pm logo

முன்னநாதேஸ்வரர் திருவூஞ்சல் &
முன்னநாதஸ்வாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்


munnanAtEsvarar tiruoonjcal
munnanatasvAmi vaTivazaki ampAl tiruoonjcal
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.org for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for assistance in the preparation of the soft copy of this work for Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

முன்னநாதேஸ்வரர் திருவூஞ்சல் &
முன்னநாதஸ்வாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்

Source:
சிவமயம்
முன்னநாத சுவாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்
பிரட்டன் பிரஸ்.
--------------

1. முன்னநாதேஸ்வரர் திருவூஞ்சல்
யாழ்ப்பாணத்து நவாலியூர் திரு. க. சோமசுந்தரப்புலவர் பாடியது.

திருச்சிற்றம்பலம்.
காப்பு

முந்துமொரு மூவருக்கு மூல மாகி
      முழுதுலகு மீன்றவடி வழகி யோடு
சந்தமலர்த் கடம்பொலிமுன் னேச்சு ரத்திற்
      முனாக முளைத்தசிவக் கொழுந்தைப் போற்றிச்
செந்தமிழின் னிசையூஞ்சற் றிருப்பாட் டோதச்
      சிந்திப்போர் தீவினைகள் தீர்த்துக் காக்கு
மைந்துகரத் திந்துமுடித் தொந்தித் தந்தி
      யானைமுகன் ஞானமலர் காப்ப தாமே.

நூல்

திருவோங்கு மிருமாயை தூணா நாட்டி
      சிவமோங்கு தத்துவங்கள் விட்டம் பூட்டி
அருவோங்கு கலையாதி வடங்கள் மாட்டி
      அணியோங்கு மறுநான்கும் பீடங் கூட்டி
உருவோங்க வுஞற்றுமுல கூஞ்சன் மீதே
      ஒளியோங்கு மம்மைவடி வழகி யோடு
முருகோங்கு பொழின் முன்னேச் சுரத்து வாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       1

வெளிமருவு மிருசுடருங் குடைகள் தாங்க
      விரைமருவு மனிலனணி கவரி வாங்க
நளிமருவு புனலரசன் பனிநீர் தூவ
      நயமருவு மடலியம னுடைவாள் காவ
களிமருவு தவமுனிவ ராசி நீடக்
      கயன் மருவு நயனிவடி வழகி யோடு
மொழிமருவு புகழ்முன்னேச் சுரத்து வாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       2

சந்தணியு மாடகயாழ் முனிவன் மீட்ட
      தகையணியு மணிமுழவம் நெடுமால் கூட்ட
வந்தணியுங் கந்தருவர் வரிப்பண் பாட
      மறையணியு மலரினயன் தாளம் போட
கொந்தணிகுந் தளமடவார் நடன மாட
      கோலணியுங் குவளை விழி யழகி கூட
முந் தணியும் பொழின்முன்னேச் சுரத்துவாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       3

வானகதுந் துபிமுழங்கச் சங்க மேங்க
      மண்ணகதூ ரியமிசைக்க மறைக ளோங்க
தேனகமந் தாரமலர் மாரி வீச
      சீரகச்செந் தமிழ் மறைமந் திரங்கள் பேச
ஊனகநெக் குருகியடி யவர்க ளாட
      உள்ளகஞ்சே ரோங்கார வடிவி யோடு
மோனகலை யருளுமுன்னேச் சுரத்து வாழும்
      முன்னநா தேஸ்வாரே யாடீ ரூஞ்சல்.       4

வானமருங் கங்கைவர நதிநீர் பன்னீர்
      வரமமரு மந்திரம் ரிளநீர் கூட்டி
ஆனமரு மைந் துமுய ரன்பா லாட்டி
      அணியமருந் துகிலுடுத்துக் கலன்கள் மாட்டி
மானமரு நானமலி தேய்வை சாத்தி
      மலரமருஞ் செங்கைவடி வழகி யோடு
மோனமுனி வரர்தொழுமுன் னேச்சு ரத்து
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       5

கைம்மலிந்த பூமாலை கனக மாலை
      கவிமலிந்த பாமாலை கவினச் சூட்டி
நெய்ம்மலிந்த புத்தமுதுங் கனியுங் கூட்டி
      நிரைமலிந்த கர்ப்பூர நிறைவு காட்டி
மெய்ம்மலிந்த தொண்டர்குழாம் விரும்பி யேத்த
      வேன்லிமந்த கண்ணிவடி வழகி யோடு
மொய்ம்மலிந்த பொழின்முன்னேச் சுரத்து வாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       6

பொன்னேறு மலரிதழி யறுகு மாடப்
      புரியேறு சடையாட நிலவு மாட
கொன்னே று மக்குமணி மாலை யாட
      கூரேறு மழுவாட மானு மாட
மின்னேறு துடியிடைமென் கொம்பு மாட
      விடையேறு நந்திமுதல் விபுத ராட
முன்னேறு புகழ்முன்னேச் சுரத்துவாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல்.       7

கைம்மேவு மதகரடக் களிறு மோர்பால்
      கதிர்மேவு சுடர்நெடுவேற் காளை யோர்பால்
மைம்மேவு கஞ்சுகத்து வடுக னோர்பால்
      வலிமேவு மடல்வீர வரத னோர்பால்
மெய்ம்மேவு முருத்திரபல் கணத்த ரோல்பால்
      விதுமேவு நுதலிவடி வழகி யோர்பால்
மொய்ம் மேவு ஞான முன்னேச் சுரத்து வாழும்
      முன்னநா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல். 8

பழிவிரவு முப்புரங்கள் படுத்தல் பாடி
      பகைவிரவு தக்கன் மகம் கெடுத்தல் பாடி
களிவிரவு மதமலையை யுரித்தல் பாடி
      கைவிரவு கரும்பனுட லெரித்தல் பாடி
துளிவிரவு கங்கைசடைச் சூடல் பாடி -
      துடிவிரவு மிடையவளோ டாடல் பாடி
மொழிவிரவு புகழ்முன்னேச் சுரத்து வாழும்
      முன்ன நா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல். 9

மாசுணச்செஞ் சடையீரே யாடீ ரூஞ்சல்
      வஞ்சகநெஞ் சடையீரே யாடீ ரூஞ்சல்
ஆசறுமா தரங்கத்தீ ராடீ ரூஞ்சல்
      அருடருமா தரங்கத்தீ ராடீ ரூஞ்சல்
தேசுமதி முடித்தவரே யாடீ ரூஞ்சல்
      தீயமதி முடித்தவரே யாடீ ரூஞ்சல்
மூசுமரி முரல்பொழின் முன் னேச்சு ரத்து
      முன்ன நா தேஸ்வரரே யாடீ ரூஞ்சல். 10

பூவாழி பொன்மாரி பொழிந்து வாழி
      பூதிகண்டி யைந்தெழுத்தும் பொலிந்து வாழி
மாவாழுந் திருமுகத்து வள்ளல் வாழி
      வள்ளிதெய்வ யானைமகிழ் மணாளன் வாழி
பாவாழு மயில்வாழி யடியார் வாழி
      பைந்தமிழ் பொன் னூஞ்சலிசைப் பதிகம் வாழி
மூவாத வருள் வடிவாம் பிகையும் வாழி
      முன்ன நா தேஸ்வரரும் வாழி வாழி. 11

முற்றும்
திருச்சிற்றம்பலம்.
-----------------

2. ஸ்ரீ முன்னநாதஸ்வாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்
சி. பாலசுப்ரமண்யக் குருக்கள்.

சிவமயம்
1. காப்பு

திருவளரு மிலங்கா புரியிலோங்குஞ்
      சிலா பநக பந்தன்னில் மேவும்
தருவளரு முனீச்சுர தலத்திலேர்ங்கித்
      தவப்பெரியார் மனத்துள் வாழும்
உருவளரும் வடிவழகி பாகங்கொண்ட
      உவமையிலா முன்னநா தேசுரர்மேல்
கருவளரு மூஞ்சலிசை கனிந்துபாடக்
      கணபதித னிருசரணங் காப்பதாமே.

2. ஊஞ்சல்

திருமலியும் நால்வேதக் கால்கணாட்டி
      சேர்ந்தபல சாகைகளாந் தழைகள் பூட்டி
உருமலியும் பிரண உமே பலகையாக
      ஊஞ்சலிலே வாஞ்சைமிக வேகந்தூண்ட
கருமலியு மைந்துவகைக் கிரிகைதேங்க
      கனங்குழலாள் சுந்தரியாள் பாகம் மேவ
தருமலியும் முன்ன நா தேசுரரே
      தன்னை நிகர் வடிவாம்பிகையே யாடீரூஞ்சல்.

3. ஆபாணம்

முத்தினொடு வைரங்கள் புஷ்ப்பராகம்
      முழுநீலம் பச்சைகோ மேதகமும்
சித்திரமார் பவளமொடு கெம்புங்கூட
      செறிந்தபல வாபரணங்கள் மின்ன
தித்திபறை தவில்பம்பை முரசினோடு
      சிறுசின்ன மெக்காளம் பேரிவீணை
நித்தமொலி முன்னதா தேசுரரே
      நிமலைவடி வாம்பிகையே யாடீ ரூஞ்சல்

4. சபா

திருமாலும் நான்முகனும் பாங்கில்மேவ
      சீர்மாதுங் கலைமகளும் நாண்தொட்டாட்ட
உருவளரு மங்கிதீ வர்த்தியேந்த
      உயர் வாயு நற்ப ந் தாங்கிநிற்ப
இருபாலுங் கணிசையர்கள் இசையோடாட
      இரவியொடு சந்திரனும் வட்டந்தாங்க
அருளோங்கு முன்னநா தேசுரபே
      அன்னைவடி வாம்பிகையே யாடீரூஞ்சல்.

5. ஸ்ரீ சக்ரம்
பிந்துவொடு முக்கோண மெண்கோணம்
      பிரியமுள தசகோணம் இரண்டும்மேவ
சிந்தைநிறை பன்னான்கு கோணமாகச்
      சிறந்ததள மெட்டோடு பதினாறும்
சொந்தமிகு விருத்தங்கள் மூன்றுபூமி
      சொன்ன முறைச க்கரத்தில்
வந்தருளு முன்னநா தேசுரரே
      வரதவடி வாம்பிகையே யாடீரூஞ்சல்.

6 ஸ்தலமஹாத்மியம்

சீராரும் இலங்கைவாழ் மன்னரேத்தி
      சிறப்புடனே வெற்றிபுகழ் வீடும்பெற்று
பாராருங் கன நிதியும் பலவளமும்
      பணிபொன்னும் பரிந்து நல்கத்
தாராருஞ் தேசுடனே யிலங்குநாத
      சடைகங்கை யறுகோடு மதியஞ்சூடுங்
காராரும் முன்ன நா தேசுரரே
      கௌரிவடி வாம்பிகையே யாடீரூஞ்சல்.

7. சம்பவம்

பலசமய வடியார்கள் பரவியேத்தப்
      பாங்கினொடு மறையோர்கள் வேதமோதத்
தலமருவுந் தமிழ்வேத கீதம்பாடக்
      தகுமாதர் தமைமறந்து வணக்கம்பேச
நலமோங்கு வாத்தியங்கள் எங்குமார்ப்ப
      நாடாளும் முடிமன்ன ரடிபணிய
வலந்திகழு முன்னநா தேசுரரே
      வாமிவடி வாம்பிகையே யாடீரூஞ்சல்.

8. வாழி

வேதமோடா கமக்க ளென்றும் வாழி
      வித்தகஞ்சே ரந்தணர்க ளாவும் வாழி
நீத முடன ர சர்நெறி யோங்கி வாழி
      நிறைவணிகர் குலநீதி யென்றும் வாழி
தீதகற்று, முழுவோரும் பாரும்வாழி
      திடபக்தி செறிதொண்டர் நாளும் வாழி
தாதணியு முன்ன நாதேசுரரும்வாழி
      தையல்வடி வாம்பிகையும் வாழி வாழி.

9. எச்சரிக்கை

வருவார்வினை தவிற்கும்பரம் பொருளே பெச்சரிக்கை
      வடிவாம்பிகை வாமந்திகழ் வரதா யெச்சரிக்கை
திருவார்சடை முடியாயெமை யுடையா யெச்சரிக்கை
      சிவமேதவ முதலோர் நினை முதல்வா யெச்சரிக்கை
மருவும்பல வடியார்தொழு மலையே யெச்சரிக்கை
      மறையாகம் நிதியேதரு மணியே யெச்சரிக்கை
உருவார்குண நிதியேஉயர் நிலையே யெச்சரிக்கை
      உருவேயரு வெளியேயொளி யுருவே யெச்சரீக்கை.

10. பராக்கு

சித்த மிசை யுறைகின்ற தேவீ பாக்கு
      சிந்தா மணிக்ரகச் செல்வீ பராக்கு
நத்துமடி யார்கள் வினை தவிர்ப்பாய் பராக்கு
      நாதன் தன் பாங்கிலுறை நல்லாய் பராக்கு
சுத்தசிவை யானவெங்கள் சுகமே பராக்கு
      தொல்லுல கோர்க்கருளுந் தோகாய் பராக்கு
பத்தி செறி யன்பருளம் படிவாய் பராக்கு
      பாசவினை வேரறுக்கும் பாவாய் பராக்கு

11. லாலி

அன்பர்பணி அற்புதனே அமரர்தொழு சிற்பாமே
      ஆதியு மை அப்பிசையா ளருகமருந் தேவே
வன்பரிடை சேராத வரதபுர லாலி
      வரங்கள் தரு முன்னநக ரீசலாலி

12. மங்களம்

மங்களம் மங்களம் நித்ய சுப மங்களம்
      திங்களணிநாதருக்கும் தேவிவடிவாம்பிகைக்கும்
      பொங்குகுண சீலருக்கும் போற்றுசிவ தேவியர்க்கும் மங்க.
தேவாதி தேவருக்கும் தேவர் புகழ் சுந்தரிக்கும்
      சிவலோகநாதருக்கும் சிவானந்த தேவியற்கும் மங்க.
முன்ன நகர்வாசருக்கும் முத்தியருள் தேவியற்கும்
      மின்னுசடைவள்ளலுக்கும் மின்கொடியாளம்பிகைக்கும் மங்க.
சுக்தசிவமானவர்க்கும் சோதிநிறை தேவியற்கும்
      மத்தமணிநாதருக்கும் மாது வடிவாம்பிகைக்கும்- மங்களம்.

------------------

This file was last updated on 12 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)