காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய 
”அருணாசல சதகம்”
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 5) 
aruNAcala catakam 
of kAnjcipuram capApati mutaliyAr
(catakat tiraTTu - part 5) 
In Tamil script, unicode/utf-8 format
 
 
 Acknowledgements: 
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
 © Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
 
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய
 ”அருணாசல சதகம்”
பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 5 
 Source:  
பல வித்துவான்கள் இயற்றிய
பன்னிரு சதகத் திராட்டு
இதனுள் பன்னிரண்டு சதகங்கள் அடங்கியுள்ளன
வல்லை பாலசுப்ரமணியம் அவர்களால் பரிசோதிக்கப் பெற்றது
பதிப்பிடம்   பி. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், சென்னை -1
பதிப்புரிமை,  விலை ரூ. 6.00
முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1948
-------------
 உள்ளடக்கம்  
1.  குமரேச சதகம் (குருபத தாசர்) PM#444
2.  அறப்பளீசுர சதகம் (அம்பலவாணக் கவிராயர்)  PM#266
3.  கயிலாச நாதர் சதகம் (சிதம்பரம் பிள்ளை)
4.  அண்ணாமலைச் சதகம் (திருச்சிற்றம்பல நாவலர்)
5.  அவையாம்பிகை சதகம் (மாயூரம் கிருஷ்ணையர்) 
6.   திருவேங்கட சதகம் (வெண்மணி நாராயண பாரதி)
7.   தண்டலையார் சதகம் (படிக்காசுப் புலவர்)  PM#219
8.  அருணாசல சதகம் (காஞ்சிபுரம் சபாபதி முதலியார்)
9.   எம்பிரான் சதகம் (பூதூர் கோபாலகிருஷ்ண தாசர்)
10.  கோவிந்த சதகம் ( நாராயண பாரதியார்)
11.  தொண்டைமண்டல சதகம் (படிக்காசுப் புலவர்)
12.  வடவேங்கட நாராயண சதகம் (திவ்யகவி நாராயண தாசர்)
-------------
 
காஞ்சிபுரம் - வித்வான் சபாபதி முதலியார் இயற்றிய ”அருணாசல சதகம்” 
 
 காப்பு  
நேரிசை வெண்பா 
திருநாதன் றேடரிய சேவடியான் றன்மேல் 
அருணா சலசதகமன்பாய்த் - தெருணாவால் 
சொல்லுதற்கு மும்மதத்த தும்பிமுகத் தான்பதும 
மெல்லடியே நற்றுணையா மே. 
நூல் 
கலி விருத்தம் 
பொன்பாவுகொன் றையினோடுவான் 
        புனலாறுவெண் மதிசூடுநீ 
என்பாரமு மினிதாவணிந் 
        திடுதன்மையா லெளியோன்சொலும் 
புண்பாடலிங் கிதுதன்னையும் 
        போற்றிக்கொள்வா யெனவுள்ளெழும் 
அன்பாலுரைத் தேன் கொண்டருள் 
         அருணாசலா ! அருணாசலா.        (1)
கடியார்துள வத் [*]தொங்கலான் 
        கமலப்புது மலர்மேவினான் 
படியூடிடந் தடிதேடவும் 
        பறந்தன்னமாய் முடிதேடவும் 
கொடியேன்மன மேகோயிலாக் 
        குடிமேவினை யெனிலைய நின் 
அடியாரெலா மென்சொல்லிடார் 
        அருணாசலா! அருணாசலா.        (2)
[*] தொங்கல் - மாலை. 
கற்பம்மனு கற்பம்முப 
        கற்பம் மெனு முறையால் வரு 
பொற்பின்மிகு திருநீறணி 
        புனிதர்க்கலா னின்றாளெனு 
நற்பங்கய நறுமாமலர் 
        நணுகும்மரு டானெய்துமோ 
[*]அற்பின்னடி யார் போற்றிடும் 
        அருணாசலா! அருணாசலா. (3)
[*]அற்பு - அன்பு. 
வில்லார்மலர்க் கணையேவிய 
        வேளைப்பொடி யாச்செய்தனை 
கல்லாலெறிந் தவன் முத்தியே 
        காணப்பரிந் தனையாதலாற் 
பொல்லாமனத் தவனென்றனைப் 
        புறமேவிடுத் திடலையனே 
அல்லார் [$]களத் தெம்மண்ணலே 
        அருணாசலா ! அருணாசலா. (4)
 [$] களம் - கண்டம். 
முடிபட்டமென் றனக்கேமலர் 
        முகிழ்போற்குழைந் திடக்கண்டிடும் 
வடிபட்ட நோக் குடையாள் புவி 
        வானோடளித் திடுவாள் மனம் 
பொடிபட்டநின் றிருமேனியிற் 
        பொரு [$] பூழியன் கையிற்பிரம் 
படிப்பட்டபோ தென்பட்டதோ 
        அருணாசலா! அருணாசலா. (5)
[$] பூழியன் - பாண்டியன். 
வானாகினை வளியாகினை 
        மால்வேதனோ டமரர்க்கெலாங் 
கோனாகினை யடியார்மனங் 
        குடிகொண்டவ ருணவூறிடுந் 
தேனாகினை யமுதாகினை 
        தேரூர்ந்திடர் செறிபோரினில் 
ஆனாகிமால் வரவூர்ந்திடும் 
        அருணாசலா! அருணாசலா. (6)
புல்லாகியே பூடாகியே 
        புழுவாகியே மரமாகியே 
கல்லாகியே னுந்தின்னகர்க் 
        கண்மேவிலே னினியெங்ஙனே 
பொல்லாப்பிறப் பொழிந்துய்குவேன் 
        புலை நாயினே னிமயந்தரும் 
அல்லார்குழற் கொருபாகனே 
        அருணாசலா! அருணாசலா.  (7) 
படைக்குந்தொழி லயற்கீந்தனை 
        பரிக்குந்தொழி லரிக்கீந்தனை 
துடைக்குந்தொழி லரற்கீந்தனை 
        துதிக்குந் தொழி லடியார்க்கெலாங் 
கிடைக்கும்படிக் கினிதீந்தனை 
        கிளரும்வகை தனையன்று நீ 
அடைக்குந் தொழி லாளான தென் 
        அருணாசலா ! அருணாசலா.  (8)
பரிந்திட்டற மெண்ணான்குமுன் 
        பயில்வாளிருக் கவுநின்னருள்
சுரந்திட்டவன் றொண்டர்க்கெனச் 
        சோறன்று நீ கச்சூரினில் 
இரந்திட்டதென் னோசொல்லுவா 
         [*]யெகினத்தவன் றலையொன்றினை 
அரிந்திட்டதிற் பலிதேர்ந்திடும் 
          அருணாசலா! அருணாசலா.  (9)
[*]எகினம் - அன்னம். 
மையார்விழி மலைமாதொடு 
        மருவுந்திருக் கோலத்தையோர் 
கையார்புனன் மலரானிதங் - 
        காணப்புரியாதென்னையோ 
மெய்யானது வேறாகவே 
        வேதாவரி யுழல்வுற்றனர் 
ஐயாவவர் மதியென்கொலோ 
        அருணாசலா! அருணாசலா.  (10)
வாதாசன னாண்வின்மலை 
        மாலார்கணை மறையே பரி 
போதாசன னேசாரதி 
        புவியோத மாக்கொண்டு பின் 
நாதாபுர நகைத்திட்டது 
        நவிலும்மவ ரகமங்கவோ 
ஆதாரமா றினுமேலுறும் 
        அருணாசலா! அருணாசலா. (11)
முன்னாளிதழ் நறுமாலையு 
        முரிதோலுமே புனையத்தரும் 
பொன்னா [$]ரிதழியினோடும்வெம் 
        புலியானைமற்றிவைதம்மொடு 
மன்னாப்பயி ரறவெண்ணியோ 
        வளர்மாமலை யுருவாயினை 
அன்னாயெனு மன்பர்க்கருள் 
        அருணாசலா! அருணாசலா.  (12)
[$  இதழி - கொன்றை ¨
மேனாளொரு விழியுன்பத 
        மேல் சாத்திய மாயோன் பெரு 
மீனான நாளினுமாங்கவன் 
        விழிகொண்டது ருசியென்று தீங் 
கானார்கரும் பதை வேரொடு 
        களைகின்றது போலானதால் 
ஆனாயனார் தொழுமையனே 
        அருணாசலா! அருணாசலா.   (13)
பாரின்கணே யைந்தாகினை 
        பகர் நீரிடை நான்காகினை 
சேருந்தழற் கண்மூன்றெனச் 
        செறிந்தாய்வளிக்' கிரண்டாகினை 
நேரும்விணி லொன்றாகினை 
        நிமிரும்முயிர்க் குயிராகினை 
ஆருன்னிலை யறிவார் சொலாய் 
          அருணாசலா!. அருணாசலா.   (14)
மாறாவரந் தருவோமென 
        வைகுந்தனும் மலர்த்தேவனு
நூறாயிர முறைவந்தெதிர் 
        நுவல்கிற்கினு நின்னன்பர்கள் 
பேறாயதை நினைவார்கொலோ - 
        பிறவிக்கட லது நீந்தவே 
ஆறாறு நீத் தவர்வாழ்த்துறும் 
        அருணாசலா! அருணாசலா.  (15)
ஊனந்தரு மிவ்வாழ்வினி 
        லுலையேற்றுமா மையினண்ணியே 
ஈனந்தொடர் துயர்மேவினே 
        னென்செய்குவே னெளியேனருண் 
மோனந்தரு நிலையீதென 
        மொழிவாயெனி லினியுய்குவேன் 
ஆனந்தமே யுருவாகிய - 
        அருணாசலா! அருணாசலா.   (16)
இடியுங்கரை மரமாமென 
        வெண்ணாமலிவ் வுடறன்னையோர்
பிடியுங்குறை யாதுண்டுநான் 
        பெரிதேவளர்த் 'துனதன்பினில் 
படியுங்குண மிலனாயினும் 
        பரிவாருனை யலதியாவரே 
அடியும்முடி யுங்காணொணா 
        அருணாசலா! அருணாசலா.   (17)
[*]மட்டார்மலர் கொடுநின்னடி 
        மலர்பூசனை செய்கின்றிலார் 
மொட்டார்தனத் தார்தம்மையே 
        முயங்கித்திகைப் பாரையையோ 
கெட்டாரவர் தமக்குன்னருள் 
        கிடையாதுமுப் புரநீறெழ 
அட் [$]டாரணன் றொழ நின்றருள் 
        அருணாசலா! அருணாசலா.  (18)
[*]மட்டு - தேன்.   [$ ஆரணன் - பிரமின் . 
பாம்பின்விட வாயிற்குளே 
        படுதேரைபோ லெளியேனுளந் 
தேம்பிப்புல னிற்சிக்குறாத் 
        திகைப்புற்று நல் லுணர்வின்றியே 
சாம்பிக்கிடக் கின்றேனரு 
        டருவாயெனி லினியுய்குவேன் 
ஆம்பற்சிறு வாய்பங்கனே 
        அருணாசலா! அருணாசலா.  (19)
வீட்டுக்கொரு வித்தாகிய 
        மெய்ஞ்ஞான நன் னெறிதேர்கிலார் 
பாட்டுக்கருள் செய்வாயெனும் 
        பண்பேனுநன் குணர்கிற்கிலார் 
கேட்டுக்கிட மாய்நாடொறுங் 
        கிறிசெய்குவா ருய்வார்களோ 
ஆட்டுக்குவல் லவனாகிய 
        அருணாசலா! அருணாசலா. (20)
செம்பிற்களிம் பது நீங்கவே 
        செம்பொன்னெனத் திகழ்தன்மைபோல் 
பம்புற்றமும் மலநீங்கவே 
        பரமாவைநீ யெனவோதினை 
வம்புற்ற நா யேனோர்ந்திலேன் 
        மயிலைக்குளுங் கயிலைக்குளும்
அம்பர்க்குளு மகிழ்பூத்திடும் 
        அருணாசலா! அருணாசலா.   (21)
 
பாராளுமன்னவர் செல்வமும்
        பகரும்விசும் பிறைசெல்வமுஞ்
சீரானவே தன் செல்வமுந் 
        திருமான்மகிழ் தருசெல்வமுங்
காராருமின் னெனவெண்ணியுன் 
        கழல்போற்றுவார் தஞ்செல்வமிங் 
காராலுமோர் வொண்ணாததாம்
          அருணாசலா! அருணாசலா!  (22)
உனக்குண்மறைந் திந்நாளுநா 
        னுறல்போலென தருளாலினி 
யெனக்குண்மறைந் திருமைந்தனே 
        யென்றாய்குரு வாய்வந்து நீ 
நினைக்குந்தொறு நினைக்குந்தொறு 
        நீயன்றியொன் றுங்காண்கிலன் 
அனக்குண்டமோர் [*]பூதக்கருள் 
        அருணாசலா ! அருணாசலா.  (23)
[*] பூதக்கு - பூதத்துக்கு. 
காவிக்கு நேர் விழிமாதரார் 
        காமக்கட லதின்மூழ்கிய 
பாவிக்கு நின்னிருதாட்புணை 
        பாலித்திடா யெனிலுய்வனோ 
நாவிக்கருள் செயுமையனே 
        ஞானத்தவர் புகழ்தூயனே 
ஆவிக்குறு துணைமெய்யனே 
        அருணாசலா ! அருணாசலா. (24)
ஒன்றாகினை பலவாகினை 
         யுளதாகினை யிலதாகினை 
யென்றாரண மதுகூறுவ 
        தெண்ணாது தாம் பரமென்றிடுங் 
கன்றால்விள வெறிமாயவன் 
        கமலத்தயன் வெருவுற்றிட
அன்றாரழல் வரையாகினை 
        அருணாசலா! அருணாசலா.  (25)
வளர்கார்த்திகை மாதந்தோறும் 
        வருகார்த்திகை நாடன்னிலே 
பளகானதில் லாவன்பர்கள் 
        பரிவாகவே யேத்தித்தொழக் 
கிளர்மாமலை தனிலேயொளி 
        கெழுசோதிகாட்டாநின்ற நின் 
அளவார்தெரி பவரையனே 
        அருணாசலா! அருணாசலா.  (26)
ஒருபான்மல ரயனாகவு 
        மொருபாறிரு மாலாகவும் 
பொருவாவருட்டிருமேனியாய்ப் 
        பொலிவாயிதன் றியுமாமலை 
வருபாவையோர் பாலாகவும் 
        வருவாயிதன் கறியுமையனே 
யருவாவையுன் னருளென்னையோ 
        அருணாசலா! அருணாசலா.   (27)
ஒப்பானதி லொருமூர்த்தியா 
        யொருபாதமார் திரிமூர்த்தியாம் 
அப்பான்மைபோன் மலையாகியு 
        மருளின் பெரு மையினையனே
இப்பாருளோர் கண்டே தொழ 
        விருந்தாய்ந்தி மதியாடர் 
[*] வப்பார்சடை முடியண்ணலே 
        அருணாசலா! அருணாசலா.   (28)
[*] அப்பு - கங்கை . 
இருப்பானது வெளிமாமலை 
        யிடத்தோர்மர கதமாமலை 
மருப்பார் மத மலை பெற்றது . 
        வளைவில்லொரு பொன்மாமலை 
விருப்பாமித னாலோவொளி 
        மேவும்மலை வடிவாயினை 
யருப்பாரெருக் கணிமாலையாய் - 
        அருணாசலா! அருணாசலா.  (29)
பொறியின் வழி மனம் போக்கிடார் 
        பொன்னந்திரு வடி சேர்வதுஞ் 
செறியும்மிரு வினையாளர்கள் 
        டிகழும்பிற வியிலாழ்வதும் 
வெறிகொண்மரை பரிதிக்கெதிர் 
        விகசித்துவாடுதல் போலுமென் 
றறியுந்நிலை யெற்கீந்தருள் 
        அருணாசலா ! அருணாசலா.  (30)
படியாவுமோர் குடை நீழலிற் 
        பரிக்கும்மவர் மகிழ் செல்வமுங் 
கடியார்தரு நிழல்வைகுறுங் 
        [*] கண்ணாயிரன் மகிழ்செல்வமு 
நெடியோர்மகிழ் தருசெல்வமு 
         நின்னன்பர்தாள் பணிந்தேத்திடும் 
அடியாரடிப் பொடி நேருமோ - 
        அருணாசலா! அருணாசலா.  (31)
[*]கண்ணாயிரன் - இந்திரன். 
காட்டுக்குளே தவஞ்செய்குவார் 
        கனலின்னடுத் தவஞ்செய்குவார் 
தேட்டுற்றநற் கதிகாணவென் 
        செயலிங்கிதுன் கோயிற்குளே 
வேட்டுற்றல கிட்டே திரு 
        மெழுகிட்டிலார் கதிகாண்பரோ 
ஆட்டுக்குமன் றினினின்றிடும் 
        அருணாசலா! அருணாசலா.  (32)
பிறவாநெறி தருவானுநீ 
        பிறக்கும்படி செய்வானுநீ 
யிறவாவரந் தருவானுநீ 
        யிறக்கும்படி செய்வானுநீ 
மறவாதுனை வாழ்த்தும்படி - 
        வந்தாளவும் வேண்டும்மையா 
[$]அறவாணர் வாழ்த் தொலிமேவிய 
          அருணாசலா! அருணாசலா. (33)
[$]அறவாணர் - தருமத்தினால் வாழ்வோர். 
உன்றாண்மலர் முடியாகவே 
        யுறுமன்பர்கூற் றுவர்பெற்றபே 
றொன்றேனுமா லயன்வானுளோ 
        ருறுகின்றில ரெனிலாங்கவர் 
கன்றார்களோ லிது நன்று கொல் 
        கருணாகரர் மதிசேகரா
அன்றாலமுண் டருள் செய்திடும் 
        அருணாசலா! அருணாசலா. (34)
மானேந்தினை மழுவேந்தினை 
        மதியேந்தினை நதியேந்தினை 
கானேந்திலா வெருக்கேந்தினை 
        கமலன்முடி கரத்தேந்தினை 
வானேந்தினா ரெலும் பேந்தினை 
        வறியேன் மொழி யையுமேந்திநல் 
ஆனேந்தவே வந்தாளுவாய் 
        அருணாசலா ! அருணாசலா   (35)
 
திருமாலொரு கண்வாங்கியுன் 
        செஞ்சேவடி மிசைசாத்தினன் 
கருமாவடர் கண்ண ப்பருன் 
        கண்ணுக்கொரு கண்சாத்தினர் 
பெருமானிவர் களில் யாவரே 
        பெரியோரெனச் சிலரெண்ணுவார்
அருமாதவர் மெய்யோர்குவார் 
        அருணாசலா ! அருணாசலா. (36) 
பூமாந்தினோன் முதலோர் தமைப் 
        பொன்றச்செய்வை யெனவோர்ந்துமே 
காமாந்தகனாவாயெனுங் 
        கருத்தேபெரி தாக்கொண்டுவீ 
ணேமாந்தர்கள் புகழ்வாரிது - 
        வெறியோமிகு மஞ்ஞானமோ 
ஆமாம்பிணை திரிசாரல்சூழ் 
        அருணாசலா ! அருணாசலா.  (37)
கல்லானை முன் கைநீட்டியே 
        கரும்புண்ணுமா றருள் செய்த நீ 
பொல்லாதகன் மனமுன்னருட் 
        போதந்தனை யுண்ணச்செய் 
வல்லாயலை போனிற்பதென் 
        மாயஞ்சொலாய் மகிழ்தொண்டர்கள் 
அல்லாதவர்க் கரிதாகிய 
        அருணாசலா! அருணாசலா.  (38)
வாட்டேறுகண்ணிசைஞானியார் 
        மைந்தன்றனை யாட்கொண்டநாள் 
பாட்டேயருச் சனையாமெனப் 
        பகர்ந்தாயஃ துணர்ந்தும்பிறர் 
மாட்டேகலி சொலவெண்ணுமென் 
        மருணீக்குவா யிருவோர்கள் போ 
ராட்டே செய்வவர்முன் வரும் 
        அருணாசலா! அருணாசலா.  (39) 
ஈனந்தரு பிறவிக்கட் 
        லிடையேழையேன் பலகால் விழ 
ஊனந்தரும் வினையாம்வளி 
        யுறுவித்தலா லுனதின்னருள் 
மோனந்தரு குகை சேரவே 
        முன்னிக்கொடு வந்தேனையா 
ஆனைந்துமா டியவையனே 
        அருணாசலா! அருணாசலா.   (40)
நாய்தன்னிலுங் கடையாகி நின் 
        னல்லன்பர்தம் பானண்ணிலேன் 
வாய்தன்னினின் றனை வாழ்த்திலேன் 
        வணங்கிப்பணி செய்தும்மிலன் 
பேய் தன்னொடா டியவாறுபோற் 
        பித்தேறுமென்னக நண்ணினை 
ஆய்தன்னினு மருள் செய்திடும் 
        அருணாசலா! அருணாசலா.  (41)
சந்தித்துமா லயன்வாது செய் 
        தலினாங்கவர்க் கரிதாகினை 
வந்தித்தலா லொருபாணன் முன் 
        வந்தாய்விற கோதிக்கொடு 
சிந்தித்திடி லவரித்திறந் 
        தெளிவெய்தியின் னருள் சேர்குவார் 
அந்திப்பிறை முடியாளனே 
        அருணாசலா! அருணாசலா.      (42) 
உமையாளரு ளனையாகவும் 
        மொருதந்தை நீ தானாகவுந் 
தமருன்னடி யாராகவுஞ் 
        சார்பற்றவர் தண்டநோக்குறி 
னமனார் நணு காதோடுத  
        னாயேனுணர்ந் துனையண்டினேன் 
அமர்நீதியார் தொழுமையனே 
        அருணாசலா! அருணாசலா. (43)
கார்மேவிய களங்கண்டனன் 
        கழன் மேவுமால் விழிகண்டனன் 
போர்மேவுசூ லங்கண்டனன் 
        போதன்றலைக் கரங்கண்டனன் 
சீர்மேவுமா திடங்கண்டனன் 
        சிறியேனிட ரினிக்காண்பனோ 
ஆர்மேவுதா ரணிதோளனே 
        அருணாசலா! அருணாசலா. (44)
திருமாலய னுனதாண்முடி 
        தெரிவானல மந்தார் முனம் 
ஒருமாதுவந் தியின்வாய்தலி 
        னுறுமாறறி கிலராகிதல் 
லுருமாறிய திறனென்னையோ 
        வுமைபாகனே யருளாகனே 
அருமாதவர் பலரேத்திடும் 
        அருணாசலா! அருணாசலா.  (45) 
வல்லாளமன் னவன் வாழ்வோர் 
        மகவாயவற் கருளீந்திடும் 
[*]வில்லார்மதி முடியண்ணலே 
        வினையேன் பிறந் திடவைப்பையேல் 
கல்லாய்மர மாயேனுநீ 
        கனிவோடமர் தருமிப்பதி 
யல்லாவிடந் தனில்வைத்திடேல் 
        அருணாசலா! அருணாசலா. (46)
[*]வில் - பிரகாசம் 
வரமாமல ரவனீந்திட 
        வானோர்களுக் கிடரே செயு 
நரகாசுரன் றனைவெல்லமுன் 
        னாராயணன் றவஞ்செய்தலின் 
ஒருபாதியாங் கவனுக்களித். - 
        தொருபாதிதே:விக்கீதலால் 
அருவாய்மரு வினையோசொலாய் 
        அருணாசலா! அருணாசலா.  (47)
எள்ளுக்குளெண் ணெய்போலவு - 
        மெறிமாமணி யொளிபோலவுங் 
கள்ளுற்றபூ மணம்போலவுங் 
        கனகத்துறு மொளிபோலவும் 
விள்ளுற்றிடா துயிர்தோறு நீ 
        மேவுற்றதோர்ந் தவர்ப்போற்றுவேன் 
அள்ளுற்ற நீ றணிமெய்யனே 
        அருணாசலா! அருணாசலா. (48)
உமையாளுன விழிமூடுநா 
        ளொளிருங்கதிர் மதிவானிடை 
சமைவாயிருக் கவுநள்ளிரு 
        டரணிக்குண்மூ டியதன்மையாற் 
கமையாருநின் விழிகாரணக் 
        கதிர்மாமதி யெனவோர்ந்தனன் 
அமைவாமனத் தவர் போற்றிய 
        அருணாசலா! அருணாசலா. (49)
பெருமைக்கட னிறவண்ணனும் 
        பிரமன்முத லியதேவரும்
ஒருமிக்கமாய் தருமூழிதோ
        றொருதானுமாய் தரனீங்கவே 
தருமக்கட வுள்வெள்விடை 
        தானாய்வர வுவந்தூர்ந்திடும் 
அருமைத்திரு வருளாளனே 
        அருணாசலா! அருணாசலா.   (50)
கலையார் மதி கதிராகுநின் 
        கண்ணோரிரண்டையுமூடுநாண் 
மலையான் மகள் கழுவாய் செயும் 
        வகை சொல்லியே வினை நின்னரு 
ணிலையீதினி னெவருய்ந்திடார் 
        நிமிர் செஞ்சடை மிசையேமதி 
அலையார்ந்தி யொடுசூடிய 
        அருணாசலா! அருணாசலா. (51)
தக்கன்முனிந் தேகூறிய 
        சாபந்தொடர்ந் தெய்தா துனைப் 
புக்கண்முசந் திரனோர்கலை 
        பொலிவெய்தவுன் முடி மீதிலே 
வைக்கும்படி யச்சந்திரன் 
        மனநைந்து செய் தவமென்னையோ 
[*]அக்கன்புட னணிமெய்யனே 
        அருணாசலா! அருணாசலா. (52)
[*]அக்கு - சங்குமணி. 
உன்னன்னிலை வினவும் பொழு 
        துமைதன்னையே வியந்தாளென 
மன்னும்யமுனையிற்சங்கமாய் 
        மருவிச்சிறு விதிமாமக 
ளென்னப்பொலி கென்றேவிய 
        தெவர்க்கும் மரு டரவல்லவோ 
அன்னத்தவன் பணியையனே 
        அருணாசலா. அருணாசலா.    (53)
விண்ணாளுமிந் திரனக்கினி 
          [$]விறலந்தக னிருதர்க்கிறை 
தண்ணார்வருணன் வாயுவே 
         தன தன்னுட னீசானனும் 
உண்ணாடிமூழ் கிய தீர்த்தமின் 
        றொன்றேயெம திடர் தீர்த்திட 
அண்ணாமலை யென நீடிய 
        அருணாசலா! அருணாசலா .  (54)
[$]விறல் - வெற்றி. 
பூசிக்கநன் மலருண்டு தீம் 
        புனலுண்டுநன் னெறிதேர்குவான் 
வாசிக்கவா கமமுண்டுநின் 
        மலர் நோக்கமு முண்டாகுமே 
னேசித்தெளி யேனுய்குவே 
        னீரோடுகண் மணிபூண்டுளத் 
[*]தாசற்றவர் தொழுமையனே 
        அருணாசலா! அருணாசலா.  (55)
[*]ஆசு - குற்றம்.
திருவாசக மொன்றுண்டுநற் 
        றேவாரமு முண்டாங்கவை 
கருவாய்வழி வாராநெறி 
        காட்டும்மெனச் சான்றோர் சொலத் 
தெருளாதுவீணேயையையோ 
        தெருநாயினுங் கடையாயினேன் 
அருமாதவர் துதியோவிலா . 
        அருணாசலா! அருணாசலா. (56)
பல்லார்விடப் பணியாமுனைப் 
        பரிந்தேதொழ வருளீந்ததும் 
பொல்லாவிட முண்டண்டரைப் 
        புரந்தாள்வது மோர்ந்தும்முனைக் 
கல்லார்களைச் சேராநெறி 
        கடையேற்கருள் செயவேண்டுமால் 
அல்லார்சுட லையிலாடிய 
        அருணாசலா! அருணாசலா. (57)
தேவாதிதே வாவென்கிலேன் 
        சிவலோகநா தாவென்கிலேன் 
காவாயர னேயென்கிலேன் 
        காபாலிவந் தானென்கிலேன் 
சேவான தூர் வோவென்கிலேன் 
        சிறியேனத னாலோவையா 
ஆவாவென வருள் செய்கிலை 
        அருணாசலா! அருணாசலா.   (58)
கன்னாகுபே ராவிந்திரா 
        காமாமுக சோமாபுவி 
மன்னாவென வேபொய்யரை 
        வாழ்த்திக்கவி சொல்லாமனன் 
குன்னாரருள் பெறுமன்பர்தா 
        ளுளம்வைத்து வாழ்த் துற நல்குவாய் 
அந்நாவலூ ராளிக்கருள் - 
        அருணாசலா! அருணாசலா. (59)
பச்சென்னிற மொருபாலுறப் 
        பைம்பொன்னிற மொருபாலுற 
வெச்சென்றதீ நிறமேவிமேல் 
        வெண்ணீ றுபூத் திடநின்ற நீ 
நச்சுண்டிருண்டிடுகண்டமு 
        நணலுற்றதைம் பூதங்களுக் 
கச்சென்ன நிற்பதுகாட்டவோ 
        அருணாசலா! அருணாசலா. (60)
பன்னாகணைத் துயின்மாயனே 
        பரிவோடுகாத் தருள் செய்குவ 
னென்னாச்சில ரெடுத்தோதுவ 
        ரீதுண்மையே லிமையோர்வரை 
தன்னாற்கடைந் திடவந்தநஞ் 
        சங்கண்டவ ரஞ்சித் தொழும் 
அந்நாள்புர வாவண்ணமென் 
        அருணாசலா ! அருணாசலா. (61)
காமத்தொடு கொலைசூதுபொய் 
        களவுக்கிடந் தந்தென்மனம் 
பூமத்தமென் பணிகின்ற நீ 
        பொருந்தற்கிடந் தாராமையால் 
ஈமத்தெரி நரகம்மெனக் 
        கிடமாகுமென் றெணி நின்னரு 
ளாமெய்த்துணை யே நம்பினேன் 
        அருணாசலா! அருணாசலா.  (62) 
உனக்குள்ளடி யேன்மேவியு 
        முனையோர்கிலா மையினிவ்வுடல் 
எனக்கென்னவீந் தனை முன்னிரு 
        ளென்னோடு சேர்ந் தந்தோவெனை 
நினக்குப்புறம் பாய்நிற்கவே 
        நீடுற்றதா லென்செய்குவேன் 
அனக்கன்னிநேர் தருமாதர்சூழ் 
        அருணாசலா! அருணாசலா.   (63)
பாசக்கிடம் [*]பசுவென்னவும் 
          பசுவுக்கிடம் பதியென்னவும் 
மாசற்றமா மறைபேசுமம் 
        மாயைப்பசு வாமென்னுளே 
தேசிற்பொலி பதியாகு நீ 
        திகழ்கின்றதற் புதமல்லவோ 
ஆசைக்குமே னிமிர்சோதியே 
        அருணாசலா! அருணாசலா.  (64)
[*] பசு - சீவன் 
யான்செய்தனன் பிறர் செய்தன 
        ரென தியானெனு மஞ்ஞானமே 
யூன்செய்பிற வியை நல்குமென் 
        றுணர்ந்தேனின தருளாலினி
வான்செய்பத விகள்யாவினு 
        மயங்காநெறி தந்தாளுவாய் 
ஆன்செய்நெடுங் கொடியாளனே 
        அருணாசலா! அருணாசலா.  (65)
சிவய்யோனுத யஞ்செய்திடில் 
        விரவும்மிரு ளொழிவாதல்போற் 
பொய்யானதில் குருவந்திடப் 
        பொய்ப்போதநீங் கிடுமென்னவே 
மெய்யானநூ லுரைசெய்யவும் 
        வீணேதிரிந் துழல்வார்சிலர் ஐயாவவ ருய்வார்கொலோ 
          அருணாசலா! அருணாசலா.  (66)
பரையுன்னிரு விழிமூடுகைப் 
        பதுமத்தனி விரற்பத்திலும் 
வருகங்கைபத் தினின்மூன்றயன் 
        மாலிந்திரனுக்கீந்துமற்
றொருநான்கு மூன்றையும் வேணியி 
         லொளித்துப்புவனங்காத்தநின் 
அருமைச்செய லறியாரெவர் 
        அருணாசலா ! அருணாசலா. (67)
மடவார்மய றானோர் புறம் 
        வருகின்றபல் பிணியோர் புறம் 
திடமாம்வறு மையுமோர்புறந் 
        தீராததீப் பசியோர் புறம் 
கடனாகுவன் பேயோர்ப்புறங் 
        கழிமானமாங் குரங்கோர்புறம் 
அடலான் மெலிந் துனையண்டினேன் 
        அருணாசலா! அருணாசலா.  (68)
தாய்மார்களுஞ் சலித்தார்வரு 
        சமனாருமோ சலித்தார்மலர் 
வாய் வேதனுஞ் சலித்தானழன் 
        மலிகும்பியுஞ் சலித்திட்டதாற் 
சேய் நானினிச் செயும்வண்ணமென் 
        செப்பாய்பல கலைவேதமும் 
ஆய்மேலவர் தொழுமையனே 
        அருணாசலா ! அருணாசலா.  (69)
மனையாண் மனம் வெறுப்பாகவு 
        மாதாமனம் வெறுப்பாகவுங் 
கனிவான பெண் கள் பிள்ளைகள்-- 
        கசந்தேமனம் வெறுப்பாகவுஞ் 
சனியாமிரு மலுமீழையுஞ் 
        சார்ந்தேழையே னலியாவகை 
அனையாமென வந்தாளுவாய் 
        அருணாசலா! அருணாசலா.  (70)
காட்டுக்குளே தவஞ்செய்குவார் 
        கனலுக்குளே தவஞ்செய்குவார் 
நாட்டுக்குளே யறஞ்செய்குவார் 
        நதியாவினும் போய்மூழ்குவார் 
பாட்டுக்கு நால் வர்களெய்திய 
        பரிசிற்பய னடைவார்களோ 
ஆட்டிற்பொலி தீக்கண்ணனே 
        அருணாசலா ! அருணாசலா.  (71)
[*]பறவைக்கர சானைந்தவெம் 
        பணிவந்துபோற் றப்பூண்ட நீ 
மறமுற்றுமா தவரேவிட 
        வருபாம்பணிந் திடவில்லையோ 
திறமுற்றுவன் பிலனென்றெனைச் 
        செயித்தாட்கொளா வகையென்னை முன் 
அறவர்க்கரு டருமையனே 
        அருணாசலா! அருணாசலா. (72) 
[*] பறவைக்கரசு - கருடன்
எரிகின்றதீப் போற்சீறியே 
        யியமன்வரு மேற்பேதையேன் 
யரிகின்ற மார்க் கண்டேயர்போற் 
        பணித்துன்பதம் போற்றுந்திறந் 
தெரிகின்றிலே னதனாலினே . 
        சிறியேனையாண் டருள்வெம்பலி 
யரிகின்ற சென் னியிலேற்றிடும் 
        அருணாசலா ! அருணாசலா. (73) 
தம்மாலறி வனயாவையுந் 
        தாமல்லவென் பதுமைந்தனே 
சும்மாவிருந் திடுமாறெனச் 
        சொல்லித்தெரி விப்பான்மலர்க் 
கைம்மான் முத லியயாவையுங் 
        கரந்தோர்குரு வாய்வந்தனை
அம்மாவுன தருளென்னையோ 
        அருணாசலா ! அருணாசலா.  (74)
காலாழ்களர் படுமாயின் வெங் 
        கரிதன்னையு நரிகொல்வது 
போலாசையாம் படுசேற்றினிற் 
        புலையேன்விழுந் துழல்கின்றதாற் 
பாலாமிரு வினைவெல்லுநின் - 
        பதமெங்ஙனந் தொழுவேனையா 
ஆலாலமுண் டருணாதனே 
        அருணாசலா ! அருணாசலா. (75) 
பொருளீட்டவு மதனானவப் 
        பொத்தற் சடந் தனையோம்பவு 
மருளீட்டுமா தர்களாசையின் 
        மயங்கித்திரி தரவுங்கொலோ 
தெருளீட்டுமித் தனுவீந்தனை 
        தேவாதிதே வாவென்னையே 
அருளீட்டுமென்பர்கள் போற்றிய 
        அருணாசலா! அருணாசலா. (76) 
பொய்யானதே குடிகொண்டது 
        புழுவானதே நெளிகின்றது 
சையோகமே விழைகின்றது 
        சவமாகிமேல் விழுகின்றது 
மெய்யான திங் கிதை நாயினேன் 
        வீணேசுமந் துழல்கின்றிலேன் 
ஐயாவுன தருள் வேண்டினேன் 
        அருணாசலா! அருணாசலா.  (77)
இந்நாள் வரை யினுமுண்டசோ 
        றெல்லாமள விடவெண்ணிலோ 
பொன்னாமலை தானேருமோ 
        புலையேனின் முண்லேபெரி 
தென்னாவழல் வேனாதலா 
        லியமன்வர வேயுன்னுவான் 
அந்நாளின்முனீவந்தருள் 
         அருணாசலா! அருணாசலா. (78) 
பறக்குஞ்சிறை மறையன்னமும் 
        படிகீண்டகோட் டொருபன்றியுங் 
கறக்கின்றவான் பாலாட்டியே 
        கனிவாயருச் சித்தின்றவன் 
இறக்கும்படி செயுமன்பர்தா - 
        மெய்தும்படி னுணரார்கொலோ 
அறக்குஞ்சியஞ் சடையாளனே 
        அருணாசலா! அருணாசலா.  (79)
தாய்தந்தைநீ குருதெய்வநீ 
        தமியேனுயி ரது நீயெனா 
வாய்தந்தன மொழிவேனலான் 
        மனமாண்டநின் னடியாரொடுந் 
தோய்தந்துவல் வினை நீங்கவுந் 
        துலையொத்தநன் னிலைகூடவும் 
ஆய்தந்திலே னுய்வேன்கொலோ 
        அருணாசலா! அருணாசலா.   (80)
 
மார்த்தாண்டனின் மலையுச்சிமேன் 
        மதியாது நா டொறுமேகுதல் 
பார்த்தாங்கவன் வெருவும்படி 
        பணிந்தோர்புறஞ் செலவைத்ததீ 
வேர்த்தாவென வுனை மேவுமென் 
        வினையோர்புறஞ் செலவைத்திலை 
ஆர்த்தார்முடிக் கணியண்ணலே 
        அருணாசலா! அருணாசலா.  (81)
தெள்ளித்தெளி தருமன்பர்பாற் 
        சேர்ந்தேயரு ளீவாய்படர் 
முள்ளிக்குவே லிகள் போடுதன் 
        முறையல்லவென் பதுபோலெனை 
யெள்ளித்திரு வருளீந்திலை 
        யெனினேழையே னென்செய்குவேன் 
அள்ளிப்புனன் முடிமேற்கொளும் 
        அருணாசலா! அருணாசலா.  (82)
தேன்பட்ட சொல்லியராசையிற் 
        நிகழாலைவாய்க் கரும்பென்னவே 
நான் பட்டு நொந் தனன் மேலுமோ 
        நமனார் வரி லென்செய்குவேன் 
கான்பட்டபூங் குழல்பாக நின் 
        கழல் சூடியாட் கொள வேண்டுமால் 
ஆன்பட்ட நீள் கொடியண்ணலே 
        அருணாசலா ! அருணாசலா. (83)
பதியாகு நின் பதமாமலர் 
        பணியாதபே யருநின்புகழ் 
துதியாதமூ டருமாலயஞ் 
        சூழ்வந்திடாப் புலையாளரும் 
கதியாதுகா ணுவரையையோ 
        காலன் கதை யடிப்பட்டுநைந் 
ததியாகுல மடைவாரலால் - 
        அருணாசலா ! அருணாசலா. (84)
மாயோனையுந் தொழுகின்றிலன் 
        மலரோனையுந் தொழுகன்றில் 
னாயேனினை யே போற்றுவே 
          னல்காயரு ளெனி லாங்கவர் 
ஏயேயென நகை செய்வரே 
        யென நாணி நான் மெலிகின்றனன் 
ஆயேயென அடியார்க்கருள் 
        அருணாசலா! அருணாசலா.  (85)
[*]பொருப்புச்சிலை யாயுன்னருட் 
        போதந்தலைப் படுமன்பர்க 
ணெருப்புக்கும் வா யுவினுக்கு நீ 
        ணீருக்குமஞ் சார்மேலுமோ 
மருப்புக்கடா மறலிக்குமே 
        மனமாய்வுறா ரெனவோர்ந்து நின் 
அருட்புக்குவான் விழைகின்றனன் 
        அருணாசலா ! அருணாசலா.  (86)
[*] பொருப்பு - மலை. 
வாசிப்பதுன் னடியார்புகழ் 
        வந்திப்பதுன் னடியார்பத 
நேசிப்பதுன் னடியார்பதம் 
        நினைகிற்பதுன் னடியார்பதம்
பூசிப்பதுன் னடியார்பதம் 
        புனைகிற்பதுன் னடியார்பதம் 
ஆசிப்பதுன் னடியார்பதம், - 
        அருணாசலா! அருணாசலா.  (87)
பொன்னுக்குளே யொளியென்னவும் 
        பூவுக்குளே மண மென்னவும் 
என்னுக்குளே நீமேவுவ 
        தெளியேனுணர் தருமாறு செய் 
துன்னுக்குளே யான்மேவவு - 
        மொருநீயருள் செயவேண்டுமால் 
அன்னக்கொடி யோன்போற்றிடும் 
        அருணாசலா! அருணாசலா. (88)
வேலிக்குமுள் ளிடவெண்ணிலார் 
        வெறிகொண்ட பேயர்களாகியோர் 
காலுக்கு முள் ளிடல்போலுனைக் 
        கடையேன்மறந் திதுகாறுமே 
மாலுற்றமெய் யதுபோற்றியுன் 
        மலர்த்தாடொழு மாறோர்ந்திலன் 
[*ஆலிக்குமுன் னத்தோர்க்கருள் 
        அருணாசலா! அருணாசலா. (89)
[*] ஆலித்தல் - களித்தல்.
[$] நட்டுந்தொழா தவனென்றரு 
        ணல்காயிஃதோர்வாரெனிற் 
றொட்டுக்கலா லெறிந்தோற்குமுன் 
        றொலையாதலின் பந்தந்தது 
கட்டுக்கதை யென்றேசிலர் 
        கழறிக்கொள்வர் ரேயம்மொழி 
யட்டிச்சுடு மென்காதினை 
        அருணாசலா! அருணாசலா.   (90)
[$] நட்டு - நேசித்து. 
கையாற் பெறு பயனின்மலர்க் 
        கழலர்ச்சனை யதுசெய்தலே 
மெய்யாற்பெறு பயன் மெய்யனீ 
        மேவாலாய் மதுசூழ்தலே 
பொய்யானதில் வாயாற்பயன் 
        போற்றித்துதி செயலிங்கிவை 
ஐயாவெளி யேற்கெய்துமோ 
        அருணாசலா! அருணாசலா. (91)
மலமூன்றுடை யாருக்கருள் 
        வடிவங்கொடு வந்தாங்கவர் 
சலமூன்றிரு வினையொப்பிலே 
        தருபோதுவா தனை நீங்கியே 
நலமூன்றுற வருள் செய்யுநீ 
        நாயேற்கருள் செய்வாய் கொலோ 
அலமூன்றுதோ ளவனேடிய 
        அருணாசலா! அருணாசலா.  (92)
 
பாசாடவிக் குள்ளைம்புலப் 
        பகைவேடருக் குறவாதலாற் 
காசாசையான் கொண்டற்பர்தங் 
        கடைவாயிறோ றுங் காத்திது 
பூசாபல னோவென்றுளே 
        புலம்பித்திருந் துழல்கின்றிலேன் 
ஆசாரமா றாதார்க் கருள் 
        அருணாசலா! அருணாசலா. (93)
புலையானதோர் தொழில் செய்யினும் 
        பொய்யான தோர் மொழிபேசினுங் 
கொலையாகிய செயல் செய்யினுங் 
        கொடிதாங்கள் வதுசெய்யினு 
மலையாது நின் னருள் சேர்வரேல் 
        வறியேனவரடி சேர்வனால் 
அலையாறுசூ டியவண்ணலே 
        அருணாசலா! அருணாசலா.   (94) 
படைப்பானுநீ யுலகியாவையும் 
        பரிவாயளித் திடுவானுநீ 
துடைப்பானு நீ பொய்பொய்யெனத் 
        தோற்றாவகை மறைப்பானு நீ 
கடைப்பாலனுக் கிரக்கஞ்செயுங் 
        கண்ணாளனு நீயாயயன் 
அடைப்பாற்றுயில் வோனாயதென் 
        அருணாசலா! அருணாசலா.  (95)
பாடார்கவி பரியாருனைப் 
        பணிமாமலர் கொடுபூசியார் 
தேடாரடி யார்தம்மையுந் 
        தினமுண்டதே யுண்டையையோ 
மாடாமெனத் திரிவாரவர் 
        மனம் வெந்துகும் பியில் வீழ்வரே 
ஆடாதபே யுடனாடிய 
        அருணாசலா ! அருணாசலா.  (96) 
போகாதுவா யுவையுள்ளுளே 
        பூரித்துநேரிற்போக்கியே 
சாகாமனத் தவராகிநின் 
        சார்புற்றிட் வேயெண்ணுதல் 
சேகார்தரு பலவேணிகள் 
        செறித்தாங்கதன் மேலேறியே 
ஆகாயமெட் டிடல்போலுமால் 
        அருணாசலா ! அருணாசலா.  (97)
மாலாரொரு கற்பந்தனின் 
        மழைமேகமாய் வரவர்ங்கதன் 
மேலாயினை பின்னும்மொரு 
        விடையாய்வர வேயூர்ந்தனை 
பாலார்மொழி மாதாவரப் 
        பரிவாவிடப் பாலீந்தனை 
ஆலாலமுண் ணும்பித்தநீ 
        அருணாசலா ! அருணாசலா.  (98)
பாய் வானதி நீர்ப்பாய்ச்சினும் 
        படரெட்டியின் கனிகைப்பறா 
நாய்வானிமி ராதாற்பல 
        நாண்கொண்டிருக் கிக்கட்டினு 
மாய்வாகிவன் மனநேருறா 
        வகையாங்கவை போலாதலோர்ந் 
தாய்வார்க்கரு ளுனையண்டினேன் 
        அருணாசலா ! அருணாசலா.  (99)
கொம்பாரிடை வண்டார்விழிக் 
         கொங்கார்தனச் சிங்காரிக 
டம்பான்மனஞ் சென்றேயழி 
        சண்டாளனை யென்றாள்வையோ 
செம்பாகினேர் மொழி பங்கனே 
        சிந்தித்தவர்க் குயர்வீடருள் 
அம்பார்சடை தம்பாவொளிர் 
        அருணாசலா ! அருணாசலா. (100)
படியாளுமன் னவர்வாழவும் 
        பரிவோடுமன்னுயிர்வாழவும் 
முடியாமறை தான் வாழவும் 
        முதலானசை வம் வாழவுங் 
கடியானெறித் தமிழ்வாழவும் 
        கவிவாணர்யா வரும் வாழவும் 
அடியார்கள்வா ழவுநன்கருள் 
        அருணாசலா ! அருணாசலா.      (101)
 
 அருணாசல சதகம் முற்றிற்று. 
-----------------------
This file was last updated on 26 March 2022. 
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)