ponniyin celvan
of kalki, part 2E
(in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


இரண்டாம் பாகம் - சுழற்காற்று



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai, India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram, Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan, Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இரண்டாம் பாகம் - சுழற்காற்று


நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - "அதோ பாருங்கள்!"
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பூங்குழலியின் கத்தி
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - "நான் குற்றவாளி!"
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - யானை மிரண்டது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - சிறைக் கப்பல்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - பொங்கிய உள்ளம்
நாற்பத்தேழாம் அத்தியாயம் - பேய்ச் சிரிப்பு
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - 'கலபதி'யின் மரணம்
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - கப்பல் வேட்டை
ஐம்பதாம் அத்தியாயம் - "ஆபத்துதவிகள்"



நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
"அதோ பாருங்கள்!"




சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "கடைசியாக என் உள்ளத்தின் போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது போல் காண்கிறது" என்று மெல்லிய குரலில் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறவர் போலச் சொல்லிக் கொண்டார்.
பார்த்திபேந்திரன் கொதித்தெழுந்தான். "சேநாதிபதி! என்ன சொன்னீர்? இது உண்மைதானா? என்னிடம் ஏன் இது வரையில் சொல்லவில்லை? இந்தப் பித்துக்குளிப் பெண்ணை நீர் நம்முடன் கட்டி இழுத்து வந்ததற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது? மறுபடியும் கேட்கிறேன்; பழுவேட்டரையர்கள் இளவரசரைச் சிறைப்படுத்தி வரக் கப்பல்களை அனுப்பியிருப்பது உண்மையா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இந்தப் பெண் கண்ணால் பார்த்ததாகவும், காதால் கேட்டதாகவும் கூறுவதை நம ்புவதாயிருந்தால் அது உண்மைதான்!"

"ஆகா! அந்தக் கிழவர், திருக்கோவலூர் மிலாடுடையார், கூறியது உண்மையாயிற்று. பழுவேட்டரையர்களை உள்ளபடி உணர்ந்தவர் அவர்தான்! சேநாதிபதி! இத்தகைய செய்தியை அறிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கிறீர்? பராந்தக சக்கரவர்த்தியின் குலத்தோன்றலை, சுந்தர சோழரின் செல்வப் புதல்வரை, நாடு நகரமெல்லாம் போற்றும் இளவரசரை, தமிழகத்து மக்களெல்லாம் தங்கள் கண்ணினுள் மணியாகக் கருதும் செல்வரை, ஆதித்த கரிகாலருடன் பிறந்த அருள்மொழிவர்மரை, இந்த அற்பர்களாகிய பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வர ஆட்களை அனுப்பும்படி ஆகிவிட்டதா? இனியும் என்ன யோசனை? உடனே படைகளுடன் புறப்பட்டுச் சென்று இளவரசரைச் சிறைப்படுத்த வந்தவர்களை அழித்து இந்த இலங்கைத் தீவிலேயே அவர்களுக்குச் சமாதியை எழுப்புவோம்!... பிறகு நாம் போட்ட திட்டத்தின்படி காரியத்தை நடத்துவோம்! கிளம்புங்கள்! இன்னும் ஏன் தயக்கம்?" என்று பார்த்திபேந்திரன் பொரி பொரித்துக் கொட்டினான்.

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி அவனைப் பார்த்து "பார்த்திபேந்திரா! நீ இப்படித் துடிப்பாய் என்று எண்ணித்தான் நான் முன்னமே இந்தப் பெண் கொண்டு வந்த சேதியை உன்னிடம் சொல்லவில்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம். அவசரப்படுவதில் பயனில்லை!" என்றார்.

"யோசனை செய்ய வேண்டுமா? என்ன யோசனை? எதற்காக யோசனை? இளவரசே! நீங்கள் சொல்லுங்கள். இனி யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? இதற்கு முன் ஏதேனும் தங்களுக்குத் தயக்கமிருந்திருந்தாலும், இனி தயங்குவதற்கு இடமில்லையே? பழுவேட்டரையர்களைப் பூண்டோடு அழித்து விடவேண்டியது தானே?"

அப்போது இளவரசர், "சேநாதிபதியின் மனத்தில் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாமே? ஐயா! தாங்கள் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?" என்று எவ்விதப் படபடப்பும ன்றி நிதானமாகக் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்துவதற்கு... இந்த வார்த்தைகளைச் சொல்லவும் என் வாய் கூசுகிறது... ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களின் சக்கரவர்த்தியின் கட்டளையோடு வந்திருந்தால் நாம் என்ன செய்வது? அப்போதும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதா?"

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் கடகடவென்று சிரித்து விட்டு, "அழகாயிருக்கிறது, தாங்கள் வார்த்தை! சக்கரவர்த்தி சொந்தமாகக் கட்டளை போடும் நிலையில் இருக்கிறாரா? அவரையேதான் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்களே!" என்றான்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன், குறுக்கிட்டு,"பல்லவ தளபதி கூறுவது முற்றும் உண்மை. நானே என் கண்களால் பார்த்தேன். சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவேட்டரையர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பமின்றி யாரும் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; பேச முடியாது.நான் ஒரு வார்த்தை சொல்லத் துணிந்ததற்காக என்னை அவர்கள் படுத்திய பாட்டை நினைத்தால்... அப்பா! சின்னப் பழுவேட்டரையரின் இரும்புக்கை பற்றிய இடத்தில் இன்னும் எனக்கு வலிக்கிறது!" என்று கூறித் தன் மணிக்கட்டைத் தடவிக் கொண்டான்.

"அப்படிச் சொல், வல்லவரையா! உன்னை என்னமோவென்று நினைத்தேன். இளவரசருக்கும், சேநாதிபதிக்கும் இன்னொரு முறை நன்றாக எடுத்துச் சொல்!" என்றான் பார்த்திபேந்திரன்.

இளவரசர், "வேண்டாம்; அவர் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார்!" என்று கூறி, வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் அந்தப் பெண்ணைப் போய் அழைத்து வருவதாகச் சொன்னீரே! ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்? அவள் கொண்டு வந்த செய்தியை அவள் வாய்மொழியாகவே விவரமாகக் கேட்கலாம்! கொஞ்சம் கிறுக்குப் பிடித்த பெண்போலத் தோன்றுகிற ு. எப்படியாவது நல்ல வார்த்தை சொல்லி அவளை இங்கே அழைத்து வாருங்கள்!" என்றார்.

"போகிறேன், இளவரசே! போய் அழைத்து வருகிறேன். பழுவேட்டரையர்களிடம் தாங்கள் சிறைப்படுவது என்பதை மட்டும் என்னால் சகிக்க முடியாது. என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது நடவாத காரியம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் சென்றான்.

"சேநாதிபதி தங்களுடைய கருத்து என்னவென்று சொல்லவில்லையே?" என்று அருள்மொழிவர்மர் கேட்டார்.

"என்னுடைய கருத்து இதுதான். பழுவேட்டரையர்கள் அனுப்பியிருக்கும் ஆட்களைத் தாங்கள் சந்திக்கக் கூடாது. பார்த்திபேந்திரன் கொண்டு வந்திருக்கும் கப்பலில் ஏறித் தாங்கள் உடனே காஞ்சிக்குப் போய் விடுங்கள். நான் தஞ்சாவூருக்குப் போகிறேன். அங்கே சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்கிறேன்..."

"தஞ்சாவூருக்குத் தாங்கள் போவது சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுப்பது போலத்தான். போனால் திரும்பி வரமாட்டீர்கள். அப்படியே அங்குள்ள பாதாளச் சிறையில் போய்விடுவீர்கள். சக்கரவர்த்தியைப் பார்க்கவும் தங்களால் முடியாது..."

"என்ன வார்த்தை சொல்கிறாய்? என்னைச் சிறையில் அடைக்கக் கூடிய வல்லமையுள்ளவன் சோழ நாட்டில் எவன் இருக்கிறான். சக்கரவர்த்தியை நான் சந்திக்கக் கூடாது என்று தடுக்கக் கூடிய ஆண்மை உள்ளவன் எவன் இருக்கிறான்? மேலும், அங்கே முதன் மந்திரி அநிருத்த பிரமராயர் இருக்கிறார்..."

"பிரமராயர் இருக்கிறார். இருந்து என்ன பயன்? அவருக்கே சக்கரவர்த்தியைப் பார்க்க முடியவில்லை. இதோ அவருடைய சிஷ்யன் நிற்கிறானே, அவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுப் பார்க்கலாமே?" சேநாதிபதி ஆழ்வார்க்கடியான் பக்கம் திரும்பி, "ஆம்; இந்த வைஷ்ணவன் இங்கு நிற்பதையே மறந்துவிட்டேன். திருமலை! ஏன் இப்படி மௌனமாக நிற்கிறாய்? ச ற்று முன் இளவரசர் சொன்னதுபோல் நீயும் ஊமையாகி விட்டாயா?" என்றார்.

"சேநாதிபதி! கடவுள் நமக்கு இரண்டு காதுகளைக் கொடுத்திருக்கிறார்; வாய் ஒன்றைத்தான் கொடுத்திருக்கிறார். ஆகையால் 'செவிகளை நன்றாக உபயோகப்படுத்து; பேசுவதைக் கொஞ்சமாக வைத்துக்கொள்' என்று என் குருநாதர் எனக்குச் சொல்லியிருக்கிறார். முக்கியமாக, பெரிய ராஜாங்க விஷயங்களைப் பற்றிப் பேச்சுக்கள் நடக்கும் இடத்தில் அந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வரச் சொல்லியிருக்கிறார்."

"குருவின் வாக்கை நன்றாக நிறைவேற்றுகிறாய். நாங்களே இப்போது கேட்பதனால் சொல். உன்னுடைய யோசனை என்ன?"

"எதைப் பற்றி என் யோசனையைக் கேட்கிறீர்கள், சேநாதிபதி?"

"இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த விஷயமாகத்தான். இளவரசர் இப்போது என்ன செய்வது உசிதம்? இலங்கையிலேயே இருக்கலாமா? அல்லது காஞ்சிக்குப் போகலாமா?"

"என்னுடைய உண்மையான கருத்தைச் சொல்லட்டுமா? இளவரசர் அநுமதித்தால் சொல்கிறேன்."

ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த அருள்மொழிவர்மர் ஆழ்வார்க்கடியானை ஏறிட்டுப் பார்த்து, "சொல் திருமலை, தாராளமாய் மனத்தை விட்டுச்சொல்!" என்று தைரியப்படுத்தினார்.

"இந்த இலங்கைத் தீவிலேயே மிகக் கடுமையான கட்டுக் காவல் உள்ள சிறைச்சாலை எது உண்டோ, அதைக் கண்டுபிடித்து அதற்குள்ளே இளவரசரை அடைத்துப் போடவேண்டும்! வௌியில் பலமான காவலும் போடவேண்டும்!"

"இது என்ன உளறல்?" என்றார் சேநாதிபதி.

"விளையாட இதுதானா சமயம்?" என்றான் பார்த்திபேந்திரன்.

"நான் உளறவும் இல்லை; விளையாடவும் இல்லை. மனத்தில் உள்ளதைச் சொன்னேன். நேற்று இரவு இளவரசர் அநுராதபுரத்து வீதிகளின் வழியாக வந்து கொண்டிருந்தார். அவர் தலைமீது ஒரு வீட்டின் முன் முகப்பு இடிந்து விழுந்தது. பிறகு ஒரு வீட்டில் நாங்கள் படுத்திருந்தோ ம். நல்ல வேளையாக ஒரு காரியத்தின் பொருட்டு எழுந்து போய் விட்டோம். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று இளவரசரையே கேளுங்கள்!"

இருவரும் இளவரசரை நோக்கினார்கள். அவருடைய முகபாவம் ஆழ்வார்க்கடியானுடைய கூற்றை உறுதிப்படுத்தியது. "இந்த அபாயங்கள் எல்லாம் யாருக்காக நேர்ந்தவையென்று கேளுங்கள். என்னையோ அல்லது வந்தியத்தேவனையோ கொல்லுவதற்காக யாராவது வீட்டைக் கொளுத்துவார்களா?"

பார்த்திபேந்திரன் உடனே துள்ளிக் குதித்து "இளவரசரைக் கொல்லுவதற்குத்தான் யாரோ முயற்சி செய்தார்கள். இதனால் இளவரசர் என்னுடன் காஞ்சிக்கு வரவேண்டிய அவசியம் உறுதிப்படுகிறது!" என்றான்.

"கூடவே கூடாது! தங்களுடன் இளவரசரை அனுப்புவதைக் காட்டிலும் பழுவேட்டரையர்களிடமே பிடித்துக் கொடுத்துவிடலாம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"வைஷ்ணவனே! என்ன சொன்னாய்!" என்று பார்த்திபேந்திரன் கத்தியை உருவினான்.

சேநாதிபதி அவனைக் கையமர்த்தி, "திருமலை! ஏன் அவ்விதம் சொல்லுகிறாய்? பார்த்திபேந்திர பல்லவர் சோழ குலத்தின் அருந்துணைவர் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

"தெரியும், சேநாதிபதி, தெரியும்! சிநேகம் இருந்து விட்டால் மட்டும் போதுமா?"

"பார்த்திபேந்திரர் சிநேகத்துக்காகவே உயிரையும் கொடுக்கக் கூடியவர் என்பதை அறிவேன், திருமலை!"

"அதுவும் இருக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு மறுமொழி கூறச் சொல்லுங்கள். நாங்கள் முந்தா நாள் மாலை தம்பள்ளைக்கு அருகில் போய்க் கொண்டிருந்தபோது இவருடன் இரண்டு பேர் வருவதைப் பார்த்தோம்! அந்த மனிதர்கள் யார், இப்பொழுது அவர்கள் எங்கே என்று இவரைக் கேட்டுச் சொல்லுங்கள்."

பார்த்திபேந்திர பல்லவன் சிறிது திடுக்கிட்டுப் போனான். கொஞ்சம தயக்கத்துடனே கூறினான்: "திரிகோண மலையில் அவர்களை நான் சந்தித்தேன். இளவரசர் இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவதாக அவர்கள் அழைத்து வந்தார்கள். அநுராதபுரத்தில் திடீரென்று மறைந்து விட்டார்கள். எதற்காகக் கேட்கிறாய், வைஷ்ணவனே! அவர்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"தெரியும்! சோழ குலத்தை அடியோடு ஒழித்துவிடச் சபதம் செய்திருப்பவர்களில் அவர்கள் இருவர் என்று எனக்குத் தெரியும். நேற்று அநுராதபுரத்தில் அவர்கள்தான் இளவரசரை கொல்லப் பார்த்தார்கள் என்று ஊகிக்கிறேன்... ஆகா! அதோ பாருங்கள்" என்று ஆழ்வார்க்கடியான் சுட்டிக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய இடம் அம்மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தது. நெருங்கிப் படர்ந்திருந்த மரங்களுக்கு இடையில் ஒரு அழகிய யுவதியும், யௌவன வாலிபனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்தியத்தேவனும் பூங்குழலியுந்தான் என்பது ஊகிக்கக் கூடியதாயிருந்தது. பேசிக் கொண்டேயிருந்த வந்தியத்தேவன் சட்டென்று ஒரு சிறிய கத்தியை சுழற்றி வீசி எறிந்தான். கத்தி ஒரு புதரில் போய் விழுந்தது. 'வீல்' என்று ஒரு குரல் கேட்டது.


பக்க தலைப்பு



நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
பூங்குழலியின் கத்தி




பாழடைந்த மண்டபத்திலிருந்து பூங்குழலியைத் தேடிக் கொண்டு சென்ற வந்தியத்தேவன், அவள் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இலேசான விம்மல் அவளிடமிருந்து வந்து கொண்டிருந்தது. குரலை மிகவும் நயப்படுத்திக் கொண்டு, "பூங்குழலி!" என்றான். சத்தம் கேட்ட பூங்குழலி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். "நீ தானா?" என்று சொல்லி மறுபடியும் திரும்பிக் கொண்டாள்.

"நான்தான்! என்பேரில் உனக்கு என்ன கோபம்?"

"உன் பேரில் எனக்கு எந்தவித க் கோபமும் இல்லை."

"பின்னே ஏன் உனக்கு இவ்வளவு சிடுசிடுப்பு?"

"எனக்கு ஆண் பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கவில்லை."

"இளவரசரைக் கூடவா?" பூங்குழலி திரும்பிக் கண்களில் கனல் எழும்படி வந்தியத்தேவனைப் பார்த்தாள்.

"ஆமாம்; அவரைத்தான் முக்கியமாகப் பிடிக்கவில்லை!" என்றாள்.

"அப்படி அவர் என்ன குற்றத்தைச் செய்துவிட்டார்?"

"என்னை அவருக்கு ஞாபகமேயில்லை. என்னை அவர் முகமெடுத்துக் கூடப் பார்க்கவில்லை."

"உன்னை அவருக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. நான் உன்னைப் பற்றிக் கூறியதும், 'ஓ! சமுத்திர குமாரியை எனக்குத் தெரியாதா? என்றார்.

"பொய் சொல்லுகிறாய்."

"நீயே நேரில் வந்து கேட்டுக்கொள்."

"என்னை நினைவிருந்தால், ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?"

"அவர் பேசினார்; நீதான் மறுமொழி சொல்லாமல் ஓடி வந்துவிட்டாய்."

"அந்தமாதிரி பேச்சை நான் சொல்லவில்லை. தெரிந்தவர்களைப் பார்த்தால், 'என்ன? ஏது?' என்று விசாரிப்பது கிடையாதா? நீ சொல்வது பொய்! அவர் என்னை முகமெடுத்தே பார்க்கவில்லை."

"பூங்குழலி! அதற்கு ஒரு காரணம் இருக்கிறது."

"என்ன காரணம்?"

"இளவரசருக்கு இப்போது ரொம்ப கஷ்டகாலம்."

"யார் சொன்னது?"

"எல்லா ஜோசியர்களும் சொல்லியிருக்கிறார்கள். குடந்தை சோதிடர் என்னிடமே சொன்னார்."

"உன்னிடம் என்ன சொன்னார்?"

"இளவரசருக்குக் கொஞ்சநாள் வரையில் கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக வந்து கொண்டிருக்கும் என்று சொன்னார். அவரைச் சேர்ந்தவர்களுக்குக்கெல்லாம் கஷ்டங்கள் வரும் என்று சொன்னார். இது இளவரசருக்கும் தெரியும். ஆகையினால் அவர் யாரும் தம்மோடு சிநேகிதமாக இருப்பதை விரும்பவில்லை. தமக்கு வரும் கஷ்டம் தம்மோடு போகட்டும், என்று நினைக்கிறார்."

"நீ மட்டும் ஏன் அவரோடு சிநேகமாயிருக்கிறாய்?"

"நீ சற் ு முன் பார்க்கவில்லையா? என்னையும் சண்டை பிடித்துத் துரத்த அவர் பிரயத்தனப்படுகிறார். நடுச் சாலையில் ஒரு காரணமும் இல்லாமல் அவர் என்னோடு கத்திச் சண்டை போட்டார்.நீங்கள் வந்ததினால் சண்டை நின்றது."

"அவர் துரத்தினாலும் நீ அவரை விட்டுப் போக மாட்டாயா?"

"மாட்டவே மாட்டேன். அவருக்கு வரும் கஷ்டங்களையெல்லாம் நானும் பகிர்ந்து அநுபவிப்பேன்."

"அவரை உனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதா?"

"ஆமாம்; ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது."

"எதனால் பிடித்திருக்கிறது?"

"காரணம் சொல்லத் தெரியாது.அவரைப் பார்த்தவுடனே அவர்மேல் பிரியம் ஏற்பட்டு விட்டது"

"எனக்கும் அப்படித்தான்!" என்றாள் பூங்குழலி. உடனே தான் அவ்விதம் மனம் திறந்து சொல்லிவிட்டதைப் பற்றி வருந்தி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"உனக்கு இளவரசரிடம் பிரியம் என்று எனக்குத் தெரியும். ஆகையினால் தான் உன்னை அழைத்துப் போக வந்தேன். என்னுடன் வா!"

"வரமாட்டேன்!" என்று பூங்குழலி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

"வராவிட்டால் பலவந்தமாக உன்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவேன்."

"அருகில் நெருங்கினால் இதோ கத்தி இருக்கிறது ஜாக்கிரதை!" என்று பூங்குழலி தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"பாவிப் பெண்ணே! எதற்காக என்னைக் குத்திக் கொல்ல வருகிறாய்? இளவரசரிடம் உன்னைப்பற்றி ஞாபகப் படுத்தினேனே, அதற்காகவோ?"

"நீ பொய் சொல்லுகிறாய்; அவரிடம் என்னைப் பற்றி நீ ஒன்றுமே சொல்லவில்லை!"

"போனால் போகட்டும்; இளவரசரைப் பிடித்துக்கொண்டு போக இரண்டு கப்பல்கள் வந்திருப்பதாகச் சொன்னாய் அல்லவா அதை அவரிடம் வந்து சொல்லிவிட்டு அப்புறம் எப்படியாவது தொலைந்து போ!" .

"எல்லா விவரங்களும் சேநாதிபதியிடம் சொல்லி விட்டேன்."

"இளவரசர் உன்னிடம் நேர ல் கேட்டு அறிய விரும்புகிறார்".

"அவர் முன்னால் வந்தால் நான் ஊமையாகி விடுவேன்."

"ஊமைச்சிகளிடத்தில் இளவரசருக்கு ரொம்பப் பிரியம்!"

"சீச்சீ! நீ பரிகாசம் செய்கிறாய்!" என்று சொல்லிப் பூங்குழலி கத்தியை ஓங்கினாள்.

"அப்படியானால் நீ என்னுடன் வரப் போவதில்லையா?"

"இல்லை!"

"சரி; நான் போகிறேன்! என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இரண்டு அடி எடுத்து வைத்தான். மறுபடியும் சட்டென்று திரும்பிப் பூங்குழலியின் கையிலிருந்து அவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தான்!

வீசி எறிந்த கத்தி வெகுதூரம் சுழன்று சுழன்று சென்று ஓர் அடர்ந்த புதரில் விழுந்தது. கத்தி விழுந்த இடத்திலிருந்து 'வீல்' என்று குரல் கேட்டது. அது மனிதக் குரலா, ஏதேனும் ஒரு விலங்கு அல்லது பட்சியின் குரலா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. கத்தியைப் பிடுங்கியதும் வந்தியத்தேவனைக் கடுங்கோபத்துடன் பார்த்த பூங்குழலி மேற்கூறிய சப்தத்தைக் கேட்டதும் கத்தி விழுந்த இடத்தை ஆர்வத்துடன் நோக்கினாள். பிறகு, இருவரும் வியப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மெள்ளமெள்ள நடந்து கத்தி விழுந்த இடத்துக்கருகிலிருந்து புதரை நெருங்கிப் பார்த்தார்கள். செடிகளிலும் தரையிலும் புது இரத்தம் சிந்தியிருந்தது. மற்றபடி அங்கு மனிதரும் இல்லை; விலங்கும் இல்லை. பூங்குழலியின் கத்தியையும் காணவில்லை!

"பார்த்தாயா பூங்குழலி! நான் கூறியதன் உண்மை இப்போதாவது தெரிகிறதா? இளவரசரை நாலா பக்கமும் அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன. எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து எப்படிப்பட்ட அபாயம் வருமென்று சொல்ல முடியாது. தற்செயலாக உன்னுடைய கத்தியைப் பிடுங்கி நான் விட்டெறிந்தேன். அதிலிருந்து இங்கே யாரோ பதுங்கிக் கொண்டிருந்தது. தெரிய வந்தது. எதற்காக பதுங்கியிருக்க ேண்டும் என்று நீயே யோசித்துப் பார்! இளவரசரைச் சமயம் பார்த்துத் தீர்த்துக் கட்டுவதற்காகத்தான்! கோடிக்கரைக்கு நான் வந்ததற்கு முதலாவது நாள் இரண்டு பேரை உன் அண்ணன் படகேற்றி அழைத்துப் போனதாகவும், அவர்களைப் பற்றி உனக்குச் சந்தேகம் தோன்றியதாகவும் சொல்லவில்லையா? அதை ஞாபகப்படுத்திக் கொள்! இப்படிப்பட்ட சமயத்தில் இளவரசரிடம் பிரியம் உள்ளவர்கள் அவரை விட்டுப் போகலாமா?" என்று வந்தியத்தேவன் மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான்.

"அவர் என்னைப் போகச் சொன்னால் என்ன செய்வது?" என்று பூங்குழலி கேட்டாள்.

"அவர் போகச் சொன்னாலும் நாம் போகக்கூடாது!"

பூங்குழலி சற்று யோசித்துவிட்டு, "இங்கே பதுங்கியிருந்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டாமா?" என்றாள்.

"அது நம்மால் முடியாத காரியம். இந்த அடர்ந்த காட்டில் எங்கேயென்று தேடிக் கண்டுபிடிப்பது? அதிக நேரம் தாமதித்தால் இளவரசருக்கு உண்மையாகக் கோபம் வந்துவிடும். நம்மை விட்டுவிட்டு எல்லாரும் போய்விடுவார்கள்! பேசாமல் என்னுடன் வா"
"சரி வருகிறேன்!" என்று பூங்குழலி கூறினாள்.

இருவரும் மற்றவர்கள் இருந்த மண்டபத்தை நோக்கி நடந்தார்கள்.

மண்டபத்திலிருந்தவர்கள், வந்தியத்தேவனும் பூங்குழலியும் அருகில் வந்ததும், மேற்படி சம்பவத்தைப்பற்றியே கேட்டார்கள். "எதற்காகக் கத்தியை எறிந்தாய்? 'வீல்' என்ற சத்தம் கேட்டதே, அது என்ற சத்தம்?" என்று வினவினார்கள்.

"புதரில் ஏதோ மிருகம் சிறுத்தையோ அல்லது நரியோ பதுங்கியிருந்ததுபோல் தோன்றியது. அதனால் இவளுடைய கத்தியைப் பிடுங்கி வீசி எறிந்தேன். கிட்டப் போய்ப் பார்த்தோம். ஒன்றும் இல்லை" என்றான் வந்தியத்தேவன்.

"அது போனால் போகட்டும்; இந்தப் பெண்ணிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்!" என்றார் சேநாதிபதி.

பூங்குழலி வந்ததிலிருந் ு இளவரசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசர் அப்போது அவளை ஏறிட்டுப் பார்த்தார்.

"சீச்சீ! இந்த நெஞ்சு எதற்காக இப்படி அடித்துக் கொள்கிறது? தொண்டையில் வந்து ஏதோ அடைக்கிறதே, அது என்ன? கண்ணில் எதற்காகக் கண்ணீர் தளும்புகிறது! அசட்டுப் பெண்ணே! உன் தைரியம் எல்லாம் எங்கே போயிற்று? அலை கடலையும், பெரும் புயலையும் கண்டு கலங்காத உன் உள்ளம் ஏன் இப்போது இப்படித் தத்தளிக்கிறது? கொடிய பயங்கர வேங்கைப் புலியின் கொள்ளிக் கண்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு படைத்த உன் கண்கள் ஏன் இப்போது மங்கல் அடைகிறது! பெண்ணே! மறுபடியும் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டிக் கொள்ளாதே! இளவரசரை நிமிர்ந்து பார்! அவர் கேட்கும் கேள்விகளுக்குக் கணீர் என்று மறுமொழி சொல்லு! உன்னை என்ன செய்துவிடுவார்? கருணை மிகுந்தவர், தயாளு என்று உலகமெல்லாம் சொல்கிறதே! பேதைப் பெண்ணாகிய உன்னை இளவரசர் என்ன செய்து விடுவார்?..." "சமுத்திரகுமாரி! என்னை உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் கேட்டது ஆழ்கடலின் அடியிலிருந்து வரும் குரல் போல் அவள் காதில் தொனித்தது.


பக்க தலைப்பு



நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
"நான் குற்றவாளி!"




"சமுத்திர குமாரி! உனக்கு என்னை நினைவிருக்கிறதா...?"

பொன்னியின் செல்வ! இது என்ன கேள்வி! யாரைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்கிறீர்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகள் கலந்து பழகிய பின்னர் 'நினைவிருக்கிறதா?' என்று கேட்பது தகுமா? அல்லது தங்களுக்குத்தான் நினைவில்லாமல் போய்விட்டதா? எத்தனை யுகம் என்னுடைய சின்னஞ்சிறு படகில் தாங்கள் ஏறி வந்திருக்கிறீர்கள்? கடலில், முடிவில்லாத கடலில், எல்லையில்லாத வெள்ள அலைகளுக்குகிடையில், நாம் இருவரும் என் சிறு படகில் ஏறிக்கொண்டு உல்லாச யாத்திரை செய்ததையெல்லாம் றந்து விட்டீர்களா? திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு நெடுங்காலம் நின்றதை மறந்து விட்டீர்களா? பயங்கரமான புயல்காற்று அடித்தபோது, மலைமலையாக எழுந்த பேரலைகள் நம்முடைய படகைத் தாக்கி, ஒரு கணம் நம்மை வான மண்டலத்துக்கு உயர்த்தி, மறுகணம் பாதாளத்தில் அழுத்தி, இப்படியெல்லாம் அல்லோலகல்லோலம் செய்த நாட்களில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்று அக்கொடும்புயலை எதிர்த்து வென்றதை மறந்துவிட்டீர்களா? ஒருசமயம் வான வௌியில் நாம் பறந்து பறந்து பறந்து சென்று கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டீர்களா? விண்மீன்களைத் தாங்கள் தாவிப் பிடித்து என் தலையில் ஆபரணங்களாகச் சூட்டினீர்களே, அதுவும் மறந்துவிட்டதா? பூரண சந்திரனை என் முகத்தருகிலே கொண்டு வந்து, 'இதோ இந்த வெள்ளித் தகட்டில் உன் பொன் முகத்தைப் பார்!' என்று சொல்லிக் காட்டினீர்களே, அதையும் மறந்துவிட்டீர்களா? மற்றொரு சமயம் ஆழ்கடலிலே தாங்கள் மூழ்கினீர்கள்; நான் உள்ளம் பதைபதைத்து நின்றேன்; சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு கைகளிலும் முத்துக்களையும் பவழங்களையும் எடுத்துக் கொண்டு வௌிவந்து அவற்றை மாலையாகக் கோத்து என் கழுத்தில் சூட்டினீர்கள்! அதைத் தாங்கள் மறந்துவிட்டாலும் நான் மறக்க முடியுமா? அரசே! உச்சி வேளைகளில், நீலநிறம் ததும்பிய ஏரிக்கரைகளில், பூங்கொத்துக்களின் பாரம் தாங்காமல் மரக்கிளைகள் வந்து வளைந்து அலங்காரப் பந்தல் போட்ட இடங்களில், பசும்புல் பாய்களில், நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் எத்தனை எத்தனை எத்தனையோ நாட்கள் கழித்தோமே, அதையெல்லாம் மறந்துவிட முடியுமா? அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும், ஆயிரம் ப ினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் நான் என்றேனும் மறக்க முடியுமா? எத்தனை ஜன்மங்களிலும் மறக்க முடியுமா? என்னைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்டீர்களே, அப்படிக் கேட்கலாமா? நினைவிருக்கிறது, ஐயா, நன்றாக நினைவிருக்கிறது!..." இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும் என்று அந்தபேதைப் பெண்ணின் உள்ளம் துள்ளித் துடித்தது.

ஆனால் அவளுடைய பவள இதழ்களோ, "நினைவிருக்கிறது!" என்ற இரு சொற்களை மட்டுமே முணு முணுத்தன.

"ஆகா! சமுத்திரகுமாரி, நீ வாய் திறந்து பேசுகிறாயே! இந்த அதிசயமான இலங்கைத் தீவிலே உள்ள எத்தனையோ மணிமாட மண்டபங்களின் தூண்களில் அழகிய தேவ கன்னிகைகளின் சிலைகளை அமைந்திருக்கிறார்கள்! ஒருவேளை அத்தகைய சிலைவடிவமோ நீ, என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீ வாய்திறந்து பேசுகிறாய். இன்னும் சில வார்த்தைகள் சொல்! உன் இனிய குரலைக் கேட்க எனக்கு எவ்வளவோ ஆசையாயிருக்கிறது.நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே, சமுத்திரகுமாரி? அந்தக் கப்பல்களை உன் கண்களினால் நீயே பார்த்தாயா?" என்று இளவரசர் கேட்டார்.

"ஆம், ஐயா, என் கண்களினால் பார்த்தேன்!" என்றாள் பூங்குழலி.

"ஆகா! இப்போது கொஞ்சம் உன் குரலைக் கேட்க முடிகிறது. என் செவிகள் இன்பமடைகின்றன. நல்லது; மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்ட ிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. இவையெல்லாம் நம் சேநாதிபதியிடம் நீ கூறியவை தானே?"

"நடந்ததை நடந்தபடியே கூறினேன்."

"அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய்! எப்படி வந்தாய், சமுத்திரகுமாரி?"

"பாதி வழி படகில் வந்தேன்; பிறகு காட்டு வழியில் நடந்து வந்தேன்."

"எங்கே போகும் உத்தேசத்துடன் கிளம்பினாய், அம்மா?"

"சேநாதிபதி மாதோட்ட நகரில் இருப்பார் என்று எண்ணி அங்கே போகும் உத்தேசத்துடன் வந்தேன்.வழியில் மகிந்தலையில் இருப்பதாக அறிந்தேன். சேநாதிபதியைப் பார்த்துச் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எத்தனை பேர் குறுக்கே நின்று தடுப்பது?" என்று சொல்லிப் பூங்குழலி சேநாதிபதி நின்ற பக்கம் நோக்கினாள்.அவளுடைய பார்வையில் கோடைகாலத்து இடிமுழக்கத்துக்கு முன்னால் தோன்றும் மின்வெட்டு ஜொலித்தது.

"சேநாதிபதியைப் பார்ப்பது என்றால் இலேசான காரியமா? இதோநிற்கும் என் சிநேகிதர் உன்னைப்போலவே சேநாதிபதியைப் பார்க்க முயன்று அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய். தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி! சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா? ம த்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்?"

"அரசே! அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது."

"பெரிய மனது பண்ணி எனக்காக இன்னொரு தடவை சொல்!"

"தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்."

"யாருடைய கட்டளையின் பேரில் அவ்விதம் வந்தார்கள் என்பது பற்றி ஏதாவது பேசிக்கொண்டார்களா?"

"அதை நான் நம்பவில்லை, ஐயா! பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்."

"உன்னுடைய கருத்தைப் பிறகு தெரிவிக்கலாம். அவர்கள் பேசிக்கொண்டதை மட்டும் சொல், சமுத்திரகுமாரி!"

"சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள்."

"ரொம்ப நல்லது; அதற்குக் காரணம் ஏதாவது சொல்லிக் கொண்டார்களா?"

"சொல்லிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்த குருக்களுடன் சேர்ந்து கொண்டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்... இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது."

"நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய்! சக்கரவர்த்தியின் தூதர்களை எந்தவிதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா...? நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா?"

"சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்..."

"ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேட க்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய். சமுத்திரகுமாரி! சற்று அப்பால் இரு. இவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் மாதிரி ரொம்ப தூரம் ஓடிப்போய் விடாதே. மறுபடியும் உன்னைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு வந்தியத்தேவரை அனுப்பும்படி செய்துவிடாதே!" சமுத்திர குமாரி சற்று நகர்ந்து ஒரு தூணின் அருகில் நின்று கொண்டாள். இளவரசரின் முகத்தைப் பார்க்கக்கூடிய இடத்திலேதான் நின்றாள்.

தேன் குடத்தில் முழுகிய இரு வண்டுகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. மெதுவாகச் சமாளித்துக் கரைக்கு வந்து பிறகு தேனைச் சுவை பார்த்துக் களிக்கத் தொடங்கின. பூங்குழலியின் கண்களும் இப்போது அத்தகைய சௌகரியமான நிலையில் இருந்தன. இளவரசரின் முக சௌந்தரியமாகிய தேனை அவை பருகித் திளைத்தன. அவளுடைய உள்ளமோ நெஞ்சுக்குள் கட்டுப்பட்டு நிற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. நெஞ்சை வெடித்துக் கொண்டு வௌியேறி வான வௌியெங்கும் பொங்கி நிறைந்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தது.

இளவரசர் சேநாதிபதி பூதி விக்கரம் கேசரியைப் பார்த்து "ஐயா! பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர்: தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது!" என்றார்.

சேநாதிபதி மறுமொழி சொல்வதற்குள் பார்த்திபேந்திரனையும் திரும்பிப் பார்த்து, "ஐயா! தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது!" என்றார்.

சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் மூலம் ஒருவருடைய பயத்தை இன்னொருவருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். சேநாதிபதி இளவரசரைப் பார்த்து, "இளவரசே! தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. வாழ்நாளெல்லாம் நான் போர்க்களத்திலே கழித்தவன். மூடுமந்திரமாகப் பேசினால் தெரிந்துகொள்ள இயலாதவன். தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"இச்சமயம் என்னுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதான். என்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படியான கட்டளையுடன் என் தந்தை ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர்கள் தேடி அலையும்படியாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? நானே அவர்கள் இருக்குமிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்துவிடுவேன். அதுவே இப்போது நான் செய்ய வேண்டிய கடமை..."

"முடியவே முடியாத காரியம்.என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன். தடுத்தே தீருவேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.

சேநாதிபதி அவனைப் பார்த்து, "பதறவேண்டாம்; பொறுங்கள்!" என்றார். பின்னர் இளவரசரை நோக்கிக் கூறினார்.

"ஐயா! தங்களுடைய கடமையைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. அருள் புரிந்து அதைக் கேட்கவேண்டும். கொ ும்பாளூர் வேளார் பெருங்குடியில் இன்று உயிரோடிருக்கும் ஆண் மகன் நான் ஒருவன்தான். மற்றவர்கள் அனைவரும் சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் இறந்து போனார்கள். அநேகமாக எல்லாரும் போர்க்களத்தில் மடிந்தார்கள். நானும் ஒருநாள் அவ்விதம் இறந்து போவேன். யார் கண்டது? ஆகையால் என் வார்த்தையைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேண்டும். அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: 'இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வௌியேறிப் போக வேண்டியதுதான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு...' இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா? அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம்? இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா?..."

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் கூறி வந்ததை இதுவரை பொறுமையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது குறுக்கிட்டார்.

"வேறு யாராவது நம்ப முடியாதோ, என்னமோ? ஆனால் என்னால் நம்ப முடியும்!" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள், இளவரசே!"

"இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்ற நான சூழ்ச்சி செய்தது உண்மைதான் என்று சொல்கிறேன்?"

வந்தியத்தேவன் இப்போது முன்னால் வந்து, "இது என்ன ஐயா! சற்று முன் வரையில் சத்தியம் - தர்மம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது இப்படிப் பெரும் பொய் சொல்கிறீர்களே!... சேநாதிபதி ! இவர் வார்த்தையை நீங்கள் நம்பவேண்டாம். நேற்றிரவு புத்த குருக்களின் மகாசபையார் இவருக்கு இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் அளித்தார்கள் இவர் வேண்டாம் என்று மறுதளித்தார். இதற்கு நானும் இதோ நிற்கும் இந்த வைஷ்ணவனும் சாட்சி!"என்றான்.

பொன்னியின் செல்வர் புன்னகை புரிந்து, "வந்தியத்தேவரே! ஒரு கேள்வி! சூழ்ச்சி செய்கிறவர்கள் சாட்சி வைத்துக் கொண்டு சூழ்ச்சி செய்வார்களா? நீங்கள் இருவரும் பக்கத்தில் இருந்ததினாலேயே நான் இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் மறுதளித்திருக்கலாம் அல்லவா?" என்றார்.

வந்தியத்தேவன் அசந்துபோனான்! இதற்கு எதிராக அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இளவரசர் மேலும் கூறினார்: "வாணர்குல வீரரே! உமக்குச் சந்தேகம் இருந்தால் அதோ நிற்கும் வைஷ்ணவரைக் கேட்கலாம். முதன்மந்திரி அநிருத்தப் பிரமராயர் அவரிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். 'புத்த குருமார்கள் தங்களுக்கு இலங்கைச் சிம்மாசனம் அளிக்க முன்வருவார்கள். சாட்சியம் வைத்துக் கொண்டு அதை மறுதளிக்கவும்' என்று சொல்லி அனுப்பினாரா, இல்லையா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்!" இதைக்கேட்டு அங்கிருந்த எல்லாருமே திகைத்துப்போய் நின்றார்கள்.

இளவரசர் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னார்: "ஐயா! இதைக்கேளுங்கள். இந்த இலங்கையைக் கவர்ந்து ஆளவேண்டும் என்று பேராசை என் மனத்தில் இருந்தது உண்மை.இந்தப் பேராசையை எனக்கு உண்டு பண்ணியவர் என் தமக்கையார். 'தம்பி! நீ நாடு ஆளப் பிறந்தவன். உன் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இங்கே உனக்கு இடம் இல்லை. ஆகையால் இலங்கைக்குப் போ! இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொள்!' என்று இப்படியெல்லாம் இளையபிராட்டி அடிக்கடி சொல்லி என் மனத்தில் ஆசையை வளர்த்து விட்டார். ஆகையால் நான் குற்றவாளிதான், சக்கரவர்த்தி என்னைச் சிறைபடுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதற்குக் காரணம் இருக்கிறது..."

"கொஞ்சம் பொறுங்கள், இளவரசே! அப்படித் தங்கள் மனத்தில் எண்ணம் உதித்திருந்தால் அது இந்த இலங்கைத் தீவின் பாக்கியம். அதற்குப் பொறுப்பாளியும் தாங்கள் அல்ல; தங்கள் தமக்கையார் இளைய பிராட்டியும் அல்ல. சுந்தர சோழ சக்கரவர்த்திதான் அதற்குப் பொறுப்பாளி அவரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்; தங்களை இலங்கைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப்பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குந்தவை தேவியிடம் இதைப் பற்றி முதன் முதலில் கூறியவரும் சக்கரவர்த்தி தான். தங்கள் தந்தையின் விருப்பத்தையே தமக்கையார் தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆகையால் தாங்கள் குற்றவாளி அல்ல..."

"சேநாதிபதி! அப்படியானால் என் தந்தையிடம் போவதற்கு நான் ஏன் தயங்கவேண்டும்? அவரிடம் நடந்தது நடந்தபடி சொல்கிறேன். இதோ இருக்கும் இந்த இரண்டு பேரும் எனக்காகச் சாட்சி சொல்லட்டும். பிறகு சக்கரவர்த்தி என்ன கட்டளை இடுகிறாரோ, அதன்படி நடந்துகொள்வது என் கடமை..."

பார்த்திபேந்திரன் இப்போது அனல் கக்கும் குரலில் கூறினான்: "சேநாதிபதி ஏதேதோ வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனியும் மூடி மறைப்பதில் பயன் ஒன்றுமில்லை இளவரசரிடம் உண்மையைச் சொல்லியே தீரவேண்டும். தாங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா!"

"நானே சொல்கிறேன்; பொறுங்கள்!" என்றார் சேநாதிபதி. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் க ூறினார்: "இளவரசே! தங்களுடைய களங்கமற்ற உள்ளத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று எண்ணியது பயன்படவில்லை. ஒரு விரஸமான விஷயத்தைப் பற்றித் தங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையர் இந்த முதிய பிராயத்தில் நந்தினி என்னும் பெண்ணை மணம் புரிந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே.அவள் ஒரு சூனியக்காரி. பயங்கரமான மாய மந்திர வித்தைகள் அவளுக்குத் தெரிந்திருக்கின்றன. அவற்றின் உதவியால் பெரிய பழுவேட்டரையரை அவள் தன் காலடியில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் காலால் இட்ட பணியை இவர் தலையில் ஏந்தி நிறைவேற்றி வைக்கிறார். பழங்குடியில் பிறந்து, பல வீரச் செயல்கள் புரிந்த அந்தப் பெரியவருக்கு விதி வசத்தால் இந்த மாதிரி துர்க்கதி சம்பவித்து விட்டது."

"சேநாதிபதி! இது நான் கேள்விப்படாதது அல்லவே? சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே?" என்றார் இளவரசர்.

"அந்த மந்திரக்காரி நந்தினியின் சக்தி இதுவரையில் பழுவேட்டரையர்களை மட்டும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. இளவரசே! மன்னிக்க வேண்டும்! இப்போது அவள் சக்கரவர்த்தியின் பேரிலும் தன்னுடைய மந்திரத்தைப் போட ஆரம்பித்து விட்டாள். அதனால்தான் இத்தகைய கட்டளையை, - தங்களைச் சிறைப்படுத்தி வரும்படியான கட்டளையை, சக்கரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்!..."

"சேநாதிபதி! எச்சரிக்கை! சக்கரவர்த்தியைப் பற்றிக் கௌரவக் குறைவாக எதுவும் சொல்ல வேண்டாம். என் தந்தையின் உடம்பில் உயிர் உள்ளவரையில் அவர் இடும் கட்டளை எதுவானாலும், எந்தச் சந்தர்ப்பத்தில் இடப்பட்டாலும், அதுவே தெய்வத்தின் கட்டளையாகும்..."

"அதை நாங்கள் மறுக்கவில்லை, இளவரசே! சக்கரவர்த்தியின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அவருடைய உயிருக்கே அபாயம் வந்துவிடுமோ என்றுதான் அஞ் சுகிறோம். நந்தினியைப் பற்றிய முழு உண்மையை நேற்றுவரை நானே அறிந்து கொள்ளவில்லை. நேற்றிரவுதான் பார்த்திபேந்திரன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அந்தப் பயங்கரமான விஷயத்தைத் தாங்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

"மூன்று வருஷத்துக்கு முன்னால் மதுரைக்கு அருகில் வீர பாண்டியனோடு இறுதி யுத்தம் நடந்தது அல்லவா? அப்போது தங்கள் தமையனால் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஓளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான்.அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம்.ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வௌியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டதென்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம். ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்துத் தன் காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையை ் கொய்து வௌியே எடுத்து வந்தார். இளவரசே! அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி! அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக்கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, 'பழுவூர் இளைய ராணி' யாக விளங்குகிறாள்! அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன், - வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா? வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். அவள் அருகில் சென்றவர் யாரும் அவளுடைய மோக வலையிலிருந்து தப்பித் திரும்புவது கடினம். அதோ நிற்கும் வந்தியத்தேவன் அதற்குச் சாட்சி சொல்லுவான். சோழ குலத்தைப் பூண்டோடு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள்.இளவரசே! துரதிஷ்ட வசமாக நம் சக்கரவர்த்திப் பெருமானும் அந்தப் பாதகியின் வலையில் விழுந்து விட்டதாகக் காண்கிறது. மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சக்கரவர்த்தியே யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையென்று கருதித் தாங்கள் தஞ்சைக்குப் போவதற்கு இது தருணமல்ல..."

"சேநாதிபதி! தாங்கள் கூறிய செய்திகள் எனக்கு மிக்க வியப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அச்செய்திகளில் நான் செய்த முடிவுதான் உறுதிப்படுகிறது. என் தந்தையை அவ்வளவு பயங்கரமான அபாயங்கள் சூழ்ந்திருக்கும்போது நான் இருக்க வேண்டிய இடம் அவர் அருகிலேதான். இலங்கை அரசு எனக்கு என்னத்திற்கு? அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு? இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம்!" என்று இளவரசர் கம்பீரமாகக் கூறினார். பிறகு, சற்றுத் தூரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு தம்மைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியின் மீது அவர் கண்கள் சென்றன.

"சமுத்திர குமாரி! சற்று இப்படி அருகில் வா!" என்றார். பூங்குழலி நெருங்கி வந்தாள். "பெண்ணே! நீ கொண்டுவந்த செய்தியின் மூலம் எனக்குப் பெரிய உதவி செய்தாய். இன்னும் ஓர் உபகாரம் எனக்கு நீ செய்ய வேண்டும். செய்வாயா?" என்று கேட்டார்.

'அடடா! இது என்ன? இந்த ஏழைப் படகுக்காரியிடமா இவர் உதவி கோருகிறார்? இவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியத்தை நாடி வந்தேன்; இவர் என்னிடம் உதவி வேண்டும் என்று யாசிக்கிறாரே! கடவுளிடம் வரம் கேட்க வந்தேன்; கடவுள் தம் திருக் கரங்களை நீட்டி என்னிடம் 'பிச்சை போடு' என்று கேட்கிறாரே?' இவ்வாறு மனத்தில் எண்ணி, "இளவரசே! தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்!" என்றாள் பூங்குழலி.

"சமுத்திரகுமாரி! என்னைத் தேடிக் கொண்டு இரண்டு மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்று முகத்துவாரத்தின் அருகில் காத்திருக்கின்றன என்று சொன்னாய் அல்லவா? அந்த இடத்துக்கு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா?"

"பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" என்பதாக ஒரு குரல் கர்ஜித்தது. அது சேநாதிபதியின் குரல்தான் என்பதைப் பூங்குழலி உணர்ந்தாள்.

இத்தனை நேரமும் ஏதோ ஒரு சொப்பன லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் தன் நெருக்கடியான நிலைமை தெரிந்தது. எந்த அபாயத்திலிருந்து இளவரசரைத் தப்புவிக்கலாம் என்ற ஆசையுடன் இவள் அவசர அவசரமாக ஓடி வந்தாளோ, அந்த அபாயத்தின் வாயிலிலேயே கொண்டு சேர்க்கும்படி இளவரசர் இப்போது தன்னைக் கேட்டுக்கொள்கிறார்! பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" - சேநாதிபதியின் இந்தக் கட்டளையின் பொருள் அவளுக்கு இப்போ ு புலனாயிற்று. நாலாபுறத்திலிருந்தும் ஆயிரம் குரல்கள் அதே கட்டளையை அவளுக்கு இட்டன. மரங்கள் அவ்வாறு முழங்கின; மண்டபத்தின் தூண்கள் அவ்விதம் அலறின; மரக்கிளைகளின் மேலிருந்து பறவைகள் கதறின.

ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. 'பூங்குழலி! இதோ உன் அதிர்ஷ்டம்! இளவரசருக்கு வழிகாட்டி அழைத்துப் போவாயானால் அவருடன் இரண்டு தினங்கள் கழிக்கலாம். அவர் அருகில் நீ இருக்கலாம். அவர் உன்னைப் பாராதபோது அவரை நீ பார்க்கலாம். அவர் மீது பட்டு வரும் காற்று உன்மீதும் படும். அவருடைய குரல் உன் காதில் அடிக்கடி கேட்கும்.அடி பெண்ணே!" நீ கண்டு வந்த எட்டாத கனவில் ஒரு சிறிது நிறைவேறும். பிறகு அது எப்படியானால் என்ன? பூங்குழலி! ஒத்துக்கொள்!" என்று அந்த மெல்லிய குரல் அவள் மனக் காதில் கூறியது.

"சமுத்திரகுமாரி! ஏன் தயங்குகிறாய்? எனக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டாயா? நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா?" என்று இளவரசர் கூறியது அவளுடைய மனம் திடமடையக் காரணமாயிற்று.

"இளவரசே! வழிகாட்ட நான் வருகிறேன்!" என்றாள்.

சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அப்போது தம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சப்தம் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால் பூமியின் கர்ப்பத்திலிருந்து எழுகின்ற பயங்கரத் தொனியை நிகர்த்திருந்தது. அவர் ஓர் அடி முன்னால் வது கூறினார்:- "இளவரசே! தங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன். ஆனாலும் என் வேண்டுகோள் ஒன்றுக்குச் செவி சாய்க்க வேணும். தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் வரையில் தங்களைப் பாதுகாப்பது என்பொறுப்பு. நேற்றிரவு தங்களைக் கொல்ல நடந்த முயற்சிகளைப் பற்றிச் சற்று முன்னால் தங்கள் தோழர்கள் சொன்னார்கள். அந்தக் கொலைகாரர்கள் இன்னும் பிடிப வில்லை. அவர்கள் யாரென்று தெரியவும் இல்லை. என் மனத்தில் உள்ளதைச் சொல்வதற்காக மன்னியுங்கள். இந்தப் பெண்ணின் பேரிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு.அந்தக் கொலைகாரர்களுக்கு இவளும் ஒருவேளை உடந்தையாயிருக்கலாம் அல்லவா? மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா? ஏன் இருக்கக் கூடாது? சற்றுமுன்னால் இவளுடைய கத்தியைத் தங்கள் தோழர் வந்தியத்தேவர் பிடுங்கி எறிந்தபோது, அது யார் பேரிலோ விழுந்து ஓலக்குரல் கேட்டதே? அது யாருடைய குரல்? இந்தப் பெண் தாராளமாக வழி காட்டிக் கொண்டு வரட்டும். நம்முடைய யானை மேல் ஏறிக்கொண்டு முன்னால் செல்லட்டும். ஆனால் தங்களுடன் நானும் தொண்டைமான் ஆற்றில் உள்ள கப்பல்களைக் காணும் வரையில் வந்தே தீருவேன்! அது என்னுடைய கடமை!"

சேநாதிபதி இந்தப் பேச்சைப் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்ற இளவரசர், "அப்படியேயாகட்டும்! தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை!" என்றார்.


பக்க தலைப்பு



நாற்பத்துநான்காம்அத்தியாயம்
யானை மிரண்டது!




மேற்கண்டவாறு முடிவு ஏற்பட்டதும் சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பார்த்திபேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் அந்தரங்கமாகப் பேசினார். பின்னர், தம்முடன் வந்த படைவீரர்களுக்குத் தனித்தனியே சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பார்த்திபேந்திரன் இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டான். "ஐயா! நான் வந்த காரியம் நிறைவேறாமல் வெறுங்கையோடு திரும்புகிறேன். இதற்காகக் கரிகாலர் என்னை மிகவும் கோபித்துக்கொள்ளபோகிறார். ஆயினும் என்ன செய்வது? தாங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள். என் பேரில் குற்றமில்லை. இதற்கு இங்குள்ளவர்க ் எல்லாரும் சாட்சி!" என்றான்.

இளவரசர், "அவ்வளவு அவசரமாகப் போகவேண்டுமா? தாங்களும் சேநாதிபதியோடு தொண்டைமானாறு வரை வந்து விட்டுப்போகக்கூடாதா?" என்று கேட்டார்.

"அந்தப்பாதகத்துக்கு நான் உடந்தையாயிருக்க மாட்டேன். நான் வந்த கப்பல் திரிகோணமலையில் நிற்கிறது. அங்கே போய்க் கப்பல் ஏறிக் கூடியசீக்கிரம் நான் காஞ்சிக்குப் போகவேண்டும். கரிகாலரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும்!" என்றான் பார்த்திபேந்திரன்.

பின்னர் வந்தியத்தேவனைப் பார்த்து, "வல்லத்தரையனே! என்னுடன் நீ காஞ்சிக்கு வரவில்லையா?" என்று கேட்டான்.

வந்தியத்தேவன் சிறிது திடுக்கிட்டு நின்றுவிட்டு, "இல்லை; இளவரசருடன் போக விரும்புகிறேன்" என்றான்.

"நல்லது; என்னுடன் வராததற்காகப் பிறகு வருத்தப்படுவாய்!" என்று சொல்லிவிட்டுப் பார்த்திபேந்திரன் புறப்பட்டான்.

சேநாதிபதியின் கட்டளையின்படி அவனுடன் இன்னும் சில வீரர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம், "அந்தப் பல்லவன் கூறியதன் பொருள் என்ன? தன்னுடன் வராததற்காக நான் வருத்தப்படுவேன் என்று ஏன் கூறினான்? உமக்கு ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டான்.
"சேநாதிபதியும் அவனும் கலந்து பேசி ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அதன் விவரம் இன்னதென்று தானே சீக்கிரத்தில் தெரியும். உண்மையில், இப்போது ஏற்பட்டிருக்கும் சங்கடத்துக்கு மூலகாரணம் இந்தக் கொடும்பாளூர் கிழவர்தான்!" என்றான்.

"அது எப்படி? சேநாதிபதி என்ன செய்திருக்க முடியும்?"

"எல்லாம் அவருடைய வேலைதான். அவருடைய குடும்பப்பெண் ஒருத்தி பழையாறையில் வளர்கிறாள் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

"நன்றாய்த் தெரியும். வானதி தேவியைத்தானே சொல்கிறீர்?"

"ஆமாம்; அந்தப் பெண்ணை இளவரசருக்குக் கலியாணம் பண்ணிக் க டுத்து இலங்கை அரசராக இவருக்கு முடிசூட்டி விட வேண்டும் என்று சேநாதிபதிக்கு ஆசை. பக்த குருக்களைக் கொண்டு இலங்கைக் கிரீடத்தை அளிக்கும்படி ஏவியவர் இவர்தான். இவருடைய முயற்சியை இரகசியமாக வைத்திருக்கவாவது தெரிந்ததா? அதுவும் இல்லை. செய்தி தஞ்சைக்கு எட்டிவிட்டது. அதனால்தான் முதன் மந்திரி அநிருத்தர் இலங்கைக்கு வந்தார்; என்னையும் இளவரசரிடம் அனுப்பி வைத்தார். வந்தியத்தேவா! எது எப்படியானாலும் நம்முடைய உயிரை நாம் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இளவரசர் இலங்கைச் சிம்மாசனத்தை ஏற்க மறுத்தது பற்றி நீயும் நானும் தஞ்சையில் சாட்சி சொல்லும்படி நேரிடலாம்!"

இதற்குள் சேநாதிபதியின் காரியங்கள் முடிந்துவிட்டன. அவருடன் வந்திருந்த படை வீரர்களில் நாலுபேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வெவ்வேறு திசையில் புறப்பட்டுச் சென்றார்கள். கடைசியாக இளவரசரின் கோஷ்டியும் புறப்பட்டது. இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் இவர்களுடனே மேற்கூறிய நாலு வீரர்களும் உயர்ந்த சாதிக் குதிரைகள் மீதேறி வடதிசை நோக்கிப் புறப்பட்டார்கள். இவர்களைப் பின்தொடர்ந்து பூங்குழலி ஏறியிருந்த யானை, ஜாம் ஜாம் என்று கம்பீரமாக நடந்து வந்தது. பூங்குழலியைத் தவிர அதன் மீது யானைப் பாகன் ஒருவன் மட்டுமே ஏறிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் இராஜ பாட்டை வழியாக அவர்கள் சென்றார்கள். ஆனால் இராஜ பாட்டையில் பிரயாணம் செய்வது சுலபமாக இல்லை, வழியெங்கும் ஜனக் கூட்டமாயிருந்தது. இளவரசர் அவ்வழியில் வருகிறார் என்பதும் எப்படியோ ஜனங்களுக்குத் தெரிந்து போயிருந்தது. இலங்கைத் தீவின் வடபகுதியில் அப்போதெல்லாம் தமிழர்களே அதிகமாக வசித்து வந்தார்கள். அங்கங்கே ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று, "இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" "சேநாதிபதி ொடும்பாளூர் வேளார் வாழ்க!" என்று கோஷித்தார்கள். சில இடங்களில் ஜனங்கள் குதிரைகளைச் சூழ்ந்துகொண்டு பின் தொடர்ந்து வந்தார்கள். வரவரப் பின் தொடர்ந்து வரும் கூட்டம் அதிகமாக்கிக் கொண்டு வந்தது. குதிரைகள் வேகமாகப் போக முடியவில்லை.

இளவரசர் சேநாதிபதியுடன் இதைப் பற்றி விவாதித்ததின் பேரில் இராஜபட்டையிலிருந்து விலகிக் காட்டு வழியில் போவதென்று தீர்மானமாயிற்று. ஜனங்களை மெதுவாகக் கழித்துக்கட்டி விட்டு அவர்கள் காட்டுவழியில் பிரவேசித்தார்கள். காட்டு வழியில் இயற்கை இடையூறுகள் காரணமாக வேகமாகப் போக முடியவில்லை.கொஞ்ச தூரம் போனதும் தாமரைத் தடாகம் ஒன்று தென்பட்டது. அதன்கரைக்கு வந்ததும் எதிர்க்கரையில் ஒரு பெரிய ஜனக் கும்பல் நிற்பது தெரிந்தது. இவர்களைப் பார்த்தவுடனே அந்த ஜனக் கும்பலின் மத்தியிலிருந்து தாரை, தப்பட்டை, கொம்பு, பேரிகை முதலிய வாத்தியங்களின் பெருமுழக்கம் கிளம்பிற்று. "கொஞ்சம் இருங்கள்; நான் போய் அவர்கள் யார் என்று பார்த்துவிட்டு வருகிறேன்!" என்று கூறிவிட்டுச் சேநாதிபதி குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டு முன்னதாகச் சென்றார். சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "இளவரசர் இந்த வழி வருவது எப்படியோ பக்கத்துக் கிராமவாசிகளுக்குத் தெரிந்து போயிருக்கிறது. இளவரசருக்கு மரியாதை செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்றார்.

ஜனங்கள் நெருங்கி வந்தார்கள். இளவரசரைச் சுற்றிச் சுற்றி வந்து அடங்காத ஆர்வத்துடன் பார்த்தார்கள். பல வகை ஜய கோஷங்களையும் வாழ்த்தொலிகளையும் கிளப்பினார்கள். அவற்றில் "ஈழத்தரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" என்ற கோஷம் மட்டும் பிரதானமாயிருந்தது. இளவரசர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஜனக்கூட்டத்திற்குத் தலைவன் என்று தோன்றிய ஒருவனை அருகில் அழைத்தார். "இவர்கள ் எதற்காக எனக்கு ஈழத்து அரசுப்பட்டம் கட்டுகிறார்கள்?" என்று கேட்டார்.

அவன் மிகப் பணிவுடன், "அரசே பன்னெடுங் காலமாக இந்த ஈழநாடு நிலையான அரசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வர் ஈழ நாட்டின் மன்னர் ஆக வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இந்நாட்டில் வாழும் எல்லா ஜனங்களுடைய விருப்பமும் அதுதான். தமிழர்கள், சிங்களவர்கள், சைவர்கள், பௌத்தர்கள், துறவிகள் இல்லறத்தார் எல்லாரும் அதையே விரும்புகிறார்கள்" என்று கூறினான். இளவரசருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து அளிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தை ஏற்றுக் கொள்ளாமல் போக முடியவில்லை. விருந்துண்ட பிறகு விடை பெற்றுப் புறப்படுவதற்கு வெகு நேரமாகிவிட்டது.

இளவரசருக்கு உபசாரங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் தனித்துப் பேசிக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. "தம்பி! பார்த்தாயா? இதெல்லாம் சேநாதிபதியின் சூழ்ச்சி என்று தெரியவில்லையா? முன்னாலேயே அவசரமாகச் செய்தி அனுப்பி இந்த உபசாரங்களையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சேநாதிபதியின் ஏற்பாடுதான் என்று ஒருவாறு தெரிகிறது. ஆனால் இந்தச் சூழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லையே? இப்படியெல்லாம் இந்தத் தீவில் வாழும் ஜனங்கள் சொல்வதைக் கேட்டு இளவரசர் நேற்று வேண்டாம் என்று மறுத்த சிம்மாசனத்தின் பேரில் இன்றைக்கு ஆசை கொண்டு விடுவார் என்ற எண்ணமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அது ஒரு நோக்கமாயிருக்கலாம். அதைக் காட்டிலும் முக்கியமானது நம் பிரயாணத்தைத் தாமதப்படுத்துவதுதான்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பிரயாணத்தைத் தாமதப்படுத்துவதினால் சேநாதிபதி என்ன பலனை எதிர்ப்பார்க்கிறார்?"

"அ து எனக்கும் தெரியவில்லை; சீக்கிரத்தில் தெரிந்து தானே ஆகவேண்டும்? இளவரசருடைய முகத்தைப் பார்! அவருக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லையென்று தெரிகிறதல்லவா?"

வந்தியத்தேவன் இளவரசரின் முகத்தைப் பார்த்தான். ஆத்திரமான வார்த்தைகளைப் பேசும்போதுகூட மலர்ந்து விளங்கிய அவருடைய முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தன.புருவங்கள் நெறிந்திருந்தன. கண்கள் ஆழ்ந்த சிந்தனையைக் காட்டின.

அதே சமயத்தில் பூங்குழலி அத்தாமரைக் குளத்தின் இன்னொரு கரையில் தன்னந்தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எதிர்பார்த்தபடி அவளுக்கு இந்தப் பிரயாணம் உற்சாகம் தருவதாக இல்லை. பிரயாணத்தின்போது இளவரசருடன் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நினைத்தாள். அவர் தன்னுடனே அளவளாவிப் பேசுவார் என்று எண்ணினாள். தன் மனத்தில் பொங்கும் உணர்ச்சியில் ஒரு சிறிதேனும் வௌியிடலாம் என்று ஆசைப்பட்டாள். அதற்கெல்லாம் சமயமேகிட்டாது போலிருக்கிறது. இளவரசரைச் சுற்றி ஒரே கூட்டமாகவே இருக்கிறது.

'அவரை எதிரிகளிடம் கொண்டுபோய் ஒப்புவித்த பழி ஒன்றுதான் மிஞ்சும்போலும். அந்தப் பழி தனக்கு எதற்காக ஏற்படவேண்டும்? ஏன் இங்கிருந்தபடி ஒருவருக்கும் தெரியாமல் ஓடி விடக்கூடாது? சேநாதிபதியின் கோபத்திலிருந்தாவது தப்பியதாக ஆகும்!' 'சே! சேநாதிபதி கோபம் என்ன என்ன செய்துவிடும்? யாருடைய கோபந்தான் என்ன செய்துவிடும்? அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. ஆனால் என்னுடைய எண்ணமெல்லாம் ஏன் மண்ணோடு மண்ணாக வேண்டும்? இந்த நெஞ்சில் உள்ள தீ எத்தனை நாள் இப்படி என்னைத் தகித்துக்கொண்டிருக்கும்? இந்த உடம்பில் உயிர் எதற்காக இருக்கிறது? திடீரென்று ஒரு இடி விழுந்து என்னைக் கொன்று விடக்கூடாதா? இப்படி எத்தனையோ ஆயிரம் தடவை ஆசைப்பட்டாகி விட்டது; பயன் ஒன்ற மில்லை. இந்த உயிர் தானாகப் போகப் போவதில்லை. நானாக ஏதேனும் செய்து கொண்டால்தான் இந்த உயிர் போகும்!...'

'ஆ! இது என்ன? கனவு காண்கிறேனா? இல்லை, கனவு இல்லை! அங்கே அந்தப் பாழும் மண்டபத்துக்குப் பக்கத்தில் இளவரசருடைய சிநேகிதர் என்னிடமிருந்து பிடுங்கி எறிந்த கத்தி இதோ வந்து என்னருகில் விழுந்திருக்கிறதே? இதை யார் எறிந்திருப்பார்கள்? யாரோ இவருடைய பகைவர்தான் எறிந்திருப்பார்கள்! என்னைக் கொல்லுவதற்குத்தான் எறிந்திருப்பார்கள். என்ன துரதிஷ்டம்! என் மேலே விழாமல் சற்று நகர்த்து விழுந்து விட்டதே? - இதுவும் நல்லதற்காகத்தான். கையில் இந்தக் கத்தி இருக்கட்டும். அவருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகு, அவரை அந்தப் பாதகர்களிடம் கொண்டுபோய் ஒப்புவித்த பிறகு, அவர் எதிரிலேயே இந்தக் கத்தியினால் குத்திக் கொண்டு இறந்து விடுகிறேன். சீச்சீ! எதற்காக அவர் மனத்தை அப்படிப் புண்படுத்த வேண்டும்? அவர் கப்பலில் ஏறிப்போன பிறகு படகில் ஏறி, நடுக்கடலில் சென்று அங்கே குத்திக்கொண்டு சாகலாம். என் அருமைக் கத்தியே நீ திரும்பி வந்தாயல்லவா? உன்னை அனுப்பியவர்களுக்கு வந்தனம்.'

'ஒருவேளை இளவரசர் மேலே எறிய எண்ணி இதை எறிந்திருப்பார்களோ? ஆம்; அவருக்கு வழியில் எத்தனையோ அபாயங்கள் நேரலாம் என்று சேநாதிபதி கூடச் சொன்னாரே?... அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கக் கூடாதா? அவர் பேரில் குறிபார்த்து எறிந்த கத்தி என் நெஞ்சில் விழக்கூடாதா? அப்படி விழுந்து அவருக்காக நான் உயிர் துறக்கும்படி நேரக் கூடாதா அவ்விதம் நேர்ந்தால், நான் இரத்தம் பெருக்கி உயிர்துறக்கும் சமயத்தில்...'

பூங்குழலியின் மனத்தில் ஒரு விசித்திரமான தோற்றம் ஏற்பட்டது. அவளுடைய மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. இளவரசர் ஓடி வந ்தார்.'ஐயோ! எனக்காக உயிர் துறக்கிறாயா?' என்று கேட்டார். பூங்குழலியின் உள்ளம் பூரித்து நெஞ்சிலிருந்து இரத்தம் அதிகமாகப் பீறிட்டு வந்தது. இளவரசர் அவளை வாரி எடுத்துத் தம் மடியில் போட்டுக்கொண்டார். அவளுடைய நெஞ்சிலிருந்து பெருகிய இரத்தம் அவர் உடம்பையும் உடைகளையும் நனைத்தது. பூங்குழலி கலகல வென்று சிரித்தாள்.'இளவரசே! இப்போதாவது என் நெஞ்சில் உள்ளது என்னவென்று தெரிந்து கொண்டீர்களா?' என்று கேட்டாள். 'அடிப்பாவி! அது எனக்கு முன்னமே தெரியும்? இதற்காகவா உயிரை விடுகிறாய்?' என்று இளவரசர் அலறினார்.பூங்குழலிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. உரத்த சத்தம் போட்டுச் சிரித்தாள்!...

"ஏ பைத்தியமே!" என்ற குரலைக் கேட்டுப் பூங்குழலி நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் வந்தியத்தேவன் நின்று கொண்டிருந்தான். "இளவரசர் ஏற்கெனவே கோபமாயிருக்கிறார்; பிரயாணம் தாமதப்படுகிறது என்று. உன்னால் வேறு தாமதம் வேண்டாம். சீக்கிரம் எழுந்து வா!" என்றான் வந்தியத்தேவன். பூங்குழலி சிரித்துக்கொண்டு எழுந்து ஓடிப்போய் யானையில் மீது ஏறிக்கொண்டாள். கத்தியை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

காட்டு வழியில் மேலும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிரயாணிகள் வல பக்கமிருந்த அடர்ந்த காட்டிலிருந்து 'விர்' என்ற சத்தத்துடன் ஓர் அம்பு பாய்ந்து வந்தது. இளவரசரைக் குறி பார்த்து அது எய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.ஆனால் அந்த அம்பைவிட வேகமாக இளவரசர் குதிரையின் கயிற்றை இழுத்துத் திருப்பினார். அம்பு அவருக்கு வெகு சமீபமாக சென்று, அவருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுடைய தலைப்பாகையில் பாய்ந்து அதைக் கொத்திக் கொண்டு சென்றது.

ஆழ்வார்க்கடியான் தலையைத் தடவிக்கொண்டு வியப்புடன் பார்த்தான்.சேநாத பதி பூதிவிக்கிரமகேசரி திடுக்கிட்டுப் போய் விட்டார்.எல்லாருமே திகைத்து நின்றார்கள். பூங்குழலியோ அந்த அம்பு தன் பேரில் விழுந்து தன்னைக் கொன்று விடவில்லையே என்று வருத்தப்பட்டாள்.

சிறிது திகைப்பு நீங்கிய பிறகு சேநாதிபதி, "இளவரசே! பார்த்தீர்களா? தங்களைப் பாதுகாப்பின்றித் தனியே அனுப்பியிருந்தால் எவ்வளவு பிசகான காரியமாயிருக்கும்?" என்று சொல்லிவிட்டுக் காவலுக்கு வந்து வீரர்களைக் காட்டுக்குள் புகுந்து தேடச்சொன்னார். அவர்கள் சிறிது நேரம் தேடிவிட்டுத் திரும்பி வந்து, யாரும் அகப்படவில்லை" என்றார்கள்.

சேநாதிபதி மேலே பிரயாணத்தைப் பற்றி ஏற்பாடு செய்யத் தொடங்கினார்."இளவரசரை நடுவில் நிறுத்தி நாம் நாலு புறமும் சூழ்ந்து வரவேண்டும்" என்று கூறி, வியூகம் வகுக்க ஆரம்பித்தார்.

அப்போது இளவரசர், "சேநாதிபதி! ஒரு வேண்டுகோள்" என்றார்.

"இது என்ன வார்த்தை? கட்டளையிடுங்கள்!" என்றார் சேநாதிபதி.

"நான் உயிரோடு தஞ்சை செல்ல விரும்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை என் தந்தையிடம் மெய்ப்பிக்க விரும்புகிறேன்..."

"தங்கள் தந்தை ஒருநாளும் சந்தேகிக்கமாட்டார் இளவரசே?"

"தந்தை மட்டுமல்ல; மக்கள் எல்லாரும் ஒப்புக் கொள்ளும்படி நிரூபிக்க விரும்புகிறேன். அந்தக் காரியத்தை நிறைவேற்றிய பிறகு என் உயிரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். அதற்கு முன்னால் வழியிலேயே உயிர் துறக்க விரும்பவில்லை."

"ஐயா! தங்கள் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தால் அந்த க்ஷணமே இந்தக் கொடும்பாளூர் வாளை என் நெஞ்சிலே செலுத்திக் கொள்வேன். "

"அதில் ஒன்றும் பயனில்லை. சோழநாடு மகத்தான நஷ்டம் அடையும்."

"தங்களை இழப்பதைக் காட்டிலும் பெரிய நஷ்டம் சோழநாட்டுக்கு வேறு என்ன இருக்க முடியும்? தங்களுக்கு ஆபத்து வருவதற்குக் காரணமாயிரு ந்துவிட்டு அப்புறம் இந்தக் கொடும்பாளூர்க் கொடும்பாவி ஒரு கணமும் உயிரை வைத்துக் கொண்டிருப்பேனா?"

"அப்படியானால் என் உயிரை நான் காப்பாற்றிக் கொள்ளுவது இன்னும் முக்கியமாகிறது."

"அதைக்காட்டிலும் முக்கியமானது இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை."

"அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது." "சொல்லுங்கள் ஐயா!"

"குதிரை மேல் பிரயாணம் செய்யும் வரையில் சற்று முன் வந்த அம்பைப்போல் வேறு அபாயங்கள் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும்."

"நடந்து போகலாம் என்று சொல்லுகிறீர்கள்? அல்லது..."

"எனக்கு யானைகளின் பாஷை நன்றாய்த் தெரியும் யானைகள் நான் சொன்னபடி கேட்கும் என்று தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"

"ஆம், ஐயா! யானைப்பாகன் வேஷம் பூண்டு இந்த இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தாங்கள் சுற்றிப் பார்த்திருப்பதும் எனக்குத் தெரியும்."

"ஆகவே நான் சொல்லுகிறது என்னவென்றால், மறுபடியும் சிறிது நேரம் யானைப் பாகன் ஆகிறேன். இப்போது யானையை நடத்துகிறவன் கொஞ்சதூரம் என் குதிரைமேல் ஏறிக்கொண்டு வரட்டும்."

இதைக் கேட்ட சேநாதிபதி சிறிது மனத்தடுமாற்றமடைந்ததாகத் தோன்றியது. இளவரசருடைய யோசனைக்கு யாராவது ஆட்சேபம் சொல்ல மாட்டார்களா என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் எல்லாரும் 'கம்'மென்று இருந்தார்கள்.


"ஐயா! யானைப் பாகனுக்குக் குதிரை ஏறத் தெரியுமோ, என்னமோ?"

"தெரியாவிட்டால், நடந்து திரும்பிப் போகட்டும்."

"அந்தப் பெண் பெரிய சங்கோசியாயிருக்கிறாளே? அவள் தங்களுக்குச் சரி சமமாக யானை மீது உட்கார மாட்டேன். என்று சொன்னால்...?"

"கீழே குதித்து நடந்து வரட்டும்" "தங்கள் சித்தம், இளவரசே!"

இளவரசர் உடனே குதிரை மீதிருந்து குதித்தார். யானையின் அருகில் சென்றார். பூங்குழலியின் கரிய கண்கள் ஆர்வத்தினால் நீண் டு வியப்பினால் அகன்று அவரை நோக்கின. யானைப் பாகனை இறக்கிவிட்டுத் தாம் யானைமீது பாய்ந்து அதன் கழுத்தில் உட்கார்ந்து கொண்டார்.தடைப்பட்ட பிரயாணம் மறுபடியும் ஆரம்பமாகியது.

பூங்குழலி புளகாங்கிதம் அடைந்தாள். யானையின் முதுகின் மேலிருந்து மேகங்களின் மீது பாய்ந்தாள். வான வௌியில் உலவினாள்.சொர்க்கத்தை எட்டிப்பார்த்து அதன் விவரிக்க முடியாத இன்ப சுகத்தின் இயல்பு இதுவென்பதை ஒருவாறு உணர்ந்து அறிந்தாள். 'ஆகா! இதுவென்ன தேவகானமா? இவ்வளவு இன்பமாயிருக்கிறதே! இல்லை, தேவகானத்துக்கு இவ்வளவு இனிமை ஏது? இளவரசர் அல்லவா பேசுகிறார்!'

"சமுத்திரகுமாரி! என்னுடன் இந்த யானை மீது தனியாக இருப்பது உனக்கு அருவருப்பாயிருக்கிறதா?"

"ஏழு ஜன்மங்களின் நான் செய்த தவத்தினால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது, பிரபு!"

"திடீரென்று இந்த யானைக்கு மதம் பிடித்து இது ஓட ஆரம்பித்தால், நீ பயப்படுவாயா?"

"தாங்கள் பக்கத்தில் இருக்கும்போது வானம் இடிந்து விழுந்தாலும் பயப்படமாட்டேன், ஐயா!"

"உன் படகை எங்கே விட்டுவிட்டு வந்திருக்கிறாய் பூங்குழலி?"

"யானை இறவுத் துறைக்குச் சமீபத்தில், ஐயா!"

"இக்கரையிலா, அக்கரையிலா?"

"அக்கரையிலே தான் படகை நிறுத்தத் தனி இடம் கிடைத்தது. அங்கேயே படகை நிறுத்திவிட்டு வந்தேன்."

"யானை இறவுத்துறையை எப்படி கடந்து வந்தாய்?"

"நான் வரும்போது கடல் நீர் மிகவும் குறைவாயிருந்தது. ஆகையால், பெரும்பாலும் நடந்து வந்தேன். கொஞ்சம் நீந்தியும் வந்தேன்."
"இப்போது இந்த யானை கடலில் இறங்கிச் சென்றால் பயப்படுவாயா?"

"கடலிலேயே என்னைத் தள்ளிவிட்டாலும் கவலையில்லை. நான்தான் சமுத்திரகுமாரி ஆயிற்றே? தாங்கள்தானே பெயர் கொடுத்தீர்கள்?"

"உன் படகு இருக்குமிடம் சென்றதும் அதில் நாம் ஏறிக்கொள் ோம். நீதான் படகு தள்ளிக்கொண்டு வரவேண்டும். இரண்டு பேரையும் வைத்துத் தள்ள முடியும் அல்லவா?"

"பத்து வயது முதலாவது துடுப்புப் பிடித்த கரங்கள் இவை. பிரபு! அரண்மனைப் பெண்களைப்போல் மலரினும் மிருதுவான கரங்கள் அல்ல. தங்கள் சிநேகிதர் வந்தியத்தேவரை வைத்துத் தள்ளி வந்ததை அவர் சொல்லவில்லையா?"

"சொன்னார்! ஆனால் இன்று அதைவிட வேகமாகத் தள்ள வேண்டும். தொண்டமான் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அதி சீக்கிரமாய்ப் போய்ச் சேரவேண்டும்?"

"இளவரசே! அவ்வளவு கொடுரமான காரியத்தை என்னை ஏன் செய்யப் பணிக்கிறீர்கள்? தங்களைச் சிறைப்படாமல் தப்புவிப்பதற்காக ஓடோடியும் வந்தேன். சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களைக் கொண்டுபோய் ஒப்புவிக்கும்படி பணிக்கிறீர்கள். இந்த ஏழையின்பேரில் ஏன் இவ்வளவு கொடூரம்?"

"பூங்குழலி! என் தந்தை - சக்கரவர்த்தி - நோய்ப்பட்டிருப்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும், ஐயா! வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுவது பற்றி ஜனங்கள் பேசிக் கொள்ளுவதும் எனக்குத் தெரியும்."

"எந்த நொடிப் போதிலும் என் தந்தையின் வாணாள் முடிவுறக் கூடும் அல்லவா?" பூங்குழலி மௌனமாயிருந்தாள்.

"அவர் ஒரு வேளை இவ்வுலகை நீத்துச் செல்ல நேரிட்டால், அவருக்கு எதிராக நான் சதி செய்து இராஜ்யத்தைக் கைப்பற்ற முயன்றேன் என்ற எண்ணத்துடன் அவர் போவது நல்லதா?"

"சக்கரவர்த்தி தங்களைப் பற்றி ஒரு நாளும் அப்படி நம்பமாட்டார். இது பழுவேட்டரையர்களின் சூழ்ச்சி!"

"அப்படிப்பட்ட பழுவேட்டரையர்களுக்கும் கூட நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்..."

"எதற்காக, ஐயா?"

"உண்மையிலேயே எனக்கு இராஜ்யம் ஆளுவதில் ஆசையில்லை, பூங்குழலி!"

"வேறு எதில் தங்களுக்கு ஆசை?"

"படகில் ஏறி முடிவில்லாத கடலில் என்றென்றும் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை! கடல்களுக்கு அப்பால் இழந்த ஈழ நாட்டைப் போல் எத்தனையோ நாடுகள் இருப்பதாகக் கேள்வி. அந்த நாடுகளுக்கெல்லாம் போக வேண்டும் என்று ஆசை. அந்தந்த நாட்டு மக்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசை!"

"விந்தை! விந்தை!"

"எது விந்தை!"

"என் மனத்தில் குடிகொண்டுள்ள ஆசையே தங்கள் மனத்திலும் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன். தாங்கள் அப்படிக் கடல் பிரயாணம் தொடங்கும் போது என்னையும் அழைத்துப் போவீர்களா?"

"முதலிலே, இப்போது நான் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றுகிறேன். அதற்கு நீ உதவி செய்வாய் அல்லவா?"

"தங்கள் சித்தம்!"

"நீ உட்கார்ந்திருக்கும் பீடத்திலிருந்து இரண்டு பக்கமும் கயிறுகள் தொங்குகின்றன அல்லவா? அவற்றை எடுத்து உன்னைக் கெட்டியாகக் கட்டிக்கொள்.

" எதற்காக இளவரசே!"

"யானை இப்போது மதங்கொண்டு ஓடப் போகிறது ஜாக்கிரதை, பூங்குழலி!"

இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் யானையின் மத்தகத்தைக் கையினால் தடவிக் கொடுத்த வண்ணம் அதன் காதண்டை ஏதோ சொன்னார். யானையின் நடைவேகம் திடீரென்று அதிகமாயிற்று. இளவரசர் யானையின் செவியண்டையில் குனிந்து மேலும் ஏதோ சொன்னார். அவ்வளவுதான், நடை ஓட்டமாயிற்று. துதிக்கையைத் தூக்கிக்கொண்டு ஒரு தடவை பயங்கரமான பிளிறல் சத்தம் போட்டுவிட்டு ஓடத் தொடங்கியது. சூறாவளி சுழன்று அடிக்கும் போது காடுகளின் மரங்கள் படும்பாடு அந்த யானையின் வேகத்தினால் பட்டன. சடசடவென்று மரங்களும் மரக்கிளைகளும் சரிந்து விழுந்தன. பூமி அதிர்ந்தது.எட்டுத் திக்குகளும் நடுநடுங்கின. மரங்களின் மீதிருந்த பறவை இனங்கள் சிறகுகளைச் சடசடவென்று அடித்துக்கொண்டும் பீதி கொண்ட குரலில் கூவிக்கொண்டும் பறந்தன. காட்டில் மறைந்து வாழ்ந்த மிருகங்கள் வௌிப் புறப்பட்டு நாலா பு மும் விழுந்தடித்து ஓடின.

"ஐயையோ! யானைக்கு மதம் பிடித்துவிட்டது போலிருக்கிறதே! இது என்ன விபரீதம்!" என்று சேநாதிபதி பூதிவிக்கிரமகேசரி கூவினார். இவ்வளவு தூரம் இளவரசர் சொல்லியிருந்ததும் பூங்குழலியின் உள்ளமும் திகில் அடைந்தது. அவள் முகத்தில் பயப்பிராந்தியின் அறிகுறி தோன்றியது.

பூங்குழலி ஒரு பெரிய பயங்கரமான பிரம்மாண்டமான கடல் சுழலில் அகப்பட்டுக்கொண்டாள்.அதே சுழலில் அகப்பட்டுக் கொண்டு இளவரசரும் சுற்றிச் சுற்றி வந்தார். யானையும் அப்படியே சுழன்று சுழன்று வந்தது. பூங்குழலி கண்களை இறுக மூடிக் கொண்டாள். புயற்காற்றினால் தள்ளப்பட்டு ஓடும் கரிய மேகத்தைப் போல் யானை போய்க் கொண்டேயிருந்தது. கடைசியில் யானை இறவுத்துறையை அடைந்தது.

அங்கே இலங்கைத்தீவின் கீழ்ப்புறத்துக் கடலும் மேற்புறத்துக் கடலும் ஒன்றாய்ச் சேர்ந்தன. அந்த ஜலசந்தியின் மிகக் குறுகலாக இடத்துக்குதான் யானை இறவு என்று பெயர். இலங்கைத் தீவின் வடபகுதியையும் மத்தியப் பகுதியையும் ஒன்று சேர்ந்த அக்கடல் துறையில் யானை இறங்கியது. அனுமார் தூக்கி எரிந்த மலை கடலில் விழுந்தது போல விழுந்தது.


பக்க தலைப்பு



நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
சிறைக் கப்பல்




கண்மூடிக்கண் திறக்கும் நேரத்தில் 'யானை இறவு' என்னும் கடல் துறை பின்னுக்குச் சென்றது. பின்னர், கானகத்து மரங்கள் பின்னோக்கி ஓடின. வானத்துப் பறவைகள் பின் நோக்கிப் பறந்தன. ஓடைகள், குளங்கள், ஊர்ப்புறங்கள், கோயில்கள், மண்டபங்கள் எல்லாம் பின்னோக்கிப் பாய்ந்து மறைந்தன. மான் கூட்டம் ஒன்று அந்த யானையுடன் சிறிது தூரம் போட்டியிட்டு ஓடப் பார்த்தது. மான்களும் தோல்வியடைந்து பின்தங்கின. யானை மட்டும் முன்னால் முன்னால் முன்னால் போய்க் கொண்டிருந்தது. எத்தனை தூர ம், எத்தனை நேரம் என்றெல்லாம் பூங்குழலிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்னமும் ஈழ நாட்டிலேதான் இந்த யானை போய்க் கொண்டிருக்கிறதா என்று மட்டும் பூங்குழலிக்கு வியப்பாயிருந்தது.

இத்தனை நேரம் அந்தத் தீவை மூன்று தடவை கடந்து போயிருக்கலாமே? இல்லை, இல்லை! இந்த யானை ஈழ நாட்டைக் கடந்து செல்லவில்லை. பூலோகத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. பூலோகத்தின் தென் முனையிலிருந்து வடமுனைக்குப் போய்க் கொண்டிருக்கிறது! இதன் முதுகில் ஏறிக்கொண்டு நானும் பூமியைப் பிரதட்சணம் செய்கிறேன். நான் மட்டுமா? இளவரசருந்தான்!

முதலில், யானை மதம் பிடித்து ஓடத் தொடங்கியதும், பூங்குழலிக்குக் கொஞ்சம் பயமாய்த் தானிருந்தது. பயத்துடன், என்ன நிகழ்கின்றது என்று தெரியாத தயக்கமும் இருந்தது. இரண்டு மூன்று தடவை இளவரசர் அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தார். பின்னர் அவளுடைய பயமும் தயக்கமும் மறைந்தன. எல்லையற்ற உற்சாகம் அவளை ஆட்கொண்டது.கொஞ்ச நேரம் வரை இப்பூவுலகில் ஒரு மத்தகஜத்தின் மீது ஏறிச் சென்றாள். திடீரென்று எப்படியோ சொர்க்கத்துக்குப் போய்விட்டாள். சொர்க்கத்தில் தேவேந்திரனுடைய ஐராவதத்தின் பேரில் அவள் வீற்றிருந்தாள். ஐராவதம் வான வீதிகளில் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. கற்பக விருட்சங்கள் அவள் மீது சுகந்த மலர்களைப் பொழிந்தன. கந்தவர்கள் இன்னிசைக் கருவிகளிலிருந்து இனிய சுவரங்களை எழுப்பிக்கொண்டு அவள் பின்னோடு பறந்து வந்தார்கள். அப்ஸர ஸ்திரீகள் நடனமாடிக்கொண்டு வந்தார்கள். ஊர்வலம் சென்ற வான வீதியின் இருபுறமும் நட்சத்திர தீபங்கள் சுடர்விட்டு ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்தன! இப்படிப் பல பல யுகங்கள் சென்றன!

இதோ, ஐராவதத்தின் வேகம் குறைகிறது. திடீரென்று அது பூலோகத்துக்கு வந்துவிட்டது. ஈழ நாட்டின் காடுகளுக் கே வந்துவிட்டது. யானைப்பாகன் குனிந்து அதன் மத்தகத்தைத் தட்டிக்கொடுக்கிறான்.அதன் காதண்டை ஏதோ சொல்கிறான். சேச்சே! அவன் யானைப்பாகன் அல்ல; தேவேந்திரன் அல்லவா? - இல்லை இளவரசர் அல்லவா இவர்?

நாலுபுறமும் மரங்கள் சூழ்ந்த ஒரு குளத்தின் கரையிலே வந்து யானை அமைதியாக நின்றது. பூங்குழலி சிறிது கவலையுடன், இளவரசரை வரவேற்று உபசரிப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து அக்கரையில் நிற்கிறதோ என்று பார்த்தாள்.இல்லை! பின்னால் குதிரைகள் தொடர்ந்து வருகின்றனவோ என்று பார்த்தாள். அதுவும் இல்லை! குளத்தைப் பார்த்தாள். அதில் பூத்திருந்த அல்லி மலர்களும் செங்கழுநீர்ப் பூக்களும் அப்படி அப்படியே கொடிகளுடன் பிய்த்துக் கொண்டு வந்தன. அவளை நாலு புறமும் சூழ்ந்து கொண்டன. கன்னங்களிலும் தோள்களிலும் உடம்பு முழுவதும் அந்த மலர்கள் அவளைத் தழுவிக்கொண்டு மகிழ்ந்தன. பின்னர் அப்பொல்லாத மலர்களின் கொடிகள் அவளை இறுக்கிப் பிடித்து அமுக்கி மூச்சுத் திணறச் செய்தன. உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கி அப்பூங்கொடிகளின் பிடியிலிருந்து பூமிக்குத் தலைகீழாய் வந்தது போலிருந்தது. யானை தன் பெரிய முன்னங்கால்களை மடித்துக் குனிந்தது.பிறகு பின்னங் கால்களையும் மடித்துக்கொண்டு தரையில் படுத்தது. இளவரசர் யானையின் கழுத்திலிருந்து கீழே குதித்தார்.

"பூங்குழலி! யானைமேலிருந்து இறங்குவதற்கு மனம் இல்லையா?" என்றார்.

பூங்குழலி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு தன் நினைவை அடைந்தாள்."ஐயா! சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவது கஷ்டந்தானே?" என்று முணு முணுத்துக்கொண்டு இறங்கினாள்.

யானை மீண்டும் எழுந்து குளக்கரையிலிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளையை ஓடித்துத் தன் அகண்ட வாய்க்குள்ளே திணித்துக் கொண்டது. அருள்மொழிவர்மர் குளத்தின் கரையோரமாகச் சென்று உட்கார்ந்தார ். தயங்கி நின்ற பூங்குழலியையும் அருகில் வந்து உட்காரச் சொன்னார்.

தௌிந்த நீரில் பூங்குழலியின் முகம் பிரதிபலித்தது. யானையின் ஓட்டத்தினாலும் அச்சமயம் நேர்ந்த உள்ளக் கிளர்ச்சியினாலும் அவள் முகம் செக்கச் செவேலென்று ஆகிச் செங்கழுநீர்ப் பூவுடன் போட்டியிட்டது. நீரில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்த வண்ணம் இளவரசர், "சமுத்திர குமாரி! உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!" என்றார்.

அல்லி மலர்களும், செங்கழுநீர்ப் பூக்களும் மீண்டும் இடம் பெயர்ந்து வந்து பூங்குழலியின் உடல் முழுவதும் முத்தமிட்டன!

"உன்னை ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது தெரியுமா?" என்று இளவரசர் கேட்டார்.

பூங்குழலியின் கண் முன்னால் வானமும் வையமும் குளமும் அதிலுள்ள மலர்களும் குளக்கரையிலிருந்த மரங்களும் சுழன்று சுழன்று வந்தன. "எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரும், நான் அவர்கள் இஷ்டம்போல் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நீ ஒருத்தி மட்டும் என் விருப்பத்தின்படி நடக்கச் சந்தோஷத்துடன் சம்மதித்தாய்! இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். சுமுத்திர குமாரி!" பூங்குழலியின் உடம்பு ஒரு யாழ் ஆயிற்று. அவளுடைய நரம்புகள் எல்லாம் யாழின் நரம்புகள் ஆயின. பொன் வண்ண விரல்கள் அந்த நரம்புகளை மீட்டித் தேவகானத்திலும் இனிய இசையை எழுப்பின.

"சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து என் பிரயாணத்தை தடை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்! சேநாதிபதி நாம் வரும் வழியில் பல இடையூறுகளை உண்டு பண்ணினார். நமக்கு முன் அவசரமாக ஆள் அனுப்பிக் கிராமவாசிகளை உபசாரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். பார்த்திபேந்திரர் விரைந்து திரிகோணமலைக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து கப்பல் ஏறி நமக்கு முன்னால் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்துக்கு வந்து வ ட வேண்டுமென்பது அவருடைய உத்தேசம். ஆகா! அவர்களுடைய சூழ்ச்சி எனக்குத் தெரியாது என்று நினைத்தார்கள்! உன் உதவியினால் அவர்களுடைய சூழ்ச்சியைத் தோற்கடித்தேன்..."

பூங்குழலிக்குச் சட்டென்று தான் செய்த காரியம் என்னவென்பது நினைவு வந்தது. அவளை நரகலோகத்தில் யம தூதர்கள் உயிரோடு செக்கிலே போட்டு ஆட்டுவது போலிருந்தது. "ஐயா! அவர்கள் எல்லாரும் தங்களை எதிரிகளிடம் சிறைப்படாமல் தப்புவிக்க முயன்றார்கள். நான் பாவி! தங்களைச் சிறைப்படுத்த அழைத்துப் போகிறேன்!" என்று கூறிவிட்டு விம்மினாள் பூங்குழலி.

"அடேடே! இது என்ன? உன்னைப்பற்றி நான் எவ்வளவோ நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தேன். நீயும் அவர்களைப் போல் ஆகிவிட்டாயே?"

"என் சுய புத்தியினால் இந்தப் பாதகத்தை நான் செய்யவில்லை. தங்களுடைய ஆசை வார்த்தையில் மயங்கிப் பைத்தியமாகி விட்டேன். இப்போது புத்தி தௌிந்தது. நான் போகிறேன்..." என்று சொல்லிவிட்டு பூங்குழலி குதித்து எழுந்தாள். அவள் ஓடிப் போகாமல் தடுப்பதற்கு இளவரசர் அவளுடைய கரத்தை இலேசாகத் தொட்டுப் பற்றினார்.

அச்சமயத்தில் தேவலோகத்துக் கன்னிகைகளுக்கு வேறு வேலை இருக்கவில்லை. அவர்கள் வெண்ணிலவின் சாற்றை சந்தனக் குழம்புடன் கலந்து பூங்குழலியின்மீது தௌித்தார்கள். அவள் முற்றும் சக்தி இழந்து, செயலிழந்து மீண்டும் கீழே உட்கார்ந்தாள். இரண்டு கரங்களிலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மத் தொடங்கினாள். "சமுத்திர குமாரி! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல எண்ணினேன். நீ இப்படி அழுவதாயிருந்தால் சொல்வதற்கில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான்."

பூங்குழலி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள். 'அதுதான் சரி, கேள்! இவர்கள் எல்லாரும் என்னைச் சிறைப்படாமல் காப்பாற்ற முயல்கிறார்கள் என்று சொன்னாயே? அது உண்ம ைதான். அது எதற்காகத் தெரியுமா?"

"தங்கள் பேரில் அவர்கள் வைத்திருக்கும் அன்பினால் தான். நான் ஒருத்தி மட்டுந்தான் பாதகி!..."

"பொறு, பொறு! என்பேரில் எல்லாருக்கும் அன்புதான்! எதற்காகத் தெரியுமா? யாரோ சோதிடர்களும் ரேகை சாஸ்திரிகளும் சொல்லியிருக்கிறார்களாம் - நான் ஒரு காலத்தில் சக்கரவர்த்தி ஆகப் போகிறேன் என்று. ஆகையால் ஒவ்வொருவரும் என்னைச் சிம்மாசனத்திலே தூக்கிவைத்து என் தலையிலே ஒரு கிரீடத்தையும் சுமத்திவிடப் பார்க்கிறார்கள். பேராசை பிடித்தவர்கள்!"

"ஐயா! அவர்கள் அப்படி ஆசைப்பட்டால் அதில் தவறு என்ன? இந்த லோகத்துக்கு மட்டுந்தானா, மூன்று உலகத்துக்கும் சக்கரவர்த்தியாகத் தாங்கள் தகுதி வாய்ந்தவர் அல்லவா?"

"ஆகா! நீயும் அவர்களைப் போலத்தான் பேசுகிறாய்! பெண்ணே! இவ்வுலகில் அரண்மனையைப் போன்ற சிறைக்கூடம் வேறில்லை; சிம்மாசனத்தைப் போன்ற பலிபீடமும் இல்லை; கிரீடம் அணிவது போன்ற தண்டனை வேறு கிடையவே கிடையாது. இதையெல்லாம் மற்றவர்களிடம் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; நீயாவது ஒப்புக் கொள்வாய் என்று நினைத்தேன்."

பூங்குழலியின் கண்ணிமைகள், பட்டுப் பூச்சியின் சிறகுகளைப்போல் அடித்துக் கொண்டன. அவள் ஆர்வம் ததும்பிய அகன்ற கண்களினால் அரசிளங்குமாரரை நோக்கினாள். "சமுத்திரகுமாரி! உண்மையாகச் சொல்! உன்னை வாழ்நாளெல்லாம் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்படி சொன்னால் உட்கார்ந்திருப்பாயா?" என்று இளவரசர் கேட்டார்.

பூங்குழலி சிறிது நேரம் யோசனை செய்தாள். பின்னர், "மாட்டேன்!" என்று தௌிவாகச் சொன்னாள்.

"பார்த்தாயா? பின்னே என்னை மட்டும் அந்தத் தண்டனைக்கு ஏன் உள்ளாக்க விரும்புகிறாய்?"

"தாங்கள் இராஜ குலத்தில் பிறந்தவர் அல்லவா?"

"இராஜ குலத்தில் பிறந்ததினால் என்ன? நல்லவேளையாகக் கடவுள் என்ன ை இந்த தண்டனைக்கு உள்ளாக்க விரும்பவில்லை. இராஜ்யம் ஆளுவதற்கு என் மூத்த சகோதரர் இருக்கிறார்; என் பெரிய பாட்டனாரின் மகன் ஒருவரும் இருக்கிறார். அவரும் இராஜ்யம் ஆள ஆசைப்படுகிறார்..."

"ஆகா! அது தங்கள் காதுக்கும் எட்டிவிட்டதா?" என்றாள் பூங்குழலி.

"நல்ல கதை! எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா என்ன? ஆகையால் தஞ்சாவூர்ச் சிம்மாசனம் அதன்பேரில் உட்காருவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கப் போவதில்லை. அத்துடன் எனக்குக் கிரீடம் சுமந்து ஆளும் இராஜ்ய ஆசையும் இல்லை!..."

"தங்களுக்கு எதிலேதான் ஆசை?" என்று கேட்டாள் பூங்குழலி.

"அப்படிக்கேள், சொல்லுகிறேன்! சற்றுமுன் இந்த மத்த கஜத்தின் மீது உட்கார்ந்து பிரயாணம் செய்தோமே? அம்மாதிரி வனங்கள் வனாந்தரங்கள் எல்லாம் புகுந்து சண்டமாருதம் போல் சுற்றி வருவதில் எனக்கு ஆசை. கப்பல்களில் ஏறிக் கடல்களைக் கடந்து செல்வதில் ஆசை. உயரமான மலைகளின் உச்சிச் சிகரங்களின் மேல் ஏறுவதில் ஆசை. கடல்களுக்கு அப்பால் இந்த இலங்கையைப் போல் எத்தனையோ இலங்கைகளும், பரதகண்டத்தைப்போல் எத்தனையோ பெரிய பெரிய கண்டங்களும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் போய் அந்தந்த நாடுகளில் உள்ள அதிசயங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை!...

இளவரசர் கூறும் மொழிகளை அப்படியே விழுங்குவாள் போல் பூங்குழலி வாயைத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகவே, "ஐயா! அங்கேயெல்லாம் போகும்போது என்னையும் அழைத்துப் போவீர்களா?" என்று கேட்டாள்.

"நான் சொன்னவையெல்லாம் என் ஆசைகள். அவை நிறைவேறப் போகின்றன என்று யார் கண்டது?" என்றார் இளவரசர்.

பூங்குழலி கனவு லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தாள். "ஐயா! அப்படியானால் தாங்கள் எதற்காக இப்போது தஞ்சாவூருக்குப் போக வேண்டும்?" என்றா ்.

"அதைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். அதற்குள் நீ பேச்சை மாற்றி எங்கேயோ கொண்டுபோய்விட்டாய். சமுத்திரகுமாரி! இந்த இலங்கைத்தீவில் வாய்திறந்து பேசும் சக்தியற்ற ஊமை ஸ்திரீ ஒருத்தி அங்குமிங்கும் சித்தப்பிரமை கொண்டவள் போல் சுற்றிக் கொண்டிருக்கிறாளே? அவளை உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

பூங்குழலி அடங்கா வியப்புடன், "தெரியும், இளவரசே! எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாள்.
"காரணம் பிறகு சொல்லுகிறேன். அந்த ஸ்திரீயை உனக்கு எப்படித் தெரியும்? அவளைப் பற்றி என்ன தெரியும்?" என்று கேட்டார்.

"ஐயா! நான் குழந்தை வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்தேன். பிறகு எனக்கு அன்னையின் அன்பை அளித்தவள் அந்த மூதாட்டிதான். அவள் என் குரு; என் தெய்வம், அவளைப் பற்றி வேறு என்ன கேட்கிறீர்கள்?"

"அந்த மூதாட்டிக்கு நிரந்தரமான வாசஸ்தலம் ஏதாவது உண்டா? எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பவள்தானா?"

"கோடிக்கரையிலிருந்து இலங்கையை நெருங்கிவரும்போது பூதத்தீவு என்று ஒரு தீவு இருக்கிறது. அதில் ஒரு பாறைக்குகை இருக்கிறது. அங்கேதான் அந்த அம்மாள் பெரும்பாலும் இருப்பாள். அவ்விடத்தில்தான் தங்களை நான் முதன் முதலில் பார்த்தேன்."

"என்னை அங்கே பார்த்தாயா?"

"ஆம்! அந்தப் பாறைக் குகையில் சில அழகான சித்திரங்களை அந்த அம்மாள் எழுதியிருக்கிறாள்.அந்தச் சித்திரங்களில் தங்கள் உருவத்தையும் கண்டேன்! பிறகு ஒரு நாள் கோடிக்கரையில் தங்களை நேரில் பார்த்தபோது, அதனால்தான் பிரமித்துப் போனேன்."

"ஓ! இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது. விளங்காத விஷயமும் விளங்குகிறது. சமுத்திரகுமாரி! அந்த மூதாட்டிக்கும் எனக்கும் உள்ள உறவைப் பற்றியும் உனக்குத் தெரியுமா?"

"ஏதோ உறவு இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். ஆனால இன்ன உறவு என்று தெரியாது!"

"பூங்குழலி! அந்த மூதாட்டி என் பெரியதாயார். நியாயமாகத் தஞ்சாவூர் சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டிய பெருமாட்டி அவள்!..."

"கடவுளே! அப்படியா?"

"ஆனால் விதியின் எழுத்து வேறு விதமாயிருந்தது. யார் என்ன செய்யமுடியும்? என் தந்தையின் உள்ளத்தில் ஏதோ ஓர் இரகசியத் துன்பம் இருந்து வேதனைப்படுத்தி வருகிறது என்று சில சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. அதன் உண்மையை இப்போது தான் கண்டுபிடித்தேன். என் பெரிய தாயார் இறந்து விட்டதாக என் தந்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்மால் இறந்து விட்டதாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார். அவள் இறக்கவில்லை, உயிரோடிருக்கிறாள் என்பதை அவருக்கு நான் போய்ச்சொல்ல வேண்டும். சொன்னால் அவர் இருதயத்தின் தாபம் தணியும்! அவரை அரித்துக்கொண்டிருக்கும் மன வேதனை தீரும். சக்கரவர்த்தியின் உடல் நிலை சரியாக இல்லை என்றுதான் உனக்குத் தெரிந்திருக்குமே? மனித வாழ்க்கை அநித்தியமானது. எப்போது என்ன நேரிடும் என்று யாரும் சொல்வதற்கில்லை. வானத்தில் சில நாளாகத் தூமகேது ஒன்று தோன்றி வருகிறது.அதைப்பற்றி ஜனங்கள் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். சக்கரவர்த்தியின் மனமும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்த நிலைமையில், விபரீதமாக எதுவும் நேர்வதற்கு முன்னால் நான் கண்டுபிடித்த விவரத்தை அவருக்குத் தெரிவித்துவிட வேண்டும். சமுத்திர குமாரி! அதற்காகவேதான் நான் அவசரமாகத் தஞ்சைக்குப் போக விரும்புகிறேன். நீ எனக்குச் செய்யும் உதவி எவ்வளவு முக்கியமானது என்று இப்போது தெரிகிறது அல்லவா?"

ஆர்வத்துடன் இளவரசரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலி ஒரு பெருமூச்சு விட்டாள். "கடவுளே! மனித வாழ்க்கையில் ஏன் இத்தனை இன்பத்துடன் துன்பத்தையும் வைத்தாய்?" என்று முணு ுணுத்தாள். பிறகு இளவரசரைப் பார்த்து, "ஐயா! இந்தப் பேதையினால் தங்களுக்கு ஏதேனும் உதவி ஏற்பட்டால் அது என் பூர்வ ஜன்ம பாக்கியம். ஆனால் இதற்கு என் உதவி ஏன்? சேநாதிபதி முதலியவர்களிடம் சொல்லியிருந்தால் அவர்கள் தங்களை தஞ்சைக்கு அனுப்பியிருக்க மாட்டார்களா?" என்றாள்.

"இல்லை அவர்கள் யாரிடமும் சொல்ல நான் விரும்பவில்லை. என்னை எப்படியாவது சிம்மாசனம் ஏற்றுவதில் முனைந்திருக்கும் அவர்களுக்கு இது ஒன்றும் முக்கியமாகத் தோன்றாது. என் தந்தையின் அந்தரங்கத்தை அவர்களிடமெல்லாம் சொல்வதற்கும் நான் இஷ்டப்படவில்லை. சொன்னால் அவர்கள் புரிந்து கொண்டிருக்கவும் மாட்டார்கள். உன்னிடம் இன்னொரு உதவியும் கோருகிறேன். சமுத்திர குமாரி! அதற்காகவே முக்கியமாக இங்கே யானையை நிறுத்தினேன். எனக்குச் சக்கரவர்த்திப் பட்டமும் சாம்ராஜ்ய சிம்மாசனமும் அளித்த ஜோசியர்கள் என் வாழ்க்கையில் பல அபாயங்கள் - பல கண்டங்கள் - ஏற்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரயாணத்தில் அப்படி ஏதாவது எனக்கு நேர்ந்துவிட்டால்... என் தந்தையை நான் சந்திக்க முடியாமல் போய்விட்டால் நீ சக்கரவர்த்தியிடம் போக வேண்டும். எப்படியாவது அவரைச் சந்தித்து என் பெரியம்மை உயிரோடிருக்கிறாள் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும். அவர் இஷ்டப்பட்டால் அந்த மூதாட்டியை அவரிடம் அழைத்துப் போக வேண்டும். இந்தக் காரியத்தையெல்லாம் செய்வாயா பூங்குழலி?"

"தங்களுக்கு ஒரு கண்டமும் நேராது; அபாயம் தங்களிடம் நெருங்கப் பயந்து ஓடும்; கட்டாயம் பத்திரமாய்த் தஞ்சாவூர் போய்ச் சேர்வீர்கள்...."

"ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான் கோரியபடி செய்வாய் அல்லவா?"

"கட்டாயம் செய்கிறேன், இளவரசே!"

"இந்த முக்கியமான காரியத்தை வேறு யாரிடம் நான் ஒப்புவிக்க முடியும்? நீயே சொல், பார்க்கல ாம்."

"என்னிடம் ஒப்புவிக்க வேண்டிய காரியத்தை ஒப்புவித்தாகி விட்டது. இத்துடன் என் உபயோகம் தீர்ந்துவிட்டதல்லவா? நான் விடைபெற்றுக் கொள்ளலாமா?" என்றாள் பூங்குழலி. அவளுடைய குரல் கண்ணீரின் ஈரப்பசையோடு கலந்து வந்தது.

"ஆகா! அது எப்படி? தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை இன்னும் நாம் அடையவில்லையே? சோழநாட்டுப் போர்க்கப்பல்களை இன்னும் காணவில்லையே? அதற்குள் எப்படி விடை பெற்றுக் கொள்ளலாம்? கோபித்துக்கொள்ளதே! இன்னும் சிறிது நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு என்னுடைய சகவாசத்தைப் பொறுத்துக் கொள். யானை மேல் மறுபடியும் ஏறி இன்னும் கொஞ்ச தூரம் என்னுடன் வா! புலிக்கொடி பறக்கும் கப்பலைத் தூரத்தில் கண்டதும் நீ என்னை விட்டுப் பிரிந்து செல்லலாம்!" என்றார் இளவரசர்.

மறுமொழி ஒன்றும் சொல்லாமல் பூங்குழலி யானை நின்ற இடத்தை நோக்கி நடந்தாள். இளவரசரும் சென்றார். அவருடைய வார்த்தைக்குப் படிந்து யானை மண்டியிட்டுப் படுத்தது. இருவரும் அதன் முதுகில் ஏறிக் கொண்டார்கள். முன்போல் யானையை இளவரசர் விரட்டவில்லை. ஆயினும் விரைவாகவே நடந்து சென்றது.

"சமுத்திரகுமாரி! எனக்கு மிகவும் பிடித்த சில காரியங்களைப் பற்றிச் சொன்னேனே? உனக்குப் பிடித்தவை என்னவென்று சொல்ல வேண்டாமா?" என்றார் அருள்மொழி வர்மர்.

"எருமை வாகனத்தின் மீது வரும் எமனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நள்ளிரவில் பாறை உச்சியின் மீது நின்று கொண்டு கொள்ளிவாய்ப் பிசாசுகளை நேரம் போவதே தெரியாமல் பார்ப்பதற்கு ரொம்பவும் பிடிக்கும்..."

"நல்ல விசித்திரமான குணமுள்ள பெண் நீ!"

"தங்கள் சிநேகிதர் கூறுவதை போல் பைத்தியக்காரப் பெண் என்று சொல்லுங்கள் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அப்புறம் சிறிய படகில் ஏறி அலைகடலின் நடுவில் போய்க் கொண்டே இருப்பதற்கும் பிடிக்க ம். அதிலும் கடலில் சுழற்காற்று அடித்ததோ, என் உற்சாகம் எல்லை கடந்துவிடும்.அப்போது படகு ஒருசமயம் அலை ஊச்சியில் ஏறி வானுலகத்தை எட்டிப் பிடிக்கும்; மறுகணம் பாதாளத்தில் தடாலென்று விழும். அதைப் போல் எனக்குப் பிடித்த காரியம் வேறொன்றுமில்லை. சற்று முன்னால் இந்த யானை வெறி கொண்டதுபோல் ஓடி வந்ததே, அப்போதும் எனக்கு அவ்வளவு உற்சாகமாகவே இருந்தது!"

"ஆ! பூங்குழலி! முருகப் பெருமான் உன்னுடைய புன்னகையை நாடி வந்திருந்தால் அடியோடு தோற்றிருப்பார்! யானை முகனை அனுப்பிக் குறமகள் வள்ளியைப் பயமுறுத்தினாரே, அந்த யுக்தி ஒன்றும் உன்னிடம் பலித்திராது!" என்றார் இளவரசர்.

அவர்கள் தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தை அணுகியபோது, "ஆ! இது என்ன?" என்று பூங்குழலி கூச்சலிட்டாள்.

"என்ன? என்ன?" என்று இளவரசர் ஆவலுடன் கேட்டார்.

"புலிக் கொடியுடன் கூடிய மரக்கலங்கள் நான் பார்த்த இடத்தில் இல்லையே? என்னைப் பற்றித் தாங்கள் என்ன நினைப்பீர்கள்? சேநாதிபதி என்மீது சந்தேகப் பட்டதுபோல் தங்களை ஏமாற்றி அழைத்து வந்தவள் ஆகி விட்டேனே!" என்றாள்.

"அப்படி நான் ஒரு நாளும் நினைக்க மாட்டேன். பூங்குழலி! நீ பொய் சொல்லி என்னை வஞ்சித்து அழைத்து வர எவ்வித முகாந்தரமும் இல்லை..."

"ஏன் இல்லை, இளவரசே, காதல் காரணமாக இருக்கலாம் அல்லவா? உலகமெல்லாம் அழகில் மன்மதனையும், வீரபராக்கிரமத்தில் அர்ச்சுனனையும் நிகர்த்தவர் என்று போற்றும் பொன்னியின் செல்வர் மீது மோகங் கொண்டு ஒரு பேதைப் பெண் இம்மாதிரி செய்திருக்கலாம் அல்லவா?"

"பெண்ணே! சேநாதிபதி இங்கே இச்சமயம் இருந்திருந்தால் ஒருவேளை அவ்வாறு சந்தேகப்பட்டிருக்கலாம். ஆனால் உன் மனத்திலும், என் மனத்திலும் அத்தகைய பைத்தியக்கார எண்ணங்களுக்கு இடமில்லை."

"ஐயா! பழையாறை அரண்மனையில் வானதி தேவி என்று வீர ்குலத்து இளவரசி ஒருத்தி இருக்கிறாளே, அவளைப் பற்றியும் அப்படித் தாங்கள் சொல்வீர்களா?"

"ஆம், ஆம்! அதை நான் மறந்துவிடவில்லை. இந்தச் சேநாதிபதியும் என் தமக்கையும் சேர்ந்து அந்தப் பெண்ணை என் கழுத்தில் கட்டிவிடப் பார்க்கிறார்கள். சோழ குலச் சிம்மாசனத்தில் அமரவேண்டும் என்ற ஆசையினால் அந்தப் பேதைப் பெண்ணுக்கும் அத்தகைய ஆசை ஒரு வேளை இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல, பூங்குழலி! அது போகட்டும்! நீ பார்த்தபோது கப்பல்கள் எங்கே இருந்தன?" என்று இளவரசர் கேட்டார்.

"அதோ அந்த முனையில்தான் நின்று கொண்டிருந்தன! எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது!" என்றாள் பூங்குழலி.

"அதனால் என்ன? கொஞ்சம் அப்பால் இப்பால் நகர்ந்து சென்று நிற்கக் கூடும் அல்லவா? எல்லாவற்றுக்கும் கடற்கரை வரையில் போய்ப் பார்த்துவிடுவோம்!" என்றார் இளவரசர்.

"கப்பல்கள் போயிருந்தால் நல்லதாய்ப் போயிற்று. இப்பொழுது எதற்காகப் போய்த் தேடவேண்டும்?" என்றாள் பூங்குழலி.

"ஆகா! நீ அப்படி நினைக்கலாம். ஆனால் எனக்கு அதைப் போல் ஏமாற்றம் தருவது வேறொன்றுமில்லை!" என்றார் இளவரசர்.

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இலங்கை இளவரசனாகிய மானவன்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு இராஜ்யத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்திலேதான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது.கப்பல்கள் வந்து நிற்பதற்கும் படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஓடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது. முகத்துவாரத்தின் அருகில் அந்த நதி வளைந்து வளைந்து சென்றது.இருபுறமும் ம ங்கள் அடர்ந்திருந்தன. இதனால் கடலிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாதபடி கப்பல்கள் நிற்பதற்கு வசதியாக இருந்தது.

அவ்வாறு பூமிக்குள் ஆறு புகுந்து தண்ணீர் நிறையத் தேங்கியிருந்த இடம் ஒன்றிலேதான இளவரசரைச் சிறைப்பிடிக்க வந்த மரக்கலங்களைப் பூங்குழலி பார்த்திருந்தாள். முதலில் பார்த்த இடத்தில் அந்த மரக்கலங்கள் இப்போது காணப்படவில்லை. அதாவது பாய்மரங்கள், கொடிகள் முதலியவை தென்படவில்லை. அந்த இடத்தை மேலும் நெருங்கிப் பார்த்தபோது ஓர் அதிசயமான காட்சி புலப்பட்டது. கப்பல் ஒன்று வெள்ளத்தை விட்டு அதிக தூரம் பூமிக்குள்ளே சென்று சேற்றிலே புதைந்து போயிருந்தது. அதன் பாய் மரங்கள் கொடிகள் முதலியவை ஓடிந்ததும் சிதைந்தும் கிடந்தன. அதில் மனிதர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டு நாளைக்கு முன்னால் அவள் பார்த்த கப்பல்களிலே அது ஒன்று என்பது பூங்குழலிக்கு நன்கு தெரிந்தது. இளவரசரைச் சிறைப் பிடித்துக்கொண்டு போவதற்கென்று வந்த கப்பல்களில் ஒன்று, அதுவே சேற்றிலே சிறைப்பட்டுக் கிடப்பதைக்கண்டு பூங்குழலி ஆச்சரியக் கடலில் மூழ்கினாள்!


பக்க தலைப்பு



நாற்பத்தாறாம் அத்தியாயம்
பொங்கிய உள்ளம்




இளவரசர் யானையின் காதில் மந்திரம் ஓதினார், யானை படுத்தது. இருவரும் அவசரமாக அதன் முதுகிலிருந்து இறங்கினார்கள். கரைதட்டி மணலில் புதைந்திருந்த மரக்கலத்தின் அருகில் சென்று பார்த்தார்கள். அந்தக் கப்பலின் கதி பார்க்கப் பரிதாபமாயிருந்தது. பாய் மரங்கள் தாறுமாறாக உடைந்து கிடந்தன. ஒருவேளை அந்த உடைந்த கப்பலுக்குள்ளேயோ அல்லது அக்கம் பக்கத்திலோ யாராவது இருக்கக் கூடும் என்று சந்தேகித்தார்கள். இளவரசர் கையைத் தட்டிச் சத்தம் செய்தார். பூங்குழலி வாயைக் குவித்துக்கொண்டு கூவிப் ப ர்த்தாள். ஒன்றுக்கும் பதில் இல்லை. இருவரும் தண்ணீரில் இறங்கச் சென்று கப்பலின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு ஏறினார்கள். கப்பலின் அடிப் பலகைகள் பிளந்து தண்ணீரும் மணலும் ஏராளமாக உள்ளே வந்திருந்தன. ஒருவேளை அதை நீரிலே தள்ளி விட்டுக் கடலில் செலுத்தலாமோ என்ற ஆசை நிராசையாயிற்று. அந்தக் கப்பலை அங்கிருந்து தண்ணீரில் நகர்த்துவது இயலாத காரியம். கரையில் இழுத்துப் போடுவதற்கு ஒரு யானை போதாது; பல யானைகளும் பல ஆட்களும் வேண்டும். அதைச் செப்பனிடப் பல மாதங்கள் மரக்கலத் தச்சர்கள் வேலை செய்தாக வேண்டும்.

சிதைந்து கிடந்த பாய்மரங்களிடையே சிக்கியிருந்த புலிக்கொடியை இளவரசர் எடுத்துப் பார்த்தார். அது அவருக்கு மிக்க மனவேதனையை அளித்தது என்று நன்றாய்த் தெரிந்தது. பூங்குழலி! நீ பார்த்த கப்பல்களில் ஒன்றுதானா இது?" என்று கேட்டார்.

"அப்படித்தான் தோன்றுகிறது. இன்னொரு கப்பல் அடியோடு முழுகித் தொலைந்து போய்விட்டது போலிருக்கிறது!" என்றாள் பூங்குழலி. அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது.

"என்ன இவ்வளவு உற்சாகம்?" என்று இளவரசர் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போவதற்கு வந்த கப்பல்கள் முழுகித் தொலைந்து போனால் எனக்கு உற்சாகமாக இராதா?" என்றாள் பூங்குழலி.

"நீ உற்சாகப்படுவது தவறு, சமுத்திர குமாரி! ஏதோ விபரீதமாக நடந்து போயிருக்கிறது. புலிக்கொடி தாங்கிய மரக்கலத்துக்கு இந்தக் கதி நேர்ந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.இது எப்படி நேர்ந்தது என்றும் தெரியவில்லை. இதில் இருந்த வீரர்களும் மாலுமிகளும் என்ன ஆனார்கள்? அதை நினைத்தால் என் மனம் மேலும் குழம்புகிறது. இன்னொரு கப்பல் முழுகிப் போய் இருக்கவேண்டும் என்றா சொல்லுகிறாய்?"

"முழுகிப் போயிருக்கலாம் என்று சொல்கிறேன். முழுகிப் போயிருந்தால் ரொம்ப நல்லது. "

"நல்லதில்லவேயில்லை, அப்படி ஒரு நாளும் இராது. இந்தக் கப்பலின் கதியைப் பார்த்துவிட்டு இன்னொரு கப்பல் அப்பால் நிறையத் தண்ணீர் உள்ள இடத்துக்குப் போயிருக்கலாம். இந்தக் கப்பல் ஏன் இவ்வளவு கரையருகில் வந்திருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. சோழ நாட்டு மாலுமிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கப்பல் விட்டுப் பழக்கமுள்ள பரம்பரையில் வந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? எப்படியும் இதிலிருந்தவர்கள் தப்பிப் பிழைத்திருக்க வேண்டும். ஒன்று மற்றக் கப்பலில் ஏறிப் போயிருக்க வேண்டும்! வா! போய்ப் பார்க்கலாம்!"

"எங்கே போய்ப் பார்ப்பது, இளவரசே! சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ்ந்து வருகிறது!" என்றாள் பூங்குழலி.

"சமுத்திரகுமாரி! உன் படகை எங்கே விட்டு வந்தாய்?"

"என் படகு ஏறக்குறைய இந்த ஆற்றின் நடுமத்தியில் அல்லவா இருக்கிறது? யானை மீது வந்தபடியால், அதுவும் நீங்கள் யானையைச் செலுத்தியபடியால், இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டோம். படகில் ஏறியிருந்தால் நள்ளிரவுக்குத் தான் இங்கு வந்திருப்போம்."

"சரி! நன்றாக இருட்டுவதற்குள் இந்த நதிக்கரையோரமாகப் போய்ப் பார்க்கலாம் வா! இங்குள்ள மரங்கள் கடல் நன்றாய்த் தெரியாமல் மறைக்கின்றன. ஒருவேளை இன்னொரு கப்பலைக் கடலில் சற்றுத் தூரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம் அல்லவா?"

யானையை அங்கேயே விட்டு விட்டு இருவரும் நதிக்கரையோரமாகக் கடலை நோக்கிப் போனார்கள். சீக்கிரத்திலேயே கடற்கரை வந்துவிட்டது. கடலில் அமைதி குடிகொண்டிருந்தது. அலை என்பதற்கு அறிகுறியும் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பச்சை வர்ணத்தகடாகத் தோன்றியது. கடலின் பச்சை நிறமும் வானத்தின் மங்கிய நீல நிறமும் வெகுதூரத்திற்கு அப்பால் ஒன்றாய்க் கலந்தன.

மரக்கலமோ, படகோ ஒன்றும் தெ ்படவில்லை. ஒன்றிரண்டு பறவைகள் கடலிலிருந்து கரையை நோக்கிப் பறந்து வந்தன. அவ்வளவுதான்! சிறிது நேரம் அங்கே நின்று நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு "சரி! புகைந்த மரக்கலத்துக்குப் போகலாம்!" என்றார் இளவரசர். இருவரும் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார்கள். "பூங்குழலி! நீ எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன். ஆனால் இங்கே நாம் பிரிந்து விடவேண்டியதுதான்' என்றார் இளவரசர்.

பூங்குழலி மௌனமாயிருந்தாள். "நான் சொல்கிறது காதில் விழுந்ததா? அந்தப் புதைந்த கப்பலிலேயே நான் காத்திருக்கத் தீர்மானித்து விட்டேன். சேநாதிபதி முதலியவர்கள் எப்படியும் இந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து சேர்வார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து மேலே செய்ய வேண்டியதைப் பற்றி முடிவு செய்வேன். ஆனால் உனக்கு இனி இங்கே வேலை இல்லை. உன் படகைத் தேடிப் பிடித்துப் போய்விடு. என் தந்தையைப் பற்றி நான் கூறியதை நினைவில் வைத்துக்கொள்..."

பூங்குழலி தயங்கி நின்றாள் அங்கிருந்த மரம் ஒன்றின்மீது சாய்ந்தாள். அதன் தாழ்ந்த கிளை ஒன்றை அவள் பிடித்துக் கொண்டாள். "என்ன சமுத்திரகுமாரி? என்ன?"

"ஒன்றுமில்லை, இளவரசே! இங்கே தங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறேன், போய் வாருங்கள்!"

"கோபமா, பூங்குழலி!"

"கோபமா? தங்களிடம் கோபங்கொள்ள இந்தப் பேதைக்கு என்ன அதிகாரம்? அவ்வளவு அகம்பாவம் நான் அடைந்து விடவில்லை."

"பின்னர் ஏன் திடீரென்று இங்கே நின்று விட்டாய்?"

"கோபம் இல்லை, ஐயா! களைப்புத்தான்! நான் உறங்கி இரண்டு நாள் ஆகிறது. இங்கேயே சற்றுப் படுத்திருந்து விட்டு என் படகைத் தேடிக் கொண்டு போகிறேன்."

அது பௌர்ணமிக்கு மறுநாள். ஆகையால் அச்சமயம் கீழைக்கடலில் சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது. இரண்டொரு மங்கிய கிரணங்கள் பூங்குழலியின் முகத திலும் விழுந்தன.

இளவரசர் அந்த முகத்தைப் பார்த்தார். அதில் குடிகொண்டிருந்த சோர்வையும் களைப்பையும் பார்த்தார். கண்கள் பஞ்சடைந்து இமைகள் தாமாக மூடிக்கொள்வதையும் பார்த்தார். சந்திரன் உதயமாகும்போது செந்தாமரை குவிதல் இயற்கைதான். ஆனால் பூங்குழலியின் முகத்தாமரை அப்போது குவிந்தது என்று மட்டும் சொல்வதற்கில்லை. அது வாடி வதங்கிச் சோர்ந்து போயிருந்தது.

"பெண்ணே! தூங்கி இரண்டு நாளாயிற்று என்றாயே? சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?" என்றார்..

"சாப்பிட்டும் இரண்டு நாளைக்கு மேல் ஆயிற்று தங்களுடன் இருந்த வரையில் பசியே தெரியவில்லை."

"என் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? இன்று பகல் நாங்கள் எல்லாரும் வயிறு புடைக்க விருந்துண்டோம்."

"நீ சாப்பிட்டாயா? என்று கூடக் கேட்கத் தவறிவிட்டேன்! வா! பூங்குழலி! என்னுடன் அந்தப் புதைந்த கப்பலுக்கு வா! அதில் தானியங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அந்தத் தானியங்களைத் திரட்டி இன்று இரவு கூட்டாஞ்சோறு சமைத்து உண்போம். சாப்பிட்ட பிறகு நீ உன் வழியே போகலாம்..."

"ஐயா! சாப்பிட்டால் உடனே அங்கேயே படுத்துத் தூங்கி விடுவேன். இப்போதே கண்ணைச் சுற்றுகிறது."

"அதனால் என்ன? நீ அந்தப் புதைந்த கப்பலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு! நானும் யானையும் கரையிலிருந்து காவல் காக்கிறோம். பொழுது விடிந்ததும் நீ உன் படகைத் தேடிப்போ!"

இவ்விதம் சொல்லி இளவரசர் பூங்குழலியின் கரத்தைப் பற்றி அவளைத் தாங்குவார் போல நடத்தி அழைத்துக் கொண்டு சென்றார். உண்மையிலேயே அவளுடைய கால்கள் தள்ளாடின என்பதைக் கண்டார். அந்தப் பெண்ணின் அன்புக்கு ஈரேழு உலகிலும் இணை ஏது என்று எண்ணியபோது அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது.

புதைந்திருந்த கப்பலுக்கு அவர்கள் திரும்பி வந்து சேர் ்த போது அக்கப்பலுக்குப் பின்னால் புகை கிளம்புவதைக் கண்டு திடுக்கிட்டார்கள். ஒருவேளை அந்தக் கப்பலைச் சேர்ந்தவர்கள் எங்கேயாவது போயிருந்து திரும்பி வந்திருக்கலாம் அல்லவா? திடீரென்று அவர்கள் முன்னால் தோன்றினால் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நேரிடக் கூடும். ஆகையால் மெள்ள மெள்ளச் சத்தமிடாமல் சென்றார்கள். வெகு சமீபத்தில் அவர்கள் போன பிறகும் பேச்சுக்குரல் ஒன்றும் கேட்கவில்லை. மறைவில் இருப்பவர்கள் யார், அவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியவில்லை. வள்ளிக்கிழங்கு சுடும் மணம் மட்டும் கம்மென்று வந்தது. பூங்குழலியின் நிலையை இப்போது இளவரசர் நன்கு அறிந்திருந்த படியால் அவளுடைய பசியைத் தீர்ப்பது முதலாவது காரியம் என்று கருதினார். ஆகையால் வந்தது வரட்டும் என்று கப்பலைச் சுற்றிக் கொண்டு அப்பால் சென்று பார்த்தார். அங்கே அடுப்பு மூட்டிச் சமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது ஒரு பெண்மணி என்று தெரிந்தது. யார் அந்தப் பெண்மணி என்பதும் அடுத்த கணத்திலேயே தெரிந்து போயிற்று. அந்த மூதாட்டி இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களை எதிர்பார்த்தவளாகவே தோன்றியது. வாய்ப் பேச்சின் உதவியின்றி இவர்களை அம்மூதாட்டி வரவேற்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் அமுதும் படைத்தாள். பழையாறை அரண்மனையில் அருந்திய இராஜ போகமான விருந்துகளையெல்லாம் காட்டிலும் இம்மூதாட்டி அளித்த வரகரிசிச் சோறும் வள்ளிக்கிழங்கும் சுவை மிகுந்ததாக இளவரசருக்குத் தோன்றியது.

சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கப்பலின் தளத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சந்திரன் இப்போது நன்றாக மேலே வந்திருந்தான். கப்பலின் தளத்திலிருந்து பார்த்தபோது கடலும் தொண்டைமானாறும் ஒன்றாகக் கலக்கும் இடமும் அதற்கு அப்பால் பரந்த கடலும் தெரிந்தன. முன்ம லை இருள்வேளையில் பச்சைத் தாமிரத் தகட்டைப்போல் தோன்றிய கடல் இப்போது பொன் வண்ண நிலாவின் கிரணங்களினால் ஒளி பெற்றுத் தங்கத் தகடாகத் திகழ்ந்தது.

அவர்கள் இரவில் திறந்த வௌியில் சுற்றிலும் நீ சூழ்ந்த இடத்தில் இருந்த போதிலும் புழுக்கத்தினால் உடம்பு வியர்த்தது. காற்று என்பது லவலேசமும் இல்லை. இதைப்பற்றி இளவரசர் பூங்குழலியிடம் கூறியதை அந்த மூதாட்டி எப்படியோ தெரிந்து கொண்டாள். வானத்தில் சந்திரனைச் சுற்றி ஒரு சாம்பல் நிறவட்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினாள்.

"சந்திரனைச் சுற்றி வட்டமிட்டிருந்தால் புயலும் மழையும் வரும் என்பதற்கு அடையாளம்" என்று பூங்குழலி விளக்கிக் கூறினாள்.

"புயல் வருகிறபோது வரட்டும்; இப்போது கொஞ்சம் காற்று வந்தால் போதும்!" என்றார் இளவரசர்.

பிறகு அந்த மூதாட்டி எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் அங்கு வந்து சேர்ந்திருக்க முடியும் என்று தமது வியப்பைத் தெரிவித்தார்.

"என் அத்தைக்கு இது ஒரு பெரிய காரியம் அல்ல; இதைவிட அதிசயமான காரியங்களை அவர் செய்திருக்கிறார்!" என்றாள் பூங்குழலி. "மேலும் தங்களிடம் அவருக்கு இருக்கும் அன்புக்கும் அளவே கிடையாது. அன்பின் சக்தியினால் எதைத்தான் சாதிக்க முடியாது?" என்றாள்.

இந்தப் பேச்சையும் அந்த மூதாட்டி எப்படியோ தெரிந்து கொண்டு பூங்குழலியின் முகத்தைத் திருப்பி ஒரு திக்கைச் சுட்டிக்காட்டினாள். அங்கே அவர்கள் ஏறிவந்த யானை நின்று கொண்டிருந்தது.அதற்குப் பக்கத்தில் கம்பீரமான உயர்ந்த சாதிக்குதிரை ஒன்று நின்றதைக் கண்டு இருவரும் அதிசயித்தார்கள்.

"இந்தக் குதிரையின் மீது ஏறி இவர் வந்தாரா என்ன? இவருக்குக் குதிரை ஏறத்தெரியுமா?" என்று இளவரசர் வியப்புடன் கேட்டார்.

"அத்தைக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. குதிரை ஏற்றம், யானை ஏற் ம் எல்லாம் தெரியும். படகு வலிக்கத் தெரியும். சில சமயம் காற்றில் ஏறிப் பிரயாணம் செய்வாரோ என்று நினைக்கத் தோன்றும். அவ்வளவு சீக்கிரம் ஒரிடத்திலிருந்து இன்னோரிடம் வந்து விடுவார். எப்படி வந்திருக்க முடியும் என்று நமக்கு ஆச்சரியமாயிருக்கும்."

இளவரசர் அப்போது வேறொரு ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார். கரையில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையின் கம்பீரத் தோற்றந்தான் அவருக்கு அத்தகைய வியப்பை உண்டாக்கியது. "அரபு நாட்டில் வளரும் உயர்ந்த சாதிக் குதிரைகளில் மிக உயர்ந்த குதிரையல்லவா இது? எப்படி இங்கே வந்தது? எப்படி இந்த மூதாட்டிக்குக் கிடைத்தது?" என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார்.

பூங்குழலி சமிக்ஞை பாஷையினால் இதைப்பற்றி ஊமை ராணியிடம் கேட்டாள்.(ஆம்; 'ஊமை ராணி' என்று இனி நாம் அந்த மூதாட்டியை அழைக்கலாம் அல்லவா?) 'யானை இறவு'த் துறைக்கு பக்கத்தில் இந்தக் குதிரை கடலிலிருந்து கரையேறியது என்றும், கரை ஏறியதும் தெறிகெட்டுப் பிரமித்து நின்று கொண்டிருந்ததென்றும், ஊமைராணி அதை அன்புடன் தட்டிக் கொடுத்து வசப்படுத்தி அதன்மேல் ஏறிக்கொண்டு வந்ததாகவும் தெரியப்படுத்தினாள். இதைக்கேட்ட இளவரசரின் வியப்பு மேலும் அதிகமாயிற்று.

பேசிக் கொண்டிருக்கும்போதே பூங்குழலியின் கண்ணிமைகள் மூடிக்கொள்வதை இளவரசர் கவனித்தார். "முன்னமே தூக்கம் வருகிறது என்று சொன்னாய். நீ படுத்துக் கொள்!" என்றார். அப்படிச் சொன்னதுதான் தாமதம்; பூங்குழலி அவ்விடமிருந்து சற்று விலகிச் சென்று படுத்துப் பக்கத்தில் கிடந்த கப்பல் பாய் ஒன்றை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் தூங்கிப் போனாள். அவள் மூச்சுவிட்ட தோரணையிலிருந்து அவள் தூங்கி விட்டாள் என்று தெரிந்தது.

ஆனால் தூக்கத்திலேயே அவளுடைய வாய் மெல்லிய குர லில் பாட்டு ஒன்றை முணுமுணுத்தது. "அலை கடலும் ஓய்ந்திருக்க அக்கடல் தான் பொங்குவதேன்?" ஆகா! இதே பாட்டை வந்தியத்தேவன் நேற்று அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான்! இவளிடந்தான் கற்றுக்கொண்டான் போலும்.மற்றொரு சமயம் சமுத்திரகுமாரி விழித்துக்கொண்டிருக்கும்போது பாட்டு முழுவதையும் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று இளவரசர் எண்ணினார். உடனே ஊமை ராணியிடம் அவர் கவனம் சென்றது. ஆகா! எல்லாருக்குந்தான் சில சமயம் அகக்கடல் பொங்குகிறது! நெஞ்சகம் விமுகிறது! ஆனாலும் வாய்ந்திறந்து தன் உணர்ச்சிகளை என்றும் வௌியிட முடியாத இந்த மூதாட்டியின் உள்ளக் கொந்தளிப்புக்கு உவமானம் ஏது? எத்தனை ஆசாபாசங்கள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துயரங்கள், எவ்வளவு கோபதாப ஆத்திரங்கள் எல்லாவற்றையும் இவள் தன் உள்ளத்திலேயே அடக்கி வைத்திருக்கிறாள்! எத்தனை காலமாக அடக்கி வைத்திருக்கிறாள்!

ஊமை ராணி இடம் பெயர்ந்து இளவரசரின் அருகில் வந்து அமர்ந்தாள். அவருடைய தலைமயிரை அன்புடன் கோதிவிட்டாள். அவருடைய இரண்டு கன்னங்களையும் பூவைத் தொடுவது போல் தன் வலிய வைரமேறிய கரங்களினால் மிருதுவாகத் தொட்டுப்பார்த்தாள். இளவரசருக்குச் சற்று நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு அந்த மூதாட்டியின் பாதங்களைத் தொட்டுத் தம் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.அவள் அந்தக் கரங்களைப் பிடித்துத் தன் முகத்தில் வைத்துக் கொண்டாள். இளவரசருடைய கரங்கள் விரைவில் அந்தப் பெண்ணரசியின் கண்ணில் பெருகிய நீரால் நனைந்து ஈரமாயின.

ஊமை ராணி சமிக்ஞையினால் இளவரசரையும் படுத்து உறங்கச் சொன்னாள். தான் காவல் இருப்பதாகவும் கவலையின்றித் தூங்கும்படியும் சொன்னாள். இளவரசருக்குத் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆயினும் அவளைத் திருப்தி செய்வதற்காகப் படுத்தார். படுத்து வெகுநேரம் வ ையில் அவர் உள்ளக் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பிறகு வௌியில் சிறிது குளிர்ந்த காற்று வந்தது. உடல் குளிரவே உள்ளம் குவிந்தது; இலேசாக உறக்கமும் வந்தது.

ஆனால் உறக்கத்திலும் இளவரசரின் மனம் அமைதியுறவில்லை. பற்பல விசித்திரமான கனவுகள் கண்டார்.அரபு நாட்டுச் சிறந்த குதிரை ஒன்றின் மீது ஏறி வானவௌியில் பிரயாணம் செய்தார். மேகமண்டலங்களைக் கடந்து வானுலகில் புகுந்தார்.

அங்கே தேவேந்திரன் அவரை ஐராவதத்தில் ஏற்றி அழைத்துச் சென்றான். தன்னுடைய இரத்தினச் சிங்கானத்தில் அவரை உட்காரச் சொன்னான்.

"ஓ! இது எனக்கு வேண்டாம், இந்தச் சிங்காதனத்தில் என் பெரிய தாயார் ஊமை ராணியை ஏற்றி வைக்க விரும்புகிறேன்" என்று இளவரசர் சொன்னார்.

தேவேந்திரன் சிரித்து, "அவள் இங்கே வரட்டும் பிறகு பார்க்கலாம்" என்றான்.

தேவேந்திரன் இளவரசருக்குத் தேவாமிர்தத்தைக் கொடுத்துப் பருகச் சொன்னான்.

இளவரசர் அருந்திப் பார்த்துவிட்டு, "ஓ! இது காவேரித்தண்ணீர்போல் அவ்வளவு நன்றாயில்லையே?" என்றார்.

தேவேந்திரன் இளவரசரை அந்தப் புரத்துக்கு அழைத்துப் போனார். அங்கே தேவ மகளிர் பலர் இருந்தார்கள்.

இந்திராணி இளவரசரைப் பார்த்து, "இந்தப் பெண்களுக்குள்ளே அழகில் சிறந்தவள் யாரோ அவளை நீர் மணந்து கொள்ளலாம்" என்றாள்.

இளவரசர் பார்த்துவிட்டு, "இவர்களில் யாரும் பூங்குழலியின் அழகுக்கு அருகிலும் வரமாட்டார்கள்" என்றார்.

திடீரென்று இந்திராணி இளைய பிராட்டியாக மாறினாள். "அருள்மொழி! என் வானதியை மறந்துவிட்டாயா?" என்று கேட்டாள்.

இளவரசர், 'அக்கா! அக்கா! எத்தனை நாளைக்கு என்னை நீ அடிமையாக வைத்திருக்கப் போகிறாய்? உன்னுடைய அன்பின் சிறையைக் காட்டிலும் பழுவேட்டரையரின் பாதாளச் சிறைமேல்! என்னை விடுதலை செய்! இல்லாவிட்டால் விராட ராஜனு டைய புதல்வன் உத்தர குமாரனைப் போல் என்னை அரண்மனையிலேயே இருக்கச் செய்து விடு. ஆடல் பாடல்களில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

இளைய பிராட்டி குந்தவை தன் பவழச் செவ்விதழ்களில் காந்தள் மலரையொத்த விரலை வைத்து அவரை வியப்புடன் நோக்கினாள். "அருள்மொழி! நீ ஏன் இப்படி மாறிப் போய்விட்டாய்? யார் உன் மனத்தைக் கெடுத்தார்கள்? ஆம், தம்பி! அன்பு என்பது ஓர் அடிமைத்தனம்தான். அதற்கு நீ கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்" என்றாள்.

"இல்லை அக்கா, இல்லை! நீ சொல்வது தவறு. அடிமைத்தனம் இல்லாத அன்பு உண்டு. உனக்கு அதைக் காட்டட்டுமா? இதோ கூப்பிடுகிறேன் பார்!...பூங்குழலி! பூங்குழலி! இங்கே வா!" என்று கூவினார்.

பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் பூங்குழலி குதிரையின் காலடிச்சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். ஊமை ராணி குதிரை மேல் ஏறிப் புறப்படுவதைப் பார்த்தாள். அவளைத் தடுப்பதற்காக எழுந்து ஓடினாள்.அவள் கப்பலிலிருந்து இறங்கிக் கரைக்குச் செல்வதற்கு முன்னால் குதிரை பறந்து சென்றுவிட்டது.

உதய நேரம் மிக்க மனோகரமாயிருந்தது. பூங்குழலியின் உள்ளத்தில் என்றுமில்லாத உற்சாகம் ததும்பியது. அங்கிருந்தபடியே கப்பலின் மேல் தளத்தைப் பார்த்தாள். இளவரசர் தூங்கிக் கொண்டிருந்தார். பூங்குழலி நதிக்கரையோரமாகப் பறவைகளின் இனிய கானத்தை கேட்டுக் கொண்டு நடந்தாள். ஒரு மரத்தின் வளைந்த கிளையில் ஒரு பெரிய ராட்சசக் கிளி உட்கார்ந்திருந்தது. பூங்குழலியைக் கண்டு அது அஞ்சவில்லை. "எங்கே வந்தாய்?" என்று கேட்பதுபோல் அவளை உற்றுப் பார்த்தது.

"கிளித்தோழி! இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் இளவரசர் இங்கிருந்து போய்விடுவார். பிறகு எனக்கு நீதான் துணை. என்னோடு பேசுவாய் அல்லவா?" என்று பூங்குழலி கேட்டாள்.

அச்சமயம் "பூங்குழலி! பூங்குழலி!" என்ற குரல் கேட்டது முதலில் கிளிதான் பேசுகிறது என்று நினைத்தாள். இல்லை; குரல் கப்பலிலிருந்து வருகிறது என்று உணர்ந்தாள். இளவரசர் அழைக்கிறார் என்று அறிந்து குதித்தோடினாள். ஆனால் கப்பல் மேலேறிப் பார்த்தபோது இளவரசர் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார். பூங்குழலி அவர் அருகில் சென்ற போது அவருடைய வாய் மீண்டும் "பூங்குழலி!" என்று முணுமுணுத்தது. உடல் புளகாங்கிதம் கொண்ட அப்பெண் இளவரசரின் அருகில் சென்று அவருடைய நெற்றியைத் தொட்டு எழுப்பினாள்.

இளவரசர் உறக்கமும், கனவும் கலைந்து எழுந்தார். கீழ்த்திசையில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். பூங்குழலியின் முகம் மலர்ந்த செந்தாமரையைப் போல் பிரகாசித்தது.

"என்னை அழைத்தீர்களே, எதற்கு?" என்று கேட்டாள்.

"உன் பெயரைச் சொல்லி அழைத்தேனா என்ன? தூக்கத்தில் ஏதோ பேசியிருப்பேன். நீ நேற்றிரவு தூங்கிக் கொண்டே பாடினாயே! நான் தூக்கத்தில் பேசக்கூடாதா?" என்றார்.

இளவரசர் குதித்து எழுந்தார். "ஓகோ! இத்தனை நேரமா தூங்கிவிட்டேன்! பெரியம்மா எங்கே?" என்று கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தார். அந்த மூதாட்டி அதிகாலையில் குதிரை ஏறிப் போய்விட்டதைச் சமுத்திரகுமாரி கூறினாள்.

"நல்ல காரியம் செய்தாள்! சமுத்திரகுமாரி! உன் களைப்புத் தீர்ந்து விட்டதாகக் காண்கிறது. நீயும் இனி விடை பெற்றுக் கொள்ளலாம். என் நண்பர்கள் வரும் வரையில் நான் இங்கேயே இருக்க வேண்டும். அதுவரை இந்தக் கப்பலைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன்" என்றார்.

பூங்குழலி, "அதோ! அதோ!" என்று சுட்டிக்காட்டினாள். அவள் காட்டிய திசையை இளவரசர் நோக்கினார். கடலில் வெகு தூரத்தில் ஒரு பெரிய மரக்கலம் தெரிந்தது. கடற்கரையோரமாக ஒரு சிறிய படகு வருவதும் தெரிந்தது. படகிலே ஐந்தாறு பேர் இருந்தார்கள்.

"ஆகா! இப்போது எல்லா விவரங களும் தெரிந்து போய் விடும்!" என்றார் இளவரசர். தாம் அங்கிருப்பது தெரியாமல் ஒருவேளை படகு கடற்கரையோடு போய்விடலாம் என்று இளவரசர் அஞ்சினார். ஆகையால் உடனே புதைந்த கப்பலிலிருந்து கீழிறங்கி நதிக்கரையோரமாகக் கடற்கரையை நோக்கிச் சென்றார். பூங்குழலி அவரைத் தொடர்ந்து சென்றாள். யானையும் அவர்களைப் பின் தொடர்ந்து அசைந்தாடிக் கொண்டு சென்றது.

கடற்கரையில் போய் நின்றார்கள். மரக்கலம் அவர்களை விட்டுத் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்தது. படகு அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. முதலில் பின்னால் ஒதுங்கி நின்ற பூங்குழலி ஆர்வங்காரணமாகச் சிறிது நேரத்துக்குள் முன்னால் வந்து விட்டாள். இளவரசருடைய மனக் கவலைகளுக்கிடையே பூங்குழலியின் ஆர்வம் அவருக்குக் களிப்பை ஊட்டியது. அவர் முகத்தில் குறுநகை ததும்பியது.

அவர் மனக் கவலை கொள்ளக் காரணங்களும் நிறைய இருந்தன. தூரத்திலே போய்க் கொண்டிருந்த கப்பலில் தாமும் போயிருக்க வேண்டும் என்றும் அது தன்னை விட்டுவிட்டுத் தூரதூரப் போய்க் கொண்டிருந்ததாகவும் அவருக்குத் தோன்றியது. அதுமட்டும் அன்று; கிட்ட நெருங்கி வந்து கொண்டிருந்த படகிலே ஒரு ஆள் குறைவாயிருந்ததாகக் காணப்பட்டது. இருக்கவேண்டிய ஒருவர் அதில் இல்லை. ஆம்; அதோ சேநாதிபதி இருக்கிறார்; திருமலையப்பர் இருக்கிறார்.உடன் வந்து வீரர்கள் இருக்கிறார்கள்; படகோட்டிகள் இருக்கிறார்கள். ஆனால் அந்த வாணர் குலத்து வாலிபனை மட்டும் காணோம். வல்லத்தரையன் எங்கே? அந்த உற்சாக புருஷன், அஸகாயசூரன், அஞ்சா நெஞ்சம் படைத்த தீரன், இளையபிராட்டி அனுப்பி வைத்த அந்தரங்கத் தூதன் எங்கே?... இரண்டு நாள்தான் பழகியிருந்த போதிலும் இளவரசருக்கு நெடுநாள் பழக்கப்பட்ட நண்பன் போல் அவன் ஆகியிருந்தான். அவனுடைய குணாதிசயங்கள் அவ்வளவாக இளவரசருடைய னத்தைக் கவர்ந்திருந்தன. அவனைப் படகில் காணாததும் அரிதில் கிடைத்த பாக்கியத்தை இழந்ததுபோல் இளவரசருக்கு வேதனை உண்டாயிற்று.

படகு இன்னும் நெருங்கிக் கரையோரம் வந்ததும் சேநாதிபதி முதலியவர்கள் தாவிக் கரையில் குதித்தார்கள். சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி ஓடிவந்து இளவரசரைக் கட்டிக் கொண்டார். "ஐயா! நல்ல காரியம் செய்தீர்கள்; எங்களை இப்படிச் கதிகலங்க அடிக்கலாமா!... யானையின் மதம் எப்படி அடங்கிற்று? இந்தப் பொல்லாத யானை இப்போது எவ்வளவு சாதுவாக நின்று கொண்டிருக்கிறது!... இளவரசே! எப்போது இங்கே வந்து சேர்ந்தீர்கள்? பழுவேட்டரையர்களின் கப்பல்களைப் பார்த்தீர்களா? அவை எங்கே?" என்று கொடும்பாளூர் பெரிய வேளார் கேள்விமாரி பொழிந்தார்.

"சேநாதிபதி! எங்கள் கதையைப் பின்னால் சொல்கிறேன். வந்தியத்தேவர் எங்கே? சொல்லுங்கள்!" என்றார்.

"அந்தத் துடுக்குக்காரப் பிள்ளை அதோ போகிற கப்பலில் போகிறான்!" என்று

சேநாதிபதி தூரத்தில் போய்க் கொண்டிருந்த கப்பலைக் காட்டினார். "ஏன்? ஏன்? அது யாருடைய கப்பல்? அதில் ஏன் வந்தியத்தேவர் போகிறார்?" இளவரசர் கேட்டார்.

"ஐயா! எனக்குப் புத்தி ஒரே கலக்கமாயிருக்கிறது. இந்த வைஷ்ணவனைக் கேளுங்கள்! இவனுக்கு உங்கள் சமாசாரத்துடன் அந்த வாலிபன் சுபாவமும் தெரிந்திருக்கிறது!" என்றார்.

இளவரசர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! வந்தியத்தேவர் ஏன் அக்கப்பலில் போகிறார்? தெரிந்தால் சீக்கிரம் சொல்லுங்கள்!" என்றார்.


பக்க தலைப்பு



நாற்பத்தேழாம் அத்தியாயம்
பேய்ச் சிரிப்பு




இளவரசரும் பூங்குழலியும் யானை மீது ஏறிச் சென்ற பிறகு, பின் தங்கியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாமும் நேயர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். "யானைக்கு மதம் பிடித்த விட்டது!" என்று சேநாதிபதி கூச்சலிட்டதைக் கேட்டு மற்றவர்களும் அப்படியே முதலில் நம்பினார்கள். யானையைப் பின் தொடர்ந்து குதிரைகளை வேகமாக விட்டுக்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆனால் அது இயலுகிற காரியமாயில்லை. யானை இறவுத் துறையை அடைந்ததும் அவர்களுடைய பிரயாணம் தடைப்பட்டு விட்டது.வழக்கம் போல் எல்லாருக்கும் முதலில் சென்ற வந்தியத்தேவனுடைய குதிரை அக்கடல் துறையில் இறங்கிப் பாய்ந்து சேற்றில் அகப்பட்டுக் கொண்டது. மிக்க சிரமப்பட்டு அதை வௌியேற்றினார்கள். ஆனாலும் குதிரை இனிப் பிரயாணத்துக்குத் தகுதியில்லையென்று ஏற்பட்டது.

சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி இன்னது செய்வதென்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டார். "என் வாழ்க்கையில் இம்மாதிரி தவறு செய்ததில்லை. எல்லாரும் சும்மா நிற்கிறீர்களே? என்ன செய்யலாம்? இளவரசரை எப்படிக் காப்பாற்றலாம்? யாருக்காவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்!" என்றார்.

அப்போது ஆழ்வார்க்கடியான் முன் வந்து, "சேநாதிபதி! எனக்கு ஒன்று தோன்றுகிறது; சொல்லட்டுமா?" என்றான்.

"சொல்வதற்கு நல்ல வேளை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? சீக்கிரம் சொல்!" என்றார் சேநாதிபதி.

"இளவரசர் சென்ற யானைக்கு உண்மையில் மதம் பிடிக்க வில்லை..."

"என்ன உளறுகிறாய்? பின்னே யாருக்கு மதம் பிடித்தது? உனக்கா?"

"ஒருவருக்கும் மதம் பிடிக்கவில்லை. தாங்கள் வேண்டுமென்று பிரயாணத்தைத் தாமதப் படுத்துகிறீர்கள் என்ற சந்தேகம் இளவரசருக்கு உண்டாகி விட்டது. அதனால் நம்மை விட்டுப் பிரிந்து போவதற்காக யானையை அப்படித் தூண்டி விட்டு வேகமாய்ப் போய்விட்டார். யானையைப் பழக்கும் வித்தையின் சகல இரகசியங்களையும் அறிந்தவர் இளவரசர் என்பதுதான் நம் எல்லாருக்கும் தெரியுமே!"

இது உண்மையாயிருக்கும் என்று சேநாதிபதிக்கும் பட்ட ு அவர் உள்ளம் நிம்மதி அடைந்தது. "சரி; அப்படியேயிருக்கட்டும். ஆனால் நாம் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் அல்லவா? அங்கே நடப்பது என்ன என்றாவது தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?"

"போக வேண்டியதுதான். கடற்கரையின் ஓரமாகச் சென்று எங்கேயாவது படகு கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டுதான் கடந்தாக வேண்டும் அல்லது பார்த்திபேந்திர பல்லவரின் கப்பல் வரும் வரையில் காத்திருக்கலாம்."

"வைஷ்ணவரே! நீர் பொல்லாதவர். இளவரசரிடம் இப்படி ஏதாவது சொல்லிவிட்டீர் போலிருக்கிறது."

"சேநாதிபதி! இந்தப் பிரயாணம் கிளம்பியதிலிருந்து நான் இளவரசருடன் பேசவே இல்லை." இதன்பிறகு அவர்கள் அந்தக் கடற்கழியின் ஓரமாகக் கிழக்கு நோக்கிச் சென்றார்கள்.

நேயர்கள் இலங்கைத் தீவின் வட பகுதியின் இயல்பு எத்தகையது என ஒருவாறு அறிந்திருக்கலாம். இலங்கையின் வடக்கு முனைப் பகுதிக்கு அந்நாளில் நாகத்வீபம் என்று பெயர் வழங்கியது. அந்தப் பகுதியையும் இலங்கையின் மற்றப் பெரும் பகுதியையும் இரு புறத்திலிருந்தும் கடல் உட்புகுந்து பிரித்தது.ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும் படியாகக் கடற்கழி மிகக் குறுகியிருந்த இடத்துக்குக் 'யானை இறவு'த் துறை என்று பெயர். சில சமயம் இத்துறையில் தண்ணீர் குறைவாயிருக்கும். அப்போது சுலபமாக இறங்கிக் கடந்து செல்லலாம். மற்றச் சமயங்களில் அதைக் கடப்பது எளிதன்று.படகுகளிலேதான் கடக்கவேண்டும்.(யானை மந்தைகள் இந்த இடத்தில் கடலில் இறங்கி கடந்து செல்வது வழக்கமாக படியால் 'யானை இறவு' என்ற பெயர் வந்தது. முற்காலத்தில் இவ்விடத்தில் யானைகளைக் கப்பலில் ஏற்றி வௌி நாடுகளுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.)

அந்தச் சமயத்தில் இலங்கைக் கடற்கரையோரமாக இருந்த படகுகள் எல்லாம் பெரும்பாலும் ாதோட்டத்துக்கும் திரிகோண மலைக்கும் சென்றிருந்தன. என்றாலும், தப்பித் தவறி எங்கேயாவது ஒன்றிரண்டு படகுகள் இருக்கலாம் என்று எண்ணிச் சேநாதிபதி முதலியவர்கள் பார்த்துக்கொண்டே சென்றார்கள். கடைசியாக மீன் பிடிக்கும் வலைஞனுடைய சிறிய படகு ஒன்று சிக்கியது. அதில் படகோட்டி ஒருவனேயிருந்தான். கேட்கிறவர் சோழ நாட்டுச் சேநாதிபதி என்று தெரிந்து கொண்டு சம்மதித்தான்.

படகில் ஏறிக் கடல் கால்வாயைக் கடந்தார்கள். ஆனால் பிறகு எப்படித் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை அடைவது? காட்டு வழியில் நடந்து போய்ச்சேர்வது சுலபமன்று. அதிக நேரமும் ஆகும்; ஆகையால் அதே படகை உபயோகித்துக் கீழைக் கடற்கரையோரமாகவே சென்று தொண்டைமானாற்றின் சங்கமத்தை அடைவதென்று தீர்மானித்தார்கள்.

நள்ளிரவு வரையில் படகுக்காரன் கடலோரமாகப் படகு விட்டுக்கொண்டு சென்றான். அதற்குப் பிறகு அவன் களைத்து விட்டான். மற்றவர்கள் உதவிசெய்வதாகச் சொல்லியும் பயனில்லை."இனி அடிக்கடி திசை திரும்பவேண்டும். மூலை முடுக்குகளும் கற்பாறைகளும் அதிகம்.பாறையில் மோதினால் படகு உடைந்து சுக்குநூறாகிவிடும். இனிப் பொழுது விடிந்துதான் படகு செலுத்த முடியும்" என்றான். சேநாதிபதி முதலியவர்களும் களைப்படைந்து போயிருந்தார்கள். ஆகையால் கரையில் இறங்கித் தோப்பு ஒன்றில் படுத்தார்கள்.

வந்தியத்தேவனுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவன் ஆழ்வார்க்கடியானோடு சண்டை பிடித்தான். "எல்லாம் உன்னாலே வந்தவினை!" என்றான்.

"என்னால் என்ன இப்போது வந்தது?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.

"நீ ஒன்றையும் மனம் விட்டுச் சொல்வதில்லை. கடம்பூரிலிருந்து நானும் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். கொஞ்சம் சொல்வது போல் சொல்கிறாய்; பாதிச் செய்தியை இரகசியமாய் வைத்துக் கொள்கிறாய்; இளவரசர் யா ைமேல் ஏறியதன் நோக்கம் உனக்குத் தெரிந்திருக்கிறதே? அதை என்னிடம் முன்னமே சொல்லியிருந்தால் நானும் அந்த யானையின் மேல் ஏறியிருப்பேன் அல்லவா? இவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்த இளவரசரை இப்போது கை நழுவவிட்டு விட்டோமே? பழையாறைக்குப் போய் இளைய பிராட்டியிடம் என்ன சொல்வது?" என்றான் வந்தியத்தேவன்.

"ஓலையைக் கொடுத்ததும் உன் கடமை தீர்ந்துவிட்டது. இன்னும் என்ன?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அதுதான் இல்லை, இளவரசரை இளைய பிராட்டியிடம் கொண்டு போய்ச் சேர்த்த பிறகுதான் என்னுடைய கடமை தீர்ந்ததாகும். நீயே அதற்குக் குறுக்கே நிற்பாய் போலிருக்கிறதே!"

"இல்லை, அப்பா, இல்லை! நான் குறுக்கே நிற்கவில்லை. நாளைக்கே நான் சேநாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு என் வழியே போகிறேன்."

"உன் காரியம் முடிந்துவிட்டது. இளவரசரைப் பிடித்துக் கொடுத்தாகிவிட்டது என்று போகப் பார்க்கிறாயாக்கும்.உன் பேரில் எனக்கு எப்போதுமே கொஞ்சம் சந்தேகமிருந்தது. இப்போது அது உறுதியாகிறது." இவ்விதம் அவர்கள் சிறிது நேரம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த பிறகு தூங்கிப் போனார்கள். நன்றாகக் களைத்திருந்த படியால் அடித்துப் போட்டவர்களைப் போல் தூங்கினார்கள்.

பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் படகு வலிக்கும் சத்தம் கேட்டு ஆழ்வார்க்கடியான் முதலில் விழித்துக் கொண்டான். அவன் எதிரே தோன்றிய காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது. கடலில் கொஞ்ச தூரத்துக்கப்பால் பாய் மரம் விரித்த மரக்கலம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பயணப்படுவதற்கு ஆயத்தமாக நின்றதாக நன்கு தெரிந்தது. அந்த மரக்கலத்தை நோக்கிக் கரையிலிருந்து ஒரு படகு போய்க் கொண்டிருந்தது. அதில் படகுக்காரனேத் தவிர மூன்று பேர் இருந்தார்கள். அந்தப் படகு முதலாவது நாள் மாலை தங்களை ஏற்றி வந்த படகுத ன் என்று தெரிந்து கொள்ள ஆழ்வார்க்கடியானுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.


அந்த மரக்கலம் எங்கிருந்து திடீரென்று கிளம்பிற்று என்பதையும் அவன் விரைவிலே ஊகித்துக் கொண்டான். அவர்கள் படுத்திருந்த இடத்துக்குப்பக்கத்தில் கடல் பூமிக்குள் குடைந்து சென்றிருந்தது. மரங்கள் அந்த இடத்தை ஓரளவு மறைந்திருந்தன. அந்தக் குடாவிலேதான் அம்மரக்கலம் நின்றிருக்க வேண்டும் பொழுது விடிந்ததும் புறப்பட்டிருக்க வேண்டும்.

அந்த மரக்கலம் யாருடையது? எங்கிருந்து வந்தது? எங்கே போவது? படகு எதற்காகக் கப்பலை நோக்கிப் போகிறது? அதில் இருப்பவர்கள் யார்? இவ்வளவு கேள்விகளும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் மின்னலைப் போல் தோன்றி மறைந்தன. "சேநாதிபதி! சேநாதிபதி! எழுந்திருங்கள்!" என்று கூவினான். சேநாதிபதியும், வந்தியத்தேவனும், மற்ற இரு வீரர்களும் திடுக்கிட்டு விழித்தெழுந்தார்கள்.

முதலில் கடலில் நின்ற பாய்மரக் கப்பல் அவர்கள் கண்ணில் தென்பட்டது. சேநாதிபதி, "ஓ! அது சோழ நாட்டுக் கப்பல்தான். பழுவேட்டரையர்கள் அனுப்பிய கப்பலாகவே இருக்கலாம்! இளவரசர் ஒருவேளை அதில் போகிறாரோ, என்னமோ? ஐயோ! தூங்கிப் போய்விட்டோமே! என்ன பிசகு செய்தோம்!" என்றார்.பிறகு, "படகு எங்கே? போய்க்கப்பலைப் பிடிக்கமுடியுமா என்று பார்க்கலாம்!" என்றார்.

"அதற்குள் படகு சென்று கொண்டிருப்பதும் அவர் கண்ணில் படவே, "அடடே! அதோ போகிறது நாம் வந்த படகல்லவா? அதில் ஏறிப் போகிறவர்கள் யார்? அடே படகுக்காரா! நில் நில்!" என்று இரைந்தார். படகுக்காரனின் காதில் விழுந்ததோ என்னமோ தெரியாது. அவன் படகை நிறுத்தவில்லை. மேலே செலுத்திக் கொண்டு போனான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தான் வந்தியத்தேவன்."அந்தக் கப்பலில் இளவரசர் போகிறார்!" என்று சேநாதிபதி கூறியது அவ ன் செவி வழியாக புகுந்து மனத்தில் பதிந்தது. அதற்குப் பிறகு வேறு எந்த நினைவிற்கும் அவன் மனத்தில் இடமிருக்கவில்லை. அவன் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றித்தான் ஏதேனும் சந்தேகமுண்டா? அவன் கால்களுக்குக் கட்டளையிட வேண்டிய அவசியந்தான் உண்டா? இல்லவே இல்லை! அடுத்த நிமிஷத்தில் அவன் கடலில் பாய்ந்து இறங்கினான். அலைகளைத் தள்ளிக் கொண்டு அதிவேகமாகச் சென்றான். நல்ல வேளையாகக் கடலோரத்தில் அங்கே தண்ணீர் அதிகம் இல்லை. ஆகையால் அதிசீக்கிரத்தில் வெகுதூரம் போய் விட்டான். படகின் அருகிலும் சென்று விட்டான். தண்ணீரின் ஆழம் திடீரென்று அதிகமாகி விட்டது. தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டது. "ஐயோ! நான் முழுகிச்சாகப்போகிறேன்! என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று கத்தினான். படகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. பிறகு சிலர் பேசும் குரல்கள் கேட்டன. படகு நின்றது. படகுக்காரன் குனிந்து கை கொடுத்தான். வந்தியத்தேவன் படகில் ஏறி உட்கார்ந்தான். படகு மேலே சென்றது.

படகில் இருந்தவர்களை வந்தியத்தேவன் ஆராய்ந்து பார்த்தான். ஒருவன் தமிழ்நாட்டானே அல்ல. அரபுநாட்டான் போலக் காணப்பட்டான். அவன் எப்படி இங்கு வந்தான் என்ற வியப்புடன் மற்ற இருவரையும் பார்த்தான். அவர்கள் முகத்தில் பாதியை மறைத்து முண்டாசு கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாட்டவர்கள் என்று தெரிந்தது. அதுமட்டுமன்று. பார்த்த முகங்களாகவும் காணப்பட்டன. எங்கே, எங்கே பார்த்தோம் இவர்களை?- ஆ! நினைவு வருகிறது! பார்த்திபேந்திர பல்லவனுடைய தம்பளையிலிருந்து திரும்பி வந்தவர்கள் அல்லவா இவர்கள்? ஆழ்வார்க்கடியான் இவர்களைத் தானே இளவரசரைக் கொல்ல வந்தவர்கள் என்று சொன்னான்? ஓகோ! இவர்களில் ஒருவனை வேறொரு இடத்தில் கூடப் பார்த்திருக்கிறோமே? மந்திரவாதி ரவிதாஸன் அல்லவா இவன்? ஆந்தை கத் துவதுபோல் கத்திவிட்டுப் பழுவூர் ராணியைப் பார்க்க வந்தான் அல்லவா இவன்? சரி, சரி இளவரசர் கப்பலில் இருப்பது தெரிந்துதான் இவர்கள் அதில் ஏறிக்கொள்ளப் போகிறார்கள்! ஆகா! இளவரசர் போகும் வழியில் இது ஓர் அபாயமா? நாம் அவசரமாய் ஓடி வந்து இந்தப் படகைப் பிடித்து ஏறியது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று?...

படகு போய்க்கொண்டிருந்தது; மரக்கலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. படகில் இருந்தவர்கள் மௌனம் சாதித்தார்கள். வந்தியத்தேவனால் மௌனத்தைப் பொறுக்க முடியவில்லை. பேச்சுக் கொடுத்துப் பார்க்க விரும்பினான்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"தெரியவில்லையா?அதோ நிற்கும் கப்பலுக்குப் போகிறோம்!" என்றான் மந்திரவாதி. பாதி மூடியிருந்த வாயினால் அவன் பேசிய குரல் பேயின் குரலைப் போலிருந்தது.

"கப்பல் எங்கே போகிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அது கப்பலுக்குப் போனபிறகு தெரியவேண்டும்" என்றான் ரவிதாஸன். மறுபடியும் படகில் மௌனம் குடிகொண்டது வௌியில் கடலின் ஓங்கார நாதம் சூழ்ந்தது.

இப்போது மந்திரவாதி ரவிதாஸன் மௌனத்தைக் கலைத்தான். "நீ எங்கே அப்பா, போகிறாய்?" என்று கேட்டான்.

"நானும் கப்பலுக்குத்தான் போகிறேன்" என்றான் வந்தியத்தேவன்.
"கப்பலுக்குப்போய் பிறகு எங்கே போவாய்?"

"அது கப்பலில் ஏறிய பிறகுதான் தெரியவேண்டும்!" என்று பாடத்தைத் திருப்பிப் படித்தான் வந்தியத்தேவன்.

படகு கப்பல் அருகில் சென்றது. மேலேயிருந்து ஓர் ஏணி கீழே இறங்கியது. அதில் ஒவ்வொருவராக ஏறிச் சென்றார்கள். ஏணி மேலே போவதற்குள் வந்தியத்தேவன் அதில் தொத்திக் கொண்டான். கப்பலின் மேல் தளத்தில் ஏதோ பேச்சு நடந்தது. அவனுக்குப் புரியாத பாஷையாகத் தொனித்தது. வந்தியத்தேவன் இன்னும் துரிதமாக ஏணியின் மீது ஏறிக் கப்பலின் தளத்தில் ுதித்தான். குதித்த உடனே, "எங்கே இளவரசர்?" என்று இரைந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சுற்றிலும் அவன் பார்த்த காட்சி அவனுடைய இரும்பு நெஞ்சத்தையும் சிறிது கலக்கிவிட்டது. அவனைச் சுற்றிலும் பயங்கர ரூபமுள்ள அரபு நாட்டு மனிதர்கள் நின்றார்கள். ஒவ்வொருவனும் ஒரு ராட்சதனைப் போல் தோன்றினான். எல்லாரும் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவனுடைய கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

"ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம்" என்ற உணர்ச்சி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதித்தது. இது சோழ நாட்டுக் கப்பல் அல்ல; இருக்க முடியாது. இதில் உள்ளவர்கள் தமிழ் மாலுமிகள் அல்ல. பெரிய பெரிய குதிரைகளை விற்பதற்காகக் கொண்டு வரும் அரபு நாட்டு மனிதர்கள்.

இந்தக் கப்பலில் இளவரசர் இருப்பது இயலாத காரியம். அவசரப்பட்டு வந்து ஏறிவிட்டோம். தப்பிச் செல்வது எப்படி? கடல் ஓரத்தில் நின்று குனிந்து பார்த்தான். படகு போய்க் கொண்டிருந்தது. "படகுக்காரா! நிறுத்து!" என்று கூவிக் கொண்டு கடலில் குதிக்கப் போனான். அச்சமயம் ஒரு வஜ்ரத்தை நிகர்த்த கை பின்னாலிருந்து அவனுடைய குரல் வளையைப் பிடித்து ஓர் இழுப்பு; ஒரு தள்ளு. வந்தியத்தேவன் கப்பல் தளத்தில் மத்தியில் வந்து விழுந்தான். அவனுக்கு உக்கிர ஆவேசம் வந்துவிட்டது. குதித்து எழுந்து அவனைத் தள்ளியவனது முகவாய்க் கட்டையில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். அந்த ஆறு அடி உயரமுள்ள அராபியன் தனக்குப் பின்னால் நின்றவனையும் தள்ளிக்கொண்டு படார் என்று விழுந்தான்.

வந்தியத்தேவனுக்குப் பின்னால் பயங்கரமான உறுமல் சத்தம் கேட்டது. நல்ல சமயத்தில் திரும்பிப் பார்த்தான். இல்லாவிட்டால் அவன் முதுகில் கத்தி பாய்ந்திருக்கும். திரும்பிய வேகத்தோடு கத்தியைத் தட்டி விட்டான். அது 'டணார்' என்ற சத்ததுடன் கப்பலில ் விழுந்து, அங்கிருந்து தெறித்துப் பாய்ந்து, கடலில் விழுந்து மறைந்தது.

மறுகணம் வந்தியத்தேவன் நாலாபுறத்திலிருந்தும் பலர் வந்து பிடித்தார்கள். பிடித்தவர்கள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.அவர்களுடைய தலைவன் அதிகாரக் குரலில் கட்டளையிட்டான். உடனே மணிக்கயிறு கொண்டு வந்து வந்தியத்தேவனுடைய கால்களையும் கைகளையும் கட்டினார்கள். கைகளை உடம்போடு சேர்த்துப் பிணைத்தார்கள் பின்னர் நாலு பேராக அவனைத் தூக்கிக் கொண்டு கீழ்த் தளத்துக்குப் போனார்கள். போகும் போதெல்லாம் உதைத்துத் திமிறி விடுவித்துக் கொள்ள வந்தியத்தேவன் முயன்றான். அந்த முயற்சி பலிக்கவில்லை. கப்பலின் அடித்தளத்தில் கொண்டு போய் அங்கே அடுக்கியிருந்த மரக்கட்டைகளின் மீது அவனைப் படார் என்று போட்டார்கள். அந்தக் கட்டைகளில் ஒன்றோடு சேர்த்துக் கட்டிவிட்டு மேலே சென்றார்கள்.

கப்பல் அப்படியும் இப்படியும் அசைந்து ஆடிற்று. கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கி விட்டது என்று வந்தியத்தேவன் அறிந்தான். கப்பல் ஆடியபோது மரக் கட்டைகள் அவன்மீது உருண்டு விழுந்தன. அவற்றை விலக்கிக் கொள்ள முடியாமல் அவனுடைய கைகள் கட்டப்பட்டிருந்தன.

"இந்த முறை மட்டும் தப்பிப் பிழைத்தால் இனி அவசரப்பட்டு எந்தக் காரியமும் செய்வதில்லை. ஆழ்வார்க்கடியானைப் போல் ஆழ்ந்து யோசித்த பிறகே செய்ய வேண்டும்" என்று வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான். அச்சமயம் பேய் சிரிப்பது போன்ற சிரிப்புச் சத்தம் அருகில் கேட்டது. வந்தியத்தேவன் மிகச் சிரமத்துடன் சற்று முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அங்கே மந்திரவாதி ரவிதாஸன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இதுவரை மந்திர வாதியின் முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டிருந்த துணி இப்போது நீக்கப்பட்டிருந்தது.

"அப்பனே! அந் ச் சோழர் குலத்துப் புலியைத் தேடிக் கொண்டு வந்தேன். புலி அகப்படவில்லை. ஆனால் வாணர் குலத்து நரியாகிய நீ அகப்பட்டுக் கொண்டாய்! அந்த வரைக்கும் அதிர்ஷ்டந்தான்! என்றான்.

மேற்கூறிய நிகழ்ச்சிகளில் வந்தியதேவன் படகில் ஏறிச் சென்ற வரையில்தான் இருந்தவர்கள் பார்த்தார்கள். மரக்கலத்திற்குள்ளே நடந்தது. இன்னவென்பது படகோட்டிச் சென்றவனுக்கே தெரியாது.அவன் உடனே திரும்பிக் கரைக்கு வந்து சேர்ந்தான்.

சேநாதிபதி முதலியவர்கள் படகில் ஏறிக் கொண்டார்கள். இனி அந்த மரக்கலத்தைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க முடியாது என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ஆகையால் தொண்டைமானாற்றின் சங்கமத்துக்குப் போய்ப் பார்க்க அவர்கள் எண்ணினார்கள். இன்னொரு கப்பல் அங்கே இருக்கலாம். அதில் ஒரு வேளை இன்னும் இளவரசர் இருக்கலாம். எப்படியும் ஏதாவது செய்தியாவது கிடைக்கும் அல்லவா?

படகுக்காரனைக் கேட்டுப் பார்த்தார்கள். அவனிடமிருந்து ஒரு விவரமும் தெரியவில்லை. "படகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலையில் யாரோ வந்து தட்டி எழுப்பினார்கள். கப்பலில் கொண்டு விட்டால் நிறையப் பணம் தருவதாகச் சொன்னார்கள் நீங்கள் விழித்தெழுவதற்குள் திரும்பி வந்து விடலாம் என்று போனேன். வேறொன்றும் தெரியாது" என்றான்.

மேலேகண்ட வரலாறுகளில் ஆழ்வார்க்கடியான் தான் அறிந்த வரையில் ஒன்றுவிடாமல் இளவரசரிடம் கூறினான். பின்னர், "இளவரசே! வந்தியத்தேவன் கடலில் குதித்துப் பாய்ந்து சென்றபோது அவனைத் தொடர்ந்து நானும் போகலாமா என்று முதலில் நினைத்தேன். ஆனால் எனக்குக் கடல் என்றால் எப்போதுமே சிறிது தயக்கம் உண்டு; நன்றாக எனக்கு நீந்தத் தெரியாது. அத்துடன், அதோ போகிறதே அந்தக் கப்பலைப் பற்றியும் எனக்குச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அதில் தாங்கள் றிப்போவது சாத்தியமில்லை என்று தோன்றியது. இன்னும், அந்தக் கப்பல் சோழநாட்டுக் கப்பலாயிருக்க முடியுமா என்ற ஐயமும் உண்டாயிற்று. இதைப்பற்றிச் சேநாதிபதியிடமும் கூறினேன். இருவரும் இங்கே வந்து பார்த்து முடிவு செய்வது என்று தீர்மானித்துக் கொண்டு வந்தோம். தங்களைப் பார்த்த பிறகுதான் எங்கள் மனம் நிம்மதி அடைந்தது"! என்றான்.

ஆழ்வார்க்கடியான் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்து அருள்மொழிவர்மர், "ஆனால் என் மனத்தில் நிம்மதி இல்லை, திருமலை! வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் போகிறான். அவனைப் பழுவேட்டரையர்கள் பிடித்துப் பாதாளச் சிறையில் தள்ளி விடுவார்கள்!" என்றார்.

அப்போது சேநாதிபதி, "இளவரசே! அந்தக் கொடியவர்களின் அதிகாரத்தை எதற்காகப் பொறுத்திருக்க வேண்டும்? தாங்கள் மட்டும் சம்மதம் கொடுங்கள். அடுத்த பௌர்ணமிக்குள் பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைத் தீர்த்துக் கட்டி அந்தப் பாதாளச் சிறையில் அவர்களையே அடைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார்.
"ஐயா! என் தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக நான் அணுவளவும் நடந்து கொள்வேன் என்று தாங்கள் கனவிலும் எதிர்பார்க்க வேண்டாம்!" என்றார் இளவரசர்.

இந்தச் சமயத்தில் குதிரை ஒன்று வேகமாக வரும் சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுத் தூரத்திலேயே அந்தக் குதிரை நின்றது. முகக்கயிறு, உட்கார ஆசனம் ஒன்றுமில்லாமல் அந்தக் குதிரை மேல் ஏறி வந்தவள் ஒரு ஸ்திரீ என்று அறிந்ததும் அனைவரும் வியப்படைந்தார்கள்.


பக்க தலைப்பு



நாற்பத்தெட்டாம் அத்தியாயம்
'கலபதி'யின் மரணம்




குதிரை மீது வந்த பெண்மணி யார் என்பது இளவரசருக்கு உடனே தெரிந்து போயிற்று. குதிரை நின்ற இடத்தை நோக்கி அவர் விரைந்து சென்றார். அவ ுடன் பூங்குழலியும் போனாள். மற்றவர்களும் சற்றுதூரத்தில் தயங்கித் தயங்கிப் போனார்கள்.

ஊமைராணி அதற்குள் குதிரையிலிருந்து இறங்கிவிட்டாள். பின்னால் கூட்டமாக வந்தவர்களைச் சற்றுக் கவலையுடன் பார்த்து விட்டுப் பூங்குழலியிடம் சமிக்ஞை பாஷையில் ஏதோ சொன்னாள். பெரியம்மா காட்டில் ஏதோ அதிசயத்தைப் பார்த்திருக்கிறாள். அந்த இடத்துக்கு நம்மை வரும்படி அழைக்கிறாள்!" என்றாள்.

இளவரசர் அக்கணமே போவதென்று தீர்மானித்துவிட்டார். மற்றவர்களும் தம்முடன் வரலாமா என்று கேட்கச் சொன்னார்.ஊமை ராணி சிறிது யோசித்து விட்டு, சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள்.

போகும்போது எல்லோரும் அவள் ஏறி வந்த குதிரையைப் பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். அது அரபு நாட்டிலிருந்து வந்த அற்புதமான உயர் ஜாதிக் குதிரை இந்த மூதாட்டிக்கு எப்படிக் கிடைத்தது? சமீப காலத்தில் இந்தப் பிரதேசத்தில் சைன்யம் எதுவும் வந்து இறங்கவில்லை; போர் ஒன்றும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது இக்குதிரை இந்தப் பெண்மணிக்கு எப்படிக் கிடைத்திருக்க முடியும்?

தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தின் அருகில் சோழ நாட்டுக்கப்பல் ஒன்று கரைதட்டிப் புதைந்திருந்ததைப் பார்த்தோம்.அங்கிருந்து சிறிது தூரம் வரையில் இலங்கைத் தீவின் கரை தென்கிழக்குத் திசையாக வளைந்து நௌிந்து சென்றது. அடிக்கடி கடல் நீர் பூமிக்குள் சிறிய நீர் நிலைகளையும் பெரிய நீர்நிலைகளையும் உண்டாக்கியிருந்தது. இத்தகைய வளைகுடா ஒன்றுக் குள்ளிருந்து தான் வந்தியத்தேவன் முதலியவர்கள் அன்று காலையில் பார்த்த கப்பல் வௌியே வந்து கடலில் சென்றது.

இப்போது ஊமை ராணி தென்கிழக்குத் திசையிலே அவர்களை அழைத்துக்கொண்டு சென்றாள். அடர்ந்த காட்டுக்குள்ளே புகுந்து சென்றாள். போகப் போக இளவரசரின் ஆ ்வம் அதிகமாயிற்று ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் நம்மை இம்மூதாட்டி அழைத்துப் போகமாட்டாள் என்று எண்ணினார். திடீரென்று அச்சம்பவம் அவர்களுடைய கண் முன்னால் வந்து நின்றது!

காட்டில் சிறிது இடைவௌி ஏற்பட்டது நீ நிலை ஒன்று தெரிந்தது. அதன் கரையில் மனிதர்கள் சிலர் இறந்து கிடந்தார்கள். பிணங்களின் நாற்றத்தோடு காய்ந்துபோன மனித இரத்தத்தின் நாற்றமும் கலந்து வந்தது. எத்தனையோ போர்க்களங்களின் அநுபவம் பெற்ற அந்த மனிதர்களுக்கு உயிரில்லா மனித உடல்களும் காய்ந்த இரத்தமும் புதிய அநுபவங்கள் அல்ல. எனினும், ஏதோ அதிசயமான, மர்ம பயங்கரமான காரியம் இங்கே நடந்திருக்கிறது என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் ஆர்வத்தோடு அருவருப்பையும் உண்டாக்கியது.

அருகிலே சென்று பார்த்தால் உயிரற்றுக் கிடந்த உடல்கள் எல்லாம் தமிழ்நாட்டு மாலுமிகள் உடல்கள் என்று தெரிய வந்தது. "சீக்கிரம்! சீக்கிரம்; யாருக்காவது இன்னும் உயிர் இருக்கிறதா என்று பாருங்கள்!" என்று இளவரசர் கூவினார். அவருடன் வந்தவர்கள் ஒவ்வொரு உடலுக்கு அருகிலும் சென்று பரிசோதிக்கத் தொடங்கினார்கள்.

இளவரசரை ஊமை ராணி மறுபடியும் கையினால் சமிக்ஞை செய்து அழைத்துப் போனாள். உடல்கள் கிடந்த இடத்துக்குச் சிறிது தூரத்துக்கப்பால் இருந்த மரத்தடிக்கு அழைத்துப் போனாள். அந்த மரத்தடியில் ஒரு கோர ஸ்வரூபம் சாய்ந்து படுத்திருந்தது. படுத்திருந்தவன் மனிதன் தான். ஆனால் அதை நம்புவது கஷ்டமாயிருந்தது. உடம்பெல்லாம் காயங்கள். மண்டையில் பட்டிருந்த காயங்களிலிருந்து, இரத்தம் முகத்தில் வழிந்து மிகப் பயங்கரமாகச் செய்திருந்தது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்மனிதனுடைய முகத்தில் இளவரசரைக் கண்டதும் மலர்ச்சியி ் சிறிய அறிகுறி தோன்றியது. அவன் வாய் திறந்து ஏதோ பேச முயன்றான்.ஆனால் அவன் வாயிலும் இரத்தமாயிருந்தபடியால் அவனுடைய முகத்தின் கோரம் அதிகம் ஆயிற்று.

இளவரசர் பரபரப்புடன் அவன் அருகில் போய் உட்கார்ந்தார். "சீக்கிரம் தண்ணீர் கொண்டு வாருங்கள்" என்று கத்தினார்.

அம்மனிதன், "வேண்டாம், இளவரசே! சற்று முன்னால் தான் இந்தப் பெண்மணி தண்ணீர் கொடுத்தாள். அவள் அச்சமயம் வராதிருந்தால் இதற்குள் என் உயிர் பிரிந்திருக்கும். ஐயா! தங்களுக்குத் துரோகம் செய்ய வந்ததின் பலனை இங்கேயே அநுபவித்து விட்டேன்.மறு உலகில் இதற்காக மறுபடியும் கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார்" என்றான்.

இளவரசர் அவன் குரலைக் கேட்டதும் முகத்தை உற்றுப் பார்த்தார். "ஆ! கலபதி!(அந்நாளில் சேனைத் தலைவனைத் 'தளபதி' என்று அழைத்ததுபோல் மரக்கலத் தலைவனைக் 'கலபதி' என்று அழைத்தார்கள்.)இது என்ன பேச்சு! இதெல்லாம் எப்படி நடந்தது? எனக்கு நீர் என்ன துரோகம் செய்வதற்காக வந்தீர்? அதை நான் நம்பவே முடியாது!" என்றார்.

"ஐயா! தங்கள் உத்தம குணத்தினால் அப்படிச் சொல்கிறீர்கள். பழுவேட்டரையர்களின் சொற்படி தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போக வந்தேன். இதோ கட்டளை!" என்று சொல்லி, மடியிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துக் கொடுத்தான், சாகுந்தறுவாயில் இருந்த கலபதி. ஓலையைக் கண்ணோட்டமாக இளவரசர் ஒரு வினாடியில் பார்வையிட்டார்.

"இதில் உமது துரோகம் என்ன? சக்கரவர்த்தியின் கட்டளையைத்தானே நிறைவேற்ற வந்தீர்? அதையறிந்து நானே விரைந்து ஓடி வந்தேன். அதற்குள் இந்த விபரீதங்கள் எப்படி நேர்ந்தன? சீக்கிரம் சொல்லுங்கள்" என்றார்.

"சீக்கிரம் சொல்லத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அப்புறம் சொல்லவே முடியாது!" என்றான் கலபதி.

பிறகு அவன் அடிக்கடி தட்டுத்தடுமாறிப் பின்வரும் வரலாற்றைக் கூறி னான்.

சக்கரவர்த்தியின் கட்டளையைப் பெற்றுக்கொண்டு கலபதி இரண்டு கப்பல்களுடன் நாகப்பட்டினத்திலிருந்து கிளம்பினான். அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லைதான். ஆயினும் சக்கரவர்த்தியின் கட்டளையை மீற முடியாமல் புறப்பட்டான். புறப்படும்போது பழுவேட்டரையர்கள் அவனிடம் கண்டிப்பாகச் சில கட்டளைகளை இட்டிருந்தார்கள். அதாவது இலங்கையை அடைந்ததும் தனியான இடத்தில் கப்பல்களை நிறுத்திக்கொண்டு, இளவரசர் எங்கே இருக்கிறார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவரை நேரில் சந்தித்து, சக்கரவர்த்தியின் ஓலையைக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்னால் சேநாதிபதி கொடும்பாளூர் வேளாருக்கு இந்தச் செய்தி தெரியக் கூடாது. இளவரசரிடம் கட்டளையைக் கொடுத்த பிறகு அவராக வந்தால் சரி, இல்லாவிட்டால் பலவந்தமாகச் சிறைப்படுத்தியாவது கொண்டு வரவேண்டும்... இவ்விதம் சொல்லித் தங்கள் அந்தரங்க ஆட்கள் சிலரையும் பழுவேட்டரையர்கள் கலபதியுடன் சேர்த்து அனுப்பினார்கள்.

கலபதி மனத்தில் பெரிய பாரத்துடனேயே புறப்பட்டு வந்தான். அவன் கீழிருந்த கப்பல் மாலுமிகளில் பலருக்கு எதற்காக இலங்கை போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. இதனால் அவனுடைய மனவேதனை அதிகமாயிருந்தது. அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். கப்பல்களைத் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தில் கொண்டு போய் நிறுத்திய பிறகு கலபதி இன்னும் சில மாலுமிகளோடு காங்கேசன் துறைக்குப் போனான். இளவரசர் அப்போது எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வருவதற்காகத்தான். தென்னிலங்கையின் உட்பகுதியில் இளவரசர் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாகக் காங்கேசன் துறையில் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.

கலபதி திரும்பி வருவதற்குள்ளே மாலுமிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. பழுவேட்டரையர் ளின் அந்தரங்க ஆட்கள் சிலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் மூலம் பிரஸ்தாபம் ஆகிவிட்டது. கலபதி திரும்பி வந்ததும் மாலுமிகள் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு கலபதியிடம் கேட்டார்கள். "பொன்னியின் செல்வரைச் சிறைப்படுத்திக் கொண்டு போகவா நாம் வந்திருக்கிறோம்?" என்று வினவினார்கள். கலபதி உண்மையைக் கூறினான். "நாம் இராஜாங்க சேவையில் இருப்பவர்கள். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியவர்கள்" என்றான்.

"எங்களால் அது முடியாது. இது சக்கரவர்த்தியின் கட்டளையும் அல்ல! பழுவேட்டரையர்களின் கட்டளை" என்றார்கள்.

"பின்னே நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்?" என்று கலபதி கேட்டான்.

"மாதோட்டம் சென்று இளவரசருடன் சேர்ந்து கொள்ளப்போகிறோம்."

"மாதோட்டத்தில் இளவரசர் இல்லையே!"

"இல்லாவிடில் சேநாதிபதி கொடும்பாளூர் வேளாரிடம் சரண் அடைவோம்."

கலபதி அவர்களுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்ததும் பயனில்லை. கலபதியுடன் நிற்பதற்குப் பழுவேட்டரையர்களின் அந்தரங்க ஆட்கள் உள்படச் சுமார் பத்துப் பேர்தான் சம்மதித்தார்கள்.பத்துப்பேரை வைத்துக்கொண்டு இருநூறு பேரை என்ன செய்ய முடியும்? "சரி; அப்படியானால் இப்போதே போய்த் தொலையுங்கள்! பின்னால் வருகிறதையும் அநுபவித்துக் கொள்ளுங்கள்! என்னால் இயன்றவரையில் என் கடமையை நான் செய்வேன்!" என்றான் கலபதி.

மாலுமிகளில் பலர் இரண்டு கப்பல்களில் ஒன்றைச் செலுத்திக்கொண்டு மாதோட்டம் போகலாம் என்று உத்தேசித்தார்கள். மற்றும் சிலர் அதை ஆட்சேபித்தார்கள். ஆகவே கப்பலிருந்து இறங்கித் தரைமார்க்கமாகவே புறப்பட்டார்கள். புறப்படும் அவசரத்தில் அவர்கள் ஏறியிருந்த கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சவில்லை. கப்பல் நகர்ந்து நகர்ந்து சென்று கரைதட்டி உடைந்து மண்ணில் புதைந்துவிட்டது.

இதற்குப் பிற கு கலபதி மற்றொரு கப்பலுடன் அங்கேயிருக்க விரும்பவில்லை. காங்கேசன் துறையில் அவன் ஒரு செய்தி கேள்விப்பட்டிருந்தான். சில நாளைக்கு முன்பு முல்லைத் தீவுக்குப் பக்கத்தில் அரபு நாட்டுக் கப்பல் ஒன்று உடைந்து முழுகிவிட்டதென்றும், அதிலிருந்து தப்பிப் பிழைத்த மூர்க்க அராபியர்கள் சிலர் அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள். எனவே, கரைதட்டிப் புதைந்த கப்பலுக்குப் பக்கத்தில் இன்னொரு கப்பலையும் நிறுத்தி வைக்க அவன் விரும்பவில்லை. நன்றாயிருந்த கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு போனான். கடல் அடுத்தபடியாகப் பூமிக்குள் சென்றிருந்த குடாவில் கொண்டு போய் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினான்.

பின்னர் கலபதி தன்னுடன் இருந்த மாலுமிகளுடன் கரையில் இறங்கி மேலே செய்ய வேண்டியதைப் பற்றி அவர்களிடம் கலந்து ஆலோசித்தான். அவன் மட்டும் தனியாகச் சென்று இளவரசரிடம் கட்டளையைச் சேர்ப்பிப்பதாகவும் அதுவரையில் மற்றவர்கள் கப்பலைப் பத்திரமாகப் பாதுகாத்து வரவேண்டும் என்றும் சொன்னான். மாலுமிகள் தங்கள் கவலைகளைக் கலபதியிடம் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் கலபதி தைரியம் கூறிக் கொண்டிருக்கும்போதே மயிர்க்கூச்சு எடுக்கும்படியான பயங்கரக் கூச்சல்களைப் போட்டுக் கொண்டு சில மனிதர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அவர்கள் அரபு நாட்டார் என்பது தெரிந்தது. தமிழ்மாலுமிகள் அச்சமயம் இந்தத் தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை. சண்டைக்கு ஆயத்தமாகவும் இருக்கவில்லை. கையில் கத்திகளும் வைத்திருக்கவில்லை. எனினும் தீரத்துடன் போராடினார்கள். போராடி எல்லாரும் உயிரை விட்டார்கள்.

"இளவரசே! நான் ஒருவன் மட்டும் மரண காயங்களுடன் ஓடி ஒளிந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன் - நடந்தது என்னவென் தை யாருக்காவது சொல்லவேண்டும் என்பதற்காகவே இதுவரையில் உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். இளவரசே! தங்களையே நேரில் பார்த்துச் சொல்லும் படியான பாக்கியம் எனக்குக் கிட்டி விட்டது. தங்களுக்கு நான் துரோகம் செய்ய எண்ணியதற்குப் பலனையும் அநுபவித்து விட்டேன். பொன்னியின் செல்வரே! என்னை மன்னித்து விடுங்கள்!" என்றான் கலபதி.

"கடமையை ஆற்றிய கலபதியே! உம்மை எதற்காக நான் மன்னிக்க வேண்டும்? போர்க்களத்தில் உயிரை விடும் வீரர்கள் அடையும் வீர சொர்க்கம் ஒன்று இருந்தால் அதற்கு நீரும் அவசியம் போய்ச் சேருவீர்! சந்தேகம் இல்லை!" என்று சொல்லி இளவரசர் அக்கலபதியின் தீயெனக் கொதித்த நெற்றியைத் தடவிக் கொடுத்தார். கலபதியின் கண்களிலிருந்து அப்போது பெருகிய கண்ணீர் அவன் முகத்தில் வழிந்திருந்த இரத்தத்தோடு கலந்தது. மிக்க சிரமத்துடன் அவன் தன் கைகளைத் தூக்கி இளவரசரின் கரத்தைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். இளவரசரின் கரம் கலபதியின் கண்ணீரால் நனைந்தது. அவருடைய கண்களிலும் கண்ணீர் துளித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கலபதியின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.


பக்க தலைப்பு



நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்
கப்பல் வேட்டை




கலபதியின் உடலையும் மாண்டு போன மற்ற மாலுமிகளின் உடல்களையும் சேர்த்து உலர்ந்த மரக்கட்டைகளை அடுக்கித் தகனம் செய்தார்கள். தீ மூட்டி எரியத் தொடங்கிய போது இளவரசர் முகத்தில் கண்ணீர் பெருகிக் கொண்டிருப்பதைச் சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி கவனித்தார்."ஐயா! இந்தப் பாதகர்களின் சாவுக்காகவா கண்ணீர் விடுகிறீர்கள்? தங்களைச் சிறைப்படுத்த வந்த துரோகிகளுக்குக் கடவுளே தக்க தண்டனை அளித்து விட்டார். தாங்கள் ஏன் வருந்தவேண்டும்?" என்றார்.

"சேநாதிபதி! இவர்கள் துரோகிகள் ல்ல; இவர்களுடைய மரணத்துக்காகவும் நான் வருத்தப்படவில்லை. சோழ நாட்டுக்கு இவ்வளவு பொல்லாத காலம் வந்து விட்டதே என்று வருந்துகிறேன்" என்றார்.

"பொல்லாத காலம் பழுவேட்டரையர்களுடனேயே வந்து விட்டது. இப்போது புதிதாக ஒன்றும் வரவில்லையே!"

"புதிதாகத்தான் வந்திருக்கிறது. கலபதியின் கட்டளையைக் கப்பல் மாலுமிகள் மீறுவது என்று வந்து விட்டால் அதைக் காட்டிலும் ராஜ்யத்துக்கும் கேடு வேறு என்ன இருக்க முடியும்? சேநாதிபதி! இது ஒரு சிறிய அறிகுறிதான்! இதைப் போலவே சோழ ராஜ்யம் எங்கும் பிளவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்! அப்படி ஏற்பட்டால் விஜயாலய சோழர் அஸ்திவாரமிட்ட இந்த மகாராஜ்யம் சின்னா பின்னமாகிவிடுமே! இந்தக் கேடு என்னாலேயா நேரவேண்டும்? மகாபாரதக் கதை கேட்டிருக்கிறேன். துரியோதனன் பிறந்தபோது நரிகளும் ஓநாய்களும் பயங்கரமாக ஊளையிட்டன என்று பாரதம் சொல்லுகிறது. நான் பிறந்தபோதும் அப்படி நரிகளும், நாய்களும் பயங்கரமாக ஊளையிட்டிருக்க வேண்டும்!" என்றார் இளவரசர்.

"ஐயா! தாங்கள் இந்த உலகில் ஜனித்தபோது என்னென்ன நல்ல சகுனங்கள் ஏற்படலாமோ அவ்வளவு ஏற்பட்டன. தங்கள் ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள்..."

"போதும், சேநாதிபதி! போதும்! இந்தப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துவிட்டது. என் ஜாதக விசேஷம் இருக்கட்டும். நாம் பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. சேநாதிபதி! தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கப்பல்களிலிருந்து கலபதியின் கட்டளையை மீறிச் சென்ற மாலுமிகள் தங்களிடம் வந்தால் தாங்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. உடனே சிறைப்படுத்தி அவர்களைத் தஞ்சைக்கு அனுப்ப வேண்டும்."

"இளவரசே! கலபதி கூறியதை மட்டுமே நாம் கேட்டோம். மாலுமிகளின் கட்சி என்னவென்று நாம் கேட்கவில்லை.ஒரு பக்கத்துப் பேச்சை மட்டும் கே ்டு எப்படித் தீர்மானிக்க முடியும்? அது நீதிக்கும் தர்மத்துக்கும் உகந்ததா? தாங்கள் என்னுடன் வாருங்கள். அந்த மாலுமிகள் வந்ததும் அவர்கள் சொல்வதையும் கேட்டு முடிவு செய்யுங்கள்..."

"ஐயா! அது சாத்தியமில்லை. தங்கள் உசிதம் போல் செய்யுங்கள். நான் இனி ஒரு கணமும் இங்கே தாமதிக்க முடியாது. உடனே புறப்பட வேண்டும். படகுக்காரன் எங்கே?" என்றுகேட்டார்.

"எங்கே புறப்பட வேண்டும், இளவரசே! படகுக்காரன் எதற்கு?"

"இதைப் பற்றித் தாங்கள் கேட்கவும் வேண்டுமா? வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பலுக்குத்தான் நானும் போக வேண்டும். அந்த வீராதி வீரன் எனக்காகவல்லவோ அராபியர் வசப்பட்ட கப்பலில் ஏறிப் பயங்கரமான அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறான்? அவனை நான் கை விட்டு விடக்கூடுமா? ஏற்கெனவே நான் செய்துள்ள பாவங்கள் போதாதென்று சிநேகத்துரோகம் வேறு செய்ய வேண்டுமா...?

"ஐயா! தாங்கள் ஒரு பாவமும் நான் அறிந்து செய்ததில்லை. தாங்கள் சொன்னாலும் உலகம் ஒப்புக் கொள்ளாது. வந்தியத்தேவன் வெறும் முரடன். முன் யோசனை சிறிதும் இல்லாதவன். அவனாக வருவித்துக் கொண்ட அபாயத்துக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? இதில் சிநேகத்துரோகம் என்ன? இளவரசே! எங்கிருந்தோ தெறிகெட்டு வந்த ஒரு வாலிபனைத் தங்கள் சிநேகிதன் என்று கொண்டாடுவதே எனக்குப் பிடிக்கவில்லை. சம நிலையில் உள்ளவர்கள் அல்லவோ சிநேகிதர்கள் ஆக முடியும்?"

"சேநாதிபதி! வீண் பேச்சில் காலங்கடத்த நான் விரும்பவில்லை. அவன் என் சிநேகிதன் இல்லாவிட்டாலும் நன்றி என்பதாக ஒன்று இருக்கிறதல்லவா? வள்ளுவர் முதலாவது பெரியோர்கள் அனைவரும் சொல்லியிருக்கிறார்களே? 'சோழ குலத்தார் நன்றி மறவாதவர்கள்' என்ற புகழ் என்னால் கெட்டுப் போக விடமாட்டேன். இந்த விநாடியே புறப்பட்டுச் சென்று அந்தக் கப்பலைப் தேடிப்பி ிப்பேன்..."

"எப்படிப் புறப்படுவீர்கள், எங்கே தேடுவீர்கள் இளவரசே!"

"நீங்கள் வந்த படகில் ஏறிக்கொண்டு புறப்படுவேன்..."

"முயலை வைத்துக் கொண்டு புலி வேட்டையாட முடியுமா? ஆழ்கடலில் செல்லும் மரக்கலத்தை இச்சிறிய படகில் ஏறித் துரத்திப் பிடிக்க முடியுமா? பிடித்த பிறகுதான் என்ன செய்வீர்கள்?"

"படகில் ஏறிப்போவேன். படகு உடைந்தால் மரக்கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டு போவேன். வந்தியத்தேவன் ஏற்றிச் செல்லும் கப்பல் ஏழு கடல்களுக்கு அப்பால் சென்றாலும் அதைத் துரத்திக் கொண்டு போய்ப் பிடிப்பேன். பிடித்த பிறகு என் நண்பனைக் காப்பாற்ற முடியாவிட்டால் நானும் அவனோடு உயிரையாவது விடுவேன்... படகுக்காரன் எங்கே?"

இவ்விதம் சொல்லிக்கொண்டே இளவரசர் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தார். படகுக்காரனுடன் ஒரு பக்கமாக நின்று பூங்குழலி பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். அருகில் ஊமை மூதாட்டியும் நின்றாள். அவர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்து போனார்.

சமீபத்தில் சென்றதும் பூங்குழலி கண்ணில் நீர் ததும்ப அப்படகுக்காரனுடன் ஆத்திரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் என்று தெரிந்தது.

"ஆகா! இது என்ன? இன்னொரு உட்கலகமா?" என்றார் இளவரசர்.

படகுக்காரன் திடீர் என்று இளவரசர் காலில் விழுந்தான். "இளவரசே! தெரியாமல் பாதகம் செய்துவிட்டேன். பணத்தாசையால் செய்துவிட்டேன். மன்னிக்க வேண்டும்!" என்று கதறினான்.

"இது என்ன?... பூங்குழலி! எல்லாருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறதே? நீயாவது விஷயம் என்னவென்று சொல்லக்கூடாதா?"

"இளவரசே! இத்தனை நேரம் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லவில்லை. இவன் என் தமையன். தங்களைக் கொல்லுவதற்காக வந்த இரண்டு பாவிகளையும் இவன்தான் கோடிக்கரையிலிருந்து படகில் ஏற்றிக் கொண டு வந்தான். அவர்கள் சொற்படியேதான் இவன் இதுவரை இங்கே காத்துக் கொண்டிருந்தான். அவர்களை இன்று காலையில் மறுபடியும் படகில் ஏற்றி நாம் பார்த்த கப்பலில் கொண்டு போய் விட்டானாம்! தங்கள் நண்பரும் அதிலேதான் ஏறியிருக்கிறார்..." என்றாள்.

"பிரபு! என்னை வெட்டிக்கொன்று விடுங்கள்! அவர்கள் அத்தகைய துஷ்டர்கள் என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன். என்னைத் தங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!" என்றான் படகுக்காரன்.

'அப்பனே! இச்சமயம் உன் உயிர் எனக்கு விலை மதிப்பில்லாத பொருள். வா, போகலாம்! அந்தக் கப்பலிலேயே என்னையும் கொண்டுபோய் ஏற்றிவிடு. எனக்கு நீ செய்த கெடுதலுக்கு அதுதான் பரிகாரம். புறப்படு, போகலாம்!" என்றார் இளவரசர்.

கடற்கரையோரத்தில் சென்றதும் கரையில் கிடந்த படகைப் படகோட்டி தண்ணீரில் இழுத்து விட்டான். இளவரசர் கடலைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். "அதோ கப்பல் இன்னும் தெரிகிறது! பிடித்து விடலாம்!" என்றார்.

சேநாதிபதியும் தூரத்தில் தெரிந்த கப்பலைக் கூர்ந்து பார்த்தார். "இளவரசே! பழம் நழுவிப்பாலில் விழுந்தது போலாயிற்று!" என்றார்.

"என்ன என்ன? தங்களிடமிருந்து கூட நல்ல வார்த்தை வருகிறதே!"

"நம் கண்ணுக்குத் தென்படுவது தாங்கள் நினைக்கிறபடி வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பல் அல்ல. பார்த்திபேந்திரனுடைய கப்பல். திரிகோண மலைப்பக்கமிருந்து வருகிறது. நாம் இருக்கும் திசையை நோக்கி வருகிறது. தெரியவில்லையா?"

"ஆம், ஆம்! அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. பார்த்திபேந்திரர் வேறு ஏதோ நோக்கத்துடன் வருகிறார். ஆயினும் நல்ல சமயத்தில் வருகிறார். சிங்கத்தைக் கொண்டே சிறுத்தையை வேட்டையாடலாம்!... ஆனால் அந்தக் கப்பல் இங்கே வரும் வரையில் நான் காத்திருக்கப் போவதில்லை. படகில் சிறிது தூரம் சென்று எதிர் கொள்கிறேன்..."

"இளவரசே! தங்களுடன் படகில் வருவதற்கு..."

"ஐயா நீங்கள் ஒருவரும் என்னுடன் வரவேண்டியதில்லை. இங்கேயே நின்றால் எனக்குப் பெரிய உதவிசெய்ததாக எண்ணிக்கொள்வேன்... திருமலை! உனக்குங் கூடத்தான் சொல்கிறேன். உனக்குத்தான் கடல் என்றால் தயக்கமாயிற்றே?"

"ஆம், ஐயா! நானும் பின் தங்குவதாகவே இருந்தேன். இலங்கைத் தீவில் இருக்கும் வரையில் தங்களைப் பார்த்துக்கொள்ளும்படிதான் எனக்குக் கட்டளை. முதன் மந்திரி மதுரையில் இருக்கிறார். அவரிடம் போய் இங்கு நடந்தவற்றைச் சொல்ல வேண்டும்..."

"அப்படியே செய்! பூங்குழலி! நீயும் இங்கே நிற்க வேண்டியதுதான். உன் தமையனைப் பற்றிக் கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ வந்த படகை எங்கேயோ விட்டிருப்பதாகச் சொன்னாயல்லவா? அதில் ஏறி இனி உன் வழியில் போகலாம். நீ எனக்குச் செய்த உதவியை என்று மறக்கமாட்டேன்... சேச்சே! கண்ணீரைத் துடைத்துக் கொள்! பார்க்கிறவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்?"

இவ்வாறு கூறிவிட்டு இளவரசர் ஊமைராணியின் அருகில் சென்று அவளுடைய பாதத்தைத் தொட்டு வணங்கப் போனார். அந்த மூதாட்டி அவரை தடுத்து நிறுத்தி உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தாள். அடுத்த நிமிஷம் இளவரசர் கடலில் ஆயத்தமாக நின்ற படகில் பாய்ந்து ஏறிக் கொண்டார். கரையில் இருந்தவர்கள் படகைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

இளவரசரும் போகின்ற படகிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லோரையும் பொதுவாகப் பார்த்தாலும் அவருடைய கண்கள் பூங்குழலியின் கண்ணீர் வழிந்த முகத்திலேயே நிலைத்து நின்றது. அதிசயம்! அதிசயம்! தூர விலகிப் போகப் போக, உருவங்கள் சிறியனவாக வேண்டுமல்லவா? கரையில் இருந்த மற்றவர்களின் உருவங்கள் சிறியனவாகித்தான் வந்தன. ஆனால் பூங்குழலியின் ம ுகம் மட்டும் வரவரப் பெரிதாகிக் கொண்டேயிருந்தது. இளவரசரின் அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது.

இளவரசர் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டார். கண்களை வேறுபக்கம் திருப்பினார். முதலாவது நாள் இரவு கண்ட கனவில் ஒரு நிகழ்ச்சி அவர் மனக்கண் முன் வந்தது. இளைய பிராட்டி குந்தவை, "தம்பி! உனக்காக இங்கே வானதி காத்திருக்கிறாள் என்பதை மறந்து விடாதே!" என்று கூறிய மொழிகள் கடல் அலைகளின் இரைச்சலுக்கிடையில் தௌிவாக அவருடைய காதில் கேட்டன.


பக்க தலைப்பு



ஐம்பதாம்அத்தியாயம்
"ஆபத்துதவிகள்"




இளவரசரைப் படகிலே பார்த்ததும் பார்த்திபேந்திரனுக்கு உண்டான ஆச்சரியம் சொல்லத் தரமன்று. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து தரிசனம் தந்ததுமல்லாமல் 'வேண்டிய வரங்களைக்கேள்" என்று சொன்னது போலல்லவா இருக்கிறது? எனினும், இப்படி அவர் தனியாகப் படகில் வருவதன் காரணம் என்று? பழுவேட்டரையர்களின் கப்பல்கள் என்ன ஆயின?... தன்னுடைய கப்பல் இது என்று தெரியாமல், ஒருவேளை இதுதான் அவரைச் சிறைப்படுத்த வந்த கப்பல் என்று எண்ணிக் கொண்டு வருகிறாரோ?

அப்படியெல்லாம் தவறான எண்ணத்துடன் வரவில்லையென்று விரைவிலேயே தெரிந்து போயிற்று. படகிலிருந்து கப்பலில் இளவரசர் ஏறியதும் பார்த்திபேந்திரன் கேட்கும் வரையில் காத்திராமல் நடந்த சம்பவங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டார். "அராபியர் வசப்பட்ட கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். அவனை எப்படியாவது தப்புவித்தாக வேண்டும்" என்றார்.

இளவரசர் கூறிய செய்திகள் பார்த்திபேந்திரனுக்கு மிகக் குதூகலத்தை உண்டாக்கின. "எல்லாம் நன்றாகத்தான் முடிந்திருக்கின்றன. அந்த முரட்டுப் பிள்ளை இவ்வளவு பதட்டமாகக் காரியம் செய்யாதிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். ஆயினும் அவனை அயல்நாட டாரிடம் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது. அந்தக் கப்பல் வெகுதூரம் போயிருக்க முடியாது; எப்படியும் துரத்திப் பிடித்து விடலாம்" என்றான். பிறகு கலபதியைக் கூப்பிட்டு விவரத்தைக் கூறினான்.

"அதைப் பற்றி என்ன கவலை? காற்று இப்படியே அநுகூலமாக அடித்துக் கொண்டிருந்தால் சாயங்காலத்துக்குள் பிடித்துவிடலாம்! நம்மை மீறி அந்தக் கப்பல் எங்கே போய்விடப் போகிறது! கோடிக்கரைசென்று, பிறகு கடற்கரையோரமாகத் தானே போகவேண்டும்?" என்றான் கலபதி.

ஆனால் வாயுபகவானுடைய திருவுள்ளம் வேறுவிதமாயிருந்தது. வரவரக் காற்றின் வேகம் குறைந்துவந்தது. உச்சி வேளை ஆனதும் காற்று அடியோடு நின்றுவிட்டது. கடல், அலை என்பதே இன்றி அமைதியடைந்திருந்தது. சொல்ல முடியாத புழுக்கம் சூழ்ந்தது. சூரியபகவான் வானத்தில் ஜோதிப் பிழம்பாக விளங்கிக் கடல்மீது தீயைப் பொழிந்தார்! கடல் நீர் தொட்டுப் பார்த்தால் சுட்டிராதுதான். ஆயினும் கடலைப் பார்க்கும்போது தண்ணீர்க் கடலாகத் தோன்றவில்லை; நன்றாகக் காய்ச்சிக் கொதித்துப் புகை எழும்பும் எண்ணெய்க் கடல் போலத் தோன்றியது. சூரிய கிரணங்கள் நேரே பிரதிபலித்த இடங்களில் உருக்கிய அக்கினிக் கடலாகவும் காணப்பட்டது.

கப்பல் அசையவில்லை. பாய்மரங்களிலிருந்து எல்லாப் பாய்களும் நன்றாக விரிக்கப்பட்டிருந்தன. பயன் என்ன? அலை ஓசை நின்றது போல் பாய்மரங்கள் சடபடவென்று அடித்துக் கொள்ளும் ஓசையும் நின்றுவிட்டது. பாய்மரங்களும் தூண்களும் குறுக்கு விட்டங்களும் அசையும்போது ஏற்படும் கறமுற சப்தமும் இல்லை. கப்பல் கடலைக் கிழித்துச் செல்லும் ஓசையும் இல்லை. உண்மையில் அந்த நிசப்தம் சகிக்க முடியாத வேதனையை அளித்தது.

அத்துடன் இளவரசரின் உள்ளத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய வேதனையும் மிகுந்தது. "இப்படிக் காற்று நின்று கப்பலும் அடி யோடு நின்று விட்டதே! இப்படியே எத்தனை நேரம் இருக்கும்! காற்று எப்போது மறுபடி வரும்? அந்தக் கப்பல் தப்பித்துக்கொண்டு போய் விட்டாதா?" என்று கவலையுடன் கேட்டார். பார்த்திபேந்திரன் நாவாயின் நாயகனை நோக்கினான்.

அப்போது கலபதி, "அதிக நேரம் இப்படியே காற்று அடியோடு ஓய்ந்து இருக்க முடியாது. சுழிக்காற்று எங்கேயோ உருவாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் அதுவந்து நம்மைத் தாக்கினாலும் தாக்கும்; அல்லது நம்மை ஒதுக்கி விட்டுவிட்டு அப்பால் போனாலும் போய்விடும். நம்மைச் சுழிக்காற்றுத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும் கடல் சீக்கிரத்தில் கொந்தளிக்கப் போவது நிச்சயம். இப்போது இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்கிறதல்லவா? இன்று இரவுக்குள் மலை போன்ற அலைகள் எழுந்து மோதுவதைப் பார்ப்போம், மலைகளையும் பார்ப்போம்; அதல பாதாளத்தையும் பார்ப்போம்!" என்றான்.

"சுழிக்காற்று கப்பலைத் தாக்கினால் அபாயந்தான் அல்லவா?"

"சாதாரண அபாயாமா? கடவுள் காப்பாற்றினால்தான் உண்டு!"

"அப்படியானால் அந்தக் கப்பலை நாம் பிடிப்பது துர்லபம்."

"இளவரசே! கடலும் காற்றும் பட்சபாதம் காட்டுவதில்லை. நமக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைதான் அந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருக்கும். தற்சமயம் அதுவும் அசையாமல்தான் நிற்கும்..."

"ஒருவேளை கரையோரம் சென்றிருந்தால்..." என்று இளவரசர் கேட்டார்.

"கரையோரம் போயிருந்தால் அதில் உள்ளவர்கள் இறங்கிக் கரைசேர்ந்து தப்பிக்கலாம்! ஆனால் கப்பல் போனதுதான்!" என்று சொன்னான் கலபதி.

"எவ்வளவு பெரிய அபாயமாயிருந்தாலும் நமக்கு வேண்டியவர்கள் நம் பக்கத்திலிருந்தால் கவலையில்லை!" என்றார் இளவரசர்.
அவருடைய மனக்கண் முன்னால் வந்தியத்தேவனுடைய குதூகலம் ததும்பும் முகமும், பூங்குழலியின் மிரண்ட பார்வையுடைய முகமும் அடிக்கடி வந்த கொண்டிருந்தன. அவர்கள் இச்சமயம் எங்கே இருப்பார்கள்? என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்?

உண்மையிலேயே அபாயம் சூழ்ந்த நிலையில் நாம் விட்டுவிட்டு வந்த வந்தியத்தேவனிடம் இப்போது நாம் செல்வோம். இளவரசரைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதற்காக வந்த பெரிய மரக்கலத்தின் அடித்தட்டில், தட்டு முட்டுச் சாமான்களும், மரக்கட்டைகளும், மூட்டை முடிச்சுகளும், போட்டிருந்த இருண்ட அறையில், அவன் ஒரு கட்டையுடன் சேர்த்துக் கட்டப்பட்டுக் கிடந்தான். வெகு நேரம் வரையில் அவன் பிரமை பிடித்தவன் போலிருந்தான். அவசர புத்தியினால் இத்தகைய இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டோமே என்ற எண்ணம் அவனை வதைத்தது. இது என்ன கப்பல், யாருடைய கப்பல், இதில் சில முரட்டு அராபியர்களும் மந்திரவாதி ரவிதாஸனும் சேர்ந்திருப்பது எப்படி, இந்தக் கப்பல் எங்கே போகிறது, தன்னை என்னதான் செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தன் வருங்காலத்தைப் பற்றிக் கண்டு வந்த கனவெல்லாம் உண்மையில் கனவுதான் போலும்! இதைவிடப் பெரிய கஷ்டங்களிலிருந்தெல்லாம் தான் தப்பித்திருக்கும்போது, இதிலிருந்து தப்பிக்கவும் ஒருவழி கிடைக்காமலா போகும் என்ற சபலமும் சில சமயம் ஏற்பட்டது. பார்க்கலாம்; உடம்பில் உயிர் இருக்கும் வரையில், அறிவும் ஆலோசனைத் திறனும் இருக்கும் வரையில், அடியோடு நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

இந்த ஆசை தோன்றிய பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான். இருட்டில் முதலில் கண் தெரியவில்லை. வரவரத் தெரியலாயிற்று. அவனுக்குச் சமீபத்திலேயே பலவகை ஆயுதங்கள் குவிந்து கிடப்பதைக் கண்டான். அவனுடைய உடம்பு இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததே தவிர, கைகள் இறுக்கிக் கட்டப்பட்டவில்லை. கைக்கட்டைத் தளர்த்திக்கொண்டு ஒரு கையை ீட்டி அங்கே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுக்கலாம்; உடம்பையும் கால்களையும் பிணைந்திருந்த கயிறுகளையும் அறுத்துவிடலாம். ஆனால் பிறகு என்ன செய்வது? இந்த அறைக் கதவோ சாத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வௌியில் போவது எப்படி? போன பிறகு அவ்வளவு அராபியர்களுடன் மந்திரவாதியுடனும், அவன் தோழனுடனும் சேர்ந்தாற்போல் சண்டை போடமுடியுமா? அப்படிச் சண்டை போட்டு எல்லாரையும் கொன்றுவிட்டாலும் அப்புறம் என்ன பண்ணுவது? கப்பலைத் தன்னந்தனியாகத் தன்னால் செலுத்த முடியுமா? கப்பலைப் பற்றிய சமாசாரம் ஒன்றுமே தனக்குத் தெரியாதே!

ஆம்; மறுபடியும் அவசரப் படக்கூடாது; பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தன்னை உடனே கொல்ல முயலாமல் அவர்கள் கட்டிப் போட்டிருப்பதே கொஞ்சம் நம்பிக்கை இடமளிக்கிறதல்லவா? என்னதான் செய்யப் போகிறார்கள், பார்க்கலாமே?

ஆனால் நேரமாக ஆக வந்தியத்தேவனுடைய பொறுமை பெரிதும் சோதனைக் கிடமாயிற்று.அடுப்புக்குள்போட்டு அவனை வேகவைப்பது போல் அந்த அறை அவ்வளவு புழுக்கமாயிருந்தது. உடம்பில் வியர்வை வியர்த்துக் கொட்டியது. கடற் பிரயாணம் இவ்வளவு வெதுப்புவதாயிருக்கும் என்று அவன் கனவிலும் எண்ணியதில்லை. பூங்குழலியுடன் அன்றிரவு படகில் சென்றதை நினைத்துக் கொண்டான். அப்போது எப்படிக் குளிர் காற்று வீசிற்று? உடம்புக்கு எவ்வளவு இதயமாயிருந்தது. அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம்? சுண்ணாம்புக் காளவாயில் போடுவது என்பார்களே, அதுபோல அல்லவா இருக்கிறது?

திடீரென்று ஏதோ ஒரு மாறுதலை அவன் உணர்ந்தான். ஆம், கப்பலில் ஆட்டம் நின்றுவிட்டது. கப்பல் நகராமல் நின்ற நிலையில் நிற்பதாகத் தோன்றியது. புழுக்கம் இன்னும் அதிகமாயிற்று. தாகம் மிகுந்து நாவும் தொண்டையும் வறண்டன. ஏது? இனி வெகு நேரம் பொறுக்க முடியாது. கத்தியை எட்டி எடுத்து, கட் ுக்களை அறுத்துகொண்டு, புறப்பட்டுப் போய்ப் பார்க்க வேண்டியதுதான். கப்பலில் எங்கேயாவது குடிதண்ணீர் வைத்திராமலா இருப்பார்கள்?

வந்தியத்தேவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு மூலையில் சில தேங்காய்கள் கிடந்தன. ஆகா! வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? அந்தத் தேங்காய்களைக் கொண்டு பசி, தாகம் இரண்டையும் தீர்த்துக் கொள்ளலாமே? கையின் கட்டுக்களை வந்தியத்தேவன் நன்றாய்த் தளர்த்தி விட்டுக்கொண்டான். கத்தியை எட்டி எடுக்கக் கையை நீட்டியும் விட்டான். அச்சமயம் காலடிச் சத்தம் கேட்டது.கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. நீட்டிய கையை மடக்கிக் கொண்டான்.

முன்னொரு தடவை வந்துவிட்டுப் போன மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் உள்ளே வந்தார்கள். இருவரும் வந்தியத்தேவனுக்கு இரு புறத்திலும் நின்று கொண்டார்கள்.

"கப்பல் பிரயாணம் எப்படி, அப்பா! சுகமாயிருக்கிறதா?" என்று ரவிதாஸன் கேட்டான்.

வந்தியத்தேவன், "தாகம் கொல்லுகிறது; கொஞ்சம் தண்ணீர்!" என்று பேச முடியாமல் பேசினான்.

"ஆ! எங்களுக்கும் தாகந்தான். அந்தப் பாவிகள் கப்பலில் தண்ணீர் வைக்கவில்லையே?" என்றான் ரவிதாஸன்.

"காளிக்கு எல்லாரையும்விட அதிக தாகமாயிருக்கிறது. இரத்த தாகம்!" என்றான் இன்னொருவன்.

வந்தியத்தேவன், திரும்பி அவனை உற்றுப் பார்த்தான். "என்னை ஞாபகமில்லையா, தம்பி! மறந்துவிட்டாயா? கடம்பூர் அரண்மனையில் குரவைக் கூத்துக்குப் பிறகு தேவராளன் வந்து வெறியாட்டம் ஆடினானே? 'காளித்தாய் பலி கேட்கிறாள்; ஆயிரம் வருஷத்து அரச குல இரத்தம் கேட்கிறாள்' என்று ஆவேசம் வந்து சொன்னானே?..."

"ஆ! இப்போது ஞாபகம் வருகிறது! நீதான் அந்தத் தேவராளன்!" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான்.

"ஆமாம்; நான்தான்! ஆயிரம் வருஷத்து அரசகுமாரனைக் காளிக்குப் பலி கொடுக்கலாம் எ ்றுதான் இலங்கைக்கு வந்தோம். அது சாத்தியப்படவில்லை. அந்த வீரவைஷ்ணவனை வைகுண்டத்துக்கு அனுப்பப் பார்த்தோம். அதுவும் முடியவில்லை. நீயாவது வலுவில் வந்து சேர்ந்தாயே? மிக்க சந்தோஷம். இப்போதைக்குக் குறுநில மன்னர் குலத்து இரத்தத்தோடு காளி திருப்தியடைய வேண்டியதுதான்!" என்றான் தேவராளன்.

"அப்படியானால் ஏன் தாமதிக்கிறீர்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"வீர வாலிபனாகிய உன்னைக் கண்ட இடத்தில் பலி கொடுத்து விடலாமா! கரை சேர்ந்த பிறகு எல்லாப் பூசாரிகளையும் அழைத்து உற்சவம் கொண்டாடியல்லவா பலி கொடுக்கவேண்டும்? முக்கியமாகப் பூசாரிணி வரவேண்டுமே?"

"பூசாரிணி யார்?"

"யார் என்று உனக்குத் தெரியாதா? பழுவூர் இளையராணிதான்."

"வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "உங்களுக்கு உண்மையில் அத்தகைய எண்ணம் இருந்தால் உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். இல்லாவிடில் இங்கேயே தாகத்தினால் செத்துப்போவேன்!" என்றான்.
"தண்ணீர் இல்லையே, தம்பி!"

"நீதான் மந்திரவாதியாயிற்றே?"

"நன்றாகச் சொன்னாய்? மந்திரம் போட்டிருக்கிறேன் பார்! இப்போது கப்பல் அசையாமல் நிற்கிறது தெரிகிறதல்லவா? இரவுக்குள் சுழற்காற்று அடிக்கப் போகிறது. மழையும் வரும்!"

"மழை வந்தால் எனக்கு என்ன பயன்? நீங்கள் மேல்தட்டில் இருப்பீர்கள்! நான் இங்கே..."

"நீயும் மேல் தட்டுக்கு வரலாம். நாக்கை நீட்டி நீர் அருந்தி தாகத்தைப் போக்கிக் கொள்ளலாம். நாங்கள் சொல்கிறபடி கேட்பதாயிருந்தால்..."

"என்ன சொல்லுகிறீர்கள்?"

"அந்த அராபியப் பிசாசுகளைச் சமுத்திர ராஜனுக்குப் பலி கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறோம்."

"ஏன்?"

"அவர்கள் கலிங்க நாட்டுக்கு இந்தக் கப்பலைக் கொண்டு போக வேண்டும் என்கிறார்கள். நாங்கள் கோடிக்கரையிலாவது நாகப்பட்டினத்திலாவது இறங்க வ ேண்டும் என்கிறோம்..."

"அவர்கள் ஆறு பேர், அதோடு பெரும் முரடர்களாயிருக்கிறார்களே?" .
"அவர்களில் மூன்றுபேர் தூங்குகிறார்கள்; மற்ற மூன்று பேர் உறங்கி வழிகிறார்கள். நாம் மூன்று பேரும் தூங்குகிற மூன்று பேரையும் வேலை தீர்த்துவிட்டால், அப்புறம் மூன்று பேருக்கு மூன்று பேர் சமாளிக்கலாமே?"

வந்தியத்தேவன் சும்மாயிருந்தான்.

"என்ன, தம்பி சொல்கிறாய்? எங்கள் யோசனைக்குச் சம்மதித்தால் உன் கட்டை அவிழ்த்து விடுகிறோம்." இளவரசரின் முகம் வந்தியத்தேவன் மனக் கண் முன்னால் வந்து நின்றது. ஆம்; அவர் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். தூங்குகிறவர்களைக் கொல்லுவதற்கு ஒரு நாளும் உடன்படமாட்டார்.

"என்னால் முடியாது; தூங்குகிறவர்களைத் தாக்கிக் கொல்வது நீசத்தனம்."

"முட்டாளே! சோழ நாட்டு மாலுமிகள் தூங்கிக் கொண்டிருந்த போதுதான் இந்த அராபியர்கள் அவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்."

"மற்றவர்கள் இழிவான செயல் புரிந்தால் நானும் அவ்வாறு ஏன் செய்யவேண்டும்?"

"சரி; உன் இஷ்டம்!" என்றான் ரவிதாஸன்.

அருகில் கிடந்த ஆயுதக் கும்பலிலிருந்து ஒரு கூரிய பட்டாக் கத்தியை அவன் எடுத்துக்கொண்டான். தேவராளனோ, நுனியில் இரும்புப் பூண் கட்டியிருந்த சிறிய உலக்கை போன்ற தடியை எடுக்கொண்டான்.

இருவரும் அங்கிருந்து சென்றார்கள். ஆனால் அறையின் கதவைச் சாத்தி வௌியில் தாள் போடவில்லை. அவர்கள் போன உடனே வந்தியத்தேவன் கையை நீட்டிக் கத்தி ஓன்றை எடுத்துத் தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டான்.குதித்து எழுந்து சென்று, மூலையில் கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து உடைத்தான். இளநீரை வாயில் விட்டுக்கொண்டான். மிச்சமிருந்த தேங்காய்களை ஒரு சாக்கைப் போட்டு மூடினான்.

பிறகு, போருக்குத் தகுதியான நல்ல வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். ந்த நிமிருத்திலும் வௌியில் பாய்ந்து செல்வதற்கு ஆயத்தமாயிருந்தான். கொஞ்சம் நேரத்துக்கெல்லா 'தட்','தட்' என்று இரு முறை சத்தம் கேட்டது இரு உடல்கள் கடலில் எறியப்பட்டன என்று அறிந்து கொண்டான். உடனே பயங்கரமான பெருங்கூச்சல், கை கலப்பு, கத்திகள் மோதும் சப்தம் - எல்லாம் மேல் தட்டிலிருந்து வந்தன.

வந்தியத்தேவன் கையில் பிடித்த கத்தியுடன் பாய்ந்தோடினான். ரவிதாஸனையும் தேவராளனையும் மற்ற நாலு அராபியர்களும் தாக்கி நெருக்கிக் கொண்டிருந்தார்கள். நெருக்கப்பட்டவர்களின் நிலை நெருக்கடியான கட்டத்தை அடைந்திருந்தது. வந்தியத்தேவன் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினான். அராபியர்களில் ஒருவன் திரும்பி அவனைத் தாக்க வந்தான். வந்தியத்தேவனுடைய கத்தி அராபியனுடைய கத்தியைத் தாக்கி அது கடலில் போய் விழச் செய்தது; அராபியனுடைய முகத்தில் ஒரு வெட்டுக் காயத்தையும் உண்டாக்கிற்று. இரத்தம் வழிந்த பயங்கர முகத்தையுடைய அராபியன் கை முட்டியை ஓங்கிக்வேண்டும் வந்தியத்தேவனுடைய மார்பில் குத்த வந்தான். வந்தியத்தேவன் சிறிது நகர்ந்து கொண்டான். அராபியன் தடாலென்று விழுந்தான். அவன் விழுந்த வேகத்தினால் இடம் பெயர்ந்த பாய்மரக் குறுக்குக் கட்டை ஒன்று அவன் தலையில் படார் என்று விழுந்தது. இன்னொரு அரபியனோடு வந்தியத்தேவன் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்து அவனைக் கடலில் தள்ளினான்.

மந்திரவாதி ரவிதாசனும், தேவராளனும், போர்த்திறமை வாய்ந்தவர்கள் அல்ல. ஆகையால் அராபியர் இருவருடன் தனித்தனி சண்டை போடுவதே அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. நேரமாக ஆகக் களைப்படைந்து வந்தார்கள். அச்சமயம் கடலில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டு அராபியர் இருவரும் தங்கள் தோழர்களின் கதி என்னவோ என்று திரும்பிப் பார்த்தார்கள். அதுதான் சமயம் என்று ரவிதாஸனும் தேவராள ும் அவர்களைத் தீர்த்துக் கட்டினார்கள்.

எல்லாம் முடிந்ததும் வெற்றி பெற்ற மூவரும் இளைப்பாற உட்கார்ந்தார்கள்.

"அப்பனே! நல்ல சமயத்தில் வந்தாய்! எப்படி வந்தாய்?" என்று கேட்டான் ரவிதாஸன்.

"நீ ஏதோ மந்திரம் போட்டாய் போலிருக்கிறது. என்னைக் கட்டியிருந்த கட்டுக்கள் தாமாகவே அவிழ்ந்து கொண்டன. கையில் இந்தக் கத்தி வந்து ஏறியது!" என்றான் வந்தியத்தேவன்.

"உன்தாகம் என்ன ஆயிற்று?"

"தேங்காய் ஒன்று என் தலைக்கு மேலாக வந்தது. அதுவாக உடைத்துக்கொண்டு என் வாயில் கொஞ்சம் இளநீரை ஊற்றியது!"

"ஓகோ! நீ வெகு பொல்லாதவன்!" என்றான் தேவராளன்.

இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"தம்பி! உன்னைப் பரிசோதித்தோம், வேண்டுமென்றே உன் கட்டுக்களைத் தளர்த்தி விட்டிருந்தோம். ஆயுதங்களைப் பக்கத்தில் வைத்திருந்தோம், தேங்காய்களை உனக்குத் தெரியும் படி போட்டிருந்தோம்!" என்றான் ரவிதாஸன்.

இவையெல்லாம் பொய்யா, உண்மையா என்று வந்தியத்தேவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சற்று மௌனமாகயிருந்தான்.

"அப்பனே! யோசித்துச் சொல்! நீ உயிர் பிழைக்க வேண்டுமா? பிழைத்துக் கரை சேர்ந்து உன் உற்றார் உறவினர் முகத்தைப் பார்க்கவேண்டுமா? பொருளும் போகமும், பதவியும் பட்டமும் பெற்று வாழ வேண்டுமா? விருப்பமிருந்தால் சொல்; எங்களுடன் சேர்ந்துவிடு! இவ்வளவு நலங்களையும் அடையலாம்!" என்றான் ரவிதாசன்.

"தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைக் கொன்றீர்கள் அல்லவா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இரண்டு பேரைத்தான் கொல்ல முடிந்தது. மற்றவன் விழித்துக்கொண்டான். நீ முன்னமே எங்களுடன் சேர்ந்திருந்தால், இன்னும் சிறிது சுலபமாய்ப் போயிருக்கும்."

"தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்லுகிறது எந்த தர்மத்தில் சேர்ந்தது? அவ்விதம் செய்ய எப்படி உ ங்களுக்கு மனம் வந்தது?"

"இந்தக் கடுகுக்கு நீ பயப்பட்டால் பெரிய பெரிய பூசினிக் காய்களை எப்படி விழுங்குவாய்? எங்களுடன் நீ சேர்வதாயிருந்தால்..."

"உங்களுடன், உங்களுடன் என்கிறீர்கள்? நீங்கள் யார்?"

ரவிதாஸன் தேவராளனைப் பார்த்து, "இனி இவனிடம் இரகசியம் தேவை இல்லை. ஒன்று, இவன் நம்முடன் சேரவேண்டும். அல்லது கடலுக்குப் பலியாக வேண்டும். ஆகையால் இவனிடம் எல்லாம் சொல்லி விடலாமே!" என்றான்.

"எல்லாவற்றையும் நன்றாய்ச் சொல்லு!" என்றான் தேவராளன்.

"கேள், தம்பி! நாங்கள் வீர பாண்டிய மன்னருடைய ஆபத்துதவிகள்,'அவரைக் காத்து நிற்பதாக ஆணையிட்டுச் சபதம் செய்தவர்கள்..."

"உங்களால் அது முடியவில்லை! ஆதித்த கரிகாலர் வெற்றி பெற்றார்..."

"எப்படி வெற்றி பெற்றார்? ஒரு பெண் பிள்ளையின் மூடத்தனத்தினால் வெற்றி பெற்றார். அவள் தன் மோகவலையின் சக்தியில் அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். அந்தச் சோழ குல நாகப் பாம்பைத் தன்னால் படம் எடுத்து ஆடச் செய்ய முடியும் என்று நம்பினாள். பாம்பு படம் எடுத்து ஆடத்தான் ஆடியது. ஆனால், அதன் விஷப் பல்லின் சக்தியை நடுவில் காட்டி விட்டது. எங்கள் மன்னரின் தலை புழுதியில் உருண்டது. தஞ்சாவூர் வரையில் கொண்டு போனார்கள். தலையைப் பல்லக்கில் வைத்து ஊர்வலம் விட்டார்கள். ஆகா! தஞ்சாவூர்! தஞ்சாவூர்! அந்த நகரம் அடையப் போகிற கதியைப் பார்த்துக் கொண்டிரு தம்பி!"

இவ்விதம் கூறியபோது ரவிதாஸனுடைய சிவந்த அகன்ற கண்கள் மேலும் அகன்று அனலைக் கக்கின. அவனுடைய உடல் நடுங்கியது. பல் வரிசைகள் ஒன்றோடு ஒன்று உராயும் சப்தம் நறநறவென்று பயங்கரமாய்க் கேட்டது.தேவராளனுடைய தோற்றமும் அவ்விதமே கோரமாக மாறியது.

"போனது போயிற்று. அதற்காக இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்? இறந்துபோன வீர பாண்டியனை உயிர்ப்பிக்க முடியுமா?"

"வீரபாண்டியரை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வளவு சக்தி என்னுடைய மந்திரத்துக்கு கூடக் கிடையாது. ஆனால், அவரைக் கொன்றவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் பூண்டோடு அழித்துப் பழிக்குப் பழி வாங்குவோம். சோழகுலப் பாம்பு வர்க்கத்தைக் குஞ்சு குழந்தைகள் உள்பட நாசம் செய்வோம். எங்களுடன் நீ சேர்க்கிறாயா? சொல்!'

"சோழ குலத்தை நாசம் செய்த பிறகு? அப்புறம் என்ன செய்வீர்கள்?"

"எங்கள் மகாராணி யாருக்குப் பட்டம் சூட்டச் சொல்கிறாளோ, அவனுக்குச் சூட்டுவோம்..."

"மகாராணி யார்?"

"தெரியாதா, தம்பி! பழுவூர் இளையராணியாக இப்போது நடிப்பவள்தான்!"

"அப்படியானால் மதுராந்தகருக்கு..."

"அவனும் ஒரு பாம்புக் குட்டிதானே?"

"பழுவேட்டரையர்?..."

"ஆ! அந்தக் கிழவனை எங்கள் அரசனாக்குவோம் என்றா நினைக்கிறாய்? அவனுடைய செல்வாக்கையும் பணத்தையும் உபயோகப்படுத்துவதற்காக..."

"உங்கள் மகாராணி அவன் வீட்டில் இருக்கிறாளாக்கும்!"

"நன்றாகத் தெரிந்து கொண்டாயே? நல்ல யூகசாலி நீ!"

"வீரபாண்டியனுடைய மரணத்துக்குக் காரணம் ஒரு பெண்பிள்ளை என்று சொன்னீர்களே?"

"அதுவும் பழுவூர் ராணிதான்! போரில் காயம் பட்டுக் கிடந்த வீரபாண்டியரைத் தான் காப்பாற்றுவதாக அவள் வாக்களித்தாள். அதை நிறைவேற்றவில்லை. அவளே துரோகம் செய்து விட்டாள் என்று நினைத்து அவளை உயிருடன் கொளுத்த நினைத்தோம். பழிக்குப் பழி வாங்குவதாக எங்களுடன் சேர்ந்து அவளும் சபதம் செய்தபடியால் அவளை உயிரோடு விட்டோம். இன்று வரையில் அவள் வாக்கை நிறைவேற்றி வருகிறாள். ஓ! அவளுடைய உதவிமட்டும் இல்லாவிட்டால் நாங்கள் இவ்வளவு செய்திருக்க முடியாது."

"இன்னும் நீங்கள் ஒன்றும் சாதித்து விடவில்லையே?"

"கொஞ்சம் பொறு, அப்பனே! பார்த்துக்கொண்டேயிரு!" என்றான் ரவிதாஸன்.

"நம்மிடமிருந்து இவன் எல்லாம் ெரிந்துகொண்டான். நாம் கேட்டதற்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லையே?" என்றான் தேவராளன்.

"தம்பி! என்ன சொல்கிறாய்? எங்களுடன் சேர்கிறாயா? யார் கண்டது? உனக்கே ஒருவேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம். நீயே ஒருவேளை தென் தமிழகத்தின் வீர சிம்மாசனத்தில் ஏறினாலும் ஏறலாம். என்ன சொல்கிறாய்?

சில காலத்துக்கு முன்னேயென்றால் வந்தியத்தேவன், "ஆஹா! உங்களுடன் சேர்கிறேன்!" என்று சொல்லியிருப்பான்.ஆனால் இளவரசருடன் மூன்று நாள் பழகியது அவனுடைய மனப்போக்கில் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணியிருந்தது. பொய் புனை சுருட்டுகள், சமயோசித தந்திரங்கள் - இவற்றில் அவனுக்குப் பற்று விட்டுப்போயிருந்தது.

ஆகையால் பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் கப்பலை எப்படிப் பிடித்தீர்கள்? சற்றுமுன் யமனுலகுக்கு அனுப்பிய அரபு நாட்டாருடன் எப்படிச் சினேகமானீர்கள்!" என்று கேட்டான்.

"எல்லாம் என்னுடைய மந்திரசக்தி, அப்பனே! திரிகோணமலையில் இவர்களிடமிருந்துதான் நாங்கள் குதிரைகளை விலைக்கு வாங்கினோம். அந்தக் குதிரைகளைக் கொண்டு உங்களைத் தொடர்ந்து முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். 'யானை இறவு'த் துறையில் இளவரசர் இறங்கி ஓடியதைப் பார்த்தோம். அவருக்கு முன்னால் இங்கு வந்துவிடத் தீர்மானித்துக் குறுக்கு வழியில் வந்து சேர்ந்தோம். இங்கே வந்து பார்த்தால், எங்கள் பழைய சிநேகிதர்கள் இந்தக்கப்பலைக் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் ஏறி வந்த கப்பல் முல்லைத் தீவுக்கு அருகில் கரைதட்டி உடைந்து போய் விட்டதாம். இங்கே ஒளிந்திருந்து இந்தக் கப்பலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். கடலோரத்தில் வழிகாட்டுவதற்கு எங்களையும் வருகிறீர்களா என்று கேட்டார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று."

"அது எப்படி?"

"அந்தச் சோழகுலத்து இளநாகம் சோழ சேநாதிபதியுடன் பே சிக் கொண்டிருந்ததைக் கேட்டோம். எப்படியும் சோழ நாட்டுக்கு அவன் திரும்பி வந்து சேர்வான் என்று அறிந்து கொண்டோம். அது மட்டுமல்ல, தம்பி! இலங்கையில் ஊமைப்பெண் பூதம் ஒன்று இருக்கிறது. அந்தப் பூதம் எங்கள் மந்திரத்துக்குப் பதில் மந்திரம் போட்டு அருள்மொழிவர்மனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆனால் சோழ நாட்டுக்கு அது வராது..."

வந்தியத்தேவன் அன்றிரவு அநுராதபுரத்தில் நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டான். ரவிதாஸன் திடீரென்று சிரித்தான்.

"இது என்ன சிரிப்பு? எதைக் கண்டு?" என்றான் வந்தியத்தேவன்.
"ஒன்றுமில்லை. தம்பி! இந்த அரபு நாட்டாரின் சுபாவத்தை எண்ணினேன்; சிரிப்பு வந்தது. இவர்கள் இவ்வளவு முரட்டு மனிதர்கள் அல்லவா? மனிதர்களைக் கொல்வது இவர்களுக்கு வாழைக்காயை அரிவது போன்றது. ஆனால் குதிரைகளிடம் இவர்களுக்கு அளவில்லாத அபிமானம். குதிரைகளின் கால் குளம்பில் இரும்புப்பூண் அடித்துத்தான் அவர்கள் நாட்டில் குதிரைகளை ஓட்டுவார்களாம். நாம் குதிரைகளை வெறுங்காலுடன் ஓடச் செய்கிறோமாம். அதனால் நாம் கருணையற்ற, அநாகரிக மிருகங்களுக்கும் கேடான மனிதர்களாம்! நம்மிடம் குதிரைகளை விற்பதே பாவமாம்!... இன்று காலையில் என்ன நடந்தது தெரியுமா?..."

"சொல்லுங்கள்!"

"கப்பலில் எல்லோரும் ஏறிக் கொண்டோம். பாய்மரங்கள் விரித்தோம். கப்பல் கிளப்பிவிட்டது. அப்போது கரையில் ஒரு குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. அவ்வளவுதான். முல்லைத் தீவில் உடைந்த கப்பலிலிருந்து தப்பிக் கரையேறிய அவர்களுடைய குதிரைகளில் ஒன்றாயிருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். அவர்களில் ஒருவன் கப்பலிலிருந்து இறங்கிப் பார்த்து விட்டுத்தான் வருவேன் என்றான். எங்களையும் அவனுடன் சேர்த்து அனுப்பினார்கள்..."

"பிறகு?"

"குதிரை அகப்படவில்லை. தம்பி! நீ அகப்பட ்டாய்! எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று, பார்! இந்தக் குதிரைப் பிரியர்களை வேலை தீர்ப்பதற்கு எவ்வளவு சௌகரியமாய்ப் போயிற்று."

"எல்லாம் சரிதான்; இந்தப் பிள்ளை நம்முடைய கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை" என்று ஞாபகப் படுத்தினான் தேவராளன்.

"சொல்லுகிறேன், ஐயா! சொல்லுகிறேன், நான் சோழகுலத்திற்கு ஊழியம் செய்ய ஏற்றுக்கொண்டவன். ஒரு நாளும் உங்களுடன் சேரமாட்டேன்..."

"வேளக்காரப் படையைச் சேர்ந்திருக்கிறாயா? சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாயா!"

"அதெல்லாம் இல்லை."

"பின்னே என்ன தயக்கம்? நீ போர் வீரன். எந்தக் கட்சியில் அதிக அநுகூலம் இருக்கிறதோ, அதில் சேரவேண்டியது தானே!"

சோழ குலத்தாருடன் உறவு பூணுவதற்கு எல்லாச் சபதங்களைக் காட்டிலும் பலம் அதிகம் கொண்ட காரணம் தனக்கு இருக்கிறது என்பதை வந்தியத்தேவன் அவர்களிடம் சொல்லவில்லை. இளையபிராட்டியின் கடைக்கண் பார்வையையும், முல்லை நிகர்ப் புன்னகையையும் காட்டிலும் சோழ குலத்தாருக்கு உயிரைக் கொடுக்க வேறு காரணம் தனக்கு வேண்டுமா? அப்புறம் இளவரசரின் இணையில்லா சிநேகம் இருக்கிறது! அவருடன் ஒரு தடவை சிநேகமானவன் மறுபடி மாற முடியுமா?

"எது எப்படியிருந்தாலும், உங்களுடைய கொலைகாரக் கூட்டத்தில் நான் சேரமாட்டேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால் உன் உயிரைச் சமுத்திர ராஜனுக்குப் பலியிட ஆயத்தப்படு!"என்றான் ரவிதாஸன்.


பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.