pm logo

வண்ணத் திரட்டு
(பதிப்பாசிரியர்: திரு. தி. வே. கோபாலய்யர்)


vaNNat tiraTTu
edited by T.V. Gopala Iyer
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work and to
Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வண்ணத் திரட்டு
(பதிப்பாசிரியர்: திரு. தி. வே. கோபாலய்யர்)

Source:
வண்ணத் திரட்டு
பதிப்பாசிரியர்: திரு. தி. வே. கோபாலய்யர், M.A., B.O.L.
முதல்வர் (ஓய்வு) அரசர் கல்லூரி, திருவையாறு.
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின்
சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
2007] [விலை : ரூ. 50-00
தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண்: 128
---------------------

நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு

நூற்பெயர் : வண்ணத்திரட்டு
பதிப்பாசிரியர் : திரு. தி. வே. கோபாலய்யர்
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர். வெளியீட்டு எண் : 128
மொழி : தமிழ்
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
வெளியீட்டு நாள் : ஜூன், 2007
பக்கங்கள் : 152
படிகள் : 1000
எழுத்து :12
அச்சிட்டோர் : சரசுவதி மகால் நூலகம்
புத்தகக்கட்டு : மெலிந்த அட்டை
பொருள் : இலக்கியம்
விலை : ரூ.50-00

-------------------------------------------

வெளியீட்டாளர் முகவுரை

தஞ்சையில் அமைந்து தரணி முழுமைக்கும் அறிவின் செல்வத்தை அள்ளித் தந்துகொண்டிருக்கும் அரும்பெரும் நிறுவனம் சரசுவதி மகால் நூலகமாகும். சுவடிகளின் கருவூலமாகவும், பன்மொழி நூல்களின் ஆய்வு மையமாகவும், திகழும் சரசுவதி மகால் நூலகம் ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது.

இந்நூலகத்தின் முக்கிய நோக்கம் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம், சிற்பம் போன்ற அரிய சுவடிகளைப் பதிப்பித்து அச்சு நூலாக்கி மக்கட்குப் பயன்படச் செய்தலேயாகும்.

வண்ணத்திரட்டு எனும் இந்நூல் 1969ல் முத்தமிழ்த்துறை முறை போகிய வித்தகரும் திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வருமான திரு. தி. வே. கோபாலய்யர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் பதிப்பாக மலர்கிறது.

இந்நூலகத்தில் உள்ள எண். 619, எம். 702, எம். 620(ஏ) & (பி), 692 (ஏ) & (பி) மற்றும் எம். 694 (பி) ஆகிய சுவடிகளின் அடிப்படையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பாசிரியர் இந்நூலில் 'பா' என்பதற்கு உரிய விளக்கமும், வகைகளும் கூறி அவற்றிற்கான அருமையான பொருண்மைச் செறிவை எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆசிரியப்பா அகவல் ஓசையும், வெண்பா செப்பல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும், வஞ்சிப்பா தூங்கல் ஓசையும் உடையனவாய் அமைதல் வேண்டும் என்ற மரபு வழிக்கருத்தையும், தொல்காப்பியத்தில் கூறப்படும் செய்யுள் உறுப்பு முப்பத்து நான்கனுள் சிறப்புடையன இருபத்தாறு என்ற கருத்தும் அவற்றுள் இறுதியில் கூறப்பட்டுள்ளது. உறுப்பு வண்ணம் என்பதாகும் எனவும், உறுப்பு வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்டன என்று கூறப்பட்டாலும் தொல்காப்பியனார் வண்ணத்தை இருபது வகையாகவே பகுத்துள்ளார் எனவும் உறுதிபடுத்தியுள்ளார். அவற்றிற்கான இலக்கண விளக்கத்தை சான்றுடன் விளக்கியுள்ளார்.

இவ்வண்ணங்களுள் சில இறைவன் பெயராலும், பல பெருநிலக்கிழார்கள் பெயராலும் அமைந்துள்ளன. இந்நூல் அறிஞர் உலகில் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒன்றாகும்.

இந்நூல் வெளிவர நிதி உதவி நல்கிய நடுவண் அரசுக்கும், நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் (பொறுப்பு) திரு. சாமி. சிவஞானம் அவர்களுக்கும், இந்நூல் கணினி அச்சில் வெளிவர கணினி பிரிவில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சாவூர்       ந. முத்துக்கருப்பன்,
28-6-2007       மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ.),
      மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
--------------------------------------

முகவுரை.

இலக்கணச் செறிவும் இலக்கிய வளனும் சான்று இன்றுவரை நடைமுறையில் இலங்கி வரும் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். இதன் கண் வரையப்பட்ட செய்யுளை எழுவகையாக நம் முன்னோர் பிரித்துப் பெயரிட்டனர். அவை பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, முதுசொல், அங்கதம் என்பன. இச் செய்தியை,

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்’
என்ற தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பா விளக்கும்.

இவற்றுள், முதலில் சுட்டப்பட்டுள்ள பாச் செய்யள் ஒன்றே அடிவரையறை யுடையது; ஏனை அறுவகைச் செய்யுளுக்கும் அடிவரையறை இன்று. இதனை,

'எழு நிலத் தெழுந்த செய்யுட் டெரியின்
அடிவரை யில்லன ஆறென மொழிப'
‘அவைதாம்,
நூலி னான உரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான’
என அவ்வியல் குறிப்பிடும். இவற்றின் விரிவான இலக்கணம் தொல்காப்பியத்துட் காணப்படும்.

இவற்றினுள்ளும் பா என்ற ஓசை தன்னகத்து அமைய நிலவுவது பாட்டாகும். சேட்புலத்து ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் ஓதுகின்றதனை இன்னது என விகற்பித்து உணர்தற்கு ஏதுவாய பரந்து பட்டுச் செல்வதோர் ஓசைத் தொகுதியே பா என்பதாகும் என்பது பண்டைய உரையாசிரியர் கருத்து.

இத்தகைய பாடல்கள் தொடக்கத்தில் ஆசிரியம், வெண்பா என இரு வகையினவாக இருந்தன. பின் ஆசிரிய நடையினதாகிய வஞ்சியும், வெண்பா நடையினதாகிய கலியும் பாடலுள் சேரப் பாட்டின் தொகை நான்காயிற்று. அடுத்து, வெண்பா, ஆசிரியம் என்ற இரண்டும் விரவி அமையும் மருட்பாவும், நால்வகைப் பாக்களும் விரவி அமையும் பரிபாடலும் சேர்க்கப்படப் பாவின் தொகை ஆறு என்று வரையறுக்கப் பட்டது. படவே, பாக்கள் பண்டைக் காலத்தில் ஆசிரியம், வெண்பா, வஞ்சி, கலி, மருட்பா, பரிபாடல் என ஆறு வகையினவாய் இலங்கின. இவற்றின் இலக்கணம் எல்லாம் தொல்காப்பியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாக்களில் அகத்திணை பற்றிப் பேசும் உரிமை கலி, பரிபாடல் என்ற இரண்டு பாடல்களுக்கே மிகுதியும் உண்டு. ஏனைய பாடல்கள் அகத்திணைக்கே உரிமையுடையன என்ற நிலையை விடுத்து, அகம் புறம் என்ற இரண்டையும் விளக்கிச் செல்லுவவாயின.

நாளடைவில் இப்பாடல்களுக்குக் கூறப்பட்ட வரையறையை மீறியும் கவிதைகள் வெளிப்பட்டனவாக, அவை யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய கொச்சக ஒரு போகு என்ற பெயரான் சான்றோர் உள்ளத்து இடம் பெற்றன.

பிற்கால இலக்கண நூல்களில் கூறப்பட்ட வெண்செந்துறை, குறட்டாழிசை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை. வெண்டுறை, வெளி விருத்தம், ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம், வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் போல்வன நிரம்பிய இலக்கணத்தன அன்மையான் அங்ஙனம் பெயரிடுதல் பொருந்துவதன்று என்பது நச்சினார்க்கினியர் முதலிய சான்றோர் தம் கருத்தாகும் எனினும், இக்காலத்து அம்முறையே வழக்கில் பல்கி வந்துள்ளது.

பிற்காலத்தில் அறுவகைப் பாக்களால் தனி நிலை தொடர்நிலைச்செய்யுள் எழுதும் மரபு குறைந்து வரவே, பாவினங்களுக்கே வாய்ப்புப் பல்குவதாயிற்று. ஆகவே, பிற்காலத் தொடர்நிலைச்செய்யுள் பல பாவினங்களாலேயே வரையப்படுவனவாயின. சிறுகாப்பியம் என்று கூறப்படும் பிரபந்தங்களிலும் இம்முறையே கையாளப்படுவதாயிற்று. பாவினம் ஒவ்வொன்றன் கண்ணும் வகை பலவாகக் கிளைப்பனவாயின. கவிஞர் தம் கற்பனை வளனுக்கேற்ப அமைக்கப்பட்ட இத்தகைய பாவினங்களின் ஓசை நயம், பொருளாழம் இவை கண்டு மகிழ்வு கொள்ளும் மக்கள் இவற்றிற்கு எனத் தனியே யாப்பிலக்கணம் வேண்டுவதன்று என்றும் உள்ளங் கொள்வாராயினர். ஆயினும் பாட்டு என்பதற்கு ஓசை இன்றியமையாதது என்ற கருத்தில் அன்று முதல் இன்று வரை மாறுதல் எதுவும் ஏற்பட்டிலது.

ஆசிரியப்பா அகவல் ஓசையும், வெண்பா செப்பல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும், வஞ்சிப்பா தூங்கல் ஓசையும் உடையனவாய் அமைதல் வேண்டும் - என்ற கருத்து இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. வெண்பா இனத்தில் வெண்டளையும், ஆசிரியப்பா இனத்தில் ஆசிரியத்தளையும், கலிப்பா இனத்தில் கலித்தளையும், வஞ்சிப்பா இனத்தில் வஞ்சித்தளையும் அமைதல் வேண்டும் என்ற யாப்புறவு இன்மையால், இப் பாவினங்களில் இவ்வோசைகளைக் காண்பது அத்துணை எளிமையுடைத்தன்று. எனவே, ஓசைகளின் கூறுபாடுகளாகிய வண்ணங்களே இவற்றில் கொள்ளப்படுவனவாயின.


'வழங்கியல் மருங்கின் வகைப்பட நிலை இப்
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின்று ஆங்கே'
என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவினால் தலைவன் ஒருவனை வாழ்த்திப் புகழும் இடத்தும், சான்றோர் குறிப்புகளை விளக்கிச் சொல்லுமிடத்தும் இசைத்துறைக்கு உரிய வண்ணங்கள் அமையப்பாடுதல் ஏற்றது என்பது பெறப்படுகிறது.

தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ள செய்யுளுறுப்பு முப்பத்து நான்கனுள் சிறப்பாக அமைந்திருப்பன இருபத்தாறாகும். அவற்றுள், இறுதியில் கூறப்பட்டுள்ள உறுப்பு வண்ணம் என்பதாகும். வண்ணம் என்பது சந்த வேறுபாடு, வண்ணம் நூறு வகைப்படும் எனவும், நூற்றுக்கு மேற்பட்ட பல வகைப்படும் எனவும் பின்னுள்ளோர் வகுத்துக் கொண்டனர் எனினும், அவற்றின் கூறுபாடுகளெல்லாம் தம்மகத்தடங்கத் தொல்காப்பியனார் வண்ணத்தை இருபது வகையாகவே பகுத்து விளக்குகிறார்.

'வண்ணந் தாமே நாலைந் தென்ப '
அவைதாம்,
பாஅ வண்ணம் தா அ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று
ஆங்கனம் மொழிப அறிந்திசி னோரே'
என்பன தொல்காப்பிய நூற்பாக்கள்.

இவ்வண்ணவகை இலக்கணத்தைச் சுருங்கக் காண்பாம்.
1. பா அ வண்ணம் என்பது சொற்களையே சீர்களாகக் கொண்டு பெரும்பான்மையும் இலக்கண நூலில் வரும் அடியின் ஓசையாகும்.
(உ - ம்) 'வடவேங்கடம் தென்குமரி '- என்பது.
2. தாஅ வண்ணம் என்பது முதற் சீரீலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்று வரும் நாற்சீரடியின் ஓசையாகும்.
(உ - ம்) 'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு' என்பது.
3. வல்லிசை வண்ணம் என்பது வல்லெழுத்து மிக்கு வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்'- என்பது.
4. மெல்லிசை வண்ணம் என்பது மெல்லெழுத்து மிக்கு வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'பொன்னின் அன்ன புன்னை நுண் தாது' என்பது.
5. இயைபு வண்ணம் என்பது இடையெழுத்து மிக்கு வரும் அடியில் அமையும் ஒசையாகும்.
(உ - ம்) 'விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழி வாய்' - என்பது.
6. அளபெடை வண்ணம் என்பது அளபெடை எழுத்துப் பலவாக வரும் அடியில் அமையும் ஓசையாகும்,
(உ - ம் ) 'தேஎன் தாஅழ் பூஉங் கா அ'- என்பது.
7. நெடுஞ்சீர் வண்ணம் என்பது நெட்டெழுத்துப் பலவாக வரும் அடியில் அமையும் ஓசையாகும்
(உ - ம்) 'மாவா ராதே மாவா ராதே'- என்பது.
8. குறுஞ்சீர் வண்ணம் என்பது குற்றெழுத்துப் பலவாக வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது.
9. சித்திர வண்ணம் என்பது நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் பயின்றுவரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'சாரல் நாட நீவர லாறே'- என்பது.
10. நலிபு வண்ணம் என்பது ஆய்த எழுத்துப் பயின்று வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை - என்பது.
11. அகப்பாட்டு வண்ணம் என்பது செய்யுள் ஈற்றடியைப் பொதுவாக முடித்துக் காட்டும் ஈற்றசை முடியாது, ஏகாரம் ஒழிந்த ஏனைய உயிரானும், சொல் இறுதியில் வரும் உரிமை உடைய ஒற்றானும் முடியும் செய்யுள் ஈற்றடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன' என்பது, ஏகாரமல்லாத உயிரான் முடிந்த ஈற்றடி,
'போயினான் ஆண்டையான் போனம்’ - என்பது ஒற்றான் முடிந்த ஈற்றடி.
12. புறப்பாட்டு வண்ணம் என்பது செய்யுளின் இடையில் உள்ள அடி செய்யுளின் ஈற்றடி போல ஏகாரத்தான் முடியும் வழி அவ்வடியில் அமையும் ஓசையாகும்.
(உ-ம்) 'இன்னா வைகல் வாரா முன்னே' - என்ற புறநானூற்றுப் பாடலின் இடையடி, செய்யுளின் ஈற்றடி போல ஏகாரத்தான் முடிவதாகும்.
13. ஒழுகு வண்ணம் என்பது சீர்களில் ஓசையில் ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஒருபடித்தாகிய ஓசை சிவணும் சீர்களைக் கொண்ட அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம் ) ‘அம்ம வாழி தோழி காதலர்' - என்பது
14. ஒரூஉ வண்ணம் என்பது அடியின் சீர்களிலுள்ள சொற்கள் பொருள் முற்றுதலால், பொருள் நிரம்புவதற்குப் பிறவடிச் சொற்களை அவாவாது அமையும் அடியின் ஓசையாகும்.
(உ-ம்) 'மறையல ராகி மன்றத் தஃதே' - என இடையடி பிறவடிச் சொற்களை அவாவாது தன் பொருள் நிரம்பி வருவது.
15. எண்ணு வண்ணம் என்பது அடியிலுள்ள சொற்கள் ஒன்றோடு ஒன்று எண்ணப்படும் வகையில் அமையும் அடியின் ஓசையாகும்.
(உ - ம்) 'நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி' என்பது.
16. அகைப்பு வண்ணமாவது செய்யுளடியில் ஒருவழி நெட்டெழுத்துப் பயின்றும் ஒருவழிக் குற்றெழுத்துப் பயின்றும் வருதலான் அறுத்தறுத்து ஓசை உண்டாக அமையும் அடியின் ஓசையாகும்.
(உ – ம்) ‘வாரா ராயினும் வரினும் அவர் நமக்கு’ – என்பது.
17. தூங்கல் வண்ணம் என்பது வஞ்சிப்பாவினைப் போலத் தன்னிடத்துச் சீர்கள் தூங்கல் ஓசைப்படத் தனித்தனியே ஒலித்து வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ - ம்) 'யாலூடத் தானுணர்த்த யானுணரா விட்ட தன்பின்’ - என்பது.
18. ஏந்தல் வண்ணமாவது ஒரு சொல்லே தன்னகத்துப் பலகாலும் வரும் அடியில் அமையும் ஓசையாகும்.
(உ- ம்) 'வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்’ - என்பது.
19. உருட்டு வண்ணம் என்பது சீர்களின் ஓசை உருட்டிச் சொல்லப்பட்ட அமையும் அராக அடியின் ஓசையாகும்.
(உ-ம்) 'எரியுரு உறழ இலவம் மலர்' - என்பது.
20. முடுகு வண்ணம் என்பது நாற்சீரின் மிக்கதாய்த் தன்கண் அராகம் தொடர்ந்துவர அமையும் அடியின் ஓசையாகும்.
(உ - ம்) 'நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇ’ - என்பது.
இங்ஙனம் ஓசைகள் பலவாய் அமைவனவற்றை நுட்பமாக அறிந்து வரிசைப்படுத்தி இவ்வரிசையின் மிக்கு ஓசை விகற்பம் வாராது என்ற கருத்தான் தொல்காப்பியனார் 'வண்ணந் தாமே நாலைந் தென்ப' என்று வரையறுத்துப் போயினார்.

கலிப்பா நான்கு வகைத்து. அவற்றுள் ஒத்தாழிசைக் கலி என்பதும் ஒன்று அதன் கூறுகளில் ஒன்று வண்ணக ஒத்தாழிசை ஆகும். வண்ணக ஒத்தாழிசையாவது அராகம் இடையிட்டு வரும் அம்போதரங்க ஒத்தாழிசையின் விரி என்று பிற்கால இலக்கண ஆசிரியர் கூறுவது முன்னவர் கருத்தொடு முரணுவது ஒன்று ஆதலின் வண்ணித்துப் பாடும் ஒத்தாழிசைக் கலியே வண்ணக ஒத்தாழிசையாகும் என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய பண்டை உரையாசிரியர் தம் கருத்தாகும் இதனை நோக்க வண்ணித்துப் பாடும் பாடல் வண்ணகம் என்று பெயர் பெறுதல் உளங்கொளத்தக்கது.

இங்ஙனம் செய்திகளை வர்ணித்துப் பாடுவதோடு சந்த வேறுபாடுகளாகிய வண்ணங்களும் இடைவிரவி வருதலால் ஓசை நயம் மிகுவதாதலின், பிற்காலத்தார் பலரும் இத்தகைய பாடல்களை இயற்றுவதிலும் நுகர்வதிலுமே பெரிதும் நாட்டங் கொள்வாராயினர். பொருளின்பத்தையே பெரிதெனக் கருதி அதன்கண்ணேயே ஈடுபாட்டை மிகுத்துவந்த பண்டையார் போலாது, பிற்காலத்தவர் பொருளின் பத்தினும் செவிச்சுவையை உடனுக்குடன் நல்குவதான சொல்லின்பத்தையே பெரிதும் விழைந்தார் ஆதலின், பிற்காலக் கவிஞர் பலரும் சொல்லணிகளாகிய மடக்கு, திரிபு ஆகியன மிகவும் பயின்று வரும் பாடல்களையே பாடுவாராயினர்

பண்டைப் பெருங்காப்பியங்களில் பொருளின்பமே முதலிடம் பெறவும், இடையிடையே பலவகைச் சந்தங்கள் விராய பாடல்கள் சிலவாகவே இருத்தலைக் காண்கின்றோம். ஆனால் பிற்காலச் சிற்றிலக்கியங்களில் சந்தமே முதலிடம் பெறுவதாகவே, அவற்றில் சந்த இன்பம் கருதி வடசொற்களும் ஆரிய சொற்களும் மிகுதியும் பயில்வனவாயின. பன்னிரண்டாம் நூற்றாண்டினராகிய ஒட்டக்கூத்தர் காலத்திலேயே இந்நிலை தமிழ்ப் பாடல்களில் ஏற்பட்டிருத்தலைக் காண்கின்றோம். அவர் இயற்றிய தக்கயாகப் பரணி என்ற நூலிலுள்ள

'சதுரா னனனும் சக்ரா யுதனும்
சந்த்ரா தியரும் இந்த்ரா திபரும்
மதுரா புரிவா தறிவா மெனமேல்
வரவந் தனன்வை திகவா ரணமே'- எனவும்,
'பாக னகங்குழை வித்த பவித்ர பயோதரிதன்
கோக னகங்கன கஞ்சத கோடி கொடுத்தனவே'-
எனவும்,

‘எல்லை நாயக ராச ராச புரேச ரீச ரிதற்கெனும்
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி
தொடங்கியே '--- எனவும் வரும் பாடல்களை நோக்குக.
பதினைந்தாம் நூற்றாண்டினராகிய வில்லிபுத்தூரார் அருணகிரியார் ஆகியவர் காலத்தே சந்தக்கவிகள் வீறுபெற்று விளங்குவவாயின. அருணகிரியார் பாடலில் முருகன் ஈடுபட்ட செய்தி செண்டலங்காரர் வண்ணத்தில் 'அருணகிரி தமிழுகந்த கொண்டலே' என்று முருகன் பரவப்படுமிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தே சிறு பிரபந்தங்களில் ‘பல் சந்தமாலை' என்ற நூலும் தக்க இடம் பெறுவதாயிற்று.

17, 18-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிறு புலவர்கள் தத்தம் வழிபடு தெய்வங்கள் பெயராலும், தம்மை யாதரித்த வள்ளல்கள் பெயராலும் வண்ணக் கவிகள் பாடுவாராக, முறுகிய அகப்பொருள் கரண விசேடங்களைப் பலவாக விரித்துச் சிற்றின்ப வேட்கை மீதூரப் பாடத் தொடங்கினர். குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு முதலியவற்றில் சந்தப் பாடல்கள் சிவணிய அகப்பொருட் செய்திகளும், விறலிவிடு தூது, வருணகுலாதித்தன் மடல் முதலியவற்றில் சந்த இன்பத்தோடு கரண விசேடங்கள் பற்றிய பல செய்திகளும் பல்க அமைந்திருப்பதைக் காண்க. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் முருகதாசர் முதலியோர் வண்ணப் பாடல்கள் பல பாடியுள்ளனர்.

இக்கவிஞர்களைப்போல வளங்கள் பல பொதுளப் பாடும் ஆற்றலில்லாத பிள்ளைக் கவிஞர்கள் சந்தம் விரவிய வண்ணம் என்ற செய்யுள்களை யாத்து, வள்ளல்களை யண்மி, அவர்தம் கொடை வளங் கொண்டு வாழ்வாராயினர். இப்பாடல்கள் பல சந்தங்களோடு செய்திகளை வர்ணித்துப் பாடுதலான் வண்ணங்கள் எனப் பெயர் பெறுவனவாயின, வண்ண யாப்பு என்ற வரையறை யின்மையின், இவற்றை வஞ்சியடி கலியடி விரவிய ஆசிரிய யாப்பிலேயே வரைதல் எளிமைத்து. தருசை சரபோசி மன்னர் காலத்தில் பெரும் புகழ்பெற்று, இன்றும் சிறப்புடன் நிலவிவரும் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில், ‘வண்ணத்திரட்டு’ என்ற பெயரில் உள்ள மூன்று சுவடிகளில் வண்ணப் பாடல்கள் இருபத்திரண்டு உள்ளன. பிழை பொதுள எழுதப் பட்ட அவை பல இடங்களில் சிதைந்தும், சில இடங்களில் சொல் விடுபட்டும் படியெடுக்கவும் இடர்ப்பாடுடையனவாய் இருந்தமையால், அவற்றில் 17 வண்ணங்கள் 16 ஆண்டுகளுக்கு முன் காகிதத்தில் பெயர்த்தெழுதப்பட்டன. ஏனைய அண்மையில் படியெடுக்கப்பட்டன. அவை அமைந்தவாறே அவற்றை வெளியிடின் அச்செய்கை எவ்வாற்றானும் தமிழுக்குச் செய்யும் பணியாகாது என்ற உள்ளத்தான், பெரும்பான்மையவான பிழைகளைத் திருத்தியும், விடுபட்ட எழுத்துகளை ஊகத்தான் ஓர்ந்து வரைந்தும் ஓராற்றான் உருவாக்கி என் சிற்றறிவிற் கெட்டிய வகையால் பதிப்பிக்கும் நிலையில் உதவும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இவ்வண்ணங்களுள் சில இறைவர் பெயரான் இலங்குவன. பல பெருநிலக்கிழவர் பெயரான் அமைந்துள்ளன. இறைவர் தம் வருணனை சிறப்பாக அமைந்துள்ளது. பெரு நிலக்கிழவர்களின் பண்புகளும் செயல்களும் கற்பனை கடந்து பேசப்படுகின்றன. சிதம்பரம், சேது ஆகிய தல வருணனைகள் பரக்கப் பேசப்படுகின்றன. இராமாவதாரச் செய்தி தொடர்பாகச் சுட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் காணப்படும் சக்தி உபாசகர்களாகிய கட்குடியர் தம் கூற்றுச் சுவை மிக்கது. பாட்டுடைத் தலைவர்களைக் கவிஞர் தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பேசும் இடங்களும், பாட்டுடைத் தலைவர்களைக் காக்குமாறு தெய்வங்களைப் போற்றும் இடங்களும் படிப்பவருக்குப் பெருவிருந்தாகும். வேளாண்குடிச் சிறப்பு வரலாற்றுடன் குறிக்கப்படுகிறது. தலைவர்களின் வீரம், கொடை பற்றிப் பாடப்பட்ட பகுதிகள் பலவாகும். பெரும்பான்மையான பாடல்களின் பிற்பகுதி மகளிர் பற்றியே அமைந்துள்ளது. இனி, இவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
----------------------------
சிவபெருமான் பற்றிய வருணனை.

சுநாதசுவாமி வண்ணத்தில் சிவபெருமான் - பிரமன் திருமால், இந்திரன் முதலிய தேவர்களுக்கு அரியவர், பிறைச்சந்திரனோடு எருக்கு முதலிய மலர்களை அணிபவர், பார்வதியைப் பாகமாக உடையவர், முவர் தேவாரத்தை விரும்புபவர், மணிவாசகரை உள்ளிட்ட 64 அடியார்களுக்கும் அருள்பாலித்தவர், இடபக் கொடியினர் என்ற செய்திகள்

இருக்கான வேதமுதல் வகுத்தோனும்
ஆலினில் முன் உதித்தோனும்
மாதருவினிற் காவுறு வோனும்
மற்றுமுள்ள தேவர்களும்
நச்சிநெடு மாதவம் இயற்றியும் அறியாதவர்;
முயல்மேவு பாதியுடல் கூனும் மாமதியும்
எருக்கொடு தாதகியும் மருத்தேனின் கூவிளையும்
முடித்தோர்; வேறாம் முப்புரம் நீறெழ
விழித்த விழியார்; இமயம் என்னும்
மலைக்கினிய காதலி தன்னிடமான சிவனார்;
இயற்பாவில் மூவர் மொழி தமிழ்க்காதல் கூர்பரமர்;
நினைப்பார்கள் நீள்மதியில் விருப்போ டுலாவும்
உத்தம விலாசர்; இருமுப்ப தொடு நால்வர்
கதிமுத்தி பெறவே அருள் செய் அடியார்வசர்;
ஆடுகொடி இடபமென மேவுங் கரனார்.
என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளன.

நெல்லை நாதர் வண்ணத்தில் சிவபெருமான் எல்லாமாகி நிற்கும் பருவுருவும் எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாய் நிற்கும் சிற்றுருவும் ஒரேசமயத்தில் உடையவர், திரிபுரத்தை நகைத்து எரித்தவர், இடபவாகனர், விடமுண்ட கண்டர். கண்ணப்பர்க்கு அருள் செய்தவர், காலகாலர், கூத்தராகி விளங்குஞ் செய்திகள்

ஒளியு மாகி உருளு மாகி
இருளு மாய நேமி வேய்
வெற்பு மாகி வட்ட மாகியே
பகலு மாகி இரவு மாய்
மதியு மாகி ஒளியு மாய்
நாகம் எட்டு மாகி மற்ற
நாகம் எட்டு மாகியே
உடலு மாகி உயிரு மாய்
அறிவும் ஞான வெளியு மாய்
வேத வித்து மாகி மூவர்
ஆதி தேவும் ஆகியே
எவையினில் நிறைந்து லாவும் சிவனார்;
உரக நாணி வரைவில் லாயொர்
முகுந்தன் தானும் பகழியாய்
மாபுரத்தை நீ றெழப்பண்
நகை நகைத்த ஈசனார்:
விடையி லேறு பரமனார்;
மிடறு நீல நிறமுள்ளார், கான
கத்து வேடன் எச்சிலே பொசித்த
வாயினார், உழை உலாவி வருகையார்,
மறலி உதை செய்வார், வீரபத்திர
காளி வெட்கி நடக்கவே
நடித்த தாளினார்;
அறுகுடன் திங்கள் சூடு சடையார்:
என்ற அடிகளில் கூறப்பட்டுள்ளன.

சிவபெருமான் கங்கை சூடி, கரித் தோல் உரியார், தேவாரம் உகப்பவர், மறைகளுக்கும் அப்பாலார், ஆலம் உண்டவர், பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகிய முனிவரரால் வணங்கப் பெற்றவர், அடியவரைப் புரப்பவர், திரிபுர சங்காரி, மதனனை எரித்தவர், பார்வதி பாகர், கயிலை மலைவாசர் என்ற செய்திகள் குமார சாம்புவன் பற்றிய வண்ணத்தில்,

புனலே திரும்பிய சடை தனில் மஞ்சனத்
தூய நீ ராடு புங்கவர்; மதமெனும்
தூய அருவி பொங்கும் குஞ்சரத்
தோலால் வீறு கஞ்சுகர்! புலி
அந்தணர் அரசர் சுந்தரர் செந்தமிழ்ப்
பாவலர் பா அலர் வீறு திண்புயர்;
மறைகள் தாமும் மண்ட அரியவர்
புவிய டங்கலும் உயிர்பெ றும்படிக்
கண்ட மட்டே ஆலாலம் உண்டவர்;
உமையுடன் மாலயன் வணங்கும் அருணைப்
பதிக்கே வாழ்வாய் இருந்தவர்; புலி பதஞ்சலி
முனிதொழும் திருவம் பலத்தே சேர் வானவர்;
பொன்னொளி தவழும் இரவிபோல் ஒளியவர்;
அனுதி னந்தொழும் அடியார் தங்களை
மைந்தரைப் போலவே தாமு கந்தவர்;
முப்புரம் பொடிபட முனிந்தவர்;
ஐங்கணைப் போர்வேளைக் காய்ந்து வென்றவர்;
சிரங்க ளும்எரி கரங்களும் மங்கையின்
கூறும் வளரக் கயிலைமீ துறைவார்;
அருண மண்டலம் அளவிடும் காவினர்:
என்ற அடிகளில் வருணிக்கப்பட்டுள்ளன.

தியாகராசர் வண்ணத்தில், சிவபெருமான் - முசுகுந்தன் கொண்டாடும் பெருமான், நாதகீத நர்த்தனம் வல்லவர், சோமாசி மாறர்க்கு அருள் செய்தவர், சுந்தரர் பாடல் உகந்து ஆடல் மறந்தவர், தியாகேசர் என்ற செய்திகள்

மேலாரும் இந்திரத் தேவனால் முசுகுந்தன்
வில்லிகொண் டாடவரும் ஆதிப்பெருமாள்;
ஓரெழு இடங்களுக்கும் ஈசர்மூ வரும்முன்
உள்ளறிந் தோதரிய கோவிற் பெருமாள்;
வேதா வியந்திடப் பீடமீ தினிலிருந்து
மெய்யசைந் தாடிய விநோதப் பெருமாள்;
கம்பிக்கா தழகிய பெருமாள்வீணா
மதங்க நற்கீத நாதம் நிரம்ப
விள்ளுந் தேன்தாரை விதரணப் பெருமாள்;
சோமாசி யன்பரிடம் அருள்கூர வேவந்து
சொல்விருந் தாம்முதிய கோயிற் பெருமாள்;
ஓவாது வந்தபுத் தொளித்தாளில் விளங்கும்
வெள்ளிபொன் பூண்டிடும் ஆனைப் பெருமாள்;
தண்டைக்கால் அரவப் பெருமாள், ஆலால
சுந்தரற்கா ஆடல் மறந்தவர் போல
விலங்கு றுந்திரு வீதிப் பெருமாள்;
தெய்வசிங் காதனத் தியாகப் பெருமாள்:
என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பெருந்துறையான் வண்ணத்தில் சிவபெருமான்

'கொழித்திடுங் கதிர்வீசிய
மழுப்பெரும் படையார்' எனவும்,
'பொருதிரைத் தடங்கட லிடத்துறங்கிய
திடத்தொடுங் கொலையே றுடையார் ' எனவும்,
'சதுர்மறைப் பெரும் பரியோடு அதிர்
நரிப் பெரும் படையார்' - எனவும் குறிப்பிடப் படுகிறார். ரகுநாத நாயக்கர் வண்ணத்தில் மேற்கூறிய செய்திகளோடு, சிவபெருமான் - பத்திரத்தன் விசித்திரன் என்ற அடியவர்க்கு அருளியவர், இராமபிரானுடைய தோஷம் தவிர்த்தவர் ஆகிய செய்திகள்

பத்தி ரத்தன் விசித்திரன் என்னப்
பத்திரர் அருச்சனை புரிதாளினர்; வளர்
காசிநகர்க் கதிகம் சேதுத் தலமெனும்
தலத்தின் கண்ணே நித்தலும் உறைவோர்;
மேன்மைக்கண் மடக்கொடி மிக்க பருவதவர்த்
தனிதவக் கனியுத் தமியுடன் வாழ்பவர்;
இராமநா யகரை உற்ற தோஷம்
ஆயது முழுதுங் கெடவே அருளினோர்:
என்று விளக்கப்பட்டுள்ளன.

சொக்கநாத சுவாமி வண்ணத்தில் காணப்படும் சிவபெருமான் பற்றிய வருணனை சந்த இன்பம் மிக்கது.

கரட மதகரி உரிவை உடையவர்,
கயிலை மலைநிகர் தவள விடையினர்,
கற்றை வார்சடை அத்த ரானவர்,
கப்பு வேல்செறி முத்தர், பூரணர்,
மருவும் இரசத சபையுள் மதிகுல
வழுதி மகிழ்தர நடனம் இடுபவர்,
மட்டு லாவுறு கடுக்கை தாதகி
மத்தம் ஆறிவை வைத்த வேணியர்,
கனக வரையினர், பனக அரையினர்,
கமழும் அறுகினர், கதழும் மறியினர்,
கற்பம் நீடறு பத்து நாலெனும்
கலைக்கு நாயகச் சொக்க நாயகர்:
என்ற பகுதியை நோக்குக.

தஞ்சை நாயகன் வண்ணத்தில் காணப்படும் சிவபெருமான் வருணனையும் சால அழகிது.

அனங்கன் மேல்விழி நோக்கு கின்றவர்,
பனக பூஷணர், கூத்து கந்தவர்,
கங்கை தாதகி திங்கள் கூவிளை
கொன்றை வார்சடை யார்,நெ டுங்கட
கரியின் மீதுரி போர்த்த சங்கரர்
நடன மாயடி தூக்கு கின்றவர்,
துங்க மான்மழு அங்கை மீதினில்
விளங்கும் சூல கபால கங்கணர்,
அரிசு ராதிபர் போற்ற வுந்திரு
மணவை மாநகர் வீற்றி ருந்தவர்,
நங்கை யோர்திரு மங்கை நாயகி
பங்கனார் சிவ ராம லிங்கனார் - என்பது அப்பகுதி.

சிவபெருமானைப்பற்றிய அரிய வருணனைகள் அமைந்திருப்பது போலவே, பார்வதியைப்பற்றிய அரிய வருணனைகளும் உள, அவற்றுள் சிலவற்றை நோக்குவாம்.

இராமநாத சுவாமி வண்ணத்தில், பார்வதி –

பகவதி, நித்யகல் யாணி, சங்கரி,
வயிரவி, உக்ரமா காளி, அந்தரி
உலகு கிடுகிடென மயிடன்திரு முடியினிடை
நடமிடுங் கவுரி நாக பூஷணி,
சரஸ்வதி இலக்குமி தேவி கும்பிடு
இருசர ணத்தி, எறிசூலி, சண்டகி,
பதறி அலகை சிலகதற ஏனை
உலகில் உதறி எறியும் ஒருபெரும்
பூத வாகனி, பருவத வர்த்தனி,
ஆதி சுந்தரி, அனுபவி, உத்தமி,
நாக கங்கணி அருண வெயிலொழுகு
தருண வடிவழகி, கருணைத் திருஉருவி:
என்று பல சிறப்புப் பெயர்களால் புகழப்படுகிறாள்.

சந்திரமதி வண்ணத்தில் பார்வதி எல்லாமாய் இருக்கும் செய்தியும், எல்லாருக்கும் அருள் செய்யும் திறனும்,

பகிரண்ட நவகண்ட புவனங்களும் அனைத்தூழி
கருப்பமும் அருக்காதி முச்சுடருமெண் டிசைதாமும்
எண்பணியும் எண்குவடும் எட்டாத பொற்குவடு
நெட்டாழி வட்டமும் ஓரைந் தினையும்
முயன்றனர் அறிந்தனவும் எத்தேவர் முத்தொழிலும்
முத்தேவர் கற்பிதமும் யாவையு மாகியுறைவாள்;
அமரர் பணிதிரி யம்பிகை, சவுந்தரி,
அருட்பால் ஈபவள், பொருட்பால் அளிப்பவள்,
புரந்தரி, சுமங்கலி, பசுங்கொடி முடிப்பவள்,
நினைத்தது முடிப்பவள், மலைக்குமரி, சுந்தரி,
மதங்கி, சிவசங்கரி , அனந்தசய னத்தாய்,
கச்சியில் கச்சாலை உத்தமி:-- என்ற தொடர்களில் விவரிக்கப்பட்டுள்ளன.


திருப்பெருந் துறையான வண்ணத்தில் காணப்படும் களியர் கூற்றில் - அவர்களால் பூசனை செய்யப்படும் தேவி,

அருள்பெ ரும்பரி பூரணி, உருத்திடும்
சிங்காரணி, அறந்தி, குங்கும நிறத்தி,
சங்கரி, அருள்பெ ருங்கிரு பாலினி,
மாலினி, வரைபெ றுங்கரு ணாகரி,
திசை பெறும்குண சாகரி;
வரதிட் டந்தரி, குரத்தி, சுந்தரி,
வணக்க ருங்கலை மதங்கனி, யோகினி,
அரிக்கு உகந்த சகோதரி,
அருந்துய ரந்தடு போதரி,
திரிநய னத்தி, கிஞ்சுக வனத்தி;
பஞ்சமி, அளித்த டங்கண் மயேசுவர
ஈசுவரி, அயிராமி - என்று தோத்திரம் செய்யப் படுகிறாள்.


சொக்கநாத சுவாமி வண்ணத்தின் தொடக்கத்தில் காணப்படும் பார்வதி தோத்திரம் சந்த இன்பம் மிக்கது.

கருதும் அடியவர் துயரது கெடவரு
கமலை, பரிபுர சரணி, கரியவள்,
கச்சு லாமுலை பச்சை நாரணி,
கற்ற நாவலர் சொற்ற பூரணி,
உரக கணபணம் நெளிய மணிமுடி
உதவு மயில்மிசை மருவு குகனையும்,
ஒற்றை யானை மருப்பி னானையும்,
உற்ற மகிழ்வொடு பெற்ற நாயகி,
கவுரி, திரிபுரை, கன்னி உமையவள்,
கமல மலர்மகள் பரவு மலைமகள்,
கற்ப காடவி உற்ற வாகனர்
கருத்துள் மேவுறு கயற்கண் நாயகி,
விமல பதமலர்க் கமலம் நினைகுவாம்:
என்பது அப்பகுதி.
சொக்கநாத சுவாமி வண்ணத்தில் களியர்கள் தேவியை,

அரிவை, திரிபுரை, வயிரி, பயிரவி
அமலை, சயமகள், குமரி, பகவதி,
அத்திர லோசனி, துர்க்கை, யாமளை
பத்திர காளி - எனப் போற்றுகின்றனர்.


வராககிரிச் சின்னையன் வண்ணத்தில் தேவி,
அகளத்தி, சகளத்தி, கவசக்தி, சமயத்தி,
வல்லபி, ஆயி, சதானந்தி, மாயி,
கலாதந்தரி, மாலினி, மாதங்கி, சூலிகபாலி,
என்று குறிப்பிடப்படுகிறாள்.

இனி, அம்பிகை பாலனாகிய முருகப்பெருமான் பற்றிய செய்திகளை நோக்குவோம்.
செவ்வேளுக்குப் பச்சை நிறத்தை இணைத்துச் சுவைக்க விரும்புகிறார் செண்டலங்கார வண்ணத்து ஆசிரியர்;

பச்சைமால் மருகா, பச்சைமான் மதலாய்
பச்சைமா மயில் வரும் வீரா,
பச்சைமால் வரையின் வள்ளி பங்காளா,
பச்சை வேள் தனக்கு மைத்துனனே –
என்று முருகப் பெருமானை விளிக்கிறார்.

முருகப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களின் பட்டியல்
ஏரகம், பழநி, வேங்கூ ரொடு, கச்சி
எண்கண், மாயூரம், ஐயாறும்
இடைமரு தூரும், திருப் பரங் குன்றம்,
எட்டியனூர் திருத்தணியும்
பாரகம் புகழும் செந்தில், வேதவனம்
பராவு செங் கோட்டிலும் மேவி –
என்ற பாடற் பகுதியில் உள்ளது

முருகனுடைய திருநாமங்கள் பல
கந்தனே, முருகா, கடம்பனே, குமரா,
கச்சிள முலைக் குற வள்ளி
கணவனே, பழநிக் கடவுளே ஏரகம்,
கதிர்காமம் வாழ நின்றவனே,
செந்தனே, செந்திற் கிறைவனே, வேளூர்
செழிக்க வந்தருள் வேளே,
அய்யனே, மயூர முத்தையா –
என்ற பகுதியில் காணப்படுகின்றன.

சரவண பவனே, குரவணி புயனே
தண்டையார் சரண பங்கயனே,
சண்முகத் தவனே, ஞான தேசிகனே
சங்கரன் உகந்தருள் மகனே
மருவு தெய்வானைப் பிராண நாயகனே
வள்ளி பங்காளனே குகனே' –
என்றும் முருகப் பெருமான் விளிக்கப் பெறுகிறான். அவன் அமரர் நாயகன், குரிசில், அருணகிரி தமிழுகந்த கொண்டல், மண்டலீசுவரன், எம்பிரான் வேளூர் வைத்தியநாதன் ஈன்றருள் மதலை, முத்து வேலவன் என்றும் சிறப்பிக்கப்படுகிறான்.

வராககிரிச் சின்னையன் வண்ணத்தில் முருகப் பெருமான் சூரனை அழித்து அமரரைக் காத்த திறம் பேசப்படுகிறது.

கபாலி மகனை, பன்னிருகைச் சண்முகனை
சரவணத்துள் மணியை,
பணிவதற்கு வைப்பான தேவை,
வானவர் மேல்வந்த தானவர் போர்குறுக
மாயவடி வாய் நின்ற சூரனும்மாள
அயிலைப் புறமெடுத்துப் பாலைத் தனிநடத்தி
அமரர்க்கு உயிரளித்த கருத்தாவை, ஓதும்
ஆரண சாரங்கள், ஆகம சாரங்கள்,
பூரணமா நின்ற சரவணவேளை,
விசால சிவகிரி யானை. –
என்று அப்பகுதி குறிப்பிடுகிறது.

செண்டலங்காரன் தன்னுடைய உடற் பிணிகளெல்லாம் நீங்கி நூறுவயது வாழ்வதற்கு முருகப்பெருமான் திருவருள் முன்னிற்க வேண்டும் என்று கவி பலபடியாகத் துதிக்கும் பாடல்கள் பல.

திருமாலின் சிறப்பும் வண்ணங்கள் பலவற்றில் கூறப்பட்டுள்ளது. திருமால் காளிங்கன் மீது நடம்புரிபவர், சர்ப்ப சயனர், வேணுகானம் செய்பவர் பிரமனைத் தோற்றிய உந்தியர், பாண்டவர்க்குத் தூது சென்றவர், கருடக் கொடியினர், கவுத்துவம் அணிந்த மார்பினர் ஆகிய செய்திகள் வேங்கடேசுவர வண்ணத்தில்,

பாந்தனின் மேல் நடம்புரி பாதசக்கிரப்
பரமனாய்ப் பணாமுடி நாக மெத்தை
மீதில் உறங்கு மாதவர்; பசுநிறை
சாய்ந்து பின்னே தொடர்ந்திடு ருசிகொண்ட
வேணு ஓது கின்றவர்; நான்முகப்
பிரமா வுடனே முளைத்த தாமரை
நாபி வட்டமீ தலமந்த காரணர்; நாரணர்;
சுகுமாரர்; அந்தரர் அமுதானவர்;
பாண்டவர் தூது சென்றவர்; கொடிஏய் –
வதான பறவையர்; வீசுகவுத்துவ
மாமணி தங்கும் மார்பினர்; கோபாலர்
அடிபரவும் நெடியமால் –
என்ற அடிகளில் குறிப்பிடப் பட்டுள்ளன.

வெள்ளைச் செட்டியார் வண்ணத்தில் திருமால் தேவதேவராய் அறிதுயில் நீங்கி அடியவர்க்கு எளியராய் அழகே வடிவெடுத்தவராய் இலங்கும் செய்தி:

வென்றிசேர் பதும மலர்க்குள்
வேதனும் உயர் முக் கணானுடன்
அமரர்க்கு நாதனும் நெடுவானோரும்
பொன்வரை மீதேறி நின்று
மறைவேறே வகுத்தும் நேச உள்ளத்
தக்கபோதில் ஒப்பில் ஆதரத்தின்
வருகின்ற அப்பனே கிருபை அகத்தனே
அலைகட லுக்குளே விழிதுயில்
சீரான செங்கமல மாதரால்
உறங்குகின்ற பராபரர்; வேணும்பொழுது
துயிலற் கொத்து நீடும் சமாதியழித்து
மேல்வருபவர்; வையத்துக் காரணர்
அடியவர்க்குத் தாம் எளியவர், சீராகநிவந்த
கோபாலர் மென்பதும பாதார விந்தம்;
உடலம் குவளைப்புட்ப மாலையோ
மலர்கள் சிந்தி மருவிய செவ்வேள்
மிக்க தாகிய ரட்சாதிகன் உலகு
புகல் ஓதத் தூநெடு வண்ணனே.
என்ற அடிகளில் புகலப்படுகின்றது.

இராமாவதார சிறப்பு இராமநாதசுவாமி வண்ணத்தில்,

வனச மலர்ப்பொலி சீதை என்ருெரு
திருமகளைக் கொடுபோய இலங்கையின்
அசுரன் அவனுடைத் தலைமகன் நடுமகள்
இளையவ னொடுபல கோடிச் சேனைகள்
முழுதும் அறுத்தே எதிரிடு கும்பகன்
னனையும் வதைத்து வீடணன் தனியரசு
நிறுவி யேயொரு சனகி சிறைவிட
மகாசலதி தன்னை ஆதி நாளையில்
மலைகொண் டடைத்தருள் சேதுபந்தன
ரகுபதி மன்னன் ஆணையின் வணங்கிய –
என்ற பகுதியில் சுட்டப்படுகிறது.

இராமலிங்கசுவாமி வண்ணம் எனப்படும் சுநாதசுவாமி வண்ணத்தில், இராமனுடைய சிறப்பு,

எழிற்பால னாகமனு உதித்த தேவோ,
தனி விண்டுத் தேனோ,
தாடகையை வதைத்தே,
நலவேள்வி முற்றி ஒருமாது
கல்லது சாக்கி வில்லை முறித்து
மலர்மாதை உயர்மணம் மேவு இராமன்
வலக்கார்முகம் தூணியுடன் நகர்விடுத்து
ஆறுகூடமது விராதனையும் அழித்து
ஊடு கானகத்து அரக்கி நாசி
கரன் மக்களொடு மானை
வயிற்றில் தலைகொள் வானை
மராஅ மரனொடு வாலியை மாளக்குலைத்து
கடல் அடைத்தே வீயார் அணிமொய்
குலத்தோடும் மாளமுடி அடுத்தோனும் மேவ
மற்றும் உயர்புட்பக
விமானத் தொடும் நகர்புக்கு
முடி சூடி வளர் இராகவே சுவரன்
என்று குறிக்கப்பட்டுள்ளது.

சீரங்கநாதர் வண்ண ம் முழுவதும் இராமனைப் பரவுவதாய் இராமாயணச் சுருக்கமாக உள்ளது.

வீரராகவ முதலியார் வண்ணத்தில் பேராற்றல் பொருந்திய இராவணனை அவன் மரபோடு அழித்துத் திருமால் தேவருக்கு அருள் செய்த திறம்,

ஆதி உருத்திரனார் கயிலாச வெற்பை
முன்னாள் அடியோ டழித்த அசலபுயன்
வீர விக்கிரம ராவணே சுவரன்,
வாரணம் எட்டுடன் பொரமருப் பொடிய
மணிநீல வச்சிரம் மேலே அழுத்திய
மார்பு தங்கிய சோரி ஆறெழ,
ஆதவனுக் கிணையாய் அபிஷேகம் வைத்த
மகாமகு டாடவித் திரள்தூளி படவே,
சுரேசர் அத்தனை பேரும் பேறுற,
வாளி தொட்ட சாப நெடுமால்; -
என்று சுட்டப்பட்டுள்ளது.

செண்டலங்காரர் வண்ணத்தில் திருமால் நரசிங்கமாய் இரணியனை அழித்ததிறம், கோவர்த்தன கிரியைக் குடையாகக் கவிழ்த்ததிறம் ஆகியவை விரித்துக் கூறப்பட்டுள்ளன.

சகத்ரட்சகன் என்ற கருணைக் கடலே,
அநந்த சயனத்திடை விளங்கும் சக்ரபாணி,
திண்டிறலால் நரசிங்கமாய் இயையும் படியே
வான்முட்டி நிமிரும் பெருந்தூணில் உதித்துடனே
முந்துமுர ணுற்ற இரணியன் தன்னுடைய
மணிநற் குடலைப் பிடுங்கியே மிகு
ரத்த பான முடன்பசி யாறிய
செங்கண் மாதவன் செங்கனி வாயினன்,
அம்பிகை சோதரன், அங்கசன் தாதை,
சிகரக் கிரியினைக் கனத்த மழையில்
கவிகை போன்று சுரபிக்கிடர் துறந்த
ஒருகைச் சகாயர், சிந்துர நேசர்,
முகுந்தர் முராரி, இராசையில் எம்பெருமான்; -
என்ற பகுதியை நோக்குக.

வேளாண் குடிச் சிறப்பு

சூளாமணி வண்ணம், வீரராகவ முதலியார் வண்ணம் ஆகியவற்றில் வேளாண் குடிச் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.
பழையனூர் நீலி என்ற பேயினால் பெண்ணுருவில் தொடரப்பட்டுத் திருவாலங் காடுவந்த செட்டியை அவ்வூர்த் தலைமக்களாகிய வேளாளர் எழுபதின்மர் அப்பெண்ணோடு இயைவித்து அவளால் அவன் உயிருக்கு ஏதம் நிகழ்ந்தால் தாமும் தீக்குளித்து உயிர் நீப்பாராக உறுதிகூறிப் பின் அவளால் அவ்வணிகன் இறக்கவே, சொல்லியசொல் மாறாது அவ்வெழுபதின்மரும் உயிர் நீத்து அழியாப்புகழ் அளித்த குலம் வேளாண் குலமே. கன்னியொருத்தி இறைவன் சந்நிதிமுன் தலைவன் ஒருவனை மணந்தாளாக, அச்செய்தியை அறியாத ஊரவர் பின் அவள் கருவுற்ற ஞான்று அவளை இழித்துப் பேசினாராகத் தன் தூய்மையைத் தெய்வத் திறங்காட்டி மெய்ப்பித்த அந்நல்லாள் பிறந்ததும் வேளாண் குலமே. தமக்கு உண்ண உணவில்லாத நிலையிலும், மாரிக்காலத்து இரவிடை வந்த விருந்தினரை உண்பித்தற்கு இருளிடைச் சென்று மழை நீரால் ஒதுங்கிய நென்முளைகளை வாரிவந்து பக்குவம் செய்வித்து உணவு அருந்துவதற்கு ஆவன செய்த இளையான் குடிமாறனாரைப் பயந்ததும் அந்த வேளாண்குலமே. வந்த புலவர் மனம் மகிழுமாறு அவருக்குப் பரிசில் நல்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் உயிர் தாங்கி இருப்பதனினும் உயிரை நீத்தலே மேலானது என்று உட்கொண்டு கொடிய நாகம் வாழ்ந்த புற்றிலே கையைவிட்ட அளவிலே அந்த நாகம் நல்கிய உயரிய மணியைப் பெற்றுப் புலவருக்குப் பரிசில் அளித்த காளத்திவள்ளல் தோன்றிய குலமும் வேளாண்குலமேயாம் - என்ற செய்திகள்

‘காடு தப்பி வந்த, பாவிச்செட்டி தன்பின் நீலி
கூடி வந்து மார்பினைப் பிளந்துவிட்ட
பழியைக் கழுவுதற் கெழுபது உத்தமர்
நெருப்பினில் முழுகியே இசைப டைத்தும்,
ஒருபத்து மாதமான கர்ப்பசங்கை நங்கை
மாது களங்கம் பறித்துப்
பால்கொதித் தெழுந்த சோறிடத் துணிந்தும்,
வயல் நெற்பெற முளைத்த முனையிற்
சில திரட்டி அமுதளித் துபசரித்தும்,
வளர் புற்றிலே கைகாண வைக்க
வஞ்ச வாளெயிற்று நஞ்சு சீறியெழு
சிறந்த காளமா நாகமிந்த வையகத்தை
விலைபெற்ற நவரத்நமணி
கைக்குளிட முற்றும், உரைபெற்ற மரபு' - எனவும்,
'ஆழி உடைத்தது போல மழைகூர
நெட்டிருள்வாய் முளை வாரி வித்தகனார்
தமக்கருள் படைத்த மெய்ஞ்ஞான பூஷணன்'
எனவும் வரும் பகுதிகளைக் காண்க

'நதிகுலேசன் கமலை நராதிபன்' எனவும்,
நதிகுலன் தஞ்சை நாயகன்' - எனவும்,
‘கங்கைகுல மீதிலிசை நாட்டுகின்ற வாரிதி’-
எனவும் வேளாண் குலத்தவர் கங்கைக் குலத்தவர் என சிறப்பிக்கப்படுதலையும் நோக்குக.

இனி, நாட்டுவளன், நகரவளன் பற்றி இவ்வண்ணங்கள் கூறுவனவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

காரியக்குளந்தை என்ற ஊரிலே கயல்மீன்கள், குவளை மலர்ந்த வாவிகள், பள்ளங்கள், அவற்றில் குளிக்கும் மகளிர் தம்மயிர்முடி, குளத்தின் நீரோடுகால், சிறுசுனை, வயல்கள் ஆகிய இவற்றில் குதித்து ஓங்கிப் பாளையில் செறிந்த தென்னங் குலைகள், வாழை கரும்பு இவற்றைத் தாக்கி நீரில் களையாக ஓடிவருவனவற்றில் புகுந்து மடையிலும் அயற்புறமும் தத்திக்குதிக்கும் என்ற கற்பனை சுவைமிக்கது. இத்தகைய கற்பனைகள் பல பிற்காலப் பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்களில் காணப்படுவனவாகும்.

'காவி மொட்டலர்ந்த கால்வழிக் குரம்பின்
வாவியில், பரந்தகேணியில், கணமாதர்
ஓதியில், மீதுஅகிற் குடைகுளத்தின்
வழியில், சிறு சுனைக்குள், வயலில்,
கயல் குதித்து முறிபடு நாளி
கேரக் குரும்பைப் பாளையில், ததைந்த
தாழையில், சுகந்த வாழையில், கரும்பில்,
உடைபட்ட புனலிட்ட களைதத்தி
மடைதத்தி அயல்தத்தி உயர்தத்தி வீசு
காரியக் குளந்தை ஊரினில் '- என்ற சடையப்பன் வண்ணப் பகுதியை நோக்குக.

காஞ்சிமாநகர வனப்பு வெள்ளைச் செட்டியார் வண்ணத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'கற்ப காடவியை நிகர்த்த சோலையும்
நறை கொட்டு தாமரைமலர் மொய்த்த
வாவியும், நிறைவான செங்கழுநீர்
ஓடையும், தரளம் வீறுறு மென்கழையும்,
நெல்லியின் பொற்காவும் வட்டநிழ லளாவிய
எட்டுவான் உயரமும் எட்டும்
கோபுரமும், மதில் பிரகாரமும்
நல்வானோர் பெரும்பதியை
நோக்கும் என்று உலகுளோர் நாளும்
வந்துரைகள் செய்யத் தக்கதான

கச்சி நீடளகை நகர்க்குள் வாழ்வோன்' - என்ற இப்பகுதியில் காஞ்சி நகரைச் சுற்றிச் சோலைகளும், மலர்வாவிகளும், கரும்பு வயல்களும் அமைந்து விளங்கிய திறனும், ஊரில் நெல்லிமரச் சோலைகளும், தேவர் தம் தலை நகரை நிகர்க்கும் என்று கூறும் அளவிலமைந்த கோபுரமும் பிராகாரமும் கொண்ட திருக்கோயில் முதலிய கட்டிடங்களும் விளங்கிய செய்தியும் விவரிக்கப்பட்டுள்ளன.

சாத்தனூரில், சங்கினங்கள் வாழைமதுச் சேறு நிரம்பிய வயலிலே இருந்தகாலை, பழங்கள் முதிர்ந்து வயலில் உதிர்ந்த காரணத்தால் அவை வருந்தி மணல் மேட்டினை எய்தி, அடுத்திருந்த தாமரையை அடைந்து அதன் கண் முத்தினை ஈனவே ஈன்றணிமையுடைய பெடைச் சங்கங்களை நீங்கும் மனமின்றி ஆண்சங்கங்கள் அவற்றுடன் துயில் கொண்டன என்ற செய்தி சூளாமணி வண்ணத்தில் சுட்டப்பட்டுள்ளது.

'தாற்றிலே வாழைமது ஆற்றிலே
பாளையுதிர் சேற்றிலே சேர்
சேயகல் வயலி னருகே நந்து கருவின்
பழ முதிர்ந்து உளைய நொந்து அயலின்
நந்தினம் அனந்தரம் உலைந்து
மணல் சூழ் மேட்டிலே எற்றி
அயல் கொடி சூழ் அலரேட்டிலேயேறி
அரவிந்த முகமேல் தரளம்
சொரிநந்து தன்பெடை மென்மேல்
போகாது இடை கொண்டு துயில்கூர் சாத்தனூர்'
என்ற பகுதியை நோக்குக.

செண்டலங்காரர் வண்ணத்தில் - இராசைமா நகரில் பசுவும் புலியும் பகையொழிந்து ஒரே துறையில் நீர்பருகும் நேர்த்தியைக் காணலாம். மகளிர் சாயலுக்கு ஒப்பான ஆண்மயில் அவர்களைப்போல் தான் நடை கற்க இயலாது இரங்கி நிற்கும் காட்சியும் காணப்படும்; காவிரியில் பெண்கள் நீராடும் போது அவர்கள் கண்களுக்கும் கெண்டை மீனுக்கும் வாளை மீனுக்கும் வேற்றுமை காண இயலாது காண்போர் மருளுவர்; குளங்களைச் சுற்றிலும் வளவயல்களைக் காணலாம்; குளக்கரைகளில் உள்ள சண்பக மரங்களில் புதுமலர்கள் பல நாடோறும் தோன்றவே வண்டுகள் அவற்றில் மொய்த்து நறுமணத்தை எங்கும் பரப்பும் என்ற செய்திகளை,

அருகே புலிகள் கண்டும் சுரபிக்கணம்
ஓரண்டை யதனில் புனல்நு கர்ந்து
பகைசற் றிலாமல் வங்கண மாகவும்,
மிகும் பொது மாதர் நடந்திடு நடையைக்
கண்டுடன் தோகையது கற்றிட இரங்கவும்;
மடுவிற் கலைகளைந்து முழுகிக் குலவும்
பெண்கள் விழியுற்று வாளையங்கிதால்
இருகெண்டை யிதாலெனவுஞ் சுழல் காவிரி,
பொன்பொழிந் தேறும் வயல்கள் சுற்றிய
தடங்கள் மிசையின் புதிய சண்பகம்
மெய்த்தரு வினங்கள் மொய்த்து வீசும்
வன் துவாரபதி --
என்று செண்டலங்காரர் வண்ணம் குறித்தலை நோக்குக.

இவ்வண்ணங்களின் பாட்டுடைத் தலைவராக அமைந்த மக்கள் பெரும்பாலும் வேளாண் குலத்தினரே. அவர்கள் உழவுத்தொழிலால் நாட்டைப் பாதுகாத்து வந்த செய்தி

'தேரூரும் சகராசர் செங்கோல்
உழுக்கோலின் செயலால் காக்கும் '-
என்ற தொடரால் அறியலாம். அவர்கள்

தேனார் மொழியும் உபசார வாக்கும் திகழறிவும், நானா கலைவல்ல சீலமும் உடையவராய்த் தீட்டும் தமிழுக்கு ஒரு தேனுவாகி நற்றென் றமிழைப் பாராட்டி வாழவே, அவர்களை உலகுக்கு நாயகராகவே புலவர் பெருமக்கள் மதிப்பாராயினர். தஞ்சையில் வாழ்ந்துவந்த வள்ளலாகிய இராமநாதன்,

வஞ்சி நாயகம், மொழிகள் சர்க்கரை
மதுர நாயகம், மரு நிறை
வம்ச நாயகம், முந்து சிந்தையில்
மையல் நாயகம், ரதியிலும்
மிஞ்சு நாயகம் என்று பஞ்சணை
மேவி மித்துரவு பேசிய
விருது நாயகம், சுரத நாயகம்,
விந்தை நாயகம், மாமறைச்
செஞ்சொல் நாயகம் வாணி தண்டமிழ்
சிறந்த நற்கமலை நாயகம்,
தீன ரட்சைபுரி புழுக பூபன்அருள்
செல்வ நாயக யோகனே,
தஞ்சை நாயக ராசன் மெச்சவரு
சொக்க நாயகன், நிதம்புகழ்
தர்மநீடு புகழ் ராமநாதன் மகிழ்
தஞ்சை நாயக மகியனே ' - என்று பாராட்டப் படுவதை நோக்குக.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - எனவும்,
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார் மேல் நிற்கும் புகழ் - எனவும்

நன்கு அறிந்த இப் பெருநிலக்கிழவர்கள் புலவர் பாடும் புகழுடையராய் வாழ்வதையே வாழ்வாக நினைத்துப் புலவரை ஆதரித்து அவர்தம் பாமாலை சூடியவாற்றை நோக்குவோம்

சடையப்பன் என்ற வள்ளல்,

பாரி சுரவி முகில் போலவே,
நீரலைத்தரங்க வாரியில் துளைந்து
பாகரைத் துறந்து வேணுவைப்பிளந்து
விகடகரட மத்தகக் கரியைப் புலவருக்கு
வரிசைபட அளிக்கும் உலகத்தியாகி,
யாதொருத்தர் நம்பினோரை வைத்திருந்து
ஆதரித்து வந்தவாறு செப்புமென்று
மிடியைப் பொடி படுத்து
அதிகக் கொடை கொடுத்த வள்ளல் –
என்று போற்றப்படுகிறான்

வெள்ளைச் செட்டி என்ற வள்ளல்,

மெச்சு பாடல்கள் சொல்லியே தர
வைகும் புலமையோர் பாடல்
கொண்டு, பணம், மாடு, ஆடை,
செம் பொன்மணி அன்னம் கொடுத்து
வாரி இச்சை உதவும் நடக்கையான் நிலக்
கர்ப்பம் நீடிய செல்வன், ஒற்றைமால்வரை
கடல்வானொடு திங்கள், ரவி, பூ
மாறினும் பொய்யுரையான், பெரிய
செல்வத்தில் குபேரன் - என்று சுட்டப்படுகிறான்.

சூளாமணி என்ற வள்ளல்,

அண்டினவர் சஞ்சலம் அழித்து அவர்
பெரும் பொருள்; அருந்தவர் உறும் பொருள்;
மிண்டர் இடியேறு அனையான்;
ஆதுலர் சேமநிதி - என்று சிறப்பிக்கப்படுகிறான்.

தஞ்சை நாயகம் என்ற செண்டலங்கார வள்ளல்,

ஐந்தருவும், சொரிமுகிலும், பாரியுங், கா
ரியுங், குமணன், வானவர் தம்
சந்திரனும், காமனும், தேவேந்திரனும்,
அகத்தியனும் தருமன் தானும்,
புந்தியுங்,கன் னனுங்கூடிச், செண்டலங்கா
ரன்னெனவே பொருந்தி ஒன்றாய்த்
தென் தமிழார் மிடிதவிர்க்குந் தியாகனிட
மாய்வந்து செனித்தா ரன்றே
என்று பூவை நிலை என்ற புறந்துறை- அமைத்துப் பாடப் பட்டிருத்தலை நோக்குக.

இத்தகைய வள்ளல்கள் பல்லாண்டு வாழ்தல் வேண்டும் என்று புலவர் பெருமக்கள் தம் வழிபடு தெய்வங்களை மனமுருகி வேண்டியனவாக அமைந்திருக்கும் பாடல்களும் பலவாகும். ஒன்றிரண்டு நோக்குவோம்.

செஞ்சிலைவே ளெங்கள் தியாகன் குமாரன் செழுங்கமல
வஞ்சியர் மோகனன் செண்டலங்காரனை வாழ்த்தியன்பு
நெஞ்சினில் எண்ணி மதுராபுரிக்கச்சி நெல்லை தில்லை
எஞ்சிய காசி இராமேச் சரத்திலும் வேண்டுவமே - எனவும்,

அய்யனே மயூர முத்தையா அடியேன்
செப்பு விண்ணப்பம் ஒன்றுளதால்
பைந்தமிழ் சுவைத்துதவு தியாகபூபதி செல்வ
பாலனை வாழ் சீவகனை
பசித்தவர்க் கன்னம் பகிரவந் தவனைப்
பரராசர் கோளரியை
உன் தனைக் கனவிலும் மறந்திடாதவனை
உயர்புகழ்ச் செண்டலங் காரனை
உடற்பிணி தவிர்ந்து வயது நூறிருக்க
உளத்தருள் உகந்து காத்தருளே - எனவும்,
மணவைப் பதிவாழ் ஈசனே ஞானதேசிகனே
இதம்பெறு ராமநாத நாயகனே
இயம்பும் விண்ணப்பம் ஒன்றுளதால்
திறம் பெறு புழுகன் உதவு கஞ்சமலை
சிறந்த தண்டாயுதன் முந்து சகமகிழ்
ஆறுமுக மகிபாலன் தியாக ராசன்
சகோதரனை வரமிகு கங்காகுல
வசிகரனை மாரனைத் தஞ்சை நாயகனை
வயது நூறிருக்கச் செல்வமும் தழைக்க
மனமது மகிழ்ந்தே இனிதுகாத் தருளே –
எனவும், வரும் பகுதிகளை நோக்குக.

இவ்வள்ளல்கள் கற்றோரை ஆதரித்ததோடு அமையாமல் தாமும் கல்வியில் துறை போயினாராகி விளங்கிய செய்தி

தெரிதமிழ் ஆசுகவி வல்லபேரை
இருபக்கமும் இருத்தி மதுரச்சொல் நூல்கள்
பலகூறச் சொல்லி, அதில் நற்பொருள் பெறவே
செப்பும் உலாவைக், கோவையை, வளமடல்,
தூதபாணிகளை உதவி, அன்பொடு
இருத்தியது மட்டலாது,
மறையோர் செப்பிய திருஞானக்கலை
வடநூல் பல நூறு அகத்தே இசை
தெரிமடமாதர் நடன விநோத பரதத்துடன்
இலக்கணம் உரைத்து, லோகத்திசையால்
முத்தமிழ் தெளியத் தெரிந்தே, பொருள்
திரளாகத் தந்திடு தியாகக் கருமுகில் –
என்று சோழகன் வண்ணம் கூறுவது நோக்குக.

இத்தகைய கொடைவள்ளல்கள் வீரத்திலும் சிறந்து விளங்கிய செய்தியையும் இவ் வண்ணங்கள் வாயிலாக அறியலாம். வீரமும் ஈரமும் ஒருசேர அமைந்த இவ்வள்ளல்கள் திருமாலின் அவதாரமாகவே போற்றப்படுகின்றனர்

பாலினும் மென்சொல் குயிலினு மென்மொழிப் பாவை நல்லாள்
மேலினுங்காமச் சரந்தைக்கு மேவட வேங்கடத்தும்
பாலினும் வேலை நடுவிலும் பாம்பிலும் மாதிரத்தும்
கோலினும் கண்டுயில்வாய் அழகாபள்ளி கொண்டவனே –
என்ற செண்டலங்காரர் வண்ணப்பாடலை நோக்குக.

இவ்வள்ளல்களின் வீரத்தைச் சற்றுவிளங்கக் காண்பாம்.

வெள்ளைச்செட்டி தன் வீரத்தால்
'தெருட்டத் தேரா தரியலர் காடேறவும்,
கடல்கள் மேலேறவும், கணமலை மீதேறவும்,
பொருது வெல்பவன்' - எனவும்,

சோழகன் தன் ஆண்மையால்,
'அலையுடன் ஆர்கடல்போல வெகுபடை கூட்டி,
இடியொத்த குரல்சுட்டி வருதுட்ட
அரசர் திரளாகக் குதிரைமேலே
கட்டினசிலைவாள் பட்டயம் யானைக்கோடற,
நடுவுடல் மார்புகிழிபட, மூளை சிதறித்
தலை தடிய, ஒருரத்தமாரி நதியோடக்,
கழுகுகள் ஆடக் கொடி நடம்ஆட
பிணமாடக் களிகள் சிலப்பலவாட,
வயிரவி ஆட, அலகைத் திரள்களிப்ப,
மாபத்திரகாளி திரிசூலத்துடன் நடமாடத்,
தசரத ராமற் கிணையாகப் போர்தனில்
வென்று மானிடவர் பணிய மீள்வோன்' - எனவும்,

இராமநாதசுவாமி வண்ணத்தில் கூறப்படும் இரகுநாதன்
'மருதர் துலுக்கர் மராட்டர் சிங்களர்
நிருதர்கள் ஒட்டியர் கரு நடர் கொங்கணர்
வடுகர் குடகரொடு நெடிய
மகுடமுடி, அருட் பதயுகள
ராசகேசரி எழுபது லட்ச
வீரர் மண்டிய புகை இலகிய
பிரமையால் மயங்கி, அடையலர்
கொடிமதில் இடிபட, நடவிய
திரி சகத்தையும் அழி ஆணையால்
ஒருவனாக வீர லக்குமி
உதவி தங்கிய ரகுகுலபதி –
எனவும் போற்றப் படுதலை நோக்குக.

இனி, கட்குடியர்களாகிய சக்தி உபாசகர்கள் ஊனும் கள்ளும் உகந்து அவற்றைப் பக்குவம் செய்யும் முறைபற்றிப் பலவாகக் கூச்சலிட்டுப் பேசும் செய்திகள் இரண்டு வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒருசில நோக்குவோம்.

சந்திரமதி வண்ணத்தில்
அந்தணர், முசுண்டையர், காலையில் முழுக்காடா
பூதகர்கள், கழுக்காணி மொட்டையர்கள், கொண்ட
விரதம் பிழையுறும் கதிபெறும் பிழையினில்,
களிப்பில் நடித்தே, முழக்கிவிடு யாமிடு
பூசை எளிதே' ---கொங்கணரைக் களைகுவம்,
கொழுப்பாடு அவித்ததை எமக்கீரல் சுட்டுவை,
குறங்கதில் நறுஞ்செஞ் சதைஎ லும்பது
தவிர உமக்கே, தலைக்கறி உமக்கே,
கட்பானையே ஊறிய சாடி தனையே
கெண்டிகளில் மொண்டு கொடு; நிரம்பமதுவைப்புரி;
முக்கண் அறவரில் தூபம் இட்டுவை;
கரண மற்றதோர் சிவத்தியானம் முத்தி தருமே'
என்று கூறும் கட்குடியர் கூற்றும், சொக்கநாத சுவாமி வண்ணத்தில், கட்குடியர் கூறும்,

'பத்திர காளியை மிக்கபூசனை செய்
மனையை மெழுகிடு; கதலி தனை நடு;
மத்த யானை முகத்தர் பரவலை;
அரிசி நல்லவல் இலையி லேயிடு;
திரள முதுபடை கறிய முதுபடை;
கறிகள் பொறியல்கள் சடுதியில், சமை;
குருவி பொரி; கயல் கழுவி அவி;
கொக்கு நாலு விதத்திலே பொரி;
குட்டி எழு துவட்டியே படை;
மகிமை யுளஎலி அதனை உரி; பொரி:
கொழுப் பில்லாத உவட்டு மீனை
எடுத்து வீசிக் குளத்தி லேஎறி;
குடுவை தனில் மது ஒருவர் நுகருவர்;
திமில குமிலமும் இடுவர். பின்பு
குதிப்பர், ஓடி இளைப்பர் வீழ்வர்;
குருக்கள் மார்கள் செவிட்டி லேயடி;
உருசி உள்ளகறி பதனம், வெகுமணம்,
இருடி மகனொரு திருடன், அவனிலும்
இளைய பயல் வலுத்திருடன், மதுவெனில்
எச்சில் வாருவர், சுற்றும் ஓடுவர்'
முதலிய கூற்றும் முறுகிய நகை விளைப்பனவாம்.

பரத்தை யொருத்தியைக் கூடிப் பேரின்ப மடைந்த தலைவன் தான் பெற்ற இன்பம் நினைக்குந்தொறும் சுவை தருவதாகக் கூறும் பாடல் சில நோக்குவாம்.

'கொத்து லாவு குவளையந் தாரினான்
குரிசிலான் புழுகாச்சி தந்தருள்
நற்றுலாவு கமலை நராதிபன்
நளினமால் தஞ்சை நாயகன் வெற்பனார்
முத்து மாடிக் கரதா டனங்களே
முழங்கக் கும்பமுலை யானைக் கோடுகள்
தைத்து மார்பில் அழுந்த அவர் செய்த
சரசம் எப்படித் தானான் மறப்பதே'
'கனகன் மேருவை நேர்கரு ணாகரன்
கமலைவாழ் புழுகாச்சி சுதாகரன்
சகல கல்வி அறியும் தயாபரன்
தஞ்சை நாயகன் மால்வரைத் தையலார்
நகம் அழுந்த அணைத்துமுத் தாடிய
நயத்தி லே,சல ராசிக்கண் டங்ஙனே
சுக மெனக்கு மட்டோ உனக்கிலையோ
சொல்லடா என்ற சொல்மற வாததே' - முதலியன.

தலைவி வண்டினைத் தலைவனிடம் தூதுவிடும் பாடலை நோக்குவோம் ,

சேவினில் ஏறும்பிரான் சடைத் திங்களும் தென்றலுந்தண்
மாவினில் கூவும் குயிலும் குழலும் வருத்தவென்னை
நாவினில் சொல்லும் வசைக்கும் நேர்ந்தேனென்று நாண்மலர்ப்பூங்
காவினில் வண்டினங்காள் சொல்லும் செண்டலங்கார னுக்கே
என்ற இப்பாடலில் தலைவி, தான் திங்கள், தென்றல், குயில், குழல், அன்னை கடுஞ்சொல் என்பனவற்றால் வருந்தும் நிலையைத் தலைவனுக்குத் தூதனுப்பி அறிவிக்க முயன்றமை சுட்டப்பட்டுள்ளது.

மக்கள் பெரும்பாலும் புலவருக்குப் பொருள் கொடுக்கக் கூசுவர், ஆனால் வேசையருக்கே தம் பொருளை வாரி வழங்குவர் என்ற செய்தியை,

தொடுக்கிக் கொண்டு மிதியடிமேல் நடப்பார்கள்,
தமிழருக் கருளத் துணிந்தால் கையை
நடுக்கிக் கொண்டு கொடுப்பார்கள்; வேசியருக்கே
கொடுக்கவே வைப்பார் கண்டீர் - என்ற பாடற்பகுதி சுட்டுகிறது.

'செல்வத்துப் பயனே ஈதல்' என்றிருக்கும் வள்ளல்கள் நாட்டில் சிலரே. இலவு காத்த கிளிபோலப் பொருளைப் பார்த்துக்கொண்டே. அதனை நுகர்ந்து புகழ்பெறாமல், இறப்பார் பலர் என்று கூறும் கவிஞர், சந்தனம் பூசிச் சென்ற கயவன் ஒருவன் பின் கவிஞன் ஒருவன் செல்ல, 'என் சந்தன மணத்தைக் களவாடவே என் பின் வந்தாய்; அதற்காக உன்னை தண்டிக்கப்போகிறேன்; தண்டனை வேண்டா என்றால் என்னைக் கும்பிட்டு மன்னிப்புக்கேட்டு ஓடிப்போ;' என்று கவிஞனிடம் அவன் கூறினான்; அத்தகையோரே நாட்டில் பலர்' என்று கூறுகிறார்.

'கலவையோ மணிப்புயத்தான் செண்டலங்கார
      னைப்போல் கற்றோர்க் கீயார்
இலலையே கிளிகாத்த படியிருக்க
      வைப்பவருக்கு இசையுண்டாமோ
கலவையேய் கைவீசச் செஞ்சந்தனப்
      பூச்சென்று சார்வ தென்பின்
குலவையே எனைக்கோறல் நீ எனக்
      கும்பிடெனும் வம்பர்குணம் கூறுங்காலே'
என்பது அப்பாடல்,
கவிஞர் தம் வள்ளலாகிய செண்டலங்காரனுக்கு மன்மதனையும் சந்திரனையும் உவமைகூற விரும்புகிறார், ஆனால் மன்மதனுக்கோ உருவமில்லை வள்ளலுக்கோ அழகிய வடிவமுண்டு. சந்திரன் பகையாகிய சூரியனுக்குப் புறங்காட்டி ஓடுபவன் ஆனால் வள்ளலோ புறங்காட்டுதலைக் கனவிலும் நினையான், ஆதலின் வள்ளலுக்கு இவர்களை உவமிப்பது யாங்கனம் என்று திகைக்கிறார்.
'பாமனர்க்குத் தருங்குரிசில் செண்டலங்கா
      ரப்பெருமாள் பசுந்து ழாய்ப்பூந்
தாமனுக்கு நிகர்தியாகப் பன்பாலற்கு
      நிகரெவரைச் சாற்று வோம்காண்
காமனுக்கு நிகரென்றால் காமனுக்கே
      அருவதேகம்; கருதா நின்ற
சோமனுக்கு நிகரென்றால் இனமல்லார்
      புறங்கொடுக்கத் துணிந்தி டானே ' - என்பது அப்பாடல்.

அம்மானை என்பது மகளிர் பாடியாடும் ஒரு விளையாட்டு. அங்ஙனம் அம்மானை ஆடுபவருள் ஒருத்தி செண்டலங்காரன் கற்பகமரத்தை ஒப்பவன் என்று கூறுகிறாள். கற்பகமரமோ வேண்டியவருக்கு வேண்டியதைக் கொடுப்பது. எல்லாவற்றையும் பிறருக்கு வாரி வழங்கிவிட்ட பெரியோனையே தியாகி என்று கூறுவர். செண்டலங்காரனைத் தியாகி என்று அழைக்கின்றனர். கற்பகமரம் போல வாரிவழங்கும் அவனைத் 'தியாகி' என்ற பெயரால் அழைப்பது பொருந்துமோ என்று வினவினாள் அடுத்தவள். எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டவன் என்ற கருத்தில் அப்பெயர் ஏற்படவில்லை. தியாகப்பன் மகன் ஆதலின் தியாகி என வழங்கப்படுகிறான் என்றாள் முதலாமவள்.

'இந்த உலகினில் செண்டலங்காரன்
சுந்தரஞ்சேர் ஐந்தருவாய்த் தோன்றினன் காண் அம்மானை
சுந்தரஞ்சேர் ஐந்தருவாய்த் தோன்றினனென்று லிவனைச்
செந்தமிழோர் தியாகி எனச் செப்புவரோ அம்மானை
தியாகன் மகனென்றால் செப்பாரோ அம்மானை '-- என்பது அப்பாடல்.

திருமாலின் திருவவதாரமான செண்டலங்காரனிடம் ஈடுபட்ட பெண்ணொருத்தி அவன் நினைவில் மயங்கிக் கிடக்கிருள். தோழி - முன்பு அடியவளான திரௌபதிக்குச் சேலை வளருமாறு அருள் செய்து காத்த பெருமான் இன்று இவ்வடியவளுக்கு மாலை (மயக்கத்தை) வளர்த்துத் துயர் செய்வது என்னோ என வியக்கிறாள்.

‘வேலைதனில் துயில் மறந்தே இராசையில்வாழ்
கோபாலன்மெய்த் தாளாளன் பரமசீலன்
அன்னந்தரு தியாகன் செண்டலங்காரன்
தனது செய்கை பாரீர்,
பாலைமன்னும் கனியை அருந்தாது
இரங்குவோர்க் கிரங்கான் பரிவோடு
சேலைமுனம் வளர்த்ததுபோல் இவள்மாலை
இன்னம் இன்னம் வளர்க்கின்றானே! -- என்ற பாடலை நோக்குக.

பெண்களின் துடை வாழைத்தண்டினையும் இடை சிங்கத்தினையும், முலை யானைக்கோட்டினையும், தலைமயிர் கவரியினையும், பிடரி கந்தினையும், முகம் தாமரையையும், கண் கருவிளையினையும், மூக்கானது குமிழம்பூவையும் ஒப்பன என்பது கொண்டு தலைவன் தான் கண்ட நங்கை நல்லாளை அற்புதமாக உருவகிக்கிறான். இரண்டு வாழை மரங்களின் மேல் ஒரு சிங்கம், அதன்மேல் இரண்டு யானைகள், முதுகின் மேல் கவரிமான், அதன்மேல் கட்டுத்தறி, அதில் ஒருமலர்ந்த தாமரை அதனிடையே கருவிளை, அக்கருவிளை குமிழம் பூவின் மேல் உலாவும் நிலை இவற்றைத் தலைவியிடம் தான் கண்டானாகக
குறிப்பிடுகிறான்.

'செண்டலங்கார பூபதி தமிழ்குலாவி வளர்
கனகமால் வரையில் ராமா
சிவேத இருவாழை மீதிலொரு சிங்கம்நின்ற
தினுசின் மேல்மத்த வாரணம்
இரண்டு நின்றது சீர்த்திறன்என்? முதுகின் மேல்
வீசியேகவரி தானணிந்த தொருகந்து
கந்தினின் மலர்ந்ததோர் மெல்லிதழ்க் கமலம்
உற்பலம் ஒரு குமிழின் மீது உலாம்பரிசிருந்ததே' -
என்பது அப்பாடற்பகுதி.

தான் மிக அருமையாக வளர்த்தமகள் தனக்குக்குறிப்பால் கூட உணர்த்தாமல், அயலான் ஒருவனிடம் தொடர்பு கொண்டு அவன் நட்பே பெரிதென்று அவனுடனே பாலை நிலத்தில் உடன்போக்குப் போயினதை அறிந்த செவிலித்தாய் தன் மகளுடைய மென்மைத்தன்மையையும், பாலை நிலத்தினுடைய கடுமையையும், தன்னந்தனியே கவனிப்பார் அற்ற நிலையில் இருக்கக்கூடிய நிலையையும் நினைத்துப் புலம்பினாளாக அமைந்துள்ள பாடற்பகுதி நெஞ்சினை உருக்குவதாகும்.

நாகரிகப் பெருமாள் நரவா கனப்பெருமான்
நயினார் அளித்த குமாரன் நற்குணசீலன்
முத்தமிழ் வீறு ராகவன்ஆள் வரைமேல்
வேதன் விதித்ததுவோ தலைமேல் எழுத்திதுவோ
வினையேன் ஒருத்திதன் மாதுகற்பூர
தூளி மெத்தை பொறாத சீறடி
பாலை தனிற்செலுமோ பாலே கொதித்தெழுமே
விடாய்கொடு பாகிதழ்ச் செவ்வாய் கருகுமே
வேனல் பறப்பதை நீரெனவே திகைத்திடுமே
கடுவேனில் வெப்பும் இலாதிருக்க வும்நிழல்
சற்றிலையே திருமலர்ச் சோலைகளும் சுற்றிலையே
சுனையாட வெற்பிலையே சுனையாடி விட்டெதிர்
கூடு தற்கொரு தோடுமற் றிலையே
ஓதி முடிப்பவரார் மதுமாலை சுற்றுவரார்
அமுதூறல் பச்சிள நீர்கொடுத் திதமான
சர்க்கரை யோடளவிய பானம் அளிப்பவரார்
பனிநீர் தெளிப்பவரார் பன்னீர் தெளித்த
சவாது மொய்த்த படீரம் அப்புவரார்
உலாவிய ஊசலில் வைப்பவரார் இருதாள்
பிடிப்பவரார் இருதாள் பிடித்திதமாக
நித்திரைதான் வருத்துவ ராரென் மாதினை
ஒருநாளும் விட்டகலாச் சொற்கிளி
ஓலமிட் டழுதே தயாவுள தாயை
நினைந்தனளோ தமரொ டுரைத்தனளோ இவள் தான்
நினைந்தறியாத புத்தியிதார் சமைத்தாரோ
முன்னாளினில் ஊழி விதிப்படி யோஒரு
மாதருக் கியல்போ அயலான் ஒருத்தன்
உபாய மிட்டொரு பேதைகைக் கொடுபோனான் -
என்ற பகுதி காண்க.

இவ்வண்ணங்களில் நடனமாதர்தம் ஏரும் எழிலும் இயலும் செயலும் அருளும் மருளும் பலவாக விளக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவ்விடங்களில் நோக்கி மகிழற்பால வாதலின் இம்முகவுரையகத்து அவை குறிக்கப்பெறவில்லை.

இத்தகைய வண்ணத்திரட்டு என்ற தொகுப்பு நூலினை அச்சிடுவதால், சில நூற்றாண்டுகளின் முன் தமிழ்மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த இப்பாடல்களை நோக்குதல் வேண்டும் என்று எண்ணமுறும் தமிழன்பருக்கு இது நல விருந்தாகும் என்று தஞ்சை சரசுவதி மகாலின் இந்நாள் கௌரவக் காரியதரிசி திருவாளர் கந்தசாமிப்பிள்ளையவர்கள் கருதினாராக, அவர்தம் அன்பு ஆணையைச் சிரமேற கொண்டு என் சிற்றறிவிற் கெட்டிய வகையில் இந்நூலைப் பதிப்பிக்கும் கடப்பாட்டினேன்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.
------------------------------------------------------------------

வண்ணத்திரட்டு - பொருளடக்கம்

1. முகவுரை … 2. சடையப்பன் வண்ணம்
3. வேங்கடேசுவரன் வண்ணம்
4. வெள்ளைச் செட்டியார் வண்ணம்
5. விட்டலராயச் சோழகன் வண்ணம்
6. இராம நாதசுவாமி வண்ணம்
7. இராமலிங்கசுவாமி வண்ணம்
8. சூளாமணி வண்ணம்
9. நெல்லை நாதர் வண்ணம்
10. செம்பை இளையான் வண்ணம்
11. சந்திரமதி வண்ணம்
12. குமாரசாம்புவன் வண்ணம்
13. தியாகராசர் வண்ணம்
14. வீரப்ப நாயக்கன் வண்ணம்
15. ஸ்ரீரங்கநாதர் வண்ணம்
16. திருப்பெருந்துறையான் வண்ணம்
17. சிதம்பரேசுவரர் வண்ணம்
18. இரகு நாத நாயக்கன் வண்ணம்
19. சொக்க நாதசுவாமி வண்ணம்
20. வராகக்கிரிச் சின்னையன் வண்ணம்
21. வீரராகவ முதலியார் வண்ணம்
22. தஞ்சை நாயகன் வண்ணம்
23. செண்டலங்காரன் வண்ணம்
24. புராண வரலாற்று விளக்கம்
25. அருஞ்சொற் பொருள்
----------------------------------------------
வேண்டுகோள்

கருணையுள்ளங்கொண்ட நம் முன்னோர்கள் அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும் பனை ஓலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன. சுவடிகள் பழுதடைவதற்குமுன் சரசுவதி மகாலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துதவினால், அவை மக்களுக்குப் பயன்படும்.
மகாலுக்குக் கொடுப்பதன் மூலம், சுவடி தந்தவர்களும், சுவடி எழுதியோரும் அழியாப்புகழை, பெருமைசால் சரசுவதி மகால் உள்ளளவும் பெறுவர். அவை பதிப்பாகி வருமாயின் சுவடி தந்தார் பெயர் இடம் பெறுவதோடு, அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர்.
எனவே, நாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடமுள்ள சுவடிகளைச் சரசுவதி மகாலுக்குத் தந்துதவ வேண்டுகிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இயக்குநர்
சரசுவதி மகால் நூலகம்.
தஞ்சாவூர் , சரசுவதி மகால் நூலகம்.
-----------------------------------

1. சடையப்பன் வண்ணம்.

தெய்வபக்தி

நீடுவிற் கரும்பு மாரனைக் கடிந்து
மானிடப் பிரபஞ்ச மாயையைத் துறந்த
கார ணத்தினொடு நித்தசிவ பக்திதரு
தற்பர வஸ்துவை மனத்தி லிருத்தி
யோகசாதனைக்கிசைந்தும் ஆசனத் திருந்தும்
தான்வழுத்தும் அன்பர் பாலருள் புரிந்து
மன்பத்தி பெறுமாறு சத்துவம் அளித்த
சிவசுத்த சமயத்தை நிலையிட்ட தேவன்
நீரினில் கொழுந்து சோதிமெய்க் கொழுந்து
வீழியிற் பொலிந்து வாழ்சிவக் கொழுத்தின்
இருபத்ம சரணத்தை இதயத்தில் இருத்தியொரு
பொற்குடை நீழற்கீழ் உலகத்தை ஆளும்

கொடைத் திறம்

வள்ளல் பாரி சுரவிமுகில் போலவே
நீரலைத் தரங்க வாரியில் துளைந்து
பாகரைத் துறந்து வேணுவைப் பிளந்து
விகடகட மத்தகக் கரியைப் புலவருக்கு
வரிசைப்பட அளிக்கும் உலகத் தியாகி
யாதொருத்தர் நம்பி னோரை வைத்திருந்து
ஆதரித்து வந்தவாறு செப்பும் என்று
மிடியைப் பொடிபடுத்தி அதிகக் கொடைகொடுத்த
மனிதத் தனமிகுந்த ரண சுத்தவீரன்
திருக்குடந்தை மாய ருக்கும் இந்து
நாதருக்கும் மங்கை பாகருக்கு மென்றே
கிரமப் படித்திறம் நடத்துமொரு சிட்டன்
நகைப்படும் உலுத்தர் மனத்திற் கோடரி
கவி யாதுரம் வீடவரு நாதமால்

வேளாண் குலச் சிறப்பு

காடு தப்பிவந்த பாவி செட்டிதன் பின்
நீலி கூடிவந்து மார்பினைப் பிளந்திட்ட
பழியைக் கழுவுதற்கு எழுபது உத்தமர்
நெருப்பினில் முழுகியே இசைப டைத்தும்
ஒருபத்து மாதமான கர்ப்ப சங்கைமாது
களங்கம் பறித்துப் பால்கொதித் தெழுந்த
சோறிடத் துணிந்தும் நெற்பெற விதைத்த
முளையிற் சிலதிரட்டி அமுதிட் டுபசரித்தும்
சரிந்துவளர் புற்றிலே கைகாண வைக்க
வஞ்ச வாளெயிற்று நஞ்சு சீறியெழு
சிறந்த காளயா சர்ப்பம் இந்த
வையகத்தை வில்பெற்ற ரத்நமணி கைக்குளிட
முற்றுமுரை பெற்ற மரபிற் பிரகாசனே!
எல்ல பூபன் அருளிய குமரவேள்!

குழந்தையூர் வளன்

காவிமட் டலர்ந்த கால்வழிக் குரம்பின்
வரவியின் பரந்த கேணியில் கணமாதர்
ஓதியில் மீதகில் குடைகு ளத்தின்
வழியில் சிறுசு னைக்குள் வயலில்
கயல்கள் குதித்து முறிபடு நாளி
கேரக் குரும்பை பானையில் ததைந்த
தாழையில் சுகந்த வாழையில் கரும்பில்
உடைபட்ட புனலிட்ட கடைதத்தி மடைதத்தி

அயல்தத்தி உயர்தத்தும் காரியக் குளந்தை
ஊரினில் தங்கி நீரிலுற் பலங்கள்
வேறுபத்தி வண்டுசுற்று தொடைபெற்ற தட வெற்பின்
இடமுற்ற கொடைகற்ற சடையப்ப பூபன்

மடவார் சிறப்பு

எல்லை மேரு கிரியில்மட மாதரார்
ஆடகக் கொடுங்கை மேடையில் குளிர்ந்த
சாளரப் பளிங்கு வாசலைத் திறந்து
நிலவில் பளபளத்த மெத்தையில் இருத்தியொழுகி
புழுகு மொய்த்த களபச் சவாது
பூசி மெய்புனைந்து போதுமெய் திமிர்ந்து
வேர்மருக் கொழுந்து பூமுடித் திருந்த
வேளை வெற்றிலை களிப்பிளவு கற்பூரம்
விளித்து முறையிற் சுருள்க டித்தும்
மதுரித்த பாகின் ஆலையிற் கரும்பு
கோதறச் சொரிந்த சாறென
சிவந்த தேனெனக் குழம்பின் உமிழ்
சர்க்கரை பழுத்த பலவிற் சுளையெனச்
செவ்விதழ்ப்படி ரசிக்கும் அமுதத்தின் ஊறல்
மெய்வி டாய்கெட முறைமுறை சேர்தியே

கரண விசேடம்

ஆறுபத் திரண்டு மாடை பெற்ற
சந்திரகலை உதவி யிட்ட செம்பொன்
ஆடையைக் களைந்து தழுவக்
கலக லத்தமணி வச்சிரமடை கைவளை
முட்ட ஒடிபட்டு நெரிபட வீழ
ஓதி மத்துடன் புறாமயில் சுரும்பு
காடைக் குக்குடங்க ளொடுபுட் குலங்கள்
வரையின் குரலோ டெட்டுவகை உட்குால்
தொனிப்ப மிடறுடன் சூழ லெழுப்ப
இடைஅற்ப ரேகை யாமெனப் புணர்ந்தஓ
வகாந்த தென்றிடு தாளிணைச் சிலம்பு
கோவெனப் புலம்ப உயிர் சொர்க்கவழி
பெற்ற தெனவே இச்சகம் உரைப்ப
ஒருவாக்கொடு முத்திதர ஒப்பிலாத
தெய்வ லோகமென உருகுவீர் உங்கள்
ஊசலிட்ட கொண்டை மேலெழச் சரிந்து
மாமுகத்தை மஞ்சுபோல் மறைத்த தென்று
கடுமைக்கு அரைநொடிக் குள்அம் மயிரைத்
தனியொ துக்கி ஒருகைக் குழல்
முடிந்த நவசித்ர லீலை யாவருக்கு
இயம்பு வோம்எனக் கரைந்து
சூறைபட்ட கெஞ்சு மாற லைப்ப
விஞ்சுமுக வட்டமும் அறுத்து
வடவெற் பையும்தட்டி யிருகுத்து
முலைதைத்து முதுகுக் குளேற
ஓலை கொப்பணிந்த காதினை நயந்து
ஆவி விட்ட மண்டலீகரைப் பிணங்கு
நயனக்கடை சிவப்ப வெகுபற் குறிஅழுந்த
மழலைகள் குதட்டி மொழிதட்டு மாற
வெள்ள வாரிவயல் அலையில் மூழ்கியே
ஊறலில் சிறந்த நீரென
பொதிந்த தானெத் ததும்பு
மானடிக் குளம்பின் அமுதக் கடல்
குதித்த திவலைத் துளி தெறிப்ப
ஒருவர்க்கு ஒருவர் சித்தம் இதமுற்ற
போக மாமெனத் திரண்ட மார்பும்
மோகத் தழுந்து பார்வை சாற்ற அங்கு
கரணமுற்று மறிந்த அவசங் களைத்த
களையைத் தெளிய விட்டு நினைவறத்
துயில் விழித்து மிதிபட் டுலாவும்
ஓதியைக் கரங்களால் முடித்த விழ்ந்த
சேலை சுற்றி மஞ்சன மேடைவிட் டிறங்கி
வெளிமுற்ற மணுகித் தன்முலை வெற்பின்
அணியொக்க நகமிட்ட குறிதைத்த தெனவெட்கி
நாண இவ்விகாரம் அமளிமற வாததே.
--------------------------

2. வேங்கடேசுவரர் வண்ணம்

திருமால் சிறப்பு

செக்கிண தாங்கிண செகுசெந்தரி யெனஒரு
பாந்தளின்மேல் நடம்புரி பாத சக்கிர
பாணி பணாமுடி நாக மெத்தை
மீதில் உறங்கு மாதவர் பசுநிரை
சாய்ந்து பினேதொடர்ந் திடுருசி கொண்ட
வேணுஓது கின்றவர் நான்முகப்
பிரமா வுடனே முளைத்த தாமரை
நாபி வட்டமீ தலமந்த காரணர்
நாரணர் சுகுமாரர் சுந்தரர் முரஹரி
பாண்டவர் தூது சென்றவர் கொடியேய்
பறவையர் பாசொளி வீசி விளங்கிடு
கவுத்துவ மாமணி தங்கு மார்பினர்
கோபா லர்அடி பரவு நெடியமால்

அரசன் திருமால் அவதாரம் என்பது

திரள்பரி பூண்டொரு கோடி முன்செல
மதகரி பாங்கினில் ஆயி ரஞ்செல
நூறு லட்ச பாதசனம் ஏக
வானம் மட்டும் தூளி எழும்ப
யானைகள் பிடர்மிசை ஓங்கு டமார
பந்திகள் அடிமிசை ஓங்கி அண்ட
கடாகம் மட்டும் ஓசை கலாவ
மத்த ளாதிகள் மேளா தியுடன்
கூடி முழங்க ஒளிதிகழ் வதன
தாமரை மலர்மகள் தாண்டவ மாட
இங்கிவன் ஆதி விட்டுணு வோவென
லோக ரட்சகன் நாடுவா வனத்தின்
கொடிதனைக் கொண்ட மண்ட லாதிபன்
மேலோர் கள்கவி பழகுஞ் செவியினான்

அத்தாணிச் சிறப்பு

வளமக தர்சலாம் செய்வ தோர்புறம்
பிறர்பி றர்சலாம் செய்வ தோர்புறம்
சீனர் ஒட்டியர் சேரர் மராடர்
குச்ச ராதியார் கவுத்தர் காணவே
ஒருமுகம் வெகுமுக மாங்கொலு வேளை
கண்டவர் அவரவர் வேண்டுகாரி யங்களை
வாசலிற் பிரதானிகர் அறிவிப்ப தோர்புறம்
நாலு திக்குமே வெகுவிந்தை யானவர்
மணிமுடி வேந்தர் குழாம்நெ ருங்கிய
சமூகந் தன்னில் பங்கினை மீறிய
பாளையக் காரரைத்தான் ஆணையின் அடக்கி

வேங்கடேசுவரன் பெருமை

யாணர்ச் சிங்கம் ஆனவன் அவர்தம்
நிலைமை யழிக்குத் தலைமை யாளன்
மயிலியல் பொறைமின் னாரு கந்திடு
மிருகமதம் சார்ந்தே அளாவு திண்புயன்
பெருநிதிய மாய்அள காபுரிக்குள் மேவு
குபேரனுக்கு மேலும் மிகுந்த வாழ்வினன்
அதிசய மாஞ்சதுர் வேதம் வந்த
பிரபுடிக மான பெருமாளை யன்துணை
பிராண வஸ்து வான சகோதரப்
பிரதாபன் கோர உக்கிர மதவலிகூர்
பிரசண்ட ராகவன் வளவயல் சூழ்ந்த
தென்மாறை வந்தருள் திருவேங்கட நாதையன்தரு
சீர்பெற் றினமாய யோகபுத்ர னானவன்
ராஜலக்ஷ் மீகரன் வேங்கடே சுவரன்
மகமேரு நிலைகுலவும் அதிபதி யின்மேல்

தலைவியின் மன நிலையும் கற்பனையும்

முகமதி காண்கினுமே
எழும்பசியது தீர்ந்திடுமே
நுடங்கிடையோ நல்லாகமோ
முலையோ ரவிக்கையோ
முகமோ கடைக்கணோ
சுகமென் சொல்வேன்தான்
ரத்னமணி யிழைத்த காந்தியினூ டிலங்கிய
நவமணி ஊஞ்சலிலே யிருந்தவர்
தூளி மெத்தை மேலவர் நானளிக்கும்
மோகன மடியிலே பிரமித்த வரடி
மயங்கு தேமனம் முதுகிடை பூங்குழல்
சோர வந்துமேல் ஒருவரது என்னிடைச்
சாய்ந்து கொள்வார்

தலைவியின் செயல்களாகத் தலைவன் கூறுவன

செம்பொனின் மோதிரக் கையால்
முலைமேல் அணைப்பள் காலொடு கால்
பிணைப்பள் சேலை குலைந்து போமவள்
தேனூறும் அமுத மிசைக் குமுதமே
முனையுகிர் பாய வியந்து சரீரம்
எங்கணும் வெகுபுள காங்கித மாமவள்
கொந்தள ஓலையிட்ட காதினில் நாவையிட்டு
அனுபவ முறைப்போள் திருப்பார்வை யிட்டே
என் ஆவியை உண்பள் மீளவும்
மடிமிசை வீழ்த்துக் கொள்வாள்
மகிழ்ந்திடு சாதனைகளால் வேளைஎன மயக்கினாய்
வீடுபோ எனச்சும்மா சில்சண்டை யாகுவள்
முழுதி லும்நர ணாளும் உம்மிடமே
குடிபோன என்றன் இதயம் மேலாம்
பலநா ளறிந்துமையே கருத்திலே கொண்ட
என்னைஏன் கவடாக நினைக்கிறீர் உம்மையே
எண்ணி வந்த என்னை மயக்குதல்
கொஞ்ச மேனும் இனிவர யாது

இன்பச் சிறப்பு

புலவியிடைக் கலவியே
சுகநிலை தோன்றுமாறு களிதர னாகச்
செய்த போது டம்புசி லீ ரெனக்
கையோசை பளீரிச்சை போலச் செய்து
தேன்சுவை போல இரங்கிய குரலிடு
நா குழறவே குரல்களும்
கூஎ னவோ குர லதுகீ எனவோ
குரல்தடு மாறக் குரல்விந்தை யானது
துடியிடை தேம்பிய தோகு லுங்கிய
முலைஇறு மாந்ததுவோ
கனகத் திருவாண் முகத்திலே குறுவேர்
தோன்றி வழிவதோ
இருகண் கொளாதபெண்
வாரேறு புனகமுலை இளருமோ
துடையி லணிந்த மணிவளை
கொண்டு கடியெனல் இங்கிதமோ
மோகனப் பெண்ணே இடைதனி
எனவே யான்என் சொல்வேன் இனி
விடுவிடு வீண்பழி யோர்வ ருந்திளன்
இறுகத் தோய்ந்து தடம் நிமிர்ந் தங்கனே
எழுப்பினீர் இங்ஙனே அழுந்துவ ளாமே
மிகுந்த பாலென வேநயந் துஇனிய
சுகவகைக ளெல்லாம் வீறுமே
புறங்கொடு திணைக ளெல்லாம் வீறுமே
மயங்கிய ஏகசித்தமாய் இருபேர் களுக்குமே
சரிபோக திட்டமாக அமைந்த லீலைகள்
பூலோகம் முழுதுமே விலை எழுதுமே.
------------------

3. வெள்ளைச் செட்டியார் வண்ணம்

திருமால் சிறப்பு


வெற்றிசேர் பதும மலர்க்குள் வேதனும்
உயர்முக் கணானுடன் அமரர்க்கு நாதனும்
நெடுவானோரும் பொன்வரைமீ தேறி நின்றுமே
மறைவேறே வகுத்தும் நேசம் உன்னத்
தக்க போதில் ஒப்பில்லா தரத்தின்
வருகின்ற அப்பனே கிருபை அகத்தனே
அலைகடலுக் குள்ளே விழிதுயில் சீரானச்
செங்கமல மாதரால் உறங்கும் பராபரர்
வேண்டும் பொழுது துயிலற் கொத்து
நீடுமிச் சமாதி அகலக் கலுழன்
மேல்வரு பவர்வை யகத்துக் காரணர்
அடியவர்க் கெளியவர் சீராக சிவந்த
கோபாலர் மென்பதும் பாதார விந்தம்
உடலம் குவளைப் புட்ப மாலையோ
மலர்கள் சிந்தி மருவிய செவ்வேள்
மிக்க தாகிய ரட்சா திகனென
உலகு புகல் ஓதத் தூநெடு வண்ணனே

வெள்ளைச் செட்டியார் குணநலன்கள்

மெச்சு பாடல்கள் சொல்லியே தாம்வைகும்
புலமை யோர்பாடல் கொடுபண மாடுஆடை
செம்பொன் மாரி அன்னம் கொடுத்து
வாரி இச்சை உதவும் நடக்கை யான்நிலக்
கருப்பம்நீ டியசெல்வன் ஒற்றை மால்வரை
கடல்வானொடு திங்கள் ரவிபூ மாறினும்
பொய்யுரையான் பெரிய செல்வத்திற்
குபேரன் வெற்பு மாதோ டுறைபுயன்
எட்டு மாதிரமும் வளைத்தமா புகழின்
நற்குணச் சயநிதி மேலான
மென் துளவமார் பொன்வலங்கை மன்னனாம்
மாவெனும் பிரபுட கல்விக்குச் சொல்சேடன்
ராசர் பணி சிங்கமிடு கொடிகொள்மால்
கந்தனாம் எனவே உலகத் துள்ளோர்
பணியும் கருணைத் திவாகர னாவான்

வெற்றிச் சிறப்பு

எதிரிட்ட தோர்தரி யலர்கா டேறவும்
கடல்கண் மேலேறவும் கணமலை மீதேறவும்
பொருது வல்ல சக்கிர பாணி
வைத்த காணிகொண் டெழுலட்ச மேல்வணிகம்
நடத்தியே பெறுபவன் நிற்கும்நேர் நிறையினன்
மாபாலர் என்றுவளர் பூபாலர் தம்சபையில்
ஓர்வளமை கொண்டவர் சொல்லத் தக்க
பாரிக்கச் சுலாமுலை மகளிர் காணா
மடலில் அழுத்தியே விரகில் எடுக்கும்
மருவளம் பின்னுள தீயாத வண்டதிரும்
மார்பணி என்று வருதியா கேசுரன்
பெரிய செல்வத்திற் பலகலக்கும் பிரதாபன்
வாரி சமணி சங்கநிதி அனையவேள்

காஞ்சியின் சிறப்பு

கற்ப காடவியை நிகர்த்த சோலையும்
நறை கொட்டு தாமரை மலர்மொய்த்த
வாவியும் நிறைபூ வானசெழுங் கழுநீர்
ஓடையும் தரளம் வீறுறு மென்கழையும்
நெல்லியின் பொற்காவும் வட்டநிழல் அளாவிய
எட்டுவான் உயாமும் எட்டுகோ புரமும்
மதில்பிர காரமும்நல் வானோர் பெரும்பதியை
நேர்க்கும் என்றே உலகுளோர் நாளும்
வந்துரைகள் செய்யத் தக்க தான
கச்சிநீ டளகை நகர்க்குள் வாழ்ந்த
இருமுடிச் செட்டிதான் உதவிய புத்திரன்
சதமுகில் சீராம னின்சொல் பெறவாழ்
சோம னங்கள் உலகார் பூபன்
வெற்றிபுனை வெள்ளைச் செட்டிய ராயன்
வாழ்சோபன கனகக் குன்றுவரை பின்வாழ்

மகளிர் சிறப்பும் காண விசேடமும்

தத்தையார் கோலி மலையிற் படிவர்
ஆரமார் புடையரைப் பேணார் மலருறை
முக்கியமா னார்உரை நாடரும் நங்கை
புவிமே லான பெண்களில் உருவாய்
விளங்கும் அரசி சன்னலைத் தட்டி
நீடு சித்திர மேடையின் நிலவி
சித்திர மாமணி செறிஉப் பரிகையில்
தப்பறச் சேரமு தளவிய வாய
நீடு பஞ்சணையி னாலே விளங்கும்
தனிவீ டாகும் அம்பொன் மணிவெள்ளிக்
கட்டில் மீது தட்பமாம் நறுமலர்
மெத்தைமேல் அருகில் இருப்பள் ஆர்புழுகை
இன்புண இறைப்பன் பூவணிகுழல் தானே
வனைந்திடுவன் ஆகுஞ்சொல் சொல்லுவள்
பாகே அருந்திடுவள் கலவிப்பற்றி வாயில்
ஓர்சுருளை மென்று இனிது தருகுவள்
சட்டமாய் இனிது படுப்பள் ஓர்ருசி
மடுப்பன் கரண முறைகள் பிணைப்பள்
வாயிதழ் கொட்டா கரண வென்றி
வள்ளை நேர வேகொண் டிடுவன்
கூர்வாய நகம் பதிய மையத்துச்சி
மீது வைப்பள் வரல்வளைகள் ஒலிக்கவே
கரமொடு கட்டிவாள் முலைகொடு குத்துவாள்
மீபிதழ் மாமுது மென்றுருசி தானாகும்
என்றுஓர் துளிச்சாறு ஆயிரம் பொன் விலை
என்றும் ஈவள் சர்ப்பம்பேர் உடலை
வளைப்பள் பார்எனது உயிர் மைத்துனா
உனது நல்லத்தை யார்மகள் என்னை
வேறாக நினைந்தினி விடாதேகாண்
மிகுந்த சம்போகச் சயம்பெருகும்
என்னைப் புல்லக் கிட்டு சாமி
உனக்கே ஓரடிமை என்றகள் வினள்இவளே
எத்தியே உபரி இயற்கையார் தொழிலை
நடத்தடா முலையை இறுக்கடா
முத்தியே சிறுக்கடா களிகாமம்
நேரே இருந்துபுரி நாவாலும் உந்தி
அணைமேலே கிடத்தி அணையடா
முலை முகடது வேது கட்டடா
குலை முழக்கடா புளகம் எழுப்படா
இது நல்ல திட்டமாயிற் றேயெனச்
சிணுங்கினுஞ் சிணுங்குவாள் சாலமும் செய்குவாள்
கூசாமல் வம்புமொழி கள்ளப் பேச்சில்
கரணமுறை சிலதப்புதே உபரி செலுத்தியே
சமரசம் மொய்த்த போதுரை செய்வதை
நகையாட விளம்புவள் தீராது அந்தத்தில்
செய்யத் திட்டமான படியால் முடிமிசை
வைப்பளே குயில்மயில் குக்கில் காடைகளின்
மிக்க தாகிய கரணத்தில் தோய்ந்து
பெரும் பொழுதும் மையலே புகன்றிடுவள்
கலவிக்குப் பிரதானம் அகன்றிட
எஞ்சி கரணத் தையே புரிகுவள்
தத்தியே லகுவொடு மேலே கிடந்திடுவள்
கலவிக்கு நேர்வலம் என்றிடுவள் மல்லுக்
கட்டுவள் இட்டமாய் இருவரும் ஒத்த
கடலுகவோ கோசல திகளோ நாமும்
பெருகுக வேதா னும்விடிந் ததெனத்
தெய்வ மதனன் புட்ப வாளி
தானும் அரிதென்று நினைந்து மகிழுமே.
----------------------

4. விட்டலராயச் சோழகன் வண்ணம்.

சோழகன் கல்வியும் கொடையும்

தெரிதமிழ் ஆசு கவிவல்ல பேரை
இருபக்கமும் இருத்தி மதுரச்சொல் நூல்கள்
சிலகூறச் சொலியதில் நற்பொருள் பெறவே
செப்பும் உலாவைக் கோவையை வளமடல்
தூதபா ணிகளும் உதவி யன்பொடு
இருத்தியது மட்டலாது மறையோர் செப்பிய
திருஞானக் கலைநூல் பன்னூறு அகத்திசை
தெரிமட மாதர் நடனவிநோ தத்துடன்
இலக்கணம் உரைத்து லோகத் திசையால்
முத்தமிழ் தெளியத் தெரிந்தே பொருளை
திரளாகத் தந்திடு தியாகக் கார்முகில்
கண்ட நாரண திலத மாயினோன்

வெற்றிச் சிறப்பு

அலையுடைக் கடல்போல் வெகுபடை கூட்டி
இடியொத்த குரல்கள் சுட்டிவரு துட்ட
அரசர் திரளாகக் குதிரைமேல் கட்டிய
சிலைவாள் பட்டயம் யானைக் கோடற
நடுவுடல் மார்பு கிழிபடச் சிதறித்
தலைதடிய ஏகு உதிர நதியாடக்
கழுகுகள் ஆடக் கொடிநட மாடப்
பிணமாடக் களிகள் சிலபல வாட
வயிரவியாட அலகைத் திரள் களிப்ப
மகபத்திர காளிதிரி சூலத்துடன் நடமாடத்
தசரதரா மற்கிணை யாகப் போர்தனில்
வென்று மானிடர் பணிய மீள்வோன்
பொருசிலை வீரர் வடுகர் கருநடர்
துளுவர் பரிசை சுற்றும் துரைமக்கள்
சேனைபுடை சூழச் சிவிகைகள் சூழ
வலமாக வேழத் திரள்கள் சூழத்
தாரைகள் முருடு மலாரி தவில்குழல்
நாதசுரம் தம்மில் முழக்க வருகின்ற
கெட்டிய மேளம் முதலப் பலவகை
சேவித் திடமுனை ராவுத்தர் சூழப்
பாடகர் கூத்து வல்லவர் சூழ
மறையவர் சூழ விளங்கித் தளதளத்த
முலைவட்ட மாதர் பொனினால் விருதுகள்
திரளாகக் கொடுவர இலக்குமி சேரப்
பாரினில் துங்க மாதவம் மருவுவார்

புகலியின் சிறப்பு

புதுமதி வீறுகுல யிளநீர்கள் திரளத்
தென்னை மரத்தையும் ஒடித்துப்
புனல் ஓடைக்குளில் விளையாடிச்
செறிபுயல் ஏறித்தவழ் பூகம் பாளைகள்
காதம் வருமணம் வீச
நெற்கதிரின் முத்தை இரைக்கொத்தி நாரை
பெருவாழைப் பழமடல் வீழ
கமுகு இளமாவிற் கனிசேர லைக்கே
சொரிபுவ னையில் உலக விருதரான
வரிசைப் புகலிவெற்பில் வருசட்டை நாதர்
புழுகா ரச்சொரி இருதா ளையும்
வழிபடுவோன் விட்டலாரயச் சோழன்
அம்பொன் மாமணி வரையின் மீதிலே

மகளிர் சிறப்பு

செம்பொன் மணி ஒளியே
மன்மதனுக்கு முடிவைக்க வரு
சித்திரமே பொன்மணியே
இச்சக அற்புத மடவாருக் கரசே
முத்தேநவ ஊர்வசியே
தெய்வி காதியே என்னுயிருக் குயிரே
உயிரளந்த குணமே என்னுடலே
முக்கனி ரதியே சர்க்கரை உருவே
புத்தமுதே நற்காமுக வசிகரமே
நலமே வடிவாய உருவமே
என் மனத்தில் குடியிருக்க
வருதத்தையே கண்மணியே
வச்சிர மணியே கற்புர மணமே
மாணிக்க மணியே சக்க ரத்தல
மண்டலிகர் முடியில் அபிஷேகமே

தலைவன் தான் செய்ய விரும்பும் தொண்டுகள்

மலர்தரவோ கைவளை பையமடி
யிட்டு வட்டுவம் அடப்பமது கட்டவோ
எனது மடிமேல் வைத்துடன் உறவாடித்
தினம்வாய் முத்திகொளவோ
முத்தாகிய அரண்மனை வாசல் தொழும்நல்
மணியத்துறை செலுத்திட வந்த
மானியலவோ கொப்பினை
இருகா துக்கிட வோபொற் பாடகம்
மணிவிரல் நோவவ வருமிரு தாளில்
இடவோ துடைத்து நுதல்பொட் டிடவோ
அருகே கிட்டிவந்து கோதிக் குழல்
சொருகோ நெற்றியில் அமுதூர் நாமத்தைத்
தீட்டவோ அருகே சுழல்
குஞ்சாய மரைக்கவரி வீசவோ

வேண்டுகோளும் முடிவும்

இருபது கோடி யுகம்ஒரு நாளையில்
விரக வேதனை எப்படிப் பொறுக்கலாகும்
எதிர்வா ரைப்பொரு தனபா ரத்தினில்
எனைவாழ்வித் தருளீர் கோமள
இதழகத் தொருதுளி சாறு தரையில்
வீழாமல் சிறுகக் கீறிவெற் றிலைமடித்து
வாயி லொடுபாதிச் சுருள்அடியே னுக்கென
என்றும் உதவீர் எத்தனைநா ளைக்காகிலும்
எனதுயிர் வாழ்வு நவரச மோகம்
இருவர்க்கும் இலையோ ஒருமெத்தை மீதில்
இதமுற்ற பணவிடை பாலிக்கினும் இமையோர்
சொர்க்க லோகத் தேவரும் போன்றுநான்
மனத்துயர் ஆறுவேன்
எழுதிய சாயமது வெளிறாமல்
எழுபத்தொரு பொன்னுக்கு வரவிட்ட சேலைஇடு
தூவட்ட அல்குலிலே நேரிட்ட அதனில்
இழையாகத் தவமே பெற்றே னிலையே
அடிமையு மாக எழும்என் ஓலை
அடிமைக் கொள்ளுமுமக்கு இதுபுத்தி காணும்
அடியேன் இப்பொழுது அறியாமற் செய்தன
நீர்பொறும் இது ஏன்? விசாரம் இதுஏன்?
உபாயமே உணரச் சொல்லீர் வெறுப்பின்
விரகத்தில் மெலியும் எளியேனுக்கு உறுதொழில்நீர்
கற்பியும் இல்லையாகில் பினைதே சத்தேஇலை
மன்னியே மடலெழுதி ஊரவோ
-----------------------

5. இராமநாத சுவாமிபேரில் வண்ணம்.

பார்வதியின் சிறப்பு
பகவன் நித்ய கல்யாணி சங்கரி
வயிரவி உக்ரமா காளி அந்தரி
உலகு கிடுகிடென மயிடன்திரு முடியினிடை
நடமிடும் கவுரி நாகபூஷணி
சரசுவதி லக்குமி தேவி கும்பிடு
இரு சரணத்தி எறிசூலி கண்டகி
பதறி அலகைசில கதறி ஏனை
உலகின் உதறி எறியும் ஒருபெரும்
பூத வாகனி பருவத வர்த்தனி
ஆதி சுந்தரி அனுபவி உத்தமி
நாக கங்கணி அருணவெயி லொழுகு
தருண வடிவழகி கருணைத் திருவுருவி
தேவி யொருபங் கிலுறை நாதனார்

சிவபெருமான் சிறப்பு

பகடு நடத்திய காலன் நெஞ்சினில்
மிதியா மறித்தருள் பாத பங்கயர்
மதனும் அவனுடை சிலையும் எரியினில்
அழல விசிறும் பால லோசனர்
அமுது பிறக்கும் முன்னே கருங்கடல்
வயிறு கிழித்தெழும் ஆலம் உண்டவர்
சனகர் முதலினர் பரவவட தருவில்
உறையும் பாமர் ஞானமருள் சவிதர்
பவள இதழுக்குள் வெண்மூரல் கொண்டு
முன்னடை யலர்முப் புரம்எரி கண்டவர்
மடுவில் முழுகி அழகிய சந்நிதியில்
வருபவர் செய்யும் பாவ மோசனர்
வாசமிகு சோபனக் கொன்றை மாலையர்

இரகுநாதன் சிறப்பு
மருதர் துருக்கர் மராடர் சிங்களர்
நிருதர் ஒட்டியர் கருநடர் கொங்கணர்
வடுகர் குடகரொடு நெடிய மகுடமுடி
அருட்பத யுகள இராச கேசரி
எழுபது லட்ச வீரர் மண்டிய
புகையிலகிய பிரமையால் மயங்கி அடையல
கொடிமதில் இடிபட நடவிய
திரிசகத் தையும்அழி ஆணையால்
ஒருவனாக வீர லக்குமி
உதவி தங்கிய இரணிய கர்ப்ப
தானம் செய்யும் நரபதி கசபதி
அசுவபதி ரகுகுலபதி ரகுநாத பூபதி
தேசா திபதி நம்புமிகு தாளினார்

இராமநாத சுவாமி சிறப்பு

வனச மலர்ப்பொலி சீதை என்றொரு
திருமக ளைக்கொடு போய இலங்கையின்
அசுரன் அவனுடைத் தலைமகன் நடுமகன்
இளையவ னொடுபல கோடிச் சேனைகள்
முழுதும் அறுத்து எதிரிடு கும்பகன்
னனையும் வதைத்து வீடணன் தனியரசு
நிறுவி யேயொரு சனகி சிறைவிட
மகாசலதி தன்னை ஆதி நாளையில்
மலைகொண் டடைத்தருள் சேது பந்தன
ரகுபதி மன்னன் ஆணையின் வணங்கிய
பொழுதில் மனம்உருகி அதிகவரம் உதவக்
கருணை மொழிவாத ராம நாயகர்

தலைவியின் சிறப்பு

வாழ்வு பெறுசெம் பொன்வரை மாதராள்
பித்திகைப் புஷ்ப விமான மஞ்சமும்
நறுமலர் மெத்தையும் நூறுவித ஒப்பனையும்
ஒருங்கு இலகுமண அறையில் வருவாள்
கலவ மயிலைப் போல உலவுவாள்
சரிகை ரவிக்கை யுள்ளே பிறங்கிய
முலைகளில் எத்தனை சோபனம் இலங்குவாள்
சுவடு நடுவிலொளி பளீர்ப ளீரென
எரியும் வயிரம்விலை நூறுகோ டிப்பொன்
விசிறி சுழற்றிய கோலமும் கையில்
அழகு பயக்குது பாவிசிந் தையவள்
இடையழ கிலும்அவ ளுடையழகி லும்இரு
துடையழ கிலும்மையல் மீறு தேமனம்
வேறு மொருபெண் தனையும் நாடுமோ

விரக கற்பனையும் கரணவிசேடமும்

விரகம் எனக்கமை யாமல் முந்தியை
வலிய இழுத்து முன்னே சிணுங்கிஎன்
மடியில் விழுவள் புனைசலவை உடையில்
வெளியில் தெரியும் மிகரோம ரேகைகள்
அவளைநெருங் கையிலோ தமிதமி தளையறுத்து
அருகில் வாவென அணிஅத ரங்கொடு
முலையின் முனையின்மேல் நெருடு நெருடென
மழலை மொழியிடை விடாது பேசுவாள்
விடுவிடு சற்றென மேலே எழும்புவாள்
உபரி தொடுத்தே அங்ஙனே இரங்குவாள்
அமளி மிசைத்துவள இடையில் இடையில்
ஒருகலக மிடுவள் உறவாக மீளவும்
மோகமிது கண்டதில்லை ராமனே
முகமதியிற் குறுவேர் அரும்பி
அழகு செனித்த தெய்விகம் எனச்சொல்
உடல் முழுதும் உயிர்புளகம் எறிப்ப
மெள்ள எனது செவியின் நுனியை
நாவின் நீவுவாள் கடிதட மத்தியிடை
நடுங்கும் மணியை அசைக்கும் போதினில்
கனிந்தே அதனில் அமுதம் ஒழுகிவர
உலைவில்அன் பொழுகுகண் உருகி உருகி
வெகுதாபம் மீறவும் முடிவில் வலக்கை
பளீரெனும் பொழுது உடலை இளக்க
வீரியம் இழந்தும் இடது கையின்
முதுகு தடவிஎனை வலிய வருவள்இனி
ஏதுதாமதம் மாமதனன் சண்டைநிர் தூளியே
போகு போகெனத் தோளில் நீடும்
மென்குரல் கமுகில் எழுப்புவள் பாத
தண்டைகள் ஒலிகதற இடைமிகுதி பதற
வரிவளைகள் சிதற வெகுபூச லாடுவள்
கடினப் புணர்ச்சியில் மகிழ்ந்திரு துடையை
மலர்த்துவள் போகம் வந்தது சமயம்
இதுசமயம் உனதுவசம் எனது உயிர் பதனமென
மொழிவளான வேளையில் முலையை யமுக்கிமுன்னே
பதிந்தது யுபரி நகக்குறி கோடியுண்டு
ஒருமனது மகிழ்வுபெறு இரதியும் மதனுமென
மருவிகலை விசிறிச் சரியோக மாய்வரும்
காம ரசனை நெஞ்சம்மற வாததே.
------------------

6. இராமலிங்க சுவாமி பேரில் வண்ணம்.

இடுக்கான வேதமுதல் வருத்தோனும்
ஆலினில்முன் னுதித்தோனும்
மாதருவிற் காவுறுவோனும்
மற்றுமுள்ள தேவர்களும்
நச்சி நெடுமாதவம் இயற்றியும் அறியாதவர்
முயல்மேவும் பாதியுடல் கூனும் மாமதியும்
எருக்கொடு தாதகியும் மருத்தேனின் கூவிகூயும்
முடித்தோர் வேறாம் முப்புரம் நீறெழ
விழித்த விழியார் இமய மென்னும்
மலைக்கினிய காதலிதன் இடமான சிவனார்
இயற்பரவில் மூவர்மொழி தமிழ்க்காதல் கூர்பரமர்
நினைப்பார்கள் நீள்மதியில் விருப்போடு உலவும்
உத்தம விலாசர்இரு முப்பதொடு நால்வர்
கதிமுத்தி பெறவே அருள்செய் அடியார்வசர்
ஆடுகொடி இடபமென மேவுங் கரனார்

இராமனுடைய சிறப்பு

எழிற்பால னாகமனு வுதித்த தேவோ
தனிவிண்டுத் தேவோ தாடகையை
வதைத்தே நலவேள்வி முற்றி ஒருமாது
கல்லது வாக்கி வில்லை முறித்து
மலர்மாதை உயர்மண மேவும் இராமன்
வலக்கார்முகம் தூணியுடன் நகரை விடுத்து
ஆறு கூடமது விராதனையும் அழித்தே
ஊடு கானகத்து அரக்கி நாசிகரன்
மக்களொடு மானை வயிற்றிற்றலை கொள்வானை
மராஅ மரனொடு வாலியும் மாளக்
குலைத்துஅலை அடைத்தே வீயார் அணிமொய்
குலத்தோடும் மாளமுடி அடுத்தோனும் மேவப்
பற்றுமுயர் புட்பக விமானம் நகர்புக்கு
முடிசூடி வளரும் ரகுராக வேசன்
வருவழி யில் அடி சூடும் பரனாம்
சுநாதனென இருந்தோன் நீடு ரவிகுலன்

வீசயரகுநாதன் வெற்றிச் சிறப்பு

வழுமன மாகதர் துலுக்காணர் சோழர்
வடுகர் மராட்டர் குடகத்தர் கருநாடர்
வடதிசை மேவு ராசர்பொரு படையொடு
இறைஞ்சிப் பணிவொடு பணியா திபல
குவித்தே சலாமிட்டு முறையோ பாராயென
அருள்கூர் குரிசில் தனுவாழ் கிரீடி
மணிக்காவில் நீடுகொடி விண்ணுக் கேற
குலாவு நறவலர் மேல்விருது பெற்ற
துறைரா வலர்கள் பெற்ற நீதி
நினைந்துபதி விசய ரகுநாதற் றொழுவார்

இரகுநாதன் செய்த திருப்பணிச் சிறப்பு

மாகத் தொடுமே இகலுமணிக் கோபுரமும்
விதிநிறை திருத்தேரும் நேமம்வைத் தொருவர்
காணுமுன் முத்திதரும் மாசந்நிதி உடையோன்
அழகான சோபை உவப்பாக ஏறும்ஒரு
பெருச்சாளி வாகனம் முதலாக அவரது

வாகனங் களைமுற் றாக்குங் காளை
தெற்கு முகமாகிய விருப்பர் நீடு
வானவர் மதித்தீரம் படைத்த சீர்த்தியான்

தலைவியின் நலனும் கரண விசேடமும்

வேளது உன்மத்த தானை யாயவன்
வெட்கம் ஏனடா உடல்கு லைத்து
முறைமடம் வேறா நாறு
திருக்கா னதொரு கரண விதத்தான்
வீறு புலியினைப் போல வேநல
போகம் மிக்க அயிராணி மலையில்
திருவனாள் உரகம் பற்பிணிகள் போலும்
அதிசயம் நாடி நாடி உற்றுப்
பரிபாஷை யாலும் நொடிச்சொலி னாலும்
சாமி பேசிடுவள் மேலுக் காகவே
அன்புடை யவளாய்ச் சொல்லுவள் வார்துடை இடுக்குவள்
நீபதலம் எச்சரிக்கை சாமி எனவே
சம்போகியோ அலது கசப்பாசியோ
கலவி வெறுத்தார்கள் போல
உச்சி மிசையொரு குட்டுக் குட்டி
இருநூ லிடைதுவளச் சயனம்
எழுநூறு படித்தாள்; தனமதில் இசையவே
படிந்திடும் அளவை அணைகுதித் தோடி
ஓடுமட் டதனிலே அவசமுற் றதனிலே
களைப்பை ஓட்டியே மாரன்
இரதி முதல்மட வார்அஞ் சிடவே
பலிப்பான தோர்கலவி புல்லிமுகம் முரித்தேனா
நாபி முற்றும் நுனிநா கொடுசுவைத்தே
வடநீள் மணிசுவைத் தல்குல் துழாவி
இருசெவி நாவின் நீவி
எடுப்பான தோர்நிலைக் கேசுரீ ரெனவும்
உரைத்தேன் அகம்மூல முதல்உவப் பான
தான மேற்றினன் உடனே பருகவே
களியு மாகிஉயர் கெக்கலி கொள்வாள்
உருகுவேன் ஓகையொடு பலரக ணமெனக்
குரல்கொடுத் தாள்விடா மல்ஆவி உதிர்த்தாளே
நாவிரகு பெறக் கோழிகூவ வெற்றி
அமளியினும் அற்புதம் இதுஎன்
ஆதுரத்தி னுடனே உபரிவிளை யாடுசாமி
தவளம் மருவும் சுகமே சம்பிரமமே.
------------------------------------------

7. சூளாமணிபேரில் வண்ணம்.

சூளாமணியின் சிறப்பு

ஆட்சியால் நாலுபடை மாட்சியால்
வாழ்வு பெறு காட்சியால் நீட்சிபெறும் அங்கையால்
பூமங்கை சயமங்கை கலைமங்கை நிலமங்கை
அருள்மங்கை வடிவெங்கும் நிறைவோன்
ஆக்க மாய்அருள் வாக்கினான் நிறைவோன்
ஏக்கமாய் வாடு பிணிகண்ட வரதன்
அஞ்சலென வந்திதைய சஞ்சலம் ஒழித்தவன்
அருந்துயர் தணந்தவன் வழக்கு கொடையான்
ஆர்க்கு மாதரவு அறிவுளோர்க்கு நாதனவன்
பாவைமார்க் கிலாமோகன சுந்தர மதவேள்
அண்டினவர் சஞ்சலம் அடைத்துஅவர்
பெரும்பொருள் அருந்தவர் உறும்பொருள்
மிண்டர் இடியேறு அனையான்
ஆதுலர் சேமநிதி நீதிமான்
தாததனா தான தனதா
தாததனா தானவெனும்
இன்ப இசைபரவ வண்டுபல
உகள மவுலி இரத்த குறிஞ்சிமுரல்
செங்கு வளையாள் அடையார் வெருவ
வீக்குவாள் வீசுவிசை பாக்கவர் மான
குலதிலகள் சந்தன கதம்பமதில்
குங்குமம் நானமுடன் தவழத் தண்புவியில்
வாழுபல மங்கையர் தமக்குப் புயவேள்
தாக்கினார் ஆரமுத நோக்கினான் மாதுரிய
வாக்கினான் நெடுமொழிகூர் சந்திர நாந்தக
துரந்தரன் சவுந்தரன் புரந்தரன் என்றபுகழான்
தானம் மாறாத கொடைவள மையான்.

சாத்தனூர் சிறப்பு

தாற்றிலே வாழைமது ஆற்றிலே பாலையுதிர்
சேற்றிலே சேயகல் வயலி னருகே
நந்துகருவின் பழமுதிர்ந் துனைய நேர்ந்து
அயலில் நந்தினம் அனந்தரம் உலைந்து
மணல்சூழ் மேட்டிலே எற்றியயல் கொடிசூழ்
அலரேட்டி லேஏறி அரவிந்த முகமேல்
தரளம் சொரிநந்து தண்பெடை மேன்மேல்
போகாது இடை கொண்டு துயில்கூர் சாத்தனூர்
அதிபதி பாடருமா நாடாளு கோத்தரு
சூளா மணியெனும் கருணைமால் கங்கை
துங்க வழியான் துணைவன் வண்டமிழ்
காதலன் உகந்து அடிமை வாழ்க.
----------------

8. நெல்லை நாதர் பேரில் வண்ணம்

சிவபெருமான் சிறப்பு

ஒளியுமாகி அருளுமாகி இருளுமாய வெளியுமாய்
நேமி வெற்பு மாகிவட்ட மாகியே
பகலுமாகி இரவுமாய் மதியுமாகி ஒளியுமாய்
நாகமெட்டு மாகமற்ற நாகமெட்டு மாகியே
உடலுமாகி உயிருமாய் அறிவும்ஞான வெளியுமாய்
வேதவித்து மாகிமூவர் ஆதிதேவும் ஆகியே
ஏனவையில் நிறைந்துலாவு சிவனார்
உரகநாணி வரைவில் லாய்ஒரு
முகுந்தன்தானும் பகழியாய்
மாபுரத்தை நீறெழப்பண்
நகைநகைத்த ஈசனார்
விடையிலேறு பரமனார் மிடறுநீல நிறமுள்ளார்
கானகத்து வேடன் எச்சிலே பொசித்த
வாயினார் உழையுலாவி வருகையார்
மறலி உதைசெய்வார் வீரபத்திர காளி
வெட்கியே நடக்கவே நடித்த தாளினார்
அறுகுடன் திங்கள் சூடும் சடையார்
தெரிவை யாரும் பாதியார்

வாளை மீன் உகளுதல் பற்றிய வருணனை

வாளை வலைகள் பீறி உந்தியே
தாமரைத் தடாகம் முட்டவே
குழம்பும் நீரின் மடுவினில்
மூழ்கி ஒளியினால் இசைகள் பாடும்
அணியெ லாம்இசை ஏற்ப சாதி
பக்கிரா தெழுப்ப நீடு தாளச் சி
றுநெல் லான வயலெ லாந்தம்
வேலி யதிர வாம்மீ துடுக்கள்
போல முத்தமே சொரிந்த கோடல்
வயல்மடை வரம்பி னூடு தள்ளியே
செறிய நீரில் மூழ்கியே
கரையில் ஏறி அளவிலே
போயளாய மேகத்தின் வாளை முட்டி
விறுங்கதலி முறியவே கமுகம்பாளை சிதறவே
வாலடித்து வரளை தாவியே குதித்த
வாவிசூழ் திருநெல் வேலி இறைவனார்
கரிய வேழ உரியினார் கவிழ்க்கவே
கழித்த வேயின் முத்த ராயினார்
வடிவுடைய மங்கை பங்கர் வரையின் மேல்

தலைவியின் வருணனை

முளரி மேவும் அரிவையே களபலீலை வனிதையே
மதன ராச கப்பமே மறுப்படாத
பரமா னந்தமே கடையப்படாத பவளமே
வடுப்படாத வயிரமே நீல ரத்தினமே
விலைப்படாத வச்சிர மாலையே முத்த
ரசனையே மதுர சார வசனையே
காமனுக்கும் மோகமுற்ற மோகனப்ர தாபமே
பரிமள வசந்த மாதர் அரசே
முருகு சோபை அதரமோ தாளரேகை முறுவலோ
சிறுபொட்டுடன் நாமமிட்ட
வாகு நெற்றி சாபமே வேளை
இகலியே கலக வேளை முடுகியே
பூசலிட்டு மாயமிட்ட அந்த சாலையோ
முலைகளீடு கவசமோ கரணவீர மகுடமோ
கோமள கம்பீர சக்ரவாள வட்டமேருவோ
துவளுமிடை வஞ்சியோ
எளியபேரை அறிகிலீர் விரகதாபம் ஒழியலீர்

தலைவன் விரும்பியன

மேனி சுற்றவும் நிற்க
ஆலவட்டம் வீசவோ அளகபாரம் வகிரவோ
அல்லது பாதந் தடவவோ
பாதரட்சை சுமக்கவோ அடப்பம் ஏகவோ
கையார் வளையிடவோ அடிமைஓலை எழுதவோ

வேண்டுகோள்

கோபம் விட்டு வார பட்சமாய்
அணைத்து வாழுவீர்
தினையளவும் நெஞ்சில் இரக்க மிலையோ
எதிரிலாத மமதையோ மதனராசர் சலுகையோ
பூதலத்தி லேயொருத்தர் கேள்வியற்ற வாசியோ
பொழுதுவீழும் அளவுமே மதியுலாவு பொழுதிலே
யானொருத்தனே தனித்திரா
முழுக்கவாட வாடியே விசாரம் இடுவனே
இதுஎன்ன மாயமோ ஆதாரமா
நீரிருக்க நானிருக்க நான்வருந்தல் நியாயமோ
இனி எழுதி மன்றில் ஊர்வன் மடலே.
------------------

9. செம்பை இளையான் வண்ணம்

இளையான் பண்பு நலன்கள்

வச்சிரமா மணித்திரள் கோடி
சுற்றுறவே அழுத்து கிரீடமோ
வடிகுழை அணிபணி நவிரி
முருடு முரசுயாழ் மத்தளம் பேரிகை
டோலக் முழக்கெழு பேரி சித்திர
நாத சுரமும் செறியக் கணநிரை
குடைகொடி குதிரைதேர் மணப்புய மரலை
சட்டை சூடிச் சிலராகிய புலவர்
போதர அகலத் துவகையுறு சகல
கலைவல புலவன் கவியகம் மகிழப்
பேரருள் சேர்துய்ய சங்க நிதிவாழ் தரணிதரன்
மத்த நாகத்தின் தீப்பொரு கோட்டினைச்
சயிப்பவன் விகடித தவள மதிக்குடை
நிலாவெ றிப்பவே நித்தம் உலாவு
கெற்சித மோக சத்து வவேள்
முழுத்த இராவிருள் உகள
உதய கிரண உதயன் வரையில்
விசய் நேமிக் கிரிநேர் மயிலாய
வெற்பினிலே உதித்தெழு ஞாயிறு வலம்வரும்
புடவி தனையொரு குடைதனி நிறுவுவோன்
உள்ளத் தன்பின் உபகாரம் அகலா
விச்சுவ ரூபச் சக்கர பாணி
அச்சு தன்மா கவுத்துவ மார்பினன்
உலகில் மரகதக கற்றை மிடையமிசை
நிறையுமிழ் பத்தி மகுடக கோயில்
பரிபூ ரணக்குட மாளி கைக்கண்
திறமை யானசரி மதகவி கல்லோலத்
திகிரிமா மரகதக் கிரியாம்
விட்டுணுலோ எனத்தமர் கூறச்
சக்தி விநாயகர் பிரமர் வேள்மா
முனிவர்கள் ஐவர் நிரைசெய்த புகழினான்
முல்லை வெண்டரள மாலை அணிவோன்
வெற்றிபெறும் மார்பன் உற்பன மான
சற்பன பாஷை விற்பனன் அடையலர்
படைகள் உடைய வடுகர் கருநடர்
நெடிய உத்தா தெக்கிண பச்சிம
முங்குண பாலினின் மன்னவர் புகழும்
இயலணி நிபுணன்மார் மெச்சும் உதாரன்
உச்சித யோசனைக் குச்சரி யானவன்
பச்சைக் குமரன் அடியரில் எளியவன்
வலியவரில் வலியவன் இவ்வவனி ஆள்வள்ளல்
செம்பொன் மேரு கிரியின்வாய்
பச்சிளம் பொருப்பில் ஒல மிட்ட
குரோதன மைக்கடல் சாடுகடு விடமொடு
கொலைதனைப் பயிலும் அயில்கள் நுழையுபு
மாயக் கணைபாய மயக்குற விழுந்தவர்
அக்கிரம காலன் உக்கிரம வாளி உடலுருவ
வெருவ அமரில் பொருதுதோத் திரமாக
சிற்றா சர்பத முற்றவர் திருப்புணர்
திறைகொள்ளும் வளமும் பெரிய தனமும்
மதன கலையும் வாழ்பவன் வரைமேல்

தலைவியர் சிறப்பு
வள்ளையங் குழையில் மோதும் விழியீர்
பத்தி செயக்கா முறற்கெளி தான
சித்திர மோகனக் கிளியெனவே
வசீகரணமும் ரசிக கிரணப்
பிரசன்ன வதனமும் மொக்கிள நீரை
ஒப்பாய் மாமருப்பு என விருது அமைந்த
கனபவளப் பரிமளத் தனிமுருகு ஒழுகியே
பட்டாடையைப் பலகாலு முடுத்தழ கரன
சிற்றி டை நூல் துவள இலகுறும்
களப மாரி தவழ விசையமார்
வெய்ய கும்பம் எனவிரி அழகால்
வாரிசூழ் உலகத் தலம் இச் சைகொள்
பாரத்தின் தரளவடத் தனபாரம் அசைய
எழுபுவனம் விலைபெற எழுதுதிலத நுதலும்
அறிதற்கு ஆசைஉமக் குளதுபே ரில்தனி
பொரும்படை வீடிரவி கிரண அருணம்
உலவுமவர் சததள நளினமோ கரையில்

தலைவன் செய்ய விழையுந் தொண்டு

நாண்ம லர்க்குழல் தான்புனைந் திடுவேன்
நலத்ததில் ஓவேன் ஊர்வசியே அனனடை
கொண்டு வாழ்வது விடீர்
மையல்கொள் தாபம் நினையீர்
கைச்சிலை மாரனைப் பிறகே வரச்சொல்வீர்
போரச் சொல்லுவீர் இதுக்கரு மமல
ஏது துயரம் எனநீர் வினவில்
இனிமை யில்யான் மெத்திய பூவினில்
பிரகாசமே மெத்தை யதிலே வந்துடனே
அரைபுனை யுங்கலை நெகிழ மகிழ
இருவர் மனதும் ஒருமன தாகக்
களிகூர நற்கனி சீனி சர்க்கரை
பால்வாய்தர முதிர அதர
அமுது பருகி உருகி மருவியே
உய்ய வும்சொல் என்றும்என் ஆணையே.
-------------------------

10. சந்திரமதி வண்ணம்.

பார்வதியின் சிறப்பு

பகிரண்ட நவகண்ட புவனங்களும் அனைத்தூழி
கருப்பமும் அருக்காதி முச்சுடருமெண் டிசைதாமும்
எண்பணியும் எண்குவடும் எட்டாத பொற்குவடு
கெட்டாழி வட்டமும் ஓரைந் திணையும்
முயன்றனர் அறிந்தணவும் எத்தேவர் முத்தொழிலும்
முத்தேவர் கற்பிதமும் யாவையு மாகிஉறைவார்
அமரர் பணிதிரி யம்பிகை சவுந்தரி
அருட்பால் ஈபவள் பொருட்பால் அளிப்பவள்
புரந்தரி சுமங்கலி பசுங்கொடி முடிப்பவள்
நினைத்தது முடிப்பவள் மலைக்குமரி சுந்தரி
மதங்கி சிவசங்கரி அநந்தசய னத்தாய்
கச்சியில் கச்சாலை உத்தமி
சரோருக பாதம் நினைவோன்

தலைவன் சிறப்பு

தண்டமிழ்ப் பரப்பில் அகமும்
புறமு மென்றிரு வகைத்தாய கவிகளைப்
பண்ணு மவர்தங் கருணைவங் கிசபதி
சக்கிரா யுதத்தலைவர் சுக்கிரோ தயங்கண்மிகும்
அழகார் தாகம்வரச் சங்கொடு சலஞ்சலம்
வலம்புரி இடம்புரி இடத்தே இருக்கும்
வளமடல் தாமரைக் குள்அரி மண்டும்
மாநகர் மண்டலம் மறுக்கெட விளக்கிய
தனுக்கோல் உடைக்குரிசில் சந்திரமதி இந்திரற்கும்
அரிய பாவையை ஈங்கு விருப்பால்
வெற்றி முகில்கொளக் கூறு களியரோம்

கட்குடியர் கூற்று

குண்டலமிடும் கொண்டையிடும் மண்டையர் கொடிக்கோல்
பிடிப்பவர் குணக்கேடர் எப்பொழுதும் முன்குடுமி
அந்தணர் முசுண்டையர் காலையில் முழுக்காடா
பூகதர்கள் கழுக்காணி மொட்டையர்கள் கொண்ட
விரதம் பிழையுறும் கதிபெறும் பிழையினில்
களிப்பில் நடித்தே முழக்கிவிடு யாமிடு
பூசை எளிதே கொங்கணரைக் களைகுவம்
கறிமுகந் தனையோல் லிடித்தமுளை முத்தால்
சமைத்துவிடு நம்பாது கம்பரிசி வெந்தது
பதந்தனில் இறக்கா திருக்கில் முறுகிப்போம்
இறக்கிவிடு மறைமுறை மைப்படி மந்திரம்
அளந்திடு கடந்தனில் அறக்காய வடித்ததை
மரக்கா லெடுத் தளவிடு வாவா
ஒருவாளை சமையல் சோஇனிக்கும் புளியும்
இட்டுத்தேன் போன்றினிய குழம்பிடு
கொழுப்பாடு அவித்ததை எமக்கீரல் சுட்டுவை
குறங்கதில் நறுஞ்செஞ் சதை எலும்பது
தவிர உமக்கே தலைக்கறி உமக்கே
குடல்பொரி பலகிந் துருவர் கிம்புருடர்
தின்பவரை இங்கொரு புறத்தே இருத்திடு
கட்பானையே ஊறிய காடி தனையே
கெண்டிகளில் மொண்டு கொடு
மொந்தையில் மொண்டு கொடுவிரித் தேகுரு
தக்கணைவை தண்டனிடு கும்பிடு கமண்டலம்
நிரம்பமது வைப்புரி முக்கண் அறவரில்
தூபம் இட்டுவை சுகந்தருவர் அன்றிஉமை
பஞ்சமி பதம்பரவுவை கரண மற்றதோர்
சிவத்தியானம் முத்தி தருமே
--------------------------------------
சிவபெருமான் சிறப்பு

புனலே திரும்பிய சடைதனில் மஞ்சனத்
தூயநீ ராடு புங்கவர் மதமெனும்
தூய அருவி பொங்கு குஞ்சரத்
தோலால் விறு கஞ்சுகர் புகலி
அந்தணர் அரசர் சுந்தரர் செந்தமிழ்ப்
பாவலர் பா அலர்வீறு திண்புயர்
மறைகள் தாமும் மண்ட அரியவர்
புவி அ டங்கலும் உயிர்பெ றும்படிக்
கண்ட மட்டே ஆலாலம் உண்டவர்
உமையுடன் மாலயன் வணங்கும் அருணைப்
பதிக்கே வாழ்வாய் இருந்தவர் புலிபதஞ்சலி
முனிதொழும் திருவம் பலத்தேசேர் வானவர்
பொன்னொளி தவழும் இரவிபோல் ஒளியவர்
அனுதி னந்தொழும் அடியர் தங்களை
மைந்தரைப் போலவே தாமு கந்தவர்
முப்புரம் பொடிபட முனிந்தவர்
ஐங்கணைப் போர்வேளைக் காய்ந்து வென்றவர்
சிரங்க ளும்எரி கரங்களும் மங்கையின்
கூறும் வளரக் கயிலைமீ துறைவார்
குளிர் சண்பகக் காவூடே
நிரம்பிய அமுதச் சந்திர நிலவே
தடங்காது தவழ்ந்திடும் அருணை யம்பதி
மருவு சங்கரர் அமுதவெற் பானார்
ஆறணிந்தவர் வரையில் மேவுகின்ற வனச

மங்கைமார் சிறப்பும் தலைவன் விருப்பும்

அருணை மலைமங்கை வனப்பும் செயலும்
மண்டப மடல்திறந்த மடந்தையைக் காணீரோ
நிரந்தரம் மழலை வண்டுகள் சுற்றும்
கருங்குழல் மங்கையைத் தளர்ந்தஎன் மனத்தில்
அமுது குத்த பெதும்பையைக் காணீரோ
சொல்லுஞ் சொல்மட நல்லார்க ளுடனே
மண்டலம் அசையவந்து கழங்கெடுத் தாடாரோ
செழுங்கலை இடைஒசிந் திடவும்வளை நெரிந்திடவும்
சொல்லப் புக்கார் களரியில் எனும்படிப்
பவுரி கொண்டவர் பந்தடித் தாடாரோ
பிரிந்தவர் இதனில் மீள வரிலோ
கனதனங் களில்இளகு குங்குமம் பூசேனோ
சிலம்படி வருடி அஞ்சனம் எழுதி
நின்று முகந்தனைக் காணேனோ
மணஞ்செறி கரிய குந்தள மயிர்வகுந்து
நினைந்து கரும்பொடு காணேனோ
தொடர்ந்திடு கலையி னங்களோ டென்னை
நினைந்தவர் என்சொலிப் போனாரோ
தெரிவையர் திகுதிகு தக்கதோ திதிதக்கதோ
திசைகணங் கணங்க தோம்தீதக்க தோதிக்க
எனும்படி தமரிக்கும் வீரமுர சொத்த
நவகண்ட லோக தாளத்திலே
கொட்டு மேளத்திலே சக்ர வாளத்திலே

அழகன் பெற்ற வெற்றிச் சிறப்புகள்

உருத்துவரு கண்டர் அணிசெருகிக் கனன்று
பரசக்கிர சேனை சிதறும்படிக் கடம்பையமர்
வென்றவீர தீரத்தினால் மிக்க சூரத்தினால்
வெற்றிசேர் விக்கிரம ஆதித்த னான
திண்டிறல் ஆள்வீரன் அழகன் வீரவேள்
சிகரப்பொன் மேருகிரி யொத்த மேடைதிகழ்
வெண்குடை விளங்கும் மணிமுன்றின் மீது
சேவிக்கும் ஈழத்தார் கலிங்கர் மகதர்
சீனத்தர் பாரக்கர் சேரர் செம்பியர்
வரவிட்ட நீலமணி முத்துமாலைக் கருவூலம்
பொன்னுல கதனுடை வாழ்வுக்கு நேரொக்க
நாளுக்கு நாள்மிக்க வாழ்சன மானத்தினால்
பெரும்புயல் வரைளட்டும் எழுதிசை எட்டும்
மண்டலமும் வந்து புகழும் பிரதான சீலத்தினால்
மிக்க தானத்தினால் வித்தை தீரத்தினால்
மிக்கதான சங்கரன் குமான் மருகனான
நிருதர்கள் கூடி வரவிட்ட வாசி
குலவும் கவரி குஞ்சம் வளைமுன்கை
ஆழி கோலக் கபாயச் சட்டை
துப்பட்டா வச்சிர சோபை குலாவிட்ட
பொலங்கு டைத்துரை கொள்ளாது கவிசித்ர
மாக வரும்விஞ் சையர்புகல் ஏக்கற்று
இடைநடவி வந்து மாடமா கத்து
மேகப்ர தாபத்தை நேரொக்க வாழ்விக்கும்
வாலத் தியாக சந்ததி
குருபத்தி யான சிவபத்தி குணமும்
பேரறமும் இன்சொல் நெறியும் பொய்யாது
கோதற்ற நீதிப்பிர தப்பத்தி னால்மிக்க
கோமளக் கடாமிக்க யானையின் மீதிலே
வருமாற னென்ன மதுரை மீதிலே

சாம்புவன் அறச்செயல்கள்

குருசொக்க நாதர் முடிவைத்த போது
குயிலும் வெண்டரளம் மிஞ்சுவயி ரம்பொன்
மாணிக் கக்கொடி பூசக்கிர வாளம்
பிறைவான் வட்டமேல் வட்டமாய் இட்டமான
கஞ்சுகங்கள் ஈசற்கு நீடுபரி வட்டம்
ஆடை அமுதூண் பரிக லங்களும்
பொன்னார் ஆழிக் கையால் மிக்க
காணிக்கை பாலிக்கும் மாவிக்ரமா தித்தனான
மந்திரி நடைகற்ற போது கொடைகனக
குலசங் கரன்விளங்க வருமைந்த னான
மாதர்க்கு மோகிக்கும் வேளொத்த கோலப்
பிரதாபக் கோமாற குமார சாம்புவன்

தலைவியின் சிறப்பு

வீறான கருவை வளநாடு சூழ்மகர
கல்லோல சலதித் தடத்து வளரும்
கமலக்கை வரமங்கை போலும் மாதர்க்கு
எல்லாம் மிக்க ரூபப் பெண்ணே
சித்திரம் மலைக்கவல் லாரப் பெண்ணே
அனங்கனும் இரசிக்கும் இரதி பரவுபெண்ணே
பொன்னெழுதும் திலதம் இந்துநுதல்
இந்திர மாலைநகல் லாரக்கட் பெண்ணே
முந்தும்மோ கனப்பெண்ணே பதுமராக மணிபெண்னே
மட்டுவார் கரும்பினில் வடியிட்ட தேனில்
அமுதத்தில் மேனிவடி வங்கொடு சமைத்த
நங்கையே பெண்மா ணிக்கமே வச்சிர
கரணப்பெண் ணேகட்டி மாடைப் பெண்ணே
பரவும் பாதம் நொந்திட வும்நீ
காலில் வருவது என்ன நீதியோ

தலைவன் செய்ய விரும்பும் தொண்டுகள்

மலர்மெத்தை மீது சயனத்திலே வாருமலர்ப்
பஞ்சடி நடந்த விதனங் கண்டீர்
வாசம்படப் பன்னீர் தடவவோ
பொற்ப டீரத்தை மார்பகத்தில் ஒற்றவோ
நிலந்தனில் அடிவைத்த போதுஎன்முடி வைக்கவரும்
முன்னழகும் பின்னழகும் கண்டே எதிர்கொண்டு
பேணி ஆலத்தி சேவிக்கவோ இட்ட
வேலைக்கோர் ஆயத்தமாய் நிற்கவருவ தன்றியும்
வடமிட்ட நீல முகவட்டம் மீறி
வளருங் களபக் கும்பமதக் கொங்கையான
மாமத்த யானைக்கோர் மாவுத்த னாகி
முகபடாம் இடவோ இடவோ சொல்லும்
சொல்லும் ஏதேது பணிவிடைகள் ஏவுவீர்

கரண விசேடம்

அமுதச் சொல்லோசை மொழிதள் ளாட
அரவின் படம்ஒதுங்கி அமுதங்கள் பாய
இகத்தில் மேவிக் குலாவிச் சமாளித்து
நேரம் வளர்ந்து வேர்அரும்பிட
இதம் ஓக்க, முறைசுற்றி இருசங் கிடைமுழங்க
ஒருசங்கி லோசை ராககதி லேயிட்ட
தாளத்திலே ஒட்டி யாணத்திலே முழங்கிட
அனுபவத்தி னாலும் அளகம் புடைசரிந்து
சரியும்பொன் சகலாத்து வாரத்தின் ஒளிக்கும்
நாளிட்ட கேளிக்கை கையால் வணங்கிடு
மானார்கள் முறைமையிது காணுமே
அகலிட்ட வாசனைப் பிச்சி மாலை
அகலஞ்சரி யச்சரிந்த சரிகொண்டை வாகும்
ஆழிச் சகோரத்தை வேல்தொட்ட பாணத்தை
ஆலத்தை நீலத்தை மேவும் அஞ்சன
விரக கபாட வழிகற் றதிலும்
விழிகொண் டெறியின்ப விரகுல் கவடும்
சேவடி யடைவாய் மிக்க கோலச்
சலாரிக்கு மேலிட்ட பூவிட்ட சேலையும்
தணிஅருண பரவரள நகைமுத்து வாயும்
அழகும் களிமிகுந்தும் இருந்து வாடும்
ஆசைப் படாமிக்க போக்கும்
மோகிக்கும் ஆருக்கும் மோகிக்கும் நூல்மருங்கும்
ஈரேழு புவியும் அரசும்விலை போகுமே.
------------------

12 தியாகராசர் வண்ணம்.

தியாகேசர் சிறப்பு

மேலாரும் இந்திரத் தேவனால் முசுகுந்தன்
வில்லிகொண் டாடவரும் ஆதிப் பெருமாள்
ஓரெழு இடங்களுக்கு ஈசர் மூவருமுன்
உள்ளறிந்து ஓதரிய கோவிற் பெருமாள்
வேதா வியந்திடப் பீடமீதி னிலிருந்து
மெய்யசைந் தாடிய விநோதப் பெருமாள்
கம்பிக்கா தழகிய பெருமாள் வீணா
மதங்க நற்கீத் நாதம் நிரம்ப
விள்ளுந் தேன்தாரை விதரணப் பெருமாள்
சோமாசி யன்பரிடம் அருள்கூர வேவந்து
சொல்விருந் தாம்முதிய கோயிற் பெருமாள்
ஓவரது வந்தடித் தொளித்தாளில் விளங்கு
வெள்ளிபொன் பூண்டிடும் ஆனைப் பெருமாள்
தண்டைக்கால் அரவப் பெருமாள் ஆலால
சுந்தரற்கா ஆடல் மறந்தவர் போல
விலங்கு றுந்திரு வீதிப் பெருமான்
காலார் மரங்களிற் கரவு காவுறை
புள்ளொடுஞ் சூழ்கமலை வாவிப் பெருமாள்
சூழ்தண் டலைச் சுரபுரி வசந்த
நன்னலம் பானலொரு மாலைப் பெருமாள்
அந்திப் போதில் அருமைப் பெருமாள்
ஆடாத தூமணி தாவிட விளங்கின
அவையின்கூ ரையில்விடு பாகற் பெருமாள்
சீராடு பங்குனித் தேவதேவர் கண்ட
தெய்வசிங் காதனத் தியாகப் பெருமாள்
தீராத அழகாய வீதிவி டங்கர்
அல்லியங் கோதை மணவாள பெருமாள்

மனுநீதிச் சோழன் செயல்
பாலாய இளம்பரித் தேர்உருளை யூடு
இளங்கன்று பையவந் தோடிப் போகி
அபாயப் படவே ஆஆ என்னும்
புனிற்றா தன்னால் அணங்கு கொள்ளும்
அவ்வியஞ் சேறலும் மன்னன் மைந்தன்
பிழைபெ ரிதெனா எரியில் மண்டு
பல்லவம் போலும் மெலிவு தீத்தடவ
அந்தப் பாடுதான் அறியப் படவே
பாவம் அழியும் பெருவழிக் கான
காரியம் என்று பலவிதங் கூறும்
கிளைசீறிப் பசுவே போலத் தானும்
மைந்தனைத் தேரில் ஊர்வன் என்று
புள்விலன் காதி துன்பப் படவே
கன்றிழந்து பார்மீது கண்களிற் பாவைபோய்
அழுகின்ற பசுவுடன் தானும் அணிவீதிக்
கெதிரேபோய் வந்தித் தீரடி தொட்டெழு
வரஆதவன் தனைப்போலும் மேனியை அந்த
வன்ளையன் காதை மணிமார்பைக் கணியான
நீராடு கண்களைப் பால ரேகையைப்
பூசிய நெய்இளங் கோவின் முடியினை
குறியான வாடா முகந்தனைச் சானு
மானம் அளந்த மல்லலந் தோளை
இருதாளைக் கிடந்த திருவீதிக் கிட்டே
தேருருளைக் கிடவே வாய்ப்பல் சொரிந்திட
காது பாலம் விழிமண்டை வல்லுரம்
கூறுபட மாலைக் குடர்போய் வேறாய
நிலங்கொளச் சோரி சோர அரைத்து
மெய்யிரண் டாக ஊர்ந்தது வாகும்
மாபாத கந்தனைக் காணும் வானுளார்
நின்று வானூ டுலவியும் தாமும்
மகிழ்வாரைத் தமர்போல அன்புற்றே தாமாக
... அபயனே .....
--------------

13. வீரப்ப நாயக்கன் பேரில் வண்ணம்.

வீரப்பன் கொடையும் ஏனைய பண்புகளும்

தோதிம ததிதோ திமித திமிதோ
திமத திமிதோ திமித திமிதோ
கிட்டங் கிணதோ தாதிருத்திதோ - எனக்
கருதார் முடித்தலைத் தான்வைக்கும்
தாள்அ திர்க்கும் கோள்அ திர்க்கும்
குரமா தூளி மொய்த்திடவே
துடித்திடு வாளி ஒப்பென
மிக்கது மிக்கது வாடைச்
சங்கிராமச் சிங்காரத்தின் பரியர்
ஏறு மண்டலப் பிரகாசமானார்
சூரன் வெற்றி உதாரன்
உத்தம மான சற்குண
சீலன் மைக்கடல் சூழ்திக்கும்
பார முத்தும் சோதிக்கும்
புகழான் மோகனத் திருமாது
லட்சுமி ஞான லட்சுமி
வீர லட்சுமி மூவர்க்கும்
பூமிப்பொன் பாவைக்கும் பெருமாள்
சோப னக்கவி வாணருக்குத்
தானை சித்திரச் சாமரைத்
திரள்தூ வடம்பூ வாடை
முத்தும் பாலிக்கும் புகழான்
வீரத் தண்டுகைப் பிரதாப வேலினான்
பேரைச் செப்பிடு மேல்ம றப்படை
விடா தோடிக் காடேறி ஒளித்திட
மேக சஞ்சா ரத்தில் கால்வைக்கும்
பரிதேர் ஆடகத் திரைசீனன் கட்டிட
நீடு சற்பன பாஷை கற்றவர்
ஆடிப் பண்பாடிக் கொண்டாடிக் கும்பிடவே
வீரருக்கு அதிவீரன் முத்தமிழ் மாறன்இப்
புவிமேல் நடத்திய வீதித்
தென்கா சிக்குள் கதிரேசருக் குஞ்சரியாய்
மாநிலம் புரக்க அருள் கூரும்மால்
மேல்திசைக் கருநாட ருக்கும்
மலாட ருக்கும் விராட ருக்கும்
மிலாட ருக்கும் சேரற்கும் சோழற்கும்
நீள்க டற்புவி ஆளும் ஒட்டிய
ராச கர்ப்ப விபாட மத்தக
யானைக்குந் தானைக்குஞ் சேனைக்கும் பெருமாள்
வீராதிகளுக்கு வீரன் விக்கிரம தீரன்
விச்சுவ குமாரன் கிருட்டின வீரப்பன்
பாரக் கம்பீரத் திண்புயவேள்

மகளிர் வருணனை

வாழ்வு கொண்ட சோபன முடைய
மாதருக் கரசே கருப்பு வில்வேள்
தரித்தசிகா மணிக்கொரு மாணிக்கம் போலும்
சிங்காரப் பெண்கொடியே மொழிக்குயிலே அனப்பெடையே
எனக்குள தாபத்து வியாமோகிக் கும்நாமச்
சம்போகச் செந்திருவே வானவர்க்கமு தேதுளைக்க
ஒண்ணாத நித்திலமே அழைத்தெனை வாழ்விக்கும்
தோகைச் செஞ்சா யற்பைங் கிளியே
மாணிக்க நவராத்ன மான ரூபமே
வடுப்பிளவோ வரிக்கயலோ
மடப்பிணையோ விழிக்கடைகள்
வாளுக்கும் காளிக்கும் சேலுக்குஞ் சரியோதேன்
வருக்கைகளோ சர்க்கரையோ
மடக்கிளிபோ லுரைப்பது
தேனுக்கும் பாலுக்கும் சீனிக்குஞ் சரியோ
மாதுளைக் கனியோ முருக்கிதழோ நின்கனிவாய்
மணித்துடை வாழைத் தண்டோ சிற்பஞ்சேர்
நற்பங் கயமோ நின்தாள் இணைகள்
இருப்பிடம் நீல வானமோ ஆதவற்கு
அழகான பொற்கம லாலயப் பதியோ
முகப்பிர பையால் ஆதித்தன் போல்வாய்
உந்தி வட்டம் காமச்செஞ் சுழியோ
நெட்டிருளோ மழைப்புயலோ
மயிற்பெ டையோ மலர்க்குழல் பாளைச்
செந்தேன் வைக்கும் பூகத்தண் டலையோ
ஆனசெப் பிணையோ பருவதமோ
மணிக்குடமோ முலைக்குவடே

தலைவன் வேண்டுகோள்

வனக்கொம்போ நற்பல தோற்றும் பங்கயமோ
நீர்கடந் திளைத் தவிடாய் தீரவே ஆல
வட்டம் வீசவோ நெற்றிவேர் துடைத்திடவோ
அடப்பம் தாங்கிப் பின்சே வித்தே
அன்பாகக் கும்பிடவோ மலர்ப்பனிநீர் தெளித்திடவோ
எனக்கொரு வாய்மை செப்பிடில்
வாய்முத்தம் சேரச் சிந்தாமல் சிந்திடுமோ
ஆனைக்கட் டியநாணே வாத்தடு மாறு
சிற்றிடை போல இணைத்தேன் தாவித்
தம்பாகம் சேர அன்பாகக் கொண்டணைவீர்
இதுமங் கையர்க்கு நீதி காணுமே.
---------------

14. சீரங்க நாதர் வண்ணம்.

பிரிவுத் துயரால் வருந்தும் தலைவி கூற்று

தாதவிழ் சுரும்பின் நாணான
சிலை கொண்ட வேள்
சரயகம் வளைந்ததே ராமா ராமா
வாகனமும் வெந்து நீறாக
உலகெங்கும் வேறாக
மதன் வெந்ததோ ராமா ராமா
தாமரை அரும்பு நேரான
முலை வெம்புதே
ஆருயிர் வெதும்புதே ராமா ராமா
வன்னியாம் எனவே சாளர மருங்கிலே
ஓடிவரு தென்றலில் வாணுதல் பசந்ததே ராமா ராமா
பாதியிரவில் கடல் முழங்குதே
கோகிலம் இரங்குதே ராமா ராமா
தாலமிசையே சேவலுறை அன்றில்வாய்
ஓவுதிலை என்செய்வேன் ராமா ராமா
அன்னமா நடையார்
காதளவு கொண்டவடி வாகிய கருங்கணார்
வாய்மை தப்புதே ராமா ராமா
ஆயவர்இரு செங்கையாலே
செறித்ததால் மேகலை சரிந்ததோ ராமா ராமா
காவிமல ரம்புசேர் பாவிஇரு கண்கள்
நீராழியில் முந்துதே ராமா ராமா
புன்னைமா மலர்சூழ
தாரகைப் பந்திபோல் மாலிகை சரிந்ததே ராமா ராமா
பசுங்களபம் பொல்லா தார்வடமும் பொல்லா
ஆசை அறவும் பொல்லா ராமாாரமா
காதல்கரை கண்டிலேன் வேறுதுறை விண்டிலேன்
நீரணைவ தெந்தநாள் ராமா ராமா
என்னை நீ மருவாய்

இராமாவதாரச் சிறப்பு

கோநகர் வேந்தனாக மாதவம் முயன்றதால்
கோசலம் மகிழ்ந்தசீ ராமா ராமா
ஆழிவளை நஞ்சுபாய் வாளாவ தம்பிமார்
ஆக உகந்தசீ ராமா ராமா
கோசிகன் விரும்பவே
தாடகை வதஞ்செய்தே
வேள்வியால் நடந்தசீ ராமாராமா
நண்ணு பாலையிலே
காதலில் குடும்ப மாதரா மாறுசிலை
வஞ்சியாள் கோலமுற வந்தசீ ராமாராமா
சாபமும் வணங்கவே மாமனும் விரும்பவே
சானகி மகிழ்ந்தசீ ராமாராமா
பெண்ணைமா நதியின்வாய் மாதரெழில் கொண்டபேய்
மயலறத்தன் துண்டமே வாளியா லரிந்தசீ ராமா ராமா
மானுளம் மயங்கவே மானுருவு கொண்ட
மாரீசனையும் வென்றசீ ராமா ராமா
வாலியை முனிந்துபோய் வானரந் தங்களால்
வாரிகரை கண்டசீ ராமா ராமா
மன்றல்ரா வணனார் மாலைபுனை கின்றதோள்
மார்பொடு பிளந்துதார் வாகைபணிந்த சீ ராமா ராமா
---------------------

15. திருப்பெருந்துறையான் வண்ணம்.


சிவபெருமான் சிறப்பு

குருத்து வந்தரு வார்விடம்
அருத்து கந்தரனார்
புணர்ந்த பசுங்கொடி இடப்புறம் சரிகொளப்
பகுத்திடு பாதியினார்
விற்பொறி புணர்த்திடுவோர் சிறுமறித் தடங்கரனார்
உயிர்படைத் தடங்கலு முடைத்து டைந்தவை
புதுக்கி டுந்தொழி லாதியினார்
கதிகொடுத் திடுஞ்சிவனார்
அதள் உடுத்த சங்கரனார்
கடல்குடித்திடும் கதழ்எரித்திடும்
கதிர்பொடித் திலக்கிய சோதியினார்
சமரில் அடல்கால் சூல தாரி
கொதித்தி டுங்கதிர் வீசிய
மழுப்பெரும் படையார்
படுகொ லைச்சமன் பொருநிலைச் சினந்தலை
குலைத்து தைத்திடு சேவகனார்
கமழ்எருக் கொடுந்தலை சூடிய
கடுக்கையந் தொடையார்
மனத்தி ழைத்த அன்பொடும் வாழ்த்தி
அன்பர்கள் வழுத்து தொண்டர்கள்
அகத்தடக்கிய பாவகனார்
முளைகு ருத்த வெண்பிறை யொடழகு
உறுத்த செஞ்சடையார்
புகழ்கொண்ட பெரும்பணி விடைத்தி றம்புரி
குறிப்ப றிந்தவர் நாவகனார்
விழியதி ரேறு காமன்செருக் கறும்படி
யாவையும் முறுக்கும் அங்கணனார்
பொருதிரைத் தடங்கடல் இடத்துத் தங்கிய
திடத்தொ டுங்கொலை யேறு டையார்
கரைதொகுத் திடும்பல தேவையும்
வகுத்த கொங்கணனார்
தலைசுழித் தெழுங்கனல் விழித்த டங்கலும்
அழித்த ணிந்திடு நீறு டையார்
திடுக்கிடும்பட வாளரவம்
எடுத்த கங்கணனார்
ஒலிசிலைத் தெழுந்து அலைமலைத்து வெண்டிரை
திரைத்து மண்டுவெள் ளாறு டையார்
நீரைச் சலியா மலர்வே ணியினார்
சிரித்த ரும்புரம் நீறெழ
எரித்திடும் எரியார்
பலதிசைத் தலங்களும் அசைத்த லம்பிய
திருச்சி லம்பணி தாளுடையார்
சதுர்மறைப் பெரும்பரி யோடதிர்
நரிப்பெரும் படையார்
விடம்வீந் திறங்குனி சிலைத்தி றம்பெற
வளைத்தி டுந்திணி தோளு டையார்
நிறைபெ ருந்தடம் புடைசூழும்
சிவபுரத் தலம்பிரியார்
உயர்சி றப்படைந் தொருமலர்க் குருந்துறை
திருப்பெருந் துறைஆ ளுடைகா யகரடி
பாடி யாடிவரு களியரோம்

உமையவள் சிறப்பு

அருள்பெ ரும்பரி பூரணி உருத்திடும்
சிங்காரணி அறத்தி குங்கும நிறத்தி
சங்கரி அருள்பெ ருங்கிரு பாலினி
மாலினி வரைபெ றுங்கரு ணாகரி
திசை பெறுங் குணசாகரி
வாதிட் டந்தரி குரத்தி சுந்தரி
வணக்க ருங்கலை மதங்கனி யோகினி
அரிக்கு கந்த சகோதரி
அருந்துய ரந்தடு போதரி
திரிநய னத்தி கிஞ்சுக வனத்தி
பஞ்சமி அளித்த டங்கண் மயேசுவர
ஈசுவரி அபிராமி பூசை தனிலே

களியர்கள் நிலை

அடக்கமும் சிவபூசையும் படப்புறங்களும் ஆள்பவர்
தூக்கி சைந்திடு மதுக்கு டங்களை
அடுக்கி யுண்டு வாழறி யார்உரை
செபிக்கும் மந்திரமொடு தவிக்கும் அந்தணர்
ஆனவர் தியக்கமுஞ் சிலமயக்க மும்பல
பயக்கும் மதுரஊண் அறியார் இவரால்
பெரும்பிற வாசிகள் எனத்து றந்த
சன்னாசிகள் வற்றல் பன்றி யிறைச்சி
தின்றதில் வந்திடும் முனிவரர் அறியா
முதுகதி வீடு சேர்வது எளிதோ
உருப்பெருங் கருவாடுகள்
கொழுத்திடுங் சினையாடுகள்
ஒருத்தர் பங்கல உருத்தர் அந்தணர்
பெருத்த சங்கமா
----------------

16. சிதம்பரேசுவரர் வண்ணம்.


மழமுனிவன் செயல்

கயிலை மலையினில் இருடியர் தங்கிய
தாருக வனத்து மீதி லேயொரு
மழமுனி வன்நற் கதியடை யும்படி
போதுவாய் எனவே பிதாவை முன்னடி
தொழுது அஞ்சலி செய்ய அவனும்
சிவத்தா னத்துள் ஆருயிர்க் கோடி
யானது பெரிய சிதம்பரத் தலமென
சென்றதிலே சிவாகம பூசைநீ செய்ய
அறிவுதரும் சிவபர கதியுந் தருமே
போதுவாய் எனவே பிதாவை விடைசொல்லி
வந்துபல அடவி கடந்து பொன்னான
தாமரை வாவி மூழ்கி அயலே
கருணை புரிந்து எதிர்வட நீழல்
தங்கிய மூல நாயகர் பூசையே
செய்து குடதிசை யுங்குல விடுவகைக்
கண்டதி லேயுமோர் சிவபூசை யானபின்
மதுமலர் வண்டுகள் விடிவள வுண்டிடும்
யாமும் ஓரின் காணொ ணாவிழி

இறைவன் அருள்

பனியில் மரமேறு மிடைகால் நழுவும்
கவடுரிய கொம்புக ளாமேல்நன் றாமென
யோக வானவர் விடைமிசை வந்து
பலவித விழிகளும் வெம்புலி போலவே
வளர்கால்கை யாம்படி அருளி மறைந்தபின்
அதனை யறிந்த தாதை யானவர்
ஓதுவார் என்னொரு முதல்வ பெண்வினை

மழமுனி திருமணம்

வதுவை விரும்புக எனவே பிதாவுரை
மாறொணா மலுமவள் உந்திய கணவர்பின்
வந்தருள் மாதரை விவாகஞ் செய்து

வரமுனி அவதாரம்

வரமுனி என்பவர் ஒருவர் பிறந்தவர்
பாலில் எய்தித் தாக மேகொடுத்து
அரிய தூயவர் எவரும் மகிழ்ந்திட
ஈசர் பாலினி ஏகு நீயென
இறைவர் காங்கொடு தடவிக் கடலில்
உவப்புறு பாலை ஏவிய நாளில்
யோகமோ டவரும் இருந்தபின் இருடி
பதந்தம தாகவே மைந்தனை ஏவி
வேறொரு வடிவுகொடு தாமும் வரவே

அபிசார வேள்வி

மயிலெனும் மங்கையர் இடுபலி சித்திட
ஆடை போய்அபி மான மேகெட
இருடிகள் காண்டலும் இவர்மருள் கொண்ட
கபாலி படஎன வேள்வியே செய்து
வரவிடு வெம்புலி யதனை அடர்ந்து
பசாசுட னேயுடன் ஆடி வருமான்
அதனை அணைத்தே முயலகன் தன்னை
நெளிந்திடு மாறு விற ழற்றொழில்
ஆறிடும் மந்திரம் சிலம்பிடை போடவே
சோக மாதவர் அவண்அ கண்டமும்
அதிர நடஞ்செய்து மாத ரார்இவர்
வேஷம் மாறிய வடிவை உணர்ந்து
புலிமுனியும் இருந்திட மாயனார்தலை நாளிலே
உன்பாதம் நினைந்தவர் துயில்வ தொழிந்திட
மாது நாகமும் ஈது தீதென
வசனம் மொழிந்தபின் விரும்பிட நேசமாய்

முனிவர் தவம்

இனிநீ யும்ஏகு எனவே மொழிந்திட
அணிகயி லையின்மீ தில்அவர் போய்வாழ்வு
அதிகஞ் செய்து தவசு புரிந்திட
சாதன் வேத ரூப மாயின
அருமை யறிந்துதன் உருவது கொள்ள
நாமும் ஆட வியாழபூ சந்தனில்
வருக என்றலும் மவுலி ஒடுங்கு
நீயும் நரக துவாரமேல் நமது
உழுவை தவஞ்செய்த வனமது தங்கிட
ஏகு வாயென ஏகி யேஒரு
புலியை இறைஞ்சலும் இவரும் இறைஞ்சிட
இதுவெ லாமவர் கூடவே கொல்லி
இருவரும் அன்பது ஒருவ ரெனும்படி
வாழும் நானையி லேதிரி ஆயிரம்
மறையவர் அங்கொரு பணிதங் கோவாம்
நாரதர் விண்ணுளோர் வழங்கிய சங்கினில்
மகரகும்ப காமுத வேதியர்க்கு அவிசிட
உமையவள் கும்பிடச் சுவைபெறு தும்புரு
கூட நாரதர் பாடி ஆடலும்

சிவனார் நடனம்

உலகபதி னாலும் உய்யவே வெயில்விடும்
கனமகர வடிவ நெடுங்குழை யாட
மான்மழு வாட அறுகி னோடும்
சிறுபி றையினோ டுஞ்சடை யாட
மாசுணம் ஆட ஆயிரம் மகுட
பருமணி சஞ்சலியா ஒருமுன் சொன்ன
நாளி லேநடம் ஆடி யேஒரு
கவுரியோ டும்பரி பவம்தீ ரப்புரிந்து
இதுஎது காரணம் வேணும் ஓதென
வானவர் தாங்களும் நடமிட லும்நின்
பூசை யாயின நீகொள் வாயென
இருவருஞ் சொல்ல மூசிய கணங்களும்
விரோத மாயவர் கால காலமும்
மிதமுடன் நதியும், அருளிய பின்னர்
கேடிலவர் எல்லாம் சாசுவத மேனியாகத்
துறந்தவர் தவசு புரிந்தவண் ஏக

அரச குமரன் வருகை

நாளறி யாமல் வேடுவன் வழிவிட
வந்துபுல முனிவனும் அன்புற நீயும்
ராச குமரன் ஆமென வினவி
அமர்கால மதிலே வானே விளம்பிட
வந்தனை அருங்கண நாத ரேகொடு
வாரும்நீ ரோடை வனச இலஞ்சியில்
முழுகி எழுந்திட மேனி ஆடகம்
ஆவ வேஇனி இரணியப் பெயரினன்
அகமகிழ்ந்து சுவாமி ஆடுதல் காணுமே
நீயும் வலனது கண்டிடச் சிரமது
கொண்டிருவர் மேவிய ஏவ லேசெய்து
உழுவை மகிழ்ந்திட நிதம்பயில் வாயென
மாய னார்பெறும் இச்சிவ லிங்கமும்
அருளிமுன் வந்தவர் போயி னாரினி
வரமுனிவோ ரெனவிவர் இதமுஞ் சொல்லி
உவகை புரிந்திடு நாளிலே கோட
தேசன் மாளவும் மழகளிறு போந்தது

அரச குமான் முடிசூட்டும் திருப்பணியும்

முடிபுனை கின்றது போல வேதனை
ஆக மீளவும் விரைய நடந்து
தன்நக ரிபுகும் தபிஷேக மாமுடி
மீளவும் பெறும் அளவில் வேள்வியில் முன்னாள்
அவிரொளி மண்டபம் மதுமலர் முண்டக
வேத னாரொடு போன வேதியர்
அனைவரையும் பகல்கண்டு விரதங் கொடுபோந்து
நாள்ஒரு போதில் ஆடவர் அவர்களில்
ஒன்றென அறியாச் சங்கரர் பேர்சொல
நம்பால் பூபனும் அறவும் நெகிழ்ந்தபின்
அமரர்கள் பண்டிசைந்த ஆறுபோம் இகலினொடே
இனஉதய மென்னப் பூதலத் தமனிய
சபையது கண்டே உரைகா ணொணாத
வேதக்கடை சித்திரு மந்திரம் எழுதிய
அம்பலம் அன்னது ஆகவே செய்து
கோடிக் கோயிலும் விரதகுண் டங்களும்
விரதி மடங்களும் ஏழு மாநில
மாட கூடமும் இருடிய ருந்தவ
வனச அரும்புபயில் ஆசிரமமும் வீசு
கோபுர அகரமும் அந்தணர் சிகரமும்
மந்திர வேள்வியும் யாக சாலையும்.

அடியவர் செயல்

மடமும்மெய் யடியர் அரஹர என்பர்
முதிர விளம்புவர் பாடி ஆடுவர்
வேதம் ஓதுவர் சிவனை வணங்குவர்
பலிதரு மந்திர மாலை ஓதுவர்
நீறு பூசுவர் இத்தொழில் அன்றியும்
அதிர நடந்திட மாதம் எற
விழாஅ அளவு வரதனும் அன்புடன்
அடிமை புரிந்தனர் யாவ ராயினும்
மேவி னோர்பெறும் மலருல கென்பதும்
மலரியும் கயிலையு மாய்ச்சிவ லோகமானது
இவைகளும் அன்றியும் மறைகள் அறிந்த
பலகோடி ஆகமம் ஓலமே இடுமளவில்
சிதம்பர பாம் பால லோசன
சூலபாணி பரகசாதன நாக பூஷண
பேயொடு ஆடிய பூத நாதனார்
அன்னை அம்மை ஆன அருளே.
--------------------

17. ரகுநாத நாயக்கன் வண்ணம்.

சிவபெருமான் சிறப்பு

வங்கா ரக்கிரி சிங் ரத்தொரு
சங்கா ரச்சிலை வடிவாய்ஓர் கைக்குள்
வளைத்தொரு கைக்கணை முப்புரம் வெப்பெழ
விடுவார் மிசைச்செம் பாதிக்கொரு வெண்பாதிப்
பிறைசம் பாதித தொருமுடி சூடினர்
பத்தி ரத்தன் விசித்திரன் என்னப்
பத்திரர் அருச்சனை புரிதா ளினர்வளர்
காசிநகர்க் கதிகம் சேதுத் தலமெனும்
தலத்தின் கண்ணே நித்தலும் உறைவோர்
மேன்மைக்கண் மடக்கொடி மிக்க பருவதவர்த்
தனி தவக் கனிஉத் தமியுடன் வாழ்பவர்
ராம நாயகரை உற்ற தோஷம்
ஆயது முழுதுங் கெடவே அருளினோர்

இரகுநாதன் சிறப்பு

பேரணி கட்டழியப் பரிதட் டழியக்
கரிபட் டுருளச் சமர்பொரு தேபகை
கொண்டாரைத் தலைக்கொண்ட களத்தில் குதித்தாடிப்
பயிரவி பேயுணர்த்தத் தலத்தினி லான
பலியிட்டு ரணக்கொடி கட்டிய ரணகேசரி
மேக வார்குழல் வெற்றிவேள்
செம்பா கத்தொடு சொம்பாகக் குயில்
பண்பாடச் செய்வதொரு பால மயில
வட்ட மணிச்சிறை நடித்திடு கட்டளை
ரசக்களி பால்அளி கொண்டாடப் பலவின்
கோலச்சுளை பொன்போலப் பெய்வது ஒருபால்
பச்சை மடற்கமு குச்சி துளிக்கும்
வெண்முத்தம் உகுப்பது ஒருபால் வளர்செந்
தேன்வைத்த பசுங்காய் அருளொடு வைத்தெனத்
தேவைத்துரைத் தளவாய் தருசித்தசன் முத்தமிழ்
வித்துவ சனததை வளைத்தே அருள்செய்
இரகு நாயகன் மாநிலம் சுற்றும்

தலைவி நிலையும் கரண விசேடமும்

சங்கீ தக்கிளி வந்தாள்
சற்றே ஒல்கி நின்றாள்
உப்பரிகை யின்மேல் அவளை
ஒப்பனை யிட்டுஒரு கட்கடை
விட்டவள் மார்பில் எழுந்தே
குத்து மதம்பாய் வெற்பை
விரைந்தே தொட்டபின் உடனே
மேல்விழ வைத்ததும் வாய்ப்பிள கிற்சில
சொல்லுள் எச்சில் உகுத்ததும் அங்ஙனே
இதழ்தந் தாள்இப் படிஉண் டோபல்
படுகிறது என்றாள் செப்படி போலவே
மேல் முத்தம் அணிந்திடு தொடைக்குள் எடுத்து
கலைக்குள் எடுத்து முலைக்குள் அணைத்தொருகை
பளீரெனும் ஓசைபோலும் கனைத்து மண்டவே
சிச்சிலிப் புறமும் காடைக் குரலும்
பெடைக்குயில் மயிலோ டணிகுக்கில் இனத்தொடு
குக்குட மொத்துக்கா லெழவேமன துஞ்சோரக்
குழலுஞ் சோரத் துகிலும் சோரப்
பரவச மாய்உள் உருக்கி உருக்கி
மணித்தொடை ஒக்கவே மன்மத னாலொரு
சந்தோஷம் வந்தேறிச் சன்னதம் பேசப்
புளகித மாம்ஒலி கைத்தொடை பிச்சி
மருக்கமழ் கந்தம் வீசிட
மேடை மீதுலவு சப்பிர மஞ்சமே
இங்கே சிற்றிடை அங்கோ சிற்றிடை
எங்கே பற்றிடம் ஏறிப் பதறித்
துவளத் துவளக் கதறிப் பரிபுரம்
ஓலிட முன்போ கித்தது பின்போகித்தது
சம்போ கித்தது ஒருவரது தழுவிப்
புணரப் புணரப் புதுநல மாகி
இரண்டா கத்துயிர் ஒன்று கித்தயவு
ஒன்றா கித்தரு முறையாக உற்ற
அவசக் களைநிக்திரை மெத்தையில் வரவே
ஆசை மீறிய முயக்கில் அன்றில்போல்
தம்பாகத் தொழில் சுவையாகப் பொருமிரு
பார்வை மயக்கி மயக்கி மருட்டி
மருட்டி மனத்தய வைத்திறை கொளவே
அமுதம் போலக் கருதிக் கொண்டு
உள்ளத் தடத்தெழு சலராசி அனைத்தும்
ஒருவர்க் கொருவர் அதிகப் படவே
இச்சை கொள்ளச் செய்த
சுகலீ மைக்கெதிர் உலகில் உண்டோ
----------------------

18. சொக்கநாத சுவாமி வண்ணம்.

பார்வதி சிறப்பு

கருதும் அடியவர் துயரது கெடவரு
கமலை பரிபுர சரணி திரிபுரை
கச்சு லாமுலை பச்சை நாரணி
கற்ற நாவலர் சொற்ற பூரணி
உரக கணபணம் நெளிய மணிமுடி
உதவு மயில்மிசை மருவு குகனையும்
ஒற்றை யானை மருப்பி னானையும்
உற்ற லாழ்வொடு பெற்ற நாயகி
கவுரி திரிபுரை கன்னி உமையவள்
கமல மலர்மகள் பரவு மலைமகள்
கற்ப காடவி உற்ற வானவர்
கருத்துள் மேவுறு கயற்கண் நாயகி
விமல பதமலாக் கமலம் நினைகுவாம்

சிவபெருமான் சிறப்பு

கரட மதகரி உரியை உடையினர்
கயிலை மலைநிகர் தவள விடையினர்
கற்றை வார்சடை அத்த ரானவர்
கப்பு வேல்செறி முத்தர் பூரணர்
மருவும் இரசத சபையுள் மதிகுல
வழுதி மகிழ்தர நடனம் இடுபவர்
மட்டு லாவுறு கடுக்கை தாதகி
மத்தம் ஆறிவை வைத்த வேணியர்
கனக வரையினர் பனக அரையினர்
கமமும் அறுகினர் கதழும் மறியினர்
கற்பம் நீடறு பத்து நாலெனும்
கலைக்கு நாயகச் சொக்க நாயகர்
கூடல் நகரினின் மேவு களியரேம்.

களியருக்குத் தெரிவித்தவை

அரிவை திரிபுரை வயிரி பயிரவி
அமலை சயமகள் குமரி பகவதி
அத்திர லோசனி துர்க்கை யாமளை
பத்திர காளியை மிக்க பூசைசெய்
மனையை மெழுகிடு; கதலி தனைநடு;
மத்த யானை முகத்தர் பரவவை;
இவற்றை யேமுன் நிரப்ப வேண்டும்நல்
அரிசி நல்லவல் இலையி லேயிடு;
திரள முதுபடை; கறிய முதுபடை:
ஆகும் அப்பமொடு நூறு மிக்கவே
படைஅப்ப னேஇவை துய்க்க வேணுமென
மாமுனி வார்கள் சேர வருமுனே
அயிரை பொடி, சிறு பயிரை பொடி
மூரல் அவியிலிடு, புளியைச் செறியவிடு
மிளகு அப்பமேயிடு, மூளச் சூடுவை,
எரிப்பி னோடு புளிப்பும் ஊறவை
கறிகள் பொரியல்கள் சடுதி யில்சமை
மயூரம்கழுகு தலையவி; குருதி தனைவறு
கயக்கி டாயையறுத் தூறு கலத்திலே
எரியிட்டு வேகவை; அமுதை இனிவடி
புதிய முனைஇடி அதனைஒருபடி மதுவதெனவடி
அத்தை நீவெகு சுத்த மாகவை
நாலு குடத்தில்விடு சாடிதனில் மீளவடி
குருவி பொரி; கயல் கழுவிஅரி
முயல் குறுகஅரி பொரிஅரிசி மிளகிடு
கொக்கு நாலு விதத்தி லேபொரி
குட்டி ஏழு துவட்டியே படை
மகிமை யுளஎலி அதனை உரிபொரி
பயறு பொரி கெளிறு உளுவைபொரி
அவைமட்டு மோசில முட்டை காடை
மணக்க வேநறு நெய்க்கு ளேபொரி
குறவை அவி,புளி மிளகு மிடு,சிறு
கொதிய விடுமது பிறகு கிளறிடு,
கொழுப்பில் லாத உவட்டு மீனை
எடுத்து வீசிக் குளத்திலே எறி
சரளை மீனொடு கூளி பொரியடா
குடுவை தனில் மதுவை ஒருவர் நுகருவர்
திமில குமிலமும் இடுவர் பின்பு
குதிப்பர் ஓடி இளைப்பர், வீழ்வர்.
குருக்கள் மார்கள் செவிட்டி லேயடி
உருசி உள்ளகறி பதனம் வெகுமணம்
உறியில் அமணர்கள் திருட வருவர்கள்
ஒப்பி லாஒரு சட்டி மீனையும்
உயரவே உறி வைத்து மூடிவை
குடுவை தளைஉடை சடையை யேஇழு
சிலர் குழலைஇழு சிலர் புடவைஉரி
வெகுகொட்ட காரர்கள் அற்பர் வீணர்
கொழுப்பர் கூடி மிகுந்த வாடர்கள்
தாதர்கள் யாரும் வாராமல் அடியடா
இருடி மகனொரு திருடன் அவனினும்
இணைய பயல் வலுத்திருடன் மதுவெனில்
எச்சில் வாருவர் சுற்றும் ஓடுவர்
கரகா ணியவர் புத்த ரானவர்
நறிய கறிகளும் அமுதும் ஒருகுடம்
நறவும் இருளறை அதனில் மூடிவை
நெய்த்த கோழி அவித்த சாறு
நமக்கு வேணும் இறுத்து மூடிவை
இடறி வீழினும் மதுவில் வீழ்வர்கள்
எவரை விலக்குவது, இவர்கள் மடையர்கள்
எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும்
எனக்கை வீசி அடிப்பர் வேதியர்
சோழியர் பொல்லாதவர் சீறுவர் என்றறி
இகலும் மறையவர் இருவர் குடுமியும்
இறுக முடிஒரு தடியை எடுபடை
இயக்கு வார்எதிர் திட்டுவர் கைநெறிப்பர்
மேலை மடைச்சன் னாசிகள் தம்மைக்
கருக வறு; பொடி திமிரிக் கிளரிடு
கடுக அதையிடு புடமுமிடு சிவ
கற்ப மாவது துய்த்திடா உடல்
அற்பமாய் விடும் அய்யனே
எளிய தலஇது களியர் மகிமையை
எவர்கள் அறிவர் கடவுள் மயம் இதென்.
------------------------

19. வராககிரிச் சின்னையன் வண்ணம்.

முருகப் பெருமான் சிறப்பு

அகளத்தி சகளத்தி கவசத்தி சமையத்தி
வல்லபி ஆயி. சதாநந்தி மாயி
கலாதந்தரி மாலினி மாதங்கி சூலிகபாலி
மகனைப் பன்னிருகைச் சண்முகனைச் சரவணத்துள்
மணியைப் பணிவதற்கு வைப்பான தேவை
வானவர் மேல் வந்த தானவர் போர்குறுக
மாயவடி வாய்நின்ற சூரனும் மாள
அயிலைப் புறமெடுத்துப் பாலை தனிநடத்தி
அமரர்க்கு உயிரளித்த கர்த்தாவை ஓதும்
ஆரண சாரங்கள் ஆகம சாரங்கள்
பூரணமா நின்ற காரண வேளை
விசால சிவகிரி யானைப் பரவுவார்

வீரசின்னையன் சிறப்பு

அரசர்க்கு நிகரோத்த துரைமக்கள் புடைசுற்ற
விசையக் கொடிபிடிக்கும் போதிலானை மீதேறி
எதிரிட்ட வரைவெட்டி முதுகிட்ட வரைவிட்ட
சண்டமா ருதமாய் மிண்டர்படை ஓட
முரிபட்டு அடைபட்டு மதிலொக்க இடிபட்டுத்
திசையுலவு விரோதியரைக் கருதிப் பொருதமால்
மகதத்தார் நிரையிட்ட நவரத்ன மொடுமக்காத்
துளுவர் திரையிட்ட ரத்னாபி ஷேகமாகக்
கலிங்கர் தெலிங்கர் வார்க்கும்சா மரைகோடி
கவடத்தார் வரவிட்ட கனரொக்க மொடுகொச்சி
குடகத்தி னொடுபட்ட தட்சிண தேசம்
ஈழம் மலாடம் கன்னடம் கல்யாணம்
மகுடமன்னர் எல்லாரும் வந்துதாள் தொழுதிடவே
மகுடத்தொடு நெருக்கிய மகுடத் திரளுதிரும்
ரத்னமணி குப்பையில் ஒதுக்கும்பொற் கூடமேல்
வாரா தவரார் கும்பிடா தவரார்
பொன்கொடா தவரார் என்றுமா கதர்கூறத்
தனியுலகு ஆளும் புகழ்கொள் வோன்துரக்கச்
சிலர்துறக்கக் கரிதுரக்கச் சக்கிர மனுவான
மன்னும் நிதிய வித்தியா விநோதன்
வாதுசொல் பிரசண்ட கோவியல் மருவா
மிண்டன் மாரில் மேல்வந்த பாளையக்
காரன் மிகப்பணிந்து சமூகத்தில் மதுரகம்
அளித்த நிரைக்குள் விலையிட்டு நிலையிட்ட
சரச குணலோலன் வாழை, பலாமஞ்சள்
பூகத்தொடு தாழை நறவுண்ட சோலையில்
மழலைக் கிளிபடுக்கும் பழனிக் கதிபன்மிக்க
தனலட்சுமி மிகுந்த முத்தார மார்பன்
வராகக் கிரியென்னும் மேருக் கிரியின்வாய்
முகம்விட் டிதழ்விரித்து முல்லைக் கொடிபரப்பி
முகிலுடன் குடியிருக்கும் உத்தியான மீதில்

தலைவியின் சிறப்பும் கரண வகையும்

வனமோ கினியோ இன்ப சாகரமோ
அரம்பை தோழமையே என்றுமா மயல்கூர
அழகுக் கழகெனத்தெள் ளமுதுக் கமுதெனப்
பொற்பாவை பொல்லா இடமாகும் பொன்மேடை
மேல்வருவள் ராச தயவாய் நின்றே
உலவுவள் மீள்வள் முறுவற் குறிவிளைப்பள்
புருவச் சிலைவளைப்பள் இறுகத் தளைதொடுப்பள்
முக்கா டிடாமல் மூடுவள் ஓர்செங்கை
தாவென எந்நெஞ்சம் முரசம்விட் டதிரவே
முறை வெற்றிலை மடித்தசுருள் கற்புரம் மணக்க
உடல் நிறையப் புளகு ஒதுக்கி உற்சாகமா
நானல்ல வோகஞ்சம் தீயல்ல வோவண்டு
தேனுண்ண வாவென்பள் வாயிதழி னூறல்
பருகப் பருக இச்சை பெருகப்
பெருக விச்சை சிறுகச் சிறுக
உற்ற பட்டாடை சோர்ந்து துவள்வள்
வேதனை பாரென்பள் சோதனை பாரென்பள்
மீசுரம் ஆரென்பள் சூதள வானமுலை
வெற்பில் விரல் வைத்து நெருடக் குமிழ்துடிப்பள்
இருபேர்க் கைவிரல் நெரிப்பள் முத்தாடஎன்
ஆவியும் நீரென்பள் ஆகமும் நீரென்பள்
பாவிசரீரம் சிலீரிடும் உரோமம் சிலிர்க்கும்
மன்மத பீடம் அதனை அணையவே
தொடை கொடுப்பள் முலையில் கதிர்செலுத்தித்
தழுவுவமோ என்பள் காமவிடாய் என்ன
லாகிரியோடு ஓடிக் கரணத் தொழிலடுப்பள்
அதரத் தொடுசுவை கொண்ட அளவில்
கழுகு சகோரம் காடைபுறா அன்றில்
முதலா யுள்ள ஒலிகள் ஒருபுறம்
குமிழி குமிழ்க்கும் ஒருபுறம் அகலும்
உற்சாக மாகும் விநோதங்கள் வீணையில்
நாதங்கள் அயர முற்றும் விடாது
ஒலிக்கும் காம வீணைத் தொழிலினாள்
கனக சப்பிர மஞ்சம் மிக்க
அணையில் பெருக்காறு ஒப்பெனவே போக
வாசனை சென்று யோசனை அளக்கவே
உவப்பள் உவரித்தொழில் முடிப்பள் ஒப்பான
போது போதும் ஐயா என்பள்
நானும் விடேன்வஞ்சி தானும் விடேனென்று
கூடிய லீலையில் ஒருவர்க்கொருவர் மிச்சம்
ஒருவர்க் கொருவர் பட்சம்
ஒருவர்க் கொருவர் உச்சம்
ஒப்பாளதே சையோகமும் மாமந்தர போகமும்
இந்த வாணுதளாள் தந்தபோக சல்லாப
உல்லாசம் மறவேன் எப்போதுமே,
------------------------

20. வீரராகவ முதலியார் வண்ணம்.

இராகவன் சிறப்பு

ஆதி உருத்திரனார் கைலாச வெற்பை
முன்னாள் அடியோ டெடுத்த அசலபுயன்
வீர விக்ரம ராவணே சுவரன்
வாரணம் எட்டுடன் பொரமருப் பொடிய
மணிநீல வச்சிரம் மேலே அழுத்திய
மார்பு தங்கிய சோரி ஆறெழ
ஆதவனுக் கிணையாய் அபிஷேகம் வைத்த
மகாமகு டாடவித் திரள்தூளி படவே
சுரேசர் அத்தனை பேரும் பேறுற
வாளி தொட்ட சாப நெடுமால்
ஆழி யுடைத்தது போல மழைகூர
நெட்டிருள் வாய்முளை வாரி வித்தகனார்
தமக்கமுது படைத்த மெய்ஞான பூஷணன்
வானதி பெற்ற செவ்வேள் குகன்
நேரிவெற் புடையோன் மதன்போல் நித்த
கல்யாணன் உத்தமன் புத்தி விசாலன்
ஆனா ஆசுகவிப் புலவோர் கலிதீர
நித்த மாமணி ஆழிசட் டைகபாய்
சரப்பள்ளி ஆடை பொற்குடை வாசி
பெரியதனம் தாருவென வீசு கொடையான்
நாதன் அளித்திடும் உதாரன் தேசினன்
கைக்கிளை பாடிக் கட்டளை யாகவே
அளிபாடி உருக்க விள்ளு தாமரை
வாரி உவட்டெறி தேன்வயல் பாய
மடைத்தலை மீது தத்திக் குதித்திடு
வாளை தாவிடன் ஆகுங் குவளைக்
குளமேல் முதுசூல் வெடித்திட நவமா
மணிக்கதிர் வீசும் முத்தம் நிலாவெனப்
பகர்நில வாய்மணி வாவி சுற்றும்
பாலியைந்த யாணர் நாலுகவிப் பெருமாள்
நவதா ரணப்பெருமான் எனவே திசைக்கிசை
போய டைந்திடு காவியப் புலவர்கள்
பாடிய மாவை நகரப் பெருமாள்
மதுசூதனப் பெருமாள் மனுநீதியிற் கெழுமு
பெருவாழ்வு பெற்றிடு பூமி பாலகன்
நாகரிகப் பெருமாள் நரவா கனப்பெருமாள்
நயினா ரளித்த குமாரன் நற்குணசீலன்
முத்தமிழ் வீர ராகவன்ஆள் வரைமேல்.

மகட் போக்கிய செவிலித்தாய் புலம்பியது

வேதன் விதித்ததுவோ தலைமேல் எழுத்திதுவோ
வினையேன் ஒருத்திதன் மாது கற்பூர
தூளி மெத்தை பெறாத சீறடி
பாலை தனிற்செலுமோ பாலே கொதித்தெழுமே
பாலே கொதித்தொரு தாளெடுத்து ஒருதாளில்
வைத்திடு மேமகள் திருமேனி வெயிற்படுமே
தழல்வேடை உற்றிடுமே வெயில்மேனி படும்போது
சிற்றிடைபோல் இளைத்திடுமே
விடாய்கொடு பாகிதழ்ச் செவ்வாய் கருகுமே
வேனல் பறப்பதை நீரெனவே திகைத்திடுமே
அடுவேனில் வெப்பம் இலாதிருக்க வும்நிழல்
சற்றிலையே திருமலர்ச் சோலைகளும் சுற்றிலையே
சுனையாட வெற்பிலையே சுனையாடி விட்டெதிர்
கூடு தற்கொரு தோடுமற் றிலையே
நிலாமணிமேடை முகப்பிலையே விளையாட முத்திலையே
விளையாடி விட்டமுதே பொசிக்கவும்வேறு திக்கிலையே
என்மயில் தாகமுற்ற நேரம் அங்ஙனே
ஓதி முடிப்பவரார் மதுமாலை சுற்றுவரார்
அமுதூறல் பச்சிள நீர்கொடுத் தினமான
சர்க்கரையோ டளவிய பானம் அளிப்பவரரர்
பனிநீர் தெளிப்பவரார் பன்னீர் தெளித்த
சவாது மொய்த்த படீரம் அப்புவாரார்
உலாவிய ஊசலில் வைப்பவரார் இருதாள்
பிடிப்பவரார் இருதாள் பிடித்தித மாக
நித்திரைதான் வருத்துவ ராரென் மாதினை
தான்வ ளர்த்த பூவை யுடனே
ஓதிமம் இப்படித் தனியே கிடக்குமதோ
ஒருநாளும் விட்டகலாச் சொற்கிளி
ஓலமிட் டழுதே ; தயாவுள தாயை
நினைத்தனளோ தமரொ டுரைத்தனளோ இவள்தான்
நினைந்தறி யாத புத்தியிதார் சமைத்தனரோ
முன்னாளினில் ஊழி விதிப்படி யோஒரு
மாதருக் கியல்போ அயலான் ஒருத்தன்
உபாய மிட்டொடு பேதைகைக் கொடுபோன
பாதகம் ஏதெனச் சொல்லுவார் பிறரே,
------------------

21. தஞ்சை நாயகன் பிள்ளை வண்ணம்.

சிவபெருமான் சிறப்பு

அனகன் மேல்விழி நோக்கு நின்றவர்
பனக பூஷணர் கூத்து கந்தவர்
கங்கை தாதகி திங்கள் கூவிளை
கொன்றை வார்சடை யார் நெடுங்கட
கரியின் மீதுரி போர்த்த சங்கரர்
நடன மாட்டி தூக்கு நின்றவர்
துங்க மான்மழு அங்கை மீதினில்
விளங்கும் சூல கபால கங்கணர்
அரிசு ராதியர் போற்ற வுந்திரு
மணவை மாநகர் வீற்றி ருந்தவர்
நங்கை யோர்திரு மங்கை நாயகி
பங்க னார்சிவ ராம லிங்கரை
அம்பொனிரு பாத மலர்துதி செய்வோன்

தஞ்சை நாயகன் பெருமை

அரிய பாவலர் ஆர்க்கும் வெம்பசி
தணிய வேதரு வாயங் கிரங்கியும்
நண்பி னாலுத வுந்த யாநிதி
இந்திர தாருவு மாகி யுந்தினம்
இரவ லோர்கலி மாற்று கின்றவன்
உலகெ லாமினி தேற்று கின்றவன்
வந்தி யாவரு மெந்த நாளும்
வணங்க வேகொழு மீது கொண்டுயர்
அவனி மீதிசை நாட்டு தந்திரி
குவளை மாலிகை சூட்டு திண்புயன்
ஆன பொன்மொழி நெடும்ப தாகை
அன்று மேருவி லேறி வரைந்தவன்
ஐந்தரு வாம்நெறி வளரு வேளே.

கனக மால்வரை போலப் பொழிந்துநல்
அறிஞர் ஆருயிர் காக்க வந்தவன்
மண்டும் ஆழ்கடல் சுண்டி யேயிரு
சந்திர சூரியர் யாதி னுந்திகழ்
மதுர பாஷித வாக்கி ரண்டுரை
பகர்கு லாநெறி வாய்த்த வன்றிசை
எங்கு மேபுகழ் கங்கை மாநதி
வங்கிச மேருவும் ஆன வன்பொடு
கருத லார்ப்பணி மூர்க்கன் அங்கசன்
வடிவி னால்வெகு தீரகன் இன்சொல்
மொழிந்து நாளும் அடைந்த பேர்கள்
தளர்ந்தி டாவகை யேபுரிந் தருள்

கமலையின் வருணனை

கஞ்சமலை நாதன் மகிழ்இளைய மாலைக்
கமுகு வாழைக ளீட்ட மும்புது
மலர்கள் சூழ்பல தோட்ட முந்திசை
கொண்ட வீதியும் அண்ட கோளமும்
அனந்த சாளரக் கோபு ரங்களும்
மடமி னார்புன லாட்ட முந்தமிழ்
அறிஞர் மாதவர் கூட்ட முங்கன
பந்தி யாக மிகுந்த சாலையும்
மண்ட லாதிபர் வாச மும்பயில்,

கமலை வாழ்புமு காச்சி தந்தருள்
சுமுக னாகிய பாக்கிய சந்ததி
செஞ்சொல் மாமொழி விஞ்சு சீர்பெறு
தஞ்சை நாயகன் பூபன் அன்புள
கங்குல் தவழ்சோலை மணிவரை யின்மேல்
வனச மாது விண்ணாட் டரம்பையர்
வடிவு போல்ரதி போலத் துலங்கும்
மனங்கள் போலிரு கொங்கை யானை
குலுங்க வேயொயி லாய்ந டந்தொரு
சிகர மேடையில் வாய்ப்புடன் கமகமென
வாசனை காட்டு பஞ்சனை மஞ்சம்
மீதொரு வஞ்சி யாளெதிர் வந்துமே
கொலுவா யிருந்தனன் வலியவே மயல்பூட்டி
நெஞ்சமும் உருக வீணைகள் மீட்டியும்
சிலசிந்து ராகச் சுரங்கள் பாடியும்
மந்த காசமு மேபு ரிந்தனள்
அங்கம் நாமுமாய் விரகம் மிகுதியாய்,

மருவ வேதய வாய்ப்ப சுங்கிளி
மிசைகள் கோலவும் வார்த்தை கொஞ்சினள்
செஞ்சவ் வாது கதம்ப பாணிதம்
சந்த னாதி பன்னீர் கலந்துடல்
குளிர வேபரி வாய்த்தி மிர்ந்தனள்
இனிது சீவிய பாக்கு டன்சுருள்
மென்ற ஊறல் கரும்பு காணது
சிந்தி லோர்துளி கோடிப் பொன்பெறும்
மது வாயிதழ் மூட்டி அங்கொரு
சுரத லாகிரி ஏற்று கின்றனள்
செம்பொ னாடை களைந்த போது
சிணுங்கி யாதர வாயி ணங்கினள்;

வண்டினிய மாமலரில் உறைதல் போல
எனது காம விடாய்க்கி தம்பெறல்
பலித மாய்முடி மேல்க ரங்கொடு
வீண்ட தாடன மும்ப ளீரென
வண்டு காடைகள் சேவல் வண்பெடை
நொடிபு றாமயில் பெட்டைக் கழுகதும்
என்ன வேகுரல் ஆற்றிடும் பொழுதில்
எந்த லீலையும் அந்த வேளையில்
இந்த லீலை யொவ்வா தெனும்படி
யிணையில் லாத வெகுதோத் திரங்கள்
செய்த உரையாலிது வெற்றி யென்றனள்
தந்த ரேகை அழுந்த என்னுகிர்
கொங்கை பூட்டி யதேதெ ரிந்தனள்
இன்ப நலமீறி வருமள வதனிலே,

இறுகி ஏர்கொடி போற்று வண்டிடை
பதற வேயிரு தாட்சி லம்பும்
முழங்க வேயிரு செங்கை வால்வளை
யுங்க லீரென வேபு லம்பிட
இணைவி டாதினி யாச்சு என்றுபின்
உபரி லீலையி னாற்பு ணர்ந்துட
லுஞ்சி லீரென மிஞ்சி யேயமு
தங்கு பீரென வேயெ ழுந்துளம்
இளக மேனியும் வேர்ப்ப மென்பர்
வசமு மாயிரு வோர்க்கு மிங்குயிர்
ஒன்ற தாமென முந்து போகமும்
அன்றில் பேடை எனவே கலந்ததை
என்றும் மறவாது உருகும் மனமுமே.

கர சரோருகன் கங்காகு லோதயன்
கமக வாழ்புழு காச்சி மகிபதி
வாசு தாகரன் மால்தஞ்சை நாயகன்
மகிபன் வாழுவள நாட்டில் வஞ்சியார்
சரச மெத்தனையுல் லாச மெத்தனை
சாடை எத்தனை கூடிக் குலாவிய
விதங்கள் எத்தனை வேடிக்கை காணுமே.

அடுத்த பேர்க்கருள் மால்புழு காச்சிசொல்
அமுத போனகக் கமலை நராதிபன்
வடித்த செந்தமிழ் சேர்தஞ்சை நாயகன்
மகிபன் வாழும்வள நாட்டில் வஞ்சியார்
கொடுத்த மோகமு முல்லாசப் பார்வையும்
கொங்கை யானை குலுங்க நடந்ததும்
உடுத்த ஆடையும் கைவீச்சம் கண்டகண்
ஒருபொழுதும் உறங்காது என்பது காணுமே.

கொத்து லாவு குவலயந் தாரினான்
குருசி லான்புழு காச்சி பாலகன்
நற்று லாவு கமலை நராதிபன்
நளிய மால்தஞ்சை நாயகன் வெற்பனார்
முத்த மாடிக் கரதா டங்களே
முழங்கக் கும்பமுலை யானைக் கோடுகள்
தைத்து மார்பில் அழுந்த அவர்செய்த
சரசம் எப்படித் தானான் மறப்பதே.

கனகன் மேருவை நேர்கரு ணாகரன்
கமலை வாழ்புழு காச்சி சுதாகரன்
சகல கல்வி அறியும் தயாபரன்
தஞ்சை நாயகன் மால்வரைத் தையலார்
நகம் அழுந்த அணைத்து முத்தாடிய
நயத்திலே சல ராசிக்கண் டங்கனே
சுகமெனக்கு மட்டோ உனக்கில் லையோ
சொல்லடா என்ற சொல்மற வாததே.

மன்னுசீர் புழுகாச்சி தவத்தினால்
வந்த கஞ்சமலை நாதன் சோதரன்
நன்ன லார்பணி ஆரூர் நராதிபன்
நதிகுலன் தஞ்சை நாயகன் வெற்பனார்
சன்னை பேசிக் கண்காட்டி அழைத்ததும்
சரச லீலைகள் பாராட்டு வித்ததும்
இன்னம் இன்னம் நினைத்திடும் போதெல்லாம்
இயங்கி நெஞ்சம் மயங்குது காணுமே.

நதிகு லேசன் கமலை நராதிபன்
நம்பு சேர்புழு காச்சி சுதாகரன்
அதிக யோகம் பெறுதஞ்சை நாயகன்
அம்பொன் வெற்பில் அதிமோக வஞ்சியார்
புதிய சந்தனப் பூச்சுங் கைவீச்சும்மேல்
புனைமுத் தாரமும் வித்தார முகமுமாம்
மதியும் கண்டு மனக்கண் சன்னதம்
வந்து வந்து மயங்குது காணுமே.

பாலி லேதிசை பார்க்கும் புகழினான்
பண்பு சேர்புழு காச்சிதன் பாலகன்
தாரி லேசெங் குவளை தரித்தமால்
தஞ்சை நாயகன் தண்கம லாபுரி
ஊரி லேவண் டுறைமலர்க் காவிலே
ஒருத்தி தங்கி உலாவிய செவ்விள
நீரி லேகரு நீல விழியிலே
நித்தம் என்றன் நினைவோடி நின்றதே.

கவளக் கரியுரி போர்த்திடு நதியவர்
கனக மணவைக் கடவு ளடிபோற்று
செங்கை மாமுகில் கமலைப் பதிவளர்
புழுகாச்சி யன்பினால் வருமதி யூகி
குவளைத் தொடைநறு மலர் சூட்டுதிண் புயாசலன்
நிலவைப் பொருநகை மடவார்க் கனங்கன்
ஆகிய குணவன் ரத்தின மின்னெறி
வாய்த்த தஞ்சை நாயகன் மருவானால்;
ஏவலர் இப்படிக் கற்பித வார்த்தை
மீண்டும் பேசுவார், ஒருவர்க் கொருவரை
வினையினை மூட்டி எந்த நாள்தொறும்
இவனை இப்படி அரண்மனை யேற்றி
அம்ப லாதிகள் செய்ய லாகுமோ
அவளைப் பொறுபொறு எனநீ மருட்டி
அங்கை யால்முதல் அடிபட்ட துறமுறை
பார்க்க இரண்டு காதுமுன் னறுபட்டது
இனியென்ன ராச்சியங் களேசொல்லும் மடவிரே,

கங்கைகுல மீதிலிசை நாட்டுகின்ற வாரிதி
தென்கமலை மேவு புழு காச்சிதந்த மாநிதி
கஞ்சமலை நாதன்மகிழ் வாய்த்திடுஞ் சகோதரன் எனுமால்;
செங்குவளை மாலையணி சூட்டுகின்ற மார்பினன்
நம்பினவர் மாகலி மாற்றுகின்ற கார்முகில்
செஞ்சொல் மொழி நாவலர் போற்றுதஞ்சை நாயகன் மருவானால்;

தங்கியொடு நாழிகை வீட்டி லிங்கிராள்
முழுவம்பி யிவள்தோதகி நேற்று முந்தா நாள்வரை
சங்கையற வேயெனை வாய்க்கு வந்த தேசினள்
விடியலி லேபங்களம் ஈதேது இனிஉனை
நாக்கரிந்து போடுவேன் என்றுசில பேசினள்
சாட்சி யுண்டுகா ணிவள்பண் படுவாளோ
இவளைப் பார்த்திருந்த பேர்சொல்லும் மடலீரே

வேரூரும் ஆலுதவும் விழுதெனவே
உனது தந்தை மேன்மை யான
பேரூர்தான் விளங்கமிகு பெருங்கிளையும்
தழைக்க வந்த பேரன் நீகாண்
தேரூரும் சகராசர் செங்கோலை
உழுக்கோலின் செயலால் காக்கும்
ஆரூர்வாழ் புழுகாச்சி அளித்த தஞ்சை
நாயகமே அனங்க வேளே

மணங்களிலே பல சுகந்த வாசமினிதே
தென்றறியும் ஆறு போலக்
குணங்களிலே அவரவர்தம்: குலமறியும்
இனிய கங்கா குலத்தோன் நீகாண்
இணங்கியநல் லறிவாளர்க் கிரங்குபுழு
காச்சிதரும் இனிய மாலே
அணங்குபயில் கமலையில்வாழ் அரியதஞ்சை
நாயகமே அணங்க வேளே.

தேனார் மொழியும் உபசார வாக்கும் திகழறிவும்
ஆனார் ஒருவர் உனக்கிணை யோஅருள் சேர்மணலை
மானா பிராம னெனும் புழு காச்சி வரத்தில் வந்த
நானா கலைவல்ல சீலா உயர்தஞ்சை நாயகமே.

தீட்டுத் தமிழுக்கொரு தேனு வாகிநற் றென் தமிழ்பா
ராட்டுந் திகழ்புழு காச்சிமைந்த ரறிவா ளர்தம்பால்
கேட்டும் படித்தும் கொடுத்துமிப் பாரினில் கீர்த்திதனை
நாட்டுங் கமலைப் பதிமேவிய தஞ்சை நாயகமே.

வேண்டுதல்
அரவ பூஷணனே திரிபு ராந்தகனே
அங்கையில் உழைமழு வேந்தும் அண்ணலே
வளர்திரு மங்கை நாயகி யையணி
செறிபாகம் வைத்தவனே இரவவர்க் குயிரே
மணவை யப்பதி வாழீசனே ஞான
தேசிகனே இதம்பெறு ராமநாத நாயகனே
இயம்பும் விண்ணப் பம்ஒன் றுளதால்
திறமிகு புழுகன் உதவு கஞ்சமலை
சிறந்த தண்டாயுதன் முந்து சகமகிழ்
ஆறுமுக மதிபாலன் தியாக ராசன்
சகோதானை வரமிகு கங்காகுல
வசிகரனை மாரனைத் தஞ்சை நாயகனை
வயது நூறிருக்கச் செல்வமுந் தழைக்க
மனமது மகிழ்ந்தே இனிது வந்தருளே

தாழிசை

மந்த ராசலம் நிகர்த்த மால்கமலை
வந்த தூய புழுகாச்சி வேள்
மைந்த னாகி வளர்தஞ்சை நாயகம்
மகிபன் வெற்பில் அபாஞ்சி யார்
கந்த மாமலர் சிறந்த மெத்தையில்
இருத்தி வாயிதழ் அருத்தியே
கனதனக் குவடு வருடி என்புளிசைக்
கங்கு லென்று மிடராகவே
உந்தி மீதி லதரத்தி னாலெழுதி
விந்தை யாகுகர ணத்தினால்
உடல்வ ளைத்து மதனர் மனைக் குளொரு
விரலழுத்தி மலர் வருடியே
இந்தி ராணி பரிபந் தனங்களொடு
இடப லீலை யொடு கூடியே
இருவ ருக்குமனம் ஒருமையுற்ற சுக
லீலை என்று மற வாததே.

காசி சேது பரியந்த முந்துதிசெய்
கங்கை யங்குல வரோதயன்
கமலை வந்த புழுகாச்சி அதிபன்ஒரு
காவி யந்தொடையல் மார்பினான்
மாசி லாத புகழ்பெற்ற கஞ்சமலை
நாத பூபன்மகிழ் சோதரன்
மஞ்சு போலுதவு தஞ்சை நாயகன்
மகிபன் வந்துமரு வாதநாள்
வீசு தென்றலும் விசு சந்தரனும்
வேயும் அன்றிலும் அனங்கனும்
வேலை வெம்முரசு மாலை யம்பொழுது
வீணை யினம்குயி லினங்களும்
ஓசை மீறுமுயர் சேமணித் தொனியும்
நேசமாய் நிதம் வருத்தவே
உளமெலிந்து மகள் துயருறுந் தகைமை
ஒருவர் சற்றுமறி யார்களே.
வஞ்சி நாயகம் மருநிறை
வம்ச நாயகம் முந்து சிந்தையில்
மையல் நாயகம் ரதியிலும்
மிஞ்சு நாயகம் என்று பஞ்சணை
மேவி மித்தூரவு பேசிய
விரத நாயகம் சுரத நாயகம்
விந்தை நாயகம் மாமறைச்
செஞ்சொல் நாயகம் வாணி தண்டமிழ்
சிறந்த நற்கமலை நாயகம்
தீன ரட்டைபுரி புழுக பூபனருள்
செல்வ நாயக யோகனே
தஞ்சை நாயக ராசன் மெச்சவரு
சொக்க நாயகன் நிதம் புகழ்
தர்ம நீடுபுய ராம நாதன்மகிழ்
தஞ்சை நாயக மகிபனே.

ஆது லர்க்கும்வரு யாச கற்கும் அறி
வாள ருக்கும் நிதி உதவுகார்
ஆட்சி யாய்நதி குலத்தில் வந்தபுழு
காச்சி தந்த மனு நீதிமால்
மேதி னிக்குளிசை நீடு கஞ்சமலை
நாதனுக்கு இளைய விசையவேள்
விஞ்சு நீதிபெறு தஞ்சை நாயகன்
விளங்கு மால்வலேர மடந்தையார்
சாதனைத் தொழில்கள் போலவே மதன்
சம்பிரமத் தொழிலில் மிஞ்சியே
சாரம் கொடுத்தலர் மெத்தை மீதிலொடு
தத்தை போலமணி இதழையே
கோதி முத்தமிடு போதினில் சிரசில்
மீதி லங்ககர தாடனம்
குமுதமிட் டமுத நிலையெழுப்பியது
கோடிப் பொன்பெறும் என் ஆணையே,

மதுர முத்தமி ழறிந்து கற்றகலை
வாணருக்குதவு மணவையான்
மாற னெங்கள் புழுகாச்சி தந்தருள்
குமரன் இங்கித மனோகரன்
விதர ணத்திலொடு குறுமு னிக்குநிகர்
பதும லட்சுமி விலாசமால்
விஞ்சு நீதிபெறு தஞ்சை நாயக
விவேகன் மால்வரை மடந்தையார்
குதலை ஒத்தமொழி கலுழ இன்பமிகு
குரல்க ளெட்டும் அயராமலே
குமுகுமு என்பமிகு வாடைமென் புழுகு
கமகம என்ப மலர் மஞ்சமேல் .............
அதர சர்க்கரை அளித்துத் தழுவிய
அரிய இன்பமென் அகத்தி லூன்றுமே.
----------------

22. செண்டலங்காரர் வண்ணம்.

செண்டலங்காரன் சிறப்பு

சகத்ரட்சகன் என்ற கருணைக் கடலே
அநந்த சயனத்திடை விளங்கும் சக்ரபாணி
திண்டிறலால் நரசிங்கமாய் இயையும் படியே
வான்முட்டி நிமிரும் பெருந்தூணில் உதித்துடனே
முந்துமுர ணுற்ற இரணியன் தன்னுடைய
மணிநற் குடலைப் பிடுங்கி யேமிகு
ரத்த பான முடன் பசி யாறிய
செங்கண் மாதவன் செங்கனி வாயினள்
அம்பிகை சோதரன் அங்கசன் தாதை
சிகரக் கிரியினைக் கனத்த மழையில்
கவிகை போன்றுசுர பிக்கிடர் துறந்த
ஒருகைச் சகாயர் சிந்துர நேசர்
முகுந்தர் முராரி இராசையில் எம்பெருமான்
மருவும் செழுந்த ரங்கக் கடலிடை
அருமை யுடனே பணிய வருவார்
திசைகள் எட்டினும் உயர்ந்த வரிசைத்
தூதுவர் தங்கள் வாயில் பரவுகின்ற
நற்புத்தி யூகி சிம்புளை நேர்வடிவம்
கொண்டு மேவலர் வெண்டலை மீது
பதம்பொரும் பரிசால் இக்கலி யுகத்தில்
தருமபுத் திரனை விஞ்சுகிர ணப்புயன்
சங்கரன் அதிகச் சரங்குனி கந்தன்
நேயர் அகந்தனில் இலாத சயந்தரும்
மகாமனு எனத்தினம் தொழுதிடும் விற்பனன்
துரந்தரன் மனுஷத் தனமிகுந்த தீரன்
இலக்குமி பொருந்தும் சமூகத் தினனே
வீறுதென் புவிவாழ்வு இன்னம் பின்றாதான்
இந்திர தாரு வினுந்திறம் பூணும்
அதுலன் எனவே தகைமை பெறுவோன்
மகிமை பரவுறும் அருங்கலைக் கவிஞர்
தங்கள் தமிழுக் குபசாரங்கள் சொலி
ரத்தின மாலைவண் பரியாடை கண்டிகை
பூஷண மும்படைத் தருளும் அலங்காரன்
முகில்பொய்த் திடினும் சிந்து ரவிதெற்
கெழினும் அம்பொன் மலைதுறந் திடினும்
இரண்டு மொழிசெப் பிடாத மூத்தோன்
விசித்திர வீரியன் இங்கித மாமணி
கொஞ்சலில் நாவினர் நண்பிணங் காத
வளமைப் பிரபு தெளிந்தகலை கற்றவன்
முயன்று வனிதைத் திரள்தொடர்ந் திட்டே
கவனிக்கும் மோக மந்திர கலாதர
சந்திர னாகிய சம்பிரம சீவகன்
தந்திரம் தங்குமன் இரவலர் பாரி

இராசை நகர்வளன்

அருகே புலிகள் கண்டும் சுரபிக்கணம்
ஓரண்டை யதனில் புனல்நு கர்ந்து
பகைசற் றிலாமல் வங்கண மாகவும்
மிகும்பொது மாதர் நடந்திடு நடையைக்
கண்டுடன் தோகையது கற்றிட இரங்கவும்
மடுவிற் கலைகளைந்து முழுகிக் குலவும்
பெண்கள் விழியுற்று வாளை யங்கிதால்
இருகெண்டை யிதாலென வுஞ்சுழல் காவிரி
பொன்பொலிந் தேறும் வயல்கள் சுற்றிய
தடங்கள் மிசையின் புதிய சண்பகம்
மெய்த்தரு வினங்கள் மொய்த்து வீசும்
வண்டு வராபதி வந்த புதியர்கள்
நுகர்ந்தருள் மாநிதி செண்டலங் காரன்
இனிய புகழே அணியும் வரைவாய்

மகளிர் வருணனையும் செயலும்

சகல லட்சண அரம்பை நல்பத்மினி
மடந்தை பருவப் பிரவுட வஞ்சி
மலர்மெத்தை மீது சுகந்தமா யிருந்தெனை
வேல்விழி கொண்டு மாலுறச் செய்து
ரஞ்சிதம் பேசி மல்லிகைத் தொடைகொடுத்து
மருவைக் குழல்வகுத்துச் செருகிப் புழுகளைந்து
களபச் சவாது வண்டணி பாணியில்
முகந்த பின்னர்த் தேனெயிறு ஊறும்
செழுங்கனிச் சோதியின் வளநிலை கொண்ட
சிந்தையொன் றாகிமருவும் அனுகூல எழில்நலமே
துணைவெற்பு நகுதனங்கள் இடைக்கனிவு பொங்கும்
அளவில் பதமறிந்து முந்து தொடுதற்கு
உளமேவும் அன்புடன் மேல்விழு கின்றனள்
ஆவல் அடையும் காமுக நெஞ்சின்
இந்தி ராணி அரிவைக்கு மேலும்
மாதருக் கரசு விண்ட விரகப்
பிரபையில் நின்று குழையச் சரீரம்
அன்புள னதனொடு தழுவுலா கிரியும்
தெரியாமல் நயனம் இதங்கூர் வன்தொழிலில்
அந்தச் சமயத்தில் முழங்குகுரல் எட்டதில்
தும்புரு நாரத னார்திகழ் வார்கள்
அருந்தல் சேருவள் இவள்பெருந் திருவணி
வளரும் அதிநேயம் உளதிற மேயுற
கமைக்குக் கமையும் செய்வகையிற் புலவியும்
தன்மனத்தில் தயவுமொன்றி இதமிக்க வேளை
ஒண்டொடி யார்பதம் உண்டிடு நேரம்
என்பது பார்வை இடும்புலன் போல
மழலைச் சிறுசதங்கை அலமர ஒலியவித்து
விந்தையிது முத்தயர நீவஞ்ச மிலாது
அருள்சி றந்திடு புங்கவ சுவாமி
எனும்படிக் காரி இயம்பிடும் போது
ஒருவருக் கொருவர் பொங்க
ஒருவருக் கொருவர் அந்தம்
ஒருவருக் கொருவர் தஞ்சம்
இதனுட் பிரயாசம் உண்டு; விடாமல்
நெருங்கவுமே தழுவுங்கயி லாகுபுரிந் திடுஞ்சோடு
கருணை அகலாமல் இதமுளதால் உடலில்
புளகரும்ப உபரிக் கிரியை விரும்பி
மதனப் பயலை வென்றும் உவகை
பிறவாக முந்தியதோர் சந்தங்கொடு பாடுவள்
நீடு சூடுவள் பந்தயம் போடுமென
மெச்சிடுவள் சிந்து நொடியிற் சொலுவள்
கொஞ்சி இகலிக் கொளுவள் இந்த
முறைமுத் தங்கொடு ரசமிக இன்றலவோ
சுகம் இன்றளவோ கதிவேகம் இன்றளவோ
சாமி என்று அலங்காரம் உளமு வப்பள்
விளைந்த சுப்பிரன சிந்துஎன வேநிறைந்து
சுகநித் திரையாகி ஒண் கண்களை
வேடை தெளிந்திடு வோர்கள் பரம்பரை
ஆக நிவந்த சம்போகக் கலவி
தனையே அயர்வின்றிக் கொழிக்கும் நித்திலப்
பாலாழி ஓசைக்கும் கொங்கைக் குங்குமக்
குயிலுக்கும் மனஞ்சுழிக்கும் பேதைக் கிரங்கி
அனையதின் தோளிணைக்கு இணங்குந் துரையவர்
எடுத்துச் சுலாவி வழிக்குஞ் சாந்தும்
சவாதும் கதம்பமும் வாரிப் பூசி
வளருந் தடம்புயர் செழிக்குங் கீர்த்தி
தானே மருவும் தியாகப்பன் செல்வனே
எங்கள் செண்டலங் காரனே.

நீடும் செங்கைச் சிலைமாறன் எய்தவாளியும்
      நீடும் அயில் சுட்ட
சூடும் தோகை பொறுப்பளே தோளிலங்கும்
      வாகை மலர் கொடுத்தியால்
பாடும் செந்தமிழ்ப் பாவலருக் கருள்பத்மமா
      நிதியே செழுங் கீர்த்தியைத்
தேடுந்துங்க ளெனுந் தியாகபூ பதிசெல்வனே
      எங்கள் செண்டலங் காரனே

கண்டிருக்கும் மொழியும் பவளவண் களியிருக்கும்
      அதரமும் உள்ளவர்
கொண்டிருக்கும் துயரம் தவிர்த்துநீ சாருதற்குக்
      குளிர்ந்த நாள் பார்த்திராய்
வண்டிருக்கும் பொழில்சூழும் இராசையில் வாழுஞ்
      சொல் கமலவல்லி மார்பினன்
செண்டிருக்குங் கரத்தான் பதம்பணி செல்வனே
      எங்கள் செண்டலங் காரனே

கண்டாசை கொண்டவ ளொருத்தி நின்புயமீது
      காமுற்ற மாதொருத்தி
காமாக மத்துக் குடன்பட்ட தோர்கன்னி
      கண் கரித்தவள் ஒருத்தி
பெண்டான தோர்மங்கை தூதுவிட் டுனைவந்து
      பேசுவதும் ஓர்கநம்பு
பெண்களுக் காகச்சென் றொருத்தியா னொருபாவி
      பேதமோ தாரனுப்பாய்

வண்டாரும் முல்லையந் தாமனே தியாகப்பன்
      மைந்தனே குணசீலனே
பண்ணார் பொற்பதத் தன்புவைத் தனுதினம்
      வணங்கும் இங்கித நீதனே
செண்டாடும் பரிநகுல! நல்லவர் மகிபதி
      தினம்தினம் மெச்சுதீரா
தென்னிராசை வாழவரு செண்டலங் காரனே
      சகதலப் பரக்யாதியே

கல்விக்கதிபன் கவிதைக் கிசைந்தவன்
      கன்னியர்கள் மதன ரூபன்
கற்றவர்க் கனுகூலன் உற்றவர்க் குபகாரி
      காசினிக் கொரு பூஷணன்
செல்வத்திற் குபேரன் கணக்கிலே நிபுணன்
      சயத்தம்பம் நாட்ட வல்லான்
சீராசை வளநகர்க் கொருதிவாகரனே
      செகம்புகழ்வ துனையலவோ.

முல்லைக்கும் வாகைக்கும் வாய்த்தபுயவீமனே
      முத்தமிழுக் கனு கூலனே
முண்டகத் திருவதன சண்டப் ப்ரசண்டனே
      மொழியுமுனம் அறியவலனே
சொல்லுக்கும் வாய்மைக்கும் நீதிஅரிச் சந்திரனே
      துங்கசங் கீதலோலா
சுந்தர வசந்தனே செண்டலங் காரனே
      ராசசேகர ராசனே.

நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்
தேனே கபாடம் வந்துதிற வாய்திற வாவிடிலோ
வானே றனைய இரவி குலாதிபன் வாசல்வந்தால்
தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே.

சங்காழி ஏந்திய மால்வீர ராகவன் சந்நிதிக்கே
சங்கா ரியஞ்சொலப் போயி ருந்தேன்வா ரேறுகந்தார்
மங்காத செல்வமு மீடேற்றமும்பெரு வாழ்வுந்தந்தார்
சிங்கார மாயிருந் தேன்பின்னை வேறு சிலுக்கிலையே.

பாலிலும் மென்சொல் குயிலினு மென்மொழிப் பாவைநல்லாள்
மேலினுங் காமச் சரந்தைக்கு மேவட வேங்கடத்துப்
பாலினும்வேலை நடுவிலும் பாம்பிலும் மாதிரத்தும்
கோலினும் கண்டுயில் வாயழ காபள்ளி கொண்டவனே.

வாடுகிறாள் நின்மாலையால் வங்கக் குயிலொன்று
தேடுகிறாள் அருந்தி யாகரே நாடியே
அனங்கன் அம்பு சொரிவித்து அனலைக்
கொண்டு விசிற வெம்பி மனது
நொந்து கலையிழந்த மான்கொங்கையிற் பதித்த
சிலநகக் குறியும் கொங்கைவாய்ப் பதித்த
பற்குறி யுங்குர லினிற்ற லுக்கும்
செங்கையின் செண்டி னாலடித் ததுவும்
கறுவிச் சிணுங்கியே மடிபிடித் ததுவும்
தேவரீர் இதனுக்கு இணங்கிய வகையும்
சேடியர் சொல்ல அறிந்தேன் காணீர்
பங்கயத் தன்ன தியாக பூபன்
பாலனே கருட கேதனனே
பச்சைமால் பதத்தில் இச்சையா னவனே
பல்கலை தெரியும் மல்லல் வளவனே
இங்கிதக் குணனே சங்கீதப் பிரியனே
இரவ லர்க்கருள் சுகுண நிதியே
எண்தரும் முகுந்தச் செண்டலங் கார
இராசை அறாத பதிவரோ தயனே.

ஊரும் உலகமும் கொண்டாடத் தண்டமி ழோர்க்குதவும்
சீரும் கொடையும் செகத்தி லுண்டோசெழு நீர்திரண்ட
காரும் பதுமமும் நேர்காரி பாரியுங் காசினியில்
ஆரும் இணையில்லாச் செண்டலங்கார னென்னையனுக்கே

துரைராசன் ராசையில் செண்டலங்காரன் துரந்தரன்மால்
பாராசர் கப்பமிடும் பாதன் தியாகப்பன் பாலன்விஞ்சும்
உரைராசர் தங்கட் குதவும்பி ரானொன்ன லார்கள்சிங்கம்
வரராசை மன்னர் பதம்பணி வோன்புகழ் வாழ்த்துதுமே.

செஞ்சிலைவே ளெங்கள் தியாகன் குமாரன் செழுங்கமல
வஞ்சியர் மோகனன் செண்டலங் காரனை வாழ்த்தியன்பு
நெஞ்சினில் எண்ணி மதுரா புரிக்கச்சி நெல்லைதில்லை
எஞ்சிய காசி இராமேச் சாத்திலும் வேண்டுவமே.

சேவினில் ஏறும் பிரான்சடைத் திங்களும் தென்றலுந்தண்
மாவினில் கூவும் குயிலும் குழலும் வருத்தவன்னை
நாவினிற் சொல்லும் வசைக்கும் நேர்ந்தேனென்று நாண்மலர்ப்பூங்
காவினில் வண்டினங் காள்சொலும் செண்டலம் காரனுக்கே.

வாளைக்கு வாளை எதிர்க்கின்ற ராசை வளம்பதியான்
காளைக்கு நேர்நடைச் செண்டலங் காரன் சொல் கற்றவர்க்கு
நாளைக்குப் பிள்ளைக்கென் றெண்ணான் பொருளை நாளுமுற்ற
வேளைக்கு வாரித் தருவானென்னையன் விதரணமே.

சோமனை ராசை வளம்பதி யானைத் துரந்தரனை
வாமனை தியாகப்பன் மைந்தனை வாச மருவுமுல்லைத்
தாமனை மன்னர் தலைவனைத் தாரணி வாழ்மயிற்கே
ஏமகன எண்ணாத நாள்கள் எவையும் பயனிலவே.

விண்ணப்பம்

கந்தனே முருகா கடம்பனே குமரா
கச்சின முலைக்குற வள்ளி
கணவனே பழநிக் கடவுளே ஏரகம்
கதிர்காமம் வாழ நின்றவனே
செந்தனே செந்திற் கிறைவனே வேளூர்
செழிக்க வந்தருள் வேளே
அய்யனே மயூர் முத்தையா அடியேன்
செப்புவிண் ணப்பம் ஒன்றுளதால்
பைந்தமிழ் சுவைத்துதவு தியாகபூபதி செல்வ
பாலனை வாழ்சீவகனை
பசித்தவர்க் கன்னம் பகிர வந்தவனைப்
பரராசர் கோளரியை
உந்தனைக் கனவிலும் மறந்திடா தானை
உயர்புகழ்ச் செண்டலங் காரனை
உடற்பிணி தவிர்ந்து வயது நூறிருக்க உ
ளத்தரு ளுகந்து காத் தருளே.
ஏரகம் பழநி வேங்கூ ரொடுக்கச்சி
எண்கண் மாயூரம் ஐயாறும்
இடைமரு தூரும் திருப்பரங்குன்றம்
எட்டியனூர் திருத்தணியும்
பாரகம் புகழும் செந்தில் வேதவனம்
பராவுசெங் கோட்டிலும் மேவிப்
பழைமை யாகவே வாழும் முத்தையா
பகரும் விண்ணப்பம் ஒன்றுளதால்
நீரகம் பொருந்தும் தாமரையே நிதம்
நிகழ்த்திய மலர் முகத்தினனை
நின்னையே தெய்வம் என்றுநினைப் பவனை
நின் கதை கேட்கும் இங்கிதனை
ஊரகம் ராசை எனஇருந் தவனை
உயர்புகழ்ச் செண்டலங்காரனை
உடற்பிணி தவிர்ந்து வயதுநூ றிருக்க
உளத்தரு ளுகந்து காத் தருளே.

பச்சைமால் மருகா பச்சைமான் மதலாய்
பச்சைமா மயில் வரும் வீரா
பச்சைமால் வரையின் வள்ளி பங்காளா
பச்சைவேள் தனக்கு மைத்துனனே
செச்சைமா மலரும் காந்தளும் கடம்பும்
திண்புயத் தணிந்த சேவகனே
செல்வனே வேளூர் முத்தையா அடியேன்
செப்புவிண் ணப்பம் ஒன்றுளதால்
வச்சிர தேகன் கருடகே தனத்தான்
வள்ளலார் தியாகபூ பாலன்
மைந்தனை ராசைவள நகருடை யானை
மருவும் முல்லைத் தொடையானை
உச்சித நந்தகோ பாலவங் கிசனை
உயர்புகழ்ச் செண்டலங் காரனை
உடற்பிணி தவிர்ந்து வயது நூறிருக்க
உளத்தரு ளுகந்து காத் தருளே.
சரவண பவனே குரவணி புயனே
தண்டையார் சரணபங் கயனே
சண்முகத் தவனே ஞானதே சிகனே
சங்கரன் உகந்தருள் மகனே
மருவு தெய்வானை ப்ராணநா யகனே
வள்ளி பங்காளனே குகனே
வழுத்தும் விண்ணப்ப மொன்றுளதால்
தருவும் மேகமும் ஒப்புறு தளிர்க்கரனை
சந்ததம் உனைநினைப் பவனை
தன்னுயிர் போல மன்னுயிர்க் கிரங்கும்
தருமனை ஒருசொல்வா சகனை
உருவிலி நாண ஓங்கு மன்மதனே
ஓங்கிய செண்டலங் காரனை
உடற்பிணி தவிர்த்து வயது நூறிருக்க
உளத்தருள் உகந்துகாத் தருளே.

கும்பமா முனிக்கு முத்தமி ழுரைத்த
குமரனே அமரர் நாயகனே
குரிசிலே அருண கிரிதமி ழுகந்த
கொண்டலே மண்டலீ சுரனே
எம்பிரான் வேளூர் வைத்திய நாதன்
ஈன்றருள் மதலையா னவனே
என்னையாள் பரனே முத்துவே லவனே
எளியேன் விண்ணப்பம் ஒன்றுளதால்
அம்புராசி இருகண் வளர்ந்த மாலைப்போல்
அன்புள நம்பியா னவனை
அஞ்செழுத் தினையும் ஆறெழுத் தினையும்
ஆய்ந்து தத்துவம் அறியும்
உம்பர் கொண்டாடும் ராசையா திபனை
உச்சிதன் செண்டலங் காரனை
உடற்பிணி தவிர்ந்து வயது நூறிருக்க
உளத்தரு ளுகந்து காத் தருளே.

அம்மானை

இந்த உலகினில் செண்டலங் காரன்
சுந்தரஞ்சேர் ஐந்தருவாய்த் தோன்றினன்காண் அம்மானை
சுந்தரஞ்சேர் ஐந்தருவாய்த் தோன்றினனென் றாலிவனைச்
செந்தமிழோர் தியாகிஎனச் செப்புவரோ அம்மானை
தியாகன் மகனென்றால் செப்பாரோ அம்மானை

தொடுக்கிக்கொண்டு மிதியடிமேல் நடப்பார்கள்
தமிழர்க் கருளத் துணிந்தால் கையை
நடுக்கிக்கொண்டு கொடுப்பார்கள் வேசியருக்கே
கொடுக்கவே வைப்பார் கண்டீர்
அடுக்கிக்கொண்ட செந்தமி ழுக்கருள் தியாகன்
செண்டலங் காரன்போல் ஊரெல்லாம்
எடுக்கிக்கொண்டு திரிந்தாலும் புலவருக்கு
நல்ல உணவு எய்தி டாதே.

கலவையேர் மணிப்புயத்தான் செண்டலங்கா
ரனைப்போலக் கற்றோர்க் கீயார்
இலவையே கிளிகாத்த படியிருக்க
வைப்பவருக் கிசையுண் டாமோ
கலவையேய் கைவீசச் செஞ்சந்தனப்
பூச்சென்று சார்வ தென்பின்
குலவையே யெனைக்கோறல்நீ எனக்கும்பிடெனும்
வம்பர்குணம் கூறுங் காலே.

பரமனர்க்குத் தருங்குரிசில் செண்டலங்கா
ரப்பெருமாள் பசுந்து ழாய்ப்பூங்
காமனுக்கு நிகர்தியாகப் பன்பாலற்கு
நிகரெவரைச் சாற்று வோம்காண்
காமனுக்கு நிகரென்றால் காமனுக்கே
அருவதேகம் கருதாநின்ற
சோமனுக்கு நிகரென்றால் இனமல்லார்
புறங்கொடுக்கத் துணிந்திடானே.
ஐந்தருவும் சொரிமுகிலும் பாரியுங்கா
ரியுங்குமணன் வரனவர்தம்
சந்திரனும் காமனுந்தே வேந்திரனும்
அகத்தியனும் தருமன் தானும்
புந்தியுங்கன் னனுங்கூடிச் செண்டலங்கா
ரன்னெனவே பொருந்தி ஒன்றாய்ச்
செந்தமிழார் மிடிதவிர்க்குந் தியாகனிட
மாய்வந்து செனித்தா ரன்றே

வேலைதனில் துயில்மறந்தே இராசையில்வாழ்
கோபாலன்மெய்த் தாளாளன் பரமசீலன்
அன்னந்தரு தியாகன் செண்டலங் காரன்தனது
செய்கைபாரீர். பாலைமன் னுங்களியை
அருந்தாது இரங்குவோர்க் கிரங்கான்
பரிவோடு சேலைமுனம் வளர்த்தது போல்
இவள்மாலை இன்னமின்னம் வளர்க்கின்றானே.

நான்மூன்றி லொருராசி கொடிய தாக
நாகம்வளை சாகரமே பேரி யாகக்
குயில்காளம் ஊதக்காமன் வளைத்துப்
பொரும் வகைக்கு இரங்கா வாறே சொல்லாய்
பார்மேவு தென்ராசைத் தியாகன் நீள
பயத்திற்கு நீயெனப் பகருங் கீர்த்தி
தேமாவின் கனிரசம்போல் பொழியுஞ் சோலைச்
செண்டலங் காரனே சிறந்த மாலே.

வேரி தங்கும் ஓடை வாழ்நர்வீதி பெண்கள்
வீதி மாமேடை கோபு ரங்கள்
சேரிராசை மேவுவிற்பன காரிபாரி வலாரி
ஐந்தருவான செண்டலங்கார பூபன்
நேரிவா யுலாவி நின்ற கன்னியர்கை வேணுதாழ
ஓசைசிந்த இசை நலுங்கி யாடவே
பூரை பூரையது மேலும் மேலும் சாமிஎனவே
போகலீலை மேவு லீலைப்பெண்கள் கோடிகோடியே
ராசை மேவுதுரை ராச பூஷணன் ராசசந்திரன்
சுகுமார்கள் மெச்சிய விதேயன்
மான அத்திரவிழி மாதர் இச்சைபுனை மார்பினான்
சேதுபர்யந்தம் இசையுலவு சங்கநிதி
செண்டலங்கார பூபதி தமிழ் குலாவிவளர்
கனகமால் வரையில் ராமா
சிவேத இருவாழை மீதிலொரு சிங்கம் நின்ற
தினுசின்மேல் மத்த வாரணம்
இரண்டு நின்றது சீர்த்திறன் என் முதுகுமேல்
வீசியே கவரி தாளணிந்த தொருகந்து
கந்தினில் மலர்ந்த தோர் மெல்லிதழ்க்
கமலம் உற்பலம் ஒரு குமிழின் மீது
உலாம்பரி சிருந்ததே.
பூபாலர் வாழ்த்திப் புகழும் நெறிநீதிக்
கோபாலன் தன்பெருமை கூறவே - மாபாரின்
வண்ண மதிசூடும் மாதேவன் நெற்றிக்
கண்ணன் களிற்றுமுகன் காப்பு.

மட்டார் பிரமரத்தார் அச்சுதா
மைக்கோலப் புயலான மேனியா
மத்தகரிக் கிடரைத்தவிர்ப்பதொரு
சக்கரக் கரத்தாய் சண்பகம் போல்
வைத்த ரசத்துளவத் தாரைப்புனைவித்த
ராசை நகரக் கொற்றவா அரக்கன்
தலைபத்தும் விழக்கணை கவியத் தொடுக்கும்
கானே சங்கிராம ராமா
மைப்ப ரந்த கண்மடப் பாவைத்
திருவைச் சேரப் பெற்ற வானவா
வற்கலை கட்டி வனத்தில் நடப்பவா
மெய்த்துவரைப் பதிவந்த சிங்காரா
உன்பத மலரை மனதில் நினைக்குமவன்
மற்போ ரைப்புரி வடுகர் பட்டுவிழக்
காலும் நெற்றியும் வாயும் மார்பமும்
புயவெற் பும்அற
குதிரை, படைத்தகரி சஞ்சலங் காண
மெய்ச்சோ ரிப்புன லைப்பேய் மொய்த்து
மண்டும்ஓரி திரள நாயு மேயுண
வெட்டிய பொற்றலை அலகைக்கு உணவிட
கொடித்திரன் வான்பறந் தேற
வைத்தகோல் ஓடிந்து விடத்தா னைத்திரள்
கெட்டோடக் கணையே தொடுத்திட்ட
வச்சிர மன்தனை ஒத்தவன்; வித்தகன்
அரசர் மனத்தில் இடிபோலும் புங்கவன்
சடைவாசமாலை புனையும் நெடியமால்
நட்டார் நட்பினன் கற்றோர் மற்றோர்
கொட்டாரத்தில் வேண்டிய தாங்கொளக்
பரந்த மடக்கொடி ஒக்கும் மாதர்கள்
இச்சை யாரும் சாரப் புறஞ்சூழ
முத்தா வத்தி இரத்தின ஆலத்தி
பகல் தீவட்டிகொள் மாத ரரர்சிலர்
முச்சகம் மெச்சிய பச்சைப் புரவிநேர்
பரிகொட்ப மதகரி யும்புறம் சூழ
நானாவிதத் தொடை யல்பால் ஒளிகுலவ
சேறற் கிசையவே மணிமொய்த்த சிவிகை
தனில்வரும் சித்தசன் மதுரசஞ் சீவி
தியாக பூபன் உதவு குமரவேள்
அச்சூர் கடகரி ஒப்பவர் தீவிய
மிடற்றி னார்தொனி ஓசை வீதியும்
மட்டுலாம் புட்பம் மலர்ந்த பொழில்களும்
ஓடைக் கரிகளும் சேனைத் திரள்களும்
கற்றோ ருக்கிசை நீதியேசொல்
வித்தையும் வித்தைய ருக்கருள் கருணையும்
முச்சகம் மெச்சிய செண்டலங் காரர்
வாழும் மால்வரை யில்வரு வனிதையார்

மகளிர் வனப்பும் கரண விசேடமும்

கட்டாணித் தரளத்தொடை யெனும்பல்
கற்பூரக் கனிவாயினாள்
மதியை ஒத்த முகத்தினள் சர்க்கரை
முக்கனி நன்னயம் பேணும் பார்வை
பொற்கோ வத்தளி ரைச்சேர் மெத்தை
வைத்தாள் புட்ப நல்வா சம்பெற
வெட்டுக் களிப்பின் பிளவு தருவித்து
விதித்திடு சந்தனம் கூடுகற் பூரத்தை
உடல்பூசிக் குழற்பூவைப் பரிவுடன் சூடுவாள்
கற்றகல விக்கலை யைச்சொலி அதரம்
முருக்கு நுதற்குறி திங்கள் என்றோத
வீறுதூரி யங்கொ டெழுதி மகிழ்வாள்
கைத்தாளத்தை நிகர்த்தே உச்சியில் வைத்தாள்
பற்பல ஓசை யேபெற முற்றும்
நகக்குறி வைப்பள் கழுத்தை வளைப்பள்
இதழ்தனை மென்று தின்றே என்னை
மெய்ப்பால் கட்டி அணைப்பள் சற்று
நகைப்பாள் புட்குரல் கூவுவாள் கலைசற்று
நெகிழ்ப்பாள் அகல விழிப்பாள் நெருக்குவாள்
கைகடை யத்தொனி மிஞ்சிடும் போது
கக்கோ லிட்டுவிழிப் பார்வைக் குள்ளெனை
தேர்விப்பாள் குலவியே
கடிதில் கரணத்தை நினைப்பள் நடத்துவள்
கொச்சை மொழிக்குயில் இங்கிதம் பேசி
மேலும் மேலென மொழிவள் பழகிப்
பட்டாடைக்கலை மெய்க்காம சலதிக்கே தலைதோயவே
சருவிச் சருவித் தொடைமெத்த நெருக்குவள்
சரசலீலையில் நெகிழ்ப்பள் இயங்களும்
பேசி விரககாம மயலைப் போலக்
கலவிக் கேயுற் றனையாம் படஇனி
உச்சிதம் எத்தனை உற்பனம் எத்தனை
கொசிதம் எத்தனை அன்புறும்போது
இன்பம்படச் சாதிக்க உனக்கார் ஒப்பவர்
இச்சா பத்தியம் ஆகுமேஇது
வச்சிரம் விட்டொளிர் கச்சிள வட்ட
முலைத்தட மும்பதிந் தேற வேணுமோ
உபரி செய்மொழி கேட்பது பத்தாது
இப்படி எத்தாகச் செய்வது இப்பால்
இப்படிப் போடுபோடென இச்சை உரைப்பாள்
சமர்த்தன் என்னச் சொல்லி எத்துவான்
மனம் தத்துவாள்; அன்றிலும் போல
ஒத்தன ஏற்புற விட்டாள் மெத்தை
நனைத்தாள் பற்குறி காண நாணுவாள்
பொற்சரி கைத்துகி லைக்கை யிடுக்கினன்
மைக்குழ லைச்சொருகு கின்ற பண்பொடு
பச்சோலைச் சுருளைக் காதி லிட்டனள்
மெய்த்தா பத்தினை ஆற்றவே மணிமுற்றம்
அதில்திரியச் சுகம்பெற் றளித்த பட்சம்என்
அன்புறு தோகைதேரையே விடுகடிது சிலதனே.

வாழ்த்து
இளம்பிறை நேந்நுதல் செங்கமல முகம்வாழி
ராசை மன்னன் திருவடித் தாமரை
உளம்பெறுநால் வேதியர்கள் வாழி வாழி
உயர்முல்லை நிலம்வாழி உறவும் வாழி
குளம்பெறுசொல் மடமாதர் வாழிவாழி
குவளைமுல்லைத் தொடைவாழி கொழிக்குங் கீர்த்தி
வளம்பெறு செண்டலங் காரன் புவியின்மீது
மைந்தர் பதினாறு பேரும் வாழி.
-----------------------

பிற்சேர்க்கை.

இவ் வண்ணங்களில் வருணிக்கப்படும் கடவுளர்பற்றிய புராண இதிகாச வரலாறுகளும் இன்றியமையாதன சிலவற்றைப்பற்றிய குறிப்புகள் இதன்கண் காணப்பெறும்.
--------------

சடையப்பன் வண்ணம்

மன்மதனை எரித்தமை
தக்கன் மகளாகத் தோன்றிய பராசக்தி தக்கன் செய்த யாகத்தில் பரிபவப்பட்டு இறந்தாளாகப் பின் சிவபெருமான் கயிலை மலையில் தவத்தில் இருந்தபோது பராசக்தி இமவானுடைய மகளாகத் தோன்றிச் சிவபெருமானை அடைதற் பொருட்டுத் தவஞ் செய்வாளாயினள்.

இதற்கிடையே சூரபன்மன் முதலிய அரக்கர்தம் கொடுஞ்செயல் மிகுந்ததாகச் சிவபெருமான் இமவான் மகளான பார்வதியை மணந்தபின் பிறக்கும் புதல்வனான முருகனால் தான் தமக்கு உய்வு ஏற்படும் என்பதைப் பிரமன் வாயிலாக உணர்ந்த இந்திரன் மன்மதனை வரவழைத்து அவனைப் பெரிதும் புகழ்ந்து பார்வதியின் திருமணம் விரைவில் நிகழ்தல் வேண்டும் என்பதற்காகச் சிவபெருமானுடைய தவத்தைக் கலைத்தல் வேண்டும் என்று காரணங்களோடு விளக்கி மன்மதனைக் கயிலைமலைக்கு அனுப்பிவைத்தான்.

மன்மதனும் தன் தகுதி ஓராது, இந்திரனுடைய புகழுரையால் மதியிழந்து கயிலைமலையை அடைந்து சிவபெருமான் மீது தன் கரும்பு வில்லிலிருந்து மலர்க்கணை விடுக்க ஒருப்பட்டானாகத் தம் தவங் குலைவதனை உட்கொண்ட சிவபெருமான் தம் முக்கண்களையும் திறந்து நோக்கினாராக, அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பிழம்பிற்கு இரையாகி மன்மதன் சாம்பராயினன். அவன் மனைவியாகிய இரதி என்ற கற்பரசி பலவாறு புலம்பி இறைவனை வேண்டினாளாக அவள் ஒருத்திக்கு மட்டும் உருவங்காட்டி உலகிற்கு அங்கமில்லாதவனாக மன்மதன் நடமாடுகிறான் என்பது.
---------------

வேங்கடேசுவரர் வண்ணம்

காளியன் மீது நடமிடல்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாக ஒளித்து வளர்ந்த கண்ணன் இடைக்குலச் சிறுவரோடு ஆனிரைகளைக் கானகத்திற்கு ஓட்டிச்சென்று அவற்றைப் புலத்தலைப் புல்லார்த்தி அலைத்தலை நீரூட்டிப் பேணி வருவானாயினான். கோகுலத்தை யடுத்து யமுனையாறு ஓடியது. அவ்வாற்றின் மடு ஒன்றில் காளீயன் என்ற கொடிய நாகம் தன் கிளையோடு வாழ்வதாயிற்று. அம்மடுவினை நெருங்கிய உயிர்கள் யாவும் மடிந்தன. இச் செய்தி அறிந்த கண்ணன் மடுவினை ஒட்டி இருந்த மரம் ஒன்றில் ஏறி மடுவில் குதித்து நீரைக் கலக்கினானாக, அதனைப் பொருது வெகுண்ட காளீய கண்ணன் உடலினைச் சுற்றிக்கொண்டதாகக் கண்ணன் தன் ஆற்றலால் தன்னை விடுவித்துக்கொண்டு காளீயன் படங்களில் அடிவைத்துக் கூத்தாடி அதன் செருக்கினை அடக்க பின் கருணையால் அதனைக் கொல்லாது வேற்றிடம் சென்று உயிர் பிழைக்குமாறு விடுத்தான் என்பது.

திருமால் கவுத்துவம் பெற்றமை
அம்மையப்பருக்குச் சாத்தப்பட்ட பூ ஒன்றினைப் பெற்று வந்த துருவாசர் என்ற முனிவர் யானை மீது இவர்ந்து சுற்றுலா வந்த இந்திரனுக்கு அதை வழங்கினாராக, இந்திரன் அதன் அருமை உணராது தான் ஏறிவந்த யானையின் பிடரியில் அதனை வைத்தானாக, யானை அதனை எடுத்து கீழே எறிந்து காலால் துகைத்ததாக, அதுகண்டு வெகுண்ட துருவாசர் இட்ட சாபத்தால் இந்திரன் செல்வங்கள் யாவும் பாற்கடலில் புக்கு ஒடுங்கின. இந்திரன் தன் தவற்றுக்கு வருந்தித் திருமாலை வழிபட்டு வேண்டினானாக, அவர் பாற்கடலைக் கடையும் வழியினை அறிவுறுத்தினார்; பாற்கடலைக் கடைந்தால் அமுதமும் கிடைக்கும் என்பதையும் குறிப்பிட்டார். அமுதம் கிடைக்கும் என்ற செய்தியறிந்து அசுரர்களும் பங்கு கொள்ள வந்தனர். மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்படுகையில் தேவர்கள் வாசுகியின் வால்புறமும் அரக்கர்கள் தலைப்புறமும் நிற்பாராயினர். மந்தரம் கடலில் அழுந்தவே, திருமால் ஆமை வடிவெடுத்து அம்மலையைத் தம் முதுகில் தாங்கி அஃது அழுந்தாது காத்தார். எல்லோரும் பாற்கடலைக் கடைந்தாராக, அதிலிருந்து வெளிப்பட்ட ஆலகால விடம் உலகையே மயக்கத் தொடங்கச் சிவபெருமான் அதனை உட்கொண்டு தம் கழுத்தளவிலேயே அதனை இருத்தி நீலகண்டர் ஆயினார்.

பாற்கடலிலிருந்து வெளிவந்த திருமகளை மணந்த திருமால் அதிலிருந்தே வெளிப்பட்ட கவுத்துவ மணியைத் தம் மார்பிலணிந்தார். இந்திரன் பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட பல அரும் பொருள்களோடு திருமாலின் திருவருளால் அமுதத்தையும் பெற்றான் என்பது.
-------------

இராமநாதசுவாமி பேரில் வண்ணம்


மயிடனை வதைத்தமை
எருமைத்தலையை உடைய அரக்கனான மயிடன் என்பான் பலருக்கும் துயரம் விளைத்தானாக. எல்லோரும் பராசக்தியின் திருவடிகளில் விழுந்து கண்ணீர் வடித்தாராகப் பராசக்தி ஆளி வாகனத்து ஏறி வாள் ஏந்தி மயிடனோடு பொருது அவனை வெட்டி வீழ்த்தி உலகிற்கு இடர்களைந்தாள். இச் செய்தி,

'மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங்கு ஒளிக்கும் இமயக் கிழவி
தனிக்கண் விளங்கும் நுதற்பிறை மேலோர்
மிகைப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின்
வாள் பிடித்து ஆளி யேறித் தானவன்
மாளக் கடும் போர் கடந்த குமரி
மூவா மெல்லடித் திரு நிழல்
வாழி காக்க இம் மலர்தலை உலகே'

என்ற பழம் பாடலானும் அறியப்படும்.

காலனைக் காய்ந்தமை

மிருகண்டு என்ற பெருந்தவ முனிவர் சிவபெருமானை வேண்டிப் பதினாறாண்டு என்று வாழ்நாள் வரையறுக்கப் பெற்ற மகனைப் பெற்றாராக, மார்க்கண்டேயன் என்னும் பெயரிய அம்மகனும் தன் வயதினை உணர்ந்து சிவபெருமானை வழிபடுவதில் ஈடுபட்டவனாய்ச் சிவத்தலங்கள் பலவும் சென்று வழிபட்டு வந்தானாகத் தன் வாழ்நாள் முடியுமன்று திருக்கடவூரில் இறைவன் சந்நிதியிலிருந்த அவனுயிரை அழைத்தேகக் காலன் வரவே, தன் தவ வலிமையால் காலன் வரவுணர்ந்து அஞ்சி இறைவனைத் தழுவிக் கொள்ளவே, சிவபெருமானோடு சேர்த்துக் கால பாசத்தை இட்டு எமன் மார்க்கண்டேயனை இழுக்கவே, சிவபெருமான் கோபங்கொண்டு தம் இடக்காலால் எமனை உந்தி எறிந்து மார்க்கண்டேயனுக்கு அழியாவரம் அருளிப்பின் தவற்றை உணர்ந்து வழிபட்ட எமனுக்கும் புத்துயிர் அளித்து அவனைச் செயற்பட விடுத்தார் என்பது.

திரிபுரம் அழித்தமை

வித்யுன்மாலி, கமலாட்சன், தாரகாட்சன் என்ற அரக்கர் மூவர் கடுந்தவம் புரிந்து அதன் பயனாகப் பேராற்றல் பெற்றுப் பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலாய மூன்று கோட்டைகளை அமைத்துக்கொண்டு வானவெளியில் போந்து பலருக்கும் இடர் விளைத்தாராக, அத்துயாம் பொறாத தேவர் இருடியர் முதலாயினார் சிவபெருமானிடம் வேண்டினாராகச் சிவபெருமான் அத்திரிபுர அரக்கர்களையும் அழிப்பதற்கு ஆயத்த மானார்.

பூமியைத் தேராகவும், சூரிய சந்திரரைத் தேர் உருளைகளாகவும், நான்கு வேதங்களையும் குதிரைகளாகவும், பிரமனைத் தேர்ப்பாகனாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை வில் நாணாகவும், திருமாலை அம்பாகவும், அக்னியை அம்பின் நுனியாகவும், தேவர்கள் ஏனையோரை உபகரணங்களாகவும் கொண்டாராக, நம்மாலல்லவோ இவர் போரிடும் ஆற்றல் பெற்றுள்ளார் என்று தேவர் நினைத்தாராக, அவர் நினைப்பின் அறியாமையை உணர்ந்த சிவபெருமான் புன்முறுவல் செய்ய, அம்முறுவலினின்றும் தோன்றிய தீப்பிழம்பு திரிபுரத்தை அரக்கரோடு எரித்து உலகைக் காத்தது என்பது. இச்செய்தி பரிபாடல் என்ற பழந்தமிழ் நூலில்,

'ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ
வேதம் மாபூண் வையத் தேரூர்ந்து
நாகம் நாணா மலைவில் லாக
மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
மாதிரம் அழல் எய்து'

என்ற பகுதியில் சுட்டப்பட்டுள்ளது.
-----------------

இராமலிங்க சுவாமி வண்ணம்


திருமால் ஆலிலையில் துயிலுதல்

உலகங்கள் யாவற்றையும் காத்தற்றொழில் பூண்ட திருமால் ஊழியிறுதியில் உயிர்களுக்கு நலிவு வாராத வகையில் உலகங்கள் யாவற்றையும் விழுங்கிச் சிறிய வடிவு கொண்டு பச்சிளம் பாலகனாக ஓர் ஆலிலையில் துயில் கொள்ளுகிறார் என்பது.

'பள்ளி யாலிலை ஏழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள் ஆரறிவார் அவன்றன்
கள்ளமாய மனக்கருத்தே'

என்ற திருவாய் மொழியை நோக்குக.

அடியவர் அறுபத்து நால்வர்

சிவனடியார்கள் நாயன்மார் எனப்படுவர். திருதொண்டத்தொகையில் தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் குறிக்கப்பட்டுள்ளனர். அதன்கண் மணிவாசகர் பெயர் இடம் பெறவில்லை. அதன் காரணம் அவர் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரருக்குப் பிற்பட்டவர் ஆவர் என்பது. அவரையும் உடன் சேர்க்க அடியவர் தொகை 64 ஆயிற்று. இவ்வண்ணத்தில் மாணிக்க வாசகரையும் சேர்த்து நாயன்மார் தொகை அறுபத்து நான்காகச் சுட்டப்பட்டுள்ளது என்பது.
--------------------

நெல்லைநாதர் பேரில் வண்ணம்


கண்ணப்பர் எச்சில் மிசைந்தமை

காளத்தி மலையில் கன்னி வேட்டைக்குச் சென்ற திண்ணனார் பன்றி ஒன்றனைத் துரத்திச்சென்று அதனை வாளால் வெட்டி வீழ்த்தியபின், நீர் வேட்கையுற்று நாணன் என்பானுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று அண்மையில் கண்ட காளத்தி மலைமீது ஏறி ஆண்டு மலைமருந்தாய் இலங்கிய குடுமித் தேவரைக்கண்டு, அவரிடம் தம்மையும் மறந்து காதல் கூர்ந்து, அவர் உண்பதற்காகத் தாம்வெட்டி வீழ்த்திய பன்றியிறைச்சியைப் பக்குவப்படுத்தித் தம் நாவினால் சுவைத்து நல்ல பகுதிகளைத் தொகுத்து அவருக்கு அர்ப்பணித்தாராக அன்பு வேண்டும் சிவபெருமான் அவர் தமக்கு உணவு அருத்திய ஐந்து நாள்களும் அவர் சுவை பார்த்து அளித்த எச்சிலாகிய இறைச்சியைத் தூய உணவாகக் கொண்டு உட்கொண்டார் என்பது.

'வெய்யகனல் பதங்கொள்ள வெந்துளதோ எனுமன்பால்
நையுமனத் தினிமையினில் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன் எனக்கினிய'

என்று சிவகோசரியார் என்ற முனிவர் கனவில் சிவபெருமான் உரைத்தாராகச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்தமை நோக்குக.

சிவபெருமான் மான் தரித்தமை

தாருக வனத்து இருடியர் தம் தவத்தால் செருக்கிக் கருமங்களே பயன் தரவல்லன எனவும், இறைவன் அருள் வேண்டா எனவும் உட்கொண்டு பெருவேள்வி யொன்றைத் தொடங்கினர். அப்பொழுது சிவபெருமான் பிச்சையேற்றுண்ணும் இளையவன் வடிவில் அவர்தம் இலைக்குடில்களை அணுகினாராக அவர் தம் மனைவிமார் அவர் வடிவழகில் மயங்கி அவர் பின் உணவு தரும் காரணங்காட்டிப் போதுவாராயினர். முனிவரர் வேள்விக் கூடத்தைத் திருமால் அழகிய நங்கை வடிவில் அணுகினாராக, முனிவரர் அந்நங்கை அழகில் மயங்கி தம் வேள்வியை விடுத்து அந்நங்கையைத் தொடர்வாராயினர். அக்கானகத்தின் ஒரு பகுதியில் ஆடவனாக வந்த சிவபெருமான் முனிவர் மனைவிமார் தம்மைச் சூழவும், பெண்ணாக வந்த திருமால் முனிவரர் தம்மைச் சூழவும் சந்தித்த அளவில் கடவுளர் இருவரும் மறைய முனிவரரும் அவர்தம் மனைவிமாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிலை ஏற்பட, முனிவரர் தம் மனத்தைக் குலைத்த திருமாலிடம் வெகுளி கொள்ளாது, தம் மனைவிமார் மனங்கவர்ந்த சிவபெருமானை வெகுண்டு அவரை அழிப்பதற்காக அபிசார வேள்வியொன்று நிகழ்த்தினாராக, அதனின்றும் புறப்பட்டு தம்மை அழிக்க வந்த மானினைச் சிவபெருமான் கரத்தில் ஏற்றார்; வெகுண்டு வந்த பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டார்; மழுவினைக் கையில் ஏற்றார்; யானையைக் கொன்று அதன் தோலை மேலாடையாகப் பூண்டார்; புலியினைக் கொன்று அதன் தோலை இடையில் ஆடையாக அணிந்தார் என்பது.

காளி ஆடலில் தோற்றமை

ஆடவரினும் மகளிரே ஆடலில் வல்லவர் என்ற பொது நோக்கத்தான் காளி தகுதியை மிகுதியாகக் கருதிச் செருக்கியிருந்தாளாக, 'ஆறாடு சடை முடியோடும் அனலாடு மலர்க்கரத்தோடும் இமயப்பாவை கூறாடு திருவுருவோடும் கூத்தாடும் குணமுடைய' சிவபெருமான் அக்காளியோடு நடனமாடலை மேற்கொண்டு அவள் வெட்கித் தோற்று நிற்குமாறு ஊர்த்துவ நடனமாடினார் என்பது.

காளியாடக் கனலுமிழ் கண்ணுதல்
மீளியாடுதல் பாருமே
மீளியாடல் வியந்தவள் தோற்றெனக்
கூளிபாடிக் குனிப்பதும் பாருமே -

என்ற குமரகுருபர அடிகளார் பாடலைநோக்குக.

திங்கள் சூடுதல்

சந்திரன் தக்கனுடைய மகளிர் இருபத்தொருவரை மணந்தான்; அவர் எல்லாரிடமும் ஒப்பப் பரிவுகாட்டாது உரோகிணியிடம் கழிபெருங் காதலனாக இருக்கவே, மற்ற மனைவிமார் தம் தந்தையிடம் முறையிட்டாராக அவனும் சந்திரன் கலை குறைந்து ஒளி மழுங்கி யிறுமாறு சபித்தான். தன் கலைகள் குறைந்து வந்தமை உணர்ந்து தன் சாபத்தின் துயரம் நீங்குமாறு இரட்டைக் கலையளவு தான் குறைந்து வந்த நிலையில் சந்திரன் சிவபெருமான் திருவடியில் விழுந்து அபயம் வேண்டச் சிவபெருமான் இரட்டைக் கலையுடைய எந்திரனைத் தம் தலைமீது தாங்கிக் காத்துப் பெருமைப்படுத்தினார் என்பது.

பிறை நுதல் வண்ண மாகின்று அப்பிறை
பதினெண் கணமும் ஏத்தவும் படுமே' –

என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பகுதியை நோக்குக.
--------------

குமார சாம்புவன் வண்ணம்


சிவபெருமான் கங்கை சூடுதல்
சகரன் என்ற சூரியகுல மன்னனின் புதல்வர் தம் தந்தையார் செய்த பரிவேள்விக் குதிரை பாதல உலகத்துக் கபிலமுனிவர் தம் தவக்குடிலின் அருகில் கட்டப்பட்டிருந்தது கருதி, அதனை அவர் செயலாகக் கொண்டு அவரை வெகுண்டு அவர் கோபத்திற்கு ஆளாகிச் சாம்பராயினாக, அவர் தம் ஆன்மா உய்வதற்கு அம்மரபில் தோன்றிய பகீரதன் என்ற மன்னன், அவர் தம் சாம்பரைக் கங்கை நீரில் கரைத்து அவருக்கு உய்தியளிக்கக் கங்கையைக் குறித்து வேண்டித்தவம் செய்தானாகக் கடுவிசையில் வெளிப்பட்ட ஆகாய கங்கை உலகத்தை அழித்து விடாதவாறு சிவபெருமான் அதனைத் தம் சடையில் ஏற்றுத் தாங்கிச் சிறிதளவினதாக இவ்வுலகிற்குப் பயன் தரும் வகையில் வெளிவிட்டார் என்பது.

சிவபெருமான் மங்கைபாகர் ஆயினமை

சிவபெருமான் பார்வதியுடன் கயிலை மலையில் வீற்றிருந்தாராக, அவரை வழிபட வந்த பிருங்கி என்ற முனிவர் பெண்ணாகிய பார்வதியை வணங்க மனமின்றி வண்டின் வடிவெடுத்து இருவருக்கும் இடைப்பட்ட வெளிவழிப் போந்து சிவபெருமானை மாத்திரம் வலம் செய்ததால், அம்மையின் அருளை இழந்த அவர் கடிதில் வலிமையற்று வண்டுருவாய்த் தரையில் கிடந்தாராகச் சிவபெருமான் அவர் தவற்றை மன்னித்துப் பார்வதிக்குத் தம் உடலின் இதயம் இருக்கும் சிறப்பினதாகிய இடப்பாகம் முழுவதையும் வழங்கி, நம்மனோருக்கு அம்மையப்பராய் ஓருருவினராய் அருள் செய்து வருகிறார் என்பது.
--------------

தியாகராசர் வண்ணம்


சிவபெருமான் சோமாசிமாறருக்கு அருளியமை
அம்பர் என்ற ஊரினரான மாறனார் என்ற அந்தணர் சோமயாகம் பல செய்தவர் ஆதலின் சோமயாஜி என்று சிறப்பிக்கப்பட்டவராவர். அவர் தமிழில் சோமாசிமாறனார் என்று வழங்கப்படுவாராவர். அவர் வன்றொண்டர் என்ற சிறப்புப் பெயருடைய சுந்தரருடைய நண்பர்; சிவனடியார் யாவராயினும் வழிபட்டு உபசரிப்பவர். யாகங்கள் பல செய்யும் அந்தணராயினும் சாதி, குலம், பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறாத அன்புள்ளம் படைத்த அவருக்குச் சிவபெருமான் பேரின்ப வீடு அருளினார் என்பது திருத்தொண்டர்புராணச் செய்தி.

அவர் யாகஞ்செய்து கொண்டிருந்தபோது சிவபெருமான் தாம் குறவர் வேடத்திலும், பார்வதியார் குறத்தி வேடத்திலும், முருகப் பெருமானும் விநாயகரும் குறச்சிறுவர் வேடத்திலும், வேதங்கள் வேட்டை நாய்கள் வேடத்திலுமாக வர, உண்மையுணர்ந்த சோமாசிமாறனார் ஆண்டிருந்த அந்தணர் பலருடைய எண்ணத்திற்கு மாறாக அக்குறக் குடும்பத்தாரை உபசரித்து இறைவன் திருவருளுக்கு இலக்காகி நாயன்மாருள் ஒருவரெனப்படும் சிறப்புற்றார் என்பது நடைமுறையில் வழங்கப்படும் வரலாறு.

சிவபெருமான் சுந்தரற்கா ஆடல் மறந்தமை

சிவபெருமானுடைய நிழலுருவாய்க் கயிலையில் அணுக்கத்தொண்டு செய்து வந்த ஆலாலசுந்தரர் இவ்வுலகிற்குத் திருத்தொண்டத்தொகை அருள் செய்யத் திருநாவலூரில் அவதரித்தாராகச் சிவபெருமான் அவரைத் தடுத்தாட் கொண்டார்.

சுந்தரர் சிவத்தல யாத்திரை தொடங்கித் தில்லையம் அடைந்து சிவபெருமானை வழிபட்டபோது
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
      அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
      திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
      எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துட் டினைத்து

      மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
அத்தகைய சுந்தரரைச் சேரமான் பெருமாள் நாயனருக்கு அறிமுகம் செய்துவைக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். சேரமான் சிவபெருமான் அருளாணை ஏற்று அரசு செலுத்தி வந்தார். அவர் நாள்தோறும் தம் பூசையின்போது சிவபெருமானுடைய பாதச் சிலம்போசையினைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒருநாள் அவ்வோசை கேளாது போகவே, சேரமான் தாம் பெருந்தவறு செய்துவிட்டாராகக் கருதி உடைவாளினை உருவி உயிர்துறக்கப் புகுகையில் சிவபெருமானுடைய சிலம்போசை கேட்க அமைதியுற்று சிவபெருமான் சேரமானுக்கு அசரீரியாகச் சொல்லியதைச் சேக்கிழார் பெருமான்,

'என்ற பொழுதில் இறைவர் தாம்
      எதிர்நின் றருளா தெழும்ஒலியால்
மன்றி னிடைநங் கூத்தாடல்
      வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப்போற்றி
      உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
      என்றார் அவரை நினைப்பிப்பார்'

என்று அருளுவதால், சுந்தரற்காகச் சிவபெருமான் ஆடல் மறந்தாராகக் கூறும் திறம் உணரப்பட்டவாறு.

சிவபெருமான் தியாகப்பெருமான் ஆவது

உலகம் முழுவதையும் திருமாலுக்கும், செல்வத்தைக் குபேரனுக்கும், வீட்டுலகத்தை அடியாருக்கும், உடலில் பாதியைப் பராசக்திக்கும் வழங்கியதால் சிவபெருமான் தியாகப் பெருமான் ஆயினார்.

வையம் முழுவதும் உழுதுண்ண
      வல்லாற் களித்து நவநிதியும்
கையி லொருவற் களித்தெமக்கே
      கதிவீ டளித்தோர் கன்னிகைக்கு
மெய்யில் ஒருகூ றளித்தனரால்
      விமலர் கமலத் தியாகரென்பது
ஐயர் இவர்க்கே தகு முகமன்
      அன்று புகழும் அன்றாமே –

என்ற குமரகுருபரர் பாடலை நோக்குக.
----------------

சீரங்கநாதர் வண்ணம்


இராமாவதாரச் செய்தி
தசரதன் வசிட்டரிடம் 'பிறிதொரு குறையிலை எற்பின் வையகம் -- மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டு' என்று தனக்குப் பின் நாட்டினைச் செவ்வனே ஆள்வார் ஒருவர் இல்லாமல் போவாரே என்று வருந்தினானாக, வசிட்டர் கூறியவாறு பரி வேள்வியும் பின் மகப்பெறு வேள்வியும் செய்ய அம்மனந் தூயவனுக்கு மக்கள் நால்வர் தோன்றினர்.

இராவணன் முதலிய அரக்கர்களால் வருந்திய தேவர் முதலாயினோர் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரமன் திருமுன்னர்ச் சென்று கண்ணீர் வடித்தாராக, அவர் துயரம் நீக்குவதற்கு ஒருப்பட்ட திருமால்
மசாதம் அனையவர் வரமும் வாழ்வுமோர்
நிசரதக் கணைகளால் நீறு செய்ய யாம்
கசரதத் துரகமாக் கடலன் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி
வளையொடு திகிரியும் வடவை தீதற
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளையர்கள் என்றடி பரவ ஏகியாம்
வளைமதில் அயோத்தியுள் வருதும் என்றனன்

என்று கம்பர் அருளிச் செய்ததை ஒட்டிப் பாஞ்சசன்னியத்தின் அம்சமாகச் சத்ருக்கனும், சுதர்சனத்தின் அம்சமாகப் பரதனும், ஆதிசேடனின் அம்சமாக இலக்குவனும் அவதரித்தனர் என்பது.

எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகைவந் தெய்தப
புல்லிய பழியினோடும் இந்திரன் போய பின்றை
மெல்லிய லாளை நோக்கி விலைமக ளனைய நீயும்
கல்லிய லாதி யென்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்

பிழைத்தன பொறுத்த லென்றும் பெரியவர் கடனே என்ப
அழற்றரு கடவு ளன்னாய் முடிவிதற் கருளு கென்னத்
தழைத்துவண் டிமிருந் தண்டார்த் தசரத ராம னென்பான்
கழற்றுகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்

என்பதனை ஒட்டி அகலிகை கல்லாகிப்பின் இராமன் திருவடி பட்ட அளவில் கல்லுருத் தவிர்ந்தாள் என்றும் கூறியவாறு.
-----------------

திருப்பெருந்துறையான் வண்ணம்

சிவபெருமான் திருமாலை இடபமாகக் கொள்ளுதல்
‘பொருதிரைத் தடங் கடலிடத்துறங்கிய திடத் தொடுங் கொலை ஏறுடையார்' என்பது அவ்வண்ணப் பாடலின் அடி.

'கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவாறு எனக்கறிய இயம்பேடி
தடமதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்
இடபமாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ

என்ற திருவாசகப் பாடலை நோக்கத் திரிபுர சங்காரத்தை ஒட்டித்திருமால் சிவபெருமானுக்கு அறமே வடிவாக உடை காளைவாகனமாக அமைந்த செய்தி உணரப்படுவதால், பாற்கடலில் யோகநித்திரை செய்யும் திருமாலே சிவபெருமானுக்குரிய வாகனமாகிய காளை ஆயின செய்தி இவ்வண்ணத்தில் சுட்டப்பட்டுள்ளது.

சிவபெருமான் நீறணிதல்

பல சங்காரங்களும் செய்து போர் வெற்றியில் சிறந்து, இறந்தோர் சாம்பலைப் பூசிச் சிவபெருமான் பண்டரங்கக் கூத்தினை ஆடிய செய்தி,

'மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ

என்ற கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலான் அறியப் படும் என்பது.

நரி பரியாதல்
குதிரை வாங்கி வருவதற்காகப் பாண்டியனிடம் பொன் பெற்றுச் சென்ற தென்னவன் பிரமராயராம் வாதவூரர் அச்செல்வத்தைத் திருப்பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு, வறிதே பாண்டியனை அணுகி, இறைவன் உள்ளிருந்து ஊக்கவே, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று கூறினாராக, இறைவன் அன்று கானகத்து நரிகளை யெல்லாம் குதிரைகளாக்கி அரசனிடம் ஒப்படைத்துச் சென்ற செய்தி,

'நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெலாம் பிச்சசேற்றும் பெருந் துறையான்'
எனவும்,

'அரியொடு பிரமற் கறிவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்'

எனவும் வரும் திருவாசகப் பகுதிகளை நோக்கி அறியப்படும்.
--------------

ரகுநாத நாயக்கன் வண்ணம்

இராம தோஷம் தவிர்த்தமை
பிறன் மனைவியை விரும்பி அவளை வலியச் சிறைசெய்த கொடுங் குற்றத்திற்காக இராவணனை இராமன் அழித்தமை நேரிய செயல் எனினும், அந்தணனாகிய அவனைக் கொன்றதனால் பிரமகத்தி தோஷம் ஏற்படக்கூடும் என்று கருதிய இராமன் இராமேசுவரத்தை அடைந்து சிவலிங்கம் ஒன்றினைப் பிரதிட்டை செய்து பூசித்துக் கழுவாய் தேடினான் என்பது, இராமனால் பிரதிட்டை செய்யப்பட்ட இறைவன் இராமநாதன் என்ற பெயரோடு வழிபடப்படுகிறான் என்பதும் உளங் கொளத் தக்கன,
------------------

சொக்கநாதசுவாமி வண்ணம்

விநாயகன் ஒற்றை மருப்பினன் ஆதல்
உலகிலுள்ளோருக்குச் சொல்லொணாத் தீங்கு பல செய்து வந்தவனும், பெருந் தவ வலிமை உடையவனும், யானைத்தலை உடையவனும் ஆகிய கயமுகாசுரனை அணுகி அவனோடு போர் செய்ய முற்பட்ட விநாயகப் பெருமான் தன் மருப்புகளுள் ஒன்றினை ஒடித்து அவனோடு போரிட்டு அவனை அழித்தான் என்பது. அம்மருப்பினையே விநாயகப்பெருமான் எழுத்தாணியாகக் கொண்டு மேருமலையில் பாரதம் எழுதினான் என்ற வரலாறு,

நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்தென்று நிலை நிற்கவே
வாடாத தவவாய்மை முனி ராசராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக அங்கூரெழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூருவாமரோ –

என்ற பாடலான் அறியப்படும்

சிவபெருமான் வெள்ளியம்பலத்து ஆடுதல்

கயிலையில் வீற்றிருந்த சிவபெருமான் சுந்தரபாண்டியனாய்த் தடாதகைப் பிராட்டியை மணந்து பாண்டிய நாட்டை ஆண்டபின், பாண்டியன் ஒருவன் தம்மை வேண்டிக் கொள்ளவே, தில்லையில் பொன்னம்பலத்தில் நடனம் ஆடியதுபோல மதுரையிலுள்ள வெள்ளியம்பலத்திலும் நடனமாட மனங்கொண்டு, தில்லையில் இடக்காலைத் தூக்கி ஆடியது போலாது மதுரையில் வலக்காலைத் தூக்கி ஆடின வரலாறு, திருவிளையாடற் புராணத்துக் கால்மாறி ஆடிய படலத்தால் அறியப்படும் என்பது.
--------------

வராககிரிச் சின்னையன் வண்ணம்

முருகப் பெருமான் சூரனை வதைத்தமை
சூரபதுமனும் அவன் இனத்தவரான அசுரர் பலரும் கடுந்தவம் புரிந்து அதன் பயனாகப் பேராற்றலும் பெருவரங்களும் பெற்றுத் தேவர் பலரையும் சிறை செய்து மூவுலகங்களையும் அடிப்படுத்திப் பெருவாழ்வு நடத்தினாராக, அசுரர் செய்த துயர் பொறாத தேவர் முதலியோர் சிவபெருமானை வேண்ட அவர் அருளால் அவதரித்த முருகப் பெருமான் அவுணர் செய்த மாயங்களை எல்லாம் அழித்து அவர்களோடு போர் செய்து அவர்களையும் அவர் தலைவனான சூரபதுமனையும் அழித்து அவர்களை நற்கதி அடையச் செய்தாள் என்பது கந்தபுராணச் செய்தி. -------------

வீரராகவ முதலியார் வண்ணம்

இராவணன் கயிலைமகயைப் பெயர்த்தமை
தவத்தான் மேம்பட்டுப் பெருவரமும் பெருவாழ்வும் படைத்த இராவணன் திக்குவிசயம் செய்யத் தொடங்கினானாக, வடப்புறத்தில் இடையூறாகக் குறுக்கே இருந்த கயிலை மலையை அடியோடு பெயர்த்தெடுப்பதற்கு முற்படவே, அதனை அறிந்த சிவபெருமான் சேவடிக்கொழுந்தால் அம்மலையினை அழுத்த, மலைக்கு அடியில் சிக்குண்ட இராவணன் பேரோலமிட்டுத் தன் இசைவன்மையால் சாம வேதத்தைப் பாடிச் சிவபெருமானை மகிழ்வித்து அவர் அருளால் சந்திரகாசம் என்ற மந்திரவாள் பெற்று அன்று முதல் சிறந்த சிவனடியாருள் ஒருவனாயினான் என்பது.

இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தி,

'இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிபொலி தடக்கையின் கீழ்ப்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல'

என்ற கலித்தொகைப் பகுதியானும் உணரப்படும்.
---------------

அருஞ்சொற் பொருள்.


அகரம் - பார்ப்பனச்சேரி
அகளத்தி - களங்கமற்ற வடிவுடையவள்; நுண்ணுடலுடையவள்
அசலம் - அசைவில்லாதது, மலை
அடப்பம் - வெற்றிலைப்பை
அடவி - காடு
அடையவர் - பகைவர்
அண்டகடாகம் -உலக வட்டம்
அதரம் - உதடு
அதள் - தோல்
அதுலர் - ஒப்பில்லாதவர்
அபிமானம் - செருக்கு, விருப்பம்
அபிஷேகம் - கிரீடம்
அமலை - களங்கமற்றவள்
அயிரை - ஒரு வகை மீன்
அரவம் - ஓசை, பாம்பு
அரவு - பாம்பு, பதஞ்சலி முனி, இலக்குவன்
அரி - வண்டு, சிங்கம், திருமால், கூறு செய், பகை
அருணை - அண்ணாமலை என்ற ஊர்
அருத்தி -விருப்பம்
அருவதேகம் - வடிவில்லாத உடல்
அலகை - பேய்
அலம்பிய - ஒலித்த
அவசம் - தன்னிலை மறத்தல்
அவ்வியம் - வஞ்சகம்
அளகபாரம் - பெண்கள் கூந்தல்
அறத்தி - தரும வடிவானவள்
அறுகு -ஒரு வகைப்புல்
அற்பரேகை சிறிய கோடு
அனங்கன் மன்மதன்
அனந்தன் - பாம்பு, ஆதிசேடன்
ஆடகம் - பொன்
ஆதவன் - சூரியன்
ஆதுரம் -வருத்தம்
ஆயி - தாய்
ஆலவட்டம் - விசிறி
ஆழி - கடல், சங்கு (சத்ருக்கள்)
ஆனிரை - பசுக்கூட்டம்
இகல் - மாறுபாடு
இங்கிதம் - குறிப்பு
இரசதம் - வெள்ளி
இரட்சகன் - காப்பாற்றுபவன்
இரவி - சூரியன்
இருடியர் - முனிவர்
இரவி குலாதிபன் -சூரிய குலத்தோன்றல்
இலஞ்சி - குளம்
ஈழம் - சிங்களத் தீவு
உச்சிதம் - மேம்பட்டது
உடுக்கள் - விண் மீன்கள்
உத்தரம் - விடை, பிறகு
உபரி - மிகுதியானது
உப்பரிகை - மேல்மாடி
உம்பர் - தேவர், மேல்
உரி - தோலை நீக்கு
உரிவை - தோல்
உரகம் - பாம்பு
உரகநாணி - பாம்பு ஆகிய வில்நாண் (வாசுகி)
உலுத்தர் - பேராசைக்காரர்
உழை - பக்கம், மான்
உற்பலம் - குவளை மலர்
உற்பனம் - உண்மை, மேம்பாடு, கல்வி
எத்து - ஏமாற்றுதல்
எரிப்பு - எரிச்சல்
ஏமன் - பாதுகாவல் தருபவன்
ஐங்கணை - மன்மதனுடைய ஐந்து வகை, மலரம்பு,
ஒயில் - அழகு, அலங்காரம்
ஓதம் - வெள்ளப்பெருக்கு
ஓதிமம் -அன்னப்பறவை.
கக்கோல் - ஒலிக்குறிப்பு
கங்கு - பக்கம்
கஞ்சுகம் - சட்டை
கடம் - யானைக்கதுப்பு
கடுக்கை - கொன்றைப்பூ
கதலி - வாழை
கதழ்வு - விரைவு
கதிரேசர் - சூரியனுக்குத் தலைவனாகிய இறைவன்
கந்தரம் - கழுத்து
கந்து - கட்டுத்தறி
கபடு - வஞ்சகம்
கபாலி - மண்டையோட்டை ஏந்தியவன்
கமலை - திருவாரூர்
கமை - பொறுமை
கயிலாகு - கையைப்பிடித்துத் தூக்குதல்
கரசரோருகன் - கைகளாகிய தாமரையுடையவன்
கரடம் -மதம்
கருதலார் - பகைவர்
கல்லாரம் - குவளைப்பூ
கல்லோலம் - அலை
கழுக்காணி - உலக்கை, சோம்பேறி
கறுவி - கோபித்து
கனகவரை - மேருமலை
கனரொக்கம் - மிக்க செல்வம்
காரி - ஒருவள்ளல், கரிக்குருவி
காவி - குவளைப்பூ
காளவேடன் - கரியவேடன் (கண்ணப்பன்)
கிஞ்சுகம் - இலவு
கிருபாலினி - கருணை செய்பவள்
குணபால் - கீழ்ப்புறம்
குந்தளம்- கூந்தல்
குரத்தி - தலைவி
குரம்பு - செய்கரை
குரமா - குளம்புகளையிடைய குதிரை
குரோதனம் - கோபம்
குலோதயன் - குலத்தில் உதித்தவன்
குளம் - வெல்லம், நீர் நிலை
குளித்தல் - மூழ்குதல், உள்பாய்தல்
குறங்கு - துடை
குறுமுனி - அகத்தியன்
கூனும்மதி - வளைந்த பிறைச்சந்திரன்
கேதனம்- கொடி
கொசிதம் - உச்சிதம்
கொட்டாரம் - தானியக் களஞ்சியம்
கொட்ப - சுழல
கொடிக்கோல் - வளைந்தகோல்
கொடித்திரள் - காக்கைக் கூட்டம்
கொடுங்கை - வீட்டின் வெளிப்பக்கம்
கோணிலா - வளைந்த பிறை
கோடல் - வெள்ளை நெட்டி, வெண்காந்தள்
கோமளம் - அழகு
கோல் - செங்கோல்
கோளரி - கொல்லும் சிங்கம்
சக்கரத்தலம் - வட்டமான உலகம்
சகலாத்து - பட்டாடை
சகளத்தி - மாயாவடிவமுடையவள்
சங்கிராமம் - சண்டை
சங்கீதலோலன் -இசையில் ஈடுபடுபவன்
சடுதி - விரைவு
சங்கை - ஐயம்
சண்டப்ரசண்டன் -மிகுவேகமுடையவன்
சண்டமாருதம் -புயற்காற்று
சதானந்தி - எப்பொழுதும் மகிழ்வாயிருப்பவள்
சம்பிரமம் - உடல் அசைத்தல்
சம்போகி - அனுபவிப்பவன்
சமரரரி - போரில் அழிப்பவன்
சமன் - இயமன்
சயனம் -படுக்கை
சருப்பம் - பாம்பு
சரசகுணலோலன் - எல்லோரிடமும் எளிமையாய்ப் பழகுபவன்
சருவி - நெருங்கி
சரோருகம் - தாமரை
சலதி - கடல்
சலாம் - வழிபாடு
சலாரி - வெகுமதி தந்து
சவிதர் - பிரகாசம் உடையவர்
சன்னதம் - கோபம், விருப்பு, ஆவேசம்
சன்னை - ஏளனச்சொல்
சன்மானம் - பரிசில்
சாசுவதம் - நிலையானது
சானு - முழங்கால்
சாயல் - ஐம்பொறியானும் நுகரும் மென்மை
சாளரம் - சன்னல்
சிணுங்கி - சிறுகோபம் கொண்டு
சிந்து - கடல், ஒருவகைப்பாட்டு
சிம்புள் - ஒரு பெரும்பறவை
சிவிகை - பல்லக்கு
சிவேதம் - வெள்ளை
சுதாகரன் - கருடன், சந்திரன்
சுமுகன் -இன்முகன்
சுரதலாகிரி - இன்பமயக்கம்
சுரபி - பசு - காமதேனு
சுருள் - வெற்றிலை
சுரேசர் - தேவர்களுக்குத் தலைவர்
சுலாவி - சுழன்று, சுற்றி வந்து
சூலதாரி - சூலம் ஏந்தியவன்
செப்படி - மாயவித்தை
சேது - அணை
சேமணி - மாட்டின் கழுத்துமணி
சேய் - முருகன்
சேவகம் - வீரம்
சோபனம் - மகிழ்ச்சி தரும் செயல்
சோமன் - சந்திரன்
சையோகம் - கூட்டம்
தஞ்சம் - பற்றுக்கோடு
தண்டலை - சோலை
தத்தை - கிளி
தமனியம் - பொன்
தமி - தனியாய்
தரியலர் - பகைவர்
தலுக்கு - மாயச்செயல்
தவளம் - வெண்மை
தவனம் - ஆசை, வெப்பம்
தனுக்கோல் - அம்பு
தாகம் - வேட்கை
தாடனம் - தட்டுதல்
தாதகி - ஆத்திமரம்
தாதர் - வேலைக்காரர்
தாபம் - வேட்கை
தாரு - கற்பகமரம்
தாலம் - நாக்கு
திகிரி - சக்கரம், பரதன்
திட்டந்தரி - உறுதியானவன்
திமிர்தல் - தேய்த்துக்கொள்ளுதல்
திமிலகுமிலம் -ஒலிக்குறிப்பு
திமிரி - ஒருவகை இசைக்கருவி
திரிசூலம் - முத்தலைச்சூலம்
திரிநயனத்தி - மூன்று கண்களை உடையவள்
திரிபுரை - பார்வதி
திரியம்பிகை - மூன்றுகண்களை உடையவள்
திருக்கு - கண், மாறுபாடு
திருசகம் - மூன்று உலகம்
திவாகரன் - சூரியன்
துங்கம் - தூய்மை, வெற்றி
துண்டம் - மூக்கு
துப்பட்டா - பட்டாடை
துரந்தரன் ஆற்றலுடையவன்
துரியம் - சுத்தநிலை, சுமத்தல்
தேசினன் - ஒளியுடையவன்
தேவை - இராமேசுவரம்
தொடை- மாலை
தொடையலான் -மாலையை அணிந்தவன்
நடவிய - செலுத்திய
நம்பு - விரும்பு
நவிரி - ஒரு இசைக்கருவி
நன்னலார் - நண்ணலார் - பகைவர்
நாகம் - மலை, பாம்பு
நாந்தகம் - வாள்
நாவி - கஸ்தூரிமான், புழுகுப்பூனை
நாவகனார் - நாவினை உடையவர்
நாளிகேரம் - தேங்காய்
நானம் - கஸ்தூரி
நிருதர் - அரக்கர், அரசர்
நீபதலம் - காரணமான இடம்
பக்கிராது - பிளவுபட்டிராது
பங்கயம் - தாமரை
பச்சிமம் - மேற்குத்திசை
படீரம் - சந்தனம்
பணவிடை - சிறுநிறுத்தலளவு
பணாமுடி - படங்களை உடைய தலை
பதனம் - பத்திரம், ஜாக்கிரதை
பத்மாசனம் - தாமரையாகிய இருப்பிடம்
பதாகை - கொடி
பதுமம் - தாமரை
பயில் - பழகு
பர்யந்தம் - எல்லைவரை
பரராசர் - வேற்றரசர்
பரிமர் - குதிரைச் சேவகர்
பரிவட்டம் - ஆடை - தலையில் அணிவது
பலிதம் - பயன்படுதல்
பனகவரை - பாம்பை உடுத்திய இடை
பாகசாதனன் - பக்குவம் பெற்றவன்
பாணிதம் - கற்கண்டு
பாலம் - நெற்றி
பாலரேகை - நெற்றியிலுள்ள கோடு
பாலலோசனன் -நெற்றிக்கண்ணன்
பாவகம் - இயல்பு, தூய்மை
பானல் - குவளைப்பூ
பிரசண்டன் - வீரமுடையவன்
பிரதாபம் - சீர்த்தி
பிரதானம் - இன்றியமையாத பொருள்
பிரபுடிகம் - பிரபுத்தன்மை
பிரபை - ஒளி
பிரமரம் - வண்டு
பிரமை - மயக்கம்
பிரயாசம் - உழைப்பு
பிரவுடம் - இளமை
பிறங்குதல் விளங்குதல்
பின்றாதான் - பின்னிடாதவன்
புகலி - சீர்காழி என்ற ஊர்
புங்கவன் - தூயவன்
புயரசலன் தோள்களாகிய மலையை உடையவன்
புலி - வியாக்கிரபாத முனி
புனிற்று - ஈன்றணிமையுடைய பசு
பூககர் - பூமியில் சுற்றுவோர்
பூகம் - பாக்கு
பூஷணம் - ஆபரணம்
பைரவி - அம்பிகை
பொலங்குடை - பொன்னாலாகிய குடை
பௌரிகன் குபேரன்
மகரம் - முதலை
மடல் - கடிதம், இதழ்
மடைச்சன்னாசி - நீர்மடையிலுள்ள ஒருவகைமீன்
மத்தம் - ஊமத்தம் பூ
மதங்கனி ஆடல் வல்லவன்
மதங்கி - காளி
மதுரபாஷிதன் இன்சொல் பேசுபவன்
மந்தகாசம் - புன்சிரிப்பு
மயல் - மயக்கம்
மயூரம் - மயில்
மறி - ஆடு, மான் இவற்றின் குட்டி
மல்லல் - வளம்
மன்றல் - வாசனை திருமணம்
மாசுணம் - பாம்பு
மாடை பொன்
மாதரு - கற்பகமரம்
மாதிரம் - திசை
மாதுரியம் - மென்மை
மாபுரம் - திரிபுரம்
மாயி - துர்க்கை
மாரன் - மன்மதன்
மாலினி -மாலையை அணிந்தவள்
மாவுத்தன் - யானைப்பாகன்
மாறன் - பாண்டியன்
மானம் - பெருமை
மானாபிராமன் - மானத்தால் அழகுடையவன்
மானி - பெருமை உடையவன்
மித்துரவு - நட்பு
மிருகமதம் - கஸ்தூரி, புனுகு , சவ்வாது
மீசுரம் - மேம்படுதல்
முகமுரித்தல் - வெறுக்கச் செய்தல்
முகுந்தன் - திருமால்
முசுண்டர் -கீழ்மக்கள்
முண்டகம் - தாமரை, கழிமுள்ளி
முந்தி - முற்பட்டு
முராரி -திருமால்
முருகு சோபை - முள் முருங்கைப்பூவின் செந்நிற அழகு
முறுவல் - சிரிப்பு, பல்
மூசிய - மொய்த்த
மூரல் - சிரிப்பு
மைத்துனன் - விளையாடுதற்குரியவன்
மோகனம் - கவர்ச்சி
மௌலி - கிரீடம்
ராவுத்தர் - ஆற்றலுடைய வீரர்
லகு - எளிமை, நொய்ம்மை
லாகிரி - மயக்கம்
வங்கம் -படிப்பினை
வச்சிரமன் - வச்சிரம் ஏந்திய இந்திரன்
வட்டுவம் - ஒரு சிறுவகைப் பை
வடதரு - கல்லாலமரம்
வண்டு -தேனீ, வளையல்
வயிற்றுத்தலையன் -கவந்தன் என்ற அரக்கன்
வரம் - மேம்பாடு
வருக்கை - சிறந்தபலா
வல்லபி - ஆற்றலுடையவள்
வழுத்துதல் -வழிபடுதல்
வழுமனம் - தீமையில் ஈடுபட்ட மனம்
வளை - சங்கு - சத்ருக்கன்
வற்கலை - மரவுரி
வனசம் -தாமரை
வாரி - கடல்
வாருதி- கடல்
வாவி - குளம்
வானதி - ஆகாச கங்கை
விகடம் -வேடிக்கை
விகடித -வேடிக்கை செய்யும்
விசிறுதல் - வீசுதல், சொரிதல்
விச்சுவம் - உலகம்
விண்டு - திருமால்
விதரணம் - அழகு
விதனம் - மனத்துயர்
விபாடம் - அம்பு, பிளத்தல்
வியாமோகம் - மிக வருந்துதல்
விருத்தர் - மேம்பட்டவர்
விலாசர் -விளையாட்டுடையவர்
விற்பனன் - ஆற்றலுடையவன்
வீயார் -பகையர்
வீறும் - வேறுபடும், பெருமையுறும்
வேது - ஒத்தடம்

*******************************


This file was last updated on 23 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)