கல்கியின்
பார்த்திபன் கனவு
பாகம் - 3

kalkiyin2
pArttipan2 kan2vu
part-3, in tamil script, unicode/UTF-8 format




கல்கியின்
பார்த்திபன் கனவு
பாகம்-3

உள்ளுறை அத்தியாயங்கள்
3.022 "நிஜமாக நீதானா?" மின்பதிப்பு
3.023 அருவிப் பாதை மின்பதிப்பு 3.024 பொன்னன் பிரிவு மின்பதிப்பு
3.025 வள்ளி சொன்ன சேதி மின்பதிப்பு 3.026 படகு நகர்ந்தது! மின்பதிப்பு
3.027 புதையல் மின்பதிப்பு 3.028 குந்தவியின் நிபந்தனை மின்பதிப்பு
3.029 சக்கரவர்த்தி கட்டளை மின்பதிப்பு 3.030 நள்ளிரவில் மின்பதிப்பு
3.031 பைரவரும் பூபதியும் மின்பதிப்பு 3.032 உறையூர் சிறைச்சாலை மின்பதிப்பு
3.033 அமாவாசை முன்னிரவு மின்பதிப்பு 3.034 "ஆகா! இதென்ன?" மின்பதிப்பு
3.035 தாயும் மகனும் மின்பதிப்பு 3.036 பலிபீடம் மின்பதிப்பு
3.037 நீலகேசி மின்பதிப்பு 3.038 என்ன தண்டனை? மின்பதிப்பு
3.039 சிரசாக்கினை மின்பதிப்பு 3.040 கனவு நிறைவேறியது மின்பதிப்பு

பார்த்திபன் கனவு
பாகம் - 3

அத்தியாயம் இருபத்திரண்டு
"நிஜமாக நீதானா?"

மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன. குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான். குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள். விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான். "ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி. குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள். "ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில். "நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். "எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன். "என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?" "உன்னைக் கண்டு பயப்படவில்லை." "பின்னே?" "நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்." குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?" "இருந்தால் என்ன?" "நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்."

இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள். புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள். "சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன். "என்னென்ன?" "நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று." "அப்புறம்?" "நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று." "இன்னும் என்ன?" "இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று."

குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது." "என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும். விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான். "பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?" "சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!"

"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள். விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான். "அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி. "அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?" "உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?" "இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான். குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள். "இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...."

"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....." "மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?" "இருக்கிறது." "அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?" "இப்போது நினைவு வருகிறது." "நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?" விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். "இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்."

"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...." "செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள். "நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.

"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..." "யார்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்." "அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது." "மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?" "உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை." "என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்." உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள்.

அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது." "உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி. விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான். "ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!" விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."

"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி. "பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான். "காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்." விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக் குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்."

"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது." "இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்." விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்: "சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?" "பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!" "குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்." "சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?" "யார் இருவரும்?" "அண்ணனும் தங்கையும்." "யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.

"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது." "அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள். விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான். "நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்துமூன்று
அருவிப் பாதை

உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது. இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, "பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார். "ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்."

"எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!" பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!" என்றான். "சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது...." பொன்னன் குறுக்கிட்டு, "சுவாமி! தாங்கள்...." என்றான். "ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்... இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்... இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?" என்று சுவாமியார் கேட்டார்.

"ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!" "அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" "சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது...." "ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்...." "என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?" என்றான் பொன்னன். "ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.... பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது.

வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது - தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் - தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது."

"சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்றான் பொன்னன். "எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!" என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார். "ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!" என்றான் பொன்னன். "போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!" என்றார் சுவாமியார். "சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!" என்றான் பொன்னன். இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை. சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை "மரத்திலே கட்ட வேண்டாமா?" என்று பொன்னன் கேட்டதற்கு "வேண்டாம்" என்றார் சிவனடியார். "இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?" என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.

பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது. "சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?" என்று பொன்னன் கேட்டான். "ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்" என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், "ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை - மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!" என்றார். "அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?" என்று கேட்டான் பொன்னன்.

"வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் - ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க - சுதந்திர வீர புருஷனாக வளர்க்க - வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது."

இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி 'ஹோ' என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார். அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.

அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், "ஐயோ!" என்று அலறிவிட்டான். "ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?" என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. 'அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்' என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்துநான்கு
பொன்னன் பிரிவு

பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள். நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.

சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!

மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!

"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார். "ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். "ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன." "ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?" "ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."

"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?" "இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...." "எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?" "அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."

"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?" "ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?" "ஐயோ!" "அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்." "ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது." "என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!" "என்ன சந்தேகம், சுவாமி?"

"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!" "தாங்கள் வராவிட்டால்....?" "அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்." "அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்தைந்து
வள்ளி சொன்ன சேதி

வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. "வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள். "நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."

"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள். "அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன். "ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோ ம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள். "சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...." "என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள். "ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..." "இப்போது எங்கேயிருக்கிறார்...?" "அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்." "சரி, அப்புறம் சொல்லு." "ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்." "ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!" "நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி. "யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"

வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள். "நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன். வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான். வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. 'வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."

இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான். "இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள். "குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்." "ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?" "நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்." பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.

பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான். மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்தாறு
படகு நகர்ந்தது!

படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், "பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு" என்றான். பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.

"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?" "வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!" "அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?" "ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!" "மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது..."

"அப்புறம் என்னதான் செய்தாய்?" என்று விக்கிரமன் கேட்டான். பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான். பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது. "பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது" என்றான் விக்கிரமன். "என்ன மகாராஜா, சந்தேகம்?" "அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று."

"ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!" "ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?" "ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்...." "ஆனால் என்ன, பொன்னா?"

"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்." "இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். "அது என்ன அபாயம், மகாராஜா?" என்று கேட்டான். "ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:- "உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்."

"மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்." "பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்." "ஐயோ, அது என்ன?" "மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...!" பொன்னன் குறுக்கிட்டு, "மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்" என்றான். "சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?" "விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?"

"பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்." "அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?" "கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளா யிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?"

பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. "விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. "ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான். "ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?" என்றான் விக்கிரமன். "கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்...." "பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். "சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!" "தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?" "முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.

அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்தேழு
புதையல்

கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம். பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான். விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, "மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்" என்றான்.

அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? - நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.... இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது... செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. "இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?" என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது!

"நாடு என்ன செய்யும்? - மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?" என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்?

"மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி - சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது. விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்: "பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. "இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!" என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் - அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது.

பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? 'முயற்சி திருவினையாக்கும்!' ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!"

இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது. பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள். நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது. "இதென்ன, பொன்னா! படகு! எங்கே?" என்றான் விக்கிரமன். "ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோ மோ?" என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. "பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?" என்றான் விக்கிரமன். "கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்தெட்டு
குந்தவியின் நிபந்தனை

பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். "சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்." "வள்ளுவர் பெருமான், 'முயற்சி திருவினையாக்கும்' என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?" என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ...." என்று மேலே பேசத் திணறினான். "ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்." "உண்மையாகவா?" "ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்."

விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் - மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் - சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?" என்றான். "உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?" "ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது...." "ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, "நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்...." என்றான். "ஆ! இது உண்மையா?" என்றாள் குந்தவி. "ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்...."

"இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?" என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள். "அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்..." "என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" "நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்." "போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்" என்றாள் குந்தவி.

படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான். "இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?" என்று கேட்டான். "தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்." "எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ...." "ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!" விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்" என்றான். "அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?" என்று குந்தவி கேட்டாள். "முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்." "கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது." "நிபந்தனையா?" "ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்."

விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், "தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!" என்றான். குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், "உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்" என்றாள்.

"இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?" "என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்..." அப்போது, "மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன. விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்" என்றான். "காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி..."

குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் "என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!" என்றாள். பொன்னன், "தேவி" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் "ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன்.

தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!" என்றாள். "தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை" என்றான் பொன்னன். விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள். படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் இருபத்தொன்பது
சக்கரவர்த்தி கட்டளை

நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து விக்கிரமன் அருகில் வந்து, "மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்" என்றான். "வரங்கேட்க நல்ல சமயம் பார்த்தாய், பொன்னா! சீக்கிரம் கேட்டுவிடு. ஆனால், என்னிடம் என்ன இருக்கிறது நீ கேட்பதற்கு?" என்று சிறிது வியப்புடன் கூறினான் விக்கிரமன். "மகாராஜா! மாரப்பபூபதியின் ஆட்களுடன் தாங்கள் சண்டையிடக்கூடாது. அவர்கள் ரொம்பப் பேர், நாமோ இரண்டு பேர்தான்..." "பொன்னா! நீதானா இப்படிப் பேசுகிறாய்? உனக்கும் சோழ நாட்டு வீர வாசனை அடித்துவிட்டதா?" என்றான் விக்கிரமன். "இல்லை, மகாராஜா! என் உயிருக்கு நான் பயப்படவில்லை. இந்த அற்ப உயிரை எந்த விநாடியும் விட்டுவிடச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்போது சண்டையிட்டால் எல்லாம் கெட்டுப் போய்விடும். மகாராஜா! தங்களுடைய அன்னை அருள்மொழித் தேவியைப் பார்க்க வேண்டாமா? இன்னொரு முக்கிய விஷயம். தங்களுடைய மூதாதைகளின் வீரவாளைக் கொண்டு முதன் முதலில் உங்களுடைய சொந்தக் குடிகளையா கொல்லுவீர்கள்?" என்று பொன்னன் கேட்டபோது, விக்கிரமனுடைய முகம் வாடியது.

"சரி பொன்னா! போதும், இனிமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் வாளைத் தொடவில்லை" என்றான். பிறகு குந்தவியைப் பார்த்து, "தேவி! இந்தப் பெட்டியைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும். மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் கொடுக்க வேண்டும்" என்றான். ஆனால் குந்தவியின் செவிகளில் அவன் கூறியது விழுந்ததோ, என்னமோ தெரியாது. அவளுடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆவேசம் வந்தவள் போல் நெருங்கி வந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். படகுகள் கரையை அடைந்தன. மாரப்ப பூபதி முதலில் படகிலிருந்து குதித்தான். மரியாதையாகக் குந்தவி தேவியை அணுகி, "பெருமாட்டி! தங்கள் அனுமதியில்லாமல் இங்கே வந்ததற்காக மன்னிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக வந்தேன்" என்றான். குந்தவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "எந்தச் சக்கரவர்த்தி? என்ன கட்டளை?" என்றாள். "தங்களுடைய சகோதரர் மகேந்திர பல்லவரின் கட்டளைதான். செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் ஒற்றனைக் கைப்பற்றி ஜாக்கிரதையாகக் காஞ்சிக்கு அனுப்பும்படிக் கட்டளை இதோ பாருங்கள்!" என்று மாரப்பன் ஓர் ஓலையை நீட்டினான். அதில் மகேந்திரனின் முத்திரையுடன் மேற்கண்ட விதமான கட்டளை எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் குந்தவி, "செண்பகத்தீவின் ஒற்றன் யார்?" என்று கேட்டாள். "இதோ நிற்கிறானே, இவன் தான், தேவி!" "இல்லை; இவர் ஒற்றன் இல்லை. நீர் திரும்பிப் போகலாம்."

"தேவி! இவன் ஒற்றன் இல்லாவிட்டால் வேறு யார்? மனமுவந்து சொல்லவேண்டும்!" என்று மாரப்பன் கள்ள வணக்க ஒடுக்கத்துடன் கூறினான். "பூபதி! யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாய்? உன்னை மறந்து விட்டாயா?" என்று கண்களில் கனல் பொறி பறக்கக் குந்தவி கேட்டாள். "இல்லை; என்னை நான் மறக்கவில்லை. எனக்கு அவ்வளவாக ஞாபக மறதி மட்டும் கிடையாது. இதோ இவனுடைய முகம்கூடப் பார்த்த முகமாக என் ஞாபகத்தில் இருக்கிறது. ஆம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது. தேவி! இவன், மகா மேன்மை பொருந்திய தர்ம ராஜாதிராஜ நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியினால் தேசப்பிரஷ்ட தண்டனைக்குள்ளானவன் என்பதாய் ஞாபகம் வருகிறது. இவன் ஒற்றன். இல்லையென்றால், தேசப்பிரஷ்டன்! தேசப்பிரஷ்டமானவன் திரும்பி வந்தால் என்ன தண்டனையென்று தங்களுக்கே தெரியும். தேவி! என் கடமையை நான் செய்ய வேண்டும். தர்ம ராஜாதி ராஜாவான பல்லவச் சக்கரவர்த்தி, தம் சொந்தப் புதல்வியின் வார்த்தைக்காகக்கூட நான் என் கடமையில் தவறுவதை ஒப்புக் கொள்ளமாட்டார்" என்றான். குந்தவியின் உடம்பெல்லாம் நடுங்கிற்று; அவளுடைய மார்பு விம்மிற்று.

"சேனாதிபதி! இவர் என் விருந்தினர், இவருக்கு நான் பாதுகாப்பு அளித்திருக்கிறேன். இவருக்கு ஏதாவது நேர்ந்தால்...." என்று கூறி, விக்கிரமனை மறைத்துக் கொள்பவள் போல் அவன் முன்னால் வந்து நின்றாள். மாரப்பன் கலகலவென்று சிரித்தான். "ஆகா! சோழ வம்சத்தின் பெருமையை விளங்க வைக்கப்போகும் வீரசிங்கம் ஒரு பெண்ணின் முந்தானையில் ஒளிந்து கொள்கிறான்!" என்று கூறி மீண்டும் சிரித்தான். நாணத்தினாலும் கோபத்தினாலும் விக்கிரமனுடைய கண்கள் சிவந்தன. அவன் நாலு எட்டாக நடந்து குந்தவிக்கு முன்னால் வந்து நின்று மாரப்பனைப் பார்த்து, "சித்தப்பா! இதோ நான் வரச் சித்தமாயிருக்கிறேன். அழைத்துப் போங்கள்!" என்றான். மாரப்பன் கேலிச் சிரிப்புடனே குந்தவியைப் பார்த்து, "ஏழைமேல் ஏன் இவ்வளவு கோபம்? இவனைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமென்றால், தங்கள் தந்தையையோ தமையனாரையோ வேண்டிக் கொண்டால் போகிறது. சக்கரவர்த்தி கருணையுள்ளவர், இவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கப்பமும் செலுத்த ஒப்புக் கொண்டால் கட்டாயம் மன்னித்து விடுவார்" என்றான். இந்த வார்த்தைகள் தான் எதிர்பார்த்தது போலவே விக்கிரமன், குந்தவி இருவருடைய முகங்களிலும் வேதனை உண்டாக்கியதை அறிந்த மாரப்பனுக்குக் குதூகலம் உண்டாயிற்று. விக்கிரமன் உடனே விரைவாகச் சென்று படகில் ஏறிக் கொண்டான்.

குந்தவி விக்கிரமனை மிகுந்த ஆவலுடன் நோக்கினான். தன்னை அவன் திரும்பிப் பார்ப்பானென்றும், தன் கண்களினால் அவனுக்குத் தைரியம் கூறலாமென்றும் அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் விக்கிரமன் திரும்பிப் பார்க்கவேயில்லை. மாரப்பன் இந்த நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுப் பிறகு பொன்னன்மீது தன் பார்வையைச் செலுத்தினான். "அடே படகோட்டி! நீயும் வா; ஏறு படகில்" என்றான். "அவன் ஏன் வரவேண்டும்? பொன்னனைப் பிடிப்பதற்கும் கட்டளையிருக்கிறதா?" என்று குந்தவி கேட்டு மாரப்பனைக் கண்களால் எரித்து விடுபவள் போல் பார்த்தாள். மாரப்பன் அந்தப் பார்வையைச் சகிக்க முடியாமல், "கட்டளையில்லை தேவி! ஆனால், இந்த ஒற்றனுக்கு தேசப் பிரஷ்டனுக்கு இவன் ஒத்தாசை செய்திருகிறான்..." என்றான். "பொன்னன் என்னுடைய ஆள்; எனக்குப் படகோட்ட வந்திருக்கிறான். அவனைக் கொண்டு போக உனக்கு அதிகாரமில்லை, ஜாக்கிரதை!" என்றாள் குந்தவி. மாரப்பன் அவளுடைய தொனியைக் கேட்டுத் தயங்கினான். குந்தவி மறுபடியும், "தேசப் பிரஷ்டனுக்கு உதவி செய்ததற்காகப் பிடிப்பதென்றால், என்னை முதலில் பிடிக்க வேண்டும்!" என்றாள். "ஆம்; தேவி! சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் அதுவும் செய்வேன்" என்றான் மாரப்பன். பிறகு அவன் படகோட்டிகளைப் பார்த்து, "விடுங்கள்" என்றான். படகுகள் உறையூரை நோக்கி விரைந்து சென்றன

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பது
நள்ளிரவில்

படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, "படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். "உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி" என்றாள் குந்தவி. பொன்னன் வியப்புடன், "தேவி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்றான். "உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா? அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்!" என்றாள் குந்தவி.

"அம்மணி! கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா?" என்றான் பொன்னன். "என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா! ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்...." இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், "தேவி! விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். "சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா!" என்றாள் குந்தவி.

குந்தவியின் கட்டளையின் பேரில் கிடைத்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், "உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்!" என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.

தன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா? அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா.... விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா? - இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான். படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். "யார் அது?" என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். 'கதவை அடைப்பானேன்?' என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.

பொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், "நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா! நான் கோயிலுக்குப் போகிறேன்" என்றது. இன்னொரு குரல், "மகாப் பிரபோ! இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே!" என்றது. "நீ இருந்து அழைத்து வா!" என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.

நெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள். இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, "அதோ பார்" என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. பொன்னன் சற்று யோசித்துவிட்டு, "வள்ளி! வா! இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது" என்றான். "எங்கே வரச் சொல்லுகிறாய்! உறையூருக்கா?" என்று வள்ளி கேட்டாள். "இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்." "அப்படியா? இளவரசர் - மகாராஜா - சௌக்கியமா? அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். "ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா!" என்றான் பொன்னன்.

இரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான். நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது. 'டக் டக்' 'டக்டக்' என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தொன்று
பைரவரும் பூபதியும்

பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். "சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு, பின்வரும் சம்பாக்ஷணை நடந்தது. "அய்யனார் கோவிலில் இருக்கிறார். என்னை இங்கே இருந்து உங்களுக்கு வழிகாட்டி அழைத்து வரும்படி சொன்னார்... ஆமாம், அவன் எங்கே?" "எவன்?" "அவன்தான். பல பெயர் கொண்டவன்... இரத்தின வியாபாரி... தேவசேனன்... உம்முடைய தாயாதி....ஹிஹிஹி, என்று குள்ளன் கீச்சுக் குரலில் சிரித்தான். "அவனா? ஹா ஹா ஹா!" என்று மாரப்பனும் பெருங் குரலில் சிரித்தான். அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் சிரித்த சிரிப்பின் ஒலி பயங்கரமாகத் தொனித்தது. மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த பட்சி ஜாதிகளை எழுப்பி விட்டது. சில பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. வேறு சில பறவைகள் தூக்கக் கலக்கத்தில் பீதியடைந்து தீனக் குரலில் சப்தித்தன.

"அவன் பத்திரமாகயிருக்கிறான் நீ கவலைப்படாதே. அடே! அன்றைக்கு அந்த இரத்தின வியாபாரிக்கு வழிக்காட்டிக் கொண்டு போனாயே, அந்த மாதிரிதான் எனக்கும் வழி காட்டுவாயோ?" என்று கூறி மாரப்பன் மறுபடியும் உரத்த குரலில் சிரித்தான். சித்திர குப்தன் கூறிய மறுமொழி பொன்னன் காதில் விழவில்லை. மீண்டும் மாரப்பன், 'ஓஹோஹோ! எனக்கு வழிகாட்டி அழைத்து வரச் சொன்னாரா? எங்கே? அழைத்துப் போ, பார்க்கலாம்" என்று சொல்லித் தன் கையிலிருந்த சவுக்கைச் சடீரென்று ஒரு சொடுக்கச் சொடுக்கினான். சவுக்கின் நுனி சித்திரகுப்தன் மீது சுளீரென்று பட்டது. சவுக்கு சொடுக்குகிற சத்தத்தைக் கேட்டதும் குதிரை பிய்த்துக் கொண்டு பாய்ந்து சென்றது. குள்ளன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பின்னால் விரைவாகச் சென்றான். அவன் இவ்வளவு வேகமாக நடக்க முடியுமென்பதைக் கண்ட பொன்னனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அவனைச் சற்று தூரத்தில் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாகப் பொன்னனும் போனான். ஒரு நாழிகை தூரம் சாலையோடு கிழக்கே போன பிறகு, சாலையில் குதிரை நிற்பதும், பக்கத்தில் மாரப்பன் நிற்பதும் தெரிந்தது. சித்திரகுப்தன் மாரப்பனைப் பார்த்து, "ஏன் நிற்க வேண்டும்? போவதுதானே?" என்று கேட்க, "ஏண்டா, காட்டுப் பூனை! இருட்டு ராஜாவாகிய நீ வழிகாட்டிதான் இனிமேல் போகவேண்டும்" என்றான் மாரப்பன்.

"ஆகா! வழி காட்டுகிறேன், ஆனால் காட்டுப் பூனையிடம் நீ சற்று ஜாக்கிரதையாகயிரு. விழுந்து புரண்டினாலும் புரண்டி விடும்!" என்று சொல்லிவிட்டுப் குள்ளன் சாலைக்கு வலது புறத்தில் புதர்களும் கொடிகளும் மண்டிக் கிடந்த காட்டில் இறங்கிப் போகலானான். பொன்னனுக்கு அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது இப்போது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. பாழடைந்த அய்யனார் கோவிலுக்குத்தான் அவர்கள் போகிறார்கள். செடி, கொடிகளில் உராய்வதினால் சத்தம் கேட்கக் கூடுமாதலால் பொன்னன் சற்றுபின்னால் தங்கி அவர்கள் போய்க் கால்நாழிகைக்குப் பிறகு தானும் அவ்வழியே சென்றான். நள்ளிரவில் அந்தக் காட்டுவழியே போகும்போது பொன்னனுக்கு மனதில் திகிலாய்த்தானிருந்தது. திகிலை அதிகப்படுத்துவதற்கு ஆந்தைகள் உறுமும் குரலும், நரிகள் ஊளையிடும் குரலும் கேட்டன. மரம், செடிகள் அசைந்தாடும் போது, தரையில் கிடந்த இலைச் சருகுகளின் சரசரவென்னும் சத்தம் கேட்கும்போதும் பொன்னனுக்கு என்னவோ செய்தது. ஆனால் ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறது - முக்கியமான இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் - என்ற ஆவலினால் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அய்யனார் கோயில் உள்ள திசையை நோக்கிச் சென்றான்.

சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் ஒரு தீவர்த்தியின் வெளிச்சம் தெரிந்தது. சரி, அதுதான் ஐயனார் கோயில். கிட்ட நெருங்க நெருங்கக் கோயிலுக்கு முன்னால் வைத்திருந்த பிரம்மாண்டமான வீரர்களின் சிலைகளும் மண் யானைகளும், குதிரைகளும் தீவர்த்தி வெளிச்சத்தில், கோரமாகக் காட்சியளித்தன. இந்த ஏகாந்தக் காட்டுப் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கோவிலுக்குப் பட்டப்பகலில் வந்தபோதே பொன்னனுக்குத் திகிலாயிருந்தது. இப்போது கேட்க வேண்டியதில்லை. கோயிலின் வாசற்படிக்கருகில் பொன்னன் கண்ட காட்சி அவனுடைய திகிலை நூறு மடங்கு அதிகமாக்கிற்று. அங்கே, புராணங்களில் வர்ணித்திருப்பது போன்ற கோர ராட்சஸ ரூபமுடைய ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நெடிய கம்பீர உருவமும் வஜ்ரசரீரமும் கொண்ட மகாகபால பைரவர் நின்று கொண்டிருந்தார். தீவர்த்தியின் சிவந்த ஒளியில் அவருடைய நெற்றியில் அப்பியிருந்த சந்தனமும் குங்குமமும் இரத்தம் மாதிரி சிவந்து காட்டின. அவருடைய கழுத்தில் தொங்கிய கபால மாலை பொன்னனுக்குக் குலை நடுக்கம் உண்டாக்கிற்று. அவன் நடுங்கிக் கொண்டே கோயிலுக்குப் பின்புறமாகச் சென்று கோயில் வாசற்படிக்கு அருகில் இருந்த பெரிய வேப்பமரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அதே சமயத்தில் சித்திரகுப்தனும், மாரப்பனும் மகா கபால பைரவரின் முன்னால் வந்து நின்றார்கள்.

"மகாப் பிரபோ!" என்று மாரப்பன் பைரவருக்கு நமஸ்கரித்தான். "சேனாதிபதி! மாதாவின் ஆக்ஞையை நிறைவேற்றினாயா? பலி எங்கே?" என்று கபால பைரவரின் பேய்க் குரல் கேட்டது. அந்தக் குரல் - மகேந்திர மண்டபத்தின் வாசலில் அன்றிரவு கேட்ட குரல் - ஏற்கனவே பயப் பிராந்தியடைந்திருந்த பொன்னனுடைய உடம்பில் மயிர்க்கூச்சு உண்டாக்கிற்று. அடித் தொண்டையிலிருந்து அதற்கும் கீழே இருதயப் பிரதேசத்திலிருந்து - வருவதுபோல் அந்தக் குரல் தொனித்தது. எனினும், உரத்துப் பேசிய மாரப்பனுடைய குரலைக் காட்டிலும் தெளிவாக அக்குரல் பொன்னனுடைய செவிகளில் விழுந்தது. கபால பைரவரின் கேள்விக்கு மாரப்பன், "மகாப்பிரபோ! பலி பத்திரமாயிருக்கிறது" என்றான். "எங்கே? ஏன் இவ்விடம் கொண்டு வரவில்லை? காளிமாதாவின் கட்டளையை உதாசீனம் செய்கிறாயா, சேனாதிபதி!" "இல்லை, இல்லை. மகாப் பிரபோ! இன்று சாயங்காலந்தான் இளவரசனைக் கைப்பற்ற முடிந்தது. உடனே இவ்விடம் கொண்டு வருவதில் பல அபாயங்கள் இருக்கின்றன, பிரபோ! அந்த ஓடக்காரன் இங்கே தான் இருக்கிறான்..."

"இதைக் கேட்டதும் மரத்தின் பின்னால் மறைந்து நின்ற பொன்னனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனுடைய அடிவயிறு மேலே நெஞ்சுக்கு வந்துவிட்டது போலிருந்தது. மாரப்ப பூபதியின் அடுத்த வார்த்தையினால் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. "...அவனைக் கைப்பற்ற முடியவில்லை. சக்கரவர்த்தியின் மகள் குறுக்கே நின்று மறித்தாள். மகாப்பிரபோ! குந்தவி தேவியும் இன்னும் இங்கேதான் இருக்கிறாள். இளவரசனைத் தப்புவிப்பதில் முனைந்திருக்கிறாள். ஆகையால் நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப் போய் விடும்." மகா கபால பைரவர் இப்போது ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்த வேளையில் அந்தப் பயங்கரத் தொனியானது நாலா பக்கமும் பரவி எதிரொலி செய்தபோது, பல நூறு பேய்கள் ஏக காலத்தில் சிரிப்பது போலிருந்தது. "சேனாதிபதி! நீதானா பேசுகிறாய்? காளிமாதாவின் கட்டளையை நிறைவேற்றப் பயப்படுகிறாயா? அதுவும் ஒரு பெண் பிள்ளைக்கும் ஒரு ஓடக்காரனுக்கும் பயந்தா?" "இல்லை, சுவாமி, இல்லை! நான் பயப்படுவதெல்லாம் காளி மாதாவின் கைங்கரியத்துக்குப் பங்கம் வந்து விடுமோ என்பதற்குத்தான். மகாப் பிரபோ! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை எப்படியும் நிறைவேற்றுவேன். அமாவாசையன்று இரவுக்குள் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்." "சேர்க்காவிட்டால்....?" என்றது கபால பைரவரின் கடூரமான குரல். "என்னையே மாதாவுக்குப் பலியாக அர்ப்பணம் செய்வேன்."

"வேண்டாம். பூபதி! வேண்டாம். உன்னால் மாதாவுக்கு இன்னும் எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டும். இந்தச் செழிப்பான தமிழகத்தில் மகா காளியின் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது நீதான் பிரதம தளகர்த்தனாயிருக்க வேண்டும்." "மகாப்பிரபுவின் கட்டளையையும், காளி மாதாவின் ஆணையையும் எப்போதும் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்." "மாரப்பா! மாதாவுக்கு உன் பேரில் பூரண கிருபை இருக்கிறது. மேலும் மேலும் உனக்குப் பெரிய பதவிகளை அளிக்கப் போகிறாள்.... இருக்கட்டும்; இப்போது எந்த இடத்தில் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பாய்?" "அமாவாசையன்று முன் ஜாமத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டி மகேந்திர மண்டபத்துக்கு அருகில் கொண்டு வந்து சேர்ப்பேன். அங்கே சாலை வழியில் தங்களுடைய ஆட்களை அனுப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்." "ஏன் அந்த வேலையை எனக்குக் கொடுக்கிறாய்?" "மகாப்பிரபோ! இங்கே உள்ள ஆட்களிடம் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. சக்கரவர்த்தியின் கட்டளைப் பிரகாரம் இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லித்தான் அனுப்பப் போகிறேன். அவர்களைத் தொடர்ந்து சற்றுப் பின்னால் நான் வருவேன். தங்களுடைய ஆட்கள் வந்து வழிமறித்து இளவரசரைக் கொண்டு போக வேண்டும். ஆனால், நான் அனுப்பும் ஆட்கள் அவ்வளவு அசகாயசூரர்களாயிருக்க மாட்டார்கள். தங்களுடைய திருநாமத்தைச் சொன்னால், உடனே கத்திகளைக் கீழே போட்டுவிட்டு நமஸ்கரிப்பார்கள்."

"அப்படியே யாகட்டும், சேனாதிபதி! ஆனால் ஜாக்கிரதை! காளிமாதா அடுத்த அமாவாசை இரவில் அவசியம் பலியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!" "இன்னொரு விஷயம் தெரிவிக்க வேணும். மகாபிரபோ!" "சீக்கிரம் சொல்; பொழுது விடிவதற்குள் நான் ஆற்றைத் தாண்ட வேண்டும்." "இந்த ஓடக்காரப் பொன்னனைச் சில நாளாகக் காணவில்லை. அவன் மகாராணியைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. அவனைப் பற்றி அறிய நான் ஆள் விட்டிருந்தேன். நேற்றுத்தான் அவனைப்பற்றித் தகவல் கிடைத்தது. பொன்னனும் இன்னொரு மனிதனும் குதிரை மேல் காட்டாற்றோடு கொல்லிமலைப்பக்கம் போனதாக என்னுடைய ஒற்றன் வந்து சொன்னான்..." "ஓடக்காரன் இங்கே இருக்கிறான் என்றாயே?" "ஆமாம்; இன்றைக்குத்தான் இங்கே வந்து சேர்ந்தான்." "அவ்வளவுதானே?" "பொன்னனுடன் போன இன்னொரு மனிதன் யார் தெரியுமா, பிரபோ?" "யார்?" "தங்களுக்கும் எனக்கும் ஜன்ம விரோதிதான்." "என்ன? யார் சீக்கிரம் சொல்!" "பொய் ஜடாமுடி தரித்த அந்த போலிச் சிவனடியார் தான்." "இதைக் கேட்டதும் மகா கபால பைரவனின் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான மாறுதலைப் பார்த்து பொன்னன் திகைத்துப் போனான். ஏற்கெனவே கோரமாயிருந்த அந்த முகத்தில் இப்போது அளவில்லாத குரோதமும் பயமும் பகைமையும் தோன்றி விகாரப்படுத்தின. அதைப் பார்த்து "ஐயோ!" என்று பொன்னன் அலறிய குரல் நல்ல வேளையாகப் பயத்தின் மிகுதியால் அவன் தொண்டையிலேயே நின்றுவிட்டது.

கபால பைரவரும் சித்திரகுப்தனும் மாரப்ப பூபதியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்ற ராட்சதன் அவர்களுக்கெல்லாம் முன்னால் போனான். சற்று நேரத்துக்கெல்லாம் தீவர்த்தி வெளிச்சம் மறைந்தது. கீழ்வானத்திலே இளம்பிறைச் சந்திரன் உதயமாயிற்று. அவர்கள் போய்க் கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு தான் பொன்னன் அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய உடம்பு மிகவும் தளர்ச்சியடைந்திருந்தாலும், மனத்தில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டிருந்தது. விக்கிரம மகாராஜாவை இந்த நரபலிக்காரர்களிடமிருந்து தப்புவிக்கும் வழி அவனுடைய மனத்தில் உதயமாகியிருந்தது. மாரப்பனுடைய தந்திரம் இன்னதென்பது அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டது. இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதில் பிரயோஜனமில்லை என்று மகாக் கபால பைரவரின் நரபலிக்கு அவரை அனுப்ப மாரப்பன் எண்ணியிருக்கிறான். ஆனால், தன் பேரில் குற்றம் ஏற்படாதபடி இந்தக் கரியத்தைத் தந்திரமாகச் செய்ய உத்தேசித்திருக்கிறான். அவனுடைய தந்திரத்துக்கு மாற்றுத் தந்திரம் செய்து விக்கிரம மகாராஜாவை விடுவிக்க வேண்டும். விடுவித்து நேரே மாமல்லபுரம் துறைமுகத்துக்கு அழைத்துப் போகவேண்டும். குந்தவி தேவியின் உதவியைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும்... இவ்விதமெல்லாம் சிந்தித்துக்கொண்டு பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் பொன்னன் தோணித் துறையை அடைந்தான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்திரண்டு
உறையூர் சிறைச்சாலை

விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய காலத்து ஞாபகங்கள் அடிக்கடி வந்தன. பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு கிளம்பிய காட்சி அவன் மனக்கண் முன்னால் பிரத்யட்சமாக நின்றது. அதற்கு முதல்நாள் மகாராஜா இரகசிய சித்திர மண்டபத்துக்குத் தன்னை அழைத்துச் சென்று தம்முடைய கையால் எழுதிய கனவுச் சித்திரங்களைக் காட்டியதெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. ஐயோ! அவையெல்லாம் 'கனவாகவே போகவேண்டியதுதான் போலும்!" தந்தைக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாமென்னும் ஆசை அவனுக்கு இதுவரையில் இருந்தது. இப்போது அடியோடு போய்விட்டது. பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளையை எதிர்பார்த்து இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நாள் கிடக்கவேண்டுமோ தெரியவில்லை. அவரிடமிருந்து என்ன கட்டளை வரும்? மரண தண்டனையை நிறைவேற்றும்படி தான் அநேகமாகக் கட்டளை வரும். மாரப்பன் அந்தக் கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருப்பான். தன்னுடைய கதியைப் பற்றி யாருக்கும் தெரியவே போவதில்லை. பார்த்திப மகாராஜாவின் பெயராவது ஜனங்களுக்குச் சில காலம் ஞாபகம் இருக்கும். தன் பெயரைக் கூட எல்லாரும் மறந்துவிடுவார்கள்.

செண்பகத் தீவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன்? - என்னும் கேள்வியை விக்கிரமன் அடிக்கடி கேட்டுக் கொண்டான். சின்னஞ்சிறு தீவாயிருந்தாலும் அங்கே சுதந்திர ராஜாவாக ஆட்சி செய்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! அதைவிட்டு இப்படித் தன்னந்தனியே இங்கே வரும் பைத்தியம் தனக்கு எதற்காக வந்தது? அந்தப் பைத்தியத்தின் காரணங்களைப் பற்றியும் அவை எவ்வளவு தூரம் நிறைவேறின என்பது பற்றியும் விக்கிரமன் யோசித்தான். செண்பகத் தீவிலிருந்தபோது பொன்னி நதியையும் சோழ வள நாட்டையும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் அவனுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால், சோழ நாட்டின்மேல் அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் சோழநாட்டு மக்கள் சுதந்திரத்தை மறந்து, வீரமிழந்து பல்லவ சக்கரவர்த்திக்கு உட்பட்டிருப்பதை நினைக்க அவன் வெறுப்பு அடைவதும் உண்டு. அந்த வெறுப்பு இப்போது சிறையில் இருந்த சமயம் பதின்மடங்கு அதிகமாயிற்று. வீரபார்த்திப மகாராஜாவின் புதல்வன் உள்ளூர்ச் சிறைச்சாலையில் இருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் தானே இந்த ஜனங்கள் இருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒன்று இருந்தது, அதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாமலே சாகப்போகிறோமோ, என்னவோ? அப்புறம், குந்தவி! - அவளை நினைக்காமலிருப்பதற்கு விக்கிரமன் ஆனமட்டும் முயன்றான். ஆனால் முடியவில்லை. குந்தவியை நினைத்ததும், விக்கிரமனுக்குப் பளிச்சென்று ஓர் உண்மை புலனாயிற்று. செண்பகத் தீவிலிருந்து கிளம்பி வந்ததற்குப் பல காரணங்கள் அவன் கற்பித்துக் கொண்டிருந்தா னென்றாலும், உண்மையான காரணம் - அவனுடைய மனத்தின் அந்தரங்கத்தில் கிடந்த காரணம் இப்போது தெரிய வந்தது. குந்தவிதான் அந்தக் காரணம். இரும்பு மிகவும் வலிமை வாய்ந்ததுதான்; ஆனாலும் காந்தத்தின் முன்னால் அதன் சக்தியெல்லாம் குன்றிவிடுகிறது. காந்தம் இழுக்க, இரும்பு ஓடிவருகிறது. குந்தவியின் சந்திரவதனம் - சீ, இல்லை!- அவளுடைய உண்மை அன்பு தன்னுடைய இரும்பு நெஞ்சத்தை இளக்கி விட்டது. அந்தக் காந்த சக்திதான் தன்னை செண்பகத் தீவிலிருந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தது. ஜுரமாகக் கிடந்த தன்னை எடுத்துக் காப்பாற்றியவள் அவள் என்று தெரிந்த பிறகுகூட விக்கிரமனுக்குக் குந்தவியின் மேல் கோபம் இருந்தது; தன்னுடைய சுதந்திரப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கு அவள் குறுக்கே நிற்பாள் என்ற எண்ணந்தான் காரணம். ஆனால், கடைசி நாள் அவளுடைய பேச்சிலிருந்து அது தவறு என்று தெரிந்தது. 'இவரை மன்னிக்கும்படி நான் என் தந்தையிடம் கேட்கமாட்டேன்; ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் இவரை மணம் புரிந்து கொள்ள அனுமதி கேட்பேன்' என்று எவ்வளவு கம்பீரமாய்க் கூறினாள்! இத்தகைய பெண்ணின் காதலை அறிவதற்காகச் செண்பகத் தீவிலிருந்து தானா வரலாம்? சொர்க்க லோகத்திலிருந்து கூட வரலாம் அல்லவா? ஆகா! இந்த மாரப்பன் மட்டும் வந்து குறுக்கிட்டிராவிட்டால், குந்தவியும் தானும் வருகிற அமாவாசையன்று கப்பலேறிச் செண்பகத் தீவுக்குக் கிளம்பியிருக்கலாமே!

அமாவாசை நெருங்க நெருங்க, விக்கிரமனுடைய உள்ளக் கிளர்ச்சி அதிகமாயிற்று. அமாவாசையன்று செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்துக்கு வரும். அப்புறம் இரண்டு நாள் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எப்படியாவது இச்சிறையிலிருந்து தப்பி அமாவாசையன்று மாமல்லபுரம் போகக் கூடுமானால்! இவ்விதம், விக்கிரமன் எண்ணாததெல்லாம் எண்ணினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஒரு யுகமாயிருந்தது. கடைசியில் அமாவாசைக்கு முதல்நாள் மாலை மாரப்பபூபதி வந்தான். விக்கிரமனைப் பார்த்து நகைத்துக் கொண்டே, "ஓ! இரத்தின வியாபாரியாரே! காஞ்சியிலிருந்து கட்டளை வந்துவிட்டது" என்றான். ஒரு கணம் விக்கிரமன் நடுங்கிப்போனான். கட்டளை என்றதும், மரண தண்டனை என்று அவன் எண்ணினான். மரணத்துக்கு அவன் பயந்தவனல்ல என்றாலும், கொலையாளிகளின் கத்திக்கு இரையாவதை அவன் அருவருத்தான். ஆனால், மாரப்பன், "காஞ்சிக்கு உன்னைப் பத்திரமாய் அனுப்பி வைக்கும்படி கட்டளை, இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் கிளம்பவேண்டும், சித்தமாயிரு" என்றதும் விக்கிரமனுக்கு உற்சாகம் பிறந்தது. வழியில் தப்புவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரிடலாமல்லவா? அல்லது போராடி வீர மரணமாவது அடையலாமல்லவா? இது இரண்டும் சாத்தியமில்லாவிட்டால், சக்கரவர்த்தியின் முன்னிலையில் இன்னொரு தடவை, "அடிமை வாழ்வை ஒப்புக் கொள்ள மாட்டேன்; சுதந்திரத்துக்காக உயிரை விடுவேன்" என்று சொல்வதற்காவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படலாமல்லவா? ஆகா! குந்தவியும் பக்கத்தில் இருக்கும்போது இம்மாதிரி மறுமொழி சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிடப் பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்திமூன்று
அமாவாசை முன்னிரவு

அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள். சிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், "கிளம்பலாம்!" என்றான். உடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள். உறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது! ஆகா! சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது?

"ஏனுங்க சாமிங்களே! இந்தப் பிள்ளையாண்டான் யாரு? இவனை எங்கே அழைத்துப் போறீங்க!" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா? இருக்கிறது? அப்படியும் இருக்க முடியுமா? வீரர்களில் ஒருவன், "உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!" என்றான். அதற்கு வண்டிக்காரன் "எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம்! இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்" என்றாள். "ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்" என்றான் ஒரு வீரன். "எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ?" என்று வண்டிக்காரன் கேட்க, "எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க? காஞ்சிமா நகருக்குத்தான்" என்று மறுமொழி வந்தது. "அடே அப்பா! அவ்வளவு தூரமா போக வேண்டும்? நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா? வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க?" என்றான் வண்டிக்காரன். பேசுகிறவன் உண்மையில் பொன்னன்தானோ? தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ? வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ? இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், "யார் அங்கே? என்ன பேச்சு!" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை. காவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

எல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, "போயிட்டு வரீங்களா? ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா! வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்!" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன? வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று. படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.

இனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் "யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்?" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது. அஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்?

இந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. "பத்திரகாளி", "நரபலி", "கபால பைரவர்" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ! இன்றைக்கு அமாவாசை இரவல்லவா? மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ! இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே "ஓம் காளி ஜய காளி!" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. "ஓம் காளி, ஜய காளி" என்ற கோஷங்களுக்கு மத்தியில் "எங்கே பலி?" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது. இதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், "மகாராஜா! பதற வேண்டாம்! நான்தான்" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். "மகாராஜா ! ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை!" என்றான் பொன்னன்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தினான்கு
"ஆகா! இதென்ன?"

விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். "பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!" என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான். "ஆமாம், மகாராஜா!" "சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்." "நான் ஒருவேளை மறந்தாலும், என்னை மறக்க விடாதவர் ஒருவர் இருக்கிறாரே!" "யார் அது?" "வேறு யார்? தங்களை யமன் வாயிலிருந்து மீட்ட தேவிதான்." இதைக் கேட்டதும் விக்கிரமனுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிற்று. குந்தவியைப் பற்றி மேலும் விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால் சிறிது தயக்கமாகவுமிருந்தது. சற்றுப் பொறுத்து, "எங்கே போகிறோம் இப்போது?" என்றான் விக்கிரமன். "மாமல்லபுரத்துக்கு, மகாராஜா!" "பொன்னா!" "என்ன, மகாராஜா?" "நாளைக் காலைக்குள் மாமல்லபுரம் போய்விட வேண்டும்." "ஆமாம், மகாராஜா! அதனால்தான் ஒரு கணம் கூடத் தாமதிப்பதற்கில்லை என்று நான் சொன்னேன்." "நாளை மத்தியானம் வரையில் அங்கே கப்பல் காத்துக் கொண்டிருக்கும்."

"அதற்குள் நாம் போய்விடலாம், மகாராஜா!" விக்கிரமன் சற்றுப் பொறுத்து மறுபடியும், "தேவி எங்கே இருக்கிறார், பொன்னா! அவரிடம் கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொண்டு கிளம்பியிருந்தால், எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும்!" என்றான். "அது முடியாது, மகாராஜா!" "எது முடியாது?" "தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவது." "ஆமாம்; முடியாதுதான்! இனி உறையூருக்கு மறுபடியும் எப்படிப் போக முடியும்?" "தேவி உறையூரில் இல்லை, மகாராஜா!" "தேவி உறையூரில் இல்லையா? பின் எங்கே?" "மாமல்லபுரத்தில்!" "ஆ!" என்றான் விக்கிரமன். சில நாட்களாகச் சிறைப்பட்டிருந்த பிறகு விடுதலையடைந்த உற்சாகம், குளிர்ந்த இரவு நேரத்தில் குதிரைமீது செல்லும் கிளர்ச்சி, இவற்றுடன், 'குந்தவி மாமல்லபுரத்தில் இருக்கிறாள்' என்னும் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.

"அப்படியானால் அவரிடம் விடைபெற முடியாது என்று சொன்னாயே, ஏன்? பொன்னா! ஒரு கண நேரமாவது அவரை நான் அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து நன்றி செலுத்த வேண்டும். அதோடு என் தாயாரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்." "அதுதான் முடியாது!" என்றான் பொன்னன். "ஏன் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?" "தேவியின் உறுதி எனக்கும் தெரிந்திருப்பதினாலே தான். தங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் உத்தேசம் அவருக்குக் கிடையாது. தங்களோடு அவரும் புறப்படச் சித்தமாயிருக்கிறார்." "ஆகா! நிஜமாகவா? - இவ்வளவு முக்கியமான செய்தியை முன்னமே எனக்கு ஏன் சொல்லவில்லை?" "இப்போதுகூட நான் சொல்லியிருக்கக்கூடாது. தாங்கள் கப்பல் ஏறிய பிறகு தங்களை அதிசயப்படுத்த வேண்டும் என்று தேவி உத்தேசித்திருந்தார் அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்." விக்கிரமன் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று, "அதோ பாருங்கள் மகாராஜா!" என்று பொன்னன் கூறியதும் விக்கிரமன் சிறிது திடுக்கிட்டுப் பார்த்தான். சாலையில் ஒரு பக்கத்து மரத்தடியில் பத்துப் பன்னிரண்டு பேர் கும்பலாக நின்றார்கள். அவர்களில் ஒருவன் தீவர்த்தி வைத்துக் கொண்டிருந்தான். தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் கோரமான காட்சி அளித்தன. அவர்களுடைய கழுத்தில் கபால மாலைகள் தொங்கின. அவர்களுடைய கைகளில் கத்திகள் மின்னின. நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நின்ற இடத்தைக் குதிரைகள் தாண்டிய போது ஒரு கணம் விக்கிரமனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவர்களைக் கடந்து சிறிது தூரம் சென்றது, "அப்பா! என்ன கோரம்" என்றான் விக்கிரமன். "மகாராஜா! தங்களுக்காகத்தான் இங்கே இவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களை ஒப்பிவித்துவிடும்படிதான் மாரப்ப பூபதி கடைசியாகத் தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நான் இவர்களை முந்திக் கொண்டேன். தாங்கள் குதிரை மேல் இவ்விதம் தனியாகப் போவீர்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்னும் ரொம்ப நேரம் காத்திருப்பார்கள். பிறகு கபால பைரவரிடம் போய்த் தாங்கள் வரவில்லையென்று தெரிவிப்பார்கள். இன்று கபால பைரவருக்கு மாரப்பபூபதி மேல் பிரமாதமான கோபம் வரப்போகிறது!" என்றான் பொன்னன்.

"பொன்னா! சக்கரவர்த்தியின் சிரஸாக்கினை, கபாலிகர்கள் பலி இந்த இரண்டுவித ஆபத்துக் களிலிருந்துமல்லவா என்னை நீ தப்புவித்திருக்கிறாய்? முன்னே காட்டாற்றில் போனவனை எடுத்து உயிர் கொடுத்துக் காப்பாற்றினாய். சோழ வம்சத்தின் குலதெய்வம் உண்மையில் நீதான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நாளைய தினம் உன்னைவிட்டுப் பிரிவேன். மறுபடியும் எப்போது காண்பேனோ, என்னவோ?" "லட்சணந்தான்!" என்றான் பொன்னன். "என்ன சொல்கிறாய்?" "என்னை விட்டாவது தாங்கள் பிரியவாவது?" "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" "இன்னொரு தடவை தங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு நான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? இங்கே எனக்கு என்ன வேலை? வள்ளி ஏற்கெனவே குந்தவி தேவியுடன் மாமல்லபுரத்தில் இருக்கிறாள். நானும் அவளும் தங்களுடன் வரப்போகிறோம்."

விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "பொன்னா! நீ சொல்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியளிக்கிறது. நீயும் வள்ளியும் என்னுடன் வந்தால், சோழ நாடே வருகிற மாதிரிதான். ஆனால் , ஒரு விஷயந்தான் என் மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. மகாராணியின் கதி என்ன? அவரை யார் தேடிக் கண்டுபிடிப்பார்கள்? அவருக்கு யார் உன்னைப் பற்றிச் சொல்வார்கள்? - நான் தாய்நாட்டுக்கு வந்ததின் முக்கிய நோக்கம் மகாராணியைப் பார்ப்பதற்கு, அவரைப் பார்க்காமலே திரும்பிப் போகிறேன். அவருக்கு என்னைப் பற்றிச் செய்தி சொல்லவாவது யாரேனும் இருக்க வேண்டாமா!" என்றான். பொன்னனுடைய மனத்திலும் அந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியாரிடம் தான் சொன்னபடி ஒன்றுமே செய்யவில்லை. அவர் என்ன ஆனாரோ, என்னவோ? மகாராணியை ஒருவேளை கண்டுபிடித்திருப்பாரோ? பொன்னனுடைய மனத்தில் சமாதானம் இல்லாவிட்டாலும், வெளிப்படையாக, "மகாராணியைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். மகாராஜா! அவரைச் சிவனடியார் பாதுகாப்பார். சிவனடியாரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மகாசக்தி வாய்ந்தவர்" என்றான்.

"ஆமாம்; அவர் நம்மை மாமல்லபுரத்துக்கருகிலுள்ள சிற்ப வீட்டில் சந்திப்பதாகச் சொன்னாரல்லவா?" "அது இப்போது முடியாத காரியம்; சிவனடியாரைப் பார்க்கத் தங்கினோமானால், கப்பலைப் பிடிக்க முடியாது." "உண்மைதான். ஆனாலும் அன்னையையும் சிவனடியாரையும் பார்க்காமல் போவதுதான் மனத்திற்கு வேதனை அளிக்கிறது" என்றான் விக்கிரமன். அப்போது "ஆகா! இதென்ன?" என்று வியப்புடன் கூவினான் பொன்னன். இதற்குள் அவர்கள் காட்டாற்றைச் சமீபித்து அதன் இக்கரையிலுள்ள மகேந்திர மண்டபத்துக்கருகில் வந்து விட்டார்கள். அந்த மண்டபத்தின் வாசலில் தோன்றிய காட்சிதான் பொன்னனை அவ்விதம் வியந்து கூவச் செய்தது. அங்கே ஏழெட்டு ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். இரண்டு பேர் கையில் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் வாசல் ஓரமாக ஒரு பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது.

"இன்று ராத்திரி என்னவெல்லாமோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன!" என்று பொன்னன் முணுமுணுத்தான். "இந்த வேளையில் இங்கே யார், பொன்னா?" என்றான் விக்கிரமன். "தெரியவில்லை, மகாராஜா!" "இவர்கள் கபாலிகர்கள் இல்லை, நிச்சயம். வேறு யாராயிருக்கலாம்?" "ஒரு வேளை குந்தவி தேவிதான் நமக்கு உதவிக்காக இன்னும் சில ஆட்களை அனுப்பியிருக்கிறாரோ, என்னவோ? ஆனால் பல்லக்கு என்னத்திற்கு?" இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகேந்திர மண்டபத்தின் வாசல் வந்துவிட்டது. குதிரைகளை இருவரும் நிறுத்தினார்கள். அங்கு நின்ற ஆட்களில் ஒருவனை எங்கேயோ பார்த்ததாகப் பொன்னனுக்கு நினைவு வந்தது. எங்கே பார்த்திருக்கிறோம்? - ஆகா! திருச்செங்காட்டாங்குடியில்! பரஞ்சோதி அடிகளின் ஆள் குமரப்பன் இவன். அந்த மனிதனும் பொன்னன் முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டான். "ஓ! பொன்னனா? என்று அவன் ஆச்சரியத்துடன் கூறி, "பொன்னா! சமாசாரம் தெரியுமா? உறையூர் மகாராணி அகப்பட்டு விட்டார்! இதோ இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கிறார். உன்னைப் பற்றிக்கூட விசாரித்தார்" என்றான்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தைந்து
தாயும் மகனும்

"மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!" என்று ஒரு பேச்சுக்குரல் கேட்டது. அது மகாராணி அருள்மொழி தேவியின் குரல். "அம்மா!" என்று அலறிக்கொண்டு விக்கிரமன் மகேந்திர மண்டபத்துக்குள் நுழைந்தான். பொன்னனும் பின்னோடு சென்றான். அப்போது அந்த இருளடைந்த மண்டபத்துக்குள்ளேயிருந்து ஒரு பெண் உருவம் வெளியே வந்தது. அது அருள்மொழி ராணியின் உருவந்தான். ஆனால், எவ்வளவு மாறுதல்? விக்கிரமன் கடைசியாக அவரைப் பார்த்தபோது இன்னும் யெளவனத்தின் சோபை அவரை விட்டுப் போகவில்லை. இப்போதோ முதுமைப் பருவம் அவரை வந்தடைந்துவிட்டது. மூன்று வருஷத்துக்குள் முப்பது வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.

விக்கிரமன் ஒரே தாவலில் அவரை அடைந்து சாஷ்டாங்கமாய்க் கீழே விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டான். அருள்மொழி ராணி கீழே உட்கார்ந்து விக்கிரமனுடைய தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விக்கிரமனைப் பின்தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த பொன்னன் மேற்படி காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவனுடைய பார்வை மண்டபத்தின் ஒரு பக்கத்தில் கட்டுண்டு கிடந்த உருவத்தின் மேல் விழுந்தது; மங்கலான தீவர்த்தியின் வெளிச்சத்தில் அது குள்ளனுடைய உருவம் என்பதைப் பொன்னன் கண்டான். பொன்னனுடைய பார்வை குள்ளன்மீது விழுந்ததும் குள்ளன், "ஹீஹீஹீ" என்று சிரித்தான். அந்தச் சிரிப்பைக் கேட்டு விக்கிரமனும் அவனைப் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பொன்னா!" என்றான். "ஆம், மகாராஜா! மாமல்லபுரத்திலிருந்து தங்களுக்கு வழிகாட்டி வந்த சித்திரக்குள்ளன்தான் இவன்!" என்றான். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று சிரித்தான்.

அருள்மொழி ராணி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். யாரை என்ன கேட்பது என்று தெரியாமல் திகைப்பவளாகக் காணப்பட்டாள். கடைசியில் "பொன்னனைப் பார்த்து, பொன்னா எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. அந்த மலைக்குகையில் எத்தனை நாள் இருந்தேன் என்பதே தெரியாது. கடைசியில் அருவியில் விழுந்து உயிரை விடலாம் என்று எத்தனித்தபோது சிவனடியார் வந்து தடுத்துக் காப்பாற்றினார். 'உன் மகன் திரும்பி வந்திருக்கிறான், அவனை எப்படியும் பார்க்கலாம்' என்று தைரியம் கூறினார். பொன்னா, காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனை நீ காப்பாற்றினாயாமே?" என்று கேட்டாள்.

அப்போது விக்கிரமன், "வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதுதானா? சக்கரவர்த்தியின் சிரசாக்ஞையிலிருந்து - காளிக்குப் பலியாவதிலிருந்து - இன்னும் எவ்வளவோ விதத்தில் பொன்னன் என்னைக் காப்பாற்றினான்" என்றான். "காளிக்குப் பலியா?" என்று சொல்லிக் கொண்டு அருள்மொழி நடுநடுங்கினாள். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று பயங்கரமாய்ச் சிரித்தான். "பலி! பலி! இன்று ராத்திரி ஒரு பெரிய பலி - விழப்போகிறது! காளியின் தாகம் அடங்கப் போகிறது!" என்றான். எல்லோரும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "இன்று அர்த்த ராத்திரியில் சிவனடியார் பலியாகப் போகிறார்! மகாபத்திர காளியின் இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது! அப்புறம் ஹா ஹா ஹா!.. அப்புறம் ... மண்டை ஓட்டுக்குப் பஞ்சமே இராது!" என்றான் குள்ளன். விக்கிரமன் அப்போது துள்ளி எழுந்து, "பொன்னா! இவன் என்ன உளறுகிறான்? சிவனடியாரைப் பற்றி...." என்றான். "ஹிஹிஹி! உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். அந்தக் கபடச் சாமியாரை இத்தனை நேரம் காலையும் கையையும் கட்டிப் பலிபீடத்தில் போட்டிருப்பார்கள். நடுநிசி ஆச்சோ, இல்லையோ, கத்தி கழுத்திலே விழும்" என்றான்.

அப்போது அருள்மொழித் தேவி விக்கிரமனைப் பார்த்து, "குழந்தாய்! இவன் முன்னேயிருந்து இப்படித்தான் சொல்லி என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஐந்தாறு நாளைக்கு முன்னால் நான் குகையிலிருந்து தப்பி அருவியில் விழப்போன போது சிவனடியார் தோன்றி, சீக்கிரத்தில் என்னை மீட்டுக் கொண்டுபோக ஆட்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். அந்தப்படியே இவர்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். வழியில் மறைந்து நின்ற இந்தக் குள்ளனையும், பிடித்துக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்து சேர்ந்தது முதல் இவன் இன்று ராத்திரி சிவனடியாரைக் கபாலிகர்கள் பலிகொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஐயோ! எப்பேர்ப்பட்ட மகான்! நமக்கு எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறார்....! அவருக்கா இந்தப் பயங்கரமான கதி!" என்று அலறினாள். விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நீ என்ன சொல்கிறாய்? இந்தக் கொடும் பாதகத்தைத் தடுக்காவிட்டால் நாம் இருந்து என்ன பிரயோஜனம்?" என்றான். "அதெப்படி முடியும், மகாராஜா! உங்கள் நிலைமையை மறந்து பேசுகிறீர்களே! நாளைப் பொழுது விடிவதற்குள் நாம் மாமல்லபுரம் போய்ச் சேராமற்போனால்..." சேராமற்போனால் என்ன? கப்பல் போய்விடும், அவ்வளவுதானே?"

அப்போது பொன்னன் அருள்மொழி ராணியைப் பார்த்து, "அம்மா, இவரைப் பெரும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. தேசப் பிரஷ்டமானவர் திரும்பி வருவதற்குத் தண்டனை என்னவென்று தங்களுக்குத் தெரியாதா? இவர் இங்கே வந்திருப்பது மாரப்ப பூபதிக்குத் தெரிந்து காஞ்சிச் சக்கரவர்த்திக்கும் தெரியப்படுத்தி விட்டார். நாளைக் காலைக்குள் இவர் மாமல்லபுரம் போய்க் கப்பலில் ஏறியாக வேண்டும். இல்லாவிட்டால் தப்புவது அரிது. இப்போது சிவனடியாரைக் காப்பாற்றுவதற்காகப் போனால், பிறகு இவருடைய உயிருக்கே ஆபத்துதான். நீங்களே சொல்லுங்கள் இவர் என்ன செய்யவேணுமென்று?" என்றான். அருள்மொழி ராணி பெருந் திகைப்புக்குள்ளானாள். விக்கிரமன் அன்னையைப் பார்த்து, "அம்மா! பார்த்திப மகாராஜாவின் வீரபத்தினி நீ! இந்த நிலைமையில் நான் என்ன செய்யவேண்டும், சொல்! நமக்குப் பரோபகாரம் செய்திருக்கும் மகானுக்கு ஆபத்து வந்திருக்கும்போது, என்னுடைய உயிருக்குப் பயந்து ஓடுவதா? என் தந்தை உயிரோடிருந்தால் இப்படி நான் செய்வதை விரும்புவாரா?" என்றான்.

"சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் எழுத வேண்டும். இவர் பிழைத்திராவிட்டால் பார்த்திப மகாராஜாவின் கனவுகளை நிறைவேற்றுவது எப்படி?" என்றான் பொன்னன். அருள்மொழி ராணி இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில், பொன்னனைப் பார்த்து, "பொன்னா! என்னைக் கல்நெஞ்சமுடையவள், பிள்ளையிடம் பாசமில்லாதவள் என்று ஒருவேளை நினைப்பாய். ஆனாலும் என் மனத்திலுள்ளதைச் சொல்கிறேன். நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கும் ஒருவருக்கு ஆபத்து வந்திருக்கும்போது என் பிள்ளை உயிருக்குப் பயந்து ஓடினான் என்ற பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை!" என்றாள். உடனே விக்கிரமன், தாயாரின் பாதங்களில் நமஸ்கரித்து, எழுந்து, "அம்மா! நீதான் வீரத்தாய்! பார்த்திப மகாராஜாவுக்குரிய வீர பத்தினி!" எனக் குதூகலத்துடன் உரைத்தான். பிறகு பொன்னனைப் பார்த்து, "கிளம்பு, பொன்னா! இன்னும் என்ன யோசனை?" என்றான். "எங்கே கிளம்பிப் போவது? பலி எங்கே நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?" என்றான் பொன்னன். "ஹீஹீஹீ! நான் வழி காட்டுகிறேன்; என்னைக் கட்டவிழ்த்து விடுங்கள்" என்று சித்திரக் குள்ளன் குரல் கேட்டது. குள்ளனுடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் கையில் ஒரு தீவர்த்தியைக் கொடுத்தார்கள். விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மேல் ஏறிக் கொண்டார்கள். குள்ளன் கையில் தீவர்த்தியுடன் மேற்கு நோக்கிக் காட்டு வழியில் விரைந்து செல்ல, விக்கிரமனும் பொன்னனும் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தாறு
பலிபீடம்

காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் குள்ளன் வெகு லாவகமாக ஏறினான். குதிரைகள் ஏறுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டன. மேட்டின் மேல் ஏறியதும், அது ஒரு ஏரிக்கரை என்று தெரிந்தது. "அதோ!" என்று குள்ளன் சுட்டிக் காட்டிய இடத்தை விக்கிரமனும் பொன்னனும் நோக்கினார்கள். மொட்டை மொட்டையான மலைக்குன்றுகளும், அவற்றின் அடிவாரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குட்டையான மரங்களும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தன. அந்த மலையடிவாரக் காட்டில் நடமாடிக் கொண்டிருந்த உருவங்கள் மனிதர்களாய்த்தானிருக்க வேண்டுமென்றாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பேய் பிசாசுகள் தான் நடமாடுகின்றனவோ என்று எண்ணும்படியிருந்தது. பயங்கரத்தை அதிகமாக்குவதற்கு அந்த இடத்திலிருந்து தாரை தப்பட்டைகளின் முழக்கம், உடுக்கு அடிக்கும் சத்தம் - இவையெல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன.

விக்கிரமன், பொன்னன் இருவருக்குமே உள்ளுக்குள் திகிலாய்த்தானிருந்தது. ஆனாலும் அவர்கள் திகிலை வெளிக்குக் காட்டாமல் குள்ளனைப் பின்பற்றி ஏரிக்கரையோடு சென்றார்கள். குள்ளனுடைய நடை வேகம் இப்போது இன்னும் அதிகமாயிற்று. அவன் ஏரிக் கரையோடு சற்றுத் தூரம் போய் ஜலம் வறண்டிருந்த இடத்தில் இறங்கி, குறுக்கே ஏரியைக் கடந்து செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்து விக்கிரமனும் பொன்னனும் குதிரைகளைச் செலுத்தினார்கள். குதிரைகளும் பீதி அடைந்திருந்தன என்பது அவற்றின் உடல் நடுக்கத்திலிருந்து தெரிய வந்தது. இன்னொரு கால் நாழிகைக்கெல்லாம் அவர்கள் குன்றின் அடிவாரத்துக் காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே குதிரைகள் நடுக்கம் அதிகமானபடியால் விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீதிருந்து இறங்கி அவற்றை மரத்தில் கட்டினார்கள். பிறகு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.

தீவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே ஜனங்கள் ஆவேசம் வந்ததுபோல் ஆடுவதையும் சிலர் மஞ்சள் வஸ்திரம் தரித்துக் கண் மூடித் தியானத்தில் இருப்பதையும், சிலர் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைப்பதையும், இன்னும் சிலர் கத்திகளைப் பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பதையும், சிலர் உடுக்கு அடிப்பதையும் பார்த்துக் கொண்டு போனார்கள். திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. அதில் பயங்கரமான பெரிய காளியின் உருவம் செதுக்கப்பட்டு, அதன்மேல் பளபளப்பான வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. காளியின் கண்கள் உருட்டி விழித்துப் பார்ப்பது போலவே தோற்றமளித்தன. அந்த உருவத்துக்குப் பக்கத்தில் சிலர் கும்பலாக நின்றார்கள். அவர்களுக்கு நடு மத்தியில் எல்லாரையும் விட உயர்ந்த ஆகிருதியுடனும், தலையில் செம்பட்டை மயிருடனும், கழுத்தில் கபால மாலையுடனும், நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டு, கபால பைரவர் நின்றார். அவருக்குப் பின்னால் ஒருவன் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருந்தான். கபால பைரவருடைய கண்கள் அப்போது மூடியிருந்தன. அவருடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவருடம்பு லேசாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது.

மகாக் கபால பைரவர் நின்ற குன்றின் அடிவாரத்துக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு பாறை இருந்தது. இயற்கையாகவே அது பலி பீடம்போல் அமைந்திருந்தது. அந்தப் பலி பீடத்தின்மேல் சிவனடியார் கையும் காலும் உடம்பும் கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்திருந்தன. அங்குமிங்கும் அவருடைய கூரிய கண்கள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டிருந்தன. பலி பீடத்துக்குப் பக்கத்தில் ஒரு ராட்சத உருவம் கையிலே பிரம்மாண்டமான கத்தியுடன் ஆயத்தமாய் நின்றது. மகா கபால பைரவர் கண்ணைத் திறந்து பார்த்து ஆக்ஞை இடவேண்டியதுதான். உடனே சிவனடியாரின் கழுத்தில் கத்தி விழுந்துவிடச் சித்தமாயிருந்தது! மேலே விவரித்த காட்சியையெல்லாம் விக்கிரமன் ஒரு நொடிப் பொழுதில் பார்த்துக் கொண்டான். பின்னர், ஒரு கணங்கூட அவன் தாமதிக்கவில்லை. கையில் கத்தியை எடுத்து வீசிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் பலி பீடத்துக்கருகில் சென்றான். அந்த ராட்சத உருவத்தின் கையிலிருந்த கத்தியைத் தன் கத்தியினால் ஓங்கி அடிக்கவும், அது தூரத்தில் போய் விழுந்தது. உடனே, சிவனடியாரின் பக்கத்திலே வந்து நின்று கொண்டான். தன்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பொன்னனைப் பார்த்து, "பொன்னா! ஏன் நிற்கிறாய்? கட்டுக்களை உடனே அவிழ்த்து விடு!" என்றான்.

இவ்வளவும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது. சுற்றிலும் நின்றவர்கள் எல்லோரும், "ஹா! ஹா!" என்று கூச்சலிட்டதைக் கேட்டு கபால பைரவர் கண்விழித்துப் பார்த்தார். நிலைமை இன்னதென்று தெரிந்து கொண்டார். நிதானமாக நடந்து பலிபீடத்துக்கு அருகில் வந்து விக்கிரமனை உற்றுப் பார்த்தார். "ஹா ஹா ஹா!" என்று அவர் நகைத்த ஒலி குன்றுகளும் பாறைகளும் அடர்ந்த அந்த வனாந்திரப் பிரதேசமெல்லாம் பரவி எதிரொலி செய்தது. அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் மயிர்க் கூச்சு உண்டாயிற்று. இதற்குள் என்னவோ மிகவும் நடக்கிறது என்று அறிந்து நாலாபக்கத்திலிருந்தும் ஜனங்கள் ஓடிவந்து பலி பீடத்தைச் சூழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மகாக் கபால பைரவர் தமது ஒற்றைக் கையைத் தூக்கி, "ஹும்!" என்று கர்ஜனை செய்தார். அவ்வளவுதான் எல்லோரும் சட்டென்று விலகிச் சென்று சற்று தூரத்திலேயே நின்றார்கள். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்த ராட்சதனும் அந்த ஹுங்காரத்துக்குக் கட்டுபட்டுத் தூரத்தில் நின்றான். பொன்னனும் நின்ற இடத்திலேயே செயலிழந்து நின்றான்.

மகாக் கபால பைரவர் விக்கிரமனை உற்றுப் பார்த்த வண்ணம் கூறினார் :- "பிள்ளாய்! நீ பார்த்திப சோழனின் மகன் விக்கிரமன் அல்லவா? தக்க சமயத்தில் நீ வந்து சேர்வாய் என்று காளிமாதா அருளியது உண்மையாயிற்று, மாதாவின் மகிமையே மகிமை!" காந்த சக்தி பொருந்திய அவருடைய சிவந்த கண்களின் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள முடியாதவனாய் விக்கிரமன் பிரமித்து நின்றான். "பிள்ளாய்! உன்னைத் தேடிக் கொண்டு நான் மாமல்லபுரத்துக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பித்தன் மாரப்பன் தலையிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டான். ஆனாலும் இன்றிரவு நீ இங்கு எப்படியும் வருவாய் என்று எதிர்பார்த்தேன்!" மந்திரத்தினால் கட்டுண்ட நாக சர்ப்பத்தின் நிலைமையிலிருந்த விக்கிரமன், விம்முகின்ற குரலில், "நீர் யார்? எதற்காக என்னை எதிர்பார்த்தீர்?" என்றான். "எதற்காகவா? இன்றிரவு இந்தத் தக்ஷிண பாரத தேசத்தில் காளிமாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. இந்த சாம்ராஜ்யத்திற்கு உனக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்று மாதாவின் கட்டளை!" என்றார் கபால பைரவர். அப்போது எங்கிருந்தோ 'க்ளுக்' என்று பரிகாசச் சிரிப்பின் ஒலி எழுந்தது. கபால பைரவரும் விக்கிரமனும் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் சிரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க யாதொரு வழியும் தென்படவில்லை.

விக்கிரமனை அத்தனை நேரமும் கட்டியிருந்த மந்திர பாசமானது மேற்படி சிரிப்பின் ஒலியினால் அறுபட்டது. அவன் சிவனடியாரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கபால பைரவரை நேருக்கு நேர் நோக்கினான்: "நீர் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போவதாகச் சொல்கிறீர். அது உண்மையானால், முதலில் நான் செய்யப்போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இதோ இந்தப் பலிபீடத்தில் கட்டுண்டு கிடக்கும் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் அன்னைக்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். அவரை விடுதலை செய்வது என் கடமை. என் கையில் கத்தியும் என் உடம்பில் உயிரும் இருக்கும் வரையில் அவரைப் பலியிடுவதற்கு நான் விடமாட்டேன்!" என்று சொல்லி விக்கிரமன் பலிபீடத்தை அணுகி, சிவனடியாரின் கட்டுக்களை வெட்டிவிடயத்தனித்தான். "நில்...!" என்று பெரிய கர்ஜனை செய்தார் கபால பைரவர். அஞ்சா நெஞ்சங் கொண்ட விக்கிரமனைக்கூட அந்தக் கர்ஜனை சிறிது கலங்கச் செய்துவிட்டது. அவன் துணுக்குற்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். சிவனடியாரின் கட்டுக்களை வெட்டுவதற்காக அவன் நீட்டிய கத்தி நீட்டியபடியே இருந்தது.

கபால பைரவர் மறுபடியும் உரத்த குரலில், "பிள்ளாய் விக்கிரமா! இந்தப் போலிச் சிவனடியார் - இந்த வஞ்சக வேஷதாரி - இந்தப் பொய் ஜடாமகுடதாரி யார் என்று அறிந்தால், இவ்விதம் சொல்லமாட்டாய்! இவரைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு முனைந்து நிற்கமாட்டாய்!" என்றார். அவருடைய குரலில் தொனித்த ஆத்திரமும் அழுத்தமும் விக்கிரமனைத் திகைப்படையச் செய்தன. சிவனடியார் பல்லவ ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் என்று தான் முன்னமே சந்தேகித்ததும் அவனுக்கு நினைவு வந்தது. கபால பைரவர் மீண்டும், "இந்த வேஷதாரியையே கேள், "நீ யார்?' என்று; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று அடித் தொண்டையினால் கர்ஜனை செய்தார். விக்கிரமன் சிவனடியாரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் புன்னகை தவழ்வதைக் கண்டான். அதே சமயத்தில், "விக்கிரமா! கபால மாலையணிந்த இந்த வஞ்சக வேஷதாரி யார் என்று முதலில் கேள்; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று இடிமுழக்கம் போன்ற ஒரு குரல் கேட்டது. இவ்வாறு கேட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த பாறையின் மறைவிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அந்த உருவத்தின் மேல் விழுந்தன. தீவர்த்தி வெளிச்சம் அந்த முகத்தில் விழுந்தபோது, "ஆ!" என்ற வியப்பொலி ஏககாலத்தில் அநேகருடைய வாயிலிருந்து எழுந்தது. விபூதி ருத்திராட்சமணிந்து, முகத்தில் ஞான ஒளி வீசித் தோன்றிய அப்பெரியாரைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு என்றுமில்லாத பயபக்தி உண்டாயிற்று. வந்தவர் வேறு யாருமில்லை; பல்லவ சாம்ராஜ்யத்தின் பழைய சேனாதிபதியும், வாதாபி கொண்ட மகாவீரருமான சிறுத் தொண்டர்தான்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தேழு
நீலகேசி

பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர ஜாலத்தினால் நிகழ்வதுபோல், திடீர் திடீரென்று ஆயுத பாணிகளான போர் வீரர்கள் அங்கே தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதைவிடப் பெரிய மகேந்திர ஜாலவித்தை ஒன்றும் அங்கே நடந்தது. பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் எப்படியோ திடீரென்று அக்கட்டுக்களிலிருந்து விடுபட்டு எழுந்து பலிபீடத்திலிருந்து கீழே குதித்தார். இதற்கிடையில், சிறுத்தொண்டர் நேரே மகா கபால பைரவர் நின்ற இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், கபால பைரவரின் முகத்தில் தோன்றிய பீதி நம்ப முடியாதாயிருந்தது. சிறுத்தொண்டர் அருகில் நெருங்க நெருங்க, அவருடைய பீதி அதிகமாயிற்று. அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. இன்னும் சிறுத்தொண்டர் அவருடைய சமீபத்தில் வந்து நேருக்கு நேராக முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "ஓ கபாலிக வேஷதாரியே! மகா காளியின் சந்நிதியில் நீ யார் என்று உண்மையைச் சொல்!" என்று கேட்டபோது கபால பைரவர் இரண்டடி பின்வாங்கி, பிறகு நடக்கவும் நிற்கவும் சக்தியற்றவராய்த் தள்ளாடித் தொப்பென்று கீழே விழுந்தார்.

அப்போது அங்கே சூழ்ந்திருந்த காளி உபாசகர்களிடையில் "ஹாஹாகாரம்" உண்டாயிற்று. வெறியில், மூழ்கிக் கிடந்த அந்தக் கபாலிகர்களால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று விக்கிரமன் கூடச் சிறிது துணுக்கமடைந்தான். பொன்னனோ, வியப்பு, பயபக்தி முதலிய பலவித உணர்ச்சிகள் பொங்க, தன்னை மறந்து செயலற்று நின்றான். கபால பைரவர் கீழே விழுந்து நாலாபுறமிருந்தும் கபாலிகர்கள் ஓடிவரத் தொடங்கிய சமயத்தில், சிறுத்தொண்டர் சட்டென்று பலிபீடத்தின் மீது ஏறிக் கொண்டார். "மகா ஜனங்களே! காளி மாதாவின் பக்தர்களே! நெருங்கி வாருங்கள். 'மகா கபால பைரவர்' என்று பொய்ப் பெயருடன் உங்களையெல்லாம் இத்தனை காலமும் ஏமாற்றி வஞ்சித்து வந்த ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன்" என்றார். சிறுத்தொண்டரைப் பார்த்தவுடனே கபால பைரவர் பீதியடைந்து கீழே விழுந்ததினால் ஏற்கனவே அக்கபாலிகர்களின் மனத்தில் குழப்பம் உண்டாயிருந்தது. எனவே, சிறுத்தொண்டர் மேற்கண்டவாறு சொன்னதும், அவர்கள் பலிபீடத்தைச் சூழ்ந்து கொண்டு, அவரையே பார்த்த வண்ணமாய் நின்றார்கள்.

சிறுத்தொண்டர் கம்பீரமான குரலில், காடு மலையெல்லாம் எதிரொலி செய்யுமாறு பேசினார். 'கேளுங்கள்! நாம் பிறந்த இந்தத் தமிழகமானது மகா புண்ணியம் செய்த நாடு. எத்தனையோ மகா புருஷர்கள் இந்நாட்டிலே தோன்றி மெய்க் கடவுளின் இயல்பையும் அவரை அடையும் மார்க்கத்தையும் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள். திருமூல மகரிஷி, அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார். என்று அருளியிருக்கிறார். வைஷ்ணவப் பெரியார், அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தகைய மகோன்னதமான தர்மங்களுக்கு உறைவிடமாயுள்ள நமது நாட்டில், கபாலிகம், பைரவம் என்னும் அநாசாரக் கோட்பாடுகளையும், நரபலி, மாமிசப்பட்சணம் முதலிய பயங்கர வழக்கங்களையும் சிலர் சிறிது காலமாகப் பரப்பி வருகிறார்கள். அன்பே உருவமான சிவபெருமானும் கருணையே வடிவமான பராசக்தியும் நரபலியை விரும்புகிறார்கள் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை? சிவபெருமான் கையில் மண்டை ஓட்டை வைத்திருப்பதாகவும், பராசக்தி கபால மாலையைத் தரிப்பதாகவும் புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் தத்வார்த்தங் கொண்டவை என்பதை நமது பெரியோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவ்விதமிருக்க இப்புண்ணிய நாட்டில் நரபலியென்னும் கொடிய வழக்கம் பரவுவதற்குக் காரணம் என்ன? இந்தத் தீய பிரசாரத்தின் மூலவேர் எங்கே இருக்கிறது? - இதைக் கண்டுபிடிப்பதற்காக நானும் சற்றுமுன் இந்தப் பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த என் தோழர் சிவனடியாரும் பெருமுயற்சி செய்து வந்தோம். கடைசியாக, அந்த முயற்சியில் என் தோழர் வெற்றி பெற்றார்; உண்மையைக் கண்டுபிடித்தார்...."

அப்போது ஒரு குரல், "அவர் யார்?" என்று கேட்டது. "அவர் எங்கே?" என்று பல குரல்கள் கூவின. உண்மை என்னவெனில், சிறுத்தொண்டர் திடீரென்று தோன்றியவுடன் ஏற்பட்ட குழப்பத்தில் சிவனடியார் ஒருவரும் கவனியாதபடி அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டார். சிறுத்தொண்டர் மேலும் சொல்வார்:- "இன்னும் இரண்டு நாளில் உறையூரில் நடக்கப்போகும் வைபவத்துக்கு நீங்கள் வந்தால், அந்த மகான் யார் என்பதை அறிவீர்கள். தற்போது இதோ இங்கே கீழே விழுந்து பயப்பிராந்தியினால் நடுங்கிக் கொண்டிருக்கும் கபால பைரவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புகழ் பெற்ற நமது மகேந்திரச் சக்கரவர்த்தியின் காலத்தில் - இருபது வருஷத்துக்கு முன்னால் - வாதாபி அரசன் புலிகேசி நமது தமிழகத்தின் மேல் படையெடுத்து வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..." என்று சிறுத்தொண்டர் கேட்டு நிறுத்தியபோது பல குரல்கள், " ஞாபகம் இருக்கிறது!" என்று கூவின.

"அந்த ராட்சதப் புலிகேசியும் அவனுடைய படைகளும் நம்பிக்கைத் துரோகம் செய்து, இச்செந்தமிழ் நாட்டின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் செய்து விட்டுப் போன அட்டூழியங்களையெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியாது. மகேந்திரச் சக்கரவர்த்தி காலமான பிற்பாடு தரும ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவரும், நானும் பெரும்படை கொண்டு புலிகேசியைப் பழிவாங்குவதற்காக வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றதையும் நீங்கள் அறிவீர்கள். வாதாபி நகரத்தின் முன்னால் நடந்த கொடிய யுத்தத்தில், நமது வீரத்தமிழ்ப்படைகள் புலிகேசியின் படைகளையெல்லாம் ஹதா ஹதம் செய்தன. யுத்தக் களத்துக்கு வந்த புலிகேசியின் படைகளிலே ஒருவராவது திரும்பிப் போக விடக்கூடாது என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருந்தார். ஆனால், அவருடைய கட்டளைக்கு மாறாக ஒரே ஒருவனை மட்டும் திரும்பிப் போகும்படி நான் அனுமதித்தேன். போரில் கையை இழந்து, "சரணாகதி" என்று காலில் விழுந்தவனைக் கொல்வதற்கு மனமில்லாமல் அவனை ஓடிப்போக அனுமதித்தேன். அந்த ஒற்றைக் கை மனிதன் தான் இதோ விழுந்து கிடக்கும் நீலகேசி. புலிகேசியை விடக்கொடிய அவனுடைய சகோதரன் இவன்!"

இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில், "ஆகா!" "அப்படியா?" "என்ன மோசம்!" "என்ன வஞ்சகம்!" என்ற பலவிதமான பேச்சுக்கள் கலகலவென்று எழுந்தன. சிறிது பேச்சு அடங்கிய பிறகு சிறுத்தொண்டர் மீண்டும் கூறினார்: "இவனை நான் மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினேன் என்று தெரிவித்தபோது சக்கரவர்த்தி, 'நீ பிசகு செய்தாய்; இதனால் ஏதாவது விபரீதம் விளையும்' என்று சொன்னார். அது உண்மையாகிவிட்டது. இந்த நீலகேசி, கபாலிக வேஷத்தில் நமது புண்ணியத் தமிழகத்தில் வந்து இருந்துகொண்டு, பஞ்சத்தினால் ஜனங்களுடைய புத்தி கலங்கியிருந்த காலத்தில் கபாலிகத்தையும், நரபலியையும் பரப்பத் தொடங்கினான். எதற்காக? வீரத்தினால் ஜயிக்க முடியாத காரியத்தைச் சூழ்ச்சியினால் ஜயிக்கலாம் என்றுதான். கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களுக்கெல்லாம் புகழ் பரவியிருக்கும் நமது மாமல்லச் சக்கரவர்த்திக்கு விரோதமாக உங்களையெல்லாம் ஏவி விட்டுச் சதி செய்விக்கலாம் என்றுதான். இந்த உத்தேசத்துடனேயே இவன் கொல்லி மலையின் உச்சியிலுள்ள குகைகளில் ஆயிரக்கணக்கான கத்திகளையும் கோடாரிகளையும் சேர்த்து வைத்திருந்தான்...."

"ஆ!" என்று கபால பைரவனின் கோபக்குரல் கேட்டது. "ஆம்; அந்த ஆயுதங்களையெல்லாம் சக்கரவர்த்தியின் கட்டளையினால் இன்று அப்புறப்படுத்தியாகிவிட்டது. இன்னும் இந்தச் சோழநாட்டு இளவரசன் விக்கிரமனையும் தன்னுடைய துர்நோக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணியிருந்தான். அதற்காகவே பார்த்திப சோழ மகாராஜாவின் வீரபத்தினி அருள்மொழித் தேவியைச் சிறைப்படுத்தி வைத்திருந்தான்..." அப்போது மகாக் கபால பைரவர் தரையிலிருந்து சட்டென்று எழுந்து நின்று, "எல்லாம் பொய்; கட்டுக்கதை; இதற்கெல்லாம் சாட்சி எங்கே?" என்று கேட்டார். அப்போது ஒருவாறு அவருடைய பீதி தெளிந்ததாகக் காணப்பட்டது. கபால பைரவர் "சாட்சி எங்கே?" என்று கேட்டதும் "இதோ நான் இருக்கிறேன், சாட்சி!" என்றது ஒரு குரல். திடீரென்று ஒரு வெள்வேல மரத்தின் மறைவிலிருந்து மாரப்ப பூபதி தோன்றினான். "ஆமாம், நான் சாட்சி சொல்கிறேன். இந்தக் கபால பைரவர் என்னும் நீலகேசி உண்மையில் கபாலிகன் அல்ல, வேஷதாரி. இவன் மகா ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்தான். அந்தச் சதியில் என்னையும் சேரும்படிச் சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அதன்மேல், இந்தத் தேசப்பிரஷ்ட இளவரசனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினான். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காஞ்சிக்கு நான் அனுப்பிய இந்த இளவரசனை இவன் வழியில் மறித்து இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்தான்."

அப்போது சிறுத்தொண்டர், "போதும், மாரப்பா! உன் சாட்சியம் போதும்!" என்றார். மாரப்பன் மனத்திற்குள் என்ன உத்தேசித்தானோ தெரியாது. தன்னைப் புறக்கணித்துவிட்டு மகாக் கபால பைரவர் விக்கிரமனுக்கு யுவராஜா பட்டம் கட்டுவதாகச் சொன்னதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் உண்டாகியிருக்கலாம். அல்லது சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த குற்றம் தன் பேரில் ஏற்படாமலிருக்க வேண்டுமென்று எண்ணியிருக்கலாம். அவன் உத்தேசம் எதுவாயிருந்தாலும், அப்போது யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவன் செய்தான். கையில் உருவிய கத்தியுடன் மகாக் கபால பைரவர் நின்ற இடத்தை அணுகினான். "சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த இந்தச் சாம்ராஜ்யத் துரோகி இன்று காளிமாதாவுக்குப் பலியாகட்டும்!" என்று கூறிய வண்ணம் யாரும் தடுப்பதற்கு முன்னால் கத்தியை ஓங்கி வீசினான். அவ்வளவுதான்; கபால பைரவனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் கீழே விழுந்தன.

எல்லாரும் பிரமித்துத் திகைத்து நிற்கும்போது மாரப்ப பூபதி பலி பீடத்தண்டை வந்து சிறுத்தொண்டருக்கு முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பிரபோ! ஆத்திரத்தினால் செய்து விட்டேன். நான் செய்தது குற்றமானால் மன்னிக்க வேண்டும்" என்றான். அச்சமயம் யாரும் எதிர்பாராத இன்னொரு காரியம் நிகழ்ந்தது. கையில் கத்தியுடன் சித்திரகுப்தன் எங்கிருந்தோ வந்து பலி பீடத்தருகில் குதித்தான். படுத்திருந்த மாரப்பனுடைய கழுத்தில் அவன் வீசிய கத்தி விழுந்தது! அக்குள்ளனை உடனே சில பல்லவ வீரர்கள் பிடித்துக் கொண்டார்கள். குள்ளனோ 'ஹீஹீஹீ' என்று சிரித்தான். சில நிமிஷ நேரத்தில் நடந்துவிட்ட இக்கோர சம்பவங்களைப் பார்த்த விக்கிரமன் மிகவும் அருவருப்பை அடைந்தான். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட்டு ஒருவரையொருவர் கொல்லுவது அவனுக்குச் சாதாரண சம்பவமானாலும், இம்மாதிரி எதிர்பாராத கொலைகள் அவனுக்கு வேதனையளித்தன. உடனே, அருகில் நின்ற பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நாம் போகலாம் வா!" என்றான். அப்பொழுதுதான் தன்னையும் பொன்னனையும் சூழ்ந்து நின்ற பல்லவ வீரர்களை அவன் கவனிக்க நேர்ந்தது.

அந்த வீரர்களின் தலைவன் தன் கையிலிருந்த ஓலையை விக்கிரமனிடம் காட்டினான். அதில் நரசிம்மச் சக்கரவர்த்தியின் முத்திரை பதித்த கட்டளை காணப்பட்டது. உறையூரிலிருந்து காஞ்சிக்கு வந்து கொண்டிருக்கும் சோழ இளவரசன் விக்கிரமனை வழியில் திருப்பி உறையூருக்கே மீண்டும் கொண்டு போகும் படிக்கும் விசாரணை உறையூரிலேயே நடைபெறுமென்றும் அவ்வோலையில் கண்டிருந்தது. விக்கிரமன் அந்த ஓலையைப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அவனுடைய கையானது உடைவாளின் மேல் சென்றது. அப்போது பொன்னன், "மகாராஜா! பதற வேண்டாம்!" என்றான். இதையெல்லாம் கவனித்த சிறுத்தொண்டர், பல்லவ வீரர் தலைவனைப் பார்த்து, "என்ன ஓலை?" என்று கேட்டார். வீரர் தலைவன் அவரிடம் கொண்டுபோய் ஓலையைக் கொடுத்தான். சிறுத் தொண்டர் அதைப் படித்து பார்த்துவிட்டு, "விக்கிரமா! நீ இந்தக் கட்டளையில் கண்டபடி உறையூருக்குப் போ! நானும் உன் தாயாரை அழைத்துக் கொண்டு உறையூருக்குத்தான் வரப் போகிறேன். இன்று நீ புரிந்த வீரச்செயலைச் சக்கரவர்த்தி அறியும்போது, அவருடைய மனம் மாறாமல் போகாது. அவசரப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டாம்!" என்றார்.

அடுத்த நிமிஷம் விக்கிரமனும் பொன்னனும் பல்லவ வீரர்கள் புடைசூழ அந்த மயான பூமியிலிருந்து கிளம்பிச் சென்றார்கள். அப்புறம் சிறிது நேரம் அங்கே கூடியிருந்தவர்களுக்கு மெய்க் கடவுளின் ஸ்வரூபத்தையும், நரபலியின் கொடுமையையும் பற்றிச் சிறுத்தொண்டர் விரித்துரைத்தார். அதன் பயனாக, அன்று பலியாக இருந்தவர்களும், பலி கொடுக்க வந்தவர்களும் மனம் மாறி, தங்களைத் தடுத்தாட்கொண்ட மகானைப் புகழ்ந்து கொண்டே தத்தம் ஊர்களுக்குச் சென்றார்கள். பலிபீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் யாராயிருக்கலாமென்று அவர்கள் பலவாறு ஊகித்துப் பேசிக்கொண்டே போனார்கள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தெட்டு
என்ன தண்டனை?

அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிடுவதும், உறையூரிலிருந்து அவளுடன் வந்திருந்த வள்ளியிடம் இடையிடையே பேசுவதுமாயிருந்தாள். என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் அவளுடைய செவிகள் மட்டும் குதிரைக் குளம்படியின் சத்தத்தை வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. பணியாட்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று பேச்சை நிறுத்தி காதுகொடுத்துக் கேட்பாள். விக்கிரமனையும் பொன்னனையுந்தான் அவள் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லவேண்டியதில்லை.

விக்கிரமனும் பொன்னனும் வந்தவுடனேயே என்ன செய்ய வேண்டுமென்று குந்தவி தீர்மானித்து வைத்திருந்தாள். விக்கிரமனுடன் அதே கப்பலில் தானும் போய்விடுவது என்ற எண்ணத்தை அவள் மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் பலவிதச் சந்தேகங்கள் தோன்றி மறுபடியும் விக்கிரமன் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகலாம். இது மட்டுமல்ல; தந்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் அவ்விதம் ஓடிப் போவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை! நரசிம்மச் சக்கரவர்த்தியின் பரந்த கீர்த்திக்குத் தன்னுடைய செயலால் ஒரு களங்கம் உண்டாகலாமா! அதைக் காட்டிலும் விக்கிரமன் முதலில் கப்பலேறிச் சென்ற பிறகு, தந்தையிடம் நடந்ததையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விக்கிரமனையே தான் பதியாக வரித்து விட்டதையும் தெரிவிப்பதே முறையல்லவா? அப்போது சக்கரவர்த்தி தன்னை கட்டாயம் மன்னிப்பதுடன், கப்பலில் ஏற்றித் தன்னைச் செண்பகத் தீவுக்கும் அனுப்பிவைத்துவிடுவார். 'உன்னுடைய கல்யாணத்துக்காக நான் ஒரு பிரயத்தனமும் செய்யப் போவதில்லை. உன்னுடைய பதியை நீயேதான் ஸ்வயம்வரம் செய்து கொள்ளவேண்டும்' என்று சக்கரவர்த்தி அடிக்கடி கூறிவந்திருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, இப்போது தன் இஷ்டத்திற்கு அவர் ஏன் மாறு சொல்ல வேண்டும்?

இத்தகைய தீர்மானத்துடன் குந்தவி விக்கிரமனுடைய வரவுக்கு வழி நோக்கிக் கொண்டிருந்தாள். வானவெளியில் சூரியன் மேலே வர வர, குந்தவியின் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, கிட்டதட்ட நடு மத்தியானத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டபோது, குந்தவியினுடைய இருதயம் விம்மி எழுந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. மறுபடியும் ஒரு தடவை விக்கிரமனைக் கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் பின் தங்குவதா? கதையிலே, காவியத்திலே வரும் வீரப் பெண்மணிகள் எல்லாரும் அவ்விதந்தானா செய்திருக்கிறார்கள்? அர்ச்சுனனோடு சுபத்திரை கிளம்பிப் போய்விடவில்லையா? கிருஷ்ணனோடு ருக்மணி போகவில்லையா? தான் மட்டும் எதற்காகப் பின்தங்க வேண்டும்? விக்கிரமனுக்கு விடை கொடுத்தனுப்புவது தன்னால் முடியாத காரியம் என்று அவளுக்குத் தோன்றிற்று. குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்க நெருங்க அவளுடைய மனக்குழப்பம் அதிகமாயிற்று. வந்த குதிரைகள் அரண்மனை வாசலில் வந்து நின்றன. வாசற்காப்பாளருக்கு, இரத்தின வியாபாரி தேவசேனர் வந்தால் உடனே தன்னிடம் அழைத்து வரும்படிக் குந்தவி கட்டளையிட்டிருந்தாள். இதோ, குதிரையில், வந்தவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள். அடுத்த வினாடி அவரைப் பார்க்கப் போகிறோம்! ஆகா! இதென்ன? உள்ளே வருகிறது யார்! சக்கரவர்த்தியல்லவா? குந்தவியின் தலை சுழன்றது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள். சிறிது தடுமாற்றத்துடன், "அப்பா! வாருங்கள்! வாருங்கள்! இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.

சக்கரவர்த்தி ஆவலுடன் குந்தவியின் அருகில் வந்து அவளைத் தழுவிக் கொண்டார். உடனே, திடுக்கிட்டவராய், "ஏன் அம்மா! உன் உடம்பு ஏன் இப்படிப் பதறுகிறது?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! திடீரென்று வந்தீர்களல்லவா?" என்றாள் குந்தவி. "இவ்வளவுதானே? நல்லது, உட்கார், குழந்தாய்! நீ உறையூரிலிருந்து எப்போது வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தி அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். குந்தவிக்கு அப்போது ஏற்பட்ட இதயத் துடிப்பைச் சொல்ல முடியாது. 'அப்பா இங்கே இருக்கும்போது அவர் வந்து விட்டால் என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன?' என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, "குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?" என்றார். "உறையூருக்கா? எதற்காக அப்பா?" என்றாள் குந்தவி. "ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அருள்மொழித்தேவி அகப்பட்டு விட்டார்." "ஆகா!" என்று அலறினாள் குந்தவி.

"ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர்தான்!" "என்ன! என்ன!.. தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்... ஒருவேளை அவரேதான்..." சக்கரவர்த்தி புன்னகையுடன், "இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! இல்லை. அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டு போய் வைத்திருந்தவன் நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகாக் கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகாக் கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?" "யார் அப்பா?"

"செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்!" குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை. அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்படியே திறந்தபடியே இருந்தது. "இன்னும் ஒரு பெரிய அதிசயத்தைக் கேள், குழந்தாய்! இரத்தின வியாபாரி தேவசேனன் என்பது உண்மையில் யார் தெரியுமா? அவனும் ஒரு வேஷதாரிதான். தேசப் பிரஷ்டனான சோழநாட்டு இளவரசன் விக்கிரமன்தான் அம்மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு அவனுடைய தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக வந்தானாம்! என்ன தைரியம், என்ன துணிச்சல், பார்த்தாயா குழந்தாய்!" குந்தவி விம்மிய குரலுடன், "அப்பா! அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே?" என்று கேட்டாள். "யாரைக் கேட்கிறாய், அம்மா! விக்கிரமனையும், பொன்னனையுமா? அவர்களை உறையூருக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கிறேன். நானே நேரில் வந்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அதற்காகத் தான் முக்கியமாக உறையூருக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"

இத்தனை நேரமும் குந்தவி அடக்கி வைத்துக் கொண்டிருந்த துக்கமெல்லாம் இப்போது பீறிக்கொண்டு வெளியில் வந்தது. தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு 'கோ' என்று கதற ஆரம்பித்தாள். இவ்வளவு நேரமும் புன்னகையுடன் பொலிந்து கொண்டிருந்த சக்கரவர்த்தியின் முகபாவத்தில் இப்போது மாறுதல் காணப்பட்டது. அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஜலம் முத்துப்போல் பிரகாசித்தது. குந்தவியின் தலையையும் முதுகையும் அவர் அன்புடன் தடவிக் கொடுத்து, "குழந்தாய்! உனக்கு என்ன துக்கம்? உன் மனத்தில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லாமலிருக்கிறாய். என்னிடம் மறைப்பானேன்! எதுவாயிருந்தாலும் சொல்!" என்றார். குந்தவி கொஞ்சங் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொன்னாள். காஞ்சி நகரின் வீதியில் சங்கிலிகளால் கட்டுண்டு சென்ற விக்கிரமனைச் சந்தித்ததிலிருந்து தன்னுடைய உள்ளம் அவனுக்கு வசமானதைத் தெரிவித்தாள். பிறகு, மகேந்திர மண்டபத்தில் ஜுரத்துடன் உணர்வு இழந்து கிடந்த விக்கிரமனைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றதிலிருந்து இன்று அவனைக் கப்பலேற்றி அனுப்ப உத்தேசித்திருந்த வரையில் எல்லாவற்றையும் கூறினாள். கடைசியில், "அப்பா! அந்தச் சோழ ராஜ குமாரனையே என் நாதனாக வரித்து விட்டேன். மற்றொருவரை மனதிலும் நினைக்கமாட்டேன்" என்று கூறி விம்மினாள்.

சக்கரவர்த்தி அப்போது அன்பு கனிந்த குரலில் கூறினார். "குழந்தாய், இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது; மற்றதெல்லாம் அநித்தியம். இரண்டு இளம் உள்ளங்கள் அன்பினால் ஒன்று சேரும்போது, அங்கே அன்பு வடிவமான கடவுளே சாந்நித்தியமாயிருக்கிறார். அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடைசெய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது; தாய் தகப்பனுக்குக்கூடக் கிடையாதுதான். ஆகையால், நீ சோழ நாட்டு இளவரசனை மணம் புரிய விரும்பினாயானால், அதை ஒரு நாளும் நான் தடை செய்யேன். ஆனால், குழந்தாய்! நமது பல்லவ வம்சம் நீதிநெறி தவறாது என்று புகழ் பெற்றது. பல்லவ சாம்ராஜ்யத்தில் ராஜகுலத்தினருக்கும் ஒரு நீதிதான்; ஏழைக் குடியானவனுக்கும் ஒரு நீதிதான். ஆகையால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் ராஜ்ய நீதிக்கிணங்க விசாரணை நடைபெறும். குற்றத்துக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும். அதற்குப் பிறகும், நீ அந்த ராஜகுமாரனை மணக்க விரும்பினால், நான் குறுக்கே நிற்கமாட்டேன்."

இதைக் கேட்ட குந்தவி, "அப்பா! தேசப்பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் தண்டனை என்ன?" என்றாள். "சாதாரணமாக, மரண தண்டனைதான்; ஆனால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன." "என்ன அப்பா?" "நீதான் அடிக்கடி சொல்வாயே, அந்த ராஜகுமாரனுடைய காரியங்களுக்கெல்லாம் அவன் பொறுப்பாளியல்ல - போலிச் சிவனடியாருடைய போதனைதான் காரணம் என்று. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்தச் சிவனடியாரும் இப்போது அகப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரித்து உண்மையறிய வேண்டும்." அப்போது குந்தவி, மனதிற்குள், 'ஆமாம், அந்தப் போலிச் சடை சாமியாரால் தான் எல்லா விபத்துக்களும் வருகின்றன. அவர் அநாவசியமாக நேற்றிரவு ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால், இத்தனை நேரம் அந்த வீரராஜகுமாரர் கப்பலில் ஏறி இருப்பாரல்லவா?" என்று எண்ணமிட்டாள். "அதோடு இன்னும் ஒரு விஷயமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்குக் குதிரை கொடுத்துச் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தது யார்? ஞாபகம் இருக்கிறதா, குழந்தாய்?" "அப்பா!" என்று வியப்பும் ஆனந்தமும் கலந்த குரலில் குந்தவி கூச்சலிட்டாள். ஒற்றர் தலைவன் வேஷத்திலிருந்த சக்கரவர்த்தி குதிரை கொடுத்து அனுப்பித்தானே விக்கிரமன் சோழ நாட்டுக்குப் போனானென்பது அவளுக்கு நினைவு வந்தது. "அப்படியானால் எப்படி தண்டனை ஏற்படும் அப்பா?" என்றாள். "எல்லாம், விசாரிக்கலாம் குழந்தாய்! விசாரித்து எது நியாயமோ, அப்படிச் செய்யலாம். பல்லவ ராஜ்யத்தில் நீதி தவறி எதுவுமே நடக்காது" என்றார் சக்கரவர்த்தி.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் முப்பத்தொன்பது
சிரசாக்கினை

"ஆகா இது உறையூர்தானா?" என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லும்படியிருந்தது. உறையூர் வாசிகளிடையே வெகுகாலத்திற்குப் பிறகு இன்று கலகலப்பும் உற்சாகமும் காணப்பட்டன. வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வண்டிகளிலும், பலவித வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆங்காங்கு ஜனங்கள் கூட்டமாய் நின்று கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி உறையூரில் பொது ஜன சபை கூட்டுகிறார் என்றும், இதற்காகச் சோழ நாட்டின் பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ள பிரமுகர்களையெல்லாம் அழைத்திருக்கிறார் என்றும் பிரஸ்தாபமாயிருந்தது. அன்று நடக்கப்போகும் சபையில் பல அதிசயங்கள் வெளியாகுமென்றும் பல விசேஷ சம்பவங்கள் நிகழுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அருள்மொழித் தேவியும், இளவரசர், விக்கிரமரும் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறார்களென்றும் செய்தி பரவியிருந்தது. இன்னும் இளவரசர் இரத்தின வியாபாரி வேஷத்தில் வஸந்த மாளிகையில் வந்திருந்தாரென்றும், குந்தவி தேவிக்கும் அவருக்கும் காதல் உண்டாகிக் கல்யாணம் நடக்கப் போகிறதென்றும் இதனால் உறையூரும் காஞ்சியும் நிரந்தர உறவு கொள்ளப்போகிறதென்றும் சிலர் சொன்னார்கள்.

வேறு சிலர் இதை மறுத்து, "தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளான இளவரசரைச் சக்கரவர்த்தி விசாரணை செய்து பொதுஜன அபிப்பிராயத்தையொட்டித் தீர்ப்புக் கூறப்போகிறார்" என்றார்கள். நாலு நாளைக்கு முன்னால், அமாவாசை இரவில், கொல்லி மலைச்சாரலில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், மாரப்ப பூபதியின் மரணத்தைப் பற்றியும் ஜனங்கள் கூட்டியும் குறைத்தும் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பொன்னனும் வள்ளியும் அன்று உறையூர் வீதிகளின் வழியாக வந்த போது, ஆங்காங்கே ஜனங்கள் அவர்களை நிறுத்தி, "பொன்னா! இன்று என்ன நடக்கப் போகிறது?" என்று விசாரித்தார்கள். பொன்னனோ, தலையை ஒரே அசைப்பாக அசைத்து "எனக்கு ஒன்றும் தெரியாது, சாயங்காலமானால், தானே எல்லாம் வெளியாகிறது. ஏன் அவசரப்படுகிறீர்கள்?" என்றான். வள்ளியை அழைத்துக் கேட்ட பெண் பிள்ளைகளிடம் வள்ளியும் அதே மாதிரிதான் மறுமொழி சொன்னாள். பொன்னனுக்கும், வள்ளிக்கும் அன்று இருந்த கிராக்கிக்கும் அவர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த பெருமைக்கும் அளவேயில்லை.

தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சபை கூடியிருப்பதைப் பார்த்தவர்கள் யாரும் திரும்பி வந்து நமக்கு அந்தச் சபையைப்பற்றிக் கூறியது கிடையாது. ஆனால் அன்று உறையூரில் கூடிய மாமல்ல நரசிம்மச் சக்கரவர்த்தியின் சபையைப் பார்த்தவர்கள், "தேவேந்திரனுடைய சபை கிட்டதட்ட இந்த மாதிரிதான் இருக்க வேண்டும்!" என்று ஏகமனதாக முடிவு கட்டினார்கள். அவ்வளவு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்த சபா மண்டபத்தில் சபை கூடிற்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் 'தேவேந்திரனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு ஒரு பக்கத்தில், வசிஷ்டரையும் வாமதேவரையும்போல், சிவனடியாரும், சிறுத்தொண்டரும் வீற்றிருந்தார்கள். சிம்மாசனத்தின் மற்றொரு பக்கத்தில் சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் அருள்மொழித்தேவியும் சிறுத்தொண்டரின் தர்ம பத்தினி திருவெண்காட்டு நங்கையும் காணப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் சிறுத்தொண்டரின் அருமைப் புதல்வன் சீராள தேவன் உட்கார்ந்து, அதிசயத்தினால் விரிந்த கண்களினால், நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னால் பொன்னனும் வள்ளியும் அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு நேர் எதிரே, சற்றுத் தூரத்தில் பல்லவ சேனாதிபதியும் இன்னும் சில பல்லவ வீரர்களும் சூழ்ந்திருக்க விக்கிரமன் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.

குந்தவி இருந்த பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ பிடிவாதமாக மனத்தை உறுதிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தானென்றாலும் சில சமயம் அவனை அறியாமலே அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் நோக்கின. அதே சமயத்தில் குந்தவியும் தன்னை மீறிய ஆவலினால் விக்கிரமனைப் பார்க்கவும், இருவரும் திடுக்கிட்டுத் தங்களுடைய மன உறுதி குலைந்ததற்காக வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியதாயிருந்தது. இன்னும் அந்த மகத்தான சபையில், மந்திரிகளும் படைத்தலைவர்களும் தனாதிகாரிகளும் பண்டிதர்களும் கலைஞர்களும் கவிராயர்களும் பிரபல வர்த்தகர்களும் கிராமங்களிலிருந்து வந்த நாட்டாண்மைக்காரர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரையும் காட்டிலும் அந்தச் சபையில் அதிகமாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்த ஒருவர் சக்கரவர்த்தி குமாரன் மகேந்திரனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்லர் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறின. சபையினர் அவரைச் சுட்டிக் காட்டி தங்களுக்குள்ளேயே, "சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் உலக யாத்திரிகர் இவர்தான்!" என்று பேசிக் கொண்டார்கள் யுவான் சுவாங்க் என்றும் அவருடைய பெயரைப் பலரும் பலவிதமாக உச்சரித்து நகையாடினார்கள்.

இந்தச் சீன யாத்திரிகரைத் தவிர இன்னும் சில அயல் நாட்டாரும் அந்த மகாசபையில் ஒரு பக்கத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் நடை உடையினால் அயல்நாட்டாராகத் தோன்றினாலும், அவர்கள் பேசுகிற பாஷை தமிழாகத்தான் தெரிந்தது. சற்றே அவர்களை உற்றுப் பார்த்தோமானால், ஏற்கெனவே பார்த்த முகங்கள் என்பது நினைவு வரும். ஆம்; செண்பகத் தீவிலிருந்து வந்த கப்பலில் இரத்தின வியாபாரி தேவசேனனுடன் வந்தவர்கள் தான் இவர்கள். அச்சபையில் நடக்கவிருந்த விசாரணையின் முடிவாகத் தங்கள் மகாராஜாவுக்கு என்ன கதி நேரப் போகிறதோ என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கிருப்பது இயற்கையேயல்லவா? சபை முழுவதிலும் ஆங்காங்கு பணியாட்களும் பணி பெண்களும் நின்று வெண்சாமரங்களினால் விசிறியும் சந்தனம் தாம்பூலம் முதலியவை வழங்கியும் சபையினருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியும் சக்கரவர்த்தி வராதிருக்கவே சபையில், "ஏன் சக்கரவர்த்தி இன்னும் வரவில்லை?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சப்தம் எழுந்தது. இவ்விதம் பல குரல்கள் சேர்ந்து பேரிரைச்சலாகிவிடுமோ என்று தோன்றிய சமயத்தில், சிறுத்தொண்டர் எழுந்திருந்து, கையமர்த்தி, "சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்று செய்தி வந்திருக்கிறது. அதுவரையில், இந்தச் சபை கூடியதின் நோக்கம் இன்னதென்பதை உங்களுக்கு எடுத்து உரைக்கும்படி எனக்குச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!" என்று இடி முழக்கம் போன்ற குரலில் கூறியதும், சபையில் நிசப்தம் உண்டாயிற்று. எல்லாரும் பயபக்தியுடன் சிறுத்தொண்டருடைய முகத்தையே பார்க்கலானார்கள்.

சிறுத்தொண்டர் மேலும் கூறினார்:- "வீர சொர்க்கமடைந்த என் அருமைத் தோழரான பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வர் விக்கிரம சோழர், இன்று உங்கள் முன்னால் குற்ற விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் தேசப்பிரஷ்டத் தண்டனையை மீறி அவர் இந்நாட்டுக்குள் பிரவேசித்துக் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடிக்கவும் பட்டார். அவர் இவ்விதம் சக்கரவர்த்தியின் ஆக்ஞையை மீறி வந்ததின் காரண காரியங்களை விசாரணை செய்து, உங்கள் எல்லாருடைய அபிப்பிராயத்தையும் கேட்டு, சர்வ சம்மதமான நியாயத் தீர்ப்புக் கூறவேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம். இதற்காகத்தான் இந்தச் சபை கூடியிருக்கிறது. நீங்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு முன்னால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிரம சோழர் சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது குற்றமானாலும், அதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. இதோ என் பக்கத்தில் வீற்றிருக்கும் என் தோழர் அதற்குப் பெரும்பாலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறார்!" என்று சிறுத்தொண்டர் கூறியதும் சபையில் எல்லாருடைய கவனமும் சிவனடியார் மேல் திரும்பியது. அவருடைய முகத்தில் குடிகொண்டிருந்த தேஜஸைப் பார்த்து அனைவரும் பிரமித்தார்கள். "இவர் யார் இந்தப் பெரியவர்? அப்பர் பெருமானோ இறைவன் பதமடைந்துவிட்டார். சம்பந்த சுவாமியோ இளம் பிராயத்தவர். மஹான் சிறுத்தொண்டரோ இங்கேயே இருக்கிறார். வேறு யாராக இருக்கும்? விக்கிரம சோழர் விஷயத்தில் இவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?" என்று எண்ணமிட்டனர்.

பிறகு சிறுத்தொண்டர், பத்து வருஷங்களுக்கு முன் பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு உறையூரிலிருந்து கிளம்பியதையும் வெண்ணாற்றங்கரையில் நடந்த பயங்கர யுத்தத்தையும் சபையோருக்கு ஞாபகப்படுத்தினார். பார்த்திப மகாராஜாவுடன் கிளம்பிய பத்தாயிரம் பேரில் ஒருவர்கூடத் திரும்பாமல் போர்க்களத்திலேயே மடிந்ததைச் சொன்னபோது சபையோர் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்றிரவு, இந்தச் சிவனடியார் போர்க்களத்தில் வீரமரணமடைந்த தீர மன்னரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று அவருடைய உடலைத் தேடியலைந்ததை எடுத்துக் கூறினார். கடைசியில் இவர் தம் முயற்சியில் வெற்றியடைந்ததையும், பார்த்திப மகாராஜாவின் உடலில் இன்னும் உயிர் இருந்ததையும், மகாராஜா சிவனடியாரிடம், "என் மகனை வீர சுதந்திரப் புருஷனாக வளர்க்க வேண்டும்" என்று வரங்கேட்டதையும்; சிவனடியார் அவ்விதமே வரங்கொடுத்ததையும் எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெரிய சபையின் நாலா பக்கங்களிலும் 'ஆஹா'காரம் உண்டானதுடன், அநேகருடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.

பின்னர், சிவனடியார் உறையூருக்கு வந்து அருள்மொழித் தேவியைப் பார்த்துத் தேற்றியது முதல், விக்கிரமன் சுதந்திரக் கொடியை நாட்ட முயன்றது, தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளானது, செண்பகத் தீவின் அரசானது, தாயாரையும் தாய் நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் திரும்பி வந்தது, வழியில் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாவற்றையும் சிறுத்தொண்டர் விவரமாகக் கூறினார். இதற்கிடையில், நீலகேசி 'மகா கபால பைரவர்' என்ற வேஷத்தில் செய்த சூழ்ச்சிகளையும், ராணி அருள்மொழித் தேவியை அவன் கொண்டுபோய் மலைக் குகையில் வைத்திருந்ததையும், சிவனடியாரின் தளரா முயற்சியினால் அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டதையும் சென்ற அமாவாசை இரவில் நடந்த சம்பவங்களையும் விக்கிரமன் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் சிவனடியாரைக் காப்பாற்ற முன்வந்ததையும் விவரித்தார். இவ்வளவையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, "சபையோர்களே, உங்களையெல்லாம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என் தோழர் சிவனடியார் போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக - நீங்கள் அபிப்பிராயப்படுகிறீர்களா? பார்த்திப மகாராஜாவின் குமாரர் விக்கிரமர் வீர சுதந்திரப் புருஷராக வளர்க்கப்பட்டிருக்கிறாரா?" என்று கேட்டார்.

அப்போது சபையில் ஏகமனதாக, "ஆம், ஆம்" என்ற மகத்தான பெருங்கோஷம் எழுந்து அந்த விசாலமான மண்டபம் முழுவதும் வியாபித்து, வெளியிலும் சென்று முழங்கியது. கோஷம் அடங்கியதும், சிறுதொண்டர் கையமர்த்தி, "இன்னும் ஒரு முக்கிய விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்கு இந்த மகா புருஷர் வாக்குறுதி கொடுத்த பிறகு மகாராஜா இவரைப் பார்த்து, 'சுவாமி! தாங்கள் யார்?' என்று கேட்டார். அப்போது இந்த வேஷதாரி, தமது பொய் ஜடாமகுடத்தை எடுத்துவிட்டு உண்மை ரூபத்துடன் தோன்றினார். இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு பார்த்திப மகாராஜா தம் மனோரதம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கை பெற்று நிம்மதியாக வீர சொர்க்கம் அடைந்தார்!" என்று கூறியபோது சபையிலே ஏற்பட்ட பரபரப்பைச் சொல்லி முடியாது. மீண்டும் சிறுத்தொண்டர், "இந்த வேஷதாரியின் உண்மை வடிவத்தைப் பார்க்க நீங்கள் எல்லாருமே ஆவலாகயிருக்கிறீர்கள் இதோ பாருங்கள்!" என்று கூறி, சிவனடியார் பக்கம் திரும்பி, ஒரு நொடியில் அவருடைய ஜடாமகுடத்தையும் தாடி மீசையையும் தமது இரண்டு கையினாலும் நீக்கிவிடவே, மாமல்ல நரசிம்ம சக்ரவர்த்தியின் தேஜோ மயமான கம்பீர முகத்தை எல்லாரும் கண்டார்கள். அப்போது அச்சபையில் மகத்தான அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. குந்தவி தன் ஆசனத்திலிருந்து எழுந்து, "அப்பா!" என்று கதறிக் கொண்டே ஓடிவந்து வேஷம் பாதி கலைந்து நின்ற சக்கரவர்த்தியின் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சையாகி விழும் நிலைமையில் இருந்த அருள்மொழித் தேவியைச் சிறுத் தொண்டரின் பத்தினி தாங்கிக் கொண்டு ஆசுவாசம் செய்தாள். விக்கிரமன் கண்ணிமைக்காமல், பார்த்தவண்ணம் நின்றான். அந்தப் பரபரப்பில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் பொன்னன், வள்ளியின் கையைப்பிடித்துக் குலுக்கினான்.

"தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி வாழ்க" என்று ஒரு பெரிய கோஷம் எழுந்தது. "ஜெய விஜயீ பவ!" என்று சபையினர் அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள். சிறிது நேரம் இத்தகைய கோஷங்கள் முழங்கிக்கொண்டிருந்த பிறகு பொன்னனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, திடீரென்று உரத்த குரலில், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" என்று கோஷித்தான். அதையும் சபையோர் அங்கீகரித்து, "ஜய விஜயீ பவ!" என்று முழங்கினார்கள். அந்தக் குழப்பமும் கிளர்ச்சியும் அடங்கியபோது இத்தனை நேரமும் சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை என்பதைச் சபையோர் கண்டார்கள். சிறுத்தொண்டர், "சபையோர்களே! நீங்கள் கலைந்து போவதற்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு காரியம் பாக்கியிருக்கிறது. மாமல்லச் சக்கரவர்த்தி தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப் பற்றி முடிவான தீர்ப்புக் கூறுவார்!" என்றார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் நரசிம்மச் சக்கரவர்த்தி தமக்குரிய ஆடை ஆபரணங்களைத் தரித்தவராய்க் கம்பீரமாக அச்சபைக்குள் பிரவேசித்தார். அவர் சபைக்குள் பிரவேசித்த போதும், சபையில் நடுநாயகமாக இருந்த தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்தபோதும், "ஜய விஜயீ பவ!" என்னும் முழக்கம் வானளாவ எழுந்தது. சத்தம் அடங்கியதும், சக்கரவர்த்தி எழுந்து, "விக்கிரம சோழரைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டேன். தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளானவர்கள் திரும்பி வந்தால், அதற்குத் தண்டனை சிரசாக்கினையாகும். எனவே, இதோ புராதனமான சோழ மன்னர்களின் மணிமகுடத்தை விக்கிரம சோழர் இனிமேல் தனியாகவே தலைமேல் தாங்க வேண்டுமென்னும் சிரசாக்கினையை விதிக்கிறேன்! இன்று முதல் சோழ நாடு சுதந்திர ராஜ்யமாகிவிட்டது. இதன் பாரம் முழுவதையும் விக்கிரம சோழரும் அவருடைய சந்ததிகளும் தான் இனிமேல் தாங்கியாக வேண்டும்!" என்று கூறியபோது, சபையிலே உண்டான கோலாகல ஆரவாரத்தை வர்ணிப்பதற்குப் புராண இதிகாசங்களில் சொன்னது போல், ஆயிரம் நாவுள்ள ஆதிசேஷன்தான் வந்தாக வேண்டும்!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


அத்தியாயம் நாற்பது
கனவு நிறைவேறியது

நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, "குழந்தாய்! எக்காலத்திலும் பார்த்திப மகாராஜாவின் புதல்வன்' என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்" என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, "அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். 'நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்' என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்" என்று ஆசி கூறினாள். விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திரம் முதலிய கலைகள் சிறந்தோங்கின. திருமகளும் கலைமகளும் காவேரி நதிக்கரையில் கைகோத்துக் குலாவினார்கள்.

ஆனாலும், பார்த்திப மகாராஜாவின் கனவு விக்கிரமனுடைய காலத்தில் பூரணமாக நிறைவேறவில்லை. சூரியனுக்குப் பக்கத்தில் மற்றக் கிரகங்களெல்லாம் ஒளி மங்கிவிடுவதுபோல் காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தியின் மகிமையானது விக்கிரமனுடைய புகழ் ஓங்குவதற்குப் பெரிய தடையாயிருந்தது. பார்த்திப மகாராஜாவின் வீரமரணமும், விக்கிரமனுடைய வீரச் செயல்களும் கூட மாமல்லரின் புகழ் மேலும் வளர்வதற்கே காரணமாயின. நரசிம்மவர்மருக்குப் பின்னரும் வெகுகாலம் பல்லவர் பெருமை குன்றவில்லை. சோழநாடு ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் கிடந்தது. ஆனால், விக்கிரமனும் அவனுடைய சந்ததியர்களும் பார்த்திப மகாராஜாவின் கனவை மட்டும் மறக்கவில்லை. வழிவழியாக அவரவர்களுடைய புதல்வர்களுக்குப் பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றிச் சொல்லி, உறையூர் சித்திர மண்டபத்தில் தீட்டியிருந்த பார்த்திப மன்னரின் கனவுச் சித்திரங்களைக் காண்பித்து வந்தார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சோழ நாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய இராஜராஜ சோழன், அவனுடைய புதல்வனான இராஜேந்திர சோழன் - இவர்களுடைய காலத்திலேதான் பல்லவர் பெருமை குன்றிச் சோழ நாடு மகோன்னதமடையத் தொடங்கியது. சோழநாட்டு வீரர்கள் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள கடாரம் வரையிலும் சென்று வீரப்போர் புரிந்து புலிக்கொடியை வானளாவப் பறக்கவிட்டார்கள். புலிக்கொடி தாங்கிய கப்பல்களில் சோழநாட்டு வீரர்கள் கடல்களில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து சாவகம், புஷ்பகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றிச் சோழர்களின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்கள். சோழவள நாடெங்கும் அற்புதமான கோயில்களும், கோபுரங்களும் சோழ மன்னர்களின் வீரப் புகழைபோல் வானளாவி எழுந்து, அக்காலத்திய சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்துக்கு அழியாத ஞாபகச் சின்னங்களாக இன்றைக்கும் விளங்குகின்றன. இவ்வாறு, பார்த்திப சோழன் கண்ட கனவு, அவன் வீர சொர்க்கம் அடைந்து முந்நூறு வருஷங்களுக்குப் பிறகு பரிபூரணமாக நிறைவேறியது.

கல்கியின் பார்த்திபன் கனவு முற்றிற்று