pm logo

க. நா. அண்ணாதுரை /அறிஞர் அண்ணாவின்
சிறுகதைகள் தொகுப்பு 2


short stories collection of
C.N. aNNAturai - 2
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அறிஞர் அண்ணாவின்
சிறுகதைகள் தொகுப்பு 2

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் - முந்தைய வெளியீடுகள்
1. குமாஸ்தாவின் பெண் ( PM629 )
2. குமரிக்கோட்டம் (PM690 )
3. கபோதிபுரத்துக் காதல் (PM758)
4. அப்போதே சொன்னேன் (PM967_01)
5. இரும்பு முள்வேலி (PM967_01)
6. தழும்புகள் (PM967_01)
7. சந்திரோதயம் (PM967_01)
8. பிடிசாம்பல் (PM967_01)
9. கோமளத்தின் கோபம் (PM967_01)
--------------------------------

உள்ளடக்கம்
10. வண்டிக்காரன் மகன் (காஞ்சி - 1966)
11. இதயம் இரும்பானால் (திராவிட நாடு - 1960)
12. எட்டு நாட்கள் (திராவிட நாடு - 1955)
13. சிங்களச் சீமாட்டி (குடியரசு 1939)
14. அரசாண்ட ஆண்டி (திராவிடநாடு - 1955)
---------------

10. வண்டிக்காரன் மகன் (காஞ்சி - 1966)

ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம்.

அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள்.

விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க அருணகிரி வருவான் வருவான் என்று எத்தனை நாட்களாகக் காத்துக் கிடப்பது. வரவேயில்லை.

அத்தே! என்று குளிர்ச்சியாகக் கூப்பிடுவான் சொக்கலிங்கம் என்று காத்திருந்தாள்; நடக்கவில்லை. கோபம் தலைக்கேறிவிட்டிருந்தது.

அந்த இருவரையும் ஒருபிடி பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். ஆனால் காவேரி? கண்ணீர் வடிக்கிறாள்! கிணறு குட்டை அகப்படாமலா போகும் என்கிறாள். நீ வீண் சண்டை போட்டுப் போட்டு நல்லவர்களையும் விரோதிகளாக்கி விடுகிறாய் என்று குற்றம் சாட்டியே பேசுகிறாள்.

பக்குவமாகப் பேசிக் காரியத்தை முடிப்பதற்குத் துப்பு இல்லாமல், கடும் கோபத்தைக் கக்கிக் கிடப்பது எதற்கு என்று கேட்கிறாள். நான் கன்னியாகவே காலந் தள்ளுவேன் என்கிறாள்.

“நான் பெத்த பெண்ணே என்னைக் கெட்டவள், பக்குவம் தெரியாதவள் என்று பேசுவதையும் கேட்டுக் கொள்ளும் காலம் வந்துவிட்டதே” என்று நினைத்து அன்னம்மாள் சோகமாக இருந்தாள்.
பக்குவமாகத்தான் பேசிப் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்த அன்னம், சொக்கலிங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு புளியங்குட்டை அருகே நின்று கொண்டிருந்தாள்.

சொக்கலிங்கம் வழக்கமாக அந்த வழியாக டேவிட் வீட்டுக்குச் சைக்கிளில் போவது அன்னம்மாளுக்குத் தெரியும்.

சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது. சோகத்தை மறைத்துக் கொண்டு புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். அன்னம்மாளைக் கண்டதும் சொக்கலிங்கம் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். பக்குவமாகப் பேசத் தொடங்கினாள்.

“தொரே உம்பேர்லே இம்மா ஆசையா இருக்கறாரே, அவரோட சொல்லி ஏதாச்சும் ஒரு நல்ல வேளையைத் தேடிக்கக் கூடாதாடா தம்பி இன்னும் எவ்வளவுன்னுதான் படிப்பே...”

“என்னோட மாமனார்கூட அதுபோலத்தான் சொல்றாரு... ஆனா எனக்குப் படிக்கறதுக்குக் குந்தகமில்லாத வேலையா கிடைக்கணும்னு ஆசை...”

“ஏனாம்! நீயும் இந்தத் தொரை மாதிரி எழுதிக்கிட்டே காலத்தை ஓட்டிடப் போறயா... இவருக்குப் பெண்ஜாதி இல்லே...புள்ளைகுட்டி இல்லே... ஒண்டிக்கட்டை... நீ அப்படி இருக்க முடியுமா... இன்னும் எவ்வளவு காலம் காத்துக்கிட்டு இருப்பா உனக்காக...”

“எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கறாளா... அது எந்தப் பைத்தியக்காரப் புள்ளே..”

“ஏண்டா தம்பி! என் கிட்டவே ஒண்ணும் தெரியாததுபோல நடிக்கறயா... என்னா சொக்குப்பெடி போட்டயோ தெரியல்லே, என் மவளோட கண்ணு உன்னைத்தானே சுத்திச் சுத்தி வளையம் போடுது...காலா காலத்திலே முடியணுமே...”

“இது என்ன விபரீதம். நான் ஒருவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமத்தான் பழகறேன்... காவேரியும் அது போலத்தான்...”

“அடப்பாவி! என்னா இப்படி ஓர் இடியைத் தூக்கிப் போடறே... அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கற பார்வையும் பேசற பேச்சும் சிரிக்கிற சிரிப்பும் ஊரே தெரிஞ்சிக்கிட்டிருக்குது தொரெக்கே கூடத் தெரியும்... அப்படித்தான் நான் எண்ணிக்கிட்டு இருக்கறேன்...”

“ரொம்ப தப்பு... நான் அந்த விதமான பேச்சே பேசினது கிடையாது... சத்தியமா...”

“பேசணுமா... ஏண்டா! ஒரு வயசுப் பொண்ணை எதிரே உட்கார வைச்சிகிட்டு இளிச்சிக்கிட்டு இருக்கறயே, என்னமோ சித்திரம் தீட்டறேன்னு... அது எதுக்காம்...”

“காவேரியோட அழகு அக்கா! என்னைப் படம் போடச் சொல்லுது...”

“சொல்லுண்டா சொல்லும்.. உன் கண் அழகு யாருக்கு உண்டு... உன் கன்னம் மாம்பழம், உடம்பு தங்கம்னு இன்னும் என்னென்ன இழவோ பேசி அந்தப் பெண்ணோட மனசை மயக்கிவிட்டு, இப்ப இப்படிச் சொல்றயே... நியாயமா... சொக்கலிங்கம்! நான் இப்பத்தான் கேட்கறேன். வெட்கத்தை விட்டே கேட்கறேன். என் மகளைக் கட்டிக்கொள்ள கசக்குதா.. ஆப்பரிக்காரி பொண்ணுன்னு சொல்லுவாங்களேன்னு தோணுதா நாலு எழுத்துப் படிச்சதாலலேயே என்னைப் பாத்தா கேவலமாத் தோணுதா...”

“அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நான் மட்டும் என்ன பெரிய மிராசுதாரன் பிள்ளையா... வண்டிக்காரன் மகன்தான்... நான் காவேரியைக் கட்டிக்கொள்ள முடியாதுன்னு சொல்றதுக்குக் காரணம், நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லே... எனக்குக் கல்யாணம் கார்த்தியெல்லாம் இப்போது கிடையாது. எங்க அப்பா படுகிற கஷ்டத்தைப்போக்கியாகணும், முதலிலே. காலம் முழுவதுமா வண்டிக்காரராக இருப்பது... நான் ஒரு பிள்ளை பொறந்துதான் என்ன பயன்.”

“எனக்கு இந்தச் சமாதானமெல்லாம் தேவையில்லே. நானும் காவேரியும் கோலார் பட்டணம் போறோம், அவளோட பெரியம்மா வீட்டுக்கு. மூணு மாதத்திலே வந்து சேருவோம். அதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தாகணும்; இல்லையானா நான் தொரே கிட்டவே சொல்லிடுவேன்...”
அப்போது ஓர் ஆள் ஓடிவந்து “சொக்கலிங்கம்! ஓடியா, ஓடியா... உன் மாமனுக்கு மாரடிச்சுட்டுது... கீழே விழுந்துட்டாரு...” என்று கூவினான்.

ஓடோடிச் சென்ற சொக்கலிங்கம், தன் மாமன் மார்வலியால் துடிப்பதையும், பக்கத்திலிருந்து கொண்டு டேவிட் துரை ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பதறிப் போனான்.

டேவிட் துரை, கீழ் நாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பேரறிவாளர்; தங்கமான மனமுடையவர்; அவரும் அருணகிரியைப் போலவே மணமாகாதவர்.

அருணகிரி அவரிடம் வேலைக்கு அமர்ந்து முப்பது ஆண்டுகளாகிவிட்டன. ஒரு நாளாகிலும் முகம் சுளித்துக் கொண்டதில்லை. ஒரு பேதமும் காட்டாமல், தமது பங்களாவின் பின்புற விடுதியிலேயே அருணகிரியை இருந்துவரச் செய்தார்.

டேவிட் துரையுடைய வீட்டு விவகாரம் முழுவதையும் கவனித்துக்கொண்டு வந்தான் அருணகிரி. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வோர் ஆள் இருந்தனர் – தோட்ட வேலைக்கு – சமையலுக்கு – கணக்கு எழுத – ஆனால் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொள்ள அருணகிரிதான். எதையும் அருணகிரியிடம் சொல்லித்தான் செய்து கொள்ளவேண்டும்-; அவ்வளவு நாணயமாக நடந்து வந்தான்.

அருணகிரி துடிப்பது கண்டு, கதறிய சொக்கலிங்கத்தை டேவிட் சமாதானப்படுத்திக்கொண்டே, தன் கண்களையும் துடைத்துக்கொண்டார்.

இனி இவனை அவனுடைய அப்பனிடம் சேர்த்து விட வேண்டியதுதான்.. என் காலம் முடிந்துவிட்டது...சார்! இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உங்களோட உதவிதான்... வேறே யார்.... எனக்குத் தெய்வம்போல நீங்கதான்” என்று மிகுந்த கஷ்டத்துடன் பேசிய அருணகிரியை டேவிட் சமாதானப்படுத்தியபடி இருந்தார்.

சொக்கலிங்கத்தின் தகப்பனாருக்குக் கடிதம் போடப்பட்டது; அவரும் வந்து சேர்ந்தார்.

“சடையப்பா! நாம் எவ்வளவு முயன்றாலும் இனி அருணகிரியைக் காப்பாற்ற முடியாது. டாக்டர் சொல்லிவிட்டார். மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.”

“என் மகன் சொக்கன் பிறந்தானே தவிர, ஐயா! அருணகிரியோட மகனாகத்தான் வளர்ந்து வந்தான். வருஷத்துக்கு ஒரு தடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவையோ, வந்து பார்த்துவிட்டுப் போகிறோமே, அது தவிர மற்றபடி எங்களோட தொடர்பே அவனுக்குக் கிடையாது. சொக்கலிங்கத்தை இவ்வளவு நல்லபடியாக வளர்த்த புண்ணியமூர்த்தி அருணகிரி... அவனோட உதவி கிடைத்திராவிட்டா, என் மகன் கூலிக்காரனாத்தான் ஆகியிருப்பான்.

“சடையப்பா! உன் மகன் நல்ல படிப்பாளி... அவனாலே உன் குடும்பம் கட்டாயம் நல்ல நிலை அடையும். என்னோட இருந்துவிடச் சம்மதமானாலும் சரி... இல்லே, வேறே எங்கேயாவது வேலைக்குப்போக விருப்பம் இருந்தாலும் சரி, அதற்கு ஏற்பாடு செய்கிறேன். அது என் பொறுப்பு.” அருணகிரி சில தினங்களில் கண்களை மூடிவிட்டான்.

டேவிட் சொக்கலிங்கத்தைக் கேட்டார், என்னுடன் இருந்து விடுகிறாயா என்று. அவனுக்கு அதிலே விருப்பம் என்றாலும், அந்த ஊரில் இருந்தால் ஆப்பக் கடை அன்னத்தினால் பெருத்த தொல்லை விளையும் என்ற பயம் அவனை அந்த இடத்தை விட்டுச் சென்று விடவேண்டும் என்று தூண்டிவிட்டது.
பல ஆண்டுகளாகப் பிரிந்து இருந்தாலும், தகப்பனாரிடம் பாசம் இல்லாமல் போகுமா. அதிலும் அவர் வாழ்ந்து கெட்டவர் என்பதையும், இப்போது வண்டிக்காரராக இருந்து வருகிறார் என்பதையும் எண்ணும்போது, இனி அவருடன் வாழ்ந்து வரவேண்டும், தான் ஏதாவது வேலை தேடி அவரை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது.

“இனியாகிலும் மகன் வீட்டோடு வந்து சேரட்டுமே.. உள்ளதைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாதா... அவன் ஒருவன் வந்து சேருவதாலா, நமக்குப் பளுவு ஏறப்போகுது” என்று சொல்லும்போதே தன் தாயாரின் கண்கள் குளமானதையும் கண்டான். தகப்பனாருடன் ஊர் சென்று விடுவது என்று உறுதி பலப்பட்டுவிட்டது.

டேவிட் தடுக்கவில்லை. நீ முன்னுக்கு வரவேண்டியவன், இங்கே அடைபட்டுக் கிடக்கத்தான் கூடாது. நான் கொடுக்கும் சிபாரிசுக் கடிதம் போதும். உனக்கு எங்கேயும் நல்ல வேலை கிடைக்கும். கணக்குத் துறையில் மேலும் படித்துப் பயிற்சி பெற்றால், ஏதாவது பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கும். என்று டேவிட் உற்சாகமூட்டினார்.

அவருடைய சிபாரிசுக் கடிதத்தையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொண்டனர்.
* * *
இரவு, சடையப்பன், தயங்கித் தயங்கி மகனிடம் பேசலானான்.

“சொக்கலிங்கம்! நீ இவ்வளவு காலமாக எவ்வளவோ நல்லபடியாக வாழ்ந்து வந்தாய், உன் மாமன் தயவால். அறிவாளிகளோடு பழகி வந்தாய். நாம் இனிப் போக வேண்டிய இடமோ, ஜெமீன். அட்டகாசமும் ஆணவமும் நிரம்பிய இடம்! ஜெமீன்தார் ஜம்புலிங்கபூபதி கொடியவர் அல்லர்; ஆனால் ஜெமீன்தாரருக்கு இருக்கவேண்டிய முடுக்கு, கண்டிப்பு எல்லாம் நிரம்பியவர். எனக்கோ அங்கு என்ன வேலை தெரியுமல்லவா...”

“மாமா இரண்டொரு முறை சொல்லியிருக்கிறாரப்பா”

“வண்டிக்காரன்! குதிரை கொட்டிலுக்குப் பக்கத்திலே குடிசை! அங்குதான் நீயும் வந்திருக்க வேண்டும். அந்தக் கேவலமான இடத்திலே நீ இருக்கக் கூடாது என்பதற்காகத்தானடா மகனே! பெற்ற பாசத்தை எல்லாம் அவளும் நானும் அடக்கிக் கொண்டு இவ்வளவு காலம் உன்னைப் பிரிந்துஇருந்தோம். இப்போது உன்னை அந்த நரகத்துக்கு அல்லவா அழைத்துப் போக வேண்டி இருக்கிறது.”

“நீங்கள் அங்கே இருக்கும்போது நான் மட்டும் இருக்கக் கூடாதா அப்பா! மேலும் எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரையில்தானே இந்தக் கஷ்டமெல்லாம். பிறகு நீங்கள் எதற்காக வண்டிக்காரராக இருக்கவேண்டும், குடும்பத்தைக் காப்பாற்ற நான் எந்தப் பாடுபடவும் தயாராக இருக்கிறேனப்பா. வேலையும் கிடைத்துவிடும், டேவிட் கொடுத்துள்ள சிபாரிசு போதும் நமக்கு...”

“வேலை தயாராக இருக்கிறது மகனே! கௌரவமான வேலை. ஜெமீனிலேயே!”

“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.”

“அப்படிச் சொல்வதற்கில்லை அப்பா! ஜெமீன்தாரர் தமது பேரப்பிள்ளைகளுக்கு, படிப்பு சொல்லிக்கொடுக்க ஒரு வாத்தியார் தேடுகிறார். படித்திருந்தால் மட்டும் போதாது, வெள்ளைக்காரரிடம் இருந்த அனுபவம் வேண்டும் என்கிறார். சம்பளம் கேட்ட அளவு. ஜெமீன் மாளிகையிலே தங்கி இருந்து, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.”
“எனக்கு மிகவும் பிடித்தமான வேலை அப்பா அது, ஏனென்றால் நான் மேலும் படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்...”

“அது மட்டுமா...ஜெமீன் மாளிகையில் இருந்து வந்தால், வேறு பெரிய பெரிய வேலைகள் கிடைக்கவும் வழி சுலபத்திலே கிடைக்கும்.”

“மகிழ்ச்சியாகச் சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை ஏனப்பா சோகத்துடன் சொல்லுகிறீர்.”

“சோகமா... வேதனையே அல்லவாபடுகிறேன்... இத்தனை காலமாகத்தான் பிரிந்திருந்தோமே இனி ஒன்றாக இருந்து வரலாம் என்று எவ்வளவோ ஆசை, எனக்கும் உன் தாயாருக்கும்.”

“ஜெமீனில் வேலை கிடைத்துவிடும் என்கிறபோது அந்த ஆசை நிறைவேறுகிறது என்றுதானே அப்பா பொருள்.”

“இல்லையடா மகனே! இல்லை. ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாராக நீ அமர்ந்திட வேண்டுமானால் எங்களோடு இருக்க முடியாது...என் மகன் என்று கூடச் சொல்லிக் கொள்ளக் கூடாது...”

“இது என்ன விபரீதப் பேச்சப்பா... ஜெமீன்தாரர் இதுபோல ஒரு நிபந்தனையா போட்டிருக்கிறார்.”
“இல்லை. நான்தான் நிபந்தனை போடுகிறேன். நிலைமை அப்படி. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதுகூட ஜெமீன்தாருக்குத் தெரியாது. சொல்லவில்லை. தெரிந்தால், உன்னை வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார் – நம்ம வண்டிக்காரனோட மகன் ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாரா? கேவலம் கேவலம் என்று கூறுவார். அவருடைய சுபாவம் அப்படிப்பட்டது. அதனால் நீ என் மகன் என்பது தெரியவே கூடாது. அப்போதுதான் ஜெமீன் மாளிகையிலே உனக்கு அந்த வேலை கிடைக்கும்.”

சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்துவிட்டான் இந்த நிபந்தனையைக் கேட்டு. இதற்கு நான் சம்மதிக்கவே முடியாது, வேண்டுமென்றால் வேறு வேலை தேடிக் கொள்ளலாம், நீங்கள் என்னோடு வந்துவிடலாம்; என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

சடையப்பன் துளியும் கோபித்துக் கொள்ளவில்லை; முகத்திலே துக்கம்தான் தோய்ந்திருந்தது.

மறுபடியும் மறுபடியும் அதனையே வலியுறுத்தலானான். அவனுடைய தழுதழுத்த குரலைக் கேட்டு சொக்கலிங்கம் உருகிவிட்டான்.

இத்தனை வருஷங்கள் எங்களைப் பிரிந்து இருந்து வந்தாய். இன்னும் ஓர் இரண்டு மூன்று வருஷம் இருக்கக் கூடாதா அப்பா! என்று கேட்டு விட்டுச் சடையப்பன் கண்களைக் கசக்கிக்கொண்டது கண்டு, சொக்கலிங்கம் திடுக்கிட்டுப்போனான்.

“பிரிந்து இருப்பதைக் காட்டிலும் கொடுமையை அல்லவா அப்பா அனுபவிக்கச் சொல்லுகிறீர்கள். நீங்கள் என் அருகிலேயே இருப்பீர்கள்; ஆனால் இவர் என் அப்பா என்று நான் சொல்லக்கூடாது என்கிறீரே... தட்டு நிறைய தித்திப்புப் பண்டம் அடுக்கி எதிரே வைத்துவிட்டு, சாப்பிடக்கூடாது, பார்த்துக் கொண்டு மட்டுந்தான் இருக்கலாம் என்கிறீர்களே!”

“பத்தியம் இருக்கச் சொல்கிறேன் மகனே! நாம் நோயாளிகள்; தரித்திரம் என்ற நோய்! கேவலமான வேலையைச் செய்து வருகிறேன். வண்டி ஓட்டிவிட்டு வீட்டுக்குப் போய் இருக்கும் வேலை கூட அல்லடா மகனே! குதிரைகளோடு குதிரையாக இருக்கிறேன். அவள்தானடா மகனே! குதிரை கட்டியுள்ள இடத்தைச் சுத்தம் செய்பவள்; உன் தாயார்! நீயே சொல்லு இந்த நிலைமையில் உள்ள எனக்கு நீ மகன் என்று தெரிந்தால், ஜெமீன்தாரர் உன்னை மனம் ஒப்பித் தமது பேரக்குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லுவாரா! சீமான்கள் வருகிற இடம்! பெரிய பெரிய அதிகாரிகளுடைய பழக்கம். துரைமார்களின் கம்பெனியில் தொடர்பு. உள்ளபடி பெரிய இடம். நாகரிகம் மிகுந்த மாளிகை. அங்கு ஒரு வண்டிக்காரன் மகன், உள்கூடம் கூடப்போக முடியாது, அவர் விரும்புவதோ, மாளிகையில் இருந்துகொண்டு, ஜெமீன் குடும்பத்தாருடன் ஒன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்! டேவிட் துரையிடம் பயிற்சி பெற்றவன் என்ற பட்டத்தை மதிப்பார். நிரம்ப! இவன் படித்திருக்கிறான். ஆனால் இவன் என் மகன்! என்று நான் சொன்னால் என்ன எண்ணிக்கொள்வார். ஆயிரம் படிப்பு இருக்கட்டும்; ஊர் என்ன சொல்லும். ஜெமீன்தாரர் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வண்டிக்காரன் மகன்தானா கிடைத்தான் என்றல்லவா. நம்மாலே அந்தக் கேவலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவார்.”

“அப்பா! நான் நாலு எழுத்து கற்றுக்கொண்டதே உன்னை மகிழ்விக்க. உனக்கு மதிப்புத் தேடிக் கொடுக்க என் மகனைச் சாதாரணமாக எண்ணிக் கொள்ளாதீர்கள். அவன் படித்தவன், மற்றவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பவன், நம்முடைய தமிழ் மட்டுமல்ல, ஆங்கில பாஷை அறிந்தவன், ஆங்கிலேயர்களே அவன் திறமையைப் பாõராட்டுகிறார்கள் என்றெல்லாம் நீ பேசிப் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தானே. அடிக்கடி மாமா என்னிடம் சொல்லுவார், “சொக்கலிங்கம்! நமது குடும்பம் ஓரளவு நிலபுலத்தோடு கிராமத்திலே மதிப்போடு வாழ்ந்த குடும்பந்தான். வகையில்லாத வாழ்க்கை நடத்தியதாலே சொத்து போய்விட்டது. கிராமத்திலே பெரிய தனக்காரக் குடும்பமாக இருந்த நாம், நொடித்துப் போய்விட்டோம். ஏதோ நான் ஓடி ஆடிப் பாடுபட்டு, நம்ம துரையிடம் வேலைக்கு அமர்ந்தேன். உன் அப்பா, படாத பாடுபட்டுக் கடைசியில்.... சொல்லக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நம்ம நாலூரில் திருவிழாவின்போது அவருக்குத்தான் முதல் மாலை போடுவார்கள். அப்படிப்பட்டவர் இன்று...சொக்கலிங்கம்! நீதான் நமது குடும்பத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும்; நாலுபேர் மதிக்கத்தக்க நிலைமைக்குக் கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் சொல்லுவார். கேட்டுக்கொண்டிருக்கும்போதே என் கண்களில் நீர் துளிர்க்கும். ஓரளவு படித்தாயிற்று, கணக்கு வழக்குப் பார்க்கத் தெரிந்து கொண்டேன். நல்ல வேலை மட்டும் கிடைத்துவிட்டால், நிம்மதியாக வாழலாம். தலைநிமிர்ந்து நீ நடக்கலாம். என் மகன் உத்தியோகம் பார்க்கிறான் என்று சொல்லிச் சொல்லி மகிழலாம்...”

“உத்தியோகம் நீ பார்க்கவேண்டும் என்பதுதானடா சொக்கு! என் ஆசையும். நான் சொல்லுகிற யோசனையும் அதற்காகத்தான். ஜெமீன்தார் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே நீ சேர்ந்து கொண்டால் போதும், – எந்தப் பெரிய உத்தியோகமும் உனக்குக் கிடைத்துவிடும். அது சாமான்யமான இடமல்ல; வெறும் ஜெமீன் வீடு அல்ல. ஜம்புலிங்க பூபதி துரைமார்களுக்கு ரொம்பவும் வேண்டியவர். எந்தப் பெரியதுரை அந்தப் பக்கத்துக்கு வந்தாலும் பூபதி! பூபதி! என்று இவரைத்தான் சுற்றிச் சுற்றி வட்டமிடுவார்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் வெள்ளைக்கார சர்க்கார் எந்தப் பெரிய உத்தியோகத்தையும் உனக்குக் கொடுப்பார்கள்...”

“ஜெமீன்தாருடைய தயவு இருந்தால் போதும் என்றுதானே அப்பா சொல்லுகிறாய்; அவரிடம் மனு செய்துகொள்ளலாம். அதற்கு நான் முழுச் சம்மதம் தெரிவிக்கிறேன். பெரிய வேலை கிடைக்கிற வரையில், அவர் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கவும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் போடுகிற மற்றொரு நிபந்தனைதானப்பா என் நெஞ்சிலே நெருப்பை அள்ளிப்போடுவதுபோல இருக்கிறது. எப்படியப்பா மனம் இடம் கொடுக்கும். ஏனப்பா அப்படி மறைந்து வாழவேண்டும். இவர் என் அப்பா என்று சொல்லிக் கொள்வதற்கு நான் ஏனப்பா கூச்சப்படவேண்டும்...”

“தம்பி நீயும் கூச்சப்படமாட்டாய். எனக்கும் நீ அப்பா! அப்பா! என்று கூப்பிடக் கேட்பதைவிட இன்பம் வேறு இருக்க முடியுமா!
-----------
வண்டிக்காரன் மகன் (2)

என் மகனைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறான்; அவன் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா. ஊர் ஜனங்களெல்லாம் வெள்ளைக்காரத் துரைகளைக் கண்டால் பயந்துகொள்கிறார்களே, என்மகன் அந்தத் துரைகளிடம் எவ்வளவு தாராளமாகப் பழகுகிறான் தெரியுமா என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படத்தான் நினைக்கிறாள் உன் அம்மாவும். ஆனால்...”

“ஆனால் என்னப்பா ஆனால்! அம்மா பெருமைப்படுவதிலே என்ன தவறு. எல்லாப் பிள்ளைகுளுமா இன்று என் அளவுக்கு சர்க்கார் பாஷையைப் படித்திருக்கிறார்கள். உத்தியோகம் பார்க்கும் யோக்கியதையைப் பெற்றிருக்கிறார்கள், அம்மாவுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கும்...”

“அம்மாவும் நானும் ஆனந்தம் அடைய ஒரே வழி நான் சொன்ன வழிதான்...”

“என்ன வழி அது! எந்த மகனும் எவ்வளவு மோசமான குணம் கொண்ட மகனும் செய்யத் துணியாததை நான் செய்யவேண்டும்”

“மகனே! உன் உள்ளம் எனக்குத் தெரியாதா, உன் உத்தமமான குணம் எனக்குத் தெரியாதா! உன்னை என்ன செய்யச் சொல்லுகிறேன் – எதற்காக அதைச் செய்யச் செல்லுகிறேன். நமது குடும்பம் மீண்டும் நல்ல நிலைமையை அடையத்தான்.”

“நான் யார்மகன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உலவச் சொல்கிறீர்களே – உங்கள் கண் முன்னாலேயே – அதைவிடக் கொடுமை வேறு என்னப்பா இருக்கமுடியும்... என்னை வாட்டாதீர்களப்பா..”

“சொக்கலிங்கம்! நான் முறைப்படி தமிழ் படித்தவன் என்பது தெரியுமா உனக்கு; பாடம்கூட சொல்லிக் கொடுத்திருக்கிறேன்; பணத்துக்காகக்கூட அல்லடா மகனே, பொழுது போக்குக்காக! ஜெமீன்தாரிடம் நான் அதைக் காட்டிக் கொள்கிறேனா! சடையா! ஆத்திச்சூடி தெரியுமா உனக்கு என்று கூடக் கேலியாகக் கேட்பார் ஜெமீன்தாரர்; எனக்குங்களா! நான் என்னத்தைக் கண்டேன்!! என்று சொல்லுவேன்.”

“ஏனப்பா! ஏன் மறைக்க வேண்டும். சொன்னால் என்ன, எனக்குத் தமிழிலே நல்ல பயிற்சி உண்டு என்று...”

“சொல்லலாமடா மகனே! சொல்லலாம். நமது குடும்பம் நொடித்துப் போகாமலிருந்தால் சொல்லலாம். ஆனால் நான் போய் ஜெமீன்தாரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரியும், அகவல் அருணாசலப் புலவரிடம் ஆறு வருடம் பாடம் கேட்டிருக்கிறேன் என்று சொல்லுவதா?”
“சொன்னால் என்னப்பா என்றுதான் கேட்கிறேன்.”

“சொல்லிவிட்டு, பைத்தியக்காரா! போதும் நீ தமிழ் படித்த பெருமையைப் பற்றிக் கதை அளப்பது, போ! போ! குதிரைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டிய நேரம் இது. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல், நீ படித்த அகவலின் பெருமைபற்றி அளந்து கொண்டிருக்காதே. இப்போது உனக்குச் சோறு போடுவது உன்னுடைய அகவல் அல்ல; நம்ம குதிரைகள்! என்று சொல்லிவிட்டு இடிஇடியெனச் சிரிப்பார். மகனே! நான் இப்போது வண்டி ஓட்டி!! வண்டிக்காரனடா, வண்டிக்காரன்!”
“என் அப்பா! என்னைப் பெற்ற பெருமான்! எனக்கு உயிரும் உடலும் உதிரமும் கொடுத்த உத்தமர்.”

“அப்படி நீ சொல்லி, நான் கேட்டு மகிழ காலம் வரவில்லை அப்பா! இது அல்ல அந்தக்காலம். நான் வண்டிக்காரன்! நீ புதுவாழ்வு பெறவேண்டியவன்; என் மகன் என்று தெரிந்தால் – வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், உனக்குப் புதுவாழ்வு கிடைக்காது...”

“பயங்கரமூட்டும் பேச்செல்லாம் பேசுகிறீர்களே அப்பா!”

“விவரத்தை வளர்த்திக் கொண்டிருக்க நேரம் இல்லை. உன் மனத்திலே என்னென்ன தோன்றும் என்பதைப் பற்றியெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்து, என் மனத்திலே ஏற்பட்ட கொந்தளிப்பையும் அடக்கிக்கொண்டு, அதற்குப் பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ ஜெமீன் ஜம்புலிங்க பூபதியின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே சேர்ந்துவிடவேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் யோக்யதாம்சம் அவ்வளவும் உன்னிடம் இருக்கிறது. உன்னிடம் உள்ள ஒன்றே ஒன்றுதான், உனக்கும் வேலைக்கும் நடுவே நிற்கிறது, தடைக்கல்லாக! நீ என் மகன் – வண்டிக்காரன் மகன் என்பதுதான் குறுக்கே நிற்கிறது. வண்டிக்காரனுடைய மகனை, ஜெமீன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டார் பூபதி! பிள்ளைகளோடு மாளிகையில் தங்கி இருக்க வேண்டும்! அங்கேயே சாப்பாடு, ஜாகை எல்லாம். எப்போதும் பிள்ளைகளுடன் இருந்து வரவேண்டும். ஜெமீன் குடும்பத்துடன் பழகும் நிலை! அந்த நிலையை மகனே! ஒரு வண்டிக்காரன் மகன் பெறமுடியாது – தரமாட்டார்கள்; ஆனால் நீ அந்த நிலையைப் பெற்றே ஆகவேண்டும். அங்கு இடம் பெற்றுக்கொண்டால், நீ முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் வேகமாக அமையும். நல்ல நிலை – மதிப்பான உத்தியோகம் கிடைக்கும் – கண்குளிரக் காணுவேன், தம்பி! நோயைப் போக்கிக் கொள்ள கசப்பான மருந்துகூடச் சாப்பிடவேண்டி வந்துவிடுகிறதல்லவா. அது இது. கண்ணிலே வலி ஏற்பட்டால் அதைப்போக்க ஒரு மருந்து தெளிப்பார்கள் கண்ணில்! எரிச்சல் சொல்லி முடியாது. கண்ணீர் தாரை தாரையாகப் பெருகும். நெருப்புப்பொறி பட்டுவிட்டால் எப்படியோ அப்படி இருக்கும். கண்களே இரத்தச் சிவப்பாகிவிடும். ஆனால் தம்பி! மெல்ல மெல்ல எரிச்சல் அடங்கும், சிவப்பு மாறும், மருந்து வேலை செய்யும், கண்வலி போய்விடும், பார்வை முன்பு இருந்ததைவிட நன்றாக ஆகிவிடும். அப்படிப்பட்ட மருந்துத் துளிகளைத் தெளித்துக் கொண்டாக வேண்டும், நீயும் நானும், உன் அம்மாவும்!”
“மருந்துத் துளிகள் அல்ல அப்பா! நெருப்புப் பொறிகள்!”
* * *
கடைசியில் சொக்கலிங்கம் சம்மதம் தெரிவித்தான், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.
“கொஞ்ச காலம்! கொஞ்ச காலம்! வேறு ஒரு பெரிய வேலை கிடைக்கிற வரையில்!! என்று சமாதானம் கூறிவிட்டு, சடையப்பனும் சொர்ணமும் ஊர் புறப்பட்டார்கள், சொக்கலிங்கத்தை இரண்டு நாள் கழித்து ஜெமீன் கிராமம் வரும்படிச் சொல்லிவிட்டு.
டேவிட், சொக்கலிங்கம் வேறு ஊர் போவதை முதலில் விரும்
பவில்லை என்றாலும், சீக்கிரமாகவே சீமைக்கு வரும்படி அவருக்கு ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்த கடிதம் கிடைத்
ததும், சொக்கலிங்கம் தன் தகப்பனாருடன் போய் வாழ்ந்து வருவதுதான் முறை என்ற முடிவுக்கு வந்தார்.

பொதுவான சிபாரிசுக் கடிதத்துடன், குறிப்பாக ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதிக்கே ஒரு தனியான சிபாரிசுக் கடிதமும் வாங்கிக்கொண்டு, சொக்கலிங்கம், ஜெமீன் மாளிகை நோக்கிச் சென்றான்.
* * *

அவன் படாடோபமற்ற ஆனால் நாகரிமான உடை உடுத்திக்கொண்டு ஜெமீன் மாளிகைக்குள்ளே நுழையும்போது, சடையப்பன் விலை மிகுந்த ஒரு குதிரையை வெளியே உலாவ அழைத்துச் செல்வதைக் கண்டான். நெஞ்சு பகீரென்று ஆகிவிட்டது. ஓடிச்சென்று அவர் காலில் விழ வேண்டியது போலத் தோன்றிற்று. அப்பா! அப்பா! என்ற சொல் வேக வேகமாகக் கிளம்பிற்று; சடையப்பன் பார்த்த பார்வையால், வார்த்தைகள் வெளியே வரவில்லை. சொக்கலிங்கத்தைப் பார்க்காதவனைப் போலச் சடையப்பன் வெளியே சென்றான்.

ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதி, மிகுந்த செல்வாக்குப் படைத்தவர், ஆங்கில அரசுடன் உறவு கொண்டாலன்றித் தமது ஜெமீன் வாழ்வு நிலைக்காது என்பதை உணர்ந்து நடந்து கொண்டவர்; ஆனால் அதே நேரத்தில், ஜெமீன்தார் என்பதற்கு உரிய மதிப்பு கெடக்கூடாது என்பதிலேயும் கண்ணுங் கருத்துமாக இருந்தவர்.

மற்ற ஜெமீன்தார்களைப்போல, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தும் கொள்ளை அடித்தும் பொருள் சேர்த்தால் மட்டுமே போக போக்கியத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற நிலையில் அவர் இல்லை. ஜெமீன் வருமானத்தைவிட அதிக அளவு அவர் வியாபாரம் மூலம் பெற்றுக் கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டங்கள், குறிப்பாகப் புகையிலை, நிலக்கடலை, ஆகியவை அவருடைய ஜெமீனில் போதுமான அளவு இருந்தது. சீமைக்குச் சென்று வியாபாரக் கம்பெனிகளுடன் தொடர்பும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

விசேஷ தினங்களில் தவிர மற்ற நேரத்தில் ஆங்கில முறை உடுப்புடன்தான் உலவுவார். நவராத்திரி போன்ற சில விசேஷ நாட்களில் மட்டும் ஜெமீன் உடையுடன் உலா வருவார்.

ஜெமீன் மாளிகை, பழைய கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. கொடி மரம்! காவலாட்கள் தங்கும் இடம்! வண்டிப் பாட்டை தனியாக! சிறிய கோபுர அமைப்பில் நழைவு வாயில், அதிலே கலசம்! சித்திரங்கள்! சித்திர வேலைப்பாடுகள்!

உள்ளே முழுக்க முழுக்க ஆங்கிலப் பாணியில், விரிப்புகள், விளக்குகள், இருக்கைகள்.

வேலையாட்கள், ஜெமீன் மரபினைக் காட்டும் தனி உடையுடன் இருந்தனர்.

சடையப்பன்கூட, சாதாரணக் காலத்தில் எப்படி உடை அணிந்திருந்தாலும் ஜெமீன்தார் கிளம்பும்போது, தனி உடை அணிந்து கொண்டுதான் – வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.

வண்டி, இவருக்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டது – இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு.
தரமான குதிரைகளை வாங்கி வளர்ப்பதில், அலாதியான விருப்பம் ஜெமீன்தாரருக்கு.

கொடுமைக்காரர் என்ற பெயர் இல்லை; ஆனால் எல்லோரையும் சமமாகப் பாவித்து நடத்துபவர் என்றும் சொல்லிவிட முடியாது.

கட்டிவைத்து அடிப்பது, கொளுத்தி அழிப்பது போன்ற கொடுமைகள் கிடையாது, ஆனால் அவர் எதிரே வருபவர்கள், மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும், மரியாதைக்காக. ஜெமீன் சாரட்டு வருகிறது என்றால், எழுந்து நிற்கவேண்டும். – இப்படிப்பட்ட கட்டு திட்டங்களைக் கண்டிப்புடன் வைத்துக் கொண்டிருந்தார்.

மகன் இல்லாததால், தன் இரண்டு குமாரிகளையும், ஜெமீனை நடத்திச் செல்லக்கூடிய அறிவாற்றல் கிடைக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.

பெரிய இராஜகுமாரி – இளைய ராஜகுமாரி என்றுதான் ஊரார் அழைப்பார்கள், பெண்களை.

எல்லா விதத்திலும் மிக்க மகிழ்ச்சியாக இருந்து வந்த ஜெமீன்தாரருக்கு ஒரு மனக்குறை ஏற்படுத்தவே பிறந்ததுபோல அவருடைய மருமகன் காளிங்கராயர் விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே ஊராருக்கு நடுக்கம். ஆனால் அவர் ஊரில் இருக்கம் நாட்கள் மிகக் குறைவு. ஊட்டி, கொடைக்கானல், பம்பாய், புனா, பெங்களூர் என்று ஒவ்வொரு சிங்காரபுரியாகச் சுற்றிக்கொண்டிருப்பார்.
* * *

ஜெமீன் மாளிகைக்குள்ளே அனுமதி பெற்று நுழைந்தபோது சொக்கலிங்கத்துக்கு எந்தவிதமான அச்சமும் எழவில்லை. காரணம், ஜெமீன்கள் உண்டான வரலாறு பற்றிப் படித்தறிந்தவன்; ஜெமீன்முறைக்கு எதிர்காலம் கிடையாது என்பது பற்றி டேவிட் தந்த விளக்கத்தைப் பலமுறை கேட்டவன்.

டேவிட் துரை கொடுத்த கடிதத்தை ஜெமீன்தாரரிடம் கொடுத்துவிட்டு, சொக்கலிங்கம் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்;
அவனுடைய தோற்றமும், கண்களிலே தோன்றிய ஒளியும், முகத்தில் தவழ்ந்த புன்னகையும் ஜெமீன்தாரரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. முகமலர்ச்சியுடன் இருந்தார்.
டேவிட் துரையின் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்துவிட்டு, ஜெமீன்தாரர், “வரப்போவதைத் தெரிவித்திருந்தால் ரயிலடிக்கு வண்டி அனுப்பி இருப்பேனே... உன் பெயர் சொக்கலிங்கமா... உட்கார் – பரவாயில்லை உட்கார்... கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே... நம்ம ஜெமீனில் எப்போதும்அறிவாளர்களுக்கு மதிப்பு உண்டு.” என்றார்.

கொடுமைபுரியும் ஜெமீன்தாரர்களைப் பற்றிய கதைகளைப் படித்திருந்த சொக்கலிங்கம். ஜெம்புலிங்க பூபதியின் போக்கைக் கண்டு வியப்படைந்தான். டேவிட் துரையின் சிபாரிசுக் கடிதத்துக்குக் கிடைத்துள்ள மரியாதை இது என்பதையும் உணர்ந்தான்.

“டேவிட் துரை சொல்லுகிற வார்த்தையை நான் தட்டி நடப்பதே இல்லை. அவர்தான் என்னை நம் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சிபாரிசு கடிதம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை. நாளைக்கே வேலைக்கு வந்து சேர்ந்துவிடலாம்.”

“மிக்க நன்றி.. இன்று முதலேகூட நான் தயார்தான்... பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டேன்.”

“அதுவும் நல்லதாயிற்று. இன்று நல்ல நாள்கூட. குழந்தைகள் பக்கத்து ஊர் போயிருக்கிறார்கள்... உமது ஜாகை இங்கேயேதான்... வேலைக்காரன் இடத்தைக் காட்டுவான்... பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, உமது வேலை. பிள்ளைகளுக்கு ஒரு பெரிய அண்ணன்போல இருக்கவேண்டும்... எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்...”

“ஜெமீன் குடும்பத்து மதிப்புக்கு ஏற்ற விதமாக குழந்தைகள் வளர என்னாலானதைச் செய்கிறேன்.”

“ஜெமீன் குடும்பத்துச் சுபாவம் குழந்தைகளுக்குத் தன்னாலே வந்துவிடும்... நீங்கள் கற்றுத் தரவேண்டியது மேனாட்டு முறைகளை; நடை உடை பாவனைகளை. இன்னும் சில வருஷங்களிலேயே நான் அவர்களைச் சீமைக்கு அனுப்பப் போகிறேன், அங்கேயே படிக்க... ஜெமீன் குடும்பத்திலே பிறந்தவர்கள் குறைந்தது ஜில்லா கலெக்டர் வேலைக்காவது போனால்தானே மதிப்பு. சீமைப் படிப்பு தேவையாம்... துரைகள் சொல்கிறார்கள்... நீங்கள்கூட ஆங்கிலமுறை உடையிலேயே இருப்பது நல்லது...! குழந்தைகள் பழகும்போதே ஒரு பாடம், கிடைக்கும். ஆங்கிலப்பாட்டு தெரியுமல்லவா, கற்றுக் கொடுக்கவேண்டும். என் சின்னமகள் போனவருஷம் தன் பெரியப்பா வீடு போயிருந்தாள் ஒரு மூன்று மாதம்– பெங்களூர். அங்கு ஆங்கிலேயர் அதிகம் அல்லவா. அங்கு உமா பியானோ வாத்தியம் வாசிக்கக் கூடக் கற்றுக்கொண்டாள்...”

“குழந்தைகள் பெரிய மகளுடைய....”

“ஆமாம், ஆமாம்.... உமாமகேஸ்வரி, லலிதாம்பிகேஸ்வரி என்று எனக்கு இரண்டு பெண்கள்... தாயை இழந்து விட்டார்கள். லலிதாதான் மூத்தவள்; மூன்று குழந்தைகள். உமா; இரண்டாவது பெண்; கன்னி.”

“இருவரும் ஆங்கிலப் படிப்பு படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்”

“ஓர் ஆங்கிலோ – இந்தியமாது – பள்ளிக்கூட ஆசிரியை – இங்கே தங்கி இருந்து, கற்றுக்கொடுத்தார்கள். எப்போது நாம் ஆங்கிலேயருடைய ஆளுகையின் கீழ் வந்துவிட்டோமோ, அப்போதே நாம் அவர்களுடைய முறைகளை மேற்கொள்ள வேண்டியதுதானே. அப்போதுதானே ஒரு மதிப்பு ஏற்படும். மேலும், நான் வேட்டையாடிக் கொண்டும், விருந்து சாப்பிட்டுக் கொண்டும், பொழுதை ஓட்டுகிற ஜெமீன்தாரன் அல்ல. வியாபாரத் தொடர்புகள் உண்டு. சீமையில் ஒரு பெரிய கம்பெனிக்கு நிலக்கடலை ஏற்றுமதி செய்கிறேன். முத்துச் சிப்பிகளையும் அனுப்பி வைக்கிறேன்.அதனால் ஆங்கிலேயர்கள் தொடர்பு நிறைய உண்டு – நிறையப் பழக்கம். சரி! சரி! நான் பேசிப்பேசி உமக்குச் சலிப்பை உண்டாக்கிவிடக் கூடாது. ஓய்வு எடுத்துக்கொள்ள நினைப்பீர். பிரயாண அலுப்பு இருக்கும் உம்முடைய பெயர் என்ன சொன்னீர்...?”

“சொக்கலிங்கம், நண்பர்கள் சொக்கு என்று செல்லமாக அழைப்பார்கள்...”

“இங்கு உமக்குப் பெயர் லிங்கம்.. நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். சொக்கலிங்கம் என்ற பெயர் மீது எனக்கொன்றும் வெறுப்பு கிடையாது. ஆனால் இங்குச் சமையல் வேலை பார்ப்பவன் பெயர் சொக்கலிங்கம். குழந்தைகள், அவனைச் சொக்கா! சொக்கா! என்று அழைப்பார்கள். உம்முடைய பெயரும் அது போலவே இருந்தால் என்னமோபோல இருக்குமல்லவா, அதனாலே.... குழந்தைகளின் சௌகரியத்துக்காக உமது பெயரைக் கொஞ்சம் வெட்டிவிட்டேன், மிஸ்டர் லிங்கம் இனி உமது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பணத்தை அவ்வப்போது மானேஜரிடம் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு உங்களை ரொம்பவும் பிடித்துவிட்டது. சில வேளைகளில் என்னோடு உலாவக்கூட வரலாம், வேட்டையாடக் கூடச் செல்லலாம்...”
* * *

மறுநாள் குழந்தைகளுடன், ஜெமீன்தாரருடைய இரண்டு குமாரிகளும் வந்து சேர்ந்தனர். சொக்கலிங்கத்தை ஜெமீன்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

லலிதாம்பிகேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகிய இருவருமே, தங்களை ஊரார் அழைப்பதுபோல இராஜகுமாரி என்று ஆசிரியரும் அழைப்பதை விரும்பவில்லை என்று கூறக்கேட்டு, சொக்கலிங்கம், வியப்படைந்தான்.

குருபக்தி உணர்ச்சியாக இருக்குமோ என்று முதலில் யோசித்தான். ஆனால் ஜெமீன் மாளிகையில் பூஜை செய்ய வருபவரிடம் அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, தன்னிடம் மரியாதையும் அன்பும் காட்டுவதற்குக் காரணம்,டேவிட் துரையிடம் பல வருஷங்கள் பழகியவன் என்பதுதான் என்று தெரியவந்தது.

ஆங்கிலேயர்கள் ஐயாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து இங்கு வந்து ஆட்சி நடத்துகிறார்கள் என்பதாலேயே, இப்படிப்
பட்ட ஜெமீன்கள் ஆங்கிலேயரிடம் மிகுந்த பயபக்தி விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதும், ஆங்கில அரசினரிடம் மட்டுமல்லாமல், ஆங்கிலப் பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகியவர்களிடமும் அதிக அளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதையும் உணர்ந்தான்;

அந்நியருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்று வருத்தமும் வெட்கமும் துளியும் அவர்களுக்கு இல்லாததையும், ஆங்கிலேயர்களைப்போலத் தாமும் கோலத்தை ஆக்கிக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பதையும் அறிந்து வருந்தினான்.

ஆங்கில நாட்டு வரலாறு படித்திருந்தால், இவர்கள் இப்படியா இருப்பார்கள்; அடிமைத்தனத்தை ஆங்கில மக்கள் எவ்வளவு வெறுத்திருக்கிறார்கள்; அடிமைத்தனத்தைப் போக்க எவ்வளவு இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் இப்படியா இருப்பார்கள் என்றெல்லாம் எண்ணிக் கவலைப்
பட்டான்.
சொக்கலிங்கத்திடம் குழந்தைகள் மிகுந்த அன்பு காட்டத் தொடங்கிவிட்டன.
அவன் படிப்பு சொல்லிக்கொடுத்த விதமும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன.

காலையில் எழுந்திருப்பது – உடலைச் சுத்தம் செய்து கொள்வது – புதிய உடை உடுத்திக் கொள்வது – உலாவச் செல்வது என்பதிலிருந்து படிப்பு தொடங்கும்.

பல நட்டுப் படங்கள் – வராற்றுச் சித்திரங்கள், ஆகியவற்றைக் காட்டி, குழந்தைகளுக்கு இயற்கையாகவே படிப்பதிலே விருப்பம் ஏற்படும்படியாகச் செய்த நேர்த்தியான முறையைக் கண்டு ஜெமீன்தாரர் வெகுவாகப் பாராட்டினார்.

எவ்வளவோ தடுத்தும், ஜெமீன்தாரர், சொக்கலிங்கத்துக்கு விதவிதமான உடுப்புகளைத் தயாரித்துக் கொடுத்தார்.
உமக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம் மிஸ்டர், லிங்கம்! ஆனால் எங்கள் ஜெமீன் கௌரவம் என்று ஒன்று இருக்கிறது பாருங்கள், அதைக் கெடவிடக் கூடாதே – என்று வேடிக்கையாக ஜெமீன்தாரர் பேசுவார்.

சொக்கலிங்கம், பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேலைக்கு அமர்ந்தவராக அங்கு நடத்தப்படவில்லை; ஜெமீன் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து நடத்தப்பட்டு வந்தார்.

எதிர்பாராத அளவுக்கு வசதியான சூழ்நிலையும், மதிப்பும் கிடைத்தது. அவனைக் கண்டவர்கள் அனைவரும், இப்படி அல்லவா அமையவேண்டும் வாழ்க்கை என்று பேசிக் கொண்டனர். பூந்தோட்டத்தில் உலவுகிறான், புதுமணம் நுகர்கிறான் என்றுதான் எல்லோரும் கருதினர். ஆனால் அவன் பட்ட வேதனை அவனுக்கல்லவா தெரியும்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்கள் தாயும் தந்தையும், ஆனால் வெளியே சொல்லிக் கொள்ள உரிமை இல்லை. தனக்குக் கிடைத்த வசதியான வாழ்க்கையிலே அவர்களுக்குப் பங்கு அளிக்க உரிமை இல்லை. பேசவே உரிமை இல்லை.

என்ன விலையுயர்ந்த முத்துமாலை மார்பிலே புரளுகிறது என்று ஊரே புகழ்கிறது; ஆனால் அந்த முத்துகள் ஒவ்வொன்றும் மார்பைத் துளைத்துக் கொண்டே இருக்குமானால், அந்த மாதரசியின் வேதனை எப்படி இருக்கும், பூமணம் நுகருகிறான் என்று ஊரார் பாராட்டுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தடவையும் பூநாகம் கடித்தபடி இருந்தால் எப்படி இருக்கும். ஜெமீன் மாளிகைக்கு வருகிறவர்களிடமெல்லாம் ஜெமீன்தாரர் அறிமுகப்படுத்துகிறார். மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார். ஆனால் பெற்ற தாயும் தந்தையும்? அவர்கள் குடிசையில் அல்லவா குமுறுகிறார்கள்! மகன் மாளிகையில்! அவர்கள் குதிரைக் கொட்டிலுக்கு அருகே! இதற்கா என்னை மகனாகப் பெற்றார்கள்.

எத்தனை இன்பம் கிடைத்தாலும், குதிரையை அவர் தேய்த்துக் கொண்டிருப்பதை ஒருகணம் பார்த்த உடன், இதயத்தில் ஆயிரம் தேள் அல்லவா கொட்டுகிறது.
-----------
வண்டிக்காரன் மகன் (3)

அப்பா! வேண்டுமளவு பணம் எடுத்துக்கொள் செலவுக்கு என்கிறார் ஜெமீன்தாரர்! விதவிதமான உடைகள்! வெல்வெட்டு மெத்தை! வகைவகையான உணவு! எல்லாம் எனக்கு! ஆனால் உங்களை நான் எந்தக் கோலத்தில் காண்கிறேன்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். தணலில் நிற்கிறேன்.

எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்னை. என் காதில் விழும்படி உன்னை ஏசுகிறார்களே! இதனைக் கேட்கவா எனக்குச் செவிகள்!! ஏனப்பா என்னை ஒரு சித்திரவதைக்கு ஆளாக்குகிறீர்கள்.

நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள்; நான் அவர்களுடன் உள்ளே உட்கார்ந்து கொண்டு வருகிறேன்! என்ன கொடுமை! என்ன கொடுமை!

அப்பா! நான் இருக்கும் பக்கம்கூட வருவதற்கு உமக்கு அனுமதி இல்லையே... என் எதிரிலேயே கூனிக் குறுகி நிற்கிறீரே, மாளிகைக்கு வருபவர் முன்பு!

எத்தனை முறை துடித்திருக்கிறேன்; இனியும் சகித்துக் கொள்ள முடியாது அப்பா! அப்பா! என்று கூவிக்கொண்டே உன் காலடி விழவேண்டும் அம்மா! அம்மா என்று அழுதுகொண்டே உத்தமியின் பாதத்தை வணங்கவேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லையே! கூடாது என்று கட்டுப்படுத்தி விட்டீர்களே... கிராதகனாக இரு! என்று கட்டளையிடுகிறீர்களே! இதயத்தை வெளியே எடுத்து வீசி விடு, மிருகமாகி விடு! என்று உத்திரவிட்டு விட்டீர்களே.

அப்பா! நான் இங்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் குழந்தைளுக்கு, நீங்கள் வணங்க வேண்டிய முதல் தெய்வம் தாய்! – என்று. என் தாய் அங்குத் தலைவிரி கோலமாக நிற்கக் காண்கிறேன்; என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்; தலைவலியா என்று கேட்டு உபசாரம் செய்கிறார்கள், எனக்கு!
என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறீர்களே! நாலுபேர் எதிரிலே என்னைக் கண்டால், வணங்குகிறார்களே, ஐயோ! அதைவிட வேதனை இருக்கமுடியுமா அப்பா!

ஏன் இந்த வேதனை? எத்தனை நாளைக்கு? இவ்வளவு நேசம் காட்டுகிறாரே ஜெமீன்தாரர், இப்போது உண்மையைச் சொன்னால் என்னப்பா!

வெளியே உலவப் போகிறேன் என்றால், ஜெமீன்தாரர், ஏன் அந்தச் சோம்பேறியை வண்டி கொண்டு வரச்சொல்வது தானே, ஏன் நடந்து போகவேண்டும் என்று கேட்கிறார்.

அடப்பாவிகளே! அவர் என் அப்பா! என்னை இவ்வளவு மதிப்பாக நடத்திக்கொண்டு என் அப்பாவை இவ்வளவு கேவலமாக நடத்துகிறீர்களே இது அடுக்குமா? என்று கூவிடத் தோன்றுகிறது, மாளிகை முழுவதும் அந்த ஒலி பரவவேண்டும்; இந்த ஊர் முழுவதும் கேட்கவேண்டும்; குன்றுகளலெல்லாம் பரவவேண்டும்... ஒரு வார்த்தை, ஒரு கை அசைவு, ஒரு கண் சிமிட்டுதல் போதும் அப்பா! ஓடோடி வந்து உம் பாதத்தில் விழுவேன், இந்த ஊர் அறியச் சொல்வேன், இவர் என் அப்பா! இதோ என் தாய்! என்று.

சொக்கலிங்கம் இதுபோலெல்லாம் எண்ணி எண்ணி மிகுந்த வேதனையுற்றான்.

சடையப்பனும் அவன் மனைவியும் தங்கள் மனவேதனை துளியும் வெளியே தெரியாதபடி நடந்து கொண்டார்கள்.

யாரும் காணாதபோது சொக்கலிங்கத்தைத் தொலைவிலிருந்து பார்த்துப் பூரிப்படைவார்கள்.

வேலையாட்கள், அவன் புகழ் பாடக்கேட்டு இன்புறுவார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக் கேட்பார்கள்.

எப்படியாவது யாருமறியாமல் தோட்டத்தில் உலவுவதுபோலச் சென்று பெற்றோரைக் கண்டு பேசி இதயத்துக்கு விருந்து பெற்றிடலாம் என்று புறப்பட்டாலோ, யாராவது ஒருவர் வந்துவிடுகிறார்கள் துணைக்கு என்று!!
ஜெமீன் மாளிகையிலே அவன் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆயிற்று. ஐந்தாறு தடவைகள் மட்டுமே பெற்றோரைச் சில விநாடிகள் தனியே கண்டு பேச முடிந்தது.

ஒவ்வொரு நாளும் தன் அறை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்க்கிறான், அந்தக் குடிசையை அங்குக் கோவில் கொண்டிருக்கும் தெய்வத்தை, கண்ணீரால் அபிஷேக்கிறான் இருக்குமிடத்தில் இருந்தபடியே!

அப்பா மெல்ல, தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறார்.

“வேடிக்கைக்குச் சொல்லவில்லை அம்மா! எவ்வளவு திறமையாக மூடி மறைக்கப்பட்ட இரகசியத்தையும், ஒரு சிறிய கம்பளித் துண்டினாலே கண்டுபிடித்து விடலாம்; மந்தரம் போட்ட கம்பளித் துண்டு” என்று கோகிலா கூறிவிட்டு, சொக்கலிங்கத்தைக் கவனித்தாள்.

அவன் ஓர் இலேசான புன்னகையுடன் அவளை ஒருகணம் பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று விட்டான்.

இரு மங்கையரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; வெவ்வேறு விதமான எண்ணங்கள் அந்த இருவர் உள்ளங்களிலும் உலவின.
* * *

சில நாட்களுக்குப் பிறகு பேரிடி விழுந்தது, கோகிலா கட்டிய மனக்கோட்டையில்.

ஜெமீன்தாரர், பல ஆண்டுகளாக இருந்துவந்த மானேஜரை, நீக்கிவிட்டார்.

பல ஆண்டுகள் பணியாற்றியதற்காகச் சிறிதளவு பணம் கொடுத்தார்; வேலையிலிருந்து நீக்குவதனால் வந்த வேதனை மானேஜரை வாட்டிவிட்டது.

என் தெய்வம் இருக்கும் இடத்தைவிட்டு என்னைத் துரத்துகிறார்களே என்று தனக்குள் கூறிக்கொண்டு கோகிலா குமுறினாள்.

உமாவின் தயவைத் தேடி இந்த ஆபத்தைப் போக்கிக்கொள்ளலாம் என்று அங்குச் சென்றாள்.

“எல்லாம் உன் நன்மைக்காகத்தான் இந்த ஏற்பாடு. உன் அப்பா கெட்டிக்காரர். எந்த ஜெமீனிலும் வேலை கிடைத்துவிடும் பயப்படாதே. நீ இங்கே இருப்பது ஜெமீன்தாரர், போட்டிருக்கும் திட்டத்தைக் கெடுத்துவிடும் என்று பயந்துதான் உங்களை வெளியேற்றுகிறார்” என்றாள் உமா.

விவரம் கேட்டதற்கு, உமா கூறியேவிட்டாள், சொக்கலிங்கமும் நீயும் பார்த்துக்கொள்கிற பார்வை அப்பாவுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது என்று.

தான் அறிந்த உண்மையை அப்போது சொல்லிவிடவேண்டும் என்று கோகிலா துடியாய்த் துடித்தாள். யாரோ இருமும் சத்தம் கேட்டது. சொக்கலிங்கம் சற்றுத் தொலைவிலே இருந்துகொண்டு, அமைதியாக இரு! என்று ஜாடை காட்டுவதைக் கண்டாள்.
* * *

மானேஜர், தன் குடும்பத்துடன் ஜெமீன் கிராமத்தைவிட்டுப் புறப்பட்டுப் போக ஏற்பாடாகிவிட்டது. ஜெமீன்தாருடைய பெட்டிவண்டியே மானேஜர் இரயிலடி செல்லத் தரப்பட்டது. சிபாரிசுக் கடிதம்கூடக் கொடுத்திருக்கிறார் சீரானூர் ஜெமீனுக்கு என்று வேலையாட்கள் பேசிக் கொண்டனர்.

விடிந்ததும் சென்றாக வேண்டுமே என்ற கவலை குடையும் மனத்துடன், கடைசியாக ஜெமீன் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் கோகிலம்.

எப்படியாவது சொக்கலிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்ற ஆவல்தான் உண்மையான காரணம்.

சொக்கலிங்கமும் அதே மன நிலையில்! அவன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தான். அவன் நெஞ்சத்தில் அவளைப் பற்றிய நினைவுதான்!

அவள் வரக்கண்டான்! தாவிச்சென்று அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு, தோட்டத்தின் கடைசிப் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
* * *

காற்றடித்தது; பூக்கள் உதிர்ந்தன!

எங்கோ குயில் கூவிடும் இனிய நாதம் கேட்டது.

சொக்கலிங்கம், கோகிலாவின் கண்களைத் துடைத்தபடி, “திருமண வேளையில் கண்ணீர் பொழியலாமா?” என்று கேட்டான்.

“நமக்குத் திருமணா? உண்மையாகவா? ஏதாவது கனவா?” என்று தழுதழுத்த குரலில் கோகிலா கேட்டாள்.
தன் சட்டைப் பையில்
வைத்திருந்த கம்பளித் துண்டை எடுத்துக்காட்டி, இந்தக் காதற் பரிசுமீது ஆணை! கோகிலம் நமக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்றான்.

அவன் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள் கோகிலம்.

“திட்டம், பாதி அளவுதான் நிறைவேறியிருக்கிறது, கோகிலம்!” என்றான் சொக்கலிங்கம்.

“காலமெல்லாம் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்றாள் கோகிலா.

அவன் அவளை அணைத்துக் கொண்டான். ஒரு புதிய இன்ப லோகத்திற்கு இருவரும் சென்றனர்.
குதிரைவண்டி உருண்டோடி வந்திடும் சத்தம் கேட்டது. இருவரும், நிலை உலகு திரும்பினர்.
* * *

வெள்ளைக்காரர்கள் கூட வியந்து பாராட்டும்படியான அறிவுத் தெளிவுடன் சொக்கலிங்கம் இருப்பது காணக் காண, ஜெமீன்தாரர் இப்படிப்பட்டவரைத் தமது மாளிகையிலே இருந்திடச் செய்வது ‘தமது ஜெமீனுக்கே தனிக் கௌரவம்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.

மகிழ்ச்சி அதிகமாக ஏற்படும்போதெல்லாம் ஜெமீன்தாரர், விசேஷ விருந்துக்கு ஏற்பாடு செய்வது வாடிக்கை. அந்த விருந்திலே விசேஷம் என்னவென்றால் குடும்பத்தார் தவிர வெளியார் யாரும் அதிலே கலந்துகொள்ள மாட்டார்கள்.

அத்தகைய விருந்தொன்று நடந்து கொண்டிருந்தது.

ஜெமீன்தாரர் மிக்க மகிழ்ச்சியாக இருந்தார்.

பல விஷயங்களைப் பற்றிச் சொக்கலிங்கத்திடம் பேசி மகிழ்ந்தார்.

மாடிக் கூடத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது விருந்து.

லலிதா, பலகணி வழியாக வெளிப்புறத்துக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ‘ஓ’ வென்று அலறினார்கள். பதறினர் அனைவரும்.

சொக்கலிங்கம், லலிதா பார்த்த பக்கம் பார்த்தான் பயங்கரமான காட்சி தென்பட்டது.

லலிதாவின் மூன்றாவது குழந்தை – நாலு வயது நிரம்பாதவன் தத்திதத்தி நடந்து செல்கிறான், துணை யாரும் இல்லை.

எதிர்ப்புறமிருந்து புதிதாக வாங்கி வரப்பட்டிருந்த முரட்டுக் குதிரை தூசி கிளப்பிக்கொண்டு பாய்ந்தோடி வருகிறது.

எல்லோரும் அலறினர்; என்ன செய்வது என்று தெரியாமல்.

சொக்கலிங்கம் பலகணி வழியாக வெளியே தாவி, தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு ‘பரபர’வெனக் கீழே, சருக்கு மரத்தில் இறங்குவதுபோல இறங்கி, கண்மூடிக் கண்திறப்பதற்குள் பாய்ந்தோடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மற்றோர்புறம் பாய்ந்து விட்டான். குதிரை நாலுகால் பாய்ச்சலில் சென்றது.

குழந்தையை,அவ்வளவு துணிவுடனும், சாமர்த்தியத்துடனும் சொக்கலிங்கம் தூக்கிக் கொண்டிராது போயிருப்பின்...!

நினைக்கவே நடுக்கம் எல்லோருக்கும்.

ஆண்டவனே! அட என் கண்ணே ரமா! – என்று தாய்ப்பாசம் வழிய வழிய கூவிக்கொண்டே லலிதாம்பிகா சென்று குழந்தையைச் சொக்கலிங்கத்திடமிருந்து வாங்கிக் கொண்டு உச்சிமோந்து முத்தமிட்டார்கள்.

ஜெமீன்தாரர் கட்டித் தழுவிக்கொண்டார் சொக்கலிங்கத்தை.

காளிங்கராயர், முதுகைத் தட்டிக் கொடுத்து, ‘பலே!’ என்றார்.

“ஏதாவது நேரிட்டு விட்டிருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா, இந்த வேலைக்காரப் பயல்கள் அவ்வளவு பேரையும் சவுக்கால், அடித்திருப்பேன்” என்றார் ஜெமீன்தார்.

“சவுக்குத்தான் கேடு! சுட்டுத்தள்ளிவிடவேண்டும்” என்றார் காளிங்கராயர்.

குழந்தையைக் காப்பாற்றிய மிஸ்டர் லிங்கத்தைப் பாராட்டாமல், வீரம் பேசுகிறார்களா, வீரம் என்று கூறிவிட்டுத் தன் கணவரைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் லலிதா.

உமாமகேஸ்வரி, கேலிப் புன்னகை செய்தாள்.

“சரி! சரி! நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு. விருந்து நடக்கட்டும்; மறுபடியும் எல்லோருக்கும் அல்வா!” என்று உத்திரவிட்டார் ஜெமீன்தாரர்.

வீரம் தீரம், ஆகியவை மேட்டுக்குடியினரிடம் மட்டுமே இருக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ஜெமீன்தாரர்.

நல்ல குடியில் பிறந்தவர்கள் மட்டுமே, ஆபத்தைத் துச்சமென்று எண்ணுவார்கள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

ஏழைகள், பணமில்லாதவர்கள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பண்புகளும் அவர்களிடம் கிடையாது என்பது அவர் கருத்து.

உயிர் காத்த உத்தமனாகச் சொக்கலிங்கம் இருப்பதற்குக் காரணம், அவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதுதான் என்ற தம்முடைய தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார் ஜெமீன்தாரர்.

“ஆயிரம் சொல்லுங்கள் – எல்லோரும் சமம் – அனைவரும் மனிதரே – மனிதர் யாவரும் கடவுளின் பிள்ளைகளே என்றெல்லாம் – பேதம் இருக்கத்தான் செய்கிறது.”

“பணக்காரன் ஏழை என்ற பேதம்தானே...”

“அதை நான் பெரிதாகக் கருதவில்லை. பணம் தேடிக்கொள்ளலாம், இழந்தும் விடலாம்... நான் சொல்வது பண்பு... நல்ல குடியிலே பிறந்தவரின் பண்பு... மற்றவர்களுக்கு அந்தப் பண்பு இருப்பதில்லை!”

“ஆமாமாம்! நற்குடிப் பிறந்தவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்துவிடுமே...”

“பேச்சு – நடவடிக்கை – எல்லாவற்றிலும் அந்த முத்திரை விழுந்திருக்கும்...”

“இதோ மிஸ்டர் லிங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...”

“இத்தனை பெரிய குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ள யாரால் முடியும்...”

“முடியும்...என் தாயாரால் முடியும்...”

“இதுதான் பண்பு! நற்குடி பிறந்தோர் மட்டுமே பெறக்கூடிய பண்பு. இதனை விலைகொடுத்து வாங்க முடியாது. கடலில் முத்து விளைவதுபோல இது தன்னாலே விளைவது; நற்குடி என்ற வயலில்.”

“அப்பா இன்று கவிøதா நடையில் அல்லவா பேசுகிறார்...”
“களிப்பு மிகுந்திடும்போது கவிதை தன்னாலே சுரக்குமாமே...”

“என் பேரப்பிள்ளை குதிரையின் காலின் கீழ் சிக்கிக் கொள்ளாமல் மிஸ்டர் லிங்கம் காப்பாற்றினாரே, அது அவருடைய ஆற்றலை, தைரியத்தைக் காட்டிற்று என்றுதான் எல்லோரும் பாராட்டுவர். நான் சொல்கிறேன், குழந்தைக்கு ஆபத்து என்பது தெரிந்த உடன் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு வந்ததே, அது பண்பு – அதைத்தான் நான் போற்றுகிறேன். அந்தப் பண்பு நற்குடி பிறந்ததால் வருவது. முரட்டுக் குதிரைகளை அடக்க வலிவுள்ள எந்த வேலைக்கார
னாலும் முடியும். சடையன் அடக்காத குதிரையா! ஆனால், அது வலிவைக் காட்டுகிறது. உணர்வை அல்ல. உடனே ஓடிச் சென்று காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை; இருப்பதில்லை. மிஸ்டர் லிங்கம் பண்பாளர்; நற்குடி பிறந்தவர். எப்போது கேட்டாலும் சொல்ல மறுக்கிறார் தமது பெற்றோர் யார் என்பதை. அவர் சொல்லத் தேவையே இல்லை. இன்றைய செயல் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த குடும்பத்தில் உதித்தவர் என்பதைக் காட்டிவிட்டது. இத்தகையவரை மகனாகப் பெற்ற தாய் வாழ்க! நீடூழி வாழ்க! அவளுக்கு என்னுடைய வணக்கம்!”

அப்போது வெளியே சென்று, வந்த காளிங்கராயர், “இடியட்! சுத்த முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் இப்படித்தான்...” என்று கூறுகிறார்.

“என்ன இது, ரசமான கட்டத்தில் வந்து கெடுக்கிறீர்... அப்பா எவ்வளவு உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்...”

“பேசிக் கொண்டிருக்கட்டும் உருக்கமாக, சுவையாக... அவருடைய முட்டாள் வேலையாட்கள் குழந்தைகளைக் குதிரைக் காலின் கீழ் போடட்டும்...”

“சின்ன ஜெமீன்தாரரை ஏன் குதிரை மிதித்து வந்தது... விசாரித்தீர்களா...”

“யாரை விசாரிப்பது... குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவைக் கேட்டோம்... விளையாட்டுச் சாமான் கொண்டு வர உள்ளே போய் வருவதற்குள் இந்த விபரீதம் நடந்துவிட்டதாம்...”

“அவ்வளவுதான் சொன்னாளா அந்தக் கள்ளி. இதுகள் இந்த – வேலைக்காரக் கழுதைகள் ஒரே கூட்டு – ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை – ஒப்பந்தம், நடந்தது அது அல்ல. இந்த ஆயா உள்ளே போனாள்.. விளையாட்டுச் சாமான் கொண்டுவர அல்ல... புகையிலை எடுத்து வர...”
“புகையிலையா... யாருக்கு...”

“அப்படிக் கேளுங்கள்... அந்தக் கிழவி இருக்கிறாளே, வண்டிக்காரன் சம்சாரம் அவளுக்கு...”

“புகையிலை கேட்டால் என்ன, கொடுத்தால் என்ன, அதிலே என்ன குற்றம் காண்கிறீர்.”

“அதிலே குற்றம்காண நான் என்ன முட்டாளா? இவள் போனாளே புகையிலை கொண்டுவர, அப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி வண்டிக்காரக் கிழவியிடம் சொல்லிவிட்டுப் போனாள்...”

“ஜாக்கிரதையாகத்தான் ஆயா நடந்து கொண்டிருக்கிறாள்...”

“இவள்? குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? செய்தாளா? செய்திருந்தால், குழந்தை தத்தித்தத்தி நடந்து செல்லுமா – குதிரை வருவது தெரியாமல். இவள் என்ன செய்தாள்? குழந்தையை விட்டுவிட்டு இவளும் போய்விட்டாள். எங்கே? கேட்டேன். சுண்ணாம்பு எடுத்துவரச் சென்றாளாம்...”

“குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சி இருந்ததா? எப்படி இருக்கும்! நற்குடியில் மட்டுந்தானே அத்தகைய பண்பு இருக்க முடியும். கிழவியைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியான நேரம். எங்கள் குலக்கொடியை இந்தக் குணவான் காப்பாற்றிய நேரம், அவருடைய நற்பண்புகளுக்காக நாம் எல்லோரும் அவருக்கு நம்முடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளும் நேரம்.”

“கம்பெனி பெரிய துரை வந்திருக்கிறார் தங்களைக் காண...”

“எல்லாச் சந்தோஷமும் ஒரே நேரத்தில் நேரத்தில் வருகிறது... நல்ல நாள் இன்று.... அழைத்து வா! வருக! வருக! நல்வரவு!

“விருந்தும் விழாவும் நடக்கும்போது வந்து சேர்ந்தேன்... அதிர்ஷ்டக்காரன்... யாருக்குப் பிறந்த நாள்...”

“பிறந்தநாள் விழா அல்ல... இதோ மிஸ்டர்... லிங்கம்... இவருக்குத்தான் பாராட்டு... இவர் உங்களிடம் எப்போதும் வாதாடுவார், மறுத்துப் பேசுவார் அதனாலேயே இவர் நல்லவர் அல்ல என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.”

“நான் அவரைப் பற்றி என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பது கிடக்கட்டும். இவர் பாராட்டப்பட வேண்டி ஏற்பட்ட காரணம்?”

“இன்று என் பேரக்குழந்தை குதிரையின் காலின் கீழ்ச் சிக்கிக் கொள்ள இருந்தது. தக்க சமயத்தில் பாய்ந்து சென்று காப்பாற்றினார்...”

“அப்படியா! என் பாராட்டுதல்! மிஸ்டர் லிங்கம் எப்போதுமே பிறருக்கு உதவி செய்வதைத் தமது இயல்பாகக் கொண்டவர். அவருக்காக நடத்தப்படும் விழாவிலே கலந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. ஒரு விதத்தில் எனக்கும் அவர் டீச்சர்! ஆமாம், இந்த அளவு தமிழ் நான் பேசுவது அவரால் தான்... அவர் என்னிடம் வாதாடுவார், நான் சொல்லுவதை மறுப்பார், கோபிப்பார், எல்லாம் சரி. அதனாலே எனக்கு மகிழ்ச்சி; கோபம் அல்ல. தலையாட்டிகள் வெறும் அடிமைகள். அவர்களை எந்த நாட்டிலும் மதிக்கமாட்டார்கள். இவர் உண்மைக்காக – தமக்குச் சரி என்று பட்ட உண்மைக்காகத் தைரியமாக வாதாடுவார். அதனாலேயே எனக்கு இவரிடம் தனியான மதிப்பு...”

“அப்பா! இப்போதுதான் என் மனம் சாந்தி அடைந்தது. பல தடவை சச்சரவு செய்வதுபோல வாதாடுவாரே, உங்கள் நாட்டு நடவடிக்கை, பழக்கவழக்கம் ஆகியவற்றைக்கூடக் கண்டிப்பாரே, எங்கே அவரிடம் உங்களுக்குக் கோபம் இருக்கிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன்.”

“கோபமா! எனக்கா! இப்படிப்பட்டவர்களைத்தான் நான் மதிப்பது. நான் இவரிடம் வைத்துள்ள மதிப்பைத் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன். வந்த இடத்திலே விழாவும் நடக்கிறது. என் விழாப் பரிசாகவே ஒரு சந்தோஷச் செய்தியைத் தருகிறேன். நமது இலண்டன் கம்பெனியில் மிஸ்டர் லிங்கத்தை உதவி மானேஜராக நியமித்து உத்தரவு வந்திருக்கிறது...”

“இலண்டன் கம்பெனியிலா! மிஸ்டர் லிங்கம், என் வாழ்த்துக்கள்.”

“எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

“நன்றி மிஸ்டர் நார்மன், மிக்க நன்றி... அங்குச் செல்வது என் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படும்.”

“மற்றோர் மகிழ்ச்சியான செய்தி! மிஸ்டர் நார்மன்! என் இளையமகள் உமாவை மிஸ்டர் லிங்கத்துக்குத் தர விரும்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இது உண்மையான விழாப் பரிசு! என்ன மிஸ்டர் லிங்கம்! மிஸ். உமா! சம்மதந்தானே! கேட்பானேன், கண்களே கீதம் பாடுகின்றனவே.”

அப்போது, தோட்டத்துப் பக்கமிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கதறிடும் ஒலியும் கேட்கிறது.
எல்லோரும் பதறிப்போய், கீழே ஓடினார்கள்; சத்தம் வந்த திக்குநோக்கி.
-------------
வண்டிக்காரன் மகன் (4)

குடிசைக்குப் பக்கத்தில் சடையப்பன் வீழ்ந்து கிடந்தான், இரத்த வெள்ளத்தில்.

எதிரே, துப்பாக்கியுடன் காளிங்கராயர் ஆவேசம் வந்தவர்போல் நின்று கொண்டிருந்தார்.

ஜெமீன்தாரர், நார்மன் துரையிடம் பேசிக்கொண்டிருந்தபோது; காளிங்கராயர் கீழே வந்திருக்கிறார், யாரும் அதனைக் கவனிக்கவில்லை.

கீழே சடையப்பன் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதும், சொக்கலிங்கம் அலறினான்; துடித்தான்; அவர்மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.

காரணம் தெரியாமல் மற்றவர்கள் திகைத்து நின்றனர்.

“அய்யய்போ! அநியாயம் நடந்துவிட்டதே... யார் செய்த அக்கிரமம் இது.”

“யார் செய்தது என்று கேள்... அக்கிரமம் என்று சொல்லாதே...”

“கொலை செய்துவிட்டிருக்கிறாய்.”

“இன்னும் உயிர் போகவில்லை – சாகடிக்கத்தான் சுட்டேன்... ஏன் தெரியுமா... இந்தக் கிழவன், உன்னைப் பற்றி இழிவாகப் பேசினான்... நீ... சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது... குழந்தையைக் கவனிக்காமல் இருந்ததற்காக அந்தக் கிழவியை இரண்டு தட்டு தட்டினேன்; பாய்ந்து வந்தான் கிழவன் என்மீது; அடித்து விரட்டினேன்; இந்தத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டுவந்தான் என்னைக் கொல்ல; இங்குக் காவல் காத்துக் கிடக்கும் நாய்”

மாமா சொல்வது சரி. இதுகளுக்கு இப்படிப்பட்ட இழிவான போக்குதான் இருக்கும். “துப்பாக்கியைப் பறித்துக் கொண்டேன், சுட்டேன்; சுருண்டு விழுந்தான்; செத்தான் என்று நினைத்தேன்; கிழட்டுப்பயல் கூவினான், கூப்பிடு! கூப்பிடு! என்று. யாரை? என்று கேட்கிறேன்... என் மகனை! என் மகனை! என்கிறான். என்னடா உளறல் என்கிறேன். நானா உளறுகிறேன்... உயிர்போகும் முன் உண்மையைக் கூறுகிறேன்... மாளிகையிலே இருக்கிறான் என் மகன்! எல்லோரும் பாராட்டும் அறிவாளன்! சொக்கலிங்கம்! என்கிறான்... சமையற்காரனையா சொல்லுகிறாய் என்று கேட்கிறேன், மிஸ்டர் லிங்கம், உங்களைத்தான் சொல்லுகிறேன்... நீங்கள் அவனுடைய மகனாம்! வண்டிக்காரன் மகனாம்...!!”

“ஆமடா ஆம்! நான் அவர் மகன்தான்! வண்டிக்காரன் மகனேதான் நான்! அவர் குடிசையிலே குமுறிக் கிடந்தார், நான் மாளிகையில் வாழ்வதற்காக. இன்னலையும் இழிவையும் ஏற்றுக்கொண்டார், நான் செல்வமும் சீரும் பெறவேண்டுமென்று. மிஸ்டர். நார்மன்! இவர் என் தகப்பனார்... வண்டிக்காரன் இந்த ஜெமீனில்! வாழ்ந்து கெட்டவர். நான் சிறு வயதிலேயே மாமனால் வளர்க்கப்பட்டு வந்தேன்... இங்கு வந்ததே இல்லை... மகனே! நாலு பேர் பார்த்து மதிக்கத்தக்க நிலை உனக்கு வரவேண்டும். அதற்கு இந்த ஜெமீனில் வாத்தியார் வேலையை ஏற்றுக்கொள். உனக்கு நிறைய சிபாரிசுகள் கிடைக்கும். பெரிய உத்தியோகம் கிடைக்கும். அதுவரையில் என் மகன் என்பது மட்டும் வெளியே தெரியக்கூடாது. வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், ஜெமீன் மாளிகையில் இடம் கிடைக்காது என்றார்; எவ்வளவோ மன்றாடினேன்... கேட்கவில்லை... சத்தியம் செய்திடச் சொன்னார் தத்தளித்தேன்.. மாளிகையிலே எனக்கு விருந்து, மகிழ்ச்சி; என் தகப்பனார் இங்கு, குடிசையில், குதிரைக் கொட்டிலில். என் எதிரிலேயே ஏசுவார்கள் கேவலமாக, என் இரத்தம் கொதிக்கும், கண்ணீர் கொப்புளிக்கும், அப்போதும் என்னை அந்த உத்தமர் பார்த்துத் தலை அசைப்பார். என்னைக் கட்டிப்போட்டு விட்டார்! சீமான்களுடன் சீமாட்டிகளுடன் நான் சாரட்டில் சவாரி செய்வேன்; அவர்தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார்! வண்டியின் வெல்வெட்டு மெத்தை என்னை முள்ளாய்க் குத்தும்... சிறிதளவு குளிர்காற்று வீசினாலும், எங்கள் உடலுக்குக் கம்பளிச் சட்டை – போர்வை! பனி பெய்யும், அவர் எங்களை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்வார். எல்லாம் எனக்கு இந்தச் சமூகத்தில் ஒரு புதிய அந்தஸ்து தேடித் தர... அம்மா! அம்மா!...”

“கிழவியைப் போலீஸ் கொட்டடிக்கு அனுப்பிவிட்டேன்... திருடினாள்.... பத்துப் படி கொள்... சாட்சி இருக்கிறது...”

“மிஸ்டர். நார்மன், எனக்கு வேண்டும்; இந்தத் தண்டனையும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும். மாளிகையிலே ஒரு போலி வாழ்க்கை எனக்கு. அப்பா சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார். அம்மா மீது திருட்டுக் குற்றம்...”

“உன் மீது மோசடிக் குற்றம்... ஆமாம்! இவ்வளவு நாள் உன் குடும்ப உண்மையை மறைத்து ஜெமீன் குடும்பத்துடன் உறவாடிய மோசடி.”

“மிஸ்டர் லிங்கம்! மிஸ்டர் ஜெமீன்தார்! முதலில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும்... மற்றவை பிறகு... கிளம்புங்கள்...”

* * *

சடையப்பனைக் காப்பாற்ற முடியவில்லை, எத்தனை உயர்தரமான மருத்துவர்களாலும்.

மகனைப் பெரிய உத்தியோகத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை ததும்பிக் கொண்டிருந்த இதயம், பேசுவதை நிறுத்திக் கொண்டது.

செய்ய வேண்டியது யாவும் செய்துவிட்டேன். சென்று வருகிறேன் என்று கூறுவது போலிருந்தது சடையப்பனின் முகத்தோற்றம்.

போலீசிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாயின் காலின் கீழ் விழுந்து கதறினான் சொக்கலிங்கம்.
வண்டிக்காரன் மகன்!

சடையன் மகன்!

பெரிய குடும்பம்! அந்தஸ்தான இடம் என்று எண்ணிக் கிடந்தோமே, நம்ம வண்டிக்காரன் மகன்!

அப்பனும் மகனுமாகச் சேர்ந்து நம்மை மடையர்களாக்கி விட்டார்களே...

ஜெமீன் குடும்பத்துக்கே இழிவு உண்டாக்கிவிட்டானே...

உமாவையே கொடுக்க இருந்தேனே...

முட்டாள்!

இவ்விதமான பேச்சுதான் முதலிலே ஜெமீன் மாளிகையிலே கிளம்பிற்று.

ஊர் கொதித்தது. மகனுக்கு அந்தஸ்து தேடிக் கொடுக்க வேதனைத் தீயிலே வீழ்ந்த உத்தமன் சடையப்பன் என்று ஏழையர் உலகம் போற்றிற்று.

போலீஸ், காளிங்கராயரைத் தேடிக்கொண்டிருந்தது.

சொக்கலிங்கம் அதிர்ச்சி தாங்காமல் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

நீதியை நிலைநாட்டியாக வேண்டும் என்று நார்மன் வேலை செய்து வந்தார்.

காளியங்கராயர் பிடிபட்டார்; வழக்குத் தெடரப்பட்டது.

அச்சம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று ஜெமீன்தாரரை.

நார்மனை நாடினார், காளிங்கராயரை மீட்பதற்காக.

“பிடிவாதம் வேண்டாம் மிஸ்டர். நார்மன்! பிடிவாதம் கூடாது. கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.”

“நான் எந்த உதவியும் செய்ய முடியாது. நடந்ததை அப்படியே கோர்ட்டில் சொல்லத்தான் போகிறேன்... நம்முடைய வியாபாரத் தொடர்பு இருந்தாலும் சரி... அறுந்தாலும் சரி...
* * *
“மிஸ்டர் நார்மன்! ஆத்திரத்தில் நடந்துவிட்டது... எப்படியாவது...”

“நடந்திருப்பது கொலை, மிஸ்டர் ஜெமீன்தார்... நான் எப்படி உடந்தையாக இருக்கமுடியும்... வண்டிக்காரனும் மனிதன் மிஸ்டர் ஜெமீன்தார், மனிதன்!”

“நீங்கள் மனது வைத்தால், என்மருமகன் தப்பலாம்... சாட்சிகளைத் தடுத்துவிட முடியும்.”

“முடியும் ஜெமீன்தார்! முடியும், நான் அந்த நேரத்தில் அங்கு வராமலிருந்தால் பிணத்தையே மறைத்துவிட்டிருக்கவும் முடியும். ஆனால் என்னால் உண்மையை மறைக்க முடியாது.”

“பூர்வீகமானது எங்கள் ஜெமீன், இப்போதே கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். மருமகனுக்கும் ஏதாவது கோர்ட்டிலே கிடைத்துவிட்டால் இழிவு எந்தக் காலத்திலும் போகாது மிஸ்டர் நார்மன். இருபது வருட சினேகிதம் நமக்குள்...”

“இருபது வருட வியாபாரத் தொடர்பு! மிஸ்டர் ஜெமீன்தார்! சமுதாயத்தில் உள்ள போலி அந்தஸ்து உணர்ச்சியை வளர்க்கக் கூடாத – அது எந்த நாட்டில் இருந்தாலும்... லிங்கம் சொல்வது முற்றிலும் சரி, எங்கள் நாட்டிலேயும் இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்ச்சி எங்கே இருந்தாலும், பாம்பு பாம்புதானே.”
* * *

காளிங்கராயரை விடுவிக்க ஜெமீன்தாரர் இலட்ச ரூபாய் வரையில் செலவிட்டுப் பார்த்தார்; பிரபலமான வழக்கறிஞர்கள் வாதிட்டுப் பார்த்தார்கள். பலிக்கவில்லை. அயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சோகமே உருவான நிலைபெற்றார் ஜெமீன்தாரர்.

என்ன செல்வம் இருந்து என்ன பயன் மருமகனைக் காப்பாற்ற முடியவில்லையே! ஜெமீன் குடும்பத்துக்கு இழிவு ஏற்பட்டுவிட்டதே, இந்த இழிவு எப்படி நீங்கும் என்று எண்ணி, சீமைக்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து, ஜெமீன் நிலத்தை விற்றுப் பணம் திரட்டிக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்த சொக்கலிங்கம், மெல்ல மெல்ல நலமடைந்தார்.

நார்மன் ஏற்பாடு öய்து கொடுத்திருந்த விடுதியில், தன் தாயாருடன் தங்கி இருந்தான்.

பல ஆண்டுகளாக ‘அம்மா! அம்மா!’ என்ற அந்த அன்பு மொழியைச் சொல்ல வாய்ப்புப் பெறாதிருந்த குறையைப் போக்கிக்கெள்பவன்போல, விநாடிக்கு விநாடி! ‘அம்மா! அம்மா!’ என்று அழைத்து, நான் பாவி அம்மா! ‘நான் பாதகன் அம்மா!’ காளிங்கராயர் அல்ல அம்மா அப்பாவைச் சாகடித்தது, என் சுயநலம் – என் மடமை – என் கபட நாடகம், அம்மா! எனக்கு உய்வு உண்டா! நான் மனிதன்தானா!’ என்று கூறிக் குமுறிக் கிடந்தான்.

நார்மன் அவனுக்கு ஆறுதல் கூறிட வந்தார்.

வெவ்வேறு இனம் – ஓர் இனம் ஆளும் இனமாகவும் மற்றோர் இனம் அடிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் இருந்திடினும், இருவரும் நல்ல இதயம் படைத்தவர்கள் என்பதாலே அவர்களின் நட்பு, நேர்த்திமிக்கதாக இருந்தது. நார்மன், எப்படியும் சொக்கலிங்கத்தின் மனம் உடையக்கூடாது என்பதற்காக அன்புமொழி வழங்கலானார்.

“மிஸ்டர் லிங்கம்! ஏதேதோ நடைபெற்று விட்டிருந்தாலும், எங்கள் கம்பெனி முடிவு மாறவில்லை. அந்த வேலை உமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.”

“நன்றி மிஸ்டர். நார்மன்! ஆனால் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். என்னதான் அப்பா வற்புறுத்தினாலும் நான் அந்தக் கபட நாடகம் ஆட ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. என்னுடைய உள்ளத்தின் அடிவாரத்தில் சுயநலம், சுகபோகம், ஆகியவற்றிலே ஆசை இருந்ததால்தான், நான் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டேன். நானும் ஒரு விதத்தில் குற்றவாளிதான்! அப்பாவைச் சாகடித்தது, துப்பாக்கிக் குண்டு அல்ல. என் மடமை – சமூகத்திலே கப்பிக் கொண்டுள்ள குருட்டு அறிவு! – இந்த மடமையும் குருட்டுத்தனமும் ஒழியவேண்டும்.. ஒழிக்கப்படவேண்டும்... அதற்கு நான் இருக்க வேண்டிய இடம் இலண்டன் அல்ல; இங்கு; என் நாட்டில்; தாய் நாட்டில்! என் நாட்டு மக்களிடம் ஜாதி குலம் சமயம் செல்வம் என்பவற்றின் பேரால் இரும்புப் பிடியாக இந்துவரும் மடமையைத் தொலைத்திட நான் பணியாற்றத் தீர்மானித்துவிட்டேன்... மன்னிக்கவேண்டும்...”

“மன்னிப்பதா! மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்! பணம் பதவி இவற்றினைத் துறந்திடத் துணியும் உன் பண்பினைப் பாராட்டுகிறேன்...”

“பணம் பதவி ஆகியவற்றிலே எனக்கு இருந்து வந்த ஆசைதானே, அப்பா சொன்ன திட்டத்துக்கு என்னை உடன்பட வைத்தது. உணருகிறேன்... திருந்துகிறேன்...”

“ஜெமீன்தாரர் வழக்கு சீமைக்குப் போகிறது...”

“எங்கே போனால் என்ன! வழக்கின் முடிவு எதுவானால் என்ன! நான் செய்த குற்றத்துக்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். ‘வண்டிக்காரன் மகன்’ என்றாலும் வாழ முடியும் – பளபளப்பும் போலி மரியாதையும் கிடைக்காமலிருக்கலாம் – நாணயமாக வாழ முடியும் இந்தப் பரந்த உலகத்தில் என்ற சாதாரண உண்மையை உணர முடியாதிருந்தேன். பாடம் படித்துக் கொண்டேன்; யாரும் கொடுத்திராத கட்டணம் செலுத்தி... என் தகப்பனாரின் உயிரைக் கொடுத்தது.

பக்கத்திலே கோகிலா வந்து நின்றாள்.

“என் துணைவியார்!” என்று பெருமிதத்துடன் சொக்கலிங்கம் கூறினான்.

(காஞ்சி - 1966)
--------------------

11. இதயம் இரும்பானால்

இதயம் இரும்பானால் (1)

ஊர்வலம் புறப்பட்டுவிட்டது! உலகம் அதுவரை கண்டறியாத அருமைமிகு ஊர்வலம்! இதைவிடத் திரளான மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம் அதிகம் இருந்ததுண்டு! மகிழ்ச்சி கொந்தளித்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. முடிதரித்த மன்னனை, “ஆண்டவனின் பிரதிநிதி” என்ற முறையில், பயபக்தியுடன் வரவேற்று, வழிபட, மக்கள் இருமருங்கும் கூடிநிற்க, அருளாளன் அளித்த அதிகாரம் நமக்கு அரணாக இருக்கிறது என்ற எண்ணம், பார்வையில் தெரிய, அடிபணிந்து கிடக்க, ஆணைகளை நிறைவேற்ற, கேட்டதைக் கொடுக்க, காத்துக் கிடக்கும் இந்தப் பெருங்கூட்டத்துக்கு, நாமன்றோ கண்கண்ட கடவுள் என்று எண்ணி இறும்பூதெய்திய நிலையில், மன்னர்கள் “பவனி” வந்ததுண்டு.

பிடிபட்ட நாட்டிலிருந்து காணிக்கையாகவும், சூறையாடி யும் கொண்டு வந்த பொருட்குவியலைச் சுமந்து கொண்டு, அடிமை நிலையைப் பெற்ற முன்னாள் வீரர்கள் அஞ்சி அஞ்சி நடந்துவர, களத்திலே கடும் போரிட்டு வெற்றிக்கு உழைத்த வீரர் குழாம், மகிழ்ச்சி உமிழும் விழிகளுடனும், குருதி தோய்ந்த வாளுடனும் கம்பீரமாக நடந்துவர, வாழ்க, வீரரே! வாழ்க! வெற்றி பெற்றளித்த எமது தீரரே வாழ்க!’ என்று மக்கள் கூட்டம், வாழ்த்தொலி முழங்கி, இருபுறமும் நின்றிட, அதற்கென்று அமைக்கப்பட்டதும், அடக்க விதான புரவிகள் பூட்டப்பட்டது மான, ‘தேரிலே’ அமர்ந்து, புன்னகையை இங்கும் அங்கும் வீசியபடி, நமது வாள் வலிமையால் வாழுகின்றனர் இந்த மக்கள்! நமது வீரம் தரும் வெற்றியால் ஏற்றம் பெற்றுவிட்டனர் இந்த மக்கள்! மனைகளில் மகிழ்ச்சியும், தொழிலிலே வளர்ச்சியும், வயலிலே செழிப்பும், யாரால் ஏற்படுகிறது என்பதை அறிந்துதான், இன்று வாழ்த்தி வரவேற்கிறார்கள். களத்திலே, நாம் கொட்டிய இரத்தம், இன்று இவர்களுக்கு வாழ்வு தருகிறது; அங்குச் செந்நீர் கொட்டினோம்; இதோ களிப்புக் கண்ணீரைச் சிந்துகிறார்கள்! நன்றி காட்டுகிறார்கள்! நல்ல மக்கள்! நமது மக்கள்! நம் நாட்டவர்! என்று எண்ணிக் களிப்படையும் வெற்றி விருது பெற்ற வீராதி வீரன், படை அணிவகுப்புடன் ஊர்வலம் வந்ததுண்டு! கண்கொள்ளாக் காட்சிகள்! சிந்தைக்குச் செந்தேனாய் அமைந்த இசை நிகழ்ச்சிகளுடன், ஊர்வலங்கள்! கண்களைப் பறிக்கும் அணிமணியுடன் ‘அலங்காரவல்லிகள்” அன்னமோ, பேசும் சொர்ணமோ, அல்லிக் கூட்டமோ, அழகு மயில் ஆட்டமோ என்று கவி அறியாதாரும் களிப்பால் கவிஞர் நிலை பெற்றுக் கூறிக் குதூகலிக்கும் விதமான காட்சிகளாக அமைந்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுபோன்ற ஊர்வலம் உலகிலே, இதற்கு முன்பும் நடைபெற்றதில்லை; இனி என்றும் நடைபெறாது என்று கூறத்தக்கதாக அமைந்திருந்தது.

மன்னன் ஆள்கிறான்; மக்கள் மாள்கிறார்கள்! அரண்மனை இருக்கிறது; அங்கிருந்து கிளம்பும் அழிவுப்புயல், வயலை அழிக்கிறது. வனிதையரை அழிக்கிறது. தொழிலை நாசமாக்கு கிறது; தோழர்களைத் துடிக்க வைக்கிறது! அரசன் தலைக்கு முடி கொடுத்தோம். அவன் நம் குரல் வளையை நெறிக்க ஆட்களை ஏவுகிறான்! - என்று மனம் நொந்து, பேசிப் பேசி, அழுது அழுது, கண்ணீரும் வற்றிப் போன பிறகு, கனல்கக்கி, எதிர்ப்பட்டதெல்லாம் இனிப் பிடிசாம்பலாகும்! என்று எக்காளமிட்டுக் கொண்டுள்ளனர், ஏதுமறியாதவர்கள்! எதற்கும் தலையாட்டக் கூடியவர்கள்! - என்று கருதப்பட்டுவந்த மக்கள்!

அந்த மக்கள், வீறிட்டெழுந்திருக்கும் வேளையிலே, ஊர்வலம்! மன்னன் வருகிறான் ஊர்வலமாக! இராணியுடன், பெற்றெடுத்த செல்வங்களுடன்!

கடும்புயல் வீசுகிறது; காகிதப்பூ என்ன ஆகும்? பிய்த் தெறியப்பட்டு, காற்றோடு காற்றாகி, மண்ணோடு மண்ணாகி உருவம் தெரியாமல் மறைந்து போகும்; அழிந்து போகும்! அதுவன்றோ இயற்கை.

கடும்புயல் வீசிடும்போது, ஆலும் வேலும் அடியற்று வீழுமே! காகிதப்பூ கணப்பொழுதுதான் நிற்க இயலுமோ!

ஆனால், என்னென்பது அதிசயத்தை! கடும் புயலும் அடிக்கிறது, காகிதப்பூவும் இருக்கிறது! அம்மட்டோ! காகிதப் பூவை, உடன் அழைத்து வருகிறது கடும்புயல்! ஆத்திரம் கொண்ட மக்கள், அழைத்து வருகிறார்கள், ஆற்றலிழந்த அரசனை, ஊர்வலமாக!! அவன் கண்டறியாக் காட்சி!
மன்னன் வருகிறான் ஊர்வலமாக! மக்கள் முழக்கமிடு கிறார்கள், ‘வாழ்க! வாழ்க!’ என்று. ஆனால் யார் வாழ்க என்கிறார்கள்? மக்கள் ‘வாழ்க!’ என்று முழக்கமிடுகிறார்கள்.
தாய்மார்கள், தமது குழந்தைகளுக்குக் காட்டுகிறார்கள், “அதோ, பார்! பார்! அவன்தான் மன்னன்! மிரள மிரள விழிக்கிறானே அவன்தான்! மண்ணில் போட்டெடுத்த பொம்மைபோல இருக்கிறானே, அவன்தான்!” என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள்.

“என்ன கனிவு! எவ்வளவு குழைவு! கண்ணைப்பார் கண்ணை!” என்று கோபத்தைக் கேலியில் குழைத்து, வழித் தெடுத்து வீசுகின்றனர்; கூடை சுமந்து கூலி பெற்றுக் கும்பி நிரப்பும் பெண்டிர் கூட்டம், இராணியைப் பார்த்து, இராணியாம், இராணி! அவளுக்கு என்ன அப்படி ஒரு பட்டம். அரசன் மனைவி என்று சொல், அதுபோதும் - அந்த அழிவு தேடிய ஆணவக்காரிக்கு” என்று பேசுகின்றனர் சிலர்.

“எதற்கெடுத்தாலும் கோபம்தானா? எப்போதும் சச்சரவு செய்தபடி இருக்கத்தான் வேண்டுமா? கஷ்டப்படுகிறோம், உண்மைதான்! கண்ணீர் பொழிகிறோம்; கர்த்தன் அறிவார். அவருடைய அருட்கண் திறந்தால், எல்லாத் தொல்லையும தொலைந்து போகும். அதை விட்டுவிட்டு அரசனை எதிர்ப்பது, அவன் ஆட்களை எதிர்ப்பது என்பதெல்லாம் முறை அல்லவே. ஏன் வீணாக ஆபத்தையும் பாபத்தையும் தேடிக் கொள்ளுகிறீர்கள்?” என்று ஆடவர்களுக்கு அன்பு கலந்த அறிவுரையை, அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு கூறிவந்தவர்கள்தான், ஆரணங்குகள்!
‘விதியே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம்’ என்ற தத்துவத்தைத் தேவாலயத்தார் மறந்தாலும், இந்தத் தையலர் மறப்பதில்லை!

“உழைப்பைத் திருடி உல்லாசமாக வாழுகிறார்கள், உலுத்தர்கள்” என்று ஆடவர் பேசிடும்போதும், உள்ள கஷ்டம் போதாதென்று இந்தப் பாபமும் வேறு வந்து சேருகிறதே” என்றெண்ணிக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கிடந்தவர்கள்தாம் அந்தப் பெண்கள்.
ஆனால், அவர்களும் மாறிவிட்டார்கள், ஆடவரே கண்டு ஆச்சரியப்படத்தக்க விதத்தில். ஏன் மாற மாட்டார்கள்!

கசையடியால் உடலெங்கும் இரத்தம் பீறிட்ட நிலையில், பண்ணைமேட்டிலே வீழ்ந்து கிடந்த தகப்பனை, துடிக்கத் துடிக்க, அலற அலறத் தாக்கி, சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கணவனை, முளையிலேயே இந்தப் போக்கிரித்தனமா என்று ஏசி முரட்டுப் பணியாட்கள் தாக்க, ‘ஐயோ! அம்மா! கொல்லுகிறார்களே! ’ என்று கதறி ஓடிவந்து காலடி வீழ்ந்த மகனைக்கண்டபிறகு, மாறாமல் எப்படி இருப்பார்கள்? மாறிவிட்டார்கள்! எந்த அளவுக்கு என்றால், இந்த ஆடவர்கள், சந்துமுனை நின்று பேசுவார்கள், உருட்டுவிழி காட்டினால் ஊராள்வோர் வழிக்குவந்துவிடுவார்கள் என்றெண்ணி ஏமாந்து கிடப்பார்கள்; செயல்படத் தயங்குவர் என்று கேலி பேசிவிட்டு, பெண்டிரெல்லாம், திரண்டு ஒன்றுகூடி, “இதென்ன பேயாட்ட மாடுகிறார்களே” என்று அரண்மனையுள்ளோரும் மாளிகைக் காரரும் மருண்டு கூறிடத் தக்க விதத்தில், கிடைத்ததைக் கரத்தில் எடுத்துக் கொண்டு, ஆத்திரம் தீர ஏசிக்கொண்டு, அரண்மனை நோக்கிப் படை எடுத்துச் சென்று, துப்பாக்கி காட்டியவரைத் தூ! தூ! என்றேசிவிட்டு, உள்ளே நுழைந்து, கிடந்ததை எடுத்து வீசி, நொறுக்கித் தூள் தூளாக்கி, அரண்மனையை அல்லோலகல்லோலப் படுத்திடும் அளவுக்கு மாறிவிட்டார்கள்!

அந்த அளவு மாறிவிட்ட பெண்கள், அரசனும் அரசியும், முன்பு அடங்கிக் கிடந்த மக்களால், அடக்கப்பட்ட நிலையில் ‘ஊர்வலம்’ வரக்கண்டால், ஏசாமலா இருப்பர்! கண்டபடி ஏசத்தான் செய்வர். வெற்றிக் களிப்புடன் கூச்சலிட்டனர்.

சீற்றம்! கேலி! மகிழ்ச்சி! - எல்லாம் கலந்த இரைச்சல்!

யாராருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவை எல்லாம் பேசுகிறார்கள்! பேசுகிறார்களா? கூவுகிறார்கள்! வார்த்தைகள் மட்டுந்தானா, கிளம்பின! பார்வைகள், வார்த்தை களைவிடக் கடுமையாக, வேகமாக! தேக்கிவைக்கப் பட்டிருந்த பெருவெள்ளம், அணையைப் பல இடங்களிலே, ஒரே நேரத்தில், பிளந்துவிட்டால், என்ன ஆகும்! அதுதான் இது! மன்னனை ஊர்வலமாக, மக்கள் அழைத்து வந்த காட்சி! ‘அழைத்து வந்த’ என்பதை நீக்கிவிடுங்கள். ‘இழுத்து வந்த’ என்று கொள்ளுங்கள்!

அரசனுடைய காவற்படை கூட வருகிறது! அரசனைக் காத்திடும் ஆற்றலுடன் அல்ல, தமது தலை தப்பினால் போதும் என்ற அச்சத்துடன். மக்களின் பாதுகாப்புப்படை, எண்ணிக்கையில், வலுவில், துணிவில், அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் படை, ஏது? மக்கள், பன்னெடு நாட்கள் சிந்திய கண்ணீர்த்துளிகள், அந்த வடிவம் கொண்டு விட்டன! கொடுமைகளைத் தாங்கித் தாங்கித் தவித்த மக்கள் ஈன்றெடுத்த பயங்கரக் குழவி, அந்தப் படை!

போர்ப் பயிற்சியை முறைப்படி பெறவில்லை! உண்மை. ஆனால் முறைப்படி போர்ப் பயிற்சிபெற்ற படைகளையும் சின்னாபின்னமாக்கும் துணிவு இருக்கிறது, இந்த மக்கட் படைக்கு! ஏன்? இது, சாக அஞ்சாத கூட்டம்!

‘கற்பழிக்கப்பட்ட தங்கையின் பிணத்தருகே அமர்ந்து, காதகன் கணவனாக இருக்கிறானே, நான் என்ன செய்ய இயலும்’ என்று கதறிய அண்ணன் இருக்கிறான் அந்தப் படையில்!

“சாகக் கிடக்கிறாளய்யா, என் தாய்! இந்தப் பழக்கொத்து அவளுக்காக, ஐயா!” - என்று கெஞ்சியபோது, இடியெனச் சிரிப்பொலி கிளப்பி, பழக்கொத்தைப் பறித்துக் கீழே வீசி, தன் குதிரையின் குளம்பு, பழக்கொத்தை மிதித்து துவைத்திடக்கண்டு, “இதுதான் உனக்கு! ஓடி, உயிர்பிழைத்துக் கொள்” என்று, ஆர்ப்பரித்து அமுல் செய்தவனை எதிர்த்து நின்று, அவன் வாளுக்கு இரையான, அண்ணனைக் கட்டிப் புரண்டு அழுத, தம்பி இருக்கிறான்!

வீடு வாசல் இழந்தவர்கள், வேலை இழந்து தவித்தவர்கள், களஞ்சியம் கொளுத்தப் பட்டதைக் கண்டு பதைத்தவர்கள், காலில் வீழ்ந்த போதும் கடுகளவு இரக்கமும் காட்டாதவர்களின் போக்கினால், நொந்தவர்கள் இருக்கிறார்கள், அந்தப் படையில். அவர்களுக்குப் பயிற்சி ஏன்? பயிற்சி இல்லை என்றுதான் எப்படிக் கூறிட முடியும்? நிரம்பப் பெற்றுவிட்டார்கள் பயிற்சி! கொடுமைகளைக் கண்டு கண்டு, கொடுமையைக் கொன்றொழித்தாலன்றி, நாம் வாழ முடியாது என்பதைக் கண்டு கொண்டார்கள்! இரத்தக் கறையைப் போக்க இரத்தம் கொண்டுதான் கழுவவேண்டும் என்ற பாடம் தெரிந்து கொண்டார்கள்! இரத்தம் தேடி அலைகிறார்கள்! உழைக்காமல் அலுத்திடாமல் ஊர் சொத்தை உண்டுகொழுத்து, உல்லாசம் தேடி அலைந்து, முத்துக் கலந்த பானமும், மோகனாங்கியின் அதரமும் ஒரு சேரச் சுவைத்து, அனுபவித்தவர்களின் இரத்தம் தேடி அலை கிறது, இந்தப்படை! உழைப்பாளியின் இரத்தம், மண்ணில் உறைந்து கிடந்ததைப் பார்த்த கண்களால், உலுத்தர்களின் இரத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கத் துடிக்கிறது. இந்தப் படை!

ஓநாய்களைத் துரத்திக் கொண்டு வரும் வேட்டைக்காரர்கள் என்று சொல்வது முறை! இல்லை, இல்லை! வேட்டைக்காரர்களைத் துரத்திக் கொண்டு வரும் ஓநாய்கள் என்று கூறவேண்டும் என்பர், அரசர் பெருமானின் அடிவருடிகள்! கூறட்டுமே! அதனால் என்ன!! இப்போது வேண்டியது இரத்தம்! - என்ற கூச்சலிடுகிறது, பெருங்கூட்டம்.

அந்தப் பெருங்கூட்டம் புடை சூழத்தான், பவனி வருகிறான், மன்னன், குடும்பத்துடன்.

பீரங்கி வண்டிகளை இழுத்து வருகிறார்கள்; அதன் மீது நின்றுகொண்டு, ஆர்ப்பரிக்கிறார்கள் - பெண்கள்!

துப்பாக்கி தூக்கிக்கொண்டு வருகிறார்கள்! அதன்முனையில் ரொட்டித்துண்டு, செருகப்பட்டிருக்கிறது!

செடி கொடிகளைப் பறித்தெடுக்கிறார்கள்; பீரங்கி வாயிலே திணிக்கிறார்கள்.

இரண்டு இலட்சம் இருக்கும் என்கிறார்கள், பெருந்திரள் கண்டு!

இவ்வளவு பேரும், நமக்கு விரோதிகள்! - என்று எண்ணி நடுங்குகிறாள், மன்னனை மணந்தவள்! “இவ்வளவு பேரும், என் குடிமக்களாக இருந்தவர்கள்!” - என்று எண்ணி ஆயாசப் படுகிறான் மன்னன்.

“முன்பெல்லாம், இந்தக் கூட்டத்தவர் வந்தால், “அப்பாவின் ஆட்கள்” அடித்துத் துரத்துவார்களே, இப்போது மட்டும் ஏன், இவர்கள் கூவுகிறார்கள், அப்பா தலை கவிழ்ந்தபடி இருக்கிறார்!” என்று எண்ணித் திகைக்கிறான், அழிவை வரவழைத்துக் கொண்ட அரசனின் மகன்!

“நள்ளிரவில் புகவேண்டும்; குடித்துக் கூத்தாடி, அலுத்துப் படுத்துக் கிடப்பான், மரக்கட்டைபோல! கட்டாரியால் ஓங்கி, மார்பில் குத்தவேண்டும்! உயிர் போகுமட்டும்!” - என்று நண்பனிடம், அரசனைப்பற்றி ஆத்திரத்தோடு பேசியவன், இருந்திருக்கக் கூடும், அந்த ஊர்வலத்தில்! “ஏ! முட்டாள்! நீ ஒரு யோசனை சொன்னாயே, யாருமறியாமல் அரசனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்று! இதைப் பாரடா, ஏமாளி! இதைப் பார்! இது ஆகுமா அது!!” என்று மற்றவன் கேட்டிருக்கக்கூடும். “ஆமாம்! ஒரே அடியாகச் சாகடித்து என்ன பலன்! இதோ, மன்னன், விநாடிக்கு விநாடி கொல்லப்படுகிறான்; மறுபடியும் உயிர் தரப்படுகிறது, மீண்டும் கொல்ல! மானமிழந்து, மதிப்பிழந்து, மக்களால் இழுத்து வரப்படுகிறான், மன்னன்! இது அல்லவோ, வெற்றி! மகத்தான வெற்றி! நான், மன்னனைக் கொல்லப் பார்த்தேன்! இப்போது மக்கள், மன்னனுக்கு மரண தண்டனை தருகிறார்கள்!! இதுதான் மாபெரும் வெற்றி!!” என்று அவன் கூறிச் சிரித்திருக்கக் கூடும்.

மக்கள், என்னென்ன பேசுகிறார்கள் என்று மன்னனுக்குப் புரியவில்லை! அவனுக்குத்தான் மக்களே, புரியவில்லையே! என்ன செய்வான், பாவம்!!

மகுடாபிஷேகத்தின்போதும் ஊர்வலம்; இப்போதும் ஊர்வலம்! எல்லாவற்றுக்கும் நான்தான், கிடைத்தேன்! - என்று எண்ணிக் கொண்டான், போலும்!

பாரிஸ் பட்டினத்தை நோக்கிச் செல்கிறது, ஊர்வலம்! பட்டத்தரசன் தலைநகர் வரவேண்டும் என்று மக்கள் அழைத்தனர்; ‘தலைநகரா அது? தலைபோகும் நகரம்!’ என்று கூறி, மன்னனை அங்குச் செல்லவிடாமல் தடுத்தனர், கொலு மண்டபத்துக் கொடியோர்! மக்களின் கை ஓங்கிற்று! அரசன் இருக்கும் இடம் நோக்கிப் பாய்ந்து மக்கள் வெள்ளம்! அதிலே சிக்கினான் மன்னன், குடும்பத்துடன்! வெள்ளம், பாரிஸ் நோக்கிப் பாய்கிறது! அதிலே, மிதந்து வருகிறான், மன்னன், உல்லாச ஓடத்தில். அமர்ந்து பழக்கப்பட்டவன்!

பாரிஸ் பட்டினத்தை மேயர், மன்னனை வரவேற்கிறார். “மன்னரே! தங்கள் வரவு நல்வரவாகுக!” என்று; அவருக்கும் தெரியும்; அனைவரும் அறிவர் அதன் பொருள். “பிடிபட்ட பேயனே! இனி நீ எங்கள் கைதி!” என்பதுதான் என்று. மன்னனும், உணர்ந்திருக்கிறான், “கைதியாக்கிவிட்டீர்கள். இனி, என் கதி, உங்கள் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது” என்று.

ஆயினும், சம்பிரதாயத்துக்காக மன்னன் பேசுகிறான்.

“மகிழ்ச்சியுடன் வருகிறேன்; மக்களிடம் நம்பிக்கை வைத்து வருகிறேன்” என்று அரசன் கூற, மேயர் அதை மக்களுக்கு அறிவிக்கிறான். அறிவிக்கும்போது, ‘மக்களிடம் நம்பிக்கை வைத்து’ என்ற வார்த்தைகளையே, சொல்லாமல் விட்டுவிடுவது கண்ட, இராணி நினைவுபடுத்துகிறாள், ‘நம்பிக் கையுடன்’ என்ற வார்த்தையைக் கூறும்படி!

அரசனை எந்த அளவுக்கு அச்சம் பிடித்தாட்டிற்று என்பது இதிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா.

“அழைத்தீர்களே என்று வந்திருக்கிறேன். முடியாது என்று கூறிடும்; ஆற்றலை இழந்துவிட்டேன்; வந்திருக்கிறேன். இழுத்து வந்தீர்கள் - இங்கு நிற்கிறேன். எனக்குக் கெடுதி எதுவும் செய்யாதீர்கள். கெஞ்சுகிறேன். கெடுதி செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.

திக்கற்றவன்! வலிவிழந்தவன்! உங்கள் மன்னன் உங்களிடம் தஞ்சம் புகுந்து விட்டேன்!” என்றெல்லாம், விளக்கமாகப் பேச நேரமில்லை, பேசிப் பழக்கமில்லை! எனவேதான், மன்னன், சுருக்கமாகக் கூறினான்-, ‘நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்’ என்று.

அந்த மக்கள், எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள், மன்னனிடம்! மகேசன் அருள் அவனை மன்னனாக்கிற்று! அவனுக்கு அடங்குவது ஆண்டவனுக்கு அடங்குவதாகும்! மன்னன், நாடு வாழ நல்லாட்சி செய்வான்; மக்கள் வாழ்வே என் மகிழ்ச்சி என்று எண்ணுவான். வெளிப்பகையும், உள்நாட்டிலே பசியும் பிணியும் தாக்காமல் பாதுகாப்பு அளிப்பான்! - என்றெல்லாம் நம்பினர்!

மக்களின் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டான் மன்னன்! இப்போது மக்களிடம் மன்றாடுகிறான், ‘உங்களிடம் நம்பிக்கை வைத்துத்தான் வந்திருக்கிறேன்’ என்று.

“ரொட்டி கேட்டோம்; இவன் படை விரட்டி அடித்தது! கருணை கேட்டோம், கசைஅடி கொடுத்தனர். இந்தப் பாவம் சும்மா விடாதய்யா என்று பேசினர். பாஸ்ட்டிலி சிறையில் தள்ளினார், அதிகாரிகள்! இப்போது, நம்மிடம் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாராம், இந்த நல்லவர்! எப்படி இருக்கிறது, வேடிக்கை!! என்று அல்லவா, மக்கள் கேலி பேசியிருப்பர்.

பஞ்சம் தாக்கிற்று மக்களை; பவனி நடத்துகிறார்கள்! அதிலே, மன்னன் மட்டுமல்ல, அவன் இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட, ‘ஐம்பது வண்டி தானியங்கள்’ உடன்கொண்டு வரப்பட்டன.

தங்கமும், தந்தமும், பரியும் கரியும், முத்தும் அங்கியும் பவள மாலையும் - இப்படிப் பொருள்கள் கொண்டு வருவர்; வெற்றிபெற்ற படையினர், வேற்று நாட்டிலிருந்து.

இங்கு, அரண்மனையை நோக்கிக் கிளம்பிய படை ஐம்பது வண்டி தானிய உள்ளத்தினன் ஒருவன் எடுத்து விளக்கினான்.

‘நண்பர்களே! தைரியமாக இருங்கள்! ரொட்டி! ரொட்டி! என்று ஏங்கித் தவிக்காதீர்கள்! இனி ரொட்டிக்குப் பஞ்சமில்லை!’

மக்களுக்கு மகிழ்ச்சி! அவர்கள், ஆட்சி முறை மாற வேண்டுமென்று விரும்பக் காரணமேகூட அரசியல் முறைகளுக் கான தத்துவ ஆராய்ச்சி அல்ல; அந்த ஆட்சிமுறையால், அவர்களைப் பட்டினி வாட்டியது! அதுதான் காரணம்.

ஆகவே, இனி ‘ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை!’ என்று தமது நண்பனொருவன் கூறக்கேட்டதும் மகிழ்ச்சி பிறந்தது. மறுகணம், கவலை குடைந்தது. “ஐம்பது வண்டி கோதுமை, எத்தனை நாளைக்குக் காணும்! இவன், இனி ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை என்கிறானே! எப்படி?” என்று எண்ணித் திகைத்தனர். அவர்களின் திகைப்பை அறிந்தவன்போல, அவன் தொடர்ந்து பேசினான்.
“ரொட்டிக்கு இனிப் பஞ்சம் இல்லை. ஏனெனில், இதோ ரொட்டி சுடுபவன், ரொட்டிக்காரன் மனைவி, ரொட்டிக்காரன் பிள்ளை, இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டோம்.”
எல்லா ஒலியையும் மீறி அல்லவா, கை ஒலி கிளம்பி இருக்கும், அவன் பேச்சு கேட்டு.

ஆணவம் கலந்த கேலிப்பேச்சா அது!

கேலி இருந்தது; ஆணவம் கூடத்தான்! ஆனால், அது மட்டுமல்ல, அதன் ஊடே மறுக்கமுடியாத ஓர் அரசியல் தத்துவமும் இருந்தது. அரசன் கடமை, மக்களுக்கு உணவளிக்க வேண்டியது; வாழ வைக்க வேண்டியது; அதற்குத் தான் அரசன்! அதைச் செய்யத் தவறினால், கேட்க, தண்டிக்க, நீக்க, ஒழிக்க, மக்களுக்கு அதிகாரம் உண்டு! - என்ற ரூசோ போன்ற அரசியல் அறிவாளிகளின் ஆழ்ந்த கருத்துகள் அவ்வளவும், அந்தக் கேலிப்பேச்சிலே குழைந்து இருந்தது.

1789ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள், ஆறாம் நாள், நடை பெற்றது, அந்த அரிய ஊர்வலம். மன்னன் புதிய இடம் வந்தான்! மக்கள் புதிய பலம் பெற்றனர்.

அன்று, இரவு பதினொரு மணி ஆகிவிட்டதாம், அரச குடும்பம், மாடி செல்ல!

வழிகாட்ட, தீப்பந்தம் பிடித்து நின்றனர், மக்கள் படையினர்!

தீப்பந்தம்! வழிகாட்டவும் உதவும்; கொளுத்தவும் பயன்படும்.


மன்னன் தலையில் சிவப்புத் தொப்பி! அந்தத் தொப்பியில் மக்கள் தயாரித்த கொடிச் சின்னம்!

சொந்த உடையைப் பறித்துக் கொண்டு, சிறை உடை கொடுத்துக் கைதிகளை உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்களல்லவா!

மன்னன், மாடி சென்றான்; மக்கள் களிநடம் புரிந்தனர்.

‘இது சிறைதானே!’ என்று எண்ணினான் மன்னன்; ‘இவன் நமது கைதிதானே’ என்று எக்காளமிட்டனர் மக்கள் ‘துலியர்ஸ் அரண்மனை’ என்ற பெயருடைய, அந்தக் கட்டிடம் கற்களாலானவை! அவை என்ன பேசும்?

இனி வரப்போகும் பயங்கரத்தை அறிவிப்பதுபோல, அரச குடும்பம், நடந்தபோது, எழுந்த காலடிச் சத்தம் இருந்திருக்கும்.

வரலாற்றுச் சுவடியிலே, காலம் ஒரு புதிய வரியைச் சேர்த்தது, ‘மக்கள் கொதித்தெழுந்தால், மன்னன் சிறைப்படுவான்’ என்று.

அதுதானா, கடைசி வரி? இல்லை! மேலும் எழுதக் காலம் துடித்துக் கொண்டிருந்தது. ‘இது எங்கள் காலம்!’ என்று எக்காளமிட்டபடி, மக்கள் திரள் திரளாக, பாரிஸ் பட்டினத்தில் உலவி வந்தனர்.

இழந்ததை எண்ணிய திகைப்பு, அரச குடும்பத்துக்கு; தூக்கம் வரவில்லை!

பெற்ற புதிய வெற்றியை எண்ணும்போது கட்டுக்கடங்காத களிப்பு மக்களுக்கு; அவர்களுக்கும் தூக்கம் வரவில்லை!

வேதனையும் வெட்கமும் அதிகப்படும் என்ற பயத்தால், அரச குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூசினர்.

ஒருவருக்கொருவர் பேசிப்பேசி, களிப்பைப் பன்மடங்கு பெருக்கி மகிழ்ந்தனர், மக்கள்.
---------
இதயம் இரும்பானால் (2)
பாறையின் இடுக்கில், அடிபட்ட கருநாகம், ஊர்ந்து கிடக்கிறது.

கடலலை, பாறைமீது பாய்கிறது; திவலைகள், பதுங்கிக் கிடக்கும் பாம்பின்மீது விழுகின்றன.

எந்த நேரத்திலும், அலையின் அளவும் வேகமும் அதிகரிக்கக் கூடும்; பாம்பு, அடித்துக் கொண்டு போகப்படக் கூடும்.

இந்த நேரத்துக்கு, இந்த இடம் என்ற அளவிலே, பாம்பு பதுங்கி இருக்கிறது.

அடிபட்டதால் ஏற்பட்ட வலி, சீறிடக்கூட வலிவு இல்லை; மூச்சு சற்றுப் பலமாக இருக்கிறது.
அன்றைய நிலைமை அது போன்றதே! ஆனால் ஒரு வித்தியாசம். பாம்பு பதுங்கி இருக்கும் இடம் அலைக்குத் தெரிய முடியாது; ஆனால் மக்கள் நன்றாக அறிவார்கள், மன்னன் இருக்கும் இடம், நிலை இரண்டையும்!

‘பாரிஸ் பட்டினத்தோரே! அறிவிழந்த பாரிஸ் பட்டினத்தோரே! மன்னனையும் அவன் மகனையும் உங்கள் கோட்டைக் குள்ளேயே காவல் வையுங்கள் என்று சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டது. அரசு குடும்பம், தப்பித்துக் கொண்டோட திட்டமிட்டிருக்கிறது. மந்த மதியினரே! அதை அறியாமல் உறங்கிக் கிடக்கிறீர், திறமையாகக் காவலிருங்கள்! அந்த ஆஸ்ட்டிரியா நாட்டவளை, அவள் மைத்துனனை, மக்களை, குடும்பத்தை, அரண்மனையில் அடைத்துப் பூட்டி வையுங்கள். தவறினால், இலட்சக்கணக்கான பிரான்சுக் குடி மக்களுக்குக் கல்லறை தோண்டியவர்களாவீர்கள்! எச்சரிக்கிறேன்! ஏமாளித்தனத்தால், எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்! மன்னன் தப்பி ஓட முயல்கிறான். திட்டம் தயாராகிவிட்டது!

“மக்கள் நண்பன்” என்ற இதழில், மாராட் எனும் மக்கட் தலைவன், இவ்விதம் எழுதினான்.

படித்தனர்; பதைத்தனர்; பயந்தனர். ஆமாம்! அரசன் தப்பிச் சென்றுவிட்டால் அழிவு அல்லவா நமக்கு! ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளும், அவன் கண்ணீர் கண்டு, படையுடன் வருவார்களே, இங்கு. எப்படி நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணினார். அச்சம் மனத்தை வாட்டலாயிற்று.

“தப்பி ஓடவா! திட்டமா! யார்? மன்னனா? பைத்தியம், பைத்தியம்! விழித்த கண்மூடாமல் காவல் புரிகிறார்கள், தெரியுமா? இதற்கென்றே, ஒரு தேர்ச்சிபெற்ற படை இருக்கிறது. கீர்த்திமிக்க தலைவன் இருக்கிறான். அரச குடும்பத்தில் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும், கூர்மையான கண்கள், பலப்பல நூறு! ஒருதுளி சந்தேகம் ஏற்பட்டாலும், மிகக் கூர்மையான வாட்களை உருவிக் கொண்டு தாக்கக் கிளம்பத் தயாராக உள்ளவர்கள் ஆயிரவருக்குமேல்! மன்னனாவது தப்பி ஓடுவதாவது! நடைபெறாது நண்பர்களே! ஒருநாளும் நடைபெறாது.” என்று சிலர் பேசினர்.

ஆனால், எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதியவர், மாராட்! மக்கள் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பர்? மக்களின் நல்வாழ்வுக்காக எதையும் அழிக்கலாம் என்று துணிந்து பேசியும் எழுதியும் வந்த மாராட், தெளிவு அதிகம் பெறமுடியாத மக்கள் இடையிலே அளவற்ற செல்வாக்கு பெற்றிருந்தான். கொடியோரைக் கொன்று குவித்தால் என்ன தவறு? அவர்களைக் கொல்லாது விட்டாலோ, அவர்கள் ஏழை எளியோரைக் கொன்று குவிப்பார்கள்! - என்று பேசுவதும் எழுதுவதும், மாராட்டின் வாடிக்கை.

சுவிட்சர்லந்திலே, ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்த மாராட், பிரான்சிலே, மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மன்னரின் காவற்படையின் மருத்துவனாகப் பணியாற்றிப் புரட்சி இயக்கத் துக்காகத் தொழிலை விட்டுவிட்டுப் பொறி எனக் கிளம்பி, பெரு நெருப்பாக மாறிவிட்டவன். இரத்தத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் மாராட் பேசுவது இரத்த வெறி ஊட்டுகிறது என்று கூறி அருவருப்படைவார்கள்! ஆனால் ஏழைகளோ, எங்கள் சார்பாக, துளியும் தயக்கமின்றிப் பேச மாராட் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று புகழ்ந்து கூறுவர். ஆதிக்கக்காரர்களை மட்டுமல்ல, அரசியல் விரோதிகளையும் அழித்தொழிப்பதிலே, மாராட் தயக்கம் காட்டியதில்லை. அதுபோன்றே ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டபோது சாகசம் பல செய்து தப்பித்துக் கொள்வதிலும் திறமைமிக்கவனாக இருந்தான்.

இத்தனைக்கும் நோய் அவனை வாட்டியபடி இருந்தது.

அவனே பிரான்சைப் பீடித்துக் கொண்டுள்ள ஒரு நோய் தானே! - என்று அவனை அருவருத்தோர் கூறினர். ஆனால் எதிரே அவனைக் கண்டால் அஞ்சுவர். காரணம் எண்ணற்ற மக்கள் அவனிடம் அளவற்ற பற்று வைத்திருந்தனர்.

எனவே, மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருக்கிறான் என்று மாராட் எழுதியதும், அந்தச் செய்தி, காட்டுத் தீயெனப் பரவிற்று.

மற்ற யாரும் கண்டறியா முன்பு, மாராட், இதைக் கண்டறிந்து கூறியது, அவனுடைய திறமைக்கு ஒரு சான்றாகி விட்டது. மன்னன் நடத்தத் திட்டமிட்ட ‘சதி’ மாராட்டுக்குத் தெரிய நேரிடச் செய்ததும், ஒரு விசித்திரமான நிகழ்ச்சியினால்தான்.

மாராட் நடத்தி வந்த ‘மக்கள் நண்பன்’ என்ற இதழுக்கு, செய்திகள் திரட்டித் தருபவர்களில், ஜாவார்தின் என்பவனும் ஒருவன். புரட்சி இயக்க ஏட்டுக்குப் பணியாற்றிக் கொண்டிருந்ததோடு, இவன் ஒரு காதலியையும் பெற்றிருந்தான். மாளிகைக்காரர் பலரை வாடிக்கைக்காரராகப் பெற்றுத் துணி வெளுக்கும் தொழில் நடத்தி வந்தவள், இவன் காதலி.

மாளிகையிலே இருந்து அனுப்பப்பட்ட சட்டை ஒன்றில் நைந்த நிலையில் ஒரு கடிதம் இருந்திடக் கண்டு, படித்துப் பார்த்தாள் அந்தப் பெண். கடிதத்தில், ‘அனுமதிச் சீட்டுகள் தயாராகிவிட்டன. வண்டிகள் ஏற்பாடாகிவிட்டன’ என்று எழுதப்பட்டிருந்தது. ஜாவார்தீனிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்தாள்; மாராட்டிடம் அவன் தந்தான். தீப்பொறி பறக்க, மாராட் இதழில் எழுதினான்; மக்கள் பதைத்தெழுந்தனர். என்ன செய்கிறது காவற்படை? என்ன செய்கிறான் காவற்படைத் தலைவன் லாபாட்டி என்று முழக்கமிட்டனர். பாரிஸ் பட்டினம் முழுவதும் இதே பேச்சாகிவிட்டது.

வெறும் வதந்தியுமல்ல இது; உண்மையில் மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்தான்.

மன்னன் இருந்துவந்த இடத்தை ஆறு நூறு வீரர்கள் கண்காணித்து நின்றனர். உள்ளே, எப்பக்கம் திரும்பினாலும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! மன்னன் அறைக்கும் இராணியின் அறைக்கும் இடையே உள்ள தாழ்வாரத்தில் கூடக் காவல்! அரச குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடப் பயந்தனர் - அவ்வளவு கண்டிப்பு, காவல்! ஆயினும், இவ்வளவுக்கும் இடையே, அரச குடும்பத்தார், தப்பித்துக் கொண்டு போய்விடத் திட்டம் தயாரித்திட முடிந்தது.

மன்னன் ஆட்சி இருந்தால் மட்டுமே, தமக்குச் ‘சுக போக’ வாழ்வு உண்டு என்பதால், பதுங்கிக் கிடந்த பிரபுக்களில் சிலரும், ஜெபமாலை காட்டி மக்களை மயக்கித் திரிந்த மதத் தலைவர் சிலரும், மன்னன் தப்பி ஓட வழிவகுத்துக் கொண்டிருந்தனர். மன்னன் வெளிநாடு சென்றால், படை திரட்டுவான்; படை வந்தால் புரட்சியை ஒழித்துக் கட்டலாம் - பிறகு... பிறகா! மது, மங்கை, மகிழ்ச்சி - என்று அவர்கட்கு எண்ணம்.

லூயி மன்னன் ஆட்சி நடத்த வேண்டுமா? அல்லது விலக்கப்படவேண்டுமா? மக்களின் நல்வாழ்வுக்கான முறையில் சட்டதிட்டம் தீட்டப்பட்டு அதற்கு அடங்கி மன்னன் நடந்து கொள்வதாக இசைவு தந்தால் ஆள அனுமதிக்கலாமா?

ஏன் மன்னராட்சி முறை இருக்க வேண்டும் - அதைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் ஓயாமல் மக்கள் கண் விழிப்பாக இருக்க வேண்டுமா? ஏன் இந்த வீண் தொல்லை? முறையையே மாற்றிவிட்டால் என்ன?

பலர் பல்வேறு கோணங்களிலிருந்து, பிரச்சினையை ஆராயத் தலைப்பட்டனர்; விவாதம் வலுவாகிக்கொண்டு வந்தது.

அரசியல் சட்டம், என்னென்ன உரிமைகளை மக்கள் பெறத்தக்கதாக அமைய வேண்டும் என்பது பற்றியும் பேச்சுப்புயல் வீசிக்கொண்டிருந்தது.

“ஆளப்பிறந்தவன்” என்ற விருதுகொண்டவன் அரண் மனையில் இருந்துவர அனுமதி அளித்த மக்கள், ஆட்சிமுறை எப்படி இருப்பது என்பதைப் பேசி வகுத்துக் கொள்ளலாம்; பிறகு, மன்னனைப் பற்றிய பிரச்சனை எளிதாகிவிடும் என்று எண்ணினர்.

பிரான்சு எப்படி ஆளப்பட வேண்டும் என்பது பற்றி மட்டுமல்ல, வெளிநாட்டவரின் பகையையும் தாக்குதலையும் எவ்விதம் எதிர்த்து நின்று வெற்றி காண்பது என்பது பற்றியும், மக்கள் தலைவர்கள், கவனிக்க வேண்டி வந்தது.

“நாம் அறிவிக்கிறோம்” என்று மன்னன் முறையில், மக்கள் தலைவர்கள், எவரும் பேச முடியாதல்லவா!

கருத்துக்கான காரணங்களை விளக்க வேண்டும், கேள்வி களுக்குப் பதிலளிக்க வேண்டும், ஐயப்பாடுகளைப் போக்க வேண்டும், மறுப்புக்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் பதிலளிக்க வேண்டும், ஏளனத்தைக் கேட்டு எரிச்சலடையக்கூடாது. எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது! - இப்படி எத்தனை எத்தனையோ உள்ளனவே முறைகள்! காலம் வேண்டும் அதற்கு! நெஞ்சில் உரமும் தெளிவும் வேண்டும்! நேசங்கள் முறிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டதற் கெல்லாம் கடுமையான மொழியால், எதிர்ப்புக் கூறிக் கொண்டே இருப்போம், கேட்டுக் கேட்டு மனம் வெதும்பித் தானாக ஓடிவிடட்டும். பிறகு விரட்டிவிட்டோம் என்ற மனத்திருப்தி பெறுவோம் என்ற போக்கினர் இருப்பர்; நிலைமையை அறிந்து நடந்து கொள்ளவேண்டும். எது கவனிக்கப்பட வேண்டியது? மனதுக்குச் சரி என்று பட்ட திட்டமா? அல்லது மனத்தை நோகச் செய்யும் போக்குடையாருடன் கூடிக் காரியமாற்றல் இயலுமா, இயலாதா என்ற பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதா? எது முக்கியம் - என்பதைத் தீர்மானிக்கவேண்டும். இப்படி எத்தனையோ சிக்கல்கள், மக்கள் மன்றத்தில் அமர்ந்து, புதிய திட்டம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு.

கவிழ்க்கப்படுவதற்கு முன்பு வரையில் மன்னனுக்கு எல்லா மக்களிலும் தான் மேம்பட்டவன் என்ற அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது; மக்களில் பெரும்பாலாருக்கும் அந்தப் பயம் இருக்கிறது. மக்கள் தலைவர்கள் விஷயம் அப்படி அல்ல! இவன் எப்படித் தலைவனானான்? எனக்குத் தெரியாதா! - என்று ஆணவம் கக்கி நிற்போரும், ‘இவனெல்லாம் தலைவனாம்! என்று ஏளனம் பேசுவோரும், ‘இவனை ஒழித்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்’ என்று சூளுரைப்போரும் மக்கள் மன்றங்களிலே இருப்பர்!

‘என்னால்தான் எல்லாம் ஆகும்! எனக்குத்தான் எதுவும் தெரியும்! என்னைத்தான் எவரும் நம்புவர்! எனக்கு மட்டுமே எல்லா ஆற்றலும் உண்டு’ - என்ற எண்ணத்தை நோயளவுக்கு முற்ற வைத்துக் கொண்டவர்கள் இருந்திடுவர்.

சமரச நோக்கம் சாகசமாகவும், கூடிப் பணியாற்ற வேண்டும் என்ற போக்கு ஒட்டிக் கொள்ளும் வித்தை என்றும் பொறுமை சொரணை கெட்ட தன்மை என்றும் திரித்துக் கூறப்படும்.

இங்கிருந்து அங்குச் செல்ல வேண்டும் - என்ற ஆசை எழக்கூடும்.

இடம் பிடிக்கும் இயல்பும், இன்னொருவருக்கு இடமளிக்க மனமில்லாத தன்மையும் ஏற்பட்டுவிடக் கூடும்.

இவருடன் கூடினால் இது கிடைக்கும், அவரை ஒழித்தால், இவருக்கு நம்மிடம் பற்று ஏற்படும் என்ற கணக்குகள் போட வேண்டும்.

அப்பப்பா! எத்தனை ‘ஆபாசங்கள்’ எழும், எத்துணை எண்ணங்கள் கிளம்பும், என்னென்ன வகையான எரிச்சல்கள் மூட்டப்படக்கூடும்! - மக்கட் தலைவர்கட்கிடையில்!

இவையாவும், எழுச்சி பெற்ற பிரான்சிலே, மக்கள் மன்றத்திலே, தலைவிரித்தாட ஆரம்பித்தன. இவை தவிர்க்க முடியாதவை என்றபோதிலும், பிரான்சிலே, மிக அதிகமான அளவு தோன்றி, நாட்டை அலைக் கழித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.

மன்னனின் கொட்டம் அடக்கப்பட்டதும், சீமான்களின் ஆணவம் தகர்க்கப்பட்டதும், மதப்போர்வைக்குள் இருந்து வந்த மதோன்மத்தர்களின் மமதை மட்டந்தட்டப்பட்டதும், என்னால் தான், என் முறையினால்தான் என்று பெருமை பேசி, உரிமை கொண்டாடிக் கட்சி கட்டினர் பலரும்.

‘என்னால்தான், எனது முறையினால்தான் என்ற பேச்சு வளர்ந்து வளர்ந்தது, இனியும் என் முறைப்படி நாடு நடத்தப் பட்டால் மட்டுமே நலன் கிடைக்கும்; மற்ற முறை அவ்வளவும் நாசமே ஏற்படுத்தும்’ என்று கூறிடவும், அந்தக் காரணம் காட்டி நாடாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் என்று கேட்கும் போக்கும் கொக்கரித்தது.

மன்னன் மனம் மகிழும்படி நடந்துகொண்டு, பட்டமும் பதவியும் பெற்றனர், பலர் முன்பு.

மக்கள் மன்றத்திலும், இதே போன்றார் கிளம்பினர்! பொறிபறக்கப் பேசுவதாலும், தீவிர திட்டங்களைத் தீட்டு வதாலும், செல்வாக்குப் பெற முயன்றனர். அதற்காகப் பலர், சிறுசிறு முகாம் அமைத்துக் கொண்டனர். முகாமுக்கு முகாம் சண்டை! முகாமுக்குள்ளாகவே சண்டை!! வெட்டு, குத்து ஏராளம்! வீண்கலாம் அதிக அளவில்!

மந்தமதியும், எதையும் சாதிக்கத் தெரியாத போக்கும் கொண்டவனாக மன்னன் பதினாறாம் லூயி இருந்ததால், விபரீதம் ஏற்படவில்லை. தருணமறிந்து வேலை துவக்கக் கூடிய தந்திரக்காரன், மன்னனாக இருந்திருப்பின், மக்கட் தலைவர்களுக்குள்ளே கிளம்பிவிட்ட, வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி இருந்திருப்பான். ஒரு கட்சி மீது மற்றோர் கட்சியை ஏவி விட்டும், கட்சிக்குள்ளயே,சிண்டு முடிந்துவிட்டும், தனக்கு வலிவு தேடிக் கொண்டிருப்பான். பதினாறாம் லூயி, அப்படிப்பட்ட மன்னனல்ல.

எப்படித் தப்பித்துக் கொண்டு ஓடிவிடலாம்? எந்தெந்த மன்னர்கள், உதவி செய்ய வருவர்? - என்ற இவைபற்றியே, எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அரசியோ, “இந்த நாட்டு எல்லையைக் கடந்தால், எல்லாத் தொல்லையும் ஒழிந்துபோகும். பழிதீர்த்துக் கொள்ளமுடியும். படுகுழிவெட்டிப் புரட்சி செய்த புல்லர்களைப் போட்டுப் புதைத்திட முடியும். மன்னனை எதிர்க்கும் துணிவு, என்றென்றும் ஏற்படமுடியாதபடி, ‘பயங்கர ’ முறைகளைக் கையாண்டு, புரட்சியைப் பொசுக்கித் தள்ளிவிட முடியும். மன்னர்கள் பலர் உளர், பிரான்சுக்கு வெளியே! அவர்களை அணுகி, வந்த ஆபத்து எமக்கு மட்டுமல்ல, மன்னர் ஆட்சி முறைக்கே ஆபத்து - பிரான்சில் தானே, என்று வாளா இருந்தீரேல், நாளை உமது நாடும் இதே நிலைதான் கொள்ளும். உடனே கிளம்புங்கள் சீறிப் போரிடத் துணிந்துவிட்ட சிறுமதியாளரை ஒழித்துக் கட்டவேண்டும்” என்ன வேண்டும் ஏமாளிகளே! என்னவேண்டும்! இன்பச் சுதந்திரமா! இதோ பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி, குண்டு மாரி பொழிந்து, கூண்டோடு ஒழித்துவிட வேண்டும் அந்தக் கொடியவர்களை” - என்றுதான் எண்ணி எண்ணித் திட்டமிட்டபடி இருந்தாள்.

மன்னன், வெளிநாடு சென்று, படையுடன் வந்து, மக்களைத் தாக்கக்கூடும் என்று மக்கள்கூடத்தான் பயந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டிலே குழப்பமும், வெளிநாட்டுப் படையின் தாக்குதலும், ஒரேபோது ஏற்பட்டுவிடுமானால் ஆபத்தாகி விடக்கூடும் என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர்.

ஆனால், அரச குடும்பமே, கண்காணிப்பில் இருந்து வருகிறது. எனவே, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று எண்ணி ஓரளவு நிம்மதியாக இருந்தனர்.

அந்தச் சமயமாகப் பார்த்துத்தான், ‘சதி’ தயாரிக்கப்பட்டது.

ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனொருவன், இதற்குத் துணை நின்றான் - அவனுக்கு அறிமுகமான சீமாட்டி, தன் தோழிகளுடனும், பணியாட்களுடனும், குழந்தைகளுடனும் வெளிநாடு செல்ல அரசாங்க அனுமதிச் சீட்டுப் பெற்றிருந்தாள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, மன்னன், தன் குடும்பத்துடன், மாறுவேடமணிந்து கொண்டு, சென்றுவிடத் தீர்மானித்தான்.

ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகன், வண்டியோட்டியாக வடிவம் பூண்டான். மன்னனோ, பணியாள்! அரசி, தோழி! தோழி, சீமாட்டி வேடத்தில்! இப்படி ஏற்பாடுகள்!

அரச குடும்பத்தார் அந்தச் சமயத்திலும், தமது ‘அட்டகாச’ போக்கை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. வெளியே சென்றதும், அந்தஸ்துக்கு ஏற்ற உடை வேண்டுமே என்றாள், அரசி பணிப்பெண் சென்று, பல கடைகளிலே, விலையுயர்ந்த ஆடைகளாக வாங்கினாள், மிக அதிகமான அளவு. கடைக்காரருக்கே சந்தேகம். தப்பிப் பிழைத்தோடும் வேளையிலும், ‘தர்பார்முறை’ கெடக்கூடாதாம்! அதனால் பல ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டி வந்தது. நேரம் வீணாக்கப்பட்டது. கடைசியில், காவலர்கள் கவனிக்காமல் விட்டிருந்த பக்கமாக, வெளியேறினர். ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனல்லவா, வண்டி ஓட்டுகிறான்! அவனுக்கு, பாரீஸ் பட்டினத்துப் பாதைகள் சரியாகத் தெரியவில்லை; சுற்றிச்சுற்றி வருகிறது வண்டி.

அரசகுடும்பம் அறியுமா, தலைநகரின் வீதிகளை.

இல்லை! தோழிகள்? அவர்கட்கு மட்டுமென்ன?

அரண்மனை தெரியும், அலங்காரக் கடை தெரியும், நாட்டிய அரங்கம் தெரியும், பூந்தோட்டம் தெரியும், மற்ற இடம் தெரியாதே! ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து வளரும் நேரம்! வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள், அரச குடும்பத்தார். கடைசியில், ஒரு காவலாளியைக் கேட்டு வழி தெரிந்து கொண்டனர். வண்டி கிளம்பிற்று. பாரிஸ் பட்டணத்தைக் கடந்தாயிற்று.

பொழுது புலர்ந்தது; விஷயம் வெளிவந்தது. தப்பி விட்டார்கள்! ஓடி விட்டார்கள்! காவலிருந்தோர் ஏமாந்தனர்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவிட்டனர். சூது சூழ்ச்சி செய்ய மாட்டேன், சதி ஏதும் புரியமாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தான், அரசப் பதவியில் உள்ள அந்த அற்பன்! ஓடிவிட்டானே இப்படி - என்று மக்கள் கூறிக் கொதித்தனர். தேடலாயினர். ஓடலாயினர்.

அரச குடும்பமோ, வேறோர் ஊர் போய்ச் சேர்ந்தது! பாரிஸ் அல்லோலகல்லோலப் படுகிறது! மாறு வேடமணிந்த மன்னன், தன் குடும்பத்துடன் வருகிறான், வேறு நகருக்குள். அந்த ஊர், அஞ்சல் நிலைய அலுவலரின் மகன், அரசனை அடையாளம் கண்டுகொண்டான்.

“யார் நீ! எடு, அனுமதிச் சீட்டு!” அவன் கேட்கிறான்.

அந்த நேரத்தில், அஞ்சா நெஞ்சம் காட்டவோ, ஆற்றலுடன் காரியமாற்றவோ, இயலவில்லை மன்னனால்! எந்த நேரத்தில்தான் முடிந்தது, பாவம்! இளித்தான்; விழித்தான்; குளறினான்!

“சரி! இனிப் பயன் இல்லை. நாங்கள்தான். எங்குப் போக வேண்டும், வழிகாட்டு” என்று மன்னன் கூறி விட்டான்.

பலநாள் பாடுபட்டுத் தீட்டிய திட்டம், நொடிப்பொழுதில் பொடிப் பொடியாகி விட்டது. அரசியின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்! மன்னன், அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரியின் வீட்டு மாடிக்கு மன்னனை அழைத்துச் சென்றனர்; சென்றதும், மன்னன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்! ரொட்டியும் வெண்ணெயும் தந்தான் அதிகாரி. பருக, பர்கண்டி திராட்சை ரசச்சாராயம் கொடுத்தான். மன்னன், அதைப் பருகி மகிழ்ந்து, ‘இவ்வளவு நல்ல, பர்கண்டி பானத்தை நான் இதற்கு முன்பருகினதில்லை!’ -என்று கூறிக் களித்தானாம்.

அரச குடும்பத்தின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று, பாரிசில் மக்கள் கொக்கரிக்கிறார்கள்; இங்கு மன்னன் பர்கண்டி பானம் அருந்தி மகிழ்கிறான். தன்னைப் பற்றிய கவலை துளியும் அற்ற போக்கா, அது? அதுகூட அல்ல, நிலைமை நமது சக்திக்கு மீறிச் சென்றுவிட்டது. இனி அதைப் பற்றிச் சிந்தித்து என்ன பயன்? ஏன், சிந்தித்துச் சிரமப்பட வேண்டும் என்ற நினைப்பு. அவ்வளவு சுறுசுறுப்பான இயல்பு!

‘பிடிபட்டு விட்டான் மன்னன்!’ - என்ற செய்தி பாரிசுக்கு எட்டிற்று. மட்டற்ற மகிழ்ச்சி மக்களுக்கு. படைகள் கிளம்பின, அரச குடும்பத்தை, மீண்டும் பாரிஸ் பட்டணம் அழைத்துக் கொண்டுவர.

முன்பு நடந்த ஊர்வலத்தில், மன்னன் கைதியாக அல்ல, மன்னனாகவே அழைத்து வரப்பட்டான்.

இம்முறையோ, மன்னன் ‘கைதி’ ஆக்கப்பட்டு, கட்டுக் காவலுடன் அழைத்து வரப்பட்டான்.

மன்னன் அமர்ந்திருந்த வண்டியிலேயே, காவல் அதிகாரியும் ஆயுதத்துடன்.

அடக்க முடியாத துக்கம் கொண்ட நிலையில், அரசி.

சூழ மக்களும் படையும்! இப்புறம் அப்புறம் திரும்பிக் கூட வேடிக்கை பார்க்காமல், இமை கொட்டாது, அரசன் இருந்த வண்டியைப் பார்த்தபடி!

முழக்கமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. பயங்கரமான ஒலியற்ற சூழ்நிலை.

வழிநெடுக மக்கள் பார்க்கிறார்கள்! கண்களிலே நெருப்பு மில்லை; நீரும் இல்லை!

‘மன்னனை ஏசுவோர் தாக்கப்படுவர். மன்னனைப் புகழுவோர் கொல்லப்படுவர்!’ என்று எழுதப்பட்ட அட்டைகள் பாரிசில் எங்கும் காணப்பட்டன. எனவே, மக்கள் வாய்மூடிக் கண்திறந்து நின்றனர்! அரச குடும்பம், கண்களையும் மூடிக் கொண்டுதான் இருந்திருக்கும்.

கைது செய்யப்பட்ட அரச குடும்பம், பாரிஸ் வந்ததும் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர்.
பிரான்சுக்கு முன்பு மன்னன் இருந்தான்! அவனை என்ன செய்வது என்று மக்கள் மன்றத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது பிரான்சுக்கு மன்னன் இல்லை; இருப்பது ‘கைதி’ - என்ன தண்டனை தருவது என்று மக்கள் பேசுகிறார்கள்.

தப்பிச் சென்று, வெளிநாட்டு உதவியுடன் நுழைந்து, மக்களை வெட்டி வீழ்த்தத் திட்டமிட்ட அரச குடும்பம் ‘இடுகாடு’ செல்லும் போதாகிலும் துக்ககீதம் பாடப்படும். அதுவுமின்றிப் பாழ்வெளியில் அமைதி போன்றதோர் நிலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர்.
-----------
இதயம் இரும்பானால் (3)

தப்பி ஓடியது திங்கட்கிழமை! பிடித்து மீண்டும் பூட்டி விட்டனர், சனி அன்று! ஒரு கிழமை! அரசன் என்ற அந்தஸ்து அடியோடு அழிந்துவிட்டது. அரசன் கைதியானான். மக்கள் கூடுகின்றனர் தீர்ப்பளிக்க! அந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்படும் நாளிலும் ஊர்வலம் உண்டு! விதவிதமான ஊர்வலம், இந்த விந்தை வேந்தனுக்கு!

“அரசர்கள் மடியவேண்டும் அல்லது பிரான்சு மக்கள் மாள வேண்டும். இரக்கம் காட்டுவது மிருகத்தனம்! பகைவர் அனைவரும் வாளுக்கு இரையாகவேண்டும் - சட்டம் சமைத்தளிக்கும் வாளுக்கு!”

ராபஸ்பயரி பேசிவிட்டான் - மன்னனுக்கு மரண தண்டனை தந்துவிட்டான். மன்றம் கூடி, அதே தீர்ப்பை எழுதப் போகிறது பிறகு, முன் கூட்டியே, ராபஸ்பயரி முழக்கமெழுப்பி விட்டான். அவன் பேச்சு, சட்டமாகும் காலம் அது.

மன்னனை என்ன செய்வது? பிரச்சனை, பல விளைவு களை, மனக் குழப்பங்களை ஏற்படுத்தியபடி இருந்தது. ‘மன்னித்து, மக்களின் பெருங்குணத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்’ என்று கூறினர் சிலர். ‘முடிபறித்துக் கொண்டு, விரட்டிவிடுவோம். எங்கோ சென்று ஏதோ செய்து விழைக் கட்டும்’ என்றனர் ஒரு சிலர். ‘மக்களே அதிகாரத்தின் பிறப்பிடம்; முதலிடம். மன்னன் அவர்களின் குறிப்பறிந்து நடந்து கொள்ளட்டும்’ என்று பேசினர் மற்றும் சிலர். ராபஸ்பயரி நெளிவு ஏன் குழைவு ஏன், உள்ளதை உரைப்பேன் என்று கூறி, ‘மன்னன் அல்லது மக்கள்!’ என்றான். அந்த விநாடியே, பதினாறாம் லூயி இறந்துபட்டான் என்று பொருள். பிணமாக்கிப் புதைக்க வேண்டிய, சடங்கு மட்டும், பாக்கியாக இருக்கிறது. அது பிறகு, விரைவில். அதற்கு முன்பே பிரான்சு நாட்டின் ஆத்திரம், தீர்ப்பளித்துவிட்டது, ராபஸ்பயரியின் மூலமாக மன்னன் மடியவேண்டும் என்று!

மன்னனிடம்,பாபம், எது இருந்தது மடியாமல்! அரசு இழந்து, நிலைகுலைந்து, ஆதரவு மறைந்து ஆண்டியும் படாத பாடுபட்டு, அடைபட்டுக் கிடக்கிறான்; மன்னன் சிறையில் இருக்கிறான்! ஒரு நாளைக்கு அவனைக் கொல்லப் போகிறோம்! என்று எவனெவனோ கூறுவதைக் கேட்டுக்கொண்டு! மடியாமலா இருக்கிறான் மன்னன்!

மன்னன் பிழைத்துப் போகட்டும் என்று மனிதாபி மானத்துடன் பேசுபவர், நாட்டுக்குத் துரோகிகள் என்று ஏசப்படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது பார்க்க - என்று கூறுவோர், மக்களின் பகைவர் ஆகிவிடுகின்றனர். மன்னனிடம் பரிவு காட்டியதால் கட்சிகளே கலைகின்றன; வீரர்களுக்குக் கோழைப் பட்டம் சூட்டப்படுகிறது; நாட்டுக்குழைத்தவர் விரட்டப்படுகிறார். அந்த நிலையில், மன்னன் மடிய வேண்டும் என்று ராபஸ்பயரி சொன்னான்! மடிந்துவிட்டான் மன்னன் - பழைய நினைவுகள் குடைவதால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் மட்டுமே இருக்கிறான்.

“மன்னனைப் பாருங்கள், அவனிடம் சமரசம் பேசி வருகிறீர்களே, எவ்வளவு அறிவற்ற தன்மை! அரசன் எவ்வழியோ, அவ்வழியேதான், பிரபுக்கள் கூட்டம். அவர்கள், நம்மை என்றும் மன்னிக்கமாட்டார்கள்! நாம் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். அவர்கள் உள்ளவரை, புரட்சிக்குப் பகை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அடைத்து வைத்துவிடலாம் என்கிறீர்களா! எவ்வளவு பேரை? எங்கே? அவர்களிடம் மயங்கித் துரோகம் செய்யாதே காவலாளிகளை எங்கே கண்டுபிடித்து அமர்த்தப் போகிறீர்கள்? நான் கூறட்டுமா, பாதுகாப்பான சிறைச்சாலை! மக்களின் பகைவர்கள் அனைவரையும் அடைத்து வைக்கக் கூடிய, பெரிய பாதுகாப்பான சிறைச்சாலை, சொல்லட்டுமா! சுடுகாடு. ஆம்! அதுதான் அவர்களுக்கு ஏற்ற சிறைச்சாலை! அங்குச் சென்றால்தான், தப்பி வந்து நமது உயிர் குடிக்காமலிருப்பார்கள். அவர்களை ஓடிவிடாமல் தடுக்கக் கூடிய ஒரே காவலாளி சாவு! கொல்ல வேண்டும்! கொல்ல வேண்டும்! அதுதான் உண்மையில் பலனளிக்கும் கொள்கை. படைதிரட்டுவீர்; பயன் இல்லை! பகை அழியாது!! குத்தீட்டியுடன் இருநூறு வீரரைத் தாருங்கள்; கொன்று குவிக்கிறேன், பகைவர்களை! புரட்சி வெற்றிபெறச் செய்கிறேன்.”

மாராட் பேசுகிறான் அவ்வளவு இரத்தவெறியுடன். மறுப்பார் இல்லை! மறுக்கக்கூடிய சிலர் மாண்டனர்; பலர் தலைமறைவு ஆகிவிட்டனர். இப்போது குத்தீட்டி, கொடுவாள், வெட்டுப்பாறை - இவை தானிருக்கின்றன.

கொலையைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள், குதூகலப் படுகிறார்கள், தங்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று அறிந்து; போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் பிணத்தைப் பிய்த்துத் தின்னலாம் என்று பெருங்கழுகுகள் வட்டமிடுமாம்! வெட்டிக் குவிப்போம் என்று மாராட் பேசிவிட்டது கேட்டுச் சொல்லக் கூசாத கொடுமை செய்வதைத் தொழிலாகக் கொண்ட கும்பல் குதூகலப்பட்டது. ‘இது அல்லவா அரசு! நமது அருமை அறிந்த அரசு’ என்று.

நாட்டை ஆபத்து சூழ்ந்து கொள்ளும்போது ஆர அமர யோசித்துக்கொண்டு, அறிவுரைகள் பேசிக்கொண்டு, அருளாளர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, காலங்கடத்த முடியுமா என்று எக்காளமிட்டனர், இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவர்கள்.

அதற்கு ஏற்றாற்போல வெளிநாட்டவர், வேகமாகப் பிரான்சைத் தாக்கிடத் தொடங்கினர். கடும் போர் மூண்டு விட்டது. மன்னர் பலர் கூடினர், பிரான்சு நாட்டைத் தாக்கிட - புரட்சியைப் பொசுக்கிட - மன்னனை மீட்க.

‘அடைபட்டுக் கிடக்கும்போதே, அவனால் வந்திடும் ஆபத்தைப் பார்த்தீர்களா? ஆதிக்க வெறி பிடித்தலையும் இனம், அவனுக்காகக் கிளம்புகிறது காணீர்! இனியுமா உங்கட்குத் தயக்கம்? மன்னன் அல்லது மக்கள்!’ என்று பேசினர் மாராட்டுகள், ராபஸ் பயரிகள்!

மக்களின் உரிமைகளைக் காக்கவும், மக்களிடையே ஒருவனோ, ஒரு கூட்டமோ கிளம்பி பொது உரிமையை, நலனை அழித்திடாதபடி பாதுகாக்கவுமான ‘புனித’க் காரியத்துக்காகவே மன்னன் இருக்கிறான். அந்தக் கடமையை மறந்து அரசபீடம் கிடைத்தது தனக்காக, சுகபோகத்துக்காக என்று எண்ணிடும் கணமே புனிதம் போய் விடுகிறது; மன்னன் மக்களின் பகைவனாகி விடுகிறான். பகைவரை வீழ்த்த வேண்டியவனே பகைவனாகிவிட்டால், அவனை ஒழிப்பதுதான் முறை. ஒழித்தாகவேண்டும் என்றெல்லாம் ‘தத்துவம்’ பேசியும், செயலில் காட்டியும் வந்த இங்கிலாந்திலேயே, செல்வாக்குள்ள ஒரு கூட்டம் கிளம்பி, ‘பிரான்சு நாட்டிலே நடப்பது அரசியல் மாறுதல் அல்ல, பயங்கரமான படுகொல, குத்திக் குடலறுப்போன், வெட்டிவீழ்த்துவோன், பச்சிளங் குழந்தைகளைக்கூடக் கழுத்தைத் திருகிக் கொன்றிட அஞ்சாத பாவிகள் கூடிக் கொண்டு படுகொலை செய்து கொண்டு வருகிறார்கள். அங்கு எல்லாம் அழிந்துபடுகிறது. அறம் அழிகிறது! அன்பு அழிகிறது! பண்பு அடியோடு அழிந்து விட்டது! பக்தி பூண்டோடு களைந்தெறியப்படுகிறது. இதை அனுமதிப்பது கூடாது. இதனால் பிரான் மட்டுமல்ல, உலகே கெடும்; மனிதகுலமே நாசமாகும். கற்றறிந்த வித்தகரும், காலத்தை வென்ற பேரறிவாளரும், நமக்களித்த, போற்றற்கரிய பொன்னான கருத்துக்களும், முறைகளும் பாழாக்கப்படுகின்றன. அவை பாருக்கு உள்ள பொதுச்சொத்து. மனிதரை மிருகத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆன்றோரும் சான்றோரும், அருளாளரும், நமக்களித்த நெறி; அது பாழாக்கப்படுகிறது. அறமறிந்தோரே! ஆண்டவனை மறவாதோரே! பண்பினை இழக்காதிருப்போரே! பாபத்தைக் கண்டு அஞ்சிடும் நல்லோரே! பிரான்சிலே தலைதூக்கி ஆடும் ‘பாபத்தை’ ஒழித்துக் கட்டிட முனைவீர், முன் வருவீர்! ஆபத்தில் சிக்கி இருப்பது அரசப் பதவி அல்ல; அறம்! அறம் தாக்கப்படுகிறது! அறம் அழைக்கிறது, அன்பர்களை! அஞ்சா நெஞ்சுடையோரை! அறத்தின் குரலைக் கேளீர்! அதனைக் காத்திட வாரீர்’ - என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தது.

பல்வேறு நாடுகளிலேயும், பகைக்கும் கும்பல், பாயத் தயாராக இருந்தன.

யாரேனும், ‘துணிந்த பேர்வழி’ ஒருவன், முனைந்திருந்தால், பிரான்சிலே முளைத்த புரட்சியை அழித்திட, பணமும் படையும் ஏராளம் திரட்டிவிட முடியும். அத்தகைய சூழ்நிலை, லூயி மன்னன் முயற்சி ஏதும் முறைப்படி செய்யாமலேயே, உருவாகிக் கொண்டு வந்தது.

இனி இங்கு இருந்தால் சுட்டுச் சாம்பலாக்குவர் என்ற அச்சம் கொண்ட, பிரபுக்களில் சிலர், பிரான்சிலிருந்து தப்பித்துக் கொண்டு, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்கு ஓடிவிட்டனர். அங்கு அவர்கள், ‘கதை கதை’யாகக் கூறினர், பிரான்சிலே நடக்கும் பயங்கரம் பற்றி.

“வெறி பிடித்த மக்கள் இரத்தத்தைத்தான் குடிக்கிறார்கள், மனித இரத்தத்தை” என்பான் ஒரு பிரபு.
அவன் மனைவி, “குழந்தையின் இரத்தத்தை!” என்று கூறி அழுவாள். கேட்போர் துடிப்பர். துணிவுள்ளோர், ‘என்ன நேரிடினும் சரி; இந்தப் புரட்சியை எதிர்த்தாக வேண்டும்’ என்று பேசுவர்.
அமெரிக்க சுதந்திரத்தை ஆதரித்து ‘நேர்மையாளன் - பாங்காளன்’, என்று பெயரெடுத்த பர்க் எனும் ஆங்கில அறிஞனே, பிரான்சிலே நடக்கும் புரட்சி மனித குலத்துக்கு மாபெரும் நாசம் விளைவிப்பதாகும் என்று எழுதினான்.

டாம்பெயின் போன்ற உரிமை உணர்ச்சியை மதித்திடும் ஒரு சிலர் மட்டும், தடுத்து நிறுத்தி இராவிட்டால், புரட்சிக்கு எதிர்ப்பு, வேகமாகவும் வலிவுள்ளதாகவும் உருவாகிவிட்டிருந்திருக்கும்.

“தக்க சமயம் இது! தலைவெட்டத்தானே தெரியும் இதுகளுக்கு! படை எடுத்துச் சென்றால், தடுத்திடும் ஆற்றல் ஏது? முறை என்ன தெரியும்! கூனும் குருடும், மொண்டியும் நொண்டியும் கூடிக்கொண்டு கொக்கரிக்கின்றன! வீரமும் போர் முறையும் கருவியும் நிரம்ப நம்மிடம் இருக்கின்றன. நாம் படை எடுத்துச் சென்றால், பயந்தோடிப் போவர் பத்து நொண்டிகள் கூடி எதிர்த்தாலும், ஒரு வீரனிடம், என்ன நடக்கும்? பார்ப்போம்!” என்று எண்ணினர்.

படை திரட்டினர், பாய்ந்தனர் அன்னியப் படைகளைத் தாக்க; பாயுமுன், உள்நாட்டிலே துரோகிகளையும், சதிகாரர்களையும், அரசனிடம் கைக்கூலி பெற்று மக்களைக் காட்டிக் கொடுக்கக் கூசாத கயவர்களையும் விட்டு விட்டா நாம் களம் செல்வது! நாம் அங்கு இருக்கும்போது இந்தக் கும்பல் பின்புறமிருந்து தாக்கினால் நமது கதி என்ன ஆகும்? என்று கேட்டனர் சிலர். “ஆமாம்! முக்கியமான பிரச்சனை” என்றனர் பலர். ‘இதிலென்ன சிக்கல்! சீவுங்கள் தலைகளை!’ என்றனர் மாராட்டுகள். கொன்றனர், கொன்றனர்! எங்கும் குருதி! அதைக் கண்ட பிறகே, மனதுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது; களம் சென்றனர்.

களத்திலே கடும்போர்! அங்குத் தோற்றால், எல்லாம் அழிந்துவிடும் - என்ற எண்ணம் அவர்களைப் புலியாக்கி விட்டது. வெற்றி பல பெற்றனர். அடியோடு எதிரிகள் அழிக்கப் படவில்லை என்றாலும், பலம் முறியடிக்கப்பட்டுவிட்டது.

வெளிப்பகை ஒருவிதமாக அடக்கப்பட்டு விட்டது. இனி மன்னனைக் கவனிப்போம் என்று கூறினர். மீண்டும் விவாதம்! “குற்றத்தை விசாரிக்கலாம்; தீர்ப்பளிக்கும்படி மக்களைக் கேட்கலாம்.” - என்று சிலர் வாதாடினர். ‘சிறையில் இருந்தாலும், மன்னன் எவ்வளவு பேரைத் தன் வலையில் விழச் செய்கிறான் பார்த்தீர்களா!’ என்றனர், அரச பரம்பரை பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்ற கொள்கை கொண்டோர்.

அரச குடும்பமோ, அரண்மனையில்கூட அல்ல, வாட்டம் தரும் ஒரு கோட்டத்தில் அடைக்கப்பட்டு, வசதிகள் பலவும் குறைக்கப்பட்டுக் கிடந்தது.

அரசி, பலகணிவழியாக எட்டிப் பார்ப்பாள், சிலவேளைகளில்! வெட்டப்பட்ட தலையை ஈட்டியில் செருகித் தூக்கிக் காட்டிக் கூச்சலிடுவான், புரட்சியில் ஈடுபட்டவன்.

“இது நடக்கிறது வெளியே! உள்ளே இருக்கிறீர்கள் நீங்கள். உம்! எத்தனை நாளைக்கு?” என்று கேட்கிறது அவன் பார்வை. அரசியின் கண்களில் நீர் ததும்புகிறது. “அழுகிறாளப்பா அரசி! மக்களை அழ வைத்த அம்மணிக்கு இப்போது கண்ணீர் எப்படி இருக்கும் என்பது புரியுமல்லவா?” என்கிறான் அவதி பல கண்டவன்.

மன்னன், மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டான்; குற்றப்பத்திரிகை படித்தனர். வாதாட யாராவது தேவையா என்று கேட்டனர்; ‘ஆம்’ என்றான் அரசன். இருவர்முன் வந்தனர், மன்னன் சார்பில் வாதாட; அவர்களைச் சுட்டுத் தள்ளுவது போலப் பார்த்தனர் மக்கள் மன்றத்தினர். இரக்கம் காட்டச் சொல்லித்தான் அவர்கள் கேட்டனர்! சட்டம் பேசவில்லை. கருணை காட்டும்படி கூறினர்; காவலன் மீது குற்றம் ஏதும் இல்லை என்று பேசவில்லை. மன்னனுக்காக வாதாடவில்லை; மனிதனுக்காக வாதாடினர்! மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவு கல் செஞ்சமா என்றே எவருக்கும் கேட்கத் தேன்றும்! ஆனால் ஆண்டு பல, பிரான்சு மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டபோது, சட்டம் பேசி அவர்களைச் சாகடித்தபோது, குற்றமற்றவர்களைக் கொன்றபோது, வழக்கறிஞர்களே கிடைக்கவில்லையே, மக்களுக்காக வாதாட! ஓரிருவர் வாதாடியபோதும், சட்டத்தின் புனிதத் தன்மையும் மதத்தின் மாண்பும், மன்னராட்சியின் மேம்பாடும் நிலைத்திட வேண்டுமானால், கண்ணீர் கண்டு கடமையினின்று தவறக்கூடாது. இரக்கம் பேசிச் சட்டத்தைக் குலைக்கக் கூடாது. கர்த்தர் இருக்கிறார் இரட்சிக்க ! சட்டம் இருக்கிறது தண்டிக்க!” என்று எத்தனை நீதிபதிகள் பேசினர் - பிறகு பிரபுக்கள் கெக்கலி செய்தனர்.

மன்னன் மக்களுக்கு எதிராகச் சதிபுரிந்தான் என்று குற்றம் சாட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்டது மக்கள் மன்றத்தால். 721 பேர் உறுப்பினர் இருந்தனர்! 361 பேர் மரணதண்டனை. விதித்தனர். நிபந்தனையின்றி மரணதண்டனை. மேலும் சிலர், சில நிபந்தனையுடன், மரண தண்டனை தரலாம் என்றனர்.

மொத்தத்தில், மன்னனுக்கு மரணதண்டனை தரவேண்டும் என்று 387 உறுப்பினர்களும், மற்ற 334 உறுப்பினர்கள் போர் முடியுமட்டும் சிறையில் வைத்திருந்து விட்டுப் பிறகு நாட்டை விட்டு ஓட்டிவிடுவது என்றும் கூறினர்.

மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது. பதறாமல் கேட்டுக் கொண்டு, சாக மூன்று நாள் அவகாசம் கேட்டான் மன்னன்.

அவ்வளவு மனஉறுதி கொண்டவனா இந்த மன்னன்! சாகப்போகும் போதுதானா, இந்த நெஞ்சு உரம் வரவேண்டும்! ஆண்டு கொண்டிருந்தபோது, காட்டாத உறுதி இப்போது தெரிகிறதே! அணையுமுன் ஒளிவிடுமாமே விளக்கு. அதுபோலப்போலும் என்று கருதினர் மன்னனைக் காவல் காத்து நின்றவர்கள்.

1793 ஜனவரி 21ஆம் நாள்! வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் மன்னனை. அடைபட்டுக் கிடந்த தோட்டத்திலிருந்து, அரண்மனைக்கு எதிரே அமைக்கப்பட்ட ‘கில்லட்டின்’ எனும் வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

தளபதிகள் வந்திருக்கிறார்கள், பணிவு காட்ட அல்ல; பயணத்துக்கு ஏற்பாடு செய்ய! போர் வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள், மரியாதை காட்ட அல்ல; தப்பி ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ள.

பாரிஸ் பட்டணத்திலே ஒரே அமைதி! தெருக்களிலே நடமாட்டம் இல்லை. போர் வீரர்கள் தவிர, மக்கள் இல்லை. பலகணிகள் திறக்கபடவில்லை. கதவுகள் தாழிடப்பட்டுக் கிடந்தன. வெட்டுப்பாறை அருகே நின்று, போர் வீரர்கள் முரசு கொட்டியபடி இருந்தனர். இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மன்னன் அழைத்துச் செல்லப்பட்டான், புரட்சி அரசு அனுப்பி வைத்த வண்டியில்.

ஆடலையும் பாடலையும், அணிவகுப்புகளையும், வெற்றி ஊர்வலங்களையும் வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ்பட்டணம் அன்று ஒரு புதி பயங்கரத் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டு விட்டார்கள். மக்கள் ஆணையை நிறைவேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் - கடைசி ஊர்வலம்! வெட்டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையாமல், ‘சாக’த் தயாரானான். மக்களிடம் ‘நான் குற்றமற்றவன்’ என்று கூறத் தொடங்கினான்! ‘முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும்’ என்று உத்தரவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப்பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு, ‘வாழ்க குடி அரசு!’ என்று கூறினர்; மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது.

“உன் பெயர்.”

“ஆஸ்ட்ரிய அரச குடும்பத்தைச் சார்ந்த மேரி அன்டான்னய்ட் என்று என்னை அழைப்பார்கள்.

“இப்போது உன் நிலைமை?”

“முன்பு பிரான்சு மன்னராக இருந்த லூயியுடைய நான்.”

“வயது?”

“முப்பத்து ஏழு!”

1793 அக்டோபர் திங்கள், பதினாலாம் நாள், மக்கள் மன்றம் அமைத்த வழக்கரங்கில் நடைபெறுகிறது இந்த உரையாடல். அரசியை மக்கள், ஊர் பெயர் கேட்கிறார்கள்; உற்ற வயது என்ன என்று கேட்கிறார்கள்; அருகே நெருங்கவே முடியாதே, அரசியை - சீமானாகவோ, சீமாட்டியாகவோ இருந்தலொழிய! சாமான்யர்கள் புரட்சி அரசு அமைத்தனர்; அவர்கள் கேட்கிறார்கள், குற்றவாளியைக் கேட்கும் முறைப்படி “உன் பெயர் என்ன?” என்று.

குற்றங்களை மெய்ப்பிக்கச் சாட்சிகள் பேசினர்; அரசியின் மறுப்புரை கேட்டனர்; கடைசியில் மணர தண்டனை தரப்பட்டது.

அரசனிடம் இருந்ததைவிட அரசியிடம் மக்களுக்கு ஆத்திரம் அதிகம். எனவே, வெட்டுப்பாறைக்கு அழைத்துச் சென்றபோது, கைகளைப் பின்புறமாகக் கட்டி, அனைவரையும் ஏற்றிச் செல்லும் வண்டியில்தான் அழைத்துச் சென்றனர். வழி நெடுக மக்கள் - குறிப்பாகப் பெண்கள் நின்று கேலி செய்தனர். - கேவலப்படுத்தினர். அக்டோபர்15! அரசியும் வெட்டுப் பாறையில் வீழ்ந்துபட்டாள். ‘வாழ்க, குடியரசு’ என்று மக்கள் முழக்கமிட்டனர்.

இரத்தவெறி பிடித்தல்லவா அலைந்திருக்கிறார்கள்! துளியும் ஈவு இரக்கம், மனிதாபிமானமற்றல்லவா, படு கொலைகள் புரிந்திருக்கிறார்கள். சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்றெல்லாம், சுவை தரும் பேச்சு பேசினரே தவிர, அவர்களின் கரங்களை இரத்தத்திலல்லவா தோய்த்து எடுத்தனர் - என்றுதான் எவருக்கும் கேட்கத் தோன்றும்.

புனிதமான கொள்கைகளுக்காக என்று கூறினாலும், படுகொலை படுகொலைதான்! முறையைத் தள்ளுங்கள், முடிவைக் கவனியுங்கள் என்று கூறுவது சமாதானமே தவிர, சன்மார்க்கத்துக்கும் சரி, அறிவுடைக்கும் சரி, சான்றாகாது.

புரட்சியின் பயங்கரம், அளவில் அதிகம்; மறுப்பதற்கில்லை. கொடுமைகள்- கேட்கக் கூசக்கூடியவை; இல்லை என்று வாதிடுவது வீண்.

ஆனால் எண்ணிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேறோர் பிரச்சினை இருக்கிறது.

அன்பு, அறம், ஈவு, இரக்கம், பற்று, பாசம், பயம், பக்தி, தயவு, தாட்சண்யம் - இவைபோன்ற குணங்கள் கொண்டவர்கள், எப்படி இரத்த வெறிபிடித்து அலையும் நிலை அடைந்தனர்? ஆட்டுக்குட்டிகள் போலக் கிடந்தார்களே, இவர்கள் எப்படி ஓநாய்களாக மாறினர்? அந்த மாறுதலுக்கு காரணம் என்ன?

பார்க்கப் பச்சைப் பசேலென்று இருக்கிறது, மலரும் கனியும் குலுங்குகிறது, சுவையும் பயனும் அளிக்கிறது, மரம். அதைக் காயவிட்டு, விறகு ஆக்கிவிட்டால், கவர்ச்சி அடியோடு போய்விடுகிறது. பிறகு நெருப்பெரிக்க மட்டுமே பயன்படுகிறது! நெருப்பில் விறகைப் போடும் வரையில் பயம் இல்லை. விறகு நெருப்பாகிவிட்டாலோ, தொடக்கூட அச்சம்; பட்டால் தொல்லை; சுட்டால் புண் ஏற்பட்டுவிடுகிறது.

பச்கையாகத்தான் இருந்தது. ஒடித்து நாசமாக்கி, உலரவிட்டு விறகாக்கிப் பிறகு நெருப்பாக்கி விட்டு, தீ சுடுகிறதே,பெரு நெருப்புச் சூழ்ந்து கொண்டதே என்று கூறுவதில் என்ன பயன்?

பிரான்சு மக்கள் இதயம், எல்லாப் பண்புகளும் பூத்துக் குலுங்கும் இடமாகத்தான் இருந்தது - அக்கிரம அரசுகள் அமைத்துக் கொண்டவர்கள், அந்த இதயத்திலிருந்த பண்புகள் வற்றிப் போகும் அளவுக்கு, கொடுமை புரிந்தனர். விறகாகி விட்டது, பச்சைக் கொடி! இரும்பாகிவிட்டது, மக்கள் இதயம். மலர் குலுங்கிற்று கொடியாகக் கிளையாக இருந்தபோது; நெருப்பாகிவிட்டது, விறகு ஆக்கப்பட்டதால் ‘ராஜ பக்தி’ - ‘தெய்வபக்தி’ எல்லாம் ததும்பும் மனம்தான் இருந்தது. கொடுமைப்
படுத்திக் கொடுமைப்படுத்திப் பழிதீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி தவிர வேறு எதுவும் இருக்க முடியாத நிலைக்கு மாற்றிவிட்டனர் மக்கள் இதயத்தை, மன்னர்களாக வந்த மமதையாளர்கள்.

இதயம் கொதித்தபோது, ஏளனம் செய்தனர். வேதனையை வெளியிட்டபோது கேலி பேசினர். இரத்தம் கேட்ட போதுதான் ஆதிக்கக் கூட்டம் அச்சப்பட்டது. பிறகு கேட்கலாயிற்று, “ஈவு இரக்கம் துளியும் இல்லையா?” என்று.

“சீமானே! உன் தந்தை வயதிருக்கும் எனக்கு! உங்கள் குடும்பத்துக்காகவே உழைத்து உழைத்து, சருகு ஆகிப்போனேன்! என்னைச் செருப்புக் காலால் உதைத்தாய், என் மனைவி எதிரில்! நினைவிருக்கிறதா? அப்போது பண்பு இருந்ததா உனக்கு? அதைக் கண்டு சிரித்தாள் உன் சிங்கார மகள்! பண்பா அது? இப்போது எம்மிடம் பண்பு இல்லையே என்று கேட்கிறாய், உமது இல்லந்தோறும் பண்புப் பயிர் வளர்த்து வைத்தவர்போல! என்று கேட்பான், புரட்சியால் “பொல்லாதவன்” ஆகிவிட்டவன். ஆனால் சீமான் இல்லை எதிரில்! பலர் இறந்தனர்; மற்றும் பலர் மறைந்தனர்! கேட்க முடியவில்லை.

உழைப்பவனைச் சுரண்டினர்; அதற்குப் பெயர் வரிவிதிக்கும் முறை என்றனர். வயல்களை அழிக்கிறோம் என்றனர்; காரணம் கேட்டால் வேட்டைக் கலை வளர்க்கிறோம் என்றனர்.
------------
இதயம் இரும்பானால் (4)

அகப்பட்டவை வாளுக்கு இரையாக்கினர். ‘ஏன் ஐயா!’ என்றால், ‘வாளின் கூர்மை எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்’ என்றனர். இது பிரபுக்கள், அரச குடும்பத்தினர் காட்டிய பண்பு! மறுக்க இயலுமா?

“என்ன செய்தான் உன்னை.”

“எப்படிப் பிரபுவே! அதைச் சொல்வேன்.”

“சொல்லடி கள்ளி! என்ன செய்தான்?”

“என்னைக் கெடுத்தான்.”

“பத்தினித் தங்கம் இவள்! போக்கிரிப் பெண்ணே! நீ என்ன பரிசுத்தமானவனோ? கெடுத்தானாம், கெடுத்து... இளித்துக் கொண்டு எதிரே வந்திருப்பாய், என்னமோ போலிருந்திருக்கும். சரி! சரி! எங்கே நடந்தது...?”

“எது...?”

“உம்! உற்சவம்...”

“மாதா கோவிலில்...”
“பாதகி! மாதா கோயிலிலா? எப்படி உனக்கு அந்த இடத்தைப் பாழ்படுத்த மனம் துணிந்தது?”

‘ஐயையோ! நான் உண்மையாகவே உற்சவத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள் என்று நினைத்து கொண்டேன். கர்த்தரே! மன்னித்துவிடு. என்னை அவர் குதிரைக் கொட்டிலில்...”

“குதிரை என்ன செய்து கொண்டிருந்தது...”

‘கொல்’ என்ற சிரிப்பொலியல்லவா கிளம்பி நாசமாக்கப் பட்டு நங்கைக்கு வேதனையைத் தந்தது இவ்விதமான வழக்கு விசாரணையின்போது.

அரசியைப் போய் துளியும் பண்பில்லாமல் ஊர் என்ன, பெயர் என்ன என்றா கேட்பது, மக்கள் அமைத்த விசாரணைக் கூடத்தில் என்று கேட்பர், கேட்கிறார்கள்; ஆனால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களிலே, பிரபுக்கள் நடத்திய விசாரணைக் கூடங்களிலே நடந்தன பற்றிக் கேட்டனரா? இல்லை! பண்பு யாரால் எப்போது எந்த விதத்தில் அழிக்கப் பட்டது. மக்களா அழித்தனர்?

சீமானின் தூக்கத்தைத் தவளைகள் சத்தமிட்டுக் கெடுக்குமாம். இரவெல்லாம் கண்விழித்து ஏழைகள் தவளைகளைப் பிடித்து அடிக்க வேண்டுமாமே! எத்தனை நேர்த்தியான பண்பு!

“சீமானின் வயலிலே எலிகள் அழிவு உண்டாக்கும். அந்த எலிகள் உன் வயலிலே உள்ள வளைகளிலே இருந்துதான் வருகின்றன. ஆகவே, நஷ்டத்துக்கு நீதான் பொறுப்பு” என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய அநியாயக்காரர்களை யார் அடக்க முன்வந்தார்கள்? ‘இரத்தம் வேண்டும்!’ என்று கேட்ட பிறகுதான் புழுவும் போரிடும் என்று புரிந்தது.

குடித்துவிட்டுக் கூத்தாடுவது, அதற்குப் பெயர் கலை!

ஆலயச் சொத்துக்களை அபகரித்துக் கொள்வது - அதற்குப் பெயர், அருளைப் பெற்று அளிக்கும் புனிதப்பணி.

சூறையாடுவது - அதற்கு வீர விளையாட்டு என்று பெயரிடுவது.

எச்சிற் பண்டங்களைப் பசிக் கொடுமையால் தாக்குண்டவர் எதிரே வீசுவது; அவர்கள் பாய்ந்தோடிச் சென்று எடுத்துத் தின்னப்போகும்போது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டுக் கடிக்க வைத்து கைகொட்டிச் சிரிப்பது! சீமானே! உனக்கு இது பொழுதுபோக்காக இருந்ததே! இப்போது தத்துவப் பேராசிரியனாகி பண்பு பாழாகலாமா என்றா கேட்கிறாய் - என்று கேட்பான் புரட்சிவீரன். எதிரே வர, சீமானுக்குத்தான் நடுக்கம்.

பதினாறாம் லூயி, கொடுமைக்காரனல்ல; ஆனால் கொடுமைக்காரர்களை அடக்கும் திறனற்ற மன்னன். செயல் புரியச் சங்கடம்! சிந்திக்க அதைவிடச் சங்கடம்! மக்கள் மனம் எரிமலையாகி இருந்த வேளையில் அரசனானான்; நிலைமையை அறிந்து கொள்ள முடியவில்லை. மன்னன் செய்ய வேண்டிய வேலை முடிதாங்கிக் கொள்வது, அடி வருடிகளை ஆனந்தப் படுத்துவது, ஆட்சி நடத்த அமைச்சர்களை நியமிப்பது, அவர்கள் ‘கைவிரித்தால்’ வேறு ஆட்களை அமர்த்துவது - இவ்வளவுதான் என்று எண்ணிக் கிடந்தான்.

அவனை மணக்க வந்த மங்கைக்கோ, ஆடம்பரம் என்றால் கொள்ளை ஆசை! நேரம் இடம் கூடப் பார்க்கத் தேவையில்லை என்ற அளவுக்கு ஆடலிலும் பாடலிலும் விருப்பம். விருந்துகள் நடத்துவர். பணம் விரயமாவது பற்றிய கவலையற்று விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவாள். தேவைக்காக அல்ல; பிறர் பார்த்து ஆச்சரியப்பட! சூதாட்டச் சாலைகளிலே அரசியைப் பார்க்கலாம்! வெறியாட்டங்களிலே அவள் நடுநாயகமாவாள்.

இவ்வளவு வீண் செலவுக்கும் பணம் தரும் பாட்டாளிகள் பஞ்சைகளாகிப் பராரிகளாகிக் கிடக்கின்றனர் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை; நேரமும் இல்லை; நினைவும் எழவில்லை.

“ரொட்டி கிடைக்காவிட்டால் என்னவாம்! ‘கேக்’ சாப்பிடட்டுமே!” என்று சொன்ன காலமல்லவா அது!

‘பசித்தால், புல் தின்னட்டுமே! வலிவு கிடைக்கும், மாடுகளுக்குக் கிடைப்பது போல!’ என்று கொக்கரித்த அமுல் நிரம்பிய நாட்களல்லவா. பண்பு வளர்க்கும் பல்கலைக் கழகங்களா அமைத்தனர்? பஞ்சமாபாதகம் நெளியும் படுகுழிகளைப் பளிங்குமாடங்களில் அமைத்துக் கொண்டனர்.

காற்றில் சிக்கிய மலரின் இதழும், கனவான் விருந்திலே கலந்து கொண்ட காரிகையரின் இதழும், பட்டபாடு கொஞ்சமா - அதற்குப் பெயர்தான் பண்பா?

உழைத்து அலுத்த மக்கள் உணவின்றி வாட, உலுத்தர் கூட்டம் எத்துணை அளவு பணத்தைப் பாழாக்குவது? கோடி கோடியாக! பரிவாரங்களின் செலவு கொஞ்சமா! பாழாக்கப்படும் பண்டங்கள் எத்துணை. நந்திப் பிழைப்போர் கொத்தித் தின்று ஏப்பம் விட்டபடி இருந்தனர் பெரும்பொருளை, காமவல்லிகள் கண்காட்டுவர்; கட்டித் தங்கத்தை அவர்கள் காலடியில் கொட்டுவர்! இடையொன்று அசையும்; சில இலட்சங்கள் அவள் இரும்புப் பெட்டியில் போய்ச் சேரும்.

“உன் கண்ணொளி, வைரத்துக்கு ஏது?” என்பான் அரச குடும்பத்து இளைஞன்!

“கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும்” என்பாள் கைகாரி!

வைரமாலை அவள் கழுத்துக்குப் போய்ச் சேரும்.

அவள் யார்? என்ற கேள்வி கிளம்பியதும் இவ்வளவு பணம், இந்த இடம், இந்த நேரம், என்று பதிலளிக்க ஆட்கள் அரண்மனையில் உண்டு.

சேடிக்குப் பணம் கொடுத்துச் சீமாட்டியின் துணை கொண்டு அரண்மனைக்குள் நுழைவது! அங்குச் சென்றதும், அழகும் அப்பாவித்தனமும் ஒருங்கே கொண்ட அரச குடும்பத் தவளைத் தேடிப்பிடிப்பது, தேனொழுகப் பேசுவது, தேவலோகம் போக வேண்டும் என்றோர் ஆசை, உன்னைக் காணும்வரை இருந்தது என்று கூறுவது; அவள் “போதுமே கேலி” என்பாள். “அதோ அந்த மலர்ப்புதர்” என்பான் இவன்; ஐயையோ! அது அந்தச் சீமாட்டியின் சொந்தமாயிற்றே” என்பாள் இவள். பிறகு இடத்துக்கா பஞ்சம்! இப்படிப்பட்ட கோலகலத்தில் மூழ்கி, நாட்டுச் செல்வத்தை ஒரு சிறுகூட்டம் பாழாக்கிக் கொண்டிருந்தது. பார்த்துப் பார்த்துப் பதைத்த மக்கள், பண்பு ஆராய்ச்சியா நடத்திக் கொண்டிருப்பர்.

ஏழையின் கண்ணீரைக் கண்டு, பெருமூச்சைக் கேட்டு, காய்ந்த வயலைப் பார்த்து, தேய்ந்து கிடக்கும் உடலைப் பார்த்து, கண்களிலே, “கடுமை” குடி ஏறுவது பார்த்து, ஆட்சி நடத்தினோர் பாடம் பெற்றிருந்தால், திருத்தம் ஏற்பட்டிருக்கும்; தீ பரவாதிருந்திருக்கும்.

ஒரு சமயம், பதினைந்தாம் லூயி அலங்கார வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். உடன் வந்த சீமானை மன்னன் ‘இந்த வண்டி என்ன விலை போகும்? சொல்லு பார்ப்போம்’ என்று கேட்டான்? சீமான், ‘8000 லிவரி (பிரான்சு நாணயம்) இருக்கும்’ என்றான். மன்னன் சிரித்துவிட்டு, ‘இதற்கு 30,000 லிவரி கொடுக்கப்பட்டது. கொள்ளையே அடிக்கிறார்கள், என்னைச் சூழ இருப்பவர்கள்” என்றான்.

வழக்கு மன்றத்திலே, கோழி திருடியதாகக் கூண்டிலேற்றப் பட்ட ஏழைக்கு, நியாயம், தர்மம் இரண்டையும் மதிக்காத கயவனுக்கு எட்டாண்டு தரப்பட்டது என்று நீதிபதி கூறுகிறார்! மன்னனைச் சுற்றிக் கொள்ளைக்காரர்கள், பட்டுச்சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்!

பிரபுக்களின் கோலாகல வாழ்வைக் கண்டிக்கும் துணிவு, மதத்தலைவர்களுக்கு இல்லை - ஏன்? அவர்களே பிரபு குடும்பத்தினர்! உடையிலே மாறுபாடு இருந்தது; நடவடிக்கையில் அல்ல!

ஜெபமாலை, கூர்வாள், செங்கோல் - மூன்றுமே ஏழைக்கு வாழ்வு அளிக்கவில்லை. எனவே அவனுக்கு எதிலும் நம்பிக்கை நசிந்துவிட்டது.

மாண்டவர் போக மீதமிருந்தவர்களின் மனப்போக்கு மாறிக்கொண்டு வந்தது. பணிவு குறைந்தது; துணிவு துளிர்த்தது! கண்ணீர்விட்டுக் கிடந்த மக்கள், சீமான்களைக் கண்டால், காரித் துப்பலாயினர். கசையடியால் மாண்டிருப்பான் தகப்பன், அவன் மகனோ, கல்லெடுத்து வீசுவான் சீமான் மீது. எரிச்சல், எதிர்ப்பு உணர்ச்சியை ஊட்டிற்று. இந்தக் குறியைக் கண்டுகொள்ள வில்லை, ஆட்சி நடத்தினோர்! “இதுகள்” எப்போதும் இதுபோலத்தான் கிடக்கும் என்று எண்ணினர்; ஏமாந்தனர்! ‘பசியைத் தாங்கிக் கொள்வார்கள்; பாபம் புரியமாட்டார்கள் பாமரர்’ என்றார் மதகுரு. ‘அந்தப் பைத்தியக்கார எண்ணம் எங்களை விட்டுப் போயே விட்டது’ என்றான், கொடுமைக்கு ஆளான ஏழை. கடல் கொந்தளிக்கத் தொடங்கிற்று. கலத்திலிருந்தோர் அந்த ஒலியை அறியவில்லை; வெறிக்கூச்சல் செவியில் சங்கீதமாக வீழ்ந்து கொண்டிருந்ததால்.

மேரி அன்டாயினட், பிரான்சு நாட்டுக்கு அரசியாவதையே அந்த நாட்டு மக்கள் வெறுத்தனர் - அவள் ஆஸ்ட்டிரிய நாடு என்பதால்.

வந்த மேரியும், மக்கள் மனத்தைக் கவர முயலவில்லை; வசீகரத்தைக் கண்டு புகழும் சீமாட்டிகளைத்தான் தேடிக் கொண்டாள்.

மன்னன் அத்துணை அட்டகாசம் ஆடம்பரம் தேடுவதில்லை; அரசிக்கு அஃதன்றி மகிழ்ச்சி தரும் வேறு பொழுது போக்கு இல்லை. தரம் கெட்ட கொட்டகை செல்வாள்! தாறுமாறாக நடனமாடி மகிழ்வாள்! கோமாளி வேடம் பூண்டு நாடகமாடுவாள்! மக்கள் அருவருப்புக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் சிரமப்பட்டுப் பொருள் செலவிட்டுச் செய்துவந்தாள்.

அரசி மேரியின் அணிமணிகள் உடை வகைகள் புதிது புதிதாக வடிவம், வண்ணம், மாறும். உடனே உல்லாச உலகு அந்த ‘தரத்தை’ப் பின்பற்றும்.

தலையணியில் இறகுகளைச் செருகிக் கொள்ளும் வழக்கத்தை அரசி புகுத்தி இறகுகளின் விலையே ஏறிவிட்டதாம்.

இந்த அழகைத் தன் தாய் காணவேண்டுமென்று, படம் தயாரித்து அனுப்பினாளாம் அரசி. அவள் தாய் மெரயா, தெரிசா படத்தைத் திருப்பி அனுப்பிவிட்டு “நான் பிரான்சு நாட்டு அரசியின் படத்தை எதிர்ப்பார்த்தேன். இந்தக் கடைசித் தரமான நாடகக் காரியின் படத்தை எதிர்பார்ப்பதே; இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தையல்ல” என்று கடிதமே அனுப்பினார்களாம்.

பிரான்சு நாட்டுச் செல்வவான்களுடன் லியான்சு நகரப் பட்டிலே ஆடைகள் தயாரித்து அணிவது வாடிக்கை. பெரும் பொருள் போட்டுப் பலர் அந்தத் தொழிலை நடத்தி வந்தனர். பல ஆயிரக்கணக்கான நெசவாளர் பிழைத்து வந்தனர்; திடீரென்று அரசி, லயான்சு பட்டாடையை விட்டு விட்டு, பிரசல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வண்ணத் துணியில் ஆடைகள் தயாரித்து அணியலானாள். அரசி அணியவே அனைவரும் அதனையே தேடினர். லயான்சு நகரில் தொழில் கெட்டது. பிழைப்பு கெட்டது. அரசி ஏன் இப்படி எம்மைக் கெடுக்கிறாள் என்று கேட்டனர் தொழிலாளர். இது தெரியாதா? பிரசல்ஸ் நகர வெள்ளை ஆடை தயாரிக்கும் தொழிலால் இலாபம் தேடத்தான் நமது வயிற்றில் மண் போடுகிறாள்” என்றனர் வெகுண்ட மக்கள்! அவர்கள் கூறியதில் உண்மை இல்லாமற் போகவில்லை.

வெறுப்பு நிரம்ப ஏற்பட்டுவிட்ட நிலை. மக்களின் நிலையை எடுத்துக்கூறிடப் பலர் முன்வந்தனர்.
பகுத்தறிவு வால்டேர் மூலம் பரவிற்று; ரூசா அரசியல் தெளிவு அளித்து விட்டார்; உரிமைக்காக அஞ்சாது போரிட்டால், எத்தகைய ஆதிக்க அரசையும் வீழ்த்தலாம் என்பதை அமெரிக்கா நடத்திக் காட்டிய ‘விடுதலைப் போர்’ எடுத்துக் காட்டிவிட்டது. அமெரிக்கா சென்று திரும்பியவர்கள், ‘கதை, கதை’யாகக் கண்டவற்றைக் கூறினர். முச்சந்திகளிலும், உணவுக் கடைகளிலும், வயலோரத்திலும், தொழிலிடங்களிலும், இதே பேச்சு!

“ஆமாம், அமெரிக்கரின் வீரம் அப்படிப்பட்டது. நம்மைப் போலவோ, குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பார்கள். அவர்கள் மனிதர்கள்! நாம் நடைப்பிணங்கள்!” என்று கூறுவான் ஒருவன் ‘இரு, இரு; பொறு, பொறு’ என்பான் இன்னொருவன். “எது வரையில்? நமது எலும்புகளை எடுத்து இசைக் கருவி அமைத்து நரம்புகளை அறுத்தெடுத்து அதிலே குளிரச் செய்யும் வரையில் பொறுத்திருக்க வேண்டுமா?” என்று குத்திக் கேட்பான் இன்னொருவன். ‘என்னதான் செய்வது’ என்பான் வேறொருவன். ‘சாகுமன் கொடுமையை எதிர்ப்பது’ என்பான் அமெரிக்கா சென்று வந்தவன். ‘வலிவு?’ என்று கேட்பான் இளைத்தவன். அவன் இதயத்தைக் காட்டி ‘இங்கு இருந்தால் போதும்’ என்பான் அமெரிக்கக் காட்சி கண்டவன். அமெரிக்க விதைப் பண்ணையிலிருந்து புரட்சிக்கான தரமான வித்து கிடைத்தது.

இதற்கிடையில் கவலையற்ற மன்னனையும் கலங்கச் செய்யும் விதமாகப் பொருளாதார நெருக்கடிகள் கிளம்பின. அமைச்சர்கள் மாறி மாறி அமர்த்தப்பட்டனர். நெக்கர் போன்றவர்கள் தமது நிபுணத்தனம் நாட்டைக் காத்திடும் என்று நம்பி உழைத்தனர். ஆனால் மூண்டு கிடந்தவற்றைக் களைந்திட முடியவில்லை. அமைச்சர்கள் மாறினர், அவதிகள் வளர்ந்தன; மக்களின் ஆர்ப்பரிப்புக் கிளம்பிற்று. தீர்க்க முடியாத சிக்கலும், அடக்கிட முடியாத தொல்லையும், போக்கிட முடியாத நெருக்கடியும் ஏற்படும்போது மட்டுமே, ஸ்ட்டேட்ஸ் ஜெனரல் எனும் கூட்டு மன்றத்தைக் கூட்டுவது வழக்கம். பிரான்சு மன்னர்கள் இதைக் கூட்டுவது என்றால் தயங்குவர்.

கூட்டு மன்றம் என்பது, மக்களின் பிரதிநிதிகள், மதத்துறை உறுப்பினர், பிரபுக்கள் எனும் மூன்று பிரிவினரும் ஒன்றாகக் கூடி, நாட்டுக்கு வந்துற்ற கேடு போக்க வழிகாண ஏற்பட்ட அமைப்பு.

படை பலமும், சட்டத்தின் துணையும் போதுமானதாக இல்லை; மக்களின் கூட்டுச் சக்தி திரட்டப்பட்டாலன்றி நெருக்கடி தீராது என்பதை அறிவிக்கும் சம்பவம், கூட்டு மன்றம் கூட்டுவது.
கூட்டு மன்றம் கூடினால் மன்னரின் ஆட்சி முறையைத் தகர்த்திடும் ஆற்றல் கிளம்பிவிடும் என்பது மன்னர்களுக்கு இருந்து வந்த அச்சம்.

அச்சப்பட்டுப் பயன் இல்லை. எனவே பதினாறாம் லூயி, கூட்டு மன்றம் கூட்டச் செய்தான். கூட்டு மன்றம் 1789ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் கூடிற்று.

மக்கள் உழைத்துப் பொருள் தருவர். பிரபுக்கள் வீரத்தால் நாட்டுக்குப் பாதுகாப்புத் தருவர்; மதத் தலைவர்கள் ஜெபம் செய்து மக்கள் உய்வுக்கான அருள் தேடித் தருவர் என்பது தத்துவம்.

நடைமுறை அடியோடு மாறிவிட்டது. மக்கள் தமது ‘பங்கினை’ தேவைக்கு அதிகமாகவே செலுத்திக் கொண்டு வந்தனர்; பிரபுக்களும் பூஜாரிகளும், பெயர் கண்டு திருப்திப்படச் சொன்னார்கள். செயலோ சீர்கேடானவை.

கூட்டுமன்றம் கூடுவதென்பது, பிரான்சு நாட்டிலே புனிதமான நிகழ்ச்சி.

மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கெனவே ஏற்பட்டு விட்டிருந்த விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் பன்மடங்கு வளர்ந்தது.

பிரான்சு நாட்டிலே, உரிமை வேட்கையையும் ஊராளும் முறை பற்றிய தெளிவையும் ஊட்டப் பல கழகங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றில் மிக அதிகமான செல்வாக்குடன் விளங்கியது ஜாகபின்ஸ் என்பவர்களின் சங்கம். இந்தச் சங்கம் புரட்சிக் காலத்தில், மிகத் தீவிரமாகப் பணியாற்றிற்று. இதிலே பயிற்சி பெற்றவர் பலர் மக்கள் மன்றத்தில் இடம் பெற்றனர்; ஆட்சிக் குழுவிலும் பணியாற்றினர். பேதமும் உட்பூசலும் ஏற்பட்டுப் பிறகு கலகலத்துப் போய்விட்டது என்றாலும், ‘ஜாகபின் சங்கம்’ மக்களிடையே உரிமைக் கனலை மூட்டி வெற்றி கண்டது.

வர்சேல்ஸ் நகரில் மே 2-ம் நாள் கூட்டுமன்ற உறுப்பினர்களை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

நாலாம் நாள் கூட்டு மன்றத்தினர் ‘அருளைப் பெற’ மாதாகோயில் சென்றனர். சாமான்யர்களே தேவாலம் செல்லும் ஊர்வலத்தின் முன்வரிசையில் செல்ல வேண்டும் என்பது முறை. அதன்படி மக்களின் பிரதிநிதிகள் முன்னால்நடந்தனர். இரண்டாவது வரிசையில் ஆடம்பர உடையுடுத்திய பிரபுக்கள்; பிறகு மத அமைப்புக்களிலிருந்து - வந்தவர்கள்; கடைசியில் மன்னன்!

மக்கள் ஊர்வலத்தின் முன்வரிசையில் வந்த, தமது ‘பிரதிநிதி’களைக் கண்டதும் களிப்புடன் ஆரவாரம் செய்தனர்; பிரபுக்களை ஏற இறங்கப் பார்த்தனர். வரவேற்கவில்லை; மதத்தலைவர்களை வெறுப்புடன் பார்த்தனர்; மன்னனை அருவருப்புடன் பார்த்தனர்.

வரலாறு எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான அறிகுறி அன்றே தெரிந்துவிட்டது.

பணம் பெற வழிகூறும் கூட்டு மன்றம் என்று மன்னனும் அவன் பரிவாரமும் எண்ணினர்; ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும்? மக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கான திட்டம் வகுத்துக்கொள்ள இதுதான் நல்ல வாய்ப்பு என்று விடுதலை விரும்பிகள் தீர்மானித்தனர்.

அரியணையில் அரசன் அமர்ந்தான்; குடும்பத்தினர் படிகளில் அமர்ந்தனர்; வலப்புறம் மதத் தலைவர்கள், இடது புறம் பிரப்புகள், கோடியில், சற்றுத் தாழவாக இருந்த இருக்கையில், மக்களின் சார்பிலே உறுப்பினரானோர் உட்கார்ந்தனர்; அன்றைய அரசியல் அமைப்பு அது; அதனை மாற்றத் துணிவும் வலிவும் கொண்டோர், ‘முன்னிடம்’ பிடிக்கவில்லை. பிடித்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது பார்வையால், பேச்சால் தெரியவந்தது.

மத அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை 290. பிரபுக்கள் சார்பில் இடம் பெற்றோர் 266. மக்கள் சார்பில் வந்திருந்தோரின் எண்ணிக்கை 584! சமூகத்தின் படப்பிடிப்பு போல் இருந்தது, அந்தக் கணக்கு. அந்த 584 பேர்களில் 121 பேர் வழக்கறிஞர்கள், 16 மருத்துவர், 162 பேர் வணிகர்கள் அல்லது சிறு பண்ணைகளின் சொந்தக்காரர்கள்.

மன்னர், கூட்டு மன்றத்தின் கடமை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அலுவலைக் கவனிக்க சொல்லி விட்டுச் சென்றனர்.

அலுவலைக் கவனிக்க, மக்களின் உறுப்பினர் துடிக்கின்றனர். பிரபுக்களும் மதச்சார்பினரும் ஒத்துழைப்புத் தரவில்லை; முன்னவர் மறுக்கின்றனர். பின்னவர் தயங்குகின்றனர்.

“நாமே அலுவலைக் கவனிப்போம்’ என்று மக்களின் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்; மதச் சார்பினரும் ஒத்துழைக்கத் தயாராயினர். இதை நாடு வரவேற்று மகிழ்ந்தது.’

பால்தரும் கொழுத்த பசுவைக் கொண்டுவந்து கட்டி யிருக்கிறோம்; தொழுவத்தில் என்று ஆட்சி நடத்தியோர் எண்ணிக் கொண்டனர்; நாட்கள் செல்லச் செல்ல, புலி உறுமுவது கேட்டது!

தமது பிரதிநிதிகளை மன்றத்திலும் வெளியிலும் கூடி மக்கள் உற்சாகமூட்டினர்.

“எமது அரசு ஏற்படப் போகிறது, எத்தர்களே! அறிமின்! தீர்த்துக் கட்டுமுன் திருந்துமின்!” என்று மக்கள் கூட்டம் மமதையாளரை நோக்கி முழக்கமிட்ட வண்ணமிருந்தது. எங்கும் எழுச்சி! உரிமைப் பேச்சு! எதிர்த்து நிற்கும் போக்கு! எவரும் எமக்கு நிகர் இல்லை என்ற நோக்கம்! புயல் கிளம்புகிறது என்பது புரியலாயிற்று.

நெக்கர், மன்னன் தன் ஆட்சி முறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்திப் பார்த்தான். மற்றவர்கள் மன்னனை உசுப்பிவிட்டனர். கூட்டு மன்றத்தை மன்னன் மீண்டும் சந்திப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டது. சூன் மாதம் 22ஆம் நாள் அதற்காகக் குறிக்கப்பட்டடது! ஆனால் 20ஆம் நாளே, ‘அரசனின் ஏவலர்கள் மன்றம் நுழைந்து அரசன் வருகைக்கான அமைப்புச் செய்யவேண்டும்; அனைவரும் வெளியேறுக!’ என்று உத்தரவிட்டனர்.
இதுபோன்ற அட்டகாசத்தை அழித்தொழிக்கத்தான் மக்களின் உறுப்பினர் கூடினர்; அவர்களிடமே ஆட்சியாளரின் அம்புகள் வம்புக்கு நின்றன.

எதிர்ப்பு எழுந்தது. இடையில் பந்தாட்ட அரங்கிலே கூடலாம் என்ற யோசனை கூறப்பட்டது. அங்குச் சென்று, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர்.

கூட்டு மன்றத்தைக் கூட்டிவிட்டுக் கேவலப்படுத்துவது எத்தகைய அறிவீனம் என்பதை அரசன் உணரவில்லை. அரசனை அண்டிப்பிழைத்துவந்த ஆள் விழுங்கிகள், அரசனுக்குத் தவறான பாதையைக் காட்டினர். 23ஆம் நாள், மன்னன் மன்றம் வந்தான். மக்களின் உறுப்பினர்களை, பக்கவாட்டத்தில் உள்ள கதவருகே நிறுத்திவைத்தனர், பிரபுக்கள் முன்வாயிற்படி வழியாகச் சென்று அமரும் வரையில்! பிறகு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே விடப்பட்டனர்! அவர்கள் உட்கார இடமே இல்லை. பிரபுக்களும் மதத்தலைவர்களும் இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர் தம்மைக் கேவலப்படுத்து கிறார்கள் என்று அறிந்து, வேதனைப்பட்டனர்; இருப்பினும் பொறுத்துக் கொண்டனர்.

மன்னன், அறிவுரை கூறலானான்; “ஆகாத வழி செல்லாதீர்; அரசாள நானறிவேன்; உரிமை தேடி அலையாதீர்! வரம்பு அறிந்து வாழுங்கள். மக்களின் நல்வாழ்வை நான் கவனித்துக் கொள்வேன். இனி, மூன்று பிரிவினரும் தனித்தனியாக இருந்து, அலுவலைக் கவனியுங்கள்.” என்ற கருத்துப்பட மன்னன் பேசினான். மக்கள் உறுப்பினருக்குப் பெருத்த ஆச்சரியம். இத்துணை கண்டிப்பு மன்னனுக்கு எங்கிருந்து வந்தது என்ற ஆச்சரியம். மன்னனைப் பிரபுக்கள் ஏவிவிட்டிருக் கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

மன்னன் புறப்பட்டான் அரண்மனைக்கு - பிரபுக்கள் புடைசூழ! மதத்தலைவர்களில் சிலர் சென்றனர்; சிலர் மக்களோடு கூடிக் கொண்டனர். மன்றத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர். மன்னனின் ஆணை பெற்ற அதிகாரி, “அரசன் உம்மைக் கலைந்து போகச் சொல்லி உத்தரவிட்டதைக் கேட்டீர் களல்லவா?” என்று கேட்டான். “மன்னன் கருத்தைக் கூறினார். நாங்கள் மக்கள் கட்டளையை நிறைவேற்றக் கூடினோம். அந்த வேலையை வெற்றிகரமாக முடித்திடாமல் கலையமாட்டோம், என்பதைப் போய் உன் எஜமானனுக்குச் சொல்” என்று முழக்கமிட்டான், மிராபோ! விடுதலைப் போரின், முதல்முரசு ஒலித்துவிட்டது.!!

அரண்மனையிலிருந்து உத்தரவுகள் கிளம்பின. மக்கள் மன்றம் அவற்றை ஏற்க மறுத்தது. ஆதிக்கம், ஆள்அடிமை கொள்ளும் முறை யாவும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டம் பற்றி மன்றம் பேசிற்று. நாடு மன்றத்தை வாழ்த்திற்று; மக்களின் போர்க்கோலம் கண்டு, பிரபுக்கள் பதுங்கினர், அரண்மனைக்குள் அச்சம் படை எடுத்தது. அணி அணியாக மக்கள் கிளம்புவர், எதிர்ப்படும் ஆதிக்கக்காரரை அடித்து நொறுக்குவர். விடுதலைக்குப் பாடுபடுவோரின் வேண்டுகோளின்படி, பாதுகாப்புப் படை திரண்டது. பாஸ்ட்டிலி சிறைச்சாலை தூளாக்கப்பட்டது ஜூலை 14இல்! மக்கள் அதனை விழாவாக்கி மகிழ்ந்தனர்.

(திராவிட நாடு - 1960)
---------------

12. எட்டு நாட்கள்

எட்டு நாட்கள் (1)

‘எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகியிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை - வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது - இன்று 1600-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் - எட்டு நாட்கள் உள்ளன, தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். “ஐயனே! அடிபணிகிறேன், அஞ்ஞானத்தால் நான் உளறிவந்தேன் இதுநாள்வரையில். மெய்ஞ்ஞான போதகரே! என் பிழை பொறுத்திடுக! ‘என் பிழை பொறுத்திடுக!’ என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை, சாவு இல்லை, வாழலாம், சிறப்புறக்கூட வாழலாம்! வரவேற்புகளும் பதவிகளும் வழங்கப்படும்! திருவிழாக் கோலத்துடன் உலவலாம்! பட்டத்தரசர்கள் கட்டித் தழுவிக்கொள்வர் - பாதகாணிக்கைபெறும் குருமார்கள் அன்புமுத்தம் அளிப்பர் - மாளிகைகள் விருந்தளிக்கும்.

எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர.

வாழ்வா? சாவா? என்ற முடிவு - அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அவன் கொல்லப்பட வேண்டியவன்தான் என்று, ஆச்சாரியாரும் கூறிவிட்டார், அரச மன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. எட்டு நாட்கள் தவணை தருகிறோம், என்று தீர்ப்பளித்தோர் கூறிவிட்டனர்.

ஆண்டு அனுவித்துவிட்டு, இனி ஆட அனுபவிக்க, இயலாத நிலையில் உள்ள படுகிழமல்ல - உலகம் மாயை, வாழ்வே அநித்யம், இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்று குளறும், காட்டு வேதாந்தியுமல்ல; வாழ்வா? ஏன்? வாழ்ந்து நான் சாதிக்கவேண்டியது என்ன இருக்கிறது என்று வேகம் குழப்ப நிலையுடையோனுமல்ல, நடுத்தர வயதுடையவன் - உலகுக்கு உண்மையை அளித்தாகவேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெரியும் உள்ளம் படைத்தான் - அவனைக் கட்டிவைத்துக் கொளுத்திச் சாகடிக்க உத்தரவு பிறப்பித்தனர் - அற மன்றத்தினர் - ஆம்! அறமற்ற செயல் புரியினும், அறமன்றமென்றே அது அழைக்கப்பட்டது. அறம் மட்டுமல்ல, அன்பு எனும் சீரிய பண்பினைத் தன் அகத்தே கொண்டது என்றும், அந்த மன்றம் கருதப்பட்டு வந்தது.

அறம் எது? அன்பு எது? என்று மக்களிடம் எடுத்துரைக்கும் உத்தமன் அவன் - அவனுக்குத்தான் மரண தண்டனை - எட்டே நாட்கள் தரப்பட்டுள்ளன, முடிவுக்கு வர.

எட்டு ஆண்டுகள் சிறையிலே சித்திரவதைக்கு ஆளாகி, வேதனையால் கொட்டப்பட்டு, தலைமயிர் வெளுத்துப்போய், கண்ணொளி மங்கி, கைகால் சோர்வுற்று, உடலெங்கும் வெதும்பிக்கிடந்தான், - ப்ருனோ - இத்தாலி தந்த அறிவாளி!

ரோம் நகரச் சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டுக் கிடக்கும் அவன் முன், ஒரே பிரச்சனை நிற்கிறது, வாழ்வா, சாவா, என்று! அவன் வாழ்வது என்று முடிவுசெய்துவிட்டான் - எனவே அவனை எட்டாம் நாள் சுட்டெரித்து விட்டனர்!!

வாழ்வு! என்ன பொருள் அதற்கு? உண்டு உலவி, உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா, மனிதன்? ஆதிக்கக்காரன் அடிபணிந்து, ஆர்ப்பரிப்போன் பாதம்பற்றி, குற்றேவல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக் கொண்டிருப்பதா வாழ்வு? எத்தனிடம் சித்தத்தை ஒப்படைத்துவிட்டு, ஏமாளியாகிக் கிடப்பதா வாழ்வு! அவன் அப்படி எண்ணவில்லை!! வாழ்வு, ஒருபெரும் பொறுப்பு, ஓர் அரும் வாய்ப்பு, உண்மையை அறிய, அறிந்ததன்வண்ணம் ஒழுக, பிறருக்கும் அந்த ஒழுக்கும் சழக்கருடன் போரிட்டு, அறமல்
லாததை, விரட்டி ஓட்டி அறத்தை நிலைநாட்டப் பாடுபடல் வேண்டும். வாழ்வு, அதற்கான ஒரு வாய்ப்பு! இந்தக் குறிக்கோளற்று இருப்பது, வாழ்வு அல்ல, என்று அவன் கருதினான். அவன்போல் ஒரு சிலரே எண்ணினர் - ஒரு சிலருக்கே அந்தச் சீரிய கருத்து இருக்க முடியும் - அந்த ஒரு சிலராலேயே உலகு, மெல்ல மெல்ல மாண்பினைப் பெறுகிறது.

அவன் அறிந்து போற்றிய ‘வாழ்வு’ அவனுக்குக் கிடைத்து விட்டது, கொடியோரால் அவன் சுட்டுக்கொளுத்தப்பட்டான் - இன்று வாழ்கிறான் - என்றும் வாழ்வான்! அவன், அப்படிப் பட்ட ‘வாழ்வு’ தேவை, என்று தீர்மானித்தான், எனவேதான், சாகச் சம்மதித்தான்.

“எட்டே நாட்கள்!” என்றனர்! உயிரை இழக்க எப்படி மனம் துணியும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாள் ஓட ஓட, அவன் நெஞ்சம் நெருப்பிலிட்டது போலாகும், அஞ்சுவான், கெஞ்சுவான், அலறுவான், அடிபணிவான், என்று தீர்ப்பளித்தோர் எண்ணிக்கொண்டனர்! அவர்கள், சிறையிலே தள்ளப்பட்டுக் கிடந்தவனின் உள்ளத்தின் மேன்மையை உணர முடியாத உலுத்தர்கள்.

“அரசை இழந்துவிடச் சம்மதித்தால், உயிரோடு இருக்கலாம்” என்றால், அரசு இழக்கலாம், உயிர், இருக்கட்டும், உயிர் இருந்தால் புது அரசு கிடைத்தாலும் கிடைக்கும், இல்லை எனினும் பரவாயில்லை, குடும்பத்தாருடன் இனிது வாழலாம் என்றே, அரசாள்பவன் கூறுவான். அங்ஙனம் உயிர்தப்பினால் போதும் என்று மணிமுடியைக் கீழே வீசிவிட்டு ஓடின மன்னர்களின் கதையை அவன் அறிவான். அவனை அவர்கள் இழக்கச் சொன்னது.

“அறிவை!”

இயலாது, என்றான்; அறிவுவேண்டி நின்ற ஒரே குற்றத்துக்காக, அவனைச் சுட்டுக்கொல்வது என்று தீர்ப்பளித்தனர்.

அறிவு வேண்டுகிறேன் - என்பதை எப்படிக் குற்றச்சாட்டு ஆக்க முடியும்? எனவே, ப்ரூனோ ஒரு நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான்.

நாத்தீகன்! இந்த ஒரு சொல்லைக் காட்டி, எத்துணைக் கொடுமைகளைச் செய்துள்ளனர்! எவரெவர்மீது அந்தச் சொல்லம்பு வீசப்பட்டது!

எது ஆத்தீகம்? எது நாத்தீகம்?

விளக்கம் தந்தனரா? இல்லை! எங்கு யார் ஆதிக்கத்தில் உள்ளனரோ அவர்கள் கொண்டுள்ள வழிபாட்டு முறையை ஏற்க மறுப்பவன், நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான். வழிபாட்டு முறையை மட்டுமல்ல, ஆதிக்கத்திலிருக்கும், எந்தக் கருத்தை ஏற்க மறுப்பவனும், மாறுதலான கருத்தைக்கொள்பவனும் விள்பவனும் நாத்தீகர் எனப்பட்டனர்.

போப்பாண்டவரின் ‘ஸ்ரீமுக’த்தைத் தீயிலிட்டபோது மார்டின்லூதர், நாத்தீகனென்று, கத்தோலிக்க உலகினால் குற்றம் சாட்டப்பட்டார். அதேபோல, இங்கிலாந்தில் பிராடெஸ்டென்ட் மார்க்கம் அரச மார்க்கமான பிறகு, கத்தோலிக்கர்களை அங்கு ‘நாத்தீகர்’ என்று கூறினர்.

மார்க்க சம்பந்தமான பிரச்சனைகளில் மட்டுமல்ல, அன்று ஆதிக்கத்திலிருந்த மத ஏடுகளிலும் அவற்றைத் துணையாகக் கொண்டு தீட்டப்பட்ட மற்றத் துறைகள் பற்றிய ஏடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துகளைக் கொள்பவரை எல்லாம், நாத்தீகர் என்றே குற்றம் சாட்டினர் - கடும் தண்டனை தந்தனர் - சித்திரவதை செய்தனர்.

அரசு முறை, அதன் தொடர்பான அறமுறை, வரி வசூலிக்கும் முறை, சமுதாய அமைப்பு முறை நடை நொடி பாவனைகள், எனும் எதிலும் அரச மார்க்கத்தின் மத ஏடுகளில் உள்ளபடியே சொல்லும் செயலும் அமைந்திருக்கவேண்டும் என்றனர்.

மனிதன் மனிதனை அடிமையாகப் பிடித்து வைத்து, வேலை வாங்குவதும், சந்தைச் சதுக்கத்தில் ஆடுமாடுகள் போல் விற்பதும், கொடுமையானது, அநாகரிகமானது, அஃது அறமாகாது, என்று கருணையும் நேர்மையும் கொண்டவர்கள் வலியுறுத்திய போதுகூட, அந்த முறையீடு, நாத்தீகம் என்றே கூறப்பட்டது.

எனவே, ப்ரூனோ மீது நாத்தீகக் குற்றத்தை வீசியது, அன்றைய மனப்போக்கிலே, திடுக்கிடக்கூடிய, தனிச் சம்பவமல்ல.

ஜியார்டானோ ப்ரூனோ, அன்று ஆதிக்கத்திலிருந்தவர்கள் எந்த அடிப்படையின் மீதமர்ந்து அரசோச்சி வந்தார்களோ, அந்த அடிப்படைக்கு ஆட்டம் கொடுக்கக் கூடிய, அறிவுப் பணியில் ஈடுபட்டிருந்தான். அவன் இருந்தால் தங்கள் ஆதிக்கம் அழிந்து படும் என்று அஞ்சினவர்கள், அவனுடைய அறிவுப் பணியைத் தடுத்திடவோ, தகர்த்திடவோ முடியாத மூட மதியினர், அவனைக் கொன்றால்தான், தாங்கள் வாழ முடியும், என்று எண்ணினர் - அவனும் சாகச் சம்மதித்தான்.

எட்டு நாட்கள் தவணை தந்தனர். ஏன்? நெஞ்சு உரமிக்கவன்தான் ப்ரூனோ, கொண்ட கொள்கைக்காகவே, ஆண்டு பல ஆபத்தால் வேட்டையாடப்பட்டு அலைந்து கொண்டிந்தவன் தான், அச்சம் அவனை அடக்கியதில்லை, ஆசை அவனைக் கட்டுப்படுத்தியதில்லை, அரண்மனை கண்டு அவன் சொக்கின தில்லை, மாளிகை கண்டு மதுரவாழ்வு வேண்டி நின்றவனல்ல, நிந்தனையை நிலாச்சோறு எனக்கொண்டான், வேதனையை வேண்டுமளவு உண்டான், எதற்கும் சளைக்கவில்லை, எதனாலும் மனம் இளைக்கவில்லை; எனினும், மரணம் தன் குரூரக்குரல் கொடுத்து நிற்பதைக் காணும்போது, நாட்கணக்கிலே உயிர் ஒட்டிக்கொண்டிருந்ததை உணரும்போது, ஒருவேளை, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நெஞ்சிலே ஒரு சிறு ஆசைப் பொறிகிளம்புமோ, என்று எண்ணினர்; ஆவல்கொண்டனர்.

அவனைத் தண்டித்தவர்கள், வாழ்வின் சுவையைப் பருகிக்கொண்டிருந்தவர்கள், செல்வத்தைப் பெறுவதிலே ஓர் இன்பம் கண்டனர், செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வதிலே வேட்டையாடும் மிருகமாக இருந்தனர் - வாழ்வு எவ்வளவு சுவை தருகிறது, மாளிகையில் வாழும்போது, மலர்த்தோட்டங்களிலே வீசும் மணத்தை உட்கொள்ளும்போது, மலரணிகொண்டைச் செருக்கிலே அவர் மையல் தரும் கண்ணின் மினுக்கிலே, உள்ள இன்பம் கொஞ்சமா, கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் ஓடிவந்து கட்டளைக்குக் காத்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் பெருமிதம் சாமான்யமா - பேழையிலே விதவிதமான அணி மணிகள் மின்னும்போது கண்களிலே களிப்பு ஒளிவிடு கிறதே, பெரும்பதவிகள் கிட்டிடும்போது, மார்பு நிமிர்கிறது, நடையிலே ஒரு புது முறுக்கு ஏறுகிறது, பேச்சே புதிய பொலிவு பெறுகிறதே - இவை எல்லாம் இன்பத்தேன் அல்லவா! இவ்விதமான வாழ்வைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் - ப்ரூனோவைத் தண்டித்தவர்கள். எனவே, அவர்கள், எதையும் ஏற்க நெஞ்சம் இடம்தரும் சாகமட்டும், துணிவு இராது. நாள் செல்லச் செல்ல, நெஞ்சு நெகிழும், ஆசை அரும்பும் உறுதி குலையும், ப்ரூனோ, உயிருக்கு மன்றாடுவான் என்று எண்ணினர். பெருமழை பெய்கிறது, மண்மேடு கரைகிறது, பாறை எப்போதும் போலத்தானே இருக்கிறது! ஏடு பல படித்த அந்த ஏமாளிகள், இந்தச் சிறு உண்மையை உணரவில்லை - ப்ரூனோ, வாழ்வு என்பதற்குக் கொண்டிருந்த ‘தத்துவம்’ தூய்மை நிரம்பியது, வீர உள்ளத்தில் மட்டுமே தோன்றவல்லது. சுயநலமிகளும் சுகபோகிகளும் சூது மதியினரும், அதனை உணர்தல் இயலாது.

எட்டு நாட்களா! என்னைக் கொல்லும் துணிவு இவர்களுக்கு உண்டாக, எட்டு நாட்கள் தேவைப்படுகிறதா! பயங் கொள்ளிகள்!! - என்றுதான் ஜியார்டானோ ப்ரூனோ, எண்ணிக் கொண்டிருப்பானே தவிர, ஐயோ எட்டு நாளிலே உயிர் இழக்க வேண்டுமா, என்று அஞ்சி இருக்கமுடியாது.

“நாத்திகனான உன்னைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சாகடிப்பது என்று தீர்ப்பளிக்கிறோம்” என்று அவர்கள் கூரியபோது, ப்ரூனோ பெருஞ்சிரிப்புடன் “இந்தத் தண்டனையைக் கேட்கும் எனக்கு அச்சம் இல்லை; இதைக் கூறும் உங்களுக்கு அச்சம் ஏன் இவ்வளவு இருக்கிறது!” என்று கேட்டான்.
அந்த நெஞ்சு உரத்தைக் குலைக்க, எட்டு நாட்களா! பேதைமை!!
* * *

என்றைய தினம், ப்ரூனோ உண்மையை உரைத்திடுவதே தன் பணி எனக் கொண்டானோ, அன்றே அவன் அறிவான், தன்மீது குறிவிழுந்துவிட்டது என்பதை. எவ்வளவு காலத்துக்கு அவர்களிடமிருந்து தப்பித்திருக்க முடிகிறதோ அதுவரையில் தான் கண்ட உண்மையை உலகுக்குக் கூறி வருவது, என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அந்தத் திண்மையை, கொடுமைகள் தகர்க்க முடியவில்லை! அவன் நாடு பல சுற்றி, பல அவைகளிலே நின்று, தன் கொள்கையைக் கூறினான் - போதுமான அளவுக்கு - இனிச் சாக அஞ்சுவானேன் - இறந்தால், கொள்கை பன்மடங்கு புதுவலிவும் பொலிவும் பெறும் - வளரும், பரவும், வெல்லும்! ப்ரூனோ, அந்த எட்டுநாட்டுகளும், இதையன்றி வேறெதனை எண்ணிடப் போகிறான். குவித்து வைத்த பொன்னை யார் அனுபவிப்பார்களோ, குலவிவந்த கிளியை எந்தக் கூண்டிலே கொண்டுபோய் அடைப்பார்களோ, மனைவி மக்கள் என்னவென்று கூறிக் கதறுவார்களோ, என்றா எண்ணி ஏங்கப் போகிறான். ப்ரூனோ, துறவி! தூர்த்தர்கள் பலர் அதனை வேலையாகக் கொண்டு, ‘துறவி’ எனும் சொல்லையே மாசு படுத்திவிட்டனர் - எனவே ப்ரூனோவைத் ‘துறவி’ என்று கூறுவது, அவருக்கு உள்ள மாண்பினை பாதிக்குமோ என்று கூட அஞ்சவேண்டி இருக்கிறது. ப்ரூனோ, கொள்கைக்காகப் போரிடும் அஞ்சா நெஞ்சினன் - வாழ்க்கையில் இதற்காகவன்றி வேறு எதற்கும், அவருக்கு நேரமும், நினைப்பும் கிடையாது. எனவே, எத்தனை நாள் தவணை தரப்பட்டாலும், தடுமாறாது! அந்த நெஞ்சம்! அவ்வளவு உறுதிப்பட்டுவிட்டிருக் கிறது. நச்ச நினைப்பினர் அதனை அறியார்.

ஏன், அவர்கள், ஜியார்டானோ ப்ரூனோ, மடிவதைவிட மனம் மாறிவிடுவது நல்லது என்று எண்ணினர்? நாத்தீகன் ஒழியத்தானே வேண்டும்? ஏன் பிழைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றனர் - புனித மார்க்கத்தை ஏற்றுக்கொள், பூஜ்யர்களை வணங்கு, உயிர் பிழைக்கலாம் என்று ஏன் கூறினர். நேர்மையும் ஈரமும் கொண்டனரா? இல்லை! சிங்கத்தைக் காலடியிலே விழச் செய்தால், காண்போர், எவ்வளவு பெருமை தருவர்! சிறு நாய்கள் நத்திப் பிழைக்கின்றன - பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது நரிகள் பதுங்கிக்கொள்கின்றன - தேடுவதே கஷ்டமாகி விடுகிறது. இதோ சிங்கம் - வீரமுழக்கத்தை எழுப்பிய வண்ணம் இருக்கிறது! வலையில் வீழ்வதில்லை: கணைக்குத் தப்பிவிடுகிறது - காடு ஒன்றிலே வேட்டையைத் துவக்கினால், வேறோர் காடு சென்றுவிடுகிறது - எங்குச் சென்றாலும் முழக்கம்!! இந்தச் சிங்கத்தை, இந்த ப்ரூனோவை, இந்த அஞ்சா நெஞ்சினினை, ‘மனமாறிவிட்டவானாக்கினால்’ சில தலைமுறைகள் வரையிலே, அறிவுத்துறையிலே ஈடுபடவும் ஆட்கள் முன்வருவரா? “அப்படிப்பட்ட அசகாய சூரன்! ஆண்டு பலவாக, மார்க்கத்தை மதிக்க மறுத்து மனம் போன போக்கிலே புதுமை புதுமை என்று பொல்லாக் கருத்துக்களைப் பேசித் திரிந்தவன், என்ன ஆனான், கடைசியில், கண்ணீர் பொழிந்தவன், காலடி வீழ்ந்தான், கண்டு கொண்டேன் உண்மையை, என்று இறைஞ்சினான்! - என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா. பகுத்தறிவு கருவில் இருக்கும் போதே கருக்கிவிட இதைவிட வாய்ப்பு வேறு கிடைக்குமா! எனவேதான், ஜியார்டானோப்ரூனோவுக்கு மரண பயத்தைக் காட்டி, பணியவைக்கலாம என்று ஆவல் கொண்டனர்.

எட்டு நாள் தவணை! ஒரு தனி மனிதனுடைய, ஒரு மாவீரனுடைய உயிர் இருப்பதா பறிக்கப்படுவதா என்பதல்ல, முழுப் பிரச்சனை, உண்மையான பிரச்சனை, பகுத்தறிவுக்கு, இனியும் இடம் உண்டா, அல்லது இந்த எட்டே நாட்களிலே, அது சுட்டுச் சாம்பலாக்கப்படுவதா என்பதுதான். ப்ரூனோ இதை நன்கறிந்தே, என்னைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் - அறிவு கொழுந்துவிட்டு எரிந்த வண்ணம் இருக்கட்டும் என்று கூறினான் - செயலால்!!

ப்ரூனோ, எப்போதும் தனக்காக அஞ்சினதில்லை - ஆண்டு பல கஷ்டப்பட்டதால் உள்ளத்தில் உரம் மெருகாகி விட்ட இந்த நிலையில் மட்டுமல்ல - சிறுவனாக இருந்தபோதே.

பதினைந்து வயதுச் சிறுவன் ப்ரூனோ, டாமினிக்கன் மடாலயத்திலே சேர்ந்தபோது; ஆர்வமும் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது மடாலயத்திலே சேரும்போது, அங்குதான் அறிவுத்தாகம் தீரும் என்று எண்ணிச் சென்றான்.

புது நெறிகள் புரட்சிபோலக் கிளம்பி, கத்தோலிக்க மார்க்கத்தைக் குலைத்தபோது, வெடிப்புகளை மூடவும் வெதும்பியதைக் களையவும், பூச்சுகளைப் புதுப்பிக்கவும், எடுத்துக்கொள்ளப்பட்ட பல முயற்சிகளிலே, டாமினிக் தேவாலய இயக்கம் ஒன்று. தூயநெறி நிற்பது, தூய்மையைப் பரப்புவது, வழி தவறியவர்களை மீண்டும் நன்னெறி கொண்டு வந்து சேர்ப்பது, என்ற நோக்கத்துடன், கற்றறிவாளர்கள், கர்த்தரின் சுவிசேஷம் உணர்ந்த வித்தகர்கள், துவக்கியது, டாமினிக், மடாலயம்.

நாத்தீகத்தை நசுக்குவதற்கான நல்லதோர் ஏற்பாடு என்றனர் இதனை - அது உலகு வியக்கும் அறிவுத் திலகம் ப்ரூனோவை, அளிக்குமென்று, எவ்வளவோ ‘ஜெபதபம்’ செய்தும், டாமினிக் துறவிகளுக்குத் தெரியவில்லை. அறிவுக் கூர்மையுள்ள வாலிபர்களை, அவர்களைப் பாசம் பற்றிக் கொள்ளா முன்னம், ஆலயக் கல்லூரியில் கொண்டு சேர்த்து, ஐயன் பெருமைகளைக்கூறி, நல்ல ‘சாமியார்’ ஆக்கிடும் வேலையில், டாமினிக் மடாலயக் கல்லூரியில் சேர்த்து, அன்பும் அக்கறையும் காட்டிய ஆன்ஸ்லம் பாதிரியருக்கு ப்ரூனோ, புன்னகை பூத்த முகம் படைத்த வாலிபனாகத் தெரிந்தபோதிலும் அவன் உள்ளம், இத்தாலி நாட்டு வெசுவயஸ் எரிமலை போன்றது என்பது புரிந்துவிட்டது; அஞ்சினார். மடாலயத்திலே இருக்கும்போதே ப்ரூனோ ஒரு சிறு ஏடு தீட்டினான்- வெசுவயஸ் கொஞ்சம் நெருப்பைக் காட்டிற்று! பொறிகளைக் கண்ட ஆன்ஸ்லம் பாதிரியார், “மகனே! வேகமாக ஆபத்தை நோக்கிச் செல்கிறாய்” என்று எச்சரித்தனர். ப்ரூனோ பதறவில்லை - புன்னகை பூத்த முகத்துடன் நின்றனன்.

மடாலயச் சாமியார்களின் மந்த மதியையும் கோலா கல வாழ்வையும் கேலி செய்து, ப்ரூனோ அந்த ஏட்டிலே தீட்டியிருந்தான், அவனுடைய நெஞ்சிலே, நாத்தீக அரவம் குடிபுகுந்துவிட்டது, என்று சந்தேகித்த, பாதிரிகள், ‘விசாரணை’ நடத்தத் திட்டமிட்டனர் - மதவிசாரணை அதிகாரியும் அழைக்கப் பட்டிருந்தார். இதை அறிந்ததும் ஆன்ஸ்லம் பாதிரியார் அலறிப் போனார். ப்ரூனோ சிறுவன், நாட்டிலே நடைபெறுவது, அதிலும் மக்களின் ‘பூஜை’யைப் பெற்றுக்கொள்ளும் மடாலயத்திலே நடைபெறும் முறை அவனுக்கு என்ன தெரியும் - ஆன்ஸ்லம் அறிவார்! விசாரணை என்றால் என்ன? கொடுமைக்கு வேறோர் பெயர் தானே! கனல்கக்கும் கண்படைத்த கொடியவர்கள், ஈவு இரக்கமற்ற நெஞ்சினர்கள், உருட்டிமிரட்டும் கண்ணினர், உட்காருவர்; எதிரே நிறுத்தப்படுபவனைக் கேள்விகள் கேட்பர்; அந்தக் கேள்விகள் எதன் பொருட்டுக் கேட்கப்படுகிறது என்று அறியாமல், பதில் கூறுவான்; அந்தப் பதிலிலே பொதிந்து கிடக்கும் பொருளைத் துருவிப் பார்த்து. இவன் நாத்தீகன்தான் என்பர்! - தீர்ந்தது. கடும் தண்டனை! சிறை கிடைக்கலாம், அவர்கள் சீற்றம் அதிகம் கொள்ளாதிருந்தால். சித்திரவதை செய்வது, வழக்கமான சாதாரண தண்டனை!

இந்த ‘விசாரணை’ ஏற்பட இருக்கிறது, ஜியார்டானோவுக்கு, அந்தத் துணிவுள்ள வாலிபன், வானத்தின் வண்ணத்தைக் கண்டு களிக்கிறான் - அலையின் ஒலி கேட்டு மகிழ்கிறான் - கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் திராட்சைகள் நிரம்பிய கொல்லையைக் காண்கிறான், எங்கும் தெரியும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கிறான்.

“மகனே! மகனே வர இருக்கும் ஆபத்து அறியாமல் கிடக்கிறாயே” என்று கூறியவண்ணம் வந்த ஆன்ஸ்லம் பாதிரியார், மடாலய ஏற்பாட்டைக் கூறினார் - நடுக்கும் குரலில்.

“நான் அறிவேன்! நான் அறிவேன்! விசாரணை என்றால் என்ன என்பதை நான் அறிவேனடா ஜியார்டானோ” என்று வேதனை ததும்பும் குரலில் அவர் கூறியபோது, ப்ரூனோ, “அஞ்சாதீர் ஐயனே! அஞ்சாதீர்! என் பொருட்டு அஞ்சாதீர்! ஏனெனில் என் பொருட்டு நானே அஞ்சவில்லை!” என்ற கூறினான்!
----------
எட்டு நாட்கள் (2)

அந்தப் ப்ரூனோ இப்போது தணலில் போட்டு எடுக்கப் பட்ட தங்கமாகிவிட்டிருக்கிறான். ஆபத்தெனும் அகழிகளைத் தாண்டியிருக்கிறான், கொடுமையூர்களைக் கடந்திருக்கிறான், வெறுப்பு வெப்பத்திலே மூழ்கி எழுந்திருந்து இருக்கிறான் - இப்போதா அஞ்சப்போகிறான்! மானைக் கொல்லக் குதித்த சிங்கக் குட்டி, பெரும் பிடரிபடைத்த காட்டரசனான பிறகு, மத்தகத்தை அல்லவா பிளக்கும் – முயற்கூட்டம் கண்டா ஓடி ஒளியும்! நீலநிற வானத்தையும் பச்சைப் பசேலென்ற தோட்டத்தையும் கண்டதும் பரவசப்படும் வாலிபன், “என்னைப் பற்றி நான் அஞ்சவில்லை” என்று சொன்னான் என்றால், இப்போது, அந்த நெஞ்சு உரம், எதிரியின் உறுதியை முறியடிக்கும் வகையினதாகத்தானே ஆகிவிட்டிருக்கும். இடைக்காலத்திலே அவன் சுகத்துக்கும் சுயநலத்துக்கும் பலியாகிவிட்டிருந்தால், அன்று மடாலயத்திலிருந்து தப்பி ஓடிவந்த ப்ரூனோ தன் அறப்போரை நிறுத்தியபாடில்லை – பயணத்தை முடித்துக்கொண்டானில்லை!

நெஞ்சும் உரம், ப்ரூனோவுக்குச் சிறுவயது முதல் இருந்து வந்த, பெருந்துணை, அதை எட்டாண்டு சிறை கெடுக்கவில்லை. இன்னும் இருப்பது எட்டே நாட்கள்! நெஞ்சும் உரம் குலைக்கப்படும் என்று எண்ணியவர்கள், ப்ருனோவின் குணம் அறியாதவர்கள்!

கோழைகளை அவர்கள் மிரட்டிப் பணிய வைத்திருக்கிறார்கள்.

கொடுமைகளை ஓரளவுக்குமேல் அனுபவிக்க முடியாத வலுவற்றவர்களை அவர்கள் அடிபணிய வைத்திருக்கின்றனர்.

ஆசைக்கு ஆட்படுபவர்களை அவர்கள் பாசவலையில் வீழச் செய்திருக்கிறார்கள்.

ப்ருனோ, இந்தக் கயவர் வலையிலே, சிக்க மறுக்கும் வீரன்!

சரண்புகுந்தால், ப்ரூனோ போன்ற கற்றறிவாளனுக்கு, வைதீகபுரியில், எந்தக் காணிக்கையும் பெறத்தக்க குருபீடம் கிடைத்திருக்கும். காரணம் கேளாது, பொருள் அறிய முயற்சிக்காது, ஆபாசம் என்று தோன்றினாலும் அதற்கு ஏதேனும் உட்பொருள் இருக்கும் என்று நம்பிக் கொண்டு, மத ஏடுகளை, மனப்பாடம் செய்து, அவ்வப்போது சிறிது சிறிது கக்கிவிட்டு, அதனை அருள்வாக்கு என்று எண்ணும் ஏமாளிகளிடம், பொன்னும் புகழும், பூஜையும் தொழுகையும் பெற்றுக்கொண்டு, முடியுடை மன்னரையும் தன் பிடியிலே வைத்துக்கொண்டு, தம்பிரானாக – சன்னிதானமாக, வாழ்ந்து வந்தனர் பலர் – அறிவுத் தெளிவிலே, ப்ரூனோவிடம் நெருங்கவே முடியாத குறை மதியினர்! ப்ரூனோ, கற்றறிவாளன்; அவன் சொற்பொழிவு, கரும்பென இனிக்கும் தரத்தது; எத்தகைய கடினமான பொருளையும் அவன் எளிதாக்கிடும் வண்ணம் பாடம் கூறவல்ல பேராசிரியன்; சலிப்பளிக்கும் தத்துவத்தையும், தேனாக்கித் தரும் தெளிவுரை கூறவல்லான் பாரிசிலும், இலண்டனிலும், பதுவாவிலும், வட்டன்பர்க்கிலும், அவனிடம் பாடம் கேட்க வந்த வாலிபர்கள், சொக்கி நின்றனர்; எந்தப் பேராசிரியனுக்கும் கிடைக்காத பெரும்புகழ் அவனைத் தேடிவந்தது! அத்தகைய ப்ரூனோ, ஒருகணம், சபலத்துக்கு ஆட்பட்டு, ஆசைக்கு அடிமைப்பட்டு, ரோம் நகரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் போப்பாண்டவருக்குச் சரணம், என்று கூறிவிட்டிருந்தால் போதும், தேவாலயக் கதவுகள் திறந்து இருக்கும், அருளாளயங்களிலே குவிந்து கிடந்த செல்வத்திலே புரளலாம், அரசர்கள் அஞ்சலி செய்வர்! நடவடிக்கையைப் பற்றிக்கூடக் கவலைப்பட வேண்டியதில்லை; பக்தர்கள், பாதிரிகளின் உபதேசத்தின் சுவையைத்தான் தரம் பார்ப்பார்களே தவிர, நடவடிக்கையைப் பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டார்கள்; நாற்றம் வெளியே தெரியாமலிருக்கும் பக்குவம் அறிந்திருந்தால் போதும். உபதேசம் செய்வதிலே, உருக்கம் இருந்தால்போதும், நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதுகூட வேண்டப்படுவதில்லை. ஒரு பெரிய மத அதிபர், “ஏசுநாதர் பற்றிக் கட்டிவிடப்பட்டுள்ள சுவையான கதை, எவ்வளவு சுகபோகத்தையும் செல்வத்தையும் நமக்கு அளிக்கிறது!” என்று கூறிப் பூரித்தாராம்! அப்படிப்பட்ட காலம் அது, ஜியார்டோனோ ப்ரூனோ இசைத்திருந்தால் போதும், குருபீடம் கிடைத்திருக்கும்.

ஆனால், சொந்த இலாபம், சுகபோகம், என்பனவற்றில் துளியும் பற்றுக்கொள்ளாத துறவி அவர்!
* * *

“பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி உமக்கு அளிக்கப்பட இருக்கிறது, ஜியார்டானோ!” என்று கூறினார், அரசர்!

“இறையே! எனக்கா? இதற்குள்ளவா? நான் அத்தகுதி பெற்றவனா?” என்று கேட்கிறார் ப்ரூனோ.

“பகட்டுடை அணிந்து, பசப்புகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடும், பாரிஸ் பட்டிண வாலிபர்களையே, உமது பேருரைகளால் திருத்தவும், திரட்டவும் முடிகிறதே! உம்மையன்றி வேறு யார், அந்தப் பதவிக்கு ஏற்றவர். பேராசிரியரே!” என்று கேட்கிறார் மன்னர்.

மடாலயத்தில், விசாரணைக் கொடுமையிலே சிக்கிக் கொள்ளாதிருக்க, ஆன்ஸ்லம் பாதிரியார் யோசனைப்படி ப்ரூனோ, இரவில், பலகணி வழியாகக் கயிற்றின் துணைகொண்டு இறங்கி, ஓடினார் – ஊரைவிட்டு – இத்தாலியை விட்டு, சுவிட்சர்லாந்து நாடு கடந்து, இடையே பல இடங்களில் தங்கி, கடைசியாகப் பாரிஸ் வந்து சேர்ந்தார்.

பிரான்சிலே அரசோச்சி வந்த மூன்றாவது என்ரி என்பவர், பாரிஸ் பட்டிணத்தில் தத்துவத் துறைச் சொற்பொழிவாளராகக் கீர்த்திபெற்ற, ப்ரூனோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை ஆதரித்தார்; அரண்மனையில் இடம் தந்தார். அங்குதான் அவர் ப்ரூனோவுக்குச் செய்தி தருகிறார். பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு, அழைப்புக் கிடைத்திருப்பதாக.

ப்ரூனோவுக்கு, பல்கலைக்கழகத்தைப் பாசறைகளாக்கி, மாணவர்களை அறிவுத்துறை வீரர்களாக்கிக் குருட்டறிவை விரட்டும் போரிடவேண்டும் என்பதுதான், குறிக்கோள். இத்தாலியில், குருட்டறிவு, அரச மார்க்கமாகிவிட்டிந்தது; இருட்டறையில் தள்ளி இம்சிக்கும், அருளாளர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது; எனவேதான், ப்ரூனோ ஓடிவந்துவிட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், பிரான்சு நாட்டிலே புதிய புகழ்பெற்று வருகிறது! புதுமைக் கருத்துகளை வரவேற்கும் கூடமாக அது விளங்கிற்று. பழமைக்குப் பாசறையாக, சோர்போன் பல்கலைக் கழகமும், புதுமைக்குப் புகலிடமாக பாரிஸ் பல்கலைக் கழகமும் விளங்கின. ப்ரூனோவுக்கு, உண்மையிலேயே பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியாற்றுவதிலே, பெருமகிழ்ச்சி – எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது என்றுதான் பொருள்.

மன்னன், மகிழ்வூட்டும் செய்தியைக் கூறியதும், ப்ரூனோ, விரும்பிய வாய்ப்புக் கிடைத்தது என்று எண்ணிக் களித்தார். ஆனால், பேரிடி உடனே வந்தது.

பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு; மன்னர் அதனைக் கூறினார். கூறுமுன் கேட்டார், “ப்ரூனோ! ஏன், தேவாலயத் தொழுகைகளிலே நீர் கலந்து கொள்வதே இல்லை!” என்று, கேட்டுவிட்டுச் சொன்னார், “பல்கலைக் கழக ஆசிரியர் என்ற முறையில், நீர், கத்தோலிக்க முறைப்படி உள்ள தொழுகை நடத்த வேண்டும் தேவாலயத்தில்”

“என்ன சொல்கிறீர், மன்னா! தொழுகையா? பேராசிரியர் வேலைக்கு அது நிபந்தனையா?” என்று கேட்கிறார்கள், ப்ரூனோ அச்சம் தலைகாட்டுகிறது.

“ஆமாம்! ஆசிரியரைப் பார்த்துத்தானே மாணவர்கள் நடந்து கொள்வர்; தொழுகை முக்கியம்” என்றார் மன்னர், இதில் என்ன இடையூறு என்று எண்ணிய வண்ணம்.

மகிழ்ச்சி கருகலாயிற்று, விசாரம் கொண்டார், ப்ரூனோ.

“தத்துவம், நரன் போதிக்கப்போவது; மதமல்ல; தொழுகைக்கு நான் சென்றாக வேண்டுமென்று நிபந்தனை ஏன், மன்னா!” என்று கேட்கிறார்.

“வீணான குழப்பம்! தொகை சடுதியில் முடிந்து விடும், ப்ரூனோ! காலம் வீணாகுமே என்று கவலையோ” என்று மன்னர் வேடிக்கையாகவே பேசுகிறார்.

“முடியாது, வேந்தே!”

“முடியாதா? தொழுகையா?”

“ஆமாம். அரசே! நான் தொழுகை செய்து நீண்ட காலமாகிவிட்டது”

“தொழுகை, கத்தோலிக்கரின் நீங்காக் கடமை, ப்ரூனோ! தவிர்க்கக்கூடாத கடமை”

“நான் கத்தோலிக்கனல்ல, காவலா! கத்தோலிக்கனல்ல!”

“மெல்லப் பேசு, ப்ரூனோ, மெல்லப் பேசு. கத்தோலிக்க மதமல்லவா, நீ! எவ்வளவு வேதனை! அப்படியானால், லூதர் கூட்டத்தவனோ?”

“இல்லை, அரசே!”

“கால்வின் கூட்டமோ?”

“அதுவுமல்ல! அரசே! நான் கத்தோலிக்கனுமல்ல, லூதர், கால்வின் ஆகியோர் முறையினுமல்ல; நான் ஒரு தத்துவாசிரியன்; நெடுநாட்களுக்கு முன்பு நான் டாமினிகன் பாதிரியாக இருந்தேன் – மடாலயத்திலே பயின்றேன்;’ அங்கு நான் அறிந்து கொண்ட உண்மைகள், என்னை எம்மதத்திலும் இருக்கவிட
வில்லை”

“மதமற்றவனா! அப்படியானால்......ப்ரூனோ!... நீ, நாத்திகள்... அல்லவா... எவ்வளவு வேதனை... என் ப்ரூனோவா இப்படி...”

“அரசே! நான் ஒரு தத்துவ ஆசிரியன்; அவ்வளவுதான்”

பாரிஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டார் ப்ரூனோ.

தன்னிடம் அன்பு காட்டிய மன்னன் கூறியும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசமறுத்த ‘உத்தமன்’ ப்ரூனோ! துளியாவது அச்சம் மனத்திலிருந்தால், அரசனிடம் இவ்விதம் பேசுவதா என்று எண்ணத் தோன்றியிருக்கும். சிறிதளவாவது, ஆசைக்குக் கட்டுப்படும் சுயநலம் இருந்திருந்
தால், தொழுகைதானே! என்று கூறிவிட்டு, பேராசிரியராகி இருக்கமுடியும்! ஆனால், ப்ரூனோவின் இயல்பு அவ்வளவு உயர்தரமானது! ஆசைக்கு ஆட்பட்டு, பொய்யொழுக்கம் கொள்ள மறுக்கும் தூய்மையாளர் அவர்.

அவருக்கா சிறையிலே, ஆசை பிறக்கும்? எட்டு நாட்களா? இதுபோல, ஆசையூட்டும் சம்பவங்களை அவர், பல கண்டிருக்கிறார். எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். எனவே, எட்டு நாட்களை வீணாக்குகிறார்கள்! எட்டு நாட்கள், ப்ரூனோவை, அவருடைய கொள்கையை எடுத்துரைக்கவும், வாதிடவும் பயன்படுத்தச் சொல்லியிருந்தால், வாய்ப்பு என்று கூறி, ஏற்றுக்கொண்டிருப்பார். இப்போதோ சாகத்துணிந்த அவரைச் சாகடிக்க எட்டு நாட்கள் கழியவேண்டி இருக்கிறது!

தான் உரைக்கும் கொள்கையை மறுத்திட, வாதிட, ஊர் முன்வந்தாலும், ப்ரூனோ மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அந்த வாதிடும் திறமை பாராட்டுதலை மட்டுமல்ல; பகையைப் பெற்றுத் தந்தது. எனினும், பகை வளருகிறது. ஆபத்து ஏற்படுகிறது என்பதற்காகக் கொள்கையை விட்டுக் கொடுப்பவரல்ல ப்ரூனோ. நாம் கொண்டுள்ள கொள்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள், அறிவாளிகள்,வீணாகப் பாடுபடவேண்டும் – எதைப் பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அதைக் கூறிப் புகழ்பெறலாம். அல்லது எந்த அளவுக்குக் கூறினால், மக்கள் உள்ளம் அன்று இருந்த நிலையில் தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கூறிக்கொண்டிருப்போம், என்று திருப்தி கொள்பவரும் அல்ல. மிகமிகத் தெளிவானது – அப்பழுக்கற்ற ஆதாரமுள்ளது நான் கொண்டுள்ள கொள்கை – இதனை மறுப்போரோ, மணலில் கோட்டை கட்டிவைத்துக் கொண்டிருப்
பவர்கள், அவர்களுடைய கொள்கைகளில் தெய்வீகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். தெளிவு இல்லை, காட்டவும் இயலவில்லை; அருள்வாக்கு என்கிறார்கள். அக்கிரமத்தைக் கூசாமல் புரிகிறார்கள், பற்று அறுபடச் செய்யும் பாசுரம் பாடுகிறார்கள், பாபச்செயலை அஞ்சாது செய்கிறார்கள்; இவர்களுக்கு அஞ்சி, நான் என் அசைக்கொணாத கொள்கையைக் குடத்திலிட்ட விளக்காக்குவதா! குந்தட்டும், வெட்டட்டும், உயிர் இருக்கு மட்டும், போராடுவேன், வாதாடுவேன், குன்றின் மேலிட்ட விளக்காக்குவேன் என் கொள்கையை; அதனை எடுத்துக் கூறிட வாய்ப்பு. எப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைத்தாலும், பயன்படுத்திக் கொள்வேன், என்ற கருத்துடன் அவர் பணிபுரிந்து வந்தவர். எந்த வாய்ப்பையும் அவர் நழுவவிட்ட தில்லை; அதன் பலனாக என்ன விளைவு நேரிட்டாலும், தாங்கிக் கொள்ளத் தயங்கினதுமில்லை.

பிரெஞ்சு மன்னன், ப்ரூனோவின் மனப்போக்கைக் கேட்டுக் கோபித்துக் கொண்டான்; வருந்தினான், வெறுத்துவிடவில்லை. எப்படி வெறுக்க முடியும்! மன்னன், புன்னகைப் புலிகளையும் நயவஞ்சக நரிகளையும் காண்கிறான்! காவி அணிந்து திரியும் காமாந்தகாரர்களையும் அருட்கவி பாடி அக்கிரமம் புரிவோரையும், பிறர் பொருள் கவரும் பேயரின் பூஜா மாடங்களையும் கண்டிருக்கிறான். மன்னன் கூறினாலும், என் மனத்திலுள்ளதை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்று தூய்மையான உள்ளத்துடன் இருந்த ப்ரூனோவிடம், வெறுப்பு அடைய முடியா! அவர் சொல்லும் கொள்கை, மன்னனுக்கு உடன்பாடானது அல்லதான் – சரியா தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை என்று கருதினான்; ஆனால் மன்னனும், மண்டலமும் சீறும் என்று அறிந்தும், உண்மையைக் கூறி விட்ட நேர்மையைப் பாராட்டாதிருக்க முடியுமா? ப்ரூனோ தன்னிடம் சொன்ன உண்மையை ஊர் அறிந்தால் ஆபத்து என்பது மன்னனுக்குத் தெரியும். மத அதிபர்களின் கோபத்தை எந்த மன்னனும் தாங்கிக்கொள்ள முடியாதல்லவா; மண்டலமே சீறும்; மாதா கோவில்களெல்லாம் சாபமிடும். ப்ரூனோவின் கொள்கை தெரிந்துவிட்டால், மதி அதிபர்களும், அவர்களின் கோட்டை என விளங்கிய சோர்போன் பல்கலைக் கழகமும், பகை கொள்ளும்; அதுபோது, தன்னால்கூட, ப்ரூனோவைக் காப்பாற்ற முடியாது என்றறிந்த மன்னன் இங்கிலாந்து நாட்டிலே இருந்த பிரெஞ்சுத் தூதுவருக்கு ஒரு கடிதம் கொடுத்து அந்த நாடு சென்று வதியுமாறு, ப்ரூனோவுக்குக் கூறினான். ப்ரூனோ, இங்கிலாந்து வந்த சமயம், அங்கு, கலையும் காவியமும், வீரமும் காதலும், செல்வமும் சீரும், கொஞ்சி விளையாடிய, எலிசபெத் இராணியின் ஆட்சிக்காலம்.

இங்கு, ரோம்நகர மத அதிபர்களின் ஆதிக்கம் இல்லை; மத விசாரணைகூடக் கொடுமைகள் இல்லை; புத்தம் புதிய போக்கு வரவேற்கப்பட்டது, பொற்காலம் என்று புகழ்ந்தனர். இங்கு ப்ரூனோவின் புகழ் வளர வழி இருந்தது – கொள்கையை எடுத்துக் கூறும் வாய்ப்பு ஏற்பட்டதும், மீண்டும் ஆபத்து ப்ரூனோவைத் துரத்தலாயிற்று.

என்ன கொள்கை அது? மத ஏகாதிபத்தியத்தை முறியடித்து, ரோமாபுரியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று, லூதரின் புரட்சி இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்திலும், பகையை மூட்டிய, அந்தக் கொள்கை என்ன? இங்கிலாந்தில் மட்டுமல்ல, கால்வின் சித்தரித்த சீர்திருத்தத்தைச் செம்மையாக்கி வாழ்ந்த, சுவிட்சர்லாந்திலும், ப்ரூனோவின் கொள்கைமீது சீறிப் பாய்ந்தனர். கத்தோலிக்க நாடுகள் மட்டுமல்ல, பிராடெஸ்ட்டென்டு நாடுகளும், பாபம்! மோசம்! அக்கிரமம்! அனுமதியோம்! என்று கூவின; அப்படிப்படட கொள்கையை ப்ரூனோ கூறிவந்தார்.

கொலை கொள்ளை எனும் தீயசெயல் புரிகிறவனை மகா சன்னிதானம் என்று போற்றுகிறார்களே, இந்த மடைமை ஆகுமா? என்று கேட்டார். மார்டியன் லூதர் – கால்வின், ஜிவிங்லி, போன்றாரும் இதையே கூறினர் – மக்கள் முதலில் மருண்டனர், பிறகு “ஆமாம், இந்த மடமை ஆகாது. நமக்கு மோட்ச வழிகாட்டியாக நாம் ஒரு தூய்மையாளரைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினர்; லூதர் சொன்னார்.

“பாவத்துக்குப் பரிகாரம், மனத்தால் கழுவாய் தேடுவதுதானே – காணிக்கை கொடுத்தால் பாவம் மறையுமோ! மறையும் என்று வாணிபம் செய்கிறார் மதஅதிபர்! ஏற்றுக்கொள்கிறீர்களே, ஆராய்ந்து பாராமல். காணிக்கை கொடுத்துப் பாவத்தைக் கழுவிக்கொள்ள முடியுமானால், பணக்காரர், கொலை, கொள்ளை, கற்பழித்தல், எனும் எந்தப் பாவமும் புரியலாம், தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? இதுவா அறம்? இதுவா மார்க்கம்? இதுவா கர்த்தரின் கட்டளை? இதுவா சுவிசேஷம்?” என்று கேட்டனர். பிராடெஸ்ன்ட் இயக்கத்தினர் – மக்கள் தெளிவு பெற்றவர் – துணிந்து போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டர்.
இந்த அளவுக்குத்தான் மக்கள் தயாராயினர்.

கயமையைக் கண்டிக்கவும் தூய்மையைப் போற்றவும் முன்வந்தனர்.

மத அதிபர்கள், மாசு மருவற்றவர்களாக இருத்தல்வேண்டும் – ஒழுக்கசீலர்களாக விளங்க வேண்டும் என்று கோரத் தலைப்பட்டனர்.

ப்ரூனோ, மத அதிபர்கள், எப்படி இருக்கவேண்டும், கயமை நிரம்பியவர்கள் கூடாதல்லவா, தூய்மை உள்ளவர்கள்தானே தொழுகை நடாத்தும் தகுதியுடையார், என்ற பிரச்சனை அல்ல, எடுத்துரைத்தது. அவர், இப்படிச் சில அதிபர்களே தேவைதானா; அவர்கள் நடாத்தி வைக்கும் தொழுகைகள், சடங்குள், ஆகியவற்றால் மக்களின் ஒழுக்கம் மேம்படவும், மனம் தூய்மை பெறவும், செயல் சீர்படவும், மார்க்கமுண்டா என்ற அடிப்படையை அலச ஆரம்பித்தார்.

மற்றவர்கள், கட்டிடத்துக்கு என்ன வண்ணச் சுண்ணம் பூசினால், கவர்ச்சியாக இருக்கும் என்ற ஆய்வுரையில் களித்தனர். ப்ரூனோ, அந்தக் கட்டிடம் உனக்கும், உள்ளத்துக்கும், சிறைக்கூடம் ஆகிவிடக் கூடாதே, என்று எச்சரிக்கை கூறினார்.

மத ஏடுகளிலே காணப்படும் மாண்புகளின்படி, மத அதிபர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதை லூதர், கால்வின், போன்றார், ஆராய்ந்தனர்; ப்ரூனோ மத ஏடுகளிலே மாண்புகள் என்று கருதப்படுவன, உண்மையிலேயே மாண்புகள்தானா என்று ஆராய்ந்தார்; அந்த மட்டோடு நிற்கவில்லை, புத்தறிவு தரும் புது உண்மைகளுக்கும், மத ஏடுகளில் காணப்படும் கருத்துகளுக்கும் உள்ள முரண்பாட்டை, எடுத்துக்காட்டினார்.
ஆன்ஸ்லம் பாதிரியார், ப்ரூனோவை, மடாலயத்தில் இருந்தபோதே இதற்காகத்தான் எச்சரிக்கை செய்து வைத்தார். அவர், மடாலயக் கெள்கையில் ஊறிப் போனவர், எனினும், புத்திக்கூர்மையும் நற்பண்பும் உள்ள ப்ரூனோவிடம் மட்டற்ற ஆசைகொண்டவர்; எனவேதான், எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் அந்த நாட்களிலே அரிஸ்டாடில் தந்த கொள்கைகள் ஆட்சிபுரிந்து வந்தன – ஊர்த் துறைகளிலும் – சிறப்பாக மார்க்கத் துறையில்.

கிரேக்க நாடு தந்த அந்த அறிவுக் கருவூலம், அவர் பயத்தில் அவருக்கு இந்த வசதிகளுக்கு ஏற்ற வகையில், அவர் காலத்துச் சுற்றுச்சார்பின்படி ஆராய்ந்து, அறிந்த உண்மைகளை வெளியிட்டார் - அவை உலகு உள்ளளவும் மாற்றப்பட முடியாதன, என்று அல்ல!

ஆனால், அந்தக் கொள்கைகளை ஏற்று, அவற்றின் அரசியல், பொருளியல், மத இயல் அமைப்புகளை, ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டனர் - பழக்கத்தில் வந்துவிட்டது - அதனால், அது இறுகியும் விட்டது.

மனிதனுடைய சிந்தனாசக்தியை, அரிஸ்டாடிலின் தத்துவங் களுடன் பிணைத்துவிட்டனர்; அதற்கு மேலால் செல்வதோ, முரணாகச் சொல்வதோ, கேடு பயக்கும், என்றனர்; செல்பவர் தண்டனைக்கு உள்ளாவர் என்றும் சில இடங்களில் சட்டம் இயற்றினர்.

விண்ணிலே சிறகடித்துச் செல்லும் பறவை, எங்கும் சென்று, இன்புறும்.

கட்டிவிடப்பட்ட ‘பட்டம்’, நூலும் அதைத் செலுத்துவோரின் தீரமும் அனுமதிக்கும் அளவுதான் செல்லும்.

அரிஸ்ட்டாடில் தந்த கருத்துத்தான், முடிந்த முடிவு, என்று ஐரோப்பா கூறிற்று.

அவர், விண், மண், கடல், என்பவை குறித்துக் கூறிவைத்த கருத்துக்களை ஆராய்வதும் ஆபத்தானது என்று கருதப்பட்டது.

சூரியன் சுற்றித்திரியும் கோளம்; பூமி நிலைத்து நிற்பது; என்பது அரிஸ்டாடில் அளித்த கொள்கை.
இதன்படியே, ஏடுகள், குறிப்பாக மத ஏடுகள், நீட்டப்பட்டு விட்டன.

விண்ணுலகம், ஆங்கே விசாரணைக்கூடம்; நரகம், அங்கு வேதனைக்கூடம்; எனும் மதக்கருத்து, அசையாதிருக்கும் பூமி, அன்றாடம் சுற்றிவரும் சூரியன், என்ற அடிப்படையின்மீது கட்டப்பட்டது.
இந்த அடிப்படையைச் சந்தேகிப்பது பாவம், என்று கூறுவதில் மதவாதிகள் முனைந்தனர்; ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அடிப்படையை அலசத் தொடங்கினர்.

ப்ருனோ சிறுவனாக இருந்தபோதே, வெடிகுண்டு வீசப்பட்டுவிட்டது.

வேதநிந்தகன் கிளம்பிவிட்டான்!

கோபர்னிகஸ் எனும் ஆராய்ச்சியாளன், பூமி உருண்டை வடிவுடன் இருக்கிறது, அது சுற்றித் திரிகிறது, சூரியன் நிலைத்து நிற்கும் கோளம், என்று ஏடு தீட்டிவிட்டான். மதவாதிகள் பாய்வர் என்று அச்சத்தால், கோபர்னிகஸ், அந்த ஏடு, தீட்டியும் வெளியே காட்டாது வைத்திருந்து, மரணப் படுக்கையில் இருக்கும்போதுதான் அந்த ஏட்டை வெளியிட ஏற்பாடுசெய்தான். கோபர்னிகஸ் கொள்கை கேட்டு, வைதீக உலகு சீறிக் கிளம்பிற்று; இது பொய்க் கொள்கை, பேய்க்கொள்கை; பூமியாவது சுற்றுவதாவது; மேலே விண்; இங்கே மண்; இதனடியில் நரகம்; புண்ணியம், பாவம் இரண்டிலே எதைச்செய்யவும் மண்; புண்ணியம் செய்தால் விண்ணுலகு செல்லலாம்; பாவம் புரிவோர் நரகம் சேர்வர்; என்று முழக்கினர்.

பூமி உருண்டையாய் இருந்தால் என்ன, தட்டையாக இருந்தால் என்ன, சுற்றி வந்தாலென்ன சும்மா கிடந்தாலென்ன, என்று மத அதிபர்கள் எண்ணிக்கிடப்பதற்கில்லை; ஏனெனில், கோபர்னிகசின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டால், புனித ஏடுகளின் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது - பிறகு, அந்த ஏடுகளின் துணை கொண்டு கட்டப்பட்ட அமைப்பு என்ன கதியாவது - அந்த அமைப்பின் பயனாகக் கிடைத்துள்ள கோலாகல வாழ்வு என்ன ஆவது - இது அவர்கள் கவலை, பயம்! எனவே, தங்கள் ஆதிக்கத்தை ஏவி, கோபர்னிகசின் கொள்கையை அழித்தொழிக்க முனைந்தனர். ப்ரூனோ, கோபர்னிகசின் கொள்கையைச் சரியானது என்று கற்றறிந்தார், சிந்தித்துத் தெளிவும் உறுதியும் பெற்றார். இந்த அடிப்படை மாற்றம் அவருக்கு ஏற்பட்டான பிறகு, எந்தமத அமைப்புத்தான் அவரை ஆட்கொள்ள முடியும்!

கோபர்னிகஸ், ஆராய்ந்து அறிந்து புது உண்மை கூட, முழுவதும் புதிதல்ல, கிரேக்க நாட்டுப் பேரறிஞர் பிதாகோரஸ் என்பவர், இதனை முன்பே கூறி இருந்தார்; ஆனால் அரிஸ்டாடில் கொள்கை, அதனை இருட்டடிப்பில் வைத்துவிட்டது.
------------
எட்டு நாட்கள் (3)

கோபர்னிகசின் கொள்கை, இதைப் புதுப்பித்தது; புயல் என்றனர் மதவாதிகள் - மத அடிப்படையில் கற்றவர் அனைவரும், இது கவைக்குதவாத கொள்கை என்றனர். ஆனால் கோபர்னிகஸ் வெற்றி பெற்ற வண்ணமிருந்தார். ப்ரூனோ, மடாலயத்தில் பயிலும்போதே இந்தக் கொள்கையை ஐயந்திரிபற உணர்ந்தார். ஆன்ஸ்லம் பாதிரியார் “மகனே! ஏன் இந்த கோபர்னிகசைக் கட்டி அழுகிறாய், அறிய வேண்டியதை அரிஸ்டாடில் அளித்துவிட்டார். அதுபோதும் ஐயன் பெருமைகளைப் படி” என்று கூறிவந்தார். இளம் உள்ளம், கோபர்னிகசின்பால் லயித்து விட்டது. பன்முறை கண்டித்திருக் கிறார் ஆன்ஸ்லம்.

“உலகம் உருண்டை என்கிறாயே, மகனே! அப்படியானால், நரகம் எங்கே இருக்கிறது? புனித ஏடு படித்திருக்கிறாயே கூறு, நரகம், உன் உருண்டை உலகிலே எங்கேயடா இருக்கும்” என்று கேட்பார் ஆன்ஸ்லம். ப்ரூனோ சிரித்துக்கொண்டே, “எங்கே இருக்கும்? நீங்களல்லவா கூறவேண்டும்” என்று மடக்குவான். அவர் காதைப் பொத்திக் கொள்வார்! அவரும் அவர் போன்றாரும், விண்ணகத்திலே, ஒளிவிடும் சிம்மாசனத்தில் ஐயன் வீற்றிருக்கிறார், அங்கு விசாரணை நடைபெறும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ப்ரூனோவின் கவலை விசாரணை எப்படி இருக்கும், எப்போது நடைபெறும் என்பதுகூட அல்ல, சுற்றாத சூரியனைச் சுற்றுவதாகவும், சுற்றும் பூமியைப் பாய்போல் கிடப்பதாகவும், ஆராய்ச்சிக்கு ஒவ்வாத முறையிலே நம்புகிறார்களே, இது ஏன் என்பதாகும். இதிலிருந்து துவங்கிய அறிவு விசாரணை, ப்ரூனோவை நெடுந்தூரத்துக்கு அழைத்துச் சென்றது.

மனிதன் பாவத்தோடு பிறக்கிறான் - அவனைப் பாவம் புரியும்படித் தீயதேவன் சதா தூண்டுகிறான் - அவனுடைய தூண்டுதலிலிருந்து மீளவும், கர்த்தரின் கிருபையைப் பெறவும் தொழுகை நடத்தவேண்டும் - முறை நாங்கள் கூறுகிறோம் - இடம் நாங்கள் காட்டுகிறோம் - நேரம் நாங்கள் குறிக்கிறோம் - காணிக்கை எமக்குத் தாருங்கள் என்றனர் மத அதிபர்கள் - கேட்கும் முறை, பெறும் காணிக்கை, வகுத்திருக்கும் சடங்கு இவை பற்றி, லூதரும் பிறரும் ஆராய்ந்தனர் - ப்ரூனோ, இவைபற்றி அல்ல, மனிதன், ஈடேற, தூய்மைபெற, அவனாலேயே முடியும், தக்கபடி முயன்றால், என்பதுபற்றி ஆராய்ந்தார்.

கோளங்கள் பற்றியும், ஒழுக்கமுறை பற்றியும், ப்ரூனோ தீட்டிய மூன்று அரிய ஏடுகள், பழைய கோட்பாட்டைத் தகர்த் தெரிவனவாக அமைந்தன.

கலத்தில் இருப்போன்தான் அலையையும் சுழலையும் சமாளித்துக் கலத்தைச் செலுத்தவேண்டுமே தவிர, இக்கரையிலோ அக்கரையிலோ இருந்துகொண்டு ஒருவன் கலத்தைச் செலுத்துவான் என்று எங்ஙனம் கூறமுடியும் - மனிதனும் அதுபோன்றே, தன் சிந்தனையையும் செயலையும் அவனேதான் செலுத்திச் செல்லவேண்டும், அதற்காக வேறு ஒருவரை நியமித்துக்கொள்வது பொருளற்றது, எனவே பயனற்றது என்று ப்ரூனோ வாதிட்டார்.

தூய்மையான சிந்தனை, செம்மையான செயலைச் செய்யும் முயற்சி - இவை மனிதனை ஈடேறச் செய்யும் என்று ப்ரூனோ கூறினார்.

மதவாதிகள், மனிதனுக்குப் ‘போலீஸ்’ வேலை செய்தனர் - ப்ரூனோ ‘தோழமை’ பேசினான். மனிதன் இயல்பால் கெட்ட வனுமல்ல, பாபியுமல்ல, அவனிடம் ‘தெய்வீகம்’ இருக்கத்தான் செய்கிறது; அதனை அறிந்திட, தன்னைத்தான் உணர்தல் வேண்டும்; தன்னை அறிந்து இன்புற்று, தக்கன தகாதன என்ற பாகுபாடு பெற்று, பாடு அறிந்து ஒழுகுதல் வேண்டும் - மனிதன், கயமை, தூய்மை எனும் இரு கடல்களுக்கிடையே தவிக்கும் கலம், நாங்களே மீகான்கள் என்று கூறும் மதவாதிகள் போலன்றி, ப்ரூனோ, மனிதன் மேம்பாடடைய முடியும், சுய முயற்சியால், என்று நம்பினான். இதனை எப்படி, தொழுகை ஸ்தலங்களை நம்பி வாழ்வோர், பொறுத்துக்கொள்ளமுடியும். பகை மூண்டது. ப்ரூனோ அஞ்சவில்லை.

சுவிட்சர்லந்து விரட்டினால், பிரான்சு, அங்கு எதிர்ப்பு வெப்பமானால், இங்கிலாந்து, அங்கும் பகைமூண்டால், ஜெர்மனி, இவ்வண்ணம், ஓடியவண்ணம் இருந்தார் - எந்த இடம் தங்குமிடம் ஆனபோதிலும், கோபர்னிகஸ் கொள்கையை வலியுறுத்துவார்.

இங்கிலாந்து நாட்டிலே ப்ரூனோ தங்கி இருந்தபோது, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அறிவு வளர்ச்சி விழா நடைபெற்றது; பல்வேறு நாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டனர்; ப்ரூனோ, அங்கு, கோபர்னிகஸ் கொள்கையை வாதாடினார், குதூகலம் கொதிப்பாக மாறிவிட்டது. - சுட்டிக் காட்டிச் சுடுசொல் கூறலாயினர் மக்கள்.

“போகிறான் பார் நாத்திகன்!”

“உலகம் சுற்றுகிறது என்கிறான் இந்த உலுத்தன்”

“சூரியன் சுற்றாதாம் - மேதாவி கூறுகிறான்” என்று ஏளனம் செய்வர் - மிரட்டுவர்.

இங்கிலாந்திலும வெப்பம் அதிகமாகிவிட்டது.

ஜெர்மெனியிலிருந்த விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தில், ப்ரூனோவுக்கு, நிம்மதி அளிக்கும் வாழ்வு கிடைத்தது; தத்துவப் பேராசிரியாகப் பணியாற்றினார் - அவருடைய கொள்கைக்காக வெறுத்து விரட்டவில்லை; அவர் கண்ட ஆராய்ச்சி உண்மையை அவர் எடுத்துரைக்கட்டும், அது அவர் உரிமை, என்று பெருந்தன்மையுடனும், தாராளத் தன்மையுடனும் விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தினர் நடந்துகொண்டனர்.

நிம்மதி, ப்ரூனோவுக்குச் சில காலமே பிடித்து; பிறகோ அவருக்குப் போரிடவேண்டும், என்ற எண்ணம் துளைத்தது. கொள்கையை, மறுப்போரிருக்கும் இடத்திலெல்லாம் சென்று பரப்புதல்வேண்டும்; அறிவுப் போர் வாழ்வின் குறிக்கோள், என்று கருதினார். போர்வீரன், மனம் களம் காணாது, கழனியில் கதிரின் அழகுகண்டு காலந்தள்ளுவதற்கு ஒருப்படுமோ! திறம்வந்த நாள் முதல் போரிட்டே பழக்கமாகிவிட்டது.

ப்ரூனோ, மடாலயத்தில் சேருவதற்கு முன்பு, தாயும், சிறப்பாகவும், ப்ரூனோவை, போர் வீரனாக்கவே விரும்பினார்கள். ப்ரூனோவேதான், அறிவுபெற மடலாயம் செல்வேன், என்று கூறினான். மக்களை மக்கள் காரணமற்றுக் கொன்று குவிக்கும் போர் முறையை, சிறுவன் ப்ரூனோ, தாயிடம் கண்டித்து, வெறுத்துப் பேசினான். “எவனோ சோம்பேறிச் சீமான் சண்டையிடச் சொல்வான், அவனுக்காக, என்போன்ற ஏழையைக் கொல்ல நான் செல்ல வேண்டுமா,” என்று கேட்டான்; தாயின் உள்ளம் மகனுடைய நேர்மையும் ஈரமும் கொண்ட உள்ளத்தைக் கண்டு பூரித்துப்போயிருக்கும்! அவள் என்ன கண்டாள், பாபம், ப்ரூனோ, வேறோர் பயங்கரப் போருக்குச் செல்வான் என்பதை.

போர் உள்ளம் கொண்ட ப்ரூனோ, நிம்மதி தந்த விர்ட்டன் பர்க்கைவிட்டு, பிராங்பர்ட், துவா, போன்ற இடங்கள் சென்றான்.

யார் செய்த சூழ்ச்சியோ, இதுநாள் வரை, ரோம் நகர மத அதிபர் பிடியில் சிக்காது இருந்து வந்த ப்ரூனோவை, ஆபத்தில் கொண்டுவந்து சேர்த்தது.

ப்ரூனோவுக்கு எப்போதும், சிறுவயது முதலே தாயகத்தினிடம் அளவற்ற பற்று எந்த நாட்டிலே உலவினாலும், இத்தாலியைப் பற்றிய எண்ணம் மனத்தில் கனிந்து நிற்கும். நீலநிற வானமுள்ள என் இத்தாலி எங்கே! என்று ஏங்கிக் கூறிக்
கொள்வான். மடாலயத்திலிருந்து, தப்பி ஓடியபோது, சுவிட்சர் லாந்து நாட்டு எல்லையருகே நின்று, இத்தாலியைவிட்டு பிரிகிறோம். மீண்டும் இங்கு வருவோமா, எனக்குத் தொட்டில் தந்த இத்தாலி, கல்லறைதான் தர இருக்கிறதா, இங்கு நான் வாழ இடமில்லையா, தாயகமே! பேயகமாக மாற்றப்பட்டு விட்டாயே என்றெல்லாம் எண்ணிக் கசிந்துருகினான் ப்ருனோ. போர் உள்ளமும், தாயகப் பற்றும், ப்ருனோவை, சதிகாரனிடம் சிக்க வைத்தது.

ரோம்நாட்டு மத அதிபர்கள், தமது எதிரிகளை கண்ணி வைத்துப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். லூதருக்கும் அவர்கள் வலை வைத்தனர் - ஆனால் அவருக்குத் துணையாக சிலரும் மக்கள் திரண்டு நின்றதாலும், அன்றைய அரசியல் நிலை மாற்றங்கள் அவருக்குச் சாதகமளித்தாலும், அவர் தப்பித்துக் கொண்டார். ரோம் மத அதிபரின் ஆதிக்கத்தை அழிக்கும் பிராடெஸ்டென்டு புயல் கிளம்பிய நாள் தொட்டு மோப்பம் பிடித்துச் செல்லும் வேட்டை நாய்கள் போன்ற ஒற்றர்கள் பல்வேறு நாடுகளிலும் சுற்றிய வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு, ப்ரூனோவின் நடவடிக்கைகள் யாவும் நன்கு தெரியும். இத்தாலிய மண்ணிலே, ப்ரூனோ கால் வைத்ததும் கவ்விக்கொள்ளக் காத்துக் கிடந்தனர். பகைமூண்ட இடங்களிலேயே ப்ரூனோ, நீண்ட காலம், தங்கி இந்திருந்தாலும் அவனை ஒழிக்க வழிகண்டிருப்பர் – ஆனால் அந்தப் புயல் ஓரிடத்தில் தங்கவில்லை, ஒரு நாட்டிலும் ஓய்ந்து இருக்கவில்லை.

இத்தாலி நாட்டுச் சீமான் ஒருவன் மோஷினிகோ – எனும் பெருடையான், ப்ரூனோவுக்கு ஓர் அழைப்புக் கடிதம் அனுப்பினான். என் மாளிகையில் வந்து தங்கி இருந்து, என் மகனுக்குத் தத்துவம் கற்றுத் தருக! உமக்கு இங்கு எந்த ஆபத்தும் நேரிடா வண்ணம் நான் பாதுகாப்பளிக்கிறேன், என்று எழுதியிருந்தான். ப்ரூனோ களிப்படைந்தார். என் இத்தாலி அழைக்கிறது! பசுமை நிரம்பிய தோட்டங்கள் என் கண்களுக்கு மண்டும் விருந்தளிக்கும். என் தாயகத்தில் மீண்டும் உலவலாம். என் உள்ளத்தில் உள்ளதை என் நாட்டவருக்கு உரைத்திடலாம். நல்ல வாய்ப்பு ஈடில்லா இன்பம்! என்றெல்லாம் எண்ணிக் களித்தார். ப்ரூனோவுக்குச் சதிகாரர்களின் இயல்பு தெரியாது. அவர் பண்பு அறிவார், படித்தவர்களின் பழக்க வழக்கமறிவார், சூது பேசும் சதிகாரர்களின் போக்கினை அறியார்.

இத்தாலி யில், இனிமைதரும் திராட்சை மட்டுமா இருக்கிறது – எரிமலையுமல்லவா இருக்கிறது! வெசு வயஸ் மட்டுமல்ல; மத அதிபர் இருக்கிறார், எந்த நேரத்திலும் அவர் சாபம் எரிமலை கக்கும் நெருப்பைவிடக் கொடுமையாக் கிளம்பக் கூடும் நாம் அங்குச் செல்வது ஆபத்தாக முடியும், என்று எண்ணத்தான் செய்தார். ஆனால் அந்தச் சூதுக்காரன் அனுப்பி வைத்த கடிதம், அவரை ஏமாற்றி விட்டது. இத்தாலியை நாட்டுச் சீமான் – அவனால் மத அதிபரின் பகையைக்கூட எதிர்த்து நிற்க இயலும் – அந்த மாளிகையைத் தாக்க துணிவு பிறக்காது, மத ஆதிக்கக்காரருக்கு, என்று எண்ணினான்.

ஒரு வேளை பகை பட்டுவிட்டது போலும் – ஒருவேளை நமது கொள்கையை ஆதரிப்போரின் தொகை இத்தாலியில் வளர்ந்துள்ளதுபோலும் – இல்லை என்றால் தன் மகனுக்குத் தத்துவ ஆசிரியராக இருக்கும்படி, ஏன் அந்தச் சீமான் அழைக்கப் போகிறார், என்று எண்ணினாரோ என்னவோ, ஏமாந்துவிட்டார். புற்றருகே அமர இசைந்து விட்டார்.

வெனிஸ் நகர்! கடலலை தழுவும் கோட்டைச்சுவர் உள்ள அழகிய மாளிகை! ப்ரூனோ அங்குத் தங்கி, தமது அருந்திறனை அள்ளி அளித்து வந்தார், சீமான் மகனுக்கு. வெள்ளியை உருக்கி வார்க்கும் நிலவுபோல, அவர் அறிவு புகட்டி வந்தார் வாலிபச் சீமானுக்கு – ஆனால், அவன் மனத்திலே அறிவு புகவா செய்தது – அவன் முற் ஏற்பாட்டின்படி, ப்ரூனோ சொன்னதை எல்லாம், மதவிசாரணைக் குழு அலுவலரிடம் ஒவ்வொரு நாளும் ஒப்புவித்துக் கொண்டிருந்தான் – குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரூனோ மீது.

“அகண்ட வெளியின் அழகினைக் காண் இளைஞனே! இயற்கையின் எழிலைப் பாரப்பா! என்ன கவர்ச்சி! எவ்வளவு நேர்த்தி! வீசும் காற்று, கீதமாக இல்லையா வாலிபனே, உற்றுக்கேள்! கடலலையைக் கண்டால், எத்துணை மாட்சிமை தெரிகிறது. இந்த இயற்கை அழகைக் கெடுக்க அழகும் கற்பனைகளை, கட்டுக் கதைகளைக் கட்டி வைத்திருக்கிறார்களே கபடர்கள்” என்றெல்லாம், பாகு மொழியில் பகுத்தறிவைக் கூறி வந்தார் ப்ரூனோ. எப்போதுமே, ப்ரூனோவுக்கு இயற்கை அழகைக் கண்டு களிப்பதிலே அளவற்ற இன்பம். ஆண்டு பலவாக அவர், மாளிகைகளிலே சிற்சில காலம் தங்கிக் கிடந்தாலும், பெரும் பகுதி, நாடு விட்டு நாடு சுற்றித் திரியும் நிலையிலே இருந்ததால், இயற்கையுடன் நெருங்கிய தோழமை பூண்டிட முடிந்தது. சாலைகளிலே நடப்பார், சோலைகளில் உலவுவார், குன்றின் மீது ஏறி நின்று, சுற்றிலும் தெரியும் கோலம் கண்டு களிப்பார்! வெனிஸ் மாளிகையின் அமைப்பும், இயற்கை அழகை அவருக்கு அள்ளித் தருவதாக அமைந்திருந்தது, கடலோரம் மாளிகையில்!

ஓரிரவு! அற்புதமான நிலவு! அலங்காரப் படகு ஏறி, மாணவனுடன் சென்று, கடற்காட்சி கண்டுவிட்டு, ப்ரூனோ திரும்புகிறார். மாணவனுக்குப் பாடம் கற்றுத் தருகிறார் - அவரே பாடம் பெறுகிறார், இயற்கையைக் கண்டு களிக்கிறார், இதற்கு இணையான இன்பம் வேறு எது என்று கேட்கிறார். பால்வண்ண நிலவைக் கருநிறமேகம் கவ்விக் கொள்வதுண்டு - ஆனால் நிலவு அதனைக் கிழித்தெறிந்துவிட்டு வெற்றி ஒளி வீசும்! ப்ரூனோவைக் கவ்விக்கொள்ள, கருமேகமல்ல, கருநாகம், மனித உருவில் வந்தது, மத விசாரணைக் குழுவினர், சீமானிடம் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி, முகமூடி அணிந்துகொண்டு மாளிகை நோக்கி வருகின்றனர். கடற்பயணம், நிலவொளி, அறிவுதரும் இன்பம் இவற்றில் திளைத்திருக்கிறார் ஜியார்டானோ - அக்கிரமக்காரர்கள் அவர் அறியாவண்ணம், மெல்ல மெல்ல நடந்து வருகிறார்கள் அவரை நோக்கி. இயற்கையின் இனிமை பற்றி அவர் வண்ணச் சிந்து பாடுவதுபோலப் பேசி மகிழ்கிறார், வன்னெஞ்சர்கள், அவரருகே வந்துவிட்டனர், பின்புறமாக! எல்லையற்ற இன்பமே! இயற்கை அழகே! என்று அவர் மன எழுச்சியுடன் கூறுகிறார், கறுப்புப் போர்வையைச் சரேலென அவர்மீது வீசி அவரைச் சிறைபிடிக்கின்றனர், கயவர்கள்! ஒருகணம்! எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. திடுக்கிட்டார்! சிங்கம் பிடிபட்டுவிட்டது; சிலர் சிறைப்படுத்தப்பட்டார். நிலவின் அழகு கண்டு மகிழ்ந்திருந்தார், அவரைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் சென்று அடைத்தனர் பாதகர்கள்.

மாளிகையிலே இருந்தது பாதாளச் சிறை! ஆறு ஆண்டுகள் அதிலே அவரை அடைத்து வைத்தனர். ஒளி கண்களில் படுவதில்லை! பறவைகளின் இன்னிசையை அவர் செவி கேட்க வில்லை! இருட்டறை! தனி அறை! ஆடை களையப்பட்டு, அலங்கோலமான நிலை! இரும்புச் சங்கிலிகள்! இந்தக் கொடுமை, ஆறு ஆண்டுகள், வெனிஸ் நகர மாளிகைச் சிறையில்.

நம்பிக்கையற்றவனை நல்வழிப்படுத்த, மதவாதிகள் கையாண்ட முறை என்ன? அவன் உணரும் வண்ணம் உண்மையை அவன் முன் எடுத்து வீசினரா? இல்லை! இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருமளவுக்குச் சவுக்காலடித்தனர்! மார்க்க ஏடுகளை அவன் முன் கொட்டி “மதியிலி! இதைப்படி, அறிவுபெறு” என்றனரா, இல்லை, கட்டி வைத்து அடித்தனர், இரும்பு வளையங்களிட்டு இம்சித்தனர், இரும்புப் பலகைமீது சாயவைத்து, இரும்பு முள்வளையங்களுள்ள உருளைகளை அவன் மீது உருட்டுவர்; ஆழப்பதிந்து எலும்புவரை உள்ள சதையைப் பிய்த்து வெளியே கொண்டுவரும் சிலர் மாண்டுவிடுவதுண்டு, பெரும்பாலானவர்கள், குற்றுயிராகிவிடுவர், இரத்தம் கசியக் கசிய அவன் வேதனைப்படும்போது, “வேதத்தை ஏற்றுக்கொள்கிறாயா, என்று கேட்பர்; அவன் தேகம், சல்லடைக் கண்போலத் துளைக்கப்பட்டுக்கிடக்கும்போது, “தேவனை பூஜிக்கிறாயா?” என்று கேட்பர். அவன் குற்றுயிராகக் கிடக்கும்போது “குருவுக்குக் கீழ்படிகிறாயா?” என்று கேட்பர். பழத்தைச் சாறு பிழிந்து பருகி இன்பம் பெறுவர் மக்கள், இந்த மகானுபாவர்
கள் பகுத்தறிவு கொள்ளத் துணிபவரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து, அவனுக்குக் காட்டி, இன்பம் பெற்றனர்.

ஜியார்டனோ ப்ரூனோ, ஆறு ஆண்டுகள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டான்! உடலில் இன்னும் கொஞ்சம் வலுவிருக்கிறது, பிடிவாதம் குறையவில்லை, இன்னும் சில நாட்களில் பயல் பணிந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டனர் - அந்த அக்கிரமக்காரர்கள் அதுபோலப் பலரைப் பணிய வைத்த
வர்கள்! ஆனால் ப்ரூனோவை அவர்கள் அடிக்கடி காண முடியுமா!
அவர் அவர்களுடைய முறை கண்டு, மனம் உடைய வில்லை. தகுந்த விலை கொடுக்கிறோம், என்றே எண்ணிக் கொண்டார்.

“இந்த மகா பாபி, என்னவெல்லாம் சொன்னான், சொல்லு தம்பீ,” என்று வாலிபச் சீமானை, ப்ரூனோ எதிரே கொண்டு வந்து நிறுத்தி வைத்துக் கேட்டனராம் ஒருநாள் - அவன் குளறினான், “ஐயன்மீர்! ஏன், அந்த அறியாச் சிறுவனை இம்சிக்கிறீர்கள். நானே கூறுகிறேன் கேளும்” என்று கேலியாகப் பேசினாராம் ப்ரூனோ.

இவ்வளவு இம்சைக்குப் பிறகும் இவனிடம் பிடிவாதம் இருக்கிறதே என்று திகைத்த அந்தத் தீயர்கள், ப்ரூனோவைத் திருத்தலத்துக்கே அனுப்பிவிடத்தான் வேண்டும் என்று தீர்மானித்தனர் - ப்ரூனோ, ரோம் நகர் கொண்டுசெல்லப் பட்டான். மோட்சலோகத் திறவுகோல் உள்ள திருத்தலமல்லவா, ரோம்! இரண்டாண்டுகள் அங்கே சிறை! அவ்வப்போது, மத நூல் வல்லுநர்கள் ப்ரூனோவை விசாரிப்பர்’ - ஒவ்வோர் முறையும், ப்ரூனோவின் அறிவுத் தெளிவு அவர்களைத் திகைக்கச் செய்தது, இறுதியில், ‘இவன் திருத்தப்படமுடியாத நாத்தீகன்’ என்று திருச்சபையினர் தீர்ப்பளித்து, இந்தப் பாவியின் இரத்தம் மண்ணில் விழாதபடி இவனைக் கொல்க! என்று கட்டளை
யிட்டு, அதனை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை அறமன்றத் துக்கு அறித்தனராம்.
இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! ஆறு ஆண்டுகள் அந்த வெனிஸ் நகரச் சிறையிலே இரத்தமும் சதையும் கலந்து கலந்து வெளிவந்தது - இப்போது இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! என்ன பொருள் அதற்கு? உயிரோடு கட்டிவைத்துக் கொளுத்து என்பதாகும்.

ஆண்டு பலவாக அவர்கள் படித்த மத ஏடுகள் ஏரளாம் - ஐயன் அருளும் உடையார் என்று கூறப்பட்டது - அவர்களால் ஒரு ‘நாத்திக’னுடன் வாதிட்டு, அவன் கொள்கையை முறியடிக்க இயலவில்லை - உயிரோடு கொளுத்திவிடு என்றுதான் கூறமுடிந்தது, என்செய்வார்கள் அவர்கள்! அவனுடைய அறிவு கிளப்பும் புரட்சித் தீ, மடாலயத்திலே குன்றெனக் குவித்து வைத்துள்ள மத ஏடுகளைச் சுட்டுப் பொசுக்குகிறதே! தப்ப வழியில்லை, எனவே அவனைத் தீயிலே தள்ளு என்றனர்.

“நாத்திகன் - எனவே நாதன் இவனைத் தண்டிப்பார், நிச்சயமாக” என்று கூறிடக் கூட இவர்களுக்கு, நம்பிக்கை இல்லை! ஒருவேளை, அவர்கள் ஆண்டவனின் தீர்ப்புக்கு இந்த வழக்கை விடலாகாது, ப்ரூனோ பக்கம் தீர்ப்புக் கிடைத்தாலும் கிடைத்துவிடும், என்று அஞ்சினர் போலும்! ஆத்திகத்தைக் காத்திட அரண்மனைகளும் மாளிகைகளும் மட்டுமல்ல, சிறு குடில்கள் இலட்ச இலட்சமாக உள்ளன - இதனை ஒரு ப்ரூனோவின் கொள்கை என்ன செய்துவிடமுடியும், கத்தித் திரியட்டும், நமது பக்தர்களின் தொழுகையின் சத்தத்தின் முன்பு இவனுடைய புரட்சிக் குரல் நிற்குமா, என்று எண்ணும் துணிவு இல்லை! ஒருவேளை, ப்ரூனோ வென்றுவிட்டால், தங்கள் ஆதிக்கம் என்ன கதி ஆவது என்ற அச்சமே அவர்களைப் பிடித் தாட்டிற்று.

பிராடெஸ்டன்டுகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம் - அவர்கள் அடிப்படையை மறுக்கவில்லை, நமது ஆதிக்கத்தில் இருக்க மறுக்கிறார்கள், எனினும், ஜெபமாலை, தொழுகை, இவை உள்ளன; இவன் போன்றார், அனுமதிக்கப்பட்டால், பிறகு, நமக்கு மிச்சம் என்ன இருக்கும்? இவன்தான், விண்ணிலே சுவர்க்கம் இல்லை, மண்ணுக்கு அடியில் நரகம் இல்லை, என்று பேசுகிறானே, இந்த இரண்டும் இல்லை என்று மக்கள் தீர்மானித்துவிட்டால், நாம் ஏது, நமக்குள்ள இந்தச் சுவைமிக்க வாழ்வு ஏது, என்று எண்ணினர் - குலை நடுக்கமெடுத்துவிட்டது - கொளுத்துங்கள் இவனை, என்று கொக்கரித்தனர்.

பழிபாவத்துக்கு அஞ்சாத பாவியாக இருக்கலாம் ஒருவன் - தாங்கிக்கொள்ளலாம், பாவத்தைத் துடைத்திடும் பரிகார முறை தரலாம், திருத்தலாம்; கொள்ளைக்காரனைக் கூட, புண்ணியவானாகும்படி புத்திகூறி, கோவில் கட்டச் சொல்லலாம்; கசிந்து உருகு காரிகையே! கற்பு இழந்த என்னைக் காப்பாற்று என்று நெஞ்சுருக இறைஞ்ச! நோன்பு இரு! திருத்தலங்களைத் தொழுது அடியார்களை வழிபடு, பாவக்கறை கழுவப்படும் என்று கூறி வழுக்கி விழுந்த வனிதையை, மீண்டும் பரிசுத்தமாக்கிவிடலாம் - ஆனால் ப்ரூனோ! இவன் பாபம் செய்தால் பரவாயில்லையே - பாபம் என்று கூறுகிறீர்களே, எதை? என்றல்லவா, கேட்கிறான். மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனிடமே இருக்கிறது, என்றுகூறி, நம்முடைய வேலையைப் பறிக்கிறானே! விட்டுவைத்தால் விபத்து நிச்சயம், எனவே தீயிலே தள்ளுங்கள் என்றனர்.

“கோவிலை இடிப்பதும் கொளுத்துவதும், பாபம்தானே?”

“நிச்சயமாக, பாபம்தான்”

“இவன் கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கொளுத்திய மகாபாவி”

“ஏன் கொளுத்தினான் தேவாலயத்தை?”

“பிராடெஸ்டண்டு மார்க்கமாம் - எனவே, கத்தோலிக்க மடலாயத்தைக் கொளுத்துவது, புண்ணிய காரியம் என்று கருதிக் கொண்டானாம்.”

பிராடெஸ்டெண்டு நீதியாளர்களின், நெரித்த புருவம் மாறிவிடுகிறது - மன்னிப்புக் கிடைக்கிறது. அதுபோன்றே, கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டான்டை இம்சை செய்வது, பாவமாகாது என்று கருதி வந்தனர். எனவே பாபம், என்பதற்கே, இரு வகையினரும், ஒன்றுக்கொன்று நேர்மாறான விளக்க உரை தரலாயினர்.
-----------
எட்டு நாட்கள் (4)

ஆனால், ப்ரூனோ, இரு சாராருக்கும், ‘ஆகாதவன்’ ஏனெனில் அவன், உலகம் உருண்டை என்று கூறி, புனிதக் கருத்துகளை மறுக்கிறான்! மாபாவி! எனவே கொளுத்திக் கொல்க என்றனர்.
கோபர்னிகஸ், உலகு பற்றிய தன் கருத்தைக் கூறு முன்பே, மத ஏடுகளைக் கேலிப் பொருளாக்கும் சம்பவமொன்று நடந்தது. ஆசார்ய புருஷர்களும், அர்ச்சகர்களும், சன்னிதானங் களும், சாதாரணச் சாமியார்களும், நம்பிக்கையுடனும் ஆவேச மாகவும், உலகு மோட்சம், நரகம், என்பவை பற்றிக் கூறிவந்த உபதேச உரைக்கு வேட்டு வைத்தான், ஒரு சாதாரணக் கப்பலோட்டி!
மாகெல்லான் என்பவன், ஸ்பெயின் நாட்டில், செவில்லி எனும் கடலகத்திலிருந்து கிளம்பினான் கலத்தில் - மேற்குத் திசையாக! மேற்குத் திசையாகவே சென்றான்! திசைமாறவில்லை; திரும்பவில்லை; மேலால், மேலால் செல்கிறான் - உலகம் தட்டை என்றால், கடைசி பாகம் எது காண்பேன், என்று பிடிவாதம் பேசுகிறான் - “மகனே! மாபாவியாகாதே! அருளாளர்கள் அளித்த உண்மையைச் சந்தேகிக்காதே, உலகம் தட்டை தான் - நீ, கடைசிவரை சென்றால் - அதோகதிதான்,” என்று மதவாதிள் எச்சரித்தனர். அவனோ நான் உலகம் உருண்டை என்று நம்புகிறேன் - உலகின் நிழல், சந்திரன் மீது வீழ்கிறது என்பதை உணர்கிறேன் - எனக்கு அந்த நிழல் தரும் நம்பிக்கையை, உங்கள் நிகண்டுகள் தரவில்லை, எனவே நான் செல்வேன், செல்வேன்” என்று கூறுகிறான். வென்றான்! மேற்கு நோக்கியேதான் சென்றான், மாகெல்லான் திசை மாறவில்லை. 1519ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் பத்தாம் நாள் சொல்லிவிட்டுக் கிளம்பியவன், 1522ஆம் ஆண்டு, செப்டம்பர் 7ந் தேதி, செவில்லி வந்தடைந்தான் - ஒரே திசையில் பயணம் செய்து! உலகம் உருண்டைதானே! என்றான். ஆமாம் போலிருக்கிறதே, என்று சிலர் இழுத்தாற் போல் பேசினர்., மதவாதிகளின் மயக்கமொழி, மாகெல்லான் பெற்ற வெற்றியின் உண்மையை மாய்த்தது. உலகம் தட்டை தான் என்றனர் மக்கள். கோபர்னிகஸ், அறிவாளிகள் உள்ளத்திலேயே புயல் எழக்கூடிய வகையிலே ஏடு தீட்டினான். தேவாலயம் அதனைத் தீண்டாதீர் என்று உத்தரவிட்டது. 1616ஆம் அண்டு ப்ரூனோ இறந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பாண்டவரே முன்னின்று, கோபர்னிகசின் கொள்கையைக் கண்டிக்க வேண்டி நேரிட்டது! கொளுத்திவிட்டனர், ப்ரூனோவை. கொள்கையோ, மடியவில்லை, போப்பின் சாபம் வீசப்பட்டது - அப்போதும் சாகவில்லை - கொள்கை வளர்ந்தது புதுப்புது ஆராய்ச்சியாளர்கள் தோன்றலாயினர் - ப்ரூனோவின் சார்பிலே பேசப் பலர் முன்வந்தனர். 278 ஆண்டுகள் போரிட்டுப் பார்த்து, தேவாலயம்! உலகம் உருண்டை என்பதையும், சுற்றி வருகிறது என்பதையும் ஏற்க மறுத்தது. கடைசியில், களத்தை விட்டு, தேவாலயத்தாரே ஓடிவிட்டனர், ப்ரூனோக்கள் அல்ல! ஒரு ப்ரூனோவைக் கொளுத்திவிட்டால் வேறு ப்ரூனோக்கள் கிளம்பமாட்டார்கள் என்று எண்ணியவர்கள் ஏமாந்தனர், பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும், வேக வேகமாகப் புத்தறிவின் சார்பிலே, படை திரட்டித் தந்தன! என்ன மர்மமோ? என்ன மாயமோ? என்று மக்கள் கேட்டுக்கிடந்த பல நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்க முன்வந்தனர் ஆராய்ச்சியாளர்கள் - பழமைப்படை புறமுதுகிட்டோடிற்று. கடைசியில், ப்ரூனோவிடம் மத உலகு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதுபோல, 1821-ஆம் ஆண்டு ஏழாம் பயன் எனும் போப்பாண்டவர், கோபர்னிகஸ் கொள்கைமீது இருந்த கண்டனத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்! மதவாதிகளும், உருண்டை உலகில் வாழச் சம்மதித்தனர்!

இந்தப் பெரு வெற்றிக்காக, ப்ரூனோ, தீயிலே தள்ளப்பட நேரிட்டது. எட்டு நாட்களில், அவருடைய மனத்திலே ஒரு துளி மருட்சியோ, மயக்கமோ கிளம்பி இருந்தால், போதும், அவர் உயிர் தப்பியிருக்கும், ஆனால் புத்தறிவு பிணமாக்கப்பட்டிருக்கும். ப்ரூனோ, உண்மை தழைக்கட்டும், என் உடல் சாம்பலாகட்டும் என்றார். எட்டு நாட்களிலே, அவர் மனக்கண்முன் தோன்றித் தோன்றி மறைந்த காட்சிகள் எத்தனையோ! துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தை எண்ணிக் கொண்டாரோ! மடலாயத்திலே துருவித் துருவிப் படித்த நாட்களை எண்ணிக்கொண்டாரோ! அன்பு பொழிந்த தாயையும், அக்கறை காட்டிய தந்தையையும் எண்ணியிருப்பார்! அவர் மனக்கண்முன் நடுக்கும் குரலுடன் பேசும் ஆன்ஸ்லம் பாதிரியாரும் திகைத்து நிற்கும் என்ரி மன்னனும், தேள் கொட்டினவர்போல அலறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், தெரிந்திருப்பர்! காட்டிக்கொடுத்தவனைக் கண்டிருப்பார் - பயத்துக்கு அடிமைப் பட்டவன், பரிதாபத்துக்குரியவன் என்று எண்ணியிருப்பார்.

எட்டு நாட்கள்தானே! விரைவிலே ஓடிவிடும் - என் கதையும் முடிந்துவிடும் என்று எண்ணி இருந்திருப்பார். அவர்தம் எண்ணத்தை வெளியிட வாய்ப்பில்லை. விஷம் தரப்பட்ட சாக்ரடீசுக்கு, கடைசிப் பொழுதில், நண்பர்கள் உடனிருந்தனர் - உலகு, அவருடைய எண்ணங்களை ஓரளவு அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ப்ரூனோவுக்கு அஃதும் இல்லை!

ஆனால், சொல்ல வேண்டியதைப் ப்ரூனோ, நாடு பல சுற்றிச் சொல்லிவிட்டார்! ஒரு வாழ்நாளில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டார்! பல்கலைக் கழகங்கள் எல்லாம், உலகம் உருண்டையா? தட்டையா? என்று விவாதித்த வண்ணம் உள்ளன. தெளிவறியா மக்கள் மட்டுமே, புத்தறிவைக் கொள்ளப் பீதி அடைகின்றனர். வேலை முடிந்துவிட்டது போலத்தான் - அரியதோர் உண்மையை உலகு ஏற்றுக் கொள்வதற்காக, என் உயிர், காணிக்கையாகட்டும் என்று, எண்ணியிருப்பார்! அந்தத் தூய்மையாளன் உள்ளத்திலே, இத்தகு உயர் எண்ணங்களன்றி வேறென்ன மலர முடியும்.
எட்டு நாட்கள் ஓடின; மதவாதிகள் ஏமாந்தனர் - ப்ரூனோ வெற்றி பெற்றார்.

சதுக்கத்திலே, ஏராளமான கூட்டம் - வேடிக்கை பார்க்க, நாத்தீகனைக் கொளுத்தப் போகிறார்கள், ஆத்திகர்களுக்கு அந்த ‘வாண வேடிக்கை’யைக் காண்பது தவிர வேறு வேடிக்கை இருக்க முடியுமா! வேடிக்கை மட்டுமா அது - ‘பக்தரின் கடமையு மாயிற்றே!’

ப்ரூனோவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்தனர் - பாவிகளுக்கு, வேத நிந்தகருக்கு, மஞ்சள் நிற ஆடை தருவது வாடிக்கை.

அந்த உடையிலே, பேய் பூதம் பிசாசு, பெருநெருப்பு, போன்ற சித்திரங்கள் - இவன் நரகம் செல்கிறான் என்பதைக் காட்ட. இழுத்துச் செல்கிறார்கள் ப்ரூனோவை! ஏறு நடை! கலங்கா உள்ளம்! புன்னகைகூடத் தெரிகிறது.

இரு மருங்கிலும் கூடி நிற்கும் ஏது மறியாதவர்கள், தூற்று கிறார்கள் - ஏசுகிறார்கள்! ப்ரூனோ, அவர்களைக் கண்டு கோபம் கொள்ளவில்லை.

ஓடி வருகிறார் ஒரு சாமியார் - மரத்தாலான சிறு சிலுவையை ப்ரூனோவின் முகத்திற்கெதிரே காட்டுகிறார் - சாகுமுன் சிலுவைக்குப் பணியட்டும் என்று!

சிலுவை! இதன் பெயர் கூறிக்கொண்டு எவ்வளவு அக்கிரமத்தைச் செய்கிறீர்கள், அறிவிலிகளே! என்று கேட்பவர் போல, ப்ரூனோ முகத்தை வேறோர் பக்கம் திருப்பிக்கொள்கிறார்.

கம்பம் - அதிலே கட்டுகிறார்கள் - தீ வளருகிறது! எதிரே, காட்டுக் கூச்சல் - ப்ரூனோ அமைதியே உருவானவராக நிற்கிறார், புகை சூழ்ந்து கொள்கிறது, அதைக் கிழித்துக் கொண்டு நெருப்பு தெரிகிறது - உடல் கருகுகிறது - அதோ, அதோ: என்று காட்டுகிறார்கள் - முகம் தெரிகிறது, தீச்சுழலுக்கு இடையில் அமைதியான முகம் - தியாகியின் முகம்!

தீயோர் மூட்டிய தீ, தன் வேலையைச் செய்து முடித்து விட்டது - ப்ரூனோ சாம்பலாக்கப்பட்டார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று கூறி அன்பு மார்க்கம் சமைத்துத் தந்தார் எமது தேவன் என்று கூறிக்கொண்டனர்; அவர்கள் ப்ரூனோவை நெருப்பிலிட்டனர்.

பல தெய்வ வணக்கத்தையும் காட்டுமிராண்டிச் சடங்கு களையும் எதிர்த்து அறப்போர் நடத்திய அண்ணலைச் சிலு வையில் அறைந்தார்கள் பாதகர்கள் என்று கூறிய விசுவாசிகள், அந்தச் சிலுவை தரும் நெறியையும் மறந்து, ப்ரூனோவைத் தீயிலிட்டனர்.

“அவர்களை மன்னித்துவிடுக, அண்ணலே, அவர்கள் அறியார்கள் என்ன செய்கிறோமென்று” என்று சிலுவையில் அறையப்படும்போது ஏசு கூறினாரென்றுரைத்து உருகும் கிருஸ்தவர்கள், ப்ரூனோவைக் கட்டி வைத்துக் கொளுத்தினர்.

ஆதிக்கத்திலிருந்த பல தெய்வ வழிபாட்டு முறையை எதிர்த்து அன்பு நெறி தந்த ஏசுவின் சொல்லைக் கேட்டும், செயலைக் கண்டும், அந்த நாள் மத ஆதிக்கக்காரர்கள், நாத்தீகன் என்று நிந்தித்தனர் - தெய்வத்தின் பெயர்கூறி வதைத்தனர். சிலுவை காட்சி தந்தது.

அக்கிரமக்காரர்கள் தந்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் உள்ள உரமும், கொள்கைப் பற்றும் இருந்தது என்பதை எடுத்துக் காட்டும் சின்னம், இந்தச் சிலுவை என்றனர் - அதைக் கண்டும், கருத்திலே தெளிவுபெற மறுத்தனர் - அதைக் காட்டியே, ப்ரூனோவைக் கொன்றனர்.

பாவிகளை இரட்சிக்க இரத்தம் சிந்தினார், என்று தொழுகையின்போது கூறுபவர்கள், ப்ரூனோவைக் கொன்றால், அன்புக்கும் அறத்துக்கும் இழுக்காகுமே என்று எண்ணவில்லை. எங்கே தங்கள் ஆதிக்கம் அழிந்து பட்டு விடுமோ என்ற அச்சத்துக்குத்தான் ஆட்பட்டனர். கோலாகலமாக ஆண்டு வந்த பழைய மார்க்க மன்னன் ஏசுவைக் கொன்றால்தான் தன் ஆதிக்கம் நிலைத்திருக்க முடியும் என்று எவ்விதம் கோபம் கக்கினானோ, அதற்குத் துளியும் குறைந்ததாக இல்லை, சிலுவை தொழுதோரின் சீற்றம்.

ஏசு மீண்டும் எழுந்து வந்தார் என்கிறார்கள், ப்ரூனோ தேவன் அருள் பெற்றவன்கூட அல்ல, எனினும் ஜியார்டானோ ப்ரூனோ சாகவில்லை - என்றும் நிலைத்து நிற்கும் உண்மை சாகாது.

ஜியார்டானோ ப்ரூனோவைக் கொள்வதற்காக மூட்டப் பட்ட நெருப்பிலிருந்தும், கிளம்பிய சிறு சிறு பொறிகள் பல்வேறு இடங்களிலும் பரவி, குருட்டறிவை அழிக்கும் பணியாற்றின.

அவரை அக்கிரமமாகக் கொன்றதற்குக் கழுவாய் தடுவதுபோல, பிற்காலத்தில், அவருடைய உருவச்சிலையை வைத்தனர். ஆனால் அவர் அடைந்த வெற்றி அது அவர் பகுத்தறிவு, பெருமிதம் கொள்ளச் செய்ததே, அவர் அடைந் வெற்றி. ப்ரூனோ, வாழ்கிறார், வெற்றி வீரராக.

(திராவிட நாடு - 1955)
--------------

13. சிங்களச் சீமாட்டி (‘பரதன்’ என்னும் புனைபெயரில்)


“நாகரிக நாட்கள் என நீ கூறுகிறாய் பெண்ணே! இன்றுங்கூட நடையிலே, உடையிலே, நாகரிகத்தைக் காண்கிறோமே தவிர, எண்ணத்திலே பழைய விஷயம் இருந்தபடிதான் இருக்கிறது. உன்னை வலைபோட்டுப் பிடிக்க விரும்பும் அந்தச் சொகுசுக்கார சங்கரன் கூட நாகரிக நாயகனாக நடிக்கிறானே தவிர, உள்ளம் பழைய எண்ணம் நிரம்பித்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று மங்கம்மாள் கூறினாள்.

மலர்க்கொடி நகைத்தாள்! அவள் சிரித்தபோதுதான் தெரிந்தது, பற்கள் எப்படி இருந்தால் பாவையருக்கு அழகு தரும் என்பது.

சிவந்த இரு அதரங்களையும் கொண்டு மலர்க்கொடி தனது முத்துப் பற்களை மூடி வைத்திருந்தாள். உண்மைதானே! விலையுயர்ந்த வஸ்துக்களைச் சற்றுப் பத்திரமாக வைத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். வைர மோதிரத்தை வெல்வெட்டுப் பெட்டியிலும், வரகரிசியை வாசலிலும்தானே போட்டு வைப்பார்கள்.

மலர்க்கொடியின் அங்கங்கள் ஒன்றை ஒன்று சண்டைக்கு இழுத்தபடி இருந்தன. கண் சொல்லிற்று “நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார். கடல் அலைபோல நான் பாய்வதை நோக்கு. அந்த மோகன மிரட்சியைக் காணு” என்று. புருவங்கள் “சும்மா கிட கண்ணே! நான் மதனன் வில்போல வளைந்து கொடுக்கும் காட்சியன்றோ உன் அழகை எடுத்துக் காட்டுகிறது! நானில்லாவிட்டால் நீ எங்கே, தங்கப் பெட்டிக்குத் தகதகப்பு. வைரத்திலே உள்ள ஒளி - இவைபோலக் கண்ணின் வனப்புக்கு நானன்றோ காரணம்” என்று சொல்லிற்று. நெற்றி சும்மா இருந்ததா? நான் பரந்து பளபளத்து பேழை என இல்லாவிடில், இந்தப் புருவமோ, கண்களோ எங்கு தங்கும் என்று வினவிற்று. “என்னைக் கண்டு காதகரும் காமுறும் அளவு உள்ளேன். நானின்றி நல்ல கண்ணோ, புருவமோ--, நெற்றியோ ஏது” என்று கன்னங்கள் கொஞ்சின. ‘மன்னனுக்கு முடிபோல, மாலைக்கு மணம் போல நான் இருக்கும் வனப்பு என்ன பாருங்கள்” என்று கூந்தல் கூவிற்று. இப்படி ஒவ்வோர் அங்கமும் ஒன்றை ஒன்று வம்புக்கிழுக்கும் அளவு வனப்புள்ள மங்கை, மலர்க்கொடி.

எனவே அவளால், மனத்துக்கும் வாலிபருக்கும் நேரிட்ட போராட்டங்களோ இவ்வளவு அவ்வளவல்ல.

எத்தனையோ அதிகாரிகள் தமது பீடத்திலமர்ந்து இந்தப் பெண்ணை எண்ணியபடி, தமது கடமையை மறந்ததுண்டு. எத்தனையோ இளைஞர்கள், இவளன்றோ வாழ்க்கையின் வழிகாட்டி, இன்பத்தின் இல்லம், இவளன்றி நாம் ஏன் இருப்பது உலகில்” என்று எண்ணி ஏங்கியதுண்டு.

மலர்க்கொடியின் மனம், பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு, சங்கரன் மீது சென்றது. நினைத்தது அவனையே மணப்பது என்று அவளும் எண்ணினாள். அவள் எண்ணத்தை அறிந்ததும் அவன் துள்ளினான். படிப்பு முடிந்து பரீட்சை தேறியதும் மணம். எனவே நாளை எண்ணிக் கொண்டும், ஏட்டைத் தள்ளிக் கொண்டும், “என்று வரும் அந்நாள்?” என்று மந்திரம் ஓதியபடி இருந்தாள். மங்கம்மாளுக்கு, மலர்க்கொடிதான் செல்வம். அந்தப் பூஞ்சோலையில் விளைந்தது அது ஒன்றுதான்! ஒன்றே போதுமே. அது ஒப்பற்ற கொடியன்றோ!

மங்கம்மாளுக்கு நவநாகரிகத்திலே விருப்பம். அதனுடைய மேற்பூக்சுக்களில் மட்டுமல்ல. கருத்துக்களில் வேட்கை. தன் வாழ்க்கையிலே நாகரிகக் கோட்பாடுகளைப் புகுத்தி வாழ்ந்தனர். மலர்க்கொடியும் அப்படியே.

சங்கரன் பார்வைக்கும், பேசும்போதும் நாகரிக புருஷனாகவே காணப்பட்டான். ஆனால் உள்ளத்திலே வைதீகம் குடிகொண்டிருக்கிறது என்பது மங்கம்மாள் கருத்து. அதனையே தன் மகளுக்கும் எடுத்துக் கூறினாள். மலர்க்கொடி அதனை நம்பவில்லை. நம்பாதுதான் நகைத்தாள்.

“சிரிக்கிறாயா? ஏனோ?” என்று மங்கம்மாள் கேட்டாள்.

“இல்லையம்மா! அவனைக் கூட சந்தேகிக்கிறாயே என்று தான் சிரித்தேன். நேற்று கூட அவர் தமது கல்லூரி மாணவர் சங்கத்திலே “மூடநம்பிக்கையும் முற்போக்கும்” என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகப் பேசினாராம்” என்றாள் மலர்க்கொடி.

“பேசலாம். அதை யாரம்மா இல்லை என்று சொன்னது? காரியத்திலே காட்ட வேண்டுமே. அதுதான் தேவை. உங்கள் பள்ளி வாத்தியாருக்குக் கிரகணம் எப்படி உண்டாகிறது என்பது நன்றாகத் தெரியும். அதை உங்களுக்குச் சொல்லியும் கொடுக்கிறார். ஆனால் கிரகணத்தன்று அவர் எங்கே இருக்கிறார்” என்று மங்கம்மாள் கூறினாள். மலர்க்கொடி “ஆமாம்! அர்த்த நாரீசுவர ஐயர் அவசியம் குளத்தங்கரைக்குத்தான் செல்வார். மறக்கமாட்டார்” என்றாள்.

“அதைத்தான் சொல்கிறேன் நானும்” என்றாள் மங்கம்மாள்.
* * *

பாழாய்ப் போன சூரியன் ஏன் இப்படிப் பாடுபடுத்து கிறானோ தெரியவில்லையே. நெருப்பிலே போட்டு வாட்டுவதைப் போல வாட்டிவிடுகிறான். கால் கொப்பளித்து விடும்போல இருக்கிறது என்று காலை முதல் மாலை வரை கூறுபவரிடம், அதே சூரியன் மாலையிலே மறைகிற நேரத்திலே ஓர் அரைமணி நேரம், அளவு கடந்த புகழ்ச்சியைப் பெற்று விடுகிறது. வானத்திலே சூரியன் மறையும்போது கிளம்பும் அந்தச் செந்நிறம் எவ்வளவு சொகுசு! கண்களுக்கு அதுதரும் குளிர்ச்சி எவ்வளவு! காவியக்காரரையும் ஓவியக்காரரையும் அந்தக் காட்சி தூண்டி விடுகிறது காதலருங்கூட அவ்வேளையில் மிக ‘குஷாலாக’ இருப்பதுண்டு. “ஏண்டி மாரி, எடுத்துக்கோ கூடையை; அரிவாளைப் போட்டாயா. ஆகட்டும் புறப்படு வீட்டுக்கு” என்று கொஞ்சினபடி குப்பன் மாரியுடன் களத்தை விட்டுப் புறப்படும் நேரம்.

“அதோ பார் கோடியிலே உம்! அப்பா, வருகிறார் பார். கூப்பிடு, “அப்பா - அப்பா!” என்று தனது குழந்தையைத் தபாலாபீசாக வைத்துக் கொண்டு, வேலையினின்று விடுபட்டு வீடு திரும்பும் கணவருடன் மாதர் கொஞ்சும் வேளை.

அந்த வேளையிலே, பங்களா தோட்டத்திலே, “தம்பி! ஏன் இந்தக் கிளாஸ்கோ பிஸ்கட்டு பிடிக்கவில்லையா” என்று மங்கம்மாள் கேட்க, அதுவரை, மலர்க்கொடியின் கண்களிலே கோடிப் பொருளைக் கண்டு கண்டு களிப்படைந்து கொண்டிருந்த சங்கரன், “ஏன் பிடிக்காது! எனக்கு ரொம்ப இஷ்டமாச்சே” என்று கூறியபடி ஸ்பூனை தவறாக எடுத்து வாய்க்கு அருகில் கொண்டு போக, மலர்க்கொடி நகைக்க, மங்கம்மாள் புன்சிரிப்பு கொள்ள, சங்கரன் முகத்திலே அசடு தட்ட வீற்றிருக்கும் காட்சி காணப்பட்டது.

“மாலை நேரத்திலே தம்பி, மனது குளிர்ந்து இருக்குமல்லவா?” என்றாள் மங்கம்மாள். “மனது குளிர்ந்ததோ இல்லையோ! டீ! குளிர்ந்தே போய்விட்டது” என்றாள் மலர்க்கொடி.

“ஆமாம்! ஆமாம்!” என்று இரண்டிற்கும் பதிலளித்தான் சங்கரன். “நாளைக்கு நாம் மூவரும் நத்தம் ஜெமீன்தாரின் விருந்துக்குப் போகவேண்டும். மாலை 5 மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடு. காரில் மூவருமாகப் போவோம்” என்று மங்கம்மாள் கூறினாள். “சரி” என்றான் சங்கரன். பிறகு மூவருமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டனர். இரவு 7 மணிக்குக் கலைந்தனர். மறுதினம் மாலை குறிப்பிட்ட நேரத்தில் சங்கரன் வந்து சேர்ந்தான். விருந்து நடக்கும் நத்தம் ஜெமீன்தாரின் மாளிகைக்குச் சென்றனர்.

விருந்துக்கு, அநேக சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருந் தனர். நகை அணிந்திருக்கிறாளே அந்த அம்மைதான் அகிலாண்டேஸ்வரி. அதோ சிரிக்கிறார் பார். பல்லிலே கொஞ்சம் தங்க முலாம்கூட இருக்கிறதே, அவள் யார் தெரியுமா, அன்னம்மாள். மணபுரி ஜெமீன்தாரரின் மருமகள். அவள் கணவன் சீமைக்குப் போயிருக்கிறான். அதோ அவர்தான் வைர வியாபாரி வரதராஜ செட்டியார். அது சுபேதார் சுந்தரம் - டாக்டர் ரகுராமன் - என்று விருந்துக்கு வந்தவர்களை எல்லாம் மங்கம்மாள். வந்தவர்களும் இந்த மூவரையும் அறிந்து கொண்டு, உபசார மொழிகள் உரைத்தனர். விருந்து முடிந்து போகும் நேரத்திலே, ஒரு நடுத்தர வயதுடையவர் மங்கம்மாளை அணுகி வந்தார்.

“சௌக்கியந்தானா, சுந்தரம்! சௌந்தரவல்லி எப்படி இருக்கிறாள்” என்று மங்கம்மாள் கேட்டாள். “சுகந்தான் மங்கு! சௌந்திரம் ரங்கூனுக்குப் போனாள். அங்கு நாடகம் நடக்கிறது. முடிந்துதானே வருவாள்” என்றான் சுந்தரம். “இதுதான் என் தங்கை புருஷன் சுந்தரம்” - என்று மங்கம்மாள், அவரைச் சங்கரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். சங்கரன் கைக்குலுக்கினான். மலர்க்கொடியைச் சுந்தரம் தட்டிக் கொடுத்து, “ஏ! அப்பா இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாயா நீ” என்று கேலி செய்தான். கொஞ்ச நேரம் சென்றதும் விருந்துக்கு வந்தவர்கள் வீடு திரும்பினர். நமது கதாபத்திரங்களும் தத்தமது வீடு சென்றனர். வீட்டிற்குப் போனதும் மங்கம்மாள் மலர்க்கொடியைப் பார்த்து, “ஏன் பெண்ணே! நாம் சௌந்திரத்தைப் பற்றிப் பேசும்போது, உன் சங்கரன் முகம் எப்படி இருந்தது கவனித்தாயோ” என்று கேட்க, மலர்க்கொடி, “ஒரு மாதிரியாகத்தான் இருந்தது” என்றாள் மங்கம்மாள். “போகப் போகத் தெரியும்” என்று கூறினாள். உள்ளபடி, சௌந்திரம் என்ற நாடகக்காரியின் அக்காள் மகள் மலர்க்கொடி என்ற சேதி சங்கரனுக்கு விசாரத்தைத்தான் கிளப்பிவிட்டது. அவன் அதுவரை எண்ணிக் கொண்டிருந்தது, சிங்களச் சீமாட்டி மங்கம்மாளின் மகள் மலர்க்கொடி என்பதே. அது ஒரு நாடகக் குடும்பம் என்பது தெரியாது. சிங்கள நாட்டிலே பல ஆண்டுகள் இருந்துவிட்டு சென்னைக்கு வந்த குடும்பமென்றும், அதிலே மணம் புரிந்து கொள்வது தனக்குப் பெருமை என்றும் எண்ணினான் சங்கரன். அன்றைய விருந்தின்போதுதான் தெரிந்தது விஷயம். நாடகக்காரி சௌந்திரம்! அவள் தமக்கை மங்கம்மாள். இவளும் ஒரு நாடகக்காரிதானே. இவள் மகளா மலர்க்கொடி! ஐயோ இவளை நான் மணம் புரிந்து கொள்வதா, நாடு நகைக்காதா, கூத்தாடிச் சிறுக்கியை, கொங்கு நாட்டு வேளாளக்குடியில் பிறந்த நானா மணப்பது? என் குடிப்பெருமை என்னாவது. சீச்சி! ஐயோ! என்று விசாரப்பட்டான் சங்கரன். ஜாதி உணர்ச்சி அவனுக்கு அவ்வளவு இருந்தது.
* * *

சிங்களச் சீமாட்டி என்று பலராலும் அழைக்கப்பட்ட மங்கம்மாள் நல்ல நாயுடு வகுப்பு. சிறுவயதிலேயே விதவையாகிவிட்டாள். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மங்கம்மாளுக்குப் பாட்டிலும் நடிப்பிலும் அதிக பிரியம். பள்ளிக் கூடத்தில் நடக்கும் எந்த விழாவுக்கும் மங்காதான் பாட வேண்டும். மங்காவும் தங்குதடையின்றிப் பாடுவாள். வந்த பிரமுகரும் தட்டிக் கொடுத்துவிட்டு, ‘சாரீரம் ரொம்ப ஜோர். பாடும்போதே காது குளிருகிறது என்று சொல்லாமற் போவதில்லை. விதவையாகும் வரையிலே, மங்கம்மாள் பாடுவது கிடையாது. பாட்டு பாடினால் பதி தன்னைப் பற்றி என்ன எண்ணுகிறாரோ என்ற பயம். விதவையான பிறகு பிழைப்புக்கு வழியாகப் பாட்டுத்தான் உதவிற்று. அண்டை அயலார் வீட்டுக் குழந்தைகளுக்கு நலங்கு பாட்டு கற்றுக் கொடுப்பது, சின்ன சின்ன சிங்காரப் பாட்டு தங்கமே, தங்கம், கும்மி முதலிய பாட்டுகள் கற்றுக் கொடுத்து வந்தாள், ஒரு தினம் ஒரு வீட்டுக் குழந்தைக்கு.

“திருவெற்றியூர் தேர் வருகுது திரும்பிப் பாரடி!
கண்ணே திரும்பிப்பாரடி, உன் மடியில் இருக்கும்
மக்காச்சோளத்தைத் தின்னு பாரடி”

என்று பாட்டு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டுக்கு வந்திருந்த ஒருவர், பாட்டைக் கேட்டு சொக்கி விட்டார். பலே பேஷ் என்று கொண்டாடினார். பிறகு மெதுவாக மங்கம்மாளிடம பேச ஆரம்பித்து, கடைசியில் தமது நாடகக் கம்பெனியில் நடிகையாகச் சேர்த்துக் கொண்டார். மங்கம்மாளின் புகழ் மலேயா, சிங்கப்பூர் பூராவும் பரவிற்று. பாட்டிலும் நடிப்பிலும் இணையில்லை என்று பெயர் எடுத்தாள். மதனசுந்தரி அது மங்கம்மாளின் நாடகப்பெயர். பணமும் சேர்த்துக் கொண்டாள். பணத்துடன் பிறந்ததுதான், மலர்க்கொடி இத்தனை சேதியும் சங்கரனுக்கு முதலில் தெரியாது. சிங்கள நாட்டிலிருந்து விட்டு சென்னை திரும்பி ஒரு பிரபல குடும்பம் என்பதுதான் இவன் முதலில் கேள்விப்பட்டது. சங்கரன் பெற்றோரை இழந்த ஒரு கொங்குவேளாளன். பெருங்குடி, செல்வம் கொஞ்சம் இருந்தாலும் தனது ஜாதி உயர்விலே மட்டற்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சி உள்ளத்திலே எங்கேயோ தூங்கிக் கொண்டிருந்தது. அன்று விருந்திலே மங்கம்மாள், ஒரு நாடகக்காரி என்பது தெரிந்த உடனே, உணர்ச்சி பொங்கி மேலிட்டு வெளிவந்தது.
* * *

சேற்றிலே செந்தாமரை போல, இந்த மலர்க்கொடி கடைசியில் ஒரு நாடகக்காரியின் மகளாகவா இருக்க வேண்டும்? என்னென்பேன் என் அதிர்ஷ்டத்தை? அந்தப் பேரழகியை நான் மணந்தால் ஊரார் என்னை நேரில் ஏதும் கூறாவிட்டாலும் மறைவாகவேனும் நாடகக்காரியைக் கல்யாணம் செய்து கொண்டவன் என்றுதானே தூற்றுவார்கள். நான் எங்ஙனம் அதைக்கேட்டு சகிப்பேன் - என்று எண்ணி சங்கரன் விசாரப்பட்டான். மலர்க்கொடியின் அழகு. அவள் மீது அவன் கொண்ட காதல், ‘ஜாதியாவது பாழாவது சங்கரா, அவளை நீ நேசிக்கிறாய். அவள் உன்னை நேசிக்கிறாள் - நல்ல ஜோடி. அவ்வளவுதானே கலியாணத்திலே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்று சொல்லிற்று. ‘சீச்சி! கூத்தாடி பெண்ணையா மணப்பது! கேவலமல்லவா? ஒரு மாடு வாங்கவதானாலும் எத்தனை குறிகள் பார்த்து வாங்குகிறோம்’ என்று எச்சரித்தது ஜாதி உணர்ச்சி.
எனவே, சங்கரன், மலர்க்கொடியின் புகைப்படுத்தைப் பார்ப்பதும், சிந்திப்பதுமாக ஒரு வாரங் காலந்தள்ளினான். அந்த ஒரு வாரமும் அவனுடைய முகத்தைக் காணாத மலர்க்கொடி வாடினாள். மங்கம்மாள், “என் பேச்சு சரியெனத் தோன்றுகிற தல்லவா குழந்தாய்! சங்கரன், எப்படி ஒரு டிராமாக்காரியின் பெண்ணை மணப்பது என்று எண்ணுகிறான் பார்! அவனை விட்டதா அந்தப் பழங்காலக் கொள்கை!” என்று கூறினாள்.

“இவ்வளவுதானா! நான் ஒரு நாடகக்காரியின் மகள் என்ற காரணத்திற்காக என் மீது இவர் வைத்திருந்த காதல் எப்படி மாறுவது? என் தாய் நாடக்காரி என்றதால் எனது (3-9-39இல் சங்கரன் எனும் கொங்குவேளாள இளைஞர், மலர்க்கொடி எனும் மங்கையைக் காதலிக்கிறார்.) இலட்சணத்திலே எது மாறிவிட்டது? என் உள்ளத்திலே இவர் என்ன தவறு இருப்பதாகக் கருதுகிறார். என்னே ஜாதிப்பித்து!” என்று எண்ணி எண்ணி ஏங்கினாள் மலர்க்கொடி.

ஜிலுஜிலுவென்ற காற்றும், சிறு தூறலும் இருந்தால்தானே பூஞ்சோலை பூத்துப் பூரித்து நிற்கும். அதைப்போல காதலில் சிக்குண்டவர் முன்பு காதலை ஊட்டியவர், நின்று பேசினால்தானே அவர்களுக்கு இன்பம்.

சங்கரனோ, மலர்க்கொடியின் மாளிகைக்கு வருவதில்லை. மலர்க்கொடியோ வாடி வதைபட்டாள் பாவம். சங்கரனுக்கு வருத்தந்தான். ஆனால் அவன் அதனைத் தீர்த்துக் கொள்ள வேறு மார்க்கத்தைத் தேடினான். நண்பர்களிடம் சென்று முறையிட்டான். அவர்களிலே சிலர், “ஒரு டிராமாக்காரிக்காக ஏனப்பா இப்படி ஏங்குகிறாய்” என்றும், “என்னடா பித்தனாக இருக்கிறாய்? ஆகட்டும் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லேன்! காரியம் முடியட்டுமே. பிறகு பார்த்துக் கொண்டால் போகிறது” என்றும், “பைத்தியக்காரப் பேர்வழி, இத்தனை நாளாக ஒரு ‘சான்ஸ்’ கூட அகப்படவில்லையா?” என்றும் சொன்னார்களே யொழிய ஒருவராவது, “நீ காதலிக்கும் மங்கையை மணக்க ஜாதி ஏன் குறுக்கிடுவது” என்று உண்மையைக் கூறவில்லை.

இன்பம் வேண்டும்; ஆனால் அதைப் பெற இடர்மட்டும் வரக்கூடாது. போகம் வேண்டும்; ஆனால் பொறுப்பு இருக்க லாகாது என்ற எண்ணம் அந்த இளைஞர்களுக்கெல்லாம்.

மலர்க்கொடியைத் தனது காமக்கிழத்தியாக்கிக் கொள்வது என்று சங்கரன் எண்ணினான். மணஞ்செய்து கொண்டால்தானே ஊரார் ஏசுவார்கள். கூத்தி என்று கொண்டால் என்ன சொல்லப் போகிறார்கள். என்னமோ பிள்ளையாண்டான் சற்று துடியான ஆள். அவள் வலையிலே விழுந்து விட்டான். இது சகஜந்தானே! அவனும் சந்நியாசியல்ல. அவளும் பத்தினியல்ல என்று சொல்வார்கள். அவன் வேறு ஜாதியாச்சே - இவள் வேறு ஜாதியாச்சே! அவளை இவன் கூடுவதா என்று கவலைப்பட மாட்டார்கள். அது சகஜமானதாகி விட்டது. ஆனால் அதே மங்கையைக் கலியாணம் செய்து கொண்டால் மட்டும் ஐயோ எனப் பதைப்பார்கள். ஆகுமா என்று அலறுவார்கள். இது என்ன கோலம் என்று கேட்பார்கள். உலகத்தின் போக்கு இது!
* * *

மெல்ல மெல்ல சங்கரனின் உள்ளத்திலே கள்ளத்தனமான எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. ஜாதீய உணர்ச்சி அவனை மலர்க்கொடியை மணக்கக் கூடாது. ஆனாலும் அவளை அடையவேண்டும் என்ற எண்ணத்தைத் தந்துவிட்டது. எனவே, அவன் சாகசமாகத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமெனக் கருதினான். நல்ல காரியம் செய்வதென்றால் அவ்வளவு விரைவில் யோசனைகள் வருவதுண்டு. எனவே சங்கரன் எப்படியோ மிகத் தாழ்ந்த விதமான சூது செய்யவுந்
துணிந்து விட்டான். ஒரு நாள் மாலை மலர்க்கொடியும் மங்கம்மாளும், தோட்டத்திலே உலவிக் கொண்டிருக்கையில் ஓர் ஆள் அங்கு வந்து சங்கரன் தந்ததாக ஒரு கடிதம் தந்தான். மலர்க்கொடி அதைப் பிரித்துப் பார்த்தாள்.

அன்பே,
எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. ஆகவே நான் அங்கு வரமுடியவில்லை; இன்றிரவு எட்டு மணிக்குத் தயவு செய்து என் அறைக்கு வர வேண்டும். கண்ணே, உன்னைக் காணாது எனக்குப் பெரிதும் கவலையாக இருக்கின்றது! தேவி உன் தரிசனத்தைக் கொடு. தவறாது வா. தவறக் கூடாது. தவறவே கூடாது.

இப்படிக்கு,
உனது காதலன்,
சங்கரன்

என்று எழுதப்பட்டிருந்தது. மலர்க்கொடி-, கடிதத்தைத் தாயிடம் தந்தாள். மங்கம்மாள் படித்துவிட்டு, “சரி! சங்கரன் சூது செய்வான். இனி அவன் மனம் கெட்டுவிட்டது. இனி நான் சொல்வது போல் நட மகளே. உன்னைச் சங்கரன் கெடுத்து விடுவான். இங்கே வா” என்று கூறி, நெடுநேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

இரவு எட்டு மணிக்கு, சங்கரன் அழைத்தபடி, மலர்க்கொடி சென்றாள். ஆனால், அவளுக்கு முன்பு இருந்த உற்சாகம் இல்லை. சங்கரனின் உண்மைச் சுபாவத்தைத் தெரிந்து கொள்வது என்ற யோசனையிலேயே அங்குச் சென்றாள்.

சங்கரன், அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். மலர்க் கொடியைக் கண்டதும் நகைத்தான். ‘மயிலே, குயிலே, மானே தேனே’ எனக் கொஞ்சினான். மலர்க்கொடி பழையபடி சிரிக்க வில்லை. முன்புபோலப் பேசவில்லை. இவ்வளவும் வெளிவேஷந்தானே என்று எண்ணும்போது அவளுக்குத் துக்கம் பொங்கி எழுந்தது. அதனை அடக்கிக் கொண்டு மங்கை பேசினாள். “உடம்பு காய்ச்சல், என்று எழுதினீர்களே.”

“உள்ளத்தில் காய்ச்சல், உடம்பில் அல்ல.”

“உம்! சரி, உள்ளத்துக் காய்ச்சலுக்குக் காரணம் யாதோ?”

“உல்லாசி! உன்னால் வந்ததுதான். வா இங்கே. என் பக்கத்திலே அமரு. எதா ஒரு முத்தம், ஒரே ஒரு முத்தம் கொடு. பார்ப்போம்.”

“பலே! சங்கர், இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டதா உமது சாகசம். திடீர் வளர்ச்சியாக இருக்கிறதே.”

“காதலி! இதிலே சாகசமேது. உன்னைக் கண்டால் என் மனம் அவ்வளவு பூரிக்கிறது. ஒரு முத்தம் தாராயா? நான் யார்? உன் காதலன் அல்லவா!”

“நீர் யார்! ஒரு வேளாளர்! அழகுள்ள மங்கை எவளேனும் அகப்பட்டால் அவளைச் சேர எண்ணும் சொகுசுக்காரர்.”

“கோபமேன் பெண்ணே!”

“கோபம் ஏன், உள்ளபடி! ஒரு நாடகக்காரியின் மகள் கோபிக்கலாமா! அதிலும் ஒரு வேளாள இளைஞர், படித்தவர், முத்தம் கொடு என்று கேட்பதே அவளுக்குப் பாக்கியமல்லவா? கிடைக்குமா, அவளுக்கு இவ்வளவு பெரிய பாக்கியம்!”

“மார்க்கொடி! நீ ஏதோ சந்தேகங்கொண்டு பேசுகிறாய். நீ நாடக்ககாரியின் மகளானாலென்ன, உன்னைத்தானே நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன்! என் காதலியின் கரத்தைப் பிடித்திழுத்துக் கட்டில்மீது தூக்கிப் போட்டு முத்தமிட எனக்கு உரிமை இல்லையா, முடியாதா என்னால்...”

“முடியும், நான் ஏமாந்தால்!” என்று சொல்லிக்கொண்டே மலர்க்கொடி, சங்கரன் தாடையிலே வைத்தாள் ஓர் அறை. அதே நேரத்திலே அவள் கண்களிலே நீர் ததும்பிற்று. மங்கம்மாளும் அந்த அறைக்கு வந்தாள். “அம்மா நான் ஏமாந்தேன் - இவனை நம்பினேன். இவன் கடைசியில் என்னை வெறும் காமப் பொருளாகக் கருதுகிறான். நீ சொன்னது உண்மை. முற்றிலும் உண்மை. என்னை இந்த இடத்தை விட்டு அழைத்துக்கொண்டு போய்விடு” என்று அழுது தாயின் மார்பிலே சோர்ந்து கொண்டிருந்த சங்கரனை உற்று நோக்கினாள். “சங்கரா! ஜாதியை நீ காப்பது போலத்தான் நானும் என் மகளைக் காப்பேன். மலர்க்கொடியும் தன் மானத்தைக் காப்பாள்” என்று கூறினாள். தாயும் மகளும் வீடு சென்றனர். சங்கரன் சோர்ந்து படுக்கையில் சாய்ந்தான், தன் சாகசம் தோற்றதே - சாயம் வெளுத்ததே, மலர்க்கொடியை இழந்தோமே என்று.

“சங்கர்! என்ன, என் யோசனைப்படி முடித்துவிட்டாயோ! மலர்க்கொடி வரும்போது நான் பார்த்தேன்” என்று கேட்டான், சங்கரனுக்கு யோசனை கூறிய சதாசிவம்.
---------
சிங்களச் சீமாட்டி (2)

“சதாசிவம்! முழுத்தோல்வி! அந்த மங்கா என்னைப் பற்றி மலர்க்கொடியிடம் ஏதேதோ கூறிவிட்டாள். இனி என்னால் அவளை அடைய முடியாது. கலியாணம் செய்து கொள்வதனாலும் நடக்காது. என் மீது அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பு உண்டாகிவிட்டது” என்றான் சங்கரன். “நான்சென்ஸ்! அப்படித்தான் இருக்கும் முதலிலே, பாபம்! நீ கலியாணம் செய்து கொள்வாய் என்று நம்பினார்கள். இப்போதுதானே விஷயம் தெரிந்தது. அதனால்தான் ஆத்திரம் அவர்களுக்கு. போகப் போகத் தணிந்து விடும். நீ மட்டும் சற்று பிகுவாக இருக்க வேண்டும். ஏதோ சோகமடைந்தவனைப் போல இருந்தால் அவர்கள் வழிக்கு வரமாட்டார்கள்” என்றான் சதாசிவம். ‘நண்பா! எனக்கு ஒரு பயமிருக்கிறது. வேறு யாராவது மலர்க்கொடியை மணம் புரிந்து கொண்டால் என்ன செய்வது. பிறகு நான் என்னாவது?’ என்றான்.

“அதற்கெல்லாம் தக்க ஏற்பாடுகள் செய்கிறேன். எழுந்திரு! வெளியே போய் சற்று ‘ஜாலியாக’ இருப்போம், உன் மனமும் சாந்தியடையும். வா போவோம்!” என்றழைத்தான் சதாசிவம்.

“எங்கே போவது?”

“ஜீவா வீட்டுக்கு”

“ஜீவாவா, யாரது?”

“வந்து பார்! உன் மலர்க்கொடி, கிலர்க்கொடியை எல்லாம் தூக்கித் தூரப்போட்டு விடுவாள். மந்திரசாமித் தெருவுதாசி, ஜீவா தெரியாதோ உனக்கு.”

“சீச்சி! நான் வரமாட்டேன். யாராவது கண்டால் ஏதாவது சொல்வார்கள்.”

“சொன்னார்கள்! வா, போவோம்” - என்று வலிய சங்கரனை அவன் தோழன் தன் கூத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
* * *

ஜீவா ஜடைவாரிக் கொண்டிருந்தாள். மேற்பூச்சு வேலைகள் இல்லை. அது மாலையிலே நடக்கும். இருந்த போதிலும் பரவாயில்லை. கண்ணுக்குக் காட்சியாகத்தான் இருந்தாள். ஆனாலும் அதனை உணர்ந்தவர் அநேகர் என்பது, ஜீவாவின் கன்னங்களிலே பளபளப்பு குறைந்ததிலிருந்தே தெரிந்து கொள்ளக்கூடும். “சங்கர்! இதோ பார், என் ஜீவாவை. மலர்க்கொடி மலர்க்கொடி என்று அழுகிறாயே தம்பி, இதோ பாரப்பா பார்” - என்றான் சதாசிவம். சங்கரனுக்குக் கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருந்தது, என்னடா இது - இவ்வளவு பச்சையாகப் பேசுகிறானே என்று. ஒரு மாதின் எதிரிலே அவளைவிட மற்றொருத்தி அழகு என்று சொல்வதைப்போல் ஆபத்துண்டோ! “சொல் அப்பா! யார் அழகு? என் ஜீவாவா மலர்க்கொடியா” - என்று மறுபடியும் கேட்டான் சதாசிவம்.

“உனக்கு ஜீவா அழகு - எனக்கு மலர்க்கொடி” என்று சமரசமாகக் கூறினான் சங்கரன்.

“எந்த மலர்க்கொடியைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்த நாடகக்காரி பெண்ணா!” என்று ஜீவா கேட்டாள். “ஆமாம்” என்றான் சதாசிவம்.

“அவள் அழகுதான்! டிராமாகாரிகள் அழகில்லாமல் இருப்பார்களா! அவர்களுடைய பார்டர் சேலையும், கர்ல் கூந்தலும், தளுக்கும் குலுக்கும், எங்களுக்கு எங்கிருந்து வரும்? நாங்கள் பரம்பரையாகப் பார்த்தசாரதி கோவிலுக்கு முத்திரை! ஏதோ ராமா, கோவிந்தா, கிருஷ்ணா என்று காலங்கழிப்பது” என்று ஜீவா தன் பெருமையைப் பேசினாள். “கேள் ஜீவா கதையை, அந்தக் கூத்தாடி சிறுக்கியை! கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம் இவர்! நான் மட்டும் இல்லாவிட்டால், அந்த மங்கா மெதுவாக என் நண்பனை மாட்ட வைத்து விட்டிருப்பாள். ஆசாமி தலைகால் தெரியாமல் ஆடினான்” என்றான் சதாசிவம்.

சங்கரன் “இதேது தொல்லையாகப் போச்சு! நான்தான் விட்டுவிட்டேனே அந்த எண்ணத்தை” என்று கூறினான்.

“அது இல்லை, என்ன அவள் அவ்வளவு அழகு? அவளைக் கண்டு இவர் எப்படிச் சிக்கிக் கொண்டார்! இவரைப் பார்த்தால் ராஜா போல இருக்கிறதே. அவள் என்ன ஏதோ சிவப்புத் தோலும், நாரும் நரம்புமாக இருக்கிறாள். அவ்வளவு அழகா அவள்” என்று ஜீவா சங்கரனைக் கேட்டாள். “என் கண்களுக்கு...” என்று இழுத்தாற்போல் பதில் சொன்னான் சங்கரன்.

“ராஜா மெச்சினது ரம்பை” என்றாள் ஜீவா. சம்பாஷணை வளர்ந்து. கடைசியிலே ஜீவா மலர்க்கொடியைப் பற்றி சொல்லாத ‘சொட்டு’ இல்லை. ‘அவள் கண் திருட்டுக் கண். கைகால்கள் நோயாளிக்கு இருப்பதைப் போல் இருக்கிறது. தலைமயிர் ஆயிரத்தெட்டு கோணல்! ரொம்ப கர்வம்; நடப்பது அசல் டிராமா நடை. சிரிப்பு வெறும் சூது” என்று ஜீவா அடுக்கடுக்காக அடுக்கினாள்.

சங்கரன் அவ்வளவையும் கேட்டுக் கொண்டே இருந்தான்.

ஒரு வாரத்துக்கு முன்பு மட்டும், வேறு யாரேனும் மலர்க் கொடியைப் பற்றி ஜீவா சொன்னதைப் போல ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் சங்கரன் துள்ளியிருப்பான். இப்போது அப்படியில்லை.

முன்பு மலர்க்கொடி காதலி; இப்போது டிராமாக்காரி. எனவே, தன் எதிரிலேயே அவள் இழிவாகப் பேசப்பட்டும், காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும், இடையிடையே சிரித்துக் கொண்டும் இருந்தான் சங்கரன்.

அன்று ஆரம்பமான பொழுதுபோக்கு, அன்றோடு நின்று விடவில்லை; ஜீவா வீட்டுக்குத் தினமும் இரு தோழரும் போக ஆரம்பித்தனர். அங்குதான் மாலை வேளையிலே ‘டீ’. பல நாட்கள் அங்கு விருந்து. மேலும் கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு சதாசிவம் வராவிட்டாலும் சங்கரன் போவது என்ற முறை வளர்ந்து முடிவிலே ஜீவாவே சங்கரனின் வைப்பாட்டியாகவும், சதாசிவம் சங்கரனின் விரோதியுமாகி விட்டான். பரீட்சையில் சங்கரன் தோற்றான். சதாசிவம் ஊர் பூராவும் சங்கரன் மீது பழி தூற்ற ஆரம்பித்து விட்டான். எங்குப் பார்ப்பினும் சங்கரன் பேச்சுதான். “இப்படியா இந்தப் பிள்ளை கெட்டுவிட வேண்டும். ஐயோ பாவம்! ஏதோ படித்தான், கொண்டான்; கடைசியில் ஜீவா வீட்டிலேயே குடிபுகுந்து விட்டானாமே” என்று ஊரார் பேசிக் கொண்டனர்.

மலர்க்கொடிக்கும் இந்தச் சேதி எட்டிற்று. மிக மனம் வருந்தினாள். என் செய்வாள் மங்கை. ஏங்கினாள் தன் காதலனுக்கு நேரிட்ட கதியை எண்ணி!

மலர்க்கொடியின் மனம் புண்ணாவது தெரிந்த மங்கம்மாள் சில காலம் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று வருவது என்று தீர்மானித்தாள். சிலோனுக்குப் போக ஏற்பாடு செய்து விட்டார்கள்.

புறப்படுவதற்கு முன்னால் மலர்க்கொடிக்கு எப்படியாவது சங்கரனைக் கண்டு பேசிவிட்டுப் போக வேண்டுமென்ற எண்ணம்.

ஜீவா வீட்டுக்கு ஆள் விட்டார்கள். சங்கரன், “ஆகட்டும்; நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று கூறி முடிப்பதற்குள், “அவர் அங்கே வரமாட்டார். ஏன் அந்தச் சிறுக்கிதான் இங்கு வருவதுதானே! வந்தால் அவள் கௌரவம் குறைந்து விடுமா, என்ன?” என்றாள் ஜீவா.

வந்த வேலையாளுக்குச் சங்கரன் ஒரு காலத்தில் மலர்க் கொடியிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தான் என்பது தெரியும். எனவே, அவன் ஜீவாவின் துடுக்கான பேச்சுக்குச் சங்கரன் என்ன பதில் கூறுவானோ என்று எதிர்பார்த்தபடி இருந்தான். ஜீவா தயாரித்த கிராமபோன் பிளேட்டைச் சங்கரன் பாடினான். “ஆமாம், அவ்வளவு அக்கறை இருந்தால் அவளை இங்கு வரச் சொல்” என்று கூறினான்.

மலர்க்கொடியும் மங்கம்மாளும் சிலோனுக்குச் சென்று பல மாதங்களாகி விட்டன. சங்கரன் அவர்களை மறந்தும் விட்டான். ஜீவாவிடம் ஜீவனைக் கொடுத்ததுடன் நிற்காது, மேலும் பல தொல்லைகளைத் தானாக வரவழைத்துக் கொண்டான். பெண்களிடம் அவனுக்கு அதுவரை இருந்து வந்த கூச்சம் பறந்து விட்டது. ஜீவாவுக்குத் தெரிந்த பெண்களிடமெல்லாம் வெகு தாராளமாகப் பழக ஆரம்பித்தான். அது ஜீவாவுக்குக் கொஞ்சம் கஷ்டந்தான். தாசி என்றபோதிலும் அவள் ஒரு பெண்ணல்லவா! அதிலும் இவன் மீது அவளுக்குக் கொஞ்சம் இஷ்டமுங்கூட. சொத்துப் போய், பரீட்சை போய், வேலையின்றிக் கிடந்த சங்கரனின் வீண் அதிகாரத்தைக் கூட ஜீவா பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

“இன்னும் ஒரு மாதத்திலே வேலை வரப்போகிறது. அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன செய்வது ஜீவா. உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய்” என்பான் சங்கரன்.

“எனக்கென்னமோ உங்கள் போக்கே பிடிக்கவில்லை. நல்ல குடும்பத்திலே பிறந்து, செல்வமாய் வளர்ந்து, படித்து, கடைசியில் இப்படிக் கெட்டுவிட்டீர்கள். என்னமோ என் மீது ஆசை வைத்து வந்தீர்கள். அத்தோடு நின்றீர்களா? ஏதோ வேலை பார்த்து, சம்பாதித்து எனக்குக் கொடுத்து, நாம் குடியும் குடித்தனமுமாக இருக்கக் கூடாதா? போன மாதத்திலே ‘செயின்’ மார்வாடி கடைக்குப் போச்சு. இந்த மாதம் இந்த வளையல் போகப் போகிறது” - என்று அழுதபடி சொன்னாள் ஜீவா.
“அழாதே, ஜீவா! நான் நிச்சயம் அந்த நகைகளை எல்லாம் மீட்டுக் கொடுக்கிறேன். அடுத்த மாதம் வேலை நிச்சயம் கிடைக்குமாம். எதிர்வீட்டில் இருக்கிறாரே, எத்திராஜ் நாயுடு அவர் சொன்னார்” என்றான் சங்கரன்.

மறுநாள் ஜீவா, எதிர்வீட்டு எத்திராஜலு நாயுடுவை அழைத்துக் கேட்டாள். அவர் ஒரு சீமை சாராயக் கம்பெனியிலே வேலை பார்த்துக் கொடுப்பதாகச் சொன்னார். ஜீவா தனது கஷ்டங்களை அவரிடம் கூறி, “எனக்கு அவரை விட்டால் கதி இல்லை. அவரும் உற்றார் உறவினரை எல்லாம் விட்டு என்னிடமே வந்து விட்டார். ஏதோ நீங்கள் இந்த உதவி செய்தால் மெத்த புண்ணியமுண்டு” என்று வேண்டிக் கொண்டாள். ‘ஆகட்டும்’ என்று கூறிவிட்டுப் போனார் அவர். எதிராஜலு நாயுடுவை ஜீவா கூப்பிட்டுப் பேசிய சேதி சங்கரனுக்குத் தெரிந்தது. அவ்வளவுதான். அவனுக்குக் கோபம் பொங்கி விட்டது. குதித்தான். கோபித்தான். “காட்டி விட்டாயே ஜாதி புத்தியை” என்றான். “ஏண்டி ஜீவா! மெல்ல எதிர்வீட்டு நாயுடுவை இழுக்கப் பார்க்கிறாயோ? ஜாக்கிரதை. அப்படி ஏதாவது நடந்தால், கொலை நடக்கும் இங்கே” என்று கூறினான் சங்கரன். ‘உனக்காகத்தானே நான் அவரைக் கூப்பிட்டுப் பேசினேன்’ என்று வாதாடினாள் ஜீவா.

“தெரியும், உன் சால் ஜாப்பு! எனக்காக வாதாடினாளாம். புதுமாப்பிளை தேடுகிறாயோ...?”

“இதென்ன சனியனா போச்செ, நான் ஏன் தேடுகிறேன்...?”

“நீலி! அப்படியே உருகுகிறாள். என்னைக் கெடுத்தது மன்றி...?”

“யார் யாரைக் கெடுத்தது? ஏன் சும்மா பேசுகிறீர்கள். உன்னாலேதான் ஊரார் சொன்ன சொல்லையும் கேளாது-, மேலே இருந்த நகைகளை விற்று உன் இழவுக்குப் போட்டேன்.”

“ராஸ்கல்! என்னடி ஏதேதோ பேசுகிறாய், உதைப்பேன்.”

“சும்மா நிறுத்து! உதைக்க மாட்டீர்களா என்ன.”

இந்தச் சம்பாஷணையின் காரம் அதிகமாயிற்று. சங்கரன் ஜீவாவை அடிக்கலானான். அவள் ஐயோவென அலறினாள். தெருவில் போவோர் வருவோர் நின்றனர். கும்பல் கூடி விட்டது. அக்கம் பக்கத்து வீட்டார் வந்து சமாதானம் சொன்னார்கள். அன்றுதான் ஒரு விஷயம் விளங்கிற்று ஜீவாவுக்கு. அதாவது சங்கரன் குடிக்கிறான் என்பது.

கெட ஆரம்பித்து விட்டால் அதற்கு ஓர் எல்லையுண்டோ! ஜீவாவின் மனம் கொதிக்கும்படியும், சங்கரன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். நாயுடு சொன்னபடி வேலை பார்த்துக் கொடுத்தார். வந்த சம்பளத்திலே பாதி சாராயக் கடைக்குச் சென்றது. பாதி பார்வதி வீட்டுக்குப் போயிற்று. பார்வதி ஜீவாவுக்குத் தெரிந்தவள். எவ்வளவோ வற்புறுத்திக் கூறினாள். சங்கரனைத் தன் வீட்டுக்கு வர வேண்டாமென்று கேட்கவில்லை சங்கரன். உருட்டி மிரட்டி அவளையும் சிநேகம் பிடித்துக் கொண்டான். ஜீவா அந்தச் சமயத்தில் கர்ப்பம்! குழந்தை பிறந்து இரண்டொரு மாதம் ஆவதற்குள் சங்கரனை வேலையினின்றும் நீக்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, கணக்கிலே தகராறு என வழக்குத் தொடுத்து விட்டார்கள். போலீசார் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஜீவாவுக்குக் கடுமையான ஜுரம். வீடு சோதனை போடப்பட்டது. சங்கரனை ஒளித்து வைத்துக்கொண்டே ஜீவா போலீசை ஏய்க்கிறாள் என எண்ணிப் போலீசார் அவளைக் கண்டித்துப் பேசினார்கள். தூற்றினார்கள். இவ்வளவு தொல்லைகளுக்கிடையே வறுமை அவளை வாட்டிவிட்டது. சங்கரனோ ஊரைவிட்டு ஓடிவிட்டான். ஜுரமோ குறையவில்லை. குழந்தையோ கோடி சூரியப் பிரகாசமாக இருந்தது. அதைக் காணக்காண, “ஐயோ! எப்படி இதைவிட்டு நான் பிரிவேன். என் கண்ணே செல்வமே! கட்டிக் கரும்பே - உன்னை விட்டுப் போவதா?” என்று புலம்பினாள் ஜீவா. ஜுரம் போக வைத்திய வசதி செய்துகொள்ள மிச்சம் மீதி இருந்த சொத்தும் போய்விட்டது. கடைசியில் பிழைப்பது கஷ்டம் என டாக்டர் கூறிவிட்டார். ஜீவாவுக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.

பார்வதிக்கு ஆள் விடுத்தாள். பார்வதி வந்ததும் குழந்தையை அவள் வசம் ஒப்புவித்தாள். இரண்டொரு நாளிலே ஜீவா இறந்தாள் பாபம்!

இந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்ட சங்கரன் உள்ளபடி வருத்தப்பட்டான். ஆனால் தலையை வெளியே காட்டுவதற் கில்லை. கிராமத்திலே தனது மாமன் வீட்டில் ஒளிந்து கொண்டு, வாழ்க்கை, சமரசத்துக்குக் கொண்டு வர முயன்றான். அது முடிந்த பிறகுதான் வெளியே வர முடியும்.

சங்கரனின் மாமா, ரிடையர்டு பென்ஷனர். அவர் வழ்க்கை ஒரு சமரச முடிவுக்குக் கொண்டு வந்தார். கம்பெனிக்காரருக்குப் பணம் கொடுத்துப் பைசல் செய்து விட்டார். சங்கரன் ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என்றபடி மாமன் வீட்டிலே இருந்து வந்தான். ‘இனியாவது புத்தியாகப் பிழை. எனக்கும் வேறே பிள்ளைக்குட்டி கிடையாது. என் சொத்து உனக்குத்தானே சொந்தம்” என்று கூறினார். சங்கரனுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது. மாதத்துக்கொருமுறை பார்வதி வீடு சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு வருவான். சங்கரனின் மாமன் அதற்காக ஒன்றும் குறை சொல்வதில்லை. இவ்வளவாவது நல்லபடி திரும்பினானே என்ற சந்தோஷம் அவருக்கு.

மலர்க்கொடி சிலோனில் ‘நர்சு’ வேலைக்குச் சென்று விட்டாள். சங்கரன் தன்னைக் கைவிட்டதால் மனம் உடைந்தது மாறவே இல்லை. உயிரையே கொடுத்து விடுவதாகச் சொன்ன சங்கரனே தன்னைக் கைவிட்டு விட்டபோது, வேறு யாரைத்தான் நம்புவது அவள். மலர்க்கொடி ‘நர்சு’ வேலைக்காகப் பயிற்சி பெறத் தாயிடம் அனுமதி கேட்டாள். தாயும் கொடுத்தாள், சில ஆண்டுகள் சிலோன் வைத்தியசாலை ஒன்றில் அவள் நர்சாக இருந்தாள். இடையே சங்கரன் சென்னைக்கே திரும்பிச் சென்று ஒரு பிரபல மருந்துக் கம்பெனியில் கிளர்க்காக வேலைக்கு அமர்ந்தான். அந்தச் சமயத்தில்தான் அவனுக்கு, சிலோன் வைத்தியசாலையில், மலர்க்கொடி நர்சாக இருப்பது தெரிய வந்தது. ஏதோ சில மருந்துகள் தேவை எனச் சிலோன் வைத்தியசாலைக்காக மலர்க்கொடி எழுதிய கடிதமொன்று சங்கரனுக்குச் சிக்கிற்று. அதைக் கண்டதும் அவனுக்கு முன்னாள் நினைவுகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. தன்னைத்தானே கெடுத்துக் கொண்டதை எண்ணி வருந்தினான். சிலோன் ‘நர்சு’ தான் காதலித்த மலர்க்கொடிதான் என்பதைத் தெரிந்து கொண்டான். அவனுக்குப் பிறகு எப்படியேனும் மலர்க்கொடியைக் காண வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. சிலோனுக்குச் செல்வதெனத் தீர்மானித்தான். நேரே, தன் மாமன் வீடு வந்தான். தன் மனத்தில் ஒன்றைக் கூட ஒளிக்காது கூறினான்.

“நாம் கொங்கு வேளாளக் குடியில் பிறந்து நாடகக்காரியை மணப்பதா என்று எண்ணத்திலே என் இன்பத்தை விடுத்தேன்” என்றான் சங்கரன்.

“நாடகக்காரியை மணம் செய்து கொண்டால் நாடு கேலி செய்யும் என்று எண்ணினாயே, பிறகு நடந்த சம்பவங்களைப் பற்றி அவ்விதம் எண்ணினாயோ?” என்று கேட்டார் மாமன்.

“இவை வெளிக்கு வராது என்று எண்ணினேன். அப்படி வரினும், அதைப் பற்றி அவ்வளவு கேவலமாகக் கருத மாட்டார்கள். கலியாணம் செய்து கொண்டால்தான் ஜாதி கெட்டவன் எனச் சொல்லுவார்கள் என்று எண்ணினேன். அதுதான் நான் செய்த தவறு” என்றான் சங்கரன்.

“சிலோனுக்கு நீ போக வேண்டாம். மலர்க்கொடியும் மங்கம்மாளும் இங்கு வரும்படி நான் ஏற்பாடு செய்கிறேன். மலர்க்கொடி, வேறு யாரோ என்று எண்ண வேண்டாம். அவள் என் மகள்தான். மங்கம்மாளை நான் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தேன். ஆனால் உன்னைப் போலத்தான் நானும் ஊருக்கஞ்சி விஷயத்தை வெகு இரகசியமாக வைத்துக் கொண்டிருந்தேன். மங்கா, நாடகத்திலே சென்று விட்டாள். நான் அவளை விட்டுப் பிரிந்தேன். ஆனால், எங்களிருவருக்கும் மனக் கசப்பு கிடையாது.

என் பொருட்டு மங்கா எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தாள். நான் மணம் செய்து கொள்ள மறுத்தபோது மங்காதான், என்னை வற்புறுத்தினாள். நானும் அவளும் பிரிந்தோம். அப்போது மலர்க்கொடி ஐந்து வயது குழந்தை. பிறகு அவர்களைப் பற்றி நான் அக்கறை எடுத்துக் கொள்ளாதிருந்தேன். நான் “சிங்களச் சீமாட்டி” என்று எழுதிய நாடகத்திலே எங்கள் இருவரின் காதல் சம்பவத்தை எழுதியிருந்தேன். அதனை நடத்தி மங்கா பெரும் பெயரெடுத்தாள்” என்று சங்கரனின் மாமன் தன் சுயசரிதையைச் சொன்னபோது சங்கரன் ஆச்சரியப்பட்டான்.

“ஆனால் மலர்க்கொடிக்கு இந்நேரம் மணம்...” என்று கேட்டான் சங்கரன்.

“இல்லை! மணம் ஆகவில்லை. நான் அதைப்பற்றி விசாரித்து வைத்துள்ளேன். அது மட்டுமல்ல் சங்கரா! உன் விஷயம் பூராவும் எனக்குத் தெரிந்ததும், மலர்க்கொடிக்கு அவற்றை விளக்கி எழுதிவிட்டேன். அடுத்த கப்பலில் சிங்களச் சீமாட்டியும் அவளுடைய தங்கப்பதுமையும் வந்து சேருவர்” என்றார். அதைப்போலவே தாயும் மகளும் வந்தனர். மலர்க்கொடி ஒரே புன்சிரிப்பால் சங்கரனை மன்னித்து விட்டாள். மணம், வெகு எளிய முறையிலே நடந்தது. பார்வதியிடம் வளர்ந்து வந்த குழந்தை குமுதா, சங்கரன் வீட்டில் சேர்ப்பிக்கப் பட்டது. எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தனர். ஊரார் ஏதேதோ பேசினார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் ஆனந்தத்தை ஊரார் என்ன அறிவார்கள். அளவு கடந்த ஆனந்த வாழ்வு வாழ்ந்தனர் அவர்கள்.

குடியரசு 1939
-------------------

14. அரசாண்ட ஆண்டி

அரசாண்ட ஆண்டி (1)

“லாரோகேல், கோட்டைக் கோமகள், கோமளவல்லி இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி... தெரியுமே, மன்னா! தங்கட்கு... நினைவில்லையோ?”

“அவளா அமைச்சரே! அழகி, ஆமாம், நினைவிலிருக்கிறது - எவர் நெஞ்சிலும் பதியும் ஓவியம்! விதவை, அல்லவா?”

“ஆமாம் அரசே! விதவை! விருந்தாக வேண்டியவள்.”

“கோலாகல வாழ்க்கையை வெறுப்பவள் போலும் அந்த வனிதாமணி. நமது கொலுமண்டபத்துக்கு வரத் தயங்கும் காரணம், வேறென்னவாக இருக்கமுடியும்.”

“விழிமட்டுமல்ல, மன்னா! மங்கையின் சுபாவமே மானுக்குள்ளது போன்றதே. ஒருவகையான கூச்சம்! அத்தகு ஆரணங்குகளிடம், பழகிவிட்டால், தொட்டால் துவள்வதுஅவளிடம் கிடைக்கொணாத இன்பம் பிறக்கும். அவள் தங்கள் அவைக்குத் தேவையான உயிரோவியம். இந்த இடத்தின் அழகு, அவளால் வளரும், மிளிரும். பூந்தோட்டத்தில் தானே பூபதி! புள்ளிக்கலாப மயில் தோகையை விரித்தாடிட வேண்டும், பொட்டலிலா! லாராகேல் கோட்டையின் ரமணி, தங்கள் பார்வையில் இருக்க வேண்டிய பாவை. மேலும், இங்கு இளித்துக் கிடக்கும் நங்கைகள் தங்கள் மனத்திலே ஓர் சோர்வை உண்டாக்கி விட்டனர். உணர்கிறேன் மன்னா, உணர்கிறேன். அந்த உல்லாசி இங்கு உலவினாலே போதும், தென்றலின் இனிமை கிடைக்கும்.”

“அமைச்சரே! அவள்தான் இங்கு வர மறுக்கிறாளே”

“மறுத்தால் என்ன! அவள் இங்கு வராவிட்டால் நாம் அங்குப் போவது!”

“நாமா”

“ஆமாம்! இப்படி அல்ல; மாறுவேடத்தில்...”

“வேடிக்கையாக இருக்கும்.”

“மனத்துக்குப் புதுவிதமான இன்பம் இறையே.”

“எனக்குக்கூட ஒரே சலிப்புத்தான்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கீதங்கள்! கண்டு கண்டு சலித்துப்போன நடனங்கள்! ஒய்யாரிகளின் சிரிப்பு, காதைக் குடைகிறது, புன்னகை பூத்த முகத்தழகி இல்லை - எங்கும் ஒரே சாலப் பூச்சு...!”

அதை உணர்ந்துதான், அரசே! லாராகேல் கோட்டைக் கோமகளைத் தங்களுக்குக் காணிக்கையாக்கித் தீருவது என்று தீர்மானித்தேன் - திட்டமும் தயாராகி விட்டது.“திட்டம் தீட்டுவதிலே, உமக்குள்ள திறமையை அறியாத அரசுகள் உண்டோ, அமைச்சரே! ஆனால் நமக்குள் பேசிக் கொள்வோம். இந்த ரசவல்லிகளின் சம்பந்தமான திட்டம் தீட்டுவதிலும் வல்லமை மிக்கவர் தாங்கள், என்பது, எவருக்கும் தெரியாதல்லவா! நம்பக்கூட மாட்டார்கள்!”
“ஆண்டிதானே, மன்னவா! ஆண்டிக்கு என்ன தெரியும், அழகிகளைப்பற்றி என்றுதான் கூறுவர்.”

“சூட்சமம் தெரியாதவர்கள்.”

“சென்று, சில ஏற்பாடுகள் செய்துவிட்டு வருகிறேன் நாளை, பயணம்.”

“புதியபோர்! அமைச்சரே! பொற்கொடியைப் பெற நடத்தப்பட இருக்கும் புனிதப் போர்!”

“எத்தகைய போர் எனினும், மன்னன் வெற்றிக்கே பாடுபடுவேன்.”

“உம் உதவி இருக்குமட்டும், வெற்றிக்கு, என்ன குறை!! சென்று, வாரும்! என் மனம், இப்போதே கோட்டையில் இருக்கிறது.”

“கோமளவல்லியின் கொஞ்சுமொழி என் செவியில் கேட்கிறது, மன்னவா! சென்று வருகிறேன்.”
அரண்மனையில், அந்தரங்க அறையில், அரசனுக்கும் அமைச்சருக்கும் இங்ஙனம் உரையாடல்! மன்னன் காமாந்த காரனல்ல - அமைச்சரோ ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார் - காமக் களியாட்டத்திலே துளியும் ஈடுபாடற்றவர்; எனினும், மன்னன் மனத்துக்கு மகிழ்ச்சி தரத்தக்க மங்கை நல்லாளைக் கண்டறிந்து கூறுகிறார். கண்ட கண்ட கட்டழகிகளுடன், காமக் கூத்தாடித் திரியும் மன்னனுமல்ல - வண்டு மொய்க்கா மலர்கள் மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்க, பசுமை நிரம்பிய தோட்டத்திலே, அந்தப் பல வண்ணமலர்கள் உள்ள நேர்த்தியைக் கண்டு களிப்படையும் ரசிகன் போல், மன்னன் ஆடிடும் அணங்குகளையும், பாடிடும் பதுமைகளையும், கடைகாட்டி, இடை அசைத்து, நடையை நாட்டியமாக்கிடும் நாரிமணிகளையும், கண்டு களிப்பவன் - ஆடி அலையும் ஆசைமிக்கோனுமல்ல, மன்னனுடைய சபலம், அமைச்சருக்குத் தெரியும் - அதனைப் போக்கும் ‘மாமருந்து’ தேடிடும் முறையும், கடமையிலே ஒன்றெனக் கொண்டார். திருத்தலாகாதோ, மன்னனை? திருத்தலாம் - திருந்தவுங்கூடும் - எனினும், திருத்திப் பயன்? மன்னனுக்குப் பொழுது போக்கு இருக்கவேண்டும் - அப்போதுதான், அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளும் நிலை அமைச்சருக்குக் கிடைக்கும் ஆகவே, ‘சபலம்’ இருந்தால் தவறில்லை! ஆனால்,

அதை அறிந்து, வேறு தர்பார் தளுக்கன் எவனாவது, அரசனுக்குத் துணைநின்று கைக்குள் போட்டுக் கொண்டால்? அமைச்சரின் ஆதிக்கத்துக்கே கூட ஆபத்து எழக்கூடுமல்லவா! எனவே, மன்னனுக்குத் தேவையான ‘பொன்வண்டு’ சேகரிக்கும் காரியத்தையும் தானே கவனித்துக் கொள்ளத்தான் வேண்டும்!

அமைச்சனின் எண்ணம் இது. அப்பழுக்கற்றவர், பெண்கள் விஷயத்தில் பக்தர்! சித்தத்தில் சத்தற்ற விஷயங்களுக்குச் சிறிதளவும் இடம் தராதவர்! அமைச்சராக மட்டுமல்ல, ஆண்டவன் அருளைப் பாமரருக்குப் பெற்றுத்தரும் திருக்கூட்டத்தவரிலே, முன்னணிப் படையிலே, முக்கியமானவராகவும் உள்ளவர். எனினும், மன்னனிடம் தமக்கு உள்ள தொடர்பும் செல்வாக்கும், எவராலும் சிதைந்திடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்காக, ‘முறையற்ற’ செயலையும், மனமுவந்து மேற்கொண்டார்! எந்த நாட்டில் என்கிறீர்களா? வேல்விழி மாதரிடம், கோலோச்சும் மன்னர்கள் அடிமைப்பட்டுக் கிடந்த போக பூமியில்! பாருக்குள்ளே ஒரு நாடு, பல ரசங்கள் பெருகிய நாடு, பிரான்சு!

“நடிப்பா இது!”

“ரசிகர்கள் ஏராளம், எனக்கு.”

“அவர்கள் ரசிகர்களா! அப்பா நடிகர்! அதிகம் பேசுவானேன். நாகரிக நகரங்களில் நமது நாடகக் குழு போன்ற உயர்தர மேடையில், உன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்காது - வருந்திப் பயனில்லை - கோபம் என்றால், பற்களை ‘நறநற’வெனக் கடிக்கிறாய் - கிராம மக்கள் ‘கரகோஷம்’ செய்வர், நிச்சயமாக! இது, பாரிஸ்! நாகரீக நளினிகளும், அவர்களின் நகைமுகம் காண நவநிதியும் தரச் சித்தமாக உள்ள பிரபுக்களும் கலையை வளர்க்கும் கூடம். கோபம் என்றால், பற்களை நறநறவெனக் கடித்துக் காட்டினால், பட்டிக்காட்டான் என்று கூறிக் கேலி செய்வர். புருவத்தை நெறிப்பது, அதேபோது, புன்சிரிப்பை இழந்திடாமல் இருப்பது - அது பாரிஸ் போற்றும் கலை, போ! போ! ஆண்டு பல பயிற்சி பெற்றபின், வா, பார்ப்போம்!”

“சிறு பாகமும் ஏற்று நடிக்கத் தயார்...”

“நீ தயாரப்பா, நீ தயார்; ஆனால், நான்? என் கலாரசிகர்கள்? சிறுபாகம் எனினும், இங்கு, என் அரங்கில், நடிப்பிலே நேர்த்தியான திறமை உள்ளவருக்கே அளிக்கப்படும். விவாதம் கூடாது. என்னிடம்! சென்று வா!”

வேலை தேடி வந்த ஆர்வமுள்ள நடிகனை, நாடகக் கலை வியாபாரி விரட்டிவிட்டு, உயர்ரகப் பானத்தைப் பருகிக் கொண்டிருந்தான்; உள்ளே நுழைந்தார், ஓர் முதியவர்.

“வருக, அமருக! ஊர் பேர் விவரம் கூறுக” என்றான் கலைவாணிபன் - முதியவர் நகைத்தார் - கூர்ந்து நோக்கினான் கலைக்கூடக் கள்ளன், கண்டு கொண்டான் அவர் யார் என்பதை. குழைந்தான்; நெளிந்தான், கரம் கூப்பினான். பெரியவர், அவனை அமரச் சொல்லிவிட்டு, அருகே ஓர் ஆசனத்திலமர்ந்து, “அச்சம் கண்களில் தெரிய வேண்டும், ஆனால் ஒரு கணம்தான் - அடுத்த கணமோ பாசத்தைப் பொழியவேண்டும், சிங்காரம் சிறப்புற இருக்க வேண்டும், எனினும் செருக்குத் தெரிதல் கூடாது; வழுக்கி விழுபவளாகத் தெரியக்கூடாது, எனினும் காதலை ரசிக்கவே தெரியாத கற்சிலைபோன்றும் இருந்துவிடக் கூடாது; பேச்சிலே ‘லலிதம்’ இருக்கவேண்டும், ஆள்மயக்கி என்று தெரிந்து விடக்கூடாது; மன்னர்களை மகிழ்விக்க இயலும் என்ற முறையில் உபசாரம் செய்யும் ஆற்றலிருக்கவேண்டும், ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புக் கிட்டிவிட்டதே, என் பாக்கியமே பாக்கியம் என்று களிப்புடன் குளறிடுதல் கூடாது; மணிமண்டபத்திலே, சிற்பி சமைத்த ஓவியம் உயிர்பெற்று எழுந்து வந்து, தன்னைக் கண்டு பூரித்து நிற்கும் ரசிகனிடம், காதலைப் பொழிவதைப்போல்! இத்தகைய நடிப்புத் திறன் உள்ள பெண், உண்டா; இங்கு, இப்போது உம்மிடம்?”

“அமைச்சர் பெருமானே! பயிற்சி தந்திருக்கிறேன். எத்தகைய பாகமும் ஏற்று நடிக்கப் பாவை ஒருத்தி, பக்குவமானவள், இப்போது இருக்கிறாள். தாங்கள் கூறும் பாகத்தை நடிக்கும் திறம் படைத்தவள். எங்கு நாடகம்? எப்போது?”

“நாளை மறுநாள்! மன்னன் முன்! கொட்டகையில் அல்ல, கோட்டை மாளிகையில்!”

“மன்னன் முன்னிலையிலா! மெத்தமகிழ்ச்சி அமைச்சர் பெரும! மெத்த மகிழ்ச்சி! அரசரின் அருமை நண்பர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைத்துக் காட்டுகிறேன். என் திறத்தை விளக்கிட நல்லதோர் வாய்ப்பு, நல்லதோர் வாய்ப்பு.”

“ஆசிரியர்! கோட்டை மாளிகையில் என்றேன், நாடகம் என்று கூறவில்லை. லாரோகேல் கோட்டைக் கோமகளாக மாறுவேடம் அணிந்து சில நாட்கள், மன்னனுடன் அந்த நடிகை அளவளாவி இருக்கவேண்டும். கோட்டை மாளிகையில், ஆள் அம்பு, ஆடம்பரம், அலங்காரம் யாவும் இன்று தயாராகிவிடும்; அவர்கள் அனைவரும், உன் நடிகையை, கோட்டைக் கோமகளாகவே வரவேற்பர், பணிபுரிவர், மன்னன் வருவார் - உடன் நான் வருவேன் - இருவரும் மாறு வேடத்தில்!”

“புதுமையாக - இருக்கிறது.”

“பொருள் உண்டு - உனக்கு அது தெரியவேண்டியதில்லை. இதோ இப்பேழையில், கோட்டைக் கோமகளுக்குரிய ஆபரண வகைகள் - மற்றோர் பேழையில் ஆடை வகைகள். இதோ அவள் ஓவியம். இன்றே உன் நடிகையைத் தயார் செய்து, இரவு அங்குச் சென்றுவிட ஏற்பாடு செய். என் ஆட்கள் அங்குத் தயாராக இருப்பார், மன்னன், லாரோ கேல் கோட்டைக் கோமகளிடம் பழகுவதாகவே, கருத வேண்டும் - துளியும் சந்தேகம் ஏற்படலாகாது - குட்டு வெளிப்பட்டால், தலை தப்பாது, உனக்கு.”

“கஷ்டமும் ஆபத்தும் நிரம்பிய திட்டம்.”

“மன்னனுக்காக! அரசுக்காக! நாட்டுக்காக! காடு வேட்டைக்கு அல்ல! கருத்தற்ற களியாட்டமுமல்ல!”

“முயல்கிறேன்...”

“வெற்றி கிட்டும், அஞ்சாதே! மன்னன் தாமாகத் தம்மை இன்னார் என்று தெரிவிக்காமுன்னம், கோட்டைக் கோமகள் அவர்தான் மன்னர் என்று அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளக்கூடாது.”

“அப்படியா? ஏன்?”

“எப்படி இதைச் சாதிப்பது என்று யோசி - ஏனென்ற கேள்வி எதற்கு!”

“உத்தரவு.”

“இதோ செலவுத் தொகை... லாரோகேல் மாளிகையில் கோட்டைக் கோமகளை, நாளை மறுநாள் சந்திக்கிறேன்.”

“நாம் யார் என்று அறிந்ததும் பேதைப்பெண் பிரமித்துப் போய் விடுவாள்! மன்னா! மன்னித்துவிடு. குற்றம் ஏதேனும் செய்திருந்தால், பொறுத்திடுக! என்றெல்லாம், குளறிக் கொட்டுவாள்.”

“ஆமாம், அரசே! மாறுவேடம் தங்களுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. நடிப்பு தங்கட்குத் தெரியாதா - சீமாட்டி அறிய முடியுமா தங்கள் திறமையை.”

“வேடிக்கையாக இருக்கும். யாரோ, காதலில் கட்டுண்ட வாலிபன், என்று எண்ணிக்கொள்வாள் - இன்னுயிரே! ஆரமுதே! என்று நான் கொஞ்சுமொழி பேசுவது கேட்டு, யாரோ, சிங்காரத் தோட்டத்தில் நள்ளிரவுகளைக் கழித்த வாலிபச் சீமான் என்று எண்ணிக் கொள்வாள்...”

“ஐரோப்பா மெச்சும் பிரான்சு நாட்டுப் பூபதி தாங்கள் என்பதை பிறகு அறிந்ததும்...”

“அப்போதுதானே, வேடிக்கையின் உச்சக்கட்டம், அமைச்சரே, ஒரு திங்களுக்கு மேலாக எனக்கு இருந்து வந்த சோர்வு, சலிப்பு, பறந்தே போய்விட்டது - புதியதோர் மன எழுச்சி இப்போது. அடுத்த விநாடி என்ன, அதற்கு அடுத்தபடி என்ன நேரிட இருக்கிறது, என்று எண்ணி எண்ணி, பரபரப்படையும் நிலை; இதைத்தான் நான் விரும்புகிறேன்.”

“நான் அறிவேனே மன்னா, அதனை! அறிந்துதானே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். பிரான்சு நாட்டு உயர்தர பிரவு குடும்பத்து வாலிப ரசிகன் உல்லாசப் பயணமாக வந்துள்ளார். தங்கள் மாளிகையில் சில நாட்கள் தங்க விழைகிறார். என்றுதான், செய்தி தந்திருக்கிறேன், கோமகளுக்கு. வேட்டையில் இலேசாகப் பிரியம் - வேடிக்கையாகப் பேசுவதைப் பெரிதும் விரும்புவார் - கீதத்திலே அளவுகடந்த விருப்பம் - நாட்டியமாடுவதிலே நேர்த்தியான முறை தெரிந்தவர் - என்று குறிப்பும் எழுதி இருக்கிறேன். அதோ பாரும், கோட்டை மாளிகை மாடி - தீபாலங்காரம்...”

“வரவேற்கத் தயாராக இருக்கிறாள், வனிதை!”

“உள்ளே ஒரே பரபரப்பாக இருக்கும், பணியாட்கள் ஓடி ஆடி வேலை செய்தவண்ணம் இருப்பர். அதோ, கீதம் கேட்கிறதோ, இனிமையான நாதம்...”

கோட்டை மாளிகை வாயில் வந்தடைந்தனர், மாறு வேடமணிந்திருந்த மன்னனும் அமைச்சனும். உள்ளே கீதம் மும்முரமாகக் கேட்டபடி இருந்தது. காவலாட்கள், தடுத்து நிறுத்தினர், உள்ளே செல்லக்கூடாது என்று. மன்னன் அமைச்சனைப் பார்த்தான் - அமைச்சன். காவலாளைப் பார்த்தான். அவன், “உள்ளே, சீமாட்டி இன்று இரு விருந்தினர்களை, உபசரித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் நுழையலாகாது - அனுமதி கிடையாது” என்று கூறி, கதவைத் தாளிட்டுக் கொண்டு சென்றேவிட்டான். உள்ளே கீதம்! மன்னன் மனத்திலே, கோபம்! அமைச்சருக்கோ திகைப்பு! என் ஏற்பாடுகள்! என் ஏற்பாடுகள்!! - என்று முணுமுணுத்துக் கொண்டார். உள்ளேயோ, மானே! தேனே! மாங்குயிலே! என்று காதல் கீதம், சாகசச் சிரிப்பொலி! வந்த வழியே திரும்பிச் சென்றனர், மன்னரும் அமைச்சரும்...

நடைபெற்றதென்னவெனில், அமைச்சரும், நாடகக் குழுத் தலைவனும் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த வேலை தேடிவந்த நடிகன், வேறோர் எத்தனுடன் கூடிக்கொண்டு, கோட்டைக் கோமகளை ஏய்த்துவிட்டனர் - அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சீமான்போல நடித்து!

இலக்கியமல்ல, வரலாறும் அல்ல, கட்டிவிடப்பட்ட கதைதான் இது. எனினும் இது போன்றதும் இதனினும் மோசமானதுமான பல செயல்களைச் செய்து வந்தவர், ரிஷ்லு என்று, பல கதைகளைப் பலர் கட்டினர் - மக்கள் இவ்விதமான கதைகளை, உண்மை என்று நம்பியது மட்டும்மல்ல, ரிஷ்லு, இதுவும் செய்வான், இதைவிடக் கேவலமான காரியமும் செய்வான் - ஆதிக்க வெறிபிடித்தலையும் அந்த ஆண்டி. எதையும் செய்வான், என்றுதான் பேசுவர். மக்கள், அந்த அளவுக்கு, ரிஷ்லுவைப்பற்றி மனக்கொதிப்பு அடைந்திருந்தனர். ஆனால் வெளிப்படையாக எதிர்க்கவோ இயலாது. ரிஷ்லுவின் பழி தீர்த்துக் கொள்ளும் திட்டம் பயங்கரமானது. எதிர்ப்பவர், தப்புவதில்லை - சித்ரவதையையே பரிசாகப் பெறுவர்.

கார்டினல் ரிஷ்லு, பிரான்சு நாட்டை ஆட்டிப் படைத்த ஆதிக்கக்காரன் - மன்னனே அவனுடைய சதுரங்கக் காயானான்! பிரபுக்களுக்கு, அவன் பெயர் கேட்டாலே அச்சம், பிறநாட்டு மன்னர்களோ, அவனுடைய திட்டம் இப்போது யாதோ, நாளை எங்ஙனம் உருவெடுக்குமோ என்று எண்ணித் திகைப்பர். அவன் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றல் எவருக்கும் ஏற்படவில்லை. முணுமுணுப்போர் மூலைக்குத் துரத்தப்படுவர்! சதிபுரிவோர், சிரம்கொய்யப்படும். புரட்சி முளைத்தால் பொசுக்கித் தள்ளப்படும். மன்னனே, உற்றார் உறவினர். உடன்பிறந்தார், பெற்றதாய், எனும் எவருக்கும் கட்டுப்படமாட்டான்; ரிஷ்லு, கீறிடும் கோட்டினை மட்டும் தாண்டமாட்டான். பற்று, பாசம், நட்பு, நன்றியறிதல், தயைதாட்சணியம், அச்சம், எனும் எதனையும் பொருட்படுத்தாமல், தான் இட்டதே சட்டமென்றாக்கி, ஈடுஎதிர்ப்பு இன்றி, முடிதரித்த மன்னனையும் பிடிவாதம் நிரம்பிய பிரபுக்களையும், சதிபுரிந்து புரிந்து பழக்கப்பட்டவர் களையும், ஒருசேர, அடக்கி ஆண்டவன், கார்டினல் ரிஷ்லு. படைத் தலைவர்கள் அவனிடம் பணிந்தனர். பூஜ்யர்கள் அவனிடம் சரண் புகுந்தனர். பிரான்சு நாட்டு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது முதல் இறந்து படும்வரையில், பிரான்சிலும், அதனுடன் எவ்வகையாலேனும் தொடர்பு கொண்ட எந்த நாட்டிலும், கார்டினல் ரிஷ்லுவைப் பற்றித்தான் பேச்சு. மன்னர்கள் மாறுவர். மண்டலங்களிலே மகத்தான சம்பவங்கள் உருண்டோடும், ஆனால் எவரும் அஞ்சும் ஒரே மகத்தான சம்பவமாக, ரிஷ்லுவின் ஆதிக்கம்தான் நிலவிற்று.

பதின்மூன்றாம் லூயி மன்னன் பட்டத்துக்கு வருகிறபோது, கார்டினல் ரிஷ்லு அரண்மனையில் இல்லை, ஆதிக்கத்தில் இல்லை, துவக்கம் கூட இல்லை. கார்டினல் ரிஷ்லு, இறக்கும் போது “எனக்குப் பிறகு, இதோ இந்த மாஜிரின் என் இடம் பெறட்டும்” என்று பதின்மூன்றாம் லூயி மன்னனிடம் கூறினான் - மன்னன் மறுக்கவில்லை - மறக்கவுமில்லை - மாஜிரின் ரிஷ்லுவாக்கப்பட்டான். இந்த வகையான செல்வாக்கைப் பெற்ற கார்டினல் ரிஷ்லு, “நானுனக்கு மகன் அலனோ, நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவோ” என்று ஆண்டவனிடம் நெஞ்சு நெக்குருக இறைஞ்சி, அருள் பெற்று, பெற்ற அருளைப் பாமரருக்குத் தந்து அவர்களைப் பரமபத நாதனின் பார்வையில் கொண்டு போய் வைக்கும் பணியில் ஈடுபடும் பாதிரிமார் வேலைக்குத்தான் தன்னைத்தானே முதலில் ஒப்படைத்துவிட்டவர். கடைசிவரையில், கார்டினல் ரிஷ்லுவாகத்தான் பெயர் - சூரன், வீரன், மகாகனம், மன்னன் - என்ற விருதுகளை விரும்பவில்லை, ஏன் விரும்பவேண்டும், விருது பல பெற்றவர்கள் எல்லாம் தன்முன் கட்டியம் கூறி நிற்கக் காணும் போது, விருது வேறு தேவை என்ற எண்ணமா பிறக்கும்! பிரான்சு நாட்டின், எந்தப் பெரும் பதவியையும், எடுத்து எவர் முன்பும் வீசும்ஆதிக்கம் இருந்தது கார்டினல் ரிஷ்லுவுக்கு. ‘தேவப் பிரசாதத்தை’த் தந்து, துதிப்பாடல்களைப் பாடி, ஏசுவின் சுவிசேஷத்தை எங்கும் பரப்பும் பணிபுரிவதற்காக என்று வாழ்க்கைப் பாதைப் பயணத்தின் துவக்கம் இருந்தது - பாதையோ, பிறகு வளைந்தது, குறுக்கே கிடைத்த மற்றோர் பாதை, அரண்மனைக்கு ரிஷ்லுவை அழைத்துச் சென்றது, மண்டலம் காலடியில் கிடந்தது.

பிரான்சு! விசித்திரமான நாடு; விபரீதமான நிலமைகள்! அங்கு, அழகும் அவலட்சணமும், வீரமும் கோழைத் தனமும், சமரசமும் சதிச் செயலும், கலையும் கொலையும் காவியமும் கபடமும், செல்வமும் சீரழிவும், உலுத்தரின் உல்லாசமும் உழைப்போரின் பெருமூச்சும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளவில்லை, ஒன்றைஒன்று அடுத்தடுத்து இருந்துவந்தன - மேகங்கள், அங்கும் இங்கும், கருநிறமாக ஒன்றும், வெண்கருமுகிலாக மற்றொன்றும் உள்ளதுபோல்! ஒன்றொடொன்று மோதி, பேரிடியாக மாறியதுதான், பிரெஞ்சுப் புரட்சி. ரிஷ்லு காலத்துப் பிரான்சிலே, மேகங்கள் சூல் கொண்டன. அந்தப் பிரபுக்களின் கோலாகலம் சிறந்ததா என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. அரண்மனையில் மட்டும்தான் அரசோச்சுபவர் இருப்பார் என்பது பொது நிலை. பிரான்சிலே, அரண்மனையிலே மன்னர் இருப்பார்; ஆனால் அரசோச்சும் ஆற்றல் கொண்ட பிரபு ஒருவன்,வேறோர் கோட்டையிலே கொலுவீற்றிருப்பான்! பாதிரிகள் பலர்; பாபச் செயலோ அமோகம் படை பல உண்டு, தோல்வியே அதிகம்! பசும் வயல் உண்டு. பட்டினி உலவும்! வாணிபம் நடைபெற்றது வணிகர் கொழுக்க! வரி வாங்குவார் மன்னர், வறியவர்களிடம் மட்டும்! மது உண்டு, மாதரின் அதரம், அதனிலும் போதை தரும் நிலை உண்டு. கீதம் உண்டு, ஏழையின் சோகக் குரலுடன் போட்டியிட்டவண்ணம், பிரான்சு, தாமரைக் தடாகத்துக்கு எருமைபோல், மக்கள் வாழ்வுக்கு ஓர் ஆட்சி முறை இருந்துவந்தது. இந்தப் பிரான்சில் தானே ஒரு ரிஷ்லு தோன்ற முடியும். இங்குதானே ஆண்டியாக வேண்டியவன், அரசனை ஆட்டிப் படைக்கும் இடம் பெற முடியும்.

இத்தகைய பிரான்சுக்கு மன்னனாக வந்தமர்ந்த பதின்மூன்றாம் லூயிக்கு, வயது 9! சொல்ல வேண்டுமா? நிலைமையை! ‘லூயி மன்னன், சிறு பாலகன், நிழலைக் கண்டால் பயந்தோடியும், நீரைக் கண்டால் அஞ்சியும் மலர்ச்செடி அருகே சென்றால் வண்டு கொட்டுமோ மானைத் தொட்டால் முட்டித் தள்ளுமோ என்று திகில் கொள்ளத்தக்க மனநிலை உள்ள வயது. ஒன்பது வயதுப் பாலகன், பிரான்சின் மன்னன்! கடிவாளம் அறுந்து போய், உடலிலே முள் தைத்து, வெறிஉணர்ச்சியுடன் உள்ள காட்டுக் குதிரையை அடக்கி ஓட்டிச் செல்ல, ஒன்பது வயதுச் சிறுவன். மன்னன் மகன் மன்னன்தானே! வயதா முக்கியம்! முடமானாலும், குருடானாலும், சித்தம் குழம்பிப் போயிருப்பினும், சீரழிவான குணம் கொண்டோனயினும், மன்னன் மகன் மன்னனாதல்தானே முறை! தேவகட்டளை அல்லவா அது! பண்டைப் பெருமையின் சின்னம்! எனவே, ஒன்பது வயதுப் பாலகன், ஆட்சிப் பீடத்த மர்ந்தான். அவன் பெயரால், அவன் அன்னை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்துவந்தார்கள். அந்த அன்னையோ!

மெடிசி குடும்பம் என்பது, பிரான்ஸ் நாட்டிலே கீர்த்தி வாய்ந்தது. செல்வத்தாலும், பல நாட்டுடன் மணவினை காரணமாக ஏற்பட்ட தொடர்பாலும், மெடிசி குடும்பம், மிகுந்த செல்வாக்கடைந்திருந்தது. மேரி எனும் அம்மை, இந்த மெடிசி குடும்பம் - மாண்ட மன்னனின் மனைவி - பதின்மூன்றாம் லூயிக்கு அன்னை; இத்தாலிய வம்சம். இயல்போ.

மேரி டி மெடிசி, தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, எதையும் துணிந்து செய்யும் இயல்பு கொண்டிருந்தார். மன்னன் மனைவியாக இருந்தவர்கள் தான் எனினும், கான்சினி எனும் இத்தாலியன், அம்மையின் அபிமானத்தை அளவு கடந்து பெற்றிருந்தான். இத்தாலியிலிருந்து மேரி அழைத்துக் கொண்டுவந்த பரிவாரத்தில், லியனாரா டோரி என்றோர் தோழி இருந்தாள்; தச்சு வேலைக்காரன் மகள் அவளுடைய கணவன், இந்தக் கான்சினி.

ஊரிலே, பலர் பலவிதமாகப் பேசினர் - அரண்மனை சட்டை செய்யுமா! கான்சினிதான், மேரிக்கு உற்ற துணை நல்ல தோழன், யோசனை கூறுவோன், எல்லாம். கான்சினியின் சொல்தான், அரண்மனையிலே, முத்திரையில்லா உத்தரவு. பலருக்கு இது பிடிக்கவில்லை- சிறுமொழி புகன்றனர். கான்சினி சிரித்தான்! என் யோகம் அது - இதுகள் வீணாக வயிற்றெரிச்சல் பட்டுப் பலன் என்ன என்பான்.

“கான்சினி, கான்சினி” என்று எதற்கும், எப்போதும் மேரிதேவியார், அவனைத்தான் அழைப்பார்கள், இந்த உத்யோகம் யாருக்கு அளிக்கலாம்? கான்சினிதான் கூறவேண்டும். இந்தச் சட்டத்தை எப்படித் திருத்தலாம்? கான்சினி சொல்கிறபடி! இதுதான் ஆட்சிமுறை இவ்வளவு செல்வாக்கைப்பெற, கான்சினி, பேரறிவாளனா? இல்லை. மேரி அம்மையின் மனத்தை மகிழ்விக்கும் துறை ஒன்றுக்கே அவன் அறிவு அனைத்தும் செலவழிந்து விட்டது - மற்றத் துறைகளை அவன் அறிவான். போரில் வல்லவனோ? போரா! அரண்மனையில், அரசாளும் அம்மைக்கு அந்தரங்க நண்பனாக இருக்கும் கான்சினிக்குக் களம் செல்ல நேரம் ஏது! பிரான்சு நாட்டுப் பெருங் கீர்த்திக் குடும்பத்தில் உதித்தவனோ? இல்லை. இத்தாலி நாட்டவன்! அவன் பெற்ற செல்வாக்குக்காக, அவன் கற்றிருந்த ஒரே வித்தை, மேரியின் மனப்பக்குவத்தை அறிந்து நடப்பது தான், சாமான்யமான கலையா, அது! அதிலும், பிரான்சில், அந்த நாட்களில்! பெற்ற செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு கான்சினி ஆட்சி முறையிலே ஒரு விறுவிறுப்பு, ஏற்படுத்தினானா? இல்லை! பட்டமும் பதவியும் பரிசும் வாரி வழங்குவான் நண்பர்களுக்கு. மேரி அம்மைக்கு எதிராகப் பகைக் கூட்டம் கிளம்பிற்று. அதனை அறிந்து அழிக்கும் ஆற்றலும் அற்றிருந்தான் கான்சினி. உரித்த பழத்தைச் சாப்பிட்டுவிட்டு உயர்தரப் பானம் பருகி, உல்லாச ஓடம் ஏறிச்செல்லும் போக்கினன், கான்சினி. அவனிடம், மேரிதேவி காட்டிய பரிவு, எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிற்று - மேரி அதை உணர்ந்து அஞ்சினாள், கான்சினி ஏதும் செய்ய இயலாதிருந்தான்! அரண்மனைக்குள்ளேயும் வெளியேயும், சீமான்களின் சிங்கார மாளிகைகளிலே, பிரப்புக்களின் பாசறைகளிலே, கான்சினி - மேரி தொடர்புபற்றி, கோபப் பேச்சுக் கிளம்பும், சூளுரைப்பர் சிலர், சிரத்தை அறுத்தெரிய வேண்டுமென்பர் சிலர், அவனை விரட்ட வேண்டும் நாட்டை விட்டு என்பர் சிலர், ஏன் இந்த மேரி தேவியின் புத்தி இவ்வளவு கெட்டுக் கிடக்கிறது என்பார் ஒருவர். எதற்கும் ஓர் அளவு இருக்கவேண்டாமா, என்பார் மற்றொருவர்; எதிர்ப்புப் பல இடங்களிலிருந்தும், உருவெடுத்தவண்ணம் இருந்தது.

ரிஷ்லு, அப்போதெல்லாம் பரமனுடைய நாமத்தை ஜெபித்துக்கொண்டு, தேவாலயப் பூஜாரியாய், திவ்யப் பிரபந்தங்களின் தேன்மொழியை ரசித்துக்கொண்டு, நாத்திகர்களைத் திருத்திடும் நற்றொண்டிலும், சந்தேகிகளைச் சன்மார்க்கிகளாக்கும் பணிபுரிந்து கொண்டும், மத தத்துவ விளக்க ஏடு தீட்டிக் கொண்டும் இருந்தான் - ஆனால், உள் எண்ணமோ, உடைக்கு ஏற்றது அல்ல. தேவாலயத்திலே தான் உலவினான்; ஆனால், நோக்கமோ, அரசியல் ஆதிக்கம் பெறவேண்டும், எப்படியேனும், பாரிஸ் பட்டணம் சென்று, புகழ்க்கொடியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான். உடை காவி, உள்ளமோ பதவி போகத்தில், நாளை மறுநாள், அடுத்த திங்கள், இன்னும் சில திங்களில் என்று, இவ்வண்ணம் ஆவலுடன் எதிர் பார்த்தபடி இருந்தான், அழைப்பு வரும் வரும் என்று, அருளாலயத்துக்கு அனைவரும் வாரீர், அவன் புகழ் கேளீர் என்று பக்தர்களை அழைக்க வேண்டிய ரிஷ்லு, பாரிஸ் பட்டணத்திலிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து, தனக்கு அழைப்பு வரும் நாளே திருநாள், பெருநாள் என்றெண்ணிக் கிடந்தான். அந்த அழைப்புக் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தான். நமது தேவாலய அதிபர், நமக்காகத் திருப்புகழைத் தொகுத்துத் தருவார், ஐயன் குணங்களை அழகுபட எடுத்துரைப்பார். பாவத்தைத் துடைக்கும் பணியினைப் பக்குவப்படுத்துவார், என்றுதான், அந்த ஊர்மக்கள் எண்ணிக்கொண்டனர். ஆனால், லூகான் நகர தேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு, மேரி அம்மையிடமிருந்து அழைப்புவரவேண்டுமென்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தார். உள்ளே புக இடம் கிடைத்துவிட்டால் போதும். பிறகு நமது உயர்வைத் தடுக்க யாராலும் முடியாது என்ற நம்பிக்கை பலமாகக் கொண்டான். ரிஷ்லு பிரான்சு நாட்டு நிலையும், ஆளும் அம்மையின் நிலையும், ஆட்டிப் படைக்கும் கான்சினியின் குணமும், பிரபுக்களின் வலிமையும், திகைத்துக் கிடக்கும் மக்களின் குமுறலும், ரிஷ்லுவுக்குத் தெளிவாகத் தெரியும். ஜெபமாலைதான் கரத்தில். ஆனால், நினைப்பு முழுவதும், நாதன்மீதல்ல. நாடாள்வோர் மீது, ஆட்சிப் பீடத்தருகே செல்லும் பாதையின் மீது. தேவாலய அதிபருக்கு வேண்டிய அறிவாற்றல் இல்லையோ - நிரம்ப, நிரம்ப. தத்துவம் தெரியும், தர்க்கம் அறிவார்; ஏடு தீட்டினார், வாதம் புரிந்தார் - ஆனால் திருப்தி இல்லை; இதுதானா, இவ்வளவுதானா, பிரான்சு நாட்டை அல்லவா ஆளவேண்டும், மந்தையிலிருந்து விலகி விட்ட ஆடுகளைத் திருப்பிக் கொண்டுவந்து சேர்க்கும் வேலைதானா எனக்கு? நான் ஆளப் பிறந்தவன், ஆளும் ஆற்றல் படைத்தவன், கான்சினியின் கரத்திலே பம்பரமாக உள்ள பிரான்சு மட்டும், என் கரத்திலே ஒப்படைக்கப் பட்டால்...! எண்ணும்போதே எதிர்காலக் காட்சிகள் மனத்திலே தோன்றின. அழைப்போ, வந்தபாடில்லை. ரிஷ்லுவின் அண்ணன் ஹென்ரி ரிஷ்லு, பாரிசில், மேரி அம்மையின் கருணைக்குப் பாத்திரமானவனாகத்தான் இருந்தான். தம்பியின் உருக்கமான வேண்டுகோள் கிடைத்தது. சமயம் வரவில்லை. வேறு பல நண்பர்களுக்கும் எழுதியிருந்தான் ரிஷ்லு. வாய்ப்புக் கிடைக்கவில்லை. மேரி தேவியாருக்கே எழுதினான்,“அடியேன் என்றும் தங்களுக்குச் சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன், உத்தரவுக்கு எதிர்பார்க்கிறேன்” என்று. உத்தரவு கிடைக்கவில்லை. கான்சினுக்கும் எழுதினான் - கட்டளைக்குக் காத்திருப்பதாக. கட்டளை கிடைக்கவில்லை. அதுவரையில் கர்த்தர் தொண்டு செய்து வருவோம் என்று இருந்து வந்தான். அதிலேயும் இலாபம் இல்லாமற் போகவில்லை.

கார்டினல் ரிஷ்லு, வேண்டாவெறுப்புடனே, எதிர்பாராத நிலையிலோ, பதவி பெறவில்லை. அதற்காக, அவன் எடுத்துக் கொண்ட முயற்சி கொஞ்சமல்ல - பூஜாரியாக இருந்துகொண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டு, அறமா, அழகா, என்பீர்கள், அந்நாளில் அது அறமா, அழகா என்பதல்ல பிரச்சனை. அதுதான் முறை! கார்டினல் ரிஷ்லு, செந்நெல் வயலிலே பதுங்கிக் கிடந்த புலி! இரை வேண்டும் - இருட்டவேண்டும் - அதுவரை, வயலில் மாடா, கதிர் தின்று பசி தீர்த்துக் கொள்ள? ரிஷ்லுவும், பாரீஸ்மீது பாய்வதற்குத் தக்க சமயம் வருகிற வரையில், இங்கு இருப்போம், என்றுதான் லூகான் நகரைத் தங்குமிடமாகக் கொண்டான் - தேவபூஜையின் மேன்மையை உணர்ந்து அல்ல!

ரிஷ்லு, எளிய குடியில்தான் பிறந்தான். 1585ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள், பாரிஸ் பட்டிணத்தில் ரிஷ்லு பிறந்தான். உடன்பிறந்த ஆடவர் மூவர், இரு பெண்கள், ஆர்மாண்டு ஜீன், என்ற பெயர், ரிஷ்லுவுக்கு! ரிஷ்லு என்பது ஊரின் பெயர், அதுவே அந்தக் குடும்பத்தினரின் பொதுப் பெயருமாயிற்று. ஐந்து வயதுப் பாலகனாக ஆர்மாண்டு ஜீன் இருக்கும்போதே, தந்தை காலமானார் - ஜீன், தாயாரால் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிள்ளை. சுசானே என்பது தாயின் பெயர். ஜீன், சிறு பிராய முதலே, நோயாளி - துள்ளித்திரிவ தில்லை, சோர்ந்து காணப்படுவான். தாயார், அவனை மிகவும், பக்குவமாக வளர்க்க வேண்டி இருந்தது. அடிக்கடி கடுமையான காய்ச்சல். சிறுவன், ஓங்கி வளருவதற்கு முடியாத நிலை. குன்றிக் கிடப்பான். உடல்தான் அவ்விதம். உள்ளமோ சுறுசுறுப்பானது -இளமை முதலே! பிரான்சு நாட்டு நிலை, பொருளாதார நெருக்கடி, கத்தோலிக்கருக்கும் பிராடெஸ்ட்டெசண்ட் பிரிவினருக்கும் ஏற்படும் போராட்டங்கள், அரச குடும்ப அலங்கோல நடவடிக்கைகள், இவைபற்றி எல்லாம் ஊரார் பேசிக் கொள்வர், சிறுவன் கூர்ந்து கவனித்துக் கேட்பான். மனத்திலே, எண்ணங்கள் தெளிவாகப் பதியலாயின! சிறு வயது முதல் இறந்து படும் வரையில், ரிஷ்லு, சதா நோயுடன் போராடிக் கொண்டுதான் இருக்க நேரிட்டது. எனினும், ஓயாத உழைப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டான். பள்ளியிலே முதல் மாணவனாக, ஆசிரியர் பாராட்டும் திறம் படைத்தவனாக, விளங்க வேண்டும் என்று ஆசை. படிப்பதிலே ஆர்வம். எந்தத் துறை சம்பந்தமான ஏடானாலும் அதனைத் தெளிவாகக் கற்றுணருவதிலே கவலை. ஆசிரியர்கள், ரிஷ்லுவின் அறிவுத் தெளிவு கண்டு ஆச்சரியப்பட்டனர். எப்போதும் நோய் வாய்ப்பட்டு, மெலிந்து சோர்ந்து காணப்பட்ட இந்த வாலிபனுக்கு அறிவுக் கூர்மை எப்படி ஒளிவிடுகிறது காணீர், என்று பலரும் பாராட்டுவர் - ரிஷ்லுவுக்கு இதனைக் கேட்பதிலே மிக்க மகிழ்ச்சி துவக்க முதலே ரிஷ்லுவிடம் இந்தக் குணம் இருந்து வந்தது - தனக்கு ஈடு எதிர்ப்பு எவரும் இருத்தலாகாது. என்ற எண்ணம். அதிகாரத்தில் அமர்ந்ததும், இதே எண்ணம் தான். ரிஷ்லுவை, ஈவு இரக்கமற்ற செயல்களையும் செய்யத் தூண்டிற்று. இலக்கியத்துறைப் படிப்பை முடித்துக் கொண்டு, ரிஷ்லு, இராணுவக் கல்லூரியில் சேர்ந்தான். குதிரை ஏற்றம், வாட்போர், ஆகிய கலைகளை நேர்த்தியான முறையிலே பயிற்றுவிக்கும், உயர்தரக் கல்லூரியில் ரிஷ்லுவுக்கு இடம் கிடைத்தது. இலக்கியக் கல்வி பயில்கையில் எத்தகைய திறமையும் ஆர்வமும் காட்டினானோ, அதேபோலவே, இராணுவத் துறைப் படிப்பிலேயும் ரிஷ்லு திறமையைக் காட்டி ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றான்.

இலக்கியம் பயின்றான், ஆனால் இலக்கிய ஆசிரியனாக வில்லை.

போர்க்கலை பயின்றான், ஆனால் படையிலே தளபதி யாகவில்லை.

இவை எல்லாம் ஆர்வத்துடனும் திறமை நிரம்பும் முறையிலும் கற்றானெயொழிய, ரிஷ்லு, இந்தத் துறைகள் தரும் இடமும் வாய்ப்பும் போதுமானவை என்று திருப்தி அடையவில்லை. வேறு ஓர் இடம் தனக்கு வேண்டும், இவை யாவும், வெறும் ‘முதற்படிகளே’ என்று எண்ணினான். ஆனால் அவன் இலக்கிய அறிவைக் கண்டவர், அவன் பெரிய இலக்கிய கர்த்தாவாகிவிடுவான் என்று எண்ணிக்கொள்வர் - இராணுவக் கல்லூரியிலே அவனைக் கண்டவர்களோ, இவன் படையில் சிறந்த தளபதியாகத் திகழ்வான் என்று எண்ணிக் கொள்வர் ரிஷ்லுவோ, இலக்கிய அறிவும்-, இராணுவக்கலை அறிவும், தனக்குக் கிடைக்க இருக்கும் பெரியதோர் வாய்ப்புக்குத் துணை புரியும், என்று மட்டுமே எண்ணிக்கொண்டான். சிறுவயது முதற்கொண்டே, ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டதாக இருந்தது.வேறு யாருக்கும் கிட்டாத கிடைக்காத இடம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவான் - அதற்கான முழுப் பயிற்சியும் பெற்றாக வேண்டும், என்ற ஆர்வம், நோயையும் பொருட்படுத்தாமல், உழைக்கச்செய்தது. இவன் ‘தாங்குவானா’ இவ்வளவு கடுமையான உழைப்பை என்று தாயார் கவலைப் படுவார்கள் - ரிஷ்லுவோ, கனி பறிக்கச் செல்பவன் மரத்தின்மீது ஏறிவிட்டால், கால்கடுக்குமே என்றா எண்ணுவது, இடையில் கிடைக்கும் செங்காய் கொண்டா திருப்தி அடைவது? மேலே மேலே ஏறத்தான் வேண்டும். கனி கரத்தில்படும் வரையில், என்ற முறையிலே உழைத்து வந்தான்.

இலக்கியம் தீட்டுவான் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றிவிட்டு, இராணுவக் கல்லூரி சென்றான். தளபதியாவான் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரிஷ்லுவோ சாமியார் ஆனான்!
---------
அரசாண்ட ஆண்டி (2)

ரிஷ்லு குடும்பத்துக்கு, மூன்றாம் ஹென்ரி எனும் பிரெஞ்சு மன்னன், லூகான் நகர தேவாலயத்தை இனாம் தந்திருந்தான். பிரெஞ்சு நாட்டிலே, மன்னர்கள் இப்படி ‘குரு பீடங்களை’, ‘தேவாலயங்களை’, ‘பூஜா மடங்களை’ தமது இஷ்டம்போல் இனாம் தருவது வாடிக்கை.

இன்றுமுதல், இராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இராமாச்சாரியார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் அவரது பின் சந்ததியாரும் ராமேஸ்வரம் தேவஸ்தான அதிபராக இருந்து, அதனால் கிடைக்கும் வருமானத்தை அடைந்து கொள்வர் - என்று ஒரு சர்க்கார் உத்தரவு இப்போது கிடையாது, இயலாது, ஜனநாயகம் அனுமதி அளிக்காது புரட்சிக்கு முன்பு பிரான்சிலே இது சர்வசாதாரணமான முறை. மன்னர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, நிலபுலன்களை, மாட மாளிகைகளை, பதவி பவிசுகளை, தானாமாகத் தருவதுபோலவே, குருபீடங்களையும் தேவாலயங்களையும் தருவர்! அதுமுதல் அந்த ஆலய வருமானத்தை அந்தக் குடும்பத்தார் அனுபவித்துக் கொள்வார்கள். அவர்களாகப் பார்த்து ஆலய காரியங்களைக் கவனிக்க சம்பளத்துக்குப் பூஜாரியை நியமிப்பர். இந்த அலங்கோலமான முறை அமுலில் இருந்த காலம் அது. லூகான் நகர தேவாலயத்துக்கு அந்த நகர மக்கள் செலுத்தும் காணிக்கை, அந்த நகர மக்கள் மதச்சடங்குகளுக்காகச் செலுத்தும் ‘தட்சணை’ யாவும், ரிஷ்லு குடும்பத்தாருக்குச் சொந்தம். மதச் சடங்குகளை நடத்தி வைக்கவும், ஆலயத்தில் தொழுகை பஜனை இவற்றை நடாத்தவும், ஓர் ‘அர்ச்சகர்’ வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்குத் தந்த சம்பளம் போக, மீதமிருக்கும் தொகையைக் குடும்பம் எடுத்துக் கொண்டது.

லூகான் நகர தேவாலயம், அதிக வருமானம் தருவதல்ல - ஏழைகள் நிரம்பிய சிற்றூர். எனவே, சம்பளத்துக்கு அர்ச்சகரை வைப்பதைவிட, ரிஷ்லுவே, அந்த ‘வேலை’யைப் பார்த்துக் கொண்டால் இலாபகரமாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது. சாமான்யக் குடும்பம் தானே.

ரிஷ்லு அப்போதுதான் இராணுவக் கல்லூரியில் திறம்படப் பயிற்சி பெற்று வந்தான். அவன் நிலையிலிருந்த எந்த வாலிபனும் இராணுவ உடை தரித்துக்கொண்டு, குதிரை மீது சவாரி செய்துகொண்டு, உல்லாசமாக வாழலாம் போர் மூண்டால், களத்திலே, திறம்காட்டி, வீரத்தை விளக்கி, விருது பெறலாம், தளபதியாகலாம் என்றுதானே எண்ணுவான். காவி அணிந்து கமண்டலம் ஏந்தி, பாவிகளை இரட்சிக்கும்படி பரமனிடம் ‘பூஜை’ செய்யும் பண்டார வேலைக்குப் போக மனம் ஒப்புவானா? ரிஷ்லு சம்மதித்தான்! வாள் ஏந்திய கரத்தை, ஜெபமாலை ஏந்தும் கரமாக்கிக் கொள்ள இசைந்தான். வலப்புறம், இடப்புறம் எதிர்ப்புறம் என்று குதிரையைச் செலுத்தி, போர்முறை பயின்று வந்தவன், அந்திவேளைப் பூஜை, அதிகாலைப் பூஜை அருள் கூறல், பிரசாதம் வழங்கல்; ஆறுதலளித்தல், குற்றம் கடிதல் என்பன போன்ற காரியங்களில் ஈடுபட இசைந்தான். காரணம் என்ன? எந்தக் காரியம் செய்தாலும், திறமையை விளக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா, அதுதான் தேவை, ரிஷ்லுவுக்கு, அவ்வளவு தன்னம்பிக்கை! தளபதியாவதற்கான துறையை விட்டுவிட்டு, ‘சாமியார்’ வேலையை மேற்கொண்ட ரிஷ்லு, லூகான் தேவாலய நிர்வாகக் காரியத்தை ஒழுங்குபடுத்துவதிலே மும்முரமாக ஈடுபட்டான். அருள்பெறும் திருமுறையை மக்களுக்கு அறிந்துரைக்கும் பணியான ‘பூஜாரி’ வேலையை மேற்கொண்டபோது, ரிஷ்லுவுக்கு வயது பதினேழு!

லூகான் நகருக்கு வந்து வேலையை ஒப்புக் கொள்வதற்கு முன்பு, ரிஷ்லு, தன் புதிய தொழிலுக்குத் தேவையான திறமையைப் பெற, பாரிஸ் சென்று மார்க்க சம்பந்தமான படிப்புக்காக இரண்டாண்டுகள் செலவிட்டான். எவ்வளவோ பேர், பூஜாரிகளாக உள்ளனர். கிடைக்கும் வருமானத்தோடு திருப்தி அடைந்து, கிராமத்துக் கொல்லனும், உழவனும், ஜெபமாலை உருட்டும் கிழவியும், பாவமன்னிப்புக் கோரும் முதியவனும் தரும் பாராட்டுதலைக் கேட்டுக் களித்து, இதுபோதும் தமக்கு என்று. ரிஷ்லு, அப்படியல்ல! லூகான் தேவாலய அதிபர் யாராலும் பாராட்டப்பட வேண்டியவராக வேண்டும். மற்றத் தேவாலய அதிபர்களெல்லாம் இரண்டோர் ஏடுகளை மனப்பாடம் செய்து கொண்டவர்கள், ஆழ்ந்த ஆராய்ச்சி, அறிவுத் தெளிவுள்ள விளக்க உரை தரும் ஆற்றல் இல்லாதவர்கள். லூகான் நகர தேவாலய அதிபராக, அரும்பு மீசை வாலிபன் ஒருவன் அமர்ந்திருக்கிறான், அவனுடைய அறிவே அறிவு, அவன் அளிக்கும் உபதேசமே உபதேசம் என்று அனைவரும் புகழ்ந்து பேசவேண்டும்; மக்களின் கவனத்தைக் கவரவேண்டும். அந்தப் புகழொளி, பாரிஸ் நகரில் தெரிய வேண்டும்; அழைப்பு அங்கிருந்து கிடைக்கவேண்டும் - இது ரிஷ்லுவின் எண்ணம். கிடைக்கும் வாய்ப்பை, பெரியதோர் நிலைபெற உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கம். எனவேதான், பரம்பரை பாத்யத்தையாகக் கிடைத்த பூஜாரி வேலை என்றாலும், மதவாதிகள் உலகு மதிக்கும் விதமான அறிவாற்றல் பெற்று, அந்த வேலையில் ஈடுபடவேண்டும் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து, மத ஏடுகளில் பெரும்புலமை பெற்றான்.

உண்மையிலேயே மார்க்கத் துறையிலே நம்பிக்கையும் அக்கறையும் பிறந்து, எந்தச் சந்தேகத்தையும் பஞ்சு பஞ்சாக்க வல்ல ஆதாரங்களை ஆய்ந்தறிந்து கொள்ளவேண்டும், மெய்ஞ் ஞானத்தின் தன்மையை உணரவேண்டும், சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வத்தை, தேஜோமாயானந்தத்தை அறிந்து மகிழவேண்டும். பாவப் பிணி அகலும், பற்றும் பாசமும் மாய்ந்தொழியும், அருள்கிட்டும், பரலோகத்தில் சீரியதோர் நிலை கிடைக்கும் என்பதற்காக, இரவு பகலாக, ஆண்டுக்கணக்கில், மத ஏடுகளைக் கற்றும், விதவிதமான ‘ஞானசிரியர்களை’ அடுத்தும், பக்குவம் பெறுவர் - சிலர் - பலர் முயல்வர். ரிஷ்லுவின் நோக்கம் அவ்விதமானதல்ல. உலகத்தின் மாய்கையை, வாழ்க்கையின் நிலையாமையை, உணர அல்ல. ஏடுகளைப் படித்தது; அவைபற்றி, கேட்போர் மெச்சும்விதமாக எடுத்துரைக்க! அதன் மூலம் தன் புகழ் பரப்ப! புகழொளியைத் துணைகொண்டு, உயரியதோர் பதவி பெற, பாரிசில் அரசோச்சும் குழுவிலே அமர, அரசாள!

லூகான் நகர தேவாலய அதிபராகி, அதிலேயே மூழ்கிவிட விரும்பவில்லை. இது ஒரு கட்டம் - முக்கியமானது - கூர்ந்த மதியுடன் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், வேறு பல கட்டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது ரிஷ்லுவின் திட்டம். யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டார்கள். அநேகருக்குத் தோன்றவே செய்யாது. ஆனால் ரிஷ்லு எல்லோரையும்போல அல்ல. அவன் மனத்திலே உறங்கிக் கொண்டல்ல, உலவியபடி இருந்த ஆசைகள் அநேகம். எல்லா ஆசைகளும் ஆதிக்கம் பெறவேண்டும், ஈடில்லை எதிர்ப்பில்லை என்ற நிலை பெறவேண்டும் என்பதுதான். வாளின் கூர்மையைப் பாராட்டும் வீரன், களத்திலே வெற்றியும் கீர்த்தியும் பெறுவதற்கு வாளைத் துணையாகக் கொள்வான் - மற்றவாள்களுடைய கூர்மையைவிட என் வாளின் கூர்மை நேர்த்தியானது என்று பேசிக்கொண்டா காலங் கடத்துவான்!

பாரிசில், மத ஏடுகளைக் கற்று, ரிஷ்லு, பல பரிட்சைகளில் தேறினான். திருப்தியில்லை. ரோமபுரி சென்று போப்பாண்டவரைக் கண்டுவர ஆவல்கொண்டான்.

கத்தோலிக்க உலகுக்கு போப்பாண்டவர் கண்கண்ட கடவுள்! அரசுகள்! போப்பாண்டவரின் ஆசிபெறத் தவங்கிடந்தன. பிராடெஸ்ட்டென்ட் புயல் வீசி, ஆதிக்கம் ஓர் அளவுக்கு அழிந்துபட்டது என்றபோதிலும், ரிஷ்லுவின் நாட்களிலே போப்பாண்டவருக்கு, பிரான்சிலேயும், கத்தோலிக்க மார்க்கத்தைக் கொண்டிருந்த வேறுபல ஐரோப்பிய நாடுகளிலேயும், அளவற்ற செல்வாக்கு. பக்திமிக்க கத்தோலிக்கர், போப்பின் தரிசனம், பாப விமோசனம் என்று எண்ணுவர் - பரமண்டலத்
திலே பிதா முன்னிலையிலே செல்வது போன்ற புனிதத்தன்மை நிரம்பியதாகவே போப்பாண்டவரைத் தரிசிப்பதைக் கருதுவர்.

ரிஷ்லு, போப்பாண்டவரைக் காண விரும்பியது, இந்த நோக்குடன் அல்ல! இதோ ஒரு புதிய நட்சத்திரம், இதன் ஒளியின் அழகுதனைக் காணீர்! என்று போப்புக்கு எடுத்துக் காட்டவே, ரிஷ்லு ரோம் சென்றான். அங்குப் புகழ் பெறவேண்டும் என்பது நோக்கம். அதற்கோர் வாய்ப்பும் கிடைத்தது. தேவாலய அதிபர் பதவிக்கு ஏற்ற வயது இல்லை. ரிஷ்லுவுக்கு. எனவே, போப்பாண்டவரிடம் மனு செய்துகொண்டு, அவர் ஆசியும் அனுமதியும் பெற்ற, வயதில் சிறியவனாயினும் வல்லமைமிக்கோன், எனவே இவன் ஆலய அதிபனாகலாம் என்று அவர் கூறவேண்டும் - இதனைச் சாதிக்க, சிபாரிசு தேவை இல்லை; நானே செல்வேன். மார்க்க சம்பந்தமான துறையிலே எனக்குள்ள புலமையையும் திறமையையும் அவரே காணட்டும். அனுமதி எளிதில் அளிப்பார், என்று கூறிவிட்டு ரிஷ்லு ரோம் சென்றான் - அனுமதியும் பெற்றான்.

ஐந்தாம்பால் என்பவர் அப்போது போப்பாண்டவர். அவர் அவையிலே, மார்க்கத்துறைத் தலைவர்களும் அரசியல் துறைத் தலைவர்களும் நிரம்பி இருந்தனர். ரிஷ்லு, அந்த அவையினர் மகிழத்தக்க மதி நுட்பத்தைக் காட்டி வெற்றிபெற்றார். ஒரேமுறை, ஓர் உபதேசியார் அருளிய உபதேசத்தைக் கேட்ட ரிஷ்லு, உடனே அப்படியே அதை, தவறு துளியுமின்றி ஒப்புவித்தாராம் - அதிசயமடைந்த போப்பாண்டவர் ரிஷ்லுவை அழைத்து, ஒப்புவிக்கச் சொல்லிக் கேட்டு இன்புற்றாராம். அதேபோது ரிஷ்லு, உபதேசம் எப்பொருள்பற்றியதோ அதே பொருள் குறித்துத் தானே புதியதோர் உபதேசம் தயாரித்துச் சொற்பொழி வாற்றினாராம்; போப் மிகவும் பாராட்டினாராம்.

“ஆசாமி பெரிய எத்தனாவான்” - என்ற பொருள்பட போப் ரிஷ்லுவைப் பற்றிக் கூறினாராம்.

போப்பாண்டவரிடம், ரிஷ்லு, தன் உண்மை வயதை மறைத்துத் தவறான சீட்டுக் காட்டி ஏய்த்தார் என்றும் வதந்தி உண்டு. ரிஷ்லுவுக்கு இது தெரியாத வித்தையல்ல!

ரோம் நகரிலே புகழ் ஈட்டிக் கொண்டு பதவிக்கான அனுமதியும் பெற்றுக்கொண்டு, ரிஷ்லு, பாரிஸ் திரும்பினார்.

ரோம், மார்க்கத்துறைக்குத் தலைநகரம்!

பாரிஸ், அரசியல் உலகுக்குத் தலைநகரம்!

முன்னதில் ஜெபமாலை ஏந்திய கரத்தினர், வாளேந்திய மன்னரைச் சீடர்களாகக் கொள்ளும் முறைபற்றிய விளக்கம் கிடைத்தது. ரிஷ்லுவுக்கு.

பாரிசில், அரசோச்சும் அதிபர்கள், ஜெபமாலையையும் தமது சுயநலத்துக்காக எப்படிப் பயன்படுத்துகின்றனர், என்ற தெளிவு கிடைத்தது.

பாரிசில், அரசியல் சம்பவங்கள் மின்னல் வேகத்தில்! ரிஷ்லு, அவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தார்.

லூகான் நகர தேவாலய அதிபர் - போப்பாண்டவரின் ஆசியும் பெற்றவர் - இவருக்கு எதற்காகப் பாரிஸ் பட்டணத்துப் பகட்டுடைக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய அக்கறை என்று எண்ணுவீர்கள் - உடைமட்டும்தானே காவி! உள்ளமோ அரசியலில் ஆதிக்கம் பெறவேண்டும் என்பதல்லவா!

“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” - இது ஏமாளிக் கொக்கு அல்ல. உறுமீன் வருமளவும் ஓடுமீன் உண்டு, காத்துக் கொண்டிருந்தது!

லூகான் நகர தேவாலயம் ஆண்டுக்கு 13,000 லிவர்ஸ் (பிரான்சு பவுண்டு) வருமானமே உடையது. இந்த அற்பத் தொகைக்காக அல்ல, ரிஷ்லு ஆசைப்பட்டது! அவன் மனத்திலே உதவிய எண்ணத்தில் முன்பு, இந்தத் தொகை வெறும் தூசு. பலருடைய கவனத்தைக் கவருவதற்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே என்பதற்காகவே, லூகான் தேவாலயம் வேலையை ஏற்றுக்கொண்டான்.

பழைய கட்டடம் - படாடோபம் கிடையாது - அதிகமான பணப் புழக்கம் இல்லை - தங்க வெள்ளி தட்டுகள் இல்லை - பட்டு விரிப்புகள் கிடையாது - சாமான்யமான நிலை, லூகான் நகர தேவாலயம். இதிலே உலவியபோது ரிஷ்லுவின் உள்ளம், அடைபட்டுக் கிடந்த சிங்கம் போன்றிருந்தது. கூண்டுக்குள் உலவிடும்போதும், சிங்கத்தின் நடையிலே ஒரு கம்பீரம் இருப்பதுபோல, இந்தச் சாமான்யமான தேவாலய அதிபர் எனும் சிறையிலும், ரிஷ்லு, தன் திறம் பிறர்க்கு விளங்கும் வகையிலே நடந்து கொண்டான்.

“என் வீடு சிறை போன்றது! பூந்தோட்டம் இல்லை - உலவும் இடம் கிடையாது - எங்கும் புகை மயம் - வெள்ளித் தட்டுகள் இருந்தாலாவது பரவாயில்லை, கிடையாது...” என்று ரிஷ்லு, குறைபட்டு, நண்பருக்குக் கடிதம் எழுதினான்.

அதே ரிஷ்லு, கார்டினல் ரிஷ்லுவாகி, பிரான்சை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்ற பிறகு, புதிதாகக் கட்டிய ‘கார்டினல் மாளிகை’க்கு, நிலத்தைப் பண்படுத்தவும், மாடிகள் அமைக்கவும் மட்டும் 3,36,000 லிவர்ஸ் செலவிட்டான். கட்டடச் செலவு 4,10,000! அலங்கார அமைப்புகள், நீர் ஊற்றுகள், பூச்செடிக்கான தொட்டிகள் இவற்றுக்காக மட்டும், 60,000!

உலவ இடமில்லை என்று வாட்டம் - பிறகு, உலவ நேரமில்லை என்ற வருத்தம். மன்னன் கண்டு அதிசயிக்கத்தக்கதும், பிரபுக்கள் கண்டு பொறாமைப்படத்தக்கதுமான மாளிகை இரண்டு அமைத்திட முடிந்தது. புகை கப்பிக்கொண்டு, ஓதம் நிறைந்து, சோகமூட்டும் நிலையிலிருந்து தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கிய இந்தக் காரியவாதியால்!
------------
அரசாண்ட ஆண்டி (3)

ரோம் நகரில் மார்க்கத் துறையினரின் மந்திராலோசனை களைக் கண்டும் கேட்டும் பழகிய ரிஷ்லு, பாரிஸ் பட்டினத்துப் படாடோபத்தைக் கண்டு பழகிய ரிஷ்லு, சேறும்சகதியும், நிரம்பிய லூகான் நகரின் தோற்றத்தையும் அங்கு உலவிய மக்களின் எளிய வாழ்க்கையையும் கண்டு, எப்படி மன அமைதி கெடாமலிருக்கமுடியும்! பாரிசின் பகட்டு எங்கே, இந்தப் பட்டிக்காட்டிலே கிடக்கும் சோர்வு எங்கே! வெறுப்பும் சலிப்பும், எவருக்கும் தோன்றும். ரிஷ்லு, அதற்கு இடம் தரவில்லை. அழைப்புக் கிடைக்கு மட்டும் இந்த எளிய நிலை! இந்த எளிய நிலையிலும், உயரிய முறையைக் காட்டியாகவேண்டும் என்று எண்ணினான். அழைப்பு வந்தது! அரசாண்டு வந்த அம்மையிடமிருந்து அல்ல! அம்மையை ‘ரசித்து’ வந்த இத்தாலியனிடமிருந்துமல்ல! அரசியல் நிலைமை, அழைப்பு விடுத்தது! பிரான்சு, தன் பேரவையை, முப்பெரு மன்றத்தைக் கூட்டிட முனைந்தது. பெரியதோர் மேகம் அரசியல் வானில்! ரிஷ்லு, தன் சமயம் பிறந்தது என மகிழ்ந்தான்.

பிரபுக்கள் - அருளாளர்கள் - மக்கள் சமுதாயம், இப்படி முப்பெரும் பிரிவு கொண்டதாகக் கருதப்பட்டது, பிரான்சு அரசியல் அமைப்பில். பிரபுக்களின் பிரதிநிதிகள். மார்க்க அதிபர்களின் பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகள், எனும் முப்பெரும் பிரிவும் ஒருசேரக் கொண்டபேரவை, பிரான்சு நாட்டு அரசியல் நெருக்கடிகளின்போது, கூட்டப்படும். கரத்திலே வலிவும், கருத்திலே முறுக்கும் இருக்குமட்டும்,பேரவை பற்றிச் சட்டை செய்வதில்லை, மன்னன் - மமதை ஒன்றே போதும்; அதை ஊட்டச் சில செருக்கு மிக்க பிரபுக்கள் போதும், எதிர்ப்பை ஒழிக்க சிறுபடை போதும் என்று இருப்பான் - குழப்பம் நாட்டிலும் மனத்திலும் மூண்டுவிட்ட சமயத்தில், என்ன செய்வது என்று திகில் பிறக்கும்போதுதான் மக்களின் குரல் செவியில் சிறிதளவு விழும்; மக்களோ, “பேரவை கூடட்டும்” என்று தான் முழக்கமிடுவர்.

எல்லா உரிமைகளையும் வழங்கவும் பாதுகாக்கவும் நாட்டின் பொது நிலையைப் பாதுகாக்கவும், ஆற்றல் கொண்டது பேரவை, என்ற எண்ணம் பிரான்சு மக்களுக்கு. அவர்கள் எண்ணியபடியே, இந்தப் பேரவை கூடி, எடுத்த முடிவுகளின்படிதான், ‘பதினாலாம் லூயி மன்னன் காலத்திலே மாபெரும் புரட்சி வெற்றிகரமாகக்கப்பட்டது. அது, மன்னனின் தலையைக் கொய்த பேரவை! இது அலங்காரப் பேரவை! இந்தப் பேரவையும் கூட்டவேண்டி நேரிட்டதற்குக் காரணம், அரசாண்டு வந்த மேரி அம்மைக்கும், அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்ட பிரபுக்கள் சிலருக்கும் மூண்ட பகை, பெரு நெருப்பாகிப் பிரான்சைப் பொசுக்கிவிடுமோ என்ற கிலி பிறந்ததால் தான்!

பிரான்சு நாட்டுப் பிரபுக்கள் - உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கிய வள்ளல்கள்!

இந்தப் பிரபுக்களின் அட்டகாசமும் ஜம்பமும் குரூரமும் மடைமையும் கொலைத் தொழிலும் சதிச்செயலும், ஏழையரை இம்சித்ததும் எளியோரை அழித்ததும், பருகிய மதுவும், பதம்பார்த்த கன்னியரின் கற்பும், இவர்களின் கோலாகலம், கிளம்பிய வெறுப்புணர்ச்சியுந்தான். பிரான்சிலே மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும், உலகிலேயே என்றும் கூறலாம், மக்களை நிமிர்ந்து நின்று ஏன் என்று கேட்டு, உள்ள உயிர் ஒன்றுதான் அது பிரிவதும் ஒரு முறைதான், சாகுமுன் உன்னைச் சாய்த்திடப் போரிட்டே தீருவேன், என்று வீர முழக்கமிட்டுப் புரட்சி நடாத்தி, மக்களாட்சியை ஏற்படுத்த உதவிற்று! இந்தப் பிரபுக்கள், தர்மம், தயை, தாட்சண்யம், அறிவு, ஆற்றல், அன்பும், நன்றி, எனும் பண்புகளுடன் நல்வழி நடந்திருந்தால், மக்களாட்சி மலர்வது மூன்று நான்கு நூற்றாண்டுகளாவது தாமதப்பட்டிருக்கும். காட்டிலிருக்கும் புலி, ஊருக்குள் நுழைந்து, ஆடுமாடுகளைக் கொன்று, மேலும் கொல்ல ஊர்க்கோடிக் கொல்லையிலே பதுங்கிக் கொள்ளும்போதுதானே ஊரார் திரண்டு சென்று, உயிருக்குத் துணிந்து நின்று, புலியைக் கொன்றுபோடுவர். பிரான்சின் பிரபுக்கள், புலிகளாயினர் - குகைக்குள்ளேயும் இல்லை - எதிர்ப்பட்ட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சினர் - எனவேதான், மக்களாட்சி மலர முடிந்தது. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவான உரிமைதானே. நாடு என்பது அனைவருக்கும் பொதுதானே, நாட்டு வளம் பெருகுவதும், எதிரிகளிடமிருந்து நாடு காப்பாற்றப்படுவதும், எல்லா மக்களின் ஒன்றுபட்ட திறமையாலும் உழைப்பாலும் தானே, எனவே மக்கள் அனைவருக்கும்தானே அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். என்ற தத்துவப் பேச்சு மட்டுமல்ல. மக்களாட்சியை மலரச் செய்தது! பிரபுக்களின் அக்கிரமம், புரட்சியை மூட்டிற்று, புரட்சித் தீயிலிருந்து, மக்களாட்சி மலர்ந்தது! அந்த முறையின்படி, பிரான்சின் பிரபுக்கள், உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர்களாவர்.

1,40,000 பிரபுக்கள் இருந்தனர். பிரான்சில்! எல்லோரும் செல்வச் சீமான்களல்ல, பலர் ஆடி அழிந்ததால் கடன்பட்டுச் சொத்தை இழந்துவிட்டு, விருது மட்டும் வைத்துக்கொண்டு வெட்டிகளாகத் திரிந்தனர். இருபது முப்பது குடும்பம், செல்வமும் செல்வாக்கும் நிரம்பப் பெற்று, அரசு செலுத்துப வரும் அச்சம் கொள்ளத்தக்க ஆர்ப்பரிப்புடன் இருந்து வந்தது. அவர்களுக்குத் தனிக் கோட்டைகள், கொடி மரங்கள், படைகள், பாசறைகள் - ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வர். அரசனால் தடுக்க முடியாது, அரசனையே எதிர்ப்பர், அரசன் அவர்களை அடியோடு அழிக்கமுடியாது. அவர்களுக்குத் தனி விசாரணை மன்றங்கள்! தனிச் சட்ட திட்டங்கள்! அரசுக்குள் ஓர் அரசு! பாரிசில் ஒரு பட்டத்தரசன் என்றால், பிரான்சிலே பகுதிக்குப் பகுதி, பட்டத்தரசர்களைவிடக் கொட்டமடித்துக் கொண்டு பிரபுக்கள் கோலோச்சி வந்தனர், வரி செலுத்த மாட்டார்கள், அரசனுக்கு. தமது ‘பிரஜைகளிடம்’ வரி வசூலிப் பார்கள் கண்டிப்புடன், மன்னன், சலுகைகள் காட்டுகிற வரையில் சல்லாபம் செய்வர், சலுகை குறைந்தால், சதியோ, சமரோ கிளம்பும்! அரச விருந்துகளிலே முதலிடம்! கேளிக்கைக் கூடங் களுக்கு அழைப்பு! உல்லாசப் பயணத்துக்கு வருவர்! நாட்டுக்குப் பேராபத்து எனில், வரிந்து கட்டிக்கொண்டு எதிரியைத் தாக்குவரோ இஷ்டமிருந்தால்! எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள் ஒரு சில கண்வெட்டுக்காரிகளுக்கு மட்டுமே கட்டப் படுவர்! உட்பகை நெளியும்? ஒரு மாளிகை பற்றி மற்றோர் மாளிகையிலே வம்புப் பேச்சுத் தாராளமாக நடைபெறும் அவள், எனக்கா, உனக்கா? என்று அமளி கிளம்பும், சிறை எடுத்தல், சிரம் அறுத்தல். இவை அன்றாட நடவடிக்கைகள். “என் பரம்பரையை இழிவாகப் பேசினாயா? நாளை காலை 8 மணிக்கு, வாட்போர் தயார் - திராட்சைத் தோட்டத்தருகே - 8 மணி” என்று அறைகூவல் கிளம்பும், இரு பிரபுக்கள் வாட்போரிடுவர், ஒரு தலை உருளும், மற்றொரு மண்டை கனம் கொள்ளும்! பிரபுக்களின் பொதுநிலை இது. ஒரு சில பிரபுக்கள், அரசியல் அதிகாரம் தேடுவர் - திறமை இருப்பதால் அல்ல ஆசை பிறப்பதால்! கிடைக்காவிட்டால், கலகம், குழப்பம்!! இப்படிப் பட்ட பிரபுக்களிடையே, மேரி சிக்கிக் கொள்ள நேரிட்டது.

இத்தாலி நாட்டு கான்சினியும் மேரியும் அவரின் ஆதரவாளர்களும் ஒருபுறம்.

காண்டி எனும் பிரபுவும் அவனை ஆதரிக்கும் சீமான்களும் மற்றோர்புறம்.

காண்டி சீமானுக்கு, எவ்வளவு சலுகை காட்டினாலும் திருப்தி கிடையாது - கான்சினி தொலையவேண்டும். மேரி அம்மைக்குத் துணைபுரியும் வாய்ப்பு தனக்கே அளிக்கப் படவேண்டும், என்பது காண்டியின் கட்டளை! மரியாதைக்காக, வேண்டுகோள் என்றனர், காண்டி, கட்டளை தான் பிறப்பித்தான்.

குழப்பம் வலுத்தது - எனவே பேரவை கூட்டப்பட்டது.

பேரவை கூடுவது பெரிய திருவிழாவாயிற்று. எல்லாச் சிக்கல்களும் தொல்லைகளும் தீர்ந்துவிடும் என்பது, பாமரமக்களின் எண்ணம். எனவே அவர்கள் பேரவை கூடுவதை வரவேற்றனர்! மதத்துறையினருக்கும் மகிழ்ச்சி, தமது உரிமைகளை வலியுறுத்தவும் தமது ஆலோசனைகளை அரசினர் கேட்பதுதான் அறமுறை என்று எடுத்துரைக்கவும் வாய்ப்பு, என்ற எண்ணத்தால். பிரபுக்களுக்குப் பூரிப்பு, தமது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அரசாளும் அம்மை அறிய இது பொன்னான வாய்ப்பு என்று மக்கள் மன்றத்தினருக்கும் நம்பிக்கை, தங்கள் நலன் பற்றி நல்லவர்களெல்லாம் கூடிக் கலந்துபேசி, திட்டம் தீட்டுவர் என்று. ரிஷ்லுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நுழைய இடம் கிடைத்தது என்று. பேரவைக்கு மதத்துறைப் பிரதிநிதியாகச் சென்று தன் திறமையைப் பிரான்சு உணரும் வண்ணம் நடந்து கொள்வது என்று தீர்மானித்தான். தான் வசித்துவந்த வட்டாரத்திற்கு, மத அலுவலர்களின் பிரதிநிதியாக, ரிஷ்லு தேர்ந்தெடுக்கப்பட்டான்! தேர்ந்தெடுக்கும் படி ரிஷ்லு நிலைமையைச் சிரமப்பட்டு உண்டாக்கி, வெற்றி பெற்றான். அழைப்புக் கிடைத்து விட்டது. அழைப்பு, தயாரித்துக் கொண்டான்! பாரிஸ் புகலானான்!

ஊர் மக்கள் இரு மருங்கும் திரண்டு நின்றனர். காட்சியைக் காண, போர் வீரர்கள் அணிவகுத்து நின்றனர் - பாதுகாப்புக்கும் பகட்டுத் துலங்கவும். பேரவை ஊர்வலம் அழகுறக் கிளம்பிற்று. முப்பெரும் பிரிவினரும் கலந்து கொண்டனர்.

அன்பை அடிப்படையாகக் கொண்டல்லவா அரசாள வேண்டும்? அந்த அன்பு சுரக்கவேண்டும், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், ஆட்சிமுறை வகுப்பவர்களுக்கும், இதற்காக ஒரு விசித்திரமான ஏற்பாடு!

குருடன், காலிழந்தோன், முடமானோன், தொழுநோயாளன், பஞ்சைப் பராரி ஆகியவர்கள், முதலில் ஊர்வலம் சென்றனர். கந்தலணிந்த அந்தக் கதியற்றவரின் நிலையைக் கண்டதும் கண்களிலும் நீர் சுரக்கும், கருணையும் மனத்தில் பிறக்கும், என்று இந்த ஏற்பாடாம்! இது நெடுங்கால வழக்கமுங்கூட!

இந்தத் ‘தரித்திரர்’ ஊர்வலம் முதலில் - பிறகு, பேரவை கிளம்பிற்று, தேவாலயத்திலே பூஜையை முடித்துக் கொண்டு!

கரங்களில் மெழுகுவர்த்தி விளக்குகளுடன், மக்கள் மன்ற உறுப்பினர்கள்!

இடையில் வாளும், மேலே பட்டுப் பட்டாடையும் கண்களில் செருக்கும் மிகுந்திட, பிரபுக்களின் உறுப்பினர்கள்.

விதவிதமான ஆடைகளும் அங்கிகளும் அணிந்து, மத அலுவலரின் பிரதிநிதிகள்.

மன்னன், தாயும் பரிவாரமும் புடைசூழ!

1614ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26ஆம் நாள் காலை! இந்த நாள் முழுவதும், ஊர்வலமே, பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. ஊர் மக்களின் உள்ளத்தில் பல புதிய நம்பிக்கை - மகிழ்ச்சி.

மறுநாள், ‘போர்போன்’ மாளிகையில், பேரவை கூடிற்று.

அலங்கார மேடைமீது, சிங்காதனம் - அதன் மீது வெண் பட்டாடை அணிந்து மன்னன் வீற்றிருந்தான். மேரி அம்மையும். தர்பார் பெண்களும், பரிவாரமும் மன்னருக் கருகில். மன்னன் முகத்திலே தெளிவோ, திருப்தியோ, இல்லை! இளைத்துக் களைத்து, ஏதும் புரியாத நிலையில் மன்னன் வீற்றிருந்தான்! என் செய்வான் மன்னன்! வயது பதின்மூன்று.!!

ரிஷ்லுவின் கூர்மையான கண்கள், நிலைமையைப் படம் பிடித்து விட்டன.

அறியாச் சிறுவன் அரியாசனத்தில் - அவனைக் காட்டி அரசாளும் அம்மை, ஆழ்ந்த அறிவற்றவள், ஆனால் அதிகார மோகமிக்கவள். உல்லாசத்திற்கு அரண்மனை ஏற்ற இடம் என்பதை மட்டுமே உணர்ந்த கான்சினி. அந்த இடம் தங்களுக்கு என்று கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்த பிரபுக்கள், கருணை பிறக்கும் கஷ்டம் தீரும் என்று நம்பிக் கிடக்கும் மக்கள் மன்றத்தினர் - இது பிரான்சு - ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது.

மன்னன், துவக்க உரையாற்றினான் - ஆர்வமற்று.

பிறகு, இடிமுழக்கம் எழும்பின, பலரிடமிருந்து.

பிரபுக்கள் சீறினர் - பாதிரிகள் பதறினர் - மக்கள் மன்றத்தினர் மன்றாடினர் - எவரும், இன்னது தேவை. இப்படி இதனை இன்னார் செய்ய வேண்டும் என்று தெளிவு பட எடுத்துக் கூறினாரில்லை. பிரபுக்களின் பேச்சிலே பதற்றம்! பூஜாரிகள் பேச்சிலே மிரட்டல்! மக்கள் குரல், தெளிவும் உறுதியும் பெறவில்லை.

முப்பெரும் பிரிவினர் ஒருவருக்கொருவர், கலந்து பேசும் நிலையிலோ ஒன்றுபட்டுத் திட்டம் தரும் திறத்திலோ இல்லை. ஒருபுறம் முரசும், மற்றோர்புறம் சங்கநாதம், இன்னோர் புறம் முழவு! ரிஷ்லுவுக்கு நம்பிக்கை பலப்பட்டது. இதுதானே பிரான்ஸ், இவர்கள்தானே இதன் நடுநாயகங்கள், ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை.

மன்னனைக் கூர்ந்து நோக்கினான் - கண்களிலே அறிவு ஒளியின் குறியே காணோம். எங்கேயோ நினைப்பு! மன்னனுக்கு எந்தத் துறையிலே விருப்பம் அதிகம் என்று உசாவினான். வேட்டை ஆடுவதில் என்றனர்.

காண்டி பிரபுவுக்குச் சப்பிட்டுவிட்டது. பேரவை கூடியதும், பலரும் கான்சினியைக் கண்டித்துவிட்டு, அதிகாரப் பொறுப்பைக் காண்டிபிரபுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவர், என்று எதிர்பார்த்தான் - யாரும் அது குறித்துப் பேசவில்லை. அவரவர்களுக்கு அவரவர்களின் பிரச்சனைதான் பெரிதாகத் தென்பட்டது, பொதுப் பிரச்சனை எது என்பதும் புரியவில்லை. நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆற்றலும் காண்டி பிரபுவுக்கு இல்லை. ஓரிருவர் மேரி அம்மையின் ஆட்சிப் போக்கைக் கண்டித்தனர் - பரிகாரம் கூறவில்லை. ரிஷ்லு மேரி அம்மையைக் கண்டித்தவருக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்து, மேரி அம்மையின் பார்வையைப் பரிசாகப் பெற்றான்.

பொருளற்ற பேச்சுகள் ஒன்றை ஒன்று துரத்தின - பேரவை வீண் ஆரவாரமே என்பது புரியத் தொடங்கி விட்டது. நாட்கள் உருண்டோடின. திங்கள் சிலவும் சென்றன. ரிஷ்லு மத அலுவலர்களின் சார்பிலே பேச அழைக்கப்பட்டார். மேரி அம்மையின் தயவே அதற்குக் காரணம், ஜனவரி 24ஆம் நாள், ரிஷ்லு பேரவையில் ஆழ்ந்த பொருள் நிரம்பிய சொற்பொழிவு நிகழ்த்தி அனைவருடைய கவனத்தையும் தன்பால் திருப்பிக் கொண்டன். ஒரு மணி நேரச் சொற்பொழிவு - ஒரு துளியும் மார்க்க சம்பந்தமானதல்ல - முழுவதும் அரசாளும முறைபற்றியது, ரிஷ்லு அந்தப் பேச்சின் மூலம், மேரி அம்மைக்குத் தன்னையும் தன் ஆற்றலையும், நோக்கத்தையும், திட்டத்தையும் விளக்கிக் காட்டினான்.

ஆண்டவன் அளித்த பிரசாதம், அரசாளும் உரிமை.

எனவே அரசாள்வோருக்கு அன்பும் மரியாதையும் அப்பழுக்கின்றித் தரப்பட வேண்டும்.

ஆண்டவன் சார்பிலேயே அரசாள்வோர், பணிபுரிகின்றனர். எனவே, அரசாள்வோரின் அதிகாரம், பலம், தலைசிறந்து விளங்கவேண்டும் - அதைக் குலைப்பதோ, எதிர்ப்பதோ பாபம், கேடு, நாட்டுக்கு நாசம்.

ஆண்டவன் அளித்த உரிமையைக் கொண்டு அரசாள்கின்றனர். எனவே அரசாள்வோர், ஆண்டவனுடைய அருளைப் பெற்று வழங்கும் மத அதிபர்களின் துணையை நாட்டில் பெற்று, ஆட்சி முறையைச் சிறப்படையச் செய்தல் வேண்டும்.
ரிஷ்லுவின் பேச்சிலே காணக்கிடக்கும் முக்கியமான கருத்து இது! ஆள்வோரின் உரிமை, அதிகாரம் - அதை அருளாளர்களின் துணைகொண்டு அரண்செயல் வேண்டும் என்பதுதான் தத்துவம். நான் இருக்கப் பயமேன்! என்று கேட்பதாக அமைந்தது, அந்தப் பேச்சு, பேரவையினர், முதலில் மகிழ்ந்தனர், பேச்சின் தெளிவும் நிறமும் கண்டு; பிறகோ மருண்டனர், உட்பொருள் புரிந்தவர்கள். மேரி அம்மையின் மனத்திலே, ரிஷ்லு நமக்குற்ற நண்பன் என்பது பதிந்துவிட்டது - ரிஷ்லுவுக்கு அது புரிந்து விட்டது. பேரவை பயனற்றுப் போயிற்று என்று பலர் மனம் வாடினர். குறிப்பாகப் பேரவையைக் கூட்ட பெருமுயற்சி எடுத்துக் கொண்ட காண்டி பிரபுவுக்கு, சகிக்க முடியாத சலிப்பு. பேரவை, பெரியதோர் வெற்றி - ஆண்டு பலவாக நான் உழைத்தது வெற்றி தருகிறது. என் குரல் கேட்டுவிட்டது - மேரி அம்மையாரின் மனத்திலே என் பேச்சுப் பதிந்துவிட்டது - இனி அம்மைக்கு அரசியல் ஆபத்து நேரிட்டது என்ற உடன், எனக்குத்தான் அழைப்புவரும். இனி, என் அரசியல் நுழைவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது - என்று ரிஷ்லுவுக்குக் கூறிக் கொள்ள முடிந்தது. யாராலோ எதற்கோ கூட்டப்பட்ட பேரவை, ரிஷ்லுவுக்குத்தான் பெரிதும் பயன்பட்டது. பிரான்சும் புரிந்துவிட்டது. அதை ஆளும் முறையும் ரிஷ்லுவுக்குப் புரிந்து விட்டது.
தன் சொற்பொழிவை, ஏராளமான பிரதிகள் அச்சிட்டு வழங்கினான் ரிஷ்லு, பாராட்டினர் பலர், பூரித்தான். பயணம் சொல்லிக் கொண்டு. பாரிசை விட்டுப் புறப்பட்டு, லூகான் வந்து சேர்ந்தான் - தன் தேவாலயத்தைக் கவனிக்க!!

பேரவையால் ஆபத்து உடனடியாக ஏற்படாது எனினும் பேரவையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தத்தமது ஊர் திரும்பியதும், தீமூட்டிவிடுவர் - எனவே பேரவையைக் கூட்டாமலிருப்பதே நல்லது என்றுமே தேவிக்கு நண்பர் ஒருவர் கூறினார்.

அவர் எச்சரித்தது உண்மையாயிற்று. பிராசன் முழுவதிலும், கலகவாடை வீசலாயிற்று. கூடிப்பேசி காரியமேதும் ஆற்றாது கலைந்த பேரவையினர், தத்மது மனம் போன போக்கில் ஆட்சிமுறைப்றிறக் குறைகூறியும் எதிர்ப்பு மூட்டியும் வரலாயினர்.

காண்டி பிரபு நெரித்த புருவத்துடனேயே காணப்பட்டான். அவனுக்குத் தூபமிட்டுக் கொண்டும், துதிபாடிக் கொண்டும் சீமான்கள் சிலர் இருந்தனர்.

கான்சினியோ, பேரவை கூடியும் தன்னை அசைக்கவும் முடியாமற் போனதை எண்ணிப் பெருமிதமடைந்தான்.

மேரியோ பூசலும் சிக்கலும் தீராததுடன், மேலும் வளருவது கண்டு திகைத்துக் கிடக்க நேரிட்டது.

மன்னனோ, பேரவை கலைந்ததும் தொல்லை விட்டது என்று எணிணத் தனக்குப் பிரியமான வேட்டையில் ஈடுபடலானான். நாலு நாள், ஐந்து நாள் தொடர்ந்து வேட்டையாடி வருவதிலே மன்னனுக்கு விருப்பம். அந்த ஒரு பொழுது போக்கிலேதான் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பல வண்ணப் பறவைகளைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதிலும், வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெரும் பறவைகளைக் கொண்டு வேறு பறவைகளை வளைத்துப் பிடித்தும், அழகான பறவைகளைக் கொண்டு வந்து அரண்மனையிலே வளர்ப்பதும் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. மன்னனுடைய தனி அறையே, பறவைக் காட்சிச் சாலையாக இருந்ததாம்! அங்கு முற்றத்திலும் தாழ்வாரங்களிலும், மன்னனுடைய பறவைகள் ஒன்றோடொன்று ஆடியும், கூடிப் பாடியும், வேட்டையாடியும் பொழுது போக்கும், மன்னன் இந்தக் காட்சியில் சொக்கிக் கிடப்பான்.

மாடப்புறா போன்றதோர் மங்கை நல்லாளை மணந்த பிறகும், மன்னன், பறவைகளுடன் விளையாடிப் பொழுது போக்குவதையே பெரிதும் விரும்பினான். ஆண்டு பதினைந்தே நிரம்பிய ஆன் அழகி, அரசிளங் குமரி - காதலின்பத்தைத் தரவல்ல அந்தக் காரிகை, தனிமையில் வாடுவாள், மஞ்சத்தில் சோர்ந்து சோர்ந்து படுத்துக் கிடப்பாள்; மன்னனோ, தன் நண்பனுடன், பறவைகளின் சிறகொலி கிளப்பும் இசையின் நேர்த்தி பற்றியும், வேட்டையாடும் திறம்பற்றியும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பான். அந்த நண்பன், பறவைகளின் சம்பந்தமான நுண்கலை நிபுணன் - வேட்டைக் கலையில் புலமை மிக்கவன்! ஊர் அங்ஙனம் கருதிற்றோ இல்லையோ, மன்னன் நம்பினான்; அதற்காக லைனிஸ் எனும் அந்த நண்பனிடம், மன்னன் அளவற்ற மதிப்பு வைத்திருந்தான். மன்னனுக்கு லைனிஸ் உயிர்த் தோழனானான். மன்னன் அவன் சொற்படி ஆடத் தொடங்கியது, மேரிக்கு மன எரிச்சலைத் தந்தது. இந்தப் ‘பாதகன்’ மகனைத் தனக்கு எதிராகக் கிளப்பிவிடுவானோ என்று அஞ்சினாள். அரண்மனை வட்டாரமோ, மேரியை ஆட்டிப் படைக்க ஒரு கான்சினி - அரசனை ஆட்டிப்படைக்க ஒரு லைனிஸ் - நல்ல நிலைமை, நல்ல அரசு முறை என்று வெறுப்புடன் பேசிக்கொண்டனர்.

கான்சினி, செருக்குமிக்கவன், லைனீஸ் சூதுக்காரன்! ஏது மறியாதவன்போல நடித்து வந்தான் - அழகிய பறவைகளுடன் பழகத் தெரியுமே தவிர, அரசியல் சூட்சமம் தெரியாது என்று எவரும் எண்ணும்படி நடந்து வந்தான். ஆனால் மெல்ல மெல்ல, மன்னனைத் தன் வலைக்குள் போட்டுக் கொண்டான். கான்சினியிடம் மன்னனுக்கு இருந்துவந்த வெறுப்பை அதிகமாக்கிவிட்டான். ஆளும் பொறுப்பை இனி இத்தாலிய கான்சினியிடமும் மேரியிடமும் விட்டுவைப்பது கூடாது, நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டும், நமக்கு, லைனிஸ் துணை நிற்பான் என்ற எண்ணம், மெல்ல மெல்ல மன்னன் மனத்திலே உருவெடுக்கலாயிற்று.

மன்னனுடைய திருமண ஏற்பாடு மேரியின் வெற்றிகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

மேரி, மெடிசி குடும்ப முறைப்படி தன் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதிலும், மருமகளைத் தேடிக் கொள்வதிலும், திறமையைக் காட்டினாள்.

ஒரு மகள், ஸ்பெயின் நாட்டு இளவரசனை மணந்தாள்.

மற்றோர் மகள், இங்கிலாந்து நாட்டு மன்னன் மனைவியானாள்.

மூன்றாம் மகளைச் சவாய் அரச பரம்பரையில் திருமணம் முடித்தாள். ஆஸ்திரிய அரசிளங்குமரி ஆன், லூயி மன்னனுக்கு மனைவியாக வாய்த்தாள். இந்தத் திருமணக் காரியத்துக்கு, உடன் வரும்படி காண்டி பிரபுவுக்குக் கட்டளை பிறந்தது. பிரபு மறுத்துவிட்டான். அழைத்ததும் உபசாரத்துக்காக அல்ல, மறுத்ததும் அரசியல் நோக்கு அற்று அல்ல! வெளிநாடு சென்று வருவதற்குள், காண்டி, பாரிஸ் புகுந்து கலகம் விளைவித்தால் என்ன செய்வது என்ற எண்ணிய மேரி, காண்டிபிரபுவை, தன் பரிவாரத்துடன் அழைத்துச் சென்றால், பயமற்றிருக்கலாம் என்ற எண்ணத்தால், அழைப்பு அனுப்பினாள் - பிரபுவும் இந்தச் சூட்சமம் அறிந்தே உடன்வர மறுத்தான். இதனால் இரு தரப்பினருக்கும் சிறு சமர் மூண்டது - வெற்றி தோல்வியின்றி, சமர் சாய்ந்தது.

இந்நிலையில் பாரிஸ் இருந்தது வந்தது - ரிஷ்லுவின் எதிர்பார்த்த நேரம் வரவில்லை.

காண்டி பிரபுவுக்குப் பல சலுகைகள் காட்டி, மேரி, சமரசம் உண்டாக்கினாள் - பிரபுவும், அரச காரியத்தை உடனிருந்து கவனிக்க அரண்மனை சென்றான்.

மேரி அம்மையின் தயவு பெற ஒருபுறம் பலமான முயற்சி, ‘கான்சினியின் ஆதரவு தேடி வேறோர்புறம் முயற்சி, இரண்டும் போதாதோவென்று, புதிதாகச் செல்வாக்குப் பெற்றுவரும் காண்டி பிரபுவிடம் ஆதரவு நாடி, ரிஷ்லு கடிதம் தீட்டினான். எவரிடமும் உள்ளன்போ, மதிப்போ, எவர் கொள்கையிலும் திட்டத்திலும் பற்றோ நம்பிக்கையோ அல்ல; யாரைப் பிடித்தால் தனக்குச் சரியான இடம் கிடைக்கும், யாரிடம் திறவுகோல் இருக்கிறது, யாருடைய புன்சிரிப்பு, அரசியல் வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்ற இதுவே ரிஷ்லுவின் உள்நோக்கம். எனவேதான், மேரி, கான்சினி, காண்டிஎனும் எவர் நிலை எப்போது உயர்ந்து காணப்பட்டாலும், அவர்களிடம் குழைந்து கும்பிட்டுக் குறுநகை கோரி நிற்க ரிஷ்லு முனைந்தான். சொந்தக் கௌரவம், முன்பின் நடவடிக்கைகளைக் கணக்கிடும் பண்பு, என்பதுபற்றி ரிஷ்லுவுக்குக் கவலை கிடையாது. எதைச் செய்தாலும், கோரிய இடத்தைப் பிடிக்கவேண்டும் - கணைவீசிப் பிடிக்கலாம்; வலை வீசியும் பிடிக்கலாம், மறை எதுவாகவேனும் இருக்கலாம்; பலன் கிட்டவேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் எண்ணம்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மேரி, ரிஷ்லுவை, ராணி ஆனுடைய; தர்மாதிகாரியாக நியமித்தார்.
---------
அரசாண்ட ஆண்டி (4)

பிரான்சு அரச குடும்பத்திலும், பிரபு குடும்பத்திலும் தர்மகாரியத்துக்கென்று அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ற அளவு தொகை ஒதுக்கித்தரப்படும் - இந்தத் தொகையைத், தக்க முறையில் பகிர்ந்தளிப்பதற்குத் ‘தர்மாதிகாரி’ நியமிக்கப்படுவதுண்டு.

ரிஷ்லுவுக்கு அந்தவேலை கிடைத்தது. சாதாரணமான வேலைதான் - அரசியல் அதிகாரம் கொண்டதல்ல - ஏழை எவர், எளியவர் யார், விதவையின் அழுகுதல் எங்குக் கேட்கிறது, எந்தத் தேவாலயத்தில் அலங்கார விளக்கு இல்லை என்பன போன்றவற்றை அறிந்து ராணி ஆன் வசம் உள்ள தர்ம பணத்தை, தரம் பார்த்துத் தருகிற வேலைதான்! உண்டிப் பெட்டிக்கு அதிகாரி, ஊராளும் வேலை அல்ல. ஆண்டுக்கு ஆறாயிரம் பவுன் சம்பளம்!

இது அல்ல. ரிஷ்லு எதிர்பார்த்தது, எனினும் “இதுவா என் திறமைக்கு ஏற்றது” என்று வெறுத்துத் தள்ளிவிடவில்லை. அரண்மனையில் நடமாடலாம் - அனைவரையும் கவனிக்கலாம், ராணி ஆன் மனமறியலாம். மன்னனையும் சந்திக்கலாம், அரசியல், அரசியல் சம்பவங்கள் சுழன்று கொண்டிருக்கும் இடத்தில் இருக்கலாம் - சமயம் கிடைக்கும் என்று எண்ணி, தர்மாதிகாரி வேலையை இசைந்து ஏற்றுக் கொண்டான்.

அரண்மனையிலோ, சூழ்ச்சியும் சதியும் நிழலுருவில் காணப்பட்டன. மேரியின் அச்சம் அதிகரித்து - லைனிசுக்கு மன்னன் மீதிருந்த பிடி, பலப்பட்டது. கண்ணீர் பொழிந்தாள் மேரி; அந்தக் கயவனை விட்டு விலகடா கண்மணீ! என்று கெஞ்சினாள் - நீ, கான்சினியை விரட்டு! என்று லூயி கூறவில்லை, ஆனால் மனத்திலே அதுதான் எண்ணம். “அன்னையே! பாசம் மறையுமா! யார் என்னுடன் தோழமை கொண்டாலும், தாயின் மனம் நோக நடந்து கொள்வேனோ” என்று பேசினானே தவிர, லைனிசை விரட்டவில்லை மன்னன். மேரியின் மனம் முறியலாயிற்று.
கிடைத்த சலுகை போதாது என்று கோபத்தால், காண்டிபிரபு-, மீண்டும் தன் கோட்டையிலே புகுந்து கொண்டு, பகை கக்கிக் கொண்டிருந்தான்.

அரசிளங்குமரி ஆன், கொஞ்சு மொழி பேசு, நானிருக்கும் போது, - பறவை உலகிலே பொழுது போக்கும் மன்னன் மரக்கட்டையா, மதியற்றவனா, அல்லது மாபாவிலைனிஸ் போடும் மாயப்பொடியில் மயக்குற்று விட்டானா, என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கிடந்தாள். அரண்மனையில் வாழ்ந்தாள் - இளமையும் எழிலும் கொண்டவன் - பட்டுப் பட்டாடை, அணிமணி அலங்காரம், சேடிகள், கீதமிசைப்போர், கிண்கிணி அணிந்தோர், பானமளிப்போர், பரதம் அறிந்தோர் எனும் விதவிதமான பரிவாரம் இருந்தது - கணவன் காதலிக்கவில்லை - கல்லுருவிலும் இல்லை, காமாந்த காரனாகவுமில்லை, தடிதாங்கியவனுமல்ல, இளைஞன், ஒத்த வயதினன், எனினும் அவன் தன்னை நாடுவதில்லை, காதல் ஒளி அவன் கண்களிலே தெரிவதில்லை, தனி அறையில் தோழன் லைனிசுடன், என்ன மர்மப்பேச்சோ, என்ன இன்பப் பேச்சோ, மணிக்கணக்கில் பேசுகிறான், மலர் இங்கே வாடுகிறது, மணம் மாய்கிறது அவன் அங்கே நள்ளிரவு நேரத்திலும் நண்பனுடன் பேசிக் களிக்கிறான்! என் செய்வாள் ஆன், ஏங்கினாள்! அழுதாள்.

காண்டி பிரபுவின் பகையைப் போக்கிச் சமரசம் உண்டாக்க, மேரி, ரிஷ்லுவை அனுப்பிவைத்தாள். ரிஷ்லு தான், முன்பே காண்டி பிரபுவுக்கு அன்பு ததும்பும் கடிதம் அனுப்பினவனாயிற்றே - எனவே, காண்டியிடம் பேசிச் சரிப்படுத்திவிட முடிந்தது. தனக்குச் சேவை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இந்த ரிஷ்லு, எனவே இவன் பேசுவதை நம்பலாம், என்று எண்ணினான். ரிஷ்லுவும், “எதிர் காலம், சிறப்புடன் விளங்கும்; தங்களின் ஆற்றலை எதிர்த்து நிற்க வல்லவர் யார்? மேரி என்ன இருந்தாலும் பெண்! கான்சினியோ, களியாட்டத்தில் மூழ்கிக் கிடப்பவன்! மன்னனோ, விளையாட்டுச் சிறுவன்!” என்று பலப்பல கூறி மயக்கக் கூடியவன்தானே! என்ன நோக்கம்? காண்டி பிரபுவுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதா! செச்சே! அதற்கா இவ்வளவு பாடு! மேரி அம்மை உணரவேண்டும், நீண்ட நாள் பகையை, பிடிவாதத்தை, முரட்டுத்தனத்தை எவ்வளவு திறம்பட ரிஷ்லு முறித்துவிட்டான், இவனன்றோ இனி நமக்குத் துணையாக இருக்கவேண்டும், இவனிருக்க நாம் கான்சினியை நம்பிக் கிடக்கிறோமே, என்றெல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டும்! இதற்காகவே ரிஷ்லு, சமரசம் ஏற்படுத்தி வைத்தான் - கபடம் அறியாத காண்டி பிரபு, பாரிஸ் வந்தான், அரண்மனை நுழைந்தான், அடைய வேண்டிய பெரும் பேறு கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களிப்புற்றான்.
காண்டியின் கோலாகலம் வேகமாகத் துவங்கி, வெறிபோல வளர்ந்தது. யாரையும் சட்டை செய்யாத போக்கு! எவரையும் எதிர்த்துத் தள்ளும் முறை! எவர் என்னை என்ன செய்யமுடியும் என்ற இறுமாப்பு! சிரித்துப் பேசுவோர், சிரம் அசைத்துக் கரம் நீட்டிடுவோர், புகழ் வீசி இலாபம் கேட்போர், இவர்கள் காண்டியின் பரிவாரம். பகலெல்லாம் விருந்து வைபவம்! இரவெல்லாம்? விவரம் கூற இயலுமா! காண்டியின் ‘காட்டுமுறை’ பாரிஸ் அரண்மனை வாசிகளைக் கூடப் பயப்படச் செய்தது.

“மன்னனா! வெறும் பொம்மை! தூக்கி எறிய எந்நேரம் பிடிக்கும்? அந்த அரியாசனத்தில் அமரத்தான் எவ்வளவு நேரம் பிடிக்கும்? நான் விரும்பினால், கான்சினி கடுகி ஓடவேண்டும், மேரி மடாலயம் சேரவேண்டும், மன்னன் சிறகொடிந்த பறவையாக வேண்டும்” என்று கொக்கரிக்கலானான். உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி கான்சினி, ஓடிவிடலாமா என்று கூட எண்ணினான். மேரி திகில் கொண்டாள். ரிஷ்லு, அவள் பக்கம் நின்றான். “அஞ்சாதீர்! அட்டகாசம் செய்கிறான் காண்டி! பலம் இல்லை! துணை நிற்போர் யாவரும், துரத்தினால் ஓடிவிடும் தொடை நடுங்கிகள்! பயம் கொள்ளாமல், விளைவு என்ன ஆகுமோ என்று யோசியாமல், உத்தரவிடும், காண்டியைக் கைது செய்ய!” என்று யோசனை கூறினான். எந்தக் காண்டி பிரபுவிடம் தயவுகோரி இருந்தானோ, எந்தப் பிரபுவை அரண்மனைக்கு அழைத்து வந்தானோ, அவனிடம் துளி பரிவு காட்டினானா? இல்லை! ரிஷ்லுவுக்குக் காரியம்தான் முக்கியம்- பண்புகளல்ல!

காண்டி கைது செய்யப்பட்டான்; பாஸ்ட்டிலி சிறை புகுந்தான்.

காட்டுத்தீ போலக் கிளம்பிய அவனுடைய அட்டகாசம், நொடியில் அழிக்கப்பட்டுவிட்டது.

துணை நின்றோர்கள் அரண்டோடினர் - துதிபாடகர்கள், மன்னிப்புக் கோரினார்.

ரிஷ்லுவுக்கு இலாபம் உண்டா? இல்லாமற்போகுமா? ஒவ்வோர் அரசியல் குழப்பமும், ரிஷ்லுவுக்கு இலாபமாகத்தான் முடிந்தது. தர்மாதிகாரியாக அரண்மனை நுழைந்த ரிஷ்லுவுக்கு ஆட்சி மன்றச் செயலாளர் பதவி கிடைத்தது. உறுமீனல்ல, பெருமீன்! இரை கிடைத்த இன்பத்திலே மூழ்கி விடாமல், மேலும் இரை தேடலானான் ரிஷ்லு.

காண்டிபோலவே, எதிர்ப்புணர்ச்சி கொண்டிருந்த வேறு பிரபுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தான். வெளி நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பிப் பிரெஞ்சு நாட்டுக்கு ஆதரவு திரட்டிடச் செய்தான் - ரிஷ்லு தன் காரியத்தைத் திறம்படத் துவக்கினான்.

ஆட்சிக் குழுவிலே வேறு பலர், அமைச்சர்கள், செயலாளர்கள் உண்டு, எனினும், ரிஷ்லு தன் திறத்தாலும் முறையாலும் மற்றவர்களைச் சாமான்யர்களாக்கிவிட்டு, முன்னணி அமர்ந்தான். முதலமைச்சர் என்ற பட்டம் அளிக்கப் படவில்லை, ஆனால் எதிர்காலத்தில் ரிஷ்லுதான் அந்தப் பதவியில் அமரப்போகிறான் என்பது குறிப்பாகத் தெரியலாயிற்று. பயணம், நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டது; பாதையும் தெளிவாகிவிட்டது. ஆனால் இடையே ஓர் புயல் வீசி, பாதையை மறைத்தது, பயணத்தைத் தடுத்தது.

காண்டி சிறைப்பட்டான், கான்சினியின் வெறியாட்டம் உச்சநிலை அடைந்தது. மன்னனை மதிப்பதில்லை, ஏளனம் செய்வான், அரியாசனத்தில் அமர்ந்து கொள்வான்-, அரசனுக்குச் செலவுத்தொகைதர அனுமதியேன் என்று ஆர்ப்பரிப்பான். ஒரு சாதாரண பிரபு குடும்பத்தானுக்குக் காட்டுமளவுக்குக்கூட, மன்னனுக்கு மரியாதை காட்ட மாட்டான்-, பித்தம் முற்றிவிட்டது - முடிவு நெருங்கிவிட்டது. லைனிஸ், இந்த முடிவுக்கான திட்டம் தீட்டி விட்டான். ஒருவரும் அறியாவண்ணம் தீட்டப்பட்ட திட்டத்தின்படி, மன்னன் உத்தரவு பெற்ற ஒரு பிரபு, கான்சினியைக் கைதுசெய்தான் - எதிர்த்ததைச் சாக்காகக் கொண்டு கான்சினியைச் சுட்டுக் கொன்றுவிட்டான். முகம் சுக்கு நூறாகிவிட்டது. ஆணவமும் அட்டகாசமும் அழிந்தது என்று மகிழ்ந்தனர் பலரும். கான்சினியின் கையாட்கள், இந்த எதிர்பாராத தாக்குதலாலும், விபரீதமான முடிவுகண்டதும் திகைத்துப் போயினர் - தப்பினால் போதும் என்று திக்குக்கொருவராக ஓடிவிட்டனர். ஒரு விநாடிக்கு முன்பு வரை, அவன் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்தது, சுட்டுத் தள்ளப்பட்டான், ஏன் என்று கேட்க ஆள் எழவில்லை. வாழ்க மன்னன்! என்ற முழக்கமிட்டபடி, கான்சினியைக் கொன்ற பிரபு, மக்கள் முன், பிணத்தைப் போட்டான். மக்கள்-, தொலைந்தான் தூர்த்தன்! என்று மகிழ்ந்து கூறினர். கலக்கமடைந்தாள் மேரி - கான்சினிக்கு நேரிட்ட கதிகண்டு அல்ல, தனக்கு என்ன ஆபத்து வர இருக்கிறதோ என்று எண்ணி, ஆண்டு பலவாக அவனுடைய சொல்கேட்டு ஆடிவந்த மேரி, அரண்மனையில் அளவுகடந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்த மேரி, வெறி நாயைச் சுட்டுத் தள்ளுவது போல அவனைச் சுட்டுத் தள்ளியதுகேட்டு, இந்த அக்கிரமம் ஆகுமா? என்று கேட்கவில்லை - கதறக்கூட இல்லை, தன்னைக் காத்துக் கொள்வது எப்படி, கான்சினிமீது பாய்ந்த பகை, தன்னைத் தாக்கினால் எப்படித் தாங்குவது, என்றுதான் எண்ணம் சென்றது! பிரெஞ்சு அரச குடும்பத்தில் இப்படிப்பட்ட நெஞ்சினருக்கே இடம் இருந்தது!

கான்சினியின் மனைவியின் பெயர் லியனோரா. மேரிக்கு இவள் உயிர்த் தோழி. மேரியின் செவிலித்தாயின் மகள், கான்சினி இறந்துவிட்டதை எப்படி லியனோராவிடம் கூறுவது - அவள் மனம் என்ன பாடுபடும், என்று கூறிக்கரத்தைப் பிசைந்துகொண்டு கண்ணீர் உகுத்தனர், சேடியர். மேரிக்குக் கோபம் பிறந்ததாம், “அவன் எப்படிச் செத்தான் என்பதைச் சொல்லத் தெரியாவிட்டால், அதுபற்றி அவளிடம் பாடுங்கள்” என்று அலட்சியமாகக் கூறிவிட்டுத் தன் காரியத்தைக் கவனித்தார்களாம்.

எப்படிப்பட்ட உத்தமமான மனம்! எவ்வளவு உயர்ந்த பண்பு!

கான்சினி கொல்லப்பட்டதும், மன்னன், தன் தோழன் லைனசுடன் கூடிக்கொண்டு, புதிய பல ஏற்பாடுகள் செய்யலானான். புயல் வீசலாயிற்று! கான்சினியின் தயவால் பெரும் பதவிகளில் அமர்ந்திருந்தவர்கள், வேலையினின்றும் நீக்கப்பட்டனர். கான்சினியால் சிறை வைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டு, பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பல துறைகளிலே திடீர் மாறுதல், லியனோரா சிறையில் தள்ளப்பட்டாள். மேரியின் அமுல் அடக்கப் பட்டுவிட்டது. எல்லாம் இப்போது லைனஸ் கரத்தில்!

மன்னனை மக்கள் பாராட்டினர். ஏதுமறியாதவர் போலிருந்தாரே, இப்போது இவ்வளவு ஆற்றலுடன் காரிய மாற்றுகிறாரே, என்று கூறி மக்கள் மகிழ்ந்தனர். கான்சினியிடம் மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இவனது கொட்டத்தை அடக்கும் துணிவு யாருக்குமா இல்லை, என்று மக்கள் பலகாலமாகக் கேட்டு வந்தனர். வேட்டை விளையாட்டில் ஈடுபட்டு, ஆட்சியிலே இருப்பவர்கள் எது செய்தாலும் அக்கறை காட்டாது இருந்து வந்த இந்த ஊமை மன்னன், மக்களின் மனப் போக்கை அறிந்து, மாபாவியைக் கொன்றானே, இதல்லவா ஆச்சரியம் என்று பேசினர்.

கான்சினியின் பிணம் பிய்த்தெறியப்பட்டது. ஆளுக்கொரு துண்டு எடுத்து அங்கும் இங்கும் போட்டுக் கொளுத்தினர் - சாம்பலை, காற்றோடு கலந்தனர், களிநடனம் புரிந்தனர். கான்சினி ஒழிந்தான், மன்னன் வாழ்க இத்தாலிய எத்தன் ஒழிந்தான், வீர இளைஞன் வாழ்க என்று வாழ்த்தினர்!

கான்சினியுடன் தொடர்பு கொண்டோர், மேரியின் தயவுக்குப் பாத்திரமானோர், இவர்களுக்குப் பேராபத்து தாக்கிய போது, தப்பிப்பிழைத்தது, ரிஷ்லு மட்டுந்தான் எப்படி?

கான்சினியின் தயவைப் பெற ரிஷ்லு தவறவில்லை - மேரியின் ஆதரவால்தான். ஆட்சிக்குழுச் செயலாளராக அமர்ந்திருந்தான். எனவே மன்னனுக்கும் லைனசுக்கும் மாற்றும் குழுவிலே இருந்த ரிஷ்லு, ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புள்ளிதான், எனினும், லைனஸ், மன்னனிடம் “ரிஷ்லு யோக்யர்! தங்களிடம் நிரம்பப் பற்று உள்ளவர்” என்று வாதாடினான். ஏன்? அவன் அவ்விதம் நம்பும்படி ரிஷ்லு, சிலகாலமாக, நடந்து கொண்டு வந்தான்.

கான்சினியின் நிலை, திடீரென்று சாயும் என்பதையும் லைனஸ் மன்னனைப் பயன்படுத்தி, சூத்திரக் கயிற்றினைப் பிடித்துக் கொள்ளப் போகிறான் என்பதையும், உணர்ந்த ரிஷ்லு, “கான்சினியின் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு அவன் தயவில் பதவியில் இருக்கவே கஷ்டமாக இருக்கிறது, மேரி அம்மையின் இயல்பும் எனக்குப் பிடிக்கவில்லை, என் உள்ளம் மன்னன் சார்பாகத்தான், மன்னனிடம்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம்” என்றெல்லாம், லைனசிடம், அவன் நம்பும்படி பேசி வந்திருக்கிறான். எனவே தான், பலருக்குத் தலைபோன அந்த நேரத்திலும், ரிஷ்லு சேதமின்றி இருக்க முடிந்தது.

மேரியும் கான்சினியும் அல்லவா, நமது இன்றைய உயர்வுக்குக் காரணம், அவர்களிடம் உள்ளன்பு கொள்வதும், நன்றியறிதல் காட்டுவதுந்தானே, நமது கடமை, அவர்களில் கான்சினி கொல்லப்பட்டுவிட்டான். மேரியோ தாழ் நிலைக்குத் தள்ளப்படுகிறாள், அவர்கள் சார்பிலே நின்று, லைனசின் அக்கிரமத்தைக் கண்டிப்பதல்லவா அறம், என்றெல்லாம் ரிஷ்லு எண்ணவில்லை! மூவர் இருந்தனர், முட்டுக் கட்டைகள் - ஒருவன் காண்டி; சிறை சென்றான்; மற்றொருவன், கான்சினி, சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர் - மூன்றாமவன் இந்த லைனஸ், இவன் தொலையு மட்டும், துதிபாடித் தப்பித்திருக்கத்தான் வேண்டும் - இவனும் தொலைவான், பிறகு, நான்தானே மன்னன் பக்கத்திலே, என் கரத்தில்தானே பிரான்சு! - என்று இப்படி எண்ணினான் ரிஷ்லு. அவன் படித்த மார்க்க ஏடுகளும் அற நூல்களும் இத்தகைய சுயநலத்தைத்தானா தந்தன, என்று கேட்கத் தோன்றும். அந்த ஏடுகளிலே இருந்து ரிஷ்லு இந்தக் குணத்தைப் பெற்றானோ இல்லையோ, நாமறியோம். ஆனால் ஒன்று அறிவே அவன் அந்த ஏடுகளைப் படித்ததே கூட, சொந்த ஆக்கத்தைப் பெற அவை தரும் அறிவு பயன்படட்டும் என்ற நோக்குடன்தான்! அறநூல் படித்தவன்! அபாரமான திறமைசாலி! - என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகக் கற்றானே தவிர, அறத்தைப் பரப்ப வேண்டும் – காக்க வேண்டும் என்பதற்காக அல்ல! அந்த வேலையைப் புத்தகப் பூச்சிகளுக்கும் வித்தகப் பேச்சாளருக்கும் விட்டுவிட்டான்!

அரண்மனை ஆச்சரியப்பட்டது பலரை வீழ்த்த பெரும் புயலால், ரிஷ்லு சாய்ந்திடாதது கண்டு.

மேரியிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டதுடன் அம்மையைப் பாரிசை விட்டே பயணப்படும்படி மன்னன் உத்தரவிட்டான் - உத்தரவு பிறப்பிக்கும்படி லைனா கட்டளையிட்டான்!

ப்ளாயிஸ் என்ற ஊர் சென்று தங்க ஏற்பாடு செய்பட்டு மேரி புறப்பட்டபோது, மன்னனுடைய அனுமதியுடன் ரிஷ்லு, மேரியின் ஆலோசகர் குழுத் தலைவராகச் சென்றான்.

மேரி, சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் தன்னுடன் இணைந்து இருக்க இசையும் ரிஷ்லுவின் பெருங் குணத்தைப் பாராட்டி இருக்கக்கூடும். ஆனால் ரிஷ்லு சென்றது, மேரி அம்மையுடன் இருந்து கொண்டு மன்னனுக்கு அவ்வப் போது ‘சேதி’ அனுப்ப! லைனசின் ஏற்பாட்டின்படி ஆட்சிப் பொறுப்பை மன்னன் ஏற்றுக் கொண்ட கணமே, ரிஷ்லு, மன்னனின் ‘ஆள்’ ஆகிவிட்டான். மேரி இனி ஒரு கருவி - அதிலும் கூர் மழுங்கிவிட்டது! உயர வழி, முன்னேற மார்க்கம் மீண்டும் உயர பதவி பெற வழி, மன்னனுக்குத்தொண்டு புரிவதுதான் என்ற முடிவுக்கு ரிஷ்லு வந்தாகிவிட்டது. மன்னனால் நியமிக்கப்பட்ட ‘ஒற்றன்’ இந்த ரிஷ்லு என்பதறியாமல், இழந்ததைத் திருப்பிப் பெறத் திட்டம் என்ன வகுக்கலாம் என்று எண்ணியபடி, ரிஷ்லுவை அழைத்துக் கொண்டு, மேரி, ப்ளாயிஸ் சென்று புதுமுகாம் அமைத்துக் கொண்டாள்.

மேரியுடன் ரிஷ்லு இருந்து வந்தது லைனசுக்குப் பிடிக்க வில்லை. எனவே ரிஷ்லு, பழையபடி லூகான் நகர் அனுப்பப் பட்டான். ஏழாண்டுகள் இதுபோல, ‘வனவாசம்’ செய்ய நேரிட்டது. பலர் ரிஷ்லுவின் அரசியல் வாழ்வு இனித் துலங்காது என்று எண்ணினர். ஆனால் ரிஷ்லுவுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது, மீண்டும் பதவிகிடைத்தே தீரும். முன்னிலும் மேலான நிலை பிறக்கும் என்று.

‘நான் உண்டு என் ஏடு உண்டு’ என்று ரிஷ்லு கூறிக் கொண்டபோதிலும், நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த வண்ணம்தான் இருந்தான். இடையிடையே, எந்த மன்னனால் துரத்தப்பட்டானோ, அதே லூயிமன்னனுக்கு, ரிஷ்லு தன் ஆற்றலை விளக்கிக் காட்டும் வாய்ப்பும் கிடைத்தது.
------------
அரசாண்ட ஆண்டி (5)

லூகான் நகர் சென்றதும் ரிஷ்லு, தன் புகழ் மங்கிவிடும்படி இருந்து விடவில்லை - புகழ் துருப்பிடிக்கவும் கூடாது. அரசாள் வோர் கவனத்தைக் கவரத் தவறவும் கூடாது என்பது ரிஷ்லுவுக்கு நன்றாகத் தெரியும்.

பிராடெஸ்ட்டென்ட் கொள்கைகளைக் கண்டித்தும், கத்தோலிக்கக் கோட்பாடுகளை ஆதரித்தும் அரியதோர் ஏடு தீட்டினான் - மார்க்கத் துறையினர் கண்டு பாராட்டும் வகையில் புகழ் பரவலாயிற்று! மன்றம் பல பேசலாயின ரிஷ்லுவின் நுண்ணறிவு பற்றி, கத்தோலிக்க மார்க்கத்தை உலகெங்கும் பரப்பி, எதிர்ப்புகளை ஒழித்துக்கட்டும் பேராற்றல் படைத்தவர் இந்த ரிஷ்லு என்று கொண்டாடினர். சிலர், மார்க்கத் துறையிலே ஈடுபட்டு மானிலம் புகழும் இடம் பெறுவதை விட்டு, ஏன் இவர் சிலகாலம் அரசியல் சேற்றிலே உழன்று கிடந்தார் என்று பேசினர். ரிஷ்லுவுக்கு இந்த வெற்றி களிப்பளித்தது, நாடு நம்மை மறந்துவிடவில்லை! புகழ்கிறது! கவனத்தில் வைத்திருக் கிறது - என்று எண்ணி மகிழ்ந்தான்.

கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு பிராடெஸ்ட்டென்ட் புயலால் ஏற்பட்ட ஊறுகளைப் போக்கவேண்டும் என்பதல்ல, ரிஷ்லுவின் எண்ணம். ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படவில்லை. ஆற்றலைக் காட்டியபடி இருந்தால் அந்த வாய்ப்பு அளிக்கப்படும். ஆற்றலைக் காட்ட இந்த ஏடு பயன்படட்டும் என்பதற்காகவே தீட்டினான். உண்மையாகவே, மார்க்க சம்பந்தமான பணியிலே ஈடுபட வேண்டுமானால் வாய்ப்பா இல்லை! ஏராளம்!

இந்த ஏழாண்டு ஓய்வின்போது, ரிஷ்லுவுக்கு ஜோசப் பாதிரியார் உற்ற நண்பரானார்.

ஜோசப், ரிஷ்லு போன்றவரல்ல, ஆற்றல் உண்டு நிரம்ப, அதற்கேற்ற அளவு நேர்மை உண்டு. கொள்கை உண்டு. அதற்காகச் சுயநலத்தைத் தியாகம் செய்யும் பண்பு உண்டு. கூர்மையான மதிபடைத்தவர், அதனைத் தமக்குப் புகழோ நிதியோ சேர்க்க அல்ல, தன் கொள்கையின் வெற்றிக்காகச் செலவிட்டு வந்தவர்.

கத்தோலிக்க மார்க்க வெற்றியே, ஜோசப்பின் மூலதாரக் கொள்கை.

கிருஸ்தவ மார்க்கத்தைப் பாதிக்கும் முறையில் நடத்து கொள்கிறார்கள் என்ற காரணம் காட்டி, முஸ்லீம்களுடன் புனிதப் போர் நடாத்தி வந்தவர்களுக்கு இருந்தது போலவே, ஜோசப்புக்கு, இஸ்லாமிய ஆதிக்கத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற பேரவா, தீஎனக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. புதியதோர் புனிதப்போர் தொடுக்கத் தூபமிட்டார், பலிக்க
வில்லை. பிறகு அவர், பிரான்சு நாடு, கத்தோலிக்க மார்க்கத்துக்கு ஏற்ற திரு இடம் என்று எண்ணினார், அங்கிருந்தபடி, ஐரோப்பாவில் பல்வேறு இடங்களிலே பரவிக் கொண்டிருந்த பிராடெஸ்ட்டென்ட் மார்க்கத்தை மாய்த்தொழிக்கலாம் என்று எண்ணினார். ரிஷ்லுவுக்கு இது தெரிந்து விட்டது! ரிஷ்லு, கத்தோலிக்க மார்க்கத்தைச் சிறப்பித்தும், பிராடெட்ஸ்டென்ட் கண்டனங்களைச் சின்னாபின்னமாக்கியும் தீட்டிய ஏடு, ஜோசப்புக்கு ஆர்வமூட்டிற்று. இருவரும் நண்பராயினர். ரிஷ்லுவைக் கொண்டு, கத்தோலிக்க மார்க்கத்தை ஒளிவிடச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன், ஜோசப், தமது செல்வாக்கை, ரிஷ்லுவுக்குத் துணையாக்கினார். ஆர்வமும் ஆற்றலும், ஓயாது உழைக்கும் திறனும், ஒன்றையும் தனக்கெனத் தேடிக்கொள்ளாப் பண்பும், பல்வேறு நாடுகளிலே செல்வாக்கும் கொண்டிருந்த ஜோசப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆதிக்கபுரி போய்ச் சேரலாம் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இருவருக்கும் ஏற்பட்ட கூட்டுறவு, ரிஷ்லுவுக்குப் பெரும் பயனளித்தது - ஜோசப் இறந்துபடும் வரையில், ரிஷ்லுவுக்காகவே, உழைத்தார். ரிஷ்லுவின் மனமறிந்து திறமையுடன் காரியமாற்றினார். ரிஷ்லு, அரசாளும் காலத்திலே பெற்ற பல ஆச்சரியமான வெற்றிகளுக்கு ஜோசப்பின் அறிவாற்றல், பெரியதோர் காரணமாக அமைந்தது.
ஜோசப்பின் செல்வாக்கினால், அரண்மனையில் கூற, ரிஷ்லுவிடம் இருந்த அவநம்பிக்கையும் பயமும் ஓரளவு குறைந்தது.

ரிஷ்லுவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

மேரி; தன் நிலையில் திருப்தி பெற முடியுமா! அரண்மனையில் எல்லா அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த அம்மை, லைனஸ் எனும் ஊர்பேர் அறியாதான் அரசாண்டு கொண்டிருப்பது கண்டு எங்ஙனம் மனம் பொறுக்க முடியும். சூழ்ச்சிகள் மூலம் மீண்டும், இழந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் வளர்ந்த வண்ணம் இருந்தது.
மகனுக்கும் அன்னைக்கும் இடையே இயற்கையாக இருந்து வந்த பாசம், லைனசால் கெட்டுவிட்டது.

ஆன் அரசி எப்போதும் போலவே, கண்ணீர் உகுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

பிரபுக்கள், இந்தப் ‘புதிய நோய்’ போக மருந்து உண்டா என்று ஏக்கத்துடன் கேட்டனர்.

“சரக்கு மாறவில்லை - விலாசம்தான் புதிது!” என்று ஒருவர், லைனசின் ஆட்சியைக் குறிப்பிட்டார்.

கான்சினி, காண்டி, இவர்களிடம் காணப்பட்ட போக்கே லைனசிடமும் இருந்தது.

உறவினர்களுக்கெல்லாம் செல்வம், செல்வாக்கு, பட்டம் பதவி! அள்ளி அள்ளி வீசினான், லைனஸ்; கேட்க நாதி இல்லை. எதிர்த்திடத் துணிந்தவர்கள் அழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேரி அம்மை, ப்ளாபிசில் சோம்பிக் கிடந்து பயனில்லை அங்கிருந்து வெளியேறி, பிரபுக்கள் சிலரின் உதவியைத் திரட்டிக் கொண்டு, லைனசை எதிர்த்தொழித்து, மகனை மீட்டு அவனை மன்னனாகக் கொண்டு பழையபடி தன் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும், என்று தீர்மானித்தாள்.

எபர்னான் பிரபுவுக்கு அதுபோது பிரான்சிலே நல்ல செல்வாக்கு, அவருடைய உதவியைப்பெற, மேரி திட்டமிட்டு மங்கலான நிலவொளி இருந்த ஓரிரவு, சாளர மாளிகையை விட்டு வெளியேறி, எபர்னான் மாளிகை வந்து சேர்ந்தாள்.

மேரி தப்பிச் சென்ற செய்தி பிரான்சிலே பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. இரவில்! சாளரவழி! நூலேணி!! - மக்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு வியப்படைந்தனர்.

எபர்னான் பிரபு, மேரி அம்மைக்குத் துணைபுரியச் சம்மத்தார் - லைனசிடம் வெறுப்புக் கொண்ட வேறு சீமான்களும் பக்கத்துணையாயினர்! மேரி அம்மையின் திட்டம் வெற்றி தந்துவிடும் என்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மன்னனும் லைனசும் கவலைப்பட்டனர் - எப்படி இந்த ஆபத்தைத் தவிர்ப்பது என்று யோசித்தனர் - ஜோசப் யோசனை கூறினார், “மேரி, படையுடன் பாரிஸ் வராதபடி தடுக்கக் கூடியவர் ஒருவர்தான் உண்டு - அவர் தான் ரிஷ்லு!” என்றார். ரிஷ்லு அழைக்கப்பட்டார்! என்னைப் பாரிசைவிட்டுத் துரத்தினீர்களே, நான் ஏன் உங்களுக்குத் துணை புரிய வேண்டும்? நான், மேரி அம்மைக்கே உதவி புரிவேன். மேரியின் தயவுதான் எனக்கு அரண்னை நுழைவுச் சீட்டாக இருந்தது. எனவே நான் பாரிஸ் வாரேன்” என்றல்லவா, ரிஷ்லு நிலையில் தள்ளப்பட்ட எவரும் கூறுவர். ரிஷ்லு பாரிஸ் சென்றான், மேரி அம்மைக்கும் மன்னனுக்கும் சமரசம் உண்டாக்கி வைக்கும் பணியைச் செய்து முடிப்பதாக வாக்களித்து, எபர்னான் சென்று, மேரியிடம் பேசி போரை நிறுத்தி வைத்ததுடன், சமரச ஏற்பாட்டையும் தாயரித்துத் தந்தான்!

ஒருபுறம் மன்னன், அவனுடன் கீழே சாயப்போகும் லைனஸ்.

மற்றோர்புறம் சூழ்ச்சித் திறமும் ஆதிக்க ஆசையும் மிகுந்த மேரி - அம்மையைச் சுற்றி அதிகார போதையைப் பருகி அட்டகாசம் செய்யவல்ல பிரபுக்கள்.

இந்த இருதரப்பிலே, மேரி தரப்பினுடைய கரம் வலுத்தால், தன் ஆதிக்க நோக்கம் ஈடேறும் வழி அடியோடு அடைபட்டுவிடும், எனவே, மேரியின் திட்டம் வெற்றி பெறக் கூடாது - வெற்றிபெற விடக்கூடாது.

மன்னன்? பரவாயில்லை! கரத்தில் சிக்குவான் லைனஸ்? அசடன்! ஆடி அழிவான்!! - எனவே மன்னர் தரப்புக்கே துணைநிற்க வேண்டும், என்று ரிஷ்லு தீர்மானித்தான்.

ரிஷ்லுவின் பேச்சுக்கு மேரி, ஏன் இணங்க வேண்டும்? மேரி, அடைந்திருந்த அவமானம் சாமான்யமானதல்ல வேட்டைக்கார வெறியன், அரண்மனையை விட்டே துரத்தினான். கீறிய கோடு தாண்டாதிருந்த மன்னனை மகனை, பிரித்து வைத்தான், பகை மூட்டி விட்டான் எபர்னான் பிரபுவின் ஆற்றல் துணை நிற்கிறது - வெற்றி எளிது! - இது மேரிக்குப் புரியக் கூடியதுதானே! ஏன் ரிஷ்லுவின் சமரசப் பேச்சுக்கு இணங்க நேரிட்டது?

ரிஷ்லு, தர்பார் தளுக்கனல்ல! பாவையரை மயக்கும் பாகு மொழி பேசியும், சொக்க வைக்கும் புன்சிரிப்பு காட்டியும், கீதமிசைத்தும் நடனமாடியும், களிப்பூட்டியும் காதலைப் பொழிந்தும், காரிகையரைக் கொல்ல உல்லாசக் கல்லூரியில் தேறியவனுமல்ல! நோயாளி பகட்டுரை அணிந்து பரிமளம் பூசிக்கொண்டு மினுக்கும் பட்டுப் பூச்சியுமல்ல! மத அதிபர் உடை! நோயும் ஓயாத உழைப்பும், தாங்கித் தாங்கி முகத்திலே, வேதனை ரேகை நன்றாகப் படர்ந்திருந்தது. எனினும், ரிஷ்லுவுக்கு யாருடைய கவனத்தையும் தன்பக்கம் இழுக்க வல்ல முக அமைப்பு இருந்தது! கவர்ச்சி அல்ல! அளவளாவலாம். தோழமை கொள்ளலாம், என்ற ஆசை எழவில்லை, எனினும், அவனைப் பார்த்ததும், மனத்திலே பதிந்து விடுகிறான், இத்தாலியச் சாணக்கியன் மாக்கியவல்லி கூறினான். “மன்னன் நேசிக்கப்படத் தக்கவனாக இருப்பதைக் காட்டிலும் அச்சமூட்டத் தக்கவனாக இருப்பது நல்லது” என்று ரிஷ்லும், அந்த ஓவியமாக விளங்கினான். நேசிக்க அல்ல, அச்சம் கொண்டிட வைத்தது, ரிஷ்லுவின் தோற்றம் அவனுடைய கண்களே, கருவூலங்கள்! ஒளி, ஆவலைக் காட்டுவதாக மட்டுமல்ல, உறுதியை, நினைத்ததைச் சாதித்தே தீருவான் என்ற உறுதியை உமிழ்ந்தது! ஆடம்பரம் இல்லை- உடையில், நடையில். ஆனால் அதிகாரத்தைத் திறம்பட நடத்தும் போக்கினன் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

இந்த ரிஷ்லுவிடம், மயக்கமா, மேரி அம்மைக்கு!

உண்டு, என்கிறார்கள் - இருக்கக் கூடும், அம்மையின் இயல்பைக் கவனித்தால்!

ரிஷ்லு, இதற்கு இணங்கினதாக ஆதாரமும் இல்லை, நடவடிக்கைகள் இவ்வகையில் ஏதும் இல்லை.

பொதுவாகவே ரிஷ்லுவுக்கு அந்தச் ‘சபலம்’ கிடையாது. நோயும், நோயைவிடக் கடுமையாக மனத்தைப் பிடித்துக் கொண்டிருந்த ஆதிக்க ரிஷ்லுவுக்கு அந்தச் சபலத்தைத் தந்திராது - மேலும் வாலிப வயது முதல் தேவாலயத்திலே அல்லவா, வேலை!! எனவே, ரிஷ்லு, விருந்து தேடிடும் வீணனாக இல்லை. ஆனால், மேரி, அம்மைக்கு ஏதோ ஒரு வகையான மயக்கம் இருப்பது மட்டும் ரிஷ்லுவுக்குத் தெரிந்தது - அந்தப் பொல்லாத குணம் கூடாது என்று ரிஷ்லு உபதேசம் செய்யவில்லை. ஒதுங்கிக் கொள்ளவில்லை. அரண்மனை ஆயிரத்தெட்டுக் கேடுகள் நடமாடும் இடம் என்று மிரண்டு ஓடிவிட வில்லை. அம்மைக்கு அவ்விதமான மயக்கம் இருப்பதும் நல்லது தான், அதனை எப்படி, ஆதிக்கம் பெறப் பயன்படுத்திக் கொள்வது, என்று மட்டுமே எண்ணினான்.

“நான் இருக்கிறேன்! இதோ! உன் எதிரில் எப்போதும்” என்று தன்னைக் காட்டிக் கொள்வது மட்டும் போதும், இணங்கிவிடுவது கூடாது, பெறவேண்டும் என்ற ஆவல் தரும் சுவையைவிட, பெற்றுவிட்டால் கிடைக்கும் சுவை குறைந்த தரமாகிவிடும், எனவே ஆவல் மட்டும் இருக்கட்டும், அது அணையாத் தீபமாக இருக்கட்டும், என்று எண்ணி ரிஷ்லு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ரிஷ்லுவின் போக்கைக் கவனிக்கும்போது, இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தள்ளிவிடுவதற்கில்லை.

இப்படி ஒரு மயக்கம் இருந்தாலொழிய, மேரி அம்மை, நெருக்கடியான நேரத்தில் எல்லாம், ரிஷ்லுவின் பேச்சுக்கு ஏற்றபடி தன் திட்டத்தைத் திருத்திக் கொள்வதற்குக் காரணம் வேறும் காணக்கிடைக்கவில்லை.

எப்படியோ ஒன்று, சமரசம் ஏற்பட்டுவிட்டது - தாயும் மகனும் அளவளாவினர் - நாடு ஓரளவு நிம்மதி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தது.

ரிஷ்லுவுக்கு இதனால் என்ன இலாபம் இல்லாமற் போகுமா? கார்டில் எனும், உயர்தர மத அதிபர் பதவியை ரிஷ்லுவுக்குப் போப்பாண்டவர் அளித்தார். இந்தப் பதவியில் ரிஷ்லுவை அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

கார்டினல் எனும் நிலைபெற, மார்க்கத் துறையிலேயே பன்னெடுங்காலம் ஈடுபட்டுக் காத்துக் கிடப்பவர் பலர். ஆனால், ரிஷ்லுவுக்கோ! ஓர் அரசியல் குழப்பம்! - சமரச முயற்சி - கார்டினல் பதவி!
எபர்னான் பிரபுவின் பேருதவியை நம்பித்தான் மேரி, மன்னனை எதிர்க்கத் துணிந்தது. ரிஷ்லு எப்படியோ அம்மையின் மனத்தை மாற்றி, மன்னனிடம் சமரசமாகிவிடும்படிச் செய்துவிட்டான். இந்தச் சமரசம் நிலைக்கவில்லை என்றபோதிலும், இந்தச் சம்பவம், அரண்மனையில் ரிஷ்லுவின் செல்வாக்கை வளமாக்கிவிட்டது. ஒருநாள் எபர்னான் பிரபு, மாளிகை மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கும்போது ரிஷ்லுவின் ஆதரவாளர் ஒருவர், படிக்கட்டில் அவரைக் கண்டு, “பிரபுவே! என்ன ஏதேனும் விசேஷம் உண்டா,” என்று கேட்க, எபர்னான், “ஏன் இல்லை! நீங்கள் உயரப்போகிறீர்கள், நான் கீழே இறங்குகிறேன்!” என்று பதிலளித்தாராம்! யூகம் நிரம்பிய பதில். எபர்னானுக்கு மேரி அரசி ஏதும் உதவி செய்யவில்லை; ரிஷ்லு வுக்கோ, அன்னையும் ஆதரவு தந்தார், அரியாசனத்திலிருந்த மகனும் தந்தான்!!

இது எனக்கு எம்மாத்திரம், என்றுதான் ரிஷ்லு எண்ணினான். ஆனால் பயனற்றது என்று கூறவில்லை. பயன் படுத்திக் கொள்ளமுடியும்.

சமரசம் முறிந்ததும், மீண்டும் சமர் கிளம்பிற்று - மீண்டும் சமரசம் - இப்படி நிகழ்ச்சிகள் ஊஞ்சலாடின - இந்நிலையில், லைனஸ் இறந்துபட்டான் - மன்னன், யாராருடைய துணை கொண்டோ துரைத்தனம் நடத்திப் பார்த்துச் சலிப்புற்று, ரிஷ்லுவுக்கு அழைப்பு அனுப்பினான், 1624-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள், ரிஷ்லு மீண்டும் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றான் - நாலு திங்களில், உடனிருந்த அமைச்சர்களை மூலையில் அமரச் செய்துவிட்டு, முதலமைச்சரானான் - முடிதரித்தவன் லூயி ஆட்சி, கார்டினல் ரிஷ்லுவிடம் நீண்டகாலத் திட்டம் பலித்துவிட்டது! பிரான்சு, ரிஷ்லு கரத்தில் சிக்கிவிட்டது. லூகான் தேவாலயத்திலோ பூஜாரி வேலையா பார்க்கச் சொன்னார்கள், பிரான்சை ஆளும் பெரும் பதவிக்கு, ஏற்ற என்னை! என்று எண்ணினான். பெற்றதைப் பலப்படுத்தும் பெரும் பணியைத் துவக்கினான். மன்னனை மெல்ல மெல்ல வசப்படுத்திக் கொண்ட ரிஷ்லு, பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவது ஹீயூஜீநாட்ஸ் எனும் பெயர் படைத்த பிராடெஸட்டென்ட் மக்களை ஒடுக்குவது, வெளி நாடுகளில் பிரான்சின் கீர்த்தியை நிலைநாட்டுவது எனும் மூன்று திட்டங்களை மேற்கொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றி கண்டான். இந்த வெற்றிகளை வரலாற்று ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்த வெற்றிகளுக்கு ரிஷ்லு கையாண்ட முறைகளோ மிகக் கொடுமையானவை.

ரிஷ்லுவின் ‘ஒற்றர்கள்’ நாடெங்கும் பூனைபோலுலவி, ‘சேதிகளை’க் கொண்டு வந்து தருவர், தனக்குப் பிடிக்காதவர்கள், ஆற்றலை வெளிப்படுத்துபவர், அரண்மனையில் புகும் உரிமை கொண்டவர்கள் ஆகியோரை, சதிவழக்குகளில் சிக்கவைக்க, இந்தச் சேதிகள் மெத்தப் பயன்பட்டன. மாளிகைகளிலே மருட்சி! ஒவ்வொரு பிரபுவும் தனக்கு எப்போது ஆபத்து வருமோ என்ற திகிலுடனேயே உலவிட நேரிட்டது. சதி வழக்குகள் தொடுத்தால், தக்க ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கடும் தண்டனை தரப்படும் - காரணம் கேட்டவருக்கு ரிஷ்லு சொன்னான் : “சதி வழக்குகளுக்கு ஆதாரங்கள் அப்பழுக்கின்றிக் கிடைக்குமா! யூகித்தறிந்த விஷயமே போதும் தண்டனை தர” என்று. இப்படிப்பட்ட விபரீத நியாயம் - முறையாகிவிட்டது.

மன்னனிடம், “என் கடன் தங்கள் ஆட்சியைப் பலப்படுத்துவதுதான். தங்களை எதிர்க்கத் துணிவு காட்டும் பிரபுக்களை அழித்து, அரச பலத்தை அதிகரிக்கச் செய்வதுதான்; தங்கள் ஆட்சியின்போது பிரான்சு நாடு பிற நாடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டது என்ற நிலை இருக்க வேண்டும்; அதற்கான முறையிலே பணிபுரிகிறேன்” என்று சொல்லி, காட்டிய இடத்தில் கையொப்பமிடும் கருவியாக மன்னனை ஆக்கிக் கொண்டான்.

பல பிரபுக்கள், ரிஷ்லுவின் பகைக்கு ஆளாகி ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர் - ஒரு பிரபுவாவது மக்களுக்குக் கேடுசெய்தான் என்பதற்காக அல்ல, மன்னனுக்க நிகராகத் தன்னை எண்ணிக் கொண்டான் என்பதற்காகவே!

அரசனுக்காக! பிரான்சுக்காக! என்றுதான் ரிஷ்லு, தன் நடவடிக்கைகளுக்கெல்லாம், விளக்கம் தந்தானே தவிர, மக்களுக்காக என்று ஒரு செயலையும் மேற்கொள்ளவில்லை.
மக்கள், எப்போதும் போல ஏக்கமிகுந்து இருந்தனர் - பசி தீரவில்லை, வாழ்க்கை சிறக்கவில்லை - தொழில் வளம்பெருக வில்லை, உரிமைக் குரலுக்கு இடமே இல்லை. பிரபுக்கள் ஒரு புறத்தில் அவர்களைக் சுரண்டினர். மத அதிபர்கள் மற்றோர் புறம் அரித்தனர். இந்தக் கொடுமைகளைக் களைய ரிஷ்லுவின் ஆற்றல் பயன்படவில்லை - அடிப்படையில் வெடிப்புக் கிடந்தது. ரிஷ்லுவோ, கலசத்துக்குப் பொன்முலாம் பூசிக் கொண்டிருந்தான்.

ரிஷ்லுவை எதிர்த்து, மன்னனுடைய தம்பி, காஸ்ட்டன் பன்முறை கிளம்பினான் - ஒவ்வோர் முறையும் பரிதாபகரமான தோல்வியே கண்டான்.

மன்னன் தம்பி என்றால் அவன் தலை தப்பிற்று - உடன் இருந்தோரின் தலைகள் உருண்டன.

வேண்டுகோள், அழுகுரல், கருணைமனு, எதனையும் பொருட்படுத்துவதில்லை, பாதையிலே குறுக்கிட்டால் தீர்ந்தது, பயங்கர மரணம்தான் பரிசு!

தன்னைச் சுற்றிலும் வேவு பார்ப்போர், தகவல் திரட்டுவோர், ஆகியவர்களை அமர்த்திக் கொண்டு, ரிஷ்லு நடத்தி வந்த ஆட்சி முறையின் கடுமை கண்டு, பலரும் கலங்கினர்.

மன்னனின் தம்பி, காஸ்டன், காமக்களியாட்டத்திலே காலந்தள்ளி வந்த பதினெட்டாண்டு வாலிபன். அவனை ஆதரவாக நம்பி, ஒரு பிரபுக்கள் எதிர்ப்பு மூட்டினர் - ரிஷ்லுவுக்கு, சதி, கருவிலிருக்கும்போதே தெரிந்து விட்டது - பிரபுக்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது - காஸ்டன், அண்ணனிடம் மன்றாடி உயிர் தப்பினான். ஒரு பிரபு சிறையில் தள்ளப்பட்டு மாண்டான் - காய்ச்சல் என்று கூறப்பட்டது. மற்றோர் பிரபுவுக்கு நேரிட்ட கதி, பிரான்சையே நடுங்க வைத்தது. காலே எனும் அந்தப் பிரபுவின் தலை சீவப்பட்டு, கோலில் செருகப்பட்டு, சதுக்கத்தில் காட்சியாக வைக்கப்பட்டது. உடல் நாலு கூறாக்கப்பட்டு, ஊரின் நான்கு நுழைவு வாயில்களிலும் தொங்க விடப்பட்டன!

தேவலாய அதிபராக வாழ்க்கையைத் துவக்கியவரின் கருணை நிரம்பிய உள்ளம் இது! இப்படியா, என்று கேட்டால், அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற ஒரே பதில்!

காலே என்பவனுடைய தலை சீவப்பட்டது என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித் தனமான முறையில் - தலைவெட்டு வதற்குத் தக்க ஆள்கிடைக்கவில்லையாம், எனவே இரு கைதிகள் இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்பட்டனர். ஊதியம், விடுதலை! கோடரி கொண்டு இருபத்து ஒன்பது தடவை வெட்டிய பிறகே கழுத்துத் துண்டிக்கப்பட்டதாம். எல்லாம் அரசுக்காக! என்றான் ரிஷ்லு, ‘ஆமென்’ என்றான் மன்னன்.

பயங்கரமும் கொடுமையும் நிரம்பிய முறையிலே நடைபெற்ற நடவடிக்கைகள் பலப்பல.

மக்களை வாட்டி வதைப்பவன், ஏழைகளை ஏய்த்தவன், சர்க்கார் பொருளைச் சூறையாடினவன், ஆலயச் சொத்தை அபகரித்தவன், போன்ற ஒரு ‘குற்றவாளி’ கூட ரிஷ்லுவின் கண்ணுக்குத் தெரியவில்லை! அப்படிப்பட்டவர்களை, குற்றவாளிகள் என்று கருதினால்தானே! ரிஷ்லுவின் கண்களுக்கு ஒரே ஒருவகையான குற்றவாளி மட்டுமே தெரியும் - தன் ஆதிக்கத்துக்குக் குறுக்கே நிற்பவன்! அதுதான், பெருங்குற்றம் - மற்றவை, ரிஷ்லுவின் கவனத்துக்கு உரியன அல்ல!
லைனஸ் இறந்துபட்ட பிறகு, மன்னன் பொழுது போக்குக்காகவேனும், தன் இல்லக்கிழத்தி ஆன் ராணியை நாடினானா! இல்லை! தன்னைச் சுற்றிலும், அழகு மங்கையரை உலவச் செய்து, ஒருவிதமான திருப்தி பெறுவான். களியாட்டம் மன்னனுக்குப் பிடிக்காது. அணங்குகள் அங்கும் இங்கும், ஆடியும் அசைந்தும், சிரித்தும் உபசரித்துக் கொண்டும் இருப்பர், இடையே மன்னன் இருப்பான்.

மன்னனுடைய பிரத்யேகமான ‘அன்பு’ ஓர் அழகிக்குக் கிடைக்கும், பிறகு வேறோர் வனிதைக்கு மாறும், ஆனால் எந்த அணங்கையும், மன்னன் காமக் கருவியாக்கிக் கொள்வதில்லை, வெறும் பொழுதுபோக்கு!

கணவனிருந்தும் விதவையாக இருந்த ஆன், தன் அழகையும் இளமையையும் வெறுத்தபடி, ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள்.

சுழல் கண்ணழகியும், கீத மொழியினளும், மன்னனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்பதும், ஆன் அரசியை மன்னன் அநியாயமாக ஒதுக்கிவைத்திருப்பதும் ரிஷ்லுவுக்குத் தெரியும்; தெரிந்தது! அந்த நிலை நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டான். ஆன் அரசியுடன் காதல் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தால்! மன்னன் அவள் வசமாகிவிட்டால்! தன் நிலைக்கு என்ன ஆபத்து நேரிடுமோ, யார் கண்டார்கள்! ஆன் அரசி, மேரிபோலாகி விட்டால்? ஆன் அரசிக்கு வேண்டியவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புத் தரப்பட்டுவிட்டால்? இப்படி எல்லாம் எண்ணிய ரிஷ்லு, மன்னனின் மணவாழ்க்கை மலருவது கூடாது என்று விரும்பினான்.

கணவன் மனைவிக்கு இடையே கலகமூட்டி, பிரித்து வைத்துப் பெருங்கேடு செய்கிறான் ஆதிக்க வெறியன் என்று சிலர் குற்றமே சாட்டினார்கள்.

அணங்குகளுடன் கொஞ்சிக் குலவட்டும், மனத்துக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்ளட்டும், ஆனால் எந்த மைவிழியாளிடமும் மன்னன் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பது ரிஷ்லுவின் எண்ணம். மனத்துக்கு மகிழ்ச்சியே கிடைக்காவிட்டால் மன்னன், காரணமற்ற கோபம், சிரிப்பு, சோகம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டுவிடுவான். - அதுவும் தொல்லையாகிவிடும். ஒருவேளை, பொழுது போக்கே இல்லாத நிலையில் ஆட்சிக் காரியங்களையே கவனிக்கத் தொடங்கிவிடக் கூடும் - அது தொல்லை மட்டுமல்ல. ஆபத்துங்கூட! எனவே மன்னன், ஆடிப்பாடி மகிழவேண்டும், அதற்கு ஏற்ற அழகு மங்கையர் அவன் அருகில் இருக்க வேண்டும் - இந்த ஏற்பாடும் ரிஷ்லு கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு எவனாவது இந்தத் துறையில் ஈடுபட்டு, மன்னனிடம் தோழமையைப் பெற்றுவிடு வதும், பேராபத்தாகுமல்லவா!’
ரிஷ்லு, மன்னனுக்கு இந்த ஏற்பாடு செய்துதரக் கூடியவன் என்ற எண்ணம் பலமாக ஊரில் பரவி இருந்ததால், கதைகள் பல, அவன் காலத்திலும், பிற்காலத்திலும் கட்டிவிடப்பட்டன. நடிகை ஒருவத்தியைச் சீமாட்டி வேடமிட்டு மன்னனைச் சொக்கச் செய்யும் ஏற்பாடு செய்தான் ரிஷ்லு, என்ற கதைபோல் பலப்பல, இதனினும் மோசமான கதைகள் கட்டிவிடப்பட்டன - மக்கள் அவற்றை விரும்பிக் கேட்டனர். சந்தேகமின்றி ஏற்றுக் கொண்டனர். டுமாஸ், ஹ்யூகோ எனும் கதாசிரியர்கள், ரிஷ்லுவைக் குறித்தும் அவன் கால நிகழ்ச்சிகளைப் பின்னியும் வகை வகையான கதைகள் தீட்டினர். அவற்றை வரலாற்றுச் சம்பவங்களுக்கு ஒப்ப மதிப்பளித்து மக்கள் வரவேற்றனர். ரிஷ்லுமீது மக்களின் வெறுப்புணர்ச்சி ஏறியவண்ணம் இருந்தது.

மேரியை ரிஷ்லு அடியோடு மறந்தே விட்டான் - அலட்சியப்படுத்தினான். அவள் சகாப்தம் முடிந்துவிட்டது என்று தீர்மானித்தான். மன்னன், தன் சொற்கேட்டு ஆடும் போது, மேரியின் ஆதரவு ஏன்! மேரியோ, மன்னனைப் போல, ஒதுங்கி இருப்பவளல்ல, அதிகாரத்தில் ஆவல் உள்ளவள். எனவே அவளை அருகே இருக்க விடலாகாது.

பிரபுக்கள் பீதிகொண்டு ஒதுங்கிக் கொண்டனர். மேரி விரட்டப்பட்டுவிட்டாள்; மன்னனின் இளவல் தலையில் தட்டி உட்காரவைக்கப்பட்டான்; ஆன் காதலறியாது கண்ணீர் பொழிந்தபடி கிடந்தாள்!
அரச குடும்பத்தை இந்த நிலையில் வைத்துவிட்டு, ரிஷ்லு, தன் ஆதிக்கத்தை உச்சநிலைக்குக் கொண்டு சேர்த்தான்.

கத்தோலிக்கர்கள் ரிஷ்லுவின் உயர்வுகேட்டு, மகிழ்ந்தனர், இனிப் பிரான்சில், ஐரோப்பா முழுவதும் கத்தோலிக்க மார்க்கம் நல்ல நிலைமை பெறும் என்று நம்பினர். பேரவையில் ரிஷ்லு இடம் பெற்றதே கத்தோலிக்கரின் ஆதரவினால்தான். எனவே, ரிஷ்லு தங்கள் மார்க்கத்துக்கு அரண் அமைப்பான் என்று எண்ணினர்.

மதத்துறை அலுவலர்களே இனி, ஆட்சியிலே தங்களுக்கு ஆதிக்கம் சிறக்கும், செல்வாக்கு வளரும் என்று நம்பினர். ரிஷ்லுவின் மார்க்க ஏடு அவர்களை மகிழ்வடையச் செய்தது. ஆட்சியிலே இடம் கிடைத்துவிட்டால் இனி ரிஷ்லு, அந்த வாய்ப்பைக் கொண்டு, மார்க்கத்தை மேம்பாட்டையச் செய்யவும், மதத் துறையினருக்கு, செல்வாக்கு மிகுந்திடச் செய்யவும் பாடுபடுவார் என்று எண்ணினர்.

அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. ரிஷ்லு பொதுவாக மார்க்கத்தை, சிறப்பாகக் கத்தோலிக்க மார்க்கத்தை மேன்மை அடையச் செய்யவேண்டும், என்பதை நோக்கமாகக் கொண்டில்லை, ஜோசப் பாதிரியாருக்கு, ரிஷ்லுவுக்குக் கிடைத்த வாய்ப்புத் தரப்பட்டிருந்தால், முடிகிறதோ இல்லையோ, அந்த நோக்குடன் பணியாற்றி இருப்பார். ரிஷ்லு அப்படிப்பட்ட எண்ணம் படைத்தவனல்ல.

மார்க்கத் துறையில் இடம்பெற்று, புகழ்பெற்று, அதன் மூலம் ஆட்சித் துறையிலே ஆதிக்கம் பெற வேண்டும் என்பது தான் ரிஷ்லுவின் திட்டம். ஒவ்வொரு சம்பவமும், ஆதிக்கம் பெற வழிகோலவேண்டும் என்பது ரிஷ்லுவின் எண்ணம். கலம் ஏறிச் செல்வது கடற்காட்சி காணவா! வேறு பொருள் நாடியோ, வேறு இடம் தேடியோ தானே! அதே போலத்தான், ரிஷ்லுவுக்கு, மார்க்கம் ஒரு கலம் - கருவி.

முதல் பேரவைக் கூட்டத்திலே ரிஷ்லு, மதத்துறையினர் சார்பில் முழக்கமிட்டார். உண்மை! ஆட்சியாளர்கள், மதத்துறை யினருக்குத் தக்க இடமளிக்க வேண்டும், அவர்தம் துணையை நாடிப்பெற்று, ஆட்சியைப் புனிதப் படுத்த வேண்டும், என்றெல்லாம் பேசினார். மார்க்கத்துறையினர் மகிழ்ந்தனர், நிமிர்ந்து நடந்தனர்! அப்போது ரிஷ்லு, லூகான் நகர தேவாலய அதிபர்! இப்போது? ஈடு எதிர்ப்பற்ற முதலமைச்சர்!! இந்த வித்தியாசத்தை மற்றவர்கள் உணரவில்லை! ரிஷ்லு இதனை மறக்கவில்லை. ஜெபமாலை தாங்கும் கரம் இப்போது பிரான்சை ஆட்டிப் படைக்கும் கரமாகிவிட்டது! ரிஷ்லுவின் கோபம், எவரையும் பிணமாக்கும், நேசம், செல்வத்தை, செல்வாக்கை பொழியச் செய்யும்! அன்று பேரவையிலே பண்டார ரிஷ்லு பேசியதை, இன்று பட்டத்தரசனைப் பதுமையாக்கி, அரசியல் ஆதிக்கம் நடாத்தும் முதலமைச்சர் ரிஷ்லுவுக்குக் கவனப்படுத்துவதா? என்ன மந்தமதி! அவர்கள் கண்டார்களா, ரிஷ்லுவின் இத்தகைய மனப்போக்கை. அவர்கள் எண்ணிக் கொண்டது. ஒரு சிறந்த கொள்கைக்காக, உத்தம நோக்கத்துக்காக, ஏசுவுக்காக, அரசியல் ஆதிக்கத்தை ரிஷ்லு பயன்படுத்துவார் என்று!

ரிஷ்லு, கொள்கையை முன்னால் வைத்து, கோட்டையைப் பிடிக்கவில்லை. ஒரு முதலமைச்சரின் கொள்கை ‘காவி கமண்டலங்களை’க் கொலுமண்டபத்துக்குக் கொண்டு வந்து, பாதபூஜை செய்வதாகவா இருக்க முடியும்! மற்ற அமைச்சர்கள், கைகட்டி வாய்பொத்தி நிற்க, அதிகாரிகள் குற்றேவல் புரிய, நீதி மன்றங்கள் குறிப்பறிந்து தீர்ப்பளிக்க, படைவீரர்கள் பகைவர் மீது பாய, ஆட்சிபுரிவது! ஏன் இந்தப் பூஜாரிகளுக்கு இது புரியவில்லை - என்று எண்ணினான் ரிஷ்லு! அவர்களின் கோபத்தை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை.

அவர்களின் கோபத்தை மட்டுமா, அவர்களின் ‘கண் கண்ட தெய்வம்’ போப்பாண்டவரின், கோபத்தையே பொருட் படுத்தவில்லை.
-------------
அரசாண்ட ஆண்டி (6)

வெளிநாட்டு நடவடிக்கை ஒன்றின்போது, போப் விரும்பாத காரியத்தை ரிஷ்லு துணிந்து செய்தார். அவருடைய செல்வாக்கு நிரம்பிய இடத்தைப் படை கொண்டு தாக்கி, அவர் வசமிருந்து இடத்தை விடுவித்தார்! அந்தப் படையும், பிரான்சு நாட்டுடையது அல்ல, பிரடெஸ்ட்டென்டுக்காரருடையது! அந்தப் படையை ஏவியதுடன், அதற்குப் பண உதவிசெய்து, போர் மூட்டி வெற்றியும் கண்டார் - போப் வெகுண்டார், நமது ஆசியைக் கோரி நின்றவன் செயலா இது என்று பதைபதைத்தார். கார்டினல் ரிஷ்லுவா இப்படிக் கத்தோலிக்க உலகத்தின் தலைவரைத் துச்சமாக எண்ணி எதிர்ப்பது என்று கேட்டார் ரிஷ்லு, கார்டினல் என்ற முறையில் போப்பாண்டவருக்கு அடக்கம், ஆனால், முதலமைச்சர் என்ற நிலையில் போப்பாண்டவர் குறுக்கிட்டாலும், அரசுக்காக, பிரான்சுக்காக, கடமையைச் செய்தாக வேண்டும், என்று பதிலளித்தார் ரிஷ்லு.

கத்தோலிக்கர்களைக் கசப்படையச் செய்ததால், பிராடெஸ்ட்டென்டுகளிடம் கண்ணியமாக நடந்து கொண்டார் போலும் என்று எண்ணிடத் தோன்றும், அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

ஹ்யூஜிநாட் என்றழைக்கப்படும் - பிராடெஸ்ட்டென்ட் மக்கள், பிரான்சில் ஒரு பகுதியில், மிக்க செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். அரசுக்குள் அரசுபோல், அவர்கள் தனிக்கோட்டைகள், தனிப்படைகள், தனி நகர ஆட்சிகள் அமைத்து கொண்டு வாழ்ந்தனர் ஒப்புக்கு, பிரான்சு மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.

இந்த நிலைமையை ரிஷ்லு எதிர்த்தார். பிராடெஸ்ட்டென்டுகளின் கோட்டை ஊரான லாரோகேல் என்னும் இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கி, சின்னபின்னமாக்கினார். அந்தப் போரின்போது கார்டினல் ரிஷ்லு இரத்த வெறி கொண்டலையும் இராணுவத் தலைவனாகக் காட்சி தந்தது கண்டு, இவரா, அறநூற்களைப் படித்தவர், ஐயன் அடியராக இருந்தவர், என்று எவரும் கேட்டிருப்பர்.

லாரோகேல் கோட்டை முற்றுகையின்போது, ஆங்கில அரசு பிராடெஸ்ட்டென்டுகளுக்குத் துணை புரிவதாக வாக்களித்தது - ஓரளவு உதவிபுரிந்தது - உதவிக்கு வந்த கப்பற் படையை ரிஷ்லு முறியடித்து. லாரோகேல் கோட்டையை வளைத்துக் கொண்டான். சொல்லொணாக் கஷ்டப்பட்டனர் பிராடெஸ்ட்டென்டுகள். பட்டினி, ரிஷ்லுவின் படையைவிடக் கொடுமை விளைவித்தது. புல் பூண்டுகளும் கிடைக்கவில்லை. செருப்புத் தோலைக்கூட வேக வைத்துத் தின்றார்களாம் - அந்த வீரமக்கள் எலும்புந்தோலுமாயினர் - நோய் சூறையாடிற்று - முதியவர்கள் மாண்டனர். குழந்தைகள் இறந்தன. கொடுமையின் விளைவு சொல்லுந்தரத்தன்று. பணிதவன்றி வேறு வழி இல்லை, பணிந்தனர் - ரிஷ்லு, வெற்றிப்பவனி நடத்தினான் வீழ்ந்துபட்ட மக்களின் கோட்டை ஊரில்; கோட்டை இடித்துத் தள்ளப்பட்டது. கொடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. உரிமை பறிக்கப்பட்டது - மார்க்கம் எப்படியோ இருக்கட்டும். தொழுகை உமது இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். ஆனால், படை, கொடி, கோட்டை என்று கனவிலும் எண்ணாதீர் என்று உத்தரவிட்டான் ரிஷ்லு. லாரோகேல் கோட்டையைப் பிடிக்க நடத்தப்பட்ட போரின்போது, ரிஷ்லுவின் இதயம், எவ்வளவு கொடுமைகளையும் துணிவுடன் கக்கக்கூடியது என்பது வெளிப்பட்டது.

கத்தோலிக்கரைக் கைகழுவிட்டபோதும் சரி, பிரா டெஸ்ட்டென்டுகளைப் பதறப்பதற அடித்தழித்தபோதும் சரி, ரிஷ்லுவின் எண்ணம், மார்க்கக் கொள்கையின் பாற்பட்டதல்ல, ஆதிக்கம் ஒன்றுதான் குறிக்கோள். ரிஷ்லுவின் மொழியில் கூறுவதானால், எல்லா நடவடிக்கையும் அரசுக்காக! பிரான்சுக்காக!

பொன் வேலைப்பாடுள்ள மங்கல் நிற உடை, மார்பிலே நீல நிறக் கவசம், தலையிலே தொப்பி, தொப்பியில் பறவை இறகு, அலங்காரத்துக்கு இடையே உடைவாள், கையிலே பிரம்பு - இது ரிஷ்லு, லாரோகேல் கோட்டைப் போரின்போது. கார்டினல் உடை, களத்துக்கு ஆகாது என்று களைந்துவிட்டு, போர்வீரர்கள் மத்தியில், போர் வீரன் போலவே உலவினான். கார்டினல், கர்த்தரிடம் ஜெபம் செய்து அருள் பெற்று வெற்றியை நாடவில்லை - அது நடவாது என்பது ரிஷ்லுவுக்குத் தெரியும். களம் சென்று, இப்படித் தாக்குக, இப்புறம் பாய்க! என்று இராணுவ முறை கூறிவந்தான். வாலிப வயதில் இராணுவக் கல்லூரியில் கற்ற பாடங்களைப் பயன்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

லாரோகேல் போரிலே பெருமிதமான வெற்றி கிடைத்ததற்குக் காரணம், ரிஷ்லுவின் திட்டம் மட்டுமல்ல, பிரெஞ்சு படையினர் காட்டிய வீரமும் ஒரு முக்கிய காரணம்; அந்த வீராவேசத்துக்கு காரணம், மன்னன் ஊட்டிய உற்சாகம். மன்னனுக்கு இந்தப் போரிலே உற்சாகம் அதிகமாக இருந்த
தற்குக் காரணம், லாரோகேல் கோட்டையினருக்குத் துணைபுரிய வந்த ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமை தாங்கி, பக்கிங்காம் பிரபு வந்தது! அதற்குக் காரணம், ஓர் அரண்மனைச் சம்பவம்!
ஒயில்மிக்கவன், பக்கிங்காம் பிரபு!

ஆங்கில நாட்டுச் சீமான், அரசனுடைய ஆதரவு நிரம்பப் பெற்றவன். அழகு கண்டால், ரசிகனாகிவிடுவான் - ரசிகனானதும், ரசாபாசம் நேரிடும்! களியாட்டத்தில் விருப்பமுடையவன் - கண்டதும் காதல் கொள்பவன் மட்டுமல்ல, எந்தக் கட்டழகியும், தன் கண் தொட்டால் பணிந்து விடுவாள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அலங்காரமான உடை, ஆளை மயக்கும் பேச்சு அளவற்ற துணிச்சல்.

லூயி மன்னனுடைய உடன் பிறந்தாள், ஹெனி ரிட்டா, இங்கிலாந்து மன்னன் சார்லசுக்கு மனைவியானாள்.

ஹெனிரிட்டாவை, இங்கிலாந்து அழைத்துச் செல்லும் உயர் தனிக் கௌரவம், பக்கிங்காம் பிரபுவுக்குத் தரப்பட்டிருந்தது. பாரிஸ் வந்தான், அரண்மனையில் தங்கினான், மாடப்புறாவைக் கண்டான். மையல்கொண்டான் நிராகரிக்கப்பட்ட அழகி, நிம்மதியற்ற நங்கை, ஆன், அவன் கண்ணில் தட்டுப்பட்டுவிட்டாள்! போதாதா!! மன்னனோ அவளிடம் முகங்கொடுத்துப் பேசுவதில்லை மங்கையோ, வாடா மல்லிகை என மணம் வீச இருக்கிறாள். ஆரத்தழுவும் உரிமை கொண்டோன் அலட்சியப் படுத்திவிட்டான். ஆரணங்கு, படரும் கொழுகொம்பற்ற கொடியெனத் துவள்கிறாள். கண்களிலே ஏக்கம் இருப்பதும், கவர்ச்சியை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. பக்கிங்காம், தீர்மானித்து விட்டான். ஆன் அரசியை இன்பபுரி அழைத்துச் செல்வது என்று.

பச்சை மயில் பாங்குடன் உலவுகிறது - பார்த்து ரசிக்கும் நிலையிலும் மன்னன் இல்லை! வலைவீசத் துணிந்து விட்டான், பக்கிங்காம்.

தனியே ஒரு நாள், ஆன், அரண்மனைத் தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தாள் - உல்லாச புருஷன் அங்குச் சென்றான் - காதலைப் பொழிந்தான் பார்வையால், திடுக்கிட்ட மங்கையை நெருங்கினான். கரம்பற்றினான், இன்ப அணைப்பு, அவளுக்கு இதயத் துடிப்பு, எதிர்பாராச் சம்பவம், எனவே இளமங்கை, அலறிவிட்டாள் - தன்னை விடுவித்துக் கொண்டபடி. ஆன் அலறிய குரல் கேட்டு அணங்குகள் ஓடிவந்தனர்.

“அரசியாரே! அலறினீர்களா.”

“யார்? நானா! அலறினேனா?”

“குரல் கேட்டதே!”

“ஆமாம் - செல்வோம்”

எப்படிச் சொல்வாள் நடந்ததை - சாகசக் கள்ளன், சமயம் சரியில்லை, பழம் நழுவிவிட்டது, என்று எண்ணிச் சென்றான்.

நாட்டுக்கு அரசி நாயகன் இளைஞன்! அரண்மனைத் தோட்டம்! அயல்நாட்டான், அணைக்க வருகிறான்! - என்ன அக்கிரமம் - எவ்வளவு துணிவு! என்கதி இதுதானா! - என்று ஆன் எண்ணாமலிருக்க முடியுமா, தனி அறை சென்றான் - மன அதிர்ச்சி குறையுமா! பயம் - பயத்தின் ஊடே கோபம் - இந்த இரு உணர்ச்சிகள் மட்டுந்தானா, இவற்றை விரட்டிய வண்ணம், ஆவல்!

எவ்வளவு துணிவு! என்ன அக்கிரமம்... என்று குமுறிய நெஞ்சம், மெல்ல மெல்ல, எவ்வளவு ஆவல்! என்ன காதல்!! என்று எண்ணலாயிற்று.

தலைபோகும் காரியமாயிற்றே, என்பது தெரியாதா - தகாத காரியம் என்பதும் தெரியாதா - தெரிந்தும், ஏன், அவன் என்னைக் கரம்பிடித்திழுத்தான்! அவ்வளவு காதல்!! துணிந்து செய்தான்! அணைத்துக் கொண்டானே, என்னை - நான் விடுவித்துக் கொள்ளாதிருந்தால்?... செச்சே! கெட்டவன், போக்கிரி, எதுவும் செய்வான் அவன். ஆமாம்! காதலால் தாக்கப் பட்டவர்களுக்குத்தான் கண் தெரியாதாமே!... அவன் அணைத்துக் கொண்டபோது என் உள்ளம் எவ்வளவு பதறிற்று - உடல் மட்டும் ஏனோ பதறவில்லை - ஏனோவா? - அவன்தான் ஆரத்தழுவிக் கொண்டானே! ஆன் அரசியின் உள்ளம் எதைத் தான் தள்ளும். கண்ணைத் திறந்தபடி இருந்தாலும் மூடினாலும், தனி அறையில் இருந்தாலும், சேடியருடன் இருந்தாலும், இசை கேட்டுப் பொழுது போக்கினாலும், வானத்தைக் கண்டு மகிழ முயன்றாலும், அவனல்லவா வந்துவிடுகிறான்! ஆரத் தழுவுகிறான்!! ஆரூயிரே!! என்கிறான். இது நாள்வரை கேட்டறியாத கீதம் உணர்ந்தறியாத இன்பம்! பொல்லாதவன், நல்ல உள்ளத்தைக் கெடுத்தே விடுவான் போலிருக்கிறதே - எங்கே அவன் இப்போது - என்ன செய்கிறான் - மறுத்தேன் என்பதால் மருண்டோடி விட்டானா - அதே மலர்த்தோட்டத்திலே உலவுகிறானா - நான் வருவேன் என்றா - பேதை உள்ளம் என்னவெல்லாமோ எண்ணிற்று. அவன் வென்று விட்டான் - அவள் பணிந்து விட்டாள். உள்ளம் பணிந்து விட்டது. உடனிருந்த தோழி, அவள் உள்ளமறிந்து, பக்குவமாகப் பாகுமொழி பேசினாள். பிரபு அழைக்கப்பட்டான் - மஞ்சத்துக்கு! கொஞ்சு மொழி பேசினான்! அவள் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறாள் - அவள் கீழே முழங்காற்படியிட்டபடி, மயக்க மொழி பேசுகிறான்! அவன் இருக்கும் இடத்தில், நிலையில் மன்னன் மட்டும் இருந்தால்! மன்னனா! அவனா என் மணாளன்? ரிஷ்லுவின் அடிமைக்கு ஒரு மங்கையின் உள்ளத்துக்கு இன்பமூட்டும் பண்புமா இருக்கும். என்னைப் பட்டினி போட அல்லவா, இந்த அரண்மனையில் சிறை வைத்தான் - இதோ வந்திருக்கிறான் வீரன், விடுதலை கிடைக்கும், வாழ்வு கிடைக்கும்! ஆன் எண்ணாத எண்ணமில்லை.

விருந்து கிடைத்தது பிரபுவுக்கு! என்கிறார்கள் - இல்லை என்றும் கூறுகிறார்கள். பக்கிங்காம் - ஆன் காதலாட்டம் பற்றிய பேச்சு, அரண்மனையில் மட்டுமல்ல, மாளிகைகளிலே, கடை வீதிகளிலே, பிரான்சிலே மட்டுமல்ல, இங்கிலாந்திலே உல்லாச உலகெங்கும் கிளம்பிற்று.

அந்தப் பக்கிங்காம், நூறு கப்பல்களுக்குத் தலைவனாக வருகிறான். லாரோகேல் கோட்டையினருக்குத் துணை புரிய! பிரெஞ்சு மன்னன், அவனுடைய முயற்சியை முறியடிக்க வேண்டுமென்பதிலே அளவற்ற ஆர்வம் கொண்டதிலே ஆச்சரியம் என்ன!

பக்கிங்காம், காதலில் பெற்றிருந்த திறமையின் அளவுக்குப் போரிலே பெற்றிருந்து, லாரோகேல் கோட்டைப் போரில், பிரெஞ்சு மன்னனை முறியடித்திருந்தால்? ஏதேதோ நடைபெற்றிருக்கும். அலங்காரக் கப்பலொன்றிலே, அணங்குகள் ஆடிப்பட, மகிழ்வோடு அவர் நடுவே ஆன் வீற்றிருக்க, பக்கிங்காம் காதல் பொழியும் கண்களுடன் அவளைக் கண்டவண்ணம், இங்கிலாந்துக்குப் பயணமே செய்திருக்கக் கூடும். அந்நாள், அரச குடும்பங்களிலும், பிரபு குடும்பங்
களிலும், இத்தகைய சுவைக்கு, அளவும், வகையுமா இருந்தது! கணக்கில்லை!!

பிராடெஸ்டென்டுகளை எதிர்த்து நடத்தப்படும் போர் இது; புனிதப்போர்! - என்று பேசி, கத்தோலிக்கர் மனத்தில் கனலை மூட்டிவிட முடிந்தது ரிஷ்லுவால்! கத்தோலிக்கருக்கு நீ செய்த நன்மை என்ன? காட்டிய சலுகை யாது? என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் பிராடஸ்டெண்டுகளை அழித்திடப் போரிடுவது ஐயன் அருளுக்குப் பாத்திரமாகும்வழி என்று கருதினர்; மடாலயங்கள் போர்ச் செலவுக்குப் பொருளை அள்ளிக் கொடுத்தன; இந்தப் புனிதப் போரிலே ஈடுபடுவோரின் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடும் என்று போப்பாண்டவரின் ஸ்ரீமுகம் பிறந்தது; ரிஷ்லு, களிப்புடன் களம் புகுந்து காரியத்தைக் கவனிக்கலானார், போர் வீரன் உடையில்!

கத்தோலிக்க மார்க்கப் போதகர், பிராடெஸ்டெண்டு தத்துவத்தைக் கண்டதுண்டமாக்கியவர், ரிஷ்லு, இவர் தொடுக்கும் இந்தப் புனிதப் போர், முதல் கட்டம், இதிலே கிடைக்கும் வெற்றி, வேறு பல வெற்றிகளுக்கு வழி செய்யும். ஐரோப்பாவில், பிராடெஸ்டெண்டு பூண்டே இல்லாது ஒழித்துக் கட்டப் போகிறார் என்று கத்தோலிக்கர் எண்ணிக்கொண்டனர்; ரிஷ்லு இதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார்; மந்த மதியினர் அவருடைய உண்மையான நோக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை; கத்தோலிக்க மார்க்க ரட்சகர், என்று அவர்கள் ரிஷ்லுவைக் கொண்டாடினர். அவருடைய நோக்கம், கத்தோலிக்கரின் செல்வாக்கை வளர்த்திட பிராடெஸ்டென்டுகளை ஒழித்திடவேண்டும் என்பதல்ல, ஆட்சியைத் தன் முன்னின்று நடத்திச் செல்லும்போது, பிரான்சிலே ஒரு பகுதியினர், அடங்க மறுப்பதா! என்ன துணிவு! இவர்களை ஒழித்துக் கட்டாவிட்டால், நம் மதிப்பு என்ன ஆவது! - இது ரிஷ்லுவின் எண்ணம்.

பதினைந்து திங்கள் முற்றுகை! உள்ளே ஒரு பொருளும் போக முடியாது! பட்டினி போட்டுச் சாகடிக்கும் முறையிலே. போர் இருந்தது! சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனர்! தன்மானம், நிமிர்ந்து நிற்கச் சொல்கிறது, பசியோ, பணிந்துவிடு! என்று தூண்டுகிறது! உள்ளே இப்படி அடைபட்டுச் சாவதைவிட, போரிலே, தாக்கி, தாக்குண்டு இறந்துபடுவது எவ்வளவோ மேலாக இருக்குமே என்று எண்ணினர் அந்த மக்கள். பழைய செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத் தின்றனராம், எலும்புத் தோலுமாகிப் போன நிலையில்! இந்த அவதி பற்றி, லூகான் ஆலய அதிகாரியாக இருந்த ரிஷ்லுவுக்குத் துளியேனும் இரக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! உள்ளே அல்லல் அதிகமாகி
விட்டது. அவதிப்படுகிறார்கள் என்று சேதி கிடைத்ததும், அவருடைய உள்ளம், சரி! பயல்கள் இன்னும் சில நாட்களில் பணிந்துவிடுவார்கள்! நாம் மேலும் ஓர் வெற்றி பெறுவோம், நமது புகழொளி பரவும் என்று எண்ணி மகிழ்ந்தார்.

ஆஸ்திரிய அரச குடும்பத்தின் செல்வாக்கைக் குலைக்கும் திட்டம் ரிஷ்லுவுக்கு உண்டு. இதற்காகச் சமர் நடத்தினான், வெற்றி கிடைத்தது. சவாய் பரம்பரைக்கும், ரிஷ்லுவின் போக்கினால் கஷ்டம், நஷ்டம். இவற்றின் பயனாகப் பிரெஞ்சு மக்களுக்கு ஏதேனும் நலன் கிடைத்தா என்றால், இல்லை; ரிஷ்லுவின் கண்களுக்கு மக்கள் தெரியவுமில்லை.
ரிஷ்லுவின் நிலை உயர உயர, பகையும் வளரத்தான் செய்தது - ஒவ்வொரு பகையையும் பயங்கரமான முறையிலே முறியடித்து வந்தான். ஒற்றர்கள், அவனுக்குக் கண்கள், காதுகள்! எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்; எனவே ரிஷ்லு. ஆயுதம் தரித்த காவலாட்களினின்றி வெளியே செல்வதில்லை. எந்த மாளிகையிலே பேசப்படும் விஷயமும், ரிஷ்லுவுக்கு எட்டிவிடும். எனவே, முன்னேற்பாடுகள் செய்வது எளிதாகவும் வெற்றிகரமாகவும் முடிந்தது, இவற்றுக்காகப் பெரும் செலவு - அரசாங்கப் பணத்திலிருந்து, அரசுக்காக பிரான்சுக்காக! என்ற மந்திரச் சொல்லைக் கூறியபடி, மட்டற்ற கொடுமைகளைச் செய்துவந்த ரிஷ்லு, அரசனையும் மிஞ்சக் கூடிய செல்வம் சேகரித்துக் கொண்டான். ஏழைக் கோவிலுக்குப் பூஜாரியாக இருந்துவந்த ரிஷ்லுவிடம் ஏராளமான செல்வம், இணையற்ற மாளிகை. ஆடம்பரமான வண்டி வாகனங்கள், காலாட்படை, குதிரைப் படை! பாடகர்கள்! பணியாட்கள்! உறவினர்களுக்கு உயர் பதவி தரக் கூசவில்லை. ஊரார் பார்த்து, இவ்வளவு செல்வம் எப்படிக் கிடைத்தது. என்று கேட்பார்களே என்று எண்ணவுமில்லை. பொன் அவன் காலடியிலே வந்து வீழ்ந்தது! நாடோ, ஏழ்மைப் படுகையிலேயே இருந்தது.

மன்னன் சிரித்தால், உடன் சிரிக்க வேண்டும், சோகமாக இருந்தால் சோகமடையவேண்டும். பேசுவதை கேட்டுக் கொள்ளவேண்டும். ஆர்வம் அதிகம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும் - இவ்வளவுதான் மன்னன் தன்னுடன் பழகிய பாவையிடம் விரும்பியது.

பாரிஸ் நகரிலேயே நிகரற்ற அழகி என்று புகழப் பட்ட ஹாடிபோர்ட் என்பாளிடமானாலும் அவளிடம் மனத்தாங்கல் கொண்டபோது கிடைத்த பாயேடி என்பவளானாலும், எந்த மங்கையிடமும், மன்னன் பழகியது இந்த முறையிலேதான். ரிஷ்லுவுக்கு இதிலே மிகுந்த திருப்தி. கெண்டை விழி மாதரிடம் மன்னன் மற்றவர்கள் போலப் பழகிவிட்டால், ஆபத்தல்லவா!
இந்த ஹடிபோர்ட், பாயேடி, எனும் இருவருமே, ரிஷ்லுவின் போக்கை உணர்ந்தனர் - வெறுத்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, ரிஷ்லுதான் வெறுப்பை மூட்டிவிட்டான் என்று கண்டித்தனர். தங்களிடம் பழகுவதால், தாங்களே மன்னனிடம் மெல்ல மெல்ல உண்மையைச் சொல்லலாம், ஆன் நல்ல நிலைமைக்கு வர உதவி புரியலாம் என்று முயன்றனர், முடியவில்லை.

ஹாடிபோர்ட், ஆன் சார்பாக மன்னனிடம் பேசத் தொடங்கியதும், மன்னன் கோபங்கொண்டு, அவளை விட்டு விலகினான். பிறகு, ஜோசப் பாதிரியின் உறவினளான, அந்த மங்கை, ரிஷ்லுவுக்கு விரோதமாக மன்னனைத் திருப்ப முயன்றாள். பலிக்கவில்லை. அந்த மங்கையைக் கொண்டு மன்னனைத் தங்கள் வலைக்குள் போடலாம் என்று சிலர் முயன்றபோது, அவள் அதற்குள் இடம் தராமல், கன்னி மாடம் சேர்ந்துவிட்டாள். அவள் கன்னிமாடம் சேர்ந்தபிறகு கூட, மன்னன் அங்குச் சென்று, மணிக்கணக்காக அவளிடம் பேசிக் கொண்டிருப்பானாம். அப்போதும் அந்தப்பாவை, ரிஷ்லுவின் பிடியிலிருந்து மன்னன் விடுபடவேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தாளாம் - இதனால் வெறுப்படைந்த மன்னன், கன்னிமாடம் செல்வதையே நிறுத்திக் கொண்டானாம். ரிஷ்லுவுக்கு எதிராக எவரேனும் ஏதேனும் சொன்னாலும், கேட்பதற்கு மன்னன் விரும்புவதில்லை. அவ்வளவு பற்று ஏற்பட்டுவிட்டது. ரிஷ்லுவுக்கு இந்தத் துணை இருக்குமட்டும் மற்றவர்களைப் பற்றிக் கவலை என்ன! மேரி அம்மையை அறவே புறக்கணித்தான் - அம்மையின் மனத்திலேயோ, பகை முழு வடிவெடுத்தது. சமயம் வரவில்லை.
-----------
அரசாண்ட ஆண்டி (7)

மன்னன், ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான் - ஆபத்தான நிலைமை - மருத்துவர்களே, கடினம் என்று கூறிவிட்டனர். மகன் மரணப் படுக்கையில், அன்னைக்கு அகமகிழ்ச்சி! மகனிடம் கொண்ட வெறுப்பாலா? அது காரணமல்ல. எவ்வளவு வெறுப்பு இருப்பினும், பாசம் விடுமா, மகனை இழக்கத் தாய் விரும்புவாளா? காரணம், வேறு. மன்னன் இறந்துவிட்டால், ரிஷ்லுவைத் தொலைத்து விடலாம் என்ற எண்ணம், அகமகிழ்ச்சியைத் தந்தது. ரிஷ்லுவின் கொடுங்கோன்மைக்கு ஆளாகி அவதிப்பட்டவர்கள் அனைவருமே, இந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

மன்னன் இறந்ததும், ரிஷ்லுவை வெட்டிப் போடுவதா, நாட்டைவிட்டு விரட்டுவதா?

ரிஷ்லு தொலைந்ததும், யாரார் எந்தெந்தப் பதவி வகிப்பது!

இவையெல்லாம் கூடப் பேசப்பட்டனவாம்.

ரிஷ்லுவுக்கும் உள்ளூரப் பயம்தான்.

மன்னனோ அனைவரையும் ஏமாற்றிவிட்டான் - பிழைத்துக் கொண்டான். ரிஷ்லு, மகிழ்ந்தான் - சதிபேசியவர்கள் மீது பாய்ந்தான்.

மற்றோர் சமயத்தில், மன்னனுக்கும் மேரிக்கும் மிகுந்த நேசம் இருந்தது - மன்னனுக்குச் சரியான தூபமிட்டும், ரிஷ்லுவை விரட்டிவிடும்படி ஏவினார்கள் தாயார். தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்த தனி அறைக்குச் செல்லவும் ரிஷ்லுவுக்கு அனுமதி கிடையாது. ரிஷ்லுவுக்கு அச்சமாகிவிட்டது. எனினும், கடைசி நேரத்திலே மன்னன் ரிஷ்லுவைக் கைவிட மறுத்து

விட்டான். மேரி மனமுடைந்து, இனி நமது திட்டம் பலிக்காது என்று தெரிந்துகொண்டு ஓய்ந்தே போனாள்.

அவ்விதமான ‘பிடி இருந்தது ரிஷ்லுவுக்கு. மன்னனிடம்’.

எந்த மங்கையின் விழியும் மொழியும் மன்னனுக்கு மது ஆகிவிடுவதில்லை, என்பது ரிஷ்லுவுக்குத் தெரிந்திருந்த போதிலும், இலேசாக அச்சம் தட்டியபடி இருந்தது.

முன்னம் இரு மங்கையர் மன்னன் மனத்தைக் கெடுக்க முயன்ற சம்பவம். இந்த அச்சத்தை வளர்த்தது. எனவே, மன்னனைப் பெண்களுடன் பழகவிடுவது, எப்போதாவது ஆபத்தாக முடிந்து விடக்கூடும் என்று எண்ணினான் ரிஷ்லு, ஆனால் மன்னன், தனியனாக எப்படி இருப்பான்; சோர்வு தட்டுமே! பொழுது போக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது!
பதினெட்டு வயது நிரம்பிய, பார்க்க இலட்சணமாக இருந்த பகட்டு வாலிபன் ஒருவன் கிடைத்தான் ரிஷ்லுவுக்கு. பெயர் சின்க் - மார்ஸ். இந்த இளைஞனை அரண்மனை உடை அதிகாரியாக ரிஷ்லு நியமித்தான். மன்னனுடன் பழக, சின்க் - மார்ஸ், எனவே அவனிடம் தாராளமாகப் பேசவும், தன் எண்ணங்களைத் தைரியமாக எடுத்துச் சொல்லவும் மன்னனுக்கு முடிந்தது - அதிலே ஓர் இன்பம் கண்டான். பெண்களுடன் பழகுவது கூடக் கூச்சமாக இருக்கிறது, இவனுடன் பேசுவதும் பழகுவதும் மகிழ்ச்சி தருகிறது என்று நினைத்தான் மன்னன்.

சின்க் - மார்ஸ், ஓர் அசடன். ரிஷ்லுவிடமிருந்து மன்னனைப் பிரித்துவிட முடியும், மன்னனைத் தன் விருப்பப்படி ஆட்டிவைக்க முடியும் என்று எண்ணினான். சதி புரிவோர், அவனைப் பயன்படுத்திக் கொண்டனர். மன்னனின் தம்பி, காஸ்டனும் உடந்தை.

அதுபோது, ரிஷ்லு, ஸ்பெயின் மீது போர் தொடுத்திருந்தான்.

உடலிலேயோ புண் - சீழ் வடிந்து கொண்டிருந்தது - காய்ச்சல் குறையவில்லை - மருத்துவர் உடலிலிருந்து அடிக்கடி இரத்தத்தை வெளியிலே எடுத்தவண்ணம் இருந்தனர். நோயைக் குறைக்க. மரணப்பாதையிலே சென்று கொண்டிருக்கும் நேரம் அந்த நேரத்திலும், தன் ஆதிக்கத்தைக் குலைக்க ஒரு சதி நடக்கிறது என்று தெரிந்ததும், ரிஷ்லு சீறும் புலியானான். சதி
யிலே தேர்ந்தவர்களெல்லாம் சாய்ந்திருக்கும்போது, அலங்காரப் பொம்மை போன்ற சின்க் - மார்ஸ் எம்மாத்திரம். அவன் தன் திட்டம் வெற்றியாகப் போகிறது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். ரிஷ்லுவோ அவனைச் சிக்கவைக்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தான்.

சின்க் - மார்ஸ், மன்னனுடன உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். ரிஷ்லுவின் ஆள், மன்னனைத் தனியே கண்டு, ரிஷ்லு தந்த கடிதத்தைக் கொடுத்தான் - மறுகணம், சின்க் - மார்ஸ் அவன் ‘சகாக்களுடன், கைது செய்யப்படுவதற்கு, மன்னன் உத்தரவு பிறப்பித்தான்.

ஸ்பெயின் நாட்டுடன் கூடிக்கொண்டு பிரான்சுக்குத் துரோகம் செய்ய, சின்க் -மார்சும் அவன் துணைவர்களும் திட்டமிட்டனர் என்பதை விளக்கும், கடிதம், ரிஷ்லுவால் மன்னனுக்கு அனுப்பட்டது. சின்க் - மார்ஸ் கட்டிய மனக்கோட்டை தூள்தூளாயிற்று.

சின்க் - மார்சும் அவன் துணைவர்களும் தூக்கிலிடப் பட்டனர்.

ரிஷ்லுவுக்கு இதற்குமேல் ஆதிக்கம் செலுத்த உடல் இடம் தரவில்லை. எப்போதும் உடலைத் துளைத்துக் கொண்டிருந்த நோய், இப்போது உடலை அழுகவே செய்துவிட்டது. பிழைப்பது முடியாத காரியம் என்பது விளங்கிவிட்டது. நார்போன் எனும் நகர் சென்று, ரிஷ்லு, ‘உயில்’ எழுதிவைத்து விட்டான். மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது என்ற திருப்தி இருந்தது ரிஷ்லுவுக்கு.

நெடுநாட்களாக ரிஷ்லுவுக்கு இருந்து வந்த பயம், லூயி மன்னனுக்கு குழந்தையே பிறக்காததால், மன்னனுக்குப் பிறகு, காஸ்டன் என்னும் இளவல் மன்னனாவானே, என்பது. இந்தப் பயம், ஒழிந்துவிட்டது. நீண்டகாலமாக ஒதுக்கி வைத்திருந்த ஆன் அரசியிடம், மன்னன் எப்படியோ சமாதானமானான். 1638இல், ஓர் ஆண்மகவு பிறந்தது. அந்தச் ‘சேதியை முதலில் வந்து சொன்னவருக்கு, ரிஷ்லு வைரத்தால் செய்யப்பட்ட ரோஜா மலர் ஒன்று பரிசு தந்தானாம்.
மரணப் படுக்கையிலே ரிஷ்லு - மனக்கண்முன் என்ன தெரிகிறது!

ஈடு எதிர்ப்பற்ற ஆதிக்கம் செலுத்திய காட்சிகள்.

எவர் பேச்சுக்கும் இணங்காமல், தன்னிடம் கட்டுப் பட்டுள்ள மன்னன்.

மேரி - முயன்று பார்த்துத் தோற்று, மனம் உடைந்து அங்கும் இங்கும் அலைந்து மாண்டேபோனாள்.

காஸ்டன் - மன்னன் தம்பி, இனித் தனக்கும் அரச பதவிக்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்து விட்டதால், பெட்டியிலிட்ட பாம்புபோலாகிவிட்டான்.

எதிர்த்தவர்கள்? கல்லறையில்! ஜோசப் பாதிரியார்? நல்ல உழைப்பாளி. அவரும் மறைந்துவிட்டார்.

லூகான் நகர பழங் கட்டிடம், அதிலிருந்து புறப்பட்ட பயணம், பாரிஸ் போற்றும் மாளிகையிலே வந்து முடிந்தது.

ரிஷ்லுவின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலே, மகத்தான வெற்றி என்றுதான் கணக்கிடவேண்டும்.

போட்ட திட்டப்படி காரியம் நடந்தேறியது - ஓர் அரசை, தன் கரத்திலே வைத்து, விருப்பப்படி விளையாட முடிந்தது.

பிரபுக்கள் கொட்டமடங்கிவிட்டது. வெளிநாடுகளிலேயும் புகழ் பேசப்படுகிறது. இவை போதுமான சாதனைகள்தாம் என்ற மனத்திருப்தி நிச்சயமாக ரிஷ்லுவுக்கு ஏற்பட்டிருக்கும்.

1642ஆம் ஆண்டு, டிசம்பர் நாலாம் நாள் ‘ரிஷ்லு இறந்தான். அன்று மக்கள் மகிழ்ந்து பல்வேறு இடங்களில் ‘சொக்கப்பானை கொளுத்தினராம்!’

போப்பாண்டவர் இதைக் கேள்விப்பட்டதும், “ஆண்டவன் ஒருவர் இருந்தால், கார்டினல் ரிஷ்லு அவரிடம் பதில் சொல்லித் தீரவேண்டும். ஆண்டவன் இல்லை என்றால், அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான் என்றுதான் பொருள்படும்.” என்று கூறினாராம்.
எதையும் திட்டப்படி செய்யும் பழக்கமுள்ள ரிஷ்லு, தனக்குப் பிறகு, தன் ‘செல்வத்தை யாரார் எப்படி எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், திட்டமாக எழுதி வைத்து விட்டுத்தான் மரணத்தை நோக்கிப் பயணமானான்.

எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்பது, ரிஷ்லுவுக்கு இருந்துவந்த ஆவேசம் - அந்த ஆவேசத்தின் முன்பு, எந்தப் பண்பும் தலைகாட்டவில்லை.

தன்னைச் சுற்றிலும் பகைவர்கள் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டதால், யார் எதிர்ப்புக் குரல் கிளப்பினாலும், உடனே அவர்கள்மீது முழு பலத்துடன் பாய்ந்து தாக்கி அழித்துவிடுவதில், காட்டு மிருகத்தின் குணத்தையும் திறத்தையும் ரிஷ்லு பெற்றிருந்தான்.

எத்தகைய சந்தர்ப்பத்தையும் நிகழ்ச்சியையும் தன் ஆதிக்க நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதிலே, ரிஷ்லு காட்டிய ஆற்றல், வெகு சிலரிடமே காணமுடியும்.

ஆதிக்கம் தேடும்போது, ரிஷ்லு, இரை தேடும் புலி! மோப்பம் பிடித்தும், இரை தொலைவில் தெரிந்ததும், பாய்ந்து தாக்கியும், இரத்தத்தைக் குடிக்கும் புலிபோல், ஆதிக்கம் பெற வழி காண்பதிலும், கண்ட வழியில் பாய்ந்து செல்வதிலும், புலி போன்றிருந்தான் ரிஷ்லு.

இரை தேடி அலையும்போது, காட்டு மிருகம், வேறு எதனையும் பொருட்படுத்தாதல்லவா - அதே குணம் ரிஷ்லுவுக்கு இருந்தது.

ரிஷ்லு, சிறுவனாக இருந்தபோது, களைத்தும் இளைத்தும், இருமியும் நடுங்கிக் கொண்டும் இருந்தபோது, அன்புடன், அவனை வளர்த்த அருமைத் தாயார், பிணமாகி இருபத்தொரு நாட்களான பிறகே, ரிஷ்லு சவ அடக்கச் சடங்குக்குச் சென்றான். தாயார் இறந்துவிட்டார்கள். உடனே வருக! - சேதி கிடைக்கிறது - பதறவில்லை. பதைக்கவில்லை, பெற்ற தாயைக் காண ஓடவில்லை. சவ அடக்கம் செய்யவேண்டும். உடன் வருக! செல்லவில்லை!! நாலு நாட்களாகக் காத்துக் கிடக்கிறோம், தாங்கள் வந்துதான் சவ அடக்கம் நடைபெற வேண்டும். செல்லவில்லை. அவசரமான அலுவல் - இப்படி அப்படி அசையமுடியாது - தாய் இறந்தார்களா, தாங்கொணாத் துக்கம்தான், ஆனால் என் செய்வது, காரியம் இருக்கிறதே, முடிந்ததும் கடுகிச் செல்லலாம் - என்றுதான் எண்ணினான் ரிஷ்லு.

எப்படி மனம் இடங்கொடுத்தது என்றுதான் எவரும் கேட்பர். ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டது.

ஆட்சிக் குழுவிலே ரிஷ்லுவுக்குச் செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போதுதான் தாயார் இறந்த செய்தி வந்தது, இருபத்தோர் நாள் கழித்தே ஊர் சென்று, சவ அடக்கம் செய்தான் ரிஷ்லு.

ஊர் என்ன எண்ணும், என்ன சொல்லும் என்பது பற்றிப் பயப்படுவதில்லை.

பேரவைக் கூட்டத்திலே முதன்முதல் பேசியதும் பலரும் பாராட்டினர் - ரிஷ்லு அவ்வளவுடன் திருப்தி அடையவில்லை. அந்தச் சொற்பொழிவை அச்சிட்டு, எராளமாக வழங்கிட ஏற்பாடு செய்தான். எதையும் அரைகுறையாக விட்டுவைப்பது, ரிஷ்லுவின் முறையல்ல. பிரன்ச்கெஜட் எனும் பிரசார இதழைத் துவக்கி, திறமையான - ஆசிரியர் மூலம் நடத்தச் செய்து, அதன் மூலம் ரிஷ்லு, தன்னைப் பற்றியும் தன் ஆட்சி முறையைப் பற்றியும் பிரசாரம் செய்துவந்தான்.

காற்று இல்லை, வெளிச்சம் இல்லை, மலர் இல்லை, மகிழ்ச்சி இல்லை, வெள்ளிச் சாமான் இல்லை, பட்டு விரிப்பு இல்லை என்று ஆயாசப்படும் நிலையில், லூகான் நகர தேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு “அரசுக்காக! பிரான்சுக்காக” பணியாற்றிப் பெற்றநிலை எப்படி இருந்தது! மன்னனுக்கு, தன் உயிலின்படி 1,50,000 பவுன் வைத்திருந்தான்! இதை, மன்னர், பண நெருக்கடியின்போது உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்ற குறிப்புடன். மன்னனுக்குப் பணம் தந்துவிட்டுச் சாகும்நிலை இருந்தது ரிஷ்லுவுக்கு.

கார்டினல் அரண்மனை எனும் உயர்தர மாளிகை, வைரக் கற்கள் பதித்த தங்க ஆபரணம், வெள்ளிப் பேழைகள் ஆகியவற்றை மன்னனுக்குத் ‘தானம்’ தர முடிந்தது, ரிஷ்லுவால்.

நெருங்கிய உறவினர்களுக்கு ஏராளமான நிலபுலனும், தோட்டம் மாளிகையும், ஜெமீன்களும் இனாம்களும், பகிர்ந்தளித்தான்.

ரிஷ்லுவின் உயிலிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தைக் கவனிக்கும்போது, பிரான்சிலே இருந்து வந்த எந்தப் பரம்பரைச் சீமானுக்கும் இல்லாத அளவு சொத்து சேர்ந்தது என்பது விளக்கமாகிறது.

மன்னன் ரிஷ்லுவுக்கு, கொழுத்த வருமானமுள்ள தேவாலயங்களையும், ஜெமீன்களையும் வழங்கி இருந்தான்.

கார்டினல் பதவிமூலம் கிடைத்த வருமானம் சாமான்ய மானதல்ல.

நார்மண்டி பகுதியிலே ரிஷ்லுவுக்கு இருந்த பண்ணை மட்டும் ஆண்டுக்கு அரை இலட்சம் பவுன் வருமானம் அளித்தது. இதுபோல வளமான பண்ணைகள், பிரான்சிலே பல்வேறு இடங்களில் ஐந்து இருந்தன.

மேலும், அன்றைய ஆட்சி முறையின்படி, அரசாங்கக் காரியத்துக்காக வசூலிக்கப்படும் எல்லாத் தொகையிலும், ரிஷ்லு, ஒரு பகுதி சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. நமக்கு வேண்டியது இது, என்று ரிஷ்லு கண்ணியம் பேசவில்லை.

புகழ் எப்படிக் குவிந்ததோ, அதைவிட வேகமாகச் செல்வம் ரிஷ்லுவிடம் குவிந்தது.

வீடு வாசல் தோட்டம் துரவு எனும் அசையாப் பொருள் களை நீக்கி, பணமாகமட்டும், உயிலின்படி, உறவினர்களுக்கும் ஊழியர்களுக்குமாக ரிஷ்லு தந்த தொகை ஏறக்குறைய முப்பது இலட்சம் பிரöஞ்சு பவுன் என்றால் ரிஷ்லுவிடம் குவிந்திருந்த செல்வத்தின் அளவு எவ்வளவு என்பது ஒருவாறு விளங்கும்.

ஒவ்வோர் அரசியல் குழப்பமும் இலாபகரமான பதவியைத் தந்தவண்ணமிருந்தது, ரிஷ்லுவுக்கு.

மன்னனுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், ரிஷ்லுவுக்கு புதுப் பண்ணைகள் கிடைக்கும்.

பல பதவிகள் ஒரே காலத்தில் - ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வருமானம்! செல்வம் குன்றெனக் குவியத்தானே செய்யும்.

இவ்வளவு பெரும் பொருளைச் சேகரித்த ரிஷ்லு, வாழ்க்கையிலே ஆடம்பரமற்று, செலவின்றி இருந்தானோ எனில், அதுவுமில்லை; மாளிகைகள் பொறாமைப்படும் செலவு.

பாதுகாப்புக்காக மட்டும் ஆயுதம் தாங்கியவர்கள் நூறு பேருக்குமேல் - சம்பளத்துடன்.

பல்லக்கிலே சவாரி, பரிவாரம் சூழ!

மாளிகையிலே உயர்தரமான அலங்காரப் பொருள்கள்.

குதிரைக் கொட்டில்கள் இரண்டு, அவைகளில் உயர் தரமான குதிரைகள்.

மருத்துவர்கள், உடலை அவ்வப்போது கவனிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

நாட்டின் பிரபுக்களின் ரிஷ்லுவுக்கு வேண்டியவர்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் நடத்தி வைக்கப்படும் - செலவு தாராளமாக.

ரிஷ்லுவுக்கு ஆடை அணிவிக்க மட்டும் ஐந்து ஆட்கள்.

குறிப்புத் தயாரிப்போர், கடிதம் எழுதித் தருவோர் ஆகியவர்கள் மூவர் - நல்ல சம்பளம்.

ஆண்டொன்றுக்கு ரிஷ்லுவின், வீட்டுச் செலவு மட்டும் இன்றைய பிரெஞ்சு நாணய முறைப்படி 36,96,000 பிராங்குகள், என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ரிஷ்லுவைப் பேட்டி காண்பது மன்னனைக் காண்பதைவிடக் கடினம் என்று கூறத்தக்க விதமாக, ஆடம்பரம் இருந்துவந்தது.

காவலர்கள், ரிஷ்லுவைக் கண்ணிமைபோல் காத்துவந்தனர். பகலில் ரிஷ்லு, இருக்கும் அறையிலேயே ஆயுதம் தாங்கிய படைவீரர் காவலுக்கு இருப்பர். இரவில், பக்கத்தறையில் இருப்பர். துளிச் சத்தம் கேட்டாலும் எழுந்தோடி வரவேண்டும் என்று உத்தரவு. யாராவது ரிஷ்லுவைக் காணச் சென்றால், ஐந்து இடங்கில் படைவீரர்கள், வருபவர்களைச் சோதனையிட்ட பிறகே, ரிஷ்லு உள்ள அறைக்கு அழைத்துச் செல்வர், அங்கு - படை வீரர் காவலிருப்பர்.
கோலகலமான வாழ்க்கைதான்! - ஏராளமான செலவு - ஆடம்பரம் - எல்லாம், அரசுக்காக! பிரான்சுக்காக!
கார்டினல் ரிஷ்லு, குன்றெனக் குவிந்திருந்த செல்வத்தில் மன்னனுக்கும், உறவினருக்கும், அவனிடம் கைகட்டிக் காத்துக் கிடந்த ஊழியர்களுக்கும் தந்திருக்கிறானே தவிர, ஏதேனும் பொது நலத்துறைக்கு மக்கள் நலனுக்கு, ஒதுக்கினானா என்றால், இல்லை! மக்களுக்காகவா, ரிஷ்லு வாழ்ந்தான்! அரசுக்காக! பிரான்சுக்காக!!

உயிலிலே, ஒரு புள்ளி விவரம் அவனுடைய உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது. 30,000 ஒரு சீமானுக்குத் தரும்படி, குறிப்பு இருக்கிறது - “அவருக்கும் பணமுடை என்பது எனக்குத் தெரியும். ஆகவே அவருக்கு இந்த உதவித் தொகையைத் தருக,” என்று கூறப்பட்டிருக்கிறது. கனிவு, எந்தத் திக்குக்கு என்பது விளங்குகிறது.

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி, கொடுமைகளைக் கூசாமல் செய்து, ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து, பெரும் செல்வத்தைச் சேகரித்துக் கொண்ட ரிஷ்லுவின், வாழ்க்கை முறையை, ஆதிக்கத்தைத் தேடி அலைபவர்கள், திருவாசகமென்று இன்றும் எண்ணுகின்றான்.

ஓயாத உழைப்பு, கூர்மையான புத்தி, அளவற்ற ஆற்றல், எந்தத் துறையினும் இணையற்ற சமர்த்து என்று பாராட்டுகின்றனர்.

உலகம், போட்டிப் பந்தய மேடை அல்ல - கூட்டுறவுச் சாலை, என்ற புனிதக் கோட்பாட்டைமதியாதார், இரும்புக் கரத்தினரை, ஈவு இரக்கமற்ற நெஞ்சினரை, அவர்களின் வெற்றி கண்டு, பாராட்டுவது, வாடிக்கையாகிவிட்டது.
மனிதனைச் சிங்கம் பிய்த்து எறிந்ததை, திராட்சைக் கொத்தைத் தின்றபடி இரட்சித்திடவில்லையா, ரோம் நாட்டு மமதையாளர்கள். பொதுநோக்கு, பொதுநலம், மக்கள் முன்னேற்றம் எனும் எதற்கும் பற்றுக்கொள்ளாது, சிறக்க வாழவேண்டும், ஈடு எதிர்ப்பின்றி ஆட்சி செலுத்த வேண்டும், என்று முயன்று, வெற்றி பெறுபவர்களைப் பாராட்டுவது, அது போன்றதேயாகும் மதத்துறைத் தலைவர்கள் உண்டு. அரசியல் துறைத்தலைவர்கள் இருக்கிறார்கள் - கார்டினல் ரிஷ்லு, மதத் துறையில் தலைமைபெறப் பணியாற்றியபடி இருந்துகொண்டே, அரசியல் துறையில் ஆதிக்கம் பெற்ற ஓர் அபூர்வமான சர்வாதிகாரி.
பார்லிமெண்டுகளைப் பஜனை மடங்களாக்குவோர் உண்டு. பஜனை மடங்களில் பார்லிமெண்டு நடத்துவோர் உண்டு. இந்த ரிஷ்லு, பஜனை மடத்தில் இருந்தபடியே பார்லிமெண்டுக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தனி வழி கண்டறிந்து பயன் கண்டவன்.

மதத்துறையில் ஈடுபட்டு, அதிலே மாசுகளைக் களைந்தெறிந்து, மாண்புகளைப் பெருகச் செய்து, அத்தகைய மார்க்கத்தின் மூலம் மக்கட் சமுதாயத்துக்கு உயர்வும் உய்யும் வழியும் கிடைத்திடச் செய்வதற்காகப் பணியாற்றிடும் பெரு நோக்குடையார் பலர் உண்டு - பலர் பணியாற்றிப் பலன் காணாது பதறினர்.

சிலர், மதத்துறையிலே பெருமளவுக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு, அந்தச் செல்வாக்கைக் காட்டி அரசுகளைப் பணிய வைக்கவும், ஆட்டிப் படைக்கவும், முயன்றனர் - வெற்றியும் கண்டனர்.

சில அரசியல் தலைவர்கள், அந்தத் துறையிலே தமக்குக் கிடைத்த செல்வாக்கைக் கொண்டு மதத்துறையிலேயும் தமது ஆதிக்கம் நுழையும்படி செய்து வெற்றி பெற்றனர்.

கார்டினல் ரிஷ்லு, இதுபோன்ற வகையினரில் ஒருவராக வில்லை - அவன் கண்ட வழியே தனி!!
ஆதிக்கம் பெறுவதற்கு மதத்துறையைச் சிலர்போல் ஏணியாக்கிக் கொள்ளவில்லை - அரசியல் ஆதிக்கம் பெறுமுன், மதத்துறையைச் சிறிது காலம் தங்குமிடமாகக் கொண்டான். மதத்துறையில் பெரும் செல்வாக்குப் பெற்றதால் அரசியல் துறையில் ஆதிக்கம் பெறலாம் என்பது பொதுவிதியானால், போப்பாண்டவரல்லவா, பிரான்சு நாட்டை ஆட்டிப்படைத் திருக்க வேண்டும். கார்டினல் ரிஷ்லுவின் கைப்பிடியில்லவா, பிரான்சு சிக்கிற்று! போப்பிடமல்லவே!!

அம்மட்டோ! அந்தப் போப்பாண்டவரைக்கூட, ஒரு சம்பவத்தின்போது, இந்த ரிஷ்லு, ‘உமது வேலையைப் பாரும்! என் துறையிலே தலையிடவேண்டாம் என்று கூறிட முடிந்தது!!

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர் - ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக! நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும், உலகை ஏய்க்கவும், எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.

நாட்டுக்காக! என்று கூறிக்கொண்டே, எந்த அக்கிரமம் செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ரிஷ்லுவால் முடிந்ததே! என்று கூறலாம் - மக்கள் பழிதீர்த்துக் கொண்டனர். காலம் பிடித்தது அதற்கு, எனினும் பழிதீர்த்துக் கொண்டனர் - ரிஷ்லுமீதல்ல, அவன் போற்றிவந்த அரசின் மீது!!

அரசு பலமடைய வேண்டும் என்று பேசப்படும்போது ஆமாம் என்ற பதில் எளிதாகக் கிடைத்துவிடும்... ஆனால், எப்படிப் பலமடைவது என்ற கேள்வியும், மக்கள் கேட்க ஆரம் பித்தால், ஆதிக்கவாதிகள் பதில் இறுக்க இயலாது.

அரசு, மக்களுக்கு நலம்தர ஓர் ஏற்பாடு, என்ற இலட்சியத்தை மறந்து, நாடு மக்களின் உடமை என்ற உண்மையை ஏற்காது, நாடு என்றால், அதிலே காணப்படும் விரல்விட்டு, எண்ணத்தக்க பட்டுடை அணிந்த வீணர்கள் மட்டுமே என்று கருதி, அரசு என்றால், அவர்களின் வசதி கெடாதபடி மற்றவர்களைக் கண்காணித்து வருவதுதான் என்று தீர்மானித்து, ஆதிக்கம் புரிந்தவர்களால், அரசும் மேன்மையுறாது, நாடும் வளம் பெறாது.

ரிஷ்லுவுக்குத் தெரிந்த பிரான்சு, அங்கே செக்குமாடென உழைத்துக்கிடந்த பெரும்பான்மை மக்களல்ல.

மமதையால் மன்னனை எதிர்க்கக் கிளம்பும் சில பிரபுக்களும், வேற்று மார்க்கத்தவர் என்பதால் பிணங்கிக் கிடந்த சில பலரும், கீர்த்தி எனும் வெற்றுரைக்காகப் போர் மூட்டிவிடும் வெறியர் சிலரும்தான், ரிஷ்லுவுக்குத் தெரிந்தனர்.

அரண்மனை, மாளிகை, ஆலயம் இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை. வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது. பாதை இருக்கிறது, பள்ளம் இருக்கிறது. தொழில் இருக்கிறது, துயரம் இருக்கிறது. இங்கு, இலட்ச இலட்சமாக ஏழைகள் உள்ளனர், உழைத்த வண்ணம், உழைக்கிறார்கள் வாழ முடியவில்லை, சாவை வரவேற்கிறார்கள், நிம்மதிபெற அதனினும் சிறந்த மார்க்கம் வேறு இல்லாததால்! இந்தப் பிரான்சுக்கு அல்ல, ரிஷ்லு, முதலமைச்சரானது! அவனுடைய பிரான்சு, மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுக்கு விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன்வண்டுகள், இவை உள்ள, அரண்மனை, மாளிகை, பூம்பொழில் இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை!
பிரான்சு, பெருமூச்சுவிட்டது, ரிஷ்லுவின் செவியிலே விழவில்லை - கேட்க மறுத்துவிட்டான்.
பிரான்சிலே, ஐந்தில் ஒரு பகுதி நிலம் - வயல் - மன்னனுக்குச் சொந்த உடைமை.

மற்றோர் பங்கு மத அலுவலருக்கு, பிறிதோர் பங்கு பிரபுக்களுக்கு, மிச்சம் இருந்ததைப் பொது மக்களுக்கு என்று விட்டுவைத்தனர். பொதுவளம், பொதுநலம், பொது அறம், - எதுதான் தழைக்க முடியும்!

இந்த ஏற்பாடு, சரியா, தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை என்று இருந்து கொண்டுதான் ரிஷ்லு-, அரசுக்காக! நாட்டுக்காக! என்று பல்லவி பாடி ஆதிக்கம் செலுத்தினான்.

பிரபுக்களின் கொட்டத்தை அடக்கும்போதுகூட, அவர்கள், மக்களை மாடுகளாக்கி, வாழ்கிறார்கள் என்பதற்காக அல்ல! ரிஷ்லுவே பெரிய பெரிய பண்ணைகளுக்கு உரிமையாளராகிவிட்டானே! ஏழை உழவனின் வியர்வையும் கண்ணீரும் கலப்பது பற்றிக் கவலை ஏன் பிறக்கும்!
உழவன், பிரபுவிடம் அடிமைப்பட்டுக் கிடந்தான். கூப்பிட்டபோது ஓடி வேலை செய்யவேண்டும். கேட்ட வரியைத் தந்தாக வேண்டும். வரி மட்டுமா? எதையும்!

பிரபுவின் இயந்திரத்தில்தான் அவன் மாவரைத்துக் கொள்ளவேண்டும்.

அவருடைய பறவைகள் உழவன் வயலிலே புகுந்து கதிர்களைக் கொத்தும், அவன் அவற்றை விரட்டக் கூடாது. அவர் அமைத்த நீதிமன்றத்தில் உழவன் கைகட்டி நிற்க வேண்டும்; அவர் சொல்வதுதான் சட்டம்!

உழவன், விளைந்ததை விற்றுத் தேவையானதைப் பெற்று வரலாம் என்று கிராமத்தை விட்டுக் கிளம்பிச் சந்தை கூடும் இடம் போவான், வழியிலே, சீமான்களின் சுங்கச் சாவடி இருக்கும், வரி கட்டினால்தான், போக அனுமதி.

இவ்வளவும் இவற்றின் விளைவாகவும் கொடுமைகள் மலிந்து கிடந்தன. அறிவாற்றல் படைத்த, எடுத்த செயலை முடித்தே தீருவதிலே வல்லமை பெற்ற ரிஷ்லு, என்ன செய்தான்? சிறு விரலையும் அசைக்கவில்லை.

மத அலுவலர்களின் போக்கோ - பிரபுக்கள் பயிற்சி பெற வேண்டிய கல்லூரியாக இருந்தது.

பட்டிக்காட்டு உழவன் விளைவதில் பத்திலோர் பாகத்தை ‘காணிக்கை’யாகத் தந்துவிட வேண்டும் - இந்தக் காணிக்கை பல கிராமங்களிலே சேகரம் செய்யப்பட்டு, ஒரு தேவாலய அதிபருக்குப் போய்ச் சேரும். மதச் சடங்குகளின் போதெல்லாம், ‘வரி’ கட்டவேண்டும்; முணுமுணுக்கக் கூடாது. கணக்குப் பார்த்தலாகாது, புண்ணியம் கிட்டாது, தேவாலயம், அருளாலயம். என்பன போன்ற திருப்பெயர்களைத் தாங்கிக் கொண்டிருந்த மத அமைப்புக்கு, தானமாகக் கிடைத்த நிலங்களிலிருந்து மட்டும் 100,000,000 பிரெஞ்சு பவுன் வருமானம் கிடைத்து வந்தது.

இந்தப் பெருந்தொகை, அஞ்ஞானத்தை விரட்ட, சன்மார்க்கத்தை நிலைநாட்ட, பயன்பட்டதா? கேட்பதே, பாபம்.

சீமான்களுக்கு, ஜெமீன்கள் பண்ணைகள் இருப்பது போல, இந்த அருளாலயங்களுக்கும் உண்டு. வருமானத்தை அவர்கள் களியாட்டத்திலே செலவிடுவர், அவர்களிடம் சிறுதொகை ஊதியம் பெற்றுக்கொண்டு. பூஜாரி, கர்த்தரின் பெருமையைக் கழனி ஆண்டிக்கு எடுத்துக் கூறிவருவான்.

புரட்சியின் போது தொகுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, மத அமைப்புக்களின் மொத்த ஆண்டு வருமானம் 170,000,000 என்று கணக்கிட்டனர்!

வரி தரமாட்டார்கள் மத அலுவலர்கள்! “எமது வாயைத் திறப்போமே தவிர, கையைத் திறக்கமாட்டோம்” என்று ஒரு மத அலுவலர் கூறினார். ஒரு சமயத்தில் இன்னொருவர், “மக்கள் பொருள் தருகிறார்கள், பிரபுக்கள் வீரத்தைத் தருவர், நாங்கள் ஜெபம் தருகிறோம்” என்று கூறினாராம்.

பண நெருக்கடியின்போது ஒரு முறை ரிஷ்லு முயன்று பார்த்தார், மத அலுவலர்களிடமிருந்து வரி வசூலிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டனர்; எதிர்ப்பு வலுத்தது. இந்த ஆபத்தான வேலை வேண்டாமென்றோ, என்னவோ இனம் இனத்தைக் காக்கும் போக்கிலே ரிஷ்லு, மேலே வலியுறுத்த வில்லை. அவர்களாகத் தந்த ‘தொகை’யை நன்றிகூறிப் பெற்றுக் கொள்வதுடன், அந்த அத்தியாயத்தை முடித்துக் கொண்டான்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத அலுவலர்கள், தாமாக, மனமுவந்து ஏதேனும் ‘தொகை’ தருவர் அரசர் அந்தத் தேவப் பிரசாதத்தை மதிப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரபுக்களுக்குத் தனித்தனி தர்பார் இருந்தது - எனவே அவர்களும் அரசுக்கு வரிசெலுத்த மாட்டார்கள்.

ஆக, அரசுக்கு வரி செலுத்தும் பெரும்பாரம், ஏழைகளின் முதுகிலே விழுந்தது.

அரசுக்காக! நாட்டுக்காக! என்று பாடிய ரிஷ்லுவுக்கு இந்த நிலைமைகளைத் திருத்தவேண்டும் என்றும் தோன்றவில்லை. அறிவும் ஆற்றலும், அரசனுக்குப் பொழுது போக்குத் தேடித்தர உதவிற்று, ஏழை அழுத கண்ணீரைத் துடைக்க அல்ல.

நீதிமன்றங்கள், பிரபுக்களின் நீதிமன்றங்கள், மத நீதிமன்றங்கள் என மூன்று வகை - இதற்குள் உட்பிரிவு வகைகள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதச்சட்டம் - எப்போது எந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்பது ஏழைக்கு விளங்கவே முடியாத புதிராக இருந்தது. இந்தப் புதிர், எண்ணற்ற வழக்கறிஞர்களுக்குக் கொழுத்த வேட்டை தந்து வந்தது. 360 வகையான சட்ட முறைகள் இருந்ததாகக் கணக்கிட்டிக்கிறார்கள்.

இவற்றில் எதனையும் மாற்ற, திருத்த, மக்களுக்கு உகந்ததாக்க ரிஷ்லு முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

அரசர், வரிவசூலிக்க பிரான்சு முழுவதுக்கும், மொத்தமாக அறுபது பேரை நியமிப்பார். அவர்கள் ஆறு ஆண்டுகள் அதிகாரம் புரிவர். மன்னனுக்கு முன்னதாகக் குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவர். இப்படி வரி வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது. அகப்பட்ட வரையில் இலாபம் என்று அவர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிந்தனர். ரிஷ்லுவின் ஒளிவிடும் கண்களில் இந்த அக்கிரமம் படவில்லை!

விருந்தொன்றின்போது, ஒவ்வொருவரும், பொழுது போக்குக்காக, கொள்ளை அடிப்பவர்களைப் பற்றி விதவிதமான கதைகள் கூறினார்களாம். அந்த விருந்திலே வால்டேர் இருந்தாராம். அவரையும் ஒரு கொள்ளைக்காரன் கதை கூறச் சொல்லி வற்புறுத்தினார்களாம். அவர், “ஒரே ஒரு காலத்தில் ஏகவரி ஏல அதிகாரி ஒருவன், இருந்தான். அவ்வளவுதான்!” என்று கதையை முடித்துவிட்டாராம். கொள்ளை அடிப்பவர்கள் எல்லாரையும் மிஞ்சக்கூடிய கொள்ளைக்காரன், இந்த வரி ஏல அதிகாரி, என்பதைச் சுவைபட வால்டேர் சொன்னார். ரிஷ்லு இது அக்கிரம முறை என்று உணரவில்லை.

எந்தத் துறையைக் கவனித்தாலும், அநீதி தாண்டவமாடிற்று, அக்கிரமம் தலைவிரித்தாடிற்று, எதையும் திருத்த ரிஷ்லு முயலவில்லை. அரசுக்காக! பிரான்சுக்காக! என்று மட்டும் பேசினான். இவ்விதமான அநீதிகளை வைத்துக் கொண்டு, எந்த அரசுதான் நிலைக்க முடியும், எந்த நாடு பிழைக்க இயலும்!

எனவேதான், புரட்சி கிளம்பிற்று - பிரான்சு, புடம் போட்ட தங்கமாவதற்கு! மக்களுக்காக அரசு! மக்களுக்காகப் பிரான்சு! என்ற முழக்கமிட்டனர், புரட்சி வீரர்கள், அறியாமல் செய்த ஒரு நன்மை உண்டு, ரிஷ்லுவால்!

கோட்டை கொத்தளங்களை அமைத்துக் கொண்டு, கொடி கட்டி ஆண்ட பிரபுக்களின் கொட்டத்தை அடக்கி, அவர்களுடைய இராணுவ பலத்தை ஒடுக்கிவிட்டான் ரிஷ்லு. இது, மக்கள் பிரான்சிலே மாபெரும் புரட்சி செய்தபோது அவர்களை எதிர்க்கும் சக்தியை, பிரபுக்கள் பெற முடியாதபடி செய்தது.

எல்லா அதிகாரங்களையும் அரசனிடம் குவித்து வைத்ததும், புரட்சிக்கு மறைமுகமாக உதவி செய்தது.

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட வேண்டுமென்று ஏழையின் இரத்தத்தை அபிஷேகம் செய்வித்து அரசாட்சி புரிந்தான் ரிஷ்லு. மக்கள் பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது, மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர், மக்களுக்காக! பிரான்சுக்காக! என்று.

(திராவிடநாடு - 1955)
---------------

This file was last updated on 1 Feb. 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)