pm logo

தேவநாம இராம மாணிக்க வாசகன் எழுதிய
ஸ்ரீநடேசர் கலிவெண்பா


nAtEcar kaliveNpA
of irAma mANikka vAcakan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to shaivam.org (Mr.S. Ganesh) for providing a soft copy of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தேவநாம இராம மாணிக்க வாசகன் எழுதிய
ஸ்ரீநடேசர் கலிவெண்பா

Source:
shaivam.org
திருச்சிற்றம்பலம்
கைவல்ய ரகசியம் என்னும் ஸ்ரீநடேசர் கலிவெண்பா
இயற்றியவர் திருவாசக ரத்னம் சிவ ஸ்ரீ தத்புருஷ
தேவநாம இராம மாணிக்க வாசகன் அவர்கள்

சீரார்ந்த செல்வத் திருமாலும் நான்முகனும்
ஏரார்ந்த வானத் திமையோரும் - சார்வரிதாய்
ஆறாறுக் கப்பால் அகிலாண்ட காரணமாய்
வேறாகா நித்த விழுப்பொருளாய்ப் - பேறுதவும்
சுத்தபரி பூரணமாய்த் தூவெளியில் சத்தாகிச் (5)

சித்தாகி யானந்தத் தேனாகி - வித்தகமாய்
நீக்கமற வெங்கும் நிறைந்த ஒருநிமலன்
ஆக்குமுல கெல்லாம் அகமகிழ - நோக்கமிக
உற்ற பதஞ்சலியும் ஓங்குபுலிக் கால்முனியும்
பற்றுந் தவத்தின் பயனுகர - நோக்கியே (10)

ஆதி மறையும் அருளா கமவிதியும்
ஓது புராண வுபநிடத - போதமெலாம்
சாற்றும் பரம ரகசியமும் தத்துவங்கள்
போற்று மிதய புரமாகி - ஏற்றமுறும்
ஞாலத் தலங்கள் அனைத்திற்கும் நாயகமா (15)

மூலத் தலமாகி முன்விளங்கிக் - கோலமுடன்
மன்னுதிருச் சிற்றம் பலத்தரிய மந்திரங்கள்
துன்னுமணிப் பீடத்தில் தோன்றிமிக - இன்னருளே
செய்யுங் கருணைத் திருமேனி தான் கொண்டு
மெய்யொளிசே ரோங்கார மேவுமொரு - துய்யதிரு (20)

வாசி யமைய மருளார் முயலகன்மேல்
ஆசில் திரோத மருள்மகரம் - தேசுறவந்
தங்கமைய ஊன்றியே அஞ்சிலம்பு கொஞ்சியிடும்
செங்கமல மன்ன திருவடியும்-புங்கவர்கள்
ஆராய்ந் துவமிக்க வொண்ணா அழகியன்ற (25)

சீர்சதங்கை காப்பு செறிதண்டை- சார்ந்தவொலி
நீடும் அருளே நிலைதொழிலாக் கொண்டயன்மால்
தேட எடுத்தமலர்ச் சேவடியும் - நாடுமெழில்
தூய இருதுடையிற் சுற்றி மடித்துடுத்த
ஆயு மொருபுலித்தோ லாடையும் - ஆயிடையிற் (30)

பொங்கரவு தந்த பொருவில் மணிவரிசை
தங்கு மரைஞாணும் சாற்றுமறை - அங்கமதில்
முந்திவரு முப்பொருளா முந்நூல் கிடந்திலங்கு
மந்தி நிறத்தி னணிமார்புஞ் - சந்தமுறத்
தெள்ளும் நவரத் தினவளையு மோதிரமும் (35)

உள்ளும் யகரத் துடன்றிகழக் - கள்ளவிழ்பூந்
தாமரை போற்சிவந்த தண்ணா ரபயகரம்
சேமமுறக் காக்குந் திறங்காட்டத் - தாமடியார்
வீங்குஞ் சமுசார வேலைக்குள் வீழ்ந்தன்று
தாங்குங் கருணை தழைத்தினிய - பாங்குடனே (40)

பற்றி எடுத்துப் பழவினைகள் வாங்கிமிகு
முத்திக் கரையுதவ முன்வீசிச் - சுற்று மணிக்
கங்கணமு மோதிரமுங் காண்பார் மனங்கவர்ந்து
தொங்கு மபிநயத்திற் சூக்குமமாய் - அங்ஙண்
வகரம் மறைந்த வடிவாம்பல் போன்று (45)

திகழும் இடக்கரமும் செய்ய -புகழுடைய
பாணினியுஞ் செந்தமிழ்சொற் பண்ணவனுஞ் சற்குருவாய்ப்
பேணும் துடியதிர்த்துப் பேருலகை- மாணவே
ஆக்குஞ் சிகரம் அமர்மேல் வலக்கரமும்
காக்கு முயிர்க்குக் கருதுசுகம் - நோக்கியொரு (50)

சங்காரஞ் செய்யுந் தழல்சேர் நகரத்தால்
மங்காமேல் வாம மணிக்கரமும்- கங்கணமும்
அக்கமணி மாலை அவிரொளிசெய் முத்தாரம்
தக்கநவ ரத்தினத் தாழ்வடமும் - மிக்க
வயிரமணித் தொங்கல் மகரகண்டி யோடினிய (55)

செயீர்தீ ரேகமணிச் சீரழகும் - பயிலுந்தம்
பத்த ரிடர்களைவான் பால்புரையும் வெண்ணீற்றை
உத்தூ ளணஞ்செய் தொளிமிளிரும் - வித்தகப் பொன்
மேனி யழகும் விரிகடல்வா யன்றெழுந்து
வானவர்க ளஞ்ச வருவிடத்தைத் - தானமுது (60)

செய்துலகைக் காத்த தியாகந் தனைக்காட்டும்
மைதிகழுங் கோல மணிமிடறும் - மெய்வணங்கும்
ஆராத அன்பர் அமுத மொழிகேட்கும்
ஏரார் செவிக ளிரண்டிலும் - பேரான
சாமம் பயிலுந் தனிப்பொற் குண்டலங்கள் (65)

தாமுஞ் சிறிதே தகைந்தாடச் - சேமமுறச்
சென்று தொழுமடியார் சித்தங் களிகூர
என்று வந்தீ ரென்னு மெழிற்குறிப்பும் - நன்றமையப்
பௌவத் தெழுமுத்தின் பல்சிறிது முன்தோன்றக்
கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்-செவ்வியதோர் (70)

குன்றுதவும் பச்சைக் கொழுந்தேன் சுவைபருகா
னின்றகளி வண்டி னிகர்விழிகள்- துன்றவிடை
நாடுந் துலை போலும் நாசிக்கு மேல் வளைந்து
ஓடும் புருவ முறநடுவிற்- கூடுமணக்
குங்குமத்தின் மேல் மூன்று கோடா மிளிர்ந்துவளம் (75)

தங்குந் திருநீற்றுத் தாரணமும் - இங்கிதமா
யோங்கு நுதல்விழிமே லொண்வயிரப் பட்டையொளி
தாங்குங் கருணைத் தனிமுகமும் - நீங்கா
அரும்பாசந் தீர்க்கு மபிநயங்க ளுந்தும்
பெருங்கூத்தி னின்பப் பெருக்கால் - பொருந்தவே (80)

ஆர்க்கு மரவ மரிய மணியுமிழப்
பூக்கு மலர்க்கொன்றை பொன்சொரியப் - பார்க்குமதி
ஆரமுது சிந்த அலைபுனலு முத்திரைப்பத்
தூர்வை யெருக்கிறகு தூமத்தஞ் - சேர்ந்திலங்கு
மின்போலுஞ் செய்ய விரிசடையும் வேரிமிகு (85)

பொன்சேர் மணியிதழிப் பூந்தாரும் - நன்புகழின்
ஓங்கு மரியெடுத்த உற்பவங்க டோறுமிக
ஆங்காரங் கொள்ளு மமயத்தே - பாங்காகச்
சங்கரித்து வைகுண்டஞ் சார்வித் துலகுயிரைப்
பங்கமறக் காக்கின்ற பண்புணர்த்த- அங்கேனம் (90)

முன்பாரை ஏந்தும் முனைமருப்புங் கூர்மவோ
டென்பு புனைந்த எழில்வடமும் - முன்பொலியச்
செம்பொற் கமலத் திருமகளு மிந்திரையும்
பைம்பொற் கவரி பணிந்திரட்ட - வம்பொற்
சதங்கை சிலம்பொடு தண்டையங் காப்பு (95)

விதம்படு சந்த மிழற்றப் - பதந்தரு
செங்கமல மன்ன திருவடிக ளோரிரண்டும்
பொங்குமிள ஞாயிற்றைப் போல்விளங்கத்- தங்கத்தால்
ஆன சரிகை அமைந்தசெம் பட்டாடை
தானுடுத்து நின்ற தனிவனப்பும் - வான்தோன்று (100)

மின்னிடையில் வண்ணமணி மேகலையு முந்தியின்மேல்
மன்னும் படிபோல் மடிப்புகளும் - உன்னரிதாம்
ஞான மயமாகி நண்ணு மிருகொங்கை
மேனிலவு முத்துவிரிவடமும் - ஆனவிருள்
மாயவினைச் சேற்றில் வருந்தா வகையெடுத்துத் (105)

தூயவருள் நீராட்டித் தூய்மை பெறத் - தாயினுமுன்
பேதித்து நம்மை வளர்த்துப் பெருநலஞ்செய்
ஆதி வலக்கரத்தி லங்கழுநீர்ப் - போதலரும்
ஏர்திகழும் பைந்துடையிற் சேர்த்த இடக்கரத்திற்
சீரார் நவரத் தினவளையும் - நீருதவு (110)

சங்கு மணிக்கழுத்திற் சார்மங் கலநாணும்
பொங்கொளிசேர் முத்தான புன்சிரிப்பும் - துங்கப்
பசுந்தளிர் மேனியும் பன்மா, மணித்தோடு
இசைந்த செவிக ளிரண்டும் - திசைவிளங்கு
பொன்மன்ற மென்னுமோர் பொற்றா மரையதனில் (115)

உன்னருநற் கூத்தா முறுதேனை - மன்னியே
உண்டு மகிழும் உயர்வண்டு போன்றிலங்கு
கண்க ளிரண்டின் கருணையும் - தண்புருவ
வில்லிடையில் வைத்த மிளிர்குங் குமப்பொட்டும்
நல்லதிரு நீற்றின் நளினமொடு - செல்லும் (120)

வெயில்மழுங்கச் செய்யும் மிகுவயிரப் பட்டை
பயிலும் நுதற்சுட்டிப் பாங்கும் - அயலே
மின்ன லுடன்தோன்று மேகத்தைப் போலணிகள்
துன்னுமெழில் நீண்ட சுரிகுழலும் - தன்னடியார்
வேண்டுவன வெல்லாம் விதித்தருளி நாட்டத்தால் (125)

மீண்டுலகில் வாரா விழுச்செல்வம் - ஈண்டுதவ
ஆராத ஆசையும் ஆன்ற மகிழ்ச்சியொடு
பேரழகும் நீங்காப் பெருமாட்டி - ஈரேழ்
புவனங்கள் பெற்ற புதியளிளங் கன்னி
நவமுடைய நித்தியகல் யாணி - சிவகாம (130)

சுந்தரியாள் காணத் துலங்குஞ் சதிலயத்தோ
டந்தர துந்துபிக ளார்ப்பமிகு - நந்தியுடன்
பானுகம் பன்பிருங்கி பாணனுயர் மாகாளர்
ஆன இசைமுழங்க அள்ளூறி - வானயன்மால்
இந்திரனு மேனோரும் எண்ணில் முனிவோரும் (135)

முந்து மடியாரு முன்வணங்கச் - சந்தமறை
அத்தனைக்கும் வித்தாக ஆராய்வார் தம்மருந்தாய்
முத்தியிலுங் கிட்டா முழுவின்பஞ் - சித்திக்கும்
தெய்வ நடம்புரியும் தேவா சிதம்பரத்து
ஐயாபொன் னம்பலத்தெம் மாரமுதே - உய்வருளும் (140)

அப்பா உனக்கே அடைக்கலமா யார்வமுடன்
செப்புந் தமிழைச் செவிமடுத்து - எப்போதும்
சிற்சபையைக் கண்டுன் திருவடியே சிந்திக்கும்
அற்புடையார் கூட்டத் தவர்நடுவில் - பொற்புறவே
வந்தென்னை யாண்டு மலவினைகள் மாற்றியுறு (145)

சிந்தை மகிழச் சிவமாக்கி - அந்தமிலா
இன்ப வெளியில் இரண்டறவே நிற்கலந்து
அன்பமையு முத்தி யருள். (148)

திருச்சிற்றம்பலம்


This file was last updated on 19 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)