pm logo

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
பாஞ்சாலி சபதம்: இரண்டாம் பாகம்
சருக்கம் 3,4 & 5


pAnjcAli capatam of cuppiramaNiya pAratiyAr - part 2
(carukkam 3, 4 & 5)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
பாஞ்சாலி சபதம் : இரண்டாம் பாகம்
சருக்கம் 3,4 & 5

Source:
பாரதி நூல்கள் (காவியங்கள்) [தொகுப்பு]
ஸ்ரீ சி. சுப்ரமணிய பாரதி
பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை
காபிரைட், ரிஜிஸ்டர் செய்தது,
1940, 4ம் பதிப்பு, விலை ரூ. 2--8-0
சென்னை தியாகராய நகர் ஹிந்தி பிரசார அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

3. அடிமைச் சருக்கம்

39. பராசக்தி வணக்கம்
40. சரஸ்வதி வணக்கம்
41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
42. விதுரன் சொல்வது
43. சூது மீட்டும் தொடங்குதல்
44. சகுனி சொல்வது
45. சகோதேவனைப் பந்தயம் கூறுதல்
46. நகுலனை இழத்தல்
47. பார்த்தனை இழத்தல்
48. வீமனை இழத்தல்
49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்
50. துரியோதனன் சொல்வது
51. சகுனி சொல்வது
-------
4. திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்
52. திரௌபதியை இழத்தல்
53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி
54. துரியோதனன் சொல்வது
55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து
வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
57. விதுரன் சொல்வது
58. துரியோதனன் சொல்வது
59. திரௌபதி சொல்லுதல்
60. துரியோதனன் சொல்வது
---------
5. சபதக் சருக்கம்
61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்
62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்
64. வீட்டுமாசார்யன் சொல்வது
65 திரௌபதி சொல்வது
66. வீமன் சொல்வது
67. அர்ஜீனன் சொல்வது
68. விகர்ணன் சொல்வது
69. கர்ணன் பதில்
70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
71. வீமன் செய்த சபதம்
72. அர்ஜீனன் சபதம்
73. பாஞ்சாலி சபதம்
--------------

பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம்
3. அடிமைச் சருக்கம்
39. பராசக்தி வணக்கம்

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
      றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
      றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
      கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
      இருங்கலைப் புலவனாக் குதியே. 1
--------

40. சரசுவதி வணக்கம்

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
      இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
      வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
      பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
      எனதுள்ளம் இயங்கொ ணாதோ? 2
-----

41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்

வேறு

அறிவு சான்ற விதுரன்சொற் கேட்டான்
      அழலு நெஞ்சின் அரவை உயர்த்தான்.
நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
      நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
பொறி பறக்க விழிக ளிரண்டும்
      புருவ மாங்கு துடிக்கச் சினத்தின்
வெறி தலைக்க, மதிமழுங் கிப்போய்
      வேந்தன் இஃது விளம்புத லுற்றான்: 3

‘நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
      நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
      தேடுகின்ற விதுரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
      அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
      மதியை என்னு ரைப்பேன்! 4

‘ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
      அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே, விதுரா,
      செய்து விட்ட தேயோ?
மெய்வகுப்பவன்போல், பொதுவாம்
      விதி உணர்ந்தவன்போல்,
ஐவர் பக்க நின்றே, -- எங்கள்
      அழிவு தேடு கின்றாய். 5

மன்னர் சூழ்ந்த சபையில் -- எங்கள்
      மாற்ற லார்க ளோடு
முன்னர் நாங்கள் பணையம் -- வைத்தே
      முறையில் வெல்லு கின்றோம்.
என்ன குற்றங் கண்டாய்? -- தருமம்
      யாருக் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? -- பல்லைக்
      காட்டி ஏய்க்கி றோமோ? 6

பொய்யு ரைத்து வாழ்வார், -- இதழிற்
      புகழுரைத்து வாழ்வார்,
வைய மீதி லுள்ளார்; -- அவர்தம்
      வழியில் வந்த துண்டோ?
செய்யொணாத செய்வார் -- தம்மைச்
      சீருறுத்த நாடி,
ஐய, நீஎ ழுந்தால் -- அறிஞர்
      அவல மெய்தி டாரோ? 7

அன்பிலாத பெண்ணுக்கு -- இதமே
      ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? -- தருணம்
      மூண்ட போது கழிவாள்.
வன்புரைத்தல் வேண்டா, -- எங்கள்
      வலிபொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, -- அங்கே
      ஏகி’டென்று ரைத்தான். 8
-------

42. விதுரன் சொல்வது

வேறு

நன்றாகும் நெறியறியா மன்னன் அங்கு
      நான்குதிசை அரசர்சபை நடுவே, தன்னைக்
கொன்றாலும் ஒப்பாக வடுச்சொற் கூறிக்
      குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தான்;
‘சென்றாலும் இருந்தாலு இனிஎன் னேடா?
      செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப்
பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்;
      பொல்லாத விதிபுன்னைப் புறங்கண் டானால்! 9

‘கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்
      கருங்கல்லில் விடந்தோய்த்த நெஞ்சுங் கொண்டோர்
படுஞ்செய்தி தோன்றுமுனே படுவர் கண்டாய்.
      “பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார்
      இளகுமொழி கூறார்” என் றினைத்தே தானும், --
நெடும்பச்சை மரம்போலே வளர்ந்து விட்டாய் --
      நினக்கெவரும் கூறியவரில்லை கொல்லோ? 10

‘நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
      நரபதி, நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
      வைத்திருத்தல் சிறிதேனுந் தகாது கண்டாய்.
சிலங்கைப்பொற் கச்சணிந்த வேசை மாதர்
      சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங்
குலங்கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்,
      கோமகனே, நினக்குரிய அமைச்சர் கண்டாய்! 11

‘சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா?
      செப்புவன நினக்கெனநான் செப்பி னேனோ?
மன்றார நிறைந்திருக்கும் மன்னர், பார்ப்பார்,
      மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்.
இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம்
      யானறிவேன், வீட்டுமனும் அறிவான், கண்டாய்.
வென்றான்உள் ஆசையெலாம் யோகி யாகி
      வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின்றானே. 12

‘விதிவழிநன் குணர்ந்திடினும், பேதை யேன்யான்
      வெள்ளைமன முடைமையினால், மகனே, நின்றன்
சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்.
      சரி, சரிஇங் கேதுரைத்தும் பயனொன் றில்லை.
மதிவழியே செல்லு’கென விதுரன் கூறி
      வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்.
பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
      பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார். 13
-------------

43. சூது மீட்டும் தொடங்குதல்

வேறு

காயு ருட்ட லானார் -- சூதுக்
      களிதொடங்க லானார்
மாய முள்ள சகுனி -- பின்னும்
      வார்த்தை சொல்லுகின்றான்: --
‘நீஅழித்த தெல்லாம் -- பின்னும்
      நின்னிடத்து மீளும்.
ஓய்வடைந்திடாதே, -- தருமா!
      ஊக்க மெய்து’ கென்றான். 14

கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக்
      கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் -- வீட்டை
      வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான -- நீதி
      யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ!
      சிறியர் செய்கை செய்தான். 15

‘நாட்டு மாந்த ரெல்லாம் -- தம்போல்
      நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ -- றுலகை
      அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பலதாங்
      காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி -- மனிதர்
      நன்கு செய்ய வில்லை. 16

ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
      துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
      துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
      ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! -- மேலே
      சரிதை சொல்லு கின்றோம். 17

------------

44. சகுனி சொல்வது

வேறு

‘செல்வம்முற் றிழந்துவிட்டாய்; -- தருமா,
      தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந்தாய்.
பல்வளம் நிறைபுவிக்கே -- தருமன்
      பார்த்திவன் என்பதினிப் பழங்கதைகாண்!
சொல்வதொர் பொருள்கேளாய்; -- இன்னுஞ்
      சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதியேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; -- ஆங்கவ்
      வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம். 18

‘எல்லா மிழந்த பின்னர் -- நின்றன்
      இளைஞரும் நீரும்மற் றெதிற்பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில் -- பிச்சை
      புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளைஞர் -- சூதில்
      வைத்திடத் தகுந்தவர் பணயமென்றே;
சொல்லால் உளம் வருந்தேல்; -- வைத்துத்
      தோற்றதை மீட்’டென்று சகுனிசொன்னான். 19

வேறு

கருணனும்சிரித்தான்; -- சபையோர்
      கண்ணின் நீரு திர்த்தார்.
இருள் நிறைந்த நெஞ்சன் -- களவே
      இன்ப மென்று கொண்டான்,
அரவு யர்த்த வேந்தன் -- உவகை
      ஆர்த்தெழுந்து சொல்வான்;
‘பரவு நாட்டை யெல்லாம் -- எதிரே
      பணய மாக வைப்போம். 20

‘தம்பி மாரை வைத்தே -- ஆடித்
      தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற -- பொருளை
      முழுதும் மீண்ட ளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; -- தருமா,
      நாடி ழந்த பின்னர்,
அம்பி னொத்த விழியாள் -- உங்கள்
      ஐவருக்கு முரியாள் -- 21

‘அவள் இழ்ந்திடாளோ? -- அந்த
      ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; -- மேலே
      களிநடக்கு’ கென்றான்.
இவள வான பின்னும் -- இளைஞர்
      ஏதும் வார்த்தை சொல்லார்,
துவளும் நெஞ்சினாராய் -- வதனம்
      தொங்க வீற்றிருந்தார். 22

வீமன் மூச்சு விட்டான் -- முழையில்
      வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தன் -- வதனக்
      களைஇ ழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன், -- ஐயோ!
      நினைவயர்ந்து விட்டான்;
ஊமை போலிருந்தான் -- பின்னோன்
      உண்மை முற்றுணர்ந்தான். 23

கங்கை மைந்தனங்கே -- நெஞ்சம்
      கனலுறத்து டித்தான்;
பொங்கு வெஞ்சினத்தால் -- அரசர்
      புகை யுயிர்த்திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், -- விதுரன்
      அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் -- கொல்லுஞ்
      செய்தி காண லுற்றே. 24
--------------

45. சகாதேவனைப் பந்தயம் கூறுதல்

வேறு

எப்பொழு தும்பிர மத்திலே -- சிந்தை
      ஏற்றி உலகமொ ராடல்போல் -- எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் -- வகை
      தானுணர்ந் தான்ஸக தேவனாம் -- எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் -- வைத்தல்
      உன்னித் தருமன் பணயமென்று -- அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் -- அங்குத்
      தீய சகுனி கெலித்திட்டான். 25
-------------

46. நகுலனை இழத்தல்

நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -- அங்கு
      நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி -- வந்து
புகுவது போலவன் புந்தியில் -- ‘என்ன
      புன்மை செய்தோம்?’ என எண்ணினான்-- அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் -- ‘ஐய,
      வேறொரு தாயிற் பிறந்தவர் -- வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை -- வைத்துத்
      தாயத்தி லேஇழந் திட்டனை. 26

‘திண்ணிய வீமனும் பார்த்தனும் -- குந்தி
      தேவியின் மக்களுனையொத்தே -- நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் -- தமைக்
      காட்டுதற் கஞ்சினை போலும்நீ?’ -- என்று
புண்ணியம் மிக்க தருமனை -- அந்தப்
      புல்லன் வினவிய போதினில், -- தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே -- ‘அட,
      சூதில் அரசிழந் தேகினும், 27
-------------

47. பார்த்தனை இழத்தல்

தர்மன் சொல்வது

‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; -- ஐவர்
      எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண். -- இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார் -- என்று
      பாதகச் சிந்தனை கொள்கிறாய்; -- அட,
சிங்க மறவர் தமக்குள்ளே -- வில்லுத்
      தேர்ச்சியி லேநிக ரற்றவன், -- எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் -- விலை
      யீடெனக் கொள்ளத் தகாதவன், 28

‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம் -- எங்கள்
      கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும் -- பெற்று
      வானத் தமரரைப் போன்றவன், -- அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், -- புக
      ழேறும் விஜயன் பணயங்காண்! -- பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்’ -- என்று
      பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 29

மாயத்தை யேஉரு வாக்கிய -- அந்த
      மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே -- கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; -- பின்பு
      சாற்றி விருத்தமங் கொன்றையே -- கையில்
தாய முருட்டி விழுத்தினான்; -- அவன்
      சாற்றிய தேவந்து வீழ்ந்ததால். -- வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார் -- மன்னர்
      இப்புவி மீதுள ராமன்றோ? 30
--------------

48. வீமனை இழத்தல்

கொக்கரித் தார்த்து முழங்கியே -- களி
      கூடிச் சகுனியுஞ் சொல்லுவான்: -- ‘எட்டுத்
திக்கனைத்தும்வென்ற பார்த்தனை -- வென்று
      தீர்த்தனம் வீமனைக் கூ’றென்றான். -- தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன், -- உளஞ்
      சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில் -- எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன், -- அறத்
      தண்ணல் இதனை உரைக்கின்றான்: 31

‘ஐவர் தமக்கொர் தலைவனை, -- எங்கள்
      ஆட்சிக்கு வேர்வலி அஃதினை, -- ஒரு
தெய்வம்முன் னேநின் றெதிர்ப்பினும் -- நின்று
      சீறி அடிக்குந் திறலனை, -- நெடுங்
கைவளர் யானை பலவற்றின் -- வலி
      காட்டும் பெரும்புகழ் வீமனை, -- உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் -- வென்று
      போ!’ என் றுரைத்தனன் பொங்கியே. 32

போரினில் யானை விழக்கண்ட -- பல
      பூதங்கள் நாய்நரி காகங்கள் -- புலை
ஒரி கழுகென் றிவையெலாம் -- தம
      துள்ளங் களிகொண்டு விம்மல்போல், -- மிகச்
சீரிய வீமனைச் சூதினில் -- அந்தத்
      தீயர் விழுந்திடக் காணலும் -- நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் -- களி
      மண்டிக் குதித்தெழுந் தாடுவார். 33
-------------

49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்

மன்னவர், தம்மை மறந்துபோய், -- வெறி
      வாய்ந்த திருடரை யொத்தனர். -- அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் -- இன்னும்
      ‘செப்புக பந்தயம்வே’றென்றான். -- இவன்
தன்னை மறந்தவ னாதலால் -- தன்னைத்
      தான் பணயமென வைத்தனன். -- பின்பு
முன்னைக் கதையன்றி வேறுண்டோ? -- அந்த
      மோசச் சகுனி கெலித்தனன். 34
------------

50. துரியோதனன் சொல்வது

பொங்கி யெழுந்து சுயோதனன் -- அங்கு
      பூதல மன்னர்க்குச் சொல்லுவான்: -- ‘ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர் -- புவி
      மண்டலம் நம்ம தினிக்கண்டீர். -- இவர்
சங்கை யிலாத நிதியெலாம் -- நம்மைச்
      சார்ந்தது; வாழ்த்துதிர் மன்னர்காள்! -- இதை
எங்கும் பறையறை வாயடா -- தம்பி!’
      என்றது கேட்டுச் சகுனிதான், 35
-------------

51. சகுனி சொல்வது

‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் -- நின்னைப்
      போன்றவர் செய்யத் தகுவதோ? -- இரு
கண்ணி லினியவ ராமென்றே -- இந்தக்
      காளையர் தம்மைஇங் குந்தைதான் -- நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; -- இவர்
      யார்? நின்றன் சோதர ரல்லரோ? -- களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -- இவர்
      நாணுறச் செய்வது நேர்மையோ? 36

‘இன்னும் பணயம்வைத் தாடுவோம்; -- வெற்றி
      இன்னும் இவர்பெற லாகுங்காண்.
பொன்னுங் குடிகளுந் தேசமும் -- பெற்றுப்
      பொற்பொடு போதற் கிடமுண்டாம்; -- ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் -- இவர்
      மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னும் அதிட்ட முடையவள் -- இவர்
      தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.’ 37

என்றந்த மாமன் உரைப்பவே -- வளர்
      இன்பம் மனத்தி லுடையனாய் -- ‘மிக
நன்றுநன்’றென்று சுயோதனன் -- சிறு
      நாயொன்று தேன்கல சத்தினை -- எண்ணித்
துன்று முகவையில் வெற்றுநா -- வினைத்
      தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல் -- அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் -- அழி
      வுற்ற துலகத் தறமெலாம். 38
-------------

4. துகிலுரிதற் சருக்கம்
52. திரௌபதியை இழத்தல்

பாவியர் சபைதனிலே, -- புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவளை, -- உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவியம் நிகர்த்தவளை, -- அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, -- எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை, 39
படிமிசை இசையுற வே -- நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை, -- ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை, -- இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் -- அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான். 40

வேறு

வேள்விப் பொருளினையே -- புலை நாயின்முன்
      மென்றிட வைப்பவர்போல்,
நீள்விட்டப் பொன்மாளிகை -- கட்டிப் பேயினை
      நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கியே -- செய்த பூணையோர்
      ஆந்தைக்குப் பூட்டுதல்போல், --
கேள்விக் கொருவரில்லை -- உயிர்த்தேவியைக்
      கீழ்மக்கட் காளாக்கினான். 41

செருப்புக்கு தோல்வேண்டியே, -- இங்குக் கொல்வரோ
      செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக்கே -- ஒத்த பந்தயம்
      மெய்த்தவப் பாஞ்சாலியோ?
ஒருப்பட்டுப் போனவுடன், -- கெட்ட மாமனும்
      உன்னியத் தாயங்கொண்டே
இருப்பகடை போடென்றான், -- பொய்மைக் காய்களும்
      இருப்பகடை போட்டவே. 42
-------------

53. திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி

திக்குக் குலுங்கிடவே -- எழுந்தாடுமாம்
      தீயவர் கூட்டமெல்லாம்.
தக்குத்தக் கென்றேஅவர் -- குதித்தாடுவார்
      தம்மிரு தோள்கொட்டுவார்.
ஒக்குந் தருமனுக்கே -- இஃதென்பர் ‘ஓ!
      ஓ!’ வென் றிரைந்திடுவார்;
கக் கக்கென் றேநகைப்பார் -- ‘துரியோதனா,
      கட்டிக்கொள் எம்மை’என்பார். 43

மாமனைத் ‘தூக்கா’ யென்பார்; -- அந்த மாமன்மேல்
      மாலை பலவீசுவார்.
‘சேமத் திரவியங்கள் -- பலநாடுகள்
      சேர்ந்ததி லொன்றுமில்லை;
காமத் திரவியமாம் -- இந்தப்பெண்ணையும்
      கைவச மாகச்செய்தான்;
மாமனொர் தெய்வ’மென்பார்; ‘துரியோதனன்
      வாழ்க’வென் றார்த்திடுவார். 44
-----------

54. துரியோதனன் சொல்வது

நின்று துரியோதனன் -- அந்த மாமனை
      நெஞ்சொடு சேரக் கட்டி,
‘என்துயர் தீர்த்தாயடா -- உயிர் மாமனே,
      ஏளனந் தீர்த்துவிட்டாய்.
அன்று நகைத்தாளடா; -- உயிர் மாமனே,
      அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா, -- உயிர் மாமனே,
      என்ன கைம்மாறு செய்வேன்! 45

‘ஆசை தணித்தாயடா, -- உயிர் மாமனே,
      ஆவியைக் காத்தாயடா.
பூசை புரிவோமடா, -- உயிர் மாமனே,
      பொங்க லுனக்கிடுவோம்.
நாச மடைந்ததடா -- நெடுநாட்பகை,
      நாமினி வாழ்ந்தோமடா!
பேசவுந் தோன்றுதில்லை; -- உயிர் மாமனே,
      பேரின்பங் கூட்டிவிட்டாய்.’ 46

என்று பலசொல்லுவான், -- துரியோதனன்
      எண்ணிஎண்ணிக்குதிப்பான்;
குன்று குதிப்பதுபோல் -- துரியோதனன்
      கொட்டிக் குதித்தாடுவான்.
மன்று குழப்பமுற்றே, -- அவர் யாவரும்
      வகைதொகை யொன்றுமின்றி
அன்று புரிந்ததெல்லாம் -- என்றன் பாட்டிலே
      ஆக்கல் எளிதாகுமோ? 47
------------

55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு
அழைத்து வரச் சொல்லியதுபற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்

வேறு
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட,
நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதனம் செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட, --
வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்,
மூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்,
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்.
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை யேறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி,
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள்,
போக்குவர வெய்தும் புதுமை யெலாந் தானாவாள்,
மாறிமாறிப்பின்னும் மாறிமாறிப்பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்,
ஆதிபராசக்தி -- அவள்நெஞ்சம் வன்மையுறச்,
சோதிக் கதிர்விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள்படர,

------------

56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது

மூடப் புலைமையினோன்,
அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோ தனனும் சுறுக்கெனவே தான்திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான்:
‘செல்வாய், விதுராநீ சிந்தித் திருப்பதேன்?
வில்வா ணுதலினாள், மிக்க எழிலுடையாள்,
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள்,
இன்னேநாம் சூதில் எடுத்த விலைமகள்பால்
சென்று விளைவெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி,
“மன்றி னிடையுள்ளான் நின் மைத்துனன் நின் ஓர்தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மனையில் ஏவலுக்கே”
என்ன உரைத்தவளை இங்குகொணர்வாய்’ என்றான்.
-------------

57. விதுரன் சொல்வது

துரியோ தனன்இச் சுடுசொற்கள் கூறிடவும்,
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு,
‘மூட மகனே, மொழியொணா வார்த்தையினைக்
கேடுவரஅறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்,
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்கிறேன்.
என்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா!
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,
மாண்டு தரைமேல், மகனே, கிடப்பாய்நீ.
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்.
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.
வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
சொல்லி விட்டேன்; பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்!
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும்,
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்
மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்,
“ஆண்டவரே, யாங்கள் அறியாமை யால்செய்த
நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர்” என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்.
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்,
பூபால ரேஎன்றப் புண்ணியனுங் கூறினான்.
சொல்லிதனைக் கேட்டுத் துரியோதன மூடன்,
வல்லிடிபோல் ‘சீச்சி! மடையா, கெடுகநீ
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே.
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்.
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
“பாரதர்க்கு வேந்தன் பணித்தான்” எனக்கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே
ஈண்டழைத்து வா’என் றியம்பினான். ஆங்கேதேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
‘அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள்போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.
சாற்றிப் பணயமெனத் தாயே உனைவைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார்.
எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்’
என்ன உரைத்திடலும், ‘யார்சொன்ன வார்த்தையடா!
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார்பணியால்
என்னை அழைக்கின்றாய்?’ என்றாள். அதற்கவனும்
‘மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்’ என்றிட்டான்
. ‘நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டு வா.
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா,
என்றவளுங் கூறி, இவன்போகியபின்னர்,
தன்னந் தனியே தவிக்கும் மனத்தாளாய்,
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய,
உள்ளத்தை அச்சம் உலைஉறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள். பின்னந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபைசென்று, ‘வாள்வேந்தே! ஆங்கந்தப்
பொன்னரசி தாள்பணிந்து “போதருவீர்” என்றிட்டேன்.
“என்னைமுதல் வைத்திழந்தபின்பு தன்னைஎன்
மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?” என்றேநும் பேரவையை
மின்னற் கொடியார் வினவிவரத் தாம்பணித்தார்.
வந்துவிட்டேன்’ என்றுரைத்தான். மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோ யொன்றும் நுவலா திருந்து விட்டார்.
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெலாம்
முற்றும் உரைஇழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 48
------------

58. துரியோதனன் சொல்வது

வேறு

உள்ளந் துடித்துச் சுயோதனன் -- சினம்
      ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான்: -- ‘அட ,
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய். -- என்றன்
      பெற்றி யறிந்திலை போலும், நீ! -- அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் -- அவள்
      கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! -- அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே! -- இங்கு
      கேட்க விரும்புமென் னுள்ளமே. 49

‘வேண்டிய கேள்விகள் கேட்கலாம், -- சொல்ல
      வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம், -- மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே -- அவள்
      நேரிடவே வந்த பின்புதான். -- சிறு
கூண்டிற் பறவையு மல்லளே? -- ஐவர்
      கூட்டு மனைவிக்கு நாணமேன்? -- சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் -- அந்த
      மொய்குழ லாளைஇங் கிட்டுவா. 50

‘மன்னன் அழைத்தனன் என்றுநீ -- சொல்ல
      மாறியவ ளொன்று சொல்வதோ? -- உன்னைச்
சின்னமுறச் செய்கு வேனடா! -- கணஞ்
      சென்றவளைக் கொணர்வாய்’என்றான். -- அவன்
சொன்ன மொழியினைப் பாகன்போய் -- அந்தத்
      தோகைமுன் கூறி வணங்கினான். -- அவள்
இன்னல் விளைந்திவை கூறுவாள் -- ‘தம்பி,
      என்றனை வீணில் அழைப்பதேன்? 51
-------------

59. திரௌபதி சொல்லுதல்

'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -- என்னை
      நல்கும் உரிமை அவர்க்கில்லை. -- புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்னை
      சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
      தாங்குந் துருபதன் கன்னிநான். -- நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
      தார முடைமை அவர்க்குண்டோ! 52

'கௌரவ வேந்தர் சபைதன்னில் -- அறங்
      கண்டவர் யாவரும் இல்லையோ? -- மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே -- அங்கு
      சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ? -- புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் -- கல்வி
      ஓங்கிய மன்னருஞ் சூதிலே -- செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்; என்றன்
      மான மழிவதும் காண்பரோ? 53

'இன்பமுந் துன்பமும் பூமியின் -- மிசை
      யார்க்கும் வருவது கண்டனம்; -- எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் -- அற
      மாட்சியைக் கொன்று களிப்பரோ? -- அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார் -- தலை
      யந்தணர் கண்டு களிப்பரோ? -- அவர்
முன்பென் வினாவினை மீட்டும்போய்ச் -- சொல்லி
      முற்றுந் தெளிவுறக் கேட்டுவா? 54

என்றந்தப் பாண்டவர் தேவியும் -- சொல்ல,
      என்செய்வன் ஏழையப் பாகனே? -- 'என்னைக்
கொன்றுவிட் டாலும் பெரிதில்லை. -- இவள்
      கூறும் வினாவிற் கவர்விடை -- தரி
னன்றி இவளை மறுமுறை -- வந்து
      அழைத்திட நானங் கிசைந்திடேன்? -- (என)
நன்று மனத்திடைக் கொண்டவன் -- சபை
      நண்ணி நிகழ்ந்தது கூறினான். 55

மாத விடாயி லிருக்கிறாள் -- அந்த
மாதர? கென்பதுங் கூறினான். -- கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் -- நின்ற
பாண்டவர் தம் முகம் நோக்கினான்; -- அவர்

'என்றன்' என்று ஒரு தனிச்
சொல் ஊகித்துக் கொள்ளலாம்
என்கிறார் கவிமணி. 'ஏன்' என்பது
முதற்பதிப்பிலில்லை; ஊகித்துக் கொண்ட பாடம்.}

பேதுற்று நிற்பது கண்டனன். -- மற்றும்
பேரவை தன்னில் ஒருவரும் -- இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே -- உள்ளத்
திண்மை யிலாதங் கிருந்தனர். 56

பாகனை மீட்டுஞ் சினத்துடன் -- அவன்
      பார்த்திடி போலுரை செய்கின்றான்: -- 'பின்னும்
ஏகி நமதுளங் கூறடா! -- அவள்
      ஏழு கணத்தில் வரச்செய்வாய்! -- உன்னைச்
சாக மிதித்திடு வேனடா!? -- என்று
      தார்மன்னன் சொல்லிடப் பாகனும் -- மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திடான் -- அங்கு
      வீற்றிருந் தோர்தமை நோக்கியே, 57

'சீறும் அரசனுக் கேழையேன் -- பிழை
      செய்ததுண்டோ? அங்குத் தேவியார் -- தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், -- அவர்
      நுங்களைக் கேட்கத் திருப்புவார்; -- அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி -- சொல்லில்,
      அக்கண மேசென் றழைக்கிறேன்; -- மன்னன்
கூறும் பணிசெய வல்லன்யான்; -- அந்தக்
      கோதை வராவிடில் என்செய்வேன்?' 58
--------------

60. துரியோதனன் சொல்வது

பாகன் உரைத்தது கேட்டனன் -- பெரும்
      பாம்புக் கொடியவன் சொல்கிறான்: -- ‘அவன்
பாகன் அழைக்க வருகிலள்; -- இந்தப்
      பையலும் வீமனை அஞ்சியே -- பல
வாகத் திகைப்புற்று நின்றனன்; -- இவன்
      அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன், -- ‘தம்பீ!
போகக் கடவைஇப் போதங்கே; -- இங்க
      பொற்றொடி யோடும் வருகநீ! 59
------------
துகிலுரிதல் சருக்கம் முற்றிற்று.

5. சபதச் சருக்கம்
61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்

இவ்வுரை கேட்டதுச் சாதனன் -- அண்ணன்
      இச்சையை மெச்சி எழுந்தனன். -- இவன்
செவ்வி சிறிது புகலுவோம். -- இவன்
      தீமையில் அண்ணனை வென்றவன்; -- கல்வி
எவ்வள வேனுமி லாதவன்; -- கள்ளும்
      ஈரக் கறியும் விரும்புவோன்; -- பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்; -- தன்னைச்
      சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்; 60

புத்தி விவேகமில் லாதவன்; -- புலி
      போல உடல்வலி கொண்டவன்; -- கரை
தத்தி வழியுஞ் செருக்கினால் -- கள்ளின்
      சார்பின்றி யேவெறி சான்றவன்; -- அவ
சக்தி வழிபற்றி நின்றவன்; -- சிவ
      சக்தி நெறிஉண ராதவன்; -- இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன்; -- என்றும்
      நல்லவர் கேண்மை விலக்கினோன்; 61

அண்ண னொருவனை யன்றியே -- புவி
      அத்தனைக் குந்தலை யாயினோம் -- என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -- அண்ணன்
      ஏது சொன்னாலும் மறுத்திடான்; -- அருட்
கண்ணழி வெய்திய பாதகன் -- ‘அந்தக்
      காரிகை தன்னை அழைத்துவா’ என்றவ்
வண்ண னுரைத்திடல் கேட்டனன்; -- நல்ல
      தாமென் றுறுமி எழுந்தனன். 62

பாண்டவர் தேவி யிருந்ததோர் -- மணிப்
      பைங்கதிர் மாளிகை சார்ந்தனன்; -- அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் -- நின்ற
      நேரிழை மாதினைக் கண்டனன்; -- அவள்
தீண்டலை யெண்ணி ஒதுங்கினாள்; -- ‘அடி,
      செல்வ தெங்கே’யென் றிரைந்திட்டான். -- ‘இவன்
ஆண்டகை யற்ற புலைய’னென்று -- அவள்
      அச்ச மிலாதெதிர் நோக்கியே, 63
----------

62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்

‘தேவர் புவிமிசைப் பாண்டவர்; -- அவர்
      தேவி, துருபதன் கன்னிநான்; -- இதை
யாவரும் இற்றை வரையினும், -- தம்பி,
      என்முன் மறந்தவரில்லைகாண். -- தம்பி
காவ லிழந்த மதிகொண்டாய்; -- இங்குக்
      கட்டுத் தவறி மொழிகிறாய். -- தம்பி,
நீவந்த செய்தி விரைவிலே -- சொல்லி
      நீங்குக’ என்றனள் பெண்கொடி. 64

‘பாண்டவர் தேவியு மல்லைநீ; -- புகழ்ப்
      பாஞ்சாலத் தான்மக ளல்லைநீ; -- புவி
யாண்டருள் வேந்தர் தலைவனாம் -- எங்கள்
      அண்ணனுக் கேயடி மைச்சிநீ. -- மன்னர்
நீண்ட சபைதனிற் சூதிலே -- எங்கள்
      நேசச் சகுனியோ டாடியங்கு -- உன்னைத
தூண்டும் பணய மெனவைத்தான் -- இன்று
      தோற்றுவிட்டான் தருமேந்திரன். 65

‘ஆடி விலைப்பட்ட தாதி நீ; -- உன்னை
      ஆள்பவன் அண்ணன் சுயோதனன். -- “மன்னர்
கூடி யிருக்குஞ் சபையிலே -- உன்னைக்
      கூட்டி வரு”கென்று மன்னவன் -- சொல்ல
ஓடிவந் தேனிது செய்திகாண். -- இனி
      ஒன்றுஞ்சொலா தென்னொ டேகுவாய். -- அந்தப்
பேடி மகனொரு பாகன்பாற் -- சொன்ன
      பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே.’ 66

வேறு

துச்சா தனனிதனைச் சொல்லினான். பாஞ்சாலி: --
‘அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை
தன்னி லிருக்கிறேன். தார்வேந்தர் பொற்சபைமுன்
என்னை யழைத்தல் இயல்பில்லை. அன்றியுமே,
சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி,
ஆதரவு நீக்கி, அருமை குலைத்திடுதல்,
மன்னர் குலத்து மரபோகாண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுகநீ’ என்றிட்டாள்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்.
---------------

63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்

விம்மியழுதாள்: -- ‘விதியோ கணவரே,
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து,
பாதகர்முன் இந்நால் பரிசழிதல் காண்பீரோ?’
என்றாள். விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனும் மற்றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் புலம்புவாள்: -- ‘வான்சபையில்
கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்,
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்,
மேலோரிருக்கின்றீர். வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார்.
இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை.
மங்கியதோர் புன்மதியாய்! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்.
நின்னை யெவரும் “நிறுத்தடா” என்பதிலர்.
என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தாம்முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு்
‘தாதியடி தாதி!’ யெனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான். கர்ணன் சிரித்திட்டான்.
சகுனி புகழ்ந்தான். சபையினோர்? வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்கின்றான்: ‘தையலே,
----------

64. வீட்டுமாசாரியன் சொல்வது

சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்.
வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்.
சூதிலே வல்லான் சகுனி. தொழில்வலியால்,
மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்.
மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே
குற்றமென்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன்
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.
செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ,
கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும்,
செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரந்தான்
வைகு நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்,
ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன்.
தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த
மேலோன் தலைகவிழ்ந்தான். மெல்லியளுஞ் சொல்லுகிறாள்: --
---------------

65. திரௌபதி சொல்வது

‘சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கதுநீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.
வம்பு மலர்க்கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். 67

வேறு

ஆடை குலைவுற்று நிற்கிறாள்; -- அவள்
      ஆவென் றழுது துடிக்கிறாள். -- வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் -- அவள்
      மைக்குழல் பற்றி யிழுக்கிறான். -- இந்தப
பீடையை நோக்கினன் வீமனும், -- கரை
      மீறி எழுந்தது வெஞ்சினம்; -- துயர்
கூடித் தருமனை நோக்கியே, -- அவன்
      கூறிய வார்த்தைகள் கேட்டீரா? 68
-------------

66. வீமன் சொல்வது

வேறு

‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.
69

‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை. 70

‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். 71

‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய். 72

‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்; 73

‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய். 74

‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம். 75

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்! 76

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’ 77
-------------

67. அர்ஜுனன் சொல்வது

வேறு

எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
      இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
      வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
      களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
      திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 78

‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
      தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
      வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
      கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
      தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான். 79
-----------

68. விகர்ணன் சொல்வதும்

அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்.
      அப்போது விகர்ணனெழுந் தவைமுன் சொல்வான்:
‘பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
      பேச்சதனை நான்கொள்ளேன். பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி
      ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்.
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
      வழங்குவதிந் நெறிஎன்றான்; வழுவே சொன்னான். 80

‘எந்தையர்தாம் மனைவியரை விற்ப துண்டோ?
      இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோ? விலைமாதர்க்கு
      விதித்ததையே பிற்கால நீதிக்காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
      சொல்லளவேதானாலும், வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை; சூதர் வீட்டில்
      ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம். 81

‘“தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த்
      தாரமெது? வீடேது? தாத னானா
பின்னையுமோர் உளடைமை உண்டோ?” என்றுநம்மைப்
      பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே, களிப்பதுதான் சூதென் றாலும்
      மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ?
      தாத்தனே, நீதிஇது தகுமோ?’ என்றான்.
82

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
      எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார்;
‘ஒவ்வாது சகுனிசெயுங் கொடுமை’ என்பார்;
      ‘ஒருநாளும் உலகிதனை மறக்கா’ தென்பார்;
‘எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்;
      ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா.
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
      செருக்களத்தே தீருமடா பழியிஃ’தென்பார். 83
------------

69. கர்ணன் பதில்

வேறு

விகருணன் சொல்லைக் கேட்டு
      வில்லிசைக் கர்ணன் சொல்வான்: --
‘தகுமடா, சிறியாய், நின்சொல்.
      தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன் றெண்ணி
      வாய்புதைத் திருந்தார், நீதான்
மிகுமுரை சொல்லி விட்டாய்.
      விரகிலாய்! புலனு மில்லாய்! 84

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
      பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
      இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்,
      நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
      நீதிநீ காண்ப துண்டோ? 85

மார்பிலே துணியைத் தாங்கும்
      வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்;
      ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
      பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
      சேலையுங் களைவாய்’ என்றான். 86

இவ்வுரை கேட்டா ரைவர்;
      பணிமக்க ளேவா முன்னந்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
      திறந்தனர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
      ஞானசுந்தரிபாஞ்சாலி
‘எவ்வழி உய்வோ’ மென்றே
      தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 87

-------------

70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை

வேறு

துச்சா தனன்எழுந்தே -- அன்னை
      துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ -- என்று
      அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்
      பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை
      உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88

‘ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்; -- கண்ணா!
      அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே -- அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், -- அன்று
      காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
      பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89

‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!
      சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
      அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
      தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
      சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90

‘வானத்துள் வானாவாய்; -- தீ
      மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
      முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
      கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
      தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91

‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
      அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
      சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
      வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
      சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92

‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
      காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
      மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
      தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
      நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93

‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்
      வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
      அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு
      நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! -- இங்கு
      சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94

‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
      மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
      ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
      புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
      சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95

பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
      பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
      கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
      வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
      எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96

பொன்னிழை பட்டிழையும் -- பல
      புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்
      செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
      மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
      தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97

தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
      ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை
      ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
      சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
      கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். 98
-------------

71. வீமன் செய்த சபதம்

வேறு

வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
      விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
      சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
      மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்
      காலனை வென்றவன் பொன்னடி மீதில் 99

‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்த
      ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்
      பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
      நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்
      வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, 100

‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பி
      சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
      கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இது
      நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
      சாதனை செய்க, பராசக்தி!’ என்றான். 101
--------------

72. அர்ஜுனன் சபதம்

பார்த்த னெழுந்துரை செய்வான்: -- ‘இந்தப்
      பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
      சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி -- அவள்
      கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
      பூதலமே! அந்தப் போதினில்’ என்றான். 102

-------------

73. பாஞ்சாலி சபதம்

தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
      தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
      பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
      மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
      செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள். 103

ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
      ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
      பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
      சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். -- இந்த
      நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க. 104
-------------


This file was last updated on 21 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)