pm logo

முடத்தமக் கண்ணியார் பாடிய
பொருநராற்றுப்படை : மூலமும் நச்சினார்கினியர் உரையும்
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)

porunarARRppaTai of muTattAmak kaNNiyAr,
verse with the notes of naccinArkiniyar
edited by U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பத்துப்பாட்டில் இரண்டாவதான
முடத்தமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படை

Source:
பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை : கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
(மூன்றாம் பதிப்பு) பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] - 1931 [விலை ரூபா. 5
--------------

பொருநராற்றுப் படையை இயற்றியவர் முடத்தமக் கண்ணியார். "இயற்பெயர் முன்னர்" (தொல், சொல். இடை. சூ. 22. சே. ந.) என்னும் சூத்திர உரையில் ஆர்விகுதி பன்மையொடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலால் இவர் பெயர் முடத்தாமக் கண்ணியென்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும் இவர் பெண்பாலாரென்றும் கூறுவாரும் உளர். ஆர்விகுதிபெற்ற பல பெயர்கள் இருப்ப இவர்பெயரை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியது இவரது சிறப்பைப் புலப்படுத்தும்.
------------

பொருநராற்றுப்படை$
($ பொருநராற்றுப்படைக்கு இந்நூலை மேற்கோளாகக் காட்டினர்; தொல். புறத், சூ. 36, ந. )

குறிப்புரை

1 - 2. "கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற், புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு - கல்லென்னும் ஓசையுண்டாக அழகு பெற்ற திருநாளை வழிப்படுத்திவிட்ட பிற்றைநாள் பொலிவழிந்த இடம் போலத் தனிமை கொண்டு'' (கலித். 5 : 10 - 11, ந.)

2. "சாறு - விழா; ‘சாறு....... உறாது' இது பொருநராற்றுப்படை'' (தக்க. 394, உரை)

3. வேறு புலம் - வேறிடம்,

5. "விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வை'' (சீவக. 559, ந.) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

‘வள் - தோல் ; விளக்கழல் ..... பச்சை' (கல். "வள்ளுறை" மயிலேறும். மேற்.)

7. (பி-ம்) ‘ஒழுங்கிய'

8. "பழையதோர் பொல்லம் பொத்திய" (திருவிளை. விறகு. 13)

11. "பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை" (பெரும்பாண். 11)

10 - 11. "கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனையவாணி" (சீவக. 559)

12. "சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்" (பெரும்பாண். 10)

14 - 5. "நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக், குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு" (பெரும்பாண். 12 - 3); "தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவு" (மலைபடு. 21)

19 - 20. "மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி.......குற்ற நீங்கிய யாழ்." (சிலப். 7 : 2 - 4)

21. (பி-ம்.) ‘படையிட'

23. "வார்தல் வடித்த லுந்த லுறழ்தல்" (சிலப்.7 : கட்டுரை, 12)

16 - 24. "ஆய்தினை யவைய லனையவா நரம்பாங் கணிபெறவாரியும் வடித்தும், ஏயுற முறையே யுந்தியு முறழ்ந்து மியைந்தநீ ரோடு நன் மொழிக, டேய்வற வெடுத்துச் சிதறியும் பல்காற் றேனுற ழின்னிசை யெழுப்பி" (இலிங்க. நாரதர்கூகை. 24)

29 - 30. "மயிரெறிகத்தரிகை யனையவாய்" (சீவக. 168); "மயிரெறி கருவி வள்ளை" (கந்த. மாயைப், 46); "மயிரெறி கருவிதனதிழி தொழிலை மதித்துமஞ் சிகனுறை தூங்க" (ஆனைக்கா. அகிலாண்ட. 38)

32. அரிமயிர் முன்கை : "அரிமயிர்த் திரண்முன்கை, வாலிழை மடமங்கையர்" (புறநா. 11 : 1 - 2)

33. காந்தள் மெல் விரல் : "முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்" (குறுந். 167 : 1)

34. உகிருக்குக் கிளிமூக்கு : "கிளிவா யன்ன வொளிவா யுகிரின்", "கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர்" (பெருங். 2. 15 : 76, 4, 7 : 42)

35. "இடையீர் போகா விளமுலை யாளை" (தே. திருவோத்தூர், 2); "ஈர்க்கிடை போகா விளமுலை மாதர்" (திருவா. போற்றி. 34); "ஈர்க்கிடை புகாம லடிபரந் தோங்கு மேரிள வனமுலை" (நைடதம், சுயம்வரப். 77)

35 - 6. சுணங்கணி யாகத்து .......... முலை : "சுணங்கணி வனமுலை" (கலித். 60 : 1)

37. "புனற்சுழி யலைத்துப் பொருந்திய கொப்பூழ்" (பெருங். 2. 15: 68)

39. "வரியல்குல் வண்டிருப் பன்ன தகைத்து" (யா. வி. சூ. 84, மேற். ‘கல்லின் மேல்')

"பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்" (சீவக. 1996, ந.) என்பதற்கு இது மேற்கோள்)

40. யானைத்துதிக்கை மகளிர் துடைக்கு: "இரும்பிடித் தடக்கையிற் செறிந்த சேர்ந்துடன் றிரண்ட, குறங்கின்" (சிறுபாண். 19 - 20); "சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து, மென்மையி னியன்று செம்மைய வாகி, நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்" (பெருங். 3.5 : 12 - 4) ; "கரிக்கைக் கவான்" (யா. கா. க - றை. 14) ; "மால்யானைக் கைபோலக், கொல்லத் திரண்ட குறங்கினாள்" (விக்கிரம. உலா)

42. "உயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ, வயங்கிழை யுலறியவடி" (சிறுபாண். 17 - 8) ; "மதந்தபு ஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி" (மலைபடு. 42 - 3); "முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய், நன்னாப் புரையுஞ் சீறடி" (நற். 252 : 10 - 11) ; "நாய் நாச் சீறடி" (சீவக. 2694); "இளைப்புறுஞமலி நலத்தகு நாவிற், செம்மையு மென்மையுஞ் சிறந்துவனப் பெய்தி............ உறூஉஞ் சேவடி" (பெருங். 2. 19 : 176 - 85) ; "வருந்துநாய்நாவி னணிகொள் சீறடி", "வருந்துநாய் நாவி னன்ன மலரடி" (கூர்ம. இராமன் வனம் 15, இராமன் வைகுந்த. 28) "வருந்து நாயினது நாவினை வாட்டித், திருந்து வெண்மையெழில் சேர்ந்த மலர்த்தாள்" (இலிங்க. அம்பரீடனை. 37)

43. "அரக்குவிரித் தன்ன செந்நிலம்" (மலைபடு. 507); "அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு" (பதிற். 30 : 27); "அரக்கத்தன்ன செந்நிலப் பெருவழி" (அகநா. 14 : 1)

45. "அடுமரன் மொக்குளில்" (நற். 278 : 2) ; "மரற்பல் பழம்போன்று கொப்புள்" (சீவக. 2339)

44 - 5. இஃது இடத்திற்கு ஏற்ற உவமைக்கு மேற்கோள்; இ. வி. சூ. 639, உரை.

47. முருகு. 205-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க. செய்யுட்கண் பல தொகையும் விராய்வந்து ஒரு சொல் நடையவாதற்கு இது மேற்கோள் ; தொல். எச்ச. சூ. 24, ந.

49. குறுந். 329 : 3.

50 - 51. "கனையெரி நிகழ்ந்த யிலையி லங்காட், டுழைப்புறத்தன்ன புள்ளி நீழல், அசைஇய பொழுதில்" (அகநா. 379 : 19 - 21)
-------------

குறிப்புரை
52. நற். 189 : 2-4.

54. "முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்" (பெரும்பாண். 33 ; புறநா. 35 : 4) ; "முரசுமுழங்கு தானை யரசொடு வேண்டினும்" (பெருங். 4. 13 : 227)

தொல். கிளவி. சூ. 33, சே. ந. உரை, மேற்.

54 - 5. முரசடுத்தற்கு மேற்கோள் ; தொல். புறத். சூ. 31, ந.

54 - 7. இவை சிறப்புப்பற்றி வந்த உவமத்திற்கு மேற்கோள் ;தொல். உவம. சூ. 4, இளம். ந ; இ - வி. சூ. 639.

59. "பொழுதெதிர்ந்த, புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலின்" (மலைபடு. 65 - 6)

61. ஒருபொருட்பன்மொழிக்கு இவ்வடி மேற்கோள் ; நன். சூ. 397, மயிலை ; நன் - வி. சூ. 398.

64. "பழுமரந் தேரும் பறவை போல" (பெரும்பாண். 20) ; "பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல" (மதுரைக். 576) ; "தாஅ வஞ்சிறை நொப்பறைவாவல், பழுமரம் படரும்" (குறுந். 172 : 1 - 2); "யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந்தன்ன" (புறநா. 173 : 3) ; "மாக்களாற், புட்பியல் பழுமரப் பொலிவிற்று", "பார்கெழு பழுமரப் பறவை" (சீவக. 93, 828) ; "மரஞ்சேர் பறவையும், தொக்குடனீண்டிச் சூழ்ந்தன விடாஅ, பழுமரத் தீண்டிய பறவையினெழூஉம்" (மணி. 14 : 24 - 6); "கனிவளங் கவர்ந்து பதிவயிற் பெயரும், பனியிறை வாவற் படர்ச்சி யேய்ப்ப" (பெருங். 2. 8 : 119 - 20); "பாய தொன்மரப் பறவைபோல்"(திருவிளை. திருநகரப். 67)

66. "பொருநர்க் காயினும் புலவர்க் காயினும், அருமறை நாவினந்த ணர்க்காயினும் ....... அடையா வாயில்" (சிறுபாண். 203 - 6) ; "நசையுநர்க் கடையா நன்பெரு வாயில்" (கூர்ம. சூரியன்மரபு. 13)

66 - 7. (பி-ம்.) ‘நசையுநர்க் கடையா ...... இசையெனப் புக்கு' நன். சூ. 457,; சூ 458, மயிலை. நன். வி. மேற்.

68. நன். சூ. 451. ‘மயிலை. மேற்.

69. பைத்த - சோபித்த வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தக்க. 466, உரை.

72. "விளக்குறு வெள்ளி முளைத்துமுன் றோன்ற" (பெருங். 1. 53 - 81): "வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று" (திருப்பாவை, 13)

73. "ஒன்றியான் பெட்டா வளவை யன்றே" (புறநா. 399 : 29)

70 - 75. "வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை, அள்ளகட் டன்ன வரிக்கிணை-வள்ளியோன், முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னா முன், என்கடை நீங்கிற் றிடர்" (பு. வெ. 206)

76. "கண்ணிற் காண நண்ணுவழி யிருந்து" (குறுந். 203 : 3)

77. "பருகு வன்ன காத லுள்ளமொடு" (அகநா. 399 : 4); "பருகு காதலிற் பாடி யாடினார்" (சீவக. 1765): "பருகு வன்னநோக்க மொடு" (பெருங். 3. 7 : 80) ; "பருகுவான் போல நாக்கும்", "பருகுவனள் போனோக்கி" (பாகவதம், 4. துருவன்பதம் 35 ; 10.சகடமுதைத்த. 21); "மலர்த்தடங்கண்ணே வாயாப் பருகுவான் போல நோக்கி" (கூர்ம. திருக்கல்யாண. 61); "பருகுவ னன்ன வார்வத்தனாகி" (நன். சூ. 40)

"பருகுவார் போலினும்" (குறள். 811) என்பதற்கு இவ்வடி மேற்கோள் ;பரிமேல்.

79. (பி-ம்.) ‘இமிர்ந்திறை கூடி'

80. "தொன்றுபடு துளையொடு பருவிழை போகி" (புறநா. 376 : 10)

81. "துன்னற் சிதாஅர் நீக்கி" (பொருந. 154); "சிதாஅருடுக்கை முதாரிப் பாண", "தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி" (புறநா. 138 : 5, 393 : 16)

80 - 81. "அரையது, வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅ, ரோம்பி" (புறநா. 69 : 2 - 4).

79 - 81. "யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப, இழைவலந்த பஃறுன்னத் திடப்புரைபற்றிப் பிணிவிடா, ஈர்க்குழாத்தோ டிரைகூர்ந்த, பேஎற் பகையென வொன்றென்கோ" (புறநா. 136 : 1 - 5)

82. (பி-ம்) ‘நோக்குநுழை வேலா'

83. ஆடைக்குப் பாம்புரி : "பாப்புரி யன்ன மீக்கொ டானை" (பெருங். 1. 42 : 244) ; "அரவுரி....................... துகிற்கொடி நிகர்ப்பன" (கம்ப. சித்திர. 4); "அரிவை துகினெகி ழல்கு லரவி, னுரிவை விடு படமொத்தாள்" (குலோத். உலா); "குரவ மெல்லரும் பன்னவெங் கூரெயிற் றரவின், உரிவை யன்னவா னுண்டுகில்" (பாகவதம், 10. கோவியர்துகில். 9); "பாழிவா யரவி னுரிநிக ராடை" (இலிங்க. அம்பரீடனை. 56); "பையர வுரியி னன்ன நடைப்படாம்" (திருவிளை. திருமண. 147)

82 - 3. நோக்கு நுழைகல்லா நுண்மைய ...............அறுவை; "கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை, வண்ண வறுவையர்" (மணி. 28 : 53 - 4); "அணங்கு நுண்டுகில் - இழை தெரியாது வருந்தும் நுண்ணிய துகில்" (சீவக. 344, ந.); "கண்கொளாப் பட்டுடுத்தாள்" ( சீவக. 2444); "நோக்குநுழை கல்லாச் செய்ய, அணங்கரவி னுரியன்ன பட்டாடையொடு" (வாயுசங்கிதை, கிரியா. 13)

84. "மலையென மழையென மாட மோங்கி" (மலைபடு. 484); ந : "சேறுசெய் மாரியி னளிக்குநின், சாறுபடு திருவி னனைமகி ழானே" பதிற். 65 : 16 - 7. (பெருங். 3. 16 : 27)

85. "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" (முருகு. 259)

இன்னகை மகளிர் : "இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 220); "நகைத்துணை யாய மெதிர் கொள" (பெருங். 1. 48 : 70)

86 - 8. பகரவுகரம் இறந்தகால வினையெச்சமாக வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். வினை. சூ. 31, ந; இ - வி. சூ. 246.

85 - 8. "இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு, மகிழ்ந்தினி துறைமதி பெரும" (மதுரைக். 779 - 81); "தண்கமழ் தேறல், பொன்செய் புனைகலத் தேந்தி நாளு, மொண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து" (புறநா. 56 : 18 - 20); பெருங். 2. 14 : 60 - 61.

91 - 2. "இடம்படு புகழ்ச்சனகர் கோனினிது பேண ..............., உடம்பொடு துறக்கநக ருற்றவரை யொத்தார்", "இறைவன் சொல்லெனு மின்னற வருந்தினர் யாரும் ................ , உறையும் விண்ணக முடலொடு மெய்தின ரொத்தார்", "இம்மையே மறுமை தானு நல்கினை யிசையோ டென்றாள்" (கம்ப. கடிமணப். 1, மந்திர. 75, உருக்காட்டு. 71)

94. "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து, பழஞ்செருக் குற்ற வனந்தர்ப் பாணியும்" (மணி. 7 : 71 - 2); "அரிய லார்ந்த வனந்தர்" (தணிகைப். நாடு. 100)

96 - 7. காலைக்கண்டோர் மருளும் ........... நிலை : பண்டறி வாரா வுருவோடு" (புறநா. 376 : 9); "நின்னை வருத லறிந்தனர் யாரே"
(புறநா. 138 : 11) என்பதற்கு, ‘நின்னை அறிவாரும் அறியாத தன்மையையாவை' என்றெழுதிய விசேடவுரை இங்கே அறிதற்பாலது.

98. "கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவி னல்கியோ னசைசா றோன்றல்", " கனவென மருள வல்லே நனவி, னல்கி யோனே நசைசா றோன்றல் " (புறநா. 377 : 19 - 20, 387 : 26 - 7)
-------------

குறிப்புரை
101. "வம்மெனக் கூஉய்" (மணி. 19 : 98)

105. காழிற் சுட்ட கோழூன் : "காழ்க்கோத்த சூட்டென்கோ " (யா. வி. மேற்.)

107 - 8. "ஊனு மூணு முனையி னினிதெனப், பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவு, மளவுபு கலந்து மெல்லிது பருகி" (புறநா. 331 : 1 - 3)

115. ‘ பால்வறைக்கருனை ' எனவும் படிப்பதுண்டு.

113 - 5. "முரவை போகிய முரிவில்வான் மூரல்பால் வறையல், கருனை" (திருவிளை. குண்டோதரனுக்கு. 14)

117 - 8. கொல்லை யுழுகொழு வேய்ப்ப ............. மழுங்கி : "தேமுரம் புழுவார் நாஞ்சிற் கொழுவெனத் தேய்ந்து" (திருக்குற். கவுற்சனச். 28)

121 - 2. "செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென. மெல்லெனக் கூறி விடுப்பின்" (மலைபடு. 567 - 8)

125. (பி-ம்.) ‘துடிபுரை யடிய'

"துடியடிக்கயந்தலை" (கலித். 11 : 8); "துடியடிக் குழவிய" (புறநா. 69 : 26)

125 - 6. "இருபெயர்ப் பேராயமொ, டிலங்குமருப்பிற் களிறு கொடுத்தும்" (மதுரைக். 101 - 2)

126 - 7. யானை கொடுக்கப்படுதலைப் புறநானூறு, 129, 130, 131, 135, 151 -ஆம் பாட்டுக்கள் முதலியவற்றாலுணர்க; "குன்றாகியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து, சென்றார் முகக்கும்" (தஞ்சை. 149)

128. "என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட" (பெருங். 1. 36 : 364)

129. (பி-ம்.) ‘வெல்வேல்'

119 - 29. பரிசிலன் யான் போகல் வேண்டுமெனக்கூறி, விடுத்தபின் தலைவன் தந்த வளனை உயர்த்துக் கூறியதற்கு இது மேற்கோள்; தொல். புறத். சூ. 36, ந.

130. ‘உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும்' (தொல். அகத். சூ. 30, ந.)

131. மு : "முருகற் சீற்றத் துருகெழு குருசில்" (புறநா. 16 : 12); "முருகி னன்ன சீற்றத்து" (அகநா. 158 : 16)

132. "உருகெழு தாய மூழி னெய்தி" (பட்டினப். 227)

134. உரிச்சொல் வகைக்கு மேற்கோள் ; தொல். கிளவி. சூ. 1, கல்.

137. தவழ் கற்றல் : "கரியவன் றவழ்கற்றனன்" (பாகவதம், 10. சகடமுதைத்த. 11)

(பி-ம்.) ‘கற்றது தொட்டுஞ் சிறந்த'

140. "மீளி மொய்ம்பின்" (பெருங். 5 : 3 : 44)

139-42. "ஆளி நன்மா னணங்குடை யொருத்தல், மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, வேந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்" (அகநா. 381 : 1 - 3); "வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன், பூண்டான் பொழில்காவ லென்றுரையா - மீண்டு, மருளன்மின் கோள் கருது மால்வரை யாளிக், குருளையுங் கொல்களிற்றின் கோடு" (பு. வெ. 245) என்பது இவ்வடிகளின் கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது. கலிங்க. 237, பார்க்க.

சிங்கக்குருளை களிற்றையடல் : "சிங்கமொரு கன்றீனும், பாவனை போ லேயெழுதிப் பக்கத்தில் - ஓவியமாக், காரானை யொன்றெழுதிக் காட்டவரிக் கன்றுதுள்ளிப், போராடிப் பாய்ந்தகதை பொய்யலவே" (விறலிவிடு. 203 - 4)

144. "அரவாய்க் கடிப்பகை" (மணி. 7 : 73);"அரநிக ரிலை நிம்பத்தார்" (திருவிளை. அன்னக்குழியும். 21); (புறநா. 76 : 4 ; 79 : 2)

145. "ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய" (சிலப். 26 : 220)

147. (பி-ம்.) ‘வெண்ணிற் றாக்கிய'

146 - 7. வெண்ணிப் போர்: அகநா. 55 : 10 - 12, 125 : 16 - 22, 246 : 8 - 14.

148. "கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்" (சிறுபாண். 65)

137 - 48. "முலைமுத றுறந்த வன்றே மூரித்தா ளாளி யானைத், தலைநிலம் புரள வெண்கோ டுண்டதே போன்று தன்கைச், சிலையிடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி, நிலவுமிழ் குடையி னீழற் றுஞ்சுக வைய மென்பார்" (சீவக. 2554)

149. (பி-ம்.) ‘மருங்கி னணுகுபு'
-----------

குறிப்புரை
151. "ஆன்கணம், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதா" (குறிஞ்சிப். 217 - 8); "கறவை கன்றுவயிற் படர" (குறுந். 108 : 2); "தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு, மாபோற் படர்தக நாம்", "கறவைதம் பதிவயிற், கன்றமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர" (கலித். 81 : 36 - 7, 119 : 9 - 10); "பதவுமேய லருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்", மதவுநடைத், தாம்பசை குழவி வீங்குசுரை மடியக், கனையலங் குரல காற்பரி பயிற்றிப், படுமணி மிடற்ற பயநிரையாயம் .............. தூங்க" (அகநா. 14 : 9 - 11, 54 : 6 - 11); "குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா லெழுதுக ளவிப்ப, கன்று நினை குரல மன்றுவழிப் படர" (மணி. 5 : 130 - 32); "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" (திருவா.); "கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தி", "தனிக்கன் றுள்ளிய புனிற்றாப் போல, விரைவிற் செல்லும் விருப்பின னாகி" (பெருங். 2. 10 : 41, 18 : 10 - 11); "கன்றுகாண் கறவையிற் கசிந்து போற்றினாள்" (பாகவதம், 10. திருவவதார. 58)

(பி-ம்.) "போற்றுவனனோக்கி"

152. ஒய்யென : முல்லை. 83.

(பி-ம்.) ‘கையது கொள்ளா'

153. (பி-ம்.) ‘மாசொடு மிடைந்த'

154. பொருந. 81, அடிக்குறிப்பைப் பார்க்க.

153 - 4. "பாசி யன்ன சிதர்வை" (பெரும்பாண். 468)

153 - 7. "என்னரை, முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து, திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ, மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும், அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டல்", "ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை, நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத், தேட்கடுப் பன்ன நாட்படு தேறல், கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ, ஊண்முறை யீத்த லன்றியுங் கோன்முறை, விருந்திறை நல்கி யோனே" (புறநா. 390 : 13 - 8, 392 : 13 - 9)

159. "எரியகைந் தன்ன தாமரை" (அகநா. 106 : 1, 116 : 1)

160. சுரியிரும்பித்தை : "சுரியிரும்பித்தை சூழ்ந்துபுறந்தாழ்ந்த, விரிபூ மாலை" (மணி. 22 : 149 - 50)

159 - 60. பாணன் பொற்பூச் சூடல் : "பாணர் தாமரை மலையவும்", "அழல்புரிந்த வடர்தாமரை, யைதடர்ந்த நூற்பெய்து, புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல், பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப், பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை", "ஆடுவண் டிமிராத் தாமரை, சூடா யாத லதனினு மிலையே", "ஒன்னார் யானை யோடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்" (புறநா. 12 : 1, 29 : 1 - 5, 69 : 20 - 21, 126 : 1 - 3); "பூப்புனையு, நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புல வீர்", "இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற், கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற், காமரு சாயலாள் கேள்வன் கய மலராத், தாமரை சென்னி தரும்" (பு. வெ. 31, 216); "பாடினர்க்கு, வற்றாத மானத வாவியில் வாடாத, பொற்றா மரையே புனைகென்றாள்" (இராச. உலா)

159 - 62. பாணன் பொற்றாமரை பெறுதலும் பாடினி மாலை முதலியன பெறுதலும்: "ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை பொலியச் சூட்டி .................. புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின், தொடையமை மாலை விறலியர் மலைய" (பெரும்பாண். 481 - 6); "தலைவன் றாமரை மலைய விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய" (மலைபடு. 569 - 70); "பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி, யொண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டி" (பதிற். 48 : 1 - 2); "மறம்பாடிய பாடினியும்மே, யேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற்றிசினே, யிழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்ச்சீர்க்கொளைவல் பாண்மகனும்மே, எனவாங், கொள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே", "பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவ னினக்கே", "வாடா மாலை படினி யணியப், பாணன் சென்னிக் கேணி பூவா, வெரிமரு டாமரைப் பெருமலர் தயங்க" (புறநா. 11 : 11 - 7, 319 : 14 - 5, 364 : 1 - 3)

163. "மருப்பிய லூர்தி" (பெருங். 1. 38 : 11); "கோட்டினிற் புரி கொடுஞ்சியந்தேர்", "யானைக் கோட்டினி லியற்று திண்டேர்" (பாகவதம், 1. தன்மபுத்தினரசு. 18 ; 10. திருவவதார. 18)

ஐந்தாம் வேற்றுமை ஆக்கப்பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள் (தொல். வேற்றுமையியல், சூ. 17, ந.; இ. வி. சூ. 202, உரை); கருவிப் பொருளில் வந்ததற்கு மேற்கோள்;நன். 293, மயிலை.

165. "வளைகண் டன்ன வாலுளைப் புரவி, துணைபுணர் தொழில் நால்குடன் பூட்டி" (பெரும்பாண். 488 - 9)

"நால்கு பண்ணினர் நால்வரு மேறினார்" என்ற அடியுரையில் நால்கென்பதற்கு மேற்கோள்: சீவக. 1774, ந.

167. (பி-ம்.) ‘களைதந் தேறென் றேற்றி'

168. (பி-ம்.) ‘முறையுளி கழிப்பி'

169. மு. "தண்பணை தழீஇய, தளரா விருக்கை" (சிறுபாண். 78;பெரும்பாண். 242)

"தண்பணை தழீஇய, சயந்தியம் பெரும்பதி" (பெருங். 2. 10 : 3 - 4)

172. (பி-ம்.) ‘வெருவருஞ் செலவின்'

171 - 2. "நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க" (கலித். 56 : 32 - 3); "தெண்கணை முன்னர்க் களிற்றி னியலி" (புறநா. 79 : 3); "பாகும் பறையும் ............... அலவுற்று விளிப்ப", "பணையெழுந் தார்ப்ப, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு, நீல யானை மேலோ ரின்றிக் காமர் செங்கை நீட்டி" (மணி. 4 : 41 - 2, 19 : 18 - 21); "பறைநிறை கொல்யானை", "அறைபறை யானை" (முத்); "முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த" (தே. ஆரூர்.) "பறைவன் களிற்று" (வி. பா. சூதுபோர். 225)

176. (பி-ம்.) ‘நிலைமை தூக்கி'

மு. "நில்லா வுலகத்து நிலைமை தூக்கி" (பெரும்பாண். 466)

180. (பி-ம்.) ‘வயின் வயினின்'

181. வெண்பாவுரிச்சீரால் தூங்கலோசை பிறந்ததற்கு இவ்வடி மேற்கோள்; (தொல். செய். சூ. 22, பேர்.)

182. (பி-ம்.) ‘கூடு குழீஇய'

183 - 4. காக்கை பலியை உண்ணல்: "வெண்ணெல் வெஞ்சோ, றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி, ............ விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே" (குறுந். 210 : 3 - 6); "வரக்கரைந்தா, லுணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப்பலி யோக்குவன்மாக், குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே" (திருச்சிற். 235)

188. (பி-ம்.) ‘பகைமுரண் சொலவும்'

190-92. மயில் பாகற்பழத்தை யுண்ணல் : "பாக லார்க்கைப் பறைகட் பீலித், தோகை", "பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக், கான மஞ்ஞைக் கமஞ்சூன் மாப்பெடை, யயிரியாற் றடைகரை வயிரி னரலும்" (அகநா. 15 : 4 - 5, 177 : 9 - 11)

"பாகல் - பலா; ........... ‘பைம்பாகற் ......... மாந்தி' எனவுஞ் சொன்னார் பாட்டினும்" (சிலப். 16 : 22 - 8, அடியார்.)


குறிப்புரை
201. மணிக்காயா. "மணியெனத் தேம்படு காயா" (ஐங். 420); "மணிபுரை யுருவின காயாவும்" (கலித். 101 : 5)

202. (பி-ம்.) ‘முணையின்'

210. "விரலூன்று படுக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை" (மலைபடு. 140 - 41); "உருமிடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்" (அகநா. 19 : 4 - 5); "கடுந்துடி, புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டு மலை", "அந்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல்" (புறநா. 170 : 6 - 8, 370 : 6)

213. மணலுக்கு நிலவு : "நிலவுக் கானல்" (மதுரைக். 114); "நிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில்" (பட்டினப். 82 - 3); "நிலவுக்குவித் தன்ன மோட்டுமண லடைகரை", "நிலவுத்தவழ் மணற்கோடு", (நற். 159 : 4, 163:5); "நிலவுக்குவித்தன்ன வெண்மண லொருசிறை ", "நிலவுநிற வெண்மணல்" (குறுந். 123 : 2, 320 : 3); "நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில்" (அகநா. 200 : 1); நிலவுமணல் வியன்கானல்" (புறநா. 17 : 11); "நிலாவெழுந்த வார்மண னீடி" (திணைமாலை. 29).

226. (பி-ம்.) ‘நாடு கெழீஇ'

231. (பி-ம்.) ‘வெல்வேற் குரிசில்'

234. "பரந்துபடு கூரெரி கான நைப்ப, மரந்தீ யுற்ற" (நற். 177 : 1 - 2)

236. கருவி வானம் : "கருவி வானங் கான்ற" (சீவக. 725)

238 - 41. "நறுவீ நாகமு மகிலு மாரமும், துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய, பொருபுன றரூஉம் போக்கரு மரபின்" (சிறுபாண். 116 - 8)

"கொடுவாய்க்குயம் - கோடின வாயையுடைய அரிவாள்; ‘கூனி ........... அரிந்து' என்றார் பொருநராற்றுப்படையிலும்" (சிலப். 16 : 30, அடியார்.)

243. "வயங்கொள்வார் சாலிச் சூடும் வளர்ந்துபோய் வானைச் சூடும்" (திருவால. திருநகர. 9)

244. "குடகாற் றெறிந்த குப்பை வடபாற், செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்" (பெரும்பாண். 240 - 41)

246-7. "வேலி யாயிரம் விளைகநின் வயலே" (புறநா. 391 : 21); "வாலி தாமுளை யொருபுறம் வளர்செறு வொருசார், பாலி னெல்லொரு சாரொரு சாரரிப் பறம்பு, சாலி வேலையோர் சாரிவை தலைமயக் குறலால், வேலி யாயிரம் விளையுளென் பதுமிதன் மேற்றே" (சீகாழித். திருநகரப். 9)

தெரிநிலையுடன் கூடிய டகரவுகரம் தொழிலடியாக வந்ததற்கு மேற்கோள் (தொல். வினை. சூ. 34, ந.); "தாங்காவிளையுள் - நிலம் பொறாத விளைத்தல்; ‘வேலி ............. ஆக' என்றாராகலின். விளைத்த லென்பது விளையுளென மருவிற்று; புலிப்பாய்த்துள், தேரைப் பாய்த்து ளென்பன போல" (சிலப். 6 : 30, அடியார்.)

248. "காவிரி புரக்கு நாடுகிழ வோற்கென்று" (சிலப். 27 : 171); "கங்கை புரக்கு நாடுகிழவோன்" (பாகவதம். 10. 20 : 7)

நன். சூ, 182. மயிலை. மேற்; நன் - வி. சூ. 183, மேற்., இ-வி. சூ. 102, மேற்.
-------------

இதன் பொருள்


1. அறாஅ யாணர் அகல் தலை பேர் ஊர் - இடையறாத செல்வ வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,;

2. சாறு கழி வழி நாள் சோறு நசை உறாது - விழாக்கழிந்த பின்னாளில் ஆண்டுப் பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது,;

3. வேறு புலம் முன்னிய விரகு அறிபொருந - விழாக்கொண்டாடும் வேற்றுப்புலத்தைக் கருதிய 1விரகையறிந்த பொருந,

இஃது அண்மைவிளி.

4. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் - மான் குளம்பு அழுத்திய இடத்தையொத்த இரண்டருகும் தாழ்ந்து நடுவுயர்ந்த பத்தலினையும்,;

5. விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை - விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய விசித்துப் போர்த்தலுற்ற தோல்

6. எய்யா இள சூல் செய்யோள் அ வயிறு - மிக அறியப்படாத இளைய சூலையுடைய சிவந்த நிறத்தையுடையோளது அழகினையுடைய வயிறின் செய்யோளென்றார், மயிரொழுங்கு விளங்கித் தோற்றுதற்கு.

------
------

7. ஐது மயிர் ஒழுகிய தோற்றம்போல - 1ஐதாகிய மயிர் ஒழுங்கு படக் கிடந்த 2தோற்றரவுபோல,

8. பொல்லம் பொத்திய பொதி உறு போர்வை - இரண்டு தலையும் கூட்டித்தைத்த மரத்தைப் பொதிதலுறும் போர்வையினையும்,;

9 - 10. அளை வாழ் அலவன் கண் கண்டன்ன துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி - முழையிலே வாழ்கின்ற ஞெண்டின் கண்ணைக் கண்டாலொத்த பத்தலிரண்டுஞ் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய முடுக்குதலமைந்த ஆணியினையும்,;

தோல் ஞெகிழாமல் முடுக்கின ஆணியென்று முரைப்பர்.

அன்ன ஆணி யென்க.

11 - 2. எண்ணாள் திங்கள் வடிவிற்று ஆகி அண்ணா இல்லா அமைவரு வறு வாய் - உவாவிற்கு எட்டாநாளில் திங்களின் வடிவை உடைத்தாய் உண்ணாக்கில்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும்,;

13. பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின் - பாம்பு தலையெடுத்தாலொத்த ஓங்கின கரிய தண்டினையும்,;

14. 3மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் திவவின் (15) - கரிய நிறத்தையுடையோளுடைய முன்கையில் அழகினையுடைய நேர்ந்த தொடியை யொக்கும் வார்க்கட்டினையும்,;

15. கண்கூடு இருக்கை திண் பிணி திவவு - ஒன்றோடொன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய திண்பிணிப்பினையுடைய திவவு.;

இது நரம்பு துவக்கப்படுவது.;

16 - 8. ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் வீசி தொடையல் - அழகினையுடைய தினையரிசியிற் குத்தலரிசியை ஒத்த குற்றம்போகிய விரலாலசைக்கும் நரம்பினையுடைய இசைமுற்றுப்பெற்ற நீண்ட விசித்தலையுடைய தொடர்ச்சியினையும்.

19. மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன காட்சி (20) - கலி யாணஞ் செய்தமை தோற்றுகின்ற மாதரை ஒப்பித்தாலொத்த அழகினையுமுடைய,;

20. அணங்கு மெய் நின்ற அமை வரு காட்சி - 4யாழிற்குரிய தெய்வம் தன்னிடத்தேநின்ற இலக்கணம் அமைதல்வரும் அழகு.

ஆறு அலை கள்வர் படை விட - வழியை அலைக்கின்ற கள்வர் தம் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி,
-------
-------

21 - 2. அருளின் மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை - அருளினது மாறாகிய மறத்தினை அவர்களிடத்துநின்று பெயர்க்கும் மருவுதல் இனிய பாலையாழை,

பாலை : ஆகுபெயர்.

"கோடே பத்த ராணி நரம்பே, மாடக மெனவரும் வகையினதாகும்" என்றதனால் மாடகமொழிந்தன கூறினார்.

பத்தலினையும் (4), பொல்லம்பொத்திய (8) பச்சையாகிய (5) போர்வையினையும் (8), ஆணியினையும் (10), வறுவாயினையும் (12), மருப்பினையும், (13) வார்க்கட்டினையும் (15), நரம்பின்றொடர்ச்சியினையும் (18), காட்சியினையும் (20) உடைய பாலையாழென முடிக்க.

"கொன்றை கருங்காலி குமிழ்முருக்குத் தணக்கே" என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம்; பத்தற்கு மரம் குமிழும், முருக்கும், தணக்குமாம்.

23. 1வாரியும் - நரம்புகளைக் கூடத் தழுவியும்,

2 வடித்தும் - உருவியும்; வடித்தல் - நரம்பெறிதலென்று முரைப்பர்.

3 உந்தியும் - தெறித்தும்,

4 உறழ்ந்தும் - ஒன்றைவிட்டு ஒன்றைத்தெறித்தும்.

24. சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி - சீரையுடைத்தாகிய
5 தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி,

------------
--------


1சீரெனவே பாணியும் தூக்கும் உளவாயின.

25. அறல் போல் கூந்தல் - ஆற்றல்போலும் கூந்தலினையும்,

பிறை போல் திரு - நுதல் - பிறைபோல அழகினையுடைய நுதலினையும்.

26. கொலை வில் புருவத்து - கொலைத்தொழிலையுடைய விற்போலும் புருவத்தினையும்,

கொழு கடை மழை கண் - அழகிய கடையினையுடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும்,

27. இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - இலவினது இதழையொக்கும் இனிய சொல்லையுடைய செம்மையுடைத்தாகிய வாயினையும்,

28. பல உறு முத்தின் பழி தீர் வெள் பல் - பலவுஞ்சேர்ந்த முத்துக்கள் போற் குற்றந்தீர்ந்த வெள்ளிய பல்லினையும்,

பலமுத்தென்றார், ஒருகோவையாயிருத்தலின்; இனிப் பலவிலையுற்ற முத்தென்றுமாம்.

29 - 30. [ மயிர்குறை கருவி மாண்கடை யன்ன, பூங்குழை யூசற் பொறைசால் காதின் :]

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன (29) காதின் (30) - மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சையொத்த காதினையும்,

பூ குழை 2ஊசல் பொறை சால் காது (30) - பொலிவினையுடைய மகரக்குழையினுடைய அசைவினைப் பொறுத்தலமைந்த காது.

31. நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் - நாணம் வருத்தலாற் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும்,

32. ஆடு அமை பணை தோள் - அசைகின்ற மூங்கில் போலும் பெருத்தலையுடைய தோளினையும்,
அரி மயிர் முன்கை - 3ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,

33. நெடுவரை மிசைய காந்தள் மெல் விரல் - நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள்போலும் மெல்லிதாகிய விரலினையும்,

34. கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் - கிளியினது வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெருமையையுடைத்தாகிய உகிரினையும்,

-----------
---------

35. அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து முலை (36) - பிறர்க்கு வருத்தமெனத் தோன்றின சுணங்கணிந்த மார்பிடத்து முலையினையும்,

36. ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை - ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சியையுடைய இளைய அழுகினையுடைய முலை,

37. நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் - நீரிடத்துப் பெயர் தலையுடைய சுழிபோல உத்தம இலக்கணங்கள் நிறைந்த கொப்பூழினையும்,;

38. உண்டென உணரா உயவும் நடுவின் - உண்டென்று பிறருண ரப்படாத வருந்துமிடையினையும்,;

உயவினென்று பாடமாயின், வருந்துதலையுடையவென்க.;

39. வண்டு இருப்பு அன்ன 1பல் காழ் அல்குல் - பல வண்டினங்களின் இருப்பையொத்த பல மணிகோத்த வடங்களையுடைய மேகலையணிந்த அல்குலையும்,;

காழ் : ஆகுபெயர்.

40. இரு பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் - பெரிய பிடியினுடைய பெருமையையுடைய கைபோல ஒழுகவந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித்திரண்ட குறங்கினையும்,;

41. பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப - கணைக்காற்கு இலக்கணமென்றற்குப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனையிலக் கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த,;

42. [ வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி :]

வருந்து நாய் நாவின் சிறு அடி - ஓடியிளைத்த நாயினது நாப்போலச் சிறிய அடியினையும்,;

41 - 2. தாட்கு ஒப்ப பெரு தகு அடி - தாளுக்குப் பொருந்தப் பெருமை தக்கிருக்கும் அடி யென்க.;

2பெருவென்னு முதனிலை பெருமையையுணர்த்தி நின்றது.;

43. அரக்கு உருக்கு அன்ன செ நிலன் ஒதுங்கலின் - சாதிலிங்கத்தை உருக்கின தன்மையையொத்த செய்யநிலத்தே நடக்கையினாலே,;

44. பரல் பகை உழந்த நோயொடு சிவணி - சுக்கான்கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி,;

------------
-------

45. மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் - மரல் பழுத்தாற் போன்ற துளும்பு நீரையுடைய கொப்புளம்,

46. 1நல் பகல் அந்தி நடை இடை விலங்கலின் - நன்றாகிய உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்தலாலே,

47. பெடை மயில் உருவின் பெரு தகு பாடினி - பெடைமயிலருகு நின்ற மயில்போலும் சாயலினையுமுடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி,

கூந்தலினையும் நுதலினையும் (25) புருவத்தினையும் கண்ணினையும் (26) வாயினையும் (27) பல்லினையும் (28) காதினையும் (30) எருத்தினையும் (31) தோளினையும் கையினையும் (32) விரலினையும் (33) உகிரினையும் (34) முலையினையும் (36) கொப்பூழினையும் (37) நடுவினையும் (38) அல்குலினையும் (39) குறங்கினையும் (40) சீறடியினையும் (42) உருவினையுமுடைய பாடினியென்க.

இங்ஙனம் சீறடியுங்கூட்டி எண்ணாக்கால் தலைமுதல் அடியீறின்றாகக் கூறிற்றாம்.

48. பாடின பாணிக்கு ஏற்ப - பாடின தாளத்திற்குப் பொருந்த,

48 - 9. நாள் தொறும் களிறு வழங்கு அதர் கானத்து அல்கி - நாடோறும் யானையுலாவரும் வழியையுடைய காட்டிடத்தே தங்கி,

50 - 51. [ இலையின் மராத்த வெவ்வந் தாங்கி, வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கின் :]

இலை இல் மராத்த வலை வலந்தன்ன மெல் நிழல் மருங்கில் - இலையில்லாத 2மராத்திடத்தனவாகிய வலையை மேலே கட்டினாலொத்த மெல்லிய நிழலினிடத்தே,

எவ்வம் தாங்கி - கொப்புளால் (45) வந்த வருத்தந்தாங்கி,

இனி, ஞாயிற்றின் வெம்மையால் தனக்குவந்த எவ்வத்தைத்தாங்கி இலையில்லாத மராமரமென மராமரத்தின்மேல் ஏற்றுதலுமாம்.

52. காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்டபின்பு.

பொருந (3), பாடினி (47) செந்நிலனொதுங்கலின் (43) அவளடிகள் (42) பரற்பகை யுழந்த நோயொடுசிவணித் (44) தம்மிடத்தே கொண்ட மொக்குளால் (45) தனக்கு வந்த வருத்தத்தைத் தாங்கித் (50) தான் நடையைத் தவிர்தலாலே (46) கானத்தின் (49) மென்னிழன் மருங்கில் (51) தங்கிப் (49) பாலையாழை (22) வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் (23) வாசித்து, பாடினி பாணிக்கேற்பச் (48) சீருடை நன்மொழி நீரொடுசிதறிக் (24) காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றையென முடிக்க.;

கடன்கழித்தல் - தடாரியை வாசித்தல்.;

-----------
---------

53 - 4. பீடு கெழு திருவின் பெரு பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை 1 மூவரும்கூடி - பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய பெயர்களையும் வலியையுடைய முயற்சியையும் வெற்றிமுரசு முழங்கும் படையினையுமுடைய சேர சோழ 2பாண்டியர் தம்மிற் பகைமை நீங்கிச் சேர்ந்து,;

55. அரசு அவை இருந்த தோற்றம் போல - செல்வக்குறைபாடின்றி அரசிருத்தற்குரிய அவையாகவிருந்த தோற்றரவுபோல,;

தோற்றம்போல இன்மை தீரவந்தனென் (129) என மேலே கூட்டுக.;

இனி, அரசவையிருந்த தோற்றம்போல வலிவும் மெலிவும் சமனுமாகப் பாடுதலைப் பற்றியவென்று பாட்டின் மேலேற்றிப் பொருள் கூறின், குலமும் செல்வமும் வீரமுமுதலியவற்றால் தம்மில் ஒத்தாரை உவமித்தலின், அவர்க்கும் வலிவும் மெலிவும் சமனுமென்னும் குணங்கள் எய்துமாதலின், அங்ஙனங்கூறல் பொருந்தாமையுணர்க; அன்றியும் பயனே ஈண்டு உவமை யென்று உணர்க.

இனிப்பாட்டு 2நிருத்த கீதவாச்சியத்தை யுடைமையின், அரசரோடு உவமித்தாரென்பாருமுளர்.

56 - 7. பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் கோடியர் தலைவ - மிடற்றுப்பாடலைத் தொடங்கி யெழுந்திருந்த பயன்களைத் தன்னிடத்தே யுடைத்தாகிய யாழையுடைய கூத்தர்க்குத் தலைவனே,;

இவன் 3போர்க்களம்பாடும் பொருநனாதலானும், கூத்தரில் இவனிற் சிறந்த கூத்தர் இன்மையானும் இங்ஙனம் கூறினார்.

57. கொண்டது அறிந - பிறர் மனத்துக்கொண்டதனைக் குறிப்பால் அறியவல்லாய்,

------------
-----------

58. அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது - வழியறியாமையினாலே இவ்வழியைத் தப்பி வேறொரு வழியிற் போகாதே,;

59. ஆறு எதிர் படுதலும் நோற்றதன் பயனே- இவ்வழியிலே என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப்பயன்,;

60. [ போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந :] புகழ் மேம்படுந போற்றி கேண்மதி - புறத்தார்புகழை அரசவைகளிலே மேம்படுத்தவல்லாய், யான்கூறுகின்றவற்றை விரும்பிக்கேட்பாயாக;;

61 - 2. ஆடுபசி உழந்த நின் இரு பேர் ஒக்கலொடு நீடு பசி ஒராஅல் வேண்டின் - அடுகின்ற பசியாலேவருந்தின நின்னுடைய கரிய பெரிய 1சுற்றத்தோடே தொன்று தொட்டு வந்த பசி நின்னைக் கைவிடுதல் விரும்புவையாயின்,;

62 - 3. நீடு இன்று எழுமதி - நீட்டித்தலின்றி எழுந்திருப்பாயாக;

வாழி - நீ வாழ்வாயாக;

63. ஏழின் கிழவ - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரமென்னும் நரம்பு ஏழின்கண்ணும் உரிமையுடையாய்,;

64. [ பழுமர முள்ளிய பறவையின் யானும் :]

யானும் பழுமரம் உள்ளிய பறவையின் - செல்வ மெய்திய யானும் முன்பு பழுத்தமரத்தை நினைத்துச் செல்கின்ற புட்போல,;

64 - 5. அவன் இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் - அவனுடைய இழுமென்றெழும் ஓசையினையுடைய அகலமுடைத்தாகிய மதிலில்.;

66. நசையுநர் தடையா நல் பெரு வாயில் - நச்சிவந்தார்க்குத் தடையில்லாத நன்றாகிய பெரிய கோபுரவாயிலின் கண்ணே,

67. இசையேன் புக்கு - வாயிலோனுக்குக் கூறாமற்புகுந்து,;

என் இடும்பை தீர -என்னுடைய மிடிதீர்தல் காரணமாக,

68. எய்த்த மெய்யேன் எய்யேனாகி -2முன்பு இளைத்த உடம்பையுடைய யான் அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பின்பு இளைப்புத்தீர்ந்து,;

69 - 70. பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப கை கசடு இருந்த என் கண் அகல் தடாரி - படம்விரித்த பாம்பினது பொறியை யொப்பக் கையினது வடுப்பட்டுக்கிடந்த எனது கண்ணகன்ற உடுக்கையில் தோற்றுவித்த,;

----------
--------

71 - 3. 1[ இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர், வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய, லொன்றியான் பெட்டா வளவையின் :]

இரு சீர் பாணிக்கு ஏற்ப ஒன்று யான் பெட்டா அளவையின் - இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டிணை யான் பேணிப் பாடுவதற்கு முன்னே,

விரி கதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் - விரிகின்ற கிரணங்களையுடைய வெள்ளியெழுந்த செறிந்த இருளையுடைய விடியற் காலத்தே,;

73 - 4. ஒன்றிய கேளிர் போல கேள் கொளல் வேண்டி - முன்பே தன்னோடு பொருந்திய நட்டாரைப்போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,;

75. வேளாண் வாயில் வேட்ப கூறி - தான் உபகரித்தற்கு வழியாகிய 2இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்பும்படி உபசாரங்களைக்கூறி,;

76. கண்ணில் காண நண்ணு வழி இரீஇ - தன் கண்ணிலே காணும் படி தனக்கு அண்ணிதான இடத்திலே என்னை இருத்தி,;

77. பருகு அன்ன அருகா நோக்கமோடு - தன்னைக் கண்ணாற் பருகுந் தன்மையையொத்த கெடாத பார்வையாலே,

78. [ உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ :] என்பு உருகு பவைபோல் குளிர்கொளீஇ - என்பை, உருகும் மெழுகு முதலியனபோல் நெகிழும்படி குளிர்ச்சியைக் கொளுத்தி,;

நோக்கத்தாலே (77) கொளுத்தியென்க.;

79. ஈரும் பேனும் இருந்து இறைகூடி - ஈரும்பேனும் கூடியிருந்து அரசாண்டு,;

80 - 81. [ வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர் துவர நீக்கி :];

வேரொடு நனைந்து வேறு இழை நுழைந்த துன்னல் சிதாஅர் நீக்கி - வேர்ப்பாலே நனைந்து சரடுகள் உள்ளே ஓடுதற்குக் காரணமாகிய தைத்தற்றொழிலையுடையனவாகிய சீரையை என்னிடத்தினின்றும் போக்கி,;

----------
--------

82 - 3. நோக்கு நுழைகல்லா நுண்மையை பூ கனிந்து அரவு உரி அன்ன அறுவை துவர (81) நல்கி - கண்ணிற்பார்வை இஃது இழை போன வழியென்று குறித்துப்பார்க்க வாராத நுண்மையையுடையவாய்ப் 1பூத்தொழில் முற்றுப்பெற்ற தன்மையாற் பாம்பினது தோலையொத்த துகிலை மிகநல்கி,;

துவரவென்பதனை இதனொடு கூட்டுக.;

84 - 5. [ மழையென மருளும் மகிழ்செய் மாடத், திழையணி வனப்பினின்னகை மகளிர் :]

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் - இழைகளையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யுமகளிர்,;

இதனை, "இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (220) என்றார், சிறுபாணாற்றிலும்.

84 - 7. [ போக்கில் பொலங்கல நிறையப் பல்கால், வாக்குபு தரத்தர :]

84 - 7. மருள் செய்யும் மகிழ் மழையென மாடத்து பல்கால், வாக்குபு - உண்டார் மயங்குதலைச் செய்யுங் கள்ளை மழையென்னும்படி மாடத்திடத்தே பல்காலும் வார்த்து,;

மகிழ் : ஆகுபெயர்.;

86 - 7. போக்கு இல் பொலங்கலம் நிறைய தர தர - ஓட்டமற்ற பொன்னாற் செய்த வட்டில் நிறையத் தரத்தர,;

87 - 8. வருத்தம் வீட ஆர உண்டு பெரு அஞர் போக்கி - வழி போன வருத்தம் போம்படி நிறையவுண்டு கள்ளுண்ணப் பெறுகிலே மென்று நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி,;

89. செருக்கொடு நின்ற காலை - மகிழ்ச்சியுடனே நான் நின்ற அந்திக் காலத்தே,;

89 - 90, மற்று அவன் திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி - இங்ஙனம் மிடி தீர்ந்த பின்பு அவனுடைய செல்வம் விளங்குகின்ற கோயிலில் ஒருபக்கத்தே கிடந்து,;

அவனைச் சேவித்து நிற்கின்ற நங்குலத்திலுள்ள மகளிர் (85) பொலங்கல நிறைய (86) மகிழை (84) வார்த்துத் தரத்தர (87) உண்டு போக்கிக் (88) கோயிலில் ஒருசிறைத் தங்கியென முடிக்க.;

---------
---------

91 - 2. தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடா அது அதன் பயம் எய்திய அளவை மான - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவஞ்செய்த உடம்பைப் 1போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப்பெற்ற தன்மையையொப்ப,;

2மக்களென்னாது மாக்களென்றார், வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்,;

93. ஆறு செல் வருத்தம் அகல நீக்கி - வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற் போக்கி,;

94 - 5. [ அனந்தர் நடுக்க மல்ல தியாவது, மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து :]

அனந்தர் நடுக்கம் அல்லது மனம் கவல்பு யாவதும் இன்றி எழுந்து-கள்ளின் செருக்காலுண்டான மெய்ந்நடுக்கமல்லது வேறுமனக்கவற்சி சிறிதுமின்றித் துயிலுணர்ந்து,

கவல்பு, கவற்சியெனப் பெயராய் நின்றது.;

96. மாலை அன்னதோர் புன்மையும் - யான் அவனைக் காண்பதற்கு முன்னாளின் மாலைக்காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிற்கெட்டாத மிடியையும்,;

3அன்னது : நெஞ்சறிசுட்டு.

--------
----------

96 - 7. காலை கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் மாழாந்து (95) - அவனைக்கண்ட மற்றை நாட்காலத்தில் என்னைக் கண்டவர் நெரு நல் வந்தவனல்லனென்று மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற தன்மையையும் யான் கண்டு மயங்கி,;

மாழாந்தென்பதனை இதனொடு கூட்டுக.

பல நறுநாற்றங்களும் தானுடைமையின், வண்டுசூழ் நிலையென்றான்.;

98. கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப - இது கனவாயிருக்குமென்று கலங்கிய என்னுடைய நெஞ்சு நனவென்று துணிய,;

99. வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப வலிய மிடியானுண்டாகிய வருத்தம் பொதிந்த கூட்டத்தார் மனம் மகிழ்ச்சி மிக,;

100. கல்லா இளைஞர் சொல்லி காட்ட - அவற்குரிய புகழ்களைத் தாங்கள் முற்றக்கற்று என்பின்னின்ற இளையவர் அவற்றைச் சொல்லிக் காட்ட,;

கல்லாவென்பது செய்யாவென்னுமெச்சம்.

இனித் தத்தம் சிறுதொழிலன்றி வேறொன்றுங்கல்லாத இளைஞர் நெருநல்வந்தவன் இவனென்று அரசனுக்குச் சொல்லிக்காட்ட வென்று மாம்; என்றது, இவன் வேறுபாடு 1கூறிற்றாம்.

101. கதுமென கரைந்து வம்மென கூஉய் - அதுகேட்டு அவர்களைக் கடுக அழைத்துவாருமென்று வாயிலோர்க்குக் கூறி யாங்கள் சென்ற பின் தான் அணுகவாருமென்று அழைக்கையினாலே,

"ஏனோருந் தம்மென" (மதுரைக். 747) என்புழித் தம்மென்பது தாருமென நின்றாற் போல வம்மென்பது வாருமென்னும் பொருட்டாய் நின்றது.;

102. அதன் முறை கழிப்பிய பின்றை - அக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள் செய்து முடித்தபின்பு,

பதன் அறிந்து - காலமறிந்து,;

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,;

105 - 6. [ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை, யூழி னூழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சுட்ட கொழு குறை

-----------
--------

வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,;

107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே,;

107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பலவடிவினையுடைய 1பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,;

உபாயங்களாற் பண்ணுதலின், விரகென்றார்; ஆகுபெயர்.;

109 - 10. (மண்ணமை முழவின் பண்ணமை சீறியா, ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க :] பண் அமை சிறு யாழ் ஒள் நுதல் விறலியர் மண் அமை முழவின் பாணி தூங்க - பண் குறைவற்ற சிறிய யாழையுடைய ஒள்ளிய நுதலினையுடைய 2விறல்படப் பாடியாடுவார் மார்ச் சனையமைந்த முழவினது தாளத்திற்கு ஆடும்படி,

111. மகிழ் பதம் பல் நாள் கழிப்பி - மகிழ்ச்சியையுடைய கள்ளுண்டலிலே பலநாள் போக்கி,

இனி, பதம் காலமுமாம்;

111 - 2. ஒரு நாள் அவிழ் பதம் கொள்க என்று இரப்ப - ஒருநாள் சோறாகிய உணவையும் கொள்வாயாகவென்று வேண்டிக்கொள்கையினாலே,

112 - 4. முகிற் தகை முரவை போகிய முரியா அரிசி விரலென நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - முல்லைமுகையின் தகைமையினையுடைய வரியற்ற இடைமுரியாத அரிசி விரலென்னும்படி நெடுகின ஒன்றோடொன்று சேராத சோற்றையும்,

பழுத்த அரிசியை ஆக்கினமைதோன்ற நிரலமை புழுக்கலென்றார்.;

115 - 6. பரல் வறை கருனை 3காடியின் மிதப்ப அயின்ற காலை - பரலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக்கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம்பும்படி விழுங்கினகாலத்தே,;

இனி, காடியைப் புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலையென்றுமுரைப்பர்.

116. பயின்று இனிது இருந்து - அவனைவிடாதே இனிதாகவிருந்து,;

-------------
---------

117 - 8. [ கொல்லை யுழுகொழு வேய்ப்பப் பல்லே, யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி :] பல்லே கொல்லை உழு கொழு ஏய்ப்ப எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி - எம்முடைய பற்கள் கொல்லைநிலத்தே யுழுத கொழுவை யொப்பப்பகலும் இரவும் இறைச்சியைத்தின்று முனைமழுங்கி,;

119. உயிர்ப்ப இடம் பெறாஅது ஊண் முனிந்து - இளைப்பாற இடம் பெறாதே இவ்வுணவுகளை வெறுத்து,;

முற்கூறியனவெல்லாம் உண்டற்றொழிற்கு உரிமையுடைமையின், ஊண் முனிந்தென்றார்.

119 - 22. [ ஒருநாட், செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய, செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென, மெல்லெனக் கிளந்தன மாக :]

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ - குற்றத்தைச் செய்தெழுந்த பகைவரைத் திறைகொள்ளும் கூறுபாடுகளெல்லாம் முடியப்போன செல்வா,

பெயர்ந்து எம் தொல் பதி சேறும் என மெல்லென ஒருநாள் கிளந் தனமாக - இனி மீண்டு எம்முடைய பழைய ஊரிடத்தே செல்வேமென்று மெத்தென ஒருநாளிலே சொன்னேமாக,;

தொல்பதியென்றார், இதுவும் தமக்குப்பதியென்பது தோன்ற,;

122 - 4. [ வல்லே, யகறி ரோவெம் மாயம் விட்டெனச், சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு :]சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு எம் ஆயம் விட்டு வல்லே அகறிரோ என - அதுகேட்டுக் கோபித்தான்போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே எம் திரளைக்கைவிட்டு விரைந்து போகின்றீரோவெனச் சொல்லி,;

125 - 6. [ துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு, பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென :]

1பிடி புணர் வேழம் அடி துடி அன்ன தூங்கு நடை குழவியொடு கொள்க என - பிடியொடு புணர்ந்தகளிறுகளைத் தம் அடிகள் துடியின் கண்ணை யொத்த அசைந்த நடையினையுடைய கன்றுகளுடனே கைக்கொள்வாயாக வென்று சொல்லி,

127. [ தன்னறி யளவையிற் றரத்தர :] பெட்டவை (126) தன் அறி அளவையின் தர தர - பின்னும் தான் விரும்பியிருந்த ஊர்திகள் ஆடைகள் அணிகலங்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலேதர,;

---------
--------

127 - 8. யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு - யானும் என்னுடைய குறைகளை யானறிந்த அளவாலே வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,;

129. இன்மை தீர வந்தனென் - மிடி எக்காலமும் இல்லையாம்படி வந்தேன்;

யானும் அவன் (64) வரைப்பின் (65) வாயிற்கண்ணே (66) புக்கு என் இடும்பை தீர்தல்காரணமாக (67) எய்யேனாகி (68) விடியற்காலத்தே (72) ஒன்று யான்பெட்டா அளவையிற் (73) கொளல்வேண்டிக் (74) கூறி (75) இருத்தி (76) நோக்கத்தாலே (77) குளிர்கொளுத்திச் (78) சிதார்நீக்கித் துவர (81) நல்கி (83) மகளிர் (85) மகிழை (84) வார்த்துத்தரத்தர (87) உண்டுபோக்கி (88) நின்றகாலைத் (89) தங்கி (90) நீக்கி (93) எழுந்து (95) ஏமாப்பச் (98) சொல்லிக்காட்டக் (100) கூவு கையினாலே (101) கழிப்பிய பின்றைத் (102) தண்டி (104) ஒற்றி (106) வேண்டேமென்கையினாலே (107) இரீஇத் (108) தூங்கக் (110) கழிப்பி (111) இரப்ப (112) அயின்றகாலத்திலே இருந்து (116) மழுங்கி (118) முனிந்து (119) சேறுமென (121) ஒருநாட் (119) கிளந்தனமாக (122) அகறிரோவெனச் சொல்லித் (123) தரத்தர யானும் (127) தவஞ்செய்மாக்கள் (91) அதன் பயமெய்திய அளவைமான (92) வேண்டுவ முகந்துகொண்டு (128) அரசவையிருந்த தோற்றம்போல (55) இன்மைதீர வந்தனெனென வினைமுடிக்க.

129 - 30. வென் வேல் உருவம் பல் தேர் இளையோன் சிறுவன் - வென்ற வேலினையுடைய அழகினையுடைய பலதேரினையுடைய இளஞ்சேட் சென்னியுடைய புதல்வன்,;

வென்ற வேற்புதல்வன்.

131. முருகன் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது சீற்றம் போலும் சீற்றத்தையுடைய உட்குதல் பொருந்திய தலைவன்,;

132. தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி பிறந்து (137) - தாயுடைய வயிற்றிலேயிருந்து அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்து,;

1தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்தென்றார்.;

133. எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப - முன்பு தன்வலியறியாத பகைவர் பின்பு தன்வலியினையறிந்து ஏவின தொழிலைச் செய்ய,;

---------
--------

134. செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப - ஏவல் செய்யாத பகைவர் தேசம் மனக்கவற்சி பெருக,;

135 - 6. 1[ பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி, வெவ்வெஞ் செல்வன் விசும்புடர்ந் தாங்கு :] வெ வெ செல்வன் பௌவம் மீமிசை பகல் கதிர் பரப்பி விசும்பு படர்ந்தாங்கு - வெம்மையையுடைய 2எல்லாரும் விரும்பப்படும் இளஞாயிறு கடலின்மீதே பகற்பொழுதைச் செய்யுங் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் விசும்பிலே மெத்தெனச் சென்றாற்போல,

137.[ பிறந்துதவழ் கற்றதற் றொட்டு :]

தவழ் கற்றதன் தொட்டு - தவழ்தலைக் கற்றநாள் தொடங்கி,;

பிறந்து, முன்னேகூட்டிற்று.

137 - 40. [ சிறந்தநன், னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப, வாளி நன்மா னணங்குடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி :]

மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி (140) - 3கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்ற வலியாலே கலித்து,;

செல்வன் விசும்புபடர்ந்தாங்குத் (136) தவழ்கற்றதற்றொட்டு (137) மிகுகின்ற வலி (140) யென்க.

பின்பு அரசாட்சி பெற்றானாதலின், தவழ்கற்றதற்றொட்டு நாடுசெகிற் கொண்டானென்றல் பொருந்தாமையுணர்க.;

சிறந்த நல் (137) நாடு செகில் கொண்டு நாள் தோறும் வளர்ப்ப (138) - 4ஏனையோர் நாட்டிற்சிறந்த நன்னாட்டைத் தோளிலே வைத்துக் கொண்டு நாடோறும் வளர்த்தல் காரணமாக,;

தோள்வலியாலே பகைவென்று நாடுகாத்தமைபற்றி, நாடுசெகிற் கொண்டென்றார்.;

140. [ முலைக்கோள் விடாஅ மாத்திரை :] ஆளி நல் மான் அணங்கு உடைகுருளை (189) முலைகோள் விடாஅ மாத்திரை - ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளை முலையையுண்டலைக் கைவிடாத இளைய பருவத்தே,;

யாளியை ஆளியென்றார், "கடிசொலில்லை" (தொல். எச்ச. சூ. 56) என்பதனான், "நாயே பன்றி" (தொல். மரபு. சூ. 8) என்னும் சூத்திரத்து, ‘ஆயுங்காலை' என்பதனாற் குருளையென்பது முடித்தாம்.;
----------
-------------

141. ஞெரேரென - கடுக,;

142. தலை கோள் வேட்டம் களிறு அட்டாங்கு - முற்பட இரையைக் கோடற்குக் காரணமான வேட்டையிலே களிற்றைக் கொன்றாற் போல,;

143. 1இரு பனம்போந்தை தோடும் - கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும்,;

"தோடே மடலே" (தொல். மரபு. சூ. 86) என்னுஞ் சூத்திரத்து, ‘பிறவும்' என்றதனாற் போந்தை முடித்தாம். அதனிடத்தினின்றும் போந்ததனாற் போந்தையென்றார்; "இரும்பனைக் கொண்டு கடை கழுமிய வடங்கு சிறை வலனகலத்து" என்றார் பிறரும்.;

143 - 4. [ கருஞ்சினை, யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலும் :]

கரு சினை வேம்பின் அரம் வாய் அம் குழை தெரியலும் - கரிய கொம்பினையுடைய வேம்பினுடைய 2வாளரத்தின் வாய்போலும் விளிம்பினையுடைய அழகிய தளிராற்செய்த மாலையும்,;

145 - 6. ஓங்கு இரு சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் ஒருகளத்து அவிய - நறிய மாலைகளில் மேலாதற்குக் காரணமான பெரிய தலையிலே ஏனையோர்சூடும் அடையாளப்பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சேரனும் பாண்டியனும் ஒருகளத்தே படும்படி,

147 - 8. 3வெண்ணி தாக்கிய வெரு வரு நோன் தாள் கண் ஆர்

----------
---------

கண்ணி கரிகால் வளவன் - 1வெண்ணி யென்கின்ற ஊரிடத்தேபொருத அச்சந்தோன்றுகின்ற வலியையுடைய முயற்சியையும் 2கண்ணுக்கு அழகுநிறைந்த ஆத்திமாலையினையுமுடைய கரிகாற்சோழன்,;

3 "முச்சக் கரமும்" என்னுங் கவியானே கரிகாலாதலுணர்க.

தாயமெய்திப் (132) பிறந்து (137) மிகுவலிசெருக்கித் (140) தெவ்வர் ஏவல் கேட்பச் (133) செய்யார் தேஎம் தெருமரல்கலிப்ப (134) நாடு செகிற்கொண்டு நாடொறும் வளர்த்தல் காரணமாகக் (138) குருளை (139) களிறட்டாங்கு (142) இருபெரு வேந்தரும் அவியத் (146) தாக்கிய (147) கரிகால்வளவனென முடிக்க.

149 - 50. [ தாணிழன் மருங்கி லணுகுபு குறுகித், தொழுது :] 4நிழல் மருங்கில் தாள் அணுகுபு குறுகி தொழுது - அருளைத்தன்னிடத்திலேயுடைய திருவடிகளை அண்ணிதாக நின்றுசேர்ந்து வணங்கி,;

150. முன் நிற்குவிராயின் - நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின்,;

150 - 51. [ பழுதின், றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கி :] ஈற்று ஆ விருப்பின் பழுதின்று போற்றுபு நோக்கி - ஈற்றுத்தொழிலையுடைய பசு தனது கன்றுக்குப் பால்சுரந்து கொடுக்கவேண்டுமென்னும் விருப்பம் போல நும்மிடத்து நிற்கின்ற மிடி இன்றாம்படி பேணிப்பார்த்து,;

151 - 2. நும் கையது கேளா அளவை - நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே,;

152. 5ஒய்யென - கடுக,;

153 - 4. பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் நீக்கி - கொட்டைப் பாசியினது வேர்போலே அழுக்கோடே குறைந்த தையலையுடைய துணிகளைப்போக்கி,;

154 - 5. தூய 6கொட்டை கரைய பட்டு உடை ந,ல்கி - தூயவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலேயுடைய பட்டாகிய உடைகளைத் தந்து,;

கொட்டை - தும்புமாம்.;
-----------
----------

156. பெறல் அரு கலத்தின் பெட்டாங்கு உண்க என - பெறுதற்கரிய பொற்கலத்தே விரும்பினபடியே உண்பாயாகவென்று சொல்லி,;

157 - 8. [ பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர, வைகல் வைகல் கைகவி பருகி :] பூ கமழ் கை கவி தேறல் வாக்குபு தர தர வைகல் வைகல் பருகி - 1தீம் பூ நாறுகின்ற தன்கடுமையாற் சிறிதமையுமென்று 2கைகவித்தற்குக் காரணமான கட்டெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர நாடோறும் நாடோறும் பருகி,;

"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்" (புறநா. 392 : 16) என்றார் பிறரும்.;

159. எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை - நெருப்புத் தழைத்தாலொத்த ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழில்லாத தாமரையை,;

எனவே பொற்றாமரைக்கு வெளிப்படை கூறினார். "தோடே மடலே" (தொல். மரபு. சூ. 86) என்னும் சூத்திரத்தே கூறினாம்.;

160. சுரி இரு பித்தை பொலிய சூட்டி - கடைகுழன்ற கரிய மயிரிலே பொலிவுபெறச் சூட்டி,;

161 - 2. நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்த மொடு பாடினி அணிய - நூலாற்கட்டாத நுண்மையையும் பிணக்கத்தையுமுடைய பொன்னரிமாலையை வெள்ளிதாகிய ஒளியையுடைய முத்தத்தோடே பாடினி சூட,

163. கோட்டின் செய்த கொடுஞ்சி நெடு தேர் - யானைக்கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரிலே,

164. ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - சாதிலிங்கம் ஊட்டின தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிரசைய,;

165. பால் புரை புரவி நால்கு உடன்பூட்டி - பாலையொத்த நிறத்தினையுடைய குதிரைகள் நான்கினைச் சேரப்பூட்டி,;

நான்கு, நால்கெனப் பெயர்த்திரிசொல்.;

166. காலின் ஏழடி பின்சென்று - தான் காலாலே ஏழடி பின்னே வந்து,;

3ஏழடிவருதல் ஒருமரபு; ஏழிசைக்கும் வழிபாடுசெய்தானாகக் கருதுதலின்.

---------
------

"செலவினும் வரவினும்" (தொல். கிளவி. சூ. 28) என்னும் சூத்திரத்துப் பொதுவிதியாற் சென்றென்பது வந்தென்னும் பொருட்டாய் நின்றது.;

166 - 7. [ கோலின், றாறுகளைந்து:] இன் தாறு கோல் களைந்து - செலுத்துதற்கு இனிதாகிய செலவு முடுக்குங்கோலைப் போக்கி,;

என்றதனாற் கடுவிசைக்கு இவர் இருத்தலாற்றாரென்று கருதி இயற்கையிற்சேறல் அமையுமென்றான்.

167. ஏறு என்று ஏற்றி - இங்ஙனம் ஏறென்று ஏறவிட்டு,

167 - 8. வீறு பெறு பெரு யாழ் முறையுளி கழிப்பி - ஏனையாழ்களின் வீறுபெற்ற யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கு முறைமைகளை நினக்குத் தந்துவிட்டு,

-70. நீர் வாய் தண் பணை தழீஇய தளரா இருக்கை நல் பல் ஊர நாட்டொடு - நீரை எப்பொழுதும் தன்னிடத்தேயுடைத்தாகிய தண்ணிய மருத நிலஞ்சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய நன்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே,;

170 - 72. [ நன்பல், வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம் :];

பறை வெரூஉ நுவலும் (171) வேழம் (172) - பறை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுதற்குக் காரணமாகிய யானை,;

பரூஉ பெரு தட கை (171) வெரு வரு செலவின் வெகுளி (172) நல்பல் (170) வேழம் (172) - பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும் அச்சந்தோன்றும் ஓட்டத்தினையும் கோபத்தினையுமுடைய நன்றாகிய பலயானைகள்,;

173. தரவு இடை தங்கல் ஓவிலன் - தருதற்றொழிலிடத்தே நிலை பெறுதலை ஒழிதலிலன் ;;

இனித் தரலிடத்துத் தாழ்த்தலிலனென்றுமாம்.

173 - 4. வரவிடை பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி - வருதலிடத்துப் பெற்ற பொருள்களைப் பிறர்க்குப்பிறர்க்குக் கொடுத்து,

174 - 5. தெற்றென செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் - கடுக அவனிடத்து நின்றும் போகின்றபோக்கை முடிவுபோக்குவீராயின்,;

175. பல புலந்து - அது பொறாமற் பலகாலும் வெறுத்து,;

--------------


1நிலைபெறுந் தகைமையுடைத்தாகலிற் புகழை நிலைமையென்றார்; ஆகுபெயர்.

177. செல்க என - இங்ஙனம் போகெனக்கூறி,;

விடுக்குவன் அல்லன் - நும்மைக் கடுக விடுவானல்லன்;

தொழுது முன்னிற்குவிராயின் (150) நோக்கி (151) நல்கிப் (155) பாடினி அணியாநிற்கச் (162) சூட்டி (160) வாக்குபு தரத்தரப் (157) பருகித் (158) தெற்றெனச் (174) செலவுகடைக்கூட்டுதிராயின் அதற்குப் பல புலந்து (175) தேரிலே (163) குதிரையைப்பூட்டி (165) ஏற்றி (167) முறை யுளிக்கழிப்பி (168) விடுக்குவனல்லன் (177) ; பின்னர் நின்னைநோக்கி நில்லாத உலகத்து நிலைமையைச் சீர் தூக்கி (176) வரவிடைப் (173) பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி (174) இங்ஙனஞ் செல்வாயாக வெனக்கூறி (177) அங்ஙனம் நீபோதற்கு நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்சல் ஓவிலன் (173) என முடிக்க.;

நில்லாவுலகத்து நிலைமை தூக்கிப் (176) பலபுலந்து (175) செல்கென விடுக்குவனல்லன் (177) என்பாருமுளர்.

177 - 9. ஒல்லென திரை பிறழிய இரு பௌவத்து கரை சூழ்ந்த அகல் கிடக்கை மண் மருங்கினான் (227) நாடு (248) - ஒல்லென்னும் ஓசைபடத் திரைமுரிந்த கரியகடலினது கரைசூழ்ந்த அகன்ற பரப்பினையுடைய இவ்வுலகத்து ஒரு கூற்றின்கண் உளதாகிய சோழநாடு,

180 - 82. [ மாமாவின் வயின்வயினெற், றாழ்தாழைத் தண்டண்டலைக், கூடுகெழீஇய குடிவயினான்:];

மாமாவின் வயின் வயின் நெல்கூடு கெழீஇய நாடு (248) - ஒரு மாநிலத்தில் ஒருமாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும் நெற் கூடுகள் பொருந்தின சோழநாடு.

2தாழ் தாழை தண் தண்டலை குடிவயினான் - தாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிலிருக்கின்ற குடிமக்களிடத்தில்,

183 - 4. செ சோற்ற பலி மாந்திய கரு காக்கை - உதிரத்தாற் சிவந்தசோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கரிய காக்கை,;

184 - 6. [ கவவுமுனையின், மனைநொச்சி நிழலாங்க, ணீற்றியாமை தன் பார்ப்போம்பவும் :] மனை நொச்சி நிழல் ஆங்கண் ஈற்று யாமை தன் பார்ப்பு கவவு முனையின் ஓம்பவும் - மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலிடத்துக் கிடந்த ஈற்றுத் தொழிலையுடைத்தாகிய யாமையினுடைய பார்ப்பைத் தான் தின்றலை வெறுத்ததாயின், அதனைப்பின்பு பசித்த காலத்துத் தின்பதாகப் பாதுகாத்து வைப்பவும்,;

--------------
-----------

எனவே, மருத நிலத்திலிருக்குங்காக்கை நெய்தனிலத்துப் பார்ப்பைத் தின்னுமென்றார்.;

"தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன" (தொல். மரபு . சூ. 5) என்பதனாற் பார்ப்பென்றார்.;

187. இளையோர் வண்டல் அயரவும் - அவ்வுழவர் மகளிர் நெய்தல் நிலத்தின் மணற்குன்றிலே வண்டலிழைத்து விளையாடவும்,;

187 - 8. [ முதியோர், அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்] பகை முதியோர் அவை புகு பொழுதில் தம் முரண்செலவும் - பகைமை முதிர்ந்தோர் தனது அரசவையிற் சென்று புகுங்காலத்துத் தம் மாறுபாட்டைப் போக்கும்படியாகவும், பெரிதாண்ட (229) என மேலே கூட்டுக.

என்ற, 1வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்குவீடறுப்ப னென்றவாறு; 2 "உரை முடிவு காணான்" (21) என்னும் பழமொழி கூறினார்.

189 - 92. [முடக்காஞ்சிச் செம்மருதின், மடக்கண்ண மயிலாலப், பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனிமாந்தி :] பை பாகல் பழம் செ சுளைய துணரிய கனி மாந்தி முடம் காஞ்சி செ மருதின் மட கண்ண மயில் ஆல - பசிய பாகற்பழத்தையும் சிவந்த சுளையையுடையவாகிய குலைகொண்ட பலாப்பழத்தையும் தின்று வளைவையுடைய காஞ்சிமரத்திலும் செவ்விய மருதிலுமிருந்த மடப்பத்தைத் தம்மிடத்தேயுடைய வாகிய
பெடைமயில்கள் ஆரவாரித்து அழைக்கும்படி அங்குநின்றும் போந்து.;
----------
-------

193 - 213. [அறைக்கரும்பி னரிநெல்லி, னினக்களம ரிசைபெருக, வறளடும்பி னிவர்பகன்றைத், தளிர்ப்புன்கின் றாழ்காவி, னனைஞாழலொடு மரங்குழீஇய, வவண்முனையி னகன்றுமாறி, யவிழ்தளவி னகன்றோன்றி, நகுமுல்லை யுகுதேறுவீப், பொற்கொன்றை மணிக்காயா, நற்புறவி னடைமுனையிற், சுறவழங்கு மிரும்பௌவத், திறவருந்திய வினநாரை, பூம்புன்னைச் சினைச்சேப்பி, னோங்குதிரை யொலிவெரீஇத், தீம்பெண்ணை மடற்சேப்பவுங் கோட்டெங்கின் குலைவாழைக், கொழுங் காந்தண் மலர்நாகத்துத், துடிக்குடிஞைக் குடிப்பாக்கத், தியாழ்வண்டின் கொளைக்கேற்பக், கலவம்விரித்த மடமஞ்ஞை, நிலவெக்கர்ப் பலபெயர:]

யாழ் வண்டின் கொள்ளைக்கு ஏற்ப (211) கலவம் விரிந்த மடமஞ்ஞை (212) நிலவு எக்கர் பலபெயர (213) - 1யாழோசைபோலும் வண்டினது பாட்டினைக்கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த அறியாமையையுடைய மயில் நிலவுபோலும் இடுமணலிலே பல பகுதிப்பட ஆடவும்,

பெடை தங்குகின்ற மருதநிலத்தை விட்டுப் பாட்டைக்கேட்டு நெய்தனிலத்தே போந்தமைபற்றி மடமஞ்ஞையென்றார்.

அகவர் (220) அறை கரும்பின் அரி நெல்லின் (193) இனம் களமர் இசைபெருக (194) வறள் அடும்பின் இவர் பகன்றை (195) தளிர் புன்கின் தாழ் காவின் (196) நனை ஞாழலொடு மரம் குழீஇய (197) அவண் முனையின் அகன்று மாறி (198) நீல் நிறம் முல்லை பல் திணை நுவல (221) - நாட்டில் வாழ்வார் அறுத்தலைச்செய்யும் கரும்பின்கண்ணும் அரிகின்ற நெல்லின் கண்ணும் எழுப்பின திரண்ட களமருடைய ஓசை மிகுகையினாலே நீரற்ற இடத்திலெழுந்த அடும்பினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிரையுடைத்தாகிய புன்கினையும் தாழ்ந்தசோலைகளையுமுடையதாய் அரும்பின ஞாழலோடே ஏனைமரங்களும் திரண்ட அந்நாட்டை வெறுத்தார்களாயின் அவ்விடத்தை நீங்கி நெஞ்சாலே கைவிட்டு நீல நிறத்தையுடைய முல்லைக்கொடி படர்ந்த பல காட்டு நிலத்தேசென்று அந்நிலத்தைக் கொண்டாடவும்,

அகவர் (220) இசைபெருக (194) முனையின் அகன்று மாறிப் (198) பஃறிணை நுவல (221) வென முடிக்க.;

--------
---------

கானவர் (220) அவிழ் தளவின் அகல் தோன்றி (199) நகு முல்லை வீ உகு தேறு (220) பொன் கொன்றை மணி காயா (201) நல் புறவின் நடை முனையின் (202) மருதம் பாட (220) - முல்லைநிலத்து வாழ்வார் அவிழ்கின்றதளவினையும் பரந்ததோன்றியினையும் அலர்கின்ற முல்லையினையும் பூ உகுகின்ற தேற்றாவினையும் பொன்போலும் பூவினையுடைய கொன்றையினையும் நீலமணிபோலும் பூவினையுடைய காயாவினையுமுடைய நல்லகாட்டில் உறைகின்ற ஒழுக்கத்தை வெறுக்கின் மருத நிலத்தே சென்று அவ்வொழுக்கத்தைப் புகழவும்,;

1தளவு - முல்லைவிசேடம்.

சுற வழங்கும் இல் பௌவத்து (203) இறவு அருந்திய இனம் நாரை (204) பூ புன்னை சினை சேப்பின் (205) ஓங்கு திரை ஒலி வெரீஇ (206) தீ பெண்ணை மடல் சேப்பவும் (207) - சுறாத்திரியும் கரிய கடலின்கண் இறவைத்தின்ற திரண்டநாரைகள் பூக்களையுடைய புன்னைக்கோட்டிலே தங்கின் அதன்மேலே முரிகின்ற உயர்ந்ததிரையினது ஆரவாராத்திற்கு வெருவி மருதநிலத்தில் இனியபனையினது மடலிலே தங்கவும்,

கோள் தெங்கின் குலை வாழை (208) கொழு காந்தள் மலர்நாகத்து (209) துடி குடிஞை குடி பாக்கத்து (210) பரதவர் (218) அவண் முனையின் (195) குறிஞ்சி பாட (218) - குலைகொண்ட தெங்கினையும் குலையினையுடைய வாழையினையும் கொழுவிய காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையினையும் துடியோசைபோலும் ஓசையினையுடைய பேராந்தையினையுமுடைய குடியிருப்பையுடைத்தாகிய பாக்கத்தில் வாழும் பரதவர் அவ்விடத்தை வெறுப்பின் குறிஞ்சி நிலத்தே சென்று அவ்விடத்தைப் புகழவும்.

214 - 5. தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும் - 2தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள் மீனினது நெய்யோடே நறவையும் கொண்டுபோகவும்,;

216 - 7. தீ கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் - இனிய கரும்போடே அவலைக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே கள்ளையும் கொண்டுபோகவும்.;

218 - 9. [ குறிஞ்சி பரதர் பாட நெய்தல், நறும்பூங் கண்ணி குறவர் சூட. :]

குறவர் நெய்தல் நறு பூ கண்ணி சூட - குறவர் அந்நிலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது நறிய பூவாற்செய்த கண்ணியைச் சூடவும்.;

-------------
-------

220 - 22. [ கானவர் மருதம் பாட வகவர், நீனிற முல்லைப் பஃறிணை நுவலக், கானக்கோழி கதிர்குத்த:]

கானம் கோழி கதிர் 1குத்த - காட்டிடத்துக் கோழிகள் நெற்கதிரைத் தின்னவும்,;

223. மனை கோழி தினை கவர - மருதநிலத்தின் மனையிற்கோழிகள் தினையைத் தின்னவும்,;

224. வரை மந்தி கழி மூழ்க - மலையிடத்திற்குரிய மந்திகள் கழியிலே மூழ்கவும்,;

225. கழி நாரை வரை யிறுப்ப - கழியிற்றிரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும்,;

226. தண் வைப்பின் நால் நாடு குழீஇ - குளிர்ந்த வைப்புக்களையுடைய நான்குகூறாகிய நாடுகள் திரண்டு,;

நால் நாடென்றார், "நடுவணைந்திணை நடுவண தொழிய" (தொல். அகத். சூ. 2) என்னுஞ் சூத்திரத்தால்.

குழீஇயென்னும் செய்தெனெச்சம் பிறவினைகொண்டது, "அம் முக்கிளவியும்" (தொல். வினை. சூ. 34) என்னும் சூத்திரவிதியால்.

பார்ப்போம்பவும் (186) அயரவும் (187) மயிலால, (190) மடமஞ்ஞை (212) பலபெயரவும் (213) நாரை (204) சேப்பவும் (207) அகவர் (220) அகன்றுமாறிப் (198) பஃறிணை நுவலவும் (221) கானவர் (220) நடைமுனையின் (202) மருதம்பாடவும் (220) பாக்கத்துப் (210) பரதவர் குறிஞ்சிபாடவும் (218) கிழங்கு மாறியோர் (214) நறவுமறுகவும் (215) அவல்வகுத்தோர் (216) மதுமறுகவும் (217) குறவர் கண்ணிசூடவும் (219) கோழி கதிர்குத்தவும் (222) மனைக்கோழி தினைக்கவரவும் (223) மந்தி மூழ்கவும் (224) நாரை வரையிறுப்பவும் (225) நானாடு குழீஇ (226) மாமாவின் வயின்வயின் நெற் (180) கூடு கெழீஇய (182) நாடு (248) என வினைமுடிக்க.;

227 - 31. [ மண்மருங்கினான் மறுவின்றி, யொருகுடையா னொன்று கூறப், பெரிதாண்ட பெருங்கேண்மை, யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ, லன்னோன் வாழி வென்வேற் குருசில்:]

மறு இன்றி (227) அறனொடு புணர்ந்த திறன் அறி செ கோல் (230) ஒரு குடையான் ஒன்று கூற (228) முதியோர் (187) முரண் செல (188) பெரு கேண்மை பெரிது ஆண்ட (229) வென் வேல் குருசில் (231) - குற்றமின்றித் தருமத்தோடு கூடிய வழியை உலகம் அறிதற்குக் காரணமாகிய செவ்விய கோலாலும் தண்ணளிசெய்தற்கெடுத்த ஒரு குடையாலும் தனது ஆணையையே உலகங் கூறும்படியாகவும் முதியோர் முரண் செல்லும்படியாகவும் பெரியநட்புடனே நெடுங்காலம் உலகையாண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன்,;

---------
---------

ஒரு குடை என்றதனாலும், ஒன்றுகூற என்றதனாலும் இவன் மண் முழுவதும் ஆண்டானென்றார்.;

அன்னோன் - யான்கூறிய அத்தன்மைகளையுடையோன்,;

வாழி - வாழ்வாயாக ;;

இறுதி யகரம் கெட்டுநின்றது.;

232 - 3. [ மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா, ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பி :]

மன்னர் நடுங்க தோன்றி - பகையரசர் நடுங்கும்படி விளங்கி,;

பல் மாண் எல்லை தருநன் பல் கதிர் பரப்பி - பல்லுயிர்களும் மாட்சிமைப்படுதற்குக் காரணமாகிய பகற்பொழுதைத்தருங்கதிரோன் தன்னிலையைவிட்டுப் பலகிரணங்களைப் பரப்புகையினாலே,

234. குல்லை கரியவும் - 1கஞ்சங்குல்லை தீயவும்,;

கோடு எரி நைப்பவும் - மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்,

235. [ அருவி மா மலை நிழத்தவும் :] மா மலை அருவி 2நிழத்தவும் - பெருமையையுடைய மலை தன்னிடத்து அருவிகளை இல்லையாக்கவும்,;

235 - 6. மற்ற கருவி வானம் கடல் கோள் மறப்பவும் - இவையொழிந்த தொகுதியையுடைய மேகம் கடலிடத்து முகத்தலை மறப்பவும்,;

237. பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் - பெரிய வற்கட முண்டாகிய நற்குணமில்லாத காலத்தும்,;

கரியவும் நைப்பவும் (234) நிழத்தவும் (235) மறப்பவும் (236) வறனாகிய காலையுமென முடிக்க.;

238 - 9. [ நறையு நரந்தமு மகிலு மாரமுந், துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி :] நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொறை துறைதுறை தோறும் உயிர்த்து ஒழுகி - நறைக்கொடியும் நரந்தப்புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமையைத் துறைதோறும் துறைதோறும் இளைப்பாறத் தள்ளிப்போய்,;

240. நுரை தலை குரை புனல் - நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரத்தையுடைய நீர்,;

வரைப்பு அகம் புகுதொறும் - குளத்திலும் 3கோட்டகத்திலும் புகுந்தோறும்,;

-------------
------

வரைக்கப்படுதலின், வரைப்பு ; ஆகுபெயர்.;

241. புனல் ஆடும் மகளிர் கதுமென குடைய - நீராடுமகளிர் கடுகக் குடைந்து விளையாட,;

புனல் ஒழுகிப் புகுதொறும் மகளிர் குடையவென்க.;

242. கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து - வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து,;

நெல்லு மிகக்காய்த்துத் தரையிலே விழுதலின், வளைந்துநிற்க வேண்டுமென்றார்.;

243. சூடு கோடு ஆக பிறக்கி - சூட்டை மலையாக அடுக்கி,;

243 - 4. நாள் தொறும் குன்று என குவைஇய குன்றா குப்பை - நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலி,;

245 - 8. [ கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ், சாலி நெல்லின் சிறைகொள் வேலி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடுகிழ வோனே :]

கடு தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் - நெருங்கத்தெற்றின குதிரின்கண்ணே வெற்றிடம் இல்லையாம்படி கிடத்தற்குக்காரணமான,;

கடுந்தெற்றுமூடை - கோட்டையுமாம்.

சிறை கொள் வேலி ஆயிரம் சாலி நெல்லின் விளையுட்டாக - வரம்பு கட்டின வேலிநிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல்லின் விளையுட்டாக,

காவிரி புரக்கும் நாடு கிழவோன் - காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடையோன்.

வறனாகிய காலையும் (237) புனல் (240) ஒழுகிப் (239) புகுதொறும் (240) மகளிர் குடைந்து விளையாடக் (241) கூனி அரிந்து (242) பிறக்கிக் (243) குவைஇய குப்பை (244) கிடத்தற்குக்காரணமான (245) விளையுட்டாகக் (247) காவிரி புலக்குநாடு (248) என வினைமுடிக்க.;

பொருந (3), கோடியர் தலைவ, கொண்டதறிந (57) புகழ்மேம்படுந, (60) ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பியபின்றை (52) நெறிதிரிந்தொராஅது (58) ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன்பயனே (59), போற்றிக்கேண்மதி (60); நின்னிரும்பேரொக்கலொடு (61) பசி ஓரா அல்வேண்டின், நீடின்று (62) எழுமதி (63); யானும் (64) இன்மை தீர வந்தனென் (129); உருகெழு குருசிலாகிய (131) உருவப்பஃறே ரிளையோன் சிறுவன் (130), கரிகால்வளவன் (148), நாடுகிழவோன் (248), குருசில், அன்னோன் (231), தாணிழன்மருங்கிற் குறுகி (149) மன்னர் நடுங்கத்தோன்றி (232), வாழியெனத் (231) தொழுது முன்னிற்குவிராயின் (150), நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்கலோவிலன் (173) எனக்கூட்டிவினை முடிவுசெய்க.
-------
----------

வெண்பா


1ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரின்;
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.         (1)

அரிமா சுமந்த வமளிமே லானைத்
2திருமா வளவனெனத் தேறேன் - திருமார்பின்
மானமா லென்றே தொழுதேன் றொழுதகைப்
போனவா பெய்த வளை.;         (2)

3முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே யளந்ததாற் - செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
4கரிகாலன் கானெருப் புற்று.;         (3)

-----------
--------
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படைக்கு
மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.


This file was last updated on 10 April 2015.
Feel free to send the corrections to the Webmaster.