pm logo

நா. நல்லதம்பி எழுதிய
மட்டுவில் வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்


maTTuvil vIracakti vinAyakar piLLaittamiz
by maTtuvil nA. nallatampi
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft
copy of this work for publication
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மட்டுவில் வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்

மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர்
பிள்ளைத்தமிழ்
ஆக்கம் : மட்டுவில் நா. நல்லதம்பி
Source:
மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி
விநாயகர் பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் :- மட்டுவில் நா. நல்லதம்பி
பதிப்பு :- முதலாம் பதிப்பு - புரட்டாதி 2014
பக்கம் :- IV+30
பதிப்புரிமை :- ஆசிரியருக்கே
அச்சகம் :- பாரதி வெளியீட்டகம்
மீசாலை மேற்கு, மீசாலை.
பிரதிகள் :- 500
--------------------------------------------

சிவமயம்

மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர்
போற்றித் திருவகவல்


மட்டுவில் மருதடி விநாயக போற்றி
மட்டுவார் குழுலுமை மைந்தா போற்றி
சித்தியும் புத்தியும் அருள்வாய் போற்றி
பத்திசெய் யடியார் பாகத்தாய் போற்றி
வித்தக விநாயகா விமலா போற்றி
பொறுமையின் புகலிடம் ஆனாய் போற்றி
அறுகினை உவந்தருள் அளிப்பாய் போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
கற்றிடும் மாணவர்க் கருள்வாய் போற்றி
சொற்பதங் கடந்த சோதியே போற்றி
அருள்தரு நீள்கரங் கொண்டாய் போற்றி
இருள்கெட வேழமாய் இயைந்தாய் போற்றி
பிள்ளையாய்த் தமிழ்பாட வைத்தாய் போற்றி
கொள்ளையாய் இன்பந் தந்தாய் போற்றி
ஐங்கர மூர்த்தியே ஆனைமுகா போற்றி
பொங்கர வணிந்தான் புதல்வா போற்றி
போற்றி போற்றி ஜயஜய போற்றி.

வாழ்த்து
மட்டுவில் மருதடி விநாயகனே வாழி
காப்பு செங்கீரை தாலம் சப்பாணி
முத்தம் வருகை அம்புலி சிற்றில்
சிறுபறை சிறுதேர்ப் பருவங்கள் பத்தும்
பொருந்தப் பிள்ளைத்தமிழ் பாடவைத்தாய் வாழி
மருளறப் படிப்போர் கேட்போர் வாழி
நான்மறை அறங்கள் வாழி நல்லடி யாரும்வாழி
மேன்மைகொள் சைவம்வாழி செந்தமிழ் வாழிவாழி.


கணபதி துணை
மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர்
பிள்ளைத்தமிழ்

விநாயக வணக்கம்.

மருதடி விநாயகனே மட்டுவிற் பதியானே
திருவடி தொழுதோம் மால் மருகா ஒரு முதலே
உமைபாலா உன்பெயரில் பிள்ளைத் தமிழ் யாம் பாட
இமைப் பொழுதும் நீயே சரண்.

மோதகப் பிரியனே மட்டுவிற் பிள்ளையாரே
காதலாற் பிள்ளைத் தமிழ்பாடச் - சாதகமாய்ச்
சித்திபுத்தி தந்தருளித்து மணநிற்பாய் சிவபாலா
நித்தலுமுன் பாதமே சரண்.

அருவமாய் உருவாய் அருவுருவாய்ப் பேரின்பப்
பொருளதாய் மறைநான்காய்ப் பிரணவமாய் - ஒருவனாய்
நிற்கின்ற விநாயகர் பிள்ளைத் தமிழ் யாம் பாட
நற்குங் சரக்கன்றே துணை

நரைகோட் டிளங்கன்றே நல்லடியார் நாடும்வரம்
விரைந்தேற்றுத் தந்தருளும் விநாயகஉன் - விரைகழலை
நம்பியாம் நவிற்கின்ற பிள்ளைத் தமிழ் நன்கமையத்
தும்பிமுக மருதடியான் துணை

வினைநீக்கும் வேழமுக விநாயகனே விமலனே
நினைத்துனது பிள்ளைத்தமிழ் யாம் பாட அனைத்தும்
தந்தருளிக் காப்பாய் தான்தோன்றி விநாயகனே
எந்தையே சரணம் நாங்களே
------------------------

சிவமயம்
மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த "வேதவனக்கவிமாமணி"
திரு செல்வராஜா சுதாகரன் அவர்கள் வழங்கிய சிறப்புப் பாயிரம்

சீர்புத்த தென்மராட்சித் திருப்பதியே மேவும்
      மட்டுவிலின் வடபாலமர்ந்த
பேர்பூத்த மருதடியானைப் பிள்ளை யாக்கிப்
      பேசரிய பிள்ளைத்தமிழ் யாத்தார்
பேர்பூத்த பெருமறிஞர் பலர்கூடி வாழ்ந்து
      பேசரிய நல்வாழ்வு பெற்றுயர்ந்திட்ட
ஏர்பூத்த மட்டுவிலூர் மண்ணதில் வந்த
      ஏற்றுமுயர் நல்லாசான் நல்லதம்பிதானே

பெருமையுறு தென்மராட்சி வடபால் மேவும்
      பேரறிஞர் பலர்வாழ் மட்டுவிலில்
மருதடியாம் வயல்வெளியில் கோவில் கொண்டு
      மக்கள்குறை தீர்த்தருளும் தேவன்
ஒருகோட் டானைமுகப் பிள்ளையவர் தன்னை
      ஓரரிய குழந்தை வடிவாக எண்ணி
பெருமையுறு பிள்ளைத் தமிழை யாத்தார்
      பேரிறிஞர் நல்லதம்பிப் புலவோனே

காப்பொடு செங்கீரை தாலம் சப்பாணி
      கருதுமுயர் முத்தம் வருகையொடு
யாப்புறு நல்லம்புலி சிற்றில் சிறுபறை
      யாண்டும் அழகுற அமைத்துமே
தோப்புறு மட்டுவிலூர் வீதிகள் எங்குமே
      தொடர்ந்து சிறுதேருருட்டு வென்றே
மூப்புயர் கவிஞர் முதுபெரும் அறிஞர்
      முத்தமிழில் நன்கிதைப் பாடினாரே

திருவளரும் மட்டுவிலூர் வடபால் ஆங்கே
      திகழ் நல்லறிஞர் சூழ்ந்தே வாழும்
மருதடியாம் வயல்வெளியில் கோவிலுற்று
      மக்கள் குறை தீர்த்தருளும் தேவன்
கருணைமிகு கணபதியாம் ஐங்கரனை இங்கே
      கவலையிலாக் குழந்தை வடிவாக்கி
பெருமையுறு நல்லதம்பிப் பேரறிஞர் யாத்தார்
      பேசுமுயர் பிள்ளைத் தமிழ்தானே

ஓங்குபுகழ் மட்டுவிலூர் வடபால் அமைந்த
      ஒருங்குவளர் மருதமர நிழலிலமர்
தூங்குகை யொன்றொடு தான்தோன்றி வளர்ந்த
      தொன்மைமிகு மருதடியிற் பிள்ளையாரின்
ஓங்குமுயர் அற்புதங்கள் ஒன்றுகூட்டி யழகாய்
      ஒருபிள்ளைத் தமிழாக்கித் தந்தார்
பாங்குயர் புலவர் பைந்தமிழ் நல்லாசான்
      பகர்நல்ல தம்பிப் புலவோன் தானே

நல்லெழில் மட்டுவிலூர் நண்ணி வாழும்
      நல்ல தம்பிப் புலவோய் வாழி
சொல்லரும் செந்தமிழிற் தூயகவியாக்கும்
      சுந்தரநல் புலவோய் வாழிவாழி
தொல்லை யறுக்கத் தான்தோன்றி வளர்ந்த
      தூயநல் மருதடியான் அருளுடனே
எல்லையில் பல்லாண்டு பலகவிகள் இயற்றி
      ஏரகம்புகழ்ந்திட வாழிய வாழியவே
---------------------

மட்டுவில் மருதடி தான்தோன்றிவீரகத்தி விநாயகர்
பிள்ளைத் தமிழ்

பருவங்கள் பத்து
1. காப்புப் பருவம்
2. செங்கீரைப் பருவம்
3. தாலப் பருவம்
4. சப்பாணிப் பருவம்
5. முத்தப் பருவம்
6. வருகைப் பருவம்
7. அம்புலிப் பருவம்
8. சிற்றிற் பருவம்
9. சிறுபறைப் பருவம்
10. சிறுதேர்ப் பருவம்
முற்றும்.
----------

சிவமயம்
மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர்
பிள்ளைத்தமிழ்

[01] காப்புப் பருவம்

ஒருவெண் மருப்பொடித் துயர்பா ரதந்தந்தோன்
      ஓமெனும் பிரணவத்தி னுட்பொருளான்
பெருமையுள மட்டுவிடுலெம் பதிமேவி மருதடியில்
      பயிர்கள்விளை நிலங்கள்சூழ் தலத்தமர்ந்து
திருவருள்தந் தடியார்தம் சித்தத்துட் படுவோனாய்த்
      திகழ்வோன்மேற் பிள்ளைத்தமிழ் பாடுதற்கு
விரும்பினேற்கு வியனுலகு புரந்தருளுந் திருமாலே!
      விக்கினங்கள் வாராமற் காத்தருளே.       1

செங்கமலப் பைம்போதாய்! சிறீதேவித் தாயாரே!
      சீரடியார் சித்தத்துட் சிக்கிநிற்கும்
எங்கள் குல தெய்வமாய் மட்டுவிற் பதியாமர்ந்து
      ஏற்றந்தரு மருதடிவி நாயகன்மேல்
சங்கம்வளர் செந்தமிழாற் பிள்ளைத்தமிழ் பாடுதற்கு
      சங்கரனார் மூத்தபிள்ளை விநாயகற்கு
மங்களங்கள் கூறியென்றும் மாசகலப் பிள்ளையாரை
      மனமார வாழ்த்தி நின்று காத்தருளே.       2

பாதிமதி பாதியுடல் பாதியுமை தானாகி
      படைத்துங் காத்தும் அழித்தும்
பாதியாய் மூவருமாய்ப் பரமாளும் பெருமானே!
      பார்வதியார் பாகத்தனே! மூத்தவனாய்
மேதினியார் போற்றவருள் சுரந்தருளு மட்டுவிற்பதி
      மருதடியி லமர்ந்தவி நாயகனை
ஆதியைப் பிள்ளைத்தமிழ், பாடிநாம் போற்றுதற்கு
      அகத்திருந்து அருள்தந்து காப்பாயே.       3

நலந்தரும் நன்செய்யும் நல்லடியார் வாழ்வகமும்.
      நாற்புறமாய் மட்டுவிலில் தலங்கொண்டு,
வலம்வந்து தொழுமடியார்க் கருள்வழங்கும் தான்தோன்றி
      விநாயகர், மருதமர நிழலமர்ந்து
குலதெய்வ மாகநமக் கருள்வழங்கும் பிள்ளையார்
      குறித்துநாம் பிள்ளைத்தமிழ் பாடுதற்கு
புலமைநிறை கலைமகளே கலைவாணித் தெய்வமே!
      புத்திசித்தி பாலித்தெமை என்றுங்காப்பாய்.       4

மாதா பராசக்தி! வையமெலாம் நிறைந்தவளே!
      மருதமர நிழலமர்ந்த பிள்ளையார்க்கு
ஓதா வுணர்வும் ஒப்பிலாக் கருணையும்
      ஓ மெனும் மந்திர வடிவும்
ஆதார மாகநாம் பிள்ளைத்தமிழ் பாடியே
      அறுகம்புல் அர்ச்சித்து அருள்பெற
நாதா எனநின்று நந்தலைமேற் குட்டிவணங்க
      நற்கதி தந்தென்றுங் காப்பாயே .       5

அறநெறி வாழ்க்கையர் அனுதினமும் கூடியே
      அப்பனைப் பக்திசெய் தவனியிற்
திறமுற மட்டுவிற் பதியமர்ந் தருளும்
      பிள்ளையைப் பிள்ளைத்தமி ழாற்பாட
குறமகள் ஒருபால் குஞ்சரி ஒருபால்
      கூடிநின் னருள்தந்து காப்பாய்
அறத்தொடு பொருளு மின்பமும் வீடும்
      அளித்தருள் நல்லூர்ப் பெருமானே!.       6

மகிடா சூரனை மாய்த்தவற் கருளியே
      மாநிலங் காத்தருள் துர்க்கையே!
அகிலாண்டேஸ்வரி அம்பிகை பாலனாம்
      ஆனைமுக னைப்பிள்ளைத் தமிழ்பாடி
மகிழவே மயக்கறுத் தென்றுமெமைக் காப்பாய்
      மட்டுவிற் பதிவாழ் அடியாரவர்
மகிமை பெற்று வணங்கி அவர்திரு
      மலர்ப்பதம் போற்றிநல் வாழ்வுறவே.       7

நறைமலர் கொண்டடி யாரலொம் கூடியே
      நாள்தொறும் விநாயகன் புகழ்பாடி
பிறையணி பெருமான் பயந்தகரி முகத்தனைப்
      பேதையான் பிள்ளைத்தமி ழாற்பாடி
மறைவலர் போற்றிடும் மட்டுவிலூர் மருதடிப்
      பிள்ளையைப் போற்றிநாம் வணங்கவும்
குறையின்றிக் காக்கட்டும் செல்வச்சந் நிதிப்பெருமான்
      கந்தனின் கழலிணை தாமே.       8

சத்தசத்து இயல்புணர்ந்து மெய்ப்போத ஞானமாம்
      தத்துவ நிலைபெற முயல்வோர்
சித்தத்துட் தித்திக்குந் தேனைச் சிவபாலனைச்
      சேவடி தொழுது வணங்கியே
சுத்தசெந் தமிழாற் பிள்ளைத்தமிழ் பாடவே
      சுகமருளி யெமை யென்றுங் காப்பான்
வித்தகனே சத்திநிபாதா சித்திபுத்தி தந்தருளும்
      விநாயகன் விரைகழல் சரணே.       9

கரமது கொண்டுநம் சிரசினிற் குட்டியும்
      காதினைப் பிடித்து மும்முறை
சிரமது தாழ்த்தித் தொழுதெழ அருள்செயும்
      மட்டுவில் மருதடி விநாயகன்
பேரருள் பெறவே பிள்ளைத்தமிழ் யான்பாட
      பைரவ மூர்த்தியே காப்பாய்
பரமனருள் புதல்வா பாவவினை போக்கும்
      பிள்ளையார் பதமலர் தலைக்கணிவோமே .       10

காப்பு முற்றிற்று
---------------

(02) செங்கீரைப் பருவம்

அம்மையும் அப்பனும் உலகென உணர்ந்து
      அங்கவர்க் காணாது, அங்கம்புரண்டு
வெம்பியும் விசும்பிற் தேடியுங் காணார்
      விம்மியும் கண்ணீர் மல்கியும்
தம்பியோ மயிலேறித் தாவிப் பறந்தான்
      தாயும் தந்தையும் உலகென
நம்பிய மட்டுவில் மருதடி விநாயகன்
      நலமுடன் செங்கீரை யாடியருளே.       1

பங்கய மலர்ப்பாதந் தலைமேற் சூடிநின்று
      பரவிடும் பான்மைய ராகிய
எங்களடி யார்தொழ எழிலார் மட்டுவிலூர்
      மருதமர நிழலமர்ந்த விநாயகன்
துங்கக் கரிமுகத்துத்தூமணியே நினது
      தூங்குகை தூக்கி யருள்செய்து
எங்கள்குல தெய்வமே ஏறூர்ந்தான் பிள்ளையார்
      எழிலாகச் செங்கீரை ஆடியருளே.       2

பார்புகழ் மட்டுவிலூர் மருதமர நிழலிற்
      பாங்காய் அமர்ந்தருள் செய்திடும்
சீர்உள சித்திபுத்தி விநாயகன்! விண்ணோர்
      போற்றிடும் வல்லபைக் கணபதி!
கார்நிற மேனியன் கற்பகக் களிறே!
      செங்கீரை யாடி யருளே
சார்பவர் சிந்தையிற் படுகின்ற பிள்ளையார்
      செங்கீரை யாடி யருளே.       3

சுரும்பு முரன்றலர் கொன்றை சூடிய
      சுந்தர வதனப் பிள்ளையார்
விரும்பி படியவர் போற்றி வணங்க
      விரைகழ லசைத்து மலர்முகத்
தரும்பு புன்னகை தவழ்ந்திட மருதடி
      விநாயக செங்கீரை ஆடியருளே
கரும்பினுமினியநல் லமுதெனு மொழிபயில்
      கணபதி செங்கீரை ஆடியருளே.       4

புனந்தனில் தினைக்காவற் போதந்தக் குறமகள்
      புந்தியிற் குமரனைக் கொண்டவள்
மனந்தனில் ஆட்கொள விரும்பிய முருகன
      முதியனாய் வள்ளியை அணுகவே
வனமகள் விலகி யோடவும், வேழமாய்
      உதவினாய் செங்கீரை ஆடியருளே
மனமார் கருணைக் கரிமுகக் கணபதி
      மழலையாய்ச் செங்கீரை ஆடியருளே.       5

பருப்பொடு பாலும் பாகுந் தேனும்
      பற்றியே முத்தமிழ் அருளிய
மருப்புடை யான்மதக் களிற்று மாமுகன்
      மாண்புடை படியவர் மனத்துறை
விருப்புள விநாயகன் விண்ணவர் தலைவன்
      செங்கீரை ஆடி அருளே
ஒருமருப் பொடித்துயர் பாரதந் தந்தவன்
      செங்கீரை யாடி அருளே.       6

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
      கப்பிய கரிமுகன் அடிபேணிச்
சித்தியும் புத்தியும் சித்திக்கு மடியவர்
      சிறப்புற வாழ்ந்திடும் மட்டுவில்
மத்தியில் மருதடி நிழலமர் விநாயகன்
      செங்கீரை ஆடி அருளே
முத்திக்கு வழிசெயும் மூஷிக வாகனன்
      செங்கீரை ஆடி அருளே.       7

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
      நாலுக்கு மூன்றுதமிழ் தந்தவனே!
ஆலும் அரசும் கோயிலாய் அறுகம்புல்
      அர்ச்சனையாய், ஆதியந்தம் இல்லானாய்,
வேலும் மயிலும் உள்ளவனுக் கண்ணனே
      செங்கீரை ஆடி அருளே
மாலு மயனுங் காண்கிலா முக்கண்ணன்
      செங்கீரை ஆடி அருளே.       8

மாங்கனிக்காய் மயிலேறி மாநிலத்தைச் சுற்றிவந்த
      முருகனுக்கு, மாதாபிதா உலகமென,
ஆங்கவர்தாம் உணரவருள் ஆனைமுக கணபதி
      ஆறுமுகள் அண்ணலே விநாயகன்,
ஓங்குபுகழ் முத்தமிழை ஒளவைதனைக் குணர்த்தியவன்
      செங்கீரை ஆடி அருளே
தூங்கியகை யுடையானே தூயவனே மருதடியானே
      செங்கீரை ஆடி அருளே.       9

கானலை நீரென்று கண்டலையு மானென
      மயங்கிடு மடியார்க்கு அருளியும்
ஞாலமுங் கல்வியும் நயந்தருள் பிள்ளையார்
      ஞாலத்தார் புகழ்கின்ற மட்டுவிலூர்
வானவர்கள் தொழுதேத்த மருதமர நிழலமர்ந்த
      விநாயகன் செங்கீரை யாடியருளே
போனகமாம் வாழ்வுதந்து அருள்செய்யும் விநாயகன்
      புண்ணியன் செங்கீரை பாடியருளே.       10

செங்கீரைப் பருவம் முற்றிற்று
----------------

(03). தாலப்பருவம்

தெங்குபனை சேர்ந்துவளர் மருதநில மட்டுவிலூர்த்
      தான்தோன்றி விநாயகனாய் அமர்ந்தருளும்
பொங்குபுகழ்க் கருணையுள கணபதியே! கரிமுகனே!
      புலமை மிகு மெய்யடியார் போற்றித்தொழ
மங்கையராம் சித்திபுத்தி மருங்காக மலமகற்றி
      மயக்கறுத்து அடியார்க்கு வரமருளும்
எங்கள் குல தெய்வமே விநாயகனே கயமுகனே!
      ஏரம்பனே தாலோ தாலே லோ.       1

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
      கப்பிய கணபதிப் பிள்ளையார்
மத்தள வயிற்று விநாயகா! மாயோன்
      மருமகனே! மருதமர நிழலமர்ந்து
உத்தமி புதல்வனே உம்பர்கட் கரசே!
      உத்தம அடியார் தமக்கருளும்
வித்தக விநாயக விரைகழல் வேந்தே
      வேழமுகா தாலோ தாலே லோ.       2

மூலத்தின் முழுமுதலே முயல்வோர் தமக்கருளும்
      முக்கண்ணுடையானே விநாயகனே
ஞாலத்தின் நாயகனே ஞானமும் போதமும்
      ஆனவனே! விக்கினவி நாயகனே!
ஆலத்தைக் கண்டத்தி லடக்கியருள் பரமனின்
      மூத்தவனே முருகனுக்கு முன்பிறந்த
சீலத்தின் சிகரமே சிந்திப்பார் சித்தத்தில்
      சிவமயமே தாலோ தாலே லோ.       3

வேய்மருவு தோளார் சித்தியும் புத்தியும்
      விளங்கவருள் பாலிக்கும் விநாயகன்
தேய்மதியம் வேணியணி சிவனாரின் மூத்தவன்
      திருவிளங்கு கணபதிப் பிள்ளையார்
தூய்மையுள பெருமானே தும்பிமுக முடையவனே!
      துதிப்போர்தம் வல்வினை களைபவனே!
ஆயகலை அறுபத்து நான்கிளையு மளிப்பவனே!
      ஆனைமுகா தாலோ தாலே லோ.       4

தலைபத்தோ னிராவணன் தாய்வணங்க இமயகிரி
      தனையசைக்க உமையாள் கரம்பற்றுந்
தலைமகனே! தன்னடியார் இதயமதி கோயிலாக்
      கொண்டருளுந் தான்தோன்றிப் பிள்ளையாரே!
நிலையில்லாப் பற்றறுக்கும் பசுபதியே நின்மலனே
      நிலையான பதமருளும் பிள்ளையாரே
நிலைகொண்ட மருதமர நிழலமர்ந்து வரமருளும்
      நின்மலனே தாலோ தாலே லோ.       5

ஐங்கரனே பன்னிருகை வேலவற்கு முன்பிறந்து
      அன்பர்தமக் கானநிலை தருபவனே
பொங்கரவ மணிந்தசிவ மைந்தனே எமக்கருளும்
      புண்ணியனே! புனங்காத்து நின்றகுற
மங்கைவள்ளி மணம்புணரத் தம்பிக்காய் வனஞ்சென்று
      மதயானை வடிவெடுத்த விநாயகனே
அங்கயற்கண் உமைபாகத் தேறூர்ந்தான் மூத்தவனே
      ஆனைமுகா தாலோ தாலே லோ.       6

ஆதியும் அந்தமும் இல்லாத சோதியே
      சுடரொளி விளக்காய் நின்றருளி
ஓதியும் உணர்ந்தும் உம்பரும் அறியவொண்ணா
      ஓம்எனும் வடிவே விநாயகா
வேதியனே விக்னவி நாயகனே மருதநிழல்
      விரும்பியுறை கின்றபரம் பொருளே
மாதிருவர் சித்திபுத்தி மருங்கமர அருள்சுரக்கும்
      விநாயகனே தாலோ தாலே லோ.       7

கண்ணுதற் பெருமானே களிற்றுமா முகத்தவனே
      கருதிய கருமங்கள் முற்றுற
மண்ணுலக கத்தினில் மாண்புடன் வாழ்ந்திட
      மலவிருள் அகற்றிநல் லருள்செய்து
விண்ணுல கெய்திடச் செய்தருள் விநாயகன்
      மருதமர நிழலிலே மட்டுவிற்பதிப்
பண்புள அடியவர்க் கருள்செய்யும் பரமனார்
      பாலனே, தாலோ தாலே லோ.       8

தும்பிக்கை யுடையவனே துயர்களையும் பிள்ளையார்
      துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம்
அம்பிகையார் பாலகனே ஆனைமுகத் தவனே உன்
      அருள்தரவே நீண்டகரங் கொண்டனை
நம்பிக்கை கொண்டடியார் உனைவேண்ட இன்னருளை
      நல்கிடுவாய் மருதடியில் மட்டுவிலூர்
தம்மடியார்க் கருள்புரியும் தான்தோன்றி விநாயகனே
      தந்திமுகனே தாலோ தாலேலோ.       9

ஏகதந்தனாம் வேழமுகப் பெருமானே எம்மடியார்
      எல்லோர்க்கும் அருள்புரிந்து கருணைமழை
மேகமெனப் பொழிந்தருளு மேன்மைகொண்டவிநாயகனே
      மெய்ப்பொருள் காட்டித்தீ வினை போக்கும்
ஆகமமான ஆனைமுகத் தண்ணலே அனுதினமும்
      அர்ச்சிக்க அறுகம்புல் போதுமையா
வேகமது கெடுத்தாளும் வேந்தனே வேழமுகனே
      விநாயகனே தாலோ தாலே லோ.       10

தாலப் பருவம் முற்றிற்று
------------------------

(04) சப்பாணிப் பருவம்

பக்குவ மிக்குமல பரிபாகம் பெற்றடியார்
      பேரின்பம் பெறவுன்னை வேண்டுவரே
முக்கணுள முதல்வனே மூஷிகவா கனத்தனே
      மட்டுவில் மருதமர நிழலமர்ந்து
தக்கவகை நினதருள் பாலிக்கும் விநாயகா
      தாமாகச் சப்பாணி கொட்டியருளே
எக்கணமும் உனைவணங்கி எம்மடியார் அருள்பெற
      ஏரம்பா சப்பாணி கொட்டியருளே.       1

மட்டுவிலெம் பதியமர்ந்து அருள்செய்து அடியார்தம்
      மயக்கறுத் தவரிதயத் துறைபவனே
மட்டவிழுங் கொன்றையணி மதிசூடிப் பெருமான்தன்
      மூத்தவனே மருதடிப் பிள்ளையாரே
இட்டமுட னுன்னடியார் ஏத்தியுனைத் தொழுவதற்கு
      இயல்பாகச் சப்பாணி கொட்டியருளே
அட்டதிக்கி லிருந்தடியார் வந்துதொழ வாய்ப்பாக
      ஆனைமுகா சப்பாணி கொட்டியருளே.       2

தும்பிமுக கணபதியே தூக்கியுனை வளர்த்தவர்
      தம்மனதில் இன்பமுற எழுந்தருளி
அம்பிகையாள் பாலகனே அமரர்க்கும் அறியவொண்ணா
      ஆனைமுக கணபதியே அமரரேறே
நம்பியுனை வணங்கிநிதம் நின்கோயில் வலம்வருவோர்
      நலம்பெறச் சப்பாணி கொட்டியருளே
எம்மிறைவா மருதடியானே இணையடிகள் இதமாகச்
      சப்பாணி கொட்டி யருளே.       3

மழலை மொழி பகர்கின்ற மாண்புடைய விநாயகா
      மாதவனின் மருகோனே மருதமர
நிழலமர்ந்து அருள்வழங்கு நின்மலனே நினதுதிரு
      வடியிணை தொழுதிட அனுதினமும்
அழகியவுன் அகத்தினி லரும்புபுன்னகையொடு
      சப்பாணி கொட்டி யருளே
பழமுதிர் சோலையமர் முருகனுக்கு மூத்தவனே
      சப்பாணி கொட்டி யருளே.       4

பவளமால் வரைநிலவு எறிப்பது போற் பரந்தநீற்
      றழகுபச் சுடம்பினில் எழிலாகத்
திவளமா துடன்நின் றாடியாரமன் சிறுவனே
      திருவடி கண்டி யார்தொழ
கவளமா களிற்றின் திருமகம் படைத்த
      கணபதி சப்பாணி கொட்டியருளே
துவளவெண் மருப்பொடித் தெழுதியே பாரதந்
      தந்தவா சப்பாணி கொட்டியருளே.       5

சித்திதந்து புத்திதந்து செந்திருவுஞ் சேர்விக்கும்
      சீர்கொண்ட சித்திவி நாயகனே
முத்திதரும் முறையாக மூலமலம் அறுவித்து
      மட்டுவிலெம் பதியுறையும் விநாயகனே
பத்திதந்து அருள்தந்து அடியார்தம் உளத்தமரும்
      பசுபதியே சப்பாணி கொட்டியருளே
உத்தமனே மருதமர நிழலமர்ந்த விநாயகனே
      உமைபாலா சப்பாணி கொட்டியருளே.       6

ஒருகொம்பன் இருகையன் மும்மதத்தன் நால்வாயன்
      ஐங்கரத்தன் ஆனைமுகன் எனவிளங்கி
மருதமர நிழலமர்ந்து மட்டுவிலெம் மடியவர்க்கு
      மயக்கமற அருள்புரிந்து வாழ்வளிக்கும்
கருணையுள கரிமுகத்து விநாயகனேவிரை கழல்
      விளக்கமுறச் சப்பாணி கொட்டுகவே
திருவடிகள் திறனறிந்து தொழுமடியார் இன்பமுறத்
      தயாபரனே சப்பாணி கொட்டுகவே.       7

நரைகோட் டிளங்கன்றே நெல்வயல்கள் நிறைந்தவள
      நாடான மட்டுவிலூர் மருதடியிலமர்ந்த
விரைகழல் விநாயகனே விண்ணோர் தொழுதேத்த
      வியனுலகு போற்றியிசை பாடவருள்
வரையாது வழங்கியருள் பாலிக்கும் விநாயகனே
      விருப்பமொடு சப்பாணி கொட்டியருளே
உரையுணர் விறந்தமெய்ப் பொருளே உமைபாலா
      உளமாரச் சப்பாணி கொட்டியருளே.       8

வாக்குண்டு மனமுண்டு மாமலரான் நோக்குண்டு
      எனநம்பித் தொழுவோர்க் கருள்வழங்கிக்
காக்கின்ற கற்பகக் களிறே கயமுகனே
      கணபதியே காண்பரிய பேரொளியே
ஆக்கியுங் காத்தும் அழித்தும் அருளியும்
      மறைத்தும் ஐந்தொழில் புரிபவனே
வாக்கினால் மனத்தால் உணரவெண்ணா விநாயகனே
      வாகாகச் சப்பாணி கொட்டியருளே.       9

திருவாக்கும் செய்கருமம் கைகூடுஞ் செஞ்சொற்
      பெருவாக் கொடுபீடும் வருக்கியே
உருவாக்கி நம்மடியார் உய்தி பெற அருள்வழங்கும்
      உமைபாலா! உம்பர்தம் பதிமேவிப்
பெருவாழ்வு பெற்றுநாம் பேரின்ப வாழ்வுபெறப்
      புண்ணியனே சப்பாணி கொட்டியருளே
திருவிளங்கும் மட்டுவிலெம் பதியமர்ந்த மருதடியிற்
      பிள்ளையாரே சப்பாணி கொட்டியருளே.       10

சப்பாணிப் பருவம் முற்றிற்று
---------------------

(05) முத்தப் பருவம்

ஒருகொம் பொடித்துயர் பாரதம் எழுதிய
      ஓரானைக் கன்றே உமைபாலா
வருவினை யகன்றிட மட்டுவில் வயலூர்
      வளநிறை பதியமாந் தருளியே
திருவொடு கல்வியும் சீருந்தந் தருளும்
      தான்தோன்றிப் பிள்ளையார் விநாயகனே
இருகையு மூன்றித் தவழ்ந்திடு மழலையே
      இனியதாய் முத்தந் தருகவே.       1

நரைகோட் டிளங்கன்றே நல்வளஞ்சேர் மட்டுவிலை
      நயந்துதல் மாக்கொண்ட விநாயகனே
உரையுணர் விறந்த நம் ஒப்பரிய கற்பகமே
      ஓமெனு மந்திரப் பொருளானே
விரைமலர்த் தாளினை கண்டுநின் அடிதொழ
      வேண்டுவரந் தந்தருள் விநாயகனே!
கரையிலாக் கருணைமா கடலே கணபதியே
      கனிவான முத்தந் தருகவே .       2

மலரவனும் பிரமாவும் தேடியும் காண்கிலா
      மதயானை முகனேநம் பிள்ளையாரே
குலவடியார் கும்பிடக் குதித்தோடுங் குஞ்சரமே
      கண்ணுதற் பெருமானே கணபதியே
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
      அருளிய தத்துவ அண்ணலே!
மலமகற்றி வாழ்வுதந்து மட்டுவிலூர்க் கருள்புரியும்
      மருதடியான் முத்தந் தருகவே.       3

வெள்ளைப் பாலுந் தேனும் பருப்பும்
      பாகுங் கலந்து ஒளவை
அள்ளித் தரவுண்டு சங்கத் தமிழ்மூன்று
      அன்றருளிச் செய்தஎம் ஆனைமுகனே!
புள்ளி மயிலோன் புனஞ்சென்று வள்ளியைப்
      புதுமணங் செய்யத்துணை புரிந்தவனே
கொள்ளைக் கருணைக் கணபதியே! கற்பகக்
      களிறே முந்தந் தருகவே.       4

வரந்தரும் நீள்கரமும் வினைநீக்க வேழமுகமும்
      கொண்டு விளங்கும் குஞ்சரமே
புரந்தரனும் மாலயனும் காண்பரிய கணபதியே
      பத்திமையார் சித்தத்துட் படுபவனே
நிரந்தரம் மருதமரத் தடியமர்ந்து மட்டுவிலை
      நீங்காத் தலங்கொண்ட நின்மலனே
சுரந்தபுன் னகைமலர வேழமா முகத்தவனே
      சுந்தரனே முத்தம் தருகவே.       5

ஓங்கார வடிவம்நீ காணநாதா உனதுமுக
      ஒளியில்நீ சூரியனும் சந்திரனும்
பாங்கான ஐந்துகரம் பாதமலர் இரண்டு
      பக்திசெயு மடியார்கள் மனத்தில்
நீங்காது நின்றருளும் நின்மலனே மட்டுவிலெம்
      பதியுறையும் விநாயகனே பிள்ளையாரே
காங்கேயற் கண்ணனே கற்பகக் களிறான
      குழந்தையே முத்தந் தருகவே.       6

குஞ்சரக் கன்றுநீ நண்ணிடிற் கலைஞானங்
      கற்குஞ் சரக்கன்று காணென
நஞ்சினிற் கொண்டுமா பதிசிவாச் சாரியார்
      செப்பிய திறனது பொய்க்குமோ
அஞ்சுகை ஆனவா அரனாரின் தத்துவம்
      மருதடிப் பிள்ளையார்
விஞ்சிய அருள்தந்து விளங்குநம் மட்டுவில்
      விநாயக முத்தந் தருகவே.       7

உலகெலா முணர்ந்து கொளவருள் மழைபொழி
      வேழமா முகத்துவி நாயகன்
நிலவுலாவிய நீர்மலி வேணிப் பிரான்தன்
      நீள்கரத் தானைமுக விநாயகன்
துலங்குவெண் ணீறணியுந் தூமணியே சங்கத்தமிழ்
      தந்தவா தந்திமுக தெய்வமே
அலகிலா மறையோது மந்தணர் சூழ்ந்திட
      அழகாக முத்தம் தருகவே.       8

தேவருஞ் சித்தரும் கணங்களுஞ் சூழ்ந்திடச்
      சூரிய சந்திர ஒளியென
ஏவருங் கண்டிடா ஓம் எனும் ஒலியாய்
      இசைந்தஎம் இறவைா விநாயகா
பூவடி முடிமிசைப் புனைந்து போற்றினோம்
      புதுமையாய் முந்தந் தருகவே
தேவனே திருவாய் மலந்தருள் விளங்கத்
      தெவிட்டாத முத்தந் தருகவே.       9

தஞ்சமென உன்னடியைச் சார்ந்திடு மடியவர்
      தமக்கருள் தந்திமுக விநாயகன்
அஞ்சுகரத் தண்ணலே ஆனைமா முகத்தனே
      அறுகினில் அமர்ந்தருள் தருகின்ற
குஞ்சர முகத்து மருதடிப் பிள்ளையார்
      கனிவுறு முந்தந் தருகவே
பஞ்சின்மெல் லடியிணை பரவிநாம் போற்றவே
      பாங்கான முந்தந் தருகவே.       10

முத்தப் பருவம் முற்றிற்று
--------------

[06) வருகைப் பருவம்

சுத்தவொளி யாகியறி வாகிமல மாயைத்
      தொடக்கிற் படாத நிறைவாய்
வைத்தருள எமைப்போல் எடுத்தநின் திருமேனி
      காட்டியே மட்டுவில் மருதடி
அத்தினம் அமர்ந்தருள் தான்தோன்றி விநாயகன்
      தவழ்ந்து அருள்செய வருகவே
கைத்தலத் தங்குச பாசந் தரித்துயர்
      வேழமே தவழ்ந்து வருகவே.       1

முத்தமிழை ஔவையார்க் கன்றருளிச் செய்தஎம்
      மோதகப் பிரியனாம் விநாயகன்
மத்தள வயிற்றினன் மட்டுவிலில் அமர்ந்தனன்
      மெய்ஞ்ஞான போதமென் றிரண்டையும்
எத்துணையும் அடியாருக் களித்தருளு மானைமுகன்
      இன்பமாய்த் தவழ்ந்து வருகவே
வித்தகனே விநாயகனே விரைகழலு மிருகையுங்
      கொண்டு தவழ்ந்து வருகவே.       2

வெண்டரள நீள்கோட்டு வேழமுக விநாயகன்
      விரும்பித் தவழ்ந்து விளையாடிக்
கண்டவர்கள் களிப்புடன் துதிக்கவருள் செய்துமே
      கரிமுகனே கவழ்ந்து வருகவே
வண்டலர்த்த மாலைபுனை சித்திபுத்தி சத்தியர்கள்
      விளங்கிடத் தவழ்ந்து வருகவே
பண்டுதான் தோன்றியாய் மட்டுவிற் பதியமர்ந்த
      மருதடியான் தவழ்ந்து வருகவே.       3

இருகை யூன்றி மழலை மொழிந்து
      இன்பம் பெருக வருகவே
மருவும் அடியார்கள் மனத்துறைந் தருளும்
      மட்டுவிற் பதியமர் விநாயகன்
திருவுங் கல்வியும் சீரும் பெருகித்
      தினமுந் தொழுது வாழந்திட
மருதடி நிழலமர் களிற்று மாமுகப்
      பிள்ளையே தவழ்ந்து வருகவே.       4

பெற்றவர்கள் உலகமெனக் காட்டிய எம்விநாயகன்
      பேதைமை யகன்றுநல் வாழ்வுபெறக்
கற்றவர்க்குங் கல்லாக்கும் கனிந்தருளுங் கணநாதன்
      கழலினை காட்டியருள் தருகவே
முற்றறிவும் முக்கண்ணும் எண்குணமும் உடையானே
      மட்டுவிற் பதியமர்ந் தருள்பவனே
நற்றவத்து நல்லடியார் நலம்பெற்று வாழ்வுபெற
      நாயகனே தவழ்ந்து வருகவே.       5

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
      கப்பிய கரிமுகா வுனைத்தொழ
மத்தியாய் மட்டுவிற் பதியினில் மருதடி
      நிழலமர் நின்மல நாயகன்
அத்தினம் அறுமுகன் படுதுயர் கண்டுடன்
      அப்புனம் அதனிடை இபமாகி
கைத்தலம் பற்றியக் குறமகள் மணம்பெற
      வைத்தவா தவழ்ந்து வருகவே.       6

வளமிகு செந்நெல் வயல்நடு வமர்ந்தருள்
      விநாயக மட்டுவிற் பதியினில்
உளமகிழ்ந் தடியார் தொழுதுதம் முன்செய்
      ஊழ்வினை நலிவுற அருளியே
அளவிலாக் கருணையின் மழைபொழி கணபதிப்
      பிள்ளையே தவழ்ந்து வருகவே
துளாயணி திருமால் மருகனே தும்பிக்
      கையனே தவழ்ந்து வருகவே.       7

மாதொரு பாகனார் மாதவப் பிள்ளையே
      மட்டுவில் மருதமர நிழலமர்ந்து
போதொடு நீர்சுமந் தேத்தும் அந்தணர்
      அடியார் தமக்கருள் ஐங்கரன்
யாதொரு கோயிலும் வேண்டான் தெருவும்
      ஆலும் அரசும் மருதும்
போதுமென் றமர்வான் புன்னகை முகத்தோன்
      பொன்னடி தவழ்ந்து வருகவே.       8

அருள்தரும் நீள்கரமும் அல்லலகற்று மானைமுகமும்
      அடியார்க ளுய்திபெறு வகையமைய
மருள்கெடுத்து மட்டுவிலெம் பதியமர்ந் தருளும்
      மருதடிப் பிள்ளையார் அடியார்
இருள்கெடும் சூரிய சந்திர ஒளிவடிவும் ஓம்எனும்
      இசைவடிவுங் கொண்டவனே அடியார்க்கு
அருள்வழங்கும் மேன்மையுள ஆனைமுக விநாயகனே
      அழ காகத் தவழ்ந்து வருகவே.       9

ஒருகொம் பொடித்துயர் பாரதந் தந்தளம்
      உமைதரு பாலனாம் பிள்ளையார்
கருதிடு மடியவர் கருத்தினிற் படுவோன்
      கமநிலஞ் சூழ்தலத் தமர்ந்து
மருதடி விநாயகன் மக்கள்தொழு தேத்திட
      மனங்கொண்டு தவழ்ந்து வருகவே
இருகரங் கூப்பியும் இன்னிசை பாடியும்
      இறைஞ்சிடத் தவழ்ந்து வருகவே.       10

வருகைப்பருவம் முற்றிற்று
---------------

(07) அம்புலிப் பருவம்

மாங்கனி பெற அன்று மயிலேறி உலகினை
.       வலம் வந்த குமரனின் காட்சியால்
ஆங்கது பெற்றிடப் பெற்றோரை வலம்வந்த
.       ஆனைமுக னானஎம் விநாயகன்
தூங்குகை யுடையவன் தும்பிமுகன் மட்டுவிற்
.       பதியினில் மருதமர நிழலில்
ஓங்கிய புகழுடன் அமர்ந்தருள் விநாயகப்
.       பெருமானொ டம்புலி! ஆடவாவே.       1

கானல்நீர் விழைந்த மானென உலகக்
.       கட்டினைப் பற்றிநின் றுழலும்
ஊனமில் லடியார்கள் வாழ்கின்ற மட்டுவில்
.       உற்றருள் பாலிக்கும் ஐங்கரன்
ஆன எங் கணிபதிப் பிள்ளையார் தம்மோடு
.       அழகாக அம்புலீ! ஆடவாவே
காமர் வள்ளியைக் குமரற்கு மணஞ்செய்த
.       கரிமுகனொ டம்புலீ! ஆடவாவே.       2

விண்ணவர் போற்றிடும் மெய்கண்ட விநாயகன்
.       விரும்பியே மருதமர நிழலமர்ந்து
மண்ணவர் தொழுதுநல் வாழ்வினைப் பெற்றிட
.       மட்டுவில் தலமாகக் கொண்ட எம்
கண்ணுதற் பெருமான் களிற்றுமா முகனாம்
.       கணபதிப் பிள்ளையா ரோடிணைந்து
விண்ணிலே தவழும் வெண்மதி நிலாவே
.       விநாயகனொ டம்புலீ ஆடவாவே.       3

திருவொடு கல்வியுஞ் சீருஞ் சிறப்புறத்
.       திருவருள் தந்துமட் டுவிற்பதி
மருதடி நிழலமர்ந் தடியவர்க் கருள் பொழி
.       மும்மத வேழமு கத்தானொடு
ஒருமித்து விளையாட விண்வெளி விட்டிங்கு
.       ஓடவும் ஆடவும் வாவே
வெருவுறு வேழமா முகத்தெம் பிரானொடு
.       விரும்பிவந்தம்புலீ! ஆடவாவே.       4

மண்ணகப் பற்றறுத் தாட்கொள அடியவர்
.       மனங்களில் கோயில்கொள் விநாயகன்
விண்ணகத் தேவருந் தேடியும் காணிகிலான்
.       விரைகழல் விநாயக மூர்த்தியொடு,
எண்ணரும் அடியவர் ஏத்தவும் போற்றவும்
.       அம்புலீ ஆட வாவே
புண்ணிய மூர்த்தியாம் புழைக்கை யானொடு
.       அம்புலி ஆட வாவே.       5

திங்களணி வேணியா னெம்பிரான் பிள்ளையார்
.       தினந்தோறும் தொழுமடியார்க் கருள்வழங்கி
எங்களூர் மட்டுவிலில் எழுந்தருளும் விநாயகன்
.       எலிவா கனத்தில் எழுந்தருளும்
ஐங்கர மூர்த்தி ஆனைமுகத் தண்ணலொடு
.       அம்புலி ஆடவாவே
பொங்கரவ மணிந்தசிவ மைந்தனாம் விநாயகனொ
.       டம்புலீ! ஆட வாவே       6

கரும்பினை விரும்புங் கற்பகப் பிள்ளையார்
.       கணபதி, கயமுகன், கண்ணுதற்
பெருமான் இன்னருளால் மருள்தவிர்ந் தடியார்
.       போற்றிட மட்டுவிற் பதிமேவி
மருதினைத் தலமர மாக்கொண்டெழுந்தருள்
.       விநாயகனொடம்புலீ ஆடவாவே
துரும்பென எண்ணிய கயமுக னைமாய்த்த
.       தூயவனொடம்புலி! ஆடவாவே       7

உமைபாகர் உலகென்று உணர்த்திய விநாயகன்
.       உளங்கொண்டு மட்டுவிலெம் பதியமர்
இமையாத நாட்டத்து இமயவருங் காண்பரிய
.       எங்கள் குல தெய்வமாம் விநாயகன்
எமையாண்டு கொண்டருள் ஏரம்ப மூர்த்தியொ
.       டெழிலாக அம்புலீ! ஆடவாவே
அமைதியாய் ஆல் அரசு வேம்புநிழல் கோயிலாய்
.       அமர்ந்தவனொ டம்புலீ! ஆடவாவே       8

தெருளாத தக்கனார் வேள்வியழித் தும்பர்தம்
.       சென்னி உருட்டி யுனைத்தேய்த்தான்
அருளாசி பெற்றிட ஆகாயம் விட்டுவந்து
.       அம்புலீ! ஆனைமுகத் தெம்பிரான்
மருதமர நிழலமர்ந்து மட்டுவிற் பதியுறை
.       மக்களுக் கருள்தரு மானைமுகன்
அருளாசி வேண்டநீ! அம்புலி! ஆடவாவே
.       ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே       9

கண்டவர் வியப்புறும் வகைஅருணன் ஒளியால்
.       கவினார் ஒளியைப் பெற்றிடும்
பண்பினால் நின்னை யொத்திடும் வேழமுகன்
.       மட்டுவிற் பதியினில் மருதமர நிழலமர்
வெண்டரளக் கொம்பன், வேழமுகத் தெம்பிரான்
.       விநாயகனொ டம்புலீ! ஆடவாவே
அண்டரும் பழமறையும் ஓலமிட நின்றஎம்
.       ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே       10

அம்புலிப்பருவம் முற்றிற்று
-------------

(08) சிற்றிற் பருவம்

அளவிலாச் செந்நல்விளை வயலூர் நடுவமர்ந்து
      அடியார்க் கெளியராய் அருள்புரியும்
உளங்கொண்ட உமைபாலா உன்னடியே தொழுகின்ற
      உத்தமரா மங்கையர்தம் மனங்கொண்ட
களவில்லாச் சிற்றில் சிதையேல் கணநாதா
      மருதமர நிழலில் தீர்த்தக்
குளத்தருகில் வீற்றிருந்து அருள்சுரக்கும்
      குஞ்சரமே அச்சிற்றில் சிதையேலே       1

பவளமால் வரையின் நிலவெறிப் பதுபோற்
      பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்
திவளமா மருப்பால் பாரதம் படைத்த
      திறமறிந்த சிறுமியர் செய்சிற்றில்
கவளமா யுண்டருளுங் கரிமுகனே கணநாதா
      கழனிசூழ் மட்டுவில் மருதடியில்
திவளமா திருவரொடு தலங்கொண்ட விநாயகா
      திகழுமச் சிற்றில் சிதையேலே.       2

உலகெலாம் உய்ய அருள் மழைபொழிந்து காக்கும்
      உத்தமனே, உமையாள் பாகனாய்
நிலவுலா வியவேணிக் காட்சியுந் தருங்கண
      நாதனே மட்டுவிற் பதியமர்ந்து
திலகவாண் நுதலார் சித்திபுத்தி சமேதராய்த்
      திகழுங் கணபதி சிறுவர்செய்
அலகிலா விளையாட் டின்போ தமைத்த
      அழகிய சிற்றில் சிதையேலே.       3

நாதமும் உருவமும் கடந்த சிவமய
      மானவெம் கணபதிப் பிள்ளையார்
பேதமில் லடியவர் போற்றி வணங்கும்
      பெற்றியன் மருதமர நிழலமர்ந்து
ஏதமில் காட்சிப் பிள்ளையார் அப்பனே
      எம்சிறார் விளையாடு மிடமாம்
சூதமுள மட்டுவில் சோலையாமர் கணபதி
      சிறுவர்செய் சிற்றில் சிதையேலே.       4

திருநெடு மாலவன் ஆலிடை நின்றுநின்
      திருவடித் தாமரைத் துகளால்
பெருநெடு மேனியின் தளிர்படப் பாம்பதன்
      பேருரு அகன்றமை மறவேன்
மருதடி நீழலில் மட்டுவிற் பதியமர்ந்
      தருள்தரு விநாயகா மிகுந்த
விருப்பினில் முயன்று கட்டிய அச்சிறு
      மங்கையர் சிற்றில் சிதையேலே.       5

விண்ணவர் ஏத்தும் விநாயக மூர்த்தியே
      வித்தகக் கபிலன் ஆதியர்க்குப்
பண்ணருள் செய்தநின் பெருமையை மறவேன்
      பழவடி யார்பயில் மட்டுவிலெம்
கண்ணுதற் பெருமான் கணபதிப் பிள்ளையார்
      கள்ளமில் கருணைக் களிப்பினில்
வண்ணமாய் வனப்புற முயன்று கட்டிய
      சிறுமியர் சிற்றில் சிதையேலே.       6

கும்பமா முனிவரின் கரநீர் கவிழ்த்துக்
      குளிர்மலர் நந்தன வனங்காத்த
வம்பலர் மாலைபுனை மருதடி விநாயகர்
      வளநிறை மட்டுவிற் பதியமர்ந்து
நம்பினார்க் கருளும் நங்கண நாதனே
      நம்மடி யாருறு களிப்பின்
கம்பினா லியன்ற கவினுறு காட்சிக்
      கன்னியர் சிற்றில் சிதையேலே.       7

சலம்பூவொடு தூபம் மறந்தறியா அந்தணர்தம்
      சிந்தையானை, என்றுங் குறைவிலா
நலந்தீங்கினு முனைமறவா நல்லடியார் வாழும்
      மட்டுவிற் பதியமர்ந் தருளும்
புலம்வென்ற காட்சிப் புண்ணியா பிள்ளையாரே
      பொய்யிலா மழலைச் சிறுவர்
நலம்பெறு வண்ணம் முயன்று கட்டிய
      நங்கையார் சிற்றில் சிதையேலே.       8

கூனலி ளம்பிறைக் கொம்பொன் றொடித்துயர்
      பாரதந் தம்தெமக் கருளிய
வானகத் தேவருந் தேடிக் காண்கிலா
      வளநிறை மட்டுவில் விநாயகா
கானகக் குறவள்ளி குமரனை மணம்பெறக்
      குஞ்சர மாகவந் துதவினார்
தேனிகர் மொழிபகர் அழகியர் செய்சிறு
      சீர்பெறு சிற்றில் சிதையேலே.       9

மெய்யடியார் மிகவாழும் மட்டுவிலூர் மருதமர
      நீழலமர்ந் தருள்புரியும் நின்மலனே
பொய்மைதனை நீக்கியவர் நற்பேறு பெறவருளும்
      புண்ணியனே புதுமையுள்ள பிள்ளையாரே
கையுடைய குஞ்சரமே கைம்மாறு உனக்குண்டோ
      கன்னியர் சிற்றில் சிதையேலே
மைவிழியார் சித்திபுத்தி மனமாரக் கொண்டவனே
      மங்கையர் சிற்றில் சிதையேலே.       10

சிற்றிற் பருவம் முற்றிற்று
------------------

(09) சிறுபறைப் பருவம்

தஞ்சமென் றுன்னடி தொழுதருள் பெற்றிடத்
      தாரணி போற்றும் மருதடியில்
அஞ்சலென் ஹமக்கருள் சுரந்தருள் விநாயகா
      ஆர்த்தெழு மாந்தர்தம் பொய்யுரை
நஞ்சென நஞ்செவி புகுந்திடா வண்ணம்
      நல்லடி யார்தொழு தருள்பெற
குஞ்சர மேயுன்றன் இருகரம் பற்றியே
      சிறுபறை முழக்கியருளே.       1

நீண்டமால் அரவாகிக் கிடந்துநின் னருள்தரு
      நேயத்தால் கலியகன் றாட்கொண்டு
ஆண்டவா, நின்னிடத் தடைக்கல மாயினேன்
      ஆனைமு கத்தனே மருதடி
வேண்டியே தான்தோன்றி யாகவந் தடியவர்
      வேண்டு வரந்தரு மிருகரம்
தீண்டியே தீவினை, மயக்கொலி கேளாது
      சிறுபறை முழக்கி யருளே.       2

குறுகுறு நடந்தெம் பிரானுடம் பசைத்துக்
      கோலவெண் பிறைபுலித் தோலாடை
அறுந்திட ஆடைகள் நெகிழ்ந்திட நடம்பயில்
      மருதடி விநாயகப் பெருமானே
அறுகினை ஏற்றெமக் அருள்மழை பொழிகின்ற
      அம்பிகை பாலனே மாயை
உறுநிலை மாந்தர்தம் மயக்கொலி கேளாது
      சிறுபறை முழக்கி யருளே.       3

கற்றவர் விழுங்கும் கற்பக விநாயகா
      கணபதிப் பிள்ளையே! கனவடியார்
ஒற்றுமை யாயுணர் வொன்றியே வாழ்வுற
      ஓதுமெய்ஞ் ஞானம் உணர்ந்திட
மற்றவர் பேசிடு மருள்ஒலி மறைந்திட
      மட்டுவில் மருதடி விநாயகா
பற்றிலான் பாதங்கள் பற்றியே பயன்பெறச்
      சிறுபறை முழக்கி யருளே.       4

கூற்றினை வென்றருள் பெற்றுய்ய நமக்குறு
      குற்றங்கள் நீங்கிடக் குட்டிவணங்கவும்
போற்றிவணங்கவும் பேதையர் பேச்சொலி
      பாவங்கள் நம்மைப் பற்றாமல்
தோற்றாம லிருக்கவும், பாலிக்கும் தும்பிமுகத்
      தான்தோன்றி மூர்த்தியாய் மருதடியில்
தோன்றியருள் செய்கின்ற விநாயக மூர்த்தியே
      சிறுபறை முழக்கி யருளே.       5

முப்புரம் எரிசெய்த முதல்வனும் நீயான
      மூஷிக வாகன மூர்த்தியே
அப்பனும் அம்மையும் அகிலமென் றுணர்த்திய
      ஓங்கார மூர்த்தியே உமைபாலா
இப்புவி வாழ்வினில் இறையருள் பெற்றிட
      இடையூறு வந்தெமை அணுகாமல்
அப்பனும் அம்மையும் ஆனவிநாயகா
      சிறுபறை முழக்கி யருளே.       6

கரமைந்து கொண்டருள் மருதடி விநாயகா
      கனவிலும் நனவிலு முன்நினைவாய்
அரகர சிவசிவ எனக்கோயில் வலம்வர
      ஆகாத பேச்சொலி அணுகாமல்
பிரணவ நாதனே இருகரம் பற்றியே
      சிறுபறை முழக்கி யருளே
பரமனை மதிக்காத பயக்கொலி வாராமல்
      சிறுபறை முழக்கி யருளே.       7

ஒருகொம்பு இருசெவி மும்மலம் நால்வாய்
      ஐங்கரம் கொண்டருள் விநாயகன்
பெறுவயிறும் பெருச்சாளி வாகனமுங் கொண்டவா
      பேதையர் பேச்சொலி வந்தெமது
இருசெவியில் ஏறாமல் இருக்கவே கரங்கொண்டு
      சிறுபறை முழக்கி யருளே
முருகனின் மூத்தவா மருதடி விநாயகா
      சிறுபறை முழக்கி யருளே.       8

சித்திபுத்தி பாகனே மருதடி விநாயகா
      சிந்தித்து வந்தித்து அருள்பெறவே
நித்தமும் உன்கோயில் வலம் வந்து தொழுதிட,
      நினதடி வணங்கி அருள்பெற
சித்தத்தில் சிறுமைகள் சேர்ந்திடா வண்ணம்
      சிறுபறை முழக்கி யருளே
பத்தருக் கின்னல்கள் பற்றிடா திருக்கச்
      சிறுபறை முழக்கி யருளே,.       9

நாவி னாலுனை நாடொறும் பரவவும்
      நாடுவார் நின்புகழ் பாடவும்
ஓவி லாவருள் பாலிக்கும் விநாயகன்
      ஒவ்வாத மயக்கொலி செவிகளில்
மேவி டாவகை மட்டுவில் மருதடியான்
      முழக்கி யருளுக சிறுபறையே
பூவில் வாழயனும் நிகரிலாப் புண்ணியன்
      முழக்கி யருளுக சிறுபறையே.       10

சிறுபறைப்பருவம் முற்றிற்று
------------------

(10) சிறுதேர்ப் பருவம்

மாங்கனிக் காகவன்று மாநிலஞ் சுற்றிவந்து
      ஆறுபடை வீடுகந்த ஆறுமுகன்
ஆங்கவர் சினமகல அழகுதமிழ் முருகனாய்
      ஆகிட அருளிய ஆனைமுகன்
ஓங்குபுகழ் மட்டுவில் மருதடிப் பிள்ளையார்
      சிறுதேர் உருட்டி யருளே
பாங்கில்வரு பக்தருற வரமருளி வடந்தொட்டுச்
      சிறுதேர் உருட்டி யருளே.       1

நீராருங் கடலுடுத்த நிலவுலக விநாயகன்
      நீண்டகரங் கொண்டருள் வழங்குவான்
ஓரானை முகத்தவன் உமையாளின் மூத்தவன்
      ஓங்கார ஓசையொலி வடிவினன்
சீராளர் மிகவாழும் மட்டுவிற்பதி விநாயகன்
      சிறுதேர் உருட்டி யருளே
ஆராத அருள்வழங்கு மாறுமுகன் உடன்வரச்
      சிறுதேர் உருட்டி யருளே.       2

கற்பகப் பிள்ளையார் கழலிணை தொழுமவர்
      கடுவினை கெடவருள் பாலிக்கும்
சொற்பதங் கடந்தமெய்ஞ் ஞானனாம் விநாயகன்
      சோதிவடி வாகிநின் றடியார்க்கு
நற்பதந் தந்தருள் செய்யுங்கண நாதன்
      சிறுதேர் உருட்டி யருளே
தற்பரா னந்தன் தந்தைதாய் மகிழ்ந்திடச்
      சிறுதேர் உருட்டி யருளே.       3

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே
      கரையிலாக் கருணைமா கடலே
மற்றவர் மயங்கும் மாயை போக்கும்
      மட்டுவில் மருதடிப் பிள்ளையாரே
பொற்பதந் தந்தெம தடியவர் அருள்பெறச்
      சிறுதேர் உருட்டி அருளே
மற்பொரு திரளபுய மதயானை முகத்தனே
      சிறுதேர் உருட்டி யருளே.       4

கரியானை முகத்துக் கணபதிப் பிள்ளையார்
      கற்றார்க்கும் கல்லார்க்கும் நற்கருணை
புரிந்திடும் புண்ணியன் பாவவினை போக்கிடும்
      புத்திசித்தி பாகனாம் பிள்ளையார்
அரிபிரமனாதியர்க்குந் தோற்றாத வடிவினன்
      சிறுதேர் உருட்டி யருளே
திருபுர மெரித்த மருதடி விநாயகன்
      சிறுதேர் உருட்டி யருளே.       5

முத்தமிழ் ஔவைக்குத் தந்தருள் செய்தவன்
      மூஷிக வாகனன் பிள்ளையார்
பக்திசெய்யடியார்தம் பாவங்கள் போக்கிடும்
      புண்ணிய னாமெங்கள் பிள்ளையார்
அத்தினந் தம்பிக்காய்ப் புனஞ்சென்ற கரிமுகன்
      சிறுதே ருருட்டி யருளே
வித்தக விநாயகன் மருதடிப் பிள்ளையார்
      சிறுதே ருருட்டி யருளே.       6

கண்ணுதற் பெருமான் களிற்றுமா முகத்தன்
      கணபதிப் பிள்ளையார் கழல்தொழ
எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறும்
      ஏரம்ப மூர்த்தியாம் விநாயகன்
மண்ணுல கத்துறு மருதடிப் பிள்ளையார்
      சிறுதே ருருட்டி யருளே
பண்ணிய எம்பாவம் போயருள் பெற்றிடச்
      சிறுதே ருருட்டி யருளே.       7

முற்றாவெண் திங்களணி முதல்வனின் மூத்தவன்
      முன்னைவினை நீக்கியருள் செய்பவன்
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக அருள்பவன்
      மட்டுவில் மருதடிப் பிள்ளையார்
பெற்றோரே உலகமென எமக்கருளிச்சொன்னவன்
      சிறுதே ருருட்டி யருளே
பற்றற்றான் பற்றினைப் பற்றி நாம் உய்ந்திடச்
      சிறுதே உருட்டி யருளே.       8

முந்திய வினைதீர்க்கு மூஷிக வாகனன்
      மருதடித் தான்தோன்றிப் பிள்ளையார்
தந்தமொன் நொடித்துயர் பாரதந் தந்தவன்
      தனக்கெனக் கோவில்கள், தம்மடியார்
சிந்தைகள் தாமெனக் கொண்டருள் செய்பவன்
      சிறுதேர் உருட்டி யருளே
கந்தவேள் அண்ணனாம் கணபதிப் பிள்ளையார்
      சிறுதேர் உருட்டி யருளே.       9

அருளைக் கொடுக்கும் நீள்கரம், நம்தீ
      வினையைக் கெடுக்கும் ஆனைமுகம்
இருளைக் கெடுக்கும் ஒளியாய் ஓசையின்
      வடிவாய் விளங்கும் விநாயகன்
மருளைக் கெடுக்கும் மருதடிப் பிள்ளையார்
      சிறுதேர் உருட்டி யருளே
முருகனைத் துணையாய்க் கொண்டஎம் விநாயகன்
      சிறுதேர் உருட்டி யருளே       10

சிறுதேர்ப் பருவம் முற்றிற்று

மட்டுவில் மருதடி விநாயகர் பிள்ளைத் தமிழ் முற்றிற்று
-------------

This file was last updated on 30 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)