pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 30 (3119-3220)
ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலை


Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 30 (3119-3220)
sri cupiramaNiya tEcikar mAlai
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V. Devarajan, Senthan Swaminathan, Lakshminarayan Haridas,
R. Navaneethakrishnan, Venkatesh Jambulingam, Govindarajan,
S. Karthikeyan, Nalini Karthikeyan and Subathra (Subbu)
Our sincere thanks also go to Mr. N.D. Logasundaram of Chennai and the authorities
of U.Ve.Ca. Library in Chennai for their help in providing the cotent of two missing pages
in the photocopy version that we used.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 10 Feb. 2010

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 30 (3119-3220)
ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலை


காப்பு.
3119
பொன்மலர் தடித்துந் தனிதமு முறுகார்ப் புயலிவர் தந்தையே பொருவ,
வென்மல ரெயிறு முழக்கமும் வாய்ந்த வெறுழ்க்கரு மூடிக முகைத்துப்,
பன்மலர் முடிமுன் னடிவரை மலர்ந்து பயிலுமோ ரத்தியைத் துதிப்பாந்,
தென்மலர் துறைசைச் சுப்பிர மணிய தேசிகன் மாலைசீர் பெறவே.       0

நூல்.

3120
பூமலி நினதா ளுள்ளுபு துதித்துப் போற்றிடும் வாஞ்சையே மதனுக்,
காமலி மூன்று மொருவழிப் படுவா னாரறுள் புரியுட லாதி,
தாமலி தரக்கே ளாதளித் தாய்க்குத் தகுவதோ வருளெனக் கேட்ட,
றூமலி யறவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       1

3121
எண்ணுத றுதித்த லியற்றவல் லாநீ யெற்றைக்கு நம்மடித் தொழும்பே,
பண்ணுக வென்றாய் மெய்ப்பணி யென்று பற்றினனிதுகொளற் பொருட்டோ,
நண்ணுகூற் றுதைத்துங் கல்லெறி யேற்று நயந்துமுன் பழகிய தைய,
சுண்ணவொண் மாடஞ் சூழ்பெருந்துறைசைச் சுப்பிர மணிய தேசிகனே.       2

3122
எம்மையாள் பொருட்டுக் கயிலையு மழுமா னிலகிய திருக்கைசார் வடிவுஞ்,
செம்மைசால் பெயரு நீத்துவே றடைந்தாய் திகழ்தரு முன்னுள மூன்று,
தம்மை நோக் குறினின் றுள்ளமூன் றனுக்குந் தாழ்ந்தன வென்றுளந் தெளிந்தேன்,
சும்மைநீர்த் தடங்கள்சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       3

3123
கேவலஞ் சிவாத்து விதம்விசிட் டத்துக் கெழுமுமத் துவிதமோம் பாது,
நாவலந் தருசுத் தங்கொளென் றருள நாடுகே வலத்தினின் றெடுத்து,
மாவலம் படருஞ் சகலத்து விடுத்தாய் வருவியாய் சுத்தமீ தென்னே,
தூவல கலைஞர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிரமணியதே சிகனே.       4

3124
இன்றுநீ யடியார் தமக்கரு டிறத்தா லெழும்புகழ்ப் படலமிக்கெழுந்தே,
யன்றுநீ புனைந்த வம்பரங் கிழித்த ததுகுறித் துணர்தரி னின்று,
நன்றுநீ பித்தன் றானெனல் விளக்கு நாடுறின் மற்றது மருளே,
துன்றுவா னவர்கள் சூழ்பெருந் துறைசைச் சுப்பிரமணியதே சிகனே.       5

3125
மதிகதி ரிரண்டு முகவிழி யவற்றுண் மதியமுள் ளுவப்பவோர் மலரைப்,
பதிதர முடியிற் கொண்டனை மற்றைப் பரிதியு முவப்போர் மலரை,
நிதிநிக ரடியிற் கொளல்கட னளித்தே னீகொளென் னிதயதா மரையைத்,
துதிபெறு முனிவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       6

3126
நிறைதகை யழிந்தும் வெண்மையே வாய்ந்து நெடியகட் குறுந்தொடி யவர்பான்,
முறைதிறம் புற்றுங் களங்கமிக் கமைந்து முனிதகக் கோடியு மடைந்த,
பிறைமதி முடியிற் கொண்டநீ யது போற் பிறங்குமென் மதியடிக் கொளினென்,
றுறைதொறு மெகினம் பயில்பொழிற் றுறைசைச் சுப்பிரமணியதே சிகனே.       7

3127
மருவிவே தண்டத் திருந்தநீ யடியேன் வன்மனத் திருந்திட லரிதோ,
பொருவிலவ் வரைமே னிசிகர னொருவன் போயற வூன்றிய நின்றா,
ளொருவிவன் மலம்போ யொழியமற் றிதன்க ணூன் றிட லரியதோ சொல்லாய்,
துருவிமான் முதலோர் சூழ்பெருந் துறை சைச் சுப்பிர மணியதே சிகனே.       8

3128
வளை தரு புறத்துக் கருகிருட் படலம் வயங்குநின் பார்வையா லன்றி,
விளைதரு மற்றொன் றால்வில குவதோ விராவகத் திருட்பட லமுநின்,
னளைதரு கருணைப் பார்வையா லன்றி யகல்வதி லனமினா ரோடு,
துளைதரு பெருநீர்த் துறைகள்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       9

3129
கோலநின் செந்தா மரையடி விட்டார் கூற்றுவ னடிவிடா தவரே,
சீலநி னங்கைச் செய்யதா மரைதஞ் சென்னிமேல் வைத்திடப் பெறாதார்,
சாலவு மொருதா மரைத்தவி சமர்வான் றன்கை வைத் திடுதல்பெற் றவரே,
சூலநின்றொளிரு மாளிகைத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       10

3130
அத்தநின் றடந்தோட் செங்கழு நீரை யவாவிய வரிமதர்மழைக்கட்,
புத்தமு தனையா டளவமு மசோகும் பொன்னிறம் பொலிதளர் மாவு,
நித்தில முயிர்க்குஞ் சலசமும் பெற்றா ணீலமும் பெறுகுவள் போலுந்,
துத்தமொய்த் திசைக்கு மளிப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       11

3131
மன்னிய நினது நாமவைந் தெழுத்தை வயங்குநின் பாலுறப்பெற்று,
மின்னிய மனத்துச் சுமந்திடா ரெல்லாம் விரிஞ்சனார் நல்குபல் லெழுத்தை,
முன்னிய துயரத் தொடுகருந் தலையின் முழுக்கவுஞ் சுமப்பவ ரன்றோ,
துன்னிய கழனி சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       12

3132
பித்தவென் றிகழோம் பெண்கொடி மனைவாய்ப் பேயுறங கிருட்பொழு தின்னே,
யத்தசெல் லென்னோந் துதிபுரிந் திதய மாய வம் போருகத் திருத்தி,
நித்தம் முவப்போ மடிகளுக் கெதன்க ணிகழ்விருப் பருள்செயல் வேண்டுஞ்,
சுத்தநற் றவத்தார் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       13

3133
மதிக்குமா ரூரின் மறுகுவன் பூவின் மலிகரு கிருளிடை மலர்ந்து,
திதிக்குநின் பாதச் செய்யதா மரைக டெண்டிரை யுடுத்த வா ரூரிற்,
கதிக்குமெம் மனமா மறுகுவன் பூவிற் கவினுற மலர்தருமென்றே,
துதிக்குமோர் கடமை பூண்டனந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       14

3134
தவருடை யலைவே ளெய்வது குறியார் தழையுநின் செங்கழு நீர்வேட்,
டிவருடை யிழந்தா ளென்பது குறியா ரெம்மனை மார்கணேற் றிராவை,
யவருடை யறுத்தா ரின்னமும் பசலை யழ கிய மேனியிற் றீரா,
டுவருடை யிதழா ளருள்புரி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       15

3135
ஐயநின் பொதுநா மத்தலாற் சிறப்பி னமைந்தநா மத்தினுமெமக்கு,
மெய்யகன் குறலாற் பொதுமையி னன்றி மேவிய சிறப்பினு மடிமை,
யுய்யநன் குறலா மெனத்துணிந் திருந்தோ முதுநிறை வேறுமா றருள்வாய்,
துய்யநற் புலவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       16

3136
கொலைகுறித் தெடுத்தல் செய்திடா மழுவிற் கொண்ட தன் றுன்றிரு மேனி,
யலைபுரிந் தெம்மை யடர்த்திடும் பந்த மடங் கலு மடர்த்திடற் கன்றோ,
தலைமைமற் றதுகொண் டதுசெயா திருக்குந் தன்மைசான் றவர்க்கழ காமோ,
தொலைவில்பல் வளமுஞ் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       17

3137
கருவிகை யிகப்பிற் போதமாம் போதங் கையிகப் பிற்றிரு வருளா,
மருவிய வருள்கை யிகப்பினின் பாமிம் மாண்புநின் னோக்கினா லன்றி,
யொருவிய மற்றை யொன்றனா லாமோ விரைப்பவ ருரையெலா மாயுந்,
துருவிய புகழோ யருட்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       18

3138
இருங்கடற் புவியி லிடமறப் பரந்த தெழுந்துமே லிடத்தினும் பரந்த,
தொருங்குநின் புகழ்மற் றின்னுமஃ தவாவி யுறமுய றன்மைதேர்ந் தன்றே,
யருங்கலை வாத வூரர்முன் னினைப்பே ராசைவா ரியனெனப் புகன்றார்,
சுருங்கைநீர் முழுக்க மறாவயற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       19

3139
மதிநதி மழுமாந் முதலிய மறைத்து மாரவேண் மேற்பகைமறையாய்,
பொதியுமத் திறத்தா லுன்னையா னகண்ட பூரணசிவனெனத் தெளிந்தே,
னதிர்கட லுலகிற் றெளிதரார் தாமு மறிதரப் புகலுவேன் கண்டாய்,
துதியொடு புலவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       20

3140
ஐயயான் வெளிப்பட் டிடினடங் குவைநீ யடங்கியல்யா னீவெளிப் படுவை,
வெய்யயா னடங்கும் வகைபுரிந் தொருநீ வெளிப்படா திருப்பதென் னுரையாய்,
வையமே லுயர்தம் முதன்மையை மறந்து வாழ்நரு முளர்கொலோ மதித்துத்,
துய்யமா தவர்கள் சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       21

3141
என்றுநாம் விரும்புஞ் செங்கழுநீரை யிவள்விரும் பினளெனச் சினந்து,
கன்றுமா மதியங் கனன்றெழு முழக்கங் கான்றெழு முயிர்த்தவா ரிதியுங்,
கொன்றுதீர் குவனென் றுடையவேள் சிலையிற் கோறொடு மடந்தையென் செய்வா,
டுன்றுநீள் கருணை செய்தருடுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       22

3142
யான்முத லென்றே யெழுவனெப் பொழுது மெய்தறி யாமைநீ யொருநான்,
றான்முத லென்றே யெழுதலஃ தன்றே சத்திய மென்பராய்ந் தமைந்தா,
ரூன்முத லியவென் னொழிவினுக் கெதிர்பார்த் துறுதலென் னுரைத்திடல் வேண்டுஞ்,
சூன்முதல் பணைத்த கழனிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       23

3143
அடியவ னீயென் றாவண நீயே யமைத்தவை புகூஉவழக்காடி,
நெடியவா ரூரர் தம்மையாண் டாய்க்கு நிகழுமோ ராவண மெழுதிக்,
கொடியயாங் கொடுப்போ மறுத்திடோ மடிமை கொண்டுநன்றாடரத் தடையென்,
றுடியமை யிடையார்சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       24

3144
பாலைநேர் மொழியாள் வேண்டுவார் வேண்டும் படியருள் படியனீ யென்று,
மாலையே வேண்ட மாலையே யளித்தாய் மாலையே நினக்குமீ தைய,
நூலையோ ரெவரு மயக்கறுத் தாளு நோன்மைய னென்பது பொய்யோ,
சோலைமேன் முகில்வந் துலாவருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       25

3145
அன்றுவண் கூட னகரின்மா பாவி யாயினா னொருவனை யாண்டாய்,
நன்றுமற் றதனாற் பெரும்புக ழடைந்தாய் நாயினேன் றன்னையு மாண்டா,
லின்றுமற் றதனாற் பெரும்புகழ் படுமே யிலாபமெண் ணார்களு முளரோ,
துன்றுமெய்த் தவத்தார் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       26

3146
உயரிய வொழுக்க மெனும்பெருங் கரையு ளுண்மையென் றுரைத்திடு மவலிற்,
பெயர்வில்சே தனமென் றுரைத்திடுஞ் சேற்றிற் பெருகுறு மன்பெனும் புனலின்,
மயர்வறத் தோன்று நின்னடிக் கமலம் வகுத்தவை யிலாதவென் னுள்ளத்,
துயரறை யகத்துந் தோன்றுமோ துறைசைச் சிப்பிர மணியதே சிகனே.       27

3147
நாடுநின் னடிக டியானியா ருவந்து நயத்தக வெடுத்தெடுத் துரையார்,
நீடுமண் டோயப் பணிதரா ருலகி னிகழ்தலிற் புள்விலங் காதி.
கூடுமஃ றிணையாய் நிகழ்வதே நன்று குறித்துரை நிந்தையின் மையினார்,
சூடுமெய்த் தவத்தர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       28

3148
வரைகெழு நினது புயத்தையா னவாவ மற்றையப் புயம்வட வரையைப்,
புரைதப முன்னங் குழைத்ததா மந்தப் பொருபகை நினைந்ததற் கெதிராம்,
விரைகெழு வரையி லுதித்தமெல் வளியும் வெப்பமிக் குறவெனை வருத்துஞ்,
சுரைநுக ரளிபண் பயில்பொழிற்றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       29

3149
கலைபல பயின்று தெளிந்தவர் வருந்திக் கற்றதற் குறுபயனாக,
மலைவரு நினையே பாடுதல் சிறப்பு மற்றுள பசுக்கண்மேற் பாட,
லலைவரு தீம்பா லட்டெடுத் திழிநாய்க் காங்கலங் கவிழ்ப்பது போலாந்,
தொலைவில்பல் வளஞ்சா லற்புதத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       30

3150
முற்றிய கருணை நின்னையா னவாவ முன்னமோர் மாங்குயிறன்னைப்,
பற்றிய பகையிற் றடிந்தனை யாமப் பகைநினைந் தன்னை மார்க் கொல்லாச்,
செற்றிய சிறையக் குயிலின மளியேன் செவிவெதுப் பேறமீக் கூவுஞ்,
சொற்றியென் றருள்வாய் நன்றுசா றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       31

3151
கருமல விருட்டுள் யானென தென்னக் கதித்தெழு மொருமதி தோன்ற,
வொருவில்பல் கொடுமைப் பனிவிரா யுடற்ற வுற்றதோ ரென்னிடத் தினுமுன்,
றிருவடிக் கமல மெங்ஙன மலருந் தேசிகோத் தமப்பெரு மானே,
சுருதியா யிரமு முழக்கறாத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       32

3152
தெரிந்துனை விழைந்தேன் மதன்மணக் கோலஞ் செய்யவந் தானிது முறையோ,
புரிந்தபொன் மலரா லாகிய பாயல் பொங்கழ றருமொரு மலர்க்கு,
விரிந்தவெந் தழன்முன் றந்தனை யாம்பின் விரைந்தவை மாறுசெய் வனபார்,
சொரிந்தவெண் டரள நிலாவருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       33

3153
மதியினை வருத்து நின்னடிக் கமல மாண்பையம் மதியினால் வருந்தும்,
பொதியசெங் கமல மெண்ணியுள் ளுடைந்து பொலிவிர குளசில பொலிவான்,
விதியினைச் சுமந்து முறாமையின் விளர்ப்ப வெள்ளிய தாமரை யென்பார்,
துதிபயில் கவிஞர் கழகமார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       34

3154
மறையவன் படைத்தன் மாயவன் புரத்தல் வாய்த்திடாவொருதிரு வுருவ,
மறைபெரும் புகழ்நீ கொண்டகா ரணத்தா லன்ன நான் முகவிதி படைத்த,
னறைகெழு துளவத் தாரினான் புரத்தனவில்பல வுருவம்யா மொழிந்தேந்,
துறைகெழு பொன்னி வளப் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       35

3155
மேவிய கிரியை ஞானமென் றேத்த விளங்குநின் றிருவடிக் கமலம்,
பாவிய சுவைப்பே ரானந்தத் தேறல் பருகுபு தேக்குமிக் கெறிவான்,
வாவிய வடியேன் மனக்கருஞ் சுரும்பர் வந்துவீழ் நாளுமுண் டாமோ,
தூவியந் தோகை பயில்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       36

3156
எனக்குனைக் கொடுத்து நினக்கெனைக் கோட லியல்பிஃ தன்றியொப் பில்லா,
நினக்கெனைக் கொடுத்தென் றனக்குனைக் கோடனீதியன் றேமுத னீயே ,
மனக்குவப் புறுத்தும் பலகதந் திரனீ மற்றஃ தில்லவ னடியேன்,
சொனக்குல மதில்கோ புரம்பொலி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       37

3157
மருளக லடியார் சூட்டிய கழுநீர் மாலைநின் சேவடிப் பொலித,
லிருள்படு பொழுதி லெழுமொரு கொழுந னெழின்மிக மணத்தலா லங்குப்,
பொருள்பெறு தானு மடுத்துற மணத்துப் பொலிந்துவாழ்ந் திருப்பது புரையுஞ்,
சுருள்விரி கதலிப் பொங்கர்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       38

3158
கறையடி வராகங் குரண்டமீன் மதியங் கரையிலை முதற்பல வற்றை,
நிறைவலி தபநீ செய்தனை யவற்றி னித்தில மனைத்துமப் பகையான்,
முறைமையி னுன்றோ ளவாவிய வென்னை முறுகுவெப் புறுத்திவாட் டுவபார்,
துறைதொறுஞ் சங்கம் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       39

3159
அகத்திரு ளடியார்க் கொழிப்பவ னீயென் றறைந்திட லுண்மையே யழகு,
நகத்திகழ் நினது தோளணி கழுநீர் நயந்த நா னிப்புறத் திருளும்,
புகத்தியங் கிடுவே னொழித்திடாத் திறமென் புகலுதி புண்ணியப் பொருளே,
சுகத்தியன் முனிவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       40

3160
மேயநீ புறத்து வெளிப்படு திறத்தால் வெவ்வினைக் குழிசியாம் யாமும்,
பாயநின் னடிக்கீ ழடங்கினம் புறத்தே பண்பினவ் வாறுமற் றகத்தே,
நாயநீ வெளிப்பட் டிடினின தாட்கீழ் நாங்கணன் கடங்கிவாழ்ந் திடுவோந்,
தூயமா தவருண் மணியெனுந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       41

3161
அடுத்தடி யடைந்தார் தம்பசு போத மடங்குறா வகையுப தேசித்,
தெடுத்தநான் முகற்குங் கூற்றுவன் றனக்கு மிடையறாத் தொழில்வளர்த் திடுவார்,
மடுத்தவா ரியரோ நோக்கினா லனைத்தும் வாங்கியாங் கசைவற விருத்தித்,
தொடுத்தபே ரின்ப மருத்திடுந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       42

3162
கற்றவர் நின்னை யவாவின ரெல்லாங் கழன்றவ ரென் பது மெய்யே,
யுற்றமற் றிவளு முன்னல மவாவி யுடைகல முணவொடு துறந்து,
செற்றநாண் மடமை முதலிய துறந்து செவிலிதா யிகுளைய ராதிச்,
சுற்றமுந் துறந்தா ணன்றிது துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       43

3163
ஒளிகெழு மாற்றா லுயர்கன கமும்பொன் னுற்றகா ரிரும்பும்பொன் னதுபோற்,
களிகெழு பசுபோ தந்தப வடைந்தார் களைப்புரந் தினிதருள் புரியு,
மளிகெழு நீயுங் குருவது சிறிது மாற்றறி யார்களுங் குருவே,
துளிகெழு மதுவத் துணர்ப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       44

3164
உற்றவர் பிறவிக் கடல்கடப் பதனுக் கொள்ளிய மரக்கல மாகிப்,
பற்றமை திரோத மருளெனப் பட்டுப் பரந்தநின் றிரு வடி யாய,
பொற்றசெம் மணிக்கு நாயினேன் மனமம் பொற்றக டாகு நா ளுளதோ,
சொற்றபல் வளத்தாற் பொலிபுகழ்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       45

3165
கலகமொன் றெனுமா மலமிரண் டென்னக் கரைதரு கருமமூன் றென்ன,
நிலவுறு மாயை யாயவிம் மூன்று நிகழ்ச்சியற் றொழிதரு பாக்குக்,
குலவுநின் றிருவாய் வயின்வரு கூற்றங் கூற்ற மாய்க் கூடுநா ளென்றோ,
சுலவுநீ ருலகம் புகழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       46

3166
அடியவர் மலத்தை யழித்திடு திறத்தி னாம்பிர தாபமு மவர்க்குப்,
படியில்பே ரின்ப மளித்திடு திறத்திற் படுபெருங் கீர்த்தியு மெழுந்து,
வடிவமாய்ச் சேந்து விளர்த்துறும் பரிதி மதியென வந்ததத் தியாசந்,
தொடியணி மடவார் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       47

3167
திருவடி யாய கமலத்தி லொடுக்கஞ் சிவணுதன் முன்னமக் கமல,
மருவடி யெழுத்தில் லவற்றொடுங் குதலே மானுமென் றனையரு ளின்றேற்,
பொருவடி யந்த மிலாநினை யென்றும் புகழ்ந்துபா டிடுவர மளித்தி,
துருவடி யவர்சூழ் தருபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       48

3168
கறைதபு காட்சிச் சிவப்பிர காசர் கருணையா லினிதுற வகுத்த,
வறையகத் திருக்கை விதித்தன ரெனினு மடியரே மனத்தறை யிருக்கை,
நிறைபெரும் புகழோய் விலக்கினர் கொல்லோ நீயிஃ தொழிப்பது தகுமோ,
துறைதொறு மடவா ராட்டயர் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       49

3169
கோலமார் பிடக ரெற்றைக்கு மருந்து கொண்டுறச் சுமப்பது மூன்றா,
ஞாலமார் பிணிய ரவையறர் கன்றோ நலமிகுபோதநீ சுமத்தல்,
சீலமார் பவர்மும் மலமறற் கன்றோ சிறியனேன் விலக்குளேன் கொல்லோ,
சூலமார் மணிமா ளிகைப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       50

3170
இவள்விழி மழைநேர் குவளைநே ரென்ப ரிருநிச மெவ்விதத் தென்னிற்,
றிவளுரு நின்னை விழைந்திடை யறாது செறிய நீர்பொழிதலி னானுந்,
தவழ்மதி யுதிக்கு மிரவுகண் படாத தன்மையினானுமென் றருள்வாய்,
துவள்கொடிமுகில்கீண் டெழுமதிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       51

3171
நிலவுமுன் மாலை விரும்பின ளதற்கு நீயொரு சேய்ஞலூர் மறையோ,
குலவுசீர்ப் புதல்வி யல்லையென் றனன்முன் னுண்மையே யின்றுபல் லோருங்,
கலவுறக் கொடுப்ப துண்டென மொழிந்தான் கருதிவண் முதுக்குறை வெந்னே,
சுலவுபூஞ் சோலை முகிலளாந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       52

3172
பற்பலர் சூழப் பவனிநீ வந்தாய் பார்த்திரு கைம்மலர் குவித்தாள்,
பொற்பவிர் மடந்தை யதற்கணி வளைகள் பொருக்கெனக் கவர்ந்தனை முன்னா,
ளற்புற விடுதல் செய்தனை யிந்நா ளமைதரக் கவருவை யெனிலுன்,
சொற்புகழ் நன்றா யிருந்தது துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       53

3173
வணங்கினர் வறுமை நோயொடு மலநோய் மாறிட வம் பொன்வட் டகையி,
லிணங்கிய சுவண நீறுநன் களிப்பா யெடுத்திடக் குறைபடா மையினாற்,
குணங்கெழு பதும நிதியென வதனைக் கபறித்தனங் குரவர்க ளேறே,
சுணங்கிள முலையார் பயில்பெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       54

3174
கூடிநின் றிருமுற் பணிந்துவீழ் போதே கூடிய கருமலம் வீழு,
நாடியங் கெழுபோ தருள்விரா யெழுநீ நல்குநீற் றாலுடல் விளர்ப்ப,
நீடிய விளர்த்த வுடம்புமற் றொன்றா நிலத்திது சிலரெண்ணா தென்னே,
சூடிய புகழாற் பொலிபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       55

3175
மலம்வியா பகமோ வியாப்பியங் கொல்லோ மருவிய வெனக்கென விரண்டு,
மலவது வியாத்தி நாக்கநாங் கிடுமென்றருளுநின் வாய்மொழி யவ்வா,
றிலகுவா னீக்க மியற்றிடா தென்னே யிசைத்தசொன் முடிப்பவர் வேறோ,
சுலவுதீர் மனத்தர் தொகுபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       56

3176
கருதுறு கரும காண்டமு ஞான காண்டமு மிருபதமாக,
மருவுப நிடத மேற்பரப் பாக வண்குமி ழோரெழுத் தாகப்
பொருவறப் பொலிமுற் பாதுகை யெனவிப் போதது போற்றவெற்கருள்வாய்,
சுருதியா னெடுமால் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       57

3177
தேடிய மாலார்க் கரியைமுன் னாளுஞ் சிறந்தவிந் நாளுமத் தகையை,
வாடிய மடவார் வளையுடை கவர்ந்தாய் மாதர்பா லின்றுமத் தகையை,
கூடிய வளைமுன் னிட்டநீ யின்று குவிகரம் பிடித்திடா வகையென்,
சூடிய மாலை யெனுமரு டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       58

3178
கருவிழிச் செவ்வா யென்மகள் வருத்தங் காண்பது நினக்கழ காமோ,
பொருவில்சங் கரனே நீயென வான்றோர் புகன்றிடு மாற்றமும் பொய்யோ,
மருவுசெங் குவளை மதன்கருங் குவளை மறிதரச் செயுமெதி ரென்றோ,
சுருதியா யிரமு முழக்கறாத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       59

3179
மன்னுநின் காவிக் கொடிமிசை யெழுந்து வானகத் தாடுத லமரீர்,
மின்னுநுண் மருங்கு லரம்பையர் போகம் வெறுத்தெனையுடையவ னாமம்,
பன்னுற் வம்மி னெனவிளித் திடுமப் பண்புதேர்தரினரு ளாமே,
துன்னுபல் கழனி வளமலி துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       60

3180
ஆன்றநின் கருணை யென்னென வுரைக்கே னையநின்பணிக்கமை நாற்கால்,
சான்றபல் பசுவு நின்பொது நாமந் தம்முடற் பொறித்திடப் படுவ,
வேன்றவிவ் விருகாற் பசுவெனு மெங்கட் கியைந்தில வவைசெய்புண் ணியமென்,
றோன்றவெவ் விடத்துங் கழகமார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       61

3180
கற்பக மாலை புனைபவர் நறிய கமலமா லிகைபுனை பவர்பா,
செற்படுந் துளவ மாலிகை புனைவா ரிவரெலா நின்றிரு வடிச்சூட்,
டற்புத மாலை புனையுமெங் களைநே ராவரோ வடர்மல மொழிந்து,
சொற்புனை நின்னைக் கலத்தலார் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       62

3182
மந்தண மாகவோதிம மேயென் மயலெலாந் திருச்செவிக் கேற்றிச்,
சந்தமென் கழுநீர் வாங்கிவா வென்றா டனிமுடி முன்புணராது,
நொந்தயான் செவிப்பா லடைந்திடு மாறு நோற்றிலே னென்றது மறுப்பச்,
சுந்தர மடவா ளயர்ந்தன டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       63

3183
மான்மிகு மென்னை வந்துநீ புணர்தல் வழக்கொலா தென்றியேல் விரைத்த,
தேன்மிகு கழுநீ ரருள்செயல் வேண்டுந் திருந்துறா ததுவுமென் றிடின்முன்,
பான்மிகு திருப்பூ வணத்தொரு மான்கைப் படர்நகக் குறிகொண்ட துரைப்பேன்,
சூன்மிகு சங்கம் புலம்புநீர்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       64

3184
ஒள்ளிய நினது குடைமதி மதவே ளுடற்றுவா னடைந்தஞான் றவன்பா,
லள்ளிய கவிகை யென்னலாங் காம மாற்றுவதில்லையே யென்னி,
னள்ளிய வுயிர்கட் கினத்தியல் பானே நாளுமாமறிவெனல் பொய்யோ,
துள்ளிய கயன்மீப் பாய்வயற் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       65

3185
வெள்ளிமால் வரையோ முலைவரை யொருநெல் வேலிவே யோதொடித் தோள்வே,
யொள்ளிய பிறையோ நுதற்பிறை கண்ணா யுறுமதி யோமுக மதிய,
நள்ளிய நீலி வனக்கத லியோவென்னகுதுடைக் கதலியென் செய்வேன்,
றுள்ளிய வரான்மீ தெழுபுனற்றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       66

3186
உள்ளுமெய் யடியார் சூட்டுமென் பூவுள் ளுன்னடிக் கேற்றிய நீலம்,
விள்ளுபன் மலரே வுடையவன் வயமாய் வெங்கொலை புரிந்ததன் றீமை,
தள்ளுதல் குறித்து விரும்பிநின் னடியாஞ் சார்புபெற் றமர்வது மானுந்,
துள்ளிய கயல்விண் கிழிக்குநீர்த் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       67

3187
காதன்மெய் யடியார் நின்னெதிர் நின்று கவின்றதீ பங்கொடு வளைத்தன்,
மேதகு பரிதி மண்டில மானும் விளங்கத னடுவணீ பொலித,
லோதரு மனைய மண்டில நடுமுன் னுறைதரு தன்மையே காட்டுஞ்,
சூதமுற் றருக்க டுறுபொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       68

3188
விட்டது யாரை முன்னர்வா சனைதான் வெண்பொனாலியன்றபா துகையே,
நட்டதுன் மலர்த்தா ளதுகுறித் திடுங்கா னகுகதிர் வெள்ளியங் கிரிமேற்,
பட்டது பயின்ற பழக்கம தன்றோ பசுவருக் கைச்சுளை கடுவன்,
றொட்டது மந்திக் கீபொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       69

3189
நின்னிரு மருங்கி லடியர்போற் றிடுங்கா னெடியவெண்சாமரை பனித்தன்,
மன்னிரு வகைய ஞானமு மெழுந்து வயங்கலு மனையவை யுயிர்த்த,
மின்னிரு வகைய புகழுமாங் கெழுந்து மேவுறத்துள்ளலும் பொருவுந்,
துன்னிரு பயனோ டின்பரு டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       70

3190
பிறையுரு வென்னத் தலைவளை தண்டம் பிறங்கிநின் றிருமுனம் பொலித,
லறைதரு கிரியா குருக்களென் றுரைக்கு மானைகட் கங்குச மென்கோ,
வுறைதரு வெள்ளி பொன்னெனு மீன்க ளுரந்தபு தூண்டிலென் றுரைக்கோ,
துறைபல கெழுமு பொன்னிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       71

3191
அந்தநா ணின்னைப் புகழ்ந்துபா டினருக் களித்தரு ளியானமா திகளை,
யிந்தநா ணீயே கொண்டனை யவற்றா லிவர்களுக் கென்பய னென்று,
சந்தமார் திருத்தாண் மலர்நிழன் மட்டே தரல்குறித்தனையது போதுஞ்,
சுந்தரக் கனக மதில்வளை துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       72

3192
வெள்ளியங் கயிலை யமர்ந்தநாள் வெய்ய விடமெடுத் தயின்றனை யிங்கு,
வள்ளிய வருளி னமருநா ளதுபோல் வலிவிளக் குவதெவன் செய்தா,
யுள்ளிய வடிவே னறிவெடுத் தயின்றா லொத்ததென்றியாவரும் புகழ்வார்,
துள்ளிய கயல்சா லிலஞ்சிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       73

3193
பொறையெனுங் குலையு ளன்பெனு நிறைந்த புனல்படு மெய்யடி யவர்த,
நிறைமன மெனுநற் றடத்துற மலரு நின்னடித் தாமரை மலரிற்,
சிறைபடு மடியே னறிவெனும் வண்டு சேர்ந்துவாழ்ந் தமருநா ளுளதோ,
துறையுணர் புலவர் புகழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       74

3194
வஞ்சனேன் மலநின் றாட்கெதிர் நமனோ வாய்ந்தகைக் கெதிர்விதி தலையோ,
மஞ்சவாங் களத்திற் கெதிர்கொடு விடமோ மறைந்தகட் கெதிர்சிலை மதனோ,
வெஞ்சுறா நெடிய சடைக்கெதிர் புனலோ வினியவாய் நகைக்கெதிர்புரமோ,
துஞ்சன்மே வுதற்கு நவில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       75

3195
மதித்திடு முனையான் கண்டநாண் முதலா மாரவேள் கணைக்கிலக் காகிப்,
பதித்திடு மயற்சேற் றாழ்தனனந் றாமோ பரிந்தருள் செய்திலா யென்னின்,
விதித்திடு கனவில் வந்தெனைப் புணர்தல் வெளிப்பட யாவர்க்கு முரைப்பேன்,
றுதித்திடு வளஞ்சான் மாளிகைத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       76

3196
அறைதரு கருணை யாழிநீ யெனவாங் காறுகால் செல்லுமே யென்று,
சிறையளி தூது சேறியென் றியம்பச் செறிந்தவெண்காற்புள்ளா கினன்மு,
னிறையவ னவன்பாற் குறைந்தகா லுடையேனேகிலே னெனத்தளர் தருவா,
டுறாபல கெழுமு காவிரித்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       77

3197
மதித்திடு வளஞ்சான் மதுரையி லெல்லாம் வல்லசித் தெனப்பொலிந் தனைமு,
னுதித்திடு மடியேன் மனங்குழை வித்தா லுறைசெயு மதுபுதுக் கியதாங்,
கதித்திடு மந்நா ளுஞற்றிய தென்னிற் காலவேற் றுமையுனக் குண்டோ,
துதித்திடு முனிவர் நிறைபெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       78

3198
முத்தவெண் ணகையார் முயக்கமே பொருளா முன்னு வார் குழாத்தொடுங்கலந்து,
சித்தமா ழாந்தா யென்றெனைப் பேசிச் சிரிப்பையேன் முன்ன மாரூரி,
னத்தநேர் குழலாண் மனைவயிற் றூது நடந்ததை யுரைத்துனைச் சிரிப்பேன்,
சுத்தமா தவத்தர் நிறைபெருந்துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       79

3199
தரையுற மெழுகி யொருபொழு துண்ட தவத்தினால் யான்பெறு மகட்கு,
விரைநறு மாலை தருதியின் றென்னின் மேவருதீக்கையா வதுசெய்,
புரைதபு முடலா தியவொரு மூன்றும் பொலியுமுன் வயத்தவா மன்றே,
சுரையடிக் கமல மலர்புனற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       80

3200
இழித்தவூ னருந்த லோப்புகென் றெங்கட் கியம்பிமுன்னாளொரு கிராதர்,
கழித்தவூ னுகர்ந்தாய் விதிவிலக் கொழிந்தாய் கடையனேற் கின்னருள் புரிந்தாற்,
சுழித்தநீ ருலகி லென்செய்தாயென்றோர் தோடநிற் குரைப்பவ ருளரோ,
தொழித்தளி முரலுமலர்ப்பொழிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       81

3201
கலைபல வையந் திரிபறி யாமை கழிதர வுணர்ந்துளாரெனினு,
மலைவினின் செவ்வாய் மொழியன்றி முத்தி வாய்ப்பரோபலபொறி யிருந்து,
மலைகடற் புடவி யிடைப்படு பொருள்கண் ணன்றிநோக் கிடுநரு முளரோ,
துலைநிகர் நடுவோர் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       82

3202
ஆற்றிடு தொழிலுங் கொண்டிடு முகமு மைந்துமுன்னொருமுகந் தரித்துக்,
காற்றிடு மலமைந் திப்பொழு தென்னிற் கவினுமிம் முகப்புகழ் பெரிதா,
லூற்றிடு கருணை யுவட்டெழ வடியா ருள்ளத்துள் ளுறைகுரு மணியே,
தோற்றிடு மதியந் தவழ்மதிற் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       83

3203
ஆன்றநின் பவனி கண்டநாண் முதலா வரியநின் றோளலர் வேட்டுக்,
கான்றவூ ருள்லார் வாயலர் மதவேள் கையலர் நிரம்புறவேற்று,
மான்றநெஞ் சினளாய்க் கண்ணலர் பொழிவாள் வயங்குநின்னுளத்தலர் கருணை,
தோன்றவென் றடைவாள் சொற்றிவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       84

3204
வடவரை கோட்டி வாசுகி பூட்டி வனத்துழாய்க் கோலொன்று கூட்டித்,
தடமதில் வீட்டிப் பெருவிறல் காட்டித் தயங்குநீ யொருமலர் தொடுக்க,
வுடன்முனிந் தனைபன் மலர்தொடுத்தவ்வே ளுடற்றுபோ ரெங்ஙனம் பொறுப்பேன்,
சுடர்விடு கொடிமாளிகைப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       85

3205
வல்லைநின் னடியெந் றலைமிசை யேற்றின் மலரவன் கைவரைந் திடலவ்,
வெல்லைதீர் தலினான் மலர்க்கைமற் றனையா னிருந்தலை யொன்றுவென் றதுமு,
னொல்லைமென் மலர்த்தா ளன்னவ னெண்கை யொருங்குவென் றஃதிதன் புகழென்,
றொல்லைநற் றவத்தார் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       86

3206
புன்மையேந் தலைமே னினதுகைக் கமலம் பொலிதரக் குவிந்துமே விடுமோர்,
நன்மைசார் தலின்மற் றயன்கர கமல நாடொறு மலர்ந்துநீங் கிடுமத்,
தன்மைதே ராத மடவரப் பிரமன் றன்றொழில் வளர்ப்பவ ரன்றோ
தொந்மைமா தவத்தர் நிறைபெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       87

3207
பராரையா லமர்ந்தான் முன்னமிப் பொழுது பராவர சமருவான் விழையிற்,
றராதல முவவா தென்னவுங் கேளா டலைவன்மற் றவனலா திலையென்,
றராவக லல்கு லன்னமென் னடையாளயருவாண் முதுக்குறைந் தனள்காண்,
சுராதிபர் விரும்பிச் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       88

3208
வெய்யவா பாச மார்க்கமத் தனையும் வீட்டுநின் றிருவடி யடைந்தே,
னையவெங் காலன் வீசுபா சத்தோ டைவகைப் பாசமுங் கழல,
வுய்யவாழ் நினது முகத்துநம் பாசமொளிர்தரப் புரிந்தனை யுய்ந்தேன்,
றுய்யமா தவர்கள் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       89

3209
புல்லிய வோரூ ரேனுமில் லென்று புகன்றுமற் றதற்குமா றாக,
நல்லியல் வெண்ணெய் நகுபுகழ்த் துறையூர் நலமலி கடந்தைகொற் றவனூர்,
வில்லிய றிருவா வடுதுறை புரப்பாய் வெறுத்த மூன் றூர்மகிழ் தரவோ,
சொல்லிய வவற்றொன் றாகிய துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       90

3210
உன்னிடைக் களங்க முறுதலி னுறாமென் றுரைத்தியேன் முன்னையம் மதியந்,
தன்னிடை யமர்ந்தாய் களங்கமங் கிலையோ சாற்றெனி னியாதுசாற் றிடுவா,
யென்னிடை யதுநே ரென்றமர்வாயே லெய்தரும் புகழ்நினக் குண்டாந்,
துன்னிடை மடவார் சூழ் பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       91

3211
கரிகுழைத் தெழுதிப் புனைதரப் பெற்ற கண்கணின் றிருவுருக் கண்டு,
வரிவளைக் குலத்தைக் கையினின் றொழிக்க மலர்க்கர நன்றுகொ லென்னப்,
புரியுமக் கயற்கண் முத்துகப் பொறாது பொம் மல்வெம் முலைமுத்தங் கருகுஞ்,
சுரிகுழற் கருள்வ தென்றுவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       92

3212
பாயவெப் பகலா நின்னுடை யுளத்திற் பதிதர வமர்தரே மென்னின்,
மேயமுற் பரிதி மண்டலத் தமர்ந்த வித்தகன் யாரெனக் கேட்ப,
னாயவிவ் வினாவிற் கெவ்விடை கொடுப்பா யத்தகு தோல்வி நிற் காமோ,
தோயமென் கழனி வளப்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       93

3213
வேண்டமுன் கண்டத் தடக்கிய விடத்தை வெளிவிடுத்தெனவிரு ணிமிரு,
மாண்டசெஞ் சடைநீர் கொதிப்பொடு வெளியே வந்தெனப் பானிலா விரியும்,
பூண்டவெம் பணியி னுயிர்ப்பென விளங்கால் போதரு மெங்ஙனம் பொறுப்பா,
டூண்டநின் றவிரா விளக்கனா டுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       94

3214
ஆன்றநீ மிசைந்த பரிகலச் சேட மன்புமிக் கேற்றமாதவருக்,
கேன்றவெம் பசிநோய் மருந்துகொ லுடலி லெய்திய நோய்தெறு மருந்தோ,
சான்றமும் மலநோய் தவிர்த்திடு மருந்தோ தவாவதன் பெருமையா துரைக்கேன்,
றோன்றமெய்ஞ் ஞானம் பயில்பெருந் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       95

3215
கையினுந் தவிர்த்தாய் நுதலினுந் தவிர்த்தாய் கடுந்தழ லனையது குறித்து,
நையினு நைக நினையெதிர்ப் பட்ட நங்கைமார் காலியங் குறுவான்,
செய்யினு நன்று காலியங் குறுவான் செய்தன ரன்னதை நன்றோ,
துய்யினுங் கூர்த்த மதியர்சூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       96

3216
மிடைசடை மறைத்து நீயெழுந் தருளி மேவினை யாயினு நினக்குப்,
புடையுற மலர்க்கை கொடுப்பவ ரினையன் பொற்சடை யுடையன்முன் னென்று,
தடையற வெவரு மறிதரு பாக்குத் தாஞ் சுமந் துணர்த்திடத் தெளிந்தேன்,
றொடைமதுப் பிலிற்றுங் காவ ணத் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       97

3217
வழிவழி யடியர்க் கணுத்துணைப் போதம் வயங்குமேற் பொறாமையு மனையார்,
கழியவின் படையு மவாவுமற் றனையார் கருமல மேலடு முனிவு,
மொழிநம பிரம வெனுமினா மொழியு முடையையா னீயுமீ தறனே,
சுழியலை யெறியும் பொன்னிசூழ் துறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       98

3218
கற்றவ ருவக்குங் கல்வியில் யானுங் கடலகத் தங்கணப் புனல்சார்ந்,
துற்றதேற் றிருத்த மாவது கடுப்ப வுன்பெரும் புகழ்விர வுதலாற்,
குற்றமின் றாகிச் செய்யுளா மென்றே குணமில்புன் சொற்கொடு துதிகள்,
சொற்றன னுவந்து கோடிவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       99

3219
மண்ணிய கருணைப் பெருஞ்சயி லாதி மரபுபல் லூழியும் வாழ்க,
வின்னிய முகிலின் முழங்கவெக் காலு மிலங்குநின் சந்நிதி வாழ்க,
பன்னிய நினது நாமவைந் தெழுத்தும் பல்லிடந் தொறும்பு கூஉ வாழ்க,
துன்னிய நின்சீர் வாழ்கவான் றுறைசைச் சுப்பிர மணியதே சிகனே.       100

சுப்பிரமணியதேசிகர்மாலை முற்றிற்று.
--------------------------
*சிறப்புப்பாயிரம்.
திருவாவடுதுறையாதீனத்து ஆறுமுகசுவாமிகளியற்றியது.
*இது பழையபதிப்பைச்சார்ந்தது.

அறுசீர்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

3220
யாமாலை நீங்கவரு டுறைசையிற்சுப் பிரமணிய வெங்கோமான்மேற்,
பூமாலை வாடுறுநன் மணிமாலை பொள்ளலுறும் பொன்னாற் செய்த,
மாமாலை தேய்வுறுமுத் தாமாலை வெள்ளையென மதித்துநாராற்,
பாமாலை தொடுத்தணிந்தான் மீனாட்சி சுந்தரனாம் பாவ லோனே.       101


This file was last revised on 13 Nov. 2021
Feel free to send corrections to the Webmaster (pmadurai AT gmail.com)