pm logo

மதுரை மீனாட்சியம்மன் பதிகம். &
சுந்தரமகாலிங்க சுவாமி பதிகம்
திருப்போரூர் கோபால் நாயகர் அவர்களாற்றமது


maturai mInATciyamman patikam &
cuntaramakAlingka cuvAmi patikam
of tirippOrUr kOpAl nAyakar
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மதுரை மீனாட்சியம்மன் பதிகம். &
சுந்தரமகாலிங்க சுவாமி பதிகம்
திருப்போரூர் கோபால் நாயகர் அவர்களாற்றமது

Source:
1) மதுரை மீனாட்சியம்மன் பதிகம்.
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது
மதராஸ், என். சி. கோள்டன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
1914
17-18 காளத்தியப்ப முதலிவீதி மதராஸ் என்.சி.
2) சதுரகிரிமலையிலெழுந்தருளிய
சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்.
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது
மதறாஸ், என். சி. கோள்டன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
17-18 காளத்தியப்ப முதலிவீதி, மதறாஸ் என்.சி. 1914
---------------------------------

1- மீனாட்சியம்மன் பதிகம்.


சிவமயம்.
நேரிசை - வெண்பா.
பொற்பாரமண் டபஞ்சூழ் பொற்றாமரைக் கரைவாழ்
கற்பகநேர் சித்திக் கணபதியே விற்பனஞ்சேர்
அற்புதநம் மீனாட்சி யம்மைதனக் கின்பமுற
நற்பதிகம் பாடவரம் நல்கு.

எழுசீர்க்கழிநெடிலடி இரட்டையாசிரிய விருத்தம்
பூமின்வள ரீரேழு பதினாலு புவனமும்
      போற்றியே தொழுது பணியும்
பொன்னளின பாதமுங் கனிவாயும் வதனமும்
      பொற்பு நயனப் பார்வையும்
சாமிகண பதிதனைப் பெற்றுசுவை யமுதுமரு
      டன்னிய விசால வடிவுந்
தவராஜர் புவிராஜர் கவிராஜர் பேரினிற்
      றயவுசே ரபையாஸ் தமும்
நேமிமா கிறமுற்ற மரகதசொ ரூபமும்
      நிறைவுடன் பிரசன் னமாய்
நேசம்வைத் தெந்தன்முன் றோன்று சௌபாக்கியமீ
      நித்தியகல் யாணி யுமையே
வாமிமதன் மாமிசிவ காமியபி ராமியுன்
      மைந்தனா யெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (1)

மாலைசந்த் ராரஞ் சரப்பளி பதக்கம்வை
      டூரியநு கர்சுட் டியும்
மௌலிமணி மகுடம் புலாக்குமூக் குத்திரு
      மங்கிலி யமுஞ் சிமிக்கி
ஒலைநவ மணிவிசிரி முருகுப்பட் டங்காறை
      யுயர்கங் கணமு மோதிரம்
ஒட்டியா ணமெட்டு பாடகந்தண் டைகொலு
      சொலிகிண் கிணிச்சரி கையாற்
சேலையிர விக்கை மணிந்துசெங் குங்குமத்
      திலதமிட்டு விசித்ர மாய்ச்
செகஜோதி யாகச்சொ லிக்கச்சி றப்புற்ற
      திவ்விய குணசிந் தாமணி
வாலையனு கூலிதிரி சூலிகிரு பாலியுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (2)

பாடலபி நயகீத தேவதாசி கள்வந்து
      பரதநட னம்புரி வதும்
பதினெட்டு வாத்திய முழக்கமும் வருடமோர்
      பனிரண்டு திருவி ழாவுஞ்
சோடசோ பசார நைவேத்திய மகத்துவமுஞ்
      சுக்ர வாரச்சே வையுந்
தோத்திரஞ் செய்தன்பர் கொண்டாடி நிற்பதுந்
      துவாதசாந்த ஸ்தல மெனும்
ஆடலறுபத் துநான்கு புரிதிரி கூடலாம்
      ஆலாட்சி யாச்சேத் திரமும்
ஐந்துமா பாதகவி மோசனஞ் செய்யிரண்
      டாறுதீர்த் தத்தின் வளமும்
மாடமா ளிகைகூட கோபுரவி சேடமும்
      மைந்தனான் சொல்ல வெளிதோ
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே (3)

கோமளம தாகவுக் கிரப்பாண் டியன்றனைக்
      கொஞ்சிமடி மீதில் வைத்து
கொங்கையி நிரித்திப் பதானபா லமுதங்
      கொடுத்த பார்பதி வராகி
சாமள நிறப்பதும நாபனீ சகோதரீ
      சாம்பீன தச்சபை தனிற்
சப்தசுர தாளமொடு ருத்ரனுட னிர்த்தமிடு
      சத்திமா தங்கி கௌரி
யாமளை சமஸ்தமுந் தானான லோகநா
      யகிமகிட சங்கா ரிநீ
வளவிடக் கூடாத வறுபத்து நாற்கலை
      யானவித்தைக ளுணர்ந்த
மாமணி சிகாமணி சிரோன்மணி மனோன்மணியுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (4)

ஆரிசோ ழன்சேர னுக்குமே லானமல
      யத்துவசன் வளர் புத்ரியா
யாங்கார மும்முலைத் தடாதகை மகடூழ்
      வாயலங் கிர்த சோடினைத்
தேரின்மீ தேறிரத கஜதுர கபதா
      திகளெனுஞ் சேனை யுடனே
திக்குவி ஜயஞ்செய்து பட்டாபி ஷேகமாய்ச்
      செங்கோல் செலுத்தி நாளும்
பாரினிற் கொண்டாட ராச்யபரி பாலனம்
      பண்கின்ற ராஜேஸ் வரி
பரமசிவ சொக்கநாதக் கடவுள் பாரியாய்ப்
      பக்கமதி ருக்கு மணியே
பாரிசிவ நாரியுப காரியதி காரியுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (5)

தந்தைதாய்க் குப்புத்ர னாகச்ச னித்துவித்
      தரணி தனிலே பிறந்து
தவழ்ந்தடி நடந்துவிளை யாடத்தெ ரிந்தபின்
      சனிசெய்த கொடுமை தானோ
விந்தையாய் வருமைபிணி பீடைநோய் யணுகினும்
      விடமான விலைமா தரை
மேவியதிலும் பிரபஞ்ச வாழ்க்கை யதிலும்
      மெலிந்த குருபர தேவதா
சிந்தனை யிலாமலும் பெரியோ ரிடத்திற்
      சினேகிதஞ் செய்து கன்னி
செல்வப்பொ ருள்களைத் தேடாமல் வீணா
      செலுத்தினே னிதுவ ரையினி
வந்தமிடி தொந்தரவை ரெந்தவிதி முந்தொலையுன்
      மைந்தனை யுகந்தா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (6)

ஜென்மித்த நாள்முதற் கொண்டுமை யம்மணி
      செல்வத்தை யானறி கிலேன்
தேர்ந்தவிற் பன்னர்சம் பாஷணை கள்செய்து
      செந்தமிழ் முதற்கற் கிலேன்
உன்மத்த மாய்கெட்ட மிஷ்டரிஷ் டம்பண்ணி
      யும்பஞ்ச பாத கத்தில்
ஒருகுற்ற மாகிலுஞ் செய்திரேன் மனதார
      ஊழ்வினைப் பயனென் னமோ
மன்கத்தி னால்வந்த துன்பத்தை முன்செய்த
      கதைகா ரணம் போலவே
விடமில் லாமனின் னிடமுரைத் தேனெனது
      கலிதனை யகற்று மம்மா
மன்முத்த மிழ்க்கள் சுகிர்தத்தையும் வளர்த்ததாம்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (7)

அஞ்சிட நடுக்கடக் கப்பல்விட் டெழுகாத
      மாதார மின்றி யோடி
அலையின் றுரும்புபோ லுலைவாயின் மெழுகென
      வலைந்துருகு பாவனை யதாய்த்
தஞ்சம் வேறில்லாம லுன்னடைக் கலமெனத்
      தற்காறிவ் வேளை யென்று
சன்னிதா னந்தனிற் றாபந்த மாகிய
      சரித்திரம் விரித்து ரைத்துங்
கொஞ்சமா வதிரக்க மில்லாத தென்னபிழை
      குற்றமென் றோகை யமலை
குதித்தபரை நீலியயி ராணியா பாசாங்
      குசத்தியா கிலுமுனை விடேன்
வஞ்சமது னெஞ்சினிற் பொஞ்சாதே பஞ்சையுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே (8)

பில்லிவஞ் சனையேவல் சூனியம் பூதப்
      பிசாசுமுனி யெதிர் வராமற்
பிரமித்தி சரணமென் றோடவு மேமனார்
      பிராணபய மில்லா மலும்
சல்லியஞ் சச்சரவு சத்ராதி கள்கோடி
      சனிக்கலி யணுகா மலுஞ்
சஞ்சலா வஸ்தைபிணி விசனமது றாமலுஞ்
      சற்சனர்க ளிகழா மலும்
மெல்லிமை யுடன்மன நினைத்தது கைகூடவு
      மிக்கிருபை செய்விக்ஞா பனம்
வினவினே னின்றுமுத லென்றைக் கும்ரட்சிக்க
      வேண்டுமுக் கண்ணி தேவி
வல்லிபிர பல்லியச் செல்லியென் றல்லியுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே. (9)

மாமேவு நிகரான நவநிதி குபேரனிட
      வாழ்வுபோ லென்ற னக்கு,
மட்டடங் காதநிதி யஷ்டைஸ் வரியமும்
      வள்ளலென வேயீ கையுஞ்,
சகமதி லிகப்பர சாதனஜென் மசாபல்லிய
      தமிழ் சமஸ்கிருத நூற்களுஞ்,
சதிரான சாலோக சாமீப சாரூப
      சாயுச்ய பதவிய துவுஞ்,
சுகமாகு மிகுசகல சாம்ராச்ய போகஞ்
      சுகித்து நீடூழி வாழ்கச்
சுபசோப னப்பதிக மாயிப்ர பந்தந்
      துதித்தேன் வரங்கொடுத்து,
மகிமைதிக ழகமகிழ மிகவிகுது சமயமுன்
      மைந்தனா மெனையா ளுவாய்
மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி
      மதுரை நகர் மீனாட்சியே (10)

மீனாட்சியம்மன் பதிகம் - முற்றிற்று
~~~~~~~~~~~~~~

2. சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்.


கடவுள் துணை.

கருவாகி அன்னைதன் வயிற்றினிலுதித்து
      கருப்பையிற் கட்டுண்டுயான்
காலமதுதிங்களீ ரைந்துமுடி வானபின்
      காசினியிலே யுதித்து
உருவாகிவந்தபின் வயதுபதி னாறுசென்
      றோரறிவு கிட்டாமலே
வுட்டினிலகப்பட்ட பட்சிபோ லேகவலை
      யுற்றடிமை மிகமெலிந்து
சிறுவருடனேசேர்க்கை யாலுன்னை நாடாமற்
      றிரிந்துவிட் டென்தெய்வமே
செனனம்வருமென்று மனம்யோசிக்கு தேயென்ன
      செய்குவே னென்னையாளும்
தருமகுணநீத சுந்தரமகா லிங்கமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (1)

மூக்குநுனியென்றகுரு பீடத்தில் நித்தியமாய்
      முதல்வனடி தனைவணங்கி
முன்செய்ததவபதத் தாலுநின் னருளாலும்
      முக்கியமாய் மனதைநாட்டித்
தாக்கியேசிவயோக வாசிதனை யூதச்
      சதானந்தி விந்துவாசி
தங்குமென்றேயெங்கள் கும்பமுனி நாயனார்
      தான்மொழிந் திட்டபடியால்
பார்க்கலாமென்ற தின்மேலிச்சை வைத்துனது
      பாதமதை யாநம்பினேன்
பரமகுருசாமியுன் னடிமையிச் சித்தத்தை
      பாலித்து யெந்தனுக்குச்
சாக்கிரதையாகநின் பாக்யமா மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (2)

பரவையதுசூழ்ந்திடுந் தரணிதனி லடிமையான்
      பட்டசள மெத்தவுண்டு
பாவிமாபாவியென் போலுமிவ் வுலகினிற்
      பார்க்கவே றொருவருண்டோ
நரசெனனமாகப் பிறந்து மறிவதைவிட்டு
      நாய்போற் றிரிந்தலைந்தேன்
காய்க்குமொருபுகழுண் டெனக்குமப் புகழில்லை
      நாயினுங் கடைக்கெட்டநான்
துரையானமூலநடு வனைமீதி லெப்பவுஞ்
      சோதியாய் நின்றிலங்குஞ்
சொரூபமேமுத்திதரு மரூபமே நின்பதந்
      துணையென்று உனையடைந்தேன்
சரமாறிவருகின்ற நிலையறிய மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (3)

பரியாசமாக இவ் வுலகோர்ந கைத்தெனை
      பாவியென் றேசினாலும்
பண்டுஊழ்வினையது தொடர்ந்தெ னைபற்றியே
      பங்கப் படுத்தினாலும்
மரியாதையில்லாம லன்னை சுற்றத்தார்கள்
      வைதாலு மடையனென்றும்
வாராததுன்பங்கள் வந்தாலு மென்கர்ம
      வசமென்று மசைவின்றியே
குறியாயிருப்பதற் கேமமொடு நேமமுங்
      கூறவரி தானதசமுங்
கூறியெனை யாட்கொள்ள வேணுமென்றேயிருகை
      கூப்பியுனை வந்தடைந்தேன்
சரியாமெனக்குஎன் றனையறிய மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தன மகாலிங்கமே. (4)

ஈயெறும்பானைமுத லெண்பத்து நான்குநூ
      றாயிரஞ் சீவவுயிரும்
இனமெலாமொன்று குறையாமலே தனதாக
      எல்லாம் பிறந்திறந்து
தேய்வாகும்பிறைபோலத் தேய்ந்தபின் மேலான
      செனனமெனு மானிடமதாய்ச்
சென்மித்துஅதனிலும் பெண்செனனம் நீக்கியான்
      செனனமது வாய்ப்பிறந்து
தீய்வானகூன்குருடு நீக்கியறி வாகநின்
      செயலெனும் அருளினாலே
சென்மித்தஅடிமைதனை வன்மித்தி ராமலென்
      செனனமது ஈடேறவே
தாய்போலெனக்குநீ தயவாக மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (5)

கருவிகரணாதியை யகற்றிமுன் செய்ததவ
      கர்மந்தனை துரத்திக்
கால்கொண்டுவாசியை மேல்கொண் டெழுப்பியே
      கடிவாள மங்கிபூட்டிப்
புருவநடுமத்தியிற் பருதிமதி யொத்துப்
      பொருந்தவே யொன்றுசேர்த்து
போகின்றநாற்கலைபாழ் போகாம லெப்பவும்
      பூரணமா யுள்ளிருத்தி
இருவினையகற்றவே மனநடு நிறுத்தியே
      எம்பிரானின் னருளினால்
இருபத்தோராயிரத் தறுநூறு தன்னையும்
      ஏகவெளி தன்னிலேத்த
சருவபரிபூரணச் சுந்தரனே மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (6)

ஆதாரமாறினி லமைத்தஅச் சரமதனை
      யன்புகூர்ந் தருள்புரியவும்
அம்பரமதானபர வெளியிலோ ரச்சரத்
      தருமைதனை யருள்புரியவும்
வாதாகயென்னிடம் வழக்காடு கருவிதனை
      மாட்டுதற் கருள்புரியவும்
மதிபெருகுமஷ்டாங்க மார்க்கமது சித்திக்க
      மௌனநிலை யருள்புரியவும்
வேதாவிதித்தவிதி தன்னைக் கடந்திடவு
      மெஞ்ஞான மருள் புரியவும்
வேண்டினேனின்னடிமை யாண்டு பனிரெண்டு
      மெய்யடிதொழுது கதியடையவே
காதாயெனக்குநின் பாதமெனு மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர்துங்கமே
      சந்தனமகா லிங்கமே. (7)

வஞ்சகநமன்றனக் கஞ்சாதி ருக்கநடு
      வனைவன்னி யருள்புரியவும்
வல்லபைகணேசன்வளர் பதியில்நாலி தளுடைய
      மணிமந்திர மருள்புரியவும்
விஞ்சையாலுதித்தெழுந் தஞ்சாமல் வரும்வாசி
      விபரமதை யருள் புரியவும்
மேலெழுந்தேமுட்டு கால்தனை யெட்டினால்
      வெடிகட்டி யருள்புரியவும்
பஞ்சவர்கள்பதியைக் கடந்தம் பரத்திற்
      பரத்தினிலை யருள்புரியவும்
பரமகுருநா தெனொன் பாதாரவிந்தமே
      பதியாக வருள்புரியவும்
தஞ்சமென நம்பினே னஞ்சலென மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குசதுரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தன மகாலிங்கமே. (8)

சூதுமுதலானபொய் களவுவஞ்ச னைகளோடு
      துர்புத்தி விட்டுவிடவும்
துர்ச்சனர்தமைக்கண்டால் நச்சரவு தானென்று
      தூரத்தி லோடிவிடவும்
ஏதுயிர்களானாலு மன்னுயிரே தன்னுயிரென்
      றெண்ணியே யிரங்கிவிடவும்
இகமீதிலுள்ளபல யிச்சைதனை யகமீதி
      லெண்ணா திருந்துவிடவும்
தீதுடையமாய்கை துன்பங்களைக் கனவிலுஞ்
      சேரா திருந்துவிடவும்
சிவசிவாசதுரகிரி தேசிகாநித் தமுன்
      தெரிசனைகள் கண்டுகொளவும்
தாதுதசவாய்வுநிலை யறியவு மோனமருள்
      தரவேண்டு மிதுசமயமே
தங்குச துரங்கிரியி லங்கிவளர் துங்கமே
      சந்தன மகாலிங்கமே. (9)

ஆதியாம்பிரமமொடு சத்திசிவம் வாழிவல்
      லபையொடு கணேசன்வாழி
அரிஅயன்வாழி லெட்சுமிவாழி சரஸ்வதி
      யம்மைபொன் னடியும்வாழி
நீதிகுருவாழியென் சுந்தரம காலிங்கம்
      நேயமாய் நாளும்வாழி
நித்தியானந்தபதி னெண்பேர்கள் வாழிநன்
      நிலையான சித்தாவாழி
வேதம்நால்வாழி வூராறுசாஸ் திரம்வாழி
      மிக்காக மங்கள்வாழி
வியாசனொடுசத்தரிஷி வால்மீகர் சுகர்சூதர்
      விஞ்சைமுனி வோரும்வாழி
மாதவர்கள்வாழி சிவனடியார்த போதனர்கள்
      மாமலர்த் தாளும்வாழி
மண்ட துயரைதீர்க்க தொண்டனெனை யுங்காக்க
      வந்தருள் மகாலிங்கமே. (10)

முற்றிற்று.
~~~~~~~~

This file was last updated on 8 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)