pm logo

Saiva Siddhantha Sastras - VII
cangkarpa nirAkaraNam of umapati civam
(in tamil script, Unicode format)

சங்கற்ப நிராகரணம்
ஆசிரியர் : உமாபதி சிவாசாரியார்
சைவ சித்தாந்த நூல்கள் - VII



Acknowledgement:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext Preparation & proof-reading : Ms. Subashini Kanagasundaram, Boeblingen, Germany.
Preparation of web and pdf versions : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This web page was first put up on Jan 16, 2002

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சைவ சித்தாந்த நூல்கள் - VII
சங்கற்ப நிராகரணம்
நூலாசிரியர் : உமாபதி சிவாசாரியார்

அறிமுக உறை: சுபாஷினி கனகசுந்தரம்

இந்நூல் பிற சமயக் கொள்கைகளை கூறி அவற்றை மறுக்கும் வகையில் எழுதப்பட்ட ஒன்று. இங்கு பிற சமயங்கள் எனக் குறிப்பிடப்படுபவை நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன:
1. புறபுறச்சமயம், 2. புறச்சமயம், 3.அகப்புறச்சமயம், 4.அகச்சமயம்.

புறச்சமயம் என்பது வேத ஆகமங்களையும் திருமுறைகளையும் ஏற்றுக் கொள்ளாத சமயத்தவர்களைக் குறிப்பது. இவ்வகையினர் ஆறு வகையாவர்:        1.உலகாயதர், 2.சமணர், 3.சௌத்திராந்திகர், 4.யோகசாரர், 5.மாத்மியர், 6.வைபாடிகர் ஆகியோர்.

புறச்சமயம் எனபது வேதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கின்றவர்கள் அனுஷ்டிக்கின்ற கொள்கையைக் குறிப்பது. இதில்         1.நியாயம், 2. சாங்கியம், 3.யோகம், 4.மீமாம்சை, 5.வேதாந்தம், 6.வைணவம் ஆகியவை அடங்குகின்றன.

அகப்புறச் சமயத்தைச் சார்ந்தோர் வேத சிவாகமங்களை ஒப்புக் கொள்கின்ற கொள்கையைச் சார்ந்தோர். இவ்வகைச் சமயம் ஆறு. அவை         1.பாசுபதம், 2.மாவிரதம், 3.காபாலம், 4.வாமம், 5.பைரவம், 6.ஐக்கியவாத சைவம் என்பவை

அகச்சமயம் எனும் சமயக்கொள்கை சைவ சித்தாந்தத்தோடு மிகவும் நெருங்கிய ஒன்று. முப்பொருள் உணமையான பதி பசு பாசம் ஆகியவற்றோடு ஒத்துப் போகினும், முத்தி நிலை விளக்கத்தில் மாறு பட்டு நிற்பவை. இவ்வகைச் சமயங்கள் ஆறு:         1.பாடாணவாத சைவம், 2.பேதவாத சைவம், 3. சிவசமவாத சைவம், 4.சிவசங்கிராந்தவாத சைவம், 5. ஈசுவர அவிகாரவாத சைவம், 6.சிவாத்துவித சைவம் ஆகியவை.

ஆக சங்கற்ப நிராகரணம் எனும் இந்நூலில் மேற்கூறிய கொள்கைகளில் ஒன்பது கூறப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. எடுத்தாளப்பட்டுள்ள சமயங்கள் மாயாவாதம், ஐக்கியவாதம், பாடாணவாத சைவம், பேதவாதம், சிவசம்வாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவித சைவவாதம்,
நிமித்தகாரணபரினாமவாதம் ஆகியவை.


சங்கற்ப நிராகரணம்
நூலாசிரியர்: உமாபதி சிவாசாரியார்

விநாயகர் வணக்கம்

திருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர்
கமையாக் காத லமையாது பழிச்சு
நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த
புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத்
தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை
வாட்டரு மும்மை நாட்ட நால்வாய்ப்
பாச மங்குசந் தேசுறு மெயிறொண்
கனியிவை தாங்கும் புனித நாற்கரத்
தங்கதங் கடகம் பொங்கிழை யார
நிறைமணிச் சுடிகைக் கறையணற் கட்செவி
கொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாட்
களிறுத னிருகழல் கருதா
வௌிறுறு துயரம் வீட்டினம் பெரிதே.

பாயிரம்

பெருங்கட லுதவுங் கருங்கடு வாங்கிக்
கந்தரத் தமைத்த வந்தமில் கடவுள்
பாலரை யுணர்த்து மேலவர் போலக்
கேட்போ ரளவைக் கோட்படு பொருளா
லருளிய கலைக ளலகில வாலவை
பலபல சமயப் பான்மைத் தன்றே யஃதா
லந்நூற் றன்மை யுன்னிய மாந்தர்
இதுவே பொருளென் றதனிலை யறைதலின்
வேற்றோர் பனுவ லேற்றோர்க் கிசையா
மாறு பாடு கூறுவ ரதனாற்
புறச்சமய யங்கள் சிறப்பில வாகி
யருளின் மாந்தரை வெருளுற மயக்கி
யலகைத் தேரி னிலையிற் றீரும்
ஈங்கிவை நிற்க நீங்காச் சமய
மூவிரு தகுதி மேவிய தாமும்
ஒன்றோ டொன்று சென்றுறு நிலையி
லாறும் மாறா வீறுடைத் திவற்று
ளெவ்வ மில்லாச் சைவநற் சமயத்
தலகி லாகம நிலவுத லுளவை
கனக மிரணியங் காஞ்சன மீழந்
தனநிதி யாடகந் தமனிய மென்றிப்
பலபெயர் பயப்பதோர் பொருளே போலப்
பதிபசு பாச விதிமுறை கிளக்கும்
வாய்ந்த நூல்க ளாய்ந்தன ராகி
யாசா நாகி வீசிய சமத்துடன்

ஏழஞ் சிருநூ றெடுத்த வாயிரம்
வாழுநற் சகன மருவா நிற்பப்
பொற்பொது மலிந்த வற்புத னானி
யாறாம் விழவிற் பொற்றே ராலயத்
தேறா வெண்மர் நிரையி லிருப்ப
மயங்கு வாத மாயா வாதி
முயங்கிட வொருதலை முதுவெதிர் மணிசேர்
பெண்ணை சூழ்ந்த வெண்ணையம் பதிதிகழ்
மெய்கண் டவனருள் கைகண் டவர்களி
லொருவ ரொருதலை மருவி யிருப்ப
வஞ்சப் பிறவிக் கஞ்சிவந் தொருவ
னேதிறை யருளென வீதெனு மாயா
வாதியை யயலினர் மறுதலைத் தருடர
மற்றவ ரயலின ரவருரை மறுத்துச்
சொற்றர வயலின ரவருந் தொலைவுற்
றின்னே யெவரு முன்னே கழியுழி
யாங்கய லிருந்த வருளின ரழகிது
நீங்கள்சங் கற்ப நிராகரித் தமையென
மற்றவ ருரைத்த சொற்றரு பொருள்கொடு
வாத செற்ப விதண்டையு மேதுவு
மோது நால்வகை யுவமையுந் திகழ்தர
வருள்சேர் மாந்தர் வெருள்சே ராமற்
றற்கமுங் விடயமுங் கற்க
நற்கவி மாந்தர் நகநவிற் றுவனே.

மாயாவாதி சங்கற்பம்

பெத்தத்தியல்பு

நவிற்றிய நிரையி னவித்தையி னோனுரை
நித்த னறிவன் சுத்த னகண்டித
னிருவி கற்பனிர்த் தத்துவ னிரஞ்சனன்
சொல்வகை யெவையுந் தொடராத் தூய்மணி
வரம்பில் வேதச் சிரந்தரு பரம்பொருள்

சத்தா யெவையுந் தானா யவித்தை
தொத்தா துயர்ந்த தொல்சுடர் மூவா
வின்ன தன்மைய னேக னநேகன்
கன்னற் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப்
பெற்றியி னிருந்து பொற்பணி யியல்பினின்

வான்வளி யனனீர் மண்மருந் தன்ன
மான தாது வாறைங் கோசத்
தொகுதி யாக்கைப் பகுதிய தொருபுடை
சுத்தி வெள்ளி யொத்தென மித்தையிற்
றானென லாகுந் தன்மைத் துலூதையிற்

சின்னூற் றகைமையின் வேற்றுமை மரீஇய
தென்னப் பன்மைய த்னினிலை பழம்பூத்
தோனார் வயிரந் தருத்தருந் தொன்மையின்
வானா ரந்திரை நுரைதரு வாய்மையிற்
கூடு மசித்தைச் சித்துத வாதெனி

னெற்பதர் பலாலத் திற்பரந் திற்பரந் தருமிது
தன்னியல் பென்றும் விளையாட் டென்றும்
முன்னுள மறைகண் மொழிதலி னொருநூற்
பன்மணி நிலையும் பசுப்பா லெனவும்
பலவக னீரி லலர்கதி ரெனவுங்

கூவ லாழி குளஞ்சிறு குழிகால்
வாவி யாவையுங் வருபுன லெனவு
மவ்வவற் றடங்கி யாடியு ணிழலெணத்
தோன்றி யாக்கைநற் காந்தத் திரும்பும்
கனவிற் றீங்குங் கங்குலிற் கயிறும்

புனலிற் றோன்றும் பேய்த்தேர்ச் செய்தியு
மன்ன துன்பி நன்னிறப் பளிங்கெனப்
பதினாற் கரணத் தொருமூன் றவத்தை
நாளு நாளு நயந்துறு மிருபயன்
தன்னிற் சாராத் தொன்மைத் தன்மை

தர்ப்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றே

சீவன்முத்தியியல்பு

இவ்வியற் பந்தப் பௌவம தகல
விண்முத றந்த கொண்மூப் படலத்
திருளற வுதித்த காறக விவேகந்
தன்னிற் றோன்றிச் சாதக மனைத்தையு

மன்னகப் பிரிப்பு மடியிழை வாங்கலும்
போல ஞானம் பொய்யறக் கழீஇத்
தானே தானாய்த் தன்னிற் றன்னைத்
தானே கண்டு தன்னல முற்று
வசையி றத்துவ மசிபதத் தௌிவா

லகமே பிரம மாயின னெனவறிந்
தசல னாகிநற் சலம்சல மதியெனக்
கண்டிடும்

பரமுத்தியியல்பு

உடலம் விண்டகல் கடந்து
மங்குலஃ துடைதர வெங்குமாந் தகைத்தே
இவ்வகை யுணர்ந்து செய்தொழி லறாத

மடவோர் தாமுங் கடனா வியற்றுங்
கன்ம காண்டத் தொன்மைப் புரிவாற்
றோற்றிய வித்தை மேற்கடை யரணியி
லெழுந்தெரி யவற்றை விழுங்கிய தென்னத்
தன்னொழிந் துள்ள தானா யழியு

மந்நிலை யன்றி யழிவறு முத்தி
யேயா தென்றுதன் னியல்பை
மாயா வாதி வகுத்துரைத் தனனே.

மாயாவாதி சங்கற்ப நிராகரணம்

பிரமாணமறுப்பு:-

வேதம் சுயம்பன்று

உரைதரு பிரம மொன்றெழு முரைக்கண்
வருபிர மாண மறையெனி லருமறை
யொன்றென்ற தன்றி யிருபொரு ளுரைத்த
னன்றன் றபேத நாடிய பொருளேற்
பேதமு மபேதமு மோத வேண்டா

பேத மெனினு மபேத மெனினும்
பேதா பேத மெனினு மமையுநின்
னையமி லுரையிற் பையவந் துளதாந்
திகழ்பிர மாண விகழ்வுமுண் டன்றிப்
பெத்தம் பேத முத்தி யபேதமே

லநவத் திதமா மவையிரு திறனு
மினியப் பழமொழி யிரண்டல வொன்றே
யன்றியும் பெத்தம் பேதத் தறைதலு
மொன்றிய முத்தி யபேதத் துரைத்தலும்
பழுதா மித்திறம் பதையா தாய்கமற்

றெழுதா மறையெனு மிப்பிர மாண
மாருரை தானே யாயின தேலுன
தேக மநேக முறுமியம் பாமற்
சத்த ரூபந் தகாதெனில் வானத்
தொத்தொலி யுறழு மெனில்வறி துதியா

தன்றியும் பதமும் பாழியு மனைத்து
மின்றியோ ரொலியா யெழுந்திடு மதனுக்
கறிவில துருவில தறியா தறையா
தன்றியு மவ்வகை யகண்டித மதுவிது
வென்றது குறிப்ப தெவ்வகை யாவு

மொன்றெனு முரயு மொழிந்தனை யன்றே
யருமறை பிரம வுரையெனி லதற்குத்
தந்த தாலு முதனவில் பொறியில
தென்னிலோ ருடற்கண் மன்னிய வலகை
யறைந்தற் றென்ப தார்சொல தமலத்

திறம்பெற் றின்றே செய்தோர் பெயராற்
சுயம்பு வென்றுல கியம்புமென் றறியினித்
தற்கீட் டலைவரைத் தான்றெழு துரைக்குஞ்
சொற்கேற் புரவல னேவ லமைச்சரை
யடிகண் மற்றெங்குடிமுழு தாண்மினென்

றேத்தி யிறஞ்சிக் காப்பர்க ளென்றாங்
கீச னாஞ்செயப் பேசின னன்றி
யினையவை பிறரிற் கனவினு மிலனே
தன்னைத் துதிக்குஞ் சொன்னலந் தானுமத்
துறையறி வாணர்க் கறைவதொன் றன்றியுந்

தனக்குத் தானே தன்னலம் பகரா
தசத்துக் குரையா தார்குரை யுயிர்க்கெனி
லுரைபிர மாண மிறைபிர மேய
நீபிர மாதா நின்பிர மிதியென
நால்வகை யுளதுன தேகநன் றன்றே

நற்பிர மாண நிற்பதொன் றன்றா
லப்பிர மேயமு மதனியல் பன்றே

பிரமேய மறுப்பு:-

பிரமம் பிரமேய மன்று

கன்னற் சுவையி லந்நிய மிலதா
லினிமை தோன்றாத் தனிமைத் தென்றனை
யறிவிற் குவமை யசத்தாங் கட்டி

பிறிவித் தொட்டினும் பேறதுறோதே
தற்பர விரிவு பொற்பணி தகுமெனிற்
செய்வோ ரின்றிச் செய்வினை யின்மையிற்
பொன்பணி யாகை தன்பணி யன்றே
செய்வோர் போலச் செயப்படு பொருண்முதற்

செய்வோ ரேயாச் செய்யவும் படுமே
சுத்தி வெள்ளியிற் றோன்றிற் றாயினுஞ்
சத்துல கேதுந் தாரா தருமெனி
னுலக மித்தையென் றோரா துரைத்தனை
நிலவுநின் மரபு நினைந்திலை யாங்கொல்

விவகாரத்தில் வேண்டுவது முலகம்
பரமார்த் தத்திற் பகரா மென்னிற்
பரத்துள தேலிவை யும்பர மார்த்தம்
பரத்தில தேலொழி முன்பகர் மாற்ற
மதன்முதல லிதுவென வுதவுக வன்றியும்

விவகரிக் குங்காற் றிகழ்பர மார்த்த
நிலையது தெரியி னிதுநீ நீயேற்
றெறியா தாயி னஃதுந் தெரியா
துரையா ரளவையு மொழிந்தனை யன்றே
யளவை காண்டல் கருத லுரையென

வுளதவை மூன்றின் மொழிவழி நுழையி
னின்பிர மேய மென்ப தெனாங்கொல்

பிரமிதி மறுப்பு

பொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னே யாநின்
றற்பர மசித்தைத் தருமா றென்னெனிற்
சிலம்பி நூறரு நலம்போற் றோன்று

மென்றனை யதுவ தன்றொழி லன்றியு
மொன்றத னியல்புல கோரியல் பன்றெனப்
பலமிலை பழம்பூப் பாதவந் தருநீர்
திரைநுரை திவலை சிலதரு மிவைபோற்
றானே பலவா மெனநீ சாற்றினை

சத்தசத் தாகவுஞ் சத்தினி லசத்தின்
கொத்துள தாகவுங் கூறின ரிலரால்
வித்திலை கனிநனி விழுதா றருநெறி
சத்தல தொன்று தான்றர வேண்டு
நெற் பதர் பலாலத் திற்குபா தானமென்

காரண மின்றிக் காரியம் பிறவா
பாரிடை யொருபடம் பண்ணவும் படுமே
யந்தமில் பிரம மவித்தை தானெய் ரணமெனத்
தந்தனை யவித்த தானெய் துறுத
றன்னியல் பென்னில் வன்னிதன் வெம்மையிற்

சத்தின தியல்புஞ் சத்தே யசத்தெனில்
வைத்தத னியல்பெனும் வழக்கொழி யன்றியு
மிருள்பொதி விளக்கென வருமரு விளக்கிற்
கருமை பயந்த பெருகொளி தகுமெனிற்
றன்னியல் பன்றத னுபாதி வசத்தான்

மன்னிய தன்றிமை தான்றனின் மாயா
தொன்றா னசுத்த னன்றா மன்றே
யாங்கொரு காலத் தோங்கிய தாயி
னந்தமி லவித்தை வந்தணை வதற்கோ
ரேது வேண்டும் புயலியல் பென்னின்வீ

டோத வேண்டா வொழிந்தோ ரினுமுறுங்
களங்கம துறவுறு மவித்தைதற் கவித்தல்
விளங்கிய பிரம விளையாட் டாயி
னவித்தை யென்பதொன் றன்னியந் தன்னி
லுதிக்கு மென்றமுன் னுரையு மறந்தனை

நுண்ணூற் குடம்பை நுந்துழி போலுட்
படுநெறி யதனால் விடுநெறி யிலதாற்
தலைமையு மறிவு மிலதென வித்தையை
விடுத்தெடுத் தாணரும் வேற்றோ ரன்றே
யொளிகொ டாமிரங் குளிகைபெற் றாங்கத

னவித்தையை வித்தை தவிர்க்குமென றுரைக்கி
னித்த னறிவன் சுத்தனென் றுரைத்த
வித்தக மென்னீ வித்தையும் வேறொன்
றெம்ம னோரி லொருவ நின்னிறை
யம்ம சைவந் தவனீ யன்றே

பிரமாதா மறுப்பு: - பெத்தம்

பன்மணி பசுநற் பாத்திர மெனவு
நன்னூல் பானீர் நற்கதி ரெனவு
முடலையு முணர்வையு முவமித் தனையேற்
றடமணி சரடொடு தாங்கூ டலவே
யுணர்வுணர் வொழியி நுலகுணர் வுறினின்

பாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக்
கலம்பல வன்றிச் சலம்பல விலதெனக்
காணுந ரின்றி வீணின் விளம்பினை
யாடியு ணிழல்போற் கூடுதல் கூறிற்
றன்னிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின்

மன்னிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே
மன்னயக் காந்த மென்னவுடல் பிரம
சன்னிதி யளவிற் சலித்திடு மாயி
னகண்டிதன் சன்னிதி யலதில தெவையு
நடந்திட வேண்டுங் கிடந்திடப் பெறாவே

காந்தத் திரும்பு காட்டுநர்ப் பொறிலயஞ்
சேர்ந்திடு நீக்குஞ் செயலதற் கிலதே
கனாத்துயர் கயிற்றர வெனாச்சில தொடுத்தனை
கனவின் பயனு நனவின் பயனும்
வினையின் பயனவை பொய்யென வேண்டா

வுடன்மா றாட்டக் கடனது கருதுக
வுற்ற புற்று மற்றதிற் கயிறு
முடலுங் கூடச் சடமென வறிதி
யறிவு கயிறென் றறியா தன்றே
யச்சம தடைதல் கொச்சமை யுடைத்தே

யின்னுமக் கனவி லிருளுறு கயிற்றிற்
பின்னுநின் பிரமம் பிரமித் திடுமே
துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத்
தானாந் தகைமை யானான் மலரென
வொருபய னன்றிப் பலபயன் மரீஇய

திருவினை தருபய னெனநனி வேண்டி
லாண்ட வித்தையு மவித்தைகொ டாக்கையு
மீண்டிரு வினையு மியம்பினை பரத்தைக்
கள்வரைப் பிணிக்குங் காவல ரெனமுய
றொல்வினைத் தொடக்கிற் றோன்றுடற் சிறையிட்

டிருவினை யூட்டு மெம்மா னம்மா
னருவினை யுடற்க ணவத்தைக ளுரத்தனை
யாருறு பவர்பர மகண்டித மடங்கா
தோர்வில துடல்சட முறுநெறி யாதெனின்
மன்னிய கரண மாறாட் டத்திற்

பன்னின மென்னி னிவையோ பரமோ
முதலிய தாயி னிவைபிறழ் வெய்தா
திவையெனி லுனது மொழிபழு துளதே
யுடற்படு பிரம முறுமெனிற் சாளரத்
திடத்தகு முறுவிர னுதியளி யெறிதுய

ரங்குலி தானே யருந்திடி லுடற்கட்
டங்கிய வறிவு தனித்துறு மன்றே
தற்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றா
னற்கணிற் றுயர நணுகாத் தகைத்தெனி
னின்மொழி விரோதமுங் காட்சி விரோதத்

தன்மையு முறுமவை தவறில வாகா
யாமுடைப் பதிவகை யாவரும் பலகலை
சொல்லுத லௌிதரி தத்தொழில் புரிவெனப்
புல்லிய பழமொழி புதுக்கினை யன்றே
யகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப்

பந்த மிதுவெனத் தந்தமை கருதில்
வானி னடக்குங் காலினைப் பிடித்துப்
பருவிலங் கிட்ட வொருவனீ யன்றே

சீவன்முத்தி மறுப்பு

பந்தம தகல வுந்து விவேகம்
வான்வளி யெனத்தனிற் றானே தோன்றின்

முன்புள தாயின் மயங்கா திலதெனிற்
பின்புள தாக திலதுள தெனின்வௌி
மலரது தருமனல் மரக்கணின் றாகித்
தருவது தகுமெனிற் றானே தோன்றா
விறகி னுதித்த கனறகு மாயி

னவித்தையி னுதித்த வித்தை யம்மரத்
துதித்த விவேகம் வித்தையென் றுரைத்த
வெந்தழ லனைய விவேக முதித்த
திந்தன மனைய திறையிலன் றற்றே
யிற்படப் பிரிப்பின் மெய்ப்படு மெவற்றையு

மிதுவன் றிதுவன் றெனக்கழி காலை
யதுவே தானே யாயின தென்றனை
வித்தை முன்ன ரவித்தையு மவித்தைமுன்
வித்தையு நில்லா வியனொளி யிருளென
விருளல வொளிக்கு மொளியல விருட்கு

மொருகா லத்து மொருபய னிலதா
லிரண்டையு நுகரு முரண்டரு விழியென
வித்தையு மவித்தையு முய்த்ததொன் றுளதே
தானே தானா மானாற் பயனென்
றன்னிற் றன்னைத் தானே காணிற்

கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே
தன்னல மதனைத் தானே நுகரு
மென்னின் முன்னல மெய்தா திருந்ததென்
கட்டி போலெனக் கதறினை யின்பம்வந்
தொட்டிடும் வித்தை யுடையயா யிடினே

தத்துவ மசியென வைத்தமுப் பதத்திற்
கொன்றே பொருளென் றன்றே பகர்வது
நீபுலி யாயினை யென்றாங் குணரி
லாயினை யென்றது மாகுவ மைத்தா
னோயா யினமே லாயா யென்றா

லகமே பிரம மாயின தென்றாற்
சகமே யறியத் தான்வே றன்றே
யுண்மையிற் சலமில வுடற்சஞ் சலமுறும்
வெண்மதி போல விளங்கிடு மென்றனை
யசல னாகிச் சஞ்சல சலத்துச்

சலன மேவின மெனமதி காண
வேண்டும தன்றிக் காண்பவர் பிறரே
லீண்டுன தேக மென்செய்த தியம்புக

பரமுத்தி மறுப்பு

உடல்விடக் கடத்துட் படுவௌி போலெனில்
விட்டென் பெறவுடற் பட்டென் படமெற்

றிகலற வொருவ னிவ்வகை தௌியி
லகிலமு முத்தி யடைந்திட வேண்டு
மறிந்தோர் முத்தி யடைந்தோ ராயின்

பிறிந்தோ ருயிர்பல பேதத் தன்றே

பிரமஞானம் வாரா தென்றது

கன்ம காண்டங் காரண மாக

மன்னும் விவேக மென்னி லவித்தைக்
கேது காரண மோதினை யில்லை
யிதற்குங் காரணம் விதித்தல்வேண் டின்றே
யரணியி லுதித்த கனலவை கவர்வென
விரதத் துதித்த விவேக மழித்தல்

வருந்தி யாயினுந் திருந்திய வேத
நீதி யெல்லா நீத்துப் போதமொன்
றறியார் தாமு மவ்வழி நடத்தல்
பொறியோ போத நெறியோ விதுபவ
நீங்கிடு நெறிதரு பாங்கினைப் பழித்த

னன்றி கொன்ற லன்றே யன்றியு
ஞால நீதியு நான்மறை நீதியும்
பாலருன் மத்தர் பசசரி லெனவு
முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந்
தானே தவிரா தானாற் புரியா

தொழிந்திடி னிரயத் தழுத்துத றிடமே
யுய்த்தோ னன்றி முத்தி யுரைத்தல்
பித்தோ பிரமஞ் செத்தோ பெறுவ
துடலையு நீயே சடமெனச் சாற்றுனை
வையினும் வாழ்த்தினும் கொய்யினும் கொளுத்தினும்

வணங்கினும் முதைப்பினும் பிணங்குதல் செய்யாப்
பிரமத் தன்மை பெறுவதெக் கால
மிருக்கு நாள்சில வெண்ணினூல் கதறித்
தருக்கம் பேசித் தலைபறி யுற்றுக்
கண்டோ ரீந்த பிண்டமுண் டலறிப்

பன்னோ யாக்கை தன்னோ யுற்றுடல்
விடவரு மென்று நடுநடு நடுங்கி
விட்டோர் தெய்வத் தொட்டின் றன்றியும்
யானே வெயரு மானே னென்றலி
னவ்வவர் சீறி யவ்வவர் வாணாட்
செவ்விதி னிரயஞ் சேர்த்துவ ரதனால்
மாயா வாதப் பேயா வுனக்குத்
தேவரி லொருவருண் டாக
மேவரு நரகம் விடுத்தலோ வரிதே

ஐக்கியவாதி சங்கற்பம்
பெத்தநிலை

அரிதேர்ந் துணராப் பெரியோ னுரைத்த
பதிபசு பாச விதிமுறை கிளக்கில்
ஈச நேக னெண்ணிலி பசுக்கள்
பாச மிருவகைப் பரிசின துலகத்
தாயவ னுயிர்க்கு மாயையி னருளால்

இருவினைத் தொகையி லுருவினைத் தருமாற்
கருமுகி லடர விரிதரு கதிர்போன்
றறிவா முயிரிற் பிறியா தேயு
மீட்டு மிருபய னூட்டிடு நியதிக்

முத்தி நிலை

கொருபொழுது திருபயனுகர்வுற மருவுத
லின்மை யாதன் முன்னிய காலைச்
சத்தி நிபாத முற்றிறை யருளா
லுருவுகொ டுலகு தெரிவுற மருவி
மாசுறுந் தூசு தேசுற விளக்குந்
தன்மையி ணுணர்த்தும் புன்மைக ணீங்கி

நீரு நீருஞ் சேருஞ் தகைமையி
னறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி
யொன்றா மென்பதை யுலகோர்
நன்றா முத்தி யென நவின் றனரே

ஐக்கியவாதி சங்கற்ப நிராகரணம்
பெத்த நிலை

முத்தி யென்ப தெவனோ சுத்த
வறிவெனிற் பாசஞ் செறியா மாயை
யுருவிரு வினையால் வருமிரு வினையு
முருவா லன்றி மருவா திவற்றீன்
முந்திய தேதோ வந்தணை வதற்கோ

ரேது வேண்டுந் தானியல் பென்னின்
வீடுற் றவரினுங் கூடக் கூடு
மீங்கிவை நிற்க நீங்காக் கருவிகள்
கொண்டறி வறியக் கண்டது மன்றி
மருவிய வுருவு துயில்பெறுங் காலைச்

சிறுபொறித் தறுகட் கறையணற் சுடிகைத்
துத்திக் கடுவுட் டுளையெயிற் றுரகக்
கொத்தயல் கிடப்பினுங் குவைதரு நவமணி
யொருபாற் றுதையினும் பெருகார் வத்தினோ
டச்சமு மணுகாக் கொச்சமை யென்னே

கருவி யாவும் பிரிவுறு நிலையேற்
பொறிபுல னாதி குறைவற நிறைந்து
காட்சிய தளிக்கு மூட்சியின் முன்னர்க்
கொடுத்தோ ராழி விடுத்தவர் நாடிக்
கொள்வோர்க் காணா துள்கி மீண்டுழித்

தந்தவர் கண்டாங் கந்தமி லதனைத்
தருக வென்னும் பெருமதி பிறக்கும
தறிவி லாமையென் றனையது மலமாக்
குறிகொ ளாள ரறைகுவ ரன்றே

முத்தி நிலை மறுப்பு

அறிவிற் கறீவு செறியவேண் டின்றே
யுண்மையி லிருமையு மொளியே யெனிலொரு
தன்மை யாகமுன் சாற்றின ரிலரே
முன்பு நன்றுட னொன்றிய காலை
யின்ப மெய்துதற் கிலதுயி ராதலி
னீயலை பொருத மாயா வாதி
யாயினை யமையு மருணிலை கேண்மதி

பாடாணவாதி சங்கற்பம்

பெத்த நிலை

மூல மலத்தாற் சாலு மாயை
கருமத் தளவிற் றருமுரு விறைவன்
செறிந்தி பயனு நுகர்ந்திடு முயிர்க
ளிருளுறு மலத்திற் பருவரற் படுதலி
னிடையிரு நோக்குந் தடைபட் டோரிற்
றுயருறு மதனாற் செயிருறு துன்பம்

முத்த நிலை

கொத்தை மாந்த ருய்த்துறுந் துயில்போற்
காட்சி யென்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி யெனவகுத் தனரே

பாடாணவாதி சங்கற்ப நிராகரணம்

வகுத்துரை பெருகத் தொகுத்திடு முத்தி
நன்று நன்றிரு ளொன்றிய மலத்தா
முளத்திற் குறுபொறி செறிபுல னுகர்தல்
விளக்கிற் றிகழு மேன்மைய தன்றே
கருவிக ளகல்வுழி மருவிய துயரமு
நன்றென லாகுந் துன்றிய படலத்
திடைதடைப் பட்ட சுடர்விழி மாந்தர்
படல நீங்குதல் கடனா தலினே
காட்சி யென்னக் காணாத் துயர
மாட்சியை முத்தி யெனவகுத் துரைக்கிற்
கரணா பாவ மரணங் கருமர
மேய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே
யனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா
தனிதரு துயர மெனுமிது திடமே
பாடாணத்திற் கூடா முத்தி

பேதவாதி சங்கற்பம்

ஈசன தருளாற் பாசத் தொகுதி
செறிவுறு செம்பிற் கறியுறு களிம்பி
குளிகை தாக்க வொளிபெற் றாங்கு
நித்த சுத்த முத்த ராக
வைத்தன ருலகின் மறைவல் லோரே.

பேதவாதி சங்கற்ப நிராகரணம்

மறைக ளாகமத் துறைகண்மற் றெவையு
நாசமில் பதிபசு பாசமென் றுரைத்த
லயர்த்தோர் குளிகைச் சயத்தாற் றாம்பிரக்
காளித நாசம் பாசத் தேய்த்தல்
கூடா தன்றியுங் குளிகை சீருண

நீடா தழித்த நிலைநிலை யாதலிற்
பேத வாத மோதுதல் பிழையே
யின்னு மின்னுயி ரேமங் குளிகை
தன்னி லந்நியந் தருவது திடமே
வீடித் திறத்தினிற் கூடக் கூடா

சிவசமவாதி சங்கற்பம்

பாசமும் பசுவு மீசனு மென்றிம்
மூவகை யுணர்வுந் தான்முதன் மையவாய்ப்
பாச வைம்புலன் றேசுற வுணர்த்தப்
பசுத்தனி ஞானம் புசித்திடு மன்றே
யினைய ஞானம் பிரிவுற வெரியாச்
செந்தழ றகுநெறி யந்தமி லுயிரு
மறிவா யொன்று மறியா தன்றே
யிவ்வா றொழுகு மேனை யுயிர்க்கு
முன்னோன் றனது முதிரொளி ஞான
மறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த
வண்டென வுயிரைக் கொண்டிடு முயிரது
தன்னை நோக்கித் தானது வாகி
யைவகைத் தொழிலு மெய்வகை யுணர்வும்
பிரியா வாறு பெற்றுத்
திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே.

சிவசமவாதி சங்கற்ப நிராகரணம்

பெத்த நிலை மறுப்பு


சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமு
மொருகா லன்றித் தெரிவுற நிற்கி
லொன்பொருள் காணும் பண்பினுக் கொருகாற்
பரிதியு மதியு மெரிதரு விளக்கும்
வேண்ட லின்றே காண்டகு காலை
யொன்றொன் றாக நின்றறி வுறுமெனி
லந்நிய மறியாமன்னுயிர் பொறிபுலன்
றானோ வறியா தலைவர்க் குலகினை
யானா வறிவா லறிய வேண் டின்றே
கொழுந்தழ றகுமெனி லழுந்திடு மவத்தையிற்
றிரியாத் தலைவர் தெரியாத் தன்மைவந்
தெய்தலாகா மெய்யுறு பொருட்கு
முன்னர்க் கீடந் தன்னென வெடுத்த
வேட்டுவ னியல்பு கூட்டல் பெறாதே
வண்டிறும் பெடாவுட் கொண்டது தனக்கு

மந்திர வாதந் தந்தது மிலதே
யெடுத்திடு மதனா லடுத்ததென் றறையிற்
கருமயிர்க் குட்டி யிருசிறைப் பறவை
யாயின தெடுத்த தாயர்சாற் றிலரே
பிறவிப் பேதத் துறையிவை கிடக்க

வேயு மித்திற னாயுங் காலை
யோகத் தகுதி யாகத் தகுமே
ஞான மின்மையென் றோதுவ தெவனெனில்
உயிரு முணர்வும் பயிலுத லின்றி
வேட்டுவ னுருவ மென்புழு வுணர்வு
மாறுத லானு மூறுடைத் தன்றே
யீசன தியல்பரு ளெய்துயி ரியற்றல்
பேசுத றவறெனப் பெருமறை யறைய
வைந்தொழி லுயிருந் தந்திட றகுமோ
யாவதென் முன்னா ணாவலர் பெருமான்

பண்டொரு முதலை யுண்டமைந் தனைவர
வழைத்தன னென்றாய் பிழைப்பில ததூஉந்
தந்திட வேண்டு மென்றன ரன்றே
யின்னவை கிடக்க முன்னவன் றன்மை
யெய்தின ரெல்லாச் செய்தியுஞ் செய்வ
ரிரும்பெரி யெய்தித் தருஞ்செய றகவெனிற்

பொருணிலை கிடக்க வொருதிட் டாந்தப்
பேறே யாயிற் சீறாக் கதுவிய
புனலொரு புடைசேர் கனறகு மாயினும்
வேறொரு பொருளை நீறாக் கிலதே
நெருப்பெனு மிதனி னுருத்தனி காட்டுக
வங்கியு மொன்றிற் றங்கிநின் றல்லது

தன்றொழி னடத்தா தென்றறி யினிநீ
யிரும்பனற் செய்தி தரும்பரி சுளதோ
வதுவெனோ ரலகை பொதிதருங் காலை
யதன்செய லனைத்து மிவன்செய லாமா
லவனிவ னாகி லிவனவன் செய்திக்
கென்னவை யன்னிற் பின்னுறு செயலு
மதன்செயலன்றி யிவன்செய லாகி
லிவன்செயல் பேயின் றன்செய லாகி
யிருந்த வாவெனத் தெரிந்திட வேண்டும்
தெரியா தாகிற் புரியிற் கடுங்கன
லெரிந்த தென்னு மிதுதகு மன்றியு
மவனிவ னாகி லிவனவன் செய்தி
யென்று செய்வா னென்றிய மதத்தா
யெல்லா மறிதல் செல்லா துயிர்கள்
சிற்றறி வெனுமிச் சொற்றவ றாகு

மென்பதெ னலகை தன்பத மடைந்தோர்
கொண்ட வாறு கண்டன மென்னின்
மூங்கை யந்தருற் றோங்கிய குணங்குறி
செய்வதெ னின்னும் பௌவமுற் றழுந்தினு
நாழி கொள்ளா தாழியி னலைபுன
நானாழி என்னுஞ் செய்யுள்
லதனாற் கருத்து முதலுள தாக
வேண்டு மன்றே யீண்டினி யமையு
மெல்லா மெனுமிச் சொல்லாற் படும்பொரு
ளனைத்துந் தாக்காத் தனிப்பரத் துற்றவர்க்
கெவ்வகை யுணர்வு செய்வதென் செப்புக
வொன்றி னொன்றா மொன்றா துலகி
னின்ற போதுயிர் நேரா மன்றே
முத்தி யுற்ற நற்றவ ரவையிடைச்
சேர்வ ரென்றனை சார்தரு முத்தி
சாலோக் கியமோ சாயுச் சியமெனிற்
பந்த முற்ற கந்தல கழித்த
வறிவினோ டறிவு பிறியாப் பெற்றி
வேண்டு மென்றதற் கீண்டிவ ரிவ்வா

றிருப்ப ரென்பதற் குருத்தான் வேண்டு
மண்ணல தருளி னண்ணி யிருப்பினுஞ்
சீவன் முத்தரென் றோதின ரகன்று
நீங்கியு முருவ நீங்கா தாயி
னோங்கிய முத்தி யாவதென் னுரைக்க
செடியுட லணுகாக் குடிலை கொடுக்குமென்
றோதினை நீயே பேதாய் பகட்டுர
லொளிர்சினை முச்சித் தளிரெனு மிதுதகு
மிச்சா ரூப நச்சின ரென்னின்

மும்மலத் தேது மின்மைய தன்றே
யிதுவளர் முத்திப் பதமென வியம்புவ
ரீங்கிவை நிற்க

சங்கிராந்தவாதி சங்கற்பம்

நீங்கா தொளிருயிர்
விளக்கென நிற்கு மளப்புறு மறிவின்
றிறைவர்க் கேது மறியவேண்டின்றே
மன்னு மான்ம சந்நிதி யளவிற்
காந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த
வுயிருட லியக்குஞ் செயலுறு பூட்டைப்
பலவகை யுறுப்பு மிலகிய தொழில்போ
லைம்பொறி புலன்க ளின்புறு மன்றே
யினைய வாய்தலி னிகழ்தரு பயனவை
யந்தக் கரண முந்தி யுணர்ந்திடு
மிவையகல் வுழியைம் பொறிபுல னிகழா
வுயிர்நீங் கிடிலுடல் செயலில தன்றே
யிவ்வகை வினையின் செவ்விதி நடத்தும்

பழமல நீங்க நிகழும் காலை
யேற்றோர் முகவொளி தோற்றுங் கலனெனத்
தலைவன தருளுயிர் நிலவிடு நிலவக்
காட்டத் தங்கி மாட்டத் தங்கிய
தன்மையு மளத்துப் புல்வையி னீப்பும்
போன்றது வாகித் தோன்றிடி மதனாற்
பசுகர ணங்கள் சிவகர ணங்க
ளாக மாறி யறிவு
மேக மாமுயி ரியானென தின்றே.

சங்கிராந்தவாதி சங்கற்ப நிராகரணம்

இன்றுன துரையி னன்றி யுயிரொளிர்
தீபம் போலத் தாபந் தரினிருள்
செறியுந் தன்மையெ னறிவில தாகி
லொளியென வுரைத்த தௌிவதற் கேதாஞ்
சந்நிதி யளவின் மன்னுஞ் செயலுடல்
காந்தம் போல வாந்த தென்ற
தன்மையு முணராப் புன்மைய தன்றே
யுயிருட லியக்கிற் றுயில்பெறுங் காலைச்
செய்ததென் மனாதி யெய்துயிர் பொறிபுல
னடத்த வாவியுஞ் சடத்தன வாயிற்
பூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே
புலனைம் பொறியி நிலவிடு மென்றனை
யஞ்சு மொருகாற் றுஞ்சா தறிதற்
கழிவென் றருஞ்செழு மலரிலை யொடுபலங்
கனிதரு வதுபோ லினையவை யைந்து
மொன்றொன் றாக நின்றறி வுறுமெனி
லொன்றின் பயனளி யொன்றறி யாதா
லிதுவே யல்லது கதுமென விருசெவி
யிருகூற் றொருகாற் றெரியாத் தன்மைவந்
தெய்து மனாதியு மெய்யுயிர்ச் செயலுந்

தனக்கில தொருவற் கெனத்தௌி கிலையே
நோக்கு முகவொளி நீக்கா தானெனக்
கவருந் தன்மை முகுரம் போலக்
கொடுத்தது கோடற் கடுத்து துண் டன்றே
காட்டத் தங்கி கூட்டக் கூடு

மிந்தனத் தியற்கை வெந்தழ றாங்கா
வுப்பளத் தடுத்த புற்பலா லங்கள்
சடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந்
தன்மை யுண்டுனக் கின்மைய தன்றே
யவமுறு கருவி சிவமய மாமெனக்
கூறினை யாகம் வேறுருக் கவரா
தென்பதே னவைமுற் றுன்பந் துடைக்குந்
திருவருண் மருவ வுரியன வென்னி
லருளுரு மாயா விருளின தாங்கொல்
சத்த பரிச ரூப ரசநறை
யெத்திறத் தினதரு ளியம்புக வன்றியு

நிறைந்து நீயாய் நின்றனை யேனு
மறைந்தைம் புலனாய் வாரா யென்றுங்
கரண மெல்லங் கடந்தனை யென்றும்
மரணமை யைந்தி னப்புறத் தென்றும்

முன்னருட் டலைவர் பன்னின ரெனவு
மினையவை யொழிய வறிகுவ தெவ்வா
றென்ற நிற்கலிக் கொன்றிய வின்பங்
கூறுத றகுமருட் பேறினை யன்றே
யேக முயிரறி வாக மொழிந்தனை
யிருபொரு ளொருமை மருவிய திலதே
யிவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி

ஈசுவர வவிகாரவாதி சங்கற்பம்
பஃறுளைக் குடத்தி நுள்விளக் கேய்ப்ப
வறிவுள தாகு முருவுறு முயிர்கள்
கண்ணா லோசையுங் கந்தமுங் கருத
வொண்ணா தென்னு முணர்வுடை மையினா
லவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகள்
செவ்விதி னிறுவிச் சேர்ந்தவை நுகரு
மூல மலத்தின் பாகம்வந் துதவுழீஇ
யிருடரு மிற்புக் கொருபொருள் கவரத்
தீபம் வேண்டு மானவா போல
மோக மாமலம் போக ஞான
விளக்கர னருளாற் றுளக்கறப் பொருந்தி
நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்
சலமில னாகிச் சார்ந்தவர்க் கென்று
நலமிக நல்கு நாதனை யணைந்து
பூழி வெம்மை பொருந்தா துயர்ந்த
நீழல் வாழு நினைவினர் போலத்
திருவடி நீழல் சேர்ந்து
கருவுரு துயரங் களைந்திருந் திடுமே.

ஈசுவர வவிகாரவாதி சங்கற்ப நிராகரணம்

இருந்ததுன் கேள்வி திருந்திடு முயிர்க
ளறிவெனில் வாயிற் பொறிபுல னென்னை
மற்றவை பற்றி யுற்றறிந் திடுதலி
னறிவென வழங்கு முயிரென வுரைத்தல்
காணுங் கண்ணினன் கைகொடு தடவிப்
பூணும் பொருளின் பெயர்பல புகற
லென்னுங் கிளவி தன்னொடு தகுமே
யவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகளைச்
செவ்விதி னிருவலி னறிவெனச் செப்பினை
யறிவி லாமைகண் டனமணை புலற்குப்

பொறிக ளேவலி னறிவொடு பொருந்திற்
கண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டு
முதவிய தொன்றாற் கதுமென வியற்றின
ருண்டோ வென்னிற் கண்டன மேனாட்
கடவுளிற் கடிமலர் முடுகிய மதன

னங்க மனங்கந் தங்கிடக் கிடந்தது
வையின் றிரளிற் செய்ய சிறுபொறி
மாட்டி மூட்டின தன்றே மீட்டுந்
தேனமர் தவிசி னான்முக னுச்சி
யறுத்ததுங் கருவி பொறுத்தோ வன்றே
யீசன தியல்பு பேசுத றவிர்க
காழி மாநகர்க் கவுணியர் கடவுண்
ஞான மாகிய நற்பதி கங்க
ளெழுதுறு மன்பர்த மின்புறு மொழியாற்
களிறென வணைந்த கன்மப் புத்தன்
முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி
வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே
யென்றது மீர்வாள் கொன்றதென் பதுபோற்
றனித்துணை யருளாற் றுணித்தன ரென்ப
வாதலின் வாயி லளவினி லறிதலி

லேதமி லறிவுயிர்க் கெய்துத லிலதே
யிருட்கு விளக்கொன் றேந்தினர் போல
மருட்கு ஞான மன்னுத லுளதே
யென்றனை கருவிக ளியாவு மசேதனந்
துன்றிய வுயிருந் துரியத் தன்மைய
னாதலி னந்த ரனைவருங் கூடித்
தீதற வருநெறி தெரியுமென் றற்றே
நீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்
சேர்ந்தவர்க் கின்பம் வாய்ந்திடு மென்றனை
பாதவ மென்றுஞ் சேதன மின்மையின்

இளைத்தோர் வம்மி னென்பதுந் துன்பம்
விளைத்தோர் தம்மில் வெறுப்புமொன் றிலதே
பொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம்
வெய்ய பூழியி னுள்ளுற வழுங்கி
யாற்றுத லின்றி யாறியங் கினர்முன்
றோற்றிடு மென்று சொல்லவு மிலதா
லிவ்வகை கடவுட் கியம்புதல் தவறே
பாச ஞானப் ப்ழிவழி யொழிக
வீசன தருள்வழி யியம்புவன் கேண்மதி

நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்பம்

புவன மியாவையும் புனிதன துருவாஞ்
சிவமுஞ் சத்தியு மெனத்தௌி யவற்று
ளசேதன மென்றொன் றறைதற் கிலதது
சேதந னுகர்பொழு திரண்டுமோர் திறத்தே
யிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப்
பொதுமையி னிற்கும் போதமென் றறிக
பொற்பணி பேதம் புரைவழி யொருவழி
நற்பொனிற் றிகழ்வென நயப்பதொன் றன்றா
லாவது மாகா தொழிவது மெனுமிப்
பாவக முண்மை பாரா தோர்க்கே
பாரா தோரெனப் பல்லுயிர் பகர்தலி
னாராய்ந் துரைக்கி நவைபிற வல்ல
பலபல பேத மிலவென் போருமில்
கண்ணின தொளியைக் கண்ணின தெனிலது
திண்ணிய விருளிற் செறிபொரு டெரித்தலு
மின்மை மின்மினி யெனவிரு கண்மணித்
தன்மை தானுந் தாவில ததனாற்
கண்ணின துருவு மதிற்கதி ரொளியும்

நண்ணருஞ் சத்தி சத்தர்க ணடிப்பே
யுலகே ழெனத்திசை பத்தென வொருவன்
பலவாய் நின்ற படியிது வென்றும்
ஊணா யுயிரா யுணர்வா யென்றும்
மானக் கண்ணே மணியே யென்றுந்
தாமே தாமாய்ச் செய்தன ரென்றும்
நாமே சிவமாய் நண்ணின மென்றுங்
காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வு
மோயா துண்போன் றானே யென்றும்
அறிவோன் றானு மறிவிப் போனும்
அறிவா யறிகின் றோனு மறிவுறு
மெய்பொரு டானும் வியந்திது வெனப்படு
மப்பொரு ளியாவு மவனே யென்றுந்
தாய்தலைப் பட்டங் கொன்றாய்த் தென்றும்
ஏதம தறநான் கெட்டே னென்றும்
மின்னு மின்னு மிறையா னளித்தவை
பன்னி லென்னரும் பான்மைத் தாதலிற்
றருபொருள் கொள்பொரு டருவோன் கொள்வோன்


ஒருபொரு ளிவ்விய லுவப்பென வுணர்க
நுகர்பொருள் சத்தி நுகர்வோன் சத்தனென்
றிகலறு முணர்வுவந் தெய்துத லரிதே
நானவ நெனுமிது நவைவழி நல்வழி
தானவ நாகை யிதுசா யுச்சிய
மித்திறன் றௌிய வுய்த்திடு மளவு
மியாதொரு வகையி னீதிய தாகத்
தானறி வழியே தலைநின் றென்று
மூனுயிர் சிவத்தி லொடுங்கிட நடத்தி
மூடு முழுமலம் வீடுங் காலைக்
கருவிக ளளவிற் புரிதரு மறிவு
சாக்கிரங் கனவு நீக்கமில் சுழுனை
துரிய மென்றவை பயிறரு மறிவு
துரியா தீதந் திரியாத் தன்மையி
லிறையரு ளுதவுங் கறையற மாறி
யறிவே யாகும் பிறியாக் கருவிக
ணிறைமுத லவத்தையி லறிவில தாகத்
துரியா தீதத் தோற்றந்
திரியா ததுநற் சிவகதித் திறனே.

நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்ப நிராகரணம்

திறம் பெற நீயிங் கறைந்தமை கருதிற்
புவன மியாவையும் புனிதன துருவெனி
லவன்முதற் காரண மன்றா மென்னி
நிமித்த காரண நிகழ்த்துக வெனநீ
யவனே காரண மனைத்துமென் றறைந்தனை
மண்டனிக் குலாலன் றண்டசக்க ராதி
காரண மூன்று மோர்பே ரணைந்ததித்
தாரணி யதனிற் கண்டது சாற்றுக
வத்த னியற்று மித்தொழில் பிறர்க்கோ
தனக்கோ வீணோ வெனக்கீ தியம்புக
வீணெனிற் பித்தர் மாண்பறுந் தொழில்போற்
றலமையு மறிவு மிலதென விகழ்வர்
தனக்கெனி லஃதுமு நிற்பதொன் றன்றே
தன்போ லறிஞருந் தலைவரு மிலரான்
மின்போ னிலைமையை வேண்டலும் பழுதே
பிறர்கெனிற் பிறரும் பிறர்க்காம் பொருளும்
பொருட்கமை கருவியு மதற்குபா தானமுஞ்
செய்கையு மென்றோ ரைவகைத் தானொடு
மாறாச் சைவர் கூறா ரென்றா
னின்சித் தாந்த மவசித் தாந்த
மென்சித் தான்ற வசித்தைமற் றீனா
தசித்தில தென்னி லசித்ததென் னுலகி
லுலகா யதனும் பூதக கூட்டஞ்
சலமேற் கொப்புட் டகுமெனச் சாற்றினன்
தீய கருமச் சீனர்சா வகர்பிறர்
நேய மில்லென நிகழ்த்தின ரிலரே
காண்டல் விரோத நிற்பிறர் கணித்தில
ரீண்டுன துரைக்குமற் றியார்கரி யுடலுஞ்
சித்தோ சித்தின் சேர்வாற் சித்தெனிற்
கடப டாதியு முடற்கட் சிதைவென்
தாபர வுயிர்போற் றநுவொழிந் திவற்றின்
மேவிய வுணர்வு விரவிடு மென்னிற்
சடத்துயிர் போலெனச் சாற்றினை யாகலி
னுடற்குயி ரிறையை யொழிந்திண் டன்றே
தருதிட் டாந்தமுந் தாட்டாந் திகமும்

ஒருபொரு ளாகி லுவமை பெறாதே
யொன்றே யாகி லுடற்கிறை தாபரத்
தொன்றிய நிலையில் விசேடமென் னுரைக்க
பூதச் சேர்வைப் பேதமென் றறையிற்
சேர்வைப் பேத மென்கொடு செப்புக
கருமத் தளவில் வருமெனிற் பித்த
ருரையிற் றிகழு முணர்வொழிந் தநையே
கருமஞ் செய்வோன் கடவுளன் றுடலு

மருவி நின் றிருவினை வளரா நுகரா
கடவுளு முடலின் கண்பட றுஞ்ச
லிடர்நல முறுத லிறங்குத லேறுத
லெவ்வகை யேனுஞ் செய்கையின் றாதலும்
பலகலை யுலகி னிலவுத லானு
மெண்ணரும் பொருளு மிரவியு மொழியக்
கண்ணென வொன்று காண்கையி னாலும்
பாசப் பகுதியு மீசனு மொழியப்
பசுவு முண்டென் றிசையவேண் டின்றே
யிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப்
பொதுமையி னிற்கு மாயையின் பொற்பெனப்
பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையி
னிட்கள சகளத் திருவுரு நிலையு
மீச னேயெனப் பேசுவ ரன்றி
யருவுரு வாகி வருமுல கென்னி
லனைத்து மாயை யெனத்தௌி கிலையே
யாவது மாகா தொழிவது மிலதெனும்
பாவக முலகா யதனது பான்மை
கட்கொலை வெகுளி காமங் களவுக
ளுட்படு மிவைவிட மொழியா தாரிலர்

சோம பானஞ் சுராபா னங்க
ளாமென மறைக ளார்செவிப் பறைந்தன
மறையோன் புலைச்சியை மருவு மென்பது
முறையோ வெனிலது புனைமொழி யென்னிற்
சாதி பேத நீதிநீ தவறினு
மேதியை யேறு விழையா விரும்புங்
கண்ணின துருவு மதிற்கதி ரொளியு
நண்ணருஞ் சத்தி நாடக மெனிலதற்
கேதுவும் பயனு மோத வேண்டும்
நின்மொழி விரோதமு நீடுல கியற்கையுந்
தன்மசாத் திரமுஞ் சகலமு மென்செயும்
உலகே ழெனவிறை பலவாந் தன்மை
கடமொடு சாரவங் கலச மாதிக
ளடலுறு குயவ னாயின னென்றாற்
றானே யாகா வவைதா னாகா
னாயின னென்ப தாக்கின னெனவே
யானா யென்ப தனைத்தி மவ்வகை

தானா காமையைச் சாற்றிடு மென்க
தாமே யெனுமித் தனியே காரம்
அழிந்தில ரதுவே யாய்த்தில ரதுவிட்
டொழிந்திலர் பிரிவில ரெனுமிவை யுணர்த்துங்
காயும் பழமுஞ் சுவையு நுகர்வ
தாயவன் றானு மவன்முதற் றென்னும்
அகிலமுந் தௌிய வறிவோன் றானும்
அகிலமு மறிஞரை யறிவிப் போனும்
அறிஞர்க் கறிவா யறிகின் றோனும்
அறிவிற் கறிபொரு ளாவோன்றானு
மகிலமு மேனி யானவ னென்னுந்
தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோ

னொருபொரு ளாயி னுவப்புண் டென்க
நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டிற்
றிகலறக் கிடையா திருந்ததெ னிரையமும்
வேண்டா ராயினு மெய்யுறு வியாதிக
ளீண்டா தொழியா திறைக்கவை யீடல
சத்தியுஞ் சிவமுந் தாமே நுகருமென்
றித்திற நுணர்வுவந் தெய்துவ தெவர்க்கோ
மமைப்பற வுணர்தலு மவர்க்கடை வன்றே

நானு மவனு நவையு நலனுந்
தானவ னாகையு நின்சா தனத்தில்
சகயோ கத்தைச் சாயுச் சியமெனப்
பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே
யாதொரு வகையென வோதிய திறை நூல்
சொன்னவற் றொன்றன் றென்னில்வீ டௌிதே
தானறி வழியே தலைப்பொருள் பிடித்து
மேனிகழ் பலமும் வீடளித் திடுமே
நிலையாக் கருவியை நிலையாக் கருதிப்
புலையா டுதலு முலகா யதன்பொருள்
குட்டிய மின்றிநற் கோல மெழுதுத
லிட்டம தாயிற் கருவியு மிடங்களுங்
கருத்துற வுரைக்கத் தெரித்திடு மதீதத்
தறிவொன் றில்லோர்க் கிறையரு ளுதவுதல்

பிறிவறி வரிய செறியிரு ளிடத்தோ
ரந்தகர்க் காண வந்தோ ரெம்மை
நீவிருங் காண வேண்டு மென்றாங்
கெடுத்தோர் தீபங் கொடுத்ததை யொக்கும்
இச்செயற் கிறைவன் கொச்சைய னன்றே

கருவி வசத்திற் ரெரிவுறக் காண
வேண்டுந ரிலரா லீண்டறி வியாவுஞ்
சிவமே யென்று செப்பினை யவமுறு
பொறிபுல னறியா வறிவது பிரம
மென்றோர்க் குன்போ லிடர்ப்பட லிலதே
யேற்றங் கருவி யிருபதோ டிரண்டும்
போற்றுமைந் தவத்தையும் புகறிரி மலமு
மீசனு முயிரும் பேசினை யஃதொழிந்
தொன்றே யாகு மென்றநின் னியல்பு
தாயர் மனைவியர் தாதியர் தவ்வைய
ராயவ ரெவரையு மோர்மையிற் காணுங்

கோகழி தூர்த்தர் கொடுந்தொழி றகுமே
யாக மற்றத னருணிலை தன்னிலை
யேக நாயக நாகிய விறைநிலை
நாசமில் பாசம் வீசிய வியனிலை
யினையவை யொன்று நினைவினு மின்றி
யுண்டெனு முணர்விற் கண்டது கருதி
விழுக்கெனும் புலன்வழி யொழுக்கமு மதுவாக்
கொண்டு பண்டையி லெண்டரு மடங்கு
வந்தவர் செய்த தந்தையை யன்றே
புன்மைக ணீங்க வுண்மை கேண்மதி

சைவவாதி சங்கற்பம்

அறிவா யறியு மறிவுயிர் கேவலத்
தறிவில னிருளொடும் பிரிவில ணண்ணல்
கலைமுத லாக நிலவிய கருவிகள்
விளக்கென வுதவுந் துளக்கறப் பொருந்தி

இருவினை நுகர்வில் வருவினை செய்து
மாறிப் பிறந்து வருநெடுங் காலத்
திருண்மல பாகமுஞ் சத்தி நிபாதமு
மருவுழி யருளுரு மன்னவ னணைந்து
செல்கதி யாய்ந்து பல்பணி படுத்திக்
கருவியு மலமும் பிரிவுறப் பிரியா
ஞான நல்கலுந் தானது நோக்கித்
கருவியு மலமும் பிரிவுறப் பிரியா
ஞான நல்கலுந் தானது நோக்கித்
தன்னையு மதனையுந் தன்முதற் பொருளையு
மின்னவென் றறியா விருவரு முயங்கி
யொன்றா யுறுபய னுவப்பு
மின்றாய் நிற்கு மிதுசிவ கதியே.

சைவவாதி சங்கற்ப நிராகரணம்

இதுகதி யாக முதலறி வுயிரேற்
பொறிபுல னீங்க வறிவுயி ரன்றே
யடைகாய் நூறி னிடைசேர் சிவப்பென
விந்தியத் தொகையின் வந்தறி வொன்றுநின்
றின்றா மென்ற லன்றே யெந்தை
யறிவில னதீதச் செறிவிலென் றுரைத்த
நின்மொழி விரோதமும் பின்முன் மலைவு
மன்வயி னிகழா மலமிரு ளிறையொளி
யான்மா விளக்கிற் றகுமருட் கலாதிக
ளீனமி லிவனிடத் தெவ்வா றிசைந்தன
விசைந்த தாயினு மிசையா தாயினு
மசைந்திடு முத்தி சாதன மவமே
சத்தி நிபாதமோ தகுமல பாகமோ
வுய்த்த காரண காரிய மோதுக
பாகங் காரண மாகின் மற்றது

காலா வதியிற் காயா வதியின்
மேலா மென்னும் வினையுறு மவதியிற்
றுயரென வுயிர்க்குத் தோன்றிடு மவதியி
னயமிகு மிறைவ னல்கிடு மவதியி
லேதிற் கூடு மோதுக விருவினை
யொத்த வெல்லையில் வைத்தன ரென்னி
லருவினை தூக்க வருவினை நில்லா
வொருவினை புரிகா லிருவினை யாகா
வொப்புறு மாறு செப்புக தேசிக
னருளுரு வென்ற பொருளினை யாயின்
மாயா வொருவன் மாயா வுருவினை
யேயா னேய்ந்தவ ரெம்ம னோரே
பல்பணி ஞான காரண மென்னிற்
றொல்பணி தொறும்பயன் றொடுப்பத னாலு
மொருபணி செய்யாச் சிரபுரச் சிறுவரு

மரச ராய தருணத் தலைவரு
முதிர்பர சமயத் திதமுறு மரசரு
ஞானம் பெற்ற நன்மையி னாலு
மீனமில் பணியருட் கேதுவன் றென்றான்
ஞானோற் பத்தி நிமித்தமித் தொழிலென
வேனோர்க் கிறைநூ லியம்பிற் றென்னாங்
கருவியு மலமும் பிரிவுற வருடரு
மென்றனை கேவலத் தேது மறிவிலன்
றுன்றிய சகலத் தருணிலை தோன்றா
வெவ்வ வத்தையி லிறையருள் பெறுகுவஞ்
செவ்விய ஞான தரிசந மாவது
நால்வகை மாயைப் பால்வரு ஞானம்

பண்டை ஞான மிதுவறி தாவரக்
கண்ட ஞான மிதுவரக் காணி
லீன ஞானிக ளென்போர் யாருமின்

ஞான வேற்றுமை நாடலு மரிதே
தானு ஞானமுந் தலைவனு மென்றனை
ஆனபி னிவனு மிவனது ஞானமும்
பாசமும் பாச ஞானமு மென்றிவை
பேசுவ ரொன்றாப் பெற்றிய வாகலின்

மும்மைப் பொருட்கு மும்மைத் தன்மை
செம்மைத் தென்னிற் செலவுக ளெழுதுக
இருவருங் கூடி யொருபய னாய்த்தென்
றருளினை யிவ்வா றபேதிக ணிலையே

சித்தாந்த சைவாசாரியர் அநுக்கிரகம்

பதிபசு பாச முதிரறி வுகளுட
னாறா முன்னர்க் கூறாப் பின்ன
ரிரு பொரு ணீத்துமற் றொருநால் வகையு
மீனமின் ஞாதுரு ஞான ஞேயமென்
றிசைய மூன்றாய்ப் பசுபதி யென்றவற்
றிரண்டா யிரண்டு மொன்றினொன் றாகத்
திரண்டாம் பயனெனுந் திருவரு டௌியிற்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றா
மென்றிறை யியற்கை யியம்புதல் தகுமே

ஒன்றா மென்ற லன்றியு முவப்பு
மின்றா மென்றா லென்பய னியம்பிக
வென்றனை வினாவு மியாவும் விளங்க
வென்றிகொள் கருத்தின் விரும்பினை யாயி
னதிக்கரை யானெனக் கொதித்தல மந்து
வெண்ணையம் பதிதிகழ் மெய்கண்ட வனரு
ளுண்ணிலை யுடையோ னொருவ னுரைத்த
தவப்பிர காசத் தன்மையில் விரித்த
சிவப்பிர காசத் செழுந்தமி ழுண்மையை
யருளுட னாய்ந்து கொள்ளத்
திருவருள் வினவ றிருந்திடு மன்றே.

-------------------------------------------
சங்கற்ப நிராகரணம் முற்றிட்டு
-------------------------------------------


This webpage was last revised on 6 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).