pm logo

ரெ. கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு - 2
(இன்னொரு தடவை, ஒட்டுப்புல்,
நாளைக்கு & நல்லவராவதும் தீயவராவதும் )


Short stories & Novels of Re. Karthigesu - II
(innoru taTavai, oTTuppul, nALakku &
nallavarAvatum tIyavarAvatum)
(in tamil script, Unicode/UTF8 format)



Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation & Proof-reading: Mr. Re. Karthigesu, Penang, Malaysia
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
This page was first put up on Feb. 22, 2002

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


ரெ. கார்த்திகேசு சிறுகதை தொகுப்பு - 2
(இன்னொரு தடவை, ஒட்டுப்புல்,நாளைக்கு & நல்லவராவதும் தீயவராவதும் )

ஆசிரியரைப்பற்றி சில வரிகள்:
ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர். பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் (mass communication) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர். மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர். அவரது மின்னஞ்சல் : .
-----------

இன்னொரு தடவை

இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். காலிப் பாக்கெட் சாலையில் விழுந்தது. லைட்டரைத் தேடினான். எந்தப் போக்கெட்டில்? கோட்டுப் போக்கெட்? சிலுவார் போக்கெட்? தட்டித் தட்டித் தேடினான். சிலுவாரின் பின்புறம்? கோட்டுக்குள் கைவிட்டு சட்டைப் பையைத் துழாவினான். இல்லை.

"டேம்மிட்" சபித்தான். சிகிரெட் உதட்டிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது.

நடக்கலாமா? முடியுமா? எந்தத் திசையில்? முன்னும் பின்னும் பார்த்தான். இரண்டு பக்கமும் சாலை நீண்டிருந்தது. இரண்டு பக்கமும் மங்கலான தெரு விளக்குகள் இருந்தன. எதிர்ப்புறத்தில் ஒரு பூங்கா இருந்தது. உயர்ந்த மரங்களுக்கிடையில் இருள் அடர்ந்திருந்தது. இப்போது விளக்கை நோக்கிப் போவதை விட இருட்டை நோக்கிப் போவதுதான் விருப்பமாக இருந்தது.

அந்த வீடமைப்புப் பகுதியின் கடைவீடுகள் தொகுதியில் நவீன அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு கட்டடத்தின் முன்னால் அவன் நின்றிருந்தான். அப்போதுதான் வெளியே தூக்கி எறியப் பட்டிருந்தான். விழுந்து எழுந்ததனால்தான் பிருஷ்டத்திலிருந்து மண் தட்ட வேண்டியிருந்தது.

எதிர்ப்புற பூங்காவை நோக்கி நடந்தான். சாலை அசைந்தது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஆடி உடலை சமன் செய்து நடந்தான். சாலை நீண்டு கொண்டே போவது போல... கடக்க நேரமாயிற்று. அடுத்த பக்கம் வந்து கொஞ்ச நேரம் நின்றான். அப்போதுதான் வந்த வடூயில் எங்கோ சிகரெட் வாயிலிருந்து விழுந்து விட்டது தெரிந்தது.

"டேம்மிட்!" போய்த் தேடலாமா? எங்கே விழுந்தது? இருட்டில் தெரியவில்லை. கண்களில் நீரூறிக் கலங்கியிருந்ததில் எதையும் குவிந்து பார்க்க முடியவில்லை. இனித் திரும்பப் போய் தேடமுடியாது. வலுவில்லை. போனால் போகட்டும் இனித் தேவையில்லை. எத்தனையோ போய் விட்டது! யாராரோ பிடுங்கிக் கொண்டார்கள்! இதுவும் போகட்டும்.

வாய் மதுவுக்கு ஊறியது. அவர்கள் தன்னைத் தூக்கியெறிந்த போது அந்த போத்தலையாவது கையோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம். அருமையான விஸ்கி. ஏதோ ஒரு விமான நிலையத்தில் டியூட்டி ·பிரீயில் கிரெடிட் கார்ட் கொடுத்து வாங்கியது. எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டான்கள். என் விஸ்கியையும், என் பணத்தையும், என் கம்பெனியையும், என் வாழ்க்கையையும்....

இப்போது எங்கே போக வேண்டும்? ஆமாம், எதிரே பூங்காவுக்குள். ஏன் போக வேண்டும்? மறந்து விட்டது. ஆ, ஆமாம்! இருளுக்குள் போக வேண்டும். அங்கே போய்...? யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அழ வேண்டும். அழுது முடிந்த பின் செத்துப் போக வடூ பார்க்க வேண்டும்.

பூங்காவைச் சுற்றி வேலி போட்டிருந்தார்கள். வேலியோரமாக அதன் வாசலைத் தேடி நடந்தான். நுழைந்தான். பூங்காவில் சிறுபிள்ளைகள் விளையாட ஊஞ்சல்கள் இருந்தன. ஏறி இறங்க ஏணிகள், சருக்குப் பலகைகள் இருந்தன. பெஞ்சுகள் இருந்தன. ஆங்காங்கே விளக்குகள் இருந்தன. அந்த வெளிச்சம் பிடிக்கவில்லை.

தூரத்து மூலையை நோக்கி நடந்தான். அங்கே சிமிந்தியால் உயரமான சுவர் போட்டு வைத்திருந்தார்கள். சுவருக்கு அந்தப் பக்கம் மூன்று பெரிய குப்பைத் தோம்புகள் இருந்தன. அன்றைய குப்பைகள் நிரம்பி வழிந்தன. கடூக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்குள் புழுக்கள் புகுந்த அழுகும் நாற்றம் இருந்தது.

இது நல்ல இடம். நானும் குப்பை. அழுகிய நாற்றம் வீசும் பொருள். சரியான இடம். இங்கே இருள் இருக்கிறது. நான் ஒளிந்து கொள்ளலாம்.

சிமிந்தியில் சரிந்து சாய்ந்தான். கால்கள் மடக்காமல் நீண்டிருந்தன. கோட்டு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. தலை சாய்ந்து கொண்டது. மயக்கம். ஒரு கையால் சிமிண்டுத் தரையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு சாய்ந்தான்.

கொஞ்ச நேரம் அப்படியே தூங்கினான். வாயிலிருந்து வடூந்த எச்சிலாலும் அவன் குறட்டைச் சத்தத்திலும் தானே விழித்துக் கொண்டான். சிகிரெட் இல்லை. விஸ்கி இல்லை. வாய் காய்ந்திருந்தது. பணம் இல்லை. வாழ்க்கை இல்லை. சாக வேண்டும். என்ன வழி?

"யாரு?" என்ற குரல் கேட்டது. இருளில் ஒரு நிழல். "யாரு?"

"நாந்தான்!" என்றான் பாஸ்கரன்.

"அடப் பாருடா! இந்த எடத்துக்கும் பங்குக்கு வந்திட்டானுங்க!" என்றது குரல்.

"இது உன் இடமா?"

"ஆமா! இங்க வேற யாரும் வரமாட்டங்கள! நீ எப்படி வந்த?"

"நீ யாரு?"

"நீ யாரு?"

யோசித்தான். போதையில் புத்திசாலித் தனமாக வேறு பெயர்கள் மறைத்துச் சொல்ல முடியவில்லை. "நான் பாஸ்கரன். மேனேஜிங் டைரக்டர் பாஸ்கரன் என்ட் துரை இன்டஸ்ட்ரீஸ்"

"கிளேட் டு மீட் யு" என்றது குரல்.

"உக்காரு. நின்னா நிமிந்து பாக்க முடியில...!" என்றான் பாஸ்கரன்.

நிழல் உட்கார்ந்தது. தாடையில் கொஞ்சமாகத் தாடி படர்ந்த நடுத்தர மனிதனாக இருந்தான். கையில் காகிதத்தில் சுற்றி ஒரு பொட்டலம் வைத்திருந்தான்.

"இது என்னா, கையில?" பாஸ்கரன் கேட்டான்.

"ஏதோ நிம்மதியா ஒக்காந்து குடிக்கலான்னு வாங்கிட்டு வந்தேன். எப்போதும் இங்கதான் வர்ரது. நீ... நீங்க எப்படி வந்திங்க? ஏன் வந்திங்க?"

"குடு. நாக்கு வறண்டு போய் கிடக்கு!"

"ஐயோ. உங்கள பாத்தா பெரிய ஆளா தெரியுது. இது உங்களுக்கு ஒத்துக்காது. சாராயம். இது என்னப் போல சின்னவங்க குடிக்கிறது!"

"நீ சின்னவனா? இங்கிலீஷ் பேசிறிய!"

"·போர்ம் திரீ வரைக்கும் படிச்சங்க. ·பெயில்'லா. அப்புறம் ஊட்டவுட்டு ஒடியாந்திட்டேன் பாத்துக்குங்க! சீனன்கிட்ட கான்டிராக்ட்ல வேல செய்றேன். பத்து நாளைக்கு வேல இருக்கும் பத்து நாளைக்கு இருக்காது. வேலைக்கு ஒரு நாளைக்கு முப்பது வெள்ளி குடுப்பான் சீனன். இன்னக்கி முழுக்க மிஷின் வச்சி சிமிந்தி ஒடச்சேன். கையெல்லாம் விண்விண்னுன்னு தெறிக்குது. உங்களப் போலியா? ஏதோ டைரக்டர்ங்கிறிங்க. கோட்டு சூட்டு போட்டிருக்கிங்க?"

"அதெல்லாம் முடிஞ்சது. இப்ப இல்ல. குடு போத்தல!"

"காசு குடுத்து வாங்கிட்டு வந்திருக்கனே! உங்ககிட்ட காசு இருக்கா?"

பாக்கெட்டுக்குள் கைவிட்டான். பர்சைக் காணவில்லை. கார் சாவி அகப்பட்டது. கார் சாவியை நீட்டினான். "இந்தா கார் சாவி. கார நீ எடுத்துக்க! போத்தல குடு!" என்றான்.

அவன் கை நீட்டிக் கார் சாவியை வாங்கிக் கொண்டான். பரிசோதித்தான். "என்ன காரு?" என்று கேட்டான்.

"வோல்வோ. அதோ கடைக்கு முன்னால நிப்பாட்டி வச்சிருக்கேன். விடியறதுக்கு முன்னால போய் எடுத்துக்கோ"

"எடுத்திட்டு?"

"வச்சுக்க. வித்திரு. பார்ட் பார்ட்டா கழட்டி வித்திரு. சீனன் வாங்கிக்குவான்"

"உங்களுக்கு!"

"எனக்குத் தேவைப் படாது. இன்னைக்கு நான் செத்திரப் போறேன்"

அவன் சாவியைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான். "ரொம்ப மனக் கஷ்டம் போல இருக்கு உங்களுக்கு. ரொம்ப குடிச்சிருக்கிங்க!"

"போதாது. போத்தல குடு!"

அவன் உட்கார்ந்து காகிதத்தைப் பிரித்து ஒரு பெரிய போத்தலை எடுத்தான். திறந்து பாஸ்கரனிடம் நீட்டினான். பாஸ்கரன் போத்தலைத் தூக்கி வாயில் ஊற்றினான். முகத்தைச் சுளித்து விழுங்கினான். "ஐய்" என்று கத்தினான்.

"டேம்மிட்! என்னடா இது?"

"சாராயங்க. புலிச்சாப். மொதல்ல அப்படித்தான் எரியும். அப்புறம் சரியாயிடும்!"

அவனும் போத்தலை வாங்கி ஊத்திக் கொண்டான்.

"சிகிரெட் வச்சிருக்கியா?"

"சீச்சீ! அந்தக் கெட்ட பளக்கமெல்லாம் கெடையாதுங்க!"

கொஞ்ச நேரம் பாஸ்கரனை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

"நீங்க எப்படி இங்க வந்திங்க?"

"என்ன எல்லாரும் ஏய்ச்சிட்டாங்கப்பா. கம்பெனி மீட்டிங் நடந்தது. என்ன நீக்கிட்டானுங்க. நான் போட்ட முதல் என்னடா ஆச்சின்னு கேள்வி கேட்டதுக்குத் தூக்கி வெளிய எறிஞ்சிட்டானுங்க!"

"அப்பிடியா?"

"பத்து வருஷத்துக்கு முந்தி சின்னதா பத்தாயிரம் மொதல் போட்டு கம்பெனி ஆரம்பிச்சோம். நானும் சண்முகமும். கஷ்டப்பட்டு ஒழச்சோம். இப்ப ரெண்டு மில்லியன் டர்ன் ஓவர்"

"அப்படின்னா?"

"ரெண்டு மில்லியன் பணம் பொரளுது. என்ஜினியரிங் புரடக்ட்ஸ். கம்பெனி வளர்ந்தவொண்ண ஒருத்தன் வந்தான். தொரைன்னு. பிளடி பாஸ்டர்ட். கோடிக்கணக்கா பணம் பொரட்ட வடூயிருக்குன்னான். கவர்மென்ட் கான்ட்ரேக்ட் வாக்கிக் குடுக்கிறேன், எனக்கு டத்தோவைத் தெரியும்னான். பூமிபுத்ரா பார்ட்னர் வச்சிக்குவோம்னான். அவன் பேச்ச நம்பி மொதல் இல்லாமலேயே அவனைச் சேர்த்தோம். அப்புறம் சண்முகம் சொன்னான் "இந்தத் தொர நல்லவன் இல்ல பாஸ்கரன். ரொம்ப சூழ்ச்சிக்காரன். அவன விட்டுடு"ன்னு. ஆனா தொர பணத்தாச காட்டி என்னை அவன் பக்கம் திருப்பிட்டான். கம்பெனில நஷ்டம்னு கணக்குத் தயாரிச்சி சண்முகத்த கழட்டி விட்டுட்டோம். அப்புறம்தான் பாஸ்கரன் என்ட் தொரைன்னு கம்பெனி பேர மாத்தினோம். இப்ப என்னையே ஓட்டாண்டி ஆக்கிட்டான்பா"

கொஞ்சம் குடித்தான். பரிமாறிக் கொண்டார்கள்.

"சண்முகத்துக்கு நான் பண்ணின துரோகத்துக்கு தண்டன கெடச்சுப் போச்சு! பேங்கில கடன் வாங்கச் சொன்னான். வாங்கி கம்பெனில போட்டேன். அதில என்ன மாட்டிட்டு அவன் தப்பிச்சிட்டான். கம்பெனி அவனோடதாப் போச்சி. கடன் என்னோடதாப் போச்சி!"

"எவ்வளவு கடன்?"

"ஒரு மில்லியன்"

"அவ்வளவா? நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ரூமா மூரா வாங்க முப்பதாயிரம் கேட்டேன். பேங்கில! முடியாதுன்னுட்டாங்க! ஒனக்கு நிரந்தரமான வேலையில்ல, அதினால குடுக்க முடியாதின்னுட்டாங்க!"

"எல்லாம் பாஸ்டர்ட்ஸ்!"

"ஆமாங்க, பாஸ்டர்ட்ஸ்!"

"எல்லாம் மோசடிக்காரனுங்க!"

"ஆமா, கெட்ட நாமர்தாப் பசங்க!"

ஆசுவாசப் படுத்திக் கொள்ள இன்னும் கொஞ்சம் குடித்தார்கள்.

"இது நல்லா இருக்கு! எங்க வாங்கின?"

"இதோ இந்தக் கடைங்க ஓரத்தில மூலையில போனா ஒரு சீனன் வங்சா கடை இருக்கு. அவன் விக்கிறான். நீங்க அங்க போனதில்லையா?"

பாஸ்கரன் அவனை மேலும் கீழும் பார்த்தான். "ஒம் பேரென்ன?" என்று கேட்டான்.

"நாகராஜ்!"

"நாகராஜ். ஏன் இந்த நாத்தம் புடிச்ச எடத்த ஒன் எடங்கிற?"

"சுத்தமான எடமாப் பாத்துப் போனா நிம்மதியா படுக்க முடியாது. குடிக்க உடமாட்டாங்க. "பீக்கிலா கிளிங், மாபோ" அப்படின்னு விரட்டுவாங்கலா"

"வீட்டுக்குப் போவக் கூடாதா, நாகராஜ்!"

"என்னா வீடு! இன்னொருத்தர் வீட்டில ரூம் புடிச்சி இருக்கோம். லேட்டா போனா ஊட்டுக்காரன் தொறக்க மாட்டான்!"

"பொண்டாட்டி தொறக்க மாட்டாளா?"

"அவ இல்ல!"

"செத்துப் போய்ட்டாளா?"

"இல்ல! அவ தகப்பங்காரன் அவ மனசக் கலச்சி அவன் ஊட்டுக்குக் கூட்டிப் போயிட்டான்!"

"ஏன்?"

"எல்லாம் இதான்! ரொம்பக் குடிக்கிறனாம். குடிக்காம எப்படிங்க? வேல எத்தன கஷ்டம்? எவ்வளவு ஒடம்பு வலி! புரியிதா இந்தப் பொம்பிளைக்கு?"

"புரியாது நாகராஜ். பொம்பிளங்கள நம்பாதே! என் பொண்டாட்டி இன்னொரு ஊடு வாங்கிக் குடுங்கிறா. கார மாத்துங்கிறா. மெர்சடிஸ் வேணுமாம்! ஒவ்வொரு மாசமும் பார்ட்டி குடுக்கணுங்கிறா. அவளாலியே பேங்கில கடன் வாங்கி நான் கெட்டேன். இப்ப கம்பெனியும் போச்சி. வீட்டுக்குப் போனா என்ன நாய் மாதிரி நடத்துவா நாகராஜ். பொம்பிளங்க ரொம்ப மோசம் நாகராஜ். பேராசைப் பேய்ங்க. புருஷன உயிரோட பிச்சிப் பிச்சித் திங்கிற பிசாசுங்க! என்ன சொல்ற?"

"ஆமாங்க!" என்றான் நாகராஜ். "ஆனா என் பொண்டாட்டி அப்பிடி இல்லங்க. அவ நல்லவ. அவ குடும்பந்தான் அவ மனசக் கலைக்கிறாங்க. அவ அப்பன், அம்மா, அண்ணன் எல்லாரும் மனசக் கலைச்சிட்டாங்க. என்னமோ மருந்து வச்சிட்டாங்க! பிரிச்சிட்டாங்க"

"போய் கூப்பிட்டியா?"

"கூப்பிட்டேன்! ஒரு நாளு நானும் குப்புசாமியும் நல்லா தண்ணி போட்டுட்டு அவ அப்பன் ஊட்டுக்கே போய்ட்டோம். வெளிய நின்னு சத்தம் போட்டேன் பாருங்க! "வாடி வெளியே"ன்னன்! கதவ இறுக்கிப் பூட்டிக்கிட்டாங்க. "உன் புள்ள எனக்குப் பொறந்த புள்ளைன்னா இப்பவே எங்கிட்ட குட்றி"ன்னன்"

"புள்ள வேற இருக்கா!"

"ஒரு பொண்ணுங்க! பத்து வயசாச்சி"

"குப்புசாமி யாரு?"

"என் கூட்டாளி. சிமிந்தி வேல செய்வான்!"

"அப்புறம்!"

"எல்லாம் வென வச்சிட்டாங்க! அவ கதவ தொறக்கவே இல்ல! அவன் அண்ணங்காரன்க வந்து அடிச்சானுங்க! அப்புறம் வந்திட்டோம்!"

"பொம்பிளங்கள நம்பக் கூடாது நாகராஜ்!"

"ஆமாங்க!"

"ஒன் பொண்டாட்டி இனி வருவான்னு நெனைக்கிறியா? திருந்துவான்னு நெனைக்கிறியா? வரமாட்டா நாகராஜ்! ஒன் பொண்ணயும் குடுக்க மாட்டா!"

சிறிது நேரம் குடித்தார்கள். நாகராஜ் தன் போக்கெட்டிலிருந்து கார் சாவியை எடுத்துக் கையில் நெருடிப் பார்த்தான்.

"என்ன வெல இருக்கும் உங்க காடி?"

"ஒன்ற லட்சம் வெள்ளி. அதுமேல கடன் ஒரு லட்சம் வெள்ளி!"

"ஐயோ!" என்றான் நாகராஜ். பாஸ்கரன் அழுதான். குடித்தான். அழுதான்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. லேசு லேசாக மேகங்கள் கொண்ட வானம். இடைவெளியில் சில நட்சத்திரங்கள். பிளந்த தேங்காய் மட்டை போல மேகங்களுக்கிடையில் ஓரம் பிரிந்த நிலாக் கீற்று. நேரமும் வானமும் நிலாக்கீற்றும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

"நாகராஜ். இந்த ஒலகத்தில இருந்து பிரயோஜனம் இல்ல! இனி யாரும் என்ன மதிக்க மாட்டாங்க!"

"என்னயுந்தாங்க, மதிக்கிறதில்ல! புள்ள கூட மதிக்கிறதில்ல!"

"காறித் துப்புவாங்க நாகராஜ்!"

"இப்பவே துப்புறாங்க!"

"அப்ப ஏன் உயிரோட இருக்கணும்?"

"பிரயோஜனம் இல்ல!"

"நாகராஜ், எங்கூட வா! செத்துப் போகலாம்!"

"சரிங்க!"

"எப்படி?"

நாகராஜ் யோசித்தான். "உங்களுக்கு நீச்சல் தெரியுமா?"

"தெரியாது!"

"தோ அந்த பங்களாவுக்குப் பின்னால ஒரு நீச்சக்குளம் இருக்குங்க! அதில போயி உளுந்திடலாம்!"

"வா!"

நாகராஜ் கை கொடுத்து எழுப்பி விட்டான். இருவரும் தடுமாறி நடந்தார்கள்.

"வீட்டுக்குள்ள எப்படி நொளையிறது நாகராஜ்?"

"வேலியில ஒரு ஓட்டயிருக்கு. நொளஞ்சிடலாம்!"

"ஒனக்கு எப்படித் தெரியும்?"

"நானும் குப்புசாமியும் போட்டு வச்சோம்!"

"ஏன்?"

நாகராஜ் பேசாமல் இருந்தான்.

"வீட்டில ஆளுங்க இல்ல?"

"ரொம்ப நாளா ஆள் இல்ல! சும்மாதான் கெடக்குது!"

"கார்டு!"

"அவன் முன்னால உக்காந்து தூங்கிக்கிட்டிருப்பான்! நாம பின்னால போலாம்!"

தடுமாறித் தடுமாறி வேலியோரம் வந்து வேலியை விலக்கி பங்களாவின் பின்னால் வந்தார்கள். புல்லும் பூண்டும் வளர்ந்து கிடந்தது. பணக்காரர்களால் பேராசையுடன் ஆடம்பரமாகக் கட்டப்பட்டு உபயோகிக்க ஆளில்லாமல் கவனிக்கப் படாமல் கைவிடப்பட்ட செல்வத்தின் பாழடைந்த சின்னம். சோம்பேறிக் காவல்காரனின் அரைகுறை கண்காணிப்பில்....

நீச்சல் குளத்தின் அசையாத நீரின் உள்ளே சின்னஞ்சிறு நிலாக் கீற்று கலங்கித் தெரிந்தது. மேற்பரப்பில் ஏதோ பூச்சிகள் ஊர்ந்தன.

"இப்ப என்னா மணி நாகராஜ்?"

அவன் கையில் கடிகாரம் இல்லை. "என்னா ஒரு மூணு நாலு மணி இருக்கும்!"

"நாகராஜ். நீ உறுதியாத்தானே இருக்க!"

"ஆமாங்க!"

அநேகமாக முடிந்து போன சாராய போத்தலிலிருந்து ஒரு மிணறு குடித்தான் பாஸ்கரன். "நம்ப கடைசிக் குடி!" மீதியை நாகராஜுக்குக் கொடுத்தான். நாகராஜ் கவிழ்த்துக் குடித்துவிட்டு போத்தலை நீச்சல் குளத்துக்குள் எறிந்தான்.

"நன்றி நாகராஜ். என் கடைசி காலத்தில நீ வந்து சேர்ந்த! உயிர்த்தோழனா இல்லாவிட்டாலும் சாவுத் தோழனா வந்த!"

"ஆமாங்க!"

"நாகராஜ். காசு வேணாம். கார் வேணாம். கம்பெனி வேணாம். பார்ட்னர்ஷிப் வேணாம். கடன் வேணாம். ஆசை வேணாம். முக்கியமா இந்தப் பொண்டாட்டி சனியன் வேணாம்! வா நாகராஜ் குதிக்கலாம்!"

"நீங்க மொதல்ல குதிங்க!"

பாஸ்கரன் குதித்தான். நிலாக்கீற்று ஆயிரம் துண்டுகளாய்ச் சிதறிற்று. நீர்ப் பூச்சிகள் பீதியுடன் எல்லா மூலைக்கும் ஓடின. கைகளை அடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அலைந்தான். அவன் கோட்டு தண்ணீருக்கு மேல் புஸ் என்று வந்தது. மூச்சுத் திமிறினான். மேலே வந்தான். மூச்சடங்க மீண்டும் முழுகினான்.

நாகராஜ் யோசித்தவாறு நின்றான். அப்புறம் குளத்தைப் பார்த்துப் பேசினான். "எல்லாம் அவ குடும்பம் வச்ச வெனையினாலதாங்க. குடிக்காம போயி நல்ல விதமா கூப்பிட்டா திரும்பி வந்திருவான்னுதான் நெனைக்கிறேன். இன்னொரு தடவ கூப்பிட்டுப் பாத்திட்டு அவ வரலின்னா அப்புறம் பாக்கலாம்!"

திரும்பினான். நின்றான். பாக்கெட்டில் இருந்த கார் சாவியை எடுத்து குளத்துக்குள் வீசினான். வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியே வந்தான். கொஞ்சம் தள்ளாடித் தள்ளாடி, ஆனால் திரும்பிப் பார்க்காமல் நடந்தான் நாகராஜ்.

(முடிந்தது)

(பிரசுரம்: மலேசிய நண்பன்: 12 ·பெப்ரவரி, 1999;

--------

ஒட்டுப்புல்

அந்தப் பள்ளிக் கூடத்தில் வேறு என்ன இல்லாவிட்டாலும் அந்தக் காலை வேளையில் கலகலவென்று சத்தம் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கே உரிய கதம்பமான ஒலிகள். கான்வாஸ் சப்பாத்துகள் தரையில் எழுப்பும் தட் தட் ஓசை; நாற்காலிகள் இழுக்கப்படும் ஒலிகள்; கரும்பலகையில் சாக்பீஸ் கிறீச்சிடும் ஒலி; "வணக்கம் டீச்சர்" என்ற ஒரு கோரஸ்; "யார் கரும்பலகையில இப்படி கிறுக்கினது?" என்ற ஓர் ஆசிரியரின் கர்ஜனை.

தலைமை ஆசிரியர் நடேசனுக்குப் பக்கமாக அன்பரசன் ஆறாம் வகுப்பு அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது இந்த ஒலிகள் எல்லாம் வந்து அவன் காதைத் தாக்கின. அவனுக்கு எல்லாம் புதியவையாக இருந்தன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று இப்போதுதான் வெளியேறியுள்ள இன்னும் பளபளப்பு மங்காத புதிய ஆசிரியன். புதிய அனுபவங்களை மேற்கொள்ளப் போகும் மனப் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அங்குள்ள பழுத்த அனுபவமுள்ள ஆசிரியர்களையும், "யார் புதிய ஆள்?" என்று முறைத்துப் பார்க்கும் மாணவர்களையும் பார்த்த போது கொஞ்சம் பயமாயும் இருந்தது.

அந்தப் பினாங்குத் தமிழ்ப்பள்ளிக்கு காலையில் வந்து சேர்ந்து கட்டடத்தைப் பார்த்த போதே "இவ்வளவுதானா!" என மனம் சோர்ந்தது. ஆனால் தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியன் இதை விட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது எனத் தன்னைத் தேற்றிக் கொண்டான்.

தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். "நல்ல நேரத்துக்கு வந்திங்க! ஆறாம் வகுப்புக்கு வகுப்பாசிரியையாக இருந்தவங்க போன வாரத்தோட நின்னுட்டாங்க! ஆளில்லாம தவிக்கிறோம் இங்க!" என்றார்.

"ஏன் சார் நின்னுட்டாங்க?" என்று கேட்டான் அன்பரசன்.

"அவங்க கணவர் இன்சூரன்ஸ் ஏஜன்ட். இவங்களயும் இழுத்துப் பகுதி நேர ஏஜன்டா வச்சிருந்தாரு! அதில வர்ர கமிஷன் வருமானம் ஆசிரியர் சம்பளத்த விட ரெண்டு மடங்கு அதிகமா இருக்காம். அப்புறம் எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலைன்னு விட்டுட்டாங்க!" என்றார்.

இது அடிக்கடி கேட்ட கதைதான். ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்த வேலையை விட்டு வேறு வேலைகள் தேடிக்கொள்ள எத்தனை விதமான வழிகள் இருக்கின்றன என்பதை அவன் சக பயிற்சி மாணவர்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

"நெறைய நேரம் இருக்கும் அன்பு. சாயந்திரத்தில ஒரு "டைரக்ட் செல்லிங்" வியாபாரம் ஆரம்பிச்சிட்டா ஒரு மாசம் ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலாம்." எம்வே, ஷேக்லீஸ், ரோஹினி, அடிபிடிக்காத அலுமினியப் பானை, நீர் வடிகட்டும் கருவி எல்லாவற்றையும் காட்டினார்கள்.

"இன்சூரன்ஸ¥க்கு ஆள் பிடிச்சிக் குடுத்தா ஒவ்வொரு ஆளுக்கும் கமிஷன் மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். செய்றியா? எனக்குத் தெரிஞ்ச ஏஜன்ட் இருக்கார். சொல்லட்டுமா?"

"எப்படியாச்சும் ம.இ.கா.வில சேந்திடு அன்பு! ஒரு வருஷத்தில ஒரு கிளைய கேட்டு வாங்கிடலாம். அப்புறம் அப்படியே தலைவருக்கு நெருக்கமாயிட்டா, அப்பறம் என்ன? தலைமை ஆசிரியர் மூக்கில விரல விட்டு ஆட்டிடலாம்!"

எந்த ஆண்பிள்ளைக்கும் ஆசிரியர் வேலையில் அர்ப்பணிப்போடு இருந்து இந்த "பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்ள" உதவ வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கவில்லை. சில பயிற்சி ஆசிரியைகள் மட்டுமே இந்தப் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று இந்த ஏழைத் தமிழ்ப் பிள்ளைகளை எப்படியாவது உயர்த்தி இந்த சமுதாயத்தைத் தூக்கி விட வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

அன்பரசனுக்கும் இது தன் வாழ்க்கையில் ஒரு தற்காலிகக் கட்டம் என்றுதான் தோன்றியது. இந்த வேலை ஒரு கண்ணியைப் போல. எப்படியோ வந்து மாட்டிக் கொண்டோம். விரைவில் காண்டிராக்டை முடித்துக் கொண்டு இதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.

ஆறாம் வகுப்பில் ஆசிரியர் இன்னும் வந்திருக்காத காரணத்தால் சத்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. வகுப்புக்குள் நுழைந்த போது "நான் ஒருதரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி" என்று ஒரு மாணவன் ரஜனிகாந்த் வசனம் பேசிக்கொண்டிருந்தது தெளிவாக விழுந்தது.

இருவருமாக வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவ மாணவிகள் தடதடவென்று எழுந்து "வணக்கம் சார்" என்றார்கள்.

"வணக்கம். உட்காருங்கள். மாணவ மாணவிகளே, இவர் நம்முடைய பள்ளிக்குப் புதுசா வந்திருக்கிற ஆசிரியர். பேரு அன்பரசன். இவர்தான் உங்க வகுப்புக்கு வகுப்பாசிரியர். சரியா?"

"சரி சார்" என்று கோரஸ் எழுந்தது.

"ஆசிரியர்கிட்ட பணிவா நடந்து நல்ல பேர் எடுக்கணும், என்ன?"

"சரி சார்"

அன்பரசனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வெளியே போனார் தலைமை ஆசிரியர்.

அன்பரசன் வகுப்புப் பதிவேட்டைத் திறந்தான். அந்த வகுப்பில் பதினெட்டு பேர்கள் இருந்தார்கள். கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டமிட்டான். மையூறிய அடையாளங்களும் கத்தியால் கீறல் போட்ட காயங்களும் உடைய மர பெஞ்சுகளின் பின்னால் கருத்த, பழுத்த, சிலமட்டுமே சிவத்த முகங்கள் தெரிந்தன.

"அம்பலவாணன்"

"உள்ளேன் சார்!" குட்டையாய் கருப்பாய் இருந்தான்.

"ஆனந்தி"

"உள்ளேன் சார்!" கீச்சுக் குரலில், நெற்றியில் பெரிதாய் திருநீறு பூசி மாநிறத்தில்...

"கருணாநிதி"

"உள்ளேன் சார்!" பெண் குரலாக இருந்தது.

"உன் பேர் கருணாநிதி]யா? பையன்னு நெனச்சனே!"

வகுப்பு கலகலவெனச் சிரித்தது. மெலிந்த பெண் வெட்கத்துடன் நின்றாள்.

"அவங்கப்பா ஆம்பிள புள்ள பொறக்கும்னு நெனச்சாராம் சார். பொம்பிள பிள்ள பொறந்ததும் அதே பேர வச்சிட்டாரு" என்றான் ஒரு சுட்டி மாணவன். வகுப்பு மீண்டும் கலகல.

"காயத்ரி!"

"உள்ளேன் சார்!" நின்று உட்கார்ந்தாள். பளிச்சென்று இருந்தாள். வட்டமான முகம். அதிலே அடக்கமான சாந்துப் பொட்டு. இரட்டைச் சடை. கண்களில் ஒரு புத்திசாலித்தனம். இங்கே இப்படி ஒரு பெண்ணா?


*** *** ***

காயத்திரியின் கையெழுத்து அவள் முகம் போலவே பளிச்சென்றிருந்தது. அவள் எழுதியிருந்த கட்டுரையில் கருத்துக்கள் கோவையாக இருந்தன. ஆனால் எழுத்துப் பிழைகள் சகிக்க முடியவில்லை.

அந்த ஆண்டு யூபிஎஸ்ஆர் உட்காரவிருக்கும் அந்தப் பதினெட்டு பேரில் பத்துப் பேர் தேர்ச்சியடைந்தாலே பெரிய விஷயம் என்று அந்த ஒரு வாரத்தில் அன்பரசனுக்குத் தெளிவாகிவிட்டது. அதிலும் அவர்களுக்குப் பாடத்தை இன்னும் தீவிரப் படுத்தினால்தான் முடியும். மிகை நேரப் பாடம் நடத்த வேண்டும். இரண்டு பிள்ளைகள் பல "ஏ" வாங்கும் தரத்தில் இருந்தார்கள். ஒருத்தி காயத்ரி. மற்றவன் அம்பலவாணன்.

பிள்ளைகளுக்கு மாலையில் டியூஷன் நடத்தும் விஷயம் பற்றி ஒருநாள் இடைவேளை ஓய்வின் போது சில சக ஆசிரியர்களிடம் பேசினான். அநேகமாக அனைவருக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் பிற்பகல் மாலை வேளைகளில் ஏதாவது ஒரு வெளிவேலை அவர்களுக்கு இருந்தது. ஓய்வில்லை என்றார்கள்.

"நம்ப குணாளன் போன வருஷம் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி அப்புறம் விட்டுட்டார்! அவரக் கேட்டுப் பாருங்களேன்!" என்றார்கள்.

குணாளனைத் தேடிப்பிடித்து தன் விருப்பத்தைச் சொன்னான்.

"அதெல்லாம் இங்க காசு குடுத்து டியூஷன் கத்துக் குடுக்க பெற்றோர்கள் தயாரா இருக்க மாட்டாங்க அன்பரசன்" என்றார் குணாளன்.

"காசு வேண்டாங்க சார். இலவசமாவே நடத்தலான்னுதான் இருக்கேன்!" என்றான்.

"அதுக்குக் கூட வரமாட்டாங்க. நான் முயற்சி பண்ணித் தோத்துப் போயிட்டேன். என் வீட்டிலியே வச்சி சொல்லிக் குடுத்துப் பாத்தேன். ஒண்ணு ரெண்டு வாரம் வந்தாங்க. அவ்வளவுதான்" என்றார்.

"அந்த பொண்ணு காயத்ரியும் பையன் அம்பலவாணனும் நல்ல திறமை உள்ள பிள்ளைங்க! டியூஷன் கொடுத்தா பல "ஏ" வாங்கக் கூடியவங்கன்னு நெனைக்கிறேன்!" என்றான்.

"ஓ! ஆமா அந்தப் பொண்ணு. நல்ல சூட்டிகையான பொண்ணு. அவங்க அப்பன்தான் சரியில்ல. சரி முயற்சி பண்ணுங்க!" என்றார்.

"நீங்களும் கூட உதவி பண்ணினா...!"

"ஐயோ என்னால முடியாது அன்பரசன். எனக்கு சில பார்ட் டைம் வேலைகள் இருக்கு! என்ன விட்டுங்க!" என்றார்.

நல்ல வேளையாகத் தான் இன்னும் எந்த பகுதி நேர வேலையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஆகவே தானாவது இந்தப் பிள்ளைகளுக்கு கணக்கு, பஹாசா, தமிழ் ஆகிய பாடங்களை நடத்தலாம் என முடிவு செய்தான். தலைமை ஆசிரியரிடம் சொன்னான்.

அவர் அவனைக் கொஞ்ச நேரம் வெறுமையாகப் பார்த்தார். அப்புறம் கேட்டார்: "ஏன் உங்களுக்கு இந்த ஆசை, அன்பு? இதிலெல்லாம் நன்மை வர்ரத விட பிரச்சினைகள்தான் அதிகம் வரும்கிறது என்னுடைய அனுபவம்."

அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் அவரும் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு பள்ளிக்கூடத்தை விட்டு மனத்தளவில் தூரமாக ஒதுங்கியிருக்கிறார் என்பது அன்பரசனுக்குத் தெரிந்த விஷயம்தான்.

"நான் மாலை நேரங்கள்ள ஓய்வாத்தான் இருக்கிறேன். முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் சார்!" என்றான்.
அவர் ரொம்ப யோசித்து பிறகு "ரொம்ப ஆசப்பட்றிங்க, சரி! பிரச்னைகள் வராம பாத்துக்குங்க!" என்றார்.

"பள்ளிக்கூடத்திலேயே மாலை நேரத்திலேயே வச்சிக்கிலாமா சார்?"

"சரி" என்றார் நடேசன்.

வகுப்பில் அறிவித்து நாள் குறித்து முதல் நாள் டியூஷனுக்கு வந்த போது ஆறு பேர்தான் வந்திருந்தார்கள். அம்பலவாணன் வந்திருந்தான். காயத்ரி வரவில்லை.

"ஏன் காயத்ரி வர்ல?" என்று அன்பரசன் மற்ற பையன்களிடம் விசாரித்தான்.

"தெரில சார். அவங்க அப்பா விடமாட்டார் சார்!" என்று பதில் வந்தது.

"ஏன் விடமாட்டார்?"

"தெரியாது சார்!" என்றார்கள்.

வகுப்பைத் தொடங்கினான். மாணவர்களுக்குத் தனித் தனிப் பயிற்சிகள் கொடுத்துப் பிழை திருத்தி சிரித்துப் பேசி உதவினான்.

மறுநாள் பிற்பகல் காயத்ரி வீட்டுக்குப் போனான். அவள் அப்பா ஒரு தொழிற்சாலையில் டெக்னீஷியன். ஷிப்டு வேலைக்காரர். நல்ல வேளையாக வீட்டில் இருந்தார்.

வீட்டில் வீடியோவில் ஏதோ தமிழ்ப்படம் ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்பரசனைக் கண்டதும் அரைமனதோடு சத்தத்தைக் குறைத்து அவனுடன் பேசத் தயாரானார் அவர்.

"நான் ஆறாம் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் ஆரம்பிச்சிருக்கங்க. இந்த வருஷம் யூபிஎஸ்ஆர் பரிட்சையில அதிகமான பிள்ளைகளை நல்ல முறையில பாஸ் பண்ண வைக்கணும். அதுக்கு இவங்களுக்கு டியூஷன் குடுத்தாதான் முடியும். காயத்ரி நல்லா படிக்குது. ட்யூஷனுக்கு வந்தா நல்லா பாஸ் பண்ணும்" என்றான்.

காயத்ரியின் அப்பா கொஞ்சம் யோசித்தார். "ஆமா பல இடங்கள்ள டியூஷன் குடுக்கிறாங்க. தெரியும். ஆனா நாங்க பொம்பிள பிள்ளய தனியா வெளிய அனுப்பிறதில்ல! அனுப்பினா தகராறாப் போகுது!" என்றார்.

"பள்ளிக்கூடப் பாடத்த மட்டும் நம்பியிருந்தா போதாது. என்கிட்ட நிறைய பயிற்சிப் புத்தகங்கள் இருக்கு. அத செய்யச் சொல்லித் திருத்திக் குடுத்தா முன்னேற்றம் இருக்கும்!"

"டியூஷன் எங்க நடக்குது?" என்று கேட்டார் அவர்.

"பள்ளிக்கூடத்திலேயே! சாயந்தரத்தில!" என்றான்.

"எத்தன பிள்ளைங்க வர்ராங்க?"

இன்னைக்கு ஏழு பேர் வந்தாங்க. மற்ற பிள்ளைகள வரச் சொல்லி வற்புறுத்திக்கிட்டு இருக்கேன்!"

"வேற யார் உங்களோட சொல்லிக் குடுக்கப் போறாங்க!"

"இப்ப நான் ஒருத்தன்தான். மற்ற ஆசிரியர்கள மெது மெதுவாத்தான் கேட்டுப் பாக்கணும்!" என்றார்.

"குணாளன் வாத்தியாரு சொல்லிக் கொடுக்கப் போறாரா?"

அவர் பெயர் அங்கு எழும்பியது அவனுக்குச் சற்று வியப்பாக இருந்தது. "இல்ல, நேரமில்லன்னு சொல்லிட்டாரு!"

யோசித்தார். "சரி போங்க! அனுப்பி வைக்கிறேன்!" என்றார்.

காயத்ரி உள்ளிருந்து நன்றியோடு எட்டிப் பார்த்தாள்.

*** *** ***


டியூஷன் வகுப்பு சத்தமில்லாமல் இருந்தது. மாணவர்கள் தலைகள் நிமிருவதும் குனிவதுமாக இருந்தன. அன்பரசன் கரும்பலகையில் எழுதியிருந்த கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதி விடைதேடுவதில் அவர்கள் கவனம் முழுமையாக இருந்தது.

அன்பரசன் அந்த முகங்களை நோட்டமிட்டான். மாணவர்கள் தங்களை மறந்திருக்கும் இந்த நேரம்தான் அவர்களைக் கவனிப்பதற்குச் சரியான நேரம். வகுப்பிலிருந்த ஒன்பது பேரில் மூன்று பேரின் முகத்தில் குழப்பம்தான் மிகுதியாக இருந்தது. மூளையில் கணக்கின் நெளிவு சுளிவுகள் நுழையாமல் அவர்கள் தரை, கால், தாள் இவற்றை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூளையில் இருந்த வெறுமை முகத்தில் தெரிந்தது.

மற்ற மாணவர்களின் இமைகள் படபடத்துக் கொண்டிருந்தன. விழிகள் அலைந்தாலும் மூளையில் எண்களின் ஓட்டமும் ஒரு விடையை நோக்கி அவற்றை நகர்த்தும் தீவிர முயற்சியும் அவற்றில் தெரிந்தன.

காயத்ரி அப்படித்தான் கணக்கில் மூழ்கியிருந்தாள். அவள் இரட்டைச் சடைகளில் ஒன்று முதுகிலிருந்து நகர்ந்து அடிக்கடி தோளில் சரிந்து கன்னத்தைத் தழுவி அவள் நோட்டுப் புத்தகத்தில் விழ தானியங்கியாக அவள் அதைப் பின்னால் வீசுவது அழகாக இருந்தது. பள்ளிக்கூடச் சீருடை இல்லாமல் வண்ணப் பாவாடை சட்டையில் இன்னும் அழகாக இருந்தாள். முகத்தின் பளிச்சென்ற நிறம்... கன்னத்தின் கதுப்புக்கள்... செதுக்கிய மூக்கு... அளவெடுத்துத் தீட்டிய அதரங்கள்... இத்தனை அழகு இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது?

இயற்கையாக அவள் மேல் ஆசை வந்தது. "சீ" என்று அடக்கினான். ஆனால் கண்கள் நகரவில்லை.

ஆழ்ந்த கவனத்தில் இருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். விழிகளை அம்புகள் என கவிஞர்கள் வருணித்தது அங்கு அவனுக்கு நிதர்சனமாக இருந்தது. அவன் விழிகளுக்குள் பாய்ந்து நெஞ்சில் சுளீரென்று குத்தி....

சில கணங்கள் ஆனாலும் யுகங்கள் போல் இருந்தன. கண்கள் மோதி கொக்கி போல் மாட்டிக்கொண்ட இந்த விபத்திலிருந்து யார் முதலில் பின்வாங்குவது என்ற போட்டியில் திகைத்திருந்து, அவன்தான் முதலில் தலை திருப்பினான். மீண்டும் அவள் தலை குனிந்த பின் ஒரு மெல்லிய புன்னகைக் கோடு அவள் இதழ்களில் தவழ்ந்திருந்தது. மீண்டும் ஒருமுறை மின்னல் போல் தலைநிமிர்ந்து அவனைப்பார்த்துக் குனிந்து விட்டாள். முதல் அம்பு பாய்ந்தது விபத்து என்றால் இந்த இரண்டாம் அம்பு குறிபார்த்து வீசியது போல் இருந்தது.

"செஞ்சிட்டேன் சார்!" என்றான் அம்பலவாணன். எழுந்து அவன் அருகில் போனான் அன்பரசன்.


*** *** ***

"டியூஷன் ரொம்ப வேகமா நடக்குது போல இருக்கே!" என்றார் சுப்ரமணியம் என்ற சக ஆசிரியர். அது ஓய்வு நேரம். அருகில் உள்ள காப்பிக்கடையிலிருந்து காப்பியும் பலகாரமும் வரவழைத்து பருகிக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள்.

"நடக்குது சார்! ஆனா பிள்ளைகள் கவனமா வர்ரதில்ல! ஒரு நாள் வந்தா நாலு நாள் வர்ரதில்ல!" என்றான் அன்பரசன்.

"காயத்ரி தொடர்ந்து வருதா?" என்று கேட்டார் சுப்ரமணியம்.

"பெரும்பாலும் வருது!"

"அப்புறம் மத்த பிள்ளைங்க வந்தா என்ன, வராட்டா என்ன!"

அன்பரசன் அவரை வியப்போடு பார்த்தான். "ஏன் சார் அப்படிச் சொல்றிங்க? காயத்ரியை விட மத்த பிள்ளைங்கதான் பலவீனமா இருக்காங்க! அவங்க தொடர்ந்து வர்ரதுதான் இன்னும் முக்கியம்!" என்றான்.

"என்ன முக்கியம் போங்க! காயத்ரி வந்தா வகுப்பு கலகலப்பா இருக்கும். இல்லைன்னா அதில சுவாரஸ்யமே இருக்காதே!" என்றார் அந்த அறையிலிருந்த சக ஆசிரியை அம்பிகா.

அந்த விசாரிப்புக்கள், அதிலிருந்த குறும்புகள் அன்பரசனுக்கு விளங்காமலில்லை. இவர்களுக்கு பதில் சொல்லி வாயை அடக்க வேண்டும் என்று எண்ணினான்.

"காயத்ரி உண்மையிலேயே கெட்டிக்காரப் பொண்ணு. இந்தப் பள்ளிக்கூடத்தில யூபிஎஸ்ஆர்ல மூணு நாலு "ஏ" எடுக்கிற திறமை அந்தப் பிள்ளைக்கும் இந்த அம்பலவாணனுக்குந்தான் இருக்கு. அதுக்காகத்தான் அவங்க மேல இத்தனை அக்கறை செலுத்துறேன் டீச்சர்" என்றான்.

"ஆமா, குணாளன் சாரும் அப்படித்தான் சொல்லிக்கிட்டிருந்தாரு. கடசியில..."

"கடசியில...?"

அவரவர்கள் வேலையைப் பார்த்தார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. சிலரின் முகங்களில் குறும்பான சிரிப்புகள் இருந்தன.


*** **** ***


காயத்ரியும் அம்பலவாணனும் அசாதாரணமானப் புத்திசாலித் தனம் காட்டினார்கள். அம்பலவாணனின் கவனக் கூர்மை அன்பரசனையே வியப்பில் ஆழ்த்தியது. அவன் வகுப்புக்குத் தவறுவதில்லை. வந்தால் நேரத்தை வீணடிப்பதில்லை. கணக்கு செய்யப் புகுந்தால் சுற்றியுள்ள உலகம் அவனுக்கு மறந்து விடும். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் இல்லை என அவன் கண்டு கொள்வதில்லை. ஒரு பஞ்சு போல அறிவை விரைவாக உறிஞ்சிக் கொண்டான்.

காயத்ரி அப்படி இல்லை. பேச்சும் விளையாட்டுமாக இருந்தாள். அன்பரசனை அடிக்கடி பார்த்து கண் இமைகள் படபடத்தாள். அன்பரசன் அவள் கண்களை எவ்வளவுதான் தவிர்க்கப் பார்த்தாலும் அவள் கொக்கிகள் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தாள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முயற்சி செய்தான். ஆனால் அது முடியவில்லை. அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் அது கனிந்து போயிற்று.

அவள் கணக்குகளைச் சரியாகப் போடுவதில்லை. அவள் மூளை முற்றாகப் பயன்படுத்தப் படுவதை ஏதோ கற்பனைகள் தடுத்துக் கொண்டிருந்தன. சேம இலைமீது தண்ணீர் ஊற்றியதைப் போல அவன் சொல்வதெல்லாம் அவளிடம் ஒட்டாமல் வழிந்து போய்க் கொண்டிருந்தது.

ஆனால் அடிக்கடி அவனிடம் வந்து சந்தேகம் கேட்டாள். சொல்லிக் கொடுத்ததையே திரும்பத் திரும்ப அவள் கேட்பது புரிந்தது. கேட்கும் போது பக்கத்தில் நின்று உரசினாள். அவனைப் பார்த்துச் சிரிப்பதும் தலை கவிழ்வதுமாக இருந்தாள்.

அன்று வகுப்பு முடியும் வேளையில் காயத்ரி அவன் கொடுத்திருந்த கணக்கை முடிக்காமல் இருந்தது சௌகரியமாகப் போனது. "காயத்ரி! இந்தக் கணக்க முடிச்சிட்டு வீட்டுக்குப் போ! மத்தவங்க போகலாம்!" என வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். மற்ற மாணவ மாணவிகள் போனதும் வகுப்பு "ஓ"வென்றானது.

காயத்திரி ஒரு சிருங்காரப் புன்னகையுடன் சந்தோஷமாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் போய்விட்ட பின் அன்பரசனுடன் தனியாக இருப்பதை அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல இருந்தது. கணக்குப் போடுவது போல பாவனை காட்டிக்கொண்டு மனத்தை எங்கோ ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

அன்பரசன் அவள் அருகே போனான். பேசினான்: "காயத்ரி! கணக்குப் போட்டது போதும். புத்தகத்தை எடுத்து வை! உங்கிட்ட கொஞ்சம் நான் பேசணும்!" என்றான். சிரிப்பு மாறாமல் புத்தகத்தை எடுத்து வைத்தாள். ஒரு காதல் உரையாடலுக்குத் தயாரானவள் போல் இருந்தாள்.

"காயத்ரி! இப்பல்லாம் உன் கவனம் படிப்பில இருக்கிறதா தெரியில. கவனம் சிதறுது. கற்பனையிலேயே இருக்கிற. இதுக்கு என்ன காரணம்?"

"உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!" என்பது போலத் தலை குனிந்து அர்த்தத்தோடு இமைகள் படபடக்கச் சிரித்தாள்.

"இதப் பாரு. உன் மனசில நீ நெனச்சிருக்கிறது என்னன்னு எனக்குக் கொஞ்சம் தெரியுது. ஆனா அந்த அசிங்கத்துக்கெல்லாம் நான் ஆளில்ல. எனக்கு உன் மாதிரி உன் வயசில ஒரு தங்கச்சி இருக்கு. அதுவும் நீயும் எனக்கு ஒண்ணுதான்!"

காயத்ரி நிமிர்ந்து பார்த்தாள். புன்னகை மறைந்து விட்டது. தட்டுத் தடுமாறிச் சொன்னாள்: "சார் நான் உங்கள..."

"காதலிக்கிறேன்னு சினிமா வசனம் பேசப் போறியா? தோ பாரு! இந்த மாதிரி நெனப்பெல்லாம் விட்ரு! இதெல்லாம் விடாம சினிமாவும் வீடியோவும் பாக்கிறதினால வர்ர வீண் நினைப்பு. வாழ்க்கைக்கு உதவாது. விட்டுத் தொலை! படிப்பில கவனத்த செலுத்து! யூபிஎஸ்ஆர் நல்ல முறையில பாஸ் பண்றதப் பார்!" என்றான்.

"சார்! என் மனசுக்குள்ள நான் உங்களத்தான்...!" என்று இழுத்தாள்.

இந்த எண்ணம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தெரிந்தது. இந்தப் பருவத்தில் இந்தக் காதல் மண்ணாங்கட்டி ஆசைகள் ஒட்டுப்புல்லைப் போல பரபரவென்று மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. யார் எவர் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கிறது. நெருங்குவதும் உரசுவதும் இருந்தால் போதும் பற்றிக் கொள்ள. தன் மனதிலும் கூடத்தான் பற்றுகிறது. ஆனால் தனக்கு அதைப் பிய்த்து எரியும் பக்குவம் இருக்கிறது. அவள் மனதிலிருந்தும் அதைப் பிய்த்து எரிய வேண்டும். மென்மையாக அதைச் செய்ய முடியாவிட்டால் முரட்டுத் தனமாகவாவது செய்யத்தான் வேண்டும்.

குரலைக் கடுமையாக்கிக் கொண்டு பேசினான். "இதப்பாரு காயத்ரி! நான் கண்டிப்பா சொல்றேன். இதெல்லாம் விட்ரு! இந்த நெனப்பு ஒன் மனசில தொடர்ந்து இருந்து, நீ இப்படியே நடந்துக்கிட்டிருந்தா, என்னப் பாத்து அடிக்கடி சிரிக்கிறது, கிட்ட வந்து உரசிறது இப்படி வேலயெல்லாம் வச்சிக்கிட்டினா, நானே உங்கப்பாகிட்ட நேரா வந்து நீ செய்றத சொல்லிடுவேன். டுயூஷன விட்டு நிப்பாட்டிடுங்கன்னு நானே சொல்லிடுவேன்"

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். தலைகுனிந்தாள். "மன்னிச்சிடுங்க சார்! இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன். தயவு செய்து எங்க அப்பாகிட்ட இதச் சொல்லிடாதிங்க! அவரு... அவரு, ரொம்பக் கோவக்காரரு. போட்டு அடிஅடின்னு அடிச்சிடுவாரு!" அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

அன்பரசனுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. "இவள் கதுப்பான கன்னங்களைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் என்று முதலில் மனதுக்குள் காமுகித்தேன். இப்போது அவளை வருத்தி அழவைக்கும் கொடுமைக்காரனாகிவிட்டேன்" என்று மனதுக்குள் உருகினான்.

ஆதரவாக அவள் இரண்டு கைகளையும் தன் கைகளில் பற்றினான். "அழுவாத காயத்ரி! உன் நன்மைக்குத்தான் சொல்றேன். உன் படிப்பு முடிஞ்சி உனக்கு உரிய பருவம் வரும்போது உன் அழகுக்கு யாராவது ஒரு அழகான அறிவான இந்தத் தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர் வேலயவிட உயர்வான வேல செய்யக்கூடிய உன் வயசுக்கொத்த ஒரு காதலன் உனக்கு வாய்ப்பான். வாத்தியார, வாத்தியாரா நினை. காதலனா நினச்சினா அவனும் கெட்டுப் போவான். நீயும் கெட்டுப் போவ!"

அவள் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்தான். அவள் தோள்களை ஆதரவாகப் பிடித்துவிட்டான்.

அவள் புத்ததகங்களை அள்ளிக்கொண்டு வகுப்பறை வாசலுக்குப் போய் ஒரு முறை அவனைத் திரும்பப் பார்த்துவிட்டு ஓடினாள்.

அவள் போனபின் கொஞ்ச நேரம் தனிமையில் உட்கார்ந்திருந்தான் அன்பரசன். ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் மனதில் அரும்புகின்ற காதல் ஒரு உன்னதமான உணர்வு. மனதை பதனப்படுத்துகிற, மேகங்களூடே பறக்க வைக்கிற, பிற வாழ்க்கைக் கவலைகளை மறைத்து மயக்கப் படுத்துகிற உணர்வு. அந்த வயதுக்கே உரியது. இன்னமும் காமம் வந்து கலக்காத மாசு படாத வானவில் போன்ற உணர்வு. அவனும் அனுபவித்திருக்கிறான். அவள் மனதிலிருந்து அதை முரட்டுத்தனமாகப் பிய்த்து எறிந்து விட்டோம் என்ற சோகம் மனதில் வந்து தங்கியது. தானே இப்படிப் பிழியப்பட்டால் இந்தப் பெண் இன்னும் எவ்வளவு மனசுக்குள் கசக்கப்பட்டிருப்பாள்?

ஏன் இயற்கை இப்படி விளையாடுகிறது? ஏன் படிப்பை முற்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டிய அதே பதின்ம வயதில் இந்தக் காதல் உணர்வுகளையும் அரும்ப வைக்க வேண்டும்? வாழ்க்கையின் உன்னதமான லட்சியத்தைப் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இளவயதில் ஏன் கிளைப் பாதைகளுக்கு இழுக்க வைத்து அலைக்கழிக்கிறது மனசு? "இது வேண்டாம். இது போலி. இது பொய். இது உனக்கு உதவாதது. இது வாழ்க்கையை வீணாக்கும் வேலை" என்று எப்படி அவளுக்கு உணர்த்துவது? உணர்ந்திருப்பாளா? அல்லது தான் கட்டிய அழகிய மலர் மாலைகளைப் பிய்த்துப் போட்ட குரங்கு எனத் தன்னை நினைப்பாளா?

வகுப்பறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறிய போது இப்படி இன்னொரு அழகான பெண் தன்னை விரும்பிக் காதலிக்கும் வாய்ப்பு இனிமேல் தனக்கு வாய்க்கப் போவதில்லை என்ற ஏக்கமே மனதில் இருந்தது.

(முடிந்தது)

(இக்கதை மலேசிய மாத இதழான “உங்கள் குரல்” இதழில் ·பெப்ரவரி, 1998-இல் பிரசுரமானது.)

--------------

ரெ. கார்த்திகேசு குறுநாவல்:
நாளைக்கு


கடித உறையைப் பார்த்ததுமே ராஜேஸ்வரிக்கு மனசுக்குள் கிலி பிடித்துவிட்டது. "அரசாங்கச் சேவையில்" என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பழுப்பு உறை. எங்கிருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. யார் எழுதியிருப்பார்கள் என்று புரிந்தது. ஓரத்தைக் கிழித்துப் படித்தாள். பத்மாதான் எழுதியிருந்தாள். தமிழில் சுருக்கமாக எழுதியிருந்தாள். இது படிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடிதம் என்று காட்ட இளங்குற்றவாளிகள் நிலையத்தின் அரசாங்க முத்திரையும் இருந்தது.

"அன்புள்ள அக்காவுக்கு, வணக்கம்.

இங்கு சுகம். உங்கள் சுகம் அறிய ஆவல்.

நிற்க, அடுத்த மாதக் கடைசியில் என்னை இங்கிருந்து விடுவிக்கப் போகிறார்களாம். இன்று காலை மீட்டிங் போட்டு முடிவு செய்தார்களாம். என்னுடைய மேற்பார்வை அதிகாரி சொன்னார். ஒரு வருஷம் இடையிடையே வீட்டுக்கு வந்து மேற்பார்வை பார்ப்பார்களாம். யாராவது பொறுப்புள்ளவர்கள் வந்து கையெழுத்துப் போட்டு அழைத்துப் போக வேண்டும். எனது கார்டியன் என்ற முறையில் உங்களுக்கும் விரைவில் கடிதம் எழுதுவார்களாம்.

அக்கா, தயவு செய்து அடுத்த மாதக் கடைசியில் வந்து கையெழுத்துப் போட்டு என்னை அழைத்துப் போங்கள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நேரில் வந்து பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

இப்படிக்கு

பத்மா"

மனதில் திகில் படர்ந்தது. இவ்வளவு சீக்கிரமாகவா இரண்டு வருஷம் ஓடிவிட்டது? இல்லை. இரண்டு வருஷம் இன்னும் முடியவில்லை. நன்னடத்தைக்காக தண்டனைக் காலத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

கடிதத்தை மேசை டிராவரில் ஒளித்து வைத்தாள். அது எளிது. ஆனால் விஷயத்தை ஒளித்து வைக்க முடியுமா? நாளை இது வெடிக்காதா?

இன்று ராத்திரிக்கு கணவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சொன்னால் என்ன ஆகும் என்று தெரியும். புயலும் பூகம்பமும் வெடிக்கலாம். நிச்சயம் வெடிக்கும். ஆனால் சொல்லாமல் என்ன செய்வது? இரவுக்காகக் காத்திருந்தாள்.


*** *** ***

டிவியில் ஏதோ ஒரு அமெரிக்க சிரிப்புப் படம் ஓடிக் கொண்டிருந்தது. கையில் பியருடனும் வாயில் சிகிரெட்டுடனும் சிரித்துச் சிரித்துப் படம் பார்த்துக் கொண்டிருந்த கணவன் சேகரனை ஓரக் கண்ணால் பார்த்தாள் ராஜேஸ்வரி. எத்தனை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான்! இப்போது சொல்லலாமா? சொல்லி நிம்மதியைக் கெடுக்க வேண்டுமா? வீட்டில் நிலவியிருக்கும் இந்த அமைதியைக் குலைக்க வேண்டுமா?

பிள்ளைகள் இருவரும் தூங்கப் போய்விட்டார்கள். மாமியாரும் இன்று வெள்ளென போய்ப் படுத்து விட்டாள். டிவியில் ஏதாவது தமிழ்ப்படம் இருந்தால் இரவிரவாக கண் விழித்து உட்கார்ந்திருப்பாள். இல்லையானால் வெள்ளென தூக்கம்தான்.

வீடு சாயந்திர அவசரங்கள் முடிந்து ஓய்ந்திருந்தது. பிள்ளைகள் விளையாடி, சண்டை போட்டு, சோறு சாப்பிட அடம் பிடித்து டிவியின் முன்னால் சத்தம் போட்டுச் சிரித்து, விரட்டியவுடன் போய்ப் படுக்கையில் சுருண்டு அடங்கினார்கள். சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுப் பாத்திரங்கள் கழுவி மேசை துடைத்து மாமியாருக்கும் வேலை முடிந்தது. வீடே கொட்டாவி விட்டுச் சோர்ந்து அடங்கிவிட்ட நேரம்.

அவன் டிவியிலிருந்து கண்கள் பெயராமல் சிரித்தவாறே பியரைக் குடித்து கோப்பையைக் கீழே வைத்த சமயமாகப் பார்த்துச் சொன்னாள்: "ஒரு லெட்டர் வந்ததுங்க!"

அவன் கண்களைத் திருப்பி அவளைப் பார்த்தான். "லெட்டரா? என்ன லெட்டர்?"

"பத்மா எழுதியிருக்கா!"

சிரிப்பு மறைந்தது. அவன் முகம் சுரீர் என்று மாறியது. அவளைக் கொஞ்சம் முறைத்தவாறிருந்தான். புயலின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தன. "என்னாவாம்?" என்றான் மொட்டையாக.

"அவளுக்கு அடுத்த மாசம் விடுதலை கொடுக்கிறாங்களாம்!"

டிவிக்கு முகம் திருப்பினான். அது கடுகடுவென்று ஆகிவிட்டிருந்தது. அவன் மனம் அந்தப் படத்தில் இப்போது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றும் கேட்கவில்லை. கேட்டால் இந்தப் பேச்சு வளரும் என்பதால் கேட்காமலேயே முடித்து விடவேண்டும் என்று நினைத்தான் போலிருக்கிறது.

இரண்டு நிமிட மௌனத்தை ராஜேஸ்வரி கலைத்தாள்: "வந்து அழச்சிட்டுப் போ அக்கான்னு கேட்டிருக்கா!"

இன்னுமொரு நிமிடம் கடுகடுவென்று இருந்தான். அப்புறம் முகம் திருப்பிக் கேட்டான்: "சரி, கேட்டா, நீ என்ன பண்ணப் போற?"

பயந்து தயங்கிச் சொன்னாள்: "போய் அழச்சிக்கிட்டு வரலான்னுதான் இருக்கேன்!"
அவன் குரல் ஓங்கியது. கத்தினான். "ஏன் ராஜி, பைத்தியமா ஒனக்கு? சுத்தமா முட்டாளாயிட்டியா? இப்படி நெனச்சிக்கூடப் பாக்கலாமா?"

"ஏங் கத்திறிங்க? புள்ளங்க முளிச்சிக்கப் போறாங்க!" என்றாள்.

"ஆகா, புள்ளங்க மேல மகா அக்கறை உள்ளவதான் நீ! அதுனாலதான் ஒரு கொலைகாரப் பேய கொண்டாந்து ஊட்டுக்குள்ள வச்சிக்கிறேங்கிற! நாளக்கி உன் புள்ளங்களயும் குத்தி கொல பண்ணிட்டு போவட்டும்னு!"

"அநியாயமாப் பேசாதிங்க! அவ அப்படிப் பட்டவ இல்ல!"

"தோ பாரு ராஜி. நான் ஒரு வருஷத்துக்கு மிந்தியே உங்கிட்ட சொல்லியாச்சி! என் முடிவில ஒரு மாத்தமுமில்ல! ஒன் தங்கச்சிக்கு இந்த வீட்டில இனி எடம் கிடையாது! அதப் பத்திப் பேச்சையே எடுக்காத!" என்றான். டிவியை முறைத்தான். பியரை எடுத்துப் பருகினான்.

"அவ வேற எங்கங்க போவா? எங்க போவா சொல்லுங்க!" ராஜேஸ்வரி அழுதாள்.

"எங்க போனா ஒனக்கென்ன? அந்த கொலைகாரச் சண்டாளிக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இனி சம்பந்தமில்ல. விஷயம் முடிஞ்சது" அவனுக்குக் கோபத்தில் மூச்சிரைத்தது.

கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். கோபத்தால் சிவந்த கண்களுடன் டிவியின் அசையும் பிம்பங்களின் அர்த்தத்தை இழந்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று திரும்பிச் சொன்னான்: "இனிமே இந்தப் பேச்ச எடுத்தீனா நமக்குள்ள உறவே கெட்டுப் போவும், பாத்துக்க!" எழுந்தான். கதவைத் திறந்து வெளியே போய் கேட்டருகில் நின்று கொண்டு சிகெரட்டை ஆத்திரமாக உறிஞ்சி ஊதிக் கொண்டிருந்தான்.

அவள் சென்று படுக்கையில் சாய்ந்தாள். உடம்பில் எல்லா இடங்களிலும் முட்கள் குத்தின. மனம் முழுக்க ரணமாக இருந்தது. என்ன எளிதாக விஷயத்தை முடித்து விட்டான்? ஆனால் அவளுக்கு இந்த பிரச்சினை இதோடு முடிந்து விடுமா? எப்படி முடியும்? பத்மாவின் கையிலிருந்த கொலை அரிவாளிலிருந்து சிந்திய இரத்தக் கறைகள் காய்ந்திருக்கலாம். ஆனால் அவள் மனத்திலும் தன் மனத்திலும் ஏற்பட்ட காயங்கள் காயவில்லை. இன்னும் அங்கே ரத்தம் கசிகிறது. தொட்ட போதெல்லாம் சுரீரென்று வலிக்கிறது.


*** *** ***

திருமணம் முடிந்து சேகரனுடனும் அவனுடைய அம்மாவுடனும் ஒரே தம்பியுடனும் வாழ வந்த போதே அந்தக் குடும்பத்தில் இருந்த நெருக்கத்தையும் இறுக்கத்தையும் ராஜி உணர்ந்து கொண்டாள். அந்தக் குடும்பம் மூடிய குடும்பமாக இருந்தது. அவளை அன்னியமாகவே வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் பல ரகசிய விஷயங்கள் பேசிக் கொண்டார்கள். ராஜியைக் கண்டால் பேச்சுக்கள் நின்றுவிடும்.

போகப் போக அது பெரும்பாலும் சேகரனின் தம்பி பாஸ்கரனைப் பற்றியதுதான் என அவள் ஊகித்துக் கொண்டாள். பனிரெண்டு பதின்மூன்று வயதில் அவன் உடல் பெருத்திருந்தான். முரடனாக இருந்தான். அவன் ராஜியிடம் அதிகம் பேசுவதில்லை. பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தான். வீட்டில் அதிகம் தங்குவதில்லை. மாலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே எங்காவது போய்விடுவான்.

ராஜி வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். பக்கத்திலேயே ஒரு தொழிற்சாலையில் அவளுக்கு அசெம்பிளி லைனில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்திருந்தது.. சில சமயம் ஷி·ப்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது. கஷ்டமாக இருந்தாலும் ஒரு கம்பெனியில் கணக்கு அலுவல் பார்த்து வந்த சேகரனுக்கு நிகரான வருமானம் வந்ததால் வேலை பிடித்திருந்தது.

அப்படி வெளியில் போக வர இருந்த போதுதான் பாஸ்கரனைப் பற்றி அவள் கேள்விப்பட ஆரம்பித்தாள். அவன் எடுத்ததெற்கெல்லாம் மற்ற பையன்களுடன் சண்டை பிடிப்பது, எப்பொழுதும் நண்பர்கள் இல்லாமல் தனியாகவே சுற்றுவது, போதைப் பொருள் பழக்கம் இருக்குமோ என்ற வதந்திகள், அவன் பெண்களைப் பார்த்து இளிப்பது எல்லாம் கேள்விப் பட்டாள்.

ஆனால் எதையும் வீட்டில் சொல்ல முடியாது. அந்தப் பேச்சை எடுத்தால் "உனக்கென்ன, விடு! பொம்பிளகளுக்கு வேற வேல கெடையாது!" என்பான் சேகரன்.

வீட்டுக்கும் அவனைப் பற்றி அடிக்கடி முறையீடுகள் வந்து கொண்டிருந்தன. பள்ளிக் கூடத்தில் சண்டை போட்டு வருவான். திருட்டு பற்றிய முறையீடுகளும் வந்தன. ஆனால் முறையீடு பண்ண வந்தவர்களை சேகரனும் அவன் தாயும் முரட்டுத் தனமாகத் திட்டி அனுப்பினார்கள். இரவில் தாயின் அறையில் மூவரும் சேர்ந்து பேசுவார்கள். சில சமயம் பாஸ்கரனை சேகரன் அடிப்பான். பாஸ்கரன் திரும்பிச் சண்டை போடுவான். மாமியார் பாஸ்கரனை அணைத்துக் கொண்டு சேகரனோடு சண்டை போடுவாள்.

இந்த விஷயங்களில் அவர்கள் ராஜியை ஒரு நாளும் நெருங்க விடுவதில்லை. ராஜி பாஸ்கரனைப் பற்றிக் கேட்க முனைந்த நாட்களில் சேகரன் அவள் வாயை அடைத்து விடுவான். ராஜி அந்த வீட்டில் வாழ்ந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றுவிட்ட இந்த மூன்று ஆண்டுகளில் அந்தக் குடும்பத்தில் யாரிடமும் அவளால் நெருங்க முடியவில்லை. பாஸ்கரனின் முரட்டுத் தனத்தை மறைப்பதற்காகவே தன்னை இப்படி அந்நியமாக வைத்திருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால் ஏன் என்று புரியவில்லை.

ராஜிக்கு இது விசித்திரமாக இருந்தது. அவள் கலகலவென சிரித்துப் பேசுகின்ற குடும்பத்திலிருந்து வந்தவள். தந்தையை இளவயதில் இழந்துவிட்ட குடும்பம். ஆனால் தன்னையும் தன் தங்கை பத்மாவையும் அவள் தாய் அன்பாகத்தான் வளர்த்தாள்.

சேகரனின் குடும்பத்தில் அவர்களுக்கிடையே நெருக்கமும் தற்காப்பு உணர்வும் அதிகமாக இருந்தன. ஆனால் மனம் விட்டுப் பேசுகின்ற திறப்பு இல்லை. ராஜி அதற்குள் நுழைந்து நிலைமையைத் தளர்த்தலாம் என்று முயன்றாள். கொஞ்சம் சுதந்திரக் காற்றை ஓடவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அவள் நெருங்க நினைத்தால் அவர்கள் இறுக்கம் இன்னும் கூடியது. "நீயேன் இதிலெல்லாம் போய் தலையிட்ற? அம்மா எல்லாம் கவனிச்சிக்குவாங்க!" என்று அவளை உறுதியாகக் கதவிற்கு வெளியே நிறுத்தி வைத்தான் சேகரன்.

இந்த நிலையில்தான் பத்மாவுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ராஜியின் அம்மா ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துப் படுத்தவள் அடுத்த நாள் போய்விட்டாள். அம்மாவை சவவண்டியில் அனுப்பிவிட்டு உட்கார்ந்த போதுதான் பத்மாவின் நிலைமை என்ன என்ற பெரிய கேள்வி வந்து நின்றது. பத்மாவுக்கு அப்போதுதான் பனிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது.

அவளை வைத்துக் கொள்ளும் நெருங்கிய உறவினர் யாரும் இல்லை. தான்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ரகசியங்கள் நிறைந்திருக்கும் அந்த வீட்டிலா? எல்லோரும் மனதுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டிலா? ராஜிக்கு அதில் கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை.

ஆனால் வேறு வழியில்லை. அம்மாவின் வீட்டைப் பூட்டிவிட்டு பத்மாவைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். புகுந்த வீடு புதியவள் வரவால் இருப்புக் கொள்ளாமல் திணறியது. சேகரன் அவளை மிரட்டினான். "இது என்ன ராஜி! வேற எங்காவது கொண்டு விடு ஒன் தங்கச்சிய! இந்தச் சின்ன வீட்டில எங்க இடம் இருக்கு?" என்றான்.

"பரவால்லிங்க நான் பாத்துக்கிறேன்!" என்றாள் ராஜி. இடம் இருக்கிறது என்று காட்டினாள். தன் அறைக்குப் பக்கத்தில் சாமான்கள் போட்டு வைத்திருந்த ஸ்டோர் ரூமை ஒழித்து அவளுக்கு படுக்கை போட்டுக் கொடுத்தாள்.

ஆனால் வீட்டில் அனைவரும் கடுகடுப்புடன்தான் அவளுடன் பழகினார்கள். பாஸ்கரன் மற்றவர்கள் முன்னிலையில் பத்மாவைப் பார்த்து கடுகடுத்தாலும், மற்றவர்கள் பார்க்காத போது அவளைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு நன்றாக இல்லை என்பதை ராஜி கவனித்தாள்.

பத்மா உண்மையில் குடும்பத்துக்கு மிக உதவியாக இருந்தாள். பள்ளிக்கூடம் போய் இருக்கும் நேரம் தவிர வேறு வேளைகளில் ராஜியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டாள். வீடு அவளோடு ஒட்டாமல் இருந்தாலும் இரண்டு குழந்தைகளும் "சின்னம்மா, சின்னம்மா" என்று அவளோடு ஒட்டிக்கொண்டு அதற்காக மாமியாரிடம் முதுகில் அவ்வப்போது அறையும் வாங்கின. பத்மா வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். முதலில் அதை வெறுத்த மாமியார் அப்புறம் ஏதோ வேலைக்காரியை ஏவுவது போல ஏவ ஆரம்பித்தாள். சேகரன் பத்மா என்ற ஒரு பெண் அந்த வீட்டில் இருப்பதாகக் கண்டு கொள்வதே இல்லை.

இந்த நிலையில்தான் அது நடந்தது. பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்து கொண்டிருந்த பத்மா பூப்பெய்தி விட்டாள். அன்று நாளெல்லாம் அறைக்குள் ஒளிந்திருந்து மாலை ராஜி வேலை விட்டு வந்தவுடன் அழுதழுது சொன்னாள். ராஜி அவளை அணைத்துக் கொண்டாள். சிரித்துத் தலையைத் தடவிக் கொடுத்தாள். தனக்குத் தெரிந்த சில சடங்குகளை அடக்கமாகச் செய்தாள்.

வீடு பத்மாவை கொஞ்சம் அருவருப்பாகப் பார்த்தது. பாஸ்கரனின் பார்வையில் காமம் கூடியிருந்தது. அவன் நாசியில் மோப்பம் கூடியிருந்தது. வீட்டில் அதிகமாகத் தங்க ஆரம்பித்திருந்தான். பத்மா அவனைப் பார்த்து வெருண்டிருந்தாள். ஆனால் புறாக் கூடான அந்தச் சின்ன வீட்டில் ஒளிய இடமில்லை. பயந்தாலும் தவிர்க்க முடியாது. வளைய வளையத்தான் வரவேண்டும்.

ஒரு நாள் ராஜி வீடு திரும்பிய போது பத்மா கசங்கிக் கிடந்தாள். ராஜியின் தோள்களைக் கட்டிக் கொண்டு கதறினாள். "அந்த அண்ணன், அந்த அண்ணன் என்னைப் பிடிச்சி கீழ தள்ளி...." தொடைகளில் ரணம் இருந்தது.

ராஜி வெகுண்டெழுந்தாள். மாமியிடம் சொன்னாள். மாமி எதிர்க் கோபம் காட்டினாள். "இது என்ன அநியாயம்! பாஸ்கரன் இன்னக்கி முழுக்க வீட்டுக்கே வரலியே... அவன் மேல இப்படிப் பொய்ச்சாட்டு சாட்டுதே இந்த சனியன்..." என்றாள்.

"நீங்க இன்னக்கி முழுக்க வீட்டில இருந்திங்களா?" என்று கேட்டாள் ராஜி.

"ஆமா வீட்லதான் இருந்தேன்...!" என்றாள் மாமியார்.

"இல்லக்கா, இந்த மாமி கடைக்குப் போறன்னிட்டு போனாங்க, அப்பதான்..." என்றாள் பத்மா விக்கலுக்கிடையே.

"ஆமா ஒரு அஞ்சி நிமிஷம் போனேன்! அதுக்கென்ன? அதுக்குள்ள ஒரு கதய ஜோடிச்சிட்றதா?" என்றாள் மாமியார்.

மைத்துணனை வீட்டில் காணவில்லை. சேகரன் இரவு வந்ததும் அவனிடம் சொன்னாள். எடுத்தவுடன் "சீச்சீ அப்படி இருக்காது!" என்றான் சேகரன்.

இரவு விளக்கணைத்து அத்தனை பேரும் மனதில் தணல்களைச் சுமந்துகொண்டு தூங்காமல் சாய்ந்திருந்த நேரத்தில் எங்கோ திரியப் போயிருந்த பாஸ்கரன் சத்தம் போடாமல் வந்து கதவு திறந்தான். சேகரன் பேசாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து "நான் போய்க் கேக்கிறேன்!" என்று எழுந்தாள் ராஜி.

"இரு இரு! நானே போய்க் கேக்கிறேன்!" என்று அப்புறம் அவன் எழுந்து போனான். அவன் அம்மாவின் அறைக்குள் கூடித் தணிந்த குரலில் சச்சரவிட்டார்கள். சேகரன் திரும்பி வந்தான்.

"என்னங்க?" என்றாள் ராஜி.

"ஒன் தங்கச்சி பொல்லாதவ ராஜி. இதுக்குத்தான் அவள இங்க சேக்காதேன்னு சொன்னேன்."

"ஏன்? அவ என்ன பண்ணினா?"

"பாஸ்கரன் மேல இத்தன அநியாயமா சொல்றாளே! அவன் சாப்பிட்டுட்டு வெளிய போனவன் இப்பதான் வர்ரான்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதாம்! அம்மாவும் அப்படிதான் சொல்றாங்க!"

"அப்ப பத்மா இப்படி ஒரு பொய்ய இட்டுக் கட்டிச் சொல்றாளா?"

"யாரோ ஒரு பையனோட அவளுக்குத் தொடர்பு இருக்காம். அவனாத்தான் இருக்கும்னு பாஸ்கரன் சொல்றான்!"

குளிக்காமல் உடை மாற்றாமல் அறைக்குள் துவண்டு கிடந்த பத்மாவை இழுத்து வந்தாள் ராஜி. "சொல்லுடி! யாரோ இன்னொரு பையனாமில்ல! அப்படியா?"

"ஐயோ!" என்று அழுதாள் பத்மா. "அந்தப் பையன் இல்லக்கா. நான் பள்ளிக்கூடத்தில இருந்து வரும்போது அவனோட நடந்து வர்ரத இந்த பாஸ்கரன் அண்ணன் பாத்திருக்கு. ஒருநாள் என்ன மிரட்டினிச்சி. "ஒன்னோட போய் ·பிரண்டான்னு கேட்டிச்சி!" இல்லைன்னேன். தான் செஞ்சிட்டு அவன் மேல வீணா பழி போடுதுக்கா!"

சேகரன் எரிந்து விழுந்தான். "யார நம்பப் போற நீ? என் தம்பின்னா அவ்வளவு இளக்காரமா? அவன் இந்த மாதிரி காரியத்த எல்லாம் செய்ய மாட்டான். இந்த பொய்க்கார நாயோட நடிப்பப் பார்த்து அவன குத்தம் சொல்லாத! இந்த நாய எங்காவது தெரத்து!" அவன் போய்ப் படுத்து விட்டான்.

தன் ஆத்திரத்துக்கு தங்கையின் முதுகில் ரெண்டு போட்டுவிட்டு அவளை அவள் ஸ்டோர் ரூம் அறைக்குள் இழுத்துக் கொண்டு போகும் போது பாஸ்கரன் தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். பத்மாவை முறைத்தான். "பிளடி ப்ராஸ்டிடியூட்" என்று சொல்லிவிட்டு வெடுக்கென்று அறையில் புகுந்து சாத்திக் கொண்டான்.

பத்மா "ஓ"வென்று அழுதாள். ராஜியின் ரத்தம் கொதித்தது. பத்மாவை அங்கேயே விட்டுவிட்டுத் தன்னறைக்கு வந்து கணவனை உலுக்கினாள். "என்ன சொன்னான் கேட்டிங்களா உங்க தம்பி?"

"என்னா?" என்றான்.

"செய்றத செஞ்சிட்டு என் தங்கச்சிய தேவடியாங்கிறாங்க!"

வெளியே யாரோ அலறினார்கள். ராஜியும் சேகரனும் ஓடி வந்த போது பாஸ்கரனின் அறை திறந்து கிடந்தது. பத்மா உள்ளே இருந்தாள். அவள் கையில் தேங்காய் உரிக்கும் அரிவாள் இருந்தது. அதை ஓங்கி ஓங்கிக் கொத்திக் கொண்டிருந்தாள். சேகரனின் மண்டையிலும் நெஞ்சிலும் கைகளிலும் வெட்டிப் பிளந்த காயங்களிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவன் கீழே விழுந்து கிடந்தான்.


*** **** ****

போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.

போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.

சேகரன் கொதித்தான். "கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி" என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது சஉஆத்


போலிசும் ஆம்புலன்சும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தன. ஆம்புலன்சில் வந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பாஸ்கரன் செத்துவிட்டிருந்தான்.

போலீசில் வாக்கு மூலம் எடுத்தார்கள். இரத்தத்தின் மாதிரியும் விந்துவின் மாதிரியும் எடுத்துக் கொண்டார்கள். உடலை சவப் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பத்மாவை போலிஸ் காரில் ஏற்றி நிலையத்தில் தடுத்து வைத்தார்கள். சேகரன் வர மறுத்து விட ராஜி மட்டும் உடன் போய் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தாள்.

சேகரன் கொதித்தான். "கொலைகாரி, குடும்பத்தை அழித்த நாசகாரி" என்று இரவு முழுக்கக் கத்தினான். அவனோடு அவன் அம்மாவும் சேர்ந்து கொண்டு கத்தினாள். பாஸ்கரன் என்ன செய்தான் என்பது பற்றி இருவரும் பேசவில்லை. ராஜி பிள்ளைகளை அணைத்துக் கொண்டு இரவு முழுக்க ஒடுங்கிப் போயிருந்தாள். போலிஸ் லாக்கப்பில் நடுங்கிச் சுருண்டுப் போயிருக்கும் அந்தப் பனிரெண்டு வயது பெண்ணின் உருவமே நினைவுக்கு வந்து அவளை வதைத்தது.

சவச்சடங்குகள் முடிந்து கொதிப்புக் கொஞ்சம் தணிந்திருந்த ஒரு காலையில் கணவனிடம் கேட்டாள் ராஜி: "ஏங்க! பத்மாவுக்கு லாயர் ஏதாச்சும் ஏற்பாடு பண்ண வேணாமா?"

தணிந்திருந்தவன் மீண்டும் கிளர்ந்து எழுந்தான். "என்ன ராஜி பேசிற? எதுக்கு லாயர்? அந்தச் சனியன நானே தூக்கில போடுவேன்! இதுக்கு லாயர் வேற கேக்குதா?"

"ஏற்பாடு பண்ணாம எப்படிங்க?"

"என் தம்பிய கொன்னவளுக்கு நானே லாயர் ஏற்பாடு பண்றதா? ஊர் சிரிக்காது? மூடு வாய!"

ஊர் ஏன் சிரிக்கும் என ராஜிக்கு விளங்கவில்லை. ஆனால் வாயை மூடிக் கொண்டாள். இங்கு தனது பேச்சு எடுபடாது என விளங்கிக் கொண்டாள்.

பிற்பகலில் தனக்குத் தெரிந்த தொழிற்சாலை மேலாளர் மூலமாக ஒரு வழக்கறிஞரைப் பார்த்துப் பேசினாள். மூர்த்தி என்ற அந்த இளம் வழக்கறிஞர் அக்கறையாகக் கேட்டு பத்மாவைத் தற்காக்க ஒப்புக்கொண்டு உடனடியாக பத்மாவைப் போய்ப் பார்த்து விட்டும் வந்தார்.

பத்மாவை தற்காலிகமாக இளங் குற்றவாளிகள் நிலையத்தில் இருக்க வைத்தார்கள். வழக்கு நடக்கும் நாட்களில் மட்டும் ராஜி அவளைப் பார்க்க முடிந்தது.

ராஜி தற்காப்பு சாட்சியாக வரவேண்டும் என பத்மாவின் வழக்கறிஞர் கேட்டபோது அவள் ஒப்புக் கொண்டாள். ஆனால் சேகரன் கடுமையாக எதிர்த்தான். "அவதான் என் குடும்பத்த அழிச்சான்னா நீயும் சேர்ந்து எங்களுக்கு அவமானத்தப் பூசப் போறியா? நான் என் தம்பிக்கு சார்பா சாட்சியம் சொல்லப் போறேன், நீ எனக்கு எதிரா சாட்சியம் சொல்லப் போறியா? ஒனக்கு ஒன் தங்கச்சி முக்கியமா புருஷன் முக்கியமா?" என்று கேட்டான்.

"புருஷன் முக்கியந்தாங்க. ஆனா அவள இப்படி அனாதரவா விட்டுட்றதா? அவளுக்குள்ள ஒரே பந்தம் நான்தானே!"

"முடியாது. நீ அவளுக்கு சாதகமா சாட்சியம் சொல்றதுன்னா நமக்குள்ள உறவு அத்துப் போயிடும் பாத்துக்க!"

இரவு முழுவதும் அழுதிருந்துவிட்டு சாட்சி சொல்லும் காலை வேளையில் தெளிவானாள் ராஜி. அன்று வழக்குக்கு அனைவரும் போனார்கள். அவர்கள் வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி பார்வதி அத்தை என்ற ஒரு நடுவயது விதவை தன் மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவளிடம் குழந்தைகளை விட்டுவிட்டுப் போனார்கள்.

சேகரன் தன் தம்பியின் கொலை பற்றி சாட்சியம் சொன்னான். பத்மா எப்போதும் பைத்தியம் போல் நடந்து கொள்வாள் என்றும் பாஸ்கரனை எப்போதுமே வெறுத்தாள் என்றும், வேறு யாராலோ கற்பழிக்கப்பட்டு அதிலிருந்து தப்ப பாஸ்கரன் மேல் பழிபோட்டு அவன் அதை மறுக்க வெறி பிடித்துக் கொலை செய்தாள் என்றும் அவன் சாட்சியம் இருந்தது.

ராஜி கூண்டிலேறி உண்மையைச் சொன்னாள். சேகரனின் முறைக்கும் விழிகளைச் சந்திக்காமல் தவிர்த்துப் பேசினாள். பாஸ்கரன் மேல் ஏற்கனவே உள்ள ஒழுங்கீனங்களைப் பற்றிச் சொன்னாள். தற்காப்பு வழக்கறிஞர் பாஸ்கரனின் ஒழுங்கீனம் பற்றி சாதிக்க இன்னும் இரண்டு சாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்.

விந்துப் பரிசோதனையில் பத்மாவின் தொடையில் இருந்தது பாஸ்கரனின் விந்துதான் என உறுதிப் படுத்தப் பட்டிருந்தது. சவத்தின் முதுகிலிருந்த கீறல்கள் பத்மாவின் நக அமைப்புக்குச் சரியாக இருந்தன. மற்ற காயங்களும் தொடைச்சிராய்ப்புகளும் பத்மா தனியறையில் நீதிபதிக்குச் சொன்ன விவரங்களோடு ஒத்திருந்தன.

"இது தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தினால் உணர்ச்சி மேலீட்டால் ஓர் இளம் பெண் செய்த கொலை என இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இது தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலை அல்ல. சம்பவம் நடந்து முடிந்த சில மணி நேரத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்ட கொலை என்றே கருத வேண்டியுள்ளது. இதில் மூர்க்கம் உள்ளது. இது குற்றமே. ஆனால் இந்தக் குற்றம் நடந்த எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இந்தக் குற்றவாளி இரண்டு ஆண்டுகள் இளங் குற்றவாளிகள் நிலையத்தில் வைக்கப்பட்டு போதனை புகட்டப்படவேண்டும் என நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது."

பத்மா "அக்கா" என்று அலறியவாறே போனாள். ராஜியால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது.

வழக்கறிஞரைப் பார்த்து நன்றி சொன்னாள் ராஜி. "என்னால செய்ய முடிஞ்சது அவ்வளவுதாம்மா!" என்றார் அவர். வழக்கறிஞரின் இந்தத் தற்காப்பு இல்லை யென்றால் பத்மா ஐந்து முதல் ஏழாண்டுகள் சிறைக்குச் சென்றிருக்கலாம் என்பதை ராஜி அறிந்து வைத்திருந்தாள்.

"உங்களுக்கு எவ்வளவு ·பீஸ்னு நீங்க சொல்லியே!" என்று ராஜி கேட்டாள்.

மூர்த்தி யோசித்தார். "நீங்க இவ்வளவு தைரியமா உங்க புருஷன எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட சாட்சியம் சொன்னதே எனக்கு மகிழ்ச்சி! இதுக்கு மேலும் உங்க புருஷனக் கோபப் படுத்தாம நீங்க எவ்வளவு பணம் எனக்குத் தரமுடியும், சொல்லுங்க!"

"என் தனி சேமிப்பா ஒரு ஆயிரம் ரிங்கிட் வச்சிருக்கேன்! அவ்வளவுதான்"

"அதில ஒரு ஐநூறு ரிங்கிட் கொண்டாந்து கொடுங்களேன்! "

மூர்த்தி போய்விட்டார். ராஜியின் மனதுக்குள் இடையறாத அந்தத் துயரச் சுழலிலும் ஒரு நல்ல உணர்வு குமிழியாக மேலே மிதந்து வந்தது.



*** *** ***

கடுகடுப்பும் எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுதலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குடும்பத்தைக் குலைத்தவள் என்ற ஏச்சுக்களும் கணவன் கட்டிலறையில் கட்டையாக விறைத்துப் போய்க் கிடத்தலும் என்று ஆறுமாதங்கள் அந்த வீட்டில் புயல் அடிப்பதும் அப்புறம் பனிக்கட்டியாக உறைந்து போவதுமாக காலம் ஓடிற்று. மாமியாரின் புறக்கணிப்பையும் கோபத்தையும் பொறுக்க முடியாமல் ராஜி குழந்தைகளை அந்த மூன்றாம் வீட்டு பார்வதி அத்தையிடம் அடிக்கடி விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அப்புறம் காயங்கள் கொஞ்சம் ஆறி குடும்பம் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கியிருந்தது. பாஸ்கரன் அந்த வீட்டில் இல்லாமல் போனதால் கொஞ்சமாக சுதந்திரக் காற்றுக் கூட வீசத் தொடங்கியிருந்தது. மாமியார் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். ஆனால் ராஜியோடு பேசுவது அடியோடு குறைந்து விட்டது. சேகரன் வீட்டு விஷயங்கள் பற்றி மட்டும் பேசுவான். இரவில் அவனுடைய அணைப்புக்கள் இயந்திரத் தனமாக இருந்தாலும் முறையாக நடந்தன.

பத்மாவை இருமுறை ரகசியமாகப் போய்ப் பார்த்து வந்தாள் ராஜி. முதன் முறை போகும் போது அவளை இருள் படிந்த அறைக்குள் விலங்கு போலக் கட்டிப் போட்டிருப்பதை கற்பனை செய்துகொண்டு போன அவளுக்கு இன்பமான அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளங்குற்றவாளிகள் நிலையம் பிரகாசமாக இருந்தது. கடுமையும் கண்டிப்பும் இருந்தாலும் மனவளர்ச்சியை அதிகரிக்கும் பாடங்களும் கைத்தொழில்களும் கற்றுக் கொடுத்தார்கள். ஓர் இந்து சமயப் பிரச்சாரகர் வாரம் ஒரு முறை வந்து தேவாரம் திருவாசகம் கற்றுக் கொடுப்பதாகக்கூட ராஜி அறிந்து கொண்டாள்.

பத்மா சந்தோஷமாக இருந்தாள். அக்காவைப் பார்த்து முதலில் வாய்நிறையச் சிரித்தவள் அப்புறம் தான் அநியாயமாகத் தனிப்படுத்தப் பட்டதை எண்ணியோ என்னவோ ஓவென அழுதாள். இந்தச் சின்னப் பிள்ளையைத் தாயாக இருந்து தன்னால் அன்பாக வளர்க்க முடியவில்லையே என ராஜியும் அழுதாள்.

பத்மா அந்தப் பள்ளியிலுள்ள எல்லாரையும் கவர்ந்திருந்தாள். ராஜி சந்தித்த மலாய், சீன அதிகாரிகள் அவள் மிகவும் ஒழுக்கமான பெண் எனவும் பள்ளியில் மிக உதவியாக இருக்கிறாள் எனவும் சொன்னார்கள்.

ஆனால் இந்த இளந்தளிரைச் சுற்றிச் சில பயங்கரமான இளம் பெண் குற்றவாளிகள் இருந்தார்கள். விபச்சாரிகளாகவும் குழந்தைக் கொடுமை செய்தவர்களாகவும் பழக்கப்பட்ட திருடர்களாகவும் போதைப் பொருள் பழக்கம் உள்ளவரள்களாகவும் பலர் இருந்தார்கள். அவர்களைப் பற்றி பத்மா கதை கதையாகச் சொன்னாள். இவர்களிடம் காயப்பட்டு பத்மா மனத்தழும்புகள் இல்லாமல் மீண்டு வர வேண்டுமே என்று ராஜி கவலைப்பட்டவாறு திரும்ப வந்தாள்.

*** *** ***

பத்மா இல்லாமற்போன இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டார் ரூமில் அடையத் தொடங்கிவிட்ட பழைய சாமான்களை அகற்றிக் கூட்டிச் சுத்தப் படுத்தினாள் ராஜி. தண்ணீர் விட்டுக் கழுவும்போது கொஞ்சம் ரத்தக் கறையும் கொஞ்சம் விந்துக் கறையும் கூட இன்னும் இருப்பது போல அவளுக்குப் பட்டது. அது வெறும் மனப்பிரமை எனச் சொல்லிக் கொண்டாள். இரண்டு பலகைகள் வைத்து ஒரு பாயை விரித்தவுடன் அது படுக்கையாயிற்று. தனது இரண்டு தலையணைகளில் ஒன்றைக் கொண்டு வந்து போட்டாள். மங்கலான பழைய பல்பு ஒன்று இருந்தது. போதும்.

மாமியார் கொஞ்ச நேரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போனாள். அப்புறம் ஏதோ முனகியவாறு பாத்திரங்களைக் கழுவும் சாக்கில் சத்தமாக உருட்டிக் கொண்டிருந்தாள்.

ராஜி பிற்பகல் வேலைக்குப் போய் ஏழு மணி வாக்கில் வீடு திரும்பிய போது சேகரன் வந்து விட்டிருந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே அவன் முகம் கடுகடுத்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. குழந்தைகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் தனக்குத் தேநீர் கலப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்த போது பின்னாலேயே வந்தான்.

அவள் கேத்தலில் நீர் நிரப்பி கேஸ் அடுப்பின் மீது வைத்தாள்.

"ஸ்டோர் ரூமை ஒழிச்சி வச்சிருக்கியாமே!" என்று கேட்டான். மாமியார் ஓதியிருக்கிறாள் எனத் தெரிந்தது.

அடுப்பின் விசையைத் தட்டினாள். அடுப்பு "குப்" என்று பற்றியது. "ஆமா!" என்றாள்.

"ஏன்?"

"ரொம்ப அழுக்கா கிடந்திச்சி!"

"படுக்கையெல்லாம் போட்டிருக்கியாமில்ல!"

"ஆமா!"

"ஏன்?"

ஒரு கோப்பையை எடுத்து தேத்துகள் பையைப் போட்டாள். கொஞ்சம் மௌனித்துச் சொன்னாள்: "நாளைக்கு பத்மாவ போய் அழச்சிக்கிட்டு வரப் போறேங்க!"

அவன் கோபத்தில் மூச்சிரைத்தான். "இதப்பத்தி ஒங்கிட்ட முன்னமே நான் சொல்லியிருக்கேன்ல?"

"ஆமா!"

"என்ன ஆமா?"

"ஆமா, சொல்லியிருக்கீங்க!"

"அப்ப நீ செய்றது திமிர்தான?"

கேத்தல் நீண்ட விசில் அடித்தது. அவள் அடுப்பை அணைத்து கொதிநீரை எடுத்து கோப்பையில் ஊற்றினாள்.

"சொல்லுடி, திமிர்தான!"

"இல்லிங்க!"

"என்ன இல்ல? நானும் அம்மாவும் இவ்வளவு சொல்லியும் எங்க பேச்ச கேக்காம நீ பாட்டுக்கு உன் விருப்பம் போலச் செய்றதுன்னா, அது திமிர் இல்லியா?"

"இல்லைங்க அதுக்குப் பேரு மனிதாபிமானம்!" தேத்துகள் பை கொதி நீரில் ஊறிக் கொண்டிருந்தது.

"எதுடி மனிதாபிமானம்? ஒரு கொலைகாரியைக் கொண்டு வீட்ல வச்சிக்கிறது மனிதாபிமானமா?"

"அவ கொலைகாரி இல்ல. இதுக்கு முன்னால ஒரு புழுவைக் கூட அவ வேணுமின்னு கொன்னதில்ல. அவ பச்சப் பிள்ள!"

கோப்பையிருந்து தேத்துகள் பையை அகற்றி பால் விட்டுக் கலக்கினாள். சீனி போட்டுக் கொள்ளவில்லை.

"ஓஹோ! பச்சப் பிள்ளதான் அரிவாள எடுத்து கொத்து கொத்துன்னு கொத்தினாளோ?"

"அவள அப்படி கொத்த வச்சதினால கொத்தினா! அவளோட மனச அந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தினதினால அடக்க முடியாம....!"

"அவ ஒரு கொலைகாரப் பேய்!" இதுவரை மறைந்து நின்றிருந்த மாமியார் முன்னுக்கு வந்து கத்தினாள். "ஒரு சாதாரண பொண்ணா இருந்தா ஒரு கத்தி எடுத்து ரத்தத்துக்கு பயப்படாம கொத்து கொத்துன்னு கொத்த முடியுமா? உன்னாலியும் என்னாலியும் முடியுமா" என்று கேட்டாள்.

ராஜி அவளை முறைத்தாள். "முடியும் அத்தை! ஏன் முடியாம? இப்ப நீங்க வார்த்தைகளால அவள நாய் பேய்னு கொத்தல? போன ஒரு வருஷமா அவள மனசுக்குள்ளியே நீங்க கொத்தல? அப்படித்தான்"

மாமியார் அதிர்ந்து நின்றாள். ராஜி தேநீரைத் தூக்கி உதட்டருகே கொண்டு உறிஞ்ச முயன்றாள். உதடுகள் துடித்தன. தொண்டை அடைத்திருந்தது. குடிக்க முடியவில்லை.

சேகரன் அறைக் கதவை ஓங்கிக் குத்தினான். "ஓக்கே! நீ ரொம்ப தலைக்கு மேல போயிட்ட! இப்படியே விட்டா முடியாது. நீ உன் தங்கச்சிய இந்த வீட்டுக்குள்ள கொண்டு வர முடியாது. இது என்னோட கட்டளை!"

கொஞ்சம் குரல் இறங்கிச் சொன்னாள்: "இதோ பாருங்க! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அவளுக்கு வேற யார் இருக்கா? எங்க போவா? வேற வழியே இல்ல!" என்றாள்.

"வேற வழி இல்லியா? இருக்குடி. நீ இந்த வீட்ட விட்டு வெளியே போய் அவளோட குடும்பம் நடத்து. நீ அவளோட தொடர்பு வச்சிக்கிறதுன்னா நம்ம உறவு அறுந்து போகும். நானும் நீயும் கணவன் - மனைவி இல்ல!"

கோப்பையைக் கீழே வைத்தாள். "சரி" என்றாள்.

சேகரன் அதிர்ந்தான். "என்ன சரி?"

"அதான் ஒவ்வொரு முறையும் உறவு அறுந்து போகும்னு மிரட்டிக்கிட்டே இருக்கிங்கள! அவ்வளவு சுலபமா அறுத்துட முடியும்னா அறுத்துக்கத் தயார்! என் தங்கச்சிய நானே தனியா வச்சி காப்பாத்திறேன்"

ஒரு கணம் மௌனம் கனத்தது. மாமியார் முன்னே வந்தாள். "என்னடி பேசிற? ஒரு குற்றவாளிச் சிறுக்கிக்காக குடும்பத்த விட்டுப் போறேங்கிறியா?"

"அவ குற்றவாளிச் சிறுக்கி இல்ல. என் தங்கச்சி. குடும்பத்த விட்டு நான் போகல. நீங்கதான் வெரட்டுறிங்க!"

"சம்பாரிக்கிறோம்கிற திமிரா?" என்றான் சேகரன்.

"ஏன் இருக்கக்கூடாது? உங்களுக்கு சம்பாதிக்கிற திமிர் இருக்கும்போது உங்களுக்கு சமமா சம்பாதிக்கிற எனக்கு இருக்கக்கூடாதா?"

"உன்ன..." சீறிக் கொண்டு முன்னால் வந்து முஷ்டியை முறுக்கி ஓங்கினான். முகத்துக்கு முன்னால் வந்ததும் முஷ்டி அப்படியே உறைந்து நின்றது.

கையை இறக்கிக் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நடந்தான். மூச்சிரைத்தான். "அப்ப வீட்டவிட்டு வெளியே போயிடுவ?"

"ஆமா!" என்றாள்.

"அப்ப புள்ளைங்க?"

"உங்க இஷ்டம். நீங்களே வச்சிக்கலாம். வேண்டான்னா என்னோட அனுப்பலாம்!"

"புள்ளங்கள ஒருகாலும் ஒன்னோட அனுப்பி அந்த கொலைகாரியோட வாழ வைக்க மாட்டேன்!"

"சரி!"

"புள்ளங்கள விட்டுப் போக நீ தயாரா?"

"தயார்தான்!"

"போய் எங்க இருப்ப?"

"இதோ மூணாவது வீட்டில பார்வதி அத்தை இருக்காங்க. அவங்க ரூம் தர்ரன்னு சொல்றாங்க. அங்கயே இருந்துக்குவோம் நானும் பத்மாவும்!"

அவன் கண்களில் தணல் பறக்க முறைத்தான். மாமியாரும் முறைத்தாள். இருவரின் பார்வைத் தீக்கதிர்கள் மத்தியில் ராஜி தனது தேநீரை மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

*** *** ***

கொஞ்ச நேரம் கழித்து மாமியார் திடுதிடுவென்று அந்த பார்வதி அத்தை வீட்டுக்குப் போவது தெரிந்தது. ராஜி பின்னாலேயே போனாள்.

"எங்க வீட்டு மருமகளுக்கு இங்க ரூம் கொடுக்கப் போறிங்களா?" என்று சத்தமாகக் கேட்டாள் மாமி.

பார்வதி அத்தை ஏன் இந்த இருட்டு நேரத்தில் இந்த அம்மாள் சத்தம் போடுகிறாள் என்று புரியாமல் மேலும் கீழும் பார்த்து அமைதியாகச் சொன்னாள்: "ஒரு ரூம் காலியா இருக்கு, அதுக்கு யாராவது ஆள் பார்த்துக் குடுன்னு நாந்தான் ராஜிக்குச் சொல்லியிருந்தேன்!"

"அவ யாரக் குடி வைக்கப் போறா தெரியுமா?"

ராஜியைக் குழப்பமாகப் பார்த்தாள் பார்வதி மாமி. "எனக்கு சொல்லலிய அம்மா. யார்னு சொல்லலிய!"

"நான் சொல்றேன். அவ தங்கச்சி, அந்தக் கொலைகாரப் பிசாசு விடுதலை ஆகி வர்ராளாம். அவளக் கொண்டாந்து குடி வைக்கப் போறாளாம்!"

"அப்பிடியா? எனக்குத் தெரியாதே" பார்வதி மாமியின் குழப்பம் மேலும் அதிகமானது.

"அவளோட இவளும் வந்து இங்கயே இருக்கப் போறாளாம்!"

"அப்படியா ராஜி?" என்று திகைத்துக் கேட்டாள் பார்வதி அத்தை.

ராஜி பேசாமல் இருந்தாள்.

"ஏம்மா அப்படி? ஏன் ராஜி உங்க வீட்டவிட்டு இங்க வந்து இருக்கணும்?" என்று கேட்டாள் பார்வதி அத்தை.

"ஏன்னா, கொலைகாரிக்கு எங்க ஊட்ல எடம் இல்லன்னு சொன்னோம். அவள கூட்டிக்கிட்டு வந்தா எங்க ஊட்ல ஒனக்கும் இடம் இல்லன்னு சொன்னோம்! அதினால புள்ளங்களயும் புருஷனையும் விட்டுட்டு இங்க வந்து இருப்பாளாம்!"

"அப்படியா ராஜி?" பார்வதி அத்தையின் திகைப்பும் குழப்பமும் உச்சத்துக்குப் போயிருந்தன. ராஜி பேசாமல் இருந்தாள்.

"எத்தன கொளுப்பு நெஞ்சளுத்தம் பாத்திங்களா ஒரு பொம்பிளைக்கு? நீங்க எடம் கொடுப்பிங்கிளா? ஒரு கொலகாரிய வீட்டில வச்சிக்குவிங்களா?" மாமியார் கத்தினாள்.

பார்வதி அத்தை மாமியாரை நேராகப் பார்த்தாள். "உங்க மகன் கற்பழிச்சதினால வெட்டிட்டுப் போன சின்னப் பொண்ணப் பத்திதான சொல்றிங்க? நல்லா வந்து இருக்கட்டும். தன்னுடைய மானத்த காத்துக்கத்தான செஞ்சா? அதில என்னா தப்பு?"

மாமியார் அதிர்ச்சி அடைந்து நின்றாள். அப்புறம் கத்தினாள்: "என்னா தப்பா? நாளக்கி உங்களயும் அரிவாள எடுத்து வெட்ட மாட்டான்னு என்ன நிச்சயம்?"

"என்ன ஏன் வெட்டிறா? நான் என்ன அவளக் கீழத் தள்ளி கற்பழிக்கப் போறேனா?"

"அப்ப?"

"என்ன அப்ப? இந்த வீட்டில ராஜியோட தங்கச்சிக்கு எடம் வேணுமின்னா நான் குடுக்கத் தயார். நீங்க வெரட்றதினால ராஜியும் இங்க வந்து இருக்கிறதுன்னா அவளுக்கும் எடம் குடுக்கத் தயார்! அவ்வளவுதான்! உங்க குடும்ப சச்சரவ உங்களோட வச்சிக்குங்க!" என்றாள் பார்வதி அத்தை.

சேகரன் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தான். அவனோடு வந்திருந்த குழந்தைகள் இருவரும் பார்வதி அத்தை வீட்டில் சுதந்திரமாக உரிமையோடு நுழைந்து வேடிக்கை பார்த்தார்கள்.

"அம்மா இங்க வா!" என்று எரிச்சலுடன் கூப்பிட்டான் சேகரன். மாமியார்க்காரி வெளியே போனாள். தங்கள் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று இருவரும் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்து வீட்டார்கள் எட்டி எட்டிப் பார்த்தார்கள். அதைப் பொறுக்க முடியாமல் தாயின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு உள்ளே போனான் சேகரன்.

ராஜி பார்வதி அத்தையை நன்றியுடன் பார்த்துவிட்டுக் குழந்தைகளின் தலையைப் பாசத்துடன் கோதிவிட்டாள்.

"சின்னம்மா எப்ப வரும் அம்மா?" என்று மூத்த பெண் கேட்டாள்.

"நாளைக்கு!" என்றாள் ராஜி.

(முடிந்தது)
(இக்கதை “கணையாழி” இதழ் நடத்தும் சம்பா நரேந்திரர் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பிரசுரம்: ·பெப்ரவரி 2, 1999. )

-------------

ரெ. கார்த்திகேசு குறுநாவல்:
நல்லவராவதும் தீயவராவதும்


ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட உழைத்ததில் வீட்டில் சமைக்க முடியவில்லை. பிள்ளைகள் ரொட்டியும் கடையில் வாங்கிய குழம்புமாக கிடைத்ததைத் தின்றுவிட்டுப் பள்ளிக்கூடம் போவதைத் தொழிற்சாலையில் இருந்த நேரத்திலெல்லாம் நினைத்துக் கவலைப் படுவாள் பார்வதி.

இன்றையிலிருந்து ஒரு வாரத்துக்கு மத்தியான ஷி·ப்ட். காலையில் மார்க்கெட் போய் பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்து விட்டுத் தானும் சாப்பிட்டுப் போகலாம். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சின்னவள் லட்சுமிக்குக் காலைப் பள்ளிக் கூடம். பஸ் ஸ்கோலாவில் போய் வந்து தானாகப் போட்டுச் சாப்பிடுவாள். பெரியவன் முத்தையா இரண்டாம் பாரம் படிக்கிறான். மத்தியானப் பள்ளிக் கூடம். சைக்கிளில் போவான். அவனை உட்கார வைத்து சாப்பாடு போட்டு அனுப்பலாம்.

கறி அடுப்பில் பாதி கொதித்துக் கொண்டிருக்க வியர்வையை வழித்தவாறு அவள் திரும்பிய போது முத்தையா பள்ளிச்சீருடையெல்லாம் போட்டுக் கொண்டு தயாராக நின்றான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இப்போதுதானே மணி பதினொன்று! அதற்குள் ஏன் இவன்...?

"என்ன முத்தையா, அதுக்குள்ள கிளம்பிட்டே?" என்றாள்.

"இன்னைக்கு டெஸ்ட் இருக்கும்மா. அதினால நானும் ·பிரன்டும் அவன் வீட்டில வெள்ளன உக்காந்து கொஞ்ச நேரம் படிக்கப் போறோம்" என்றான்.

அவளுக்கு சந்தோஷமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. முன்பெல்லாம் நன்றாகப் படிக்கிற பிள்ளைதான். ஆனால் போன வருஷத்திலிருந்து அவனுக்கு மார்க்கெல்லாம் குறைந்து விட்டது. தான் வீட்டிலிருந்து அவனைப் படிக்கச் சொல்லி ஒழுங்காகக் கவனிக்க முடியாததுதான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு அதிகமாக இருந்தது. ஆகவே பிள்ளை தானாகவே டெஸ்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று கிளம்பியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இன்றைக்கென்று சாப்பிடாமல்...

"கொஞ்சம் இருந்து ஒரேயடியா சாப்பிட்டுட்டு போயேம்பா. இன்னைக்குன்னு அம்மா ஒனக்காகத்தான நல்ல கறி ஆக்கிக்கிட்டு இருக்கேன்...!"

"நேரம் இல்லம்மா. சாப்பிட்டுப் போக நேரம் ஆயிடும். ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்" அவன் சைக்கிளில் ஏறிப் போவதை அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த பிள்ளைதான் படித்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டும். நல்லவன்தான். குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன்தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எப்படியோ அவனுக்கு வாய்த்த நண்பர்கள் சரியில்லை.

போன வருஷம் அவன் தமிழ்ப் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு முதல் பாரத்தில் படிக்க தேசியப் பள்ளியில் சேர்ந்தபோது கேசவன் என்ற ஒரு பையனோடு விடாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் படிப்பில் அக்கறை குறைந்தது. மார்க்குகள் குறைந்தன. பள்ளிக்கூடத்திற்கு அவன் முறையாக வருவதில்லை என்று அங்கிருந்து கடிதம் வந்தது.

கேசவன் நல்ல பிள்ளையில்லை என்று பார்வதி கேள்விப்பட்டிருந்தாள். அவன் குடும்பம் சிதைந்த குடும்பம். தலைவன் இல்லாத குடும்பம். ஏறக்குறைய பார்வதியின் குடும்பத்தைப் போலத்தான். ஆனல் பார்வதிக்குக் குடும்பத்தின் மேல் உள்ள அக்கறை கேசவனின் தாய்க்கு இருக்கவில்லை. அவள் மிகச் சுதந்திரமாகக் கெட்டுத் திரிந்து அவன் தலையிலும் தண்ணீர் தெளித்துச் சுதந்திரமாகக் கெட்டுத் திரியவிட்ட மாதிரிதான் இருந்தது.

"ஏம்பா, அந்தக் கேசவனோட உனக்கென்ன அவ்வளவு நெருக்கம்? அவன் நல்லவன் இல்லன்னு எல்லாரும் சொல்றாங்களே!" என்று பார்வதி ஒருநாள் விசாரித்துப் பார்த்தாள்.

"சும்மாதாம்மா! அவன்தான் அடிக்கடி கூப்பிட்றான். நான் அவ்வளவு வச்சிக்கிறதில்ல!" என்றான் முத்தையா.

"ஜாக்கிரதப்பா! அப்பனில்லாத பிள்ளைகளா நாந்தான் உங்கள வளக்க வேண்டியிருக்கு. நீதான் படிச்சி முன்னுக்கு வந்து குடும்பத்த காப்பாத்தணும். என் நம்பிக்கைய வீணாக்கிடாத!"

"சரிம்மா, எனக்குத் தெரியும்மா. நீங்க கவலப்படாதீங்க" என்றான் முத்தையா.

ஆனால் அப்புறமும் ஒரு நாள் அந்தக் கேசவனோடுதான் இவன் சுற்றுகிறான் என்று செய்தி வந்தது. பள்ளிக்கூட நேரத்தில் இருவரையும் கடைத்தெருவில் பார்த்ததாகச் சொன்னார்கள். பார்வதிக்கு வெறி வந்து விட்டது.

வீட்டுக்குத் திரும்பியவுடன் கேட்டுப் பார்த்தாள். இல்லை இல்லையென்று வழுக்கி வழுக்கி பதில் சொன்னான். பள்ளிக்கூட நேரத்தில் கடைத்தெருவில் இருந்ததற்கு ஏதோ பொய்யான காரணங்களைக் கற்பித்துச் சொன்னான். அவன் பொய்களை அவளால் ஊடுருவிப் பார்க்க முடிந்தது.

விறகுக் கட்டையை எடுத்தாள். அவன் முதுகிலும் கால்களிலும் தோள்பட்டையிலும் அடித்தாள். அவன் "வேணாம்மா, வேணாம்மா, இனிமே அவங்கூட சேர மாட்டேம்மா, விட்டும்மா!" என்று கெஞ்சக் கெஞ்ச அடித்தாள். அவன் கால்களிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியபோதுதான் அவள் கோபம் அடங்கியது.

அப்புறம் அவனைக் கட்டிப் பிடித்து அழுது காயங்களுக்கு மருந்து தடவி ஒரு மணி நேரம் அவனோடு பேசினாள். ஒருவேளை தன் பழைய கதையைச் சொன்னால் வயது வந்த பிள்ளைக்கு வாழ்க்கையின் வக்கிரங்கள் விளங்கலாம் என்று அதைச் சொன்னாள். தான் படிக்க வேண்டிய வயதில் அவனுடைய அப்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி படிப்பையும் குடும்பத்தையும் உதறிவிட்டு அவனோடு வீட்டை விட்டு ஓடிவந்த கதையைச் சொன்னாள். பின்னால் அவன் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பொருளாதாரச் சுகத்தையும் தராமல் இந்த இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுத் தந்து விட்டு, இன்னொரு இளம்பெண்ணை இழுத்துக் கொண்டு எங்கோ ஓடிவிட்ட கதையைச் சொன்னாள்.

"முத்தையா! அந்த ஓடுகாலித் தகப்பன் மாதிரி நீ ஆயிடக் கூடாதுன்னுதாம்பா நான் கவலப் பட்றேன். ஆத்திரப் பட்றேன். நீ படி. முன்னுக்கு வா. அதுக்குத்தான நான் ராத்திரியும் பகலுமா ஒழைக்கிறேன். நீ பெரிய மனுஷனா வா. அப்புறம் என்னைக்காவது உங்கப்பன் ஒன்னத் தேடி வந்தா அவனுக்கு நல்லா புத்தி சொல்லிக்குடு. அத நான் பாக்கணும்பா" என்று அழுதழுது சொன்னாள்.

அவனும் அழுதான். "சரிம்மா! நீ அழுவாதம்மா!" என்று அவள் கண்களைத் துடைத்தான். "நான் நல்லவனா இருக்கிறேம்மா. இனிமே அந்த கேசவனோட சேரமாட்டேம்மா! இது சத்தியம்மா!"

அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

இந்த வருஷம் பிள்ளை அக்கறையாகப் படிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. அமைதியாக இருக்கிறான். மற்ற நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறான். பாடங்களில் சுமாரான மார்க்குகள் வாங்குகிறான்.

அவன் சைக்கிள் மறையும் வரை அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

*** *** ***
முத்தையா சைக்கிளைக் கீழே நிறுத்திவிட்டு அந்த நான்கு மாடி மலிவு விலை அடுக்கு மாடிக் கட்டிடத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஆவலோடு ஏறி வந்தான். குப்பை கூளம் மிக்க வராந்தா வழியாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்டிய போது அது தானே திறந்து கொண்டது. வீடு "ஓ"வென்று கிடந்தது. கேசவன் வீட்டில் இல்லை. வழக்கம் போல் வீட்டில் வேறு யாரும் இல்லை.

கேசவனின் அப்பாவைப்பற்றி முத்தையாவுக்கு ஒன்றும் தெரியாது. கேசவனும் பேசுவதில்லை. அவன் அண்ணன் கோலாலும்பூரில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். எப்போதாவது இந்த பினாங்குக்கு அம்மாவையும் தம்பியையும் பார்க்க வீட்டுக்கு வருவதோடு சரி. அப்படி வீட்டுக்கு வரும் போதெல்லாம் கேசவனுக்கு நிறையப் பணம் கொடுத்துப் போவான். அந்த நாட்களில் எல்லாம் கேசவனின் அனுசரணையில் முத்தையாவுக்கும் ரொம்ப விருந்துதான். படம், வீடியோ கேம், சாப்பாடு என்று அலுக்காது. கேசவனின் அம்மா இதை ஒன்றையும் கண்டு கொள்வதில்லை. காலையில் மிகத் தாமதமாக எழுந்து அலங்கரித்துக் கொண்டு வெளியே போனால் திரும்ப வருவது நள்ளிரவோ அதற்குப் பிறகோ...!

எங்கே போயிருப்பான் கேசவன்? "நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னால வா! புது வீடியோவுக்கு சொல்லி வச்சிருக்கேன். பாத்திட்டுப் போலாம்" என்றான்.

"என்ன படண்டா? படையப்பாவா?" ஆவலோடு கேட்டான் முத்தையா.

"போடா உன் படையப்பாவும் --ரப்பாவும்!" அவன் அப்படித்தான் பேசுவான். கொச்சை வார்த்தைகள் சரளமாக வந்து விழும் பேச்சு. அது ஆண்மையும் தைரியமும் கலந்த உலகத்தைப் புறந்தள்ளி தன்னை ஏற்றி வைத்துக் கொண்ட வீரப் பேச்சாகவும் முத்தையாவுக்குத் தெரியும்.

அதுதான் இந்த கேசவனிடமிருந்த கவர்ச்சி. அவன் இந்த உலகத்தைத் தலைகீழாகப் படித்திருக்கிறான். படித்து இதைப் புறக்கணிக்கவும் இகழவும் உமிழவும் கற்றுக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம், படிப்பு அவனுக்குக் கால் தூசு. "படிச்சி என்ன --ரப் --ங்கப் போறோம்? ஒரு நாளைக்கு இருவது முப்பதும் சம்பாரிக்கவா? இப்பவே நான் முப்பது நாப்பது சம்பாரிக்கிறேன் தெரியுமா?"

யார் யாருக்கோ ஏதேதோ டெலிவரி வேலை செய்தான். ஒவ்வொரு டெலிவரிக்கும் கை மேல் பணம். அவன் அண்ணன் வீட்டில் விட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிளில் லைசன்ஸ் இல்லாமலேயே சுற்றுவான். போலிஸ்காரன் எங்கு மறைந்திருப்பான், அவனை எப்படி ஏய்த்து வேறு குறுக்கு வழிகளில் போகலாம் எல்லாம் அவனுக்குத் தெரியும். அப்படியே பிடிபட்டுவிட்டால் எப்படிக் குழைவது, எத்தனை தருவது எல்லாம் தெரிந்து தயாராக இருப்பான்.

பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட அவன் அஞ்சுவதில்லை. அவன் பள்ளிக்கூடம் வரவில்லை என்று அறிவிக்கும் கடிதங்கள் வீட்டு முகவரிக்கு வந்தால் தானே பிரித்து கள்ளக் கையெழுத்துப் போட்டு கொண்டு வந்து கொடுத்துவிடுவான். முத்தையாவிடம் எல்லாம் சொல்லியிருக்கிறான். முத்தையா ஏதேதெல்லாம் செய்ய முடியாமல் தயங்குகிறானோ அத்தனையும் கேசவன் செய்வான். கேசவன் முத்தையாவின் ஹீரோ. அவன்தான் படையப்பா, அருணாச்சலம், பாட்சா!

"அப்புறம் என்ன படண்டா?"

"வேற படம் சொல்லி வச்சிருக்கேன். புளூ ·பிலிம். இந்தியாவிலிருந்து வந்தது. ·பிலிம் ஸ்டார்ஸ். எல்லாம் தமிழ்ப் பொம்பிளங்க!"

"கிர்"ரென்று ஒரு காம உணர்ச்சி ஏறியது. "தமிழ்ப் பொம்பிளங்களா? நெசமாவா? இது வரைக்கும் சீனத்திங்க வெள்ளக்காரிச்சிங்கதான..."

"அதெல்லாம் பழசு. ஆனா ரொம்ப பத்திரமா இருக்கணும். போலிஸ்காரங்க தேடிக்கிட்டிருக்காங்களாம். ஒரு காப்பி மூணு மணிநேரம் வாடகைக்கு எடுக்க அம்பது வெள்ளி"

"அம்பது வெள்ளியா?"

"போடா ---! "அம்பது வெள்ளியா"ன்னு வாயப் பொளக்கிறான். ஒங்கிட்ட இப்ப காசு கேட்டனா? படத்துக்கு நாந்தான் டெலிவரி போய்! நீ எனக்கு பெஸ்ட் ·பிரன்ட் இல்லியா! நாளைக்கு வா. ஒனக்கு ·ப்ரீ ஷோ!"

இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அவனுடைய அபிமான நடிகைகள் நிர்வாணமாக மனதில் உலா வந்தார்கள். கேசவனின் வீரத்தோற்றம் முத்தையாவின் எண்ணத்தில் இன்னும் உயர்ந்தது. என்ன அபூர்வமான விஷயங்களெல்லாம் வைத்திருக்கிறான்! எப்படியெல்லாம் பூந்து விளையாடுகிறான்! எத்தனை தைரியம், தன்னம்பிக்கை! அவனை நெருங்கிய நண்பனாக அடைந்திருப்பதில் அவன் வகுப்பு மாணவர்கள் மத்தியில் அவனுக்கு ஒரு தனிப் பெருமை இருந்ததாக நினைத்துக் கொண்டான்.

நாளைக்குப் பள்ளிக்கூடம் போகும் வேளையில் அம்மா வீட்டில் இருப்பாள். ஆனால் ஏதாகிலும் சமாதானம் சொல்லிவிட்டுப் புறப்படலாம். தெரிந்தால் தொலைத்து விடுவாள். கேசவன் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான்! எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லை. இந்த வீட்டில் எந்த நேரமும் நச்சு நச்சென்று...!

ஆனால் அம்மா சொல்வதும் சரிதான். கேசவனைப் போலத் தான் ஆக முடியாது. அவனைப் போல பொறுப்புகள் இல்லாமல் சுற்ற முடியாது. அம்மா தன்னைத்தான் நம்பியிருக்கிறாள். தன்னை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய அப்பா இல்லாத குறைக்குத் தொழிற்சாலையில் இரண்டிரண்டு ஷி·ப்டாக வேலை செய்கிறாள். கண்களெல்லாம் சிவந்து போய் வீடு வருகிறாள். வீட்டிலிருக்கும் நேரத்திலெல்லாம் முதுகிலும் தோளிலும் வலி நிவாரணித் தைலங்களைத் தேய்த்துக் கொண்டு அந்த நாற்றத்தோடே சுற்றிக் கொண்டிருக்கிறாள். பாவமாக இருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டும்.

ஆனால் இன்று ஒரு நாள்... இந்த வாய்ப்பை விட முடியாது. தமிழ் நடிகைகளாமே...! குஷ்புவா, ரம்பாவா? ஆ...!

இரவு முழுவதும் நாளைக்கு நண்பனுடன் ரகசிய கூட்டில் ஈடுபடும் கிளர்ச்சி, காமக் கிளுகிளுப்பு, அம்மா நினைவுக்கு வந்த மாத்திரத்தில் குற்ற உணர்ச்சி, நாளைக்குப் பிறகு நல்லவனாக மாறிவிடலாம் என்ற சமாதானம் எல்லாம் வந்து அவனைத் தூங்க விடாமல் அடித்திருந்தன.

இத்தனைக்கும் மத்தியில் இத்தனை எதிர்பார்ப்புக்களுடன் இங்கே வந்து... எங்கே போனான் கேசவன்?

முத்தையா கேசவனின் வீட்டுக்கு வெளியிலேயே வராந்தாவில் உட்கார்ந்து காத்திருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக் கூடம் போயாக வேண்டும். படம் பார்க்க அரை மணி நேரமாவது ஆகும். கேசவன் துரோகம் பண்ணி விட்டான். இனிமேல் இவனை நம்பக் கூடாது. இவனுடன் என்ன தோழமை வேண்டிக் கிடக்கிறது? ஒழித்துத் தொலைக்க வேண்டும். அயோக்கியன்.

இருந்தாலும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம். இல்லாவிட்டால் "என்ன --ரு அவசரம் ஒனக்கு? அஞ்சு நிமிஷம் காத்திருக்கக் கூடாதா?" என்று திட்டுவான்.

வராந்தா வழியே ஒரு தமிழ்ப் பெண் போனாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தது போல் இருந்தது. முத்தையா தெரியாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். யார் எங்கேயோ பார்த்தது போல....! அம்மாவை ஒரு நாள் பார்க்க வந்தாளோ? அம்மாவோடு வேலை செய்யும் பெண்ணோ? மனம் திடுக்கிட்டது. தெரிந்து கொண்டிருப்பாளா? அம்மாவிடம் சொல்வாளோ? ஒரு மாதிரி பயம் வந்து கவிந்தது.

சீச்சி! தெரிந்திருக்காது. வீட்டுக்கு வந்தபோது என்னைப் பார்த்தது கூட நினைவிருக்காது. எப்பவோ ஒரு நாள். மறந்து போயிருக்கும். மனம் சமாதானப் பட்டது.

காத்திருந்தான். இன்னும் ஐந்து நிமிடங்கள். பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகிவிடும். பரவாயில்லை. கொஞ்சம் லேட்டானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். "பைசிக்களில் காத்துப் போய்விட்டது சார், அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லை சார், வயித்து வலி சார்" எத்தனையோ மாதிரி சொல்லலாம்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கீழே கேட்டு எட்டிப் பார்த்த போது கேசவன்தான். மோட்டார் சைக்கிளைக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு மேலே வந்தான்.

"என்னடா லேட் பண்ணிட்ட?" என்று ஆவலோடு கேட்டான் முத்தையா.

"போடா. பெரிய சிக்கலாப் போச்சி. வேற ஆளுங்க வாடகைக்கு வாங்கிட்டுப் போயிட்டாங்க. இன்னுங் கொஞ்ச நேரத்தில கெடைச்சிரும்"

கேசவன் கவலைப்பட்டான். "கொஞ்ச நேரன்னா?"

"இன்னும் அரை மணி நேரத்தில..."

"இன்னும் அரை மணியா? கேசவா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுண்டா. நாளைக்குப் பாத்துக்கலாமா?"

"போடா பெரிய பள்ளிக்கூடம். நீ போறதுன்னா போ! நான் இன்னைக்குப் போகல! நாளைக்கு இந்த வீடியோ கிடைக்காது. இன்னைக்கு திரும்ப குடுத்திறனும். அத வேற எடத்துக்கு அனுப்பப் போறாங்களாம்."

மனம் தவித்தது. "அப்படின்னா?"

"வேணுமின்னா இருந்து பாத்துட்டுப் போ. இல்லன்னா ஒன் இஷ்டம்!"

"பள்ளிக்கூடம்?"

"--ர் பள்ளிக்கூடம்"

கேசவனின் அந்தத் துணிவும் அலட்சியமும் கருத்தில் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பதும் தனக்கு ஏன் வரமாட்டேனென்கிறது? ஏன் பயமும் கோழைத் தன்மையுமே முன்னால் நிற்கின்றன? இந்த விஷயத்தில் பின்வாங்கிக் கேசவனின் முன்னால் தலைகுனிந்து வாலைச் சுருட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓட மனம் ஒப்பவில்லை. போனாலும் மனசு தவறிப் போன வீடியோவின் ஏக்கத்திலேயே இருக்கும்.

இருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவது என முடிவு செய்தான் முத்தையா. "சரிடா!" என்றான்.

"அப்ப நீயும் வா! மோட்டார் சைக்கிள்ளியே போயி கையோட வாங்கிட்டு வந்திரலாம்!" என்றான் கேசவன்.

"ரெண்டு பேருமா? ஒனக்கே லைசன்ஸ் இல்லையே...!" என்று தயங்கினான் முத்தையா.

"நீ இப்படித்தாண்டா, பொட்டப் பயந்தாங்கொள்ளி!"

"சரி, வா போலாம்" என்றான் முத்தையா.

*** *** ***

"நிச்சயமா தெரியுமா கமலா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பார்வதி.

"நிச்சயமா ஒம் மகன்தான். அப்படியா எனக்குத் தெரியாமப் போகும்?" என்றாள் கமலா.

பார்வதி கமலாவின் முகத்தைப் பார்த்தவாறு அதிர்ந்து நின்றாள்.

"அந்த கேசவன் ரொம்ப கெட்டவன் பார்வதி. பொய், திருட்டு எல்லாம் இருக்கு. ஆபாச வீடியோ வியாபாரம் பண்றவங்களோட சேந்து இவனும் வியாபாரம் பண்றானாம். என் மகன்கிட்ட கூட வாங்கிப் பாக்கிறியான்னு கேட்டானாம்!"

பார்வதிக்கு மனசு ஆடிப் போனது. உடம்பும் கூட ஆடியது. செய்யும் வேலை மறந்து விட்டது. அப்படியே நின்றாள்.

"என்ன பார்வதி?" என்று அருகே வந்தாள் கமலா.

கண்ணீர் பொலபொலவென கொட்டியது. துடைத்துக் கொண்டே சொன்னாள்: "அவங்கிட்ட கெஞ்சி பாத்திட்டேன் கமலா. அடிச்சி பாத்திட்டேன். அடிச்ச பிறகு கொஞ்சியும் பாத்திட்டேன். இனிமே அவனோட சேரமாட்டேன்னு இல்லாத சத்தியமெல்லாம் பண்ணிட்டான். அப்படி பண்ணிட்டு இப்படி ஏய்ச்சிட்டானே.... நான் என்னதான் பண்ணுவேன்?"

அவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் கமலாவும் அயர்ந்து நின்றாள்.


*** *** ***

வீடு திரும்பும் போது முத்தையாவுக்கு குற்ற உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. வீடியோ பார்க்கும் போது இருந்த கிளர்ச்சிகள் எல்லாம் குறைந்து விட்டிருந்தன.

வீடியோவைத் தேடி ஓடி காத்திருந்து வாங்கி கேசவனின் வீட்டில் ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு போட்டுப் பார்த்து முடித்ததில் நேரம் போய்விட்டது. இனி பள்ளிக்கூடம் போவதில் அர்த்தமில்லை என்று தோன்றியவுடன் கண்ட இடத்தில் அலைந்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் சரியான நேரத்திற்குத் திரும்பினான்.

வீடு திரும்பும் வேளையில் அம்மா வீட்டில் இருக்க மாட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அக்கம் பக்கத்தார் பார்க்கக்கூடும் என்பதற்காக இந்த நடிப்பு தேவையாக இருந்தது.

வீட்டில் தங்கை மீனா மட்டும் தனியாக இருந்தாள். முத்தையா குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு அம்மா வீடு வரும் நேரத்துக்கு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிப்பதாகப் பாவனை செய்து கொண்டிருந்தான். அம்மா வரும் நேரம் நெருங்க நெருங்க அம்மாவின் சகதொழிலாளி தன்னைக் கேசவன் வீட்டில் பார்த்த நினைவு அடிக்கடி வந்தவாறிருந்தது. அம்மாவுக்குத் தெரிந்து விட்டிருக்குமா? பயம் கவிந்தது.

சனியன், ஏன் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்? பார்த்தால் எல்லாம் பம்மாத்து வேலை. சில சினிமா காட்சிகளைக் காட்டி அப்புறம் தலையில்லாத முகந்தெரியாத முண்டமான பெண்களை வெட்டி ஒட்டி... எல்லாம் சுத்த ஏமாற்று வேலை. இதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு, அம்மாவிடம் பொய் சொல்லி, நாளைக்குப் பள்ளிக்கூடத்திலும் பொய் சொல்லி.... சீச்சீ!

அம்மா ஏழு மணிக்கு வந்தாள். அவள் முகத்தில் தன் குட்டு உடைந்துவிட்ட அறிகுறிகள் தெரிகின்றனவா என்று முத்தையா ரகசியமாகப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. அம்மாவின் முகத்தில் நீண்ட நேர உழைப்புக்குப் பின் தெரியும் வழக்கமான களைப்பும் இறுக்கமும்தான் இருந்தன போலத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் குளிக்கப் போனாள். அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஒன்றும் அம்பலமாகவில்லை.

அம்மா பகல் ஷி·ப்ட் செய்யும் போதெல்லாம் இரவில் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். முத்தையாவுக்கு பயங்கள் தெளிந்தவுடன் காலையில் அம்மா சமைத்த ஆட்டுக் கறியின் நினைவு வந்தது. நாக்குச் சப்புக்கொட்டிக் காத்திருந்தான்.

அம்மா குளித்து வந்ததும் ஒன்றும் பேசாமல் கறியைச் சுடப் பண்ணி சாப்பாடு எடுத்து வைத்தாள். குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் அவள் டிவி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள்.

"ஏன் அம்மா, நீங்க சாப்பிடலயா?" என்று மீனா கேட்டாள்.

"நீங்க சாப்பிடுங்க! எனக்குப் பசியில்ல!" என்றாள் பார்வதி.


*** *** ***

மறுநாள் பள்ளிக்கூடம் போய் வகுப்பு ஆசிரியரிடம் மழுப்பி மழுப்பிக் காரணம் கூறித் தப்பித்தாகிவிட்டது. ஆனால் நேற்று எதிர்பாராமல் கணக்கு ஆசிரியர் திடீர் கணக்குப் பரிசோதனை வைத்தார் என்றும் அதில் கலந்து கொள்ளாததால் அது ஆண்டு ரிப்போர்ட் கார்டில் "வரவில்லை" என்று எழுதப்படும் என்றும் கேள்விப்பட்டபோது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.

கேசவனும்தான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது அவனுக்குப் பொருட்டல்ல. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவன் ரிப்போர்ட் கார்டைக் கேட்டுப் பார்க்க ஆளில்லை. கள்ளக் கையெழுத்தும் அவனே போட்டுக் கொள்வான். ஆனால் முத்தையாவின் அம்மா தவறாமல் கேட்டு வாங்கிப் பார்ப்பாள். அந்தப் பரிட்சையில் கலந்து கொள்ளாமல் போனதை ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கும்போது அம்மாவுக்கு விளக்கியாக வேண்டுமே! இப்போதே மனம் பொய்ச் சமாதானங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தது.

அன்று இரவும் சாப்பிட உட்கார்ந்த போது அம்மா சாப்பாட்டுக்கு வரவில்லை. அதிகம் பேசவும் இல்லை. ஆளும் மிகச் சோர்ந்து இருந்ததுபோல் காணப் பட்டாள். மீனாவைக் கூப்பிட்டு "நீயே எடுத்துப் போட்டுச் சாப்பிடு மீனா! அண்ணனுக்கும் போட்டுக்குடு!" என்றாள்.

சாப்பிடும் போது முத்தையா மீனாவிடம் ரகசியமாகக் கேட்டான்: "ஏன் மீனா, அம்மாவுக்கு என்ன, ஒடம்பு சரியில்லியா?"

"எனக்குத் தெரியாது!" என்று வெடுக்கென்று சொன்னாள் மீனா.

மறுநாள் பகல் பார்வதி படுக்கையிலேயே இருந்தாள். முத்தையா பள்ளிக்கூடத்திற்குத் தயாராகிய போது சாப்பாடு ஒன்றும் தயாராகியிருக்கவில்லை.

அவன் அவள் படுக்கையை எட்டிப்பார்த்து "ஏம்மா இன்னைக்கு சமைக்கிலியா?" என்றான்.

அவள் தலைமாட்டிலிருந்து ஐந்து வெள்ளியை எடுத்துக் கொடுத்து "ஏதாச்சும் கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு, ராத்திரிக்கு வரும்போதும் ஏதாச்சும் வாங்கிட்டு வந்திரு!" என்றாள்.

காசை வாங்கிக் கொண்டு "ஏம்மா, ஒடம்பு சரியில்லையா?" என்று கேட்டான்.

ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு பேசாமல் போனான்.

பள்ளிக்கூடத்தில் இருந்த போதும் அம்மா நினைவு அதிகமாக இருந்தது. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அம்மா உடல் தளர்ந்திருக்கிறாள். இப்படி அவள் படுத்து அவன் பார்த்ததே இல்லை. இப்படி இருந்தால் எப்படி வேலைக்குப் போவாள்?

ஒரு வேளை தான் செய்தது தெரிந்து விட்டதா? தெரிந்தால் ஏன் கேட்கவில்லை? ஏன் கத்தவில்லை? ஏன் அடிக்கவில்லை? தெரிந்திருக்காது. வேறு காரணமாக இருக்கலாம்.

அன்று மாலை வீட்டுக்கு கொஞ்சம் அவசரமாகவே வந்தான். வரும் வழியில் மறக்காமல் எல்லாருக்கும் ரொட்டிச் சாணாய் வாங்கிக் கொண்டு வந்தான்.

அவன் சந்தேகப் பட்டதைப் போலவே அம்மா வேலைக்குப் போகாமல் படுத்தபடிதான் இருந்தாள். தலை கலைந்து முகம் ஒடுக்கு விழுந்து கண்மூடிப் படுத்திருந்தாள். மீனாவின் குழந்தை முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது. வீடு முழுவதும் இருள் கவிந்திருந்தது.

"என்ன மீனா, அம்மா ஏன் இப்படி இருக்காங்க?" என்று கவலையுடன் தங்கையைக் கேட்டான்.

"தெரிலிய! ஒடம்பு சரியில்லன்னுதான் சொல்றாங்க. எங்கிட்டயும் சரியா பேசமாட்டேங்கிறாங்க! மூணு நாளா சாப்பாட்டையே தொடல. தண்ணி மாத்திரம்தான் குடிக்கிறாங்க. அடுத்தவீட்டு அம்மா வந்து பாத்திட்டுப் போனாங்க. "ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போகவா"ன்னு கேட்டாங்க. அம்மா வேணான்ட்டாங்க!" என்றாள்.

முத்தையாவின் தொண்டைக் குழிக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களில் அழுகை முட்டினாலும் அடக்கிக் கொண்டான். அம்மாவிடம் போய்ப் பேச பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் இங்கு நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருந்தது. பயமும் தயக்கமும் இருந்து பயனில்லை.

அம்மாவின் படுக்கையை நோக்கிப் போனான். திரும்பிப் படுத்திருந்தாள். அவளுடைய கலைந்த, அழுக்கடைந்த கூந்தல் தாறுமாறாகக் கிடந்தது. அவளுடைய கைலி கலைந்து தளர்ந்து கிடந்தது.

அவள் முதுகைத் தொட்டு "அம்மா!" என்றான்.

மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். கைலியைச் சரி செய்து கொண்டாள்.

"உடம்புக்கு என்ன செய்யிது?" அழுகை மீண்டும் முட்டிக் கொண்டு வந்தது.

பேசாமல் இருந்தாள். வெறுமையான விழிகளால் அவனைப் பார்த்தாள்.

"சொல்லும்மா! நான் வேணா காடி பிடிச்சி ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டா?" என்று கேட்டான்.

சிரமத்துடன் வாய் திறந்தாள்: "வேண்டாம் முத்தையா! என் ஒடம்புக்கு ஒண்ணும் இல்ல!"

"அப்படின்னா ஏன் இப்படி இருக்கிற? ஏன் சாப்பிடாம இருக்கிற?"

மீண்டும் பேச்சில்லை.

"சொல்லும்மா!" என்றான்.

"சாப்பிட்டு இந்த ஒடம்ப வளத்து என்ன பிரயோசனம் முத்தையா? நம்ப மாதிரி ஏழைங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்குது?"

அவனுக்கு இதில் ஏதோ ஒரு வகையில் தான் சம்பந்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசிற?" என்றான்.

"ஆமாப்பா! நான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சீரளிஞ்சி போனாலும் நீ நல்லா படிச்சி இந்தக் குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வருவேன்னு நெனச்சேன். அது நடக்கப் போறதில்லன்னு நீ காட்டிட்ட! நீ உங்கப்பனப் போலத்தான் இருக்கப் போற! படிப்ப குட்டிச் சுவராக்கப் போற! ஒரு வயசு வந்ததும் ஒருத்திய ஏமாத்தி இழுத்து ஓடி இப்படி நம்ப குடும்பம் மாதிரி இன்னொரு லட்சியமே இல்லாத ஏழைக் குடும்பத்த ஆரம்பிக்கப் போற! குழந்தைகளப் பெத்துப் பாழாக்கப் போற! அதையெல்லாம் நான் உயிரோட இருந்து இன்னொரு தடவ பாக்கணுமா?"

அவள் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் முதுகில் அடி அடியென்று அடித்திருக்கலாம். முன்பு அப்படி அடித்து அவன் தாங்கியிருக்கிறான். ஆனால் இந்தச் சொற்களின் அடி அவன் மனத்தில் வெட்டு வெட்டாகக விழுந்தன. மனத் தசைகளை இரத்தம் வழியக் கிழித்தன.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசிற? நான் என்ன செஞ்சிட்டேன் இப்ப?" அழுகையோடு கேட்டான்.

"ஒனக்குத் தெரியாதா முத்தையா? தெரியலன்னா நான் சொல்லிப் பிரயோஜனம் இல்ல! தெரியாத மாதிரி நடிக்கிறேன்னுதான் அர்த்தம். எத்தனையோ பொய்யோட இன்னும் ஒரு பொய்ய சொல்லப் போற அவ்வளவுதானே!" மெதுவாக முகத்தைத் திரும்பிக் கொண்டாள்.

பேசாமல் உட்கார்ந்து கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தான். இனி மறைக்க முடியாது. இது முன்பு போல இல்லை. அம்மா முன்பு போல அடிக்காமல் ஏசாமல் தானாக தன் கழுத்தில் இறுக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டு அதன் ஒரு முனையை அவன் கையில் தந்திருக்கிறாள்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னான். "சரி அம்மா, நான் செஞ்சது தப்புத்தான். பள்ளிக்கூடம் போகாம கேசவனோட சேர்ந்து படம் பார்த்தேன். நெசந்தான். இனிமே சத்தியமா அப்படி செய்ய மாட்டேம்மா! என்ன மன்னிச்சிரும்மா!"

திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். "பிரயோஜனம் இல்ல முத்தையா! உன்னோட சத்தியம், என்னோட மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு மதிப்பும் கெடையாது. நீ சத்தியம் பண்ணிட்டியேன்னு நான் ஒன்ன அணைச்சிக்கிட்டு அழுது சமாதானம் ஆயிடலாம். ஆனா ஒரு வாரம் போனா எல்லாம் சகஜமா போயிடும். ஒனக்குக் கூட்டாளிங்க வந்திருவாங்க. பழைய ஆசைங்க எல்லாம் வந்திரும். அம்மாவ ஏமாத்திறது எவ்வளவு சுலபம்னு ஒனக்குந் தெரியும். ஒனக்கு கைவந்த கலைதான. ஆகவே எல்லாம் மிந்தியப் போலத்தான் நடக்கும். பிரயோஜனமில்லப்பா!"

அதிர்ச்சியடைந்து அவளைப் பார்த்தான். "இல்லம்மா! நான் உண்மையிலேயே திருந்திட்டேன்!"

"அப்படியா? எவ்வளவு நேரமா திருந்தியிருக்க? இதோ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சு போச்சின்னு நெனச்சவுடனே பல வருஷங்களா இருந்த கெட்ட பழக்கத்த உட்டு ஒரு நிமிஷத்தில திருந்திட்டியா? அவ்வளவு சீக்கிரம் திருந்தினவன் மறுபடி கெட்டுப் போறதுக்கு எவ்வளவு நேரம்பா வேணும்?"

அம்மா குரல் அடைக்க அடைக்க மிக மெதுவாகப் பேசினாள். அவளால் உரத்துப் பேச முடியவில்லை. கோபத்தைக்கூடக் காட்ட முடியவில்லை. பலவீனமான தொனியில் அளந்து அளந்து பேசினாள். ஆனால் அவன் இதயத்தைக் குறி வைத்து குறி வைத்து அடித்தாள்.

"என்ன என்னதாம்மா பண்ணச் சொல்ற?" அழுதான்.

"ஒண்ணும் பண்ண வேணாம் முத்தையா. எதுவும் பண்ணிப் பிரயோஜனமில்ல! நீ விரும்பின வழியில நீ போகலாம். என்ன என் வழிக்குப் போக விடு!" மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

"ஹீம்" என்று குரல் விட்டுக் கேவி அழுதான். "வேணாம்மா! அப்படிப் பேசாத. நீ போயிட்டா எனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதி?"

அவனைப் பார்த்தாள். "உனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதிங்கிறத நீதான் தீர்மானிச்சிட்டியே தம்பி! உங்கப்பா காட்டின வழிதான் உனக்கு வாய்ச்சிருக்கு. நீ இப்படியே போனா இந்தக் குடும்பம் முன்னேற முடியாம பாழாத்தான் போகும். நான் உயிரோட இருந்தாலும் இல்லைன்னாலும் இப்படித்தான் நடக்கும். ஆகவே இதையெல்லாம் பாக்காம நான் சீக்கிரமே போயிடலான்னு முடிவுக்கு வந்திட்டேன். ஒங்க தலைவிதிப்படி ஒங்க விருப்பப்படி நடக்கட்டும். நீ என்னுடைய கட்டுப்பாட்டில இல்ல. முழுக்க முழுக்க உன் நண்பனோட கட்டுப் பாட்டில இருக்க! அவன்தான் உனக்கு எதிர்காலத்துக்கு வழி சொல்லிக் குடுப்பான்!"

"இல்லம்மா, அப்படிச் சொல்லாதம்மா! இன்னையோட அவனை விட்டுட்றம்மா! இனிமே அவனோட சேரமாட்டேம்மா. சத்தியம்மா, சத்தியம், சத்தியம்!" அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் அடித்தான்.

"மூணு சத்தியமாப்பா? காப்பாத்த அவசியமில்லாதபோது மூணு என்ன, நூறு கூடப் பண்ணலாம். எனக்கு நம்பிக்கையில்லப்பா!" என்றாள்.

என்ன செய்ய நினைத்துவிட்டாள் இந்த அம்மா! செத்தே போவது என்று முடிவு செய்து விட்டாளா? தன்னையும் தன் தங்கையையும் அநாதைகள் ஆக்கிவிடுவதென்று முடிவு செய்து விட்டாளா? அந்த அளவுக்கா என் செயல் அவளைத் தைத்து விட்டது?

முத்தையாவுக்கு மனம் முற்றாக உடைந்து போனது. கதறினான். "வேணாம்மா? இப்படிச் செய்யாத! எங்கள விட்டுப் போகாத. நான் என்ன செய்யணும் சொல்லு? வேணுன்னா என்ன கட்டி வச்சி அடி! எனக்குச் சூடு வை. நான் பண்ணின குத்தத்துக்கு நீ ஏன் இப்படி தண்டனை அனுபவிக்கிற?"

"ஏன்னா ஒனக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லாமப் போகுது. அதினால ஒன்ன சரியா திருத்தி வளக்க முடியாததுக்கு எனக்கே நான் தண்டனை கொடுத்துக்கிறேன். அவ்வளவுதான்!"

"வேணாம்மா! நான் எல்லத்தையும் இன்னைக்கோட விட்டிட்றேன். நீ எந்திரிம்மா. சாப்பிடும்மா!" அழுதழுது சொன்னான்.

அவள் லேசாக எழுந்து உட்கார்ந்தாள். முத்தையா அவள் எழுந்து சாய்ந்து கொள்ளத் தலையணையை முட்டுக் கொடுத்தான்.

"இனிமே அந்த கேசவனோட சேராம இருப்பியா?"

"சேரமாட்டேன். சத்தியம்மா!" கண்களைத் துடைத்துக் கொண்டான்.

"அப்படின்னா அந்தக் கேசவனையே இங்க கொண்டாந்து எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!"

அதிர்ச்சியடைந்தான். கேசவனா? அவன் வருவானா? எப்படி வருவான்?

"என்னப்பா அப்படிப் பாக்கிற? வருவானா?"

"அம்மா! அவன் வருவானா இல்லையான்னு தெரிலம்மா! அவன் எதுக்கு? ஆனா நான் இனிமே அவன் கிட்டயே போக மாட்டேம்மா!"

"முடியாது முத்தையா! நீ போக மாட்டே! ஆனா அவன் வந்தான்னா ஒட்டிக்குவ. ஒன்னால அவன எதிர்த்து நிக்க முடியாது. அவன வரச்சொல்லு. எங்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!"

"அம்மா!"

"அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். இதே கட்டில்! இங்கேயேதான் என் உயிர் போகும்!"


*** *** ***

சைக்கிளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கேசவனின் அடுக்குமாடி வீட்டை அடைந்த போது இரவு மணி ஒன்பதாகி விட்டது. கேசவன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை. கீழே அவன் மோட்டார் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. தயக்கத்தோடு கதவைத் தட்டினான்.

திறந்தது கேசவனின் அம்மா. அலங்காரம் ஒன்றுமில்லாமல் சூம்பிப் போன முகத்துடன் தலை முடி விரிந்து கிடந்தாள். "என்னா வேணும்?" என்று கேட்டாள். அவள் குரல் முரட்டுத் தனமாக இருந்தது.

"கேசவனப் பாக்கணும் அண்டி" என்றான்.

"நீ யாரு?"

"நான் அவனோட ஸ்கூல் ·பிரண்ட். அவன அவசரமாப் பாக்கணும்!"

"அது ஊட்டில எங்க இருக்கு?"

"எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?"

"ஆமா, எங்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் போவுது. யாருக்குத் தெரியும்? நாய் மாதிரி ஊரெல்லாம் சுத்தும். ஆமா நீ ஏன் இந்த ராத்திரி நேரத்தில அதத் தேட்ற?"

"பேச வேண்டியிருக்கு அண்டி"

"ஆமா, நீங்க ராத்திரி ராத்திரியாதான் கூடிப் பேசிறதா? ஒன்னப்போல ·பிரன்ட்ஸ் சேந்துதான் அதையும் இப்படித் தறுதலையா ஆக்கிட்டிங்க!" கோபத்தோடு பேசினாள்.

"அண்டி! வந்தா என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க அண்டி. அவசரம். என் பேரு முத்தையா. அவனுக்கு வீடு தெரியும்!"

ஒன்றும் சொல்லாமல் கதவை பட்டென்று சாத்தினாள்.

என்ன செய்வது என முத்தையா யோசித்தான். வீட்டுக்குப் போய் அம்மாவின் கையைப் பிடித்து அழலாம் என்று தோன்றினாலும் கேசவன் இல்லாமல் அம்மாவைப் பார்த்துப் பயனில்லை எனத் தோன்றியது. அம்மா அவனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள். முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டு சொன்னது போலவே செத்துப் போய்விடுவாள்.

கீழே போய் ஏறிவரும் படியில் உட்கார்ந்தான். முத்தையா வர என்னேரமானாலும் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகாமல் விடுவதில்லை.

அந்த மலிவு விலை அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் எங்கோ மூலையிலிருந்து மூத்திர மணம் வந்தது. கொஞ்சம் தூரத்தில் சீனர் அங்காடிக் கடைகளில் கொய்த்தியோவும் மீயும் பிரட்டுகின்ற மணமும் சத்தங்களும் வந்தன. தொடைகளில் முழங்கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு முத்தையா காத்திருந்தான். மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும் இடத்தில் அவன் பார்வை நிலைத்திருந்தது. கேசவன் வந்தால் அங்குதான் வந்து நிற்பான். பிடித்துவிடலாம்.

அம்மா எப்படி இருப்பாள் என்ற நினைவே புரண்டு புரண்டு வந்ததது. அவள் படுக்கையில் ஒரு கந்தல் துணி போல நைந்து போய்க் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. "அம்மா! எங்களை விட்டுப் போய்விடாதே! நான் திருந்தி விட்டேன்! நான் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்! எனக்காகக் காத்திரு!" மனம் நடுங்கியது.

ஒன்பது மணியளவில் கேசவன் மோட்டார் சைக்கிளோடு வந்தான். அவன் நிறுத்து முன் அவனை நோக்கி ஓடினான் முத்தையா.

"என்னடா முத்தையா, இந்த நேரத்தில!"

"கேசவா. நீ இப்பவே என்னோட எங்க வீட்டுக்கு வரணும்"

"உங்க வீட்டுக்கா? ஏன்? என்ன விஷயம்?"

எப்படிச் சொல்வது என்று யோசித்தான். "கேசவா எங்க அம்மா சாகப் பிழைக்க கெடக்கிறாங்க!"

"ஏன்? என்ன சீக்கு?"

"சீக்கு இல்லடா. அன்னைக்கு நாம ரெண்டு பேரும் பள்ளிக் கூடம் போகாம இங்க வீடியோ பாத்தது அம்மாவுக்குத் தெரிஞ்சி போச்சி! அதினால இனிமே நான் அப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு மூணு நாளா சாப்பிடாம இருக்காங்க!"

கேசவன் அவனை மேலும் கீழும் பார்த்தான். "போடா --ரு! இதுதாண்டா ஒன்ன சேத்துக்கிறதில உள்ள தொல்லை. ஏன் உங்கம்மாவுக்கு சொல்லித் தொலைச்ச?"

"நான் சொல்லலடா!" அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கலாம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.

"நீயும் உங்கம்மாவும் எப்படியாவது போங்க! என்ன எதுக்கு இதில இழுக்கிற?" என்றான் கேசவன் எரிச்சலோடு.

"இல்லடா! நான் இனிமே இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னாலும் எங்கம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. நீ வந்து சொல்லணுமாம். வாடா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டிக்கிறண்டா!"

கேசவன் மருண்டிருந்தான். கண்களில் கோபமும் பயமும் இருந்தன. "போடா போடா!" என்று மிகக் கொச்சை வார்த்தைகளில் முத்தையாவைத் திட்டினான்.

"என்ன என்ன வேணுன்னாலும் சொல்லு. நான் கேட்டுக்கிறேன். ஆனா என்னோட வந்து எங்கம்மாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போடா!"

"போடா! எதுக்கு நான் வரணும்? அங்க வந்து நாந்தான் புளூ ·பிலிம் காமிச்சேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் உங்கம்மா போலிசைக் கூப்பிட்டு பிடிச்சிக் குடுக்கவா? முடியாது. நீ போய் என்ன வேணுன்னாலும் பண்ணிக்க. நான் வரமுடியாது."

"கேசவா! நீ வரலின்னா எங்கம்மா செத்துப் போயிடுவாங்கடா!" முத்தையா அழுதான்.

"செத்துத் தொலைக்கிட்டுமே! சாவமாட்டாளான்னுதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்!" அலட்சியமாகச் சொன்னான் கேசவன்.

"என்னடா சொன்ன?" முத்தையா பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான். "எங்கம்மாவையா செத்துத் தொலையச் சொன்ன? எங்கம்மாதாண்டா எனக்கும் உசிரு! அவங்க உயிர் போச்சின்னா ஒன்னயும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேண்டா!"

கேசவன் அவனைப் பிடித்துத் தள்ளினான். முத்தையா சட்டையை விடவில்லை. இருவரும் தார் ரோட்டில் விழுந்து புரண்டார்கள். முத்தையா கேசவனின் முகத்தில் குத்தினான். கேசவன் திருப்பிக் குத்தினான். முத்தையா விழுந்த இடத்தில் தலையில் பட்டு கொஞ்சமாக ரத்தம் வழிந்தது.

சீனர்கள் அங்காடிக் கடையிலிருந்து ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்க ஓடிவந்தது. கேசவன் முத்தையாவை ஓர் ஓரமாகத் தள்ளினான். அங்கிருந்து ஓடி தன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பினான். ஏதோ ஒரு பக்கம் தலை தெறிக்க ஓட்டி மறைந்து போனான்.

முத்தையா மெதுவாக எழுந்தான். கூடியிருந்த சிறிய கூட்டத்தைப் பார்த்தான். தலையில் கை வைத்து ரத்தத்தைப் பார்த்தான். தலையும் குத்துப் பட்ட முகமும் "விண்விண்"னென்று வலித்தன. ஆனால் அதைவிட மனம்தான் அதிகமாக ரணப்பட்டுக் கசிந்திருந்தது. இந்த அயோக்கிய நண்பனின் உறவால் அம்மாவையே இழந்து விடுவோமோ என்ற திகில் வந்து படர்ந்தது. அவமானமும் ஏமாற்றமும் மனதை அழுத்த குனிந்தவாறே சோர்ந்து போய் தன் சைக்கிளை நோக்கி நடந்தான்.


*** *** ***


தன்னைக் கட்டிப்பிடித்துத் தேம்பித் தேம்பி அழுகின்ற மகனைப் பஞ்சடைந்த கண்களுக்கூடே பார்த்தாள் பார்வதி. அவன் தலையைத் தடவியபோது அந்த ரத்தம் கையில் பிசுக்கென்று ஒட்டியது.

"ஐயோ, இது என்ன ஐயா?" என்று கேட்டாள்.

"அம்மா! அவன் ரொம்ப கெட்ட ராஸ்கலும்மா! அயோக்கியன். நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் வர முடியாதுன்னு சொல்லிட்டாம்மா! என்னப் பிடிச்சி தள்ளிட்டு ஓடிட்டாம்மா! அம்மா! அவன் வேணாம்மா! நான் ஒன் மகன் இல்லியா? நான் சொல்றதக் கேளு! இனி ஜென்மத்துக்கும் நான் அவனோட சேரமாட்டேன். இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்மா? சொல்லும்மா?"

பார்வதி நீண்ட நேரம் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சோகம் கப்பியிருந்த கண்களில் இரக்க நீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. அப்புறம் தலையைத் திருப்பி பக்கத்தில் அழுதவாறே நின்றிருந்த மகளைக் கூப்பிட்டாள். மீனா அருகில் வந்ததும் "சாப்பிட ஏதாச்சும் இருக்கா மீனா?" என்று கேட்டாள்.

"அடுத்த ஊட்டு அம்மா கொஞ்சம் கஞ்சி வச்சிக் குடுத்திருக்காங்க!" என்றாள் மீனா.

"அதக் கொஞ்சம் எடுத்திட்டு வா!"

மீனா ஓடி ஒரு சிறிய பாத்திரத்தில் கஞ்சி ஊற்றி அதில் ஒரு கரண்டியையும் போட்டுக் கொண்டு வந்தாள்.

"முத்தையா! கொஞ்சம் எடுத்து வாயில ஊட்டுப்பா!" என்றாள்.

முத்தையாவின் கரங்கள் வெடவெடவென்று நடுங்கின. கரண்டியிலிருந்து கொஞ்சம் கஞ்சி அம்மாவின் மார்பில் ரவிக்கை மேல் விழுந்தது. துடைக்க முயன்றான்.

"பரவால்ல! அப்புறம் தொடச்சிக்கலாம்!" என்றாள். அவள் வாயைத் திறந்து முத்தையா ஊற்றிய கஞ்சியைக் கொஞ்சமாகக் குடித்தாள். "போதும்!" என்றாள். சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள். கைலியைச் சரிப்படுத்தினாள்.

"முத்தையா, நான் மெதுவா குடிச்சிக்கிறேன். நீ மீனாவையும் கூட்டிக்கிட்டு கிளினிக் போய் காயத்தக் காமிச்சிட்டு வாப்பா" என்றாள். தலைமாட்டிலிருந்து 20 ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தாள்.

அவன் முகத்தில் தெளிவு வந்திருந்தது. மலர்ச்சி வந்திருந்தது! "நீ மொதல்ல சாப்பிட்டு முடிம்மா. நான் மெதுவா போறேன். மீனாவையும் கூட்டிட்டுப் போனா உன்ன யார் பாத்துக்குவாங்க?" என்றான்.

"நான் கூட்டிட்டுப் போறேன்!"

யார்? குரல் வந்த பக்கம் திரும்பினான். கேசவன்.

முத்தையாவில் முகத்தில் அனல் பறந்தது. "நீ ஏண்டா இங்க வந்த? எங்கம்மாவ செத்துத் தொலையிட்டும்னு சொன்னேல்ல!"

கேசவன் தலை குனிந்து தரையைப் பார்த்தவாறிருந்தான். அப்புறம் நிமிர்ந்து பார்வதியின் முகத்தைப் பார்த்துப் பேசினான்.

"எங்கம்மாவ நெனச்சி சொன்னேன். இந்த அம்மாவை இல்ல...!" என்றான் கேசவன்.

பார்வதி அவனைப் பரிவுடன் பார்த்தாள்.

"போடா! ஒன்னோட சேந்ததுனாலதான் இத்தனையும் நடந்திச்சி. இனி நீயும் நானும் கூட்டாளி இல்ல. எங்கம்மா சாப்பிட்றேன்னு சொல்லிட்டாங்க! இனி நீ தேவையில்ல! வெளியே போ!"

"இரு முத்தையா!" பார்வதி தடுத்தாள். கேசவனைப் பார்த்துச் சொன்னாள். "தம்பி! அழச்சிட்டுப் போப்பா! முத்தையாவுக்குத் துணையா போய் அவன பத்திரமா திருப்பிக் கொண்டாந்து விட்டிரு!" என்றாள்.

"வேணாம்மா! நான் தனியா போய்க்கிறேன்! இவன் வேணாம்! இவனோட சேந்தா இன்னும் கெட்டுத்தான் போவேன்!" என்றான் முத்தையா.

"இல்ல முத்தையா! கூடப் போ! இனிமே இந்தத் தம்பியால நீ கெட்டுப் போக மாட்ட! அதுதான் ஒன்னால திருந்தப் போகுதுன்னு நெனைக்கிறேன்!"

அம்மா மெதுவாகக் கஞ்சியை உறிஞ்சியவாறு அவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மாங்காய்க்கு வைத்த குறியில் இரு மாங்காய்கள் கனிந்து விழுந்திருப்பது சந்தோஷமாய்த்தானிருந்தது. கஞ்சியைக் கீழே வைத்துவிட்டு மீனாவைப் பக்கத்தில் கூப்பிட்டு இறுக அணைத்துக் கொண்டாள்.

(முடிந்தது)

(ரெ.கா.வின் “இன்னொரு தடவை” (2001; மித்ர பதிப்பகம், சென்னை) சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)


/This file was last revised on 22 Nov. 2021
Please send your comments to the webmaster (pmadurai AT gmail.com)