pm logo

சிவமலைப் பிள்ளைத்தமிழ்
(நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை)


civamalai piLLaittamiz
(author not known)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library RMRL for providing a scanned PDF of this work.
We sincerely thank Dr. Meenakshi Balaganesh of Bangalorer, India for her assistance in the prepartion of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவமலைப் பிள்ளைத்தமிழ்.
(நூலாசிரியரின் பெயர் விவரங்கள் தெரியவில்லை)


Source:
சிவமலைப் பிள்ளைத் தமிழ்
[ஈரோடு : வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், 1960
10 p. ; 22 cm.
Roja Muthiah Research Library
--------------
சிவமலைப் பிள்ளைத்தமிழ் - முன்னுரை


கொங்கு நாட்டுக் கொங்கு* என்னும் தொன்மை சான்ற மூதூரினை அணிமையிலுடையதாய்க் கொங்குவஞ்சியெனப் பெயர்பெற்று விளங்குவது கொங்குத் தாராபுரம். அத்தாராபுரக் கூற்றத்தைச் சார்ந்து விளங்குவது காங்கேய நாட்டுக் காங்கேயம். காங்கேயத்தின் வடமேற்றிசையில் விளங்குவது சிவமலையென்னும் தெய்வத் திருமலை. அம்மலையின்கண் கோவில்கொண்டு தன்னை வழிபடுவோருக்கு இம்மை மறுமைப் பயன்களைத் தவிராது அருளுபவர் முருகப்பெருமான். என்றும் இளைஞராகிய அம்முருகப்பெருமானது இளமைப்பருவத்தைப் புகழ்ந்துபாடியது சிவமலைப் பிள்ளைத்தமிழ். பிள்ளைப்பாட்டு, பிள்ளைக்கவிதை என்பன இதன் வேறு பெயர்கள். தலைவனுடைய இளமைப்பருவச் சிறப்பைப் புகழ்ந்துபாடுவது நூலியற்றும் பழைய புலவர்களின் வழக்கங்களில் ஒன்று. "குழவிமருங்கினும் கிழவதாகும்” என்பது தொல்காப்பியப் புறத்திணையியல். பிள்ளைத்தமிழில் குழவியின் இயல்புக்கேற்ற பத்துப் பருவங்கள் அமையப் பாடப்பெறும். அவை

சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து என்பனவாம்.

பிள்ளைத்தமிழெனக் கூறப்பெறினும் அது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் முதன்மையுடையதாய் விழுமிய புகழ் வாய்ந்தது. “பிள்ளைத்தமிழே யெனுஞ்சிறுமை பெருமை பெரிய தமிழெனுமால்" என்பது அழகர் பிள்ளைத்தமிழ். பன்னிரு பாட்டியல் முதலிய நூல்களில் இதன் விரிவான இலக்கணங் கூறப்பட்டிருக்கின்றது.

சென்னிமலையில் தயிரும் சிவன்மலையில் பாலும் முருகனுக்கு மிகவும் விருப்பமானவை. ஆதலின் நம் நாட்டு மக்கள் சென்னிமலைக்குத் தயிரும் சிவமலைக்குப் பாலும் சிறப்பாகக் கொண்டுசென்று முருகப்பெருமானை வழிபட்டுவருவர். சிவமலையிற் சிவவாக்கிய சித்தர் வாழ்ந்த குகையும், சித்தர்களாற் புகழப்படும் செங்கொடி வேலியென்னும் தெய்வசஞ்சீவி மூலிகையும், தீராத கன்மநோய்களைத் தீர்த்து வைக்கும் அனுமார் கோவில் அகஸ்தியர் நெய்வைப்பும் உண்டு. எதிர்கால நிகழ்ச்சிகளை அறிவுறுத்தும் அறிகுறிகள் பல அத்தலத்தில் அடிக்கடி நிகழ்வதுண்டு. அவற்றைச் சிவமலையாண்டவன் புள்ளி என்பர். இப்புள்ளி தவறுவதில்லை. முன்பு நம் நாட்டில் குறும்பர்களின் தொல்லையதிகரித்தமையால் மக்கள் செய்வதொன்றும் அறியாது திகைத்தகாலையில் நம் நாட்டிற்கு ஆங்கிலேயர்களின் வருகையையறிவித்து மக்களுக்கு ஆறுதலையுண்டாக்கியதும் அத்திருமலை தான்.

அம்மலை பட்டாலி என்னும் பழமை சான்ற ஊரினைச் சார்ந்தது. ஆதலின் அருணகிரிநாதர் “பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை, மயில்கள் நடமிடும் பட்டாலி மருவும மரர்கள் பெருமாளே" என்று திருப்புகழிற் பாடியுள்ளார். இப்பிள்ளைத் தமிழ் நூலாசிரியரும்

''கார்தங்கு மாடமலி காங்கயநன் னாடதிற்
கமலைவளர் பட்டாலியிற்
கலைநிலவு குலவுசிவ மலையிலுயர் நிலைமருவு
கந்தனைக் காக்கவென்றே"

என்று காப்புப் பருவத்தில் பாடியுள்ளார்.

காங்கேயத்தின் வடக்கே மூன்று கல்தொலைவில் பார்வதிபுரத்தையடுத்து விளங்குவது மடவளாகம். அது பச்சோடலிங்கம், பச்சோடநாயகி, பச்சோட தீர்த்தம் என்பவற்றால் மிகவும் மகிமை வாய்ந்தது. அத்தலத்தில் இற்றைக்கு 102 ஆண்டுகளின் முன்பு வாழ்ந்திருந்த லட்சுமண பாரதியென்னும் கவிஞர் பெருமான் சிவமலைக் குறவஞ்சியென்னும் நயமிக்க நாடகநூலை யாத்துள்ளார். அறப்பளீசுரசதகம் பாடிய சீகாழி அம்பலவாணக் கவிராயரென்பவர் சிவமலைப் புராணம் பாடியுள்ளார். சிவமலையில் அகஸ்திய தீர்த்தம் முதலாக ஏழு தீர்த்தங்கள் உண்டு. அத்தலத்தில் வழிபாடியற்றிப் பேறு பெற்றோர் அகத்தியர், இந்திரன், நகுடன், அனுமார், பாண்டவர் முதலாயினோர்.

சுமார் ஐந்து ஆண்டுகளின் முன்பு பழைய கோட்டை அரண்மனையில் ஏடுதேடிக் கொண்டிருக்கும் பொழுது அம்புலிப்பருவம் வரையிலும் உள்ள ஏட்டுச்சுவடியொன்று என் கைக்குக் கிடைத்தது. அதுவும் மிகவும் சிதைந்திருந்தது. அந்நூலின் முழுப்பிரதியும் வேண்டுமென்று பலவிடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நூலாசிரியரின் பெயர், முதலிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை முருகன் அடியவர்கள் விரும்பி ஓதுதற்குரிய சுவை மிக்க சிறந்த பாடல்களால் ஆகிய நூலாதலின் அதிலிருந்து பத்துப் பாடல்களைத் தொகுத்துக் குறிப்புரையொன்றுமெழுதி அதனுடன் வெளியிடுகிறேன்,

இங்ஙனம்,
      முதுபெரும் புலவர், வித்துவான், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்,
ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமைத் தமிழாசிரியர்.
[*] கொங்கு - கொங்கு நாட்டின் பழைய தலைநகர்.
-------------------------

சிவமலைப் பிள்ளைத் தமிழ்.


சிவமலையாண்டவர் துணை.
காப்பு.
காருலவுங் காவினிலோ ரோவியமண் டபத்திற்
      கவுரியுட னிறைபுகமுன் கருதினள்பார்க் குங்கால்
ஓர்குடிலை யிரண்டுருவுற் றுயர்களிறு பிடியா
      படன்புணரு மாயிடைவந் துதித்தவிளங் களிறு
சூர்குலையப் பொருதுபுரந் தரற்குமணி மவுலி
      சூட்டியசெங் கதிரிலைவேற் றோன்றலருள் ஞானஞ்
சேர்குகன்றென் பட்டாலிச் சிவமலைவேள் பிள்ளைச்
      செழுங்கவிதை தழைத்துவளஞ் சிறக்கவரந் தருமே

குறிப்புரை:- கார் - மங்கலச் சொல், மேகம். கா - சோலை. ஓவியம் - சித்திரம். கவுரி - பார்வதி. இறை - சிவன். கருதினள் - விரும்பி, முற்றெச்சம். ஓர்குடிலை - ஒப்பற்ற பிரணவம். “சண்முகன்குடிலையென்னும் ஒன்றொருபதத்தினுண்மையுரைத்தனன்” கந்தபுராணம். விடைபெறுபடலம் 39. களிறு - ஆண் யானை. பிடி - பெண் யானை. ஆயிடை - அவ்விடத்தில் அ + இடை, தூக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே.' நன்னூல். களிறு - மூத்த பிள்ளையார். சூர் - சூரபன்மன். பொருது - போர் செய்து. புரந்தரன் - இந்திரன். மவுலி – கிரீடம். இலைவேல் - இலைவடிவமைந்த வேல். தோன்றல் - தலைவன், ஆண்பாற் சிறப்புப் பெயர். பிள்ளைச் செழுங்கவிதை - பிள்ளைத் தமிழ். ''கா மலையின் மாலலங்காரனைப் பாடுமென் கவிதழைத் தோங்கவென்றே" அழகர் பிள்ளைத் தமிழ். பாயிரம் -10.
களிறு கவிதை தழைக்க வரந்தருமெனக் கூட்டுக.

"முன்பொரு காலத்தில் சிவனும் உமையும் திருக்கைலை மலையின் கண் உள்ள ரேவா என்னும் நதிக் கரையையடுத்துள்ள சோலையின் நடுவில் விளங்கும் சித்திர மண்டபத்தையடைந்தனர். அங்கு பளிங்குக் கல்லில் எழுதப் பெற்றிருந்த பிரணவ வடிவத்தைப் பார்த்து உமை மகிழ்ந்தனள். அப்பொழுதே பிரணவத்தினின்றும் களிறும் பிடியுமாகிய இரண்டியானைகள் தோன்றிப் புணரவும் பிரணவ வடிவினராகிய மூத்த பிள்ளையார் தோன்றினர். இதன் விரிவு சிவரகசிய மகேதிகாசத்திற் காண்க. (1)
---------------
செங்கீரை
கோங்கமுகை யனையகுங் குமமெழுது குவவிளங்
        கொங்கையர்க ளங்கம்மனைக்
குருமணிப் பந்தாட வூசலா டிக்குலவு
        கொய்மலர்க் குளிர்சோலையும்
பூங்கமல மலிபுனற் குண்டக முடுத்தபாம்
        புரிமருவு பொற்புரிசையும்
புயறவழு மேடையும் மணிமாட வீதியும்
        பொற்பநிறை மாளிகையும்வா
னோங்கிநிமிர் கோபுரமு முயர்தேவ ராலயமு
        முயர்தரும சாலைகளுமீ
னுகள் பழன முஞ்சிறகர் மிறுவளர்ந் திசைபயிலு
        முற்பலக் கட்கமழுநீர்
தேங்கயமு மேவிவளர் காங்கயநன் னாடனே
        செங்கீரை யாடியருளே
சிவமலையி னிலைமருவு குமரகுரு பரமுருக
        செங்கீரை யாடியருளே.

குறிப்புரை:- கோங்கமுகை - கோங்க மாத்தின் அரும்பு. குங்குமம் - குங்குமக் குழம்பு. அம்மனை - அம்மானைக் காய். குரு - ஒளி. குண்டு - ஆழம். புனல் - நீர். பாம்புரி - அகழி, பாம்புச் சட்டை. உலக வழக்கில் பாம்பேரி என வழங்கி மதிலின் புடை பயிற் கட்டும் சரிவாகிய கீழ் மதிலையுணர்த்தி நிற்கிறது. புரிசை - மதில். புயல் – மேகம். மேடை - உப்பரிகை. பழனம் - வயல். ஞிமிறு - வண்டு. உற்பலம் - செங்கழுநீர் மலர். குவளை மலர் எனினுமாம். கள் - தேன். அயம் - தடாகம். காங்கயகாடு - காங்கேயத்தைத் தலைநகராகவுடையது, வேளிர் குலத் தலைவர்களாகிய காங்கேயர்களின் ஆட்சிக்குரியதாயிருந் தது. காங்கேயன் என்னும் பெயருடைய முருகனுக்குவப்பானது. செங்கீரையாடுதல் - குழவி இரண்டு கைகளையும் முழந்தாள்களையும் நிலத்திலூன்றிக் கொண்டு செங்கீரையிலைபோல தலைநிமிர்ந்தாடுதல். கீர் என்பது சொல் என்னும் பொருள் தருவதாமாதலின் சிறுசொற்பேசுதல் எனக்கொள்ளுதலுமாம். (2)

--------------
தால்.
திருவாய் மலர்ந்து மலைமாது
        சேயே வருக வெனவழைத்துத்
திருவெண் ணீற்றுக் காப்பணிந்து
        செம்பொன் வள்ளத் தமுதூட்டிக்
குருமா மணிப்பொற் பட்டுடுத்திக்
        குழைதாழ் குதம்பை திருக்கிமுத்தங்
கொடுத்துக் கனிவாய் நீர்மாற்றிக்
        குஞ்சி திருத்திச் செஞ்சுடிகை
வரிசேர் சிறுகிண் கிணியரைஞாண்
        வனைந்து மலர்ச்செங் கையிற்கொடுப்ப
வாங்கி மகிழ்ந்துச் சியை மோந்து
        மார்போ டணைத்து வைத்தருள
வரனார் மடிமேல் விளையாடி
        யருள்வாய் தாலோ தாலேலோ
ஆரா வமுதே சிவமலைவாழ்
        அரசே தாலோ தாலேலோ

குறிப்புரை:- வெண்ணீற்றுக் காப்பு - திருவெண்ணீறாகிய காப்பு. காப்பு - காவல் (ரட்சை) ஆகுபெயர். "காப்பிட வாராய் காப்பிட வாராய்." திவ்யப்பிரபந்தம். குரு - ஒளி. குழை - காது, குண்டலமெனினுமாம். குதம்பை - ஓராபரணம், காதிடுசடையுமாம். திருக்கி - முறுக்கி. குஞ்சி - குடுமி. சுடிகை - நெற்றிச்சுட்டி, கிண்கிணி - சதங்கை. வனைந்து - தரித்து, வரனார் - சிவபெருமான். ஆரா - உண்ணுதற்குத்தெவிட்டாத. (3)
------------
சப்பாணி.
குண்டலங் குழைதொறுந் துயிலாது திருநுதற்
        குறுவெயர் வரும்பாதுமெய்க்
கோலமழி யாதுசிறு குஞ்சிபுனை செச்சையுங்
        குரவமுங் குலைவுறாது
கண்டசர மலையாது கேயூர நெகிழாது
        கங்கணமொ லித்திடாது
கவினொழுகு மீராறு கைத்தளிர் கயங்காது
        காமர்கலை கலைவுறாது
புண்டரிக நாண்மலர்ச் சீறடிக் கிண்கிணி
        பொலஞ்சிலம் பவிர்கனைகழற்
பொற்சிறு சதங்கைநிறை பொற்புமிளிர் தண்டைகள்
        புலம்பாது பொறிமார்பிடைத்
தண்டரள மணிமாலை யைம்படையொ டுறழாது
        சப்பாணி கொட்டியருளே
தலைவகலை பயில்புலவ நிலவுசிவ மலைமுருக
        சப்பாணி கொட்டியருளே

குறிப்புரை :- குண்டலம் - காதணி. குழை - காது. துயிலாது - துயிலாமல், (அசை யும்படி) கோலம் - அலங்கரிப்பு. செச்சை - வெட்சிப்பூமாலை. குரவம் - குரவம்பூமாலை. கேயூரம் - தோளணி. கைத்தளிர் - கையாகிய தளிர், உருவகம். காமர் - அழகு. கலை - ஆடை. புண்டரிகம் - செந்தாமரையின். நாள்மலர் – அன்றலர்ந்த பூ. சீறடி - சிறியபாதம், சிறு+அடி. கிண்கிணி - காற்சதங்கை "கிண்கிணி கவை இயவொண்செஞ்சீறடி" முருகு. கனைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டை. (வினைத்தொகை) தாளம் - முத்து. ஐம்படை - திருமாலுக்குரிய சக்கரம் சங்கு தண்டு வாள்வில் என்னும் ஐம்படைகள் அமைத்துச் செய்யப்பெற்ற ஓர் ஆபரணம். "ஐம்படை மார்பிற்காணேன்," திருவிளையாடற்புராணம். ஐந்து + படை - ஐம்படை. (4)
-----------------
கொண்டல் வெண் டிங்கள்கிளி கோகிலந் தோகைமயில்
        குலவலான் முல்லைமலரும்
கோங்கின தரும்புங் குரும்பையும் வஞ்சியங்
        கொம்பும்வல் லிக்கொடியுநேர்
மண்டிவளர் கந்தியுங் கேழ்கிளர் முருக்கலரு
        மாதுளம் போதுமுதிரா
மாவின்மிளிர் தளிருமொளிர் வடுவுமுடன் மருவலான்
        மருமலர்க் குழலுமுகமும்
பண்டிகழு மொழியுமவிர் சாயலும் முறுவலும்
        பணைமுலையு மொசியுமிடையும்
பகர்களமு மதரமும் பாணியும் விழியும்
        படைத்தவோர் பாவைநிகராங்
தண்டலை நெருங்கிவளர் பட்டாலி நகரதிப
        சப்பாணி கொட்டியருளே
தலைவகலை பயில்புலவ நிலவுசிவ மலைமுருக
        சப்பாணி கொட்டியருளே.

குறிப்புரை:- இப்பாடலில் பட்டாலியூர்ச் சோலை ஓர் இளம்பெண்ணிற்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கின்றது. சோலையிலுள்ள கொண்டல் முதலிய பதினைந்து பொருள்களைப் பெண்ணின் உறுப்புக்களாகிய குழல் முதலிய பதினொன்றற்கு நிரனிறையாய் உவமை கூறுகின்றார். மொழி தனம் இடை அதரம் ஆகிய நான்கனுக்கும் இரண்டிரண்டுவமமும் ஏனையவற்றிற்கு ஒவ்வோருவமமும் கொள்க.
கொண்டல் - மேகம். கோகிலம் - குயில். கந்தி - கமுகு, வடு - மாவடு. குழல் -கூந்தல். முறுவல் – பல். களம் - கழுத்து. அதரம் - உதடு. பாணி - கை. பாவை - பெண்; உவமையாகுபெயர். தண்டலை – சோலை. சப்பாணி கொட்டுதல் - கை தட்டுதல். (5)
---------------
முத்தம்.
தத்துந் தரங்கக் கடற்பிறந்த
        சங்கங் கடல்பாய் காவிரிவாய்த்
தவழ்ந்து நடந்து காவிரியைச்
        சார்ந்து நடக்குங் காஞ்சிநதி
சுத்தப் பனற்சென் றெதிரேறிச்
        சூழ்தெங் கிலையிற் படர்கால்வாய்த்
தூய்நீ ரொழுக்கின் றொடரோடிச்
        சூல்கொண் டுளைந்துஞ் சொரிதோறுஞ்
சத்தங் கிளர மிகமுழங்கித்
        தாதார் மலர்த்தண் டலைதோறுஞ்
சாலிப் பயிர்சேர் கழனிதொறுந்
        தாட்டா மரைப்பூந் தடங்கடொறும்
முத்தஞ் சொரிகாங் கயநாடா
        முத்தந் தருக முத்தமே
முகமா றலர்ந்து சிவமலைவேள்
        முத்தந் தருக முத்தமே.

குறிப்புரை:- தத்தும் தரங்கம் - மோதுகின்ற அலை. “தத்தலை வேலையன் காணாத" மறைசையந்தாதி. சங்கம் . சங்குப் பூச்சிகள். காஞ்சி - நொய்யலாறு. “மீ கொங்கிலணி காஞ்சி" தேவாரம். இலையிற்படர் - இலையைத் தொட்டுச் செல்லுகின்ற. "பைங்கமுகின் கூந்தன்மேற் கங்கைக் கொழுந்தோடும் நீர் நாடன்” நளவெண்பா. தொடர்-தொடர்பு. (வழி) சூல் - கருப்பம் உளைந்து - வருந்தி, சொரிதோறும் - ஈனுந்தோறும். முழங்கி - அலறி. "சங்குசூலுளைந்தலறியதடம்பனை" நைடதம். தாது - பூப்பொடி, மகரந்தம். சாலிப்பயிர் நெற் பயிர். தடம் - தடாகம். முத்தம்சொரி - முத்துக்களைச் சொரிகின்ற. "தண்ணந்தாமரை. சொரிந்த வெண்முத்தமும்" நைடதம், முத்தம் - முத்தந்தருதல், உதடு, வாய் முத்தம். (6)
-----------
வருகை.
விண்ணத் தமரர் கணம்போற்றி
        விளங்கி வருக விறற்பூதர்
வீரரிலக்கத் தொன்பதின்மர்
        விதந்து வருக வடியார்க
ளுண்ணெக் குருகி வருகமுனி
        வோர்செங் கரங்கள் சிரங்கூப்பி
யுவந்து வருக வுனதுபுக
        ழோதி யருண கிரிவருக
வண்ணப் புரவிக் கீரன்முரு
        காறுதுதித்து வருக மறை
யார்த்து வருக பட்டாலி
        மறுகிற் பவனி யுலாவருக
வண்ணத் தடந்தேர் மிசையிவர்ந்து
        வருவாய் வருக வருகவே
மலையா நிலம்வந் துலவுசிவ
        மலையாய் வருக வருகவே.

குறிப்புரை:- விண்ணம் - வானுலகம், வீரரிலக்கத் தொன்பதின்மர் - முருகப்பெரு மானுக்குத் துணைவர்கள். இவர்கள் உமாதேவியாரின் காற்சிலம்பினின்றும் சிதறிய நவமணிகளிலிருந்து தோன்றிய நவசக்திகளின் வியர்வையிலிருந்து ஓரிலட்சம் பேரும் நவசக்திகளின் கருப்பத்திலிருந்து வீரவாகு தேவர் முதலிய ஒன்பதின்மருமாகத் தோன்றியவர்கள். கந்த புராணம் துணைவர் வருபடலம் காண்க.
புகழ் - திருப்புகழ். வண்ணப்புரவி - கவிக்குதிரை. “மேட்டிற் பறக்கின்ற செந்தமிழ்ப் புரவிக்கு மேடேது பள்ளமேது'' மேற்கோட் செய்யுள். கீரன் - நற்கீரன். “சங்கைக் கீர்கீரெனவறுக்கும் கீரனோ” தமிழ் நாவலர் சரிதை. முருகாறு - திருமுருகாற்றுப்படை. "முருகாறு முற்றும்” என்பது உரையாசிரியருரை. மறுகு - வீதி. இவர்ந்து - ஏறி, மலையாநிலம் - பொதிய மலையினின்றும் தோன்றுகிற தென்றல் காற்று. (7)
----------------
பொங்கு மதுரப் பயோததியிற்
        புயங்க வணைமே லரிதுயிறல்
பொருவக் குருகார் புனல்வயலிற்
        புகுந்து பொழிதேன் கொப்பளிப்பக்
கங்கு திகழ்செங் கோகனகங்
        கழுநீர் குமுத மலர்குதட்டுங்
கயவாய்க் குறுந்தாட் பொரிமருப்புக்
        கவரிகுழக் கன்றினுக் கிரங்கிக்
கொங்கு செறியுங் கவையடிகள்
        பெயர்த்துப் படர்ந்து பணைமுலைகள்
குவித்துச் சுரந்து பொழிநறும்பாற்
        குளிர்கான் மறைக்கும் பொழின்மீது
மங்கு றுயிலும் பட்டாலி
        வாழ்வே வருக வருகவே
மலையா நிலம்வந் துதவுசிவ
        மலையாய் வருக வருகவே.

குறிப்புரை:- பயோததி - பாற்கடல். புயங்கவணை - பாம்பாகிய படுக்கை . அரி - திருமால். துயிறல் - நித்திரை கொள்ளுதலை. பொருவ - ஒப்பாக. குருகு - நீரில் வாழும் பறவைகள். ஆர் - நிறைந்த. கங்குதிகழ் - வரம்பில் விளங்குகின்ற. செங்கோகனகம் - செந்தாமரை. கயவாய் - பெரிய வாயில். குதட்டும் - குமைக்கின்ற. மருப்பு- கொம்பு. கவரி - எருமை. 'மேதிக் - கடைவாயிற்கார்நீலங்கண்விழிக்குநாடன்' நளவெண்பா. குழக்கன்று - இளங்கன்று, 'மழவுங்குழவுமிளமைப்பொருள' என்பது தொல்காப்பியம். கொங்கு - பூந்தாது. கவை - பிளவு. கான் - சோலையின் கீழ்நிலம். பொழில்மீது - சோலையின் மேலிடம். மங்குல் - மேகம். மலையாநிலம் - தென்றல் காற்று. *‘வயலிற்புகுந்து மலர் குதட்டும் கவரி கன்றினுக்கிரங்கி முலைகள் சுரந்து பொழிநறும்பால் குளிர்கான் மறைக்கும்’ எனவும் ‘அரிதுயிறல் பொருவமங்குல் துயிலும்’ எனவும் கூட்டுக. *பாலால் நிறைந்துள்ள சோலையின் கீழிடம் பாற்கடலையும், சோலையின் மேலிடம் பாம்பணையையும் மேகம் பாம்பணையிற்றுயிலும் திருமாலையும் ஒப்பாமென்க.
----------------
அம்புலி.
மேதகு கணஞ்சூழ மீமிசை விளங்கலால்
        வேலைதோய் வேலைஞாலம்
மிடையுநள் ளிருடீர மிளிர்கரம் பெறுதலான்
        மேவுமலை வாய்வருதலாற்
றீதில்பொன் பொலிதரணி தன்வல முலாவலாற்
        றெறுசூர் கெடத்தொலைத்துத்
தேவர்சிறை நந்தவருள் அமுதமினி துதவலாற்
        றிகழ்கார்த் திகைத்தெரிவைமார்
காதலன் றண்ணளி சுரப்பவன் கருணைநிறை
        கலைமதிப் புலவனெனவே
காசினி துதித்தலாற் கங்கைகரம் வளர்தலால்
        கந்தவேட் கிணையாயினை
யாதலி னுனைக்குமரன் வருகென வழைத்தன
        னம்புலீ யாடவாவே
அருவிகெழு சிவமலையின் மருவிவளர் முருகனுட
        னம்புலீ யாடவாவே.

குறிப்புரை :- வேலை - கரை, கடல். ஐயுருபேற்ற வேல் என்னும் பெயர். இப்பாடல் செம்மொழிச் சிலேடையாகச் சந்திரன் முருகனை ஒப்பாதல் கூறுகின்றது. 1. முருகன் 2. சந்திரன். கணம் – 1. தேவகணம் பூதகணம், 2. விண்மீன்களின் கூட்டம். மீமிசை - 1. மலையுச்சியின் மேல், 2. வானத்தின் மேல். வேலை ஞாலம் நள் இருள் தீர கரம் பெறுதல் – 1. வேலாயுதத்தை உலகில் மிகுந்த பகையாகிய இருள் நீங்கும்படி வைத்திருத்தல், 2. கடல் சூழ்ந்த பூமியில் நடுவிரவின் இருட்டு நீங்கும்படி கிரணங்களைப் பெற்றிருத்தல். அலைவாய் வருதல் – 1. திருச்செந்தூரில் செல்லுதல், 'அலைவாய்ச்சேறலு நிலை இயபண்பே” (முருகாறு), 2. கடலில் தோன்றுதல். பொன்பொலி தரணிவலம் உலாவல் – 1. அழகிய பூமியைக் கனியின் பொருட்டு வலமாகச் சுற்றி வருதல், 2. பொன் பொருந்திய மேருவை வலமாகச் சுற்றுதல், அழகு விளங்குகிற சூரியனிடம் ஒளி பெறும் பொருட்டு மாதந்தோறும் செல்லுதலெனினுமாம். "இந்துவோடிரவி கூட்டமமாவாசையமையுமென்ப" (சூடாமணி). சூர்கெடத் தொலைத்து தேவர் சிறை நந்த அருளமுது உதவல் – 1. சூரனைக் கெடுமாறு அழித்துத்தேவர்கள் சிறைகெடும் படி திருவருளாகிய அமுதத்தைவழங்குதல், 2. துன்பம் நீங்கும்படி தேவர்களிடம் சென்று வளர்ச்சியடையுமாறு இரக்கத்தால் அமுதுணவு கொடுத்தல்; அமுத கிரணமெனினுமாம். கார்த்திகைத் தெரிவைமார் காதலன் – 1. கார்த்திகை மாதர் அறுவரின் புதல்வன்.' அறுவர் பயந் தவா றமர் செல்வ" கார்த்திகேயன் (முருகு), 2. கார்த்திகை முதலிய நட்சத்திரங்களின் கணவன், உடுபதி. தண்ணளி – 1. கருணை, 2. குளிர்ச்சி. கலை மதிப்புலவன் – 1. நூலறிவு வாய்ந்த சங்கப் புலவன். “நூலறிபுலவ" முருகு, 2. பதினாறு கலைகளையுடைய மதியென்னுந்தேவன். காசினி துதித்தல் - 1 - 2 பூமியிலுள்ளோர் புகழ்தல். கங்கைகரம் வளர்தல் – 1, கங்கையின் கையில் வளர்தல், ''காங்கேயன்," 2. (சிவபிரான்சடையில்) கங்கையின் கரமாகிய அலையின் பக்கம் வாழ்தல். மன்மதனாகிய வேளினின்றும் வேறு பிரித்தோதக் கந்தவேள் என்றனர். (9)

தூயவெண் சலிலமிலை செக்கரஞ் சடைமுடிச்
        சுடரிடக் கண்ணி னீயோர்
சுடரென விளங்கினை நுதற்கண்ணி லோராறு
        சுடரென விளங்கினனிவன்
ஏயுமார் கலிமூழ்கி யிரவெழுவை நீயன்ப
        ரின்மையார் கலிதுரந்தே
யிரவெலா நீக்குவ னிவன்சிகியி னாலுநீ
        யினைவைசிகி யூர்குவனிவன்
றேயுமோர் பதினாறு கலையுடையை நீயிவன்
        றேயா தெவர்க்கருளினுந்
திகழுநாற் பதினாறு கலையுடைய னாதலாற்
        செப்புதற் கொப்பல்லைநீ
யாயினுங் கவுரியருள் சேயுனை யழைத்தன
        னம்புலீ யாடவாவே
யருவிகெழு சிவமலையின் மருவிவளர் முருகனுட
        னம்புலீ யாடவாவே.

குறிப்புரை:- இச்செய்யுள் சந்திரனுக்கும் முருகனுக்கும் பேதம் கூறிச் சந்திரனினும் முருகனே உயர்ந்தவன் என்று சந்திரனை முருகனுடன் விளையாடவருமாறு அழைத்தல் கூறுவது. சலிலம் மிலை - கங்கை நீரைத்தரித்த. செக்கர் - சிவப்பு. சடைமுடிச்சுடர் - சிவபெருமான். சுடர் என - ஒளியென்று. நுதற்கண்ணில் - (மேலாகிய) நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி. " சிற்பரன்றான் கொண்டுள்ள திருமுகமாறு தன்னில், பொற்புறு நுதற்கண்டோறும் புலிங்கமொன்றொன்று தந்தான், கந்தபுராணம் திருவவதாரப்படலம் 44. ஆர்கலி - கடல். இரவு - இராக்காலம் (இரத்தல்). இன்மையார்கலி - வறுமையாகிய கடல் (உருவகம்) துரந்து - துரத்தி. இரவுஎலாம் - யாசித்தல் முதலிய துன்பங்களெல்லாவற்றையும். சிகியினால் இனைகுவை - மயில் கொத்துமோ என்ற அச்சத்தினால் வருந்துவாய். மற்றும் சிகியென்பதனை மலை, பாம்பு, என்னும் பொருள்களில் வைத்துப் பொருள் காண்டலுமாம். சிகி ஊர்குவன் - மயிலை வாகனமாகச் செலுத்துவான். கலை உடையை - ஒளியின் பாகங்களையுடையவனாவாய். நாற்பதினாறு - அறுபத்துநான்கு. நான்கு + பதினாறு. கலை. கலைஞானங்கள்' அருவிகெழுசிவமலை என்பது இழுமென இழிதரும் அருவிப்பழமுதிர்சோலை மலைகிழவோனே, என்னும் திருமுருகாற்றுப் படையினீற்றடிகளை நினைவு கூரச்செய்கின்றது. (10)
சிவமலையாண்டவன் திருவடியே துணை.


This file was last updated on 16 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)