pm logo

tirikaTukam of nallAtanAr
(one of kIzkkaNakku works)

நல்லாதனாரின் திரிகடுகம்
(பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)




Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input, proof-reading): Ms. Sarala Sandirasegarane, Kanpur, India
web-version: K. Kalyanasundaram, Lausanne, switzerland.
This Etext file was first put up in the Web on 24 January 2000.
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நல்லாதனாரின் திரிகடுகம்


காப்பு

கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

1. நூல்
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.

2. ஒழுக்கமுடையார் தொழில்கள்
தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மென்முறை யாளர் தொழில்.

3. அறியாமையால் வரும் கேடு
கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு.

4. சாவதற்குரியவன் தொழில்கள்
பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்
காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

5. அருந்துன்பம் காட்டும் நெறி
வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.

6. ஆண்மைச் செல்வங்கள்
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்
காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னும் செருக்கு.

7. ஊமை கண்ட கனா
வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்அவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.

8. பேசக்கூடாத இயல்பு உடையவை
தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
வேந்துவப்ப வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

9. மூடர் விரும்புபவை
பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்
முழுமக்கள் காத லவை.

10. நன்மை அளிக்காதவை
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்முன்றும்
நன்மை பயத்தல் இல.

11. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையும் - தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.

12. நன்மை அளிப்பவை
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

13. பெறற்கு அரியார்
சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.

14. அறிவுடையார் அடையாதவை
இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

15. நட்புக் கொள்ளத் தகாதவர்.
பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்
நட்கப் படாஅ தவர்.

16. இறவாத உடம்பை அடைந்தவர்
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

17. கல்வித் தோணியைக் கைவிட்டவர்
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத தலைமகனும் - வாய்ப்பகையுள்
சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்.

18. கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
இருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரி னஞ்சப் படும்.

19. பழி முதலியவற்றினின்று நீங்காதவர்
கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானும் - மறந்தெரியாது
ஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்கால் தூங்கு பவர்.

20. எல்லார்க்கும் இன்னாதன
ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலும் - கதித்தொருவன்
கல்லானென்று எள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

21. நல்லவரின் கொள்கைகள்
வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.

22. வீடு அடையலாம்
பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்

பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

23. அறப்பயனைக் கட்டும் கயிறு
தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்
குற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்
பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்கும் கயிறு.

24. நரகத்தைப் போன்றவை
காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.

25. அறிஞர் கொள்ளாத உணவுகள்
செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

26. உயர்ந்தவர் எனப்படுபவர்

ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்
சீலமினி துடைய ஆசானும் இம்மூவர்
ஞாலம் எனப்படு வார்.

27. தூயவரின் செயல்கள்
உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉய மென்பார் தொழில்.

28. உமி குத்திக் கை வருந்துவார்
வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற்று இருப்பானும் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூன்றும்
உமிக்குத்திக் கைவருந்துவார்.

29. கற்றவர் கருத்து.
பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை
மண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

30. நிலைத்த புகழை உடையவர்
தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும் அழுக்காறி கந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

31. தலை சிறந்தவை
பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்
இல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.

32. கற்றவர் கடமை
நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா
வெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

33. மன்னன் கைவிடலாகாதவை
கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன் மற்று விடல்.

34. உலகம் எனப்படுவார்
மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசும் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும் இம்மூவர்
உலகம் எனப்படு வார்.

35. முக்தியுலகை அடைபவர்
முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.

36. நூல்களின் உண்மை உணராதவர்
ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்
தானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்
காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.

37. வாய்மையாளர் வழக்கம்
குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினில் தோன்றும் குடிமையும் - பால்போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யடையார் வழக்கு.

38. செல்வம் உடைக்கும் படை
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.

39. அறம் அற்றவரின் செயல்கள்
புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்
கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து
பொய்ம்மயக்கம் சூதின் கண்தாங்கால் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.

40. தொல்லறிவாளர் தொழில்கள்
வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு
ஒத்த லொழுக்கம் உடைமையும் - பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றும்
தொல்லறி வாளர் தொழில்.

41. அறங்களுள் சிறந்தவை
அலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்
தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி
நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாந் தலை.

42. வேளாண்குடிக்கு அழகாவன
கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.

43.
வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
செய்கை அடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி
நெஞ்சம் அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.

44. அறிவுடையார்க்கு நோய் ஆவன
விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்
புல்லப்புடை பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்று
ஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே உரனுடை யார்க்கு.

45. நரகத்தில் விழுபவர்
ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றி
ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் - கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

46. அறிவுடையார் குறுகாதவை.

கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

47. காக்கப்பட வேண்டியவை
சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்
தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழ் ஆகாப் பொருள்.

48. மெய்ப்பொருள் உணர்ந்தவர்
வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

49. எவருக்கும் பயனற்றவர்
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு உறுதியில் லார்.

50. மழையைக் குறைப்பவர்
கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையறுக்கும் கோள்.

51. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை
தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் - சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.

52. ஆராயுமிடத்தவர் உள்ளவை
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும்
மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்
குறியுடையார் கண்ணே யுள.

53. தெரியாத பொருள்கள்
குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறிவு இல்லான் கதழ்ந்துரையும் - பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்
எண்ணின் தெரியாப் பொருள்.

54. அறிவற்ற செயல்கள்
தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
நல்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக்
குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்.

55. ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்
அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றம்கொண் டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார்.

56. உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறிதூரா வாறு.

57.
கொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்
ஆளும் கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள் இன்னா தன.

58. இளவரசனின் செயல்கள்
பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற்கு இளையான் தொழில்.

59. உள்ளவை போல் கெடுபவை
கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.

60. துன்பப் பிறப்புகள்
பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்பின் வெருவும் - புலம்தெரியா
மக்கள் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.

61. அமைச்சர்களின் கோள்
ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.

62. மக்களை இழப்பவர்
நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.

63. நன்மையைத் தாராதவை
நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல.

64. கற்புடையாளின் கடமைகள்
நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.

65. மிக்க வருத்தத்தைத் தருவன
அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய
மெய்ந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்
தம்நெய்யில் தாம்பொரியு மாறு.

66. சிறப்பில்லாதவை
கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய
கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்
சால்போடு பட்டது இல.

67. செய்யக்கூடிய திண்மை
எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்
செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப
முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்தது இல்.

68. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்கு உள.

69. கிடைத்தற்கு அரியவை
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து
நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

70. செல்வம் உடையார் எனப்படுவர்
காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து
ஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வர் எனப்படு வார்.

71. காணக் கூடாதவை
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.

72. அஞ்சுபவை
நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.

73. வாழ்வார் போல் தாழ்பவர்
இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.

74. அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்
கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்று
ஈகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதும் கடைப்பிடியா தார்.

75. மரம்போல் அசைவற்றவர்
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியும் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.

76. பாதுகாத்தற்கு அரியவர்
மாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து
மாற்றம் மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்
போற்றற்கு அரியார் புரிந்து.

77. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்
குடிமா சிலார்க்கே உள.

78. நற்றவமுடையார் செயல்கள்
தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை உடைமை வனப்பாகும் - தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.

79. நெஞ்சுக்கு ஒரு நோய்
பழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்து
இல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

80. புதரில் விதைத்த விதை
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

81. ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்
தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.

82. நல்லவர் வழிகள்
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லாள் வழங்கும் நெறி.

83. நல்வழியைக் கெடுக்காதவை
உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்ஆகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்பநெறி தூரா வாறு.

84. வறுமையால் பற்றப்பட்டார்
வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

85. ஒற்றரின் இயல்புகள்
எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
உள்ளிய ஒற்றாள் குணம்.

86. குற்றங்களை உண்டாக்கும் பகைகள்
அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றம் தரூஉம் பகை.

87. மூடரின் செயல்கள்
கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு
அகன்ற இனம்புகு வானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

88. மனவுறுதியை நிலைகுலையச் செய்வன
பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

89. பிறந்தும் பிறவாதவர்
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

90. நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருள்உலகம் சேராத ஆறு.

91. உடல் பற்றுடைய மூடர் செய்கை
பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தேம் என்றல் - மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

92. பிறப்பின் பயனை அடையாதவர்
விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானும் இம்மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

93. உயிர்க்கு அறியாமையை அளிப்பவை
இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.

94. நல்லொழுக்கம் இல்லாதவர்
நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.

95. நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்

அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்
வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

96. பெய்யெனப் பெய்யும் மழை
கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்
பெய்எனப் பெய்யும் மழை.

97. பாவச் செயல்கள்
ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

98. மும்மாரிக்கு வித்து
செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

99. நல்லுலகம் சேராதவர்
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

100. மன்னர்க்கு உறுப்புகள்
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.

திரிகடுகம் முற்றிற்று.

This webpage was last revised on 3 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).