pm logo

வெள்ளாங்கோயில் ப. செங்கோட முதலியார் எழுதிய
கூவலூர் மத்தியபுரி மரகதவல்லி மாலை
& திருநடன வண்ணம்


kUvalUr marakatavalli mAlai & tirunaTana vaNNam
by veLLAngkOyil cengkOTa mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வெள்ளாங்கோயில் ப. செங்கோட முதலியார் எழுதிய
மத்தியபுரி மரகதவல்லி மாலை.

Source:
திருச்சிற்றம்பலம்.
கூவலூர் மத்தியபுரி மரகதவல்லி மாலை.
இஃது மே. முத்துக்கவுண்டர் அபிப்பிராயப்படிக்கு,
செங்குந்தரில் பரஞ்சோதியார் பரம்பசை, வெள்ளாங்கோயில் பெரிய தனம்,
ப. செங்கோட முதலியாரால் இயற்றப்பட்டு,
சேலம், எஸ். எம். நாராயணசாமிபிள்ளை அவர்களால்,
தமது பட்டக்கார் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்றது.
1921.       அணா 4.
-------------
மத்தியபுரி மரகதவல்லி மாலை.


ஓம்
மரகதவல்லி பாதமே துணை.
(கட்டளைக் கலித்துறை.)

திருவே தழைத்த மனமே தெளிந்த தேனின்சுவை
யுருவே யடிய ருளமே வினைக ளொழிக்கவந்த
குருவே யகர முதலே மரகத மாலைசெப்ப
வரவே புழைக்கை நால்வா யானைக்கு வந்தனமே.       1

சுளித்தோடு வாணிநதி புனற்றேங் கிச்செந் நெலிகார்
தளிர்த்தாடக் குலைசாய்த்த கழனியுஞ் சோலையுந் தண்டலைநீர்
களித்தோடி மீனினம் பாளைமதுப் பருகிப்பின் ... யின்வந்து
களித்தாடு மல்லல்வளம் மத்யபுரி மரகதமென் கருத்தினிலே.       2

மாயப்பிறவி மையலிற் சிக்கி மயக்கு மெனைத்
தாயற்ற பிள்ளை யாக்கினை யோசக மேழுமுண்ட
மாயப் பெருமான் றங்கையே மரகத மாவல்லியே
காயக் கடத்தை நம்பினே னென்செய்வேன் கண்ணுதலே.       3

வணங்குங் கயற்கண் வதனமுஞ் சிவந்த வாயி தழும்
கணங்குழைச் செவியுஞ் சிந்துரப் பொட்டழகுங் கரகமல
மிணங்குபொற் பட்டாடை யிடையுந்தி மார்பழகி யிருகழலின்
மணிகளின் கலினோசை யிசைபேச வருகு மரகதவல்லியே.       4

சுடுகாட்டி லாடும் பிஞ்ஞகன் பாகத் துடியிடையா
ளடிகாண மறைபாடு மடியார்க ளுடன்கூடி யலரிமல்லி
செடிகோடு விரித்த மலர்தூவி மரகதத்தைச் சிந்தைநண்ண
சடங்காட்டி வருவா ளிர்தய மத்யபுரி நாயகியே.       5

பச்சைநிறமேனி மரகத வல்லி பதாம் புயத்தி
லிச்சைவைத் தேத்தித் தொழாத பாதகரை யமபடர்கள்
நச்சுக்கண் பார்வை யுறத்த வசனம்பேசி நலியுமன
மச்சப்படாமல் மரகதவல்லி பெயர றைகுதுமே.       6

மாடோட்டி யண்ணன் பேயோட்டி புருஷன் மைந்தர்களோ
கோடாட்டி யானைமுக னாருக் கிளைய குமரன்மனத்
தோடாடி வள்ளி தெய்வானை மாமி திருப்பதத்தை
யேடான மலர்தூவி மரகதத்தாட் டுணையை யிறைஞ்சுதுமே.       7

கருவாயிற் பட்டதுமி நாதஞ் சிரசு கைகளென்றவ்
வுருவாகி வந்துமிக மீதிருந் துழைத்த மன
முருகாத நெஞ்சே கடைவழிக் கேதுதுணை யுற்றுடைந்து
பெருகாதல் கொண்டு மரகத வல்லி யருள்பேணுதுமே.       8

திங்களுங் கங்கையுங் கொன்றையுஞ் சூடுஞ் சிற்பரத்தை
பங்குகொண் டாடும் பதாம்புயத்தி பச்சை மரகதத்தி
கிங்கிணி யாடக் குழலாட வடியவர் சிந்தைதொறும்
தங்கினி தாடும் மரகத வல்லிபதந் தஞ்சமென்னே.       9

கண்டிற் சுவைத்த மறைமொழி கேழாத கசடர்களை
நெண்டிப் புழுக்கள் துளைக்கு மாபாவி நிரையமதில்
கொண்டுபோய் போடென் றெமபடாள் சொன்ன கோபமதை
கண்டபோ துந்தன் தொண்டரைக்கர மரகத கலாவல்லியே.       10

மூலத் துதித்த சைவக்கொழுந்தே தந்தை வேள்விசெய்ய
ஆலத்தை யுண்ட சிவபெருமானை மதியா ததினால்
மாலொத்த மேனி வேர்வையில் வருவீர பாகுவிற்கு.
கோலொத்த வேள்விக் குலைத்து வாவென்று விடைகொடுத்தவளே.       11

நாகஞ்சுமந்த பார்மிசை தோன்றியும் நலியுமிந்தத்
தேகஞ்சுமந்து திரிகுவனோ திருத் தொண்டனிடம்
பாகுஞ் சுவைத்தமொழி பேசி வெங்காட்டாள் பிள்ளையுணப்
போகுஞ் சிவபிரான் மனையாட்டி மரகதப் பூங்கொடியே.       12

துன்பக் கடலிற் சிக்குண்டு கரைகாணா தேங்குமெனை
அன்பர்க் குத்தொண்டன் சுடுகாட்டிலாடி யரவணிந்தோன்
நண்பர்க் களித்த சாயூச்ச வீடுநமக் களிக்க
யின்பந் தழைத் தானுடன் வருவாள் மரகதத்தீஸ்பரியே.       13

மாழை நிறத்தி மதிமுகத்தி வையகத்தி மங்களத்தி
தாழை நிறத்தி சமர்த்தி தருமத்தி தபத்திமனக்
கோழை துறத்தி குண்டத்தி கோபத்தி கொம்பணத்தி
ஏழை மனத்தி லெஞ்ஞான்று மரகதத்தி லிருப்பவளே.       14

வேதாந்த வீட்டில் நடமாடும் மரகதமெய்ப் பொருட்குப்
பாதார விந்த மலர்தூவி முப்போது பணிந்தவர்கள்
நாதாந்தங் கடந்தது ரியாதீதப் பொருளை நண்ணுதலாற்
போதாந்த சித்திதந்தாளும் மரகதப் பொற்கிளியே.       15

கானமயி லேறு மீராறு கையுடைய கந்தனுக்கும்
யானைமுக முடனே மூஷிகத்தி லேறினவன் நல்லன்னையே
ஏனமுக முடையமைத்துனனு நகைக்க யீரைங்கரத்தோன்
தானுமிரக்க லாமோ மரகதத் தற்பரியே.       16

தேகம் பெருக்கப் பிரவூண் விரும்பிச் சிந்தை யற்றுப்
போகும் பொழுதொன்று தவாவென்ற மறை பொய்த்திடுமோ
பாகுஞ் சுவைத்த வேதாந்த மொழிபகரும் பரமனிடப்
பாகத் துதித்த மத்யபுரி மரகதத்தைப் பணிகுவனே.       17

அலைவாய்ந் துரும்பினுடனாட்டும் பாசத் தழுந்துவதோ
கலைதேய்ந்த வாரக்கங்குலின் நின்று கலங்குவதே
சிலைவாங்கும் வேடன் கலைமாவிறைச்சி சிரித்து வுண்டு
மலை போன்றவில்லைக் கரமேந்து மீசன் மரகதமே.       18

முனைநாடி வென்ற யோகீசர்பேரின்ப முறை யைவிட்ட
வினையா லுதித்த பாழுஞ்சரீர மிதுமெய் யாகுமோ
மனையாட்டி மக்கள் துணையாவரோ வுள்ள மத்தியபுரி
தனைநாடி வந்து மரகதத் தாழ்க்குமுடி தாழ்த்தினனே.       19

சிற்றின்பக் கடலிற் சிக்குண்டு கரைகாணா தேங்கினவன்
மற்றின்ப நாட வழியரியாது மயங்கு வதோ
கற்றுத் தெளிந்த நித்தியானந்தக் கடல் படிந்து
பெற்றத் திவர்ந்த பெருமாட்டி மரகதப் பெண்ணரசே.       20

அஞ்ஞானக் காட்டில் விளையாடிமதி கெட்டலைந்த நெஞ்சே
விஞ்ஞான சொரூபந் தனைநாடி யோக வினைபுரிந்தால்
மெஞ்ஞான வீட்டில் நடமாடு மரகதமெல் லியலாள்
எஞ்ஞான்று மின்பக் கடலாடுமுத்தி வீடேற்றுவளே.       21

சேல்விழி மாதர் சிற்றின்ப மயக்கச் சிக்கறுத்து
நூல்வழி யேற்றி மேல்வழி நோக்கி நுண்ணறிவால்
கால்வழி மாறிப் போம்வழி யோடக் கண்ணிடையில்
மால்நிற மேனி மரகத வல்லி வரந்தருமே.       22

வெட்டப் படுமர மேலேறிய பக்ஷிமீண் டதுபோல்
கட்டுண்ட வாசை கனன்றோடிக் காக்ஷிக் கன்னியிலே
பட்டுண்ட ஞானப் பரம்பொருட் டேனைப் பருகுதற்குப்
பொட்டுண்ட நுதலாள் மரகதவல்லி பதம் போற்றினனே.       23

மூலத் துதித்த வகங்கார மாய்கையில் முளைத்தமனக்
கோலத் துணர்ந்த சீவனாம் பக்திக் கொம்புதலை
மேலிற் பழுத்த ஞானப்பழத்தை வேண்டி நிற்கப்
பாலிற் சுவைத்த மொழிபேசு மரகதப் பைந்தொடியே.       24

ஓங்கார வடிவ மரகதவல்லி தொண்டர்க் குறைத்தமறை
பாங்கான சாதனம் பண்ணுவீ ரென்றுமொழி பகருதையோ
சாங்காலம் வந்தபோ தேங்காதே திருநிழலைத் தஞ்சமென்றா
லாங்கார மறலி தீங்கான பாசத் தறுப்பவளே.       25

என்பிலா வடலை யிரவிகாய்ந் தெரிக்குமே லுயிர்மே
லன்பிலா தவரை யறங்காய்ந்து கொல்லு மவனிமிசை
நண்பன் மாதுலரைப் பண்பிலா தேசி நகைத்தவரைத்
துன்புறச் செய்யு மூவிலைச் சூலத்திற் றுரைப்பவளே.       26

பூதங் களற்றுப் பொறியற்று வஞ்சப் புலனுமற்றுப்
பேதங் குலைந்த காலத்துன் நாமத்தை போடாட்டேன்
நாதங் கடந்த சைதன்ய வாழ்வு நமக்களிக்க
வேதம் முடிவில் நடமாடும் மரகதத்தை வேண்டினனே.       27

முத்திக்கு வித்தாக முதிர்ந்த சுவைஞான முருகனிட
பத்திசகி ரங்கிப் பராசத்தி வேலொன்று பரிசளிக்க
வெத்திக்கு மாண்ட சூர்மாளச் சங்கார வேலறிந்தோன்
தித்திக்கும் தாயே மத்தியபுரி மரகதத் தேமொழியே.       28

துப்புடைய மனமதனிற் பிறர்குற்றம் பலபேசித் தூஷித்தோரும்
வைப்புடைய பிறர்பொருளை வழிமறித்து வௌவியுயிர்வதை செய்தோரும்
கற்புடைய பாவையரைக் கலந்தோரும் மொன்கண் மனக்காட்டினோருங்
கைப்புடைய பிறவியினி லழுந்தி மரகதத்தினருட் கண்ணிலரே.       29

பூப்போல மணமுடைய புண்ணியமே மிகுந்துபவப் பொறையைப்போக்கிக்
காப்பாளக் கங்கை குலச்சாத்தந்தை கோத்திரத்தார் கட்டுங்கோயில்
நாப்பாடும் பாவலரு முனிவர்களும் மத்தியபுரி நடந்துவந்து
தூப்பான தவமியற்று மரகதத்தி னிருகழற்குத் தோத்திரமே.       30

கூவலூர் மத்தியபுரிக் கோயில்வாழ் பெருமாட்டி கொன்றைமாலை
பூவலோர் வர்ணித்த பொருட் போலப்படை ஞன்மகன் புனைந்தமாலை
நாவலோர் பிழைபொறுக்கப் பேரின்ப வீடளிக்க நளினமுள்ள
நாவினால் வேதமொழி மரகதத்தின் திருப்பாதம் நண்ணுவமே.       31

முற்றிற்று.
---------------------

திருநடன வண்ணம்.


தான தந்தன தத்தத்தனதானன தாத்தானதத்தன
தத்தத்தனதானந் தானதத்ததனா
தானத்தனதானத்தன தையத்தனதானந்
தத்தத்தனதத்தத்தன தையத்தனதானந்
தானதத்தனதத்தத்தன தானந் தானதானங்
      தனனதானனா.

வேதவித்தக சத்தித் திருபாகனார் பூலோகமீதினில்
விளங்குஞ்சோதிப் பாதந் தஞ்சமே
வேணும்படியே வந்தவர் கஞ்சனும் மாலும்
விண்டும் புவி ரண் டுங்கடை கண்டவர்தேடும்
தாபதர் முன்பு சத்தியுடனாடுந் தராதாருயிர்
      வடிவநாதனே

தாண்டவம்புரி சங்கரநாமனை நாடோருந்துதித்த
தண்டமிழ் பேசுந் தாமம் புனைந்தவா
சாதங்கறி தாவென்று சிறுத்தொண்டன்பிள்ளை
தன்னைக்கறி சமைத்திட அறுப்புண்டபிள்ளை
கூவியழைக்க வந்த சீராளன் கோலங்காண
      நின்ற வீஸ்வரா

லோககண்டக திரிபுரசூர்பட ரூபத்திரிமூர்த்தி
யுத்தத்துக்கேகின பூமிரதமம்மா
சூரியனுஞ் சோமனுஞ் சக்கரமதாக
துங்கத் திருமறைப்பரி பூட்டியதிலோட
வேதன் நடத்த மலையை வில்லாக வாழிக்கூடு
      விஷ்ணுபாணமே

காமனையெரித்த முக்கண்ணுடையவா பிச்சாடன சுந்தரா
கங்கையைவைத்த சந்திர சேகரமே
காலன் வர ஓலம் மிடு மார்க்கண்டனைக்காத்து
கடலின்விடப முதுண்டதி தேவரைக் காத்து
தூலப்பிரணவ மந்திரம் பேசித் தூக்கியாடும்
      நந்திவாகனா

நீதமுற்றறு பத்து மூவருந் தோத்திரங்கள் செய்து
நித்தியப்பரமசொ ரூபம்பெற்றனரே
தூலத்தொடுத்தாலத்தினிற் சுற்றித்திரி வேனை
சொந்தக்கவி தந்துன்னருள் ஞானந்தருவாயே
வேலவர் தகப்ப மெய்ப்பொருள்முர்த்தி வீணை மீட்டி
      விறகுவிற்றவா

யாதிகற்பக முடியப்பிர்மனார் கபாலமீச
னங்கையிலானந்தத் தாண்டவமாடுமே
ஆதிக்கொரு நீதிப்பொருளுமையவள் நேசன்
னஞ்சுமுடிபத்து சரமான செவ்வாயன்
யானை யையுரித்துத் தோலையுடுத்த நாகரீக
      ரூபரூபமே

மூலத்துதித்த குண்டலிசத்தியா லேயிர்தயத்தில்
முட்டும் பரமானுச் சீவன் தானன்னே
தேகக்கடமோடித்திரி பூதங்களைந்து
சித்தத்தொடு சுற்றும்மறி வானதுவொன்று
கூடிநின்றொன்று பட்டதான்மாவே கோலஞான
      மான சமாதியே

நீதிநன்மங்கலங் கூவலூரிலே மார்கழியாதிரை
நிர்த்தனஞ் செய்த மத்தியபுரியீசனே
நேசப்பிரகாசற்குரு நித்தந்தொழுதேனே
நெஞ்சக்கன கல்லுக்கலி யல்லல்லறுத்தோனே
பாதிப்பெண்ணிடப் பக்கத்தில் வேதம் பாடியாடு
      சுகாசனமூர்த்தியே

நாதர்வாழுங் கைலைமீதிலே குபேரன்வாசனம்
நடத்தித் தசகண்டன் மலையைத் தூக்கினான்
நாரியொருபாகனிடக் கால்விரலூன்ற
நழுவியசை யிருபது சுரவணம் பாடக்
கேட்டவரத்தை யீசருதவக் கேடிலாத
      ராவணனாரென்றார்

பாதிமதியுங் கங்கையைச் சுமந்தவாமா விமயராஜன்
பயின்ற பெண்ணை மணந்துக்கொண்டவர்
பாசுபதபாணமென ஊசிமுனைமீதில்
பற்குணனுநின்று தபங் கொண்டுன்னருள் கேட்ட
பாதிநாட்டுப் பகையைமீட்டப் பாண்டவர்க்கஸ்திர
      மளித்தபரமனே

வாணிதென்கரை மத்தியபுரிலிங்கமே திருவாதிரை நாளில்
வருகும்பவனி வண்ணம்பாரம்மா
வாசிப்பரியேறுந் திருத்தொண்டர் கொண்டாடும்
வஞ்சிமணக் கங்கணக்கைச் சுந்தரம் பாடும்
மாணிக்கம் வருகச் சம்மந்தர் கூட வந்தவப்ப
      ரான நால்வரே

தேனின்சுவைத் தேவாரம் பூண்டவா கூத்தாடுஞ்சபையில்
திருக்கழல் தூக்கி மாறியாடினனே
சேணாடவர் காணாதது வானதிருப்பாதந்
சித்தர்க்கருள் வித்தித்தது சின்மய போதந்
தேடிநின்ற முப்பத்து முக்கோடி தேவர்தேவ
      தேவநாமமே

பேதகம் பெற்ற பருவப்பெண்களா வோர்வார்த்தை கேளும்
பிச்சைக்குவந்த ததட்டிச் சொல்லாததே
தேவன்னடிதேடித் தரிசித்த கற்பாகுஞ்
சிந்தைக்குள் நெஞ்சந்தொடு வஞ்சகம் போக்குங்
காரியசித்தி கற்பு முண்டாச்சு காலனேவுங்
      கயிறுமிற்றதே

முந்துகின்ற சினத்திஞ்ஞாலத்தே தேசோதிமானிட
ஜென்மமெத்தனை லட்சங்கோடியோ
தேனுந்தினைமாவுந் தினும் முருகனைப் பெற்றோன்
சித்திமணவாளக் கணபதியையும் பெற்றோன்
தூது நடந்த சுந்தார்க்காகச் சோமசுந்தர
      ராஜசிங்கமே

சாதிவகுத்த வருணத்தார்களே யாரூர்த்ர தரிசனத்
தரசுந் தருவை யரனுஞ்சுற்றுமே
சாக்ஷிக்குருவாகப் பெருநந்தியிலேறிச்
சந்தக்கவிசொந்தப் பிரபந்தங்களைக் கோரி
யாண்டிவடிவ வம்மையுங்கூட வாடவாடல்
      முப்பத்திரண்டுமே

பாதிரியன்னை சண்பகமல்லிநான் பூமத்தியநாதன்
பாதத்தை நினந்து துதித்த தபசியே
பாசத்தொடுவேசந்தரித்துத் திரியாதே
பஞ்ச முகன்பத்துக்கையனைப் பணிவாயே
மாமத்தியபுரி யரனார்பாதம் மாறியாடின
      வண்ணம் போற்றியே.

எட்டுத் திசைவா ழசர சராசரம்
நட்ட மாடுசிவன் செயலானதே
திட்ட மான திருவாதிரைக்காக்ஷி
பட்டக்கார் பிரசுப் பதிப் பானதே.

வாழி நான்மறை வானவ ரானவர்
வாழி வாசவர் கேசவர் மாதவர்
வாழி யிக்காக்ஷி படிப்பவர் கேட்பவர்
வாழி யுமையா னடியவர் வாழியே.
-------------

பாண்டியனீன்ற மீனாக்ஷி என்ற மெட்டு.

இராகம் தோடி.) (தாளம் ஆதி.
பல்லவி
கூவலூரம்மா-மரகத வல்வியென் னம்மா
நன் மங்கலங் கூவலூரம்மா

அநுபல்லவி
நாவலோர் துதித்த மரகதமே வுந்தனை நம்பினேன் நானே
செங்கோடன் நவிலுங் கவிதானே மத்தியபுரி (கூவ)
சரணங்கள்.
சங்கரன் தேவியே நடன சங்காரி
தன்னருளைக் கோரி சரணமென
சந்தத முனது
கந்த பத மலரை
யந்தி பகலு நினை
யுந்திரு வடியவர்
தங்களுக்குபகாரி ஒய்யாரி
தற்பரமன்பாரி நலமுள்ள (கூவ)

காலனார் பாசமெடுப்பானே யெந்தனைக்
கட்ட வருவானே யப்போது
காசு மனைவிமக
னாசை பெரியவிசு
வாச மனிதவென
வேச வுயிருடலைக்
கலங்கிடச் செய்திடாமலே யுன்பாதக்
கருணை புரிவாயே கனமுள்ள (கூவ)

மானிடச் சென்மமிது தானே உலகில்
வாழும் பிணமாமே சுணகநரி
வயிறு நிறைய நிண
முறிய வருகு முன
மறிய தவமு நிலை
புரிய வருளு மெனக்
கார்துணை செப்பு மரகதமே சாஷ்டாங்க
வணக்கஞ் செய்தேனே வடியர் வாழ் (கூவ)
----------------

இராகம் - சிந்துபைரவி.) (தாளம் - ஆதி
பல்லவி.
காக்ஷியாந் திருவாதிரைக் காக்ஷியாங் கூவலூரில்
கண்ட வானந்தங் கொண்டாடுந்திருக் (காக்ஷி)
அநுபல்லவி.
காக்ஷி திருவாதிரைக்காக்ஷி கண்டபிராணனுக்கத்தாக்ஷி
ஆட்சநிலை யறியுங்காக்ஷி சுருதி முடிவில்
சுந்தரப்பாத நின்றகண் ஞானக் (காக்ஷி)

நாலாறு தத்துவக்காக்ஷி நாதருமையு நடனக்காக்ஷி
கால்தூக்கியாடின காக்ஷி கனகசபையில்
காரணப்பொருளாய் நின்றவைதீகக் (காக்ஷி)

ஆதியந்த மானகாக்ஷி ஆறுயியாறு சமயக்காக்ஷி
சோதிசுத்த சைவக்காக்ஷி துரியநிலையில்
தொந்தி மித்தோமென வந்தகண்காக்ஷி (காக்ஷி)

முற்றுப்பெற்றது.
-------------------

This file was last updated on 15 Dec. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)