pm logo

கவிராட்சச கச்சியப்ப முனிவரின்
திருத்தணிகையாற்றுப்படை


tiruttaNikai ARRuppATai of
kavirATcaka kacciyappa munivar
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Muthukumaraswamy of Singapore for the preparation
and proof-reading of this literary work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 15 Feb. 2010.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கவிராட்சச கச்சியப்ப முனிவரின்
திருத்தணிகையாற்றுப்படை


உ - கணபதி துணை

இந்தநூல் கவிராட்சச கச்சியப்ப முனிவரால் , தம்முடைய மாணாக்கரிற் சிறந்தவராகிய கந்தைபையருக்கு வயிற்றிலே
ஓர் குன்மநோய் உண்டாயபோது இத்தணிகையாற்றுப்படையைப் பாடி, அவர் நோயை மாற்றியருளினார் என்பது நூல் வரலாறு.

விநாயகர் காப்பு
நேரிசை வெண்பா

சீரார் தொடைபுனைந்த செம்பாவை முன்புபோ
லேரார் தணிகை யிளவற்கு – நேராகக்
கூட்டுமால் வேற்றுருவங் கொள்ளாமை யெப்பொருளுங்
காட்டுமா லைங்கைக் களிறு.

நூல்

பொன்மலைத் திருவிற் பன்னக நெடுநாண்
மாயப் பகழித் தாயக் குரிசின்
முரணமை யிருகால் திரள்மறைப் புரவி
அலர்மரை வாழ்க்கை வலவத் தேரும்
வழங்குதற் கமையா வண்மையின் இசைக்கும்       5

பெருந்தகு பாடல் திருந்திசைப் புலவர்
அறன்கடைக் ககலாப் பிறங்குதம் உளத்தில்
சாலாக் கல்வி மாலார்க் ககலா
வரன்மாண் டமைந்த வுரன்மாண் பலகையிற்
தண்டா விருப்பின் எண்தோள் முதல்வனோடு       10

ஆனாது பயிலிய அருமறைக் கேள்வி
மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென்று
ஆயிரு கடலும் ஆற்றலிற் கடையா
ஐயம் திரிபெனும் அழல்விடம் படாது
வெய்யசெம் பொருளெனும் மிளிர்தீஞ் சுதைத்திரள்       15

ஆராக் காதலின் ஆராது கைப்பவும்
மூன்றுவிரல் அழுந்தா துடல்தசை திணிந்து
கான்றதேன் தெரியற் கருங்குழன் மகளிர்க்கு
அணங்குளம் நிறீஇ ஆருயிர் கவர்க்கும்
வளங்கவின் கொழிக்கும் விளங்குசீர் இளமையும்       20

பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று
சிந்தை வழிச்செலும் ஐந்துநிலை பெறீஇயர்
அளவினைத் திறத்தின் அயரா யாக்கையும்
அளகைக் கோமான் உளமழுக் கறுப்ப
நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமு       25

நீடின் றிரியு நிலைமை நாடி
ஏற்போர் அங்கைக் கொடைக்கடன் நிறுத்து
நோற்போர் நோற்கும் நோன்மைசால் அறனெனும்
உறுதி யாக்கம் ஒய்யெனக் கழலவும்
வரைத்திரள் புரள்விற் றிரைத்தெழுந் திரைக்கணம்       30

விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்தும்
ஒளிறுவேல் அழுவத் துருத்தெழுந்து அடர்த்துக்
குளிறுவார் முரசும் பிளிறுமால் யானையும்
வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு
பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும்       35

திறைகேழ் உரிமை முறைநேர் நடாவியும்
தத்தந் தொழிலில் தலைநின்று வளர்க்கும்
பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும்
மிஞிறுந் தேனும் வெறிகவர் தும்பியும்
கஞலிப் பட்குரல் கஞற்றுவ சுழலும்       40

இருள்துஞ்சு மலர்ப்பொழின் மருள்சில் லோதிப்
பூவார் சோலைப் புறத்தகப் படுத்து
மேவரத் தடையிய விதுக்குறை கடுக்கும்
திவளொளி மாண்ட குவவுநுதல் வாணுதல்
தீங்கதிர் அமிழ்தத் திங்கட் பிளவின்       45

நீங்குகார்க் கறையு நிலாத்தவழ் வெண்மையும்
விராயுருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கட்
செங்குமு தத்துச் சிறுமதி கிடந்தெனச்
செவ்வாய் அகத்த செயிர்தீர் வெண்பல்
விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகில் துயல்வர       50

வள்ளையின் ஒழுக்கிய வள்ளெழிற் செஞ்செவி
செவ்வாய் கவுள்துணைச் சேல்விழி நெற்றி
இவ்வா யுறுப்பான் இன்சுவை யமிழ்த
வுறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும்
வளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டவ்       55

வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும்
பதும மாநிதி யிதுவெனக் கவன்று
தாவா வுறுவர் மேவா வுள்ளமும்
ஓவப் படமென வுஞற்றுறு திருமுகப்
பகுவாய்ப் பொற்குழை மகரமீ னாஅன்று      60

ஐதுமீக் கிடத்தலின் ஐங்கணைக் கிழவோன்
வெய்துதன் னாணை விளக்கிய வுயர்த்த
அணங்குதவழ் கொடியின் இணங்குபணை வேய்த்தோள்
காம்புபுடை யடுத்த கதிர்மணிக் குன்றின்
தோள்புடை யடுத்த சுடர்ப்பூட் கொங்கை       65

குவிமுலைத் துணைக்கொள் சவிமணி மார்பில்
தத்தமது ஏணி கடவாது தணிய
நள்ளுநின் றுணர்த்துந் தள்ளாக் குறியின்
அணிவயிற்று ஒழுகிய மணிமயிர் வல்லி
நெடுகுமயிர் ஒழுக்கு நெடுவழிப் படர்ந்து       70

கடுமுலைக் கோட்டுக் களிறுபட எடுத்த
படுகுழி அனைய பயம்படு கொப்பூழ்
நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண
நடுநின்று தேய்ந்த விடுகுகொடி மருங்குல்
வையகம் உயிர்த்தோன் மதிபுனைந்து இயற்றலின்       75

கைபுனைந்து இயற்றுங் கதிர்மணித் திண்தேர்
கடாதுருக் கொண்டோடுந் தடாதபே ரல்குற்
கீழ்மே லாகக் கிளர்ந்தெழின் அத்தகு
வாழையொடு பொரூஉம் வார்ந்தசெறி குறங்கின்
வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய       80

வீற்றுஇருந் தருளும் விரைமல ரேய்க்கும்
அலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி
மயிலியன் மருளும் இயன்மட மாதரைச்
சீலம் விழைவே செயல்குறி இவற்றான்
நால்வகைப் பேதமும் மாலறத் தெரிந்து       85

மருந்துமந் திரத்தும் திருந்துவிழை வேற்றித்
தேயம் பயிற்சி சேட்டை இயல்பே
இன்பத் துறையே இருவகைத் தொழிலே
இங்கித வகையே இவைநனி நாடி
இருவகைப் பொழுதொடும் ஏற்ப மருவிய       90

மூன்று காலமு மூன்று வேகமும்
ஒப்பக் கலவி உஞற்றுபே ரின்ப
அவாவுளம் பொதிந்துகொண்டு அழற்றுவெம் படர்நோய்
தவாதுபிறை போலத் தணிவின்றி வளர
உவாமதி போல உருவே தபவும்       95

கடவுட் பொங்கரும் தடமருப் பாவும்
சிந்தா மணியு நந்தா நிதிகளும்
கலன்முத லான வளம்பல கொழிப்ப
பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்த
தெவ்வுத் தானவர் அவ்வித்து ஏங்க       100

விரிகதிர்ப் பிழம்பும் அரிமான் தவிசிற்
களிகூர் நெஞ்சாற் காவல் வைகும்
ஒளிகூர் மகவான் உறுபதம் ஆதி
எளிதினுய்த்து அளிக்கும் தெளிவினை போலாது       105

பார்முதிர் புணரிப் பாயற் கடவுள்
வார்மதுப் பொகுட்டு மரைமலர்ப் புத்தேள்
என்றிவர் தமக்கும் எய்தற்கு அரிய
சரியை கிரியை யோகத் தவநிலைப்
பெயர்பொச் சாப்பப் பிறக்கணித்து உகவும்
ஊன நாடகம் உஞற்றிய திருவருள்       110

ஞான நாடகம் நவிலிய மாறலும்
ஆனா மலப்பகை நோனாது கழலத்
தானா னந்தத் தனியுயிர் மடங்கக்
கண்காண் குருமுதற் கடவு ளாகி
உயிரே யவத்தை யுணர்த்துந் தன்மை       115

அருளின் இயல்பே அங்கதன் பயனே
பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்று
அனைவகை யேழும் அரில்தபத் தெரிப்பத்
தாழாது கெட்டு வீழாது சிந்தித்து
அங்கைக் கொண்ட அமிழ்தெனத் தெளிந்து       120

பொங்குபே ரின்பம் புணராது புணரும்
நிட்டை கூட நிலையது நீங்கவும்
பல்திறப் பகைஞர் படையொடு நேர்ந்தென
வெல்திறங் காட்டாது வீற்றுவீற்று உடற்றும்
பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான்       125

முந்தையோர் ஈட்டும் முழுநிதிச் செல்வமும்
பொய்ம்மை யாளர் புகழெனத் தேய
நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரிற்
பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி
அதுவென வெறுவியது அன்றுமற்று இதுவென       130

முன்னைநாள் மருந்தை முறைமுறை இகழாப்
பின்னைநாள் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப்
பண்டைநோய் மேலும் பருகுபல் மருந்தால்
மண்டுநோய் வேறு மரீஇக்கிளர்ந்து உருப்ப
உரைத்தஎன் மொழிவழி யொழுகினை அல்லைகொல்       135

பெருத்துநோய் தெறும்என மருத்துவன் ஒழியத்
தெய்வத் திறத்தால் தீர்வுகாண் பாம்என
உள்ளூர் வயின்வயின் தெள்ளிதின் ஓங்கும்
புரிமுறுக்கு அவிழ்க்கும் பூம்புனல் தீர்த்தமும்
பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும்       140

படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை
அணிஅயல் புறநகர் மணிகெழு கோட்டமும்
விரத நியதிப் பரவு கடனாதிப்
பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந்து ஏத்தியும்
கவலை நெஞ்சம் கையறு பினையச்       145

சேண்சென்று ஒராஅல் செய்தென வலித்து
மிக்கநோய்க்கு இரங்கும் ஒக்கல்புறம் தழுவ
வறுமைக் கவற்சியும் இறுகுறப் பிணிப்ப
இல்லும் தமரும் இசைபயில் நாடும்
மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையால்       150

இருள்கால் சீக்கும் எழுபரித் தேரோன்
கடுஞ்சினம் திருகிய கொடுமைகூர் அமயத்து
முளிமுதல் முருக்கிய முழங்கழல் போழ்ந்து
வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம்
பைதரு கானத்துப் படர்நெறி ஒதுங்கலின்       155

முந்துபரல் உழந்த வெந்துயர்க் கொப்புள்
பிந்துபரல் உழத்தொறூஉம் பிளந்துநீர் உகுப்ப
இயங்காச் செல்லல் இணைஅடி தாங்க
வெயிற்பகை உழந்த வேர்ப்புற நனைப்பச்
சூறை மாருதம் துறைத்துறை எடுத்த       160

பூழி போர்த்த பொற்பறு மாசு
கலுழ்நீர் அல்லது கயந்தலை இன்மையிற்
கழுவுதல் புரியா முடைபயில் காயமோடு
இலையின் மராத்த நிலையின் மென்னிழல்
சேய்வரல் வருத்தம் சிதைபாக்கு அசைந்து       165

நெட்டுயிர்ப்பு எறிந்து நினைதரும் இரவல
ஆற்றா நின்னுளத்து அவலம்இனி ஒழிக
புளிஞரும் அருளும் போக்கரும் சுரத்து
வீற்றுவீற்று ஒழுகும் ஆற்றினில் திரியாது
ஒருநெறி எதிர்ப்பாடு உற்றது முன்னைப்       170

பழுதறு பெருந்தவப் பயனது போலும்
விழும வெந்துயர் முழுதொரால் வேண்டின்
பாணியாது இன்னே காணிய எழுமதி
தோல்தேர்க் கோடும் திருகுகோட்டு இரலையின்
நோய்ப்பகை என்ன வாய்ப்பிலாது அமையும்       175

அடுத்தடுத்து யானும் அலமரும் காலை
ஊரூர் வைகிய சீர்கெழு மாந்தருள்
உண்டி கலவி உறுதொழில் முதலா
மண்டிய பகுப்பின் வரையறைப் படாது
வேறுவே றுயிர்க்கும் வெம்பிணி யாளரும்       180

கருவி போழ்ந்த பெரும்புண் உறுநரும்
குட்டம் பெருநோய் முட்டிய வாதம்
முயலகன் ஆதி மொய்ப்பிணி உழவரும்
பாப்புக் கோள்ஆதிப் பலவகைக் கடிஞரும்
பேய்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும்       185

உறுப்புக் குறைநரும் ஒண்குணம் இழநரும்
இன்ன பல்றிறத்து எனைவரும் அன்றிக்
கல்விவேட் டவருங் கான்முளை வீழ்நரும்
செல்வம் வீழ்நரும் தேயம்நா டுநரும்
அலர்முலை மடவார் கலவிகா முறுநரும்       190

இரண்டறு கலப்பின் இன்பநச் சுநரும்
இனையபல் வேறு நினைவினர் எவரும்
வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவும்
மேற்கொண் டெழுந்து மேனாள் நேர்ந்த
பொற்கிழித் திரளும் பூந்துகில் மூடையும்       195

மணிப்பூண் பேழையும் வார்தரு கவரியும்
பைம்பொற் கவிகையும் செம்பொற் சிவிகையும்
ஊர்தியுங் கொடியும் வார்விசி முரசும்
சூட்டுவா ரணமும் தோகைய மயிலும்
தத்தமக் கியன்ற தழீஇயினர் போதும்       200

ஓசைதிக்கு அதிர்க்கும் மாசனப் பெருக்கம்
காண்டொறும் ஈண்டிய களியேன்
உடங்குசென்று இருப்பான் ஒருப்பட்டு எழலும்
துன்னிய விழுமநோய் தன்ன நீங்க
உறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த       205

ஒய்யெனக் கிளர்ந்த உவகைநெஞ் சத்துப்
படர்பேர் ஊக்கம் பிடர்பிடித்து உந்த
எழுந்தனன் இம்மென ஏகுதல் தொடங்கி
அடிபெயர்த் தோறும் அஞர்ப்பிணி நழுவ
உவரி நீரில் தவஎழு மகிழ்வால்       210

அவல்மிசை பாடாஅ அனைத்து நெறியாகச்
சென்றனன் அடுத்து மன்றல்நகர் நுழைதலும்
வெருவுநோய் இருகூற்று ஒருகூறு விலங்கக்
காட்சி ஆர்வம் கையிகந்து ஈர்த்தலின்
நறுமணம் கமழும் நந்திநதி குடையாது       215

எழுமுனி வரர்தம் எழுசுனை யாடாது
அலைமலைப் பகைஞன் அருள்கயம் படியாது
நாக வண்சுனை நன்புனல் தோயாது
விண்டு தீர்த்தம் மேவரக் குளியாது
அலரவன் இருஞ்சுனை அழிபுனல் முழுகாது       220

எத்துயர்த் திரளும் அத்தினத்து அகற்றுஞ்
சரவணப் பொய்கைத் தடம்புனல் துளைந்து
மென்மெலக் குன்றம் மீமிசை இவர்ந்து
காலைநண்பகல் மாலைமுப் போதும்
வைகல் வைகல் மலர்மூன்று தெரிக்கும்       225

நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது
புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின்
அடியிடப் படாஅ ஆரிடை வீதி
ஒதுங்குபு பைப்பய ஒருமுறை சூழ்ந்து
தூவும்எள் நிலத்துத் தோயாதுவெறுத்த       230

தேவர்கள் குழுவும் தேயத் தொழுதியும்
தடைஇய வாயல் தடையாது நுழைந்தாங்கு
ஒருவர்மெய் மணிப்பூண் ஒருவர்மெய் வடுச்செய
நெருங்கிச் சென்று நித்தில வாள்நகை
வள்ளி நாயகி மணத்தினை முடித்த       235

கள்ள வேழக் கடவுளைப் பணியா
வீரர்ஒன் பதின்மர் வார்கழல் தாழ்ந்துமற்று
ஆவயின் வதியும் அமரரைத் தொழுது
பூதப் பகுப்பும் பூதகா ரணமும்
இந்தியக் கூட்டம் இரண்டுமுக் குணமும்       240

நந்தும்ஆங் காரமும் நலத்தகு கரணமும்
இறுவாய் மாயை எழுவாய் ஏழும்
சுற்றம் என்னத் தோன்றிய ஐந்தும்
விராய்நின்று இயக்கி மராதுநின்று ஒளிரும்
ஆரா வின்பம் அருள்நிலை அம்ம       245

தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப
அருள்திரு உருவுகொண்டு அவிர்மணித் தவிசின்
ஞான சத்தியும் கிரியா சத்தியும்
வானவர் கோமான் வளம்பயின் மகளும்
கானவர் நலங்கூர் கன்னியும் என்ன       250

இரண்டு பாலும் இருந்தனர் களிப்பக்
கண்டமெய் யடியர் கலவினர் போற்றக்
காணா விண்ணவர் கலவாது ஏத்தக்
கண்கடை ஒழுகும் கருணை நோக்கமோடு
இனிதுவீற்று இருக்கும் எழில்நேர் காண்டலும்       255

எஞ்சுநோய் துவர இரியல் போக
விஞ்சுநாற் பொருளும் மேவந்து துவன்ற
ஆற்றாக் கடுந்துயர் அருநரகு உழப்பவர்
நோற்றமுன் ஊழ்நனி நூக்கலும் நொடிப்பின்
ஆயிடை நின்று மாயிரும் துறக்கம்       260

புக்குழிப் பொலிவித்து ஒக்கதோற் றத்து
விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க
ஒருகதி விட்டுமற்று ஒருகதி அடைந்தவர்
மயங்கறிவு என்ன உயங்குமுன் உயங்கல்
எய்யே னாகி இறுமாப்பு எய்தி       265

செய்முறை தெரியாது திருமுன் நிற்ப
இருமைப் பயனும் எளிதினுற்று அளிக்கும்
பூதியும் திருவுருப் பூச்சுநன்கு அளித்திட்டு
என்னைத் தன்வசம் ஆக்கிய உலகை
என்வச மாக்கி என்றுமோர் இயல்பின்       270

நின்றதன் நிலையின் நீங்காது இருத்தி
விடாதுவிட்டு அருள மெய்யருள் மேற்கொண்டு
ஒழியாது ஒழிந்து வழிவரு கின்றனன்
அத்தகு பெருமான் அருள்விளை யாடலைச்
சற்றிது கேண்மதி தவமேம் படுந       275

விச்சொன்று இன்றி விளைவுமிக்கு ஆக்கியும்
விச்சுமிக்கு கிருப்ப விளைவுமுழுது ஒழித்தும்
ஒளிதலை வளர்ப்ப ஒளிகளைத் தணித்தும்
அழுக்கினைக் கழுவ அழுக்கினை ஏற்றியும்
உறுந்தொழி லாளர்க்கு உறாதுசேண் அகன்றும்       280

வறுந்தொழி லாளர்க்கு உவந்துடன் கலந்தும்
விதித்தநல் விதிகளை விலக்கென உவர்த்தும்
விலக்கினை விதியென மேதக நயந்தும்
இத்தகு தொழின்மை நித்தலும் இயற்றிப்
பொற்றபே ரின்பருள் பெற்றியன் அதான்று       285

இருமுது குரவர் எழுவாய்ச் சுற்றமொடு
துயரிலங்கு உலகம் தோற்றுதற் பொருட்டுத்
தந்தை என்ன ஐந்துமுகன் ஆகியும்
அன்னை என்ன மனோன்மனி ஆகியும்
முன்முறை தந்தையர் தாயர் என்ன       290

நாதம் சிவமே நலத்தகு விந்து
மேதகு சத்தி வேறுவே றாகியும்
பின்முறை தந்தையர் தாய ரென்ன
மகேசன் உருத்திரன் மகேசையுமை யாகியும்
தமைய னென்னத் தந்திமுக னாகியும்       295

தனைய னென்னத் தாமரை மருட்டு
மூவிரு முகமும் முன்னான்கு கரமும்
மருவிவீற் றிருக்கும் ஒருதா னாகியும்
கடப்படும் இரண்டு கைகோள் இயங்க
நான வார்குழல் நகையிழை யானையைக்       300

கானவ ரரும்பெறற் காமரு மாதினைக்
கற்பினிற் களவினிற் பொற்புற மணந்தும்
பொருள்துறை முழுதும் புரையின்றி நடப்ப
அண்டகோ டிகளும் அரைக்கணத் தளவையின்
வறிதுநகை தோற்றி இறுவது புரியும்       305

எறுழ்வலி ஆற்றல் எய்யான் போல
மந்திரந் தூது செலவிகல் மற்று
மாற்றிவெஞ் சூர்வலி காற்றிஉல கோம்பியும்
எல்லாம் அறிந்தறி விக்கும்அவ் வியல்பைக்
கண்கூ டாகக் காட்டுவன் அதாஅன்று       310

மூவகை உருவாய் மூவுலகு உயிர்த்து
மூவகை யுருவும் முயங்காப் பரம்பொருள்
பந்தம் வீடு பல்லுயிர்க்கு அமைத்தும்
பந்தம் வீடு படாத பெருந்தகை
ஆருயிர்க்கு உயிராய் அமைந்தன நடாவியும்       315

ஆருயிர் காட்சிக்கு அணுகா அருந்திறல்
தானாய் நின்று தற்காண் தனிமுதல்
அளிகளின் அளியா அளிகளூஉங் களியன்
ஒளிகளின் ஒளியா ஒளிகளூஉங்கு ஒளியன்
வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளியன்       320

அளவினின் அளவா அளவினூஉங்கு அளவன்
இன்னான் ஒருவனை முன்னுபு சென்றவன்
பூங்கழற் சேவடி போற்றுதி யாயின்
பேரஞர் உறுத்த பேதுறு நோயுங்
காரண நோயும் கையிகந்து இரியக்       325

கடைக்கணித்து அருளிக் கரையினாற் பொருளுங்
கொடைக்கடன் நீயிர் குறித்த அளவையின்
எண்மடங்கு ஆற்றி என்றும் தீரா
அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் அன்றே
ஆடகப் பசும்பொற் பாடகச் சீறடி       330

நாடக மகளிர் நவிற்றிய ஆடற்
சிலம்பு கிண்கிணி தீங்குழன் முழவம்
முரசந் தூரி முழங்கொலி யானும்
விண்டல முரிஞும் வியன்மணிப் புரிசைக்
கொண்டல்கண் படுக்குங் கோபுர நிரைகள்       335

ஆடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை
இன்னன பிறவும் மன்னுத லானும்
ஒலிதிரைக் கடலும் ஓங்குபல் வரையும்
உடங்குதொக்கு அண்மி ஒண்துறை ஆடி
இருபகுப் பினவாய் இருகரை மருங்கும்       340

நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கும்
மும்மையும் அளிக்கும் மூவா முழுமுதல்
ஐம்முகன் ஆகி அமர்ந்தகீழ்க் கோட்டமும்
பொன்னும் மணியும் புதுமலர்க் குவையும்       345

திரைக்கயிற்று தூஉய்த் திளைத்தெழுந் தொழுகு
நந்தி யாற்று நறும்புனன் மடுக்கும்
குரங்குகதிர்ச் சாலியுங் கொழுந்தீங் கரும்பும்
குலைப்பூங் கதலியும் கோள்தெங்கு இனமும்
கோள்கள் மீப்பரிக்கும் பாளைக் கமுகும்       350

வயின்வயிற் பொதுளி வளம்பல வுறந்த
முருகலர்ப் பண்ணை ஒருபுறஞ் சூழ
அவரை துவரை அரிக்கதிர் வரகு
சாமை இறுங்கு ததைந்தன விளையும்
கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும்       355

பந்தர் மாதவி யுந்திய கோங்கும்
பைங்காற் கொன்றை பசும்பொற் சுண்ணமும்
வளிஉளர்ந்து எடுப்ப மறுபுல வரைப்பும்
போர்த்தன கமழ்ந்து பொறிவண்டு அழைக்கும்
அரும்புலப் புறவம் ஒருபுறஞ் சூழச்       360

செருந்திமந் தாரங் குருந்துவழை பாடலம்
கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம்
குங்குமம் மரவம் கோழ்அழகில் கப்புரம்
இல்லம் ஆவிரை வில்லம் பாங்கர்
பிடர்ஞெமை நமையாண்டு அடர்வரை எகின்சே       365

அசோகம் தேக்கே ஆத்தி சூதம்
மருது போதி வஞ்சி காஞ்சி
ஞாழல் புன்னை நரந்தை மாதுளை
பொகுட்டரை இருப்பை பூஞ்சினைச் சரளம்
முன்னம் பலாசு முருக்கை வருக்கை       370

சோதி மாமரம் தொத்தின நாகம்
அன்றி அனைத்தும் துன்றிய கறிக்கொடி
மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து
மணங்கமழ் காமர் வல்லி ஒன்றே
இணங்குபூத் தரும்தன் நிகழ்ச்சியை நாடி       375

வசைப்படத் தத்தம் இசைவிளக் குவபோல்
பொறிவரிச் சுரும்பும் வெறிநுகர் தேனும்
தோகைமா மயிலும் தொடிக்கண் பூவையும்
கிள்ளையும் குயிலும் தெள்ளுகுரற் காட்டி
வண்தளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ       380

நுண்தளி நறுந்தேன் நோலாது திவளும்
ததைமலர்ச் சினைய தருவந்து உடுத்த
பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு
வேரல் நரன்றுஉக்க வெண்மணிக் குப்பையும்
பிறழ்பல் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச்       385

சிங்கவல் ஏறு பொங்குசினம் திருகி
எழுந்துதாய்த் துமிப்ப இருங்கடா யானை
மத்தகம் பிளந்து மாஇருங் குன்றத்து
வெண்புனல் அருவி வீழ்வன போலச்
சலசல வுக்க தரளக் குவாலும்       390

நிலவுராய்த் தவழ நெமிர்ந்தன மிளிரும்
கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கும்
உவாமதி முகத்தார் ஓச்சினர் விடுக்கும்
கவணையின் மணியோ கங்குற் கானவர்
விலங்கினம் துரக்கும் இலங்குகூர்ங் கணையோ       395

அலைத்தர விசும்பின் நிலைத்தரு கலன்கள்
பல்வகை மின்கொடி ஒல்கிவீழ்ந் தென்ன
வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிப்பூங்
காழுந் தாமமுங் கவினத் ததைஇய
மண்டப மேடை மாடமேல் நிலைகள்       400

இயங்கா நிலைத்தேர் இயங்குமணிப் பல்தேர்
விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா
வளம்பல தழீஇஎம் மருங்கும்மெய் யடியார்
இடுமகில் தூமமும் எக்கரிற் குவைஇய
படரொளி ஊட்ட பளிதக் குப்பை       405

கான்றதீம் புகையும் கழுமிவிண் கெழுமி
இமையார் நாட்டம் இமைப்பன செய்ய
மல்லல் ஆவணம் மறுகும் வீதியும்
நாள்தொறும் எழிலான் நவநவம் ஆகியும்
இமைக்குநர் நாட்டம் இமையாமை செய்ய       410

மண்டலம் விண்டலம் மாற்றியது என்ன
இறும்பூது பயவா ஏர்குலாய்க் கிடந்த
திசைகாப் பாளர் இசைநிறை தேவர்
அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர்
முதுக்குறை அன்பின் முறைமுறை பழிச்சச்       415

சாறுநாள் அல்லது வேறுநாள் அறியாது
உலகமுழு தோம்புபல் சிறப்பின்
நிலைபெறு தணிகை மலைகிழ வோனே.
----------
திருத்தணிகையாற்றுப்படை முற்றும்

This file was last updated on 15 Feb. 2010
Feel free to send corrections to the Webmaster