pm logo

கதிர்காமக் கலம்பகம்
ஆசிரியர்: கந்தப்ப சுவாமிகள்


katirkamak kalampakam
of kantappa cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, Mithra and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This file was first put online on 12 October 2010

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கதிர்காமக் கலம்பகம்
ஆசிரியர்: கந்தப்ப சுவாமிகள்

கணபதி துணை : திருச்சிற்றம்பலம்
சிவமயம்.
Source:
சரஸ்வதிபீடம் - கந்தப்ப சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட
கதிர்காமக்கலம்பகம்
இஃது யாழ்பாணம் தமிழ்ப்பண்டிதர் நா. கதிரைவேற்பிள்ளையால் பரிசோதித்து
மதுரை - பாதரக்குடி ஸ்ரீமான். ஆ சொக்கலிங்கப்பிள்ளை அவர்களின் திரவிய
சகாயத்தால் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
ஏவிளம்பி வருஷ சித்திரை மாதம்
1897
(Copy Right registered)
--------------------

சிறப்புப்பாயிரம்.

சென்னைக் கிறிஸ்தியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் பிரமஸ்ரீ
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள் பி.ஏ. சொல்லிய
நேரிசை வெண்பா.

கந்தப்பர் செய்தகதிர் காமக் கலம்பகத்தைச்
சந்தமொடு மச்சிட்டான் சால்புறவே - சந்ததமுங்
கந்தனடி பெணுங் கதிரைவேற் பிள்ளையெனு
மந்தமிழ்ப் பா வாணனினி தாய்ந்து.

அஷ்டாவதானம்
பூவை - கலியாணசுந்தர முதலியாரவர்கள் இயற்றிய
பன்னிருசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

பொன்மலையா யிரஞ்சூழி களிலொன்றங் கெனநிலவும் பொற்பு வாய்ந்த,
      புகழீழ நாட்டினில்யாழ்ப் பாணநக ரினைவெஃகிப் பொலிந்து றைந்த,
தன்மசரஸ் வதிபீடங் கந்தப்ப சாமியெனுந் தவமே தாவி,
      தனித்திலங்குங் கதிர்காமத் தலத்துறுநஞ் செவ்வேட்குத் தக்கோர் பேணு,
நன்மணிநேர் செஞ்சொற்களாற் சொற்ற கலம்பகத்தி-னயங்கண்னுற்று,
      நாடனைத்து மேபரவ நனியாய்ந்திங் கச்சிட்டு நற்சீர் பெற்றான்,
பன்மனைசூழ் புரிபுலோ லியிற்றோன்றிச் செந்தமிழ் நூல் பலவுஞ்
      சூழ்ந்து பகருமைந் திலக்கணமு மிகத்தேர்ந்த கதிரை வேற் பாவ லோனே.

முகவுரை

அநாதிமல முத்தராய், ஆதிமத்தியாந்த சமானாதிக காமரூப குணரகிதராய்,
சர்வஞ்ஞ சர்வகர்த்தத்துவ சர்வாநுக்கிரக அதிபர மாப்தபதியாய்,
விளங்காநின்ற சிவகுசக் கடவுள், நல்லசுரர்மேற் குழைந்து,
வல்லசுரரைக் களைந்து தொல்பதத் திருத்துவான் திருவுளங்கொண்டு,
படையுடனடந்து உவகையோடுந் தங்கியருளிய பாடி வீடான
ஏமகூடம் எனப் பகர்தற் கிலச்சாய் நிற்பதும், அடைந்தவரது
மாசுகளைத் துடைத்துத் தூய்மை செய்யும் மாணிக்க கங்கை
என்னும் மகாநதி யினையும், சோதிவடிவமா யுள்ள திருக்கோயிலையும்,
கதிரைமலை முதலிய பர்வதங்களையுங் கொண்டிருப்பதும், அரிபிரமேந்திராதி
யமரர்களானும், அகத்தியாதி முனிவரர்களானும் பூசிக்கப்பட்டதும்,
கண்டியிலிருந்து அரசாண்ட பாலசிங்க மன்னனின் தந்தையும்,
சோழராசாவின் மருகனுமாகிய நாரசிங்க நரேந்திரன் வசித்து வழிபட,
அவற்கிட்ட சித்தியை அளித்த தானமாயுள்ளதும் சிவ சுப்பிரமணியக்
கடவுளின் திருவருட்பெருஞ் செல்வராகிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளால்
திருப்புகழ் புனையப்பெற்றதும், குன்றுதோறாடற்பதிகளூள் ஒன்றாய்
மகாமகிமையுற்றதும், பாபயுகமாகிய இக்கலிகாலத்தும் மெய்யன்பர்-
பொருட்டாகப் பற்பல திவ்வியாற்புதங்கள் நிகழப்பெறுவதும், மாண்பினையுடைய மேருகிரியின் பொற்சிகரம்
பொருந்தப்பெற்றமையால் "பொன்னகரம்,
ஈழம்" எனச் சிறப்புப் பெயர்களை வகித்த பல்வளம் படைத்த இலங்கைத்
தேசத்திலே, தக்கிண பாகாந்தத்திலே, "மகேந்திரக்கடல்" என வழங்குஞ்
சமுத்திர சமீபத்திலே இலங்குவதுமாகிய திருக்கதிர்காம க்ஷேத்திரத்தின்
விசேட பிரபாவத்தைத் தொண்ணூற்றாறு பிரபந்தங்களுள் ஒன்றாய கலம்பகம்
என்னும் பிரபந்தத்தாற் றெரித்தவர், ஸ்ரீ. சரஸ்வதிபீடம் - கந்தப்ப சுவாமிகள்
என்பவரேயாம். யாழ்ப்பாணத்திலே அவதரித்துச் சுப்பிரமணிய பத்தியில்
விசிட்டமுடைய இத்தவநிலையினர், தமக்கு உற்றகொடுநோய் நிவாரண
நிமித்தம் ஆங்காங்குள்ள சிவகுகதல தீர்த்த மூர்த்த சேவை செய்தும், அது
விமோசன மாகாமையாற் பெரிதும் வருந்திப் பின்னர், அறுமுகப்பெருமானது
ஆஞ்ஞை மேற்கொண்டு கதிரை க்ஷேத்திரமடைந்து, மணிநதி மூழ்கித் தரிசித்த
மாத்திரத்தே அவ்வாதனை யகலப்பெற்று, அன்பின் மேலீட்டால் இப் பிரபந்தத்தையும்
பூர்த்தியாக்கி, மலபரிகாரம் வரத் தலைநிலையான திருவடி முத்திபெற்றனர்;
என்பதே அவர் சரிதமாய்த் தெரிந்தவாம் என்க.

இம்மேலவராற் செய்யப்பட்ட இப்பிரபந்தமானது, கொச்சகக் கலிப்பாவும்,
வெண்பாவும், கலித்துறையும் முதற்கவி யுறுப்பாக முற் கூறப்பெற்று, புயவகுப்பு,
மதங்கு, அம்மனை, காலம், சம்பிரதம்,கார், தவம், குறம், மறம், பாண், களி,
சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும் பதினெட்டுறுப்புக்களும்
இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியவிருத்தம்,
கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை
என்னு மிவற்றால் இடையிடையே வெண்பாவும் கலித்துறையும் விரவிவர,
அந்தாதித் தொடையான் முற்றப் பெற்றமையாற் கலம்பகமெனக் காரணக்
குறிகொண்டு, சொன்னோக்கம், பொருணோக்கம், தொடைநோக்கம், நடை
நோக்கத்தோடு எந்நோக்கமுங் காண்டற்கு இலக்கியமாய் நிலவுதன்றி, அன்பருளீந்து,
தத்துவஞானத்தை நிலைப்பித்து, சீதரற்குங்கிட்டாத திருவடிப் பெருவாழ்வையுங்
கொடுக்குங் கருவியாகவுந் திகழ்தலால், சிறியேன், அப்பெரும் பயனைச் சிந்தித்த
சில கனவான்களின் வேண்டுகோட்படி, எடுப்பாரும் படிப்பாருமின்றிப்
பாணவாய்ப்பட்டு ஆங்காங்குச் சிதைந்து கிடந்தனவற்றை யெல்லாம் ஒருவாறு
இயைந்தன வாக்கி, பிரகடனஞ் செய்தேன் ஆகலின், பெரியோர்கள் குறை
நோக்காமே சீரியதெனப் பாராட்டல் அவரது பேரருங் கடனேயாம்.

      இங்ஙனம்,
      நா. கதிரைவேற்பிள்ள
மேலைப்புலோவி, யாழ்ப்பாணம்.
-----------------
உ :கணபதிதுணை.

கதிர்காமக்கலம்பகம்.

காப்பு.
நேரிசை வெண்பா.

சிலம்பகந்தோ றாடல் செயுங்கதிரே சன்மேற்
கலம்பகப்பா மாலைக்சொலக் கான்மா - னலம்பகஞ்சேர்
தும்பிமுகர் தாழ்கரடச் சோனைமழை மாறாத
தும்பிமுகர் தாளே துணை.
-------------

திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் துதி.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

கும்பந்தங் கியகரிமாக் குழாம்படருங் கதிர்காமக் குகன்க லம்ப
சம்பந்த னதனத்தெங் கவுமாரி யருளமுதக் கடைவாய்த் தொன்னூற்
சம்பந்தன் றிருத்தாளை முடிக்கணியா யணிந்துபவச் சார்பி லான
நம்பந்தந் தனைத்துமிக்கப் பகர்ந்துமுடி வறும்பதத்தை நண்ணுவாமே.
----------

நூல்.

மயங்கிசைக் கொச்சகலிப்பா.
இவை - எட்டடித்தாவுகள். (2)

சீர்பூத்த வரைமடந்தை திருப்பாகப் பிறைச்சடில
னேர்பூத்த வுள்ளகத்தி லெழுஞ்சுடரே யாமென்னத்

தானவர்தங் குலம்பதைக்கச் சதுமறையா கமங்கலிப்ப
வானவர்தங் குலம்பிழைக்க மறைமுதல்வ னகங்களிப்ப

வுன்னற் கருங்கதியா யுரைப்பரிய வான்பொருளாய்த்
தன்னந் தனிமுதலாய்த் தத்துவமாய்ச் சுத்தமுமா

யூனக்கண் கொண்டுணர்வார்க் கொளித்திருந்த நள்ளிருளாய்
ஞானக்கண் கொண்டுணர்வார் நாயகமாய் வந்துதித்தோய்.

கடக்குறவ ரிடக்கொடியுங் கடக்கிரியுந் தரப்பொலிந்த
மடப்பிடியு மிடப்புறனும் வலப்புறனுங் களிப்பூரச்

சூருரமுங் கார்வரையுஞ் சூறைபடப் பேருததி
நீரலையத் தாவயில்வே னீள்புயத்தோர் பானிலவச்

சிறைப்படரிக் குழுக்குலவச் செய்ப்புயமார் பகத்திருக்கு
நறைப்படலைக் கடப்பையிடை நாயகமா மணிவிளங்க

மண்ணகம்விண் ணகமெவைக்கு மதாணியெனத் தகைமைதருங்
கண்ணகன்ற சுயஞ்சுடராய்க் கதிர்காமத் திருந்தோய்கேள்

இவை - ஈரடித்தாழிசைகள் (8)

மந்திரமுந் தத்துவமும் வான்கலையு நீள்பதமுஞ்
சுந்தரமாம் வன்னபதம் யாவையுமாந் தூயோய்நீ (1)

சாவதுவும் பிறப்பதுவுந் தமையகலா துழற்றவுழ
றேவர்கடந் தேவர்கட்குந் தெய்வசிகா மணியானாய் (2)

மறையவர்க்கு மாலறியா வள்ளலுக்கு மோனபத
நிறைமொழியைப் பகர்ந்தனையே னின்றகைமைக் களவுண்டே (3)

எச்சமயத் தார்களுமெம் மிறையிறையென் றேத்தவவர்க்
கச்சமயந் தோறுஞ்சென் றருள்புரிவா னாகினையே (4)

காட்சிமுத லெண்ணளவை காண்பரிய தற்கடந்த
மாட்சியுடை யாயெனது வாய்துதிக்க வந்தனையே (5)

குன்றிருமாப் படக்குதற்கோ குன்றவர்வாழ்த் தெடுப்பதற்கோ
குன்றகத்தே யிருப்பதற்கோ குன்றுதோ றாடினையே (6)

சத்திகளை யீவதற்கோ சத்தியிலார்க் காய்வதற்கோ
சத்தியமீ தென்பதற்கோ சத்தியயி லேந்தினையே (7)

ஆறுமுக மகிழ்வதற்கோ வாறுமுக மாவதற்கோ
வாறுமுக மதுகுறித்தோ வாறுமுக மாயினையே (8)

இவை - ஈரடி அராகங்கள் (4)

அவனவ ளதுவெனு மவைவினை யுறவரு
சிவனவ தவமுறு செயலறு கதியினை (1)

மயலற மனநக மணியென மலரடி
நயமறு மவரிட நடநவில் கருணையை (2)

இவையிஃ தெமதென விவனக மெனவரு
பவையற வெனையரு டருபர கதியினை (3)

ஒளியிரு ளுளதில வுருவரு வெனலற
வளிபுன லெரிநிலன் வெளியென மருவினை (4)

இவை - நாற்சீரோரடி இரண்டுகொண்ட அம்போதரங்கம் (2)

அலைகட லிடையுறை மரமென வருமவ
னிலைகெட வருமொரு மிடலுடை யயிலினை (1)

உலைவற வுடலுயி ரொருபொரு ளமைவுற
விலையறு மொருபொரு டருகுரு வுருவினை (2)

இவை - முச்சீரோரடி அம்போதரங்கம் (4)

ஒருவரை யெழுவரை யட்டனை (1)
உததிக ளழவயி னட்டனை (2)
மருவல ரறவடி யிட்டனை (3)
மறைமறை முனிசெவி விட்டனை (4)

இவை - இருசீரோரடி அம்போதரங்கம் (8)

உருவி னுற்றனை (1) மருவு மானினை (5)
ஒருவி னுற்றனை (2) மருவு மானினை (6)
உரையில் வந்தனை (3) வார ணத்தினை (7)
உரையில் வந்தனை (4) வார ணத்தினை (8)

இவை - பெயர்த்தும் ஈரடித்தாழிசைகள் (4)

உருமாறிப் பவக்கடற்புக் கூசலா டுவர்தமக்குக்
கருமாறிப் பதமடையக் கடைப்பிறவி காண்பவனீ. (1)

ஆறாறு தத்துவமு மாம்பரிச கன்றொருநீ
வேறானா லிங்கெவையும் விளங்குவதற் கொவ்வாவே. (2)

முப்பாழும் பாழாய் முடிந்தவிடத் தேமுளைத்த
வப்பாழும் பாழா யறிந்தவனு நீயன்றே. (3)

ஆதார மீதான மாயிடைதோ றுந்திரிபாய்
நீதானோ வன்பர்கட்கு நின்றவனு மற்றுண்டே. (4)

இது - தனிச்சொல்
எனவாங்கு,

இது - பதினான்கடி நிலைமண்டில ஆசிரியச் சுரிதகம்

புனன்மலி யுலகத் தனைவருங் கண்டு
தனியுயி ரிவனெனச் சாற்றும்யா னொருவனை
நல்வினை தீவினை யென்றநா யிரண்டுந்
தொல்வினை மலமெனச் சூழரா மூன்று
மந்தக் கரணமென் றறைபுலி நான்கும்
பந்தவிந் தியமாம் பாய்மா வைந்துங்
காம மாதிய கள்வ ரறுவரு
மேமப் பிறப்பா மெழுவகைக் கூற்று
மெமக்கிரை யெமக்கிரை யெனப்பல கூறிச்
சுமக்கருந் துயர்செயத் தொடர்த னோக்கிப்
படும்பரி சனைத்தையும் பார்த்து வாளா
விடும்பரி சுன்ன துன்னடி யார்க்கூஉ
யவர்பணி யென்றலைக் கமைய நிறீஇப்
பவப்பிணக் ககற்றப் பகர்தனின் கடனே. (1)

நேரிசை வெண்பா.

நின்கடனா மென்னை நிலைநிறுத்த னாயடியேன்
றன்கடனா நின்பதத்தைச் சார்கையே - மன்கடநா
கக்குலங்கள் சூழுங் கதிர்காமத் தார்ந்தமுரு
கக்குமரா வேலாகு கா. (2)

கட்டளைக் கலித்துறை.

காலனைப் பூங்கணை வேளைச் சயங்கொண்ட கண்ணுதறன்
பாலனைப் பார்வதி மைந்தனைத் தேவர் படைத்துணையைக்
கோலனைக் கோலக் குறமின் மணாளனைக் குன்றெறிந்த
வேலனைத் தண்கதிர் காமத்தென் றாயை விழைநெஞ்சமே. (3)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

விழைவகன்ற முனிவகன்ற நினைப்புமறப்
      பறத்தொலைத்த வீட்டின் மாயை,
நுழைவகன்று தனிப்பரசிற் சுகோததிமென்
      மேற்றிளைத்து நுகர்ந்து வாழ்வார்,
கழையெழுந்து விசும்பிவர்ந்த கனத்தூன்று
      கம்பமெனக் கதிக்கும் பண்ணைத்,
தழைவகன்ற வளனளிக்குங் கதிர்காமத்
      துத்தமன்றாள் சார்ந்தார் தாமே. (4)

கலிநிலைத்துறை.

தாக மெடுத்தும் போகம் விடுத்துந் தனியாகி
யாக மிளைத்தும் யோகம் விளைத்து மலைவீர்காள்
சோக மவித்தா ராக மவித்தார் சுடரேசர்
போக மலர்த்தா ளாக வடுத்தே புணர்வீரே (5)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

வீரம னப்பகை யாரற வுத்தம மேவவு ளக்குறியார்
தாரமனைப் பொருளாரநினைத்தவர் தாமும வைப்பெறவே
சோரம தக்கரி மாமுக னற்றுணை சோர்வுற நத்தியவே
லாரம திற்கதி காமம திற்றரு மாறுமு கப்பரமே (6)

எண்சீர்க்க்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

பரமன் மெய்க்கவுத் தரம ளித்தசிற் பரம நிற்பதப் புணைதனைப்புலிச்,
சிரம வற்பவக் கடல்க டக்கநச் சியத வர்க்கரு ளுறவெனச்செயும்,
வரம னைத்துமெற் கெனவி தத்தில்வைக் குதி சைக்குமைக் கலிநி கர்க்கவா,
னரமு சுக்குழுக் குதித ரப்பொலி நகைக திர்க்கிரிக் குரிய வத்தனே: (7)

பதின்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

அந்தம னச்செயல் பெற்றிடு மெய்த்தவர் மொய்த்தத னிப்பர
      வைச்சிர னித்தந டித்திட வருபாலா
முத்தணி யிட்டெழு பொற்றன பத்தினி நிற்பெயர் சொற்றிடு
      முற்பட வட்கைமுளைத்திட வளிசீலா
நித்தவ நித்தத னிப்பொருண் முற்றுமு ரைத்தடி யர்த்தெற
      நிற்கும யற்கொரு சத்துரு பொருகாலா
வெத்தல மொத்ததி தற்கென நிச்சலு மெச்சுக திர்க்கிரி
      யிற்குடி யுற்றவ வெற்கருள் சயவேலா (8)

எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

வேலையு முடன்வாரு சூரையு மெதிர்பொரு
      மேருவு மழல்பட முன்சீறிக்
காலையும் வெயில்படு மாலையு நினைதரு
      காதலர் தம்பகை யுந்தூறிச்
சோலைம லையுமலை வாயினு மெழில்விரி
      சோதிம லைமுடி யினுமேறிப்
பாலையு றழுமொழி யாலவி ழியளொரு
      பாகமு றையமயி லமர்வோனே. (9)

தலைவன் வினாதல்.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

உடையவர்சண் முகர்கதிகா மத்துள்வாழு மொண்னுதலீ
      ருமக்கொருசொல் லுரைக்கக் கேண்மி
னிடையுமக்கிவ் விடைதெரியக் காணகில்லே
      னென்பதுசத் தியமலவோ விசைப்பீ ராயிற்
படைநெடுங்கண்ணயிலினத்தார் பகையீ தென்னப்
      பதைபதைக்கு மவற்றினைப்பத் திரப்படுத்தித்
தடைபடுமென் னுயிரெனக்கு முன்னேயீயச்
      சமைவீரே லமைவீரே தளர்வுறீரே (10)

அம்மானை - மடக்குத்தாழிசை

ஏகமாய்ப் பூரணமா யேய்ந்தகதி ரேசனுக்குத்
தேகமே வேங்கைத் திருவுருவ மம்மானை
தேகமே வேங்கைத் திருவுருவ மாமாயின்
மோகமாய் மானை முயங்குவதே னம்மானை
முன்பின் கெட்டார்க்கு முறையுண்டோ வம்மானை. (11)

பாங்கி தலைவிக்குரைத்தல்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

மானை மணந்தவர் யானை புணர்ந்தவர் வாண்மலை யின்மீதே
யானை யெனும்படி மானை யெனும்படி யாவரு ணர்ந்தாரே
தானை சுருங்கிய மேகலை கொஞ்சு சரோருக வந்தேனே
கானையடைந்தவிவ் வேளு ளியம்பிய காதலுணர்ந்தேனே (12)

வஞ்சித்துறை.

தேனார்புனைதரு-கோனார் பரவிய
வானாரிலகுமெ-மானார் திகழ்வே. (13)

புயவகுப்பு.
ஆசிரிய வண்ணவிருத்தம்.

திகழிரவி மண்டலக் குலனறைகொள் பங்கயத்
      திரளிரு புறம்பெற்ற கனமகர குண்டலக்
      தலனீடு மொளிவீச வைத்துப்பரிந்தன
தினகரர்கண் மந்தரப் பனிவரை யிரண்டுபத்
      தெனுமவையி னும்பர்புக் கொளிசெயு மெனுந்தகைத்
      தெனவாகு தொடியோடு மெச்சப்புனைந்தன
திரைமணிசெ யம்பரத் தொடுமலைசெ யம்புயத்
      திருடர்கண் மனம்பதைப் புறவரைகள் பம்பரத்
      தினிலாட வயில்வீசி யிட்டுப்பொலிந்தன
சிறுவிதி மகந்தொலைத் தவன்முத லனந்தபற்
      பலமுனி வரும்பர்சக் கரனொடு சொரிந்தவக்
      கதையானு மதயானை யொப்பத்ததும்பின. (13-1)

பகழிபடு பங்கயத் திலகமட மங்கையர்ப்
      பணிலவளை சங்குகைத் தலமகல வந்தபொற்
      பதனாலு மதனாரு நச்சக்கிடந்தன
பரவைவரு சம்ப்ரமத் தொடியர்கள் புகழ்ந்தபொற்
      பதனொடு திரண்டவற் புதவிருவர் கொங்கையொப்
      பருமால விழியோடு தைக்கக் குழைந்தன
பதுமனொடு கும்பவுற் பவமுனிவ னும்பவப்
      படிறற வணங்கவர்க் கபயவர தந்தரத்
      திருமார்பி னிருநீள்கை யத்திற்புகன்றன
பதமலர் புனைந்தமுத் தரினொடு பணிந்தபத்
தியரொடு புகழ்ந்தவெற் குதலையு மகிழ்ந்துவித்
தகமான மலரொடு மிட்டுத்திகழ்ந்தன. (13-2)

அகழிடமு மும்பர்சித் தரினிடமு மிம்பர்வித்
      தகரிடமு மெங்குமெய்ப் பொடுபுனைத் தரும்புகட்
      செயுமார மணம்வீச லுற்றுப்பரந்தன
அரியமண மன்றல்கட் கமழ்புழுகு சந்தனத்
      தணிமுலைய நங்கையர்த் திலகமொடு குன்றவர்க்
      கருமானு மிடுமாலை மொய்த்துக் கமழ்ந்தன
அசலவிறை நந்தவச் சிரவயுத னந்தலைக்
      கதிர்முடி நொறுங்கவுக் கிரமனைய செண்டின்முற்
      படுகால னெனவேகி மொத்தித்திரிந்தன
அருணகிரி யன்றிருப் புகழொடு படர்ந்துசொற்
      கருமண மணந்துவெற் றியினொடு திரண்டுநற்
      கவியோது படையாறும் வைத்துக் கவின்றன. (13-3)

மகிழினொடு சண்பகத் தறூகவிழ் கடம்பைமெய்த்
      துளவினொடு தும்பைபொற் குழையவி ழரும்புநற்
      கடியார மடியார்கள் தொக்கத்துதைந்தன
மலையரையன் மங்கைபொற் றனவமு தருந்தவைத்
      தகமுற முயங்கவக் கணமதி னியங்குபற்
      பலவாக மொருதேக மொத்துக்குவிந்தன
மரைமல ரமர்ந்தவச் சதுமுகன் மனந்திகைப்
      புரபிர ணவந்தழைப் புறவுரை பகர்ந்துவற்
      கதிர்வீச முடிமீது குட்டித்தணிந்தன
மறைமுடி வொளிந்துமிக் கவரக மமர்ந்துகெட்
      டவாக மிரிந்துபற் பலநகர் திருந்துமெய்ப்
      புகழ்வீசு கதிர்காமன் வெற்றிப்புயங்களே. (14)

புயமுமீ ராறுளான் புகழுமீ ராறுளான்
நயமுமென் மேலுளா னலமுமென் மேலுளான்
கயலுலா மலையினான் கதிருலா மலையினான்
சயவிலாஅ சத்தனே சமைவிலா சத்தனே (15)

தலைவனை வேண்டல்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

சதமகன்கன் னியைப் புணர்ந்துங் கானவேடத்
      தையலைப்புல் லியுங்காம சரத்திற்றப்பா
மதமகன்பக் குவமுணர்ந்திங் கடியார்க்கோதி
      வனசவிழித் திருநெடுமால் வயிற்றிலார்முன்
னிதமகன்சென் னியிற்புடைத்த கதிர்காமத்தாய்
      நிற்குறித்தே யிவள்வாடி நீந்தற்கொண்ணா
வதமகனம் மயற்பவத்த ழுந்தல்கண்டு
      மறியார்போ லிருத்தவருட் கழகிற்றாமோ. (16)

இரங்கல்
நேரிசை வெண்பா

ஆமாங் கதிரேச ரன்றெனக்குத் தந்தமயல்
போமாறிங் கெண்ணிப் புகலுங்கால் - வேமாறூ
சந்தனத்தைப் பூச றணந்தன்னா யாங்கவன்பாற்
சந்தனத்தை யின்றனுப்பிற்றான் (17)

கிளிவிடுதூது-கட்டளைக்கலித்துறை.

தானத்த மாதியொன் றுந்தெரி யார்புகழ்ந் தார்தமைமீ
தானத்த மாதனத் தேயிருத் தார்தளர்ந் தார்தமக்குத்
தானத்த மாதன மாங்கதிர் தாமரைச் சார்ந்துரையத்
தானத்த மாதயர்ந் தாளெனப் பூம்பொழிற் றத்தைகளே. (18)

மடக்கு - எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

தத்து ம்ணிப்புயத் தணிதேங் கடப்பையேமா
      றம்மகத் திற்குறிக் காதேங் கடப்பையேமால்
வித்தகமா மரைமலர்த்தாட் கஞ்ச மேயாம்
      வெகுண்டுநமன் விடுமலர்த்தாட் கஞ்சமேயாங்
குத் துபடக் குமைத்ததுமக் கடலை யாமே
      குலைந்தனமைம் பொறிகளின்மக் கடலை யாமே
சித்திதருங் கதிர்காமன் றிருக்கண் டோமே
      சிலையெடுத்திங் கதிர்காமன் றிருக்கண் டோமே (19)

பிரிவுழிக்கலங்கல்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

அண்டர் மாதர்க டொண்டை வாய்நுக ரந்தநாரணன் மருகராய்த்
தொண்டர் நாதரெனுந்த்ரி யம்பகர் சுந்தரம்பெறு குமரரா
யெண்டி சாமுக மெங்கும் வந்தவ ரெற்பிரிந்திட லொண்ணுமோ
கண்ட பேர்களு மென்சொல் வார்கதிர் காமமேவிய தோகையே. (20)

இரங்கல்.
மடக்கு- எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

தோகைமீதுவி ருப்படைந்தவர் தோகைமீதுவி ருப்பிலார்
      தூயவன்பா கத்துளார்மலர் தூயவன்பர கத்தெறார்
வாகைப்பட்டகொ டிக்குளாரடி வாகைபட்டகொ டிக்கிலார்
      மலைத் தணித்தவை வேலினார்மத மலைதணித்திட வேலிலா
தோகையென்றவ ளுக்கடுத்தவ ரோகையென்றவ ளுக்குறா
      ரோதிமற்குரு வாகிவந்தவ ரோதிமற்குரு வாய்வரார்
சாகையார்பொழி லார்கதிர்க்கிரி சாகையார்க்கிவை யொண்ணுமோ
      தாளினோடொரு தாளினின்றுத வஞ்செயுங்கம லங்களே. (21)

இரங்கல் - கலிவிருத்தம்

கமலா சனனச் சுகதிர்க் கிரியான்
முமலா சறுமுத் தர்களுக் கறிவான்
விமலா சலமெற் றெறவிட் டிரிவா
னமலா சலனித் திடுநல் லுளனே (22)

நாரை விடுதூது.
கட்டளைக்கலித்துறை.

கல்லவ ரங்கே தரவருள் வாரிமை யோர்நடுங்க
வல்லவ ரங்கே தனமுடை யார்க்கென் மயலனைத்துஞ்
சொல்லவ ரங்கே தனித்தே னலார்கதிர் காமந்துனிச்
செல்லவ ரங்கே தருங்கோ தையோடெனைச் சேர்குருகே (23)

இரங்கல் - தாழிசை

குருகமர்ந்த வேலையே முருகமர்ந்த சோலையே
      கூதிர்தந்த மாலையே யோதிநின்ற தாலையே
யருகுநின்ற பானலே பெருகிவந்த கானலே
      யாலடர்ந்த நீழலே மாலடர்ந்த ஞாழலே
யுருகிநின்ற வன்புதந் தருகுநின்ற வன்பொழித்
      தூடல்காட்டென் முலைபுணர்ந் தாடல்காட்டென் மகிழ்நனாற்
றருமென்மோக மயிலனாள் பிரிவிநோதர் தேடியே
      தாவுசோதி மலையிலே போகலான தறிவிரே. (24)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

வீரத்த னஞ்சயனற் றேரூர்ந்த மாயவன்றன்
      மருகன் வேலோன்,
கோரத்த னஞசயன்கோட் கூற்றினரைத்
      துமிக்கவெற்காக் கொண்டு நின்ற,
வோரத்த னஞ்சயனுக் குரைத்தபழம்
      பொருளுரைக்க வுற்றோன் வேழத்,
தாரத்த னஞ்சயலா ரயிலுடையான்
      கதிரையெனுந் தானத் தானே. (25)

எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்

தானவர் குலமற வேலயில் விடுகுரு சாமிம யிவெரிந் மீதேறிக்,
கானவர் குலமயி லோடம ரர்கள்குடில் சாதன் மணமலர் தாஞ்சூடி,
மானவர் முதலிய வேனையர் பரவிட வாழ்வுறு பதியதை யாதென்பீர்,
கூனவிர் மதிதவழ் வானம துறுகதிர் காம மெனவுளங் கொள்வீரே. (26)

இரங்கல் - நேரிசைவெண்பா

கொள்ளைகொண்டு போவாரொ கூடாரைக் கோறல்புரி
வெள்ளிலைவே றாங்குவெற்றி வீரனெனிற் - றள்ளா
முதிர்காமத் தேமயங்கென் முன்னொளித்திங் கென்னைக்
கதிர்காமத் தேயிருந்தார் காண். (27)

கட்டளைக்கலித்துறை.

காணக் களிக்கவுங் கேட்கப் பனிக்கவுங் கண்டுபுல்லிப்
பூணச் சிலிர்க்கவு முன்னத்தித் திக்கவும் போன்றதுகாண்
டோணக் குறிக்குத் தொடராத வாற்றிற் சுடர்க்கிரிமேல்
யாணர்க் கமழ்முரு காம்பசுந் தேன்செய்த வற்புதமே. (28)

மடக்கு- எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

புத்தர்மதங் கத்தமதம் போக்கியமா தங்கம்
      பொன்னிவளென் றுன்னவரப் புரிந்ததுமா தங்கந்
தத்தகலு முத்தர்களுக் கீவதுமோ முத்தி
      சாதனமுள் ளார்களுக்குச் சாற்றுலுமோ முத்தி
நத்துபுகழ் செப்பவரு நான்மறையே சிலம்பாம்
      நகரெனவே கொண்டதுஞ்சீர் நண்ணுகதிர்ச் சிலம்பாம்
பத்தர்களுக் கொத்ததுணை பாதம்பங் கயமே
      பன்னுபவர்க் கன்னையுடற் பையுளின்பங் கயமே (29)

இரங்கல் - எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

கயம்வந் தநங்கை யொடும்வந் திருந்த கதிர்காம மன்ன ரெனையே
நயம்வந் தமங்கை யொருமுன் பிறந்த நலிகான் முனம்பொ லெழவே
யுயவந் ததன்மை யுளநா மெனும்பெ ருணர்வென் னவாகு முயிரே
பயம்வந் தபெண்மை யறவுந் திரிந்த பிறகென் புரிந்து பெறுமே. (30)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

புரிந்த யல்லைநீ யடியவர்க் கடிமையைப் புன்செயற் பகையாரை
யரிந்த யல்லைநீ கதிர்க்கிரி யான்பத மடைந்தவன் றலஞ்சூழ்ந்து
திரிந்தை யல்லைநீ மடமையே புரிந்தறத் தீமையுட் செலுநெஞ்சே
கரிந்தை யல்லைநீ சாகிலை பாழ்படக் காண்கிலே னுனைநானே. (31)

இரங்கல்- எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

நானா விதத்தென் மனமே மயக்கி நடுநா ளிருட்டி லெனையே
மேனா ளடுத்த வுறவோ ரெனப்பல் விதமோ டணைந்து கனவிற்
போனார் கதிர்க்கி ரியினார்க் குநல்ல புலழ்வோ வுரைக்கி லழகோ
மானார் தமைக்கொன் மயலீ தலென்றன் வடிவே லருக்கு மரபே. (32)

காலம் - மடக்கு.
எண்சீர்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

வேலெடுத்த கதிர்காமன் கொடுமையினு மென்மேல்
      வில்லெடுத்திங் கதிர்காமன் கொடுமையினும் பெரிதாம்
நூலெடுட்த்த விடைவருந்த நுவன்றிடுங்கோ கிலமே
      நொந்தமையைப் புலம்புறுங்கை நுவன்றசங்கோ கிலமே
கூலமணித் திரைவாரிக் குளிறுசமுத் திரமே
      கொடியேற்குத் தீவினையே கோணிசமுத் திரமே
யாலமிடத் தோன்மிடற்றி லெழுந்திடுங்கா லமுமே
      யறைகுறிலெற் றேடிவரி மனற்பிறங்கா லமுமே (33)

இரங்கல்.

எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

ஆலமி டற்றவனுலும றைப்பொரு ளாவதெ
      னக்கரு ளென்போதிற்
றாலம திற்பெரி யோர்கண் மதித்திடு தாரணை
      வைத்தவர் தாமேவந்
தேலமி டப்புகை நாறுமென் மைக்குழ லிரந
      றைக்கடி யுண்டாரே
சாலவி ழைத்தமி யேனை யயர்த்தனர் தாவில்
      கதிர்க்கிரி யன்னாரே. (34)

கட்டளைக்கலித்துறை.

நாரா யணன்பது மாதனன் றேவர்க ணான்மறைகள்
பாரா யணத்துட் படுங்குறி யாம்பசும் பாய்புரவித்
தேரா யணந்தவ ராமற்செ லும்படி செய்தரக்கர்ச்
சூரா யணங்கிழித் தான்கதிர் காமத்தென் றூயவனே (35)

இரங்கல் - மடக்கு

அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

தூயம றைக்குவ ரம்பானார் சோரவி னைக்கிவ ரம்பானார்
சேயம தித்தலை யாறானார் சேயின் முடித்தலை யாறானா
ரேயக திர்ச்சிலை வேளானா ரேவுக ழைச்சிலை வேளானார்
கூயம லர்க்கண் வருந்தேனே கூசிய னைக்கண் வருந்தேனே. (36)

இருபத்தொருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

தேனவிர் பகற்கஞ்ச முகமாறு கொண்டமை தெரிக்கிலொரு
      குடிலை யுடனே செய்யவைஞ் சத்தியா னென்பதற் கேமற்ற சீரங்க
      முண்மை யகலாத், திருவருட் குணனியா னென்பதற் கேசிவ னுதற்கணிற் பொறியி லெழுதல்,
ஊனவிரி யோனியுற் பவமிலாப் பதியாகி யகராதி யுறுபொ றிகளா,
      யுளபொரு ளியானென்னன் மிகுசத் துவத் தனொடு மொருநீலி நடுவ ணுறைத,
      லோர்பக லிருட்குநடு வானவனு மதுவல துதுவிரண் டற்ற விடமே,
நானவிரு தானமென நாட்டியது தரிவேலி னண்ஞான சத்தி யதனை,
      நான்றரித் தவனெனச் சொலுமாறு மயில்கொடியின் ஞாலமுத னாத வரையும்,
      நடுவனா யவைகளாய் மேற்கொண்ட நன்னிலைய னானெனல் விளக்கி யதுவாங்,
கானவிரு கூந்தலர்க் கொளலிச்சை கிரியனெனல் சாட்டவசு ரர்க்களைந்து,
      காத்தனமும் மலநீக்கி யுயிர்கட்கு வீடுதவல் காமமெனு மேம வறைமிக்,
      காணொளியின் னிலையென்னி லஃதினிலை யெவர் காண்பர் காட்டுவரிவ் வஞ்ச கத்தே (37)

பாங்கன் றுணிவு.

அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

வஞ்சனை மிஞ்சு கருங்கண தம்பல மஞ்சல வொண்குழலே
கொஞ்சிய கிஞ்சுக மன்றத ரங்கள்கொ ழுங்கிரி யன்றழகார்
மஞ்சள் படர்ந்தகல் கொங்கைக ளஞ்சுக மன்றவண் மங்கையரே
தஞ்சென நின்னுயிர் கொண்டவள் கண்டது தண்கதி ரின்கிரியே. (38)

இரங்கல் - கலிநிலைத்துறை.

கதித்தமுலை சிறுத்தவிடை கறுத்தவிழி
      சுரித்தகுழற் கன்னிமாதர்,
துதித்தமலர் நறைத்தபொழில் சுடர்க்கிரியி
      னிடத்தர்திறல் சொல்லவாமோ,
மதித்தென்முலைக் குடத்தையிரு கரத்திலுற
      வணைத்துபடர் மோகவாரி,
குதித்தெனிடைக் கலத்ததிர வியத்தையெடுத்
      தெனைத்தவிக்கக் கொண்டுபோனார். (39)

மேகவிடு தூது.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

போனவர் வந்து புணர்ந்தெ னகங்க ளிபொங்க வரந்தரு வாரன்றே,
யானவி தங்கள் பணிந்துதெய் வங்க ளயர்ந்து கலங்கினனொன்காரீர்,
நானம ழிந்தென தாருயிர் சிந்துமு னாயக ரொண்கிரி மீதேகிக்,
கானவர் மங்கையி லாவமை யங்கொடு கண்டுமொ ழிந்தருள் செய்வீரே (40)

மடக்கு - கொச்சகக் கலிப்பா

அருடருமஞ் சண்முகமே யரிமலைமஞ் சண்முகமே
திருமருகுஞ் சரவணனே சேர்ந்ததுங்குஞ் சரவணனே
தருமமுளார்க் குறுமுனிவன் றனக்கன்பன் குறுமுனிவன்
மருவமனங் கொண்டீரே வன்னமனங் கொண்டீரே (41)

சித்து.
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

ஈரமதி புனைசடிலத் தரனார் பிச்சைக்
      கிரங்கிமா தங்கங் கொடுத்த சித்தரேம்யாங்
காரளவு கதிர்காம னருள்கைக் கொண்டக்
      கரியோர்க்குப் பொன்றனைக்கல் யாணஞ் செய்தோங்
கூரயிலாற் குன்றமெலா மிகை செய்தோங்
      கூழையும்பூ ரியிற்சமைத்துக் கொடுப்போ மப்பா
காரத்தைக் கனகமெனக் காட்டிச் சிங்கக்
      கணத்தினையு மரிபோலக் காட்டு வோமே. (42)

இதுவுமது.

காட்டுமருட் கதிரைமன னிருப்பை யீழங்
      காட்டியொளிர் மனையைமா தங்க மாக்கிச்
சேட்டுலகி னாகமதை வெள்ளி யாக்கிச்
      சிதம்பரத்தை யாடகமாய்ச் செய்தோ மீசர்க்
காட்டமல்ல விதுதழையொன் றின்றி யாட்டை
      யனந்தமெனப் பலுகுவிப்போம் புலியைக் கூட
நீட்டிடுவம் வேங்கையென வரிதா ரத்தை
      நிசிசெய்வோ மரிதெமக்கு நித்தஞ் சோறே. (43)

இரங்கல்.

எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

சோறு விண்டமறை நாலு நொந்துபுகழ்
      தூவி நின்றகதிர் காமமே,
னீறு கொண்டமுக மாறு மொண்புயமி
      ராறு மன்றெழிலின் மாதரார்,
சேறுசெய்தவிழி யன்று குஞ்சியல செய்ய
      வொண்பவள மன்றுவா,
யூற லொன்றுமென தாறு கொண்டநல
      முண்டு சென்றவ ணொளிந்ததே. (44)

எழுதரிதென்றல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

ஒளிதேர் மறித்தகதிர் மலையிர் மடற்பரியி
      லுசைவே னெனக்கனத்த,
வளியோ டுரைத்துவர வெளிதே முலைக்கிரியு
      மமைவாக ணளவினுக்குங்,
கிளியார் மொழிக்குமவ ரிடையார் வெளிக்குமளி
      கிளையார் குழற்கு மிக்க,
நளியா மனச்சிலையு மரிதே கிழிக்குமிகை
      நகையாகு முணர்விடுத்தே. (45)

ஊசல்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

உணர்வார்க் குணர்வரியீ ராசி ரூசல்
      உன்னாதவர்வறியீ ராடி ரூசல்
பணவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்
      படைவாய்ப் படுமயிலீ ராடி ரூசல்
மணமார் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்
      மறையாங் கதிர்ச்சிலம்பீ ராடி ரூசல்
தணலா டிதன்குமர னாடிரூசல்
      தகைதீ வினைக்குமர னாடிரூசல். (46)

பாங்கி வினவல்.
எழுசீர்க்கழி நெடில் ஆசிரியவிருத்தம்.

ஊச லாடின ரோகை கூறின ரும்பர் மாதர்க ணாணவே
பேச லாடினர் பூமுடித்தனர் வாவி தோய்குநர் பேணலார்
கூர வேவிய வேலி னார்கதிர் காம மேவிய குமரரே
நேச மாகிய மான னாரிலி னாரெ னச்சொலிர் நீவிரே. (47)

கார்காலம்.
எழுசீர்க்கழி நெடில் ஆசிரியவிருத்தம்.

நீவிய குழல்வடி வாகியென் முகமதி நீடிய கதிரெதி ரற்கஞ்சிப்
பாவிய முகின்மத னார்விடு பகழிப ணாடவி யுரகம்வி ழுங்கிடல்கண்
டேவிய லமையமி தாமென வுத்தியெ னாரழல் குமுகுமெ னப்பெய்து
வாவிய காலமி தாகிலெ னாகின வாண்மலை யார்தரு மகிழ்வீதே. (48)

இளவேனில்-கட்டளைக்கலிப்பா.

தேவ தேவர் சிவசுப்ர மண்யனார்
      சேர்ந்தி ருந்த திருக்கதிர் காமத்து
ளாவி போல்பவர் வந்தெனைச் சேர்ந்தகன்
      றாரப் போதை யறிந்திவ் வனங்கனார்
மாவிற் கோலி வளைத்தது மன்றியிம்
      மாலை வந்ததுங் கண்டுகொ லெற்றெற
வேவிப் பூவயன் விட்டிட வந்ததா
      லிந்த வேனி லிளந்தைக் குழந்தையே. (49)

பனிக்காலம்-நேரிசை யகவற்பா.

ஐயரி படர்ந்த மைவிழி மடவார்த்
தொய்யில் மெம்முலைத் தோய்ந்த குமர
னண்டர்தந் துயரம் பிண்டிடக் குறித்துக்
கண்டகர்க் குமித்த மண்டல வயில
னகில சராசர மியாவையு மாக்கி
நிகிலமுந் தானாய் நிறைந்த பராபரன்
றாணுவுக் கொருசிறு தனயனாய்ப் புவியிற்
காணுமெற் குருவாய் வந்தகாங் கேய
னன்பர்க் காக வலைவாய் முதல
மன்புக ழாறு படையினும் வைகிக்
காணல் காண்பான் காட்சி காட்டு
மாணக் கடந்த வைப்பி லமர்ந்து
முக்குண மைங்கலை மும்மைக் காலமுஞ்
சிக்கற வுயர்ந்த சிற்பிர காசன்
முதிரை நகமணி முளைத்தெழு சோதிக்
கதிரை நகரையுங் கருதுபா சறையாக்
கொண்டுவிண் டவர்விண் டவர்குழா மயன்முற்
றண்டுகொண் டவர்மண் விண்டுவிண் டுருகிப்
போற்ற விருந்த புண்ணியற் பழிச்சா
தாற்ற விழிந்த வறியர்தஞ் செயலிற்
கடிமண மணந்த கமல வொண்முக
மடிவுற வெழுந்த வடவையே யீண்டுப்
பனியெனும் பேரிற் பரவித்
துனியெழ வெனக்குத் தூஉய் நின்றதே. (50)

நேரிசைவெண்பா.

நின்றா னிருந்தான் றுயின்றான்பி னீத்தனைத்துஞ்
சென்றா னெனப்படுமித் தீப்பிறப்பை-நன்றாகப்
பன்னினைந்தாய் நெஞ்சே பணிந்துகதிர் காமத்தார்
மன்னினைந்தா யல்லாய் மறந்து. (51)

தவம் - கட்டளைக்கலித்துறை.

மறந்தும் பிசகியற் றாதவர்க் குள்ளவெம் மான்மணிசேர்
நிறந்தும் பியந்துணை யான்கதிர் காம நினைந்துதுற
லிறந்தும் பியங்கக லான்மா வளவை யறிந்தடைவீர்
திறந்தும் பிகள்பயில் பங்கயம் போன்முகச் செவ்வியரே. (52)

காட்சி.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

செவ்விள நீர்க ளிரண்டொரு தண்பிறை செங்கம லங்குமுதந்
துவ்விய பகழி யிரண்டிரு விற்குமிழ் துடியுமி ணைந்துறவே
னவ்வு மயற்கிவை யென்னவ ணிந்தொரு நாளமி லங்கிடுமோ
லிவ்வுல கவ்வுல கெவ்வுல குந்தரு மின்கதி ரைக்கிரியே. (53)

கைக்கிளை - மருட்பா.

ஏவுளரும் வேர்வுறுவண் டேய்தார்வா டும்படியும்
பூவுறழ்பா தத்துணையிப் பொற்றொடியாள் - காவுலவும்
ஏமகூட மாமெம் மானிருந் தருளுங் காமகூ டத்துக் காரிகை
யாமணங் கலளா சங்கையின் றதற்கே. (54)

குறி.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

கேட்கவேண்டு குறிகள்யாவுங் கேட்கவல்ல மாதரீர்
      கிட்டவாரு மிந்நிலங் கிளைக்கவின்று மெழுகுவீர்
நாட்கள்கோட்கள் யாவுநன்று நன்குமஞ்சட் பிள்ளையார்
      நாட்டுவீ ரதற்குமுன்பொர் நாழிநெற்கு விப்பிரால்
வாட்டமின்றி வற்றினோர்நெல் வைத்திங்கெண்ண மிஞ்சின
      வந்தவாழ்வை யென்னவென்று வாய்திறந்து கூறுகே
னாட்டமூன்ற வன்பயந்த நங்கதிர்க்கி ரிப்பர
      னாளைவந்துன் றோளைமேவு நம்புபொன்ன ளந்திடே. (55)

சம்பிரதம்.
பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

அளவிடற் கரிதாய வித்தைபல காட்டுவே
      னமுதத்தை விடமாக்குவே
னண்டகோ டிகளெலா மோரணு வதற்குள்
      ளடைத்துவைப் பென்கடலெலாம்
வளமுறக் கொண்டொருகை வைத்தடக் குவனந்த
      வடவான லத்தையும்வாய்
மடுத்துண்ணு வேன்மணல் களைத்திரிப் பேனிரவி
      மதிதிக்கு மாறவைப்பேன்
களமாயன் முதலான தேவரும் பூமியிற்
      காணமுன் வரவழைப்பேன்
கருதரிய வாலகா லந்தனையு மமுதமாய்க்
      காட்டுவேன் மனநிறுப்பேன்
றளமவி ழரும்பொழிற் கதிரைநகர் தனின்மேவு
      சாமிநா தன்றிருவடித்
தாமரை படுந்தழும் பில்லாத விறைவர்முடி
      தமையுமுணர் விப்பனின்றே. (56)

உருவெளி.
வேற்றொலி வேண்டுறை.

பன்னிய வன்பருண் மன்னிய வேணில வின்பண்ணை
துன்னிய வென்னிர தந்தகை யாது தொழப்போமே
மின்னிய விடையுமை மலிந்த மேகமு
மன்னிய மேருவும் வளைந்து கொள்ளவே. (57)

மதங்கு.
கட்டளைக்கலிப்பா.

வளைகள் வீசிய மாணிக்க கங்கையார்
      மதிய ளாவிய வொண்கதிர் காமத்தார்
நனிகள் பேசிப் படித்த மதங்கியார்
      நகைக்கு முல்லை நனைகளு நாணின
வெளிய நுண்ணிடைக் கெஞ்சின மின்னின
      மேந்து கொங்கைக் கிளைத்தது மேருவே
களியெ னுள்ளங் கவர்ந்தன வாகுமே
      கலிக டத்தையைக் கானம் புகுத்தவே. (58)

குறம்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

புக்கனநின் விழிமின்கள் குயக்கு டத்துட்
      பொங்கினதா னனமதியும் பூத்த தல்லி
யிக்கணநங் கதிர்காமத் திருந்த வேந்த
      லிங்குறீஇப் புணர்வரென்றன் குறத்தி னன்றோ
சங்கரனைப் பொறிமணந்தா ளுமையா ளந்தச்
      சாம்பசிவ னைப்புணர்ந்தா டப்பா தம்மா
விக்குயர்த்த நிசமதனிற் பால னிவா
      யில்லையெனிற் குறமுமினிச் சொல்லேன் யானே. (59)

கலிவிருத்தம்.

யானென தெனத்தெரிவல் வாணவ மகற்றீர்
வானினை யளாவுகதிர் காமமலை வாழக்
கோனினை நினைக்கிலிர் குளிக்கிலிர் களிப்பிற்
போனமுடி வற்றபத மெங்குபுணர் வீரே. (60)

களி.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

புணர்முலையார் தெய்வானை வள்ளி பங்கன்
      போந்தகதிர் காமமென்ற பொருப்பிற் பூத்த
விணர்முடங்கற் பெண்ணைமது வுண்டு வாழ்வே
      மீதருந்தி யேயயனும் பிரம னானான்
றுணரலங்கற் றுழாய்முடியன் மாலாய்நின்றான்
      றோகைபங்கன் பித்தானான் றெல்லை யீதுண்
டுணர்வழிந்தே மதுவானா னொருத்த னெங்கட்
      குரியதெய்வ மதுவுண்டே கஞ்சா வுண்டே. (61)

இதுவுமது - நேரிசை வெண்பா.

கஞ்சாவைத் தின்னார் களிமதனப் போர்புரியார்
தஞ்சாவைப் போக்கார் தவஞ்செய்வா - ரெஞ்சா
வடியார்க் குடையகதி ரைப்புரியா ருங்கள்
குடியார் குடியென் குடி. (62)

பாண்.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

குடிகொண்ட வன்ப ருளினின்ற தெய்வ
      குறமின் புணர்த்தெல் வரையா,
னடிகொண்டு ணர்ந்த வவர்நொந்த தீய
      ரவரொன்ற நின்று வருவீர்,
முடிகொண்ட வாறு முகனெங்க டெய்வ
      முறைநின்ற பாண்கண் மொழிவீர்,
கடிகொண்ட குழ லதினின்று போவிர்
      கடிதுங்கள் வாய்க ளறவே. (63)

மறம்.
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

அற்றவர்தந் தீவினையைத் தொழுவார் வாழு
      மருங்கதிர்கா மத்தடத்தி லரச ரென்றும்
வெற்றோலை தன்னைச்சீ முகம தென்றும்
      வீண்பேசி வந்துநின்ற தூதா கேளாய்
கற்றவராற் பழிச்சுமற வக்கு லத்தெங்
      கன்னியைவேட் டனந்ததவர் காலங் கண்டார்
மற்றதனை யறிந்துமனர் பட்ட பாட்டின்
      மாட்சியுண ராய்போலும் வந்த வாறே. (64)

நாரைவிடு தூது - கலிநிலைத்துறை.

வந்தன னன்றென் கொங்கை புணர்ந்த மயில்வீரன்
கந்த னரன்புகழ் மைந்தன் கடம்பன் கதிர்காமன்
முந்த வணங்கென் சிந்தை வருந்தன் மொழிவாயாற்
சிந்தை யகன்றெம் பண்ணை யுவந்திரி செந்நாராய். (65)

மடல்விலக்கு - கலிவிருத்தம்.

நாரணன் மருகராய் நம்பன் மைந்தரா
யேரணி கதிர்க்கிரி யிறையன் பாகினார்
வாரணி முலைமட வாரைப் புல்கலா
தோரணி மடறனை யூர்தற் கொண்ணுமே. (66)

முதுவேனிற்காலம்.
வஞ்சிவிருத்தம்.

ஒண்ணுதல் புணர்ந்தபுய வுத்தமன்
கண்ணுதல் பயந்தவொரு கர்த்தனுக்
கெண்ணலரின் வந்தமுது வேனிலே
கண்ணினன றூவல்கதிர் காமமே. (67)

அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

காமமில்லான் பாசமில்லான் கருத்துமில்லான்
      மறைமாற்குங்காண கில்லா,
னாமமில்லா னுருவருவூர் மேலுமிலான் குணங்குறி
      நாட்டங்க ளில்லா,
னேமமில்லா னாதிநடு வீறில்லான்
      மனைமுளையுற்றாரன் றாமெல்,
லாமுமில்லா னெவனவனென் னகத்தொளிர்நங்
      கதிரையருந் தலத்தா வானே. (68)

கூதிர்காலம்.
கட்டளைக் கலித்துறை.

வாகா றிரண்டுடை யான்கதிர் காம மலையின்முந்நீ
ரேகா றிரண்ட குடங்கொண் டனன்முகந் தீர்த்தெனுயிர்ப்
போகா றிரண்டறப் பெய்தன வெங்கடுங் காலனிற்பூத்
தேகா றிரண்டுசெய் வாரெனக் கூதி ரெனுங்கொண்டலே. (69)

கட்டளைக்கலிப்பா.
மடக்கு.

கொண்டன்மேலவர்க் கிட்டதும்பாசமே
கொண்டன்மேலவர்க் கிட்டதும்பாசமே
பண்டளிக்கப் பரித்ததவ்வேலையே
பண்டழிக்கப் பரித்ததவ்வேலையே
அண்டர்வீழ விருந்ததுகாமமே
அண்டர்வீழ விருந்ததுகாமமே
தொண்டர்க்கீர்வதும் பாதகமலமே
தொண்டர்க்கீர்வதும் பாதகமலமே. (70)

எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

தகர்வரிய பவக்கடலுந் தாண்டி யப்பாற்
      றனிமாயை தனைப்பரமா சாரி யாராற்
றிகழ்மகவான் ஞாலத்திற் றுலைத்துன் றாளைச்
      சேர்ந்தடியார் பணிசெய்துயச் செயுநா ளுண்டோ
மகரமுலா வியவுததி மேல்வேல் வாங்கும்
      பலனுடையாய் கதிர்காம மணியே யன்பர்
புகழ்மலையே மலையமலை யுவந்து பெற்ற
      பொற்கொழுந்தே நிற்பழிச்சாப் புலைய னேற்கே. (71)

எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

புலையரா யிழிந்த தொழிலராய் மயங்கும்
      புந்திய ராயினு முறுப்பில்,
கொலையரே யெனினுங் கதிர்மலை
      குறித்தோர் குறிக்குமெங்கடவுள ராவார்,
நிலையராய் வேத வேள்விய ருயர்ந்த
      நீள்குவத் தினரெவ ரேனுங்,
கலையுலாங் கதிர்கா மனைப்பர வாதார் கவியினுங்
      கடைப்படும் பிறப்பே. (72)

எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

பிறப்பகற்று நினைப்புடையீர் வாரீ ரெங்கள்
      பெருமானார் கதிர்காமக் கிரியைக் காணீர்
நறைக்கடியார் மலரெடுத்துத் தூற்றீ ருங்க
      ணாக்குழற மெய்சிலிர்க்க நடனஞ் செவ்வீர்
பெறற்கரிய பேறடைந்த பெரியோர் தாளைப்
      பேணிடுவீர் நாணிடுவீர் பிராற்கன் பில்லார்க்
கறப்பெரிய தவமியற்றல் வேண்டாங் கண்டீ
      ரமைவீரே வொப்புமக்கிங் கறிவோ ராரே. (73)

இரங்கல்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

ஆர மெறிந்தனை மேனி கயந்தனை யாணையொ ழிந்தனையாற்
றீர மகன்றனை வாயு மலர்ந்தனை சேலறல் சிந்தினையே
நார மெறிந்தப யோததி யேயெனி னாதர் பிரிந்தனையே
வீர முறுங்கதிர் காமம் வரும்வடி வேலரி னும்பெரிதே. (74)

பாங்கி விலக்கல்
எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

பெரிதுமக்குத் தந்தையும்பிச் சாண்டி யாகும்
      பெரியவனோ பெருவயிற்றன் பெற்றா ணீலி
கருதிலுன்றன் மனையாள்கா னக்கு றத்தி
      கடற்றுயிறா மதத்தனுற்றன் மாமன் கண்டாய்
மருவுடலற் றோனாமைத் துனனு மாங்கே
      மாமியுஞ்சித் திரப்பொறியே மன்னா நல்ல
வொருதுணையு மற்றுகுக னானாய் நீயெம்
      முத்தமியைக் (கதிர்காமத் துதவோங் கண்டாய்) (75)

கட்டளைக்கலித்துறை.

கண்டுண்ட சொல்லியர் மோகப் பயோததியிற் கவிழ்ந்து
தொண்டுங் களுக்கடி யேமெனச் சொல்லித் துதித்தவரின்
புண்டுண் டெனத்திரி யும்புலை யீர்கதிர் காமமுறீர்
மண்டந்த வந்தகர்க் கென்சொல்ல வோவெண்ணி வாழ்வதுவே. (76)
'
இரங்கல்- நேரிசை வெண்பா

வேமலிந்த தோண்மடவார் மேலியணைந் தார்விழைந்தி
ராமலிந்த வாறகல்வார் யாவரே - பூமலிந்த
பொய்கையிலே டிட்டகதிர்ப் பூதரத்தி லேயிருந்து
வையையிலே டிட்டார் மரபு. (77)

முதுவேனில்.
கட்டளைக்கலிப்பா.

புதிய கூற்றிற் புகன்றவிப் பூங்குயில்
      போர்கு றிக்கப் பொரவருஞ் சேவகன்
கதிகொள் வாளினு மேழ்மடங் கீர்வன
      கன்னி யீர்நுங் கலவியின் மென்மொழி (78)
மதியும் வந்து கிடைத்த வவற்றொடும்
      வந்த வேனிலும் வந்திலர் வந்திலர்
கதியு லாங்கதிர் காமத்தென் னாயகர்
      நானு நாளு நலிந்து கலங்கவே. (78)

எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

கலகமிடும் பொறிக்கிரைக்கா வோடி யோடிக்
      காசினியெல் லாந்திரிந்த கயவ னேனைப்
பலகலையும் பயின்றுதொழும் பான வுன்றன்
      பத்தர்கள்பா தந்தொழுது பணிமேற் கொண்டு
நல்கதியைப் பெறும்பரிசன் கருணை மேவ
      நரகமகன் றுய்ந்திடலெற் கெந்த நாளோ
வுலகமெலாம் பரவியசீர்க் கதிர்கா மத்தி
      லுள்ளவநன் மறைமறையோர்க் குரைத்த சேயே. (79)

கட்டளைக் கலித்துறை.

சேமனத் தானத்த னாதியி னார்வினை சிந்தவரச்
சேமனத் தானத்த னாதியி னாருக்குக் கொள்ளவருஞ்
சேமனத் தானத்த னாதியி னார்கதி ரைப்பதியைச்
சேமனத் தானத்த னாதியி னார்செலுஞ் செல்லகமே. (80)

நேரிசை யாசிரியப்பா.
உயிர்வருக்கமோனை.

அசரமாய் நின்றரு ளொருதனி முதல்வனை
ஆறுமா முகனை யோரிரா றுகானை
இருமையும் பயக்கு மெந்தைபெம்மானை
ஈசனற் குருவை ஞானசத் தியனை
உம்பலை யிரலையை யொருங்குவைத் தவனை
வாழியு மிறவாக் காழியின் மணியை
எண்ணிடு மாறனை யெண்ணலர் மாறனை
ஏர்மயில் வாரணத் திலகுமத் தியனை
ஐங்கர மணிநிறத் தும்பியின் றுணையை
ஒருவள வீழத் திருளொழி காமனை
ஓர்முறை நினைத்தவ ருடற்றேழ்
ஔவியப் பிறப்பொழிந் தருணிலைத் தவரே. (81)

வஞ்சி விருத்தம்.

தவர்க ணாகிய வன்பினார் - புவனம் யாதினு முன்பினார்
நவநி லாமலை யின்பொனார் - பவமி லாதவொ ரின்பினார். (82)

மாலை யிரத்தல்.
எழு சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

ஆர்பு னைந்தபெம் மானன் மைந்த னநாத ரன்கதிர் காமமே
லேர்பு னைந்தவென் மாலெ லாமுரை யீது நெஞ்சமி லாரெனிற்
கார்பு னைந்தகை யாழி யேனுங் கடாவு மற்றது மின்றெனின்
மார்பு னைந்தமர் தார்த ரக்கொடு வாவெ னின்னுயிர் மாதரே. (83)

தழை.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

மாதவ னுலகுவ லாரியி னுலகொரு மானிட னுலகெதி னும் முண்டே,
காதலின் முழுகும தாசல முகடுக மாதொயி லெழுதிய முலைமாதீர்,
சீதரன் மருகன் மனோலய விரதசி னோன்மய னுறைகதிர் மலைமீதே,
கோதறு தழையிதை நேர்தரு தழைகொள் குமாரியல் குலினெழில் கோணாதே. (84)

புன்னாகங் கண்டிரங்கல்.
கட்டளைக் கலித்துறை.

நாகத்தை மாய்த்தொரு நாகத்தைச் சேர்த்தவ னாயகன்பொன்
னாகத்தைப் பாதிசெ யம்பிகை யீன்றவ வன்றமியே
னாகத்தைப் போற்குதிர் கப்புரிந் தான்கதிர் நாகத்துப்புன்
னாகத்த ருக்கணத் தீருமக் கேச்சுற நாணெனக்கே. (85)

பதினான்குசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

கேசவன் மருக பூரண புராண கிளர்சக தரணநல் லரண
      கிருத்திம வசுர காலகா லாந்த கிரிபொடித் தவதவ யோக
நேசவின் முருக பரமநற் குரவ நிசபர வரபிர ணவத்த
      நிகமநிட் களச களோபய வீச நிர்க்குண துவிதவத் துவித
பாசமில் லவசண் முககுக தோகை பங்கபார் வதிசுத வேத
      பாரண கிருப மயிலநல் லயில பாவநா சகர்த்தவித் தகவோ
நாசமில் லவதற் பரசிவ குமர நற்சர வணபவ சேந்த
      நற்றிருக் காமத் தெங்கணா யகநீ துணையிருந் தருளரு ணயமே. (86)

தலைவி பிளமைத் தன்மை யுணர்த்தல்.
நேரிசை வெண்பா.

ஏதேது சொன்னாலு மேற்கீர் கதிர்க்கிரியெம்
மாதே துணைவரின்பம் வாய்ந்துணரா-ளோதேவா
கொஞ்ச வயதினள்காண் கூடியுன்னோ டேமகிழ்ந்து
கொஞ்ச வயதிலன் காண் கொள். (87)

வெறி விலக்கல்.
கட்டளைக் கலித்துறை

கொண்டார் வெறிதனைக் கொம்பரன் னார்தங் கொதித்தமுலை
வண்டா ரலங்கல் புலர்ந்தமை நோக்கி மதிமயக்கும்
பண்டாழ் மொழியன்னை யார்கதிர் காமப் பதியரசே
கண்டா யிதற்கென்ன வேயுரைப் பாயுன் கருத்தினையே. (88)

வண்டோச்சி மருங்கணைதல்.

எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

கருத்துமக்கிப் படித்திரிந்த சாட்சி யென்னோ
      கன்னியர்கண் ணளியாரென் காரணப்பேர்
திருத்துமுமக் கொருவார்த்தை மொழியக் கேண்மின்
      றிருக்கதிர்கா மத்தலத்திற் சேர்ந்தார்க்கொண்ணா
வருத்தமெல்லாம் புரிந்தடுத்தீ ரோர்கொம் பேந்து
      மகமேருத் துணைக்கொதுங்கி வாடல்கண்டு
நிருத்தமெலாம் புரிகின்றீர் முடிமே லுங்க
      ணேசமென்னோ வாசமலர் நீங்கிநின்றே. (89)

வலைச்சியார்.
அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

நின்றவர் கண்டவ ரந்தணர் நொந்திட நெக்கு நெக்காய்
மன்றன் மணந்துயர் கொங்கை சுமந்த வலைச்சி யர்பூத்
துன்று பெரும்புகழ் வந்தக திர்த்தட சூழ லொர்பா
னன்றிய ரம்புய வங்கயல் கொண்டு நடந்த துண்டே. (90)

தலைவி கையுறையேற்றமை கூறல்.
எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

நடந்தந்த மஞ்சூர் களன்றந்த கொந்தார்
      நறுந்தண்க டம்பார் கதிர்காமர்,
வடந்தந்த சந்தூர் குடந்தந்த கந்தூர் மதந்தந்த
      கொங்கை மடவார்த,
மிடந்தந்தென் முந்தென் கரந்தந்த கொங்கா
      ரிளந்தும்பி வந்தா டுதழையே,
படந்தந்த ஒண்ணே ரிடந்தந்து முள்ளம்
      படிந்தாள குந்த மகிழ்வே. (91)

கட்டளைக்கலிப்பா.

வேடர்போற்றுங் கதிரையில் வேடன்முன்
      மேவிப் பற்பல வாறினில் வேண்டிநின்
றாடல் வெற்றி மயிலையும் வேலையு
      மைய தந்திடென் பேனவை யன்பர்க்காக்
கூட லார்த்தெற வொற்றிவைத் தேனெனிற்
      கொண்ட பொன்னகை யேனுங்கொ டாயென்பேன்
வாடு நுண்ணுசுப் பார்க்கெனிற் பாதமா
      மலரைத் தரவென்று மடியைப் பிடிப்பனே. (92)

கலிநிலைத்துறை.

பிட்டுண்டு குட்டுண்டு மன்பருக்கா
      யெரிகரும்பை பீடரிற்கொண்டுங்,
கட்டுண்டுந் திட்டுண்டுங் கடுநுகர்ந்துங்
      காத்தளித்த கருணையீன்ற,
மட்டுண்ட வரிமுரலுங் கடப்பையந்தார்
      மணிக்குன்றே மயலேன்றீயைத்,
தொட்டுண்டு கிடக்கவென்றோ வெனைப்படைத்தாய்
      கதிர்காமத் தூயவாழ்வே. (93)

----------------------- verses 94 to 97 missing one page -------------------- நேரிசைவெண்பா.

சேர்ந்தாரைக் காத்தவர்க டீமைதபத் தாய்கருப்பத்
தூர்ந்தாரை நீரி லொழிகுமா - லார்ந்தாங்
கதிர்காமற் செற்ற வரனிடத்தாள் பெற்ற
கதிர்காமற் குற்றவருட் காண். (98)

அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

கருணைவா ரிதிபொழிந்த கடைக்கண்க ளீராறுங் கரமீ ராறு,
மருணமுக மோராறு மீராறு குழைத்திரளு மருளா னந்தத், தருண
மலை போன்மயிலுந் தாயரம ரிருபுறனுந் தமியேன் கண்டு, வருண
மழை போற்கண்ணீ ரருந்தலென்றோ கதிர்காமம் வாய்ந்த தேவே. (99)

எழுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

தேவனை மூவர் தேடரும் பொருளைச்
      சிறியனென் பிழைகுறிக்காத,
நாவனைக் கதிர்கா மத்தனைக் குகனை
      நான்மறை யொடுமுட நிடனைப்,
பாவனை புரிவார்க் குரியசிற் பரனைப்
      பணிந்தனன் புரிந்திடத் துணிந்தேன்,
சேவக மடியே னடைந்தனன் முடிவிற்
      சின்மயா னந்தமெய்ச் சீரே. (100)

கதிர்காமக் கலம்பகம் முற்றிற்று.

கதிரை வேற்பெருமான் திருவடி வாழ்க.

This file was last revised on 15 Nov. 2021
Please feel free to send corrections to the webmaster (pmadurai AT gmail.com).