pm logo

சமுத்திரம் எழுதிய
'என் பார்வையில் கலைஞர்'
(வாழ்க்கை வரலாறு)
பாகம் 2 (அத்தியாயம் 11-25)


en pArvaiyil kalainjar, part 2 (chapters 11-25)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சமுத்திரம் எழுதிய
'என் பார்வையில் கலைஞர்'
- பாகம் 2 (அத்தியாயம் 11-25)


Source:
என் பார்வையில் கலைஞர்
சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை - 600 004
முதல் பதிப்பு : டிசம்பர், 2000
விலை : ரூ. 60.
உரிமை : ஆசிரியருக்கு
----------
சிப்பிக்குள்ளே
1. நம்ம சமுத்திரத்திற்கு ஒரு நல்ல மாலையாக
2. சமுத்திரம் மேல் ஒரு உதய சூரியன்
3. கலைஞர் வழிக் காதல் கடிதங்கள்
4. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடி
5. கலைஞர் வீட்டில் ஒரு சமுத்திர கூச்சல்
6. அன்பாலயத்தில் ஒரு அதிகப் பிரசங்கிதனம்
7. சாணக்கிய காங்கிரசுக்கு சறுக்கிய அடி
8. காகங்களா கழுகுகளா ஒரு கவித்துவமான பதில்
9. பையிலிருந்து வெளிபட்ட ஒரு பூனை
10. கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கம்
11. அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ. பதவி
12. ராணித் தேனீக்கள், சாமானியத் தேனீ, டாமர் தேனீ
13. ஒன்றாகவா, ஒன்றாக்கியா ஒரு அலசல்
14. தமிழ் அக்காதெமி, வள்ளலார் கோட்டம் ஒரு குறிப்புணர்த்தல்
15. கண்களைக் கலக்கிய ஒரு கையறு சொல்
16. மஞ்சள் துண்டு ஒரு மஞ்சள் விமர்சனம்
17. சாண்ஏறி முழம் சறுக்கிய தேர்தல்கள்
18. தோழமை என்ற ஒரு சொல்லாக நம்பூதிரிபாத், கலைஞர்
19. தேரான், தெளியான் தீரா இடும்பன்
20. ஏகலைவன் - கலைஞர் - அர்ச்சுனன்
21. கலைஞர் - முத்தமிழ் அறிஞர் எப்பேர்பட்ட மனுசன்
22. கலைஞர், மூப்பனார் ஒரு தமிழர் இலக்கணம்
23. பொது சமுத்திரத்திற்குள் ஒரு புயல் வீச்சு
24. வைகுண்டர் தலைப்பாகை, வள்ளலார் வழிபாடு
25. தம்பிரான் தோழர் ஒரு பன்முகப்பார்வை
---------------------

11. அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ. பதவி

செல்வி. ஜெயலலிதா, முதலமைச்சர் ஜெயலலிதாவானார்.

தமிழகப் புதிய சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். பேரவையின் செய்தியாளர் மாடத்தின் முதல் வரிசையில், இதர செய்தியாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.

அந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியே கேவலமாக இருந்தது. காங்கிரஸ் உறுப்பினர்களும், தி.மு.க.வின் ஒற்றை உறுப்பினர் பரிதி இளம் வழுதியும் நிமிர்ந்த தலையோடு, நேர் கொண்ட பார்வையோடு பதவியேற்ற போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண்கிடையாகக் குப்புற விழுந்தார்கள். கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினர், அவர் காலில் கீழே விழும் போது அவரது வேத காம உச்சிமுடி, அம்மையாரின் பாதங்களில் தொடப்பைக் குஞ்சம் போல், கறுப்பு நிறத்தில் தெரிந்தது. ஆஜானுபாகு தோற்றம் கொண்ட அத்தனை பேரும், தமிழனின் சுய மரியாதை காக்கும் திராவிட இயக்கத்திலிருந்து வந்ததாகத் தம்பட்டம் அடிப்பவர்கள். சட்ட சபைக்குள்ளேயே குனிந்து விழுந்தால் நேரமாகும் என்று சொல்லி, அந்த அம்மாவின் காலில் தொப்பென்று விழுந்ததை, வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும் படம் பிடித்துத் தமிழனின் தன்மானத்தை உலகெங்கும் காட்டின.

பொதுவாக ஒருவர் காலில் இன்னொருவர் விழும் போது, விழுந்தவரை ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லித் தொழுகைக்குரியவர் தூக்கி விடுவது அல்லது தடுப்பதே இயல்பு. பெரியவர்கள் காலில் விழுகிறவர்களும், இலேசாகக் குனிந்து, அவர்களின் முட்டிக் கால்களைப் பட்டும் படாமலும் தொடுவார்கள். கால் நிமிடத்திற்குள் இது முடிந்து விடும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த மாபெரும் பிரதிநிதிகளோ, இரண்டு நிமிட நேரம், இந்த அம்மாவின் செருப்புக் காலில் முகம் போட்டுக் கிடக்கிறார்கள். இந்த அம்மையாரோ, அது ஒரு பெரிய விவகாரம் இல்லை என்பது மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு போக்குக் காட்டுகிறார். இந்த அவலமான கேவலத்தை இது வரை எந்த அமைப்பும் ஒரு இயக்கமாக எடுத்துக் கொண்டு, தமிழனின் தன்மானத்தை நிலை நிறுத்தப் போராடவில்லை. இந்த இலட்சணத்தில் 'தமிழன் உலகாண்டானாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றினானாம். இனமானம் உள்ளவனாம்'.

சேடப்பட்டி முத்தையா, அவர்கள் மாண்பு மிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதும், பேரவைக்குள்ளேயே நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா காலில் விழுந்து, சட்டப் பேரவையின் கவுரவத்தை உலகறியச் செய்து விட்டார். இதற்குப் பின்னர், பேரவைக்குள் ஜெயலலிதா நுழையும் போதும், வெளியேறும் போதும், சிறிது ஆசுவாசமாக அருகே உள்ள ஓய்வு அறைக்குச் செல்லும் போதும், சட்டப் பேரவை அதிமுக உறுப்பினர்கள் எழுவதும், உட்காருவதுமாக இருப்பார்கள். சேடப்பட்டியார் கூட எழுந்து நிற்காதது போலவும், அதே சமயத்தில் உட்காராதது போலவும் திரிசங்கு ஆசனத்தில் நிற்பவர் போல் நிற்பார். 19ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தான்த்தில் ஒரு அடிமையின் விலை இரண்டு எருதுகள் என்று பழைய வரலாறு கூறுகிறது. ஆனால், இங்கேயோ ஒரு அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ பதவி என்பது அதிமுக படைத்த புதிய வரலாறு.

முன்னதாக அதிமுக, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் துவக்க விழா, சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரே உள்ள கடற்கரைப் பரப்பில் நடை பெற்றது. ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் பங்கேற்றார்கள். அப்போது, ஜெயலலிதா, பேரவைக்குக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டட வேட்பாளர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்தார். மக்களுக்கோ, அந்த உறுப்பினர்களின் முகங்கள் தெரியவில்லை. அத்தனை பேரும் தொப்பென்று அந்த அம்மா காலில் குப்புற விழுந்ததால், அவர்கள் முதுகுகள் மட்டுமே மக்களுக்குத் தெரிந்தன. செய்தியாளன் என்ற முறையில் முன் வரிசையில் இருந்த நான், ராஜீவ் காந்தி தம்மோடு நின்ற இன்னொரு வடநாட்டு காங்கிரஸ் தலைவரைப் பார்த்து, கண்ணடித்துச் சிரிப்பதைப் பார்த்து விட்டு, தமிழன் இப்படி ஆனதற்காகத் துக்கக் கூத்து ஆடாத குறையாக, வெம்பி வெம்பிப் பார்த்தேன்.

எந்தக் காலத்திலேயும் இல்லாத அளவுக்கு, தமிழனை அடிமைப்படுத்தும் இந்தக் காலடிக் கலாச்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு உரிய செய்திகளைத் தாராளமாகவே வெளியிட்டேன். அதே சமயம், எதிர்க்கட்சிச் செய்திகளை, குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டேன். தேர்தலுக்கு முன்பு, செல்வி ஜெயலலிதா விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக, திமுக.வைச் சம்பந்தப்படுத்திக் குற்றம் சாட்டினார்.

என்றாலும், அவர் பதவியேற்ற ஒரு மாத காலத்தில், அவருக்கு நெருக்கமானவர் ஒருவரும், இப்போது மாற்று அணியில் இருக்கும் அப்போதைய ஒரு மூத்த அமைச்சரும், 'முதலமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருக்கிறது மாதிரி, நீங்க அடிக்கடி செய்தி போடுறீங்க இதனால், அம்மா மேல விடுதலைப் புலிகள் ஒரு கண்ணா இருக்காங்க. விடுதலைப் புலிகளால் யாரையும் எங்கே வைத்தும் கொல்ல முடியும். அதனால் இனிமேல், அந்த மாதிரிச் செய்திகளைப் போடாதீர்கள்' என்று எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்படிக் கூறியவர்களின் பெயர்கள் இன்றும் எனக்கு நினைவில் உள்ளன. முதலைமைச்சருக்கு வேண்டிய இன்னொரு அரசு சார்பிலா அமைச்சர் ஒருவர் ‘இன்றைக்குக் கூட அம்மா வீட்ல, எல்டிடி திரட் வந்தது. அதனால இனிமேல் அவங்க விடுதலைப் புலிகளுக்கு எதிரானவங்க என்கிற மாதிரி செய்தி போடாதீங்க’ என்று உரிமையோடு என்னைக் கேட்டுக் கொண்டார்.

நானும் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சம்பந்தப்படுத்தி, விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட செய்திகளைப் போடவில்லை. முதலைமைச்சர் அப்படிப் பேசினால்தானே நான் போடுவதற்கு? விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கப்சிப் ஆகிவிட்டார். இப்படி அகத்தே பயந்து, புறத்தே பேசிய வீரத்தைக் கூட விடுதலைப் புலிகள் விவகாரத்தில் விட்டுக் கொடுத்தார். சட்டப் பேரவையிலோ ஜெயலலிதா மாபெரும் வீராங்கனையாக சித்தரிக்கப்பட்டார். ஒரு அதிமுக உறுப்பினர் ஒரு கேள்வியைப் பேரவையில் கேட்பார். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் ‘கல்லும் நடந்தால் கனியாகும்... எங்கள் இதயக் கனி, முக்கால முதல்வி, தமிழ்த் தாய், பாரத மாதா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மேலான ஆணையின்படி, சட்டப் பேரவையில் கொசுத் தொல்லையைப் போக்குவதற்கு ஐந்நூறு ரூபாய்க்கு மருந்து வாங்கப் பட்டுள்ளது' என்பது மாதிரி பதிலளிப்பார். இப்படி முதலமைச்சர் பட்டாதி பட்டங்களோடு வலம் வந்த போது, அவர் விடுதலைப் புலிகளுக்கு எப்படி பயப்படுகிறார் என்பதை அறிந்திருந்த நான் சிரித்துக் கொள்வேன். அதே சமயம் தனி மனிதனான நான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்திகளை சென்னை வானொலியில் துணிந்து வெளியிட்டு வந்தேன்.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவிற்கு அம்மாவிடம் அடிமையாக இருந்தார்களோ, அந்த அளவிற்கு பரிதி இளம்வழுதியையும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களையும் எஜமானத்தனமாக அதட்டுவார்கள். பரிதி இளம் வழுதியும் விடமாட்டார். பல சமயங்களில், அவர் குண்டுக்கட்டாக சபையில் இருந்து, காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்கிறார். ஒரு தடவை இப்படி இவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது, சட்டப் பேரவைக் காவலாளியான ஒரு அதிமுக அடிமை, பரிதியை ஊமையடியாக அடித்து விட்டார். இவரும் கலங்கிய கண்களோடு, காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை அலுவலகத்துக்கு வந்தார். என்னால் தாங்க முடியவில்லை. அவரது தோளில் கை போட்டபடியே ‘கவலைப்படாதடா! உனக்கும் ஒரு காலம் வரும். அது வரைக்கும் பொறுத்திரு’ என்று சொன்னபோது, அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

பரிதி இளம்வழுதியைத் தேற்றி விட்டு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து நான் பேரவைக்குள் போன போது, இடையில் கலைஞரின் உதவியாளரான சண்முகநாதன் எதிர்ப்பட்டார். இந்த மாதிரியான சந்திப்புகளில் பொதுப்படையாகப் பேசிக் கொள்வோம். அப்போது அவர் சட்டப் பேரவையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். முன்னதாக கலைஞரின் உதவியாளர் என்பதற்காகவே, எம்.ஜி.ஆர் அரசால் கொடுமை செய்யப்பட்டவர்.

என்னைப் பார்த்ததும் நின்றார். உடனே நான் 'அண்ணாச்சி, பரிதி இளம் வழுதிய அடித்த விவகாரத்த, நான் வானொலியில் செய்தியாகப் போடப் போறேன். இப்ப எல்லாம் கலைஞருக்கு ஆதரவான செய்திகளத்தான் போடறேன். வேணுமுன்னு போடல. அதுதான் நியாயம். ஆனாலும், உங்க கலைஞர் என்னை எப்படித் தொலைக்காட்சியில இருந்து தூக்கி அடிச்சிட்டார் பார்த்தீங்களா? என்ன மட்டும் டிவியில் அவர் நிலைக்க விட்டிருந்தால், இந்நேரம் எப்படி எல்லாம் செய்தி வெளியாகியிருக்கும். கலைஞருக்கு, வேண்டியவன் யார், வேண்டாதவன் யாருன்னு தெரியலையே?' என்று சரமாரியாகப் பொரிந்தேன்.

உடனே சண்முகநாதன் அமைதியாக ‘அவர் உங்கள் மாத்தல சார்’ என்றார். நான் 'நல்லா இருக்கே நியாயம்' என்றேன். சண்முகநாதன், தம் சொல்லை நம்பாத என்னை உணர்வு கொப்பளிக்கப் பார்த்தபடியே ‘என் பிள்ளைகள் சத்தியமாச் சொல்கிறேன். உங்க மாறுதலுக்கு கலைஞர் காரணமல்ல, அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்’ என்றார். உடனே, நான் அவரது பதிலை அங்கேயே ஏற்றுக் கொள்வதாக, நெகிழ்ந்து பேசினேன்.

செய்திப் பணி முடிந்து ஆற அமர யோசித்த போது, சென்னை தொலைக் காட்சியில் இருந்து, வானொலி நிலையத்திற்கு கலைஞர் மாற்றியிருக்க மாட்டார் என்றே தோன்றியது. அதே சமயம், வைகோவின் நிர்ப்பந்தம் கருதி, பேசாமல் இருந்து இருப்பார் என்று அனுமானிக்க முடிந்தது. எங்கள் அமைச்சருக்குக் கலைஞர் மட்டும் புகார் செய்திருந்தால், என்னை சென்னைக்கு உள்ளேயே மாற்றி இருக்க மாட்டார்கள் என்ற தெளிவும் பிறந்தது. இப்படிப் பட்டவர்களுக்கு என்றே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநகர், அப்போதைய சண்டிகட், நாகலாந்து தலைநகர் கோகிமா, அந்தமான் போன்ற இடங்கள் என் நினைவுக்கு வந்தன. இதனால், கலைஞர் மீது ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டது.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிறிது அடாவடியாகவும், ஆணவமாகவும் பேசத்தான் செய்வார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், கலைஞர் முதல்வராக இருக்கும் போது, அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அத்தனை பேரும் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள். ஜெயலலிதாவும் தமது கட்சிக்காரர்களை அடக்கும் வல்லமை மிக்கவர்தான். ஆனால், கண்டுக்க மாட்டார்.

இப்படிச் சொல்வதால், நான் ஜெயலலிதாவிற்குத் தனிப்பட்ட முறையில் எதிரானவன் என்று பொருளல்ல. சர்ச் பார்க் கான்வென்டில், அவர் முதலாவதாக வந்ததும், சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதோடு, உலகளாவிய அளவில் அவர் அறிவு விரிவானது என்பதும் எனக்குத் தெரியும். இளமையிலேயே பல்வேறு ஆணாதிக்கக் கொடூரங்களுக்கு உட்பட்ட காரணத்தால்தான், அவர் மனிதர்களை நம்பாத போக்கிற்கு, அதாவது அதன் மாறு வேடமான ஆணவத்திற்குப் போய் விட்டார் என்பதும் தெரியும். கூடவே ஆரம்பக் காலத்தில் என் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கும், சட்டப் பேரவையின் போக்கும், கலைஞர் இழிவு செய்யப்படுவதும், என்னைக் கலைஞரிடம் மனிதன் என்ற முறையில் ஈர்த்தது. பிறகு தமிழன் என்ற முறையில் ஒன்றிக்கச் செய்தது. இதன் விளைவாக, சென்னை வானொலி நிலையம், தமிழக அரசு எதிர்ப்புச் செய்தி நிலையமாகிவிட்டது. காங்கிரஸ் உறுப்பினர்களும், ஜெயலலிதாவை எதிர்க்கத் துவங்கியதால், என் பணி எளிதாயிற்று.

இதற்கு முன்பு, எம் ஜி ஆர் அமைச்சரவையில் இடம் பெற்ற எங்கள் பக்கத்துக்காரரான கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரனும், அவரது துணைவியாரும் தமது காலில் விழுந்ததைப் புகைப்படமாக எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஒரு சேடிஸம், அதாவது பிறா் துன்பத்தில் அல்லது பிறரைத் துன்புறுத்தி மகிழும் போக்கு, தமிழக அரசியலில் கண்டறியாதது. ஒருவேளை, புரட்சித் தலைவி என்ற பட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தாரோ என்னமோ - ஒரு பாவமும் அறியாத, அந்த முன்னாள் அமைச்சரின் மனைவியையும் காலில் விழ வைத்துக் கேவலப்படுத்தியதை ஒரு தமிழன் வியந்து பார்த்தால், அவனும் கேவலமானவனே என்பது என் கருத்து.

சட்டப் பேரவை உரிமையை மீறி விட்ட குற்றத்தின் பேரில் முரசொலி ஆசிரியர் செல்வம் கைது செய்யப்பட்டு, சட்டமன்ற வளாக அறை ஒன்றில் வைக்கப் பட்டிருந்தார். அப்போதுதான் அவரை முதலில் பார்க்கிறேன். மிகவும் மென்மையானவர். அவரிடம் சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு எழுத்தாளனான நானும், வானொலியும் அவர் பக்கம் நிற்பதாக உறுதி அளித்தேன். பின்னர், பேரவையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் அவர் நிறுத்தப்பட்டு, பேரவைத் தலைவர் வாசித்த கண்டனத்தை அமைதியோடு வாங்கிக் கொண்டார். பேரவை உறுப்பினர்களும், அப்போது கட்சி வேறுபாடின்றி அமைதியாக இருந்தார்கள். அதிமுக உறுப்பினர்கள் இப்படி ஒரு விதி விலக்காக நடந்து கொண்டதை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு அவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது.

சட்டப் பேரவையில் இன்னொரு காட்டுமிராண்டித் தனமான உரையை அப்போதைய அதிமுக உறுப்பினர் ஒருவர் நிகழ்த்தினார். கலைஞரின் மகள் கனிமொழியை, சிலேடையில் மிகவும் இழிவாகப் பேசினார். ஒரு பெண், என்பதையாவது அவர் மனதில் நினைத்து இருக்க வேண்டும். அல்லது ஒரு முன்னாள் முதல்வரின் மகள் என்பதையாவது நினைத்திருக்க வேண்டும். இவற்றை நினைவில் கொள்ளாமல், கனிமொழியை இழிவு படுத்தி மாறி மாறிப் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதாவும் பேரவையில் இருந்தார். அந்த அராஜகப் பேச்சைத் தடுப்பதற்குப் பதிலாக, இரசிப்பது போலவே தோன்றியது.

செய்தியாளர் மாடத்தில் இருந்த நான். சட்டப் பேரவைக்குள் அருகே இருந்த சென்னை புரசைவாக்கம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாதன் அவர்களிடம், மெல்லிய குரலில் அந்த உறுப்பினர் அடாவடியாகப் பேசுவதை எதிர்க்கும்படிக் குறிப்பிட்டேன். அவரும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து, எதிர்ப்புக் குரலிட்ட போது, அந்த உறுப்பினர் பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டார். இந்தக் காட்டு மிராண்டி பேச்சை என்னால் பொறுக்க முடியவில்லை. சென்னை வானொலி நிலையச் செய்தியில் ஒரு முன்னாள் முதல்வரின் மகள் இழிவு செய்யப்பட்டார் என்றும், இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் என்றும் குறிப்பிட்டேன். சட்டப் பேரவை நடைபெறும் சமயத்தில், பேரவை விமர்சனம் என்று பத்து நிமிடத்திற்கு ஒலி பரப்புவோம். இதில், அந்த உறுப்பினரின் பேச்சு காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்தோம்.

இரவு வீட்டிற்குத் திரும்பியபோது, ஒரு தந்தை என்ற முறையில், கலைஞரின் மனம் என்ன பாடுபடும் என்பது எனக்குப் புரிந்து விட்டது. கூடவே, ஒரு பாவமும் அறியாத கனிமொழி, அவரது அன்னையார் ஆகியோர் எப்படித் துடித்து இருப்பார்கள் என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. நான் கலைஞரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வானொலிச் செய்தியைக் கேட்டதாகத் தெரிவித்தார். மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். உடனே நான் ‘கனிமொழி உங்களுக்கு மட்டும் மகளல்ல... எனக்கும் மகள் தான் சார்’ என்று சொன்னேன். கலைஞரின் நெகிழ்ந்த குரல், இன்னும் என் காதுகளில் நினைக்கும் போதெல்லாம் ஒலிக்கும். எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி. கலைஞரை வானொலியில் படாத பாடு படுத்தியதற்குக் கழுவாய் தேடிவிட்டது போன்ற நிம்மதி.

எங்கள் உரையாடலை, கலைஞர் இலக்கியத்தின் பக்கம் திருப்பி விட்டார். அப்போது - அதவாது 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் வெளியான சுபமங்களாவில் வந்த எனது நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். உடனே நானும், அதே பத்திரிகையில் நவம்பர் மாதம் வெளியான கலைஞரின் நேர்காணல் அற்புதமானது என்றேன். கலைஞர் ஒரு இலக்கியக் குழந்தையாகிவிட்டார். ‘என்னைத்தான் இலக்கியவாதியே இல்லை என்கிறார்களே’ என்று குறைப்பட்டுக் கொண்டார். உடனே நான் ‘நீங்கள் இலக்கியவாதி இல்லை, என்றால் உலகத்தில் ஒருவர் கூட இலக்கியவாதியாக இருக்க முடியாது’ என்று அடித்துச் சொன்னேன்.

கலைஞரின் நேர்காணல் வந்த சுபமங்களாவுக்கு அடுத்த இதழில், இலக்கிய விமர்சகரும், எனக்கு மிகவும் வேண்டியவருமான திகசி அவர்கள், கலைஞர் படைப்புகளில் பிரச்சார வாடை அதிகம் என்றும் இலக்கிய வீச்சு குறைவு என்றும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். பொதுவாக தி.க.சி. அனைத்து இலக்கியவாதிகளிடமும் நல்லதையே காண்பார். பாராட்டுவார். கலைஞரைப் பற்றி ஏன் இப்படி எழுதினார் என்பது எனக்குப் புரியவில்லை. சுபமங்களா பத்திரிகை, தனக்குப் பிடிக்காதவர்களை பேட்டி கண்டு போட்டு விட்டு, பின்பு அவர்களை இழிவு செய்வது போல் கடிதங்களைப் பிரசுரிக்கும். நவீன தமிழ் கவிஞரான அப்துல் ரகுமானையும், நேர் காணல் செய்து விட்டு, அடுத்த இதழில் அவரையும், உலகெங்கும் தெரிந்த கவிஞர் பிரமிலையும் ஒப்பிட்டு அப்துல் ரகுமானைச் சிறுமைப் படுத்தியது. இந்த இலக்கியச் சிலந்தி வலையில், தி.க.சி. எப்படி சிக்கினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. நானும் செந்தில் நாதனும் அவரை மானசீகமாகத் திட்டித் தீர்த்தோம்.

இப்போது தி.க.சி அவர்கள் திராவிட இலக்கியத்தை, குறிப்பாக கலைஞரின் படைப்புகளை மறு வாசிப்பு செய்து, இலக்கியத்தில் கலைஞருக்கு உரிய மகத்தான இடத்தைக் கண்டு பிடித்து விட்டார் என்பதை அவர் எனக்கு எழுதும் கடிதங்கள் கூறுகின்றன. சரி போகட்டும். இதனால் கலைஞர் இலக்கியவாதி இல்லை என்று ஆகி விடாது. கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டியது இல்லை. அவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர், சங்கர் நாவல்களும், குப்பைத் தொட்டி, அணில் குஞ்சு போன்ற சிறுகதைகளும் எதிர்காலத் தமிழ் இலக்கியத்தில் அவரை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். எனவே, பேரவை விவகாரத்திற்கு வருவோம்.

சம்பந்தப்பட்ட அந்தப் பேரவை உறுப்பினர், சென்னை வானொலி மீது உரிமைப் பிரச்னை எழுப்பினார். அவர் அப்படிப் பேசவில்லையாம். வானொலி, தான் வேண்டுமென்றே அப்படி ஒலி பரப்பியதாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகையாளர் மாடத்தில், கலைஞருக்கு எதிரான செய்தியாளர்கள் கூட அந்த உறுப்பினர் அப்படிப் பேசியதைக் கடுமையாகக் கண்டித்து, தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

இந்த உரிமைப் பிரச்னையை எதிர் நோக்குவதற்காக, வழக்கப்படி பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு, வழக்கத்திற்கும் அதிகமான செய்தியை அவர் தலைக்கு மேல் சுற்றும் ஒளி வட்டமாய்ப் போட்டு விட்டு, மறுநாள் அவரைச் சந்தித்தேன். அவர் சிறிது காலம், முரசொலியிலும் பணியாற்றியதாகக் கேள்விப் பட்டேன். அவரை அவரது அறையில் சந்தித்த நான் ‘கனிமொழி உங்களுக்கும் எனக்கும் மகளல்லவா? நீங்கள் அப்போதே கண்டித்திருக்க வேண்டாமா?' என்று கேட்டேன். அவரும், அந்த உறுப்பினர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார். அவர் உரிமைப் பிரச்சினையை, உரிமையற்றுப் போகச் செய்து விட்டதில் மகிழ்ச்சி.

சென்னை வானொலி மட்டும் அப்படி ஒரு செய்தி போடவில்லை என்றால். செல்வி ஜெயலலிதாவை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தோ என்னமோ, சின்னத்தனமாக பேசிய அந்த உறுப்பினர், தான் அப்படிப் பேசவில்லை என்று சொல்லியிருக்க மாட்டார். பேரவை நடவடிக்கைக் குறிப்பேட்டில் மேலேழுந்த வாரியாகப் பார்த்தால் அப்பாவித்தனமாகத் தோன்றும் அந்த வரிகள் ஓசைப் படாமல் எடுக்கப்பட்டு இருக்காது. இதில் ஒரு வேதனை என்னவென்றால், எந்தப் பத்திரிகையும் இதைக் கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. அந்த உறுப்பினர் பேசியதை இருட்டடிப்புச் செய்து கலைஞருக்கு ஏதோ சலுகை செய்து விட்டது மாதிரி அனுமானித்துக் கொண்டன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை, தர்ம சங்கடத்தில் வைக்கும் பல சிக்கலான பிரச்னைகளும் உருவாயின. அவற்றைப் பெரும்பாலும் அரசு ஊழியனாக அனுமானிக்கப்படும் நானே எழுப்புவேன். எடுத்துக்காட்டாக, அகில இந்திய சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாடு அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மத்தியான உணவிற்குச் செய்தியாளர்கள் அழைக்கப் பட்டு இருந்தார்கள். தீவுத் திடலில் இந்தப் பகலுணவு நடைபெற்றது. பொதுவாக இந்த மாதிரி சமயங்களில்தான், செய்தியாளர்கள், பிற மாநிலப் பேரவைத் தலைவர்களோடு உரையாட முடியும்.

இப்படி உரையாடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பேரவை உறுப்பினர்கள், பிற மாநில, சட்டப் பேரவைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு ஷாமியானா பந்தலும், செய்தியாளர்களுக்கு என்று இன்னொரு பந்தலும், தனித்தனியாகப் போடப் பட்டிருந்தன. நான் சக செய்தியாளர்களிடம் இதைச் சுட்டிக் காட்டி, விருந்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டேன். அவர்களோ, பத்திரிகைத் தொழிலில் இது எல்லாம் சகஜம் என்று வாதிட்டார்கள். போதாக் குறைக்கு, பத்திரிகை முதலாளிகளுக்குப் பதில் சொல்ல வேண்டியர்கள் அவர்கள். நானும், முதலாளிகளுக்கு முதலாளியான மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவன். கூடவே, பசி வேறு. இட ஒதுக்கீடாக இருந்த கொட்டகைக்குள்ளேயே பகலுணவை அருந்தி விட்டோம்.

ஆனாலும், மாலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பல்ராம் ஜாக்கர், பேரவைத் தலைவர்கள் மேற் கொண்ட முடிவுகளை விளக்கினார். எடுத்த எடுப்பிலேயே, நான் இடை மறித்து, செய்தியாளர்கள் நடத்தப்பட்ட விதத்தை விளக்கி, அதை ஆட்சேபிக்கிறோம் என்று குறிப்பிட்டேன். சேடப்பட்டி முத்தையா அவர்களின் கை கால்கள் நடுங்குவதை என்னால் பார்க்க முடிந்தது. ஏதோ பேச முயற்சிக்கிறார். பேச்சு வரவில்லை. இந்தச் சமயத்தில் பலராம் ஜாக்கர் அவர்கள் மிகவும் பெருந் தன்மையோடு, அப்படி நடந்ததுக்கு வருந்துவதாகவும், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

திடீரென்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. நாடாளுமன்றப் பேரவைத் தலைவரை நோக்கி 'இப்போது கேள்வி கேட்ட இவர் கருத்து, பத்திரிகையாளர்களின் கருத்தல்ல’ என்று சக பத்திரிகையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படிக் குரலிட்டது. அப்படி ஒலித்த குரல், நாமெல்லாம் ‘பெருமைப் படும்’ தமிழர் தளபதி என்று அழைக்கப்படும் கீ.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட விடுதலைப் பத்திரிகையின் செய்தியாளரும், எனது இனிய நண்பருமான ராதாதான்.

சட்டப் பேரவைக்குள் சுடு சொற்களும், அடிக்கப் போவது போன்ற செயல்பாடுகளும், வெளியேற்றமும், வெளியேற்றப் படுவதும் மாமூலாகிவிட்டன. ஒரு தடவை பேரவையில் இருந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்களும் கிட்டத்தட்டத் துரத்தப்பட்ட போது, எதிர்க்கட்சி அறையில் இருந்து, அதன் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, பேரவையின் லாபிக்குள் வந்த போது, அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், பேரவைக் காவலர்கள் இருவர், அவரது கையைப் பிடித்து இழுத்து மல்லாக்கத் தள்ளினார்கள். இதனால், அவருக்கு இரு கரங்களுமே பிசகி விட்டன. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார். கலைஞர், அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார். எஸ்.ஆர்.பியின் கரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதே தவிர பாதிப்பு முற்றாக நீங்கவில்லை. இப்போதும் அவரது கைகள் முழுமையாக இயங்கவில்லை.

ஒரு தடவை, தமாகவினர் சட்டப் பேரவைக்குள் தர்ணா செய்த போது பேரவை முடிக்கப்பட்டு, மின்விளக்குகளும் அணைக்கப் பட்டன. மாலை ஏழு மணி வரை ஒரே புழுக்கம். பேரவை முடிந்து விட்டதால், செய்தியாளர்கள் வெளியேற வேண்டும் என்று பேரவைத் தலைவர் ஆணயிட்டார். இதை மீறி, நானும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, யுஎன்ஐ, பிடிஐ, இந்து ஆகிய நிருபர்களுமே பிடிவாதமாக உள்ளே இருந்தோம். சேடப்பட்டி முத்தையா அவர்கள், என்னைத் தனியாக, அவரது அறைக்கு வர வைத்து ‘இந்த ஏசி ரூம்ல உட்காருங்க. அங்க ஏன் போறீங்க’ என்றார். உடனே, நான் 'சார்! நீங்க சிஎம்மப் பகைச்சா எப்படி உங்க வேல போயிடுமோ, அப்படி மத்திய ஆளுங் கட்சியான காங்கிரஸப் பகைச்சா என் வேலை போயிடும். நான் அங்கேதான் போவேன். போகணும்' என்று சொல்லி விட்டு, அவர் வாங்கிக் கொடுத்த காபியையும் குடித்து விட்டு, செய்தியாளர் மாடத்திற்கு வந்தேன்.

சென்னை வானொலி நிலையத்தில் மாலைச் செய்திகளில், சட்டப் பேரவையில் நோயாளி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு மின் வசதியோ, தண்ணீர் வசதியோ தொடர்ந்து இல்லாது போனால், பலர் உடல் நிலையில் சிக்கல் ஏற்படும் என்றும், ஒரு மருத்துவர் மாதிரிச் செய்தி போட்டேன். இதன் விளைவாகப் பத்தே நிமிடங்களுக்குள் சட்டப் பேரவையின் மின் விசிறிகள் சுழன்றன. பேரவை உறுப்பினர்களுக்கு மினரல் வாட்டர் பாட்டில்களும் வந்தன. தவமாகக் கிடந்த செய்தியாளர்களுக்குத்தான் எதுவும் இல்லை. அன்று இரவு முழுவதும் அங்கேயே பழி கிடந்தோம். மறுநாள் காலையில் பேரவையில் அமளி ஏற்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டதும், அவரது எதிர்ப்பைத் தெரியப்படுத்த, வானொலிச் செய்திகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகி விட்டது.

எனக்கு, இதோடு முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

முதலைமைச்சர் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக, உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகளுக்கு முன் கூட்டியே சொல்லாமல், மெரினா வளாகத்தில் அவசர அவசரமாகப் போடப்பட்ட பந்தல் மேடையில் உட்கார்ந்து விட்டார். இது ஒரு பரபரப்பான செய்தி. வீட்டில் இருந்த எனக்குச் சிறிது தாமதமாகத்தான் கிடைத்தது. ஓடோடிப் போய், உண்ணாவிரத மேடையை நெருங்கினேன். உடனே, செல்வி ஜெயலலிதா ‘வாங்க மிஸ்டர். சமுத்திரம்! உங்களுக்காக பழையபடியும் விவரம் சொல்றேன்’ என்று சொல்லி விட்டு, தம் உண்ணாவிரத நோக்கங்களை, ஒரு அறிக்கையைப் பார்த்தபடியே விளக்கினார். அவர் விளக்கி முடித்ததும், எங்கள் உரையாடல் இந்தப் பாணியில் இருந்தது. 'மேடம்! உங்களுடைய உண்ணாவிரதத்தால், கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படலாம். தமிழ்நாட்டிலும் கன்னடர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடிக்கலாம்’

‘அதற்கு நான் என்ன செய்யணும் என்கிறீங்க’

‘அதனால சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும்படி, தமிழகக் காவல் துறைக்கு ஆணையிட்டீர்களா? கர்நாடக முதல்வரைத் தொடர்பு கொண்டு, தமிழர்கள் தாக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்று சொன்னீர்களா?’

‘நீங்க அடிப்படை பிரச்னையத் திசை திருப்புறிங்க’

‘இல்ல மேடம்! உங்க உயிர் முக்கியமானதுதான். இதில் கருத்து வேறுபாடே கிடையாது. அதே சமயம், கர்நாடகத் தமிழர்களின் உயிரும், உடமையும் மிகவும் முக்கியமானது. இதனால்தான் பின் விளைவுகளைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டினேன்.’

பாதித் தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் நடந்த இந்த உரையாடலை ஜெயலலிதாவே முடிவுக்குக் கொண்டு வந்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார். அவருக்கு அருகே நின்ற மற்ற அதிகாரிகளின் முகங்கள் எனக்கு நினைவுக்கு இல்லை. ஆனால், இடது பக்கமாக நின்ற அப்போதைய காவற்துறைத் தலைவரான ஸ்ரீபால் அவர்கள், டக்கென்று ‘அட்டென்சனுக்கு’ வந்தார். ஸ்ரீபால் அவர்களின் பணி முறை எப்படியோ... ஆனால்... இனிமையான மனிதர். மிகச் சிறந்த இலக்கியவாதி. மென்மையாகவும், அழுத்தமாகவும் பேசக் கூடியவர்.

மறுநாள், பத்திரிகையாளர்களுக்கும், ஆளுங் கட்சிப் பேரவை உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்லப் பிள்ளையாக விளங்கி, இப்போது தொல்லைப் பிள்ளையாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘அண்ணாச்சி ஆற்றுல தண்ணி போவுது... நீயும் குடிக்க மாட்டேங்க எங்களையும் குடிக்க விடமாட்டேங்க. அம்மா கேட்கச் சொன்னாங்க. உங்களுக்கு என்ன குறை சொல்லுங்க அண்ணே. நாங்க தீர்த்து வைக்கிறோம். எதுக்குண்ணே அம்மா கிட்ட அப்படி கேள்வி கேட்டீங்க. உங்கள நல்லா கவனிக்கலன்னு அம்மா எங்களத் திட்டுறாங்க, சமுத்திரத்திற்கு என்ன குறை என்று கேட்கச் சொல்றாங்க’ என்றார். உடனே நான் 'இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும், முதல்வருக்கு எதிராக அப்படிக் கேள்விகள் கேட்கப் படவில்லை' என்றும் விளக்கினேன். கவனிப்பு என்று நினைத்தால், நான் எனது அப்போதைய தோழரான நடராசன் மூலமும், அல்லது அவர் மனைவி சசிகலா மூலமும், இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மூலமும் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். நான் ‘அல்லா’ அறியச் சொல்லுகிறேன். அப்படிப் பட்டவன் இல்லை. உனக்கே தெரியும்' என்றேன். ஜெயலலிதா சொன்னாரோ, இல்லையோ, அந்த நண்பர் அப்படிச் சொன்னார்.

இதற்கிடையே, அதிமுக ஆட்சியின் அராஜகமும், பொது மக்களுக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்தது.

ஜெயலலிதா, புதுடில்லியில் மத்திய அரசுடன் பேசி விட்டு, சென்னை விமான நிலையத்திற்குத் திரும்புகிற ஒரு நாள், விமான நிலையம் சென்றோம். அரசியல் முக்கியத்துவமான பயணம் என்று நினைக்கிறேன். ஆனால், விமானம் மிகவும் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. அலுவலகம் போய் விட்டு வரலாம் என்று வெளியே காரில் வந்தால், காவற்துறையினர் அந்தத் தேசியச் சாலையில் அத்தனை பேரையும் இரண்டு பக்கமும் மடக்கிப் போட்டிருக்கிறார்கள். விமானம் தாமதமாக வரப்போகிறது என்று குறிப்பிட்டு, போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று நானும் சில பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களோ, விமானம் தரையிறங்கி, முதல்வர் போன பிறகே மற்றவர்கள் போகலாம் என்று மணிக்கணக்கில் காக்க வைத்து விட்டார்கள். இப்படி ஒரு ஆணையை ஜெயலலிதா போட்டிருப்பார் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், மேடையில் ஒற்றை நாற்காலியில் உட்காரும் அவருக்கு இது பிடிக்கும் என்று அதிகாரிகள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

தமிழகத்தில் நிலப் பறிமுதலைக் கேட்பதற்கு நாதியே இல்லாமற் போய்விட்டது. நான் வசிக்கும் டாக்டர் இராதாகிருஷ்ண நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் முன்னாலும், பின்னாலும் காலி நிலங்கள் கிடந்தன. முன்னால் உள்ள நிலம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகருக்குச் சொந்தம் என்று அறிகிறேன். இந்த நான்கு கிரவுண்ட் இடத்தை ஆளுங் கட்சியினர் சுற்றி வளைத்தார்கள். மதில் கட்டினார்கள். ஐம்பது அறுபது ரவுடிகள் இரவில் குடிபோதையில் கத்திய கத்தல் இன்னும் என் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. தெருவாசிகள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியின் தாளாளரிடம், ஆளுங் கட்சியைச் சேர்ந்த ஒரு குண்டர் தம்மை மயிலாப்பூர் கட்சிப் பிரமுகராக அறிவிக்கும் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்து விட்டு, நிலத்தைப் பிடித்த ரவுடிகளுக்கு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவர் ஒரு பிராமணர். பொதுவாக பிராமணர்கள், சாதுக்களாகத்தான் இருப்பார்கள். வெளிப்படையாக அடாவடியில் இறங்க மாட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிராமணர்களையே ரவுடிகளாக்கியப் பெருமை, அப்போதைய ஆளுங்கட்சிக்கே சேரும்.

இந்த நிலத்தை வளைப்பதில் வெற்றி பெற்றவர்கள், தெருவின் மறுபக்கம் உள்ள நாலு கிரவுண்ட் இடத்தைச் சுற்றி வளைக்கப் போன போது, இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கரமான மோதல். நான்கைந்து கொலைகள் விழலாம் என்பது போன்ற நிலைமை. உடனே, நான் காவல் துறைத் தலைவரான தேவாரம் அவர்களுக்கு டெலிபோன் செய்து, இந்த விவரத்தைப் புகாரிட்டு, காவல் படையைக் கணிசமாக அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தேன். தன்னந்தனியாக மோதல் நடந்த இடத்திற்குப் போனேன். என் மனைவி 'போகாதே போகாதே என் கணவா' என்று ஒப்பாரி போடாத குறைதான்.

அந்தச் சமயத்தில், இந்தக் கலவரத்தை அடக்க திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு ஜீப்பில் மூன்றே மூன்று போலீசார் வந்தனர். இந்தக் கோஷ்டிகளில் வலுவான ஒன்றிற்கு அவர்களது ஆதரவு இருப்பது தெரிந்து விட்டது. நானும் அந்த இடத்தை அப்போதைக்கு சீல் வைக்கவில்லை என்றால், அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தேன். எப்படியோ போலீஸ்காரர்கள், தாங்கள் ஆதரித்த கோஷ்டியின் காலில் விழாத குறையாக, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அப்புறப் படுத்தி வெளியேற்றினார்கள்.

இப்படிப்பட்ட சமூக அநீதியை, இலக்கியவாதி என்ற முறையிலும் சாடினேன். ஜெயலலிதாவிடம் சேர்ந்து கொண்ட துதிபாடிகள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கும் காலில் விழுந்த கதைகள், யானைப்பூச்சிகள், பின்னோக்கிய ஒட்டம், தமிழன் காலில் விழுந்து விழுந்து எப்படி ஓணானாக மாறி விட்டான் என்பதை விளக்கும் எதிர் பரிணாமம் போன்ற சிறுகதைகளைப் படைத்தேன். இந்த எதிர் பரிணாமச் சிறுகதையை, இந்தியப் பொதுவுடைமை கட்சியும், அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றமும் மேடைகளில் குறிப்பிட்டதாக அறிகிறேன்.

எழும்பூரில் பகுத்தறிவு சிந்தனையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில் பிராமண எதிர்ப்பும், பகுத்தறிவும் கொண்டவர்களாய்த் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் விதிவிலக்கான உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ஒரு கட்டம் வரை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மனச்சாட்சிக் காவலராகவும் இருந்த நீதிபதி வேணுகோபால் அவர்களும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். என்னையும் பேச அழைத்தார்கள்.

நான், ‘தமிழகத்தில் பெரும்பாலான தமிழன், செல்வி ஜெயலலிதாவின் காலில் விழுகிறான். தாமதமாக விழுந்தால், அம்மாவுக்குக் கோபம் வரும் என்று தொப்பென்று விழுகிறான். இதைக் கேட்கத் தைரியமோ, அல்லது மனமோ இல்லாத உங்களுக்கு, சுயமரியாதை பற்றியோ, அல்லது பகுத்தறிவு பற்றியோ பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது’ என்ற தோரணையில் பேசி விட்டு, கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டேன்.

பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும், ஜெயலலிதாவின் இந்தக் காலடி கலாச்சாரத்தை எதிர்த்துத் தொடர்ந்து எழுத்தாலும், பேச்சாலும் போராடிக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான்.

1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் டில்லிக்கு மாற்றப்பட்டேன். எனது அநியாயமான மாற்றத்திற்கு எதிராக நீதிமன்றம் போனேன். ஜி.கே.எம், எஸ்ஆர்பி , தங்கபாலு, டாக்டர் சுப்பிரமணிய சாமி, சந்திரலேகா போன்றவர்கள் என் பக்கம் இருந்த நியாயத்தை, மனவளர்ச்சி குன்றியவராகத் தோன்றும் எங்கள் அமைச்சர் சிங்டியோவிடம் எடுத்துரைத்தனர். வேறு வழியில்லாமல், அவரும் என்னைக் கள விளம்பரத் துறைக்கு, மாநிலத் தலைமை அதிகாரியாக இதே ஆண்டு டிசம்பர் மாதம் பதவியுயர்வு கொடுத்து நியமித்தார்.

இதற்காக இந்த அமைச்சரிடம், யாருக்குமே தலை வணங்காத எனது இனிய தோழர் எஸ் ஆர். பால சுப்பிரமணியம் அவர்கள் தம் சுயமரியாதையையும் ஒரு பொருட்டாகக் கருதாது வாதாடிப் போராடினார்.

தமிழக கள விளம்பரத்துறை இயக்குநர் என்ற முறையில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து உரையாற்றிய நான், இந்தக் காலடி கலாச்சாரத்தைப் பொதுப்படையாகவும், ஜெயலலிதாவைக் குறிப்பது போல் மறைமுகமாகவும் சாடி இருக்கிறேன். பொதுமக்களுக்கு ரோஷம் வந்ததை நேராகவே கண்டேன். ஆனால், இனமானத் தளபதி வீரமணி செய்ய வேண்டியதை, சாதாரண அரசு ஊழியரான என்னால் தொடர்ந்து வலுவாகக் கொண்டு செலுத்த முடியவில்லை.

கலைஞரின் கழகம் உள்ளிட்ட அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும், இந்தக் காலடி கலாச்சாரத்தைக் கண்டு கொள்வதே இல்லை. அனைத்துக் கட்சிகளும், கண்ணிரண்டையும் விற்றுத் தேர்தல் சித்திரம் வாங்கவே முற்படுகின்றன. இவை போதாது என்று, ஒரு சில உதிரிக் கட்சித் தலைவர்கள் செல்வி. ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று, தேம்பித் தேம்பி அழுது, கூட்டணி வைத்துக் கொண்டதும், தலையைச் சொரிந்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டதும் பலருக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் -

இணையாக நடத்தும் கலைஞர் என்று வந்து விட்டால் மட்டும், இவர்களுக்கு அடகு வைக்கப்பட்ட சுயமரியாதை வட்டியோடு வருகிறது. ரோஷமும் பொத்துக் கொண்டு வருகிறது.
---------------

12. ராணி தேனீக்கள் சாமானியத் தேனீ டாமர் தேனீ

கலைஞருடன், முதல் தடவையாகத் தனிமையில் நேருக்கு நேராக, மனம் விட்டு உரையாடும் சந்தர்ப்பம் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் எனக்கு கிடைத்தது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், முன்பு ஒரு தடவை, அவர் முதல்வராக இருந்த போது தனித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் முதல்வர். நான் தொலைக்காட்சிச் செய்தியாசிரியர். அந்தச் சந்திப்பு, எனது புலம்பலாகவும் அவர் வெறுமனே தலையாட்டுவதாகவும் மட்டுமே இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்போ என் அளவில் மறக்க முடியாதது. தோழமையுடன் கூடியது. எங்கள் உறவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலைஞரின் முன் அனுமதி பெற்று, எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக, கோபாலபுரத்திற்குச் சென்றேன். அவருக்கு வேண்டிய கட்சித் தலைவர்கள், அங்கும் இங்குமாய் நின்றார்கள். ஆனால் கூட்டம் இல்லை. கலைஞரை மாடியில் சென்று சந்தித்தேன். கலைஞர் ஒரு பற்றற்ற யோகி போலவே தோற்றம் காட்டினார். அரசியல் விரோதிகள், தம்மை இழித்துப் பழித்துப் பேசியதோ, எவரை முன்னிருத்தினாரோ, அவராலேயே, தாம் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையோ தெரியப்படுத்தும் எந்த வெளிப்பாடுகளும் முகத்தில் இல்லை. நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற தோரணை. நல்லதே நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு. அப்படியே அது பொய்த்துப் போனாலும் வெற்றியும், தோல்வியும் வீரருக்குச் சமம் என்ற தமிழ் மொழியைப் பிடித்துக் கொண்ட தத்துவார்த்த பார்வை. அந்த அறையில் தவ யோகி போலவே தென்பட்டார்.

எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப் பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனீக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்குக் கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சி சாஸ்திரி வெங்கட்ராமய்யர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனீக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித் தேனீதான் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித் தேனீக்கள், ஓரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.

ஒற்றை அடை மட்டுமே கட்டும் சாமானியத் தேனீ ஒருவகை. இது தேனடைகளை, சொந்த மெழுகால் கட்டாமல் மண்ணையும், மரப் பிசின்களையும் சேர்த்துக் கட்டுமாம். இந்திரா காந்தியுடன் ஆரம்பத்தில் அரசியல் விளைவுகளைப் புறந் தள்ளிக் கூட்டணி வைத்த கலைஞர், எனக்கு சாமானீயத் தேனீயாகத் தோன்றினார். ஒரு காலத்தில் மலைத் தேனீயாக இருந்து, பின்னர் சமதளத்திற்கு வந்து, பயந்தாங் கொள்ளியாய்ப் போன டாமர் தேனீ வகை ஒன்றையும், பூச்சி சாஸ்திரி குறிப்பிடுவார். இது எனக்கு வீரமணி அவர்களின் திராவிடர் கழகமாகப் பட்டது. இரண்டு ராணித் தேனீக்களை நினைத்ததும், எனக்கு ஜெயலலிதா, சசிகலா நினைவு வந்ததைச் சொல்ல வேண்டியது இல்லை.

இந்த ராணித் தேனீக்கள் தமிழக நந்தவனத்தை அளவுக்கு மீறித் தேன் உறிஞ்சி எப்படிக் கெடுக்கின்றன என்பதும், சாமானியத் தேனீ, இதை எதிர்த்துப் பெரிதாகப் போராடாததையும், தமிழக நந்தவனம் அநாதையாகி விட்டதாகவும் சித்தரிக்கும் கதை அது. கலைஞர் இந்தத் தொகுப்பின் அட்டைப் படத்தை, ரசித்துப் பார்த்தார்.

எங்கள் உரையாடல். அரசியல் பக்கமாகச் சென்றது. சில அந்தரங்கமான விவகாரங்களைப் பேசினோம். அவற்றை இங்கே குறிப்பிடுவது நாகரீகமாகாது. ஆனாலும், கலைஞர் ஒரு கட்டத்தில் ‘சமுத்திரம்! நாங்க ஆளும் போது சர்க்காரியா கமிஷனில் எங்கள் மீது நாற்பத்தாறு லட்ச ரூபாய் அளவிற்கே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதுவும் நிருபிக்கப் படவில்லை. ஆனால், இப்போ கோடி கோடியாக் கொள்ளை அடிக்காங்க, ‘யாருமே கண்டுக்கவில்லையே’ என்று என்னிடம் ஆதங்கப்பட்டார்.

நான் அவரது ஆதங்கத்திற்கான காரண காரியங்களை விளக்கி விட்டு, அவருடைய நிலைமையை இப்படி எடுத்துரைத்தேன்.

‘சார், நீங்க முதல் தடவை முதலமைச்சரான போது, நான் டில்லியில் இருந்தேன். உங்களப் பதவி நீக்கம் செய்யப் போற சமயத்துலதான் சென்னைக்கு வந்தேன். உங்களோடு இருந்தவர்கள் எல்லாம், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல் ஓடி விட்டதோடு, உங்களுக்கு எதிராகவும் செயல் பட்டதுக்கு நீங்க முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியதாகக் கேள்விப்பட்டேன். அதுல ‘கட்சிக்காரன் காலுக்கு செருப்பில்லாம இருக்கானேன்னு, அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுத்தால், அந்த செருப்ப வைச்சே அவன் என்ன அடித்து விட்டான்’ என்கிற மாதிரி நீங்க எழுதினதாக சொன்னாங்க உண்மையிலே நான் கண் கலங்கிட்டேன்

கலைஞர் என்னை அன்போடும், அழுத்தமாகவும் பார்த்தார். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன் என்பதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. என்னிடம் உற்ற தோழன் போல் பல்வேறு அரசியல் விவகாரங்களையும், தனி மனிதர்களைப் பற்றியும் பேசினார். இவற்றை என் மனதிற்குள் இப்போதும் அசை போடுகிறேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நானும் கலைஞரிடம் உரிமையோடு பேசினேன். பல தலைவர்களைக் கிண்டலடித்தேன்.

கலைஞர் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மெளனம் சாதிக்கக் கூடாது என்றேன். இலங்கை விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றியோ, தமிழக தலைமையைப் பற்றியோ கவலையில்லை. தமிழக அரசில் கலைஞரின் தலைமை வர வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால், ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்க மாட்டார்கள் என்று நினைவு படுத்தினேன். கலைஞரைக் கொன்று அதன் மூலம் தமிழ் ஈழம் வரும் என்றால், அவர்கள் அதற்கும் தயாராவார்கள் என்றும் வாதாடினேன். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவோம், சிங்கள ராணுவத்திடம் இருந்து மட்டும் அல்ல, விடுதலைப் புலிகளிடம் இருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் அவர் ஒரு முழக்கத்தைத் தாயகத் தமிழர்களிடையே வைக்க வேண்டும் என்று வாதாடினேன். கலைஞர், நான் தெரிவித்தவற்றை உன்னிப்பாகக் கேட்டார். மறுத்தோ அல்லது ஏற்றுக் கொண்டோ, அவர் பதிலளிக்கவில்லை.

கலைஞரிடம் இருந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நான் கண்ணீர் மல்க விடை பெற்றேன். என்னுடைய மகள் திருமணத்திற்கு அவர் வர வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். அன்று வெளியூரில் இன்னொரு திருமண நிகழ்ச்சி உள்ளது என்று கலைஞர் அப்போதே தம் இயலாமையைத் தெரிவித்து விட்டார். இயலாமை என்று அவர் சொன்ன போது, புதுடில்லி தமிழ் சங்கத்தில் கலைஞர் முதல் தடவை முதல்வராக இருக்கும் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியே நினைவுக்கு வருகிறது.

பேராசிரியர் சாலை. இளந்திரையன் டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் ஒரு ‘பெரிய சமுத்திரம்’. மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். நானே மிகையானது என்கிற அளவிற்குப் பேசக் கூடியவர். ஆனாலும், டில்லியில் கறுப்புத் தமிழர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர். பிராமணர்களாலும் நேசிக்கப்பட்டவர். டில்லித் தமிழர்களுக்கு சொற்பொழிவு என்று வந்துவிட்டால், அவர்தான் அதாரிட்டி. தனிப்பட்ட முறையில் நல்லவரான இவர் தலைமையில், டில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டார். அப்போது கலைஞர் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லி விட்டதாக சாலையார் தம் தலைமையுரையில் இடித்துரைப்பது போல் பேசினார்.

பொதுவாக, கலைஞர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், யாராவது ஒருவருக்கு செல்லக் குட்டு வைக்கவில்லை என்றால் அவருக்கு நிறைவு இருக்காது. சாலையாருக்கு ஒரு தமிழ்க் குட்டு வைப்பதில் அவர் மகிழ்ந்திருக்க வேண்டும். இறுதியில் பேசிய கலைஞர், சாலையாரிடம் இயலாது என்று சொன்தாகவும், முடியாது என்று சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார். பின்னர், இயலாமைக்கும் முடியாமைக்கும் உள்ள வேறுபாடுகளை விலாவாரியாக விளக்கினார். இப்போது கூட நான் பிறாிடம் இந்த மாதிரிப் பேச வேண்டியது இருந்தால், இயலாது என்று சொல்வதா... முடியாது என்று சொல்வதா... என்று முன்கூட்டியே யோசிப்பது உண்டு. கலைஞரை நான் சந்தித்த ஓரிரு நாட்கள் கழித்து எனது உறவினர் தோழரும், திமுக பிரமுகருமான ஆலடி அருணா அவர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு ‘யோவ்... கலைஞர் கிட்ட யானைப்பூச்சியோ, பூனைப் பூச்சியோன்னு ஒரு கதையை கொடுத்தீராமே அது நல்லாயிருக்குன்னு கலைஞர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாருய்யா... அப்புறம், கலைஞர் கிட்ட சில யோசனைகள் சொன்னீராமே... அதையும் கணக்கில் எடுத்து இருக்கிறதாக உம்மக்கிட்ட சொல்லச் சொன்னாருய்யா என்று தென்பாண்டி தமிழில் தெரிவித்தார்.

ஆலடி அருணாவும், அந்த யோசனைகளைப் பற்றி தகவல் கேட்கவில்லை. நானும் தெரியப்படுத்த வில்லை. ஒரு மாபெரும் தலைவருக்கும் அவரோடு தோழமை கொண்ட ஒரு எழுத்தாளருக்கும் இடையே நடந்த உரையாடல் ரகசியத்தை மதித்தமைக்காக அவரை இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். ஆலடி அருணா அவர்கள் நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது, நான் கடையத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். அப்போதே நாங்கள் நண்பர்கள். சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக வாதாடிக் கொள்ளுவோம். இப்போது கூட அப்படித்தான். ஆனாலும், மனிதர் வரலாற்றுச் சான்றுகளையும், புள்ளி விவரங்களையும் அள்ளித் தந்து என்னையும் ஒரு தற்காலிக திமுகவாக மாற்றிவிடுவார்.

நான் கலைஞரை சந்தித்த சில நாட்களில் திருவான்மியூருக்கு அருகே, திமுகவின் அப்போதைய பகைக்கட்சி அலுவலகத்தில் எதற்கோ குறிவைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததாகவும், இது எல்டிடி குண்டு என்றும் கலைஞருக்கு குறி வைக்கப்பட்டது என்றும் பத்திரிகைகள் பரப்பரப்பான செய்திகளை வெளியிட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய அரசும் விடுதலைப்புலி களின் கொலைப் பட்டியலில் கலைஞரும் இருப்பதாக மாநில அரசையும், அவரையும் உஷார்ப் படுத்தியதாகக் கேள்வி.

இந்தப் பின்னணியில், கலைஞரும் முரசொலியில் அந்தக் குண்டு வெடிப்பை தன்னைக் கொல்வதற்கு குறிவைத்ததாக கருதலாம் என்ற பொருளில் எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் குறித்து நான் சுட்டி காட்டிய அணுகுமுறையையும் அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். அதற்குள் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை தொடுத்தது. இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்கு, விடுதலைப் புலிகளைத் தவிர வேறு நாதியில்லை . இதனால் கலைஞர் இந்த புதிய முழக்கத்தைக் கொண்டு செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். நான்கூட, அந்த தாக்குதலின் போது என்னையறியாமலே மானசீகமாக விடுதலைப் புலிகளின் பக்கமே நின்றேன்.

சட்டப் பேரவை தேர்தல்கள் நடக்கும் வரை கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்யும் நான் அரசியல் சமூக நிலவரத்தை கலைஞரிடம், தொலைபேசியில் நேரடியாகப் பேசுவேன். சண்முகநாதனிடம் எனது கருத்துக்களை கூறி அதை கலைஞரிடம் கூறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்வேன். என்னுடைய நோக்கம் எல்லாம் கலைஞர் வரவேண்டும் என்பதை விட, தமிழகத்தில் நிலவிய அராஜகமும் நிலப்பறிமுதலும் ஒருவரை முக்கியத்துவம் ஆக்குவதற்கு ஓராயிரம் பேரை பேடியாக்கும் சினிமாத்தனமும் போயாக வேண்டும் என்ற சிந்தனையே காரணம். கூடவே கலைஞர், தமிழ் சமுதாயம் மேன்பட ஆற்றியத் தொண்டும், பணியும் போனஸாக நினைவுக்கு வந்தன. இத்தகைய உரையாடல்களும், தொடர்புகளும் கலைஞருக்கும் எனக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை வலுவாக்கி விட்டன.
--------------

13. ஒன்றாகவா... ஒன்றாக்கியா ஒரு அலசல்...

எனது நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு கலைஞருடன் ஒரு மேடையை பகிர்ந்துக் கொள்ளும் இனிய அனுபவம் ஒன்று அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நிகழ்ந்தது.

கலைஞர் 26796அன்று எனது நூல்களை வெளியிட்ட பிறகு வீட்டிலும் அலுவலகத்திலும் அதற்கு முன்பு நடந்த அவரும் நானும் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை அசைபோட்டேன். ஒவ்வொரு நிகழ்வும் மனத்திரையில் அந்தக் காலத்தில் நான் முதல் தடவையாக பார்த்த கேவா கலர் பிம்பங்களாகத் தோன்றின. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இப்போது பின் நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

அமரர் ஆதித்தனார் சார்பாக தினத்தந்தி அறக்கட்டளை மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கும், தமிழ் படைப்பாளி ஒருவருக்கும் 1995ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவில் கொடுத்து வருகிறது. இதற்காக நான் அலிகளை மனிதநேயமாக சித்தரித்து எழுதிய வாடாமல்லி நாவலை அனுப்பி இருந்தேன். என்றாலும், மூத்த தமிழறிஞர் விருதை சாலய் இளந்திரையனாருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக எனது விருதை விட்டுக் கொடுக்க முன் வந்தேன். அவருக்கு எழுபது வயது எட்டவில்லை என்ற காரணத்தால் விருது இல்லையென்று ஆனபோது, பரவலான வாசகப் பரப்பைக் கொண்டிருந்தாலும் சரியான அங்கீகாரம் பெறாத எழுத்தாளர் ரமணிச்சந்திரனுக்கு அந்த விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த பரிசு அப்போதைக்கு வேண்டாம் என்றும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லி விட்டேன்.

என்றாலும், நடுவர் குழுவில் இருந்த பேராசியர்கள் ஒளவை நடராசனும், டாக்டர். பொற்கோவும் எனது வாடாமல்லி நாவலுக்குத்தான் கொடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதை உறுதி படுத்துவதுப்போல் ஒளவை நடராசன் அவர்கள் ‘பரிசு வேண்டாமுன்னு சொல்கிற முதல் ஆளு நீங்க தான்யா, எதற்காக அப்படி சொன்னீங்க’ என்று மேடையில் கேட்டார். இதனால் ஆதித்தனார் விருது 1996ஆம் ஆண்டிற்காக எனக்கு கிடைத்தது. மூத்த தமிழறிஞர் அருணாசல கவுண்டருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா, அமரர் ஆதித்தனார் பிறந்த நாளான மேலே குறிப்பிட்ட நாளில் சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் நடைபெற்றது.

முதல்வர் கலைஞர், சரியான நேரத்தில் ராணி சீதையம்மாள் அரங்கிற்கு வந்து விட்டார். சொல்லி மாளாத கூட்டம். கலைஞர் சிறிது கடுகடுப்பாகவே இருந்ததுபோல் தோன்றியது. அரைமணி நேரத்திற்குள் விழாவை முடித்துவிட வேண்டும் என்று, அமைப்பாளர்களிடம் தெரிவித்து விட்டதாகக் கேள்வி. ஒரு மாபெரும் பத்திரிகையின் வேண்டுகோளை புறக்கணிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த விழாவிற்கு அவர் இணங்கியிருக்கிறார். தினத்தந்தி உரிமையாளரும், தமிழகத்தில் சாதிய வேறுபாடுகளைக் கடந்து இளைஞர் விளையாட்டு அணிகளை ஏற்படுத்தியவருமான திருமிகு. சிவந்தி ஆதித்தன் தக்கபடி வரவேற்புரை வழங்கினார்.

அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரலில் தமிழறிஞர் விருது பெற்ற அருணாசலக் கவுண்டர் மட்டுமே ஏற்புரை வழங்குவதாக இருந்தது. கலைஞர் என்னைப் பார்த்து நான் ஏன் பேசவில்லை என்று கேட்டார். நான் ‘நீங்கள் தான் ‘விரைவில் முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னீர்களாம்’. என்றேன். கலைஞர் ‘நீங்களும் பேசவேண்டும்’ என்றார். பேசுவதற்கு தயாராக வராததால், அன்று சிறப்பாகப் பேசினேன்.

முதலில், ஔவை நடராசன் அவர்கள் ஒரு இலக்கியச் சொற்பொழிவை நிகழ்த்தினார் - அதுவும் கலைஞர் வழியாக: கலைஞர் ஆக்கிய சங்கத்தமிழ் நூலில் ‘வாளிங்கே - அவன் நாக்கெங்கே? என்ற உரை வீச்சை அப்படியே ஒப்பித்தார். கூட்டம் மெய்மறந்து கேட்டது. கலைஞரின் அந்த கவிதை ஆரவாரமாக இருந்தாலும், அது ஆழமான கடலின் அலைப்பாய்ச்சலாக தோன்றியது. தமிழ் மண்ணின் வீரத்தை குறிப்பாக ஒரு வீரத்தாயின் மனப்போக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. பெண்பாற் புலவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், புறநானூறில் ‘நரம்பெழுந் துலறிய..’ என்று துவங்கும் பாடலுக்கு கலைஞர் எழுதிய உரைவீச்சு ... முதுமை தட்டிய வயதிலும் அந்த உரைவீச்சை ஒளவை ஒப்பித்த விதம் கண்கவர் காட்சியாகும்.

ஔவை நடராசான் அவர்களுக்குப் பிறகு நான் பேசினேன், பொதுவாக இந்த மாதிரி விழாக்களில் பேச்சாளர்கள் விழாவின் நாயகரை மட்டுமே முன்னிலைப் படுத்தி விட்டு மற்றவர்களை ‘கோட்டை விட்டு விடுவார்கள். கலைஞர் ‘கோட்டையில் இருப்பதால் இதுவே முறையாகிவிடும். அல்லது அழைத்தவரை ஒப்புக்கு பேசுவார்கள். நான் அப்படி பேசக் கூடாது என்று மேடையிலேயே தீர்மானித்து விட்டேன்.

சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள ஆண்டாண்டு கால நட்பை விளக்கினேன். ஆழமான கால்வாய் போல் நீர் பெருக்கெடுத்த தெரு வழியாக முட்டிக்கால் வரை நனைந்தபடி, 1985ஆம் ஆண்டு எனது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அவர் வந்ததையும், அதற்கு பிறகு என் வீட்டில் வறுமை வெளியேறி விட்டதையும், இதனால் எந்த பாவப்பட்ட அலிகளைப் பற்றி எழுதினேனோ அந்த அலிகளின் நல்வாழ்விற்காக விருது பணமான ஐம்பதாயிரத்தில் பத்தாயிரம் ரூபாயை வழங்க முடிகிறது என்றும் குறிப்பிட்டேன். தினத்தந்தியின் மூத்த செய்தியாளரான சுகுமார் முன் நடக்க, முட்டிக் கால்கள் வரை வெள்ளம் வியாபிக்க என் வீட்டை தேடித்தேடி கண்டுபிடித்த சிவந்தி அவர்கள் என் மீது கொண்டு பாசத்தையும், பற்றையும் எடுத்துரைத்தேன்.

பின்னர், கலைஞர் என் மீது காட்டும் பாசத்தால் எப்படி நெகிழ்ந்து போனேன் என்பதை விலாவாரியாக விளக்கினேன். கலைஞருக்கு நான் ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். கலைஞரின் தமிழைப் பயன்படுத்தி பல இளம் ஜோடியினரை கிராமங்களில் சேர்த்து வைத்த காதல் கடமையையும் விலாவாரியாக விளக்கினேன். கலைஞரின் தமிழ் எனக்குக் கை கொடுப்பதால் என் படைப்புகளுக்கு கிடைக்கும் ராயல்டியில் ஒரு பகுதி அவருக்குப் போகவேண்டும் என்றேன். கூட்டம் என் பேச்சையும் பெரிதும் ரசித்தது. கலைஞரின் இலக்கிய மேன்மைக்கு, அவரது குப்பைத்தொட்டி சிறுகதையை ஆய்வு முறையில் குறிப்பிட்டேன்.

ஒளவையும், நானும் ஆற்றிய உரைகளாலும், முகத்தாட்சண்யம் கருதியும் சிவந்தி ஆதித்தன் அவர்கள் மீது ஏற்பட்ட பழைய பாசம் புதுப்பிக்கப்பட்டதாலும், கலைஞர் கலகலப்பாகி விட்டார். இதை மைக்கில் பேசிக்கொண்டிருந்த நான் புரிந்து கொண்டேன். உடனே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கலைஞர் அவர்களையும், சிவந்தி ஆதித்தன் அவர்களையும் இந்த மேடையில் ஒன்றாகப் பார்க்கிறோம். இனிமேல் ஒன்றாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஐந்தாண்டு காலமாக நிலவிய இடைவெளியை இட்டு நிரப்புவது போல் பேசினேன். கலைஞருக்கு தினத்தந்தியும் குறிப்பாக சிவந்தியும், சிவந்திக்கு தமிழக அரசும் குறிப்பாக கலைஞரும் தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்திற்கு இது தேவைப்படுகிறது என்பதை நான் சூசகமாக குறிப்பிட்டதை புரிந்து கொண்ட கூட்டத்தினர் அதை ஆமோதிப்பதுப் போல் பலத்து ஆரவாரித்தனர்.

கலைஞர் பேச எழுந்தார். பேச்சாளர்கள் அத்தனை பேருக்கும் கிடைத்த கைத்தட்டல்களை கூட்டி போட்டால் அதைவிட அதிகமான கைதட்டல்கள். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமோ கேட்காதோ, ஒரு சிறு தக்கை விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும் அப்படிப்பட்ட மெளன எதிர்பார்ப்பு. கலைஞர், ஒளவை நடராசன் அவர்கள் படித்த தனது கவிதையை மீண்டும் படித்தார். அந்தக் கவிதையை பத்து நிமிடம் வரை அப்படியே ஒப்பித்தார்.

போரில் புறமுதுகு காட்டி மாய்ந்ததாக ஒருவனால் புரளிகிளப்பி விடப்பட்ட மகனது சடலத்தைப் பார்க்கும் ஒரு போராளித் தாயின் கதை. மகன் மார்பில் வேல் ஏந்தி இறந்ததைக் கண்டு பொய்ச் சொன்ன கயவனின் நாக்கெங்கே என்று முலைப்பால் அறுக்கப் போன அந்த வீரக் கிழவி அந்தப் பொய்யனைத் தேடுகிறாள். கூட்டம் அசந்து விட்டது. எப்போதோ எழுதிய அந்த கவிதையை கலைஞர் காற்புள்ளி, அரைப்புள்ளி கூட பிசகாமல் தாள நயத்தோடு ஒப்பித்ததை கண்டு கூட்டம் அதிசயத்து விட்டது. தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல் கலைஞர் முகத்யுைம் பார்க்க மறந்து அவர் வாயிலிருந்து ஒலிக்கும் வார்த்தைகளை மட்டுமே உள்வாங்கியது. ஆனாலும் கலைஞர் ஒரு போடு போட்டார். கடைசிவரி ‘வாளிங்கே! அவன் நாக்கெங்கே? என்று வரவேண்டும், ஆனால் ஒளவையோ ‘அவன் நாக்கிங்கே வாளெங்கே’ என்று மாற்றிச் சொல்லிவிட்டார் என்று திருத்தம் கொடுத்தார். கூட்டம் அவரது ஞாபகச் சக்தியை கண்டு வியந்ததுபோல் பலத்து ஆரவாரித்தது. போரில் பெற்ற மகன் புறமுதுகிட்டு இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய முலைப்பாலை அறுத்தெரிவதற்கு அந்தத் தாய்க் கிழவி எப்படி வீராவேசமாக பேசியிருப்பாளோ அப்படிப் பேசினார் கலைஞர். அப்போது அந்த வீரத்தாயின் ஆண் வடிவமாகக் காணப்பட்டார்.

இது முடிந்ததும், கலைஞர் நான் ஊசி ஏற்றிய வாழைப் பழத்தில் இன்னொரு ஊசியை ஏற்றினார். அமரர் ஆதித்தனார் அவர்களுக்கும், தனக்கும் பல்லாண்டு காலமாக இருந்த நட்புறவை விளக்கினார். ஆதித்தனார் அவர்கள் தனது தலைமையிலான அமைச்சரவையில்தான், முதன் முதலாக அமைச்சராக ஆக்கப்பட்டார், என்பதை ஏதோ சலுகை வழங்குவது போல் கூறாமல், ஒரு நட்புக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக தெரிவித்தார். பின்னர் அமரர் ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றில், தனது நட்பு குறித்தோ அல்லது தனது அமைச்சரவையில் அவர் இடம் பெற்றது குறித்தோ ஒரு வரி கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். அப்போது கூட்டத்தை ஒரு தடவையும், சிவந்தி ஆதித்தன் அவர்களை மறு தடவையும் பார்த்து விட்டு மீண்டும் ‘தம்பி சிவந்திக்கு என் மீது பாசம் உண்டு. ஆனால் அதை வெளிக்காட்ட அப்போதைக்கு பயம்’ என்று அவர் இயல்பாக பேசியபோது கூட்டத்தினர் இயல்பாக இருக்காமல் பலத்து ஆரவாரித்தனர்.

எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவசர குடுக்கையாக இந்த ஒன்றாக்கிப் பார்த்தலை, கூறியிருக்க வேண்டாமோ என்று நினைத்தேன். அதேசமயம் இவர்கள் ஒன்றானால் தான் தமிழகத்தில் நல்லதுகள் விரைவில் நடைபெற்று, அல்லதுகள் ஒரளவுக்காவது மறைய முடியும் என்ற பொது நலன் கருதியே அப்படிப் பேசினேன். ஆனாலும், கலைஞர் அப்படிக் குத்திக் காட்டியது, சிவந்தியின் மனதை புண்படுத்தியிருக்குமோ என்று நினைத்தேன். பொதுவாக, ஒரு பெரியவரை இன்னொரு பெரியவர் ஏதோ ஒரு வகையில் சாடும்போது, அந்தச் சாடலுக்கு காரணமான ஆசாமிதான் ஆப்பசைத்த குரங்காகி விடுவார். இந்த நிலைக்கு நான் வந்து விட்டேன். அதே சமயம் மக்கள் சாட்சியாக சொல்ல வேண்டியதை மனச்சாட்சிபடி சொன்னதில் ஒரு திருப்தியும் ஏற்பட்டது.

ஒருவாரம் கழித்து ராணி ஆசிரியரும், தமிழ் இதழ்கள் வரலாற்றை வரலாற்று பூர்வமாக எழுதியவரும், திராவிடச் சிந்தனையாளரும், சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு வேண்டியவருமான திரு. ஆமா சாமி அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, நான் அப்படி பேசியது சரிதானா என்று கேட்டேன். உடனே அவர் ‘இரண்டு பேருக்கும் இடையிலே இருந்த ஒரு முள்ளை நீங்க எடுத்திட்டிங்க’. நீங்க அப்படி பேசினது தான் சரி. கலைஞருக்கும் எங்க அய்யாவுக்கும் பழையபடி நல்ல உறவு ஏற்படுது. கலைஞரும் மனசிலேயே நினைத்துக் கொண்டிருக்காமல் அப்படிக் கொட்டி விட்டார். இனிமேல் முதல்வரும் மனதில் எதையும் வைத்திருக்க மாட்டார். அந்த வகையில் உங்களுக்கு எங்கள் நன்றி’ என்றார்.

அந்த விழாவில் மனதில் அழுத்தி இருந்த அந்த சுமையை கலைஞர் கீழே தூக்கிப் போட்ட நேர்த்தி இருக்கிறதே, அது கேட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இப்படி மனப்பாரத்தை பூவை இறக்குவது போல இறக்கும் பண்பாடும் சொல்லாற்றலும் எனக்குத் தெரிந்து கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இந்த இருட்டடிப்பை கலைஞர் சுட்டிக்காட்டிய போது, சிவந்தி அவர்களும் வேறு வழியில்லாத ஒரு மாணவனைப் போல அதாவது ‘ஏன் லேட்டு’ என்றால், லேட்டு சார்’ என்று சொல்லும் பள்ளி மாணவன் போல் சிரித்த காட்சியை யாராவது புகை படமாக எடுத்திருந்தால், அது புகைப்பட கண்காட்சியில் முதல் பரிசை பெறும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருநாள் சென்னையில் உள்ள தமிழக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்தம் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் நான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தெரிவித்தார். எனக்கு இந்த மாதிரியான சமாச்சாரங்களில் அதிக ஈடுபாடு கிடையாது. அதே சமயம் கலைஞர் சொல்லைத் தட்டுவது போல் நடந்து கொள்வதும் சரியாகப் படவில்லை. கலைஞர் என் மீது கொண்டிருக்கிற அன்பு கண்டு ஆனந்தித்தேன். அதே சமயம் அவர் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, சென்னை தொலைக்காட்சி ஆசிரியரான என் மீது வைத்த நம்பிக்கை போல் பொய்த்து விடக் கூடாதே என்கிற பயமும் ஏற்பட்டது. ஆகவே, கலைஞரிடம் புகார் போகக் கூடாது என்பதற்காக அந்த குழுவோடு ஒத்துப் போக வேண்டும் என்று பலதடவை மனதில் சொல்லிக் கொண்டேன்.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை, சிறந்த நடிகர், நடிகைகளை, இதரக் கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் அப்போதைய குழுவிற்கு முன்னாள் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியும், மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான நீதிபதி கோகுல கிருஷ்ணன் அவர்கள் தலைவர். இவர்தான் 1960ஆம் ஆண்டு பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சியே பட்டி மண்டபத்தில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு வழங்கியவர்.

இந்தக் குழுவில் மிகச் சிறந்த திரைப்பட வசனங்களை எழுதிய ஆருர் தாஸ், பசி என்ற கலைப்படத்தை எடுத்து தமிழ் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்கிய இயக்குநர் துரை, சங்கீதத்தை இசையாக்கிய விசுவநாதன் - ராமமூர்த்தி, பாசமலர் போன்ற அற்புத படங்களை இயக்கிய பீம்சிங் அவர்களின் சௌமித்ரா, எனது இனிய நண்பர் சாருஹாசன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இவர்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது என்ற திரைப்பட இலக்கணத்தோடு ஒத்துப் போனவர்கள். என்னால், அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை . நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் அவர் தனது தோழர்களோடு ஒரு ஏரியில் குளித்துக் கொண்டு ஜட்டியை கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாய் ஆட்டுவார். இதற்கு குழுவினடமிருந்து ஒரு சின்ன எதிர்ப்புக் கூட இல்லாதது, நான் அவர்களோடு ஒன்றிப் போகாத நிலைமையை வலுப்படுத்தியது. நான் அடிக்கடி கூச்சல் போடுவது வழக்கமாகி விட்டது.

கலைஞரிடம், இப்படி கூச்சல் போடுகிறவரை உறுப்பினராக போட்டு விட்டீர்களே என்று உறுப்பினர்களோ, அல்லது தோழர் அமிர்தமோ கேட்டு விடக் கூடாது என்பதற்காக குழுக் கூட்டங்களில் மெளனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்த என் வைராக்கியம் பிரசவித்து விட்டது. எப்படியோ எழுத்தாளர் பூமணி எழுதி இயக்கிய கருவேலம் பூக்களுக்கு சிறப்புப் பரிசை என்னால் வாங்கிக் கொடுக்க முடிந்தது.

அடுத்தாண்டு திரைப்பட தேர்வுக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட போது என்னைத்தவிர எல்லா உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தார்கள். நான் நடந்து கொண்ட விதமும், கோப தாபங்களும், கலைஞரின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், குழு உறுப்பினர்கள் என்னிடம் அன்போடும், பண்போடும் நடந்து கொண்டார்கள். ‘குழுவுக்கு ‘உங்கள மாதிரி ஒரு ஆள் தேவைதான்’ என்றும் சொல்லிக் கொண்டார்கள்’ எப்படியோ புதிய குழுவில் நான் இடம் பெறாமல் போனதற்கு நானே காரணம். அதற்காக எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ ஏற்படவில்லை. கலைஞரின் நம்பிக்கையை தகர்த்து விட்டேனே என்கிற ஆதங்கம்தான். அதே சமயத்தில் எனக்கு நானே உண்மையாக இருந்தேன் என்ற தெளிவு. கூடவே, எனது கருத்துக்களை இதமாக சொல்லி இருக்கலாமே என்கிற ஒரு பின் யோசனை.

என்றாலும், தமிழக அரசின் திரைப்படத் தேர்வில் கலைப்படங்கள் தேர்வதில்லை. சும்மாயிருப்பதே நடிப்பு என்பது மாதிரியான கலைபடங்கள் தான் வந்து கொண்டும் இருக்கின்றன. இந்தத் தேர்வில் திரைப்படங்களின் அடிப்படைக் கருத்துகளைப் பற்றியோ சமூக விரோத உரையாடல்கள் பற்றியா, உறுப்பினர்கள் அலட்டிக் கொள்வதில்லை. திரைப்படத் தணிக்கை குழுவை தலையணையாக வைத்துக் கொண்டு படங்களைப் பார்க்கிறார்கள். ஆகையால், இந்தக் குழு இப்படியே இருக்கட்டும் இன்னும் சில சமூகச் சிந்தனையாளர்களை குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னைக் கேட்டால், ஒரு திரைப்படத்தின் கதைக்கரு, அடிப்படையில் மோசமாக இருந்தால் அது எவ்வளவு சிறப்பாக எடுக்கப்பட்டாலும், அதற்கு அரசு பரிசுகள் வழங்கப்படலாகது என்பேன்.
---------------

14. தமிழ் அக்காதெமி- வள்ளலார் கோட்டம் ஒரு குறிப்புணர்த்தல்

1997 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் கலைஞர் அவர்களை சந்தித்தேன்.

கலைஞரும் வழக்கத்தை விட தெம்பாகவே இருந்தார். முன்னதாக கலைஞர் வீட்டில் இருந்த அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கலைஞருக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் புரிந்து விட்டது. நானும் அந்நியத் தன்மை போய் சொந்த இடத்திற்கு போவது போலவே போனேன்.

கலைஞரை மாடியில் சந்தித்து பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்து பேசிக் கொண்டு இருந்தோம். பின்னர் கலைஞரிடம் நான்கு குறிப்புகளை சுருக்கமான அறிமுகத்தோடு கொடுத்தேன். மின்னச்சில் எடுக்கப்பட்ட குறிப்புகள். பொதுவாக வேறு ஒருவராக இருந்தால் சொல்லுங்க அப்புறமா படிக்கிறேன்’ என்பார். ஆனால், கலைஞரோ நான்கு குறிப்புகளையும் பொறுமையாகப் படித்தார்.

முதலாவது குறிப்பில் நாட்டில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை என்ற எனது நேரிடையான அனுபவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒரு கிராமத்தில் உதவிக்குத் தகுதி உள்ள ஊனமுற்றவரோ, விதவைப் பெண்ணோ, ஓய்வுதியம் பெற வேண்டிய மூத்தோரோ தமிழக அரசின் உதவி இல்லாமல் விடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விட்டு இந்த ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். மலை, மகமதுவிடம் போகாது, மகமதுதான், மலையிடம் போகவேண்டும் என்ற பழமொழியை மனதில் வைத்து இப்போதைய முறையான,

பாதிக்கப்பட்டோர் விண்ணப்பித்தலை விட்டு விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தத்தம் கிராமங்களுக்குச் சென்று உதவிக்கு தகுதியுரிய அத்தனை பேரையும் சுயமாக கணக்கெடுத்து அரசு சார்பில் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டேன். கிராமங்களில் உதவி பெற தகுதி பெற்றும் உதவி மறுக்கப்படுகிறவர்களை கண்டறிய அரசு ஊழியர்களுக்கு தெரியாமலே கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். இதில் பலதரப்பினரும் இடம் பெற வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

இரண்டாவது குறிப்பில், வடலூரில் உள்ள வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். வள்ளலாருக்கு பின்பு தோன்றிய, ரமணர், அரவிந்தர், சேஷாத்திரி போன்ற பெரியவர்கள் தவமிருந்த இடங்கள் பளிங்கு மண்டபங்களாய் காட்சியளிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். சங்கராச்சாரியார் போன்றவர்களைப் போல் அல்லாது தமிழ் வழிபாடு, சாதியமறுப்பு, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் பூசை புனஸ்காரம் இல்லாத அருட்பெருஞ்ஜோதி வழிபாடு - ஆகியவற்றைக் கொண்டு வந்த அசல் தமிழ் ஆன்மீகப் போராளியான வள்ளலாரின் வடலூர் வளாகத்தை அமிர்தசரஸ் பொற்கோயில் போல் ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனைப் படித்துப் பார்த்த கலைஞர் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

காஞ்சி மடத்துக்குச் செல்லும் வடநாட்டு வாசிகளையும், வெளிநாட்டு தலைவர்களையும் தமிழ் மண்ணை உள்ளது உள்ளது போல் விளக்கும் வடலூர் வளாகத்திற்கு வரவழைக்கும் வகையில் அந்த வளாகம் மேன்படுத்த வேண்டும் என்பதை கலைஞரும் ஒப்புக் கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன் என்னை அடுத்து தன்னைச் சந்திக்க போவதாகவும், அவரிடம் இந்தக் குறிப்பை தக்க நடிவடிக்கைக்காக கொடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். நான், அமைச்சர் தமிழ்க் குடிமகன், விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் ஒன்று கூடி, ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்றாவதாக ஒரு இரகசியக் குறிப்பைக் கொடுத்தேன். கலைஞர் பொறுப்பேற்ற கால இடைவெளியில் ஏற்பட்டு வரும் எதிர்வினைகளைச் சுட்டிக் காட்டி அதை முறியடிப்பதற்கான சட்டப்பூர்வமான, அமைதி வழியிலான குறிப்புதான் அது. அவரது கழகம் மட்டும் இலைமறைவு, காய்மறைவாக ஆதரவளித்தால் தனிமனிதான் நானே, அந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்துவதாக தெரிவித்தேன். வள்ளலார் பேச்சு வந்ததும் உடனடியாக பதிலளித்த கலைஞர் அப்போது மெளனமாக இருந்தார். நான் வற்புறுத்திய போது யாதார்த்த நிலையை அவர் விளக்கினார். சேம் சைடிலேயே கோல் போட்ட சில பேர்வழிகளின் பெயர்களையும் சொன்னார். உடனே நான் நேர்காணலில் முத்திரைப் பதிக்கும் வீரபாண்டி போன்றவர்களும் கலைஞருக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்றேன். கலைஞர் குறிப்பிட்ட காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை, ஆனால் வெளியிடக் கூடியவை அல்ல.

நான்காவது குறிப்பு நமது மாநில அளவில் மத்திய சாகித்ய அகடாமியைப் போல் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பது. மத்திய அரசின் இலக்கியக் கூறுகளாக விளங்கும் சாகித்திய அக்காதெமியும், நேஷ்னல் புக் டிரஸ்டும் பாரபட்சமாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். தமிழகத்தில், இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலும், ஐம்பது, அறுபதுகளிலும் மகத்தான் தாக்கத்தை ஏற்படுத்திய திராவிட இயக்கமும், இலக்கியமும் இந்த ஆலோசனைக் குழு பேர்வழிகளுக்கு வேப்பங்காயாகப் போய்விட்டன. வேண்டப்பட்ட பலருக்கு ஓசைப் படாமல் பொறுப்புகளைக் கொடுப்பதும், இவர்களை அகடாமி சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் இன்றுவரை தொடர்கிறது. இப்படிப் போகிறவர்களும் தமிழ் மண்ணை கொச்சைப் படுத்தும் வகையிலேயே பேசிவிட்டு திரும்புகிறார்கள்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய சுதந்திரதின பொன்விழாவின் போது, நாட்டில் பதினெட்டு மொழிகளில் உள்ள ஒவ்வோர் மொழியில் இருந்தும் மூன்று தலைமுறை கவிஞர்கள் டில்லியில் கவிதைபாட அழைக்கப் பட்டிருந்தார்கள். தமிழிலும் சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த கவிஞர் என்ற முறையில் வைரமுத்தும், சுதந்திரத்தோடு பிறந்த கவிஞராக ஈரோடு தமிழன்பனும் கவிதை பாட அழைக்கப் பட்டார்கள். வரவேற்கத்தக்கதே.

என்றாலும், சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் இருந்த தலைமுறையில் எந்தக் கவிஞர் அழைக்கப்பட்டார் தெரியுமா? கவிதை என் கைவாள் என்று சொன்ன பொதுவுடைமை கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அல்ல... மதநல்லிணக்க கவிதைகளை ஆக்கித்தந்த முனைவர் தயானந்தன் பிரான்சிஸ் அல்ல... உவமைக் கவிஞர் சுரதா அழைக்கப்படவில்லை. குலோத்துங்கள் யுகம் என்று பிரேமா நந்தக்குமாரால் பாராட்ட பெற்றவரும், தமிழை விஞ்ஞானப்பூர்வமாக பார்த்து கவித்துவமாய் ஆக்குகிறவருமான கவிஞர் குலோத்துங்கன் (வாசெ. குழந்தைசாமி) அழைக்கப்பட வில்லை. இந்த மூத்தக் கவிஞர்களை விட்டு விட்டு சாகித்திய அக்காதெமி பழைய தலைமுறை கவிஞர் என அழைத்தது எழுத்தாளர் சுந்தரம் ராமசாமியைத் தான். அழைக்கப்பட்டவருக்கே அப்போதுதான் தான் கவிஞர் என்கிற விவரம் தெரிந்திருக்கும். எனவே, தகுதிமிக்க மண்வாசனை படைப்பாளிகளை பிறமொழிகளில் கொண்டு செல்ல மாநில சாகித்திய அக்காதெமி அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்று அந்தக் குறிப்புக் கேட்டுக் கொண்டது.

கலைஞர், தமிழ் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்காக ஒரு தனி இலக்கிய அமைப்பு எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்டார். அக்காதெமி என்கிற பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்று சில விளக்கங்களை என்னிடம் கேட்டார். நானும் நிறைவோடு பதிலளித்தேன். இந்தக் குறிப்பை கலைஞர் ஏற்றுக் கொண்டார்.

பத்து, பன்னிரண்டு நிமிடம் கலைஞரிடம் பேசிவிட்டு நான் விடைபெற்றேன். கீழே முதல்வரை சந்திப்பதற்காக காத்திருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் சிறந்த இலக்கியவாதியுமான தமிழ்க் குடிமகன் அவர்களிடம் ரகசியக் குறிப்பைத் தவிர இதர குறிப்புகளை விளக்கினேன். அவரும் கலைஞரின் அனைத்து விருப்பங்களும் செயல்படுத்தப்படும் என்று வாக்களித்தார்.
--------------

15. கண்களைக் கலக்கிய ஒரு கையறு சொல்


1997ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்

மேட்டுக் குடியினரால் புறக்கணிக்கப்பட்ட திராவிட இலக்கியத்தை மறு ஆய்வு செய்யும் போக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்களிடம் கடந்து ஐந்தாண்டு காலமாக தீவிரமாக ஏற்பட்டுள்ளது. இதில் என் பங்கும் உண்டு. எழுத்தாளர் வெ. புகழேந்தி எழுதிய அண்ணா வழி சிறுகதைகளை நான் படித்தேன். இந்தத் தொகுப்பில் அண்ணா, கலைஞர், தென்னரசு, ராதா மணாளன், இரா செழியன், சேகரன், முரசொலி மாறன், டிகேசீனிவாசன் போன்றவர்களின் அற்புதமான சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குப்பைத் தொட்டி தனது அனுபவத்தைச் சொல்வது போன்ற கலைஞரின் ‘குப்பைத் தொட்டி’ என்ற சிறுகதை இப்போது கூறப்படுகிறதே மேஜிக்கல் ரியலிசம் - அதாவது மாந்திரீக யதார்த்தம் அதற்கு முன்னோடியாக இருந்த கதையாகும். இந்தக் கதை இலக்கிய இதழான செம்மலரில் சிகரங்களைத் தொட்ட சிறுகதை வரிசையில் பிரசுரிக்கப்பட்டது.

தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி போன்ற அற்புதமான மண்வாசனை படைப்புகளை உருவாக்கியவரும், பல மொழிகளில் கொண்டெடுத்து செல்லப்பட்டவருமான என் இனிய தோழர் சின்னப்ப பாரதி அவர்கள் திராவிட மற்றும் முற்போக்கு படைப்பாளிகளின் படைப்புகள் மேட்டுக்குடியினரால் இருட்டடிப்பு செய்வதை உணர்ந்து, இவற்றை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு ஆங்கில காலாண்டு இதழை துவக்கினார். இந்தியன் லிட்ரேச்சர் அண்டு அஸ்தட்டிக்ஸ் (ILA-Indian Literature and Aesthetics) என்ற இந்த காலாண்டு இதழை மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் முல்லை வேந்தன் அவர்கள் சென்னையில் வெளியிட்டார்.

இந்த இதழில் கலைஞரின் நாலைந்து சிறுகதைகளும், அண்ணா இறந்தபோது கலைஞர், வானொலியில் ஆற்றிய உரை வீச்சும் இடம் பெற்றன. இவற்றைப் படித்துப் பார்த்த பிறமொழி வாசகர்கள் குறிப்பாக மார்க்சிய தோழர்கள் கலைஞரின் இலக்கியத்தில் ஒரு போர்க்குணம் இருப்பதை கோடி காட்டினார்கள்.

இப்படி கலைஞரின் இலக்கியத்தின் பக்கம் எனது கவனம் திரும்பியபோது, கலைஞருக்கு எதிரான பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஒன்று திரண்டன. சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியுற்ற ஜெயலலிதா அவர்கள் மரித்தெழுந்தார். மேற்கு மாவட்ட, தென் மாவட்ட சாதிய சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் நான் கண்ட சில ‘கள் யாதார்த்தங்களை’ கலைஞரிடம் சொல்வதற்காக அவரைச் சந்திக்க சண்முகநாதனிடம் தேதி கேட்டேன். கலைஞர் அனுமதித்து விட்டார்.

வழக்கம் போல் கலைஞரை மாடியில் உள்ள அவரது அறையில் சந்தித்தேன். நான் கண்ட யதார்த்தங்களை அவரிடம் விளக்கினேன். ஜெயலலிதா தலைமையில் பலமான எதிர்சக்தி உருவாகி இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒரு குறிப்பிட்ட சாதியினர் திமுகவினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று வாதாடினேன். ஆனால், கலைஞர் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த சாதியில் திமுகவில் நாற்பதுக்கும் அதிகமான பேரவை உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். சென்ற சட்டப் பேரவை தேர்தலிலும் இவர்கள் தனக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதே சமயம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் பலனும் இல்லை. நான், சென்ற சட்டப்பேரவை தேர்தல் போல், நாடாளுமன்ற தேர்தல் இருக்காது என்றும் திமுகவிற்கு அப்போதைய அளவிற்கு வாக்குகள் கிடைக்காது என்றும் குறிப்பிட்டேன்.

உடனே முதல்வர் டெலிகாமில் பேசி, சண்முகநாதனை ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியான முரசொலியை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். ‘நீங்கள் தான் முரசொலி படிப்பதில்லையே’ என்று ஒரு செல்லக் குட்டும் வைத்தார். சண்முகநாதன் கொண்டு வந்த முரசொலியின், முதல் பக்கத்தில், கலைஞர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த போது சுயமாய் திரண்ட கூட்டப் பெருக்கை புகைப்படமாக காட்டியது. கலைஞர் பெருமிதமாக ‘சமுத்திரம்! எனக்கு போகிற இடமெல்லாம் நல்ல கூட்டம் வருது... பாத்தீங்களா முரசொலியை . ஆனா பெரிய பத்திரிகைகள் இதை இருட்டடிப்பு செய்கின்றன’ என்றார். பேச்சு வாக்கில் கலைஞர் முதலில் முரசொலியையும், பின்னர் விடுதலையையும் இவற்றிற்கு பிறகுதான் இதர பத்திரிகைகளையும் படிப்பதாக அறிந்தேன். உடனே, நான் இந்த பாணியில் பேசினேன்.

‘சார் காமராசர்... புதிதாக தோன்றிய திமுக சக்தியா பற்றி கவலைப்படாம, ராஜாஜியை மட்டுமே ஒரு பெரிய சக்தியா நினைத்தார். இதனாலதான் அவர் தமிழக அரசியலில் திமுகவிடம் தோற்றார். நீங்களும் போணியாகாத விடுதலைப் பத்திரிகை மேல ஒரு அடிக்சன் வைத்திருக்கிங்க. இது உங்களை யாதார்த்தத்திலிருந்து திசை திருப்புமுன்னு நினைக்கிறேன். முதல்ல அந்த பத்திரிகையை படிக்கிறத விடுங்க சார்’.

‘ஆயிரந்தான் இருந்தாலும் நான் வேலை செய்த பத்திரிகை ஆயிற்றே.’

கலைஞருக்கு, ஜெயலலிதாவிடம் அடிமைப் பட்டுப்போன விடுதலை பத்திரிகையின் பெருங்காய வாசனை போகவில்லை. ‘விடுதலையை பற்றி பேசும் போது அவரது கண்கள் உள்நோக்கிப் போய் கடந்த காலத்தில் கால் நிமிடம் மையம் கொண்டன. மீண்டும் எனது பேச்சு, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலைச் சுற்றி வந்தது. இன்னின்ன இடங்களில் கலைஞருக்கு ஆதரவு இருக்காது என்பதை சொன்னேன். எனது நோக்கம் கலைஞரை உஷார் படுத்த வேண்டும் என்பதுதானே தவிர ஊக்க குறைப்பிற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டினேன்’

கலைஞரோ எனது கருத்தாக்கம் - எதிர்கருத்தாக்கம் என்ற தத்துவார்த்தப் போக்கை புரிந்தவர் போல் மெல்ல தலையாட்டினார். நான், மீண்டும் மீண்டும் அவருக்கும் கட்சிக்கும், மக்கள் மத்தியில், குறிப்பாக பேருந்து கட்டணங்களை உயர்த்தியதால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை தெரிவித்தபோது கலைஞர், மனம்விட்டு என்னிடம் ஆணியடிப்பதுப் போல் இந்த பாணியில் பேசினார்.

‘சமுத்திரம்! எல்லாருக்கும் நன்மை செய்யணுமுன்னுதான் நான் நினைக்கிறேன். கட்சிக்கு அப்பால் எல்லா மக்களையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். பல நல்ல காரியங்களை செய்து வருவது உங்களுக்கே தெரியும். அப்படியும் யாராவது ஓட்டுப் போடா விட்டால் அதற்கு நான் என்ன சமுத்திரம் செய்ய முடியும்’

என் கண்கள் கலங்கி விட்டன. ஒரு மகத்தான் தலைவர், மாபெரும் முதல்வர், ஒரு எழுத்தாள சாமனியனிடம் எப்படியெல்லாம் மனம் விட்டு பேசுகிறார்! கட்சிக் காரர்களிடமும், அமைச்சர்களிடமும் கூட கூற முடியாத ஒரு கருத்தை என்னிடம் எப்படி முன் வைக்கிறார் என்பதை நினைத்ததும், நான் ஆடிப்போனேன். குறிப்பாக சண்முகநாதன் அவர்கள் மூலம் முரசொலியை தருவித்து கலைஞரே, தனது நெல்லை மாவட்ட சுற்றுப் பயண நிகழ்வு புகைப்படங்களை என்னிடம் காட்டியது என்னை பிரமிக்க வைத்தது.

நான் கலைஞரை நீர் போங்கும் கண்களோடு நிலைகுலைவாய் பார்த்தேன். ஒரு மகத்தான் மனிதரின் அருகே இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ந்து போனேன். சிறிது இடைவெளிக் கொடுத்து எழுந்து நடந்தேன். ஆனாலும், கலைஞர் அன்று உணர்ச்சி வசப்பட்டு, என்னிடம் தெரிவித்த இந்தக் கருத்து மனதளவில் அவரது செயலாக்கம் எப்படி மாசற்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. இதைக் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் புரிந்து கொண்டார்களா என்பது வேறு விவகாரம்.
----------------

16. மஞ்சள் துண்டு ஒரு மஞ்சள் விமர்சனம்

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

வள்ளலாருக்கு அமிர்தசரஸ் பொற்கோவில் போல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்பு கொடுத்த குறிப்பை கலைஞரிடம் நினைவுப்படுத்தினேன். பிறகு நகைச்சுவையாக ‘நீங்கள் போட்டிருக்கும் மஞ்சள் துண்டை விட, வள்ளலார் உங்களுக்கு அதிகமாக வலிமை கொடுப்பார்’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்தேன். என்னிடம் அவர் காட்டிய தோழமையில் அவர் மகத்தான் தலைவர் என்பதையும், தமிழகத்தின் முதல்வர் என்பதையும் மறந்து போய் சிறிது அதிகமாகவே பேசிவிட்டேன்.

கலைஞர், தோளில் மஞ்சள் துண்டு அணிவதை, பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக் கொள்கிறவர்கள், மேடைகளில் கிண்டல் அடித்தும், பத்திரிகைகளில் எழுதியும் வந்த வேளை. உடை என்பது உடம்பு முழுவதையும் நாகரீகமாக மறைக்கும் வரை, அது ஒருவரின் சொந்த விவகாரம் என்பதை, வேண்டும் என்றே மறந்து போய், கலைஞரை இந்தப் பேர்வழிகள் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். இதன் தாக்கத்தாலோ என்னமோ நானும் மஞ்சள் துண்டை குறிப்பிட வேண்டியது ஆயிற்று. ஆனாலும், கலைஞர் அசரவில்லை. மஞ்சள் துண்டை போட்டிருப்பதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப் போனார். நான் அவர் பேச்சை இடைமறித்து இப்படிக் கூறினேன்.

‘சார், நீங்க மஞ்ச துண்ட போடுறத கிண்டல் செய்றவங்க பகுத்தறிவுக்காக அப்படி வாதாடல. எப்படியாவது உங்கள் இந்த மஞ்சள் துண்ட எடுக்க வைச்சிட்டு, அப்படியாவது நீங்க தலையை போட்டுட மாட்டீர்களா என்று எதிர் பார்க்கிற நமது அரசியல் விரோதிகள் அவர்கள். மஞ்சள் துண்டு ஒரு பெரிய விவகாரம் அல்ல. போன வருஷமே உங்களுக்கு ஆயுள் முடியப்போகுதுன்னு நாள் குறித்த எதிரிகளுக்கும் இந்த மஞ்சள் துண்டு மைய பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எந்த துண்டு போட வேண்டும் என்பது உங்கள் உரிமை. இதை குறை கூறுகிற எவரும் ஒரு காட்டுமிராண்டிதான்’ என்று பொரிந்து தள்ளி, அந்த விவகாரத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தேன்.

கலைஞர் என் கருத்தை ஆட்சேபிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. சின்ன சிரிப்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார்.

பல்வேறு அரசியல் - சமூக விவகாரங்கள் குறித்து கலைஞரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் வெளியே சொல்ல முடியாத சில விவகாரங்களை என்னிடம் விளக்கினார். நான் நெகிழ்ந்து போனேன். அவர் அப்போது கூறியவை எல்லாம் பின்னர் சம்பவங்களாகவும், செய்திகளாகவும் வெளிப்பட்டன. நான் என்னையே நம்ப முடியாமல் கலைஞரை நம்பிய படியே பார்த்தேன். இந்த துஷ்ட பிள்ளையிடமும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை, என்னை மலைக்க வைத்தது.

பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள வைகுண்டசாமிக்கு ஒரு நல்ல கோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் எளிய மக்கள் அனைவரும் வைகுண்டர் பக்கம் நிற்பார்கள் என்றேன். உடனே கலைஞர் ‘மெர்கண்டைல் வங்கி விவகாரத்தை நல்ல முடிவுக்கு கொண்டு வரப்போகிறேன் சமுத்திரம்’ என்றார். உடனே நான் ‘ஓட்டுப் போடக் கூட போகாத பணக்காரர்களுக்கு நீங்கள் செய்வது எப்படியோ.. ஆனால், வைகுண்ட சாமியை மேன்மைப் படுத்தினால் எளிய மக்கள் குறிப்பாக பனையேறி மக்கள், உங்கள் பக்கம் கட்டுக் கோப்பாக நிற்பார்கள். அதோடு வைகுண்டர் வள்ளலாருக்கும், நாராயண குருவிற்கும் முன்பே மாபெரும் புரட்சியாளராக இருந்தவர்’ என்று குறிப்பிட்டேன். கலைஞரும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்க் குடிமகன் அவர்களை, சாமித் தோப்பிற்கு சென்று முதலில் பார்வையிடச் சொல்வதாகக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு என்ற இடத்தில் மாபெரும் ஆன்மீகப் போராளியாக உதித்தவர் வைகுண்டர். வள்ளலாருக்கும், நாராயணகுருவிற்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து அவர்களுக்கு இணையாக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் நம்பூதிரிகள், பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோர் தவிர அனைத்து சாதியினரும் முட்டிக்கு கீழே வேட்டி கட்டவோ, தோளில் துண்டு போடவோ, நல்ல பெயர் வைத்துக் கொள்ளவோ உரிமை உள்ளவர்களாக இல்லை. முடிசூடும் பெருமாள் என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட வைண்டருக்குக் கூட, மேல் சாதியினரின் அச்சுறுத்தல் கலந்த வற்புறுத்தலில் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதோடு, அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த துணியும் போடக் கூடாது என்று இந்து மதத்தாலும், அதன் எடுபிடியான அரசாலும் தடைசெய்யப் பட்டிருந்த காலம். இந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய வைகுண்டர் பிராடஸ்ட் கிறிஸ்துவ என்ற பாதிரிகளான தெளவே, சார்லஸ் மால்ட் போன்றவர்களால் துவக்கப்பட்ட தோள்சீலைப் போராட்டத்திற்கு அழுத்தம் கொடுத்தவர். துண்டு போட உரிமையற்ற எளியவர்களுக்கு தலைப்பாய் கட்டிவிட்டவர். ஆடு வெட்டியும், மாடு வெட்டியும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் மாய்ந்து கொண்டிருந்த எளிய மக்களை அருவ வழிபாட்டிற்கு கொண்டு வந்தவர். ‘குகையாளப் பிறந்தவனே என் குழந்தாய் எழுந்திருடா என்று கவிமுழக்கம் இட்டவர். இந்த முழக்கம்தான் திராவிட இயக்கத்தின் குறிப்பாக கலைஞரின் தமிழ் முழக்கமானது. இந்த வகையில், வைகுண்டரைப் போலவே எளிய குடியில் பிறந்த கலைஞர், அந்த சாமித்தோப்பு ஆன்மிகப் போராளியின் ஒரு நவீன, சமூக பதிப்பு என்பதே என் கருத்து. இதை கலைஞருக்கு எடுத்துரைப்பதில் எந்த அளவிற்கு வெற்றிப் பெற்றேனோ எனக்குத் தெரியாது. இதுவரையும் சாமித்தோப்பு ஆசாமித் தோப்பாகவே இருக்கிறது.
------------------

17. சாண் ஏறி முழம் சறுக்கிய தேர்தல்கள்...

நான், கலைஞரை மீண்டும் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கலைஞரை மீண்டும் கோபாலபுரத்தில் சந்தித்தேன்.

இதே ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா அணி 30இடங்களையும், கலைஞர் அணி 10இடங்களையும் பெற்று மத்திய அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்ட காலக்கட்டம். ஜெயலலிதா கலைஞர் அரசை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டிக் கொண்டிருந்த வேளை.

இந்த தேர்தல்களுக்கு முன்பு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் அவர்களின் அங்கீகாரத்தில் கோவை, மதுரைத் தொகுதிகளை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும்படி மூப்பனாரிடம் மேற்கொண்ட முயற்சிகளையும், கலைஞரோடு தொடர்பு கொள்ள முடியாமல் போன முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். ஒருவேளை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டு இருந்தால், மிகச்சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக - பாஜக கூட்டணியை தோல்வியுறச் செய்திருக்கலாம். இதனால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று வெளிப்படையாகவே தெரிவித்தேன்.

கலைஞர், முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், நான் குறிப்பிடுவதை உள்வாங்கிக் கொண்டார். ஓரளவு உற்சாகம் குறைந்துதான் காணப்பட்டார். அவரது அரசியலே சாண் ஏறி முழம் சறுக்குகிற கதை. பழையகதை திரும்பி விடக் கூடாதே என்று அவர் சிந்தித்திருந்தால் அது தவறில்லை. அவரை உற்சாகப்படுத்துவதற்காக கலைஞரிடம் நான் அறிந்த ஒரு தகவலைச் சொன்னேன். அது வெறும் தகவல் அல்ல. உண்மை. மேயராக பணியாற்றும் திரு. ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை கண்டதாக குறிப்பிட்டேன். குறைந்த பட்சம் அவருக்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை என்றும் அவரது கண்துஞ்சா செயல்பாடு மக்களின் கவனத்திற்குப் போய் இருக்கிறது என்றும் தெரிவித்தேன். அவர் முகத்தில் அரசியல் சோகங்களையும் மீறி ஒரு சின்னப் பெருமிதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில், கோரைப்புற்கள் என்ற எனது சிறுகதைத் தொகுப்பை கலைஞரிடம் கொடுத்தேன். இதில் வரும் தலைப்புக் கதை 1997ஆம் ஆண்டு தினமணிக் கதிர் பொங்கல் மலரில், எழுதப் பட்டு பின்னர் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. இந்தக் கதையில் அப்போதே ஒருவேளை தமிழகத்தில் நடைபெறக் கூடிய கலைஞருக்கு எதிரான எதிர்வினைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். அது இப்போது பலித்து விட்டதில் மிகவும் வேதனைப் பட்டேன்.

இந்தக் கதையில், யாதவமக்களின் தலைவனான கிருஷ்ணன், அந்நியனான அர்ச்சுனனை இந்த மக்களுக்கு அறிமுகப்படுத்தி, எப்படி தனிநபர் வழிபாட்டைக் கொண்டு வந்தான் என்பதையும், இதன் தொடர்பாக யாதவகுல அழிவின் போது அத்தனை யாதவரும் ஒரு உடுக்கடி கலைஞன் வசம் மாட்டிக் கொண்டதை சிறிது சேர்த்து புராணக் கதையில் அரசியல் பொடி தூவினேன். கோரைப் புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு யாதவகுலம் மாண்டு போகிறது. இன்னும் எஞ்சியிருக்கும் கோரைப் புற்களை புதிய பூதகி , நவீன பூதங்களோடு தமிழக கடலோரம் கூட்டி வருவதாக முடித்திருப்பேன். இதில் அர்ச்சுனனாக எம்.ஜி.ஆரையும், கிருஷ்ணனாக கலைஞரையும் உருவகித்துப் படித்தால் அந்த கதைக்குள்ளே ஒரு கதை இருப்பது புரியும்.

முதல்வர் கலைஞரிடம் இந்தக் கதையை படிக்கும்படி குறிப்பிட்டேன். நான் அவரைப் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாததை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனப்போக்கில் கொடுத்தேன்.

இதற்குப் பிறகும் கலைஞரிடம், எதிர் சக்திகளின் மேலாண்மை பற்றி பேசினேன். கலைஞர், நான் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, பதிலளிக்கவில்லை. நான் பேசப்பேச, எதிர்சக்திகளை முறியடிக்க அல்லது எதிர் நோக்க, மேற்கொள்ளப் படவேண்டிய வியூகம், அவர் மனதில் எழுந்ததாக நினைக்கிறேன். நானும், கலைஞரை அந்த வியூகத்திற்குள்ளேயே விட்டு விட்டு சண்முகநாதன் டெலிகாமில் இன்னொரு பார்வையாளரை நினைவு படுத்தும் முன்பே வெளியேறினேன்.

கலைஞரைச் சந்தித்துவிட்டு அந்தத் தெருவின் எதிர் பக்கம் உள்ள வீட்டிற்குச் சென்றேன். எனது இனிய நண்பர் நாகப்பிள்ளை அவர்களின் இல்லம் அது. சென்னையில் எல்.எம்.எல் இருச்சக்கர வாகனங்களின், ஒட்டுமொத்த விற்பனையாளராக அதற்காக ஒரு தொழிற்கூடமும் வைத்திருப்பவர். தஞ்சையில் இப்போது மாருதி விற்பனைக் கூடத்தையும் வைத்திருக்கிறார். மிகவும் எளிமையானவர். அவரும், அவரது குடும்பத்தினரும் எனக்கு குடும்ப நண்பர்கள். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கலைஞரை நான் அடிக்கடிப் பார்ப்பது அவருக்குத் தெரியும். என்னிடம் கலைஞர் குடும்பத்தைப் பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டார்.

கலைஞர் குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் தனது மருமகள்களுடன் அந்தக் காலத்தில் இருந்தே இயல்பாக பழகுவார்கள் என்றும், ஒரு தலைவரின் மகள்கள் என்ற எண்ணத்தை எப்போதுமே கொடுக்கமாட்டார்கள் என்றும் வாயாரப் பாராட்டினார். அவர் தெரிவித்த பிறகுதான் எனக்கு கலைஞர் குடும்பத்தினர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் தெரியும். ஆக மொத்தத்தில் அந்த நாலாவது குறுக்குத் தெருவில் சொந்தமாய் குடி வந்த நாளிலிருந்து கலைஞரும், அவரது குடும்பத்தினரும் அனைவருக்கும், நல்லதொரு அண்டை வீட்டுக்காரர்களாகத்தான் நடந்து வருகிறார்கள் என்று அவர் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
----------------

18. தோழமை என்ற ஒரு சொல்லாக நம்பூதிரிபாத்-கலைஞர்

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி நானும் தோழர் சின்னப்ப பாரதியும் கலைஞரைச் சந்திக்க அனுமதிக் கிடைத்தது.

அன்று காலை ஒன்பது மணிக்கு கலைஞரை சந்திக்க அனுமதி கிடைத்தது. காலை எட்டேமுக்கால் மணிக்கே சென்றுவிட்டோம். அன்றைக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.பா என்று அன்போடு அழைக்கப்படும் முனைவர் சி.பாலசுப்பிரமணியம் அதிகாலையில் காலமாகி விட்டார். இனிமையாக இயல்பாக பழகும் தமிழறிஞர். எனது சத்திய ஆவேசம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில், இந்த படைப்பைப் பற்றி, அவர் விலாவாரியாக பேசியது இன்றும் இனிமை நினைவுகளாக நிழலாடுகின்றன. அதே சிபா அவர்கள் எங்கள் சந்திப்பு நாளில் அதிகாலையில் மரணமாகி விட்டார். கலைஞரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பார்வையாளர்கள் நேரத்தை தவிர்க்க முடியாதபடி ரத்து செய்து விட்டார்.

நாங்கள் கலைஞர் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் சண்முகநாதன் அவர்கள் நிலைமையை விளக்கி விட்டு, ‘எதற்கும் போய்ப் பார்க்கிறேன்’, என்ற தெரிவித்து விட்டு கலைஞரை சந்திக்க சென்றார். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து எங்கள் இருவரை மட்டும் சந்திக்க கலைஞர் அனுமதி கொடுத்ததாக தெரிவித்தார். விரைவாக பேசிவிட்டு வந்து விடும்படியும் அறிவுரை கூறினார். கலைஞரை சந்திக்க முன் அனுமதி பெற்றிருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், கட்சித் தலைவர்கள், மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் திருப்பி அனுப்பப் பட்டார்கள். அவர்கள் அப்படி அனுப்பப் பட்டதில் எனக்கு சந்தோஷம் வரக்கூடாதுதான் ஆனாலும் வந்தது. எங்களை மட்டுமே பார்க்க கலைஞர் அனுமதித்து இருக்கிறார் என்பதில் ஒரு பெருமிதம். அதே சமயம் சி.பாவின் மரணத்தால் ஒரளவு அதிர்ச்சியுற்ற நானும் கலைஞருடன் உரையாடுவதற்காக மனதில் வரித்திருந்த உரைப் பொருள் பட்டியலை உடனடியாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை .

வழக்கம்போல் கலைஞர், எங்களை எழுந்து நின்று வரவேற்றார். நான் சின்னப்ப பாரதி அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். உடனே கலைஞர் தெரியுமே... இவரோட தாகத்தை படித்திருக்கேன்’ என்றார். இந்த தாகம் நாவல், மக்கள் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனை. எளிமையான நடையில் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் மிட்டாமிராசுகள், விவசாய தொழிலாளர்களுக்கு சவுக்கடி, சாணிப்பால் கொடுத்து கொடுங்கோன்மை செய்ததையும், இந்த கொடுமைகளை மீறி அவர்கள் போர்க்கொடி தூக்கியதையும் சித்தரிக்கும் நாவல். நிச்சயம் கலைஞருக்கு பிடித்திருக்கும்.

பிறகு கலைஞரிடம் ‘சார், இவரு நம்பூதிரிபாத் அவர்களோடு தோழமையோடு பழகுகிறவர். முதலைமைச்சரான கலைஞர் எப்படி இருப்பாரோ என்று உங்களைச் சந்திக்க தயங்கினார். நான்தான் ‘கலைஞர் இன்னொரு நம்பூதிரிபாத்... சந்தித்துத்தான் பாருங்களேன் என்று வற்புறுத்திக் கூட்டி வந்தேன்’ என்றேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். பின்னர் அவரிடம், அவரது அண்ணா இரங்கற்பா பிரசுரமான இலா பத்திரிகையை காட்டினோம்.

அந்த ஆங்கில மொழியாக்கத்தை ஒரு நிமிடம் மேலோட்டமாக பார்த்த கலைஞர் அந்த கவிதையில் முக்கியமான சில பகுதிகள் விடுபட்டு போய்விட்டன என்று போகிற போக்கில் சொல்வது போல் சொன்னார். உடனே மொழிபெயர்ப்பாளர் ஆக்கிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டோம் என்றும், மீண்டும் அதை முழுமையாக வெளியிடுவோம் என்றும், குறிப்பிட்டு விட்டு, கலைஞர் போய் வாருங்கள் என்று சொல்லும் முன்பே நாங்கள் எழுந்தோம். காலத்தின் அருமை கருதும் கலைஞர் எங்களை மட்டும் பார்த்ததற்கு நன்றி சொல்லிக் கொண்டோம். கலைஞரும் எழுந்து நின்று வழியனுப்பினார்.

பொதுவுடைமை தலைவர்களோடு ‘தோழரே’ என்று இணையாக பழகும் சின்னப்ப பாரதியே அசந்து போனார். ‘என்னங்க கலைஞர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். எவ்வளவு அன்பாக இருக்கிறார்’ என்று கோபாலபுரத்தில் இருந்து ராதாகிருஷ்ண சாலை வருவது வரைக்கும் சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு என் சட்டையைப் பிடித்து இழுத்து நிற்க வைத்து ‘என்ன சமுத்திரம்! கலைஞர் கிட்ட போய் அவ்வளவு சர்வ சாதாரணமா பேசுறீங்களே. நான் அவர் பார்க்க தயங்கினேன் என்பதை கூட சொல்றீங்களே’ என்று ஆச்சரியப்பட்டார். உடனே நான், ‘ஒரு மகத்தான் தலைவரிடம் அப்படி சொல்லக் கூடாது. ஆனால், கலைஞர் மாபெரும் தலைவர் மட்டும் அல்ல... தலைசிறந்த இலக்கியவாதி. நான் பேசவில்லை; அவர்தான், தனது சொல்லாலும் செயலாலும் என்னை அப்படி பேச வைக்கிறார்’ என்று குறிப்பிட்டேன்.

பொதுவுடைமை கட்சிக்காரர்கள் அரசியல் ரீதியாக கலைஞரிடம் இணைவதும் உண்டு. பிரிவதும் உண்டு. பலமாக ஆதரிப்பதும், கடுமையாக சாடுவதும் அரசியல் மாற்றங்களை சார்ந்து உள்ளன. ஆனால், இலக்கியம் என்று வரும் போது கலைஞரிடம் அவர்களுக்கு மகத்தான் மரியாதை உண்டு.

இப்போது தீக்கதிர் பத்திரிகையில் கலைஞரின் அரசியல் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், முதல்வரின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான தென்பாண்டிச் சிங்கம் - கேரளத்தில் உள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிற தகவலை நான் குறிப்பிட்டதும் மறுநாள் அதை மிகப்பெரியச் செய்தியாக தீக்கதிர் வெளியிட்டது. இதற்காக தீக்கதிர் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்த போது ‘என்ன தோழரே! கலைஞர் மாபெரும் இலக்கியவாதி என்பதில் நாங்கள் எப்போதுமே அணி பிரிந்தததில்லை. அற்புதமான இலக்கியவாதி ஆயிற்றே. அரசியல் வேறு இலக்கியம் வேறு என்று விளக்கினார்.
---------------

19. தேரான் - தெளியான் தீரா இடும்பன்

இதற்கிடையே, கலைஞருக்கு, என் மீது மனகசப்பை ஏற்படுத்தக் கூடிய மூன்று நிகழ்ச்சிகள் சொல்லிவைத்தது போல் அடுத்தடுத்து ஏற்பட்டன.

தமிழ்க்கல்வி, தமிழ் வழிபாடு போன்ற விவகாரங்களை முன்னிலைப் படுத்துவதற்காக, தோழர் வா.மு.சேதுராமன் அவர்கள், மயிலை கபாலீஸ்வரன் கோயிலுக்கு அருகே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், புதிய தமிழகத்தின் தலைவர் தோழர் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு தமிழில் குடமுழக்கு செய்தவரும், இந்த கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துபவருமான சத்தியவேல் முருகன் உள்ளிட்டப் பலசமய பெரியார்களும், சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். ஒருநாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டு உரையாற்றினேன்.

கோயில் கருவறையில் அர்ச்சகர் உள்ளே நிற்பதையும், ஓதுவார் இடஒதுக்கீடாக கருவறைக்கு வெளியே நிற்பதையும் எடுத்துக் காட்டினேன். ஆகையால், வெளியே நிற்கும் ஓதுவார்களை கருவறைகளுக்குள் நிற்க வைக்க வேண்டும். இதற்காக கருவறை நிரப்புப் போராட்டம் ஒன்றை சிறை நிரப்புப் போராட்டம் போல் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்று வலியுறுத்தும் கி.வீரமணி அவர்கள் அரசு கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துவது பொதுப்பணத்தை வீணடிப்பதாகும் என்று எவரையோ திருப்தி படுத்துவதற்காக விடுத்த அறிக்கையையும் குறிப்பிட்டேன்.

இதைவிட இன்னொரு செய்தியையும் முக்கியமாக தெரிவித்தேன். தமிழக அரசின் அறநிலையத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான மெய்கண்டதேவன், அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டார். இவர் தமிழ் வழிபாட்டில், அளப்பரிய நம்பிக்கை கொண்டவர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டவர். இப்படி அறநிலையத் துறையோடு முழுமையாக ஒன்றிப்போன நேர்மையாளரான மெய்கண்ட தேவன், தமிழ் வழிபாடு, தமிழ் கல்வி வற்புறுத்தப் படும் போது, கலைஞர் அரசால் மாற்றப் பட்டிருப்பது கன்டணத்துக்கு உரியது என்றேன். இதனால், நான் பிரச்சனையிலிருந்து விலகிப் போவதாக அமைப்பாளர்கள் மத்தியில் ஒரு சின்ன சலசலப்பும், என் கருத்துக்கு ஆதரவாக கூட்டத்தினர் மத்தியில் பெரிய ஆரவாரமும் ஏற்பட்டன.

இரண்டாவதாக, கவிஞர் சாலய் இளந்திரையன் அவர்கள் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாலாம் தேதி காலமானார். கலைஞரின் வீட்டிற்கு இரண்டு வீதிகள் தள்ளி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு எதிர்ப்பக்கம் உள்ள திருவீதியான் தெருவில் வாழ்ந்து வந்தவர். டில்லி பல்கலைக்கழக வேலையில் இருந்து சுயஓய்வு பெற்று, தனது துணைவியார் சாலினியுடன் தமிழகத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் தமிழறிஞர்கள் கூட அவரை அதிகமாக கண்டுக்கவில்லை. இவரது பேச்சின் தீவிரத் தன்மையைக் கண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். எனது வளர்ப்பு மகள் நாவலை டில்லி பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைத்தவர்.

என்றாலும், எனக்கும் அவருக்கும் தத்துவார்த்த ரீதியில் ஒத்துப் போனது இல்லை . எம்.ஜி.ஆர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் இவரது துணைவியார் எனது கதையைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது எனக்கு ஆழ்ந்த வருத்தம். அதிலிருந்து நேரில் பார்த்தால் கூட ஒதுங்கிக் கொள்வோம். ஆனாலும், நிழல் முகங்கள் என்ற நாவலில் சாலையாரைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டு இருந்தேன். இதனால், ஒருநாள் தொலைபேசியில் எனக்கு நன்றி சொல்லவில்லை என்றாலும் அந்த நாவலைப் பற்றி விசாரித்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சாலய்யார் மீது கும்பகோணம், சென்னை என்று பல்வேறு இடங்களில் வழக்குகள் போடப்பட்டிருந்தன. இதய நோயால் பீடிக்கப்பட்ட இவர் இதனால் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்பட்டார். கலைஞர் ஆட்சிக்கு வந்த விட்டதால், இது குறித்து நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தொலைபேசியில் அப்போது கேட்டுக் கொண்டார். நானும் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகி சாலய்யாரைப் பற்றி எடுத்துரைத்தேன். அமைச்சர் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கலைஞர், சாலையார் மீது போடப்பட்டிருந்த அரசு வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்ற தகவலை, அரசு அறிவிக்கும் முன்பே சாலய்யாருக்கு நான்தான் தொேைபசியில் தெரிவித்தேன். மகிழ்ந்து போனார்.

சாலய்யாரின் மரணம் கேட்டு நானும் அவரது வீட்டிற்கு சென்றேன். சமூகச் சிந்தனையாளர்களான, திருவாளர்கள் ஆனைமுத்து, பழ.நெடுமாறன், இன்குலாப், தோழர் சசெந்தில்நாதன், அருகோபாலன், தமிழ்ச் சங்க சுந்தரராஜன், முகம் மாமணி போன்றவர்கள் வந்திருந்தார்கள்.

என்றாலும், அண்டை வீட்டுக்காரரான கலைஞர் சாலய்யாருக்கு இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. ஒரு அனுதாப தந்தி மட்டுமே அடித்திருந்தார். இதை அங்குள்ள தமிழறிஞர்கள் அனைவருமே சுட்டிக் காட்டினார்கள். அதே தெருவில் அப்போதே நடைபெற்ற அனுதாப கூட்டத்தில் நான் கலைஞர் வராததை கண்டித்துப் பேசினேன். ஒரு வெள்ளைக்கார அரசில், தவத்திரு குன்றக்குடி அடிகள் காலமான போது முதல்வர் ஜெயலலிதா அனுதாப அறிக்கை வெளியிடாததையும், தவத்திரு. கிருபானந்த வாரியார் மரணமான போது சட்டப் பேரவையில் அனுதாப தீர்மானத்தை நாவலர் கொண்டு வந்த போது இந்த அம்மையார் அலட்சியமாக பேரவையை விட்டு வெளியேறியதையும் சுட்டிக் காட்டினேன்.

இதே மாதிரி கருப்பு அரசாங்கத்தின் தலைவரான கலைஞரும், அதே மாதிரி நடந்துக் கொண்டது தவறானது என்று கண்டித்தேன். அதே சமயம், கலைஞர் சாலய்யார் மீது போடப்பட்ட அரசு வழக்குகளை திரும்ப பெற்றுக் கொண்டதையும் சுட்டிக் காட்டினேன். கலைஞர் வராததற்காக, அவரை தனிப்பட்ட முறையில் என்னிடம் நோகடித்து பேசிய அத்தனை பேரும் அனுதாபக் கூட்டத்தில் அவரைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. என்னையடுத்து பேசிய பெருஞ்சித்தனார் மகள் மட்டும் தான் கலைஞர் வராததை கண்டித்தார். கலைஞர் வந்திருந்தால் இந்தப் போராளித் தமிழர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்திருக்குமே என்று நினைத்தேன். ஆனாலும், அனுதாபக் கூட்டம் விடுதலை புலிகளின் ஆதரவு கூட்டம் போல்தான் நடைபெற்றது. இதை மனதில் வைத்துதான் கலைஞர் வரவில்லையோ என்னமோ. அதோடு, சாலையாரும் தன் மீது போட்ட வழக்குகளை விலக்கிக் கொண்ட கலைஞரை ஒரு எட்டு அவர் வீட்டிற்கு நடந்து நன்றி சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனாலும், கலைஞர் வந்திருக்க வேண்டும் என்பதே இப்போதும் என் கருத்து.

மூன்றாவதாக முரசொலி மாறன் அவர்களுக்கும், எனக்கும் கலைஞர் இல்லத்திலேயே ஒரு மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட இலா பத்திரிகை சார்பில் கலைஞரிடம் ஒரு நேர்காணல் வாங்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் சின்னப்ப பாரதி என்னிடம் தெரிவித்தார். நான் சண்முகநாதன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, கலைஞரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்ட போது அவர் முதலில் கேள்விகளை நான் எழுதி கொடுத்துவிடலாம் என்றும், பிறகு கலைஞர் பதிலளித்ததும் அவரை நேரில் சந்தித்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இது நல்ல ஏற்பாடாகவே எனக்குத் தோன்றியது.

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, கேள்விப் பட்டியலோடு கோபாலபுரம் சென்று சண்முகநாதனிடம் அந்த பட்டியலை ஒப்படைத்து விட்டு திரும்பி நடந்த போது, வரவேற்பரையின் வலது பக்கம் முரசொலி மாறன் ஒரு நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமியும், துரைமுருகனும் நின்று கொண்டிருந்தார்கள். அன்று கணினி தமிழ் தட்டெழுத்து முறைமைகளை உலகளவில் ஒருமைப்படுத்தும் கருத்தரங்கில் கலைஞர் பேசுவதால் பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

ஆர்க்காடு வீராசாமி அவர்கள் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். எனது பாலைப்புறா நாவலை வெளியிட்டவர். பொதுவாக பேசமாட்டார். ஆனால், நண்பரை அங்கீகரிப்பது போல் ஒரு சிரிப்புச் சிரிப்பார். நான் வணக்கம் போட்ட போது லேசாய் சிரித்தார். அமைச்சர் துரைமுருகன், எனது கல்லூரிக் காலத்தில் இருந்தே எனக்கு பரிச்சயமானவர். மாணவ அரசியலில் எதிரும், புதிருமாக நின்றவர்கள் நாங்கள். எங்கே பார்த்தாலும் என்னோடு இன்முகமாக பேசுவார். எனது கதைகளில் ஒன்றை குறிப்பிடுவார். அன்று கூட சுபமங்களா சார்பில் இளையபாரதி வெளிக்கொண்டு வந்த கலைஞர் முதல் கலாப்பிரியா வரை என்ற நூலில் எனது நேர்காணல் நன்றாக வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அவருக்கு அன்போடு நன்றி தெரிவித்து விட்டு இன்னும் தலையை நிமிர்த்தாத முரசொலி மாறன் அவர்களை பார்த்து கும்பிடு போட்டேன். அவரோ என்னை லேசாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு அலட்சியப் படுத்துவது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். எனக்கு என்னவோ போல் இருந்தது.

இப்படி உரிமை உணர்வு மேலோங்கியதற்கு காரணமும் உண்டு. முரசொலி மாறன் அவர்கள் பல்லாண்டு காலமாக பழக்கமானவர். குங்குமம் இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, அதை எப்படி பிரபலப் படுத்தலாம் என்பதற்கு என்னையும் தனியாக வரவழைத்து ஆலோசனை கேட்டவர். ஒரு தடவை ‘சமுத்திரம்! ஒரு எழுத்தாளருடைய நாவலை குங்குமத்திற்கு சரிவராது என்று நிராகரித்தோம். ஆனால், அந்த எழுத்தாளர் இது உங்களுக்காக எழுதிய நாவலாச்சே’ என்று அழாக்குறையாக சொன்னபோது அதைப் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். உங்கள் நாவலான உயரத்தின் தாழ்வுகளை தொடர்கதையாய் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். ஆனால், நீங்கள் தொலைபேசியில் பேசிய பேச்சைக் கேட்டதும், அதை நிராகரித்தோம்’ என்று சிரித்துக் கொண்டே நயம்பட சொன்னவர். அவர் சொன்ன விதத்தில் எனக்கு கோபமோ வருத்தமோ ஏற்படவில்லை.

புதுடில்லியில், என்னை தனது குடியிருப்புக்கு வரவழைத்து சிற்றுண்டிக் கொடுத்தவர். இன்னும் நன்றாகவே நினைவு இருக்கிறது. ஒரு சில நண்பர்களுக்கு, என்னை எழுத்தாளன் என்ற முறையில் அறிமுகம் செய்தார்.

மத்திய அமைச்சரானபோது செய்திக்காக எந்த சமயத்திலும் அப்போதைய தொலைக்காட்சி ஆசிரியரான என்னை அணுகாதவர். ஜென்டில்மேன் மினிஸ்டர். அமைச்சர் என்ற முறையில் நான் பேட்டி காண போகும்போது கூட ‘எனக்கு எந்த செய்தியும் வேண்டாம் ஆள விடுங்க சமுத்திரம்’ என்று அன்போடு கூறியவர். அப்படிப்பட்ட மாறன் என்னை பாராமுகமாக பார்த்தபோது, எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அந்த வருத்தத்தை வெளிக்காட்டுவது என்று தீர்மானித்தேன். இப்படியாக எங்கள் உரையாடல் இருந்தது.

‘என்ன மாறன் சார்!... நாம நீண்டகால நண்பர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். உங்களுக்கு கும்பிடு போடுறேன் ஒப்புக்குக் கூட நீங்க. பதில் வணக்கம் போடலியே?’

‘நீங்க முரசொலி படிக்கிறதே பாவமுன்னு சொல்றீங்க. உங்க கிட்ட நான் எதுக்கு பேசணும்?’

‘நான் எப்ப சார் பேசினேன்? நான் அப்படியெல்லாம் விமர்சிக்கலியே. நான் முரசொலிய படித்தால் தான்ே விமர்சிக்கிற பிரச்சனை வரும்.’

‘இல்ல. நீங்க பேசியிருக்கிங்க. என்கிட்ட பேப்பர் கட்டிங் இருக்கு.’

‘எந்த பேப்பர் சார்.’

‘எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, பேசியிருக்கிங்க.’

மாறன், மேற்கொண்டு, என்னிடம் பேச விரும்பாதது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். ஒருவேளை கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள உறவு மாற்றமோ அந்தரங்கமான தொலைபேசி உரையாடல்களோ அவருக்கு தெரியாமல் கலைஞரை நான் அண்டிப் பிழைக்க வந்ததாக நினைத்து இருக்கலாம். எனக்கு ஆத்திரம் வந்தது. இப்படிக் கத்தினேன்.

‘லுக் மிஸ்டர் மாறன்!, நல்லா கேளுங்க சார்.. உங்ககிட்ட எப்பவுமே நான் உதவிக்கு வந்தது இல்ல. இனிமேலும் வரமாட்டேன். ஆனால், அரைகுறை உண்மை பாதிக்கிணறு தாண்டுவது மாதிரி என்பதை மட்டும் புரிஞ்சுக்கங்க. நம்ம ஆட்கள் கிட்ட உள்ள கோளாறே தீர விசாரிக்காம ஒரு முடிவுக்கு வாரதுதான்’

ஆர்க்காட்டாரும், துரைமுருகனும் அதிர்ந்து போய் என்னையும், மாறனையும் மாறிமாறிப் பார்த்தார்கள். மாறன் நான் பேசுவதை கேட்டுவிட்டு பிறகு எழுதத் துவங்கினார். எனக்கு, பதிலாக ஒரு மென்சொல்லோ, அல்லது சுடுசொல்லோ பேசவில்லை. ஆனாலும், நான் சொன்னதை உன்னிப்பாக கவனித்தார். ஒருவேளை, காலங்காத்தாலேயே இந்த ஆள், வம்புக்கு வரானே என்று மனதிற்குள் நினைத்து இருக்கலாம்.

இந்த மூன்று சங்கதிகளும் கலைஞரின் காதுக்கு போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை எனக்கு அதிகமாக இடம் கொடுத்து விட்டோமோ என்று கூட கலைஞருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். என்னால் கலைஞர் உறவு அறுபட்டு போகும் என்று நினைப்பதற்கே ஒருமாதிரி இருந்தது.

இந்தச் சமயத்தில் தமிழ் கல்வியாளர்கள் மாநில அரசு விடுத்த தமிழ்க் கல்வி ஆணைக்கு, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அறிவாலயம் சென்றார்கள். இதற்கு அழைக்கப்பட்டு இருந்த, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் செந்தில்நாதன், என்னையும் அந்த குழுவில் சேரும்படி சொன்னார். எப்போதுமே அவரும், நானும் ஒன்றாக செயல்படுகிறவர்கள். ஒரேமாதிரி சிந்திக்கிறவர்கள். நானும் கலைஞரை நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்பதற்காக அறிவாயலத்திற்குச் சென்று, குழுவோடு சேர்ந்து கொண்டேன்.

அந்தக் குழுவோடு நானும், கட்சித் தலைவர் கலைஞர் அறைக்குள் சென்றேன். கலைஞர் பொதுப்படையாகப் பேசிவிட்டு குழு உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார். அப்போதுதான் கலைஞர் என்னை பார்த்திருக்க வேண்டும். ‘அடடே சமுத்திரமா!’ என்று அன்புதழுவக் கேட்டார். நான் தனித்து நின்று உரையாட விரும்பாமல், குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டு வெளியேறினேன். என் மனஉளைச்சலுக்கு ஒரு விமோசனம் ஏற்பட்டது. இப்படிச் சொல்வதால் தமிழ் விவகாரத்தையும் எனது சொந்த விவகாரத்தையும் நான் இணையாக கருதுவதாக நினைக்க வேண்டாம். உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்பதால் இங்கே இதைக் குறிப்பிடுகிறேன்.
-------------

20. ஏகலைவன் கலைஞர் அர்ச்சுனன்

1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று நான் முன்பு முதல்வர் கலைஞரிடம் கொடுத்த குறிப்பு சரியாக செயல்படுத்த படவில்லை என்று கருதினேன். அரசு இதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வள்ளலார் மக்கள் நேயப் பேரவை என்ற அமைப்பை துவக்கினோம். வள்ளலாரை சைவச் சிறையில் இருந்து மீட்டி, அவரை தமிழ் வழிபாட்டாளராக, சாதிய மறுப்பாளராக, தமிழ்ச்சித்தராக மக்களிடையே, மக்கள் மொழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் பேரவையின் நோக்கம்.

தோழர் செந்தில்நாதன் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தூண்டியவர். இந்த அமைப்பிற்கு நான் தலைவராகவும், மணிவாசகர் நூலக உரிமையாளர் பேராசிரியர் சா. மெய்யப்பன், முனைவர் இளவரசு துணைத் தலைவர்களாகவும், சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் பொருளாளராகவும் நியமிக்கப் பட்டோம். புலவர் கீதா பச்சையப்பன், முகம். மாமணி ஆகியோர் இதன் செயலாளர்கள். எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், தீக்கதிர் பொறுப்பாசியர் சு. பொ. அகத்தியலிங்கம், இளங்கவிஞர் இரா.தெ.முத்து ஆகியோர் இந்த அமைப்பில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இந்த அமைப்பு உருவாகியிருப்பதும் இதன் நோக்கம் பற்றியும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போது நாடெங்கிலும் இருந்த பல்வேறு வள்ளலார் அமைப்புகள் எங்களுடன் தொடர்பு கொண்டன. இது நாங்கள் எதிர்பாராதது.

எனவே, கலைஞரை வைத்து இந்த பேரவையைத் துவக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். இதற்கான தேதியை கலைஞரிடம் இருந்து பெற்றுக் கொள்வது என்னுடைய பொறுப்பாயிற்று. மீண்டும் சண்முகநாதன் அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவரோ ‘தலைவர் ரொம்ப பிசியாயிருக்கார். இப்ப வாரது கஷ்டந்தான். எதற்கும் சொல்லிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். விரைவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தல்களையும், தேர்தல் பிரச்சாரத்தையும் மனதிற்கொண்டு அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். நான், மேற்கொண்டும் சண்முகநாதன் அவர்களை காலை ஆறுமணிக்கே தொல்லைபடுத்த விரும்பவில்லை.

திராவிட இயக்கத்தின் கருவறைப் பத்திரிகையாக, அண்ணாவை ஆசிரியராக கொண்டு இயங்கிய நம் நாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றியவரும், கொள்கை பிடிப்பிலிருந்து மாறாதவருமான கவிக்கொண்டல் மா. செங்குவட்டுவன் அவர்களை அணுகினேன். அவர் அறிவாலயத்தில் உள்ள ஆயிரம் விளக்கு உஷேன் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்றார். கோபலபுரத்தில் பேச முடியாத கலைஞருடன், அறிவாலயத்தில் பேசவேண்டும் என்பதை அவரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிட்டேன். அவரும் காத்திருக்கும்படி சொன்னார்.

கலைஞர் அறிவாலயத்திற்குள் நுழைந்து, தனது அறையை நோக்கி நடந்தபோது, அத்தனை பேரும் கட்டுப்பாடாக வரிசையாக நின்றார்கள். ஒருவர் குறுக்கே நின்ற என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னார். நானும் அப்படியே நின்றேன். என்னுடைய நோக்கம், கலைஞருக்கு அங்கேயே என் வருகையை தெரிவித்து விட வேண்டும் என்பது. வரிசைக்குள் சிக்கியதால் இந்த நோக்கம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், கலைஞர் என்னைப் பார்த்து விட்டார். அரை நிமிடம் நின்று ‘அடடே சமுத்திரமா! ஏது இந்தப் பக்கம் என்றார். உடனே, நோக்கத்தைச் சொல்லிவிட்டால் கலைஞர் அங்கேயே அனுப்பி விடுவார் என்று நினைத்து ஒரு விஷயமா உங்களைப் பார்க்கணும்’ என்று பொத்தம் பொதுவாக சொன்னேன்.

கலைஞர், தனது அறைக்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களில் முதலில் என்னைத்தான் அழைத்தார். நான், பேரவையை கலைஞர் துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த விவரத்தை சண்முகநாதன் தனக்கு தெரிவித்து இருப்பதை குறிப்பால் உணர்த்தியபடியே ‘உங்களுக்கே தெரியும் எனக்கு ஓய்வில்லாத வேலை... என்னால இயலாதே சமுத்திரம்’ என்றார். உடனே, நான் ‘சார் உங்கள் நான் எனக்காக எப்பவும் எதுக்காகவும் வற்புறுத்தல.. என்ற பீடிகையோடு மேற்கொண்டு பேசப்போனேன். உடனே கலைஞர் இடைமறித்து அதனாலதான் நான் சொல்றேன். இப்பவும் வற்புறுத்தாதீங்க..’ என்றார்.

நான் இந்த பேரவையை அவர் நிச்சயம் துவக்கி வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு குழந்தையின் விடாபிடித்தனத்தோடு முரண்டு பிடித்தேன். கலைஞரும் மசிந்து விட்டார். தென் மாவட்டங்களில் தனது சுற்றுப் பயணம் முடிந்த பிறகு சண்முகநாதனை அணுகும்படி என்னிடம் தெரிவித்தார். வெளியே தலைவர்கள் தொண்டர்கள் என்று பலர் காத்திருந்ததால் நான் கலைஞருக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு வெளியேறினேன்.

கலைஞரின் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடிந்ததும் சண்முகநாதன் மூலமாக கலைஞரை சந்திப்பதற்கு நேரம் வாங்கிக் கொண்டேன். கலைஞரை மாடியில் சந்தித்தேன். கலைஞர் வழக்கம் போல் தெம்பாகத் தான் இருந்தார். ஆனாலும், அவர் தோரணை உள்முகமாகவே இருந்தது. என்னை அன்புடன் வரவேற்றார். சன் தொலைக்காட்சியில் வீரபாண்டியன் நடத்திய நேர்காணலில், பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தவன் நான். பாரதீய ஜனதாவுடன் அவர் மேற்கொண்டிருக்கும் புதிய கூட்டணி எனக்கு பிடிக்காது என்று அவர் நினைத்திருக்கலாம். கூடவே, கலைஞர் சேராத இடத்தில் சேர்ந்து விட்டார் என்று தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா, இந்த பிஜேபி அணியோடு சேர்ந்து இருந்தபோது ஒப்புக்குக் கூட விமர்சிக்காமல் வாய் மூடிக் கிடந்த வீரமணி அவர்களுக்கும் இந்த புதிய உறவு அவலாகிவிட்டது. நான் எடுத்த எடுப்பிலேயே இந்த விதமாக பேசினேன் என்று நினைக்கிறேன்.

‘சார்..! நீங்க பிஜேபியோட உறவு வைத்திருப்பது ஒரு அரசியல் நடவடிக்கைதான். சமூக நடவடிக்கை இல்லை என்பது என்னை மாதிரி உள்ளவர்களுக்கு தெரியும். இதன் மூலம், தமிழகத்திலாவது மதவாதம் பரவாமல் நீங்கள் தடுக்க முடியும் . என்று நினைக்கிறோம். தம்பி ஸ்டாலின் சிறையில் கொடுமைப் படுத்தப் பட்ட போது கூட விருப்பு வெறுப்புகளை மீறி கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காவும் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர் நீங்கள். ஆகையால், இந்த கூட்டணி ஒரு பெரிய விவகாரமாகாது. நீங்களும் ஏதாவது ஒரு தேசிய கட்சியை சார்ந்திருக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களுக்கு புரியும்.’

கலைஞரின் புதிய கூட்டணியை கண்டு பலர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். கலைஞர் மீது மெய்யான அன்பு வைத்திருப்பவர்களுக்கும் இது அதிர்ச்சி தான். தத்துவார்த்தக் கட்சிகளும், மேற்கு வங்க ஜோதிபாசு போர் குரல் கொடுக்க வில்லையா என்று மேடைகளில் வினவுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் மித்ர பேதம் கிடையாது. ஜோதிபாசு நீக்கப்பட்டால் அவர் முன்னிலும் வலுவாக வருவார். ஆனால், தமிழகத்தின் நிலைமை வேறு.

திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி மண்வாசனை இல்லாத தலைமையில் சிக்கியிருக்கிறது. இந்த தலைமை எந்த பழிபாவத்திற்கும் அஞ்சாதது. இதனை அதன் போக்கில் விட்டால், தமிழனும் கவலைப்பட மாட்டான். அந்த அளவிற்கு மனோ நோயாளியாகிப் போனவன் தமிழன். ஒருவேளை கலைஞர் மாற்று அணியில் சேர்ந்து, இதனால் சொந்த முறையிலும், அரசு முறையிலும் பாதிக்கப் பட்டால் இதே தமிழன் கலைஞருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்வான். இவனை நம்பி களத்தில் இறங்க முடியாது. ஆகையால், கலைஞர் எடுத்த முடிவு எனக்கு சரியாகவே பட்டது. எந்த அரசியல் தலைவரும், பிறா் பாராட்ட வேண்டும் என்பதற்காக தற்கொலை முடிவு எடுக்க முடியாது.

கலைஞரின் முகத்தில் ஒரு நன்றி மகிழ்ச்சி ஏற்பட்டதுபோல் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும் உரிமை நான் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் எனக்கு அது உண்டு என்று நம்புகிறேன். கலைஞரும் மனம் திறந்து என்னிடம் பல்வேறு விவகாரங்களை எடுத்துரைத்தார். இவற்றில் ஒரு சில அந்தரங்கமானவை. அவரது சகாக்களோடு கூட பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அவர் முழுமையாக பகிர்ந்து கொண்டது போல் தோன்றியது. என்னை நம்பிக்கைகுரிய, அதே சமயம் சந்தா செலுத்தாத கழகக் கண்மணியாக ஏற்றுக் கொண்டதில் ஆனந்தம் அடைந்தேன். வள்ளலார் பேரவையை துவக்கி வைப்பதற்கு ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை நேரத்தை ஒதுக்கித் தந்தார் கலைஞர். பேச்சாளர் பட்டியலைப் பற்றி அப்போதும் அவர் என்னிடம் கேட்கவில்லை.

வள்ளலார் விரித்த கடைக்கு கொள்வாரை அழைக்கிறார் கலைஞர் என்ற முத்திரையோடு அழைப்பிதழும், சுவரொட்டிகளும் தயாரிக்கப்பட்டன. நான் ஜூலை மாத முதல் வாக்கில் கலைஞருக்கு அழைப்பிதழ் எடுத்துச் சென்றேன். ஏற்கெனவே கலைஞரை பார்த்து தேதி வாங்கி விட்ட நான் அவரை அடிக்கடி தனியாகச் சந்தித்து அவரது நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வரவேற்பு அறையிலேயே கலைஞருக்காக காத்து நின்றேன். என்னை விட பலமடங்கு சர்வவல்லமை உள்ள பார்வையாளர்கள், முன் அனுமதி பெற்று, கலைஞரை மாடியில் ஏறி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவரையும் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் கலைஞர் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், எனக்கோ குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கியவர். நேரமாகிவிட்டாலும் அவர் வாயில் இருந்து புறப்படுங்கள் என்ற வார்த்தை வராது.

கலைஞரும் காலை பத்து மணியளவில் படியிறங்கினார். நான் அங்கே நிற்பேன் என்று அவர் எதிர்பார்க்க வில்லை. அழைப்பிதழோடு வந்திருப்பேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்காது. ‘வாங்க அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா.’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் விழித்தபோது ‘நீங்க தினமணி கதிரில் தலைப்பிரசவத்தில் எழுதிய கட்டுரையைத் தான் சொல்கிறேன். நல்லா இருந்தது’ என்று தாளலயமாய் தலையாட்டி பாராட்டினார்.

நான் புல்லரித்துப் போனேன். சக படைப்பாளிகள் பிறபடைப்புகளை படிப்பதில்லை. ஒரு பிரபல எழுத்தாளர், தான் எவரது படைப்பையும் படிப்பதில்லை என்று மார்தட்டிக் கொள்வார். இந்தப் பின்னணியில் முதல்வர், கட்சித் தலைவர், குடும்பத் தலைவர், இலக்கியவாதி என்று பல்வேறு சுமைகளை சுவையாக தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒரு சாதாரண சமுத்திரத்தின் கட்டுரை முழுவதையும் படித்து விட்டு அதை அந்த சமுத்திரத்திடமே சொல்வது என்பது உலக அதிசயங்களில் எட்டாவது. இவ்வளவுக்கும், அங்கே ‘கல்யாணம் இங்கே கலாட்டா’ என்ற எனது முதல் சிறுகதையின் தலைப்பை அந்தக் கட்டுரையில் தேடிப் பிடித்துத்தான் பார்க்க வேண்டும். கலைஞர் தேடிப் பிடித்து பார்த்திருக்கிறார்.

கலைஞரிடம் அழைப்பிதழை கொடுத்து விட்டு, அந்தச் சந்திப்பு போதையில் இருந்து மீளமுடியாமல் வீட்டிற்கு திரும்பினேன். உடனடியாக தினமணிக்கதிர் பொறுப்பாசிரியர் இளையபெருமாளிடம், கலைஞர் எனது கட்டுரையை பாராட்டியதை எடுத்துரைத்தேன். பிறகு ‘கலைஞர் இலக்கியவாதி என்ற முறையில் ஒரு குழந்தை. அவரது தலைப்பிரசவத்தையும் கேட்டு வாங்கி தினமணிக் கதிரில் பிரசுரிக்க வேண்டும்’ என்றேன். முற்போக்கு இளைஞரான இளையபெருமாளும் இந்த தலைப்பிரசவத்தில் எழுத்தாளர் சீனியாரிட்டி இல்லாமல் கலவையாக வருவதால், கலைஞரின் கட்டுரையையும் வாங்கிப் போட்டுகதிரைப் பெருமைப் படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆனாலும், கலைஞரின் கட்டுரை இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை கலைஞரிடம் வாங்கி அந்தத் தொடரை அவரது கட்டுரையை வைத்து முத்தாய்ப்பாக முடிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. இதைக் கலைஞரிடம் கேட்பது அற்பம். தினமணிக் கதிருக்கு மீண்டும் நினைவுப் படுத்துவது அசிங்கம்.

எந்தவித மின்னணு ஊடகங்களும் இல்லாமலே லட்சோபலட்சம் மக்களை அண்ணல் காந்தி கவர்ந்தது போல், லட்சோப லட்ச இலக்கிய ஆர்வலர்களை சாகித்திய அக்காதெமியின் ஆதரவு இல்லாமலே பெற்றிருப்பவர் கலைஞர். அப்படிப்பட்ட இலக்கிய மேதை என் கட்டுரையை படித்ததும் என்னை மேலும் வலுவாக எழுத ஊக்குவிக்கிறது. கூடவே, சகப் படைப்பாளிகளின் படைப்புகளை புறந்தள்ளாமல் படிக்க வேண்டும் என்ற உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வள்ளலார் மக்கள் நேயப் பேரவையை கலைஞர் 11.7.99 அன்று மாலையில் கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். நான் விழாவிற்கு தலைமை வகித்தேன். வள்ளலார் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை டாக்டர். தி.தயானந்தன் பிரான்ஸிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வள்ளலாரியத்தில் ஒன்றிப் போன பழ.சண்முகனார், ஊரன் அடிகள், பேராசிரியர் மெய்யப்பன், தமிழ் வேள்வி சத்தியவேல் முருகன் போன்ற ஆன்மிக வித்தகர்களும், முனைவர் இரா. இளவரசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், ச. செந்தில்நாதன், முகம். மாமணி, கி.த. பச்சையப்பன் போன்ற நாத்திகர்களும், நயம்பட கலந்து கொண்டார்கள். சென்னை தொலைகாட்சியின் முன்னாள் இயக்குநர் ஏநடராசன் அவர்களும், கவிஞர் சிற்பி அவர்களும் பங்கேற்றார்கள். குங்கிலி யம் பழசண்முகனார் வள்ளலார்மயமாக ஆனவர். அந்தப் பெரியவர் சாதிய மறுப்பாக அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுரத்தை சுட்டிக்காட்டி, கலைஞருக்கு சமத்துவபுர தோன்றல் என்று, பலத்த ஆரவாரத்திற்கிடையே பட்டமளித்தார்.

நான், எனது தலைமை உரையில் வானளாவிய அதிகாரம் - கொண்ட முன்னாள் பேரவைத் தலைவர் ஒருவர் போல நடந்து கொண்டதற்காக இப்போது வருந்துகிறேன். பேசுகிற ஒவ்வொருவரையும், காலங்கருதி முடிக்கும்படி தெரிவித்தேன். இப்போதைய தொலைக்காட்சிப் பாணியில் குறைந்த நேரத்தில் பேசி முடிக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டேன். கலைஞர் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவரது நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் அப்படிக் குறிப்பிட்டேன். ஆனாலும் கலைஞர் என்னைப் பார்த்து ‘ஏன் அவசரப்படுத்துறிங்க’ என்று மென்மையாக கடிந்து கொண்டார்.

அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, நான் எனது முடிவுரையில் வள்ளலாரை தமிழர் நலன் கருதி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கினேன். ஏதலைவன் தன்னை விட வீரனாகிவிடுவான் என்று பொறாமைப்பட்ட அர்ச்சுனனின் தூண்டுதலால் அந்த மலைச்சிறுவனின் கட்டை விரலை வெட்டி கொடுமையை எடுத்துரைத்தேன். இந்த நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு அர்ச்சுனா விருதுகளும், நல்லாசிரியர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகளும் கொடுக்கப்படுவது அசல் மோசடி என்றேன். ஏகலைவனான வள்ளலாரை, கட்டை விரலை வெட்டக் குடுக்காத இன்னொரு ஏகலைவனான கலைஞர்தான் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

கலைஞர் பேச எழுந்தார். ‘சமுத்திரத்தைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்’ என்று எடுத்த எடுப்பிலேயே பீடிகை போட்டார். செல்லக் குட்டு வைக்கப் போகிறார் என்பது கூட்டத்திற்கும் எனக்கும் புரிந்தது. அவர் என்னைப் பற்றி எப்படி அவதான்ித்து இருக்கிறார் என்பதை அறிவதில் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு. கூடவே, குட்டு பலமாக இருந்துவிடக் கூடாதே என்கிற பயம், இருக்காது என்கிற நம்பிக்கை. ஆனாலும் கலைஞர் அப்படி பேசப் போவதை தொடரவில்லை.

எடுத்த எடுப்பிலேயே சூடான அரசியலில் இருந்து தன்னை இங்கு கொண்டுவந்து அறிஞர்களின் பேச்சு மழையில் நனையை வைத்த எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சட்டம் தமிழ் சிந்தனையாளர்களாலும், வெளியூரில் இருந்து திரண்ட வள்ளலார் நேயர்களாலும் நிரம்பி இருப்பதை புரிந்துக் கொண்டார். பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் அமைதியாக இருக்கும் போது, காலில் பிறந்தவனும், பாதத்தில் பிறந்தவனும் மோதிக் கொள்கிறார்களே என்று வருத்தம் தெரிவித்தார். இந்த பின்னணியில் வள்ளலாரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே வள்ளலாரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

கலைஞர் மேலும் பேசுகையில், அர்ச்சுனன் மரத்தில் இருந்த கிளியை மட்டுமே பார்த்தது போல, நாமும் நமது குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். சில வள்ளலார் பிரியர்களுக்கு, இது வருத்தத்தை அளித்தது. நான் ஏகலைவனைப் பற்றிச் சொல்லும் போது அவரோ அவனைப் பழிவாங்கிய அர்ச்சுனனைப் பற்றி குறிப்பிடுகிறார் என்று பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால், நோக்கம் இதுவல்ல. ஏகலைவனும், அன்று அர்ச்சுனனைப் போல் வில்வித்தையில் மட்டுமே குறியாக இருந்திருந்தால் அவன் கட்டை விரலை எந்த ஆச்சாரியாரும் எடுத்திருக்க முடியாது என்ற பொருளிலேதான் கலைஞர் கோடி காட்டினார். வீண் ஆராவாரங்களிலும், சாதிய சண்டைகளிலும் மூழ்கிப் போகாமல் பிரம்மனின் காலில் பிறந்தவர்களும், பாதத்தில் பிறந்தவர்களும் முகத்தில் பிறந்தவர்களுக்கு இணையாக குறிக்கோளில் குறி தவறாது நிற்க வேண்டும் என்பதையே கலைஞர் எடுத்துரைத்தார். கூட்டமும் அறிஞர் பெருமக்களால் நிரம்பப் பட்டதால் இதை விளக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. விலாவாரியாக விளக்குவதற்கு அவர் சாதாரணமானவரும் அல்ல. தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் பொதுமைப்படுத்தி நடக்க வேண்டியவர்.

என்றாலும், கூட்டம் முடிந்ததும் எனக்கு செம டோஸ். குறிப்பாக தோழர் செந்தில்நாதன், என்னை கடுமையாக விமர்சித்தார். எனது தலைமையுரையில் வள்ளலார் வளாகத்தில் இன்னென்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லத் தவறிவிட்டேன். அதனால் தான் கலைஞரும் பேரவையின் கோரிக்கைகைகளைப் பற்றி குறிப்பிடவில்லை என்றார். உடனே நான் எழுத்து மூலமாக கலைஞரிடம் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தை நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல விரும்பவில்லை என்றேன். அதற்கு தோழர் செந்தில்நாதன் இதர உறுப்பினர்களின் மவுன சம்மதத்தோடு ‘நீங்கள் இந்த கோரிக்கையை கூட்டத்தின் முன் வைத்திருக்க வேண்டும். அவர்களும் ஆரவாரம் செய்திருப்பார்கள். கலைஞரும் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். நமது கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றிருப்பார். நீங்கள் ரகசியமாக கொடுத்தது ரகசியமாகவே போய்விட்டது’ என்று விளக்கினார்.

எனக்கும் என்னவோ போல் இருந்தது. கலைஞர் முன்னிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் இன்னும் என்னுள் உள்ளது. அதே சமயத்தில் கலைஞர் சுயமாக சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கலாமே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. வள்ளலார் அன்பர்கள் சிலர் கலைஞரை சொல்லிக் குற்றமில்லை திருவருள் இன்னும் கைகூட வில்லை மேலும் மேலும் வள்ளலாரை முன்னிலப்படுத்திய பிறகே, அந்த வளாகம் மேன்பட வேண்டும் என்று இருக்கிறதோ என்னவோ என்றார்கள்.
--------------

21. கலைஞர் முத்தமிழ் அறிஞர் எப்பேர்பட்ட மனுசன்!

இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் முதல் வார வாக்கில்....

ஏவி. எம். மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மகளும், எனது குடும்ப நண்பருமான திருமதி. மீனா அருண் வீரப்பன் அவர்கள், என்னை அகில இந்திய குடும்பநலத் திட்டச் சங்கத்தில் கலைஞரோடு சேர்ந்து பேசவைத்தார்.

இன்று, இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் தருவித்துக் கொண்டு அவற்றிற்கு கணக்கு காட்டாமல் பொதுமக்களுக்கு சேவை செய்வது போல், பாவனை செய்து, முக்கால்வாசிப் பணததை ஓரங்கட்டும் போது, இந்த அகில இந்திய குடும்பநல திட்டச் சங்கம், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுகிற அமைப்பு. அந்தக் காலத்தில் இருந்தே குடும்பநலத் திட்டத்திற்காக அரும்பணி ஆற்றிய அமைப்பு.

விழா நாளில் ராஜேஸ்வரி மண்டபத்தில் மேடையில் கலைஞர் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் போடப்பட்ட சாதாரண நாற்காலியை வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். அவருக்கு வலது பக்கம் சங்கத்தின் தலைவர் என்று நினைக்கிறேன். இடது பக்கமும் இன்னொருவர்... நான் கலைஞரின் வலது பக்கத்திற்கு வலது பக்கம். என்னையடுத்து கலைஞரின் துணைவியார் திருமதி ராசாத்தி அம்மையார், இவரை அடுத்து ரஜேஸ்வரி அம்மையார்... இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் சரளமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும், ராசாத்தி அம்மாவும் வணக்கம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளாததற்கு என்னளவில் ஒரு காரணம் உண்டு. கலைஞர், முதல்வராக இருந்த போது, அவர்தான் என்னை வானொலியில் இருந்து தொலைக்காட்சிக்கு செய்தி ஆசிரியராக மாற்றினார் என்பதை வாசகர்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், நான், ராசாத்தி அம்மாவின் சாதியை சேர்ந்தவன் என்பதால், அவரே கலைஞரிடம் என்னை தொலைக்காட்சியில் நியமிக்க வேண்டும் என்று நிர்பந்தித்து வெற்றி பெற்றதாக எழுதியிருந்தார். இது மணியன் அவர்களின் தகுதிக்கே குறைவான செயல்.

ராசாத்தி அம்மாவுக்கு என்னை தெரிந்திருக்க முடியாது. ஒருவேளை, கனிமொழி சம்பந்தமாக கலைஞரிடம் நான் உரையாடியதை, அவர் தனது துணைவியாருடன் சொல்லி இருக்கலாம். ஆனாலும், ராசாத்தி அம்மாவுடன் எனக்கொரு மானசீகமான அன்பு உண்டு. இதயம் பேசுகிறதில் வந்த செய்தி, ஒருவேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட நம்பத் துவங்கினேன். ஒருவர் நமக்கு பிடித்தமானவராய் ஆகும்போது, அவர் நமக்கு நல்ல காரியம் செய்வதாக கூறப்படும் போது, அது செய்யப்பட்டதோ, செய்யப்படவில்லையோ, சம்பந்தப்பட்டவர், அப்படி செய்ததாகவே நம்புவார். நடப்பதை மட்டும் நம்ப வேண்டும் என்பது இல்லை. நடந்திருக்கும் என்றும் நம்பலாம். இதுதான் மனோதத்துவத்தில் ஒரு அடிப்படை விதி.

இந்தச் சூழலில், கலைஞர், இரண்டாவது தடவையாக முதல்வராய் பொறுப்பேற்றவுடன் சென்னை தொலைக் காட்சியில் ஒரு கவியரங்கத்திற்கு தலைமை தாங்கினார். கவியரங்கம் நிலைய அரங்கிற்குள்ளேயே நடந்தது. அங்கே வரும் ராசாத்தி அம்மாவை வரவேற்று அவருக்குரிய இருக்கைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. இந்தப் பொறுப்பைக் கொடுத்தவர்கள் கூட இதயம் பேசுகிறது செய்தியை நம்பித்தான் கொடுத்து இருக்கலாம் ராசாத்தி அம்மா வந்த போது நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயரைக் கேட்டதும், அவர் ஏறிட்டுப் பார்த்து புன்னகைச் செய்வார் என்று நினைத்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. ஒப்புக்கும் அவர் தலையாட்ட வில்லை. இது எனக்கு அவமானமாக தோன்றியது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, தோழர் ஆலடி அருணாவின் மகனின் திருமண நிகழ்ச்சி அடையாரில் நடைபெற்றது. கலைஞர் இதை நடத்தி வைத்தார். கூட்டம் கலைந்தபிறகு காரைத் தேடிக் கொண்டிருந்த ராசாத்தி அம்மாவிடம் மீண்டும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் கண்டுக்க வில்லை. குறைந்தபட்சம் அப்படி எனக்குத் தோன்றியது. இனிமேல் அவரை எங்கே சந்தித்தாலும் நானும் கண்டுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அருணாவிடம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நான் மனத்தாங்கலாக குறிப்பிட்ட போது ‘யோவ்.. அந்த அம்மா ரொம்ப கஷ்டப்பட்டவங்க... அப்பாவி... நிறைய பேரு கூழை கும்பிடு போட்டே அவங்கள ஏமாத்தி இருக்காங்க. இதனால அவங்க எச்சரிக்கையா இருக்காங்க. உம்ம கும்பிடு கூழைக் கும்பிடா அல்லது நல்ல கும்பிடா என்பது அவங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று அவர் ஒரு எதிர் கேள்வி கேட்டார்.

என்றாலும், இனிமேல் ராசாத்தி அம்மாவை எங்கே பார்த்தாலும், அவரைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை என்று நான் தீர்மானித்து விட்டேன். ஆகையால் அந்த விழா மேடையில், அவரோடு நான் பேசவில்லை. அவரும் என்னை கண்டுக்கவில்லை. இதனை கலைஞர் எப்படியோ கவனித்து இருக்கிறார். உடனே வலது பக்கமாக திரும்பி ராசாத்தி அம்மையாரை நோக்கி ‘அவரு சமுத்திரம்’ என்று சிறிது வலுவாக பேசினார். உடனே, நாங்கள் இருவரும் தெரியுமே என்று ஒரே சமயத்தில் சொல்லிக் கொண்டு, ஒரே சமயத்தில் வணக்கம் போட்டு பிறகு பேசிக் கொண்டோம்.

ராசாத்தி அம்மையார் எவ்வளவு எளிமையானவர் என்பது அப்போது நன்றாகவே புரிந்தது. நானும் கனிமொழி மணமுடித்து சிங்கப்பூர் சென்றதை கருத்தில் கொண்டு, ராசாத்தி அம்மையார் ஆனந்த விகடனில் என் சிரிப்பு சிங்கப்பூர் போய்விட்டது’ என்று குறிப்பிட்டதைப் படித்து விட்டு ‘என் கண்கள் கலங்கின என்று அவரிடம் தெரிவித்தேன். உடனே அவர், ஆனந்த விகடன் அல்ல அவள் விகடன் என்று திருத்தம் கொடுத்தார். அவருடைய கண்கள் உள்முகமாய் போயிருக்க வேண்டும். மனோ அலைகள் சிங்கப்பூருக்கு அவரை இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். சிறிது நேரம் பேச்சற்று காட்சியளித்தார்.

இதற்குப் பிறகு தினகரன் பத்திரிகை விழாவில் ராசாத்தி அம்மையாரை சந்தித்தேன். என் மகனின் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை கொடுக்காது போனது ஏன் என்று என்னை கேட்டார். நான் அவர் அப்போது ஊரில் இல்லாததால் கூரியரில் அனுப்பியிருந்ததாக தெரிவித்தேன். கூரியரில் அனுப்பியிருந்தால் வந்திருக்குமே என்று என்னை நம்பாதது போல் கேட்டார். அதில் ஒரு உரிமை இருப்பதை கண்டு கொண்டேன்.

கலைஞர் என்னைப் பார்த்து ‘அதுதான் என் துணைவியார் ராசாத்தி அம்மா’ என்று சொல்லி ஏன் பேசாமல் இருக்கிறாய் என்று மறைமுகமாக கேட்காத கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கலாம். ஆனால் அவரோ தனது துணைவியாரைப் பார்த்துத்தான் அப்படி கேட்டார். இதனால் நானும் அன்றைக்கு என் துணைவியார் திருமதி. கோகிலா சமுத்திரத்தை பற்றி பேசுவது என்று தீர்மானித்து விட்டேன். இப்படிப் பேசினேன்.

‘பொதுவாக நமது முதல்வரின் முன்னிலையில் பேசுவதற்கு அனைவருமே அஞ்சுவார்கள். அந்த அளவிற்கு கலைஞர் அவர்களது பேச்சை மனதில் உள்வாங்கிக் கொண்டு குட்டுவதா, தட்டுவதா, தட்டிக் கொடுப்பதா என்று தீர்மானிப்பார். ஆனால், கலைஞரின் முன்னிலையில் பேச நான் தயங்குவது இல்லை’

‘இப்போது நான் பயப்படுவது பார்வையாளர் இருக்கையில் இருக்கும் என் துணைவியாருக்குத்தான். வள்ளலார் மக்கள் நேயப் பேரவை துவக்க விழாவிற்கு தலைமை தாங்கிய நான் கலைஞரின் வருகையை பொருட்படுத்தாது போல் அங்கும் இங்கும் சுற்றியதாக என் துணைவியார் என்னைக் கண்டித்தார். ‘எப்ப பேர் பட்ட மனுசன்! அவர். அவர் முன்னால அப்படி நடந்துகிறீங்களே’ என்று சாடினார். கலைஞருக்கு, தென்மாவட்ட மண்வாசனை பாணியில் எப்பேர்ப்பட்ட மனுசன் என்று என் துணைவியார் கொடுத்திருக்கும் பட்டம் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் டாக்டர், முத்தமிழ் அறிஞர், தமிழனத்தலைவர் போன்ற பட்டங்களுக்கு இணையானது’

கலைஞர் என் பேச்சை பெரிதும் ரசித்தார். நான் பேசி உட்கார்ந்ததும் ராசாத்தி அம்மையர், நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், முன்பின் பார்த்தறியாத என் மனைவியை கண்டு பிடித்து ‘எப்படி வெட்கப்படுகிறாங்க பாருங்க’ என்றார்.
-------------

22. கலைஞர்-மூப்பனார் ஒரு தமிழர் இலக்கணம்

இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எனது மகன் சிவகுமாரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வழக்கம் போல் சண்முகநாதன் மூலமாக கலைஞரைச் சந்தித்தேன். கோவையில் நடைபெறும் திருமணத்திற்கு கலைஞரால் வரமுடியாது என்றாலும், சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கு, அவர் வந்தாக வேண்டும் என்றேன். ‘சார் என் மகளோட கல்யாணத்துக்கு நீங்க வரல. ஆனா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்’ என்றேன் உரிமையோடு . உடனே ‘கலைஞர் உங்க மகளோட திருமண நாளுல எனக்கு இன்னொரு திருமண நிகழ்ச்சி இருந்தததை அப்பவே உங்ககிட்ட சொன்னேனே’ என்று பதிலளித்தார்.

நான் அசந்து போனேன். கலைஞர் அப்போது அப்படி சொன்னது அந்தச் சமயத்தில்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு பிறகும் கலைஞர் அப்போது பேசியதை மறக்காமல் வைத்திருக்கிறார். பல்வறு அரசியல் சமூக நிகழ்வுகளை கூட முழுமையாக நினைவு படுத்த முடியாமல் பல தலைவர்கள் அல்லாடி இருப்பதை செய்தியாளன் என்ற முறையில் நான் பலதடவை பார்த்திருக்கிறேன். ஆனால், கலைஞரோ ஒரு சாதாரண விஷயத்தைக் கூட அதுவும் ஐந்தாண்டுக்கு முன்பு பேசியதை மனதில் பதிவு செய்திருப்பது கண்டு நான் பூரித்துப் போனேன் என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால், உண்மை அதுதான்.

இந்தச் சந்திப்பின்போது, கலைஞருடன் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளையே பேசினேன். மேயர் ஸ்டாலினுக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருப்பதையும், அவர் அல்லும் பகலும் குறிப்பாக தீவிபத்துக்ளின் போதும், தீராத மழையின் போதும் ஓடோடி உழைப்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இப்போது போலவே அவர் எப்போதும் அடக்கி வாசிக்க வேண்டும் என்று கலைஞர் கேளாமலே ஒரு அறிவுரையை உதிர்த்தேன்.

ஒரு குறிப்பிட்ட சாதி, அவருக்கு வாக்களிக்காது என்கிற யதார்த்தத்தைச் மீண்டும் சுட்டிக்காட்டி, அந்த சாதியினைரை ஆற்றுப்படுத்தவும், அதற்கு எதிராக உள்ள சாதியை மென்மைப் படுத்தவும், கலைஞர் ஆவன செய்ய வேண்டும் என்றேன். சென்ற தடவை, நான் குறிப்பிட்ட அந்த சாதியினர், தன் பக்கம் நிற்பதாக குறிப்பிட்ட கலைஞர், இப்போது அவர்களது ஒட்டுமொத்தமான ஆதரவில், பத்து சதவீதம் குறைந்து இருப்பதாக குறிப்பிட்டார். இதுவும், அவர், அந்த சாதியினர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதே தவிர, யதார்த்ததை அல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும், அவர் கருத்துக்கு எதிராக நான் பலமாக வாதாடவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கு முன்பு, இந்த யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்வதும், அதற்கு ஏற்ப வியூகம் வகுப்பதும் தமிழகத்தின் ஒட்டுமொத்தமான நலனுக்கு உகந்தது.

எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லைதான். கலைஞரும் அப்படியே. அதேசமயம் தமிழகத்தில் தொற்று நோயாய் பரவிவரும் சாதிய அரசியலையும் புறக்கணிக்க முடியாது என்பதே என் கருத்து. சாதி வழியாக, சாதியத்தை கலைஞரால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.

திருமண வரவேற்பு நாளில், கலைஞர் இரவு எட்டு மணி அளவில், ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்கு வந்தார். ஏழு அமைச்சர்களை தன்னோடு கூட்டி வந்தார். இவர்களில் பலருக்கு, நான் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. எனக்கு அவர்களை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. குறிப்பாக மூத்த அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி அவர்கள் மேடைக்கு கலைஞரோடு வந்து இருந்தார்கள். கலைஞருக்கு வேண்டிய ஒருவர், தங்களுக்கும் வேண்டியவர் என்ற முறையில்தான் வந்திருப்பார்கள். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, தமிழ்க் குடிமகன், பிச்சாண்டி ஆகியோர் எனக்கு நண்பர்கள். இவர்கள் வருவது இயல்பு ஆனால், நான் குறிப்பிட்ட அந்த இரண்டு மூத்த அமைச்சர்களும் அழைப்பிதழ் கிடைக்காததை மனதில் வைத்துக் கொண்டு கலைஞரிடமிருந்து அப்போதைக்கு நழுவிப் போகாமல், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு பெருந்தன்மையான செயல். அண்ணா, திமுகவை எப்படி குடும்பப் பாங்கில் வைத்திருந்தாரோ அப்படியே கலைஞரும் வைத்திருப்பதை கண்ணாரக் கண்டேன்.

இந்த விழாவிற்கு மூப்பனார், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்கள் வந்திருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. மூப்பனார் அவர்கள் கூட்டத்தோடு அமர்ந்து இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். கலைஞர் மேடைக்கு வந்ததை அவர் கவனிக்கவில்லை. கலைஞர் வெளியே புறப்படும்போது யாரோ ஒருவர் மூப்பனார் வந்திருப்பதாக கலைஞரிடம் தெரிவித்தார். உடனே கலைஞர் திரும்பி நடந்து மூப்பனாரை நோக்கி ஓடாத குறையாக நடந்தார். இதற்குள் மூப்பனாரும் சேதி அறிந்து கலைஞரை நோக்கி ஓடி வந்தார்.

இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அன்போடு அளவளாவினார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் அனைத்துப் பத்திரிகைகளும் புகைப்பட சாட்சியாக செய்தியாக்கி இருந்தன. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் சமூக, குடும்ப உறவு என்று வரும்போது தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞரும், மூப்பனாரும் கண்காட்சி போலவே தோன்றினார்கள். மற்ற தலைவர்களுக்கும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கே சொல்லாமல் விடுவதே கட்டுரையின் தகுதிக்கு ஏற்புடையது.
--------------

23. பொதுச் சமுத்திரத்திற்குள் ஒரு புயல்வீச்சு

கலைஞரை பலர் முன்னிலையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு 11.6.2000 அன்று ஏற்பட்டது.

முன்பு கலைஞரிடம் நான் சமர்ப்பித்த குறிப்பின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பை நிறுவியது. இதன் பொதுக்குழு உறுப்பினராக நானும் நியமிக்கப் பட்டிருந்தேன். இந்த அமைப்பிற்கு கலைஞர் முதல்வராக அல்ல, இலக்கியவாதி என்ற முறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழண்ணல் துணைத்தலைவர் முனைவர் நாகராஜன் அவர்கள் தனி அலுவலர். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்கள் புரவலர். தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கலைஞர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - நடைபெற்றது.

பொதுக் குழுவில் தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், ச.மெய்யப்பன், கா.பா.அறவாணன், சா.வே. சுப்பிரமணியன், ஆங்கில இலக்கிய வித்தகர் சு. செல்லப்பன், ‘காவ்யா’ சண்முக சுந்தரம், நாட்டுப்புற இயல் வித்தகர்களான பேராசிரியர்கள் லூர்து, கே.ஏ. குணசேகரன், எழுத்தாளர்கள் சாவி, கோவி. மணிசேகரன், சுஜாதா, நவீன நாடக விற்பன்னர் மு.ராமசாமி, வானொலித்துறை நிபுணர் மன்னர் மன்னன் உள்ளிட்ட பலர் பொதுக்குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டார்கள். இந்தக் குழுக் கூட்டத்தில் அப்போதைய நிதித்துறை செயலாளரும், எனது பல்லாண்டுகால நண்பருமான ராஜாராம் இ. ஆ. ப. அவர்களும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எழுத்தாளர் ம. ராஜேந்திரனும் கலந்துக் கொண்டார்கள். மத்திய சாகித்திய அக்காதெமி சார்பில் அதன் செயலாளர் கவிஞர் சச்சினாந்தமும், சென்னை கிளையின் அப்போதையை தனி அதிகாரி கிருஷ்ண மூர்த்தியும் கலந்து கொண்டார்கள். நானும் பொதுக்குழு உறுப்பினராய் கலந்து கொண்டேனா கலக்கினேனா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தக்குழுக் கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய துணைத் தலைவரும், காட்சிக்கு எளியவரும், கடுஞ்சொல் அற்றவருமான முனைவர். தமிழண்ணல் அவர்கள், சங்கப்பலகை எல்லோருக்கும் பொதுப்படையானது என்று குறிப்பிட்டார். ஆகையால், இதனை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் ஒருசில மேட்டுக்குடி இலக்கியவாதிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்.

இந்தச் சங்கப்பலகை எதற்காக அமைக்கப்பட்டது என்பதை, அவரை விட நான் அதிகமாகவே அறிவேன் என்பதால் என்னால் குறிக்கீடாமல் இருக்க முடியவில்லை. முனைவரின் பேச்சில் குறுக்கிட்டு இந்த அமைப்பு, ஒரு இடஒதுக்கீட்டு பலகைதான் என்று வாதிட்டேன். திராவிட, முற்போக்கு இயக்க படைப்பாளிகளை, சாகித்திய அக்காதெமியின் துணையோடு இங்குள்ள மேட்டுக்குடி இலக்கியவாதிகள் இருட்டடிப்பு செய்வதால்தான், இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருக்கிறது என்றேன். ஆகையால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, அதே சமயம், தகுதி வாய்ந்த படைப்பாளிகளை அடையாளப் படுத்துவதே இந்த சங்கப்பலகையின் முதல் நோக்கம் என்றும் வாதிட்டேன். சிறிது உணர்ச்சி வசப்பட்டு, கடுமையாகதான் பேசினேன்.

எதற்காக இந்த சங்கப்பலகை துவக்கப்பட்டதோ, அதன் நோக்கம் புரியாமல், சுந்தரம் ராமசாமிக்கும், ஜெயகாந்தனுக்கும் சங்கப்பலகை, குறும் படங்களை எடுக்க வேண்டும் என்று ஒருவர் தினமணியில் எழுதியிருந்தார். இன்னொருவர் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற இலக்கிய மேதைகளை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருப்பதாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். இது சங்கப் பலகையின் சங்கிலிகளை அறுத்து விடுகிற சாமாச்சரமாக எனக்குத் தோன்றியது. இதனால், இந்த அமைப்பும் இன்னொரு சாகித்திய அக்காதெமியாக ஆகிவிடுமோ என்று என்னுள் அச்சம் ஏற்பட்டது. ஆகையால் எடுத்த எடுப்பிலேயே இதன் நோக்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், நான் பெரிதும் மதிக்கும் முனைவர் தமிழண்ணல் பேச்சில் குறுக்கிட வேண்டியதாயிற்று. அவர் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை.

பொதுக் குழு உறுப்பினர்களிடையே பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எவரும் இடைமறித்து பேசிய என்னை இடைமறிக்கவில்லை. கலைஞரின் தலைமை அவர்களது வாய்களை கட்டிப் போட்டிருக்கலாம். அல்லது கலைஞர் பார்த்துக் கொள்ளுவார் என்று சும்மா இருந்து இருக்கலாம். ஒருவேளை, நான் பேசியது முரட்டுத்தனமாக இருந்தாலும் அதில் உண்மை பொதிந்திருப்பதை உணர்ந்தும் பேசாது இருந்து இருக்கலாம். இந்த மூன்று காரணங்களாலோ, அல்லது மூன்றில் ஒன்றாலோ தமிழகமெங்கும் இருந்து வந்த சிந்தனையாளர்கள், எந்த வித எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் போக்கை என் கருத்துக்கான மௌன சாட்சியமாக நினைத்துக் கொண்டு நான் மேற்கொண்டும் பேசப்போனேன்.

அப்போது கலைஞர் இடைமறித்தார் இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்று சொன்ன என்னைப் பார்த்து ‘சமுத்திரம் எல்லோருக்கும் பொதுவானது’ என்று சிலேடை நயத்தோடு குறிப்பிட்டார். நானும் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘சமுத்திரம் சில சமயம் கரையேற வேண்டியது இருக்கிறது’ என்றேன். கலைஞர் என்னையே உற்று நோக்கினார். அந்த பார்வையின் பொருளை புரிந்து கொண்டு, நான் மேற்கொண்டு பேசவில்லை. இதை ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மென்மையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணையாழிப் பத்திரிகையோ, தனக்கே இயல்பான மேட்டுக்குடித் தனத்தில், கலைஞர் என்னை தலையில் தட்டி உட்கார வைத்து விட்டதாக குறிப்பிட்டு என்னை கோமாளியாக்குவதாக நினைத்து, கோமாளித்தனம் செய்தது.

சங்கப் பலகையின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு இலக்கிய சமாச்சாரங்களை உறுப்பினர்கள் கோடி காட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளூர வருத்தம். ஒரு மூத்த தமிழறிஞரை அதுவும் என் மீது அன்புக் காட்டும் பெரியவரின் பேச்சை அப்படி இடைமறித்து இருக்கக் கூடாது என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.

கலைஞரின் கணிப்பில் இருந்து நான் வீழ்ந்திருப்பேனோ என்ற சந்தேகம். சமுத்திரம் எங்கே போனாலும் கலாட்டா செய்வார் என்று சங்கப் பலகை எதிரிகள் நான் சொல்ல வந்தததை திசைத்திருப்பி விடலாமே என்ற எதிர்கால அச்சம். பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், சிலர் நான் குறுக்கிட்டதுதான் சரி என்றார்கள். சிலர் இவை எல்லாம் சொல்லாமல் செய்ய வேண்டிய செயல்கள் என்றார்கள். நான் கலைஞர் தவறாக நினைப்பாரே என்று வருந்தினாலும் நான் அப்படி கருத்து தெரிவித்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

சங்கப் பலகையின் பொதுக் குழு உறுப்பினர்களில் இருந்து செயற்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். போட்டி இல்லாத தேர்வு. பேராசிரியர் மெய்யப்பன், சங்கப் பலகைக்கு காரணமானவர் என்று சொல்லி என் பெயரை முன்மொழிந்தார். உறுப்பினர்கள் ஆட்சேபிக்கவில்லை. சிலம்பொலி செல்லப்பன், சா. வே. சுப்பிரமணியன், அப்துல் ரகுமான், காவ்யா சண்முகச் சுந்தரம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை விட பொதுக் குழுவால் நியமிக்கப் பட்டார்கள் என்று சொல்லலாம்.

காலங்காலமாக அடிமைப் படுத்தப்பட்ட அல்லது கொச்சைப்படுத்தப் பட்ட இந்த மண்ணின் இலக்கியத்தை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல, இத்தகைய தடாலடி குறுக்கீடு தேவை என்றே தோன்றியது. ஆரம்பகாலத்தில் என் படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றவரும் என்னை சங்கப்பலகையின் செயற்குழுவிற்கு உறுப்பினராக வழிமொழிந்தவருமான பேராசிரியர் மெய்யப்பன் தமிழண்ணல் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர். நான் தமிழண்ணல் அவர்களிடம் ஒருவேளை அவர் மனம் புண்படும் படி நடந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தபோது பேராசிரியர். மெய்யப்பன் நான் அப்படிச் செய்ததே சரி என்று அங்கேயே வாதிட்டார். இதுதான் நட்பையும் மீறிய நேர்மை என்பது.

கலைஞரும், தனக்கே உரிய முத்திரையோடு தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதை உலகளாவ கொண்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தையும் அருமையாக வற்புறுத்தினார்.

நான் கலைஞருடன் கொண்ட நட்பை வாழ்நாள் வரை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். எனது இடைச்செருகல் பேச்சு இதற்கு இடையூறாக வந்திருக்குமோ என்று வருத்தப்பட்டேன். அதற்கு அவசியம் இல்லை என்பது போல் ஒரு நிகழ்ச்சி விரைவில் நடைபெற்றது. முதல்வர் அலுவலகத்தில் ஆன்லைன் என்ற தனியார் இணையத்தை கலைஞர் 11.12.2000அன்று துவக்கி வைத்து இருக்கிறார். அதில் எனது கட்டுரையான ‘கிராமங்கள் அன்றும் இன்றும் எனது புகைப்படத்துடன் வெளியாகி இருந்ததாம். அதில் வந்த கட்டுரைகளையும், எழுத்தாளர்களின் பெயர்களையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் எனது கட்டுரையையும் எனது புகைப்படத்தையும் பார்த்தவுடனே, அதை உற்று நோக்கி அடடே நம்ம சமுத்திரம்! என்றாராம். இதை ஆன்லைனில் பணியாற்றும் எனது தோழரும், சிறந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணனும், செய்தித் துறையில் உதவி இயக்குநராக உள்ளவரும், எனது வாடமல்லி நாவலுக்கு காரணமானவருமான, என் இனிய நண்பர் சுபாஷ் அவர்களும் மறுநாள் என்னிடம் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்.

எனக்கு இரட்டை மகிழ்ச்சி. குறள் பீடத்தில் நான் தெரிவித்த கருத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டார் என்கிற ஒரு மகிழ்ச்சி. அப்படியே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பு அவரிடமிருந்து வீழ்ச்சி அடையவில்லை என்ற இன்னொரு மகிழ்ச்சி.

இந்தக் காலக்கட்டத்தில் முரசொலி மாறன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மாறன் அவர்களும் ரங்கராஜன் குமாரமங்கலமாக திடுதிடுப்பென்று ஆகிவிடுவாரோ என்பது போன்ற அதிர்ச்சிதரும் செய்திகள் வெளியாயின. இந்தச் சமயத்தில் கலைஞர் கலங்கிப் போனதை தொலைக்காட்சியில் பார்த்த போது என் கண்கள் கலங்கிவிட்டன. கையறு நிலையில் அவர் தவித்த தவிப்பு என்னையும் தவிக்க வைத்தது. என்னை மட்டுமல்ல... மனிதநேயம் மிக்க எல்லோரையும் தவிக்க வைத்திருக்கும். ஆனால், என்னைப் போன்றவர்களின் தவிப்பு தமிழ்நாடு சம்பந்தப்பட்டதும் கூட, ஓணானாய்ப் போன தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க இன்னும் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது தேவைப்படுகிறது. இதற்கு கலைஞர் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், மாறனுக்கு விபரீதமான ஒன்று ஏற்பட்டால் அவரும் வாழமாட்டார் என்பது அவரது ஐம்புலன்கள் மூலமும் வெளிப்படையாக தெரிந்தது. வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து

வெளியேறிய போது, கலைஞர் இயலாமையில் கையாட்டியது என் இதயத்தையே ஆட்டுவது போல் இருந்தது.

முரசொலி மாறன் அவர்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அப்பாவிக் கலைஞரை, அவர்தான் ஆட்டி வைப்பதாக கட்சிக்காரர்கள் சிலர்கூட கூறுவது உண்டு. இதனால் கலைஞருக்கு பாதகமான நிலையே உருவாகியிருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், கலைஞருக்கு ஒரு மாறன் தேவைப்படுகிறது. நந்தனின் பொறுப்பாசிரியரான என் இனிய தோழர் கவிஞர் இளவேனில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது கலைஞர் ஒரு வகையில ஏமாளிங்க .... அவர் கதை ஒன்றை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டால் போதும் அப்படியே மயங்கிடுவார். மாறன் உடனிருந்து, நல்லவர்கள் கெட்டவர்களை சலித்து அவருக்கு சரியான வழிகாட்டியாக இருக்கிறார்’ என்றார்.

தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் தாய் மாமாவை ‘அம்மான் என்றே சொல்லுவார்கள். இதனால் சகோதரி பிள்ளைகளின் ஜாதகங்கள் கூட தாய்மாமனுக்காவே முதலில் பேசும் என்பார்கள். ஆனால் எனக்கும் என் தாய்மாமா அம்மான் தான். அவரை விட நான் வேறு யாரையும் அதிகமாக நேசிக்கவில்லை. இந்த உறவு கலைஞருக்கும் மாறனுக்கும் அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. மாறன் என்ற ஊன்றுகோல் இல்லை என்றால், கலைஞர் அரசியலில் ஓரளவு முடமாவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த தத்துவார்த்தச் சிந்தனையுடன் இன்றைய தமிழக நல்வாழ்வில் முரசொலி மாறன் அவர்களின் உயிரும், வாழ்தலும் இதனால் கலைஞரின் வாழ்தலும் தமிழக வாழ்தலில் முக்கிய அம்சங்களாக எனக்குப் படுகின்றன
-------------

24. வைகுண்டர் தலைப்பாகை வள்ளலார் வழிபாடு

கலைஞரே முன் நிற்க...

சென்ற ஆண்டில் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பு வித்தியாசமான காரணங்களுக்கானது. அதோடு ஐந்தாம் தேதி சண்முகநாதன் அவர்களை அணுகினால் மறுநாள் ஆறாம் தேதியன்று, கலைஞரை ஏழாம் தேதி சந்திக்கலாம் என்று செய்தி வந்தது. பொதுவாக எனது வேண்டுகோட்களுக்குப் பிறகு, கலைஞரை சந்திக்க நான்கைந்து நாட்களாவது ஆகும். ஆனால், இந்தத் தடவை ஒருநாள் இடைவெளியில் எனக்கு அனுமதி கிடைத்தது. கலைஞரும் என்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.

மூன்று முக்கிய காரணங்களுக்காக கலைஞரை சந்தித்தேன். முதலாவது அரசியல் நிகழ்வுகள். இரண்டாவது சாகித்திய அக்காதெமி சமாச்சாரங்கள். மூன்றாவது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒரு அதிகாரியின் நடத்தையைச் சுட்டிக் காட்டி தமிழக அதிகார வர்க்கத்தை அடையாளப் படுத்த வேண்டும் என்பது.

முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது, தொலைக்காட்சியில் பார்த்த கலைஞரில் இருந்து நான் சந்தித்த கலைஞர் வித்தியாசமாக இருந்தார். உடனே, எடுத்த எடுப்பிலேயே ‘பரவாயில்லை சார், கும்முன்னு இருக்கீங்க, இப்படி உங்களப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்குது’ என்று சொன்னேன். இந்த ‘கும்’ என்ற வார்த்தை எனக்கு எனது சேரித் தோழர்கள் கொடுத்தது. இதை பயன்படுத்தி இருக்கக் கூடாதுதான். ஆனாலும், மொழிவாசனை யாரை விட்டது?

முரசொலி மாறன் உடல்நலக் குறைவின் போது, தொலைக்காட்சியில் கலைஞர் துடித்த துடிப்பைக் கண்டு நான் கண்கலங்கி விட்டதாக குறிப்பிட்டேன். உடனே அவர் அப்பல்லோ மருத்துமனையில் குறிப்பேட்டில் நான் எழுதியதை படித்ததாக தெரிவித்தார். இதில் மாறனின் வாழ்வும், கலைஞரின் வாழ்தலும் தமிழக நலன்களோடு பின்னிப்பிணைந்து உள்ளன என்று எழுதியிருந்தேன்.

எனக்கும், மாறன் அவர்களுக்கு வந்தது போன்ற இதய நோய் சிறிய அளவில் வந்திருப்பதை கலைஞரிடம் குறிப்பேட்டேன். உடனே அவர் துடித்துப் போனார். அதுபற்றி அவர் விசாரிக்கப் போனபோது, நான் எச்சரிக்கையானேன். அமைச்சர் ஆலடி அருணா அவர்களுக்கு இருதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், ஆனாலும் ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கலைஞர் அருணாவை, உடனடியாக மருத்துவமனையில் சேரும்படி செய்து விட்டாராம். இதை மனதில் வைத்து எனக்கும் அப்படி ஒரு மருத்துவமனை வாசம் உடனடியாக ஏற்படக் கூடாது என்பதற்காக இலேசுதாங்க அய்யா’ என்று சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன். இந்த ‘அய்யா எனது சார் என்கிற வார்த்தையை எப்படியோ மாற்றிவிட்டது. எல்லாம் என் இனிய நண்பர், எந்த மனத்தாங்கலையும் மனதில் வைத்துக் கொள்ளாத அற்புதப் பேச்சாளர். தமிழ்க் குடிமகனின் வாசனைதான்.

முரசொலி மாறனை பற்றிய பேச்சையடுத்து, இன்றைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சு வந்தது. வரப்போகிற தேர்தல்கள் குறித்து கலைஞரிடம் சில சந்தேகங்கள் கேட்டேன். திமுக பிரச்சாரம் ஆக்கிரமிப்பாக இல்லை. தற்காப்பாக இருக்கிறது என்றேன். கலைஞர் ‘அப்படியில்லை பலர் திறமையாக பேசுகிறார்கள்’ என்றார்.

அரசியல் கட்சிகளின் அணிவகுப்பில், கலைஞர் இந்த அளவிற்கு மௌனம் சாதிக்கக் கூடாது என்றும், ஒருசில நிகழ்வுகளை சுட்டிக் காட்டினேன். கலைஞர் தனது மவுனத்திற்கான காரணங்களை என்னிடம் தெரிவித்தார். அந்தக் காரணங்களை கண்டு நான் அதிர்ந்து போனேன். அவரது மௌனத்திற்கான சூழல் எனக்கு புரிந்தது. இந்த அதிர்ச்சி தரும் செய்தியை, கலைஞர் என்னிடம் பகிர்ந்து கொண்டது என்னைப்பற்றி நான் பெரிதாக நினைக்க வைத்தது. ஜி.கே. எம் அவர்களிடம் பேசிப் பார்க்கலாமா என்றேன். அவர் எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும் என்பதையும், நான் சொல்வதை கவனமாகக் கேட்பார் என்பதையும் குறிப்பிட்டேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். மறுப்புக் கூறவில்லை. வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்பதுதான் அந்தச் சிரிப்பின் பொருள்.

எங்கள் உரையாடல் சாகித்திய அக்காதெமியின் பக்கம் திரும்பியது. இந்த அக்காதெமி எப்படி எல்லாம் மேட்டுக் குடிக்கு ஏதுவாக செயல்படுகிறது என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். மேட்டுக் குடி தாச எழுத்தாளர் ஒருவருக்கு, இந்த அமைப்பு ஐந்துப் பொறுப்புகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இவர் தொகுத்து அண்மையில் வெளியான நவீன தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்க படைப்பாளிகளோ, குறிப்பாக சொல்லும்படியான கலைஞரின் குப்பைத் தொட்டியோ அல்லது சு.சமுத்திரம், கு.சின்னப்ப பாரதி, பொன்னீலன், டி. செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி என்ற முற்போக்கு வரிசை படைப்போ இடம் பெறவில்லை. இந்த லட்சணத்தில் இதே எழுத்தாளருக்கு சென்ற நூற்றாண்டின் சிறுகதைகளை தொகுக்கும் பொறுப்பையும், அக்காதெமி கொடுத்ததில் துடித்துப் போனேன்.

இந்தப் பொறுப்பை அவர் காய்தல், உவத்தல் இல்லாமல் செய்யமாட்டார் என்பது தெரியும். ஆகையால், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இந்த இலக்கிய கொடுங்கோன்மையை கண்டித்து எழுதினேன். முதுபெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணன் தலைமையில் எழுத்தாளர் கூட்டணி ஒன்றை உருவாக்கி கூட்டம் போட்டு கண்டித்தோம். இந்த விவரத்தை கலைஞரிடம் நான் தெரிவித்தபோது, குங்குமம் பத்திரிகையில் வந்த கட்டுரைகளை படித்ததாக குறிப்பிட்டார். பெரும்பாலும் எனது கருத்து அவருக்கு ஏற்புடையதாகவே இருந்தது. சாகித்திய அக்காதெமியின் இத்தகைய போக்கை கண்டித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் அவர்கள் மூலம் மத்திய அரசிற்கும் அந்த அக்காதெமிக்கும் கடிதம் எழுதும்படி, நான் கேட்டுக் கொள்ளலாமா என்று வினவியபோது கலைஞர் சரி என்று ஒப்புக் கொண்டார்.

இத்தகைய முயற்சிகளாலும், எங்கள் போராட்டத்தாலும் சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரோடு மேலும் இரண்டு பேரை நியமித்து ஒரு குழு அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால், தமிழ் இலக்கியத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிய பெருமிதம் ஏற்படுகிறது. திராவிடப் படைப்பாளிகளுக்கு முதல்முறையாக இலக்கிய நீதி வழங்கப்படுகிறது.

இறுதியாக எங்கள் பகுதி சென்னை மாநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் ஒரு உதவிப் பொறியாளரைப் பற்றியது. இவர் ஒரு தொழிற்ச்சங்கத் தலைவராம். இயக்கரீதியில் இல்லாத லும்பத்தனமான தலைவர் என்பதால், இவர் பொதுமக்களை வரி செலுத்துவோராக நினைக்காமல் கப்பம் கட்டுபவராகவே நினைத்தார். எங்கள் தெருவாசிகளில் எழுத்து மூலமான வேண்டுகோளைப் பற்றி ஒப்புக்குக்கூட ஒரு பதில் அளிக்கவில்லை. வாரியத்தில் கேட்டாலோ அவராக செய்தால் உண்டு. அவரை யாரும் அப்படிச் செய்யச் சொல்ல முடியாது என்று இயலாமமையில் தெரிவித்தனர். கலைஞர் அரசு நல்லதை செய்ய நினைத்தாலும் அதை எப்படி ஒரு அதிகாரியால் முறியடிக்க முடிகிறது என்பதை நேருக்கு நேராகப் பார்த்தேன். இதைக் கலைஞரிடம் தெரிவிக்க நினைத்தேன். பல நண்பர்கள் ஒரு முதல்வரிடமா இத்தகைய சின்னப் பிரச்சனையை குறிப்பிடுவது என்று வினவினார்கள். ஆனால், எனது தோழர் செந்தில்நாதன் கலைஞர் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்று குறிப்பிட்டு ஊக்கமளித்தார்

நான் ஒரு குறிப்பு எழுதிக் கொண்டேன். அதில், கிருஷ்ணா நதி நீர் திட்டத்தைப் பற்றி கவலைப்படும் முதல்வரிடம் ஒரு தெருவின் தண்ணீர் விநியோகம் பற்றி குறிப்பிடுவதற்கு வருத்தம் தெரிவித்தேன். பின்னர் அடித்தள மக்களின் உரிமைப் போராட்டமான குழாய் நீர் பகிர்வை, மேட்டுக்குடியினர் குழாய்ச் சண்டை என்று கொச்சைப் படுத்தியதைச் சுட்டிக்காட்டி, மக்கள் முதல்வரான கலைஞர், அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற முன்னுரையுடன் விவரம் தெரிவித்திருந்தேன். இந்த குறிப்பைக் கொடுக்கும் போது எனக்கு கைகள் லேசாக ஆடின. ஆனால், கலைஞரோ இதை இயல்பாக எடுத்துக் கொண்டார்.

வீட்டுக்குத் திரும்பிய மூன்று மணி நேரத்தில் நேர்மையாளரான நிர்வாக இயக்குநர் சிபிசிங் என்னோடு தொடர்பு கொண்டார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கும் தன்னை மிரட்டிக் கொண்டிருந்த சபாடிர்னேட் ஒருவரிடமிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி. குருவி உட்கார பனம்பழம் என்பார்களே அப்படி ஒன்று நடந்தது. இந்த அதிகாரியைப் பற்றி அன்று வெளியான தினமலர் பத்திரிகையில் டீக்கடைப் பேச்சில் ‘சமுத்திரத்திற்கே தண்ணி காட்டியவர்’ என்று அந்த அதிகாரியைப் பற்றி கண்டிக்கும் உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதை முதல்வரும், அவருடன் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் படித்திருப்பார்கள். அன்றைக்குப் பார்த்து நான் தான் அந்தச் செய்தியை போடவைத்தது என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னைப் போல சம்பந்தப்பட்ட அலுவலரிடம் திக்குமுக்காடிய தினமலர் தலைமைச் செய்தியாளரும், எனது நண்பருமான நூருல்லாதான் அந்தச் செய்திக்கு முழுமுதல் காரணம். இப்படி எத்தனைக் காகங்கள் உட்கார்ந்து, எத்தனை பனம்பழங்கள் விழுந்தனவோ. இதனால் தான்ோ என்னவோ, காக்காக் காரணங்களால் சிலர் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

கலைஞர் மூலம் வள்ளலாரையும், வைகுண்டரையும் மக்களிடையே கொண்டு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். கலைஞரும் ஒரு ஆரம்பமாக, இந்த இரு ஆன்மீகப் போராளிகளுக்கும், குறும் படங்கள் எடுக்க கொள்கையளவில் முடிவெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் முதல் தடவையாக இந்த இரண்டு ஆன்மீகப் போராளிகளையும், மக்களிடையே கொண்டு செல்வதற்கு கலைஞர் வாய்ப்பளித்திருக்கிறார். இந்த வாய்ப்புக்கள் ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்ற கலைஞர் நமக்கு தேவைப்படுகிறார்.

சாமிப்தோப்பு வைகுண்டரே கலைஞரின் தலைப்பாகையை வலுப்படுத்தட்டும், வடலூர் வள்ளலாரே தமிழ் வழிபாட்டை செய்விக்கட்டும். இதற்கு கலைஞரே தொடரட்டும்.
----------------

25. தம்பிரான் தோழர் ஒரு பன்முகப் பார்வை

கலைஞரை என்னளவில் தம்பிரான் தோழர் என்று அழைப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சைவசமயக் குரவர்களில் அப்பர் பிரானுக்கும், முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கும் உள்ள உறவு நல்லதோர் ஆண்டான் அடிமைத் தன்மை வாய்ந்தது. திருஞான சம்பந்தருக்கும் அதே ஆண்டவனிடம் உருவான உறவு தந்தை மகன் போன்றது. சுந்தரருக்கு ஏற்பட்ட உறவோ தோழனுக்குத் தோழன் போல் இணையானது.

பெரிய புராணத்திலும், இதர தமிழ் புராண நூல்களிலும் வந்துள்ள இந்த மூவரிடமும் ஈசன் நடத்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்கள் புராணப் பொய்களே. ஆனாலும், இவை பூஜ்யத்தைப் போல், மெய்மைக்கு வலிமை கொடுக்கும் பொய்கள்.

சுந்தரரை, அவரது திருமணத்தின் போது சிவபெருமான் தனது அடிமை என்று நிரூபித்து அழைத்துச் செல்கிறார். இதில் சுந்தரருக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், வேறு வழியில்லாமல் ஈசன் பின்னால் செல்கிறார். இதைப்போல், நானும் என்னையும் மீறி, கலைஞரின் தமிழிற்கு அடிமையானேன். சுந்தரர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக அவருக்கு கண்கள் போகின்றன. எனக்கு, தொலைக்காட்சி வேலை போகிறது. சுந்தரருக்கு, சரியாக நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் கிடைக்கிறது. எனக்கு, வானொலி கிடைக்கிறது. சுந்தரர், அந்த ஊன்றுகோலை வைத்து சிவசொரூபமான லிங்கத்தின் மீது வீசியடிக்கிறார். நானும், வானொலியை வைத்தே கலைஞரை அடிக்கிறேன். சுந்தரர், தனது கோபத்தின் உச்சத்தில் சிவபெருமானை வாழ்ந்து போவீரே என்று அங்கத பாணியில் பதிகம் பாடினார். நானும் கலைஞரை தாக்கி, அறிக்கைகள் விடுத்தேன். இறுதியில் சுந்தரத்தோழரும், மகாத்தோழரும், ஒரு மையத்தில் ஒள்றித்தது போல் நானும் கலைஞரும் ஒன்றிக்கிறோம்.

இப்படிக் குறிப்பிடுவதால், கலைஞரை நான் ஆண்டவனாக உயர்த்தி, அந்தச் சாக்கில் என்னையும் ஒரு நவீன சுந்தரராக ஆக்கிக் கொள்வதாக பொருட்படுத்தலாகாது. என்னளவில் தம்பிரான் தோழர் என்று நான் அழைப்பதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமே இது. ஆகையால், வரிகளுக்குள் வரி தேடலாகாது. கலைஞர் கூட இதைப்பற்றி என்னிடம் கேட்கவில்லை. இதன் முழுத்தாக்கம் அவருக்குத் தெரியாமலும் இருக்காது.

இந்த விளக்கத்தினால் கலைஞரை விமர்சிக்கக் கூடாது என்றும் பொருளல்ல. தொடர்ந்து விமர்சிப்பேன் என்பதற்குதான் இந்த பட்டமே. ஆனால் அது, அவரையும் தமிழகத்தையும் மேன்மைப் படுத்துவதற்காக மட்டுமே.

கலைஞர், என்னைப்போல் எளிய வர்க்கத்தில் இருந்து புறப்பட்டவர். பொதுவாக இளமையில் மனக்காயங்களை உள்வாங்கிக் கொண்ட ஒருவருக்கு இரண்டு தனித்துவக் குணங்கள் இருக்கும். முதலாவதாக அந்தச் சிறுவன் இளைஞராகும் போது பரமசாதுவாக மாறலாம். வாழ்நாள் முழுவதும் இந்தச் சாதுத்தனம் நீடிக்கலாம். இரண்டாவதாக அந்த இளைஞர் தீவிரவாதியாக மாறலாம். இந்த இரண்டில் ஒன்றுதான் அவனுக்கு இருக்க முடியும். ஆனால், கலைஞருக்கோ அல்லது எனக்கோ இந்த இரண்டும், தக்க விகிதாச்சாரத்தில் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்த இரண்டையும் முறியடித்துக் கொண்டு அவர் வீறிட்டிருக்கிறார் என்பதே என் கருத்து.

1969 ஆம் ஆண்டில், முதல் தடவையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது கலைஞர், தன்னை ஒரு கட்சித் தலைவராக அனுமானித்தார். பெருந்தலைவர் காமராசரை முறியடிப்பதற்காக இந்திராவுடன் கூட்டமைத்து அவர் முதலமைச்சர் பதவியை உறுதி செய்துக் கொண்ட போது ஒரு அரசியல்வாதியாகவே தன்னை நினைத்துக் கொண்டார். 1989ல் பதவியேற்றபோது, ஒரு ஒரு தாயகத் தமிழனத் தலைவராக பொறுப்பேற்றார். இப்போது - அதாவது 1996ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற நாளிலிருந்து அவர் எல்லாமாகி, எல்லாமும் அல்லது மாகி அரசியலில் கிட்டத்தட்ட பூரணத்துவத்தை எட்டிவிட்டார் என்றே கருதுகிறேன். இல்லையானால் செல்வி ஜெயலலிதாவை அவர் எதிர்நோக்குகிற விதமே வேறு விதமாக இருக்கும்.

கலைஞரை, அவரது அரசியல் எதிரிகள் பழைய கணக்கை வைத்தே அளக்கிறார்கள். இது தவறானது. ஆரம்பத்தில் தவறாக கருதப்படுகிறவர்கள், இறுதிக் கட்டத்தில் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

எடுத்துக் காட்டாக, குன்றக்குடியில் ஆரம்பக் கட்டத்தில் மக்களால் ஓரளவு ஒதுக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் இறுதிக் கட்டத்தில் அந்த மக்களுக்கு உள்ளூர் கடவுளாகி விட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியில் வழக்கறிஞர்களை அடித்துத் துரத்திய குற்றத்தின் பேரில் தண்ணியில்லா காட்டிற்கு அனுப்பபட்ட கிரேன்பேடிதான் இன்று நாடு போற்றும் காவலராக திகழ்கிறார். கேரள கடலோர கிராமத்தில் பெரும்பாலான மக்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் உள்ளான ஒரு மீனவப் பெண்தான், இன்று உலகம் போற்றும் மாதா அமிர்தாயியாக மாறியிருக்கிறார்.

ஒருவரை அவரது இறுதிப் பரிணாம வளர்ச்சியை வைத்துத்தான் அளக்க வேண்டும். எல்லோருக்கும் இப்படிப்பட்ட அளவுகோலை வைப்பவர்கள் கலைஞர் என்று வந்துவிட்டால் ஏனோ அந்த அளவுகோலை ஒடித்துப் போடுகிறார்கள். இது விசித்திரமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.

கலைஞர் மகத்தான் இலக்கியவாதி. வைரஸ் ஊடுருவ முடியாத கணிப்பொறி மூளைக்காரர். ஆனாலும், தான் சந்திக்கும் ஒருவரிடம் அவருடைய அளவிற்கு இறங்குகிறார். என்னிடம் அவர் உரையாடுவதைப் பார்த்தால், அந்தக் கணத்தில் அவர் முதல்வர் என்பது மறந்து போகும். அபிராமியைப் பற்றி அந்தப் பெயருக்குரிய பட்டர் குறிப்பிடுவாரே என் அறிவளவானது அதிசயமே என்று. அப்படி கலைஞரும் ஒருவரின் அறிவளவிற்கு அதிசயமாய் தன்னை ஆக்கிக் கொள்கிறார்.

இலக்கியவாதி என்று வரும்போது அரசியல் மேல்தளத்தில் இருந்து குதித்து நம்மோடு சமதளத்தில் நிற்கிறார். இவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் - போன்ற படைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின், இலக்கியவாதிகள் மேலோங்க, மேலோங்க மேலோங்கும் என்பது எதிர்கால இலக்கிய வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கலைஞரைப் போல் வேறு எந்தத் தலைவரும் இழிவாகவும், கேவலமாகவும் விமர்சிக்கப்பட வில்லை . இவருக்கு அடுத்தபடியாக பெருந்தலைவர் காமரசரைச் சொல்லலாம். பெருந்தலைவருக்கு இந்த வசவுகள் காதிலேயே ஏறாது. ஆனால், கலைஞர் அப்படியல்ல. சென்சிட்டிவ் என்பார்களே அந்த மாதிரியான வகை. தொட்டால் சிணுங்கி வகைதான். அவர் இழிவு செய்யப்படும் போதெல்லாம், இந்த உணர்ச்சி இலை சுருங்கி போயிருக்கும் என்பது அவரைப் போன்ற எனக்கும் புரியும். ஆனாலும், இவர் அந்த இலைகள் சுருங்கும் போதெல்லாம், அவற்றைத் தாங்கும் செடியாகி விடுகிறார். இந்தச் செடியில் எத்தனை இலைகளைதான், எதிரிகளால் சுருங்க வைக்க முடியும்?

கலைஞர், டில்லி ஆட்சியாளர்களுக்கு பயப்படுவதாக அன்று முதல் இன்று வரை ஒரு குற்றச்சாட்டு உண்டு. அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை என்பதை அறிந்தவர்தான். இதனால், தனக்குள் இருக்கும் ஒரு போராளியை அவர் மறந்து விடுவதும் உண்டு. அதே சமயம், சந்தர்ப்பச் சூழல் அந்தப் போராளியைச் சீண்டும் போது அரசியல்வாதி மறைந்து அந்தப் போராளியே விசுவரூபம் எடுப்பார். இதற்கு நெருக்கடி காலமே சாட்சி.

பெற்ற பிள்ளை சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட போதும், கட்சிக்காரர்கள் படாதபாடு படுத்தப்பட்ட போதும் கலைஞருக்குள் இருந்த போராளி வெளிப்பட்டு விசுவரூபம் எடுத்தார். நெருக்கடிகால் ஆட்சிக்கு சவாலிட்டார். முன்னாள் அமைச்சர் ராஜாராம் அவர்களின் தம்பியும், சமூகச் சிந்தனையாளருமான டாக்டர் காந்தராஜ், கலைஞரிடம் தான் உடனிருந்து கண்ட இந்த போராளி அனுபவத்தை என்னிடம் சொல்லிச் சொல்லி மெய்மறப்பார். ஆனாலும், இதில் ஒரு வேடிக்கை அல்லது விபரீதம் என்னவென்றால், இயல்புநிலை திரும்பும்போதெல்லாம் கலைஞரை ஆக்கிரமித்த அந்த போராளி அடங்கி ஒரு ஒரு பொதுமைவாதியே தென்படுவார். இதுவே கலைஞரின் பலம். இதுவே கலைஞரின் பலவீனம். தமிழகத்திற்கும் சேர்த்துதான்.

அரசியலில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாமல் யதார்த்தமான முடிவுகளை மேற்கொள்ளும் கலைஞர் தோழமை என்று வந்துவிட்டால் அவர் தொண்டர் அடிமையாகி விடுகிறார். லட்சோப லட்சம் கூட்டத்திற்கு மத்தியிலும் அவருள் ஏதோ ஒரு தனிமை தனித்துவமாய் நிற்கிறது. இந்தத் தனித்துவத்தை மறைக்கும் அரசியல் திரை விலக்கப்பட்டால் அதுவே ஒரு ஆன்மீக வடிவமாக வெளிப்பட்டிருக்கும். இரவில் எத்தனை மணிக்கு படுத்தாலும், காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கலைஞர் எழுந்துவிடுவார் என்பார்கள். இதற்குப் பெயர்தான் கர்மயோகம். இதனால்தான் அவர் எதிரிகளின் ஆருடங்களை பொய்ப்பித்தபடி நடை போடுகிறார்.

கலைஞரிடம் குறை இல்லாமல் இல்லை. சமூக மாற்றத்திற்கு அவர் துடிக்கிற அளவிற்கு கலாச்சார மாற்றத்திற்கு அவர் அதிகமாக இயங்கவில்லை. இந்திய தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தமிழ் செத்துக் கொண்டு வருகிறது. தமிழ்ப்பண்பாடு நுனி நாக்கு பண்பாட்டிற்கு வழிவிடுகிறது. இதற்கு கலைஞர் அரசு ரீதியில் தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இலக்கியவாதி என்ற வகையில், தனது பேனா தமிழை மேலோங்கச் செய்தால் போதும் என்று மட்டுமே நினைக்கிறார். உலகமயமாதலில் கலாச்சார சீரழிவுகளை தவிர்க்க முடியாது என்று நினைக்கிறாரோ என்னமோ. ஆனாலும், இந்த சீரழிவுகளை அப்புறப்படுத்தாமல் தமிழை மேன்மைப்படுத்த முடியாது. கலைஞர் அமைத்த குறள்பீடம் இந்த சீரழிவுக்கு எதிரான ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்ப்போமாக.

கலைஞர் பதவியில் இல்லாதபோதும் அவரை எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருப்பேன் என்று தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் பேசுகையில், சோதித்துப் பார்க்க ஆசை என்றார்.

இந்த சோதனைக் கட்டத்தில்தான் இந்த நூலை கொண்டு வருகிறேன். கலைஞர் நிச்சயம் மீண்டும் முதல்வராவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை . ஆனாலும், சாதியச் சக்திகள் அவரை வீழ்த்திவிடுமோ என்ற ஒரு அச்சமும் வருகிறது. அவர் வெற்றி பெற்ற பிறகு இந்த நூலைக் கொண்டு வந்தால் அது சமர்த்தாக கருதப்படும். அதற்காக அவர் தோற்பார் என்று தேர்தல் வரும் வரைக்கும் காத்திருக்கவும் கூடாது. எனவே, இந்தக் காலக் கட்டத்தில் இந்த நூல். முன்பெல்லாம் கலைஞர் ஆட்சியின் போது கலைஞரை பாதகமாக விமர்சிப்பார்கள். ஆனால், இப்பொதெல்லாம் கலைஞரை விட்டுவிட்டு அரசையும், அதிகாரிகளையும் தான் திட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு கலைஞரின் இந்த முதிர்ச்சி புரிந்திருக்கிறது. அவரது சிந்தனை முழுவதும் தமிழகத்தை மேன்படுத்த வேண்டும் என்பதில் சுழல்வதை மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு கட்சிக்காரர்களும், அரசு கட்டமைப்பும் புரிந்துக் கொள்ளவில்லையே என்பதுதான் இன்றைய சோதனை. இதற்காக மக்கள் கலைஞரை சிலுவை சுமக்க விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கலைஞரை சந்தித்த நாட்களை நான், தோரயமாகத்தான் போட்டிருக்கிறேன். எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. ஒரு முதல்வரை பற்றிய சந்திப்பு தேதிகளை கூட தெரியாமல் வைத்திருப்பது தவறுதான். அவரோடு சந்தித்த போதெல்லாம் நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதில்லை. இது கவனக் குறைவு அல்ல. கவனமாக மேற்கொண்ட ஒரு பண்பாடுதான். இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எதிர் வரும் தேர்தல்களில், கலைஞர் தோற்பார் என்றும், அப்போது அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சிலர் தாறுமாறாக பேசிவருகிறார்கள்.

கலைஞர் வெற்றி பெற்றால் அது ஐந்தாண்டுகாலமாக நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதாக இருக்கும். ஒருவேளை அந்த வாய்ப்பு நமக்கோ கலைஞருக்கு கிடைக்காது போய் ஆதிக்கச் சக்திகள் தலைவிரித்து தாண்டவமாட முனையும். இதுவே தமிழகத்தில் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் துவக்கமாக இருக்கும்.

இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியர்களும், பேரினவாதிகளும் கலந்துக் கொள்வது சந்தேகமே. கலைஞரின் உள்வட்ட இலக்கியவாதிகளும், வெளிப்படையாக எழுத்தால் போராடுவதும் ஒரு கேள்விக் குறியே. ஆனால், சுயமரியாதைத் தமிழன் என்ற முறையிலும், தமிழ் எழுத்தாளன் என்ற வகையிலும் -

நான் சொல்லாலும், செயலாலும் தொடர்ந்து போராடுவேன்.
---------------

This file was last updated on 22 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)