pm logo

இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
அருளிய திருவருட்பா
ஐந்தாம் திருமுறை பாடல்கள் 3029-3266


tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -V (verses 3029 - 3266)
(in tamil script, unicode format)




Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This page was first put up on December 13, 2001

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஐந்தாம் திருமுறை (பாடல்கள் 3029 -3266)

உள்ளுறை
1. அன்பு மாலை - 31 (3029 - 3059)
2. அருட்பிரகாச மாலை - 100 ( 3060 - 3159)
3. பிரசாத மாலை - 10 (3160 - 3169)
4. ஆனந்த மாலை - 10 (3170 - 3179)
5. பக்தி மாலை - 10 (3180 - 3189)
6. சௌந்தர மாலை - 12 (3190 - 3201)
7. அதிசய மாலை - 14 (3202 - 3215)
8. அபராத மன்னிப்பு மாலை - 10 (3216 - 3225)
9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை - 11 ( 3226 - 3236)
10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை - 10 (3237 - 3246)
11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை - 10 ( 3247 - 3256)
12. ஆளுடைய அடிகள் அருண்மாலை - 10 (3257 - 3266)
-------------
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை

திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் திருமுறை

1. அன்பு மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3029
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
      ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
      கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
      வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
      பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.       ; 1

3030
நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
      நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
      கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
      பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
      குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.       2

3031
ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
      ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே
      வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே
நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
      நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
      விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.       3

3032
சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
      செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
      உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
      இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
      துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.       4

3033
துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
      துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
      அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
      இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
      தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.       5

3034
கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
      கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
      விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
      பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
      என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.       6

3035
திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
      செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
      கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
      பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
      மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.       7
3036
குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
      குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
      எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
      பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
      ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.       8
3037
பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
      பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
      கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
      மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
      எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.       9
3038
அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
      இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
      சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு(184) நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
      மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.       10
      184. வந்து - காற்று. ச.மு.க.
-----------
3039
அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
      அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
      மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
      டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
      முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.       11

3040
பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
      பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
      சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
      வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
      காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.       12

3041
என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
      என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
      தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
      நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
      என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.       13

3042
பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
      பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
      நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
      நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
      குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.       14

3043
சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
      தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
      கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
      மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
      பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.       15

3044
சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்
      தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
      என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
      கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
      பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.       16

3045
ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
      இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
      மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
      தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
      உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.       17

3046
தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
      தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
      இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
      பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
      உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.       18

3047
அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
      ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
      திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
      இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
      துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.       19

3048
நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
      நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
      தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
      சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
      மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.       20

3049
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
      ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
      மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
      ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
      நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.       21

3050
ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
      அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
      கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
      போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
      நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.       22

3051
இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
      எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
      உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
      வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
      கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.       23

3052
சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
      தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
      புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
      பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
      தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.       24

3053
ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை
      எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
      உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
      திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
      போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.       25

3054
முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
      முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
      பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
      தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
      எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.       26

3055
ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
      தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
      விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
      புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
      சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.       27

3056
அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
      அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
      செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
      மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
      என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.       28

3057
மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
      மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
      தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
      ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
      எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.       29

3058
பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்
      போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
      வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
      பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
      எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.       30

3059
செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
      திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
      என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
      ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
      என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.       31

திருச்சிற்றம்பலம்
-----------

2. அருட்பிரகாச மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3060
உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
      உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
      இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
      களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
      ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.       1

3061
ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
      உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
      அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
      கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
      தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.       2

3062
திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
      தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி
      வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
      செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
      குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.       3

3063
அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்
      தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
      வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
      ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்
      என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.       4

3064
இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
      தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
      களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
      உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
      ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.       5

3065
இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
      இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
      கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
      மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
      பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.       6

3066
ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
      உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
      வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
      தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
      மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.       7

3067
நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
      நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
      தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
      கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்
      குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.       8

3068
மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
      மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
      கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
      கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
      பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.       9

3069
அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்
      கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
      சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
      தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
      வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.       10

3070
அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
      அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
      மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
      தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
      என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே.       11

3071
ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
      நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
      கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
      சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
      அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.       12

3072
இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
      இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
      மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
      திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
      ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.       13

3073
கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
      கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
      துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
      மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
      தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.       14

3074
பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
      பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
      கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
      தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
      மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.       15

3075
ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
      உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
      தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
      பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
      அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.       16

3076
அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
      அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
      கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
      உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
      பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.       17

3077
காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
      கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
      உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்
      யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
      பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.       18

3078
துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
      சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
      பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
      உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
      பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.       19

3079
நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
      நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
      அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து
வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
      வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
      கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.       20

3080
சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
      தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
      தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
      மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
      சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.       21

3081
பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
      பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
      தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
      அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
      விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.       22

3082
செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
      திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
      உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
      மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
      அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.       23

3083
உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
      உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
      நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
      என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட
      அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.       24

3084
விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
      விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
      தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
      களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
      குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.       25

3085
வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்
      விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
      போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
      நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
      உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.       26

3086
தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
      தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
      கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
      என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
      சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.       27

3087
மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
      வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
      தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
      தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
      கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.       28

3088
படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
      பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
நடைப்புலையேன் பொருட்டாக நடந்திரவிற் கதவம்
      நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
      இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
      தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.       29

3089
முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
      முழுதிரவில் நடந்தெளியேன் முயங்குமிடத் தடைந்து
அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
      தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
      டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
      வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.       30

3090
மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
      மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
      செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்
      மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
      ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.       31

3091
வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
      விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
      நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
      புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
      துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.       32

3092
ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
      ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
      அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
      பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
      கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.       33

3093
விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
      விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
      மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி
      என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
      முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.       34

3094
நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
      நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
      அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
      சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
      பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.       35

3095
புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
      பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
      நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
      எம்ப஦ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
      தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.       36

3096
மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
      முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
      எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
      சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
      புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.       37

3097
கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
      கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
      மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
      நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
      அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.       38

3098
கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
      கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
      மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
      பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
      னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.       39

3099
அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
      அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
      சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
      மகிழ்ந்துதிரு அருள்வழியே வாழ்கஎன உரைத்தாய்
இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
      எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.       40

3100

முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
      முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
      கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
      பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
      தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே.       41


3101

மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
      மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
      பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
      நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
      நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே.       42

3102

சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
      சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
      கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
      கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
      ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.       43

3103

தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
      தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந்
      தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
      புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
      சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே.       44

3104

கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
      கரையாது நிறைந்ததிருக் கழலடிகள் வருந்த
வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
      விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
      அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
      நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே.       45

3105

ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
      உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
      அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
      நண்ணிநீ எண்ணியவா நடத்துகஎன் றுரைத்தாய்
இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
      என்புகல்வேன் மணிமன்றில் இலங்கியசற் குருவே.       46

3106

எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
      என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
      போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
      தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
      இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே.       47

3107

சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
      சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
      வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
      அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
      முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே.       48

3108

சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
      தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
      பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
      பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
      உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.       49

3109

உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
      உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து
      கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
      நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
      செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே.       50

3110

தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
      தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
      பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
      தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
      என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.       51

3111

அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
      அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
      கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
தொண்டனென எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
      துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
      உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.       52

3112

அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
      தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
      பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
      திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
      பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.       53

3113

விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
      விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
      கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
இடையின்அது நான்மறுப்ப மறுக்கேல்என் மகனே
      என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
      உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.       54

3114

நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
      நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
      யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
      கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
      இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.       55

3115

அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
      அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
      போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
      சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
      மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.       56

3116

பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
      பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
      வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
      செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
      திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.       57

3117

என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
      என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
      தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
      முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
      வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.       58

3118

பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
      பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
      வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
      செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
      உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.       59

3119

சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
      துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
      கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
      என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
      தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.       60

3120

முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
      முடிகள்முடித் துரைக்கின்ற அடிகள்மிக வருந்தப்
பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
      படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
      திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
      தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.       61

3121

எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
      இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
      தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
      களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
      உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.       62

3122

இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
      எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
      இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
      சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
      உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.       63

3123

அன்பளிப்ப தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
      றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
      எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
      தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
      முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.       64

3124

மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
      மோனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
      உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
      புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
      நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.       65

3125

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
      காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
      பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
      குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
      மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.       66

3126

ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
      அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
      விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
      பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
      சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.       67

3127

கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
      துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
      வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே.       68

3128

ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
      கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
      சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
      விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
      பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.       69

3129

இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
      எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
      பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
      வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
      ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.       70

3130

உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
      உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
      சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
      பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
      நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.       71

31
31

ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
      அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
      திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
      களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
      தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.       72

3132

அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
      ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
      யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
      மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
      சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே.       73

3133

நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
      நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
      தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
      தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
      மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.       74

3134

யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
      உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
      என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
      வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
      முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.       75

3135

மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
      மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
      மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
      தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
      அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.       76

3136

இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
      எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
      உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
      தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
      குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.       77

3137

தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
      சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
      இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
கம்மடியா(185)க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
      கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
      நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.       78

185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து
இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது.
பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க. ஆ.பா.
------------

3138

உம்பருக்குங் கிடைப்பரிதாம் மணிமன்றில் பூத
      உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
செம்பருக்கைக் கல்லுறுத்தத் தெருவில்நடந் திரவில்
      தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
      மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
இறைவநின தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.       79

3139

உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
      உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
      சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
      சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
      மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.       80

3140

பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
      பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
      போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
      வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
      றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.       81

3141

உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
      உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
      அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
      கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
      விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.       82

3142

எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
      இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
      சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
      எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
      அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.       83

3143

மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
      வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
      றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
      திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
      மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.       84

3144

பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
      பரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே
அசமான மானசிவா னந்தஅனு பவமும்
      அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
      மனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று
விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
      விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.       85

3145

ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
      அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
      துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
      படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
      உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.       86

3146

பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
      பத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில்
ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
      அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
      நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
      மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.       87

3147

எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
      எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
      அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
      எழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே
சம்மதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
      தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.       88

3148

பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
      போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
      வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
      நவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த
ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
      என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.       89

3149

வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
      வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
      தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
      மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
      அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.       90

3150

புன்றலைஎன் தலையெனநான் அறியாமல் ஒருநாள்
      பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
      இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
மன்றலின்அங் கெனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்தாய்
      மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
பொன்றலிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
      புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.       90

3151

தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
      தம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள்
வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
      வருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி
எஞ்சலிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
      தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
      மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.       92

3152

எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்
      எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
      வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
அழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
      ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
      எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.       93

3153

மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
      வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
      போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
தாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே
      தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
      நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.       94

3154

மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
      மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
      கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
      உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
      தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.       95

3155

நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்(186)
      நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
தொடுங்கதவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
      துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
      கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
இடுங்கடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
      ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.       96

186. அடிகளாரின் எழுத்து பாவில் உள்ளபடி தோன்றுகிறது.
தொ.வே. அவர்களும் அப்படியே பதித்திருக்கிறார்கள்.
சீர் அமைவு கருதி "நெடுங்கமலம் விளங்கும்" எனக்
கொள்வார் கொள்க ஆ.பா. ----------

3156

வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
      மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
      துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
      உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
      மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.       97

3157

சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
      சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
      தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
      பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
      பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.       98

3158

அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
      தாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
      படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
      பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்
      பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.       99

3159

உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
      உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
      திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
      இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
      பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.       100

திருச்சிற்றம்பலம்
--------------

3. பிரசாத மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3160

திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
      திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
      தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
      மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குருஉருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும்
      குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.       1

3161

என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
      என்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்
தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
      தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
      வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
      ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.       2

3162

அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே
      அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
      களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
      கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
      மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.       3

3163

விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
      வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
      கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
      அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
      மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.       4

3164

உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
      உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப
மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
      மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
      அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
      கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.       5

3165

பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
      பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
      வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
      விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
குழைஅசையச் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
      கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.       6

3166

முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
      முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
      என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
சித்தேஎன் பவரும்ஒரு சத்தேஎன் பவரும்
      தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
      ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.       7

3167

தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
      சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
      உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
      கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
      கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.       8

3168

கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
      கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
      வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
      பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்(187)உளங் களிப்பப்
பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
      பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.       9
187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.

3169 உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
      ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
முன்னுதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
      முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
      துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
      பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.       10

திருச்சிற்றம்பலம்
------------

4. ஆனந்த மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3170

திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
      சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
      போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
      பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.       1

3171

சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
      தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
      பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
      எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.       2

3172

அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
      அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
      மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
      எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.       3

3173

மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்
      மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
      சிவகாம வல்லிபெருந் தேவே஢உளங் களிப்பக்
காசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில்
      கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
      அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.       4

3174

பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
      பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
      களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
      நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.       5

3175

அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
      அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
      மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
      புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.       6

3176

உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
      ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
      கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
      இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.       7

3177

பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி
      பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
      என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
      கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.       8

3178

பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
      பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள்
தேரணியும் நெடுவீதித் தில்லைநக ருடையாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
      இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
      தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.       9

3179

தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
      தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
      சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
      வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
      உடையானே நின்னருளின் அடையாளம் இதுவே.       10

    திருச்சிற்றம்பலம்
-----------

5. பக்தி மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3180

அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       1

3181

அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       2

3182

ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாளுடையேன்(188) தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       3

188. வாள் - ஒளி, பட்டயம். ச.மு.க.


3183
ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       4

3184

அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
      அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       5

3185

ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
      அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
      மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
      காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       6

3186

அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
      வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
      ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       7

3187

ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
      அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே
      வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
      காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       8

3188

அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
      அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
      இனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
      தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       9

3189

அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
      அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
      மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
      வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
      இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.       10

திருச்சிற்றம்பலம்
-----------

6. சௌந்தர மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3190

சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
      சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய்
மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
      விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
      பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
      வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.       1

3191

இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
      இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை
வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
      மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
      ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
      தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.       2

3192

சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
      சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
      நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான
      படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்
      தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.       3

3193

சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
      சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
      மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
      போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
      படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.       4

3194

தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
      சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
      தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல்
ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
      அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
      உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.       5

3195

தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
      சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
      மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
      நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
நூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
      நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.       6

3196

சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
      சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
      உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
      வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
      பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.       7

3197

ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
      ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
      பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
      சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
      உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.       8

3198

பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
      பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
      தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
      தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
      நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.       9

3199

என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்
      இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
      இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
      அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
என்புருக மனஞான மயமாகும் என்றால்
      எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.       10

3200

கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
      கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
      வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
      இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
      யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.       11

3201

காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
      கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
      வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
      அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
      இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.       12

திருச்சிற்றம்பலம்
------------

7. அதிசய மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3202

அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்
      மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
      எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       1

3203

அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
      நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
எச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன்
      எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
தச்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       2

3204

அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
      ஒதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
      எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       3

3205

அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
      மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
எந்தோஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
      எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       4

3206

அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
      இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
      எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       5

3207

அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
எம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
      இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
      வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும்
தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       6

3208

ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
      உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
      சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       7

3209

அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
கண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
      கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
      எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       8

3210

ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
      புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
      செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       9

3211

அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
      யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
      முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே.       10

3212

ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
      அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
      வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
      புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       11

3213

எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
      இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
      உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
      கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       12

3214

என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
      இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப
      மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த
      புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       13

3215

ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
      உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
      பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
      குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
      தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.       14

திருச்சிற்றம்பலம்
------------

8. அபராத மன்னிப்பு மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


3216

செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
      சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
      மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
ஐவகைய கடவுளரும் அந்தணரும் பரவ
      ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.       1

3217

நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
      நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
      கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
      தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.       2

3218

கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
      கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
      தனிப்பொருள்என் கையிலளித்த தயவுடைய பெருமான்
கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
      கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.       3

3219

நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
      நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
      என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
      ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.       4

3220

துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
      துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
      வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
      கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.       5

3221

பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
      பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
      கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
      மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.       6

3222

கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
      காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
      அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
      வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.       7

3223

திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
      தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
      உண்மையறி வானந்த உருவுடைய குருவே
சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
      திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.       8

3224

தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
      சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
      உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
      தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.       9

3225

ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
      ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
      பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
      துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
      விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.       10

திருச்சிற்றம்பலம்
-----------

9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

      எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3226

உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்
      உற்றிலாச் சிறியஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
      ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறங் காலத் தடிக்கடி ஏற
      விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
திலகநற் காழி ஞானசம் பந்தத்
      தெள்ளமு தாஞ்சிவ குருவே.(189)       1

3227
உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்
      உற்றிலாச் சிறியஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
      ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத் தடிக்கடி ஏற
      விடுத்துப்பின் விலகுறா வண்ணம்
அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன்
      அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்
திலகநற் காழி ஞாநசம் பந்தத்
      தெள்ளமு தாஞ்சிவ குருவே.
189. பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன் காணப்பெறுவதாக ஆ.பா.கூறி
இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே. முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்
நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின்
மிக்கு வராது. பெருமானது கையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த
இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.


3227

உயிர்அனு பவம்உற் றிடில்அத னிடத்தே
      ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த
      சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப்
      பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான
      பந்தன்என் றோங்குசற் குருவே.       2

3228

தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்
      தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி
      உற்றிடல் உயிரனு பவம்என்
றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே
      இருந்தவா றளித்தனை அன்றோ
சித்தநற் காழி ஞானசம் பந்தச்
      செல்வமே எனதுசற் குருவே.       3

3229

தனிப்பர நாத வெளியின்மேல் நினது
      தன்மயந் தன்மயம் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப்
      பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய்
      இருந்ததே அருளனு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன்
      என்னும்என் சற்குரு மணியே.       4

3230

உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்
      உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
      நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய்
      நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால்
      வெறுவெளி சிவஅனு பவம்என்
றுள்ளுற அளித்த ஞானசம் பந்த
      உத்தம சுத்தசற் குருவே.       5

3231

பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
      பொருள்அரு ளனுபவம் அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப்
      பற்றறப் பற்றுதி இதுவே
சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த
      தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின்
      முதலர சியற்றிய துரையே.       6

32
32

அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ
      அருட்சிவ மதற்கெனப் பலகால்
படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம்
      பார்த்தரு ளால்எழுந் தருளி
      மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள்
      விளங்குவ அடிமுடி என்றாய்
வடிவிலாக் கருணை வாரியே மூன்று
      வயதினில் அருள்பெற்ற மணியே.       7

3233

செவ்வகை ஒருகால் படுமதி அளவே
      செறிபொறி மனம்அதன் முடிவில்
எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள்
      எண்ணிய படிஎலாம் எய்தும்
இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன்
      றெனக்கருள் புரிந்தசற் குருவே
தெவ்வகை அமண இருளற எழுந்த
      தீபமே சம்பந்தத் தேவே.       8

3234

முன்புறு நிலையும் பின்புறு நிலையும்
      முன்னிநின் றுளமயக் குறுங்கால்
அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண்
      டையநீத் தருளிய அரசே
என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண்
      டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே
      என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.       9

3235

வருபகற் கற்பம் பலமுயன் றாலும்
      வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின்
      உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப்
      பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த
      உயர்தனிக் கவுணிய மணியே.       10
      பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3236

சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
      தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
      கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
      இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
      பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.(190)       11
      190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம்
------------

10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை

      எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3237

திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
      சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
      ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
      புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
      கடலேநின் கழல்கருதக் கருது வாயே.       1

3238

வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
      வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
      சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
சேய்மைவிடா தணிமையிடத் தாள வந்த
      செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
      அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.       2

3239

தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
      திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
      நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
      பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
      வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.       3

3240

விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
      வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
      வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
      பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
      கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.       4

3241

கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
      கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
      பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
      விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
      உத்தமனே(191) சித்தமகிழ்ந் துதவு வோனே.       5

191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ

      எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர்க ளைகண்இல்லேன்
      கழலடியே கைதொழுது காணின்அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்
      தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
      பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
7215 (6-99-1) திருநாவுக்கரசர், திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.


3242

ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
      ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
ஆங்காரப் பெருமதமால் யானை போல
      அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
      பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
      செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.       6

3243

செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
      சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
      பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
      உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
      வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.       7

3244

விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
      மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
      கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
      துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
வளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த
      வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.       8

3245

அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
      அவதரித்த மணியேசொல் லரசே ஞானத்
தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
      செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
      இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
      வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.       9

3246

தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
      செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
      தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
      குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
      செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.       10

திருச்சிற்றம்பலம்
---------

11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை

      கொச்சகக் கலிப்பா

3247

மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.       1

3248

நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.       2

3249

இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.       3

3250

வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.       4

3251

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை192
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே.

192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.

- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்.

3252

வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.       6

3253

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்(193) தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.       7

193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும்,
திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத்
திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.

3254

இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.       8

3255

பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.       9

3256

பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத்
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.       10

திருச்சிற்றம்பலம்
--------------

12. ஆளுடைய அடிகள் அருண்மாலை

      தரவு கொச்சகக் கலிப்பா

3257

தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.       1

3258

கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.       2

3259

மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.       3

3260

உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனிஅகவல்(194) எண்ணம்எனக் கியம்புதியே.       4

194. `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம்,
திருவண்டப்பகுதியில்`என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை

வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது
உள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க
அருளொடு பராவமுது ஆக்கினன்
பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.
      - திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.


3261

தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.       5

3262

சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.       6

3263

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.       7

3264

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.       8

3265

பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே.       9

3266

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.       10

      திருச்சிற்றம்பலம்

ஐந்தாம் திருமுறை முற்றிற்று


This webpage was last revised on 20 Nov. 2021
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com)