pm logo

மு. கோ. இராமன் இயற்றிய
தஞ்சை பெருவுடையார் மாலை


tanjcai tiruvuTaiyAr mAlai
by M.K. Raman
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மு. கோ. இராமன் இயற்றிய
தஞ்சை பெருவுடையார் மாலை

Source:
தஞ்சை பெருவுடையார் மாலை.
மகாமகோபாத்தியாய டாக்டர் வே. சாமிநாதையர் அவர்கள்
மாணாக்கருள் ஒருவரும், முன்னைப் பால பாடசாலைப் பரிசோதகருமான
திராவிட கவிமணி வே. முத்துஸாமி ஐயர் எம். ஏ., எல். டி. அவர்களின் மைந்தனும்
மாணாக்கனும், காந்தி அடிகள் பிள்ளைத்தமிழ், அப்பர் சுவாமிகள்
பிள்ளைத்தமிழ் இவற்றின் ஆசிரியருமாகிய மு. கோ. இராமன் இயற்றியது
இதன் பதிப்புரிமை யார்க்கும் உரியது.
வெற்றிவேல் பவர் பிரஸ், தஞ்சாவூர்.
1949.
இலவச வெளியீடு.
---------------

தஞ்சை பெருவுடையார் மாலை

சிறப்புப்பாயிரம்.

1. புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்
பிரமஸ்ரீ கவிராஜபண்டிதர் N. கனகராஜ ஐயர்
      பிறவிகள் பலமுன் பிறந்து நன் றியற்றும்
      பெருந்தவப் பயனெனத் தமிழின்
பெருமையை உணரும் பிறப்பினைப் படைத்துப்
      பெருந்தகைப் புலவர்தங் கவிதை
உறுநலம் கனியும் சுவைநயந் துவக்கும்
      உள்ளமே பொருந்திய ஒருவன்
உயர்வற உயர்ந்த தமிழ்ப்பெரும் புலவர்
      உவந்தமெய்த் தமிழமா ணவகன்
அறமலி அரங்க நாதமா புரத்தில்
      அந்தணர் குலமுத்து ஸாமி
ஐயனாம் புலவன் பெறும்சிறு மதலை
      அருட்கவி கோதண்ட ராமன்
பெறலருந் தனிச்சீர் பிறங்கெழிற் றஞ்சைப்
      பெருவுடை யவர்க்கொரு மாலை
பெருகுமன் பொழுகத் தமிழ்மணங் கமழப்
      பிணைத்தனன் புலவர்போற் றுறவே.
---------------
2. சென்னை, தணிகைமணி, இராவ்பகதூர் உயர் திரு.
V. S. செங்கல்வராய பிள்ளை M. A. :

தஞ்சைவா ழரனார் பெருவுடை யார்தம்
      தாண்மலர் நெகிழ்ந்திடா வண்ணம்
நெஞ்சினி லிருத்திச் செந்தமிழ்ப் பாக்கள்
      நேயமோ டுரைத்தனன் தமிழ்நூல்
செஞ்சவே கற்ற திருவளர் செல்வன்
      சிவநிறை முத்துஸா மிப்பேர்
அஞ்சொலான் அறிஞன் அளித்த கோதண்ட
      ராமநா மக்கவி அரசே.

3. ஆசிரியர் தந்தையார் திராவிடக் கவிமணி பிரமஸ்ரீ
வே. முத்துஸாமி ஐயர் எம். ஏ., எல்.டி. :
மூதண்ட கோள மெல்லாம் மொய்ம்புற அருளிற் சிறக்கும்
தீதண்ட கில்லாத் தஞ்சைத் திருப்பெருவுடையார் பாத
மீதண்டு தமிழ்ப்பா மாலை வேய்ந்தனன் விழைந்தென் மைந்தன்
கோதண்ட ராம நாமக் குண மிகு சீடன் ஆய்ந்தே.
------------------

முன்னுரை

1. இந்நூல் I இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற இராஜேசுவரம் என்னும் தஞ்சைப் பெரிய கோவிலில் …….. பெருவுடையார்மீது 30 துதிப் பாக்கொண்டது. சிவபிரானுக்கு 11-2- 49 இல் (தை வெள்ளி வாரம்) ........... பதிப்பகத்தார் நடத்திய சந்தனக்காப்பு விழாவில்
அரங்கேற்றியது. அப்போது புதுக்கோட்டை மகாராஜா காலேஜ் தமிழ்ப்பேராசியர் கவிராஜபண்டிதர் பிரமஸ்ரீ N. கனகராஜ ஐயர் B.O.L., அவர்கள் தலைமை தாங்கினர். இக்கவிகளை 15-10-48இல் கும்பகோணம் ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் கேட்டருளினார்கள். இச்சிறு நூலை அன்னார் திருவடிகளில் அர்ப்பிக்கின்றேன்.

காலையிளம் பரிதியெனக் கருத்திலக இருள்தீர்த்து
வேலையமு தெனஅருளும் விமலசங் கரகுருவே!
பாலைமகிழ் பெருவுடையார் பால்அன்பாற் பாலன்என்பா
மாலையிதை யேற்றருளி வளர்கருணை வழங்குகவே.

2. இப் பெரியகோவில் அற்புதச் சிற்பநலம் பூண்டது. இதன் ஒவ்வொரு உறுப்பின் அமைப்பும் அழகும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றன. கோவிலின் பரப்பும் கோபுரத்தின் உயர்வும் மூர்த்திகளின் எழிலும் பொலிவும் இணையற்றன. இக்கோயில், 1000 ஆண்டு கண்டதாயினும், இன்று தான் கண்டதோ என, அத்தனை திட்ப நுட்ப ஒட்பமுள்ளது.

3. சைவத் திருமுறையில் இத்தலம் கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாப் பெற்றது. கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் பெரும் புலவரால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரிய உலாவும் பெற்றுளது.

4. இதனை அர்ப்பணம் ஏற்ற அடிகளுக்கும், எளியேனைத் தமிழ்த்துறையில் ஆற்றுப்படுத்த
எந்தையாருக்கும் சிறியேன் பெருவணக்கம் கூறுகின்றேன். பாயிரம் அளித்த பெரியோர்களுக்கும்
நன்றி பகர்கின்றேன். இதனை அச்சேற்றியும் அரங்கேற்றியும் உதவிய தஞ்சை வெற்றிவேற்
பதிப்பகத்தார்க்கும் என் நன்றி உரியதாகும்.

5. பெருவுடையார் திருவருள் பேருலகெங்கும் பெருகுக.

அரங்கநாதபுரம் )       இங்ஙனம்,
11--2-49. )
கோவில் ; 2வைப்பு - சேமநிதி.
-----------------

தஞ்சை பெருவுடையார் மாலை.

காப்பு:
விநாயகர் துதி ; நேரிசை வெண்பா .

தஞ்சைப் பெருவுடையார்க் கன்பினாற்
.......... .... மாலை செப்பவே - ஏராரும்
கணபதி தாள் சென்னிமிசைச் சேர்க்கின்றேன் .
நல்லத் தகமே நயந்து.

அவையடக்கம்; கலி விருத்தம்.

கங்கைவெண் பிறைமுடி சூடுங் கண்ணுதல்
அங்குபுல் எருக்கரா அணிதல் காண்டலாற்
பொங்குசீ ரான்றவர் புகழ்ந்த பாக்களோ(டு)
இங்கெளி யேனிவை இயம்ப லாயினேன்.

குருவணக்கம்; வஞ்சி விருத்தம்.
மைந்தன் இந்நூல் வளமுற, கந்தம் வீசு கவிமணி
எந்தை பாத இணைமலர், சிந்தை யன்பு செய்வெனே.

நூல்;
எழுசீர் விருத்தம்.

திருவுடை யவனே* வேதனே* மற்றைத்
      தேவரே* தேடியு மறியா
உருவுடையவனே ! ஒப்பிலா மணியே !
      உத்தமர் உளத்தினிற் றிகழும்
அருவுடையவனே! அருமறை யந்தத்(து)
      அணிதிகழ் ஆதியே! கரித்தோற்
பெருவுடையவனே! பெருவளத் தஞ்சைப்
      பிறங்கு சீர்ப் பெருவுடை யவனே.       1

காசு சேராசை கருத்துமிக் குறவே
      கங்கை வார் சடையிடை முடிக்கும்
தேசனே! நின்னைச் சிந்தையில் மொழியில்
      செயலினிற் சிந்தியா திருந்தேன்;
நீசனேன் நாயேன் நினைப்பதொன் றில்லேன்;
      நின்னையே நினைத்திடு வண்ணம்
ஈசனே கருணை வழங்குதி தஞ்சை
      எழில்தளிப்[1] பெருவுடை யவனே!       2
[1]எழில் தளி - எழுச்சியுள்ள கோவில்

கதியென நின்னைக் கண்ணுதால்! நாயேன்
      கணமுமென் கருத்தினிற் கருதேன்;
விதியினால் நொந்து வெம்பவத் தழுந்தி
      வீழ்கின்றேன்; விரைவினி லருள்வாய்;
நிதியறு மன்பர்க் கெய்ப்பினில் [2]வைப்பா
      நீடருள் மழைபொழி கங்கை
மதியுடைச் சடையாய்! மணிகிளர் தஞ்சை
      மாநகர்ப் பெருவுடை யவனே!       3
[2]வைப்பு - சேமநிதி.

பெண்ணொரு பாக முடையனே! சோதி!
      பிஞ்ஞகா! பிறப்பிலீ! நின்னை
நண்ணுதற் கான நல்வழி யறியேன்
      நாதனே! நலமுடன் நால்வர்
பண்ணுறப் பாடும் பாப்பல வுடையாய்!
      பாம்பினை யரைக்கசைத் துவக்கும்
அண்ணலே! அடியேற் கருளுக; தஞ்சை
      ஆதியே! பெருவுடை யவனே! "       4

உருளுடைச் சகடம் போன்றதாம் பிறப்பில்
      உருண்டுருண் டுழல்கின்றேன் நாயேன்;
மருளுடை மனத்து மாசுசேர் வாழ்வு
      மதிக்குமிவ் வெளியனைக் கண்டம்
இருளுடை யரனே! ஒளிமய மான
      ஈசனே! தேசனே! உள்ளத்(து)
அருளொடும் ஆள்வாய் அடியனைத்தஞ்சை
      அமர்ந்துளாய்! பெருவுடை யவனே !       5

[*]கருத்தனே வுலக காரண! நின்சீர்
      கனவினு நினைத்திடற் கறியேன்;
நிருத்தனே! மன்றுள்; நிலவுதண் கருணை
      நிமலனே! நேயமோங் கன்பர்
1கருத்தனே! மழுவுங் கனலுங்கை ஏந்தீ!
      காடுசார் வெண்பொடி பூசும்
[2]திருத்தனே! சிறியேற் கருளுக; தஞ்சைத்
      திருநகர்ப் பெருவுடை யவனே!       6
[*]கர்த்தா; [1கருத்திலிருப்பவன்; [2]திருத்தமுடையன்; தீர்த்தனுமாம்.

சங்கர! சம்பு! சத்தியோர் பாக!
      சதாசிவ! சச்சிதா னந்த!
அங்கண! உலகம் எங்கணு முடையாக
      அரிபிர மாதியர் முதலோர்
இங்கடி பணிந்துன் ஏவலில் நிற்ப
      இன்னருள் புரிதல்போல் மயலே
பொங்கெளி யேனைப் புரந்தருள்; தஞ்சைப்
      புராரியே! பெருவுடை யவனே!       7

முத்தநேர் முறுவற் பவளவாய்க் கருங்கண்
      மொய்குழல் மாதர்பால் வீழும்
சித்தமே யுடையேன் செய்வதொன் றறியேன்
      சீலமு ஞானமு மில்லேன்
பித்தனேன் பேயேன் பிழைபுரி நாயேன்
      பேதையேன் பிழைத்திடு வண்ணம்
அத்தனே! பொழிவாய் அருள்மழை; தஞ்சை
      அணிநகர்ப் பெருவுடை யவனே!       8

தனிப்பெருங் கருணை! அருட் பெருஞ்சோதி!
      தாண்டவ மாடிட வல்லாய்!
பணிப்பொருப் பரையன் பாவையை வாம
      பாகத்தி லினிதுறக் கொண்டாய்!
இனிப் பிறவாத இருங்கதி நாயேன்
      எய்திடச் செய்திடின் இதனின்
இனிப்புறும் பேறு வேறெதோ? தஞ்சை
      இலங்கருட் பெருவுடை யவனே!       9

நெஞ்ச மொன்றெண்ண வாய்கரம் பிறிதாம்
      நீசனாம் மாசினேன் றனைநீ
அஞ்சலென் றன்பால் ஆதரித் தருள்வாய்;
      அம்மையில் அப்பனில் மிக்காய்!
எஞ்சலில் [1]திசைகள் எலாம் பெருவுடையாய்!
      இணையிலாக் கோபுர எழிலார்
தஞ்சையம் பதியில் விஞ்சையந் தளியிற்
      சார்திருப் பெருவுடை யவனே!       10
      [1]திசைகளை உடையாய் உடையவன் - திகம்பரன்;

இந்துவாழ் சடையாய்! திரிதலைப் படையாய்!
      ஏற்றுயர் கொடியினை யுடையாய்!
[2]கந்து பேரானைக் களிற்றுரி யுடையாய்!
      கவுரியை யிடத்தினி துடையாய்!
è3]வந்துநீர் தீமண் விண்ணுரு வுடையாய்!
      மைதிகழ் கண்டமே லுடையாய்!
எந்தையே! எளியே னுய்யு மாறருள்வாய்;
      எழிற்றஞ்சைப் பெருவுடை யவனே!       11
[2]கந்து - கட்டுத்தறி; [3]வந்து - காற்று; பஞ்சபூதங்களும் கூறியுளது.

யானெனு மகந்தை என்மன மகல
      இற்றைநா ளுனைநினைக் ககிலேன்;
மானெனும் விழியாள் கூறுளாய்! என்னுள்
      மலிதரு மையலைத் தவிர்த்தே
நானெனும் பொருளும் நீஎனும் பொருளும்
      நவையற ஒன்றென உணர்த்தி
ஊனெனும் உடல்மேற் காதல் தீர்த்தருள்வாய்;
      உயர்தஞ்சைப் பெருவுடை யவனே!       12

ஆதியு நீயே; அருமறை நான்கின்
      அந்தமும் அருத்தமும் நீயே;
சோதியு நீயே; சுடரொளி நீயே;
      தூயவர் சொற்பொருள் நீயே;
நீதியு நீயே; நிலைப்பொருள் நீயே;
      நின்பதம் எனக்குறு கதியே;
மாதிடம் அமரும் பாதியே! தஞ்சை
      மணிமுதற் பெருவுடை யவனே!       13

ஆசுசித் திரமே யாதிநாற் கவியால்
      அருட்டிறம் பாடினேன் நாயேன்;
மாசுமிக் கோங்கும் மாதரார் மண்பொன்
      மையல் தீர்ந் துய்யுமா றருள்வாய்;
[1]தூசெனப் புலித்தோ லரைக்கணி ஐய!
      தூயவ! தொன்மறை யாதி!
தேசுமிக் கோங்கும் இஞ்சிசூழ் தஞ்சைத்
      திருநகர்ப் பெருவுடை யவனே!       14
      [1]தூசு - ஆடை;

உன்னை யிங்கின்றி ஒருவரை நாயேன்
      உரையினில் உளத்தினில் செயலிற்
பன்னிடேன் கருதேன் பணிந்திடேன் என்றும்
      பரமனே! திரிபுராந் தகனே;
கன்னியோர் பாக முடையனே! கங்கை
      கவின்சடை முடித்தமுக் கணனே!
என்னையோர் பொருளா ஆண்டருள்; தஞ்சை
      [2]எந்தையாய்! பெருவுடை யவனே!       15
[2]எந்தையாய் - எந்தையானவனே! ஆய் - தாயுமாம்.

கோவலூர் குடந்தை திருக்குட வாயில்
      கோலக்கா கொடுமுடி கோயில்
நாவலூர் நாகை நனிபள்ளி கானூர்
      நன்னிலம் நாரையூர் கூடல்
[1]மூவலூர் சேறை ஆப்பனூர் காழி
      முதுகுன்ற மெனச்சொலி நாளும்
ஆவலூர் தரயான் போற்றிடப் பணியாய்;
      அணிதஞ்சைப் பெருவுடை யவனே!       16
[1]மூவலூர் - தேவார வைப்புத் தலம். ஏனைய பாடற்றலங்கள்;

ஆலமே யனைய தீவினைக் கடையேன்
      அஞ்செழுத் தன்புட னோதும்
சீலமே யில்லேன்; சிறப்பொன்று மில்லேன்;
      திறப்படு சிந்தையும் இல்லேன்;
ஓலமே இட்டுன் உயர்பதம் பணிந்தேன்;
      உறுகதி காட்டிநீ அருள்வாய்;
[2]பாலமே லொளிருங் கண்ணனே! தஞ்சைப்
      பரமனே! பெருவுடை யவனே!       17
[2]. பாலம் - நெற்றி.

காயுமா புலனாற் கட்டுணுங் கடையேன்
      கடலெனும் பவவினை அறவே
தேயுமா றுனது திருவடி பணிந்தேன்;
      திருத்தனே! கருத்தனே! உறுத்துப்
பாயுமான் அங்கைப் பற்றிய பரனே!
      பையர வரைக்கசைத் தவனே!
தாயுமாய்த் தந்தை யாவுமாய் அருள்வாய்;
      தஞ்சைவாழ் பெருவுடை யவனே!       18

நாடக அரங்காம் நானிலந் தன்னில்
      நான்பவ வினையினாற் பற்பல்
வேடமே புனைந்து மிகமிக இளைத்தேன்;
      வேண்டிலேன் மறுபிறப் பைய!
ஆடக அரங்கத் தாடிடும் அத்த!
      அமையுமீ தெனக்கரத் தமர்த்தி
[3]வீடகம் அருளில் உய்குவேன்; தஞ்சை
      வீறுடைப் பெருவுடை யவனே!       19
[3]வீடகம் - விடுதலை இடம். நாடக மூர்த்தியிடம் நடித்த இளைப்புக் கூறிய நயம் காண்க.

மண்ணிலெப் பிறவி வஞ்சனேன் உறினும்
      வழுத்துநின் மலரடி எளியேன்
எண்ணிலெப் பொழுதும் இருக்குமா றருள்வாய்;
      இருக்குமா மறையறி கில்லா
அண்ணலே! ஆதி அந்தமே இல்லாய்!
      அரியசெந் தமிழினிற் றவழும்
பண்ணனே! சோதீ! பரமனே! தஞ்சைப்
      பதிவளர் பெருவுடை யவனே! 20

அதுஇது உதுவென் றியாவரும் அறியா
      அப்பனே! ஒப்பிலா மணியே!
[1]விதுநதி முடியார் விமலனே! வேத
      [2]வேத்தியா! வீணனேற் கருள்வாய்;
கதுமெனக் கருதும் அன்பர்தம் உளத்துக்
      கதிதரு கருணைவா ரிதியே!
பதுமநற் பாதம் பணிந்தனன் தஞ்சை
      பதியமர் பெருவுடை யவனே!       21
[1]சந்திரன்; 2அறியத்தக்கவ!

பந்தனை தீர்ந்து பவக்கடல் கடந்து
      3பஞ்சவர் பாழ்விளை யாட்டை
நிந்தனை புரிய நினதுவெண் ணீறு
      நிதமுமென் மெய்யினிற் பூசச்
சிந்தனை யெனக்குன் சிந்தனையாகச்
      செப்புவ நின்புக ழாக
வந்தெனக் கருள்வாய்; வளநகர்த் தஞ்சை
      வரதனே! பெருவுடை யவனே!       22
[3]பஞ்சவர்-ஐம்புலன்கள்.

செந்நெலும் கரும்பும் செழிப்புற ஓங்கும்
      சென்னியர் நாடமர் சோதீ!
உன்னலுன் கழலே உவப்பதுன் செயலே
      உவந்தனு தினமுமென் நாவாற்
பன்னலுன் புகழே யாம்படிக் கருள்வாய்;
      பானுதண் மதிசுடர்க் கண்ணா!
நென்னலும் இன்றும் நாளையு மாச்சீர்
      நீள்தஞ்சைப் பெருவுடை யவனே!       23

மின்னிகர் வாழ்வை விரும்பியே நாயேன்
      வேதனை பலபல அடைந்தே
உன்னிரு பாதம் ஓலமென் றடைந்தேன்;
      உவந்தருள் புரிக;ஐங் கரத்தன்
பன்னிரு புயத்தன் இருவரைப் பயந்த
      பருவரைக் கன்னியோர் பாகா!
பொன்னிநன் நாட்டிற் புகழ்மிகு தஞ்சைப்
      புரிவளர் பெருவுடை யவனே!       24

சங்கிருப்புலையிற் காய்ந்தென வெளிய
      சாம்பல்மெய் பூசிடும் சம்பூ!
அங்கியும் மழுவும் அங்கையில் ஏந்தீ!
      அடியனேன் பணிந்தனன் அருள்வாய்;
எங்கிருக் கின்றார் அடியவர் என்னும்
      எண்ணமே கொண்டுநீ அவர்தம்
பங்கிருக் கின்றாய்; பரமனே! தஞ்சைப்
      பதிதிகழ் பெருவுடை யவனே!       25

தஞ்சமுன் சரணம்; ஆண்டருள் தருவாய்;
      தாணுவே! தமிழ்மொழிப் பண்பை
எஞ்சலில் சீர்த்திக் குறுமுனிக் கருளும்
      எம்பிரான்! தமிழ்நலம் அறியா
மஞ்சனேன் அந்த மொழிநய முணரும்
      வணம்அருள்; வானுயர் மாடத்
தஞ்சையில் இராஜ ராஜஈச் சரத்துத்
      தழைத்தொளிர் பெருவுடை யவனே!       26

மரணஜென் மங்கள் மாற்றுபே ரின்ப
      வழியெனக் கருளவே அத்தா!
சரணம்உன் சரணம் எனஉனை அடைந்தேன்;
      சான்றபே ரடியவர்க் குதவும்
கருணையந் தருவே! கண்ணுத லரசே!
      கணுவிலாக் காமர்செங் கரும்பே!
அருணநன் னிறம்சேர் அண்ணலே தஞ்சை
      அணிநகர்ப் பெருவுடை யவனே!       27

வஞ்சியோர் பாலை மகிழ்பவ! அவுண
      மாமுதல் முருக்குசேய்க் குருந்தை
அஞ்சுவெவ் வினைநீக்கத்தியை ஈந்த
      அரச!ஆல் தேக்கடிக் குரவ!
பிஞ்சுவெண் பிறைச்செஞ் சடாடவிப் பெரும!
      பிழைக்குமா றுன்பதம் பணிந்தேன்;
விஞ்சையர் சூழும் இஞ்சிசூழ் தஞ்சை
      விழைந்தருள் பெருவுடை யவனே!       28

போற்றிசங் கரனே போற்றியெம் அரனே!
      போற்றிவெண் பிறையணி பரனே!
போற்றிமால் வேதன் போந்தறி வொண்ணாப்
      புகலடி முடியுடை யவனே!
போற்றிவெவ் அவுணர் முப்புரம் எரித்த
      புன்னகை; போற்றி எஞ்ஞான்றும்
போற்றிநின் அலகில் திருவருள்; தஞ்சைப்
      புனிதனே! பெருவு டை யவனே!       29

போற்றிமுக் கணனே! போற்றிஅங் கணனே!
      போற்றிஏ ழுலகுமெண் குணனே!
போற்றிவேற் கரனே! புரமெரி அரனே!
      போற்றிவெள் விடையிவர் பரனே!
போற்றிநான் மறையும் புகழொணாச் சிவனே!
      போற்றிஆல் அடியுறை தவனே!
போற்றிநின் பதமாம் புதுமலர்; தஞ்சைப்
      புரிவரு பெருவுடை யவனே!       30
      ------------------------

கவி 27-ல் தரு அரசு கரும்பு எனவும், 28-ல் வஞ்சி பாலை மகிழ் மா முருக்கு குருந்து அத்தி ஈந்து அரசு ஆல்
தேக்கு குரவம் என 12 மரப்பெயரும் அடவி எனக் காடும் தொனித்தல் காண்க.
--------------
This file was last updated on 15 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)