pm logo

Literary Works of Bharathidaasan : V :
kAthal ninaivukaL (a collection of poems)
(in Tamil Script, unicode/utf-8 format)

புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள் - V:
காதல் நினைவுகள்


Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation (input) & Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

காதல் நினைவுகள் (கவிதைத்தொகுப்பு)
புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் (கனகசுப்பரத்னம், 1891 - 1964)

உள்ளுறை
1. ஆடுகின்றாள்
2. காதலற்ற பெட்டகம்
3. காதலன் காதலிக்கு
4. காதலி காதலனுக்கு
5. இன்னும் அவள் வரவில்லை
6. சொல்லித்தானா தெரிய வேண்டும்
7. அவள் மேற் பழி
8. அவளை மறந்துவிடு
9. காதல் இயற்கை
10. பிசைந்த தேன்
11. எங்களிஷ்டம்
12. வாளிக்குத் தப்பிய மான்
13. தும்பியும் மலரும்
14. தமிழ் வாழ்வு
15. உணர்வெனும் பெரும்பதம்
16. ஒரே குறை <
17. காதலனுக்குத் தேறுதல்
--------

1. ஆடுகின்றாள்

கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்--கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.

விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.

சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்--வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.

செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்--பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.

கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்--தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.

இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்--உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.

2. காதலற்ற பெட்டகம்

உள்ளம் உருக்கி, உயிர் உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர்சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

* * * * * *

பட்டுவிரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்,
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!

* * * * * * *

கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழிநடந்தேன்!-காதல் திருவுருவம்!
ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனியிரண்டு தெரிய இருக்கு மெழில்
மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ, நான்தான்.
வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்து சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம்.
மாதுளமும் அங்கு வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!

3. காதலன் காதலிக்கு

"பறந்து வா!"

*
காதலியே,
என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்ததுண்டு! கவிதைஊற்றிக்
கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள்
பிரிந்ததுண்டு! கற்கண்டான
மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென்
அள்ளூறும் வாய்தான்! ஏடி

மயிலே,
உன்உடலான மலர்மாலை
     பிரிந்ததுண்டென் மார்பகந்தான்!
ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை;
     மீதமுள்ள ஆவி ஒன்றே
அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை
     ஆயிற்றே! "அன்பு செய்தோன்
சாதல்அடைந்தான்" எனும்ஓர் இலக்கியத்தை
     உலகுக்குத் தந்திடாதே!
சடுதியில்வா! பறந்துவா! தகதகென
     முகம்காட்டு! தையலாளே!

4. காதலி காதலனுக்கு

"பறப்பதற்குச் சிறகில்லை"

*

காதல,
நான் பிழைசெய்தேன்; என் ஆசை
     உன்மனத்தில் கழிந்ததென்று
கருதினேன்! கடிதத்தைக் கண்டவுடன்
     களிப்புற்றேன்! களிப்பின் பின்போ
வாதையுற்றேன்! பறப்பதற்குச் சிறகில்லை!
     காற்றைப்போல் வந்தே னில்லை
வனிதைஇங்கே-நீஅங்கே! இடையில்இரு
     காதங்கள் வாய்த்த தூரம் !
சாதலுக்குக் காரணம்நான் ஆகேன்
     என் சாகாமருந்தே! செங்கை
தாங்கென்னை; உன்றன்நெடும் புயத்தினில்நான்
     வீழ்வதற்குத் தாவு கின்றேன்.
நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ
     நினைப்பிழந்தேன் என் துரையே!
நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ!
     என்செய்கேன் நீணிலத்தே!

5. இன்னும் அவள் வரவில்லை

மங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில்
      மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ! மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
      தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ!
      சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான் வெளியில்!
திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற்
      செவ்வாயின் இதழளிக்க இன்னும் வர விலையே!

மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும்
      வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா டில்லை.
துணியுலர்த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால்
      தொலையாத மாலைதான் தொலைந்துபோ மன்றோ!
அணியிரவும் துங்கிற்றோ காலொடிந்த துண்டோ;
      அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர வில்லை!
பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே
      பேரின்பம் எனக்கருள இன்னும்வர விலையே!

முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
      முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
      பூங்கொடியாள் வருவதாம் நேற்றெனக்குச் சொன்ன
நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை?
      நானின்பம் எய்துவதில் யாருக்குத் துன்பம்?
சொல்லைத் தேன் ஆக்கிஎனை அத்தான் என்றள்ளிச்
      சுவைக்கடலில் தள்ளஅவள் இன்னும்வர விலையே!

பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறைந் திட்ட
      பிறகுவரும் நள்ளிரவு! யாவருமே துயில்வார்!
திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில்
      சிலம்பொலியும் இவ்விடத்தில் கேட்டிடும்என் காதில்!
உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய
      ஒளிமாலை விழிஇன்னும் மூடாத தேனோ!
புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள்
      புத்தமுதம் எனக்குதவ இன்னும்வர விலையே!

சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள்
      தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து நின்றே
நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள்
      நள்ளிரவில் அத்தானே நான்வருவேன் என்றே!
வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும்
      விழல்மடிய இருளருவி எப்போது பாயும்?
பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
      புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே!

மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
      வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே!
நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
      நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி; அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
      மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன்.
சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்!
      தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே!

6. சொல்லித்தானா தெரியவேண்டும்

தாயிருக்கையில் தனமிருக்கையில்
      சஞ்சல மென்ன மானே--நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
      படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
      வான நிலவும் கொடுப்பேன்--இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
      நிலத்தினில் உயிர் விடுப்பேன்.


என்ன குறைச்சல்? எதனில் தாழ்த்தி?
      யானை போல அப்பா--நீ
சொன்ன நொடியில் குறை தவிர்ப்பார்!
      சொல்லுவதும் தப்பா?
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
      சித்திரப் புழுப் போலே--அடி
கன்னி உனக்குக் கசந்ததுவோ
      காய்ச்சிய பசும் பாலே?


அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
      ஆசைக் கொரு தம்பி-- அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
      ஏற்ற தங்கக் கம்பி.
தண்ணென் றிருந்த உனது மேனி
      தணல் படுவது விந்தை-- உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
      கலங்கியதோ சிந்தை!

7. அவள்மேற் பழி

'கைப்பிடியில் கூட்டிவரக்
கட்டளையிட்டாள்' என நீ
செப்புகின்றாய் வாழியவே வாழி-- 'நான்
ஒப்பவில்லை' என்றுரைப்பாய் தோழி!

தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன்
'ஊருக்கெனைக் கூட்டிச்செல்க' என்றாள்--தன்னை
யாருக்குமுன் வாக்களித் திருந்தாள்?

சோலையிலே வஞ்சியினைத்
தொட்டிடுமுன் சேல் விழியாள்
நாலுதரம் சுற்றுமுற்றும் பார்த்தாள்--எந்தக்
காலிக்கவள் அஞ்சிமுகம் வேர்த்தாள்?

கோட்டைவழி என்னை வரக்
கூறி அவள் நான் வருமுன்
பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்?--எனைக்
கூட்டிவரப் பசப்பு கின்றாள்?

வல்லியினை முத்த மிட்டேன்
வாய்த்த என்றன் மேனியினை
மெல்லஅவள் ஏன்தடவ வேண்டும்?--வேறு
நல்லஉடலோ அவட்கு வேண்டும்?

'புன்னகையும் பூப்பதில்லை!
புதுமலரும் தீண்டவில்லை;
என்நினைவால் வாடுகின்றாள்' என்றாய்-- அன்று
சன்னலிலே யாருக்காக நின்றாள்?

'தொத்துகிளி யாள் எனது
தோளின் மிசை வந்திருக்கப்
பித்துமிகுந் தாள்' என மொழிந்தாய்--அவள்
இத்தெருவில் யாருக்காக வந்தாள்?

'ஆடுமயில் என் உளத்தை
ஆடரங்கம் ஆக்கிவிட
நாடிநலிந்தாள்' எனச்சொல் கின்றாய்--அவள்
மாடியிலே ஏன்ஒருநாள் நின்றாள்?

8. அவளை மறந்துவிடு

மறந்துபோ நெஞ்சே அந்த
      வஞ்சியை நினைக்க வேண்டாம்
'இறந்துபோ' என்றே என்னை
      இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
      எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
      ஒட்டாரம் என்ன சொல்வேன்?

மருந்துகேள்! அவளை நெஞ்சே
      'மறந்துபோ' துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
      ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியுதட்டை
      அவள் அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
      மலர்மேனி இருந்தால் தானே?

பாலோடு சீனி யிட்டுப்
      பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
      விரைவோடு மறைந்து போவாள்!
சேல்ஓடும் போது பின்னே
      சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன் அவள்பால்
      பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!

ஏட்டினில் கவிதை தன்னில்
      இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
      குளிரிளம் பிறையும் என்றன்
வீட்டினில் திருவி ளக்கும்
      அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
      கவலைக்கு மருந்து நெஞ்சே!

எனைக்கண்ட தோழன் காதில்
      ஏந்திழை பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
      தையலாள் வரும் வரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
      நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
      மறந்துபோ எனது நெஞ்சே!

9. காதல் இயற்கை

மறவன் சொல்லுகிறான்:

கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
      கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
      மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
      ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத்
      தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ?

குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
      குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான்.வார்த்தை பேதம்
      மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
      அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்.
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
      புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல்.

* * * * *

குறத்தி சொல்லுகிறாள்:

கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று
பெரும்புவியே நீசொன்னாய். ஐய கோஉன்
பேதமைக்கு நான் அஞ்சும் அச்சத் தாலே
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான்;அயர்கின்றேன்.ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!

உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரித்தல் யானறிவேன்; அறியார் மற்றோர்.
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!

* * * * *

இயற்கை சொல்லுகிறது:

காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ?
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!

குறத்தி சொல்லுகிறாள்:

மோதவரும் ஆணழகே வா வா வா வா!
முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று!

மறவன் சொல்லுகிறான்:

மாதரசி கனியிதழோ தேனோ--சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!

10. பிசைந்த தேன்

பெண்ணேபாராய், பெண்ணே பாராய்!
வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை
ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற
மாற்றி மாற்றி வடைதட்டி இட்டும்,
ஊற்றிய நெய்யில் 'ஒய்'என வேகுவதில்
இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப்
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்!

இருவர்நாம் ஒன்றாய் இருந்து,நம் விழிநான்கு
காண, இரண்டு கருத்தும் கலந்தபடி
ஒரே நேரத்தில்நம் உயிர்இன் புறுவதை
விரும்புகின்றேன்! வீதியில் நடப்பது
கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்!
தனித்திருந்து காண் என்று சாற்றிவிடாதே!
சன்னலண்டை என்னிடம், விரைவில்
பெண்ணே வாராய், பெண்ணே வாராய்!

பார்த்தனையோ என் பச்சை மயிலே?
'புதிதிற் பூத்த பூக்காடுதான் அது'!
நான் அதைப் பெண்ணென்று நவிலமாட்டேன்.
அக்காட்டின் நடுவில் 'அழகுடன் மணத்துடன்
செக்கச்செவேலெனச் செந்தாமரை' பார்!
அதை, அவள் வாய்என்று அறைய மாட்டேன்
அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ
நான் அதை உதடுஎன்று நவிலமாட்டேன்.

'இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்'
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியடு,
பிசைந்ததேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

11. எங்களிஷ்டம்

தென்றல் விளைந்தது, முல்லை மலர்ந்தது,
      தீங்குரற் ப‡¢கள் பாடின.
குன்று நற்சோலை விநோத மலர்க்குலம்
      கோலம் புரிந்தன எங்க ணும்.
நின்றிருந்தான் தனியாய் ஒரு வாலிபன்
      நேரிலோர் தாமரைப் பூவிலே
அன்புறு காதலி யின்முகங் கண்டனன்;
      ஆம்பலில் கண்டனன் அவள் விழி!

கோதை இடைதனைப் பூங்கொடி தன்னிலும்,
      கோவைப் பழத்தினில் இதழையும்,
காதலன் கண்டனன்; கங்கைப் பெருக்கெனக்
      காதற் பெருக்கிற் கிடந்தனன்!
சீதள மென்மலர் தன்முக மீதினில்
      சில்லென வீழ்வது போலவே
காதலி அக்கணம் பின்புற மேவந்து
      கண்களைப் பொத்தினள் செங்கையால்!

கையை விலக்கித் திரும்பினன் காதலன்
      காதலி நிற்பது கண்டனன்!
துய்யவன் நெஞ்சும் உடம்பும் சிலிர்த்தன
      சுந்தரி தன்சிரிப் பொன்றினால்!
கொய்மலர் மேனியை அள்ளிடுவான்; அவள்
      கோபுரத் தோளில் அழுந்துவாள்!
செய்வது யாதுபின்? இன்பநற் கேணியிற்
      சேர்ந்தனர் தம்மை மறந்தனர்!

காதலர் இவ்விதம் இங்கிருந்தார் இதைக்
      கண்டனர் கேட்டனர் ஊரினர்!
'ஏதுவிடோம்' என அத்தனை பேர்களும்
      எட்டி நடந்தனர் சோலைக் கே.
பாதி மனிதர்கள் கோபத்திலே தங்கள்
      பற்களை மென்றனர் பற்களால்!
மீதிருந்தவர் கத்திநற் கேடயம்
      வேலினைத் தூக்கி நடந்தனர்!

நின்றதோர் ஆல மரத்திடை வீழ்தினை
      நேரிற் பிணைத்ததோர் ஊஞ்சலில்
குன்றுயர் தோளினன் வீற்றிருந்தான் அந்தக்
      கோல நிலாமுகப் பெண்ணுடன்!
சென்றனர் கண்டனர் காதலர் தங்களைச்
      சீறினர்! பாய்ந்தனர் சிற்சிலர்;
கொன்று கிடத்திட வேண்டுமென் றேசிலர்
      கோலையும் வேலையும் தூக்கினர்.

'பொய்தவிர் காதல்' எனப்படும் காம்பினில்
      பூத்த அப்பூக்கள் இரண்டையும்
கொய்து சிதைத்திட ஓடினர் சிற்சிலர்
      குன்றிட வைதனர் சிற்சிலர்!
வையக மீதினில் தாலி யிழந்தவள்
      மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
      தொட்டதை வைதிகம் ஏற்குமோ?

என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்!
      இங்கிவை கண்டனர் காதலர்.
குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி
      கூர்ந்தனர்! அச்சம் தவிர்ந்தனர்!
இன்றுள தேசம் புதுத்தேசம் மணம்
      எங்களிஷ்டம் எனக் கூறியே
அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந்
      தாடினர்; ஊரினர் ஓடினர்!

12. வாளிக்குத் தப்பிய மான்

கணக்கப் பிள்ளையின்மேல்--அவளோ
      கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை--அவளோ
      மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப்--பெரிதாய்ப்
      பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின்--பெயரைச்
      சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன்--உளமோ
      அவள் அழகினிலே
முழுகிய தன்றி-- மணக்கும்
      முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும்--சித்திரம்
      போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல்--உயிரில்
      ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி--அலைந்தே
      மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க--அவன்மேல்
      பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார்--மணமும்
      இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி--நகரின்
      மக்களும் வந்திருந்தார்.

பார்ப்பனன் வந்துவிட்டான்--மணத்தின்
      பந்தலில் குந்திவிட்டான்.
'கூப்பிடும் மாப்பிள்ளையைப்--பெண்ணினைக்
      கூப்பிடும்' என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே--ஐயகோ
      ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம்--கணக்கன்
      பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான்--கணக்கன்
      குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான்--தனது
      வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத்--தனது
      கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான்--தனதோர்
      ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள்--மணமாப்
      பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம்--பிள்ளைக்குக்
     கருத்தில் ஏமாற்றம்
'பண்ணுவதாய் உரைத்தீர்--நகைகள்
      பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
      எண்ணிவைக்க வேண்டும்.'

என்றனன் மாப்பிள்ளை தான்--பெண்ணினர்
      'இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல்--அனைத்தும்
      உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய்--மணத்தை'
      என்று பகர்ந்தார்கள்.
'இன்று வரவேண்டும்--அதிலும்
      இப்பொழு' தென்றுரைத்தான்.

'நல்ல மணத்தைமுடி--தொகையும்
      நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்--அழகு
      முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே'--எனவே
      சொல்லியும் பார்த்தார்கள்.
'இல்லை, முடியாது--வரட்டும்'
      என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும்--தனது
      வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்--வாலினை
      அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே--வந்தவர்
      போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்--அருமைத்
     தந்தை உரைத்திடுவான்.

'இந்த மணவரையில்--மகளுக்
      கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்--மணத்தை
      இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்'--எனவே
      வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம்--நெருங்கி
      'அன்பு மகளினை நீ

வந்து மணம்புரிவாய்'--என்றனன்
     மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக்--கணக்கன்
      தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத்--தமிழன்
      மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே--கணக்கன்
      ஆடி நடக்கலுற்றான்.

'ஆசைக் கொருமகளே--எனதோர்
      அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான்--அவனோ
     கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ--அந்தக்
      கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க--நினைத்துன்
      பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே--கணக்கன்
      ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும்--பிறகு
      தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே'--எனவே
      ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்?--'மாப்பிள்ளை
      யார்?' என்று கேட்டனள்பெண்.

'அந்தக் கணக்கப்பிள்ளை'--எனவே
      அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில்--செவிகள்
     குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே--தனது
      தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக்--குறிக்க
      வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில்--உரைத்த
     அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும்--அவனின்
      ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி--நடுவில்
      கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின்--நடுவில்
     மணம் முடித்தார்கள்.

'சிங்கக் குழந்தைகளை--இனிய
      செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே--அங்கமே
      பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும்--எனவே
      செழிக்க நல்லாயுள்'
இங்கெழும் என்வாழ்த்து--மொழிகள்
      எய்துக அவ்விருவர்!

13. தும்பியும் மலரும்

மகரந்தப் பொடியைத் தென்றல் - வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் - அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் - வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் - விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு - வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என - நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை - அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி - அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் - புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் - மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் - தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! - ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் - இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கையால் அணைத்தாள்.

14. தமிழ் வாழ்வு

மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
'மருது' தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!

* * * *

இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது, பெண்ணழகை அருகி லிருந்து
காணும் பேறு காணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாயலின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
எடுத்தடி வைப்பாள்,எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள் எழில்என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகே எனப் பிதற்றிக் கிடந்தான்.
மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்:
'அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்,
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக
இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
'கன்னல்' என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!
மாடியில், நேற்று மாலைநீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண்பிறந் துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில்நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத்தொட அவள் துடித்தாள்.
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன்
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்
உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்!
அன்னை தந்தையர்க் கவளோ ஒருபெண்,
என்ன செய்வார்? ஏந்திழை சொற்படி
உன்னை மருகனாய் ஒப்பி விட்டனர்.

* * * *

முதலில் உன்றன் முழுச்சொத் தினையும்
இதுநாள் அவள்மேல் எழுதி வைத்துவிடு!
நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன்.
பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ!
பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்!
குலதரு மத்தைக் குலைக்க லாகுமா?
என்று சீனு இயம்புதல் கேட்ட
இளையோன் 'நண்பனே இன்னொரு முறைஅக்
கிளியை மாடியில் விளையாட விடு;
மீண்டும் நான்காண விரும்பு கின்றேன்.'
என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு!
மாடியின் சன்னலை மங்கையின் கைகள்
ஓடித் திறந்தன. ஒளிவிழி இரண்டும்,
எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல்
குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன் விழி.
அவன் விழி அவள்விழி அன்பிற் கலந்தன
அகல்யா சிரித்தாள், அவனும் சிரித்தான்
கைகள் காட்டிக் கருத்து ரைத்தார்கள்.
'என் சொத்துக்களை உன் பேருக்கே
எழுதி வைக்கவா?' என்றான் மருது!
'வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும்'
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா.
'அழகிய நகையெல்லாம் அனுப்பவா?' என்றான்.
வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள்.
'இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில்
கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்
கூடிய தனியிடம் நாடிவா' என்று
மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள்.

* * * *

'சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும்.
நகைவேண் டாம்உன் நலமே வேண்டும் என்
றுரைத்தாள் அகல்யா; ஊர்ப்புறக் கொன்றை
மரத்தின் அருகில் வா என்று சொன்னாள்.'
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
'நன்று நன்று நான் போகின்றேன்'
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்.
மாலையில் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்து கொண்டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த 'ஏசல்' ஒன்றும்,
பொருளில்லாத புதுக் குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன.திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்.
மேலும், 'என்வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.
மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ் மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் 'என் வாழ்வை வீணாக்கிய நீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
'பொருள் விளங்காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.
அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்
பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு
உயிரில் லாத உடலே அன்றோ!
கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன்
வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ?'
என்றான்; விலகினான்; கன்னலை நோக்கி!
அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள்.
மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்!
அத்தான் வருகஎன் றழைத்த கன்னலில்
மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்!
'கன்னல்' 'மருது' தம் கண்ணும் நெஞ்சும்
இன்னல் உலகில் இல்லவே இல்லை;
பாழுங் கிணற்றில் அகல்யா
வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே!

15. உணர்வெனும் பெரும்பதம்

கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப் போதில்
கடற்கரையின் வெண் மணலில்
தனியிருந்தேன். கண்ணைச்
சதிபுரிந்து நெஞ்சினுள்ளே
ஒருமங்கை தோன்றிச்
சதிராடி நின்றாள். அப்
புதுமை என்ன் சொல்வேன்!
மதிபோலும் முகமுடையாள்
மலர்போலும் வாயாள்
மந்தநகை காட்டிஎனை
'வா' என்று சொன்னாள்.
புதையல் வந்து கூவுங்கால்
'போ' என்றா சொல்வேன்?
'பூங்காவனக் குயிலே
யாரடி நீ?' என்றேன்.

'உணர்வு' என்றாள்.பின்னென்ன,
அமுதாகப் பெருகும்
ஓடையிலே வீழ்ந்தேன்.'என்
ஈடில்லாச் சுவையே,
துணை என்ன தமிழர்க்குச்
சொல்லேடி' என்றேன்.
'தூய்தான ஒற்றுமைதான்
துணை' என்றாள் மங்கை.
இணையற்ற அந்நிலைதான்
எற்படுங்கால் அந்த
எற்பாட்டுக் கிடையூறும்
எற்படுமோ?' என்றேன்.
'தணல் குளிரும்; இருள் ஒளியாம்
தமிழர் ஒன்று சேர்ந்தால்!
தம்மில் ஒருவனின் உயர்வு
தமக்கு வந்ததாக

எண்ணாத தமிழர்களால்
இடையூறும் நேரும்,
இனத்திலுறும் பொறாமைதான்,
வெடிமருந்துச் சாலை
மண்ணாகும்படி எதிரி
வைத்த கொடும் தீயாம்
வையத்தில் ஒழுக்கமில்லார்
ஏதிருந்தும் இல்லார்
நண்ணுகின்ற அன்புதான்
ஒற்றுமைக்கு வித்து,
நல்ல அந்த வித்தினிலே
தன்னலத்தைச் சிறிதும்
எண்ணாமை செழித்து வரும்
நடுவுநிலை பூக்கும்;
ஏற்றமுறு செயல் காய்க்கும்;
பயன்கனியும்' என்றாள்.

'முன்னேறும் தமிழ் மக்கள்
மதத்துறையை நாடி
மூழ்குதலும் வேண்டுமோ
மொழியேடி' என்றேன்.
'முன்னேற்றம் மதஞ்சொன்னோர்
இதயம் பூஞ்சோலை!
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்னவந்த காட்டுத்தீ'
என்றுரைத்தாள். இன்பத்
தேனென்று சொல்லுவதோ
அன்னவளின் வார்த்தை?
கன்னல்மொழி உயிர்தழுவ
வீட்டுக்குச் சென்றேன்.
கதிகாட்டும் விழியாளின்
காதல் மறத்தல் உண்டோ!

16. ஒரே குறை

அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
      அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
      வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
      முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
      வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
      செங்காந்தள் விரல்நுனியின் நகத்த்¢ லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
      விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
      போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
      கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
      பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
      வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்!
      பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
      கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
      கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
      சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
      எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
      நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
      மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
      உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
      செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
      விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
      பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
      ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
      பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
      முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
      அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
      'பூத்திருக்கும் நான்காத்த முல்லை' யென்றும்
'நிறம்காண வேண்டும்'என்றும் சாக்குச் சொல்லி
      நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
      தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
      உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
      அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
      பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
      கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
      செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
      தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
      துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
      நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
      ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
      இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
      தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
      காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.

பிற்சேர்க்கை:
17. காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீஉரிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற் றேயோ!

* * * * *

விழிநோக வையமெல்லாம் தேடி, மிகுக்க
மொழிநோகக் கூவி,நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல்மொழி பழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல்வந்து கிள்ளைதனைத் தட்டிப் போயிற்றோ!

* * * * *

அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும்
வாழத்தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை
நோக்கிப்பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தை
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

* * * * *

தூயோனே மீனாட்சிசுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவ விட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டாள்.
அந்தோ உனக்கார்ஓர் ஆறுதலைச்செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்?

* * * * *

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்று கேள்;
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்,
தேடுகின்றாள் உன்னை! நீதேடந்தப் பொன்னை,ஏன்
வாடுகின்றாய்? ஏன்உன் மலர்விழியை வாட்டுகின்றாய்?

* * * * *

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்!
அன்னவளைக் கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முன்னேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டும் நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே!
அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்!
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்து கின்றேன் நான்!


காதல் நினைவுகள் முற்றும்.


This webpage was last revised on 6 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).