: 
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா. 
      விண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று, 
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த 
      அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை, 
மன்னுமா மணிமாட வேந்தன் 
      மானவேல் பரகாலன் கலியன் சொன்ன 
பன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப் 
      பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30 
---------
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதற்றிருவந்தாதி (2082-2181) 
தனியன் 
முதலியாண்டான் அருளிச்செய்தது 
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த, 
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து 
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி, 
படிவிளங்கச் செய்தான் பரிந்து 
2082: 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக, 
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய 
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, 
இடராழி நீங்குகவே என்று.           1 
2083: 
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, 
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று 
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ 
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.         2 
2084: 
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, 
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில் 
பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன், 
நீயளவு கண்ட நெறி.         3 
2085: 
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து 
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம் 
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த, 
ஆலமமர் கண்டத் தரன்.         4 
2086: 
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி, 
உரை_ல் மறையுறையும் கோயில், - வரைநீர் 
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி, 
உருவமெரி கார்மேனி ஒன்று.         5 
2087: 
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான், 
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று 
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் 
திருவரங்க மேயான் திசை.         6 
2088: 
திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத் 
திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க் 
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத 
வண்ணன் படைத்த மயக்கு.         7 
2089: 
மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத் 
தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள் 
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே, 
போராழிக் கையால் பொருது?         8 
2090: 
பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன் 
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட 
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க, 
மாவடிவின் நீயளந்த மண்?         9 
2091: 
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், 
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில் 
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ் 
வுலகளவு முண்டோ வுன் வாய்?         10 
2092: 
வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம் 
தாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ் 
சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால், 
காணாகண் கேளா செவி.         11 
2093: 
செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ 
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், - அவியாத 
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே, 
ஏனமாய் நின்றாற் கியல்வு.         12 
2094: 
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல, 
முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக 
நீதியா லோதி நியமங்க ளால்பரவ, 
ஆதியாய் நின்றார் அவர்.         13 
2095: 
அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, 
இவரிவ ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச் 
சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த 
மூர்த்தி யுருவே முதல்.         14 
2096: 
முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும் 
முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய 
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து, 
பல்லார் அருளும் பழுது         15 
2097: 
பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி 
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன், 
கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் 
அடலோத வண்ணர் அடி.         16 
2098: 
அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல, 
முடியும் விசும்பளந்த தென்பர், - வடியுகிரால் 
ஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள் 
ஊர்ந்தா னுலகளந்த நான்று.           17 
2099: 
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய் 
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி, 
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும், 
மருதிடைபோய் மண்ணளந்த மால்.         18 
2100: 
மாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண் 
டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக் 
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும் 
திருமேனி நீதீண்டப் பெற்று.         19 
2101: 
பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய், 
செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா 
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி, 
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.         20 
2102: 
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால், 
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும் 
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம், 
அடையாழி நெஞ்சே. அறி.         21 
2103: 
அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன், 
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும் 
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை, 
தாம்பேகொண் டார்த்த தழும்பு.         22 
2104: 
தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை, 
தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த 
பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த, 
வீங்கோத வண்ணர் விரல்.         23 
2105: 
விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி 
உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா 
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?, 
ஓங்கோத வண்ணா. உரை.         24 
2106: 
உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும் 
வரைமேல் மரகதமே போல, - திரைமேல் 
கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி 
இடந்தானை யேத்தி யெழும்.         25 
2107: 
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, 
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார், 
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர் 
மனச்சுடரைத் தூண்டும் மலை.         26 
2108: 
மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து, 
சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப் 
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் 
காக்கோடு பற்றியான் கை.         27 
2109: 
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத் 
தைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய 
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த 
இறையான்நின் ஆகத் திறை.         28 
2110: 
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், 
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின் 
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த, 
செங்கண்மால் கண்டாய் தெளி.         29 
2111: 
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத் 
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத் 
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே, 
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.         30 
2112: 
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி, 
அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ 
வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற் 
றெண்ண்த்தா னாமோ இமை?         31 
2113: 
இமையாத கண்ணால் இருளகல நோக்கி, 
அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல், 
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய் 
நாகத் தணையான் நகர்.         32 
2114: 
நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல் 
பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே 
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும், 
அந்தியா லாம்பனங் கென்?         33 
2115: 
என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில் 
முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப் 
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் 
ஆய்த்தாய் முலைதந்த ஆறு?         34 
2116: 
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், 
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி, 
நெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து 
முடியான் படைத்த முரண்?         35 
2117: 
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம் 
தரணி தனதாகத் தானே - இரணியனைப் 
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ 
மண்ணிரந்து கொண்ட வகை?         36 
2118: 
வகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும் 
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின் 
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் 
ஊதியவாய் மாலுகந்த வூர்.         37 
2119: 
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை, 
பேர எறிந்த பெருமணியை, - காருடைய 
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர் 
என்னென்ற மால திடம்.         38 
2120: 
இடந்தது பூமி எடுத்தது குன்றம், 
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும் 
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே, 
பேரோத வண்ணர் பெரிது.         39 
2121: 
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ 
வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில் 
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர் 
கோன்வீழ கண்டுகந்தான் குன்று.         40 
2122: 
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும் 
இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும் 
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான் 
திறனுரையே சிந்தித் திரு         41 
2123: 
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் 
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல் 
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த, 
மாலோத வண்ணர் மனம்?         42 
2124: 
மனமாசு தீரு மறுவினையும் சார, 
தனமாய தானேகை கூடும், - புனமேய 
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி, 
தாம்தொழா நிற்பார் தமர்.         43 
2125: 
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே, 
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து 
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே, 
அவ்வண்ணம் அழியா னாம்.         44 
2126: 
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க, 
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய 
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை, 
பாதமத்தா லேண்ணினான் பண்பு.         45 
2127: 
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற, 
வெண்புரி_ல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த 
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம் 
போகத்தால் பூமியாள் வார்.         46 
2128: 
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும், 
சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய 
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள் 
கைந்நாகம் காத்தான் கழல்.         47 
2129: 
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல், 
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும் 
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல, 
மருவாழி நெஞ்சே. மகிழ்.         48 
2130: 
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை, 
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த 
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம் 
ஆதிகாண் பார்க்கு மரிது.         49 
2131: 
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம் 
பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய் 
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர் 
ஏற்றானைக் காண்ப தெளிது.         50 
2132: 
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம் 
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில் 
பொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய் 
இருந்தான் திருநாமம் எண்.         51 
2133: 
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர், 
வண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி 
ஒரு மாலை யால்பரவி ஓவாது,எப் போதும் 
திருமாலைக் கைதொழுவர் சென்று.         52 
2134: 
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், 
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும் 
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் 
அணையாம், திருமாற் கரவு.         53 
2135: 
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய் 
குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி 
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண் 
டட்டெடுத்த செங்கண் அவன்.         54 
2136: 
அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன் 
அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால் 
ஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல் 
பேராயற் காட்பட்டார் பேர்.         55 
2137: 
பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை, 
ஆரே அறிவார்? அதுநிற்க, - நேரே 
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் 
அடிக்கமலந் தன்னை அயன்.         56 
2138: 
அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி, 
உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற 
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும், 
சொன்மாலை கற்றேன் தொழுது.         57 
2139: 
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி, 
எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி 
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான், 
அந்தரமொன் றில்லை அடை.         58 
2140: 
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம், 
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - _டங்கிடையை 
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள் 
தன்வில் அங்கை வைத்தான் சரண்.         59 
2141: 
சரணா மறைபயந்த தாமரையா னோடு, 
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய 
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது, 
ஓராழி சூழ்ந்த வுலகு.         60 
2142: 
உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ் 
விலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில் 
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன் 
புந்தியி லாய புணர்ப்பு.         61 
2143: 
புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து, 
மணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ 
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும், 
சூழரவப் பொங்கணையான் தோள்.         62 
2144: 
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும், 
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும் 
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே, 
நாணாமை நள்ளேன் நயம்.         63 
2145: 
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு, 
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன் 
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன், 
வருமாறென் நம்மேல் வினை?         64 
2146: 
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார், 
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற் 
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட் 
கரியானைக் கைதொழுதக் கால்.         65 
2147: 
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த 
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண் 
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும், 
பேராழி கொண்டான் பெயர்.         66 
2148: 
பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ 
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும் 
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன், 
ஒருவனையே நோக்கும் உணர்வு.         67 
2149: 
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி, 
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார் 
விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப் 
பண்ணகத்தாய். நீகிடந்த பால்?         68 
2150: 
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் 
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று 
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? 
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.         69 
2151: 
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு, 
சொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த் 
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால், 
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.         70 
2152: 
நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி, 
நின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும் 
விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய், 
அடலாழி கொண்டான்மாட் டன்பு.         71 
2153: 
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன் 
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி 
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும் 
பூணாரம் பூண்டான் புகழ்.         72 
2154: 
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை, 
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க் 
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும், 
உடலும் உயிருமேற்றான்.         73 
2155: 
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் 
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால் 
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான் 
கங்கையான் நீள்கழலான் காப்பு.         74 
2156: 
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள், 
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச் 
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை 
வந்திப்பார் காண்பர் வழி.         75 
2157: 
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா 
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும் 
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த 
சீரான் திருவேங்கடம்.         76 
2158: 
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத 
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும் 
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே, 
என்றால் கெடுமாம் இடர்.         77 
2159: 
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் 
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை 
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், 
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.         78 
2160: 
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார், 
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை 
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் 
ஆரங்கை தோய அடுத்து?         79 
2161: 
அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி, 
படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை, 
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு, 
அல்லாதும் ஆவரோ ஆள்?         80 
2162: 
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று, 
வாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச் 
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப் 
பற்றிக் கடத்தும் படை?         81 
2163: 
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந் 
தொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின் 
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் 
மான்மாய எய்தான் வரை.         82 
2164: 
வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர் 
நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய 
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல், 
பேராழி கொண்ட பிரான்?         83 
2165: 
பிரான். உன் பெருமை பிறரா ரறிவார்?, 
உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத் 
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை 
அடிக்களவு போந்த படி?         84 
2166: 
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட் 
கொடிகண் டறிதியே?கூறாய், - வடிவில் 
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி, 
நெறிநின்ற நெஞ்சமே. நீ.         85 
2167: 
நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப் 
பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில் 
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல் 
இடைகழியே பற்றி யினி.         86 
2168: 
இனியார் புகுவா ரெழுநரக வாசல்? 
முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக் 
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு, 
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.         87 
2169: 
நாடிலும் நின்னடியே நாடுவன, நாடோ றும் 
பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும் 
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு, 
என்னாகி லென்னே எனக்கு?         88 
2170: 
எனக்காவா ராரொருவரே, எம்பெருமான் 
தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம் 
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ, 
மாமேனி காட்டும் வரம்.         89 
2171: 
வரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம், 
சிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால் 
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை, 
ஓரரியாய் நீயிடந்த தூன்?         90 
2172: 
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி, 
ஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், - ஏனத் 
துருவா யுலகிடந்த வூழியான் பாதம், 
மருவாதார்க் குண்டாமோ வான்?         91 
2173: 
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் 
தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி 
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் 
மண்ணை உமிழ்ந்த வயிறு?         92 
2174: 
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச 
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால் 
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின் 
சேவடிமே லீடழியச் செற்று?         93 
2175: 
செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும், 
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும் 
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால், 
இறையேனும் ஏத்தாதென் நா.         94 
2176: 
நாவாயி லுண்டே நமோநார ணா என்று, 
ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத 
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் 
தீக்கதிக்கட் செல்லும் திறம்?         95 
2177: 
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய், 
அறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம் 
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே, 
கண்டாய் கடைக்கட் பிடி.         96 
2178: 
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன் 
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர் 
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, 
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்?         97 
2179: 
பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும், 
நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும் 
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன் 
ஒருவனங்கத் தென்று முளன்.         98 
2180: 
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் 
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய், 
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், 
உள்ளத்தி னுள்ளனென் றோர்.         99 
2181: 
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், 
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில் 
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், 
மாயவனை யேமனத்து வை.         100 
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் 
-----------
ஸ்ரீ: -  ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (2182 -2281 )  
தனியன் 
திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது 
நேரிசை வெண்பா 
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா 
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர் 
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப் 
பூதத்தார் பொன்னங்கழல். 
2182: 
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக, 
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி 
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு 
ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1 
2183: 
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள், 
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத் 
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள் 
பணியமரர் கோமான் பரிசு? 2 
2184: 
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம், 
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள் 
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து 
நல்லமரர் கோமான் நகர். 3 
2185: 
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே 
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப் 
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள், 
அங்கம்வலம் கொண்டான் அடி. 4 
2186: 
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும் 
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற 
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை 
ஆரோத வல்லார் அறிந்து? 5 
2187: 
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம் 
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன் 
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே, 
காரோத வண்ணன் கழல். 6 
2188: 
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார் 
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த 
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை 
ஓராழி நெஞ்சே. உகந்து. 7 
2189: 
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை 
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து 
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும் 
அலைபண்பா லானமையால் அன்று. 8 
2190: 
அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி, 
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று 
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம், 
பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9 
2191: 
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து 
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய 
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் 
காவடியேன் பட்ட கடை. 10 
2192: 
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும் 
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற 
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை 
ஆரோத வல்லார் அவர்? 11 
2193: 
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம், 
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும் 
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே 
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12 
2194: 
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப் 
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க 
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன் 
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13 
2195: 
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம் 
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும் 
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள் 
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14 
2196: 
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று 
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும் 
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின் 
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15 
2197: 
தனக்கடிமை பட்டது தானறியா னேலும் 
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை 
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால், 
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16 
2198: 
மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன், 
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப் 
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக் 
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17 
2199: 
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய், 
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும் 
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள், 
வான்கடந்தான் செய்த வழக்கு. 18 
2200: 
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய், 
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று 
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே, 
பார்விளங்கச் செய்தாய் பழி. 19 
2201: 
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை, 
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி 
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும், 
காரணங்கள் தாமுடையார் தாம். 20 
2202: 
தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின் 
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன் 
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே 
அருநரகம் சேர்வ தரிது. 21 
2203: 
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, 
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர் 
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே, 
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22 
2204: 
தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால் 
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த 
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம் 
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23 
2205: 
அவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும், 
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய் 
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத, 
சீற்றத்தீ யாவானும் சென்று. 24 
2206: 
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால், 
கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும் 
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம் 
வாயோங்கு தொல்புகழான் வந்து. 25 
2207: 
வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம் 
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப் 
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த, 
படியமரர் வாழும் பதி. 26 
2208: 
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை, 
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங் 
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே, 
மால்தேடி யோடும் மனம். 27 
2209: 
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் 
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும் 
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் 
மாவாய் பிளந்த மகன். 28 
2210: 
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, 
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய் 
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை 
நீறாக எய்தழித்தாய் நீ. 29 
2211: 
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே, 
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று 
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை, 
பேரோத மேனிப் பிரான். 30 
2212: 
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும், 
குராநல் செழும்போது கொண்டு, - வராகத் 
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர், 
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31 
2213: 
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும் 
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த 
தழலாழி சங்க மவைபாடி யாடும், 
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32 
2214: 
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம் 
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும் 
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே, 
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33 
2215: 
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம், 
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த 
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு, 
என்பாக்கி யத்தால் இனி. 34 
2216: 
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற, 
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று 
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல், 
சேமநீ ராகும் சிறிது. 35 
2217: 
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும், 
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை 
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று, 
எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36 
2218: 
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே, 
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின் 
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும் 
ஏதங்க ளெல்லா மெமக்கு. 37 
2219: 
எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே, 
தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும் 
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர் 
ஓதுவதே நாவினா லோத்து. 38 
2220: 
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர் 
ஏத்தும் திறமறிமி னேழைகாள், ஓத்தனை 
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர் 
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39 
2221: 
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார் 
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த 
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத 
போகத்தா லில்லை பொருள். 40 
2222: 
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது 
அருளா லறமருளு மன்றே, - அருளாலே 
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே, 
நீமறவேல் நெஞ்சே. நினை. 41 
2223: 
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண, 
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால் 
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம், 
துறந்தார் தொழுதாரத் தோள். 42 
2224: 
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும், 
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும், 
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என் 
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43 
2225: 
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம், 
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும் 
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர் 
ஓதுவதே நாவினா லுள்ளு. 44 
2226: 
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று, 
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய 
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், 
பாதத்தான் பாதம் பயின்று. 45 
2227: 
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள் 
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற 
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே 
மணிதிகழும் வண்தடக்கை மால். 46 
2228: 
மாலை யரியுருவன் பாத மலரணிந்து, 
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம் 
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால் 
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47 
2229: 
உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி 
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய் 
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ், 
மாயிருஞ் சோலை மலை. 48 
2230: 
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர, 
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த 
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று, 
அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49 
2231: 
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன, 
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய 
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும், 
மாயவனே என்று மதித்து. 50 
2232: 
மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம், 
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய் 
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த 
நீராழி வண்ணன் நிறம். 51 
2233: 
நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன், 
அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்த 
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து, 
நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52 
2234: 
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து, 
அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது 
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும், 
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53 
2235: 
வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் 
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென் 
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத் 
திளங்கோயில் கைவிடேல் என்று. 54 
2236: 
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், 
நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி 
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக் 
கடலாழி நீயருளிக் காண். 55 
2237: 
காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால், 
நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக் 
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும், 
திருமாலை நாங்கள் திரு. 56 
2238: 
திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும், 
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால் 
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர், 
நாற்றிசையும் கேட்டீரே நாம்? 57 
2239: 
நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து 
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, - வேம்பின் 
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று, 
அருள்நீர்மை தந்த அருள். 58 
2240: 
அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து, 
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து 
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம், 
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59 
2241: 
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம், 
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம் 
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர், 
நீதியால் மண்காப்பார் நின்று. 60 
2242: 
நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள் 
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று 
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப் 
பிரமாணித் தார்பெற்ற பேறு. 61 
2243: 
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால், 
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின் 
பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய், 
எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62 
2244: 
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து 
ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி 
உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி, 
கண்டபொருள் சொல்லின் கதை. 63 
2245: 
கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே, 
இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும் 
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப், 
பருமொழியால் காணப் பணி. 64 
2246: 
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் 
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன் 
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே 
இருந்தேத்தி வாழும் இது. 65 
2247: 
இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது, 
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய் 
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா, 
காரணமும் வல்லையேல் காண். 66 
2248: 
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக் 
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன் 
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும் 
மறுநோய் செறுவான் வலி. 67 
2249: 
வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள 
வலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க 
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான், 
கோணாகம் கொம்பொசித்த கோ. 68 
2250: 
கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே 
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும் 
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும், 
தண்கமல மேய்ந்தார் தமர். 69 
2251: 
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், 
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும் 
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, 
ஏவல்ல எந்தைக் கிடம். 70 
2252: 
இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான் 
றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும் 
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், 
பூவா ரடிநிமிர்ந்த போது. 71 
2253: 
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த 
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது 
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல, 
அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72 
2254: 
ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய், 
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த 
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான் 
இறைக்காட் படத்துணிந்த யான். 73 
2255: 
யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், 
யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே 
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன், 
பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74 
2256: 
பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று, 
இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த 
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர், 
வான்கலந்த வண்ணன் வரை. 75 
2257: 
வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும், 
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு 
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே 
ஓதிப் பணிவ தூறும். 76 
2258: 
உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம், 
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய் 
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும், 
சாற்றி யுரைத்தல் தவம். 77 
2259: 
தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி 
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன் 
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர் 
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78 
2260: 
பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள் 
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற 
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த 
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79 
2261: 
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம், 
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த 
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப் 
படிக்கோலம் கண்ட பகல்? 80 
2262: 
பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில் 
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன் 
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான், 
வான்திகழும் சோதி வடிவு. 81 
2263: 
வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப் 
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி 
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ, 
கோலத்தா லில்லை குறை. 82 
2264: 
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி, 
மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும் 
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும், 
மாயன்கண் சென்ற வரம். 83 
2265: 
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை, 
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த 
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, 
அங்கண்மா ஞாலத் தமுது. 84 
2266: 
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும், 
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன 
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட, 
நன்மாலை யேத்தி நவின்று. 85 
2267: 
நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே 
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம் 
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான் 
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86 
2268: 
இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச் 
சென்றாங் களந்த திருவடியை, - அன்று 
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன், 
திருக்கோட்டி எந்தை திறம். 87 
2269: 
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை, 
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச் 
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர் 
கடிநகர வாசற் கதவு. 88 
2270: 
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து, 
அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப் 
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை, 
மாணியாய்க் கொண்டிலையே மண். 89 
2271: 
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய், 
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித் 
திருமாலை செங்க ணெடியானை, எங்கள் 
பெருமானைக் கைதொழுத பின். 90 
2272: 
பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர், 
முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல் 
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம் 
அளந்தா னவஞ்சே வடி. 91 
2273: 
அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும் 
படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன் 
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும் 
காமமே காட்டும் கடிது. 92 
2274: 
கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை, 
கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம் 
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ் 
சுண்டானை ஏத்துமினோ உற்று. 93 
2275: 
உற்று வணங்கித் தொழுமின், உலகேழும் 
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப் 
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள் 
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94 
2276: 
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை 
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய் 
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும் 
ஆழியான் அத்தியூ ரான். 95 
2277: 
அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின் 
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ 
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும் 
இறையாவான் எங்கள் பிரான். (2) 96 
2278: 
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ, 
செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு 
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய், 
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97 
2279: 
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது, 
உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு 
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம் 
இடமாகக் கொண்ட இறை. 98 
2280: 
இறையெம் பெருமான் அருளென்று, இமையோர் 
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல 
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய் 
மாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99 
2281: 
மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு 
மேலா. வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால் 
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன் 
அளவன்றால் யானுடைய அன்பு. (2) 100 
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் 
-----------
ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (2282-2381 ) 
தனியன் 
குருகை காவலப்பன் அருளிச் செய்தது 
நேரிசை வெண்பா 
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள் 
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - ஓராத் 
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே, 
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து. 
2282: 
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் 
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் 
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன், 
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1 
2283: 
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், 
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று 
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை 
மருக்கண்டு கொண்டேன் மனம். 2 
2284: 
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் 
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச் 
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன், 
வருநரகம் தீர்க்கும் மருந்து. 3 
2285: 
மருந்தும் பொருளும் அமுதமும் தானே, 
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும் 
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், 
அன்றுலகம் தாயோன் அடி. 4 
2286: 
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன், 
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம் 
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே 
ஆராழி கொண்டாற் கழகு? 5 
2287: 
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், 
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே 
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ, 
கங்கைநீர் கான்ற கழல்? 6 
2288: 
கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, 
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங் 
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை, 
நண்ணற் கரியானை நாம். 7 
2289: 
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று, 
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி 
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய், 
கண்ணனையே காண்கநங் கண். 8 
2290: 
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும், 
மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில் 
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன், 
திருமா மணிவண்ணன் தேசு. 9 
2291: 
தேசும் திறலும் திருவும் உருவமும், 
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில் 
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத, 
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10 
2292: 
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும் 
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப் 
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார் 
_ற்கடலான் _ண்ணறிவி னான். 11 
2293: 
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், 
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும் 
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும் 
பைங்கோத வண்ணன் படி. 12 
2294: 
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, 
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம், 
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே, 
மாகாய மாய்நின்ற மாற்கு. 13 
2295: 
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு, 
_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால 
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், 
பாதத்தான் பாதம் பணிந்து. 14 
2296: 
பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத, 
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங் 
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன் 
மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15 
2297: 
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் 
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை 
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன், 
திருவல்லிக் கேணியான் சென்று. (2) 16 
2298: 
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால், 
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும் 
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய், 
மறவாது வாழ்த்துகவென் வாய். 17 
2299: 
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண் 
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் 
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி, 
அஞ்சா திருக்க அருள். 18 
2300: 
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று 
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத 
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது, 
முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19 
2301: 
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் 
பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே 
திருமாலே. செங்க ணெடியானே, எங்கள் 
பெருமானே. நீயிதனைப் பேசு. 20 
2302: 
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே 
வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய 
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ 
வக்கரனைக் கொன்றான் வடிவு. 21 
2303: 
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் 
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை, 
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே, 
மெய்ம்மையே காண விரும்பு. 22 
2304: 
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் 
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும் 
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே, 
மனம்துழாய் மாலாய் வரும். 23 
2305: 
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், 
நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும் 
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும் 
தொடராழி நெஞ்சே. தொழுது. 24 
2306: 
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், 
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட 
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும் 
சேயானை நெஞ்சே. சிறந்து? 25 
2307: 
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும், 
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும், 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, 
தாம்கடவார் தண்டுழா யார். 26 
2308: 
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார், 
காரே மலிந்த கருங்கடலை, நேரே 
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி 
அடைந்தானை நாளும் அடைந்து? 27 
2309: 
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று 
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும் 
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப் 
பேய்ச்சிபா லுண்ட பிரான். 28 
2310: 
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, 
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த 
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய், 
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29 
2311: 
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் 
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த 
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, 
இறைபாடி யாய இவை. 30 
2312: 
இவையவன் கோயில் இரணியன தாகம், 
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா 
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான் 
பாகத்தான் பாற்கடலு ளான். 31 
2313: 
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், 
_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட் 
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், 
குருந்தொசித்த கோபா லகன். 32 
2314: 
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் 
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ 
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம் 
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33 
2315: 
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல், 
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று 
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக் 
கடந்தானை நெஞ்சமே. காண். 34 
2316: 
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு 
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண் 
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற் 
கழல்பாடி யாம்தொழுதும் கை. 35 
2317: 
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், 
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய 
படைபரவ பாழி பனிநீ ருலகம், 
அடியளந்த மாயன் அவற்கு. 36 
2318: 
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், 
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும் 
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம், 
திகழும் திருமார்வன் தான். 37 
2319: 
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், 
தானே தவவுருவும் தாரகையும், - தானே 
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் 
திருசுடரு மாய இறை. 38 
2320: 
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், 
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த 
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், 
உள்ளத்தி னுள்ளே உளன். 39 
2321: 
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும் 
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய், 
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான், 
மண்ணெடுங்கத் தானளந்த மன். 40 
2322: 
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், 
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை 
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும் 
குடையாக ஆகாத்த கோ. 41 
2323: 
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி, 
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி 
அரியுருவ மாகி இரணியன தாகம், 
தெரியுகிரால் கீண்டான் சினம். 42 
2324: 
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து, 
புனமேய பூமி யதனை, - தனமாகப் 
பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார், 
ஓரகலத் துள்ள துலகு. 43 
2325: 
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ் 
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள் 
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே, 
பூரித்தென் நெஞ்சே புரி. 44 
2326: 
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித், 
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் 
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள் 
மண்கோட்டுக் கொண்டான் மலை. 45 
2327: 
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, 
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட் 
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான், 
பிண்டமாய் நின்ற பிரான். 46 
2328: 
நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம் 
சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று 
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள் 
நரகவாய் கீண்டாயும் நீ. 47 
2329: 
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், 
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே 
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய், 
தேவா சுரம்பொருதாய் செற்று? 48 
2330: 
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் 
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல் 
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச் 
சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49 
2331: 
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால், 
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த 
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான், 
அணிநீல வண்ணத் தவன். 50 
2332: 
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், 
அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே 
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், 
இலங்கா புரமெரித்தான் எய்து. 51 
2333: 
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், 
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும் 
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய் 
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52 
2334: 
முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, 
இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர் 
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய், 
தண்ணலங்கல் மாலையான் தாள். 53 
2335: 
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, 
கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது 
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு, 
பெண்ணகலம் காதல் பெரிது. 54 
2336: 
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, 
கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால் 
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன் 
நீணெடுங்கண் காட்டும் நிறம். 55 
2337: 
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று, 
இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய 
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே, 
பூமங்கை கேள்வன் பொலிவு? 56 
2338: 
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி, 
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து 
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, 
தெருடன்மேல் கண்டாய் தெளி. 57 
2339: 
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, 
அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய 
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள் 
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58 
2340: 
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய், 
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும் 
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள் 
பெருமான் அடிசேரப் பெற்று. 59 
2341: 
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், 
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக் 
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப் 
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60 
2342: 
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம், 
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு 
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை, 
இளங்குமரன் றன்விண் ணகர். (2) 61 
2343: 
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், 
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த 
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, 
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62 
2344: 
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், 
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும் 
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, 
இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63 
2345: 
இசைந்த அரவமும் வெற்பும் கடலும், 
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து 
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில், 
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64 
2346: 
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து, 
மங்க இரணியன தாகத்தை, பொங்கி 
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே, 
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65 
2347: 
காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், 
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த 
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார், 
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66 
2348: 
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், 
ஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத் 
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில் 
பகரு மதியென்றும் பார்த்து. 67 
2349: 
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, 
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த 
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள் 
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68 
2350: 
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க் 
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற 
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான், 
பூண்டநா ளெல்லாம் புகும். 69 
2351: 
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி 
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன் 
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே, 
கண்டு வணங்கும் களிறு. 70 
2352: 
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி, 
ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி 
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள் 
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71 
2353: 
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை, 
சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை 
இளங்குமரர் கோமான் இடம். 72 
2354: 
இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி, 
வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த 
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே, 
நாத்தன்னா லுள்ள நலம். 73 
2355: 
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய், 
நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான் 
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான், 
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74 
2356: 
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் 
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து 
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன் 
புனவேங்கை நாறும் பொருப்பு. 75 
2357: 
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து 
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய 
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால், 
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76 
2358: 
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் 
வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த 
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த 
அடிப்போது நங்கட் கரண். 77 
2359: 
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன், 
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல் 
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே, 
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78 
2360: 
ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து, 
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த 
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி, 
நிரையார மார்வனையே நின்று. 79 
2361: 
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், 
ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும் 
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, 
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80 
2362: 
நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன் 
நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப் 
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, 
ஓராது நிற்ப துணர்வு? 81 
2363: 
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து 
புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக் 
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, 
எங்கணைந்து காண்டும் இனி? 82 
2364: 
இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், 
இனியவன் காண்பரிய னேலும், - இனியவன் 
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான், 
உள்ளத்தி னுள்ளே யுளன். 83 
2365: 
உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத் 
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய 
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே, 
கண்டா ருகப்பர் கவி? 84 
2366: 
கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய், 
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார் 
போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய் 
ஏற்றுயிரை அட்டான் எழில்? 85 
2367: 
எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத் 
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட 
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல, 
கார்வானம் காட்டும் கலந்து. 86 
2368: 
கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி 
மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும் 
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, 
அந்திவான் காட்டும் அது. 87 
2369: 
அதுநன் றிதுதீதென் றையப் படாதே, 
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற 
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள் 
முன்னங் கழலும் முடிந்து. 88 
2370: 
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம் 
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த 
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள் 
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89 
2371: 
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா 
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள் 
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ, 
வண்டுழாய் மாலளந்த மண்? 90 
2372: 
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், 
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக் 
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், 
வயிற்றினோ டாற்றா மகன். 91 
2373: 
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், 
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை 
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே 
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92 
2374: 
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், 
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு 
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை, 
உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93 
2375: 
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி, 
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே 
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து, 
பொன்றாமை மாயன் புகுந்து. 94 
2376: 
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் 
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும் 
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே 
வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95 
2377: 
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் 
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த 
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன், 
அடித்தா மரையாம் அலர். 96 
2378: 
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, 
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த 
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட் 
கெண்ணத்தா னாமோ இமை? 97 
2379: 
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும், 
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ் 
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான், 
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98 
2380: 
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், 
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக் 
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் 
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99 
2381: 
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் 
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த 
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், 
தேனமரும் பூமேல் திரு. (2) 100 
பேயாழ்வார் திருவடிகளே சரணம் 
-----------
ஸ்ரீ:  - ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (2382- 2477) 
சீராமப்பிள்ளை அருளிச்செய்தது 
நேரிசை வெண்பா 
திருமழிசைப்பிரானடி வாழ்த்து 
நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக் 
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார் 
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ 
மழிசைப் பரனடியே வாழ்த்து 
2382: 
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும் 
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய் 
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, 
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1 
2383: 
தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் 
ஆருமறியார் அவன்பெருமை, ஓரும் 
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் 
அருள்முடிவ தாழியான் பால் 2 
2384: 
பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும், 
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத் 
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில் 
அருபொருளை யானறிந்த வாறு? 3 
2385: 
ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும், 
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர் 
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும் 
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4 
2386: 
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம், 
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில் 
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே, 
அருநான்கு மானாய் அறி 5 
2387: 
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், 
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய 
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் 
ஈனவரே யாதலால் இன்று. 6 
2388: 
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் 
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக 
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே 
நீயென்னை யன்றி யிலை 7 
2389: 
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற 
சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட 
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த 
கூரம்பன் அல்லால் குறை 8 
2390: 
குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து 
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட 
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் 
அண்டத்தான் சேவடியை ஆங்கு 9 
2391: 
ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும் 
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண 
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான் 
வல்லரே யல்லரே? வாழ்த்து 10 
2392: 
வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம் 
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த 
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை 
வழாவண்கை கூப்பி மதித்து 11 
2393: 
மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ 
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய் 
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி 
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12 
2394: 
வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக் 
கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும் 
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு 
நற்பொருள்தான் நாரா யணன் 13 
2395: 
நாரா யணனென்னை யாளி, நரகத்துச் 
சேராமல் காக்கும் திருமால்தன், பேரான 
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு 
ஆசைப்பட் டாழ்வார் பலர் 14 
2396: 
பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம் 
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில் 
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர் 
நீர்க்கண்டன் கண்ட நிலை 15 
2397: 
நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர் 
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர் 
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய 
தேராழி யால்மறைத்தா ரால் 16 
2398: 
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு 
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம் 
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல் 
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17 
2399: 
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு 
கூறகக் கீறிய கோளரியை, - வேறாக 
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச் 
சார்த்தி யிருப்பார் தவம் 18 
2400: 
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை 
அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக் 
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம் 
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19 
2401: 
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும் 
நீயே தவத்தேவ தேவனும், - நீயே 
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் 
திருசுடரு மாய இவை 20 
2402: 
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற 
இவையா எரிவட்டக் கண்கள், - இவையா 
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான், 
அரிபொங்கிக் காட்டும் அழகு ? 21 
2403: 
அழகியான் தானே அரியுருவன் தானே 
பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த் 
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே 
மீனா யுயிரளிக்கும் வித்து 22 
2404: 
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த 
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த 
கார்மேக மன்ன கருமால் திருமேனி, 
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23 
2405: 
நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும் 
இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய் 
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய் 
மனப்போர் முடிக்கும் வகை 24 
2406: 
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும் 
வகையால் வருவதொன் றுண்டே, வகையால் 
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும் 
வயிர வழக்கொழித்தாய் மற்று 25 
2407: 
மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை, 
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும் 
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக் 
கண்டுகொள் கிற்குமா று 26 
2408: 
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும் 
பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி 
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை 
யான்காண வல்லேற் கிது 27 
2409: 
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது, 
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை 
தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை, 
ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28 
2410: 
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே, 
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம் 
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால் 
அன்றிக்கொண் டெய்தான் அவன். 29 
2411: 
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில் 
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன 
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே, 
வெள்ளத் தரவணையின் மேல். 30 
2412: 
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம் 
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர் 
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும் 
கருமாயம் பேசில் கதை 31 
2413: 
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள 
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான் 
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ 
ஆய்ந்த குணத்தான் அடி 32 
2414: 
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை 
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள 
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து, 
கோப்பின்னு மானான் குறிப்பு. 33 
2415: 
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த, 
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ 
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல், 
தான்கடத்தும் தன்மையான் தாள் 
2416: 
தாளால் உலகம் அளந்த அசைவேகொல், 
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம் 
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், 
ஐந்தலைவாய் நாகத் தணை? 35 
2417: 
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், 
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத் 
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், 
அணைப்பார் கருத்தனா வான். 36 
2418: 
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு, 
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு 
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும், 
அண்டந் திருமால் அகைப்பு. 37 
2419: 
அகைப்பில் மனிசரை யாறு சமயம் 
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல் 
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும், 
அப்போ தொழியும் அழைப்பு. 38 
2420: 
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண, 
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே 
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை 
வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39 
2421: 
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி 
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற 
_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார், 
கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40 
2422: 
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர, 
ஓண விழவில் ஒலியதிர, பேணி 
வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய், 
திருவேங் கடமதனைச் சென்று. 41 
2423: 
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை, 
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும் 
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும், 
அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42 
2424: 
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை 
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள் 
சடையேற வைத்தானும் தாமரைமே லானும் 
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43 
2425: 
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், 
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, 
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே, 
போம்குமர ருள்ளீர் புரிந்து. 44 
2426: 
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், 
பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும் 
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே 
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45 
2427: 
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென் 
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும் 
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே, 
நாடுவளைத் தாடுமேல் நன்று. 46 
2428: 
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும், 
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ 
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் 
வேடு முடைவேங் கடம். 
2429: 
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் 
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே 
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு 
வானவரைக் காப்பான் மலை. 48 
2430: 
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, 
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல் 
பீறக் கடைந்த பெருமான் திருநாமம், 
கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49 
2431: 
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ 
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங் 
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன் 
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50 
2432: 
எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான் 
தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா 
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு 
விண்ணெல்லா முண்டோ  விலை? 51 
2433: 
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர், 
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால் 
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார், 
கடமுண்டார் கல்லா தவர். 52 
2434: 
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் 
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத 
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் 
தேவரைத் தேறல்மின் தேவு. 53 
2435: 
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில் 
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய் 
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார், 
கற்கின்ற தெல்லாம் கடை. 54 
2436: 
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும் 
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற 
நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை 
யாரோத வல்லா ரவர்? 55 
2437: 
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு, 
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக் 
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற் 
குடனின்று தோற்றா னொருங்கு. 56 
2438: 
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான், 
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த 
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம் 
ஆனவர்தா மல்லாக தென்? 57 
2439: 
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான், 
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச 
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த் 
தாயனுக் காக்கினேன் அன்பு. 58 
2440: 
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக் 
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை 
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி 
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59 
2441: 
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின் 
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க் 
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை 
விரும்புவதே விள்ளேன் மனம் 60 
2442: 
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை, 
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான் 
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான், 
சென்றொன்றி நின்ற திரு. 61 
2443: 
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார், 
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த 
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய், 
தார்தன்னைச் சூடித் தரித்து. 62 
2444: 
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர், 
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி 
வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும், 
பூசித்தும் போக்கினேன் போது. 63 
2445: 
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக் 
காதானை யாதிப் பெருமானை,- நாதானை 
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும் 
சொல்லானை, சொல்லுவதே சூது. 64 
2446: 
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை 
மாதாய மாலவனை மாதவனை, - யாதானும் 
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத் 
தில்லையோ சொல்லீ ரிடம்? 65 
2447: 
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு 
படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக 
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான் 
வையேனாட் செய்யேன் வலம். 66 
2448: 
வலமாக மாட்டாமை தானாக, வைகல் 
குலமாக குற்றம்தா னாக,- நலமாக 
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை, 
சீரணனை யேத்தும் திறம். 67 
2449: 
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் 
மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும் 
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன் 
தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68 
2450: 
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம், 
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு 
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில் 
மறைப்பொருளும் அத்தனையே தான். 69 
2451: 
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து, 
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன் 
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச் 
சென்றாங் கடிப்படுத்த சேய். 70 
2452: 
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், 
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன் 
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில் 
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71 
2453: 
இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும், 
சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம் 
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே 
யாவதீ தன்றென்பா ரார்? 72 
2454: 
ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த, 
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த 
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த 
பண்டைத்தா னத்தின் பதி. 73 
2455: 
பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி, 
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன் 
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை, 
அல்லதொன் றேத்தாதென் நா. 74 
2456: 
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத் 
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு 
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச் 
செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75 
2457: 
பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும் 
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட 
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் 
றனமாயை யிற்பட்ட தற்பு. 76 
2458: 
தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக் 
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட 
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான், 
எவ்வினையும் மாயுமால் கண்டு. 77 
2459: 
கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல் 
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும் 
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங் 
காரலங்க லானமையா லாய்ந்து. 78 
2460: 
ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால் 
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம் 
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம் 
வைகுந்தம் காண்பார் விரைந்து. 79 
2461: 
விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க, 
கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம் 
பாடின ஆடின கேட்டு, படுநரகம் 
வீடின வாசற் கதவு. 80 
2462: 
கதவு மனமென்றும் காணலா மென்றும், 
குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக 
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய், 
கற்றமொழி யாகிக் கலந்து. 81 
2463: 
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை 
நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள் 
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள் 
விட்டேத்த மாட்டாத வேந்து. 82 
2464: 
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் 
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத் 
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும், 
பின்னால்தான் செய்யும் பிதிர். 83 
2465: 
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு, 
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும் 
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும் 
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84 
2466: 
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, 
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த 
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, 
வில்லாளன் நெஞ்சத் துளன். 85 
2467: 
உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும் 
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய் 
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும், 
என்னொப்பார்க் கீச னிமை. 86 
2468: 
இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட, 
சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள் 
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு 
உண்டா னுலகோ டுயிர். 87 
2469: 
உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி, 
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச் 
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப் 
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88 
2470: 
பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம், 
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை, 
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து 
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89 
2471: 
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான் 
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த 
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே 
தாழா யிருப்பார் தமர் 90 
2472: 
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும் 
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள் 
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன் 
தாள்தா மரையடைவோ மென்று 91 
2473: 
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து 
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும் 
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய், 
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92 
2474: 
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் 
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை 
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை 
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93 
2475: 
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக 
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த 
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு 
வேம்பும் கறியாகும் ஏன்று. 94 
2476: 
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை 
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன் 
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை 
இடநாடு காண இனி. (2) 95 
2477: 
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் 
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன் 
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை 
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96 
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம். 
-----------
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்  (2478-2577) 
தனியன் 
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது 
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து, 
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு, 
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த, 
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே. 
2478: 
பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா  வொழுக்கும் அழுக்குடம்பும், 
இந்நின்ற நீர்மை இனியா   முறாமை, உயிரளிப்பான் 
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா. 
மெய்நின்று கேட்டரு ளாய்,அடியேன்செய்யும் விண்ணப்பமே. 1 
2479: 
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண் 
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ 
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்ணாட்டவர் மூதுவராம் 
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே. 2 
2480: 
குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும், 
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல்  மீளுங்கொல், தண்ணந்துழாய் 
அழல்போ லடும்சக்க ரத்தண்ணல்  விண்ணோர் தொழக்கடவும் 
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின்  போன தனிநெஞ்ச் கமே. 3 
2481: 
தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே  கவர்ந்தது, தண்ணந்துழாய்க் 
கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே 
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப் 
பனிநஞ்ச மாருத மே,எம்ம  தாவி பனிப்பியல்வே? 4 
2482: 
பனிபியல் வாக வுடையதண்  வாடை,இக் காலமிவ்வூர் 
பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந் தண்ணந்துழாய் 
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம் 
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே? 5 
2483: 
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு, 
கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக் 
கடாவிய வேகப் பறவையின்  பாகன் மதனசெங்கோல் 
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6 
2484: 
ஞாலம் பனிப்பச் செரித்து,நன்  நீரிட்டுக் கால்சிதைந்து 
நீலவல் லேறு பொராநின்ற  வான மிது,திருமால் 
கோலம் சுமந்து பிரிந்தார்  கொடுமை குழறுதண்பூங் 
காலங்கொ லோவறி யேன்,வினை யாட்டியேன் காண்கின்றவே? 7 
2485: 
காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள் 
பாண்குன்ற நாடர் பயில்கின் றன,இதெல் லாமறிந்தோம் 
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும் 
சேண்குன்றம் சென்று,பொருள்படைப் <பான்கற்ற திண்ணனவே. 8 
2486: 
திண்பூஞ் சுடர்_தி நேமியஞ் செல்வர்,விண் ணாடனைய 
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,இவையோ 
கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி 
வண்பூங் குவளை, மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9 
2487: 
மாயோன் வடதிரு வேங்கட நாட,வல் லிக்கொடிகாள். 
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரை யீர் _மது 
வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும் 
ஆயோ அடும்தொண்டை யோ, அறை யோவி தறிவரிதே. 10 
2488: 
அரியன யாமின்று காண்கின்றன,கண்ணன் விண்ணனையாய். 
பெரியன காதம் பொருட்கோபிரிவெனெ, ஞாலமெய்தற் 
குரியென வெண்முத்தும் பைம்பொன்னு மேந்தியொ ரோகுடங்கைப் 
பெரியென கெண்டைக் குலம்,இவை யோவந்து பேர்கின்றவே? 11 
2489: 
பேர்கின் றதுமணி மாமை, பிறங்கியள் ளல்பயலை 
ஊர்கின் றதுகங்குல் ஊழிகளே,இதெல் லாமினவே 
ஈர்கின்ற சக்கரத் தெம்பெருமான்கண்ணன் தண்ணந்துழாய் 
சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து போன் தனிவளமே. 12 
2490 
தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப் 
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும் 
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந் 
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே. 13 
2491: 
ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ 
பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே 
சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர் 
தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே? 14 
2492: 
கயலோ _மகண்கள்? என்று களிறு வினவிநிற்றீர், 
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த 
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும் 
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. 15 
2493: 
பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப் 
பலபல கூறிட்ட கூறாயிடும்,கண்ணன் விண்ணனையாய். 
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும் 
பலபல சூழ லுடைத்து,அம்ம வாழியிப் பாயிருளே. 16 
2494: 
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ 
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவணைமேல் 
இருள்விரி நீலக் கருநாயிறுசுடர் கால்வதுபோல் 
இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே. 17 
2495: 
கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று 
கடல்கொண் டெழுந்த வதனாலிது,கண்ணன் மண்ணும்விண்ணும் 
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொலோ புயற் காலங்கொலோ. 
கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய் யாநிற்கும் காரிகையே. 18 
2496: 
காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே 
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ 
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார் 
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே. 19 
2497: 
சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம்,இந் நோயினதென் 
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது வேல.நில்நீ 
என்மொழி கேண்மினென் அம்மனை மீர் உல கேழுமுண்டான் 
சொல்மொழி, மாலயந் தண்ணந்துழாய்கொண்டு சூட்டுமினே. 20 
2498: 
சூட்டுநன் மாலைகள் தூயனவேந்தி,விண் ணோர்கள்நன்னீர் 
ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்கு,ஓர் மாயையினால் 
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன் 
கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. 21 
2499: 
கொம்பார் தழைகை சிறுநா ணெறிவிலம் வேட்டைகொண்டாட் 
டம்பார் களிறு வினவுவ தையர்புள் ளூரும்கள்வர் 
தம்பா ரகத்தென்று மாடா தனதம்மில் கூடாதன 
வம்பார் வினாச்சொல்ல வோ,எம்மை வைத்ததிவ் வான்புனத்தே? 22 
2500: 
புனமோ புனத்தய லேவழி போகும் அருவினையேன் , 
மனமோ மகளிர்_ங் காவல்சொல் லீர்,புண்ட ரீகத்தங்கேழ் 
வனமோ ரனையகண் ணான்கண்ணன் வானா டமரும்தெய்வத் 
தினமோ ரனையீர்க ளாய்,இவை யோம் இயல்புகளே? 23 
2501: 
இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக் 
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால் 
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க் 
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே? 24 
2502: 
எங்கோல் வளைமுத லா,கண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும் 
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்,திறல் சேரமர் 
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோன் 
நங்கோ னுகக்கும் துழாய்,எஞ்செய் யாதினி நானிலத்தே ? 25 
2503: 
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட, 
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை, கடந்தபொன்னே. 
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந் 
தேனிளஞ் சோலையப் பாலது, எப் பாலைக்கும் சேமத்ததே. 26 
2504: 
சேமம்செங் கோனரு ளே,செருவாரும்நட் பாகுவரென் 
றேமம் பெறவையம் சொல்லும்மெய்யே,பண்டெல் லாம்மறைகூய் 
யமங்க டோ றெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த் 
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே. 27 
2505: 
தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம், நடுவே 
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்,வள் வாயலகால் 
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா.அருளாய் 
எண்ணந் துழாவு மிடத்து,உள வோபண்டும் இன்னன்னவே? 28 
2506: 
இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று 
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட 
மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா 
அன்னன்ன நீர்மைகொ லோ, குடிச்சீர்மையி லன்னங்களே . 29 
2507: 
அன்னம்செல் வீரும்வண் டானம்செல்வீரும் தொழுதிரந்தேன் 
முன்னம்செல் வீர்கள் மறவேல்மினோகண்ணன் வைகுந்தனோ 
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர் 
இன்னஞ்செல் லீரோ, இதுவோ தகவென் றிசைமின்களே . 30 
2508: 
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல் 
அசைமின்க ளென்றா லசையிங்கொலாம்,அம்பொன் மாமணிகள் 
திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்சிமயம் 
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே . 31 
2509: 
மேகங்க ளோ.உரை யீர், திருமால்திரு மேனியொக்கும் 
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான் 
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்னீர்கள் சுமந்து_ந்தம் 
ஆகங்கள் நோவ, வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32 
2510: 
அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும் 
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால் 
பொருளோ எனுமிகழ் வோ?இவற்றின்புறத் தாளென்றெண்ணோ? 
தெருளோம் அரவணை யீர்,இவள் மாமை சிதைக்கின்றதே. 33 
2511: 
சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறி,தன் சீறடியால் 
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார் 
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப் 
பதைக்கின்ற மாதின் திறத்துஅறியேஞ்செயற் பாலதுவே. 34 
2512: 
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த 
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த 
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம் 
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே. 35 
2513: 
துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன் தண்தா ரதுபெயரா 
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ 
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோ.இலங்கைக் 
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே . 36 
2514: 
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர், கொலையில்வெய்ய 
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து, அருவினையேன் 
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற 
தொடுங்கா லொசியு மிடை, இள மாஞ்சென்ற சூழ்கடமே. 37 
2515: 
கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள் 
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல், 
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து 
நடமா டியபெரு மான்,உரு வொத்தன நீலங்களே. 38 
2516: 
நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள் 
போல, பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர் 
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான் 
கோலம் கரிய பிரான்,எம்பிரான்கண்ணின் கோலங்களே. 39 
2517: 
கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த 
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர் . 
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே 
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ. 40 
2518: 
என்றும்புன் வாடை யிதுகண்டறிதும்,இவ் வாறுவெம்மை 
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம், ஓங்கசுரர் 
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள் 
மன்றில் நிறைபழி தூற்றி, நின்றென்னைவன் காற்றடுமே. 41 
2519: 
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த, 
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன, மண்ணும்விண்ணும் 
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த 
தன்கால்பணிந்தவென் பால்,எம்பிரான தடங்கண்களே. 42 
2520: 
கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே, 
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால் 
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும் 
எண்ணு மிடத்தது வோ, எம்பிரான தெழில்நிறமே? 43 
2521: 
நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று, 
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும், அங்கங்கெல்லாம் 
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும் 
பெறமுயன் றாரில்லை யால், எம்பி ரான்றன் பெருமையையே. 44 
2522: 
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல் 
ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவர்நம்போல் 
வரும்கேழ் பவருள ரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும் 
மருங்கே வரப்பெறு மே, சொல்லுவாழி மடநெஞ்சமே. 45 
2523: 
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி, 
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்,அப் பொன்பெயரோன் 
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த் 
திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே. 46 
2524: 
திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து 
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே 
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை 
விரிகின் றதுமுழு மெய்யும்,என் னாங்கொலென் மெல்லியற்கே? 47 
2525: 
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில் மிளிர்தந்தாங்கே 
செல்லிய செல்கைத் துலகையென் காணும்,என் னாலும்தன்னைச் 
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்? 
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே. 48 
2526: 
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,இப் பாயிருள்போல் 
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண 
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன் 
உண்டும் உமிழ்ந்தும் கடாய, மண் ணேரன்ன ஒண்ணுதலே. 49 
2527: 
ஒண்ணுதல் மாமை ஒளிபயவாமை, விரைந்துநந்தேர் 
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று, தேன்நவின்ற 
வண்முதல் நாயகன் நீள்முடிவெண்முத்த வாசிகைத்தாய் 
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய்யாநிற்கும் மாமலைக்கே. 50 
2528: 
மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான். 
அலைகண்டு கொண்ட அமுதம்கொள்ளாது கடல்,பரதர் 
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத் 
துலைகொண்டு தாயம் கிளர்ந்து,கொள்வானொத் தழைக்கின்றதே. 51 
2529: 
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய் 
மழைக்கண் மடந்தை அரவணை யேற, மண் மாதர்விண்வாய் 
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் 
மழைக்கண்ண நீர்,திரு மால்கொடியானென்று வார்கின்றதே. 52 
2530: 
வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம், 
சேரா யினதெய்வ நன்னோ யிது,தெய்வத் தண்ணந்துழாய்த் 
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ் 
வேரா யினும்,நின்ற மண்ணாயினும்கொண்டு வீசுமினே. 53 
2531: 
வீசும் சிறகால் பறத்திர், விண்ணாடு_ங் கட்கெளிது 
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண் 
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார் 
மாசின் மலரடிக் கீழ்,எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54 
2532: 
வண்டுக ளோ.வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ, 
உண்டுகளித்துழல் வீர்க்கொன்றுரைக்கியம், ஏனமொன்றாய் 
மண்துக ளாடிவை குந்தமன்னாள்குழல் வாய்விரைபோல் 
விண்டுகள் வாரும், மலருள வோம் வியலிடத்தே? 55 
2533: 
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால், 
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,ஓர் தண்தென்றல்வந் 
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின்தேன் 
புயலுடை நீர்மையி னால், தடவிற்றென் புலன்கலனே. 56 
2534: 
புலக்குண் டலப்புண்ட ரீகத்த போர்க்கொண்டை, வல்லியொன்றால் 
விலக்குண் டுலாகின்று வேல்விழிக் கின்றன, கண்ணன் கையால் 
மலக்குண் டமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால் 
கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை யாரும் கழறலரே. 57 
2535: 
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய் 
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து 
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா 
அழறலர் தாமரைக் கண்ணன், என்னோவிங் களக்கின்றதே? 58 
2536: 
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு 
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள, ஓங்குமுந்நீர் 
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன் 
தளப்பெரு நீண்முறு வல்,செய்யவாய தடமுலையே. 59 
2537: 
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய 
கலையோ அரையில்லை நாவோகுழறும், கடல்மண்ணெல்லாம் 
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பர மே.பெருமான் 
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே? (2) 60 
2538: 
வாசகம் செய்வது நம்பரமே?, தொல்லை வானவர்தம் 
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும் 
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால் 
தாயவன், ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே. 61 
2539: 
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்டால்,என வும்மிரங்காது, 
அறையோ. எனநின் றதிரும் கருங்கடல், ஈங்க்கிவள்தன் 
நிறையோ இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால் 
முறையோ, அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே. 62 
2540: 
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய, 
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ 
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற் 
கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக் கால மிருகின்றதே. 63 
2541: 
இருக்கார் மொழியால் நெறியிழுக்காமை, உலகளந்த 
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர், யாமும் அவா 
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின் 
கருக்காய் கடிப்பவர் போல், திருநாமச்சொல் கற்றனமே. 64 
2542: 
கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்று,ஓ ரோகருமம் 
உற்றுப் பயின்று செவியொடு சாவி, உலகமெல்லாம் 
முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் 
உற்றும் உறாதும், மிளீர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே. 65 
2543: 
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் 
எண்ணாய் மிளிரும் இயல்பினவாம்,எரி நீர்வளிவான் 
மண்ணா கியவெம் பெருமான்றனதுவை குந்தமன்னாள் 
கண்ணாய் அருவினை யேன், உயிராயின காவிகளே. 66 
2544: 
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று, 
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு, அசுரர்செற்ற 
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர் 
தூவியம் பேடையன் னாள்,கண்களாய துணைமலரே. 67 
2545: 
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் 
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ் 
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய். 
கலந்தார் வரவெதிர் கொண்டு,வன் கொன்றைகள் கார்த்தனவே. 68 
2546: 
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான் 
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை, புவனியெல்லாம் 
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே? 
வாரேற் றிளமுலை யாய், வருந்தேலுன் வளைத்திறமே. 69 
2547: 
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல், 
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை, 
விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை 
உளைவான் புகுந்து,இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே. 70 
2548: 
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம்,பழங்கண்டு 
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு,அஃ தேகொண்டன்னை 
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும் 
தோழிக ளோ.உரை யீர், எம்மை அம்மனை சூழ்கின்றவே. 71 
2549: 
சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை, 
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே 
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று 
வாழ்கின்ற வாறிது வோ,வந்து தோன்றிறு வாலியதே. 72 
2550: 
வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும், 
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம் 
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும் 
சால்பின் தகைமைகொ லாம், தமியாடி தளர்ந்ததுவே? 73 
2551: 
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண் 
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக் 
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய் 
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந் தோவந் துலாகின்றதே.          74 
2552: 
உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம்ஆவியை ஊடுருவக் 
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத் தீர்,குனி சங்கிடறிப் 
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார் 
நிலாகின்ற வைகுந்த மோ,வைய மோம் நிலையிடமே?          75 
2553: 
இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய், 
வடம்போ தினையும் மடநெஞ்ச மே,நங்கள் வெள்வளைக்கே 
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின் 
தடம்போ தொடுங்க,மெல் லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.          76 
2554: 
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட 
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை 
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா 
நங்களை மாமைகொள் வான்,வந்துதோன்றி நலிகின்றதே.          77 
2555: 
நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோ ள்துணித்த 
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல, மைவரைபோல் 
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே 
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.          78 
2556: 
வேதனை வெண்புரி _லனை, விண்ணோர் பரவநின்ற 
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும் 
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் 
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.          79 
2557: 
சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த, 
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த 
பேரர சே.எம் விசும்பர சே.எம்மை நீத்துவஞ்சித்த 
ஓரர சே.அரு ளாய்,இருளாய்வந் துறுகின்றதே.          80 
2558: 
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப் 
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த் 
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் 
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே.          81 
2559: 
எரிகொள்செந் நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய், 
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்கண்கள், மீண்டவற்றுள் 
எரிகொள்செந் தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும் 
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே?          82 
2560: 
விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை, 
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர் 
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் நைவுமெல்லாம் 
தளரில் கொலோவறி யேன், உய்யலாவதித் தையலுக்கே.          83 
2561: 
தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும், 
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம் 
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான் 
மையவண் ணா.மணியே,முத்த மே.என்றன் மாணிக்கமே.          84 
2562: 
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி, 
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த 
மாணிக்க மே.என் மரகத மே.மற்றொப் பாரையில்லா 
ஆணிப்பொன் னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே.          85 
2563: 
அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும், 
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம் 
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன் றாய்ச்சிவன் தாம்புகளால் 
புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே?          86 
2564: 
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந் 
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின் 
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம் 
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?           87 
2565: 
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன் 
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும் 
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர் 
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு, எங் கேவரும் தீவினையே?          88 
2566: 
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை, 
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது 
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால் 
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?          89 
2567: 
தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால், 
நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே 
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ  றசுரர்குழாம் 
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.          90 
2568: 
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும் 
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு 
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற 
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே.          91 
2569: 
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதிவாய், 
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நீன்னைவிண்ணோர் 
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று 
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.          92 
2570: 
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர் 
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும் 
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து 
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.          93 
2571: 
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே, 
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார், 
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும் 
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?          94 
2572: 
யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் 
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்ன மே,அதனால் 
யாதானும் பற்றிநீங் கும்விரதத்தைநல் வீடுசெய்யும் 
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.          95 
2573: 
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால் 
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ 
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய் 
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.          96 
2574: 
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க் 
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம் 
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு 
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோ கண்கள் துஞ்சுதலே?          97 
2576: 
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற, 
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும் 
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே 
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே.          98 
2576: 
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும் 
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர் 
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும் 
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே           99 
2577: 
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர் 
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த 
சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம் 
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே            100 
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 
-----------
ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
 நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்  (2578 - 2584)
தனியன் 
அருளாளப் பெருமான் எம்பெருமானாரருளிச் செய்தது 
கலிவிருத்தம் 
கானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து, 
ஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை, 
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை, 
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே . 
ஆசிரியப்பா 
2578: 
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் 
பரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு 
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் 
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம் 
கடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல் 
பீதக ஆடை முடிபூண் முதலா 
மேதகு பல்கலன் அணிந்து, சோதி 
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப் 
பச்சை மேனி மிகப்ப கைப்ப 
நச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி 
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து 
சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர் 
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த 
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக 
மூவுல களந்த சேவடி யோயே.  
2579: 
உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல் 
சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா 
ருயிருகி யுக்க,நேரிய காதல் 
அன்பி லின்பீன் தேறல், அமுத 
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு 
அசைவோர் அசைக, திருவொடு மருவிய 
இயற்கை, மாயாப் பெருவிற லுலகம் 
மூன்றி னொடுநல்வீடு பெறினும், 
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? 
2580: 
குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் 
மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை 
மெய்பெற நடாய தெய்வம் மூவரில் 
முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து 
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர, 
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர 
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத் 
தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே 
இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே? 
2581: 
ஊழிதோ றூழி ஓவாது வாழியே. 
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ, 
யாவகை யுலகமும் யாவரு மில்லா, 
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட் 
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் 
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை 
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல 
_தலிமூ வுலகம் விளைத்த உந்தி, 
மாயக் கடவுள் மாமுத லடியே? 
2582: 
மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, 
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது 
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் 
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை 
வழிபட நெறீஇ, தாமரைக் காடு 
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது 
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன 
கற்பகக் காவு பற்பல வன்ன 
முடிதோ ளாயிரம் தழைத்த 
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே? 
2583: 
ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க 
மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந் 
தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் 
கடவுள் நிற்ப புடைப்பல தானறி 
தெய்வம் பேணுதல், தனாது 
புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி, 
கொல்வன முதலா அல்லன முயலும், 
இனைய செய்கை யின்பு துன்பளி 
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா 
பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே. 
2584: 
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் 
தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா, 
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, 
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும் 
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, 
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும் 
அகப்ப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்தவெம் 
பெருமா மாயனை யல்லது, 
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே?   
நம்மாழ்வார் திருவடிகளே சரணம். 
----------
 நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி (2585 - 2671)
தனியன் 
எம்புருமானார் அருளிச்செய்தது 
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து 
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த 
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல் 
குருகூரன் மாறன் பேர் கூறு. 
2585: 
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே, 
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய 
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப் 
பூவீன்ற வண்ணன் புகழ் 
2586: 
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் 
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற் 
றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம் 
எங்கள் மால் கண்டாய் இவை. 
2587: 
இவையன்றே நல்ல இவையன்றே தீய, 
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம் 
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே, 
என்னால் செயற்பால தென்? 
2588: 
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற் 
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன 
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப் 
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று? 
2589: 
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ 
மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ 
மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த 
நீயம்மா. காட்டும் நெறி. 
2590: 
நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா 
முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை 
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய் 
எஞ்செய்தா லென்படோ ம் யாம்? 
2591: 
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் 
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய 
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த 
அம்மா. நின் பாதத் தருகு. 
2592: 
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே 
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம் 
பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய 
_ண்புடையீர் _ம்மை _மக்கு. 
2593: 
_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார் 
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி 
யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே 
யாதானும் சிந்தித் திரு. 
2594: 
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ  
டொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு 
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே 
நாமா மிகவுடையோம் நாழ்? 
2595: 
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, 
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத 
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, 
நீரும்நீ யாய்நின்ற நீ. 
2596: 
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்? 
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும் 
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள் 
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 
2597: 
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட, 
இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே, 
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள் 
தம்மால்காட் டுன்மேனிச் சாய்? 
2598: 
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே, 
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த் 
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம் 
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து. 
2599: 
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம் 
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம் 
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய 
செம்மேனிக் கண்வளர்வார் சீர். 
2600: 
சீரால் பிறந்து சிறப்பால் வளராது, 
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப் 
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே? 
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. 
2601: 
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் 
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் 
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, 
தாள்வரைவில் லேந்தினார் தாம். 
2602: 
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, 
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் 
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் 
தொல்லுருவை யாரறிவார் சொல்லு? 
2603: 
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே, 
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண் 
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக, 
காத்தானைக் காண்டும்நீ காண். 
2604: 
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம், 
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி 
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான், 
திருவாகம் தீண்டிற்றுச் சென்று. 
2605: 
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, 
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் 
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, 
காருருவன் தன் நிமிர்த்த கால் 
2606: 
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், 
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் 
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற் 
றிருக்குமிடம் காணா திளைத்து. 
2607: 
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன், 
இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த 
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான், 
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். 
2608: 
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான் 
தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்,-தானே 
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால், 
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்? 
2609: 
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை 
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் 
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர் 
இனத்தலைவன் கண்ணனால் யான். 
2610: 
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக் 
கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர் 
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த, 
அருளென்னும் தண்டால் அடித்து. 
2611: 
அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல் 
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய். 
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம், 
அறிகிலாமால் நீயளந்த அன்று. 
2612: 
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம், 
இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும் 
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் 
உட்கண்ணால் காணு முணர்ந்து. 
2613: 
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே, 
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத் 
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால், 
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு. 
2614: 
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய 
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே 
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண் 
டடியெடுப்ப தன்றோ அழகு? 
2615: 
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான், 
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக் 
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத் 
தடங்கடலை மேயார் தமக்கு. 
2616: 
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார், 
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று 
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார், 
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது? 
2617: 
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ, 
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும் 
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால் 
பாறுபா றாக்கினான் பால். 
2618: 
பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும் 
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் 
சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும், 
நீதியாய். நிற்சார்ந்து நின்று. 
2619: 
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், 
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை 
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான், 
அன்புடைய னன்றே யவன்? 
2620: 
அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர் 
வனாம் அவனென் றிராதே,-அவனாம் 
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால், 
அவனே எவனேலும் ஆம். 
2621: 
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? 
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் 
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் 
அதுகரமே அன்பால் அமை. 
2622: 
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, 
இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள், 
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, 
பேசியே போக்காய் பிழை. 
2623: 
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய், 
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால் 
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே 
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு? 
2624: 
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே, 
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால 
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை 
மாய்த்தானை வாழ்தே வலி. 
2625: 
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர் 
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின் 
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே, 
பன்னாளும் நிற்குமிப் பார். 
2626: 
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் 
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம் 
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு 
ஆவான் பூகாவால் அவை. 
2627: 
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே, 
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில் 
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ , 
மனத்துயரை மாய்க்கும் வகை? 
2628: 
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும், 
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து 
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே, 
மேலைத்தாம் செய்யும் வினை? 
2629: 
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, 
தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது 
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், 
நாயகத்தான் பொன்னடிகள் நான். 
2630: 
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும் 
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத 
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, 
நீகதியா நெஞ்சே. நினை. 
2631: 
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே, 
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச 
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும் 
எவ்வளவு முண்டோ  எமக்கு? 
2632: 
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, 
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த 
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, 
கொன்றானை யேமனத்துக் கொண்டு? 
2633: 
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் 
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் 
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் 
பேருருவென் றெம்மைப் பிரிந்து. 
2634: 
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே, 
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால் 
ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல், 
மாவை பிளந்தார் மனம்? 
2635: 
மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை, 
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய 
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே, 
வண்டுழாம் சீராக்கு மாண்பு? 
2636: 
மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் 
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் 
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா 
துண்ணவாய் தானுறுமோ ஒன்று? 
2637: 
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க் 
கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில் 
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு 
வைகுந்த மென்றருளும் வான்? 
2638: 
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ, 
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற 
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், 
வன்துயரை யாவா. மருங்கு. 
2639: 
மருங்கோத மோதும் மணிநா கணையார், 
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே 
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால், 
மனக்கவலை தீர்ப்பார் வரவு. 
2640: 
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே. 
ஒருவா றொருவன் புகவாறு,-உருமாறும் 
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், 
மாயவர்தாம் காட்டும் வழி. 
2641: 
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே, 
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும் 
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள, 
வாழ்வடங்க மார்விடந்த மால்? 
2642: 
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது 
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால் 
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று, 
மறப்பின்மை யான்வேண்டும் மாடு. 
2643: 
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் 
காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப் 
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் 
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. 
2644: 
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் 
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும் 
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு 
இல்லைகாண் மற்றோர் இறை. 
2645: 
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள், 
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின் 
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின் 
மீதிலகித் தாங்கிடக்கும் மீன். 
2646: 
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் 
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர் 
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள் 
பிணிக்காம் பெருமருந்து பின். 
2647: 
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், 
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று 
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், 
பருச்செவியு மீர்ந்த பரன். 
2648: 
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், 
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் 
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் 
கைதான் தொழாவே கலந்து? 
2649: 
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே 
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் 
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, 
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு. 
2650: 
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, 
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட 
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே. 
அறிகண்டாய் சொன்னேன் அது. 
2651: 
அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில், 
அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து 
மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே, 
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல். 
2652: 
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், 
புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல 
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், 
அடியேன துள்ளத் தகம். 
2653: 
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார், 
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால் 
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை, 
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து? 
2654: 
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, 
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் 
மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே 
யாதாகில் யாதே இனி? 
2655: 
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே, 
தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர் 
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு 
முகத்தான்நின் உந்தி முதல். 
2656: 
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே 
முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா, 
நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே, 
புகரிலகு தாமரையின் பூ? 
2657: 
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, 
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் 
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை 
எல்லாம் பிரானுருவே என்று. 
2658: 
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், 
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று 
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே. 
புடைதான் பெரிதே புவி. 
2659: 
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென் 
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி 
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், 
ஊன்பருகு நேமியாய். உள்ளு. 
2660: 
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம், 
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள 
உலகளவு யானும் உளனாவன் என்கொல், 
உலகளந்த மூர்த்தி. உரை. 
2661: 
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே, 
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம், 
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர் 
சொல்நன்றி யாகும் துணை. 
2662: 
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் 
திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில் 
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, 
ஓவாத வூணாக உண். 
2663: 
உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே, 
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் 
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் 
பேராயற் காளாம் பிறப்பு? 
2664: 
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும் 
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம் 
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான் 
பாதமே யேத்தாப் பகல்? 
2665: 
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை 
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத் 
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார், 
செழும்பரவை மேயார் தெரிந்து. 
2666: 
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா 
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் 
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை 
அம்மானை யேத்தா தயர்ந்து. 
2667: 
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன் 
உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால 
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன் 
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து. 
2668: 
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத் 
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, 
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, 
தங்கத்தா னாமேலும் தங்கு. 
2669: 
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து, 
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத் 
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய 
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்? 
2670: 
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான், 
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த 
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, 
என்நினைந்து போக்குவரிப் போது? 
2671: 
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் 
எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும் 
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் 
மெய்கழலே ஏத்த முயல். 
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 
----------------
ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
 திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை (2672)
தனியன்கள் 
எம்பெருமானார் அருளிச்செய்தவை 
வாழிபரகாலன் வாழிகலிகன்றி, 
வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ 
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் 
தூயோன் சுடர்மான வேல். 
சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால், 
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ், 
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே 
சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே. 
2672: 
ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், 
ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை 
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் 
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை 
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் 
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி, 
முப்புரி _லொடு மானுரி யிலங்கும். 
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, 
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை, 
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை 
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி 
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் 
இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ 
நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில் 
அந்தணர் வணங்கும் தன்மையை,ஐம்புலன் 
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி 
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் 
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் 
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள் 
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் 
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை, 
ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய 
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் 
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர 
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி 
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து 
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் 
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை, 
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை, 
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, 
அறுபதம் முரலும் கூந்தல் காரணம் 
ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் 
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் 
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் 
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் 
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து 
நின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை 
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி 
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் 
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் 
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் 
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் 
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் 
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் 
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் 
வருமிடர் அகல மாற்றோ வினையே.  
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 
எம்பெருமானார் திருவடிகளே சரணம் 
------------
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்  (2673-2710) 
ஸ்ரீமதே ராமனுஜாய நம: 
ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம: 
தனியன் 
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம் 
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல் 
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி 
மருவாளன் தந்தான் மடல் 
2712: 
காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை 
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1 
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல் 
நீராரவெலி நிலமண்கையென்னும் -- இப் 2 
பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும் 
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3 
ஆராரிவற்றினிடையதனை எய்துவார் 
சீரார் இருகலயும் எய்துவர் -- சிக்கெனமது 4 
ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும் 
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5 
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌமெ 
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6 
தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு 
ஆராவமுதமண்கய்தி -- அதுனின்றும் 7 
வாரதொழிவதன்னுண்டு -- அகுனிர்க்க 
யெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ? 8 
எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான் 
காரார்க்குழலெடுதுக்கட்டி -- கதிர்முலயை 9 
வாராரவீக்கி மணிமெகலைதிருத்தி 
ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து 10 
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான் 
நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் 11 
பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்க 
சீரார் குடமரியண்டெந்தி -- செழுந்தெருவெ 12 
ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டு 
ஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் 13 
வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால் 
காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் 14 
ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் -- அரிவழிந்து 
தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி 15 
ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை 
சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு -- செங்குரிஞ்ஜி 16 
தாரார் நௌமாலை சாதர்க்கு 
தான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் -- அதனாலம் 17 
தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவு 
வாராதுமாமை அதுகண்டுமதாண்கெ 18 
ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார் 
பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல் 19 
ஆரானும் மெய்படுவன் நென்றர் -- அதுகேட்டு 
காரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி 20 
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா 
வெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ 21 
பெராயிரமுடயான் நென்றாள் -- பெர்த்தெயும் 
காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 22 
சீரார் வலம்புரியெ யென்றள் -- திருதுழாய்த் 
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா 23 
நீரெதுமண்ஜேல்மின் _ம்மகளை நொஇசெய்தான் 
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் 24 
கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ 
ஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான் 25 
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து 
ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர் 26 
ஆரால் கடைந்திட ப்பட்டது -- அவன் காண்மின் 
ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் 27 
ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி 
சீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை 28 
வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு 
ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ 29 
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை 
வேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு 30 
நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை 
போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் 31 
ஓராதவன்பொல் உர-ண்கியரிவுற்று 
தாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ 32 
ஆராத வெண்ணைவிழு-ண்கி -- அருகிருந்த 
மோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே 33 
ஓராதவன்பொல் கிடந்தானை கண்டவளும் 
வாராத்தான் வைதது காணாள் -- வயிரடுத்தி-ண்கு 34 
ஆஅரார் புகுதுவார்? ஆஇய்யரிவரல்லால் 
நீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் 35 
ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ 
தீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப 36 
ஆராவயிதினோடர்த்தாதான் -- அன்னியும் 
நீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி 37 
ஒராயிரம்பணவெ-ண் கொவியல்னாகதை 
வாராயெனக்கெண்ரு மததன் மதகது 38 
சீரார் திருவடியால்பயிந்தான் -- தஞ்சீதய்க்கு 
நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை 39 
கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும் 
ஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை -- வென்னரகம் 40 
செராவகையெ சிலைகுனித்தன் -- செந்துவர்வல் 
வாரார் வனமுலயால் வைதெவி காரணமா 41 
எரார்த்தடந்தொளிராவணனை -- ஈரயிந்து 
சீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் 42 
போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை 
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு -- குடல் மாலை 43 
சீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி -- செங்குருதி 
சொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி 44 
ஆரவெழுந்தன் அரியுருவாஇ 
அன்னியும்பெர் வாமனனாகிய காலது 44 
மூவடிமண் தாராயெனகென்று வேண்டிச்சலதினால் 
நீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை 45 
ஆராதபொரில் அசுரர்களும் தானுமாஇ 
காரார்வரைனட்டு நாகம் கய்ராக 46 
பேராமல் தாண்கி கடைண்தான் -- திருதுழய் 
தாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் 47 
போரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி 
நீராமலர்க்கமலம் கொண்டொர்னெடும்கய்யால் 48 
நாராயணா வோ மணிவண்ண நாகனையாய் 
வாரய். யென்னாரிடரய் நீக்காய் -- எனவுகண்டு 49 
தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக 
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் 50 
பேராயிரமுடயான் பேய்பெண்டீர்னும்மகளை 
தீரானொஇ செய்தானெனவுரைதாள் -- சிக்கனுமத்து 51 
ஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும் 
போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ 52 
தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மத்து 
ஆரானுமல்லனே யென்னொழிண்தாள் -- நானவனைக் 53 
காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா 
பேராபிதற்றத் திரிதருவன் -- பின்னையும் 54 
ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை 
சோராமருக்கும் வகையரியேன் -- சூழ் குழலாஅர் 55 
ஆரானுமேசுவர் என்னுமதன் பழியெ 
வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன் 56 
வாராஇ மடனெ-ஞ்சே வந்து -- மணிவண்ணன் 
சீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி 57 
தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை 
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் 58 
ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும் 
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு 59 
காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும் 
வாராதே யென்னை மரந்ததுதான் -- வல்வினையீன் 60 
ஊரார் உகப்பதே ஆயினேன் -- மற்றெனக்கி-ங்கு 
ஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் 61 
நீரை உருகும் என்னாவி -- நெடு-ண்கண்கல் 
ஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க -- உட்டமந்தன் 62 
பேராயினவே பிதத்துவன் -- பின்னையும் 
காரார் கடல் பொலும் காமத்தராயினார் 63 
ஆரேபொல்லாமை அணிவார் அதுனிற்க 
ஆரானுமாதானும் அல்லலவள்காணீர் 64 
வாரார் வனமுலை வாசமததை வென்று 
ஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் 65 
பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ 
தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் 66 
ஊராரிகழ்ண்திடப் பட்டாளே? -- மற்றெனக்கி-ங்கு 
ஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே -- நானவனை 67 
காரார் திருமேனி காணுமலவும்போஇ 
சீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் 68 
ஊரே -- மதிழ் கச்சி ஊரகமே பேரகமே 
பேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஃஆவே 69 
பேராலித-ண்கால் நரையூர் திருப்புலியூர் 
ஆராமம் சூழ்ந்தவர-ண்கம் -- கணம-ண்கை 70 
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் 
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் 71 
காரார்க்குதந்தை கடிகை கடல்மல்லை 
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை 72 
சீராரும் மாலிரும் சொலை திரு மூகூர் 
பாரோர் புகழும் வதரி வடமதுரை            73 
ஊராயவெல்லாம் ஒழியமெ நானவனை 
ஓரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த            74 
சீரானை -- செ-ண்கணெடியானை தேந்துழாஇத் 
தாரானை -- தாமரைபொல் கண்ணனை            75 
யெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி -- பெருந்தெருவெ 
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்            76 
வாரார் பூம் பெண்ணை மடல் 
------------
ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமானுஜாய நம: 
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல் (2673-2790)
தனியன் 
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது 
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும் 
நன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில் 
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில், 
மன்னு மடலூர்வன் வந்து. 
மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி 
ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர் 
தாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை 
வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே 
கலி வெண்பா 
2673: 
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், 
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், 
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், 
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,                     1 
2674: 
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம், 
என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை 
மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும் 
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை                   2
2715: 
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், 
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன், 
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல் 
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,                   3
2716: 
என்னும் இவையே முலையா வடிவமைந்த, 
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் 
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் 
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட                  4 
2717: 
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர், 
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல் 
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் 
முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்                  5 
2718: 
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், 
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும் 
பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர் 
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,                  6 
2719: 
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, 
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் 
மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், 
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,                   7
2720: 
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால், 
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார், 
என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில் 
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,                   8
2721: 
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும் 
தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே, 
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங் 
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க,                  9 
2722: 
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, 
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன், 
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர் 
கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,                    10
2723: 
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண் 
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் 
கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த 
மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,                   11 
2724: 
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப, 
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், 
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம், 
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,                    12
2725: 
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், 
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண் 
மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, 
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,                   13 
2726: 
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த, 
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், 
அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த 
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்                    14
2727: 
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய், 
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், 
மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார் 
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,                   15 
2728: 
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப, 
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், 
சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம் 
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்                    16
2729: 
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர 
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் 
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர் 
மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,                   17 
2730: 
பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங் 
கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், 
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல், 
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே                    18
2731: 
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும் 
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின் 
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் 
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,                    19
2732: 
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும், 
தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம், 
மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார் 
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,                   20 
2733: 
அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய் 
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின் 
மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல் 
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,                  21 
2734: 
உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த் 
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில், 
தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள் 
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,                   22
2735: 
பொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல் 
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும், 
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும், 
பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்                   23
2736: 
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து, 
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, 
மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள் 
மின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு                  24 
2737: 
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று, 
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா, 
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன் 
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,                   25
2738: 
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும், 
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?, 
பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின், 
மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்                   26
2739: 
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது, 
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங் 
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள் 
கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,                   27
2740: 
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை 
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும் 
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை, 
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,                  28 
2741: 
பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன் 
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல, 
தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன் 
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது                   29
2742: 
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், 
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், 
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், 
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,                   30
2743: 
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும், 
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய 
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய், 
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்                  31 
2744: 
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், 
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், 
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, 
மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்                   32
2745: 
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், 
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா 
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், 
அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்,                   33
2746: 
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல, 
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங் 
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள் 
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள                   34
2747: 
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும், 
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், 
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி, 
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,                   35
2748: 
பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு 
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ் 
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல், 
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,                   36
2749: 
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும் 
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், 
பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின் 
பொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்,                  37 
2750: 
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும், 
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும், 
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப, 
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்                   38
2751: 
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், 
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, 
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய், 
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,                   39
2752: 
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே, 
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும், 
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு 
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த                   40
2753: 
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும். 
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, - 
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, 
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,                   41
2754: 
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே, 
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, 
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், 
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்                   42
2755: 
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய, 
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து, 
தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல் 
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,                   43
2756: 
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, - பேதையேன் 
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின், 
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே, 
மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்,                  44 
2757: 
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், 
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் 
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் 
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,                   45
2758: 
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர் 
மன்னும் மருந்தறிவி ரில்லையே? - மல்விடையின் 
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால் 
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்                   46
2759: 
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின், 
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, 
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும், 
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த                   47
2760: 
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள் 
முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின் 
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல் 
அன்ன கடலை மலையிட் டணைகட்டி,                   48
2761: 
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து, 
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து 
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண் 
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்,                   49
2762: 
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை 
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து, 
கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன் 
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,                   50
2763: 
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய 
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த 
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை, 
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,                   51
2764: 
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில், 
கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை, 
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் 
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்                   52
2765: 
தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு 
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய 
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும், 
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,                  53 
2766: 
மன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன் 
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் 
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, 
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,                  54 
2767: 
மன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் 
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் 
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த 
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து, அங்                   55 
2768: 
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி, 
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, 
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, - தாமரைமேல் 
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,                   56
2769: 
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை, 
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை, 
மன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல் 
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,                    57
2770: 
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை, 
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, 
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் 
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,                   58
2771: 
மன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ் 
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, 
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, 
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,                   59
2772: 
மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம் 
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை, 
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை, 
அன்னத்தை மீனை அரியை அருமறையை,                   60
2773: 
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, - கோவலூர் 
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப், 
பின்னும் முலையுண்ட பிள்ளையை, - அள்ளல்வாய் 
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,                   61
2774: 
தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, - 
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை, 
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, 
கொன்னவிலும் ஆழிப் படையானை, - கோட்டியூர்                   62
2775: 
அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து 
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, 
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை, 
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெஃகாவில்,                  63 
2776: 
உன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள் 
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை, 
என்னை மனங்கவர்ந்த ஈசனை, - வானவர்த்தம் 
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,                   64
2777: 
அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை, 
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல் 
மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித் 
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்                   65
2778: 
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, 
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும் 
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர் 
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,                   66
2779: 
கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது 
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான், 
தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான் 
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்,                   67
2780: 
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும், 
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் 
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள் 
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,                   68
2781: 
துன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வேண்ணெய் 
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண் 
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால் 
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,                  69 
2782: 
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண் 
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,                   70
2783: 
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் 
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,                  71 
2784: 
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும், 
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,                   72
2785: 
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி, 
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,                   73
2786: 
தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை, 
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்                   74
2787: 
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி, 
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,                  75 
2788: 
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து, 
மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்,                   76
2789: 
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத் 
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்                   77
2790: 
உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான், 
முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த, 
மன்னியம்பூம் பெண்ணை மடல்.                   78
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். 
-------------
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி 
 தனியன்கள் 
முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன்* 
பொன்னங்கழற்கமலப் போதிரண்டும் - என்னுடைய 
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு 
என்னுக்கடவுடையேன் யான். 
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்* 
சயந்தருகீர்த்தி யிராமாங்சமுனிதாளிணைமேல் 
உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்குமன்பால் 
இயம்பும் கலித்துறையந்தாதியோத விசைநெஞ்சமே. 
சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும் 
நல்லன்பரேத்து முன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே* 
அல்லும் பகலும்மரும்படி நல்கு அறுசமயம் 
வெல்லும்பரம் இராமாநுச இதென் விண்ணப்பமே. 
------------- 
2791: 
பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த 
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர் 
தாம்மன்னவந்தவிராமாது சன் சரணாரவிந்தம் 
நாம்மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.               1
2792: 
கள்ளார் பொழில் தென்னரங்கன் கமலப்பதங்கள் நெஞ்சிற் 
கொள்ளாமனிசரைநீங்கி குறையல்பிரானடிக்கீழ் 
விள்ளாதவன் பனிராமாநுசன்மிக்க சீலமல்லால் 
உள்ளாதென்னெஞ்சு ஒன்றறியேனெனக்குற்றபேரியல்வே. .                        2
பேரியல்நெஞ்சே அடிபணிந்தேனுன்னை பேய்ப்பிறவிப் 
பூரியரோடுள்ள சுற்றம் புலத்தி பொருவரும்சீர் 
ஆரியன் செம்மையிராமாநுசமுனிக் கன்பு செய்யும் 
சீரிய பேறுடையார் அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே. .                 3
2793: 
என்னைப்புவியிலொருபொருளாக்கி மருள்சுரந்த 
முன்னைப்பழவினை வேரறுத்து ஊழிமுதல்வனையே 
பன்னப்பணித்தவிராமாநுசன் பரன் பாதமுமென் 
சென்னித்தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே. .                4
2794: 
எனக்குற்ற செல்வமிராமாநுசனென்று இசையகில்லா 
மனக்குற்றமாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர் 
தனக்குற்றவன் பரவன் திருநாமங்கள் சாற்றும் என்பா 
வினக்குற்றம் காணகில்லார் பத்தியேய்ந்தவியல் விதென்றே.  .                5
2795: 
இயலும் பொருளுமிசையத்தொடுத்து நன்கவிகளன்பால் 
மயல் கொண்டு வாழ்த்து மிராமாநுசனை மதியின்மையால் 
பயிலும் கவிகளில் பத்தியில்லாதவென்பாவிநெஞ்சால் 
முயல்கின்றனன் அவன்றன் பெருங்கீர்த்திமொழிந்திடவே.   .                 6
*மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக்குறும்பாம் 
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்துமிராமாநுசன் புகழ்பாடி அல்லா 
வழியைக் கடத்தல் எனக்கினியாதும் வருத்தமன்றே.    .                7
வருத்தும் புறவிருள்மாற்ற எம்பொய்கைப்பிரான்மறையின் 
குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத் 
திரித்தன்றெரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே 
யிருத்தும்பரமன் இராமாநுசனெம்மிறையவனே.  .                8
இறைவனைக்காணு மிதயத்திருள்கெட ஞானமென்னும் 
நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள் நெஞ்சத் 
துறையவைத்தாளுமிராமாநுசன்புகழோதும் நல்லோர் 
மறையினைக்காத்து இந்த மண்ணகத்தேமன்னவைப்பவரே.  .               9
மன்னிய பேரிருள்மாண்ட பின் கோவலுள் மாமலராள் 
தன்னொடுமாயனைக் கண்டமைகாட்டும் தமிழ்த்தலைவன் 
பொன்னடி போற்று மிராமாநுசற்கன்புபூண்டவர்தாள் 
சென்னியிற் சூடும் திருவுடையாரென்றும் சீரியரே. .                 10
சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த 
பாரியலும்புகழ்ப் பாண்பெருமாள் சரணாம்பதுமத் 
தாரியல் சென்னி யிராமாநுசன்றன்னைச் சார்ந்தவர்தம் 
காரியவண்மை என்னால் சொல்லொணாதிக்கடலிடத்தே.  .                 11
இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் இணையடிப்போ 
தடங்குமிதயத் திராமாநுசன் அம்பொற்பாதமென்றும் 
கடங்கொண்டிறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக்காதல் செய்யாத் 
திடங்கொண்டஞானியர்க்கே அடியேனன்பு செய்வதுவே. .                  12
செய்யும் பசுந்துளபத்தொழில்மாலையும் செந்தமிழில் 
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராதசீரங்கத் 
தையன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா 
மெய்யன் இராமாநுசன்சாணேகதி வேறெனக்கே.     .                 13
கதிக்குப்பதறி வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம் 
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன் கொல்லிகாவலன் சொல் 
பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர்பாதங்களே 
துதிக்கும் பரமன் இராமாநுசனென்னைச் சோர்விலனே. .                 14
சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் தொல்லைமாலையொன்றும் 
பாராது அவனைப்பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் 
பேராதவுள்ளத் திராமாநுசன்றன் பிறங்கியசீர் 
சாராமனிசரைச்சேரேன் எனக்கென்ன தாழ்வினியே.       .                15
தாழ்வொன்றில்லாமறைதாழ்ந்து தலமுழுதும்கலியே 
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின்* அரங்கர்மௌலி 
சூழ்கின்றமாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் 
வாழ்கின்றவள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே.  .                16
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் 
கனியார்மனம் கண்ணமங்கைநின்னை சுலேபரவும் 
தனியானையைத்தண்டமிழ் செய்த நீலன் றனக்கு உலகில் 
இனியானை எங்களிராமாநுசனை வந்தெய்தினரே.   .                 17 
எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் 
செய்தற்குலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே 
பெய்தற்கிசையும் பெரியவர்சீரையுயிர்களெல்லாம் 
உய்தற்குதவும் இராமாநுசனெம்முறு துணையே.     .                 18
உறுபெருஞ்செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் 
வெறிதருபூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர் 
நெறிதரும் செந்தமி ழாரணமேயென்றிந்நீணிலத்தோர் 
அறிதரநின்ற இராமாநுசனெனக்காரமுதே.       .                 19
ஆரப்பொழில் தென்குருகைப்பிரான் அமுதத்திருவா 
யீரத்தமிழி னிசையுணர்ந்தோர்கட்கு இனியவர்தம் 
சீரைப்பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் 
வாரிப்பருகும் இராமாநுசனென்றன் மாநிதியே.       .                  20
நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றித் 
துதிகற்றுலகில் துவள்கின்றிலேனினி* தூய்நெறிசேர் 
எதிகட்கிறைவன் யமுனைத்துறைவனிணையடியாம் 
கதிபெற்றுடைய இராமா னுசனென்னைக்காத்தனனே.     .                  21
கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண் 
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும் 
பூத்தவனேயென்று போற்றிட வாணன் பிழை பொறுத்த 
தீர்த்தனை யேத்தும் * இராமாநுசனென்றன் சேமவைப்பே.   .                22
வைப்பாய்வான் பொருளென்று நல்லன்பர் மனத்தகத்தே 
எப்போதும் வைக்கு மிராமாநுசனை இருநிலத்தில் 
ஒப்பாரிலாத வுறுவினையேன்வஞ்சநெஞ்சில்வைத்து 
முப்போதும் வாழ்த்துவன் என்னாமிது அவன் மொய்புகழ்க்கே.  .                23
மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல்தொறும் மூத்து அதனால் 
எய்த்தொழிந்தேன் முன்நாள்களெல்லாம் இன்று கண்டுயர்ந்தேன் 
பொய்த்தவம் போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக் 
கைத்தமெய்ஞ்ஞானத்து* இராமாநுசனென்னும் கார்தன்னையே. .                   24
காரேய் கருணையிராமாநுச இக்கடலிடத்தில் 
ஆரேயறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு 
நேரேயுறைவிடம் நான் வந்து நீயென்னையுய்த்த பின் உன் 
சீரேயுயிர்க்குயிராய் அடியேற்கின்று தித்திக்குமே. .                 25
திக்குற்றகீர்த்தி யிராமாநுசனை என் செய்வினையாம் 
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் 
எக்குற்றவாள ரெது பிறப்பேதியல்வாகநின்றோர் 
அக்குற்றமப்பிறப்பு அவ்வியல் வேநம்மையாட்கொள்ளுமே.     .                 26
கொள்ளக்குறைவற்றிலங்கிகொழுந்துவிட் டோங்கியவுன் 
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் 
வெள்ளைச்சுடர்விடு முன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று 
தள்ளுற்றிரங்கும் இராமாநுசவென் தனிநெஞ்சமே.      .                27
நெஞ்சில்கறை கொண்ட கஞ்சனைக்காய்ந்த நிமலன் நங்கள் 
பஞ்சித்திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா 
வஞ்சர்க்கரியவிராமா னுசன் புகழன்றியென்வாய் 
கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே.    .                  28
கூட்டும் விதியென்று கூடுங்கொலோ * தென்குருகைப்பிரான் 
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை தன்பத்தியென்னும் 
வீட்டின் கண்வைத்தவிராமா னுசன் புகழ்மெய்யுணர்ந்தோர் 
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டின்பமெய்திடவே.  .                29
இன்பந்தருபெருவீடுவந்தெய்திலென் எண்ணிறந்த 
துன்பந்தரு நிரயம்பல சூழிலென் தொல்லுலகில் 
மன்பல்லுயிர்கட்கிறையவன்மாயனெனமொழிந்த 
அன்பனனகன் இராமாநுசனென்னையாண்டனனே.  .                30
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ்காலமெல்லாம் மனமே 
ஈண்டு பல்யோனிகள் தோறுழல்வோம் இன்றோரெண்ணின்றியே 
காண்டகுதோளண்ணல் தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப் 
பூண்டவன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே.   .                 31
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல 
திருந்தியஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் 
வருந்தியஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த 
அருந்தவன் எங்களிராமாநுசனையடைபவர்க்கே .  .                 32
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கையாழியென்னும் 
படையோடு நாந்தகமும்படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும் 
புடையார் புரிசங்கமுமிந்தப்பூதலம் காப்பதற்கென்று 
இடையே இராமாநுசமுனியாயினவிந்நிலத்தே.    .                33
நிலத்தைச் செறுத்துண்ணும் நீ சக்கலியை நினைப்பரிய 
பெலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை என்பெய்வினை தென் 
புலத்தில் பொறித்தவப் புத்தகச்சும்மைபொறுக்கியபின் 
நலத்தைப் பொறுத்தது இராமாநுசன்றன் நயப்புகழே.   .                34
நயவேனொரு தெய்வம் நானிலத்தே சிலமானிடத்தைப் 
புயலேயெனக் கவிபோற்றி செய்யேன் பொன்னரங்கமென்னில் 
மயலே பெருகு மிராமாநுசன்மன்னுமாமலர்த்தாள் 
அயரேன் அருவினையென்னையெவ்வாறின்றடர்ப்பதுவே. .                 35
அடல் கொண்டநேமிய னாருயிர் நாதன் அன்றாரணச்சொல் 
கடல் கொண்டவொண்பொருள் கண்டளிப்ப பின்னும் காசினியோ 
ரிடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர்பின் 
படரும்குணன் எம்மிராமாநுசன்றன் படியிதுவே.   .                 36
படி கொண்ட கீர்த்தி யிராமாயணமென்னும்பத்திவெள்ளம் 
குடிகொண்ட கோயிலிராமாநுசன் குணங்கூறும் அன்பர் 
கடிகொண்டமாமலர்த்தாள்கலந்துள்ளங்கனியும் நல்லோர் 
அடிகண்டுகொண்டு கந்து என்னையுமாளவர்க்காக்கினரே.    .                  37
ஆக்கியடிமைநிலைப்பித்தனையென்னையின்று அவமே 
போக்கிப்புறத்திட்டதென்பொருளாமுன்பு புண்ணியர்தம் 
வாக்கிற்பிரியாவிராமாநுசநின் னருளின் வண்ணம் 
நோக்கில் தெரிவரிதால் உரையாயிந்த நுண்பொருளே.    .               38
பொருளும்புதல் வரும் பூமியும் பூங்குழலாருமென்றே 
மருள் கொண்டிளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார்தர 
இருள்கொண்ட வெந்துயர்மாற்றித்தன்னீறில் பெரும்புகழே 
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே. .                  39
 
சேமநல்வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் 
காமமும் என்றிவை நான் கென்பர் நான்கினும் கண்ணனுக்கே 
ஆமது காம மறம்பொருள் வீடிதற்கென்றுரைத்தான் 
வாமனன் சீலன் இராமாநுசனிந்தமண்மிசையே.   .                       40
மண்மிசையோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே 
கண்ணுறநிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் 
அண்ணலிராமாநுசன் வந்து தோன்றியவப்பொழுதே 
நண்ணருஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே. .                  41
ஆயிழையார் கொங்கைதங்கும் அக்காதலளற்றழுந்தி 
மாயுமென்னாவியை வந்தெடுத்தானின்று * மாமலராள் 
நாயகனெல்லாவுயிர்கட்கும் நாத னரங்கனென்னும் 
தூயவன் தீதிலிராமாநுசன் தொல்லருள்சுரந்தே.  .                  42
சுரக்கும் திருவுமுணர்வும் சொலப்புகில் வாயமுதம் 
பரக்கும் இருவினைபற்றறவோடும் * படியிலுள்ளீர் 
உரைக்கின்றனனுமக்கியானறஞ்சீறுமுறுகலியைத் 
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. .                   43
சொல்லார் தமிழொருமூன்றும் சுருதிகள் நான்குமெல்லை 
யில்லாவறநெறி யாவும் தெரிந்தவன் * எண்ணருஞ்சீர் 
நல்லார் பரவுமிராமா னுசன் திருநாமம் நம்பிக் 
கல்லார்கலிடத்தோர் எதுபேறென்று காமிப்பரே.   .                 44
பேறொன்று மற்றில்லைநின் சரணன்றி *அப்பேறளித்தற் 
காறொன்றுமில்லை மற்றச் சரணன்றி* என்றிப் பொருளைத் 
தேறுமவர்க்குமெனக்குமுனைத்தந்த செம்மை சொல்லால் 
கூறும்பரமன்று இராமாநுசமெய்ம்மை கூறிடிலே. .                 45
கூறும் சமயங்களாறும் குலைய குவலயத்தே 
மாறன்பணித்தமறையுணர்ந்தோனை மதியிலியேன் 
தேறும்படியென்மனம்புகுந்தானைத் திசையனைத்தும் 
ஏறும் குணனை இராமாநுசனையிறைஞ்சினமே.     .                    46
இறைஞ்சப்படும் பரன் ஈசனரங்கனென்று இவ்வுலகத் 
தறம் செப்புமண்ணலி ராமாநுசன்* என்னருவினையின் 
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே 
நிறைந்தொப்பறவிருந்தான் எனக்காரும் நிகரில்லையே. .                   47
நிகரின்றிநின்றவென் நீசதைக்கு நின்னருளின்கணன்றிப் 
புகலொன்றுமில்லை அருட்கு மஃதே புகல் புன்மையிலோர் 
பகரும் பெருமையிராமாநுச இனிநாம் பழுதே 
அகலும் பொருளென் பயனிருவோமுக்குமான பின்னே.    .                48
ஆனது செம்மையற்நெறி* பொய்ம்மையறு சமயம் 
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத் 
தேன திபாய்வயல்தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் 
தானதில் மன்னும் * இராமாநுசனித்தலத்துதித்தே. .                 49
உதிப்பனவுத்தமர்சிந்தையுள் *ஒன்னலர்நெஞ்சமஞ்சிக் 
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம் 
பதித்தவென்புன்கவிப்பாவினம்பூண்டன் பாவுதொல்சீர் 
எதித்தலைநாதன் இராமாநுசன்றன்னிணையடியே.   .                50
அடியைத் தொடர்ந்தெழுமைவர்கட்காய் அன்று பாரதப்போர் 
முடியப் பரிநெடுந்தேர்விடுங்கோனை* முழுதுணர்ந்த 
அடியர்க்க முதமிராமா னுசனென்னையாள வந்து இப் 
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.  .                  51
பார்த்தானறு சமயங்கள் பதைப்ப* இப்பார்முழுதும் 
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து 
தீர்த்தானிருவினை தீர்த்தரங்கன் செய்ய தாளிணையோ 
டார்த்தான் இவையெம்மிராமாநுசன் செய்யுமற்புதமே.   .               52
அற்புதன் செம்மையிராமாநுசன்* என்னையாளவந்த 
கற்பகம் கற்றவர்காமுறுசீலன் கருதரிய 
பற்பல்லுயிர்களும் பல்லுலகியாவும்பரனதென்னும் 
நற்பொருள் தன்னை இந்நானிலத்தேவந்து நாட்டினனே.  .                53
நாட்டிய நீசச்சமயங்கள் மாண்டன் நாரணனைக் 
காட்டிய வேதம்களிப்புற்றது தென்குருகை வள்ளல் 
வாட்டமிலாவண்டமிழ்மறைவாழ்ந்தது மண்ணுலகில் 
ஈட்டியசீலத்து இராமர் நுசன்றன்னியல்வுகண்டே.  .                  54
கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் 
தொண்டர்குலாவுமிராமா னுசனை* தொகையிறந்த 
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப்பார்த்தருளும் 
கொண்டலைமேவித்தொழும் குடியாமெங்கள் கோக்குலமே.  .                 55
கோக்குலமன்னரை மூவெழுகால் ஒருகூர்மழுவால் 
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும் 
ஆக்கியகீர்த்தியிராமா னுசனையடைந்தபின் என் 
வாக்குரையாது என் மனம் நினையாதினிமற்றொன்றையே.  .                 56
மற்றொரு பேறுமதியாது* அரங்கன் மலரடிக்கு ஆ
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளுமுத்தமனை 
நற்றவர் போற்றுமிராமானுசனை யிந்நானிலத்தே பெற்றனன் 
பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே.    57
பேதையர்வேதப்பொருளிதென்றுன்னி பிரமநன்றென் 
றோதி மற்றெல்லாவுயிருமஃதென்று உயிர்கள் மெய்விட்டு 
ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் 
வாதில் வென்றான் * எம்மிராமாநுசன்மெய்ம்மதிக்கடலே.   .               58
கடலளவாயதிசையெட்டினுள்ளும்* கலியிருளே 
மிடைதருகாலத்திராமாநுசன் மிக்க நான்மறையின் 
சுடரொளியாலவ்விருளைத் துரந்திலனேல் உயிரை 
உடையவன் நாரணனென்றறிவாரில்லையுற்றுணர்ந்தே.      .                59
உணர்ந்தமெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் திருவாய்மொழியின் 
மணந்தருமின்னிசைமன்னுமிடந்தொறும் மாமலராள் 
புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும்புக்கு நிற்கும் 
குணந்திகழ் கொண்டல் இராமாநுகனெங்குலக்கொழுந்தே.  .                60
கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால் நிரயத் 
தழுந்தியிட்டேனை வந்தாட்கொண்ட பின்னும் அருமுனிவர் 
தொழுந்தவத்தோனெம்மிராமாநுசன் தொல்புகழ்சுடர்மிக் 
கெழுந்தது அத்தால் நல்லதிசயங்கண்டதிருநிலமே.    .                  61
இருந்தேனிருவினைப்பாசம் கழற்றி இன்றியானிறையும் 
வருந்தேனினியெம்மிராமா னுசன் மன்னுமாமலர்த்தாள்  
பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கொன்றும் நன்மை செய்யாப் 
பெருந்தேவரைப்பரவும் பெரியோர்தம்கழல் பிடித்தே.   .               62
பிடியைத் தொடரும்களிறென்ன யானுன்பிறங்கியசீர் 
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் * அறுசமயச் 
செடியைத் தொடரும்மருள் செறிந்தோர் சிதைந் தோடவந்து இப் 
படியைத் தொடரும் இராமாநுசாமிக்க பண்டிதனே.              .    63
பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் 
விண்டிட எங்களி ராமாநுசமுனிவேழம் * மெய்ம்மை 
கொண்டநல்வேதக்கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே 
மண்டிவந்தேன்றது *வாதியர்காளுங்கள் வாழ்வற்றதே.   .               64
வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு என்றும் மறையவர்தம் 
தாழ்வற்றது தவம் தாரணிபெற்றது தத்துவ நூல் 
கூழற்றது குற்றமெல்லாம் பதித்தகுணத்தினர்க்கு அந் 
நாழற்றது நம்மிராமாநுசன் தந்த ஞானத்திலே .     .               65
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொறும் நைபவர்க்கு 
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் 
ஈனம் கடிந்தவிராமாநுசன் தன்னையெய்தினர்க்கு அத் 
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண்கொடுத்தே.   .                66
சரணமடைந்ததருமனுக்கா பண்டு நூற்றுவரை 
மரணமடைவித்தமாயவன் தன்னை வணங்கவைத்த 
கரணமிவையுமக்கன்றென்றி ராமாநுசன் உயிர்கட் 
கரணங்கமைத்திலனேல் * அரணார்மற்றிவ் வாருயிர்க்கே.  .                67
ஆரெனக்கின்றுநிகர்சொல்லில் மாயன்ன்றைவர் தெய்வத் 
தேரினிற் செப்பிய கீதையின் செம்மை பொருள் தெரியப் 
பாரினிற் சொன்னவிராமா னுசனைப் பணியும் நல்லோர் 
சீரினிற் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே.   .                68
சிந்தையினோடுகரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள் 
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென்றனக்கன்றருளால் 
தந்தவரங்கனும் தன்சரண்தந்திலன் தான து தந்து 
எந்தையிராமாநுசன் வந்தெடுத்தன னின்றென்னையே. .                   69
என்னையும் பார்த்தென்னியல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த 
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் * அன்றியென்பால் 
பின்னையும் பார்க்கில் நலமுளதே உன்பெருங்கருணை 
தன்னையென்பார்ப்பர் இராமாநுசாவுன்னைச் சார்ந்தவரே. .                70
சார்ந்ததென்சிந்தையுன் தாளிணைக்கீழ்* அன்புதான் மிகவும் 
கூர்ந்தது அத்தாமரைத்தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே 
தீர்ந்ததென்செய்கை முன்செய்வினை நீ செய்வினையதனால் 
பேர்ந்தது வண்மையிராமாநுசா எம் பெருந்தகையே. .                   71
கைத்தனன் தீயசமயக்கலகரை* காசினிக்கே 
உய்த்தனன் தூயமறைநெறிதன்னை* என்றுன்னியுள்ளம் 
நெய்த்தவன் போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே 
வைத்தனனென்னை இராமாநுசன்மிக்க வண்மை செய்தே.               72
வண்மையினாலும் தன்மாதகவாலும் மதிபுரையும் 
தண்மையினாலுமித்தாரணியோர்கட்கு கான்சரணாய் 
உண்மை நன்ஞானமுரைத்தவிராமாநுசனையுன்னும் 
திண்மையல்லாலெனக்கில்லை மற்றோர் நிலை தேர்ந்திடிலே.                73
தேரார்மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் 
கூராழிகொண்டு குறைப்பது * கொண்டலனையவண்மை 
ஏரார்குணத்தெம்மிராமாநுசனவ் வெழில்மறையில் 
சேராதவரைச்சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.            74
செய்த்தலைச்சங்கம் செழுமுத்தமீனும் திருவரங்கர் 
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி* நங்கண் முகப்பே 
மொய்த்தலைத்துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே 
மொய்த்தலைக்கும் வந்து இராமாநுசாவென்னை முற்றுநின்றே.             75
*நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறைவேங்கடப்பொற் 
குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் 
உன்றனக்கெத்தனையின் பந்தரும் உன்னிணைமலர்த்தாள் 
என்றனக்குமது இராமாநுசாவிவை யீந்தருளே.   .               76
ஈந்தனனீயாதவின்னருள் எண்ணில் மறைக்குறும்பைப் 
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால் இப்படியனைத்தும் 
ஏய்ந்தனன் கீர்த்தியினாலென்வினைகளை வேர்பறியக் 
காய்ந்தனன் வண்மையிராமாநுசற்கென் கருத்தினியே.  .                 77
கருத்திற் புகுந்துள்ளில் கள்ளம் கழற்றி கருதரிய 
வருத்தத்தினால் மிகவஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே 
திருத்தித்திருமகள் கேள்வனுக்காக்கியபின் என்னெஞ்சில் 
பொருத்தப்படாது எம்மிராமாநுசாமற்றோர் பொய்ப்பொருளே. .                 78
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப்பூதலத்தே 
மெய்யைப்புரக்குமிராமாநுசன் நிற்க வேறு நம்மை
 உய்யக்கொள்ளவல்லதெய்வமிங்கியாதென்றுலர்ந்து அவமே 
ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே. .                79
நல்லார்பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப 
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே 
எல்லாவிடத்திலுமென்றுமெப்போதிலு மெத்தொழும்பும் 
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே. .                 80
சோர்வின்றியுன்றன் துணையடிக்கீழ் தொண்டுப்பட்டவர்பால் 
சார்வின்றிநின்றவெனக்கு அரங்கன் செய்யதாளிணைகள் 
பேர்வின்றியின்றுபெறுத்துமிராமாநுசா இனியுன்
 
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே. .                81
தெரிவுற்றஞானம் செறியப்பெறாது வெந்தீவினையால் 
உருவற்ற ஞானத்துழல்கின்றவென்னை ஒருபொழுதில் 
பொருவற்ற கேள்வியனாக்கிநின்றானென்ன புண்ணியனோ 
தெரிவுற்ற கீர்த்தி* இராமாநுசனென்னும் சீர்முகிலே.  .                82
சீர்கொண்டுபேரறம் செய்து நல்வீடுசெறிதுமென்னும் 
பார்கொண்டமேன்மையர் கூட்டனல்லேன்* உன்பதயுகமாம் 
ஏர்கொண்டவீட்டையெளிதினிலெய்துவன் உன்னுடைய 
கார்கொண்டவண்மை இராமாநுசா ! இதுகண்டு கொள்ளே.   .                83
கண்டுகொண்டேனெம்மிராமாநுசன் றன்னை காண்டலுமே 
தொண்டு கொண்டேனவன் தொண்டர்பொற்றாளில் என் தொல்லை வெந்நோய் 
விண்டுகொண்டேனவன் சீர்வெள்ளவாரியை வாய்மடுத்தின் 
றுண்டுகொண்டேன் இன்னமுற்றனவோதிலுலப்பில்லையே.   .               84 
ஓதியவேதத்தினுட்பொருளாய் அதனுச்சிமிக்க 
சோதியை நாதனெனவறியா துழல்கின்ற தொண்டர் 
பேதைமை தீர்த்தவிராமாநுசனைத் தொழும் பெரியோர் 
பாதமல்லாலென்றன்னாருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே.    .                85
பற்றாமனிசரைப்பற்றி அப்பற்றுவிடாதவரே 
உற்றாரெனவுழன்றோடிநையேனினி ஒள்ளிய நூல் 
கற்றார்பரவுமிராமாநுசனைக் கருதுமுள்ளம் 
பெற்றார்யவர் அவரெம்மைநின்றாளும் பெரியவரே.   .                 87
பெரியவர் பேசிலும் பேதையர்பேசிலும் * தன்குணங்கட் 
குரிய சொல்லென்று முடையவனென்றென்று உணர்வில் மிக்கோர் 
தெரியும் வண்கீர்த்தியிராமாநுசன்மறை தேர்ந்துலகில் 
புரியுநன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும்கலியே.   .               88
கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான் 
ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து * அதனால் 
வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் 
புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.    .               89
போற்றரும் சீலத்திராமாநுச நின்புகழ் தெரிந்து 
சாற்றுவனேல் அதுதாழ்வது தீரில் உன் சீர்தனக்கோர் 
ஏற்றமென்றே கொண்டிருக்கிலும் என்மனமேத்தியன்றி 
ஆற்றகில்லாது இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே.   .                90
நினையார் பிறவியை நீக்கும் பிரானை* இந்நீணிலத்தில் 
எனையாள வந்தவிராமா னுசனை இருங்கவிகள் புனையார் 
புனையும் பெரியவர்தாள்களில் பூந்தொடையல் 
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.  .                 91
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருளாம் 
இருள்சுரந்தெய்த்தவுலகிருள் நீங்க தன்னீண்டியசீர் 
அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் 
பொருள் சுரந்தான்* எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே.  .               92
புண்ணிய நோன்புபுரிந்துமிலேன் அடி போற்றி செய்யும் 
நுண்ணருங்கேள்வி நுவன்றுமிலேன் * செம்மை நூற்புலவர்க் 
கெண்ணருங்கீர்த்தியிராமாநுசா இன்று நீ புகுந்து என் 
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக்காரணம் கட்டுரையே.  .                93
கட்டப்பொருளை மறைப்பொருளென்று கயவர் சொல்லும் 
பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே* என்பெருவினையைக் 
கிட்டிக்கிழங்கொடுதன்னருளென்னுமொள் வாளுருவி 
வெட்டிக்களைந்த இராமாநுசனென்னும் மெய்த்தவனே.   .                94
தவந்தரும் செல்வும் தகவும் தரும் * சலியாப்பிறவிப் 
பவந்தரும் தீவினைபாற்றித்தரும் பரந்தாமமென்னும் 
திவந்தரும் தீதிலிராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு 
உவந்தருந்தேன் அவன் சீரன்றியானென்று முள் மகிழ்ந்தே. .                95 
உண்ணின்றுயிர்களுக்குற்றனவே செய்து அவர்க்குயவே 
பண்ணும்பரனும்பரிவிலனாம்படி* பல்லுயிர்க்கும் 
விண்ணின் தலைநின்று வீடளிப்பானெம்மிராமா னுசன் 
மண்ணின் தலத்துதித்து உய்மறைநாலும் வளர்த்தனனே .  .                96
வளரும்பிணிகொண்டவல்வினையால் மிக்க நல்வினையில் 
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலையூன் முடைத்தலயூன் 
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு 
உளரெம்மிறைவர் இராமாநுசன்றன்னை யுற்றவரே.  .                97
தன்னையுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் 
தன்னையுற்றாட் செய்ய என்னையுற்றானின்று தன் தகவால்  
தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லையென்றறிந்து 
தன்னையுற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே.  .                98
*இடுமேயினியசுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச் 
சுடுமே அவற்றைத் தொடர்தரு தொல்லை சுழல்பிறப்பில் 
நடுமேயினி நம்மிராமாநுசன் நம்மை நம்வசத்தே 
விடுமேசரணமென்றால் மனமேதையல் மேவுதற்கே.   .                98
தற்கச் சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன் 
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும் 
நிற்கக்குறும்பு செய்நீசரும்மாண்டனர் நீணிலத்தே 
பொற்கற்பகம் எம்மிராமா னுசமுனி போந்த பின்னே.         .                  99
போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு * உன்தடிப்போதிலொண்சீ 
ராம்தெளிதேனுண்டமர்ந்திட வேண்டி நின்பாலதுவே 
ஈந்திட வேண்டுமிராமாநுசா! இதுவன்றியொன்றும் 
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே.   .                100
மயக்குமிருவினைவல்லியிற் பூண்டு * மதிமயங்கித் 
துயக்கும் பிறவியில் தோன்றியவென்னை துயரகற்றி 
உயக்கொண்டு நல்குமிராமாநுசா ! என்ற துன்னையுன்னி 
நயக்குமவர்க்கிதிழுக்கென்பர் நல்லவரென்றும் நைந்தே. .                101
நையும்மனமுன்குணங்களையுன்னி என் நாவிருந்தெம் 
ஐயனிராமா னுசனென்றழைக்கும் அருவினையேன் 
கையும் தொழும்கண்கருதிடுங்காணக் கடல் புடை சூழ் 
வையமிதனில் உன் வண்மையென்பாலென் வளர்ந்ததுவே.   .                102
வளர்ந்தவெங்கோபமடங்கலொன்றாய் அன்றுவாளவுணன் 
கிளர்ந்தபொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப்பயிரெழுந்து 
விளைந்திடும் சிந்தையிராமா னுசனென்றன் மெய்வினை நோய் 
களைந்து நன்ஞானமளித்தனன் கையிற்கனியென்னவே.  .                 103
கையிற்கனியென்னக்கண்ணனைக்காட்டித்தரிலும் உன்றன் 
மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான்* நிரயத் 
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண்சேரிலும் இவ்வருள் நீ 
செய்யில் தரிப்பன் இராமாநுசா! என் செழுங்கொண்டலே.  .                 104
*செழுந்திரைப்பாற்கடல் கண்டுயில் மாயன்* திருவடிக்கீழ் 
விழுந்திருப்பார் நெஞ்சில்மேவு நன்ஞானி* நல்வேதியர்கள் 
தொழுந்திருப்பாதனிராமாநுசனைத் தொழும் பெரியோர் 
எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே.           .                  105
 *இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ்சோலையென்னும் 
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் அவைதன்னொடும்வந் 
திருப்பிடம்மாயனிராமாநுசன் மனத்து இன்றவன்வந் 
திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக் கின்புறவே.   .                 106
*இன்புற்றசீலத்திராமாநுச* என்றுமெவ்விடத்தும் 
என் புற்றநோய் உடல்தோறும் பிறந்திறந்து* எண்ணரிய 
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே 
அன்புற்றிருக்கும்படி என்னையாக்கியங் காட்படுத்தே.   .                107
*அங்கயல்பாய்வயல்தென்னரங்கன்* அணியாகமன்னும் 
பங்கயமாமலர்ப்பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம் 
தங்கியதென்னத்தழைத்து நெஞ்சேநந்தலைமிசையே 
பொங்கியகீர்த்தி இராமாநுசனடிப் பூமன்னவே.         .                 108
-----------
 
This webpage was last revised on 5 August 2021. 
Feel free to send the corrections by email  to the webmaster (pmadurai@gmail.com).