pm logo

பாரதிதாசன் நாடகங்கள் - 3; (கற்கண்டு,
பொறுமை கடலினும் பெரிது, இன்பக் கடல்)


pAratitAcan nAtakangkaL : kaRkaNTu,
poRumai kaTalinum peritu & inpak kaTal)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாரதிதாசன் நாடகங்கள் - 3 : ( கற்கண்டு,
பொறுமை கடலினும் பெரிது & இன்பக் கடல்)

Source:
பாரதிதாசன் நாடகங்கள் - 3
பாவேந்தர் பாரதிதாசன்
மணிவாசகர் பதிப்பகம்,
55, லிங்கித் தெரு, சென்னை -600001
முதற் பதிப்பு 1991, உரிமை செறிவு
பதிப்பாசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன்
விலை ரூ. 15.00
----------
உள்ளடக்கம்
1. கற்கண்டு (நகைச்சுவை நாடகம்)
2. பொறுமை கடலினும் பெரிது (நகைச்சுவை நாடகம்)
3. இன்பக் கடல் (காது நுகர் நாடகம்)
--------------

பாரதிதாசன் நாடகங்கள்: 1. கற்கண்டு
நகைச்சுவை நாடகம்

புதுச்சேரியில் முதலியார் தெரு என்பதொன்று. அத்தெருவின் முனையில் இருப்பது சிங்கார முதலியார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்: நல்ல பரோபகாரியுமாவார்.

அந்தச் சிங்கார முதலியார் வீட்டுக்கெதிரில், ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடி முடித்ததில் சிறுத் தொண்டப் பத்தன் கதையைத் துவக்கியிருக்கிறான். மீண்டும்.

தருமனும் அவன் சிற்றாளாகிய சின்னான் என்ற சிறு பையனும் உட்கார்ந்திருக்கிறார்கள். வீதியோரத்தில் சாக்கை விரித்துப் போட்டு. அவர்கட்கு எதிரில் ஒரு திரை விரித்துப் போடப்பட்டிருக்கிறது. அத் திரையில், சிறுத்தொண்டப் பத்தன் கதையில் உள்ள பிரதான கட்டங்கள் சிலசித்திரிக்கப்பட்டுள்ளன. கதை பாடுவதற்கு இடையில். கதையில் வரும் சித்திரத்தை அவன் கையில் உள்ள கோலால் மக்கட்குக் குறிப்பிடுவான்.

தருமனின் இடது கை ஒன்றே இரு தாளத்தையும் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கும். வலது கைதான் படம் காட்டுகிறதே பக்கத் தில் உள்ள சின்னான் ஒற்றைத் தந்தித் தம் பூராவை மீட்டுகிறான்.

பிள்ளையார் தோத்திரம் முடிந்து விட்டது. கதை ஆரம்பமாகப் போகிறது. எதிரில் சிலர் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் ஆவலாயிருக்கிறார்கள் கதை கேட்க .

தருமன்: (எதிரில் உள்ளவர்களை நோக்கி]
"கொஞ்சம் வெத்திலை இருந்தா குடுங்க."

பாக்குப் புகையிலையுடன் வெற்றிலை உடனே ஏற்பாடாகிறது.
வாயிற் போட்டுக் குதப்பி அடக்கிக் கொள்ளுகிறான்.

தருமன்: போட்டா தம்பூரை!
"திருச்செங்காட்டாங்குடியில்
சிறுத்தொண்டப் பத்தன்- அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
திருவெண்காட்டு நங்கையை
மணம்புரிந்தான்.

கல்யாணம் செய்த பின்னே
இருவரும் கூடி - அந்த
இருவரும் கூடி,
கனமாகச் சீராளனைப்
பெற்றெடுத்தார்.

சீராளன் வயசல்லோ
அஞ்சான வுடனே - நல்ல
அஞ்சான வுடனே,
தெருப்பள்ளிக் கூடத்திலே
படிக்கவச்சார்."

சீராளன். பள்ளிக்கூடம் போவதாக எழுதப்பட்டிருக்கும் கட்டத்தைக் கோலால் குறிப்பிடுகிறான் தருமன்.

கேட்பவர்களில் ஒருவன் சொல்லுகிறான். "அதானே! படிக் காட்டிப் போனா என்னா பண்றது!"

மற்றொருவன்: உஸ், சும்மா இரு!

[இதற்குள் சிங்கார முதலியார் வெளிவந்து தம் வீட்டுக் குறட் டில் நிற்கிறார்; முதலியாரின் குழந்தையாகிய புட்பரதனும் முதலியாருடன் நின்று கதையைக் கவனிக்கிறான்.]

தருமன் : "இப்படி இருக்கின்ற
நாளையிலே பத்தன்
நாளையிலே பத்தன் - அவன்
ஈடில்லா அன்னதானம்
செய்ய நினைத்தான்.
அன்னதானம் என்று சொல்லி
சிறுத்தொண்டப் பத்தன்
சிறுத்தொண்டப் பத்தன் - அவன்
அன்னக்கொடி தன்னையே
நாட்டி விட்டான்."

(தருமன் திரும்பிப் பார்க்கிறான். முதலியார் நிற்பதை அறிந்து அவரிடம் சொல்லுகிறான்.)

ஒங்க காவற்காரர் இப்பதானுங்க போனாருங்க. நீங்க அவசரமாச் செக்கு மாத்த அனுப்பினிங்க போல இருக்குதே.

"சிறுத்தொண்டப் பத்தன்.
தினந்தோறு மேஅன்னம்
பொசித்திடலானார் - அடியார்
பொசித்திடலானார்
சிவனடியார் கூட்டம்
கூட்டமாக.

இந்தப் பையனே அனுப்பி அவசரமாக அழைச்சிவரச் சொல் லட்டுங்களா? - "கூட்டம் கூட்டமாக."

முதலியார். அவனுக்கு இடம் தெரியுமா? தருமன் : தெரியுங்க - "கூட்டம் கூட்டமாக"

முதலியார்: அப்படிண்ணா அனுப்பு நான் அவாரமா குப்புசாமி முதலியார் வீட்டுக்குப் போகணும்.

தருமன் : ஓடு பையா
"கூட்டம் கூட்டமாக
நூறு பேருக்குத் தினம்
சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
நோகாமல் அன்னமிட்டான்
சிறுத்தொண்டப் பத்தன்."

முதலியார்: இப்பத்தானா அவன் போனான்?

தருமன் : ஆமாங்க - "சிறுத்தொண்டப் பத்தன்"

முதலியார்: இங்கே என்னா பண்ணான்?

தருமன்: ஒருத்தன் கிட்ட பேசிகினு இருந்தானுங்க. "சிறுத் தொண்டப் பத்தன்" (புட்பரதனை நோக்கி) பள்ளிக்கூடம் போகலே தம்பி - "சிறுத்தொண்டப் பத்தன்" - "போவாணாம் இண்ணு சொன்னாங்க அப்பா?"... "சிறுத்தொண்டப் பத்தன்"

புட்பரதன்: (தன் தகப்னாரை நோக்கி) அப்பா ஒங்களை இவன் சிறுத்தொண்டப் பத்தன் இண்றாம்பா! என்னியும் அப்படியே சொல் றாம்பா. நம்ப காவக்காரனைக் கூடம்பா.

முதலியார்: இல்லையப்பா , பாட்டைச் சேர்ந்த பகுதி அது.

தருமன் : "ஆயிரம் பேருக்குச்
சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
அனுதினமும் அன்னம் போட்டான்
சிறுத்தொண்டப் பத்தன்."

சிறுத்தொண்டப் பத்தன். அன்னக்கொடியை நாட்டி, தினம் ஆயிரம் பேருக்கு ரெண்டாயிரம் பேருக்கு அன்னம் போட்டு வாரானாம்.

"இப்படி இருக்கின்ற
நாளையிலே கைலை - நல்ல
நாளையிலே - கைலை
ஈசனும் பார்வதியும் பேசுகின்றார்."

கேட்பவர்களில் ஒருவன் : அங்கே கைலாசத்திலியா சரிதான்

மற்றொருவன் : கைலாசத்திலே நடக்குது?

தருமன் : "என்னடி பார்வதியே
சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச்
சிறுத்தொண்டப் பத்தன்
இறுமாப்புக் கொண்டாண்டி
பார்வதியே.

அன்னக்கொடி நாட்டினாண்டி
பார்வதியே - அடி
பார்வதியே,
அது விவரம் காணவேணும்
பார்வதியே.

பெருமைக்குச் சோறுபோடும்
பேர்வழியும் உண்டு."

கேட்ப 1: ஹங்கும்.

கேட்ப 2: "பின்னே இல்லையா!
சின்னத்தனம் மறைத்திடச்
சோறிடுவ துண்டு.

கேட்ப 1: உண்டு உண்டு.

கேட்ப 2: சொச் சோ சோ!

தருமன் :
"சிறுத்தொண்டப் பத்தனை நான்
தெரிஞ்சி வாரேன் பொண்ணே
தெரிஞ்சி வாரேன் பொண்ணே - அவனுக்குச்
சிவபக்தி உண்டா என்று
தெரிஞ்சி வாரேன்..."

பையனும் முதலியாரின் காவற்காரனாகிய குப்பனும் கன வேகமாக வருகிறார்கள்.

காவற்காரன்: (தருமனை நோக்கி)
"ரொம்ப கோவிச்சிகினாரா எசமான்?" என்று பயத்தோடு கேட்கிறான்.

தருமன் : பின்னென்னா - தெரிஞ்சி வாரேன் பொண்ணே - நீதான் இங்கேயே வெகு நேரமாய் பேசிக்கினு இருந்துட்டியே? - "தெரிஞ்சி வாரேன் பொண்ணே."

காவற்காரன்: நீ சொல்லிபுட்டியோ?

தருமன் : "என்று பார்வதியிடம்
சொல்லிவிட்டே சாமி"
நான் சொல்லவே யில்லையே
"சொல்லிவிட்டே சாமி
எழுந்து போனார் செங்காட்
டாங் குடிக்கே."

காவற்காரன்: ஏது ஏது ஒன்னால் எனக்கு ரொம்பத் தொந்தரவு. இந்த எடத்தே வுட்டுக் கெளம்பு.

தருமன் : "செங்காட் - டாங்குடிக்கே" என்னியா?
செங்காட் - டாங்குடிக்கே"

[இதற்குள் எஜமான் வந்துவிடுகிறார். அவர் காவற் காரனை நோக்கிக் கோபமாக]
ஏண்டா எப்போ போனே? இந்நேரம் என்னா பண்ணே?

காவற்காரன் : நேரா போயி நேரா வந்தேனுங்க.

தருமன் : "செங்காட்டாங்குடிக்கே."

முதலியார்: நீ பிரயோஜனமில்லே. வேற எங்கியாவது வேலை பார்த்துக் கொண்டு போய்விடு.

தருமன் : "செங்காட் டாங்குடிக்கே.
டாங்குடிக்கே"

காவற்காரன்: இவனைப் பாருங்க. நீங்க ஏமேலே கோவிச்சி கிரிங்கிண்ணு. என்னைக் கேலி பண்றானுங்க.

உடனே தருமன் ஜனங்களைப் பார்த்து உருக்கமாக
"சிவனடியார் போலே அவர் உருவெடுத்தார்." என்று அடியை முடிக்கிறான்.

[எஜமான் உள்ளே போய்விடுகிறார். காவற்காரக் குப்பனோ. முதலியார் வீட்டின் குறட்டில் போட்டிருக்கும் விசிப்பலகை யில் உட்காருகிறான். அச்சமயம் குப்புசாமி முதலியார் காரில் ஏறிக்கொண்டு அவ்வழியாகப் போகிறார். குப்புசாமி முதலியாரைத் தேடிக்கொண்டு சிங்கார முதலியார் இப்போது அவசரமாகப் போகிறார் என்பது தருமனுக்கு நினை விருக்கிறது. சிங்கார முதலியார் உள்ளே உடுத்துகிறார். அவர் வெளியே வந்ததும் காவற்காரன் மேல் கோள் மூட்டிவிடத் தருமன் திட்டம் போட்டிருக்கிறான். அதற்குச் சிசங்கார முதலி யார் வெளியில் வருவதற்குள், காவற்காரனை அங்கில்லாமல் அனுப்ப ஒரு யோசனை செய்தான்.]

"ஆரையா காவற்காரரே" என்றான் ; காவற்காரன் "ஏன்" என்றான்.

தருமன் : அதோ முத்து கூப்புட்டுட்டுப் போறாரு ஒங்களே.

(இதைக் கேட்டுக் காவற்காரன் போகிறான் ; அச்சமயம் சிங்கார முதலியார் உடுத்துக் கொண்டு வெளியில் வருகிறார்.)

தருமன் : சிறுத்தொண்டப் பத்தன் வீட்டுத்
தெருவில் வந்தார் - சாமி
தெருவில் வந்தார்
சந்தன நங்கை என்னும்
தாதி கண்டாள்.

முதலியாரை நோக்கி,
நீங்க குப்புசாமி முதலியாரைத் தேடிப் போவதாயிருந்தா பயணத்தை நிறுத்த வேண்டியதுதானுங்க.

சிங்கார மு : ஏன்?

தருமன் : அவுரு இப்பதான் காரில் இப்படிப் போனாருங்க.

முதலியார்: ஐயே அப்படியா! நல்லதாப் போச்சி நீ சொன்னது. எங்கே காவற்காரன்?

தருமன்: இங்கேதான் இருந்தாருங்க. நான் சொன்னேன். "குப்புசாமி முதலியாரு இதோ காரில் போராறு. எஜமாங்கிட்டே சொல்லையா" இண்ணு. அவரு சொன்னாருங்க நறுக்கிண்ணு. "போய் ஏமாந்துட்டு வரட்டுமே" இண்ணு. எழுந்து இப்பத்தான் எங்கியோ போனாருங்க. நான் சொன்னேன் இண்ணு, அவருகிட்டே சொல்லிப் புடாதீங்க.

முதலியார்: நீ நம்ப வீட்டுக்கு காவல்காரனாக இருக்றியா?

தருமன் : சரிங்க, அவரு அடிப்பாருங்க.

முதலியார் : அவன் கெடக்றான், நான் பார்த்துக் கொள்கிறேன்.

தருமன் : சரிங்க.
'சந்தன நங்கை என்னும்
தாதி கண்டாள்
தாதி கண்டாள் - சாமியைத்
தயவு செய்தே உள்ள
வாரு மென்றாள்.

[முதலியார் உள்ளே போகிறார். காவற்காரன் வருகிறான். தருமன் வெகு உருக்கமாகப் பாட ஆரம்பிக்கிறான்.]

"ஓடி, வெண்காட்டு நங்கையும்
ஓடிவந்தாள் அங்கே - அவள்
ஓடிவந்தாள் அங்கே
விழுந்து பணிந்தாள் சாமி திருவடியில்

காவற்காரன் : (கோபமாக) எங்கடா முத்து கூப்பிட்டாண்ணியே?

தருமன்: "அன்ன முண்ண வேணுமென்ற
அடியில் வீழ்ந்தா ளம்மை - அவர்
அடியில் வீழ்ந்தா ளம்மை
சோறுதின்ன வேணுமென்றே
தொழுது நின்றாள்."

காவற் : என்னடா கேக்றேன். நீ பாட்டுக்குப் பாடறியே?

தருமன்: சும்மா இரையா, "சோறு தின்ன வேணுமென்றே தொழுது நின்றாள்."

[இதற்குள் முதலியார் காவற்காரக் குப்பனுக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து,]
"இந்தா ! புடி, போ" என்கிறார்.

காவற்காரன்: நான் ஒரு குற்றமும் செய்யலீங்களே . சோத்துக்கு வழியில்லாமே ஆக்கிப் புட்டிங்களே?

தருமன் : சோறு தின்ன வேண்டுமென்றே தொழுது நின்றாள்."

காவற்காரன் : நான் எப்படி பொழைக்கிறதுங்க

தருமன் : "சோறு தின்ன வேணுமென்றே
தொழுது நின்றாள். தொழுது நின்றாள்."

காவற்காரன்: பாருங்க, அதியே அவன் திலுப்பித் திலுப்பிச் சொல்லுறானுங்க.

முதலியார்: நான் வேறு ஆள் வைச்சுட்டேன்! பூடு!

[முதலியார் வீட்டுக்குள் போய்விடுகிறார். காவற்காரன் மூக்கால் அழுது கொண்டே தருமன் குந்தியிருக்கும் இடத்தைக் கடந்து போகிறான்.]

தருமன் : "புருஷன் எங்கே என்று கேட்டா
ராம். சாமியார் - கேட்டா
ராம் சாமியார்.
போனார் வெளியில் என்றா
ளாம் அம்மை ?"

[இந்தக் கடைசி அடியைக் காவற்காரனுடைய முகத்தைப் பார்த்துக் கேலியாகப் பலமுறை கூறுகிறான். காவற்காரன் மகா தொந்திரவோடு மறைகிறான்.]

தருமன்: "ஆளனில்லா வீட்டிலே
அமுதுண்ணே னம்மா - நான்
அமுதுண்ணே னம்மா
கணவனில்லா வீட்டிலே
உண்ணே னென்றார்"

[முதலியார் உள்ளே போகிறார். தருமன் எதிரில் ஓடி நின்று கும்பிடுகிறான்.]

முதலியார்: ஜாக்கிரதையா இரு; அவனாட்டம் நடக்காதே. வேறு என்ன தேவை உனக்கு?

தருமன் : எஜமான் தயவு இருந்தாப் போதும்.

முதலியார்: சரி, இரு.
[முதலியார் உள்ளே போகிறார். தருமன் பின்னிருந்து வெகு பக்குவமாக.]

தருமன் : "அந்தத் துண்டே இப்படி எறிஞ்சுட்டுப் போங்க" என்கிறான்.

[அவர் போட்டிருந்த காவித் துண்டைத் தருமனுக்குக் கொடுத்துப் போகிறார். தருமன் வாசற்படியின் விசிப்பலகை யில் உட்கார்ந்து கொள்ளுகிறான். காவித்துண்டைப் போர்த்துக் கொண்டு அச்சமயம் அவனண்டையில் புட்பரதன் வருகிறான்.]

புட்பரதன்: நீயா காவலு? அப்பா சொன்னாங்களே.

தருமன் : ஆமாந் தம்பி! உள்ளே போயி அப்பாவுது வேட்டி இருந்தா ஒண்ணு எடுத்தா!

[புட்பரதன் உள்ளே ஓடுகிறான்.]

சின்னான்: "அப்போது வெண்காட்டம்மை
ஏதுரைத்தாள் - அம்மை
ஏதுரைத்தாள் .
அவர் வெளியில் போயிருக்கார்
என்றுரைத்தாள்.
ஆளன் வந்தா லென்னிடம்
அனுப்பு மென்றார் - சாமி
அனுப்பு மென்றார்
அழைத்தால் வருவேனென்றே
சாமி சொன்னார்."

தருமன்: மகிழ்ச்சி போடும்
[இதற்குள் புட்பரதன் ஒரு வேட்டியைக் கொண்டு வந்து கொடுக்கிறான். தருமன் தழைய விட்டுக் கட்டிக் கொள் கிறான்.]

புட்பரதன்: நீ பெரிய ஆளா இருக்கறியே! எங்கப்பா சொன்னாங்க. முதலிலே ஒண்ணும் வாணாம் இண்ணியாம், உடனே துண்டு கேட்டியாம். இப்போ வேட்டி கேட்டியே.

தருமன் : அப்பாவா சொன்னாங்க. தோ பாரு தம்பி , வேட்டி எனக்கு அழுக்கா இருந்தது. அத்தோட்டு தான் தம்பி.

புட்பரதன்: கதையைச் சொல்லேன் கேட்போம்.

தருமன் : சாமியார் வேஷத்தோடு சாமி சிறுத்தொண்டன் வீட்டுக்கு வந்தாரா?

புட்பரதன்: வந்தாரு.

தருமன்: சந்தன நங்கை பார்த்தாளா?

புட்பரதன்: பார்த்தா

தருமன்: ஒடனே கும்பிட்டு "உள்ளே வாங்க" இண்ணா , அப்றம் உள்ளே இருந்து வந்த திருவெண்காட்டு நங்கை பாத்தா. சாப்பிடச் சொன்னா, அதுக்கு சாமி , "ஊட்டுக்காரர் எங்கே" இண்ணார். வெளியில் போயிருக்காரு" இண்ணா . "ஆமளே இல்லாத ஊட்டுலே நான் சாப்பிட மாட்டேன், அவுரு வந்தா என்னைக் கூப்பிட்டு அனுப்பு" இண்ணு சொல்லிபுட்டு, கோயில் திருவாத்தி மரத்தடியிலே போயி ஒக்காந்துக்கினாரு.

புட்பரதன்: ஓகோ அப்படியா?

தருமன் : தம்பி. ஒரு விசிறி பிஞ்சி போனது கிஞ்சு போனது இருந்தா எடுத்தாயேன்.

[புட்பரதன் எடுத்து வந்து கொடுக்க. தருமன் வெள்ளை வேட்டி, காவித்துண்டு, கையில் விசிறியுடன் வீட்டு முதலியார் போலவே விளங்குகிறான்.]
------------------

---2---

வீரப்ப முதலியாருக்கு 70 வயது நடக்கிறது. அவருக்கு தலைக்கு உயர்ந்த பிள்ளைகள் இருவர் இருக்கிறார்கள். வீரப்ப முதலியார் மனைவி இறந்து போகவே வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைத்தார். இந்த எண்ணத்தில் கொஞ்சம் மூச்சுவிட்டார். பிள்ளைகள் சீறினார்கள். அதுமுதல் பிள்ளைகளிடம் அது விஷயத்தைச் சொல்வதே யில்லை.

துரைசாமி முதலியார் வீரப்ப முதலியாருக்கு 300 ரூபாய் பாக்கி செலுத்த வேண்டியிருந்தது. வீரப்ப முதலியார் அதைக் கண்டித்துக் கேட்கவில்லை. ஏனென்றால், துரைசாமி முதலியாரால் வீரப்ப முதலியாருக்கு முக்கியமானதோர் காரியம் ஆகவேண்டியிருந்தது.

துரைசாமி முதலியாரும் தாரமிழந்தவர். அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயற் கற்கண்டு.

கற்கண்டை 70 வயது சென்ற வீரப்ப முதலியார் கட்டிக் கொள் வதாகத் துரைசாமி முதலியாரிடம் கூறினார். கடன் தொல்லையாவது நீங்கட்டும் என்று நினைத்துத் துரைசாமி முதலியார் ஒத்துக் கொண்டார்.

கல்யாணத்தைத் தம் ஊராகிய சிதம்பரத்தில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. வீரப்ப முதலியார் பிள்ளைகள் மலைபோல வந்து குறுக்கே நின்றுவிடுவார்கள்.

வீரப்ப முதலியார் ரகசிய முறையில் அறுநூறே சில்லரை ரூபாய் எடுத்துக் கொண்டு, துரைசாமி முதலியார் கற்கண்டு ஆகிய இரண்டு சீவன்களையும் அழைத்துக்கொண்டு, புதுவைக்கு வந்துவிட்டார்.

செட்டித் தெருவில் ஒரு வீடு காலியாயிருக்கிறது. அந்த வீட்டுக் குடையவர் எதிர் வீட்டுக்காரர். அவரைக் கண்டு வாடகை பேசி முடிக்கச் சொல்லித் துரைசாமி முதலியாரை அனுப்பிவிட்டு, அந்த வீட்டின் எதிரில் தெருவில் வீரப்ப முதலியாரும், கற்கண்டும் நிற் கிறார்கள். இவ்விருவரும் நிற்பதைப் பக்கத்து வீட்டின் நடைத் திண்ணையிலிருந்து ராமசாமியும் சீனுவாசனும் கவனிக்கிறார்கள்.

வீரப்பக் கிழவர் கற்கண்டை நெருங்குகிறார். கற்கண்டு விலகி ஜாடையாகக் கிழவரின் மறுபக்கம் மாறி நிற்கிறாள். பல தடவை இப்படி.

வீரப்ப: கற்கண்டு.

கற்கண்டு: ஏங்க.
[கற்கண்டிடம் வெற்றிலை இருக்காது என்பது வீரப்பக் கிழவருக்கே தெரியும்.]

வீரப்ப: வெத்திலை இருக்கா?

கற்கண்டு : இல்லிங்களே!

வீரப்ப: வாங்கிவரச் சொல்லவா?

கற்கண்டு: எனக்குங்களா. நான் வெத்திலை போட்டுக்றதில் லிங்களே.

வீரப்ப: ஏன் வெட்கப்படுறே? எல்லாப் பெரயாசையும் ஒன்க் காகத் தானே . எல்லாம் கொண்டாந்திருக்கேன் ஒனக்கு. ஒத்துக் குடித்தனம் பண்ணு .

கற்கண்டு. நல்லா குடித்தனம் பண்ணனும். அதுதான் எனக்கும் ஆசைங்க.

வீரப்ப: அப்படிச் சொல்லு.
[இதற்குள் குறிப்பிட்ட வீடுதிறந்து விடப்படுகிறது. துரைசாமி முதலியார் "வாங்க" என்று கூப்பிடுகிறார். இருவரும் போகிறார்கள்.
தெருப்பக்கத்து அறையில் கற்கண்டு நுழைந்து ஒரு புறமாக நிற் கிறாள். வீரப்பக்கிழவர் துரைசாமி முதலியாரிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து ]

"நல்ல பலகாரமா பார்த்து வாங்கி வாரும்" என்கிறார்.

கற்கண்டு: நானும் வாரேன் அப்பா.

வீரப்ப: நீ ஏன்? அதெல்லாம் சரியல்ல கற்கண்டு.

துரைசாமி : வரட்டுமே!

வீரப்ப: அட சீ என்னாங்காணும் உமக்கு புத்தி கித்தி இருக்கா!

துரைசாமி : சரிதாம்மா. நீ இரு என்னா வாங்கி வரச் சொன்னீங்க?

வீரப்ப: கொஞ்சம் லட்டு, சிலேபி, அல்வா, பழம். இன்னும் என்னா ஓணும் கற்கண்டு?

கற்கண்டு : போதுங்க, புதுச்சேரி நெய்முறுக்கு நல்லா இருக்கும் இண்ணாங்களே .

துரைசாமி : அவுரு மெல்ல முடி...

வீரப்ப: ஓய் தூ! ஆருங் காணும்? வாங்கி வாருங்காணும் முறுக்கும்.

துரைசாமி: சரி.
[துரைசாமி முதலியார் வெளியில் போகிறார் - வெளியில் புறப்பட்ட துரைசாமி முதலியாருக்கும். அடுத்த வீட்டின் குறட் டில் காத்திருந்த ராமசாமி, சீனிவாசன் ஆகிய இருவர்க்கும் கீழ்வரும் பேச்சு நடக்கிறது.]

ராமசாமி : ஏனையா நீங்க எந்த ஊரு?
துரைசாமி : செதம்பரம்
.
ராமசாமி : அந்தக் கெழவர் ஆரு?
துரைசாமி: நம்ப சொந்தக்காரரு.

ராமசாமி : அந்தப் பொண்ணு?
துரைசாமி : நம்ப கொழந்தை.

ராமசாமி : எங்கே போறீங்க இப்ப?
துரைசாமி: பலகாரம் வாங்க.

ராமசாமி : கெழவரை அனுப்பறத்தானே?
துரைசாமி: அது சரியல்ல.

ராமசாமி : வயசு பெண்ணையும் அந்த அயோக்யக் கிழவரையும் தனிக்க உட்டுட்டு நீர் போறது சரியோ?
துரைசாமி : பாதகமில்லே. அவர்தான் அந்தப் பொண்ணே கட்டிக்கப் போறே மாப்ளே!

சீனுவாசன் : அடபாவீங்களா

ராமசாமி : அப்படியா, சரிதான். போய்வாங்க செதம்பரத்தாரே.
[துரைசாமி முதலியார் தலை குனிந்தபடி போய் விடுகிறார். ராமசாமியும், சீனுவாசனும் அறையில் வீரப்பக் கிழவர் செய்கையை ஜன்னல் வழியாகக் கவனிக்கிறார்கள், வெளிப் பக்கமிருந்து. வீரப்பக் கிழவருக்கு குஷி அதிகரிக்கிறது. "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்று தொடங்கும் வெண்பாவை விருத்தம் போல் மெதுவாகப் பாடிக் கொண்டே விரல் நொடிப்பால் தாளம் போடுகிறார்.]

வீரப்ப: கற்கண்டு. இப்பதான் என் மனசு குளுந்துது பனிக்கட்டி மாதிரி. ஏன் இண்ணு கேளு. (அவள் என் என்று கேட்கவில்லை .)

வீரப்ப: என் இண்ணா . நாம்ப ரெண்டு பேரும் நான் நெனச்ச மாதிரி ஒரே ஊட்டுலே இருக்கோம் கற்கண்டு. ஒண்ணு கேளேன். கோகிலாம்பா இண்ணு ஒருத்தி தங்கம் இண்ணு ஒருத்தி. முனியம்மா இண்ணு ஒருத்தி. இப்படி பல பேரு ஐயையோ எனக்குக் கடுதாசி மேலே கடுதாசி எழுதறது . உம், எம் மனசு போகவே இல்லே அவங்க கிட்டே. ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இண்ணு இந்தத் தலையிலே எழுதியிருக்கும் போது எப்படி மனசு போவும். ஹி ஹி இப்படி வா ஒக்காரு.

கற்கண்டு: அக்றே இல்லிங்க.

வீரப்ப: கற்கண்டு. இந்தப் பணப்பையை அந்த டிரங்கில் வை.

(அவள் வந்து பையை வாங்குகிறாள். "இதென்னா ஒன் கன்னத்திலே கரி" என்று கூறி, அவள் கன்னத்தைத் தொடு கிறார். அவள் பையைக் கொண்டு போய் டிரங்கில் வைக்கிறாள்.)

வீரப்ப : (தனக்குள் உரத்த குரலில்)
அங்கே..... மொத்தம் அறுநூத்தி அஞ்சி ரூபா கொண்டாந்தேன். துணிமணி முப்பது ரூபா போச்சி. சில்லறைச் செலவு ரூபா அம்பது போச்சி இப்ப ஒருரூபா. அன்னூத்தி இரவத்தி நாலுரூபா.... கற்கண்டு எங்கே எடுத்து வா பையை.

[அவள் பழையபடி எடுத்து வந்து கொடுக்கிறாள்.]

வீரப்ப: இதென்ன தலையிலே ஒட்டடை?
(அவள் தலையைத் தொடுகிறார். உடனே பையை அவிழ்த்து ஒன்று ஒன்றாக எண்ணிப் பார்த்து. "கற்கண்டு. சரிதான் கொண்டுவை" என்று கூறுகிறார்.)

[கற்கண்டு பையை வாங்குகிறாள். வீரப்பக் கிழவர் "மூணு பவுனுக்குக் காப்படிக்கிறதா இருந்தா" என்று கூறிக் கற் கண்டின் கையைப் பிடித்துக் "கை கனவாசியா இருக்குமோ?" என்றார். அவள் பதமாகத் திமிறுகிறாள் என்று தோன்றவே, கையை விட்டு விடுகிறார். கற்கண்டு பையை டிரங்கில் வைத்து விட்டு மூலையிலேயே நிற்கிறாள்.]

வீரப்ப: எந்நேரம் நிப்பே, ஒக்காரு. சொல்றேனே. இப்படி வா! என்ன வெக்கம்? என் பக்கத்திலே வந்து ஒக்கார மாட்டே கற்கண்டு என்னே வரச் சொல்றியா: வர்ரேன்.

[கிழவர் கற்கண்டிடம் போகக் காலடி எடுத்து வைக்கிறார்! ஆனால் கிழவரின் குடுமி பின்னால் இழுக்கப்படுகிறது. கிழவர் குடுமியை விடுவிக்க முயன்று , கீழே விழுந்து, மிகுந்த தொல்லையுடன் எழுந்து, ஜன்னலின் வெளியில் பார்க் கிறார்.]

ராமசாமி : (சீறுகிறான்) "பெரியவரே. இளம் பெண்ணின் வாழ்வைக் கெடுக்க வேண்டாம்."
[கிழவர் மலைத்து நிற்கிறார். கற்கண்டு நெஞ்சில் வியப்பும் மகிழ்ச்சியும் ; கண்களில் துன்ப நடிப்பும்.]

கற்கண்டு: நீங்க ரெண்டு பேரும் ஆரு? ஏன் அவரை இப்படித் துன்பப்படுத்தணும்?

சீனு! தங்கச்சி. ஒன் வாழ்வில் ஒனக்குப் பொறுப்பு இருக்க வாணாமா? தள்ளாத கெழவராச்சே

கற்கண்டு : எப்படிச் சொல்றிங்க. அவர் தள்ளாத கெழவர் இண்ணு ?

சீனு : தலை மயிரு . மீசை வெள்ளைக் கோரப்பட்டு, அது கூடவா தெரியிலே?

கற்கண்டு : கெழவருக்கு இப்படியா இருக்கும் பல்லு?

சீனு : ஐயையோ தங்கச்சி. சொந்த பல்லல்லம்மா. சைனாக்காரன் வேலை. அவுரு கண்ணே பாரம்மா ஆழக் குழிதோண்டி அதிலே ஒரு முட்டையிட்ட மாதிரி! இது செத்துப் போன மனிதர் ஆவி இன் றாங்களே, அதுவா இருக்குமோ என்னமோ?

கற்கண்டு : கண்ணா தெரியிலே அவருக்கு

சீனு : தெரியுதே? எங்கே தெரியுதம்மா? அவரு உருவு நம்பக் கண்ணுக்குத் தெரியுது. அதைக் கொண்டு நம்ப உருவு இவருக்குத் தெரியறதா அர்த்தமா? காலைத் தூக்கி ஆகாயத்தை எட்டி எட்டி ஒதைக்கிறாரு.

கற்கண்டு : என்ன. எனக்குச் சிரிப்புக் காட்டப் பாக்றிங்களா?

சீனு : சிரிக்காம இருக்கிற பந்தயத்திலே ஒன்னை ஜயிக்க முடியாதம்மா.

வீரப்ப: போங்கடாப்பா, போக்கிறித்தனம் பண்ணாதீங்க.

சீனு : ஆமாந் தாத்தா. ஒரு சின்னப் பொண்ணே இப்படி ஏமாத் றிங்களே, நீங்க போக்றியா? நாங்க போக்றிங்களா? கெடுக்காதிங்க தாத்தா.

[ராமசாமி சீனுவாசன் இருவரும் போகிறார்கள். துரைசாமி முதலியார் பலகாரங்களோடு வருகிறார்.]

வீரப்ப: கற்கண்டு நீ போயி பலகாரம் சாப்பிடு. போ.
(கற்கண்டு போகிறாள்.)

வீரப்ப: ஏன் காணும் கற்கண்டு ஏமேலே உசிரெ வைச் சிருக்கிறது இப்பத்தாங்றேன் தெருஞ்சிது. இந்தத் தெருவு ரொம்ப மோசம். இந்த ஊரிலே சிங்கார முதலியாரிண்ணு ஒருத்தர் இருக்காரு அவுரு நம்பளவுரு. அவரைப் பிடிக்கணும். எல்லாம் சாயும். அதான் சரி . நான் அவரைப் பார்த்துட்டு வர்ரேன். மொதல்லே செய்ய வேண்டிய வேலை அதுதான். போய் வர்ரேன். துரைசாமி : பாத்துப் போங்க பத்ரமா .

வீரப்ப: அப்ப நான் என்னா அவ்வளவு கெழவனா?
துரைசாமி: அதுக்குச் சொல்லல்லே.

வீரப்ப: பின்னே எதுக்குச் சொன்னே?
[வீரப்பக் கிழவர் போகிறார். ஆனால் தூணில் முட்டிக் கொண்டு விழுந்து. நல்லபடியாக எழுந்து. வலியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் போய் விடுகிறார்.]

கற்கண்டு : எங்கே அப்பா போறாரு ஒங்க மருமகப் புள்ளே?
துரைசாமி : அவருக்கு வயசு என்னமோ கொஞ்சத்தாம்மா.

கற்கண்டு: நல்ல பலசாலிகூட, வயித்யம் செய்தா கண்ணு நல்லாய்டும். கடிக்காமல் இருந்தா பல்லு எங்கியும் பூடாது. பித்த நரை. அவருக்கு வயசு என்னாப்பா இருக்கும்
துரைசாமி: இந்தச் சித்திரை வந்தா நாற்பது.

கற்கண்டு: அப்படியா ! சித்திரை வர இன்னும் எத்னி மாசம் இருக்கு?
துரைசாமி : இன்னும் மூணு மாசம் இருக்கு. கற்கண்டு : அப்ப சித்திரை வரப்போறது நிச்சயம் அது வரைக் கும் இவரு இருக்கப் போறது?

துரைசாமி : என்ன தாயே! ஏன் அப்படி சொல்றே? கற்கண்டு: ஆயிசு கெட்டிதான் இன்னு சொன்னிங்களே. துரைசாமி : சாதகம் பார்த்தேன் ; ஆயிசு கெட்டிதான். கற்கண்டு. அப்படிண்ணா சரிதான். [துரைசாமி முதலியார் பலகாரம் சாப்பிடுகிறார்.)
--------------

---3---

சிங்கார முதலியார் வீட்டுக் குறட்டில் தருமன் ஏகப்பட்ட சட்ட திட்டமாக உட்கார்ந்திருக்கிறான் விசிப் பலகை மேல். வீரப்பக் கிழவர். எதிரில் போய் நின்று வினயமாக. "தாங்கதானா சிங்கார மொதலியாரு" என்கிறார்.

தருமன் : ஆமாங்க. என்னா சேதி? எந்த ஊரு?

வீரப்ப: நானு செதம்பரங்க. வீட்லெ பொண்டுவ கால மாய்ட்டாங்க. நமக்கிண்ணு ஒருத்தி இருந்தா நல்லது. திடீருண்ணு கொஞ்சம் வெந்நீருவைச்சிக் குடுக்கணும். ஒருத்தி இருந்தா - ஹிஹி.

தருமன் : அது மாத்ரமா. நமக்கே ஒண்ணாச்சி. மேலே உழுந்து அழுவ ஒருத்தி ஓணுமே. நல்ல பொணம் இண்ணா என்ன அர்த்தம். தாலியைக் கையிலே தூக்கிக் கிணு. பூவே எடுத்து எடுத்து விசிறி எறிஞ்சி அழுவ ஒரு கட்டுக் கழுத்தி இருக்க வாணாமா? வெக்கக் கேடு.

வீரப்ப: கலியாணம் நானு பண்ணிக்கப் படாதிண்ணு நம்ப பசங்க எகுத்தாளி பண்றானுங்க.

தருமன் : அவனுவ ஆருண்ணென்?

வீரப்ப: அதுக்கு மேலே ஒரு பொண்ணே பாத்தேனுங்க. கலியாணத்தே புதுச்சேரியிலே வைச்சி முடிச்சிப் புடலாமின்னு . தகப்பனாரு துரைசாமி முதலியாரையும் கையோடு கூட்டி வந்துட் டேன் : செட்டித் தெருவுலே வீடு பேசி எறங்கி இருக்கோம். அந்தத் தெருவுலே போக்டாப் பசங்க ஜாஸ்திங்க.

தருமன் : நீங்க என்னா மரபு?
வீரப்ப: மொதலியார் தானுங்க.

தருமன் : நம்ம மரபுதான்.
வீரப்ப: அதனாலேதான் இங்கே....

தருமன் : சரிதான், கடமைப்பட்டேன். அந்தத் தெருவு போக்கிரித் தெருவுதான். இருக்கட்டும். எல்லாம் ஏற்பாடு பண்றேன். எடுத்தேன் கவுத்தேனென்று கல்யாணத்தே முடிச்சிப்புடணும். அப்படி வைச்சிகிங்க. பன்னிப் பன்னி ஏங் கேக்றிங்க. இது ஒரு மாதிரி ஊரு. பயப்பட வேண்டியதில்லே. இங்கே நம்ப எடத்திலே ஆரும் ஒண்ணும் பண் ணிக்க முடியாது. இந்த ஒலகத்திலேயே நான் ஜீவனுக்குத்தான் பயப்படுவேன். எங்க அண்ணனுக்கு . உள்ளதான் இருக்காரு. அவுரு ஒரு சிடுசிடுப் பேர்வழி. அவ்வளவுதான். என்னை எதிலியும் கவனிக் காதே இண்ணுவாரு. நீங்க இருக்கிங்க. ஒங்க சங்கதியைச் சொன்னீங்க. நான் கவனிக்கணுமே. ஐயோ இண்ணு நெனைக்கிறேன். இதெல்லாம் அவருக்குப் புடிக்கவே புடிக்காது. தெரிஞ்சாலும் ஒங் களியும் வோட்டுவாரு . மத்தபடி பொண்ணுங்கச் சம்மதந் தானே?

வீரப்ப: உசிருங்க. தருமன் : பொண்ணு தகப்பனாருக்கு?

வீரப்ப: மணவறையிலே தம் மவளே எம் பக்கத்திலே குந்தி வச்சி கண்ணாலே பாத்துட்டாப் போதும் இண்றாரு அவுரு .

தருமன் : சொச்சோ! அப்படியோ? இப்ப எங்கிட்டே என்னா எதிர் பாக்றிங்க? பணந்தானே? சரி; எவ்வளவு தேவை? நூறு ரூபாய்லே எல்லாம் முடிச்சுப் புடலாமா?

வீரப்ப: ஐயையோ? சொன்னதே போதுங்க.... எனக்குக் காசு பணம் வாணாங்க.

தருமன் : நம்ம மரபா இருக்கிற விஷயத்திலே பணமா பெரிசி.

வீரப்ப: இல்லிங்க , எங்கிட்ட பணம் இருக்கு. இல்லாட்டி போனா கேக்றேனுங்க .

தருமன் : நீங்க வெக்கப்படறதா தெரியுது. வீரப்பா வெக்கம் என்னாங்க. தருமன் : நம்ப சாதி இருக்குதே ரொம்பக் கேவல நெலைக்கு வந்து விட்டது. அதனாலே ஒருத்தருக்கு ஒருத்தர் நமக்குள்ளே உதவியா நடந்து கொள்ளணும். அதுக்காகத்தான் சொல்றேன். சரி. பொண்ணுக்கு ஏதாவது நகை நட்டு ஏற்பாடு பண்ணணுமே? அப்படி இல்லாட்டிப் போனா நல்லா இருக்காது.

வீரப்ப: நீங்களே செஞ்சிபுடுங்க. அத்துக்கு எப்படியோ அப்படி. ஓங்க கையிலே குடுத்துடுறேன். எல்லாத்தையும் நீங்கதானே முடிச்சி வைக்கணும்.

தருமன் : இப்ப எங்கே நகை செய்றது. வேண்டாம். நம்ப ஊட்ல இருந்து செட்டா அனுப்பி வைக்கிறேன். மெதுவாகச் செய்துகினு அப்புறம் குடுங்க நகையை அவசரமில்லே.

வீரப்ப: உங்க தயவுங்க. (வீரப்பக் கிழவர் தம்மிடமிருந்த ரூபாயில் சில்லறையை மாத்திரம் எடுத்துக் கொண்டு. மொத்தமாக 500 ரூபாயை பையுடன் தருமன் எதிரில் வைக்கிறார்.)

தருமன்: இங்கியா வைக்றிங்க. சரி , ஒப்புக் கொள்றேன். ஒரு விஷயமாத்ரம் சொல்றேன். அது என்னாண்ணா இந்த ஊரிலே ஒருத் தன் மாதரம் இருக்கான் எனக்கு விரோதி. அவங்கிட்ட ஒரு முப்பது லக்ஷ ரூபா காசி கெடந்து கூத்தாடுது. பல காரியத்லே அவனைத் தலையெடுக்க வொட்டாதே அடிச்சேன். எதுக்குச் சொல்றேன். அவன் நான் கவனிக்கிற காரியத்லே எதிரா வரக்கூடும். அந்தக் காலத்தில் நீங்க பயந்து பூடக்கூடாது. கராரியத்லே பின்னிடையக் கூடாது. அதுதான் நீங்க கவனிக்க வேண்டியது.

வீரப்ப: அதென்ன அப்படிச் சொல்றிங்க. நம்ப மரபு ஒருபோதும் இல்லைங்க. கிழிச்ச கோட்டெ தாண்டுவனா?

தருமன் : அதாங் கேட்டேன். சரி எல்லாம் நான் பாத்துக்றேன். நீங்க எறங்கி இருக்ற வூட்டுக்கு வாங்க போவலாம்.

வீரப்ப: நானே அவுங்களே அழைச்சி வரேனுங்க.

தருமன் : சரியல்ல. முன்னே போங்க. இதோ வர்றேன். நான் அங்கே தலையைக் காட்டிப்புட்டா எதிர்ப்பு மட்டமா இருக்கும். அதுக்காக.

வீரப்பா: ஆமாங்க ஆமாங்க. தருமன் : முன்னே போங்க.

[வீரப்பக் கிழவர் முன்னே போகத் தருமன் பணப்பையை அடிமடியில் பத்திரப்படுத்திக்கொண்டு பின் தொடர்கிறான்.]

வீரப்பக் கிழவர் "கற்கண்டு" என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைகிறார். துரைசாமி முதலியாரும் கற்கண்டும் "ஏன் என்று முன் வந்து நிற்கிறார்கள்.

வீரப்ப: ஆரு வர்ராரு பாத்திங்களா? மொதிலியாரவாள் ! நம்ப காரியம் இனிமே யாராலும் தடைப்படாது. அந்தப் போக்கிரிப் பசங்களே இப்ப வரச்சொல்லுங்க. சோட்டால் அடிக்றேன்.

[துரைசாமி முதலியாரும் கற்கண்டும் முதலியாரைத் தரிசனம் செய்கிறார்கள். பாய் கொண்டு வந்து போடுகிறார்கள். ஓடு கிறார்கள். ஆடுகிறார்கள் ]

வீரப்ப: இவுங்கதான் இந்தப் புதுச்சேரிப் பட்டணத்துக்கு ராசா மாதிரி . சிங்கார முதலியார் இண்ணா - கோவிச்சிக்காதிங்க - அழுத பிள்ளையும் வாயெ கெட்டியா மூடிக்கும் ஓடிப்போயி.

தருமன் : உம், நமக்கு மேலெல்லாம் ஒலகத்திலே உண்டுங்க. ஒம்பேர் என்னாம்மா?
கற்கண்டு: கற்கண்டு. (நாணிக் கொள்கிறாள் )

தருமன்: அப்படியா கற்கண்டு இவரெ கல்யாணம் உண்ணிக் கொள்வதிலே அட்டிகிட்டி ஒண்ணுமில்லியே?

கற்கண்டு: ஒங்களுக்குப் பிரியமிருந்தா எனக்குப் பிரியந் தானுங்க.
தருமன் : நீங்கதானுங்களா துரைசாமி முதலியாரு கல்யாணத்தே முடிச்சுப்புட வேண்டியது தானே?

துரைசாமி : சீக்கிரம் முடிச்சிப்புட்டா தேவலை.

தருமன்: ஒண்ணு பண்ணுங்க. வீரப்ப முதலியாரு மாப்பிள்ளை யாவும் இருக்காரு. இங்கே சிலருக்குப் புடிக்காதவராயும் இருக்காரு. முதலியார் தெருவுக்கு மேலண்டைப் பக்கத்தில் ஒரு வூடு காலியா இருக்குது இண்ணு கேள்விப்பட்டேன். முன்னே அதெப் போயி முடிச்சி வீரப்ப மொதலியாரு அதிலே இருந்துடணும். ஒடனே செய்யுங்க இதெ. நாளைக்கி முகூர்த்த நாளு. முடிச்சிட வேண்டிய தான். வேறே பேச்சில்லே.

துரைசாமி : நல்லதுங்க.
வீரப்ப: அதுக்குள் எப்படி முடியும்?

தருமன் : எல்லாம் செட்டா நான் அனுப்பறேன். அனுப்புறவன் நானில்லை? நாளெ வளத்தப்படாது.

வீரப்ப: அப்படீண்ணா சரி. துரைசாமி மொதலியாரே எழுந் திரும் நானும் வர்ரேன்.

தருமன் : நான் போகணும். ஆகவேண்டிய காரியம் அதிகம் இருக் குது.
(தருமன் அவசரமாகச் சென்று, வீதியின் முனையில் நின்று. இருகிழங்களும் வெளியில் போகிறார்களா என்று கவனிக்கிறான். இருவரும் போகிறார்கள். கற்கண்டைத் தனியாகச் சந்திக்க வீட்டை நோக்கி வருகிறான். வழியில் ராமசாமியும் சீனுவாசனும் நிற்கின்றார்கள்.)

ராமசாமி : சிங்கார முதலியாரா?
தருமன் : ஆம், என்னா சேதி?

ராமசாமி : வாங்களேன்.
தருமன் : இல்லை அவசரமாகப் போகணும்.

ராமசாமி : என்னாங்க சிங்கார முதலியாரே, ஒரு சேதி கேட்டுப் போகப்படாதா?
தருமன் : ஏன்? என்னா சேதியப்பார் [தருமன் நிற்கிறான்]

ராமசாமி : அந்தக் கெழவனுக்கா அந்தச் சின்னப் பொண்ணே கண்ணாலம் பண்ணிவைக்கப் போரிங்க.
தருமன் : அதுபத்தி ஒங்களுக்கு என்னா கவலை? உம்?

ராமசாமி : அப்படிங்களா? ஒங்களுக்கு என்னாங்க கவலை ஏதாவது தரகோ?
தருமன் : மரியாதையாகப் பேசுங்க. சீனு : மரியாதையாகப் பேசுங்க.

சீனு : மரியாதையாகப் பேசு ராமசாமி.
தருமன்: நான் யார் தெரியுமல்ல?

சீனு : அவரு யாருன்னு தெரியுமல்ல ராமசாமி ஒனக்கு?
[ராமசாமி சிரிக்கிறான் விழுந்து விழுந்து : சீனுவும் சிரிக் கிறான்.]

ராமசாமி : ஏண்டா! சிறுத்தொண்டைப் பத்தன் கதை பாடுகின்ற வன் இவன் இண்ணு , எங்களுக்குமாடா தெரியாது. காமாட்டி

தருமன்: தெரியுங்களா என்னை ? தெரிஞ்சுதான் இருக்குதுங்க ஒங்களுக்கு மன்னிக்கணுங்க.

சீனு : நீ அந்தப் பொண்ணே
கட்டிக்கொண்டா கூடச் சம்மதம் எங்களுக்கு . தள்ளாத கெழவனுக்கு வேண்டாம்.

தருமன்: ஒங்களுக்குத் திருப்தியா முடிச்சுப்புடறேன் ஒரு மாதிரி ஒங்க ஒதவி இருக்கணும் சாமி.

ராமசாமி : சாமியாவது பூதமாவது. முயற்சி எடுத்துப் பாரு. எங்க ஒத்தாசை நிறைய இருக்கும் ஒனக்கு. போறியா? அப்பப்ப சொல்லு.

தருமன் : சரிங்க. (தருமன் கற்கண்டின் எதிரில் போகிறான்.) கற்கண்டு: வாங்க.

தருமன் : அப்பா எங்கே?
கற்கண்டு: ரெண்டு பேருந்தான் வூடு பார்க்கப் போனாங்க.
தருமன் : கற்கண்டு. ஒன்னே தனியாக்கண்டு ஓ மனசை அறிய ணும் இண்ற எண்ணம். அந்தப் பெரியவரை நீ கட்டிக்கச் சம்மதிச் சதுக்கு என்னா காரணம்?

கற்கண்டு. அதுவா , எங்கப்பா அவருகிட்டே 300 ரூபா கடன்பட்டு இருக்காருங்க. அதுக்காக என்னெ தொந்தரவு செய்றாருங்க. அந்தக் கெழவரெ கட்டிக்க சொல்லி.

தருமன்: நானு நெனைச்சேன்? அப்படிண்ணா ஒனக்குப் பிடிக்கல்லே?

கற்கண்டு: ஆனா, எங்கப்பா தனிக்கட்டே, அவுரு மனசெ திருப்திப்படுத்தணும் நானு.
தருமன் : சவுகரியமா வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண் ணிக்கிறதிலே தடையில்லே.

கற்கண்டு: ஓங்களாலேதான் முடியுங்க. அவுரும் கெழவரா இருக் கப்படாதுங்க.
தருமன் : நல்லாச்சொன்னே. துள்ளுகாளை என்னாட்டம் இருப் பான் அசல்.

கற்கண்டு: சரிங்க. தருமன்: நல்ல சம்பாதனைக்காரன். கற்கண்டு: சரிதானுங்க.
தருமன்: ஒங்கப்பா அந்தக் கெழவருக்குக் குடுக்க வேண்டிய 300 ரூபாயை அந்தப் புள்ளையாண்டான் குடுத்துப்புடுவான்.

கற்கண்டு: அதாங்க வேண்டியதுங்க.
தருமன் : இதே மனசிலே வை, கட்டவுத்து உட்டுடாதேக் காரியம் கெட்டுடும்.

கற்கண்டு: உறுதிங்க.
தருமன் : உம் ; பெண் புத்தி பின் புத்தி இண்ணுவாங்க. நான் சொல்றெ ஆளெ கண்ணாலம் பண்ணிக்கிறதாக. கைபோடு பார்க்கலாம்.

கற்கண்டு: (பரிதாபமாக) அவரெ ஒருதரம் கண்ணாலே பார்த்தாத் தேவலைங்க.
தருமன் : என்னெ பார்த்தா அவனெ பாக்க வேண்டியதில்லே. கற்கண்டு.

கற்கண்டு: கெழவன் இல்லிங்களே? ஒங்களாட்டம் இருந்தா சரிதானுங்க.

தருமன் : சரி.
கற்கண்டு. பெரிய அந்தஸ்துக்காரராய் இருக்கப் படாதுங்க.
தருமன் : அப்படியா? சரி; சாதாரண அந்தீசுதான்.

கற்கண்டு : பிச்சை எடுக்கிறவராயிருந்தாக்கூடப் பாதகம் இல்லிங்க. கெழவராயில்லாமே கண்ணுக்குப் புடிச்சி இருந்தாப் போதுங்க. 300 ரூபா கெழவர்கிட்ட எறிஞ்சுப்புடணுங்க . கையை நீட் டுங்க.
[கையை நீட்டுகிறான் தருமன்.]

கற்கண்டு: ஐயோ. நீங்க ஏழையா இருக்கப்படாதுங்களா? தருமன் : ஏழையை நீ ஏன் விரும்புகிறாய்?
கற்கண்டு : பணக்காரர் என்னெ ஏன் விரும்புறாரு? விரும்பினாலும் பின்னாலே ஏழையாயிருந்தா அப்படியில்லிங்க. என் உடம்பு உண்டு; பாடுபடத் தைரியம் உண்டுங்க.

தருமன் : அப்படியா! ஐயோ! பெண்ணே கற்கண்டு. நான் சொல்ற அந்தப் பையன் சனங்களுக்கு சிறுத்தொண்டப் பத்தன் கதை சொல்லி நல்லவெதமாப் பொழைக்கிறான். இனிமே அந்த வேலையை உட்டுடச் சொல்றேன். வேறே வேலே பார்த்துக் குடுக்கறேன். அவன் கையிலே 500 ரூபா ரொக்கம் வைச்சிருக்கிறான். என்ன சொல்றே?

கற்கண்டு: அவரு எப்படி இருப்பாருங்க?
தருமன் : என்னாட்டமே.
கற்கண்டு: சத்தியமா அவுரே கட்டிக்றேன். அவுரு சிறுத்தொண்டப் பத்தன் கதை சொல்ற வேலையை உட வேண்டியதில்லிங்க. அவுரு கெழவரில்லையே?

தருமன் : சத்யமா இல்லை .
கற்கண்டு : கண்ணுக்கு புடிக்குங்களா?

தருமன் : என்னெ ஒனக்குப் புடிக்குதா?
கற்கண்டு: புடிக்குதுங்களே.
தருமன் : என்போலவே இருப்பான் இண்றேனே . ஆனா நெலமை நான் சொன்னதுதான்

கற்கண்டு: ஐயா, என் தாய் மேலே ஆணை. அந்த நெலமை எனக்குச் சம்மதம்.
தருமன் : அப்படியா, கை போடு .

கற்கண்டு: ஒருதரம் அவரெ என் கண்ணாலே பாத்திட்டாப் போதும்.
தருமன்: நாந்தாங் கற்கண்டு. கற்கண்டு: ஆ? நீங்க பணக்காரராச்சே! தருமன் : ஆர் சொன்னதிண்ணேன்?

கற்கண்டு : கெழவர் சொன்னாரே. என்னமோ மொதிலி யாரிண்ணு .
தருமன்: சிங்கார மொதிலியார் தாங்கதானா இண்ணாரு. ஆமாங்க இண்ணேன். நான் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடற் வன்தானே. மனசிலே போட்டு வை. சம்மதமா கற்கண்டு.

(தருமன் அவளெதிரில் கையை நீட்டுகிறான். அவள் கை போட்டுக் கொடுத்ததோடு, அந்தக் கைக்கு முத்தங் கொடுக்கிறாள்.)

கற்கண்டு: "என் மைசூரு ராஜாவே மாணிக்கக் கூஜாவே என்னெ கண்ணாலம் பண்ணிக்கிறிங்களா?"
தருமன் : அடி. செவ்வாழைப் பழச்சீப்போ சீமை எலந்தத் தோப்பே நான் சொல்றபடி கேக்கணும் நீ.
கற்கண்டு: தங்கத்து வார்ப்படமும் தானாக வந்து நிண்ணு கோழி கிழிச்சுட்டா கொஞ்சோண்டு தாண்டுவனா?
தருமன் : கற்கண்டு. இப்ப எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா?

கற்கண்டு: எனக்கு மாத்ரம் கசக்குதிண்ணு நெனைக்றிங்களா மாம்பழத்தட்டு வா இண்ணு கூப்பிட்டாலே, நஞ்ச பெலாச்சொளே நாக்லே வந்து குதிச்சாப்லே, தேனான கொளத்திலே திட்டுண்ணு விழுந்தாலே, சோன மழையும் பவுனாச் சொரிஞ்சாப்லே. கொடலை மல்லிகைப்பூ கொட்டி முடிச்சாப்லே , வடம் புடிச்ச தேரு வாசல்லே வந்தாலே அப்படியே துள்ளுது மகிழ்ச்சி தெரியுங்களா

தருமன்: கற்கண்டு. ஒன் அழவுலே நானு அட்டையாட்டம் ஒட்டிக்கப்படாது இதுங்காட்டியும் . இண்ணைய வரைக்கும், தெபாரு. சிரிக்காதே சுருட்டி மடக்கிகிணு இங்கே உழுந்தும் வைக்காதே சொல்லிப்புட்டேன். ஒங் கண்லே காந்தமா இருக்கும். போடி.

கற்கண்டு: ஏங்க அப்டி சிடுசிடுண்ணு இருக்கீங்க?
தருமன் : காரியம் பெரிசி| கொறையும் முடிக்க வாணாமா?

கற்கண்டு: அதுக்குச் சொல்றிங்களா. பறிச்சித் திங்கறாப்பலே சிரிச்ச மொகம் இபடி மாறிச்சே என்னபாப்பாண்ணு பாத்தேன்.
தருமன் : இப்ப ஒரே ஆபத்து. கற்கண்டு: என்னா ?

தருமன் : நாம்ப ரெண்டுபேரும் இப்பக் கொஞ்ச நேரம் பிரியணுமே.
கற்கண்டு: ஆமாங்க. என்னா பண்றதுங்க. ஒடனே வந்துடுங்க.

தருமன் : உசுரே ஒரு கையாலே புடிச்சிகினு இரு; என் பச்செ கிளியில்லே! கொஞ்ச நேரம்.
கற்கண்டு: வாரது நிச்சயமா இருந்தா. நான் சாவாமே இருக்றது நிச்சயந்தான்.

தருமன் : நிச்சயம் நூறு பங்கிலியும். கற்கண்டு : அப்படிண்ணா துன்பமில்லை . ஓ! தருமன் : வரட்டுமா? கற்கண்டு : போறிங்க? தருமன்: வந்துடுவாங்களே .

கற்கண்டு: வந்துடுவாங்களா?
தருமன் : உம், வர்ரேன்.
கற்கண்டு: போறிங்க?
தருமன் : ஆகவேண்டியது ரொம்ப இருக்குதே; நாளை அதிகாலை யிலே கலியாணமாச்சே!
கற்கண்டு: கவனமாப் பாருங்க. இங்கியே இருந்திட்டிங்களே.

தருமன்: போய் வர்ரேன். கற்கண்டு: போறிங்க. ஒண்ணு கேக்க ஆசையாயிருக்கு.
தருமன் : என்ன அது? கற்கண்டு: நீங்க திட்டாதீங்க.

தருமன்: நானா. சே. சொல்லு சும்மா.
கற்கண்டு : ஓங்க பேரு சொன்னா தருமமா இருக்கும்.

தருமன்: அதுதான் பேரு. நீதான் சொல்லிட்டியே தருமன் இண்ணு .
கற்கண்டு : ஐயையோ, பேரேச் சொல்லிப்புட்டேனே.

தருமன். தெரியாதிருக்கும் போது ஆம்படையாம் பேரே சொன்னா குத்தமில்லே கற்கண்டு. நான் வாறேன். நாழி ஆவுது.

கற்கண்டு: (வருத்தமாக) நான் கண்ணை மூடிக்கிறேன். சொல் லாமே பூடுங்க நீங்க.
பூட்டிங்களா! (உரத்தி)
[கண்ணை மூடிக் கொள்ளுகிறாள். தருமன் அவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போய் விடுகிறான்.]

தருமன் : பூட்டேன். கற்கண்டு. (தூரமாகச் சென்றவனை) இப்பவே வாரிங்களா? தருமன்: (உரத்தி) வர்றேன்.
----------------

--5--

தருமன் - சிங்கார முதலியார் வீட்டில் யோசனையோடு உட் கார்ந்திருக்கிறான். சின்னான் சிறுத்தொண்டன் கதை பாடுவதற்கு முன் அது சம்பந்தமான வசனம் பேசுகிறான். இச்சமயம் புட்பரதனும் குறட்டில் வந்து நிற்கிறான்.

சின்னான்: ஆத்தி மரத்தடியிலே சாமி குந்தியிருந்தாரா? அங்கே சிறுத்தொண்டப் பத்தனாகப்பட்டவன் அவுரு காலில் உழுந்தானா? உழுந்து அழைச்சானா? அதுக்குச் சாமி 'ஒங்க ஊட்டிலே என்ன கறிடா' இண்ணு கேட்டாரா? பூசினிக்கா பொடலங்கா அந்தக்கா இந்தக்கா இண்ணு சிறுத்தொண்டப் பத்தன் சொன்னானா? அதுக்குச் சொல்றாரு சாமி.
"பூசனிக்காய் ஐயரொட
தொப்பை யல்லோ பத்தா - அது
தொப்பை யல்லோ பத்தா
பூசனிக்கா கறி எனக்கு
வேண்டா மென்றார்."

கேட்பவர் ! ஓகோ. சிவனுடைய தொப்பை யாட்டம் பூசனிக்கா இருக்குது. அதுக்காக, அது வாணாம் திண்ணாப் பாவம் இண்றாரா?

கேட்பவர்: 1: சொல்றவரு ஆரு?
கேட்பவர்: 2: சொல்றவரும் அவருதான்.
கேட்பவர் : 1: தெருவிளயடாடல் இதெல்லாம்.

சின்னான்: "கத்திரிக்காய் ஐயரொட
பூசை மணியல்லோ பத்தா - அது
பூசை மணியல்லோ பத்தா
கத்திரிக்காக் கறி எனக்கு
வேண்டாம் என்றார்.

முருங்கைக்கா ஐயரொட
விபூதி யல்லோ பத்தா - அது
விபூதியல்லோ பத்தா
முருங்கைக்காக் கறி எனக்கு
வேண்டாம் என்றார்.

பாவக்கா ஐயரோட
குண்டல மல்லோ பத்தா - அது
குண்டல மல்லோ பத்தா
பாவக்காக் கறி எனக்கு
வேண்டாம் என்றார்.

இந்தக் கறிகள் எல்லாம்
எனக்கு வேண்டாம் பத்தா - அது
எனக்கு வேண்டாம் பத்தா
எடுத்துரைப்பேன் அதைக்
கேளும் பத்தா.

மனிதக் கறி எனக்கு
வேணுமடா பத்தா - அது
வேணுமடா பத்தி
பிள்ளைக் கறி எனக்கு
வேணுமடா.

புட்ப: (ஆச்சரியத்தோடு) ஐயையோ பிள்ளையையா சமைக்கிறது?
தருமன் : உம். ஆமாம் ஒன்னாட்டம் பிள்ளையை.
"பள்ளி கூடப் பிள்ளையாய்
இருக்க வேணும் பத்தா - அது
இருக்க வேணும் பத்தா
ஒரு தாய்க்கொரு மகனாய்
இருக்கணுண்டா .

தாய் மடியில் அமுக்கிப்
புடிக்கணுண்டா பத்தா - நல்லாப்
புடிக்கணுண்டா பத்தா

தகப்பனார் கத்தியாலே
அறுக்கணுண்டா .'

புட்ப: ஐயையோ! அப்படியே செஞ்சாங்களா?
தருமன் : ஓ! அதே மாதிரிப் புள்ளெய அலற அலற அறுத்து ஆக்கினாங்க. போட்டாங்க.

[புட்பரதன் எண்ணம் குழம்புகிறது. விழிக்கிறான். மெதுவாக உள்ளே போய்விடுகிறான். வேலை இழந்த காவற்காரக் குப்பன் வருகிறான் வெகு சோர்வுடன்.]

தருமன் : குப்பர் வருகிறாரோ குப்பர்.
குப்பன் : என் கஞ்சியைக் கெடுத்துப்புட்டியே? என் அடி வயிற்றில் அடிச்சிப்புட்டியோ ஒன்னேதான் கேட்கலாம் இண்ணு வந்தேன் ஒனக்கு வேற பொழப்பு உண்டு. எனக்கு அப்படி இல்லே. நீ இப்ப நெனச்சா என் துன்பத்தை நீக்கிட முடியும்? நான் புள்லெ குட்டிக் காரன். என்னா சொல்றே?

தருமன் : வந்தியா வழிக்கு ஒன் முறுக்கு திலுப்பு எல்லாம் ஏங்கிட்டே காட்ட மாட்டியே?
குப்பன் : ஊஹூம்.
தருமன் : சரி . ஒரு பக்கம் போயிரு. எசமான் வெளியிலே வந்து நிப்பாரு. ஓடியாந்து காலிலே உழு . கெஞ்சு . அழுவு. நானும் ஒனக்கு சிபாரிசு செய்றேன். தெரியுமா?

குப்பன் : தெரியும்.
தருமன் : தெரியுங்க இண்ணுடா.

குப்பன் : தெரியுங்க.
தருமன் : இனி ஒரு தடவை என்னைப்பற்றி அசாக்ரதையா இருப்பியா?
குப்பன் : இல்லே .
தருமன் : இல்லிங்க இண்ணுடா .
குப்பன் : இல்லிங்க.
தருமன் : போ [குப்பன் சந்து முனையில் மறைவாக நிற்கிறான்.]

[வீரப்பக் கிழவர் தருமனை நோக்கி வருவதைத் தருமன் பார்த்து விடுகிறான். தருமனுக்கு ஓர் கற்பனை உதிக்கிறது. வீட்டின் வாசற் படிக்குப் புறமாக மறைவில் கணக்கப் பிள்ளையிருப்பது போலவும், தருமன் அந்தக் கணக்கப் பிள்ளையோடு பேசுவது போலவும் பிறர் நினைக்கும்படி பேசுகிறான்.]

கணக்கப்பிள்ளை வேலை பார்ப்பது இப்படியாண்ணேன். மார்வாடி கைமாத்தாக - சீட்ட நாட்டா பதி மூவாயிர ரூபா வாங்கிப் போனான். அதே கேக்க மறந்துடலாமா? ஒண்ணு. காட்டுக் குத்தகை வகையில் வேலுக்கவுண்டர் கணக்கு ஐயாயிரம் தவுசல் படுகிறது. அதே ஒடனே எடுத்தெழுதி இதோ இருக்கு தடா மடையா கணக்கு' இண்ணு அவன் மூஞ்சிலே எறியறதில்லே? என்னா? நீங்க சொல்லலையா? எல்லாத்தையுமா நான் சொல்லணும் நல்லா இருக்கு . (இதற்குள் வீரப்ப முதலியார் சமீபத்தில் வந்துவிடுகிறார்.) சரி போய் வேலையே பாரும். வாங்க முதலியாரே.

வீரப்ப: வீடு அமத்திச் சமையலுக்கும் ஏற்பாடு பண்ணிட் டேனுங்க.

தருமன் : பேஷ். நல்லா செய்திங்க. புஷ்பப் பல்லக்குக்குச் சொல்லிப்புட்டே. பல்லக்கு ஒங்க ஊட்டுக்கு வரும். அங்கேயே ஜோடிப்பு நடக்கும். அந்த நேரத்துக்கு முஸ்திப்பா பொண்ணு வூட்டுக்கு அனுப்ப வேண்டியது. ஒடனே பொண்ணு வீட்டுலே இருந்து ஊர்கோலமாகக் கெளம்பி முத்தால்பேட்டைச் சத்திரத்துக்குப் போறது. விடியற்காலை முகூர்த்தம் வேண்டிய நுண்கள் சாமான்கள் அல்லாம் சித்தமாயிட்டுது. ஜவுளிதினுசு மாத்ரந்தான் எடுக்கணும். கேட்டிங்களா சேதியை அந்தப் பசங்க ரெண்டு பேரும். என் விரோதி இருக்கான் இண்ணெனே அவன் ஆட்கள்தான். பயம் ஒண்ணுமில்லே. இருந்தாலும் நாம்ப முன்னேற்பாடா இருக்கணும் பாருங்கோ? நீங்க மாத்ரம் வெளியிலே வரவாணாம். அந்த நேரத்திலே நானு வந்து கூப்பிடுவேன்.

வீரப்ப: சரிதானுங்க. அப்படியே நான் போகட்டுமா? அதென்னமோ அல்லாம் ஒங்க பொறுப்பு.

தருமன் : அதான் பாரத்தே என் தலையிலே போட்டுட்மங்களே . சரி போய் வாங்க. வெளியிலே மாதரம் நீங்க வரவேண்டாம்.

வீரப்ப: அதென்னாங்க அதை அவ்வளவு அழுத்தமா சொல்றீங்க? நெலமை அவ்வளவு மோசமாவா இருக்குது.

தருமன் : இல்லை. வேற ஒருத்தனுக்குக் கற்கண்டைத் தூக்கிப் போயிக் கலியாணம் பண்ணிப்புடறதுண்ணு எதிரியின் யோசனை.

வீரப்ப: அந்தப் பசங்கே அப்பவே அதான்களே சொன்னானுங்க. தருமன் : பாத்திங்களா.

(இச்சமயத்தில் வெளியில் போயிருந்த சிங்கார முதலியார் வந்துவிடுகிறார். தருமன் விழிக்கிறான். முன்பு தருமன் எசமானிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியிற் போனது பற்றி எசமான் பேசப் போகும் பேச்சுக்களால், தருமன் கேவலம் காவற்காரன் என்ற உண்மை வீரப்ப முதலியாருக்குத் தெரிந்து விட்டால் ஆபத்து. வீரப்ப முதலியாரை நீங்கள் சீக்கிரம் போய்விடுங்கள் என்று சொல்லி அனுப்புவதும் சாத்தியமில்லை . அவர் குறட்டை விட்டுப் போகக் கால்மணி நேரம்
செல்லும். ஆயினும் தருமனுக்கு மின்னல் போல் ஒரு யோசனை நெஞ்சில் தோன்றியது. எசமான் தன்னை நோக்கி வாய் திறக்குமுன், தானே அவரை நோக்கி.)

தருமன் : நாம் பழைய வேலைக்காரனை நீக்கியதில் அவன் அதிகத் தொந்தரவு படுவதாகத்தான் தோணுது.

சிங்கார: சரி : நீ முன்னே எங்கே போனே?
தருமன்: இங்கில்லே மெய்தான்.
சிங்கார: எதற்காக ஒன்னை வைத்தது? வெளியிலிருந்து வருகிற வர்கள் விசாரித்து உள்ளே விட; உள்ளே கூப்பிட்ட கொரலுக்கு ஏண்ணு கேக்க. நீ பூட்டா என்ன பண்றது?

தருமன் : அது முட்டாள் தனமில்லிங்களா?
சிங்கார: பிச்சை எடுத்த நாயே! ஒன்னே கொண்டாந்து சேத்ததுக்கா?

தருமன்: அக்றம மில்லிங்களா?
சிங்கார: அவுசரமிருந்தா சொல்லிட்டுப் போறது?
தருமன்: ஓ நல்லா .
சிங்கார : அயோக்கியப் பையா.

[கோபமாகச் சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைந்தவுடனே. அவர் வார்த்தையைத் தொடர்ந்தாற்போல் தருமனும் . "ஈனப் பையன்" என்று வேறொருவனைக் கூறியதுபோல் கூறிவிட்டு, வீரப்ப முதலியாரை நோக்கி]
எவனெ வைச்சாலும் அயோக்கியத்தனந்தான் பண்றானுவ; பாருங்க அண்ணனுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலே. ஒருத்தனையும் அண்ணன் இப்படியெல்லாம் திட்டமாட்டாரு. அந்தப் பையன் அப்டி நடந்து கொண்டானுங்க. நீக்கிவிட்டு வேறெ ஆளெ வைச்சுடணும் என்று கூறி, சிங்கார முதலியார் பேசிய அனைத்தும் தன்னையல்ல என்று வீரப்பக் கிழவர் நம்பும்படி செய்துவிடுகிறான்.

வீரப்ப: ஓகோ வேறே ஆளப்பத்தி கோவிச்சிக்கினாரோ? சரிதான். தங்கள் அண்ணார் கொஞ்சம் கோவக்காரர்தான் போலிருக்கு.

தருமன் : இந்த ஒலகத்திலே எங்கிட்டதான் மரியாதை போங்களேன்.

[வீரப்பக் கிழவா விடை பெற்றுக் கொண்டு போய் விடுகிறார். தரு மனும் ஆபத்தில் தப்பினோம் என்று மூச்சு விடுகிறான்.]

சிறிது நேரம் சென்று வழக்கம் போல் சிங்கார முதலியார் உடை களைக் களைந்து, காவித் துண்டு, வெள்ளை வேட்டி, கையில் விசிறி யுடன் வெளியில் வருகிறார்.
சந்து முனையில் காத்திருந்த பழைய காவல் குப்பன் ஓடிவந்து காலில் விவுகிறான்.

குப்பன் : வேலையை விட்டு நீக்கிய நாளிலிருந்து பட்டினிங்க. புள்ளெ குட்டிக்காரனுங்க . நீங்கதானுங்க காப்பாத்தனும்.

சிங்கார: ஒன்னை அனுப்பிப்புட்டு இந்தப் பையனே வைச்சேன். இவனும் அப்படித்தான் செய்றான்.

தருமன் : எனக்கு பொழப்பு இருக்குங்க. என் வேலையெ பழயபடி இவனுக்கே கொடுத்துடுங்க.

சிங்கார: சரி, அப்ப ஒப்புக்கொள்ளு குப்பா.
[முதலியார் உள்ளே போனதும், தருமன் தனது வெள்ளை வேட்டி, காவித்துண்டு. விசிறி இவைகளைக் குப்பனிடம் கொடுத்து விட்டுப் போய் விடுகிறான். குப்பன் அந்த உடை களை உடுத்திக் கொண்டு விசிறியையும் கையில் பிடித்த வண்ணம் விசிப்பலகையை அடைகிறான்.]
----------------

--6--

துரைசாமி முதலியாரும் கற்கண்டும் தருமன் அனுப்பிய கூறைப் புடவை பன்னிரண்டாறு சில்லறை நகைகள் ரவிக்கை முதலியவைகளைப் பற்றிப் பேசிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

அச்சமயம் சின்னான் தன்னுடன் வந்த பெண் பிள்ளையைக் காட்டி, "முதலியார் வீட்டம்மா" என்கிறான் . துரைசாமி முதலியார் திடுக்கிட்டெழுந்து சிறிது வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுங்கி விடு கிறார். வந்த பெண் பிள்ளை ஓர் ஓரமாகச் சென்று, கற்கண்டை அழைத்துக் கொண்டு, அந்த வீட்டை அடைகிறாள். அந்த அம்மாவுக்கும் கற்கண்டுக்கும் நடக்கும் பேச்சுக்களை ஆண்பிள்ளையாகிய துரைசாமி முதலியார் எப்படிச் சமீபத்தில் இருந்து கேட்க முடியும்

கற்கண்டு: (தன் தகப்பனிடம் வந்து ) "அப்பா. ஒங்களே முத்தால் பேட்டை சத்ரத்துக்கு . சின்னான் கூடப் போயி ஆகவேண்டியதெப் பார்க்கச் சொன்னாங்க. அம்மா நகையெல்லாம் கொண்டாந் திருக்காங்க. மத்தவங்களும் இப்ப வரப் போறாங்களாம். நீங்க இருக்றிங்க இண்ணு அம்மா வெக்கப்படுறாங்க.

துரைசாமி: சரிதான். சின்னான் வரியா! [இருவரும் போய் விடுகிறார்கள்.]

கற்கண்டு: (அம்மாவை நோக்கிச் சிரித்துக் கொண்டு) ஆவ வேண்டி தென்னா மேற்கொண்டு

அம்மா: (அம்மாவாக வந்த தருமன்) நீயும் நானுந்தான் கற்கண்டு!
கற்கண்டு: ஏங்க இம்மா நேரம்? கோவில்லே பெருமாளையாவது பாத்த கண்ணு மறந்து போவும். ஒங்களெக் கண்டதிலே இருந்து இந்தப் பாழாபோன மனதும் கண்ணும் மறக்குதா ஒங்களே? கலியாணம் நடந்துடுமா?

தருமன்: நாளைக்கு இந்நேரம் எனக்கு நீ. உனக்கு நானு ! அப்பட்டம் அலுவாத் துண்டுதானே?
கற்கண்டு: அள்ளி அள்ளி முழுங்க வேண்டியது தானோ: ஐயையோ இந்த ராத்திரி போயி? அப்பறம் ஒரு ராத்ரி வரவேணுமோ

தருமன்: ஏன் அப்படி? இதோ இந்த ராத்திரி போச்சோ போவுலியோ கலியாணந் தீர்ந்தது. ஆடேன் பாடேன்! என் முதுவு மேலே ஏறிக்கேன்? அல்லாட்டி மாட்டு வண்டி கட்டிக்கேன் ஏறிக்கேன் என்னோட உடனே சவாரி ஆலஞ்சாலை காதலே! வாயேன் திரும்பி சாப்பிடேன் என்னோட ஒரே எலையிலே!

கற்கண்டு : அப்றம்?
தருமன் : புட்டுக்கேன் லட்டோ
கற்கண்டு: அப்றம்?
தருமன்: கொட்டிக்கேன் வாயிலே!
கற்கண்டு: அப்றம்
தருமன் : நெட்டிக்கேன் பாலே! கற்கண்டு. அப்றம்
தருமன் : வெட்டிக்கேன் பாக்கே!
கற்கண்டு: அப்றம்?
கற்கண்டு
தருமன் : தூக்கேன் ஏலக்கா , கிராம்பு . ஜாதிக்கா, ஜாதி பதரி. நோக்கேன் கம கம கம கமண்ணு. ஆரு ஒண்ணே கேகறவுங்க இண்ணேன்.

கற்கண்டு. அப்படியா சேதி ! ஐயையோ!
[கற்கண்டு தருமன்மேல் விழுந்து சிரிக்கிறாள்]
இப்ப எங்கப்பா திரும்பி வந்துட்டார்

தருமன் : யாரு ஏன் வர்ராரு. சின்னான் கொடுக்ற மருந்திலே. முத்தால் பேட்டைச் சத்ரத்து மூலையிலே முட்டை இடற கோழிதான் ஒங்கப்பா. ஆனா கற்கண்டு நானு அவசரமாப் போவணும். ஆவ வேண்டிய காரியத்தெ பார்க்க வாணாம்? என் கண்ணில்லே, எனக்கு உத்தரவு குடு.

கற்கண்டு: போறிங்க?
தருமன் : ஆமாம்.
கற்கண்டு: செய்ங்க.
[அவள் ஆசையோடு பார்க்கிறாள் அவன் போவதை.]
-----------------

--7--

ஆயாசமான குரலில் தருமன் துரைசாமி முதலியாரிடம் போகிறான்.

தருமன் : அந்தப் பசங்க ரொம்ப அயோக்யத்தனத்திலே ஆரம்பிச்சுட்டானுவ.
துரைசாமி : என்னா! என்னாங்க? தருமன்: நானு என்னா சொல்றது போங்க.
துரைசாமி: அப்பமங்களா?
தருமன் : வீரப்பக் கிழவருக்குத் தவிர வேறு யாருக்காவது கற்கண்டைக் கலியாணம் பண்ணிப்புடக் கூடாதா?

துரைசாமி: முடியவே முடியாதுங்க. அப்படி நான் தவறி நடந்துப் புட்டு உசுரோட இருக்கமாட்டேன்.
தருமன் : அதிகக் கஷ்டமிருக்குது கிழவருக்கு முடிக்கிற விஷயத்திலே .

துரைசாமி : உசுரே போகட்டுங்க: நான் அவருக்கே குடுத்தாகணும்.
தருமன் : பொண்ணுக்குக் கெழவர் விஷயத்திலே இஷ்டம் இல்லாட்டி?

துரைசாமி: கற்கண்டுக்கா?
தருமன் : உம்.

துரைசாமி : இந்தச் சதரத்துக் கெணத்லே உழுந்து ஒழியறது. அவ்வளவுதானுங்க.
தருமன்: பாவம் ஓங்க சபதம் நெறவேறணும், பாப்பம். கெழவரு வயித்தால் போவுதிண்ணாரு.

துரைசாமி : எப்பொ ?
தருமன்: சாயந்திரம் , டாக்டரை அழைச்சி உட்டுட்டுத் தானே நான் அந்தண்டை போனேன். சரி, நான் போய் வர்ரேன். ஒங்களுக்கு வண்டியும் தக்க ஆளும் அனுப்புறேன். அல்லாட்டி அல்லாட்டி நான் வர்றேன்.
அது குறுக்கே நீங்க வெளியிலே வரவாணாம், கலியாணத்தெ பொண்ணு வூட்லே செட்டித் தெருவுலியேதான் வச்சிக்க வேண்டியதா வரும்போல இருக்குது. இருங்க.
துரைசாமி: ஒங்களுக்கு ரொம்ப சிரமம். தருமன் : இருக்கட்டுங்க. அதெப் பார்த்தா முடியுதுங்களா? வர்ரேன்.

[அவசரமாகப் போகிறான் தருமன், சிறிது தூரம் போனவுடன் சின்னான் எதிரில் வருகிறான்.]

சின்னான்: துரைசாமி மொதிலியாரை இங்கே உட்டுட்டு அங்கே வந்தேன். ஒங்களே காணோம். ஓடியாரேன்.

தருமன்: சரி என்னா மணி?
சின்னான்: பத்துக்கு மேலே ஆச்சி.

தருமன்: ஒண்ணு பண்ணு . நான் நேரே வீரப்பக் கெழவர் கிட்ட ஒக்காந்து பேசியிருப்பேன். அந்தச் சமயம். அந்தத் தெருவுலே கடாம் படாண்ணு கல்லு வந்து உழணும்.
சின்னான்: எங்கே உழணும்?

தருமன்: தெருவுலே இருக்கிற பல ஊட்டு மேலியும். என்னா சொல்றே?
சின்னான்: சரி, அடுத்த தெருவுலே இருந்து. பத்து மலைப் பிஞ்சியை அணுப்றேன். அப்றம் என்னார்

தருமன்: அதான் போ!
[சின்னான் ஓடுகிறான்]
-----------------

--8--

(தருமன் வீரப்ப முதலியார் வீட்டைத் தட்டுகிறான்.)

தருமன் : நாந்தான் கதவைத் திறங்க?
வீரப்ப: நாந்தான் இண்ணா ? ஆரு?

தருமன்: நான்தான் சிங்கார முதலியார்.
சின்னான் : வாங்க வாங்க. [கதவு திறக்கப்படுகிறது]

வீரப்ப: நீங்க சொன்னதிலிருந்து கதவைப் பூட்டியே வச்சுடறது.
தருமன் : அதுதான் சரி விஷயம் அதிக மொம்மரமா பூட்டுதுங்க.

வீரப்ப: என்னா ?
தருமன் : ஒங்களே தூக்கிப் போய்டறது. அல்லாட்டி அடிச்சி புடறது. பொண்ணே தூக்கிப் போயி வேறு ஆளுக்குக் கட்டிப்புடறது.

வீரப்ப: அதானுங்க அவுங்க தீர்மானம்.
தருமன் : அடியாட்களே ஏற்பாடு பண்ணி புட்டானுவ.

வீரப்ப: ஜயையோ ! என்னா பண்றதுங்க?
தருமன் : தக்க ஏற்பாடு பண்ணாமலா இருப்பேன்? பயப்பட வேண்டிய அவசியம் இல்லியே

வீரப்ப: ஒங்க தயவுங்க. என்னெ காப்பாத்தி வீட்டுக்கு அனுப்றது ஒங்க பொறுப்புங்க.
தருமன்: அவனுவ இந்தத் தெருவுக்கு வரப்போறதா கேழ்வி . நானும் தக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். உயிருக்குப் பயந்தா என்ன ஆவும்?

வீரப்ப: என்னியா அப்டி துணியணும் இண்றிங்க தருமன் : உம் என்னெ சொல்றேன்?
(கதவை யாரோ தட்டுகிறார்கள். அதைக் கேட்ட வீரப்ப முதலி யார் நடுங்குகிறார். தருமனுக்குத் தெரியும் இன்னார் என்று. அதனால் தருமன் வெகு தைரியமாக . "ஆர் அங்கே " என்று அதட்டிவிட்டுக் கதவைத் திறக்க எழுந்திருக்கிறான்.)

வீரப்ப: ஜயையோ தெறக்காதீங்க. தடுக்கிறார். தருமன் திமிறிக் கொண்டு போய்க் கதவைத் திறந்து. "யார்"? என்றான். "பல்லக்குங்க" என்று பதில் கிடைக்கிறது. தருமன்: பல்லக்கா? அப்டிதான் வையுங்க கொஞ்சம். கட்டை முட்டை தர்றேன். அதே போட்டு ஊட்டு எதிரே கொளுத்துங்க. சாவு வீடாட்டம் பாகறவங்க நெனைக்கணும். தெரியுமா? ஆராவது கேட்டா. செதம்பரத்து பெரியவுரு காலராவிலே செத்துப் புட்டாரு. அவருக்கு காலையிலே கல்யாணம் ஆக இருந்தது இண்ணு சொல்லுங்க.

ஆள் : சரிங்க. (தருமன் கட்டை முட்டைகளை எடுக்கப் போகிறான். இவைகளைக் கேட்டிருந்த வீரப்ப முதலியார்.)

வீரப்ப: நீங்க கண்டுபிடிக்க மாட்டேன்றிங்களே. நான் போற மாதிரியே .....
இதற்குள் தெருவிலிருந்து சத்தம் கேட்கிறது. "கல்லு கல்லு எவன் அவன்? உடாதே.'
தருமன் : வந்துட்டானுவ.
வீரப்ப: இங்கே வரக் கூடுமா? தருமன் : வரட்டுமே வந்தா, கெழவர் செத்துப்புட்டாருண்ணு பல்லக்கு தூக்ற ஆள் சொல்லப் போறான். ஆதரமா வந்தவனுங்க 'ஐயையோ' இண்ணு மனசி எரங்கி பூடப் போரானுவ, அவ்வளவு
தானே!

வீரப்ப: நல்ல யோசனைதான்.
[பிணம் இருந்தால் அந்த வீட்டின் எதிரில் தீ மூட்டுவது என்ற வழக்கப்படி தீ எரிகிறது. பல்லக்கும் தயாராக வைக்கப் பட்டிருக்கிறது.]

தருமன் : நீங்க உள்ளியே இருங்க, கதவெ சாத்திக்கினு . இதோ வந்துடுகிறேன் !
வீரப்ப: ஏன் போறீங்க?
தருமன் : அட போம்போதே மூதேவியாட்டம் ஒண்ணும் கேக்காதிங்க?
வீரப்ப: சரிங்க.
[சற்று நேரத்திற்கெல்லாம் தருமன் தன் முகம் மறைய முக் காடிட்டுக் கொண்டு துரைசாமி முதலியார் சகிதம் பல்லக்கு வைத்திருக்கும் தெருவை அடைகிறான். அந்த வீதி முனையில் தற்செயலாகப் பல்லக்கையும் தீ எரிவதை யும் பார்த்தவன் போல் நடித்து:]

தருமன் : நில்லுங்க அங்கே என்னா ?
துரை: தெரியிலிங்களே .
தருமன் : அதுதானே வீரப்ப முதலியார் இருக்கிற வூடு
துரை: தெரியிலிங்களே. நெருப்பு எரியறது மாத்திரம் தெரியுது எனக்கு .

தருமன் : என்னாங்க அது. ஐயையோ!
துரை: என்னாங்க

தருமன் : நெருப்புத் தெரியுதே! ஐயையோ , பல்லக்குத் தெரியுதே! துரை: ஐயையோ, போயி பார்ப்பமே. அடடா
[இருவரும் வீரப்ப முதலியார் வீட்டின் எதிரில் வந்து நிற்கிறார்கள். தருமன் ஒருபுறமாக நின்று கொண்டு துரைசாமி முதலியாரை நோக்கி.]

"அந்த ஆளை மெதுவாக என்னா இங்கேண்ணு விசாரியுங்க" என்கிறான்.
துரைசாமி முதலியார் போய்க் கேட்கிறார்.
"என்னா இங்கே "
ஆள் : நாளைக்கு கல்யாணம் செய்துக்க இருந்தாருங்க அந்தச் செதம்பரத்து பெரியவரு. காலராவுல செத்துப்புட்டாருங்க.
தருமனும் துரைசாமி முதலியாரும் பேசிக் கொண்டே திரும்புகிறார்கள்.

துரை: நாங்க செதம்பரத்திலே இருந்து வந்தோம். அவருக்கு இப்படி ஆச்சி. எனக்கு அவச் சொல்லு ஏற்பட்டுப் போச்சி.
[அழுகிறார்.]

தருமன் : மனசெ தெடப்படுத்துங்க. எனக்குச் சாயந்திரமே சந்தேகம் ஏற்பட்டுப் போச்சு. அத்தோட்டு தான் கேட்டேன். அங்கேயே வேற ஒருத்தருக்குக் கட்டிக் குடுக்க ஏற்பாடு பண்ணலாமா இண்ணு? இப்ப என்னார் 'கலியாணத்துக்காக ஏகப்பட்ட செலவு ஆயிபோச்சி. குறிச்ச நேரத்திலே கலியாணத்தே முடிக்காட்டிப் போனா எனக்குக் கெட்ட பேரு .

துரை: அப்படித்தான் செய்யுங்க மாப்பிள்ளை?
தருமன் : இருக்கான். நல்ல பையன்! துரை: நல்லா இருப்பானா? கண்ணுக்குப் புடிக்குமா பொண் ணுக்கு?

தருமன் : என்னாட்டமே இருப்பான் என்னா பாத்தா அவனெ பாக்கவே வேண்டியதில்லே. அநேகம் பேரு நான் தாண்ணு நெனைச்சி அவங்கிட்டே பேசுவாங்க. முந்தா நேத்து தபால்காரன் அவனைப் பார்த்தான். கும்பிடு போட்டுட்டு என் தபாலே அவங்கிட்டே குடுத்துட்டான். அப்டி.

துரை: அவனெ சம்மதிக்க வைக்கணுமே.

தருமன்: இப்ப ஆகவேண்டிய வேலை அதுதான் நீங்க முத்தால் பேட்டையிலியே சத்ரத்லே இருங்க. ஒங்களே கூட, அந்தப் போக்கிரிப் பசங்க தேடுவதாகக் கேள்வி. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிப்புட்டு ஆளெ அனுப்புறேன். வாங்க. உம்?

துரை: நல்லதுங்க.
-----------------

--9--

கற்கண்டும் தருமனும் மணவறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்னும் தாலி கட்டவில்லை . ராமசாமியும் சீனுவாசனும் ஆக வேண்டிய காரியத்தைப் பொறுப்புடன் கவனிக்கிறார்கள்.

தாலி கட்டப்போகும் சமயம் துரைசாமி முதலியார் மணவீட்டில் நுழைகிறார். மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அவர் முகம் வேறுபடு கிறது. மகா பெரிய முதலியாராகிய சிங்கார முதலியார்தான் மாப் பிள்ளையார் அப்படியானால், அவர் சுயகாரியத்திற்காகப் பல சூழ்ச்சி செய்தாரா? என்பன போன்ற சந்தேகம் அவருக்குத் தோன்றுகின்றன. அதனால் துரைசாமி முதலியார்.

"எல்லாம் சூழ்ச்சியா இருக்குது என்று கூவுகிறார். அதே சமயம் சின்னான் ஓடிவந்து.

"தாத்தா"
என்கின்றான்.
துரைசாமி முதலியார்.
"ஏன்?"
என்கிறார்.
சின்னான் : சிங்கார முதலியாரு பொணத்தண்டே இருந்து சகல காரியத்தையும் பார்க்கிறாராம். உங்களைக் கல்யாணத்தைக் கவனிக்கச் சொன்னாரு.

துரை: அப்ப அவுரில்லையே இவுரு...... - அப்படியா ஓகோ அவுருகூடச் சொன்னார் அவுராட்டமே இருப்பாரு இவுரு இண்ணு. சரிதான்.

தருமன் : (பார்ப்பானை நோக்கி)
ஓய். ஒண்ணும் சாங்கியம் வாணாம். எடு தாலியே.
[மாங்கிலிய தாராணம் தாராளமாக மங்களமாக முடிகிறது.]
[பெண் மாப்பிள்ளை பாலும் பழமும் உண்ட பிறகு தருமன் தனியே துரைசாமி முதலியாரைக் கும்பிடுகிறான். வாய் நிறைய வெற்றிலை குழைய]

துரை: சவுக்கியமாக இருக்கணும்.

தருமன்: (வெற்றிலை குதப்பிக் கொண்டே)
மொதிலியாரு அங்கே இல்லிங்களா?

துரை: இல்லப்பா. அவுரு அங்கே இருக்காரு. அதையேன் இந்த எடத்லே கேக்றே? இருக்கட்டும் ! (மற்றொரு புறம் தனியாக.)

ராமசாமி : தருமா! மெச்சத் தக்க செயல்.
சீனு : ஏன் ஐயரை வைச்சே?
ராமசாமி : கூலிக்காரன் சொன்னபடி கேட்பான் பாப்பான்?

சீனு : ஓகோ! ராமசாமி: நாளைக்குப் பொணம் எழுந்து வருமே?
தருமன் : வரட்டுமே? அது "எழுந்து வார பொணந்தான்".... பாருங்களேன் வேடிக்கையெ

சீனு : தருமன் தனி ராசியப்பா! அனாமத்து மூளை. ஜமாயி தருமா, வர்ரோம். நாளைக்கிச் சந்திக்கலாம்.
தருமன் : ஓ! பேஷா
--------------

--10 --

நன்றாய் விடிந்தது. கல்யாண உடைகளை நீக்கிச் சாதாரண உடையுடன் தருமன் வீரப்ப முதலியாரிடம் வருத்தமான முகத்துடன் சென்று பெருமூச்சோடு உட்காருகிறான்.

வீரப்ப: கல்யாணம் எப்பங்க ராத்திரி என்னா நடந்ததுங்க.
தருமன் : எங்க அண்ணாரிடம் ஆளை அனுப்பி ஏதேதோ புளுகிப் புட்டானுவ.

வீரப்ப: அப்றம் தருமன்: நான் வெளியே வல்லெண்ணா அப்புறம் என்னா ?

வீரப்ப: முடிவு?
தருமன் : முடிவு முடிவுதான். என்னாட்டமே ஒருத்தன் இந்த ஊரிலே இருக்கான். அந்தப் பாவியெ புடிச்சி எல்லாக் காரியத்தையும்
செப்பனிட்டு முடிச்சிபுட்டானுவ.

வீரப்ப: எப்படிண்ணேன்?
தருமன் : அந்த எழவே ஏன் கேகறிங்க? வேறு ஒருத்தனுக்குக் கற்கண்டை கட்டிச் சோபனத்தையும் கையோடு முடிச்சிபுட்டானுவே. இதுக்கெல்லாம் தைரியம் இருக்கணும். அதுதான் ஒங்ககிட்ட பூஜ்யங்க. வீணா எனக்கு இதிலே அவமானம் வந்திட்டுது. உயிரே உட்டுக் கலாமிண்ணுங்கூட முடிவு கட்டி, கவுத்தைக்கூட எடுத்து அறையில உத்தரத்துல கூட மாட்டிபுட்டேன் இண்ணுகூட வச்சிக்கிங்க. அப்புறம் பார்த்தேன். சீ அதுவா பெரிசி; இருக்கிறவரைக் காப்பாத்தி நல்ல படியா செதம்பரத்துக்கு அனுப்பணுமேண்ணு மனசை தெடம் பண்ணிகினு ஓடியாந்தேன்.

வீரப்ப: அப்படியா. உம். அந்த தொரைசாமி மொதலி... ஆஹா! எப்படிச் சம்மதித்தார் ! உம்!
தருமன் : நான் சொல்ற மாதிரியே சொல்லியிருக்கான். என்னாட்டம் இருக்கிற அந்த ஆளு .

வீரப்ப: ஆருக்குக் கட்டி வைச்சிட்டான்?
தருமன் : கட்டிகினவனும் அந்தப் பையன்தான் இண்ணுகேழ் விங்க. என்னா சொன்னான் அவன்? நீங்க செத்து புட்டிங்க காலராவிலெ இண்ணு நேரே சொல்லியிருக்கானுங்க, என்னா அக் குறும்பு இண்றது:

வீரப்ப: ஓகோ . ராத்ரி பல்லாக்கு வச்சிருந்துதே. விசாரிச்சி இருப்பானுவ. ஆள் சொல்லியிருப்பான் நான் செத்துப் போனதாக .

தருமன் : அதான் விஷயம். கலியாணத்துக்காக இத்தனை தூரம் செலவு செய்து வீணா போவலாமா இண்ணு சொல்லியிருப்பான். அப்படீண்ணு சொன்னா துரைசாமி முதலி, சிங்கார மொதலியாரே கட்டிக்றேன் இன்னாரே இண்ணு சம்மதிச்சி புட்டான். அவளும் சம் மதிச்சிபுட்டா . அதான் சங்கதி. இன்னொரு சேதிங்க. ஒங்களெ மெரட் றது இண்ணு சுத்திகினு இருக்காணுவ. நீங்க இப்பவே பொறப்படு செதம்பரத்துக்கு போயி அஞ்சாறுநாள் செண்ணு வறிங்க. என்னா சொல்றீங்க?

வீரப்ப: நான் செத்தாலும் சரிதான். நேரே அந்தத் தொரைசாமி மொதலியே கண்டு நாலு கேழ்வி நறுக்காகக் கேக்கணும். அந்தக் குட்டியையும் அப்டி இப்பவே என் 300 ரூபாயெ அணா பைசாவோடு வைச்சுட வாணாமா அந்த நாயி.

[மகா கோபத்தோடு வீரப்ப முதலியார் கற்கண்டு வீட்டுக்குப் போகிறார். தருமனோ வீரப்ப முதலியாருக்கு முன்னே வேறு வழியாக அதே கற்கண்டு வீட்டுக்குப் போய்க் கலியாண உடை யுடன் கற்கண்டின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுகிறான்.]

தருமன்: (கற்கண்டை நோக்கி) நாளு போவது வீணா? நீ சீக்கிரம் பாடக் கத்துக்கணும்.
கற்கண்டு: அதுக்கென்ன. இப்பவே நோக்குங்கு நல்லா நானா வாணாமின்றேன். ரொம்ப ஆசை யாச்சே பாட்டுண்ணா எனக்கு.

தருமன் : அப்படியா, சின்னான் போட்டா தம்பூரு . கொண்டா தாளத்தோ
கற்கண்டு (சித்தமாகிறது.)
தருமன்: (தாளத்தோடு) மொதல்லே
புள்ளார் தோத்திரம் பாடணும். எப்டி
தெரியுமா?
"ஆதி சிவன் பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா - ஓஹோ
புள்ளையாரப்பா"
சொன்னாத்தானே வரும்.

கற்கண்டு : ஆதி சிவன் பெத்தெடுத்த
புள்ளையா ரப்பா - ஓஹோ
புள்ளையா ரப்பா

தருமன் : ஆ எஞ் செங்கரும்பே ரவை பேசுதே தொண்டையிலே! உம்

சின்னான் : கொட்டுது ரவை! தருமன்: "அம்பிகை பெத்தெடுத்த புள்ளையாரப்பா!"
கற்கண்டு : தருமன்: "சிவபெருமான் பெத்தெடுத்த புள்ளையா ரப்பா"
கற்கண்டு: தருமன் : "செவகாமி பெத்தெடுத்த புள்ளையா ரப்பா!"

கற்கண்டு:
தருமன் : "சிறுத்தொண்டப் பத்தன் கதை
நான் பாடவேணும் - நல்லா
நான் பாடவேணும்
தேவா துணை புரிய, நீ வாவா!"

கற்கண்டு :
தருமன் : நான் சொல்றபடியே சொல்றியே. அப்றம் என்னா? இண்ணைக்கே தோக்க வேண்டியதுதான் தொழிலை.

கற்கண்டு: ஓ கணக்கா . நானா வாணாம் இண்றேன்?
[இதற்குள் அங்கு வந்த வீரப்ப முதலியார் வீட்டின் முன் புறத்தில் உட்கார்ந்திருந்த துரைசாமி முதலியாரை நோக்கி வயிற்ரெரிச்சலாக.]

வீரப்ப: "தொரசாமி மொதலியாரே சரிதானா நீர் செஞ்சது? எத்தினி நாளா தொரசாமி மொதலியாரே காத்திருந்தே, என்னே இந்த மாதிரி வயித்தை எரிய வைக்க? நல்லா இருக்குது மொதலியாரே. நல்லா இருக்குது. எல்லாம் முடிஞ்சு போச்சா? இன்னும் ஏதாவது சொச்சம் இருக்குதா?

துரைசாமி : என்னை நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாது. நான் ஒரு குத்தமும் செய்யலே. அல்லாம் சிங்கார மொதலியார் கட்டளைப்படி நடந்த காரியம்.

வீரப்ப: கலியாணமம் முடிஞ்சி போச்சில்ல?
துரைசாமி : ஆமாங்க.

வீரப்ப: சரி, உம் பொண்ணுக்கு நீர் முடிச்சீர். அதெப் பத்தி என்னாங்க மொதலியாரே. சிங்கார மொதலியாரா இப்டி சொன்னாரு?

துரைசாமி : ஆமாங்க. நீங்க செத்துப்புட்டிங்க இண்ணு சொன்னாரு. நம்ப வேண்டியதா போச்சி.

வீரப்ப : சிங்கார மொதலியாரு அப்படியாப்பட்ட அயோக்யரல் லவே அல்லாம் இதோ (மாப்பிள்ளையைக் காட்டி) இந்த அயோக்யன் செஞ்ச வேலை. அவராட்டமே இருந்தான் இவன். இருக்றானே! பாறேன் ! பிச்சை எடுக்றவனுக்கா வாழ்க்கைப்பட்டெ மோசக்காரி? அனுபவிப்பே. என் கண்ணாலே பார்ப்பேன். தகரக் குவளையெ
கைலே தூக்கித் தெருத்தெருவா பிச்சை எடுக்றதை.

கற்கண்டு: ரொம்ப சந்தோஷமாச்சே தாத்தா? உங்களெ கட்டிகினு அழறதிலியும் பிச்சை எடுக்கறது தேவிலியே, வயிசு மாப்பிள்ளை கூட.

தருமன் : ஐஸ் பால் சர்பத்தாட்டம் அப்டி சொல்லும்
வீரப்ப: அது போவுட்டும். என் பணத்தை எடும். 300 ரூபா! இதே நேரத்லே எடும் என்னாங்காணும் முழிக்குறீரே. மானம் இல்லே

துரைசாமி : (அழுது கொண்டே) என்னா சொல்றே மருமகப்பிள்ளை ?

தருமன் : உம் ! பெரியவரே. நானா மானங்கெட்டவன்? என்ன தெரியாது ஓமக்கு தெரிஞ்சுக்குவிங்க சீக்கிரம் மானிங்காணும் நானு . ஒருத்தரு . ஒண்ணு சொல்லிபுட்டா இந்த உசிரெ அப்படியே உட்டுடுவேங் காணும். பெரியவரே! ஓமக்குச் சேரவேண்டிய 300 ரூபாயெ அந்தச் சிங்கார முதலியார் கிட்டே வண்டி கட்டிகினு போயி பைசல் பண்ணிட்டு வந்துதான் பெரியவரே தாலியெ கைலெ எடுத் தேன். அதுவும் வட்டியோட அந்த வட்டியும் தொடர்வட்டி பெரியவரே! அணா பைசாவோட பெரியவரே! அரைக்காசு சொச்சம் வந்தது : ஒரு காசு குடுத்தேன். அதுவும் - இன்னும் கேளு பெரியவரே! நான் குடுத்த பணத்லே ஒரு ரூபா ராணி ரூபா செல்லாதிண்ணு எடுத் தாந்தாரு . அதையும் ஒத்துக்கின்னு வேற ரூபா கொடுத்தனுப்பினேன்
பெரியவரே, சிங்கார மொதலியாரு விசிறியே வைச்சுட்டுப் பூட்டாரு . இப்பத்தான் பெரியவரே இதோ இருக்கான் கின்னான் -- கொண்டு போயி குடுத்துட்டு வந்தான் பெரியவரே : பணத்தைக் கையிலே வச்சுகினு விசிப் பலகையிலேதான் ஒக்காந்து இருக்காராம் பெரியவரே அப்டி நெனைச்சி புடாதியும் நம்பளே; க்ஷத்ரிய புள்ளை சிங்கக்குட்டி பெரியவரே என்னே திட்டுறிங்களா பெரியவரே! நல்லா இருக்குது. இப்பத்தான் ஒங்களைத்தான் தேடி வந்தானுவ அந்தப் போகறிப் பசங்க. நான்தான் கூரை மழுக்கி அனுப்னேன். பெரியவரே. இது ஒரு மாதிரி ஊரு பெரியவரே! பெரியவரே!

[வீரப்பக் கிழவருக்கு வயிற்றெரிச்சல் ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை . சரேலென்று எழுந்தார் ஆத்திரமாக.]

வீரப்ப : தொரைசாமி மொதலி, சவுக்யமா இரும். கற்கண்டு. அனுபவிப்பே. என் வவுரு எரியற மாதிரி திகதிகிண்ணு எரிஞ்சி புடணும்.
[என்று சொல்லி வெளியிற் போகிறார் சிங்கார முதலியார் வீடு நோக்கி. துரைசாமி முதலியாருக்குக் கொஞ்சம் வருத்தம் வீரப்ப முதலியார் துன்பத்தைக் கருதி.]

கற்கண்டு: ஏங்க. இவுரு நேரே எங்கே போவாரு
தருமன்: அந்தக் கொள்ளையே நீ நேரே பாத்தாத்தான் தெரியும். இங்கியே வாயாலே சொன்னா என்ன பிரயோசனம்?

கற்கண்டு: ரொம்ப வேடிக்கையா இருக்குமா?
தருமன் : ஆயிரந்தலை படைச்ச ஆதிசேஷன் கூட, சிரிக்க இன்னம் பத்து, பதினைஞ்சி தலை கடன் கேட்பான். வரியா இப்பவே அங்கே நான் சொல்லிக்கினு இருந்த சிறுத்தொண்டப் பத்தன் கதையை இன்னும் முடிக்கலே. முடிப்போமே போயி. கொஞ்சந்தான் பாக்கி இருக்குது.

கற்கண்டு : சரி.
சின்னான், கற்கண்டு, தருமன் மூவரும் தம்பூரா, தாளம், படம் இவற்றுடன் போகிறார்கள்.
-------------

--11 --

வீட்டுக் குறட்டில் காவல் காத்திருக்கும் குப்பனை நோக்கி, வீட்டு எஜமானாகிய சிங்கார முதலியார் கூறுகிறார்.

வந்தானா சிறுத்தொண்டப் பத்தன் கதை பாட? இல்லியே? சிறுத்தொண்டப் பத்தன் கதை பையனெ என்னா கஷ்டப் படுத் திட்டுது. பாக்றே இல்லவோ? ராத்திரியெல்லாம். கொல்றாங்க வெட்டுறாங் இண்ணு அலறித் துடிச்சான் இல்லியோ? என்னா நிலையிலே கெடத்தி வெச்சிருக்கு புள்ளெயெ. பாத்தியாடா . தாயி மடியிலே அழுத்திப் புடிச்சிக்கிறாளாம்; தகப்பனார் கத்தியாலே அறுத்தாராம். இதெல்லாம் கேட்டுகினு இருந்தா ரவை பசங்க கதி என்னாகும். ஆயுட்டுதோ

கண்டிப்பாச் சொல்லிப்புட்டேன். அவன் இங்கே இப்ப வந்தாத் தொரத்திப் புடு. இல்லே. என்னே கூப்டு தெரியுமா?

குப்பன் : நல்லதுங்க.
(சிங்கார முதலியார் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போதுதான் கற்கண்டும் தருமனும் சின்னானும் அங்கு வருகிறார்கள். அதே சமயத்தில் வேறு பக்கமிருந்து வீரப்ப முதலியார் காவற்காரக் குப்பனை அடைகிறார். வீரப்பக் கிழவருக்கும் காவற்காரக் குப்பனுக்கும் நடக்கப் போவதைத் தருமன் முதலிய மூவரும் சந்து முடக்கில் ஒளிந்து நின்று கவனிக் கிறார்கள். அவர்கள் இன்னும் படத்தை விரிக்கவில்லை .)

வீரப்ப: (குப்பனை நோக்கி) "என்னங்க முடிவு இப்படியாப் போச்சிங்க?"
குப்பன்: என்னா அது?
(தருமன், கற்கண்டு ஒருபுறமிருந்து சிரிக்கிறார்கள்.)

வீரப்ப: கல்யாணந்தாங்க.
குப்பன்: எந்தக் கல்யாணம்?
வீரப்ப: இந்தக் கல்யாணந்தானுங்க.

குப்பன்: ஏதையா கல்யாணம்?
வீரப்பன் : என்னாங்க அப்டிக் கேக்றிங்களே?
குப்பன்: பின்னே எப்படிக் கேக்க?
வீரப்ப: நீங்க கவனிச்ச காரியம் இப்படி முடியலாங்களா?

குப்பன் : நான் என்னாத்தெக் கவனிச்சேன்?
வீரப்ப: தொரைசாமி மொதலியாருதானுங்க சொல்றாரு அப்படி.
குப்பன் : எந்தத் தொரைசாமி மொதிலியாரு?
வீரப்ப : என்னாங்க நூதனமாக் கேக்றிங்க?

குப்பன் : யாருகிட்டேப் பேசிறீங்க?
வீரப்ப: ஒங்க கிட்டதானுங்க.

குப்பன் : ஒண்ணுமே புரியலிங்களே. என்னே ஆருண்ணு நெனைச்சிப் பேசிறீங்க.
வீரப்ப: சிங்கார மொதலியாரு தானுங்களே நீங்க

குப்பன் : நானில்லை ஐயா. அவுரு உள்ளே இருக்காரு. வருவாரு , காத்திருங்க.
வீரப்ப: நீங்க இல்லிங்களா? அப்டிங்களா? சரிதானுங்க. (வீரப்ப முதலியார் ஒரு புறமாக நிற்கிறார்.)

தருமன்: (பாட்டு: "மாய உலக மல்லோ
இந்த உலகம் - ஆமாம்
இந்த உலகம்
மாயா உலகத்லே வந்துட்டாயா?" -

(பேச்சு) விரிடா சின்னான் படத்தே.

[சின்னான் படத்தை விரிக்கிறான். கற்கண்டு அதே அடியைத் திருப்பிச் சொல்லிக் கொண்டே உட்காருகிறாள். தருமன் உட் காருகிறான். கடைசியில் சின்னான் தம்பூரா மீட்டிக் கொண்டே இருக்க இருவரும் நெருங்கி உட்கார்ந்து கொண்டே ஆரம்பிக்கிறார்கள். காவற்காரக் குப்பன் மயங்குகிறான். தருமனை நோக்கிப் பாடாதே" என்று கூறவும் குப்பனுக்குப் பயம்.]

தருமன் : "சிவபெருமான் வந்தார்.
ரிஷபத்திலே - அந்த
ரிஷபத்திலே
சிவகாமி அம்மனும் கூட வந்தா."

கற்கண்டு : " " "

தருமன் : "ஒன்மனசைச் சோதிச்சண்டா
சிறுத்தொண்டப் பத்தா - ஆமாம்
சிறுத்தொண்டப் பத்தா
ஓடி வந்து சேருங்கடா கைலாசம்."

கற்கண்டு : " " "
தருமன்: "சிறுத்தொண்டப் பத்தன் மத்த
எல்லோரையும் - மத்த
எல்லோரையும்
சிவபெருமான் பாதம் சேர்த்துக் கொண்டார்."

கற்கண்டு : " " "
(இச்சமயம் டாக்டர் சுந்தரமூர்த்தி சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைகிறார்.)

தருமன்: "ஆகையால் மனுஷர்களே
மனுஷர்களே - நீங்க
மனுஷர்களே
அடியாருக் கன்னமிட வேண்டுமல்லோ ."

கற்கண்டு : " " "
கேட் 1: மெய்தானே!
கேட் 2: அன்னதானத்துக்கு ஈடா?
தருமன் : கதை முடியப் போவுது. காசி போட்டாத்தானே?
தருமன்: "காசு பணம் எல்லாம்
கூட வராதல்லோ - ஆமாம்
கூட வராதல்லோ
கடவுளே பத்தி செய்வீர் மனுஷர்களே."

கேட் 1: செத்துப்புட்டா காசு பணம் கூடவா வரப் போவுது?
கேட் 2: உம். அது ஏது?

(டாக்டரும் சிங்கார முதலியாரும் வெளியில் வருகிறார்கள். சிங்கார முதலியார் முகம் களையிழந்து இருக்கிறது.)

சிங்கார : (டாக்டரை நோக்கி) ஒண்ணம் பிள்ளைக்கு ஆபத்து இருக்காதுங்களே?
தருமன்: "சாவது நிச்சயமே மனுஷர்களே
மனுஷர்களே - ஓ
மனுஷர்களே
சாமியின் பதம் சேர்வீர் மனுஷர்களே."

டாக்டர்: என்னாங்க இந்த மூதேவிப் பையனெ இன்னும் வச்சிருக்கிங்க?

சிங்கார முதலியாருக்கு அடங்காத கோபம்.
"அடே காமாட்டி. போமாட்டோ" என்று சத்தம் போடுகிறார்.
(கற்கண்டு எழுந்து ஓட எத்தனிக்கிறாள். அவளையும் ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு.)

தருமன் : "கோபஞ் சண்டாள மல்லோ
மனுஷர்களே -
மனுஷர்களே
கோமானின் பதம் சேர்வீர் மனுஷர்களே."
இப்பத்தானுங்க வசூல் ஆவுது. இதோ முடிச்சிப் புட்ரேனுங்க.

கேட் 1 : இதோ ஆயிபுட்டுதுங்க சாமி.
தருமன் : (கேட்கும் ஜனங்களிடம்) 'நீங்க கேளுங்க' என்று மெதுவாகக் கூறினான்.
"கோபஞ் சண்டாள மல்லோ
மனுஷர்களே - மனுஷர்களே
குஞ்சித பாதத்தே சேருங்களே."

(தருமன் அதிக உருக்கத்தோடு இந்த அடியைக் கூறியதோடு தானும் கும்பிடுகிறான். அதைக் கண்டு. கேட்பவர்களும் கும்பிடுகிறார்கள்.]

தருமன் : நிறுத்திப்புடட்டுமா?
கேட் 1: முடிங்க சொல்லுங்க.
கேட் 2: குறுக்க நிறுத்தலாமா?

சிங்கார : (டாக்டரை நோக்கி) இருக்கட்டுங்க. முடியட்டுங்க.
டாக்டர்: காய்ச்சல் அதிகமா இருக்குது. கொஞ்சம் இறங்கணும். இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. நான் வர்ரேன். 15 நிமிஷம் பொறுத்து.

டாக்டர் போகிறார். சிங்கார முதலியார் பரபரத்த உள்ளத் தோடு நிற்கிறார். குறட்டிலே வீரப்ப முதலியார் நெருங்குகிறார்.)

குப்பன் : இந்தப் பெரியவுரு ஒங்களே தேடறாருங்க. சிங்கார : என்னா சேதி?
வீரப்ப: ஏதோ தாங்க மனவலியா இருக்றிங்க. கெட்டது கெட்ட துங்க. ஐந்நூறு ரூபா ஒண்ணு. துரைசாமி மொதலி கொடுத்த முன்னூறு ரூபா ஒண்ணு . ஆக 800 ரூபாயெ குடுங்க.
சிங்கார சரிதான் யாரிடத்லே குடுத்தேய யாரே கேக்றே?

வீரப்ப: என்னாங்க... நேத்து இதே எடத்லே...... சிங்கார:
(தருமனை நோக்கி) ஏண்டா இவரெ ஏமாத்திப் பணத்தே வாங்கிக்கினியா?
தருமன் : அவுரையே கேளுங்க.

சிங்கார: ஏனையா பெரியவரே! சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடுகிறானோ அவனா?

வீரப்ப: அந்தப் பிச்சைக்கார பையன் கிட்டவா குடுப்பேனுங்க? சிங்கார: அப்படின்னாப் போங்களேன்.

வீரப்ப: நீங்க வீட்டு மூத்தவருங்களா?

சிங்கார: எந்த வூட்டுக்கு? அட அடையாளமே தெரியலிங்க ஒங்களுக்கு. சரியா விசாரிங்க. பெரியவரே.

வீரப்ப: அப்ப நீங்க வாங்கலே பணம்?
சிங்கார: இல்லே.
வீரப்ப: ஏன் ஐயா (குப்பனை நோக்கி) நீங்களும் வாங்கலே!

குப்பன் : இல்லிங்க. சிங்கார: அவன் கிட்டே கொடுக்கலிங்களே?
வீரப்ப: இல்லிங்க.

தருமன்: (இச்சமயத்திலே)
"காண்ப தெல்லாம் பொய்யே
இந்த ஒலகத்திலே - நல்ல
இந்த ஒலகத்திலே
கடவுள் மாத்ரம் மெய்யே மனுஷர்களே.."
(கும்பிடுகிறான்; மற்றவர்களும் கும்பிடுகிறார்கள்.)

சிங்கார: அட காமாட்டி, நிறுத்திட்டுப் போமாட்டோ கதெ சொல் றான் கதெ பாவிப் பையா. கதை கேட்டுத் தாண்டா குழந்தை ஆபத்தாக் கெடக்கறான். தொலைஞ்சிப் போயேண்டா

தருமன் : "இந்தச் சிவ கதையெ
குத்தஞ் சொல் றவுங்க - ஆமாம்
குத்தஞ் சொல்றவுங்க
எரிகின்ற நகரத்திலே உழுவாங்க."

சிங்கார: அடேய கிண்டலா பண்றே என்னே? தோலே உரிச் சிடுவேன்.

கேட் 1: ஒங்களே இல்லையா. நீங்க சும்மா இருங்க.
கேட் 2: கதையெ ஏஞ்சாமி கெடுக்றிங்க.
[கதை கேட்கும் ஜனங்கள் அனைவரும் சிங்கார முதலியாரை வெறுப்பாகப் பார்ப்பதைச் சிங்கார முதலியார் உணர்கிறார்.]

சிங்கார: வேறு இடத்திற்கு அவனே அழைச்சிக்கினி போங்க.
தருமன் : இதோ முடிஞ்சி போச்சிங்க.
"பணக்காரர் என்று சொல்லிக்
கிருவங்கொள்ளா திங்க - நீங்க
கிருவங்கொள்ளா திங்க
(எங்கப்பன்) பரமசிவன் பாதம் நெனையுங்க."

சிங்கார: என்னடா சொன்னே?

கேட் 1 : முட்டாக் கோவிச்சிக்கிறிங்களே?

கேட் 2: என்னங்க சாமி பண்ணுவிங்க? கடிச்சித் திண்ணுப் புடுவிங்களா?
[இவைகளைக் கேட்டுக் கொண்டே டாக்டர் வருகிறார்.]
சிங்கார : என்னா போக்கிரித்தனம் பண்றானுங்க இவன்கள்!

டாக்டர்: அவனே ஆதரிக்க ஜனங்கள் இருக்கும் போது நாம் என்னா செய்கிறது?

சிங்கார : "இந்தச் சிவகதையைக் குற்றம் சொல்லுகிறவர்கள் எரியும் நரகத்திலே விழுவாங்க" என்று பாடுகிறான் என்னைக் குறித்து. அதே மாதிரி அந்த ஜனங்களும் ஏமேலே கோவிச்சிக்கிறாங்க. என்ன முட்டாள்தனம்

டாக்டர்: "முட்டாள்தனம். அதற்கு ஜனங்கள் ஆதரவு இருக்குதே. அப்படி இருக்கிற வரைக்கும். அவன் போக்கிரித்தனம். ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு இவைகள் இருந்துதானே தீரும்.

[டாக்டர் உள்ளே போகிறார். சிங்கார முதலியார் மகா கோபத் தோடு தருமனை உறுத்துப் பார்த்தபடி நிற்கிறார். அச்சமயத் தில் வீரப்ப முதலியார் தொடங்குகிகறார்.]

வீரப்ப: அப்ப என்னாங்க ஏம் பணத்துக்கு ஒரு வழியுமில் லிங்களா?

சிங்கார : அடச் சீ போங்காணும். பைத்தியமா உமக்கு பூடும்; இங்கே நிற்கப்படாது.

[வீரப்ப முதலியார் அந்த அதட்டலின் சத்தத்தால் விழுந்தடித்து எழுந்து நடக்கலுற்றார்.]

தருமன் : "இந்தச் சிவகதயெ
சொல்லிய பேர்கள் - நல்லா
சொல்லிய பேர்கள்
இன்பத்தை எந்நாளும் அடைவாங்க."

சிங்கார: இம் அப்றம். தருமன் : இந்தச் சிவ கதயெ
கேட்டவர் யாரும் - இப்ப
கேட்டவர் யாரும்
எம்பெருமான் பாதம் சோவாங்க."

சிங்கார: இனிமே இந்தப் பக்கம் வருவியோ?

[சின்னான் படத்தைச் சுருட்டுகிறான். தருமனும் கற்கண்டும் எழுந்து நிற்கிறார்கள்.]

தருமன்: "இந்தக் கதை அருமை
தெரியாத மனிதர் - ஆமாம்
தெரியாத மனிதர்
எருமைமாடாப் பிறந்து திரிவாங்க."

சிங்கார : அடே
கேட் 1: ஞாயந் தானுங்களே?
கேட் 2: பின்னென்னாங்க?
[சிங்கார முதலியார் வீட்டுக்குள் போய் விடுகிறார். ஜனங்கள் போகிறார்கள் ஒரு புறமாக.]

கற்கண்டு: அந்தக் கெழவர் போறத்தே பாருங்க பாவம்.

தருமன் : (தாளம் போடுவது போல் வெறுங்கையால் பாவனைக் காட்டிக் கொண்டே.)
"பாவம் பொய் புண்ணியம் பொய்
மனுஷர்களே - ஓ
மனுஷர்களே
பரமசிவன் மெய்யல்லோ எப்போதும்."

கற்கண்டு: பெரியவர்க்கு அந்த முந்நூறு ரூபா குடுக்கலியா நீங்க? குடுத்துப் புட்டதாய்ச் சொன்னிங்களே சிங்கார மொதிலியார் கிட்ட.

தருமன் : "காசும் பொய் ரூபாயும் பொய்
மனுஷர்களே -
மனுஷர்களே - இந்தக்
கற்கண்டும் நானும் மெய் எப்போதும்."

கற்கண்டு: 500 ரூபா வேறே வாங்கினீங்களா பெரியவுரு கிட்டே

தருமன்: "பெரியவர் பொய் சின்னவர் பொய்
மனுஷர்களே - ஓ
மனுஷர்களே
பிழைப்பது மெய் என்றன் கற்கண்டே"
--------------

2. பொறுமை கடலினும் பெரிது
(நகைச்சுவை நாடகம்)

[முத்துப்பாக்கம் பெரிய எஜமான் ஓர் சுயகாரியப் புலி. அவர் தம் காரியத்தில் அதிக அக்கறையும் சுறுசுறுப்பும் உள்ளவர் பிறர் காரியத்தில் மகா மந்தம்.
முத்துப்பாக்கம் 50 வீடுகள் உடைய கிராமம், நமது பெரிய எஜ மான் ஊருக்கே பெரிய எஜமான். மிகப் பெரிய மிராசுதார். அவருக்கு 16 வயதுள்ள பிள்ளையாண்டான் உண்டு. அவரை ஊராரும், வீட்டுக் கணக்கர் . ஆட்களும் சின்ன எஜமான் என்பார்கள். சின்ன எஜமான் தவிர 8. 5. 3. 1 வயதுள்ள 4 பசங்கள் உண்டு . அதிகாலையில் வெளிக்குப் போய், பெரிய எஜமான் தம் வீடு நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கிறார். பரிதாப முகத்துடன் வீட்டுக் கணக்கர் பின் தொடர்கிறார்)

கணக்கன் : எஜமான் வீட்டில் என் மனைவியைப் பாம்பு கடித்து விட்டது.

பெ.எ.. (இந்த வார்த்தையைக் கேட்டதில் பதைபதைப்பு ஏதுமின்றி) சாந்தலிங்கம் நேற்று வட்டிப் பணம் கொடுத்தானா?

கணக்கன் : கொடுத்தான். வைத்யரை இட்டு வந்து காட்டினேன். சீக்கிரமாக, பெரிய எஜமானிடம் ஓடி. மருந்து கேட்டு வாங்கி வா என்று சொன்னார் வைத்யர்? ஓடி வந்தேன்.

பெ.எ... அந்த முத்துசாமி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? எப்போதுதான் பணம் கொடுப்பான்?

கணக்கன்: இந்த மாதத்திலேயே கொடுத்து விடுவதாகச் சொன்னான். வந்துவிடும். வைத்தியரிடம் பாம்புக் கடி மருந்து இல்லையாம். உங்களுக்குச் செய்து கொடுத்தாராம் போன மாதம். அவசரமாகக் கொடுங்கள்.

பெ.எ.: விழுப்புரத்தில் இப்போது என்ன சினிமா நடக்கிறது? கணக்கன்: இந்திப் படம். கொஞ்சம் அவசரமாகக் கொடுத்தால் தேவலை எஜமான்.

பெ.எ.: பொறுமை கடலினும் பெரிது. கணக்கன் : இதுக்குக் கூடவா?

பெ.எ. : சின்னசாமியைக் கணக்குப்பிள்ளையாய் வைத்துக் கொள்ளச் சொல்லி. உன்னை நீக்கிவிடச் சொன்னார்; என்னிடம் தொந்தரவு பண்றாரே.

கணக்கன் : உங்க சித்தம். மருந்து இருக்குதல்ல உங்க கிட்ட
[பெரிய எஜமான் தம் வீட்டுத் திண்ணையை அடைந்து விட்டார்.]

பெ.எ.: (உள்ளிருப்பவரை நோக்கி) பாயைக் கொண்டு வந்து போட்றா. தலைகாணி எடுத்து வா . காலெல்லாம் வலிக்குது.

கணக்கன் : உட்காரீங்களே. மருந்து அவசரமாச்சே எஜமான். (இதற்குள் பாய் போடுகிறான் ஓர் ஆள். தலையணை போடு கிறான் ஒருவன். கால் பிடிக்கிறான் ஒருவன்.)

பெ.எ: . எந்த வைத்யா ? கணக்கன் : வேலுசாமி.

பெ.எ: உம்... கையைப் பிடிடா. [இதற்குள் கணக்கன் இந்தப் பாவியின் அட்டகாசம் பொறுக்க முடியாமல், பெரிய எஜமானின் வீட்டினுள் புகுந்து, அங்கு இருக்கும் சின்ன எஜமானிடம் கூறுகிறான்.)
கணக்கன் : சின்ன எஜமான், என் மனைவியைப் பாம்பு கடித்துவிட்டது. மருந்து இருக்குதாம் இங்கே. அவசரமா எடுத்துக் கொடுங்களேன்.

சி.எ.: அப்படியா, அப்பாவிடம் இருக்கு. கேட்டியா?

கணக்: அவர் எப்போது வாரது? அதற்குள் மனைவி ஒழிஞ்சி பூடுவாள் போலிருக்கே.

சி.எ. : (வெளியில் தன் தகப்பனை நோக்கி) அப்பா பெட்டிச் சாவி கொடுங்க. மருந்து வேணுமாங் கணக்கப் பிள்ளைக்கு

பெ.எ. காப்பி சாப்பிட்டாயா? என்ன பலகாரம் வச்சா அம்மா?

சி.எ. : தோசை சொஜ்ஜி சாவி கொடுப்பா . பாம்பு கடிச்சிட்டதாமே கணக்கப்பிள்ளை வீட்டில்.

கணக்: உடனே மருந்து கொடுக்கணும் என்று வைத்தியர் பறக்கிறார்.

பெ.எ. : வரதராஜலு கடிதம் போட்டானே அதை எடு தம்பி.
[சின்ன எஜமான் எரிச்சலுடன் உள்ளே போகிறான்.]

கணக்: என்ன ஆச்சோ வீட்டில் மருந்து இருக்குதல்ல எஜமான்?
[இதற்குள் ஓர் ஆள் தினசரி ஒன்றைக் கொண்டு வந்து கொடுக்க ; அதை வாங்கி விரித்துக் கணக்கனை நோக்கி.]

பெ.எ.: உள்ளே கண்ணாடியை எடுத்து வா.

கணக்: வாசித்த பிறகுதான் எழுந்திருப்பிங்களோ ! ஐயோ. அவசரமாச்சே எஜமான்!

பெ.எ... பொறுமை கடலினும் பெரிது. (விசிறிக் கொண்டிருந்த ஆள் ஓடிக் கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, பெரிய எஜமான் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்து விடுகிறார்.)

கணக்: சாவியைக் குடுங்களேன் எஜமான். எப்போ வாசிக்கிறது? எப்போ மருந்து கொடுக்கறது?

பெ.எ.. என்ன கடித்தது?
கணக்: பாம்பு. [வாசிக்கிறார் பெரிய எஜமான்.]

கணக்: பாம்புங்க.
பெ.எ.. மருந்து இல்லியே.
(கணக்கர் கையுதறிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறார்.) (கணக்கனின் வீட்டில் நடப்பது.)

உறவினர்: இப்படிக் கொண்டு வா மருந்தை ஆர் வீட்டில்? அவசரமாகக் கொஞ்சம் தண்ணீர் கொண்டா . மருந்தெ வாயில் போட்டுத் தண்ணியை ஊத்தணும்.
[உடனிருக்கும் வைத்தியர் கையை நீட்டுகிறார்.)

கணக்: எங்கே? அந்தப் பாவி இந்நேரம் காத்திருக்க வைத்து மருந்து இல்லேண்ணு சொல்லிவிட்டானே!

(என்று கூறி, அங்கு வளர்த்தி வைத்திருக்கும் தன் மனைவியை நோக்கி

தனபாக்கியம் !(தனபாக்கியம் வாயில் நுரை தள்ளுகிறது.)

வைத்தியர் : நா.. நா..... நான்..... பே.... போய்.. வ..... வ..... வ. வர்றேன்.

[போகிறார். கணக்கனும் உடன் போகிறான். இதற்குள் பெரிய எஜமானுக்குக் காலை அமுக்கிக் கொண்டிருக்கும் இரிசனின் தகப்பனாகிய ஓர் கிழவன். பெரிய எஜமானை நோக்குகிறான்.]

கிழவன் : பேரன் ஊருக்குப் போறான் பாட்டி கூட அரை ரூபா குடுங்க, குடுத்தனுப்ப வாணாங்களா எஜமான்?

பெ.எ.: தெக்கு வெளியிலே பயிரெல்லாம் எப்படியிருக்கு; பாத்தியா கிழவா?

கிழவன் : பாத்தேன். நல்லா இருக்கு. அதோ நிகறாங்க! தோ வந்துட்றேன் இண்ணு ஓடியாந்தேன். குடுங்கே.

பெ.எ . முதுகே உருட்டு. இரிசன் : எங்க பெரியவரை அனுப்பனா தேவலை எஜமான். (இதற்குள் விசிறிக் கொண்டிருந்த குப்பனின் இடது கையில் தேள் கொட்டி விடுகிறது.)

குப்பன் : ஐயோ! (பார்க்கிறான்) தேள் கொட்டிப் புட்டுதுங்க.

பெ.எ .. இந்தப் பக்கம் வந்து விசிறு. பொறுடா . [மறுபக்கம் வலியோடு விசிறுகிறான். சீனனை இருவர் தூக்கி வந்து பெரிய எஜமான் எதிரில் தெருவில் கிடத்துகிறார்கள்.)

கொள்ளு வேலுப்பையன் இவனெ மண்டையை ஒடைச்சி புட்டு. ஊட்லே பூந்து பொண்டுவளே அடிச்சிபுட்டு. பணம் நகையெல்லாம் தூக்கிகிணு நொச்சிக் காட்டுக்கு ஓடிப்புட்டான். போலீஸ்க்கு ஆளெ உடுங்க . ஆக வேண்டியதே பாருங்க எஜமான்.

பெ.எ. அங்காரு? மனைவி
கனகம் : (உள்ளேயிருந்து வந்து) ஏன்?
[பெரிய எஜமான் பேப்பர் வாசிக்கிறார்.]

கொள்ளு வேலுப்பையன் ஓடிப்புடுவாங்க. கிழவன் : கொஞ்சம் தயவு பண்ணுங்க. (காயப்பட்டுக் கிடக்கும் சீனன் தத்துக் குத்தலான நிலையில் இருக்கிறான்.)

சீனன் : என்னெ காப்பாத்துங்க. அவனெ புடிக்க ஏற்பாடு பண்ணுங்க.
வைத்த "ம." [மருந்து என்று சொல்ல "ம" எழுத்தில் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தையடைகிறார். தெற்று வாயராகிய வைத்தியர்]

கனகம் : ஏன் கூப்பிட்டிங்க?
பெ.எ . இதோ வந்துவிட்டேன். கணக்: என் மனைவிக்கு உயிர் போவுதுங்களே. எழுந்திருங்களேன்.

பெ.எ.: பொறுமை கடலினும் பெரிது.
(பேப்பர் வாசிக்கிறார். உற்றுக் கவனித்தபடி, சுப்ரமண்ய குருக்கள் வருகிறார்.)

சுப்ர: வரணும். இடது கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி.)

பெ.எ .: வாங்க. சாமி. உக்காருங்க.

சுப்ர : உட்கார்ந்துக்கில்லே. கொஞ்சம் அவசரமா வந்தேன். நம்ம ஆதலே இன்னிக்கு நம்ம மருமான் ஊருக்குப் போறது. அவன் ஆம்படையாளெ கூட்டினு.

பெ.எ . ராமையா குருக்கள் சௌக்யமா இருக்காரா?
சுப்ர: இருக்கார். மருமான் வந்தா செலவு இருக்காதா 10 ரூபாய் கொடுங்க . நிக்க வச்சிட்டு வந்தேன்.

பெ.எ . கடுதாசி கிடுதாசி போட்டாரா?

சுப்ர: போட்டார். நான் அப்புறம் வந்து சொல்றேன். என்னை அனுப்புங்க..

[பெரிய எஜமான் பேப்பர் பார்க்கிறார் பழையபடி.]

சுப்ர: என்னை அனுப்புங்க. சாவகாசமா பாருங்களேன் பேப்பரை.

பெ.எ .. ஒங்கமேலே ஒரு பிராது. சுப்ர : என்னா அது?

பெ.எ. (பேப்பர் பார்க்கிறார்) கணக்: ஆபத்துங்க. (பரிதாபமாக)

கிழவன் : அரை ரூபாய்தானுங்க. (பரிதாபமாக)
இரிசன் : எங்க பெரியவரே அனுப்புங்க. (பரிதாபமாக) குப்பன் : தேளுங்க. (பரிதாபமாக)
கொள்ளு திருட்டுப் பையன். (பரிதாபமாக)
சுப்ர: 10 ரூபாய். (கையைப் பிசைந்தபடி.)
சீனன் : ஐயோண்ணு போவுது உயிர்.
(என்றிவ்வாறு அவரவர் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள் வாய் ஓயாமல்.)

மனைவி: (பெரிய எஜமானை நோக்கி) ஏன் கூப்புட்டிங்க
பெ.எ.: கலியாண விஷயம் என்ன?
கனகம் : அவன் கலியாணம் இப்பவாண்டாம் இண்றான். சம்பாதனைக்கு வழிதேடிய பின்னேதான் செய்துக்குவேன் இண்ணு சொல்றான்.

பெ.எ . (கணக்கனை நோக்கி) நம்ம பையன் பெரியவனாப் போயிட்டான்; கலியாணம் பண்ணணுமா இல்லையா?
கணக்: ஆபத்துங்க.

பெ.எ.: (திடுக்கிட்டு. நிதானித்து) ஓகோ உன் சேதியா? அது இருக்கட்டும். கண்ணுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்தா போறது.
(கிழவனை நோக்கி) ஏன் கிழவா பொண்ணா நமக்கு அகப்படாது.

கிழவன் : அரை ரூபாய் தானுங்க.
பெ.எ... (திடுக்கிட்டு நிதானித்து) ஓகோ - நல்ல இடத்துப் பெண் ஒண்ணு இருக்கு . உங்க அப்பாவை அனுப்பிக் கேக்கலாமிண்ணு நினைக்கிறேன்.
(இரிசனை நோக்கி) ஏன்?
இரிசன் : எங்க பெரியவரே அனுப்புங்க.

பெ.எ.: என்னடா மடப்பயலே.
இரிசன் : அவசரங்க. பெரியவரே அனுப்புங்க.
பெ.எ .: ஓகோ... ஏண்டி கனகம்? ஜமீன்தார் மகள் எப்படி? படிச்ச பொண்ணு, நல்ல அழகு. (குப்பனை நோக்கி) ஏன்?

குப்பன் : தேளுங்க.

பெ.எ.. தேளா! (நிதானித்து) ஓகோ உன் சங்கதியோர் (மனைவியை நோக்கி) ஜமீன்தார் அந்தஸ்தில் குறைஞ்சவராகனகம் (கொள்ளுவை நோக்கி) அவர் அந்தஸ்து எப்படி?

கொள்ளும் திருட்டுப் பையன். குப்பன் : ஓகோ அதுவா?

பெ.எ.: அடடா , என்னடா அப்படி சொல்லிட்டியே ஜமீன்தாரே. கொள்ளு: திருட்டுப் பையன் ஓடிடுவாங்க.

கனகம் : எங்க அண்ணன் மவ நல்லா இல்லியா? அவளே ஏங் கட்டப்படாது? நாங்க என்னா பொற மாட்டமா? பரியம் ஏதாவது குடுங்க. ஏன் குருக்களே?

சுப்ர: பத்து ரூபாய்.
கனகம் : அட, ஒன்னே பாடையிலே வைக்க. குருக்களா நீ மூஞ்சை பாரு. திருட்டுப் பையனாட்டம்.

சுப்ர: மருமானை ஊருக்கு அனுப்பணும். 10 ரூபாய் தேவையிண்ணேன்.

கனகம் : ஓகோ (பெரிய எஜமானை நோக்கி) நீங்க கட்டாட்டிப் போனா எங்கூட்டிலே சோறு கொதிக்காமே பூடாது. கிராக்கி இல் லாமல் இல்லே. (இச்சமயம் சீனன் எழுந்து விழுகிறான். அவனைக் காட்டி) சீனனுக்குத் தெரியும் எங்க வீட்டு நெலவரம்.

சீனன்: ஐயோண்ணு போவுது உயிரு.
கனகம் : ஏங் குடும்பமா?

சீனன் : போலீஸுக்குச் சொல்லுங்க; மண்டை ஒடஞ்சி போச்சிங்க.
பெ.எ.: உனக்கென்ன செய்யணும்ண்றே ? கிழவன் : அரை ரூபாய் நாழி ஆவுதுங்க.

பெ.எ.: சரி, ஒனக்கு?
கொள்ளு: வேலு ஓடிப்புடுவானுங்க. சீக்கிரம் போலீஸுக்கு ஆள் அனுப்பணுங்க.

பெ.எ.: சரி நீ
குப்பன்: தேள் கொட்டி புட்டது : போறேனுங்க. மருந்து இருந்தா போடுங்க.

பெ.எ. சரி. நீர்?

வைத்: "ம"
[என்ற எழுத்தைத் தாண்டி மருந்து என்று கூறி முடித்து. பெட்டியில் என்பதற்கு "பெ" என்ற எழுத்தில் மாட்டிக்கொண்டு, அவஸ்தைப் பட ஆரம்பிக்கிறார்.]
கணக் மருந்து. பெட்டியில் இருக்கிறதாமே! அவசரம் எஜமான்!

பெ.எ . சரி, நீ
இரிசன் : எங்க அப்பாவை அனுப்புங்க அவசரமா.

பெ.எ.: சரி, நீங்க?
சுப்ர: அதான். 10 ரூபாய் கேட்டேனே.
பெ.எ.: சரி.
(உள்ளே போகிறார். அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். பெரிய எஜமான் சற்று நேரம் சென்ற பின். ஒரு பொட்டணத்துடன் வெளியே வருகிறார்.
கணக்கர் கை நீட்டுகிறார் ஆவலுடன். பொட்டணத்தைக் கணக்கனிடம் கொடுத்துக் கூறுகிறார்.)

பெ.எ. இந்தப் பொட்டணத்தைக் கோயில்லே குருக்கள் இருப்பார். அவர்கிட்ட கொடுத்துட்டு அவசரமா ஓடியா.

[பொட்டணத்தை வாங்காமல் தலை தாழ்த்தி நிற்கிறான். ]

கணக்: ஐயோ எனக்கிண்ணு நெனைச்சேன்.
பெ.எ.. திண்ணையில் அதை வைத்து) அவசரமா கொடுத்துட்டு ஓடியா.
[உள்ளே போகிறார். சிறிது நேரம் சென்று எட்டணாவுடன் வெளியில் வந்து]

பெ.எ.: இந்தா (அரை ரூபாயைக் காட்டி) யாரங்கே?
கிழவன் : நான்தாங்க. (ஆவலாகக் கைநீட்டி நெருங்குகிறான்.)

பெ.எ. (தேள் கொட்டப்பட்ட குப்பனை நோக்கி) குப்பா. இதைக் கொண்டு போய் ராமசாமி பிள்ளை கேட்டார். நல்லா நெய்யா வாங்கிக் கொடுத்துட்டு ஓடியா.

கிழவன் : எனக்கு எஜமான்? என்னை அனுப்புங்க.
குப்பன் : கொட்டு வாயில் ரொம்ப கடுக்குதுங்க.

பெ.எ . சரி. நான் அனுப்புகிறேன். (உள்ளே போகிறார். சற்று நேரம் சென்று ஒரு நோட்டோடு வெளி வருகிகறார்.)

சுப்ர: ரொம்ப உபகாரமா போச்சு (என்று கூறிக் கையை நீட்டுகிறார்.)

பெ.எ .. நாளைக்கு ஒரு விசேஷம். அதற்குச் சில்லறை வேணும். வைத்யரே மாத்தி வாரீரா.... அப்புறம் ஆகட்டும்..... இருங்க. இதோ வந்துட்டேன். (சிறிது நேரம் சென்று குப்பனை) பல்லு குச்சி நல்ல வேப்பங்குச்சா பாத்து ஒடிச்சிகினு வா. இதோ சாப்பிட்டு வர்றேன்.

[உள்ளே போகிறார். இதற்குள் ஒரு பையன் ஓடி வந்து கணக்கனைப் பார்த்து]

பையன் : ஒங்க பொண்டாட்டி செத்துப்புட்டாங்க.
கணக்: பூட்டாளா. ஐயோ!

பெ.எ.. பூஜை முடிச்சிபுட்டு வர்ரேன்.
கணக்: அட காமாட்டி. (என்று கூறி ஓடுகிறான்)
குருக்கள்: சரியா போச்சு ! (போகிறார்)
(மற்றவர்களும் முணுமுணுத்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் போகிறார்கள்.)

மறுநாள் [பெரிய எஜமான் திண்ணையில் உட்கார்ந்திருக்க, மனைவி எதிரில் நிற்கிறாள்.]
பெ.எ. நேற்றே தெரியும்? அவன் ஒரு மாதிரியிருந்தான். காசிமாலை இருக்கா? அதையும் எடுத்துக்கின பூட்டானா?
கனகம். அதையுந்தான்.
பெ.எ. அட பாவி, எங்கே போயிருப்பான்? மொத்தம் பதினாயிர ரூபாய் நகை இருக்கும். ரொக்கம் ஆயிரம் அல்லாத்தையும் எடுத்துக் கினு போயிட்டானே. பணம் நகை போகட்டும். பிள்ளை இருக்கிற
இடம் தெரிந்தா போதும்.
பொறுமை கடலினும் பெரிது
57
கனகம். அதுதானே நான் நினைக்கிறேன். ராத்ரி கிளம்பி நேரே ரயிலுக்குப் போயிட்டான் இருட்டில் காலை 3 மணி ரயில் ஒத்துக்கிச்சி. எங்கியோ பூட்டான்.
(தந்தியுடன் ஒரு பியூன் சைக்கிளில் வருகிறான்.)

பெ.எ.: (தந்தியைக் கொடுக்க அதை வாசிக்கிறார்) இப்ப என்னா மணி 3 இருக்கும். ஐயோ! இன்னும் ஒரு மணி நேரந்தானே இருக்குது. அவசரமா ரயிலுக்குப் போகணுமே; ஐயையோ!

கனகம்: என்னா சங்கதி? கேட்கறேனே.

பெ.எ... சென்னையிலே நாளை காலையில் கப்பல் ஏறப் போறானாம் பையன். மோரிசுக்குப் போக. அதுக்குள்ளே நாம் வந்தாதாம் பார்க்க முடியுமாம் ! கிளம்பு. இன்னும் ஒரு மணி நேரந்தான் . 6 மைல் இருக்கு ரயில் ஸ்டேஷனுக்கு : கிளம்பு

[கனகம் உள்ளே ஓடி உடுத்துகிறாள். மூட்டை கட்டுகிறாள். பிள்ளைகளுக்கு உடுத்துகிறாள். வெகு பரபரப்புடன் பெரிய எஜமான் வெளியில் ஓடுகிறார். கணக்குப் பிள்ளையின் வீட்டெதிரில் நின்று]

பெ.எ. கணக்குப் பிள்ளை ஓடியா. [கணக்குப் பிள்ளை வருகிறான்.]

பெ.எ. : ரயிலுக்கு அவசரமா போகணும் வண்டிக்காரனைக் கூப்பிடு . ஓடு.
கணக்: நாளைக்குத்தான் மூணாநாள். கொஞ்சம் கிரியை விசேஷமாக நடத்த யோசனை.

பெ.எ.: நான் என்ன சொல்றேன். அவசரம் ஓடு. கணக்: பொறுமை கடலினும் பெரிது.
பெ.எ . என்னா மடயா சீக்கிரம் வண்டி.
கணக்: என்ன விசேஷம்?

பெ.எ. ஐயோ! கோம்பேறி நாயே.
[என்று கூறி வண்டிக்காரனாகிய குப்பனின் வீட்டிற்கு ஓடி எதிரில் நின்று ]
குப்பா ஓடியா வண்டி கட்டு.

குப்பன் : (எதிரில் நின்று) தோ வந்துட்டேன். இந்தக் கையைத் தூக்க முடியலிங்க. தேள் கொட்டிச்சி பாருங்க. என்னாங்க...

பெ.எ.: கதை சொல்லி மறுக்க நாழியில்லை ... அவசரம் ஓடியா. வண்டியைக் கட்டு வா.

குப்பன்: (தன் வீட்டுக்காரியை நோக்கி) அங்காரு? வெற்றிலைப் பையை எடு. தோ வர்ரேன் போங்க.

பெ.எ... என்ன வர்ரியா? புறப்படு. ஓடு சொல்றேனே.
குப்பன் : பொறுமை, கடல் இருக்குது பாருங்க. அதுக்கீடு பெரிசுங்க.

பெ.எ... அடே வாடா சீக்கிரம். குப்பன் : சரி.
[நகருகிறான்; பெரிய எஜமான் அவனைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறார்.]

பெ.எ.: போய் வண்டியைக் கட்டு , இதோ கொள்ளுப் பையனைக் கூட்டிகினு ஓடியாரேன். ஓடு.
[அவசரமாக ஓடுகிறார்.)

[பெரிய எஜமான் வீட்டின் எதிரில் கட்டை வண்டி நிற்கிறது. அதன் கூண்டு தனியாக ஒரு புறம் இருக்கிறது. அதைப் பழுது பார்க்க ஆரம்பிக்கிறான் குப்பன் பெரிய எஜமான், கொள்ளு. சீனன், கணக்கன் வருகிறார்கள்.]

பெ.எ. கணக்கப்பிள்ளை. புஸ்தகத்தேயெல்லாம் எடுத்து உன் அறையிலே வைச்சிக்கோ. நான் வர இரண்டு நாள் ஆவும். என்னடா செய்யறே குப்பா? போதும் பழுது பார்த்தது : கூண்டே எடுத்து மூடு சீக்கிரம்.

குப்பன் : சரிங்க. [கூண்டைத் தூக்கி வருகிறான். பெரிய எஜமான் உள்ளே போகிறார்.)
பெ.எ.: போக வேண்டிய மூட்டை. முடிச்சி, பொட்டி. போழை யெல்லாம் ஒரு பக்கம் எடுத்துவை. கனகம். அப்றம் உடுத்தலாம்; சீக்கிரம் நாழி ஆவுது.

[இதற்குள் கொல்லைப் புறமிருந்து கழுதை ஒன்று வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது. கூடத்தில் எடுத்துப் போக வேண்டிய சாமான்களைக் கனகம் கொண்டு வைக்கிறாள். இடுப்பில் ஒரு பிள்ளையைச் சுமந்தபடி ஒவ்வொன்றாக.]

அவையாவன :
வேடுகட்டிய ஒரு தவலை. ஒரு மூட்டை. ஒரு கூஜா செம்பு. சர்க்கரை சீசா, சோப்பு பெட்டி, பாலாடை, சீப்பு முதலியன அடங்கிய ஒரு சிறு தகரப்பெட்டி, பிள்ளைத் தடுக்கு. மெத்தைச் சுருணை. தலையணைக் கட்டு. பலகாரம் அடங்கிய ஒரு டின், வெற்றிலை பாக்குப் பெட்டி, செருப்பு ஒரு ஜோடி, அப்போது கட்டிக் கொள்ள வேண்டிய புடவை, அப்போது போட்டுக் கொள்ள வேண்டிய நகை.
ஒட்டியாணம். கண்ணாடி, பிள்ளைகளின் உடைகள், நகைகள்

பெ.எ. : (டிரங்கில் உடுப்பு அடுக்கிக் கொண்டே ) கணக்கப் பிள்ளே .

கண: இதோ புஸ்தகங்களை எடுத்து வைக்கிறேன்.

பெ.எ.: ஆரையாவது அனுப்பு! கொல்லைக் கதவை சாத்தச் சொல்லு... நானே சாத்தி விடுகிறேன். ஓடிச் சாத்துகிறார்.
(கனகத்தை நோக்கி) ஆச்சா? நாழிகை ஆகிறது. சாமான்களையெல்லாம் வண்டியிலே எடுத்து வை.

[வெளியில் போகிறார். வண்டியில் கூண்டு மூடுகிறவனைப் பார்த்து]

"போதும்டா" (கூண்டை மேலோடு வைத்து விடுகிறான்.)
குப்ப ன் : சரி. | பெ.எ. வண்டியைக் கட்டு: மாட்டே ஓட்டிவா.
[குப்பன் கொல்லையை நோக்கிப் போகிறான்.]

பெ.எ.. (உள்ளே தலைவாரிக் கொண்டிருக்கும் கனகத்தை ஓர் அறை அறைந்து) முண்டே நாழிகை ஆகிறது.
[என்று கூறி, டிரங்கு தடுக்கக் கீழே விழுகிறார். எழுந்து சாமான்களை எடுத்துக் கொண்டு, வண்டியை நோக்கி ஓடி, அதில் வைத்து. அவசரமாகத் திரும்பி, மற்றும் சாமான்களை எடுத்து வருவதற்குள், கழுதை ஓர் அறையில் புகுந்து விடுகிறது. கனகமும் சாமான்களை வண்டியில் கொண்டு வந்து வைக்கிறாள்.]

பெ.எ.: தவலை வேண்டாம். [என்று கூறி அதை அறையில் வைக்க நுழைகிறார். கனகம் அவசரமாகக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டி விடுகிறாள். அதே அறையில் கழுதையும் இருந்ததால் அதனிடம் பெரிய எஜமான் உதைபடுகிறதால் ஏற்படும் கதறல் வீட்டைப் பிளக்கிறது.]

பெ.எ... ஐயையோ! ஐயையோ!
[கனகம் கதவைத் திறக்க, பெரிய எஜமான் பல் உடைந்தபடி வெளியே வந்து விழுகிறார். அறையில் கனகம் நுழைகிறாள். இது பெரிய எஜமானுக்குத் தெரியாது. அவசரமாக எழுந்து கதவைச் சாத்துகிறார். கழுதை கனகத்தை உதைக்கிறது.]

கனகம்: ஐயையோ! ஐயையோ!
[பெரிய எஜமான் கதவைத் திறக்கிறார். மண்டை உடைந்தபடி கனகம் வெளியே வந்து விழுகிறாள். கழுதை இருப்பது தெரிகிறது.

பெ.எ .. அதைரியப்படாதே. எழுந்திரு. வண்டியிலேறு. (கழுதையை நோக்கி) உஸ். சீ. (தமக்குள்) உள்ளே கிடந்து ஒழி. (கதவைச் சாத்துகிறார்.)

[அடுத்த அறையில் தம் 8 வயதுப் பையன் என்னமோ எடுக் கிறான். அது தெரியாமல் பூட்டி விடுகிறார். 8 வயது பிள்ளை தவிர மற்றப் பிள்ளைகள் சாமான்கள் வண்டியில் ஏற்றுமதி நடந்து விட்டது.]

பெ.எ. கணக்கப்பிள்ளை பத்திரம். நான் மூன்று நாளில் வந்து விடுகிறேன்.
(வண்டியில் ஏற , கூண்டு சாய்கிறது)

குப்பன் : பயப்படாதிங்க. இதோ சரிப்படுத்தி விடுகிறேன். (என்று இறங்க முயலுகிறான்.)

பெ.எ. கூண்டு இல்லாவிட்டால் பாதகமில்லை. ஓட்டு [கூண்டு இல்லாத வண்டி ஓடுகிறது. ]

கனகம்: எல்லாச் சாமான்களும் சரியாய் எடுத்து வைச்சாச்சோ. என்னமோ?

பெ.எ .: வச்சாச்சி ரயில் அகப்படுமா குப்பா?
குப்பன் : ஆகா நல்லா.
பெ.எ .: ஓட்டு வண்டியை.
குப்பன் : ஏய்......
[மாட்டை அபாரமாக அடித்து விரட்டுகிறான். வண்டியில் கடையாணி இல்லாததால், இரு சக்கரமும் ஏக காலத்தில் கழலப் பார் நிலத்தில் உட்கார்ந்து விடுகிறது. பிள்ளைகள் கீழே உருளுகின்றனர். கனகம் விழுந்து எழுந்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறாள். 8 வயதுள்ள பிள்ளை பெயர் ராமு.]

கனகம் : ஐயோ ! ராமு எங்கே?
[இதற்குள் எதிரில் ஒரு கூண்டு வண்டி வருகிறது. பெ.எ. கைகாட்டி நிறுத்துகிறார். சாமான்கள் ஏற்றப்படுகின்றன. பிள்ளைகள் ஏற்றப்படுகிறார்கள்.]
கனகம்: ராமுவைக் காணோமே?
(என்று கூவுகிறாள்.)

பெ.எ.: மணி ஆகிவிட்டது. ஓட்டு வண்டியை. [என்று கத்துகிறார்.]

குப்பன் : பொறுமை கடலினும் பெரிது. [என்று கத்துகிறான். வண்டி ஓடுகிறது.) கனகம்: ராமுவைக் காணோமே. ஐயோ.

பெ.எ .. ராமு எங்கே? (இறங்கி. வண்டி வந்த வழி நோக்கி ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து) வீட்டிலேயே தங்கிவிட்டானோ?

கனகம். அப்படித்தான் இருக்கும்.
(பெ.எ . வீட்டை நோக்கி ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து.)

பெ.எ... வீட்டுச் சாவி எங்கே ?
கனகம் : என்னிடம் கொடுக்கலியே.
பெ.எ.: போடி முண்டே (என்று ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து)
கனகம் கணக்கப் பிள்ளையிடம் இருக்குமா சாவி!

கனகம் : இருக்கும்.
பெ.எ.. வண்டியை ஓட்டு. டிக்கட்டு வாங்கிவிடு. நான் எப்படியாவது வந்து விடுகிறேன். ஆம்பளை!

கனகம் : சரி.
[வண்டி ஓடுகிறது. பெரிய எஜமான் ஓடுகிறார் வீட்டை நோக்கி. கணக்கப்பிள்ளை வீடு சாத்தியிருக்கிறது. பெரிய எஜமான் கதவைத் தட்டுகிறார் விரைவாக.]

பெ.எ. கணக்குப்பிள்ளை !
கணக்: (உள்ளேயிருந்தபடி) யாரடா அவன்?

பெ.எ.: நான்தான் பெரிய எஜமான்
கணக்: ஏன் என்ன சங்கதி. நீங்களா? ரயில் அகப்படலியா?

பெ.எ .: சாவி கொடு.
கணக்: எந்தச் சாவி?
பெ.எ. : வீட்டுச் சாவி?
கணக்: ஏன்?
பெ.எ.: பையனை வீட்டிலே விட்டுச் சாத்திவிட்டுப் பூட்டேன், அவசரத்தில்!

கணக்: அட்டா! அதுதான் அறையில் சத்தம் கேட்டதோ. பையனை அறையில் வுட்டுச் சாத்திவிட்டிங்க.

பெ.எ... ஐயையோ என்ன பண்ணுவேன். அட்டா. வாயேன் வெளியே. என்ன பண்றே?
கணக்: இதோ வந்துட்டேன்!

பெ.எ.: சாவியாவது குடேன்.
கணக்: இதோ வந்துட்டேன்.

பெ.எ .: என்னடா பண்றே பாவி .
கணக்: பொறுமை கடலினும் பெரிசு. எண்ணெய்த் தலையோடு இருக்கேன். இதோ வந்துவிட்டேன்.

பெ.எ.: சாவியைக் கொடுத்தனுப்பேன்.
கணக்: வீட்டில் யாரும் இல்லை .

பெ. எ .: ஜன்னலால் போடு.
கணக்: எதை?

பெ.எ.: அறைக்கதவு சாவியை.
கணக்: என்னிடம் ஏது?

பெ.எ.: பின் எங்கே ?
கணக்: எங்கே வச்சிங்க?

பெ.எ... வீட்டுக் கதவு சாவி கொடு. கணக்: அறையில் தானே பிள்ளையிருக்கான்.
பெ.எ...
(கதவை உடைக்கிறார். கதவு உடைந்து விடுகிறது. எதிரில் நிற்கிறான் கணக்கன்.)

சாவி கொடு.
கணக்: பொறுமை கடலினும் பெரிது. இந்தாங்க சாவி.
[சாவியை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறார் பெரிய எஜமான்.]
[அவசரமாக வீட்டைத் திறக்கிறார். கொத்துச் சாவியிலிருக் கும் வேறு சாவியைப் போட்டு பிறகு. சரியான சாவியால் திறந்து உள்ளே ஓடுகிறார். அறைக்கதவு சாவியைத் தேடு கிறார். அகப்படவில்லை . அங்கிருந்த கடப்பாறையால் அறைக் கதவை உடைக்கிறார். கழுதை வெளியே ஓடி வருகிறது.]

[பிறகு இரண்டாவது அறைக் கதவை உடைக்கிறார். பிள்ளை படுத்துத் தூங்குகிறான். அள்ளியெடுக்கிறார்.]

பெ.எ... ஓடியா தம்பி. தெரியாமல் சாத்திவிட்டேன்.
(இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார் வீட்டைச் சாத்தாமல்.)
[சிறிது நேரம் செல்ல)

பெ.எ. அடடா! வீட்டைப் பூட்டவில்லை. போ தம்பி ஸ்டேஷ னுக்கு. இதோ வந்துட்றேன்.

[வீட்டை நோக்கி ஓடுகிறார். பையன் சோகமாக அங்கு உட் கார்ந்து விடுகிறான். திரும்பி பெ.எ . ஓடி வருகிறார். பையன் சோர்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவனைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்.) (எதிரில் கனகம் வண்டி ஓடி வருகிறது.]

பெ.எ.. என்ன சங்கதி? ஏன்? கனகம் : பணம் என்னிடம் கொடுக்கவில்லையே டிக்கட் வாங்க

பெ.எ.. சரி சரி. என்னிடம் இருக்கிறது. (வண்டியில் அனைவரும் ஏறிக் கொள்ள, வண்டி ஸ்டே ஷனை நோக்கி ஓடுகிறது. ரயில் ஸ்டேஷனை அடைகிறது.)

பெ.எ.. (புக்கிங் கிளார்க்கை நோக்கி) டிக்கட் கொடுங்க.
கிளார்க்கு : எந்த ஊருக்கு
பெ.எ.: பட்டணம் (பையில் கையை விடுகிறார்.)
கிளார்க்கு : எத்தனை?
பெ.எ.: மூணரை. சீக்கிரம் கொடுங்க.
கிளார்க்கு : பணம்?

பெ.எ.: அடடா, இதோ வந்துட்டேன்.
(தம் மனைவியை நோக்கி) மணிபர்ஸ் எங்கே?
கனகம் : யாரைக் கேட்கிறீங்க

பெ.எ.. எங்கே என் டிரங்கு?
கனகம் : உங்கள் டிரங்கை எடுத்து வைக்கலே.
பெ.எ .: ஐயையோ! (குப்பனை நோக்கி) என்ன பண்ணுவேன்?
(ரயில் போய் விட்டது.)
------------

3. இன்பக் கடல் (காது நுகர் நாடகம்)


1. பட்டு வீடு

பட்டு: யார்?
அரச : அரசப்பன்.
பட்டு: ஓ! வாருங்கள் ; உட்காருங்கள் அத்தான்.

அரச : என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி?
பட்டு: ஒன்றுமில்லை .... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டு மென என்று பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள்.

அரச : நான்தான் சொன்னேனே, என் காதல் பித்துக்காக உன்னையும், திரண்ட சொத்துக்காக அந்தத் தங்கத்தையும் (நான்) மணந்து கொள்ள வேண்டுமென்று இதை இனிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டாமா, நீ உன் பெற்றோருக்கு?

பட்டு: ஒப்புவார்களா ... உம்.... ஒப்புவார்கள் .... ஒப்பித்தான் தீர வேண்டும் அவர்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் என்னைப் பறிகொடுத்தேன் உங்கட்கு இப்போது இதுவும் சொல்வீர்கள். எதுவும் சொல்வீர்கள். நல்லது அத்தான்! ஆமாம், முதலில் எனக்கும் உங்கட்கும் திருமணமா? அல்லது தங்கத்திற்கும் தங்கட்குமா?

அரச: தங்கத்தைத்தான் முதலில் மணந்து கொள்ள வேண்டும்.

பட்டு: அத்தான், கேளுங்கள். நான் பட்டு. முதலில் பட்டணிந்து தானே. பிறகு தங்கத்தையணிவார்கள்?

அரச : இல்லையே. தங்கத்தைப் பெற்றால் தானே பட்டைப் பெற முடியும்? இதில் இன்னொன்னு . என்னென்று கேள்.
பட்டு: என்ன?

அரச: தங்கம் என் தாய் மாமன் மகள். இருந்தாலும் உன் அக மொத்த தோழி. அவளையும் என்னையும் ஒன்றுபடுத்தும் தொல்லை என்னைச் சேர்ந்ததில்லை.
பட்டு: ஐயோ அத்தான். தங்கம் அந்த இளவழகன் மேல் உயிரை வைத்திருக்கிறாள். தங்கத்தின் தந்தையோ. மகள் விருப்பத்திற்கு மாறாக நடப்பதில்லை. மேலும் நோயுற்றவர் தந்தை. தாயற்றவள் தங்கம்.

அரச : தங்கம் என் மைத்துனி , நினைவிருக்கிறதா?

பட்டு: எனக்கு நினைவிருக்கிறது. அவளுக்கு நினைவிருக்க வேண்டும் அத்தான்.
அரச : என் கண்ணல்ல. நீ முயன்றால் அவளுக்கு அதை நினைவூட்டலாம். நீ முயன்றால் என்னோடு கூட்டலாம். மனமார முயற்சி செய். என் பங்கில் இரு. உன்னை நம்பி இருக்கிறேன். என்னை நீ நம்பு .

பட்டு: நம்பியதின் பயனைத்தானே இதோ அறுவடை செய் கிறேன். இன்னும் நம்ப வேண்டும், நம்புகிறேன்.

அரச : வருந்தாதே பட்டு. இனிமேலும் நீ வருந்தும்படி நான் நடக்க மாட்டேன் முகத்தைக் காட்டு - என் கருத்தை முடி. என் கண்ணல்ல. [முத்தத்தின் ஒலி.]
-------
2. தங்கம் வீடு

பட்டு: தங்கம் - எங்கே தங்கம்?
வேரைக்காரி : அவுங்கப்பாகிட்டே பேசிக்கிட்டு இருக்காங்க.
அதோ வாராங்களே .
தங்கம் :

பாட்டு எடுப்பு
முல்லைமலர் கேட்டேன்
இல்லை என்று சொல்லாமல்
முடித்துக்கொள் என்றாரடி தோழி

பட்டு: (பேச்சு)
ஓகோ அப்பாவா சொன்னார் தங்கம்? சொந்த மாமனைக் கட்டிக்கொள்ளச் சொல்லவில்லையா?

தங்கம் :
துணை எடுப்பு
கொல்லையில் வளர்ந்தாலும்
புல்லில் மணமிராதே கொடுந்தொலைவில் அடர்ந்து படர்ந்து
கிடந்த நறு (முல்லை )

அடி
மாங் கொம்பைத்
தழுவிக் கொண்டிருக்கும் - அந்த
மலர்க்கொடியை அறுப்பார் உண்டா?
பூங்காட்டில் உலவிடும் வண்டைப் - போ
போ என்றார் என்ன பயன் கண்டார்?
தூங்கா விளக்குக்கும்
சுடருக்கும் ஏற்பட்ட
தொடர்பை அறுப்பதாலே இடர்வந்து சேராதா (முல்லை )

'சாகும் போது உன் தாய் சொல்லியபடி நீ உன் மாமனை மணந்துகொள்வதுதானே' என்று சொன்னார் தந்தை. நான் சொன்னேன். மாமாவின் நடத்தையை என் தாய் இப்போது இருந்து பார்த்தால். அப்படிச் சொல்லமாட்டார்கள்' என்றேன். என்றேனா, சரியம்மா சரியம்மா. நீ இளவழகனையே மணந்து கொள்ளம்மா' என்று முடித்துவிட்டார் வாய் குளிர , மனம் குளிர

பட்டு: திருமணம்?
தங்கம் : இன்னும் நாலைந்து நாளில்
பட்டு: மிக்க மகிழ்ச்சி தங்கம், எனக்கு விடை கொடு.
தங்கம் : ஏன் பட்டு?
பட்டு : அம்மா விரைவில் வரச் சொன்னார்கள். நீ படித்துக் கொண்டிரு.
தங்கம்: சரி.
-------

3. தங்கம் வீடு
[காற்செருப்பின் நடை ஓசை.]

தங்கம் : வேலைக்காரி, வெளியிற்போ. வெளியிற் போ.
வேலை : ஏம்மா?
தங்கம் : அவர் வருகிறார். போ போ .
வேலை: வரலையம்மா.
தங்கம் : அதோ காலடி ஓசை. வேலை: ஏம்மா கவுந்து படுத்துகிட்டிங்க கட்டில்லே
தங்கம் : அதெல்லாம் கேளாதே. போ...

இளவழகன் : [நாற்காலி இழுக்கப்படும் ஓசை
செம்பு விரலால் தெரிவிக்கப்படும் ஓசை ]
தங்கம் தங்கம்!
[உடம்பில் கையால் தட்டப்படும் ஓசை ]தூக்கமா?

தங்கம் : இல்லை அத்தான் இல்லை. நீங்கள் வந்தவுடன் கையால் தொட்டு எழுப்புவதுதானே என்மேல் கைபட்டால் ஒடிந்தா போகும், தாமரைத்தண்டு சடுக்கென்று ஓடிவது போல?

இளவழகன் : இப்படி என்று தெரிந்தால் தப்படிப்பதுபோல் சாத்தியிருப்பேனே. அது போகட்டும் தங்கம், சேதியைச் சொல்ல மாட்டேன் என்கிறாயே?

தங்கம்: சொல்லத்தான் தொடங்குகிறேனே அத்தான்.
இளவழகன்: காயா? பழமா?
தங்கம் : எப்படித் தெரிகிறது உங்கட்கு
இளவழகன் : உன் முகம் என்னமோ முந்தாநாள் பூத்த தாமரை மாதிரி இருக்கிறது.

தங்கம் : அப்படியானால் கெட்ட செய்திதானே? ஆமாம். உங்களை நான் மணந்து கொள்ளக் கூடாதென்று அப்பா சொல்லிவிட்டார்.

இளவழகன் : ஆ. அப்படியா? தங்கம் : இல்லையில்லை. நல்ல செய்திதான். இளவழகன் : மெய்தானா தங்கம்?

தங்கம் : மெய்தானா? என் முகம் முந்தாநாள் மலர்ந்த தாமரை போலிருப்பது?
இளவழகன் : இந்தா . இன்று இதழ் விரித்த செந்தாமரை உன் முகம்.

தங்கம்: 'மாமனை மணந்து கொள்கிறாயா?' என்றார் அப்பா. 'முடியாதப்பா' என்றேன் நான். அம்மா சாகும் போது அப்படித்தானே சொன்னாள் என்றார். இப்போது அம்மா இருந்தால் அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்றேன். யாரை மணந்து கொள்ள நினைக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன்...

இளவழகன்: என்ன சொன்னாய்?
தங்கம் : உங்கள் பேரை. இளவழகன் : எனக்கு இரண்டு பேர் உண்டு. எதைச் சொன்னாய் என்றால்?

தங்கம்: சொன்னேன். அவர் தெரிந்து கொண்டார். அப்புறம் என்ன ?

இளவழகன் : அப்பாவிடம் நீ சொல்லியபடி சொல். சொல்லுகிறாயா இல்லையா? நான் போகிறேன்.

தங்கம்: "இளவழகனை" என்றேன். இளவழகன்: அப்படிச் சொல் காது குளிர -
தங்கம்: மனமார ஒப்பினார். சரி என்று செப்பினார். இதில் இன்னொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி என்ன என்று கேளுங்கள்.

இளவழகன் : என்ன என்று வேறு கேட்க வேண்டும். விரைவில் சொல்ல மாட்டாயா தங்கம்?

தங்கம் : இன்னும் இரண்டு மூன்று நாட்களில் திருமணம்: ஏன் என்று கேளுங்கள்.
இளவழகன்: ஏன்?

தங்கம் : அப்பாவுக்கு உடல் நலம் இல்லை . சீர்கேடு முற்றிக் கொண்டு வருகிறது. அத்தான். இன்றைக்கே மாப்பிள்ளை வீட்டார் அப்பாவைக் கண்டு பெண் கேட்டு, நாளையும் குறித்துவிட வேண்டும். விரைவில் போய் இதைச் சொல்லுங்கள். உங்கள் பெற்றோருக்கு.

இளவழகன்: அப்படியானால், நான் விரைவில் வீட்டிற்குப் போகவார்

தங்கம் : உம்; பின்னென்ன? இளவழகன் : சரி, போய் வருகிறேன். (நாற்காலி தள்ளப்படும் ஓசை )

தங்கம் : இன்னும் சிறிது நேரம் இருங்கள் அத்தான்; உட்காருங்கள்.
இளவழகன் : இருக்கவும் கூடாது. போகவும் கூடாது.

தங்கம் : விரைவில் போனால்தான். அவர்களை விரைவில் அனுப்ப முடியும் என்கிறீர்களா?
இளவழகன் : நானா சொன்னேன்? நீதானே தங்கம் சொன்னாய் என் கரும்பல்ல, விடை கொடு , போய் வருகிறேன்.
-------------

4. தங்கம் வீடு

அரசப்பன் தந்தை: தெ.செங்கேணி. ஐயா என்ன செய்கிறார்?

வேலைக்காரி : ஆரு. தங்கம் அவுங்கப்பாதானே .
அரசப்பன் தந்தை : ஆமாம்.
வேலைக்காரி : அவுங்களுக்குத்தான் உடம்பு நல்லால்லியே சும்மா வந்து வந்து தொல்லை குடுத்தா?

அரசப்பன் தந்தை : சீ ஓடிப்போய் ஓங்க மச்சான் வந்திருக் காருண்ணு சொல்லு.

வேலைக்காரி : ஐயா.. ஐயா....

தங்கத்தின் தந்தை: ஏன்?

வேலைக்காரி : அரசப்பா அவுங்க அப்பா வந்திருக்காரு தூங் கறார்ண்ணு சொல்லிப்புடட்டுமா?

தங்கத்தின் தந்தை: சீச்சி அனுப்புடி.
அரசப்பன் தந்தை: எப்படி இருக்கிறது உடம்பு?
தங்கத்தின் தந்தை : சீர்கேடு மிகுதியாகிறது. (இருமல் ஓசை ) ஐந்தாந் தேதி தங்கத்தின் திருமணம் (இருமல்) இடையில் மூன்று நாள்தான் இருக்கிறது. (இருமல்)

அரசப்பன் தந்தை. மாப்பிள்ளை ? தங்கத்தின் தந்தை: இரிசப்பன் மகன் இளவழகன் (இருமல் ) நல்ல பையன். (இருமல்) படித்த பையன்.

அரதப்பன் தந்தை: உரியவன் இருக்கையில் ஏன் அப்படி?

தங்கத்தின் தந்தை : அல்ல அல்ல. (இருமல்) தங்கம் இளவழ கனைக் கட்டிக் கொள்வேன் என்னும்போது? - வருத்தப்படாதே. இருந்து நடத்து நீதிருமணத்தை . (இருமல்) படுத்த படுக்கையை விட்டு என்னால் நகர முடியாது. (இருமல்)

அரசப்பன் தந்தை : நம் பையனுக்கு உங்கள் பெண்ணைக் கொடுப்பதால் சொத்து அயலில் போகாதே

தங்கத்தின் தந்தை : அதெல்லாம் எனக்குத் தெரியும்.
அரசப்பன் தந்தை : சரி. தங்கத்தின் தந்தை : கணக்கப்பிள்ளை இருக்கிறார். ஆட்கள் இருக்கிறார்கள். ஆகவேண்டியதைப் பார். தொடங்கு. போ...
---------
5. தங்கம் வீடு

இளவழகன்: என்ன ஊன்றிப் படிக்கிறாய்?
தங்கம் : வாருங்கள் அத்தான். நல்ல வேளை. என் மாமா இருக்கிறாரே அவர், எழுதுகிறார் காதற் கடிதம் படியுங்கள்.

இளவழகன் : 'செந்தாமரை மலர்க்கும் செவ்விதழ்க்கும் தேனுக்கும் நொந்தே கிடக்கும் நுவல் வண்டு வந்தால் வரவேற்ப துண்டா மலர்க்காடே? ஓர் சொல் தரவே நான் தந்தேன் இவ்வேடு. மாமா வண்டு. மைத்துனியாகிய மலர்க்காட்டைக் கேட்கிறது. உன்னிடம் வந்தால் வா என்று வரவேற்பாயா? பதில் எழுது ஒரு பேச்சில், வா என்று சொன்னால், தங்கம் உன் வாய் மலரா கசக்கும்?' பதிலா எழுதுகிறாய்? படி தங்கம்.

தங்கம் : செந்தா மரைமலர்க்கும் செவ்விதழ்க்கும் தேனுக்கும் வந்தால் வரவேற்க ஒண்ணாது - செந்தேனை வீழ்த்துகின்ற தோட்டம் தோட் டக்காரன் மேன்மையினை வாழ்த்துமணப் பந்தலுக்கு வா. இதை உங்கள் கையாலேயே அதோ இருக்கும் அவர் ஆளிடம் கொடுத்து அனுப்புங்கள் அத்தான்.

இளவழகன் : இதை எடுத்துப் போய்க் கொடப்பா. வேலைக்காரன்: நல்லதுங்க. தங்கம்: ஏன் அத்தான். விடிந்தால் திருமணமாயிற்றே. உடுப்பெல் லாம் தைத்தாகிவிட்டதா?

இளவழகன் : விடிந்தாலா? இன்றிரவுதான் திருமணம். இன்றிரவு நாலு மணிக்கு . இன்னும் சட்டை தைத்து முடியவில்லையாம். சட்டை யிரைவிட்டால் என்ன தங்கம்?

பாட்டு (தென் பாங்கு)
அன்பிருந்தால் போதுமன்றோ
அங்கரக்கா என்ன பயன் தென்பழந் தமிழ்ச் சொல்லாளே
தங்கமே தங்கம்
உன் பழக்கம் பொன்னுடையாய்
மேனி குலுங்கும்.

தங்கம் : நான் பாடட்டுமா?
பாட்டு (தென்பாங்கு)
பொன்மெருகு மெனியன்றோ
புழுதிபடக் கூடாதையா மன்னவன் போல் சட்டை போட்டுச்
சிங்கமே சிங்கம்
மணவறைக்கு வந்தாலே
என் ஆசையும் பொங்கும்.

இளவழகன் : மெத்தச் சுவை தங்கம். நான் போகிறேன். வேலை இருக்கிறது.

தங்கம்: சரி அத்தான்.
-----

6. தங்கம் வீடு

உறவு 1: மூன்று மணி ஆகிறது. மேளக்காரர் நடையில் படுத்திருக்கிறாங்க. எழுப்புங்க.

உறவு 2: ஏன் முருகேசு . வாழ மரத்தெ கட்றது எப்போ ? எழுந்திரப்பா .

உறவு 3: அடுப்ப மூட்றதுதானே. சமையல்காரரே.

உறவு 4: வரவேண்டிய பெரியவர்களுக்கு வண்டி அனுப்பி யாச்சா?
[இசை முழக்கம் ]
-------

7. பட்டு வீடு

அரச : பட்டு. நீ திருமண வீட்டுக்குப் போகாதே. இங்கேயே இருந்துவிடு. ஏன் என்றால். அங்கே கலவரம் ஏற்படும்?

பட்டு : என்ன?
அரச : திருமண வேளையில் இளவழகன் இருக்க மாட்டான்.
பட்டு: ஏன்?
அரச : அவனை அங்கில்லாமல் செய்து விடுவேன் எப்படியாவது.
பட்டு: உயிருக்குக் கெடுதி நேர்ந்துவிடக் கூடாது அத்தான்.

அரச : இல்லை இல்லை. மயக்க மருந்தைக் கொடுத்துக் கடற் பாலத்தின் அடியில் போட்டு வைத்துவிட எண்ணுகிறேன்.

பட்டு: இறந்து விட்டால்?
அரச: இறக்க மாட்டான் பட்டு. வசம்பின் சாற்றையும் எலு மிச்சைச் சாற்றையும் கலந்து கொடுத்தால் உடனே மயக்கம் தீர்ந்து விடும். தாலி கட்டும் வேளை அவன் இல்லாவிட்டால் நான் தங்கத் திற்குத் தாலி கட்டி விடுவேன். அப்பாவும் அதுதான் சரி என்றார். இங்கேயே இரு.

பட்டு: சரி.
----------

8. தெரு

அரச: ராமு காருக்கு எண்ணெய் ஊற்றியாயிற்றா?
ராமு: ஆச்சிங்க.
அரச: மாப்பிள்ளையைக் கூப்பிடு விரைவாக.
ராமு: மாப்பிள்ளே , அரசப்பன் கூப்பிடறாரு.

அரச : இளவழகரே. ஏறுங்கள் காரில், அந்தப் படவா இன்னும் தைக்கிறான் உடுப்பை. ஒரு முறை போட்டுப் பார்க்க வேண்டுமாம். உம் விடப்பா காரைக் கடற்கரை பக்கம். ஏறுங்கள், ஏறுங்கள். பும்பும்,
(கார் ஊதும் ஓசை)

இளவழகன் : திருமணம் முடிப்பதென்றால், எவ்வளவு தொல்லை அரசப்பன்!

அரச : அதை ஏன் கேட்கிறீர்கள் இளவழகரே காலைச் சிற்றுண்டியோடு சரி. இதுவரைக்கும் பச்சைத் தண்ணீரை வாயில் ஊற்றவில்லை. கேட்டால் கேளுங்கள். விட்டால் விடுங்கள். வானத்தின் கீழேயிருந்து சொல்லுகிறேன். என்னவோ சீமை இலந்தம் பழமாம். சென்னையிலிருந்து வந்தது. வாயிற் போடுங்கள் இதை.

இளவழகன் : நன்றாயிருக்கிறது. (இச்சி என்று சப்பும் ஓசை )
அரச : ராமு. மாப்பிள்ளையைக் கூப்பிடு இப்போது.

ராமு: மயான காண்டந்தானா?

அரசப்: இல்லை. மாலை வரைக்கும் மாப்பிள்ளைக்கு மழையும் வெய்யிலும் ஒன்றுதான். நிறுத்து காரை. இவனைத் தூக்கு . நடந்து போ. கடற்பாலத்தின் அடியில் கிடத்து. அப்படித்தான். இந்தா இந்தத் துணியால் மூடு, உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும். வா போகலாம் (பும்.... பும்)
-----------

9. தங்கம் வீடு

ஐயர் : பொண்ணு மாப்பிள்ளைக்கு வஸ்திராபரணம் ஆகட்டும். நாழிகை ஆகிறது.

உறவு 1: வாம்மா தங்கம், இப்படி வா. பொண்ணு தோழி ஆரு தைனாகி?

உறவு 2: அவத்தான் அயிலாண்டம். அது கூடவா தெரியாது.

உறவு 3: சித்தப்பா, மாப்பிளே எங்கே சித்தப்பா?

உறவு 4: இங்கேதான் இருப்பான் நீ வெத்லே கட்டே பிரிச்சி பட்டி கட்டு. ஆரத்தெ கொண்டா. சந்தனம் கரை.

இளவழகன் தாய் : ஆமாம். நம்ப பையன் இளவழகன் எங்கே?
இளவழகன் தந்தை : இங்கேதான் இருப்பான்.

இளவழகன் தாய் : எங்கியும் பார்த்தேனே. இல்லியே.
ஐயர்: பொண்ணு மாப்பிள்ளை வரணும், வாத்யம் வாத்யம்!

இளவழகன் தந்தை : நிறுத்தப்பா வாத்யத்தை . பையன் எங்கே!

உறவு 1: ஏன் வீராசாமி, பையனே பாத்தியா. குப்புசாமிக்குத் தெரியுமே. ஏன் குப்புசாமி, மாப்பிள்ளை எங்கே ?

உறவு: நான் பார்க்கவேல்லே. அதோ வராரே அரசப்பன் அவரெ கேட்டா தெரியுமே.

இளவழகன் தந்தை : என்னா அரசப்பா. இளவழகன் எங்கே யப்பா ?

ஐயர்: முகூர்த்த வேளை தப்பிடப்படாது சீக்கிரம்.
இளவழகன் தாய்: பிள்ளைய யாராவது எங்கேயாவது இட்டுப் போய்க் கொன்னுட்டாங்களோ என்னமோ தெரியலியே.

அரச : நானும் இத்தனை நேரமாய் அலைந்துவிட்டேன். இளவழகன் ஊரிலே இருக்கிறதாகத் தெரியவில்லை .
இளவழகன் தந்தை : ஐயோ ஏன்?

அரச : இளவழகன் ஒருத்தியை வைப்பாட்டியாய் வைத்துக் கொண்டிருந்தாராம்.
இளவழகன் தந்தை: ஐயோ, அப்படிப் பட்டவனல்லவே.

அரச : கேளுங்கள். அவளும். அவனைப் பெற்றவர்களும் இளவழகனை மடக்கி, நீ திருமணம் செய்து கொண்டால் நாங்கள் போகிற வழி என்ன என்று சண்டை போட்டார்களாம். அதன் மேல் இளவழகன் நான் தங்கத்தைத் திருமணம் செய்து கொள்ளவில்லை; உன்னையே நான் திருமணம் செய்து கொள்ளுகிறேன்' என்று அந்த வைப்பாட்டியையும் வைப்பாட்டியின் உறவினரையும் கூட்டிக் கொண்டு, வெளியூருக்குப் போய் விட்டாராம் என்று கேள்வி.

இளவழகன் தந்தை: அடடா என்ன மாறுபாடு.
உறவு 1: பெரிய முட்டாத்தனமால்ல இருக்கு. ''
உறவு 2. அப்போ என்னா பண்றது. ஒண்ணும் கெட்டுப் புடலே. இதோ இருக்கார் மலையாட்டம் அரசப்பன். இழுத்து வைத்து மணத்தை முடியுங்கள்.

உறவு 3: ஆமாமாமம் :

உறவு 2: பெத்தவங்களே கேக்கணுமே!
உறவு 1: மாப்புள்ளையெப் பெத்தவங்க ஒத்துக்கறாங்க : அந்தாண்ட பாத்தா பொண்ணு ஓடையவங்க யாரு? அந்த மாப்பிள்ளையே பெத்தவங்கதானே? இது என்ன வெக்கக் கேடாக்குது.

உறவு 2: அது சரிதான்.
உறவு 3: கொண்டா
உறவு 4: மாப்பிள்ளையெ தலையிலே தண்ணியே ஊத்திகினு வரச்சொல்லு. அவ்வளவுதான்.

உறவு 5: ஏன் ஐயரே, முகூர்த்த வேளை இன்னும் இருக்குதில்ல

ஐயர் : நல்லா இருக்குண்ணேன். மணி நாலுதானே ஆச்சி! இருக்கு இருக்கு

உறவு 1: பொண்ணு எங்கே?
உறவு 2: இதோ வருது. இட்டாங்க பொண்ணு மாப்பிள்ளையெ.
உறவு 3: பொண்ணு எங்கே?
உறவு 4: பொண்ணு காணலையே? உறவு 5: உம் அங்கே தானிருக்கும். எங்கே பூடும்?
------

10. கடற்கரை

பாட்டு

தங்கம்:
நிலவே நிலவே சிறிதும் இன்பம்
இல்லையே வாழ்வில் ஏனிந்த துன்பம்?
விலையிலா மாணிக்கந் தன்னை
விலகிடச் செய்தபின். தன்னை
விரும்பென்று சொல்லுவான் என்னை
கடலே கடலே என் உயிரை
விடலே தகுதி வாழ்வினி வீணே?
உடலும் உயிரும் அவன் என்றிருந்தேன் படலாகுமோ இந்தத் தாழ்வு
கெடலானதே என்றன் வாழ்வு!

பேச்சு
கடலே! ஆழ்கடலே உன் நடுவயிற்றில்
என்னை அடக்கிக் கொள்!

பட்டு: தங்கம் தங்கம்
தங்கம்: ஆ. யார் பட்டா ;
பட்டு: ஆம் தங்கம், உன் மணவாளன் இதோ.

தங்கம்: அத்தான்!

இளவழகன்: கடலில் விழுந்து உயிர்விடவும் துணிந்தாயோ தங்கம், எனக்கு மயக்க மருந்தைக் கொடுத்து இங்கே போட்டுவிட்டுப் போய்விட்டான் அரசப்பன். வசம்பின் சாற்றையும் எலுமிச்சஞ் சாற்றையும் தந்து என்னைக் காத்தவர் உன் தோழியார்.

பட்டு: என் அருகில் உட்கார்ந்து கொள். தங்கம் அருகில் வா. கடலில் வீழ்ந்து உயிர்விடவும் துணிந்தாய்.
தங்கம் : ஆம் அத்தான். துன்பக்கடலில் தொலைந்திருப்பேன். ஆயினும், இன்பக்கடலில் இதோ நீந்தி விளையாடுகின்றேன்.

பட்டு: நீங்களும் இங்கேயே இருங்கள் ! நான் அந்தக் குற்றவாளி அரசப்பன் நிலையைப் பார்த்து வருகின்றேன்.

இளவழகன் : பட்டு, கூடுமானால், இதே நேரத்தில் அரசப்பனை நீ மணந்து கொள்ள முயன்று பார்.
பட்டு: நல்லது. போகிறேன்.
தங்கம்: இளவழகன்.
----

11. தங்கம் வீடு

பாட்டு
ஒருமனப் பட்டதே திருமணம் ஆகும்
உயிருடம் பாலே இருவர் அன்பாலே (ஒரு)

கருமணல் காட்டில் நீலவான் கூரை.
வெண்ணிலா சந்தனம் பூசப்
பெருங்கடல் முரசு நலமெல்லாம் செய்யப்
பேரின்ப வாழ்வு கண்டோம் நாம். (ஒரு)

மக்கள் : தங்கமே, இளவழகே வாழ்க
தங்கம்: பட்டு, மணம் முடிந்தா உனக்கு? பட்டு: ஆம் தங்கம்.
மக்கள் : இரு மணமக்களும் வாழ்க!
-----------------------


This file was last updated on 22 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)