 
ponniyin celvan
of kalki, part 3D
(in tamil script, unicode format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நூலடக்கம் 
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University,  Chennai,
India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,
Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,
Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth
Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
 To view the Tamil text correctly you need to set up the following: 
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer 
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). 
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. 
.
In case of difficulties send an email request to 
kalyan@geocities.com or 
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted 
to preparation of electronic texts of tamil literary works and to distribute
them free on the Internet. Details of Project Madurai are available at
the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
மூன்றாம் பாகம் - கொலை வாள் 
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - பசும் பட்டாடை
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பிரம்மாவின் தலை
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி கேட்ட உதவி
முப்பத்து நான்காம் அத்தியாயம் - தீவர்த்தி அணைந்தது!
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - "வேளை நெருங்கி விட்டது!"
முப்பத்தாறாம் அத்தியாயம் - இருளில் ஓர் உருவம்
முப்பத்தேழாம் அத்தியாயம் - வேரும் வௌிப்பட்டது
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - வானதிக்கு நேர்ந்தது
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கஜேந்திர மோட்சம்
நாற்பதாம் அத்தியாயம் - ஆனைமங்கலம்
முப்பத்தொன்றாம்  அத்தியாயம் 
பசும்  பட்டாடை 
மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதலாவது மந்திரி அநிருத்தரின் ஓலையுடன்
அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான்.  குதிரையை விரட்டாமல்
மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். 
ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று.  இயற்கை அரசி பச்சைப்
பட்டாடை உடுத்தி நவயௌவன சௌந்தரியத்துடன் திகழ்ந்தாள்.  அந்தப் பச்சைப் பட்டாடையில்தான் எத்தனை
விதவிதமான பசுமைச் சாயங்கள்! கழினிகளில் கதிர்விடுவதற்குத் தயாராயிருந்த நெற் பயிர்கள் ஒரு
சாயல்: நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல்; அப்போதுதான்
நடவாகியிருந்த பசும் பொன்னிறப் பயிர்கள் வேறொருசாயல்! ஆல மரத்தில் த
ைத்திருந்த இலைகள் ஒரு
பசுமை: அரச மரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவிதப் பசுமை; தடாகங்களில் கொழு கொழுவென்று
படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகனப் பசுமை; வாழை இலைகளின் கண்கவரும் பசுமை; தென்னங்
குருத்துக்களின் தந்தவர்ணப் பசுமை; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தௌிந்தநீரின் பசுமை;
நீரில் அங்குமிங்கும் தத்திப் பாய்ந்த தவளைகளின் பசுமை.  
இவ்வளவு விதவிதமான சாயல்கள் வாய்ந்த பச்சைப் பட்டாடையின் அழகைத் தூக்கிக்காட்டுவதற்கென்று
நட்சத்திரப் பொட்டுக்கள் பதித்ததுபோல் குவளைகளும், குமுதங்களும், செந்தாமரை செங்கழுநீர்ப் பூக்களும்
ஆங்காங்கு ஜொலித்துக் கொண்டிருந்தன.  இந்த அழகையெல்லாம் வந்தியத்தேவன் இரு கண்களாலும் பருகிக்
கொண்டு பிரயாணம் செய்தான்.  ஆடிமாதத்தில் அந்த வழியாக அவன் சென்ற போது பார்த்த காட்சிகளுக்கும்,
இப்போது காணும் காட்சிகளுக்கும் உள்ள வேற்றுமையை அவன் உணர்ந்திருந்தான்.  ஆடிமாதத்தில் ஆற்றில்
புதுவெள்ளம் நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது.  இப்போதோ பிரவாகத்தின்
வேகமும் கோபமும் தணிந்து, செந்நிறம் மாறி, பளிங்கு போல் தௌிந்து, உல்லாசமாகப் பவனி சென்றது. 
புது வெள்ளத்தின் 'ஹோ' என்ற இரைச்சலும் மேலக் காற்று மரக்கிளைகளைத் தாக்கிய போது உண்டான
பேரோசையும், ஆயிரமாயிரம் புள்ளினங்களின் கோலாகலத் தொனிகளும் அப்போது ஒரு மாபெருந்
திருவிழாவின் ஆரவாரத்தைப் போல் கேட்டன.  இன்றைக்கோ குளிர்ந்த வாடைக் காற்றில் இலைகள் அசைந்த
மாமரச் சத்தமும், மடைகளில் தண்ணீர் பாய்ந்த சலசலப்பு ஓசையும், மழையை எதிர்பார்த்த மண்டூகங்களின்
சுருதி பேதக் குரல்களும், பலவகைச் சில்வண்டுகளின் ஸ்வர பேத ரீங்காரங்களும் சேர்ந்து இயற்கை
மாதரசியின் சோக சங்கீத கோஷ்டிகானத்தைப் போல் ஒலித்துக் கொண்டிருந்தன.  
வந்
ியத்தேவனுடைய உள்ளத்திலும் அப்போது ஏதோ ஒரு வகையான இனந்தெரியாத சோகம் குடி
கொண்டிருந்தது.  இதன் காரணம் என்னவென்று யோசித்து யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை.  உண்மையில்
அவன் அபரிமிதமான உற்சாகம் கொள்வதற்கு வேண்டிய காரணங்கள் இருந்தன.  இந்த வழியாக இரண்டு
மாதங்களுக்கு முன்னால் போனபோது என்னென்ன மனோராஜ்யங்கள் செய்தானோ அவ்வளவும் நிறைவேறிவிட்டன. 
அவன் கனவிலும் நடக்கும் என்று கருதாத காரியங்களும் நடந்தேறிவிட்டன.  சுந்தர சோழ சக்கரவர்த்தியைத்
தரிசித்தாகி விட்டது! தஞ்சாவூர், பழையாறை, மாதோட்டம், அநுராதபுரம் முதலிய மாபெரும் நகரகளைப்
பார்த்தாகி விட்டது.  சோழநாட்டின் கண்ணுக்குக் கண்ணாக விளங்கிய பொன்னியின் செல்வனுடைய சிநேகிதம்
கிடைத்து விட்டது; அந்த வீர இளவரசனுக்கு உதவிபுரியும் பேறும் கிடைத்து விட்டது; தமிழகத்தின் அழகுத்
தெய்வமும், சோழர் குலவிளக்குமான அரசிளங்குமரி குந்தவையை ஒருமுறை பார்ப்பதற்கே எத்தனையோ தவம்
செய்திருக்க வேண்டும்.  இப்படியிருக்க அவளுடைய தூய இதயத்தின் நேயத்தைப் பெறுவதென்பது எத்தகைய
பெறற்கரும் பாக்கியம்? அதை எண்ணியபோது அவன் உள்ளம் பெருமிதத்தினால் பொங்கியது. ஆனால் அந்தப்
பெருமிதக் குதூகலத்துடனே ஏதோ ஒரு வேதனையும் தொடர்ந்து வந்தது.  அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான்
உண்மையில் உரியவன்தானா? அது நிலைத்து நிற்குமா? கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ
தடங்கல்கள் ஏற்படக்கூடுமல்லவா? 
"ஆகா! தடங்கல்களுக்கும் என்ன குறைவு? உலகமே தடங்கல் மயம்தான்! ரவிதாஸனைப் போன்ற
மாயமந்திரவாதிகளும், நந்தினியைப் போன்ற மாய மோகினிகளும், பழுவேட்டரையர்களைப் போன்ற
சதிகாரர்களும், கந்தமாறனையும் பார்த்திபேந்திரனையும் போன்ற சிநேகத் துரோகிகளும், பூங்குழலியையும்,
வானதியையும் போன்ற பித்துக்கொள்ள
ிப் பெண்களும், வீரவைஷ்ணவ ஒற்றர்களும், காலாமுக சைவர்களும்,
கொள்ளிவாய்ப் பேய்களும், ஆழ்ந்தெரியாத புதை சேற்றுக் குழிகளும் நிறைந்த உலகமல்லவா இது? கடவுளே
மேற்கூறிய அபாயம் ஒவ்வொன்றிலிருந்தும் எப்படியோ இதுவரை தப்பித்து விட்டேன்! அவை எல்லாவற்றையும்
விடப் பெரும் அபாயகரமான காரியத்தில் இப்போது முதன் மந்திரி அநிருத்தர் என்னை ஏவியிருக்கிறார்!
ஒரு பக்கத்தில், எளிதில் மூர்க்காவேசம் கொள்ளக்கூடிய ஆதித்த கரிகாலர்; மற்றொரு பக்கத்தில் பெரிய
பழுவேட்டரையரைப் பொம்மையைப் போல் ஆட்டி வைக்கும் மாயசக்தி வாய்ந்த மோகினி! இவர்களுடைய
நோக்கத்துக்கு குறுக்கே நின்று நான் தடை செய்து வெற்றி பெற வேண்டுமாம்! இது நடக்கக்கூடிய காரியமா?
அந்தப் பிரம்மராயர் தமது மனத்தில் என்னதான் உண்மையில் எண்ணியிருக்கிறாரோ தெரியாது!
அரசிளங்குமரியிடமிருந்து என்னைப் பிரித்து விடுவதே அவருடைய நோக்கமாயிருக்கலாம் அல்லவா?
ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து கொள்வான் என்று இருவரும் சொன்னார்கள்! அவனையும் இது வரையில் 
காணோம்! அந்த வீர வைஷ்ணவன் எப்பேர்ப்பட்டவனாயிருந்தாலும், இதுவரையில் எனக்கு ஒரு கெடுதலும் 
செய்ததில்லை; பலமுறை உதவிதான் புரிந்திருக்கிறான். அவனுடன் சேர்ந்து பிரயாணம் செய்தால், ஏதாவது 
உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான்.  பிரயாணத்தில் அலுப்புத் தட்டாமல் இருக்கும்.  இனி எங்கே 
வந்து அவன் நம்முடன் சேர்ந்து கொள்ள முடியும்? அவனுக்காக எத்தனை நேரந்தான் இந்தக் குதிரையை 
இழுத்துப் பிடித்து மெள்ளச் செலுத்திக் கொண்டு போவது?..." 
"ஆகா! அதோ கும்பலாயிருக்கும் மரங்கள்! நதி வெள்ளத்தில் முதலைகளைப் போல் கிடக்கும் அந்த
வேர்கள்! இங்கேதான் பொம்மை முதலைமீது வேல் எறிந்த படலம் நடைபெற்றது! வாரிணியும் தாரகையும்,
செந்திருவும் மந்தாகினியும் நம்முடைய வீரச
செயலைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தது இவ்விடத்தில்தான்!
அரசிளங்குமரி நமக்குப் பரிந்து அந்தப் பெண்களை அதட்டியதும் இதே இடத்தில்தான்! சற்று இங்கே நின்று
பார்க்கலாம்." 
வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து இறங்கி நதிக்கரையில் ஓரமாகச் சென்று நின்றான். 
மரத்தின் வேர்களைச் சுற்றிச் சுற்றிச் சுழலிட்டுக் கொண்டு ஓடிய தௌிந்த நீர்ப்பிரவாகத்தைச்
சிறிதுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்...  ஆகா! அந்தச் சுழலில் ஒரு முகம் தெரிகிறது! அது
யாருடைய முகம்? சொல்லவேண்டுமா? அரசிளங்குமரி குந்தவைப் பிராட்டியின் இன்பப் பொன்முகந்தான்!
"கண்டேன் கண்டேன் கண்டேன் 
        கண்ணுக்கினியன கண்டேன்!" 
என்று பாடிய குரலைக்கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தான்.  உன்னதமான 
மரத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது! 
"ஓகோ! வீரவைஷ்ணவரே! நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக 
இருக்கிறேனா! நான் உம்மைச் சிறிது நன்றாகப் பார்க்கிறேன்.  கீழே இறங்கி வருக!" என்று 
சொன்னன் வந்தியத்தேவன்.  
வீரவைஷ்ணவன் - மரத்திலிருந்து இறங்கிய வண்ணம், "நான் உன்னை சொல்லவில்லை, அப்பனே!
உடையில் வாளும், கையில் வேலும் ஏந்திய நீ என் கண்ணுக்குப் பயங்கரமாகவல்லவோ புலப்படுகிறாய்?"
என்றான்.
"பிறகு, யாரைப் பற்றிச் சொன்னீர், வைஷ்ணவரே?" 
"முழு முதற் கடவுளாகிய திருமால் வாமனாவதாரம் எடுத்து வானத்தை அளப்பதற்காக ஒரு 
பாதத்தைத் தூக்கிய போது, உங்கள் சிவபெருமானுடைய கண்களுக்கு...." 
"வைஷ்ணவரே! நிறுத்தம்! இம்மாதிரியெல்லாம் சிவனைத் தாழ்த்திக் கூறுவதை நிறுத்தி விடும்.  
இல்லாவிடில் பெரிய அபாயத்துக்கு உள்ளாவீர்!" 
"என்ன அபாயம், அப்பனே! முதலையைக் கொன்று யானையைக் காத்த பெருமானின் சக்கரம்
இருக்கும்போது 
ன்னை யார் என்ன செய்ய முடியும்?" 
"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உமது இஷ்டம்." 
"எனக்கு என்ன அபாயம் வருகிறது என்று சொல், தம்பி!" 
"பழையாறையில் ஜனங்கள் கொந்தளித்து அரண்மனை வாசலுக்கு வந்தார்கள் அல்லவா? 
அப்போது சில காலாமுகர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்." 
"என்ன பேசிக் கொண்டார்கள்?" 
"சோழ நாட்டில் பெருகிவரும் வீரவைஷ்ணவர்களை மகாகாளிக்குப் பலி கொடுத்து, 
அவர்களுடைய மண்டை ஓடுகளைக் குவித்து அடுக்கி, அவற்றின் பேரில் நின்று ஆனந்தத் 
தாண்டவம் ஆட வேண்டும் என்று சொன்னார்கள்!" 
ஆழ்வார்க்கடியான் தன் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு, "இது 
கெட்டியாகத்தானிருக்கிறது! காலாமுக தாண்டவத்தைத் தாங்கக்கூடியதுதான்" என்றான்.  
"நான் கேள்விப்பட்டதற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு நான் வரும் வழியெல்லாம் 
காலாமுகர்கள் மண்டை ஓடுகளையும் சூலாயுதங்களையும் தாங்கிக் கொண்டு அலைகிறார்கள்.  
நீர் சிவனே என்று இந்த முன் குடுமி வேஷத்தை மாற்றிக் கொண்டு..." 
"முடியாது, அப்பா, முடியாது!" 
"என்ன முடியாது?" 
"நீ சொன்னாயே அந்தப் பெயரைச் சொல்ல முடியாது.  'விஷ்ணுவே' என்று சொல்லி, எனது
வேஷத்தை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்வேன்...  அதோ பார்!" 
ஆற்றங்கரைச் சாலையில் அப்போது ஒரு பல்லக்கு போய்க் கொண்டிருந்தது.  
அதற்குள் ஒரு பெண்மணி இருப்பது தெரிந்தது.  ஆனால் யார் என்று தெரியவில்லை யாரோ 
ராஜகுலத்துக்குப் பெண்ணாகத் தானிருக்க வேண்டும், யாராயிருக்கும்? பல்லக்குச் சுமப்பவர்களைத் 
தவிர ஒரு தாதிப் பெண் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை 
அரசிளங்குமரியாயிருக்கலாமோ! அப்படி இருக்க முடியாது.  
"வைஷ்ணவரே! அந்தப் பல்லக்கில் இருப்பது யார், தெரியுமா?" என்று வந்தியத்தேவன் 
கேட்டான்.
"தம்பி! நான் சொல்
தைக் கேள்.  உனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் 
கொள்ளாதே! அதனால் பல தொல்லைகளை நீ ஏற்கனவே அநுபவித்திருக்கிறாய் அல்லவா! வழியோடு 
எத்தனையோ பேர் போவார்கள்; உனக்கு என்ன அதைப்பற்றி? குதிரை மேலேறிக் கொள்; 
தட்டிவிடு!" என்றான்.  
"ஓகோ! அப்படியா சமாசாரம்? வீரவைஷ்ணவர் இப்போது பெரிய வைராக்கியசாலி
ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது. வீரநாராயணபுரத்தில் நடந்ததை மறந்துவிட்டீரா? அங்கே 
மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஓலை ஒன்றைச் சேர்ப்பிக்கும்படி நீர் எனக்குச் 
சொல்லவில்லையா?" 
"அதெல்லாம் பழைய கதை! இப்போது எதற்கு எடுக்கிறாய்." 
"போனால் போகட்டும்.  நீர் என்னோடு வழியில் வந்து சேர்ந்து கொள்வீர் என்று
சொன்னார்கள்.  உமக்காகவே இத்தனை நேரம் மெள்ள மெள்ளக் குதிரையைச் செலுத்திக் 
கொண்டு வந்தேன்.  இனியாவது என்னோடு வரப்போகிறீரா, இல்லையா?" 
"நீ குதிரையில் போகிறாய்! நான் கால்நடையாக வருகிறேன்.  நாம் எப்படிச் சேர்ந்து
பிரயாணம் செல்ல முடியும்? நீ கொள்ளிடக்கரையில் போயிரு.  அங்கே நாளைக் காலையில் உன்னுடன் வந்து
சேர்ந்து கொள்கிறேன்." 
ஆழ்வார்க்கடியான் வேறொரு இரகசிய வேலையில் ஈடுபட்டிருக்கிறான் என்றும், தன்னுடன் 
வரமாட்டான் என்றும் வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான்.  
"சரி உமது இஷ்டம்!" என்று கூறிக் குதிரைமீது தாவி ஏறிக்கொண்டான்.  தான் போக 
வேண்டிய திசையை நோக்கினான். வடகிழக்குத் திசையின் அடிவாரத்தில் கரியமேகங்கள் திரள்வதைக் 
கண்டான்.  
"வைஷ்ணவரே! இன்று மழை பெய்யுமா?" என்று கேட்டான்.  
"அப்பனே! எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? ஐப்பசி பிறந்து விட்டதல்லவா? மழை
பெய்தாலும் பெய்யும்.எல்லாவற்றுக்கும் சீக்கிரமாகக் குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டுபோ! இராத்திரி
தங்குவதற்கு ஏதேனும் ஒரு சத்திரம் சாவடியைப் பார்த்துக்க
ொள்!' என்றான் ஆழ்வார்க்கடியான்.  
வந்தியத்தேவன் அவ்விதமே குதிரையைத் தட்டிவிட்டான். "எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?"
என்று ஆழ்வார்க்கடியான் கேட்டது அவனுடைய மனத்தில் பதிந்திருந்தது.  இதிலிருந்து குடந்தை சோதிடரின்
நினைவு வந்தது.  போகும் வழியிலேதான் அந்தச் சோதிடரின் வீடு இருக்கிறது அவரைப் பார்த்துவிட்டுப்
போனால் என்ன? சோழ சிங்காதனம் ஏற ஆசைப்படுகிறவர்களுக்குள்ளே யாருக்கு இந்த அதிர்ஷ்டம்
கிடைக்கப்போகிறது? பொன்னியின் செல்வரைத் துருவநட்சத்திரத்துக்குச் சமமானவர் என்று குடந்தை சோதிடர்
சொன்னாரல்லவா? அவரோ இராஜ்யம் ஆளுவதில் மனதை செலுத்தவே மறுக்கிறார்! இலங்கைச் சிம்மாசனத்தையும் 
மணிமகுடத்தையும் எவ்வளவு அநாயாசமாக மறுதளித்தார்? அவருக்குப் பல கண்டங்கள் நேரிடுமென்று சோதிடர்
கூறியது ஓரளவு பலித்துத் தானிருக்கிறது.  அது போலவே வருங்காலத்தில் அவர் மகோந்நதம் பெற்று
விளங்குவார் என்பதும் பலிக்குமா? அது எப்படிச் சாத்தியமாகக் கூடும்? என்னுடைய வாழ்க்கைக் கனவுகள்தான்
எவ்வளவு தூரம் பலிக்கப் போகின்றன? என் முன்னோர்கள் காலத்தில் இழந்து விட்ட இராஜ்யம் திரும்பக்
கிடைக்குமா? நான் இப்போது எதற்காகப் புறப்பட்டிருக்கிறேனோ அது எவ்வளவு தூரம் நிறைவேறும்? ஆதித்த
கரிகாலர், நந்தினி இவர்களுக்குக் குறுக்கே நின்றுதான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமா?
இதுவரையில் இரண்டு மூன்று தடவை நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்தோம்! மறுபடியும் அது
முடியுமா? பழுவூர் இளைய ராணியை எண்ணியபோது வந்தியத்தேவனுடைய மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. 
அவள் அவனிடம் மிக்க பிரியமும் மரியாதையும் காட்டிப் பேசியதென்னவோ உண்மைதான்! ஆனால் அவள்
உள்ளத்தை அவனால் அறிய முடியவில்லை.  ஏதோ ஒரு முக்கிய காரிய நிமித்தமாக அவனை அவள் விட்டு
வைத்
ிருப்பதாகவே தோன்றியது.  அதனாலேயே வந்தியத்தேவனிடம் அவள் அவ்வளவு பொறுமையாக
இருந்திருக்கிறாள்.  அது என்ன காரியமாக இருக்கும்? 
வந்தியத்தேவனுடைய குதிரை சற்றுமுன் அந்த வழியே சென்ற பல்லக்கைத் தாண்டிச் சென்றது. 
இம்முறை அவன் பல்லக்கை மோதவும் விரும்பவில்லை.  பல்லக்கு அவனை மோதவும் இஷ்டப்படவில்லை.  
ஆனால் குதிரை பல்லக்கைத் தாண்டியபோது பல்லக்கின் திரை சிறிது விலகியது.  உள்ளே வீற்றிருந்த பெண்
கொடும்பாளூர் இளவரசி வானதி என்பதை அறிந்து கொண்டான்.  குதிரையை நிறுத்தலாமா என்று ஒரு கணம்
யோசித்தான்.  பிறகு அதை மாற்றிக்கொண்டு மேலே சென்றான்.  வானதியைப் பற்றி இளைய பிராட்டி
கூறியது நினைவு வந்தது.  நாலுபுறமும் அபாயங்கள் சூழ்ந்த இக்காலத்தில் கொடும்பாளூர் இளவரசி தனியாக
எங்கே புறப்பட்டாள்? தகுந்த பாதுகாப்புக்கூட இல்லையே? அதோடு இன்னொரு விசித்திரத்தையும் அவன்
கண்டான்.சற்றுத் தூரத்திலிருந்து பயங்கரத்தோற்றமுடைய இரண்டு காலாமுக சைவர்கள் வானதியின் பல்லக்கை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  இவர்கள் எதற்கு அப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் இரண்டு பேரும்
யார்? அரிச்சந்திர நதிக்கரையில் தான் படுத்துறங்கிய போது தன் பக்கத்தில் வந்து நின்று பேசியவர்கள்
அல்லவா? 
வானதியிடம் வந்தியத்தேவனுக்கு அவ்வளவு அனுதாபம் இல்லையென்பது உண்மையே.  பொன்னியின்
செல்வருடைய உள்ளத்தில் பூங்குழலி பெறவேண்டிய இடத்தை வானதி அபகரிக்க விரும்புவதாகவே அவன்
எண்ணினான்.  இதனால் அவள் பேரில் கோபங் கொண்டிருந்தான்.  ஆனாலும் இளைய பிராட்டி அவளிடம் அளவற்ற  
அன்பு வைத்திருந்தாள் என்பதை அவனால் மறக்க முடியவில்லை.  எனவே வானதிக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் 
இளைய பிராட்டி அதனால் அளவில்லாத துன்பம் அடைவாள்.  ஆனால் அபாயம் எதற்காக நேரவேண்டும்?
"சம்பந்தமில்ல
த காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே; உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!'
என்று ஆழ்வார்க்கடியான் கூறிய புத்திமதி நியாயமானதுதான்.  ஆயினும் வானதியின் பல்லக்குச் சென்றதைக்
காலாமுகர்கள் இருவர் மறைவான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற காட்சி திரும்பத் திரும்ப அவன்
ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது.  
இதோ குடந்தை சோதிடரின் வீடு வந்துவிட்டது! எல்லாவற்றுக்கும் அவரைக் கேட்டுப்
பார்க்கலாம்...  அடேடே! இத்தனை நேரம் அந்த விஷயம் மூளைக்கு எட்டவில்லையே! வானதி தேவியும்
குடந்தைச் சோதிடரின் வீட்டுக்குத்தான் வருகிறாள் போலும்.  பழம் நழுவிப் பாலி விழுந்தது.  வானதி
வந்து சேர்வதற்குள் நம்முடைய காரியத்தையும் நாம் பார்த்துக் கொள்ளலாம்.  இவ்வாறு எண்ணிச் சோதிடர்
வீட்டு வாசலில் குதிரையை நிறுத்தி விட்டு வந்தியத்தேவன் அந்தச் சிறிய வீட்டுக்குள் நுழைந்தான்.
பக்க தலைப்பு
முப்பத்திரண்டாம்  அத்தியாயம் 
பிரம்மாவின்  தலை 
வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டிற்குள் இரண்டாம் முறையாகப் பிரவேசித்தபோது
அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான இன்ப உணர்ச்சி உண்டாயிற்று.  அந்தச் சிறிய வீட்டுக்குள்ளேதான்
முதன் முதலாக அவன் இளையபிராட்டி குந்தவையைப் பார்த்தான்.  அவளுடைய செந்தாமரை வதனத்தையும்,
வியப்பினால் விரிந்த கரிய பெரிய கண்களையும் பார்த்துத் திகைத்து நின்றான்.  அவளுடைய
தேனினுமினிய தீங்குரல் அவன் செவியில் விழுந்ததும் அங்கேதான். இந்த நினைவுகள் எல்லாம் அலைமோதிக்
கொண்டு அவன் உள்ளத்தில் பொங்கி வந்தன. அவற்றினால் அவன் செவிகள் இனித்தன; உள்ளம் இனித்தது;
உடல் முழுவதுமே இனித்து சிலிர்த்தது! 
சோதிடர் அப்போதுதான் மாலைவேளைப் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.  இவனைப்
பார்த்தத
ம் "வா, அப்பனே, வா! வாணர்குலத்து வல்லத்தரையன்தானே?" என்றார்.  
"ஆம், சோதிடரே! உம் ஜோசியம் முன் பின்னாக இருந்தாலும் உம்முடைய ஞாபக சக்தி 
பிரமாதம்!" என்றான் வந்தியத்தேவன்.
"தம்பி சோதிட சாஸ்திரம் பயில்வதற்கு ஞாபக சக்தி மிக அவசியம்.  கிரகங்கள்,
நட்சத்திரங்கள், தசைகள், புக்திகள், யோகங்கள் - இவை லட்சம் விதமான சேர்க்கை உள்ளவை. 
அவ்வளவையும் மனத்தில் வைத்துக்கொண்டு வரும், மாதம் நாள், நாழிகை, வினாடி, ஒரு வினாடியில் நூற்றில்
ஒரு பங்கு நேரம் - இவ்வளவையும் கணக்கிட்டுப் பார்த்தல்லவா சொல்ல வேண்டும்? போகட்டும்; என் ஜோசியம் 
முன் பின்னாக இருந்தாலும் என்றாயே? அதன் பொருள் என்ன? நாள் உனக்குச் சொன்னது ஒன்றும் 
பலிக்கவில்லையா?" 
"அதையும் உங்கள் ஜோசியத்திலேயே கண்டுபிடித்துக் கொள்ள வழியில்லையா?" 
"உண்டு, உண்டு! ஜோசியத்தினாலும் கண்டுபிடிக்கலாம்; ஊகத்தினாலும் கண்டுபிடிக்கலாம்.  உனக்கு
நான் கூறியவை பலித்துத்தான் இருக்க வேண்டும்.  இல்லாவிடில் நீ திரும்பவும் இந்தக் குடிசைக்குள் வருவாயா?"
"ஆமாம், ஆமாம்.  உம்முடைய சோதிடம் பலிக்கத்தான் செய்தது." 
"அப்படிச் சொல்லு! எந்த விதத்தில் பலித்தது, அப்பனே?" 
"நீர் எனக்குச் சொன்னது அப்படியே பலித்தது.  'நீ போகிற காரியம் நடந்தால் நடக்கும்; 
நடக்காவிட்டால் நடக்காது' என்றீர், அந்தப்படியே நடந்து. 'நடந்தது' என்று நான் சொல்வதுகூடப் பிசகு.
என்னைக் கண்டவுடனேயே ஓட்டம் பிடித்து ஓடிற்று!" 
"தம்பி! நீ பெரிய வேடிக்கைக்காரனாயிருக்கிறாய்!" 
"உண்மையான வார்த்தை, நான் வேடிக்கைக்காரன் தான்! அத்துடன் கொஞ்சம் கோபக்காரன்!" 
"இந்தக் குடிசைக்குள் வரும்போது கோபத்தை வௌியில் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரவேண்டும்." 
"அப்படிச் செய்யலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால் உம்முடைய சீடனை வீட்டு வாசலில்
க
ாணவில்லை.  கோபமூட்டையைத் திண்ணையில் வைத்தால் யாராவது அடித்துக்கொண்டு போய் விட்டால் என்ன
செய்கிறது என்று உள்ளே கொண்டு வந்துவிட்டேன்.  உம்முடைய சீடன் எங்கே சோதிடரே? போன தடவை 
அவன் என்னை வாசலில் தடுத்து நிறுத்தப் பார்த்தது அப்படியே என் நினைவில் இருக்கிறது!" 
"இன்றைக்கு ஐப்பசி அமாவாசை அல்லவா? அதற்காக அவன் கொள்ளிடக்கரைக்குப் போயிருப்பான்."
"அமாவாசைக்கும், கொள்ளிடக் கரைக்கும் என்ன சம்பந்தம்?" 
"கொள்ளிடக்கரையில் காலாமுகர்களின் மகா சங்கம் இன்று நடைபெறுகிறது.  என் சீடன் 
காலாமுகத்தைச் சேர்ந்தவன்." 
"சோதிடரே! நான் சைவ மதத்தையே விட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்."
"விட்டுவிட்டு..." 
"உமது சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி இருக்கிறாரே..." 
"திருமலையைச் சொல்கிறாயாக்கும்!" 
"ஆம்; அவரிடம் தீட்சை பெற்று உடம்பெல்லாம் நாமத்தைப் போட்டுக்கொண்டு, வீர 
வைஷ்ணவனாகி விடலாம் என்று உத்தேசிக்கிறேன்." 
"அது ஏன் அப்படி?" 
"காலாமுகச் சைவர்கள் சிலரைப் பார்த்தேன்.  இங்கே வருகிற வழியிலே கூடப் பார்த்தேன்.  
அவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் மண்டை ஓடுகளையும் பார்த்த பிறகு சைவத்தை விட்டு 
விடலாம் என்று தோன்றுகிறது." 
"தம்பி! எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்திருக்கும் உனக்கு மண்டை ஓடுகளைக் கண்டு 
என்ன பயம்?" 
"பயம் ஒன்றுமில்லை; அருவருப்புதான். போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்வதற்கும் மண்டை
ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?" 
"உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி 
எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?" 
"அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார்.  அதற்காகப் பிறகு எவ்வளவோ
வருத்தப்பட்டார்.  அவர் கூட மண்டை ஓட்டை மால
யாகப் போட்டுக் கொள்ளவில்லை; கையிலும் 
எடுத்துக்கொண்டு திரியவில்லையே? காலாமுகர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?" 
"வாழ்க்கை அநித்தியம் என்பதே மறந்து விடாமலிருப்பதாற்காக அவர்கள் அவ்வாறு
செய்கிறார்கள்.  நீயும் நானும் திருநீறு பூசிக்கொள்கிறோமே, அது மட்டும் என்ன? இந்த மனித உடம்பு
நிலையானது அல்ல.  ஒரு நாள் சாம்பலாகப் போகிறதென்பதை மறந்துவிடாமலிருப்பதற்குத்தானே திருநீறு
பூசிக்கொள்கிறோம்!" 
"மனித தேகம் அநித்தியம் என்பது சரிதான்; இது எரிந்து சாம்பலாகும்; அல்லது மண்ணோடு
மண்ணாகும், சிவபெருமானுடைய திருமேனி அப்படியல்லவே! பரமசிவன் ஏன் கையில் மண்டை ஓட்டை
வைத்திருக்கிறார்?" 
"தம்பி! சிவபெருமானுடைய கையில் உள்ள மண்டை ஓடு ஆணவத்தைக் குறிக்கிறது. 
ஆணவத்தை வென்றால் ஆனந்த நிலை ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.சிவபெருமான் கையில் 
மண்டை ஓட்டுடன் ஆனந்த நடனம் செய்கிறார் அல்லவா?" 
"மண்டை ஓடு எப்படி ஆணவத்தைக் குறிக்கும்? எனக்குத் தெரியவில்லையே?" 
"உனக்குத் தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்கிறது.  தம்பி! மண்டை ஓடு ஆணவத்தைக் 
குறிப்பது எப்படி என்பதை மட்டும் இப்போது தெரிந்துகொள்.  பிரம்மதேவனும், திருமாலும் ஒருசமயம் கர்வம்
கொண்டார்கள்.  'நான் பெரியவன்; நான்தான் பெரியவன்' என்று சண்டையிட்டார்கள்.  சிவன் அவர்களுக்கு
நடுவில் வந்தார் 'என்னுடைய சிரசை ஒருவரும் என்னுடைய பாதத்தை ஒருவரும் கண்டுபிடித்துக் கொண்டு 
வாருங்கள்; யார் பார்த்துவிட்டு முதலில் வருகிறாரோ, அவர்தான் உங்களில் பெரியவர்' என்றார்.  மகாவிஷ்ணு 
வராக உருவங்கொண்டு சிவனுடைய பாதங்களைப் பார்ப்பதற்குப் பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்.  
பிரம்மா அன்னப் பறவையின் உருக்கொண்டு வானத்தில் பறந்து சென்றார்.  திருமால் திரும்பி வந்து சிவனுடைய
அடியைக்காண முடிய
ில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார்.  பிரம்மா திரும்பி வந்து சிவனுடைய 
முடியைப் பார்த்து விட்டதாகப் பொய் சொன்னார்! அப்போது சிவன் பிரம்மாவுக்கிருந்த ஐந்து தலைகளில் 
ஒன்றை கிள்ளி எடுத்து அவரைத் தண்டித்தார்.  ஆணவம் காரணமாகப் பிரம்மா சண்டையிட்டுப் பொய் 
சொன்னபடியால், அவருடைய தலை ஆணவத்துக்குச் சின்னமாயிற்று...." 
வந்தியத்தேவன் எதையோ நினைத்துக் கொண்டவன் போல் இடிஇடி என்று சிரித்தான்.  
"என்னத்தைக் கண்டு இப்படி சிரிக்கிறாய், தம்பி!" 
"ஒன்றையும் கண்டு சிரிக்கவில்லை. ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது; அதனால் சிரித்தேன்." 
"அது என்ன விஷயம்? இரகசியம் ஒன்றுமில்லையே?" 
"இரகசியம் என்ன? பிரம்மாவைத் தண்டித்ததுபோல் என்னையும் தண்டிப்பதாயிருந்தால், குறைந்த
பட்சம், பதினாயிரம் தலையாவது எனக்கு இருந்தால்தான் சரிக்கட்டி வரும்! அதை எண்ணித்தான் சிரித்தேன்."
"அத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாயாக்கும்!" 
"ஆம், சோதிடரே! அது என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது.  பொன்னியின் செல்வரைச் 
சந்தித்த பிறகு உண்மையே சொல்வதென்று தீர்மானித்திருந்தேன்.  ஒரு தடவை ஒரு முக்கியமான 
உண்மையையும் சொன்னேன்.  அதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள்; ஒருவரும் நம்பவில்லை!" 
"ஆம்; தம்பி! காலம் அப்படிக் கெட்டுப் போய்விட்டது.இந்த நாளில் பொய்யையே ஜனங்கள்
நம்புவதில்லை; உண்மையை எப்படி நம்பப் போகிறார்கள்?" 
"உம்முடைய ஜோதிடத்தின் கதியும் அப்படித் தானாக்கும்! சோதிடரே! இளவரசர் 
அருள்மொழிவர்மரைப் பற்றி நீர் கூறியது நினைவிருக்கிறதா! வானத்திலே வடதிசை அடிவாரத்தில் 
நிலைத்து நின்று ஒளிரும் துருவ நட்சத்திரம் போன்றவர் பொன்னியின் செல்வர் என்று நீர் 
சொல்லவில்லையா?" 
"சொன்னேன்; அதனால் என்ன?" 
"அவரைப் பற்றிய செய்தியை நீர் கேள்விப்படவில்லையா?" 
"கேள
்விப்படாமல் எப்படி இருக்க முடியும்? நாடு நகரமெல்லாம் அதே பேச்சாகத்தானே
இருக்கிறது?" 
"துருவ நட்சத்திரம் கடலில் மூழ்கிவிட்டதென்று நீர் கேள்விப்பட்டதுண்டா?" 
"துருவ நட்சத்திரம் கடலில் மூழ்காது.  ஆனால் அந்த நிலைகுலையா நட்சத்திரத்தையும் மேகங்கள்
சில சமயம் மறைக்கலாம், அல்லவா? இன்றைக்குக்கூட வட திசையில் மேகங்கள் குமுறுகின்றன இன்று இரவு 
நீ எவ்வளவு முயன்றாலும் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாது.  அதனால் அந்த நட்சத்திரம் இல்லாமற்
போய்விடுமா?" 
"அப்படியா சொல்கிறீர்? பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையான செய்தி ஏதாவது
உமக்குத் தெரியுமா?" 
"எனக்கு எப்படித் தெரியும்? நீதான் அவருடன் கடைசியாகக் கடலில் குதித்தாய் என்று
பேச்சாயிருக்கிறது.தெரிந்திருந்தால், உனக்கு அல்லவா தெரிந்திருக்கவேண்டும்.  உன்னைக் கேட்கலாம்
என்று எண்ணியிருந்தேன்." 
வந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பி, "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி
இருக்கிறது?" என்று வினவினான்.  
"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது.  இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். 
 
தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும்.  
கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.  
வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது.  தஞ்சையில் பாரிச வாயு
பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்கு சுரம் வந்து கிடக்கும்
பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும்,
இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை
வாளை வைத்துக்கொ
்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள். 
"அதெல்லாம் போகட்டும், சோதிடரே! இராஜ குலத்தாரின் விஷயம் நமக்கு என்னத்திற்கு? நான் 
இப்போது மேற்கொண்டு போகும் காரியம் எப்படி முடியும், சொல்லுங்கள்!" 
"முன்னே உனக்குச் சொன்னதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது அப்பனே! எத்தனையோ
விபத்துக்கள் உனக்கு வரும்; அவற்றையெல்லாம் வெற்றி கொள்வதற்கு எதிர்பாராத உதவி கிடைக்கும்!"
என்றார் சோதிடர்.
இப்போது வாசலில் வந்து கொண்டிருப்பது விபத்தா, உதவியா என்று வந்தியத்தேவன் 
எண்ணமிட்டான்.  ஏனெனில் அச்சமயம் வாசலில் ஆடவர்களின் குரல்களுடன், பெண்களின் குரல்களும் 
கேட்டன.  இருவரும் வாசற்புறத்தை நோக்கினார்கள்.  
மறுநிமிடம் வானதி தேவியும் அவளுடைய பாங்கியும்  உள்ளே வந்தார்கள்.  
வந்தியத்தேவன் எழுந்து நின்று மரியாதையுடன் "தேவி! மன்னிக்க வேண்டும்! தாங்கள் இங்கே
வரப்போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால், நான் வந்திருக்கமாட்டேன்!..." என்றான்.  
பக்க தலைப்பு
முப்பத்து  மூன்றாம்  அத்தியாயம் 
வானதி  கேட்ட உதவி 
"ஐயா, என்னிடம் ஏன் அவ்வளவு கோபம்? தங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?" என்ற
கொடும்பாளூர் இளவரசியின் தீனமான குரல் வந்தியத்தேவனை உருக்கி விட்டது.  இந்தப் பெண்ணிடம்தான் 
உண்மையில் எதற்காகக் கோபம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  பூங்குழலி ஒரு கணம் அவன்
மனக்கண் முன் வந்து மறைந்தாள்.  அவளுக்காக இந்தப் பெண்ணிடம் கோபங்கொள்ளுவது என்ன நியாயம்? 
"அம்மணி! மன்னிக்கவேண்டும்.  அந்தமாதிரி ஒன்றும் நான் சொல்லவில்லை.  தாங்கள்
சோதிடரைப் பார்த்துவிட்டுப் போகும் வரையில் நான் வௌியில் காத்திருப்பேன் என்றுதான் சொன்னேன். 
எனக்கு ஒன்றும் அவசரமில்லை.  இப்
ோதுகூட..." 
"தாங்கள் வௌியேறவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.  தங்களுக்கு அவசரமில்லை என்று அறிந்து
மகிழ்ச்சி அடைகிறேன்.  உண்மையில் நான் இங்கே சோதிடரைப் பார்க்க வரவில்லை.  இவருடைய
சோதிடத்தில் எனக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லாமற் போய் விட்டது..." 
"தேவி! தங்கள் சித்தம் என் பாக்கியம்! ஒரு காலத்தில் என் சோதிடம் பொய்யாகவில்லை
என்பதை தாங்களே உணர்வீர்கள். உணர்ந்து, இந்த ஏழையைப் பாராட்டுவீர்கள்!" என்றார் சோதிடர்.
"அப்போது பார்த்துக் கொள்ளலாம்!" என்று வானதி கூறிவிட்டு வந்தியத்தேவனைப் பார்த்து,
"ஐயா! நான் தங்களைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன். வழியில் தாங்கள் குதிரை மீது சென்றதைப்
பார்த்தேன்.  நின்று விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன்.  பராமுகமாகப் போய்விட்டீர்கள்! அதைப் பற்றி
நான் அதிகமாக ஆச்சரியப்படவில்லை.  இந்த அநாதைப் பெண்ணிடம் அவ்வளவு அக்கறை எதற்காக இருக்க
வேண்டும்?" என்றாள்.
வந்தியத்தேவனுடைய கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.  
"தேவி இது என்ன வார்த்தை? கொடும்பாளூர் பராந்தக சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, 
தென்திசைச் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளையபிராட்டியின் 
அந்தரங்கத்துக்கு உகந்த தோழி, இத்தகைய தங்களை அநாதைப் பெண் என்று யார் ஒப்புக் 
கொள்வார்கள்? பாதையில் நின்று விசாரிப்பது மரியாதைக் குறைவாயிருக்குமென்று வந்து விட்டேன்.  
வேறொன்றுமில்லை.  என்னால் ஏதாவது ஆகவேண்டிய காரியம் இருந்தால்..." 
"ஆம், ஐயா! தங்களால் ஆகவேண்டிய காரியம் அவசியம் இருக்கிறது.  தங்களிடம் ஒரு
முக்கியமான உதவி கோருவதற்காகத் தான் இந்த வீட்டுக்குள் நான் வந்தேன்..." 
"சொல்லுங்கள்; என்னால் முடியக்கூடிய காரியமாயிருந்தால்..." 
"தங்களால் முடியாத காரியம்கூட ஒன்று இருக்கமுடியுமா, என்
? இலங்கைப் பிரயாணத்தின் 
போது தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஓரளவு நானும் கேட்டறிந்திருக்கிறேன்.  நான் கோரும் 
உதவியை அளிப்பதாக முதலில் வாக்குத்தர முடியுமா?" 
வந்தியத்தேவன் தயக்கத்துடன் "தேவி! உதவி எத்தகையது என்று சொன்னால் நல்லது!" என்றான். 
"ஆம்; தங்களை ஏமாற்றி நான் வாக்குறுதி பெறக்கூடாது தான்.  ஆகையால் காரியத்தைச் சொல்லி
விடுகிறேன்.  சோதிடருக்கும் தெரியலாம்; அதனால் பாதகம் இல்லை.  நான் புத்த தர்மத்தை மேற்கொண்டு
பிக்ஷூணி ஆகிவிடுகிறது என்று தீர்மானித்திருக்கிறேன்..." 
"என்ன? என்ன?" 
"இது என்ன வார்த்தை?"
"கூடவே கூடாது!" 
"உலகம் பொறுக்காது!"
"நடவாத காரியம்!" 
இவ்வாறெல்லாம் சோதிடரும், வந்தியத்தேவனும் மாற்றி மாற்றிச் சொன்னதைக் கேட்டுக்
கொண்டிருந்து விட்டு, வானதி, "ஆம்; புத்த சந்நியாசினி ஆவதென்று முடிவு செய்து விட்டேன்.  அதில் ஏன்
உங்களுக்கு அவ்வளவு ஆட்சேபம்? தவறு என்ன? பழந்தமிழ் நாட்டில் எத்தனையோ பெண்கள் துறவறம்
மேற்கொண்டதில்லையா? மாதவியின் புதல்வி மணிமேகலை துறவறம் நடத்தித் தெய்வத்தன்மை பெறவில்லையா?
'மணி மேகலா தெய்வம்' என்று அவளை நாம் இன்று போற்றவில்லையா? அவ்வளவு பெரிய ஆசையெல்லாம்
எனக்குக் கிடையாது. இந்தப் பயனற்ற வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றேன்.அதில் தவறி விட்டேன். 
கடவுளுடைய விருப்பம் நான் உயிரோடு இன்னும் சில காலம் இருக்கவேண்டும் என்பது போலும்.அப்படி
இருக்கக்கூடிய காலத்தைப் புத்த மடம் ஒன்றில் சேர்ந்து ஜீவகாருண்யத் தொண்டு புரிந்து கழிக்க
விரும்புகிறேன்.  இதற்குத் தாங்கள் எனக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள் அல்லவா?" என்றாள்.  
வந்தியத்தேவன் மனத்தில் ஒரு சிறிய சந்தேகம் உதித்தது.  அது அவனைத் திடுக்கிடச் செய்தது.
"தேவி! தங்கள் தீர்மானம் நியாயமன்று எனினும் அதை
ச் சொல்லும் உரிமை எனக்குக் கிடையாது.  
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தங்களுக்கு அதைப்பற்றி யோசனை சொல்ல வேண்டும்.  
தங்கள் பெரிய தந்தை சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி கூடிய சீக்கிரம் திரும்பி வரப்போகிறார் என்று
தெரிகிறது...." 
"ஐயா! நான் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை; யாருடைய யோசனையையும் கேட்கப்
போவதில்லை.  தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன்.  தங்களுடைய உதவியைக் கோருகிறேன்..." 
"இது விஷயத்தில் நான் என்ன உதவி செய்யக்கூடும், தேவி!" 
"சொல்லுகிறேன்.  நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போவதற்காக நான் புறப்பட்டேன். 
அங்கே சென்று புத்த குருமார்களை அடுத்துத் தீட்சை பெற்றுக் கொள்ள எண்ணிக் கிளம்பினேன்.  வழித்
துணைக்குத் தாங்கள் என்னுடன் நாகைப்பட்டினம் வரையில் வரவேண்டும்.  அதுவே நான் கோரும் உதவி!" 
வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.  கொடும்பாளூர் இளவரசி இலேசுப்பட்டவள் அல்ல. 
நாமும் இளைய பிராட்டியும் பேசிக் கொண்டது அரைகுறையாக இவள் காதில் விழுந்திருக்க வேண்டும். 
தன்னிடம் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளப் பார்க்கிறாள்.  நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப்
போகப் புறப்பட்டது, இளவரசரை அங்கே சந்திக்கும் நோக்கத்துடனேதான்! அதற்கு ஒருநாளும் தான்
உடந்தையாயிருக்க முடியாது.  
"அம்மணி! ரொம்பவும் மன்னிக்க வேண்டும்.  தாங்கள் கோரும் உதவி என்னுடைய சக்திக்கு
அப்பாற்பட்டது." 
"இது என்ன விந்தை? ஈழநாட்டுக்குச் சென்று எத்தனை எத்தனையோ அற்புதங்களைச் சாதித்து
வந்தவருக்கு இந்த அநாதைப் பெண்ணை நாகைப் பட்டினத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது முடியாத
காரியமாகுமா?" 
"தேவி! முடியாத காரியம் ஒன்றுமில்லை.  ஆனால் நான் இச்சமயம் மேற்கொள்ள இயலாது. முதன்
மந்திரியும், இளைய பிராட்டியும் என
னை அவசரமாகக் காஞ்சிக்குப் போகும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். 
அவர்கள் கொடுத்த ஓலையுடன் போகிறேன்.  ஆகையினால்தான் முடியாது என்று சொன்னேன்.  வேறொரு
சந்தர்ப்பமாயிருந்தால்..." 
"ஆம், ஆம்! விருப்பமில்லாவிட்டால் எத்தனையோ காரணங்கள் சொல்லலாம்.  அதனால் பாதகம்
இல்லை.  தனியாகப் பிரயாணம் செய்வது என்ற எண்ணத்துடனேதான் கிளம்பினேன்.  வழியில் சிற்சில
இடங்களில் காலாமுகர்களின் கூட்டங்களைப் பார்த்ததும் கொஞ்சம் பயம் உண்டாயிற்று.  சகல ஜீவர்களையும்
காப்பாற்றக் கடமைப்பட்ட கடவுள் இருக்கிறார்.  அவரிடம் பாரத்தைப் போட்டு விட்டுப் புறப்படுகிறேன்?
உலகத்தைத் துறந்து சந்நியாசினியாக முடிவு செய்த ஒரு பேதைப் பெண்ணை யார் என்ன செய்து
விடுவார்கள்? போய் வருகிறேன்.சோதிடரே!" என்று கூறிவிட்டு வானதி புறப்பட்டாள்.
அவளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டே சோதிடர், "தேவி! தேவி! இருட்டும் சமயமாகி 
விட்டதே! அமாவாசைக் கங்குல்.  அதோடு வட கிழக்கில் மேகங்கள் குமுறுகின்றன.  இரவு இந்த 
ஏழையின் குடிசையில் தங்கிவிட்டுக் காலையில் போகலாமே!" என்றார்.  
"இல்லை சோதிடரே! மன்னிக்க வேண்டும்.  இரவு திருவாரூர் போய்த் தங்குவதாக எண்ணம். இந்த
மனிதர்தான் துணைக்கு வர மறுத்துவிட்டார்.  திருவாரூரில் யாராவது கிடைக்காமலா போவார்கள்? அப்படி
நான் என் உயிரைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.  இதனால் யாருக்கு என்ன உபயோகம்?..." 
சோதிடர் காதிலும், வந்தியத்தேவன் காதிலும் கடைசியாக விழுந்த வார்த்தைகள் இவைதான். 
வாசலில் காத்திருந்த பல்லக்கில் வானதி ஏறிக் கொண்டாள், பல்லக்கு மேலே சென்றது.  
பல்லக்குக் கண்ணுக்கு மறையும் வரையில் வந்தியத்தேவனும் சோதிடரும் அதைப் பார்த்த வண்ணம் 
நின்றார்கள்.  
பிறகு வந்தியத்தேவன் "கொடும்பாளூர் இளவரசி சில காலத்துக்கு முன்புவரையில் பெரு
்
பயங்கொள்ளியாயிருந்தாள்.  இளைய பிராட்டியின் மற்றத் தோழிகள் இவளை அதற்காகப் பரிகசித்துக்
கொண்டிருந்தார்கள்.  பொம்மை முதலையை நதியில் மிதக்க விட்டு இவளைப் பயமுறுத்திப் பார்த்தார்கள்;
நான் கூட அதில் ஏமாந்து போனேன்.  இப்போது திடீரென்று இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியம் எப்படி
வந்தது? இவள் தனியே பிரயாணம் செய்யக் கிளம்பியது என்ன விந்தை? இளையபிராட்டி இதற்குச்
சம்மதித்ததுதான் எப்படி?" என்றான்.  
"எனக்கும் அது ஆச்சரியத்தையே அளிக்கிறது.  சென்றமுறை இப்பெண் இந்தக் குடிசைக்கு வந்திருந்த
போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்; தயங்கித் தயங்கி ஈனஸ்வரத்தில் பேசினாள். 
அந்தக் கொடும்பாளூர் இளவரசி தானா இவள் என்றே சந்தேகமாயிருக்கிறது.  இன்று எவ்வளவு படபடப்பாகவும்
துணிச்சலாகவும் பேசினாள்?" 
"இப்படிப்பட்ட திடீர் மன மாறுதலுக்கு என்ன காரணமாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்று
கேட்டான்.  
"ஏதோ முக்கியமான செய்தி இவளுடைய மனத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்க
வேண்டும்." 
"அப்படி என்ன முக்கியமான செய்தி இருக்க முடியும்?" 
"ஏன்? பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்ட செய்தியே போதாதா? இந்தப் பெண்ணுக்கும்
இளவரசருக்கும் திருமணம் நடக்கக் கூடும் என்று பேச்சாயிருந்ததே!" 
இவ்விதம் சோதிடர் கூறியபோது, வந்தியத்தேவன், 'பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டுவிட்ட 
செய்தியா, அல்லது அவர் பிழைத்து நாகப்பட்டினத்தில் இருக்கிறார் என்ற செய்தியா அல்லது பூங்குழலியைப் 
பற்றி நான் கூறிய செய்தியா, எது இவளுக்கு இத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கக் கூடும்?' என்று 
சிந்தனை செய்தான்.  
"ஆம்; சோதிடரே! கொடும்பாளூர் வம்சத்தார் பரம்பரையான வீரசைவர்களாயிற்றே! இந்தப்
பெண்ணுக்குத் திடீர் என்று புத்த மதத்த
ல் பற்று உண்டாவானேன்?" என்றான்.  
"பூர்வஜன்ம வாசனையாயிருக்கலாம்" என்றார் சோதிடர்.  
"நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புறப்படுவானேன்?" 
"அதுதான் எனக்கும் வியப்பை அளிக்கிறது!" 
"உம்முடைய சோதிட சாஸ்திரத்தில் பார்த்துச் சொல்ல முடியாதா?" 
"தம்பி! சோதிட சாஷ்திரத்தின் மூலம் இதை எப்படி அறியலாம்? இது ஒற்றாடல் சாஸ்திரத்தைச் 
சேர்ந்தது." 
"ஒற்றாடல் என்று ஒரு சாஸ்திரமா?" 
"ஏன் இல்லை? பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளைப் பற்றி நீ கேட்டதில்லையா?" 
"அப்படி ஒரு நூல் உண்டு என்று கேட்ட ஞாபகமிருக்கிறது." 
"அந்த நூலில் 'ஒற்றாடல்' என்று ஓர் அதிகாரம் இருக்கிறது.  அதில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன." 
அப்படியா? அவற்றில் இரண்டொரு நல்ல பாடங்கள் சொல்லுங்கள்!" 
"எல்லாம் நல்ல பாடல்கள்தான்.  இதைக்கேள்:- 
'வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு 
அனைவரையும் ஆராய்வது ஒற்று.' 
அரசன் தன்கீழ் ஊழியம் செய்வோரையும், தன்னுடைய சொந்த உறவினரையும், அவ்வாறே தன் பகைவர்களையும் 
ஒற்றர்கள் வைத்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர்.  இன்னும் கேள்:- 
'துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து 
என்செயினும் சோர்வில தொற்று.' 
துறவிகளைப் போல் வேடம் பூண்டும், செத்தவர்களைப் போல் பாசாங்கு செய்தும், எதிரிகள் எவ்வளவு 
துன்புறுத்தினாலும் இரகசியத்தை வௌியிடாமலும், சோர்வில்லாமல் உழைப்பவன் ஒற்றன் என்று 
வள்ளுவர் கூறுகிறார்.  அரசர்கள் ஒரு ஒற்றனுடைய காரியத்தை இன்னொரு ஒற்றனைக் கொண்டு 
ஒற்றறிய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.  
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்  
ஒற்றினால் ஒற்றிக் கொளல்'.  
இந்தப் பாடல்களையெல்லாம் நீ கேட்டதில்லை யென்றா சொல்கிறாய்?" 
வந்தியத்தேவனுக்கும் ஒரே வியப்பாய்ப
 போய் விட்டது. இனி அவகாசம் கிடைத்ததும்,
திருக்குறளைப் படித்துவிட்டுத் தான் வேறுகாரியம் பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டான்.  ஆயிரம்
அண்டுகளுக்கு முன்னால் இப்படியெல்லாம் இராஜரீக முறைகளைப் பற்றி எழுதியவர் எத்தகைய 
அறிவாளியாயிருக்க வேண்டும்? 
இன்னும் சற்றுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தியத்தேவன் புறப்பட்டான்.  "இன்றிரவு இங்கே
தாமதித்து விட்டுக் காலையில் போகலாமே!" என்று சோதிடர் கூறியதை அவன் கேட்கவில்லை.  
"இன்னொரு சமயம் வருகிறேன்; அப்போது தங்கள் விருந்தாளியாயிருக்கிறேன்" என்றான்.  
"இன்னொரு சமயம் நீ இங்கு வரும்போது என்னுடைய சோதிடங்கள் பலித்திருப்பதைக் காண்பாய்!"
என்றார் சோதிடர்.
"ஐயா, சோதிடரே! நீர் சோதிடம் ஒன்றுமே சொல்லவில்லையே? சொல்லியிருந்தால் அல்லவா 
அவை பலிக்க முடியும்?" என்று கூறி நகைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரைமீது ஏறிப் புறப்பட்டான்.  
சோதிடர் வீட்டிலிருந்து சற்றுத்தூரம் வரையில் ஒரே பாதைதான் இருந்தது.  பல்லக்குச் சென்ற
பாதையிலேயே அவனும் போக வேண்டியிருந்தது.  பின்னர் பாதைகள் இரண்டாகப் பிரிந்தன.  ஒரு பாதை
வடக்கு நோக்கிக் கொள்ளிடக் கரைக்குச் சென்றது.  இன்னொன்று, தென்கிழக்காகத் திருவாரூர் நோக்கிச்
சென்றது.திருவாரூர்ச் சாலையில் வெகு தூரத்தில் பல்லக்குப் போய்க்கொண்டிருப்பதை வந்தியத்தேவன்
பார்த்தான்.  ஒரு கணம் அவனுடைய உள்ளம் தத்தளித்தது.
கொடும்பாளூர் இளவரசி கேட்ட உதவியை மறுக்க வேண்டி வந்து விட்டதே! உண்மையிலேயே 
அவளுக்கு உதவி தேவையிருக்குமானால்..  வழியில் அபாயம் ஏதேனும் ஏற்படுமானால் - பின்னால் அந்தச் செய்தி 
தெரியும்போது என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியுமா? வழித்துணை போக மறுத்தது பற்றி நெடுங்காலம் 
வருந்த வேண்டியிராதா? ஆயினும் என்ன செய்வது? முதன் மந
திரியும் இளைய பிராட்டியும் இட்ட கட்டளை மிகக் 
கண்டிப்பானது.  வேறு காரியங்களில் நான் இப்போது தலையிட முடியாது.  முன்னர் சில முறை அப்படிச்
சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொல்லைப்பட்டதெல்லாம் போதும்.  ஆழ்வார்க்கடியான் வேறு
எச்சரித்திருக்கிறான்.  அன்றியும் வானதி தேவியைத் தான் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு
அழைத்துச் செல்வதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம்...
இவ்வாறு முடிவு செய்த வந்தியத்தேவன் குதிரையைக் கொள்ளிடக்கரைப் பாதையில் திருப்பினான். 
அதே சமயத்தில் 'வீர்' என்ற ஓர் அபயக்குரல், மிக மிக இலேசான பெண் குரல், ஒலித்ததாகத் 
தோன்றியது, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான், பல்லக்கைக் காணவில்லை. அங்கேயிருந்த சாலை 
முடுக்கில் திரும்பியிருக்கக்கூடும்.  ஆயினும் போய்ப்பார்த்து விட வேண்டும் என்ற முடிவுக்கு ஒரு கணத்தில் வந்து 
விட்டான் வந்தியத்தேவன்.  அதனால் அப்படியொன்றும் தாமதம் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  குதிரை 
பாய்ந்து சொன்றது.  வெகுசீக்கிரத்தில் சாலை முடுக்கின் அருகில் வந்துவிட்டது.  அங்கே அவன் கண்ட 
காட்சி வந்தியத்தேவனுடைய இதயமே நின்றுவிடும்படி செய்தது.  பெண் ஒருத்தி ஓரத்து மரம் ஒன்றில் 
கட்டப்பட்டிருந்தாள்.  அவளுடைய வாயில் துணி அடைக்கப் பட்டிருந்தது.  இருட்டும் நேரமாதலால் யார் என்று 
முதலில் தெரியவில்லை.  அருகில் சென்று பார்த்தான். வானதியின் பல்லக்குடன் நடந்து சென்ற சேடிப் பெண்
என்று தெரிந்தது.  அவள் முனகிக் கொண்டே தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். 
வந்தியத்தேவன் குதிரையிலிருந்து பாய்ந்து இறங்கி, முதலில் வாயில் அடைத்திருந்த துணியை எடுத்து விட்டு,
கட்டுக்களையும் அவிழ்த்து விட்டான்.  அவ்வளவு பலமாகக் கட்டப்படவில்லை என்பது அவன் உள்மனத்தில்
ப
ிந்தது.  
"பெண்ணே என்ன நடந்தது? சீக்கிரம் சொல்! பல்லக்கு எங்கே? உன் எஜமானி எங்கே?" என்று
பதறிக் கொண்டே கேட்டான்.  
சேடிப் பெண் உளறிக் குளறி மறுமொழி கூறினாள்.  அந்தச் சாலை முடுக்கில் பல்லக்குத் 
திரும்பியபோது திடீரென்று ஏழெட்டு மனிதர்கள் பக்கத்து மரங்களின் மறைவிலிருந்து பாய்ந்து வந்தார்கள்.  
அவர்கள் சிலருடைய கைகளில் மண்டை ஓடுகளும் சூலாயுதங்களும் காணப்பட்டன.  அவர்களில்
இரண்டுபேர் சேடிப் பெண்ணை மண்டையில் அடித்துக் கீழே தள்ளினார்கள்.  வாயில் துணியை அடைத்தார்கள். 
இதற்குள் மற்றவர்கள் பல்லக்குச் சுமந்தவர்களிடம் ஏதோ பயங்கரமான குரலில் சொல்லவே, அவர்கள் பாதையை
விட்டு விலகிக் குறுக்கு வழியில் பல்லக்குடன் ஓடினார்கள்....  மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள்,
வானதி தேவியின் குரலே கேட்கவில்லை.  இவ்விதம் கூறிவிட்டு, பல்லக்குச் சென்ற குறுக்குப் பாதையையும்
அச்சேடிப்பெண் சுட்டிக் காட்டினாள்.  
"பெண்ணே! நீ அந்தக் குடந்தை சோதிடர் வீட்டிற்குப் போயிரு! நான் உன் எஜமானியைக்
கண்டுபிடிக்கப் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் குதிரை மீது பாய்ந்து ஏறினான். 
குதிரை இராஜபாட்டையிலிருந்து திரும்பிக் குறுக்கு வழியில் சென்றது.  மேடு, பள்ளம், காடு, செடி என்று
பாராமல் அதிவேகமாய்ச் சென்றது.  
பக்க தலைப்பு
முப்பத்து  நான்காம்  அத்தியாயம் 
தீவர்த்தி  அணைந்தது! 
அமாவாசை முன்னிரவு, நன்றாக இருள் சூழ்ந்து விட்டது.  வடதிசையில் தோன்றி மேலே வந்து
கரிய மேகங்கள் இப்போது வானவௌி முழுதும் பரவி மறைத்து விட்டன.  ஆகாசத்தில் ஒரு நட்சத்திரம் கூடக்
கண் சிமிட்டவில்லை.  மரங்களின் மீதும் புதர்களின் மீதும் பறந்த மின்மினிப் பூச்சிகள் சிறிது
வௌிச்சம் அளித்தன.  அதன் உதவிகொண்டு வந்தியத்தேவன் 
ுதிரையைச் செலுத்திக் கொண்டு போனான். 
எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம், போவதனால் பயன் ஏதேனும் ஏற்படுமா என்பதும் ஒன்றும்
தௌிவாகவில்லை.  குந்தவைப் பிராட்டியின் அருமைத் தோழிக்கு ஆபத்து வந்திருக்கிறது. அவளைக்
காப்பாற்ற முயலுவது தன் கடமை. அப்புறம் கடவுள் இருக்கிறார்! 
ஒரு நாழிகை நேரம் குதிரை ஓடிய பிறகும் பல்லக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  வெறும்
பைத்தியக்கார வேலையில் இறங்கி விட்டோமோ என்ற யோசனை வந்தியத்தேவன் மனதில் உதித்தது,
குதிரையை நிறுத்தினான்.  அச்சமயம் சற்றுத் தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது.  கூர்ந்து கவனித்தான்!
குதிரைக் காலடிச் சத்தம் போலிருந்தது.  ஆம், குதிரைதான்! ஒரு குதிரையா, பல குதிரைகளா என்று
தெரியவில்லை.  பல்லக்கைக் காவல் புரிந்து கொண்டு போகும் குதிரை வீரர்களாயிருக்கலாம்.  இனி
ஜாக்கிரதையாகப் போக வேண்டும்.  திடீரென்று பெருங்கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. 
அதனால் வானதி தேவிக்கும் பயன் இல்லை; தன் காரியமும் கெட்டுப் போகும்....  
மெள்ள மெள்ள நின்று நின்று, குதிரையை விட்டுக் கொண்டு போனான்.  முன்னால் போவது ஒரே
குதிரைதான் என்று ஒருவாறு நிச்சயித்துக் கொண்டான்.  சற்று நேரத்த்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு
மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போலத் தோன்றியது.  தான் பின் தொடர்வது தெரியாமல்
மறைந்து நிற்க விரும்பினான் சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான்.  பாழடைந்த மண்டபம் ஒன்று இடிந்த
சவர்களுடன் பக்கத்தில் காணப்பட்டது.  அதன் அருகே சென்று மொட்டைச் சுவர் ஒன்றின் மறைவில் குதிரையை
நிறுத்திக் கொண்டான்.  முன்னால் சென்று மேட்டில் ஏறிய குதிரையைக் கண்கள் வலிக்கும் படியாக இருட்டில்
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.  
"யார் அங்கே?" என்ற குரல் வந்தியத்தேவனைத் திடுக்கிடச் 
ெய்தது.  அது அவனுக்குப்
பழக்கப்பட்ட மனிதரின் குரலாகத் தோன்றியது.  "மகாராஜா! அடிமை, நான்தான்!" என்ற மறுகுரலும்
கேட்டது.
ஒரு நிமிட நேரத்துக்கெல்லாம் குரல்கள் கேட்ட இடத்தில் ஒரு தீவர்த்தி வௌிச்சம்
தோன்றியது.  மரத்தின் மறைவிலிருந்து கையில் தீவர்த்தியுடன் ஒருவன் வௌி வந்தான். அதன்
வௌிச்சத்தில் குதிரை தெரிந்தது.  குதிரையின்மேல் ஓர் ஆள் வீற்றிருப்பது தெரிந்தது.  குதிரை
மேலிருந்தவர் மதுராந்தகர் தான் என்பது உறுதியாயிற்று.  
தரையில் நின்றவன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது இளவரசர் ஏறியிருந்த குதிரை
மிரண்டது.  முன்னங்கால்களை அதுமேலே தூக்கி ஒரு தடவை சுழன்றது.பின்னர் சடால் என்று பாய்ந்து ஓடத்
தொடங்கியது.  
அந்தக் குதிரை நின்ற இடம் ஒரு அகன்ற வாய்க்காலின் கரை.  அந்த மேட்டுக்கரையிலிருந்து
குதிரை வாய்க்காலின் வெள்ளத்தில் பாய்ந்தது.  
தீவர்த்தி பிடித்த மனிதன் "மகாராஜா! மகாராஜா!" என்று கூறிக்கொண்டே குதிரையைப் பின் 
தொடர்ந்து வாய்க்காலில் குதித்தான். குதித்தவன் இடறி விழுந்தான்.  தீவர்த்தி வாய்க்காலின் வெள்ளத்தில் 
அமிழ்ந்தது.  
மறுகணம் முன்னைவிடப் பன் மடங்கு கனாந்தகாரம் சூழ்ந்தது.  
அதேசமயத்தில் இலேசாகத் தூற்றல் போடத் தொடங்கியது.  
 
காற்றினால் மரங்கள் ஆடிய  சத்தத்துக்கும், மழைத் தூறலின் சத்தத்துக்கும், மண்டூகளின் 
வறட்டுக் கத்தல்களுக்கும் இடையே  மனிதர்களின் அபயக் குரல்களும், குதிரைகளின் காலடிச் சத்தமும் 
குழப்பமாகக் கேட்டன. இளவரசர் மதுராந்தகர் அவ்வளவாகத் தைரியத்துக்குப் பெயர் போன மனிதர் 
அல்ல என்பதை வந்தியத்தேவன்  அறிந்திருந்தான்.  
மிரண்ட குதிரையின் மேலிருந்த மதுராந்தகருக்கு என்ன ஆபத்து விளையுமோ என்று அவன் உள்ளம்
திடுக்கிட்டது.  குதிரை அவரைச் சுமந்துகொண்டே தெறிகெட்டு ஓடி
னாலும் ஓடலாம்.  அல்லது அவரை
வாய்க்கால் வெள்ளத்திலேயே தள்ளியிருந்தாலும் தள்ளியிருக்கலாம் அல்லது சற்றுத் தூரம் அவரைச் சுமந்து
கொண்டு சென்று, வேறு எங்காவது தள்ளிவிட்டுப் போயிருக்கவும் கூடும்.  
தீவர்த்தியுடன் வந்த மனிதனால் குதிரையைத் தொடர்ந்து போய் அவரைக் காப்பாற்ற முடியுமா?
அவனேதான் வாய்க்கால் வெள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டானே? 
அச்சமயம் தான் செய்ய வேண்டியது என்ன? வானதியைத் தேடிப் போவதா? மதுராந்தகரின் 
உதவிக்குச் செல்லுவதா என்ற போராட்டம் ஒரு நிமிடம் அவன் உள்ளத்தில் நிகழ்ந்தது.  
வானதி தேவி போன இடமே தெரியவில்லை.  ஆனால் மதுராந்தகர் தன் கண் முன்னால் ஆபத்துக்கு
உள்ளானார்.  அவருக்கு உதவி செய்வது எளிது; அவரைத் தேடிப் பிடித்து அபாயம் ஒன்றுமில்லை என்று கண்டால் 
பிறகு வானதியைத் தேடிப் போவது இருக்கவே இருக்கிறது! கடவுளே! சம்பந்தமில்லாத வேறு எந்தக்
காரியத்திலும் தலையிடுவதில்லை என்று தான் சற்று முன்னால் தீர்மானித்துக் கொண்டு கிளம்பியது என்ன?
இப்போது நடப்பது என்ன? 
மண்டபச் சுவரின் மறைவிலிருந்து குதிரையை வௌியில் கொண்டு வந்தான் வந்தியத்தேவன். 
இருட்டிலும் தூறலிலும் உள்ளுணர்ச்சியினால் வழி கண்டுபிடித்து வாய்க்காலில் இளவரசரின் குதிரை இறங்கிய
இடத்தை நோக்கிச் சென்றான்.  வாய்க்காலில் அவனும் இறங்கினான் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்தான்,
ஒன்றும் தென்படவில்லை.  எங்கேயோ தூரத்தில், 'ஆஆஆ!', 'ஓஓஓ!', 'ஈஈஈ!', 'டடபடா டடபடா', 'கடகட
கடகடா!' என்பவை போன்ற விவரம் தெரியாத சத்தங்கள் கேட்டன.  
வாய்க்காலின் அக்கரையில் ஏறினான்.  கரை மேட்டுக்கு அப்பால் உற்றுப் பார்த்தான்.  நெடுகிலும்
நெல் வயல்களாகக் காணப்பட்டன. வயல்களில் சேற்றிலும் பச்சைப் பயிரிலும் குதிரையை நடத்திச் செல்வது
இயலாத காரியம்.  கரையோடு போய்த்
ான் தேடிப் பார்க்க வேண்டும்.  
வாய்க்காலின் கரையிலோ, செடி கொடிகளும் முட்புதர்களும் அடர்ந்திருந்தன.  அவற்றின் நடுவே
சென்ற குறுகிய ஒற்றையடிப் பாதை வழியாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான்.  மேலே மழை;
கீழே சறுக்கும் சேற்றுத் தரை; ஒரு பக்கத்தில் வாய்க்கால்; இன்னொரு பக்கத்தில் நெல் வயல்கள்; சுற்றிலும்
முட்புதர்கள்.  
குதிரை மெள்ளச் மெள்ளச் சென்றது.  
நேரமோ, ஒரு நிமிடம் ஒரு யுகமாகச் சென்றது! 
தூறல் மழையாக வலுத்துக் கொண்டிருந்தது! 
இருட்டு மேலும் இருண்டு கொண்டிருந்தது! 
வந்தியத்தேவனுடைய உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது! 
மதுராந்தகத் தேவர் தனியாகக் குதிரைமீது ஏன் வந்தார்? எங்கே செல்வதற்காகப் புறப்பட்டு
வந்தார்? அவரை எதிர்கொண்டு வந்த மனிதன் யார்? 
வானதியைச் சிலர் பிடித்துக் கொண்டு சென்றதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
வானதியின் கதி இப்போது என்ன ஆகியிருக்கும்? 
நாம் எதற்காக இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும்? 
நம்முடைய காரியத்தை நாம் பார்க்கலாமே? இராஜ பாட்டையைத் தேடிப் பிடித்து அடைந்து, 
காஞ்சியை நோக்கிப் போகலாமே ? 
அதுதான் இந்த மழைக்கால இருட்டில் எப்படிச் சாத்தியமாகும்? 
இந்தக் காரியங்கள் எல்லாம் நமக்குச் சம்பந்தம் இல்லையென்று எப்படித் தீர்மானிக்க முடியும்? 
கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்தைக் கவனித்ததினால்
பிற்பாடு எவ்வளவு உபயோகம் ஏற்பட்டது? ஆனாலும் இன்றிரவு இந்த இருட்டில் இந்த வாய்க்காலின் கரையோடு
போய்க்கொண்டிருப்பதினால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.  சொட்ட நனைவது தான் பயன் ! குதிரை
எங்கேயாவது இடறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், பிரயாணமே தடைப்பட்டுவிடும்.  
திரும்பிச்
 சென்று அந்தப் பாழும் மண்டபத்தை அடைய வேண்டியதுதான்.  மழைவிட்ட பிறகுதான்
மறுபடியும் புறப்பட வேண்டும்.  
பளிச்சென்று ஒரு மின்னல், அதன் நேர் வௌிச்சத்தில், சிறிது தூரத்தில், களத்துமேடு ஒன்றில், 
ஒரு குதிரை நின்றது போலத் தெரிந்தது.  வந்ததுதான் வந்தோம்; இன்னும் கொஞ்சதூரம் சென்று, 
அதையும் பார்த்துவிட்டுத்தான் போகலாமே! இளவரசர் மதுராந்தகருக்கு ஆபத்துச் சமயத்தில் கை
கொடுத்து உதவினால், அதன் மூலம் பிற்பாடு எவ்வளவோ காரியங்களுக்குச் சாதகம் ஏற்படலாம்.  
குதிரையை வாய்க்காலின் கரையிலிருந்து பக்கத்து வயல் வரப்பில் வந்தியத்தேவன் இறக்கினான். 
குதிரை நின்றதாகத் தோன்றிய களத்துமேட்டை நோக்கிச் செலுத்தினான்.  
களத்துமேட்டின் சமீபத்தை அடைந்தபோது அது ஒரு பெரிய கரிய பூதத்தைப் போல் காட்சி அளித்தது.  
இன்னொரு மின்னல், மேட்டின்மீது குதிரை நின்றது ஒரு கணம் தெரிந்தது.  குதிரையின் பேரில் 
ஆள் இல்லை என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான்.  
இடி இடித்தது! 
இடிக்கும் மின்னலுக்கும் பயந்துதானோ என்னவோ அந்தக் குதிரை மறுபடியும் தெரிகெட்டுப் பயந்து 
ஓடத் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து போவதில் இனி ஒரு பயனுமில்லை.  
பக்கத்தில் எங்கேயாவது குதிரைமேலிருந்து விழுந்த மதுராந்தகத் தேவர் ஒரு வேளை இருக்கக்கூடும்.
ஆகையால் வந்தியத்தேவன் பலமுறை குரல் கொடுத்துப் பார்த்தான்.  "ஜிம் ஜிம்", "ரிம் ரிம்" என்னும் 
மழை இரைச்சலை மீறி அவனுடைய இடி முழக்கக் குரல் "அங்கே யார்?" "அங்கே யார்?" என்று எழுந்தது. 
நாலாபுறத்திலிருந்தும் "அங்கே யார்?" "அங்கே யார்?" என்ற எதிரொலிதான் கேட்டது.
மழை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது.  வாடைக்காற்று விர் என்று அடித்தது.  காற்றின்
வேகத்தினால் மழைத் தாரைகள் பக்கவாட்டில் திரும்பித் தாக்கின.  குதிரை உடம
்பைச் சிலிர்த்துக்
கொண்டது.  வந்தியத்தேவனுடைய உடம்பும் மழையினால் தாக்கப்பட்டுக் குளிரினால் நடுங்கத் தொடங்கியது.  
இனி அங்கே நிற்பதில் ஒரு பயனுமில்லை வந்தியத்தேவன் குதிரையை வந்த வழியே
திரும்பினான்.  தன்னுடைய அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான்.  இனி மேலாவது
இத்தகைய அசட்டுக் காரியங்களில் இறங்காமலிருக்க வேண்டும்.  நம்முடைய காரியம் உண்டு நாம் உண்டு என்று
பார்த்துக்கொண்டு போக வேண்டும்...  
குதிரை தன்னுடைய உள்ளுணர்ச்சியைக் கொண்டு வழி கண்டுபிடித்து இடிந்த மண்டபத்துக்கு அருகில் 
வந்து நின்று ஒரு கனைப்புக் கனைத்தது.  அப்போதுதான் வந்தியத்தேவன் சிந்தனா உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு 
வந்தான்.குதிரை மீதிருந்து இறங்கினான்.  அவன் உடுத்தியிருந்த துணிகள் சொட்ட நனைந்து
போயிருந்தன.  அவற்றை உலர்த்தியாக வேண்டும்.  அன்றிரவு அந்த இடிந்த மண்டபத்தில் தானும் குதிரையும்
தங்கியிருப்பதற்கு இடியாத பகுதி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்று முற்றும் பார்த்தான்.  
வெட்ட வௌியில் கொட்டுகின்ற மழையில் காலிலே நெருப்புச் சுட்டால் எப்படியிருக்கும்? அவ்வாறு
வந்தியத்தேவன் துள்ளிக் குதிக்க நேர்ந்தது. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; பேயில்லை
பிசாசில்லை; ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் குரல்தான்! 
"அம்மா! அம்மா!" 
பேயில்லை, பிசாசில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அந்த வேளையின் அந்த மண்டபத்தில், 
குழந்தைக் குரல் எப்படிக் கேட்க முடியும்?
அது பேய் பிசாசின் குரல் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? 
சீச்சீ! பேயும் இல்லை! பிசாசும் இல்லை! பேயும் பிசாசும் பயப்பிராந்தி கொண்ட பேதைகளின் 
கற்பனை! 
"அம்மா! அம்மா! ஊம்! ஊம்!" இது மனிதக் குழந்தையின் குரல்தான்! தாயைப் பிரிந்த சேயின் 
பயங்கலந்த அழுகைக் குர
்தான்! 
இடிந்த மண்டபத்தின் இருளடைந்த பகுதியிலிருந்து வருகிறது.  
குழந்தை மட்டுந்தான் இருக்கிறதா?
வேறு யாரும் இல்லையா? 
"அம்மா! அம்மா! ஊம்! ஊம்!"
குரல் வந்த இடத்துக்குச் சமீபத்தில் சென்று வந்தியத்தேவன் "யார் அங்கே"? என்றான்.  
"யார் அங்கே?" என்று குழந்தையின் குரல் எதிரொலித்தது.  
"நான் தான்! நீயார்? இருட்டில் என்ன செய்கிறாய்? வௌியே வா!" 
"வௌியில் மழை பெய்கிறதே!" 
மழை நின்று விட்டது; வா!" 
"என் அம்மா எங்கே?" 
"அம்மா உனக்குப் பால்வாங்கிக் கொண்டுவரப் போயிருக்கிறாள்." 
"இல்லை; நீ பொய் சொல்கிறாய்!" 
"நீ வௌியில் வருகிறாயா; நான் உள்ளே வரட்டுமா?" 
"உள்ளே வந்தால் என் கையிலே கத்தியிருக்கிறது! குத்தி விடுவேன்!" 
"அடே அப்பா! பெரிய வீரனாயிருக்கிறாயே? வௌியில் வந்துதான் குத்தேன்!" 
"நீ யார்? புலி இல்லையே?"
"நான் புலி இல்லை; குதிரை!" என்றான் வந்தியத்தேவன்.  
"நீ பொய் சொல்கிறாய்; குதிரை பேசுமா?"
"புலியாயிருந்தால் பேசுமா?" 
"வௌியில் வந்தால் புலி இருக்கும்.  ஒருவேளை மேலே பாய்ந்துவிடும் என்று  அம்மா சொன்னாள்." 
"நான் புலி இல்லை; உன் பேரில் பாயவும் மாட்டேன்; பயப்படாமல் வௌியே வா!"
"பயமா? எனக்கு என்ன பயம்?" என்று சொல்லிக் கொண்டே ஒரு சின்னஞ்சிறு குழந்தை இருண்ட
மண்டபத்திலிருந்து வௌியே வந்தது.  
இதற்குள் மழை நன்றாக விட்டுப் போயிருந்தது.  மேகங்கள் சிறிது விலகி நட்சத்திரங்களும் 
தெரிந்தன.  
நட்சத்திர வௌிச்சத்தில் அக்குழந்தையை வந்தியத்தேவன் பார்த்தான்.  சுமார் நாலு வயதிருக்கும்.  
தெரிந்த வௌிச்சத்தைக் கொண்டு வெகு இலட்சணமான குழந்தை என்று தெரிந்து கொண்டான். 
இடுப்பில் ஒரு சிறிய பட்டுத் துணி உடுத்தியிருந்தது.  கழுத்தில் ஒரு ரத்தினமாலை அணிந்திருந்தது.
பெரிய குலத்துக்கு
க் குழந்தையாக இருக்க வேண்டும்.  இதை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போன
தாய் யார்? இங்கே எதற்காக வந்தாள்? ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போனாள்? 
இதற்குள் குழந்தையும் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்து விட்டு, "நீ குதிரை இல்லை, மனிதனைப்
போல்தான் இருக்கிறாய்" என்றது.  
"அதோ குதிரையும் இருக்கிறது, பார்!" என்றான் வந்தியத்தேவன். 
குழந்தை குதிரையைப் பார்த்தது. 
"ஓகோ! எனக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறாயா? பல்லக்கு வரும் என்றல்லவா சொன்னார்கள்?" 
சிறுவனின் மறுமொழி வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல முரண்பட்ட எண்ணங்களை உண்டாக்கின. 
இந்தக் குழந்தை யார்? இவன் ஏன் இங்கே தனியாயிருக்கிறான்? இவ்வளவு சின்னஞ் சிறு பிள்ளை இப்படிச்
சற்றும் பயப்படாமல் இருக்கிறானே, அது ஆச்சரியமல்லவா? இவனுக்காக யார் பல்லக்கு அனுப்புவதாகச்
சொல்லியிருந்தார்கள்? அது ஏன் வரவில்லை? இவனை விட்டு விட்டுப் போன இவன் அம்மா யார்? அவள் எங்கே
போயிருக்கிறாள்? 
"குழந்தை! உன்னை ஏன் உன் அம்மா விட்டுவிட்டுப் போய் விட்டாள்?" என்று கேட்டான்.  
"அம்மா என்னை விட்டு விட்டுப் போகவில்லை; நான்தான் அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்!" 
என்றான் அந்தச் சிறுவன். 
"ஏன் விட்டுவிட்டு வந்தாய்?" 
"குதிரை ஒன்று ஓடி வந்தது.  அதைப் பிடித்து அதன் மேல் ஏறிக்கொண்டு வரலாம் என்று நான் 
சொன்னேன் அம்மா கூடாது என்றாள்.  நான் அவளுக்குத் தெரியாமல் குதிரையைப் பிடிக்க ஓடி வந்தேன் 
அந்தக் குதிரை தானா இது?" 
"இல்லை; இது வேறு குதிரை.  அப்புறம், எப்படி இங்கே வந்தாய்?" 
"குதிரை அகப்படவில்லை.  அம்மாவையும் காணவில்லை.  மழை அதிகமாக வந்தது.  அதற்காக 
இந்த மண்டபத்துக்குள் வந்தேன்." 
"இருட்டில் தனியாக இருக்க உனக்குப் பயமாயில்லையா?" 
"பயம் என்ன? தினம் இந்த மாதிரிதானே இருக்கிறேன்!"
"புலிக்குக் கூடப் பயமில்லையா?" 
"அம்மாவுக்குத்தான் பயம், எனக்குப் பயம் இல்லை.  நான் மீன், புலியை விழுங்கி விடுவேன்!" 
"அடே! மீன் புலியை விழுங்குமா?" 
"நான் சாதாரண சின்ன மீன் இல்லை! பெரிய மகர மீன்; திமிங்கலம்! புலி, சிங்கம் யானை 
எல்லாவற்றையும் விழுங்கி விடுவேன்..." 
வந்தியத்தேவன் மனத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.  புலியை விழுங்கும்
மீன் அதிசய மீன் அல்லவா! இப்படி யார் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? 
"அதோ அங்கே என்ன சத்தம்?" என்று கேட்டான் சிறுவன்.  
வந்தியத்தேவன் பார்த்தான், தூரத்தில் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது.  கூட்டதில் சிலர்
தீவர்த்திப் பந்தங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நடுவில் ஒரு பல்லக்கும் தெரிந்தது. 
எல்லாரும் பரபரப்புடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாகத்
தோன்றியது.  "அங்கே!", "இங்கே", "அதோ!", "இதோ!" என்ற கலவரமான குரல்கள் கேட்டன.  
இடிந்த மண்டபத்தைக் கூட்டத்தில் ஒருவன் பார்த்துச் சுட்டிக் காட்டினான்.  அவ்வளவுதான்! எல்லோரும்
அம்மண்டபத்தை நோக்கி ஓட்டம் பிடித்து ஓடி வந்தார்கள்.  
"அதோ வருகிறார்கள், பல்லக்கும் வருகிறது.  எனக்குப் பல்லக்கில் ஏறப் பிடிக்கவில்லை.  
என்னை உன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு போகிறாயா?" என்று சிறுவன் கேட்டான்.  
அந்தக் குழந்தையின் முகமும், தோற்றமும், பேச்சுக்களும் வந்தியத்தேவனுடைய மனத்தைக் கவர்ந்தன. 
அவனைக் கட்டி அணைத்துத் தூக்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.  ஆனால் மனத்திற்குள் ஏதோ ஒரு தடங்கலும்
கூடவே ஏற்பட்டது.  
"எனக்கு வேறு அவசர வேலை இருக்கிறதே?" என்றான் வந்தியத்தேவன்.
"நீ எங்கே போகப் போகிறாய்?" 
"காஞ்சிக்கு!" 
"காஞ்சிக்கா! அங்கேதான் என்னுடைய ம
க்கியமான சத்துரு இருக்கிறான்!"
வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.  அவ்விதம் அந்தப் பிள்ளையின் அருகில் தான்
நிற்பது கூடப் பிசகு என்று எண்ணினான்.  ஆனால் குதிரையின் மேல் ஏறிப் போவதற்கும் அவகாசம் இல்லை. 
கூட்டம் வெகு அருகில் வந்து விட்டது.  ஓடினால் சந்தேகத்துக்கு இடமாகும்.  இவ்வளவுடன் என்னதான் நடக்கப்
போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் வந்தியத்தேவனைப் பற்றியிருந்தது.  ஆகையால் சற்று ஒதுங்கிச்
சென்று இடிந்த சுவர் ஓரமாக இருட்டில் நின்றான்.  
"இதோ நான் இருக்கிறேன்" என்று முன்னால் போய் நின்றான் சிறுவன்.  வந்தவர்களிலெல்லாம்
முதலில் வந்தவள் ஒரு பெண்பிள்ளை.  அவளுக்கு ஓடிவந்ததினால் இறைத்துக் கொண்டிருந்தது.  அதை அவள்
பொருட்படுத்தாமல் தாவி வந்து குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டு, "பாண்டியா இப்படிச் செய்து
விட்டாயே?" என்றாள்.  
அவளுக்கு அடுத்தபடியே வந்தவன் ரவிதாஸன்.  அவன் சிறுவனின் பக்கத்தில் வந்து நின்று,
"சக்கரவர்த்தி! இப்படி எங்களைப் பயமுறுத்தி விட்டீர்களே?" என்றான்.  
சிறுவன் சிரித்தான், "அப்படித்தான் பயமுறுத்துவேன்.  நான் குதிரை வேண்டும் என்று கேட்டேன்.  
பல்லக்கு கொண்டு வந்திருக்கிறீர்களே!" என்றான்.  
நாம் முன்னம் பார்த்திருக்கும் சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் முதலியவர்கள்
சிறுவனை வந்து சூழ்ந்து கொண்டார்கள்.  
"சக்கரவர்த்தி! ஒரு குதிரை என்ன? ஆயிரம் குதிரை, பதினாயிரம் குதிரை கொண்டு வருகிறோம், 
இன்றைக்கு இப்பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!" என்றான் சோமன் சாம்பவன்.  
"மாட்டேன்; நான் அந்தக் குதிரை மேலேதான் ஏறி வருவேன்" என்று சிறுவன் கூறிச் சுவர் 
மறைவில் நின்ற குதிரையைச் சுட்டிக் காட்டினான்.
அப்போதுதான் குதிரையையும், அதன் அருகில் நின்ற வந்தியத்தேவனையும் அவ
ர்கள் கவனித்தார்கள்.
ரவிதாஸன் முகத்தில் வியப்பும் திகிலும் குரோதமும் கொழுந்து விட்டு எரிந்தன.  
இரண்டு அடி முன்னால் சென்று, "அடப் பாவி! நீ எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டான்.  
"அட பிசாசே! கோடிக்கரையிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டான் வந்தியத்தேவன். 
 
ரவிதாஸன் 'ஹா ஹா ஹா' என்று சிரித்தான்.  
"நீ என்னை உண்மையாகவே பிசாசு என்று நினைத்துக் கொண்டாயா?" என்று கேட்டான். 
"சிலர் செத்துப்போன பிறகு பிசாசு ஆவார்கள்.  நீ உயிரோடிருக்கும் பிசாசு!" என்றான் 
வந்தியத்தேவன்.  
இதற்குள் சிறுவன், "அவனோடு சண்டை போடாதே! அவனை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. 
இருட்டில் எனக்குத் துணையாயிருந்தான்.  புலி வந்தால் கொண்டு விடுவதாகச் சொன்னான் அவனும் நம்மோடு 
வரட்டும்" என்றான்.  
ரவிதாஸன் சிறுவன் அருகில் சென்று, "சக்கரவர்த்தி! அவசியம் அவனையும் அழைத்துப் போகலாம்.
தாங்கள் இன்றைக்கு ஒரு நாள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!" என்றான்.  
சிறுவன் அவ்வாறே பல்லக்கை  நோக்கிச் சென்றான்.  
ரவிதாஸன் வந்தியத்தேவனை மறுபடியும் நெருங்கி, "இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்று 
கேட்டான். 
"நீயல்லவா சொல்ல வேண்டும்?" 
"எங்களுடன் வந்து விடு! எங்களுடைய இரகசியம் உனக்கு முன்னமே அதிகம் தெரியும்.  இப்போது
இன்னும் அதிகமாகத் தெரியும்.  உன்னை விட்டுவிட்டு நாங்கள் போக முடியாது. வந்துவிடு!" 
"உங்களுடன் நான் வர மறுத்தால்?..." 
"முடியாத காரியம், நீ பெரிய சூரன் என்பதை அறிவேன்.  ஆயினும் நாங்கள் இருபது பேர் 
இருக்கிறோம் எங்களிடமிருந்து தப்பி நீ போக முடியாது." 
"உயிரோடு தப்ப முடியாது என்று தானே சொல்கிறாய்?" 
"நீ இளம் பிராயத்தவன்.  உலகத்தின் சுகங்கள் ஒன்றையும் அநுபவியாதவன்.  எதற்காக வீணுக்கு
உயிரை விட வேண்டும்?" 
"வீ
ணுக்கு யார்தான் உயிரைவிடுவார்கள்? உங்களுடன் வரச் சொல்லுகிறாயே, எங்கே
கூப்பிடுகிறாய்? நீங்கள் எங்கே போகிறீர்கள்?" 
"அப்படிக்கேள் சொல்லுகிறேன்.  பழுவூர் இளைய ராணியிடந்தான்!" 
"ஓகோ! அப்படித்தான் நினைத்தேன்.  இளையராணி இன்று எங்கே இருக்கிறாள்?" 
"இளைய ராணி இத்தனை நேரம் திருப்புறம்பயத்துக்கு வந்திருப்பாள் நீ வருவாயா, மாட்டாயா?" 
"நானும் அந்தப் பக்கந்தான் போக வேண்டும்.  வழிகாட்ட யாருமே இல்லையே என்று பார்த்தேன். 
நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய்! போகலாம், வா!" என்றான் வந்தியத்தேவன்.  
இதற்குள் சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும்
தீப்பந்தகளைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார்
சென்றார்கள்.  வந்தியத்தேவனும் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் உள்ளத்தில் பல்வேறு எண்ணங்கள்
அலைபாய்ந்தன.  
வானதியின் கதி என்ன? தெரியவில்லை.  மதுராந்தகர் என்ன ஆனார்? தெரியவில்லை. 
தன்னுடைய கதி இன்றிரவு என்ன ஆகப் போகிறது? அதுவும் தெரியவில்லை.  
கடம்பூர் மாளிகையில் அன்று கண்டறிந்த சதிச்செயலை விடப் பன்மடங்கு சதிச் செயலைப் பற்றி
இன்று நேர்முகமாக அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரையில்
பிரயோஜனகரமானதுதான்.  ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும்? தன்னை உயிரோடு தப்பிச் செல்ல
இவர்கள் விடுவார்களா? இவர்களோடு சேர்ந்து விடும்படி தன்னையும் கட்டாயப் படுத்துவார்கள்.  மாட்டேன் என்று 
சொன்னால் பலியிடத்தான் பார்ப்பார்கள்! ஒரு வேளை மறுபடியும் நந்தினியின் தயவினால்...  
பழுவூர் இளைய ராணியின் பெயரை ரவிதாஸன் கூறியதும் அவர்களுடன் போகத்தான் இணங்கி
விட்டதை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்தான்.  அது அவனுக்கே வியப்பை அளித்தது.  'மாயை' 
ன்றும்
'மோகம்' என்றும் பெரியோர்கள் சொல்வது இதைத்தான் போலும்.  'அவள்' எவ்வளவு பயங்கரமான
சதிச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. ஆயினும் அவளைச்
சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அவன் மனத்தில் ஓர் ஆர்வம்
எழுந்தது.அடக்க முடியாமல் தன்னை மீறி எழுந்தது.  யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அவன் வாய்
"வருகிறேன்" என்று பதில் சொல்லி விட்டது...  ஆனால் வேறு வழிதான் என்ன? ரவிதாஸன் கூறியதுபோல்
இத்தனை பேருடன் தன்னந்தனியாகச் சண்டையிடுவது சாத்தியமில்லை.  சிறிது அவகாசம் கிடைத்தால்,
தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஓர் உபாயம் தென்பட்டாலும் தென்படலாம்.  அத்துடன் இந்தச் சதிகாரக்
கூட்டத்தைப் பற்றியும் இவர்களுடைய நோக்கங்களைப் பற்றியும் இன்னும் தௌிவாக அறிந்து கொள்ளலாம்.
"காஞ்சிக்கா போகிறாய்? அங்கேதான் என்னுடைய முக்கிய சத்துரு இருக்கிறான்!" என்று அந்தச்
சின்னஞ்சிறு குழந்தை மழலை மொழியில் கூறியது அடிக்கடி வந்தியத்தேவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது. 
அந்தச் சிறுவன் யார்? அவனைச் "சக்கரவர்த்தி" என்று இவர்கள் அழைப்பதேன்? "முக்கிய சத்துரு" என்று
அச்சிறுவன் யாரைக் குறிப்பிட்டான்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுடைய மனத்தில் பதில்களும் தோன்றிக்
கொண்டிருந்தன.  நினைக்க நினைக்க பயங்கரம் அதிகமாகிக் கொண்டிருந்தது.  கடவுளே! இவற்றுக்கெல்லாம்
முடிவு எப்போது? "வெகு சீக்கிரத்தில்" என்று அவனுக்குள் ஒரு குரல் சொல்லிற்று.  
அந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது.  வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள்,
காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது.  கடைசியாக வெள்ளப்
பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம்
 எல்லையை அடைந்தது.  பள்ளிப்
படையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.  
பக்க தலைப்பு
முப்பத்தைந்தாம்  அத்தியாயம் 
"வேளை  நெருங்கி  விட்டது!" 
நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப் படைக்
கோவிலை முன்னொரு தடவை நம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான்
ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான்.  அதே இடத்துக்கு இப்போது
வந்தியத்தேவனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.  
பாழைந்த பள்ளிப் படையின் ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வந்தியத்தேவனையும், அவன்
குதிரையையும் அழைத்து வந்தார்கள்.  
 "அப்பனே! சற்று நீ இங்கேயே இரு! உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம்.  
தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே! பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் 
வரவும் முடியாது; வௌியேறவும் முடியாது; அப்படி வௌியேற முயன்றால், நிச்சயம்  உயிரை இழப்பாய்!" 
என்றான் ரவிதாஸன்.  
"அப்படி நான் வழி கண்டுபிடித்துப் போகப் பார்த்தால் நீ மந்திரம் போட்டுக் கொன்று விடுவாய்! 
இல்லையா, மந்திரவாதி!" என்று கூறி வந்தியத்தேவன் நகைத்தான். 
"சிரி, சிரி! நன்றாய்ச் சிரி! என்று சொல்லி, ரவிதாஸனும் சிரித்தான்.  
அச்சமயம் பார்த்து எங்கேயோ தூரத்தில் நரி ஒன்று ஊளையிடத் தொடங்கியது, அதைக் கேட்டுப்
பக்கத்தில் எங்கேயோ கோட்டான் ஒன்று முனகியது.  
வந்தியத்தேவனுடைய உடல் சிலிர்த்தது, குளிரினால் அல்ல.  அடர்ந்த அந்தக் காட்டின் 
மத்தியில் வாடைக் காற்றுப் பிரவேசிக்கவும் பயந்ததாகக் காணப்பட்டது. ஏன்? அங்கே மழைகூட 
அவ்வளவாகப் பெய்ததாகத் தெரியவில்லை.  தரையில் சில இடங்களில் மட்டும் மழைத்
துளிகள் சொட்டி 
ஈரமாயிருந்தது.  காற்று இல்லாதபடியால் இறுக்கமாக இருந்தது.  அங்கே வந்து போயிருந்தது.  சுற்றிக் 
கட்டியிருந்த துணிச் சுருள் மட்டும் ஈரமாயிருந்தது அதை எடுத்து விரித்துப் பக்கத்தில் கிடந்த 
பாறாங்கல்லின் மீது உலர்த்தினான்.  அதே கல்லின் ஒரு மூலையில் வந்தியத்தேவன் உட்கார்ந்து 
பள்ளிப் படைச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான்.  அவனுக்குக் காவலாக அருகில் ஒருவன் மட்டும் இருந்தான்.  
சற்றுத் தூரத்தில் காட்டின் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவௌியில் அவனுடன் மற்றவர்கள் வட்ட
வடிவமாக உட்கார்ந்தார்கள்.  பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்தது ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக்
கொண்டு வந்து போட்டான்.  அதில், 'சக்கரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள்.
தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள்.  அவ்விதம்
தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது.
"ராணி இன்னும் வரவில்லையே?" என்றான் ஒருவன்.  
"சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் 
சொல்லியிருக்கிறேன்.  அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!" என்றான் 
சோமன் சாம்பவன்.  
இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான்.  தேவராளன் ஏதோ 
ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான்.  
வந்தியத்தேவன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்;
கேட்டுக் கொண்டுமிருந்தான்.  'வழுதிகுலம்' என்பது பாண்டியகுலம் என்று அவன் அறிந்திருக்கிறான்.  பாடல்
ஏதோ ஒரு சோகப் பிரலாபமாக அவன் காதில் தொனித்து.  உடுக்கின் நாதமும், சோகப் பாடலின்
இசையும் அவன் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின.  பாடலில் சிற்சில வார்த்த
ைகள் அவன் காதில்
விழுந்தன.  அவற்றிலிருந்து அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய
வரலாறு அவன் நினைவுக்கு வந்தது.  
ஆம்; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம்
நடந்தது.பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான்.  அப்போரில் மாண்ட லட்சக்
கணக்கான வீரர்களைப் போல் அம் மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்
படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது.  
கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின.  பாண்டிய சைன்யத்தின்
வெற்றி நிச்சயம் என்று தோன்றியது.  இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. 
அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். 
இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர்தூக்கிக் கொண்டு வந்தார்கள். 
இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான்.  
இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான்.  அவன் சென்ற இடங்களிலெல்லாம் 
இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன.
சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள்.  
ஜண ஜண ஜண ஜணார்! - பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் 
கொண்டு வந்தன! 
டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன! 
வாள்களும் வேல்களும் மோதின! 
ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன.  
ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன! 
ஈ ஈ ஈ ஈ!- குதிரைகள்
 கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன! 
ப்ளீ ளீ ளீ ளீ!- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன! 
இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் - மிருகங்கள் உடல்கள் மிதந்தன.  
இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன!
முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன! 
"ஐயோ ஓ ஓ ஓ!" என்ற ஐம்பதினாயிரம் ஓலக் குரல்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன! 
"விடாதே! பிடி! துரத்து! வெட்டு! குத்து!"
இவ்விதம் நூறு ஆயிரம் குரல்கள் முழங்கின.  
பதினாயிரம் ஜயபேரிகைகள் "அதம்! அதம்! அதம்!..." என்று சப்தித்தன.  
இருபதினாயிரம் வெற்றிச் சங்கங்கள் "பூம்! பூம்! பூம்!" என்று ஒலித்தன.  
"ஹா! ஹா! ஹா! ஹா!" என்று அறுபதினாயிரம் பேய்கள் சிரித்தன.
வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.  நாலாபுறமும் பார்த்து விழித்தான்.  பள்ளிப்படைச் 
சுவரில் சாய்ந்தபடியே சிறிது நேரம் தான் கண்ணயர்ந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அந்த 
அரைத்தூக்கத்தில் கண்ட பயங்கரமான கனவை மறுபடி நினைத்துப் பார்த்தான்.  கனவுதானா அது! இல்லை!
உடுக்கின் முழக்கத்துக்கு இணங்கத் தேவராளன் பாடிய பாடலில் போர்க்களத்தைப் பற்றிச் செய்த வர்ணனை 
தான் அப்படி அவன் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும்.  
அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப்
பாடிக் கொண்டிருந்தான்.  அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்த களிச் சிரிப்புத்தான் அப்படி
அநேகாயிரம் பேய்களின் சிரிப்பைப் போல் ஒலித்து, வந்தியத்தேவனைத் திடுக்கிட்டுக் கண் விழிக்கச்
செய்திருக்க வேண்டும்.  
உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது.  தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான்.
சற்றுத் தூரத்தில் 
ரு தீவர்த்தி வௌிச்சம் தெரிந்தது.  அது நெருங்கி நெருங்கி வந்தது. 
தீவர்த்தி வௌிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது.  பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே
இறக்கி வைத்தார்கள்.  பல்லக்கின் திரைகள் விலகின.  உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீ வௌியில் வந்தாள். 
ஆம்; அவள் பழுவூர் ராணி நந்தினிதான்.  ஆனால் முன் தடவைகளில் வந்தியத்தேவன் பார்த்தபோது அவள்
சர்வாலங்கார பூஷிதையான மோகினியாக விளங்கினாள்.  இப்போது தலைவிரி கோலமான உக்கிரதுர்க்கா
தேவியாகக் காட்சி தந்தாள்.  
அவளை இந்தத் தோற்றத்தில் பார்த்த வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு திகில் தோன்றியது; 
அவன் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.  
நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். 
அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள்.  
சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் 
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  
சிறுவனைப் பாழும் மண்டபத்துக்குத் தேடி ஓடி வந்த ஸ்திரீ - அவனால் "அம்மா" என்று அழைக்கப்
பட்டவள்.சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.  
நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள்.  சிறுவன் அவளையும் 
தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான்.  
"நீ தானே என் அம்மா? இவள் இல்லையே" என்று கேட்டான்.  
"ஆம், கண்மணி!" 
"இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?" 
"அவள் உன்னை வளர்த்த தாய்!" 
"நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் 
எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?" 
"கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான்.  உன் தந்தையைக் 
கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!" 
"ஆமாம்; அது எனக்குத் தெரியும்!" என்று சிறுவன் எழுந்து நந்தினியை அணுகினான். 
நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள்.  சிறுவனும்
அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான்.  மறுபடியும் அவள் தன்னைவிட்டுப் போகாமலிருக்கும்
பொருட்டு அவன் அப்படிப் பிடித்துக் கொண்டான் போலும்! 
ஆயினும் இந்தக் காட்சி நீடித்திருக்கவில்லை.  அவனுடைய பிஞ்சுக்கரங்களை நந்தினி
பலவந்தமாக எடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள்.  சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். 
மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள்.  அதனுள்ளிருந்து நாம் முன்பார்த்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டாள்.
பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள்.  அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு
சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள்.  
நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள்.  கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது
குறுக்காக வைத்தாள்.  
சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, "நான் இதைக் கையில் எடுக்கலாமா?" 
என்று கேட்டான். 
"சற்றுப் பொறு, என் கண்மணி!" என்றாள் நந்தினி.  
பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள்.  
"சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?" என்று கேட்டாள்.  
"இல்லை, தேவி!" என்றான் சோமன் சாம்பவன்.  
ரவிதாஸனைப் பார்த்து நந்தினி "சேநாதிபதி!..." என்று ஆரம்பித்தாள்.
ரவிதாஸன் சிரித்தான்.  "இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த 
நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!"
"தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமா
 நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம்." 
"ஐயா! நாமோ ஒரு சிலர்.  நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை.  சோழ ராஜ்யம்
மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது.  நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம்
கெட்டுப் போயிருக்கும்.  பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை
நெருங்கியிருக்கிறது.  ரவிதாஸரே! நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும்
ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா!" 
ரவிதாஸன் அங்கே இருந்தவர்களின் முகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தான். 
அனைவரும் மௌனவிரதம் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள்.  
"தேவி! நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை.  தாங்கள்தான் சொல்ல வேண்டும்.  
சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள்.  எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் 
போகிறது என்று சொல்லி அருள வேண்டும்" என்றான்.  
"ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன்.  அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே
தவறாமல் வரச் சொன்னேன்.  நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்" என்றாள் நந்தினி. 
சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக்
கொண்டிருந்தார்கள்.  அவள் மேலும் கூறினாள்: 
"உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள்.  நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும்
சிலர் சந்தேகப் பட்டீர்கள்.  அந்தச் சந்தேகம் அடாதது.  மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள்
எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு.  இல்லை; நான் மறக்கவில்லை.  சென்ற மூன்று 
ஆண்டுகளாக அல்லும் பகலும் அனவரதமும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை.  நாம் எடுத்துக்கொண்ட 
சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்தி
 உபாயங்களையும் தவிர வேறு எதையும்
பற்றி நான் எண்ணியதில்லை.  எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது
நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை.  சமய
சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன.  சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு
பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள்.  பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம்
கட்ட முடிவு செய்து விட்டார்கள்.  கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும்
அதற்கு விரோதமாயிருக்கிறார்கள்.  பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி
வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். 
இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம்."
"தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக்
கேள்வியுறுகிறோம்.கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக
அறிகிறோம்." 
"ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான்.  ஆனால் என்ன காரணத்திற்காக வென்று
உங்களால் ஊகிக்க முடியவில்லையா?" 
"முடியவில்லை.  ராணி! ஒரு பெண் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டுபிடிக்க சர்வேசுவரனால் கூட
முடியாது என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  எங்களால் எப்படி முடியும்?" 
"அது உங்களால் முடியாத காரியந்தான்.  நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள்.  
நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை 
மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் 
உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு 
இரு
ட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள்.  அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி
வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும்.  அதற்காகவே இந்தச் சமாதானப்
பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை
நிறைவேற்றிவிட வேண்டும்.  அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும்
சண்டைக்கு முடிவேயிராது.  இரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து 
கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா...சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?" 
இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும்,
உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன.  பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள்
ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள்.  ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க
முடியவில்லை.  
"தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம்.  சமாதானப் பேச்சின்
கருத்தை அறிந்து கொண்டோம்.  ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள்.  அதை
நடத்துவது யார்? எப்படி? எப்போது?" என்றான்.  
"அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன்.  சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின்
பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது;
அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான்.  நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். 
வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. 
இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!..." 
அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் 'ஆ
ா' காரம் செய்தார்கள்.  
சிலர் துள்ளிக் குதித்தார்கள்.  
உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். 
மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு 
கிளைகளுக்குத் தாவின. 
வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின.  
வந்தியத்தேவனுடைய குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது.  
வந்தியத்தேவனும் நிமிர்ந்து பார்த்தான்.  நந்தினி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ
பரபரப்புத் தரும் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பது மட்டுந்தான் தெரிந்தது.  அவளுடைய பேச்சு
ஒன்றும் அவன் காதில் விழவில்லை.  
ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான்.  
"தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. 
நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக்
களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?" என்று கேட்டான்.
"அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான்.  அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத
முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச்
செய்தேன்.  வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது.  இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின்
கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள்
அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும்.  ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன்
வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன்.  இடும்பன்காரி கோட்டைக்
காவலர்களில் ஒருவனாக இருப்பான்.  பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாள
கைக்குள்
பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம்.  இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?" 
ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.எல்லோருக்கும் அந்த 
ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது.  
ரவிதாஸன் கூறினான்:"தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான்.  அதற்கு நாங்கள் எல்லோரும் 
சம்மதிக்கிறோம்.  ஆனால் இன்னும் ஒரு விஷயம்.  பழிமுடிக்கும் பொறுப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, 
அவர் சொல்கிறபடி மற்றவர்கள் கண்டிப்பாகக் கேட்கிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும். 
சக்கரவர்த்திக்குப் பிராயம் வருகிறவரையில் பழி முடித்தவன் இட்டதே சட்டமென்று மற்ற அனைவரும் 
நடந்து கொள்ள வேண்டும்." 
இதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் புன்னகை அரும்பியது.  
"என்னையும் உட்படுத்திதானே சொல்கிறீர்?" என்று கேட்டாள்.  
"ஆம் தேவி! விதிவிலக்குச் செய்யமுடியாது!" என்றான் ரவிதாஸன். 
"சந்தோஷம், இப்போது ரவிதாஸன் கூறியதும் உங்கள் எல்லோருக்கும் சம்மதந்தானே!" என்று 
நந்தினி மற்றவர்களை நோக்கி வினவினாள்.  
எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; மறுமொழி சொல்வதற்குத் தயங்கினார்கள்.  சிலருக்கு
அந்த ஏற்பாடு சம்மதமில்லையென்று தோன்றியது.  
சோமன் சாம்பவன், "அது எப்படி நியாயமாகும்? நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் 
தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும்?" என்று கேட்டான்.  
"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.  நான் உயிர் வாழ்ந்திருப்பதே வீரபாண்டிய
சக்கரவர்த்தியின் கொடூரக் கொலைக்குப் பழி வாங்குவதற்காகத்தான்.  அந்தப் பழியை முடித்துக்
கொடுக்கிறவர் யாராயிருந்தாலும், அவருக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்கச் சித்தம்!" என்றாள்
நந்தினி.  
பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் க
ண்டிருந்த சிறுவனை
நந்தினி தேவி பார்த்து "என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது.  இதை உன் பிஞ்சுக்
கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம்
கொடு!" என்றாள்.  
ரவிதாஸன் சற்று அருகில் வந்து "சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில்
யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து
வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!" என்றான்.  
சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார்.  
எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் 
கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொருவருடைய கண்களும் "என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!" என்று
கெஞ்சும் பாவத்தைக் காட்டின.  
ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் "என்னிடம் கொடுங்கள்!" என்று அதிகாரபூர்வமாகப்
பயமுறுத்திக் கட்டளையிட்டன.  
சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் 
கையில் எடுத்தான்.  அதைத் தூக்க முடியாமல் தூக்கினான்.
அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது.  
சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான்.  அம்மா! எனக்கு உன்னைத்தான் 
எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.  நான் பெரியவனாகும் வரையில் நீதான் 
எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.  
பக்க தலைப்பு
முப்பத்தாறாம் அத்தியாயம் 
இருளில் ஓர் உருவம் 
சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்தவாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். 
அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். 
 பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து 
மார்புடன் அணைத்துத் தழுவிக் கொண்டாள்.  அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்
பொழிந்தது.  
மற்றவர்கள் சற்று நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். 
ரவிதாஸன் முதலில் திகைப்பு நீங்கப்பெற்றுக் கூறினான்.  
"தேவி! சக்கரவர்த்தி நம்முடைய கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை.  புரிந்து 
கொள்ளாமல் தங்களிடம் வாளைக் கொடுத்து விட்டார். மறுபடியும் விளக்கமாகச் சொல்லி..." 
நந்தினி அவனைத் தடுத்து நிறுத்தினாள்; தழுதழுத்த குரலில் கூறினாள்.  "இல்லை, ஐயா இல்லை!
சக்கரவர்த்தி நன்றாய்ப் புரிந்து கொண்டுதான் வாளை என்னிடம் கொடுத்தார்.  என் கண்ணீரைப் பார்த்து
நீங்கள் கலங்க வேண்டாம்.  வீரபாண்டிய சக்கரவர்த்தியின் படுகொலைக்குப் பழி வாங்கும் பாக்கியம்
எனக்குக் கிடைத்ததை நினைத்துக் களிப்பு மிகுதியினால் கண்ணீர் விடுகிறேன்!" 
"தேவி! யோசித்துப் பாருங்கள்! நாங்கள், இத்தனை பேர் ஆபத்துதவிப் படையினர்
உயிரோடிருக்கும்போது..." என்று சோமன் சாம்பவன் தொடங்கியதை நந்தினி தடுத்து நிறுத்தினாள். 
"யோசிக்க வேண்டியதே இல்லை, அந்தப் பொறுப்பு என்னுடையதுதான். உங்களுக்கும் 
வேலையில்லாமற் போகவில்லை.  உங்களில் பாதிபேர் சக்கரவர்த்தியைப் பத்திரமாகப் பஞ்ச பாண்டவர் 
மலைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள்.  மற்றவர்கள் கடம்பூருக்கு வாருங்கள். சம்புவரையன் 
மாளிகைக்குள் வரக்கூடியவர்கள் வாருங்கள் மற்றவர்கள் வௌியில் சித்தமாகக் காத்திருங்கள்.  
வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளுடன் காத்திருங்கள்.  காரியம் வெற்றிகரமாக முடிந்த பின் 
கூடுமானால் எல்லாரும் உயிருடன் தப்பித்துச் செல்ல வேண்டும் அல்லவா?" என்றாள் நந்தினி.
ரவிதாஸன் முன் வந்து, "அம
்மணி! ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டது;அதைச் சொல்ல
அனுமதிக்க வேண்டும்" என்றான்.  
"சொல்லுங்கள், ஐயா! சீக்கிரம் சொல்லுங்கள்! பழுவேட்டரையர் கொள்ளிடக்கரையில் நடக்கும் 
காலாமுகர்களின் மகா சங்கத்துக்குப் போயிருக்கிறார்.  அவர் திரும்பி வந்து விடுவதற்குள்ளே நான் 
அரண்மனை போய்ச் சேரவேண்டும்!" என்றாள் நந்தினி.  
"நமது முதற் பகைவன் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையன் மாளிகைக்கு வந்து சேருவான் 
என்று சொன்னீர்கள் அல்லவா? அது அவ்வளவு நிச்சயமில்லை" என்றான்.  
"எந்தக் காரணத்தைக் கொண்டு அவ்விதம் சொல்கிறீர்?" என்று கேட்டாள் நந்தினி.
"தகுந்த காரணத்தைக் கொண்டுதான் சொல்கிறேன் கடம்பூர் மாளிகைக்கு எக்காரணத்தைக்
கொண்டும் வரவேண்டாம் என்று ஆதித்த கரிகாலனுக்கு ஓலை போகிறது.  பழையாறை இளைய பிராட்டியும்,
முதன் மந்திரி அநிருத்தரும் அவ்விதம் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்..." 
"அந்த விவரம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தீர்?" 
"தெரிந்திருந்தும் அவன் கடம்பூருக்கு வருவான் என்று எதிர்பார்க்கிறீர்களா?" 
"ஆம்; அவசியம் எதிர்பார்க்கிறேன்.  ஆதித்த கரிகாலருடைய இயல்பு அந்தப் பழையாறைப் பெண்
பாம்புக்குத் தெரியாது; அன்பில் பிரம்மராட்சதனுக்கும் தெரியாது; மாய மந்திர வித்தைகளில் தேர்ந்த
உமக்குங்கூடத் தெரியவில்லை.  எந்தக் காரியத்தையாவது செய்யவேண்டாம் என்று யாரேனும் தடுத்தால்,
அதைத்தான் ஆதித்த கரிகாலர் கட்டாயமாகச் செய்வார்.  அது எனக்குத் தெரியும்; நிச்சயமாகத் தெரியும்.
ஆதித்த கரிகாலர் அருள்மொழிவர்மனைப் போன்ற எடுப்பார் கைப்பிள்ளை அல்ல.  மதுராந்தகனைப் போன்ற
பயங்கொள்ளிப் பேதை அல்ல.  கடம்பூருக்கு வரவேண்டாமென்று தமக்கையும் முதன் மந்திரியும் செய்தி
அனுப்பியிருப்பதனாலேயே கட்டாயம் ஆதித்த கரிகாலர் கடம்பூருக்கு வந
்து சேருவார்!" என்றாள் நந்தினி.  
"தேவி! அதையும் தாங்கள் பூரணமாக நம்பியிருக்க வேண்டாம்.  அவர்கள் அனுப்பிய செய்தி
காஞ்சிக்குப் போய்ச் சேராது!" என்றான் ரவிதாஸன்.  
"என்ன சொல்கிறீர், ஐயா! சற்று விளக்கமாகச் சொல்லும்!" என்றாள் நந்தினி. 
அவளுடைய குரலில் இப்போது பரபரப்புத் தொனித்தது.  
"தேவி! ஆதித்த கரிகாலனுக்குச் செய்தி யார் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும்
தங்களுக்குத் தெரியுமா?" என்று ரவிதாஸன் கேட்டான்.  
"நிச்சயமாகத் தெரியாது; ஆனால் ஊகிக்க முடியும்." 
"நல்லது! ஊகிக்க வேண்டிய அவசியமில்லை.  அவனை நாங்கள் பிடித்துக்கொண்டே
வந்திருக்கிறோம்.  சக்கரவர்த்தி மழைக்கு ஒதுங்கியிருந்த மண்டபத்தில் அவனும் இருந்தான்.  நம்முடைய
இரகசியங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும். அவனை மேலே உயிருடன் போக விடுவது நமக்கு நாமே 
சர்வ நாசத்தைத் தேடிக் கொள்வதாகும்.  இடும்பன்காரி! எங்கே அந்த ஒற்றனை இங்கே அழைத்துக் 
கொண்டு வா!" என்றான் ரவிதாஸன்.
இடும்பன்காரி பள்ளிப்படைக் கோவிலை நோக்கிப் போனான்.  அவனுடன் இன்னும் இரண்டு பேரும்
போனார்கள்.  நந்தினி அந்தத் திசையை உற்று நோக்கத் தொடங்கினாள்.  இத்தனை நேரமும் கடுகடுவென்று
இருந்த அவளுடைய முகத்தில் இப்போது மறுபடியும் மோகனப் புன்னகை தவழ்ந்தது.  
இடும்பன்காரியும், இன்னும் இரண்டு பேரும் வந்தியத்தேவனை நெருங்கினார்கள்.  அலுத்துச் சலித்துப்
போய் அரைத் தூக்கமாக உட்கார்ந்திருந்த அந்த வீரன் மீது திடீரென்று பாய்ந்தார்கள்.  வந்தியத்தேவன்
அவர்களோடு மல்யுத்தம் செய்யலாமா என்று ஒரு கணம் உத்தேசித்தான்.  பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்
கொண்டான்.  என்னதான் செய்கிறார்களோ பார்க்கலாம் என்று சும்மா இருந்தான்.  ஒரு பெரிய கயிற்றினால்
அவனுடைய கைகளைச் சேர்த்து உடம்போடு கட்டினார்கள்.  பிறகு 
அவனுடைய இரு தோள்களையும் இரண்டு 
பேர் பிடித்து நடத்தி அழைத்துக் கொண்டு வந்து நந்தினியின் முன்னால் நிறுத்தினார்கள்.  
வந்தியத்தேவன் நந்தினியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.  நந்தினியின் முகத்தில் எவ்வித
மாறுதலும் இப்போது தெரியவில்லை; அமைதி குடிகொண்டிருந்தது.  
"ஐயா! மறுபடியும்..." என்று ஆரம்பித்தாள்.  
"ஆம், தேவி, மறுபடியும் வந்துவிட்டேன்! ஆனால் நானாக வரவில்லை!" என்று சொல்லிச்
சுற்றிலுமுள்ளவர்களை நோக்கினான்.  
நந்தினியின் அருகில் இருந்த சிறுவன், "அம்மா! இவன்தான் என்னை இருட்டில் பிசாசு 
விழுங்காமல் காப்பாற்றியவன்.  இவனை ஏன் கட்டிப் போட்டிருக்கிறது?" என்று கேட்டான்.  
வந்தியத்தேவன் சிறுவனைப் பார்த்து "குழந்தை! சும்மா இரு! பெரியவர்கள்
பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.  பேசினால் உன்னைப் புலி விழுங்கிவிடும்!" என்றான். 
"புலியை நான் விழுங்கிவிடுவேன்!" என்றான் சிறுவன்.
"மீனால் புலியை விழுங்கமுடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.  
அவனைச் சுற்றிலும் இருந்தவர்களின் கண்டங்களிலிருந்து ஒரு பயங்கரமான உறுமல் சத்தம்
வௌிவந்தது.  அது வந்தியத்தேவனைக் கூட ஒரு கணம் மெய்சிலிக்கச் செய்தது. 
ரவிதாஸன் உரத்த குரலில் "தேவி கேட்டீர்களா? இவனை இனி உயிருடன் தப்பிச் செல்ல 
விட முடியாது.  முன் இரண்டு தடவைகளில் தங்கள் விருப்பத்துக்காக இவனை உயிருடன் தப்பிச் 
செல்ல விட்டோம்.  இனிமேல் அப்படி இவனை விட முடியாது" என்றான்.  
வந்தியத்தேவன், "மந்திரவாதி! இது என்ன இப்படிப் பெரிய பொய்யாகச் சொல்லுகிறாய்?
நீயா என்னை உயிருடன் விட்டாய்? நான் அல்லவா உன்னைத் தப்பிப் போகவிட்டேன்? தேவி! இந்த
மந்திரவாதியைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! இவன் உண்மையில் ரவிதாஸன்தானா? 
அல்லது ரவிதாஸனுடைய 
ிசாசா!" என்று கேட்டான்.  
ரவிதாஸன் பயங்கரமாகச் சிரித்தான்.  "ஆம்! நான் பிசாசுதான்! உன்னுடைய இரத்தத்தை இன்று
குடிக்கப் போகிறேன்," என்றான்.  
மீண்டும் அங்கிருந்தவர்களின் தொண்டைகளிலிருந்து பயங்கர உறுமல் குரல் வௌியாயிற்று.  
இதற்குள் சிறுவன், "அம்மா! இவனிடம் ஒரு நல்ல குதிரை இருக்கிறது.  அதை எனக்குக் 
கொடுக்கச் சொல்லுங்கள்!" என்றான்.  
"குழந்தை! நீ என்னுடன் வந்துவிடு! உன்னை என் குதிரையின் மேல் ஏற்றி அழைத்துக்கொண்டு
போகிறேன்" என்றான் வந்தியத்தேவன்.  
ரவிதாஸன் வந்தியத்தேவனை நோக்கிக் கோரமாக விழித்து "அடே! வாயை மூடிக்கொண்டிரு!" 
என்று சொல்லி விட்டு, நந்தினியைப் பார்த்து, "தேவி! சீக்கிரம் கட்டளையிடுங்கள்!" என்றான்.  
நந்தினி நிதானமாக, "இவர் எப்படி இங்கு வந்தார்? எப்போது வந்தார்?" என்று கேட்டாள்.  
"சக்கரவர்த்தி மழைக்கு ஒதுங்கியிருந்த மண்டபத்திலிருந்து அவரை இந்த ஒற்றன் எடுத்துக் 
கொண்டு ஓடிவிடப் பார்த்தான்.  நல்ல சமயத்தில் போய் நாங்கள் தடுத்துப் பிடித்துக்கொண்டோம்.  ஒரு 
கணம் தாமதித்திருந்தால் விபரீதமாகப் போயிருக்கும்" என்றான் ரவிதாஸன்.  
"ஐயா! இவர்கள் சொல்வது உண்மையா?" என்று நந்தினி கேட்டாள்.  
"தங்களைச் சேர்ந்தவர்கள் உண்மை சொல்லக்கூடியவர்களா என்பது தங்களுக்குத்தானே 
தெரியும்? எனக்கு எப்படித் தெரியும் தேவி?" என்றான் வந்தியத்தேவன்.  
நந்தினியின்  முகத்தில் தோன்றிய புன்னகை மின்னலைப் போல் மறைந்தது.  அவள் 
ரவிதாஸனைப் பார்த்து, "ஐயா! நீங்கள் எல்லாரும் சற்று அப்பால் சென்றிருங்கள் நான் இவரிடம் சில 
விஷயங்கள் தனியாகக் கேட்டு அறிய வேண்டும்" என்றாள்.  
"தேவி! நேரம் ஆகிறது, அபாயம் நெருங்கிறது.  இந்த வேளையில்..." என்று ரவிதாஸன் 
கூறுவதற்குள், நந்தினி கடுமையான குரலில், "சற்றுமுன் நாம் செய்துகொண்ட நிபந
தனையை நினைவுபடுத்திக் 
கொள்ளுங்கள்.  மறுவார்த்தை சொல்லாமல் உடனே அகன்று செல்லுங்கள்.  சக்கரவர்த்தியையும் 
அப்பால் அழைத்துப் போங்கள்!" என்று கூறி, சிறுவனுடைய காதில் "குமாரா! சற்று அவர்களுடன் 
நகர்ந்து போ! உனக்கு இவரிடமிருந்து குதிரை வாங்கித்தருகிறேன்" என்றாள்.  
ரவிதாஸன் முதலியவர்கள் பின்னர் மறு வார்த்தை பேசாமல் அந்தச் சிறுவனையும் அழைத்துக்கொண்டு
அவசரமாக அப்பால் போனார்கள்.  
நந்தினி, வந்தியத்தேவனை இலேசான தீவர்த்தி வௌிச்சத்தில் ஊடுருவிப் பார்த்து, "ஐயா! 
உமக்கும் எனக்கும் ஏதோ ஒரு துவந்தம் இருப்பதாகக் தோன்றுகிறது" என்றாள். 
"அம்மணி! அந்தத் துவந்தம் மிகப் பொல்லாததாயிருக்கிறது; மிகக் கெட்டியாகவும் இருக்கிறது.  
என் உடம்பையும் கைகளையும் சேர்த்து இறுக்கிக் கட்டியிருக்கிறது!" என்றான் வந்தியத்தேவன்.  
"உம்முடைய விளையாட்டுப் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.வேண்டுமென்று
இங்கு வந்தீரா! தற்செயலாக வந்தீரா?" 
"வேண்டுமென்று வரவில்லை! தற்செயலாகவும் வரவில்லை.  தங்களுடைய ஆட்கள்தான் 
பலவந்தமாக என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள்.  இல்லாவிடில், இத்தனை நேரம் 
கொள்ளிடக்கரையை அடைந்திருப்பேன்." 
"என்னைப் பார்க்கும்படி நேர்ந்ததில் உமக்கு அவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது.  என்னைப்
பிரிந்து போவதற்கு அவ்வளவு ஆவல் என்றும் தெரிகிறது." 
"தங்களைப் பார்க்க நேர்ந்ததில் எனக்குக் கஷ்டம் இல்லை, தவிர தங்களைப் பிரிந்து 
போவதற்குத்தான் உண்மையில் வருத்தமாயிருக்கிறது.  தாங்கள் மட்டும் அநுமதி கொடுங்கள்; ஒரு 
பக்கத்தில் அந்தக் கிழட்டுப் பழுவேட்டரையரிடமும் இன்னொரு பக்கத்தில் இந்தப் பயங்கர 
மந்திரவாதிகளிடமும் அகப்பட்டுக் கொண்டு தாங்கள் திண்டாடுகிறீர்கள்.  ஒரு வார்த்தை சொல்லுங்கள்.  
இவர்கள
ிடமிருந்தெல்லாம் தங்கள் விடுதலை செய்து அழைத்துப் போகிறேன்..." 
"எங்கே அழைத்துப் போவீர்கள்?" 
"இலங்கைத் தீவின் காடுகளில் அநாதையைப் போல் அலைந்து கொண்டிருக்கும் தங்கள் அன்னையிடம் 
அழைத்துப் போய் விடுகிறேன்", என்றான் வந்தியத்தேவன். 
நந்தினி ஏமாற்றம் தொனிக்க ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.
"நானும் அப்படி அநாதையாக அலைய வேண்டும் என்று விரும்புகிறீரா? ஒரு வேளை அத்தகைய 
காலம் வந்தாலும் வரலாம்.  அப்போது அன்னையிடம் அழைத்துப் போக, உம்முடைய உதவியை
அவசியம் நாடுவேன்.அதற்கு முன்னால், என்னுடைய எண்ணம் நிறைவேற வேண்டும்.அது நிறைவேறுவதற்கு 
உதவி செய்வீரா?" என்று கேட்டாள்.  
"அம்மணி! தங்கள் மனதிற்கொண்ட எண்ணம் என்னவென்று தெரிந்தால் அதற்கு உதவி செய்வதைப்
பற்றி நான் சொல்ல முடியும்?" என்றான் வந்தியத்தேவன்.  
"உண்மையான பிரியம் உள்ளவர்கள் இப்படிச் சொல்லமாட்டார்கள். எண்ணம் என்னவென்பதைத் 
தெரிந்து கொள்ளாமலே அதை நிறைவேற்றுவதற்கு உதவி செய்ய முன் வருவார்கள்." 
"பிரியமுள்ளவர்கள் சமயத்தில் எச்சரிக்கை செய்து ஆபத்திலிருந்து காப்பாற்ற முயல்வார்கள். 
அம்மணி!  தங்களை இந்தக் கிராதகர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து, பெரிய அபாயத்தில் சிக்க
வைத்திருக்கிறார்கள்.  அவர்களுடைய காரியத்துக்கு உங்களை உபயோகப் படுத்திக் கொள்ளப்
போகிறார்கள்..." 
"நீர் கூறுவது தவறு! நான்தான் இவர்களை என்னுடைய காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்
பார்க்கிறேன்! இதை நீர் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளும்." 
"ஒரு சிறு குழந்தை எந்தக் காட்டிலிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து தங்களை 
ஏமாற்றுகிறார்கள்...." 
"குழந்தை எதற்காக என்று உமக்குத் தெரியுமா?"
"பாண்டியன் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப் பட்டம் கட்டுவதற்காக..." என்றான்.  
"மறுபடியும் தவறாகச் 
சொல்கிறீர்.  பாண்டியன் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க மட்டும் அல்ல; 
துங்கபத்திரையிலிருந்து இலங்கை வரையில் பரந்து கிடக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் 
அமர்த்தி முடி சூட்டுவதற்காக!" 
"அம்மம்மா! யாருடைய உதவியைக் கொண்டு இந்த மகத்தான காரியத்தைச் சாதிக்கப்
போகிறீர்கள்? இதோ சுற்றிலும் நிற்கிறார்களே - இந்த நரிக்கூட்டத்தின் உதவியைக் கொண்டா? சோழ
சாம்ராஜ்யத்தின் இருபது லட்சம் வீராதி வீரர்கள் கொண்ட மாபெருஞ்சேனையை, பகலில் வளைகளில்
ஒளிந்திருந்து, இரவு நேரத்தில் வௌிப்பட்டு வரும் இந்தப் பத்து இருபது நரிகளின் துணை கொண்டு வென்று
விடுவீர்களா?" 
"நான் இவர்களை மட்டும் நம்பியிருக்கவில்லை.  இதோ என் கையில் உள்ள வாளை
நம்பியிருக்கிறேன்.இதன் உதவியினால் என் மனத்தில் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றுவேன்." 
"அம்மணி! அந்த வாளைத் தாங்கள் ஒருநாளும் உபயோகப்படுத்தப் போவதில்லை. அதற்கு 
வேண்டிய பலம் தங்கள் கையிலும் இல்லை; தங்கள் நெஞ்சிலும் இல்லை!" 
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" 
"ஏதோ என் மனத்தில் தோன்றியதைக் கூறினேன்." 
"நீ சொல்வது முற்றும் தவறு என்று இந்த இடத்திலேயே என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்!" 
"அப்படியானால் நான் பாக்கியசாலிதான்.  தங்கள் திருக்கரத்தினால் வெட்டுப்பட்டுச் சாவதற்குக்
கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று கூறி வந்தியத்தேவன் வெட்டுப்படுவதற்கு ஆயத்தமாவது போல் கழுத்தை
வளைத்துத் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.  
"என் திருக்கரத்தினால் வெட்டுப் படுவதற்குத்தானா ஆசைப்படுகிறீர்? கிரீடம் சூட்டப்படுவதற்கு 
விரும்பவில்லையா?" என்றாள் நந்தினி.  
வந்தியத்தேவன் நிமிர்ந்து பார்த்து, "தாங்கள் வசமுள்ள கிரீடத்தை எத்தனை பேருக்குத்தான்
சூட்டுவீர்கள்?" என்று வினவினான்.  
"அது என்னுடைய இஷ
்டம்.  முடிவாக யாருக்குச் சூட்ட வேண்டுமென்று பிரியப்படுகிறேனோ, 
அவருடைய சிரசில் சூட்டுவேன்."
"அப்படியானால் இந்தச் சிறுபிள்ளையின் கதி என்ன ஆவது? 
"அவனுக்கு முடிசூட்டுவதும், சூட்டாததும் என் இஷ்டந்தானே?" 
"தேவி, தங்களுக்கு யாருக்கு இஷ்டமோ  அவருக்கு முடிசூட்டுங்கள்.  எனக்கு 
வேண்டியதில்லை." 
"ஏன்?" 
"என்னுடைய சிரசிலுள்ள சுருட்டை மயிரின் அழகைப் பற்றி பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  
கிரீடம் வைத்துக் கொண்டு அந்த அழகைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை." 
"உமது வேடிக்கைப் பேச்சை நீர் விடமாட்டீர்.  நல்லது ஐயா! பொன்னியின் செல்வன் கடலில்
விழுந்து இறந்த செய்தியைக் கேட்டதும் இளையபிராட்டி என்ன செய்தாள்? ரொம்ப துக்கப்பட்டாளா?" என்று
நந்தினி திடீரென்று பேச்சை மாற்றிக் கொண்டாள்.  
வந்தியத்தேவன் சிறிது திகைத்துவிட்டு, "பின்னே துக்கமில்லாமல் இருக்குமா? ஸ்திரீகள் 
எல்லாருமே இதயமற்றவர்களாக இருப்பார்களா?" என்றான்.  
"அந்தக் கொடும்பாளூர் பெண் ஓடையில் விழுந்து உயிரை விடப் பார்த்தாளாமே? அது 
உண்மையா? அவளை யார் எடுத்துக் காப்பாற்றினார்கள்?" என்று கேட்டாள்.  
உடனே வானதிக்கு நேர்ந்த ஆபத்தைக் குறித்து வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வந்தது.  
அவளுடைய கதி என்ன ஆயிற்றோ என்ற நினைவில் மூழ்கி வந்தியத்தேவன் கேள்விக்குப் பதில் 
சொல்லாமலிருந்தான்.  
நந்தினி குரலைக் கடுமைப் படுத்திக்கொண்டு, "சரி; அதையெல்லாம் பற்றி நீர் ஒன்றும்
சொல்லமாட்டீர் எனக்குத் தெரியும்.  ஆதித்த கரிகாலர் கடம்பூர் மாளிகைக்கு வராதபடி நீர் தடுக்கப்
போகிறீரா?" என்று கேட்டாள்.  
"தடுப்பதற்குப் பிரயத்தனம் செய்வேன்" என்றான் வந்தியத்தேவன். 
"உம்மால் அது முடியாது என்று நான் சொல்லுகிறேன்." 
"என்னால் முடியும் என்று நானும் சொல்லவில்
லை.  தேவி! பிரயத்தனம் செய்வேன் என்று தான்
சொன்னேன்.  இளவரசர் ஒன்று செய்ய நினைத்துவிட்டால், அதை மாற்றுவது எளிதன்று!" 
"ஆதித்த கரிகாலரின் இயல்பை நீர் நன்றாய் அறிந்து கொண்டிருக்கிறீர்." 
"என்னைவிட அதிகமாகத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்." 
"நல்லது; நான் எவ்வளவுதான் சொன்னாலும் நீர் என் கட்சியில் சேரமாட்டீர்.  என் 
எதிரியின் கட்சியில்தான் இருப்பீர்.  அப்படித்தானே?" 
"அம்மணி! தங்கள் எதிரி யார்?" 
"என் எதிரி யார்? பழையாறை இளவரசிதான்! வேறு யார்?" 
"அது தங்கள் மனோ கற்பனே, தேவி! தங்களுக்கு ஓர் உண்மையை முக்கியமான உண்மையை, 
தெரிவிக்க விரும்புகிறேன்..." 
"போதும், போதும்! நீர் உண்மை என்று சொல்ல ஆரம்பித்தால் அது வடிகட்டின கோட்டைப்
பொய்யாயிருக்கும்.  எனக்குத் தெரியாதா? உமது உண்மையை நீரே வைத்துக் கொள்ளும்!" என்று நந்தினி
குரோதத்துடன் கூறிவிட்டுக் கையைத் தட்டினாள்.  ரவிதாஸன் முதலியவர்கள் உடனே நெருங்கி வர
ஆரம்பித்தார்கள்.  
வந்தியத்தேவன் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தான் சரியாக உபயோகப் படுத்திக்
கொள்ளவில்லை என்பதை உணர்ந்தான்.  இந்த ராட்சஸி என்னைக் கொன்று விடும்படி தான் இவர்களுக்குக்
கட்டளையிடப் போகிறாள்.  கடவுளே! எத்தகைய சாவு! போர்க்களத்தில் எதிரிகளுடன் போராடி வீர
மரணம் அடையக் கூடாதா? இப்படியா என் தலையில் எழுதியிருந்தது? 
ரவிதாஸன் கோஷ்டியார் அருகில் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.  
இரையை நெருங்கிய ஓநாய்க் கூட்டம் உறுமுவது போல் அவர்கள் உறுமிக் கொண்டிருந்தார்கள்.  
"ராணி! தாங்கள் என்னதான் சொன்னாலும் இவன் வழிக்கு வரமாட்டான் என்று எனக்குத் 
தெரியும்.  தாங்கள் உடனே புறப்படுங்கள்.இவனை நாங்கள் இந்தப் புண்ணிய ஸதலத்தில் பலி 
கொடுத்து விட்டுக் கிளம்புகிறோம்", என்றான் ரவிதாஸன்.  
"மந்திரவாத
! ஜாக்கிரதை! என்னுடைய விருப்பம் அதுவன்று.  இவரை உங்களில் யாரும் எதுவும்
செய்யக்கூடாது.  இவரை எவனாது தொட்டால் அவனை நானே இந்தக் கத்தியினால் வெட்டிக் கொன்று பழி
வாங்குவேன்!" என்று நந்தினி கர்ஜித்தாள்.
ரவிதாஸன் முதலியோர் திகைத்து நின்றார்கள்.  
"இவரால் எனக்கு இன்னும் பல காரியம் ஆகவேண்டியிருக்கிறது.  தெரிகிறதா? நான் இதோ
புறப்படுகிறேன்; நீங்களும் புறப்படுங்கள்.  இவர் அவருக்கு விருப்பமான வழியில் போகட்டும்.  யாரும்
இவரைத் தடை செய்ய வேண்டாம்!" என்றாள் நந்தினி.  
ரவிதாஸன், "தேவி! ஒரு விண்ணப்பம்! தங்கள் சித்தப்படி செய்யக் காத்திருக்கிறோம்.  ஆனால்
இவனிடம் குதிரை இருக்கிறது.  இவனை முதலில் போக விடுவது நல்லதா? கொஞ்சம் யோசித்துச்
சொல்லுங்கள்!" என்றான்.  
"நல்லது; இவரை அந்தப் பள்ளிப்படைக் கோவில் தூணுடன் சேர்த்துக் கட்டிவிடுங்கள்.  கட்டை
அவிழ்த்துக் கொண்டு புறப்பட இவருக்குச் சிறிது நேரம் ஆகும்.  அதற்குள் இந்தப் பள்ளிப்படைக் காட்டை
நீங்கள் தாண்டிப் போய் விடலாம்" என்றாள்.  
வந்தியத்தேவன் பள்ளிப்படைத் தூணுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான்.சற்றுத் தூரத்தில் அவன்
குதிரை ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது.  
நந்தினி பல்லக்கில் ஏறிக் கொண்டு போய் விட்டாள். 
சிம்மாசனத்தை இரண்டு ஆட்கள் தூக்கிச் சென்றார்கள்.  
ரவிதாஸன் கோஷ்டியார் சிறுவனை அழைத்துக் கொண்டு விரைந்து போய் விட்டார்கள்.  
அவர்களுடன் சென்ற தீவர்த்தியின் வௌிச்சமும் சிறிது சிறிதாக மங்கி மறைந்து விட்டது.  
வந்தியத்தேவனைச் சுற்றிலும் கன்னங்கரிய காரிருள் சூழ்ந்தது.
சிறிது நேரத்துக்கு முன்னால் அங்குப் பார்த்த காட்சிகள், நடந்த நிகழ்ச்சிகள் எல்லம் கனவோ
எனத் தோன்றியது.  
இருட்டில் ராட்சத வௌவால்கள் சடபடவென்று தங்கள் அகன்ற சிறக
களை அடித்துக்கொண்டன.  
ஊமைக் கோட்டான்கள் உறுமின. 
நரிகள் அகோரமான குரலில் முறைவைத்து ஊளையிட்டன. 
ஊளையிட்டுக்கொண்டே அவை நெருங்கி வருவதுபோல் வந்தியத்தேவனுக்கு உணர்ச்சி ஏற்பட்டது.
காட்டில் இனந்தெரியாத உருவங்கள் பல நடமாடின.  
கடம்பூர் மாளிகையில் அவன் கண்ட கனவு நினைக்கு வந்தது.  
ஆயிரம் நரிகள் வந்து தன்னைச் சூழ்ந்து கொண்டு பிடுங்கித் தின்னப் போவதாக எண்ணி நடுங்கினான்.  
அவசர அவசரமாகக் கட்டுக்களை அவிழ்த்துக் கொள்ளப் பார்த்தான்.  
இலேசில் அக்கட்டுக்கள் அவிழ்கிற விதமாகத் தெரியவில்லை.  
வௌிச்சம் இருந்தால் கட்டுக்களை அவிழ்ப்பது சிறிது சுலபமாயிருக்கும்.  
ஆனால் வௌிச்சம் என்று அறிகுறியே அங்கு இல்லை. 
மின்னல் வௌிச்சமும் இல்லை; மின்மினி வௌிச்சங்கூட இல்லை.  
வானத்தில் ஒரு வேளை மேகங்கள் அகன்று நட்சத்திரங்கள் தோன்றியிருந்தாலும் அவற்றின் 
வௌிச்சம் அந்தக் காட்டுக்குள் நுழைய இடமில்லை.  
ஆகா! அது என்ன சத்தம்? 
காட்டில் எத்தனையோ ஜந்துக்கள் நடமாடும்; அதில் என்ன அதிசயம்? 
இல்லை; இது மனிதனுடைய காலடிச் சத்தம் மாதிரி இருக்கிறதே! குதிரை இலேசாகக் கனைத்தது.  
கால்களை மாற்றி மாற்றி வைத்து அவஸ்தைப்பட்டது.  ஒரு வேளை புலி, கிலி வருகிறதா என்ன? 
வந்தியத்தேவன் கட்டை அவிழ்க்க அவசரப்பட்டான்; பயனில்லை.  
அதோ ஒரு உருவம்.  அந்தக் காரிருளில் ஒரு கரிய நிழல் போன்ற உருவம்.  மனித உருவமா?
அல்லது...  வேறு என்னவாயிருக்க முடியும்? 
அது நெருங்கி நெருங்கி வந்தது.  
வந்தியத்தேவன் தன்னுடைய மனோதைரியம் முழுவதையும் சேகரித்துக் கொண்டான்.  
தன்னுடைய தேகத்தின் பலம் உழுவதையும் காலில் சேர்த்துக் கொண்டான்.  
ஓங்கி ஒரு உதை விட்டான்! 
"வீல்" என்று சத்தமிட்டுக் கொண்டு அந்த உருவம் பின்னால்
 தாவிச் சென்றது.  
சிறிது தூரம் பின்னால் சென்றதும் "டணார்" என்று ஒரு சத்தம். பள்ளிப்படைச் சுவரில் 
அது மோதிக்கொண்டது போலும்! 
பின்னர் அங்கேயே அந்த உருவம் சிறிது நேரம் நின்றது.  பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்து
கொண்டு நிற்பதாகத் தோன்றியது.  
இருட்டில் விவரம் தெரியாவிட்டாலும் அந்த உருவம் தன்னையே உற்றுப் பார்த்துக் 
கொண்டிருப்பது போல் வந்தியத்தேவனுக்கு உணர்ச்சி ஏற்பட்டது.  
கட்டுக்களை அவிழ்த்துக்கொள்வதற்கு மேலும் அவசரமாக அவன் முயன்றான்.  அந்த மந்திரவாதிப்
பிசாசுகள் இவ்வளவு பலமாக முடிச்சுக்களைப் போட்டுவிட்டன! ஆகட்டும்; மறு தடவை அந்த ரவிதாஸனைப்
பார்க்கும்போது சொல்லிக் கொடுக்கலாம்! 
அந்த உருவம் இடம் விட்டுப் பெயர்ந்தது.  பள்ளிப்படைக்குள்ளே போவது போலத் தோன்றியது.  
சிறிது நேரத்துக்கெல்லாம் பள்ளிப்படைக் கோவிலுக்குள் கூழாங்கற்கள் மோதுவது 
போன்ற  'டண்', 'டண்' சத்தம் சில முறை கேட்டது.  
கோவில் வாசலில் வௌிச்சம். 
அதோ அந்த உருவம் கையில் ஒரு சுளுந்தைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்கு வௌியே வருகிறது.  
தன்னை நோக்கி வருகிறது.  
அது ஒரு காளாமுக வீர சைவனின் உருவம். நீண்ட தாடியும், சடைமுடியும், மண்டை ஓட்டு 
மாலையும் அணிந்த பயங்கரமான உருவம்.  
வந்தியத்தேவன் அருகில் வந்து வௌிச்சத்தை தூக்கிப் பிடித்து அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு 
நின்றது.  
பக்க தலைப்பு
முப்பத்தேழாம்  அத்தியாயம் 
வேஷம்  வௌிப்பட்டது 
பயங்கரத் தோற்றம் கொண்டிருந்த அந்தக் காளாமுக சைவரை அந்த நேரத்தில் அந்த இடத்தில்
பார்க்கும் வந்தியத்தேவன் ஒரு கணம் திகிலடைந்தான்.  பிறகு அவனுக்கு இயற்கையான துணிச்சல் திகிலை
விரட்டியடித்தது.  "இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? எங்கே?" என்று சிந்த
த்தான்.  ஆம், ஆம்;
அரிச்சந்திர நதிக்கரையில் மரத்தடியில் படுத்திருந்த போது இரண்டு பேர் வந்து உற்றுப் பார்த்துவிட்டுப்
போகவில்லையா? அவர்களில் ஒருவன் இவன்! அவ்வளவுதானா? ஒரு தடவை மட்டும் பார்த்த முகமா இது? 
அந்தக் கூரிய பார்வையுள்ள கண்களை வேறு எங்கேயும் பார்த்ததில்லையா? 
இதற்குள் காளாமுக சைவன் அவனை உற்றுப் பார்த்து விடு, "ஹா! ஹா! ஹா!" என்று சிரித்தான். 
அந்தக் குரல் அடிக்கடி கேட்ட குரல்போல் இருக்கிறதே? 
"அட சே! நீ தானா? உனக்காகவா இந்த நள்ளிரவில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்?" 
என்று காளாமுக சைவன் கூறியபோது, அவன் வேண்டுமென்று சிறிது குரலை மாற்றிக் கொண்டு 
பேசியதாகத் தோன்றியது.  
"பின்னே, யாருக்காக வந்தாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.  
"இளவரசைத் தேடிக் கொண்டு வந்தேன்!" என்றான் காளாமுகன்.
"எந்த இளவரசரை?" 
"உனக்கென்ன அதைப்பற்றி? நீ ஏன் கேட்கிறாய்?" 
"நானும் ஒரு இளவரசன்தான்; அதனால் தான் கேட்டேன்." 
"இளவரசனுடைய முக லட்சணத்தைப் பார்...!" 
"என் முகலட்சணத்துக்கு என்ன ஐயா, குறைவு? உம்மைப் போல் தாடி மீசையும், 
சடைமுடியும், எலும்பு மாலையும் அணிந்தால் என் முகம் இலட்சணமாகி விடுமா?" 
"அணிந்து பாரேன்! அப்போது தெரியும்." 
"தாடி மீசையும் ஜடைமுடியும் எத்தனைநாளில் வளரும்?"
"அது என்ன பிரமாதம்? ஒரு நாளில் வளர்ந்து விடும்.  வேண்டுமென்றால் ஒரு நாழிகையில்
கூட..." 
"அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன்..." 
"என்ன நினைத்தாய்?" 
"ஒன்றுமில்லை.  என்னைக் கட்டியிருக்கும் கட்டுக்களை அவிழ்த்துவிடு.  நானும் உங்கள் 
கோஷ்டியில் சேர்ந்து விடுகிறேன்." 
"போது போதும்! உன்னைப் போன்ற ஒற்றர்கள் இன்னும் யாரோ எங்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள்.
அதனால்தான் எங்கள் மகாசங்கம் இன்று அப்படி முடிந்தது." 
"எப்பட
ி முடிந்தது?" 
மகா சங்கத்துக்கு இளவரசர் வரப்போகிறார்; அவர் சிம்மாசனம் ஏறியதும், எங்கள் மகாகுருவை 
இராஜ குருவாக ஏற்றுக் கொள்வதாய் வாக்களிக்கப் போகிறார் என்று காத்திருந்தோம்! இளவரசர் 
வரவேயில்லை." 
"என்னைக் கட்டு அவிழ்த்துவிடு; இளவரசர் ஏன் வரவில்லையென்று நான் தெரியப்படுத்துகிறேன்." 
"எந்த இளவரசர்?" 
"வேறு யார்? கண்டராதித்தரின் குமாரர் மதுராந்தகர் தான்!" 
"நான் ஊகித்தது சரி!" 
"என்ன ஊகித்தாய்?" 
"நீ ஒற்றன் என்று ஊகித்ததைத்தான் சொல்கிறேன்." 
"எதைக் கொண்டு ஊகித்தாய்?" 
"இளவரசரைத் தேடிக்கொண்டு வந்தபோது, இந்தக் காட்டுக்குள்ளிருந்து சிலர் வௌியேறுவதைப்
பார்த்தேன்.  அவர்கள் இன்னார் என்று எனக்குத் தெரியும்.  நீ ஒற்றன் என்று சந்தேகித்துத்தான் அவர்கள்
உன்னைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும்.  ஆனால் உன்னை உயிரோடு ஏன் விட்டுவிட்டுப் போனார்கள் என்றுதான் 
தெரியவில்லை." 
"அதை நான் சொல்லுகிறேன்; என்னைக் கட்டு அவிழ்த்து விடு!" 
"நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.  உன்னைக் கட்டு அவிழ்த்து விடவும் முடியாது. நான் சொல்கிறபடி 
செய்கிறதாக ஒப்புக் கொண்டால்..." 
"நீ சொல்கிறபடி என்ன செய்ய வேண்டும்?" 
"உனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லையென்று ஒப்புக் கொண்டு 
நூற்றெட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டும்!" 
"அப்படியா சமாசாரம்?" என்றான் வந்தியத்தேவன்.  
இந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்த போதெல்லாம் அவனுடைய கைகள் சும்மா இருக்கவில்லை.  மெள்ள 
மெள்ள கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டேயிருந்தன.  "நூற்றெட்டுத் தோப்புக் கரணம் போட வேண்டும்" என்று 
காளாமுகன் கூறியபோது எல்லாக்கட்டுக்களும் அவிழ்ந்து விட்டன.  அவ்வளவு தான்; ஒரே பாய்ச்சலாகக் 
காளாமுகன் மீது பாய்ந்தான் வந்தியத்தேவன், அவனைக் கீழே தள்ளினான
்.  காளாமுகன் கையில் ஏந்தியிருந்த 
சுளுந்து பக்கத்தில் விழுந்தது; ஆனால் அடியோடு அணைந்து விடாமல் சிறிது வௌிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.  
கீழே விழுந்த காளாமுகன் மார்பின்மீது வந்தியத்தேவன் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் முக 
தாடியைப் பிடித்துக் குலுக்கினான்.  தாடி வந்தியத்தேவனுடைய கையோடு வந்து விட்டது.  அதே சமயத்தில்
காளாமுகன் வந்தியத்தேவனை உதறித் தள்ளிவிட்டு எழுந்து நின்றான்.  
தரையில் கிடந்த அணைந்து போகும் தறுவாயிலிருந்த சுளுந்தை வந்தியத்தேவன் எடுத்துத் தூக்க்கிப்
பிடித்தான்.  தாடியும் சடையும் இழந்த காளாமுகனுடைய முகம் சாக்ஷாத் வீர வைஷ்ணவ 
ஆழ்வார்க்கடியானுடைய முகமாகக் காட்சி அளித்தது.  இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் 
சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  
"வைஷ்ணவரே! சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது என்று எனக்குச் சொன்னீரே?
நீர் மட்டும் என்ன செய்தீராம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"உன்னைப்போல் நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொள்ளவில்லையே, அப்பனே! நான் 
மட்டும் இப்போது வந்திராவிட்டால்..." 
"நீர்தான் என் கட்டுக்களை அவிழ்த்து விட்டதாக எண்ணமா?" 
"நீயே கட்டு அவிழ்த்துக் கொண்டிருந்தாலும் இந்த காட்டிலிருந்து என் உதவியில்லாமல் வௌியே
போகமுடியாது.  நரிகளுக்கு இரையாக வேண்டியதுதான்." 
"நரிகள் கிடக்கட்டும்.  இங்கே சற்றுமுன் வந்து கூடியிருந்த மந்திரவாதி நரிகளை நீர் 
பார்த்திருந்தால்...  அந்த நரிகளிடமிருந்து நான் தப்பியதுதான் பெரிய காரியம்!" 
"அந்த மந்திரவாதிகளை எனக்கும் தெரியும்.  மந்திரவாதிகள் மட்டுந்தான் வந்திருந்தார்ழூகளா?
இன்னும் யாராவது வந்திருந்தார்களா?" 
"சிறிய மீன் ஒன்று வந்திருந்தது.  புலியை விழுங்க ஆசைப்படும் அதிசயமான மீன் அது!" 
"ஆகா! சொல்! சொல்! யார் யார் வந்திருந்தார்கள்.  என்னென்ன நடந்தது? விவரமாகச் சொல்!" 
"நீர் எதற்காக இந்த வேஷம் தரித்தீர்? சாயங்காலம் எங்கே போயிருந்தீர்? போயிருந்த 
இடத்தில் என்ன நடந்தது?...  அதையெல்லாம் சொன்னால் நடந்ததை நான் சொல்கிறேன்!" 
"நான் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை.  இன்று முன்னிரவில் கொள்ளிடக்கரையில்
காளாமுகர் மகாசங்கம் கூடும் என்று தெரிந்தது.  அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் இந்த
வேஷம் போட்டுக் கொண்டு போனேன்.  பார்த்துவிட்டுக் கொள்ளிடக்கரைத் தோணித்துறையில் உன்னை வந்து
சந்திக்கலாம் என்று எண்ணினேன். மகாசங்கமும் கூடிற்று; பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். 
காளாமுகர்களின் பெரிய குருவும் வந்திருந்தார்.  ஆனால் முக்கியமாக யார் வருவார் என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்களோ, அவர் வரவேயில்லை!" 
"இளவரசர் மதுராந்தகரைத்தானே எதிர்பார்த்தார்கள்?" 
"ஆம்; அது எப்படி உனக்குத் தெரிந்தது?" 
"மதுராந்தகர் தஞ்சை சிம்மாசனத்தில் ஏறினால் இராஜ்ய பாரம் அழகாகத்தான் நடைபெறும்!" 
"ஏன் அவ்விதம் சொல்கிறாய்?" 
"ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவரால் முடியவில்லையே? பழுவேட்டரையர் போன்ற
சிற்றரசர்களையும், கலக மூட்டும் காளாமுக சைவர்களையும், சண்டைக்கார வீர வைஷ்ணவர்களையும் 
அவரால் எப்படி அடக்கி ஆள முடியும்?" 
ஆழ்வார்க்கடியான், நகைத்துவிட்டு, "நீ வரும் வழியில் மதுராந்தகரைப் பார்த்தாயா? அவருக்கு 
என்ன நேர்ந்தது தெரியுமா?" என்று கேட்டான்.  
வந்தியத்தேவன் தான் மதுராந்தகரைத் தொடர்ந்து வந்ததையும், திடீரென்று தீவர்த்தியைக் கண்டு
அவருடைய குதிரை தறிகெட்டு ஓடியதையும், தான் அவரைச் சிறிது தூரம் தேடிப் போனதையும், கடைசியில்
களத்துமேட்டில் குதிரையை மட்டும் பார்த்ததையும் கூறினான்.  
"
யோ! பாவம்! குதிரை அவரை எங்கே தள்ளிற்றோ, என்னவோ? அவருடைய உயிருக்கே 
ஆபத்து நேர்ந்தாலும் நேர்ந்திருக்கலாம்.  அதனால்தான் அவர் உங்கள் மகாசங்கத்துக்கு வரவில்லை; நாம் 
மறுபடியும் போய் அவரைத் தேடிப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.  
"அழகுதான்! அதைப்பற்றி நமக்கு என்ன? நம்முடைய வேலையை நாம் பார்க்கலாம் வா! புறப்படு
உடனே! பொழுது விடிவதற்குள் நாம் கொள்ளிட நதியின் தோணித்துறையில் இருக்க வேண்டும்" என்றான்
ஆழ்வார்க்கடியான்.  
"மதுராந்தகர் வாய்க்காலிலோ, வயல் வரப்பிலோ விழுந்த செத்துக் கிடந்தாரானால்?..
அப்போதுகூட நமக்கு என்ன கவலை என்று சொல்வீரா?" 
"அப்படியெல்லாம் நேர்ந்திராது.  அநிருத்தர் அதற்கு முன் ஜாக்கிரதை ஏற்பாடு செய்திருப்பார். 
"முதன் மந்திரி அநிருத்தாரா? அவருக்கு என்ன இதைப் பற்றித் தெரியும்?" 
"ஆகா! அது என்ன அப்படிக் கேட்கிறாய்? அன்பில் அநிருத்தருக்குத் தெரியாமல் இந்த 
இராஜ்யத்தில் எந்த இடத்திலும் எதுவுமே நடக்க முடியாது." 
"ஓகோ! கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக்கூட்டத்தைப் பற்றிய விஷயமும் அவருக்குத்
தெரியுமா?" 
"ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்.  வீர நாராயணபுரத்துத் திருவிழாவின் போது
பழுவூர் ராணியின் பல்லக்குப் போனதை நாம் இருவர் ஒரு மரத்தடியில் நின்று பார்த்தோம் அல்லவா!" 
"ஆம் பல்லக்கின் திரை விலகியதும் நீர் அடைந்த பரபரப்பு இன்னும் என் ஞாபகத்தில்
இருக்கிறது.  'பழுவூர் ராணியிடம் ஒரு ஓலை கொடுக்க முடியுமா' என்று நீர் என்னைக் கேட்டீர்?" 
"நீ அதற்குச் 'சீச்சீ! அது என்ன வேலை' என்றாய்.  நான் ஏதோ? காதல் ஓலை கொடுக்க 
விரும்பியதாகவே எண்ணினாய்.  'சதிகாரர்களின் பேச்சை நம்பி மோசம் போகவேண்டாம்' என்று 
மதுராந்தகருக்கு எச்சரிக்கை செய்யவே நான் விரும்பினேன், முதன் மந்திரியின் கட்டளைப்படி!" 
"பல்லக்க
ல் இருந்தது மதுராந்தகர் என்று உமக்குத் தெரியுமா?" 
"முதலில் சந்தேகித்தேன். திரைவிலகியதும் அந்த இரகசியம் தெரிந்தது.  நீ நல்ல 
அழுத்தக்காரன்.  நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் நீ பல்லக்கில் இருந்தது பழுவூர் ராணி 
அல்ல மதுராந்தகர் என்று சொல்ல மறுத்து விட்டாய் அல்லவா?"
"நீர் மாத்திரம் அழுத்தக்காரர் இல்லையா? இன்று சாயங்காலம் நீர் எங்கே போகப் போகிறீர்
என்று கூடச்சொல்ல மறுத்து விட்டீரே." 
"சொன்னால் நீ அதிலும் தலையிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருப்பாய்.  இப்போதே 
எவ்வளவு சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டாய், பார்! இனிமேலாவது..." 
"காளாமுகர் கூட்டத்தைப் பற்றியும் மதுராந்தகர் அங்கே போக உத்தேசித்திருப்பது பற்றியும்,
முதன் மந்திருக்குத் தெரியுமா?" 
"தெரியாமலா என்னை அனுப்பினார்? அதே சமயத்தில் மதுராந்தகர் அங்கே போய்ச் 
சேராதிருப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.  யாரோ தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான் என்று
சொன்னாயே, அவனும் அநிருத்தரின் ஆளாகத்தான் இருந்திருப்பான்.  வேண்டுமென்றே குதிரையை மிரட்டித்
தறிகெட்டு ஓடும்படி செய்திருப்பான்.  தரையில் விழுந்த இளவரசரை யாராவது எடுத்துக்
காப்பாற்றியிருப்பார்கள்.  இத்தனை நேரம் அநேகமாக அவர் ரதத்திலோ, பல்லக்கிலோ ஏறித் தஞ்சையை
நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்.  வா! நாமும் நம் வழியே போகலாம்.  
"வைஷ்ணவரே! நான் வர முடியாது." 
"இது என்ன, நீ ஒப்புக்கொண்ட காரியம் என்ன ஆயிற்று? காஞ்சியிலிருந்து ஆதித்த 
கரிகாலர் புறப்பட்டு விட்டதாகக் கேள்விப்படுகிறேன்.  நாம் உடனே வாயுவேக மனோவேகமாகப் 
போனால்தான்...." 
"ஆதித்த கரிகாலரிடம் கொடுக்க வேண்டிய ஓலையை நீரே கொடுத்துவிடலாமே? அவர் 
மதுராந்தகரைப் போல் ஸ்திரீ வேஷத்திலும் வர மாட்டார்; இரவில் ஒளிந்தும் பிரயாணம் செய்ய ம
ட்டார்..." 
"நீ என்ன செய்யப்போகிறாய்?" 
"உண்மையில் நான் மதுராந்தகரைப் பின் தொடர்ந்து இன்று சாயங்காலம் புறப்படவில்லை.  
வேறொருவரைத் தொடர்ந்து போக ஆரம்பித்ததில் மதுராந்தகரை வழியில் தற்செயலாகப் பார்க்க 
நேர்ந்தது." 
"நான் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன்.  நீ தொடர்ந்து போக ஆரம்பித்தது ஒரு பெண்மணியாக 
இருக்கும்." 
"நீர் பொல்லாத வைஷ்ணவர்! ஒரு நாள் உம்முடைய மண்டையை உடைத்துவிட்டு மறுகாரியம்
பார்க்கப் போகிறேன்." 
"இது உன்னால் முடியாத காரியம்.  ஏற்கெனவே என் மண்டையை ஒரு காளாமுகனுக்கு 
அடகு வைத்திருக்கிறேன்.  அது போனால் போகட்டும், நீ குடந்தையிலிருந்து யாரைத் தொடர்ந்து
புறப்பட்டாய்? அந்தப் பெண் யார்?" 
"கொடும்பாளூர் இளவரசி குடந்தை சோதிடர் வீட்டுக்கு வந்திருந்தாள்.  பல்லக்கில்
ஏறிக்கொண்டு தனியாகப் புறப்பட்டுப் போனாள்.  உண்மையில் அந்தச் சித்தப் பிரமை கொண்ட பெண்ணைத்
தொடர்ந்து நான் கிளம்பவில்லை.  அவளுடைய பல்லக்கு நான் போக வேண்டிய பாதையில் கொஞ்சதூரம்
போயிற்று.  திடீரென்று அந்தப் பல்லக்கைச் சில மனிதர்கள் வந்து தாக்கினார்கள்.  கூடப்போன தாதிப்
பெண்ணை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு வானதியை மட்டும் கொண்டு போனார்கள்.  வைஷ்ணவரே! அந்தப்
பெண்ணின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் உம்மோடு வர எனக்கு இஷ்டமில்லை." 
"அந்தப் பெண்ணைப் பற்றி உனக்கு என்ன அவ்வளவு கவலை?" 
"அது என்ன அப்படிச் சொல்கிறீர்? ஈழத்துப் பட்டமகாவீரர் சிறிய வேளாரின் 
புதல்வியல்லவா? பழையாறை இளைய பிராட்டியின் மனத்திற்குகந்த தோழியல்லவா? இன்னும், 
பொன்னியின் செல்வருக்கு வானதி தேவியை மணம் செய்விக்கப் போவதாகவும் ஒரு பிரஸ்தாபம் 
இருந்ததல்லவா?" 
"அப்பனே! பொன்னியின் செல்வர்தான் கடலில் முழுகி இறந்து விட்டாரே? அவருடைய
திருமணத்தைப் பற்றி 
ப்போது என்ன கவலை?" 
"அவர் இறந்து விட்டார் என்பது என்ன நிச்சயம்? ஊகந்தானே?" 
"அப்படியானால் அவர் உயிரோடிருக்கலாம் என்று நீ நினைக்கிறாயா?" 
"வைஷ்ணவரே! என்னுடைய வாயைப் பிடுங்கி ஏதேனும் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம்
என்பது உங்கள் உத்தேசமாயிருந்தால், அதை மறந்துவிடும்!" 
"சரி! சரி! நீ பெரிய அழுத்தக்காரன் என்பது எனக்குத் தெரியும் ஆனால் வானதி தேவியைப் 
பற்றி நீ கவலைப்பட வேண்டாம்.  இளைய பிராட்டிக்கு அவள் பேரில் உயிர் என்பதுதான் உனக்கு 
நன்றாகத் தெரியுமே?" 
"அதனாலேதான் நானும் கவலைப்படுகிறேன்.  வானதி தேவிக்கு இந்த ஆபத்து வந்தது இளைய
பிராட்டிக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லவா?" 
"இன்றைக்குத் தெரியாவிட்டால் நாளைக்குத் தெரிந்து விடுகிறது." 
"நாளைக்குத் தெரிந்து என்ன பயன்? காளாமுகர்கள் அந்தக் கன்னிப் பெண்ணை இன்றிரவு பலி
கொடுத்து விட்டால்...." 
"வானதியைக் காளாமுகர்கள் தாக்கிப் பிடித்துக் கொண்டு போனதாகவா சொல்லுகிறாய்?"
"அப்படித்தான் எனக்குத் தோன்றியது.  வானதியின் தோழியும் அப்படித்தான் என்னிடம் 
கூறினாள்." 
"அது உண்மையானால், நீ கொஞ்சம் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை.  கொடும்பாளூர் 
வம்சத்தார் காளாமுகத்தைச் சேர்ந்தவர்கள்.  வானதி தேவி கொடும்பாளூர்ப் பெண் என்று தெரிந்தால், 
அவளுக்குக் காளாமுகர்கள் இராஜோபசாரம் செய்வார்கள்!" 
"ஓகோ! இது எனக்குத் தெரியாமல் போயிற்றே?" 
"ஆகையால்தான் காளாமுகர்கள் மதுராந்தகத் தேவருக்கு எதிராக இருக்கிறார்கள்..." 
"இந்த மண்டை ஓட்டுச் சாமியார்கள் எதிராக இருந்தால், என்ன வந்துவிடப் போகிறது? 
"உனக்குத் தெரியாது.  இந்த நாட்டின் மிகப் பெரிய குடும்பங்கள் காளாமுகத்தைச் சேர்ந்தவை. 
சைன்யத்திலும் அத்தகைய பலர் இருக்கிறார்கள் அதனாலேயே பழுவேட்டரையர் இன்றைக்க
 இந்த ஏற்பாடு
செய்திருந்தார்.  மதுராந்தகருக்குக் காளாமுகர்களின் ஆதரவைத் தேட முயன்றார்.  அது ஒரு குதிரை செய்த
கோளாறினால் பலிக்காமற் போயிற்று.  நீ புறப்பட்டு, என்னுடன் வருகிறாயா அல்லது நான் கிளம்பட்டுமா?" 
வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக எழுந்து குதிரையையும் கையில் பிடித்துக்கொண்டான்.  அடர்ந்த
காடுகளின் ஊடே ஆள் நுழையக்கூடிய வழியைக் கண்டுபிடித்து அவர்கள் வௌியே வந்தார்கள்.  
"அதோ பார்!" என்று ஆழ்வார்க்கடியான் வானத்தைச் சுட்டிக் காட்டினான்.  
முன் எப்போதையும் விடத் தூம கேதுவின் வால் நீண்டு வானத்தின் ஒரு பாதி முழுவதிலும்
வியாபித்திருப்பதை வந்தியத்தேவன் பார்த்தான்.  
குளிர்ந்த வாடைக்காற்று வீசிற்று.  வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. 
தூரத்தில் கிராமத்து நாய் ஒன்று தீனமான சோகக் குரலில் அழுதது.  
பக்க தலைப்பு
முப்பத்தெட்டாம்  அத்தியாயம் 
வானதிக்கு  நேர்ந்தது 
சூரியன் மறைந்து நாலு திக்கிலும் இருள் சூழ்ந்து வந்த நேரத்தில், வானதி குடந்தை - திருவாரூர்
சாலையில் பல்லக்கில் போய் கொண்டிருந்தாள்.  அவளுடைய உள்ளம் குழம்பியிருந்தது.  நாகைப்பட்டினம்
சூடாமணி விஹாரத்துக்குப் போக வேண்டும் என்றும், அங்கே காய்ச்சல் வந்து படுத்திருக்கும் இளவரசருக்குப்
பணிவிடை செய்ய வேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? புத்த
பிக்ஷூக்களின் விஹாரத்துக்குள் தன்னை அனுமதிப்பார்களா, அங்கே இளவரசரைத் தான் பார்க்க இயலுமா,
பார்த்தாலும் பணிவிடை செய்ய முடியுமா - என்பதை யெல்லாம் எண்ணியபோது ஒரே மலைப்பாயிருந்தது. 
நாகைப்பட்டினத்துக்குத் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணிய போது அதைரியம்
உண்டாயிற்று.  அதைரியத்தைப் போக்கி மனதில் உறுத
 உண்டுபண்ணிக் கொள்ள முயன்றாள்.உலகில் பெரிய
காரியம் எதுதான் எளிதில் சாத்தியமாகும்? ஒவ்வொருவர் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு எவ்வளவு
கஷ்டப் படுகிறார்கள்? அந்த ஓடக்காரப் பெண் கடலில் தனியாகப் படகு செலுத்திக்கொண்டு போக எவ்வளவு
நெஞ்சுத் துணிவு உள்ளவளாயிருக்க வேண்டும்? புயலிலும், மழையிலும் மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு
விட்டுக் கொண்டு போய் இளவரசரைக் காப்பற்றியதற்கு எவ்வளவு நெஞ்சுத் துணிவு அவளுக்கு இருக்க வேண்டும்? 
தான் இந்த சிறிய பிரயாணத்தைக் குறித்துப் பயப்படுவது எவ்வளவு பேதமை? சூடாமணி விஹாரத்துக்குள் உடனே 
போக முடியாவிட்டால் பாதகமில்லை.  அக்கம் பக்கத்தில் இருந்து இளவரசரைப் பற்றிய செய்தி தெரிந்தது
கொண்டிருந்தாலும் போதும்.  இளவரசரைப் பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை; அந்த ஓடக்காரப்
பெண்ணையாவது பார்க்க முடிந்தால் போதும்.  ஆம், அதுதான் சரி, அவளை எப்படியாவது தெரிந்து கொண்டால், 
அவள் மூலமாக இளவரசரைப் பார்க்க முடிந்தாலும் முடியலாம்.  அவரிடம் தனக்குள்ள அன்பு ஏதோ ஒரு
பிரயோஜனத்தை காட்டிவிட வேண்டும்.  அதற்குப் பிறகு இந்த உயிரை விட்டாலும் விட்டுவிட்டலாம்.  அல்லது
புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷூணி ஆனாலும் ஆகிவிடலாம்...  
மறுநாள் எந்த நேரத்துக்கு நாகைப்பட்டினம் போய்ச் சேரலாம் என்று பல்லக்குச் சுமப்பவர்களை
விசாரிப்பதற்காக வானதி பல்லக்கின் திரையை விலக்கி வௌியில் பார்த்தாள்.  சாலை ஓரத்தில்
ஓங்கி வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின்னால் சில உருவங்கள் மறைந்து நிற்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. 
இன்னும் சிறிது கவனமாக உற்றுப் பார்த்தாள்.  மறைந்து நின்றவர்கள் வீர சைவ காளாமுகர்கள் என்று
தெரிந்தது.  இதைக் குறித்து வானதிக்குச் சிறிதும் கவலை உண்டாகவில்லை.  அவள் கொடும்பாளூர் 
அரணமனையில் வளர்
்த காலத்தில் அடிக்கடி காளாமுகர்கள் அங்கே வருவதுண்டு.  அவளுடைய பெரிய 
தந்தையிடம்  பேசி, தங்களுக்கு வேண்டிய பொருகளைப் பெற்றுப் போவதுண்டு.  காளாமுகர்களின் பெரிய 
குருவே ஒரு சமயம் கொடும்பாளூர் வந்திருக்கிறார்.  அவருக்கு உபசாரங்கள், பூஜைகள் எல்லாம் நடந்தன. 
அவளுடைய பெரிய தகப்பனார் பூதி விக்கிரம கேசரி பல திருக்கோயில்களில் காளாமுகர்களுக்கு அன்னம் 
படைப்பதற்கென்று நிவந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்.  ஆகையால் காளாமுகர்கள் தனக்குக் கெடுதல் ஒன்றும் 
செய்ய மாட்டார்கள்.  ஒருவேளை உதவி செய்தாலும் செய்வார்கள்.  இன்றைக்கு அவர்களுடைய மகாசங்கம் 
கூடுகிறதென்பதும் வானதிக்குத் தெரிந்திருந்தது.  ஆகையால் அன்று பழையாறையிலிருந்து குடந்தைக்கு
வந்தபோது கூடச் சாலையில் காளாமுகர் கூட்டங்களை அவள் பார்க்கும்படி நேர்ந்தது.  ஆனாலும், இவர்கள்
எதற்காக மரத்தின் பின்னால் ஒளிந்து நிற்கிறார்கள்? தன்னை ஒருவேளை வேறு யாரோ என்று அவர்கள்
எண்ணிக் கொண்டு ஏதாவது தீங்கு செய்யலாம் அல்லவா?...  
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்தபோதே, மறைந்திருந்தவர்கள் திடு திடு வென்று ஓடி
வந்தார்கள்.  பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள், அப்போதும் அவள் பயப்படவில்லை.  தான் யார் என்பதை
அவர்களுக்குத் தெரிவிக்க எண்ணினாள்.  எப்படி அதைச் சொல்வது என்று யோசிப்பதற்குள், பல்லக்குடன் வந்த
பணிப்பெண்ணை இரண்டு பேர் பிடித்து மரத்தோடு கட்டுவதைப் பார்த்தாள்.  உடனே அவளையறியாமல் பீதியுடன் 
கூடிய கூச்சல் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது.  பல்லக்கைச் சூழ்ந்திருந்த காளாமுகர்களில் ஒருவன் ஒரு 
திரிசூலத்தை எடுத்து அவள் முகத்துக்கு நேரே காட்டி, "பெண்ணே, கூச்சல் போடாதே! கூச்சல் 
போடாதிருந்தால், உன்னை ஒன்றும் செய்யமாட்டோம்.  இல்லாவிட்டால் இந்தச் சூலத்தினால் குத்திக்கொன்று
விட
வோம்" என்றான்.  
வானதிக்குச் சிறிது தைரியம் வந்தது கம்பீரமாகப் பேச எண்ணிக்கொண்டு, "நான் யார்
தெரியுமா? கொடும்பாளூர் வேளார் மகள், என்னைத் தொட்டீர்களானால் நீங்கள் நிர்மூலமாவீர்கள்" என்றாள்.
அவளுடைய மனத்தில் தைரியம் இருந்ததே தவிர, பேசும்போது குரல் நடுங்கிற்று.  அதைக் கேட்ட காளாமுகன் 
"எல்லாம் எங்களுக்குத் தெரியும். தெரிந்துதான் உனக்காகக் காத்திருந்தோம் சற்று நேரம் சத்தமிடாமலிரு! 
இல்லாவிட்டால்...." என்று மறுபடியும் திரிசூலத்தை எடுத்து நீட்டினான்.  
அதே சமயத்தில் சாட்டையினால் 'சுளீர்' 'சுளீர்' என்று அடிக்கும் சத்தமும், 'ஐயோ' என்ற
குரலும் கேட்டது.  அப்படி அடிபட்டு அலறியவர்கள் சிவிகை தூக்குவோர் என்பதை வானதி அறிந்தாள்.
அவர்களைச் சில காளாமுகர்கள் சாட்டையினால் அடித்திருக்க வேண்டும்! 
அதைப்பற்றி வானதி ஆத்திரப்பட்டுப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிவிட எண்ணினாள்.  
அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.  ஏனெனில் சிவிகை தூக்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு 
ஓடத் தொடங்கினார்கள்.  காளாமுகர்களும் பல்லக்கைச் சூழ்ந்த வண்ணம் ஓடிவந்தார்கள்.  ஓடும்போது 
அவர்கள் பயங்கரமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினார்கள்.  ஆகையால் வானதி தான் கூச்சல் 
போடுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தாள். ஓடும் பல்லக்கிலிருந்து கீழே குதிப்பதும் இயலாத 
காரியம்.  அப்படிக் குதித்தாலும் இந்தப் பயங்கர மனிதர்களுக்கு மத்தியில் தானே குதிக்க வேண்டும்? 
இவர்கள் எங்கேதான் தன்னைக்கொண்டு போகிறார்கள், எதற்காகக் கொண்டு போகிறார்கள்
பார்க்கலாம் என்ற எண்ணமும் இடை இடையே தோன்றியது.
சுமார் அரை நாழிகை நேரம் ஓடியபிறகு மரங்களின் மறைவிலிருந்து ஒரு பழைய துர்க்கைக்
கோயிலுக்கு அருகில் வந்து நின்றார்கள்.  இதற்குள் நன்றாக இருள் சூழ்ந்து விட்டது.  ஒருவன் கோ
யிலுக்குள்
சென்று அங்கே எரிந்து கொண்டிருந்த தீபத்தை எடுத்துக் கொண்டு வந்து வானதியின் முகத்துக்கு எதிரே
கட்டினான், காளாமுகர்களில் ஒருவன் வானதியை உற்றுப்பார்த்து "பெண்ணே! நாங்கள் கேட்கும் விவரத்தைச்
சொல்லி விடு! உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம்.  அல்லது நீ எங்கே போக
விரும்புகிறாயோ, அங்கே கொண்டு போய்ப் பத்திரமாய்ச் சேர்த்து விடுகிறோம்" என்றான்.  
வானதியின் மனத்தில் இதுவரை தோன்றாத சந்தேகம் உதித்தது.  "எனக்கு என்ன விவரம்
தெரியும்? என்னை என்ன கேட்கப் போகிறீர்கள்?" என்றாள்.  
"பெண்ணே! நீ யாரோ ஒருவரை அந்தரங்கமாகச் சந்திப்பதற்கே இப்படித் தனியாகப் 
பிரயாணம் தொடங்கினாய் அல்லவா? அவர் யார்? யாரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டாய்?" 
வானதியின் சந்தேகம் உறுதிப்பட்டது.  ஒரு கண நேரத்தில் அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரிய
மாறுதல் உண்டாயிற்று.  ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டாலும் பயந்து மிரண்டு கொண்டிருந்த பெண்மான் 
உலகில் எதற்கும் அஞ்சாத பெண் சிங்கமாக மாறியது.  
"நான் யாரைச் சந்திக்கப் புறப்பட்டால் உங்களுக்கு என்ன? நீங்கள் யார் அதைப் பற்றிக்
கேட்பதற்கு?சொல்ல முடியாது!" என்றாள் வானதி.  
காளாமுகன் சிரித்தான்.  "அதை நீ சொல்ல வேண்டாம்; எங்களுக்கே தெரியும்.  இளவரசன் 
அருள்மொழிவர்மனைச் சந்திப்பதற்குத்தான் நீ புறப்பட்டாய்! அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று 
சொல்லி விடு. உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறோம்" என்றான்.
"நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.  என்னிடமிருந்து எந்த விவரமும் நீங்கள்
தெரிந்து கொள்ள முடியாது" என்று வானதி அழுத்தம் திருத்தமாய்க் கூறினாள்.  
"உன்னை என்ன வேணுமானாலும் செய்து கொள்ளலாம் என்றா சொல்கிறாய்? நாங்கள் 
செய்யப் போவதும் என்ன வென்று அறிந்தால் இப்படிச் ச
ல்லத் துணியமாட்டாய்!" 
"என்ன செய்யப்போகிறீர்கள்? அதையும் சொல்லிப் பார்த்து விடுங்கள்!" 
"முதலில் உன் அழகான பூப் போன்ற கரங்களில் ஒன்றை இந்தத் தீவர்த்திப் பிழம்பில் 
வைத்துக் கொளுத்துவோம்.  பிறகு இன்னொரு கையையும் கொளுத்துவோம்.  பின்னர், உன் கரிய 
கூந்தலில் தீவர்த்தியைக் காட்டி எரிப்போம்..." 
"நன்றாகச் செய்து கொள்ளுங்கள். இதோ என் கை! தீவர்த்தியை அருகில் கொண்டு வாருங்கள்!"
என்றாள் வானதி.  
இராஜ்யத்தில் நடந்து வந்த சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் வானதிக்குத் தெரிந்துதானிருந்தன.  
இந்தத் துஷ்டர்கள், சதிகாரர்களின் ஆட்களாயிருக்க வேண்டும்.  இளவரசர் இருக்குமிடத்தைக்
கண்டு பிடிக்கப் பார்க்கிறார்கள்.  அவருக்குக் கெடுதி செய்யும் நோக்கத்துடனே தான் இருக்க வேண்டும். 
இளவரசருக்காக, அவருடைய பாதுகாப்புக்காக நான் இத்தகைய கொடூரங்களை அனுபவிக்கும்படி நேர்ந்தால்,
அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது? - இவ்வாறு எண்ணினாள், கொடும்பாளூர் இளவரசி
வானதி. அந்த எண்ணந்தான் அவளுக்கு அத்தகைய மனோதைரியத்தை அளித்தது.  
"பெண்ணே! யோசித்துச் சொல்! வீண் பிடிவாதம் வேண்டம்.  பிறகு வருத்தப்படுவாய்! உன் ஆயுள்
உள்ள வரையில் கண் தெரியாத குரூபியாயிருப்பாய்!" என்றான் காளாமுகன்.  
"என்னை நீங்கள் அணு அணுவாகக் கொளுத்துங்கள்; என் சதையைத் துண்டு துண்டாக 
வெட்டுங்கள்.  ஆனாலும் என்னிடமிருந்து ஒரு விவரமும் அறிய மாட்டீர்கள்?" என்றாள்.  
"அப்படியானால் எங்களுடைய காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான்! சீடா! கொண்டுவா அந்தத்
தீவர்த்தியை இங்கே!" என்றான் காளாமுகன்.  
அச்சமயம் வானதியின் கவனம் சற்றுத் தூரத்தில் சென்றது.  யானைகள், குதிரைகள், 
காலாட்படைகள், பல்லக்குகள் முதலியன அடங்கிய நீண்ட ஊர்வலம் ஒன்று அவர்கள் இருந்த இடத்தை 
நெருங்கி
 வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.  தெய்வத்தின் அருளால் தனக்கு ஏதோ எதிர்பாராத 
உதவி வருகிறது என்று எண்ணினாள்.  
"ஜாக்கிரதை! அதோ பாருங்கள்!" என்று சுட்டிக் காட்டினாள்.  
காளாமுகன் மறுபடியும் சிரித்தான்.  
"வருகிறது யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.  
"முதன்மந்திரி அநிருத்தர் மாதிரி இருக்கிறது.  நான் இப்போது கூச்சல் போட்டால் 
அவர்களுக்குக் காது கேட்கும்.  ஜாக்கிரதை! என்னை விட்டுவிட்டு ஓடிப்போய் விடுங்கள்! இல்லாவிட்டால்..."
என்றாள் வானதி.  
"ஆம், பெண்ணே! வருகிறவர் முதன் மந்திரி அன்பில் அநிருத்தர்தான்.  அவருடைய கட்டளையின்
பேரில்தான் உன்னை நாங்கள் பிடித்துக்கொண்டு வந்தோம்" என்றான் காளாமுகன்.
இப்போது வானதியை மறுபடியும் திகில் பற்றிக் கொண்டது.  அவளை அறியாமல் பீதி 
நிறைந்த கூச்சல் அவள் தொண்டையிலிருந்து வந்தது.  இதை அடக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய 
வாயைத் தானே பொத்திக்கொள்ள முயன்றாள்.
பக்க தலைப்பு
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் 
கஜேந்திர மோட்சம் 
இத்தனை நேரமும் வானதி சிவிகையிலேயே இருந்தாள். சிவிகையை இப்போது இறக்கிப்
பூமியில் வைத்தார்கள்.  வானதி பல்லக்கிலிருந்து வௌியேவந்து நின்றாள்.  நெருங்கி வந்த ஊர்வலத்தைப்
பார்த்துக் கொண்டே நின்றாள்.  காளாமுகர்களும் அதே திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தார்கள்.
தண்ணீர் ததும்பிய கழனிகளில் தவளைகள் இட்ட சத்தமும், வாடைக்காற்றில் மரக்கிளைகள் அசைந்த சத்தமும்
மட்டுமே கேட்டன.  
ஓடித் தப்பிக்கலாம் என்ற எண்ணமே வானதிக்குத் தோன்றவில்லை.  அது இயலாத காரியமென்று
அவளுக்குத் தெரிந்திருந்தது.  இந்தக் காளாமுகர்களிடமிருந்து ஏதேனும் யுக்தி செய்து தப்பினாலும் தப்பலாம்,
அன்பில் அநிருத்தரிடமிருந்து தப்பு
து கனவிலும் நினைக்க முடியாத காரியம். அவருடைய அறிவாற்றலும்,
இராஜ தந்திரமும், சூழ்ச்சித் திறனும் உலகப் பிரசித்தமானது.  அதோடு சக்கரவர்த்தியிடம் அவர் மிகச்
செல்வாக்கு உடையவர் என்பதும் உலகம் அறிந்தது.  பழையாறையிலிருந்து அரண்மனைப் பெண்டிர் சோழ
சாம்ராஜ்யத்தின் மற்ற அதிகாரிகளையும், சிற்றரசர்களையும் பற்றி வம்பு பேசுவார்கள், ஆனால்
அநிருத்தரைப் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள்.  அந்தப்புரத்தின் உள் அறைகளிலே மிகமிக
அந்தரங்கமாகப் பேசினாலும் அவருடைய காதுக்கு எட்டிவிடும் என்று பயப்படுவார்கள் சக்கரவர்த்தி வேறு 
எதைப் பொறுத்தாலும் தன் அந்தரங்கப் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய முதன் மந்திரியைப்பற்றி 
யாரும் அவதூறு பேசுவதைப் பொறுக்க மாட்டார் என்று அனைவரும் அறிந்திருந்தார்கள்.  
இவையெல்லாம் வானதிக்கும் தெரிந்திருந்தன.  இளவரசி குந்தவையும் அவரிடம் பெரும் மதிப்பு
வைத்திருந்ததை அவள் அறிந்திருந்தாள்.  ஆகையால் அவரிடமிருந்து தனக்கு உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தாள்.  இந்தக் காளாமுகர்கள் வேறுவிதமாகச் சொன்னதும் அவளுடைய மனோதிடம் குலைந்தது. 
அவர் எதற்காக இந்த அனாதைப் பெண்ணைக் கைப்பற்றச் சொல்லியிருக்க வேண்டும்? ஒருவேளை இவர்கள் பொய் 
சொல்லுகிறார்களோ என்னமோ! வருவது ஒரு வேளை பழுவேட்டரையர்களாக இருக்கலாம்.  அல்லது மதுராந்தகரும் 
அவருடைய பரிவாரங்களாகவும் இருக்கலாம்...  யாராயிருந்தாலும் ஒன்று நிச்சயம், இளவரசரைப் பற்றித்
தனக்குத் தெரிந்த செய்தியை எவரிடமும் சொல்லக் கூடாது.  அதனால் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரிதான்!
தன் உயிரே போவதாயிருந்தாலும் சரிதான்!...  இதைப்பற்றி எண்ணியதும் வானதி குலைந்த மனோதிடத்தை
மீண்டும் பெற்றாள்.  வரட்டும் யாராயிருந்தாலும் வரட்டும்.  நான் கொடும்பாளூர் வேளிர் வ
ீர பரம்பரையில்
வந்தவள் என்பதை நிலை நாட்டுகிறேன்.  குந்தவைப் பிராட்டியின் அந்தரங்கத்தோழி என்பதையும்
காட்டிக்கொடுக்கிறேன்.  
ஊர்வலத்தில் ஒரு பல்லக்கு மட்டும் பிரிந்து முன்னால் வந்தது.  மற்ற யானை, குதிரை
பரிவாரங்கள் எல்லாம் சற்று பின்னால் நின்றன.  முன்னல் வந்த பல்லக்கு வானதியின் அருகில் வந்ததும்
பூமியில் இறக்கப்பட்டது.  அதனுள்ளிலிருந்து முதன் மந்திரி அநிருத்தர் வௌியே வந்து நின்றார்.  
அவர் சமிக்ஞை காட்டவே, சிவிகை சுமந்தவர்களும் காளாமுகர்களும் அப்பால் நகர்ந்து
சென்றார்கள்.  அநிருத்தர் வானதியை மேலும் கீழும் உற்றுப்பார்த்து, "இது என்ன விந்தை! நான் காண்பது
கனவு அல்லவே? என் முன்னால் நிற்பது கொடும்பாளூர் இளவரசிதானே! ஈழத்துப் போரில் வீரசொர்க்கம்
எய்திய பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி வானதிதானே?" என்று கேட்டார்.  
"ஆம், ஐயா! நான் காண்பதும் கனவு அல்லவே? என் முன்னால் நிற்பது சோழ சாம்ராஜ்ய மக்களின்
பயபக்தி மரியாதைக்குரிய அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்தானே? சக்கரவர்த்தியின் அந்தரங்க
அபிமானத்தைப் பெற்ற முதன் மந்திரியார்தானே?" என்றாள் வானதி.  
"தாயே! நான் யார் என்பதை நீ அறிந்திருப்பது பற்றி சந்தோஷப்படுகிறேன்.இதனால்,
என்னுடைய வேலை எளிதாகும்.  உனக்கும் அதிகக் கஷ்டம் கொடுக்க வேண்டி ஏற்படாது." 
"ஆகா! அதைப்பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். தங்களைப் போன்ற அமைச்சர் 
திலகத்தினால் எனக்குக் கஷ்டம் நேர்ந்தால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன்.  அதைக் 
கஷ்டமாகவே கருதமாட்டேன்." 
"உன்வார்த்தைகள் மேலும் எனக்குத் திருப்தி அளிக்கின்றன.  உன்னை அதிகமாகக் கஷ்டப்படுத்தும்
உத்தேசமும் எனக்கு இல்லை.  இரண்டொரு கேள்விகள் உன்னிடம் கேட்கப் போகிறேன்.  அவற்றுக்கு மறுமொழி
சொல்லிவிட்டால் போதும் பிறகு..." 
"ஐயா! நீங்கள் என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்னால் நான் கேட்பதற்குச் சில கேள்விகள்
இருக்கின்றன...." 
"கேள், அம்மா! தயக்கமில்லாமல் கேள்.  நான் உன் தந்தையை யொத்தவன்.  உன்னை என்
மகளாகவே கருதுகிறேன்.  சில நாளைக்கு முன்பு உன் பெரிய தகப்பனார் சேநாதிபதி பூதிவிக்கிரம
கேசரியை மாதோட்டத்தில் சந்தித்தேன்.  உன்னை என்னுடைய மகளைப் போல் பாவித்துக் கவனித்துக் 
கொள்ள வேண்டும் என்று சொன்னார்.  அப்படியே வாக்களித்தேன்..." 
"வந்தனம் என் தந்தையே! குழந்தைப் பிராயத்தில் தகப்பனை இழந்த எனக்குத் தந்தையாயிருப்பதாக
முன்னொரு தடவை சக்கரவர்த்தி வாக்களித்தார்; இப்போது தாங்கள் ஒரு தந்தை தோன்றியிருக்கிறீர்கள். 
இனி எனக்கு என்ன குறை?" 
"நீ என்னிடம் கேட்க விரும்பியதைச் சீக்கிரம் கேள், அம்மா! வானம் கருத்து இருள் சூழ்கிறது.  
மழை வரும்போலத் தோன்றுகிறது." 
"தந்தையே! சாலையோடு பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டிருந்த தங்கள் அருமை மகளை இந்தக் 
காளாமுகர்களை விட்டு வழிமறித்து, இவ்விடம் பலவந்தமாகக் கொண்டு சேர்க்கும்படி செய்தது தாங்கள் தானா?
இந்த அபலைப் பெண்ணின் கையைத் தீவர்த்திப் பிழம்பில் காட்டி எரிக்கும்படி சொன்னதும் தாங்கள் தானா?
இந்தப் பயங்கரமான மனிதர்கள் அவ்வாறு தங்கள்மீது குற்றம் சாட்டினார்கள்.  நான் அதை நம்பவில்லை...." 
"குழந்தாய்! இவர்கள் கூறியது உண்மையே, நான்தான் இவர்களுக்கு அவ்விதம் கட்டளையிட்டேன்.
அது குற்றமாயிருந்தால் அதற்குப் பொறுப்பாளி நானே...." 
"மூன்று உலகமும் புகழ்பெற்ற சோழநாட்டு முதன் மந்திரியே! தங்கள் பேச்சு எனக்கு 
வியப்பளிக்கிறது. 'குற்றமாயிருந்தால்' என்றீர்களே! தாங்கள் சகலதர்ம சாஸ்திரங்களையும், நீதி 
சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். சோழ சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்களையெல்லாம் நடத்தி வைக்கும் 
பொறுப்
ு வாய்ந்தவர்; நீதிக்கு மாறாகச் சக்கரவர்த்தியே காரியம் செய்தாலும், அதைக் கண்டித்து நியாயமாக 
நடக்கச் செய்யும் உரிமை வாய்ந்தவர்.  ஒரு காரியம் குற்றமா இல்லையா என்பது தங்களுக்குத் 
தெரியாவிட்டால், வேறு யாருக்குத் தெரியும்? சாலையோடு பிரயாணம் செய்யும் அபலைப் பெண் 
ஒருத்தியைப் பலவந்தமாக வழிமறித்து தனி இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதும், அந்தப் பெண்ணைச்
சித்திரவதை செய்வதாகப் பயமுறுத்துவதும் குற்றமா, இல்லையா? என்று தங்களுத் தெரியாமற் போனால் வேறு
யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் வழிப்
பிரயாணத்தில் எவ்விதப் பயமும் கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன்.  அதிலும் பெண்களைத் துன்புறுத்தும்
துஷ்டர்களுக்குக் கடும் தண்டனை உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.  அது குற்றமா, இல்லையா என்றே
தங்களுக்குச் சந்தேகம் தோன்றியிருப்பது மிக வியப்பான காரியம் அல்லவா?" 
முதன் மந்திரி அநிருத்தர் திணறிப்போனார்.  இடையில் குறுக்கிட்டுப் பேச அவர் இரண்டு தடவை
முயன்றும் பயன்படவில்லை.  இப்போது அவர் குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு, "பெண்ணே! கொஞ்சம்,
பொறு! உன் பேச்சுத் திறமை முழுவதையும் காட்டிவிடாதே! 'குற்றமா, இல்லையா?' என்று நான்
சந்தேகப்படுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.  அது நான் கேட்கும் கேள்விக்கு நீ சொல்லும்
விடையைப் பொறுத்திருக்கிறது.  முக்கியமான இராஜாங்க இரகசியம் ஒன்றை அறிந்த பெண் ஒருத்தி
நாகைப்பட்டினம் சாலையில் போவதாக நான் கேள்விப்பட்டேன்.  அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தும்படி என்
மனிதர்களுக்குக் கட்டளையிட்டேன்.  அவர்கள் என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணிக் கொண்டு
செய்திருக்கிறார்கள்.  ஒருவேளை அவர்கள் தவறு செய்திருக்கலாம். இராஜாங்க சதி வேலையில் ஈடுபட்ட
பெண்ணுக்குப் பதிலாகக் குடந்தை ஜோதிடரிடம் ஜோதிடம் கேட்டுவிட்டுத் திரும்பிய உன்னைக்
கைப்பற்றியிருக்கக் கூடும்.  மகளே! நீ சொல், குடந்தையிலிருந்து பழையாறைக்குத் திரும்புவது தான் உன்
நோக்கமா? சிவிகை தூக்கிகள் தவறாக உன்னை நாகைப்பட்டினம் சாலையில் கொண்டு போனார்களா?
இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்த ஒருவனை அந்தரங்கமாகப் பார்க்கும் நோக்கத்துடன் நீ
நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லை?...  இல்லையென்று நீ சொல்லி நிரூபித்தாயானால் இவர்கள் செய்தது
குற்றமாகும்; அதில் எனக்கும் பங்கு உண்டுதான்! என்ன சொல்கிறாய், பெண்ணே? இன்னும் தௌிவாகவே கேட்டு 
விடுகிறேன்.  இளவரசன் அருள்மொழிவர்மனை இரகசியமாகச் சந்திப்பதற்காக நீ நாகைப்பட்டினத்துக்குப்
புறப்படவில்லையே?..." 
இளவரசி இப்போது கதிகலங்கிப் போனாள்.  முதன் மந்திரி அநிருத்தரை எரித்துவிடலாமா
என்று அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.  ஆனால் ஆத்திரத்தை வௌியில் காட்டுவதில் பயனில்லை என்று
உணர்ந்தாள்.  கள்ளங்கபடம் அறியாதிருந்த அந்தச் சாதுப் பெண்ணுக்கு அப்போது எங்கிருந்தோ ஆழ்ந்து
சிந்திக்கும் சக்தியும், சூழ்ச்சித் திறனும் ஏற்பட்டிருந்தன.  ஆகையால், முதன் மந்திரியின் கேள்விக்கு
நேரடியாகப் பதில் சொல்லாமல், "ஐயா! இது என்ன வார்த்தை? இளவரசர் அருள்மொழிவர்மரையா
இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்தார் என்று சொல்கிறீர்கள்? சக்கரவர்த்தியின் அருமைக்
குமாரரைப் பற்றி நீர் இவ்விதம் பேசுவது குற்றம் அல்லவா? சோழ குலத்துக்கு எதிரான சதி அல்லவா?
ஆகா! இதைப்பற்றி நான் உடனே குந்தவைப் பிராட்டியிடம் சொல்லியாக வேண்டும்!" என்றாள்.  
"பேஷாகச் சொல், தாயே! என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டால், பிறகு ஒரு
கணங்கூட இங்கே தாமதிக்க வேண்டிய அவசியமில்லை.  நானே உன்னை இளைய பிராட்டியிடம
 பத்திரமாய்க்
கொண்டு போய்க் சேர்ப்பிக்கிறேன்..." 
"தங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால்?..."
"சொல்லாவிட்டால் என்பதே கிடையாது, தாயே! இந்தக் கிழவனிடமிருந்து அவ்வளவு சுலபமாகத் 
தப்ப முடியாது, என் கேள்விக்குப்பதில் சொல்லியே தீரவேண்டும்" என்றார் அமைச்சர்.  
"ஐயா! சர்வ வல்லமை படைத்த முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரே! ஒரு சக்தியும் இல்லாத
இந்த ஏழை அபலைப் பெண்ணிடமிருந்து தாங்கள் இளவரசரைப்பற்றி எதுவும் அறிய முடியாது.  இந்த
யமகிங்கரர்கள் சற்றுமுன் பயமுறுத்தியது போல் என் கையைத் தீயிலிட்டு எரித்த போதிலும், நான் ஒன்றும்
சொல்லப் போவதில்லை."  
"கொடும்பாளூர் வீர வேளிர் குலத்துதித்த கோமகளே! உன்னுடைய மன உறுதியைக் கண்டு 
மெச்சுகிறேன். ஆனால் இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்ல மாட்டேன் என்று நீ கூறினாயே,
அது அவ்வளவு சரியன்று.  ஏற்கெனவே, சில விவரங்கள் நீ சொல்லி விட்டாய்.  இன்னும் ஒரு விவரத்தையும்
சொல்லிவிட்டால், அதிக நஷ்டம் ஒன்றும் நேர்ந்து விடாது.  என் வேலையும் எளிதாய்ப் போய் விடும்..."
வானதி மறுபடியும் திடுக்குற்றாள், 'வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டோமோ என்று
நினைத்தபோது அவளுடைய நெஞ்சை யாரோ இறுக்கிப் பிடிப்பது போலிருந்தது உடம்பெல்லாம் பதறியது. 
'இல்லை, நான் ஒன்றும் சொல்லி விடவில்லை; இந்தக் கிழவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறார்' என்று
எண்ணிச் சிறிது தைரியம் அடைந்தாள்.  
"ஐயா! வேதம் சொல்லும் உம்முடைய வாயிலிருந்து பொய் வரலாமா? சுந்தரசோழரின் முதலாவது 
அமைச்சர் இல்லாததைக் கற்பித்துச் சொல்லலாமா? நான் இளவரசரைப் பற்றி எதுவும் கூறவில்லையே? 
நான் ஏதோ கூறியதாகச் சொல்கிறீரே?" என்றாள்.  
"யோசித்துப் பார், தாயே! நன்றாக எண்ணிப்பார்! ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமலேயே,
அதைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்க முட
யாது என்று நீ கருதினால், அது பெரிய தவறு.  நீ
சொல்லாமற் சொன்ன விவரத்தைக் குறிப்பிடுகிறேன்; கேள்! இளவரசர் அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி
இறந்து விட்டதாக உலகமெல்லாம் பேச்சாக இருக்கிறது. குடிமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோகக்கடலில்
ஆழ்ந்திருக்கிறார்கள்.  உனக்கும் அந்தச் செய்தி தெரியும்.  அப்படியிருக்கும்போது, நீ இளவரசரைப் பற்றி
ஒரு விவரமும் சொல்லமாட்டேன் என்று கூறினாய்.  அதிலிருந்து வௌியாவது என்ன? இளவரசர்
இறக்கவில்லையென்பது உனக்குத் தெரியும் என்று ஏற்படுகிறது.  அவரைப் பார்ப்பதற்கு நீ நாகைப்பட்டினம்
போகிறாய் என்று நான் சொன்னதையும் நீ மறுக்கவில்லை. 'இறந்துபோன இளவரசரை நான் எப்படிப்
பார்க்கமுடியும்?' என்று நீ திருப்பிக் கேட்கவில்லை.  'நாகைப்பட்டினம் போகவில்லை, வேறு இடத்துக்குப்
போகிறேன்' என்றும் நீ உயிரோடு இருக்கிறார் என்பதையும், அவரைப் பார்க்கப் போகிறாய் என்பதையும்
ஒப்புக்கொண்டு விட்டாய்.  மிச்சம் நீ சொல்ல வேண்டிய விவரங்கள் இரண்டே இரண்டுதான்!
நாகைப்பட்டினத்தில் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்; அந்தச் செய்தி உனக்கு எப்படித்
தெரிந்தது என்றும் கூற வேண்டும். இந்த இரண்டு விவரங்களையும் நீ கூறிவிட்டால், அப்புறம் ஒருகணங்கூட
இங்கே தாமதித்து இந்தக் கிழவனோடு பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.  உனக்கு எங்கே 
போக விருப்பமோ அங்கே போகலாம்." 
வானதியின் உள்ளம் இப்போது அடியோடு கலங்கிப் போய் விட்டது. முதன் மந்திரி கூறியது
உண்மை என்றும், தன்னுடைய அறியாமையினால் இளவரசரைக் காட்டிக்கொடுத்து விட்டதாகவும் உணர்ந்தாள்.
தான் செய்துவிட்ட குற்றத்துக்குப் பிராயச்சித்தம் உண்டா? கிடையவே கிடையாது! உயிரை விடுவதைக் தவிர 
வேறு ஒன்றுமில்லை.  
"ஐயா! தாங்கள் என் பெரிய தந்தையின் ஆப்த நண்பர் என்று சொன்
னீர்கள். என்னைத் தங்கள்
மகள் என்றும் உரிமை கொண்டாடினீர்கள்.  தங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்.  நான் நாகைப்பட்டினம்
போகவும் விரும்பவில்லை; பழையாறைக்குப் போகவும் விரும்பவில்லை...." 
"கொடும்பாளூருக்குப் போக விரும்புகிறாயாக்கும், அது நியாயந்தான்.  அங்கேயே உன்னைக்
கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்." 
"இல்லை, ஐயா! கொடும்பாளூர் போகவும் நான் விரும்பவில்லை....  இந்த உலகத்தைவிட்டு 
மறு உலகத்துக்குப் போக விரும்புகிறேன்.  தங்களுடைய ஆட்களிடம் சொல்லி அதோ தெரியும் பலி 
பீடத்தில் என்னைப் பலி கொடுத்துவிடச் சொல்லுங்கள்! நான் தயாராக இருக்கிறேன்!" என்று சொன்னாள்.  
"தாயே! உன்னுடைய விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றி வைப்பதாகச் சொன்னேன்.  ஆகையால்
மறு உலகத்துக்குத்தான் நீ போகவேண்டுமென்றால் அங்கேயே அனுப்பி வைக்கிறேன்.  ஆனால் அதற்கு 
முன்னால் என்னுடைய கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்!" 
"ஐயா! என்னை வீணில் துன்புறுத்த வேண்டாம்.  நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப்
போவதில்லை.  என்னைத் தங்கள் மகளாகக் கருதுவதாய்ச் சற்றுமுன் தாங்கள் சொன்னது உண்மையாயிருந்தால்..."
"மகளே! அதில் யாதொரு சந்தேகமுமில்லை.  உன்னை நான் பெற்ற மகளாகவே கருதுகிறேன். 
உன் குடும்பத்தார் எனக்கு எவ்வளவு வேண்டியவர்கள் என்பது ஒருவேளை உனக்குத் தெரிந்திராது! உன் பெரிய 
தந்தையும், நானும் நாற்பது ஆண்டுகளாகத் தோழர்கள்.  ஆனால் இராஜாங்க காரியங்களில் சிநேகிதம், உறவு
என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை. பெற்ற தந்தை என்றும் பார்க்க முடியாது.  அருமைக் குமாரி என்றும் பார்க்க
முடியாது.ஏன்? சக்கரவர்த்தியின் காரியத்தையே பார்! தமது சொந்த குமாரன் இராஜாங்கத்துக்கு
விரோதமாகச் சதி செய்தபடியால், அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடவில்லையா?" 
"ஐயா! பொன
னியின் செல்வரைப் பற்றியா இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்? அவர்
இராஜாங்கத்துக்கு விரோதமாக என்ன சதி செய்தார்?" 
"ஓகோ! உனக்கு அது தெரியாது போலிருக்கிறது.  இலங்கைக்குப் போர் செய்யப் போவதாகச் 
சொல்லி விட்டுப் பொன்னியின் செல்வர் போனார்.  அங்கே நமது வீரப் படைகள் இலங்கைப் படைகளை 
முறியடித்தன.  அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டு இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைச் 
சிம்மாசனத்தைக் கைப்பற்றிக்கொள்ளப் பார்த்தார்.  இது இராஜாங்கத்துக்கு விரோதமான சதியல்லவா? 
இதை அறிந்ததும் சக்கரவர்த்தி தமது திருக்குமாரரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்குக் கட்டளை 
அனுப்பினார்.  இளவரசர் அக்கட்டளையை மீறிக்கடலில் வேண்டுமென்று குதித்துத்தான் இறந்து விட்டதாகப் 
பொய்ச் செய்தியைப்பரப்பச் செய்தார்.  பிறகு கரையேறி எங்கேயோ ஒளிந்து, மறைந்திருக்கிறார். 
இந்த விவரங்கள் உனக்குத் தெரியாதபடியால் அவர் இருக்குமிடத்தை நீ சொல்ல மறுத்தாய் போலும்.  
அப்படிப்பட்ட இராஜாங்க விரோதியை நீ மறைத்து வைக்க முயன்றால், அதுவும் பெரிய குற்றமாகும் 
ஆகையால், சொல்லிவிடு அம்மா!" என்றார் முதன் மந்திரி.  
வானதி இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் இப்போது பொங்கிப் பீறிக்கொண்டு
வௌிவந்தது.  பொன்னியின் செல்வரைக் குறித்து முதன் மந்திரி கூறிய தூஷணைகளை எல்லாம் அவளால்
பொறுக்க முடியவில்லை.  அந்தச் சாதுப் பெண் வீராவேசமே உருவெடுத்தவள் போலாகிக் கூறினாள்:- 
"ஐயா! தாங்கள் கூறியது ஒன்றும் உண்மையில்லை.  இளவரசர் மீது வீண் அபாண்டம் கூறினீர்கள். 
இலங்கையில் நமது படைகள் சோர்வடைந்திருந்த காலத்தில் இளவரசர் அங்கே சென்றதினாலேயே
உற்சாகங்கொண்டு போராடினார்கள்.  பொன்னியின் செல்வர்தான் இலங்கையில் நம் வெற்றிக்குக் காரணமானவர்
என்பது உலகமறிந்த உண்மை.  அவருடைய வீரத
்தையும், மற்ற குணாதிசயங்களையும் பார்த்து இலங்கை மக்கள்
அவர் மீது அன்பு கொண்டார்கள். போரில் புறமுதுகிட்டோடி ஒளிந்து கொண்ட தங்கள் அரசனுக்குப் பதிலாக
இளவரசரைத் தங்கள் அரசனாக்கிக் கொள்ள விரும்பினார்கள்.  புத்த குருமார்கள் இலங்கைச் சிம்மாசனத்தைப்
பொன்னியின் செல்வருக்கு அளித்தார்கள்.  பொன்னியின் செல்வர் சிம்மாசனம் தமக்கு வேண்டாம் என்று
மறுதளித்தார்.  அத்தகைய நேர்மையானவரைக் குறித்துத் தாங்கள் இவ்வளவு அவதூறு சொல்லியிருக்கிறீர்கள். 
இளவரசர் தந்தையின் கட்டளை என்று அறிந்ததும் தாமே சிறைப்பட்டு நேரே தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தார். 
அவர் கடலில் வேண்டுமென்று குதிக்கவில்லை. தம் அருமை சிநேகிதரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே
குதித்தார்.  சக்கரவர்த்திக்கு விரோதமாக அவர் சதி செய்யவும் இல்லை.  இந்த அபாண்டங்களையெல்லாம்
கேட்க என் செவிகள் என்ன துர்பாக்கியம் செய்தனவோ தெரியவில்லை!..." 
அநிருத்தர் இலேசாகச் சிரித்துக்கொண்டே, "பெண்ணே! அருள்மொழிவர்மருக்காக நீ இவ்வளவு
ஆத்திரமாகப் பரிந்து பேசுவதைக் கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? நீங்கள் இருவரும்
காதலர்கள் என்று நினைப்பார்கள்!" என்றார்.  
"ஐயா! தாங்கள் இப்போது கூறியதில் பாதி மட்டும் உண்மை. நான் அவருக்கு என் உள்ளத்தைப் 
பறிகொடுத்திருப்பது மெய்தான்.  இதைத் தங்களிடமிருந்து நான் மறைக்க விரும்பவில்லை.  ஆனால் அவர் 
இந்த அநாதைப் பெண்ணுக்குத் தன் உள்ளத்தில் இடங்கொடுத்திருப்பதற்கு நியாயம்  இல்லை.  வானத்தில் 
ஜொலிக்கும் சந்திரன் மீது அன்றில் பறவை காதல் கொள்ளலாம்.  ஆனால் சந்திரனுக்கு அன்றில் பறவை 
ஒன்று இருப்பதே தெரிந்திராது." 
"ஆஹா! என் அருமைச் சிநேகிதரின் மகள் இவ்வளவு சிறந்த கவிதா ரஸிகை என்பது இதுவரை
எனக்குத் தெரியாமற் போயிற்று.  இளைய பிராட்டி குந்த
வையின் அந்தரங்கத் தோழி அல்லவா நீ", என்றார்
முதன் மந்திரி.  
"போது போதும்! தங்கள் புகழ்ச்சியைக் கேட்க நான் விரும்பவில்லை.  ஒன்று என்னை என்
வழியே போவதற்கு விடுங்கள்.  இல்லாவிடில் உங்கள் ஆட்களை அழைத்துக் கட்டளையிடுங்கள்." 
"பெண்ணே! கொஞ்சம் பொறு! பொன்னியின் செல்வரைப் பற்றி உனக்கு எவ்வளவோ விவரங்கள்
தெரிந்திருக்கின்றன.  ஆகையால் அவர் இப்போது இருக்குமிடமும் உனக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். 
அதை மட்டும் சொல்லிவிடு.  உன்னை உடனே உன் பெரிய தந்தையிடம் அனுப்பி வைக்கிறேன்.  அவர்
இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.  இத்தனை நேரம் மதுரைக்கு வந்திருப்பார்...." 
"ஐயா! தங்களைப் போன்ற வஞ்சம் நிறைந்த மனிதருடன் சிநேகமாயிருப்பவர், என்னுடைய பெரிய
தந்தை அல்ல.  எனக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. இளவரசரைப் பற்றி எல்லாரும் அறிந்திருப்பதையே
நான் சொன்னேன்.  வேறு எதுவும் என்னிடமிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள முடியாது.  வீண் தாமதம் செய்ய
வேண்டாம்..." 
"தாமதம் செய்யக்கூடாதுதான்.  பலமாக மழை வரும் போலிருக்கிறது..." 
"மழை மட்டுந்தானா வரும்? தங்களைப் போன்றவர்கள் உள்ள இடத்தில் இடி, மின்னல், 
பிரளயம் எல்லாம் வரும்!" 
வானதியின் கூற்றை ஆமோதிப்பது போல் அச்சமயம் ஒரு நெடிய மின்னல் வானத்தின் ஒரு 
முனையிலிருந்து இன்னொரு முனை வரையில் பாய்ந்தோடி ஜொலித்துவிட்டு மறைந்தது.  மின்னல் மறைந்து 
இருள் சூழ்ந்ததும் அண்ட கடாகங்கள் அதிரும்படியான பேரிடி ஒன்று இடித்தது.  
"பெண்ணே! இளவரசன் அருள்மொழிவர்மன் எங்கே இருக்கிறான் என்று சொல்லாமாட்டாயா?"
"சொல்லமாட்டேன்!" 
"நான் ஊகித்தது ஊர்ஜிதமாகிறது.  இளவரசன் மறைந்திருக்கும் இடத்துக்கு நீ ஏதோ இரகசியச் 
செய்தி கொண்டு போவதற்காகப் புறப்பட்டாய், இது உண்மையா, இல்லையா?" 
"ஐயா! 
ீண் வேலை.  தங்கள் கேள்வி எதற்கும் இனி நான் மறுமொழி சொல்ல முடியாது." 
"அப்படியானால், இராஜாங்கத்துக்கு துரோகமாகச் சதி செய்பவர்களுக்கு அளிக்கவேண்டிய கடுந்
தண்டனையை உனக்கும் அளிக்க வேண்டியதுதான்.வேறு வழி இல்லை." 
"தண்டனையை ஏற்பதற்குக் காத்திருக்கிறேன், ஐயா! பலிபீடத்தில் என் தலையை வைக்கவேண்டும் 
என்றால் அப்படியே செய்கிறேன்." 
"சேச்சே! நீ கொடும்பாளூர் வேளிர்மகள்! உனக்கு அவ்வளவு அற்பமான தண்டனை கொடுக்கலாமா? 
அதோ பார் அந்த யானையை!" 
வானதி, அவர் காட்டிய திசையைப் பார்த்தாள் கன்னங்கரிய குன்றினைப் போல் யானை ஒன்று
நின்று கொண்டிருந்தது.  கருங்கல்லினால் செய்த மை பூசப்பட்ட உருவத்தைப் போல் அது தோன்றியது.  அதன்
கருமையை நன்கு எடுத்துக் காட்டிக்கொண்டு இரண்டு வெள்ளைத் தந்தங்கள் நீண்டு வளைந்து திகழ்ந்தன.  
"பெண்ணே! கஜேந்திர மோட்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? யானையின் அபயக்குரல்
கேட்டுத் திருமால் ஓடி வந்து முதலையைக் கொன்று கஜேந்திரனை மோக்ஷத்துக்கு அனுப்பினார்.அதற்குப்
பதிலாக இந்தக் கஜேந்திரன் எத்தனை எத்தனையோ பேரை அந்தத் திருமால் வாசம் செய்யும் மோட்ச
உலகத்துக்கு அனுப்பியிருக்கிறது. நீ இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக வேண்டும் என்று
சொன்னாய் அல்லவா? உன் விருப்பத்தை இந்த யானை கண்மூடித் திறக்கும் நேரத்தில் நிறைவேற்றி வைக்கும். 
அது தன் துதிக்கையினால் உன்னைச் சுற்றி எடுத்து வீசி எறிந்தால் நீ நேரே மோட்ச உலகத்திலேயே
போய் விழுவாய்!" 
இவ்விதம் கூறிவிட்டு முதன் மந்திரி அநிருத்தர் சிரித்தார்.  அந்தச் சிரிப்பு வானதிக்கு
ரோமாஞ்சனத்தை உண்டாக்கிற்று.  இந்த மந்திரி, மனிதர் அல்ல, மனித உருக்கொண்ட அரக்கன் என்று
எண்ணினாள்.  
"கோமகளே! முடிவாகக் கேட்கிறேன், பொன்னியின் செல்வன் இருக்குமி
த்தைச் சொல்கிறாயா?
அல்லது இந்தக் கஜேந்திரனுடைய துதிக்கை வழியாக மோட்சத்துக்குப் போகிறாயா?" என்ற வார்த்தைகளைக்
கேட்டதும், வானதி மீண்டும் மனோதிடம் பெற்றாள். 
"ஐயா! கஜேந்திரனை என்னிடம் வரச் சொல்கிறீர்களா? அல்லது நானே கஜேந்திரனிடம் 
போகட்டுமா?" என்று கம்பீரமாகக் கேட்டாள்.  
அநிருத்தர் கையினால் சமிக்ஞை செய்தார். அத்துடன் அவர் வானதிக்கு விளங்காத பாஷையில்
ஏதோ சொன்னார்.  யானை பூமி அதிரும்படி நடந்து வந்தது.  வானதியின் அருகில் வந்தது.  தன்னுடைய
நீண்ட துதிக்கையினால் வானதியின் மலரினும் மிருதுவான தேகத்தைச் சுற்றி வளைத்தது.  அவளைப்
பூமியிலிருந்து தூக்கியது.  
அந்தச் சில கணநேரத்தில் வானதியின் உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் அலை அலையாகப் பாய்ந்து
மறைந்தன.  தான் அச்சமயம் அவ்வளவு தைரியத்துடன் இருப்பதை நினைத்து அவளுக்கே வியப்பாயிருந்தது. 
இளையபிராட்டி குந்தவை தேவி என்னைப் பயங்கொள்ளி என்றும், கோழை என்றும் அடிக்கடி சொல்லுவாரே? அவர் 
இச்சமயம் இங்கிருந்து என்னுடைய தைரியத்தைப் பார்த்திருந்தால் எத்தனை ஆச்சரியப்படுவார்? அவருக்கு
என்றாவது ஒருநாள் இச்சம்பவத்தைப் பற்றித் தெரியாமலிராது; பொன்னியின் செல்வருக்காக நான் தீரத்துடன்
உயிரை விட்டது பற்றி அறிந்து கொள்வார்.  அதை இளவரசரிடமும் சொல்லியே தீருவார்.  அப்போது
இளவரசர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? அந்த ஓடக்காரப் பெண்ணைக் காட்டிலும் கொடும்பாளூர் வேளார்
மகள் தைரியசாலி என்று அப்போதாவது அறிந்து கொள்வார் அல்லவா? 
யானையின் துதிக்கை மெள்ள மெள்ள மேலே எழுந்தது.  அத்துடன் வானதியும் மேலே ஏறினாள். 
'ஆம், ஆம்! அந்தப் பிரம்மராட்சதர் கூறியது உண்மைதான்.  இந்தக் கஜேந்திரன் என்னை நேரே
மோட்சத்திற்கே அனுப்பிவிடப் போகிறது! அடுத்த கணம் என்னை வீசி எறிய போகிறது! எத்தனை
தூரத்
ில் போய் விழுவேனோ தெரியவில்லை ஆனால் விழும் போது எனக்குப் பிரக்ஞை இராது.  அதற்குள்
உயிர் போய்விடும்! 
வானதி இப்போது யானையின் மத்தகத்துக்கு மேலேயே போய் விட்டாள்.  கண்களை மூடிக்
கொண்டாள்.  யானை தன் துதிக்கையைச் சுழற்றியது.  வானதியை விசிறி எறிவதற்குச் சித்தமாயிற்று. 
அந்தச் சமயத்தில் கடவுள் அருளால் வானதி தன் சுய நினைவு இழந்து விட்டாள்.
பக்க தலைப்பு
நாற்பதாம்  அத்தியாயம் 
ஆனைமங்கலம் 
நம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக்
கொண்டிருக்கிறாள் அல்லவா? இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். 
ஏனெனில், அவளுடைய நோய் நீங்கும் காலம் நெருங்கி விட்டது.  
வானதிக்கு நினைவு சிறிது வந்தபோது முதலில் அவள் ஊசலாடுவது போலத் தோன்றியது. 
பின்னர் அவள் தான் வானவௌியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணினாள்.  "ரிம் ரிம்", "ஜிம்
ஜிம்" என்று மழைத்தூறலின் சத்தம் கேட்டது.  குளிர்ந்த கற்று "குப் குப்" என்று உடம்பின்மீது வீசிற்று. 
அதனால் தேகம் சிலிர்த்தது.  சரி சரி, மேக மண்டலங்களின் வழியாக வானுலகிற்குப்
போய்க்கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாள்.  சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, இடையிடையே மின்னல்
வௌிச்சம் பளிச்சிட்டு மறைந்தது.  
முதன் மந்திரி கடைசியாகக் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூறியதும், யானை அதன்
துதிக்கையினால் தன்னைச் சுற்றி வளைத்துத் தூக்கியதும் இலேசாக நினைவு வந்தன.  முதன் மந்திரி
அநிருத்தர் கூறியபடியே நடந்து விட்டது.  'மண்ணுலகில் என் ஆயுள் முடிந்து இப்போது மோட்சத்துக்குப்
போய்க்கொண்டிருக்கிறேன்.  மோட்ச உலகில் தேவர்களையும், தேவிகளையும் பார்ப்பேன்.' 
ஆனால் எல்லாத் தேவர்களிலும் என் மனத்துக்குகந்த தெ
்வமாகிய அவரை அங்கே நான் பார்க்க
முடியாது.மனத்துக்கு இன்பமில்லாத அத்தகைய மோட்ச உலகத்துக்குப் போவதில் என்ன பயன்?' அடடே! 
இது என்ன ஊசலாட்டம்! உடம்பை இப்படித் தூக்கித்தூக்கிப் போடுகிறதே! ஆனால் தலைவைத்திருக்கும் இடம்
மெத்தென்று சுகமாயிருக்கிறது.  தாயின் மடியைப் போல் இருக்கிறது.  ஏன்! தாயைக் காட்டிலும் என்னிடம்
பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது!...  ஆ! குந்தவைதேவி இப்போது
பழையாறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ? என்னைப் பற்றி செய்தி அவருக்கு இதற்குள்
எட்டியிருக்குமோ? 
மோட்ச உலகத்துக்கு வானவௌியில் மேக மண்டலங்களின் வழியாகப் பிரயாணம் செய்வது
சரிதான்.  ஆனால் என்ன வாகனத்தில் பிரயாணம் செய்கிறேன்? சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது? 
அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா? அப்பா! யானை என்றாலே சிறிது
பயமாகத்தானிருக்கிறது! யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும்! - அப்படித் துவளும் துதிக்கையில்
தான் எவ்வளவு பலம் அதற்கு?- போனது போயிற்று! இனி அதைப் பற்றிப் பயம் என்ன? கவலை என்ன?' 
ஆனால் தலை வைத்திருக்கும் இடம் அவ்வளவு பட்டுப்போல் மிருதுவாயிருக்கும் காரணம் யாது?
சுற்றிலும் இருளாயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை.  கையினால் துளாவிப் பார்க்கலாம். உண்மையில்,
பட்டுத் திரைச் சீலை மாதிரிதான் தோன்றுகிறது.  கொஞ்சம் ஈரமாயும் இருக்கிறது.' 
ஆகா! இது என்ன? என் கன்னங்களை யார் தொடுகிறது? மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான
கரம் அல்லவா தொடுகிறது?
"வானதி! வானதி!" 
"அக்கா! நீங்கள் தானா?" 
"நான்தான்.  வேறு யார்?" 
"நீங்கள் கூட என்னுடன் மோட்ச உலகத்துக்கு வருகிறீர்களா?" 
"மோட்ச உலகத்துக்குப் போக அதற்குள் உனக்கு என்னடி அவசரம்? இந்த உலகம் அதற்குள்ளே 
வெறுத்துப் போய் விட்டதா?" 
"ப
ன்னே, நாம் எங்கே போகிறோம்?" 
"என்னடி அதுகூட மறந்து போய்விட்டதா? ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா?" 
"என்ன ஊர்? இன்னொருதடவை சொல்லுங்கள்!" 
"சரியாய்ப் போச்சு! ஆனைமங்கலத்துக்குப் போகிறோம்! ஆனையின் முதுகில் ஏறிக்கொண்டு 
போகிறோம்!" 
"ஐயோ! யானையா?" 
"அடி பைத்தியமே! உன் உடம்பு ஏனடி நடுங்கிறது! யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் 
தொடங்கிவிட்டாயா?" 
"அக்கா! சற்று முன்தூங்கிப் போய்விட்டேனா?" 
"ஆமாம். ஆமாம்! யானையின் மேல் அம்பாரியில் பிரயாணம் செய்கிற சொகுசில் ஆனந்தமாய்த் 
தூங்கி விட்டாய்!"
"ஆனந்தம் ஒன்றுமில்லை, அக்கா! பயங்கரமான கனவுகள் கண்டேன்!" 
"அப்படித்தான் தோன்றியது!  ஏதேதோ பிதற்றினாய்!" 
"என்ன அக்கா பிதற்றினேன்!" 
"காளாமுகர் என்றாய்! பலி என்றாய்! கஜேந்திர மோட்சம் என்றாய்! யானைத் துதிக்கை
என்றாய்! அப்புறம் முதன் மந்திரி அநிருத்தரைப் 'பாவி, பழிகாரன்' என்று திட்டினாய்.  அந்தப்
பிரம்மராயருக்கு நன்றாய் வேண்டும்! நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர்
கேட்டிருந்தால், பலநாள் தூங்கவே மாட்டார்!" 
"அதெல்லாம் நடந்தது நிஜமாகக் கனவுதானா, அக்கா!" 
"நிஜமாகக் கனவா? பொய்யாகக் கனவா? எனக்கு என்ன தெரியும்? நீ என்ன சொப்பனம் 
கண்டாய் என்பதே எனக்குத் தெரியாது." 
"காளாமுகர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முதன் மந்திரி என்னிடம்
இளவரசரைப்பற்றி இரகசியத்தைக் கேட்டார்.  நான் சொல்ல மறுத்துவிட்டேன். உடனே யானையை அழைத்து
என்னைத் தூக்கி எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அப்போது நான் கொஞ்சங் கூடக் கலங்காமல்
தைரியமாக இருந்தேன்.  அக்கா! அப்போது உங்கள் ஞாபகமும் வந்தது.  நீங்கள் அங்கே இல்லையே, என்னுடைய
தைரியத்தைப் பார்ப்பதற்கு என்று." 
"போகட்டும்; சொப்பனத்திலாவது அவ்
ளவு தைரியமாக நடந்து கொண்டாயே? அதன் பொருட்டுச்
சந்தோஷம்!" 
வானதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, "என்னால் நம்பமுடியவில்லை!" என்றாள்.  
"உன்னால் என்னத்தை நம்ப முடியவில்லையடி?" 
"நான் கண்டதெல்லாம் கனவு என்று நம்பமுடியவில்லை." 
"சில சமயம் சொப்பனங்கள் அப்படித்தான் இருக்கும்.  நிஜமாக நடந்தது போலவே தோன்றும். 
நான்கூட அப்படிப்பட்ட சொப்பனங்கள் பலமுறை கண்டிருக்கிறேன்." 
"அப்படி என்ன சொப்பனம் கண்டிருக்கிறீர்கள்? சொல்லுங்களேன்?" 
"ஏன்? என் தம்பிகூடத்தான் அடிக்கடி என் கனவில் வருகிறான்.  இலங்கைக்கு அவன் போய் எத்தனை
மாதம் ஆயிற்று? ஆனால் இரவில் கண்ணை மூடினால் அவன் தத்ரூபமாக என் முன்னால் வந்து நிற்கிறான்..."
"நீங்கள் அதிர்ஷ்டசாலி, அக்கா!" 
"என் அதிர்ஷ்டத்தை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் அவன் கடலில் குதித்த செய்தி 
வந்ததிலிருந்து என் மனம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியாது." 
"அப்படியானால் அதுவும் ஒரு பயங்கர சொப்பனம் அல்லவா? அவர் கடலில் முழுகியது மட்டும்
நிஜமான செய்திதானா!" 
"அதுவும் ஒரு துர்ச் சொப்பனமாயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே? அது மட்டும் 
நிஜந்தானடி வானதி! இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே! அதை
நம்பாமல் என்ன செய்வது?" 
"வாணர்குல வீரரைத்தானே சொல்கிறீர்கள்? அவரே இளவரசைப்பற்றி வேறு ஏதோ
சொல்லவில்லையா? ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ
சொல்லவில்லையா?" 
"இதெல்லாம் உன் சொப்பனமாயிருக்க வேண்டும்.  ஆம், ஓடக்காரி பூங்குழலியைப்
பற்றியும், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் நீ தூக்கத்தில் பிதற்றினாய்! புத்த பிக்ஷூணி
ஆகப் போவதாகக் கூட உளறினாய்! அதற்குள் உனக்கு என்னடி இந்
 உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு 
வெறுப்பு? எதற்காக நீ புத்த பிக்ஷூணி ஆகவேண்டும்?" 
"அக்கா! என் மனது உங்களுக்குத் தெரியாதா? அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு,
எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது! சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத்
துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!" 
"அடி பாவி! நீயும் போய் விட்டால் என் கதி என்னடி ஆகிறது?" 
"உங்கள் விஷயம் வேறு, அக்கா! நீங்கள்..." 
"ஆமாம், ஆமாம்! அருள்மொழியிடம் என்னைக் காட்டிலும் உனக்கு அதிக ஆசை! இல்லையா?"
"அக்கா! அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை.  தங்களைப் போல் நான் மனோதைரியம் உள்ளவள் 
அல்ல.  அவர் இறந்து விட்ட பிறகு...." 
"சீச்சீ! என்ன வார்த்தை சொல்லுகிறாய்? அவன் இறந்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்? உனக்கு
நிச்சயமாய்த் தெரியுமா? பழுவேட்டரையர்களும், பழுவூர் ராணியும், பேதை மதுராந்தகனும் அப்படிச் சொல்லிக்
கொம்மாளம் அடிப்பார்கள்.  நீயும், நானும், அப்படி ஏன் சொல்ல வேண்டும்? அல்லது ஏன் நினைக்கத்தான்
வேண்டும்?" 
"பின்னே, என்ன சொல்கிறீர்கள்? அவர் சுழிக் காற்றில் கடலிலே குதித்தபிறகு...  வேறு
என்ன ஆகியிருக்க முடியும்? பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா?" 
"அடி பைத்தியமே! கடலில் குதித்தால், அவனைக் கடல் கொண்டு விட்டது என்று அர்த்தமா?" 
"கரை ஏறியிருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்?" 
"என் தகப்பனாரின் கதை உனக்கு தெரியுமா? அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம்
இருக்குமிடமே தெரியாமலிருந்தது.  தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள்.  என்
பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார்.  பல
வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது.  ந
ன் சொல்லுகிறேன் கேள், வானதி!
காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள்.  அது மாதிரியே சமுத்திர
ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும்
மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி
ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா? அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் 
இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை
போலிருக்கிறது.  உன் பேரில் தப்பு இல்லை.  இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே
பேதலித்து விட்டது.இப்போதுதான் கொஞ்சம் தௌிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்!" 
வானதி சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு, "அக்கா! நாம் எந்த ஊருக்குப் போகிறோம்
என்று சொன்னீர்கள்?" என்றாள். 
"ஆனைமங்கலத்துக்கு" 
"அது எங்கே இருக்கிறது?" 
"நாகைப்பட்டினத்துக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது.  நீ ஏதோ சொப்பனம் 
கண்டு உளறினாயே, அந்தச் சூடாமணி விஹாரத்துக்கும் ஆனைமங்கலத்துக்கும் கொஞ்ச தூரந்தான்.  
நீ புத்த பிக்ஷூணியாவதாயிருந்தால் கூட, அதற்கும் சௌகரியமாகவேயிருக்கும்.  ஆனால் நீ மணிமேகலை 
யாவதற்கு அவசரப்பட வேண்டாம்.  பொன்னியின் செல்வனைப் பற்றித் திடமான செய்தி கிடைத்த பிறகு 
முடிவு செய்து கொள்ளலாம்!" என்று குந்தவை கூறி விட்டு இலேசாகச் சிரித்தாள்.
"அக்கா! இது என்ன நீங்கள் சிரிக்கிறீர்கள்! சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?
இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா?" 
"நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்படி இருப்பேனா வானதி! நான் பார்த்து வைத்திருக்கும் 
ஜோசியங்கள் எல்லாம் பொய்யாகப் போ
வதில்லை.  என் தம்பியின் கையில் உள்ள சங்கு சக்கர ரேகைகளும் 
பொய்யாகப் போவதில்லை.  இது வரையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது." 
"என்ன சரியாக நடந்து வருகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?" என்றாள் வானதி. 
"உனக்கு ஏன் தெரியப் போகிறது? நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே? அருள்மொழிக்கு 
இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள்.  அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன.  பின்னே
மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும்?" 
"மற்றவை என்றால்?" 
எத்தனையோ தடவை நான் சொல்லியாகிவிட்டது.  நீயும் கேட்டிருக்கிறாய், மறுபடி எதற்காகச்
சொல்லச் சொல்லுகிறாய்? பேசாமல் தூங்கு! பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்." 
வானதி மீண்டும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது விட்டு, "இராத்திரியெல்லாம் யானை 
மீது பிரயாணம் செய்யப் போகிறோமா அக்கா! எதற்காக?" என்று கேட்டாள்.  
"அதுகூடவா உனக்கு ஞாபகம் இல்லை? பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள
ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்.  'பொன்னியின் செல்வன் எங்கே?', 'சோழ
நாட்டின் தவப்புதல்வன் எங்கே ?' என்று கேட்பார்கள்.  பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள்.  பழுவூர்
இளைய ராணியைச் சபிப்பார்கள்.  சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள்.  அதையெல்லாம்
நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும்? நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப்
பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள்! எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில்
புறப்பட்டேன்.  இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும்
கேட்கிறாய்.  நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது! சூடாமணி விஹாரத்துக்குப் புத்த
பிக்ஷூக்களிடம் சொல்ல
ித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும்! போனால் போகட்டும்;
நீ இப்போது தூங்கு! எனக்கும் தூக்கம் வருகிறது இந்த ஆடும் குன்றின் மீது உட்கார்ந்தபடியேதான் இன்று இரவு
நாம் தூங்கியாக வேண்டும்" என்றாள் இளையபிராட்டி.  
வானதி இனி ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்து மௌனமானாள்.  அவளுடைய உள்ளம் ஒரே
குழப்பமாயிருந்தது.  அன்று நடந்தையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள்.  எல்லாம்
உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களாகவே தோன்றின. 'எனக்குச் சித்தப் பிரமை ஒன்றுமில்லை; அக்காதான்
என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறாள்' என்று சில சமயம் எண்ணினாள். யானை தன்னைத்
துதிக்கையினால் சுற்றித் தூக்கிய பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தாள்.  ஒன்றும்
நினைவுக்கு வரவில்லை.  என்னதான் நடந்திருக்கும்? தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா
சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.  அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி
நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும்.  ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது
அவ்வளவு சுலபமான காரியமா?...  ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ?... தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய 
யானைதானா இது? மேலே அம்பாரி இருந்தது.  அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது.  இளையபிராட்டி அந்த
அம்பாரியிலேயே இருந்திருக்கலாம்.  யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக
மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும்.  அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி
பலமுறை பார்த்ததுண்டு.  முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி
செய்திருக்கிறார்களோ? எதற்காக? நான் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுத்தான். 
என்னுடைய தை
ியத்தைச் சோதிப்பதற்காகவும் இளைய பிராட்டி இம்மாதிரி செய்திருக்கலாம்.  பொம்மை
முதலையை என் அருகிலே விட்டு ஒரு சமயம் சோதனை செய்யவில்லையா?..  எப்படியாவது இருக்கட்டும்; நான்
இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது
எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது.  அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன!
பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.  ஒருவேளை இந்தப்
பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா?..  இவ்வாறு எண்ணியபோது வானதியின் உள்ளத்தில்
அளவில்லாத கிளர்ச்சி ஏற்பட்டது.  மனச்சோர்வுக்கு நேர்மாறான உற்சாக இயல்பு இப்போது அவளை
ஆட்கொண்டது.  
யானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது.  
யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது.  
முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன.  
மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது.  
வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன.  
நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன.  
வானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப்
பார்த்தாள்.  
வானவௌியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின்
வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள்.  
பொன்னியின் செல்வர் உதித்த நட்சத்திரத்துக்கும், தான் பிறந்த நட்சத்திரத்துக்கும் உள்ள 
பொருத்தத்தை பற்றி ஜோதிடர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்குமா? 
தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று 
ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா? 
வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாத
்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் 
கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்? 
அப்படி என்ன உற்பாதம் நடக்கும்? 
பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா?
அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா? 
அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்!...  
இம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக்
கண்ணயர்ந்தாள்.  
அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. 
புள்ளினங்கள் உதய கீதம் பாடின.  
இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு
வௌியே பார்த்து, "இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோம்.  சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து
விட்டோம்" என்றாள்.  
இரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள்.  
மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள்.  அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் 
இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள்.  
கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி 
கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.  
"அக்கா! இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே? என்ன
செய்திருக்கிறீர்கள்?" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.  
"ஆமடி வானதி! தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது.  அதோபார், ஒரு படகு வருகிறது!
அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்!" என்றாள் 
குந்தவை.
வானதி திரும்பிப் பார்த்தாள்.  சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவௌியில் ஒரு சிறிய படகு
வருவது தெரிந்தது.  அதில் இருவர் இருந்தார்கள். 
 "அக்கா! அந்தப் படகில் வருவது யார்?" என்று வானதி
கேட்டாள்.  
"படகு தள்ளுகிறவன் சேந்தன் அமுதன்.  தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையிலிருந்து நாம் அன்றொரு
நாள் விடுதலை செய்தோமே, அவன்.  உட்கார்ந்திருப்பவள் பூங்குழலி!" 
வானதிக்கு உடம்பு சிலிர்த்தது. 
"அக்கா! நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன்!" என்றாள்.  
"என்னடி அவளைக் கண்டு அவ்வளவு பயம்! உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன? 
நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ பயப்படாமல் சும்மா இரு!" என்றாள் குந்தவை.  
படகு நெருங்கி வந்து கொண்டிருந்தது.  
யானைத் துதிக்கையில் அகப்பட்ட வானதி எப்படி உயிர் பிழைத்தாள்? இதைக் குறித்து, அவள்
இரண்டாவதாகச் செய்த ஊகந்தான் சரியானது.  யானை துதிக்கையைச் சுழற்றி அவளைத் தூர எறியவில்லை. 
மேலே தூக்கி அம்பாரியின் அருகில் இலேசாக வைத்தது.  அங்கே திரை மறைவில் ஆயத்தமாயிருந்த குந்தவை
அவளை வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டாள்.  
பிறகு முதன் மந்திரியும் பல்லக்கில் ஏறினார்.  "தேவி போய் வரட்டுமா? உன் பிரயாணம்
இனிதாயிருக்கட்டும்.அதன் முடியும் இனிதாயிருக்கட்டும்!" என்று சொன்னார்.  
"ஐயா! தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!" என்றாள் இளைய பிராட்டி.
"கொடும்பாளூர்ச் கோமகளைக் கோழை என்றாயே? அவளைப்போல் நெஞ்சழுத்தக்காரப் பெண்ணை 
நான் பார்த்ததேயில்லை." 
"முன்னேயெல்லாம் அவள் கோழையாகத் தானிருந்தாள்.  கொஞ்ச நாளாகத்தான் அவளுக்கு
இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது" என்றாள் குந்தவை.  
"எல்லாம் உன்னுடைய பயிற்சிதான்.  அந்தப் பெண் என்னைப் பயங்கர ராட்சதன் என்று
எண்ணியிருப்பாள்; போனால் போகட்டும்.  என்னைப் பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாக எண்ணிக்
கொண்டிருப்பார்கள்.  நான் அதற்காகவெல்லாம் கவலைப் படுவதில்லை.  போய் வாருங்கள், அம்மா!" 
வ்விதம் முதன் மந்திரி கூறியதும், அவருடைய பல்லக்கும் நாலு வீரர்களும் மட்டும் மேற்குத் 
திசையில் செல்ல, யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கிச் சென்றன.  
முதன் மந்திரி பல்லக்குப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. 
மழையைப் பொருட்படுத்தாமல் சிவிகை தூக்கிய ஆட்களும், சிவிகையைக் காத்த வீரர்களும் சென்று
கொண்டிருந்தார்கள்.  
மழை குறைந்து தூறல் நிற்கும் சமயத்தில் திடீரென்று பல்லக்கு நின்றது.  
"ஏன் நிற்கிறீர்கள்?" என்று முதன் மந்திரி கேட்டார்.  
"சுவாமி, அந்த மரத்தடியில் யாரோ கிடப்பது போலத் தெரிந்தது!" என்றாள் முன்னால் சென்ற
காவலர்களில் ஒருவன்.  
முதன் மந்திரி அவன் சுட்டிக்காட்டிய திசையை உற்றுப் பார்த்தார். பளிச்சென்று ஒரு
மின்னல் மின்னியது.
"ஆமாம், யாரோ கிடக்கிறதாகத்தான் தெரிகிறது, இறங்கிப் பார்க்கிறேன்" என்றார் 
முதன் மந்திரி.  
சிவிகையிலிருந்து இறங்கி அருகில் சென்றபோது மரத்தடியில் கிடந்த மனிதன் முனகும் சத்தம்
கேட்டது.
"யார் இங்கே!" என்றார் அநிருத்தர்.  
அதற்குப்பதிலாக, "முதன் மந்திரி போலிருக்கிறதே!" என்ற தீனமான குரல் கேட்டது.  
"அம்;" கேட்டது முதன் மந்திரிதான்! இங்கே கிடப்பது யார்?" 
"ஐயா! தெரியவில்லையா? நான்தான் மதுராந்தகன்!" 
"இளவரசே! இது என்ன கோலம்? இங்கே எப்படி வந்தீர்கள்? என்ன நேர்ந்தது?" என்று 
பரபரப்புடன் கேட்டுக் கொண்டே முதன் மந்திரி மதுராந்தகரைத் தூக்கி நிறுத்த முயன்றார்.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters
of this website.