பெண்ணின் பெருமை
அல்லது வாழ்க்கைத்துணை
திரு வி. கலியாணசுந்தர முதலியார்
peNNin perumai @ vAzkaittuNai
by thiru vi. kalyANacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பெண்ணின் பெருமை
அல்லது வாழ்க்கைத்துணை
திரு வி. கலியாணசுந்தர முதலியார்
Source:
பெண்ணின் பெருமை (அல்லது) வாழ்க்கைத்துணை
நவசக்தி ஆசிரியர் திரு வி. கலியாணசுந்தர முதலியார்
யாததது
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை
1927
உரிமை பதிவு செய்யப்பட்டது, விலை ரூ. 2.
-----------
முன்னுரை
உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக் கப்பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இவ்விரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல்வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படா விடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறது.
இந்நாளில் பெண்ணுலகில் பலதிறக் குறை பாடுகள் தோன்றியிருக்கின்றன. அவைகளுள் இரண்டு சிறப் பாகக் குறிக்கத்தக்கன. ஒன்று சிறிதும் நாகரிகமின் றிச் சில விடங்களில் பெண் இருளில் மூழ்கிக்கிடப் பது; மற்றொன்று "பழுத்த நாகரிகம்" என்னும் பேய்க்குச் சில விடங்களில் பெண் இரையாகி வாழ்வையே குலைத்துக்கொள்வது. இருசாராரும் ஒழுங்குப்பட்டுப் பெண்ணாய் உலகிற்குப் பயன்படல் வேண்டும்.
நமது நாட்டில் இடைக்காலத்தில் ஏற்பட்ட கட்டுப் பாடுகள் பெண்ணுலகின் பெருமைக்கே கேடு சூழ்ந்தன . அக்கட்டுப்பாடுகள் பெண்மக்களைக் கல்லாய் மண்ணாய் நடைப்பிணமாய்ச் செய்துவிட்டன. மேல் நாட்டில் இத்தகைக் கொடுங்கட்டுப்பாடுகள் இல்லையேனும், ஆண்டுப் " பழுத்த நாகரிகம்" என்னும் அலகை பெண் மையின் இறைமையைக் கவர்ந்து நிற்கிறது. அந்நாட்டுப் பெண்ணறிஞர் பலர் தாய்மைப்பேற்றை இழி வெனக்கருதி வாழ்தல் கண்கூடு. தாய்மை நிலவா விடத் தில் இறைமை எங்ஙனம் நிலவும்? இப் "பழுத்த நாக ரிகம் " உலகை வளர்க்குமா ? தேய்க்குமா?
இக்காலத்தில் பெண்மைக்கணுள்ள தாய்மையையும், தாய்மைக்கணுள்ள இறைமையையும் மக்கள் வாழ்வில் உணரத்தக்க துறைகள் காணப்பெறல்வேண்டும். அத் துறைகள் காண உலகில் முயற்சி துவங்கப்பட்டிரு கிறது.
மேல் நாட்டறிஞர் சிலர் பெண்மையைப்பற்றியும் தாய்மையைப்பற்றியும் அரிய நூல் பல எழுதி வருகிறார். அந்நூல்களின் உட்கிடக்கை பெரிதும் நமது நாட்டுப் பழைய அகப்பொருள் நூல்களின் உட்கிடக் கைக்கு அரண் செய்தல் கண்டு யான் கழிபேருவகை எய்தல் உண்டு. நன்மக்கள் எவராயினும், அவர் யாண்டு உறையினும், அவர் அறிவில் ஒரே கருத்து அரும்பல் இயல்பு.
நமது நாட்டுப்பழமை இப்பொழுது மேல் நாட்டில் பதுமையாக உருக்கொள்கிறது. பழமை புதுமையுருத் தாங்கல் இயல்பு. பழமைக்கும் புதுமைக்கும் பொருளில் வேற்றுமையில்லை;
தோற்றத்திலேயே வேற்றுமை புண்டு. பொருண் முதன்மைக்கு எப்பொழுதும் அழி வில்லை என்னும் நியாயம் ஈண்டுக்கருதற்பாலது. "முன் னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே - பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே " என றார் வாதவூரடிகளும். நமது நாட்டுப்பழமை என்னும் உயிர் தற்கால மேல் நாட்டுப் புதுமை என்னும் உடல் தாங்கும் முறையில் தமிழ்மொழியில் நூல் பல யாத்தல் காலத்துக்கியைந்த தொண்டாகும். அத்தகை நூல்களின் இன்றியமையா மையைச் சொல்லவும் வேண்டுமோ?
பெண் பெருமை பேசும் பன்னூல் இதுபோழ்து வெளிவரல் மிக அவசியம். நந்தமிழ் நாட்டில் பெண் ணைப்பற்றிய சில நூல்கள் வெளிவந்துலவுகின்றன. அவைகளுள் பெரும்பான்மையன இடைக்காலத்தில் தோன்றிய அடக்கு முறை நூல்களின் எதிரொலி களாக விளங்குகின்றன. சில நூல்கள் காமவெறி யூட் டக் கூடிய முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. இவை யல்லாத நூல்கள் எழுதிய அன்பர்கட்கு எனது வணக்கம் உரியதாக.
பழமையும் புதுமையும் விரவ, ஒல்லும்வகை முயன்று, "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை" என்னும் இந்நூல் எழு தலானேன். இந்நூல், பெண்மை தாய்மை இறைமை என்னும் முப்பொருளை முதலாக உடையது. இம்மூன்றும் முறையே நூலின் உடல் உள்ளம் உயிராக அமைந்திருக்கின்றன. இம்மூன்று முதலி னின்றுங் கிளம்பிய கவடுகளும் கோடுகளும் நூலின் பிற உறுப்புக்களென்க.
பெண் பிறவியின் விழுமிய நோக்கம், அன்பால் ஒரு வனை மணந்து, ஒழுங்குப்பட்ட இல்லறம் நடாத்துவதில் நிறைவேறுமென்பது நூலின் திரண்ட பொருள். இயற்கை வாழ்வினின்றும் வழுவிச் செயற்கைப்பாழில் விழுவதால் விளையுங் கேடுகள் இந்நூற்கண் விளக்கமாக இதப்பட்டிருக்கின்றன. அறம் அன்பு அருள் முதலிய வற்றிற்குப் பெண் உறையுள் என்பது இந்நூலில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஒருத்தி ஒருவனுடனும் ஒருவன் ஒருத்தியுடனும் வாழும் உயரிய ஒழுக்க மணம் இந்நூலில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருக்கும்.
இந்நூலின் உள்ளக்கிடக்கையை புணர விரும்புவோர் நூலை முற்றும் படித்துப் பார்ப்பாராக. ஆங்காங்கே சில பொருள் கண்டு நூலைப்பற்றி ஒருவித முடிந்த கருத் துக்கோடலாகாது. ஓரிடத்தில் ஓர் ஐயப்பொருள் காட்சி யளிக்கும். அவ்வைய நீக்கப் பொருள் மற்றோரிடத்தில் மிளிரும். ஆகவே நூலை முற்றும் வாசிக்குமாறு அன் பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கைவாழ்வு, செயற்கைத் தாழ்வு, உடலோம்பல், மலச்சிக்கல், கூடா வொழுக்கத்தால் விளையுங் கேடுகள் போன்ற பொருள்கள் நூலின் ஊடே ஊடே சில விடங்களில் பெய்யப்பட்டிருக்கின்றன. அவை "கூறியது கூறும் " நோக்குடன் பெய்யப்பட்டனவல்ல என்பதை 14ம், அவை அநுவாதம் என்னும் நியாயம் பற்றிப் பெய்யப் பட்டனவென்பதையந் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொருள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குறிப் புடன் ஒவ்வொரு வித விளக்கம் முதலியன பெற்றிருத் தல் நூற்கண் காணலாம். ஒரே பொருள் இடத்துக் கேற்ற விளக்கமும், தெளிவும், முறையும், இயைபும், சுருக்கமும், பெருக்கமும் பெறும் வழியில் பல விடங்களில் பொறிக்கப்படல் ஒருவித நூன்மரபு. எல் லார்க்கும் பயன்படு முறையில் நூல் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
பெண் பெருமை பெறின் நாடும் பெருமை பெறும் என்னுங் கருத்துக்கொண்டு சிறியேனால் எழுதப்பெற்ற இந்நூற்கண் குற்றங் குறைகளுளவேல், அவைகளை அறிஞர்கள் பொறுத்தருள்வார்களாக.
சென்னை, 25-6-27.) திரு. வி. கலியாண சுந்தரன்.
--------------
பொருள் அடக்கம்
1. பெண் ஆண் | 5. இறைவழி |
2. பெண்ணின் முதன்மை | 6. இயற்கை அறம் |
3. பெண்ணுரிமை | 7. திருமணம் |
4. பெண் வளர்ப்பு | |
-------------
பெண்ணின் பெருமை
1. பெண் ஆண்
(பெண் ஆண் வடிவம் – தாவரங்கட்கு உயிரும் பெண் ஆண் வேற்றுமையும் உண்மை. உலகம் காரியமா காரணமா என்பது – உள்ளது போகாது இல்லது வராது – கடவுளில் பெண்மையும் ஆண்மையும் – கடவுள் தாய் தந்தை – பெண் ஆண் நுட்பம் – பௌதிகம்- பெண் ஆண் சக்தி இயல் – தண்மை பெண்; வெம்மை ஆண்-பெண் நிறம் – சந்திர சூரிய கலைகள் – சக்தி சிவம் – முழு மனித்தன்மை)
அம்மையே அப்பா ஓப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
இவ்வழகிய உலகைச் சிறிது உற்று நோக்குவோம். உலகம் எக்காட்சியை வழங்குகிறது? பெண் ஆண் காட்சியையன்றோ அது வழங்குகிறது? உலகில் தனிப்பெண் தோற்றமாதல், தனி அண் தோற்றமாதல் புலனாகிறதோ? இல்லை.
தாவரங்கட்கு உயிரும், பெண் ஆண் வேற்றுமையும்
உலகில் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள எல்லாம் பெண் அண் வடிவாகப் பொலிதல் காண்கிறோம். புல் முதலிய தாவர இனங்கட்கும் உயிர் உண்டு என்றும், அவைகளுள்ளும் பெண் அண் வேற்றுமை உண்டு என்றும் நமது நாட்டு நூல்கள் முழங்குகின்றன. இக்கொள்கை, சிலகாலம் சில இடங்களில் மறுக்கப் பட்டும் வந்தது. அம்மறுப்பிற்கு இனி இடமில்லை.
அக உணர்வு
தாவரங்கட்கு உயிர் உண்மையையும், பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் நம் முன்னோர் ஏட்டில் மட்டும் எழுதிச் சென்றனர். வேறு வழிகளான் அவ்வுண்மைகளை அவர் நிறுவிக் காட்டினரா என்பது தெரியவில்லை. அவர் எத்துறை நண்ணி அவைகளைக் கண்டனர் என்பதும் செவ்வனே விளங்க வில்லை. அக்கால மக்கட்கு அகவுணர்வு மிக்கிருந்ததென்று சொல்லப்படுகிறது. அவ்வுணர்வான் அவர் பல நுண்மைகளைக் கண்டிருக்கலாம். அக்கால நிலை, புறக்கருவி ஆராய்ச்சியை வேண்டி நிற்கவில்லை போலும்.
பிற்கால அறிஞர் கடன்
பின்னை நாளில் - அதாவது அகவுணர்வு குன்றிய பொழுது - முன்னோர் ஏடுகளில் எழுதிவைத்துள்ள பல உண்மைகளைக் காலநிலைக் கேற்றவண்ணம், புறக்கருவிகளின் துணையால் ஆராய்ந்து, புதிய முறைகளான் உறுதிப்படுத்த வேண்டுவது பிற்கால அறிஞர் கடன். அக்கடனாற்றப் புகாது, பழைய மக்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது அறமாகாது.
இந்நாளில் நமது நாட்டில் ஒரு பேரறிஞர் தோன்றித் தாவர உலகை நன்கு ஆய்ந்து, இக்கால முறையில் பலதிற உண்மைகளை வெளியிட்டனர். அவரை இன்னாரென்று யான் உலகுக்கு அறிவிக்க வேண்டுவதில்லை. அவர் வங்காளமளித்த பேரறிஞர் ஜகதீச சந்திர போஸ் என்பவர். அவரது திறன், ஆராய்ச்சியாளர் பலர்க்குந் தெரியும். அன்னார் தாவர ஆராய்ச்சியில் தமது பெரும்பொழுதைப் போக்கி, எத்துணை எத்துணை நுட்பங்களை உலகிற்கு உதவி வந்தனர்! அவ்வறிஞர், தாவரங்கட்கு உயிர் உண்மையையும், அவற்றுள் பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் எவருங் கண்டு வியக்குமாறு புறக்கருவிகளின் துணையால் உறுதிப்படுத்தியது உலகறிந்த தொன்று. அவரல்லரோ நம் பண்டை மூதறிஞர் வழி வழி வந்த பெரியார் என்று போற்றத்-தக்கவர்? இனித் தாவரங்கட்கு உயிர் உண்மையையும், பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் மறுத்தற்கு உலகில் சிறிதும் இடமில்லை.
ஏனைய உயிர்களின் பெண் அண் உண்மை வெள்ளிடை மலை. ஆகவே, இவ்வழகிய உலகம், பெண் அண் வடிவாக அமைந்திருத்தல் எவரும் ஓப்பமுடிந்த உண்மை என்க.
உலகம் காரியமா? காரணமா?
பெண் ஆண் வடிவாயிலங்கும் உலகம் காரியமா? காரணமா? இதுகுறித்து நீண்ட ஆராய்ச்சி இங்கே நிகழ்த்த வேண்டுவதில்லை. உலகம் நாமரூபங்களையுடையது. நாமரூபங்களையுடைய ஓன்று தோற்றக் கேடுகளுக்கு உட்படல் இயல்பு. தோற்றக் கேடுகளையுடைய ஓன்று காரியமாகுமா? காரணமாகுமா? அது காரியமாகாது எங்ஙனம் காரணமாகும்? உலகம் காரியமென்பது அறிஞர் ஆராய்ந்து கண்ட முடிபு.
நிமித்தம்
காரிய உலகம் எக்காட்சியை வழங்குகிறது? அது பெண் ஆண் காட்சியை வழங்குகிறது. காரிய உலகம் பெண் ஆண் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை வடிவாயிருத்தலால், அதைக் காரியப்படுத்தும் நிமித்தம் எவ்வடி வினதா-யிருத்தல் வேண்டும்?
உள்ளது போகாது இல்லது வாராது
“உள்ளது போகாது இல்லது வாராது” என்பது நியாயம். காரணத்தில் பெண்மை இல்லை எனில், காரியத்திலும் பெண்மை இராது. அவ்வாறே காரணத்தில் அண்மை இல்லை எனில், காரியத்திலும் அண்மை இராது. காரிய உலகு, பெண் ஆணால் ஆக்கப்பட்டிருப்பதால், அதைக் காரியப்படுத்தும் நிமித்தமும் பெண் அணாகவே இருத்தல் வேண்டும். இவ்வுண்மை கண்டே நம் முன்னோர், நிமித்தமாகிய கடவுளை, “அம்மை அப்பன்” எனக் கொண்டனர் போலும்.
கடவுளில் பெண்மையும் ஆண்மையும்
“முழுமுதற் பொருள் பெண் ஆண் வடிவாய்ப் பொலிகிறது” என்ற உண்மை, முதல் முதல் நம்நாட்டவரால் காணப் பெற்றது. எல்லாவற்றையும் கடந்தொளிரும் மெய்ப் பொருளை இக்கால உலகில் பலர் ஆணாகவும், சிலர் பெண்ணாகவும், சிலர் பெண் ஆணாகவும் கொண்டு வழிபடுகின்றனர். இனி வரும் உலகம் எத்திறக் கருத்து வேற்றுமையுமின்றி ஓரே உண்மையை ஏற்கும் என்று யான் நம்புகிறேன்.
“மாற்ற மனங்கழிய" நிற்கும் மறைபொருளை அவரவார் விரும்புமாறு போற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. “எல்லாமாய் அல்லவுமாய்' விளங்கும் ஓன்றை எவ்வண்ணம் போற்றினா லென்ன? ஆயினும், எடுத்த பொருளுக்கேற்பக் கடவுளின் பெண் அண் நிலையைப்பற்றி ஓர்ந்து உணர வேண்டுவது நமது கடன்.
கடவுள் தாய் தந்தை
கடவுளைத் தாயெனக் கொண்டோர் மிகச் சிலர். அவரைக் தந்தையெனக் கொண்டோர் பலர். கடவுளைத் தந்தை யாகக் (Fatherhood of God) கொண்டோர், அவரைத் தாயாகக் (Motherhood of God) கொள்ள மறுத்தற்குப் பொருளில்லை. தந்தையாக உள்ள கடவுள் ஏன் தாயாக இருக்கமாட்டார்? அன்னையினும் அப்பன் சிறந்தவன்கொல்! அப்பனிலும் அருள் மிக்கவள் அன்னையல்லளோ? கடவுளிடத்துள்ள தாய்மைக் குணத்தையா மறைப்பது? மறுப்பது? கடவுளைத் தந்தையாக் கொள்ள ஒருப்பட்ட மனம், அவரைக் தாயாக் கொள்ள ஓஒருப்படுவதில் என்ன இழுக்கு?
பெண் ஆண் நுட்பம் (பெளராணிகம்)
முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் தண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்புக்களையுடைய பெண் ஆண் வடிவங்களை உணர்த்துவன அல்ல. அவை நுண்ணிய சக்திகளை உணர்த்துவனவாம். புராணங்கள் அவைகளைக் திண்ணிய வடிவங்களாகக் கொண்டு திருமணப் படலங்களும் வகுத்திருக்கின்றன. அறிவால் கூர்ந்து உணரத்தக்க சில நுண்மைகள், மனத்திற் பொருளாகுமாறு அவற்றை உருவகப்படுத்திக் கதைகளாக அணிவகுத்துக் கூறுவது புராண மரபு. கதைகளை உள்ளவாறு நம்புவது பெளராணிக மதம். ஞான நூலாராய்ச்சியுடையார் புராணக் கதைகளின் நுட்பமுணர்ந்து இன்புறுவர்; ஏனையோர் இடர்ப்படுவர்.
பெண் ஆண் சக்தி இயல்
நுண்ணிய பெண் ஆண் சக்திகள் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். உலகில் இரண்டு சக்தி நிலவுகின்றன. ஓன்று கூட்டுஞ் சக்தி, மற்றொன்று பிரிக்குஞ் சக்தி. முன்னையது தண்மையது; பின்னையது வெம்மையது. இவ்விரண்டும் சடசக்தி-களாகும். இவற்றின் உண்மை, பூதபெளதிக சாஸ்திரிகளால் உறுதி செய்யப் பெற்று நீண்ட நாட்களாயின. சடசக்திகள் தாமே இயங்கமாட்டாவாகலின், அவற்றை இயக்கச் சடமல்லாத ஓன்று தேவையே. அதுவே சித்பொருள் என்பது. இயங்கும் சடத்தில் இரண்டு சக்தி-யிருத்தலையொப்ப, அச் சடத்தை இயக்கும் சித்பொருளிலும் இரண்டு சக்தியிருத்தல் வேண்டும். இல்லையேல், சடசக்திகள் முறை முறையே இயங்க மாட்டா. அகவே, சித்பொருளினிடத்தும் கூட்டல் பிரித்தற் குரிய தண்மை வெம்மை இருந்தே தீரல் வேண்டும். அவற்றின் இருப்பும், உண்மை கண்ட பெரியோரால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. சித்தெனும் செம்பொருள், சடப் பொருளுடன் நீக்க மறப் பிரிவின்றி, அத்துவிதமாகக் கலந்து நின்று, அச்சடத்தை இயக்குந்திறத்தை விரிந்த நூல்களிற் காண்க.
தண்மை பெண்; வெம்மை ஆண் (பெண் நீலம்; ஆண் செம்மை)
தண்மையைப் பெண் என்றும், வெம்மையை ஆண் என்றும் கூறுதல் உலகோர் இயல்பு. இவ்வியல்பு பற்றிச் சித்பொருளின் தண்மைக் கூற்றைப் பெண் என்றும், வெம்மைக் கூற்றை ஆண் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்றும் நம் முன்னோர் உலகுக்கு உணர்த்தினர். இவை நிரலே சக்தி என்றும் சிவம் என்றும் வழங்கப்படுகின்றன. வழிபடுவோர் உள்ளத்தில் அவை பொருளாகுமாறு முன்னதற்கு நீல நிறமும், பின்னதற்குச் செம்மை நிறமும் மெய்ஞ்ஞானிகளால் பொறிக்கப் பெற்றன. தண்மைக்கு நீலமும், வெம்மைக்குச் செம்மையும் பொறித்தது மிகப் பொருத்தம். நீலத்தைப் பெண்மை நிறம் (Feminine colour) என்றும், சிவப்பை அண்மை நிறம் (Masculine colour) என்றும் மனோ தத்துவ ஆசிரியர் வில்லியம் ஜேம்ஸ் உள்ளிட்டார் உரைத்துள்ளனர். இதை வலியுறுத்தப் பல சான்றுகள் தேவை யில்லை. கண்கூடாக உள்ள ஒன்றைக் குறித்தல் சாலும். அது நெருப்பு. நெருப்பு நா நீட்டிச் சுழன்று எரியும்போது, அதினுடலில் செம்மையும், விளிம்பில் நீலமும் மிளிர்தல் காண்கிறோம், இந் நீலமும் செம்மையும் ஓன்றினின்றும் ஒன்று பிரிந்து நிற்பதில்லை. அது போலச் சக்தியும் சிவழும் பிரிவின்றி ஒன்றோடொன்று இயைந்து நிற்கின்றன.
யோக முறை
அண்டம் பெண் ஆணாக அமைந்திருப்பது போலப் பிண்டமும் அவ்வண்ணமே அமைந்திருக்கிறது. உடலின் இடது பக்கத்தில் தண்மை நாடியும், வலது பக்கத்தில் வெம்மை நாடியும் ஓடுகின்றன. விளக்கம் உடற்கூற்று நூலிற் பார்க்க. யோகிகள் இத் தண்மையையும், வெம்மையையும் முறையே சந்திரகலை சூரிய கலை என்று சொல்வர். இவை, இடைகலை பிங்கலை எனவும் படும். வலதுபக்க வெம்மைச் சூரிய கலையும், இடது பக்கத் தண்மைச் சந்திரகலையும் சமமாக இயங்கல்வேண்டும். ஒன்று மிகுந்து, மற்றொன்று குறையின் உடலுக்கு உளறு விளையும் இதனை,
”மாறு மதியம் ஆதித்தனும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உ.பரயமும்
பாறுபடாஇன்பம் பார்மிசைப் பொங்கு மே”
எனவரூஉந் திருமூலர் திருவாக்கான் உணர்க.
இக்கலைகளைப் பெண்கலை ஆண்கலை என்று வழங்குவதுமுண்டு; “ஈராறு பெண்கலை எண்ணிரண்டான் கலை” என்றார் அத் திருமூலரே. விரித்துச் சொல்லாது சுருங்கச் சொல்லின், மக்களின் இடது பக்கம் பெண் தண்மையும், வலது பக்கம் ஆண் தன்மையும் திகழ்கின்றன என்னலாம். பிராணாயமப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றோர், கலைகளை ஓழுங்குபெற இயக்கும் ஆற்றல் வாய்ந்தவராதலின், அவர் விரும்புமாறு பெண் குழவியையோ ஆண்குழவியையோ பெறுதல் கூடும் என்று யோக நூல்கள் கூறுகின்றன. இப்பெண்கலை ஆண்கலைக்குப் பற்றுக்கோடு சக்தி சிவமேயாகும்.
ஆண்ட பிண்டங்கள் யாவும் பெண் ஆண் வடிவாயிருத்தல் போல, அவைகட்குக் காரணமாகவுள்ள முழு முதற் பொருளும் பெண் ஆண் வடிவாயிருத்தல் கருதத்தக்கது. இந்நுட்பம் அர்த்த நாரீசுர மூர்த்தத்தில் நனிவிளங்கும். அம்மூர்த்தத்தில் ஒருபாதி பெண்ணுருவும், மற்றொருபாதி ஆணுருவும் பொலிதல் காண்கிறோம். அதின் நுட்பமென்னை? அவ்வடிவம், இவ்வண்ட பிண்டம் அர்த்தநாரீசார வடிவமாயிருத்தலை அறிவுறுத்துவ தென்க. அர்த்தநாரீசுர வடிவம் ஓவியம். ஓவியத்தின் விரிவு அண்டபிண்டஞ் சேர்ந்த அகிலம்.
சக்தி சிவ இயைபு
சக்தி சிவம் என்ப ஒன்றை விடுத்து ஒன்று பிரிந்து நிற்பன அல்ல. அவை ஒன்றோடொன்று இயைந்து நிற்பன. சக்திக்கும் சிவத்துக்கும் உள்ள இயைபு, மலரும் மணமும் போன்றது; மரமும் காழ்ப்பும் போன்றது; பண்ணும் இசையும் போன்றது.
பரம்பொருள் எல்லாவற்றையுங் கடந்தது; ஓன்றையுங் கடந்தது. ஓன்றையுங் கடந்ததை என்னென்று கூறுவது? அதைப் “பாழ்” என்று பெரியோர் உலகிற்கு அறிவுறுத்தினர். பாழின் இயல்பு என்னை? இன்னதென்று சொல்ல முடியாதது அதன் இயல்பு. அஃது அகல நீளம் அற்று, நாம ரூபம் அற்று, பிறப்பு இறப்பு அற்று, (அகல நீள நாம ரூபங்களையுடைய) எல்லா உலகங்களும் இயங்க, அடிப்படையாய் - தாரகமாய் - நின்று, அகண்டமாய், அறிவாய் ஒளிர்வது. இது பரத்தின் உண்மை நிலை. இந்நிலை சொரூபம் என்றும், நிர்க்குணம் என்றும் மரபினரால் வழங்கப்படுகிறது.
பரம் எல்லாவற்றையும் கடந்து நிற்பதோடு, எல்லா வற்றிலும் கலந்தும் நிற்கிறது. அதில் கலப்பில்லையேல் எதுவும் இயங்காது. பரத்தின் கலந்தநிலை தடஸ்தம் என்றும் சகுணம் என்றும் சம்பிரதாயத்தவரால் சாற்றப்படுகிறது.
தூய அறிவாய் ஒளிர்வது பரம்பொருள். அதன் பண்பு அருள். பரத்தின் கலந்த நிலையில் அருள் செவ்வனே விளங்கும். கலப்பில் அருள் விளங்குவது இயற்கை.
ஒரு சக்தி உண்டென்றும், அது புரோடான் - எலெக்ட்ரான் - என்று இரண்டாய் இயங்கி ஒளி செய்கிறது என்றும் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை விஞ்ஞானக் கலை விளம்புகிறது. புரோடான் சிவம் போன்றது; எலெக்ட்ரான் சக்தி போன்றது.
பரம்பொருள் சிவம். அதன் அருள் சத்தி. சக்தி என்பது தனித்து நிற்பதன்று. சக்தியாவது சிவத்தின் அருள். ஒருவனிடத்துள்ள அருட்குணத்தை எங்ஙனம் பிரித்தல் இயலும்?
சத்தி என்றோ அன்றே சிவமுமுண்டு, சிவம் என்றோ அன்றே சக்தியுமுண்டு. இரண்டும் அநாதி. இரண்டும் உயர்வு தாழ்வின்றி ஒத்து உலகு உயிர்களை இயக்குகின்றன. சக்தி சிவத்தைப் பற்றி,
அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாங்
குறியது உடைத்தாய் வேதா கமங்களின் குறிய றந்தங்
கறிவினில் அருளான் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்
என்றும்,
ஒருவனே இராவ ணாதி பாவகம் உற்றாற் போலத்
குருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையுந் திரியா னாகும்
வரும்வடி வெல்லாஞ் சக்தி சக்திதான் மரமுங் காழ்பபும்
இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைற்து நிற்கும்
என்றும்,
சக்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணிய மாக
வைத்தனன் அவளால் வரத வாக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
என்றும்,
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்.பள்
என்றும்,
அருளது சக்தி யாகும் அரன்தனக கருளை யின்றித்
தெருள்சிவ மில்லை அர்தச் சிவமின்றிச சக்தி யில்லை
என்றும் சிவஞான சித்தியார் விளக்கியிருத்தல் காண்க.
முழு மனிதத் தன்மை
சக்தி சிவம்போலப் பொண்ணுலகும் ஆணுலகும் இலங்கல் வேண்டும். பெண் ஆண் சேர்ந்த ஒன்றே வாழ்வென்பது. பெண்ணும் ஆணும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை என்று மனு பகர்கிறார். தண்மையும் வெம்மையும் எங்ஙனம் உடல் நலத்துக்கு வேண்டற்பாலனவோ, அங்ஙனமே பெண்மையும் ஆண்மையும் வாழ்வு நலத்துக்கு வேண்டற்பாலன. ஒன்றற் கொன்று சிறுமை யுறின் ஊறும் குலைவும் நிகழும். இவ்வுலக வாழ்விற்குப் பெண்மை ஆண்மை என்னும் இரண்டும் இன்றியமையாதன. இரண்டனுள் உயார்வு தாழ்வில்லை. உயர்வு தாழ்வு கற்பிப்போர் இறை இயல்பையாதல், இயற்கை இயல்பையாதல் உணராதார் என்க.
இவ்வுலகம் பெண் ஆண் வடி வாயிலங்குகிறது. முழுமுதற் பொருளும் பெண் ஆண் வடிவாய்ப் பொலிகிறது. ஆதலால், பெண்ணும் ஆணும் கூடி வாழும் வாழ்வே வாழ்வாகும். அவ்வாழ்வு ஓங்க; பெண் ஆண் வாழ்க.
மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல்ல கதிக்கு யாதுமேசர் குறைவிலலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
- திருஞானசம்பந்தர்
-----------
2. பெண்ணின் முதன்மை
(பெண்ணும் பெண்மையும் – பெண்மை இன்ப நிலை – பெண், இன்பத்தின் பருமை – பெண், இன்பம் அழகுக் கடவுள் – கவிவாணரும் பெண்ணும் – பெண்பிறவி நோக்கம் – தாய்மையும் தொண்டும் – வாழ்க்கைப் பெண் – பெண்ணின் தியாகம் – பெண்மை ஆண்மைக்குணம் – ஆணில் பெண்மை – அகமே புறம் – அன்பர் அருளாளர் வீரர் பாவலர் முதலியோரின் தன்மை – பெண்மையின் இறைமை – நமது நாடும் பெண்மையும் – கலைமகள், திருமகள், பரை – பெண் தோற்றம் – பெண்ணின் முதன்மை மறந்த இடம் – நமது நாட்டுத் தொன்மை வழக்கு)
பெண் கொடியாக நட ந்த துலகே - திருமூலர்
பெண்ணுலகு ஆணுலகு என்னும் இரண்டனுள் உயர்வு தாழ்வு கருதலாகாதென்பது மேலே சொல்லப்பட்டது. இரண்டுலகினுள் உயர்வு தாழ்வு இல்லையேனும், பெண்ணுலகிற்கு முதன்மை வழங்கவேண்டுமென்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து. பெண்ணுலகிற்கு இயல்பாயமைந்துள்ள குணம், தொண்டு, கடமை முதலியவற்றை நோக்குழிப் பெண்ணுலகு முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும். ஆணுலகின் பேற்றிற்கும், வளத்துக்கும், நலத்துக்கும், பிற ஆக்கத்துக்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகென்பது எவரும் அறிந்த தொன்று. இப்பெற்றியுடைய பெண்ணுலகிற்கு முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்னை?
பெண் எது?
முதலாவது, பெண்ணின் இயல்புகள் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். பெண் எது? இதற்குப் பலர் பலவாறு விடை கூறுப. பெண்ணுறுப்புடையது பெண் என்று சொல்வது சாதாரண உலக வழக்கு. பெண்ணுறுப்புடைய சிலரிடத்திலும், சிலவற்றிலும் பெண்மை இல்லாதிருத்தல் கண்கூடு. ஆதலால், உறுப்புக்குறி ஒன்றையே கருதிப் பெண் இஃது என்று கொள்ளல் முறைமையாகாது. உறுப்போடு வேறு பல இயல்புகளையும் கொண்ட ஓன்றே பெண்ணென்பது. அவ்வியல்புகளின் திரட்சி பெண்மை எனப்படும். இப்பெண்மையுடையது பெண்ணென்க.
பெண்மை என்னுஞ் சொல், கடை குறைந்து, பெண்ணென நின்று, பின்னைப் பெண்ணெனும் ஓர் இனத்தைக் குறிப்பதா யிற்று. பெண் ஆகுபெயர். இது, தமிழ் இலக்கண வழக்கு. ஈண்டுப் பெண்ணை எவள் என்னாது, எது என்றது முதற்பொருளை ஒட்டி என்க.
பெண்மை
பெண்மையாவது யாது? அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும். மண் நீர் காற்று ஒளி முதலியன சேர்ந்து மரமாதல்போல, அடக்கம் முதலிய குணங்கள் சேர்ந்து பெண்மையாகின்றன. சிறுசிறு நீர்த்துளிகள் கலந்து பரந்த நீர் நிலை என்னும் பெயர் பெறுதல்போலவும், சிறுசிறு பரல்கள் கலந்து மலை என்னும் பெயர் பெறுதல் போலவும், அடக்கம் முதலிய குணங்கள் ஒன்றி, அவை பெண்மை என்னும் பெயா் பெற்றன. பெண்மை என்பதைக் கூறிட்டுப் பார்ப்பின், அஃது அடக்கம் முதலிய நீர்மைகளாகப் பிரிந்து நிற்கும். ஆகவே, அடக்கம் முதலிய இயல்புகளின் திரட்சி பெண்மையாகிற தென்க.
இன்ப துன்ப நிகழ்ச்சி
உலகில் இன்பம் துன்பம் என்னும் இரண்டும் உண்டு. இன்பம் எப்பொழுது விளைகிறது? துன்பம் எப்பொழுது நிகழ்கிறது? அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம் முதலியவாற்றான் இன்ப மெழுதலும், அடங்காமை, பொறாமை, தன்னலம், அவா, வன்கண் முதலியவற்றான் துன்பமுறுதலும் இயற்கை. மாயை- அவித்தை - முதலியவாற்றைக் கடந்து விளங்குவது இன்பம் என்றும், அம் மாயையாதியன பொறாமை வெகுளி அவா முதலிய பேய்க்குணங்களாகி, உயிர்களைப் பீடித்து, இன்ப ஊளற்றைத் தகைந்து நிற்கின்றன என்றும் ஞான நூல்கள் நவில் கின்றன. பேய்க் குணங்களல்லாத அடக்கம் பொறுமை முதலிய தெய்வ குணங்களால் விளைவது இன்பமென்பது அன்றாட அநுபவத்தில் அறியக் கிடப்பது.
பெண்மை இன்ப நிலை
அடக்கம் முதலியவற்றின் திரட்சி பெண்மையாய்ப் பொலிவதையும், அடக்கம் முதலியவற்றான் இன்பம் விளைவதையும் கூர்ந்து நோக்கின், பெண்மை இன்பமாக விளங்காமற் போகாது. ஆதலின் பெண்மையை இன்பநிலை யெனக் கோடல் எவ்வாற்றானும் பொருந்தும். மின்னல் யாண்டும் இயங்கினும், அது யாண்டும் தானே விளங்கித் தோன்றுவதில்லை. அது விளங்கித் தோன்றுமாறு அதனைத் தொழிற்படுத்து மிடத்தில் மட்டும் அஃது ஒளிரும் அதேபோல, இன்பம் யாண்டும் பரந்து நிற்பினும், அது பெண்மையில் விளங்கி, நிகழ்ச்சியில் தன்னை உணர்த்துவதாகும்.
பெண் இன்பத்தின் பருமை
இனிப் பெண்மையாவது யாது? பெண்மையை இன்ப நிலை என்று சொல்லலா-மன்றோ? அடக்கம், பொறுமை, தியாகம் முதலியன பெண்மையின் உறுப்புக்கள். இவ்வுறுப்புக்கள் சேர்ந்த இன்பம் பெண்மையின் உடல். இன்ப உடல் நுண்ணிய-தாகலின் (Abstract) அதற்கு என்பு தோல் போர்த்த ஒரு வடிவம் - பருவுடல் - இறைவனால் அமைக்கப்பட்டி ருக்கிறது. அவ்வடிவம், “பெண்” “பெண்: என்னும் பெயரால் உலகில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது பெண் எது? இன்பத்தின் பருமை பெண் என்க.
பெண் தெய்வம்
இன்பமோ நுண்ணியது; காணக்கூடாதது. காணக்கூடாத இன்பம் பெண்ணாகி நமக்குக் காட்சி அளிக்கிறது. பெண்மை என்னும் இன்பத் தெய்வத்தை ஏந்தி நிற்கும் பெண்ணை, வெறும் பெண்ணெனக் கொள்ளாது, பெண் தெய்வமென்றும் போற்றலாம். இத்தகைய பெண்மையுடைய பெண்ணை முதன்மையுடை யாள் எனில், என்ன முழுகிப் போகும்?
இன்பமும் அழகும்
பெண்மை இன்பமாயின், பெண்மை அழகுமாகும். இன்பமுள்ள இடத்தில் அழகுமுண்டு. அழகுள்ள இடத்தில் இன்பமுண்டு. அழகு புலனாகுமிடத்தில் இன்ப நுகர்ச்சியு மிருத்தல் அநுபவம். அதலால், பெண்மை அழகுமாதல் உன்னத்தக்கது.
பெண்ணும் அழகும்
அழகு நுட்பம் உணர்ந்த மக்களுள், பண்டைத் தமிழ் மக்கள் தலைசிறந்து விளங்கினவர்கள். அவர்கள் பெண்ணை அழகென்றே கொண்டார்கள். பெண் என்னுந் தமிழ்ச்சொற்கு அழகு என்பது பொருள். பெண்ணை உணர்த்தும் மாதர் முதலிய சொற்கட்கும் அழகுப் பொருளிருத்தல் காண்க. பெண், மாதர் இவைகள் அகுபெயர்கள். பல இடங்களில் ஒரோவழி விளங்கும் அழகெல்லாந் திரண்டு, பெண்ணாகி நிற்றலால், அழகுப் பொருள் அளிக்கும் பெண் என்னுஞ் சொல் பெண்ணுலகிற்குச் சூட்டப்பட்டது. நீலவானத்தில் திங்கள் போலவும், மலையில் பொழில் போலவும், பசுங்கொடியில் மலர் போலவும், மலரில் நிறம் போலவும், பறவைகளில் மயில் போலவும், விலங்குகளில் மான்போலவும் பெண் என்னும் அழகு இவ்வழகிய உலகை அழகு செய்கிறது. பெண் இல்லையேல் உலகில் அழகு ஏது?
அழகுக் கடவுள்
அழகு எது? இதுபற்றி, “முருகன் அல்லது அழகு” என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அழகுக் கடவுளைக் கண்டு இன்புற எவரும் வானத்தை நோக்க வேண்டுவதில்லை; மலைக்கு ஏகவேண்டுவதில்லை; காடுகளில் புகவேண்டுவதில்லை; கடலை நாட வேண்டுவதில்லை; காவியங்களைப் புரட்ட வேண்டுவ தில்லை. அழகுக் கடவுள் பெண்ணாகி யாண்டுங் காட்சி அளிக்கிறது. அதைக் கண்ணுள்ளோர் காண்பாராக.
கவிவாணர்
பெண்ணழகிலுள்ள கடவுட் டன்மையை உணர்ந்து அவ்வழகை எத்துணைக் கவிவாணர் எழுத்தால் எழுதி எழுதி இன்பம் நுகர்ந்தார்! அன்னார் எழுதி எழுதி எழுத்துக்கு முடிவு கண்டாரன்றி, அவ்வழகுக்கு முடிவு கண்டாரில்லை. அழகுக் கடவுளுக்கு முடிவு ஏது? அழிவு ஏது? பெண்ணின் பாலுள்ள அழகுக் கடவுளைக் காணாது, அவளது என்புதோல்மீது கருத்துச் செலுத்தி வெந்தொழியுங் காமுகர்நிலை குறித்து இரங்குகிறேன். எல்லாவற்றிலும் முதன்மை பெற்றுள்ள அழகாகிய பெண்ணிற்கு முதன்மை வழங்கல் தவறாகுமோ?
பெண் பிறவி நோக்கம் - தாய்மை
பெண்ணின் வாழ்க்கையை ஊன்றி உன்னுவோமாயின், பெண் பிறவியின் விழுமிய நோக்கம் இனிது புலனாகும். பெண் பிறவி, காம வேட்கைக்கும், அடுப்பூதல் முதலிய வேலைகட்கும் பயன்படுவது என்று கருதல் அறியாமை. பெண் எத்தகையினள்? இவ்வுலக ஆக்கமும் அழிவும் அவளிடத் திருக்கின்றன! பெண், தன் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளைத் தீய வழியில் வளர்த்து உலகில் விடின், உலகநிலை என்னாகும்? உலகம் அரக்க வாழ்வுக் கன்றோ இரையாகும்? உலகில் தெய்வ அன்பு வாழ்வு சுருங்கி அழிந்தேபடும். பெண்ணினல்லாள் தெய்வமாதலின், அவள் எப்பொழுதும் அழிவு நினையாள்- அவள் உள்ளத்துள் எப்பொழுதும் அக்கமே நிலவும். தன் வயிற்றிற் பிறக்கும் பிள்ளை, பெருங்கல்வி யாளனாய் - வீரனாய் - அன்பனாய் - நல்லவனாய் - தொண்டனாய் - உலகில் வாழ்தல் வேண்டும் என்னும் எண்ணத்தையே தாய் கொள்வது வழக்கம். பிள்ளை கெட்டொழிய வேண்டுமென்று தாய் ஒரு போதும் நினையாள். தாய் வயிற்றிற் பிறந்து, அவளால் வளர்க்கப் பெறும் பிள்ளைகளல்லவோ பின்னைய உலகம்? உலகாக்குந் தாய்மையுடைய பெண்ணின் பெருமையை என்னென்று கூறுவது? பெண் பிறவியின் விழுப்பத்தைக் கூர்ந்து நோக்குங்கள். பெண்ணின் பெருமையை உணர்ந்தன்றோ திரு வள்ளுவனார், பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்று உலகிற்கு அறிவுறுத்தினார்.
தொண்டின் கூறுபாடு
உலக ஆக்கத்துக்குரிய தாய்மை பெண்ணின்பால் உண்டெனில், அவளது தொண்டின் சிறப்பை என்னென்று கூறுவேன்? உலக நலத்துக்குரிய தொண்டை (service)ப் பெண் தெய்வம் ஏந்தி நிற்கிறது. தொண்டு எது? பயன் கருதிச் செய்யப்படும் வேலை தொண்டாகாது. பயன் கருதாது செய்யப்படும் பணியே தொண்டாகும். பிள்ளைகளை நல்வழியில் வளர்க்குந் தொண்டினுஞ் சிறந்தது வேறொன்றுண்டோ? பிள்ளைகளுக்குத் தொண்டு செய்யும்போது தாய் ஏதாவது பயன் கருதுகிறாளா? இல்லையே! உலகநலன் ஒன்றே கருதித் தாய் தொண்டு செய்கிறாள். பயன் கருதாத் தொண்டன்றோ கடவுள் தொண்டு! அத்தொண்ட ருளத்தன்றோ கடவுள் வீற்றிருப்பர்! தாயுள்ளத் திலில்லாத கடவுள் வேறெங்கே இருக்கப் போகிறார்? இது பற்றியே, ஈன்றாளின் என்ன கடவுளுமில்' என்றது நான்மணிக் கடிகை. பெண், தாயாய்ப் புரியுந்தொண்டு பெரிதுங் கருதற் பாலது. பெண் பிறவியின் விழுமிய நோக்கம் தாயாகித் தொண்டு புரிதல் என்று சொல்லல் மிகையாகாது. எனவே, பெண்மை என்னும் நினைவு தோன்றும் போது, தாய்மை - தொண்டு - என்னும் இரண்டும் பக்கத்தில் தோற்றமுறல் வேண்டும். தாய்மையும் தொண்டும் வாய்ந்த பெண்ணல்லளோ முதன்மையுடையாள்?
தாய்மைத் தொண்டு
தாய்மைத் தொண்டு என்பது எளியதன்று. தாய்மைத் தொண்டு என்று எளிதில் பேசலாம்; எழுதலாம். நடைமுறையில் அத்தொண்டாற்றுவோர்க்கே அதின் அருமை தெரியும். அரிய தொண்டு பெண்ணிற்கு வாழ்வாயிருக்கிறது. தொண்டிற் கென்றே பெண் பிறந்தாள், வளர்ந்தாள், படித்தாள்; மணங் கொண்டாள், வாழ்கிறாள் என்றுங் கூறலாம். தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப் பணி. பயன்கருதாத் தொண்டு தெய்விகம் நிரம்பியது. “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்னுந் திருவாக்கை ஓர்க. இப்பெயரான் யான் ஒரு நூல் எழுதியிருக்கிறேன். விரிவு அதிற் காண்க.
வாழ்க்கைப் பெண்
வாழ்க்கையில் தலைப்பட்டுள்ள ஒரு பெண்ணின் வாழ்வை நோக்கின், அவளது தொண்டின் சிறப்பு இனிது புலப்படும். அப்பெண் எத்துணை எத்துணைச் தொண்டாற்றுகிறாள்! மாமன் முதலியோர்க் கேற்ற தொண்டு - கணவனுக்குரிய தொண்டு - பிள்ளைகளுக்குகந்த தொண்டு- மற்றவரா்கட்குத் தக்க தொண்டு - எத்தனை எத்தனை வகைத் தொண்டு! வன்கண்ணர் சேர்ந்த குடும்பமாயின், அக் குடும்ப நெருப்பிடை நின்று, துன்பம் பொறுத்து, மகிழ்ச்சியோடு பெண் பணியாற்றுகிறாள். வருவா யில்லாக் குடும்பமாயின், பொருளீட்டுந் துறையிலும் உழைத்து மற்றக் கடன்களைப் பெண் உஞற்றுகிறாள். பொது வினைகளில் தலைப்பட நேரின், அவ்வினைகளையும் பெண் மகள் நிகழ்த்து கிறாள். பெண்மகள் துன்பம் பொறுத்து, மகிழ்ச்சியோடு பணி செய்வதுபோல், அண்மகன் செய்யமாட்டான்.
பெண்ணின் தியாகம்
பெறுமைப் பொருளாகிய பெண்ணைக் கிறிஸ்து என்றும், காந்தி என்றும் யான் போற்றுகிறேன். துன்பப் பொறையில் விளைவது இன்பம் என்று அஸ்கார் ஓயில்ட் என்னும் அறிஞர் கூறிப்போந்தார். இவ்வின்பநிலை பெற்ற வரல்லரோ என்பையும் அன்பால் பிறர்க்கு அளிப்பவராவர்? இந்நிலை பெண் மக்களிடம் இயல்பாய் அமைந்துள்ளது. பெண் எப்பொழுதும் தனக்கென ஒன்றும் கொள்வதில்லை. பிள்ளைகளை வஞ்சிக்கும் தாய், உலகிலிருப்பளோ? தன்னுயிர்க்கென ஓன்றிருப்பினும் அதைப் பிள்ளைகட்குக் கொடுக்கத் தாய் சிறிதும் பின்னடை யாள். பிள்ளைகட்காகத் தாய் செய்யும் தியாகத்தை இத்தகைத் தென்று எழுத்தால் எழுதல் முடியாது. சுருங்கக் கூறின், பெண் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவள் என்று கூறலாம். குடும்பக் கொடுமைகளைப் பொறுத்தல், உள்ளதை மற்றவர்கட் கந்து மகிழ்தல், தனக்கென வாழாது பின்னுலகாக்கும் உயிர்கட்கென வாழ்தல், விருந்தோம்பல், ஏழைகட் குதவல் முதலிய அருங்குணங்கள் பெண்ணினிடத்துப் பொலிதல் வெள்ளிடைமலை.
குணம்
இப் பெருங்குணங்கள் பெண்ணின் தொண்டாகப் பரிணமிக்கின்றன. குணமிலாதக் தொண்டு தொண்டாகுங்கொல்! தொண்டிற்கு வேண்டற்பாலது குணம் குணமே. பெண்ணின் பாலுள்ள தாய்மையில் எக்குணம் அடங்காது? உள்ள குணமெல்லாம் அதன்கண் அடங்கும். எனவே, பெண் குணமலை யாகிறாள் - பெண்ணைச் குணமலை எனப் போற்றல் எவ்வாற் றானும் பொருந்தும். குணம் முதன்மை பெறல் இயல்பன்றோ?
குணமிலாப் பெண்
பெண் பிறவி தாங்கினோருள் குணமில்லார் இல்லையோ என்று சிலர் வினவலாம். உலகில் எதற்கும் புறனடை உண்டு. புறனடையைப் பொதுமையில் புகுத்திப் பேசுவது உலக வழக்கன்று. ஈண்டுப் பொதுஅறம் பற்றியே பெண்ணுலகின் இயல்பை யான் மொழிந்து வருகிறேன். பெண் வடிவந் தாங்கினோருள்ளும், பொறுமை தியாகம் முதலிய குணங்களில்லாப் பேய்களிருக்கலாம். இவர்கள் வடிவத்தால் பெண்மக்களே யன்றித் தாய்மைக்குரிய பெண்மை வாய்க்கப் பெற்ற பெண் மக்களல்ல. இவர்கள் புறனடைப் பெண் மக்கள். புறனடை ஒவ்வொன்றிலும் உண்டு.
ஒரு மாந்தோப்பை எடுத்துக் கொள்வோம். அத்தோப்பிலுள்ள மாமரங்களில் இரண்டொன்று கனி கொடாமல் இருக்கலாம். அவ்விரண்டொன்றில் மனஞ்செலுத்தி, “மாமரம் கனியளிக்கும் இயல்பின தன்று' என்று பொதுப்படக் கூறல் அறமாகுமோ? பெண்ணுலகினும் யாண்டாயினும் ஒரு மூலையில் பழுது நேரலாம். அதுகொண்டு, “பழுது பெண்ணு லகின் இயல்பு” என்று கூறல் அறமாகுமோ? பொதுப் படப் பெண்ணு லகின் இயல்பையே நாம் நோக்கல் வேண்டும்.
பெண்ணுமைக்குணம்; ஆண்மைக்குணம்
குணங்களை இரண்டு கூறாகப் பிரிக்கலாம். ஓன்று பெண்மைக் குணத்தொகுதி; மற்றொன்று ஆண்மைக் குணத் தொகுதி. பெண்மைக் குணங்களாவன: அழகு, அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், வீரம் முதலியன. அண்மைக் குணங்களாவன: கரடு, முரடு, அவா, பொறாமை, தன்னலம், சீற்றம் முதலியன. ஆண்மகன், கரடும் முரடும் சுருளும் திரிவும் பிளவும் நிரம்பிய பட்டைகள் போர்த்த வலிய மரம் போன்றவன். பெண்மகள், அக்கரடு முரடு முதலிய கொடுமை களை ஒடுக்க, அம்மரத்தைச் சுற்றி, மனத்துக்கினிய பசுமை வழங்கும் மெல்லிய பூங்கொடி போன்றவள். இக் குணமிலாப் பெண் பெண்ணாகாள். இக்குணமுள்ள அண்மகனும் பெண்மை பெற்றவனாவன்.
ஆணில் பெண்மை
ஆண் வடிவில் பெண்மைக் குணம் பெற்ற மக்களே இது காறும் உலகில் அன்பர்களென்றும், அடியார்களென்றும், அறிஞர்களென்றும், வீரர்களென்றும், பாவலர்களென்றும் போற்றப்பட்டு வருகிறார்கள். 'ஆண்வடிவில் பெண்மைக் குணம்” என்பது கொண்டு அக்குணமுடைய ஓருவனை அலி என்று எவருங் கருதலாகாது. அலிகள் ஆண் பெண் என்னும் இரு பாலாரிலுமுண்டு. அவர்களைப் பற்றிய பேச்சே ஈண்டு வேண்டா. அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அக்கூட்டம் வேறு; ஈண்டு யான் குறிப்பிடும் ஆண் வடிவில் பெண்மைக் குணம் படைத்த கூட்டம் வேறு. ஆண் பிறவி தாங்கினோர் நல்வழியில் முயன்று பெண்மைக்குணம் பெற விரைவாராக.
“அகமே புறம்” என்றபடி குணத்துக்கேற்ற முகம் மலரும். அன்பர், அருளாளர், வீரர், பாவலர் முதலியோர் முகங்களில் பெண்மை ஓழுகல் காணலாம். பண்டைக்கால அன்பர், அருளாளர் முதலியோர் படங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைக்குமேல் அவர்தம் முகத்தில் பெண்மையைப் பார்க்கலாம். அருகர், புத்தகர், கிறிஸ்து, திருவள்ளுவர், அப்பர், நம்மாழ்வார் முதலியோர் முகங்களில் பெண்மையே பொலிந்திருத்தல் வேண்டும். பாட்டிற் சிறந்த ஷெல்லி, வீரத்திற் சிறந்த நெப்போலியன், பொறுமையிற் சிறந்த காந்தியடிகள் - இவர்கள் திருவுருவப் படங்களை உற்று நோக்குவோம். இவர்கள் முகத்தில் மனத்தைக் கவரும் பெண்மை என்ன அழகாகப் பொழிகிறது! பெண்மைக்குணம் ஊறும் அகம், பெண்மை முகமாக மலர்தல் இயல்பு.
பெண்மையின் இறைமை
பெண் நீர்மைகளே இறைமை நீர்மைகள் என்பன; ஏனைய அரக்க நீர்மைகள். அரக்கத் தன்மையை ஓழிக்கப் பெண் தன்மை தேவையே. பெண்ணியல்பு பெறாது கடவுள்நிலை பெறல் இயலாது என்று சுருங்கச் சொல்லிவிடலாம். ஞானநிலையில் எவரும் பெண்மையாகும் ஒருநிலையுண்டு; அதாவது அழுக்காறு - அவா - வெகுளி - முதலியன கழிந்து, பொறுமை - அருள் - முதலியன படியும் ஒருநிலை என்க. “ஒளியாம் பரமும் உளதாம் பரமும்- அளியார் சிவகாமியாகுஞ் சமயம் ' என்றார் திருமூலனார். “மெய்யருனாந் தாயுடன் சென்று பின் தாதையைக் கூடி ' என்றார் பட்டினத்தடிகள். கடவுள்நிலை அடைதற்கும் பெண்ணியல்பு இன்றியமையாததா யிருக்கிறது.
நமது நாடும் பெண்மையும்
பெண்மையின் சிறப்பை உன்னியே நம் முன்னோர் வாழ்விற்கு இன்றியமையாத கல்வி, திரு, ஞானம் முதலியவற்றையும் பெண்ணெனக் கொண்டனர் போலும். கல்வியைக் கலைமகள் என்றும், திருவைத் திருமகள் என்றும், ஞானத்தைப் பரை என்றும் நம் நாட்டார் கொண்டது அராயத்தக்கது. நாட்டைப் பலவழியிலும் ஓம்பும் காட்டை, காட்டுக்கன்னி- வனதேவதை என்று வாழ்த்துவதும், பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் தாய் (வந்தேமாதரம்) என்று வழுத்துவதும் உன்னற்பாலன. எல்லாவற்றிற்கும் மேலாக விளங்கும் கடவுளையும் நம்மவர் பெண்ணாகவே பெரிதும் போற்றுகின்றனர். இந்திய நாட்டில் கடவுளைப் பெண்ணாகப் போற்றுவோர் தொகையே பெருகி நிற்கிறது. முழுமுதற் பொருள் பெண் ஆண் வடிவாயிருப்பினும், அதனிடத்து அருளுக்குரிய பெண் தன்மையே சிறந்து விளங்கு தலை, அருள்நிலை எய்திய பெரியோர் நமக்கு அறிவுறுத்திப் போந்தனர். “மூவே முலகுக்குந் தாயே” என்றும், “அம்மையெனக் கருளியாவா றார்பெறுவார் அச்சோவே ” என்றும் மாணிக்க வாசகனார் அருளியிருத்தல் காண்க. உலகில் உயரிய அன்புப் பொருளெல்லாம் பெண்ணாகவே பேசப்படல் எவரும் அறிந்த தொன்று. இத்துணைச் சிறப்பு வாய்ந்த பெண்மையின் பருமை யாம் பெண்ணின் முதன்மையை விளக்கலு வேண்டுமோ?
பெண் தோற்றம்
பெண்ணின் முதன்மையை நிறுவப் பலப்பல காரணங்களுண்டு. அவற்றை ஈண்டு விரிக்கில் அவை பெருகும். எதையும் ஆய்ந்து உண்மை கண்ட பின்னரே, அவ்வுண்மையை உலகிற்கு அறிவுறுத்தும் மேல் நாட்டுப் பூதபெளதிக ஞானிகளிற் பலர், பெண் தோற்றத்தையே முதலாவதாகக் கருதுகின்றனர். இழிந்த பிராணிகளிற் சில சின்னாள் பெண்ணாகவும், சின்னாள் ஆணாகவும் மாறுதல் உண்டு. பையாலஜி என்னும் இயற்கை நூலைப் பார்க்க. உலகில் - தொன்மையில்- பெண் ஆண் வேற்றுமை அரும்புதற்கு முன்னர், முதன் முதல் இயற்கையில் பெண்ணுறுப்பே அரும்பியிருத்தல் வேண்டுமென்பது இயற்கை ஞானிகளின் அராய்ச்சியிற் போந்த உண்மை. இவ்வுண்மைக்கு நமது நாட்டவருட் சிலர் கண்ட உண்மை அரண் செய்கிறது.
தமிழ் நாட்டிற் பிறந்த மணிகளுள் திருமூலர் என்னுங் குருமணி, பெண்ணின் முதன்மையைப் பல இடங்களில் விரித்துக் கூறியிருத்தல் எனது உள்ளத்தைக் கவர்கிறது. அவர் அருளிய மொழிகளுள் சில வருமாறு:
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆணென் பிறப்பரிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாற.
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.
பைங்கொடி யாளும் பரம னிருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்.
பெண்கொடி யாக நடந்த துலக.
இயற்கையில் முதல் முதல் அரும்பியது பெண்ணுறுப் பென்பது பூதபெளதிக ஞானிகளின் கொள்கை. அவ்வியற்கைக்குக் காரணமாக உள்ளது சக்தி என்ற உண்மை கண்டு நம் நாட்டவர் சத்திக்கு முதன்மை கூறுகிறார். முன்னையது சடத்தைப் பற்றிய ஆராய்ச்சியினின்றும் எழுந்த உண்மை. பின்னையது சித்தைப் பற்றிய ஆராய்ச்சியினின்றும் பிறந்த உண்மை. சித் எவ்வழி, அவ்வழிச் சடமுமியங்குமாகவின், அவ்வுண்மைக்கு இவ்வுண்மை துணை போதல் காண்க. இயற்கையிலும் இறைமையிலும் முதன்மை பெற்றுள்ள பெண்ணிற்கு முதன்மை எவரும் வழங்க வேண்டுவதில்லை. அம்முதன்மை, இயல்பாகவே அமைந்து கிடக்கிறது. அனால் அம்முதன்மை, உலகில் பொதுவாகச் சில விடங்களிலும், சிறப்பாக நமது நாட்டிலும் மறக்கப்பட்டி ருக்கிறது.
பெண்ணின் முதன்மை மறந்தவிடம்
பெண்ணின் முதன்மை மறந்த இடங்களில் கல்வி, திரு, பொலிவு, அன்பு, உரிமை, வாய்மை, தொண்டு, தெய்வ மணம் முதலியன அருகி நிற்கும். இயற்கை அவ்விடங்களைப் பற்பல வழிகளில் ஒறுத்தேதீரும். பெண்ணின் முதன்மை மறக்கப்பட்ட இடம், நரகக்குழமியை யொத்தது என்று சுருங்கக் கூறுவேன். அழகு, அடக்கம், இரக்கம், இன்பம், முதலியன முதன்மை பெறாத இடம், நரகமாகாது பின்னை என்னவாகும்? மனத்தைக் கவரும் அழகரும்்.பி, நல்வாழ்விற்கு அடிகோலும் அடக்கம் மலர்ந்து, பொறுமை தியாகம் தன்னல மறுப்பு இரக்கம் முதலிய செவ்விய நீர்மைகட்கு அடிப்படையாயுள்ள அன்பு காய்த்து, பின்னுலகாக்கும் தாய்மைத் தொண்டு கனிந்து, இன்ப வாழ் வெனும் தேன் பிலிற்றும் பெண் கொடியின் முதன்மையையா மறப்பது? மறுப்பது?
நமது நாட்டுத் தொன்மை வழக்கு
நம் முன்னோர் கடவுளின் பெண் கூற்றை முன்னர்க் குறித்தே, பின்னர் ஆண் கூற்றுக் குறிப்பது வழக்கம். பார்வதி பாகன், இலட்சுமி நாராயணன், வள்ளி மணாளன் முதலிய வழக்குகளை உன்னுக. உலகம் ஒருபாதி பெண்ணும் மற்றொரு பாதி ஆணுமாக ஆக்கப்பட்டிருப்பினும், பெண்ணுலகின் பெருமையை உணர்ந்து, தொன்மை யுலகம் பெண்ணுக்கே முதன்மை வழங்கிற்று. பெண்ணையே தேவி என்று நம்மவர் அமைக்கின்றனர். ஆணைக் தேவன் என்று சொல்லும் வழக்கம் பெரிதும் நாட்டில் இல்லை. இவ்வாறு பெண்ணிற்கு முதன்மை வழங்கிய நாடு, இதுபோழ்து அம் முதன்மை மறுக்கும் நிலை எய்தியிருக்கிறது! கொடுமை! கொடுமை! தாய்மையுடைய பெண்ணிற்கு முதன்மை வழங்க மறுப்பது அநாகரிகம். “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்” என்றும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றும், “சத்தியாய்ச் சிவமாகி” என்றும் பெரியோர் பெண்ணுக்கு முதன்மை வழங்கியிருத்தல் காண்க. பெண் வயிற்றிற் பிறந்த நாம் பெண்ணை முதலாகக் கொள்வோமாக.
யான் பெண்ணின் வயிற்றில் தோன்றினேன்; பெண்ணுடன் பிறந்தேன்; பெண்ணுடன் வாழ்ந்தேன். என் வாழ்விற்கு நாடோறுந் துணைபுரியும் இயற்கை, பெண்ணாகவே காட்சி யளிக்கிறாள். யான் தொமும் அன்புத் தெய்வமும், பெண்ணாகவே யிருக்கிறது. எனது உள்ளத்துள்ள பெண்மை, அருளைச் சொரிகிறது. யான் பேசும் மொழி, எனக்குப் பெண்ணின்பம் நல்குகிறது. எல்லாம் பெண் மயமாக என்னைச் சூழ்ந்து, என்னுட லுக்கும் உயிருக்கும் நலஞ் செய்கின்றன. இத்தகைய பெண் தெய்வத்தை முதன்மைப் பொருளாகப் போற்றுகிறேன். பெண்ணே முதன்மையுடையாள்; அத் தாயை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன். வந்தேமாதரம்.
”சர்வம் சக்தி மயம் ஜகத் *
----------
3. பெண்ணுரிமை
(உரிமை இயல்பு – அஃறிணையுலகில் பெண்ணுரிமை –ஆண் கொடுமை – பெண்ணுரிமையுள்ள நாடு – நாகரிகத்துக்கு அறிகுறி – கீழ் நாட்டுப் பெண்மக்கள் – பெண்ணுரிமையில்லா நாடு – வேதகாலப் பெண் மக்கள் – இதிகாச காலப் பெண்கள் – புத்தர் காலம் – இராசபுத்திரிகள் – பழந்தமிழ்ப் பெண்மக்கள் – அகப்பொருளும் பெண்ணுரிமையும் – நாயன்மார்காலம் – பெண் அடிமைப்பட்ட காலம் – ஸ்மிருதி காலம் – பெண் ஆண் மூளை நிலை – அமைதியில் அறிவு – கலைமகள் நுட்பம் – பேதைமை விளக்கம் – கட்டுப்பாடுகளின் கொடுமை – ஒழுக்கம் இருபாலர்க்க்கும் – திருவள்ளுவர் உள்ளம் – செயற்கைக் கட்டுகள் – உரிமையும் கடமையும் – பெண்ணுரிமைக் கேட்டால் விளையுங் கேடுகள் – உரிமைப் போரால் கொடுமை – பெண் பிறவி நோக்கம் – பெண் ஆணுக்குள்ள தொடர்பும் நாட்டுப் பழைய வாழ்வும்)
மாதர் தம்மை இழிவு செய்யம்
மடமயைக் கொளுத்துவோம் - பாரதியார்
உரிமை
எல்லாவற்றிலும் முதன்மை பெற்று விளங்கும் பெண்ணிற்கு உரிமை வழங்க-வேண்டுமா வேண்டாவா என்னும் ஆராய்ச்சியும் இவ்வுலகில் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று; மற்றொருவர் வாங்குவது மன்று. அஃது எவரிடத்தும் எல்லா விடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. சிலர் தமக்குள்ள வன்மையால் பிறர் உரிமையை மறித்தும் பறித்தும் வருகின்றனர். ஒருவார் உரிமைக்கு மற்றொருவர் கேடு சூழ்வதினும் கொடிய பாவம் பிறிதொன் றிருக்கிறதென்று தெரியவில்லை. உரிமையாவது உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக் கொடை. தன்னைப் போலவே உயிர்களும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உலகில் வாழவேண்டுமென்பது கடவுள் நோக்கம். அவ்வருள் நோக்கத்துக்கு மாறுபட்டுப் பிறர் உரிமையைத் தேடுவோர், கடவுள் உண்மையில் உறுதியுடையோராகார். எவ்வுயிர் உரிமைக்கும் எவரும் கேடு நிகழ்த்தலாகாதென்பது பொது அறம். அங்ஙனமாக, மன்பதையின் தோற்ற வளர்ச்சிக்கெனக் கடவுளருளால் தாய்மை பெற்றுள்ள மென்மைப் பெண்மகளின் உரிமையை வன்மை அண்மகன் சில இடங்களில் மறித்தும் பறித்தும் இருக்கிறான்! இயற்கை நியதிக்கு முரணிநின்று, பெண்ணுரிமையைக் கடிந்து, “பெண்ணுக்கு எவ்வளவில் உரிமை வழங்கலாம்; எவ்வளவில் வழங்கல் கூடாது” என்னும் ஆராய்ச்சியில் தலைப்படல் எத்தகை அறியாமை! பெண்ணின் உரிமையைக் கெடுக்கவும் வழங்கவும் இம்மகன் யாவன்? அவ்வுரிமையைக் கடிந்த மறத்துக்குக் கழுவாய் தேட வேண்டுவது இவன் கடமை என்று யான் கூறுவேன்.
அஃறிணை உலகில் பெண்ணுரிமை
“பெண்ணுரிமைக்குக் கேடு எவ்வுலகில் விளைந்திருக்கிறது? அஃறிணையுலகிலா? ஆறறிவுடைய மக்கள் உலகிலா? வெட்கம் வெட்கம்! புல் செடி கொடிகளில் ஆணினம், தன் தன் பெண்ணினத்தின் உரிமையைத் தகைந்திருக்கிறதா? ஆண் பறவை, பெண்பறவையின் உரிமையைக் கெடுத்திருக்கிறதா? எவ்விலங்காதல் தனது பெண்ணினத்தின் உரிமையை உடைத்திருக்கிறதா? அஃறிணை உலகில் பெண்ணுரிமைக்கும் பழுது நிகழ்ந்ததில்லை. பாழான ஆறறிவுடைய உயர்திணை உலகிலேயே பெண்ணுரிமைக்குப் பழுது நேர்ந்திருக்கிறது.!
ஆண்கொடுமை
பமுது தொன்றுதொட்டு இடையீடின்றி நிலவி வருவதன்று. சில நூற்றாண்டுக்கு முன்னரே பெண்ணுலகில் பழுது நுழைந்தது. இதற்குக் காரணம் ஆணுலகின் தன்னலமேயாகும். ஆண்மகன் பெண்மகளைத் தனக்குரிய காமப்பொருளாகவும், பணியாளாகவும் கொண்ட நாள் தொட்டுப் பெண்மகள் உரிமையை இழக்கலானாள். வலிய ஆணின் கொடுமை, மெலிய பெண்ணின் உரிமையைப் பறிமுதல் செய்தது. வலிய ஆண் முன் மெலிய பெண் என் செய்வாள்?
பெண்ணுரிமையுள்ள நாடு
பெண்ணுரிமை பொதுவாக உலகில் பல இடங்களிலும், சிறப்பாகச் சில இடங்களிலும் பின்னை நாளில் கடியப்பட்டது. பெண்ணுரிமையுள்ள நாடுகள் செமுமை-யுற்றிருப்பதும், அவ்வுரிமை இல்லா நாடுகள் செழுமையற்றிருப்பதும் கண்கூடு. பெண், நாட்டின் தாயாகலான், அவள் அடிமைப்படும் இடம் அடிமைப்படல் இயல்பு.
நாகரிகத்துக்கு அறிகுறி
மேல்நாட்டார், தாம் பெண்ணுரிமை கடியாமல் வாழ்தலால், தாம் நாகரிக நுட்பம் உணர்ந்தவரென்றும், கழ்நாட்டார் பெண்ணுரிமை கடிந்திருப்பதால் அவர் நாகரிக நுட்பம் உணராத வரெரன்றும் கருதுகின்றனர். ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண்மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிற தென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ, அங்கேயுள்ள அண் மக்கள் நாகரிக நுட்பமுணர்ந்தவர் களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.
கீழ்நாடு
கீழ்நாட்டின் பழைய வரலாற்றை நோக்குழிப் பெண் மக்கள் அடிமை வாழ்வு
நடாத்தினார்களென்பது விளங்கவில்லை. கீழ் நாட்டுச் சரித்திரங்களில் இவ்வுண்மையைக் காணலாம்.
எகிப்து, பாபிலோன் முதலிய இடங்களில் பண்டை நாளில் பெண்மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள் என்று தெரியவில்லை. முதல்முதல் ஓரு பெண்பால் அரசு செலுத்திய இடம் எகிப்து என்று சரித்திரம் கூறுகிறது. சீனத்தில் ஹதாசு, செமிராமிஸ் என்பவர் ஆட்சி நடாத்தி இருக்கின்றனர். அணித்தே ஒரு மஹாராணியே சீனத்தின் சக்கவரத்தினியா யிருந்தாள். இந்தியாவில் ரிஜியா, நூர் ஜஹான் முதலியோர் ஆட்சிகள் நடந்தன. சிரியா நகரங்களை அராபியர் பற்றி வந்த போது காலஸ், ஓபிரா என்ற அராபிப் பெண்மணிகள் நாட்டிய வீரத்தை நூல்களிற் காணலாம்.
நபிநாயகத்தின் அருந்தவப் புதல்வியார், பெருமைக்கு ஓர் உறையுளாயிருக்கிறார். விரிவு அவர்தம் வரலாற்றிற் காண்க. பாக்தாத் முதலிய இடங்களிலிருந்த சில கலிபாக்கள், தங்கள் மனைவிமாரின் நினைவுச் குறிகளாகப் பல அழகிய நிலையங்கள் எழுப்பினார்கள். ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், அவர்தம் மனைவியின் அன்பிற்கோர் அறிகுறியாக நிற்கிறது. இவ்வன்புச் செயல்கள் பெண்மக்களிடத்துள்ள மதிப்பைப் புலப்படுத்து கின்றன. முஸ்லிம் பெண்கள், பிறந்த இடத்தில் சொத்துரிமை பெற்றிருப்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.
கீழ்நாட்டுப் பெண்மணிகளில் கல்வித் துறையில் போர் பெற்று விளங்கினவர் பலர். ஜப்பானிய இலக்கியங்களிற் சிறந்த இரண்டு நூல்களின் ஆசிரியன்மார் பெண்மக்களேயாவர். பாக்தாத், கார்டோவா முதலிய இடங்களில் பெண்மக்கள் கல்லூரிகளில் சென்று பயின்று வந்தார்களென்று சொல்லப் படுகிறது. அப்பெண் மக்கள், பற்பல கல்வித் துறைகளிலும் வல்லவர்களாயிருந்தார்கள். மீராபாய், ஜிபன்னிசா, சைஸ், போதோனி முதலிய புகழ்பெற்ற பெண் கவிகளின் சிறப்பை என்னென்று கூறுவது?
கீழ்நாட்டுப் பெண்மக்கள் வாழ்வு
கீழ்நாட்டுப் பெண்மக்கள் பெரிதுந் தாய்மையையும், அறவவொழுக்கத்தையும், சமய வாழ்வையும், தொண்டையுமே தங்களுக்குரிய வாழ்வுச் செல்வங்களாகக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணிகள் ஆண்மக்களிடத்தில் போராடுவதும், அவர்களை வழி மறித்துப் புடைப்பதும், அவர்கள் பதவிகளைப் பற்றுவதும் தங்களுக்குரிய வாழ்வென்று கொண்டார்களில்லை. ஆண்மக்களுடன் போராடுவது மட்டும் பெண்ணுரிமையாகாது. பெண் ஆணுடன் கலந்து வாழப் பிறப்பிக்கப்பட்டாளே யன்றி, அவள் ஆணுடன் போர்புரிந்து வாழ்வைக் குலைத்து இடர்ப்படப் பிறப்பிக்கப்-பட்டாளில்லை. இதுபற்றிப் பின்னுங் கூறுவன்.
இந்திய நாடு
கீழ்நாடுகளிற் சிறந்த நமது இந்திய நாட்டின் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். பண்டை நாளில் இந்திய நாட்டுப் பெண்மக்கள் கல்வியாளர்களாய், வீரத் தாய்மார்களாய், அரசிகளாய், எவ்வினையும் ஆற்ற வல்லவர்களாய் இருந்தார்கள். அந்நாளில் நாடு உற்றிருந்த செழுமைக்கோர் அளவில்லை.
இந்திய நாட்டின் செழுமையும், பெருமையும், பிறவும் நூல்களில் பேசப்படுகின்றன. நாடு அச்செழிய நிலையுற்றிருந்த நாள் எந்நாள்? அந்நாள், பெண்ணுரிமை பெற்றிருந்த நாள் என்று தயங்காது சொல்லலாம். பெண்ணுரிமை பறிக்கப்பெற்ற நாள் தொட்டு, நாடும் உரிமை இழந்து, அடிமைக் குழியில் வீழ்ந்து வருந்துகிறது.
நமது நாட்டின் இப்போதைய சிறுமைக்குக் கூறப்படுங் காரணங்களுள் யான் மூன்றைச் சிறப்பாக எடுத்துக்காட் டுவது வழக்கம். அவை (1) பெண்ணுரிமை தடிந்தது. (2) பிறப்பால் வகுப்பு வகுத்தது. (3) மக்களுள் தீண்டாமை கொண்டது. இம் மூன்றனுள் பெண்ணுரிமை தடிந்ததைத் தலையாய காரணமாகவங் கொள்ளலாம். பெண், நாட்டின் ஒரு பாதியாகலின், அவள் உரிமைக்கேட்டால், நாடு எங்ஙனம் நல்வாழ்வு பெறுதல் கூடும்? மனிதனது ஒரு பாதி, வாயுவால் இயக்கமின்றி வீழ்ந்தால், அவன் எதற்குப் பயன்படுவன்? “பெண்ணுரிமையில்லா நாடு, பக்கவாயு உடையானை ஓத்தது” என்று சொல்லத் தேவையில்லை.
பண்டைக் காலத்தில் நமது நாட்டுப் பெண்மக்கள் எல்லாத் துறைகளிலும் உரிமை பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. வேத கால உலகின் மீதும் பழந்தமிழர் கால உலகின்மீதும் நமது கருத்தைச் செலுத்துவமேல் அக்காலப் பெண்மக்கள் நிலை இனிது புலனாகும். இடைக்காலத்திலும் பெண்மக்கள் சிறுமை யுற்றிருந்தார்களென்பது விளங்கவில்லை. பிற்காலத்திலேயே - அதாவது ஸ்மிருதி காலத்தில் - நமது நாட்டில் பெண்ணுரிமை குலைக்கப்பட்டது.
வேதகாலப் பெண்மக்கள்
வேதங்களில் மிகத் தொன்மையது ரிக் வேதம். அதன்கண் பெண்மக்களால் யாக்கப்பட்ட பாக்களைக் காணலாம். அத்திரி ரிஷியின் வழித்தோன்றிய விசுவாவரை, அகத்தியரின் காதல் மனைவியார் லோபா முத்திரை, ஆம்ரி முனிவரின் அருமைப் புதல்வியார் வாக்தேவியார் முதலியோர் யாத்த பாடல்கள் அவ் வேதத்தில் பொலிகின்றன. மைத்ரேயி, கார்க்கி, தேவபூதி முதலிய பெண்மணிகளைப்் பற்றி ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை.
மைத்தேயி
மைத்ரேயி என்பார், மித்ரர் என்னும் பெரும்புலவரின் அருந்தவப் புதல்வியார். ”தந்தை மகற்காற்று நன்றி அவையத்து - முந்தி யிருப்பச் செயல்” என்றார் வள்ளுவனார். “மகனுக்கு” என்பதுகொண்டு, “மகட்கு அன்று என்று பொருள் கூறுவது பிற்கால வழக்கு. பொதுவாக உலகிற்கு ஓர் அறம் உரைக்கும் வேளையில், “ஒருவன்”, “மனிதன்' என்னும் ஆண்பாற் சொற்களை ஆளுதல் தொன்று தொட்ட வழக்கு. இவ்வழக்குப் பற்பல மொழிகளிலும் உண்டு. திருவள்ளுவர் ஈண்டு “மகற்கு” என்றது, பொதுவாக மக்களை உணர்த்துவதென்க. இது நிற்க, தந்தை பிள்ளைக்கு நல்கத்தக்கது கல்விச் செல்வமேயாகும். பண்டிதர் மித்ரரும் தம் புதல்வியாரைப் பெரும் பண்டிதை யாராக்கினர். இப்பண்டிதையார் பொருட் செல்வத்தின் புன்மையையும், அருட் செல்வத்தின் மேன்மையையும் பற்றித் தங் கணவனார் மகரிஷி யாக்ஞவல்கியருடன் வாதித்த பெருமொழிகள் ஒரு சிறந்த உபநிஷத்தில் ஒளிர்கின்றன. அப்பண்டிதையார், ஆசிரியரா யிருந்து ஒரு வேதபாடசாலையை நடாத்தின ரென்றுஞ் சொல்லப்படுகிறது.
கார்க்கி
அப்பெருமாட்டியாரின் நெருங்கிய உறவினராகிய கார்க்கியைப் பற்றித் தெரியாத வடமொழிப் புலவர் இரார். கார்க்கி, ஒருபோது ஜனகன் கழகத்தில், யாக்ஞவல்கி-யருடன் வாதம் புரிந்து, “தர்க்க அரசி என்ற பெயர் பெற்றனர்.
தேவபூதி
தேவபூதி என்பார், சாங்கிய மதாச்சாரியராகிய கபிலர் என்ற பெரியாரை ஈன்ற தாயார். தாயார் தேவபூதியினிடத்தில் புதல்வர் கபிலர் கல்வி பயின்று, அப்பயிற்சியின் பயனாகச் சாங்கிய நூல் இயற்றி, ஒரு சமயத்தைக் காணும் திறனும் பெற்றார். இப்பெருமைக்குக் காரணராயிருந்த தேவபூதியின் கல்விச் சிறப்பை என்னென்று பகர்வேன்?
பெண்மக்கள் வேதப் பயிற்சி
வேதகாலப் பெண்மக்கள் நிலை குறித்துப் பலபடப் பேச வேண்டுவதில்லை. அக்கால வழக்க மொன்றை ஈண்டுக் குறிப்பிடுவது சாலும். அந்நாளில் தலைவன் வேள்வி செய்யும் போது தலைவியும் உடனிருப்பாள். மந்திரத்திலாதல்- சுரத்தி லாதல் - தலைவன் பிழை நிகழ்த்துவனேல், உடனே திருத்தமாகத் தலைவி அதைச் சொல்லி ஒழுங்கு செய்வது வழக்கம். இதனால் அண் மக்களைப் போலவே பெண்மக்களும் கல்வியிலும் வேதப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது தெற்றெனத் தெரிகிறது.
வேதகாலங் கடந்த பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் பெண்மக்கள் கல்வித்துறையிலும், பிற துறைகளிலும் உரிமை பெற்றிருந்தார்கள். சங்கரர்க்கும் மிசிரர்க்கும் நிகழ்ந்த விவாதத்தில் நடுநிலைத் தலைமை வகிக்கும் பேறுபெற்ற பாரதியும், கணிதத்திற் சிறந்த லீலாவதியும், வானசாஸ்திரத்தில் பேர் பெற்ற கானையும், மணஞ் செய்தற்குத் தம்மையொத்த புலமை யுடைய நாயகன் வாய்க்கப் பெறாது கன்னிகையாகவே காலங் கழித்த சுலபையும், ஹு வான் த்ஸாங் என்ற சீனர், நமது நாடு போந்து சுற்றியபோது, எக்கட்டுப்பாடுமின்றிப் புலவர்களோடு பேசிக்கொண்டிருந்தனரென அவர் நூலில் குறிக்கப் பெற்றுள்ள இராஜேசுவரியும், பிறரும் அக்காலப் பண்டிதைமாரில் குறிக்கத் தக்கவார்.
இதிகாச காலப் பெண்மக்கள்
இதிகாசங்களிற் போந்துள்ள பெண்மக்கள் வரலாறுகளும், அவர்களது நிலையைப் புலப்படுத்தும். சீதையின் நிறையும், பிரபாவதி, சபரி இவர்களின் தவமும், குந்தி தமது புதல்வர்கட்கு ஊக்கமூட்டிச் சோர்வு குலைத்து வீர மெழுப்பிய தும், காந்தாரி அரச அவை ஏறி அரசியல் அறிவுறுத்தியதும், ([1]அருச்சுனன் மனைவியாகிய) திரெளபதியின் அருஞ்செயல் களும் அக்காலத்திய பெண்மணிகளின் உரிமைக்கு எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.
---
[1] திரெளபதி ஐவர்க்கு மனைவி என்று வியாச பாரதம் விளம்புகிறது. அவ்வாறு ஜைன பாரதம் விளம்பவில்லை. அருச்சுனன் ஒருவனுக்கே மனைவியாகத் திரெளபதி வாழ்ந்தாள் என்று ஜைன பாரதம் கூறுகிறது.
புத்தர் காலம்
புத்தர் காலத்திலும் பெண்ணுரிமைக்குக் கேடு நிகழ வில்லை. அந்தநாளில் ஆண்மக்களைப் போலவே பெண்மக்களும் கல்வி பயின்று அறம் வளர்த்தார்கள். அசோகன் காலத்தில் சில பெண்மணிகள், உலகில் பலநாடு போந்து அறம் வளர்த்தார்களென்று சரித்திரம் சாற்றுகிறது.
இராசபுத்திரிகள்
இன்னும் சரித்திரத்தில் சில பெண்மக்களின் அருஞ் செயல்கள் பேசப்படுகின்றன. அரசிகளாகச் சிலர் இருந்தனர்; வீரத் தாய்மாராகச் சிலர் இருந்தனர். அறுநூறு எழுநூறு ஆண்டுகட்கு முன்னர் நாட்டில் வதிந்த இராசபுத்திரிகள் போர்முகத்தில் காட்டிய வீரச் செயல்கள் சரித்திரத்தில் பதிந்து கிடக்கின்றன. அச்செயல்களின் திறங்களைச் சரித்திரங்களிற் காண்க. அவ்வீரச் செயல்கள், பழைய பெண்மக்கள் வழி வழி வந்து சுருங்கி நின்ற எச்சங்களாகும். எனவே, வேத காலத்திலும், இடைக் காலத்திலும் நமது நாட்டுப் பெண்மக்கள், உரிமை இழந்து நின்றார்கள் என்று சொல்வதற்கு இடமில்லை.
பழந்தமிழ்க் காலப் பெண்மக்கள் - அகப்பொருளும் உரிமையும்
பழந் தமிழ்நாட்டுப் பெண் மக்கள்மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். பழந் தமிழ்நாடு பெண் மக்கள் உரிமைக்கு ஓர் இலக்கியம் என்று கூறல் உயர்வு நவிற்சியாகாது. பழந்தமிழ் நூல்களைத் துருவித் துருவி ஆராய்ந்தால் அவற்றில் யாண்டும் பெண்ணுரிமை காணலாம். “பெண் தாழ்ந்தவள், குறையுடை யாள், அடிமை” என்னும் உணர்வே அற்றை நாளில் இல்லை. தமிழில் தலைசிறந்து விளங்கும் அகப்பொருள் நூல்களின் உள்ளக்கிடக்கை என்னை? இன்பமன்றோ? உரிமை இல்லா இடத்தில் இன்ப நிகழ்ச்சி ஏது? உரிமையின் ஓழுக்கமன்றோ இன்பம்? இன்ப நுகர்ச்சிக்கு இருபாலாரிடத்தும் ஒத்த உரிமை இயல்புகள் இருத்தல் வேண்டும். ஒத்த உரிமை இயல்புகளே பெரிதும் பழந்தமிழ் நாட்டு அண் பெண் வாழ்வாக அமைந் திருந்தன. அவைகளை “ஓத்த நலனும் ஒத்த குணனும் ஒத்த கல்வியுமுடைய ஒருவனும் ஒருத்தியும்” என்றும், தலைவன் தலைவியர் அன்பு நிலையை, “ஓராவிற்கு இருகோடு பூத்தா லென்ன” என்றும் நக்கீரனார் நவின்றிருத்தலை நோக்குக. பழந் தமிழ்நாட்டு மணம், களவாயிருந்ததும் ஈண்டுக் கருதற் பாற்று. பெண்மகள் தனக்கினிய தலைவனைக் தானே தெரிந்தெடுத்து வந்த வழக்கமொன்றே, அந்நாளைய பெண்ணுரிமைக்குப் போதிய சான்றாக நிற்கிறது.
பெண் கல்வி
“ஓத்த கல்வி” என்ற குறிப்பு, அக்காலப் பெண் கல்விச் சிறப்பை உணர்த்துகிறது. பழந் தமிழ்நாடு ஆண் புலவரோடு பெண் புலவரையும் அணிந்திருந்தது. வெள்ளி வீதியார், ஓளவையார், பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், எயினிமார் முதலியோர் அந்நாளில் தமிழ் வளர்த்த பெண்மணிகள். இவர்தம் பாக்களைப் புறநானூறு முதலிய நூல்களிற் காண்க.
அப்பாடல்களிற் சில வருமாறு
களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிரந்
தெம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்டேடோர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே.
யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினுத் தந்தையாரக்
கருளவற தனவாற் புதல்வாதம் மழலை
என்வாய்ச் சொல்லாம் அன்ன ஒன்னார்
கடிமதி லரண்பல கடந்த
நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே.
ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாட் பயின்று பலரொடு செல்லினும்
குலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூ ணணிந்த யானை இயல்தோர்
அதியாமான் பரிசில் பெறாஉங் காலம்
நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிறை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. -- ஒளவையார்.
அற்றைத் திங்கள் ௮வ்வெண் ணிலவின்
எந்தைய மூடையேம் எங்குன்றும் பிறார்கொள௱ர்
இற்றைத் திங்கள் இவ்வெண் அிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார் யாம் எந்தைய மிலமே. - பாரிமகளிர்
இப்பாடல்கள் பேச்சுப் போலிருத்தல் கவனிக்கத்தக்கது. பழந்தமிழ்ப் பெண்மக்கள் பேச்சே பாடல் என்க.
கோவலன் தன்னை விடுத்துப் பிரிந்த பொழுது மாதவி, மீண்டும் அவனை அடைய வேண்டி, எழுத்தாணியைச் செம்பஞ்சின் குழம்பில் தோய்த்துத் தாழையின் வெள்ளிய தோட்டிலே திருமுகந் தீட்டி, அவன்பாற் செலுத்தினளென்று சிலப்பதிகாரஞ் செப்புகிறது.
திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி
அலத்தகக் கொழுஞ்சே றளைஇ அயலது
பித்திகைக் கொமுமுகை யாணிகைக் கொண்டு
………. ……………. ……………. …….
எண்ணெண் கலையும் இசைந்துடன் போகப்
பண்ணுற திறனும் புறங்கூறு நாவில்
தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துரை யெழுதி
எனவரூஉம் இளங்கோவடிகள் இன்னுரையை உன்னுக.
நாலடியார் என்னும் நூலில்,
குஞ்சி ௮ழகு.ம் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
எனவரூஉம் செய்யுட் பொருளை உற்று நோக்குக. குஞ்சி, கொடுந்தானைக் கோடு, மஞ்சள் - இவைகள் பெண் மக்களை உணர்த்துவன என்று எவருங் கூறுவர். நாலடியார் காலத்தில் பெண் கல்வி இயல்பாயிருந்தமை அராயற்பாலது. இக் கருத்தைச் சிறுபஞ்சமூலமும்.
மயிர்வனப்பும் கண்கவரு மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிரதீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியை ந்த
சொல்லின் வனப்பப வனப்பு
என்று வெளியிட்டிருத்தலை எண்ணி எண்ணிப் பார்க்க.
“கல்வியிற் பெரியர் கம்பர்” என்னும் பெயர் தாங்கிய கவி மன்னரும், தமது இராமாயனத்தில், நாட்டுப்படலத்தில்,
பெருந்த டங்கண் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வநதவா்க் கீதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே
என்று பாடியிருத்தலைக் கூர்ந்து ஓர்க. கம்பர் கோசல நாட்டைக் குறித்துப் பாடினும், அவர் அந்நாட்டை நேரிற் கண்ட வரல்லர். அவர் காலத்துக் கோசலமும், இராமன் காலத்துக் கோசலமும் இடையில் எவ்வளவோ வேற்றமையுற்றிருக்கும். கம்பர், தமிழ்நாட்டில் தாங்கண்ட காட்சியைக் கோசலத்தில் அமைத்துப் பாடினரென்க.
நாயன்மார், ஆழ்வார் காலத்திலும் பெண் கல்வி தமிழ் நாட்டில் நிலவியிருந்ததென்று தெரிய வருகிறது. காரைக்கால் அம்மையாரும், ஆண்டாள் அம்மையாரும் பாடிய அருட் பாடல்கள் நம்மெதிரில் நிற்கின்றன. அவர்தம் பாக்களில் இரண்டொன்று வருமாறு:-
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என் புறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு.
[1]அன்றுந் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவம் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேள்
எவ்வருவோ நின்னுருவம் ஏது - காரைக்காலம்மையார்
வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
விமலன் எனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை றைவித்து நாளும்
உயிரப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்க_வன் வரக்கூவாய். - ஆண்டாள்
------
[1] God is unknown and unknowable.
இப் பெண்மக்கள் பாட்டிற்கு இரங்கி ஆண்டவன் அருள் செய்யா தொழிந்தனனோ? ஆண்டவனுக்குப் பாட்டு ஆணுடையதா யிருந்தாலென்ன? பெண்ணுடையதாயிருந்தாலென்ன? அவனுக்கு வேண்டற்பாலது கல்வியின் பயனாகிய அன்பே. காரைக்காலம்மையாரினதும், ஆண்டாள் அம்மையாரினதும் அன்பு நிலையை அளந்து கூறற்கு யான் அருகனல்லன். அத்தகைய அன்புக் கல்விமணிகளைப் பெற்றது நந்தமிழ்நாடு!
பழந்தமிழ்த் தாயா வீரம்
பண்டைத் தமிழ் நாட்டில் பெண்ணுரிமையும், அவ்வுரிமைக் குயிரனைய கல்வியும், பிறவுமிருந்தமையான், அந்நாளைய பெண்மக்கள் வீரத் தாய்மார்களாகவும், வேறு பல அருஞ் செயல் நிகழ்த்தும் அற்றம் வாய்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பழந் தமிழ் நாட்டுப் பெண் மக்களின் வீரச் செயல்களும் பிறவும் போற்றற்குரியன. அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.
நரம்பு எழுந்து தோல் வற்றிய முதியோள் ஒருத்தியின் ஒரு புதல்வன் போர்க்கோலந் தாங்கி அமர்க்களஞ் சென்றனன். “அவன் போரிடைப் புறமுதுகிட்டுப் பட்டான்' என்று பலர் போந்து அம்முதியோள்பால் அறைந்தனர். அதுகேட்ட அன்னை, தனது முதுமையைச் சிறிதுங் கருதாது, வாள் தாங்கி, “இவர் கூற்று மெய்யாயின், அவனுக்குப் பாலூட்டிய எனது மார்பை இவ்வாளால் அறுப்பேன்' என்று எழுந்து, போர்க்களம் புகுந்து, மைந்தனைத்தேடி. அண்டுக் குவிந்து கிடந்த பிணங்களை வாளால் பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்தனள். அங்கே தன்னொரு மகன் மருமத்திடை ஊறுதாங்கி, இறந்துபட்டிருத்தலைக் கண்டு, அத்தாய் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தனள். இவளல்லளோ வீரத்தாய்?
நரம்பெமுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையறிந்து மாறினன் என்று பலர்கூற
மண்டமாக் குடைந்தன னாயின் உண்டஎன்
முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களற் துழவவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. - புறநானூறு.
மற்றுமொரு பெண்மணியின் கொழுநன் போர்க்களத்தில் மறப்போர் புரிந்து இன்னுயிர் துறந்தான். அவன் உயிர்துறந்த மறுநாள், மாற்றார் செருப்பறை கேட்டு, அப்பெண் மகள், தன்னொரு மகனை அழைத்துத் தலைமயிர் நீவிப் போருடை புனைந்து, வேல் கைத்தந்து, “போர்க்களம் போய் வருக: என்று மகிழ்ச்சி யோடு வழிகூட்டி அனுப்பினாள். இவளது வீரம், கொழுநன் பிரிவையும் மறக்கச் செய்தது!
கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மோனா ளுற்ற செருவிற் கிவள்தன்னை
யானை எறிந்து களத்தொழிற் தனனே
நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப் பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே. - புறநானூறு
கண்ணகி என்னும் கற்புக் கடவுளைப் பற்றிக் கேள்வியுறாத தமிழர் அரியர். அப்பெருமாட்டியின் வீரச் செயலை விளம்பவும் வேண்டுமோ! கண்ணகியும் அவளது ஆருயிர்த் தலைவன் கோவலனும் தாம் பிறந்த சோழநாடு நீத்துப் பாண்டிநாடு போந்து, ஆண்டு வாணிபஞ் செய்ய வேண்டிக் கண்ணகியின் காற் சிலம்பை விற்கக் கோவலன் சென்றபோது, அங்குக் களவு போன பாண்டிமா தேவியின் சிலம்பே அச்சிலம்பென்று, கோவலன் மீது பழிசுமத்தி, மன்னன் ஆணைப்படி, அவனைக் கொலைஞர் கொன்றனர். அக்கொலைச் செய்தி கேட்ட கண்ணகி, “என்னருமை நாயகன் மீது பொல்லாத களவுப்பழி சுமத்தியா இவ்வரசு கொன்றது!” என்று வீரக்கிளர்ச்சியுடன் எழுந்து, பாண்டியன் வாயில் நுழைந்து, அவன் ஆணை பெற்று, அவனருகே சென்று, தன் வரலாறு கூறித், தன் நாயகனைக் கொன்றது கொடுங் கோன்மை என்று வாதம் புரிந்தாள். “கள்வனைக் கோறல் கடுங் கோலன்று” என்று மன்னன் எதிர்வாதம் புரிந்தான். பின்னைக் கண்ணகியின் வலியுறுத்தல் மீது, வேந்தன் தன் மனைவியின் மற்றொரு காற்சிலம்பினையும், கொலைக்குக் காரணமாக நின்ற கண்ணகியின் ஒரு காற்சிலம்பினையும் உடைத்துப் பார்த்ததும் அதனுள் பரலும், இதனுள் மணியும் இருத்தல் கண்டு, அவன் “யானோ அரசன், யானே கள்வன்” என்று நடுக்குற்று, அரியா சனத்தினின்றுங் கீழே சாய்ந்து மாய்ந்தான். இத்துணை அருவினை கண்ணகி என்ற பெண்வழி நிகழ்ந்தது! “நாயகன் கொல்லப்பட்டான்; நமக்கென்ன இங்கு வேலை? தந்தை தாயர்க்கு அறிவித்து வீடு சேரலாம்” என்னுங் கோமை எண்ணம் கண்ணகியின் உள்ளத்தில் உறவில்லை. “நாயகனை அநியாயமாகக் கொன்றது பிமை: என்று வேந்தன்முன்னே வாது செய்து, உண்மை கிளத்தி, அவன் மனச்சான்றே அவனைக் கொல்லு மாறு செய்ததன்றோ கண்ணகியின் வீரம்! இத்தகைய வீரத் தாய்மார் வாழ்ந்த நாடு இத்தமிழ் நாடு. வீரத்துக்கு அடிப்படை அந்நாளில் பெண் மக்களுக்கிருந்த உரிமையே யாகும். உரிமை யில்லா இடத்தில் வீர எழுச்சி ஏது?
தமிழ்ப்பெண்மணிகளின் அறவொழுக்கம்
இத்தகைய வீரச் செயல்கள் மட்டும் பண்டைத் தமிழ்ப் பெண் மக்கள்பால் பொலிந்திருக்கவில்லை, வேறுபல அறவொ முக்கங்களும் அன்னாரிடை நிரம்பியிருந்தன. மாதவி என்ற மாதரசியைக் கோவலன் விடுத்துப் பிரிந்த பின்னை அவள் என் செய்தனள்? அவள் வேறுதுறை நண்ணாது, துற வொழுக்கம் பூண்டு, நிறைகாத்து, அறம் வளர்த்தாள். அவள் வயிற்றிற் பிறந்த மணிமேகலை எத்துணை உலகச் சோதனைகளைக் கடந்து நின்றனர்! மணிமேகலை அறவெொழுக்கத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் நிற்கிறார். அவர், உயிர்கள் நலங் கருதித் தொண்டு செய்ததும், சிறைப்பட நேர்ந்தபோது அச்சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதும், சமயக் கணக்கர் உரை கேட்டதும், பிறவும் மணிமேகலை என்னுஞ் சீரிய தமிழ் நூலில் மிளிர்தல் காண்க.
நாயகன் தவறி நடப்பின், அவனை அறிவால் - அன்பால் - திருத்தும் பெருந்தகைமை அந்நாளைய பெண்மக்களுக்கு இருந்தது. சிலப்பதிகாரக் கண்ணகியல்லாத மற்றொரு கண்ணகி, வழுக்கிய தன் கணவனைப் புலவர் வாயிலாகச் செம்மைப் படுத்தியதைப் பழைய நூல்களிற் பார்க்க. இச்செயல்கள் என்ன காட்டுகின்றன? அக்காலப் பெண்மக்களின் கல்வி அறிவு ஒழுக்கம், இவைகட்கெல்லாங் காரணமாக நிற்கும் உரிமை முதலியவற்றைக் காட்டுகின்றன.
நாயன்மார் காலம்
நாயன்மார் காலத்தும் பெண்ணுரிமைக்குப் பழுது நேர்ந்த தென்று சொல்வதற்கில்லை. நாயன்மாரின் அருமை மனைவிமார் நிகழ்த்திய பெருஞ்செயல்கள் பல. அவற்றைப் பெரிய புராணம் விரித்துக் கூறுகிறது. அப்பெண்மணிகளின் செயல்களை ஈண்டு விரிக்கில் அவை பெருகும். அன்பிற் சிறந்த திருநீலகண்ட நாயனார் சிற்றின்பத்துறையில் எளியராகியதை உணர்ந்த அவர்தம் இல்லக்கிழத்தியார், அவரை எவ்வழியில் திருத்தினார் என்பது கருதற்பாலது. பிற சமயம் தழுவிய தம்பியாரை மீண்டும் சைவ சமயத்தில் கொணர முயன்றவர் யாவர்? ஒரு பெண்மணி யல்லரோ?
தமிழ்நாட்டில் பெண்வழி மற்றுமோர் அருஞ்செயல் நிகழ்ந்திருக்கிறது. பெண் பெருமைபேச அந்நிகழ்ச்சியை ஈண்டுக் குறிக்கின்றேனே யன்றிச் சமய நோக்குடன் அதை ஈண்டுக் குறிக்கின்றேனில்லை.
பாண்டிமாநாட்டில் ஒருபோது சமணசமயம் பெருகிச் சைவசமயம் அருகிற்று. அவ்வேளையில் மன்னனும் அச்சமய நெறி நின்றான். “அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்” என்றபடி, குடிமக்கள் பலரும் அமண் சமயம் புகுந்தனர். சொக்கலிங் கத்தையும், மீனாட்சியையும் தொழுவோர் அரியராயினர். இந் நிலையில் அவ்விடத்தில் மீண்டும் சைவசமயம் தழைக்க உழைத் தவர் யாவர்? ஒரு மங்கையர்க்கரசியாரே. அம்மங்கையர்க்கரசியார் எவர்? சமணக் கடவுட்டொமுத பாண்டியன் தேவியார். நாயகன் வேறு சமயம் புகுந்தும், நாடும் வேறு சமயம் புகுந்தும், தனதறி விற்குப் பொருத்தமெனத் தோன்றிய ஒரு கொள்கையினின்றும், நாயகன் பொருட்டாதல் - நாட்டின் பொருட்டாதல் - சிறிதும் பிறழாது, உறுதியில் நின்ற அளவோடு நில்லாது, திருஞான சம்பந்த சுவாமிகளைத் தனது நாட்டிற்கு வரவழைத்து, மீண்டும் நாயகனையும், நாட்டையும் தனது கொள்கைவழி, ஒரு பெண் தெய்வந் திருப்பியதெனில், அப்பெண் தெய்வத்தின் உரிமை உணர்வையும் கல்வி அறிவையும் என்னென்று புகழ்வது? மங்கையர்க்கரசியார் என்ற ஒரு பெண்மணி அன்றில்லா திருப்பரேல், சைவசமயம் அன்றே தமிழ்நாட்டில் இறந்துபட்டி ருக்கும். ஒரு சமயத்தை நிலை பெறுத்திய பெண்மணியை நமது தமிழ்நாடு பெற்றிருந்தது!
அந்நாளில் வதிந்த ஆண்மக்களும் பெண்மணிகளின் சிறப்பைக் கூறத் தியங்குவதில்லை. பெண்ணுரிமை கடியப்பட்ட பின்னர்ப் பெண்ணின் சிறப்பை ஆண்மகன், தான் புகழல் பாவமெனக் கருதினன்போலும்! “பெண் அடிபடப் பிறந்தாள்” என்றன்றோ பின்னே போந்த ஆண் பெரியோர்' எழுதி வைத்தனர்! இவர்கள் மக்களா! பண்டைக்கால ஆண்மக்களோ பெண் சிறப்பை மகிழ்ச்சியோடு புகழ்ந்தார்கள். கடவுளைப் பெண் ஆண் வடிவாக்கொண்டு, “பெண்ணுடன் கூடிய கடவுள்” என்று அவரை எங்கணும் பாடிய திருஞானசம்பந்தப் பெருந் தகையாரும், பெண்ணுக்குரிய அமைதிநிலை எய்தி, அதில் விளங்கும் அன்பு ததும்பிக் கரைபுரண்டு தமிழ்ப்பாக்களாக ஓடுதற்கு நிலைக்களனாயிருந்த சேக்கிழாரும், மேற்போந்த மங்கையர்க்கரசியாரைச் செவ்விய செவ்விய தீந்தமிழ் மலரால் தூவிப் போற்றியிருக்கின்றனர். பெண் அடிமை என்னும் உணர் வில்லா நாளில், பெண்ணைக் காழ்ப்பின்றி ஆண்மக்கள் புகழ்ந்திருக்கிறார்கள்.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்லி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமாநத
ஆலவா யாவது மிதுவே. -திருஞானசம்பந்தர்
மங்கையா்க்குத் தணியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னா்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருத்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே. - சேக்கிழார்
இவர்கள் மங்கையர்க்கரசியாரை எவ்வாறு போற்றியிருக்கிறார்கள் என்பதை அன்பர்கள் உன்னுவார்களாக.
பெண் அடிமைப்பட்ட காலம்
வேத காலத்திலும், பழந்தமிழர் காலத்திலும் பெண்மக்கள் தங்கள் உரிமைவழி நின்று கடனாற்றினார்கள். அவ்வுரிமை இடைக்காலம் வரை தொடர்ந்து நின்றது. பின்னை நாளில் அதாவது ஸ்மிருதி காலத்தில் பெண்மக்கள் உரிமை நமது நாட்டில் கடியப்பட்டது. வேறு சில இடங்களிலும் அவ்வுரிமை கடியப்பட்டதெனச் சரித்திரஞ் சாற்றுகிறது. பெண்ணுரிமை கடிந்து கூறும் ஸ்மிருதிகளையும், அவைகளை யொட்டிப் பின்னை எழுந்த நூல்களையும் நோக்குழிப் பெண்ணுரிமையை அரிக்கும் அநியாயக் கட்டுப்பாடுகளை அவைகளிற் காணலாம். அவைகளை எழுதிய ஆண்மக்கள் நெஞ்சம் கல்லோ இரும்போ அறிகிலேன்.
முதலாவது பெண்கல்வி வாயிலே பாவிகள் மண்ணிட்டார்கள். பலவழியிலும் ஆண்மகனை யொத்தும் - சிலவற்றில் மேம்பட்டும் - நிற்கும் பெண்மகள், தன் வாழ்விற்கு இன்றியமையாத கல்வி பெறலாகாதென்னுங் கொடிய கட்டுப்பாட்டினுங் கொடிய தொன்றிருக்குமோ? பண்டை நாளில் வேதவேதாந்தத் துறையில் ஈடுபட்டுப் பலகலைகளையும் எழுதிய பெண் மக்களின் வழிவழி வரும் பெண்மணிகளா படித்தல் கூடாது? இது பெண் மக்களை விலங்காக்கித் தங்கள் வழியில் ஆட்ட வேண்டுமென்று ஆண்மக்கள் கொண்ட தீய எண்ணமன்றி வேறு என்ன? “விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் - கற்றாரோ டேனை யவர்” என்றார் திருவள்ளுவனார்.
மக்கள்
ஈண்டு “மக்கள்” என்றது ஆண்மக்களையும் பெண்மக்களையும் குறிப்பதென்க. பெண்மக்களைப் பிரித்து ஆண்மக்க ளென்று பொருள் கொண்டது தற்கால வழக்கு. திருவள்ளுவர் காலத்தில் ஆண்மக்களைப் போலவே பெண் மக்களும் படித்து வந்தார்கள். அதனால் அவர் “மக்கள்” என்று பொதுப்படக் கூறினர். அறிவு விளக்கத்துக்கு இன்றியமையாத கல்வியைப் பெண் பெறாதொழிவளேல் அவள் வாழ்வு என்னாம்? அவள் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பாள்? அவள் உலகப் பொறுப்பைத் தாங்குந் தாயாக அல்லவோ இருக்கிறாள்? இந்நாளில் நமது நாட்டில் வான்மீகுிகள், வியாசர்கள், நக்கரர்கள், திருவள்ளுவர்கள் தோன்றாமைக்குக் காரணம் என்னை? தாயைக் கல்வி இழக்கச் செய்து, அவள் உரிமையை மகன் கடிந்ததன்றி வேறென்னை? பயிரின் நலன் நிலத்தின் பான்மையைப் பொறுத்ததன்றோ? பின்னை நாளில் பெண் மக்களுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடுகள், இந்நாளில் நாட்டின் வளர்ச்சிக்கே கேடு விளைத்திருக்கின்றன.
இடைச்செருகல் - ஸ்மிருதிகாலம்
“பழைய நூல்களிலும் பெண் கல்வி மறுப்பு உண்டு” என்று சிலர் சில உரைகளைக் காட்டுவர். அந்நூல்களை முற்றும் ஆய்ந்தால் பல இடங்களில் பெண்கல்வி பேசப் பட்டிருக்கும். ஊன்றி நோக்கினால் பெண்கல்வி மறுப்புக்கள் ஓட்டுப்போல் தோன்றும். பெண் படித்தலாகாதெனுங் கொடிய கட்டுப்பாடு எழுந்த நாளில், அக்கட்டுப்பாட்டை விதித்தவர், தம் கருத்தைப் பழைய நூல்களினுஞ் செருகிவிட்டனர். இந்நஞ்சு பல பழைய நூல்களிலும் இறங்கியிருக்கிறது. இடைச் செருகலில் நமது நாடு பேர் பெற்றது. இப்பொழுதும் பழைய நூல்களை அச்சிடுஞ் சிலர், இடை இடையே தங்கருத்துக்-கேற்பச் சில மாறுதல் செய்கின்றனர். பெண் கல்வி மறுப்பு, பழைய நூல்களில் காணப் படுமேல், அதனை இடைச்செருகல் என்று அறிஞர் ஒதுக்கு வாராக. பெண்கல்வி மறுப்பு ஸ்மிருதி காலத்திலேயே ஏற்பட்டது. வேறு பல கட்டுப்பாடுகளும் ஸ்மிருதிகளில் உண்டு. இந்நாளில் அவை மாற்றப்பெறல் வேண்டும். இல்லையேல் நாட்டுக்கு நலன் விளையாது.
பெண் ஆண் மூளைநிலை
ஆண்மக்களைப் போலப் பெண்மக்கள் படித்தலாகாது என்னுங் கட்டுப்பாடு எற்றுக்கு? கல்விப் பயிற்சிக்குரிய மூளை பெண்மக்களுக்கு இல்லையோ? அவர்கட்கும் ஆண்டவன் மூளையைப் படைத்திருக்கிறான். ஆண்மக்கள் மூளையினும் பெண் மக்கள் மூளை மென்மையுடையது என்பதைச் சோதனையிற் காணலாம். நுட்பங்களை விரைவில் ஈர்க்கத்தக்க ஆற்றல் மெல்லிய மூளைக்கு உண்டு. ஆண்மக்களினும் பெண் மக்கள் நுண்ணிய பொருளை விரைவில் உணரும் ஆற்றல் பெற்றிருத்தல் அறிஞரால் ஒப்பப்பட்ட உண்மை. ஆண்மக்கள் பள்ளிக்கூடங்களிலும், பெண்மக்கள் பள்ளிக்கூடங்களிலும் அடியேன் ஆசிரியனாயிருந்தபோது, இவ்வுண்மையை அநுபவத்தில் கண்டிருக்கிறேன். இத்தன்மை சில ஆண்மக்களிடத்திலும் உண்டு. அவர்கள் பெண்ணியல்பு வாய்ந்தவர்கள். பெண்ணியல்பு இன்னதென்பதைப் “பெண்ணின் முதன்மை” என்னுந் தலைப்பின்கீழ் விளக்கியிருக்கிறேன்.
அமைதியில் அறிவு விளக்கம்
இன்னும் ஒருவழிபற்றிப் பெண்ணறிவின் நுட்பம் கூறலாம். அமைதியில் அறிவு விளக்கம் உண்டு என்பது எவரும் ஒப்பத் தக்கது. நெஞ்சில் அமைதி நிலவா வேளையில் எந்நூலையும் வாசிக்க மனமெழுவதில்லை. நூலை எடுத்து வாசிப்பினும் பொருள் பதிவதில்லை. இஃது அநுபவம். இரவு உறங்கி, வைகறையில் எழும்போது, நெஞ்சில் அமைதி நிலவுகிறது. அவ்வேளையில் அறிவு, தாண்டவம் புரிகிறது. அந்நேரத்தில் அரிய பொருளெல்லாம் எளிதில் விளங்குகின்றன. பின்னர் உலகியலில் நுழைந்ததும் அமைதி குலைகிறது; அறிவு விளக்கமும் குன்றுகிறது; நுண்ணிய பொருளைச் சிந்திக்கவும் இயல்வதில்லை. அமைதிக்கும் அறிவு விளக்கத்துக்கும் உள்ள தொடர்பு ஈண்டுக் கருதற்பாற்று.
அமைதியும் பெண்மையும்
அமைதி ஆண்மக்கட்கு அதிகமுண்டா? பெண்மக்கட்கு அதிகமுண்டா? அமைதி பெண்மக்கட்கு அதிகமிருத்தல் கண்கூடு. பெண்மையைக் “கட்புலனாயதோர் அமைதித் தன்மை” என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். கண்ணுக்குப் புலனாகாத அமைதி, பெண் வடிவாகிக் கண்ணுக்குக் காட்சியளிக்கிறது என்பது அதன் கருத்து. அமைதியே பெண்ணெனத் திரண்டு விளங்குகிறதெனில், பெண்மக்களின் அறிவு விளக்கத்தைப் பற்றித் தெளிவு செய்ய வேண்டுவதில்லை. அதற்கேற்ற மூளையும் படைப்பில் அவர்கட்கு அமைந்திருக்கிறது.
கலைமகள் நுட்பம்
அறிவு, அமைதியில் உறைதலான், அறிவிற்குரிய கல்வியை அமைதி குறிக்கும் ஒரு பெண் கடவுளாக நாம் போற்றுவதும் உன்னத்தக்கது. கலைமகள் நுட்பம், அமைதியுடைய பெண்மையில் அறிவு உறைதலை விளக்குவதாகும். கல்விக் கடவுளைப் பெண்ணெனக் கொண்ட நமது நாடு, பின்னைப் பெண் கல்வியை மறுப்பது பொருளற்ற தொன்றாகும். பின்னை நாளில் ஆண் மக்கள் வகுத்த கொடுஞ் சட்டங்கள் நாட்டையுங் குறை கூறச் செய்கின்றன.
பெண்மக்கள் படித்தலாகாதென்பது இயற்கை நோக்க மாயின், பெண்மக்கட்குப் படிப்பு வருதல் கூடாது. பெண்மக்கள், ஆண்மக்களைப் போலவே கல்வி பயின்று, தேர்தலில் வெற்றி பெறுவதையும், பட்டம் பெறுவதையும், நூல்கள் எழுதுவதையும், மேடைகளில் பேசுவதையும், கல்லூரிகளிலும் மற்றக் கழகங்களிலும் தலைமை தாங்கி வினைகள் முடிப்பதையும், பிறவற்றையும் கண்ணாரக் காண்கிறோம். கல்வித்துறை, பெண் மக்கட்கு இயற்கையில் அரண் செய்வதன்றி முரண் செய்வதில்லை. பெண்கல்வியை மறுப்பது, இறைவன் படைப்பு நோக்கை இடர்ப்படுத்துவதாகும்.
பேதைமை விளக்கம்
“பேதைமை என்பது மாதர்க்கு இயற்கையாய் அமைந்திருப்பது” என்று சிலர் கூறிப் பெண்கல்வியை மறுக்கின்றனர். அன்னார், “பேதைமை என்பது மாதர்க்கணிகலம்” என்னும் ஒளவையார் திருவாக்கையும் காட்டுகின்றனர். “பேதைமை” என்பது பல பொருள் ஒரு சொல். அஃது அறியாமை என்னும் பொருளைப் பெரிதும் வழக்கில் பெற்றிருக்கிறது. “பேதைமை” என்னுஞ் சொற்கு, நக்கீரனார், “கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்று பொருள் விரித்திருத்தல் காண்க. இப்பொருள் அறிவின்மை- மடமை முதலிய கருத்துக்களைத் தெரிவிப்பதா என்று வினவுகிறேன். பெண் கல்வி மறுக்கப்பட்ட நாள் தொட்டுப் பேதைமை, பெண்ணின் அறியாமை குறிக்குஞ் சிறப்புச் சொல்லாகக் கொள்ளப்பட்டது. இப்பொருள்படப் பின்னாளில் ”“****பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே” என்பது போன்ற மொழிகளும் பிறக்கலாயின. அறிவின்மைப் பொருள் அளிக்கும் பேதைமை எல்லார்க்கும் பொதுவா யிருப்பது. அஃது ஒருபாலார்க்கே உரித்து என்று சொல்வது தவறு.
“பேதைமை” என்றோர் அதிகாரம் திருக்குறளில் இருக்கிறது. அது பெண்ணுலகை மட்டுமா குறித்து நிற்கிறது? சில சொற்கள் காலத்துக்கேற்ற பொருள் பெறுவதுண்டு. அச்சொற்களுள் “பேதைமை” என்பதும் ஓன்று. “பேதைமை” என்னுஞ் சொற்குப் பழந்தமிழர் கொண்ட பொருளை ஊன்றிப் பார்க்க.
சீரிய பொருளுடைய ’பேதைமை’ மாதர்க்கணிகலனா யிருத்தலை ஒளவையார் மொழிந்தனர். இஃதென்ன குற்றம்? இனிப் “பேதைமை” என்னுஞ் சொல்லைப் பழம் பொருள்பட ஆட்சியிற் கொணருமாநு புலவர்களை வேண்டுகிறேன். பெண் கல்வியை மறுத்துக் கூறும் பிற்காலப் பழமொழிகளும், பிற இஹழிவுகளும் ஆட்சியற்று ஓழிவனவாக.
பெண்களுக்கு விதிக்கப்பெற்ற கட்டுப்பாடுகள்
பின்னை நாளில் ஆண்மக்கள், பெண்மக்களின் கல்வி யுரிமையை மட்டுமா கெடுத்தார்கள்? வேறு பல பிறப்புரிமைகளையும் அவர்கள் பறித்திருக்கிறார்கள். அந்நாளில் பெண் மக்களுக்கு விதிக்கப் பெற்ற கட்டுப்பாடுகளை எண்ண எண்ண உள்ளம் உருகுகிறது; கண்ணீர் பெருகுகிறது. அக்கால அறிஞர்களின் வன்கண் இருந்தவாறென்னே! என்னே! பெண் உற்ற வயதடைந்து பகுத்தறிவு பெறாமுன்னம் ஓருவனை மணத்தல், கைம்மை எய்தினால் மொட்டையடித்து அவளை மானபங்கஞ் செய்தல், அவளைப் பசியால் மெலிவித்தல், பல பெண்கள் ஒருவனை மணத்தல், பெண்விபசாரத்துக்கு மட்டுந் தண்டனை விதித்தல், ஆடவன் எச்சிலைத் தின்னுமாறு மகளிரை வலியுறுத்தல், இன்னோரன்ன பிற கட்டுப்பாடுகள் பெண்ணுலகின் உயிர்நாடியைப் போக்கிவிட்டன. இக்கட்டுப் பாடுகள் அணுலகிற்கு உண்டோ? இல்லை! அந்தோ! என்ன கொடுமை!
ஆண்மகன் மனைவியை இழந்தால், அவன் எவ்வளவு வயதான கிழவனாயிருப்பினும், ஒரிளங் கட்டழகியை மணந்து இனிது வாழலாம்! இளம் பெண்ணொருத்தி கணவனை இழந்தாலோ, அவள் மொட்டையடித்து, உண்டி கெடுத்து, உலகைத் துறத்தல் வேண்டும்! என்ன அநியாயம்! விதி என்றால் இருபாலார்க்கு மன்றோ இருத்தல் வேண்டும்? ஒருவன் பல பெண்களை மணந்து கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறான்.! அநியாயம்! அநியாயம்! ஒருத்தி ஒருவனோடு வாழ்தலே அறவெொழுக்கம். அவ்வாறே ஒருவனும் ஒருத்தியுடன் வாழ்தல் வேண்டும். “ஒருவன் பல பெண்களை மணக்கலாம்” என்னும் விதி, பெண்ணுலகை இழிவுபடுத்துவதாகும். பெண், தவறி நடந்தால் தண்டனை! ஆண், தவறி நடந்தாலோ தண்டனை யில்லை! இஃது அநீதி! தண்டனை இருபாலார்க்கும் விதிப்பது நீதியாகும்.
பிறப்பில் ஆணாகப் பிறந்தால் எல்லாஞ் செய்யலாம்! பெண்ணாகப் பிறந்தார்க்கு மட்டும் விதிகள் - கட்டுப்பாடுகள் - தண்டனைகள்! ஆண்டவனே! கொடுமை பொறுக்க முடியவில்லை. உன்னை நோக்கி முறையிடுகிறேன்.
அடியேன், பெண்மக்கள் கூடா ஒழுக்கத்தைப் போற்றிக் கூறுவதாகவாதல், துணை நிற்பதாகவாதல் எவருங் கருதலாகாது. பெண் தவறுதலுக்கு விதிக்கப் பெற்றுள்ள தண்டனைகள், ஏன் ஆண் தவறுதலுக்கும் விதிக்கப்படவில்லை என்பதே எனது கேள்வி. பெண்ணுலகிற்கு இடைநாளில் நேர்ந்த சிறுமையை ஈண்டு எடுத்துக்-காட்டவேண்டும் என்னும் அவாவால் இவ்வுரைகள் பகரலானேன். ஒரு பாதியாயுள்ள பெண்ணின் சிறுமை, மற்றொரு பாதியாயுள்ள ஆணையுந்தாக்கி, முடிவில் வாழ்வையும் நாட்டையும் குலைக்குமென்பதை ஆணுலகம் இனியாதல் உணர்ந்து நடப்பதாக.
ஒழுக்கம் இருபாலார்க்கும்
“உலகை ஈன்று வளர்க்கும் தாய் பெண்ணாகலின், அவளது ஓழுக்கங்காக்க வேண்டிச் சில கட்டுப்பாடுகள் கோலப் பட்டனவேயன்றி, பெண்ணைச் சிறுமைப்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கோடு கட்டுப்பாடுகள் கோலப்படவில்லை” என்று சில அறிஞர் திறம்பட வாதிக்கின்றனர். இது போலி வாதமன்றி நியாயவாதமாகாது. பெண் ஓழுக்கம் காத்தல் வேண்டும் என்பதை ஒரு முறைக்குப் பன்முறை யான் வலியுறுத்துகிறேன்/ அவ்வொழுக்கம் ஆணுலகிற்கும் வேண்டற் பாலதென்று அவ்வளவில் வலியுறுத்துகிறேன். ஆணுலகில் தூய்மை இல்லை எனில், பெண்ணுலகில் தூய்மை எங்ஙனம் ஏற்படும்? தயொமுக்கமுடைய ஒருவன், நல்லொழுக்கமுடைய ஒருத்தியின் உடல் நலத்தைக் கெடுத்து, அவள்வழித் தோன்றும் பிள்ளையையும் நோய்வாய்ப் படுத்துகிறானல்லனோ? அதலால், ஒழுக்கத் தூய்மை இரு பாலார்க்குந் தேவை. ஓழுக்கத் தவறுதலுக்குத் தண்டனை விதிக்கப்படின், அத்தண்டனை இரு பாலார்க்கும் விதிக்கப்படல் வேண்டும்.
ஒருத்திக்கு ஒருவன்
ஆண், தன் விருப்பப்படி திரிதற்குக் கொடிய அடக்கு முறைகளைப் பெண்ணிற்கு விதித்தனனோ என்னவோ தெரியவில்லை. ஆண்மக்கள், தாங்கள் களியாட்டில் வரம்புமீறி இறங்குதற் பொருட்டுப் பெண்மக்கள் உரிமை தடிந்து, அவர்களைப் பொம்மைகளாக்கி விட்டார்கள் போலும்! ஒவ்வோர் ஆண் மகனும் ஒவ்வொரு பெண்மகளோடு வாழும் அற ஒழுக்கத்தில் நிற்பனேல், உலகிடை வரைவின் மகளிர் கூட்டம் தோன்றுதற்கே இடமிராது. ஆண்மகன் பல மகளிரை மணத்தலும், பரத்தையருடன் அடலும் வரம்பு கடந்த நடத்தைகளாகும். ஒரு பெண்ணை வீட்டிற் சிறைப்படுத்தி, மற்றப் பெண்களோடு கூடி வாழும் உரிமை ஆண்மகனுக்கு எங்கிருந்து வந்தது? ஆண்மகன் கொடுங்கோன்மையால் பெண்ணுரிமை தடிந்து தன் விருப்பப்படி. ஆட்சி புரிகிறான்!
ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்தல் இயற்கை. இது குறித்துப் பின்னே விரித்துக் கூறுவேன். இரு பாலாரிடத்தும் தீயொழுக்கம் கூடாதென்பது எனது உள்ளங் கிடக்கை. கட்டுப்பாடு எனில், அஃது இருசாரார்க்கும் இருத்தல் வேண்டும். ஒருவர் உரிமையை மற்றொருவர் கட்டுப்படுத்தல் கூடாதென்பதை மீண்டும் வலியுறுத்தி மேற்செல்கிறேன்.
திருவள்ளுவர் உள்ளம்
இல்வாழ்க்கையை வலியுறுத்திச் சென்ற திருவள்ளுவனாரும், பெண்ணுலகிற்கு மட்டும் கற்பை வலியுறுத்தியுள்ளாரென்றும், அணுலகிற்கு அதை வலியுறுத்தா தொழிந்தா-ரென்றும் சிலர் கூற யான் கேட்டிருக்கிறேன். அவர்தங் கூற்று, திருவள்ளுவர் கருத்துக்கு முற்றும் மாறுபட்டது. இதைத் திருக்குறளுக்கு யான் கண்ட விரிவுரையில் ஒல்லும் வகை விளக்கியுள்ளேன். “ஆண் மகனும் நிறைகாத்து வாழ்தல் வேண்டும்” என்பதே திருவள்ளுவர் உட்கிடக்கை. அவ்வக்கால நிலைமைக்கேற்றவாறு உரை கண்டு போகும் உரையாசிரியர் கூற்றை முதல் பொருளாகக் கோடலா காது. ஸ்மிருதிகளை ஆராய்ந்து, அவற்றில் மூழ்கிக்கிடப்பவர், திருக்குறளுக்கு உரை காணப்புகுந்தால், அவரது ஸ்மிருதி மனத் துக்கு, ஸ்மிருதிப் பொருளே புலனாகும். அம்மனங் கொண்டு சிலரால் வரையப் பெற்ற உரைகளை முற்றுங் கோடல் தவறு.
திருவள்ளுவர் ஆண்மக்களையும் நிறைகாக்குமாறு வற் புறுத்தியுள்ளார். அக்கருத்தொளிருஞ் சில குறள் வருமாறு:
பாறியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெனஞ்ச லெஞ்ஞான்று மில்.
அன்பு மறனு முடைத்காயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாறிறிற் புறததாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.
அறனெனப பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பறன்பழிப்ப தில்லாயி னன்று.
நலக்குரியார் யாரெனில் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
இக்குறள்களின் பொருள்களை, இடைக்கால உரைகட்கு அடிமையாகாது, நடுநிலைக் கண்கொண்டு நோக்குமாறு அன்பர்களை வேண்டுகிறேன். இடைக்கால உரைகளைக் கொண்டு திருவள்ளுவனாரையும் சிலர் குறை கூறுகின்றனர்.
செயற்கைக் கட்டுகள்
சில இடங்களில் பெண்ணுக்கு ஆன்மா இல்லை என்றும், பெண் ஆணிடத்திருந்து படைக்கப்பட்டாள் என்றும், பெண் பிறவிக்கு வீடுபேறில்லை என்றும் நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பெண் மக்களுக்கு என்றுஞ் சிறைக்கூடு அமைக்கப்பட்டிருக்கிறது. சிறை இருளில் போதிய காற்றின்றி - ஒளியின்றி - அன்புக் கொடிகள் வாடி வதங்குகின்றன. அவர்கள் அப்புறம் இப்புறம் பார்த்தல் கூடாது! பேசுதல் கூடாது! என்ன கொடுமை! கண்ணையும் வாயையும் கடவுள் அவர்கட்கு எற்றுக்கோ ஈந்தான்? இயற்கை வாழ்வு எல்லார்க்கும் உரியது. அவ்வாழ்வினின்றும் பெண்ணைப் பிரிக்கவும் ஆண்மக்கள் மனம் ஒருப்பட்டதன்றோ? இன்னோரன்ன கட்டுப்பாடுகளுள்ள இடங்களில் பெண்ணுலகிற்குப் பேரிழிவு நேர்ந்திருக்கிறது.
அவ்விடங்களில் பெண்மகள் நாய் பேயாகக் கருதப்படுகிறாள்; மாயையாகச் கருதப்படுகிறாள். ஞானத்துக்கும், வீடு பேற்றிற்கும் பெண் இடையூறாக இருக்கிறாளாம்! மூவாசையுள் பெண்ணும் ஓர் ஆசைப் பொருளாம்! இன்ப அன்புத் தெய்வமாக அடியேன் போற்றும் பெண்ணிற்கு உற்றுள்ள இழிவை, இன்னும் எழுத்தால் எழுதக் கையோடவில்லை. அந்நாளில் பெண்ணுலகிற்கு ஏற்பட்ட துன்பம், “பெண்ணாய்ப் பிறப்பதினும் மண்ணாய்ப் பிறக்கலாம்” என்னும் பழமொழியை எழுவித்த தெனில், பெண்ணுலகத் துன்பத்தை என்னென்று விளக்குவது? பெண் ஆசைப் பொருளல்லள் என்பதையும், அவளை அங்ஙனங் கருதி வெறுத்தலும் துறத்தலும் அன்புக் கடவுளைக் காணும் வழிகளல்ல என்பதையும் வேறோரிடத்தில் விரித்து விளம்புவன்.
உரிமையும் கடமையும்
சில இடங்களில் உரிமையையும், கடமையையும் ஒன்று படுத்தி மக்கள் இடர்ப்படு-கிறார்கள். உரிமை வேறு; கடமை வேறு. பெண் மெல்லியலாள்,; ஆண் வல்லியலான். மென்மை வன்மைக்கேற்ப இருபாலார்க்குமுரிய கடமைகள் வேறு படலாம். உரிமையில் கட்டுப்பாடி ருத்தல் கூடாதென்பதொன்றே ஈண்டுக் கருதற்பாற்று. கடமை வேறுபாடுகளைக் குறிப்பிட்டுப் பெண்ணுரிமையில் கைவைப்பது கொடுமை.
பெண்மைக் கேட்டால் விளையுங் கேடுகள்
உரிமை எல்லார்க்கும் பொதுவானது. வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழுவது போலவும், பறவை அழகிய சிறகை வீசிப் பறப்பது போலவும், பெண் தனது உள்ளத்தெழும் விருப்பவழி நடக்கும் உரிமையுடையவளாதல் வேண்டும். அவ்வுரிமையைச் சிறைப்படுத்தல் பெறும் பாவம். பெண், அடிமை வாழ்வு நடாத்த நேரின், அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண் தாயாகலின், அவள் உரிமையைத் தடிதல், அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளின் உரிமையைத் தடிவதாகும். பெண்ணுரிமை பிடுங்கப்பட்ட நாடும் உரிமையிழந்த நாடாதல் இயல்பு. பெண்ணுரிமை பறிப்பதன் பயன் இஃதாகும். நமது நாடு இனி யாதல் எச்சரிக்கையுடன் நடக்குமென்று நம்புகிறேன். பெண்ணுரி மையைக் குலைப்பதைப் போன்ற அறியாமை பிறிதொன் றில்லை. பெண்ணுரிமையைக் கெடுத்தல் பின்சந்ததியின் உயா்நிலையைக் கெடுப்பதாகும். எக்காரணம் பற்றியும் பெண்ணுரிமைக்குக் கேடு சூழ்தல் கூடாது; கூடாது.
உரிமைப் பெயரால் கொடுமை
மேல் நாட்டில் சின்னாளாகப் பெண்ணுலகில் ஓர் இயக்கம் தோன்றி இருக்கிறது. பெண்மக்கள், “உரிமை” என்னும் பெயரால் சில கொடுமைகள் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்கள் ஆண்மக்களைப் போல எல்லா வழியிலும் வாழ்வு பெறக் கிளர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்ள ஆண்மக்கள் மீது கல்லெறிதல், அவர்களைக் கருவியால் தாக்கல், வழிமறித்தல் முதலிய வன்-செயல்கள் புரிகிறார்கள். இச்செயல்கள் உரிமைப் போராட்டமென்று சொல்லப் படுகின்றன. இவை நமது நாட்டில் ஆண்மக்கள் பெண்மக்களை அடக்கக் கொண்ட மூடச் செயல்களுக் கடுத்து நிற்பன. பெண்ணுரிமை என்பது, ஆண் மக்களைப் பகைத்து, அவர்கள் பதவிகளைப் பெற, மூர்க்க நெறியில் நின்று, அவர்களைத் தாக்குவதன்று. மேல்நாட்டுப் பெண்மக்கள், உரிமை என்னும் பெயரால் வாழ்வையே குலைத்து வருகிறார்கள்.
இக்கால மேல்நாட்டு நாகரிகத்தால் விழுங்கப் பெற்றுள்ள கழ்நாட்டுப் பெண்மக்களும், மேல்நாட்டுப் பெண்மக்கள் அடிச்சுவட்டைப் பற்றி நடக்க முயலுகிறார்கள். இது தவறு.
பெண் பிறவி நோக்கம்
பெண்பிறவியின் நோக்கம், ஆண்பிறவி தாங்கினோரிடத்தில் போர்புரிந்து, அவரைக் துன்புறுத்த வேண்டுமென்பதன்று. பிறரைத் துன்புறுத்தல் வேண்டும் என்னும் எண்ணமே பெண்ணீர்மையை அழிப்பதாகும். ஒரு பாதியாகிய பெண், மற்றொரு பாதியுடன் கூடி, இன்ப வாழ்வை உலகில் பெருக்கி, உலகை வளர்க்கும் நெறியில் நிற்றல் அறம். பெண்மக்கள், ஆண்மக்கட்கு அடிமைப்பட்டு வாழ வேண்டுவதில்லை; அவர்களுடன் உரிமைகொண்டு வாழலாம்.
பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக் கடன். சமயம் நேருமேல், அன்புவழியில் ஆண்பதவிகளையும் பெண்மக்கள் ஏற்று உலகை நடாத்தலாம். ஐரோப்பாவில் (1914 - 1218, 1939 - 1945) நடைபெற்ற பெரும்போர்கள், ஆண்மக்கள் கடமைகள் பலவற்றைப் பெண்மக்கள் ஏற்று நிகழ்த்துமாறு செய்தன. “உரிமை' என்று, பெண்ணுலகு ஆணுலகோடு போர் புரிவதால், பெண்ணுக்குரிய அமைதி கெடும்; உலகு அழியும்.
மேல்நாட்டில் இக்கால நாகரிகத்தால், அன்பு - பொறுமை - இன்பம் முதலியன அறவே தொலைந்து, வன்கண் - பொறாமை - துன்பம் முதலியன பெருகுகின்றன. இக்கால நாகரிகம் தொலைய வேண்டுமேல், பெண்தெய்வங்கள், தங்கள் தாய்மைத் தொண்டைச் செவ்வனே ஆற்றிவருவார்களாக.
“பெண்ணுலகுக்கு உரிமை வழங்கினால், அவ்வுலகம் ஆணுலகிற்கு இடர் விளைத்து, வாழ்வையே குலைத்துக் கொள்ளுமாதலின், அதை அடக்கி அளுமாறு நிறுவப் பெற்ற கட்டுப்பாடுகள் போற்றற்குரியன' என்று சிலர் சொல்வதுண்டு. இஃது அறியாமை. பெண், ஆணை அடக்கப்புகுவதும் தவறு; ஆண், பெண்ணை அடக்கி ஆள்வதும் தவறு. இருவரும் ஒத்து நடத்தலே இன்பம்.
நாட்டுப் பழைய வாழ்வு
இதற்கு நமது நாட்டுப் பழைய வாழ்வை இலக்கியமாகக் கொள்ளலாம். பெண்மையும் ஆண்மையும் இறையிடத்திலும், இயற்கையிடத்திலும், ஓத்து விளங்கலைக் கண்டு, ஓர் உயிர் ஈருடலென அன்புநிறைந்த இன்பவாழ்வை நம் நாட்டார் நடாத்தினர். உயர்வு, தாழ்வு, போராட்டம் முதலிய எண்ணங்களின்றி, ஒருயிர் ஈருடல் எனப் பெண், ஆணுடன் ஒன்றி, வாழ்வு நடாத்தி, உலகை வளர்ப்பாளாக. இது பெண்ணின் பெருமை.
பெண்ணொளியால் நலம்பெற்றும்
பேசுவதோ சிறுைமமொழழி
கண்ணொளியை இழித்துரைத்தல்
கயைமையன்றிப் பிறிதென்னே
பெண்பெருமை உலகமெலாம்
பிறங்கிநின்றால் உளங்குளிரும்
மண்முதலாம் வடிவாகி
மகிறியற்கைப் பெருமானே. - பொதுமை வேட்டல்
----------
4. பெண் வளர்ப்பு
(பெண்ணும் உலகமும் – நற்பிள்ளைப் பேறும் தாய் தந்தையர் பொறுப்பும் – பெண் உலகோபுந்தாய் – பிள்ளைகளை வளர்த்தல் பெருந்தொண்டு – நல்லிணக்கம் வேற்றுமை நினைவும் (பெண் ஆண் நினைவு – உயிர் நிலைச் சிறப்பு – பிஞ்சிற் பழுத்தல் – கீழ்மக்கள் சேர்க்கை கூடாது – தாய் தந்தையர் கடமை – அவர்தம் கடமை) – கல்வியும் கற்பும் (கல்வி எது? – அறிவும் ஒழுக்கமும் – தாய்மைக்கு அஞ்சுதல் – இயற்கைக் கல்வி – போலி நாவல்களில் புன்மை – உடற்கூற்றுக் கல்வி – பெண் ஒரு பல்கலைக் கழகம் – சமயக் கல்வி – கற்பு – கற்பிழக்கும் பெண் – எண்ணமும் கற்பும் – தீ நட்பு களைதல் – கூட்ட்த்தில் நடமாடல் – சோதனைப் பருவம்) – உடலோம்பல் (அகத்தூய்மை புறத்தூய்மை – உறக்கம் நேரம் இடம் முதலியன – துயிலெழல் – காலைக் கடன் மலச்சிக்கல்- அதனால் விளையுங் கேடுகள் – அவை போக்கும் வழி – பயிற்சி – ஆட்டங்கள் இயந்திர அரக்கன் – செல்வப் பெண்கள் – நீராட்டல் – உணவு – விரதம் – உண்டிசுருங்குதல் – பொருந்தாத உணவு – பொருந்தாப் பானங்கள் – நகரப் பெண்மக்கள் உடை – நூற்றல் – நகை – நகையால் கேடு – தலைமயிர் ) – அழகு – அழகோவியம் – பேய்ச் சோதனை)
பெண்ணைப் போற்றி வளராகக. - பழமொழி
இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டி வாய்மை எருவட்டி
அன்பு நீர்ப் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய். - அறநெறிச்சாரம்
உலகமும் பெண்ணும்
உயிர்களின் தோற்றத்துக்கும் ஆக்கத்துக்கும் மூலமாயிருப்பவள் பெண். அப்பெண்ணின் வளங்குன்றுமேல் உலக வளனும் குன்றும். பெண்ணின் வளன் பெரிதும் அவளது இளமை வளர்ப்பையே ஓட்டிநிற்கும். பெண் தீயவழியில் வளர்ந்து வருவளேல், அவள்வழித் தோன்றும் உலகமும் தீயதாகும்; பெண் நல்வழியில் வளர்ந்து வருவளேல், அவள் வழித்தோன்றும் உலகமும் நல்லதாகும். உலகை நல்லதாக்க வேண்டுமென்பதே இயற்கையின் நோக்கம். அந்நோக்கத்துக்குத் துணைபுரிய வேண்டுவது பெற்றோர் கடன்.
நற்பிள்ளைப்பேறும் தாய் தந்தையர் பொறுப்பும்
முதலாவது நற்பிள்ளைப் பேற்றிற்குத் தாய் தந்தையரின் உடல் வளனும், நல்லியல்பும் இன்றியமையாதன. அவர், நல்லுடலும் நல்லியல்பும் பெறுந் துறையில் இறங்கி உழைப்பது அறம். நில விதைகளுக்கேற்ற வண்ணமன்றோ பயிரின் இயல்பிருக்கும்? தாய் தந்தையர் உடல் நலனும் இயல்பும், பிள்ளையின் வளர்ப்பிற்கு நீரும் ஒளியும் போன்றன. தாய் தந்தையர் நன்னடை, பிள்ளைகட்குப் பெருந்துணை செசய்யும். நற்பிள்ளைப் பேற்றிற்கும், வளர்ப்பிற்கும் தாய் தந்தையர் பெரும் பொறுப்பாளர். பொறுப்புணர்ந்து நடக்குந் தாய் தந்தையர் வாழ்க.
பெண் உலகோம்புந்தாய்
பொதுவாக உலகில் பல இடங்களிலும், சிறப்பாக நமது நாட்டிலும் பிறந்த குழவி பெண்ணாயிருப்பின், “ஐயோ! பெண்ணா”என்று தாய் தந்தையரும், உற்றார் உறவினரும் இடி கேட்ட நாகம்போலக் கலக்க முறுகின்றனர். இஃதென்ன அறியாமை! பின் தாயாகி உலகோம்பக் கடவுள் அளித்த பெண் பிறவியைக் கண்டா கலக்க முறுவது? “தாயாகும் பேறுடைய பெண்குழவி நம் வயிற்றிற் பிறந்ததே!” என்று பெற்றோர் இன்பக் கடலிலன்றோ திளைத்தல் வேண்டும்? பெண்ணாகப் பிறத்தல் எற்றுக்கு? பின் தாயாகி, உயிர்களை ஈன்று, உலகை வளர்ப்பதற்கன்றோ? பெண் பிறவி இல்லையேல் கடவுளின் படைப்பு நோக்கம் எங்ஙனம் நிறைவேறும்? கடவுளின் படைப்பு நோக்க நிறைவேற்றத்துக்குப் பிறந்த பெண்ணைக் கண்டு கலக்கமுறுவது அறியாமை. பெற்றோர், தம் வயிற்றிற் பிறந்த பெண்குழவியைப் பார்க்குந் தோறும் பார்க்குந்தோறும் “உலகோம்புந் தாய் நம்பால் பிறந்திருக்கிறாள்” என்று அடங்காக் கழிபேறுவகை எய்துவாராக. அவ்வுவகை ஊற்றினின்றும் பொங்கி எழும் அன்பு நீரும், அருட்கண் ஒளியும் கான்முளையை இனிது வளர்த்து வரும்.
பிள்ளைகளை வளர்த்தல் பெருந்தொண்டு
தாய் தந்தையர் பிள்ளைகளைப் பெறுவது மட்டும் பெருமையாகாது. அவற்றை நல்வழியில் வளர்ப்பதே பெருமை. பிள்ளைகளை ஓழுங்கு முறையில் வளர்க்குந் தொண்டினுஞ் சிறந்தது பிறிதொன்றில்லை. பின்னுலகு ஆக்குதற்கு உயிர்களைப் பண்படுத்தி விடுவது சிறந்த தெய்வத் தொண்டாகும்.
பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க முனையாத பெற்றோர், பின்னை உலகத்துக்குக் கேடு சூழ்ந்தவராவர், எத்தனையோ பாவங்கட்கு விதையிட்டவராவர். பிள்ளைகளை - சிறப்பாகப் பெண்பிள்ளைகளை - வளர்ப்பதில் தாய் தந்தையர் பெருங் கவலை செலுத்தல் வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்வு அவளோடு நிற்பதில்லை. அஃது அவள் வழித்தோன்றும் உலகையுந் தொடர்ந்து நிற்பது. “தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. பெண்ணின் தாய்மைக்குரிய வித்து, அவளது இளமை வளர்ப்பாகலின், அவளது இளமை, நல்வழியில் அரும்புமாறு பெற்றோர் உழைத்தல் வேண்டும். ஆகவே, தாய் தந்தையர், பெண்ணின் தாய்மை விழுப்ப முணர்ந்து, பெண்ணை வளர்ப்பாராக.
நல்லிணக்கமும் வேற்றுமை நினைவும்
பெற்றோர் பெண்ணை வளர்க்கும் முறைகளைப் பற்றி ஈண்டு விரிக்கிற் பெருகும். அம்முறைகளை விரித்துக் கூறுவது இந்நூலின் நோக்கமுமன்று. எடுத்த பொருளுக்கேற்பச் சில குறிப்புக்களை மட்டும் பொறிக்கப் புகுகிறேன்.
ஆண்பெண் நினைவு
குழந்தைகளின் மன மொழி மெய்களில் எக்காரணம் பற்றியும் தீமை படியாதவாறு தாய் தந்தையர் அவைகளைக் காத்து வருவாராக. தாய் தந்தையர் தமது நடத்தையால் குழந்தைகளின் நலனைக் காத்துவருவதோடு மற்றவர் கூட்டுறவாலும், அவைகட்குக் கேடு நிகழாதவாறு காத்து வருதல் சிறப்பு. குழந்தைகள் உள்ளத்தில் ஆண் பெண் என்னும் நினைவே தோன்றலாகாது. அவ்வெண்ணந் தோன்றுமுறையில் தாய் தந்தையார் நடத்தல் கூடாது. மற்றவர் வாயிலாகவும் அவ்வெண்ணம் குழந்தைகள் மனத்தில் நுழையாதவாறு காக்க வேண்டுவது தாய் தந்தையார் கடமை.
சிறந்த உறுப்பு
பெண் ஆண் உணர்வை உற்ற வயதில் இயற்கை தோற்று விக்கும். அக்காலத்துக்கு முன்னர், இளமையில் அவ்வெண்ணம் பதிவது, பின்னை வாழ்வின் நலத்துக்குரிய அறிவு - மனம் - உடல் - எல்லாவற்றையும் அழிப்பதாகும். அறிவு விளக்கம் மன அமைதியைப் பொறுத்து நிற்பது. மன அமைதி உடல்நலத்தைப் பொறுத்து நிற்பது. உடல்நலம் இனத்தை அறிவிக்கும் உறுப்பின் அகப்புற வளத்தைப் பொறுத்து நிற்பது. அவ்வுறுப்புக்குப் பழுது நேரின், வாழ்வே குலைந்துபோகும். உடவில் எவ்வுறுப்புக்கு ஊறு நேரினும் சிகிச்சை செய்தல் கூடும்; எவ்வுறுப்பு இழந்தேனும் வாழ்தல் கூடும். அந்தோ! குறிக்கு ஊறு நேரிலோ எவ்விதச் சுகிச்சையுமில்லை. சிகிச்சை செய்து கொள்ளினும் ஊறு நீங்காது. ஊறுடன் வாழ்தலும் முடியாது.
உயிர்நிலை
எல்லா உறுப்புக்களிலும் சிறந்தது, பால் பிரிக்கும் உறுப்பாகும். எல்லா உறுப்புக்-கட்கும் அஃது உயிர் போன்றது; வேர் போன்றது. இந்நுட்பம் உணர்ந்தே நந் தமிழ்மக்கள் அவ் வுறுப்புக்கு “உயிர்நிலை” என்ற பெயர் சூட்டினார்கள். ஆன்றோர் வழிபற்றி அவ்வுறுப்பை “உயிர் நிலை' என்றே யானும் இனி குறித்துவருவன்.
இப்பொழுது மேல்நாட்டு அறிஞர் உயிர்நிலையின் நுட்பங்களைச் செவ்வனே ஆராய்ந்து, அதன் இயல்புகளை எவரும் உணரும் முறையில் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வியல்புகளை ஓவ்வொரு பெண்மகளும் ஆண்மகனும் உணரல் வேண்டு மென்பது எனது வேட்கை. உயிர்நிலையின் நுட்பங்களை உணராது, நெறியல்லா நெறியில் சென்று, எத்துணையோ உயிர்கள் பாழ்படுகின்றன.
உயிர்நிலையாக உள்ள உறுப்பு, எக்காரணத்தால் மெலிவுறினும், நரப்புக் கட்டுக்களெல்லாம் மெலிந்து குலைந்துபோகும். நரப்புக்கட்டுக் குலையப் பெற்ற ஒருத்தியோ ஒருவனோ உடல் நலமிழந்து, மன அமைதி குன்றி, அறிவு விளக்கங் கெட்டு, தோல் பொம்மைபோலாகி, உலகிற்குப் பெருஞ் சுமையாதல் திண்ணம்.
எண்ணமும் உயிர்நிலையும்
இளமையிலேயே பெண் ஆண் நினைவு அடிக்கடி, ஊட்டக் கூடிய வளர்ப்பு, பின்னைப் பல கேடுகட்கு இடமுண்டாக்கும். பெண் இளமையிலேயே அவ்வெண்ணம் கொள்ளல் பெருந் தவறு. அவ்வெண்ணம், அடிக்கடி இன்ப உறுப்பின்மீது கருத்தைச் செலுத்தி காலத்தில் அதை மலர்விக்கும். எண்ணத்துக்கும், உயிர்நிலை உணர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணம் இல்லையேல் உணர்ச்சியும் இல்லை என்க.
பிஞ்சிற் பழுத்தல்
பெண்ணினத்தின் படைப்பிற்குரிய உள்ளுறுப்பு, ஏறக்குறைய பத்தாண்டுவரை எடுப்பின்றி உறக்கத்திலேயே கிடக்கும். பத்தாண்டிற்குமேல் அது சிறிது முகிழ்த்தெழும். அதற்குள் தீய எண்ணத்தால் அதன் எழுச்சியை ஒடுக்கி, அதன் சத்தைக் கெடுத்தல் எவ்வளவு பாவம்! அதன் செழுமை குன்றின், அதன் வாயிலாகத் தசைகட்குச் செல்லத்தக்க மூலச்சத்தின் சார ஓட்டங் குறைந்துபோகும். அந்தச் சத்தே பெண்ணின் அழகிற்கு உணவு போன்றது. அதன் பசுமையைப் போக்கும் இளம் பெண், பின்னைப் பெண்மைக்கும் தாய்மைக்கும் இன்றியமையாத கட்டழகைக் குலைத்துக் கொள்கிறாள். அவள் பெண்ணல மெல்லாம் இழக்கிறாள் என்று சுருங்கச் சொல்லலாம்.
ஏறக்குறைய பத்தாண்டில் சிறிது முகிழ்த்துத் தலைகாட்டும் இன்ப உறுப்பு, தன்னை முற்றும் பண்படுத்தற்குரிய தசைக் கட்டுக்களைக் கட்டிக் கொள்வதில் ஊக்கம் காட்டி நிற்கும். தசைக்கட்டும், பிறவும் பின்னைய தாய்மைக்கு வேண்டற்பாலன. அத்தசையையும், பிறவற்றையும் கட்ட இயற்கை அடிகோலும் வேளையில், இளமைப்பெண் தீய எண்ணத்தாலோ சேர்க்கையாலோ இன்ப உறுப்பின் இளங்-கொழுமையைப் போக்கப் புகுதல் அறியாமை. இக்கேடு உறாதவாறு, குழந்தைப் பருவத் திலேயே பெண் ஆண் வேற்றுமை, உள்ளத்தில் நுழையா வழியில், குழந்தையைப் பெற்றோர் வளர்த்தல் சிறப்பு என்று சொல்லலும் வேண்டுமோ?
பின்னைப் பன்னிரண்டு அல்லது பதினான்கு வயதில் இன்ப உறுப்பு மலர்ச்சியடைந்து தனது கடனாற்றத் துவங்கும். அப்பொழுது கருக்குழி செவ்விய நிலை எய்துதற்கு வேண்டப்படும் முயற்சியில் அவ்வுறுப்புத் தலைப்பட்டு அதை (கருக்குழியை) ஒழுங்குபடுத்தும். அந்நிலையிலும், கன்னியின் மனம் உறுதி யினின்றும் பிறழ்தலாகாது. பிறழுமேல் பிஞ்சிற்பழுத்த கதையாக முடியும். திருமணம் வரை, பெண்ணிற்குத் தீக்கிளர்ச்சி எண்ணம் உறுதலே கூடாது. தீய எண்ணத்துக்கு இரையாகாத முறையில் பெண்ணை வளர்ப்பதில் பெற்றோர் பெருங்கவலை செலுத்தல் வேண்டும்.
கீழ்மக்கள் சேர்க்கை கூடாது
குழந்தைமையில், பெண் ஆண் வேற்றுமை உணர்வு தோன்றாத வழியில், குழந்தையை வளர்க்க வேண்டுமென்று தாய் தந்தையர்க்கு அடிக்கடி. நினைவூட்டுகிறேன். “இஃதென்ன சிறிய காரியம்” என்று பெற்றோர் கவலை ஈனமாக இருத்தல் இயக்கத்தை மறந்ததாகும். கீழ்மக்கள் காற்றும் குழந்தை மீது வீசுதலாகாது. கீழ்மக்கள் வாயினின்றும் வரும் “வேத மொழிகளை”: ஈண்டு நினைவூட்ட வேண்டுவதில்லை. கீழ் மக்களின் பேச்சில் நூற்றுக்கு எண்பது சொற்கள் பெண்ணின் வண்ணமாக ஒழுகும். அச்சொல்லொழுக்கின்றி அவர்களால் கருத்தை வெளியிடல் இயலாது. அவர்களை அறியாமலும் “அந் நறு மலர்கள்' அவர்கள் வாயினின்றும் உதிர்ந்துவிடும். என் செய்வார்கள் பாவம்/ சிறிதும் நாணமின்றி, அக்கம் பக்கத்துள்ள குழந்தைகளையும் கன்னிகளையும் கவனியாது, கீழ் மக்கள், இன உறுப்பைப் பற்றிப் பேசுவதும் குறிப்பதும் இயல்பாகிவிட்டன! இக்காட்சி காணுங் குழந்தைகளும் விளையாட்டாகக் கீழ்மக்கள் உரைகளைப் பகர்கின்றன; பிறவுஞ் செய்கின்றன. விளையாடல், பின்னை வினையாக முடிகிறது. அதலால், குழந்தைகளைக் கீழ்கள் கூட்டத்தினின்றும் பெற்றோர் பிரித்தே தீரக் கடமைப் படுவாராக.
தாய்தந்தையர் கடமை
தாய் தந்தையர் பழக்கத்தாலோ, வேறு எதனாலோ சில குழந்தைகள் கைகளால் அடிக்கடி, உயிர் நிலையைத் தொடுகின்றன. இவ்வழக்கம் மிகக் கொடியது. நாளடைவில் அவ்விடத்தில் ஒருவித உணர்ச்சி தோன்றும். அவ்வுணர்ச்சி, இன்ப உறுப்பின் நோக்கை வேறு வழியில் திருப்பி, உடலில் சத்தைப் பரப்புஞ் சக்தியின் வினையைக் கெடுக்கும். அதனால் வாழ்வு இளமையிலேயே வெம்பி விழுந்து போகும். குழந்தை அறியாமையால் தீச்செயல் புரியும்போது, அதன் கருத்தை வேறு வழியில் திருப்பத் தாய் தந்தையர் முயல்வது நலம். குழந்தை, தாய் தந்தையர் வழியில் சார்ந்து நிற்றலால், அஃது அவர் சொல் வழியே நிற்கும் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. ஈன்ற அன்னையார் குழந்தையை நோக்கி, “அங்கே போகாதே; பூதம் பிடித்துக் கொள்ளும்” என்று இரண்டொரு முறை சொற்றால், குழந்தை குறிப்பிட்ட இடத்திற்குப் போக அஞ்சுவது இயல்பு. பிற குழந்தைகள் அங்கே செல்லும் போதும், “போகாதே-யுங்கள்; பூதம் பிடித்துக் கொள்ளும்” அம்மா சொன்னார். என்று அக்குழந்தை தன் நண்பரையுந் தடுக்கும். இது குழந்தைகள் இயல்பு. எத்துணைத் தாய்மார் “பேய் வருகிறது; பூதம் வருகிறது; சோறுண்” என்று அச்சமூட்டிக் குழந்தைக்குச் சோறூட்டு கின்றனர். வெறுக்கத்தக்க அச்சமூட்டி, அச்சவழியில் குழந்தையை நிறுத்தியாளும் தாய், குழந்தை அறியாமையால் பின் வாழ்வைக் கெடுக்கவல்ல தீச்செயல் நிகழ்த்தும் போதும், ஒருமுறை இரு முறை அதைத் தடுத்தால், அது மீண்டும் அத் தீச்செயலில் தலைப்படுமோ? தலைப்படாது.
தாய் தந்தையர் மடமை
சில தாய் தந்தையரின் மூடச் செயல்களாலும் குழந்தைகள் கெடுகின்றன. அவற்றை ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை. இரண்டொன்றைக் குறிப்பிடுகிறேன். சில தாய் தந்தையர் தமது அன்பைக் குழந்தைகளின் உயிர் நிலையில் காட்ட விரும்பு கின்றனர். இதனாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் உயிர் நிலையைக் தொடும் பயிற்சி பெறுவதுண்டு. சில மூடப் பெற்றோர், சிறு அறையில் விளக்கேற்றி வைத்துக் குழந்தைகளையும் உடன்கிடத்தி ஆடல் பாடல் புரிகின்றனர். சிறிது உணர்வு பெற்ற குழந்தைகள், தாய் தந்தையர் நாடகத்தை நடிக்கத் தொடங்கு கின்றன. அதைப் பார்த்து மகிழும் கயவரும் இருக்கின்றனர்! குழந்தைகளின் தீய ஆடல்களை மற்றவரோடு பேசிக் களிப்புறுஞ் சிற்றினங்களும் உலகில் வாழ்கின்றன. என்ன இழிவு! இப்பாவிகளா குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பவர்கள்? இவர்களல்லவோ குழந்தைகளைக் கொலை செய்யும் யமன்கள்? குழந்தைகளுடன் தாய் தந்தையர் ஓரே படுக்கையிற் படுத்தலே தவறு. படுத்து ஆடல் பாடல் புரிவது எத்தகைய தவறு!
உயிர் நிலையைத் தொடும் பயிற்சியில் குழந்தை இறங்கும் போதே பெற்றோர் அதைக் தடுத்தல் வேண்டும். அப்பயிற்சி யினின்றும் குழந்தை விலகு மட்டும் பெற்றோர் பெருங்கவலை செலுத்தல் வேண்டும். குழந்தை சிறிது உணர்வு பெற்றதாயின், “அம்மா அங்ஙனஞ் செய்யாதே. கண்ணைத் தொட்டு அழுத்திக் கொண்டேயிருந்தால், கண்ணின் நிலை என்னாகும்? கண் கெட்டாலும் உலகில் வாழலாம். உயிர்நிலை கெட்டால் மரணமே நேரும்” என்று பெற்றோர் அறிவு கொளுத்தி, எவ்வழி யிலாதல் குழந்தையின் தீப் பயிற்சியைத் தொலைக்க முயல் வாராக.
எவ்வழியிலும் குழந்தைகள் தங்கள் உள்ளத்தில் பெண் ஆண் என்னும் நினைவே தோன்றாவண்ணம் வளர்வதும், அவைகளைப் பெற்றோர் அந்நெறியில் வளர்ப்பதும் பின்னைய பேரின்ப வாழ்விற்கு அடி கோலுவதாகும். நல்வளர்ப்புக்குக் கேடு விளைக்கவல்ல சிற்றினங்களைக் கண்ணால் காணவும் குழந்தை களை விடலாகாது. சிற்றினச் சேர்க்கையே கொடுமை; கொடுமை. குழந்தை நல்லவழியில் வளர்க்காது, பின்னை விதி - கர்மம் - ஊழ் - பேச்சுப் பேசுவது அறிவுடைமையாமோ?
தீயாரைச் காண்பதுவுற் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுற் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது
எனவரூஉம் ஒளவையார் அறிவுரையை நோக்குக.
கல்வியும் கற்பும்
பெண்மக்கள் வாழ்விற்குக் கல்வி இன்றியமையாதது. பெண் கல்வியைப் பற்றிப் 'பெண்ணுரிமை'த் தலைப்பிலும் கூறியிருக்கிறேன். பெண்மக்கள் கல்வியை இளமையிற் கற்றல் விழுப்பம். இளமை கல்விக்குரியது. “'இளமையிற் கல்” என்றார் ஒளவையார். இளமைக் கல்வி, பின்னை வாழ்விற்குப் பெருந் துணை செய்யும். பெண்ணின் இளமை, கல்வித்துறையிற் கழிவது அறம்.
கல்வி எது?
பல்லாயிரம் நூல்களை மட்டும் வாசிப்பது கல்வியாகாது. பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் வெற்றியடைந்து பட்டம் பெறுவதும் கல்வியாகாது. கல்வி என்பது, வாழ்வில் இரண்டறக் கலந்து, வாழ்வுக்குரிய பயனை அளிப்பது. கல்வியின் பயன் என்னை? அறிவையும் ஓழுக்கத்தையும் வாழ்விற்கு வழங்குவது கல்வியின் பயன். கல்வி - அறிவு - ஒழுக்கம் - என்னும் அடுக்கு வழக்கை அராய்க ; ஆராய்ந்தால் உண்மை விளங்கும். இங்கே விளக்கந் தேவையில்லை.
அறிவும் ஒழுக்கமும்
கல்வியாற் பெறும் அறிவு விளக்கமட்டும் வாழ்விற்குப் போதாது. அறிவோடு ஓழுக்கமிருத்தல் பொருத்தம். ஒழுக்க மில்லா வாழ்வு எத்தகையதாயினும், அதனால் வாழ்வு நோக்கம் நிறைவேறாது. ஓழுக்கத்துக்குரிய கல்வியே கல்வி. மற்றையது கல்வியாகாது. தாய்மைக்குரிய பெண்ணிற்கு ஓழுக்கம் உயிர் போன்றது. ஒழுக்கமே பெண்ணாக வளர்தல் வேண்டும். ஒழுக்கமில்லாப் பெண் பெண்ணல்லள். அவள் பேய். அதலால், தன்னைத் தெய்வமாக்கும் ஓழுக்கத்தை அளிக்கவல்ல கல்வியைப் பெண் இளமையில் பெற்றே தீரல் வேண்டும்.
தாய்மைப் பேற்றிற்கு அஞ்சல் தவறு
இப்பொழுது பெண்மக்கள் பல இடங்களில் ஆண் மக்களைப் போலவே கல்வி பயில்கிறார்கள்; உயர் கல்வியும் பெறுகிறார்கள். இக்கல்வி பெறுவோருள் சிலர், தாய்மை நிலை பெறுதற்கு அஞ்சி, வாளா காலங் கழிக்கின்றனர். இவரைக் கற்றவரென்று யான் கூறேன். பெண் வாழ்வின் நோக்கம் என்னை? தாய்மை நிலை பெறுதலன்றோ? இறைவன் படைப்பு நோக்கமும் அஃதே; இயற்கையின் நோக்கமும் அஃதே. இரண்டுக்கும் மாறுபட்டுப் பெண்ணை வாழச் செய்யுங் கல்வி கல்வியாகுங்-கொல்? இயற்கை யோடியைந்த வாழ்வை அளிக்கக் கூடிய கல்வியே பெண்ணிற்கு வேண்டற்பாலது. ஆணுக்கும் அத்தகைய கல்வியே தேவை. இளமையிலேயே இயற்கை நுட்பத்தை உணர்த்தக்கூடிய கல்வியைப் பெண் மக்கட்குப் பெற்றோர் ஊட்டுவாராக.
இயற்கைக் கல்வி
பெற்றோர் தமது பெண்ணிற்கு இளமையிலேயே இயற்கையைக் காட்டிக்காட்டி, ஆடல் பாடல்களை அறிவுறுத்துவது நல்லது. மரம், செடி, கொடி, மலை, நிலா, ஞாயிறு முதலிய இயற்கைப் பொருள் நினைவு தோன்றும் வழியில், பெண்ணை ஆடுமாறும் பாடுமாறும் பெற்றோர் வளர்த்தல் வேண்டும். நமது நாட்டில் பழைய தாய்மார் பனைப்பாட்டு, மலைப்பாட்டு, நிலாப்பாட்டு, வானப்பாட்டு, பறவைப்பாட்டு முதலிய இயற்கைப் பாடல்களைப் பாடிப் பாடிக் குழந்தைகளைக் தாலாட்டுவது வழக்கம். இயற்கையைப் பற்றிய பல கதைகள் பாட்டிமார் சொல்வதுமுண்டு. திருடன் கதை, கொலைஞன் கதை, குடியன் கதை, பேய்க்கதை, அச்சமூட்டுங் கதை முதலிய ஆபாசக் கதைகளைக் குழந்தைகட்கு எவருஞ் சொல்லுதலே கூடாது. மரஞ் செடிகள் அழகாக வளர்ந்து காய்கனிகள் தருவதையும், காற்று வீசுவதையும், ஞாயிறு ஒளி உமிழ்வதையும் காட்டி, “இம்மரஞ் செடியும், காற்றும், ஞாயிறும் ஏதாவது பயன் கருதிக் கடன் களாற்றுகின்றனவா?” என்று பெற்றோர் அடிக்கடி இளம் பெண்ணுடன் பேசிப் பேசிப் பரோபகார சிந்தையை அவள் உள்ளத்தில் பெருக்குவாராக.
கடவுள் நினைவு
பின் தாயாகும் பெண்ணுள்ளத்தில் பயன் கருதாது தொண்டாற்றும் அன்புக் கடவுளைப் பதியச் செய்யத் தாய் தந்தையர் முயல்வது நலம். பெற்றோர் குழந்தையைத் தமது பிள்ளை என்று கருதுவதைப் பார்க்கினும், அதைக் தாய்மைக் கூரிய ஒன்று என்று வளர்ப்பது சிறப்பு.
போலி நாவல்களின் புன்மை
இளம் பெண்கள், தீய எண்ணங்களை ஊட்டவல்ல களிக் கதைகளை - போலி நாவல்களை - மறக்கதைகளை - இன்னோரன்ன பிறவற்றைக் கேட்டலுமாகாது; அவைகளைச் கையால் தொடுதலுமாகாது. இதில் பெற்றோர் பெருங் கவலை செலுத்துவாராக. போலி நாவல்கள் பெண்ணுலகையே கெடுத்து வருகின்றன. “தங்கள் வாழ்வை நஞ்சென எரிப்பது போலி நாவல்” என்று பெண்மணிகள் கருதுவார்களாக. போலி நாவல்களையும் போலி நாடகங்களையும் படித்து, நல்வாழ்வை இழந்து பின்னை வருந்தி வருந்தி மாண்ட சில பெண்மக்கள் கதைகள் எனக்குத் தெரியும். அருமைக் குழந்தைகளே! போலி நாவல்களைப் படியாதே யுங்கள், தொடாதேயுங்கள்; உங்கள் வாழ்வு குலைந்து போகும்; நோய்வாய்ப்பட்டு வருந்தி வருந்திச் சாவீர்கள். கடவுள் உங்களை ஏன் உலகிற்கு அனுப்பினார்? பிஞ்சில் பழுத்து உதிரவா? நோய் வாய்ப்பட்டு வருந்தவா? அண்ணன் தம்பி உற்றார் உறவினார் ஊளரார் “சீ சீ” என்று ஏசி ஏசி உங்களை ஒதுக்கவா? அன்று; அன்று. “நீங்கள் தாயாதல் வேண்டும்; நல்வாழ்வு எய்தல் வேண்டும்; பேரின்பம் அடைதல் வேண்டும்” என்பது ஆண்டவன் நோக்கம். அப்பெருவாழ்விற்கெனப் பிறந்த நீங்கள் சிறுநாவல் பித்தால் வாழ்வையா குலைத்துக் கொள்வது? போலி நாவல்களைப் படி யாதேயுங்கள்; படியாதேயுங்கள். போலிநாவல்கள் இளம் பெண்கள் கண்களிற் படாதவாறு பெற்றோரும் ஆசிரியன் மாரும் காப்பாராக.
உடற்கூற்றுக்கல்வி
பெண்மக்கட்கு உடற்கூறு நன்றாகத் தெரிதல் வேண்டும். உடற்கூற்று நூல்கள் செவ்வனே பெண் மக்கட்குப் போதிக்கப் படல் வேண்டும். உடற்கூறு தெரியாது எத்துணையோ பெண்கள் பலவழியிலும் கெடுகிறார்கள். உடல் இயல்பு நன்றாகத் தெரிந்தால், அதற்கேற்றவண்ணம் வாழ்வு நடாத்தல் அவர்களால் இயலும். கருக்குழியைப் பற்றியும், அதன் சினைகளாக உள்ள சிறுசிறு உறுப்புக்களைப் பற்றியும், அவற்றின் தொடர் உறுப்புக்களைப் பற்றியும் பெண் மக்கள் போதிய உணர்வு பெறுதல் சால்பு. சில பெண்மக்கள் உறுப்புக்களின் நிலை யுணராது, வழி துறை தெரியாது உழன்று, இன்பமிழந்து நிற்பதோடு, வேறு பல நோய்களையும் தேடிப் பாழ்படுகிறார்கள். உடற்கூற்றை உணர்ந்துகொள்வதோடு, அகத்திணை (உள் ளொழுக்கு - மனோ தத்துவம்) தெரிந்து கொள்ள அதைப்பற்றிய நூல்களைப் பெண்மக்கள் பயிலுதல் மேன்மை. மக்கள் இயல்பை அளந்தறியும் அற்றல் பெண் மக்கட்கு இருத்தல் அவசியம், அவசியம்.
பலகலையறிவு
இல்வாழ்க்கை நடாத்தவும், பிள்ளைகளைத் தக்க வழியில் வளர்க்கவும், சமயம் நேர்ந்துமி வேறுபல துறைகளில் இறங்கிக் கடனாற்றவும் பெண்மக்கள் பலதிறக் கலைகளைப் பயிலுதல் இன்றியமையாமை. எல்லாப் பெண்மக்கட்கும் பதார்த்த குணம், வைத்தியம், கணிதம், அரசியல் முதலிய கலைகளில் பொது அறிவு செறிதல் சிறப்பளிக்கும். பெண் எனில், அவள் ஒரு பல்கலைக் கழகமாயிருத்தல் வேண்டும். இல்லையேல், அவன் தாயாகிப் பிள்ளைகளை எப்படி வளர்த்தல் முடியும்?
சமயக் கல்வி
எல்லாவிதக் கல்வித் துறைகட்கும் மேலாகப் பெண்மணி கற்கத்தக்க ஒரு சிறப்புக் கல்வியுளது; அதாவது சமயக் கல்வி. மேற்கூறிய கல்வித் துறைகளெல்லாம் உடல் போன்றன. சமயக் கல்வியோ உயிர்போன்றது. அவ்வுயிர்க் கல்வி மிகமிக இன்றியமையாதது. இயல்பாகப் பெண்மக்களிடத்துக் கடவுட்டன்மை யுண்டு. இதை முன்னருங் கூறியிருக்கிறேன். அவ்வியல்பு அரும்ப, அதைத் தூண்டுதற்குச் சமயக் கல்வி வேண்டற்பாலது.
பெண்மக்கள், உலகியற் கல்வியையும், கடவுளியற் கல்வியையும் முறையே பெறுவார்களாயின், அவர்கள் உடல்நிலை, ஓழுக்கநிலை, அன்புநிலை முதலியவற்றை நன்கு உணர்ந்து, நற்றாய்மார்களாகி அறத்தொண்டு செய்து இன்பம் நுகர்வார்கள். அதலால், பெண்மக்களை இளமையிலேயே கல்வித் துறைகளில் வல்லவர்களாக்கத் தாய் தந்தையர் பெருங்கவலை செலுத்தி உழைப்பாராக.
கற்பு
பெண்மக்கள் கேட்டிற்குக் காரணம் கல்வி இன்மையே. கல்வி பயின்று, உடலியல், உயிரியல், ஒழுக்கவியல், அன்பியல் முதலியவற்றைப் பெண்மக்கள் செவ்வனே உணர்வரேல், அவர்கள் கனவிலும் மறந்தும் தயொழுக்கத்தை நினையார்கள். நிறைக்கேட்டால் இன்னின்ன துன்பங்கள் உண்டு என்று இளமையில் செவ்வனே உணரப்டெறும் பெண்மணி, ஒரு போதும் ஓழுக்கந் தவறி வாழ நினையாள். தாஞ்சாக மருந்துண் போர் ஒருவரும் இல்லை.
பெண்ணிற்குள்ள பெருமை யாண்டுளது? “கற்பில்” என்று எவருங் கூறுவார்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையண் டாகப் பெறின்
என்றார் திருவள்ளுவனார். பெண்ணிற் பெருந்தகையது ஓன்றில்லை. எப்பொழுது? அவள் கற்பென்னுந் தண்மை யுண்டாகப் பெறுவளேல். அப்பொழுது அவள் பெருந்தகைமைக்கு உடையவளாகிறாள். பெண்ணிற்குள்ள பெருமையெல்லாம் கற்பில் அடங்கியிருத்தல் ஊன்றி ஊன்றி உணரற்பாலது. கற்புடையவளே பெண். அஃதில்லாதவள் பெண்ணல்லள்.
கற்பிழக்கும் பெண்
கற்பிழக்கும் பெண், முதலாவது தனது உயிர்நிலை உறுப்புக்களாகிய இன்பக் கருவிகளின் உணர்ச்சியை நாளடைவில் இழப்பள். அவ்வுணர்ச்சி குன்றக் குன்ற உடலில் இரத்த ஓட்டம் குன்றும். இரத்த ஓட்டம் குறையக் குறைய உடற்கட்டுக் குலையும். உடற்கட்டுக் குலைவால் அழகெனும் தெய்வம் மறையும். பின்னை எந்நிலை உறும்? உயிர் நிலையின் உள்ளும் புறமும் பற்பல வெந்நோய்கள் தோன்றும். அவை உடலெலாம் பரவும். அப்பாமும் பெண் படுந்துயரத்துக்கு ஓர் அளவும் உண்டேோ? அவள் படுவது நரகத் துயரன்றோ? அவள் நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. நோய் வாய்ப்படும் பெண், தாயாகும் பேரின்பத்தை இழக்கிறாள். பேரின்பம் இல்லை யேனும் உடலின்பமேனும் உண்டே? இரவும் பகலும் “நோயின்பம்” தவிர வேறின்பம் அவளுக்கு ஏது? இவ்வளவு கேட்டிற்கும் காரணம் என்னை? கற்பிழந்தமையே. கற்பிழந்தவள் அழகை இழக்கிறாள்; பெண்மையை இழக்கிறாள்; தாய்மையை இழக் கிறாள், எல்லாவற்றையும் இழக்கிறாள்.
எண்ணமும் கற்பும்
கற்புக் காத்தல், ஒருத்தியின் மனோநிலையைப் பொறுத்து நிற்பது. மனத்தில் எழுந் தீய எண்ணமே கற்பைக் குலைப்பது. நல்லெண்ணமோ பெண்ணை வளர்ப்பது. நல்லெண்ணம் அறிவைப் பொறுத்து நிற்பது. அறிவ, எண்ணங்கட்கு ஏற்ற வண்ணம் ௧ரு உறுப்புக்களின் தன்மை நிலவும். இந்நிலைக்கு ஏற்ற உடல் அமையும். தூய அறிவும் தூய எண்ணமும் நிறைகாத்து, நல்லுடல் அமைத்து, அழகெனுங் கடவுளைப் பெண்ணின்பால் எழுந்தருளச் செய்யும். அழகமையாப் பெண், பெண்ணல்லள். அழகென்பது வெண்தோலையோ, மஞ்சள் தோலையோ, சிவப்புத்தோலையோ பற்றி நிற்பதன்று. அது, தூய மனத்தால் அமையும் கற்புறுதியினின்றும் எழும் இரத்த ஓட்டத்தானும், தசைக்கட்டானும் தோற்றமுறும் அருவத் தன்மையது. சுருங்கக் கூறின் “பெண்ணின் நலன் அவள் கற்பிலிருக்கிறது” என்று கூறலாம். இடையிடையே இந்நூற்கண் இதைப்பற்றிக் குறித்துச் செல்வன்.
கற்பிழத்தலால் விளையுங் கேட்டை உணராத பெண்ணே தன்னொழமுக்கத்தைக் கெடுக்கப் புகுவள். கற்பிழத்தலால் இத் துணைக் கேடுகள் உண்டு என்பதைப் பெண் இளமையிலேயே கல்வியறிவால் உணர்ந்திருப்பளேல், அவள் ஒழுக்கந் தவற நினைக்கவும் மாட்டாள். கல்வியில்லாக் குறையால் பெண்ணுலகில் பல கேடுகள் விளைகின்றன. அதலால், பலதிறக் கலைகளைப் பெண் இளமையில் பயில்வது சிறப்பு.
“கல்வி பயின்ற பெண்கள் நிறை தவறி நிற்பதில்லையோ” என்று சிலர் வினவலாம். ஏட்டைப் படித்தவரெல்லாரும் கல்வி கற்றவராகார். நூல்களெல்லாம் நூல்கள் ஆகா. பெண்களைக் கெடுக்கும் நூல்களும் உண்டு. தீயார் செயல்கள் எத்துணையோ நாட்டில் உலவுகின்றன. அவரால் எழுதப்பட்ட நூல்களும் நாட்டில் நடமாடுகின்றன. தீய நூல்களைப் படிப்பவர் எங்ஙனங் கற்றவராவார்?
சில நன்னூல்களைப் படித்தவரும் கெடுதல் உண்டு. நல்லுணவடன் தீயவுணவைக் கலந்துண்டால் எவ்வுணவின் பயன் மிகுந்து நிற்கும்? தீயவுணவின் பயனே மிகுந்து நிற்கும். நன்னூற் பயிற்சியோடு வேறு தீப்பயிற்சிகளையும் பெண் பெறுவளேல் அவளுக்குக் கேடு விளைதல் இயல்பு. நட்பு, கூட்டுறவு, சுற்றம் முதலியவற்றையும் வாழ்வு பொறுத்து நிற்கிறது. நன்னூற் பயிற்சியோடு நட்பு முதலியனவும் நல்லனவாக அமைதல் அழகு. தீய நூல்களை விலக்குவது போலத் தீ நட்பு முதலியவற்றையும் விலக்குதல் விழுப்பம். தீ நட்பு முதலியவற்றால் வாழ்வு கெடுதல் ஒருதலை.
தீ நட்பு களைதல்
நண்பரை - அதினும் ஆண் நண்பரைத் - தெரிந்தெடுப்பதில் பெருங்கவலை செலுத்தும் பெண் பின்னே நல்வாழ்வுக்குரிய மகளாவள். பெண்கள் ஆடவரோடு நட்புக் கொள்ளல் ஆகாது என்று யான் கூற மாட்டேன். அவர்கள், எவரோடும் நட்புக் கொள்ளலாம். அந்நட்பு, தீயதாயிருத்தல் கூடாதென்பதை மட்டும் வலியுறுத்துகிறேன். எவ்வாடவானதல் பேசுகையில் காமக்கிளர்ச்சி எழுப்பக் கூடிய உரை பகர்வனேல், அவன் தன்னைக் கொல்லவந்த யமன் என்று கருதி, அவனது நட்பை உடனே பெண்மகள் களைவாளாக. ஏட்டுக் கல்வியினும், நட்பாராய்ந்து தெரியப் பயிலுங் கல்வி மிகச் சிறந்தது. இதுவும் கல்வி இனத்திற் சேர்ந்ததாகும்.
கூட்டத்தில் நடமாடல்
பெண்மக்கள் இனவேற்றுமை கருதாது ஆண் மக்களுடன் விளையாடலாம். வயதேற வயதேறத் தனித்து ஒரு தனி ஆடவனோடு போதலும் வருதலும் ஆடலும் பாடலும் கூடா. எதைச் செய்தாலும் பெண்மக்களும் ஆண்மக்களும் கூட்டங் கூட்டமாகக் கூடிச்செய்யின், வேறு எண்ணத்துக்கு இடம் பெரிதும் நேராது.
சோதனைப் பருவம்
வயதடைந்த நாள் தொட்டுத் திருமணம் வரை, பெண்ணுக்குரிய பருவம் மிக நெருக்கடியானது; சோதனைக்கும் உரியது. அக்காலத்தில் தன்னைக் காக்கும் பெண்ணே பின்னைப் பெருந்தேவியாவள். நற்கல்வியும், நன்னட்பும், நல்வளர்ப்பும் பின்னைத் தாய்மைக்குரிய எல்லா நலன்களையும் தரும். உற்ற வயதில் பெண்மக்கள் உள்ளத்தில் “பின் தாயாதற்கு ஆக்கந் தேடத்தக்க பருவம் இது. இதனை நல்வழியில் ஓம்புதல் அறம்” என்னும் எண்ணமே உறுத்து நிற்றல் வேண்டும். இதற்குரிய கல்வி, நட்பு முதலியவற்றை அவர்கள் இளமையில் பெற முயல்வார்களாக.
உடலோம்பல்
கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய எல்லாவற்றிற்கும் நிலைக் களன் உடல் என்பதை விளக்க வேண்டுவதில்லை. உடலை ஓம்பாது, வெறுங் கல்வி அறிவை மட்டும் பெற முயல்வதால் என்ன பயன் விளையும்? கல்வி அறிவைப் பயன்படுத்த நல்லுடல் தேவை. அதலால், உடலோம்புவதிலும் பெண்மக்கள் கருத்துச் செலுத்துவார்களாக.
உடலோம்பு முறைகள் இன்ன இன்ன என்று இந்நூலில் விரித்துக் கூறுதல் பொருத்தமன்று. அவைகட்கெனக் தனி நூல்கள் பல இருக்கின்றன. ஈண்டுச் சிற்சில முறைகளைச் சுருங்கச் சொல்கிறேன்.
அகத்தூய்மை
தூய்மை, அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டு வகைப்படும். அகத்தில் நல்ல எண்ணங்களே தோன்றுமாறு மக்கள் பழகல் சிறப்பு. இய எண்ணங்கள் அகத்திலுறுமேல், அவை உடல் வளனைக் கெடுத்து, வாழ்வையே சிதைக்கும். உடலோம்பலுக்கு முதல் முதல் வேண்டத்தக்கது அகத்தூய்மை. அகத்தூய்மை, உடல் நலத்துக்குப் பெரிய அமிழ்தம். அதற்கு உரியது வாய்மை. “அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்” என்றும், “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற - செய்யாமை செய்யாமை நன்று” என்றும் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்திருத்தல் காண்க. வாய்மையுள்ள இடத்தில் வேறு பல அறத்துறைகள் உறைவது இயல்பு. பிறவற்றை மேலே போந்துள்ள “நல்லிணக்கம்” என்னுந் தலைப்பின் கீழ்ப் பார்க்க.
புறத்தூய்மை
அகத்தூய்மையைப் போலவே புறத்தூய்மையையும் மக்கள் காத்தல் வேண்டும். புறத்தூய்மை இல்லாத பெண்மகளின் அகம் தூய்மையா யிராது. “அகமே புறம்”, “மனம்போல வாழ்வு” என வரூஉம் மூதுரைகளை உற்றுநோக்குக. புறத்தூய்மையில் உடல் தூய்மைமையும் வீட்டுத் தூய்மையையும் சேர்த்துக் கொள்க. உடல் தூய்மையைக் காவாது விடின், அஃது உடலில் அழுக்குச் சேர்த்துப் பலதிற நோய்களை உண்டு பண்ணும். வீடுகளிலும் அழுக்குகள் அடைந்திருந்தால், அவற்றினின்றும் பலதிற நச்சுப் பூச்சுக்கள் தோன்றி நோய்களைப் பிறப்பிக்கும்.
சுகாதாரம்
புறத்தூய்மைக்குப் பல சுகாதார முறைகள் தேவை. பெண் மக்கட்கு இளமையிலே சுகாதாரக் கல்வி பயிற்றல் நல்லது. சுகாதார அறிவு பெறாத பெண்ணால் (அவள் வாழ்விற்கும், அவளைத் தொடர்ந்தோர் வாழ்விற்கும்) பலதிறக் கேடுகள் விளையும். சுகாதார முறைகளை ஆண்மக்கள் மட்டும் கவனிப்பதால் பயன் விளையாது. அவை பெண்மக்களாலும் கவனிக்கப் பெறல் வேண்டும்.
சுகாதார உணர்ச்சியில்லாத பெண்ணுடன் எப்படி வாழ்வது? அவள் சமைக்கும் உணவை எப்படி, உண்பது? அது நஞ்சன்றோ? பெண் தாயாகலான், அவள் வாழ்வு சுகாதார முடையதாயிருத்தல் அவசியம். அவள் சுகாதார வழியில் நிற்பாளாயின், அவள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அவ்வழியில் நிற்கப் பயிலும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் இயல்பின தன்றோ?
“புறந்தூய்மை நீரால் அமையும்” என்றார் திருவள்ளுவனாரர். நீராடலை ஈண்டுக் குறிப்பதற்கு முன்னர், வேறு சில கடன் முறைகளையுங் குறிப்பது நலம் என்று தோன்றுகிறது.
உறக்கம் : ஆண்மக்களினும் பெண்மக்கட்கு உறக்கம் சிறிது அதிகந் தேவை. நமது நாட்டில் இதற்கு மாறுபட்ட வழக்கம் உண்டு. பெண்மக்கள் உறக்கத்துக்கு ஆண்மக்கள் பல வழியிலும் கேடு சூழ்கிறார்கள். பெண்ணின் உடல் இயல்பையும், அமைதித் தன்மையையும் உணரும் ஆண்மகன், பெண் மகள் உறக்கத்துக்கு இடையூறு செய்யான். பெண்மணிகள் நன்றாக உறங்கி எழுவதே நலம். உறக்கம் வாழ்வுக்கு இன்றியமையாதது. உறக்கமாவது மன ஓய்வேயாகும். ஒருவரது உறக்கத்தைக் கொண்டு அவரது உடல்நிலையை அளந்து கொள்ளலாம். உறக்கத்தின்போது பற்பல எண்ணங்களும், பற்பல கனவுகளும் தோன்றுதல் கூடாது. நல்லுடல் பெற்றிருப்-போர்க்கு அவை தோன்றா. நோயுள்ளார்க்கே அக்கொடுமைகள் தோன்றும். இரவில், குலையாத உறக்கம் வரும் முறையில் மக்கள் பகலில் உடற்பயிற்சி செய்து பழகுவார்களாக.
உறக்கநேரம்
உறக்க நேரத்தைப் பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. சிலர் எட்டு மணி நேரம் என்பர்; சிலர் ஆறு மணி என்பர்; சிலர் நான்கு மணி என்பார். எட்டு மணிக்கு மேலே போகாமலும், நான்கு மணிக்குக்குறையாமலும் உறங்குவது நலம். ஆறு மணி நேரம் மிகப் பொருத்தம். நேரம் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற வண்ணம் அமையும். உறக்கம் இடை இடை இடர்ப்படல் அகாது. அவ்விடரால் பல கேடுகள் விளையும். இரவு பத்து மணிக்குப் படுத்து, வைகறை எழுவது இனிது.
உறங்குமிடம்
உறங்குமிடம், நறுங்காற்று எளிதில் உலவக் கூடியதாய்ப் பகலில் ஞாயிற்றின் ஒளி படரக் கூடியதா யிருத்தல் வேண்டும். இவை நன்கு பரவாத குகைகளில் படுத்துறங்குவது நாளடைவில் உடல் வளத்தைக் குலைத்துக் கொள்வதாகும். படுக்கை அறைக் கதவுகளும், பலகணிகளும் திறக்கப்பட்டி ர௬த்தல் இயற்கைக்குத் துணை போவதாகும். கதவுகளையும் பலகணிகளையும் அடைத்து உறங்குவதால் பல நோய்கள் உண்டாகும். காசநோய்க்குச் சொல்லப்படும் பல காரணங்களுள் புழுக்கமான அறையில் படுத் துறங்குவதும் ஒன்று.
படுக்கைகளில் அழுக்கேறலாகாது. அவற்றைத் தூய்மையாக வைத்திருத்தல் நல்லது. அன்றாடம் ஞாயிற்றின் ஒளியில் படுக்கைகளை உலர்த்தல் உத்தமம். பெண்மக்கள் எக்காரணம் பற்றியும் அடுப்புள்ள அறையில் படுத்தல் கூடாது. அங்கே நச்சுக் காற்று அதிகம்.
துயிலெழல் : ’வைகறைக் துயிலெழு:' என்பது ஒளவையார் திருமொழி. வைகறையில் துயில் எழுவதைப்பற்றி இயற்கை நூலார் பலபடக் கூறி இருக்கின்றனர். பறவைகள் விலங்குகள் முதலிய அஃறிணை உயிர்கள், பெரிதும் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்துகின்றன. அவை எப்பொழுது துயில் எழுகின்றன? விடியற் காலத்திலல்லவோ? ஞாயிறெழுந்த பின்னர்ப் படுக்கை விட்டெழுவது இயற்கைக்கு மாறுபாடு. அவ் வாறெமும் பயிற்சியுடையார் விரைவில் நோய்வாய்ப்படுவர். இயற்கை எழும்பும்போது மக்கள் படுக்கையில் கிடப்பது, குருதியை வெம்மைப்படுத்தி, நாளடைவில் கொதிப்பூட்டிப் பல நோய்கட்கு இடந்தருவதாகும். அதலால், வைகறைத் துயிலெழல் இயற்கை வாழ்விற்குரியதென்க.
காலைக் கடன்
காலைக் கடன் : காலையில் எழுந்ததும் மலங்கழித்தல் ஒழுங்கு. மலம் சிக்கலுறாது கழிவது நல்லுடலுக்கு அறிகுறி. மலம் சிக்கல், நோய்க்குக் கால்கொள்வதாகும். மலச்சிக்கல் உற்றதும் சிலா் மருந்துங் கையுமாக நிற்கின்றனார். அது தவறு. மலச்சிக்கல் உற்றதற்குக் காரணம் யாது என்பதைக் காண மக்கள் முயலல் வேண்டும். பொருந்தா உணவருந்தல், மீதூண் கொள்ளல், பசியெழா முன்னஞ் சாப்பிடல், கள் குடித்தல், தீயொழுக்கம், கெட்ட எண்ணம், கவலை, புழுங்குமிடத்தில் வாழ்தல், எப்பயிற்சியுஞ் செய்யாது ஓரே இடத்தில் கிடத்தல் முதலியன மலத்தைச் சிக்கச் செய்கின்றன. இத்தீமைகளினின்றும் விலகாது மருந்தை மட்டும் உண்பது தவறு. மருந்துண்ணும் நேரத்தில் குணங்காணலாம். மருந்து முடிந்ததும் மீண்டும் மலச்சிக்கல் தோன்றி நோயாளரை வருத்தும்.
மலச்சிக்கலால் விளையும் கேடுகள்
“மலச்சிக்கல்தானே”' என்று எவரும் ஒரு நொடிப் பொழுதும் கவலையீனமாக இருத்தலாகாது. எல்லாப் பிணிகட்கும் பிறப்பிடம் மலச்சிக்கலே என்பதை மக்கள் உணர்வார்களாக. மலம், வேளையில் கழியாது உள்ளே நின்றால், அது நஞ்சாகி உடலின் அகப்புற உறுப்புக்களை எரிக்கும்; உறக்கத்தைக் கெடுக்கும்; நோயை உண்டாக்கும்; எல்லாக் கொடுமைகளையுஷஞ் செய்யும்.
மலச்சிக்கலைப் போக்க வழி
தண்ணீர் மட்டுங் கொண்டு ஒருநாளோ இரண்டு நாளோ நிலைமைக்கேற்றபடி விரதமிருந்தால், உள்ளே கிடக்கும் அழுக்குகளெல்லாம் வெளியேவரும்,; பசித்தோற்றம் உண்டாகும். நீரும், காற்றும், ஞாயிற்றொளியும் மலச்சிக்கலுக்கு பெரு மருந்துகள். பழ உணவு மிகப் பொருத்தம். எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருந்திய உணவு கொள்ளுதல் நலம். உடற்பயிற்சிமீ து கவலை செலுத்தல் சிறப்பு. பொருந்திய உணவும், நீரும், காற்றும், ஞாயிற்றொளியும், உடற்பயிற்சியும் மலச்சிக்கலைப் போக்கி நிலையை ஒழுங்குபடுத்தும். மேலும், மலச்சிக்கலால் துன்புறுவோர் எனிமாவாலாதல் அன்றாடம் மலத்தை வெளிப்படுத்தி, இயற்கை வாழ்வை மேற்கொள்வார்களாக. இந்நூலில் இயற்கை முறைகளைப் பற்றி விரித்துரைத்தல் மிகையாகும். நோய்வாய்ப் படுவோர் அவ்வப்போது இயற்கை நுட்பந் தெரிந்த மருத்துவர் மாட்டுக் கேட்டு வாழ்வு நடாத்தல் அறிவுடைமை.
பயிற்சி : உடலுக்குப் பயிற்சி மிக அவசியம்; இல்லையேல் கட்டுக்களும், தசைகளும், பிறவும் பிணிப்புண்டு, பின்னை இடர் விளைக்கும். மக்கள் பயிற்சியின் நலத்தை முதலாவது உணர்தல் வேண்டும். உடற்பயிற்சி எதுவாயினுமாக. அதைக் காலையில் ஒழுங்காக மக்கள் செய்துவரல் உடற்காப்பாகும். காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்து வரலாம். காலை நேரத்தை விடுத்து, மாலை நேரத்தில் பயிற்சி செய்தல் இரண்டாந்தரமாகும். காலையில் பயிற்சி செய்ய முடியாதவர் மாலையில் செய்யலாம். பயிற்சிக்குரிய காலம் காலை நேரமே.
ஆட்டங்கள்
பயிற்சிகள் பலதிறத்தன. இங்கே அவற்றை விரித்துக் கூறாது பெண்மக்களுக்குரிய சிலவற்றின் மீது கருத்தைச் செலுத்துகிறேன். மேல்நாட்டுப் பெண்மக்கள், நடை, குதிரை யேற்றம், பந்தாட்டம், தண்ணீரில் நீந்தல் முதலியவற்றைக் கொண்டு வாழ்கிறார்கள். இவற்றை நமது நாட்டுப் பெண் மக்களும் கொள்ளலாம். பந்தாட்டம் பழைய காலத்தில் நமது நாட்டு மகளிர் ஆட்டங்களுள் ஒன்றாயிருந்தது. இதனை நமது நாட்டுப் புராணங்களிற் காணலாம்.
நமது நாட்டு மகளிராட்டங்கள் பல உண்டு. அவை கும்மி, குரவை, கோலாட்டம், பரதநாட்டியம், இசை முதலியன. இவ் வாட்டங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கி உடல்நலனை உஊட்டும். நமது நாட்டுப் பெண் பாடசாலைகளில் இவ்வாட்டங்கள் போதிக்கப்படல் வேண்டும். ஓவ்வொரு வீட்டிலும் இவ் வாட்டங்கள் நிகழ்தல் வேண்டும். பரதநாட்டியம் ஒவ்வோர் உறுப்புக்கும் உரமூட்டுவது. அஃது, இப்பொழுது வீட்டுக் குல மகளிரை விடுத்து, மற்றவரிடம் புகுந்து, பொருளீட்டுங் களி யாட்டங்களுள் ஒன்றாய் ஒதுங்கிவிட்டது. பரதநாட்டியம் தலையாய பயிற்சி. இசை மிக நுண்ணிய பயிற்சி. இது பல நுண்ணு அப்புக்களுக்கு உரமூட்டும். பெண்மக்கள் இசைப் பயிற்சியால் உடல் நலத்தைக் காத்துவரலாம்.
நமது நாட்டுப் பெண்மக்கள் வாழ்விலேயே வேறு பல பயிற்சிகளும் அமைந்திருக்-கின்றன. அவை நீர்முகத்தல், வீடு பெருக்கல், அரிசி குத்தல், மாவறைத்தல், இராட்டை சுழற்றல் முதலியன. இவை பெண் மக்களின் கை கால் இடுப்பு முதலிய வற்றிற்கு உரமளிப்பன.
இயந்திர அரக்கன்
நாகரிகம் என்னும் பெயரால் இப்பொழுது இயந்திரம் என்னும் அரக்கன், உலகத்திலுள்ள இயற்கை ஆற்றலையும் வனப்பையும் வெட்டிச் சாய்த்து வருகிறான். அவ்வரக்கன் நமது நாட்டிலும் நுழைந்து சூறையாடுகிறான்; நமது நாட்டுப் பெண் மக்களின் இரத்தம், சத்து, தாது, அழகு முதலியவற்றை உறிஞ்சு கிறான். பெண்மக்கள் என்புக் கூடுகளாகிக் கணீல் கணீல் என இருமல் ஓசை எழுப்புகிறவர்களாய் மருந்துங்கையுமாய் நிற்கிறார்கள். நமது நாட்டில் நெல், அரிசி, மிளகு, சீயக்காய் எல்லா வற்றையுந் தூளாக்க மூலை முடுக்குகளிலெல்லாம், இயந்திரங்கள் நுழைந்திருக்-கின்றன. இயந்திரங்கள் பெண் மக்களைச் சோம்பேறிகளாக்குகின்றன; அவர்கள் உடல் உரத்தையும் கெடுக்கின்றன.
இயந்திரங்கள் உணவுப் பொருளிலுள்ள சத்துக்களைப் போக்குகின்றன. உதாரணமாக இயந்திரத்தாற் குத்தப்பெற்ற அரிசியை எடுத்துக் கொள்வோம். அரிசிமீது உமி இருக்கிறது. அரிசிமீதுள்ள சத்தின் காப்புக்கென உமி இயற்கையில் அமைந்திருக்கிறது. இயந்திரம், உமியை நீக்கும்போது, அரிசிமீதுள்ள சத்தும் இல்லாதவாறு அதைத் தீட்டிக் கழிக்கிறது. அந்தச் சத்தில் சில நலன்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஜீரணத்துக்குத் துணை நிற்பது. இச்சத்தில்லாச் சோற்றை உண்பதால் என்ன பயன்? தோயுறலே விளையும் பயன்.
செல்வப் பெண்கள்
செல்வர் வீட்டுப் பெண்மக்களிற் பலர் வீட்டு வேலையுஞ் செய்வதில்லை; வேறு ஆட்டங்களும் ஆடுவதில்லை. இவர்தம் நிலைகுறித்துப் பெரிதும் இரங்குகிறேன். இவர் எத்துணையோ உயிர்க்கொலை செய்யும் பாவத்துக்குள்ளாகிறார் என்று சுருங்கச் சொல்கிறேன். உழைப்பில்லாப் பெண்மக்கள் கருவில் உயிர் தங்குதலே அரிது; தங்கினும் இடையிடையே அது கரைந்துபோகும்; கரையாது நிற்பினும், ௧ரு உயிர்க்கும்போது குழந்தை உள்ளே இறந்து போதலும் உண்டு; சில சமயங்களில் மருத்துவர் பெருமுயற்சி செய்து கருவியால் குழந்தையைத் துண்டித்து வெளிப்-படுத்துவதும் உண்டு. இக்கொலைகட்குக் காரணர் யார்? காரணம் எது? உடற்பயிற்சி செய்யாத செல்வப் பெண்மக்கள் காரணர். காரணம் இவர்களின் சோம்பல்; சோம்பல். ஆகவே, பெண்மக்களுக்குப் பயிற்சி இன்றியமையாதது.
நீராடல் : நீராடலைப் பற்றி மேல்நாட்டார் பல முறைகள் வகுத்திருக்கின்றனர். அவற்றை ஆராய்ந்து, அவற்றில் வீழ்ந்து புரள்வது அறிவுடைமையாகாது. குளிர்மிகுந்த அந்நாட்டிற்கு அம்முறைகள் தேவையே. நமது நாட்டிற்குச் சூரிய நாராயணன் திருவருள் உண்டு. அத்திருவருள் எவ்வளவோ சுகாதாரக் குறை களைப் போக்கிவருகிறது. அதலால், குளிர் மிகுந்த மேல்நாட்டு முறைகள் நமது நாட்டவர்க்குப் பெரிதும் பொருந்தி வருவன அல்ல.
காலையில் தூய நீராடுதல் வேண்டும். மெலிந்த உடலினோர் வெத்நீரில் மூழ்குவது நலம். ஊற்று நீரோ ஓடுநீரோ இல்லாத இடத்தில் எல்லாரும் வெந்நீரில் மூழ்குவது சிறப்பு. ஓடுநீர் மிக நறுமை யுடையதாயின், மூன்று வேளையும் அதில் மூழ்கலாம்.
நீராடும்போது உடம்பிலுள்ள அழுக்குகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல் அழகை வளர்க்கும். பச்சைப்பருப்போ சீயக்காயோ புன்கோ உபயோகிக்கலாம். சோப் அநாவசியம்.
நாடோறும் நீராடுவோரை நோய் அணுகாது; மற்றவரை நோய் வருத்தும். நீராடல் மிக மிக அவசியம். நீராடாது பெண் மகள் எவ்வினையும் நிகழ்த்தலாகாது. “கூழானாலும் குளித்துக் குடி- கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்னும் பழமொழியை உற்று நோக்குக.
நீர் மூழ்கலைப் போலவே வேறு இரண்டு மூழ்க்குகள் இருக்கின்றன. ஒன்று காற்று மூழ்க்கு; மற்றொன்று ஞாயிற் றொளி மூழ்க்கு. இவ்விரண்டிற்கும் நீண்ட நேரமும் பெரு முயற்சியும் தேவையில்லை. சிறிது நேரம் தூய காற்று வீசு மிடத்தில் கதிரொளிபட நிற்றல் சாலும். அதிகாலையில் புறப்படும் இளஞ்செஞ்ஞாயிற்றொளியும், மாலை ஞாயிற்றொளியும் உடல்நலத்துக்குரியன. ஞாயிற்றின் ஒலி ஓவ்வோர் உறுப்பிலும் படருமாறு புரண்டு புரண்டு படுத்தல் மிகவும் நன்று. இக்காலைக் கடன்களைக் குறைவற ஆற்றிச் சிறிது நேரம் அன்பு வடிவான ஆண்டவனை உன்னிப் பொருந்திய உணவு கொள்ளல் தகுதி.
உணவு
சுவையடக்கம் : அடக்கம் பெண்மக்கள் உடைமை என்று மேலே சொல்லப்பட்டது. இவ்வுடைமை குழந்தைமை யிலேயே பெண்மக்கட்கு அணியப் பெறல் வேண்டும். அடக்க நிலைகள் பலதிறத்தன. அவற்றுள் தலையாயது நாச்சுவை அடக்கம். இவ்வடக்கம் இருபாலார்க்குந் தேவை. இது பெரிதும் பெண் மக்கள்பால் சிறந்து விளங்கல் நல்லது. நாச்சுவை அடக்கமிலாப் பெண், பின்னைப் பிற அடக்கங்களையும் இழப்பள். அதலால், சுவை அடக்கம் பெண்மக்கட்கு மிகமிக இன்றியமையாதது.
குழந்தைமையில் கண்டதைக் தின்று பழகும் பெண், பின் நா அடங்கி வாழ்தல் அரிது. பெண்மகள் குழந்தைமையில் கண்டதைத் தானே தின்னமாட்டாள். தாய் தந்தையர் மடமை யால் குழந்தை கண்டதைக் தின்பதுண்டு. குழந்தைமையில் பெண்மகள் கண்டதைத் தின்பது பின்னை வாழ்வைக் குலைக்கு மென்பது மூடத் தாய் தந்தையர்க்கு விளங்குவதில்லை. குழந்தை மையிலேயே கண்டதைத்தின்று கொழுத்தால் பின்னை வாழ்வில் மகள் மிக வலிமை உடையவளாய் இருப்பள் என்பது தாய் தந்தையர் கருத்துப்போலும்! குழந்தைகட்கு அளவாக உணவளித்து, நா அடங்க அவைகளை வளர்க்கத் தாய் தந்தையார் பயில்வாராக.
சில தாய் தந்தையர் “அன்பு” “அன்பு” என்று கண்டதை வாங்கிக் குழந்தைகட்குக் கொடுப்பதுண்டு. இவ்வன்பு பின்னைப் பெண்ணை எலும்பாக்கும் என்பதைப் பெற்றோர் உணர்வ தில்லை. பிள்ளைகளுக்குக் கண்டதை வாங்கிக் கொடுக்கும் வழியில்தான் பெற்றோர் அன்பைக் காட்டல் வேண்டும் போலும்! இவ்வன்பு அன்பாகாது. இது, பெண்ணை விரைவில் சுடு காட்டுக்கு அனுப்பும் ’அன்பாக’ முடியும். இப்போலி அன்பு எத்துணையோ பெண்மக்கள் வாழ்வைக் குலைக்கும் யமனாகிறது. பின் வாழ்வில் பெண் தாயாதற்கு வேண்டப்படும் இயல்பும் உடலும் அமைதற்குரிய உணவு ஊட்டுவதில், பெற்றோர் கவலை செலுத்துவது பொருந்திய அன்பாகும்.
உணவின் தன்மை, அளவு முறை, காலம் முதலியவற்றைப் பெண்ணின் இளமையிலேயே தாய் தந்தையர் கணித்துப் பழக்கத்தில் கொணரல் சிறப்பு. இப்பழக்கம் நா அடக்கத்தை இயற்கையில் கொணர்ந்து நிறுத்தும். கண்ட பொருளைக் காணுந்தோறும் நாவறப் பெறும் பெண்ணால், பெண்ணுக்குரிய வாழ்வு நடாத்தல் இயலாது. அவள் அடிக்கடி நோய் வாய்ப் பட்டுங்கிடப்பள்.
நோயற்ற வாழ்வு
நோயற்ற வாழ்வன்றோ வாழ்வு? நோய் பெரிதும் உணவைப் பொறுத்து நிற்பது. பலதிற நோய்கட்குக் காரணம் பெருந் திண்டியே யாகும். அன்றாடம் உண்ணும் உணவு, அன்றாடம் ஜீரணமாவதாயிருத்தல் வேண்டும். ஜீரணமாகாது, அரைகுறை யாக உணவு வயிற்றுள் நிற்கும்போது, மேலும் மேலும் உணவு ஏற்பது, நோயை உண்டுபண்ணாது, பின்னை எதை உண்டு பண்ணும்? பசி எழா முன்னம் உணவருந்தும் பயிற்சியினுங் கொடியது பிறிதொன்றில்லை. பெருந்திண்டி,, பொருந்தா உணவு, காலந்தவறிய உணவு முதலியன நோய்க்கு அடி கோலுவன.
“நோய்' என்னும் சொற்குத் “துன்பம்” என்பது பொருள். உடலுக்குத் துன்பம் எப்பொழுது நேர்கிறது? அவ்வவ்வுறுப்பு, தன் தன் கடனை ஆற்ற இயலாது, தடைபடும்போது, அதாவது பிணிபடும்போது துன்பம் உண்டாகிறது. பிணிப்புக்கு அடிப் படை பெருந்திண்டி, பொருந்தா உணவு முதலியன. எனவே, துன்பத்துக்கு அதாவது நோய்க்குக் காரணம் பொருந்தா உணவு முதலியன என்க. உணவை ஓமழுங்குபடுத்தி வாழ்வோர்க்கு நோய் தோன்றல் அரிது. நோயற்ற வாழ்விற்கு ஓழுங்குபட்ட உணவு தலையாய காரணம் என்று கூறலாம்.
விரதம்
வேளை நாழி அறியாது, கண்டதை வயிற்றில் அடைத்து, நோய்வாய்ப்படும்போது, பலதிற மருந்துகளைப் பெண்மகள் உண்பது, அவள் தன் கொழுமையைக் கெடுப்பதாகும். பெருந் திண்டியால் உற்றநோய்க்கு மருந்து எற்றுக்கு? திண்டியின் பெருக்கமும், அரை குறை ஜீரணமும், இவற்றால் ஏற்படும் மலச் சிக்கலும், பழைய மலக்கட்டு உடலுள் பரப்பும் நஞ்சும் தொலைதற்கு விரதமிருத்தல் பொருத்தம். விரதம், வயிற்றினுள்ளேயுள்ள ஆபாசங்களைத் தள்ளி, உறுப்புக்களுக்கு ஏற்பட்ட பிணியையும் சோர்வையும் நீக்கி, உறுப்புக்களுக்கு ஊக்க மூட்டும். நோய் போக்கவல்லது நோன்பன்றி, மருந்தன்று என்பதைப் பெண்மக்கள் இளமையிலேயே உணரல் வேண்டும். இது குறித்துப் பின்னுங் கூறுவன்.
உண்டி சுருங்கல்
பெண்மக்கள் தங்கள் வாழ்விற்கு உணவும் துணை செய்வதென்பதைத் தெரிந்து நடப்பதும் ஒருவிதக் கல்விப் பயிற்சியாகும். ஓழுங்குபட்ட உணவைப் பெண்மக்கள் உண்டுவரின், அவர்களிடம் எந்நோயும் தலைகாட்டாது. “உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு' என்றார் நம் மூதாட்டியார். உண்டி சுருக்கத்தைப் பற்றி இதுபோழ்து மேல்நாட்டார் பல நூல்கள் எழுதி வருகின்றனர். அந்நூல்கள் பெரிதும் நமது பழைய முனிவரர் கொண்ட உணவு முறையையே அறிவுறுத்துகின்றன. “உண்டி சுருங்குதல்” எனில், நாடோறும் பட்டினி கிடப்பதன்று. உண்டிப் பெருக்கம் கூடாதென்பதே அதன் கருத்து. பெருந் தண்டி யால் மக்களுக்கு விலங்குணர்வு பெருகுவ தோடு நோயும் பெருகும். அதலால், மக்கள் உண்டிப் பெருக்கை ஓழிப்பார்களாக.
பொருந்தா உணவு
“பெண்” என்னுஞ் சொல்லிற்குச் “கட்புலனாயதோரா் அமைதித் தன்மை” என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது. அமைதிக்குரிய பொருளையே பெண்மக்கள் உண்பது நலம். புளி காரம் கலந்த பதார்த்தங்களும், அவை கலந்த ஊறுகாய்களும், புலால் - காப்பி - தேயிலை - கொக்கோ - ஓவல்டைன் முதலியவைகளால் செய்யப்படும் பான வகைகளும், கள் முதலிய மயக்கப் பொருள்களும் அமைதி குலைப்பனவாம். மக்கள் இவைகளைக் கனவினுங் கருதலாகாது.
அளவு கடந்த புளி காரம் கலந்த பதார்த்தங்களும், ஊறுகாய்களும் நமது நாட்டின் இரத்தத்தோடு கலந்துவிட்டன. அவற்றில் சுவை உண்டு என்பது சிலர் எண்ணம். சுவை என்பது இயற்கைப் பொருளில் இருப்பது. இயற்கைச் சுவையைக் கெடுக்கும் ஒன்று, சுவையாகக் கருதப்படுவது பழக்கத்தின் குற்றமாகும். பெருமிதப் புளி மிளகாய்க் கலப்பு, கொதிப்பை உண்டாக்கி, மக்கட்குச் சீற்றம் முதலிய தீக்குணங்களை எழுப்பும்.
“உப்பு, புளி, காரம் இருந்தால்தானே உடலுக்கு நல்லது” என்று நமது வீட்டுத் தாய்மார் சொல்வது வழக்கம். உப்பு - புளி - காரத்தில் மூழ்கியவர் இரண்டொரு நாள் அவற்றை விடுத் திருப்பின், அவர் வானத்தில் பறப்பதுபோலக் காணப்பெறுவர். மேலும் மேலும் அவர் அவற்றை நீக்கிவரின், நாளடைவில் அவற்றின் கொடுமை அவர்க்குப் புலனாகும். உப்பு - புளி - காரம் உண்போர், அவற்றைத் திடீரென விட வேண்டுவதில்லை. படிப் படியாக அவற்றைக் குறைத்து வருவது நலம்.
உப்பை அளவாக உபயோகித்து வரலாம். இயற்கைக் காய்கறிகளை உண்போர்க்கு உப்பே தேவையில்லை. காய்கறிகளைச் சமைத்துச் சாப்பிடுவோர் சிறிது உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். நாளடைவில் உப்பையும் நீக்க முயன்று வருவது சிறப்பு.
புளி கொடிய தென்று சொல்லப்படுகிறது. “காட்டுக்குப் புலி - நாட்டுக்குப் புளி' என்பது பழமொழி. புளியின் கொடுமை யுணர்ந்து, பழமொழி கண்ட நாடு, புளியில் தோய்ந்து கிடப்பது அநியாயம். புளிக்குப் பதிலாக எலுமிச்சஞ் சாறு சேர்க்கலாம். இதற்குப் பழச்சாறென்ற சிறப்புப் பெயரும் உண்டு. புளியில் விருப்புடையோர், அளவைச் சுருக்கி, அதைப் பயன்படுத்தலாம். புளியிலும் ஜீவசத்து இருத்தல் இக்கால அராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மிளகாயைப் பற்றி ஓன்றும் விரித்துக் கூற வேண்டு வதில்லை. பழைய காலத்தில் மிளகாய் நமது நாட்டில் இல்லை. அக்காலத்தில் காய்கறிகளிலும் ஊறுகாய்களிலும் மிளகாய் காரங் கலந்து நம்மவர் உண்டாரில்லை. நம்மவர் மிளகுநீர் உண்டாரேயன்று மிளகாய் நீர் உண்டாரில்லை. மிளகு ரசம் இப்பொழுது மிளகாய் ரசமாக மாறிவிட்டது. மிளகாய் நமது நாட்டில் இடைக்காலத்தில் நுழைந்தது. அதன்பாலுள்ள காரங்கண்டு, நம்மவர் அதை “மிளகு காய்' என்று அழைத்தனார் போலும்! அது மிளகுகாய் அன்று. நமது நாட்டு உணவுப் பொருளில் மிளகாய் ஒன்றன்று. மிளகாய்க்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம். மிளகாயைப் பயன்படுத்திப் பழகியவர் அதை ஓரளவில் பயன்படுத்துவது தீதாகாது. மிளகாயினும் ஒருவித ஜீவசத்து உண்டு. மிளகாயை அளவு கடந்து உபயோகிப்பது தவறு.
இரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் எழுப்ப வல்ல கார வகைகளை அமைதி வடி வாயிலங்கும் பெண்மக்கள் உண்ணாதிருப்பார்களாக, பெரிதும் உண்ணா-திருப்பார்களாக. பெண்மணிகள் இயல்புக்குச் சாத்துவிக உணவே பொருந்தியது. தாய் தந்தையர், குழந்தைகளுக்கு - சிறப்பாகப் பெண் குழந்தை களுக்கு - சாத்துவிக உணவு ஊட்டி வளர்ப்பாராக.
புலால்
எக்காரணம் பற்றியும் பெண்மக்கள் புலால் உண்ணல் கூடாது. பெண் மக்கள் அனைவரும் தூய உணவு அருந்துவதில் உறுதி கொள்ளல் வேண்டும். அப்பொழுது ஆணுலகும் திருந்தும். மன்பதைக்குப் (பெண்மக்களுக்கோ ஆண் மக்களுக்கோ) புலால் உணவு பொருந்தாததேயாகும். புலால் உண்ணாமையைப் பற்றி நம் நாட்டார் எழுதிய நூல்கள் பலப்பல. நம்மவர் ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கிடத்தி நூல்கள் எழுதினர். மேல் நாட்டாரும் புலால் உண்ணாமைய௰யைப் பற்றிப் பலப்பல நூல்கள் எழுதி வருகின்றனர். அவர் ஆராய்ச்சி வாயிலாக (உடல் நலங் கருதிப் புலால் உணவை மறுத்து வருகின்றனர். “புலால் உணவில் வீரம் உண்டு' என்று சொல்வது அராய்ச்சி இல்லாதார் கூற்று. அதை ஓதுக்குக. அறிஞர் ஏற்கத்தக்க முறையில், காரணங்காட்டி எழுதப்பட்டு வரும் நூல்களைப் படிக்குமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
புலால் உணவு குணத்தையும் கெடுக்கும், உடல் வளத்தையும் குலைக்கும். “புலால், உடல் வளந்தருவது” என்னும் கூற்றுக்கு அறிவு உலகில் இனி அதரவு இராது. புலால் உணவு, உடலுக்கு நலஞ் செய்வதன்று. நலத்துக்குப் பதிலாக அது நோய் செய்யும் என்க.
இயற்கையாகப் பெண்மக்களுக்கு அமைதிக்குணம் அமைந்திருக்கிறது. அமைதி, பெண்ணின் வாழ்விற்கு உரியது. அதைப் புலால் உணவு சிதைக்கும். இரஜோ குணத்தை எழுப்பி, மக்களைக் கெடுக்கும் புலாலை எக்காரணம் பற்றியும் பெண் மக்கள் உண்ணுதல் கூடாது.
பொருந்தாப் பானங்கள்
இக்கால நாகரிகம் என்னும் பெயரால், காப்பி- தேயிலை- கொக்கோ - ஓவல்டைன் - இவற்றால் செய்யப்படும் பானங்கள், உலக முமுவதும் பரவியிருக்கின்றன. நமது நாட்டிலும் - கூக்கிராமங்களிலும், குடிசைகளிலும் - அப்பானங்கள் குடியேறி விட்டன. காப்பிக் கடைகள் இல்லாத இடமில்லை. கட்குடியை ஓழிக்கப்பல தேசபக்தர் முயன்றனர். அம்முயற்சி காப்பிக் கடை மீது திரும்புங் காலம் என்று வரும்? கள்ளுக் கடைக்காதல் சில கட்டுப்பாடுகள் இருந்தன. காப்பிக் கடைக்கோ எவ்விதக் கட்டுப் பாடும் இல்லை. கள்ளுக்கும் காப்பிக்கும் பெரும் வேற்றுமை இல்லை. இருவருஞ் சகோதரர். கள்ளார் அண்ணனார்; காப்பியார் தம்பியார். இவ்வளவே வேற்றுமை. காப்பி முதலிய பானங்களால் விளையுங் கொடுமைகள் அறிஞரால் சொல்லப் படுகின்றன; எழுதப்படுகின்றன. அனால் அவற்றை ஓஒழித்தற்கு எவ்வித முயற்சியுஞ் செய்யப்படுவதில்லை.
காப்பியும், தேயிலையும், கொக்கோவும் வெம்மை நாட்டு மக்களை எப்படி அரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நாட்டில் காசம் - க்ஷயம் - நீரிழிவு முதலிய நோய்களைக் காப்பி முதலிய குடிகள் பெருக்கி வருகின்றன. கொடிய நோய்கட்கு இரையாகியும், அக்குடிகளை ஓழிக்க நம்மவர் துணிகிறாரில்லை. கூூயத்தால் பீடிக்கப்பட்டு, உடல் மெலிந்த பின்னர் - “டாக்டர்” அறிவுறுத்திய பிறகு - வேண்டா வெறுப்பாக அக்கொடிய குடிகளை அகற்ற நம்மவர் முயல்கின்றனர். இஃதென்ன அறியாமை? இளமை தொட்டே கொடிய பானங்களை நீக்கி வந்திருந்தால், காசத்துக்கும் க்ஷ்யத்துக்கும் மக்கள் இரையாக வேண்டுவதில்லை. கண்ணிருந்தும் குழியில் விமுகிறவர் நம்மவர்.
நகரப் பெண்மக்கள் நிலை
ஆண்மக்களில் நூற்றுக்கு ஐம்பது பேரின் நுரை ஈரல் கெட்டிருந்தால், பெண்மக்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேரின் நுரையீரல் கெட்டிருக்கும். நகரங்களிலுள்ள எப்பெண்மணி இருமாமலிருக்கிறாள்? வீடுகளில் அழகொழுகும் பெண் மக்களா நடமாடுகிறார்கள்? என்புக் கூடுகள் அல்லவோ நிற்கின்றன? பெண்ணுலகின் நிலை இஃதாயின், பின்சந்ததியின் நிலை என்னாகும்? வயிற்றைப் பற்றிய பலதிற நோய்களும், நீரிழிவு முதலிய கொடிய நோய்களும் பெண்ணுலகை அரித்து வருவதை விரித்தலும் வேண்டுமோ? இத்துணைத் துன்பங்கட்குக் காரணம் காபி, தேயிலை, கொக்கோ முதலியன என்றுணர்ந்தும், அவற்றை விட்டொழிக்க நம்மவர் மனங் கொள்கிறாரில்லை. காப்பி முதலிய குடிகள் மிகுந்துள்ள இந்நாளில், தாய் தந்தையர், பொதுவாகக் குழந்தைகளை - சிறப்பாகப் பெண் குழந்தைகளை- அக்குடிப் பயிற்சியினின்றுங் காப்பாராக.
காப்பி, தேயிலை, கொக்கோ முதலிய குடிகட்குப் பதிலாகத் தூநீர், நீர்மோர், பழச்சாறு, இளநீர் முதலியவற்றை மக்கள் அருந்தலாம். இவற்றால் உடலுக்குக் கேடில்லை. இவை உள்ளு அப்புக்களுக்கு எரியூட்டா; ஜீரணத்துக்கும், இரத்த ஓட்டத்துக்கும் ஈரல் (ம) களக்கத்துக்கும், பித்தச் சுரப்புக்கும் துணை புரியும்.
இயற்கை உணவு, அமைதிக்கும் அன்புக்கும் இன்பத்துக்கும் உரியது. குழந்தைமை தொட்டுப் பெண்மக்கள் பொருந்திய உணவு அருந்தி வளருமாறு செய்ய வேண்டுவது தாய் தந்தையர் கடன்.
நேரம்
உணவுக்குரிய நேரம், காலை - உச்சி - மாலை- என்று விளக்க வேண்டுவதில்லை. இப்பொழுது ஆறு முறை உண்போரும் உளர். அவர், இன்ப வாழ்வை இழந்தவர் என்பது எனது கருத்து. உணவுப் பெருக்கால் உடல் நலமுறாது. உணவை அளவாக அருந்தலே பொருத்தம். மூன்று வேளை உணவு நமது நாட்டு அறிஞரால் மறுக்கப்படுதலும் உண்டு. “மூன்று வேளை உண்பவன் ரோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, ஒரு வேளை உண்பவன் யோகி” என்றொரு வழக்குத் தொடர் இந்நாட்டில் உலவுகிறது. காலை மாலை இரண்டு வேளை எளிய உணவு ஏற்றுப் பகல் சிறிது கொழுமையான உணவு ஏற்பது நலம். மேலே குறிப்பிட்ட பொருந்தா உணவு போக, மிகுதியுள்ள நல்லுணவை அவரவர் வழக்கப்படி யே உண்டு வரலாம். உணவுடன் பழம் அருந்தல் நலம். ஆரஞ்ச் எவர்க்குந் தீமை செய்யாது.
உணவை மென்று மென்று வாயூறலோடு கலக்கச் செய்து விழுங்குவது நலம் பயக்கும். பிறவற்றைத் தனி நூல்களிற் காண்க.
உடை : நாகரிகம் முதிர முதிர மக்கட்கு உடை ஏற்பட்டது. உடையை, உடல் நலத்துக்கென அணிதல் வேண்டுமேயன்றி அடம் பரத்துக்கென அணிதல் கூடாது. உலகில் பெரும் பான்மையோர் அடம்பரத்துக்கென்றே உடை உடுத்துகின்றனர். இதில் பெண் மக்கள் பேர் பெற்றவர்கள். அடம்பர உடை ஒரு வரை உயர்த்து வதில்லை; அல்லாத உடை ஒருவரைத் தாழ்த்துவதுமில்லை. உயர்வு தாழ்வு உடையில் இல்லை.
உடை, அழகு நல்குகிறதென்றும், மதிப்பளிக்கிறதென்றும் எண்ணுவோரும் உளர். உடலில் இல்லாத அழகும், ஒழுக்கத்தில் இல்லாத மதிப்பும் உடையில் எங்கிருந்து முளைக்கின்றனவோ தெரியவில்லை! உடையில் அழகும் மதிப்பும் இருக்கின்றன என்று கருதுவோர், தம்பால் அழகும் மதிப்பும் இல்லாதவரா யிருத்தல் வேண்டும். இயற்கை அழகே அழகு; இயற்கை மதிப்பே மதிப்பு.
பெண்மக்களும் உடையும்
சில இடங்களில் “ஆண்மக்கள் தேடும் பொருளெல்லாம் பெண் மக்கள் புடவைக்கே செலவாகின்றன”' என்று சொல்வதுண்டு. பெண் மக்கள் விலையயர்ந்த புடவைகளை விரும்புவதற்குக் காரணம் என்னை? “உடை எதற்கு” என்னும் அறிவை ஊட்டக்கூடிய கல்வியை அவர்கட்கு இளமையிலேயே பெற்றோர் போதியா தொழிந்ததேயாகும். நல்லறிவுடைய பெண் மகள், விலை உயர்ந்த உடைகளை வாங்கித் தருமாறு எவரையும் வலியுறுத்தாள்; தூய - எளிய - நல்லுடையையே அவள் விரும்புவள். இளமையில் போதிய கல்வி கொடாது பெண்களை வளர்த்து விட்டால், அவர்கள் அழகும் மதிப்பும் ஆடம்பரத்தில் உண்டு என்றே கருதுகிறார்கள். இளமையிலே பெண்மக்கட்கு இயற்கை யழகு முதலிய நுட்பங்களை உணர்த்தத்தக்க கல்வி அளித்தல் வேண்டும். இளமையில் பெண்ணைக் தவறாக வளர்த்துப் பின்னை அவளை மாடென்றும் பேயென்றும் பேசுவதால் என்ன பயன் விளையும்? பெண்வளர்ப்பு, பெரிதும் தாயின் பொறுப்பில் இருப்பது. தாய், அடம்பர உடை அணிவதை, இளம்பெண் பார்த்துப் பார்த்துப் பழகினால், அப்பெண்ணும் வயதில் அவ்வுடைமீதே கருத்துச் செலுத்துவள். ஆதலால், தாய், எளிய நல்லுடை அணிந்து வாழ்வு நடாத்துவது குழந்தைக்குப் பெரும் பாடமாகும்.
ஆடம்பர உடைமீது கருத்தைப் பதிய வைத்துள்ள பெண்ணின் வாழ்வு, பின்னை நலமுறுதல் அரிது. நமது நாட்டில் எத்துணைப் பெண்மக்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, நாயகனையும் வஞ்சித்து, விலை உயர்ந்த புடவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்து, அழகு பார்த்து மகிழ்கிறார்கள். உடை எற்றுக்கு என்று இளமையில் உணராத குற்றமே இவ்வறி யாமைக்குக் காரணம்.
பெண்மக்களின் உடைக்கோலங்களோ உலகில் பலவிதம். அக்குப்பைகளை ஈண்டுக் கிளற வேண்டுவதில்லை. இரண்டெொன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
உடைச் சுமை
உடை, உடையாக இருக்க வேண்டுமே யன்றிச் சுமையாக இருத்தல் அகாது. தாங்க முடியாத உடைச் சுமைகளைச் சில பெண்மணிகள் சுமப்பதை யான் காண்கிறேன். “இவர்கள் தலை எழுத்தென்னோ! சுமை தாங்கச் சுமை தாங்கிகள் இருக்கும் போது, இவர்கள் ஏன் சுமை தாங்கிகள் அகிறார்கள்” என்று யான் நினைப்பதுண்டு. மேல்நாட்டுப் பெண்மணிகளும் முன்னே சுமைதாங்கிகளாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் தங்களைத் தாங்குபவர்களாய் விட்டார்கள். இந்தியப் பெண்மணி களின் உடைச் சுமையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உடைச்சுமை, உடல் நலத்தைக் கெடுப்பதென்பதைப் பெண் மணிகள் இளமையிலேயே உணரும் முறையில், அவர்களைப் பெற்றோர் வளர்ப்பாராக.
உடை இறுக்கம்
இன்னுஞ் சில இடங்களில் பெண்மணிகள் உடைகளை உடலில் இறுக்கி இறுக்கிப் பிணிக்கிறார்கள். இதனால் குருதி ஓட்டம் பிணிப்புண்டு தடைபடுகிறது. பிணிப்புண்ட இடத்தில் தொடக்கத்தில் நமை தோன்றும்; பின்னைப் புண் உண்டாகும், பின்னைச் சீமும் நீரும் ஒழுகும். சில இந்தியப் பெண்மக்கள் இடுப்பிலும், உடலைச் சுற்றிலும் புண் மலிந்த படைத் தழும்புகள் எழும்பி அவர்களை வருத்துகின்றன. இதற்குக் காரணம் அவர்கள் புடவையையும் இரவிக்கையையும் இறுகப் பிணித்துக் கட்டுவதேயாகும். உடைகளை இறுக்கிப் பிணிக்கும் பழக்கம் மேல்நாட்டுப் பெண்களிடையும் ஒருபோது இருந்தது. இப் பொழுது அப்பழக்கம் முற்றும் அவர்களிடை மறைந்து விட்டது. நமது நாட்டிலும் அது மறைதல் வேண்டும்.
உடையும் நாட்டியலும்
நமது இந்திய நாடு, குளிர் மிகுந்ததும் அன்று; வெம்மை செறிந்ததும் அன்று; இரண்டும் ஒப்ப நிற்பது. இந்நாட்டில் உடைச் சுமையும் இறுக்கமும் எங்ஙனம் புகுந்தனவோ தெரிய வில்லை. நமது நாட்டில் வாழும் மேல் நாட்டுப் பெண் மணிகள் இப்பொழுது மெல்லிய உடையை இலகுவாக அணிகிறார்கள்; இந்தியப் பெண்மணிகளின் உடைக்கோலமும் மாறுபட்டு வரு கிறது. மாற்றம் எத்தகையதாயினும் ஆக. சுமையும், இறுக்கமும், பிணப்பும் வேண்டா என்று மட்டுஞ் சொல்கிறேன்.
உடையியல்
பிறர் உள்ளத்தைக் கவரும் முறையில் உடைக்கோலஞ் செய்யும் பெண்மணிகள் நிலை குறித்து இரங்குகிறேன். தூய மனமுடைய ஆண்மக்கள் நெஞ்சையும் உடைக்கக் கூடிய வேடிக்கை உடைகளைச் சில பெண் மக்கள் அணிகிறார்கள். இப்பழக்கம் நிறுத்தப்படல் வேண்டும். உடையைக் கொண்டு ஒருவர் மனோநிலையை அறிஞர் உணர்தல் கூடும். அவரவர் நடைக்கேற்ற உடையையே அவரவர் விரும்புவர். ஒருவார் உடை கொண்டு அவரது நடையையும் அறிஞர் அளந்து கொள்ளலாம். இதை-யொட்டியே நடை உடை பழக்கம்' என்னுஞ் சொற்றோடர் வழக்குத் தோன்றியது போலும்! அமைதி வடிவங்களாகிய பெண்மக்கள், பிறர் மனத்தைக் கவரத்தக்க உடை அணிதல் பாவம், பாவம். அக் கவரல் பின்னைத் தன்னைப் பல வழியிலும் கெடுக்கும் என்பதைப் பெண்மகள் உணர்வாளாக. தய எண்ணம் உலவும் மனமுடைய அண்மக்கள் மனத்தையும் கவரக் கூடாத அமைதி பொருந்திய உடைக் கோலமும் உண்டு. அத்தகைய தெய்வீக எண்ணமூட்டக்கூடிய உடைக்கோலங் கொள்ளவே பெண் மக்கள் இளமை தொட்டுப் பழகல் வேண்டும்.
நூற்றல்
பெண்மக்கள் தங்கள் உடையைத் தாங்களே செய்து கொள்ளலாம். பெண்மக்கட்குப் பெரிதும் ஓய்வு உண்டு. அவ்வேளையில் அவர்கள் சில பல வீட்டுத் தொழில்கள் புரியலாம். வீட்டுத் தொழில்களுள் தலையாயது நூற்றல். நாடோறும் அரை மணி நேரம் ஒவ்வொருவரும் நூற்றால், அண்டுக்கு வேண்டப்படும் உடையை அவ்வவர்க்கு அந்நூல் அளிக்கும். இவ்வாறு பெண் மக்கள் தங்கட்கும், வீட்டிலுள்ள மற்றவர் கட்கும் உடை உதவலாம். அதலால், பெண்மக்கட்கு இளமை யிலேயே நூற்றல் கற்பித்தல் வேண்டும். அவர்கட் குத் தையல் பின்னல் முடைதல் முதலிய வீட்டுத் தொழில்களையும் கற்பிக் கலாம். மேல்நாட்டுப் பெண் மக்கள் ஓய்ந்த வேளைகளில் நகை களைப் பார்த்துப் பார்த்துக் களிப்புறார்கள். அவர்கள் சிறுசிறு வீட்டுத் தொழில்களைச் செய்து நாட்டுக்கு நலன் தேடுவார்கள். இளமையில் பெண்மக்கட்கு வீட்டுத் தொழின் முறைகளும் போதிக்கப்படலாம். பின்னை வாழ்விற்கு அத்தொழின் முறைகள் எவ்வளவோ துணை செய்யும். நூற்றல் முதலிய தொழின் முறை கள் கற்பையும் காக்கும் என்று அறிஞர் கூறுகின்றனர். இது குறித்து, “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூலிலும் விளக்கியிருக்கிறேன். இது நிற்க.
நகை : நமது நாட்டுப் பெண்மக்களுக்கு மற்றுமொரு பித்து உண்டு; அதாவது நகைப் பித்து. இப்பித்து ஓழிதற்கு எத்துணை நாளாகுமோ அறிகிலேன். இந்நாட்டுப் பெண்மக்கள், “நகை களில் தான் அழகுண்டு - இன்பமுண்டு - வாழ்வுண்டு - எல்லா மூண்டு' என்று கருதுகிறார்கள். நகையணியும் நாயகனை நன்னாயகனென அவர்கள் போற்றுகிறார்கள். பெண்மக்கள் பட்டினி கிடந்தேனும், இழிதொழில் செய்தேனும், பொருளீட்டி, நகையணியவே முயல்கிறார்கள். இதற்குக் காரணம், அண் மக்கள் பெண் மக்களின் உரிமையைக் கடிந்து, அவர்கள் அறிவைக் கெடுத்து, அவர்களைக் காமப் பொருளாக் கருதி, நகைகளால் அணிசெய்து களிப்புற்றதென்று யான் கூறுவேன்.
நகைப்பித்து
நீண்ட நாள் பழக்கம் இப்பொழுது நாட்டை வருத்துகிறது. சிறு வருவாயுள்ள ஒருவனுடைய நாயகியும், தன் நாயகனை வஞ்சித்தும், தன்னை வஞ்சித்தும் பொருள் சேர்த்து, நகை வாங்க எண்ணுகிறாள். பட்டினியால் நோய் மிகுந்து உயிர் போகும் வேளையிலும் நகைப்பித்து அவளை விட்டு ஒழிவதில்லை. பெண்மகள் இறந்த பின்னரும், அவளது அறிகுறியாக அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த உடைகளையும் பூண் களையும் நடுவீட்டில் வைத்து அவளுடைய உறவினர் போற்று கின்றனர். நகைகள் நடுவீட்டில் தெய்வங்களாகவும் போற்றப் படுகின்றன! நமது நாட்டுப் பெண் மக்களுக்கு நகைமீதுள்ள பித்தை இந்நூல் முற்றும் எழுதிக் கொண்டே போகலாம்.
நகையால் இரக்கமழிதல்
நகைப்பித்தால் சில இடங்களில் பெண்மக்கள் வாழ்வே குலைகிறது. ஒருத்திமீது எத்துணை ஆயிரம் ஆயிரம் ஏறிஏறி நிற்கின்றன! எத்துணை ஏழை மக்கள் உழைப்பு, பட்டினி, துயரம், கண்ணீர் ஒருத்தியின் கழுத்திலும் காதிலும் தலையிலும் ஏறி நிற் கின்றன! ஒருத்திமீதுள்ள ஒரு நகை எவ்வளவோ ஏழை மக்கட்கு உணவளிக்கும்) உடையளிக்கும், தொழிலளிக்கும். ஏழை மக்களின் கலி தீர்க்கவல்ல பொருள், நகைச்சுமையாய்க் கிடப்ப தால் என்ன பயன்? நகையில் அழகு உண்டா? அன்பு உண்டா? என்ன உண்டு? “அண்டை வீடுகளில் ஏழைமக்கள் பட்டினியால் வருந்த, யான் இவ்வளவு நகைகளைச் சுமந்து கொண்டிருப்பது அறமா: என்று நகைப் பித்துடைய பெண் இரங்குவாளா? நகைப் பித்து, பெண்ணின் இயற்கைக் குணமாகிய இரக்கத்தையும் சிதைக்கிறது!
நகையால் தீயொழுக்கம்
மூடப் பெண்ணின் நகைப்பித்து ஏழைமக்களைத் தீய ஒழுக்கத்திலும் இறங்கச் செய்கிறது; அவர்களைப் பொறாமையறச் செய்கிறது; களவாடச் செய்கிறது; சில வேளைகளில் கொலையும் நிகழ்த்தச் செய்கிறது. நகையின் கொடுமை என்னே! என்னே! “ஓழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றார் திருவள்ளுவனார். கல்வியறிவில்லாப் பெண்மக்கள், ஓழுக்கத்தினும் நகையையே பெரிதும் ஓம்புகிறார்கள்.
நகையும் உடல் நலனும்
நகைச் சுமையால் உடலுக்காதல் நலன் உண்டேடோ? ஓன்று மில்லை. உடல் நலத்துக்கென முத்துமாலை, பவளமாலை, மணிபதிந்ததோடு முதலியவற்றை அணியலாம். சில மணிகளால் உடலுக்கு நலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பொன்னுக்கும் அக்குணம் உண்டாம். உடல் நலத்துக்கென ஏற்பட்ட இவை, பின்னாளில் வெறுஞ்சுமை - சுமைகளாக அணியப்பட்டன. இப்பொழுது முத்து முதலியவற்றின் குணநலன் கண்டு, எப்பெண்ணும் அவற்றை அணிவதில்லை. குணங்கண்டு அவற்றைப் பெண் அணிவளேல், சுமை சுமையாக அணியமாட்டாள். கலன்களாகவே அவை இப்பொழுது அணியப்படுகின்றன. குணங்கண்டு நகைகளை அணியும் நல்அறிவு, மக்களுக்கு இருக்குமேல், போலி முத்து- பவளம் - மாணிக்கம் - இவற்றை ஏன் அவர்கள் அணிகிறார் கள்? சுகாதார முறைகளை நாடோறும் ஓழுங்காகக் கவனித்து, வாழ்வு நடாத்தும் பெண்மகள், உடல் நலத்துக்கெனவும் நகைகளை அணிய வேண்டுவதில்லை. இப்பொழுது உடல் நலத்தைக் கெடுக்கும் சுமையாக வன்றோ நகை துயர் செய்கிறது? நகைப்பித்து, உள்ளத்தில் நுழையாதவாறு, பெற்றோர் தம் பெண்மக்களை இளம் பருவத்திலேயே இயற்கை வழியில் வளர்த்துவரல் நலம்.
தலைமயிர் : பெண்மக்கள் தலைமயிரைப் பற்றி இரண்டோர் உரை கூற விரும்புகிறேன். தலைமயிர் உடையன்று. அஃது இயற்கைப் பொருள். அதையும் உடை போலச் சில பெண்மக்கள் கருதுவதால், அதன் நினைவு எனக்கு இங்கே தோன்றிற்று. இயற்கைத் தலைமயிரைச் செயற்கை உடையெனக் கருதி, அதைப் பலவாறு அலைத்தல் அறியாமை. பெண்மக்களிற் சிலர், தலை மயிரை இப்பொழுது பலவாறு திரித்து வருகின்றனர். பெண் மக்கள் தலைமயிரைக் கெடுத்துவரல் அழகுக்கும் சுகாதாரத்துக் கும் ஊறு செய்வதாகும். பெண்மக்களுக்குத் தலையில் குறைந்தது பன்னிரண்டங்குலம் நீண்ட மயிர் இருப்பது சிறப்பு. இயற்கையில் அமைந்த மயிரைச் செயற்கை யால் மாறு படுத்தவது வீண்.
அழகு
கல்வி அறிவு ஒழுக்கத்தானும், நல்லோர் இணக்கத்தானும், நல்வழியில் உடலோம்புவதானும், பொருந்திய உணவு கொள்வ தானும், அன்புக் கடவுளைப் போற்றுவதானும், இயற்கையோடு இயைந்து வாழ்வதானும் வளர்ந்துவரும் பெண்ணின்பால், கண்ணுக்குப் புலனாகாத அழகுத் தெய்வம் கோவில் கொள்ளும்.
கூய மனத்தால் கற்பும், கற்பால் நல்லுடலும், நல்லுடலால் அழகும் அரும்புதல் மேலே விளக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மூலம் அகத்தூய்மை. அகத்துரய்மை புறத்தே அழகாக அரும்பும். அழகுத் தெய்வம் வீற்றிருக்கும் பெண்ணே நன் மனமுடையாள்; நிறையுடையாள்,; நல்லுட லுடையாள்' என்று கூறல் மிகையாகாது.
பெண்ணின் உற்ற வயதில் அழகு திரண்டு ஓளி வீசும். அழ கொளி அண்டவன் அருளொளி போன்றது. அண்டவன் அழ கொளியாலும் உலகம் (பிள்ளைப்பேறு) மலர்கிறது. அண்டவன் படைப்பு நோக்கத்தை நிறைவேற்ற வந்தவளல்லளோ பெண்? அப் பெண்ணின் கற்புத் தண்மையால் அரும்பும் அழகு, அன்பருக்குத் தெய்வமாகும்; புலவருக்குப் பாட்டாகும்.
அழகோவியம்
அகிலத்துள்ள இயற்கை வனப்பெல்லாந் திரண்டு பெண் தெய்வமாகிக் காட்சியளிக்கின்றன. “பெண்ணின் முகம் எனது புத்தகம்' என்று அறிஞர் பைரன் என்பார் கூறியிருக்கிறார். இயற்கை வனப்பை ஓரிடத்தில் திரட்டிக் காட்சியளிக்கும் ஒரு பெரும் அழகு நிலையம் என்றும் பெண்ணைக் கூறலாம். அத் தகைய ஒரு நிலையத்தை எச்சொல்லால் சொல்வது? எவ்வெழுத் தால் எழுதுவது? தெய்வச் சேக்கிழார் என்னும் ஓவியர் அவ் வழகு நிலையத்தை எழுத்தோவியமாக எழுதியுள்ளார். அவ் வோவியத்தை நோக்குவோமாக:
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வே
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ.
ஓவியநான் முகனெமுத ஓண்ணாமை உள்ளத்தான்
மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ.
அழகு நிலையத்தைப் படத்தில் பார்ப்பதினும் பாட்டில் பார்ப்பதில் இன்பம் உண்டு. வீடுகளில் தெய்வ உருவங்களின் படங்கள் தூங்குவதைக் காட்டினும், அவ்வுருவங்களின் பாட்டுகள் தூங்குவது சிறப்பு.
பேய்ச் சோதனை
உற்ற வயதடைந்து, வயதுக்கேற்ற உறுப்பு உரம் பெற்று நிற்கும் “புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடி” தனது உற்றவயதுன்னி, அகத்தூய்மை கெடுக்கும் எதையும் எண்ணுதலும் கூடாது. அவ்வெண்ணம் கொடியை எரித்து விரை போக்கும். எத்துணைப் பேய்ச் சோதனைகட்கும் விரைக் கொடி. இடந்தாராது வளர்வாளாக. அவள் பேய்ச் சோதனைக்கு இடந்தருவது, பின்னைத் தன்மாட்டுக் கனியவேண்டிய தாய்மையைக் கெடுப்பதாகும். பெண் வாழ்வின் நோக்கம் தாய்மைப்பேறு என்று முன்னருஞ் சொல்லப்பட்டது. சிறு கவலை ஈனத்தால் பெரும் பயனை இழப்பது அறிவுடைமை யாகாது. தாய்மைக்குரிய கற்பையும், உடலையும், அழகையும் அழிப்பவள் பெரும் பாவி. அவள் இவ்வுலகிலேயே நரகத் துன்பம் எய்துவள். தாய்மை நினைவின்றிக் கெட்டழிந்த பெண் மக்கள் கதைகள் பற்பல. அதலால், சகோதரிகள், “இவ்வுடல், இவ்வழகு, இவ்வாழ்வு எல்லாம் தாய்மைப் பேற்றிற்கு” என்று ஒழுங்குபட்ட வாழ்வு நடாத்துவார்களாக. நல்வாழ்வு நடாத்தும் பெண்ணிற்குத் தாய்மைப் பேறு இறையருளால் காலத்தில் உண்டாகும்.
அழகொழமுக நிற்கும் பெண்மக்களிற் சிலர் மனத்தை வேறு வழியில் விடாமலும், திருமணம் விரும்பாமலும் வாழ்கின்றனர். இவ்வாழ்வுங்கூடாது. இதனால் வாழ்வின் நோக்கம் நிறை வேறாது, அரை குறையாய் அழிந்துபடும். ஒருவனோடு வாழாத ஒருத்தி முழுப் பெண்தன்மை எய்தினவள் அல்லள். ஒத்தநலனும், ஒத்த கல்வியும், பிறவும் உடைய ஒருவனுடன் ஒருத்தி வாழ்ந்து, தாய்மைப் பேறு பெற்று, அன்பு நிலையைக் காண்டல் அறிவுடைமை. இது பெண்ணின் பெருமையுமாகும். இது குறித்துச் சிறிது விரிவுரை கூற விரும்புகிறேன்.
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிரவா இசையே என்கோ
தாழிருங கூந்தல் தையால் நின்னை. - இளங்கோ அடிகள்
அழகெனும் அழகுமேோரர் அழகு பெற்றதே. - கம்பர்
---------
5. இறைவழி
(பெண்பாதி ஆண்பாதி ஒன்றல் முழு மனிதத்தன்மை – இயற்கையின் நோக்கு – இறைவழி நிற்றல் – பிரவர்த்தி நிவர்த்தி – படைப்பு நோக்க நிறைவேற்றம் – இல்லறத்திலிருத்தல் – படைப்புப் பொருள் – உயிர்களின் வரவு – அவ்வரவுக்குத் துணை- ஆண்டவன் உதவி – கடவுள் படைப்பு நிகழ்த்தும் முறை – உடலமைப்பின் நுட்பம் .- தனித்த வாழ்வு கூடாது).
யாவரும் மடந்தைமாரோ டில்லறத் தொழுகும்கன்மை
மேவரப் பணித்தான். - கச்சியப்பர்
தனித்த வாழ்வு
பெண் கற்பன கற்று, கேட்பன கேட்டு, நல்வழியில் வளர்ந்து உற்ற வயதடைந்து நிற்கிறாள். இவ்வாறே ஆணும் வளர்ந்து உற்ற வயதடைந்து நிற்கிறான். பின்னர் இருவர் நிலையும் எங்ஙனம் முற்றுறல் வேண்டும்? அவள் அங்ஙனே தனித்தும், இவன் இங்ஙனே தனித்தும் வதிந்து மாய்தல் வேண்டுங்கொல்? இல்லை, இல்லை. இருவரும் தனித்தே நின்று சாவாராயின், அவரது பிறவி நோக்கம் நிறைவேறாது.
முழு மனிதத் தன்மை
பெண் ஆண் சேர்ந்த ஒன்றே வாழ்வு என்பது. வாழ்வின் ஒருபாதி பெண்; மற்றொரு பாதி ஆண். இரு பாதியாக இவர் எத்துணைநாள் உலகில் உறைவது? இரு பாதியும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. இத்தன்மையைப் பெறுதற்கென்றே பெண் ஆண் வடிவங்கள் இயற்கையில் அமைகின்றன. இல்லையேல் வடிவங்கள் வேறுவழியில் அமையலா மல்லவோ? படைப்பில் வடிவங்கள் அமைந்துள்ள ஒழுங்கை நோக்குழிப் பெண்ணுக்கும் அணுக்கும் உள்ள இயற்கைத் தொடர்பு நன்கு புலனாகும்.
இயற்கையின் நோக்கு
தனித்து ஒரு பாதியாக நிற்கும் பெண்ணையும், தனித்து மற்றொரு பாதியாக நிற்கும் ஆணையும் இயற்கை கூட்டும் அழகை என்னென்று சொல்வேன்! இருவர்பாலும் உற்ற வயதில் ஒருவித இன்ப உணர்வு எழுகிறது. இவ்வுணர்வு ஏன் எழுதல் வேண்டும்? இதற்கு ஏதாயினும் பொருள் இருத்தல் வேண்டு மன்றோ? இவ்வுணர்வே இரு பாதியையும் ஒன்றாகப் பிணித்துப் பிறவி நோக்கை நிறைவேற்றும் இயற்கை அன்புக் கயிறென்க.
இறைவழி நிற்றல்
இறைவன், பிறப்பில் பெண் ஆண் வடிவ அமைப்பு வகுத்து, இரண்டையும் ஒருமைப்படுத்த இயற்கையில் இன்ப உணர்வு அளித்துள்ள நுட்பத்தை ஓர்ந்து, ஒருத்தியும் ஒருவனும் அன்பால் ஓன்றி வாழ்வது, அவ்விறைவன் வழி நிற்பதாகும். அங்ஙனமின்றி, இருவரும் தனித்து நின்று, இறைவனை மட்டும் வழிபடல், அவ்விறைவன் வழி நிற்பதாகாது.
போலித் துறவு
இறைவன் ஆணைவழி உலகில் ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் வாழ்வே பெரிதும் நடைபெறுகிறது. இறைவழியே உலகம் இயங்கி வருகிறது. இதைப்பற்றி விரிந்த பேச்சும் வேண்டுவதில்லை; எழுத்தும் வேண்டுவதில்லை. ஆயினும், இடைக் காலத்தில் இறைவழிக்கு மாறுபட்ட போலித்துறவு என்னும் ஒன்று தோன்றி, அருள் நெறிக்கு இடையூறு செய்து வரலான், அதுபற்றிச் சில உரையாதல் பகரவேண்டுவது எனது கடன்.
பிரவர்த்தி நிவர்த்தி
“பெண்ணும் ஆணும் கூடி வாழ்வது இறைநெறியல்லாத “பிரவர்த்தி மார்க்கம்” என்றும், பெண் ஆணைத்துறந்தும், ஆண் பெண்ணைத் துறந்தும், தனித்து நின்று தவங்கிடப்பதே இறை நெறி நிற்கும் “நிவர்த்தி மார்க்கம்” என்றும் பெரியோரும் நூல்களும் முழங்கா நிற்க, நீவிர் முற்றும் மாறுபட்ட இறைவழி குறிப்ப தென்னை? என்று சிலர் வினவலாம். இதற்கு ஒல்லும் வகை பொருந்திய விடை பின்னை இறுப்பன். ஈண்டு எடுத்துக் கொண்ட “இறைவழி” என்பதற்கு ஏற்பச் சிறிது கூறுகிறேன்.
கடவுள் வழி நிற்றல்
பெண்ணும் ஆணும் பிரிந்து வாழ்தல் நிவர்த்தி என்று கருதுவோர், கடவுள் வழி விடுத்து வேறுவழிச் செல்வோராவர். கடவுள் படைப்பு முயற்சிக்குத் துணை செய்யா-தொழிவோர், எங்ஙனம் கடவுள் வழி நிற்போராவர்? இறைவன் படைப்புத் தொழிலை எவர் பொருட்டு நடாத்துகிறான்? தன் பொருட்டா? உயிர்கள் பொருட்டே அவன் அத்தொழிலை நடாத்துகிறான். அவன் முயற்சிக்குத் துணை நில்லாதார், எங்ஙனம் அவனிடத்தும் உயிர்களிடத்தும் அன்புடையவராவார்?
கடவுளின் படைப்புத் தொழிலைப் பற்றிப் பல திறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. அவை சமயவாதங்களின் பாற்படும். அவற்றுள் நுழைய வேண்டுவதில்லை. வாதம் இந்நூலிற்கு வேண்டற்பாலதுமன்று.
படைப்பு என்பதன் பொருள்
கடவுள் ஓரிடத்திருந்து கையால் படைப்புத் தொழில் செய்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை. கடவுள் தூய அறிவு. அதற்கு இருவித நிலை உண்டு. ஒன்று கடந்த நிலை; மறி றொன்று கலந்த நிலை. முன்னையது பேச்சு எழுத்துக்களையும் தாண்டித் தனித்து நிற்பது. இங்கே பின்னையதே தேவை. இஃது இன்ப அன்பாக யாண்டும் நீக்கமறக் கலந்து நிறைந்துள்ளது. இந்நிலைக்கு இறை என்ற பெயர் வழங்கப்படுகிறது. இறை யாண்டும் இறுத்தலையும் இருத்தலையும் உடையது. இவ் விறை, இயற்கை வாயிலாகத் தன் வினைகளை ஆற்றி வருகிறது. அவ்வினைகளுள் ஒன்று “படைப்பு: என்பது. “படைப்பு” என்பது இல்லாத ஒன்றையோ அல்லது இல்லாத ஓன்றினின்றும் ஒன்றையோ புதிதாக உண்டு பண்ணுவதன்று. உள்ள ஒன்றே காரியப்படுவது “படைப்பு” என்று சொல்லப்படுகிறது. அதற்குக் “கடவுள்” என்னும் அறிவு, நிமித்தமாக நிற்றலான், அது “கடவுள் படைப்பு” என்று வழங்கப்படுகிறது. இஃது உபசாரம்; உண்மை யன்று.
இனி எடுத்த பொருள்மீது செல்வோம். ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழாதொழிவது, கடவுளிடத்தும் உயிர்களிடத்தும் அன்பின்மையை எங்ஙகனங் குறிக்கும் என்பதைச் சிறிது ஆராய்வோம்.
அறிவு அறியாமை முதலியன
எவ்வாராய்ச்சிக்கும் கண்ணுக்குப் பொருளாக உள்ள உலகையும், அநுபவத்தையும் அடிப்படையாகப் கொள்வது வழக்கம். அவ்வழிபற்றி யானுஞ் செல்கிறேன். இவ்வுலகில் யான் பிறந்தேன்; வளர்கிறேன். எனது அநுபவத்தில் அறிவு அறியாமை, இன்பதுன்பம், ஒளி இருள், நினைப்பு மறப்பு ஆகிய இரு நிகழ்ச்சியும் என் மாட்டு உறுதல் காண்கிறேன். முழு அறிவோ, முழு இன்பமோ, முழு ஒளியோ, முழு நினைப்போ தோன்றக் காண்கிறேனில்லை. அவ்வாறே முழு அறியாமையோ, முழுத் துன்பமோ, முழு இருளோ, முழு மறப்போ தோன்றக் காண் கிறேனில்லை. இவ்வுலகில் இரண்டும் விரவியே நிற்கின்றன. எனக்கு அறிவும் விளங்குகிறது; என்னை அறியாமையும் மறைக் கிறது. என்னில் இன்பமும் எழுகிறது; என்னைத் துன்பமும் சூழ்கிறது. நான் ஒளியையும் காண்கிறேன்; இருளையும் பார்க்கிறேன். எனக்கு நினைப்பும் உண்டு; மறப்பும் உண்டு.
இச்சிறு அறிவு - இன்பம் - ஒளி - நினைப்பு - கொண்டு, முழு அறிவு - இன்பம் - ஒளி - நினைப்பு - உண்மையை நிறுவலாம். அங்ஙனே சிறு அறியாமை முதலியவற்றைக் கொண்டு, முழு அறியாமை முதலியவற்றையும் நிறுவலாம். முதலின்றிச் சினை, அதாவது உறுப்பு எங்ஙனந் தோன்றும்? எனவே, முழு அறிவு முதலியன நிலவும் இடத்துக்கும், முழு அறியாமை முதலியன மலியும் இடத்துக்கும் இவ்வுலகம் இடைப்பட்டதென்க.
உயிர் வரவு
இவ்வுலகில் வாழும் யான் யாண்டிருந்து ஈண்டுப் போந்திருப்பேன்? முழு அறிவு - இன்பம் - ஒளி - நினைப்பு - உள்ள ஓரிடத் திருந்தா அல்லது முழு அறியாமை - துன்பம் - இருள் - மறப்பு - செறிந்த ஓரிடத்திருந்தா ஈண்டுப் போந்திருப்பேன் என்பது சிந்திக்கற்பாலது. முழு அறிவும் - இன்பமும் - ஒளியும் - நினைப்பும் நிலவும் ஓரிடத்திருந்து, அறிவும் அறியாமையும் - இன்பமும் - துன்பமும் - ஒளியும் இருளும் - நினைப்பும் மறப்பும் விரவி நிற்கும் இவ்வுலகை யான் ஏன் நோக்கல் வேண்டும்? நிழலில் வாழும் ஓருவன் கானலில் வாழ ஒருப்படுவனோ? கானவில் வருந்தும் ஒருவன் நிழலை நாடி ஓடுதல் இயல்பு. அகவே, யான் முழு அறியாமை - முழு துன்பம் - முழு இருள் - முழு மறப்பு - செறிந்த இடத்திருந்தே, இரண்டும் இலங்கும் இவ் வுலகம் போந்திருப்பேன். ஈங்கிருந்து - முழு அறிவு - முழு இன்பம் - முழு ஒளி- முழு நினைப்பு - பெற முயன்று வருகிறேன்.
வரவுக்குத் துணை
முழு அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில், எனது நிலை யுணராது செயலின்றிக் கிடந்த யான், இவ்வுலகிற்கு எப்படி வந்தேன்? எனக்கோ அந்நிலையில் அறிவு விளக்கமும் இல்லை; செயலும் இல்லை. பாம்பு தீண்டிய ஒருவனது நிலைக்கு எனது நிலையை ஒப்பிடலாம். அந்நிலையிலிருந்த யான், பிறர் துணையின்றி, இங்கு எங்ஙனம் வருதல் கூடும்? ஒருவர் துணை கொண்டே யான் ஈண்டுப் போந்திருத்தல் வேண்டும்.
துணைவர் இயல்
அவ்வொருவர் யாவர்?£2 அவர் எத்தன்மையராய் இருத்தல் வேண்டும்? அவர் என்னைப்போல அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில் கிடப்பவராய் இருத்தல் கூடாது. அறியாமைத் துன்ப இருளில் செயலின்றிக் கிடப்போர், அந் நிலையிலுள்ள மற்றொருவர்க்கு என்ன செய்தல் கூடும்? குருடனுக்குக் குருடன் வழிகாட்டிய கதையாகவே முடியும். ஆதலால், அறியாமைத் துன்ப இருட்கட்டில்லா ஒருவரே, எனக்குத் துணை நின்று, இவ்வுலக வாழ்வை நல்கியிருத்தல் வேண்டும். அவ்வொருவரையே உலகம் கடவுள் என்று போற்றுகிறது.
அறிவு அறியாமை இயல்
கடவுள், அறியாமை - துன்பம் - இருள் - மறப்பு - முதலிய எக்கட்டும் இல்லாதவர் என்பதை ஈண்டுப் பெரிதுங் கவனித்தல் வேண்டும். எக்கட்டுமில்லாத கடவுள், கட்டில்லா அறிவாய் இன்பமாய் ஒளியாயிருத்தல் வேண்டுமென்பதற்கு விளக்கமுந் தேவைகொளல்! கட்டில்லா அறிவில் என்றும் இன்பம், அன்பு, இரக்கம், பிறர்நல நாட்டம் முதலிய அருட்குணங்கள் இருத்தல் இயல்பு. இதனை வலியுறுத்த வேறோர் எடுத்துக்காட்டும் வேண்டுவதில்லை. மக்களாகிய நமது அநுபவமே சாலும். நமது அறிவு, கட்டினின்றும் நீங்கி விளக்கமுறும்போது, நம்மாட்டு, அன்பு, பொறை, இரக்கம், பிறர்க்குதவல் முதலிய நற்குணங்கள் தோன்றுதலை உணர்கிறோம். நம்மாட்டு அறியாமை மிகுந்து நிற்கும் போது, அவா, பொறாமை, வன்கண்மை, பிறர்க்குக் கேடு சூழல் முதலிய தீக்குணங்கள் எழுதலை அறிகிறோம். நல்லெண்ணங்கட்கும் இன்பத்துக்கும் பிறப்பிடம் அறிவு என்பதும், தீய எண்ணங்கட்கும் துன்பத்துக்கும் தோற்றுவாய் அறியாமை என்பதும் அவரவர் அநுபவத்தில் உணரக் கிடப்பனவாம். கட்டினின்றும் வெளியாகும் அறிவிற்கே அன்பு இரக்கம் முதலிய குணங்கள் உண்டெனில், அநாதியாக எக்கட்டுமின்றி என்றும் அறிவாய் ஒளிரும் பரம்பொருளிடத்து எத்தகைய அன்பு - எத் தகைய அருள் - இருக்கும் என்பதை எழுத்தால் எழுதல் முடியாது. அன்பே அது; அருளே அதன் வடிவம்.
அருளியல்
நீரில் தண்மை போலவும், நெருப்பில் வெம்மை போலவும், மலரில் மணம் போலவும் ஆண்டவனிடத்தில் அருட்குணம் இயல்பாய் அமைந்திருக்கிறது. அவ்வருள் வாளா கிடக்குமோ? ஒவ்வொன்றும் தன் தன் வேலையை நிகழ்த்துவதுபோல, அருளும் தன் வேலையை நிகழ்த்தி வருகிறது. ஒருவருக்கு அருள் - இரக்கம் - தயை பெரிதும் எப்பொழுது சுரக்கிறது? பிறர் துன்பம் காணும் பொழுதன்றோ? உயிர்களின் துன்பத்தைக் காணக் காண இறையருள் சுரந்த வண்ணமிருக்கிறது. உயிர்களின் துன்பத்துக்கும் ஓய்வில்லை; ஆண்டவன் அருள் சுரப்புக்கும் ஓய்வில்லை. உயிர்களிடத்துத் துன்பமுள்ள மட்டும் ஆண்டவன் அருளும் சுரந்து கொண்டே-யிருக்கும். இரண்டின் எல்லை கண்டு கூறல் எவரால் இயலும்? ஆகவே இரண்டும் அநாதி யென அறிஞர் கூறுகின்றனர்.
ஆண்டவன் உதவி
உயிர்கள் அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில் கட்டுப்பட்டுக் கிடப்பதைத் திருவருளையே திருமேனியாக உடைய ஆண்டவன் கண்டு வாளா கிடப்பனோ? ஆண்டவன், அவைமீது இரக்கஞ் செலுத்தி, அவற்றைத் துன்பத் தினின்றும் நீக்கித் தன்னைப் போலாக்கத் திருவுளங் கொள்கிறான். அறிவு விளக்கமும் செயலுமின்றிக் கிடக்கும் உயிர்கள் மீது, ஆண்டவன் அருளொளி பட்டதும், அவைகட்குத் தனு கரண புவன போகங்கள் கூடுகின்றன. “கண்ணுதலோன் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி” என்றார் மாணிக்க வாசகனார். கட்டிற் கிடந்த உயிர் கட்குத் தனு (உடல்) முதலியன கிடைத்ததும், அவை சிறிது அறிவு விளக்கமும் செயலும் பெறுகின்றன. இந்நிலையே, அறிவு அறியாமை, இன்ப துன்பம், ஒளி இருள், நினைப்பு மறப்பு முதலிய இரண்டும் கலந்த உயிர்களின் இவ்வுலக வாழ்வென்க. இந்நிலையி-னின்றும் முழு அறிவு விளக்கம் பெற்று, முழு இன்பநிலை எய்த முயல வேண்டுவது உயிர்களின் கடமை.
அறியாமைத் துன்ப இருட்கட்டில் கிடந்த உயிர்கள், அறிவு விளக்கமும் செயலும் அடையும் பொருட்டு ஆண்டவன் புரியுந் துணையன்றோ துணை! ஆண்டவன் உயிர்கள் மீது கொண்டுள்ள அருட் பெருக்கிற்கோர் அளவும் உண்டே? அப்பெருக்கை ஏழையேன் என்னென்று புகல வல்லேன்?
கடவுள் படைப்பு நிகழ்த்தும் முறை
இனித் துன்ப இருட்கட்டில் கிடக்கும் உயிர் கட்குத் “தனு” என்னும் உடலை, இறைவன் எவ்வழியில் கூட்டுகிறான் என்பதை உன்னுவோமாக. கட்டிற்கிடக்கும் உயிர்களை, இறைவன் தனது கையாற் பிடித்துத் தூக்கி, உடல் தந்து, அவற்றை இவ்வுலகில் கொணர்ந்து விடுகிறானில்லை. இறைவனோ கைகால்கள் இல்லாதவன். பின்னை எவ்வழியில் அவன் தன் படைப்புத் தொழிலைச் செய்கிறான்? அவன் எதையும் இயற்கை வாயிலாக நிகழ்த்துகிறான். இறைவன் இயற்கையில் நீக்கமறக் கலந்து நிறைந்திருப்பவன். அண்டபிண்ட சராசரங்களெல்லாம் அவன் வடிவம். அவன் எங்கும் பொருந்தி இருத்தலால், அவனை “இறைவன்” என்று போற்றுகிறோம். எங்கும் அறிவாகக் கலந்து நிற்கும் இறைவன் ஓரிடத்திருந்து படைப்புத் தொழிலைச் செய்கிறானில்லை. அவனது படைப்புத் தொழில் அங்காங்கே எங்கணும் நிகழ்கிறது. இயற்கை வாயிலாக இறைவன் எல்லாஞ் செய்கிறான். உடல் தாங்காமற் கிடக்கும் உயிர்களின் தோற்றத் துக்கென, உடல் தாங்கித் தோன்றியுள்ள உயிர்களிடத்துச் சில இயற்கை அமைப்புக்களை இறைவன் வகுத்திருத்தல் ஈண்டுக் கருதற்பாலது.
உடல் அமைப்பின் நுட்பம்
பெண் ஆண் என்னும் இருபாலாரும் உற்ற வயதடைந்ததும், இருவர் மாட்டும் ஒருவித இன்ப உணர்வு இயல்பாக எழுகிறது. இவ்வுணர்வு உயிரிகளிடத்து எழுவதன் நோக்கம் என்னை? எழுச்சிக்குரிய உறுப்புக்கள் அமைந்திருப்பதன் நோக்கம் என்னை? அன்பர்களே! உன்னுங்கள். இன்பத் தோற்றத்துக்கென மெல்லுறுப்புக்களும், அவைகளின் காப்புக்கெனப் பருவுறுப்புக்களும், அவைகளின் அரணுக்கென நரம்பு - என்பு - தசை - தோல் முதலியனவும் இயற்கையில் அமைந்திருக்கும் நுட்பத்தை உன்ன உன்ன, அவற்றின் நோக்கம் புலனாகும். உடற்கூற்றின் அமைப்பும், அதனால் எழும் இன்பழும், பெண் ஆண் சேர்க்கை, இயற்கையில் பொருந்திய தொன்று என்பதைச் செவ்வனே அறிவுறுத்துகின்றன. இதைப்பற்றி விரிவுரை வேண்டுவதில்லை. பெண் ஆண் சேர்க்கையின் வழித் துன்ப இருளிற் கட்டுண்டு கிடக்கும் உயிர்கட்கு, ஆண்டவன் உடலை ஈந்து, இவ்வுலக வாழ்வை நல்குகிறான். ஆண்டவன் படைப்பு இவ்வழி நிகழ்ந்து வருகிறது.
தனித்த வாழ்வு கூடாது
பெண் ஆண் சேர்க்கை, உயிர்களின் துன்ப நீக்கத்துக்கு இன்றியமையாததாயிருக்க, அதை வெறுப்பதும் துறப்பதும் அறமா என்று கேட்கிறேன். பெண் ஆணை விடுத்துத் தனித்து நிற்பதும், ஆண் பெண்ணை விடுத்துத் தனித்து நிற்பதும், துன்ப இருளில் கிடக்கும் உயிர்களின் கட்டை நீக்க மறுத்து நிற்ற லாகும். இதனால் உயிர்களின் துன்பமும் நீங்குவதில்லை; ஆண்டவன் நோக்கமும் நிறைவேறுவதில்லை. எனவே, துறவு என்னும் பெயரால் ஒருவரை ஓருவர் நீத்து நிற்போர் கடவு னிடத்தும் உயிர்களிடத்தும் எங்ஙனம் அன்புடையவராவா்2 உயிர்களின் துன்ப நீக்கத்துக் கென்று அண்டவன் கோலியுள்ள வழி நில்லாது, அவனைப் போற்றுவோர் எங்ஙனம் அவன் அருள் பெறுதல் கூடும்? ஆண்டவன் வழி நிற்போரே அவனிடத்தும் உயிர்களிடத்தும் அன்புடையவராவர்.
“துறவு துறவு” என்று ஒதுங்கும் பெண்மகளும் ஆண்மகனும் யாண்டிருந்து முளைத்தனர்? அவர் தாய் தந்தையரின்றியோ முளைத்தனர்? அன்னார் உடல்தாங்கி இவ்வுலக வாழ்வை அடைந்ததுபோல, மற்ற உயிர்களும் அவ்வாழ்வை அடைதல் வேண்டாவோ? அதற்குத் தடையாக நிற்பது அறிவுடைமையா?
உயிர்கள் உடலோடு கூடி வாழ்வு பெற்ற பின்னரே, அறிவு விளக்கமும் செயல் நிகழ்ச்சியும் பெறுகின்றன. விளங்கிய அறிவுப் புணைகொண்டே, உயிர்கள் பிறவிக்கடல் கடந்து இன்பக்கரை நண்ணுதல் வேண்டும். இன்பக்கரை நண்ணுதற்குக் கருவியாயுள்ள உடல் வாழ்வைப் பெறப் பெண்ணும் ஆணும் கூடி வாழாதொழிவரேல், உயிர்களின் நிலை என்னாகும்? கருணையில்லா மக்களே மணவாழ்வை வெறுப்பார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஆணும் ’துறவு’ 'துறவு' என்று மணவாழ்வை வெறுத்து நிற்பின் உலக வளர்ச்சி அற்றேபோகும்; உயிர்களின் துன்பமும் நீங்காது; இறைவனது படைப்பு நோக்கமும் நிறைவேறாது. இத்துணை இடருக்குக் காரணராக உள்ள கூட்டத்தார் கடவுளிடத்தும் உயிர்களிடத்தும் தம்மிடத்தும் அன்பில்லாதவர் என்று பன்முறை அறை கூவுகிறேன்.
“துறவொழுக்கம் நிவர்த்தி மார்க்கம்” என்று நமது நாட்டு நூல்கள் பல கூறுவது உண்டு. துறவொழுக்கமும் நிவர்த்தி மார்க்கமும் பெண்ணை வெறுக்குமாறு அணிற்கும், அணை வெறுக்குமாறு பெண்ணிற்கும் அறிவுறுத்தவில்லை. அவற்றின் நுட்பங்களைப் பின்னே விளக்குவேன்.
பெண்ணும் ஆணும் கூடிவாழல் இறைவழி நிற்ப தென்றும், அங்ஙனம் வாழாதொழிவது இறைவழி நிற்பதாகா தென்றும் இவ்வதிகாரத்தில் சுருங்கச் சொன்னேன். இனி, இயற்கை நெறிக்கும் பெண் ஆண் சேர்க்கை வேண்டற்பால தென்பதையும், இல்லையேல் உலகில் பல துன்பங்கள் விளையும் என்பதையும் சிறிது விரிக்கப்புகுகிறேன்.
Marriage is the nursery of the Heaven - Jeremy Tayler
-------------
6. இயற்கை அறம்
(இறையும் இயற்கையும் – நீத்தப் பொருள் – குணத் தொகுதிகள் – இயற்கை செயற்கை – திருக்குறள் உலகம் – அறம் கடவுள் நிலை – பொருளும் இன்பமும் – அரசும் இல்லரசும் – அறமும் கடவுளும் – படைப்பை வெறுத்தல் கடவுளை வெறுத்தல் – விடுதலைக்கு வழி – இயற்கை நிலை – போலித் துறவால் விளையுங் கேடு – அமைப்பின் நோக்கம் – உயிர் நிலைச் சிறப்பு – செயற்கை வினைகள் (வேசையர் கூட்டம்; காமுகர் ஈட்டம்; நோய்க்குழு; முஷ்டிமைதுனம் ; மருந்துண்ணல் ; புலனடக்கம்; வாளா கிடத்தல்) – அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் – நீத்தல் அல்லது துறவு (தொல்காப்பியனார் இறையனார் திருவள்ளுவனார் மாணிக்கவாசகனார், ஆண்டாள் முதலியோர் கோலிய அறநெறி) – ரவீந்திர்ர் போக்கு – கருத்து வேற்றுமைக்கு மதிப்பு – மூவாசை – பெண்ணை விடுத்தோடல் துறவன்று – காமக் கொடுமை – மனமாசகற்றம் வழி – மாசற்ற நெஞ்சில் அன்புக் கடவுள் கோயில் கொள்ளல் – கல்விப் பயன் இல்லறம் – இல்லறத்தில் தன்னலக்கேடு – பிள்ளைப் பேற்றில் தியாகம் – பெண்ணை வெறுத்தவன் – பெண்ணைக் கொண்டவன் – இல்லறத்தால் அன்பு உயிர்களிடம் பரவல் – விருந்தோம்பலின் நுட்பம் – நீத்தார் பெருமை – உண்மைத் துறவு- துறவைப் பற்றிய ஐயப்பாடு – பெண்ணுடன் வாழலும் ஆசை துறத்தலும் – அந்தணர் நிலை – செந்தண்மை பூண்டொழுகல் – ‘பெண்வழிச் சேறல்’ என்னும் அதிகாரம் – திருவள்ளுவரும் துறவும் – பிறப்பில் சாதி வேற்றுமை இன்மை – ஆச்சிரம நோக்கம் – தவம் என்பது பெண்ணைத் துறப்பதன்று – போலித் துறவும் உண்மைத் துறவும் – போலித் துறவின் நிழைவு – மகாத்மா காந்தியும் இல்லறமும் – காலமும் விதியும் – புத்தர் பெருமான் தொண்டும் இல்வாழ்வும் – கிறிஸ்து – மணிமேகலை புத்தர்பெருமான் காலத்திய அறம் – தொண்டு நிலையின் பின்னை மாற்றம் – மடாதிபதிகளும் வாழ்க்கைத் துணையும் – பெண்ணை வெறுக்கும் போலித் துறவு – தற்காலச் சந்நியாசம் – அறத்தின் பொருள் மாற்றம் – அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை – சிற்றின்ங்கட்குப் புகலிடம் போலிச் சந்நியாசம் – உண்மை வேதாந்தமும் பெண்ணும் – பெண்ணை வெறுத்த சந்நியாசிகள்பாடு – போலிச் சந்நியாசிகள் எழுதிய நூல்கள் – அறம் வேறு, போலிச் சந்நியாசம் வேறு – சீர்திருத்த்தார் – ஞானிகள் (பட்டினத்தார்; அருணகிரி நாதர்; நம்மாழ்வார் ; மாணிக்கவாசகனார்) – இல்லறம் (இல்லறம் துறவறம் – திருவள்ளுவர் கருத்து – துறவு இல்லறத்தின் ஒரு கூறு – பெண்ணுடன் வாழும் நோக்கம் – பேரின்பம் சிற்றின்பம் –வீடு) – மகாத்மா காந்தி, ரவீந்திர்ர், நக்கீரனார், நச்சினார்கினியர் இவர்களின் கருத்து)
அறத்தாற்ரின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன். - திருவள்ளுவர்
இறைவழி எதுவோ அதுவே இயற்கை என்பது. எவன் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்துகிறானோ, அவன் இறைவழி நிற்பவனாகிறான். இயற்கையோடு இயைந்து நிற்றலை உலகோர் அறமெனக் கூறுப. இக் கருத்துப்படவே ஈண்டு இயற்கை நெறியை, “இயற்கை அறம்” என்று குறித்தேன். உலகில் அறமெனும் பெயரால், சில செயற்கை முறைகளும் நிகழ்ச்சியி லிருத்தலால், நேரிய அறத்தை “இயற்கை அறம்” எனக்கோடல் தவறாகாது.
இறையும் இயற்கையும்
இறை - இயற்கை - என்னுஞ் சொற்களைக் கொண்டு, இரண்டிற்கும் பிரிவு கற்பித்தல் கூடாது. இறையை விடுத்து இயற்கை இயங்குவதில்லை; இயற்கையை நீத்து இறை கடனாற்றுவதில்லை.
இயற்கை கடந்த ஒரு நிலையும் இறைக்கு உண்டு. அதைப் பற்று ஏழையேன் என் சொல்ல வல்லேன்! அது வாக்கு மனங் கடந்தது; உருவம் - அருவம் - அருவுருவம் - எல்லாவற்றையுங் கடந்தது. அவ்விறை உயிர்கட்கு அருள வேண்டி, இயற்கையை உடலாக் கொண்டு கடனாற்றுகிறது. இயற்கையை உடலாக் கொண்ட இறைநிலையே வழிபாட்டுக்குரியது. இறை இயற்கை யில் கட்டின்றி, அங்கிங்கெனாதபடி, எங்கும் நீக்கமறக் கலந்து நிறைந்து நிற்பது; இறையை இயற்கை வாயிலாகவே, மெய்யறி வால் உணர்தல் வேண்டும்.
இறைவனது உண்மையை உணர்த்துங் காட்சிப் பொருள் இயற்கையே யாகும். இயற்கை வாயிலாகவே இறைவனது அருட்டொழில் நிகழ்ந்து வருகிறது. இயற்கை, இறைவனது தொழிற் சக்தியாய் விளங்குகிறது. இறையின் உண்மையை உணர்ந்து அழியாத இன்பம் நுகர வேண்டுமேல், அதற்குக் காட்சிப்பொருளாகிய இயற்கைக் கொழுகொம்பையே பற்றல் வேண்டும். இயற்கையை விடுத்து இறையை உணர முயல்வது கானற்சலத்தை நம்பி ஓடினவன் கதையாக மூடியும். இறைக்குரிய வழி இயற்கை இயற்கையே. இல்வியற்கைக்கு அரணாகுமாறு வாழ்வு நடாத்துவோர் இறை இன்பம் நுகரல் திண்ணம். “இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு” என்னுந் திருவாக்கின் நுட்பத்தை ஓர்க.
இறை இன்பத்துக்கு, “அதை விடல் வேண்டும் - இதைவிடல் வேண்டும்” என்று சொல்வோரும் உளர். அவரால் எழுதப்பெற்ற நூல்களும் உண்டு. “விடல்' எனில் எதை விடுவது? எதுவும் இயற்கையின் கூறாகவே இருக்கிறது. இயற்கையோ இறையின் உண்மையை உணர்த்துங் கருவியாயிருக்கிறது. அதை விடுத்து இறை இன்பத்தை எங்ஙனம் நுகர்தல் கூடும்? இயற்கையை நீத்து எங்ஙனம் உலகில் வாழ்தல் முடியும்2 இயற்கையை நீக்கப் புகின் முதலாவது இயற்கையாலாகிய உடலை நீத்தல் வேண்டும். உடலை நீத்து ஞானத்தைப் பெறுவது எப்படியோ தெரியவில்லை.
நீத்தற்பொருள்
பின்னை, “நீத்தல்” என்று சொல்லப்படுவதன் பொருள் என்னை? இயற்கைக்கு மாறுபட்ட செயற்கையை நீத்தலையே, “நீத்தல்” என்பது குறிப்பதாகும். செயற்கை எது? அதை இரு கூறாகப் பிரிக்கலாம். ஒன்று புறஉலகில் மனிதன் கையால் செய்வது; இன்னொன்று மக்களின் அக உலகிலிருப்பது. அக உலகிலுள்ள செயற்கை அழியின், புறஉலகச் செயற்கை தானே அழியும். அகத்தில் இயற்கை இன்பம் தோன்றப் பெறுவோர் புறத்தேயுள்ள இயற்கை இன்பத்தையும் செவ்விதில் நுகர்வர். மக்கள், செயற்கைப் பொருட்களில் வேட்கை கொள்வதற்குக் காரணமாக நிற்பன, அவர்கள் உள்ளத்திலுள்ள செயற்கைக் குணங்களேயாம். அக்குணங்களை நீத்தால் மக்கள் செயற்கை நரகத்துக்கு இரையாகமாட்டார்கள். எனவே, “நீத்தல்” என்பது, செயற்கைக் குணங்களினின்றும் நீத்தலைக் குறிப்ப தென்க.
செயற்கைக் குணங்கள் யாவை? அழுக்காறு - அவா - வெகுளி முதலியன. அவை “இயல்பாக மக்களிடத்தில் பதிந்து கிடக்கின்றன. இயல்பாக உள்ள குணங்களைச் செயற்கையெனச் செப்பல் நியாயமோ’ என்று சிலர் வினவலாம். இச்செயற்கை, உலக வழக்கில் சொல்லப்படுஞ் “செயற்கை போன்ற தன்று. இதனை இயற்கைச் செயற்கை எனச் செப்பல் பொருந்தும்; அதாவது மக்களுடன் இயல்பாகத் தோன்றி, மக்களை அழிப்பது. இயற்கைச்செயற்கை என்பது, பயிருடன் முளைக்கும்களை போன்றது.
குணத் தொகுதிகள் (இயற்கை செயற்கை)
மக்களிடத்து இருவிதக் குணத்தொகுதி காண்கிறோம். ஒன்று, பொறுமை - அன்பு - அருள் முதலிய குணத்தொகுதி; மற்றொன்று, அழுக்காறு - அவா - வெகுளி முதலிய குணத் தொகுதி. முன்னையது மக்கள் வாழ்விற்குக் கேடு சூழாது. இயற்கையோடு இயைந்து இறை இன்பத்தைக் கூட்டுதற்குத் துணைநிற்பது, பின்னையது மக்களை இயற்கை வாழ்விற் செலுத்தாது, செயற்கை நரகில் தோய்த்து, இறை இன்பத்தைக் கூட்டாமல், அவர்கள் வாழ்விற்குக் கேடு சூழ்வது. இவ்விரண்டனுள் மக்கள் நல்வாழ்விற்கு உரியது எது? உரியதாகாதது எது? பொறுமை - அன்பு - அருள் முதலிய குணத்தொகுதி மக்கள் நல்வாழ்விற்கு உரியது. பொறாமை - அவா - வெகுளி முதலிய குணத் தொகுதி அவ்வாழ்விற்கு உரியதாகாதது. மக்கள் வாழ்விற்கு உரியதை இயற்கை என்று கொண்டேன்; மற்றதைச் செயற்கை என்று கொண்டேன். ’அழுக்காறு முதலிய குணங்கள், மக்களுடன் இயல்பாய், அநாதியாய் உண்மையான், அவற்றைச் செயற்கை என்று எங்ஙனம் கூறலாம்’ என்று சிலர் வாதமிழடுவர். வாதத்துக்கும் எனக்கும் நெடுந்தூரம். வாதங் கடந்த ஒன்றே எனக்கு உரிய இயற்கை வாழ்வு. அழுக்காறு முதலியவற்றை ஆதி என்று சொல்வோரும் உளர். அநாதி என்று சொல்வோரும் உளர். அவை அதியோ அநாதியோ அதைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. மக்கள் வாழ்விற்கு உரியதை இயற்கை என்றும், உரியதாகாததைச் செயற்கை என்றும் யான் கொண்டு என் கருத்தை வெளியிடுகிறேன். அன்பர் சொற்போரை ஒழித்துக் கருத்தை மட்டும் நோக்குவாராக.
திருவள்ளுவனார்
மக்கள் தங்கள் மாட்டுள்ள அழுக்காறு முதலிய தீக் குணங்கள், தங்களை விடுத்து விலகும் முறையில் வாழ்வு நடாத்தல் வேண்டும். அவ்வாழ்வு பெறுவது எப்படி? இயற்கை வாயிலாக இறைவன் அதைக் கோலி இருக்கிறான். அஃது, இஃதெனச் சில அறிஞர் உலகிற்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். அவருள் நந் தமிழ்நாடு உலகுக்களித்த தெய்வத் திருவள்ளுவனாரை யான் இங்கே போற்றி ஏற்கிறேன்.
திருக்குறள்
திருவள்ளுவனார் அருளிய திருக்குறள், மக்கள் வாழ்வுக் குரியது. மக்கள் வாழ்வுக்குரிய முறைகளும் துறைகளும் திருக்குறளாக அமைந்திருக்கின்றன. திருக்குறள் ஒரு நூலன்று. அஃது உலகம், மக்கள் வாழ்வு. அதலால், அதை ஈண்டுப் போற்றி ஏற்கிறேன்.
அறம் கடவுள் நிலை (பொருளும் இன்பமும்)
திருக்குறள், அறம் - பொருள் - இன்பம் என்னும் மூன்றையும் அறிவுறுத்துவது. அறம் என்பது ஒரு பெரும் நிலை. அது கடவுள் நிலை. கடவுள் நிலை எய்துதற்கு இயற்கை வாழ்வு இன்றியமை யாதது என்று முன்னே சொல்லப்பட்டது. இயற்கை வாழ்வாவது இவ்வுலக வாழ்வு. இவ்வுலக வாழ்விற்குரிய துறைகள் பலவற்றைப் பொருட்பாலில் திருக்குறள் வகுத்துக் கூறுகிறது. இப்புறவுலக வாழ்வுடன் நின்றுவிடுவதா மக்கள் வாழ்வின் நோக்கம்? இல்லை. மேலான அறநிலை என்னுங் கடவுள் நிலை எய்த வேண்டுமென்பது மக்கள் வாழ்வின் விமுமிய நோக்கம். அந்நோக்கம் நிறைவேறுதற்குரிய முறைகளைத் திருக்குறள் “இன்பத்தில் கோலியிருக்கிறது. எனவே, பெரிய அறநிலைக்குப் “பொருளும்: “இன்பமும்” வேண்டற் பாலன என்க. “பொருள்” புறத்துக்குரியது; “இன்பம்” அகத்துக் குரியது.
அரசு
புறவுலகில், கொலை களவு முதலிய கொடுந்தீமைகள் நிகழாதவாறு காப்பதற்கு அரசு வேண்டும். அரசு நன்கு நடை பெற அமைச்சு, கல்வி, முயற்சி, செல்வம் முதலியன வேண்டும். இவை யாவும் ஓழுங்குபட அமைந்துள்ள நாட்டில் கொடுந் தீமைகள் எரியாது அமைதி நிலவும். அமைதி அகத்துக்குந் தேவை. புறத்தில் அமைதியின்றிக் கிளர்ச்சி நிகழின், அகத்தே அமைதி நிலவுதல் அரிது. ஒருவனது உடற்றுன்பம் அவனது உள்ளத் துன்பமாகவும் இருத்தல் கண்கூடு. ஆகவே புறவாழ்வின் நிலை அகவாழ்வின் நிலையைப் பெரிதும் பொறுத்து நிற்கிறது. புறவாழ்வின் அமைதிக்கு அரசு முதலியவற்றை அறிவுறுத்திய திருக்குறள், அகவாழ்வின் அமைதிக்கும் இன்பத்துறை-யெனும் இல்வாழ்க்கையை (இல்லரசை) அறிவுறுத்தா நிற்கிறது. அகத்தில் அமைதி கெடுப்பன யாவை? அழுக்காறு, அவா, வெகுளி முதலியன அல்லவோ? இவற்றைக் கெடுக்க இல்லரசு என்னும் இல்வாழ்க்கையைத் திருக்குறள் உணர்த்துகிறது. திருக்குறள் உணர்த்தும் அறமே இயற்கை அறமாகும்.
அறமும் கடவுளும்
முதலாவது அறத்தின் இயல்பைச் சிறிது ஆய்வோம். மாசிலா மனத்தில் - அதாவது, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்கள் அற்ற இடத்தில் -அறக்கடவுள் பொலியும். “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் - ஆகுல நீர பிற” என்றும், “அமுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் - இழுக்கா இயன்றது அறம்” என்றும் திருவள்ளுவனார் அறத்தின் இயல்பை ஓதியிருத்தல் காண்க. அழுக்காறு முதலிய தத்துவக் கூட்டங்களைக் கடந்து ஒளிர்வது கடவுள் என்னுஞ் செம்பொருள். அப்பொருளை அறம் என்று திருவள்ளுவனார் கூறுகிறார். எனவே, கடவுளையும் அறத்தையும் ஒன்றென்றும் கொள்ளலாம். மேலும், அறத்தின் மேன்மை தோன்ற “அறத்தினூஉங் காக்கமு மில்லை அதனை- மறத்தலினூங் கில்லை கேடு” என்றார் நம் பெரியார். திருவள்ளுவனார் அருளிய திருக்குறளின் முழு நோக்கம் “அறன் வலியுறுத்தல்” என்பது தெளிதற்பாற்று. இக்காரணத்தான் “அறன் வலியுறுத்தல் பாயிரத்துள் வைக்கப் பட்டிருக்கிறது.
திருக்குறள் அறநிலையம்
அறம் ஒரு மரம் போன்றது. மற்றப் பால்களும், அதிகாரங்களும், பாக்களும் மரத்தின் கவடு கோடு இலை முதலியன போன்றன. திருக்குறளின் ஒவ்வொரு பாட்டும் அறத்தின் ஓவ்வொரு கூறாம். திருக்குறள் கோலியுள்ள வழியில் ஒருவன் வாழ்வு நடாத்துவனேல், அவன் முடிவில் அறநிலை எய்தல் ஒருதலை. அவ்வாழ்வு இயற்கைக்கு அரண் செய்வதாகவும் வளர்ந்தோங்கும்.
மக்கள், அழுக்காறு - அவா - வெகுளி முதலிய கட்டுக் களினின்றும் விடுதலை அடைதற்குக் கொள்ளத்தக்க வழிதுறை களை நோக்குவோம். மக்கள் கட்டுக்களி-னின்றும் விடுதலை அடைதற்குக் கடவுளைப் போற்ற வேண்டுமென்றும், மாய உலகைக் துற்றத்தல் வேண்டுமென்றும், சிறப்பாகப் பெண்ணைக் துறத்தல் வேண்டு-மென்றும், துறந்து நாட்டைவிடுத்துக் காட்டுக் கோடி கண்ணை மூடி உடலை வருத்தி யோகஞ் செய்தல் வேண்டுமென்றும் சிலர் கூறுப. இதைப்பற்றி முன்னருஞ் சிறிது தொகையாகக் குறிப்பிட்டி ருக்கிறேன். அத்தொகையை இங்கு வகைப்படுத்திச் சில உரை பகர்கிறேன்.
உலகம் கொடியதாயின் கடவுள் படைப்பில் அவ் உலகம் அமைய வேண்டுவதில்லை. பெண் மாயையாயின், அப்’பொருளு’ம் இயற்கையில் தோன்ற வேண்டுவதில்லை. உலகமும் பெண்ணும் கடவுள் படைப்பில் தோற்றமுற்றிருப்பதால், அவ்விரண்டும் உயிர்களின் வாழ்விற்கென்றே தோன்றியிருத்தல் வேண்டும். ஆதலால், “உலகையும் பெண்ணையும் துறந்து வாழல்” என்னும் எண்ணம், கடவுளின் படைப்பு நோக்கை அறியாது, கடவுளை மறப்பதாகும். கடவுளின் படைப்பை வெறுப்பது கடவுளை வெறுப்பதாகும்.
விடுதலைக்கு வழி
பின்னை எங்ஙனம் அழுக்காறு அவா முதலியவற்றைத் தொலைப்பது? அதற்கொரு வழி, செயற்கை முறையில் நாம் வலிந்து கோலத்தேவையில்லை. அவ்வழி இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அளித்த ஆண்டவன், மக்களின் துன்பத்துக்குக் காரணமாக உள்ள கட்டினின்றும் விடுதலை அடைய ஒரு வழியையா கோலாதொழிவன்? கட்டினின்றும் மக்களை விடுதலை செய்விக்கவே அவர்கட்கு இவ்வுலக வாழ்வை ஆண்டவன் நல்கியிருக்கிறான். அவ்வருள் சுரந்த ஆண்டவன் கட்டு நீக்க வழியையும் கோலியிருக்கிறான். இயற்கையில் அவ்வழி அமைந்திருக்கிறது.
இயற்கை நிலை
இயற்கை, பெண் ஆண் வடிவாகப் பொலிவது என்பது தொடக்கத்தில் விளக்கப்பட்டது. அப்பெண் ஆண் சேர்க்கை யால் உலகம் வளர்ந்து வருகிறது. பெண்மகளும் ஆண்மகனும் இயற்கையின் கூறாகவே யிருப்பவர். இயற்கைக் கூறாக உள்ள அன்னார், அதற்கியைந்த வாழ்வு நடாத்துவதே அறிவுடைமை. அன்னார் வேறுபட்ட வாழ்வு நடாத்தப்புகின், அவர்தம் வாழ்வில் பலதிற இன்னல்கள் விளைவது திண்ணம். “உலகத்தோ டொத்து வாழ்' எனவும், “உலகத்தோ டொட்ட ஓழுகல் பலகற்றும் - கல்லார் அறிவிலாதார்' எனவும் வரூஉம் ஆன்றோர் மொழிகளை ஊன்றி நோக்குக. மற்ற உயிர்கள் இயற்கை யுலகோடியைந்த வாழ்வு நடாத்துவது போல, மக்களும் அத்தகைய வாழ்வு நடாத்தக் கடமைப்படல் வேண்டும். தாவரம், பறவை, விலங்கு முதலிய எல்லா உயிரும் (பெண் ஆண்) சேர்க்கை வாழ்வையே நடாத்துகின்றன. இயற்கை நிலை அவ்வாறாக, ஆறறிவுடைய மக்கள் மட்டும் சேர்க்கை வாழ்வைத் துறந்து நிற்க வேண்டுமென்று வலியுறுத்துதற்கு இயற்கையில் எத்நியதி அமைந்திருக்கிறது?
போலித்துறவால் விளையுங் கேடு
வாழ்விற்கு நீர், காற்று ஒளி முதலியன வேண்டப்படுவது போலப் பெண்ணிற்கு ஆண் வேண்டற்பாலன்; ஆணிற்குப் பெண் வேண்டற்பாலள். இரண்டொரு நாள் நீரின்றியும் சிறிது போழ்து காற்று ஒளியின்றியும் வாழ்வு நடாத்தல் இயல்வ தில்லை. போதிய நீரும், காற்றும், ஒளியுமின்றி வாழ்வோர் முகத்திலும் உடலிலும் வெளுப்பேறியிருத்தல் காண்கிறோம். இதன் பயனாகப் பலதிற நோய்கள் தோன்றி இவர்தம் வாழ்வையே குலைக்கின்றன. இவ்வளவிற்குங் காரணம் என்னை? இயற்கை யிலுள்ள நீரையும், காற்றையும், ஒளியையும் அவமதித்த குற்றமே சிறந்த காரணமாகும். இவ்வாறே இயற்கையின் கூறாகிய பெண் ஆணைத் துறத்தலும், ஆண் பெண்ணைத் துறத்தலும் குற்ற மாகும். இத்துறவு இயற்கைக்கு மாறுபட்ட தொன்றாகலான், பின்னை நாளடைவில் அது பலதிற நோய்களைத் தோற்றுவித்து வருத்தி வாழ்வைக் குலைப்பது ஒருதலை. இயற்கையோடி_யைந்த வாழ்வு நடாத்தலே ஒழுங்கு பட்ட வாழ்வாகும்.
அமைப்பின் நோக்கம்
உறுப்புப் பயிற்சியின் இன்றியமையாமை
மக்கள் வடிவம் பெண் ஆண் சேர்க்கைக்கு ஏற்றவாறு அமைந்திருத்தல் கருதற்பாலது. அவ்வமைப்புக்கு ஒருவித நோக்கமும் இருத்தல் வேண்டும். ஒரு நோக்கமுமில்லா ஒன்று இயற்கையில் அமைதல் அரிது. உடலிலுள்ள ஓவ்வோர் உறுப்பையும் உற்று நோக்குவோம். ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு விதக் கடமை இருத்தல் காண்கிறோம். ஒவ்வோர் உறுப்பும் தன் தன் கடமையை ஆற்றாதொழியுமேல், அவ்வதனால் ஆக்கப் பட்ட உடல் செழமுமையுறாது சூம்பிப் போகும். உடலின் செழுமை காக்கவேண்டி ஒவ்வோர் உறுப்பும் இயங்குமுறையில் பயிற்சி செய்கிறோம். பயிற்சியால் உறுப்புக்கட்கும் உடலுக்கும் நலன் விளைவகைக் கண்கூடாகக் காண்கிறோம். உறுப்புக்களின் இயக்கம், குருதி ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி, நரம்புகட்கு உரமேற்றிக் கொழுமை திரட்டித் தசையாக்கி அதனின்றும் அழகுத் தெய்வக் காட்சியை வழங்குகிறது.
உறுப்புக்களுக்கெல்லாம் உயிர் போன்றது உயிர்நிலை. அப்பெயரானே அதன் பெற்றி இனிது விளங்கும். அதற்குங் கடமை உண்டு. அக்கடமையாற்ற அதற்கும் பயிற்சி தேவை. உயிர் நிலைப் பயிற்சி குன்றின், அதன் நிலை என்னாகும்? அதனை உயிராக் கொண்ட மற்ற உறுப்புக்களின் நிலை என்னாகும்? இக்கால மேல்நாட்டறிஞர், உயிர்நிலையின் நுட்பங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து, அது மற்றைய உடலுறுப்புக்களுக்கு எங்ஙனம் உயிர்ப்பாக - பிராணனாக - இருக்கிறதென்பதையும், அதற்கு எவ்வழியிலாதல் கேடு நிகழின் அக்கேட்டான் எங்ஙனம் உடல்வளன் குன்றுகிறதென்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியிருக்கின்றனர்.
உயிர்நிலைச் சிறப்பு
இளமையிலோ அல்லது உற்ற வயதிலோ உயிர் நிலைக்கு எவ்வழியிலாதல் ஊறு நிகழ்த்திக் கொள்வோரது பின்னைய நிலை இரங்கத் தக்கதாக முடியும். சிலர் நோய் வாய்ப்பட்டு இறந்துபடுவர்; சிலர் முகப்பொலிவும் உடல்வளமும் குன்றப் பெற்று, குரலொடுக்குற்று, கண்ணொளி இழந்து, அழகுடைந்து, பார்வைக்கு இனிமை பயவாத உடல்தாங்கி ஒழிவர். ஒருவரது உடல்வளம் அவரது உயிர்நிலை வளத்தைப் பொறுத்து நிற்கிற தென்று சுருங்கச் சொல்லலாம்.
விதை அடிக்கப் பெற்ற மாட்டுக்கும் குதிரைக்கும், மற்ற மாட்டுக்கும் குதிரைக்கும் வேற்றுமை இருத்தல் கண்கூடு. முன்னைவற்றிற்கு ஊக்கம், எழுச்சி, சுறுசுறுப்பு, உரிமையுணர்வு முதலியன போதிய அளவு இல்லை; பின்னையவற்றிற்கு அவை உண்டு. அஃறிணை உயிர்களின் உயிர்நிலைக் கேட்டினும், உயர்திணை உயிர்களின் உயிர்நிலைக்கேடு பேரிடர் விளைக்கும்.
உயிர்நிலைக்கேடு, அறிவு விளக்கத்துக்கும் ஞாபக சக்திக்கும் பெருந்தொல்லை விளைக்கும் என்பதை ஈண்டுச் சிறப்பாகத் தெரிவிக்கிறேன். அறிவு விளக்கங்குன்றி, ஞாபகசக்தி இழந்து, உலகில் வாழ்வது வாழ்வாகுமா?
இளமைதொட்டு உயிர்நிலையை எப்படிக் காப்பது என்பது பற்றிப் ’பெண்ணின் வளர்ப்பு' என்னுந் தலைப்பின் கீழும் உரைத்திருக்கிறேன். உற்ற வயதில் உயிர்நிலையின் இயற்கை அமைப்புக்கேற்ற பயிற்சி இருத்தல் வேண்டும். அப்பொழுதே அவ்வமைப்பின் நோக்கம் நிறைவேறும். உயிர்களின் துன்ப நீக்கத்தையும், இன்ப அக்கத்தையும் குறிக்கொண்டு நிற்பது அந்நோக்கம் என்பதை மீண்டும் ஈண்டு வலியுறுத்துகிறேன்.
செயற்கை வினைகள்
“உற்ற வயதில் உயிர்நிலைக்குப் பயிற்கிகதானே தேவை” என்று மக்கள் செயற்கைத் துறைகளில் இறங்குவது தற்கொலைக்குக் கால்கொள்வதாகும். செயற்கை முறைகள் பற்பல. அவற்றை ஈண்டு விரிக்கில் அவை பெபருகும். அவற்றுள் சிற்சிலவற்றை ஈண்டுச் சுருங்கச் சொல்கிறேன். அவை: வேசையர் கூட்டம், காமுகர் ஈட்டம், நோய்க்குழு, முஷ்டி, மைதுனம், மருந் துண்ணல், புலனடக்கல், வாளாகிடத்தல் முதலியன. இவை எப்படிச் செயற்கை முறைகளாகும் என்பதைச் சிறிது ஆராய்வோம். ஈண்டுக் கூறுவன யாவும் பொதுவகையில் பெண் ஆண் என்னும் மக்களினத்தைக் குறிப்பன என்று கொள்க.
வேசையார் கூட்டம்: வேசையர் கூட்டம் பெண்மக்களிலும் உண்டு; ஆண்மக்களிலும் உண்டு. ஆனால், அப்பெயர் பெரிதும் ஒருவகைப் பெண்ணினத்துக்கே வழங்கப்பட்டு வருகிறது. அன்புப் பொறுப்புடன் ஒருவனோடு வாழ ஒருப்படாது, பிழைப்புக்கென மானம் விற்றுப் பொல்லா வாழ்வு நடாத்தும் பெண், “வேசை” என்று அமைக்கப்படுகிறாள். தெய்வத் தன்மை பொருந்திய பெண்ணினத்தில் வேசைக் கூட்டம் தோன்றியதற்குக் காரணம் ஆண்மக்களின் மூடச் செயலேயாகும். ஆணுலகம் தூய்மை காத்திருக்குமேல், பெண்ணுலகில் வேசையா் கூட்டம் திரண்டிராது. எப்படியோ வேசையர் கூட்டம் தோன்றி இருக்கிறது. அதை ஒடுக்க வேண்டுமாயின், ஒருவன் ஒருத்தியோடு வாழும் இயற்கை அறம் உலகில் யாண்டும் பரவுதல் வேண்டும். “ஒருவன் ஒருத்தியுடன் வாழும் பொறுப் பேலாது, நினைந்தபோது வேசையர்பால் துயின்றெழுவதால் விளையும் தமை என்னை? எங்ஙனமாவது பெண் சேர்க்கைதானே தேவை” என்று கருதுவோரும் உளர். இவர் இயற்கை - செயற்கை நுட்பம் தெரியாதவர் என்க.
கலவி நுட்பம்
கலவி என்றால் எல்லாங் கலவியாகுங்கொல்? பெண் ஆண் கலவி என்பது காதல் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். காதல் இன்பம், அறிவு மனம் உடல் ஆக மூன்றும் ஒன்றிய அன்பின் வழிப் பிறப்பது. அன்பில்லாத இடத்தில் அவ்வின்பம் பிறவாது. அறிவும் மனமும் உடலும் அன்பால் ஒன்றி நிகழுங் கலவியில், பெண்மக்களின் உயிர்நிலை யின் உட்கருவிகளிலுள்ள சினை உறுப்புக்களினூடே ஒருவித இன்பம் துளும்பி ஊறும். அதன் பயனாக ஒருவிதச் சத்து எழும்பி (ஆண்மகன் சுக்கிலம் விழுந்ததும்) ஆணுள் நுழையும். அந்தச் சத்து ஆண்மகன் சுக்கிலச் செலவிற்கு ஈடு செய்யும் அமிழ்தாய் உடல்நலனைக் காப்பதாகும். இஃது இயற்கைக் கலவி, இதற்கு மாறுபட்டது செயற்கைக் கலவி.
பொருட்பெண்டிர் கலவி
அறிவும் மனமும் ஒன்றாத கலவியில் சத்துப் பிறப்பதில்லை. பொருட் பெண்டிர் கலவி, அன்புவழி அறிவும் மனமும் ஒன்றாத வெறும் உடற்கூடல் என்பதற்கு விளக்கந் தேவை யில்லை. அக்கலவியில் பெண்மகளின் உட்கருவியின் சினை களில் இன்பக் கிளர்ச்சியும் நிகழாது; அதனின்றும் சத்தும் எழாது. சத்து எழாத இடத்தில் நிகழ்வது, வெறும் உடற் கூடலாகலின் அக்கூடல் செயற்கை முறையாகும். அது முஷ்டி மைதுனத்தை ஓத்ததெனச் சில அறிஞர் எண்ணுகின்றனர்.
பொருளொன்றே குறிக்கொண்டு, சில பெண் மக்களோடு கூடித்திரியும் ஆடவரும் வேசையர் கூட்டத்திற் சேர்ந்தவராவர். இவர்தங் கலவியும், மனமும் அறிவும் ஒன்றாத அன்பில்லாத தாகலின், அதுவும் செயற்கை முறையே யாகும். அன்புவழி நிகழாத கலவி யாவும் செயற்கை முறைகளே என்று சுருங்கச் சொல்லலாம். இதைக் கீழ்வரும் இனங்களிலும் கூட்டிக்கொள்க.
அகவே, பொருளில் கருத்து வைத்து, மானம் விற்பதைத் தொழிலாக உடைய வேசையர் கூட்டம், உடலுக்கு நலன் பயவாத செயற்கை இனங்களில் ஒன்றாதல் காண்க.
காமுகர் ஈட்டம்: சில இடங்களில் பொருள் வேட்கை யின்றி, வெறுங் காமக்-கிளர்ச்சியால் இருவர் சேர்க்கை நிகழ்வ துண்டு. காமம் (Lust) என்பது, வெறியால் உடலளவில் எழும் ஒருவித வெம்மைக் கிளர்ச்சி. இவ்வெம்மைக் கிளர்ச்சியால் நிகழும் புணர்ச்சி மனத்தில் உறுவதில்லை. சேர்க்கையின் போழ்தும் காமுகர் மனம் பெரிதும் அலைந்து திரியினும் திரியும். காதலால் விழுங்கப்பட்ட மனம் அவ்வாறு அலைந்து திரிவதில்லை. இம்மனம் அன்பில் ஒன்றி நிற்கும். அலைந்து திரியும் மனத்துடன் கூடுவது வெறும் உடல்சேர்க்கையே யன்றி, அது மனங் கலந்த ஒன்றாகாது.
சில சமயங்களில் மனம் அலையாமலும் காமுகர் சேர்க்கை நிகழும். மனம் அலையாத ஒரு காரணம் பற்றி, மனங்கலந்த காதற் சேர்க்கை என்று அதைக் கோடலாகாது. என்னை? காமுகராகிய ஒருத்திக்கும் ஒருவனுக்கும் விளைந்த வேட்கை மற்றவரிடத்தும் செல்கிறதா இல்லையா என்று பார்த்தல் வேண்டும். அவ்வேட்கை மற்றவரிடத்தும் சென்று தாக்குவதாயின், அவ் விருவர்க்கும் மனக்கலப்பில்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.
சில காலம் பிறரிடத்து வேட்கை செல்லாத வழியிலும் சில இடங்களில் ஒருத்திக்கும் ஒருவனுக்கும் காமச் சேர்க்கை நிகழ்வதுண்டு. இதைச் சோதனை செய்து பார்த்தால் உண்மை விளங்கி விடும். இருவரையும் சிறிது காலம் பிரித்து வைத்திருப்பின், இவள் இவனையும், இவன் இவளையும் மறந்து விடுவர். சமயம் நேரின், இவர் மற்றக் காமுகரிடத்திலும் திருவிளையாடல் புரியத் துணியினுந் துணிவர்.
காமுகர் சேர்க்கையில் மனக் கலப்பிராது. சில சமயத்தில் போலிக்கலப்பு நிகழும். சேர்க்கை, மனங் கலந்ததாயின், அது காதலாகும். காதலுடையார் பிறரைக் காமுறார்,; எவ்வளவுநாள் பிரிந்திருப்பினும் ஒருவரை ஒருவர் மறவார். அவர்தம் உள்ளத்தில் பிரிவு நிகழாது. இதற்கு மாறுபட்டு வாழும் கூட்டமே காமுகர் ஈட்டமாகும்.
காமுகர் பலரிடங் கூடலால், அவர்பால் நோயும் நிரம்பித் ததும்பும், புணர்ச்சிக் காலத்தும் மனத்தைப் பிறரிடஞ் செலுத்தும் காமத்தின் சிறுமையை என்னென்று கூறுவது?
காமுகர் ஈட்டமும் - அன்பும் - மனக்கலப்பும் இல்லா ஒரு வழியில் உழன்று, உடலுக்குக் கேடு தேடிக் கொள்வதால், அதுவுஞ் செயற்கைத் துறையின்பாற் படுவதாகும்.
நோய்க்குழு : நோயாளரின் சேர்க்கையைக் குறித்து விரித்துக் கூற வேண்டுவதில்லை. நோய்வாய்ப்பட்ட பெண்ணுடன் ஆணோ அல்லது ஆணுடன் பெண்ணோ கூடுவதைப் போன்ற செயற்கை நரகம் பிறிதொன்றில்லை. நோய், அவளுடனும் அவனுடனும் ஓழிவதில்லை. சில இடங்களில் அஃது அவர் வழிவழித் தொடர்ந்தும் வளர்கிறது. இக்கொடுமையைப் பற்றிப் பின்னுங் கூறப்போவதால், இவ்விடத்திற்கு ஏற்ற அளவில் நின்று மேற்செல்கிறேன். நோயாளர்க்கு முதலாவது அறிவு விளக்கம் இராது; மனோ உரம் இராது. இரண்டும் இன்மையால் இவரைச் சிறுகாமத்தீ பெரிதும் எரித்துக் கொண்டே யிருக்கும். அவர்க்குத் தய நினைவு தோன்றும்போதெல்லாம் கிளர்ச்சி எழும். வேறு நினைவு அவர்க்குப் பெரிதும் உறாது. அவர்தஞ் சேர்க்கை, உடல் அளவிலும் நிகழ்தல் அரிது. இதை எங்ஙனம் இயற்கை முறை என்று கூறுவது? ஆதலால், நோய்க் குழுவினரது ஆடலையும் செயற்கைத் துறையெனத் தள்ளுக.
முஷ்டி மைதுனம் : இது “கைமுட்டி” என்று வழங்குவதுண்டு. இஃதொரு கொடிய செயற்கை முறை. அறிவும் மனமும் கலவாத ஒருத்தியும் ஒருவனும் கூடுவதே செயற்கை முறையெனில், இருவர் சேர்க்கையேயின்றி, ஒருவரே இன்பங் காணப் புகும் முயற்சிக் துறையை எத்தகைய கொடிய செயற்கை முறை என்று சொல்வது? இதுவே சுத்த செயற்கைமுறை.
இச்செயற்கை முறையின் கொடுமை தெரியாது சிலர் வெந்தரகத்துக்கு இரையாகின்றனர். இப் பயிற்சியால் வாழ்வில் விளையுங் கேடுகளை மேல்நாட்டு மருத்துவர் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றனார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மக்களிடையில் பரவுதல் நலம்.
இக்கொடுஞ் செயற்கைப் பயிற்சி, பல காரணங்களால் இளமையில் சில பெண்மக்களிடத்தும் ஆண் மக்களிடத்தும் நுழைந்து, அவர்கள் பிறவிப் பயனைக் கொல்கிறது. குழந்தைகள் (அப்பருவத்திலேயே) அடிக்கடி உயிர்நிலையைத் தொடுவதாலும், சில மூடத்தாய் தந்தையர் குழந்தைகளின் உயிர்நிலையைத் தொட்டும் கசக்கியும் முத்தமிடுவதாலும், பீடங்களின் மீதோ மற்றெதன்மீதோ குழந்தைகள் சாய்ந்து உயிர்நிலையை உறாய்வதாலும், இன்னோரன்ன பிற காரணங்களாலும் உயிர்நிலையின் நரம்புகளில் ஒரு விதக் கிளர்ச்சி எழும். நாளடைவில், வயது ஏற ஏற, இக்கிளர்ச்சி, குழந்தைகளை முஷ்டிமைதுனத்தில் செலுத்தும். இதற்குக் காரணம் பெற்றோரது கவலை ஈனமே. இதைப் “பெண்ணின் வளர்ப்பு” என்னுந் தலைப்பின் கீழும் சிறிது விரித்துள்ளேன்.
தீயோர் இணக்கத்தாலும் முஷ்டிமைதுனப் பயிற்சி நுழைவதுண்டு. ஆயிரக்கணக்கான மாணாக்கர் பயிலுங் கல்லூரிகளிலும், மாணாக்கர் வதியும் விடுதிகளிலும், இளைஞர் கூடும் எந்த இடங்களிலும் இக்கொள்ளை நோய் வாடை சிறிதும் வீசாதவாறு ஆசிரியன்மாரும் மற்றவரும் பார்த்துக் கொள்ளல் வேண்டும். பெண்பாடசாலைகளும், அவைகளை ஒட்டிய விடுதிகளும் நன்மக்கள் பார்வையில் நடைபெறல் வேண்டும். சில இடங்களில் மணவாழ்வு ஏலாத பெண் மக்கள் ஆசிரியன்மார் களாகவும், விடுதித் தலைவர்களாகவும் அமர்கிறார்கள். அவா்களில் நல்லோர் பலர் இருக்கலாம். முஷ்டிப் பயிற்சியும், வேறு சில தீப்பயிற்சியும் புகுந்த உள்ளமுடைய சிலரால் பாடசாலை யும் விடுதியும் பாழாகிவிடும். இதுகுறித்துத் தாய் தந்தையர் மிக எச்சரிக்கையா யிருப்பாராக.
முஷ்டி மைதுனத்தில் ஒரு ’நல்ல குண’முண்டு! அஃது எது? அது, விரைவில் தன்னைக் கொண்டோரைக் காட்டிக் கொடுப்பது. முஷ்டிமைதுனம் தொடங்கப் பெற்ற சில ஆண்டுக் கூள்ளாக, அது தன் நண்பருடலில் சில மாறுதல் நிகழ்த்தும். மாறுதல் கண்டு, பெற்றோரோ மற்றவரோ அப்பயிற்சி யுடையாரை எச்சரிக்கை செய்து, அதனால் வாழ்வில் விளையுங் கேடுகளை எடுத்துக்காட்டினால், அவர் உடனே அதை விட்டொழிப்பர். அப்பயிற்சியால் தலைப்பட்டோர் உற்ற வயதடைந் தவராயின், உடனே அவர் மணம் புரிதல் சிறப்பு.
முஷ்டிமைதுனத்தால் விளையும் கேடுகளை இளமையில் உணர்வோர் அத்துறையில் தலைப்படமாட்டார். ஓன்றுந் தெரியாது தலைப்பட்டோர், கேடுகளை உணரப் பெற்றதும், அவரும் உடனே அம் மைதுனத்தைத் தொலைப்பர். பல ஆண்டு அப்பயிற்சியில் உழன்று பழுத்தோர், பழுத்து விழவேண்டி யவரே. அன்னார்க்குத் துன்பம் நரகம் போலத் தோன்றும்; தோன்றினும் அப்பயிற்சியினின்றும் அவர் விடுதலை அடைதல் அரிது. அவர் அப்பயிற்சிக்கு அடிமையாய்விட்டவர். அவா் அதன் கொடுமை உணர்ந்து, அதனை விட முயலினும் அஃது அவரை விடாது. எந்தோய்க்கும் மருந்து உண்டு; எப்பேய்க்கும் மந்திரமும் உண்டு. முஷ்டிமைதுன நோய் பேய்கட்கு மருந்தும் இல்லை; மந்திரமும் இல்லை. பின்னை முஷ்டிமைதுனத்தார் உய்யும் வழியாது? “ஒன்றும் இல்லை” என்று சிலர் கூறுவர். உய்யும் வழி உண்டு என்று கூறலாம். அவ்வழியை மற்றோரிடத் தில் (பெண்ணலனில்) குறிப்பன். தீப்பயிற்சியால் துன்பம் முதிர்ந்த பின்னர் வழிகாண முயல்வதினும், அது முதிரா வண்ணம் அதைத் தடுத்தொழிப்பதே அறிவுடைமை.
முஷ்டி மைதுனம் எவ்வழியில் தன்னை உடையானைக் காட்டிக் கொடுக்கும் என்பதைச் சிறிது பார்ப்போம். அப்பிடை, முதலாவது முகத்தில் சில மாறுதல் நிகழ்த்தும். முகத்தில் இளமை குன்றும், ஒரு விதப் பழுப்புத் தோன்றும்; பழுப்பில் கருஞ்சாம்பற்பூசல் போன்றதொரு சாயல், மிக மென்மையாய் எழும்பி மறையும். பின்னே கண்களின் கீழ்க் கருங் (கோட்டுச்) கற்றுக்கள் படரும். கண்களில் குழிவிமும். சோர்வு களைப்பு தலைகாட்டும். படிப்பிலோ தொழிலிலோ மனம் செல்லாது. நாளடைவில் உயிர் நிலையின் நரம்புக்கட்டுக் குலையும், சோர்வுறும். அது கிளர்ந்தெழுந் தன்மையை இழக்கும், வாட்டமுறும். உயிர்நிலையின் நரம்புக்கட்டுக் குலைவு தன்னளவில் நின்று விடாது. அஃது எல்லாவற்றிற்கும் தாயக மாகலான், அது மற்ற இடங்களிலுள்ள நரம்புக்கட்டுக்களையும் குலைக்கும். இக்குலை வால் மூளையின் உரங்குன்றும்; குடர் மெலிவுறும்,; ஈரலும் குண்டிக்காயும் சுறுசுறுப்பா யிருக்க மாட்டா. இவற்றால் ஜீரணசக்தி குறையும்; மலச்சிக்கல் உண்டாகும். இன்னோரன்ன தொல்லைகளால் இடர்ப்படும் மாந்தர்க்கு ஞாபகசக்தி இராது; பெரிய நூலாராய்ச்சியில் நாட்டம் செல்லாது. கூட்டங்களிலிருக்க அவர்தம் மனம் ஒருப்படுவதில்லை. ஆடவராயின் அவர்க்கு மகளிர் கூட்டம் நஞ்செனத் தோன்றும்; மகளிராயின் அவர்க்கு ஆடவர் கூட்டம் வெறுப்பாகத் தோன்றும். இப் “பெரியோர்” தனித்து ஒதுங்கி வாழவே விரும்புவர். இன்பூட்டும் இயற்கை இவர்க்குத் துன்பூட்டுவது போலத் தோன்றும். இன்னும் கொடுமைகளை விரிக்கில் அவை பெருகும். மேல்நாட்டு அறிஞர் எழுதிய மருத்துவ நூல்களில் முஷ்டி மைதுனத்தால் விளையுங் கொடுமைகளைப் பரக்கக் காண்க. இப்பயிற்சியில் பழுத்த மாக்களே உயிரொடு நரகில் இவ்வுலகத்தில் அழுந்திக் கிடப்பவராவார்.
இவ்வளவு துன்பத்துக்குங் காரணம் என்னை? ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழா தொழிவ தன்றோ? அண்டவன் விதித்த இயற்கை முறைக்கு இடர் விளைத்த பாவம் வீண் போகுமோ? இருவர் சேர்க்கைக்கென அமைக்கப்பட்ட உறுப்பில் ஒருவர்க்கு என்ன விளையாட்டு? இவரல்லரோ இறையின் ஆணையை மீறியவர்? இயற்கைத் தாயை மறந்தவர்? முடிவில் தம் வாழ்விற்கே கேடு சூழ்ந்தவர்? இவசே பேர்பெற்ற தற்கொலையாளர். இன்பத்துக்கென அளிக்கப்பட்ட அரிய பிறவியை - பெறற்கரும் பெருவாழ்வை - துன்பமாக்கிக் கொள்ளும் மடமையினும் மடமை பிறி தொன்றுண்டேோ?
இத்துணைக்கேடு விளைக்கவல்ல முஷ்டிமைதுனத்தைச் செயற்கை முறை என்று சொல்லலும் வேண்டுமோ?
மருந்துண்ணல் : இயல்பாக எழும் வேட்கையை ஓடுக்கச் சிலர் மருந்து உண்கின்றனர். இம்மருந்தார் முஷ்டிமைதுனத் தார்க்குத் தம்பியார் என்க. இயற்கையை மருந்தால் கட்டுப் படுத்தப் புகலே அறிவுடைமையன்று. மருந்து என்ன செய்யும்? தாதுவைக் கெடுக்கும். மருந்துகளிற் சில, மூலாதாரத்தையே ஓடுக்கும்; வேறு பல நோய்களையும் உண்டுபண்ணும். மருந்து, தொடக்கத்தில் வேட்கையை அழிப்பது போன்றதொரு உணர் வளிக்கும். உண்மையில் மருந்து, வேட்கையை அழிப்ப தில்லை; வேட்கைக்கு நிலைக்களனாக உள்ள உறுப்புக்களின் பசையை அழிக்கிறது. பசையின் அழிவு, பின்னே படிப்படியாக முஷ்டி மைதுனத்தால் விளையும் கேடுகளைப் போன்ற கேடுகளைப் பொறுத்துப் பொறுத்து விளைக்கும். இக்கேடுகளை விளைக்கும் மருந்துண்ணலும் செயற்கை முறையாகும்.
புலனடக்கம் : மேற்போந்த முறைகளைச் செயற்கை என்பதில் வாதப் போர் நிகழாது. புலனடக்கத்தைச் “செயற்கை முறை” எனில், வாதப்போர் அளவின்றிக் கிளம்பும். “புலனடக்கம் பல பெரியோரால் கொள்ளப்பட்டது; நூல்களால் முழங்கப் பெறுவது. அதை எப்படிச் செயற்கை முறை என்று கூறலாம்?” என்று பலர் வாதம் புரிவர். புலனடக்கப் பயிற்சி இல்லாதாரே, பெரிதும் வாதப்போர்க்குப் புறப்படுவர். “பெரியோர்” மீதும், “நூல்கள்” மீதும் அவர் கொண்டுள்ள பற்றே பிடி வாதத்துக்குக் காரணம். உண்மைப் பெரியோர் கருத்துக்கும், உண்மை நூல்களின் உள்ளக்கிடக்கைக்கும், அநுபவத்துக்கும் எனது கருத்து முரண்பட்டு நில்லாது என்று உறுதி கூறுகிறேன். பெண்ணை இழிந்த பொருளெனக் கருதி, அவளை வெறுத்து, அவள் நினைவு உள்ளத்தில் பதியாதவாறு காக்கப் புலனடக்கம் வேண்டு மென்று சொல்வோர் கூற்றுக்கு எனது கருத்து மாறுபட்டே நிற்கும். பெண்ணை வெறுக்கும் எண்ணத்துடன் புலன்களை அடக்குவது செயற்கை முறை என்பது எனது கொள்கை. யான் பெரியோரெனக் கொண்டுள்ள அறிஞர் கொள்கையும் இதுவே.
புலனடக்கம் பல அன்றோர் நூல்களில் பேசப்பட்டிருத்தல் உண்மை. “அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை: என்று திருவள்ளுவனார் திருவாய் மலர்ந்திருக்கிறார். “மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து' என்று மாணிக்க வாசகனார் அருளிச் செய்திருக்கிறார். இக்கருத்தடங்கிய நம் நாட்டவர் பாடல்களை மலை மலையாகக் குவிக்கலாம். திருமூலர் என்னும் பெரியார்.
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனம் அ மென்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
என்று அறிவுறுத்தியிருத்தல் ஊன்றி நோக்கத்தக்கது. அத்திருமூலரே.
ஐற்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஓடுங்கில் அருளுடை யாரே
என்றுங் கூறியிருக்கிறார்.
பெரியோர் உரைகள் ஒன்றோடொன்று முரண்படுவது போலக் காணப்படும். அவ்வுரைகளை நுணுகி ஆராய்ந்தால் முரண்பாடின்மை காணலாம்.
அடக்கம் என்பதன் பொருள்
முதலாவது “அடக்கம்” என்னுஞ் சொல்லின் பொருளுணர்தல் வேண்டும். நெறியல்லா நெறியில் செல்வதினின்றும் தன்னைக் காத்தலே அடக்கமென்பது. முற்றுஞ் செயலின்மை அடக்கமாகாது. நாவடக்கம் என்றால் என்னை? நாவைச் செயவின்றிச் செய்வதா? அன்று, “கண்டதைத் தின்னலாகாது” என்பது அதன் பொருள். “வாயடக்கமாயிரு' எனில், “பேசாமல் ஊமையா யிரு என்றோ பொருள் கூறுவது? “பேசத் தகாததைப் பேசாதே” என்பதன்றோ அதன் உண்மைப் பொருள்? இவ்வாறே புலனடக்கம் என்பதற்கும் பொருள்கொள்ளல் வேண்டும். புலனடக்கம் என்பதற்குப் புலன்களை வழியல்லா வழியில் உழற்றலாகா தென்பது பொருள், புலன்களின் செயலைக் கெடுத்தல் என்று பொருள்கோடல் தவறு. புலன்களின் செயல் கெடின், மனிதன் அசேதனனாவன்; அதாவது அறிவற்ற சடப் பொருளாவன். புலன்களின் செயலைக் கெடுத்து அமழிவோரை நோக்கியே திருமூலர், ’அஞ்சும் அடக்கில் அசேதனமாம்' என்று நல்லறிவு கொளுத்தினர். அத்திருப்பாட்டிலேயே ’அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே்’ என்று புலனடக்கத்தின் நுட்பத்தை அவர் நுவன்றுள்ளனர். புலன்களை வினைகெடச் செய்யாது, அவற்றைச் செம்மையில் நிறுத்தி வாழ்வோருக்கு, மன ஒற்றுமையும் அறிவு விளக்கமும் உண்டாகும்.
திருவள்ளுவர் கருத்து
ஆகவே, புலனடக்கம் என்று அன்றோர் கூறிய உரைகளில் வேற்றுமைப் பொருளில்லை என்க. புலனடக்கம் வேண்டற் பாலதே. ஆனால், அசேதனமாய் அழியும் முறையில் அவ் வடக்கம் வேண்டற்பாலதன்று. உலகிற்கு இயற்கை அறத்தை அறிவுறுத்தப் போந்தவர் திருவள்ளுவனார். அவர் புலனடக்கத்தைப் பற்றிப் பெரிதும் பேசியுள்ளார். புலன்களைக் கெடுக்கும் முறையை அவர் அறிவுறுத்தினாரில்லை. ஒருபோதும் அவர் புன்னெறியை அறிவுறுத்தார்.
உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரன் என்னும் வைப் பிற்கோர் வித்து
என்றார் திருவள்ளுவனார், “உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்” என்று அவர் அருளியிருத்தல் காண்க. உரனால் ஓரைந்தும் நெறியல்லா நெறியில் சென்று உழலாத வாறு அவற்றைக் காத்தல் வேண்டுமேயன்றி, அவற்றை அழித்தல் கூடாது. அழித்தால் உரன் விளக்கம் ஏது? “அடல் வேண்டும் ஓந்தன் புலத்தை” என்றதென்னை எனில், ஓந்தன் புலம் தீநெறியில் செல்வதை அடல் வேண்டுமென்று கொள்க. ஓம்புலன் அடங்காது முனைந்தெழுந்து தீநெறியில் பாயும் நீர்மை யுடைமையால், அவற்றின் முனைப்பை அடல் வேண்டும் என்று புலவர் விரைந்து கூறுகிறார்.
சுவைஓளி உறுஓசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
என்னுங் குறளினும் அசிரியர் “ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு” என்று அருளியிருக்கிறார். ஐந்தினை அழித்து வினை கெடுத்தவன் கண்ணதே உலகு என்று அவர் அறைந்தாரில்லை.
“[$]புலனடக்கம் “பொறியடக்கம்” என வரூஉம் இடங்களில் “அடக்கம்” என்பதற்குச் செயலின்மை கொள்ளாது, அறிவு வழிச் செந்நெறியில் நின்றொழமுகல் என்று கொள்ளக் கடவோமாக.
----
[$] யான் எழுதியுள்ள திருக்குறள் விரிவுரையில் ’பொறிவாயில் ஐந்தவித்தான்’, ’ஐந்தவித்தான் ஆற்றல்' முதலிய குறட்பாக்கட்கு என்னால் பொறிக்கப்பெற்றுள்ள குறிப்புக்களை நோக்குக. புலனடக்க நுட்பத்தை 'முருகன் அல்லது அழகு' முதலிய நூல்களிலும் எழுதியுள்ளேன்.
-------
இவ்வுண்மை தேறாது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஓந்தைக் கெடுக்கும் முறையில் புலனடக்கப் பயிற்சி செய்யப்புகுவது செயற்கை முறையாகும். இவ்வைந்தும் கெட்டால், மகன் அறிவற்ற பொருளாதல் உறுதி. அறிவு கெடும் முறையில், சிலர் புலனடக்கம் என்னும் பெயரால், பெண்ணை வெறுத்து, “யோகம்: “யோகம்” என்று போலியோகஞ்் செய்து, ஈரல் இயக்கங் கெடுத்து, உடல் வெளுப்பேற, சோகை, காமாலை, இருமல் முதலிய நோய்வாய்ப்பட்டு, வாழ்வைக் குலைக்கின்றனர்.
நமது நாட்டில் கெளதமனாரைப் பற்றிய ஒருவிதக் கதை வழங்கிவருதல் நேயர்கட்குத் தெரியும். கதையைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. கதையிலுள்ள நுட்பத்தையே கருதல் வேண்டும். கெளதமனார் ஐம்புலவழி உழலாது, ஐம்புலனைத் தம் அறிவின்வழிச் செந்நெறியில் இயக்கும் அற்றல் வாய்ந்தவர். அவரும் அகலிகை என்ற மனைவியோடு வாழ்ந்தவர். இந்திரன் புலனடக்கும் ஆற்றல் இலனாய், சிறுமை இன்பத்துக்கு எனளியனாய், அகலிகையின் கற்பழித்துத் துன்புற்றான். இவ்விருவருள் ஐந்தின் வழியுழலாதவா் ஒருவா்; உழன்றவன் ஒருவன். கெளதமனார் ஐந்தையுஞ் செயலின்றி ஓடுக்கி மாயவில்லை என்பது கவனிக்கற்பாலது.
அன்புநெறி இன்னதென்று உணராது, உடலைக் கெடுக்கும் வெம்மை நெறியில் நுழைந்து திரியும் போலி யோகிகள், தங்கள் மறச்செயலுக்குத் திருவள்ளுவனார் போன்ற அறவோர் உரைகளை எடுத்தாண்டு, பொல்லாப் பழியை அப்பெரியோர் மீது சுமத்தா திருப்பார்களாக. திருவள்ளுவனார் ஆங்காங்கே அறிவுறுத்தும் புலனடக்க நுட்பத்தை,
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே யள
என்று அவரே விளக்கியிருத்தல் காண்க. திருவள்ளுவனார் அருளிய திருக்குறளை முற்றும் ஆய்ந்து, அவர்தம் உள்ளக் கடக்கை இன்னதென்று உணராது. அங்காங்கே ஓவ்வோர் உரையை எடுத்துக் தங்கோள் நிறுத்த முயல்வது நியாயமாகாது. திருவள்ளுவனார் அருளிய திருக்குறள், இயற்கை அற வாழ்க்கையை உலகிற்கு அறிவுறுத்த எழுந்த நூல் என்பதை அன்பர்கள் உணர்வார்களாக.
ஆகவே, புலனை நல்வழியில் நிறுத்தி ஆளுந்திறனின்றிப் புலனையே கெடுத்துப் புலனை அறிவற்ற பொருளாக்க முயல் வதும் செயற்கை முறையேயாகும்.
வாளா கிடத்தல் : மேற்போந்த முறைகளெல்லாம் உடல் நலனைக் குலைத்தலால், அத்துறைகளில் இறங்காமலும், மணவாழ்வை ஏலாமலும் வாளாகிடத்தல் நலமெனச் சிலர் கருதலாம். வாளாகிடத்தலும் பிழையே. ஓவ்வோர் உறுப்பும் ஓவ்வொரு வினையாற்றினாலன்றி உடல்நலம் பெறாது. உயிர் நிலைக்கென உள்ள கடனை ஒருத்தியோ ஒருவனோ ஆற்றா தொழிவதும் இயற்கைக்கு மாறுபட்டு நிற்பதாகும். மேற்போந்த முறைகள் விரைவில் கேட்டை வெளிப்படுத்தும். வாளா கிடத்தல், நாட்பொறுத்து உடல் நலனுக்கு ஊறு நிகழ்த்தும். இறைபடாத கேணியின் நிலை என்னாகும்? வாளா கிடக்கும் வாழ்வும் அத் தகையதாகும். வாளா கிடக்கக் கிடக்க உயிர்நிலையின் இயக்கம் குன்றிப்போகும். அதனால் நரம்புக்குத் தளர்ச்சி உண்டாகும். மனைவியொடு வாழாமலும், வேறு தீப்பயிற்சியில் நண்ணாமலும் இருப்போர்க்கும் கண் மங்கல், மண்டையிடி, மூளை உரம் குன்றல், நினைவுத்திறக் குலைவு முதலியன தோன்றும். இந் நோய்களுக்கு உரிய மருந்து காதல் மணவாழ்வேயாகும். அதலால், வாளா கிடத்தலும் இயற்கைக்கு மாறுபட்டு நிற்பதாகும்.
இன்னும் பல செயற்கை முறைகள் உண்டு. அவ்விழிவுகளை ஈண்டு விரிக்கில் நூல் பெருகும். இயற்கை அறத்துக்கு மாறுபட்ட ஒவ்வொன்றும் செயற்கையின் பாற்படுமென்று சுருங்கச் சொல்கிறேன்.
செயற்கை முறைகளில் தலைப்பட்டால் உடல் நலத்துக்குக் கேடு விளையும். உற்ற வயதில் வாளா கிடந்தாலும் உயிர் நிலைக்குப் போதிய பயிற்சியின்றி உடல்நலன் கெடும். பின்னை என்ன செய்வது? வேறு வழி உன்னாது, இயற்கை அமைப்பு வழியே வாழ்வு நடாத்த ஒருப்படல் வேண்டும். இயற்கை அமைப்பு, பெண் அண் சேர்க்கையைக் குறிக்கொண்டு நிற்றல் வெள்ளிடைமலை. அவ்வமைப்பின் நோக்குக்கு மாறுபட்டொமுகி, ஏன் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளல் வேண்டும்? இயற்கைவழி நிற்க ஒருப்படுவது அறிவுடைமை.
அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்
“மக்கள், இயற்கை அமைப்புவழி நின்றால் உடல் நலமுறல் உண்மை. அனால் அவ்வழி அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞ் ஞானத்தைக் கூட்டுமா?' என்று ஐயுறுவோரும் உளர். இயற்கைக்கு முரண்பட்டு நிற்குமட்டும் அஞ்ஞானம் அகலா தென்றும், அதற்கு அரணாக நிற்க நிற்க மெய்ஞ்ஞானம் கூடு மென்றும் அன்பர்கள் அறிவார்களாக. இயற்கைக்கு அரணாக வாழ்தலாவது ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழ்வதாகும். “அந்தோ! இஃதென்னை? மற்றும் மாறுபட்ட கருத்து! இல்வாழ்க்கையா மெய்ஞ்ஞானத்தைக் கூட்டும்? அநியாயம்! அநியாயம் !/ என்று கடிந்துரைப்போர் இல்லாமற் போகார்.
அழுக்காறு அவா வெகுளி முதலியன உள்ள இடத்தில் அஞ்ஞானமும், அவை அற்ற இடத்தில் மெய்ந்ஞானமும் நிலவும் என்பது எவரும் ஒப்ப முடிந்த உண்மை. இதில் கருத்து வேற்றுமை இல்லை. அழுக்காறு முதலிய தீக்குணங்களின் நீக்கத்துக்கும், மெய்யுணர்வின் ஆக்கத்துக்கும் கடைப்பிடிக்கத் தக்க வழி யாது? இல்வாழ்க்கையை அஞ்ஞான மென்றும் பிரவர்த்தி யென்றும் பேசுவோர் என்ன வழி காட்டுகின்றனர் 2 அது செயற்கை வழியா யின் உடலுக்குக் கேடு விளையும். மெய்ஞூ ஞானத்துக்கு உடல்நலன் மிக மிக இன்றியமை யாதது.”உடலார் ஒழிந்தால் உயிரார் ஓழிவார் - திடம்பட ஞானம் சேர வொட்டாது' என்றார் திருமூலர். மேலே காட்டிய வழிகளுள் எதில் நுழையினும், அது செயற்கை வழியாய் முடிகிறது. எஞ்சி நிற்பது இல்வாழ்வு ஒன்றே. அதை அஞ்ஞான வழி எனில் வேறு வழி என்ன? வேறு வழி, நீத்தல் அல்லது துறவு என்று அன்பர்கள் கூறலாம். நீத்தல் என்னும் துறவைப்பற்றி இந்நூலின் இடை யிடையே பேசி வருகிறேன். புலனடக்கத்தி”லும் குறிப்பாக அது பற்றிச் சில உரை பகர்ந் துளேன், ஆயினும், இன்னும் சிலமொழி கூறுதல் தவறாகாது.
நீத்தல் அல்லது துறவு
சில இடங்களில் புலனடக்கம் எவ்வாறு திரிபாகக் கொள்ளப்பட்டி ருக்கிறதோ, நீத்தலும் அவ்வாறே கொள்ளப் பட்டிருக்கிறது. திரிபு பல அண்டாக நிலைத்தும் நிற்கிறது. திரிபில் மயங்கிக் கிடப்போர்க்கு என் போன்றார் கூற்று, கூற்றாகவே தோன்றும்.
யான் புதிதாக ஓன்றுங் கூறுகிறேனில்லை. பண்டைத் தமிழ்மக்கள் கொண்ட ஓர் அறத்தையே இன்று வலியுறுத்து கிறேன். இடைக்காலத்தில் தோன்றிய திரிபும் மயக்கமும் நாட்டையே அலைக்கின்றன. தொல்காப்பியனார், இறைய னார், திருவள்ளுவனார். மாணிக்கவாசகனார், அண்டாள் முதலியோர் கோலிய அறநெறியே யான் வலியுறுத்தும் செந்நெறி யாகும். இக்கால ரவீந்திரநாத் தாகூரும் அவ்வற நெறியையே உலகிற்கு அறிவுறுத்தினார். எனது உள்ளக்கிடக்கையைச் செவ்வனே உணராது, புதுமுறை' என்று என்மீது பழிசுமத்தும் அன்பர்கட்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். யான் குறிப்பது புதுமுறை யன்று; அது பழையது. புதுமுறை காண்பதும் குற்றமாகாது. அதற்கும் மக்கட்கு உரிமை இருத்தல் வேண்டும். “தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா ' என்று உமாபதி சிவம் உரைத் இருத்தல் காண்க.
கருத்து வேற்றுமை
நமது நாட்டில் கருத்துவேற்றுமைக்கு மதிப்பு ஏற்படல் வேண்டும். கருத்து வேற்றுமை காரணமாகப் பகைமை பாராட்டலும் கேடுசூழலும் அறியாமை. கருத்து வேற்றுமைக்கு இடமும் மதிப்பும் கொடுப்பது சிறந்த நாகரிகமாகும். அவரவர் கருத்தை அவரவர் வெளியிடுவாராக. உலகம் கொள்ளத் தக்கதைத் கொள்ளும், தள்ளத்தக்கதைகத் தள்ளும். பழைமை என்று மடமையைப் போற்றலும், புதுமை என்று செம்மையைத் தூற்றலும் அறிவுடைமையாகா. இக்குணமுடைய நாடு ஒரு போதும் வளர்ச்சியுறாது. கருத்து வேற்றுமைக்கும், பொருந்திய புதுமைக்கும் இடந்தரும் நாடு வளரும். இது நிற்க.
மூவாசை
நீத்தல் என்பதற்கு உலக அசையை நீப்பது என்று சொல்லப் படுகிறது. அசை வகைகள் பல. அவை மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று தொகுக்கப்-பட்டிருக்கின்றன. இம் மூன்றனுள் பெண்ணாசையை நீத்தால் மற்ற அசைகள் தாமே நீங்குமென்று அறையப்படுகிறது. “மண்ணாசை தன்னிற் பொன்னாசை தன்னின் மயக்க வாழ்க்கைப் - பெண்ணாசை நீத்தல் எளிதோ பெரியோர் தமக்கும்” என்றும் பெண்ணாசையின் கொடுமை குறிக்கப்படுகிறது. பெண்ணாசையால் எல்லா அசைகளும் வளரும் என்பது பெண்ணை வெறுப்போர் கருத்துப் போலும்!
பெண்ணை நீத்தல் ஞானமாகாது
இடைக்காலத்தில் அணுலகில் எழுந்த அடக்குமுறை, பெண்ணுலகை மாயையாகவும் அஞ்ஞானமாகவும் கருதச் செய்திருக்கிறது. பெண்ணுடன் வாழ்தல் பிரவர்த்தி மார்க்கமாம்! அஞ்ஞானமாம் /அவ்வாழ்வைக் துறத்தல் நிவர்த்தி மார்க்கமாம்! மெய்ஞ்ஞானமாம்! இந்த ’ஞானம்’ பேசும் ’அறிஞரை’ நோக்கிச் சில கடாக்கள் கடாவ விரும்புகிறேன். “ அறிஞரே ! நீவிர் யாண்டிருந்து முளைத்தீர்? நுந் தந்தை ஒரு பெண்ணுடன் கூடி வாழாதொழிந்திருப்பரேல், நீவிர் இப்பொழுது இந்த ஞானம் பேசல் முடியுங்கொல்! நுந் தாய் தந்தையர் “சேர்க்கை” யன்றோ நமது துன்ப இருட்கட்டை அவிழ்த்து, நுமக்கு இவவுடலீந்து , இவ்வுலக வாழ்வுதந்து. உம்மை ஞான ஆராய்ச்சி புரியுமாறு செய்திருக்கிறது. அவரைப்போல் நீவிரும் ஒரு பெண்ணுடன் கூடி வாழ்ந்து, துன்ப இருளிலுள்ள சில உயிர் கட்கு உடலீந்து அவைகளை இவ்வுலகில் கொணரல் வேண்டு மன்றோ? நீவிர் மட்டும் “ஞானம்” பெற்று, வீடுபேறெய்துவது அறமாகுமோ? இது தன்னலமா? பிறர் நலமா? தன்னலமுடையார்க்கு ஞானம் உண்டோ? அன்பு உண்டோ? நீவிர் பெண்வாழ்வை மறுப்பது இறைவன் படைப்பு நோக்குக்கு இடையூறு செய்வதாகாதோ? புத்தர், கிறிஸ்து, முகம்மது, காந்தி போன்ற பெரியோர் உலகிற்கு வேண்டாவோ? பெண்ணுடன் வாழ்தலை வெறுத்தால் அத்தகைய பெரியோர் எப்படி, உலகில் தோன்றுவர்? அறிஞரே ஓர்மின்!” பெண்ணின் வயிற்றிற் பிறந்து, “ஞானம்' பேசும் ஒருவர், அப்பெண்ணை மாயை - அஞ்ஞானம் - பிரவர்த்தி - என்று பேசுவது எத்தகைய நன்றியறிதல்! எத்தகைய கைம்மாறு! வெட்கம் ! வெட்கம் !
அஞ்ஞானம் எது? மெய்ஞ்ஞானம் எது? பெண் தெய்வத்தை மாயையென்று கருதி அவளைத் துறப்பது அஞ்ஞானமென்றும், பெண்ணைக் கடவுள் வடிவம் என்று உணர்ந்து அவளுடன் அன்பு வாழ்வு நடாத்துவது மெய்ஞ்ஞான மென்றும் யான் சொல்கிறேன்; இங்ஙனமே பெண்ணுடன் கூடி வாழல் நிவர்த்தி என்றும், கூடி வாழாமை பிரவர்த்தி என்றும் சொல்கிறேன். எப்படி?
திருவள்ளுவர் வழி விளக்கம்
திருவள்ளுவனார் வழியே நின்று எனது கருத்தை வெளியிடுகிறேன். திருவள்ளுவனார், “மனத்துக்கண் மாசில னாதல் அனைத்து அறம்” என்றும், “அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும் - இழுக்கா இயன்றது அறம்” என்றும் அறத்தின் இயல்பு கூறியிருக்கிறார். இவ்வறநிலை முன்னருங் கூறப்பட்டது. அமுக்காறு முதலிய குற்றங்களினின்றும் நீங்கி, மன மாசு அகற்றவது எப்படி? ஏட்டுப் படிப்புக் கொண்டு எல்லாவற்றையும் புறத்தே நீத்தால் மனமாசு அகன்றுவிடுமோ? வாய்வேதாந்தம் மிக எளிதில் பேசிவிடலா மன்றோ?
பெண்ணை விடுத்தோடல், காமக்கொடுமை
எவ்வெண்ணத்தோடு வாய்ஞானிகள் துறவு ஏற்க விரும்புகிறார்கள்? “பெண் மாமை; காமப் பொருள் ” என்னும் எண்ணத் தோடன்றோ? இவ்வெண்ணத்துடன் அவர்கள் காட்டுக் கோடினாலென்ன? மூக்கைப் பிடித்தாலென்ன? அவர்கள் உள்ளத்துள்ள காமநோய் ஓடிப்போகுமோ? காம எண்ணம் உள்ளமட்டும் அஃது அவர்களை மலையிலும் எரிக்கும்; நீரிலும் எரிக்கும்; காட்டிலும் எரிக்கும், நாட்டிலும் எரிக்கும், எங்கும் எங்கும் எரிக்கும். இவ்வெரியால் “இத்துறவோர்” கூடா ஓழுக்கத்திலோ வேறு எச்செயற்கைத் துறையிலோ வீழ்ந்து ஒழியினும் ஒழிவர்; வீழா தொழியினும் பெருநிலை இவர்க்குக் கூடப் போவதில்லை. என்ன? மன மாசு அகலா ஒருவர்க்கு எங்ஙனம் பெருநிலை கூடும்? இவர் மனத்திலுள்ள மாசன்றோ பெண்ணினிடத்துப் பொலிதரும் கடவுட் டன்மையை மறைத்து, அதை மாயை எனச் கருதித் துறக்கச் செய்தது? மாசு எவார் பாலது? பெண்ணின் பாலதா? ’இத்துறவோர்' பாலதா? தம்பாலுள்ள மாசினைசத் துடைக்க வழி தேடாது, அதைச் துடைக்க வந்த பெண் தெய்வத்தை - அன்பு வடிவை - மாயை என்று கருதி ஓடுவது அஞ்ஞானமாகாது, பின்னை எஞ்ஞானமாகும்?
மனமாசு அகற்றும் வழி
“மனத்துக்கண் மாசிலனாதல்் என்று அறநிலை கூறிய திருவள்ளுவனார், அம் மனமாசை அகற்றுதற்கு வழி கூறா தொழிந்தாரில்லை. அவ்வழி எது? பாயிரத்துள் அறன் வலி யுறுத்தி, அவ்வறநிலை பெறுதற்குப் படிப்படியே அவர் வழி கோலியிருக்கிறார். முதலாவது திருவள்ளுவனார் “இல்வாழ்க்கை” குறிக்கிறார்; பின்னை அதற்குரிய “வாழ்க்கைத் துணைநலம்” வகுக்கிறார்; அதற்கு மேல் “மக்கட்பேறு” புகல்கிறார்; அதினின்றும் “அன்புடைமை” “விருந்தோம்பல்” முதலிய அறத் துறைகளை முறை முறையே அணி அணியாகக் தொகுத்துச் செல்கிறார். இவ்வதிகார வைப்பின் நுட்பத்தைச் சிறிது கூர்ந்து நோக்குவோம்.
அன்புக் கடவுள் கோயில் கொள்ளல்
அழுக்காறு அவா முதலிய மாசுபடிந்த மனத்தில் தன்னல உணர்வே பெரிதும் இருக்குமன்றிப் பிறர் நலங் கருதும் அன்பு நிகழ்தல் அரிது. அன்பும் கடவுளும் ஒன்றே. அழுக்காறு முதலியன குறையக் குறையத் தன்னலப் பேயுணர்வு தேய்ந்து தேய்ந்து இறுகும். பின்னை அவ்விடத்தில் அன்புக் கடவுள் உணர்வு, வளர்ந்து வளர்ந்து, மற்ற உயிர்களிலும் அக்கடவுள் கோயில் கொண்டிருத்தலைப் புலப்படுத்தும். அதனால் நெஞ்சிலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாது, அவ்வுயிர் நலன் நாடிப் பயன் கருதாத் தொண்டாற்ற இயல்பாக ஒருணர்வு எழும். இவ்வுணர்வு பெறவே மக்கள் பிறக்கிறார்கள். அவ்வுணர்வு பெறுவிக்கவே கடவுள் உயிர்கட்குத் தநு கரண புவன போகங் களைக் கொடுக்கிறார். இவ்வுலக வாழ்வின் நோக்கமும் இவ்வுணர்வு பெறல் வேண்டுமென்பதே.
கலைஞானத்தால் பயனின்மை
இப்பெருநிலையை மக்கள் முதல் முதல் கலைஞானத் தளவில் உணர்கிறார்கள். “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது பழமொழி. ஏட்டில் படித்தது நடையில் - செயலில் - வரல் வேண்டும். “எவ்வுயிர்க்கும் அன்பாயிரு' என்று வாயால் சொல்வது எளிது. அதைச் செயலில் கொணர்வது அரிது. அழுக்காறு அவா முதலிய மாசுகளைத் துடைத்தால் தன்னிடத் தும் பிறரிடத்தும் விளங்கும் அன்புக் கடவுள் தோற்றமுறும் என்று பேசலாம்; எழுதலாம். இப்பெருநிலையைச் செயலில் பெற்றாலன்றோ வாழ்வின் நோக்கம் நிறைவேறும்? வெறுங் கல்வியுடன் நின்றால் மனமாசு எங்ஙனம் அகலும்? அன்பு ஊற்று எங்ஙனம் திறக்கும்?
கல்விப்பயன் இல்வாழ்க்கை என்பது
“வெறுங் கல்வி” அறிவோடு வளரும் ஒருத்தியும் ஒருவனும் ஒன்றி வாழப்புகுவரேல், அக்கல்வி அறிவாலாகிய பயன் பெபெறுவர். இல்லையேல் அவர் அப்பயன் பெறாதொழிவர். கல்விப் பயனைப் பெறுதற்குரிய நிலை ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழ்வதாகும். இந்நிலை கூட்ட இயற்கை, தன் நாட்டத்தைச் செலுத்தியே நிற்கிறது.
உற்ற வயதில் இருவர்க்கும் இன்ப உணர்வு தோன்றுகிறது. அஃது ஏன் தோன்றுதல் வேண்டும்? அவ்வுணர்வின் நோக்கம் என்னை? இருவரையும் சேர்க்க வேண்டு-மென்பதன்றோ? இருவரும் இயற்கை கூட்டும் வழியே சேர்ந்தால், வாழ்வின் நோக்கம் கைவரப் பெறுவர். வாய் வேதாந்தம் பேசிப் பேசிப் போலித் துறவில் அவர் தலைப்படுவரேல், வாழ்வு நோக்கம் கைவரப் பெறாது இடர்ப்பட்டொழிவர். இயற்கை வழி என்னும் அண்டவன் அணைவழி நிற்றலே அறிவுடைமை. அதற்கென்று படைப்புக் களும் அமைந்திருக்கின்றன. ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலும், ஒருவன் ஒருத்தியுடன் வாழ்தலும் இயற்கை; இயற்கை.
இல்வாழ்க்கையில் தன்னலக்கேடு
இயற்கை வழி ஒருத்தியும் ஒருவனும் கூடி இல்வாழ்வில் நுழைகின்றனர். நுழைவதால் வாழ்வு நோக்கம் எங்ஙனம் நிறைவேறும்? இங்கே கூர்ந்து கூர்ந்து வாழ்வின் வளர்ச்சியை நோக்குவோமாக. நாளடைவில் படிப்படியே இவளிடத்துள்ள அழுக்காறு அவா முதலிய மாசுகளும் இவனிடத்திலுள்ள அம் மாசுகளும் தேய்ந்து தேய்ந்து, அவ்வவ்விடத்தில் பொறுமை, தியாகம், இவை எல்லாவற்றிற்கும் அடி.ப்படையாயுள்ள அன்பு, அப் படிப்படியே கால் கொண்டு கோயில்கொள்ளும் அழகை என்னென்று சொல்வது? சுருங்கச் சொல்லின், தன்னலங் கெட்டுப் பரநலம் பெருகும் என்னலாம்.
மணத்தின் பின்னர் விளையும் மாறுதல்
மணவாழ்விற்கு முன்னர், ஒருத்தி பெரிதுந்தன்னையே நேசித்துத் தன்னலத்திலேயே நாட்டஞ்செலுத்துகிறாள்; ஒருவனும் அவ்வாறே தன்னலத்தில் தோய்ந்து கிடக்கிறான். காரணம், பரநலத்துக்குரிய அன்பு ஊற்றை, அழுக்காறு அவா வெகுளி முதலிய மாசுகள் மறைத்து மூடிக் கொண்டிருப்பதாகும். மணவாழ்விற்குப் பின்னை ஒரு பெரும் மாறுதல் இருவர்பாலும் நேர்கிறது. இவள் இவனை நேசிக்கிறாள்; இவன் இவளை நேசிக் கிறான். அந்தோ! எத்தகைய நேசம்! சொல்லலும் இயலுமோ! இவள் இவன் ஆகிறாள்; இவன் இவள் ஆகிறான். இருவரும் ஒருயிர் ஈருடலெனப் பொலிகின்றனர். இவள் நதோயுற்றால் இவன் நோயுற்றதுபோல வருந்துகிறான்; இவன் நோயுற்றால் இவளும் அவ்வாறே வருந்துகிறாள். என்ன நேசம்! ஒருவரிடத்தில் முன்னே கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு, இப் பொழுது இருவர் பால் பரவலாயிற்று. எவ்வளவு அன்பு பரவுகிறதோ, அவ்வளவில் அழுக்காறு அவா முதலிய மாசுகளும், அம்மாசுகளாலாகுந் தன்னலமும் கெடும்.
பிள்ளைப் பேற்றால் தியாகம் பெருகல்
இருவரும் கூடி வாழும்பொழுது, இவரது அன்பின் பயனாகக் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் இவ்விருவருடைய உயிர் என்று கூறல் மிகையாகாது. தாயும் தந்தையும் குழந்தைகளை எப்படி நேகிக்கின்றனர் என்பதை விளக்கலும் வேண்டுமோ? இருவரிடையே பரவி முட்டி நின்ற அன்பு, இப்பொழுது மூன்றாவது உயிர்களிடைப் பரவி நிற்கிறது. அவ்வளவில் அழுக்காறு அவா முதலியன கெடுகின்றன. பிள்ளைகள் பால் அழுக்காறு முதலியன கொள்ளும் தாய் தந்தையர் அரியர். தாய் தந்தையர் தமக்கென்று ஏற்ற வாழ்வு, இப்பொழுது பிள்ளைகளுக்கென்று அர்ப்பணஞ் செய்யப்படுகிறது. அன்பார்களே! பாருங்கள்; தன்னலங் கெடுவதையும், தியாக உணர்வு பெருகுவதையும் உன்னிப் பாருங்கள். அன்பு நிகழும் இடத்தில், அழுக்காறு முதலிய மாசுகள் தலைகாட்டுமோ? இப்பொழுது தாய் தந்தையர் தம்மை மறந்து மூன்றாவது உயிர்களாகிய பிள்ளைகள் நலத்துக்கென வாழ்வோராகின்றனர். அழுக்காறு முதலியன குறைதலும் அன்பு வளாரர்தலும் “நிவர்த்தியா பிரவர்த்தியா” என்று, பெண்ணை வெறுக்கும் “பெரியோர்களை நோக்கி வினவுகிறேன்.
பெண்ணை வெறுத்தவனும் கொண்டவனும்
இல்வாழ்வு ஏற்ற ஒருவன், தன்பாலுள்ள மாசுகுறைந்து, அன்பு ஊற்றுத் திறக்கப் பெற்று, அவ்வன்பு, மனைவி மக்கள் மீது பொழிவது காணும் பேறு பெறுகிறான். பெண்ணை “மாயை” என்று வாய் வேதாந்தம் பேசித் திரியும் ஒருவன் அன்பின் தன்மை இன்னதென்று உணராது, மாசடர்ந்த இருள்மனமுடைய வனாய் நிற்கிறான். எவன் நிவர்த்திமார்க்கத்தில் இருப்பவன்? எவன் பிரவர்த்தி மார்க்கத்தில் கிடப்பவன்? நேயர்களே! சிந்தித்து உண்மை காணுங்கள்.
மற்ற உயிர்களிடம் அன்பு பரவல்
ஒருத்தியும், ஒருவனும் இளமையில் ஏட்டில் படித்த அன்பை, இப்பொழுது வாழ்வில் காண்கின்றனர். இவ்விருவரும் கற்றவராகலான், பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் நலனுக்குப் பயன் கருதாத் தொண்டு செய்துவரும் வேளையில், “இவவுயிர் கட்கும் மற்ற உயிர்கட்கும் என்ன வேற்றுமை? இவர்கட்குள்ள பசி- பிணி- முதலியன மற்றவர்கட்கும் உண்டு. இவர்கள் நம் வயிற்றிற் பிறந்தமையான், இவர்களை நாம் பாதுகாக்கிறோம். அங்ஙனமே மற்றவர்களும் தங்கள் தங்கள் மக்களை வளர்த்து வருகிறார்கள். இஃது ஆண்டவன் கோலியுள்ள ஒழுங்கு முறை. உதவியின்றி வருந்தும் உயிர்கள் என்செய்யும்? அவைகட்கும் நாம் உதவுதல் வேண்டும்” என்னும் எண்ணம் அடிக்கடி, அவர்தம் உள்ளத்தில் தோன்றும். இப் பரோபகார எண்ணம் முதிர முதிர அழுக்காறு அவா முதலியன கெடும். அவை கெடக்கெட அவர்தம் அன்பு, மற்ற உயர்திணை உயிர்களிடத்தும் பரவத்தொடங்கும், பின்னை அஃறிணை உயிர்களிடத்தும் பரவும். இப் பரவல்முறையை விரித்துக் கூற வேண்டுவதில்லை. பரோபகார எண்ணம், மனமாசு களைக் கழுவி, மக்களைத் தூய்மைப்படுத்தி, எவ்வுயிரிலும் நிறைந்துள்ள அன்புக் கடவுளைக் காட்டும். இம் முழுநிலை அடைந்தோர் முழுநிவர்த்தி பெறுவர். இந்நிலைக்கு இல்வாழ்வும் பிள்ளைப் பேறும் கருவியாயிருத்தல் கருதற்பாலது. பிள்ளைப் பேற்றிற்குப் பின்னரே, மக்களிடத்து அன்பு உளமும் - பரோபகார சிந்தையும் - திறக்கப்படுதலும் கவனிக்கத்தக்கது. ஒருத்தியும் ஒருவனும் இளமையில் கற்ற “எவ்வுயிர்க்கும் அன்பாயிரு' என்னுங் கல்வியை, இப்பொழுது அவர் தம் வாழ்வில் காண்கிறார். எவ்வுயிர்க்கும் அன்பாயிருத்தலாவது, மனமாசுகளை முற்றுங்களைந்த ஒரு நிலை என்க. இஃதன்றோ மெய்ஞ்ஞானம்? நிவர்த்தி மார்க்கம்? திருவள்ளுவனார் உலகிற்கு அறிவறுத்தியது இச்செந்நெறி என்க.
திருவள்ளுவனார், “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறம்” என்றும், “அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும் - இழுக்கா இயன்றது அறம்” என்றும் கூறி, அழுக்காறு அவா முதலிய மனமாசுகளை அகற்றும் வழி கோல்வான், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை முறை முறையே அமைத்தனர். இம்முறையில் அழுக்காறு முதலியன தேய்தலும், அன்பு முதலியன வளர்தலும் அமைந்திருத்தல் காண்க.
அன்புடைமையும் விருந்தோம்பலும்
மக்கட் பேற்றிற்குப் பக்கத்தில் ’அன்புடைமை’யையும் ’விருந்தோம்ப'லையும் பொருத்தியிருத்தல் கருதற்பாற்று. ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழ்வு நடாத்தி, மக்களை ஈன்ற பின்னரே, அன்னார் அன்பின் தன்மை இன்னதென்று அநுபவத்தில் உணர்வோராகின்றனர். அந்நிலையில் அவர்தம் அன்பு ஊற்றும் திறக்கிறது. அவர்க்கு அப்பொழுது அன்பு உடைமையாகிறது. பிள்ளையில்லா ஓருவன் அடா செயல் நிகழ்த்தும் போது, அவனை நோக்கி, “பிள்ளையில்லாப் பாவி” என்று உலகோர் சொல்வது வழக்கம். அதன் பொருள் என்னை? அன்பில்லாதவன் என்பது. பிள்ளைப் பேற்றிற்கும் அன்பொழமுக்கத்துக்கும் உள்ள தொடர்பு, வாழ்வில் அநுபவத்தில் உணரத்தக்கது.
“அன்புடைமை”க்குப் பின்னை ’விருந்தோம்பல்' வைக்கப் பட்டிருக்கிறது. பிள்ளைப்பேற்றிற்குப் பின் எழும் அன்பு, தொடர்புடைய அப்பிள்ளையளவில் நில்லாது, தொடர்பில்லா உயிர்களிடத்தும் பாய்தலை “விருந்தோம்பல்” தெரிவிக்கிறது. இதுபற்றி முன்னருஞ் சுருங்கச் சொல்லியிருக்கிறேன்.
புதிதாக வருவோரே விருந்தினராவர். விருந்து என்னுஞ் சொல்லிற்குப் புதுமை என்பது பொருள். உற்றார் உறவினர் நண்பர் முதலியோர் விருந்தினராகார்; முன்பின் பழக்கமின்றி வருவோரே விருந்தினராவர். அவர்க்கு உதவுதல் தொடர்பில்லா மற்ற உயிர்கட்கு உதவுதலாகும். இக்காரணம் பற்றியே ’விருந் தோம்பல்’அன்புடைமை’க்குப் பின்னே பொலிகிறது. அன்பில்லா இடத்தில் விருந்தோம்பல் ஏது?
மற்றைய மற்றைய அதிகாரங்களெல்லாம் ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் வாழ்வில் கொள்ளத்தக்க முறைகளையும் தள்ளத்தக்க முறைகளையும் வகை வகையாக விரித்துக் கூறுவனவாம்.
இப்பொழுது நீத்தல் எது? பெண்ணை மாயை என்று இல்வாழ்வை விடுத்து ஓடுவதா அல்லது இல்வாழ்வை ஏற்று அழுக்காறு முதலிவற்றை நீக்குவதா என்று உன்னுதல் வேண்டும். இல்வாழ்வு, அழுக்காறு அவா முதலிய மாசுகளை நிவர்த்தி செய்யும் மார்க்கம் என்பது ஓல்லும்வகை முன்னே விளக்கிக் காட்டப்பட்டது. திருவள்ளுவனார் கோலிய வழியும் இதுவே என்பதும் விளக்கப்பட்டது. அதலால், பெண்ணை மாயை என்று விடுத்து ஓடல், நீத்தல் அகாதென்றும், ஓடுவது மாயையில் தோய்ந்து கிடக்கும் பிரவர்த்தி மார்க்கமென்றும் உணர்க.
திருவள்ளுவனார் பாயிரத்தில், “நீத்தார் பெருமை” என்றோர் அதிகாரமும், அறத்துப் பாலில் “துறவு” என்றோர் அதிகாரமும் அருளியிருத்தல் என்னை என்று சிலர் வினவலாம். இவ்விரண்டதிகாரமும் எனது கருத்துக்கு அரண் செய்வனவே. மன மாசுகளை அகற்றுதற்கு இல்வாழ்க்கை முதலிய முறைகளான் வழி காட்டிய ஒருவர், அதற்கு மாறுபடுமாறு மற்ற இடங்களில் வேறு வழி காட்டுவரோ? காட்டார். “நீத்தல்” “துறவு' என்னுஞ் சொற்களைக் கொண்டு, அவை பெண்ணை வெறுக்கும் போலித் துறவைக் குறிப்பன என்று, திருவள்ளுவனாரை மற்றவர் தம்வழி ஈர்க்க மூயலலாகாது. பெண்ணை வெறுத்தல் துறவெனக் கொள்வோர் கொள்க. அதைப்பற்றிய கவலை எனக்குச் சிறிதும் இல்லை. திருவள்ளுவனாரை “அத் துறவோர்” தமக்குத் துணை கோடல் குறித்து வருந்துகிறேன். இயற்கை வாழ்வு நடாத்தி, “இயற்கை அறவழியே உய்யும் வழி” என்று உணர்த்திய ஒருவர் மீது ஏன் வீண்பழி சுமத்தல் வேண்டும்?
“நீத்தார் பெருமை”, துறவு' என்னும் இரண்டதிகாரங்் களில் யாண்டாயினும் பெண்ணை மாயை என்று துறக்குமாறு திருவள்ளுவனார் மொழிநத்திருக்கிறாரா என்பது ஆரறாயற் பாலது. அவ்விரண்டும் வருமாறு:
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு எயர்கோமான்
இந்திரனே சாலுங் கரி,
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியார்
செய்கரிய செய்கலா தார்.
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யூலகு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
குணமென்னுங குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.
அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொமுக லான்.
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
அடல்வேண்டும் ஜந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயாரத்து.
மற்று தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க குடம்பு மிகை.
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டரா மற்றை யவர்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
’நீத்தார் பெருமை' பாயிரத்திலிருப்பது; “துறவு” அறத்துப் பாலிலிருப்பது. இப்பாக்களின் பொருள் நுட்பங்களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. திரண்ட கருத்தைமட்டும் எடுத்துக் கொள்வோம். புலன்கள் தீயவழியில் உழலாதவாறு அவற்றைக் காத்தல் வேண்டுமென்றும், அவை தீய வழியில் உழல முனைந் தெழுமேல் அவற்றின் எழுச்சியை அடல் வேண்டுமென்றும், யான் எனது என்னுஞ் செருக்கை அறுத்தல் வேண்டுமென்றும், அகப்புறப் பற்றைக் களைதல் வேண்டுமென்றும் இவ்விரண்டதி காரமும் அறிவுறுத்துகின்றன. இவற்றின் கருத்து, “பெண்ணைத் துறத்தல்” என்று எங்ஙனம் கூறுவது?
உண்மைத் துறவு
புலன்கள் நெறியல்லா நெறியில் சென்று உழலும்போதும் யான் எனது என்னுஞ் செருக்கு எழும்போதும் - அகப்புறப்பற்று உறுத்தும்போதும் - மக்கள், அழுக்காறு அவா வெகுளி கொலை களவு கள் காமம் பொய் முதலிய பேய்கட்கு இரையாகிறார்கள். இவைகட்கு இரையாகாதவாறு மக்கள் தங்களைக் காத்துச் செற்நெறி நிற்றல் வேண்டும். இதற்கு அழுக்காறு முதலிய வற்றிற்குப் பிறப்பிடமாயுள்ள புலன்களின் தீநெறியோட்டத்தை யும், யான் எனது என்னுஞ் செருக்கையும், அகப்புறப் பற்றையும் தடுத்து, இவைகளினின்றும் நீத்தல் அதாவது துறத்தல் வேண்டும். எனவே, துறத்தலாவது அழுக்காறு முதலியவற்றினின்றும் நீங்குதலாகும். இதுவே துறவென்பது. சிறிது விளக்கிக் கூறின், அழுக்காறு, அவா, வெகுளி, கொலை, களவு, கள், காமம், பொய் முதலியவற்றை விடுவது துறவு என்று கூறலாம்.
துறவைப் பற்றிய ஐயம்
பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் நூல்களிற் சில வலியுறுத்திக் கூறுவதன் பொருளென்னை என்று சிலர் கேட்கலாம். பெண்ணைக் துறக்குமாறு பெரியோர் எவரும் கூறினாரில்லை. பெண்ணாசையைத் துறக்குமாறு பெரியோர் நூல்கள் நுவல்வது உண்மை. பெண்ணைத் துறத்தல் என்பதற்கும், பெண்ணாசையைத் துறத்தல் என்பதற்கும், வேற்றுமை உண்டு. பெண்ணாசை எவரிடத்திருப்பது? அது பெண்ணைக் காமுறும் ஓருவன் உள்ளத்திருப்பது. அவ்வாசையைத் துறக்க வேண்டுவது அவன் கடமை. அவ்வாசையைக் துறவாது, பெண்ணை நீத்துக் காட்டுக் கோடி, மூக்கைப் பிடித்தல் எங்ஙனந் துறவாகும்? பெண்ணாசையைத் துறக்கும் ஒருவனுக்குப் பெண்ணினிடத்துள்ள கடவுட்டன்மை இனிது புலனாகும்.
பெண்ணுடன் வாழலே ஆசைதுறத்தல்
ஆசை முதலிய குற்றங்கள் “மனமாசு' என்று மேலே விளக்கி வந்ததை நேயர்கள் கருத்திலிருத்தல் வேண்டும். மனமாசு நீக்கத்துக்கு இல்வாழ்வு உறுகருவி என்பது, திருவள்ளுவனார் கருத்தையொட்டி, மேலே விளக்கப்பட்டது. மாசு நீக்கத்துக்குக் கருவியாயுள்ள பெண்ணையே துறத்தல் - நீத்தல் ஆகாது. அம் மாசைத் தொலைக்கவல்ல பெண்ணைக் துறப்பது மாசைச் செவ்வனே பதிய வைப்பதாகும். ஆதலால், ஆசை முதலிய மாசு களைத் துடைத்துப் பெருநிலை எய்தப் பெண்ணுடன் வாழ்தலே அறிவுடைமை.
நீத்தார் பெருமை எது?
“நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்திலுள்ள இறுதிப் பாட்டின் கருத்தை ஊன்றி நோக்குவோமாக. நீத்தார் பெருமை யாது? எவ்வுயிரையுங் தம்முயிரெனக் கொண்டு, அவ்வுயிர்க்குச் செந்தண்மை பூண்டொழுகுவது நீத்தார் பெருமை. எவ்வுயிரை யுந்தன்னுயிர்போல் கொண்டு ஒருவன் ஒழுகுதற்குத் தடையா யிருப்பன யாவை? அவை அழுக்காறு அவா வெகுளி முதலியன. இக்குற்ற நீக்கத்துக்கு உறுகருவி இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி ஓதவேண்டுவதில்லை. இல்வாழ்க்கையின் முடிந்த நிலை யாது? மனமாசு முற்றும் அகன்று முழு அன்புநிலை பெறுவது. இப்பெருநிலையை, “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் - செந்தண்மை பூண்டொமுக லான்” என்னும் குறள் அறிவிக்கிறது. எனவே, நீத்தார் எவரெனில், அவர், பெண்ணை மாயை என்று கருதி ஓடாது, மனத்திலுள்ள மாயையை ஓட்ட, பெண் தெய்வத் துணைபெற்று வாழ்ந்து, அன்புநிலை அடைந்து, எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுவோ ரென்க.
பெண்வழிச் சேறல்
“பெண்ணைக் துறத்தலே துறவு என்னுங் கொள்கை யுடையார், திருவள்ளுவனாரைகச் தம் பக்கத் துணையாக்க வேண்டித் திருக்குறளிலுள்ள ’பெண்வழிச் சேறல்' என்னும் அதிகாரத்தைத் தமது வைப்பென எடுத்துக்காட்டி, “இதற்கென் சொல்கிறீர்” என்று கடாவுகிறார், “வாழ்க்கைத் துணை நலன்” வகுத்த திருவள்ளுவனார் - “இன்பப்பால்' இனிது ஓதிய திருவள்ளுவனார் - “பெண்வழிச் சேறல்' என்று பொதுப்படக் கூறார். “பெண் வழிச்சேறல்” என்னும் அதிகார வைப்பு முறையை நோக்குதல் வேண்டும். “பெண்வழிச் சேறல்: என்னும் அதிகாரத்தின் அண்டையில் “வரைவின் மகளிர்” என்னும் அதிகாரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, “கள்” “சூது” முதலிய அதிகாரங்கள் நிற்கின்றன. தெய்வப் பெண்ணைக் கொணர்ந்து இக்குழுவிலா திருவள்ளுவனார் செருகுவார்?
காம வேட்கை மேலீட்டான் விலைமகளிர் ஏவல் செய்யும் ஆடவர் கூட்டமும் உண்டு. அச்சிறுமைக் கூட்டத்தின் இழிவைப் “பெண்வழிச் சேறல்' என்னும் அதிகார வாயிலாக ஆசிரியா் விளக்கியிருக்கிறார். “பெண்வழிச் சேறல்” என்னும் அதிகாரம் ---------- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 121 காமக் கேட்டைத் தெரிப்பதென்ச. வேறு வழியில் அவ்வதிகாரக் கருத்தைக் கொள்வது திருக்குறள் நோக்கத்தை இடர்ப்படுத்துவ தாகும். இவ்வாறே மற்ற இடங்களிலும் முன் பின் பார்த்துத் திருவள்ளுவனார் உட்கிடக்கையைக் தெளிய முயல்க.
திருவள்ளுவரும் துறவும்
திருவள்ளுவனார் “இல்வாழ்க்கை” அதிகாரத்தில் “இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் - நல்லாற்றின் நின்ற துணை” என்றும், “துறந்தார்க்கும்- துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் -இல்வாழ்வான் என்பான் துணை” என்றும் அருளிய பாக்களிற் போந்துள்ள “இயல்புடைய மூவர்”, “துறந்தார்” யாவர் என்னுங் கேள்வி எழலாம்.
பிறப்பில் சாதி வேற்றுமை இல்லை என்பது திருவள்ளுவனார் காலத்தில் நால்வகை ஆச்சிரமம் வழக்கிலிருந்தது; நால்வகை வருணப் பாகுபாடும் இருந்தது. வருணப் பாகுபாடு பிறப்பில் இருத்தல் கூடாது என்று, திருவள்ளுவனார் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா- செய்தொழில் வேற்றுமை யான்” என்னுங் குறளால் மறுத்தனர். தொழில் முறை பற்றி நால்வகை இனம் எங்கணும் உண்டு. நமது நாட்டில் பிறப்பை ஒட்டி அவ்வின வேற்றுமை இடைக்காலத்தில் புகுத்தப் பட்டது. வேத காலத்தில் பிறப்பை யொட்டி நால்வகை வருணம் இயங்கவில்லை. இடைக் காலத்திலேயே அவ்வேற்றுமை இடம் பெற்றது. அவ்வேற்றுமையைப் பிறப்பில் கொள்ளலாகா தென்று திருவள்ளுவனார் மறுத்துரைத்தார்.
ஆச்சிரமம்
ஆச்சிரம ஒழுக்கம் மக்கள் வாழ்விற்குரியது. அம்முறை சில இடங்களில் மூன்றாகவும், சில இடங்களில் இரண்டாகவும் தொகுக்கப்பட்டி ருக்கிறது. நமது நாட்டில் அது நான்காக வகுக்கப்பட்டிருக்கிறது.
மாணாக்கனாயிருந்து கல்வி கற்றல், பின்னை அக்கல்விப் பயனைப் பெற இல்வாழ்க்கை ஏற்றல், அவ்வில்வாழ்கை யினின்றும் அன்பும் அருளும் விளங்கப் பெற்று உயிர்கட்குத் தொண்டு செய்யத் தம்மைப் பண்படுத்தல், அதன் பயனாக எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழமுகல் ஆகிய இவை ஒவ்வொருவர் வாழ்விலும் அரும்பி மலர்ந்து காய்த்துக் கனிய வேண்டுவன. மனைவியோடு தொடக்கத்தில் வாழும் ஓருவன், தன் வாழ்விற்குத் தொழில் பல செய்து பொருளுடையவனாகிறான். அவன், ஏழை மாணாக்கர்க்கும், தொண்டிற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் வாய்ப்புப் பெறாதார்க்கும், “எல்லாங் கடவுள் மயம்” என்று தொண்டு செய்வோர்க்கும், உண்டி முதலியன உதவுதல் இயல்பு[#]. 'இம்மூவர்க்கும் இல்வாழ்வின் முதற்படியில் நிற்பவன் துணை புரியக் கடமைப்பட்டிக்கிறான். ஈண்டுத் “துறந்தார்' என்போர் பெண்ணைக் துறந்தவரல்லா்; காமம் வெகுளி முதலியவற்றை மறந்தவரென்க. பெண்ணை வெறுத்தோடும் பூரியரை ஈண்டுத் திருவள்ளுவனார் “மூவர்” என்றும், “துறந்தார்” என்றும் குறிப்பிட்டாரில்லை.
----
[#] “இயல்புடைய மூவர்' என்பதற்குத் திருக்குறள் விரிவுரையில் யான் எழுதியுள்ள
குறிப்புக்களைப் பார்க்க.
வாழ்வை நான்கு கூறிட்டு அச்சிரமம் வகுத்த அறிஞரும் இல்வாழ்வை ஒஓதுக்கினாரில்லை. பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கனுள் கிருஹஸ்தமும் ஒன்றாயிருக்கிறது. பிரமசரியத்தில் படித்துணர்வதை அனுபவத்திற் பெறுதற்குரிய ஆச்சிரமம் கிருஹஸ்தம். அக்கிருஸ்தத்தின் பயன் வானப்பிரஸ்தமும் சந்தியாசமுமாகும். கிருஹஸ்தத்தின் முழுமை (Perfection) சந்தியாசமாகும். சந்நியாசமென்பது கிருஹஸ் தத்தினின்றும் பிரிந்து வேறுபட்டு நிற்பதன்று. சந்நியாசமாவது முற்றும் அழுக்காறு முதலிய மாசுகளினின்றும் நீங்கி, எவ்வுயிரிடத்தும் அன்புக் கடவுளைக் கண்டு, அவ்வுயிர் நலன் நாடிப் பயன் கருதாத் தொண்டு செய்வது. இப்பெரு நிலைக்குக் காரணமாயுள்ள கிருஹஸ்தத்தை வெறுக்குமாறு அச்சிரமக்காரருங் கூறவில்லை. துறவோர் என்று சொல்லப்படும் பெருமுனிவரர் அனைவரும் பெண்ணுடன் வாழ்ந்த பெரியோர் என்பது எவார்க்குந் தெரியும்.
தவமென்பது பெண்ணைத் துறப்பதன்று
“தவம் என்று ஒரு நிலை சொல்லப்படுகிறதே; அஃதென்னை?” என்னும் ஐயமும் ஈண்டுச் சிலர்க்கு நிகழலாம். திருக்குறளில் éதவம்' என்னும் ஓர் அதிகாரம் இருக்கிறது. தவம் என்பதும் அறநிலையின் ஓர் உறுப்பு. தவம் என்பது என்னை? பெண்ணை விடுத்துச் செல்வதா? அன்று.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாம
அற்றே தவத்திற்கு உரு.
என்றார் திருவள்ளுவனார். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமையும், பிறர் தீங்கு செய்யும்போது அதனால் விளையும் துன்பம் பொறுத்து அவர்க்குங்கேடு சூழாது நலன் புரிவதும் தவநிலையாகும்.
திருவள்ளுவர் மறுப்பு
போலித் துறவு திருவள்ளுவனார் காலத்திலேயே உலகில் நிலவலாயிற்று. அதன் வரலாற்றைப் பின்னே கூறுவன். அப்போலித் துறவைத் திருவள்ளுவனார் மிக உரமாக மறுத்திருக்கிறார். அம்மறுப்புகைளிற் சில வருமாறு :-
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புவியின்றோல் போர்த்துமேய்ற் தற்று.
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.
புற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
போலியும் உண்மையும்
“பெண்ணை வெறுத்தல் துறவு” என்னுங்கொள்கை எப்பொழுது எப்படி உலகிடை நுழைந்தது? எந்நாளில் எவ்வாறு அக்கம் பெற்றது? திகம்பர ஜைனம் தோன்றிய நாளில் பெண்ணை வெறுக்குந் துறவு உலகிடை நுழைந்தது. புத்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகட்குப் பின்னர்ப் போலித் துறவு உலகிடை ஆக்கம் பெற்றது.
திகம்பர ஜைனத்தைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் ’பெரிய புராண'த்தில் ’திருஞான சம்பந்த சுவாமிகள் புராணக்’ குறிப்புரையில் என் கருத்தை விளக்கி-யுள்ளேன். அதைப் பார்க்க.
போலித் துறவின் நுழைவு
புத்தர் பெருமான் தமது அறத்தை உலகிற்கு அறிவுறுத்தத் திருவுளம் பற்றியபோது, புகைத் தொடர்வண்டி, - மோட்டார் வண்டி - பத்திரிகைகள் - போன்ற சாதனங்கள் இல்லை. புத்தர் பெருமான் தமது சீரிய அறத்தை உலக முழுவதும் பரப்பும் பொருட்டுச் சில நன்மக்களைத் தொண்டர்களாகச் சேர்த்தனர். அவர்களுள் பெண் ஆண் என்னும் இருபாலாரும் இருந்தனர். அந்நன்மக்கள் காடு மலை கடந்து, பல இடங்கட்குச் செல்ல வேண்டியிருந்தமையானும், சில இடங்களில் தங்கவேண்டி யிருந்தமையானும், வேறு பல காரணம் பற்றியும் அவர்கள் இல்வாழ்வு ஏலாது தன்னந்த தனியராய்ப் புறப்பட்டார்கள். “தொண்டில் தலைப்படுவோர் இல்வாழ்க்கை ஏலாதிருத்தல் வேண்டும்” என்ற விதி அன்று பிறந்ததோ பிறக்கவில்லையோ தெரியவில்லை. அவ்விதி பிறந்ததாகவே வைத்துக் கொள்வோம்; வைத்துக் கொள்ளினும் அது கால நிலைக்கேற்றவாறு நிறுவப் பட்டதென்று கோடல் அறிவுடைமை. கால நிலைக்கேற்றவாறு சில காரணம் பற்றிச் செய்யப்படும் விதிகளை என்றும் நிலவ வைத்துப் பிடிவாதங்காட்டுவது அறிவுடைமையாகாது. அத்தகைய மக்கள் வாழும் நாடும் முன்னேற்றம் அடைதல் அரிது. நமது நாடு இதற்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது.
மகாத்மா காந்தியும் இல்லறமும்
மகாத்மா காந்தி, “இந்தியர் இல்வாழ்வு ஏலாதிருப்பது நலம்” என்று அறிவுறத்தினர். “மகாத்மா காந்தி ஏன் இவ்வாறு அறிவுறுத்தினர்? இப்போதனைக்கு நேர்ந்த அவசியம் என்னை?” என்று ஆராயாது, அவர் போதனையை நிலைபேறாக உள்ள இயற்கை அறமாகக் கோடல் நியாயமாகாது. மகாத்மா காந்தி என்றுமே இல்வாழ்வு வேண்டா என்று சொற்றாரில்லை. நாடு, உரிமை யிழந்து, செல்வ நிலை குலைந்து, வறுமை மேலீட்டான் பசியானும் பிணியானும் அலக்கணுற்ற வேளையில், “உயிர்களைப் பெருக்கலால், அவைகள் இன்னலுறு மாதலால், நாடு உரிமை பெறும்வரை, இல்வாழ்வு வேண்டா”: என்று அடிகள் அறிவுறுத்தினர். இம்செம்மொழி உயிர்கள் மீதுள்ள இரக்கத் தினின்றும் எழுந்ததாகும்.
காலமும் விதியும்
காலநிலை நாட்டுநிலை முதலியவற்றை நோக்கிப் பெரியோர் சொல்லும் மொழிகளையும், கோலும் முறைகளையும் என்றும் நிலைபேறாகக் கொள்வதால் வாழ்வில் பல திற இடர்கள் நிகழ்ந்துவிடும். சிற்சில சமயங்களில் நோயாளர்க்குப் பத்தியம் விதிப்பது போல, இயற்கைக்கு மாறுபடுவது போல் தோன்றத்தக்க சில விதிகள் அறிஞரால் நிறுவப் பெறுதல் உண்டு. நிலைமை மாறி ஒழுங்குபெற்றதும், அவ்விதிகளை விலக்கிவிடல் நல்லது.
அங்ஙனே பெளத்த தர்மத்தைப் பரப்ப வேண்டுமென்ற பேராவலால், புத்தர் பெருமான், காலநிலை - நாட்டுநிலை- பிற நிலை முதலியவற்றை உன்னித் தொண்டர்களை இல்வாழ்வு ஏலாதிருக்குமாறு அறிவுறுத்தியிருக்கலாம். இப்பொழுது நிலைமைகள் மாறுபட்டி ருக்கின்றன. இல்வாழ்வு ஏற்றும் பெளத்த தர்மத்தைப் போதிக்கலாம். இந்நாளில் பலதிற வண்டி, தபால், தந்தி, அச்சு, பத்திரிகை முதலிய பல சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அகவே, அறத்தைப் பரப்பும் முறைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.
தொண்டர் உள்ளம்
மற்றுமொன்றை ஈண்டுக் கூற விழைகிறேன். அது தனித்த வாழ்க்கையைப் பற்றியது. இல்வாழ்வின்றித் தனித்து வாழலும் இயற்கைக்கு முரண்பாடென்று முன்னே யான் வலியுறுத்தியதை ஈண்டு நினைவட்டிக் கொள்ளுமாறு நேயர்களை வேண்டுகிறேன். அறத்தொண்டிற்கெனப் புறப்பட்ட நன்மக்களும், தனிமை வாழ்வால் உடல்வளம் குலைந்து வருந்தார்களோ எனில், வருந்தார்கள் என்று இங்கே இயம்புகிறேன். அறத்தொண்டிற் கெனப் புறப்படும் நன்மக்கள் உள்ளத்தில் அழுக்காறு - அவா - வெகுளி முதலிய பேய்கள் உலவுமா? அல்லது அன்பு - அருள் - தயை என்னும் தெய்வம் நிலவுமா? என்று கேட்கிறேன். பேயுலவும் உள்ளமுடையார் அறத் தொண்டிற்கு அருகராகார். அருட்டெய்வம் நிலவும் உள்ள முடையாரே அறத்தொண்டிற்கு உரியராவர்.
தொண்டும் இல்வாழ்வும்
தொண்டு என்பதன் பொருள் என்னை? வளைவு- தாழ்வு என்பது பொருள். அழுக்காறு அவா முதலியவற்றிற்கு மூலமாய், “யான்” “எனது”: என்று நிமிர்ந்து நிற்கும் முனைப்புக் கெட அதாவது வளைய, அன்பிலும் அருளிலும் தாழ்வு பெற்றுப் பிற உயிர் நலன் நாடிப் பயன் கருதாது செய்யும் அருட்பணியே தொண்டாகும். இத்தொண்டுடையார் உள்ளத்தில், அருள் - இரக்கம் - தயை - என்னும் பரோபகாரச் தெய்வம் இருத்தலால், அவர்தம் உடலுக்கு எவ்விதக் கேடும்நேராது. தொண்டு செய்யும் போது அவர் உள்ளத்தெழும் மகிழ்ச்சி அவர் உடலைச் செவ்வனே ஓம்பும். இந்நிலையை இல்வாழ்வுங் கூட்டும்.
இப்பெரியோர் உள்ளம் தொண்டில் படிவதால் இவர் உடல்நலங் குலைவதில்லை. இஃது ஏற்றுக் கொள்ளற்பாலதே. மற்றுமொன்று மேலே வலியுறுத்தப்பட்டது. அஃதென்னை? அஃது உயிர்களின் துன்ப நீக்கத்துக்கு இல்வாழ்வு நடாத்த வேண்டுமென்பது.
பெரியோர் தொண்டு உளங்கொண்டு, இல்வாழ்வு ஏலா தொழிவரேல், இவர்வழித் தோன்ற வேண்டிய உயிர்களின் கதி என்ன அகும்? அவ்வுயிர்களின் தோற்றத்துக்குத் துணைபுரியாத பாவம் பெரியோரைச் சூழுமன்றோ? இவர் போன்ற பெரியோர் உலகிடைத் தோன்றாமைக்கும் இவர் காரணமாக நிற்கிறா ரல்லரோ? இவைகட்கென் சொல்வது? இல்வாழ்வு ஏலாது தொண்டிற் புகும் பெரியோர்வழி, உயிர்கள் தோற்ற முறா முறையில் இயற்கை இவர்க்குத் துணைபுரியும். இவர்வழித் தோற்றமுறும் உயிர்களும் நியதியில் அமைந்திரா. மலரும் எல்லாப் பூக்களும் காய்க்கின்றனவோ? இஃது இயற்கையின் நியதி.
இவவியல்புடன் உலகில் தோன்றும் பெரியோர் தொகையை விரல் வைத்து எண்ணிவிடலாம். இத்தகையோர் உலகில் கோடி யில் ஒருவர் இருவர் பிறத்தலும் அரிது. கிறிஸ்து, மணிமேகலை முதலியோர் இல்வாழ்வு ஏலாது அறத் தொண்டாற்றியவர். இவர் போன்றார் மிக அரியர். இவர் போன்றார் வாழ்வை எடுத்துக்காட்டிப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவை நிலைநாட்டப் புகுவது அறியாமை.
இப்பெரியோரில், எவராவது பெண் ஆணையாதல் ஆண் பெண்ணையாதல் வெறுத்தனரா என்பது சிந்திக்கப்படல் வேண்டும். இவர் வாழ்வில் ஒருவரை ஒருவர் “மாயை” என்று வெறுத்தது இல்லை. வெறுப்புள்ள இடத்தில் அன்பேது? அருளேது”? தொண்டேது?
புத்தர் பெருமான் காலத்தில், அறத்தொண்டிற்கெனப் புறப்பட்டவர், “அறத்தை வளர்க்க வேண்டும்” என்ற ஆர்வத்தால் விழுங்கப்பட்ட பெரியோராதலால், அவர்தம் உள்ளம், வேறு வழியில் செல்லாது, தொண்டிலேயே நிலைத்து நின்றது. உயிர்களிடத்து இரக்கஞ் செலுத்தும் உள்ளத்தில் எம்மாசு நிலவும்? எம்மாசு புகும்? இத்தகையோரையும் உலகம் அந்நாளில் அறவோர், துறவோர், நீத்தார், அந்தணர் என்று அழைத்தது.
புறனடை
உயிர்களிடத்து இயல்பாக இரக்கந் தோன்றப் பெறாதார் உள்ளத்துள்ள “யான்” “எனது” என்னுஞ் செருக்கை உடைத் தெரிவது இல்வாழ்க்கை. இல்வாழ்க்கையே உலகில் இயற்கை வாழ்வாக அமைந்திருக்கிறது. ஒருவர் இருவர் இயல்பாக ஒரு பெரும்நிலை பெறுவதை உலகிற்குரிய-தொன்றாகக் கொள்ளாது, அதைப் புறனடையாகவே கொள்ளல் வேண்டும். இல்வாழ்விலிருந்து, மாசு கழியப் பெற்ற அனைவரும் அறவோர் - துறவோரா்- நீத்தார் - அந்தணராகிறார்.
தொண்டு நிலை மாற்றம்
பல காரணம் பற்றி இல்வாழ்விற் புகாது, அறத்தொண்டுக்கெனப் புறப்பட்ட பெளத்தப் பெரியோரின் அகநிலையை உணராது, அவரது தனிமை வாழ்வின் மீதும் மற்றப் புறக் கோலங்களின் மீதும் பெரிதும் சமய உலகம் தன் கருத்தைச் செலுத்தியது. பெளத்தப் பெரியோரின் தனிமை வாழ்வும் புறக் கோலங்களும் நாளடைவில் மற்றச் சமய குருமாரிடத்திலும் குடியேறின. அற்றைஞான்று சமய குருமாரென வெளிப்போந்த ஆண்பாலர் பெண் பாலரை வெறுத்து நீப்பதும் பெண்பாலர் ஆண்பாலரை வெறுத்து நீப்பதும் மிகச் சிறப்பாகக் கருதப் பட்டன. அன்று நுழைந்த இல்வழக்கம் இன்றும் வீழ்ந்துபடாம லிருக்கிறது. இன்னும் மடாதிபதிகளென்போர் தமக்கென வாழ்க்கைத் துணை ஏற்க ஒருப்படாது, வாழ்வு நடாத்தல் கண் கூடு. இம்மடாதிபதிகள் எத்துணைக் கூடாஓமழுக்கச் சேற்றில் வீழ்ந்து புரண்டாலும் வெளிப்படையாக (ஒருவன் ஒருத்தியை அல்லது ஒருத்தி ஒருவனை) மணஞ் செய்து கொள்வதில்லை. ஆண் பெண்ணுடன் வாழாமையும், பெண் ஆணுடன் வாழாமையும் கடவுள் நெறிக்கு ஓர் அறிகுறி என்னும் மூடக் கொள்கை பல இடங்களில் வேரூன்றி நிலைத்துவிட்டது.
பெண்ணை வெறுக்கும் போலித் துறவு
பின்னைப் பெண்ணுரிமை குலைக்கப்பட்ட இடங்களில், மூடக்கொள்கை அணுலகில் மட்டும் நிலவலாயிற்று. அந்நாளில் நமது நாட்டில் எழுதப் பெற்ற விதி நூல்களில் “பெண்பால் சந்நியாசம் பெறுதல் கூடாது. என்னுங் கட்டுப்பாடு நிறுவப் பெற்றது. அன்று தொட்டுப் “பெண்ணை வெறுத்து நீத்தல், கடவுள் நெறி கூட்டும் துறவறம்” என்னும் பொருளற்ற சிறுமைக் கொள்கை வழக்கில் வந்தது. அவ்வழக்கு வளர்ந்து வளர்ந்து பெரிய நூல்களிலும் நுழைந்துவிட்டது. முடிவில் மூவாசைப் பொருள்களுள் ஒன்றாகப் பெண்ணும் பாவிக்கப்பட்டாள். பெண்ணை வெவறுத்து நீத்தல் துறவொமுக்கம் என்பதும், அவளை இழித்துரைத்தல் ஞானநெறி என்பதும் பொது மக்களால் எண்ணப்பட்டன. இவ்வாறு பெண்ணை வெறுக்கும் போலித்துறவு பொதுவாக உலகிலும், சிறப்பாக நமது நாட்டிலுங் கால்கொண்டது.
தற்காலச் சந்நியாசம்
ஒருத்தியுடன் வாழாது, துவராடை புனைந்து, மொட்டை யடித்தோ சடைவளர்த்தோ மடத்திலோ மற்ற இடங்களிலோ உறைவது துறவொழுக்கம் அல்லது சந்நியாசம் என்று கருதப் பட்டது. அழுக்காறு அவா முதலிய மாசுகளினின்றும் விடுதலை யடைந்து, எவ்வுயிரையுந் தன்னுயிர்போல் நினைந்து தொண்டாற்றும் அறவொமுக்க நிலைக்கு வழங்கப் பெற்று வந்த துறவு - நீத்தல் - சந்நியாசம் - சாது முதலிய சொற்கள், தமக்குரிய பொரு ளிழந்து, வெறுந் தனி வாழ்வுக்கும் புறக்கோலத்துக்கும் வழங்கலாயின.
அறப்பொருள் மாற்றம்
அறம் என்னும் இல்லறம் அறத்தின் ஒரு கூறாகக் கொள்ளப் பட்டது. இல்லறத்தின் முடிந்த நிலையாக உள்ள துறவு, அறத்தின் மற்றொரு கூறாகக் கொள்ளப்பட்டது. இம்மாற்றங் கண்டே திருவள்ளுவர், ஒளவையார் முதலியோர் அறத்தின் உண்மையை விளக்க வேண்டி, “அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை”: என்றும், “இல்லறமல்லது நல்லறமன்று” என்றும் அறிவு கொளுத்தினர்; கொளுத்தியும் பயன் விளையவில்லை. அத்திருவாக்குகட்குத் திரிபுப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. இந்நாளில் மூலத்தின் வழிநின்று துறவின் உண்மை இயல்பு கூறுவோர் எள்ளி நகை யாடப்படுகிறார். என் செய்வது! காலத்தின் கோலம்!
சிற்றினங்கட்குப் புகலிடம் போலிச் சந்நியாசம்
ஒருத்தியுடன் அறநெறியில் வாழும் பொறுப்பேற்க நடுக்குறும் பயங்கொள்ளிகள் - “மனைவி, மக்கள், மற்றவர்கள் நலத்துக்கு நாமேன் உழைத்தல் வேண்டும்” என்றெண்ணுந் தன்னலத்தார் - பிழைக்க வழிதெரியாதவர் - திண்ணை தூங்குஞ் சோம்பேறிகள் - முதலிய சிற்றினங்கட்குப் போலிச் சந்நியாசம் இந்நாளில் புகலிடமாயிருக்கிறது. இச்சிற்றினம் நாளுக்கு நாள் தொகையில் பெருகுகிறது.
இவ்வினத்தவரில் படித்தவர், தம் நலன்நாடி, வேதாந்தப் பெயரால், “பெண் மாயை; அவளைத் துறப்பது வீடு என்று சில நூல்களையும் எழுதி வைத்தனர். அந்நூல்கள் மக்கட்குச் செய்து வரும் இன்னல்கள் எண்ணில; எண்ணில.
உண்மை வேதாந்தமும் பெண்ணும்
உண்மை வேதாந்தம் பெண்ணை வெறுக்குமாறு உரைக்க வில்லை. எல்லாவற்றையும் கடவுள் வடிவாக நோக்கும் வேதாந்தம், பெண்ணிடத்துள்ள கடவுளிருப்பை மட்டும் எங்ஙனம் மறுக்கும்? பெண்ணிடத்துள்ள கடவுள் தன்மை விளங்கப் பெறுவோர், மற்ற இடங்களிலுள்ள கடவுள் தன்மையும் விளங்கப் பெறுவர். பெண்ணைக் காமப் பொருளாக் கருதும் மனம், அவளைக் கடவுளாகக் கருதும் பேறு பெறுமேல் அம் மனமுடைய ஓருவன், வாழ்வின் முடிந்த நிலை கண்ட உண்மை வேதாந்தியாவன். பெண்ணைக் காமப் பொருளாக் கருதி, அவளை வெறுத்து நிற்குமட்டும் உண்மை வேதாந்தம் எவ்வழியில் கைகூடும்?
காம வேட்கையால் பெண்ணுடன் வாழாது, காதல் வழி நின்று, அவளுடன் வாழ வாழ, அவள்பாலுள்ள கடவுட்டண்மை புலனாகும். தலைவிக்கும் தலைவனுக்கும் ஏற்படும் பற்று, அமுக்காறு முதலிய மாசுகளைக் கழுவவல்ல கடவுட் பற்றாக அதாவது அன்பாக இருத்தல் வேண்டும். பெண்ணுடன் அன்பு வழியில் கூடி வாழ வாழ அன்றோ பெண்ணின் பெருமை புல னாகும்? அன்பு வழி நின்று இல்வாழ்வு நடாத்திய சுந்தரமூர்த்தி சுவாமிகள், “பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே: என்று தமது அநுபவத்தை உலகிற்கு அறிவு அத்தியிருத்தல் காண்க.
பெண்ணை வெறுத்த பாவம்
அன்பு வழியில் பெண்ணுடன் கூடி வாழாது, “வெறுப்பு - வெறுப்பு: என்னும் நெருப்பிடை நிற்போர், காமம் வெகுளி முதலிய கனல்களால் எரிக்கப்படுதல் திண்ணம். பெண்ணை வெறுத்தோடும் எத்துணைப் போலிச் சந்நியாசிகள், பின்னைக் காமத் தீயால் எரிக்கப்பட்டு, எரி தாங்காது, பலதிறச் செயற்கைக் குழிகளில் வீழ்ந்து வருந்துகிறார்கள்! எத்துணை நோய்கள் இவர்களை அடர்கின்றன! நோய்வாய்ப்பட்டு இவர்கள் வருந்துவதை என்னென்று வருணிப்பது”? அனலிடைப்பட்ட புழுவென இவர்கள் துன்பத்தில் நெளிகிறார்கள். நரகத் துன்பத்தை இவ்வுலகில் இவர்கள் அநுபவிக்கிறார்கள் என்று சுருங்கச் சொல்லலாம். இத்துன்பத்துக்குக் காரணம் என்னை? பெண் தெய்வத்தை வெறுத்த பாவம், அத்தெய்வத்தை மாயையென்று கருதிய பாவம்; அவ்வாறு மற்றவர்க்குப் போதித்த பாவம், அண்டவன் அருளால் உயிர்கள் நலத்துக்கெனத் தோன்றிய பெண்ணை வெறுத்தால் அண்டவன் பணியை நிகழ்த்தும் இயற்கை, வாளா கிடக்குமோ? இயற்கைக்கு மாறுபட்டு நிற்போரை இயற்கை ஒருத்தே தீரும். போலிச் சந்நியாசிகள் போதனைக்குச் செவி சாய்த்துப் பின்னை இடர்ப்பட்ட இளைஞர் பலரை யான் அறிவேன். அதலால், போலிச் சந்நியாசிகள் வலையில் சிக்குறாதி ருக்குமாறு இளைஞரை எச்சரிக்கை செய்கிறேன்.
காமம் வெகுளி முதலிய நோய்களைப் போக்கும் மருந்து, இல்வாழ்வென்று அடிக்கடி அறைய வேண்டுவதில்லை. காமம் வெகுளி முதலிய நாக்கள் விட்டெரியும் தீயைத் தணிக்கும் அன்பென்னும் தண்புனல் ஊற்று, பெண்தெய்வம் என்பதை உலகம் உணர்ந்து நடப்பதாக, இத்தகைய பெருமை வாய்ந்த பெண் தெய்வத்தை - அன்பு உளற்றை - அருட் பெருக்கை - மாயை யென்றும் நாயென்றும் பேயென்றும் பேசுவதா ஞானம்? இஃதன்றோ அஞ்ஞானம்? வாழ்விற்கு இன்றியமையாத பெண்ணுடன் வாழாது, இரண்டொரு போலி நூல் பயின்று, காஷாயஸஞ்சுற்றி, மொட்டையடித்து, பெண் மாயை’ அப்பா! அவள் வாழ்வைவிடு' என்று பேசுவது வேதாந்தமுமன்று; ஞானமுமன்று. ஞானம் எது அஞ்ஞானம் எது என்பன பற்றி மேலே விளக்கியுள்ளேன். ஆகவே, பெண்ணின் பெருமை உணராது, பெண்ணைச் சிறுமைப்படுத்திய போலிச் சந்நியாசி களாலும் அவர்கள் சொற்கேட்டு ஏமாந்த மற்றவர்களாலும் பேசப்படும் பேச்சுக்களும் எழுதப்படும் எழுத்துக்களும் வேதாந்த ஞான உண்மை தெரிக்கும் பேச்சுக்களுமல்ல; எழுத்துக்களுமல்ல.
போலி நூல்கள்
தன்னல மேலீட்டான் வெளிவரும் போலிச் சந்நியாசிகள் எழுதி வைத்துள்ள நூல்களை நம்பி உலகம் மோசம் போதலாகாது. இவர்கள் என்னென்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள்! இவர்களின் குணங் குற்றம் ஓராது, பெண்ணுடன் வாழும் புனிதர்கள், இவர்கட்குச் சோறிடல் வேண்டுமாம்! கூறை யளித்தல் வேண்டுமாம்! இப் “பெரியோர்கள்” நிஷ்டையில் திளைத்திருக்கும் வேளையில் இவர்கட்குச் சிற்றின்ப நினைவு தோன்றினுந் தோன்றுமாம்! தோன்றுமேல் அந்நினைவைக் கழித்துக் கொள்ளச் “சுவாமிகள்' வரைவின் மகளிரில்லம் போந்து, துயில்நீத்துப் பின்னை “நிஷ்டை” கூடுவார்களாம்! இந் “நிஷ்டாபரணர்' பொருட்டு மன்னரும் மற்றவரும் காமச் சத்திரங்கட்டி நடாத்துவது அறமாம்! அந்தோ! அந்தோ! உலகம் எப்படி ஏமாற்றப்பட்டது! ஏமாந்த உலகமே! இன்னுமா ஏமாறுவை! ஏமாந்தது போதும்! போதும்!
இப்போலிக் கூட்டத்தார்க்குப் பாவம் ஏது? புண்ணியம் ஏது? இவர் “முத்த'ரல்லரோ? இவர்க்கு எல்லாம் ஒன்றுதானே! அவர் கொலை செய்யலாம்! களவாடலாம்! கள்ளருந்தலாம்! காமத்திற் கரையாகலாம்! பொய் கூறலாம்! எல்லாஞ் செய்யலாம்! கொலை களவு முதலியவற்றிற்கும், கொல்லாமை கள்ளாமை முதலியவற்றிற்கும் இச் “சமரச ஞானி' கட்கு வேற்றுமை தோன்றினாலன்றோ இவர்கட்குப் பாவ புண்ணிய வேற்றுமை புலனாகும்? இத்தகைய கூட்டத்தை என்னென்று கூறுவது? இதை ஆண் வேசையர் கூட்டம் என்று கூறுவது குற்றமாகாது. தனக்கென ஒரு நாயகனின்றிக் கூடா ஓழுக்கத்தில் உழலும் மகளிர், வேசை என்று சொல்லப்படுகிறாள். அவ்வாறே தனக்கென ஒரு நாயகியின்றிக் கூடா ஒழுக்கத்தில் உழலும் ஆடவனையும் வேசையர் இனத்தில் சேர்க்கலாமன்றோ? ஆண் மக்களின் இக்கூட்டம் அருகினால், பெண்மக்களில் வேசையர் கூட்டம் அருகும். போலிச் சந்நியாசமும் பெண்ணுலகில் வேசையார் கூட்டம் திரண்டதற்குக் காரணம் என்று ஊகிக்க இடமூண்டு. சில வேசையர் தம்மைப் பெண்சந்நியாசிகள் என்று சொல்வதுண்டு.
தமது நலத்துக்கெனப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவோரால், பெண்ணை வேண்டுமென்று வெறுத்துத் தள்ளாது, உயிர்கள் மீது கொண்ட இரக்கத்தால், தொண்டுக்கென வெளி வரும் அறவோர்க்கும் இவ்வுலகில் இன்னல் விளைகிறது. உண்மைக்கும் போலிக்கும் புறத்தே வேற்றுமை காண்டல் மிக அரிதாயிருக்கிறது. தொண்டில் குறிக்கொண்டு தனித்து வாழும் அறவோர் திருவடி எனது முடியணி என்று ஈண்டு அறிக்கை செய்கிறேன். அத்தகைய தொண்டர் இந்நாளில் மிக அரியர்; அரியார். அவரைப் பற்றி முன்னருங் கூறியிருக்கிறேன்.
அறத்தொண்டிற்கெனச் சில காரணம் பற்றிக் குறிப்பிட்ட சிலரால் ஒருபோது கொள்ளப்பெற்ற பெண்ணுடன் வாழாமை, பின்னைப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவாய் முடிந்தமை கண்டு, ஆங்காங்குள்ள அறிஞர் அப்போலியை மறுத்தனர். “கலியுகத்தில் சந்நியாசங் கூடாது” என்னும் விதி நமது நாட்டில் பிறந்தது. மேல்நாட்டில் கிறிஸ்துவ மதத்தில் ஒருவரை ஒருவர் வெறுக்குந் துறவு என்னுந்த ஒரு போது மூண்டது. மகளிரை நீத்த அடவரும், ஆடவரை நீத்த மகளிரும் பல இடங்களில் மடங்களையும், ஆசிரமங்களையும் அமைத்துக் கடவுளை மறைக்கும் தீவினைகளில் தலைப்பட்டு, இயற்கை வாழ்விற்குக் கேடு சூழ்ந்தனர். அங்கே லூத்தர் முதலிய அறிஞர் கிளர்ச்சி செய்து, அந்நாட்டைச் சீர்திருத்தஞ் செய்தனர். அரேபியாவில் நபிநாயகம் தோன்றி, இல்வாழ்வு நடாத்திக் காட்டிப் பெண்ணை வெறுத்து வாழும் அறியாமையை ஒழித்து உலகை உய்வித்தனர். பெண்ணை வெறுத்து வாழல் கடவுள் நெறி யென்றும், ஞானமென்றும், வேதாந்தமென்றும் உலகில் எழுந்த போலிஅறம் விரைவில் ஒழியுமாறு அண்டவனை வழுத்துகிறேன்.
ஞானிகள்
பொதுவாக உலகிலும், சிறப்பாக நமது நாட்டிலும் தோன்றிய ஞானிகளிற் பெரும்பான்மையோர் பெண்ணை இழித்துக் கூறியுள்ளனரென்று சிலர் எண்ணி-யிருக்கின்றனர். இதுபற்றிப் பல இடங்களில் யான் பேசியும் எழுதியும் வருகிறேன். மெய்ஞ்ஞானிகள் ஒருபோதும் பெண்ணை இழித்துக் கூறார்கள். அவர்கள் பெண்ணைக் காமப் பொருளெனக் கருதும் தங்கள் மனத்தை நொந்து நொந்து கூறிக்கொள்வது வழக்கம். சல ஞானிகள் பெண்ணையே நேராகத் தாக்கியிருப்பது, பெண்ணுலகினின்றும் வழுக்கி வீழ்ந்த வரைவின் மகளிர் கூட்டத்தைக் குறிப்பதாகும். வரைவின் மகளிரை நன்னெறியில் திருப்ப வேண்டுமென்பது ஞானிகளின் விருப்பம். காமவேட்கையால் விழுங்கப் பெற்று, மயக்குற்று, பெண்ணின் நுண்மை யுணராது, பூவை மாந்து கிடக்கும் வண்டைப் போலப் பெண்ணின் என்புதோலில் பற்றுவைத்து, வீழ்ந்து கிடக்கும் தூர்த்தருக்கு நல்லறிவு கொளுத்த வேண்டி, ஞானிகள் சில உரை பகர்ந்தும் இருக்கிறார்கள். இவை யாவும் பெண்ணுலகை வெறுத்துக் கூறியன அல்ல என்று ஒரு முறைக்குப் பன்முறை பறைசாற்றுகிறேன்.
ஈண்டுப் பல ஞானியரைக் குறித்தும், அவர்தம் வாய் மொழிகளைக் குறித்தும் முறை முறையே எழுதிச் செல்லின், நூல் மிக விரியும். இரண்டொரு ஞானியர் மீது கருத்துச் செலுத்துவது நலம்.
பட்டினத்தார்
நமது நாட்டிற் றோன்றிய ஞானியருள் பெண்ணைப் பெரிதும் இழித்துப் பாடினவர் பட்டினத்தார் என்று பலர் சொல்ல யான் கேட்டிருக்கிறேன். அவர் பெண்ணை வெறுத்துப் பாடினமையால், அவரது துறவு நிலையை, ’பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆருந் துறக்கை அரிது அரிது’ என்று அநுபூதிமானாகிய தாயுமானாரே விதந்தோதி யிருக்கிறார் என்று சிலர் கருதுவதும் எனக்குத் தெரியும். பட்டினத்தார் மிகப் பெரியவர்; முற்றும் மனமாசகலப் பெற்றவர். அவர் இவ்வுலகிலேயே சிவோகம் பாவனை நிலையுற்று, எல்லாவற்றையுஞ் சிவமாக் கண்டு, “வாவியெல்லாந் தீர்த்தம் மணலெல்லாஞ் சிவலிங்கம்” என்று பாடினவர். பட்டினத்தார்க்குப் பார் முழுவதும் சிவமாகக் காணப் பட்டதேயன்றி, மாயையாகக் காணப்படவில்லை. அதனால் அவரது பெருநிலையைத் தாயுமானார் உலகிற்கு எடுத்துக் காட்டினார். மனமாசு முற்றும் அகல்வதே துறவுநிலை என்று முன்னே விளக்கியிருக்கிறேன். அத்துறவுநிலை எய்தினவர் பட்டினத்தார் என்க.
பட்டினத்தார் பெயரால் இருவித நூல்
பெண்ணை வெறுத்தல் “துறவு அல்லது “ஞானம்” என்று பட்டினத்தார் பகர்ந்தனரா என்பதொன்றே ஈண்டுப் பெரிதுங் கருதற்பாற்று. பட்டினத்தார் பெயரால் இருவித நூல்கள் உலகில் உலவுகின்றன. “பதினொராந் திருமுறை'யில் பட்டினத்தார் அருளிய சில நூல்கள் அடங்கியிருக்கின்றன. பட்டினத்தார் அருளிய “திருப்பாடற்றிரட்டு' என்றொரு நூலும் ஆட்சியிலிருக்கிறது. இத்திரட்டு பதினொராந் திருமுறையில் சேர்க்கப் பட்டில்லை.
மொழிவனப்பு, பாநடை முதலியவற்றை நோக்குழி இரண்டிற்கும் உள்ள வேற்றுமை நன்கு புலனாகும். அனால் பட்டினத்தார் இருவர் இருந்தனர் என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. பெண்ணைப் பற்றிய மயக்க உரைகள் பெரிதும் “திருப்பாடற் நிரட்டி“லேயே கிடக்கின்றன. பதினொராந் திருமுறையில் ஒரு பகுதியைப் பாடிய பட்டினத்தார் ’திருப்பாடற் றிரட்டை'ப் பாடியிருப்பரோ என்னும் ஐயம் ஆராய்ச்சியாளருக்கு இயல்பாக நிகழும். இவ்வாராய்ச்சியில் தலைப் படாது, பெண்ணைப் பற்றிப் பட்டினத்தார் கொண்ட கருத்தென்னை என்பதன் மீது கருத்தை இருத்துவோம். பதினொராந் திருமுறையில் பட்டினத்தார் அருளிய “திருவிடை மருதூர் மும்மணிக்கோவை”யில்,
மலர்தலை உலகத்துப் பலப்பல மாக்கள்
மக்களை மனைவியை ஓக்கலை ஓரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்
காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பி னழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்
துளர்வறும் யாக்கையைத் தளா்வித் தாங்கவா்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பார்
ஈங்கியவை செய்யா தியாங்க ளெல்லாம்
பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும்
செந்தா துதிரந்த நந்தன வனத்தும்
தென்ற வியங்கு முன்றி லகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாவிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
மருப்பி னியன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேற் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
னெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயின் மீது பரிபுர மிழற்றச்
சாயலன் னத்தின் தளாரைப் பயிற்றி
* * அஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினாக் கென்றும் பாடினாக் கென்றும்
வாடினாக் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புணனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியம்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து
மைந்தரும் ஓக்கலும் மகிழ்வன மகிழ்ந்து
இவ்வகை இருந்தோ மாயினும் அவ்வகை
மந்திர வெழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை யின்வழிச் செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை யன்றோ
எனவரூஉஞ் செம்மொழிகளைப் பன்முறை உற்று உற்று நோக்குக. இத்திருவாக்கில் இல்வாழ்விற்கும் கடவுள் நெறிக்கும் உள்ள தொடர்பைக் கூர்ந்து ஊன்றிப் பார்க்க. இக்கருத்துடைய பட்டினத்தார் பெண்ணை இழித்துக் கூறுவரோ? ஒருபோதும்
கூறார்.
’திருப்பாடற்றிரட்டு'ம் இப் பட்டினத்தாரே அருளின ரென்று கருதப்படின், அதன்கண் ஒளிரும் பெண்ணைப் பற்றிய பாடல்கள், பெரிதும் பெண்ணைக் காமப்பொருளாக எண்ணும் மனத்துக்கும், காமுகர்க்கும், வரைவின் மகளிர்க்கும் அறிவு கொளுத்தும் நோக்குடன் அருளிச் செய்யப்பெற்றன என்று கொள்ளப்படல் வேண்டும். வேறு ஒரு பட்டினத்தாராயினும் இவ்வாறு கோடல் தவறாகாது. “திருப்பாடற்றிரட்டிலுள்ள இரண்டொரு திருவாக்குகளை நோக்குவோம். “தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே”“மாலை உபாதி துயில் காமம் இவை மாற்றிவிட்டே- அலமுகந் தருள் அம்பலவா என்னை அண்டருளே”, “சிற்றின்பம் விட்டு ஏறும் பதந்தருவாய் திருக்காளத்தி ஈசுரனே' எனவரூஉம் அடிகளின் திருவாக்குகள் பெண்ணை வெறுக்குமாறா அறிவிக்கின்றன? “பெண் காமப் பொருள்” என்று நினைக்கும் நெஞ்சை நல்வழியில் திருப்ப ஆண்டவன் அருளையல்லவோ அத் திருவாக்குகள் குறிக்கொண்டு நிற்கின்றன? “பட்டப் பகவில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல் - இட்டத்தை நீதவிர்ப் பாய் இறைவா கச்சியேகம்பனே” எனவரூஉம் இன்னோரன்ன கருத்துடைய பாக்களில் வரைவின் மகளிர் நடைமுறைகளை அடிகள் விளக்கியவாறு காண்க. வேறு பல இழிமொழிகள் அடங்கிய பாக்கள் தூர்த்தர்கட்கு நல்லறிவு கொளுத்த அருளிச் செய்யப் பெற்றன என்க. பட்டினத்தடிகள் கருத்தில் பெண்ணை வெறுத்தல் இல்லை என்பதொன்றையே நேயர்கள் கவனிப்பார்களாக.
“பேய்போற் றிறிந்து பிணம்போற்
கிடந்திட்ட பிச்சையெல்லாம்
நாய்யோ லருந்தி நரிபபோ
லுழன்றநன் மங்கையரைத்
தாய்போற் கருதித் தமர்போ
லனைவாரக்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போ விருப்பாகண் டீருண்மை
ஞானம் தெளிந்தவரே ”
இப்பாட்டுந் 'திருப்பாடற்றிரட்டி' லிருப்பது. இப்பாட்டு, எல்லா ஐயங்களையும் போக்கி, அடிகளின் உள்ளக்கிடக்கையைச் செவ்வனே தெதரிக்கிறது. “நன்மங்கையரைகத் தாய்போல் கருது” மாறு அடிகள் உலகிற்கு அறிவுறுத்துகிறார். அஃது “உண்மை ஞானந் தெளிந்தவர் இயல்பு” என்றும் அவர் கூறுகிறார்.
“நன்மங்கையரைத் தாய்போல் கருதுவது உண்மை ஞானம்” என்று கூறிய ஞானியா பெண்ணை வெறுப்பர்? அவளை மாயை என்று கூறுவர்? எந்த உண்மை ஞானியும் தாயாகிய பெண்ணை வெறுத்து இழித்துக் கூறார்.
அருணகிரியார் வரைவின் மகளிரைப் பற்றிக் குறித்த பாடல்களும் பெண்ணைப் பொதுவாகக் குறிப்பன என்று எண்ணி இடர்ப்படுவோரும் உளர். இதுபற்றி “முருகன் அல்லது அழகு” என்னும் நூலில் நுவன்றிருக்கிறேன்.
கடவுள் அருள்பெற்றுப் பேரன்பராய்ச் சமய குருமாரெனப் போற்றப்படும் நம்மாழ்வார், மாணிக்கவாசகர் முதலிய பெரியோர், பெண்ணின் பெருமை பேசும் அகப்பொருட்டுறை கட்கு இலக்கியங்களாகத் திருவிருத்தம் திருக்கோவையார் முதலிய இன்ப நூல்களை உலகிற்கு வழங்கியிருக்கின்றனர். அவர் பெண்தெய்வத்தை முன்னிலைப்படுத்திக் கடவுளை நோக்கிப் பாடி யிருக்கின்றனர். பெண் தன்மைக்கும் கடவுள் தன்மைக்கும் உள்ள உறவு அப்பெரியோரால் நன்கு உணரப்பட்டது; உணர்த்தப்பட்டது.
ஆதலால், எந்த உண்மை ஞானியும், “பெண்ணை வெறுத்தல் துறவு” என்று இழித்துக் கூறார். அங்ஙனம் கூறுவோர் உண்மை ஞானியராகார் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். ஞானியரின் உள்ளக் கிடக்கையைத் தேறாது அவர்மீது பழி சுமத்துவது அறியாமை.
இல்லறம்
இறை வழியையும், இயற்கை நோக்கையும், படைப் பமைப்பையும், இன்னோரன்ன பிறவற்றையும் கூர்ந்து நோக்குழி, ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் கூடி வாழ்தலே அறம் என்பது புலப்படும். அதுவே வாழ்விற்குரிய இயற்கை யாகலான், அதனை “இயற்கை அறம்” என்று தலைப்பில் பொறித்தேன். இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தலே அறம். அதற்கு மாறுபட்டு வாழ்தல் மறம். ஒருத்தி ஒருவனுடனும் ஒருவன் ஒருத்தியுடனும் வாழ்வது இயற்கை அறமென்று இதுகாறும் சொல்லப்பட்டுவந்தது. இவ்வியற்கை அறத்தை உலகம் “இல்லறம்” என்று சொல்கிறது. எனவே அறம் - இயற்கை அறம் - இல்லறம் - எல்லாம் ஒன்றே அதல் காண்க.
இல்லறம் துறவறம்
அறம், இல்லறமென்றும் துறவறமென்றும் இரு கூறாக உலகில் விளங்கிக் கொண்டிருக்க, அதனை இல்லறத்தில் மட்டும் ஒடுக்கி அடக்குவதென்னை என்று சிலர் ஐயுறலாம். இயற்கை வாழ்விற்குரிய நல்லனயாவும் அறத்தின் கூறுகளே யாகும். மனமாசினின்றும் நீத்தலாகிய துறவும் அக்கூறுகளுள் ஓன்று. இல்லறமோ அறக்கூறுகள் யாவும் சேர்ந்த ஒரு முழுமை என்க.
அறம் என்பது ஓரு மரம் போன்றது. திருமணம், பிள்ளைப் பேறு, அன்பு, விருந்தோம்பல், ஒழுக்கம், பொறை, ஓப்புரவு, ஈகை, அருள், தவம், வாய்மை, துறவு, மெய்யுணர்வு முதலியன அம்மரத்தின் உறுப்புக்களாகிய வேர், மன்றம், பட்டை, கவடு, கோடு, விளார், தளிர், இலை, மலர், காய், கனி முதலியன போன்றன. இவ்வறக் கூறுகள் யாவும், பிறந்து வளர்ந்து பயனளிக்க வேண்டிய தாயகம் இல்லறமாகும். இந்நுட்பத்தை ஓர்ந்து தெளியின், அறத்துக்கும் இல்லறத்துக்கும் வேற்றுமை தோன்றாது. நீண்ட நாள் “இல்லறம்”, “துறவறம்” என்று கேட்டும் படித்தும் நினைந்தும் பழகியும் தழமும்பேறப்பெற்ற காதுக்கும் நாவுக்கும் நெஞ்சுக்கும் எனது கூற்றுப் புதுமையாகவே தோன்றும்.
பெண்ணுரிமை கடியப்பட்ட நாள் தொட்டும், பெண்ணை வெறுத்தல் துறவு என்னும் சிறுமைக் கொள்கை முளைத்த நாள் தொட்டும், பெண்ணுடன் வாழல் அறத்தின் ஒரு பெருங்கூறு என்பதும், பெண்ணை விடுத்தல் அறத்தின் மற்றொரு பெருங் கூறு என்பதும் நாட்டில் பிரிக்கப்பட்டன. இக்கொள்கை மக்களிடைப் புகுந்து வேர்கொண்ட பின்னைப் போலித் துறவைக் கடிந்த திருவள்ளுவனார் அருளிய குறள் போன்ற நூல்களின் உள்ளக்கிடக்கையையும் பின் வந்தார் தங் கருத்துவழித் திருப்பலாயினர்.
இல்லறவியல் துறவறவியல்
திருக்குறளில் இல்லறஇயல் துறவறஇயல் என்று இரண்டு இயல் காணப்படுகின்றன. அவ்வவ்வியலின் உறுப்புக்களாகச் சிற்சில அதிகாரங்கள் முறை முறையே ஓழுங்கு செய்யப்பட்டி ருக்கின்றன. காலத்துக் கேற்றவண்ணம் இயல் தொகுத்து அதிகாரம் வகுத்த பின்வந்தார் கூர்த்த மதியைப் போற்றுகிறேன். ஒரு கொள்கையைக் காலத்துக்கேற்ற வழியில் ஒழுங்குபடுத்திக் காட்டல் சிறந்த அறிவுடைமையாகும்.
அதிகாரம் அதிகாரமாகத் திருவள்ளுவனார் திருக்குறளைப் பாடியது உண்மை. இல்லறம் துறவறம் என்னும் இயல்களையாதல், வேறு இயல்களையாதல் திருவள்ளுவனார் வகுத்திருப்பரா என்று எளியேன் ஐயுறுகிறேன். அறம் - பொருள்- இன்பம் - என்னும் மூன்றன் விரிவாகத் திருக்குறள் என்னும் ஓர் அரிய நூலைத் திருவள்ளுவனார் யாத்தனர். அதன்கண் அவர் அறத்தை, இல்லறம் துறவறம் என்று இரண்டு கூறிட்டிரார் என்பதே எனது சிற்றறிவிற்குப் புலனாகிறது. திருவள்ளுவனார், “அறமும் இல்லறமும் ஒன்றே' என்னுங் கருத்துடையார் என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. திருவள்ளுவனார் பாயிரத்தில் அறனை வலியுறுத்தி, பின்னை அதன் விளக்கங் கூறப்புகுந்தார். அவர் நேரே “வாழ்க்கைத் துணைநலம்” கூறாது, “இல்வாழ்க்கை” அல்லது ’இல்லறம்' என்றோர் அதிகாரம் ஏன் கூறினார்? அவர் பாயிரத்திற் பகர்ந்த அறனையே பொருளாகக் கொண்டு பின்னை இல்வாழ்வில் அதன் விளக்கம் உரைக்கலாயினார் என்க.
திருவள்ளுவனார் கருத்து
அறன் வலியுறுத்தலில் திருவள்ளுவனார் “அறத்தான் வருவதே இன்பம்” என்று இயற்கை அறத்தின் மாண்பு தெரித்து, அந்நாளில் தலைகாட்டி நிமிர்ந்து நின்ற மற்றச் செயற்கை அறத்தை “மற்றெல்லாம் புறத்த புகழு மில” என்று மறுத்துரைத்தார். “இல்வாழ்க்கை” என்னும் அதிகாரத்தாலும் ஆசிரியர், “அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்" என்று இயற்கை அறத்தை விதந்தோதிப் பின்னே, புறத்தாற்றிற் போஓய்ப் பெறுவ தெவன்” என்று பொல்லாத போலி அறத்தை இழித்துக் கூறினார். இன்னும் அவ்வதிகாரத்தில் அவர், “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை” என்று இயற்கை அறத்தை வலியுறுத்தி, அதனை நேர்மை வழியில் நடாத்தல் வேண்டும் என்பார், “அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று” என்றார்.
பின்வந்தார் கருத்துப்படி துறவு என்பது அறத்தின் ஒரு பெருங்கூறாயின், துறவதிகாரத்தில் அறத்தைப் பற்றி ஓர் உரை யாதல் ஆசிரியர் அருளியிருப்பர். அவ்வதிகாரத்தில் அறம் என்னுஞ்சொல் மருந்திற்கும் இல்லை. நேயர்கள் அவ்வதிகாரத்தை ஊளன்றி ஊன்றி ஆராய்வார்களாக. ஆராயின், மனமாசினின்றும் நீத்தல் துறவு என்னும் உண்மையும், பெண்ணை விடுத்து நீத்தலைப் பற்றிய பேச்சே ஆண்டின்மையும் புலனாகும்.
துறவு இல்லறத்தின் ஒரு கூறு
மனமாசினின்றும் நீத்தல் இல்லறத்தின் ஒரு கூறு. இல்லறத்தின் பற்பல நோக்கங்களுள் ஒன்றாயிருப்பது நீத்தல் அல்லது துறவு. இத்துறவு இல்லறத்துக்கு வேறுபட்டு எங்ஙனம் நிற்கும்? ஆகவே, துறவு என்பது இல்லறமென்னும் அறத்தின் ஒரு கூறு என்றே கொள்க; பெண்ணுடன் வாழ்தல் இல்லற மென்றும், பெண்ணை விடுத்தல் துறவறமென்றுங் கொள்ளற்க.
பெண்ணுடன் வாழும் நோக்கம்
பெண்ணுடன் வாழ்தல் எனில், பெண்ணுடன் சேர்ந்து பிள்ளைபெறற்கு மட்டும் என்று நினைப்பது அறியாமை. பிள்ளைப்பேறும் இல்லறத்தின் ஒருகூறு. அவ்வளவில் இல்லறத்தின் நோக்கு நிறைவேறுவதில்லை. வேறு பல அறக்கூறுகளெல்லாம் அதன்கண் நிறைவேறுதல் வேண்டும். அவற்றின் நிறைவேற்றத்துக்குப் பெண் ஆணின் ஓத்த வாழ்வு வேண்டற் பாலது. அவ்வாழ்வு, பிள்ளைப் பேறுடன் நில்லாது, மனமாசைத் துறத்தற்கும், அன்பு அருள் பெறுதற்கும், முடிவில் இன்பநிலை எய்துதற்குந் துணை புரிகிறது. சுருங்கக் கூறின், ஆன்மாவிற்கு முழுத் தூய்மை அதாவது அறநிலை அதாவது கடவுள்நிலை கூட்டுவது அவ்வொன்றிய வாழ்வு என்று கூறலாம்.
பேரின்பம் சிற்றின்பம்
துறவு என்பதை இல்லறத்துக்கு மாறுபட்ட தனி அறமாகப் பிரித்த “அறிஞர்” அறத்தின் பயனாகிய இன்பத்தையும் இரு கூறிட்டனர். அறம் இரண்டாகப் பிரியும்போது, அதன் பயனாகிய இன்பமும் இரண்டாகப் பிரிவது இயல்பன்றோ? ஆழ்ந்த அறிவு கொண்டே “அறிஞர்' அப்பிரிவு கண்டனர் போலும்! அது காலநிலையைப் பொறுத்தது.
பெண்ணுடன் வாழ்தல் என்னும் இல்லறம் சிற்றின்பத்துக் கூரியதாம்! பெண்ணை விடுத்தல் என்னும் துறவறம் பேரின்பத்துக் குரியதாம்! இன்பத்தில் சிறுமை பெருமை ஏன் கற்பித்தல் வேண்டும்?
வீடு
பெண்ணுலகு சிறுமைப்பட்ட காலந்தொட்டு இன்பம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் மூவகைப் பேறு, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகையாகப் பிரிந்தன. இன்பத்துக்கு வேறாக ’வீடு’ என்பதொன்று பிரிக்கப்பட்ட து.
கட்டு- அதாவது பந்தம் - விட்ட இடம் வீடு. துன்பம் நீங்கிய இடம் இன்பம். எனவே, வீட்டிற்கும் இன்பத்துக்கும் என்ன வேற்றுமை? பெண்ணும் இல்வாழ்க்கையும் இழிவாக நினைக்கப் பட்ட நாளில், இன்பத்தில் சிறுமையும் பெருமையும் நுழைந்து கொண்டன. உண்மையின் அதன்கண் சிறுமையும் இல்லை; பெருமையும் இல்லை. அஃது என்றும் ஒரு பெற்றியதாய் இலங்கிக் கொண்டிருப்பது.
பெண்ணுடன் வாழ்தல் உடலின்பத்தை மட்டும் அளிப்ப தன்று. அது உயிரின்பத்தையும், அது கடந்த அழியா இன்பத்தையும் அளிக்கவல்ல அன்புத் தொடர்புடையது. பெண் ஒரு பொழுது பருஉடல் தாங்கி மனைவியாய் இன்பம் அளிக்கிறாள். பின்னை அப்பெண்ணிடத்துள்ள நுண்மைத் தெய்வம் வேறு வழியில் அவ்வின்பத்தை நிலைபெறச் செய்கிறது.
பிரிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொளன்றி நின்று புணா்ச்சிசெய் தாங்கே
அறிவொன்ற நின்றன ளாருயி ௬ள்ளே
என வரூஉந் திருமூலர் திருவாக்கை ஓர்க.
இம்மையிலும் மறுமையிலும், இவை கடந்த பெருநிலையிலும் பெண்ணின் கூட்டுறவின்றி அவ்வந் நிலையில் இன்ப மெய்துதல் இல்லை என்க. இன்பம் ஓவ்வொரு நிலையில் ஓவ்வொரு விதமாய்ப் பெருகிப் பெருகி முடிவில் தன் முழு நிலை எய்தும். துன்ப நீக்கத்துக் கேற்ற அளவாக இன்பம் நிகழ்ந்து கொண்டே போகும். எந்நிலையிலும் பெண்ணின் கூட்டுறவு உண்டு. அக்கூட்டுறவு இல்லாத இடத்தில் இன்ப நிகழ்ச்சி இல்லை. எந்நிலையிலும் பெண்ணைத் துறத்தல் செயற்கைமுறை யாகும். பெண்ணுடன் வாழ்தல் என்றும் வேண்டற்பாலது. அவ் வாழ்க்கையைக் கூட்டிவைப்பது இல்வாழ்க்கை யாகும். இக் கருத்துப் பற்றியே ஓளவையாரும், “இல்லற மல்லது நல்லற மன்று” என்று அருளினார்.
திருவள்ளுவனார் பெண்ணுடன் வாழ்ந்து, தாம் பெற்ற அநுபவத்தைத் திருக்குறள் என்னும் நூலாகத் திருவாய் மலர்ந்தருளினார். அவர் பெண்ணின்பத்தைப் பற்றியும், இல்வாழ்வைப் பற்றியும் அருளிய குறட்பாக்கள் இரண்டொன்று வருமாறு:-
கண்டுகேட்டு உண்டுஉயிர்தது உற்றஅறியம் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இத்திருவாக்குகள் வாழ்வின் அனுபவத்தினின்றும் பிறந்தன என்பது கூர்த்த மதியினர்க்குச் செவ்விதில் விளங்கும்.
காமுகாக்கு இன்பந் தோன்றும் நிலை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்வாழ்வின் வாயிலாகக் கடவுள் இன்ப நிலையை இவ்வுலகில் கண்டவர்; பரவை - சங்கிலி- என்னும் இரு பெண்மணிகளுடன் இன்பம் நுகர்ந்தவர். அவர் நுகர்ந்த இன்பம் எத்தகையது? “பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்” என்று அவர் தமது அநுபவத்தை உலகிற்கு அறிவு அத்துகிறார். ஈங்குக் குறிப்பிட்ட பற்று, சிற்றின்பத்தினதா? நேயர்களே உன்னுங்கள். என்பு தோல் போர்த்த ஒரு பாவையாகப் பெண்ணைக் கருதித் தனது காம வெம்மையைக் கழிக்க அவளுடன் வாழுங் கீழோனுக்கு அவள் இன்பம் சிறுமையதாகத் தோன்றும். மேலோர், பிள்ளைப் பேற்றிற்கென உடலும் உள்ளமும் அன்பால் ஓன்றச் சேர்ந்து, பின்னை அவ்வன்பறாத முறையில் இன்ப வாழ்வு நடாத்துவர். ;பெண் என்புதோல் போர்த்த காமக்கூடு. இவளோடு சின்னாள் தொலைத்துப் பின்னை இவளை விடுத்துத் தனியே இருத்தல் வேண்டும்' என்னும் எண்ணத்துடன் பெண்ணொடு வாழும் காமுகனுக்குப் பெண்ணின் நுண்மையும் விளங்காது; இன்பத்தின் இயல்பும் தெரியாது.
உலகம் போற்றும் மகாத்மா காந்தி இல்லறத்திலிருந்து பெருங்கடனாற்றினர். அவரது இல்வாழ்வைப் பற்றி, “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூலில் விரித்துக் கூறியிருக்கிறேன். விரிவு ஆண்டுக் காண்க.
இப்பொழுது உலகில் மிக உயரிய நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது கீதாஞ்சலி. அந்நூலைப் பற்பல சமயத்தாரும் போற்றுகின்றனர். அந்நூலின் உள்ளக்கிடக்கை யாது? அதன் உள்ளக்கிடக்கை எதையும் வெறுத்துத் துறத்தல் கூடாதென்பது. எல்லாம் கடவுள் வடிவாகப் பொலியும்போது, எதை வெறுப்பது - எதைத் துறப்பது - என்று அந்நூலாசிரியர் ரவீந்திரநாத் தாகூர் கேட்கிறார். “அன்பு நோக்குடையார்க்கு எல்லாம் இன்பமயம்” என்பது அவரது உட்கிடக்கை.
கீதாஞ்சலி என்னும் அரிய நூலை அன்பு இன்பம் ஒழுகும் பாட்டாக யாக்க ரவீந்திரர் எக்கழகத்தில் பயின்றார்? வெறும் ஏட்டுக்கல்வியா அவரது அன்புக் கண்ணைக் திறந்தது? பின்னை எது? அவர் பெண்ணுடன் கலந்து, இயற்கை அறமெனும் இல்லறக் கழகத்தில் பயின்று பயின்று பெற்ற அனுபவழும் பயனுமே ’கீதாஞ்சலி' என்னும் பாட்டாகப் பரிணமித்தன.
தீங்கனியின் சுவை எவர்க்கு இனிக்கும்? அதைத்தின்று கண்டவர்க்கன்றோ அஃது இனிக்கும்? அதைத் தின்னாதார்க்கு அஃது எங்ஙனம் இனிக்கும்? நல்ல நாபெறாத நோயாளர்க்கு அது கைக்கும். அதுபோலப் பெண்ணுடன் அன்பு வாழ்வு நடாத்துவோர்க்கு இன்பப் பயன் இன்னதெனத் தெரியும். அவ் வாழ்வில் தலைப்படாதோர்க்கு ஒன்றுமே தெரியாது. காமநோயால் அவ்வின்பம் நுகரப் புகுவோர்க்கும் ஓன்றும் தெரியாது.
களவியலுக்கு உரைகண்ட நக்கீரனார், களவு மணத்தைப் பிற களவுகளினின்றும் வேறுபடுத்தி, அதன் பெற்றியைப் பேசும்பொழுது,
இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட்கெல்லாம் இக்களவு
சிறப்புடமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்
எனப்படுவதென்று சொல்லிச் சிறப்பிக்கப் பட்டது
என்றும், தொல்காப்பியத்துக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியர்,
ஓத்த அன்பான் ஒருவனும் ஒருத்திய கூடுகின்ற
காலத்துப் பிறந்த பேரின்பம்.
என்றும் கூறியிருத்தல் காண்க.
பிற்கால வழக்கு
பெண்ணுடன் வாழ்வது உடலளவில் இன்பம் பயந்து இறந்துபடுவதென்பதும், மற்றுமோர் இன்பத்துக்கு மற்றுமோர் அறந்தாங்க வேண்டுமென்பதும் பிற்காலத்துப் புகுந்த வழக்காகும். அந்நாள் தொட்டு, நாம், நமது நாடு - நமது வாழ்வு முதலிய எல்லாம் குலைய விடுத்து, முடிவில் உரிமையையும் இழந்தோம். இவ்வளவிற்குங் காரணம் இன்ப வாழ்விற்குரிய பெண்ணையும் அவளுடன் வாழும் இயற்கை அறத்தையும் இழித்துப் போலிமுறையை ஏற்றதேயாகும். அதலால், இன்பத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுவது அநாவசியம்; இரண்டாகப் பிரிந்தெழுந்த வழக்கையும், அவ்வழக்குப் பற்றிப் பின்னே நல்லோர் எழுதிய உரைகளையும், நூல்களையும் இது போழ்து குறைகூற வேண்டுவதில்லை. அவற்றைக் “காலத்தின் கோலம்” என்று கொண்டு பழைய மூலத்தின் வழியை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது அறிவுடைமை.
திருவள்ளுவனார் அருளிய முப்பாவில் எல்லாம் அடங்கும். வீட்டைப் பற்றித் தனிமை வாழ்வு கொள்வது பேய்த்தேரை (கானற்சலத்தை) நம்பி ஓடினவன் கதையாக முடியும். வீடு என்பது முழு இன்பநிலை என்க.
இதுகாறும் கூறியவாற்றான் இயற்கையோ டியைந்து வாழ்தலே இறை வழிக்குரியது என்பதும், அவ்வாழ்வு பெண்ணுடன் கூடி வாழும் இல்வாழ்வு என்பதும், செந்நெறியில் அவ்வாழ்வு நடாத்தப்படின் அதனால் இன்பநிலை கூடும் என்பதும், பிறமுறைகள் செயற்கையின்பாற் படுவன என்பதும், அவற்றால் உடல் நலன் கெடுவதோடு வாழ்வும் குலைந்து வாழ்விற் பெறவேண்டிய இன்பத்தையும் இழக்க நேரும் என்பதும் ஒருவாறு விளக்கப்பட்டன. அதலால், உலகில் இயற்கை அறம் ஓங்கி வளர்வதாக.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை - திருவள்ளுவர்.
-------
7. திருமணம்
(திருமணப் பொருள் – ஒருமைப்பாட்டின் நுட்பம் – இருமைக் கேடும் ஒருமைப் பேறும் – இக்கால மணங்கள் – வகை (திருமணத்தில் கிரியை தோன்றியதற்குக் காரணம் – எண்வகை மணம் – களவு மண விளக்கம்) – வயது (பொருந்தா மணம், வயதும் கால வேற்றுமையும் –மேல் நாடும் நமது நாடும் – இன்ப நுகர்ச்சிப் பருவம் – ஏழுவகைப் பருவம் – அரிவை யரின்பம் – போலி மணம் – இளமை மணமும் கிழ மணமும் – கொழுநன் ( நாயகன் எவன்? / கட்டுப்பாடுகளால் பொருந்தா மணங்கள் – மனமொன்றலே மணம் – கொழு நனைத் தெரிந்தெடுத்தல் – நாயகன் இயல் / ஒத்த கல்வி ஒழுக்கம் முதலியன – நோயாளரிட்த்தில் எச்சரிக்கை – நீறுபூத்த நெருப்புகள் – திருமணத்துக்கு விலக்கானவர்கள் – புறங்கொண்டு அகந்தெரிதல்) – சாதிக் கொடுமைக்கு அஞ்சலாகாது – இந்து மதக் கட்டுகள் )
சொற்பால் அமுதிவள் யான்சவை என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத் தெய்வம் தந்தின்று நான்இவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புவலியூரப் புனிதன் பொதியில் வெற்பில்
கற்பா வியவரை வாய்கடி தோட்ட களவகத்கதே.
- திருக்கோவையார்
ஒரு பாதியாய பெண்ணும் மற்றொரு பாதியாய ஆணும் ஒன்றுபடுவது திருமண மென்பது. அவ்வொன்றிய வாழ்வின் இன்றியாமையாமை, முன்னே “இறைவழி', “இயற்கை அறம்” என்னும் தலைப்புக்களின் கீழ் விரித்தோதப் பட்டிருக்கிறது. அவ்விரண்டும் இத் 'திருமணத்'துக்கு முற்றுந் தொடர்புடையன. மண வாழ்வைப் பற்றி எழும் பலதிற ஓயங்கட்கும் தடைகட்கும் ஆண்டுச் செவ்வன் இறை இறுத்திருத்தலான், அவற்றை மீண்டும் ஈண்டுக் கிளத்த வேண்டுவதில்லை.
மக்களின் இயற்கை அமைப்பை நோக்குழி அவர்கள் தனித்து வாழும் இயல்பினரல்லர் என்பது புலனாகும். மக்கள் கூடி வாழும் இயல்பினரே யாவர். அக்கூட்டை நிகழ்த்துவது திருமணம். திருமணப் பேறு பெறாதார் பிறவிப் பேற்றை இழந்தவராவர்.
மக்கள் ஏன் பிறக்கிறார்கள்? பிறந்து உண்டு களித்து மாண்டு போகவா அவர்கள் பிறக்கிறார்கள்? ஒருவரோடொருவர் கூடி வாழ்ந்து, அன்பைப் பெற்று, அவ்வன்பைப் பிற உயிர்களும் பெறத் துணைநின்று, முடிவில் இன்பநிலை எய்துவது மக்கட் பிறவியின் நோக்கம். இந்நோக்கம் திருமணமின்றி எங்ஙனம் நிறைவேறுதல் கூடும்?
திருமணப் பொருள்
திருமணம் என்பது வெறும் விளையாட்டன்று. ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரூஉம் இரண்டு உயிர் ஒன்றி, முழுத்தன்மை எய்திக் கடனாற்றுதற்கு, அவைகளை அன்புக் கயிற்றால் இயற்கை பிணிப்பது திருமணம். இப் பிணிப்புக்கென்றே இருவரையும் இயற்கை பாதிப்பாதியாகத் தோற்றுவிக்கிறது. அவ்வப் பாதி நிலை, இருவரும் பின்னைக் கூடி வாழ்வதற்கு வேண்டப்படும் ஒழுங்குகளைப் பண்படுத்தற்கு உரியதாவது. இருவர் அறிவும் மனமும் ஏனைய உறுப்புக்களும் தனித்தனியே பண்பட்டதும், இயற்கை, திருமண வாயிலாக, அவர்தம் இருமை கெடுத்து ஒருமையாக்கி முழுமை வழங்குகிறது. முழுமை பிறவி நோக்கை நிறைவேற்றுவதாகும்.
ஒருமைப்பாட்டின் நுட்பம்
“திருமணம் இருபாதியை எங்கே கெடுக்கிறது? பெண் ஆண் உடல்கள் ஓன்று-படுகின்றனவா? இருவர் உடலங்களும் வெவ்வேறாக அல்லவோ விளங்குகின்றன”: என்று கருதுவோரும் இருப்பர். ஈண்டு ஒற்றுமை என்றது அன்பின் ஒருமைப்பாட்டை என்க. பெண் மகள் என்பவளும் உடல் அல்லள்; ஆண்மகன் என்பவனும் உடல் அல்லன். உடல் மக்களின் உறையுள். உடலே மக்களன்று. உடலுக்குள்ளே ஒரு நுண்மை இருக்கிறது. அஃது ஆன்மநேய ஒருமைப்பாடு என்பது. அந்நுண்மை விளங்கப் பெறவே மக்கள் இளமையில் கல்வி பயில்கிறார்கள். அந் நுண்மை யாண்டும் விளங்குவதை முதல் முதல் மக்கள் கலை யளவில் உணர்கிறார்கள். அதைப் பின்னை அநுபவத்திற் பெறுவிப்பது திருமணம்.
இருமைக்கேடு ஒருமைப்பேறும்
தொடக்கத்தில் பெண் ஆண் சேர்க்கையால் ஒருமைப்பாடு ஓரோவழிப் புலனாகும். பின்னைப் பிள்ளைப் பேற்றானும், பிறவாற்றானும் அஃது யாண்டும் புலனாகும். விரிவு இந்நூல் ’இறைவழி’யிலும், ’இயற்கை அறத்தி'லும் காண்க. ஆகவே, பெண் ஆண் சேர்க்கையால் எய்தும் ஒருமை, வெறும் உடல் அளவின தன்று என்றும், உடலினுள் பொலியும் நுண்பொருளைப் பற்றியது என்றுங் கொள்க. இரண்டாறு ஒன்றுபடுவதுபோல என்க. ஆறு என்பது சொல்லால் இடத்தைக் குறிப்பினும், பொருளால் நீரைக் குறிப்பதாகிறது. இரண்டாறும் ஓரிடத்தில் கலந்து ஓடத்தொடங்கிய பின்னை, “இஃது இவ்வாற்றுப் புனல்” என்று புனலில் எவ்வாறு வேற்றுமை காணுதல் கூடும்? இவ்வாறே திருமணம் என்னுங் கூட்டால் பெண் ஆண் என்னும் வேற்றுமைக் குரிய இருமை கெட்டு ஒருமை பெறுகிறது.
உலகியல் வழிநின்று, பெண் ஆண் ஒருமைப்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். ஓராவிற்கு இருகோடு பூத்திருத்தல் காண்கிறோம்; ஆ ஒன்று; கோடு இரண்டு. ஆ போன்றது தலைவி தலைவன் அன்பு; கோடுகள் போன்றன அன்னார் உடல்கள். “ஈருடல் ஓருயிர்” என்னும் வழக்கும் இக்கருத்துப் பற்றி எழுந்ததாகும். தலைப்பில் ஒளிரும் மாணிக்கவாசகனார் திருமொழியில் “அமுதிவள் யான் சுவை” என்றும், “நான் இவளாம் பகுதி பொற்பார் அறிவார்” என்றும் போந்திருத்தல் காண்க. இவள் இவனாமாறும், இவன் இவளாமாறும் துணைபுரியும் திருமணத்தின் பெற்றியை எவ்வுரையால் அளந்து கூறவல்லேன்?
இக்கால மணங்கள்
அப்பெற்றி வாய்ந்த திருமணம் இப்பொழுது வெறுங் கருமணமாய் மாறியிருக்கிறது. இரண்டு மரத்துண்டுகளைத் தச்சன் ஒட்டுவது போல் இரண்டு உடல்களை ஓரிடத்தில் சிலர் ஓட்ட வைக்கின்றனர். மனம் ஓட்டுகிறதோ? ஒட்டவில்லையோ? அவ்வுண்மை எவர்க்குத் தெரியும்? இருமை கெடுத்து ஒருமை கூட்டவல்ல அன்பினின்றும் அரும்பவேண்டிய திருமணம் இப்பொழுது யாண்டிருந்து பெரிதும் அரும்புகிறது? அவ் விழிவைச் சொல்லலும் வேண்டுமோ? காணி பூமியில் எத்துணை மணம் - பொன் பொருளில் எத்துணை மணம் - போலிக் கல்வியில் எத்துணை மணம் - பதவி பட்டத்தில் எத்துணை மணம் - புகைப் படத்தில் எத்துணை மணம் - அடை அணியில் எத்துணை மணம் - ஊன் பொதிந்த உடலில் எத்துணை மணம் அரும்புகின்றன. அந்தோ! கொடுமை! கொடுமை! அன்பு மணக் கமழ்ச்சி எங்கே? எங்கே? துன்ப மணக் துதைவா யாண்டும்? அன்பு மணம் வளர்ந்த நமது தமிழ் நாடும் துன்பக் குழியில் விழுந்து கிடக்கிறது! அகத்திணை அரும்பிய தமிழ்நாடே! களவியல் கண்ட தமிழ் நாடே! கோவையார் கொண்ட தமிழ்நாடே! நீயுமா குழியில் விமுந்தனை?
திருமணம் விளையாட்டன்று
திருமணம் என்பது ஒருபொழுது தோன்றி, மற்றொரு பொழுது அழிவதன்று. அஃது இம்மை மறுமை வரை தொடர்ந்து நிற்பது. “ஆயிரங் காலத்துப் பயிர்” என்று நம்மவர் சொல்வதுண்டு. அத்தகைய ஓன்றை விளையாட்டாகவா கருதுவது? மக்கள் பிறப்பதும் வாழ்வதும் படிப்பதும் உழைப்பதும் உண்பதும் எற்றுக்கு? திருமண வாழ்விற்கன்றோ? அத்திருமண நிலை குன்றின் உலகில் என்ன வளரும்? என்ன ஓங்கும்? தற்செயலாகச் சில இடங்களில் சில நன்மணங்கள் கூடி விடுகின்றன. பல திருமணங்கள் பெரும் போராட்டமாக முடிகின்றன. தலைவனைக் தலைவியும் தலைவியைத் தலைவனும் நீதிமன்றங்களில் ஏற்றும் “மணங்கள்” திருமணங்களா என்று கேட்கிறேன். திருமண நிலை, மிக இழிவு எய்தி இருக்கிறது. அதலால், திருமணத்தின் மீது மக்கள் பெருங்கவலை செலுத்துவார்களாக.
வகை
கிரியை முதலியவற்றிற்குக் காரணர் யாவா?
“அன்பு வழியில் இருமை கெடுத்து ஒருமை கூட்டும்” திருமணத்தில் வகை என்ன? பிற என்ன? என்று சிலர் வினவலாம். தொடக்கத்தில் வகையும் இல்லை; பிறவும் இல்லை. பின்னை நாளடைவில் வகையும் பிறவும் அங்காங்கே நுழைந்தன. நுழைவிற்குக் காரணர் யாவர்? ஆண்மக்கள் என்று கூறல் மிகையாகாது. ஆணுலகில் தீயொழுக்கம், பொறுப்பின்மை, பொய்ம்மை முதலியன தோன்றிய நாள் தொட்டுப் பெண்ணுலகக் காப்புக்கெனத் திருமண விதிகள் கோலப்பட்டன. நாளடைவில் அவ்விதிகளினின்றும் வகையும் முறையும் கிரியையும் கோலமும் பிறவும் பிறந்தன. அவை நாட்டுக் கேற்றவாறும், சமயத்துக் கேற்றவாறும், பலபடப் பரந்து கிடக்கின்றன. காலதேச வர்த்தமானத்துக் கேற்ற வண்ணம் அவ்வப்பொழுது அவை மாறுதலும் அடைகின்றன. மாறுதலும் பிறவும் பல இடங்களில் திருமணத்தின் உள் நோக்கிற்குக் கேடு விளைத்திருக்கின்றன. திருமணக் கட்டுப்பாடுகளானும் பிறவாற்றானும் உலகில் விளையும் போருக்கும் பிரிவுக்கும் வழக்குக்கும் ஓர் அளவும் உண்டேோ? அன்புவழியில் திருமணம் நடக்குமேல் போரேது? பிரிவேது? வழக்கேது?
உலகிலுள்ள மண வகைகளை ஈண்டு விரிப்பின் அவை பெருகும். நமது நாட்டு மணவகைகளை மட்டும் கவனிப்போம். அவற்றுள் உலக மணங்கள் பல அடங்கும். நமது நாட்டு நூல்களை ஆய்ந்தால் அவற்றில் பலதிற மணங்கள் காணலாம். பண்டைக் காலத்தின் முடிவிலிருந்த அறிஞர் மணத்தை எட்டு வகையாகப் பிரித்தனர். நக்கீரனாரும், நச்சினார்க்கினியரும் முறையே இறையனார் அகப்பொருள் உரைக்கண்ணும், தொல்காப்பிய உரைக்கண்ணும் எட்டுவகை மணங்களை விளக்கி உரைத்திருக்கின்றனர். அவர்தம் உரைகளை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அவை வருமாறு:-
பிரமம்: என்பது நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராடைப் பிராயந்தாளை அணிகலனணிந்து கொடுப்படு. கொடவிடின், ஓரிருது காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விட்த்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்குமென்பது: அதனை அற நிலையென்பது. பிராசாபத்தியம் என்பது மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது; அதனை ஒப்பென்பது, ஆரிடம் என்பது ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற் குளம்பினவாகச் செய்து அவற்றிடை நீரிற் கொடுப்பது; அதனைப் பொருள்கோ ளென்பது. தெய்வம் என்பது . வேள்வியாசிரியற்கு வேள்வித் தீமுன் வைத்துக் கொடுப்பது; அதனை தெய்வமென்று வழிபடப்பட்டது;
அகரம் என்பது கொல்லேறு கொண்டான் இவளை யெய்தும், வில்லேற்றினான் இவளை யெய்தும், திரிபன்றி எய்தான் இவளை யெய்தும், மாலை சூட்டப்பட்டான் இவளி யெய்துமென இவ்வாறு சொல்லிக்கொடுப்பது; அஃது அரும்பொருள் வினை நிலை யென்பது; இராக்கதம் என்பது அவள் தன்னினு ந் தமரினும் பெறாது வலிந்து கொள்வது. பைசாக ம் என்பது மூத்தாண் மாட்டுந்துயின்றான் மாட்டுங் களித்தான் மாட்டுச் சார்வது; அது பேய் நிலை எனப்படும். கந்தர்வம் என்பது இருவர் ஒத்தார்தாமே கூடுங் கூட்டம்; அதனை யாழோர் கூட்டமென்ப.’ -- நக்கீரனார்
பிரம்மாவது :- ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது; ‘கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி யயல்பே ரணிகலன்கள் சேர்த்தி யியலி நிரலொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரம்மண மென்னும் பெயர்த்து.’
பிரசாபத்தியமாவது: மகட் கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம் மகட்கு ஈந்து கொடுப்பது; ‘அரிமத ருண்க ணாயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி திருவின்றந்தை திண்ணிதிற் சேர்ந்தி யரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரிதலிலா பிரசாபத்தியம். ‘
ஆடரிமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற் குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது. ‘தனக்கொத்த வொண்பொரு டன் மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையார் பேணி யினக்கொத்த வீரிட்த் தாவை நிறீஇயிடை யீவதே ஆரிட்த்தார் கண்டமண் மாம்’.
தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு அவ்வேள்வித் தீ முன்னர்த் தக்கிணை யாக்க் கொடுப்பது; ‘ நீளி நெடு நகர் நெய்பெய்து பாரிந்த வேள்வி விளங்கமுன் முன்னிறீஇக் கேள்வியாய் கைவைத்தாம் பூணாளைக் காமுற்றார்க் கீவதே தெய்வமணத்தார் திறம்’.
அசுரமாவது: கொல்லேறு கோடல் திரிபன்றி யெய்தல் வில்லேறுதல் முதலியன செய்து கோடல்; ‘முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகை நலங்கருது ந் தருக்கின ருளரெளினிவையிவை செய்தாற் கெளியண்மற் றிவனெனத் தொகை நிலை யுரைந்த பின்றைப் பகைவலித் தன்னவை யாற்றிய வளவையிற் றயங்க றொன்னிலை யகர ந் துணிந்த வாரே’.
இராக்கதமாவது: தலைமக டன்னினும் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது; ‘மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண்டாள்வதே யெனப வலிதிற் பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ ளிராக்கத்தார் மன்ற லியல்பு’.
பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை மணஞ் செய்தலும் ஆடை மாறுதலும் பிறவுமாம்; ‘எச்சார்க் கெளிய ரியைந்த காவலர் பொச்சாப் பெய்திய பொழுதுகொளமையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பி நுச்சாவார்க் குதவாக் கேண்மை பிசாசர் பேணிய பெருமைசா லியல்பே’. ‘இடைமயக்கஞ் செய்ய வியல்பினி னீங்கி யுடைமயக்கி யுட்கறுத்த லென்ப வுடைய துசாவார்க் குதவாத வூனிலா யாக்கைப் பசாசத்தார் கண்ட மணப்பேறு;’. இனிக்
கந்தருவமாவது: கந்தருவ குமார்ருங் கன்னியருந்தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்து போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது; ‘அதிர்ப்பில்பைம் பூணாரு மாடவருந்தம்மு ளெதிர்ப்பட்டுக் கண்டியை லென்ப கதிர்ப்பொன் யாழ் முந்திருவர் கண்ட முனிவருது தண்காட்சிக் கந்தருவர் கண்ட கலப்பு’ என இவற்றானுணர்க. - நச்சினார்க்கினியர்
இவ்வெட்டனுள் பண்டைக் காலத்தில் நிலவியது களவு மணம். அக்கால இறுதியில் எட்டுவித மண வகைகள் தோன்றின என்று தெரிகிறது. அவ்வெட்டும் நிலவியபோதும் அறிஞர் பண்டையதாகிய களவுமணங் கொண்டே வாழ்ந்தனர். தொல்காப்பியனாரும், இறையனாரும் களவுமணத்தையே போற்றிப் பிறவற்றின் இயலைக் குறிப்பிட்டுச் சென்றனர்.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் தணைமையோ ரியல்பே
- தொல்காப்பியனார்
அன்பி னைற்திணைக் களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவா்
- இறையனார்
மண வகைகளை உற்றுநோக்குழிக் களவுமணம் ஒன்று தவிர, ஏனைய மணங்களிற் சில ஒருதலைக் காமமுடையனவாயும், சில இருவர் வழிவேட்கை பெறினும் வயது முதலியன பொருந்தாதன வாயும் விளங்குதல் காணலாம். ஒருதலைக்காமம் கைக்கிளை யென்றும், பொருந்தாதது பெருந்திணை யென்றும் பண்டை மக்களால் அமைக்கப் பட்டன.
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
பின்னைய நான்கும் பெருந்திணை பெறுமே
என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அகத்திணை உணர்ந்த அறிஞர், கைக்கிளை பெருந்திணை இரண்டையும் ஒதுக்கிக் களவு மணம் ஒன்றையே கொண்டனர். தொல்காப்பியனாரும் இறையனாரும் “***ஓத்த கிழவனும் கிழத்தியும்' என்றும், “அன்பின் ஐந்திணைச் களவெனப்படுவது: என்றும் முறை முறையே ஓதியிருத்தல் காண்க.
களவுமணத்தின் நுட்பம் உணராதார், “களவு: என்னுஞ் சொற்கேட்டு, அம்மணத்தை இழிவாகக் கருதுகின்றனர். ஈண்டுக் களவு என்பது, மற்றக் களவு போன்றதன்று.
’என் பயக்குமோ இது கற்கவெனின், வீடுபேறு பயக்குமென்பது, என்னை? இது களவியலன்றோ? இது கற்க வீடுபேறு பயக்குமா றென்னை? களவு கொலை, காமம் இணை விழைச்சு என்பனவன்றோ சமயந்தாரானும் உலகத்தாரானுங் கடியப் பட்டன? அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின், அற்றன்று. களவெனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஊங் காம மெனுஞ் சொற்கேட்டுக் காமந் தீதென்பதூஉ மன்று; மற்றவை நல்லவாமாறு முண்டு, என்னை? ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்ந்து நஞ்சுண்டு சாவலென்னும் உள்ளத்தளாழ் நஞ்சு நின்றவிடத்து, அருளுடையானொருவன் அதனைக் கண்டு இவளிதனையுண்டு சாவாமற் கொண்டுபோ யுகுப்பலென்று அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான்; உலளுஞ் சன நீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்கள்வினான் அவளை உய்யக் கொண்டமையான் நல்லுழிச் செல்லுமென்பது – மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்குமென்பது-.
இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லை அக்களவுகட்கெல்லாம் இவ்வுளவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடுபேறுகளை முடிக்குமாகலான் எனப்படுவ தென்று சொல்லிச் சிறப்பிக்கப்பட்டது. அது பாயிரத்துள்ளும் உரைத்தாம். மற்று உலகத்துக் களவான வெல்லாம் கைகுறைப்பவுங் கண்சூலவுங் கழுவேற்றவும் பட்டுப் பழிய்ம் பாவமுமாக்கி, நரகத் தொடக்கத் தீக்கதிகளில் உய்க்கும். இது மேன்மக்களாற் புகழப்பட்டு ஞானவொழுக்கத் தோடொத்த இயல்பிற் றாகலானும் பழுபாவ மின்னையானும் எனப்படுவதென்று விசேடிக்கப்பட்டது. -- என்று நக்கீரனாரும்
’பிறர்க்குரித்தென்று இருமுது குரவாற் கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிற்ற்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன் றாயிற்று. இது வேதத்தை மறை நூலென்றாற் போலக் கொள்க”. ‘உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந்தம்முள் இயைவதே யென வேதமுங் கூறிற்றாதலின்’ -- என்று நச்சினார்க்கினியரும் களவியலை விளக்கியிருத்தல் காண்க. விரிவு அக நூல்களிற் பார்க்க.
களவுமண விளக்கம்
களவு மணமாவது “ஓத்த பண்பும் ஓத்த நலனும் ஓத்த அன்பும் ஒத்த செல்வழும் ஓத்த கல்வியும் உடைய” ஒருத்தியும் ஒருவனும், பிறர் முயற்சியின்றி ஆண்டவன் அருள் கூட்டிய வழிக்கூடி, இவள் இவனாமாறும், இவன் இவளாமாறும் ஐம்புலனார இன்ப நுகருங் காதல் மணமென்க. இம்மண வாய்ப்படும் ஒருத்திக்கும் ஒருவனுக்கும் நிகழும் இன்ப அன்பே வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற வல்லது. இதன் பெற்றியை அக நூல்கள் விரித்துக் கூறுகின்றன.
தூய களவு மணத்துடன் நாளடைவில் சில வினைமுறைகள் கூடலாயின. மன்பதையில் - சிறப்பாக ஆடவரிடைப் பொய்யும் வழுவும் புகுந்த பின்னர்க் களவுவழி நிகழும் (தலைவி - தலைவன்) அன்புக் குறிப்பை உலகுக்கு உணர்த்தற்பொருட்டுப் பெற்றோர் சில வினைகள் கொண்டனர். வினைகளுக்கேற்ற கிரியைகளும் வகுக்கப்பட்டன.
“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னா்
ஐயா யாத்தனர் கரண மென்ப”
எனவரூஉந் தொல்காப்பியச் சூத்திரம் உன்னற்பாலது. கரணம் அல்லது கிரியை கொண்டது கற்பியல் என்பது. கற்பியல், களவியல்வழிப் பிறந்தது. களவின்றேல் கற்பில்லை. தொல் காப்பியனார் காலத்தில் களவு மணம் எந்நிலையுற்றிருந்த தென்பது, தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திற் போந்துள்ள களவியல் கற்பியல்களான் தெரிகிறது. பின்வந்த ஏனையோர் அவ்வழி நின்றே நூல்கள் எழுதினர்.
பின்னை நாளடைவில் தொல்காப்பியர் காலத்திய களவு மணமும் மறைந்து, வேறு மணங்கள் மன்பதையில் நுழைந்தன. இப்பொழுது மணங்கள் போலியாய் முடிந்திருத்தல் கண்கூடு. போலி மணங்களால் மக்கள் வாழ்வு குலைந்து வருகிறது, தீயொழுக்கம் பெருகி வருகிறது.
இந்நாளில் பழைய களவு மணத்தை உயிர்ப்பித்தல் அரிது. என்னை? அந்நாளில் இருபாலாரும் அகத்திணைப் பயிற்சியில் வல்லவரா யிருந்தனர். அவர் காட்சியளவான் மெய்ப்பாடு கண்டு, அகப் பொருத்தம் உணரும் நுண்ணறிவு பெற்றிருந்தனர். இப்பொழுது அப்பயிற்சி இறந்துபட்டமையான், புறவழி யிலாதல் நிலைமையை உணர்ந்து திருமணம் நடாத்தல் வேண்டும். இது குறித்துச் சில உரை பகர விரும்புகிறேன்.
வயது
முதலாவது வயதின்மீது கருத்துச் செலுத்துவோம்; பின்னே பிறவற்றை நோக்குவோம். “ஓத்த பண்பு ஓத்த நலன் ஓத்த அன்பு ஒத்த செல்வம் ஒத்த கல்வி' என்று கூறிய அறிஞர் “ஒத்த வயது” என்று கூறாமை உன்னத் தக்கது. வயதில் மாறுதல் இருத்தல் வேண்டுமென்பது அன்னார் கருத்து. எத்தகைய மாறுதல்? அவர்தங் கூற்றால் வயது ஓத்திருத்தல் கூடாது என்பது விளங்குகிறது. ஓத்தலின்றேல் ஏற்றக் குறைவு இருத்தல் வேண்டுமன்றோ? ஏற்ற வயது எவருக்கிருத்தல் வேண்டும்? குறைந்த வயது எவருக்கிருத்தல் வேண்டும்? ஓத்த பண்பு ஓத்த நலன் முதலியன ஓதிய அறிஞர், வயதில் மட்டும் வேற்றுமை காட்ட வேண்டி, “இவனும் பதினாறாட்டைப் பிராயத்தானாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தாளாய் ஓத்த பண்பும் ஓத்த நலனும் ஒத்த அன்பும் ஓத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடைய ராய்' என்று வயது குறித்திருத்தல் ஊன்றி ஊன்றி நோக்கற் பாலது. இதனால் அண் வயது, பெண் வயதினும் சிறிது ஏறி யிருத்தல் வேண்டுமென்பது தெரிகிறது; இதனை அராய்ச்சி மிகுந்த மேல்நாட்டறிஞரும் ஏற்றுக் கொள்கின்றனர். பெண், ஆணைவிடச் சிறிது விரைவில் உற்ற வயதடைதலான், ஆண் வயதினும் பெண் வயது சிறிது குறைந்திருத்தல் பொருத்தம். இல்லை யேல் பெண்ணுக்குத் துன்பம் மிகும்; ஆணுக்கும் இன்பம் இல்லை.
பொருந்தா மணம்
வயது வேற்றுமை கொண்டு, ஆண்டில் பலபட முதிர்ந்த நரை மூதாளன், ஓரிளங் கன்னியைக் கட்டலாமோ எனில் அது கூடவே கூடாது. வயதில் முதிர்ந்த பெண்ணுடன் வயதில் இளைய ஆணும் சேர்தல் ஆகாது. இம்மணங்களால் இன்பம் விளைவதில்லை; நற்பிள்ளைப் பேறும் உறுவதில்லை. இன்பம் பொருந்தாததாகவும் ஒருதலையாகவும் இருத்தலான் உடல் நலனுங்கெடும். அதலால், வயதில் சிறு வேற்றுமையுடைய காளையும் கன்னியும் மணம்புரிதலே சால்புடைத்து.
அச்சிறு வேற்றுமை யாது? அதற்குக் கால எல்லையண்டேடா? நம் நாட்டார் “பதினாறு - பன்னிரண்டு: என்று நான்கு வயது வேற்றுமை கொண்டனர். இன்னும் ஓராண்டு கூட்டி ஐந்து வயது வேற்றுமையும் கொள்ளலாம். இரண்டு வயது வேற்றுமையும் ஒருபுடை ஓக்கும், வயது வேற்றுமை, ஐந்துக்கு மேற் போகாமலும், இரண்டுக்குக் குறையாமலும் இருப்பது நலம். நான்கு வயது வேற்றுமை மிகப் பொருத்தம்.
பதினாறு - பன்னிரண்டு வயதைப் பற்றிச் சிறிது உன்னுவோம். இவ்வயது முறை இப்பொழுது மறுக்கப்படுகிறது. மறுப்புக்கு யானும் துணைநிற்கிறேன். அனால் பதினாறு - பன்னிரண்டு வயதுகுறித்துச் சென்ற பண்டை மூதறிஞர்மீது, இக்காலத்துச் சிலர் சுமத்தும் பழிக்கு யான் துணை நில்லேன். என்னை?
வயதும் கால வேற்றுமையும்
பதினாறு - பன்னிரண்டு வயது என்று ஆன்றோர் குறிப்பிட்ட காலதேச வர்த்த-மானத்துக்கும் தற்கால தேசவர்த்த மானத்துக்கும் வேற்றுமை உண்டு. இப்பொழுது உள்ள நிலைமையைக் கொண்டு, பண்டை மூதறிஞர் செயலைக் குறை கூறுவது பிழை. அவரைக் குறை கூறாது, காலத்துக்கேற்ற மாறுதல் செய்வது அறிவுடைமை. அந்நாளில் பிராணாயாமம் முதலிய பயிற்சிகள் ஐந்து வயதில் தொடங்கப்படும். பதினாறு வயதில் அப்பயிற்சிகள் முழுமை எய்தும். அவ்வயதில் திருமணத்துக்குரிய இயல் - திறம் - உரம் முதலிய யாவும் ஆடவன்பால் பொருந்தி வந்தன. பெண்ணும் பன்னீராண்டில் திருமணத்துக்குரிய யாவும் பெறுவள். இந்நாளைய பதினாறு வயதுடைய ஆணும், பன்னிரு வயதுடைய பெண்ணும் புல் தடுப்பினும் கீழே விழுவர். இப்பதினாறு - பன்னிரண்டையா, அப்பதினாறு - பன்னிரண்டுடன் ஓப்பநோக்கி அன்றோரைப் பழித்துக் கூறுவது!
காலதேச வர்த்தமான நிலை நோக்கி, பதினாறையும் பன்னிரண்டையும் முறையே, இருபது - பதினாறு ஆக்கலாம். வேண்டுமேல் இரண்டு வயது உடன் கூட்டலாம். எப்படியோ இருவர்க்கும் நான்கு வயது வேற்றுமை இருத்தல் வேண்டும்.
மேல் நாடும் நமது நாடும்
இந்நாளில் சிலர் மேல்நாட்டு முறைபற்றி முப்பது, முப்பத்தைந்து என்று சொல்கின்றனர். நமது நாடு மேல் நாடன்று. மேல்நாட்டார் வெண்ணிறத்துடன் பிறக்கின்றனர். நாம் அந்நிறுத்துடன் பிறப்பதில்லை. மேல்நாடு தண்மை நாடு. அதை நோக்க நமது நாடு வெம்மை நாடு. இன்பக் கிளர்ச்சி வெம்மை நாட்டில் விரைவில் எழுதல் இயல்பு. அவ் வெழுச்சியைத் தகைய இயற்கையோடு மாறுபட்டுப் போர் புரிதல் அறியுடைமையாகாது. எல்லாவற்றிற்கும் மேல் நாட்டை இலக்கியமாகக் கொள்வது நமது நாட்டின் வளத்தைக் கெடுப்ப தாகும். மேல்நாட்டு முறைபற்றி “முப்பது - முப்பத்தைந்து” பாட்டுப் பாடுவது அறமன்று. இருபத்திரண்டு வயதுக்குள் மணவினை முடிப்பது அறிவுடைமையாகும். புறனடையாகச் சிலர் இருபத்தைந்து கொள்ளலாம். இருபது இருபத்தைந்துக்குள் ஆடவருக்கும், பதினாறு இருபத்துக்குள் மகளிர்க்கும் மணவினை முடித்தல் நமது நாட்டின் இயற்கைக்கு அரண் செய்வதாகும்.
உற்ற வயதில் மக்கட்குப் போகப் புணர்ச்சி இருத்தல் வேண்டும். அஃது உடல் வளத்துக்கும் அறிவு விளக்கத்துக்கும் துணை செய்வதாகும்.
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னாச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.
- வளையாபதி
இன்பநுகர்ச்சிப் பருவம்
திருமணத்தின் பின்னர் இருவர்க்கும் சொலற்கரிய இன்ப நிகழ்ச்சி தொடங்கும். சில ஆண்டு இன்பக் கலவியால் சில ஒழுங்குமுறைகள் பண்படும். பண்பட்ட இன்ப நுகர்ச்சிக்குரிய பருவமும் உண்டு அப்பருவத்தில் திருமணஞ் செய்யாது முன்னரே ஏன் செய்தல் வேண்டும்?” என்று சிலர் கருதலாம். முன்னரே திருமணம் நடந்தாலன்றி அப்பருவத்தில் பண்பட்ட இன்பம் நிகழாதென்க. ஒருவன் குழந்தைப் பருவந்தொட்டு எழுத்து, சொல் முதலியன பயிலாது வாளாகிடந்து, பின்னே திடீரெனத் தொல்காப்பியம் பயிலப் புகுந்தால், அவனது தொல்காப்பியப் பயிற்சி என்னாகும்? இன்ப நிகழ்ச்சிக்கு எழுத்துப் பயிற்சி போன்றது திருமணம். சில ஆண்டு கடந்து கூடும் இன்ப நிகழ்ச்சி தொல்காப்பியப் பயிற்சி போன்றது.
அப்பருவம் எது? நம் நாட்டறிஞர் பெண் பருவத்தை ஏழு வகையாகப் பிரித்துப் போந்தனர். அவர் அதற்குரிய ஆண்டுகளையும் வரைப்படுத்தியுள்ளனர். அவை வருமாறு:-
1. பேதை (ஒரு வயது முதல் ஏழு வயது வரை);
2. பெதும்பை (ஏழு - பதினொன்று) ;
3. மங்கை (பதினொன்று -பதின்மூன்று);
4. மடந்தை (பதிமூன்று - பத்தொன்பது);
5. அரிவை (பத்தொன்து - இருபத்தைந்து);
6. தெரிவை (இருபத்தைந்து - முப்பத்தொன்று);
7. பேரிளம் பெண் (முப்பத்தொன்று - நாற்பது);
பிற இளமை கடந்த முதுமைக்குரியன. இவை நமது நாட்டுத் தட்ப வெப்ப நிலைமைக் கேற்றவண்ணம் வகுக்கப்பட்டன. மேல்நாட்டில், இன்னும் சில ஆண்டு கடந்து முதுமையுறும். மேலே குறிப்பிட்டவாறு, கால நிலை நோக்கி இம்முறையில் சில மாறுதல் நிகழ்த்துவது தவறாகாது.
பழைய முறைப்படி நோக்குழி, இப்பருவங்களில் திருமணத்துக்குரியது மங்கைப் பருவமாகிறது. இப்பொழுது மடந்தைப் பருவம் வரை திருமணக்காலம் நீண்டிருக்கலாம். திருமணத்தினின்றும் இன்ப நிகழ்ச்சி செம்மை பெறுதற்குச் சில ஆண்டாகுமென்பது மேலே சொல்லப்பட்டது. இன்ப நுகர்ச்சிக்குரியது அரிவைப் பருவமாகும். கால நிலைக்கு ஏற்றவாறு அப்பருவத்துக்குரிய அண்டுநிலை ஒரு சிறிது மாறலாம். செம்மை இன்பத்துக்குரிய பருவம் அஃது என்பதே ஈண்டுக் கருதற்பாற்று. “பெண் இன்பமே முத்தின எனக்கொண்ட உலகாயதர், அவ்வின்பத்துக்குரிய பருவம், “அரிவைப் பருவம்” என்று குறித்திருக்கின்றனர். “அரிவையர் இன்பம் முக்தி” என்னும் உரையைக் காண்க. பண்பட்ட செம்மை இன்பத்துக் கூரிய அப்பருவத்தில் திருமணஞ் செய்யப் புறப்படுவோர் இன்பத்தைப் பெறாதொழிவோராவர். ஆதலால், அப்பருவத்துக்கு முன்னரே மணவினை முடிப்பது அறிவுடைமை.
போலி மணம்
நமது நாட்டில் பலப்பல விதமாகத் திருமணங்கள் நடைபெற்றன; பெறுகின்றன. திருமணத்திற்கு உரிய வயது முதலியவற்றின் மீது நம் நாட்டார் சிறிதுங் கவலை செலுத்தியதில்லை. பால்மணமறாச் சிறு குழந்தைகள் கரத்தில் பழந் தந்து ஏமாற்றி மணவினை முடிக்க முந்திய தாய் தந்தையரும் இருந்தனர். இவர் தாய் தந்தைய-ராவரோ? என்று கேட்கிறேன். திருமணத்தின் இயல், பொருள், நுட்பம் முதலியவற்றுள் ஒன்றுந் தெரியாத குழந்தைகட்கு மணவினை முடித்து வந்த கொடுமை ஒருவழியில் “சாரதா சட்ட”த்தால் தொலைந்தது. பெண்மகள், பயில வேண்டுவதைப் பயின்று, உணர வேண்டுவதை உணர்ந்து, இயற்கை வழி வளர்ந்துவரும் வேளையில், திருமண நிகழ்ச்சி அவள் உள்ளத்தில் கூடும்போது, அவள், தன் இயல்பு, கல்வி முதலியவற்றிற்குத் தக்கவாறு, ஒருவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை அவளுக்கன்றோ இருத்தல் வேண்டும்? உலகம் இன்ன தென்று தெரியா முன்னம் ஒருத்தியை ஒருவனுக்கு மற்றவர் கொடுத்தல் பாவம்.
இளமை மணமும் கிழ மணமும்
இளமை மணத்தால் நாடு கேடுற்று வந்தது ஓரளவில் ஒழிந்தது. கிழ மணத்தால் விளைந்து வருங் கேட்டையும் தொலைக்க அறிஞர் முயலுதல் வேண்டும். வெள்ளிக் கம்பியென நரை மயிர் திரண்டு, கண்குழிவிழுந்து, பல் தேய்ந்து, நரப்புக்கட்டுக் குலைந்து, எலும்பு உலுத்து, முதுகு வளைந்த தொண்டு கிழவன், மேகங் கட்டுக் கட்டாகத் தவழ்ந்தாலென அடர்ந்த மயிரும், பிறைத் திங்களும் வெஃகும் நுதலும், நீலக் கருவிழியும், முத்தன்ன வெண்ணகையும், பவள இதமும், குயில் குரலும், மயில் நடையு முடைய இளமையும் அழகும் ஓழுகியூரும் கன்னியை மணக்குங் கொடுமை நமது நாட்டில் மலிந்து கிடக்கிறது. அந்தோ! பெண் தெய்வம் கல்லா? மண்ணா? இக்கொடுமை குறித்து எழுதக் கையும் ஓடவில்லை. பெண் கொலை? பெண் கொலை? என்று கூவிக் கூவி மேலே செல்கிறேன்.
மறுமணம்
“நாயகி இறந்தால் என் செய்வது?” என்று சிலர் கேட்கின்றனர். “நாயகன் இறந்தால் என்செய்வது?”' என்று கேட்பாரில்லை. இரண்டா முறை மணம் வேண்டுமேல் அம் மணவுரிமை இரு பாலார்க்கும் இருத்தல் வேண்டும். இரண்டா முறை மணம் வேண்டுவதில்லை என்றே யான் சொல்வேன். ஒருமுறை ஒருத்தியுடன் காதல் கொண்டு ஒருவன் மணஞ் செய்த பின்னை, மற்றொரு பெண்ணை அவன் மணஞ் செய்வது எற்றுக்கு? காதல் ஒருவரிடம் நிகமுமேயன்றி மற்றவரிடம் நிகழாது. காதலால் ஒருமுறை வாய்க்கப்பெற்ற மனைவி, இன்னுயிர் துறக்க நேரினும், அவள் காதல் எங்ஙனம் நீங்கும்? கொழுநன் காதலும் அத்தன்மையதே. ஆதலால், காதலால் விழுங்கப் பெற்ற ஒருத்தி இறப்பினும் ஒருவன் மறுமணஞ் செய்ய வேண்டுவதில்லை. அவ்வாறே ஒருவன் இறப்பினும் ஒருத்தி மறுமணஞ் செய்ய வேண்டுவதில்லை. மனைவி உயிருடன் இருக்க, மேலும் மேலும் ஆடவன் மணஞ் செய்வது பெருங்கொடுமை. அதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூற வேண்டுவதில்லை.
புறனடையாக இங்கு இரண்டொரு குறிப்புப் பொறிக்க விரும்புகிறேன். திருமணம் நடந்த உடன் அதாவது ஓராண்டு ஈராண்டுக்குள், மனைவி மரித்தால், பிள்ளைப்பேறு கருதி, இன்னொருத்தியை மகன் மணக்கலாம். வயது முதிர்ந்த ஒருவன், மனைவியை இழந்த பின், மனைவி நசையால் இடர்ப்படுவனேல், அவன் தன் வயதிற்கியைந்த ஒருத்தியை - அதாவது கணவனை இழந்த ஒருத்தியை - அவளும் விரும்பின் - மணந்து கொள்ளலாம். அங்ஙனஞ் செய்யாது, கிழவன் கன்னியைக் கட்டுவது கூடாது. இருவர் எவ்வயதில் எந்நிலையில் மணஞ் செய்து கொள்ளினும், வயது வேற்றுமை நான்கு அல்லது ஓந்துக்குமேல் இருத்தல் கூடாதென்பது கவனிக்கத்தக்கது.
கொழுநன்
கொழுநன் என்பதற்குக் கொழுகொம்பு போன்றவன் என்பது பொருள். தான் சுற்றிக் கொள்ளத் தக்க கொழுகொம்பு இஃது என்று கொடி தெரிந்து கொள்ளுதல் போலத் தன் னியல்புக்குரிய கொழுநன் இன்னானென ஒருவனைத் தெரிந்து கொள்ளும் பொறுப்புப் பெண்ணினுடையதா யிருத்தல் வேண்டும். பெண் பிறந்து வளர்ந்து கல்வி பயின்று தேர்ச்சி அடைவது எற்றுக்கு? ஒருவனுடன் வாழ்ந்து தாய்மைப் பேறு பெறுதற்கன்றோ? அப்பேற்றிற்குரிய வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் அவள் கவலை செலுத்தியே தீர்தல் வேண்டும். வாழ்க்கைக்கு நற்றுணையாகாத ஓருவன் நாயகனாக வாய்ப்பனேல் பெண்ணின் வாழ்வு குலைந்துபடுவது திண்ணம். அப்பெண், செல்வத்திற் சிறந்த சீமாட்டியா யிருந்தாலென்னை? கல்வியிற் சிறந்த கலைவாணியா யிருந்தாலென்னை? அழகிற் சிறந்த அணங்கா யிருந்தாலென்னை? நல்ல கணவன் வாய்த்தால் இவையெல்லாம் அவளுக்குப் பயன்படும். வாய்க்கவில்லையேல் இவைகளால் ஆகும் பயன் ஒன்றுமில்லை. ஒருத்தியின் வாழ்வுச் செல்வம் அவளது நாயகனேயாவன்.
நாயகன் எவன்?
நாயகன் விளையாட்டல்லன்; பாவையல்லன்; இன்றிருந் து நாளை ஓழிவோனல்லன். அவன் என்றும் நீங்காது வாழ்வில் ஒன்றியிருப்பவன்; வாழ்க்கைத் துணையா யிருப்பவன். இத்தகைய ஒருவன், எல்லா வழியிலும் நாயகியுடன் இயைந்தவனா யிருத்தல் வேண்டுமன்றோ?
அத்தகைய நாயகனைக் தெரிந்தெடுக்கும் பொறுப்பு எவருடையதாயிருத்தல் வேண்டும்? தாய் தந்தையார் பெண்ணுக்குரிய நன்னாயகனைத் தெரிந்தெடுப்பதில் துணை புரியலாம்; கவலை செலுத்தலாம். அனால் ஆர்ந்த பொறுப்புப் பெண்ணினுடையதாகவே இருத்தல் வேண்டும். இது நம் நாட்டார் பலர்க்கு வியப்பூட்டும். “பெண்ணா புருஷனைக் தேடிக் கொள்வது?” என்று அவர் எள்ளுவர்; நகையாடுவர். “புருஷனுடன் நாளை வாழப்போகிறவர் யார்?” என்று எள்ளுவோரையும் நகையாடுவோரையும் நோக்கிக் கேட்கிறேன். கேவலம் நகை, புடவை முதலியன வாங்குவதில் தாய் தந்தையார் மகளது விருப்பம் கேட்கின்றனர். இவைகட்குப் புதல்வியின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் பெற்றோர் அவள் வாழ்வினூடே நெடிதும் உயிராகக் கலந்து வாழத்தக்க நாயகனைப் பற்றித் தானா பெண்ணின் கருத்தைத் தெரிந்து கொள்வது இழிவு? பழைய களவு மணம் வழக்கில் இல்லா தொழியினும், அதற்குரிய அக அறிவு ஊற்றுத் தூர்ந்துபடினும் அதனுடைய போக்கை யாதல் பற்றி ஒழுகுவது நல்லது. திருமணத்துக்கு முன்னரே பெண், நாயகனைப் பற்றிச் செவ்வனே தெரிந்து கொள்ளுமாறு மற்றவர் முயலுதல் சிறப்பு. முன்பின் ஒஓன்றுந் தெரியாத ஓருவன் பக்கத்தில் பெண்ணைத் திடீரென அமர்த்துவது அறமன்று. “பெண்ணைப் பெற்ற தாய் தந்தையர்க்குப் பொறுப் பில்லையோ?” என்று சிலர் கருதலாம். பெற்றோர்க்குப் “பொறுப் பில்லை என்று யான் கூறேன். அப்பொறுப்புடன் பெண்ணின் விருப்பும் கூடல் வேண்டு மென்பது எனது உள்ளக்கிடக்கை.
கட்டுப்பாடுகளால் பொருந்தா மணங்கள்
சாதிக் கட்டுப்பாடு, சமயக் கட்டுப்பாடு, பொருள் வேட்கை முதலியவாற்றான் எத்துணையோ பொருந்தா மணங்கள் நடை பெறுகின்றன. கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு எத்துணை நாள் உயிர்வதை செய்து கொண்டி ருப்பது! கட்டுப்பாடுகள் என்னென்ன செய்கின்றன! அந்தோ! விரிக்கிற் பெருகும். பெற்றோரும் பெண்ணும் விரும்பாத இடத்திலும் மணம் நிகழுமாறு ’கட்டுப்பாடு' செய்கிறது! கட்டுப்பாட்டுக்கும் கண்மூடி வழக்கத்துக்கும் என்ன ஆற்றல்! என்ன பெருமை! அஞ்சா நெஞ்சுடன் கட்டுப் பாடுகளையும் கண்மூடி வழக்கங்களையும் உடைத்தெறிதல் வேண்டும்.
மன மொன்றிய மணம்
சில இடங்களில் மூடப் பெற்றோரின் விருப்பத்துக் கிணங்க, எத்துணைப் பெண்மணிகள் கண்ணீர் உகுத்து மணஞ்செய்து கொள்கின்றனர். பெண் மனங் கொள்ளா மணம் மணமா? என்று வினவுகிறேன். திருமணம் என்பது நகையா? இசையா? பந்தரா? மாலையா? கூட்டமா? விருந்தா? மனம் ஒன்றாத இடத்திலே மணமேது? மகிழ்வேது? நாயகி நாயகன் மனம் ஒன்றுவதே மன்றல் மன்றலாகும். அதலால், பெண் தன் கருத்துக் கியைந்த நாயகனை நண்ணலே பொருத்தம்.
சோதிடம்
களவு மணம் இறந்துபட்ட பின்னர்த் தாய் தந்தையர் சோதிடத்தின் வழிப் பொருத்தங் கண்டு, பிள்ளைகட்குத் திருமணஞ்செய்து வந்தனர். இஃது இன்னும் நடைபெற்று வருகிறது. சோதிட வழிக் குறிக்கப் பெறும் பொருத்தத்தை யான் கூறை கூறவில்லை. சோதிடம் பிழையெனவும் யான் கூறேன். சோதிடன் பிழை படலாமன்றோ? கணிதம் முதலியவற்றில் பிமை நிகழலாமன்றோ? சோதிடத்துடன் - பெற்றோர் ஆராய்ச்சியடன் - மற்றவர் உதவியுடன் - பெண்ணின் விருப்பமும் தேவை என்று யான் சொல்கிறேன். முடிபு பெண்ணின் விருப்பத்தை ஒட்டி யதாயிருத்தல் வேண்டும் என்பது எனது கருத்து.
கொழுநனைத் தெரிந்தெடுத்தல்
கொழுநனைத் தெரிந்து கொள்வதில் பெண்ணுக்குப் பெரும் பொறுப்பு உணடு. “மகன்: என்னுஞ் சொல்லுக்குரிய பொருளுடைய ஒருவனைப் பெண் தெரிந்தெடுப்பது பொருத்தம். நீண்ட நாள் தனக்குத் தெரிந்த ஒருவனையே பெண் கருத்திற் கொள்வது நலம். திடீரென வரும் ஒருவனது செல்வம் - கல்வி - உடற்கட்டு - முதலியவற்றைச் கண்டு பெண்மகள் மயங்கலாகாது. நாளடைவில் அவனது வழக்க ஓழுக்கம் முதலியவற்றைக் கவனித்து, அவள் தன் மனத்தில் தெளிவுபெறல் வேண்டும். தாய் தந்தையர் வாயிலாகவும், மற்றவர் வாயிலாகவும், ஒல்லும்வகை நேராகவும் அவனது செயலைப் பெண் கவனித்துவரல் வேண்டும். வெறுங் காமக்கிளர்ச்சிக்கு எளிவந்து, திடீரென ஒருவனை ஒருத்தி ஏற்பது பின்னைப் பிரிவிற்கும் பிற இடருக்குங்கால் கொள்வதாகும். பின்னை வாழ்வில், எத்தகைய இடையூறும் நேராத வழியில், அவள் தனக்குகந்த வாழ்க்கைத் துணையைத் தேடுவது அறிவுடைமை. இழிந்த காமச்சூட்டிற்கு அடிமைப் பட்டுப் பெண், சேற்றில் விமுவது அறியாமை.
நாயகன் என்றால், காமவேட்கை தணிப்பவன் என்று மட்டுங் கருதலாகாது. ஒருத்தியின் தாய்மை நிலைக்குத் துணை நிற்பவனும், நற்பிள்ளைப் பேற்றிற்குத் தந்தையாயிருப்பவனும் நாயகன் என்னுஞ் சொற்கு உரியவன் என்க. பின்னுலகாக்குந் தந்தையாமாறு ஒருவனைத் தனக்குரிய கணவனாகக் கோடல் பெண்ணின் கடமை. தந்தையாகும் நீர்மை அவன்பால் இருக்கிறதா என்பது பெரிதுங் கருதற்பாற்று.
நாயகன் இயல்
வயது ஓன்று தவிர, பிறவற்றில் ஏறக்குறைய எல்லாக் கூறுகளிலும் பெண் தன்னை ஓத்த ஒருவனை நாடுவது சிறப்பு. “ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஓத்த செல்வமும் ஓத்த கல்வியும் உடையராய்* * *”- அன்பினானும் குணத்தினானும் கல்வியினானும் உருவினானும் திருவினானும் திரிவிலா ஒருவர் ஒருவரின்* * *' - “எக்காலத்தும் எவ்விடத்தும் ஞானத்தானும் ஒழுக்கத்தானும் ஆள்வினையானும் பொருளினானும் பொருவிலன் தானே என்பது. இவளும் அன்னளெனவே, இருவரும் பொருவிறந்தா ரென்பதைப் பயக்கும்'- என வரூஉங் களவியல் உரையாசிரியர் மொழிகளைக் காண்க.
ஒத்த கல்வி
இருபாலார்க்கும் முதலில் ஓத்த கல்வி வேண்டற்பாலது. ஒத்த கல்வி இல்லாத இடத்துப் பிற ஒத்துவரல் அரிது. ஈண்டு ஓத்த கல்வி என்பது ஓத்த ஏட்டுக்கல்வியையும் அன்று; ஓத்த பட்டக் கல்வியையும் அன்று. பின்னை எது? கல்விக்குரிய பயனிலையை என்க.
சில இடங்களில் நாயகி இசைக் கல்வியிற் சிறந்து விளங்குகிறாள். நாயகன் அக்கல்வியில் சூந்யமாயிருக்கிறான்,; அதை வெறுப்பவனாயும் இருக்கிறான். நாயகனுக்கு அக்கல்வி யில்லா தொழியினும், அதைச் செவிமடுத்துத் திளைக்கும் அறிவாதல் அவனுக்கிருத்தல் வேண்டும். இல்லையேல் பெருங் கவலையே. இசைப் புலமை நிரம்பப் பெற்ற ஒருத்தி, அப்புலமை சிறிது மில்லா ஒருவனை மணந்தால் மன ஒற்றுமை நிகழ்தல் அருமை. புறனடையாகச் சில இடங்களில், சிலபோழ்து, வேறு துறைகளால் ஒற்றுமை நிகழலாம். பலதிறக் கல்வித் துறைகளில் இரு பாலார்க்கும் ஒத்த புலமை இருத்தல் சமயத்துக்கு உதவுவதாகும். இந்நாளில் நாயகன்மாருள் பலர் கற்றவராயிருக்கின்றனர். நாயகிமாருக்கோ எழுத்து வாசனையும் கிடையாது. இவ் விருவர்க்கும் அறிவு ஒற்றுமை எங்ஙனம் நிகழும்? அறிவு - மனம் - உடல் என்னும் முத்திற ஒற்றுமை இருபாலார்க்கும் இருத்தல் சிறப்பு. இவ்வொற்றுமைக்கு அடிப்படை ஓத்த கல்வியாகும்.
ஒத்த ஒழுக்கம்
கல்வி அறிவுடன் இருபாலார்க்கும் ஒத்த ஒழுக்கம் இருத்தல் வேண்டும். ஓத்த ஒழுக்கம் இல்லாதாரிடத்து ஓத்த அன்பு நிகழாது. பொய்யனிடம் மெய்யள் சிக்குவதும், கொலைஞனிடம் அருள் கனிந்த அகமுடையாள் அகப்படுவதும் மாறுபாடாக முடிதல் இயல்பு. அதலால், ஓத்த ஒழுக்கம் இருபாலார்க்கும் தேவை.
நாயகன், நாயகியின்பால் எவ்வொழுக்கத்தை எதிர்நோக்கு கிறானோ, அவ்வொமுக்கம் அவன்பாலும் இருத்தல் வேண்டும். அவ்வாறே நாயகி, நாயகன்பால் எதிர்நோக்கும் ஓழுக்கமும் அவள்பால் இருத்தல் வேண்டும். செல்வமும் பிறவும் ஒத்திருத்தலும் நல்லதே.
உடற் பொருத்தம்
சில இடங்களில் எல்லாம் ஓத்தும் உடல்நலன் ஓவ்வாமல் இருக்கும். உடல் நலன் ஓவ்வாமை, பிற ஓத்த நிலைகளையும் சிதைக்கும். இத் திருமணத்தால் மெய்ப்பயன் விளையாது. கட்டும் அழகும் திரண்டு, அமுதெனப் பொலியும் இளங் கன்னியை, உடல் நலன் பெறாத ஒரு “தேரை: மணந்தால் மன ஒற்றமை நிகழுங்கொல் மன ஒற்றுமை இல்லாத இடத்து அறிவு ஒற்றுமை ஏது? உடல் - மனம் - அறிவு - என்னும் மூன்றும் ஒருமைப்பட்ட வாழ்வே அன்புக்குரிய இல்வாழ்வாகும். உடல் நலன் எல்லாவற்றிற்கும் ஊற்று என்று கூறல் மிகையாகாது.
நோயாளரிடத்தில் எச்சரிக்கை
உடல்நலன் மீது பெரிதுங் கருத்துச் செலுத்தல் வேண்டும். “நீறுபூத்த நெருப்புக்கள்' சில உண்டு. அவர் விலையயர்ந்த நல்லாடையால் தம் புரையை மறைத்து உலகை மயக்குவா்; ஏறு போல் செயற்கை நடை நடந்துங் காட்டுவர், கல்வியிலும் செல்வத்திலும் பிறவற்றிலும் பெருக்குடையராயும் இருப்பர். இவ்வளவுடன் அவருள் கனல் மூண்டு கொண்டிருக்கும். இந் ’நீறுபூத்த நெருப்புக்க'ளிடை எவராவது அணுகலாமா? அணுகின் நெருப்பு என் செய்யும்? அணுகுவோரையும் அவர் வழித் தோன்றல்களையும் அக்கனல் எரிக்கும். அதலால், பெண்மகள் தன்னை மணஞ் செய்ய விரும்பும் ஒருவனது உடல் நலனைப் பெரிதுங் கவனிப்பாளாக.
இந்நாளில் எத்துணையோ நோயாளர் செயற்கைப் புறக்கோலத்தால் தம் புண்ணை மறைத்துப் பின்னே பெண்ணுலகை எரிக்கின்றனர். இவர், தாம் கெட்டது மன்றிப் பிறரையுங் கெடுக்கின்றனர். இப்பாவிகட்கு இப்பொழுதுள்ள நரகக் குழிகள் போதுமோ? புது நரகக் குழிகளல்லவோ தேவை? தொழு நோய் அல்லது குஷ்டரோகம், காசம் முதலிய நோய்களுடையார் திருமணஞ் செய்யாமலிருப்பது நல்லது. இந்நோயினர் எத்துணைக் கல்வி, செல்வம் உடையவராயினும், பெண்மக்கள் இவரைப் பொருட்படுத்தலாகாது. வெள்ளை - கொறுக்கு - மேகம் முதலிய நோய்களுடையவரிடத்தும் பெண்மக்கள் மிக எச்சரிக் கையாயிருத்தல் வேண்டும். இவர் பெரிய ’நீறுபூத்த நெருப்புக்கள்'. இவர் நோய் இவருடன் ஓழிவதில்லை. இவரை மணக்கும் மங்கைநல்லாரிடத்தும் நோய் தொடரும். நோய் இவர் அளவிலும் நில்லாது, இவர் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையும் பற்றி அரிக்கும். பின்னே கொடு நோய் வழி வழியே படர்ந்து கொடி கொடியாக வளரும்.
பெரு நோய்களால் பீடிக்கப்பட்டோர்க்குப் பிள்ளை பெறல் அரிது. பிறப்பினும், அது குருடாகவும் வேறு பல ஊறு உடையதாகவும் பிறக்கும். இக்கொடுமைக்குக் காரணனாயுள்ள ஒருவனையா ஒருத்தி மணப்பது?
நோய்த் தன்மையை அளந்தறியும் அற்றல் பெண்மகள் பெற்றிருத்தல் வேண்டும். நோயால் பீடிக்கப்பட்டதும், கழுவாய் தேடுஞ் சிலர், கொள்ளையினின்றும் பிழைப்பதுண்டு. அவரையும் மருத்துவரைக் கொண்டு சோதித்து உண்மை தெளிவது பெண்ணினத்தார் பெருங்கடன். யாண்டாயினும் நோயின் வெம்மையும் பூச்சும் புழுவும் மறைந்து ஓஒளித்திருக்கும். பெண்சேர்க்கை நேர்ந்ததும் மீண்டும் நோய் வெளிப்படும். அதலால், எக்காரணம் பற்றியும் நோயாளியைப் பெண்மணி மணஞ் செய்யாதொழிவது நலன். எத்துணைக் கள்ளர் நல்லுடையால் புண்ணை மூடிப் புகைப்படம் எடுத்தனுப்பிப் பெண்ணுலகை ஏமாற்றுகின்றனர்! புகைப்படக் காட்சியாலும் பெண்மகள் மோசம் போதலாகாது.
குடி முதலியன
பெண்மணி குடியரை மணஞ் செய்தலுந் தவறு. குடியால் தொடக்கத்தில் நரப்புக் கிளர்ச்சி உண்டாகும். அதனால் அவர் பெண் விளையாட்டில் மூழ்குவர். நாளடைவில் அவர்தம் நரப்புக்கட்டுக் குலையும். அதனால் அவர் திடீரென அகாலத்தில் நபுஞ்சகராவர். புகையிலையை அமிதமாக மெல்லுவோர், காப்பி தேயிலை கொக்கோ முதலியவற்றை அமிதமாக அருந்து வோர் முதலியவர் நிலையும் இவ்வண்ணமே முடியும்.
தீநோய் - குடி - முதலியவற்றால் விளையுங் கேடுகள் உயிர்களை வழி வழி அடர்ந்து தொடரும் என்று ஆராய்ச்சியாளர் கண்ட உண்மைமீது பெண்மகள் கருத்திருத்திக் கடனாற்றுவது அறிவுடைமை.
திருமணத்துக்கு விலக்காகும் மற்றவர்
காமுகன், பக்கத்தாரை ஐயுறுவோன், முன்னரே ஒருத்தியை மணந்தவன், சோம்பேறி, முதல் வைத்துத் தின்பவன், இன்னவரன்ன பிறரும் திருமணத்துக்கு விலக்கானவரசே. பெண்மையை விரும்பாது பொருட் காதல் மட்டுங் கொண்டு, ’இவ்வளவு ஆயிரம் கொடுத்தால் பெண்ணைக்கொள்வேன்' என்று சொல்வோனும் விலக்கானவனே. என்னை? அவனது காதல் பொருளைப் பற்றிக் கிடக்குமே யன்றிப் பெண்ணைப் பற்றிக் கிடப்பதில்லை. மேலும் அன்னான் பொருளின் பொருட்டு மற்றொரு பெண்ணை நாடினும் நாடுவன். இந் நாளில் பொருள் மணங்கள் பல நடை பெறுகின்றன. இம் மணங்கள் அன்பற்றனவாம். பெண் வாழ்விற்கெனப் பெற்றோர் அன்பால் பொருள் கொடுக்கலாம். அது வேறு. பொருட்கு முதன்மை அளித்து, ’இவ்வளவு வேண்டும்' என்று வலியுறுத்துவது பெண்ணின் நுண்மை யுணர்ந்து மணஞ் செய்வதாகாது. ஆகவே, அத்தகைய ஒருவனும் விலக்கிற்கு உரியவனே.
புறங்கொண்டு அளந்தறிதல்
கூர்த்த மதியுடைய பெண்மணி, ஒருவனது புறத்தோற்றங் கண்டு, அவனது நிலையை அளந்து உணரலாம். கண், நா, விரல் முதலியன ஒருவனது உடல் நிலையைச் செவ்வனே அறிவிக்கும். குடியருக்குக் கண் சிவந்திருக்கும். நோயாளர்க்கு அது மஞ்சளாயிருக்கும். நாவிலும் விரலிலும் மஞ்சள் படர்ந்திருத்தல் நோய்க்கு அறிகுறி. உடல்நலனுடைய சிலர், நோய்வாய்ப்படும் வேளையில் இத்தோற்றம் பெறுதலுண்டு. இவரை மேற் போந்தவர் கூட்டத்தில் சேர்த்தல் கூடாது. என்றும் நோயுடை யாரிடத்துப் பெண்மகள் மிக எச்சரிக்கையாயிருத்தல் தற்காப்பாம்.
சிற்ப நூல்
நமது நாட்டுச் சிற்ப நூல்களில் இரண்டொன்றை ஒருவர் வீட்டில் இளமையில் அடியேன் ஒருபோது பார்த்தல் நேர்ந்தது. அந்நூல்களில் பாவைகள் செதுக்கற்குரிய இயல்கள் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் பெண் ஆண் உடற் பொருத்தம் பேசி யிருத்தல் கண்டேன். இப்பொழுது அஃது ஈண்டு நினைவிற்கு வருகிறது. அதுபற்றி இங்கு இரண்டோர் உரை பகர்கிறேன்.
பெண்ணின் கை கால் விரல்களின் அளவு, ஆணின் கை கால் விரல்களுடன் ஓத்திருந்தால் உடற் பொருத்தம் இருக்கும். சிறிது ஆண்மகனுக்கு நீண்டும் இருக்கலாம்,; அதிகம் நீண்டிருத்தல் கூடாது. பெண் விரல்களைவிட ஆண் விரல்கள் அளவில் குறைந்திருக்குமேல் உடற்பொருத்தம் இருத்தல் அரிது. இவ்வாறு சிற்ப நூல்கள் கூறுகின்றன.
சாதி முதலிய கொடுமைக்கு அஞ்சுதலாகாது
நமது நாட்டில் சிலர் ஒருமை மனப்பட்டும், சாதி முதலிய கட்டுப்பாடுகளால் வெளிப்படையாக மணஞ் செய்ய மறுத்துக் காலங் கழிக்கின்றனர். இது பொருந்திய அன்புமணம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதனிடைக் கரவிருக்கிறது. கரவு கூடாது. உலகில் சட்டங்களும் விதிகளும் பல இருத்தல் இயல்பு. அவை கட்குத் தாய் தந்தையர் இணங்கி நடந்தாலன்றி அவர்க்குப் பிறக்கும் பிள்ளை நல்வாழ்வு பெறமாட்டாது. பிள்ளை நலன் கருதி, இருவரும் தமது மனமிசைந்த மணத்துக்குச் சட்டப்படி எச்சமூகம் இடந் தருகிறதோ, அச்சமூகத்தில் சேர்ந்து மணவினை முடிப்பது நலம். இங்ஙனம் அவர் செய்யாது, சாதிக் கட்டுக்களுக்கு அடங்கி ஒதுங்கி வாழ்ந்து, பிள்ளைக்குக் “கூத்திப் பிள்ளை”: என்னும் பழியை ஏன் சுமத்தல் வேண்டும்? பிள்ளைக் கூப் பழியுண்டாகா முறையில் தாயும் தந்தையும் நடப்பது அறம்.
ஹிந்து மதக் கட்டுகள்
ஹிந்து மதத்தில் சாதிச் சமூகக் கட்டுப்பாடுகள் பலபடக் கிடக்கின்றன. கட்டுப்பாடுகள் பல நன்மணங்களைக் கெடுக்கின்றன. மனம் ஒன்றப்பெறும் ஒருத்தியும் ஒருவனும் விருப்பவழி மண முடித்தலைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் இயற்கைச் செந்நெறிக்கு அரண் செய்வன ஆகா. அவைகளை உடைத் தெறிய வேண்டுவது அறிஞர் கடமை. இக்கால ஹிந்து மதத்தி லுள்ள சில மூடச் கட்டுப்பாடுகளைத் தொலைக்கவே அறிஞர் சிலர் ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலியவற்றைக் கண்டனர். இது நிற்க.
ஆண் மக்களிடம் எச்சரிக்கை
பெண்மக்கட்கு ஓர் எச்சரிக்கை பகர்ந்து இப்பகுதியை இவ்வளவில் முடிக்கிறேன். அஃது, எல்லா வழியிலும் ஓத்த ஒருவனாயினும் திருமணத்துக்கு முன்னர் அவனுடன் ஒருத்தி கூடுதலாகாதென்பது. அன்புப் பெருக்கால் கூடுதல் நிகழ்த்த வல்ல குறிகள் தோன்றினும் பெண்மகள் அவைகளை அறிவால் அடக்க முயலல்வேண்டும். அடக்கல் அரிதாயிருக்கலாம். அரிதாயினும் சோதனைக்கு இடந்தரலாகாது. பண்டை நாளில்- களவுமணக் காலத்தில்- வாய்மை, கடவுளாகப் போற்றப் பட்டது. பின்னைப் பொய்யும் வழுவும் புகலாயின. ஆதலால், காலநிலை யன்னி நடக்குமாறு பெண்மணிகளைக் கேட்டுக் கொள்கிறேன். கூடிக் கலவி நிகழ்த்திய பின்னைத் திருமணங் கூடாதொழியு மேல் என் செய்வது? ஆண்மகன் மணம் நிகழ்த்துவான் என்பதற்கு என்ன உறுதி? இதுகுறித்து இக்காலப் பெண்ணுலகுக்கு விரிவுரை கூறவேண்டுவதில்லை.
உலகம் ஒருகுலம்
திருமண நுட்பங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று உலகம் ஒருகுலமாதற்குக் கால்கொள்வது. மக்கள் இயல்பு சேர்ந்து வாழ்வதென்பது உயிர் நூலார் கண்ட உண்மை. இச் சேர்க்கைக் கென்றே புனிதக் காதல் இயற்கையில் அமைந்துள்ளது. காதல் சேர்க்கை குடும்பமாகிறது. சேர்க்கைக் குடும்பத்தின் குறிக்கோள் ஊளராய், கோட்டமாய், வட்டமாய், நாடாய், உலகாய் விரிந்து பொலிதல் வேண்டுமென்பது. காதல் சேர்க்கை என்னுந் திருமணம், உலகம் ஒருகுடும்பமாக அதாவது ஒரு குலமாக வித்திடுவதென்பது உணரத்தக்கது. இதுபற்றிய விளக்கம் ஈண்டைக்குத் தேவையில்லை.
மற்றொரு பாதி
ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலாவது, தனக்குரிய மற்றொரு பாதியைத் தன்னுடன் பொருத்துவதாகும். அவ்வொருபாதி எத்தகையதாயிருத்தல் வேண்டும். அது பொருந்தியதாய் இருத்தல் வேண்டும். பொருந்திய பாதியைத் தேடிப் பிடித்தல் எளிதன்று. அரிதின் முயன்றேனும் பெண்மகள் தனக்குரிய ஒருவனைப் பெற முயல்வது அவளது கடமை. உடல் - மனம் - அறிவு என்னும் மூன்றானும் பொருத்தம் நல்கும் இருபாதி, அன்பால் பிணிக்கப்பட்டு, இருமைகெட ஒருமை இன்பங்கூட்டி வாழ்வதற்குக் கால்கொள்வது திருமணம். இத்திருமணம் ஓங்குக.
பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈாத்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார். - இராமாயணம்
-------
8. இன்ப வாழ்வு
(வீடு – ஒழுங்குபட்ட இல்லறம் வீடு – சிற்றின்பம் பேரின்பம் – காதல் காமம் – இரண்டுக்கு முள்ள வேற்றுமை – காதல் வாழ்வு – காமக் கூட்டம் – உண்மைக் காதல் – கலவி – காமச் சூடும் ஆண் மக்களும் – சுக்கிலத்தின் அருமை – காமத்தால் விளையும் கேடுகள் – சேர்க்கைக் காலவரை –மன அடக்கம் – ஒருதலை வேட்கை – வலிந்து கூடல் – அன்புக் கூடல் – படுக்கை அறை – வாழ்வும் கலவியும் – மனைவி, தாய், உடன்பிறந்தவள், மகள் –உலகியலும் கடவுள் நிலையும் – கல்வி நீக்கும் வயது – பெண்ணின் தெய்வக் காட்சி – இயற்கை வழி இறைவனைக் காண்டல் – ஆண் பெண்ணாதல் – கலவி எச்சரிக்கை – பொருந்தா நாயகன் – கணவன் அலியாயின் – நோயாளினாயின் – வருவாய்க்கேற்ற செலவு – அருள்வளர்க்க அறஞ் செய்தல் – ஐயுறல் கெடுவது காட்டுங்குறி)
இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு - வன்றொண்டர்
அந்தண நிலை
திருமணத்தின் பின்னர் இருவர் கூட்டுறவால், வாழ்வு அரும்புகிறது. இளமையில் இருவரும் “வாழ்வு வாழ்வு” என்று கற்றும் கேட்டும் வந்ததை இப்பொழுது அவர் நிகழ்ச்சியில் காண்கின்றனர் . இல்வாழ்வை இருவரும் ஒழுங்குபட நடாத்திவரின், அன்னார் தம்பாலுள்ள பொறாமை அவா வெகுளி தன்னலம் முதலிய குற்றங்கள் படிப்படியே நீங்கப்பெற்று, அவ்விடத்தில் பொறுமை அடக்கம் அன்பு அருள் தியாகம் முதலிய குணங்களுற்று, அந்தண நிலை எய்துவர். ஆகவே, திருமணங்கூட்டும் வாழ்வை நல்வழியில் நடாத்திப் பேறு பெற வேண்டுவது தலைவி - தலைவா் கடமை.
தலைவியும் தலைவனும் வாழ்வை நெறியல்லா நெறியில் நடாத்தினால் திருமண வாழ்வால் விளையத்தக்க பயன் விளையாது. அன்னார் தீநெறியில் வாழ்வு நடாத்தி, இல்லறத்தைப் பழித்துப் பேசி, அங்கும் இங்கும் அலைவது அறியாமை. ஒழுங்கு பட்ட இல்லறம்,வீடுபேற்றை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வீடு
’வீடு’, ’வீடு’ என்பது தனித்து ஓர் எல்லைக்குள் கட்டுப் பட்டுக் கிடக்கும் ஒரிடமன்று. அதைப்பற்றிய பேச்சே வேண்டுவதில்லை. திருவள்ளுவனார் முப்பால் கூறினாரேயன்றி நாற்பால் கூறினாரில்லை. ’வீடு ' இன்பத்திலும் அறத்திலும் நிலவுவது. வீட்டைத் தனியே பிரித்து இடர்ப்படுவோர் படுக.
வீடு என்னுந் தமிழ்ச்சொல் விடு என்னும் வினையினடியாகப் பிறந்த தொழிற்பெயர். கட்டு (பந்தம்) விட்ட இடம் வீடு; அதாவது கட்டினின்றும் விடுதலை அடைவது வீடாகும்.
ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் இடம் வீடு என்று உலக வழக்கில் சொல்லப்படுகிறது. இங்கு வீடு என்றால் என்னை? அதன் நுட்பத்தை ஓர்தல் வேண்டும். வீடு என்பது ஓர் எல்லையன்று; கட்டடமன்று; கூரையன்று; அஃதொரு பருப் பொருளன்று . பின்னை என்னை? கட்டு நீங்கி இன்பம் நிகழும் இடம் வீடாகும். ஒருத்தியும் ஒருவனும் அன்பால் விழுங்கப் பெற்று நுகரும் இன்பத்தில் கட்டேது? கட்டுள்ள இடத்தில் துன்பமன்றோ விளையும்? கட்டில்லா இடத்திலேயே இன்பம் விளையும். கட்டினின்றும் விடுதலை அடையும்போது விளைவது இன்பம். இவ்வின்பமே வீடுபேறாகும்.
துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் உற்ற இடமெல்லாம் வீடேயாகும். இவ்வுலகில் துன்பமின்றி இன்பம் நிலவும் இடம் பெற்ற ’வீடு' என்னும் வழக்கு, முழுத்துன்ப நீக்கமும் முழு இன்ப ஆக்கமும் உற்ற நிலையாகிய வீடு என்னும் முதன்மையினின்றும் பரிறந்த தென்க.
பெண்ணின்பத்தை ’இன்பம்' என்று கூறுவது முழு உலகாயதக் கொள்கை என்று சிலர் கருதல் கூடும். ஈண்டு “இன்பம்” என்றது வெறுங் கலவியை மட்டுங் குறிப்பதன்று. அது கலவியுடன் பிறவும் சேர்ந்த ஒன்று. தோன்றி மறையும் இன்பம் பெரிதுங் கலவியால் விளைவதாகும். அழியா இன்பம் பெண் ஆண் மெய்யுறு புணர்ச்சியால் மட்டும் விளைவதன்று. இப்புணர்ச்சி கடந்த ஒரு நிலையில் கூடுவது அவ்வின்பம். அழியா இன்ப ஊற்றைத் திறக்குங் கருவி, ஒருத்தி என்பது பெரிதும் உன்னத்தக்கது. இக் கருத்துப்பற்றியே உய்யவந்ததேவ நாயனார் என்னும் தவஞானச் செல்வரும்,
பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற;
முளையாது மாயையென் றுந்தீபுற
என்று அருளிப் போந்தார்.
அழியா இன்பப் பேற்றை அடையவே ஒருத்தி ஒருவனுடன் கூடி. வாழ்கிறாள். அவள் வாழுமிடமும் ’வீடு’, ’வீடு' என்று வழங்கப்படுகிறது. பெண் தெய்வம் உறையும் இடம் வீடல்லாது பின்னை என்னாகும்? பெண்ணில்லா வீடு வீடா? அது காடு; சுடுகாடு; நரகம். வீட்டை இன்ப ஒளி வீசுமாறு செய்யும் தெய்வ மணிவிளக் கல்லளோ பெண்? அவ் விளக்கில்லா இடத்தில் துன்ப இருளன்றோ சூழ்ந்து கிடக்கும்? அத்தகைய பெண்ணின் பெருமையை என்னென்று பேசுவது?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாக்கை
பண்பும் பயனும் அது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். - திருவள்ளுவனார்.
மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளைக்கு நின்றிமைப்பின் என்னாம் - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோரர் காடு. - நாலடியார்
…. பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை - நான்மணிக்கடிகை.
இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை.
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். - ஒளவையார்
என வரூஉம் ஆன்றோர் மொழிகளை நோக்குக.
ஒருத்தியும் ஒருவனும் வாழும் இடம் வீடாக வேண்டுமேல், அவர் வாழ்வு இன்பமா-யிருத்தல் வேண்டும். இருவர் மாட்டும் பொய் பொறாமை முதலியன இருத்தலாகாது. இன்ப நுகர்ச்சியைத் தகைவன பொய் பொறாமை முதலியன. இவை யில்லாத உள்ளத்தில் இன்பம் ஊர்ந்துகொண்டேயிருக்கும். இவ்வின்பத்துடன் வாழ்வதே இறையுடன் இயைந்து வாழ்வதாகும். இன்பம் வேறன்று; இறை வேறன்று. இக்கருத்துப் பற்றியே, “இறைகளோ டிசைந்த இன்பம்” என்றார் நம் வன்றொண்டப் பெருந்தகையார். இவ்வின்பத்தோ டியைந்த வாழ்வே மக்கட்குரிய வாழ்வாகலான், “இன்பத்தோ டிசைந்த வாழ்வு” என்று அவர் பின்னும் கூறலானார். இத்தகைய வாழ்வினர்க்குத் துன்பம் உண்டுகொல்! அவர்க்குத் துன்பம் இல்லை. ’இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்றார் அப்பர் சுவாமிகளும்.
இறைவன் நிறைவையும் - அவனோ டியைந்துள்ள இன்பத்தையும் - உணர ஒண்ணாதவாறு தகைந்து நிற்பன பொறாமை முதலிய தடைகள் என்று அடிக்கடி இந்நூற்கண் நுவன்று வருகிறேன். அவற்றைப் போக்கி இறையுடன் இயைந்த நிலை கூட்டுவது இல்வாழ்க்கை என்று இந்நூலில் “இறைவழியிலும், “இயற்கையற”த்திலும் விரித்துக் கூறியுள்ளேன்.
காதல்
திருமணத்தில் பெறும் வாழ்க்கையை இறையுடன் இயைந்த இன்ப வாழ்வாக்குதல் எங்ஙனம்? அதற்குரிய முறைகள் என்னென்ன? விரிவஞ்சி மிகச் சுருக்கமாகச் சில பகர்ந்து மேலே செல்கிறேன்.
முதலாவது இருவர்பாலும் காதல் நிலவுதல் வேண்டும். காதல் பெருநிலை கூட்டும். காதலாவது தலைவி தலைவர்க்குள் நிகமும் கடவுள் அன்பு. தலைவி, தலைவனைக் கடவுளாக் கோடலும், தலைவன், தலைவியைக் கடவுளாகக் கோடலும் காதலாகும். கடவுளாவது எல்லாவற்றையும் கடந்து நிற்பது. தலைவியும் தலைவனும் தாம் விரும்பும் பொருள்களுள் தம் மோடு ஓப்பாகவாதல் உயர்வாகவாதல் தாமன்றிப் பிறி தொன்றைக் காணாத ஒரு பெரும் நிலை காதல். இக்காதலால் விழுங்கப் பெற்ற தலைவிக்குத் தலைவனிலும் கடந்த பொருள் ஒன்று தோன்றாது. அவ்வாறே தலைவனுக்கும் தலைவியினும் கடந்த பொருள் ஒன்று புலனாகாது. இந்நிலை பெறுவோர்க்குக் கூடா ஒழுக்கம் இயல்பில் நிகழாது. இக் காதல் நிலை எய்தாதார் காம வாய்ப்பட்டு வாழ்வைக் குலைத்துக் கொள்வர். ஆகவே, தலைவி தலைவர் வாழ்வு, காதல் வழி இயங்குவதா-யிருத்தல் வேண்டும். காமத்தின் வழி அவ்வாழ்வு இயங்குதலாகாது.
காதல்; காமம்
காதல் என்னை? காமம் என்னை? இரண்டுக்கும் வேற்றுமை உண்டோ? உண்டு. காதல் ஓரிடத்தில் படிந்த வேட்கை. அத் தகைய வேட்கை பிறிதொன்றில் நிகழாது. காமம் பல இடங்களில் தோன்றும் விருப்பம்.
காதல் மாறாதது; காமம் மாறுவது. காதல் கடவுள்; காமம் பேய். காதல் இன்பம்; காமம் துன்பம். காதல் அன்பென்னுந் தண்மையினின்றும் பிறப்பது; காமம் அவாவென்னும் வெம்மை யினின்றும் பிறப்பது. காதல், உடலை வளர்க்கும்; காமம், உடலை எரிக்கும். காதல், உடல் - மனம் - அறிவு - என்னும் மூன்றினும் ஊடுருவிப் பாய்ந்து நிலைத்து நிற்கும்; காமம், உடலளவில் எழுந்து வீழ்ந்துபடும். காதல், நாளுக்குநாள் பெருகுந் தன்மையது; காமம், நாளுக்கு நாள் அருகுந்தன்மையது.
காதல் தொல்காப்பியனார், திருவள்ளுவனார், இறையனார், நம்மாழ்வார், மாணிக்கவாசகனார், அண்டாள் முதலிய அறிஞரால் போற்றப்படுவது, விரிவு அவர் அருளிய நூல்களிற் காண்க.
காதலைப் போற்று மொழிகளுள் சில வருமாறு:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியம் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள: - திருக்குறள்
குருநாண் மலா்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
வருநா ணழிய அழல்சோர்
மெமுகொத் துழிகின்றதே. - திருக்கோவையார்
ஆயுந் தொறுந்தொறும் இன்பந்
தருங்கல்வி யாங்கறிவு
மாயுந் தொறுந்தொறும் இன்பந்
தரும்வள்ளல் வார்கழல்கள்
தேயுந் தொறுற்தொறும் இன்பந்
தருஞ்சந்து தேங்குழனில்
தோயிந் தொறுற்தொறும் நேராத
இன்பஞ் சுரந்திடுமே. - திருத்தணிகைப் புராணம்
பெண்ண லத்தினைப் பெறாதவர் மகவினைப் பெறாதவர்
பெண்ண லத்தினைப் பெற்றவரே மகப் பெற்றார்
பெண்ண லத்தினான் மகவுபெற் றிருமையும் பெறுவார்
பெண்ண லத்தினா லன்றியயோர் பெறும்பொரு ளுண்டோ. - பிரமோத்தர காண்டம்
காமம் அறிஞரால் தூற்றப்படுவது. அத்தூற்றல்களுள் சில வருமாறு:-
மனைபகு வார்கண் மனைவியை நாடிற்
சுனைபுகு நீர்போற் சுழித்துடல் வாங்கும்
கனவது போலக் கசிர்தெழு மன்பை
நனவது போலவு நாடவொண் ணாதே. - திருமந்திரம்
பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். - திருக்குறள்
ஊரு ளெழுந்த வருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகு - நீருட்
குளிப்பினுங் காமஞ் சுடுமே குன்றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும். - நாலடியார்
சிறைய முண்டோ செழிப்புனன் மிக்குழீஇ
நிறைய முண்டோ காமங் காழ்கொளின். – மணிமேகலை
கொலையஞ்சார் பொய்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பறியொடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமஞ் கதுவப்பட் டார். - நீதிநெறி விளக்கம்.
உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற்
கொள்ளினுஞ் சட்டிடுங் குறுகி மற்றதைத்
தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற்
கள்ளினுங் கொடியது காமத் தீயதே. - கந்தபுராணம்
காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத
காமமே களவுக் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சும்
காமமே கள்ளுண் டற்குங் காரண மாத லாலே.
காமமே நரக பூமி காணியாக் கொடுப்ப தென்றான்.
-- திருவிளையாடற் புராணம்
சில இடங்களில் காமம் என்னுஞ் சொல் காதல் பொருள் பட அன்றோரால் அளப்பட்டிருக்கிறது. சொல்லைக் கண்டு எவரும் ஏமாறுதல் கூடாது; பொருளையே நோக்கல் வேண்டும். காமம், இன்பம் என்னும் பொருள்பற்றி வரும்போது, அதைக் காதற்கும் ஆளுதல் உண்டு. திருவள்ளுவனார் காமக்கேட்டைப் “பெண்வழிச் சேற்லிலும் காதற்றிறத்தைக் “காமத்துப்பா'லிலும் ஓதியிருத்தல் காண்க.
காதல் வாழ்வு
’காதலென்ன காமமென்ன எல்லாங் கலவிதானே’ என்று சொல்வோருமூளர். அன்னார் காதற்றன்மை யுணராதாரென்க. திருமணம், வெறும் பெண், ஆண் சேர்க்கையை மட்டும் குறிக்கொண்டு நிற்பதன்று. அதனுடன் வேறு பல வாழ்வுத் துறை களையும் அது குறிக்கொண்டு நிற்கிறது. அவையெல்லாம் சேர்ந்த ஒன்று காதல் வாழ்வு.
காமக் கூட்டம்
“கலவிக்கென்றே பெண் படைக்கப்பட்டாள்” என்று கருதுவது மடமை. தாய்மை என்னும் பெருவாழ்வு பெற்று, எல்லா உயிர்களிடத்தும் அத்தாயன்பு செலுத்திக் கடவுள் நிலை பெறுதற்குப் பெண் பிறந்தாள். உயிர்நிலை முதலிய மெல்லு அப்புக்கள் பிள்ளைப் பேற்றிற்கென அமைக்கப்பட்டன என்று கோடல் வேண்டுமேயன்றி அவற்றை வெறுங் கலவிக் கெனக் கோடல் படைப்பு நோக்கை உணர்வதாகாது. பிள்ளைப் பேற்றிற்குக் கலவி ஒரு துணைக்கருவி போன்றது. கலவியிலேயே பெண் வாழ்வு அடங்குகிறது என்று, அக்குறியுடன் ஆண் பெண்ணை நோச்குவதும், அவளொடு வாழ்வதும் நரகக் குழியில் வீழ்வதாகும். அங்ஙனம் தன்னை நினைந்து கலவியிலேயே காலங்கழிக்கும் பெண்ணும் தனது பிறவிப்பேற்றை இழந்து துன்புறுவாள். இவ்வாண் பெண் ஈட்டமே காமக்கூட்ட மென்க. பெண்பிறவி ஒரு பெரும் விழுமிய நோக்குடையது. அந்நோக்கு, காதல் வாழ்வால் நிறைவேறும்.
காதலில் கலவி இல்லையோ எனில், உண்டு என்று சொல்ல வேண்டுவதில்லை. காதல் வாழ்வில் கலவி ஒரு சிறு கூறு. காம வாழ்விலோ கலவியே யெல்லாம். அதற்குமேல் அது செல்வதில்லை. காதலிலோ, கலவி - பிள்ளைப் பேறு - கொலை களவுகள் காமம் பொய் முதலிய இழிவுகளினின்றும் விடுதலை யடைதல் - யான் எனது என்னுஞ் செருக்கறல் - தியாகம் - அன்புடைமை - விருந்தோம்பல் - எவ்வுயிரையும் தன்னைப் போல் பார்த்தல் - பயன்கருதாத் தொண்டு முதலிய அறத்துறைகள் பல அடங்கி இருக்கின்றன.
காதற் றலைவன், தலைவி நலன்நாடி வாழ்வன். அங்ஙனே காதற் றலைவியும், தலைவன் நலன்நாடி வாழ்வள். ஒருவர் நோயுறின் மற்றவரும் நோயுற்றாற் போல வருந்துவர். இருவரும் ஒருயிர் ஈருடலென வாழ்வர். அவரது அன்பு, வாழ்வுடன் கலந்து நீண்டு வளர்ந்தே போகும். காமத்தலைவனோ தன்னலனே நாடுவன். காமத்தலைவியும் தன்னலனே நாடி நிற்பள். உடல் நலனோ பொருள் வளனோ சுருங்கின் இவர்க்குள் பிரிவு நேரும். இத்தகைய அன்பில்லாக் காம வாழ்விலா மக்கள் வீழ்வது? சிறுமை! சிறுமை!
உண்மைக் காதல்
உண்மைச் காதலி, தன் காதலனுடைய உடல் நலனோ பிறவோ குன்றினும், அவள் அவனை விட்டுப் பிரியாது, ஓன்றிய அன்பால் தொண்டு செய்வாள். காதலன் உயிர்நீப்பினும் அவனைக் காதலி மறவாள். காதலி உள்ளத்துள்ளே காதலனை யன்றி வேறென்ன நிலவும்? உண்மைக் காதலன் இயல்பும் இத்தன்மையதே. காதல் என்பது வெறும் விளையாட்டன்று. காதல், தன்னலன் நாடாது பிறர்நலன் நாடி. உழைக்க எத்தகைய தியாகத்துக்கும் உட்படத் துணிவு ஊட்டும். உண்மைக் காதலுக்கு அறிகுறி இதுவே யாகும். இக் காதல்வழி வளரும் இல்வாழ்க்கை, பின்னை எந்நிலை கூட்டும் என்று இயம்பலும் வேண்டுமோ? ஆதலால், மக்கள் காதல் என்னும் தண்மைப் பொழிலிடை வாழ்வு நடாத்த முயலவேண்டுமா? அல்லது காமம் என்னும் எரிவாய் வெம்மையிடை வீழ முயல வேண்டுமா? என்பது உன்னற்பாற்று.
கலவி
காதல் வாழ்வு கூட்டும் தாய்மை முதலிய பேறுகட்குப் பிள்ளைப் பேறு அடிப்படை. பிள்ளைப் பேற்றிற்குக் கலவி தேவை. கலவியைப் பற்றிச் சில உரைபகர வேண்டுவதும் எனது கடன்.
உலகில் கல்வித்துறைகள் பல உண்டு. அவற்றுள் கலவித் துறையும் ஒன்று. இக் கல்வி இயற்கையில் உயிர்கள் மாட்டு, நிகழ்வது. அதற்கெனக் தனிக் கல்லூரித் தேர்வு முதலியன தேவையில்லை. அதலால், இதுகுறித்து விரித்துரைத்தல் அநாவசியம்.
கயமை நூல்கள்
பல துறைகட்கு நூல்கள் இருப்பது போலக் கலவித் துறைக்கும் நூல்கள் உண்டு. அவற்றுள் பல கயவரால் எழுதப்பட்டன. அவற்றைக் கையாலும் தொடுதல் கூடாது. நன் மக்களால் எழுதப் பெற்ற நூல்கள் வாழ்விற்குத் துணை செய்யும். இளமையில் நேரிய முறையில் வாழ்வைச் செலுத்தியவர்க்கு எந்நூலும் வேண்டுவதில்லை. அன்னாரை இயற்கைக் தெய்வம், வழியே நடாத்திச் செல்லும்.
காமச்சூடும் ஆண்மக்களும்
கலவி காமச்சூட்டால் நிகழலாகாது. காமச் சூட்டுக்கு எளியராகிக் கலவி புரியாப் பயிற்சி ஆண்மக்கட்குத் தேவை. காமச்சூட்டுக்கு ஆண்மக்கள் எளியராதல் போலப் பெண்மக்கள் எளிய ராவதில்லை. இத்தன்மை பெண்மக்களுக்கு இயல்பில் அமைந்திருக்கிறது. உலகில் நிறை என்பது பெரிதும் பெண் மக்கள் உறுதியில் நிலவுகிறது என்று சொல்வது மிகையாகாது. இப்பெட்புடைய மகள், நாயகனையும் காமத்துக்கு இரையாகாதவாறு காத்தல் சிறப்பு.
நாயகன் விரும்பும்போதெல்லாம் நாயகி இடந்தரலாகாது; இடந் தந்துவரின் ஆண்மகன், உடலுரங் குன்றி, அகாலத் தில் ஆண் தன்மை இழந்து, பலதிற நோய் வாய்ப்படுவன். இவ்வாறு ஒருவனைக் கெடுக்கவா ஒருத்தி அவனை மணஞ் செய்வது?
கணவன் மனைவியை அடிக்கடி கலவிக்கு அழைத்தல் பெருந்தவறு. இப்பயிற்சியால் ஆண்மகனே பெண் தெய்வத்தைப் பேயாக்குகின்றான். ஒருவரை ஓருவர் வலியுறுத்தல்வழி நிகழும் கலவி ஒருதலைக் காமத்தின் பாற்படும். அதனால் உடல் நலம் குன்றும்.
நாயகன் விரும்பும்போ தெல்லாம் நாயகி உடல் நலங் கருதி, மறுத்துக் கொண்டே இருத்தல் அறமாமோ எனில், அஃதும் அறமாகாது. இடையீடில்லா மறுப்பு வெறுப்பின்வழி நிகழ்வது. காதல் வாழ்வில் கட்டுப்பட்ட நாயகி, இடையீடின்றி மறுத்து வாராள். இருவரும் ஓரளவில் கலவியில் கருத்துச் செலுத்தல் நல்லது.
கல்வி அறிவு ஒழுக்கம், நல்லாரிணக்கம், கடவுளிடத்தன்பு, உயிர்களிடத்தன்பு, தன்னிடத்தன்பு, பொருந்திய உணவு, பொருந்திய உடை முதலியன காமஎரி எழாதவாறு மக்களைக் காத்துவரும். ’பிள்ளைப் பேற்றிற்குக் கலவி' என்னும் எண்ணம், இருவர் பாலும் பசுமரத்தாணிபோல் பதிந்து கிடப்பின், அவ்வெண்ணம் எல்லாவறிறையும் ஓழுங்குபடுத்தும்.
சுக்கிலம்
ஆண்மகனுக்கு உடற்கட்டு, நலன், வளன், உரன், அழகு முதலியவற்றை நல்குவது அவனது சுக்கிலம். அதை நினைந்த போதெல்லாம் அவன் போக்கிக் கொண்டிருந்தால், உடற்கட்டு முதலியன குலையும், பின்னை நரப்புத் தளர்ச்சி உண்டாகும். நரப்புத் தளர்ச்சி உற்றவனால் காம உணர்ச்சியைச் சிறிதும் அடக்கல் முடியாது. போதிய வலிமையின்மையால் அவ் வுணர்ச்சியை அவனால் மாற்றுதலும் முடியாது. பெண் நினைவுறினும், அவள் ஒலி பேச்சு முதலியவற்றைக் கேட்பினும் உடை முதலியற்றைக் காணினும், காமச்சுடர் தீயனை எரிக்கும். எரியால் தாக்குறும் அவனால் ஆர்ந்த கலவியும் புரிதல் இயலாது, இயலாமையால் மன எரிவும் அவனுக்குத் தணிவ தில்லை. இவ்வளவோடு சனி அத்தீயனை விடுமோ?
காமத்தால் விளையுங் கேடுகள்
சனி, மகனது மூளையைக் கலக்கி நினைவழிக்கும்; கண்ணொளியைப் போக்கும்; காதை அடைக்கும்; பொறி புலன்களை ஓடுக்கிப் பசியைக் குலைக்கும். இவற்றால் அவனுக்கு மலம் சிக்குறும்; மண்டை இடிக்கும்; இருமல் எழும்; பித்தேறும். அவன் கண்டதை உளறுவன். உலகம் அவனுக்கு வெறுப்பாகத் தோன்றும், அவனுக்கு அழகிடை அன்பு தோன்றாது; இசையில் இன்பந் தோன்றாது. அவன் நிலையை இன்னுமா வருணித்தல் வேண்டும்? அவன் வாழ்விழந்த பாவியாகிறான். இத்துணைக் கேட்டிற்குங் காரணம் என்னை? இளமையில் மைந்தன் தாதுவை அதிகம் செலவழித்ததே யாகும். காமச்சூட்டுக்கு இரையாகும் பெண்மகள் நிலையும் இவ்வாறே முடியும்.
தாதுவை வீணில் நினைந்தபோதெல்லாம் செலவழிப்பதால் விளையுந் தொல்லைகள் பலப்பல. எண்பது துளி இரத்தம் ஒரு துளி தாதுவாகிறது. இவ்வரிய தாதுவைச் சேமிக்கும் அளவினதாக உடல்வளன் அமையும். அடியோடு தாதுவைக் கட்டுதலும் கூடாது. (இதுபற்றி முன்னர்க் கூறியுள்ளேன்) அதனாலும் சில கேடுகள் விளையும், ஓரளவினதாக - அதுவும் பிள்ளைப்பேறு கருதி - அன்பிடை - தாதுவைச் செலவு செய்தல் அறிவுடைமை.
சேர்க்கைக் காலவரை
திங்களுக்கு இரண்டு முறை மனைவியோடு சேருமாறு நமது நாட்டு நூல்கள் கூறுகின்றன; அதாவது மாதப் பூப்புக்கு முன்னொரு நாளும், சூதகம் நின்ற பின்னொரு நாளும் என்று சிலர் கூறுப. மாதப் பூப்பில் சூதக வடிவு நான்கு ஐந்து நாளில் நிற்கும்; சிலருக்கு ஆறு ஏழு எட்டு நாட்களுமாகும், நல்லுடல் பெறாதார்க்கு இன்னுஞ் சின்னாள் நீடிக்கும். உடல் நிலைக்கு ஏற்றவண்ணம் சூதக ஒழுக்கு நிற்பது வழக்கம். அது நின்ற ஒரு வாரம்வரை கருத்தரிக்கும் நாட்களாகும். சில உடலுக்கு இன்னுஞ் சின்னாள் கூடுதலுமுண்டு. பொதுவாக ஒரு வாரம் குறிப்பிடலாம். அந்நாட்களில் இரண்டொரு நாள் கலவி புரிந்து, மற்ற நாட்களில் அதை விலக்கி வாழ்வது அறிவுடைமை. இவ் வழக்குப் பற்றியே, “மாதத்துக் கரண்டு முறை மங்கையரைப் புணர்தல் என்னும் அநுபவமொழி எழுந்தது போலும்!
திங்களுக்கு ஒருமுறை கூடல் சாலும் என்று பல அறிஞர் கூறியுள்ளனர். மூன்று திங்களுக்கு ஒருமுறை கூடல் மிகப் பொருத்தம் என்பது சில கூர்த்த மதியினர் கொள்கை. மூன்று மாத காலந்தாதுவைக் கட்டி, அன்பு வழியில் புரியுங் கலவியில் செம்மை இன்பம் நிகழும். அவ்வின்பம், கலவிக்குப் பின்னும் பன்னெடுநாள் மன அமிழ்தாய் நிலவும். பிள்ளை பிறப்பின் அது மிக அழகியதா யிருக்கும்.
வாரத்துக்கு இருமுறை மும்முறையும், (சூதகம் அடங்கிய நாள்தொட்டு மறுசூதகம் உறும் வரை) நாடோறும் மனைவியுடன் கலவி புரிவது அறியாமை. இக் கலவியில் இன்பம் இராது. ஆனால் பின்னைத் துன்பம் மிகும். கலவியில் அளவாயிருக்கப் பயிலும் பயிற்சி மிகச் சிறந்ததென்க.
காமங் காத்தல்
இடையிடையே காம எரி எழாதவாறு எங்ஙனங் காப்பது? மனைவி முகம் பாராமலிருப்பதா? என்று சிலர் கேட்கலாம். மனைவியுடன் வாழலாம்; ஆடலாம்; பாடலாம். ஆனால் சேர்க்கை கூடாது. அவ்வாறு மனத்தைப் பயிற்சி செய்தல் வேண்டும். எப்படி - அதிலும் வெம்மை நாட்டில் எப்படி - என்று சிலர் கருதலாம். இது குறித்து எவரும் மலைவறல் வேண்டுவதில்லை. மனப் பயிற்சி முறையில் மேல்நாட்டறிஞர் செவ்விதிற் பண்பட்டிருக்கின்றனர்.நம் நாட்டவரும் அப்பயிற்சியில் பண்படுவது நலம். அப்பயிற்சியில் நமது நாடு ஒரு போது தலைறந்து விளங்கியது.
மன அடக்கம்
நாயகன் நாயகியுடன் பலதிற அடல்கள் ஆடலாம்; கைகால் படவும் ஆடலாம்; உடலுறவும் விளையாடலாம்; எல்லாஞ் செய்யலாம். ஆனால் மனத்தில் மட்டும் காமக் கிளர்ச்சிக்கு எவரும் இடந்தரலாகாது. கிளர்ச்சி தோன்றினும் அதற்கு எளிமையாகாது, ஒருமுறை இருமுறை மன உறுதியால் அதை அடக்கி ஆள ஆள மனம் பண்படும். பின்னர், நாளடைவில் தீக்கிளர்ச்சி எவரையும் தன்வயப்படுத்த இயலாதொழியும்.
மனைவியைப் பாராமலும், தொடாமலும், பேசாமலும் அவளுடன் ஆடாமலும், பாடாமலும் இருப்பின், மனத்தில் காமக்கனல் மூண்டுகொண்டே யிருக்கும். அதலால், மனைவியுடன் ஆடியும் பாடியும் வரின், மனமயல் ஒழியும். மனஅடக்கப் பயிற்சியால், விரும்பும்போது கலவி புரியும் பயிற்சியும் கைகூடும். இப்பயிற்சியுடையாரே நல்வாழ்வு பெற்றவர்.
வலிந்து கூடல்
நாயகி விரும்பாத காலத்து நாயகன் வலிந்து கூடுவது கொடும்பாவம்; கொலைப் பாவம்; அஃது இன்பக் கூடலுமாகாது. அக்கூடலில் வலிந்து புகும் ஆடவனுக்குக் கேடு விளையும். அது முஷ்டிமைதுனத்தை ஓத்தது என்பது முன்னர்ச் சில இடங்களில் காட்டப் பட்டது. அஃறிணையுலகில் வலியுறுத்தல் கிடையாது. அவ்வுலகை தோக்கியேனும் உயர்திணை உலகம் நல்லறிவு பெறுவதாக.
பறவைகளிற் சில தமது சிறகை விரித்துக் காட்டுவதால், காதல் குறிப்பை உணர்த்தும். சில பூச்சிகள் கூத்தாட்டால் தங்கள் நிலையை உணர்த்தும். சில இனங்கள் சுழற்சியால் தங்கள் வேட்கையைப் புலப்படுத்தும். இவ்வழியில் இவைகள் தங்கள் பெண்ணினங்களை அன்பு வயப்படுத்துகின்றன. வலிந்து புணர் தலை அவ்வுயிர்-களிடத்தில் காண்டல் அரிது. வலிந்து கூடலும் இயற்கை நிகழ்ச்சியாகாது. வலிந்து கூடும் மனிதர் மாக்களினும் இஹழிந்தவராவர்.
அன்புக் கூடல்
நாயகன் தனது காதல் அன்பெழுச்சியை இனியமுறையால் புலப்படுத்தப் புலப்படுத்த, அதுகாணும் நாயகியும் அக்காதல் அன்பால் விழுங்கப்படுவாள். அவள், செயல் குன்றியிருப்பது போல் கிடப்பாள். அதனைக் கண்ணால் - உதட்டால் - பிற மெய்ப்பாட்டால் - நன்கு உணர்தல் கூடும். அந்நிலையில் கலவி புரிதல் அறம். அதுவே மனங்கலந்த கலவியாகும். நாயகியுள்ளத் தில் விருப்பமில்லா வேளையில் கூடுதற்கும், விருப்பமுள்ள வேளையில் கூடுதற்கும் உள்ள வேற்றுமை, காதல் நுட்பம் உணர்ந்த அறிஞர்க்குப் புலனாகும்.
தலைவி விரும்பா வேளையில் கூடும் தலைவனுக்குப் பலதிறக் கேடுகள் விளையும். இவனது சுக்கிலம் அவள்பால் செல்கிறது. அதற்கீடாக அவளிடமிருந்து இவன் என்ன பெறுகிறான்? ஒன்றுமில்லை. தலைவியும் விரும்பிய புணர்ச்சி யாயின், அவள் உள்ளத்தூறும் அன்பால் கருக்குழிக்கணுள்ள சினைகள் கிளர்ந்தெழும். அவ்வெழுச்சியினின்றும் ஒருவிதச் சத்துப் பிறக்கும். அது தலைவனுள் நுழையும். அதனால் தலைவன் உடல் நலன் கெடுவதில்லை. தலைவி விரும்பாத வேளையில் தலைவன் அவளை நண்ணுவது மரத்துடன் புணர்வதை ஓக்கும். அது முஷ்டிமைதுனத்தை ஒத்தது என்று அறிஞர் கருதுகின்றனர். இதுபற்றி முன்னுங் கூறினேன்; பின்னுங் கூறுவேன். அதலால், எக்காரணம் பற்றியும் பெண் விரும்பாத காலத்து, அண் வலிந்து கூடுவது மூர்க்கச் செயலாகும். அதனால் இன்ப வாழ்வு கூடவே கூட்டாது.
படுக்கை அறை
இருவர்க்கும் படுக்கை அறை வேறாக இருத்தல் வேண்டும். அறை வேறே இல்லாதொழியினும் படுக்கையாதல் வேறே தனித் தனியாக இருப்பது நலம். ஒரே படுக்கையில் இருவர் உறங்குவது வெறுக்கத்தக்கது. அதில் சுகாதாரக் குறைவு ஏற்படும்.
வாழ்வும் கலவியும்
வாழ்வில் கலவி ஒரு கூறாகலான், அதை வாணாள் முழுவதும் வைத்துக் கொள்ளுதல் தவறு. சில இடங்களில் மனைவியின் பூப்பு நிற்குமட்டும் கலவியை விடுக்கக் கணவனுக்கு மனம் எழுவதில்லை. சிலர் மனைவியின் பூப்பு நின்ற பின்னர் வேறு ஒருத்தியை நச்சுகின்றனர். மருந்து தின்றேனும் கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கூடலில் சிலர் மூழ்குகின்றனர். இவர் அறியாமை இருந்தவாறென்னே! என்னே! இவர் வாழ்வின் நோக்கம் உணராத கயமை விலங்கினத்தார் என்க.
மனைவி, தாய், உடன் பிறந்தவள், மகள்
மனைவியின் பூப்பு முற்றும் நிற்பதற்கு முன்னரே, அவளோடு மெய்யுறு புணர்ச்சியை நிறுத்தி, அவள் உள்ளத்தில் வீற்றிருக்கும் அன்புக் கடவுளைக் காணத் தலைவன் முயலல் வேண்டும். மனைவி வெறுங் கலவிக்கு மட்டும் உரிய ஒருத்தி யல்லள். அவள், தாயுமாவள். உடன் பிறந்தவளுமாவள்; மகளு மாவள், கடவுளுமாவள். எல்லாம் அவள். அவளிடத்தில் எல்லா இயல்புகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்த ஒருத்தியே மனையில் வாழத்தக்கவள்.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயம் மகளுநற் றாரமு மாமே.
தாரரு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாற்திசை பத்துல. யாமே. - திருமூலர்.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொறியார்
என்னுடை யாரமு தெங்களப்பன்
எம்பெரு மானிம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
தமயனெம் மையன் றாள்கள்பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே. - திருவாசகம்
அன்னை தயையும் அடியாள் பணியமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - துன்னுமெழில்
வேசி துயிலும் விறல்மந் திரிமதியம்
பேசில் இவையடையாள் பெண். - நீதி வெண்பா
தாயோ டறுசவையபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - தூயவுடன்
வந்தோன் மரிக்கில் வலிபோம் மனையெனிலோ
அந்தோ இவையெலாம் போம். - நீதிசாரம்
இவ்வான்றோர் மொழிகளின் உள்ளக்கிடக்கையை ஓர்க.
உலகியலும் கடவுள் நிலையும்
கடவுள் இயல் குறித்துச் சான்றோர் மொழிகளை உலகியலுக்கு எடுத்தாளல் பொருத்த மாகுமா? என்று சிலர் வினவுதல் கூடும். உலகியல் நன்கு நடைபெறவேண்டி அதற்கோர் இலக்கியமாகக் கடவுள்நிலை விளங்குகிறது. கடவுளியலை உலகியலினின்றும் பிரித்துப் பேசுதல் கூடாது. கடவுளின்றி உலகமில்லை; உலகமின்றிக் கடவுளில்லை. உலகியலுக்குக் கடவுள் நிலை ஒரு வழிகாட்டி போன்றது. இறைவனுக்கு இறைவி ஒருபோது தாயாகவும், ஒருபோது உடன் பிறந்தவளாகவும், ஒரு போது மனைவியாகவும், ஒருபோது மகளாகவும் இருக்கிறாள் என்பது எதைக்காட்டுகிறது? அஃது, உலகியலிலும் ஒரே பெண்மை ஒருபோது தாயாகவும், ஒருபோது உடன்பிறந்த வளாகவும், ஒருபோது மனைவியாகவும், ஒருபோது மகளாகவும் நின்று துணை செய்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. இல்வாழ்வு இறையியலை நன்கு விளக்குவதென்க. இது நிற்க.
கலவிநீக்கும் வயது
உலக வளர்ச்சி நாடிக் கடவுள் அணைவழி நின்று பிள்ளைப் பேற்றின் பொருட்டுச் சின்னாள் கலவியில் ஈடுபட்டுப் பின்னை அதை நிறுத்துவது வாழ்வின் நோக்கை நிறைவேற்றுவ தாகும், “முப்பதாம் ஆண்டளவில் மூன்று அற்று” என்றார் ஒளவையார். காலநிலை நோக்கி இப்பொழுது வயதை முப்பத்தைந்தாகப் பெருக்கிக் கொள்ளலாம். நமது நாட்டில் முப்பத்தைந்து வயதுக்குமேல் பெண்ணொடு கலத்தல் பொருந்தாத தாகும். குளிர்நாட்டில் வதிவோர் இன்னஞ் சில ஆண்டு கலவியில் போக்கலாம். நாட்டின் இயல்பிற்கேற்ப நமது நாட்டுப் பெண்மகளும் முப்பதுக்குள் கலவியினின்றும் விலக முயல்வது நல்லது. பூப்புள்ளபோதே அப்பயிற்சியில் தலைப்படல் வாழ்வை அறிவால் ஓழுங்குபடுத்துவதாகும். பூப்பு நிற்கும் வரை மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தல் உடலுக்கு நலன் தேடுவதாகாது.
இருபது வயதுமுதல் முப்பத்தைந்து வயதுவரை அதாவது பதினைந்தாண்டு மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தியது சாலாதா? அதற்குள் பிள்ளைப் பேறும் உண்டாகிறது. பிள்ளைப் பேற்றிற்குப் பின்னை, மேலும் மேலும் மெய்யுறு புணர்ச்சி எற்றுக்கு? பிள்ளைப் பேற்றின் பின்னை, நாயகன் தந்தையாகிறான்; நாயகி தாயாகிறாள். இப்பேற்றினின்றும் இறைமைப் பேறு பெற இருவரும் முயலல் அறம். இதுவே அந்தணநிலை என்பது. இவ்வுண்மையை,
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
எனவரூஉம் தொல்காப்பியச் சூத்திரத்தால் உணர்க.
“இது துறவொழுக்கம் கூறும் சூத்திரம்” என்று சிலர் நினைக்கலாம். தய குணங்களி-னின்றும் விடுதலை அடைவதே துறவொமுக்க மென்பதும், பெண்ணை வெறுத்தல் துறவொழுக்கம் அன்றென்பதும் இந்நூற்கண் பல இடங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் நாட்டைச் கெடுக்க நுழைந்த போலித் துறவறத்தை இச்சூத்திரம் அறிவுறுத்துகிற தில்லை. பிள்ளைப் பேற்றின் பின்னை, மெய்யுறுபுணர்ச்சி நீத்து, உள் நோக்கால் இறைமைநிலை உணர்ந்து, உயிர்களிடத்து அன்பு செலுத்தும் ஒருநிலை “சிறந்தது பயிற்றல்' என்பது.
மெய்யுறு புணர்ச்சி நீக்கிய பின்னை
இவ்வாறு மெய்யுறலை நீக்கும் நாயகன், நாயகியைத் தன்னுடன் பிறந்த ஒருத்தியாகவும் தாயாகவும், நாயகி நாயகனைக் தன்னுடன் பிறந்த ஒருவனாகவும் தந்தையாகவும் கொள்ளப் பயிலல் அறம். இருவரும் மெய்யுறு புணர்ச்சி நீத்த பின்னர் உடல்நிலை கடந்த உள்நிலையில் கருத்தைச் செலுத்தல் விழுப்பம். உடம்பினுள்ளே கோயில் கொண்டுள்ள அன்புக் கடவுளோடு உறவுகொள்ளப் பயிலல் மேன்மை. இப்பயிற்சிக்குக் கால்கொள்வதே இளமை மெய்யுறு புணர்ச்சியின் நோக்கமாகும்.
மெய்யுறு புணர்ச்சி ஒரு படி
மெய்யுறுபுணர்ச்சி, மெய்யிலுள்ள அன்புக்கடவுள் காட்சிக்கு ஒரு படி போன்றது. அப்படியும் பிள்ளைப் பேறெனும் உலக வளர்ச்சிக்குத் துணை நிற்பது. அந்தப் படியைக் கடந்தால் தெய்வக் காட்சி காணலாம். பெண்ணின் பெருமை விளங்கு மிடம் அங்கே அங்கே என்று இறுமாப்புடன் கூறுகிறேன். பொறாமை முதலிய பேய்கட்கு அங்கே இடமில்லை. அங்கே எல்லாம் அன்பு அன்பாகப் பொலியும். இளமை தொட்டு வாழ்வை அவ்வப்போதைக்குரிய நேரிய வழியில் நடாத்துவோர் இந்நிலை எய்துவர்.
பெண்ணில் தெய்வக்காட்சி
இந்நிலை எய்துவோர்க்குப் பெண்மக்கள் தெய்வங்களாகவே தோன்றுவார்கள். பெண்ணைக் தெய்வமாகக் காணும் ஒருவன் பிறவிக்கடல் கடந்தவனாவன். வாழ்வில் இத்துணை புரியப் போந்த பெண்ணின் பெருமையை என்னென்று சொல்வேன்? இக்கருத்துப் பற்றியே பெண் தெய்வத்தை ’வாழ்க்கைத் துணை' என்று நந் தமிழ்ப் பெரியார் கூறிப்போந்தார். உடல் வாழ்க்கைக்கும் உயிர் வாழ்க்கைக்கும் துணைபுரிவோள் பெண்தெய்வம் என்பது உன்னற்பாலது.
பெண்ணின்பாலுள்ள தெய்வ இன்பத்தை நுகர்ந்த பெரியோர் பலருளர். அவருள் தம்பிரான் தோழர் என்னும் நம்பியாரூரரை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கிறேன். அப்பெரியார் தமக்கும் தம் மனைவிமார்க்கும் ஏற்பட்ட பற்று, கடவுள்பற்று என்று அருள்கிறார்.
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
என்று வன்றொண்டர் ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க. இத்திருப்பாட்டை எத்துணைமுறை எடுத்துக் காட்டினும் என் மனம் சலிப்புறுவதில்லை. அதை நோக்க நோக்க - நினைக்க நினைக்க - என்னுள்ளம் இன்பக் கடலாடுகிறது. அன்பர்களே! அத்திருவாக்கில் படிந்து, அதன் பொருளாதற்குப் பயிலுங்கள்.
இயற்கைவழி இறைவனைக் காண்டல்; ஆண் பெண்ணாதல்
தெய்வம் கண்ணுக்குப் புலனாகாதது. அஃது இயற்கை வடி வாகிக் காட்சி அளிக்கிறது. இயற்கை வழியே இறைவனை உணரல் கூடும். பெண்ணோடு மெய்யுறல் நீத்து, உள்ளுறல் கொண்டு, இன்ப அன்பை நிகழ்ச்சியளவில் பருகி வரும்போது அன்பெனும் அண்டவன் வடிவாகிய இயற்கை நுட்பங்களெல்லாம் இனிது விளங்கும். பெண் ஓர் இயற்கை வனம்போலக் காணப்படுவள். நீலவானமும், வெண்திங்களும், மாங்குயிலும், நீலமஞ்ஞையும், அழகிய மலரும், விரைக் கொடியும், அருவி கொழிக்கும் மணிகளும், பிறவும் ஒருங்கு திரண்டு பெண் ணெனப் பொலிதல் காணலாம். இப்பொலிவுடைய இயற்கைப் பெண், அவளது உள்ளேயுள்ள இன்ப அன்புக் கடவுளின் பருமை யாவள். ஆகவே, பெண் இயற்கை வடிவான தெய்வமாகிறாள். இத்தெய்வத் தன்மையை ஆண்மகன் நினைந்து நினைந்து பெண்தன்மை பெறுவானாக. பெண்தன்மையாவது அருட்டன்மை; அதாவது எவவுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண நிலை. இது வாழ்வின் நோக்கம்.
இப்பெருநிலைக்கு அடிப்படையாயுள்ள கலவியில் ஓரளவாகச் கருத்திருத்தல் வேண்டுவது தலைவி தலைவர் கடன்.
கலவியில் எச்சரிக்கை
கலவியும் ஒருவிதக் கல்வி என்பது மேலே சொல்லப் பட்டது. அக்கலவியை வழிதுறையின்றிப் புரிவதாலும் உடலுக்குப் பல திறக்கேடுகள் விளைவதுண்டு. வலிய ஆண் மக்களிடம் மெலிய பெண்மக்கள் மிக எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். வழிதுறையில்லா விளையாட்டால் பெண்மக்களின் கருவுறுப்புக்களுக்கு ஊறு நிகழும்.
கால வேளை நாழி கருதாது கலவி புரிவதால், மலச்சிக்கல் முதலிய பிணிகள் தோன்றுவதுண்டு. உணவு கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் ஒருவரோடொருவர் கூடிக் களித்தலாகாது. அதனால் அஜீரணம் முதலிய நோய்கள் தோன்றும்; பின்னைப் பெருநோய்கள் உண்டாகும். புணர்ச்சிக் காலத்தில் வயிறு நிரம்ப ஜீரணமாகாத வெம்மை உணவு நின்றிருத்தலும் கூடாது. இன்னும் விரிக்கிற்பெருகும்.
பொருந்தா நாயகன்
தனக்கினிய கொழுநனைக் தெரிந்தெடுப்பதில் பெண்மகள் பெருங் கவலை செலுத்தல் வேண்டுமென்று “திருமணம்” என்னுந் தலைப்பின் கீழ் வலியுறுத்தியிருக்கிறேன். பெண் மகளின் கவலை ஈனத்தாலோ வேறு எக்காரணத்தாலோ பொருந்தா நாயகன் வாய்க்கப் பெறுவனேல் என் செய்வது? பெண்மகள் அவனுடன் வாழ்வதா அல்லது வாழாது அவனை விடுத்துப் பிரிவதா? பிரிதல் வேண்டுமென்று சொல்ல இந்தியாவில் பிறந்த எனக்கு நா எழவில்லை. எங்ஙனமாவது முயன்று ஆண்மகனது பொருந்தாத் தன்மையைப் போக்கவே பெண்மகள் முயல்வது சிறப்பு.
பெண்மை என்பது தாய்மை என்றும், தாய்மை என்பது தொண்டுக்குரியது என்றும் மேலே விளக்கப்பட்டன. தொண்டைப் பொருந்தா நாயகனை ஒழுங்குபடுத்துவதில் பெண்மகள் பயன்படுத்தலாமன்றோ? தொண்டில் விருப்புடைய பெண்ணிற்கு அஃதொரு வாய்ப்புமாகும்; தனக்கு வாய்த்த நாயகனைப் பண்படுத்தப் புகுந் தொண்டினும் வேறு தொண்டு பெண்ணிற்கு எற்றுக்கு? தொண்டுவழியில் வாழ்வு செலுத்தும் பெண்மணி வாழ்க. அவள்பால் கடவுள் அருள் என்றும் நிலவுக.
பொருந்தாத் தன்மை எத்தகையது என்று முதல் முதல் காணல் வேண்டும். அத்தன்மை பலதிறத்தது. ஈண்டு இரண்டெொன்றை எடுத்துக்கொள்வோம்.
கணவன் அலியாயின்?
கொண்ட கணவன் அலியாயிருந்தால் என்செய்வது? பிறப்பில் பேடனாக உள்ள ஒருவன், ஒருத்தியை மணஞ் செய்து கொள்ளான், ஒருவேளை அறியாது கொள்வனேல், மனைவி என்செய்தல் வேண்டும்? மனைவி உயரிய மனங்கொண்டு மெய்யுறு புணர்ச்சியைக் காய்ந்து கணவனுடன் வாழ்வது மேன்மை. அவள் வேறுவித ஆடல் பாடல், கல்வி ஆராய்ச்சி, கடவுள் வழிபாடு முதலியவற்றில் உட்கலந்து வாழ்வு நடாத்தி வரலாம். அப் பெண்மணி, பிள்ளைப்பேறு விரும்பினால், வேறு ஒருவனை மணஞ் செய்வது தவறாகாது.
நோயாளனாயின்?
நோயாளன் கணவனாக வாய்த்தால், மனைவி அவனது நோயைப் போக்கி, அவனுடன் கூடிவாழ உழைத்தல் ஓழுங்கு. நாயகன் கொடிய (பெண்) நோயோளனாயின், எக்காரணம் பற்றியும், அந்நோய் தீருமட்டும், அவனுடன் நாயகி சேர்தல் கூடாது. ஓராண்டோ ஈராண்டோ முயன்று, அவனது நோயைப் போக்கிய பின்னரே, அவள் அவனுடன் சேர்தல் விழுப்பம். தீரா நோயாயின் சேர்க்கையைத் தொலைத்துவிடுவது நல்லது. நோயாளியுடன் சேர்ந்து அவனது நோயை அருமைப் பெண் தன்னுடலில் இறக்கி வருந்துவதோடு, நோய்க் குழவிகளையும் குருட்டுக் குழவிகளையும் ஏன் உலகில் பெருக்கல் வேண்டும்? அப்பிள்ளைகளின்வழி நோயை ஏன் உலகில் வளர்த்தல் வேண்டும்? உயிர்களிடத்து இரக்கமுடைய பெண் ஒருபோதும் உலகிற்குக் கேடு நினைத்தலுங் கூடாது; செய்தலுங்கூடாது.
வேறு சில செயற்கை முறைகளால் சிறிது ஆண் தன்மை இழந்த கணவனாயின், மனைவி அவனுடன் கலத்தலை முற்றும் நிறுத்தி, எவ்வழியிலாவது முயன்று, அக்குறை போக்கத் தொண்டு செய்வாளாக. குறை நீங்கிய பின்னர் அவனுடன் அவள் கலந்து வாழ்வு நடாத்தலாம்.
இத்தகைய குறைகளின்றிக் குணத்திலோ செல்வத்திலோ கல்வியிலோ இவைபோன்ற பிறவற்றுிலோ குறைபாடுடைய ஒருவன் ஒருத்திக்கு நாயகனாகக் கிடைப்பனேல், அவனது அவ்வக் குறையைக் களையப் பல்லாற்றானும் முயல வேண்டுவது நாயகியின் கடமை. குறையடைய நாயகனை நிறையடையனாக்க நாயகி தொண்டு செய்வது சிறந்த கடவுள் தொண்டு செய்வ தாகும். பெண்ணுக்குரிய பொறுமை, அடக்கம், அன்பு முதலிய குணநலன்களெல்லாம் பயன்படத்தக்க இடம் இதுவே.
நாயகன் பால் எக்குறையிருப்பினும், நாயகி பிரிவு உளங் கொள்ளாது, அக்குறை போக்க மகிழ்வுடன் தொண்டின் வழி வாழ்வைக் கழிப்பது பிறவிப் பயனைப் பெறுவதாகும்.
பொருந்தா நாயகியைப் பெறும் நாயகனும், மேற்போந்த முறைப்படி, அவளை ஒழுங்குபடுத்திக் கூடி வாழவே முயல்வது நல்லது.
வேறு சில
ஒருத்தியும் ஒருவனும் கூடி. இல்லறம் நடாத்தும் வேளையில் கவனிக்கத்தக்க வாழ்வுத் துறைகள் பலவுள. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றைக் கூறுகிறேன்.
வருவாய்க் கேற்ற செலவு
செல்வநிலை கவனிக்கத் தக்கது. இல்வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாது வேண்டற்பாலது. பொருள் வருவாய்க் கேற்ற செலவு செய்யப்படின் வாழ்வில் இன்பத் தேன் பிலிற்றும்; வருவாய்க்குமேல் செலவு செய்யப்படின், வாழ்வைத் துன்பக் கைப்பு அரிக்கும். வருவாய்க்கேற்ற செலவு செய்யும் பொறுப்பு யாருடையது? அப்பொறுப்பு வீட்டுக்கரசியாய், வாழ்க்கைத் துணைநலனாய் வந்த பெண்ணினுடையது என்று சொல்லலும் வேண்டுமோ?
மனைத்தக்க மாண்புடைய னாகிக் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
என்றார் திருவள்ளுவனார்.
அருள் வளர்க்க அறஞ்செய்தல்
வாழ்விற்குத் தேவைன அளவு செலவு செய்வது அறிவுடைமை; அன்புடைமை. செல்வக் களியாட்டயர்தல் அல்லது வறுமைக் குழியில் வீழ்தல் இரண்டும் நல்வாழ்வாகா. இரண்டிற்கும் இடைப்பட்ட எளிய இயற்கைவாழ்வு சாலும். இது குறித்துப் ’பெண்ணின் வளர்ப்பி’லும் சொல்லியுள்ளேன். எளிய இயற்கை வாழ்விற்குச் செலவாகிப் பொருள் எஞ்சி நிற்குமேல், அதை ஏழைகள் - குருடர் - முடவர் - தீராப் பிணியாளர் - முதலியவர்க்குச் சோறு கூறை கல்வி முதலியன வழங்குவதில் செலவழித்தல் அறம். பொருள்வழி அருள்வளர்க்க முயல்வது அறிவுடைமை.
இல்வாழ்வின் நோக்கம் என்னை?
அன்பு அருள் ஒப்புரவு முதலியவற்றை ஓம்புதல்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்று திருவள்ளுவனார் இல்வாழ்வோர் தொண்டு குறித்தல் காண்க.
தம்முயிர் போலப் பிறவுயிரையுங் கருதற்குரிய செந்துறை களிலெல்லாம் இறங்கித் தொண்டாற்ற வேண்டுவது இல்லறத்தார் கடன். அக் கடனாற்ற வருவாய்க்குத் தக்க செலவு செய்யும் இயல்பு சிறப்பாக இல்லக் கிழத்தியர் மாட்டிருத்தல் விழுப்பம். அத்தகைய இல்லிலேயே இன்ப வாழ்விற்கு இடனுண்டாகும்.
மீச் செயல் கூடாது
நாயகிக்கும் நாயகனுக்கும் இடையீடின்றி நாளுக்கு நாள் அன்பு வளரும் வழியில் இருவரும் வாழ்வு செலுத்துவது நலம். அதற்கு வாழ்வில் எல்லாவற்றிலும் ஓரள விருத்தல் வேண்டும். எதிலும் வரம்பு மீறி மீச்செயல் நிகழ்த்தல் கூடாது. ஆடல் பாடல் கூட ஓரளவினவாக இருத்தல் சால்பு. தொடக்கத்தில் வரம்புமீறி அடிப்பாடிப் பின்னே விடுத்தால், அன்பிற்கு இடையூறு நிகழும். சில இடங்களில் நாயகிமார் “அன்பு அன்பு” என்று தத்தம் நாயகன்மார்க்கு எல்லாப் பணிகளுஞ் செய்து, அவரைச் சோம்பேறி-களாக்குகின்றனர்; சில இடங்களில் பிணங்களாக்குகின்றனர். இச் செயல்கள் நாளடைவில் இடர் விளைக்கும். பின்னை வெறுப்புளத்தோடு பணிகள் ஆற்றல் நேரும். ஆட்டில் அமைத்தல் போன்ற வினைகளை நாயகி ஆற்றலாம். நாயகனுடைய துணி தோய்த்தல், கால் கழுவல், அவனுக்குப் பொட்டிடல் போன்ற வினைகளை நாயகி ஆற்றுவது அநாவசியம்.
இருபாலாரும் வினையாற்றுவது நலன். ஒருவரோடொருவர் கலந்து பல வேலைகள் செய்யலாம். இளமையில் உடலுரம் உள்ளபோது, எல்லாப் பணிகளையும் நாயகி தானே செய்து நாயகனைப் பிணமாக்கினால், பின்னை வலி குன்றும் போது, அவன் எதிர்பார்க்கும் வேலைசெய்ய இயலாது, அவள் விழிப்பாளாயின், அவன் மனம் மாறுபடும். அதலால், நாயகன் மாரைச் சோம்பேறிகளாக்காத வாழ்வை நாயகிமார் நடாத்துவாராக.
இளமையில் நாயகி நாயகனுடன் அடிக்கடி. வீண்பேச்சு, வெற்றுரை, பயனில்சொல் முதலியன வழங்கல் ஆகாது. அவை தொடக்கத்தில் விருப்பூட்டுவது போலச் தோன்றும்; பின்னார் நாளடைவில் வெறுப்பூட்டும்.
ஐயுறல் கெடுவது காட்டுங்குறி
ஒருத்தியும் ஒருவனும் நடாத்தும் இல்வாழ்வு இன்ப வாழ்வாக வேண்டுமேல், இருவர் மாட்டும் நம்பிக்கையும் உண்மையும் இருத்தல் நல்லது. ஒருவரை ஒருவர் ஐயுறல் கூடவே கூடாது. ஐயத்தால் பீடிக்கப்படும் வாழ்வு இன்ப வாழ்வாதல் அரிது. அதை நரக வாழ்வு என்று கூறலாம். ஓன்றிய அன்புத் தெய்வம் நிலவத்தக்க இடத்தில், ஐயப்பேய் புகுந்தால், அது வாழ்வை அலைப்பது திண்ணம். ஐயத்தால், விளைந்த கேடுகள் பல); நிகழ்ந்த கொலைகள் பல. எக்காரணத்தாலோ ஐயந் தோன்றினால், உடனே கரவின்றி அதை வெளிப்படுத்தித் தெளிவு பெறல் சிறப்பு, ஐயத்தை உளங்கொண்டு, துப்பறிவார் போல் ஒருவரை ஒருவர் சோதிக்கப் புகுவது, நரகத்தை வலிந்து விலைக்கு வாங்குவதாகும். “மருண்டவன் கண்ணுக்கு இருண்டன வெல்லாம் பேயா’கத் தோன்றுதல் போல, ஒவ்வொருவர் செயலும் மருட்சியை வளர்த்து வளர்த்துப் பேரிடர் விளைக்கும். அதலால், நாயகியும் நாயகனும் தமதுள்ளத்தில் ஐயப்பேய் நுழையாதவாறு தம்மைக் காத்து வருவாராக,
நாயகி தன் வாழ்வு நாயகன் பொருட்டென்றும், நாயகன் தன் வாழ்வு நாயகி பொருட்டென்றும், தன்னலமில்லா வாழ்வு நடாத்திவரின், அவர் வாழும் இல்லம் இறையுறையும் வீடாகும்; வாழ்வும் இன்ப இறைவனோ டியைந்ததாகும்.
பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்றொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றமாநதிருந்தார் காதவினால்,
-- சேக்கிழார்
----------
9. பிள்ளைப்பேறு
(பெண்ணின் பெருமை பிள்ளைப் பேற்றில் – பிள்ளைப் பேற்றின் மாண்பு – குழந்தை இன்பம் – பிள்ளைப் பேற்றிலுள்ள நலன்கள் – நற்பிள்ளைப் பேற்றிற்க்குப் பொறுப்பாளர் – உடல் நலனும் ஒழுக்கமும் – கருவுற்ற காலத்தில் கொள்ளத்தக்க முறைகள் – பிள்ளைப் பேற்றில் அச்சம் – இக்கால நாகரிகம் – கருத்தடை – கருச்சிதைவு – தாய் தந்தையர் அன்பே குழந்தை – சோமாஸ்கந்த மூர்த்தம்)
கல்லா மழலைக் களியறல் கலந்து கொஞ்சும்
சொல்லா லுருக்கி அழுதோடித் தொடாந்து பற்றி
மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர்
இல்லா தவர்க்கு மனைவாழ்வின் இனிமை என்னாம்.
- வில்லிபுத்தூரார்.
பெண்ணின் பெருமை, மணத்துடன் நிற்கவில்லை; இன்ப வாழ்வுடன் முடியவில்லை. மற்றுமொன்றில் அவள் பெருமை பிறங்குகிறது. அஃது எது? அது பிள்ளைப்பேறு. பிள்ளைப் பேறில்லையேல் தாய்மை ஏது? பெண் பிறவியின் நோக்கம் தாய்மைப்பேறு பெறுவதன்றோ? வாழ்விற்குரிய தொண்டு தியாகம் அன்பு முதலியன நிலவுதற்கு நிலைக்களன் தாய்மையன்றிப் பிறிதென்னை? அத்தாய்மையை அளிப்பது பிள்ளைப்பேறு.
பிள்ளைப் பேற்றின் மாண்பு
பிள்ளைபேறு, தாய் தந்தையரை இயற்கை நெறியில் நிறுத்தும்; உலக வளர்ச்சிக்குத் துணை புரியும், இறைவன் அருள் நோக்கத்தை நிறைவேற்றும்; பெற்றோரது அன்புக் கண்ணைத் திறக்கும்; உயிர்களிடத்து அன்புகொண்டு தொண்டு செய்யுமாறு அவரை உந்தும்; வேறு பல வாழ்வுத் துறைகட்கும் உதவி செய்யும்.
வாழ்வை இன்பமயமாக நடாத்தல் வேண்டுமென்பது இயற்கையின் நோக்கம். தொடக்கத்தில் இன்பம் கல்வி வாயிலாகப் பிறக்கும், பின்னைக் திருமண வாயிலாக விளையும்; முடிவில் பிள்ளைப்பேறு வழியே நிலைபெறும். பிள்ளைப் பேற்றில் ஒரு தனிச் சிறப்புண்டு. அது சோர்வு போக்குவது. சோர்வு கல்வியில் தோன்றுவதுண்டு; தொழிலில் தோன்றுவ துண்டு. நாயகனுக்கு நாயகி இடத்திலும், இவளுக்கு அவனிடத்திலும் சோர்வு தோன்றுவதுண்டு. பிள்ளையின்பாலோ எச்சோர்வும் தோன்றுவதில்லை. வாழ்வில் சோர்வு தோன்றி, இன்பம் மறையும் வேளையில், பிள்ளை பிறந்து, சோர்வைப் போக்கி, இன்பத்தை நிலைபெறுத்துகிறது. அதலால், இன்ப வாழ்விற்குப் பிள்ளைப்பேறு இன்றியமையாதது.
வாழ்வில் எல்லாமிருந்தும் பிள்ளைப்பே றொன்றில்லையேல் மற்றவைகளால் என்ன பயன்? எல்லாவற்றிலுமுள்ள இன்பத்தை நுகர்விப்பது பிள்ளைப்பேறு. ஒருத்தியும் ஒருவனும் சேர்ந்த வாழ்வால் வீடு உண்டாகும். அவ்வீட்டில் இன்ப முண்டாக்குவது பிள்ளைப்பேறு. வாழ்வில் இருள் போக்கும் மணி விளக்கு, பெண் என்று மேலே சொன்னேன். அம்மணி விளக்கு உமிமுஞ் செங்கதிர், பிள்ளை என்று ஈண்டுச் சொல்கிறேன். ’மணியிடைக் கதிர்வரு திறம் போல்' என்றார் கச்சியப்பர்.
பிள்ளைப் பேற்றின் பெருமையை “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் - நன்கலம் நன்மக்கட்பேறு” என்று திருவள்ளுவனார் விளக்கி யிருத்தல் காண்க.
பிள்ளையில்லா வீட்டில் வாழும் தலைவியையும் தலைவனையும் பிணியாளர் என்று கூறல் மிகையாகாது. புறத்தே பலதிறத் தொழில் செய்து வீடு சேரும் நாயகனும், அகத்தே பலதிறத் தொண்டாற்றி அமரும் நாயகியும் எத்துணை நாள் ஒருவரை ஒருவர் பார்த்திருப்பர்? எத்துணைநாள் அதையும் இதையும் பேசிக் கிடப்பர்? எத்துணை நாள் ஆடலிலும் பாடலிலும் கழிப்பர்? திருமண வாழ்வின் தொடக்கத்தில் நோக்கும் பேச்சும் ஆடலும் பாடலும் இன்பூட்டிக் கொண்டிருக்கும். நாளடைவில் அவ்வட்டம் குன்றும். நாயகன் வேறு களியாடல்களுக்குச் சென்று உணவுக்கு வீட்டுக்கு வருவன். நாயகி தன்னந் தனியளாய் எண்ணாதன எண்ணித் தூங்கி விழுவாள். குழந்தை ஒன்றிருக்குமேல் சோர்வு நீங்கும்; இன் பூட்டம் பெருகும். புறத்தே வேலை செய்துவருந் தலைவனின் சோர்வையும், அகத்தே வேலை செய்து அயரும் தலைவியின் சோர்வையும் போக்கும் அமிழ்தம் குழந்தை யென்க. குழந்தையின் ஆடல் பாடல் கேட்கும் தாய் தந்தையரே தவமுடையார். அவர் வாழ்க.
குழந்தை இன்பம்
குழந்தையின் ஆடலைக் காணக் கண்கள் படைக்கப் பட்டன. குழந்தையின் மழலைப் பாடலைக் கேட்கச் செவிகள் படைக்கப்பட்டன. குழந்தையின் கையறலைப் பெற உடல் படைக்கப்பட்டது. 'அவ்வாடல் இனியது; இப்பாடல் இனியது’ என்று எவர் கூறுவர்? குழந்தையின் ஆடல் பாடலைக் காணாத- கேளாத - பாவிகள் அங்ஙனங் கூறுவார்கள். குழவி இன்பத்தைச் செவ்வனே நுகர்ந்து, இயற்கை அறவோராகிய திருவள்ளுவனார், குழவி ஓசையாகிய ழகர ஓசை பொதுள, ’குழலினிது யாழினிது என்பதம் மக்கள் - மழலைச்சொல் கேளா தவர்' என்று மொழிந்து, மேலும் “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் - சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு” என்றும் அருளியிருத்தல் காண்க.
பிள்ளையால் வீட்டுப் பிணக்கு நீங்குதல்
நாயகனையும் நாயகியையும் பிணித்துள்ள அன்புக் கயிற்றுக்கு ஊறு நேராவண்ணம் காத்து வருவது பிள்ளைப் பேறு என்று கூறலாம். சில வேளைகளில் இருவர்க்கும் பிணக்கு நோலாம். பிணக்கு, பிள்ளையில்லா வீட்டில் வளரும். பிள்ளையுள்ள வீட்டிலோ அது ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போல் ஒழியும். அப்பெருமையுடையது பிள்ளைப் பேறு. குழந்தை விளையாடும் வீட்டில் துன்பம் ஏது? அஃதில்லா வீட்டிலோ? அந்தோ!
பிள்ளைப் பேற்றால் தியாகம்
பிள்ளைப் பேற்றால் வேறு பல நலன்களும் உண்டு. பிள்ளையை வளர்க்கத் தாய் தந்தையர் எத்துணை அன்புத் தொண்டு செய்கிறார்! பிள்ளைப் பேறில்லையேல் அத் தொண்டு அவர் மாட்டு அரும்புதலே அரிது. பயன் கருதிப் பெற்றோர் அத்தொண்டு ஆற்றுகிறாரோ? இல்லை. கைம்மாறு கருதாக் கடவுட்டொண்டு பெற்றோரிடம் வளர்ந்து வரப் பிள்ளைப் பேறு துணை செய்கிறது. ஒரு பிள்ளையை வளர்க்கப் பெற்றோர் எவ்வளவு தியாகத்துக்கு உட்படுகிறார்! மக்கட் பிறவியை உய்விக்க வல்லது தியாகம் என்பதை விளக்க வேண்டுவதில்லை. அத்தியாகம் பிள்ளைப் பேற்றில் இருக்கிறது.
பிள்ளை நலன் கருதித் தாய் தந்தையர் தமது நலன்களை யெல்லாஞ் சுருக்கிக் கொள்கின்றனர். பிள்ளைப் பேற்றால் தன்னலம் கெடுதலும் தியாகம் எழுதலும் காண்க. அன்புத் தொண்டு - தன்னலமின்மை - தியாகம் - முதலியன, பொறாமை வெகுளி அவா முதலிய மனமாசுகளைகத் துடைப்பனவல்லவோ? மாசகன்ற இடத்திலன்றோ இன்பப்பேறு உண்டாகும்? எனவே, பிள்ளைப்பேறு இன்ப வாழ்விற்கு இன்றியமையாதது என்பது கருதற்பாலது. பிள்ளைப் பேற்றின் பெற்றி யுணர்ந்தே நம் முன்னோர் அது குறித்துப் பலபடப் பேசலாயினர். அவர் பிள்ளைப் பேற்றைப் பற்றிக் கூறாத இடமேயில்லை.
நற் பிள்ளைப் பேற்றுக்குப் பொறுப்பாளர்
வாழ்விற்குரிய இன்பப் பேற்றிற்கு உறுகருவியாயுள்ளது பிள்ளைப்பேறெனில், அதன்மீது தாய் தந்தையர் எத்தகைய கவலை செலுத்தல் வேண்டும் என்பதைச் சொல்லலுந் தேவையோ? பிள்ளை எனில் எல்லாம் பிள்ளைகளாமோ? ’பழிபிறங்காப் பண்புடை மக்கள்' என்றார் திருவள்ளுவனார். பண்புடை மக்களைப் பெறும் பொறுப்பு யாருடையது? “தாய் தந்தை யருடையது” என்று எவருஞ் சொல்வர். நற்பிள்ளைப்பேறு தாய் தந்தையருடைய வாழ்வைப் பொறுத்து நிற்பது.
உடல் நலன்
உலகில் நற்பிள்ளைப் பேற்றையே தாய் தந்தையர் விரும்புதல் இயல்பு. வெறும் விருப்பத்தால் பயன் விளையாது. விரும்பியவாறு நடக்கும் பயிற்சி தேவை. நற்பிள்ளைப் பேற்றிற்கு முதலாவது வேண்டற்பாலது உடல்நலன். நலன் பெறாத தாய் தந்தையர்க்கு நற்பிள்ளை பிறத்தல் அரிது. உடல் காப்பு, ’பெண் வளர்ப்'பில் விளக்கப்பட்டது.
ஒழுக்கம்
உடல் நலனுக்கு ஒழுக்கம் உயிர்போன்றது. அவ் வொமுக்கங் காக்கவேண்டுவது தாய் தந்தையரின் தலையாய கடன். ஒருத்தி ஒருவன்பாலும், ஒருவன் ஒருத்திபாலும் வாழ்தல் அறம். கூடா ஓழுக்கத்தாலும், நிறை தவறுதலாலும் மக்களுக்கு விளையுங் கேடுகள் பல. தீயொழுக்க முடையார்க்குப் பிள்ளை பிறத்தல் அரிது; பிறப்பினும் கருவினில் அழிவதாய், கான்முளையினில் அழிவதாய்த் தொலையும். அஃது ஒருவேளை பிழைத்து வளரினும் நோய் வாய்ப்பட்டுச் சூம்பி ஓழியும், நோயில்லா தொழியினும் குருடு செவிடாகப் பிறக்கும்; இக்குறைகளில்லா தொழியினும் களியாய் மடியாய் உலகச் சுமையாய்க் கிடக்கும். பிள்ளை, நாட்டின் உடைமையாகலான், அதைப் பண்புடைய தாகப் பெறுதற்குரிய வாழ்வை நடாத்தத் தாய் தந்தையார் முயலவேண்டும்.
கூடாவொழுக்கமில்லாத சிலர்க்கும் நற்பிள்ளை பிறவா திருத்தற்குக் காரணமென்னை என்று சிலர் கருதலாம். அன்னார் வெவ்வேறு வழிகளில் தமது உடல் நலன்களுக்குக் கேடு சூழ்ந்தவராயிருப்பர். காப்பி தேயிலை கொக்கோ முதலிய பானங்களை அளவிற்கு மீறிப் பருகல், கள் சாராயம் முதலியவற்றை அருந்தல், உடற்பயிற்சியின்றிச் சோம்பிக் கிடத்தல், அளவு கடந்த உழைப்பு, அகால உணவு, போதிய நேரம் உறங்காமை, புழுங்கிய இடத்தில் வதிதல், மீதூண் கொள்ளல், வரம்புமீறிப் பட்டினி கிடத்தல் முதலியன உடல்நலனைக் கெடுப்பன. இவைகளால் உறுப்புக்களில் வெம்மையெமும். வெம்மை, உறுப்புக்களின் சுறுசுறுப்பு - ஊக்கம் - எழுச்சி முதலியவற்றைப் போலியாகத் தொடக்கத்தில் கிளப்பிப் பின்னை அவைகளைக் குலைக்கும். பெண்மக்களின் கருவுறுப்புக்களோ மிக மெல்லியன. அவைகளில் வெம்மை ஏறினால் கருத்தங்கலும் அரிதாகும்; தங்கினும் அழியும். நற்பிள்ளைப் பேறு விரும்பும் தாய் தந்தையர், உணவு, உழைப்பு, உறக்கம் முதலிய வற்றில் அளவாயிருப்பாராக.
உணவு முதலியவற்றை ஓழுங்குபடுத்தி வாழ்வோர்க்கும் சில இடங்களில் நற்பிள்ளை பிறப்பதில்லை. இஃது எற்றுக்கு? ஒருத்தியும் ஒருவனும் இளமை தொட்டு உயிர்நிலைகளின் மீது கவலை செலுத்தி வந்ததைவிடத் திருமணத்தின் பின்னர் ஆயிரமடங்கு அதிகமாக அவற்றின்மீது கவலை செலுத்தல் வேண்டும். காம எரிக்கு எளியராய் ஒருவரோடொருவர் புணர்தல் கூடாது; பிள்ளைப்பேறு நினைவின்றி, வெறும் புணர்ச்சிமீது மட்டும் கருத்தைப் பதித்து அடிக்கடி கூடலா காது. போகத்தில் அளவாயிருத்தல் வேண்டும்; இல்லையேல், சுக்கிலம் நீத்து, நற்பிள்ளைப் பேற்றிற்கு இடர் செய்யும்.
திருமணஞ் செய்த சின்னாளுக்குள் பிள்ளை பெறுதலாகாது. கருவுறுப்புக்கள் உரம் பெறுதற்கு முன்னர்க் கருவுயிர்த்தல் அவ்வுறுப்புக்களை மெலிவிப்பதாகும். மெலிவுற்ற கருவினின்றும் பிறக்கும் பிள்ளை எங்ஙனமிருக்கும்? மூஞ்சூறுபோ லிருக்கும். வலிய திண்ணிய அழகிய அறிவுடைய பிள்ளைப் பேறே உலகிற்குப் பயனளிப்பதாகும். அதற்குரிய பெண் பருவம் அரிவைப் பருவமென்க. விரிவு, இந்நூல் “திருமணத்”தில் பார்க்க. நற்பிள்ளைப் பேற்றிற்குத் தாய் தந்தையரது ஓழுங்குபட்ட வாழ்வே காரணம். நல்வாழ்வில் தலைப்படாத தாய் தந்தையர், சேர்க்கை தவிர்த்து வாழ்தல் முறைமையாம். அவர் ஈனும், ஊனமும் ஈனமும் நிரம்பிய பிள்ளைகளால் நாட்டுக்கு என்ன பயன்? உலகிற்கு என்ன பயன்?
கருவுற்ற காலத்தில் கொள்ளத்தக்க முறைகள்
பெண் கருவுற்றிருக்கும்போது அவள் மிகத்திறம்பட வாழ்வு நடாத்தல் வேண்டும். கருவுற்ற நாள்முதல் அவள் ஒன்றுஞ் செய்யாது வாளா கிடத்தல் கூடாது. வழக்கம் போல் நிகழ்த்திவந்த பயிற்சிகளை யெல்லாம் அவள் நிகழ்த்தி வரலாம். மனைவி கருவுற்ற வேளையில் கணவன் பெரும் பொறுப்புடன் அவளைக் கவனித்து வருதல் கருணையாகும். அச்சம் - ஐயம் - கவலை - பொறாமை - வெகுளி - முதலிய கனல்கள் மனைவி மனத்தில் மூளாவண்ணம் நாயகன் நடந்துவரல் நன்மை பயக்கும். இக்கனல்கள் கருக்குழியை எரிக்கும். கருவுற்ற வேளையில் பெண் மகள் சிலபோழ்து காய்ந்து விமுவதுமுண்டு. நாயகன் பொறுமையுடன் அவள் காய்வை ஏற்பானாக.
மற்றுமொன்றை ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். அது, மனைவி கருவுற்றிருக்கும்போது மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தலாமா என்பது. இது குறித்துப் பலதிறக் கருத்து வேற்றுமைகளுண்டு.
உடற் கூற்றுக்கு ஏற்ற வண்ணம் கூடுதல் நிகழ்ந்து வருகிறது. சிலர் மூன்று ஐந்து ஏழு மாதம் வரை கூடிக் குலாவுவர்; சிலர் பிள்ளை பிறக்கும்வரை அவ்வினை நிகழ்த்துவர். கருவுற்ற வேளையில் பெண்ணுக்கு இயல்பாகக் கிளர்ச்சி மிகும். கிளர்ச்சி மேலீட்டான், சில சமயம் பெண்மகள் (எல்லாருமல்ல; சிலர்) நாயகன்பால் நெருங்குதலுமுண்டு. அவ்வேளையில் மனைவி வேண்டுதலுக்கு இரங்காது மறுக்குங் கணவன் இல்லாம வில்லை. மறுப்புக்குக் காரணம் மனைவிமீதும், அவள் வயிற்றி லுள்ள குழவி மீதுங் கொண்ட இரக்கமே யாகும். இரக்கம் இச்சையையும் அடிமைப்படுத்தும். மூன்று மாதங் கடந்ததும் மெய்யுறு புணர்ச்சியை நீப்பது நலன் என்பது சில அறிஞரது உள்ளக்கிடக்கை. ஒருவேளை மனைவி விருப்பந் தணிக்கக் கணவன் எண்ணுவனேல், அவன் அவளுடலுக்கும், உட் கருவிக்கும், கருவுக்கும் கேடு நிகழா முறையில் கூடுவானாக.
கருத்தாங்கும் மனைவி விரும்பாத வேளையில் அவளுடன் வலிந்துசேர முயலுங் கணவன் கணவனல்லன். அவன் அவளைக் கொல்ல வந்த யமன் என்று கூறலாம். கருவுறாக் காலத்திலேயே வலிந்து புணரல் கூடாது. கருவுற்றுள்ள வேளையில் - அதுவும் மனைவி விரும்பாத போது - வலியுறுத்திக் கூடுவோனை விலங்கென்றுஞ் சொல்லலாமோ? அவன் விலங்கினும் இழிந்த வனல்லனோ? இத்துறையில் விலங்கினின்றும் மனித உலகம் பாடங் கற்றல் வேண்டும். மக்காள்! விலங்கு உலகை நோக்குங்கள். அதன் பெண்ணினம் கருவுற்றிருக்கும் போது, அணினம் நெருங்கி அதை வலியுறுத்துகிறதா? இல்லையே! ஆறறிவுடைய மனிதனோ கருவுற்ற வேளையிலும் மனைவியிடஞ் செல்கிறான்! அதிலும் அவ்வேளையில் வலிந்து சேோர்வோனை என்னென்று கூறுவது? மனைவி கருவுற்ிறுள்ள போழ்து அவளைச் சகோதரி யென்று கருதுவோனே மனிதன்.
பிள்ளைப் பேற்றில் அச்சம்
மரம் பருவத்தில் காய்ப்பது போல, உற்ற வயதில் பெண் மகளும் பிள்ளை பெறுவது இயற்கையோ டியைந்து வாழ்வதாகும். இப்பொழுது உலகில் சில இடங்களில் பெண் மக்களிற் சிலர் பிள்ளைப் பேற்றுக்கு அஞ்சித் திருமண வாழ்வு கொள்ளா தொழிகின்றனர். சிலர் பிள்ளைப்பேறு உறா முறையில் ஆண் கலப்புக் கொள்ள விரும்புகின்றனர். சிலர் பிள்ளை கரைக்கும் வித்தை பயின்று வாழ்கின்றனர். இக்கூட்டத்தார் இக்கால நாகரிக மென்னும் அறியாமையில் மூழ்கினவர். இந் நாகரிகத்தை ’நாகரிகம்’ என்று எப்படி அழைப்பது? இச்செயற்கைத் துறைகளில் பெரிதும் இறங்குவோர் கற்றவர்; பெரும்பட்டம் பெற்றவர். இவர் அறிவு இருந்தவாறென்னே! இவர் கற்றது கல்வியா?
திருமண வாழ்வையே வெறுத்து நிற்பவரைப் பற்றி, ’இயற்கையற’த்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். வாளா கிடத்தலாலும், முஷ்டிமைதுனம் போன்ற செயற்கைத் துறைகளாலும் விளையுங் கேடுகளும் அங்காங்குச் சுருங்க ஓதப்பட்டி ருக்கின்றன. அதலால், அவற்றைப் பற்றி ஈண்டு மீண்டுங் கூற வேண்டுவதில்லை.
நோயாளிகள்
காசநோய், தொழுநோய் (குஷ்டரோகம்), பித்து முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர், திருமண வாழ்வு கொள்ளாது வாளா கிடக்கலாம்; திருமணவாழ்வு கொண்ட பின்னர் இந் நோய்கள் தொடரின், அப்பொழுதும் வாளா கிடக்கலாம். ஈண்டு வாளா கிடத்தல் என்பது பிள்ளைப் பேற்றை வெறுத்தலைக் குறிப்பதன்று; அப்பிள்ளைப் பேற்றால் உலகில் நோய்கள் வளரு மாகலின், வாளா கிடத்தலே அறம் என்பதைக் குறிப்பதென்க.
குடியனுடன் சேரல் கூடாது
ஓயாத குடியனை மணக்க நேரின், பெண்மணி கலவியை வெறுத்து வாழ்வது நியாயம். தீய பிள்ளைகளைப் பெற்று உலகைக் கெடுப்பதினும், தான் ஒருத்தி வருந்தி ஓழிவதால் கேடு விளையாது. குடி, தொழுநோய், பெண்நோய், பித்து முதலியன கருவில் தாக்குற்றுப் பிள்ளைகளை அடரும். இன்னோரன்ன அல்லாத பிற, பிள்ளையைச் சார்வதில்லை. இது குறித்து மேல் நாட்டார் அராய்ச்சி செய்து, இதனை எவரும் ஒப்பமுடிந்த வழியில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இது நிற்க.
சில இடங்களில் பொருட்செல்வ நிலை கருதிப் பிள்ளைப் பேற்றை ஓடுக்குவதுண்டு. திருமண வாழ்வில் தலைப்படாது பிரமசரியங் காக்குமாறு நம்நாட்டார்க்கு மகாத்மா காந்தி ஒரு போது அறிவுறுத்தினர். காரணம் என்னை? நாட்டின் வறிய நிலை நோக்கி யென்க. இத்தகைய காரணங்களால் பிள்ளைப் பேற்றை வெறுத்தல் ஏற்கற்பாலதே. இக்குறைகளில் ஓன்று மில்லா மக்கள், பிள்ளைப் பேற்றை வெறுப்பது அறமாகாது.
கருத் தடை
பெண்கள் ஆடவனுடன் புணரினும் கருத்தரியா முறைகள் பல மேல்நாட்டில் காணப்பட்டு வருகின்றன. அம்முறைகளை அறிவுறுத்தும் நூல் பலவற்றை யான் படித்துப் பார்த்தேன். ஒன்றேனும் எனக்குப் பிடிக்கவில்லை. கருவைத் தகையக் காணப் பட்டுள்ள முறைகளாலும் கருவிகளாலும் உறுப்புக்களுக்குப் பின்னை ஊறு விளையும் என்பதில் ஐயம் இல்லை. இத்துறையில் இறங்க ஒருப்படும் மகளிருக்குந் தீமை விளையும்; ஆடவனுக்குந் தீமை விளையும்; இவை யாவும் முஷ்டிமைதுனம் போன்ற செயற்கை முறைகளே யாகும். பிள்ளைப் பேற்றைத் தடுக்கக் கொள்ளப்படும் முறைகளும் கருவிகளும், நாளடைவில் மெல்லிய கருவுறுப்புக்களின் அக்கத்தைக் குலைக்கும். அவ் வுறுப்புக்களின் குலைவால் பின்னே பலதிற நோய்கள் தோன்றும். அண் - பெண் உறுப்புக்களின் சேர்க்கையின்றிப் பல இடைச்சேர்க்கைகள் யாவும் இமை பயப்பன என்று சுருங்கச் சொல்கிறேன்.
இக்கால நாகரிகப் பெண்மக்கள்
நமது நாட்டுப் பெண்மக்களில் மேல்நாட்டு முறைப்படி கல்வி பயின்று திரிவோர் சிலர், அறியாமையால் பிள்ளைப் பேற்றைக் தடுக்கும் முறை கொண்டு வாழ்வு நடாத்துகின்றனர். இப் பெண்மக்கள் பெரும் பதவிகளிலும் வீற்றிருக்கிறார்கள்/ பெரும்பான்மையோர் அசிரியன்மாராக இருப்பவர். இவர் கூட்டுறவு நேராதவாறு, பெண் குழந்தைகளைக் காக்க வேண்டுவது பெற்றோர் கடன். இந்நூலில் இதுகுறித்து விரித்துரைக்க வேண்டுவதில்லை.
கருச் சிதைவு
சில பெண்மக்கள் செயற்கைக் கருவிகளைச் செருகிக் கொள்ளாது ஆடவரோடு இன்பந் துய்க்கிறார்கள். ஆனால் அவர் பிள்ளைப் பேற்றை விரும்புகிறாரில்லை. கருவுற்ற குறி தோன்றியதும் அதைச் சிதைக்க அவர் முயல்கிறார். அதற்கென எவ்வளவு முயற்சி! எவ்வளவு உழைப்பு! கருச்சிதைக்க ஒருப்படும் மருத்துவரார்க்குக் கடவுள் எந்நரகம் படைத்திருக்கிறானோ தெரியவில்லை. பாவங்களிற் சிறந்தன கருச் சிதைப்பதும், அதற்குத் துணைபோவதுமாகும். பாவமென்றால் பாவத்துக்கு அஞ்சாதாருமுளர். அவருக்கு என்ன உரைப்பது?
இயற்கையில் அமையுங் கருவை மருந்தாலோ மற்றெதனாலோ அழிப்பின் கருக்குழிக்கும் அதனை ஒட்டிய சினையு அப்புக்கட்கும் ஊறு உண்டாகும். அதனால் உடல் வலிமை குன்றும். இவ்வாறு பலமுறை நிகழ்த்துவோர் கதி என்ன? இவ்வுலக வாழ்வை அகாலத்தில் நீப்பதே அவர் கதி அகும்.
வழுக்கிய நடையால் கொலை
நற்குடி யிற் பிறந்து, கூடாவொழுக்கத்தில் தலைப்படு வோரிடையும் கருவழிக்குந் “திருத்தொண்டு” நிகழ்கிறது. பிள்ளை பிறந்தால் மானம் போகுமென்று கருதி, அன்னார் பெருங்கொலை செய்கிறார். தொடக்கத்தில் காம வேட்கை! பின்னே மானம்! என் செய்வது? குழந்தையோ கடவுளின் கொடை! நாட்டின் செல்வம்! அதை ஏன் அழித்தல் வேண்டும்? நமது நாட்டில் பொதுவாகப் பெண்மக்கட்கும், சிறப்பாகக் கைம்பெண்கட்கும் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உயிர்க் கொலையாய் முடிகின்றன. இளம் பெண்கள் வழுக்கி வீழ்கிறார்கள்; பின்னே விழிக்கிறார்கள்.
இப்பெண்கள் கூடாவொழுக்கத்தில் தலைப்படாத நெறியில் வாழ்வு நடாத்தல் வேண்டும், நெறி தவறநேரின், குழந்தையை ஈன்று வளர்க்கும் அஞ்சா நெஞ்சம் பெறல் வேண்டும். உலகப் பழிப்புக்கு அஞ்சிக் கருவழிப்பது இழிவு! இழிவு! பேரிழிவு! கருவழிக்கும் பெண்ணின் உடல்நலன் குன்றும். அவள் நோய் வாய்ப்பட்டு, அகாலத்தில் மாள்வது ஒருதலை. அரிய வாழ்வை இடையில் இழப்பதா அறிவு?
கடவுள் நெறிக்கும், உலக வளர்ச்சிக்கும், நாட்டின் செல்வத்துக்கும், இன்ப வாழ்வுக்கும் உறுகருவியாயுள்ள பிள்ளைப்பேற்றை விரும்பாத நெஞ்சம், ஈரமில்லாததே யாகும். அது பெண்ணுலகிற்கு உரியதன்று. பிள்ளைப்பேறு விரும்பாத பெண் பெண்ணல்லள் என்று சுருங்கச் சொல்லலாம்.
பெண்பிறவி தாங்கினோர், பிள்ளைப் பேறு பெற, இளமை தொட்டு - உடல் நலன் - ஓழுக்கம் முதலியவற்றைக் காத்துவரல் வேண்டும். உடல்நலனும் ஒழுக்கமும் பெண் பிறவிக்கு இன்றிய மையாதன என்று கூறல் மிகையாகாது. ஆகவே, ஒருத்தி ஒருவனுடன் நன்முறையில் வாழ்ந்து, பிள்ளை பெற்று, உலகை ஓம்புவது சிறப்பு.
தாய் தந்தையர் அன்பே குழந்தை
தாய் - தந்தை - குழந்தை இம்மூன்றுஞ் சேர்ந்த ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தமென்பது. உலகில் இம்மூன்றும் நிலை பபெறல் இயற்கை என்பதை அறிவுறுத்தவே நம் முன்னோர் கடவுளை அம்மூார்த்தமாகவும் கொண்டு வழிபட்டனர். “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்றார் மாணிக்கவாசகனார். தாய் தந்தையார் அன்பினின்றும் பிறக்கும் ஆரமுதம் குழந்தையென்க. அக் குழந்தையைப் பெற முயல்வது பெருந்தவமாகும். பெண்ணின் பெருமைக்கு உரையுளாயுள்ள அத்தவம் யாண்டும் மலிக,; என்றும் நிலைக்க.
படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுத் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிகின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்கு.ப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாடே.
- பாண்டியன் அறிவுடை நம்பி
-------
10. பெண்ணலன்
( தாயும் நாடும் – செயற்கை முறைகளும் கழுவாயும் – எரி நோய் – உயிர்முட்டை – இயற்கையும் மருந்தும் – மாதப் பூப்பு – உறுப்புப் பிறழ்ச்சி – மலச்சிக்கல் – வியர்வை – பிராணாயாமம் – சிறுநீர் – பித்தம் – நோன்பு – அழகு காத்தல்)
உடம்பா ரூழியரில் உயிரா ரழிவார்
திடம் பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. - திருமூலர்.
பிள்ளைப்பேறு முதலிய பெருமைகட்கு நிலைக்களனா யிருப்பது உடல்நலன். உடல்நலனைக் கெடுத்து நோய் வாய்ப்படும் ஒருத்தியின் ஊனம் அவளோடு ஓழிவதில்லை. அவள் வழிவழித் தோன்றும் உயிர்களையும் அவ்வூனம் தொடர்ந்து தொடர்ந்து பீடிக்கும். ஒரு நாட்டின் செழுமையும் கொழுமையம் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்திருக்கின்றன.
தாயும் நாடும்
நோயில்லாப் பெண்மக்களைப் பெற்ற நாடே தவஞ் சிறந்த நாடு. ஒருநாடு எல்லா வளங்களையுங் கொழிப்பதாயினும், அந்நாட்டு மக்கள் கூடாஓழுக்கத்தில் தோய்ந்து, நோய்வாய்ப் படுவரேல், அவர்கட்குப் பிறக்கும் மூஞ்சூறுகளும், குருடுகளும், செவிடுகளும் அந்நாட்டின் வளங்களிலுள்ள நலன்களை எங்ஙனந் துய்க்கும்? இன்ப நுகர்ச்சிக்கு நாட்டு வளனோடு மக்கள் வளனும் பொருந்தியிருத்தல் வேண்டும். ஆதலால், நோயற்ற வாழ்வுடைய மக்கள் வதியும் நாடே சிறந்த தவ நாடாகும். அத்தகைய நாட்டைப் படைக்கும் பொறுப்பு, தாயுடையது என்பதை விளக்க வேண்டுவதில்லை.
தாய்மைக்குரிய பெண்மணி நோயின்றி நலம் பெற்று வாழ முயல்வது தகுதி. நற்றாயாதற்குரிய வழியில் பெண்ணை இளமை தொட்டு வளர்க்கத் தாய் தந்தையார் பெரிதுங் கடமைப் பட்டிருக் கின்றனர். விரிவு இந்நூல் ’பெண் வளர்ப்'பில் காண்க. ஆண்டு உடலோம்பு முறைகளும் சில கூறப்பட்டன.
பெண்ணினல்லாள், உணவானும் ஓழுக்கத்தானும், தன்னுடல் நிலையைப் பாதுகாத்துவாரல் பண்பை வளர்ப்பதாகும். வெம்மையட்டும் உணவும் கூடாவொழுக்கமும் பெண்ணின் மெல்லிய உறுப்புக்களை எரித்து அரித்துக் கல்லும். இவ்வெரிக்கு அடிமையாகாது, இயற்கைவழி வாழ்வு நடாத்தும் பெண்ணின் வாழ்வு நல்லதாக மலர்ந்து மணம் வீசும்.
உடல்நலனுக்குரிய முறைகள் பல இந்நூற்கண் அங்காங்கே சொல்லப் பட்டிருக்கின்றன. நூற்கண் வேறிடத்தில் சொல்லாத சிலவற்றை ஈண்டுச் சுருங்கக் குறிப்பிடுவது நலமென்று தோன்கிறது.
செயற்கை முறை: இல்லறமென்னும் இயற்கை அறத்தை ஏலாது, வேட்கையைச் செயற்கை முறையில் தணிக்கப் புகும் மக்கள் பின்னே அடையங் கொடுமைகள் முன்னர் விளக்கப் பட்டன. முஷ்டிமைதுனம் போன்ற செயற்கைத் துறைகளில் அறியாமையால் வீழ்ந்து இடர்ப்படும் மக்கள் நிலையும் அண்டுக் கூறப்பட்டது. அச்செயற்கையாளர் மீண்டும் நலம் பெறல் உண்டேோ?
தொடக்க நிலையில் இருப்போர்க்குத் திருமணம் பொருந்திய மருந்தாகும். அந்நிலை கடந்து, முகம் வெளுத்து, கண்ணொளி மங்கி, ஈரல் இயக்கந் தளர்ந்து, பசிகுன்றி, மலஞ்சிக்கி, உறக்கமிழந்து, இருக்கும் போதும் நிற்கும்போதும் கிடக்கும்போதும் எப்போதும் இய எண்ணத்துக்கு அடிமையாய், சிறுநீர் அடிக்கடி சொட்டும் முதிர்ந்த நிலையடைந்த “முத்தர்' உய்யும் வழியில்லை என்று மேல்நாட்டு மருத்துவ அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். உய்யும் வழியும் காணப்பெறாத முத்தர்” நிலை பெரிதும் இரங்கத் தக்கதன்றோ?
இயற்கையின் இயல்பு
இவர் இந்நிலை எய்துதற்குக் காரணம் என்னை? இயற்கை அன்னையின் நோக்குக்கு இவர் மாறுபட்டு நடந்தமையாகும். அந் நடக்கை, அளிக்கத்தக்க பயனை அளியா தொழியுமோ? தன் நியதிக்கு மாறுபட்டு நடப்போரைச் சிறிதும் இரக்கமின்றி ஒறுப்பது இயற்கை அன்னையின் இயல்பு. மேலும் மேலும் மருந்து முதலியன உண்டு. இயற்கை அன்னையை மறப்பது, அவளுக்கு மேலும் மேலும் சினத்தை மூ.ட்டுவதாகும்.
கழி விரக்கமும் மன்னிப்பும்
செயற்கைத் துறையில் உழைத்து முதிர்ந்த 'முத்தர்க்கு' உரிய மருந்து இவ்வுலகிலில்லை. இல்லையேல், அவர்தங் கதி என்னை? குற்றத்திற்கு மன்னிப்பு இல்லையா? மன்னிப்பு உண்டு. எப்பொழுது? செய்த குற்றங் குறித்துக் கழிவிரக்கமும், மீண்டும் அக் குற்றஞ் செய்யா மனஉறுதியும் கொள்வோர்க்கு மன்னிப்பும் கிடைக்கலாம், உய்வும் உண்டாகலாம். செயற்கைத் துறையில் அஆடியதன் பயனைத் துய்ப்போர் முதலாவது இயற்கையை மறந்தது தவறு என்பதை உணர்தல் வேண்டும்; அவ் வுணா்வுடன் நிகழ்த்திய பிழை குறித்து வருந்தல் வேண்டும்; வருந்துவதுடன் மீண்டும் அக்குற்றம் நிகழ்த்தாத மனஉறுதி பெறுதல் வேண்டும். செயற்கையாளர், இயற்கை அன்னைபால் சரண்புகுந்து, “அன்னாய்! அடைக்கலம்! அடியேனைக் காத்தருள்க” என்று அழுவாராக. அவர் இயற்கை வழி வாழ்வு நடாத்த உறுதி கொள்வாராக.
இயற்கை முறைகள்
முதலாவது அந்நோயாளர் உயிர் நிலையைக் கரத்தால் தொடு கூடாது; மனத்தால் நினைப்பதுங்கூடாது. பழக்கம் மிகக் கொடியது. நீண்ட நாள் பழக்கம் அவரை விரைவில் விடுதலை செய்யாது. அப்பழக்கத்தைத் தவிர்க்கவல்லது மன உறுதி ஒன்றே. உறுதி குலைந்து, மீண்டும் இடையிடையே பழைய பழக்கத்துக்குத் தீயோர் அடி மையானால், அவர் மாள வேண்டுவதே முடிவு. மன உறுதியால் பழக்கத்தை வென்று, இயற்கை அன்னையின் திருவருளாகிய நீரினும் காற்றினும் ஞாயிற்றொளி யினும் முறைப்படி படிந்து வரவர, இயற்கை அன்னை திருவருள் சுரப்பள்.
வெம்மை நாட்டில் வதிவோர் நீண்ட நேரம் ஞாயிற் றொளியில் நிற்றலாகாது. ஐந்து அல்லது பத்து நிமிடஞ் சாலும். ஞாயிற்றொளியில் மூழ்கும் போது தலையையும் அரையையும் துணியால் அல்லது பசுந்தழையால் மூடிக் கொள்வது முறைமை. இல்லையேல் மூளைக்கும் உயிர் நிலைக்கும் பழுது நேரும்.
இயற்கை உணவு
இயற்கை மூழ்கலோடு, இயற்கை உணவருந்தல் பொருத்தம். காய்கறிகளைப் பசுமையாக உண்பது நல்லது. இயலாதாயின் அவற்றைச் சிறிது அவித்து அருந்தலாம். காரம் புளி சேர்க்கை கூடாது. பழம் நிரம்ப உண்ணலாம். பழமே உண்டும் வரலாம். காப்பி, தேயிலை, கொக்கோ, ஓவல்டைன் முதலியன வீட்டில் தலைகாட்டல் ஆகாது. அடிக்கடி நீர் பருகலாம். முறைப்படி உடல்நிலைக்கேற்ற அளவில் நோன்பு அதாவது விரதம் இருப்பது எல்லாவற்றினும் சிறந்தது.
வாழும் இடம்
நோயாளர் காடுகளிலாதல் காடர்ந்த மலைகளிலாதல் வதிதல் நன்று. இவர் கட்டிடங்களில் - அதிலும் காற்று நுழைவில்லாத கட்டிடங்களில் - பெரும் பொழுது போக்குதலாகாது; மரத்தடியில் பகல் பொழுதைக் கழிப்பது சிறப்பளிக்கும்; இயற்கையுடன் இயைந்து வாழல் வேண்டு மென்று சுருங்கச் சொல்லலாம். இவ்வாறு மனந் திரும்பினோர், ஓராண்டில் அல்லது ஈராண்டில் இயற்கை அன்னையின் திருவருளை ஓரோவழியாதல் பெற்று, ஒருவாறு நலனுறலாம்.
இடையில் உடல்நலனைக் கெடுத்துப் பின்னை ஏன் இடருறல் வேண்டும்? இடரினின்றும் நீங்க ஏன் அங்கும் இங்கும் உழலல் வேண்டும்? இளமை தொட்டு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தும் பெண்ணே மேன்மையடைவாள். அவள் பெறற்கரிய இன்பத்தைப் பெறுவாள். அதலால், எக்காரணம் பற்றியுஞ் செயற்கைக் துறைகளில் படியாது பெண் மக்கள் இயற்கை வாழ்வு நடாத்துவார்களாக.
எரி நோய்:- மேற்குறிப்பிட்ட செயற்கைத் துறைகளில் வீழாது, வேறு பல தீத்துறைகளில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்டு, உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளும் பெண்ணினமும் உண்டு. இவ்வுலகில் வெறுக்கத்தக்க உயிர்கள், பன்றிகள் என்று சிலர் கூறுப. அவற்றினும் இழிந்தன இந்நோயுருவங்கள். உயர்திணைப் பெண் தெய்வங்களை அஃறிணை “உருவங்கள்' என்று சொல்லலும் நேர்ந்தது.
பெண்பிறவி தாங்குவோர் அனைவரும் வாழ்வில் வெற்றி பெறுகிறாரில்லை. சிலர் வழுக்கி வீழ்கின்றனர். பெண்பிறவி தாங்குவது மட்டும் பெண்மை கூட்டாது. பிறவிக் கேற்ற நலனெலாம் மலர நல்வழியில் வளர்ந்து தெய்வநிலை பெறுபவளே பெண்ணெனுஞ் சொற்கு உரிய பொருளாவள். ஒருவனுடன் வாழ்வு நடாத்திக் கடவுள் படைப்புக்குத் துணைபுரிய வழங்கப் பட்ட இன்ப உறுப்பைக் கூடாவொழுக்கத் தாலும் வேறுபல தீயவழியாலும் புண்படுத்தி, எரியாக்கித்தான் இடர்ப்படுவ தோடு, பிறரையும் பின்வரும் உலகையும் இடர்ப்படுத்தும் ஒருத்தி எங்ஙனம் பெண் அவள்? அவள் தாய்மைக்குரிய பெண்மை இழந்த பாவியல்லளோ? அவளை அஃறுிணையின் பாற்படுத்துவது தவறாகாது.
அப்பாவி உருவிலும் உறுப்பிலும் வெம்மை கொழுந்து விட் டெரியும். அவ்வுருவை ஒரு நெருப்பு மரம் என்று கூறலாம். அதைக் தொட்டாலும் போதும் நோய்த்தி பற்றிக் கொள்ளும். ஐம்பூதத்துள் ஒன்றாகிய தீயின் சூட்டால் நேரும் புண்ணாதல் ஆறிவிடும். பாவிப் பெண்ணின் தீப்புண்ணுக்கு ஆறுதலில்லை. அத்தீயிடை வீழ்ந்து வருந்து வோர்நிலை இரங்கத் தக்கது. உயிர்நிலையினின்றும் எழும் வெம்மை, மூளையையுந் தாக்கி, வேறு பல உறுப்புக்களையுங் கலக்கி, இளகச் செய்யுங் கொடுமையை என்னென்று இயம்புவது? தண்மைப் பெண், வெம்மைப் பேயானாள். பசிய மருதம், பசுங்கள்ளியையும் எரிக்கும் பாலையாயிற்று.
உயிர் முட்டை
இப்பெண் ஏன் பிறந்தாள்? ஊரை அழிக்கவா? இவள், தானும் வெம்மையில் வேகிறாள், மற்றவரையும் வேக வைக்கிறாள். இவள் கருவில் உயிர்முட்டை நிலவுங்கொல்! நிலவி வருங்கொல்! அஃது எரிந்து கரிந்தன்றோ போகும்? ஓழுக்கங் காவாதொழிந்த மதியீனம் இப்பொழுது “மகளுக்கு” விளங்கும்! அகவே, ஒருவனுடன் வாழும் ஒருத்தியே நலனுடையா ளென்க.
ஓழுக்கந்தவறி வீழ்ந்த பெண்மக்கள் நலனுறுவது எங்ஙனம்? இவர்கள் விடுதலை அடையக் கொள்ளும் பேராவலுக்கு அளவில்லை. இவர்கள் எவ்வழியில் முயன்றாலும் கறந்த பாலாகப் போவதில்லை; ஆயினும், தக்க கழுவாய் தேடின், ஒருவழியில் துன்பமின்றியாதல் வாழ்தல் கூடும்.
தொடக்கத்திலேயே கழுவாய்
வெள்ளை, கொறுக்கு, மேகம் முதலிய கொடுநோய்கள் தலைகாட்டும்போதே, பெண் எச்சரிக்கையாயிருந்து, இயற்கை வழி வாழ்வு நடாத்தினால் ஒருவாறு எரியைத் தணிக்கலாம். முதலாவது - நோய் தலைகாட்டும் போதே- பெண்மக்கள் பிறர் சேர்க்கையை அறவே முற்றுந்தொலைத்தல் மனந்திருந்துவதற்கு அடி கோல்வதாகும். நோயுடையார்க்கு வெம்மைக் கிளர்ச்சி அதிகம். அதன் தூண்டுதலுக்கு எக்காரணம் பற்றியும் அவர் எளியராதல் கூடாது. உள்ளத்தில் உறுதி கொண்டு, உள்ளும் புறமும் பற்றியுள்ள வெம்மையைக் தணிக்க அவர் முயல்வாறராக. இதற்கு இரு வழியுண்டு. ஒன்று இயற்கை வழி; மற்றொன்று மருந்து வழி. இயற்கை வழிகளில் தலையாயது நோன்பு அதாவது விரதம். நோன்பு புண்டு, நீர் காற்று ஞாயிற்றொளியில் படிந்து, பொருந்திய உணவுகொண்டு வாழ்வோரது வெம்மை ஒருவாறு தணியும். இவ்வழி நிற்க இயலாதார் அநுபவத்திற் சிறந்த மருத்துவரிடம் போந்து மருந்து உண்பது மாண்பு. மருந்தினும் இயற்கை முறையே சால்புடையது. நோய் நீங்கப் பெற்ற பின்னா் நல்வழியில் காலங்கழிப்பது பெண்மைக்கு அழகு. பெண்ணோய் உலகிடை அருகுநாள், உலகம் விடுதலை அடையும் நாளாகும்.
மாதப் பூப்பு : செயற்கை நரகங்களில் வீழாமலும், வேறு பல கூடாஓமுக்கங்களில் தோயாமலும் தன்னைக் காத்து, இயற்கை அறத்தை நடாத்திப் பிள்ளைப் பேறு முதலிய பேறுகளையடைய உடலை ஓம்பும் பெண்ணே பெண்ணினல்ல நங்கையாவள். உலகை ஈன்று வளர்க்குந் தாய், பெண்ணாகலான், அவள் உடல்நலனைப் பெரிதும் பேணுதல் வேண்டும்.
உடல்நலனை நல்ல வழியில் பேணிவரும் பெண், திங்கள் தோறும் ஒழுங்காகப் பூப்பெய்துவள். மாதப்பூப்பு, மாதவிடாய், மாதருது, வீட்டுத்தூரம், வீட்டு விலக்கு, தலைமுமுக்கு, தீட்டு முதலிய யாவும் ஒரு பொருளுடையனவே. திங்களுக்கு ஒருமுறை நிகமும் சூதக வெளியீடு பூப்பென்பது. அவ்வெளியீடு இருபத்தெட்டு நாளுக் கொருமுறை நிகழல் இயல்பு. உடற்கூற்றுக்கு ஏற்றவண்ணம், சிலருக்கு இருபத்தேழாம் நாளிலும், சிலருக்கு இருபத்தொன்பது முப்பதாம் நாளிலும் சூதகம் வெளிப்படும். இவ்வேற்றுமை இயற்கை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு அவ்வக் கால எல்லைக்குள் பூப்புறல் வேண்டும். அதில் மாற்றமும் பிறழ்ச்சியும் நிகழ்வது நல்லுடலுக்கு அறிகுறி யாகாது. சூதகம் வடிதல் நான்கு ஐந்து நாளுக்குள் நிற்றல் நல்லது; அதற்கு மேற்பட்டு வடிதல் நல்லதன்று. உடற்கூற்றுக்குக் தக்கவாறு சிலநாள் கூடலும் குறைதலும் உண்டு. மாதவிடாயில் ஓழுங்கீனம் நிகழின், உடனே அதைப் போக்கி, ஒழுங்கில் கொணர முயல்வது பெண்மக்கள் கடமை.
பூப்பின் ஒழுங்கின்மைக்குக் கூறப்படுங் காரணங்கள் பலப்பல. ஓழுங்கின்மைத் திறங்களும் பற்பல. அவற்றை மருத்துவ நூல்களிற் காண்க.
இளமை தொட்டு, ஒழுக்கங் காத்து, உணவு உறக்கம் முதலியவற்றில் ஏற்றமிறக்க-மின்றி, அவைகளை அளவாக் கொண்டு, முறையாக உடற்பயிற்சி செய்து, இயற்கைக்கு அரணாமாறு வாழ்ந்து வருவோர்க்கு மாதவிடாயில் தவறுதல் நிகழாது. மாதப் பூப்பின் ஒழுங்கு பெண்ணின் வாழ்வின் ஒழுங்காகும். அதலால், மாதவிடாயில் தவறுதல் நிகழ்ந்ததும் பெண்மணி, தக்க மருத்துவர்பால் சென்று, உற்ற குறைபாட்டை முறையிட்டு, அவர்வழி நின்றொமுகி, அதை ஓழுங்குபடுத்திக் கொள்வாளாக.
மரஞ்சுற்றல், மலையேறல் முதலிய பயிற்சிகள் நல்லன.
பிறழ்ச்சி : போதிய பயிற்சியின்மையும், ஒரே இடத்தில் கிடத்தலும், மலச்சிக்கலும், இன்ன பிறவும் பெண்மகளின் கருஉறுப்பை இடம் விடுத்துச் சரியவோ, ஏறவோ, தாழவோ செய்யும். இதற்குச் சிறந்த காரணம் உடலில் போதிய உரம் இன்மை என்று பொதுப்படக் கூறலாம். பிறழ்ந்த உறுப்பைத் தக்க மருத்துவரைக்கொண்டு உடனே ஓழுங்குபடுத்தல் வேண்டும். உறுப்பு ஓழுங்குபட்டதும் உடற் பயிற்சியானும், நல்லுணவானும், பிற இயற்கை முறைகளானும் உடலை நலனுறச் செய்தல் அறிவு.
கருப்பையின் பிறழ்ச்சியை உணராது வாளா கிடந்தால் பின்னர்ப் பலதிற இன்னல்கள் விளையும். சிலபோழ்து சத்திரஞ் செய்தலும் நேரும். கருப்பையின் பிறழ்ச்சியை உணராது, “பிள்ளைப் பேறில்லையே” என்று வருந்தி வருந்திச் சிலர் ஏங்கிக் கிடப்பர். சில நாயகன்மார் மறுமணஞ் செய்ய முந்துவர். இயந்திர காலத்தில் வாழும் இக்காலப் பெண்ணுலகிற்குக் கருப்பைப் பிறழ்ச்சி மிக இயல்பாகிவிட்டது. ஒரே இடத்தில் கிடந்து, எந்நேரமுந் தின்று, போகந்துய்த்திருந்தால் கருப்பையும் நெகிழும்; பிற உறுப்புக்களும் தளரும். எல்லா நலன்களுக்கும் உடற் பயிற்சி, நீராடல், காற்றில் உலவல், ஞாயிற்றொளியில் நிற்றல், பொருந்திய உணவருந்தல், போகத்தில் அளவாயிருத்தல் முதலிய ஒழுங்குமுறைகள் தேவை.
மலச்சிக்கல் : மலச்சிக்கலைப் பற்றி இந்நூற்கண் பல இடங்களில் ஒவ்வொரு முறையில் குறிப்பிட்டு வருகிறேன்; ஈண்டுஞ் சில குறிக்கிறேன். உறங்கி எழுந்ததும் அன்றாடம் மலங் கழித்தல் வேண்டும். மலம் முற்றுங் கழியாது, சிக்குற்றுத் தங்குமேல், அது நஞ்சாசிப் பலதிற நோய்களை உண்டு பண்ணும். ஏறக்குறைய எல்லா நோய்களையும் பிறப்பிப்பது மலச்சிக்கல் என்பதை ஆராய்ச்சியிற் காணலாம். ஆதலால், மலச்சிக்கல் உறாதவாறு காப்பது நோய் வரவொண்ணாதவாறு தடுக்க முயல்வதாகும். உடற்பயிற்சியில் கவலை செலுத்தாது சோம்பிக்கிடத்தல், பொருந்தா உணவருந்தல், மீதூண் கொள்ளல், கண்விழித்தல், அடிக்கடி மருந்துண்ணல் முதலிய வாற்றான் மலச்சிக்கல் உறும். அளவு மீறிய போகத்தாலும் மலச்சிக்கல் நேர்வதுண்டு. மலச்சிக்கலைப் போக்க அன்றாட உணவு, உறக்கம், பழக்க வழக்கம் முதலியவற்றை ஓழுங்கு படுத்துவது தற்காப்பாகும். உடற்பயிற்சி இன்றியமையாதது. பழவுணவு மலச்சிக்கலைப் போக்கும். போதிய அளவு நீர் அருந்தல் மலச்சிக்கலுக்குப் பெருமருந்து. கீரை, கத்திரிப்பிஞ்சு, வெண்டைப்பிஞ்சு, வெங்காயம், தக்காளி, கடுக்காய் முதலியன உண்டுவரின் மலமிறங்கும். எம்முயற்சியானும் மலங்கழியா தொழியின் எனிமாவால் அதைக் கழித்தால் துன்பம் நீங்கும். காலையில் நறு நீராடினால் நலம்விளையும். நீராடல் முன்னருஞ் சொல்லப்பட்டது. ஆற்றுநீர் ஊற்றுநீர் இல்லாத இடங்களில் தொட்டியில் நீர் நிரப்பி, அதில் சிறிது நேரம், ஐந்து அல்லது பத்துநிமிடம் - காலும் தலையும் நீரில் தோயாதவாறு, கொப் பூழுக்குக் கழ், நீர் நிற்குமாறு அமர்ந்து, பின்னர்த் தலைமுழு கலாம். இது கூன் என்பார் கொண்ட முறை. இது குடருக்கு வலிமையூட்டி, குருதியைப் பெருக்கி, மலக்கழிவை ஒழுங்கு படுத்தும்.
வியர்வை: அன்றாடம் - அன்றாடம் வியர்வை இறங்குதல் உடல் நலனுக்குத் துணைபோகும். வியர்வை இறங்காமல் உள்ளே தங்கித் தேங்குவது உடலில் நஞ்சைச் சேமிப்பதாகும். உழைப்பானும், உடற் பயிற்சியானும் வியர்வையைச் கழிக்கலாம். வியர்வை எளிதில் இறங்காவிடின், வேது அதாவது நீராவி பரிடித்தல் நன்று. தலைநோயால் பரீடிக்கப் பட்டிருக்கும்போது சிலர் வேது பிடித்து நோய் நீக்குவார். தோய் நீக்கத்துக்குக் காரணம் என்னை? (வெளியே வாராது) உள்ளே தங்கித் தேங்கிக் கிடந்த நச்சுநீர் வெளிவந்தமையாகும். வியர்வை க௫சியா இடங் களில் குருதி யோட்டங் குறையும். நாளடைவில் அவ்விடம் மரத்துப் போகும். வேது பிடித்தலால் நஞ்சை இறக்கலாம். வியர்வை சொட்டச்சொட்ட வேலை செய்வது விழுப்பம். உறக்கத்துக்குப் போம்போதும், உறக்கத்தினின்றும் எழும்போதும் உடலை நன்றாகக் தேய்த்துக் கொள்வதால் செழுமை சிறக்கும். பின்னே தூய நீராடிப் புற அழுக்குகளைப் போக்கல் புனிதம்.
பிராணாயாமம்: பிராணாயாமம் அட்டாங்க யோகங்களுள் ஒன்று. பண்டைக்காலத்தில் நம் நாட்டார் ஒவ்வொருவரும் பிராணாயாமத்தை ஐந்தாம் ஆண்டில் தொடங்கிப் பதினாறாம் ஆண்டில் முற்றுறச் செய்து தேர்ச்சி பெறுவர். இப்பொழுது பிராணாயாமம் ஏட்டில் - பாட்டில் - மட்டுங் கிடக்கிறது. இலட்சத்தொருவர் பிராணாயாமஞ் செய்வதும் அரிதாயிற்று. உடலோம்பு முறைகளில் பிராணாயாமம் உயிர் போன்றது. பிராணாயாமத்தில் தேர்ச்சி பெற்ற ஒருத்தியையோ ஒருவனையோ நோய் என் செய்யும்? பிணி என் செய்யும்? யமன்தான் என் செய்வன்? அப்பயிற்சியை நமது நாடு இழந்தது! பெரிய உயிர்ச் செல்வத்தை நாடு இழந்தது!
இப்பொழுது பிராணாயாமத்தை முறையாகச் செய்வோர் அரியர். ஏடுகளைப் படித்து இரேசக பூரக கும்பகத்தி விறங்குவது தவறு. பிராணாயாமத்தைப் பிழைபடச் செய்தால் பல கேடுகள் விளையும். தக்கார் மாட்டுக் கேட்டுப் பிராணாயாமத்தில் தலைப்படுவது அறிவுடைமை. தூய நறுங்காற்றை மூக்கின்வழி முறையே ஈர்த்து, நுரை ஈரற் குழல்களில் அதை நிரப்பிச் சுழற்றி, வெளிவிடும் (Breathing Exercise) பயிற்சி போதும். இது பிராணயாமத்தின் ஒரு கூறு. நாடோறும் இதைச் செய்து வருவோர்க்கு நோயணுகாது; ஆயுள் பெருகும்.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
கறுப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே
என வரூஉந் திருமூலர் திருவாக்கை ஓர்க.
இப்பயிற்சியை நகரங்களில் - சாக்கடை, மலஅறை முதலியன சூழ்ந்து நாற்றம் வீசும் இடங்களில் - செய்தல் கூடாது; நச்சுக் காற்று வீசாத இடங்களில் அமர்ந்து செய்வது முறைமை. கடலோரம், மலையுச்சி, பரந்த வெளி, காடு முதலிய இடங்கள் பிராணாயாமத்துக்கு உரியன.
நமது நாட்டுப் பெண்மக்கள் பெரிதுங் காற்றுள்ள இடங்களில் வாழ்வதில்லை. அவர்கள் புழுங்கிய அறைகளில் வாழ்கிறார்கள்; கரிவாயு செறிந்த அடுப்பங்கரைகளில் உறங்குகிறார்கள். கிராமத்தில் வயல்களில் வேலை செய்யும் பெண்மக்கள் உடல் நிலையையும், நகரங்களில் மாடியில் ஏறி நிற்கும் பெண்மக்கள் உடல் நிலையையும் உற்று நோக்கினால் வேற்றுமை காணலாம். முன்னவரிடத்தில் அழகுத் தெய்வம் ஆனந்தத் தாண்டவம் புரியும். பின்னவர் உடலில் பிணியென்னும் பேய் உறங்கும். காரணம் என்னை? அவர் நறுங்காற்று வீசும் வெளியில் வேலை செய்கின்றனர்; அக்காற்றை நன்கு முகர்கின்றனர். இவர்க்கு அவ்வுணவேது? காப்பி உப்புமா என்னும் நஞ்சல்லவோ இவர்தம் உணவு? அவர் இயற்கைச் செல்வத்தில் புரள்கின்றனர்; இவர் செயற்கைச் ’செல்வத்'தில் கிடக்கின்றனர். முன்னையது வீடுபேறு; பின்னையது நரகம். இது நிற்க.
பெண்மகள் புழுங்கிய அறையில் என்றும் சிறைபட்டுக் கிடப்பதும், அடுப்பங்கரையில் பெரிதும் அடைபட்டுக் கிடப்பதும் தொலைதல் வேண்டும். பெண்மகள், காற்றும் ஒளியும் வீசும் இடங்களில் உலவியும் உறங்கியும் பொழுது போக்குவாளாக; காற்றை நன்றாக மூக்கின்வழி முகர்ந்து முகர்ந்து விடுவாளாக. அஃது உடலிலுள்ள ஊறுகளைப் போக்கி வளஞ்செய்யும்.
சிறுநீர் : “சிறுநீர்” என்பது மூத்திரம். பெண் மக்களிற் பலர், காலத்தில் மலசலங் கழியாது அடக்குதல் உண்டு. அதனால் மலச்சிக்கலும், நீர்கட்டும் நேர்கின்றன. நீர் அடைப்பால் குண்டி க்காய்க்கு ஊறு நிகமும். மூத்திரப்பை தூய்மை யாயிருக்கு மாறு அதைக் காத்தல் வேண்டும். சிறுநீர் அடக்கும் பயிற்சி மிகக் கொடிது! கொடிது! நாடோறும் போதிய நீர் பருகி, வேளைக்கு வேளை சிறுநீர் பெய்தால் நோயணுகாது. பெண் மக்கள் மல சலத்தை அவ்வப்போது கழித்து வருவார்களாக.
பித்தம் : பித்தச் சரப்பிற்குப் பிறப்பிடம் ஈரல் (Liver) ஈரலின் இயக்கத்துக்கு எவ்வித இடையூறும் நேராத முறையில் வாழ்வு நடாத்தல் நன்மை. அதன் இயக்கங் குன்றினால் முழு உடலுக்குங் கேடு விளையும். ஒருவரது உடல்நிலை அவரது ஈரல்நிலையைப் பொறுத்து நிற்கிறது. பித்தச் சுரப்புக் குன்றினால் உண்ணும் உணவு செரிப்பதெப்படி? செரியாமல் உணவு கிடப்பதால் விளைவ தென்னை? இரத்த ஓட்டங் குன்றி மற்றக் கருவிகளின் இயக்கமும் குலையும். ஆதலால், ஈரல்நிலைமீது பெருங்கவலை செலுத்துவது மக்கள் கடமை. காப்பி தேயிலை கொக்கோ முதலிய பொருந்தாப் பானங்கள், கள் முதலிய குடிகள், உறக்கமின்மை, புலால் உணவு முதலியன ஈரல் இயக்கத்தைக் கெடுக்கும்; ஈரலை மலரச் செய்யும்; அதை இடம் விடுத்துப் பெயர்ப்பிக்கும். மேற்கூறிய பானங்கள் முதலியவற்றைக் கனவிலும் மறந்துங் கருதலுங்கூடாது.
நோன்பு: நோன்பைப் பற்றி இந்நூற்கண் சில இடங்களில் சுட்டிக்சுட்டி வருகிறேன். நோன்பு கொள்ளும் முறையை யாண்டுஞ் சுட்டிக் குறிப்பிட்டேனில்லை. அதலால், அது குறித்து ஈண்டுச் சிறிது சொல்கிறேன்.
நோன்பெனினும் விரதமெனினும் ஓக்கும். உலகிலுள்ள பல நாடுகளினும் நமது நாடு நோன்பில் பேர் பெற்றது. நோன்பின் மாண்பைக் கூறாத புராணங்கள் இல்லை என்று கூறலாம். பண்டை மக்கள் நோன்பின் பெற்றியைச் செவ்வனே உணர்ந்து வாழ்ந்தார்கள், பெண்மக்கள் பெரிதும் நோன்பில் ஈடுபட்டு வந்தார்கள். இன்னும் அது பெண்மக்களிடைப் பெரிதும் சொல்லளவிலாதல் நிலவியிருத்தல் கண்கூடு.
இந்நாளைய விரதம்
பெண்மக்கள் கடைப்பிடித் தொழுகும் இந்நாளைய “நோன்பு” வெறும் பெயர் அளவினதன்றிப் பொருள் அளவின தன்று. “விரதம் விரதம்' என்று காலையும் இரவும் விலாப் புடைக்கப் பலகாரங்களைத் தின்பதும், பகலில் வயிறு கிழிய அறுசுவை உணவை அடைப்பதும் பொருந்தியனவல்ல. இம் மூறைமை நோன்புக்கு முற்றும் மாறுபட்ட தென்பதைப் பெண் மக்கள் உணர்வார்களாக.
விரதம் எற்றுக்கு?
நோன்பு எற்றுக்கிருப்பது? உடலில் சேரும் பிணியைப் போக்குதற்கு நோன்பிருப்பது வழக்கம். நோன்பால் உள்ளுறுப்புக்கள், சுமை நீங்கப் பெற்று, விடுதலையடைந்து, தத்தங் கடன்களை ஊக்கத்துடன் நிகழ்த்தும். அன்றாடம் உண்ணப்படும் உணவில் செரியாமல் எஞ்சி நிற்கும் நஞ்சையும் பிறவற்றையும் வெளிப்படுத்தும் ஆற்றல் நோன்புக்கு உண்டு. அவை வெளியாகாமல் உள்ளே கிடக்குமேல் பலதிற நோய்கள் தோன்றும். மருந்து உண்பதால் நோய் சிறிது ஓதுங்கி ஒடுங்கும். மீண்டும் பழையபடியே அஃது உயிர்த்தெழும். பொருந்தா மருந்துகள் வேறு கேடுகளையும் நிகழ்த்தும். ஆதலால், மருந்து உண்பதினும், நோன்பால் உறுப்புக்களுக்கு உற்றுள்ள பிணியைப் போக்கி, நோயைக் கழிப்பது நலன்.
முறை
அவரவர் தத்தம் உடல் நிலைக்கேற்ற வண்ணம் வாரத்திலோ மாதத்திலோ ஒரு நாளோ இரு நாளோ இன்னுஞ் சில நாளோ கணித்து நோன்பிருக்க முயல்வது சிறப்பு. நோன்புக்கு முன்னாட் பகல் உண்டு கழித்த பின்னர், அன்றிரவு எவ்வித உணவும் உண்ணலாகாது; நீர் அருந்துவது நன்று. அடுத்த நாள் வைகறைத் துயிலெழுந்து காலைக்கடன்களை முடிப்பது முறைமை. காலையில் மலஞ் செவ்வனே கழியா தொழியுமேல் எனிமாவால் அதை முற்றும் போக்கலாம். பின்னர் நீராடி, அமைதியும் - காற்றும் - ஞாயிற்றொளியும் - நிலவிப் படரத்தக்க ஓரிடத்தில் அமர்ந்து அன்பு வடிவான கடவுளை நினைந்திருத்தல் வேண்டும். இஃது உடலையும் உயிரையும் தூய்மைப் படுத்தும். அடிக்கடி - நெஞ்சில் வறட்சியுண்டாகும் போதெல்லாம் - ஒருவிதச் சிறுமயக்கம், இளைப்பு, களைப்பு தோன்றும் போதெல்லாம் - சிறிது சிறிதாக - நீர் அருந்தினால் ஊக்கம் பிறக்கும். நீரருந்தாது விரதமிருப்போர்க்கு, வெஞ்சுரம், இரத்தக் கழிவு முதலியன தோன்றும், உள்ளுறுப்புக்கள் வறண்டு போகும், பலதிற இன்னல்கள் விளையும். அதலால், நீரருந்தலில் கவலை செலுத்தல் நோன்பினர் கடமை. நீருடன் சிறிது உப்புச் சேர்ப்பது செம்மையாம்.
விரத காலத்தில் நோன்பினர் எவருடனும் பேசுதலாகாது. நோன்பினர் உள்ளத்தில் பொறாமை வெகுளி முதலிய எரிகள் எக்காரணம் பற்றியும் உறுதல் கூடாது. அவை யுறுத்தும் எதன் கண்ணும் அவர் ஈடுபடுதலாகாது. பொறாமை முதலியன நோன்பைக் குலைத்து, உடலுக்கு ஊறுசெய்யும்.
நாள் முழுவதும் நீர் அருந்தி, நோன்பிருந்து, மறுநாள் காலையில் எழுந்து, வழக்கம் போலக் கடன்களை முடித்தல் வேண்டும். முன்னாள் உணவு கொள்ளாமையால் மலம் வாராமை கண்டு வாளா இருத்தல் கூடாது. எனிமா உபயோகித்தால் அழுக்குகள் வந்து விழுவது காணலாம்.
நோயாளர் முறைப்படி நோன்பைப் பலநாள் தொடர்ந்து கடைப்பிடித் தொமுகலாம். நோயில்லாதார் வாரத்துக்கு ஒருநாள் அல்லது திங்கட்கு ஒருநாள் நோன்பிருத்தல் சாலும்.
நோன்பு கழித்து, உணவு கொள்ளப் புகும்போது, மிக எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும். திடீரெனக் கடினமான உணவு கொள்வது மடமை. நோன்பு கண்ட உறுப்புக்களில் திடீரெனச் சோறும் - காய் கறிகளும் - கிழங்குகளும் - விழுதல், அவ்வுறுப்புக்களின் கடமைகளைக் கட்டுப்படுத்தி நோய் செய்யும். ஆதலால், படிப்படியே உணவைப் பெருக்கல் நலன். நீர் அருந்தி, பின்னைப் பழரச மருந்தி, பின்னை நீர்மோர் அருந்தி, பின்னை நீர் கலந்த பாலருந்தி, பின்னைக் கஞ்சி போன்ற உணவருந்தி, வழக்க உணவு கொள்வது பொருத்தம்.
குரு இயற்கை
நோன்பு வாயிலாக உடலைச் செம்மை வழியில் ஓம்பி வரலாம். நோன்பிற்குப் போதகாசிரியர் வேண்டுவதில்லை. இரண்டொரு முறை பயிற்சிசெய்வோர்க்கு இயற்கை அன்னையே வழிகாட்டுங் குருவாவள். இஃது அநுபவத்தில் உணரக் கிடப்பது.
நல்வழியில் உடலோம்பி நலனுற்று வாழ்வது பெண் மக்களுக்கு அழகு. நோயில்லாமை பெண்மைக்கு அறிகுறி. பெண்மையில் நோய் நுழைவது பெண்மைக்குரிய தாய்மையைக் கெடுப்பதாகும். பெண்மக்கள் கருவுயிர்க்கும் பேறுடையராகலின், அவர்கள் ஆண் மக்களினும் உடல்நலனைப் பெரிதும் பேணுவார்கள். ஆண்மக்களும் பெண்மக்கள் உடல்நலன் மீது கருத்தை இருத்துவார்களாக.
பெண்மகள் கருவுற்றுள்ள போதும், கருவுயிர்க்கும் போதும் எவ்வளவோ ஜீவசத்துக்கள் குறைகின்றன. அவைகளுக்கு ஈடு செய்யும் முறையில் பெண் தன்னுடலை ஓம்புதல் சிறப்பு. “கர்ப்பத்தான் மங்கையர்க்கு அழகு குன்றும்” என்று நம்மவர் பாடுவது வழக்கம். இவ்வழக்கைப் பொய்ப்படுத்துவது மக்கள் கடமை. கருவுயிர்த்த பின்னரும் பெண்மகள் கன்னிக் காட்சியையே வழங்கும் நிலையில் இயற்கை வாழ்வு நடாத்தல் இனிமை. அழகு என்னுந் தெய்வம் பெண்மக்களை விடுத்து என்றும் அகலலாகாது. அவர்கள் மார்புத் திரட்சி, அவர்கள் உடல் நலனுக்கு அடையாளம். அது கெடாதவாறு பெண் வாழ்வு உலகில் நடப்பதாக.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. - திருமூலர்
------
11. பதியிலார்
(பெண்ணுலகின்கறை – பதியிலாருள் பிரிவு – பதியிலார் வரலாறு – புராணம் – சரித்திரம் – தேவடியால் – தாசிப் பெயர் விளக்கம் – தாசி வேசையானது – கோயிலில் கூடாவொழுக்கம் – ஆண்மக்கள் கடமை – குலப் பெண்டிர் கடமை – பொருட் பெண்டிர் இன்பம் இன்பமாகாது – அன்பிலாக் கலவியால் இருபாலர்க்குங் கேடு – பதியின்றி வாழ்தலிலுள்ள கேடுகள் – ஒருவனுடன் வாழல் – வைப்பாட்டியா யிருத்தலும் கூடாது – பதியிலாரின் உலகைத் தூய்மைப்படுத்தல் – ஒருத்தியுடன் வாழும் நோன்பு – மகாத்மா காந்தியின் பொன்னுரைகள் - திருவள்ளுவர் கருத்து – செல்வரால் பெண்ணலுகங் கெடல் – இயற்கை இறை நோக்கம்)
பதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின் வேறல்ல - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும் - நாலடியார்
பெண்ணுலகம் ஒரு தெய்விகமானது. அதன் கண்ணும் ஒரு கறை படிந்திருக்கிறது . அக்கறை ஓழியும் நாள் எந்நாளோ தெரியவில்லை. ஆணுலகம் தூய்மையறு நாளே அந்நன்னாளென்க.
பெண்ணுலகில் படிந்துள்ள கறை யாது? அது பதியிலார் கூட்டமென்பது. பதியிலார் யாவர்? பதியில்லாத அனைவரையும் பதியிலார் என்று உலகம் அழைக்கிறதோ? இல்லை. நோயாளர் பலர், பேடிகள், படைப்பில் சில குறைபாடுடைய பலர் முதலியோர் பதியின்றி வாழ்கின்றனர். இவரைப் பதியிலார் என்று உலகம் உரைப்பதில்லை. பின்னை எவர்க்கு உலகம் பதியிலார் என்னும் பட்டஞ் சூட்டியிருக்கிறது? குறிப்பிட்ட பதி அதாவது நாயகன் இன்றிப் பலருடன் கூடிப் போதுபோக்கும் பெண்ணினத்தார்க்கு உலகம் அப்பட்டஞ் சூட்டியிருக்கிறது. பதியிலார்க்குப் பொது மகளிர், வரைவின் மகளிர், கணிகையர், வேசையர் முதலிய பெயர்களும் வழங்கி வருகின்றன.
பதியிலாருள் பிரிவு
வயிற்றுப் பிழைப்புக்கென மானம் விற்கும் பதியிலாக் கூட்டம் போக, வேறு பதியிலாக் கூட்டங்களும் உண்டு. இக் கூட்டத்தார் நற்குடியிற் பிறந்தவராகவும், செல்வமுடையவ-ராகவும் கல்வியுடையவராகவும், உயர்பதவியிலுள்ளவராகவும் இருப்பர். இவர், இக்கால நாகரிகக் கள்ளுண்ட மயக்கால் பதியிலராவோரா். சில பெண்மக்கள் பல காரணம் பற்றித் திருமண வாழ்வை ஏலாது, வேட்கை மீதூரும்போது, சிலருடன் கூடி விளையாடிக் களிக்கிறார்கள். ஒருவேளை கருவுறுமேல் சிறிதும் இரக்கமின்றி அவர்கள் அதைச் சிதைக்கிறார்கள். இக்கூட்டத்தாரும் இவரனைய பிறரும் பதியிலார் இனத்தைச் சேர்ந்தவராவர்.
இப் பதியிலாக் கூட்டம் உலகில் யாண்டும் இருக்கிறது. இக்கூட்டமில்லா இடமேயில்லை. எந்நாட்டிலும் எவ்வூரிலும் இச்சேனைகளைக் காணலாம்; எல்லா வகுப்பிலும் இக்குழுவினர் இருக்கிறார்; நமது நாட்டிலும் இக்கூட்டத் தாருளர்.
அங்ஙனமாக, நமது நாட்டில் ஒரு சாதியார்க்கு மட்டும் பதியிலார் என்னும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பிறப்பை யொட்டிச் சாதிகள் வகுக்கப்-பட்டமையான், இழிதொழிலுக்கும் பிறப்பையொட்டி ஒரு சாதி வகுக்கப் பட்டது. என்ன கொடுமை!
பிறப்புவழிச் சாதி
நீண்ட காலப் பழக்கத்தால் சாதிப் பதியிலாரும் தமது இழிவை உணராது வாழ்கிறார். வேசைத் தொழிலும் வழி வழியாக நடந்து வருகிறது. வேளாளன் பிள்ளை வேளாளனாகசக் கருதப்படுவது போல, வேசியின் பெண்ணும் வேசியாகசக் கருதப் படுகிறாள். இது நாட்டின் சிறுமையைப் புலப்படுத்துகிறது. பிறப்புவழிச் சாதிகருதும் முறை என்றோ தொலையும்?
சாதிப் பதியிலாரைப் பற்றிப் பலப்பல கதைகள் புராணங்களில் சொல்லப்படுகின்றன. சரித்திர முறையிலுஞ் சில வரலாறுகள் சொல்லப்படுகின்றன. மற்றக் குலத்தார்க்கு வரலாறுகள் புனையப்பட்டதுபோல, இக்குலத்தார்க்குஞ் சில வரலாறுகள் புனையப்பட்டன போலும்! இவை யாவும் சரித்திரம், புராணம், கலை என்னும் பெயர்களால் நாட்டிடை உலவுகின்றன.
புராணம்
புராணங்களில் சாதிப் பதியிலார்க்குத் தோற்றுவாய் கூறப் பட்டிருக்கிறது. அன்னார் தெய்வத் தோற்றுவா யுடையா ரென்றும், அவ்வினத்தார் ஓவ்வொரு குடும்பத்தினின்றும் ஒவ் வொரு பெண்ணைக் கடவுள் பணிக்கென அர்ப்பணஞ் செய்ய வேண்டுமென்னும் வரமுடையாரென்றும், அப்பெண்கள் கடவுள் ஒருவரையே பதியாக்கொண்டு ஏனையோரைப் பதியாக் கொள்ளாமையால், அவர்கள் பதியிலார் என்று அமைக்கப் பட்டார்களென்றும், நாளடைவில் அவர்களிடைக் கூடா வொழுக்கம் நுழைந்துவிட்டதென்றுஞ் சொல்லப்படுகின்றன.
சரித்திரம்
கிரீஸ் தேசத்தில் கோயில்களிலும், அரண்மனைகளிலும் பதியிலாப் பெண்மக்கள் முறையே பணியாளர்களாகவும் தோழி மார்களாகவும் தொண்டு செய்து வந்தார்கள் என்றும், அவர்களிற் சிலர் இந்திய மன்னரால் வரவமைக்கப்பட்டனர் என்றும், அவர்தம் வழிவழித் தோன்றிய கூட்டத்தினரே பதியிலார் என்றுஞ் சரித்திரக்காரர் சிலர் செப்புகிறார்.
பதியிலார் வரலாற்றைப் பற்றி விரிந்த ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. பதியிலார் என்றொரு கூட்டம் நாட்டில் இருத்தல் உண்மை. அன்னார் இன்னும் கோயில்பணி செய்தலைக் கொண்டும், இழிதொழில் புரிதலைக் கொண்டும், மேற்போந்த கதைக் குறிப்புக்களைக் கொண்டும் வரலாற்றை ஒருவாறு ஊகஞ்் செய்யலாம்.
தேவடியாள் தாசி
ஒரு காலத்தில் திருமண வாழ்விற்கு உரிய ரல்லாத சில பெண்மக்கள் அரண்மனைகளில் தொண்டு செய்து காலங் கழித்து வந்தார்களென்பது தெரிகிறது. பண்டை நூல்களில் வேலைக்காரிக்குக் “கூனி' என்ற ஒரு பெயர் வழங்கி யிருத்தல் காண்கிறோம். அரண்மனை வேலையை விரும்பாத வேறு சிலர், ஆண்டவன் கோயில்களில் தொண்டாற்றப் புகுந்திருப்பர். அவருடன் வேறு சில ஊனமில்லாப் பெண்மணிகளுஞ் சேர்ந்து அண்டவன் அருள்பெறப் பணியாற்றியிருப்பர். இப் பழக்கத்தால் கோயில்களில் சில தொண்டுகள் பெண்மக்களுக்கென ஏற்பட்டிருக்கும். அத்தொண்டாற்றி வந்த பெண்மக்கள் “தேஅடியாள்”, “தாசி” என்று அமைக்கப் பட்டிருத்தல் வேண்டும். இச்சொற்களின் ஆட்சியால் அப்பெண்மணிகள் ஏற்ற தொண்டின் தன்மை நன்கு விளங்குகிறது. தேவனுக்குப் பணிசெய்யும் மகன் தே அடியான் - தாசன் - ஆகிறான், அப் பணிபுரியும் மகள், தேஅடியாள் - தாசி - அகிறாள்.
தாசி வேசையானது
ஆண்டவன் பணிக்கென வாழ்வு நடாத்திவந்த பெண்ணன்பர்கள், கோயில் அர்ச்சகர் - தர்மகர்த்தர் - முதலியவருடன் நெருங்கிப் பழகல் நேர்ந்தது. அப்பழக்கம் நாளடைவில் கூடா வொமுக்கத்தைக் கூட்டலாயிற்று. அன்று கோயில் தலைவர்களாக இருந்த ஆண் மக்கள் நிகழ்த்திய அடாத செயல், இன்று பெண்ணுலகையே கறைப்படுத்தி யிருக்கிறது. தேவனுக்கு அடிமை பூண்டோர் மற்றவர்க்கும் அடிமை பூண நேர்ந்தமையால், “தேவடியாள்”, “தாசி” என்னும் பெயர்கள் இழிபொருள் ஏற்கலாயின. இப்பொழுது அச்சொற்கள் குலமகளிரில் கடவுள் அடியவர்க்கு வழங்குவதில்லை. அவை விலைமகளிர்க்கே வழங்கி வருகின்றன. தொன்றுதொட்டு வரூஉம் வழக்கத்தால் இவ்வினத்தார் அண்டவன் பெயரால் பொட்டுக்கட்டி மானம் விற்கும் விலைமகளிராகிறார். இப் பழக்கம் நாட்டை விடுத்து அகலல் வேண்டும்.
கோயிலில் கூடா ஒழுக்கம்
விலைமகளிர், தேவடியாள் என்னும் பெயரால், இழி தொழிலுக்கெனப் பட்டாடை சுற்றி, அலங்கோல அணியணிந்து, ஆடும் ஆட்டமும் பாடும் பாட்டும் வெறுக்கத் தக்கன. ஓழுக்கத்துக்கு நிலைக்களனா யிருக்கவேண்டிய திருக்கோயில், கூடாவொழுக்கத்துக்கு நிலைக்களனாய் ஊரைக் கெடுப்பதாய் விட்டது. தாய்மை என்னும் பேறு பெற்றுத் தெய்வநிலை எய்துதற்குப் போந்த பெண்வடிவம், தீச்சேர்க்கையால் தன்னிலை மறந்து, மானம் விற்றுப் பொருளீட்டுங் குறிக்கொண்டு ஆடுகிறது; பாடுகிறது. அக்காட்சி கண்டு களிக்கும் மக்கள் மக்களா? நாட்டிற் பிறந்தவர்களா? அவ