pm logo

கி. வா. ஜகந்நாதன் எழுதிய
பாண்டியன் நெடுஞ்செழியன்
(வரலாறு))


pANTiyan neTunjceziyan (history) by
ki.vA. jakannAtan
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கி. வா. ஜகந்நாதன் எழுதிய
பாண்டியன் நெடுஞ்செழியன் (வரலாறு))

Source:
பாண்டியன் நெடுஞ்செழியன் ((வரலாறு), 1960)
ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்
அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தேனாம்பேட்டை : : சென்னை-18
அமுதம்-123, உரிமை பதிவு
முதற் பதிப்பு - அக்டோபர், 1956; ஐந்தாம் பதிப்பு - ஜூன், 1960
நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனும்பேட்டை, சென்னை-18
---------------------

முகவுரை

சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து நின்றான். அவன் இயல்புகளைப் பத்துப் பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவன் வரலாற்றோடு தொடர்புடைய பாடல்கள் பல புறநானூற்றில் இருக்கின்றன. அவனே பாடிய செய்யுள் ஒன்றும் அத் தொகை நூலில் இடம் பெற்றிருக்கிறது.

அவனுடைய வரலாறே இது. சங்க நூல்களில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளைத் தொகுத்து அடைவு தேர்ந்து ஒட்ட வைத்துக் கற்பனையால் உருவாக்கியிருக்கிறேன். உரையாடல்களில் என் கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறேன். புலவர்களின் பாடல்களில் உள்ள பொருளே உரைநடையில் இணைத்திருக்கிறேன். அவற்றிற்குரிய பாடல்கள் இன்னவென்பது அடிக்குறிப்பினால் தெரியவரும்.

நெடுநல் வாடையின் உள்ளுறையை உரைநடையில் அமைத்திருக்கிறேன். மதுரைக் காஞ்சியில் உள்ளவற்றில் பெரும் பகுதியை அப்படியப்படியே வைத்தும் சிலவற்றைச் சுருக்கியும் காட்டியிருக்கிறேன். அக்காலத்து வாழ்க்கை முறையை உணர இப் பகுதிகள் கருவியாக இருக்கும்.

முன்பு எழுதிய வரலாறுகளேப் போல, இதைப் படித்து முடித்தால் வரலாற்றுத் தலைவனுடைய உருவம் உள்ளத்தே ஒருவாறு புலப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடே இதனையும் எழுதியிருக்கிறேன்.

பழம்பெரு மன்னர்களையும் புலவர்களேயும் இலக்கியத்துக்குள் நுழைந்து அறிந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மாண்வர்களுக்கும் இத்தகைய நூல்கள் அவர்களின் பெருமையை உணர்ந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.

“காந்தமலை”       கி. வா. ஜகந்நாதன்
கல்யாண நகர் - மயிலை
15—10—56
--------------------
பொருளடக்கம்

1. கிளி பறந்தது
2. வஞ்சினம் வெடித்தது
3. தலையாலங்கானத்துப் பெரும் போர்
4. போரில் ஊக்கம்
5. நெடுநல் வாடை
6. புலவர் அறிவுரை
7. மருதனார் படைத்த பாட்டு
8. மதுரைக் காஞ்சி
9. ஐந்திணை வளம்
10. மதுரை மாநகர்
11. நிறைந்த வாழ்வு
-----------------

1. கிளி பறந்தது

“இவ்வளவு பெரிய நாட்டை விதி இந்தச் சின்னஞ் சிறிய பிள்ளையின் கையில் ஒப்படைத்திருக்கிறது. என்ன ஆகுமோ? நல்ல மந்திரிகள் அமைந்து அரசியல் ஒழுங்காக நடைபெற வேண்டும். இறைவன் திருவருள் துணையிருந்து காக்க வேண்டும்” என்றார் முதியவர்.

அவரைவிடச் சற்றே இளையவர் ஒருவர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்; “ஆண்டில் இளையவன் என்று எண்ணி அஞ்சவேண்டிய தில்லை. சிங்கக்குட்டி என்றால் வீரம் இராதா? பாண்டிய மரபில் தோன்றிய யாரும் கோழையான தில்லை. மதுரை மாநகரம் என்று தோன்றியதோ, அன்றுமுதல் திருமகளின் அரசிருக்கையாகத் திகழ்கிறது. பாண்டிய மன்னர்களும் குலப் பெருமை வீண் போகாமல் கோலோச்சி வருகிறார்கள்” என்றார்.

“பரம்பரை பெரியதுதான். ஆனால் அது ஒன்றே போதுமா? வித்து நல்லதாகவும் உரமுடையதாகவும் இருந்தாலும் நிலமும் நீரும் பொருந்தினால்தான் நன்கு விளையும். அரசர்கள் சிறப்பதும் தாழ்வதும் பெரும்பாலும் உடன் இருக்கும் அமைச்சர்களைப் பொறுத்து நிற்கும். இளைஞனாகிய மன்னனுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தேர்ந்து நாடுவதற்கு அநுபவம் ஏது?”

“புதிய அமைச்சர்கள் சிலரே வருவார்கள். நாட்டின் நன்மையையே கருத்திற் கொண்டு அரசனுக்கு உறுதுணையாக நின்ற பழைய அமைச்சர்கள் இருக்கிறார்களே; அவர்கள் இதுகாறும் நடந்தபடியே அரசியலை ஒழுங்க்ாக நடத்த வழி வகுப்பார்கள் அல்லவா?”

“எல்லாம் போகப் போகத் தெரியும். நாம் நல்லதையே நினைப்போம். ஆண்டவனை வேண்டுவோம். அரசனை வாழ்த்துவோம்.”

மதுரை மாநகரில் ஒரு வீட்டில் இப்படி இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். அதுகாறும் மதுரையை ஆண்டிருந்த பாண்டியன் உயிர் நீத்தான். அவனுடைய ஒரே மகனாகிய நெடுஞ்செழியன் அரசு கட்டில் ஏறினான். அப்போது அவன் இளம்பிள்ளையாக இருந்தான். கைக் குழந்தையாக இருந்தாலும் அவனுக்கே அரசுரிமை செல்வது மரபாதலால் அமைச்சரும் சான்றோரும் அவனுக்கு முடி சூட்டினார்கள்.

முடி சூட்டு விழா மிகச் சிறப்பாகவே நடைபெற்றது. பாண்டியர் குலத்தில் வரும் மன்னர்களுக்கு இயற்கையாகவே சில பண்புகள் இருக்கும். நுட்பமான அறிவும் வீரமும் தமிழ்க் காதலும் அவர்கள் குருதியிலே ஊறியவை. இந்த இளைய அரசனிடமும் அவை இருப்பதாகவே புலப்பட்டன. எப்படியும் சில ஆண்டுகள் அரசாட்சி செய்து அநுபவம் பெற்றுவிட்டால் பிறகு யாதோர் இடயூறுமின்றி அரசியற் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் திறமை பெற்று விடுவான். இந்த நம்பிக்கை அமைச்சர்களுக்கு இருந்தது.

அரசுக்குக் கேடு வரவேண்டுமென்றால் இரண்டு வகையாக வரும். ஒன்று அகப்பகையால் வரும். மற்றொன்று புறப்பகையால் வரும். அரசன் திறமையற்றவனாக, குடிமக்களுடைய நலம் கருதாதவனாக, தன்னுடைய இன்பம் ஒன்றனையே எண்ணுபவனாக இருந்தால் அகப்பகை தோன்றும்; நாட்டிற்குள் பல கட்சிகள் உண்டாகும்; அமைச்சரும் பிறரும் மனம் வேறுபட்டுச் சூழ்ச்சி செய்வார்கள். இதுவே அகப்பகையின் வளர்ச்சி.

பிற நாட்டவர்கள் அரசனிடம் பொருமை கொண்டாலும், அவனுடைய நாட்டிலுள்ள வளத்துக்கு ஆசைப்பட்டாலும், பழம் பகை இருந்தாலும், படைவன்மை இல்லாதவன் என்று உணர்ந்தாலும் போர் செய்து நாட்டைக் கைப்பற்ற எண்ணுவார்கள். புறப்பகை மூளும்.

இந்த இரு வகையிலும், அகப்பகை உண்டாக இப்போதைக்கு வழி இல்லை. அமைச்சரும் படைத்தலைவரும் சான்றோரும் பாண்டிய மரபினைப் பாராட்டிப் பெருமதிப்பு வைத்துப் போற்றுகிறவர்கள்; ஒரு பாவையைச் சிங்காதனத்தில் வைத்தாலும் அரசனென மதித்து ஒழுகுகிறவர்கள். அவர்களால் தீங்கு வர இடம் இல்லை. ஒருகால் சொன்னதைக் கேளாமல் அரசன் தான் போகிற போக்கிலே போய் மற்றவர்களைப் புறக்கணிப்பானானால், பல காலமாக இருந்து அரசியல் தேரை இழுக்க உதவும் சான்றோர்களுக்கு மனத்தில் சற்றே வெறுப்புத் தோன்றலாம். ஆனாலும் அவர்கள் கைவிடமாட்டார்கள்.

ஒரு விதத்தில் அரசன் இளைஞனாக இருப்பது நன்மைதான். நல்ல வகையில் அவனுக்கு அறிவுரை கூறிக் கோலோச்சும்படி செய்யலாம். மனிதன் வளர வளர ஆசையும் பாசமும் வளர்கின்றன. இளம் பருவத்தில் அவன் உள்ளத்தில் அத்தனை மாசு இருப்பதில்லை. ஆதலால்தான் இளமையில் கல்வி கற்கும் நல்ல வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்த அரசனுக்கும் இப்போதிருந்தே நல்ல பழக்கங்கள் வந்துவிட்டால் பின்னால் மாறமாட்டான்; மற்றவர்களுடைய துணையின்றியே திறமையோடு அரசாட்சியை நடத்துவான்.

இவ்வாறெல்லாம் எண்ணிய அமைச்சரும் பிறரும் மிக்க மகிழ்ச்சியோடு நெடுஞ்செழியனுக்கு முடி சூட்டி அரசனாக்கி அவனை வணங்கினார்கள். நேற்றுவரையில் அரண்மனையில் ஓடியாடித் திரிந்த இளம் பிள்ளை இன்று அரசனாகிவிட்டான். நேற்றுவரையில் சிட்டுக் குருவிபோல ஒரு கவலையும் இல்லாமல் பறந்து திரிந்தவனுக்கு இன்று தலையின்மேல் பாண்டிய குலத்துக்குரிய முடி ஏறினவுடன் கவலைகளும் ஏறிவிட்டன. அரச பதவி யென்றால் எளிதா?

“அரசன் எப்படி இருக்கிறான்?” என்று கேட்டாள் அமைச்சரின் மனைவி. தம் அரசன் நன்றாக இருக்கவேண்டும், திறமையாக ஆட்சி புரிய வேண்டும் என்ற கவலை நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருடைய உள்ளத்திலும் இருந்தது. பொறுப்புள்ள அமைச்சருடைய மனைவிக்கு அந்தக் கவலை இருப்பது வியப்பு அல்லவே!

“பாண்டிய குலத்தின் பெருமையை நாளுக்கு நாள் உணர்ந்து பாராட்டுகிறேன்” என்றார் அமைச்சர்.

“பழையவர்கள், முன்பு இருந்த பாண்டியர்களின் பெருமையையா? இப்போதுள்ள இளைஞனின் பெருமையையா?”

“அது வேறு, இது வேறா? கங்கையாற்று நீரைப் போல இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தானே? இடையறாது வருவது பாண்டிய பரம்பரை; அதனுடைய பெருமையும் நீரோட்டம்போல-கங்கையாற்றின் நீரோட்டம்போல-கோடை யென்று குறையாமல் தடையின்றி வருவது. இந்த உண்மையை இப்போது நன்றாக உணர்கிறேன்.”

“அரசன் பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறானா? மனத்தில் வாங்கிக் கொள்கிறான?”

“அவன் சொல்வதை நாங்களும் வாங்கிக்கொள்கிறோம்.”

“நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை.”

“இத்தனை சிறிய பிராயத்தில் அறிவும் பெருந்தன்மையும் எவ்வளவு முழுமையாக அமைந்திருக்கின் றன! மற்றப் பூச்செடிகளில் இலை நன்றாகத் தழைத்து அரும்பு விட்டு மலர்ந்து மணக்கும். ஆனால் மருவோ இரண்டு இலை விடும்போதே மணக்கிறது. இந்தப் பாண்டியனும் அப்படித்தான் இருக்கிறான். அறிவும் அடக்கமும் பெருமையும் சால்பும் இவனுடன் கருவிலே உண்டாகி இருக்கின்றன.”

“அமைச்சர்கள் யாவருக்கும் மகிழ்ச்சிதானே?”

“உருவத்தைக் கண்டு நாம் எதையும் மதிப்பிடக்கூடாது என்பதைப் பலர் தெரிந்துகொண்டார்கள். அரசன் பிராயத்தால் சிறியவனாக இருந்தாலும் அறிவால் பெரியவனாக இருக்கிறான். யார் எது சொன்னாலும் பதற்றம் இல்லாமல் கேட்கிறான். அமைதியாக ஆராய்கிறான். தன்னுடைய கருத்தையும் துணிவாக எடுத்துச் சொல்கிறான். அப்படிச் சொல்வதில் துணிவும் இருக்கிறது; பணிவும் இருக்கிறது. சில சமயங்களில் அவன் எழுப்பும் ஐயங்களுக்கு எங்களாலே விடை கூற முடியவில்லை.”

“அறிவிற் சிறந்த பாண்டிய குலம் வாழட்டும்! புறப் பகைஞர் வராமல் இருக்கட்டும்!” என்று அமைச்சர் மனைவி வாழ்த்தினாள்.

அமைச்சர்கள் தமக்குள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. ஏதோ ஒரு செய்தியை அரசனுக்கு அறிவிக்க முடியாமல் மயங்குவதாகத் தெரிந்தது. ஒருவர், “நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். போர் மூண்டுவிட்ட பிறகு ஆயத்தம் செய்வதால் பயன் இல்லை” என்றார்.

“இப்போதுதான் அரசு கட்டில் ஏறினான். விளையாட்டை விட்டு அரசியலில் புகுந்தான். அதற்குள் போர் என்றால் அவன் உள்ளம் அஞ்சாதா?” என்று கேட்டார் மற்றோர் அமைச்சர்.

“நம் அரசனுடைய அறிவைக் காணக் கான நமக்கு வியப்பு உண்டாகிறது; அதுபோலவே அவனுடைய வீரமும் நமக்கு வியப்பை உண்டாக்கலாம். எப்படியும் நாம் படைகளைப் போருக்கு ஆயத்தப்படுத்த வேண்டியதுதான். இந்தச் செய்தியை அரசனிடம் கூறி, மேற்கொண்டு செய்யவேண்டுவதைச் செய்வதே நம் கடமை” என்றார் முதல் அமைச்சர்.

அவர்களுடைய கவலைக்குக் காரணம் பாண்டி நாட்டைக் கைப்பற்றச் சேர அரசன் முயல்கிறான் என்ற செய்திதான். ஒற்றர்களின் வாயிலாக இது அமைச்சர்களுக்குத் தெரிய வந்தது.

பாண்டி நாட்டில் எல்லா வளங்களும் உண்டு. ஐந்து வகையான நிலங்களும் இருக்கின்றன. பல காலமாகப் பெரு மன்னர்களின் பாதுகாப்பில் இருந்தமையால் நாளுக்கு நாள் வளம் பெருகி வந்தது. பிற நாட்டரசர்கள் பாண்டியனோடு போர் செய்ய அஞ்சினார்கள். பாண்டி நாட்டைப் போலத் தம் நாட்டில் வளம் சுரக்க வேண்டும் என்றும், பாண்டியனைப் போலத் தாமும் புகழ் பெறவேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்பட்டார்கள். வெறும் ஆசை இருந்தால் போதுமா? அதற்கு ஏற்ற ஆற்றல் வேண்டாமா?

அக்காலத்தில் சேர நாட்டில் அரசனாக இருந்தவன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவன். அவன் கொடையிலே சிறந்தவன்; புலவர்களைப் பாதுகாப்பவன்; நல்ல பண்புகளை உடையவன். ஆயினும், நிலத்தின் இயல்பு நீரை மாற்றுவதுபோல அவனுடைய அமைச்சர்களிற் சிலர் அவனுக்குத் தீய எண்ணத்தை உண்டாக்கினார்கள். மன்னனாகப் பிறந்தாலே மண்ணாசை பற்றிக்கொள்ளும். அமைச்சர்களுடைய தூண்டுதலும் சேர்ந்தால் அது பெருகித் தீயாக மூண்டுவிடும்.

மாந்தரஞ் சேரல் இரும்பொறையைச் சில அமைச்சர்கள் நெருங்கிப் பேசினார்கள். “பாண்டி நாட்டில் இப்போது ஒரு குழந்தை அரசாளுகிறது. பால்மணம் மாறாப் பாலகனை அரசனாகப் பெற்ற பாண்டிய மக்கள் எப்படித்தான் வாழப் போகிறார்களோ?” என்று பேச்சைத் தொடங்கினர்.

“இதுவரையில் வாழ்ந்தது போலத்தான் வாழ்வார்கள்” என்றான் சேரன்.

“அப்படிச் சொல்வதற்கில்லை. அரசன் திறமையுடையவனாக இராவிட்டால் ஆட்சி நன்றாக நடவாது. இளங்குழந்தைக்கு அரசியல் எப்படித் தெரியும்? உடனிருக்கும் அமைச்சரும் படைத்தலைவரும் தம்முடைய போக்கிலேதான் நாட்டை ஆள்வார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கும். தன்னலம் பெருகிய உலகத்தில் ஒவ்வொருவனும் தனக்கு மிகுதியான ஊதியம் வரவேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்களுக்குள் மன வேறுபாடு நேரும்; ஒற்றுமை குலையும். ஆட்சி சிதைவுறும். இத்தகைய செவ்வியைக் கண்டு அருகில் உள்ள அரசர்கள் எளிதிலே நாட்டைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.”

“அதற்காக நாம் என்ன செய்வது? பாண்டி நாட்டுக்கு வந்த கவலையை நாம் ஏற்றுக்கொண்டு வருந்துவானேன்?” என்று கேட்டான் சேர மன்னன்.

“கவலைப்பட வேண்டாம். வேறு ஓர் அரசன் கொண்டு போகிறதை நாமே எடுத்துக்கொள்ளலாமே!”

“பாண்டிய நாட்டைக் கைப்பற்றலாம் என்று சொல்கிறீரா?”

“மன்னர் பிரானுக்கு நாடு விரிவடைய வேண்டும் என்று விருப்பம் இல்லாவிட்டால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்.”

“இல்லை, இல்லை. உம்முடைய யோசனை என்ன? அதைத் தெளிவாகச் சொல்லும்.”

“நமக்கு வேண்டிய படைகள் இருக்கின்றன. பல காலம் போர் செய்யாமல் வீரர்கள் தோள் தினவெடுத்துக் கிடக்கிறார்கள். பாண்டி நாட்டு அரசனோ குழந்தை. இப்போது நாம் மதுரையை முற்றுகையிட்டால் எளிதில் கைப்பற்றலாம். இத்தகைய சந்தர்ப்பம் என்றும் இருந்ததில்லை. இனியும் நேராது.”

அரசனுக்கு மண்ணாசை தோன்றியது; அது வளர்ந்து பெரிய உருவம் எடுத்தது. யானையின் கண்ணைப் போன்ற சிறிய கண்ணை உடையவனாதலால் யானைக்கட் சேய் என்று அவனை வழங்கினார்கள். அவன் புறக்கண் சிறியதாக இருந்ததைப் போல அகக் கண்ணும் சிறியதாகிவிட்டது போலும்! அமைச்சன் கூறியதை நம்பி ஆசையை வளர்த்தானேயன்றித் தானே ஆய்ந்து பார்க்கவில்லை.

படைகளை ஆயத்தம் செய்தான்; புதிய படைகளையும் சேர்த்தான். பெரும் போராக மூள இடம் இல்லையென்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆதலால் பெரும் படை திரட்டவில்லை.

‘சேரமான் படை திரட்டுகிறான்; மதுரையைத் தாக்கவேண்டும் என்பது அவன் எண்ணம்’ என்ற செய்தியை ஆராய்ச்சியில் வல்ல ஒற்றர்கள் கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை முதலில் நெடுஞ்செழியனிடம் தெரிவிக்காமல் அமைச்சர்கள் தமக்குள்ளே கலந்து ஆராய்ந்தார்கள். கடைசியில் அரசனுக்குத் தெரிவித்துத் தக்கபடி பாதுகாப்புக்குரியவற்றைச் செய்யவேண்டு மென்று தீர்மானித்தார்கள்.

அரசனிடம் செய்தியைத் தெரிவித்தபோது அவன் திடுக்கிடவில்லை. “நல்ல சந்தர்ப்பம் வருகிறது. பாண்டிய வீரர்களின் வீரத்தையும் உங்களுடைய அறிவையும் என்னுடைய மனத்திண்மையையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே இந்தப் பயிற்சி கிடைப்பது எனக்குப் பெரிய ஊதியம்” என்று அதை வரவேற்றான். சிங்கக் குட்டி என்று ஒருவர் சொன்னது எவ்வளவு பொருத்தம்!

அரசன் இளையவனென்ற ஒன்றை மாத்திரம் எண்ணிச் சேரன் முற்றுகையிட வருகிறான் என்பதை மதுரையில் உள்ளவர்கள் உணர்ந்துகொண்டார்கள். “மற்றவர்களை அவன் மறந்துவிட்டான். மதுரை எப்போதும் மாற்றானுக்கு இடம் கொடாது என்பதை உணரப் போகிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.

போர் மூண்டது. மாந்தரஞ் சேரல் இரும் பொறை மண்ணாசைக்கு அடிமையாகித் தானே படைத்தலைமை தாங்கி நேரே பாண்டி நாட்டுக்குள் புகுந்து விட்டான். நாட்டின் எல்லையைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டான். நெடுஞ்செழியன் இளையவனாக இருந்தும் தானே போர் முனைக்குப் போக வேண்டுமென்று துடிதுடித்தான்.

சேரன் படையின் அளவை ஒற்றர்களின் வாயிலாக முன்பே தெரிந்துகொண்டிருந்தனர் படைத்தலைவர்கள். அந்தப் படையை எளிதில் புறங்கண்டு விடலாம் என்று தெளிந்தார்கள். அரசன் போருக்குச் செல்லவேண்டு மென்று துடிப்போடு இருப்பதை உணர்ந்த அமைச்சர் தலைவர் அவனை அணுகித் தம் கருத்தைக் கூறினார். இந்தப் போர் மிகவும் சிறிய போராகவே இருக்குமென்றும், மாற்றான் வலியைத் தெரியாமல் சிறிய படையுடன் சேரன் வந்திருக்கிறானென்றும் எடுத்துக் காட்டினார்.

“முதல்முதலாக நம்மை நாடி வரும் வெற்றி மகளை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்றான் அரசன்.

“அதற்குரிய பருவம் உண்டு” என்று பணிவாகச் சொன்னார் அமைச்சர்.

“நான் இளையவன் என்று அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டான் நெடுஞ்செழியன்.

“இல்லை, இல்லை. இந்தப் போர் சிறு போர். இதில் பெறுவது பெரிய வெற்றி ஆகாது. அரசர்பிரானுடைய கன்னிப் போர் பெரிய போராக இருந்தால் வெற்றியும் பெரிதாக இருக்கும். இது காலில் குத்திய முள்ளை எடுத்தெறிவதுபோல முடியப் போகும் போர். இதைப் போர் என்று சொல்லுவதே நம் வீரத்துக்கு இழுக்கு. சில நாழிகைகளில் சேரனை அடி பணியச் செய்து சிறைபிடித்து வருகிறேன்” என்று படைத்தலைவர் கூறினார். அரசன் தன் ஆர்வத்தை அடக்கிக்கொண்டான்.

பாண்டி நாட்டின் எல்லையில் எதிர்ப்பு ஒன்றும் இல்லாததைக் கண்ட சேரமான் தன் படையை நாட்டுக்குள்ளே செலுத்தினான். பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு அவனைச் சிறை செய்ய வேண்டுமென்று ஆசை. ஆதலால் சிலந்தி தன் வலையில் ஈ விழுமட்டும் காத்திருப்பது போலச் சும்மா இருந்தார். தம் நாட்டு எல்லை தாண்டி உள்ளே சிறிது தூரம் வந்த பிறகு சென்று எதிர்த்தார். மதுரைப் படையும் சேரன் படையும் கை கலந்தன. சேரன் படையைப் பாண்டிப்படை நாற்புறமும் சூழ்ந்துகொண்டது.

சில நாழிகையே கடுமையாகப் போர் நிகழ்ந்தது. தம் நாட்டின் எல்லைக்குள்ளே அகப்பட்டுக்கொண்ட பகைவர் படையை எளிதிலே வென்றுவிடலாம் என்று படைத்தலைவர் எண்ணியது நிறைவேறியது. சேரமான் வகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டான். போரில் மடிந்தவரும், தம் நாட்டை நோக்கி ஓடின வரும் போக எஞ்சியவர்கள் சிலரே. ஓடுவார் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் தலைவர். ஆனால் தாம் கூறிய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதிச் சேர அரசனை வெளிச் செல்லாதபடி காக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அவன் சிறைப்பட்டான்.

சிறைப்பட்ட சேரனுடன் வெற்றி மிடுக்கோடு படைத் தலைவர் நெடுஞ்செழியனை அணுகினார். அவனுடைய பெருந்தன்மையை என்னவென்று சொல்வது! சிங்காதனத்திலிருந்து எழுந்து வந்து எதிர் கொண்டழைத்தான் அந்த வீரனை. “இந்தச் சேரர் பெருமானை நல்ல மாளிகையில் ஊணுக்கும் உறக்கத்துக்கும் இடையூறு வராமல் பாதுகாத்து வர வேண்டும்” என்று அவன் கூறியபோது யாவரும் அவனுடைய பண்பை வியந்தனர்.

பெரிய அரசனாகிய சேரனைக் குற்றம் செய்தவரை இடும் சிறையிலா இடுவார்கள்? பெரிய மாளிகையில் சிறை வைத்தார்கள். வேண்டிய பொருளை வேண்டிய போதெல்லாம் அளிக்கத் திட்டம் செய்தார்கள். அவன் வெளியே தன் விருப்பப்படி செல்ல இயலாதேயன்றி வேறு வகையில் அவனுக்கு ஒரு குறையும் இல்லை. இசை பாடும் மகளிரும் கூத்தியற்றும் விறலியரும் அவனுக்கு முன் பாடியும் ஆடியும் அவனை மகிழ்வித்தனர்; சுவைமிக்க உணவு அளித்தனர்.

சுதந்தரம் இல்லாத வாழ்வில் அமுதமே கிடைத்தாலும் மானமுடையவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வார்களா? மாந்தரஞ்சேரலிரும்பொறை இப்போதுள்ள தன் நிலையை நினைந்து பார்த்தான். அறிவற்ற அமைச்சரின் வார்த்தைக்குச் செவி கொடுத்த தீமை இப்படி விளைகிறதென்று எண்ணி ஏங்கினான். தன் அருமைச் சேர நாட்டையும் நகரத்தையும் மனைவி மக்களையும் விட்டுப் பிரிந்து வாழும் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக உணர்ந்து தவித்தான். பாட்டும் கூத்தும் அவனுக்கு அப்போது இனிக்குமா? கூட்

பா-2 டுக்குள் கிளியை அடைத்துக் கொஞ்சுவதுபோல அவனுக்குத் தோன்றியது. அவன் எண்ணமெல்லாம் எப்படி அந்தச் சிறையினின்றும் விடுபட்டுச் செல்வது என்பதில் கவிந்திருந்தன.

கட்டுக் காவல் கடுமையாக இல்லை. பாண்டிய அரசனுடைய பெருந்தன்மையை அவன் தன் உள்ளத்துக்குள் பாராட்டினான். அவ் விளைய அரசன் அப்போது என்ன வேண்டுமானலும் செய்யலாமே! இது சிறையா? தன் நிலைக்குச் சிறையே ஒழிய வசதிகளில் ஏதேனும் குறைவுண்டா?-இந்த எண்ணங்கள் அவனுக்குத் தோன்றினாலும் அவை அவனுக்கு உரிமை வாழ்வில் உண்டான ஆசையை மாற்றவில்லை. எப்படியாவது அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டான். ஒருவருக்கும் தெரியாமல் காவலாளர் சோர்ந்திருக்கும் செவ்வி அறிந்து ஓடி விட வேண்டுமென்று திட்டமிட்டான். தன் வீரத்துக்கு அடுக்காத செயல்தான். ஆயினும் வேறு வழி இல்லையே!

அவன் எண்ணம் கைகூடியது. பாண்டிய அரசனுக்கும் இவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதற்குள் அவன் தன் பிழையை எண்ணி வருந்துவான் என்று நினைத்தான். ஆதலால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் நடவாமல் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். விருந்தினனைப்போல உபசாரம் செய்ய வேண்டுமென்று பணித்தான். இந்த நிலையில் கடுமையான காவல் எவ்வாறு இருக்கும்?

ஒரு நாள் கிளி தப்பி ஓடிவிட்டது. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும் பொறை சிறையினின்றும் தப்பி ஓடிவிட்டான்; பெற்றேன், பிழைத்தேன் என்று தன் மாநகரைப் போய் அடைந்தான்.

சிறைப்பட்ட சேரன் தப்பி ஓடிவிட்டான் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் அறிந்தான். காவலரளர்கள், அரசன் என்ன செய்வானோ என்று அஞ்சி நடுங்கினார்கள். படைத் தலைவரது தண்டனைக்குத் தாம் ஆளாகவேண்டும் என்பதில் அவர்களுக்குச் சிறிதும் ஐயம் உண்டாகவில்லை.

ஆனால் அரசன் பெருந்தன்மை இப்போதும் புலப்பட்டது. “நாம் சேரனை விருந்தாளியாக வைத்துப் பாதுகாத்தோம். சிறைப்பட்டவன் என்ற எண்ணம் யாருக்கும் தோன்றாதபடி அவன் சுகமாக இருந்தான். காவலர்களுக்கே அவன் சிறைப்பட்டிருக்கிறான் என்ற நினைவு இல்லாமற் போயிருக்கும். அதனால் சோர்ந்து விட்டார்கள். குற்றம் இல்லை. இனிமேல் இப்படி நடவாமல் இருந்தால் போதும்” என்று சொல்லி அருள் பாலித்தான்.

“சேரன் ஓடிப் போய்விட்டானே!” என்று ஓர் அமைச்சர் அங்கலாய்த்தார்.

“போனல் போகட்டுமே. எத்தனை நாளைக்கு அந்த யானையைக் கட்டித் தீனி போடுவது? நாமாக ஒரு நாள் பெருந்தன்மையோடு உன் ஊருக்குப் போய் வா என்று அனுப்பியிருப்போம். அதனால் நமக்குப் பெருமை வந்திருக்கும். அந்தப் பெருமையை நமக்கு அளிக்காமல், ‘திருட்டுத்தனமாக ஓடிவிட்டான்’ என்ற சிறுமையைத் தான் பெற்றுக்கொண்டு போய் விட்டான். அவன் செய்த பேதைமைச் செயலுக்கு இதுகாறும் உரிமையை இழந்து பிணிப்புற்றிருந்ததே போதும். பாவம்! இனியாவது தன் வலிமை அறிந்து தன் நாட்டில் செய்யவேண்டியதைச் செய்யட்டும்.”

‘அரசனா பேசுகிறான்? இளமைப் பிராயத்தில் இத்தனை அறிவும் சால்பும் எப்படி வந்தன இவனுக்கு?’ என்று, கேட்ட சான்றோர்கள் வியந்தார்கள். அரசவைப் புலவர் மாங்குடி மருதனார் உள்ளம் பூரித்தார். பாண்டி நாடு நல்ல பண்புடைய மன்னனைப் பெற்றிருக்கிறதென்று உணர்ந்துகொண்டதனால் வந்த மகிழ்ச்சி அது.
----------------

2. வஞ்சினம் வெடித்தது

இந்த முறை சோழனுக்குப் பாண்டி நாட்டின் மேல் ஆசை விழுந்தது. ஆனால் அவன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப்போல ஆராயாமல் செயலிற் புக விரும்பவில்லை. அரசன் புதியவனாக வந்திருந்தாலும் பழம் படைகள் மதுரையில் மிகுதியாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ‘எவ்வளவு படைகள் இருந்தாலும் தக்க தலைவன் இருந்தாலன்றிப் படையின் ஆற்றல் பயன்படாது. இளமைப் பருவமுடைய நெடுஞ்செழியனுக்கு என்ன அநுபவம் இருக்கிறது? ஏதோ பைத்தியக்காரத்தனமாக மாந்தரஞ் சேரல் ஆராயாமல் சென்று அகப்பட்டுக் கொண்டான். எப்படியோ தப்பி வந்துவிட்டான். தக்கபடி படைப் பலத்தைக் கூட்டிக்கொண்டு சென்று எதிர்த்தால் தடையின்றிப் பாண்டி நாட்டை அடிப்படுத்திவிடலாம்.’-இந்த நெறியிலே சென்றன, அவன் எனணங்கள்.

சோழ அரசனிடம் படை இருந்தது. ஆனால் அது போதாதென்று தோன்றியது. எத்தனைக் கெத்தனை மிகுதியான படைகளைச் சேர்த்துக்கொள்ள முடியுமோ அத்தனைக்கத்தனை வெற்றி உறுதி யென்று தேர்ந்து, அதற்கு ஆகும் வழி என்னவென்று ஆராய்ந்தான். தான் மாத்திரம் படையைப் பெருக்கிக்கொண்டால் போதாதென்று நினைத்தான். மற்ற நாட்டு மன்னர்களையும் துணையாகப் பெற்றால் பாண்டியனை வெல்லலாம். சேரன் முன்பே பாண்டியனிடம் தோல்வியுற்றவன். அவன் தனியே இனிப் போர்க்குச் செல்லமாட்டான். ஆயினும் அவன் உள்ளத்தில் பகைக் கனல் அவிந்திராது; கொழுந்து விட்டெரிந்து கொண்டேயிருக்கும். அவனைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். போதுமா? இன்னும் பலரைத் துணைவராகச் சேர்த்துக்கொள்ள விரும்பினான்.

“பாண்டியனை வெற்றி கொள்ள யார் யார் வருகிறீர்கள்?” என்று வெளிப்படையாக முரசறைந்து விளம்பரப் படுத்தவில்லையே ஒழிய ஊருக்கு ஊர் ஆள் அனுப்பித் தன் கருத்தைத் தெரியப்படுத்தி அவர்களுடைய கருத்தை அறிந்துவரச் செய்தான்.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மன்னர்கள் மூவர் இருந்தார்கள். தொன்று தொட்டு வரும் அரச குலத்தைச் சார்ந்த சேர சோழ பாண்டியர்களாகிய மூவரையும் சிறப்பித்துப் பாராட்டுவது வழக்கு. அவர்களையல்லாமல் அங்கங்கே உள்ள கொங்கு நாடு முதலிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களும் இருந்தார்கள்.

இந்த இரு வகையினர்களை யல்லாமல் வேளிர் என்று வழங்கும் தலைவர்கள் பலர் பல இடங்களில் இருந்தார்கள். அவர்கள் தம்முடைய ஊர்களில் உள்ள மக்களையும் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களையும் ஆண்டு வந்தார்கள்; இக்காலத்தில் ஜமீன்தார்கள் என்றும் பாளையக்காரர்கள் என்றும் வழங்குபவர்களைப் போன்ற நிலை படைத்தவர்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் அடங்கியவர்கள் அல்லர். நிலவளமுடைய வேளாண்குடியிலே பிறந்தவர்கள் அவர்கள் வேளிர்களுக்குள் ஒழுக்கத்தாலும் கொடையாலும் சான்றாண்மையாலும் சிறந்தவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் தமக்குள்ளே சண்டையிட்டார்கள். பெரு மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் அவர்களுக்குத் துணையாகச் சென்று போரில் ஈடுபடுவதும் உண்டு. போர் வீரர்களையும் யானை முதலிய படைகளையும் அவர்கள் வைத்துத் தம் ஆட்சிக்குட்பட்ட ஊர்களைப் பாதுகாதது வந்தார்கள்.

சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் உள்ள வேளிரையும் குறுநில மன்னரையும் சேரனையும் தனக்குப் படைத் துணையாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியைச் சோழன் மிக வேகமாகச் செய்து வந்தான். எத்தனை பேர் சேர்ந்து போரிட்டாலும் வெற்றியிலே பங்கு கொடுக்கலாம். பாண்டி நாடு எவ்வளவு விரிந்தது! இருபது பேர்கள் போரிட்டு வெற்றி பெற்றால் அந்த இருபது பேர்களுமே அந்த நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம். அந்த நாட்டிலே எந்தப் பொருள் இல்லை?

சோழன் முயற்சி பலிக்கும் என்றே தோன்றியது. முதலில் அவன் சேரனுடைய உடன்பாட்டைப் பெற்றான். “போர் பாண்டி நாட்டு எல்லைக்கு வெளியே நடந்தால் நான் அவசியம் படையுடன் வந்து சேர்ந்து போரிடுகிறேன்!” என்று சேரன் உறுதி கூறினான். ஒருமுறை பாண்டி நாட்டின் எல்லைக்குள்ளே புகுந்து அகப்பட்டுக் கொண்டவன் அல்லவா?

சோழ நாட்டில் அழுந்தூர் என்ற ஊரில் திதியன் என்னும் வேள் ஒருவன் இருந்தான். அவன் வீரத்திற் சிறந்தவன். குறுக்கை யென்னும் இடத்தில் அன்னியென்பவனோடு போர் செய்து அவனை வென்றவன் அவன். கோசர் என்னும் கூட்டத்தினரோடு பொருது அழித்தவன். அவனிடம் சோழன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, அவன் தன்னிடமுள்ள படைகளோடு துணை வருவதாக ஒப்புக் கொண்டான். சேரனும் திதியனும் இணங்கி வந்தபோது சோழனுக்குப் போரில் வெற்றியே கிட்டியது போன்ற மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. பொருநன் என்ற வேள் ஒருவனும் இந்த முயற்சியில் சேர்ந்துகொண்டான்.

வேற்று நாட்டில் உள்ள வேளிர்களையும் சேர்த்துக்கொண்டால் நலம் என்று அவர்கள் எண்ணினார்கள். எருமையூரனைக் கேட்டால் ஒருகால் அவனும் சேரலாம் என்று சேரன் சொன்னன். இன்று மைசூர் என்று வழங்கும் ஊருக்கு வடமொழியில் மஹிஷபுரம் என்று பெயர். அதுவே எருமையூர் என்று தமிழில் வழங்கியது. அக்காலத்தில் அது பெரிய அரசாக இருக்கவில்லை. அதை ஒரு வேளே ஆண்டு வந்தான்; குறுநில மன்னனென்றே சொல்ல வேண்டும். அவனிடம் சிறந்த படை ஒன்று இருந்தது. சோழன், திதியன், பொருநன் மூவரும் அவனிடம் சென்றனர்; சேரன் துணை வருவதாக இருப்பதையும் சொல்லித் தம் கருத்தைத் தெளிவாகச் சொன்னார்கள்.

வலிய வரும் செல்வத்தை வேண்டாம் என்று சொல்வார் யார்? பாண்டி நாட்டின் வளத்தைப்பற்றி எருமையூரன் முன்பே கேட்டிருக்கிறான். மதுரை மாநகர் இந்நாட்டில் வேறு எங்கும் காணாத சிறப்புடைய தென்பதைப் புலவர்கள் சொல்லக் கேட் டிருக்கிறான். “அரசனே இளையவன்; நாடோ பெரிது; நாம் வென்றால் நமக்குக் கிடைக்கும் பொருள் அளவற்றது” என்று சோழனும் பிறரும் சொல்லச் சொல்ல எருமையூரனுக்கு நாவில் நீர் ஊறிற்று; “உங்கள் கருத்துக்கு இணங்குகிறேன்” என்று உடன்பட்டான்.

“இன்னும் யார் யாரைச் சேர்த்துக்கொள்ளலாம்?” என்று கேட்டான் சோழன். அந்தப் பக்கங்களில் யாரேனும் தக்க படை வலிமையுடன் இருந்தால் துணையாகச் சேர்த்துக்கொள்ளலாமே என்பது அவன் எண்ணம். படை பெருகப் பெருக வெற்றி உறுதிப்படும் அல்லவா? விரைவிலும் நினைத்த காரியத்தை நிறைவேற்றி விடலாம்.

எருமையூரன் இரண்டு பேரைச் சொன்னான். “துவார சமுத்திரத்தில் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேள்மான் இருக்கிறான்; அவனைக் கேளுங்கள். தகடூரில் எழினி யென்னும் வேள் இருக்கிறான்; அவனை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அவனையும் துணை சேர்த்துக்கொள்ளலாம்... இன்னும்..."

“போதும், போதும். இப்போதே நாம் ஐந்து பேர் இருக்கிறோம். ஐந்து பேர் சேர்ந்து நூற்று வரை முறியடித்த நாடு இது. நீங்கள் சொன்ன இரு வரையும் அணுகிக் கேட்கிறோம். உடன்பட்டால் சேர்த்துக்கொள்கிறோம்; இல்லையானால் நாம் ஐவரும் போதும்; இந்த உலக முழுவதுமே வென்றுவிடலாம்” என்றான் சோழன்.

எருமையூரன் சிரித்துக்கொண்டான். “பல காலமாகப் புகழ் படைத்து விளங்கும் பாண்டியனது பேரரசை எளிதிலே குலைத்துவிடலாம் என்று நான் நினைக்கவில்லை. பலருடைய துணைவலி இருந்தால் அது இயலும்” என்றான்.

சோழன் முதலில் இருங்கோவேள்மானிடம் சென்றான். மிகப் பழங் காலத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வேளிர்களில் ஒருவனுடைய வழி வந்தவன் அவன். அவனுடைய குல முதல்வன் ஒரு முனிவரைக் காப்பாற்றும் பொருட்டுப் புலியோடு, பொருது அதனைக் கொன்றான். அதனால் அவனுக்குப் புலிகடிமால் என்ற சிறப்புப் பெயர் வந்தது. அப்பெயரை அவன் வழி வந்தவர்களுக்கும் சார்த்தி வழங்குவது மரபாகி விட்டது. துவார சமுத்திரம் என்னும் ஊரைத் துவரை என்று தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். புலிகடிமால் மரபை ஹொய்ஸால வம்சம் என்று இப்போது சரித்திர ஆசிரியர்கள் குறிக்கிறார்கள். வீரம் செறிந்த மரபு அது.

இருங்கோவேள்மானிடம் சோழனும் பிறரும் சென்று பேசி அவனையும் தம் கட்சியில் சேர்த்துக் கொண்டனர். தகடூரை ஆண்ட எழினியும் அவர்களுக்குத் துணையானான்.

முடியுடை மன்னராகிய சோழனும் சேரனும், திதியன், பொருநன், எருமையூரன், இருங்கோவேள்மான், எழினி என்னும் ஐம்பெரு வேளிரும் ஒன்றுபட்டுப் பாண்டியனை எதிர்த்து வென்று பாண்டி நாட்டைத் தமக்குள்ளே பங்கு போட்டுக்கொள்ளத் திட்டமிட்டனர். அவரவர்கள் தம்மால் இயன்ற அளவுக்குப் படையைக் கூட்டுவதாக உறுதி பூண்டனர்.

எல்லாருக்கும் ஊக்கம் உண்டாக்கி முன் நின்று போரை நடத்த முன் வந்தான் சோழன். சோழனும் பாண்டியனும் பரம்பரை வைரிகள். தன்னுடைய முயற்சி வரவர எண்ணிய திசையிலே எண்ணியபடி நிறைவேறி வருவதை எண்ணி எண்ணி இறுமாந்தான் சோழன். தன் தலையில் பாண்டி நாட்டு மணி முடியே ஏறிவிட்டது போன்ற கற்பனையில் அவன் கிடந்து தடுமாறினான். உடனே மதுரைக்குச் சென்று முற்றுகையிட்டுப் பாண்டியனைச் சிறைபிடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் அவனிடம் உண்டாயிற்று. நினைத்தவுடன் நடப்பதாக இருந்தால் இவ்வளவு முயற்சியும் அல்லலும் எதற்கு?

ஒருவாறு அவர்கள் ஏற்பாடுகள் நிறைவேறின. யார் யார் எப்போது எப்படி வந்து சேர்வது என்று யோசித்தார்கள். அவரவர்கள் வெவ்வேறு திசையில் வந்து தாக்கலாம் என்று முதலில் பேச்சு எழுந்தது. அப்படியானால் ஒவ்வொருவரையும் எளிதில் பாண்டிப் படை வென்றுவிடக்கூடும் என்று அஞ்சினர். படையின் சிறு சிறு பகுதியை ஒவ்வோரிடத்திலும் அனுப்பிப் பொழுது போக்கச் செய்துவிட்டுப் பெரிய படை இருக்கும் இடத்தில் பெரும்பாலான படைகளைக் கொண்டு சென்று பொருது அழித்து, அடுத்து வேறிடத்துக்கு வந்து பொரலாம். இப்படியே யாவரையும் பாண்டியன் அழித்துவிடலாம். ஆதலின், எல்லோரும் ஒருங்கே ஒரு திசையிற் சென்று போர் செய்தலே நலம் என்று தீர்மானித்தனர்.

இரு பெரு மன்னரும் ஐம்பெரு வேளிரும் போர் முழக்கம் செய்துவிட்டனர். முன் அறிவிப்பு இல்லா மல் போர் செய்வது அக்காலத்தில் வழக்கம் அன்று. போர் நிகழ்வதற்கு முன் அதனை அறிவிப்பதோடு, பகையரசன் நாட்டிலுள்ள பெரியோர்களையும் மங்கையரையும் குழந்தைகளையும் வேறு இடத்துக்குப் போய் விடும்படி எச்சரிப்பார்கள். போரில் அவர்களுக்கு ஊறுபாடு நிகழக் கூடாதென்பது பகைவர்கள் கருத்து. பிறகு ஆநிரைகளை ஓட்டிவந்துவிடுவார்கள். அவற்றுக்குத் தீங்கு நேரக்கூடாது. “சண்டைக்கு எடுபிடி மாடு பிடி” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது இந்த ஆநிரை கொள்ளும் வழக்கத்தையே புலப்படுத்துகிறது. இவ்வாறு ஒரு முறையை மேற்கொண்டு போர் நிகழ்த்தியதால் அறப் போரென்று சொன்னார்கள்.

போர் முழக்கம் நெடுஞ்செழியன் காதில் விழுந்தது. ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்தான். குடிமக்களிற் சிலருக்குச் சற்றே அச்சம் தோன்றியது. “இன்னும் பிள்ளைப் பிராயம் நீங்கவில்லை. அதற்குள் இவ்வளவு பேரோடு எப்படிப் பொருவது?” என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாண்டிய மன்னன் குதித்தெழுந்தான். உலகமே எதிர்த்து வந்தாலும் அஞ்சாதவனைப் போல மிடுக்கோடு பேசினான். “ஆயிரம் எலிகள் வந்துவிட்டனவே என்று பாம்பு அஞ்சுவதில்லை. பெரிய யானை ஆயிற்றே என்று சிங்கக் குட்டி சோர்ந்து போவதில்லை. மூட்டை மூட்டையாகப் பஞ்சு இருக்கிறதே என்று நெருப்பு நிற்பதில்லை. ஏழு பேர் தலைவர் ஒரு படைக்கு என்றால், அதுவே அதற்குக் குறை. படை முழுவதும் ஒருவர் தலைமையில் இயங்கினால்தான் அதன் வீரம் அனைத்தும் பகைவனை எதிர்ப்பதில் பயன்படும். தலைவர்கள் பலரானால் கருத்து வேறுபாடு ஒவ்வொரு கணத்தும் எழும்” என்று அறிவிலும், அநுபவத்திலும் சிறந்தவனைப் போல் அவன் பேசினான். அத்தனையும் உண்மை. அமைச்சரும் படைத் தலைவர்களும் வியந்தார்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? அவர்களுக்குச் சிறிதளவு இருந்த ஐயமும் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டது. “இந்த அரசனைத் தலைவனாகப் பெற்றுப் போர் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று யாவரும் ஒருமுகமாகக் கூறினர்.

அரண்மனையில் இருந்த சிலர் நெடுஞ்செழியனது இளமையை நினைந்து அஞ்சியது அவனுக்குத் தெரியவந்தது. பகைவர்களும், “இவன் சிறிய பையன்” என்று எள்ளியதாகக் கேள்வியுற்றான். அவன் கண்களில் கனல் கொப்புளித்தது. நெஞ்சில் வீரம் கனன்றது. அரச குலத்தின் மிடுக்கு அவன் நாவில் உருவாகியது. வஞ்சினம் கூறத் தொடங்கினான்:

“இதை யாவரும் கேளுங்கள். ‘இவன் நாட்டைப் பெரிதென்று பாராட்டிச் சொல்கிறவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும். இவன் சிறியவன். இவனால் என்ன செய்ய முடியும்?’ என்று அவ்வேந்தர்கள் பேசிக்கொள்கிறார்களாம். பெரிய பெரிய யானைகளும் தேரும் மாவும் படை வீரர்களும் மிகுதியாக இருப்பதாக எண்ணி இறுமாந்துகொண்டிருக்கிறார்கள். பாண்டி நாட்டு வீரர்களுடைய வலிமையை எண்ணி அவர்கள் அஞ்சவில்லை. சேரனுக்குப் பழைய கோபம் வேறு இருக்கும். என்ன என்னவோ சிறுசொற் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களாம்!”

“ஆம், ஆம்; அப்படித்தான் அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்” என்று அரசவையில் சிலர் தமக்குள் கூறிக்கொண்டனர்.

“அவர்கள் உண்மையை அறியாதவர்கள். பாண்டி நாட்டின் சிறப்பை உணராதவர்கள். இந்த மண்ணின் வீரத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள். என் இளமையையும் சிறிய உருவையும் பார்த்து ஏமாந்து போய் விட்டார்கள். இந்தச் சிறிய உடம்பில் இமய மலையைப் பதம் பார்த்த வழுதியின் ரத்தம் ஓடுவது அவர்களுக்குத் தெரியவில்லை. கடலளவும் தன் நாட்டை விரித்து முந்நீர் வடிம்பிலே தன் அடியை வைத்து அது தன் பாதத்தை அலம்ப நின்ற பெருவிறல் படைத்த பாண்டியன் உடம்பிலே அன்று இருந்த மிடுக்கு இந்த உடம்பிலும் இருப்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மன்னரைப் புறங் கண்டு வெற்றிக் கொடி நாட்டி வேள்வி செய்த முதுகுடுமிப் பெருவழுதியின் வலிமை இன்னும் பாண்டிய பரம்பரையிலே குன்றாமற் சுடர் விடுவதை எண்ணிப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை; அறிவில்லை; விதியும் இல்லைபோலும்!”

பாண்டியன் நெடுஞ்செழியனுடைய பேச்சில் மிடுக்கு ஏறியது; கனல் குமுறியது; வீரம் வெடித்தது. சொற்கள் அம்புகளைப்போல அடுக்கடுக்காக, வேகமாக, சூடாக வெளி வந்தன. அவையில் இருந்தவர்கள் மூச்சையும் அடக்கிக்கொண்டு கேட்டார்கள். “என்னுடைய வலிமை தெரியாமல் சிறுசொல் சொல்லிய வேந்தரைப் பொருது, அவர்கள் அவ்வளவு பேரையும் வென்று, அவர்கள் முரசத்தையும் அவர்களையும் ஒருங்கே கைக்கொள்ளாவிட்டால், என் குடை நிழலில் வாழ்கிற குடிமக்கள், பாதுகாப்பைக் காணாமல், எங்கள் அரசன் கொடியவன் என்று கண்ணீர் விட்டுத் தூற்றும் கொடுங்கோலை உடையவனாகுக! உயர்ந்த பெருமையையும், சிறந்த கேள்வியையும் உடைய மருதனாரை முதல்வராக உடைய உலகத்தோடு நிலை பெற்ற பலர் புகழும் சிறப்பையுடைய புலவர்கள் என் நாட்டைப் பாடாமல் போகட்டும்! என்னுடைய பாதுகாப்பில் இருக்கும் உறவினர்கள் துன்புறும்படியும், என்னிடம் இரப்பவர்களுக்கு ஈயாமற் போகும்படியும் வறுமை என்னை வந்து அடையட்டும்!” என்று அரசன் வஞ்சினம் கூறி முடித்தான். சிறிது நேரம் அவையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் மெளனம் நிலவியது.

மெல்ல மாங்குடி மருதனார் பேசினார். “அரசே, பாண்டிய குலத்தின் குருதி எப்படிக் கொதிக்கும் என்பதை இன்று நன்றாக உணர்ந்தேன்” என்றார். அவர் ஒருவர்தாம் அப்போது பேசமுடியும். அவரும் சுருக்கமாகப் பேசினார். “குலத்தின் பெருமைக்கு ஏற்ற வஞ்சினம் இது. உனக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நீ நீடு வாழ்க!” என்று வாழ்த்தினார். அவை கலைந்தது. போருக்கு ஆயத்தங்கள் நடைபெற்றன.

அரசன் தான் கூறிய வஞ்சினத்தைக் கவியாகவே அமைத்து விட்டான். அவனும் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன். உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கிக் காட்டும் அந்தக் கவிதை புறநானூற்றில் இன்று ஒளிர்கிறது.

‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;
இளையன் இவன்’ என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்

நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாம்’ என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎன் ஆயின், பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது
‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலையஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை! புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!
----

இவன் ஆளும் நாட்டை உயர்வாகக் சொல்பவர்கள் எள்ளி நகையாடற்குரியவர்கள்; இவன் இளைய சிறு பையன்’ என்று நான் வருந்தும்படி சொல்லி, ‘ஒலிக்கின்ற மணி மாறி மாறி இசைக்கும் பரந்த அடியைபும் பருத்த காலையும் உடைய யானையையும், தேரையும், குதிரையையும், படைக்கலங்களைப் பெற்ற வீரர்களையும் உடையோம் யாம்’ என்று என்னுடைய மிக்க வலிமைக்கு அஞ்சாமல் பெரும் சினம் மிக்குச் சிறுமைப் பண்பைக் காட்டும் சொற்களைச் சொல்லிய சினமுடைய மன்னரை, வெல்லற்கரிய போரிலே சிதையும்படி தாக்கி அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே அகப்படுத்தாமல் இருந்தேனானால், இதுகாறும் பொருந்தி நிற்கும் என் குடை கிழலில் வாழ்வார்களாகிய குடி மக்கள் தாங்கள் பாதுகாப்பின் பொருட்டுச் சாரும் நிழலைக் காணாமல், ‘எம் வேந்தன் கொடியவன்’ என்று கண்ணீர் விட்டுப் பழி தூற்றும் கொடுங்கோலுடையவனாகுக! உயர்ந்த பெருமையையும் மேம்பட்ட கேள்வியையுமுடைய மாங்குடி மருதன் தலைவனாக உலகத்தோடு நிலைபெற்ற பலர் புகழும் சிறப்பைப் பெற்ற புலவர் என் நில எல்லையைப் பாடாமல் நீங்குக! என்னால் காப்பாற்றுவதற்குரிய உறவினர் துன்பம் மிக, என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க மாட்டாத வறுமையை யான் அடைவேனாகுக!
------------------

3. தலையாலங்கானத்துப் பெரும் போர்

அரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம் பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுகட்டில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக்கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப் பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே! மூதூர் வாயிலிற் பணிக் கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டுவிட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா? அவர்கள் அனைவரையும் இன்றைப் போதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களோ!’ என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

மூதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல் தவச் சிறிதே![1]

“போரைப்பற்றி எவ்வளவோ செய்திகளை அறிந்திருக்கிறோம். பல போர்களைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன் இத்தகையதொரு போரைப்பற்றிக் கேட்டதே இல்லை” என்றார் இடைக் குன்றூர் கிழார்.

அயலில் நின்ற புலவர், “எதை எண்ணிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஓர் அரசனை மற்றோர் அரசன் தாக்குவது உண்டு. ஒருவனை ஒருவன் எதிர்த்து அழிதலும் உண்டு. அது புதுமையன்று; உலகத்தில் எங்கும் நடக்கும் இயற்கை. ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி நடந்ததைக் கேட்டதே இல்லை.”

“இதுவும் சண்டைதானே?”

“இதில் ஏழு பேரோடு இளம் பருவமுடைய ஒரு மன்னன் தனியே நின்று போரிடுவதென்பது வியப்பிலும் வியப்பு! இது முன்பு கண்டறியாத போர்” என்று தம் வியப்புக்குரிய காரணத்தை வெளியிட்டார் இடைக்குன்றூர் கிழார்.

“அந்த ஏழு பேரையும் தேடி இவனா போனான்? மண்ணாசை இவனுக்கு இல்லை. பாண்டி நாட்டைத் தக்கபடி ஆண்டுவந்தால் போதுமே. அவர்களுக்குத்தான் மண்ணாசை; பாண்டி நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று ஆசை. தலை வாசலில் வந்து படையுடன் நிற்கும்பொழுது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருக்க முடியுமா?”

“அவர்கள் நாட்டின் எல்லையில் வந்து அக்கிரமமாகப் புகுந்தது உண்மைதான். அவர்களுக்கு இவனுடைய பெருமை தெரியவில்லை; இவனுடைய தலைமையும் தெரியவில்லை. ஆசை ஒன்றே உந்த அறிவு மங்க வந்துவிட்டார்கள். அப்படி வந்தவர்கள் எளியராகத் தோற்றவில்லை. முன்பே பல போரில் ஈடுபட்டுக் கழல் கட்டிக்கொண்டவர்கள். அவர்களை நான் ஒருவனே சென்று அடுகிறேன் என்று புறப்பட்டானே, நம் அரசன்; அது எவ்வளவு ஆச்சரியமான செயல்!”

“உண்மைதான். இவனும் அவர்களைப் போல வேறு யாரையேனும் துணைவர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. தன் பலத்தில் இவன் அத்துணை நம்பிக்கை வைத்திருக்கிறான்.”

“அது மாத்திரம் அன்று. முன்பு சேரன் எதிர்த்தபோது படைத் தலைவர்களை விட்டு அடக்கினது போலச் செய்திருக்கலாம். அப்படியும் செய்ய வில்லை. போர்ப்பறை காதில் விழுந்ததோ இல்லையோ, தன் குலத்துக்குரிய வேப்பந் தளிரைச் சூடிக்கொண்டான், நாட்டை முற்றுகையிட்டிருக்கும் பகைவரோடு பொரப் புகுவார் அணிகிற மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்து கொண்டான். வீர முரசு ஆர்ப்ப, அந்த ஏழு பேரையும் அடக்குவேன் என்று புறப்பட்டு விட்டானே! இந்தப் பருவத்தில் இத்துணைத் துணிவு உண்டானது ஆச்சரியப்படக் கூடியதல்லவா?”

“ஆம், ஆம்” என்று இப்போது தலையசைத்தார் மற்றொரு புலவர்.

பாண்டி நாட்டின் வடவெல்லையிலே போர் மூண்டது. அங்கேயே பகைவர்களை எதிர்த்து அழிப்பது என்று பாண்டிய மன்னன் புறப்பட்டுவிட்டான்.

பகைவர் ஏழு பேர்கள்; பகைப் படைகளும் ஏழு. ஆயினும் ஏழு வகையில் செயலாற்றலாமா? எருமையூரன் படைக்கும் சோழநாட்டுப் படைக்கும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வளவோ வேறுபாடுகள். முன்பு கூடியறியாதவர்கள் அவர்கள். அத்தகையவர்கள் எப்படி ஒத்துப் போர் செய்ய முடியும்? சோழ நாட்டு வேளிர்களில் இன்னும் சிலரைத் துணைக்கு அழைத்திருக்கலாம்; நெடுஞ் சேய்மையிலுள்ள இருங்கோவேள்மானிடம் போயிருக்க வேண்டாம்; எருமையூரனை நாடியிருக்க வேண்டாம். எல்லாம் பட்ட பிறகு தானே தெரிகின்றன? ஒவ்வோர் ஊர்ப் படையும் ஒவ்வொரு வகையில் போரிடுவதாக இருந்தால் போரில் எப்படி ஒருமித்துத் தாக்க இயலும்?

இந்தக் குறைபாடும் பாண்டியனது படைக்குப் பலமாக முடிந்தது. இயற்கையாகவே பெருவிறல் படைத்த படைத்தலைவர்கள் கட்டுத்திட்டமாகப் படை வீரர்களை நடத்திச் சென்றனர். பாண்டி நாட்டுப் படையின் ஒழுங்கு முறைக்கு முன் எந்த நாட்டுப் படையின் ஒழுங்கு முறையும் நில்லாது. தன் படைப் பலமும் பகைவருடைய வலியின்மையும் பாண்டியனுக்குத் துணையாயின.

பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களே யன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப் படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை; பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம்[2] என்னும் இடத்தில் நின்று போர் செய்தது. அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்துவிட்டமையால் எளிதில் சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கினான்.

போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிரும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று முடுக்கினர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர். ‘வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை’ என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவந்தான். அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

எருமையூரன் படைவீரர்களுக்குத்தான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. “நம்முடைய ஊர் எங்கே? இந்த இடம் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத் தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆள முடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்? பல நாடுகள் இடையிட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக் கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்?’-இப்படி அவர்களுக்குள் ஊக்கக் குறைவு தலை நீட்டியது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

அங்கங்கே பகைப் படைகளில் உள்ள வீரர்கள் கை வாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக்கூட ஊக்கம் குறைந்துவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று பொருதது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

பாண்டிப் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப் போரில் வெற்றி மகளைக் கைப்பற்றினான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக்கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றி விழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வீசினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர். போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத் தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

போர் நிகழ்ந்தது சில நாட்களே யானாலும் அதனால் உண்டான மகிழ்ச்சி யாரவாரம் பல மாதங்கள் இருந்தது. புலவர்கள் கவி பாடி அந்த வெற்றியை மக்கள் மறவாதபடி செய்தார்கள்.

நெடுஞ்செழியனைப் புலவர்கள் பாராட்டும் போதெல்லாம் அவன் தன் படைத் தலைவர்களையும் வீரர்களையும் புகழ்ந்தான். தான் ஒன்றும் செய்யாதவனைப் போல இருந்தான். இந்த உயர்ந்த பண்பை உணர்ந்து அதையும் பாராட்டினார்கள் புலவர்கள்.

“போர் செய்யும் பருவம் இன்னும் வரவில்லை. நேற்று வரைக்கும் கிண்கிணி அணிந்திருந்த கால் அது. இப்போது அதில் கழலை அணிந்துகொண்டான். இப்போதுதான் குடுமி வைத்தார்கள். அதற்குள் வேப்பந் தளிரையும் உழிஞையையும் அணிந்துகொண்டான். கையில் காப்பு அணிந்து விளையாடினவன் அதைக் கழற்றிவிட்டு வில்லை எடுத்துக்கொண்டான். தேரில் சிங்கக் குட்டிபோல நின்றான். ‘இவன் யார்! விளையாடிக்கொண்டிருந்த அவனா!’ என்று நாங்கள் எங்கள் கண்களையே நம்பவில்லை. அவன் வாழட்டும், அவன் கண்ணி வாழட்டும் என்று போற்றினோம். எங்கள் கண்ணேறு படக்கூடாதல்லவா? இன்னும் குழந்தைப் பருவத்துக்குரிய ஐம்படைத் தாலியைக் கழற்றவில்லை. பாலை விட்டுவிட்டுச் சோறே உண்ணும் பழக்கமும் வரவில்லை. அதற்குள் படையெடுத்து வந்த பகைஞரை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டான். அவர்களுடைய படைப் பெருமையைக் கண்டு வியக்கவும் இல்லை; அதை அலட்சியம் செய்யவும் இல்லை. அவரைத் தக்கபடி தாக்கி எலியைப் பொறியிலே அகப்படுத்துவதுபோலச் சுற்றிக்கொண்டான். வெற்றியாரவாரம் வானத்தில் எதிரொலி செய்யுமாறு அவர்களை மடக்கினான்; நிலத்தைக் கவ்வும்படி செய்தான். அதைக் கண்டு நாடே அதிசயத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அவனோ இதற்காக அளவற்ற மகிழ்ச்சியடையவும் இல்லை; தன் பெருமையைச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அவன் வீரத்தைச் சொல்வதா? உள்ளத் திண்மையைச் சொல்வதா? பண்பின் சிறப்பைச் சொல்வதா?”[3]

இவ்வாறு பாடினார் இடைக்குன்றூர் கிழார். ஒரு பாட்டோடு நின்றாரா? மேலும் மேலும் பாடினார்.

“அந்தப் பைத்தியக்காரர்களுடைய அறிவை என்னவென்று சொல்வது! புலி புறப்பட்டால் அதன் முன்பு மற்ற விலங்குகள் எம்மாத்திரம்? அது சோம்பல் முரித்துக்கொண்டு பாயும்போதல்லவா அதன் பெருமை தெரிகிறது? புலியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளாதவர்கள் அவர்கள். சோழன் புலிக் கொடியைக் கையிலே பிடித்திருக்கிறானே அன்றி, அதன் தன்மையைச் சிறிதும் எண்ணினான் இல்லை. மற்றவர்களும் இவன் வீரத்தை மதியாமல் தாங்களே பெரியவர்கள் என்று புறப்பட்டார்கள். ‘இவன் சிறு பிள்ளையாண்டான்; இவன் நாடு கிடைத்தால் நமக்குப் பெரிய கொள்ளை கிடைக்கும்’ என்று எண்ணி வந்தார்கள். அவர்களை இந்த நாட்டிலே வைத்து நசுக்கியிருக்கலாம். இவன் அப்படிச் செய்யவில்லை. பகைவர் நாட்டிற்கே சென்று ஊர்ப் பெண்கள் அவருடைய தோல்வி கண்டு நானும்படி அங்கேயே அட்டான். என்னே இவன் வீரம்!”[4] என்று பா அலங்கல் சூட்டினார்.

மாங்குடி மருதனார் பாடினார். நக்கீரர் பாடினார். இன்னும் பல புலவர்கள் தலையாலங்கானத்துப் போரையும், அதில் பாண்டியனுக்குக் கிடைத்த வெற்றியையும் பல பல வகையிலே புனைந்து பாடி இன்புற்றார்கள். அந்தப் பாடல்கள் நாட்டு மக்களுக்குத் தமிழ் இன்பத்தையும், மன்னனது புகழையும் ஒருங்கே வெளிப்படுத்தின. அதுமுதல் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனானான். புலவரும் பாண்டி நாட்டு மக்களும் மாத்திரமா அப்படிச் சொன்னார்கள்? அந்தப் போர்க்களத்தில் தோல்வியுற்றவர்களின் நாட்டிலும் அவனுடைய பெயர் இந்தச் சிறப்புடனே வழங்கலாயிற்று.
-----------
[1]. தன் பழைய நகரத்கின் வாயிலில் உள்ள குளிர்ச்சியையுடைய குளத்தில் நீராடிப் பொதுவிடத்தில் வளர்ந்துள்ள வேம்பின் ஒள்ளிய தளிரை அணிந்து, தெளிவான பறை முன்னாலே, போதலே உடைய ஆண் யானையைப்போல மிடுக்குடன் நடந்து வெவ்விய போரைச் செய்யும் பாண்டிய மன்னனும் வந்தான்; அவனுக்கு முன் எதிர்ப்பட்ட புதிய வீரரோ பலர்; பகற்பொழுது, மிகச் சிறிது. இவர்கள் அழியாமல் எஞ்சுவார்களோ!
[2]. குடவாயிலுக்கு அருகில் தலையாலங்காடு என்ற பெயரோடு விளங்கும் சிவத்தலமே இது.
[3]. புறநானூறு.77
[4]. புறநானூறு.98.
----------

4. போரில் ஊக்கம்

தலையாலங்கானத்தில் வெற்றி மகளைக் கைப்பிடித்தபின் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தோள்திவுை மிகுதியாகிவிட்டது. அது மிகப் பெரிய போராக இருந்ததனால் போர்த் தொழிலின் துறைகளையெல்லாம் நன்கு உணரும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. முடியுடை மன்னர்கள் முறிந்தோட வீர விளையாட்டு நிகழ்த்திய அவன் புகழ் தமிழக முழுவதுமே பரவியது. ‘இளைஞன் இவன்; எப்படி நாட்டை ஆளப் போகிருனோ!’ என்று ஐயுற்றவர்கள் இப்போது அவனது இளமையை எண்ணியே பெருமிதம் அடைந்தார்கள். நெடுங்காலம் அவன் ஆட்சி செய்வான் அல்லவா? இனியும் எங்கேனும் பகைவர் இருந்தால் அவர்களை அடியோடு தொலைப்பேன் என்று வீர முழக்கம் செய்தான் வழுதி.

அக் காலத்தில் பாண்டி நாட்டின் வட கிழக்கே சோழ நாட்டின் எல்லையில் கடற்கரையை அடுத்த பகுதி ஒன்றை எவ்வி என்பவன் ஆண்டு வந்தான். நீழல் என்னும் ஊரில் அவன் வாழ்ந்தான். பெரும் போர் நடந்து முடிந்த இந்தச் சமயத்தில் பாண்டிப் படை இளைப்பாறும் என்று அவன் எண்ணிக் கொண்டான். தன் நிலப் பகுதியை அடுத்துள்ள பாண்டி நாட்டுப் பகுதி ஒன்றின்மேல் படை, யெடுத்துச் சென்று அதைத் தனதாக்கிக்கொண்டு கொடி நாட்டினான்; இந்தச் செய்தி பாண்டியனை எட்டியவுடன் அவன் கொதித்தெழுந்தான். யானைகளைப்பொருது வென்ற கோளரிக்கு முயல் எம்மாத்திரம்? ஒரு சிறு படையை அனுப்பி வேள் எவ்வியை ஓட்டச் செய்ததோடு அவன் நாட்டையும் அகப்படுத்தச் செய்தான். அப்போதுதான் எவ்விக்கு உணர்வு வந்தது. இவ்வளவு பெரிய அரசை எதிர்த்தது எவ்வளவு பேதைமை என்று தெரிந்துகொண்டான். ‘இனி இத்தகைய, செயலைச் செய்யேன். இப்போது நான் செய்த பிழைக்காக எனக்குரிய மிழலைக்கூற்றத்தைப் பாண்டியனுக்கு அளித்துவிடுகிறேன்’ என்று சமாதானம் பேசினான். பாண்டியனுக்கு நாடாசை இல்லாமையால் அவன் விருப்பப்படியே அவனை மன்னித்து, அவன் வழங்கிய மிழலைக்கூற்றத்தை மட்டும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.

இவ்வாறு வேறு சிவ பழைய வேளிர் குறும்பு செய்தனர். அவர்களையும் அடக்கி அவர்களுடைய முத்தூற்றுக்கூற்றம் என்ற நிலப் பகுதியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டான்.

நாளுக்கு நாள் பாண்டிய மன்னனுடைய வீரம் ஓங்கி வளர்ந்தது. இளமை மிடுக்கும் குலத்திற்கேயுரிய திறலும் சந்தர்ப்பமும் சேரச் சேர அவனுக்கு எப்போதுமே போரில் நாட்டம் இருந்து வந்தது. மிகச் சிறிய பகையானாலும் பெரும் பகையானாலும் தானே நேரில் சென்று போர் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் வளர்ந்தது. அவ்வாறே சென்று போரிட்டு வெற்றி பெற்றான்.

நெடுஞ்செழியன் அரியணை யேறியது முதல் தொடர்ந்து பெரும் போர்களும் சிறு போர்களுமாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன. பாண்டி நாட்டு வீரர்களுக்கு ஊக்கம் குறையவில்லை. போர் வீரர்களுக்கு வெற்றி உண்டாக உண்டாகப் போரில் புகும் ஆர்வம் வளர்ந்து வரும்.

ஆனால் புலவரும் சான்றோரும் இந்த நிலையை விரும்பவில்லை. விடிந்து எழுந்தால் வேல் பிடிப்பதும் வில் பிடிப்பதுமாக அரசன் தன் வாழ்நாளைக் கழித்தால் அவனுடைய வாழ்க்கையில் பிற துறைகள் என்னாவது? அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டாமா? கலையின்பம் நுகர வேண்டாமா? புலவர்களைப் பாதுகாத்து அவர்கள் கவிதையைக் சுவைக்க வேண்டாமா? தமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்தனர். மாங்குடி மருதனார், நக்கீரனார் முதலிய புலவர் பெரு மக்கள் தமிழை வளம்படுத்தினர். அந்தப் புலவர்களோடு புலவராக வீற்றிருந்து தமிழை ஆராய்ந்து இன்பம் காணும் திறமை பெற்றவர்கள் பாண்டிய மன்னர்கள். நெடுஞ்செழியனிடமும் அந்த ஆற்றல் இருந்தது. அவனே ஒரு புலவன். அப்படி இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அவன் உண்டாக்கிக்கொள்ளவில்லை. போர் வேட்கை அவனைக் கடுமையாகப் பற்றிக்கொண்டது.

இந்த நிலையில் புலவரும் சான்றோரும் மதியமைச்சரும் சேர்ந்து, பாண்டியனுடைய போர் வெறியைத் தணிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அப்போது அறிவிலும் அநுபவத்திலும் சிறந்த மாங்குடி மருதனார், “நம் மன்னன் வீர மகளின்பால் கொண்ட காதலை மாற்ற வேண்டுமானால் அவனுக்கு ஒரு தேவியைத் திருமணம் முடிப்பதுதான் தக்க வழி; வீரம் மிக்கவர்கள் அமைதி பெறுவது காதலிலேதான்” என்று கூறினார். மற்றவர்களும் அந்த உண்மையை உணர்ந்தார்கள். அரசனுக்குத் திருமணத்தின் இன்றியமையாமையை எடுத்துரைக்கத் தீர்மானித்தார்கள்.

புலவர்கள் மனம் வைத்தால் எதையும் செய்துவிடுவார்கள். மாங்குடி மருதனார் திருமணத்தைப் பற்றிய செய்தியைச் சொல்லியபோது முதலில் அரசன் ஆர்வமுள்ளவனாகக் காட்டிக்கொள்ளவில்லை. பேரரசர்கள் திருவோலக்கம் கொள்ளும்போது மாதேவியுடன் வீற்றிருத்தல் மரபென்றும், கோலோச்சும் மன்னன் இல்லறம் நடத்திக் காட்டினால் குடி மக்களும் இல்லறத்தை நன்கு நடத்துவார்கள் என்றும் புலவர் எடுத்துக் காட்டினார். நக்கீரனாரும் சேர்ந்துகொண்டார். அறிவும் மதிப்பும் உடைய அவர்களுடைய வாய்மொழி வென்றது. அரசன் திருமணம் புரிந்துகொள்ள உடன்பட்டான்.

பாண்டியப் பேரரசனுக்கு மணம் என்றால் எத்துணைச் சிறப்பாக நடைபெற்றிருக்கவேண்டும்! நாட்டு மக்கள் அவ்வளவு பேரும் அவனைத் தம் உயிரைப் போல எண்ணிப் போற்றினார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் திருமணம் நிகழ்ந்தது போன்ற உவகையில் அவர்கள் மிதந்தார்கள். பிற நாட்டு மக்களும் அரசரும் புலவரும் கலைஞரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். தம்முடைய வாழ்நாளில் அத்தகைய சிறந்த நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை யென்று முதியவர்கள் கூறிக் களிக்கூத்தாடினர்.

புலவரும் பிற கலைஞரும் பெற்ற வரிசைகளைச் சொல்வதா? அயல்நாட்டு மக்கள் கொணர்ந்து அளித்த காணிக்கைகளைச் சொல்வதா? குடிமக்கள் தங்கள் அன்புக்கு அறிகுறியாக அரிய பண்டங்களைக் கையுறையாகக் கொணர்ந்து அளித்த அன்பைக் கணக்கெடுக்க முடியுமா? அவர்கள் அளித்ததற்குமேல் அரசன் பல்வகைப் பொருள்களை அவர்களுக்கு வழங்கிய சிறப்பைத்தான் அறுதியிட்டுச் சொல்ல இயலுமா?

திருமணத்தில் அணங்கினர் நடனமிட்டனர்; அவர்களுடன் திருமகளும் களிக்கூத்தாடினள். புலவர்கள் புகழ்பாடிப் பாராட்டிப் பரிசுகளை மலையெனப் பெற்று உவகைக் கடலில் மூழ்கினர்; கலைமகள் குதுகலித்தாள். சான்றோர்கள் தெய்வத் திருவிழாவிலே கலந்து கொண்டது போன்ற இன்பத்தை அடைந்தார்கள்; தெய்வத் திருக்கோயில்களில் சிறப்பாக விழாக்கள் நடைபெற்றன.

மன்னனுடைய குலப் பெருமையை முதியோர் பாராட்டினார்கள்; அவனுடைய வீரச் சிறப்பைப் படைத் தலைவர்கள் புகழ்ந்தார்கள்; அவனுடைய வள்ளன்மையைப் புலவர்கள் கவிதையில் வைத்துப் போற்றினார்கள்; அவனுடைய கலைநுகர் திறத்தைக் கலைஞர்கள் எடுத்துரைத்துக் களிகூர்ந்தனர்; அறிவுச் சிறப்பை அமைச்சர் எடுத்துரைத்தனர்; அன்பின் மிகுதியைக் குடிமக்கள் பலபடியாகப் பாராட்டினர். குழந்தையும் கிழவனும், ஆணும் பெண்ணும், உள்நாட்டாரும் புற நாட்டாரும் தங்கள் தங்களுக்குத் தோற்றிய வகையில், அரசனைத் தம் அன்புக்குரியவன் என்பதை உணர்ந்து தெளிந்து, மனத்தால் போற்றியும் வாக்கால் புகழ்ந்தும் பெருமிதம் கொண்டார்கள்.

திருமணம் நிகழ்ந்த பின்னரும் பல மாதங்கள் அதைப்பற்றியே யாவரும் பேசிக்கொண்டிருந்தனர். அரசன் காதலின்பத்தை நுகரத் தொடங்கினான். ஆயினும் அவனுக்கு வெற்றி மகளிடம் இருந்த ஆராக் காதல் தணியவில்லை. மீண்டும் மீண்டும், யார் எங்கே குறும்பு செய்கிறார்கள் என்று ஆராய்ந்தான். யாரேனும் முணுக்கென்றால் ஓடினான்; பகைவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றியோடு திரும்பினான்.

பாண்டி நாட்டின் தெற்கே கடற்கரையை அடுத்த பகுதியில் பரதவர் என்னும் வகுப்பினர் இருந்து வாழ்ந்தனர். கடல் வாணிகம் செய்தும் முத்தும் பவளமும் எடுத்தும் அவர்கள் தம் திறமையைக் காட்டினர். தாம் செய்யும் தொழில்களிலே வரும் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசனுக்குத் திறையாகச் செலுத்தினர். இது வழி வழியே நடந்துவந்த முறை.

“அரசன் போர் புரிவதிலே பேரூக்கமுடையவனாக இருக்கிறான்; நாடாட்சியைத் தக்கவண்ணம் கவனிப்பதில்லை” என்ற பேச்சை அங்கங்கே சிலர் பேசத் தலைப்பட்டார்கள். அதனைக் கேள்வியுற்ற பரதவர், ‘அப்படியானால் நாம் திறை அளிக்காமல் நிறுத்தி விடலாமே. அதை அவன் எங்கே ஆராயப்போகிறான்?’ என்ற எண்ணம் கொண்டனர். ஒருகால் போர் நிகழ்ந்தாலும் தம்மினத்தார் யாவரும் கூடி எதிர்த்துத் திறை வழங்கும் வழக்கத்தை மாற்றிவிடலாம் என்பது அவர்கள் நினைவு.

பரதவர் இறை இறுக்கவில்லையென்பதை அதிகாரிகள் அரசனுக்கு அறிவித்தனர். உடனே இறையை இறுக்க வேண்டும் என்று அரசன் ஓலை போக்கினான். பரதவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் நினைவுறுத்தினான். அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டபடி வாளாவிருந்தனர். ‘எங்கே யார் வாலை ஆட்டுகிறார்கள்?’ என்று காத்து நின்ற அரசன் உடனே புறப்பட்டுவிட்டான்.

பரதவருக்கும் பாண்டியருக்கும் போர் மூண்டது. இனப்பற்று எவ்வளவு உறுதியானது என்பதை அரசன் அன்று உணர்ந்தான். பரதவர் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டனர். ஒருவனவது மரபையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லக் கூடாதோ? பாண்டி நாட்டுக் கடற்கரை நீளமானது. அங்குள்ள பரதவர்களில் ஒருவர் விடாமல் யாவரும் போரில் சேர்ந்தனர். கடல் வாணிகத்தால் பரதவர் தலைவர் பலர் பெரும் பொருள் ஈட்டியிருந்தார்கள். அவர்களுடைய உதவியைப் பெற்று வாழும் மக்கள் பலர் அங்கங்கே இருந்தனர். அவர்களிற் பலர் பரதவர் கட்சியிலே சேர்ந்து போர் புரிந்தனர்.

‘இது மிகச் சிறிய போராகத்தான் இருக்கும்’ என்று எண்ணிய பாண்டி நாட்டுப் படைத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள். பரதவர் படைப் பெருக்கம் பொருளின் ஆற்றலை எடுத்துக்காட்டியது.

நினைத்தபடி அந்தப் போர் விரைவில் முடியவில்லையே யன்றி, முடிந்தபோது வெற்றி, பாண்டிய மன்னனுக்கே உண்டாயிற்று என்று சொல்லவும் வேண்டுமா? தென் பரதவர் மிடலைச் சாய்த்து மீட்டும் பழையபடியே திறை செலுத்தும்படி ஆணையிட்டு விட்டு, மதுரையை அடைந்தான் நெடுஞ்செழியன்.

ஒன்று போக ஒன்றாகப் போர் எழுவதையும், திருமணம் செய்துகொண்ட பிறகும் அரசனுக்குப் போர் புரிவதில் உள்ள வெறி அடங்காமல் இருப்பதையும் கண்ட சான்றோர் கவலை கொண்டனர். தக்க வழியில் இந்தப் போக்கைத் தடை பண்ண வேண்டும் என்ற அவா அவர்கள் உள்ளத்தே முறுகி எழுந்தது. புலவர்கள் இத்துறையில் தம்மால் ஆன முயற்சிகளைச் செய்தால் நலம் பிறக்கும் என்று தேர்ந்தார்கள். நக்கீரரையும் மாங்குடி மருதனாரையும் மற்ற நல்லிசைப் புலவர்களையும் அணுகித் தங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ‘என்ன செய்வது? எப்படிச் சொல்வது? யார் சொல்வது?’ என்ற வினாக்கள் முன் நின்றன.

‘கவிதையிலே நம் ஆர்வத்தைத்தெளிவாகத் தெரிவிக்கலாம். அது அத்துணைச்சிறப்பன்று. நேர்முகமாகச் சொல்வதைவிட மறைமுகமாகச் சொல்வதே கலையின் பண்பு. அரசன் உள்ளத்தில் படும்படி கவிதை பாட வேண்டும்’ என்று புலவர்கள் தமக்குள் ஆய்ந்து பேசினார்கள். கடைசியில் நக்கீரர் தாம் ஒருபாட்டுப் பாடுவதாக ஒப்புக்கொண்டார். தலைவனாகிய அரசன் போர் செய்யப் புக்குப் பலகாலம் பாசறையிலே தங்கி விடுகிறான். அப்போது அவனுடைய காதலி அரண்மனையில் இருந்து வருந்துகிறாள். குளிர்காலம் வருகிறது. வாடை வீசுகிறது. ‘இன்னும் அவர் வரவில்லையே!’ என்ற வருத்தத்துடன் அவனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘இவள் வருத்தம் தீர அரசன் வெற்றி பெற்று மீள்வானாக!’ என்று துர்க்கையை வழிபட்டுப் பிரார்த்தனை செய்கிறாள் ஒரு முதியவள். அவள் சொல்வதாக ஒரு பெரிய பாட்டைப் பாடினார் நக்கீரர். அதற்கு நெடுநல்வாடை என்றுபெயர்.
----------------------

5. நெடுநல் வாடை

புரட்டாசி தாண்டி ஐப்பசி வந்துவிட்டது. இது கூதிர்ப்பருவம்; அடைமழை பெய்யும் காலம்; வாடைக் காற்று வீசி நடுக்கியெடுக்கும் பருவம். இதை நக்கீரர் தம்முடைய பாட்டில் முதலில் வருணித்தார். நீண்ட வாடை; ஆனால் பாசறையிலிருந்த அரசன் வெற்றி பெறும் நல்ல வாடையாதலால் அந்தக் கால நிகழ்ச்சியைப் பாடிய இதற்கு நெடுநல்வாடை என்னும் பெயரை வைத்தார். அவர் காட்டும் காட்சிகளை நாம் பார்க்கலாம்.

எப்போதும் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. அந்த மழையைக் கண்டு ஆயர்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. ஆடுமாடுகள் மழையில் நனைவதால், மேய்ச்சல் நிலத்தில் மனம் போனபடி போய் மேய முடியாது. எங்கே பார்த்தாலும் வெள்ளம். எப்படி மேய்கிறது? ஆகையால் தண்ணீர் தங்காத மேட்டு நிலமாகப் பார்த்து அங்கே அவற்றை ஓட்டிச் செல்கிறார்கள். வழக்கமாக மேய்க்கும் இடம் அன்றாதலால் அவர்களுக்கு வருத்தந்தான். என்ன செய்வது?

அங்கே வளர்ந்திருக்கும் காந்தள் மலர்கள் மழையால் இதழ் கலங்கிக் காட்சியளிக்கின்றன. உருவமே சிதைந்து போயிற்று, அவர்கள் உள்ளத்தைப் போல. ஒரே குளிர், வெடவெடக்கிறது. பத்துப் பேர், இருபது பேர்களாகக் கூடிக்கொண்டு பெரிய நெருப்பை மூட்டிக் குளிர் காய்கிறார்கள். தம் கைகளை நெருப்பிலே காய்ச்சிக் கன்னத்திலே தடவிக் கொள்கிறார்கள். ஆனாலும் பற்கள் தாளம் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆடுமாடுகள் எப்படி இந்த நிலையில் மேயப்போகும்? மேய்ச்சலையே மறந்துவிட்டன. குரங்குகள் காலைக் கையாலே கட்டியபடி மரத்தின் மூலையில் குந்திக்கொண்டிருக்கின்றன. மரத்திலே வாழும் பறவைகள் வாடைக் காற்று வீசுவதைத் தாங்காமல் அப்படி அப்படியே தரையில் விழுகின்றன. கன்று தாய்ப்பசுவிடம் போய் ஊட்டப் புகுந்தால் அது உதைக்கிறது.

இப்படி மனிதரும் விலங்கும் பறவையும் குளிரால் நடுங்கும் கூதிர்க்காலம் இது. மலையே உள்ளூறக் குளிர்ச்சி பெற்று நிற்கிறது.

முசுண்டைக் கொடி பூக்கும் காலம் இதுதான். அதில் வெள்ளை வெளேரென்று பூ மலர்ந்திருக்கிறது. அதனோடு அங்கங்கே உள்ள புதர்களில் பீர்க்கங்கொடி ஓடிக்கிடக்கிறது. அதில் பொன்னைப் போன்ற மலர் மலர்கிறது.

நீரோட்டத்தால் சில இடங்களில் சேறும் சில இடங்களில் ஈரமணலுமாக இருக்கின்றன. மழை நீர் ஓடும் இடங்களில் கயல் மீன்கள் அந்த நீரோட்டத்துக்கு எதிரே வருகின்றன. அருகே மணலில் இருந்தபடியே கொக்குகளும் நாரைகளும் அந்த மீன்களைக் கொத்துகின்றன.

கார்ப் பருவத்தில் நன்றாக மழை பெய்தது; இப்போது தூறல் வீசுகிறது.

அகன்ற வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்து நிற்கின்றன. கமுக மரங்களில் காய் முற்றிக் குலை குலையாகத் தொங்குகின்றன. பூம்பொழிலிலுள்ள மரங்களின் கிளைகளிலிருந்து மழைத்துளிகள் சொட்டிக்கொண்டே இருக்கின்றன.

இனி, சிறிதே நகரத்துக்குள் போவோம். இது அரசனுடைய இராசதானி நகரமாகிய மதுரை. பெரிய பெரிய வீதிகள். மழை நீர் ஓடுகிற இந்தச் சமயத்தில் பார்த்தால் வீதிகளெல்லாம் ஆறுகளைப் போலத் தோன்றுகின்றன. இந்தக் குளிரில் மழைத் தூறலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அயல் நாட்டு மக்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு வலிமையான உடம்பு! தழையும் பூவும் சேர்த்துக் கட்டிய மாலையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளை நிரம்ப உண்டிருக்கிறார்கள். பகற்பொழுது போனாலும் அவர்கள் வீதிகளில் திரிகிறார்கள்.

வீட்டுக்குள்ளே கொஞ்சம் போவோமா? அங்குள்ள மகளிரின் அழகுதான் என்னே! சங்கைக் கடைந்து செய்த அழகிய வளைகளை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பருத்த தோளும் மெத்தென்ற சாயலும் முத்தைப் போன்ற பல்லும் காதிலே அணிந்த குழையோடு சென்று மோதும் குளிர்ந்த அழகிய கண்னும் படைத்தவர்கள் அவர்கள். எங்கும் மேக மூட்டமும் தூறலுமாக இருக்கும் இப்போது அவர்கள் மாலைப் பொழுதை அறிந்துகொண்டு விளக்கேற்றப் புகுகிறார்கள். எப்படி மாலை வேளை வந்ததென்று அறிந்தார்கள் தெரியுமா? அவர்கள் காலையிலே பிச்சியரும்பைப் பறித்துப் பூந்தட்டிலே வைத்து ஈரத் துணியால் மூடியிருந்தார்கள். இப்போது அரும்புகள் அவ்வளவும் குப்பென்று மலர்ந்திருக்கின்றன. அந்தி மாலை வந்தால் மலரும் மலர் பிச்சி. அம்மலர்களைக் கண்டு அந்தி வந்ததை அறிந்துகொண்டார்கள். இரும்பாற் செய்த விளக்கிலே நெய் தோய்ந்த திரியைக் கொளுத்தி நெல்லையும் மலரையும் தூவித் தெய்வத்தை வணங்கி எங்கே பார்த்தாலும் விளக்கை ஏற்றுகிறார்கள். வளமுடைய அங்காடித் தெரு முழுவதும் விளக்குகள் வரிசை வரிசையாகச் சுடர் விடுகின்றன.

வீட்டிலே வாழும் புறாக்களுக்கு இரவென்றும் பகலென்றும் தெரியவில்லை. ஆண் புறாவும் பெண் புறாவும் வெளியிலே சென்று இரை தேர்ந்து அருந்தி வருவது வழக்கம். இப்போது ஒன்றும் செய்யாமல் வீட்டிலே கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் தலைமாறித் தங்கியிருக்கின்றன.

பெரிய வீடுகளில் சந்தனம் அரைப்பதற்காகவே சில வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். வடநாட்டிலிருந்து வந்த சந்தனக் கல்லிலே தென் திசையிலிலுள்ள பொதியிலிலிருந்து வந்த சந்தனக்கட்டையை அரைத்துத் தருவார்கள். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. சந்தனத்தை யார் பூசிக்கொள்கிறார்கள்? கல்லும் கட்டையும் சும்மா கிடக்கின்றன.

ஆசையோடு மலர் மாலைகளைப் புனைந்துகொள்ளும் மகளிர் இப்போது சில பூக்களை மாத்திரம் செருகிக் கொள்ள எண்ணுகிறார்கள். கூந்தல் ஈரம் போக வேண்டுமல்லவா? அதற்காக அகிலையும் கண்ட சர்க்கரையையும் நெருப்பிலிட்டுப் புகைத்துக் கூந்தலை ஆற்றுகிறார்கள்.

நுட்பமான வேலைப்பாட்டுடன் செய்த் விசிறிகள் உறையிலே கிடந்தபடியே முளைகளில் தொங்குகின்றன. அவற்றைத் தேடுவார் இல்லாமையால் அவற்றைச் சுற்றிச் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது.

வீடுகளில் மேலே சாளரங்கள் இருக்கின்றன. தென்றற் காற்று வீசுவதற்கு வாய்ப்பாக உள்ளவை அவை. இப்போது அவற்றின் இரட்டைக் கதவுகளையும் சாத்தித் தாழிட்டிருக்கிறார்கள். தண்ணீரை அருந்துவாரே இல்லை. நெருப்பு முட்டிகளில் தழலைப் போட்டு நீரைக் காய்ச்சி உண்ணுகிறார்கள். நீராகவா இருக்கிறது அது? நெருப்பைப்போலக் கொதிக்கிறது. கிழவரும் குமரரும் அந்த நெருப்பை அருந்துகிறார்கள்! ஆடுகிற மகளிர் பாட்டுக்குச் சுருதி சேர்க்க யாழை எடுக்கிறார்கள். குளிரால் அது சுருதி மாறியிருக்கிறது. அதைத் தம் மார்புச் சூட்டிலே தடவிச் சுருதி சேர்க்கிறார்கள்.

தம்முடைய கணவரைப் பிரிந்திருக்கும் மகளிர் எல்லாம் வருத்தமுற்றிருக்கிறார்கள். கூதிர்க்காலம் இந்தச் செயல்களுக்கெல்லாம் காரணமாக வந்து நிற்கிறது.

இனிமேல் அரண்மனைக்குப் போகலாம். அதைப் பார்த்துவிட்டு, அந்தப்புரத்தில் நெடுஞ்செழியனுடைய மனைவி அவன் பிரிவினால் வருந்தும் நிலையைப் பார்க்க வேண்டும் அல்லவா? நக்கீரர் நம்மை அழைத்துச் சென்று ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். இப்போது அரண்மனைக்கு வருகிறோம்.

அரசனுக்கு ஏற்றபடி வகுத்த திருமாளிகை அது. நல்ல காலத்தில் தக்க முகூர்த்தத்தில் நூலைக் கட்டி அளவு பார்த்துத் தொடங்கிக் கட்டியிருக்கிறார்கள். அரண்மனையில் எத்தனையோ கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றிச் சூழ ஒரு நெடிய மதிலை எழுப்பியிருக்கிறார்கள். மதில் வாசல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! பெரிய நிலை; இரட்டைக் கதவுகள்; இரும்புப் பட்டமும் ஆணிகளும் கொண்டு கதவைச் சமைத்திருக்கிறார்கள். நிலைக்கு மேலே வளைந்த வளைவு இருக்கிறது; அதைக் கற்கவி என்று சொல்வார்கள். அதில் நடுவே திருமகள் வீற்றிருக்க, இரு மருங்கும் இரண்டு யானைகள் தம் கைகளில் செங்கழு நீர்ப் பூவை ஏந்திக்கொண்டு நிற்கின்றன. இந்த வளைவின் கீழே உறுதியான நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் இருப்பதாக எண்ணி நெய்யும், அரைத்த வெள்ளைக் கடுகும் அப்பியிருக்கிறார்கள். தெய்வத்துக்கு அவ்வாறு அப்பி வழிபடுவது அந்தக் காலத்து வழக்கம்.

இந்த உயர்ந்த வாசல் வழியே யானைகள் போகும். வெறும் யானைகள் மட்டும் அல்ல. தம் மேலே கொடியை உயர்த்திய யானைகள் அந்தக் கொடியைத் தாழ்த்தவேண்டிய அவசியம் இல்லாமலே புகும்படி உயரமாக அமைத்திருக்கிறார்கள், இந்த வாசலை. வாசலுக்கு மேலே கோபுரம். அது குன்று போலே விளங்க, குன்றைக் குடைந்தது போலத் தோன்றுகிறது வாசல்.

வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பரந்த வெளி இருக்கிறது. அந்த முற்றத்தில் கவரிமான்களும் அன்னப் பறவைகளும் ஓடியாடித் திரிகின்றன. இந்த அரண்மனையில் திருமகள் விலாசம் எப்போதும் குறையாமல் இருந்துகொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் குதிரை கட்டும் இடம் இருக்கிறது. அங்கே குதிரைகள் தங்க மனமில்லாமல் வாய் வழியே புல்லைக் குதட்டிக்கொண்டு நிற்கின்றன. நிலா முற்றத்திலிருந்து மழைநீர் அருவியைப் போல விழுகிறது. மகர வாயைப்போல் உள்ள துவாரத்தின் வழியே நீர் வந்து விழுகிறது. ஒரு பக்கத்தில் மயில்கள் ஆரவாரிக்கின்றன. அவற்றின் குரல் ஊதுகொம்பின் ஓசையைப் போலக் கேட்கிறது. இந்த ஒலிகள் மலையிலே சிலையோடுவது போல இங்கே எதிரொலி செய்கின்றன.

இந்த அரண்மனையின் பின்னே தான் அந்தப்புரம் இருக்கிறது. பாண்டியனத் தவிர வேறு ஆடவர் யாரும் அதில் நுழைய முடியாது. ஆண் வேலைக்காரர்கள் கூட நுழைய உரிமை இல்லை. அதற்குள் அங்கங்கே பாவை கையில் ஏந்தி நிற்கும் கோலத்தில் அமைந்த விளக்குகள் எரிகின்றன. நிறைய நெய்யும் பெரிய திரியும் இட்டிருக்கிறார்கள். இந்த விளக்குகள் யவன தேசத்திலிருந்து யவனர் கொண்டு வந்தவை; அழகான வேலைப்பாடு உடையவை.

அந்தப்புரமும் பெரியதுதான். அது குன்றுபோல இருக்கிறது. வானவில்லைப்போல அங்கங்கே பல நிறமுள்ள கொடிகளைக் கட்டியிருக்கிறார்கள். சுவர்களில் பூசிய சுண்ணம் வெள்ளியைப்போலப் பளப்ளக்கிறது. தூண்கள் நீல மணியினால் அமைந்தவைபோல நிற்கின்றன. சுவர்களோ செம்பினால் வார்த்துப் பண்ணியவை போல உறுதியாக உள்ளன.

சுவர்களில் மலர்கள் பூத்த கொடியின் உருவத்தை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்கள். இதுதான் மாதேவி இருக்கும் இடம்; பள்ளியறை. கட்டிலின் மேல் அவள் படுத்திருக்கிறாள்.

அது வட்டமான தந்தக் கட்டில்; நாற்பது ஆண்டுகள் முதிர்ந்த யானையின் தந்தத்தைச் செதுக்கி நுட்பமான பூ வேலைகளைச் செய்தமைத்தது; நன்றாகக் கடைந்து அமைத்த திரண்ட குடங்களையும், உள்ளிப் பூண்டுபோல விட்டு விட்டுப் புடைத்த கால்களையும் உடையது. சுற்றிலும் முத்து மாலைகளைத் தொங்க விட்டுத் திரை கட்டி நடுநடுவே சாளரம் விட்டிருக்கிறார்கள். கட்டிலின்மேல் மெல்லிய மயிர்களுக்கு நிற மூட்டிப் பரப்பி, சிங்கம் வேட்டையாடுவது போன்ற சித்திரத்தை நடுவிலே அமைத்து, சுற்றிலும் முல்லை, முதலிய பல நிறமுள்ள பூவை வரிசையாக இட்டிருக்கிறார்கள். இதற்கு மேலே மெல்லிய படுக்கையை விரித்து அன்னத்தின் அடிவயிற்றுத் தூவிகளாற் செய்த அணைகளை வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் கஞ்சியிட்டு நன்றாக வெளுத்த மடியை விரித்திருக்கிறார்கள். அதன்மேல் பாண்டிமா தேவி படுத்திருக்கிறாள்.

ஆரம் அணியும் மார்பில் இப்போது வெறும் தாலி மட்டும் புரள்கிறது. நாயகனைப் பிரிந்தபோது அலங்காரங்கள் எதற்கு? மயிரைக் கோதிக்கொள்ளாமையால் அது நெற்றியிலே கிடந்து புரள்கிறது. காதில் குழை இல்லை; வெறும் தக்கையை அணிந்திருக்கிறாள். பொன் வளையல்களை அணிந்திருந்த கைதான்; அதில் இப்போது மங்கலத்தின் அடையாளமாகிய சங்குவளை மாத்திரம் இருக்கிறது; திருமணத்திலே கட்டிய காப்பு நாண் இருக்கிறது. விரலில் ஒரு முடக்கு மோதிரம் மாத்திரம் காட்சியளிக்கிறது. பூ வேலை செய்த உயர்ந்த துகிலை அணியும் இடையிலே மாசு ஏறிய நூல் புடைவையைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். வர்ணம் தீற்றாமல் வெறும் கோடுகள் மாத்திரம் வரையப்பெற்ற சித்திரத்தைப் போலத் தோன்றுகிறாள் பாண்டிமாதேவி.

அழகிய மகளிர் அவள் காலை வருடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பிட்டு அலங்காரம் செய்வது வழக்கம். இப்போது ஓர் அலங்காரமும் இல்லை.

அருகில் கூந்தலில் நரை விரவிய முதிய செவிலிமார்கள் அவளுக்குப் பொழுது போவதற்காகப் பலவிதமான கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நடுநடுவே, “உன் நாயகர் இதோ விரைவில் வந்து விடுவார்” என்று ஆறுதல் சொல்லுகிறார்கள். அதைக் கேட்டும் அவளுக்கு மன அமைதி உண்டாகவில்லை. இன்னும் கலங்கியபடியே இருக்கிறாள்.

கட்டிலில், கால்களை நட்டு மெழுகுச் சீலையில் சித்திரம் எழுதின மேற்கட்டியை மேலே கட்டியிருக்கிறார்கள். அதில் இராசிகளை எழுதியிருக்கிறார்கள். சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் ஓவியமும் இருக்கிறது. அதைப் பார்த்து மாதேவி, ‘நாம் நம் காதலருடன் இவ்வாறு பிரிவின்றி ஒன்றுபட்டு இருக்கவில்லையே!’ என்ற நினைப்பினால் வருந்தித் தன் கண்ணில் அரும்பிய நீரைக் கைவிரலால் வழித்துத் தெறிக்கிறாள்.

இவ்வாறு பிரிவுத் துன்பம் தாங்காமல் தனிமையிலே வருந்திக் கிடக்கிறாள் பாண்டியன் மனைவி.

அவள் இவ்வாறு இருக்கப் பாண்டியன் எப்படி இருக்கிறான்?

இது பாண்டியன் பாசறை. அங்கங்கே கூடாரத்தில் படை வீரர்கள் தங்கியிருக்கிறார்கள். போர்க் களத்தில் பெரிய யானைகளைத் தொலைத்து வீரங்காட்டி முகத்திலும் மார்பிலும் பட்ட விழுப்புண்களோடே அவ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணைக் கண்டு நல்ல வார்த்தை சொல்லிவரப் பாண்டியன் தன் கூடாரத்திலிருந்து புறப்பட்டுவருகிறான். வாடைக் காற்றுச் சில்லென்று வீசுகிறது. அங்கே உள்ள வட்ட விளக்கின் சுடர் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து எரிகிறது. படைத் தலைவன் கையிலே வேலை ஏந்திக் கொண்டு முன்னே செல்கிறான். அந்த வேலில் வேப்ப மாலை கட்டியிருக்கிறது. பாண்டியனது அடையாள மாலை அல்லவா அது? முன் செல்லும் சேனாபதி புண் பட்ட வீரர்களை அரசனுக்கு ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டே செல்கிறான்.

வழியிலே சேணத்தைக் கலைக்காத குதிரைகள் நிற்கின்றன. மழைத் துளி மேலே விழுவதனால் அவை உடம்பைச் சிலிர்த்து அந்தத் துளிகளே உதறுகின்றன. இரு மருங்கும் கூடாரம் அமைந்த அந்த வீதி வழியே செல்கிறான் அரசன். அவன் இடத் தோளிலே போட்டிருக்கும் மெல்லிய துகில் நழுவுகிறது. அதை அப்படியே இடக் கையால் இடுக்கிக்கொள்கிறான். அருகிலே வலிமையையுடைய கட்டிளங்காளை ஒருவன் வாளைத் தோளிலே மாட்டியபடி நிற்கிறான். அவனுடைய பின் கழுத்தின் மேலே வலக்கையை வைத்துக்கொண்டு நடக்கிறான் அரசன். தவ்வென்று மழைத் துளி வீச, அதற்கு மறைப்பாக ஒருவன் குடை பிடிக்கிறான். முத்துமாலை தொங்கும் கொற்றக் குடை அது. இப்படி, புண்பட்ட வீரர்களைக் கண்டு முகமலர்ச்சியோடு விசாரிப்பதற்காக நடுஇரவிலும் தூங்காமல் சில வீரர்களோடு சுற்றி வருகிறான் பாண்டியன்.

“இவளுடைய பிரிவுத் துன்பம் தீரும்படியாக, அவன் பாசறையை அமைத்துக் கொண்டு இவ்வாறு திரிவதற்குக் காரணமான போர்த் தொழில் அவனுக்கு வெற்றியை உண்டாக்கி முடிவதாகுக!” என்று வேண்டிக்கொள்கிறாள் துர்க்கையைப் பரவும் பெண்.

★★ ★
மிகவும் அழகான ஓவியத்தைப் பாட்டிலே அமைத்துக் காட்டிவிட்டார் நக்கீரர். கூதிர்க்கால வருணனையும், அரண்மனையின் அமைப்பும், பள்ளிக் கட்டிலின் பாங்கும், பிரிவால் வாடும் பாண்டிமாதேவியின் உருவமும், பாசறையில் உள்ள பாண்டியன் செயலும் கண்முன்னே தோன்றும்படியாகக் கோலம் செய்தார்.

அதைக் கேட்டு அரசன் தான் போர்த் தொழிலிலே ஈடுபட்டு வாழ்வைப் போக்குவதால் தன் மாதேவிக்குப் பிரிவுத் துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்து போர் செய்வதைக் குறைத்துக் கொள்வான் என்று எண்ணினார் நக்கீரர்.

பாட்டின் சுவையைப் புலவர்கள் பாராட்டினார்கள். அரசன் அவையில் அது அரங்கேறியது. அரசனும் அதன் சுவையை நுகர்ந்து இன்புற்றான். கவிதையைச் சுவைக்கும் அளவிலே மகிழ்ந்த அவன் நக்கீரர் கருத்தை முழுவதும் உணர்ந்து நடப்பவனாகத் தோன்றவில்லை.
----------------

6. புலவர் அறிவுரை

நெடுஞ்செழியன் தோள் தினவு இன்னும் தீரவில்லை. புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. சில போர்களைச் செய்தான். சாலியூர், முதுவெள்ளிலை என்னும் ஊர்களைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டான்.

புலவர்கள் அவனுடைய போர் ஆசை தணியும் காலம் என்று வரும் என்று ஏங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் மக்களுக்கு உறுதி தரும் பொருள்கள். போர் செய்வதனால் பொருளும் புகழும் கிடைக்கின்றன. பொருளை மட்டும் ஈட்டினால் போதுமா? மற்றவற்றையும் குறிக்கோளாகக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் முயற்சி செய்வது மக்கள் கடமை.

பாண்டியன் நெடுஞ்செழியன் இன்ப வாழ்வைத் தக்கபடி நுகரவில்லை. போர் ஆசை அவன் இன்பத்துக்குத் தடையாக நின்றது. அதனையே நக்கீரர் நெடுநல் வாடையால் புலப்பட வைத்தார். போரினால் அறத்துக்கு இடையூறு நிகழ்கின்ற தென்பதை வற்புறுத்தினால் ஒருகால் அரசன் அமைதி பெறுவானோ என்ற நினைவு புலவர்களுக்கு உண்டாயிற்று. அதற்கு ஏற்ற செவ்வியும் கிடைத்தது.

போருக்கு ஆயத்தம் செய்வதிலும் படைகளுக்குரிய வசதிகளைச் செய்வதிலும் அரசன் ஈடுபட்டிருந்தான். நாட்டில் குடி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், என்பதைப்பற்றியே சிந்திக்கவில்லை. பாண்டி நாட்டில் பல இடங்களில் குளங்களும் ஏரிகளும் இருந்தன. அவ்வப்போது அவற்றைக் கண்காணித்துச் செப்பம் செய்து வரவேண்டும். அரசன் கவனம் செலுத்தாமையால் பல குளங்கள் மேடிட்டுப் போயின. பல ஏரிகளின் கரைகள் உடைந்துவிட்டன. இன்னும் பல இடங்களில் மழை பெய்தாலும் தண்ணீரைத் தேக்குவதற்குரிய குளமோ, ஏரியோ இல்லை. இதனால் நாட்டில் வேளாண்மை போதிய அளவுக்குப் பெருகவில்லை. குடிமக்கள் இதுபற்றி அமைச்சர்களிடம் கூறி, தம் குறைகளைப் போக்க வேண்டுமென்று முறையிட்டுக் கொண்டார்கள். அமைச்சர்கள் அரசனை அணுகி எடுத்துச் சொல்ல அஞ்சினார்கள்.

இதுதான் நல்ல சமயமென்று குடபுலவியனார் என்னும் நல்லிசைப் புலவர் அரசனிடம் சென்று குடி மக்களின் குறையைத் தெரிவிக்க முற்பட்டார்.

அரசவை கூடியது. புலவர்களும் அமைச்சர்களும் குடிமக்களிற் சிலரும் அவையில் இருந்தார்கள். குட புலவியனாரும் இருந்தார். அவர் மெல்ல, “ஒரு விண்னப்பம்” என்றார்.

அரசன், “என்ன அது?” என்று வினவினான்.

“சில செய்திகளை அர்சர் பெருமான் திருச் செவியில் ஏறச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை.”

“சொல்லலாமே!” என்றான் பாண்டியன்.

“சற்றுப் பொறுமையோடு கேட்கவேண்டும்.”

அரசன் புன்னகை பூத்தபடியே, “இப்போது புதிய போர் ஏதாவது வரப் போகிறதா, நான் பொறுமையின்றி இருக்க?” என்று கேட்டான்.

“அரசர் பிரானுடைய மரபே வீரத்துக்குப் பெயர் போனது. உலகில் பல நாடுகளைத் தம்முடைய முயற்சியால் வென்று ஏக சக்கராதிபதியாக வாழ்ந்தவர்கள் அரசர்பிரானுடைய முன்னோர்கள்.”

“நான் அப்படி உலகை ஒரு குடைக் கீழ் ஆளவில்லையே!”

“அது ஒன்றும் பெரிதன்று. மன்னர்பிரான் கோடி கோடி ஆண்டுகள் வாழவேண்டும். இப்படி அகழியும் மதிலும் உடைய பழைய நகரத்தை யார் பெற்றிருக்கிறார்கள்? பாண்டிய அரசர்களுக்குத்தான் அந்தப் பெருமை உண்டு. அந்தப் பழைய பெருமை நிலைக்க வேண்டுமானல் சில கடமைகளைச் செய்ய வேண்டும்.”

“என்ன செய்ய வேண்டும்?”

“மறுமையிலே நல்வாழ்வு வேண்டுமானாலும் சரி, இவ்வுலகத்தில் பெரும் புகழோடு தான் ஒருவனே தலைவனாக வேண்டினாலும் சரி, மன்னன் செய்வதற்குரிய செயல்கள் உண்டு.”

“அவற்றைச் சொல்லுங்கள்.”

“சொல்லத்தான் வருகிறேன். மன்னர் பெருமான் செவி சாய்த்தருள வேண்டும்.”

“நீங்கள் சொல்வது என் நன்மையின் பொருட்டுத்தானே இருக்கும்? நன்றாகச் சொல்லுங்கள். கேட்கிறேன்.”

“நீர் இல்லாவிட்டால், உடம்பு பெற்றவர்கள் வாழமுடியாது. உடம்பு வளர உண்டி கொடுத்தவர் யாரோ, அவர்கள் உயிர் கொடுத்தவரே ஆவர். சோற்றால் எடுத்த சுவராகிய இந்த உடம்பு உணவு காரணமாக வளர்வது. உணவு என்று சொல்வது எது? நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு வரும். நீரையும் நிலத்தையும் ஓரிடத்திலே சேர்த்தவர்கள் உடம்பையும் உயிரையும் சேர்த்துப் படைத்தவர்கள் ஆகிறார்கள். எவ்வளவு அகன்ற நிலமானாலும், விதைத்துவிட்டு வானத்தை நோக்குவதாக இருந்தால் அதனால் அரசனுக்குப் பயன் இல்லை. நீர் குறைவின்றிக் கிடைக்கும்படி செய்தால் நிலம் வளம் சுரக்கும். ஆதலால் இதனை மறவாமல் விரைவில் பள்ளமான இடங்களிலே குளமும் ஏரியும் அமையும்படியாகக் கரை போட்டு நீரை யார் தேக்குகிறார்களோ அவர்கள் தம் புகழை இவ்வுலகில் தேக்கிக்கொள்கிறார்கள். அப்படித் தேக்காதவர்கள் இவ்வுலகில் தம் பெயரைத் தேக்காதவர்களே!”

புலவர் பொதுவாகச் சொன்னாலும், “நீ ஏரி குளங்களைச் செப்பஞ் செய்தும் புதியனவாக அமைத்தும் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள் நன்றாக விளையும்படி செய்யவேண்டும்” என்பதையே குறிப்பாகப் பெறவைத்தார்.

பாண்டியன் அறிவுடையவன்தானே? தான் செய்ய மறந்த கடமையை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டான்.

“ஆம், நீங்கள் கூறியது சாலச் சிறந்த உண்மை. இதுகாறும் போரில் சிந்தை செலுத்தியமையால் நான் நீர்நிலைகளை மறந்துவிட்டேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதை இனி எக்காலத்தும் மறவேன்” என்று நெடுஞ்செழியன் சொல்வதைக் கேட்டு எல்லோர் நெஞ்சுகளும் குளிர்ந்தன. அவர்கள் உள்ளங்களில் நீர் தேங்கியதைப்போல் ஒரு நிறைவு உண்டாயிற்று. போர் ஆசையால் இன்பத்துக்கு இடையூறு உண்டாவதை உணர்த்தியும் மாறாத அரசன், உணவு விளைக்கும் அறத்துக்குத் தடையாகப் போர் இருப்பதை உணர்ந்துகொண்டான். அது அவன் ஒருவனுடைய நலம். இது குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் நலம் அல்லவா?

குடபுலவியனாரைத் தனியே புலவர்கள் பாராட்டினார்கள். “உங்கள் சொல் செல்லும் சொல் ஆயிற்று; வெல்லும் சொல்லும் ஆயிற்று” என்றார்கள்.

“நம் நினைப்பு முழுமையும் கைகூடட்டும். அதற்குள் அவசரப்பட வேண்டாம்” என்றார் குடபுலவியனார்.

அரசனுக்குக் கூறிய அறிவுரையை அவர் பின்பு கவிதை வடிவத்தில் அமைத்துத் தமிழ் இலக்கியக்கோவையிலே ஒளிரும் முத்தாக்கிவிட்டார்.[1]
---
[1]. புறநானூறு,18
-----------------

7. மருதனார் படைத்த பாட்டு

அரசன் தன்னுடைய சிந்தையையும் செயலையும் நாட்டுநலத்திலே திருப்பத் தொடங்கினான். எங்கெங்கே பழைய ஏரிகளும் குளங்களும் இருக்கின்றன என்று கணக்கெடுத்தான். அவற்றின் நிலையைப்பற்றி விசாரித்தறிந்தான். கரையைச் செப்பம் செய்ய வேண்டிய இடங்களில் அவ்வாறே செய்யச் செய்தான். புதிய கரை எடுக்கவேண்டிய இடங்களில் எடுக்கப்பணித்தான். அவற்றோடு நில்லாமல் குடபுலவியனார் சொன்னபடி பள்ளமான இடங்களில் அகழ்ந்தும், கரை போட்டுத் தடுத்தும் புதிய நீர்நிலைகளை உண்டு பண்ணினான். அரசன் எதை நினைத்தாலும் நன்றாகச் செய்கிறான் என்று குடிமக்கள் பாராட்டினார்கள். ‘போர்க்களத்துக்குச் சென்று பொருது வெற்றி பெறுவதில் மாத்திரம் அரசன் வல்லவனாக இருக்கிறானே!’ என்று கவலையடைந்த பெருமக்கள், ‘இவன் எதை மேற்கொண்டாலும் திருத்தமாகச் செய்கிறான்’ என்று உணர்ந்து மகிழ்ந்தனர்.

அங்கங்கே நீர்நிலைகள் புதிய மணமகளைப்போலப் புதிய கோலத்தைப் பூண்டு விளங்கின. இனித் தம்முடைய ஆற்றலால் பயிர் விளைத்து உணவுப் பொருளைக் குவிக்கலாம் என்று வேளாளர்கள் உள்ளம் பூரித்தனர். நாட்டில் வேளாளர்கள் நல்ல நிலையில் இருந்து தம்முடைய தொழிலைச் செவ்வனே செய்து வந்தால்தான் அரசனுடைய பெயரும் பொருளும் நிற்கும் என்பதை முன்பே உணர்ந்தவன்தான் நெடுஞ்செழியன். அதனை இதுகாறும் மறந்திருந்தான். இப்போது நினைவு வரப்பெற்று ஆவனவற்றைச் செய்தான்.

புலவர்கள் அரசனுடைய மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் தமக்குள்ளே அந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்கள். சிலருக்கு ஒரு வகையான அச்சம் எழுந்தது.

“நீர்நிலைகளைச் செப்பம் செய்த பிறகு, தனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லாமையால் மீட்டும் போரிலே அரசன் உள்ளத்தைச் செலுத்தினால் என் செய்வது?” என்றார் ஒரு புலவர்.

“அரசனுக்கா வேலை இல்லை? ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்புடையவனுக்கே அல்லும் பகலும் அறுபது நாழிகையும் வேலை இருக்கும்போது, ஒரு நாட்டை ஆளுகிற மன்னனுக்கு, அதுவும் பரந்து விரிந்த இப்பாண்டிப் பெருநாட்டை ஆளுகிற சக்கரவர்த்திக்கு, வேலையா இல்லை? வேளாண்மை, வியாபாரம், தொழில்கள், கலைகள் ஆகியவை வளர்ச்சியடைய வழி துறைகளை வகுக்கலாம். ஊர்தோறும் உள்ள ஆலயங்களைச் செப்பஞ் செய்யலாம். பழுது பட்ட அறச்சாலைகளைத் திருத்தியமைக்கலாம். அறங்கள் பல செய்யலாம். குடிமக்களுக்கு என்ன குறை உண்டென்று விசாரித்துப் போக்க முற்படலாம். நீதித் துறையைக் கவனிக்கலாம். அறங்கூறவையத்தில் உள்ள சான்றோர்களோடு பழகி அவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டுச் செய்யவேண்டியவற்றைச் செய்யலாம். மறுமைக்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யலாம்” என்று வேறு ஒரு புலவர் வரிசையாக அடுக்கினார்.

“அரசன் மனம் கடமையை உணர ஓரளவு தலைப்பட்டிருக்கிறது. இந்தச் சமயம் பார்த்து அவனுக்குப் போரின் தீமையையும் செய்ய வேண்டிய செயல்களின் இன்றியமையாமையையும் வற்புறுத்திக்கொண்டே வர வேண்டும். அவன் உள்ளம் இந்தத் துறையில் நன்கு ஈடுபட்டுவிட்டால் மீண்டும் மாறாது. அதற்கு ஏற்ற வகையில், அவன் உள்ளம் கொள்ள, சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள் சொல்ல வேண்டும்” என்று மற்றொரு புலவர் சொன்னார்.

“இப்போது இங்கே உள்ள புலவர்களுக்குள் அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்தவர் மாங்குடி மருதனாரே. அரசனுக்கும் அவரிடத்தில் நன்மதிப்பு இருக்கிறது. எப்படி வளைத்தால் வளையும் என்பதை அவர் நன்கு அறிவார். திசை திரும்பிய மன்னனுடைய சிந்தனையை அப்படியே இடையீடின்றிச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்துவிட வேண்டும்” என்று ஒருவர் இயம்பினார். மற்றப் புலவர்களும் மருதனாரை, ஏதேனும் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். “அரசன் ஆக்க வேலைகளில் முனைந்தால் நாடு முன்னேறும். அறமும், வீட்டு நெறியும் அவன் உள்ளத்தில் இடம் பெற்றால் பாண்டி நாடு இந்திர லோகமாகிவிடும்” என்றார்கள்.

மாங்குடி மருதனாரும் இந்த வகையில் சிந்தனை செய்தவரே. அவர்கள் ஒருமுகமாகத் தம் தலையில் ஏற்றிய பொறுப்பை உதறுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு செய்யும் ஆற்றல் இல்லாதவராக இருந்தால் அல்லவா அஞ்ச வேண்டும்? அவர் சொல்லை வேற்று நாட்டு மன்னர்களே ஏற்றுப் போற்றி நடப்பார்களென்றால், பாண்டியன் கேட்பதற்குத் தடை என்ன?

நல்ல வகையில் பயன் உண்டாகும் வண்ணம் தாம் அறிவுரை கூற வேண்டும் என்பதை உணர்ந்த அப்பெரும் புலவர் ஏதேனும் ஒரு நெடும் பாட்டின் வாயிலாக அதனைச் செய்ய முடிவு செய்தார். அரசர்களுக்கு உண்மையைக் கவியின் மூலம் எடுத்துரைப்பது பழம் புலவர் மரபு.

அரசனுக்குப் போரில் உள்ள மோகத்தைப் போக்க வேண்டும் என்பதே புலவரின் கருத்து. ஆனால் அதனை நேரே சொல்வது முறையன்று. வீரம் செறிந்த மன்னர்களின் குலத்தே உதித்தவர்கள் மிடுக்கான பண்புடையவர்கள். அவர்களுக்குச் சாந்தமான இயல்பு உண்டாக வேண்டுமானால், பொருளும் வெற்றியும் நெடுநாள் நில்லாதன என்று சொல்ல வேண்டும். தமிழில், காதல் அல்லாத மற்றவற்றைச் சொல்லும் பாடல்கள் புறத்திணையைச் சார்ந்தவை. அது போர்ச் செயலிலுள்ள பல பகுதிகள், அவரவர்கள் ஆற்றும் கடமைகளைப்பற்றிக் கூறும் பகுதிகள் முதலியவற்றை உடையது. காஞ்சி என்பது ஒரு பகுதி. அது நிலையாமையை எடுத்துக் கூறுவது. இம்மை வாழ்க்கையில் அறம் புரிந்து பொருள் ஈட்டி இன்பம் துய்ப்பவனுக்கு மறுமை இன்பமாகிய வீட்டிலும் விருப்பம் உண்டாக வேண்டும். இவ்வுலக வாழ்வையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல் இதன் நிலையாமையை உணர்ந்தால் அந்த விருப்பம் எழும். அப்படி உணர்ந்தவனுக்கே வாழ்க்கையில் உலகியற் செயல்களே நிலையான பயன் அளிப்பன என்ற எண்ணம் நீங்கும். பலருக்கு நலம் செய்து தன்னலத்தை மாற்றுவதற்கும் அந்த உணர்வு துணை செய்யும். அதனால் புலவர்கள், செல்வம் நிலையாது என்பதையும், வாழ்க்கை நிலையாது என்பதையும், உலகத்துப் பொருள்கள் நிலையா என்பதையும் செல்வர்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். அவ்வாறு கூறிய அறிவுரைப் பாடல்கள் காஞ்சி என்னும் புறத்திணையில் அடங்கும்.

மாங்குடி மருதனாருக்கு இப்போது அந்தத் திணை நினைவுக்கு வந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது பெற்ற வெற்றிகள் போதுமானவை. அவன் பெற்றிருக்கும் நாட்டின் விரிவும் இனி நாடாசை கொள்ளாத வகையில் அமைந்திருக்கிறது. மேலும் மேலும் போரில் தாவும் அவனது மனத்தைத் தடுத்து நிறுத்த உலகியற் பொருளின் நிலையாமையை எடுத்து உணர்த்தலாம்.

யாருக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று ஆராய்ந்து சொல்பவர்களே அறிவுடையவர்கள். இங்கே, வீரமே பெரிதென்று கருதி வாழும் அரசனுக்குச் செல்வ நிலையாமை முதலியவற்றை எடுத்துரைக்க வேண்டும். அதை அப்படியே, “எல்லாரும் செத்துப் போவார்கள்; எல்லாம் அழிந்து போய்விடும்” என்று சொல்வது முறையன்று. அரசனிடம் இப்போதுள்ள இயல்புகளைப் புகழ வேண்டும். முன்னோர்களைப் புகழ வேண்டும். அவன் நாட்டையும் நகரத்தையும் புகழ வேண்டும். அவற்றுக்கு நடுவிலே நிலையாமை குறிப்பாகப் புலப்படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு சிந்தித்து முடிவு கட்டினார் புலவர். நீண்ட பாட்டாக மதுரைக் காஞ்சி என்ற பெயரோடு ஒரு நூலை இயற்றத் தொடங்கினார்.

சொல்லுக்குப் பஞ்சமில்லா வாக்கு வளமும், கருத்துக்குப் பஞ்சமில்லா அறிவு வளமும், அழகாகச் சுவை நிரம்பப் பாடும் கவி வளமும் படைத்த மருதனாருக்குக் கவி பாடுவது ஒரு விளையாட்டு. அது அவருக்கு இன்பம் தருவதோடு மக்கள் அனைவருக்கும் இன்பம் வழங்கும் தகைமையது. நெடும் பாட்டாக அவர் பாடப் போகிறார் என்ற செய்தியை அறிந்து புலவர் களித்தனர். தமிழ்ச் சுவை தேரும் தகைமையினர் கவியின் உதயத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர்.

புலவர் மதுரைக் காஞ்சியைப் பாடி முடித்தார். 782 அடிகளையுடைய அந்தப் பாட்டு, பாண்டிய மன்னரின் மரபைப் பாராட்டியது. நெடுஞ்செழியனது வீரத்தையும், கொடையையும், பிற நல் இயல்புகளையும் விளக்கியது. பாண்டி நாட்டின் நில வளப்பத்தையும் ஐந்திணை இயல்பையும் விரித்துரைத்தது. மதுரைமாநகரின் அமைப்பையும் அங்குள்ள அங்காடிச் சிறப்பையும் செல்வ நிலையையும் மக்கள் பொழுது போக்கும் முறையையும் தனித் தனியே எடுத்துக் காட்டியது. புலவர்கள் அதனைக் கேட்டுக் கூத்தாடினர். ‘நெடுஞ்செழியன் இதைக் கேட்டுத் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் தமிழ்த் தாய்க்கு ஒரு புதிய அணிகலன் கிடைத்துவிட்டது’ என்ற உவகையில் பலர் ஆழ்ந்தனர்.

எந்த நூலானலும் தக்கார் கூடிய அவையில் அரங்கேற்றுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, மதுரைக் காஞ்சியின் அரங்கேற்றத்தையும் பெருவிழாவாக நடத்த அமைச்சரும் பிறரும் முயன்றனர். அரசனுக்கு அறிவுரை வழங்கும் நூலானாலும் அதிற் பெரும்பகுதி மதுரையின் சிறப்பைச் சொல்வது. ஆதலின், நூல் எப்போதும் யாவருக்கும் இனிமை தருவதாக அமைந்தது.

அரங்கேற்றம் நடைபெற்றது. அரசன் நூல் முழுவதையும் கேட்டான். தன் முன்னோர்களின் பெருமையைக் கூறும் பகுதியைக் கேட்டு அவன் தோள்கள் பூரித்தன. நல்ல மன்னருடைய நாட்டில் தீங்கின்றிக் கோள்கள் வழங்கும் என்றுள்ள பகுதியைக் கேட்டு அவன் மகிழ்ந்தான். தன்னுடைய வீரத்தையும் வண்மையையும் விரிக்கும் இடத்தில் நாணினான். பாண்டி நாட்டில் ஐவகை நிலங்களும் இருத்தலை விரிவாக எடுத்துக் காட்டும் பகுதிகள் அவனுக்குப் பெருமிதத்தை உண்டாக்கின. மதுரையைத்தான் எவ்வளவு நன்றாக ஓவியத்திலே வரைந்து காட்டுவதைப் போலக் காட்டினார் புலவர்! அந்தப் பகுதிகளைக் கேட்கக் கேட்க அவன் உடம்பு பூரித்தது; உள்ளம் துள்ளியது.

“ஒரு செய்தியைச் சொல்கிறேன். நீ கேட்டருள வேண்டும்” என்று பாட்டில் வருகிறது. அதைக் கேட்டுப் பின்னும் ஆர்வத்தோடு கேட்கலானான். “முன்னே உலகை ஆண்டு செல்வம் ஈட்டி வாழ்ந்த மன்னர்கள் கணக்கில்லாதவர்கள். கடல் மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அவர்களை எண்ண இயலாது. அவ்வளவு பேரும் வாழ்ந்தார்கள்; பிறகு மாண்டுபோனார்கள்” என்று வாழ்க்கை நிலையாமையை இடையிலே எடுத்துக் காட்டினார் மருதனார். அது மன்னனுடைய கருத்திலே பதிந்தது. வாயார மன்னனை வாழ்த்திப் பாட்டை முடித்திருந்தார் புலவர். அதைக் கேட்டு ஆறுதலாகப் பெருமூச்சு விட்டான் பாண்டியன்.

மதுரைக் காஞ்சி என்ற பெயரே, புலவர் பலவற்றைச் சொன்னாலும் அவர் நோக்கம் நிலையாமையை எடுத்துரைப்பதுதான் என்பதைப் புலப்படுத்தியது. அரசன் அந்தக் குறிப்பை உணர்ந்தான்.

மதுரையைப் பாராதவர்களும் பாட்டைக் கேட்டால் நேரிலே மதுரையைக் காண்பதுபோல இருந்தன வருணனைகள். அவையில் உள்ளவர்கள் யாவரும் பாட்டின் அற்புதமான அமைப்பிலே ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். அரசனும் பாட்டின் சுவையில் உள்ளத்தைப் பறிகொடுத்தான்; அதன் கருத்திலே கருத்தைப் பதித்தான்.

அரங்கேற்ற முடிவிலே அரசன் மருதனாருக்குப் பலவகையான பரிசுகளை வழங்கினான். “உங்கள் பாட்டினால் தமிழுலகம் பயனை அடையும்; என் வாழ்க்கையும் பயனுடையதாக மாறும் என்று நம்புகிறேன்” என்று அவன் சொல்லி மருதனாரைப் பாராட்டிய போது, அவன் தாம் விரும்பியபடி மனமாற்றத்தை அடைவான் என்று புலவர்கள் எண்ணினார்கள்.

மதுரைக் காஞ்சி தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதைப் பாடிய புலவருக்குப் பின்னும் புகழ் ஓங்கியது. மாங்குடி மருதனார் என்று, அவருடன் பழகியவர்கள் அவரைச் சுட்டிக் கூறுவார்கள். மற்றவர்கள், பெயரைக் கூறுவது மரியாதையன்று என்று மாங்குடி கிழார் என்று சொல்வார்கள். மதுரைக் காஞ்சி என்ற பாட்டை அவர் இயற்றி அரங்கேற்றிய பிறகு அவரை யாவரும் மதுரைக் காஞ்சிப் புலவனார் என்று வழங்கத் தலைப் பட்டனர்.

இனி, அந்த மதுரைக் காஞ்சியாகிய சொல்லோவியத்தில் உள்ள பொருள்களை ஓரளவு பார்க்கலாம்.
----------------

8. மதுரைக் காஞ்சி

மதுரையில் உள்ள அரசனுக்கு நிலையாமையைப் புலப்படுத்திய காஞ்சித் திணைப் பாட்டாதலின் அதற்கு மதுரைக் காஞ்சி என்ற பெயர் அமைந்தது. அது மதுரையையும் வருணித்துக் காஞ்சித் திணைப் பொருளாகிய நிலையாமையையும் அறிவுறுத்துகிறது.

நெடுஞ்செழியனுடைய முன்னோர்கள் தம்முடைய நாட்டை நல்ல முறையில் ஆண்டு வந்தார்கள். அதனால் காற்று நன்றாக வீசியது. நட்சத்திரங்கள் காலத்துக்கு ஏற்ற கதியிலே நடந்தன. கதிரவனும் திங்களும் தங்களால் ஒரு குறையும் நேராமல் ஒளி வழங்கினர். மேகம் உரிய காலத்தில் பெய்தது. திசைகளெல்லாம் தழைத்தன. ஒன்று ஆயிரமாக விளைநிலங்கள் விளைந்து மல்கின. மரங்கள் நன்றாகப் பயன் தந்தன. பசியும் பிணியும் இல்லாமல் மக்கள் அழகுடன் விளங்கினர். எவ்வளவு பேர் எத்தனை காலம் உண்டாலும் குறையாத வளம் நாட்டில் நிரம்பியது. எக்காலத்திலும் மெய்யையே கூறும் அமைச்சர்கள் அரசர்களுக்குத் துணையாக இருந்தனர். இப்படி இங்கே வெள்ளமெனும் பெரிய எண்ணிக்கை அமைந்த ஆண்டுகளாகக் கிருதயுக வாழ்வே நிலைபெற்றிருந்தது.

“அப்படி உலகத்தை ஆண்ட மன்னர்களின் வழி வந்தவனே!” என்று முதற் பகுதியில் மருதனார் அரசனை விளிக்கிறார்.

நல்லுாழி அடிப்படரப்
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக![1]

என்று பாராட்டுகிறார்.

“போர்க்களத்தில் இறந்தவர்களின் உடம்புகளைப் பேய்கள் விருந்தாக உண்ணும்படி களவேள்வி செய்தவனே, பொதிய மலையை உடையவனே, சேரனும் சோழனுமாகிய இரு பெருவேந்தருடன் வேளிர்சாயப் பொருது அவரைத் தலையாலங்கானத்தில் வென்றவனே, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனே!” என்று புகழ்கிறார்.

பிறகு, பல நாடுகளின்மேல் படையெடுத்து வேற்றரசர்களுடைய மதிலே முற்றுகையிட்டு உட்சென்று அம்மன்னர்களைப் பொருது வென்று, அவர்களைத் தன் ஏவல் கேட்கும்படி செய்து கொற்றவர்தம் கோனாக விளங்குவதை எடுத்துரைக்கிறார்.

கப்பல்களில் பண்டங்கள் இறங்கியேறும் கடல் துறையையுடைய சாலியூர் என்னும் ஊரைக் கைக்கொண்டான் பாண்டியன். குட்ட நாட்டில் உள்ள மன்னரை வென்றான். முதுவெள்ளிலை என்னும் ஊரிலிருந்த குறுநில மன்னரை அடிப்படுத்தினான். தலையாலங்கானத்தில் ஏழு பகைவர்களைத் தோல்வியுறச் செய்து அவர்கள் முரசை வெளவினான். இந்த வெற்றிகளையும் விரித்துரைக்கிறார் புலவர்.
“நீ நண்பர்களின் குடியை உயரச் செய்வாய். பகைத்தவர் அரசைக் கைக்கொள்வாய். புகழையும் முத்தையும் முத்துக் குளிப்பவரையும் அருகில் சிறிய ஊர்களையும் உடைய கொற்கைக்குத் தலைவனே, தெற்கிலுள்ள பரதவர்களைப் பொருத சிங்கம் போன்றவனே, பிறருக்குக் கிடைப்பதற்கரிய பொருள்களை எளிதிலே கைக்கொண்டு அவற்றை உனக்கென்று பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுப்பவன் நீ. நம்முடைய இராசதானி நகரத்திலே சுகமாக இருக்கலாம் என்று எண்ணாமல், பகைவரைப் பொரும் பொருட்டு மலைகளையும் காடுகளையும் கடந்து அவர்களுடைய உள் நாட்டிலே புகுந்து அரண்களைக் கைப்பற்றிப் பல காலம் அங்கங்கே தங்கிச் சிறப்புடன் போரில் வெற்றி கொள்ளும் அரசனே, பகைவர் நாட்டிற் சென்று அவர்களுடைய காவற் காடுகளை அழித்து வயல்களை எரியூட்டி, நாடென்னும் பெயர் மாறிக் காடு என்னும் பெயர் உண்டாகவும், பசுமாடுகள் தங்கின இடங்களில் காட்டு விலங்குகள் உறையவும், ஊராக இருந்த இடங்கள் பாழாகவும், மங்கையர் கூத்தாடி மகிழ்ந்த இடங்கள் பேயாடும் இடங்களாகவும், அங்குள்ள குடிமக்கள் பசியால் வருந்தி உறவினர்களைச் சென்று அடையவும், பெரிய மாளிகைகளில் இருந்த குதிர்கள் இப்போது சரிந்து போக அதில் கோட்டான் இருந்து கதறவும், செங்கழுநீர் பூத்துப் பொலிந்த பொய்கைகளில் கோரை வளர்ந்து மண்டவும், எருதுகள் உழுத வயல்களில் காட்டுப் பன்றிகள் ஓடித் திரியவம் அந் நாடுகள் பாழாகிவிட்டன. யானைகளுடனும் படைகளுடனும் முருகன் போருக்குப் புறப்பட்டது போலப் பகைவரிடம் சென்று, வானத்தில் ஆரவாரம் எழ, மழைபோல அம்புகளைத் தூவி, குதிரைகள் புழுதி எழுப்பச் சங்கு முழங்கக் கொம்பு ஒலிக்க, அப் பகைவரை வென்று கொன்று அவர் நாடுகளை அழித்து மதில்களைக் கைக்கொண்டு அவருக்குத் துணையாக வந்தவரையும் வலியழித்து வீரம் காட்டுதலின், நின் பகைவர்கள் நின் ஏவலைக் கேட்டு நடக்கிறார்கள். மற்ற, மண்டலங்களையும் நின்னுடையனவாகக் கொண்டு அரசியல் பிழையாமல் அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழியே தவறாமல் ஒழுகி, வளர்பிறைபோல நின் கொற்றம் மேலும் மேலும் சிறப்பதாகுக! தேய்மதியைப்போல நின் பகைவர் ஆக்கங்கள் தேய்வனவாகுக!” என்று பாண்டியனை வாழ்த்துகிறார்.

நெடுஞ்செழியன் தேவலோகத்தையும் அமுத பானத்தையும் பெறுவதாக இருப்பினும் பொய்யை மேற்கொள்ளாமல் மெய்யையே கடைப்பிடிக்கிறவன். உலகத்தில் யார் எதிர்த்தாலும், தேவரே எதிரிகளாக வந்தாலும் பகைவர்களுக்கு அஞ்சமாட்டான். புதையலாக உள்ள பெரு நிதி கிடைத்தாலும் பழியை விரும்ப மாட்டான். பிறருக்கு நிதிகளைக் கொடுக்கும் நெஞ்சம் உடையவன்; புகழையே விரும்புபவன்.

இந்த இயல்புகளை எடுத்துக் கூறிய புலவர், “அத்தகைய சிறப்பியல்புகளை உடையவனே, நின் முன்னால் இருக்கும் இந்த விரிவான போகப் பொருள்களுக்கும் நினக்கும் என்ன தொடர்பு? பெரிய கருத்து ஒன்றைச் சொல்லப்போகிறேன். அதைக் கேட்பாயாக, நின் துன்பம் கெடுவதாகுக! நின் புகழ் கெடாமல் நிலைபெறுவதாகுக!” என்று வாழ்த்திவிட்டுக் காஞ்சித் திணையின் பொருளாகிய நிலையாமையைச் சொல்ல வருகிறார்.

“தம்முடைய நகரங்களிலே இருந்து, கூத்தாடும் மகளிருக்கு வளைகளையும், பாணர்களுக்கு யானைகளையும் வழங்கி, தம்முடைய நண்பர்களுக்குப் பல பொருள்களைக் கொடுத்து, காலையிலே எழுப்பும் சூதர்களுக்குத் தேரையும் குதிரைகளையும் வழங்கி, படைத் தலைவர்களுடன் இனிய குடிவகையை உண்டு, தம்மைப் பணிந்தோர் தேசங்கள் தம் ஏவலைக் கேட்டு நடக்க, பணியாதார் தேசங்களைப் பணியச் செய்து திறை கொள்வதற்காக அவர் நாட்டுக்குச் சென்று வென்ற மன்னர்கள் முன்பு பலர் இருந்தார்கள். கடல் மணலைக் காட்டிலும் பலர் பகைவரை வென்று உலகத்தை ஆண்டு பயனின்றி மாண்டார்கள்” என்று கூறும் வாயிலாக, மறுமைக்குரிய நெறியைக் கருதாமல் போரில் வெற்றி பெறுவதை மாத்திரம் எண்ணி வாழ்ந்த வாழ்க்கை வீண் என்று புலப்படுத்துகிறார்.

பிறகுதான் பாண்டி நாட்டின் வளப்பமும் மதுரை மாநகரின் சிறப்பும் வருகின்றன.

முதலில் பாண்டி நாட்டைப் பார்ப்போம். அங்கே மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலமும், வறண்டு போன பாலை நிலமும், காடும் காட்டைச் சார்ந்த இடமுமாகிய முல்லை நிலமும், வயலும் அதைச் சார்ந்ததுமாகிய மருதமும், கடலும் அதைச் சார்ந்த பகுதியுமாகிய நெய்தலும் ஆகிய ஐவகை நிலங்களும் உள்ளன. அதனாற் பாண்டியனுக்குப் பஞ்சவன். என்ற பெயர் உண்டாயிற்று. மாங்குடி மருதனார் பாண்டி நாட்டில் உள்ள ஐந்து திணைக்குமுரிய நிலங்களை வருணிக்கிறார்.

----
[1]. கன்றாகிய யுகம் நமக்கு அடிப்பட்டு கடக்க, ‘வெள்ளமென்னும் எண்ணைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்ட தன்மையை மேலாக யாவரும் எடுத்துச் சொல்லும்படியாக, உலகத்தையாண்ட சிறந்த மன்னர்களின் வழி வந்தவனே!
------------

9. ஐந்திணை வளம்

மேகங்கள் கீழ்கடல் நீரை மொண்டு உண்டு மேற்கே சென்று யானைகளும் நடுங்க மலைகளின்மீது இரவும் பகலும் விடாமல் மழை பொழிகின்றன. எங்கும் வெள்ளக் காடு. மலையிலிருந்து அருவி ஓடி வருகிறது. யானைகளெல்லாம் அஞ்சும்படி அது ஒலிக்கின்றது. அருவி கீழே வந்து கீழ்கடலை நோக்கி ஆறாக ஓடுகிறது. போகும் வழியில் உள்ள குளங்களை யெல்லாம் நிரப்பிச் செல்கிறது.

இப்படி எங்கும் நீர்வளம் மிகுவதனாலே கழனிகளில் நெற்பயிர் விளைந்து, கதிர்கள் முற்றித் தோன்ற நிற்கின்றது. யானை புகுந்தால் அது மறையும்படியாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. அங்கங்கே உள்ள சிறிய குளங்களில் தாமரை பூத்திருக்கிறது. நெய்தலும் நீல மலரும் ஆம்பலும் வளர்கின்றன.

இந்த இடங்களிலுள்ள மீன்களை வலைஞர் பிடிக்கிறார்கள். பிடித்துக் குவிக்கிறார்கள். அவர்கள் போடும் ஓசை ஒரு பக்கம் ஒலிக்கிறது. கரும்பு ஆலைகளின் ஓசை ஒரு சார் கேட்கிறது. களை பறிப்பவர்கள் செய்யும் ஆரவாரம் ஒருபுறம். சேற்றிலே தங்கிய எருதின் அயர்ச்சியை மாற்ற உழவர்கள் செய்யும் ஆரவாரம் ஒரு பக்கம். நெல் முற்றிய கழனியில் அறுவடை செய்பவர்கள் கொட்டும் பறையோசை ஒரு சார். அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் விழாக் கொண்டாடும் முழக்கம் ஒரு திசை. ஆற்றிலே புதுவெள்ளம் வந்ததனால் காதலரும் காதலிமாரும் அந்நீரில் மகிழ்ச்சியோடும் ஆடும் ஓசை ஒரு பக்கம். இப்படி எழும் ஓசைகளெல்லாம் வானத்திலே சென்று இசைக்கின்றன.

பாணர்கள் வாழும் சேரிகள் அங்கங்கே உள்ளன. இத்தகைய மருத நிலம் ஒரு சார் விளங்குகிறது.

முல்லை நிலம் ஒரு பக்கம் இருக்கிறது. அதில் சிறிய தின முற்ற, அதை அறுக்கிறார்கள். எள்ளுக் காய்கள் முற்றி விளைகின்றன. வரகு கதிர்விட்டு நிற்கிறது. ஆழ்ந்த குழிகளிலே மணிகள் ஒளி விடுகின்றன. வளர்ந்த காட்டில் பொன் துகள் கொழிக்கின்றது. மான்கள் பிணையோடு துள்ளுகின்றன. கொன்றை மரத்தின் கீழே உள்ள பாறையில் பரப்பினாற் போல மலர்கள் உதிர்கின்றன. நீலநிறம் பெற்று வளர்ந்த பயிர்களின் மேலே முசுண்டைப் பூவும் முல்லைப் பூவும் உதிர்கின்றன. தெளிந்த நீரையுடைய பள்ளங்களில் நீலமணியைப் போன்ற நெய்தலும், தொய்யிற் கொடியும் மலர்கின்றன. பூசாரி பூசை போட்டுப் பல மலர் தூவி முருகனை வழிபடும் களம் போலத் தோன்றுகிறது இந்த இடம். இப்படி மலரழகு பெற்று விளங்குகிறது முல்லை நிலம்.

குறிஞ்சி நிலத்தைக் காண்போம். சந்தன மரங்கள் காடாக வளர்ந்திருந்தன, மலைச் சாரலில், அவற்றை வெட்டித் தோரை நெல்லை விதைத்திருக்கிறார்கள் குறிஞ்சி நில மக்கள். வெள்ளைக் கடுகையும் பயிர் செய்திருக்கிறார்கள். ஐவன நெல்லும் வெண்னெல்லும் விளைந்திருக்கின்றன. பாறைகளில் இஞ்சியையும், மஞ்சளையும், மிளகையும் வேறு பண்டங்களையும் குவித்திருக்கிறார்கள்.

இந்த நிலத்திலும் பலவகை ஓசைகள் செவியிலே விழுகின்றன. தினை விளையும் மலைச் சாரல்களில் குற மகளிர் கிளிகளை ஓட்டும் ஒலி இது. அவரைக்கொடியை மேயும் காட்டுப் பசுவை வேடர்கள் ஓட்டுகிறார்கள். அந்த ஓசைதான் அது. பரணின் மேலே காவல் இருக்கும் குறவன் குழியைத் தோண்டி மேலே மூடி வைத்திருக்கிறான். அதில் காட்டுப் பன்றி விழுந்துவிட, அதைக் கொன்று ஆரவாரம் செய்கிறான். அந்த ஒலியை இதோ கேட்கிறோம். வேங்கை மரத்திலுள்ள மலர்களை மகளிர் புலிபுலியென்று சொல்லிக்கொண்டே பறிக்கிறார்கள். அவர்களுடைய ஒலியையும் கேட்கிறோம். காட்டுப் பன்றியைக் கொன்ற புலி முழங்குகிறது. இத்தனை வகையான ஓசைகளும் அருவியின் ஓசையோடே மாறி மாறி ஒலிக்கின்றன. மலைகளையுடைய குறிஞ்சி நிலம் இத்தகைய காட்சியை அளிக்கிறது.

சில இடத்தில் பாலை நிலமும் இருக்கிறது. தமிழ் நாட்டில் கோடை மிகுதியானபோது நீரற்று நிற்கும் நிலம் பாலையாகிவிடும். இயற்கையாகவே பாலையாக என்றும் உள்ள நிலம் இல்லை. பாலையில் மூங்கில்கள் உராய்வதனால் பிறந்த பெரு நெருப்பு, தூறுகளை யெல்லாம் எரிக்கிறது. அதனால் வலியிழந்த யானைகள் மேய ஒன்றும் இல்லாமல் வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன. அருவிகள் வற்றிப் போன அழகில்லாத மலைகள் நிற்கின்றன. எங்கே பார்த்தாலும் ஊகம் புல். அவையும் உலர்ந்து வைக்கோலைப் போலத் தோன்றுகின்றன. மேல் காற்று வீசும்போது அது மலையின் பிளப்புகளிலும் குகைகளிலும் புகுந்து புறப்படுகிறது. அப்போது கடலில் ஆரவாரம் போன்ற ஓசை எழுகிறது.

இத்தகைய இடங்களில் வழி நடப்போரிடம் ஏதேனும் இருந்தால் அதைப் பறிக்கும் ஆறலை கள்வர் வருவார்கள். அவர்களால் வழிச் செல்வாருக்குத் தீங்கு நேராமல் காவல் புரியும் இளம்பருவ ஆடவர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். இலை வேய்ந்த குடிசையில் மான்தோலைப் படுக்கையாகக் கொண்டவர்கள் அவர்கள்; தழை விரவின கண்ணியைச் சூடி இருக்கிறார்கள். கடுமையான சொல்லையுடையவர்கள் அவர்கள்.

கதிரவன் கடுமையாகக் கதிர்களை வீசுகிறான். நிழல் என்பதே இல்லாத இடம் இது; வேனில் அரசாட்சி செய்யும் பாலை நிலம்.

கடற்கரையுடைய நெய்தல் நிலத்தில் நம் கண்ணிலே படுகின்ற பண்டங்கள் எத்தனை எத்தனை! கடலிலிருந்து எடுத்த முத்து; வாளரத்தால் சங்கையறுத்துச் செய்த வளை, பரதவர் கொண்டு வந்த பல வகைத் தானியங்கள், வெள்ளை உப்பு, இனிய புளி, ஓடத்தையுடையவர்கள் அறுத்த மீன் துண்டங்கள், வேற்று நாட்டிலிருந்து மரக்கலத்தில் வந்த குதிரைகள் ஆகிய இவை நாள்தோறும் வந்து மிகுதியாக நிறைகின்றன.

இவ்வாறு பாண்டி நாட்டில் ஐந்து வகையான நிலங்களும் அழகுபெற்று விளங்குகின்றன. புலவர்களால் பாடப்பெற்ற இந்த நாட்டில் பல ஊர்களும் அவ்வூர்களில் குடிமக்களும் இருப்பதைக் காணலாம். அவ்வூர்களுக்கு நடுவே சிறந்து இலங்குவது மதுரை.

இனி அம் மதுரை மாநகரையும் அங்கு வாழ்வோரையும் சென்று காண்போம்.
-------------

10. மதுரை மாநகர்

மதுரைக்குப் புறத்தே வையை ஓடுகிறது. அதன் கரைகளில் பூம் பொழில்கள் வளர்கின்றன. அந்தச் சோலைகளினிடையே பெரும் பாணர்கள் வாழ்கிறார்கள். வையையாறு மதுரை மாநகருக்கு ஒரு பக்கத்து அகழியாக விளங்க, மற்றப் பக்கங்களில் ஆழமான அகழிகள் இருக்கின்றன. அகழியைத் தாண்டினால் பல பல கற்படைகளையுடைய பெரிய மதிலைப் பார்க்கிறோம். இந்த அகழியையும் மதிலையும் முற்றுகையிட்டுப் பல அரசர்கள் தோல்வியுற்று ஓடியிருக்கிறார்கள்.

மதில் வாசலில் மிக உயர்ந்த நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் உறைவதாக எண்ணி வழிபடுகிறார்கள். அதிலுள்ள இரட்டைக் கதவுகளில் பலகாலும் நெய்யைத் தடவியதனால் அவை கரிய நிறம் பெற்றிருக்கின்றன. இந்த வாசலில் எப்போதும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

மதிலின் வாசல் வழியே உள்ளே புகுந்தால் ஆறுகள் கிடந்தாற் போன்ற அகன்ற நெடுந்தெருக்களைக் காண்கிறோம். மிக உயர்ந்த வீடுகளும் அவ்வீடுகளில் தென்றற் காற்றுப் புகுந்து ஒலிக்கும் சாளரங்களும் உள்ளன. வீடுகள் பல்வேறு கட்டுக்களும் அமைப்புக்களும் கொண்டனவாய்த் திகழ்கின்றன.

இப்போது நாம் பார்க்கப் புகுவது நாளங்காடி; காலைக் கடை. இங்கே வெவ்வேறு வகையான மக்கள் தங்கள் தங்கள் மொழியிலே பேசுகிற ஓசை ஒலிக்கிறது. முரசை அடித்து விழாவைச் சிலர் அறிவிக்கிறார்கள். பல வாத்தியங்களை வாசிக்கிறார்கள். இங்கே நாளங்காடி, அல்லங்காடி என்று இரண்டு வகைக் கடைத் தெருக்கள் இருக்கின்றன. சித்திரத்தைக் கண்டாற் போலத் தோன்றும் அமைப்புடையன அவை.

நாளங்காடியிற் பல பல கொடிகள் காட்சி அளிக்கின்றன. கோயில்களில் விழாக்கள் நடக்கின்றன. அதைப் புலப்படுத்தும் கொடிகள் பல. அரசனுடைய ஏவலால் படைத்தலைவர் அவ்வப்போது வேறு மன்னருடைய மதில்களைக் கைப்பற்றுவார்கள். அப்போதெல்லாம் வெற்றிக் கொடிகளை உயர்த்துவார்கள். அவ்வாறு உயர்த்திய கொடிகள் பல அசைகின்றன. போர்க்களத்தே பொருது பெற்ற வெற்றியைக் காட்டும் கொடிகள் பல. கள் விற்கும் இடம் இதுவென்று அடையாளம் காட்டும் கொடியும், கல்விச் சிறப்பினால் அறிஞர் உயர்த்திய கொடியும், தவம் கொடை ஆகிய சிறப்பைப் புலப்படுத்தும் கொடிகளுமாகப் பல பெரிய கொடிகள் அங்கங்கே அருவியைப்போல அசைகின்றன.

மதத்தால் சிறந்த யானைகளும், அன்னச் சேவலைப் போன்ற குதிரைகள் பூட்டிய தேரும், வேகமாக ஓடும் குதிரைகளும், மிடுக்குடைய வீரர்களும் அந்த வீதி வழியே செல்வது உண்டு. அப்போதெல்லாம் அங்கே பூந்தட்டிலே பூவை வைத்து விற்பவர்களும், மாலைகளை விற்பவர்களும், வாசனைச் சுண்ணத்தை விற்பவர்களும், பாக்கு வெற்றிலை சங்குச் சுண்ணாம்பு ஆகியவற்றை விற்பவர்களும் அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்கள். படைஞர் போன பிறகு அச்சம் நீங்கி அவர்களும் மற்றப் பண்டங்களை விற்றுக்கொண்டு திரிபவர்களும் மலையைப் போன்ற மாடங்களின் நிழலிலே தங்கியிருக்கிறார்கள். அழகிய மங்கையரும் இளைய மைந்தரும் ஒன்றுபட்டு இன்புறுவதற்கு ஏற்ற பண்டங்களையும் பூவையும் நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிர் வீடு வீடாகச் சென்று விற்கிறார்கள். இந்தப் பண்டங்களை அங்கங்கே உள்ள மக்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிக் கொள்ளக் கொள்ளக் குறையாமலும், பலரும் புதிய பண்டங்களைக் கொண்டுவரக் கொண்டுவர மிஞ்சிப் போகாமலும் விளங்குகிறது நாளங்காடி. அது மேகம் முகந்து செல்வதாற் குறையாமலும் ஆறுகள் பாய்வதால் மிகாமலும் உள்ள கடலைப் போல அல்லவா தோன்றுகிறது?

எங்கும் மாடங்கள் விளங்கும் கூடல் நகரில் விழாத் தொடங்கி ஏழு நாட்களாகியமையால் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. அதனால் மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

அந்திவானத்தைப் போன்ற சிவந்த நிறத்தையும் நுட்பமான பூத்தொழிலையும் உடைய கலிங்கத்தை இடையிலே கட்டி உடைவாளைத் தொங்க விட்டுக் கொண்டு தோளிலே தானை புரளக் காலிலே கழல் திகழ மார்பிலே மாலை மணக்கத் தேரின் மேலேறி அருகிலே காலாட்கள் காவல் செய்யச் செல்லும் செல்வர்களின் திருமாளிகைகள் இவை. இவற்றில் சிலம்பு ஒலிக்க வானுறையும் அணங்குகளைப் போன்ற அழகிய மகளிர் தாம் அணிந்த வாசனைப் பொருள்களின் மணம் தெருவெல்லாம் கமழும்படி கொடி கட்டிய நிலா முற்றந்தோறும் தம் அழகிய முகத்தை நீட்டி விழாவைக் கண்டுவிட்டு மறைகிறார்கள்.

மழுவை ஏந்திய சிவபெருமான் முதலிய தெய்வங்களுக்கு அந்திக்காலப் பூசை நடக்கிறது. அப்போது வாத்தியங்கள் முழங்குகின்றன. கணவரும் குழந்தைகளும் உடன் வர மகளிர் பூவையும் தூபப்பொருள்களையும் கொண்டு சென்று வழிபடும் திருக்கோயில்கள் பல இருக்கின்றன. வேதம் ஓதிச் சிறந்த ஒழுக்கத்தோடு நின்று இங்கிருந்தபடியே முத்தியின்பத்தைப் பெறும் நிலையையும் அறநெறி பிழையாத அன்புடை நெஞ்சையும் உடைய துறவியர் வாழும் இடங்கள் பல. முக்காலமும் நன்குணர்ந்த சமணர்கள் வாழும் பள்ளிகள் பல.

வழக்குரைப்பாருடைய அச்சத்தையும் வருத்தத்தையும் ஏக்கத்தையும் போக்கி, விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ந்து, நடு நிலைமையிலே நின்று அறத்தையே சொல்லும் அறங்கூறவையத்தைச் சார்ந்த பெரியோர் வாழும் மாளிகைகள் இவை. அரசனிடத்தில் உள்ள நன்மையையும் தீமையையும் உணர்ந்து, அவற்றை மனத்துள் அடக்கிக்கொண்டு, அன்பும் அறமும் அழியாதபடி பாதுகாத்து, பழியை நீக்கிப் புகழ் நிறைந்த இயல்போடு, தலையில் பாகை கட்டிக் கொண்டு தோன்றும், காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்கள் வாழும் மாளிகைகள் அவை. இவையாவும் மிகவும் உயரமான மாளிகைகள்.

பலவகையான பண்டங்களும், உணவுவகைகளும், மலையிலே விளைந்தனவும் நிலத்திலே விளைந்தனவும் கடலிலே விளைந்தனவுமாகிய பொருள்களும், முத்தும் பொன்னும் தாம் வாங்கிக்கொண்டு தம் நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர்களும், ஐம்பெருங் குழுவினரில் அமைச்சர் அல்லாத புரோகிதர், சேனாபதிகள், தூதர், ஒற்றர் என்னும் நால் வகையினரும், சங்கு அறுப்பாரும், மணியைத் துளையிடுவாரும், பொன்னணி செய்வாரும், பொன்னை உரைக்கும் பொன் வாணிகரும், ஆட்ைகளை விற்பவரும், செம்பை நிறுத்து வாங்கிக்கொள்பவரும், கச்சுக்களை அமைப்பாரும், பூவையும் தூபப் பொருளையும் விற்பாரும், எந்தப் பொருளையும் அழகாகத் தோன்ற எழுதும் ஒவியர்களும், பிறரும் கூடி நான்கு தெருக்களிலும், நெருங்கி நிற்கிறார்கள். இந்த இடங்களில் எப்போதும் கல்லென்ற ஓசை இருந்துகொண்டே இருக்கிறது.

பலாப்பழமும் மாங்கனியும் வெவ்வேறு வகையான காய்களும் பிற பழங்களும் கீரை வகைகளும் கற்கண்டும் ஊனும் கிழங்கும் கொண்டு ஆக்கிய இனிய உணவுகளைக் கொண்டு வந்து இடுவார் இட, அங்கங்கே அவற்றை நுகர்கிறார்கள் பலர்.

இத்தகைய அல்லங்காடியில் கப்பல் வந்து இறங்கும் துறைமுகத்தைப் போல ஒரே ஆரவாரமாக இருக்கிறது. பல வேறு பறவைகள் ஒருங்கே ஒலித்தது போன்ற ஓசை கேட்கிறது

நாளங்காடியையும் அல்லங்காடியையும் பார்த்து விட்டோம். இனி இம் மாநகர் மக்கள் எவ்வாறு இரவிலே பொழுது போக்குகிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

கதிரவன் மறைந்தான். நிலாப் புறப்படுகிறது. தம்முடைய கணவன்மார் பிரிவின்றித் தம்முடன் இருக்கப் பெற்ற மகளிர் மாலையும் அணியும் அணிந்து வாசப்புகை ஊட்டிய ஆடை புனைகிறார்கள்; விளக்கு ஏற்றுகிறார்கள். கணவரைப் பிரிந்தோர் வருந்துகிறார்கள். செல்வர்களே நாடிப் பரத்தையர் தம்மை அலங்கரித்துக்கொண்டு செல்கிறார்கள். திருமாலுக்குரிய ஓண விழாவில் நடந்த குத்துச் சண்டை முதலியவற்றில் பெற்ற நெற்றி வடுவையும் கண்ணியையும் உடைய வீரர்கள் தெளிந்த மதுவை உண்டு திரிகிறார்கள். கணவர் உவக்கும்படியாகக் குழந்தையைப் பெற்ற மகளிர் புனிறு தீர்ந்து குளத்தில் நீராட அதுகண்டு முதற் சூலைக் கொண்ட மகளிர் பூசைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு சென்று கோயிலிலுள்ள தேவராட்டியிடம் கொடுத்து வழிபடுகிறார்கள். பூசாரி முருகனுக்குப் பூசை போடும்போது பலவகை வாத்தியங்கள் முழங்குகின்றன. அங்கே மகளிர் கை கோத்துக்கொண்டு குரவைக் கூத்து ஆடுகிறார்கள்.

தெருக்களில் கதை பேசுவார் பலர்; பாட்டுப் பாடுவார் பலர்; கூத்தாடுவார் பலர். இப்படிப் பலபல வகையான கம்பலைகள் மலிந்துள்ளன. இந்த வகையில் முதற் சாமம் கழிகிறது.

இரண்டாம் சாமம் வந்துவிட்டது. சங்குகளின் ஓசை அடங்குகிறது. வியாபாரம் செய்கிறவர்கள் கடைகளை அடைக்கிறார்கள். மகளிர் துயில்கிறார்கள். வெல்லப் பாகினாலே உண்டாக்கின அடையையும் பருப்பும் தேங்காயும் உள்ளே வைத்த மோதகத்தையும் அப்பத்தையும் விற்பவர்கள் அப்படி அப்படியே தூங்குகிறார்கள். கூத்தாடுகிறவர்களும் கூத்த நிறுத்தித் துயில் கொள்கிறார்கள். கடல் அலை யடங்கினது போல யாவரும் ஓசையடங்கித் துயில்கிறார்கள்.

இப்போது நள்ளிரவு. சரியாக இரவு பதினைந்து நாழிகை. காலிலே செருப்பும் இடையிலே கச்சும் நூலேணியும் கையில் உளியும் வாளும் கொண்டு, வரும் கள்வரைத் தேர்ந்து, தூங்காத கண்னோடு காவலர்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத் திருட்டு நூலும் தெரியும்; காவல் நூலும் தெரியும். மழை மிகுதியாகப் பெய்தாலும் அவர்கள் வில்லும் அம்பும் கைக்கொண்டு தளர்ச்சியில்லாமல் உலாவுவார்கள்.

மூன்றாம் சாமத்தில் தெய்வங்கள் உலாவுவதாகச் சொல்வார்கள். நள்ளிரவும் மூன்றாம் சாமமுங் கழிகின்றன. நான்காம் சாமம் வந்துவிட்டது.

கட்டவிழ்கின்ற மலர்களையுடைய பொய்கையில் தாதை உண்ணும் தும்பிகள் முரன்றார்போல மறை ஓதும் அந்தணர்கள் வேதத்தைப் பாடுகிறார்கள். யாழில் வல்லவர்கள் காலைக்குரிய மருதப் பண்ணை வாசிக்கிறார்கள். குத்துக்கோற்காரர்கள் யானைக்குக் கவளம் கொடுக்கிறார்கள். குதிரைகள் புல்லைக் குதட்டுகின்றன. பல பண்டங்களை விற்கும் கடைகளை ஏவலர் மெழுகுகிறார்கள். இனிய குடிவகை விற்கும் கடையில் இப்போதே வியாபாரம் தொடங்கிவிட்டது. இல்வாழ் மகளிர் எழுந்து, சிலம்பொலிக்கக் கதவுகளைத் திறக்கிறார்கள். திறக்கும் ஓசை கேட்கிறது. நின்று ஏத்தும் சூதர்கள் வாழ்த்து இசைக்கிறார்கள். இருந்து ஏத்துவார் புகழ் பாடுகிறார்கள். வேதாளிகர் நாழிகை இவ்வளவு ஆயிற்றென்று அறிவிக்கிறார்கள். பள்ளி யெழுச்சி முரசு முழங்குகிறது.

எருதுகள் ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலி யெழுப்புகின்றன. கோழி கூவுகிறது. கரிச்சான் குருவியும் அன்னமும் கரைகின்றன. மயில்கள் அகவுகின்றன. பிடியோடு நிற்கும் களிறுகள் பிளிறுகின்றன. கூட்டிலே உறையும் கரடிகளும் புலிகளும் முழங்குகின்றன.

இரவிலே தம் கணவரோடு ஊடிய மகளிர் முத்து மாலையைக் கழற்றி எறிந்திருக்கிறார்கள்; மணல் முற்றத்தில் அந்த முத்துக்களோடு பாக்கும் வாடிய பூவும் ஆபரணங்களும் இறைந்து கிடக்கின்றன. அவற்றை ஏவலர் பெருக்குகிறார்கள்.

இத்தகைய காட்சிகளை நாலாவது சாமமாகிய விடியற்காலத்தில் காணுகிறோம்.

இப்படிச் சிறந்து ஓங்கி நிற்கும் மதுரையிலே அரசனுடைய வெற்றிச் சிறப்பால் பலவகைப் பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. பெருந் தோளையுடைய மழவரை ஓட்டியதால் அவர் விட்டுப்போன யானைகளும், பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த புரவிகளும், பகைவரூரைச் சுட்டு அங்கிருந்து கொண்டு வந்த ஆநிரைகளும், வேற்று நாட்டு மதிலை இடித்துக் கொணர்ந்த மதிற் கதவுகளும், பணிந்து போன மன்னர்கள் திறையாகக் கொண்டு வந்து கொடுத்த கலன்களும் பிறவும் கடலிலே கங்கையாற்று வெள்ளம் சென்று சேர்ந்நாற்போல இந் நகரிலே வந்து சேர்ந்திருக்கின்றன.

இவ்வாறு வளம் பெற்ற மதுரையின் அமைப்பையும் அங்கு வாழ்வார் செயல்களையும் விரித்துக் கூறி விட்டு நெடுஞ்செழியனை வாழ்த்துகிறார் புலவர்.

இரவிலே மாதேவியோடு துயின்று விடியலில் எழுந்து ஆடையணி புனைந்து தெய்வத்தை, வழிபடுவர் அரசர். அப்பால் திருவோலக்கத்திலிருந்து, பல்வேறு வீரச் செயல்களைச் செய்த படைத் தலைவர்களையும், வீரர்களையும் அரசியற்கருமம் செய்பவர்களையும், புலவர்களையும், பாணரையும், விறலியரையும், கூத்தரையும் அழைத்து வரச் செய்வர். பின்பு அவரவர்களுக்கு வேண்டிய வரிசைகளை வழங்குவது மன்னர் இயல்பு. “அவ்வாறே செய்து முதுகுடுமிப் பெருவழுதியைப்போலக் கேள்வித் துறை போகிய ஆசாரியர்களோடு கலந்து நட்பாடியும் பெரியோர்களின் உபதேசங்களைக் கேட்டும் வீட்டு நெறிக்குரிய பெரும் பொருளைக் கற்றும் புகழ் பெற்றுச் சுற்றத்தாரோடு இனிது விளங்கி நீடூழி வாழ வேண்டும்” என்று. வாழ்த்தி மதுரைக் காஞ்சியை முடிக்கிறார் மரங்குடி மருதனார்.

மகிழ்ந்தினிது உறைமதி பெரும,
வரைந்து நீ பெற்ற நல்லூழி யையே[1]

என்று முடிகிறது பாட்டு.

இந்த அழகிய பாட்டும் நக்கீரர் பாடிய நெடுநல்வாடையும் பத்துப் பாட்டு என்ற சங்கத் தொகை நூலில் சேர்க்கப் பெற்றுள்ளன.

---
[1]. பெருமானே, நினக்கென்று வரையறுக்கப் பெற்று நீ கொண்ட நல்ல வாழ்நாள் முழுதும் மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக!

-----------------

11. நிறைந்த வாழ்வு

மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி தமிழ்ப் புலவருக்கு இன்பத்தை உண்டாக்கியது; பன்னூறு ஆண்டுகளாகியும் இன்றும் அது பழைய மதுரையின் வளத்தைக் காட்டிக்கொண்டு இன்புறுத்துகிறது. அது பாடப்பெற்ற அப்போதே மருதனார் எதிர்பார்த்த பயனை உண்டாக்கியது. அரசன் பன்முறை அந்தப் பாட்டைக் கேட்டான். தனக்கு அறிவுரை கூறுவதற்காகவே மருதனார் அதைப் பாடினார் என்பதை அவன் நன்கு தேர்ந்தான். சென்ற நாட்களில் சிந்தனையை ஓட்டினான். போர், போர் என்றே பல காலத்தைக் கழித்துவிட்டதை நினைந்து இரங்கினான். அறம் வளரவும் வீட்டு நெறிக்குரிய திறம் வளரவும் என்ன என்ன செய்யவேண்டும் என்று பெரியோர்களோடு இருந்து ஆராய்ந்து அவற்றைச் செய்யத் தலைப்பட்டான்.

அவனுடைய செயல்களால் குளங்களும் ஏரிகளும் செப்பம் அடைந்தது போல, உடைந்து போயிருந்த சான்றோர் உள்ளமும் புலவர் நெஞ்சமும் கவலை தீர்ந்து நிறைவடைந்தன. கருவிலே வள்ளன்மையையுடைய அரசன் தான் போரிலே பெற்ற பொருள்களை வாரி வாரி வழங்கினான். நல்ல வேள்விகளைச் செய்தான். அறத்துறைகளை வளர்த்தான். தெய்வத் திருக்கோயில்களே எடுப்பித்தான். வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறச் செய்தான். பலவேறு விழாக்கள் நடத்தினான்.

அப்போது அவனுக்கே அமைதி யென்பது இன்னது என்ற உணர்ச்சி பிறந்தது. ஞான நூல்களைத் தக்கார் வாயிலாகக் கேட்டான். இந்த அமைதியிலே கிடைக்கும் இன்பத்துக்கு ஈடில்லை என்பதை அநுபவத்திலே தெளிந்தான்.

பிற நாட்டார் வந்து பாண்டி நாட்டில் நிலவும் அமைதியைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். மக்களிடம் உள்ள மன நிறைவு அவர்களைக் கவர்ந்தது. ஆக்க வேலைகளிலும் அமைதி பெறும் வழியிலும் ஈடுபட்ட அரசனை வணங்கிப் போற்றினார்கள். வேற்று நாட்டு மன்னர்கள் நெடுஞ்செழியனிடம் நட்புப் பூண்டு அடிக்கடி கையுறைகளுடன் வந்து கண்டு மகிழ்ந்தார்கள். அவன் செய்யும் நற் கருமங்களுக்குத் துணையாக நின்று ஏவல் செய்தார்கள்.

இந்தக்காட்சியைக் கண்ட மாங்குடி மருதனாருக்கு உவகை தாங்கவில்லை.

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே[1]

என்று பாடினார்.

புலவர்கள் அவன் புகழைப் பலபடியாக விரித்துப் பாடினார்கள். யாழ் வாசிக்கும் பாணர்கள் வந்து பாடிப் பரிசில் பெற்றார்கள். பொருநரும் விறலியரும் கூத்தருமாகிய கலைஞர்களின் கலையை அமைதியாக இருந்து நுகர்ந்து பரிசு பல வழங்கினான் அரசன்.

குடிமக்கள், தம் குறைகளை வேண்டும் பொழுதெல்லாம் அரசனை அணுகி எடுத்து இயம்பி, அவன் அவற்றைக் கேட்டு ஆவன செய்வதனால் குறைகள் நீங்கி இன்பம் பெற்றார்கள். தொழிலும் கலையும் சிறந்து விளங்கின. அறம் மலரவும் பொருள் கனியவும் இன்பம் பொங்கவும், மக்கள் தம் அரசனைப் போல வீட்டு நெறிக்குரிய நற்செயல்களைச் செய்வதனால் அமைதி பெருகவும் எங்கும் வள வாழ்வு மல்கியது.

புறப் பகைகளைக் களைந்து வென்று மிடுக்கிலே தலை நிமிர்ந்து நின்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இப்போது அறத்துறைகளை நிறைவேற்றி, மெய்ஞ்ஞான நெறியிலே சிந்தையைச் செலுத்தி, இறை வழிபாடும் பெரியோரைப் பேணலாகிய நற்செயல்களைத் தவறாமற் செய்து, அமைதியும் நிறைவும் பெற்று வாழ்ந்தான். அகப் பகையாகிய போர் ஆசையும் பேராசையும் அவனிடமிருந்து ஒழிந்தன.

அவன் புகழ் நாடுகடந்து சென்றது. தண்டமிழ்ப் பாடல்களில் நின்று காலங் கடந்தும் வந்து அப்புகழ் மணக்கிறது.
---
[1]. அமைந்த கேள்வியையும் ஐம்புலனும் அடங்கிய விரதங்களேயும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக, வேந்தர் தக்க ஏவல்களைச் செய்ய நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வேந்தனே!
----------


This file was last updated on 25 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)