pm logo

கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார் எழுதிய
திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவினாயகர் பதிகம்
& திருவல்லிக்கேணி சிங்காரவேலர் பஞ்சரத்தினம்


tiruvallikkENi aracaTik kaRpakavinAyakar patikam
& cingkAravElar panjcaratnam
of cuppiramaNiya mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார்
எழுதிய திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவினாயகர் பதிகம்
& திருவல்லிக்கேணி சிங்காரவேலர் பஞ்சரத்தினம்

Source:
இவை திருவல்லிக்கேணி இந்து வாலிப பக்தசன சபையார் விருப்பத்தின்படி
கோயமுத்தூர் தமிழ்ப்பண்டிதர் மா – ஸ்ரீ ச - திருச்சிற்றம்பலம்பிள்ளையவர்கள் மாணாக்கர்
க - சுப்பிரமணிய முதலியாரவர்களால் இயற்றப்பட்டு
திருவளவாயல் துரைசாமிமுதலியார் அவர்கள் முயற்சியால்
சென்னை: ஸ்ரீ ஹரி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1899
----------------------------
உ - சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவிநாயகர் பதிகம். &
சிங்காரவேலர் பஞ்சரத்தினம்
------------------

சிறப்புப்பாயிரம்.
இந்நூலாசிரியர் உடன் கற்றவராகிய மாா. M. V. மீனாக்ஷிசுந்தர முதலியார்
அவர்களால் இயற்றப்பட்டது.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சீர்பூத்த கற்பகவி நாயகர்தம் பெருமை யையும்சிறப் பின்மிக்குப்
பார்பூத்த சிங்கார வேலவர்தம் பெருமையையும் பாவாற் பாடக்,
கார்பூத்த திருவல்லிக் கேணிக்கோர் கண்ணெனவே கருது கின்ற,
ஏர்பூத்த இந்துவா லிபபக்த ஜனசபையார் இனிது வேண்ட.

சந்ததமுஞ் சிவபெருமான் றிருவடியே புகழ்கந்த சாமி தன்பால்,
வந்துதித்துத் திருச்சிற்றம் பலவனெனும் நாவலன்பான் மகிழ்ந்து கற்றுச்,
சுந்தரஞ்சேர் கோவைநகர்க் கணியாகி விளங்குகின்ற சுப்ர மண்யன்,
இந்திராதி தேவருமே வியக்குமா றிவையினிதா யியற்றி னானே.
-------------------------

சிவமயம்,

திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவினாயகர் பதிகம்.


காப்பு - வெண்பா.
விரைசெறியுஞ் சோலை விளங்கல்லிக் கேணி
யரசிடியிற் கற்பகவைங் கரனைப்- பரசிடுநற்
செந்தமிழின் மாலைதனைச் செப்புதற்கவ் யானைமுகன்
கந்தமிகு செஞ்சரணே காப்பு.

நூல் – அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

ஒன்றிய கேள்வி மேலோ ருணர்விலும் உறுதி யாவும்
துன்றிய வேதத் துள்ளும் துவக்கிலா நினது பாதம்
நன்றம ரல்லிக் கேணி நல்லகற் பகமே என்னே!
கன்றுசிற் றறிவேம் சின்னாட் காலத் தேமுண ருமாறே.       (1)

இரும்பி னுங்கடிய நெஞ்சோம் இவ்வுல கத்தின் வாழ்க்கை,
விரும்பி யேதிரிவோம் நின்னை யொருகணம் விழைத லில்லோம்,
அரும்பு கள்மதிகேர் அல்லிக் கேணியைங் கரனே! நின்றன்
கரும்பி னுமினிய பாதங் காட்டிடி னுய்ந்தோ மன்றே.       (2)

முன்னுவார் கரும முற்றி; மொழிகி லார்செயல் தவிர்த்தி;
என்னமுக் கண்ணன் முன்னாள் இயம்புதல் பெற்ற மூர்த்தி!
மன்னு சீரல்லிக் கேணி வளர ரசடி யிற்றாரு
வென்ன முன்ன ருளும் விக்கினேச் சுரவெமைக் காப்பாயே       (3)

நாலுகை யுடைய வள்ளால் நன்றம ரல்லிக் கேணி,
யேலுகற் பகமாம் பிள்ளை யாரெனும் எழிற்பேர் கொண்டோய்,
நாலுமா முகனைக் குட்டும் நாதற்கு மூத்தோய்! எம்மைச்
சாலவாழ் வளித்துக் காத்துச் சரணளித் தருள் செய்வாயே.       (4)

அஞ்சியே யமர ரோட வாரிடர் விளைத்த வேழ,
வெஞ்சின முகத்தோன் றன்னை வீழ்த்திய விக்ன மூர்த்தி
மஞ்சிவ ரல்லிக் கேணி யரசின் கற்பகமே! மன்னும்,
செஞ்சரண் வழங்கி யெங்கள் சிறுமைகள் போக்கு வாயே.       (5)

ஆறமர் சடையெம் மண்ணல் அளித்த வைங்கர னேயல்லிப்,
பேறமர் கேணி வாழும் பெரிய கற்பக மேமங்கை,
சாறவன் முதலாம் விண்ணோர்க் கும்பயன் கொடுப்பை யானால்,
சீறடி யேமுக் குற்ற செய்வது மரிய தாமோ.       (6)

எழுபவக் கடல்வீழ் யாமுன் னின்னருட் குரிய ரல்லோம்
வழுவினோம் என்று நீத்தல் மரபதோ வருந்தி வாடும்
குழவிமே லன்றோ வன்னைக் குறுபரி வாகுங் கோல
மழகிய அல்லிக் கேணி யரசடித் தருவாம் தேவே!       (7)

எட்டொணா வடிவத் தெந்தை யியம்புமோ ரெழுத்துட் டோன்றிக்,
கிட்டிய வைந்து கைய கெமுமிய வல்லிக் கேணிப்,
பட்டின வாசின் கீழ்க் கற்பக மெனும் விக்கினேச
ஒட்டிய பிறவி வெம்மை யோடிட வருள் செய்வாயே.       (8)

ஒன்பதா மெண்போ லென்னுள் நானு முரையே மேலி
டுன்பத மொருநா ளேனும் உய்த்திட வேத்தல் செய்யே
என்பொருட் கலைவ தானேன் இனியருட் பார்வை நல்காய்,
பொன்பெரு கல்லிக் கேணிப் பொருலில் கற்பகமா மாந்தேவே!       (9)

பத்தியை யுடைய வன்பர் பாலெமை யிருத்திப் பாச,
முத்தியை யளிப்பான் இப்பான் முன்னைய தொழிய மூட்டை,
மெத்தமே லாகா வண்ணம் வீடுதந் தருளல் வேண்டும்,
அத்தியாய் அல்லிக் கேணி யரசடி யமர்ந்த தேவே.       (10)
--------------------

திருவல்லிக்கேணி சிங்காரவேலர் பஞ்சரத்தினம்


காப்பு.
திருவல்லிக் கேணியில்வாழ் சிங்கார வேலர்
இருபதத்தை யென்னு ளிருத்தி- மருவைந்து
பொற்பகப்பா போற்றப் புகலாம் அரசடியிற்
கற்பகத்து யானை கழல்,

நூல் - எண்சீர்க்கழிகெடிலடியாசிரிய விருத்தம்.

சீர்பூத்த திருவல்லிக் கேணி யில்வாழ்
      சிங்கார வேலரெனுஞ் சிறந்த தேவின்
ஏர்பூத்த திருப்பதமாங் கரும்பைத் தேனை
      யினுயதொரு கற்கண்டை யெழில்கொள் பாலை
நார்பூத்த மனத்தினராய் நம்பிக் கொள்ளின்.
      நலமுறலிவ் வுலகதனில் வாழ்ந்து பின்னர்க்
கார்பூத்த வானகத்தே கவின்பெற் றோங்கிக்
      கலந்துகுக னடிவீட்டின் வாழ்வா ரன்றே. (1)

திருவல்லிக் கேணியெனச் சிறந்த பேர்கொள்
      திகழ்பதியிற் சிங்கார வேலர் என்றும்
மருமல்லி போலுமிரு மங்கை மார்கள்
      மகிழ்ந்தணையும் மார்பினர்தீ விழியா லந்நாள்
ஒருவல்லிக் கனையழித்தார் இளஞ்சேய் பாதம்
      ஒருகணமே எனினுமனம் வைத்து வாழின்
மருவல்லிங் கிவர்கணெனத் தென்பான் மன்னை
      மறுக்கஞ்செய் திடுமந்த மயிலோன் றானே. (2)

கோலமுறு திருவல்லிக் கேணி யென்னும்
      குலவுதிரு நகரதனில் வாழ்சிங் கார
வேலவன்முன் அயனொருநாள் அகந்தை கொள்ள
      மிக்கவதை யறுத்திடுவான் வேத வாய்மைச்
சீலவெழுத் துரைகேட்டுச் சிறையி ருத்திச்
      சிவபெருமாற் குபதேசஞ் செய்தான் அன்ன
பாலன்பத மெமதுமுடிக் கணியாய் நாளும்
      பரிவுடனே காக்குமவை பகரின் மாதோ. (3)

விண்ணவருக் கிடர்செயலே விரும்பி வாழ்ந்த
      விழற்சூரைத் தொலைத்தந்தத் தேவர் தம்மை
முன்னிருந்த குடியேற்றிச் சிறைதொ லைத்த
      முன்னவனே! திருவல்லிக் கேணி யாறு
சென்னியுடைச் சிங்கார வேலாய்! எம்மைச்
      செம்மையிலா துடற்றிநலிந் திடர்செய் பாசம்
மண்ணுலகிற் பிறவிசெயல் மாற்றி நின்றன்
      மன்னுபத மளித்தனினக் கரிதோ வன்றே. (4)

இம்மையினு மம்மையினு மின்ப மெய்தும்
      இருமலரார் நோக்குமளித் துன்றன் பாதம்
மும்மைபெறு காலமுமெம் முணர்வின் மேவும்
      முதல்வரமொன் றதைவிடவே றொன்றும் வேண்டோம்
அம்மையென வனைத்துயிரு மளித்துக் காக்கும்
      ஆறுமுக முடையவனே! யருளார் வேளே!
செம்மைபெறு திருவல்லிக் கேணி வாழுஞ்
      சிங்கார வேலவனாஞ் சிறந்த தேவே (5)
--------------
வாழி.
ஏர்மருவல் லிக்கேணிக் கற்ப கத்தின்
      இணையடிகள் வாழ்கபுகழ்ச் சைவம் வாழ்க
சீர்மருவுஞ் சிங்காரர் பதங்கள் வாழ்க
      திருநீறு மக்கரமு மணியும் வாழ்க
பார்மருவு மிவர்பணிசெய் இந்து பால
      பக்தசன சபையாரா மடியார் வாழ்க
கார்மருவு கருணையுடை யரசும் வாழ்க
      கண்ணுதலா ரன்பரெலாம் வாழ்க மாதோ.
முற்றிற்று.
சிவஞானயோகிகள் சேவடி வாழ்க.
------------------
உ சிவமயம்
வேலுமயிலும் துணை
--------------------

This file was last updated on 8 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)