pm logo

இரும்பு முள்வேலி
(பாகம் 1)
சி. என். அண்ணாதுரை


irumpu vEli
(essays -world history, part 1)
by C.N. Annadurai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இரும்பு முள்வேலி
(சரித்திரக் கட்டுரைகள்)
சி. என். அண்ணாதுரை

Source: நூல் பற்றிய விவரங்கள்
இரும்பு முள்வேலி
பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை, எம். ஏ.
பூம்புகார் பிரசுரம் பிரஸ் 63, பிராட்வே, சென்னை - 600001.
விலை ரூ. 5-90
பூம்புகார் வெளியீடு எண் : 162
முதற் பதிப்பு : அக்டோபர், 1980
உரிமை: திருமதி ராணி அண்ணாதுரை
அச்சிட்டவர்கள் : பூம்புகார் பப்ளிகேஷன்ஸ் பிரஸ், சென்னை -600001.
--------
Novels of C.N. Annadurai Novels based on historical events)
உள்ளடக்கம்

1. இதயம் இரும்பானால் (about World war I)
2. இரும்பு முள்வேலி (on the French Revolution 1789-1794)
3. இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் (Napoleon and the Invasion of Russia (1912)


பதிப்புரை

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று கட்டளையிட்டான் மகாகவி பாரதி.

சாத்திரமல்ல, மேனாட்டுச் சரித்திரத்தையே தமிழுக்குக் கொண்டு வந்து காட்டிய பேரறிவாளர் டாக்டர் அண்ணா அவர்களாவார்.

எல்லா நாட்டுச் சரித்திரங்களையும், அதனைத் தழுவிய சுவையான - உருக்கமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் அறிய வேண்டுமென்ற ஆவலின் காரணமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய ஓவியங்கள் கொஞ்ச மல்ல.

மேனாட்டு வரலாற்றைக் கதை வடிவில் சொல்வதென்பது சாதாரண விஷயமல்ல; அது ஒரு கலை. அந்தக் கலையில் வல்ல டாக்டர் அண்ணா அவர்கள் படைத்தவற்றில், 'இரும்பு முள்வேலி' என்னும் தலைப்பிலுள்ள அழ கோவியம் தனிச் சிறப்பு மிக்கதாகும்.
இனம் கடந்த, மொழி கடந்த, மதம் கடந்த, ஏன், எல்லாமே கடந்த ஒன்று உலகில் இருக்கிறதென்றால் அது காதலாகத்தான் இருக்க முடியும். வேறு எதற்குமே அந்தச் சக்தி கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு புனிதமானதொரு ஈர்ப்புச் சக்தி உலகில் படும் உயிர்வதையை, இரு வேறு இனத்தைச் சார்ந்த ஆண் - பெண் இடையே கல்லும் கரையும் வண்ணம் சுவையான கதை யாக்கிக் காண்பித்துள்ளார். அதுபோலவேதான் மற்ற இருவேறு கதைகளும்!

அத்தகு சிறப்பும் உயிர்த் துடிப்பும் மிக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.

- பூம்புகார் பிரசுரத்தார்.
-----------------

1. இரும்பு முள்வேலி

தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள் வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப் பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற் கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். 'மனிதத் தன்மையின் புனிதத்தை விளக்கிடும். தூய்மை மிக்க கருத்தோவியம்.

கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் நீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும்.

பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன் மிக்க ஒரு ஓவியனால் முடியும்.

ஆனால் கருமேகங்கள் திரண்டிருப்பதால் காரிருள் கப்பிக் கொண்டிருக்கும் காட்சியுடன் ஓர் புத்தொளி மெள்ள மெள்ளக் கிளம்புகிறது என்பதனையும் இணைத்தளித்திட கைத்திறன் மட்டும் போதாது. கருத்துத் திறனும் இருந்திட வேண்டும், ஒவியனுக்கு.

கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமை பெற்ற எழுத்தாளனுக்கு.

நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு.

ஆனால் 'கெட்டவன்' நல்லதும் எண்ணுகிறான்; செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம் புற்றுக்குள் அரவுபோல கெடு நினைப்போ செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும், எழுத்தாளனாக மட்டும் இருந்தால் போதாது; எண்ணங்களை ஆள்பவனாகவும் இருந்திட வேண்டும்.

எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டிவிடக் கூடும், படிப்போரின் உள்ளத்தில்.

இந்தச் சூழ்நிலையில், இவன் 'இப்படித்தான் எண்ணி யிருப்பான் - இவ்விதம்தான் செய்திருப்பான் என்று யூகித்து' எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.
சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுவிடும் எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் எழுத்தோவியம் தீட்டித் தருவதனை எல்லா எழுத்தாளர்களும் மேற்கொள்வதில்லை, ஆபத்தான முயற்சி என்ற காரணத்தால்.

ஆனால் சிற்சிலர், தனித் திறமை பெற்றோர், இத்தகைய எழுத்தோவியம் தருகின்றனர். இறவாப் புகழுக்கு உரியராகின்றனர்.

பகைவனிடம் கோபமும் கொதிப்பும், வெறுப்பும் எழுவதும், வஞ்சம் தீர்த்தாக வேண்டும் என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.

ஆனால் பகைவனிடமும் பரிவு எழுகிறது - எழ முடியும் என்று எடுத்துக்காட்ட மிகச் சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டுள்ள முறைக்கு முரணானது. எனவேதான் அதனை கூறுவதற்குத் தனியானதோர் திறமை தேவைப் படுகிறது.

நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும் போது - போர் மூண்டிடும் போது,
நாட்டுப் பற்று உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும் விட, மேலோங்கி நிற்கிறது.

நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப் படுகிறது!! என்ற எண்ணம் உள்ளத்தை எரிமலையாக்குகிறது; வெடித்துக் கொண்டு கிளம்புகிறது கோபம். கொதிப்பு, வெறுப்பு, பழி வாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழிக்க வேண்டும் என்ற துடிப்பு.

போர் மூண்டிடாதபோது எவையெவை 'வெறி' என்று கருதப்படுமோ அவை யாவும், தேவைப்படுவனவாக, வரவேற்கப்படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகி விடுகின்றன.

"இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம் மனிதன்தானே" என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர் கூட, மெல்லியலார் கூட, 'சுட்டுத் தள்ள வேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோடு அழிக்க வேண்டும்!" என்று பேசுகின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்று கூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன. அந்த 'எழுச்சி' பற்றி.
நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள் கூட! பச்சிளங் குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம்கூட! போர்க் கோலத்தில், "கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!" என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

ஒருநாடு மற்ற நாட்டின் மீதே எல்லாப் பழிகளையும், எல்லா கெடு நினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலை பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.
போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும். உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.

வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான் பேசப்படும் - போர் நடக்கும்போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம், குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.

யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப் பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் 'தேசத்துரோகி' ஆக்கப்பட்டுவிடுவான்.

தேசத்துரோகி--நாட்டைச் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி – எதிரியை-விடக் கொடியவன் - இழி மகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர்.

இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.

துரத்தினேன்! அவன் ஏற்கனவே அடிப்பட்டவன். ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை. களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது. படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை விரண்டோடி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான; காலின் கீழ் போட்டு..ஆ! என்றான் ஒருமுறை;... ஒரே ஒரு முறை பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!

இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று திரும்பியவன்; கேட்போர் மகிழ்வர்; அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.

பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்த்திடுவதும் போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகி-விடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டு விடுகின் றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில் தான் விழுகிறது ; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது அல்லவா.

இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், 'தாக்கு! அழி! வெட்டு! குத்து!'--என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படி யானால் அந்தப் பண்புகள் - மனிதத்தன்மை - அடியோடு மடிந்து போகின்றனவா? மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதிய நிலை ஏற்பட்டதும், மீண்டும் மெள்ள மெள்ள அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.

மடிவதில்லை ; ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன; மறைந்து விடுகின்றன.
பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி. அந்தப் பண்புகளை மூலைக்குத் துரத்தி விடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து விடுவது போன்ற நிலை!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண் மீன் உளது என்பதனையும், அதன் ஒளி காரிருளைக்கூடக் கிழித்தெறிந்து கொண்டு வெளிக் கிளம்பக்கூடும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார் ஹால் கெயின் என்னும் பேரறிவாளர் 'இரும்பு முள்வேலி ' எனும் தமது நூலில்.

இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடி விழச் செய்திடத் துணிந்து கெய்சர் போர் நடாத்திய நாட்கள்; முதலாவது உலகப்போர்.

ஜெர்மனியில், கெய்சர் போர் வெறி மூட்டுகிறார் என்று துவங்கிய பேச்சு, ஜெர்மானியர் போர் வெறியர்கள் என்ற கட்டத்தை அடைந்து விட்டது. ஒருநாட்டு மக்களுடைய நாட்டுப் பற்றையும், 'ராஜபக்தியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்த நாட்டு அதிபன், அவர்களைப் பலிக்கிடாக் களாக்கி, இரத்த வெள்ளம் புரண்டோடச் செய்தான்.

கெய்சர் மீதுதான் முதலில் கண்டனம், வெறுப்பு, கொதிப்பு! பிறகு ஜெர்மன் மக்கள் மீதே அந்த வெறுப் புணர்ச்சி பாய்ந்தது.

குழந்தைகளை வெட்டித் தின்கிறார்கள் ஜெர்மன் வெறியர்கள் என்று இங்கிலாந்து நாட்டு முதியவர்கள் - குறிப் பாகத் தாய்மார்கள் பேசினர்!

ஜெர்மன் மொழி, ஜெர்மன் தொழில் திறமை, ஜெர்மன் கலை என்ற எல்லாவற்றின் மீதும் அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

போர் மூளுவதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் பல் வேறு துறைகளில் வேலை பார்த்து வந்த ஜெர்மானியர்கள் விரட்டப் பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர்.

ஜெர்மனியுடன் எந்த விதமான தொடர்பும் கூடாது என்பது தேசியக் கட்டளையாகி விட்டது. எல்லாத் தொடர்புகளும் அறுத்தெறியப்பட்டன.

இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் ஜெர்மன் கெய்சர் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு. அதனை வெளியே சொல்லக் கூடக் கூசினர். பகை உணர்ச்சி அந்த அளவு கப்பிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் நடைபெறும் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. 'இரும்பு முள்வேலி'. போர் கிளப்பிவிடும் பகை உணர்ச்சிக்கும் இதயத்தின் அடியிலே மறைந்திருக்கும் அன்பு உணர்ச்சிக்கும் இடையே நடை பெறும் போர் பற்றிய கதை.

மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம். மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச்செல்லும் ஒரு குடும்பமும், முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பமும்.

ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனித குலமே அழிந்து போகும் என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்தது போலவே, அந்த சின்னஞ்சிறு தீவிலும் பரவி இருந்தது.

முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.

'என் அண்ணன் போர்வீரன்! பொல்லாத ஜெர்மானி யரை அழிக்கும் புனிதப் போரிலே ஈடுபட்டிருக்கிறான்' என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கே அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.

எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா மனதிலும் ஜெர்மானியர் மீது வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. 'ஒரு துளியும் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. கொன்று குவிக்க வேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு ஒழிக்க வேண்டும்' என்று கருதினாள்.

ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம், கொலை பாதகத் தன்மை பற்றிய தகவல் நிரம்பக் கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன! வெறுப்புணர்ச்சி மூண்டுவிட்டிருந்தது. முதியவர்கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை.அவருடைய மனதிலே சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த ஒரே ஒரு உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கிவிட்டிருந்தது.

ஜெர்மனி வெற்றிகளை ஈட்டிக் கொண்டு, ஆணவத்தைக் கக்கிக் கொண்டிருந்த கட்டம் முடிந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது; பல இடங்களிலே தோல்வி கண்டு திணறிச் கொண்டிருந்தது; ஜெர்மானியர் பலர் கைதாயினர்.

அந்தக் கைதிகளை, இந்தத் தீவிலே கொண்டு வந்து சிறை வைக்க ஏற்பாடாகிறது.

காட்டு மிராண்டிகள், வருகிறார்கள்; இங்கு நாம் இருக்கக்கூடாது என்று எண்ணி அந்தத் தீவிலிருந்து பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. சில குடும்பத்தினர் தீவிலே தங்கினர்; என்றாலும் பெண்களை மட்டும் வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டனர்.

"இங்கு ஏன் அந்த இழிமக்களைக்கொண்டு வருகின்றனர்? கேவலம் இது, மிகக் கேவலம். அந்தக் கொடியவர்களின் நிழல் பட்டாலே இழிவாயிற்றே! அவர்களுக்கா நமது தீவிலே இடம்? அந்த வெறியர்கள் இங்கு இருக்கப் போகிறார்கள் என்றால், அதே இடத்தில் நாம் இருப்பதா? கேவலம்! மிகக் கேவலம் அது. அப்பா! நாம் இந்தத் தீவைவிட்டு வேறிடம் போய்விடலாம். அந்தக் கொடியவர்களைக் காண்பது கூடப் பெரும் பாவம்! இங்கு இருக்கலாகாது" என்று பெண் வற்புறுத்துகிறாள். அவள் உள்ளத்தில் வெறுப்புணர்ச்சி அவ்வளவு கப்பிக் கொண்டிருக்கிறது. முதியவர் புன்னகை செய்கிறார், அடே அப்பா! எவ்வளவு கொதிப்புடன் பேசுகிறாள் மகள் என்பதை எண்ணி.

"மகளே! மற்றவர்கள் தீவை விட்டுச் சென்றுவிட்டாலும், நாம் செல்வதற்கு இல்லை. மிராசுதாரர், நாம் இங்கேயே இருந்தாக வேண்டும்; கவனிப்பு இல்லாவிட்டால் பண்ணை பாழாகிவிடும் என்கிறார்; மேலும் இங்கு சிறை வைக்கப்பட இருப்பவர்களுக்கு, நாம்தான் பால் தரவேண்டி இருக்கிறது; வேறு வழியில்லை..." என்கிறார்.

"பால் தருவதா! அந்தப் பாவிகளுக்கா! எந்தப் பாதகர்களை ஒழித்திடும் புனிதப் போரிலே அண்ணன் ஈடுபட்டிருக்கிறாரோ, அந்தப் பாதகர்களுக்கு நாம் பால் தருவதா? அக்ரமம்! அநியாயம்! இழிசெயல்! நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். அந்தப் பாவிகளை வெட்டி வெட்டிப் போட வேண்டும், கழுகுக்கும் நரிகளுக்கும்; அவர்களுக்கு நமது தீவிலே இடம்! நமது பண்ணையிலிருந்து பால்! இது என்ன அநியாயமப்பா!" - என்றெல்லாம் அவள் எண்ணிக் கொதிப் படைகிறாள். முதியவர் புன்னகை புரிகிறார்.

"அதனால் என்னம்மா! அவர்களும் மனிதர்கள் தானே! ஜெர்மானியர்களாகப் பிறந்ததனாலேயே அவர்கள் மனித குலம் அல்ல என்று கூறிவிட முடியுமா! போர் மூண்டுவிட்டது. நம் நாட்டுக்கும் ஜெர்மனிக்கும். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். அதனால் ஜெர்மானியர் மனிதர்களே அல்ல என்று கூறிவிட முடியுமா!"- என்று கனிவாகப் பேசுகிறார் முதியவர்; கன்னி கடுங்கோபம் கொள்கிறாள்.

போரின் போது, இரு தரப்பினருந்தான் அழிவு வேலையில் ஈடுபடுகின்றனர். எந்தச் சமயத்தில், எந்த இடத்தில் எவருடைய கரம் ஓங்கி இருக்கிறதோ அவர்கள் அதிக அளவுக்கு வெட்டி வீழ்த்துவார்கள்! இரு தரப்பினரும் ஒரே விதமான வேலையில் - கொல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதிலே ஒரு தரப்பினர் மட்டுமே காட்டு மிராண்டிகள் - கொலைபாதகர்கள் - இரத்த வெறி பிடித்தலைவோர் -- என்று கூறிவிட முடியுமா? போர், காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு விடுகிறது. ஒரு தரப்பினர் குண்டுகளால் தாக்குகின்றனர்; மற்றோர் தரப்பினர் மலர்கொண்டு அர்ச்சிக்கின்றனர் என்பதா போர்! கொலை நடக்கிறது, பெரிய அளவில் -- சட்டத்தின் அனுமதியுடன் - சமூகத்தின் ஒப்புதலுடன்! இதிலே அதிகமான அளவு அழிவைச் செய்பவன் வெற்றி வீரனாகிறான். அவனுடைய கரம் இரத்தக் கறை படிந்தது. ஆனால் அது நாட்டைக் காத்த கரம் --- வெற்றி ஈட்டிய கரம் - புகழ் தேடித் தந்த கரம் என்பதால் பாராட்டப்படுகிறது.

முதியவர் இதுபோன்ற கருத்தினைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்; அவருடைய உள்ளம் ஒரேயடியாக வெறுப்பு நிரம்பியதாக இல்லை; நியாய உணர்ச்சியும் சிறிதளவு உலவிட இருந்தது.

”இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால் தந்தால் என்ன என்று பேசுவதா? நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பியுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர். இவர்களுக்குப் பருகப் பால்! நாம் கொடுப்பதாம்! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக் கிடக்கிறார் - பால் தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும் மனிதர்தான் என்று நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக் கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக் கூடக் கொன்றனர் அக் கொடியவர்கள்! அவர்களும் மனிதர்கள் தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்தி கெட்டுப் போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை இங்கே அப்பா பால் தரச் சொல்கிறார். அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார். இதனை அறிந்திடின்? செச்சே! அப்பா சுத்த மோசம்!"

ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை அடைத்து வைப்பது போல ஜெர்மன் கைதி களை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ் போர்வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்ள.

கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல ; பலர் தொழிலில், வாணிபத்தில், பல்வேறு அலுவலகங்களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள் கூட!

எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடி யவர்கள் தானே! இவர்களை இப்படித்தான் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு. முதியவ ருக்கோ ஒரு பச்சாதாப உணர்ச்சி. ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்.

இதுகளுக்கு அப்படிப் பட்ட உணவுதான் தரவேண்டும் என்கிறாள் மோனா, அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால், வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா; மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை என்று முணுமுணுக்கிறார் முதியவர். கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்குத் துளியும் பிடிக்கவில்லை. நம்முடைய மக்கள் களத்திலே பூப்பந் தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ! நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ? அதைப்பற்றி நினைத்துக் கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் மோசம்! போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப் பாதகர்களுக் காக!" என்று மோனா கூறுகிறாள். முதியவர், 'கல்மனம் மகளே! உனக்குக் கல்மனம்!' - என்று மெள்ளக் கூறுகிறார்.

மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டுவரப் படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட சிறைக்குள்ளே தள்ளப் படுகிறார்கள்.

மோனாவின் மனம் இளகவில்லை; படட்டும், படட் டும்! அனுபவிக்கட்டும்! என்றே கூறுகிறாள். என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது போதாதா அவர்களிடம் வெறுப்புக்கொள்ள?

அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா! அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டு போக ஜெர்மன் கைதிகளில் சிலர் வருகிறார்கள். பிரிட்டிஷ் போர்வீரர்கள் உடன் வருகின்றனர், கைதிகள் தப்பி ஓடி விடாதபடி பார்த்துக் கொள்ள. ஜெர்மானியரைப் பார்க்கும்போதே எள்ளும் - கொள்ளும் வெடிக்கிறது மோனாவின் முகத்தில். சுட்டுவிடுவது போன்ற பார்வை! காலில் ஒட்டிக் கொள்ளும் மலத்தைக் கழுவியான பிறகும் ஒருவிதமான அருவருப்பு இருந்தபடி இருக்குமல்லவா, அதுபோல, அவர்களைக் கண்டால் மோனாவுக்கு ஒருவித அருவருப்பு.

அந்தக் கைதிகள் அவளிடம் பேச முயற்சிக்கிறார்கள்; மோனா வாய் திறக்க மறுக்கிறாள். இதுகளுடன் பேசுவேனோ!! என்று நினைக்கிறாள்.

"மகளே! இவ்வளவு குரூரமாக இருக்கிறாயே நமது வேதம் என்ன சொல்லுகிறது. பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி அல்லவா கூறுகிறது. பரமண்டலத்திலுள்ள பிதாவை நோக்கி நாம் பஜிக்கும் பாடல் நினைவிற்கு வரவில்லையா” என்று கேட்கிறார். அவளுக்கு அந்த நினைவெல்லாம் இல்லை; ஒரே ஒரு எண்ணம் தான் அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது; வெறுப்பு! ஜெர்மானியர் என்ற உடன் ஒரு கொதிப்பு! அவர்கள் அழிந்துபடவேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி. பகைவனுக்காகக்கூடப் பகவானிடம் பிரார்த்திக்கலாம். ஆனால் அந்தப் பகைவன், மனிதனாக இருக்க வேண்டுமே! ஜெர்மானியரைத்தான் மோனா, மனிதர் என்றே ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளே; மனித வடிவிலே உலவும் மிருகங்கள்; பிரிட்டிஷ் இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பிடும் கொடிய விலங்குகள் என்றல்லவா திடமாக நம்புகிறாள். அவர்களிடம் பச்சாதாபமா...! முடியுமா!!

பால் எடுத்துக் கொண்டு போக பண்ணை வீட்டுக்கு வந்திடும் ஜெர்மானியரில் ஒருவன், உடல் மெலிந்து கிடந்தான். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; வெளுத்துப்போன முகம். சிலவேளைகளில், அவனிடம் சிறிதளவு பச்சாதாப உணர்ச்சி தோன்றும், மோனாவின் உள்ளத்தில். ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு நொடியில் விரட்டி அடிக்கிறாள். அய்யோ பாவம் என்று எண்ணுவதா! பச்சாதாபம் காட்டுவதா! இவனுக்கா!! இளைத்திருக்கிறான். இருமிக் கொண்டிருக்கிறான்; ஆனால் இவன் யார்? இவனும் ஜெர்மானியன் தானே! மனித குலத்தை நாசமாக்கத் திட்டமிட்டுப் போரினை மூட்டிவிட்ட ஜெர்மன் இனத்தான் தானே!! இவனிடமா பச்சாதாபம் காட்டுவது? கூடாது! முடியாது!

மோனாவின் உள்ளத்திலுள்ள வெறுப்புணர்ச்சி வெற்றி பெறுகிறது.

ஜெர்மானியர் செய்திடும் அட்டூழியங்களைப் பற்றி இதழ்கள் செய்திகளைத் தந்தபடி உள்ளன. அவற்றினைப் படிக்கப் படிக்க, வெறுப்புணர்ச்சி மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது; எரிகிற நெருப்பிலே கொட்டப்படும் எண்ணெய் ஆகிறது அந்தச் செய்திகள்.
முதியவர் வழக்கம் போலப் பிரார்த்தனையின் போது, சமாதானத்தை வழங்கும்படி பிதாவை வேண்டிக் கொள்வது கூட மோனாவுக்குப் பிடிக்கவில்லை. பிதாவே! ஜெர்மானியரைப் பூண்டோடு அழித்தொழித்திடு ; மனிதகுலத்தை ரட்சித் திடு!-- என்பது போலப் பிரார்த்தனை இருந்திடின் மோனாவுக்குப் பிடித்தமாக இருக்கும். முதியவர் தமது பிரார்த்தனையில் ஜெர்மானியர் அழிக்கப் பட்டாக வேண்டும் என்பதனை வலியுறுத்தாமல் சமாதானம் வேண்டும் என்று மட்டும் கூறுகிறாரே, நியாயமா... நாட்டுப்பற்று உள்ளவர்கள் இப்போது சமாதானம் காணவா விரும்புவார்கள். போர்! போர்!! பகைவர் அழிந்தொழியும் வரையில் போர்! இதனை அல்லவா விரும்புவர்! பகைவனை அழித்தொழிக்கும் வல்லமையை ஆண்டவனே! எமக்கு அளித்திடும் என்பதல்லவா நாட்டுப் பற்று மிக்கவன் செய்திடத்தக்க பிரார்த்தனை! மோனா இது குறித்து முதியவரிடம் கேட்டே விடுகிறாள்.

"அப்பா! உண்மையிலேயே சமாதானம் வேண்டும் என விரும்புகிறீரா?"

"ஆமாம் மகளே! சமாதானம் நாடக்கூடாதா..."

"நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர் வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில் போர் வேண்டும்."

முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார். ஆனால் அவள் போக்கை மாற்ற முடியாது என்று கண்டுகொள்கிறார் போலும்! திருத்த முயற்சிக்கவில்லை; வாதிடக்கூட இல்லை.

நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து பேருருக் கொண்டு, பெரியதோர் அழிவை மூட்டிவிட்டுப், பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும் ; இடையிலே இந்த உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக் கொண்டார் போலும்.

ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான், களத்தின் நிலைபற்றி; உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப் போகிறோம்; முன்னணிப் படையினில் நான் இருக்கப் போகிறேன் ; இந்தத் தாக்குதல் பகைவர்களை அழித்திடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறான் கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.

"அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை. அதிகாரிகள் சிலரிடம் படித்துக் காட்டினேன். அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும்; இந்தப் போர் ஒரு திங்க ளில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்." ராபியின் கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திடக் கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது; பூரித்துப் போனாள்.

பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன. ஜெர்மன் படைகள் விரண்டோடு-கின்றன.

ஜெர்மன் படைக்குத் தோல்விமேல் தோல்வி ஏற்படுகிறது.

இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தித் தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.

ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்கவில்லை; கடிதம் காணோமே என்று எண்ணிக் கவலை கொள்கிறாள்.

ஒருநாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக் கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை; குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார்; சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராபி களத்தில் முழுவதும் படிப்பானேன்? விஷயம் புரிந்து விட்டது; ராபி இறந்துவிட்டான். வீரமரணம்; நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் - என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடி தத்தில்; ஆனால் தந்தையின் தத்தளிப்பை, வீர மரணம் என்ற பாராட்டுதல் குறைத்திட முடியுமா...

"மகளே! படி அம்மா! பாரம்மா!"

மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துபட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக் கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே ஒரு பிரிவினர் கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால் தமது பண்ணையிலிருந்து! என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள், அந்தக் கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்கு பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!

இதுபோல் என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம்! ஏற்கனவே மூண்டு கிடந்த கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!

பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!

”அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு! அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன் மகனுடைய இரத்தத்தை - என் அண்ணன் உயிரைக் குடித்துவிட்டார்களப்பா! அண்ணனைக் கொன்றுவிட்டார்களப்பா அந்த கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர் : நமது பண்ணையில் பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம் காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர் மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள் என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் உன் மகனை - என் அண்ணனை - நாட்டுப் பற்று மிக்கவனை, நியாயத்தை நிலை நாட்டப் போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டனவே அப்பா! இப்போது என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம் வழங்கும்படி? சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருப்பது; நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள்' என்றெல்லாம் கேட்டிட அந்தக் கன்னி துடித் திருப்பாள்.

முதியவரின் நிலை? மகன் இறந்துப்பட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அவருடைய மனதிலே சிறிதளவு தலை தூக்கியபடி இருந்ததே மனிதத் தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல், பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது. இதயத்தில் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு இழந்து. மருத்துவர் வருகிறார்; இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை. படுத்துறங்கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

முதியவர் படுத்துக் கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.

ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.

எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல, எல்லா ஜெர்மானியரையும் அழித்திடவேண்டும் - ஆண் - பெண் - குழந்தை குட்டி அவ்வளவு பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்து போகவேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள் அனைவரையும் அழித்தாக வேண்டும்; இல்லை-யென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!

மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பிரார்த்தனை!

முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி. மோனா அதனை மறுத்தாள். கல்மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?

ஆண்டவனே எழுந்தருள்வீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர் கொட்ட மடித்திட விடக்கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது பொழியட்டும்; நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர்களை! நரகப் படுகுழியில் தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலை தூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத் தள்ளிடுவீர்!

இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு இரங்கல் என்பதை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம் பெற மறுத்துவிடுகிறது. மகனைக் கொன்ற மாபாவிகள் என்று எண்ணும் போதே, ஜெர்மானியர் பூண்டோடு அழிந்துபட வேண்டும் என்ற கொதிப்பு எழுகிறது. மோனா சொன்னது தான் சரி; அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல; ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.

ஜெர்மன் கைதிகள் அடைபட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையின-ராகின்றனர்.

அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.

கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

நிலைமையை அறிந்து போக வந்திருந்த மேலதிகாரி, 'இவர்களை நாய்களை அடைத்து வைப்பது போல அடைத்து வைத்தால், நாய்க் குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்கவேண்டும்" என்று கூறுகிறார்.

இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே, தொழில் நிலையங்கள் அமைக்கப் படுகின்றன, கைதிகள் வேலை செய்ய.

மிருகங்களை மனிதர்களாக்க முயற்சிக்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப் புதிய திட்டத்தைப் பார்த்து.

வழக்கப்படி பால் வாங்கிக் கொண்டு போக வரும் இரு மல்காரனுக்குப் பதிலாக வேறோர் ஜெர்மானியன் வந் தான், ஓர்நாள்.

மோனா அதனைச் கவனிக்கக்கூட இல்லை. பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். 'இது நான் எடுத்துப் போகவேண்டிய பாத்திரமா?’ என்று புதியவன் கேட்டபோது தான் திரும்பிப் பார்த்தாள். அவன் மருத்துவ மனைக்குச் சென்று விட்டான்; அவனுக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன்' என்றான் புதியவன், இளைஞன் ; சாந்தமான முகத்தினன்.

குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம், முகத்திலே வெறித்தனம் காணோம்; யார் இவன் ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.

"உன் பெயர் ? "

"ஆஸ்க்கார்.... "

"ஆஸ்க்கார்....? "

"ஆஸ்க்கார் ஹெயின் "

"மூன்றாம் நம்பர் சிறைக்கூடத்திலா இருக்கிறாய்? "

"ஆமாம் "

மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, 'அதுதான் நீ எடுத்துச் செல்ல வேண்டிய பாத்திரம்' என்று கூறுகிறாள்.

'நன்றி!' என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா. முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்று கொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி வழியாகவும் பார்க்கிறாள்.

அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள். ஏதோ குமுறல், மனதில்.

வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்!

”இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி" என்று கூறி விடுகிறாள் மோலா. தலைவலியா!!

அன்றிருந்த ஒரு மனப்போராட்டம், மோனா தன் உள்ளத்திலே இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன் அதிக நேரம் அளவளாவுகிறாள், அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு ஊட்டுவார், உள்ளத்தில் இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற நம்பிக்கையுடன்.

ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார். மோனா? பிரார்த்தனையில் கலந்து கொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஒரு உணர்ச்சி அவளை வேறு எங்கோ அழைக்கிறது ; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்கார் கூடவா, ஜெர்மானியன். அத்தனைப் பணிவாக இருக்கிறான் ; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப் பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை. ஜெர்மானியனா இவன் ; ஆஸ்க்கார் போன்றவர்கள் கூட இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.

'நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு' என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார் முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது ; முன்பு! இப்போது? அந்தப் பிரார்த்தனை அவளுக்கு என்னமோ போல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச் செய்திடச் சொல்லிக் கேட்பது! ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு பிரார்த்தனை செய்வது என்று கூட எண்ணி சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின் இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!

மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்ற உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன் கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது; அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில் நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!

"லட்விக் இறந்துவிட்டான்? "

"யாரவன் லட்விக்?"

"முன்பெல்லாம் வருவானே, இருமிக் கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம்! செத்துவிட்டான்! கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு."

மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது; கண்களில் நீர் துளிர்க்கிறது; ஆனால் சமாளித்துக் கொண்டு கூறுகிறாள்.

"மகனை இழந்த தாய் அவள் ஒருவள் தானா! போர் மூட்டி விடுபவர்கள்; அதனால் விளையும் பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்."

ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச் சுடப் பதில் கொடுத்துவிட்டோம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்க வேண்டும்? இல்லையே! போகிறவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள், தவறாகப் பேசிவிட்டோம் என்றெண்ணி வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்? தவறு செய்துவிட்டாய் என்று கூறுவது போலிருக்கிறது.

மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். ’இது இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம் செல்ல முடியாது. அதலால், இதனைத் தாங்கள்...'

ஆஸ்க்கார் கெஞ்சும் குரலில் பேசுகிறான் : மோனா கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள்; 'என்னால் முடியாது; இதனை எடுத்துக் கொண்டு போய்விடு’ என்று. அவன் போய் விடுகிறான்; ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!

’கிடக்கட்டும் இங்கேயே, எனக்கென்ன' என்றுதான் மோனா எண்ணிக் கொள்கிறாள். அன்று பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறிய வில்லை! முடியவில்லை! ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்தது போலும்.

மாலையில் யாருமறியாமல் சென்று லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத் தூவிவிட்டு வந்து விடுகிறாள்.

மோனா, ”ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும், குழந்தை குட்டிகள் உள்பட” என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறை மீது மலர் தூவுகிறாள்! எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற காரியமா இது! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை எழுப்பி விட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித் தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக் கொண்டது!

ராபியின் வீரதீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப்பதக்கத்தை மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.

வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது! கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக! அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப்பதக்கம் பற்றிய விவரம் கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித் தரப்பட்டது இந்தப் பதக்கம் என்பதனை அறிந்ததும் ஆஸ்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா காட்ட வேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான், பாராட்டுதலுக்குரிய வீரன் என்று!!

என்ன விந்தை இது! கப்பிக் கொண்டிருந்த வெறுப் புணர்ச்சி எங்கே போய்விட்டது.

தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா வெறுப்பை காட்ட முடியவில்லை, எவ்வளவோ முயன்றும்!

தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப் பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப் பேசுகிறான் ஜெர் மானியன் ஆஸ்க்கார்!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண் சிமிட்டுகிறதே!!

மோனாவிடம் ஏதோ ஓர் மாறுதல் தோன்றி விட்டிருக்கிறது என்பது முதியவருக்குத் தெரிகிறது; விவரம் புரிய வில்லை.

பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது பற்றியும், அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக் கேட்ட முதியவர் கொதித்துச் சபிக்கிறார். 'ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்' என்று. 'ஏனப்பா இப்படி பகை உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச் சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா?' என்று கேட்டுவிடுகிறாள் மோனா! முதியவர் திகைக்கிறார். 'மகளே! என்ன இது! இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்?' என்று கேட்கிறார்.

அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.

மோனா, முதியவர் மனதில் குடியேறிவிட்டாளோ?

முதியவர், மோனா மனதிலே இடம் பெற்று விட் டாரோ!

முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனவுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த மனப்பான்மை இதுபோது முதியவருக்கும் அமைந்து விட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?

ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர் உள்ளத்திலே மூண்டு கிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக் கொண்டிருக்கிறது.

அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளிவருகின்றன. மோனா அதைப் படித்துப் பார்க்கிறாள். ஏற்கனவே மெள்ள மெள்ள அவள் உள்ளத்திலிருந்து கலைந்து கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.

எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப் புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக் கண்ட நாள் தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள் முதல்.

ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன் தப்பிச் செல்ல முயற்சிக்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!

அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத் தலைவர்கள் சிலர் விருந்துண்டு களிநடமாடு-கின்றனர்.

வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டுவிடுகிறான்.

ஒரு குண்டு! ஒரு அலறல்! ஒரு பிணம்! பிறகு கைதட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! - இப்படித்தான் நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்க வேண்டும். அதுபோல நடக்கவில்லை.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படைவீரனை, அந்த ஜெர்மானியன் பிடித்து மேலிடம் ஒப்படைக்கக்கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டுவிடாதபடி மறைந்து கொள்ள வழி செய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ் வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!

பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்! பயங்கரமான பழி வாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான்; இரக்கம் காட்டுகிறான்; பகைவனுக்கே துணை செய்கிறான்.

இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.

’புரிகிறதா அப்பா, எந்த இனத்திலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதோ இந்த ஜெர்மானியன் நல்லவனல்லவா?' என்று கேட்கிறாள், முதியவர் மனதில் மூண்டுள்ள வெறுப்புணர்ச்சியைக் குறைத்திடலாம் என்ற எண்ணத்துடன்.

முதியவர் அதற்குத் தயாராக இல்லை.

”இவன் நல்லவனாக இருக்கலாம் மகளே! ஆனால், என் மகன் உயிரைக் குடித்த குண்டு வீசியவன், இவனுடைய மகனாக இருந்திருந்தால்..... மகளே! ஜெர்மானியரில் நல்லவர் என்று ஒரு பிரிவும் உண்டா ? வெறியர்கள்! அழிந்துபட வேண்டியவர்கள்! மனித குல விரோதிகள்!" என்று முதியவர் பேசுகிறார்.

அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை மோவாவினால்; அந்த இடத்தை விட்டுச் செல்கிறாள்.

முதியவர் காண்கிறார்! என்னமோ நேரிட்டு விட்டிருக்கிறது! என் மகளின் மனதிலே ஓர் மாறுதல் புகுந்து விட்டிருக்கிறது, என்ன காரணம் இந்த மாறுதலுக்கு? என்றெண்ணித் திகைக்கிறார்.

போரினில் ஈடுபட்டு இதயம் இரும்பாகிவிடும் நிலையிலே கூட, மனிதத்தன்மை பளிச்சிட்டுக் காட்டத் தவறுவதில்லை என்பதற்கான சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக மோனாவுக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக ஜெர்மானியர் அனைவருமே கொடியவர்கள் என்ற எண்ணம் தகர்ந்துபோய் விடுகிறது.

அவர்களிலேயும் நல்லவர்கள் உண்டு என்ற எண்ணம் பிறக்கிறது.

ஜெர்மானியர் எல்லோருமே கொடியவர்கள் என்றால் இவ்வளவு நல்லவனான ஆஸ்க்கார் எப்படி அந்த இனத்திலே பிறந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. மோனாவின் மனமாற்றம் வேகமாக வளர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்ததோ, வெறுப்புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வோர் நாளும் 'பிதா'வை வேண்டிக் கொண்டிருக்கிறார், கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.

ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால் தாக்கப்பட்டு, குற்றுயிராகிய ஒரு ஜெர்மன் போர் வீரன், ராபி இருந்த குழிக்கு அருகே துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை இப்படி இம்சைப்படவிடக் கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடிச் சென்று துடித்துக் கிடந்த ஜெர்மானியனை தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த 'குழி'க்கு இழுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின் குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.

ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர் வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிபட்டு ; ஒரு பிரிட்டிஷ் போர்வீரன், ஜெர்மன் குண்டடிபட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம் தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன் குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில் கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிபட்ட இருவரையும் விட்டுவிட்டு.

ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக்கடியாரத்தைக் கொடுக்கிறான் ஜெர்மானியனிடம். நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால், இதனை என் தங்கையிடம் சேர்த்து விடு' என்று கூறிவிட்டு.

ராபி இறந்துவிடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக் கொள்கிறான்.

அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன்! விவரம் தெரிந்து கொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை ஆஸ்க்காருக்கு அனுப்பிவைக்கிறான். ’ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு. அதுதான் ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு' என்று.

ஆஸ்கார் இந்தத் தகவலையும் கைக்கடியாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம் பாகாய் உருகி விடுகிறது.

கடும் போர் நடைபெறும் களத்திலேகூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!

ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர்; மற்றவர் பிரிட்டிஷ்.

அவர்கள் வெட்டிக் கொள்ளவில்லை. சுட்டுக் கொள்ளவில்லை ; ரணப் படுக்கையிலே வீழ்ந்து விட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றன.

இந்த மனிதத் தன்மைதான் இயற்கையானது.

போர், இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.

ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளிக் கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது. போர்! ஏன் தான் போர் மூட்டிக் கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.

மோனா ஒரே சமயத்தில் இரண்டு போர் முனைகளில் ஈடுபட வேண்டி நேரிட்டு விட்டது.

ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.

மற்றோர் முனையில், ஆஸ்க்கார் நிற்கிறான், இதயத்தில் இடம் கொடு என்று கேட்டபடி ; மறுத்திடவும் முடியவில்லை; கொடுத்திடவும் துணிவில்லை. போர் மூள்கிறது; நாளாகவாக மோனாவின் போரிடும் ஆற்றல் குறைந்து கொண்டு வருகிறது.

எப்போதும் ஆஸ்க்கார் பற்றிய நினைவு; இரவிலும் பகலிலும்; பார்க்கும் போதும் பார்க்காதிருக்கும் போதும்! அந்தப் பாசம் நிறைந்த கண்கள் அவளைப் படாதபாடு படுத்துகின்றன.

வாய் திறந்து அவன் தன் காதலைக் கூறிடவில்லை. ஆனால் அவன்? அவன் கண்கள் வேறென்ன பேசுகின்றன! ஜெர்மானியர்களை வெறுத்த நிலை மாறி, அவர்களிலும் நல்லவர் இருக்கின்றார் என்ற அளவுக்குக் கருத்து மாற்றம் கொண்டு, ஆஸ்க்காரிடம் பச்சாதாபம் காட்டத் தொடங்கி, பிறகு பரிவு கொள்ளத் தொடங்கி, இறுதியில் காதலே அல்லவா அரும்பத் தொடங்கிவிட்டது. நெஞ்சிலே நெருப்பு மூண்டு கிடந்தது; அங்குக் காதல் மலருகிறதே : எப்படி? எண்ணுகிறாள்; விம்முகிறாள்; குமுறுகிறாள்; எப்படியாவது தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாள்; துடிக்கிறாள்.

”கேட்டாயா பெண்ணே! அக் கொடியவர் செயலை. பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசி, பச்சிளங் குழந்தைகளைக் கொன்றுவிட்டனர். இந்தப் பாவம் சும்மா விடுமா! ஆண்ட வன் இதைச் சகித்துக் கொள்வாரா! நமது அரசாங்கம் பழிக்குப் பழி வாங்காம-லிருக்குமா! உடனே கிளம்ப வேண் டும்; ஜெர்மன் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும்! ஒன்றுக்கு ஓராயிரம்! பழிக்குப் பழி" - என்று பதறுகிறார் முதியவர்.

"அவர்கள் செய்த கொடுமையை நாமும் செய்வது தான் நியாயமா! குழந்தைகள் தூய்மையின் சின்னம்! ஜெர்மன் குழந்தைகளாக இருந்தால் என்ன!” - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள் மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.

அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். 'என் நாட்டவர் இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன்; வேதனைப் படுகிறேன்' என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.

”நீ வெட்கப்பட்டு என்ன பயன்? வேதனைப்பட்டு என்ன பயன்? எங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட்டது போன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட வேண்டும். அப்போது புரியும்" என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார் திகைத்துப் போகிறான்.

சில நாட்கள் வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை. ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சி கொள்ள முயற்சிக்கிறாள்.

கிருஸ்மஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும், இசை விருந்து விழாக் கோலம்.

அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.

வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி ஆறுதல் பெற. அவனுடைய வீட்டின் மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை பத்து வயதுச் சிறுமி இறந்து விட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது; வேதனை தாளமாட்டாமல் வந்தேன், ஆறுதல் அளித்திட வேறு யாரும் இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ் சிறு சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர்- என்றெல்லாம் கூறிக் குமுறிக் குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.

வேதனை நிரம்பிய இந்தச் செய்தி பற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக் கொள்கிறாள்! அவன் மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம் இதற்காகத்தானே காத்துக் கிடந்தோம் என்று ஒருவருக் கொருவர் கூறிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த அணைப்பின் பொருள் அதுவாகத்தான் இருந்தது.

ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொள்கின்றனர். இங்கு ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக் கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி ; காமவெறியால் அல்ல, கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த்தெறியும் காதலின் தூய்மை தந்திடும் வலிவு காரணமாக. இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும் போர், கப்பிக் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் ஜெர்மனி - பிரிட்டன் என்ற நாட் டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா, எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக் கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப் பிணைத்துவிட்டது.

கீழே ஏதோ பேச்சுக் குரல் கேட்ட முதியவர், தள்ளாடித் தள்ளாடி வந்து பார்க்கிறார், ஜெர்மானியனுடன் தன் மகள் குலவுவதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்! ”அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு ஜெர்மானியனை! விபச்சாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே! இந்தக் கள்ளக் காதல் காரணமாகத் தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா! உன் அண்ணனின் ஆவி உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுச் சித்திரவதை செய்யாதா! அண்ணன் உயிர் குடித்த அக்ரம் ஜெர்மானிய இனத்தானுடன், அடிப் பாதகி! விபச்சாரி....." - முதியவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மகனைக் களத்திலே சாகடித்தான் ஒரு ஜெர்மானியன்! மகளின் கற்பையே அழிக்கத் துணிந்தான் மற்றோர் ஜெர்மானியன்! இதனைக் கண்ட பிறகுமா உயிர் தங்கும் உடலில்! கீழே சாய்ந்தார். கூக்குரல் கேட்டு அங்கு வந்த பண்ணையாட்கள், முதியவரைப் படுக்கையில் கிடத்தினர். மோனாவின் இழிசெயலைப் பற்றி முதியவர் பதறிக் கூறியது அவ்வளவையும் அவர்கள் கேட்டு விட்டிருந்தனர். மோனா இனி அவர்களிடமிருந்து தப்ப முடியாது. அவள் பாதகி காதகி! விபச்சாரி என்று கூவிடும் அந்த ஊர் முழுதும். திரும்பிப்பார்த் தாள். ஆஸ்க்காரைக் காணோம். நடந்ததை நினைத்துக் கொண்டாள்; அவளுக்கே நடுக்கம் எடுத்தது. படுக்கையில் பார்க்கிறாள், முதியவர் மரணத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்து விட்டதை. சுற்றிலும் பார்க்கிறாள், சுட்டுவிடுவது போல பார்வையைச் செலுத்தும் பண்ணையாட்களை முதியவர் இறந்துவிட்டார்.

ஊரே அவளைத் தூற்றுகிறது; பண்ணையாட்கள் அவளி டம் வேலை செய்வது இழிவு என்று கூறி விலகிக் கொள்கி றார்கள்.

அப்பனைச் சாகடித்தவள்!
ஜெர்மானியனுடன் குலவினவள்!
கெட்ட நடத்தைக்காரி!
காம சேட்டைக்காரி!

என்றெல்லாம் தூற்றுகிறார்கள் ; இதயத்தைத் துளைக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கமுடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும் போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக் கொள்வார்களா! இனத் துரோகி! நாட்டுத் துரோகி! பெண் குலத்தின் பெருமையையே அழித்த வள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும் தான் கொண்டு போயிருப்பான்! இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா பறிகொடுத்தாள் மனமொப்பி!

பண்ணை முழுவதும், முதியவர் மோனாவுக்கே சொந்தமாக்கி வைத்திருந்தார். தூற்றுவோர் தூற்றட்டும் என்று எண்ணிக் கொண்டு மோனா பண்ணை வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்!

மோனாவும் ஆஸ்க்காரும் பல நாட்கள் சந்திக்கக்கூட இல்லை.

அவர்கள் இருவரும் கள்ளக் காதல் நடத்திக் கொண்டிருந்தனர்; அதனை ஒரு நாள் முதியவர் கண்டு பிடித்து விட்டார் என்று ஊர் பேசிற்று; நடைபெற்றதோ ஒருகணம் தோன்றி அவர்கள் இருவரையும் பிணைத்துவிட்ட காதல் உணர்ச்சி. அதனை அவள் விளக்கிடத்தான் முடியுமா. ஊரே தூற்றுகிறது, அவளை விபச்சாரி என்று.

வெறுப்புணர்ச்சிக்கும் மனிதத் தன்மைக்கும் நடை பெறும் கடும் போர், உள்ளத்தை உலுக்கிவிடத் தக்கது. பலருடைய வாழ்க்கையிலே விபத்துக்களை மூட்டிவிடக் கூடியது என்பது 'இரும்பு முள்வேலி' போன்ற ஏடுகள் மூலம் விளக்கப்படுகின்றன.

ஆனால் இதிலே எடுத்துக் காட்டப்படும் மக்கள் மனப் போக்கு' எளிதிலே மாற்றப்படுவதில்லை. மூட்டிவிடப்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள மக்களில் பெரும்பாலோரால் முடிவதில்லை.

வெறுப்புணர்ச்சி சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும் போதும் மோனா போல் ஒருவரிருவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் - என்றாலும் வெறுப்புணர்ச்சியின் பிடியில் தம்மை ஒப்படைத்துவிட்ட மக்கள், 'மோனா' போன்றவர்கள் மீது சீறிப் பாய்வர்.

மோனா, பிரிட்டிஷ் இனம்; ஆஸ்க்கார், ஜெர்மன் இனம்; இருந்தால் என்ன? காதல் அவர்களைப் பிணைக்கிறது! அதிலே என்ன தவறு என்று எண்ணிட முடியவில்லை, வெறுப் புணர்ச்சி கொண்ட மக்களால்.

எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.

பெர்ல் பக் எனும் உலகப் புகழ் பெற்ற ஆசிரியர், தமது படைப்புகளில், இதுபோன்ற உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.

மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்து கொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக் கொள்ளச் செய்திட வேண்டும் என்பதாகும்.

மற்றோர் 'முனை’ யைக் காட்டுவது போல, பெர்ல் பக் ஓர் கதையைத் தீட்டி அளித்துள்ளார்.

ஜப்பானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம். இரண்டாவது உலகப் போர்! இட்லர் மூட்டிவிட்ட போர்!

ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு ; அது போன்றே ஜப்பானியருக்கும்.

இது 'தேசிய உணர்ச்சி' என்ற மதிப்புப் பெற்று விட்டிருந்த நேரம்.

அவனும் மனிதன் தான்!- என்று பேசுவதே தேசத் துரோகம்!

அவன் ஜப்பானியன். ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று ஆக்கப்பட்டு விட்டிருந்த சூழ்நிலை.

அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஒரு அமெரிக்கன், கடலோரம் கிடத்தப் பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.

அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ. உயிருக்கு மன்றாடுகிறான்!

டாக்டரின் கடமை என்ன! விபத்திலே சிக்கி உயிர் துடித்துக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவது! இனம், ஜாதி, எனும் எதனையும் கவனிக்கக்கூடாது; நோயாளி - டாக்டர் என்ற தொடர்பு மட்டுமே அது போது தெரியவேண்டும்.

வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான். அமெரிக்கன் பிழைத்துக் கொள்கிறான்.

எந்த அமெரிக்கனைக் கொல்வது, 'தேசியக் கடமை' என்று கொள்ளப்பட்டிருக்கிறதோ, அந்த அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!

மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்ய வேண்டியதை மறந்து!

இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே. தன் மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக் கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.

அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஒரு அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான் என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.

அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவிக் கொன்று விடச் செய்வதாகக் கூறி அனுப்புகிறான்.

எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அதற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!

இது கொலை பாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர் காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.

நாமாக அவனைக் கொல்லக்கூடாது; வேறு யாராவது கொன்றால் கொன்று கொள்ளட்டும் என்று எண்ணுகிறான்.

இதற்கிடையில் அவன் மனதில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்க வேண்டும்!

ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக் கொண்டு படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.

அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தை-யாகிறான் என்பதை அறியவில்லை.

சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று எண்ணாமலிருந்திருக்க முடியுமா!!

ஓரிரவு, ஈரிரவு ஆகிறது; அமெரிக்கன் கொல்லப்பட வில்லை.

மேலதிகாரி, சொன்னபடி கொலை செய்யும் ஆட்கள் வரவில்லை.

கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது; அங்குபோய் விடச் சொல்கிறான்.

மனிதத் தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!

மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன் தப்பியோடி விட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.

மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூற அந்தக் 'கொலை' கூடாது என்று எண்ணினார் போலும்! அவர் உள்ளத்திலும் மனிதத் தன்மை மேலோங்கி நின்றிருக்கும் போல் தெரிகிறது.

'உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிப்பட்டிருக்கிறான் என்பதை அறிவித்து விட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். சரி! நடந்தது நடந்து விட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்!' என்று மேலதிகாரி கூறிவிடுகிறார்.

ஆக இரு ஜப்பானியர். தம்மிடம் சிக்கிய ஒரு அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும் அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்து விடுகின்றனர்.

இதுபோன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்த ரிக்கப்பட்டிருக்கிறது.

வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டிவிடப் படுவது; மனிதத் தன்மைதான் இயற்கையானது. அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட.

'இரும்பு முள்வேலி’ யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக் காட்டாக விளங்குகிறாள், மெத்தப் பாடு பட்டு தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண் டவளாக!

அவள் மீது வெறுப்புணர்ச்சிக் கொண்டோர் பாய்கின்றனர்.

இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்தது ; மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.

ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக் கொண்ட அந்த இழிமகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள் போரிடுகிறாள்; அலறுகிறாள்; எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித் துரத்துகிறான், தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று பார்க்கிறாள் மோனா. ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தே விட்டது!

நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.

கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஒருநாள் மோனாதான் அவனைக் காப்பாற்றுகிறாள்.

தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழி சுமத்துகிறான் காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன் முயன்ற போது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இனிக் களைந்தெறிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக் கொண்டு இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானி யருக்கும் பிரிட்டிஷாருக்கும்; இங்கு காதலா! ஒப்புமா உலகு! ஊரோ, மோனா ஜெர்மானியனுக்குக் கள்ளக் காதலி ஆகி விட்டாள் என்று ஏசுகிறது. சபிக்கிறார்கள் - வெறுப்பைக் கக்குகிறார்கள். அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே கொடுத்து விட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும் நாடு தாங்கிக் கொண்டிருக்கிறேதே' என்றெல்லாம் ஏசினர்.

மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை ; அவனுடைய கவலை முழுவதும், அவள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும் இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு இனம் எனும் கட்டுகளை உடைத்துக் கொண்டு பிறந்து விட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே ஆகிவிட்டது! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்து கொண்டு வாழ்ந்தாக வேண்டும். இந்தப் போர்ச் சூழ் நிலையில் நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா? சமுதாயம் ஒப்புக் கொள்ளுமா?

தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.

காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர். காதலால் கட்டுண்ட இருவரும்.

விடிவெள்ளி முளைக்கிறது. பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலைகுலைந்து போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோம் என்ற உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர், உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை; ஜெர்மனியிலே இருக்கிறார். போர் மூட்டிவிட்ட கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர். நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் கெய்சரை விரட்ட வேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோரவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் துணிகின்றனர். சமாதானம் ஏற்படுகிறது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு முள்வேலிகள் அகற்றப் படுகின்றன. கவலை தோய்ந்த முகங்களிலெல்லாம் ஒரு களிப்பு பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம் நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்; ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம்; காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம்; குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம்; உருண்டோடி வரும் பீரங்கி வண்டிகள் கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி ’மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா' - என்ற அன்பு மொழி இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.

சடலங்கள் கிடக்கும் வெட்ட வெளிகள், இரத்தம் தோய்ந்த திடல், அழிக்கப்பட்ட வயல், இடிபாடாகிவிட்ட கட்டிடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள் இவைகளையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும். மாடு மனை தெரியும்; மக்கள் சுற்றம் தெரிவர்; விருந்து மண்டபம் தெரியும்; விழாக்கோலம் தெரியும்; பூங்கா தெரியும்; ஆங்கு உலவும் பூவையின் புது மலர்முகம் தெரியும் ; கண்கள் களிநடமிடும்.

மோனாவுக்கும் ஆஸ்க்காருக்கும் கூடப் புதுவாழ்வு பிறந்திடுமல்லவா!

பகைவனிடமா காதல், ஜெர்மன் வெறியனிடமா காதல் என்ற பேச்சுக்கு இனி இடமில்லை அல்லவா?

சமாதானம் ஏற்பட்டுவிட்டது; இனி ஜெர்மானியரும் பிரிட்டிஷ் மக்களும் பகைவர்கள் அல்லர்; வெவ்வேறு நாட்டி னர்; நேச நாட்டினர். இனி மோனாவை ஆஸ்க்காரிடமிருந்து பிரித்து வைக்கும் பேதம் ஏது?

கைதிகளை விடுதலை செய்து ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பிவிடும்படி உத்திரவு வந்துவிட்டது. சிறுசிறு அளவினராக அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். ஆஸ்க்கார்? அவளையும் தான் போகச் சொல்லுவார்கள் ஜெர்மனிக்கு. அவன் போய்விடுவதா! நான்! என் கதி! -- என்று எண்ணுகிறாள் மோனா.

பிரிட்டிஷ் பெண்ணை மணம் செய்து கொள்பவன் ஜெர்மனி போகத் தேவையில்லை என்றோர் விளக்கம் கிடைக்கிறது; மோனா மனதிலே ஒரு நம்பிக்கை எழுகிறது.

ஆஸ்க்காரைத் திருமணம் செய்து கொண்டு தீவிலேயே வாழலாம்; பண்ணை வேலைகளை இருவரும் கவனித்துக் கொள்ளலாம். கள்ளி என்றும் விபச்சாரி என்றும் ஏசிப் பேசினவர்கள் கண்முன், நாங்கள் காதலித்தோம் கடிமணம் புரிந்து கொண்டோம் காண்பீர்! ஏதேதோ கதைத்தீர்களே முன்பு. இப்போது புரிகிறதா! நாங்கள் எந்த முறைகேடான செயலிலும் எங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; முறைப்படி திருமணம் செய்துகொண்டோம் என்று கூறிடலாம்; வீசப்பட்ட மாசுகூட துடைக்கப் பட்டுவிடும் என்று எண்ணிக் கொண்டாள் மோனா. பேதைப் பெண்! இந்த உலகம் உண்மைக் காதல் வெற்றிபெற அவ்வளவு எளிதாக அனுமதி கொடுத்து விடுகிறதா! துளியும் எதிர்பாராதிருந்த இன்னல் கள் தாக்கிடக் கிளம்பின.

மிராசுதாரர், குத்தகைக் காலம் முடிந்துவிட்டது; இனி பண்ணையை விட்டு வெளியேறு என்று உத்திரவு பிறப் பித்தார்.

”மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன். பாடுபட்டு, பண்ணையை நடத்தி" என்கிறாள் பாவை. 'உனக்கா! ஊர் என் முகத்திலே காரித் துப்பும்! ஜெர்மானிக்காரனுடன் திருட்டுத்தனமாக தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு என் பண்ணையைக் குத்தகைக்குத் தரமுடியாது. விரைவில் வெளி யேறு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் மிராசுதாரன்.

ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்க மாட்டார்கள்; தங்கும் இடமும் தர மாட்டார்கள்; தொழிலும் நடத்தவிட மாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது. மோனாவின் மனம் உடைந்து விடுவது போலாகிவிட்டது. ஆஸ்க்கார் கூறினான்: "கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன் என்றாலும், பிரிட்டனில் தான் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர் மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப் பிடித்தார்கள். நான் தவறேதும் செய்தவன் அல்ல என்பதும் ஜெர்மனியில் கெய்சர் மேற் கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன் என்பதையும் நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர். அப்போதே எனக்கு உறுதி அளித்தார்கள், ”போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும்" என்பதாக. இப்போது அதை நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று வாழ்ந்திடலாம்; போர்க்காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும். இல்லறம் எனும் நல்லறத்தில் இன்பம் பெறுவோம் ; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டு விட்ட இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும்' என்றான்.

இசையென இனித்தது அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று. பிரிட்டிஷ் தொழில் நிலையம் அனுப்பி வைத்த பதில் கடிதம். வேலை இப்போதைக்கு இல்லை! போர் முடிந்துவிட்டது என்றாலும் ஜெர்மானியர்கள், பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில் தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானி யனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும்' கடிதம் இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே உலகே சிக்கிவிட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! போர் எங்கே நின்றுவிட்டது! "சமாதானம் மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர் நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு. மோனா! போர் நடந்தபடி இருக்கிறது! வெறுப்புணர்ச்சி தாண்டவமாடியபடியேதான் இருக்கிறது. இதோ பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்!" ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட் டாள்! நிலைமையை அறிந்து கண்கலங்கினாள்.

அமெரிக்கா, இனவெறி அற்ற இடம் ; யாரும் சென்றிடலாம்; தாயகமாகக் கொண்டிடலாம் என்ற செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம் போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இனபேத மற்ற சமுதாய நெறி தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. ’எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ஒரு வசதியுமின்றி புகுந்து கொண்டு நாட்டுக்குப் பாரமாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனை குறுக்கிட்டது.

பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம ஏழை! ஆஸ்க்காரோ ’கைதி'யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்யமுடியும்? அமெரிக்காவை மறந்துவிட வேண்டியது தான். அது பொருள் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு அங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது? வாழ இடம் ? வாழ வழி?

தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார் : ”மோனா! நீ மட்டும் சம்மதித்தால், நாம் நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து, போர் கிளறிவிட்ட பகை உணர்வை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால் நாம், இருவரும் அங்கு சென்று வாழ்ந்திடலாம். அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வை தன் வாழ்வு என்பவர்கள். உன்னைக் கண்டால் பூரித்துப் போவார்கள்! போகலாமா!" என்று கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும் இடமே எனக்குத் திரு இடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார் தன் அன்னைக்கு. பதில் வந்தது. இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவது போல.

'எப்படியடா மனம் துணிந்தது, நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருவளைக் காதலிக்க? அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை, பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல் கண்ணை மறைக்கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன் தானா நீ? நாட்டைவிடப் பெரியவளோ உன்னை மயக்கி விட்ட கள்ளி' என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி அந்தக் கடிதத்தில்.

போர் முடிந்துவிட்டது என்றால் புது நேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது, பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள் ; பீரங்கி ஓசை இல்லை, படை கொண்டு தாக்குதல் இல்லை. ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர் தான்! பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் - வெவ்வேறு இனம்! என்ற கருத்து பீடித்துக் கொண்டிருக்கிறது என்பதனை இரு வரும் உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடை யாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்று பட்டதால் கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி ஏங்கிக் கிடந்தாள்.

'ஒன்று இருக்கிறது! போரும் பகையும் அற்ற இடம் ; விரோதமும் குரோதமும் அற்ற இடம் ; மனிதர்களாக வாழக் கூடிய இடம் ; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது மோனா! அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள் ; உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம் ; நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற இடம். அதனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடம்தான்; இருவருமே செல்வோம். நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு' என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், கொந்தளிக்கும் கடல்!

மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை ஏற்றுக் கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்! உன் மரபு என்ன? என்று கேட்கும். மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை! பிரிட்டன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி துரத்துகிறது, 'உள்ளே நுழையாதே; இடம் கிடையாது என்று. அதோ ஆழ்கடல்! கொந்தளித்தபடி இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது; காதலால் கட்டுண்ட என் மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும் வெறுப்புணர்ச்சியால்.

கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன், உங்களை ஆரத்தழுவி வரவேற்றிட! இங்கு இனபேதம், கிளறிவிடும் பகை உணர்ச்சி கிடையாது. வந்திடுவீர்! என்று கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு: காதலின் மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! -- என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் தான் கொந்தளிக்கிறதோ!

உறுதி பிறந்துவிட்டது; புது உற்சாகமே வந்துவிட்டது; இருவரும் புறப்படுகின்றனர். தமக்கு ஏற்ற நாடு நோக்கி குன்றேறுகிறார்கள்! மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும் இடம், அதோ கீழே, காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப் பார்க்கின்றனர்; கீழே ஆழ்கடல்! அலைக் கரங்கள் அழைக்கின்றன.

ஆரத் தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!! இயற்கையோ எழிலளிக்கிறது மணவீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை! இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர். புது வாழ்வு பெற்ற இருவரும்.

ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத் தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப் பிணைக்கப் பட்டிருக்கட்டும் என்று எண்ணினான் போலும்.

கண்களைக் கண்கள் கவ்விக் கொண்டன.

அந்த கண்கள் என்னென்ன பேசிக் கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ள மனம் படைத்தோர் இருக்கும் இடம்! அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதா கோயிலின் மணி ஓசை கிளம்புகிறது. போர் முடிந்தது; பகை ஒழிந்தது; சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை கூறுகிறது என்பர்!

இல்லை! போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச் சேர்ந்தனர் என் றல்லவா ஒலி அறிவிக்கிறது!

காதற் பயணம் முடிந்தது. போய்ச் சேரவேண்டிய இடத் திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க காதல் என்று ஒலிக்கிறதோ!!
-----------------

2. இதயம் இரும்பானால்


ஊர்வலம் புறப்பட்டுவிட்டது! உலகம் அதுவரை கண்டறி யாத அருமைமிகு ஊர்வலம்! இதைவிடத் திரளான மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம் அதி கம் இருந்த துண்டு! மகிழ்ச்சி கொந்தளித்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. முடி தரித்த மன்னனை, 'ஆண்டவனின் பிரதிநிதி" என்ற முறையில், பயபக்தியுடன் வரவேற்று, வழிபட, மக்கள் இருமருங்கும் கூடி நிற்க, அருளாளன் அளித்த அதிகாரம் நமக்கு அரணாக இருக்கிறது என்ற எண்ணம், பார்வையில் தெரிய, அடிபணிந்து கிடக்க, ஆணைகளை நிறைவேற்ற, கேட்டதைக் கொடுக்க, காத்துக் கிடக்கும் இந்தப் பெருங்கூட்டத்துக்கு, நாமன்றோ கண்கண்ட கடவுள் என்று எண்ணி இறும்பூதெய்திய நிலையில், மன்னர்கள் "பவனி" வந்ததுண்டு.

பிடிப்பட்ட நாட்டிலிருந்து காணிக்கையாகவும், சூறை யாடியும் கொண்டு வந்த பொருட் குவியலைச் சுமந்து கொண்டு, அடிமை நிலையைப் பெற்ற முன்னாள் வீரர்கள் அஞ்சி அஞ்சி நடந்துவர, களத்திலே கடும் போரிட்டு வெற் றிக்கு உழைத்த வீரர்குழாம், மகிழ்ச்சி உமிழும் விழிகளுட னும், குருதி தோய்ந்த வாளுடனும் கெம்பீரமாக நடந்துவர, 'வாழ்க, வீரரே! வாழ்க! வெற்றி பெற்றளித்த எமது தீரரே வாழ்க!' என்று மக்கட் கூட்டம், வாழ்த்தொலி முழங்கி, இரு புறமும் நின்றிட, அதற்கென்று அமைக்கப்பட்டதும், அடக்க அரிதான புரவிகள் பூட்டப்பட்டதுமான, தேரிலே' அமர்ந்து, புன்னகையை இங்கும் அங்கும் வீசியபடி, நமது வாள் வலி வால் வாழுகின்றனர் இந்த மக்கள்! நமது வீரம் தரும் வெற்றியால் ஏற்றம் பெற்றுவிட்டனர் இந்த மக்கள்! மனை களில் மகிழ்ச்சியும், தொழிலிலே வளர்ச்சியும், வயலிலே செழிப்பும், யாரால் ஏற்படுகிறது என்பதை அறிந்து தான், இன்று வாழ்த்தி வரவேற்கிறார்கள். களத்திலே, நாம் கொட் டிய இரத்தம், இன்று இவர்களுக்கு வாழ்வு தருகிறது; அங்கு செந்நீர் கொட்டினோம்; இதோ களிப்புக் கண்ணீரைச் சிந்து கிறார்கள்! நன்றி காட்டுகிறார்கள்! நல்ல மக்கள! நமது மக்கள்! நம் நாட்டவர்! என்று எண்ணிக் களிப்படையும் வெற்றி விருது பெற்ற வீராதி வீரன், படை அணிவகுப்புடன் ஊர்வலம் வந்ததுண்டு! கண்கொள்ளாக் காட்சிகள்! சிந் தைக்குச் செந்தேனாய் அமைந்த இசை நிகழ்ச்சிகளுடன், ஊர்வலங்கள்! கண்களைப் பறிக்கும் அணி மணியுடன் அலங் காரவல்லிகள்" அன்னமோ, பேசும் சொர்ணமோ, அல்லிக் கூட்டமோ, அழகு மயில் ஆட்டமோ என்று கவி அறியாதா ரும் களிப்பால் கவிஞர் நிலை பெற்றுச் கூறிக் குதூகலிக்கும் விதமான காட்சிகளாக அமைந்த ஊர்வலங்கள் நடைபெற் றுள்ளன. ஆனால் இதுபோன்ற ஊர்வலம் உலகிலே, இதற்கு முன்பும் நடைபெற்றதில்லை ; இனி என்றும் நடைபெறாது என்று கூறத்தக்கதாக அமைந்திருந்தது.

மன்னன் ஆள்கிறான்; மக்கள் மாள்கிறார்கள்! அரண் மனை இருக்கிறது; அங்கிருந்து கிளம்பும் அழிவுப்புயல், வயலை அழிக்கிறது. வனிதையரை அழிக்கிறது. தொழிலை நாசமாக்குகிறது; தோழர்களைத் துடிக்க வைக்கிறது! அர சன் தலைக்கு முடி கொடுத்தோம். அவன் நம் குரல் வளையை நெறிக்க ஆட்களை ஏவுகிறான்! - என்று மனம் நொந்து, பேசிப் பேசி, அழுது அழுது, கண்ணீரும் வற்றிப் போன பிறகு, கனல் கக்கி, எதிர்ப்பட்டதெல்லாம் இனிப் பிடி சாம்ப லாகும்! என்று எக்காளமிட்டுக் கொண்டுள்ளனர், ஏதுமறி யாதவர்கள்! எதற்கும் தலையாட்டக் கூடியவர்கள்! - என்று கருதப்பட்டுவந்த மக்கள்!

அந்த மக்கள், வீறிட்டெழுந்திருக்கும் வேளையிலே, ஊர்வலம்! மன்னன் வருகிறான் ஊர்வலமாக! இராணியுடன், பெற்றெடுத்த செல்வங்களுடன்!

கடும் புயல் வீசுகிறது; காகிதப்பூ என்ன ஆகும்? பிய்த் தெறியப்பட்டு, காற்றோடு காற்றாகி, மண்ணோடு மண்ணாகி உருவம் தெரியாமல் மறைந்து போகும்; அழிந்து போகும்! அதுவன்றோ இயற்கை.

கடும் புயல் வீசிடும் போது, ஆலும் வேலும் அடியற்று வீழுமே! காகிதப்பூ கணப்பொழுதுதான் நிற்க இயலுமோ!

ஆனால், என்னென்பது அதிசயத்தை! கடும் புயலும் அடிக்கிறது, காகிதப்பூவும் இருக்கிறது! அம்மட்டோ! காகி தப் பூவை, உடன் அழைத்து வருகிறது கடும்புயல்! ஆத்தி ரம் கொண்ட மக்கள், அழைத்து வருகிறார்கள், ஆற்றலிழந்த அரசனை, ஊர்வலமாக!! அவன் கண்டறியாக் காட்சி!

மன்னன் வருகிறான் ஊர்வலமாக! மக்கள் முழக்கமிடு கிறார்கள், 'வாழ்க! வாழ்க!' என்று. ஆனால் யார் வாழ்க என்கிறார்கள்? மக்கள் வாழ்க!' என்று முழக்க-மிடுகிறார்கள்.

தாய்மார்கள், தமது குழந்தைகளுக்குக் காட்டுகிறார் கள், "அதோ, பார்! பார்! அவன்தான் மன்னன்! மிரள மிரள விழிக்கிறானே அவன்தான்! மண்ணில் போட்டெடுத்த பொம்மை போல இருக்கிறானே, அவன் தான்!" என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள்.

'என்ன கனிவு! எவ்வளவு குழைவு! கண்ணைப்பார் கண்ணை!" என்று கோபத்தைக் கேலியில் குழைத்து, வழித் தெடுத்து வீசுகின்றனர்; கூடை சுமந்து கூலி பெற்றுக் கும்பி நிரப்பும் பெண்டிர் கூட்டம், இராணியைப் பார்த்து, 'இராணியாம், இராணி! அவளுக்கு என்ன அப்படி ஒரு பட்டம். அரசன் மனைவி என்று சொல், அதுபோதும் - அந்த அழிவு தேடிய ஆணவக்காரிக்கு" என்று பேசுகின்றனர் சிலர்.

"எதற்கெடுத்தாலும் கோபம் தானா? எப்போதும் சச் சரவு செய்தபடி இருக்கத்தான் வேண்டுமா? கஷ்டப்படு கிறோம், உண்மைதான்! கண்ணீர் பொழிகிறோம்; கர்த்தன் அறிவார். அவருடைய அருட்கண் திறந்தால், எல்லாத் தொல்லையும் தொலைந்து போகும். அதை விட்டு விட்டு அரசனை எதிர்ப்பது, அவன் ஆட்களை எதிர்ப்பது என்ப தெல்லாம் முறை அல்லவே. ஏன் வீணாக ஆபத்தையும் பாபத்தையும் தேடிக் கொள்ளுகிறீர்கள்?" என்று ஆடவர் களுக்கு அன்பு கலந்த அறிவுரையை, அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு கூறிவந்தவர்கள் தான், ஆரணங்குகள்!

'விதியே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம்' என்ற தத்துவத்தைத் தேவாலயத்தார் மறந்தாலும், இந்தத் தையலர் மறப்பதில்லை!

"உழைப்பைத் திருடி உல்லாசமாக வாழுகிறார்கள், உலுத்தர்கள்" என்று ஆடவர் பேசிடும் போது, உள்ள கஷ் டம் போதாதென்று இந்தப் பாபமும் வேறு வந்து சேரு கிறதே" என்றெண்ணிக் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கிடந்தவர்கள் தான் அந்தப் பெண்கள்.

ஆனால், அவர்களும் மாறிவிட்டார்கள், ஆடவரே கண்டு ஆச்சரியப்படத்தக்க விதத்தில். ஏன் மாற மாட்டார்கள்!

கசையடியால் உடலெங்கும் இரத்தம் பீறிட்ட நிலை யில், பண்ணைமேட்டிலே வீழ்ந்து கிடந்த தகப்பனை, துடிக் கத் துடிக்க, அலற அலறத் தாக்கி, சிறைக்கு இழுத்துச் செல் லப்பட்ட கணவனை, முளையிலேயே இந்தப் போக்கிரித் தனமா என்று ஏசி முரட்டுப் பணியாட்கள் தாக்க, 'ஐயோ! அம்மா! கொல்லுகிறார்களே!' என்று கதறி ஓடிவந்து காலடி வீழ்ந்த மகனைக்கண்ட பிறகு, மாறாமல் எப்படி இருப்பார்கள்? மாறிவிட்டார்கள்! எந்த அளவுக்கு என்றால், இந்த ஆடவர் கள், சந்துமுனை நின்று பேசுவார்கள், உருட்டுவிழி காட்டி னால் ஊராள்வோர் வழிக்கு வந்துவிடுவார்கள் என்றெண்ணி ஏமாந்து கிடப்பார்கள்; செயல்படத் தயங்குவர் என்று கேலி பேசிவிட்டு, பெண்டிரெல்லாம், திரண்டு ஒன்றுகூடி, "இதென்ன பேயாட்டமாடுகிறார்களே என்று அரண்மனை யுள்ளோரும் மாளிகைக்காரரும் மருண்டு கூறிடத் தக்க விதத்தில், கிடைத்ததைக் கரத்தில் எடுத்துக் கொண்டு, ஆத்திரம் தீர ஏசிக் கொண்டு, அரண்மனை நோக்கிப் படை எடுத்துச் சென்று, துப்பாக்கி காட்டியவரைத் தூ! தூ! என்றேசிவிட்டு, உள்ளே நுழைந்து, கிடந்ததை எடுத்து வீசி, நொறுக்கித் தூள் தூளாக்கி, அரண்மனையை அல்லோலகல் லோலப் படுத்திடும் அளவுக்கு மாறிவிட்டார்கள்!

அந்த அளவு மாறிவிட்ட பெண்கள், அரசனும் அரசி யும், முன்பு அடங்கிக் கிடந்த மக்களால், அடக்கப்பட்ட நிலையில் 'ஊர்வலம்' வரக்கண்டால், ஏசாமலா இருப்பார்! கண்டபடி ஏசத்தான் செய்வர். வெற்றிக் களிப்புடன் கூச்சலிட்ட னர்.

சீற்றம்! கேலி! மகிழ்ச்சி! - எல்லாம் கலந்த இரைச்சல்!

யாராருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவை எல்லாம் பேசுகிறார்கள்! பேசுகிறார்களா? கூவுகிறார்கள்! வார்த்தைகள் மட்டுந்தானா, கிளம்பின! பார்வைகள், வார்த்தைகளைவிடக் கடுமையாக, வேகமாக! தேக்கிவைக்கப் பட்டிருந்த பெருவெள்ளம், அணையைப் பல இடங்களிலே, ஒரே நேரத்தில், பிளந்துவிட்டால், என்ன ஆகும்! அதுதான் இது! மன்னனை ஊர்வலமாக, மக்கள் அழைத்து வந்த காட்சி! அழைத்து வந்த' என்பதை நீக்கிவிடுங்கள். இழுத்து வந்த' என்று கொள்ளுங்கள்!

அரசனுடைய காவற்படை கூட வருகிறது! அரசனைக் காத்திடும் ஆற்றலுடன் அல்ல, தமது தலை தப்பினால் போதும் என்ற அச்சத்துடன். மக்களின் பாதுகாப்புப்படை, எண்ணிக்கையில், வலுவில், துணிவில், அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் படை, ஏது? மக்கள், பன்னெடு நாட்கள் சிந்திய கண்ணீர்த்துளிகள், அந்த வடிவம் கொண்டு விட்டன! கொடுமைகளைத் தாங்கித் தாங்கித் தவித்த மக் கள் ஈன்றெடுத்த பயங்கரக் குழவி, அந்தப் படை!

போர்ப் பயிற்சியை முறைப்படி பெறவில்லை! உண்மை. ஆனால் முறைப்படி போர்ப் பயிற்சி பெற்ற படைகளையும் சின்னாபின்னமாக்கும் துணிவு இருக்கிறது. இந்த மக்கட் படைக்கு! ஏன்? இது, சாக அஞ்சாத கூட்டம்!

'கற்பழிக்கப்பட்ட தங்கையின் பிணத்தருகே அமர்ந்து, காதகன் கணவனாக இருக்கிறானே, நான் என்ன செய்ய இயலும்' என்று கதறிய அண்ணன் இருக்கிறான் அந்தப் படையில்!

"சாகக்கிடக்கிறாளய்யா, என் தாய்! இந்தப் பழக் கொத்து அவளுக்காக, ஐயா!" - என்று கெஞ்சியபோது, இடியெனச் சிரிப்பொலி கிளப்பி, பழக் கொத்தைப் பறித்துக் கீழே வீசி, தன் குதிரையின் குளம்பு, பழக்கொத்தை மிதித்து துவைத்திடக்கண்டு, இதுதான் உனக்கு! ஓடி, உயிர்பிழைத் துக் கொள்" என்று, ஆர்ப்பரித்து அமுல் செய்தவனை எதிர்த்து நின்று, அவன் வாளுக்கு இரையான, அண்ணனைக் கட்டிப் புரண்டு அழுத, தம்பி இருக்கிறான்!

வீடு வாசல் இழந்தவர்கள், வேலை இழந்து தவித்தவர் கள், களஞ்சியம் கொளுத்தப் பட்டதைக் கண்டு பதைத் தவர்கள், காலில் வீழ்ந்த போதும் கடுகளவு இரக்கமும் காட் டாதவர்களின் போக்கினால், நொந்தவர்கள் இருக்கிறார் கள், அந்தப் படையில். அவர்களுக்குப் பயிற்சி ஏன்? பயிற்சி இல்லை என்றுதான் எப்படிக் கூறிட முடியும்? நிரம்பப் பெற்றுவிட்டார்கள் பயிற்சி! கொடுமைகளைக் கண்டு கண்டு, கொடுமையைக் கொன்றொழித்தாலன்றி, நாம் வாழ முடியாது என்பதைக் கண்டு கொண்டார்கள்! இரத்தக் கறையைப் போக்க இரத்தம் கொண்டுதான் கழுவவேண்டும் என்ற பாடம் தெரிந்து கொண்டார்கள்! இரத்தம் தேடி அலைகிறார்கள்! உழைக்காமல் அலுத்திடாமல் ஊர் சொத்தை உண்டு கொழுத்து, உல்லாசம் தேடி அலைந்து, முத்துக் கலந்த பானமும், மோகனாங்கியின் அதரமும் ஒரு சேரச்சுவைத்து, அனுபவித்தவர்களின் இரத்தம் தேடி அலை கிறது, இந்தப்படை! உழைப்பாளியின் இரத்தம், மண்ணில் உறைந்து கிடந்ததைப் பார்த்த கண்களால், உலுத்தர்களின்
இரத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கத் துடிக்கிறது, இந்தப் படை!

ஓநாய்களைத் துரத்திக் கொண்டு வரும் வேட்டைக் காரர்கள் என்று சொல்வது முறை! இல்லை, இல்லை! வேட்டைக்காரர்களைத் துரத்திக் கொண்டு வரும் ஓநாய்கள் என்று கூற வேண்டும் என்பர், அரசர் பெருமானின் அடிவருடிகள்! கூறட்டுமே! அதனால் என்ன!! இப்போது வேண்டியது இரத்தம்! - என்று கூச்சலிடுகிறது, பெருங்கூட்டம்.

அந்தப் பெருங்கூட்டம் புடை சூழத்தான், பவனி வருகிறான், மன்னன், குடும்பத்துடன்.

பீரங்கி வண்டிகளை இழுத்து வருகிறார்கள்; அதன் மீது நின்று கொண்டு, ஆர்ப்பரிக்கிறார்கள் - பெண்கள்!

துப்பாக்கி தூக்கிக்கொண்டு வருகிறார்கள்! அதன்முனை யில் ரொட்டித் துண்டு, செருகப்பட்டிருக்கிறது!

செடி கொடிகளைப் பறித்தெடுக்கிறார்கள்; பீரங்கி வாயிலே திணிக்கிறார்கள்.
இரண்டு இலட்சம் இருக்கும் என்கிறார்கள், பெருந்திரள் கண்டு!

இவ்வளவு பேரும், நமக்கு விரோதிகள்!- என்று எண்ணி நடுங்குகிறாள், மன்னனை மணந்தவள்!

"இவ்வளவு பேரும், என் குடிமக்களாக இருந்தவர்கள்!"- என்று எண்ணி ஆயாசப் படுகிறான் மன்னன்.

"முன்பெல்லாம், இந்தக் கூட்டத்தவர் வந்தால், "அப்பாவின் ஆட்கள்" அடித்துத் துரத்துவார்களே, இப் போது மட்டும் ஏன், இவர்கள் கூவுகிறார்கள், அப்பா தலை கவிழ்ந்தபடி இருக்கிறார்!' என்று எண்ணித் திகைக்கிறான், அழிவை வரவழைத்துக் கொண்ட அரசனின் மகன்!

"நள்ளிரவில் புகவேண்டும்; குடித்துக் கூத்தாடி, அலுத்துப் படுத்துக் கிடப்பான், மரக்கட்டை போல! கட்டாரியால் ஓங்கி, மார்பில் குத்தவேண்டும்! உயிர் போகுமட்டும்!" - என்று நண்பனிடம், அரசனைப்பற்றி ஆத்திரத்தோடு பேசியவன், இருந்திருக்கக் கூடும், அந்த ஊர்வலத்தில்! "ஏ! முட்டாள்! நீ ஒரு யோசனை சொன்னாயே, யாருமறியா மல், அரசனைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று! இதைப் பாரடா, ஏமாளி! இதைப் பார்! இது ஆகுமா அது!!" என்று மற்றவன் கேட்டிருக்கக்கூடும். "ஆமாம்! ஒரே அடி யாகச் சாகடித்து என்ன பலன்! இதோ, மன்னன், விநாடிக்கு விநாடி கொல்லப்படுகிறான்; மறுபடியும் உயிர் தரப்படு கிறது, மீண்டும் கொல்ல! மானமிழந்து, மதிப்பிழந்து, மக்க ளால் இழுத்து வரப்படுகிறான், மன்னன்! இது அல்லவோ வெற்றி! மகத்தான வெற்றி! நான், மன்னனைக் கொல்லப் பார்த்தேன்! இப்போது மக்கள், மன்னனுக்கு மரண தண் டனை தருகிறார்கள்!! இதுதான் மாபெரும் வெற்றி!" என்று அவன் கூறிச் சிரித்திருக்கச் கூடும்.

மக்கள், என்னென்ன பேசுகிறார்கள் என்று மன்னனுக்குப் புரியவில்லை! அவனுக்குத்தான் மக்களே, புரியவில்லையே! என்ன செய்வான், பாவம்!!

மகுடாபிஷேகத்தின் போதும் ஊர்வலம் ; இப்போதும் ஊர்வலம்! எல்லாவற்றுக்கும் நான் தான், கிடைத்தேன்! - என்று எண்ணிக் கொண்டான், போலும்!

பாரிஸ் பட்டினத்தை நோக்கிச் செல்கிறது, ஊர்வலம்! பட்டத்தரசன் தலைநகர் வரவேண்டும் என்று மக்கள் அழைத்தனர்; 'தலைநகரா அது? தலைபோகும் நகரம்!' என்று கூறி, மன்னனை அங்கு செல்லவிடாமல் தடுத்தனர், கொலு மண்டபத்துக் கொடியோர்! மக்களின் கை ஓங் கிற்று! அரசன் இருக்கும் இடம் நோக்கிப் பாய்ந்தது மக்கள் வெள்ளம்! அதிலே சிக்கினான் மன்னன், குடும்பத்துடன்! வெள்ளம், பாரிஸ் நோக்கிப் பாய்கிறது! அதிலே, மிதந்து வருகிறான், மன்னன், உல்லாச ஓடத்தில். அமர்ந்து பழக் கப்பட்டவன்!

பாரிஸ் பட்டினத்து மேயர், மன்னனை வரவேற்கிறார். மன்னரே! தங்கள் வரவு நல்வரவாகுக!" என்று; அவருக்கும் தெரியும்; அனைவரும் அறிவர் அதன் பொருள். 'பிடிப்பட்ட பேயனே! இனி நீ எங்கள் கைதி!" என்பதுதான் என்று. மன்னனும், உணர்ந்திருக்கிறான், 'கைதியாக்கி விட்டீர்கள். இனி, என் கதி, உங்கள் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது" என்று.

ஆயினும், சம்பிரதாயத்துக்காக மன்னன் பேசுகிறான்.

"மகிழ்ச்சியுடன் வருகிறேன்; மக்களிடம் நம்பிக்கை வைத்து வருகிறேன்" என்று அரசன் கூற, மேயர் அதை மக்களுக்கு அறிவிக்கிறான். அறிவிக்கும் போது, மக்களிடம் நம்பிக்கை வைத்து' என்ற வார்த்தைகளையே, சொல்லாமல் விட்டுவிடுவது கண்ட, இராணி நினைவு படுத்துகிறாள், நம்பிக்கையுடன்' என்ற வார்த்தையைக் கூறும்படி!

அரசனை எந்த அளவுக்கு அச்சம் பிடித்தாட்டிற்று என்பது இதிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா?

"அழைத்தீர்களே என்று வந்திருக்கிறேன். முடியாது என்று கூறிடும் ; ஆற்றலை இழந்துவிட்டேன்; வந்திருக்கிறேன். இழுத்து வந்தீர்கள் - இங்கு நிற்கிறேன். எனக்குக் கெடுதி எதுவும் செய்யாதீர்கள். கெஞ்சுகிறேன். கெடுதி செய்யமாட் டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.

திக்கற்றவன்! வலிவிழந்தவன்! உங்கள் மன்னன் உங்களி டம் தஞ்சம் புகுந்து விட்டேன்!" என்றெல்லாம், விளக்கமா கப் பேச நேரமில்லை, பேசிப் பழக்கமில்லை! எனவேதான், மன்னன், சுருக்கமாகக் கூறினான், நம்பிக்கையுடன் வந்திருக் கிறேன்' என்று.

அந்த மக்கள், எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள், மன்னனிடம்! மகேசன் அருள் அவனை மன்னனாக்கிற்று! அவனுக்கு அடங்குவது ஆண்டவனுக்கு அடங்குவதாகும்! மன்னன், நாடு வாழ நல்லாட்சி செய்வான்; மக்கள் வாழ்வே என் மகிழ்ச்சி என்று எண்ணுவான். வெளிப்பகையும், உள் நாட்டிலே பசியும் பிணியும் தாக்காமல் பாதுகாப்பு அளிப் பான்! - என்றெல்லாம் நம்பினர்!

மக்களின் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டான் மன்னன்! இப்போது மக்களிடம் மன்றாடுகிறான், 'உங்களிடம் நம் பிக்கை வைத்துத்தான் வந்திருக்கிறேன்' என்று.

"ரொட்டி கேட்டோம்; இவன் படை விரட்டி அடித் தது! கருணை கேட்டோம், கசை அடி கொடுத்தனர். இந்தப் பாவம் சும்மா விடாதய்யா என்று பேசினர். 'பாஸ்ட்டிலி சிறையில் தள்ளினர், அதிகாரிகள்! இப்போது, நம்மிடம் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாராம், இந்த நல்லவர்! எப்படி இருக்கிறது, வேடிக்கை!! என்று அல்லவா, மக்கள் கேலி பேசியிருப்பர்.

பஞ்சம் தாக்கிற்று மக்களை ; பவனி நடத்துகிறார்கள்! அதிலே, மன்னன் மட்டுமல்ல, அவன் இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட, ஐம்பது வண்டி தானியங்கள்' உடன் கொண்டு வரப்பட்டன.

தங்கமும், தந்தமும், பரியும் கரியும், முத்தும் அங்கியும் பவளமாலையும் - இப்படிப் பொருள்கள் கொண்டு வருவர்; வெற்றிபெற்ற படையினர், வேற்று நாட்டிலிருந்து.

இங்கு, அரண்மனையை நோக்கிக் கிளம்பிய படை ஐம்பது வண்டி தானியத்தைக் கொண்டு வருகிறது!

அன்று நாடு இருந்த நிலையை ஆத்திரம் மட்டுமன்றி, அறிவும் ததும்பிய உள்ளத்தினன் ஒருவன் எடுத்து விளக்கினான்.

'நண்பர்களே! தைரியமாக இருங்கள்! ரொட்டி! ரொட்டி! என்று ஏங்கித் தவிக்காதீர்கள்! இனி ரொட்டிக்குப் பஞ்சமில்லை!'

மக்களுக்கு மகிழ்ச்சி! அவர்கள், ஆட்சி முறை மாற வேண்டுமென்று விரும்பக் காரணமே கூட அரசியல் முறை களுக்கான தத்துவ ஆராய்ச்சி அல்ல; அந்த ஆட்சிமுறையால், அவர்களைப் பட்டினி வாட்டியது! அதுதான் காரணம்.

ஆகவே, இனி 'ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை!' என்று தமது நண்பனொருவன் கூறக்கேட்டதும் மகிழ்ச்சி பிறந்தது. மறுகணம், கவலை குடைந்தது. "ஐம்பது வண்டி கோதுமை, எத்தனை நாளைக்குக் காணும்! இவன். இனி ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை என்கிறானே! எப்படி?" என்று எண்ணித் திகைத்தனர். அவர்களின் திகைப்பை அறிந்தவன் போல, அவன் தொடர்ந்து பேசினான்.

"ரொட்டிக்கு இனிப் பஞ்சம் இல்லை. ஏனெனில், இதோ ரொட்டி சுடுபவன், ரொட்டிக்காரன் மனைவி, ரொட்டிக்காரன் பிள்ளை, இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டோம்."

எல்லா ஒலியையும் மீறி அல்லவா, கை ஒலி கிளம்பி இருக்கும். அவன் பேச்சு கேட்டு.

ஆணவம் கலந்த கேலிப்பேச்சா அது!

கேலி இருந்தது; ஆணவம் கூடத்தான்! ஆனால், அது மட்டுமல்ல, அதன் ஊடே மறுக்க முடியாத ஒரு அரசியல் தத்துவமும் இருந்தது. அரசன் கடமை, மக்களுக்கு உண வளிக்க வேண்டியது ; வாழ வைக்க வேண்டியது; அதற்குத் தான் அரசன்! அதைச் செய்யத் தவறினால், கேட்க, தண் டிக்க, நீக்க, ஒழிக்க, மக்களுக்கு அதிகாரம் உண்டு!-- என்ற ரூசோ போன்ற அரசியல் அறிவாளிகளின் ஆழ்ந்த கருத் துகள் அவ்வளவும், அந்தக் கேலிப்பேச்சிலே குழைந்து இருந்தது.

1789ம் ஆண்டு, அக்டோபர் திங்கள், ஆறாம் நாள், நடைபெற்றது, அந்த அரிய ஊர்வலம். மன்னன் புதிய இடம் வந்தான்! மக்கள் புதிய பலம் பெற்றனர்.

அன்று, இரவு பதினொரு மணி ஆகிவிட்டதாம், அரச குடும்பம், மாடி செல்ல!

வழிகாட்ட, தீப்பந்தம் பிடித்து நின்றனர். மக்கள் படையினர்!

தீப்பந்தம்! வழிகாட்டவும் உதவும்; கொளுத்தவும் பயன்படும்.

மன்னன் தலையில் சிகப்புத் தொப்பி! அந்தத் தொப்பி யில் மக்கள் தயாரித்த கொடிச் சின்னம்!

சொந்த உடையைப் பறித்துக் கொண்டு, சிறை உடை கொடுத்துக் கைதிகளை உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்களல்லவா!

மன்னன், மாடி சென்றான்; மக்கள் களிநடம் புரிந்தனர்.

'இது சிறைதானே!' என்று எண்ணினான் மன்னன் ; 'இவன் நமது கைதி தானே' என்று எக்காளமிட்டனர் மக்கள் 'துலியர்ஸ் அரண்மனை' என்ற பெயருடைய, அந்தக் கட்டிடம் கற்களாலானவை! அவை என்ன பேசும் ?

இனி வரப்போகும் பயங்கரத்தை அறிவிப்பது போல, அரச குடும்பம், நடந்தபோது, எழுந்த காலடிச் சத்தம் இருந்திருக்கும்.

வரலாற்றுச் சுவடியிலே, காலம் ஒரு புதிய வரியைச் சேர்த்தது, மக்கள் கொதித்தெழுந்தால், மன்னன் சிறைப் படுவான்' என்று.

அதுதானா, கடைசி வரி? இல்லை! மேலும் எழுதக் காலம் துடித்துக் கொண்டிருந்தது. 'இது எங்கள் காலம்!' என்று எக்காளமிட்டபடி, மக்கள் திரள் திரளாக, பாரிஸ் பட்டினத்தில் உலவி வந்தனர்.

இழந்ததை எண்ணிய திகைப்பு, அரச குடும்பத்துக்கு; தூக்கம் வரவில்லை!

பெற்ற புதிய வெற்றியை எண்ணும்போது கட்டுக்கடங் காத களிப்பு மக்களுக்கு; அவர்களுக்கும் தூக்கம் வரவில்லை!

வேதனையும் வெட்கமும் அதிகப்படும் என்ற பயத் தால், அரச குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூசினர்.

ஒருவருக்கொருவர் பேசிப்பேசி, களிப்பைப் பன்மடங்கு பெருக்கி மகிழ்ந்த னர், மக்கள்.
பாறையின் இடுக்கில், அடிபட்ட கருநாகம், ஊர்ந்து கிடக்கிறது.

கடலலை, பாறை மீது பாய்கிறது ; திவலைகள், பதுங் கிக் கிடக்கும் பாம்பின் மீது விழுகின்றன.

எந்த நேரத்திலும், அலையின் அளவும் வேகமும் அதி கரிக்கக் கூடும்; பாம்பு, அடித்துக் கொண்டு போகப்படக் கூடும்.

இந்த நேரத்துக்கு, இந்த இடம் என்ற அளவிலே, பாம்பு பதுங்கி இருக்கிறது.

அடிபட்டதால் ஏற்பட்ட வலி, சீறிடக்கூட வலிவு இல்லை ; மூச்சு சற்றுப் பலமாக இருக்கிறது.

அன்றைய நிலைமை அது போன்றதே! ஆனால் ஒரு வித்தியாசம். பாம்பு பதுங்கி இருக்கும் இடம் அலைக்குத் தெரிய முடியாது; ஆனால் மக்கள் நன்றாக அறிவார்கள், மன்னன் இருக்கும் இடம், நிலை இரண்டையும்!

'பாரிஸ் பட்டினத்தோரே! அறிவிழந்த பாரிஸ் பட்டினத் தோரே! மன்னனையும் அவன் மகனையும் உங்கள் கோட்டைக் குள்ளேயே காவல் வையுங்கள் என்று சொல்லிச் சொல்லி அலுத் துப் போய்விட்டது. அரச குடும்பம், தப்பித்துக் கொண்டோ டத் திட்டமிட்டிருக்கிறது. மந்த மதியினரே! அதை அறியா மல் உறங்கிக் கிடக்கிறீர், திறமையாகக் காவலிருங்கள்! அந்த ஆஸ்ட்டிரியா நாட்டவளை, அவள் மைத்துனனை, மக்களை, குடும்பத்தை, அரண்மனையில் அடைத்துப் பூட்டி வையுங்கள். தவறினால், இலட்சக்கணக்கான பிரான்சுக் குடிமக்களுக்குக் கல்லறை தோண்டியவர்களாவீர்கள்! எச்ச ரிக்கிறேன்! ஏமாளித்தனத்தால், எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்! மன்னன் தப்பி ஓட முயற்சிக்கிறான். திட்டம் தயாராகிவிட்டது!

"மக்கள் நண்பன்' என்ற இதழில், மாராட் எனும் மக்கட் தலைவன், இவ்விதம் எழுதினான்.

படித்தனர்; பதைத்தனர் ; பயந்தனர். ஆமாம்! அரசன் தப்பிச் சென்றுவிட்டால் அழிவு அல்லவா நமக்கு! ஐரோப்பா வில் உள்ள பல அரசுகளும், அவன் கண்ணீர் கண்டு, படை யுடன் வருவார்களே, இங்கு. எப்படி நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணினர். அச்சம் மனதை வாட்டலாயிற்று.

"தப்பி ஓடவா! திட்டமா! யார்? மன்னனா? பைத் யம், பைத்யம்! விழித்த கண் மூடாமல் காவல் புரிகிறார் கள், தெரியுமா? இதற்கென்றே, ஒரு தேர்ச்சிபெற்ற படை இருக்கிறது. கீர்த்திமிக்க தலைவன் இருக்கிறான். அரச குடும்பத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்றுக் கவனித் துக் கொண்டிருக்கும், கூர்மையான கண்கள், பலப்பல நூறு! ஒருதுளி சந்தேகம் ஏற்பட்டாலும், மிகக் கூர்மையான வாட் களை உருவிக் கொண்டு தாக்கக் கிளம்பத் தயாராக உள்ளவர்கள் ஆயிரவருக்குமேல்! மன்னனாவது தப்பி ஓடுவதாவது! நடைபெறாது நண்பர்களே! ஒருநாளும் நடைபெறாது." என்று சிலர் பேசினர்.

ஆனால், எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதியவர், மாராட்! மக்கள் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பர்? மக்க ளின் நல்வாழ்வுக்காக எதையும் அழிக்கலாம் என்று துணிந்து பேசியும் எழுதியும் வந்த மாராட், தெளிவு அதிகம் பெறமுடி யாத மக்கள் இடையிலே அளவற்ற செல்வாக்கு பெற்றிருந் தான். கொடியோரைக் கொன்று குவித்தால் என்ன தவறு? அவர்களைக் கொல்லாது விட்டாலோ, அவர்கள் ஏழை எளி யோரைக் கொன்று குவிப்பார்கள்! என்று பேசுவதும் எழுது வதும், மாராட்டின் வாடிக்கை.

சுவிட்சர்லந்திலே, ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்த மாராட், பிரான்சிலே, மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மன்னரின் காவற்படையின் மருத்துவனாகப் பணியாற்றிப் புரட்சி இயக்கத்துக்காகத் தொழிலை விட்டு விட்டுப் பொறி எனக் கிளம்பி, பெரு நெருப்பாக மாறிவிட்டவன். இரத் தத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் மாராட் பேசுவது இரத்த வெறி ஊட்டுகிறது என்று கூறி அருவருப்படைவார்கள்! ஆனால் ஏழைகளோ, எங்கள் சார்பாக, துளியும் தயக்கமின் றிப் பேச மாராட் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று புகழ்ந்து கூறுவர். ஆதிக்கக்காரர்களை மட்டுமல்ல, அரசியல் விரோதிகளையும் அழித்தொழிப்பதிலே, மாராட் தயக்கம் காட்டியதில்லை. அதுபோன்றே ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டபோது சாகசம் பல செய்து தப்பித்துக் கொள்வதி லும் திறமைமிக்கவனாக இருந்தான்.

இத்தனைக்கும் நோய் அவனை வாட்டியபடி இருந்தது.

அவனே பிரான்சைப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு நோய்தானே!- என்று அவனை அருவருத்தோர் கூறினர். ஆனால் எதிரே அவனைக் கண்டால் அஞ்சுவர். காரணம் எண்ணற்ற மக்கள் அவனிடம் அளவற்ற பற்று வைத்திருந்தனர்.

எனவே, மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருக்கிறான் என்று மாராட் எழுதியதும், அந்தச் செய்தி, காட்டுத் தீயெனப் பரவிற்று.

மற்ற யாரும் கண்டறியா முன்பு, மாராட், இதைக் கண்டறிந்து கூறியது, அவனுடைய திறமைக்கு ஒரு சான் றாகிவிட்டது. மன்னன் நடத்தத் திட்டமிட்ட சதி மாராட் டுக்குத் தெரிய நேரிடச் செய்ததும், ஒரு விசித்திரமான நிகழ்ச்சியினால் தான்.

மாராட் நடத்தி வந்த மக்கள் நண்பன்' என்ற இத ழுக்கு, செய்திகள் திரட்டித் தருபவர்களில், ஜாவார்தின் என்பவனும் ஒருவன். புரட்சி இயக்க ஏட்டுக்குப் பணியாற் றிக் கொண்டிருந்ததோடு, இவன் ஓர் காதலியையும் பெற்றி ருந்தான். மாளிகைக்காரர் பலரை வாடிக்கைக்காரராகப் பெற்றுத் துணி வெளுக்கும் தொழில் நடத்தி வந்தவள், இவன் காதலி.

மாளிகையிலே இருந்து அனுப்பப்பட்ட சட்டை ஒன்றில் நைந்த நிலையில் ஒரு கடிதம் இருந்திடக் கண்டு, படித்துப் பார்த்தாள் அந்தப் பெண். கடிதத்தில், 'அனுமதிச் சீட்டு கள் தயாராகிவிட்டன. வண்டிகள் ஏற்பாடாகிவிட்டன' என்று எழுதப்பட்டிருந்தது. ஜாவார் தீனிடம் இந்தக் கடி தத்தைக் கொடுத்தாள்; மாராட்டிடம் அவன் தந்தான். தீப்பொறி பறக்க, மாராட் இதழில் எழுதினான்; மக்கள் பதைத்தெழுந்தனர். என்ன செய்கிறது காவற்படை? என்ன செய்கிறான் காவற்படைத் தலைவன் லாபாட்டி என்று முழக்கமிட்டனர். பாரிஸ் பட்டினம் முழுதும் இதே பேச் சாகிவிட்டது.

வெறும் வதந்தியுமல்ல இது; உண்மையில் மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்தான்.

மன்னன் இருந்துவந்த இடத்தை ஆறு நூறு வீரர்கள் கண்காணித்து நின்றனர். உள்ளே, எப்பக்கம் திரும்பினா லும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! மன்னன் அறைக்கும் இராணியின் அறைக்கும் இடையே உள்ள தாழ்வாரத்தில் கூடக் காவல்! அரச குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடப் பயந்தனர்--அவ்வளவு கண்டிப்பு, காவல்! ஆயினும், இவ்வளவுக்கும் இடையே, அரச குடும்பத்தார், தப்பித்துக் கொண்டு போய்விடத் திட்டம் தயாரித்திட முடிந்தது.

மன்னன் ஆட்சி இருந்தால் மட்டுமே, தமக்குச் 'சுக போக' வாழ்வு உண்டு என்பதால், பதுங்கிக் கிடந்த பிரபுக் களில் சிலரும், ஜெபமாலை காட்டி மக்களை மயக்கித் திரிந்த மதத் தலைவர் சிலரும், மன்னன் தப்பி ஓட வழிவகுத்துக் கொண்டிருந்தனர். மன்னன் வெளிநாடு சென்றால், படை திரட்டுவான் ; படை வந்தால் புரட்சியை ஒழித்துக் கட்ட லாம் - பிறகு பிறகா! மது, மங்கை, மகிழ்ச்சி - என்று அவர்கட்கு எண்ணம்.

லூயி மன்னன் ஆட்சி நடத்த வேண்டுமா? அல்லது விலக்கப்படவேண்டுமா? மக்களின் நல்வாழ்வுக்கான முறை யில் சட்டதிட்டம் தீட்டப்பட்டு அதற்கு அடங்கி மன்னன் நடந்து கொள்வதாக இசைவு தந்தால் ஆள அனுமதிக்கலாமா?

ஏன் மன்னராட்சி முறை இருக்க வேண்டும் - அதைக் கட்டுப் படுத்தவும் ஒழுங்கு படுத்தவும் ஓயாமல் மக்கள் கண் விழிப்பாக இருக்க வேண்டுமா? ஏன் இந்த வீண் தொல்லை? முறையையே மாற்றிவிட்டால் என்ன?

பலர் பல்வேறு கோணங்களிலிருந்து, பிரச்சினையை ஆராயத் தலைப்பட்டனர்; விவாதம் வலுவாகிக்கொண்டு வந்தது.

அரசியல் சட்டம், என்னென்ன உரிமைகளை மக்கள் பெறத்தக்கதாக அமைய வேண்டும் என்பது பற்றியும் பேச்சுப்புயல் வீசிக்கொண்டிருந்தது.

"ஆளப்பிறந்தவன்" என்ற விருது கொண்டவன் அரண் மனையில் இருந்துவர அனுமதி அளித்த மக்கள், ஆட்சிமுறை எப்படி இருப்பது என்பதைப் பேசி வகுத்துக் கொள்ளலாம்; பிறகு, மன்னனைப் பற்றிய பிரச்சினை எளிதாகிவிடும் என்று எண்ணினர்.

பிரான்சு எப்படி ஆளப்பட வேண்டும் என்பது பற்றி மட்டுமல்ல, வெளிநாட்டவரின் பகையையும் தாக்குதலையும் எவ்விதம் எதிர்த்து நின்று வெற்றி காண்பது என்பது பற்றி யும், மக்கட் தலைவர்கள், கவனிக்க வேண்டி வந்தது.

"நாம் அறிவிக்கிறோம்" என்று மன்னன் முறையில், மக்கட் தலைவர்கள், எவரும் பேச முடியாதல்லவா!

கருத்துக்கான காரணங்களை விளக்க வேண்டும், கேள்வி களுக்குப் பதிலளிக்க வேண்டும், ஐயப்பாடுகளைப் போக்க வேண்டும், மறுப்புக்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் பதிலளிக்க வேண்டும், ஏளனத்தைக் கேட்டு எரிச்சலடையக்கூடாது. எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது!- இப்படி எத் தனை எத்தனையோ உள்ளனவே முறைகள்! காலம் வேண் டும் அதற்கு! நெஞ்சில் உரமும் தெளிவும் வேண்டும்! நேசங் கள் முறிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ட தற்கெல்லாம் கடுமையான மொழியால், எதிர்ப்புக் கூறிக் கொண்டே இருப்போம், கேட்டுக் கேட்டு மனம் வெதும்பித் தானாக ஓடிவிடட்டும். பிறகு விரட்டிவிட்டோம் என்ற மனத்திருப்தி பெறுவோம் என்ற போக்கினர் இருப்பர்; நிலைமையை அறிந்து நடந்து கொள்ளவேண்டும். எது கவனிக்கப்பட வேண்டியது? மனதுக்குச் சரி என்று பட்ட திட்டமா? அல்லது மனதை நோகச் செய்யும் போக்குடையாருடன் கூடிக் காரியமாற்றல் இயலுமா, இயலாதா என்ற பிரச் னையைத் தீர்த்துக் கொள்வதா? எது முக்கியம் ---என் பதைத் தீர்மானிக்க வேண்டும். இப்படி எத்தனையோ சிக்கல்கள், மக்கள் மன்றத்தில் அமர்ந்து, புதிய திட்டம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு.

கவிழ்க்கப்படுவதற்கு முன்பு வரையில் மன்னனுக்கு எல்லா மக்களிலும் தான் மேம்பட்டவன் என்ற அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது; மக்களில் பெரும்பாலாருக்கும் அந் தப் பயம் இருக்கிறது. மக்கட் தலைவர்கள் விஷயம் அப்படி அல்ல! இவன் எப்படித் தலைவனானான்? எனக்குத் தெரி யாதா! - என்று ஆணவம் கக்கி நிற்போரும், இவனெல்லாம் தலைவனாம்!' என்று ஏளனம் பேசுவோரும், 'இவனை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்' என்று சூளுரைப் போரும் மக்கள் மன்றங்களிலே இருப்பர்!

'என்னால் தான் எல்லாம் ஆகும்! எனக்குத்தான் எதுவும் தெரியும்! என்னைத்தான் எவரும் நம்புவர்! எனக்கு மட் டுமே எல்லா ஆற்றலும் உண்டு' --என்ற எண்ணத்தை நோயளவுக்கு முற்றவைத்துக் கொண்டவர்கள் இருந்திடுவர்.

சமரச நோக்கம் சாகசமாகவும், கூடிப் பணியாற்ற வேண்டும் என்ற போக்கு ஒட்டிக் கொள்ளும் வித்தை என்றும் பொறுமை சொரணை கெட்ட தன்மை என்றும் திரித்துக்
கூறப்படும்.

இங்கிருந்து அங்கு செல்ல வேண்டும் - என்ற ஆசை எழக்கூடும்.

இடம் பிடிக்கும் இயல்பும், இன்னொருவருக்கு இட மளிக்க மனமில்லாத தன்மையும் ஏற்பட்டுவிடக் கூடும்.

இவருடன் கூடினால் இது கிடைக்கும், அவரை ஒழித் தால், இவருக்கு நம்மிடம் பற்று ஏற்படும் என்ற கணக்குகள் போட வைக்கும்.

அப்பப்பா! எத்தனை ஆபாசங்கள்' எழும், எத்துணை எண்ணங்கள் கிளம்பும், என்னென்ன வகையான எரிச்சல் கள் மூட்டப்படக்கூடும்!-- மக்கட் தலைவர்-கட்கிடையில்!

இவை யாவும், எழுச்சி பெற்ற பிரான்சிலே, மக்கள் மன்றத்திலே, தலைவிரித்தாட ஆரம்பித்தன. இவை தவிர்க்க முடியாதவை என்ற போதிலும், பிரான்சிலே, மிக அதிகமான அளவு தோன்றி, நாட்டை அலைக் கழித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.

மன்னனின் கொட்டம் அடக்கப்பட்டதும், சீமான்களின் ஆணவம் தகர்க்கப்பட்டதும், மதப்போர்வைக்குள் இருந்து வந்த மதோன்மத்தர்களின் மமதை மட்டந்தட்டப்பட்ட தும், என்னால் தான், என் முறையினால் தான் என்று பெருமை பேசி, உரிமை கொண்டாடிக் கட்சி கட்டினர் பலரும்.

'என்னால் தான், எனது முறையினால் தான் என்ற பேச்சு வளர்ந்து வளர்ந்து, இனியும் என் முறைப்படி நாடு நடத்தப்பட்டால் மட்டுமே நலன் கிடைக்கும்; மற்ற முறை அவ்வளவும் நாசமே ஏற்படுத்தும்' என்று கூறிடவும், அந்தக் காரணம் காட்டி நாடாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் என்று கேட்கும் போக்கும் கொக்கரித்தது.

மன்னன் மனம் மகிழும்படி நடந்துகொண்டு, பட்ட மும் பதவியும் பெற்றனர். பலர் முன்பு.

மக்கள் மன்றத்திலும், இதே போன்றார் கிளம்பினர்! பொறிபறக்கப் பேசுவதாலும், தீவிர திட்டங்களைத் தீட்டு வதாலும், செல்வாக்குப் பெற முயற்சித்தனர். அதற்காகப் பலர், சிறுசிறு முகாம் அமைத்துக் கொண்டனர். முகாமுக்கு முகாம் சண்டை! முகாமுக்குள்ளாகவே சண்டை!! வெட்டு, குத்து ஏராளம்! வீண்கலாம் அதிக அளவில்!

மந்தமதியும், எதையும் சாதிக்கத் தெரியாத போக்கும் கொண்டவனாக மன்னன் பதினாறாம் லூயி இருந்ததால், விபரீதம் ஏற்படவில்லை. தருணமறிந்து வேலை துவக்கக் கூடிய தந்திரக்காரன், மன்னனாக இருந்திருப்பின், மக்கட் தலைவர்களுக்குள்ளே கிளம்பிவிட்ட, வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி இருந்திருப்பான். ஒரு கட்சி மீது மற்றோர் கட்சியை ஏவி விட்டும், கட்சிக்குள்ளேயே, சிண்டு முடிந்துவிட்டும், தனக்கு வலிவு தேடிக் கொண்டிருப்பான். பதினாறாம் லூயி, அப்படிப்பட்ட மன்னனல்ல.

எப்படித் தப்பித்துக் கொண்டு ஓடிவிடலாம் ? எந் தெந்த மன்னர்கள், உதவி செய்ய வருவர்? - என்ற இவை பற்றியே, எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அரசியோ. "இந்த நாட்டு எல்லையைக் கடந்தால், எல்லாத் தொல்லை யும் ஒழிந்துபோகும். பழி தீர்த்துக் கொள்ள முடியும். படுகுழி வெட்டிப் புரட்சி செய்த புல்லர்களைப் போட்டுப் புதைத் திட முடியும். மன்னனை எதிர்க்கும் துணிவு, என்றென்றும் ஏற்படமுடியாதபடி, 'பயங்கர' ' முறைகளைக் கையாண்டு, ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகன், வண்டியோட்டியாக வடிவம் பூண்டான். மன்னனோ, பணியாள்! அரசி, தோழி! தோழி, சீமாட்டி வேடத்தில்! இப்படி ஏற்பாடுகள்!

அரச குடும்பத்தார் அந்தச் சமயத்திலும், தமது அட்ட காச' போக்கை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. வெளியே சென்றதும், அந்தஸ்துக்கு ஏற்ற உடை வேண்டுமே என் றாள், அரசி. பணிப்பெண் சென்று, பல கடைகளிலே, விலையுயர்ந்த ஆடைகளாக வாங்கினாள், மிக அதிகமான அளவு. கடைக்காரருக்கே சந்தேகம். தப்பிப் பிழைத்தோடும் வேளையிலும், தர்பார்முறை' கெடக்கூடாதாம்! அதனால் பல ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டி வந்தது. நேரம் வீணாக்கப்பட்டது. கடைசியில், காவலர்கள் கவனிக்காமல் விட்டிருந்த பக்கமாக, வெளி ஏறினர். ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனல்லவா, வண்டி ஓட்டுகிறான்! அவனுக்கு, பாரீஸ் பட்டினத்துப் பாதைகள் சரியாகத் தெரியவில்லை; சுற்றிச்சுற்றி வருகிறது வண்டி.

அரசகுடும்பம் அறியுமா, தலை நகரின் வீதிகளை.

இல்லை! தோழிகள்? அவர்கட்கு மட்டுமென்ன?

அரண்மனை தெரியும், அலங்காரச் கடை தெரியும், நாட்டிய அரங்கம் தெரியும், பூந்தோட்டம் தெரியும், மற்ற இடம் தெரியாதே! ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து வளரும் நேரம்! வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள், அரச குடும் பத்தார். கடைசியில், ஒரு காவலாளியைக் கேட்டு வழி தெரிந்து கொண்டனர். வண்டி கிளம்பிற்று. பாரிஸ் பட்டி னத்தைக் கடந்தாயிற்று.

பொழுது புலர்ந்தது; விஷயம் வெளிவந்தது. தப்பி விட்டார்கள்! ஓடி விட்டார்கள்! காவலிருந்தோர் ஏமாந் தனர்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவிட்டனர். சூது சூழ்ச்சி செய்ய மாட்டேன், சதி ஏதும் புரியமாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தான், அரசப் பதவியில் உள்ள அந்த அற்பன்! ஓடிவிட்டானே இப்படி - என்று மக்கள் கூறிக் கொதித்தனர். தேடலாயினர், ஓடலாயினர்.

அரச குடும்பமோ, வேறோர் ஊர்ப் போய்ச் சேர்ந்தது!

பாரிஸ் அல்லோலகல்லோலப் படுகிறது! மாறு வேட மணிந்த மன்னன், தன் குடும்பத்துடன் வருகிறான், வேறு நகருக்குள். அந்த ஊர், அஞ்சல் நிலைய அலுவலரின் மகன், அரசனை அடையாளம் கண்டு கொண்டான்.

"யார் நீ! எடு, அனுமதிச் சீட்டு!' ' அவன் கேட்கிறான்.

அந்த நேரத்தில், அஞ்சா நெஞ்சம் காட்டவோ, ஆற்ற லுடன் காரியமாற்றவோ, இயலவில்லை மன்னனால்! எந்த நேரத்தில் தான் முடிந்தது, பாவம்! இளித்தான் ; விழித் தான்; குளறினான்!

"சரி! இனிப் பயன் இல்லை. நாங்கள் தான். எங்கு போக வேண்டும், வழி காட்டு' என்று மன்னன் கூறி விட்டான்.

பலநாள் பாடுபட்டுத் தீட்டிய திட்டம், நொடிப்பொழு தில் பொடிப் பொடியாகி விட்டது. அரசியின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்! மன்னன், அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரியின் வீட்டு மாடிக்கு மன்னனை அழைத்துச் சென்றனர்; சென்றதும், மன்னன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்! ரொட்டியும் வெண்ணெயும் தந்தான் அதிகாரி. பருக, பர்கண்டி திராட்சை ரசச்சாரா யம் கொடுத்தான். மன்னன், அதைப் பருகி மகிழ்ந்து, இவ் வளவு நல்ல, பர்கண்டி பானத்தை நான் இதற்கு முன் பருகினதில்லை!'--என்று கூறிக் களித்தானாம்.

அரச குடும்பத்தின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று, பாரிசில் மக்கள் கொக்கரிக்கிறார்கள்; இங்கு மன்னன் பர்கண்டி பானம் அருந்தி மகிழ்கிறான். தன்னைப் பற்றிய கவலை துளியும் அற்ற போக்கா, அது? அதுகூட அல்ல, நிலைமை நமது சக்திக்கு மீறிச்சென்றுவிட்டது. இனி அதைப் பற்றிச் சிந்தித்து என்ன பயன்? ஏன், சிந்தித்துச் சிரமப்பட வேண்டும் என்ற நினைப்பு. அவ்வளவு சுறுசுறுப்பான இயல்பு!

'பிடிபட்டு விட்டான் மன்னன் - என்ற செய்தி பாரி சுக்கு எட்டிற்று. மட்டற்ற மகிழ்ச்சி மக்களுக்கு. படைகள் கிளம்பின, அரச குடும்பத்தை, மீண்டும் பாரிஸ் பட்டணம் அழைத்துக் கொண்டுவர.

முன்பு நடந்த ஊர்வலத்தில், மன்னன் கைதியாக அல்ல, மன்னனாகவே அழைத்து வரப்பட்டான்.

இம்முறையோ. மன்னன் 'கைதி' ஆக்கப்பட்டு, கட்டுக் காவலுடன் அழைத்து வரப்பட்டான்.

மன்னன் அமர்ந்திருந்த வண்டியிலேயே, காவல் அதிகாரியும் ஆயுதத்துடன்.

அடக்க முடியாத துக்கம் கொண்ட நிலையில், அரசி.

சூழ மக்களும் படையும்! இப்புறம் அப்புறம் திரும்பிக் கூட வேடிக்கை பார்க்காமல், இமை கொட்டாது, அரசன் இருந்த வண்டியைப் பார்த்தபடி!

முழக்கமும் இல்லை ; மகிழ்ச்சியும் இல்லை. பயங்கரமான ஒலியற்ற சூழ்நிலை.

வழிநெடுக மக்கள் பார்க்கிறார்கள்! கண்களிலே நெருப்பு மில்லை; நீரும் இல்லை!

மன்னனை ஏசுவோர் தாக்கப்படுவர். மன்னனைப் புகழுவோர் கொல்லப்படுவர்!' என்று எழுதப்பட்ட அட்டை கள் பாரிசில் எங்கும் காணப்பட்டன. எனவே, மக்கள் வாய் மூடிக் கண்திறந்து நின்றனர்! அரச குடும்பம், கண்களையும் மூடிக் கொண்டுதான் இருந்திருக்கும்.

கைது செய்யப்பட்ட அரச குடும்பம், பாரிஸ் வந்ததும் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர்.

பிரான்சுக்கு முன்பு மன்னன் இருந்தான்! அவனை என்ன செய்வது என்று மக்கள் மன்றத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது பிரான்சுக்கு மன்னன் இல்லை; இருப்பது 'கைதி' - என்ன தண்டனை தருவது என்று மக்கள் பேசுகிறார்கள்.

தப்பிச் சென்று, வெளிநாட்டு உதவியுடன் நுழைந்து, மக்களை வெட்டி வீழ்த்தத் திட்டமிட்ட அரச குடும்பம் 'இடுகாடு' செல்லும் போதாகிலும் துக்ககீதம் பாடப்படும். அதுவுமின்றிப் பாழ்வெளியின் அமைதி போன்றதோர் நிலை யில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டனர்.

தப்பி ஓடியது திங்கட்கிழமை! பிடித்து மீண்டும் பூட்டி விட்டனர், சனி அன்று! ஒரு கிழமை! அரசன் என்ற அந் தஸ்து அடியோடு அழிந்துவிட்டது. அரசன் கைதியானான். மக்கள் கூடுகின்றனர் தீர்ப்பளிக்க! அந்தத் தீர்ப்பு நிறைவேற் றப்படும் நாளிலும் ஊர்வலம் உண்டு! விதவிதமான ஊர் வலம், இந்த விந்தை வேந்தனுக்கு!

"அரசர்கள் மடியவேண்டும் அல்லது பிரான்சு மக் கள் மாள வேண்டும். இரக்கம் காட்டுவது மிருகத்தனம்! பகைவர் அனைவரும் வாளுக்கு இரையாக வேண்டும் - சட்டம் சமைத்தளிக்கும் வாளுக்கு!"

ராபஸ்பயரி பேசிவிட்டான் - மன்னனுக்கு மரண தண் டனை தந்துவிட்டான். மன்றம் கூடி, அதே தீர்ப்பை எழுதப் போகிறது பிறகு முன் கூட்டியே ராபஸ்பயரி முழக்க-மெழுப்பி விட்டான். அவன் பேச்சு, சட்டமாகும் காலம் அது.

மன்னனை என்ன செய்வது? பிரச்சினை, பல விளைவு களை, மனக் குழப்பங்களை ஏற்படுத்தியபடி இருந்தது. மன் னித்து, மக்களின் பெருங்குணத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்' என்று கூறினர் சிலர். முடி பறித்துக் கொண்டு, விரட்டிவிடுவோம். எங்கோ சென்று ஏதோ செய்து பிழைக் கட்டும்' என்றனர் ஒரு சிலர். மக்களே அதிகாரத்தின் பிறப் பிடம் ; முதலிடம். மன்னன் அவர்களின் குறிப்பறிந்து நடந்து கொள்ளட்டும்' என்று பேசினர் மற்றும் சிலர். ராபஸ்பயரி நெளிவு ஏன் குழைவு ஏன், உள்ளதை உரைப்பேன் என்று கூறி, மன்னன் அல்லது மக்கள்!' என்றான். அந்த விநாடியே, பதினாறாம் லூயி இறந்துப்பட்டான் என்று பொருள். பிண மாக்கிப் புதைக்க வேண்டிய, சடங்கு மட்டும், பாக்கியாக இருக்கிறது. அது பிறகு, விரைவில். அதற்கு முன்பே பிரான்சு நாட்டின் ஆத்திரம், தீர்ப்பளித்துவிட்டது, ராபஸ்பயரியின் மூலமாக மன்னன் மடியவேண்டும் என்று!

மன்னனிடம், பாபம், எது இருந்தது மடியாமல்! அரசு இழந்து, நிலைகுலைந்து, ஆதரவு மறைந்து ஆண்டியும் படாத பாடுபட்டு, அடைபட்டுக் கிடக்கிறான்; மன்னன் சிறையில் இருக்கிறான்! ஒரு நாளைக்கு அவனைக் கொல்லப் போகி றோம்! என்று எவனெவனோ கூறுவதைக் கேட்டுக்கொண்டு! மடியாமலா இருக்கிறான் மன்னன்!

மன்னன் பிழைத்துப் போகட்டும் என்று மனிதாபி மானத்துடன் பேசுபவர், நாட்டுக்குத் துரோகிகள் என்று ஏசப்படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது பார்க்க - என்று கூறுவோர், மக்களின் பகைவர் ஆகிவிடுகின்றனர். மன்ன னிடம் பரிவு காட்டியதால் கட்சிகளே கலைகின்றன; வீரர் களுக்குக் கோழைப் பட்டம் சூட்டப்படுகிறது; நாட்டுக் குழைத்தவர் விரட்டப்படுகிறார். அந்த நிலையில், மன்னன் மடிய வேண்டும் என்று ராபஸ்பயரி சொன்னான்! மடிந்து விட்டான் மன்னன் - பழைய நினைவுகள் குடைவதால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் மட்டுமே இருக்கிறான்.

"மன்னனைப் பாருங்கள், அவனிடம் சமரசம் பேசி வருகிறீர்களே, எவ்வளவு அறிவற்ற தன்மை! அரசன் எவ் வழியோ, அவ்வழியேதான், பிரபுக்கள் கூட்டம். அவர்கள், நம்மை என்றும் மன்னிக்கமாட்டார்கள்! நாம் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். அவர்கள் உள்ளவரை, புரட்சிக்குப் பகை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அடைத்து வைத்துவிடலாம் என்கிறீர்களா! எவ்வளவு பேர்களை? எங்கே? அவர்களிடம் மயங்கித் துரோகம் செய்யாத காவ லாளிகளை எங்கே கண்டுபிடித்து அமர்த்தப் போகிறீர்கள்? நான் கூறட்டுமா, பாதுகாப்பான சிறைச்சாலை! மக்களின் பகைவர்கள் அனைவரையும் அடைத்து வைக்கக் கூடிய, பெரிய பாதுகாப்பான சிறைச்சாலை, சொல்லட்டுமா! சுடு காடு. ஆம்! அதுதான் அவர்களுக்கு ஏற்ற சிறைச்சாலை!

அங்கு சென்றால் தான், தப்பி வந்து நமது உயிர் குடிக்காம லிருப்பார்கள். அவர்களை ஓடிவிடாமல் தடுக்கக் கூடிய ஒரே காவலாளி சாவு! கொல்ல வேண்டும்! கொல்ல வேண்டும்! அதுதான் உண்மையில் பலனளிக்கும் கொள்கை. படை திரட்டு வீர்; பயன் இல்லை! பகை அழியாது!! குத்தீட்டியுடன் இரு நூறு வீரரைத் தாருங்கள்; கொன்று குவிக்கிறேன், பகை வர்களை! புரட்சி வெற்றி பெறச் செய்கிறேன்."

மாராட் பேசுகிறான் அவ்வளவு இரத்தவெறியுடன். மறுப்பார் இல்லை! மறுக்கக்கூடிய சிலர் மாண்டனர்; பலர் தலைமறைவு ஆகிவிட்டனர். இப்போது குத்தீட்டி, கொடு வாள், வெட்டுப்பாறை - இவைதானிருக்கின்றன.

கொலையைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள், குதூ கலப்படுகிறார்கள், தங்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று அறிந்து; போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் பிணத்தைப் பிய்த்துத் தின்னலாம் என்று பெருங்கழுகுகள் வட்டமிடுமாம்! வெட்டிக் குவிப்போம் என்று மாராட் பேசிவிட்டது கேட்டுச் சொல்லக் கூசாத கொடுமை செய்வதைத் தொழிலாகக் கொண்ட கும்பல் குதூகலப்பட்டது. 'இது அல்லவா அரசு! நமது அருமை அறிந்த அரசு' என்று.

நாட்டை ஆபத்து சூழ்ந்து கொள்ளும்போது ஆர அமர யோசித்துக்கொண்டு, அறிவுரைகள் பேசிக்கொண்டு, அருளா ளர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, காலங்கடத்த முடியுமா என்று எக்காளமிட்டனர், இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவர்கள்.

அதற்கு ஏற்றாப்போல வெளி நாட்டவர், வேகமாகப் பிரான்சைத் தாக்கிடத் தொடங்கினர். கடும் போர் மூண்டு விட்டது. மன்னர் பலர் கூடினர், பிரான்சு நாட்டைத் தாக் கிட- புரட்சியைப் பொசுக்கிட- மன்னனை மீட்க.

'அடைபட்டுக் கிடக்கும் போதே, அவனால் வந்திடும் ஆபத்தைப் பார்த்தீர்களா? ஆதிக்க வெறி பிடித்தலையும் இனம், அவனுக்காகக் கிளம்புகிறது காணீர்! இனியுமா உங்கட்குத் தயக்கம்? மன்னன் அல்லது மக்கள்!' என்று பேசினர் மாராட்டுகள், ராபஸ் பயரிகள்!

மக்களின் உரிமைகளைக் காக்கவும், மக்களிடையே ஒருவனோ, ஒரு கூட்டமோ கிளம்பி பொது உரிமையை, நலனை அழித்திடாதபடி பாதுகாக்கவுமான புனிதக் காரி யத்துக்காகவே மன்னன் இருக்கிறான். அந்தக் கடமையை மறந்து அரசபீடம் கிடைத்தது தனக்காக சுகபோகத்துக் காக என்று எண்ணிடும் கணமே புனிதம் போய் விடுகிறது; மன்னன் மக்களின் பகைவனாகி விடுகிறான். பகைவரை வீழ்த்த வேண்டியவனே பகைவனாகிவிட்டால், அவனை ஒழிப்பதுதான் முறை. ஒழித்தாக வேண்டும் என்றெல்லாம் 'தத்துவம்' பேசியும், செயலில் காட்டியும் வந்த இங்கிலாந் திலேயே, செல்வாக்குள்ள ஒரு கூட்டம் கிளம்பி, பிரான்சு நாட்டிலே நடப்பது அரசியல் மாறுதல் அல்ல, பயங்கரமான படுகொல, குத்திக் குடலறுப்போன், வெட்டி வீழ்த்துவோன், பச்சிளங் குழந்தைகளைக்கூடக்கழுத்தைத் திருகிக் கொன்றிட அஞ்சாத பாவிகள் கூடிக் கொண்டு படுகொலை செய்து கொண்டு வருகிறார்கள்.

அங்கு எல்லாம் அழிந்து படுகிறது. அறம் அழிகிறது! அன்பு அழிகிறது! பண்பு அடியோடு அழிந்து விட்டது! பக்தி பூண்டோடு களைந்தெறியப்படுகிறது. இதை அனுமதிப்பது கூடாது. இதனால் பிரான்சு மட்டுமல்ல, உலகே கெடும்; மனிதகுலமே நாசமாகும். கற்றறிந்த வித்தகரும், காலத்தை வென்ற பேரறிவாளரும், நமக்களித்த, போற்றற் கரிய பொன்னான கருத்துக்களும், முறைகளும் பாழாக்கப் படுகின்றன. அவை பாருக்கு உள்ள பொதுச் சொத்து. மனி தரை மிருகத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆன்றோரும் சான்றோரும், அருளாளரும், நமக்களித்த நெறி; அது பாழாக்கப்படுகிறது. அறமறிந்தோரே! ஆண்டவனை மறவாதோரே! பண்பினை இழக்காதிருப்போரே பாபத்தைக் கண்டு அஞ்சிடும் நல்லோரே! பிரான்சிலே தலை தூக்கி ஆடும் 'பாபத்தை ' ஒழித்துக் கட்டிட முனைவீர், முன் வருவீர்! ஆபத்தில் சிக்கி இருப்பது அரசப் பதவி அல்ல; அறம்! அறம் தாக்கப்படுகிறது! அறம் அழைக்கிறது, அன்பர்களை! அஞ்சா நெஞ்சுடையோரை! அறத்தின் குரலைக் கேளீர்! அதனைக் காத்திட வாரீர்' - என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தது.

பல்வேறு நாடுகளிலேயும், பகைக்கும் கும்பல், பாயத் தயாராக இருந்தன.

யாரேனும், 'துணிந்த பேர்வழி' ஒருவன், முனைந்திருந் தால், பிரான்சிலே முளைத்த புரட்சியை அழித்திட, பண மும் படையும் ஏராளம் திரட்டிவிட முடியும். அத்தகைய சூழ்நிலை, லூயி மன்னன் முயற்சி ஏதும் முறைப்படி செய்யாமலேயே, உருவாகிக் கொண்டு வந்தது.

இனி இங்கு இருந்தால் சுட்டுச் சாம்பலாக்குவர் என்ற அச்சம் கொண்ட, பிரபுக்களில் சிலர், பிரான்சிலிருந்து தப்பித்துக் கொண்டு, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்கு ஓடி விட்டனர். அங்கு அவர்கள், கதை கதை' யாகக் கூறினர், பிரான்சிலே நடக்கும் பயங்கரம் பற்றி.

"வெறி பிடித்த மக்கள் இரத்தத்தைத்தான் குடிக்கி றார்கள், மனித இரத்தத்தை " என்பான் ஒரு பிரபு.

அவன் மனைவி, "குழந்தையின் இரத்தத்தை!" என்று கூறி அழுவாள். கேட்போர் துடிப்பர். துணிவுள்ளோர், 'என்ன நேரிடினும் சரி; இந்தப் புரட்சியை எதிர்த்தாக வேண்டும்' என்று பேசுவர்.

அமெரிக்க சுதந்திரத்தை ஆதரித்து நேர்மையாளன் - பாங்காளன்', என்று பெயரெடுத்த பர்க் எனும் ஆங்கில அறிஞனே, பிரான்சிலே நடக்கும் புரட்சி மனித குலத்துக்கு மாபெரும் நாசம் விளைவிப்பதாகும் என்று எழுதினான்.

டாம்பெயின் போன்ற உரிமை உணர்ச்சியை மதித்திடும் ஒரு சிலர் மட்டும், தடுத்து நிறுத்தி இராவிட்டால், புரட்சிக்கு எதிர்ப்பு, வேகமாகவும் வலிவுள்ளதாகவும் உருவாகி விட்டிருந்திருக்கும்.

"தக்க சமயம் இது! தலைவெட்டத்தானே தெரியும் இதுகளுக்கு! படை எடுத்துச் சென்றால், தடுத்திடும் ஆற்றல் ஏது? முறை என்ன தெரியும்! கூனும் குருடும், மொண்டியும் நொண்டியும் கூடிக்கொண்டு கொக்கரிக்கின்றன! வீரமும் போர் முறையும் கருவியும் நிரம்ப நம்மிடம் இருக்கின்றன. நாம் படை எடுத்துச் சென்றால், பயந்தோடிப் போவர். பத்து நொண்டிகள் கூடி எதிர்த்தாலும், ஒரு வீரனிடம், என்ன நடக்கும்? பார்ப்போம்!' என்று எண்ணினர்.

படை திரட்டினர், பாய்ந்தனர் அன்னியப் படைகளைத் தாக்க; பாயுமுன், உள்நாட்டிலே துரோகிகளையும், சாதிகா ரர்களையும், அரசனிடம் கைக்கூலி பெற்று மக்களைக் காட் டிக் கொடுக்கக் கூசாத கயவர்களையும் விட்டு விட்டா நாம் களம் செல்வது! நாம் அங்கு இருக்கும் போது இந்தக் கும்பல் பின்புறமிருந்து தாக்கினால் நமது கதி என்ன ஆகும்? என்று கேட்டனர் சிலர். "ஆமாம். முக்கியமான பிரச்சினை" என்ற னர் பலர். இதிலென்ன சிக்கல்! சீவுங்கள் தலைகளை!' என்றனர் மாராட்டுகள். கொன்றனர், கொன்றனர்! எங்கும் குருதி! அதைக் கண்ட பிறகே, மனதுக்கு ஒரு நிம்மதி ஏற்பட் டது; களம் சென்றனர்.

களத்திலே கடும் போர்! அங்கு தோற்றால், எல்லாம் அழிந்துவிடும் - என்ற எண்ணம் அவர்களைப் புலியாக்கி விட்டது. வெற்றி பல பெற்றனர். அடியோடு எதிரிகள் அழிக்கப்படவில்லை என்றாலும், பலம் முறியடிக்கப்பட்டு விட்டது.

வெளிப்பகை ஒருவிதமாக அடக்கப்பட்டு விட்டது. இனி மன்னனைக் கவனிப்போம் என்று கூறினர். மீண்டும் விவாதம்! "குற்றத்தை விசாரிக்கலாம்; தீர்ப்பளிக்கும்படி மக்களைக் கேட்கலாம். - என்று சிலர் வாதாடினர். சிறை யில் இருந்தாலும், மன்னன் எவ்வளவு பேர்களைத் தன் வலை யில் விழச் செய்கிறான் பார்த்தீர்களா!' என்றனர்,
அரச பரம்பரை பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்ற கொள்கை கொண்டோர்.

அரச குடும்பமோ, அரண்மனையில் கூட அல்ல, வாட் டம் தரும் ஒரு கோட்டத்தில் அடைக்கப்பட்டு, வசதிகள் பலவும் குறைக்கப்பட்டுக் கிடந்தது.

அரசி, பலகணி வழியாக எட்டிப் பார்ப்பாள், சிலவேளை களில்! வெட்டப்பட்ட தலையை ஈட்டியில் செருகித் தூக்கிக் காட்டிக் கூச்சலிடுவான், புரட்சியில் ஈடுபட்டவன்.

"இது நடக்கிறது வெளியே! உள்ளே இருக்கிறீர்கள் நீங்கள். உம்! எத்தனை நாளைக்கு?" என்று கேட்கிறது அவன் பார்வை. அரசியின் கண்களில் நீர் ததும்புகிறது. "அழுகிறாளப்பா அரசி! மக்களை அழ வைத்த அம்மணிக்கு இப்போது கண்ணீர் எப்படி இருக்கும் என்பது புரியுமல்லவா?" என்கிறான் அவதி பல கண்டவன்.

மன்னன், மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டான்; குற்றப்பத்திரிகை படித்தனர். வாதாட யாராவது தேவையா என்று கேட்டனர்; ஆம்' என்றான் அரசன். இருவர் முன் வந்தனர். மன்னன் சார்பில் வாதாட ; அவர்களைச் சுட்டுத் தள்ளுவது போலப் பார்த்தனர் மக்கள் மன்றத்தினர். இரக்கம் காட்டச் சொல்லித்தான் அவர்கள் கேட்டனர்! சட்டம் பேசவில்லை. கருணை காட்டும்படி கூறினர்; காவலன் மீது குற்றம் ஏதும் இல்லை என்று பேசவில்லை. மன்னனுக்காக வாதாடவில்லை; மனிதனுக்காக வாதாடினர்! மக்கள் மன் றம் ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவு கல் நெஞ்சமா என்றே எவருக்கும் கேட்கத் தோன்றும்! ஆனால் ஆண்டு பல, பிரான்சு மக்கள் கொடுமைப்படுத்தப்-பட்டபோது, சட்டம் பேசி அவர்களைச் சாகடித்தபோது, குற்றமற்றவர்களைக் கொன்ற போது, வழக்கறிஞர்களே கிடைக்கவில்லையே, மக்களுக்காக வாதாட ஒருவரிருவர் வாதாடியபோதும், சட்டத்தின் புனிதத் தன்மையும், மதத்தின் மாண்பும், மன்ன ராட்சியின் மேம்பாடும் நிலைத்திட வேண்டுமானால், கண்ணீர் கண்டு கடமையினின்றும் தவறக்கூடாது. இரக்கம் பேசிச் சட்டத்தைக் குலைக்கக் கூடாது. கர்த்தர் இருக்கிறார் இரட்சிக்க! சட்டம் இருக்கிறது தண்டிக்க!" என்று எத்தனை நீதிபதிகள் பேசினர்- பிறகு பிரபுக்கள் கெக்கலி செய்தனர்.

மன்னன் மக்களுக்கு எதிராகச் சதிபுரிந்தான் என்று குற்றம் சாட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்டது மக்கள் மன்றத்தால். 721 பேர் உறுப்பினர் இருந்தனர்! 361 பேர் மரணதண்டனை விதித்தனர். நிபந்தனையின்றி மரணதண் டனை. மேலும் சிலர், சில நிபந்தனையுடன், மரண தண்டனை தரலாம் என்றனர்.

மொத்தத்தில், மன்னனுக்கு மரணதண்டனை தர வேண்டும் என்று 387 உறுப்பினர்களும், மற்ற 334 உறுப்பி னர்கள் போர் முடியுமட்டும் சிறையில் வைத்திருந்து விட்டுப் பிறகு நாட்டைவிட்டு ஓட்டிவிடுவது என்றும் கூறினர்.

மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது. பதறாமல் கேட்டுக் கொண்டு, சாக மூன்று நாள் அவகாசம் கேட்டான் மன்னன்.

அவ்வளவு மனஉறுதி கொண்டவனா இந்த மன்னன்! சாகப்போகும் போது தானா, இந்த நெஞ்சு உரம் வர வேண்டும்! ஆண்டுகொண்டிருந்தபோது, காட்டாத உறுதி இப்போது தெரிகிறதே! அணையுமுன் ஒளிவிடுமாமே விளக்கு. அதுபோலப்போலும் என்று கருதினர் மன்னனைக் காவல் காத்து நின்றவர்கள்.

1793 ஜனவரி 21-ம் நாள்! வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் மன்னனை. அடைபட்டுக் கிடந்த தோட்டத்திலிருந்து, அரண்மனைக்கு எதிரே அமைக்கப்பட்ட 'கில்லட்டின்' எனும் வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

தளபதிகள் வந்திருக்கிறார்கள், பணிவு காட்ட அல்ல; பயணத்துக்கு ஏற்பாடு செய்ய! போர் வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள், மரியாதை காட்ட அல்ல; தப்பி ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ள.

பாரிஸ் பட்டணத்திலே ஒரே அமைதி! தெருக்களிலே நடமாட்டம் இல்லை. போர் வீரர்கள் தவிர, மக்கள் இல்லை. பலகணிகள் திறக்கப்படவில்லை, கதவுகள் தாளிடப்பட்டுக் கிடந்தன. வெட்டுப்பாறை அருகே நின்று, போர்வீரர்கள் முரசு கொட்டியபடி இருந்தனர். இருள் சூழ்ந்து கொண்டி ருந்தது. மன்னன் அழைத்துச் செல்லப்பட்டான், புரட்சி அரசு அனுப்பி வைத்த வண்டியில்.

ஆடலையும் பாடலையும், அணிவகுப்புகளையும், வெற்றி ஊர்வலங்களையும், வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ் பட்டினம் அன்று ஒரு புதிய பயங்கரத் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டு விட்டார்கள். மக்கள் ஆணையை நிறை வேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் - கடைசி ஊர்வலம்! வெட் டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையா மல், 'சாக'த் தயாரானான். மக்களிடம் 'நான் குற்றமற்ற வன்' என்று கூறத் தொடங்கினான்! 'முரசுகள் ஆர்ப்பரிக் கட்டும்' என்று உத்தரவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப் பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு. ' வாழ்க குடி அரசு!' என்று கூறினர்; மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது.

"உன் பெயர்".

"ஆஸ்ட்ரிய அரச குடும்பத்தைச் சார்ந்த மேரி அன்டான்னய்ட் என்று என்னை அழைப்பார்கள்."

"இப்போது உன் நிலைமை?"

"முன்பு பிரான்சு மன்னராக இருந்த லூயியுடைய நான்."

"வயது?'

'முப்பத்து ஏழு!"

1793 அக்டோபர் திங்கள், பதினாலாம் நாள், மக்கள் மன்றம் அமைத்த வழக்கரங்கில் நடைபெறுகிறது இந்த உரையாடல். அரசியை மக்கள், ஊர் பெயர் கேட்கிறார் கள்; உற்ற வயது என்ன என்று கேட்கிறார்கள்; அருகே நெருங்கவே முடியாதே, அரசியை - சீமானாகவோ, சீமாட்டி யாகவோ இருந்தாலொழிய! சாமான்யர்கள் புரட்சி அரசு அமைத்தனர்; அவர்கள் கேட்கிறார்கள், குற்றவாளியைக் கேட்கும் முறைப்படி "உன் பெயர் என்ன?" என்று.

குற்றங்களை மெய்ப்பிக்கச் சாட்சிகள் பேசினர்; அரசி யின் மறுப்புரை கேட்டனர்; கடைசியில் மரண தண்டனை தரப்பட்டது.

அரசனிடம் இருந்ததைவிட அரசியிடம் மக்களுக்கு ஆத்திரம் அதிகம். எனவே, வெட்டுப் பாறைக்கு அழைத்துச் சென்றபோது, கைகளைப் பின்புறமாகக் கட்டி, அனைவரை யும் ஏற்றிச் செல்லும் வண்டியில் தான் அழைத்துச் சென் றனர். வழிநெடுக மக்கள் - குறிப்பாகப் பெண்கள் நின்று கேலி செய்தனர் -- கேவலப்படுத்தினர். அக்டோபர் 15! அரசியும் வெட்டுப் பாறையில் வீழ்ந்து பட்டாள். 'வாழ்க, குடியரசு' என்று மக்கள் முழக்கமிட்டனர்.

இரத்தவெறி பிடித்தல்லவா அலைந்திருக்கிறார்கள்! துளியும் ஈவு இரக்கம், மனிதாபிமானமற்றல்லவா, படு கொலைகள் புரிந்திருக்கிறார்கள். சமத்துவம், சகோதரத் துவம், விடுதலை என்றெல்லாம், சுவை தரும் பேச்சு பேசி னரே தவிர, அவர்களின் கரங்களை இரத்தத்திலல்லவா தோய்த்து எடுத்தனர் - என்றுதான் எவருக்கும் கேட்கத் தோன்றும்.

புனிதமான கொள்கைகளுக்காக என்று கூறினாலும், படுகொலை படுகொலைதான்! முறையைத் தள்ளுங்கள், முடிவைக் கவனியுங்கள் என்று கூறுவது சமாதானமே தவிர, சன்மார்க்கத்துக்கும் சரி, அறிவுடமைக்கும் சரி, சான்றாகாது.

புரட்சியின் பயங்கரம், அளவில் அதிகம்; மறுப்பதற் கில்லை. கொடுமைகள், கேட்கக் கூசக்கூடியவை; இல்லை என்று வாதிடுவது வீண்.

ஆனால், எண்ணிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேறோர் பிரச்சினை இருக்கிறது.

அன்பு, அறம், ஈவு, இரக்கம், பற்று, பாசம், பயம், பக்தி, தயவு, தாட்சணியம் - இவை போன்ற குணங்கள் கொண்டவர் கள், எப்படி இரத்த வெறிபிடித்து அலையும் நிலை அடைந் தனர் ? ஆட்டுக்குட்டிகள் போலக் கிடந்தார்களே, இவர்கள் எப்படி ஓநாய்களாக மாறினர்? அந்த மாறுதலுக்குக் கார ணம் என்ன?

பார்க்கப் பச்சைப் பசேலென்று இருக்கிறது, மலரும் கனியும் குலுங்குகிறது, சுவையும் பயனும் அளிக்கிறது, மரம். அதைக் காயவிட்டு, விறகு ஆக்கிவிட்டால், கவர்ச்சி அடியோடு போய்விடுகிறது. பிறகு நெருப்பெரிக்க மட்டுமே பயன்படுகிறது! நெருப்பில் விறகைப் போடும் வரையில் பயம் இல்லை. விறகு நெருப்பாகிவிட்டாலோ, தொடக்கூட அச்சம் ; பட்டால் தொல்லை ; சுட்டால் புண் ஏற்பட்டுவிடு கிறது.

பச்சையாகத்தான் இருந்தது. ஒடித்து நாசமாக்கி, உலரவிட்டு விறகாக்கிப் பிறகு நெருப்பாக்கி விட்டு, தீ சுடு கிறதே, பெரு நெருப்புச் சூழ்ந்து கொண்டதே என்று கூறு வதில் என்ன பயன்?

பிரான்சு மக்கள் இதயம், எல்லாப் பண்புகளும் பூத்துக் குலுங்கும் இடமாகத்தான் இருந்தது --அச்கிரம் அரசுகள் அமைத்துக் கொண்டவர்கள், அந்த இதயத்திலிருந்த பண்பு கள் வற்றிப் போகும் அளவுக்கு, கொடுமை புரிந்தனர். விற காகிவிட்டது, பச்சைக் கொடி! இரும்பாகிவிட்டது, மக்கள் இதயம். மலர் குலுங்கிற்று கொடியாகக் கிளையாக இருந்த போது ; நெருப்பாகிவிட்டது, விறகு ஆக்கப்பட்டதால் ராஜ பக்தி - தெய்வபக்தி ' - எல்லாம் ததும்பும் மனம் தான் இருந்தது. கொடுமைப்படுத்திக் கொடுமைப்படுத்திப் பழி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி தவிர வேறு எதுவும் இருக்க முடியாத நிலைக்கு மாற்றிவிட்டனர் மக்கள் இதயத்தை, மன்னர்களாக வந்த மமதையாளர்கள்.

இதயம் கொதித்தபோது, ஏளனம் செய்தனர். வேத னையை வெளியிட்டபோது கேலி பேசினர். இரத்தம் கேட்ட போதுதான் ஆதிக்கக் கூட்டம் அச்சப்பட்டது. பிறகு கேட்க லாயிற்று. "ஈவு இரக்கம் துளியும் இல்லையா?" என்று.

"சீமானே! உன் தந்தை வயதிருக்கும் எனக்கு! உங்கள் குடும்பத்துக்காகவே உழைத்து உழைத்து, சருகு ஆகிப் போனேன்! என்னைச் செருப்புக் காலால் உதைத்தாய், என் மனைவி எதிரில்! நினைவிருக்கிறதா? அப்போது பண்பு இருந்ததா உனக்கு? அதைக் கண்டு சிரித்தாள் உன் சிங்கார மகள்! பண்பா அது? இப்போது எம்மிடம் பண்பு இல்லையே என்று கேட்கிறாய், உமது இல்லந்தோறும் பண்புப் பயிர் வளர்த்து வைத்தவர் போல!! என்று கேட்பான், புரட்சியால் "பொல்லாதவன்" ஆகிவிட்டவன். ஆனால் சீமான் இல்லை எதிரில்! பலர் இறந்தனர்; மற்றும் பலர் மறைந்தனர்! கேட்க முடியவில்லை.

உழைப்பவனைச் சுரண்டினர்; அதற்குப் பெயர் வரி விதிக்கும் முறை என்றனர். வயல்களை அழிக்கிறோம் என்ற னர்; காரணம் கேட்டால் வேட்டைக் கலை வளர்க்கிறோம் என்றனர். அகப்பட்டவைகளை வாளுக்கு இரையாக்கினர். 'ஏன் ஐயா!' என்றால், 'வாளின் கூர்மை எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்' என்றனர். இது பிரபுக்கள், அரச குடும் பத்தினர் காட்டிய பண்பு! மறுக்க இயலுமா?

"என்ன செய்தான் உன்னை."

"எப்படிப் பிரபுவே! அதைச் சொல்வேன்."

"சொல்லடி கள்ளி! என்ன செய்தான்?"

"என்னைக் கெடுத்தான்."

"பத்தினித் தங்கம் இவள்! போக்கிரிப் பெண்ணே! நீ என்ன பரிசுத்தமானவளோ? கெடுத்தானாம், கெடுத்து... இளித்துக் கொண்டு எதிரே வந்திருப்பாய், என்னமோ போலிருந்திருக்கும். சரி! சரி! எங்கே நடந்தது.....?"

"எது....?"

"உம்! உற்சவம்..."

"மாதாகோயிலில்....."

"பாதகி! மாதா கோயிலிலா? எப்படி உனக்கு அந்த இடத்தைப் பாழ்படுத்த மனம் துணிந்தது?"

'ஐயையோ! நான் உண்மையாகவே உற்சவத்தைப் பற் றித்தானே கேட்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். கர்த்தரே! மன்னித்துவிடு. என்னை அவர் குதிரைக் கொட்டிலில்..."

"குதிரை என்ன செய்து கொண்டிருந்தது...."

'கொல்' என்ற சிரிப்பொலியல்லவா கிளம்பி நாச மாக்கப்பட்டு நங்கைக்கு வேதனையைத் தந்தது இவ்விதமான வழக்கு விசாரணையின் போது.

அரசியைப் போய் துளியும் பண்பில்லாமல் ஊர் என்ன, பெயர் என்ன என்றா கேட்பது, மக்கள் அமைத்த விசார ணைக் கூடத்தில் என்று கேட்பார், கேட்கிறார்கள்; ஆனால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களிலே, பிரபுக்கள் நடத்திய விசாரணைக் கூடங்களிலே நடந்தன பற்றிக் கேட் டனரா? இல்லை! பண்பு யாரால் எப்போது எந்த விதத்தில் அழிக்கப்பட்டது? மக்களா அழித்தனர் ?

சீமானின் தூக்கத்தைத் தவளைகள் சத்தமிட்டுக் கெடுக் குமாம். இரவெல்லாம் கண்விழித்து ஏழைகள் தவளைகளைப் பிடித்து அடிக்க வேண்டுமாமே! எத்தனை நேர்த்தியான பண்பு!

"சீமானின் வயலிலே எலிகள் அழிவு உண்டாக்கும். அந்த எலிகள் உன் வயலிலே உள்ள வளைகளிலே இருந்துதான் வருகின்றன. ஆகவே, நஷ்டத்துக்கு நீதான் பொறுப்பு' என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய அநியாயக்காரர்களை யார் அடக்க முன் வந்தார்கள்? 'இரத்தம் வேண்டும்!' என்று கேட்ட பிறகுதான் புழுவும் போரிடும் என்று புரிந்தது.

குடித்துவிட்டுக் கூத்தாடுவது, அதற்குப் பெயர் கலை!

ஆலயச் சொத்துக்களை அபகரித்துக்கொள்வது - அதற் குப் பெயர், அருளைப் பெற்று அளிக்கும் புனிதப்பணி.

சூறையாடுவது- அதற்கு வீர விளையாட்டு என்று பெயரிடுவது.

எச்சிற் பண்டங்களைப் பசிக் கொடுமையால் தாக்குண் டவர் எதிரே வீசுவது; அவர்கள் பாய்ந்தோடிச் சென்று எடுத் துத் தின்னப்போகும் போது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டுக் கடிக்க வைத்து கை கொட்டிச் சிரிப்பது! சீமானே! உனக்கு இது பொழுது போக்காக இருந்ததே! இப்போது தத்துவப் பேராசிரியனாகி பண்பு பாழாகலாமா என்றா கேட்கிறாய் - என்று கேட்பான் புரட்சி வீரன். எதிரே வர, சீமானுக்குத்தான் நடுக்கம்.

பதினாறாம் லூயி, கொடுமைக்காரனல்ல; ஆனால் கொடுமைக்காரர்களை அடக்கும் திறனற்ற மன்னன். செயல் புரியச் சங்கடம்! சிந்திக்க அதைவிடச் சங்கடம்! மக்கள் மனம் எரிமலையாகி இருந்த வேளையில் அரசனானான்; நிலைமையை அறிந்து கொள்ள முடியவில்லை. மன்னன் செய்ய வேண்டிய வேலை முடிதாங்கிக் கொள்வது, அடி வருடிகளை ஆனந்தப்படுத்துவது, ஆட்சி நடத்த அமைச்சர் களை நியமிப்பது, அவர்கள் கைவிரித்தால்' வேறு ஆட் களை அமர்த்துவது - இவ்வளவுதான் என்று எண்ணிக் கிடந்தான்.

அவனை மணக்க வந்த மங்கைக்கோ, ஆடம்பரம் என்றால் கொள்ளை ஆசை! நேரம் இடம் கூடப் பார்க்கத் தேவையில்லை என்ற அளவுக்கு ஆடலிலும் பாடலிலும் விருப்பம். விருந்துகள் நடத்துவர். பணம் விரயமாவது பற் றிய கவலையற்று விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கு வாள். தேவைக்காக அல்ல; பிறர் பார்த்து ஆச்சரியப்பட! சூதாட்டச் சாலைகளிலே அரசியைப் பார்க்கலாம்! வெறி யாட்டங்களிலே அவள் நடுநாயகமாவாள்.

இவ்வளவு வீண் செலவுக்கும் பணம் தரும் பாட்டாளி கள் பஞ்சைகளாகிப் பராரிகளாகிக் கிடக்கின்றனர் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை ; நேரமும் இல்லை; நினை வும் எழவில்லை.

'ரொட்டி கிடைக்காவிட்டால் என்னவாம்! 'கேக்" சாப்பிடட்டுமே!" என்று சொன்ன காலமல்லவா அது!

'பசித்தால், புல் தின்னட்டுமே! வலிவு கிடைக்கும், மாடுகளுக்குக் கிடைப்பது போல!' என்று கொக்கரித்த அமுல் நிரம்பிய நாட்களல்லவா. பண்பு வளர்க்கும் பல்கலைக் கழகங்களா அமைத்தனர்? பஞ்சமாபாதகம் நெளியும் படு குழிகளைப் பளிங்குமாடங்களில் அமைத்துக்கொண்டனர்.

காற்றில் சிக்கிய மலரின் இதழும், கனவான் விருந்திலே கலந்து கொண்ட காரிகையரின் இதழும், பட்டபாடு கொஞ் சமா - அதற்குப் பெயர்தான் பண்பா?

உழைத்து அலுத்த மக்கள் உணவின்றி வாட, உலுத்தர் கூட்டம் எத்துணை அளவு பணத்தைப் பாழாக்குவது? கோடி கோடியாக! பரிவாரங்களின் செலவு கொஞ்சமா! பாழாக் கப்படும் பண்டங்கள் எத்துணை நத்திப் பிழைப்போர் கொத் தித் தின்று ஏப்பம் விட்டபடி இருந்தனர் பெரும்பொருளை, காமவல்லிகள் கண்காட்டுவர்; கட்டித் தங்கத்தை அவர்கள் காலடியில் கொட்டுவர்! இடையொன்று அசையும்; சில இலட் சங்கள் அவள் இரும்புப் பெட்டியில் போய்ச் சேரும்.

"உன் கண்ணொளி, வைரத்துக்கு ஏது?" என்பான் அரச குடும்பத்து இளைஞன்!

"கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும்" என்பாள் கைகாரி!

வைரமாலை அவள் கழுத்துக்குப் போய்ச் சேரும்.

அவள் யார்? என்ற கேள்வி கிளம்பியதும் இவ்வளவு பணம், இந்த இடம், இந்த நேரம், என்று பதிலளிக்க ஆட்கள் அரண்மனையில் உண்டு.

சேடிக்குப் பணம் கொடுத்துச் சீமாட்டியின் துணை கொண்டு அரண்மனைக்குள் நுழைவது! அங்கு சென்றதும், அழகும் அப்பாவித்தனமும் ஒருங்கே கொண்ட அரச குடும்பத் தவளைத் தேடிப் பிடிப்பது, தேனொழுகப் பேசுவது, தேவ லோகம் போக வேண்டும் என்றோர் ஆசை, உன்னைக் காணும் வரை இருந்தது என்று கூறுவது; அவள் போதுமே கேலி" என்பாள். "அதோ அந்த மலர்ப்புதர்' ' என்பான் இவன் ; ஐயையோ! அது அந்தச் சீமாட்டியின் சொந்தமா யிற்றே" என்பாள் இவள். பிறகு இடத்துக்கா பஞ்சம்! இப்படிப்பட்ட கோலாகலத்தில் மூழ்கி, நாட்டுச் செல்வத்தை ஒரு சிறுகூட்டம் பாழாக்கிக் கொண்டிருந்தது. பார்த்துப் பார்த்துப் பதைத்த மக்கள், பண்பு ஆராய்ச்சியா நடத்திக் கொண்டிருப்பர்.

ஏழையின் கண்ணீரைக் கண்டு, பெருமூச்சைக் கேட்டு காய்ந்த வயலைப் பார்த்து, தேய்ந்து கிடக்கும் உடலைப் பார்த்து, கண்களிலே, "கடுமை' ' குடி ஏறுவது பார்த்து, ஆட்சி நடத்தினோர் பாடம் பெற்றிருந்தால், திருத்தம் ஏற்பட்டிருக்கும்; தீ பரவாதிருந்திருக்கும்.

ஒரு சமயம், பதினைந்தாம் லூயி அலங்கார வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். உடன் வந்த சீமானை மன்னன் 'இந்த வண்டி என்ன விலை போகும்? சொல்லு பார்ப்போம்' என்று கேட்டான்? சீமான், '8000 லிவரி (பிரான்சு நாண யம்) இருக்கும்' என்றான். மன்னன் சிரித்துவிட்டு, இதற்கு 30,000 லிவரி கொடுக்கப்பட்டது. கொள்ளையே அடிக்கி றார்கள், என்னைச் சூழ இருப்பவர்கள்' என்றான்.

வழக்கு மன்றத்திலே, கோழி திருடியதாகக் கூண்டிலேற் றப்பட்ட ஏழைக்கு, நியாயம், தர்மம் இரண்டையும் மதிக் காத கயவனுக்கு எட்டாண்டு தரப்பட்டது என்று நீதிபதி கூறுகிறார்! மன்னனைச் சுற்றிக் கொள்ளைக்காரர்கள், பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்!

பிரபுக்களின் கோலாகல வாழ்வைக் கண்டிக்கும் துணிவு, மதத்தலைவர்களுக்கு இல்லை - ஏன்? அவர்களே பிரபு குடும் பத்தினர்! உடையிலே மாறுபாடு இருந்தது ; நடவடிக்கையில் அல்ல!

ஜெபமாலை, கூர்வாள், செங்கோல் - மூன்றுமே ஏழைக்கு வாழ்வு அளிக்கவில்லை. எனவே அவனுக்கு எதிலும் நம்பிக்கை நசிந்துவிட்டது.

மாண்டவர் போக மீதமிருந்தவர்களின் மனப்போக்கு மாறிக்கொண்டு வந்தது. பணிவு குறைந்தது, துணிவு துளிர்த் தது! கண்ணீர்விட்டுக் கிடந்த மக்கள், சீமான்களைக் கண் டால், காரித் துப்பலாயினர். கசையடியால் மாண்டிருப்பான் தகப்பன், அவன் மகனோ, கல்லெடுத்து வீசுவான் சீமான் மீது. எரிச்சல், எதிர்ப்பு உணர்ச்சியை ஊட்டிற்று. இந்தக் குறியைக் கண்டு கொள்ளவில்லை, ஆட்சி நடத்தினோர்! "இதுகள்" எப்போதும் இதுபோலத்தான் கிடக்கும் என்று எண்ணினர்; ஏமாந்தனர்! பசியைத் தாங்கிக் கொள்வார்கள்; பாபம் புரியமாட்டார்கள் பாமரர்' என்றார் மதகுரு. அந்தப் பைத்யக்கார எண்ணம் எங்களை விட்டுப் போயே விட்டது' என்றான், கொடுமைக்கு ஆளான ஏழை. கடல் கொந்தளிக்கத் தொடங்கிற்று. கலத்திலிருந்தோர் அந்த ஒலியை அறியவில்லை; வெறிக்கூச்சல் செவியில் சங்கீதமாக வீழ்ந்து கொண்டிருந்ததால்.

மேரி அன்டாயினட், பிரான்சு நாட்டுக்கு அரசியாவ தையே அந்த நாட்டு மக்கள் வெறுத்தனர் - அவள் ஆஸ்ட் டிரிய நாடு என்பதால்.

வந்த மேரியும், மக்கள் மனதைக் கவர முயலவில்லை ; வசீகரத்தைக் கண்டு புகழும் சீமாட்டிகளைத்தான் தேடிக் கொண்டாள்.

மன்னன் அத்துணை அட்டகாசம் ஆடம்பரம் தேடுவ தில்லை; அரசிக்கு அஃதன்றி மகிழ்ச்சி தரும் வேறு பொழுது போக்கு இல்லை. தரம் கெட்ட கொட்டகை செல் வாள்! தாறுமாறாக நடனமாடி மகிழ்வாள்! கோமாளி வேடம் பூண்டு நாடகமாடுவாள்! மக்கள் அருவருப்புக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் சிரமப்பட்டுப் பொருள் செலவிட்டுச் செய்துவந்தாள்.

அரசி மேரியின் அணிமணிகள் உடை வகைகள் புதிது புதிதாக வடிவம், வண்ணம், மாறும். உடனே உல்லாச உலகு அந்த 'தரத்தைப் பின்பற்றும்.

தலையணியில் இறகுகளைச் செருகிக்கொள்ளும் வழக் கத்தை அரசி புகுத்தி இறகுகளின் விலையே ஏறிவிட்டதாம்.

இந்த அழகைத் தன் தாய் காணவேண்டுமென்று, படம் தயாரித்து அனுப்பினாளாம் அரசி. அவள் தாய் மெரயா, தெரிசா படத்தை திருப்பி அனுப்பிவிட்டு 'நான் பிரான்சு நாட்டு அரசியின்படத்தை எதிர்பார்த்தேன். இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தை எதிர்பார்ப்பதே ; இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தையல்ல" என்று கடிதமே அனுப்பினார்களாம்.

பிரான்சு நாட்டுச் செல்வவான்களுடன் லியான்சு நக ரப் பட்டிலே ஆடைகள் தயாரித்து அணிவது வாடிக்கை. பெரும் பொருள் போட்டுப் பலர் அந்தத் தொழிலை நடத்தி வந்தனர். பல ஆயிரக்கணக்கான நெசவாளர் பிழைத்து வந் தனர்; திடீரென்று அரசி, லயான்சு பட்டாடையை விட்டு விட்டு, பிரசல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வண்ணத் துணியில் ஆடைகள் தயாரித்து அணியலானாள். அரசி அணியவே அனைவரும் அதனையே தேடினர். லயான்சு நகரில் தொழில் கெட்டது. பிழைப்பு கெட்டது. அரசி ஏன் இப்படி எம்மைக் கெடுக்கிறாள் என்று கேட்டனர் தொழிலாளர். இது தெரியாதா ? பிரசல்ஸ் நகர வெள்ளை ஆடை தயாரிக்கும் தொழிலால் இலாபம் அடை வது, அரசியின் அண்ணன்! அவனுக்கு இலாபம் தேடத் தான் நமது வயிற்றில் மண் போடுகிறாள்" என்றனர் வெகுண்ட மக்கள்! அவர்கள் கூறியதில் உண்மை இல்லாமற் போகவில்லை.

வெறுப்பு நிரம்ப ஏற்பட்டுவிட்ட நிலை. மக்களின் நிலையை எடுத்துக்கூறிடப் பலர் முன்வந்தனர்.

பகுத்தறிவு வால்டேர் மூலம் பரவிற்று, ரூசா அரசியல் தெளிவு அளித்து விட்டார்; உரிமைக்காக அஞ்சாது போரிட் டால், எத்தகைய ஆதிக்க அரசையும் வீழ்த்தலாம் என்பதை அமெரிக்கா நடத்திக் காட்டிய விடுதலைப் போர்' எடுத்துக் காட்டிவிட்டது. அமெரிக்கா சென்று திரும்பியவர்கள், கதை, கதை யாகக் கண்டவைகளைக் கூறினர். முச்சந்திகளிலும், உணவுக் கடைகளிலும், வயலோரத்திலும், தொழிலிடங்களி
லும், இதே பேச்சு!

"ஆமாம், அமெரிக்கரின் வீரம் அப்படிப்பட்டது. நம்மைப்போலவா, குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பார்கள். அவர்கள் மனிதர்கள்! நாம் நடைப்பிணங்கள்!" என்று கூறு வான் ஒருவன் 'இரு, இரு ; பொறு, பொறு' என்பான் இன் னொருவன். ' 'எது வரையில்? நமது எலும்புகளை எடுத்து இசைக் கருவி அமைத்து நரம்புகளை அறுத்தெடுத்து அதிலே குளிரச் செய்யும் வரையில் பொறுத்திருக்க வேண்டுமா?" என்று குத்திக் கேட்பான் இன்னொருவன். என்னதான் செய்வது என்பான் வேறொருவன். சாகுமுன் கொடுமையை எதிர்ப்பது' என்பான் அமெரிக்கா சென்று வந்தவன். வலிவு?' என்று கேட்பான் இளைத்தவன். அவன் இதயத்தைக் காட்டி 'இங்கு இருந்தால் போதும்' என்பான் அமெரிக்கக் காட்சி கண்டவன். அமெரிக்க விதைப் பண்ணையிலிருந்து புரட்சிக் கான தரமான வித்து கிடைத்தது.

இதற்கிடையில் கவலையற்ற மன்னனையும் கலங்கச் செய்யும் விதமாகப் பொருளாதார நெருக்கடிகள் கிளம்பின. அமைச்சர்கள் மாறி மாறி அமர்த்தப்பட்டனர். நெக்கர் போன்றவர்கள் தமது நிபுணத்தனம் நாட்டைக் காத்திடும் என்று நம்பி உழைத்தனர். ஆனால் மூண்டு கிடந்தவைகளைக் களைந்திட முடியவில்லை. அமைச்சர்கள் மாறினர், அவதி கள் வளர்ந்தன; மக்களின் ஆர்ப்பரிப்புக் கிளம்பிற்று. தீர்க்க முடியாத சிக்கலும், அடக்கிட முடியாத தொல்லையும், போக்கிட முடியாத நெருக்கடியும் ஏற்படும் போது மட்டுமே. ஸ்ட்டேட்ஸ் ஜெனரல் எனும் கூட்டு மன்றத்தைக் கூட்டுவது வழக்கம். பிரான்சு மன்னர்கள் இதைக் கூட்டுவது என்றால் தயங்குவர்.

கூட்டு மன்றம் என்பது, மக்களின் பிரதிநிதிகள், மதத் துறை உறுப்பினர், பிரபுக்கள் எனும் மூன்று பிரிவின் ரும் ஒன்றாகக் கூடி, நாட்டுக்கு வந்துற்ற கேடு போக்க வழி காண ஏற்பட்ட அமைப்பு.

படை பலமும், சட்டத்தின் துணையும் போதுமான தாக இல்லை ; மக்களின் கூட்டுச் சக்தி திரட்டப்பட்டாலன்றி நெருக்கடி தீராது என்பதை அறிவிக்கும் சம்பவம், கூட்டு மன்றம் கூட்டுவது.

கூட்டு மன்றம் கூடினால் மன்னரின் ஆட்சி முறையைத் தகர்த்திடும் ஆற்றல் கிளம்பிவிடும் என்பது மன்னர்களுக்கு இருந்து வந்த அச்சம்.

அச்சப்பட்டுப் பயன் இல்லை. எனவே பதினாறாம் லூயி, கூட்டு மன்றம் கூட்டச் செய்தான். கூட்டு மன்றம் 1789ம் ஆண்டு மே 5ம் நாள் கூடிற்று.

மக்கள் உழைத்துப் பொருள் தருவர். பிரபுக்கள் வீரத் தால் நாட்டுக்குப் பாதுகாப்புத் தருவர்; மதத் தலைவர்கள் ஜெபம் செய்து மக்கள் உய்வுக்கான அருள் தேடித் தருவர் என்பது தத்துவம்.

நடைமுறை அடியோடு மாறிவிட்டது. மக்கள் தமது 'பங்கினை' தேவைக்கு அதிகமாகவே செலுத்திக் கொண்டு வந்தனர்; பிரபுக்களும் பூஜாரிகளும், பெயர் கண்டு திருப் திப்படச் சொன்னார்கள். செயலோ சீர்கேடானவை.

கூட்டு மன்றம் கூடுவதென்பது, பிரான்சு நாட்டிலே புனிதமான நிகழ்ச்சி.

மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கனவே ஏற்பட்டு விட்டிருந்த விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் பன்மடங்கு வளர்ந்தது.

பிரான்சு நாட்டிலே, உரிமை வேட்கையையும் ஊரா ளும் முறை பற்றிய தெளிவையும் ஊட்டப் பல கழகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகளில் மிக அதிகமான செல் வாக்குடன் விளங்கியது ஜாகபின்ஸ் என்பவர்களின் சங்கம். இந்தச் சங்கம் புரட்சிக் காலத்தில், மிகத் தீவிரமாகப் பணி யாற்றிற்று. இதிலே பயிற்சி பெற்றவர் பலர் மக்கள் மன்றத் தில் இடம் பெற்றனர்; ஆட்சிக் குழுவிலும் பணியாற்றினர். பேதமும் உட்பூசலும் ஏற்பட்டுப் பிறகு கலகலத்துப் போய் விட்டது என்றாலும், 'ஜாகபின் சங்கம்' மக்களிடையே உரிமைக் கனலை மூட்டி வெற்றி கண்டது.

வர்சேல்ஸ் நகரில் மே 2-ம் நாள் கூட்டு மன்ற உறுப்பி னர்களை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

நாலாம் நாள் கூட்டு மன்றத்தினர் அருளைப் பெற' மாதா கோயில் சென்றனர். சாமான்யர்களே தேவாலயம் செல்லும் ஊர்வலத்தில் முன்வரிசையில் செல்ல வேண்டும் என்பது முறை. அதன்படி மக்களின் பிரதிநிதிகள் முன்னால் நடந்தனர். இரண்டாவது வரிசையில் ஆடம்பர உடையுடுத் திய பிரபுக்கள்; பிறகு மத அமைப்புக்களிலிருந்து வந்த வர்கள், கடைசியில் மன்னன்!

மக்கள் ஊர்வலத்தின் முன்வரிசையில் வந்த, தமது பிரதிநிதி களைக் கண்டதும் களிப்புடன் ஆரவாரம் செய் தனர்; பிரபுக்களை ஏற இறங்கப் பார்த்தனர். வரவேற்க வில்லை; மதத்தலைவர்களை வெறுப்புடன் பார்த்தனர்; மன்னனை அருவருப்புடன் பார்த்தனர்.

வரலாறு எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான அறிகுறி அன்றே தெரிந்து விட்டது.

பணம் பெற வழிகூறும் கூட்டு மன்றம் என்று மன்ன னும் அவன் பரிவாரமும் எண்ணினர்; ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும்? மக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக் கப்படவேண்டும் என்பதற்கான திட்டம் வகுத்துக் கொள்ள இதுதான் நல்ல வாய்ப்பு என்று விடுதலை விரும்பிகள் தீர் மானித்தனர்.

அரியணையில் அரசன் அமர்ந்தான்; குடும்பத்தினர் படி களில் அமர்ந்தனர்; வலப்புறம் மதத் தலைவர்கள், இடது புறம் பிரபுக்கள், கோடியில், சற்றுத் தாழ்வாக இருந்த இருக்கையில், மக்களின் சார்பிலே உறுப்பினரானோர் உட் கார்ந்தனர்; அன்றைய அரசியல் அமைப்பு அது; அதனை மாற்றத் துணிவும் வலிவும் கொண்டோர், முன்னிடம் பிடிக்கவில்லை. பிடித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது பார்வையால், பேச்சால் தெரியவந்தது.

மத அமைப்புக்களின் உறுப்பினர் எண்ணிக்கை 290. பிரபுக்கள் சார்பில் இடம் பெற்றோர் 266. மக்கள் சார்பில் வந்திருந்தோரின் எண்ணிக்கை 584! சமூகத்தின் படப்பிடிப்பு போல் இருந்தது, அந்தக் கணக்கு. அந்த 584 பேர்களில் 212 பேர் வழக்கறிஞர்கள், 16 மருத்துவர், 162 பேர் வணி கர்கள் அல்லது சிறு பண்ணைகளின் சொந்தக்காரர்கள்.

மன்னர், கூட்டு மன்றத்தின் கடமை குறித்துச் சொற் பொழிவு நிகழ்த்தினார். அலுவலைக் கவனிக்கச் சொல்லி விட்டுச் சென்றனர்.

அலுவலைக் கவனிக்க, மக்களின் உறுப்பினர் துடிக்கின் றனர். பிரபுக்களும் மதச்சார்பினரும் ஒத்துழைப்புத் தர வில்லை; முன்னவர் மறுக்கின்றனர், பின்னவர் தயங்குகின்றனர்.

'நாமே அலுவலைக் கவனிப்போம்' என்று மக்களின் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்; மதச் சார்பினரும் ஒத்து ழைக்கத் தயாராயினர். இதை நாடு வரவேற்று மகிழ்ந்தது.

பால் தரும் கொழுத்த பசுவைக் கொண்டுவந்து கட்டி யிருக்கிறோம்; தொழுவத்தில் என்று ஆட்சி நடாத்தியோர் எண்ணிக் கொண்டனர்; நாட்கள் செல்லச் செல்ல, புலி உறுமுவது கேட்டது!

தமது பிரதிநிதிகளை, மன்றத்திலும் வெளியிலும் கூடி மக்கள் உற்சாகமூட்டினர்.

"எமது அரசு ஏற்படப் போகிறது, எத்தர்களே! அறி மின்! தீர்த்துக் கட்டு முன் திருந்துமின்!" என்று மக்கள் கூட் டம் மமதையாளரை நோக்கி முழக்கமிட்ட வண்ணமிகுந் தது. எங்கும் எழுச்சி! உரிமைப் பேச்சு! எதிர்த்து நிற்கும் போக்கு! எவரும் எமக்கு நிகர் இல்லை என்ற நோக்கம்! புயல் கிளம்புகிறது என்பது புரியலாயிற்று.

நெக்கர், மன்னன் தன் ஆட்சி முறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்திப் பார்த்தான். மற்ற வர்கள் மன்னனை உசுப்பிவிட்டனர். கூட்டு மன்றத்தை மன்னன் மீண்டும் சந்திப்பது என்று ஏற்பாடு செய்யப் பட்டது. சூன் மாதம் 22ம் நாள் அதற்காகக் குறிக்கப்பட் டது! ஆனால் 20ம் நாளே, 'அரசனின் ஏவலர்கள் மன்றம் நுழைந்து அரசன் வருகைக்கான அமைப்புச் செய்யவேண்டும்; அனைவரும் வெளியேறுக!' என்று உத்தரவிட்டனர்.

இதுபோன்ற அட்டகாசத்தை அழித்தொழிக்கத்தான் மக்களின் உறுப்பினர் கூடினர்; அவர்களிடமே ஆட்சியாள ரின் அம்புகள் வம்புக்கு நின்றன.

எதிர்ப்பு எழுந்தது. இடையில் பந்தாட்ட அரங்கிலே கூடலாம் என்ற யோசனை கூறப்பட்டது. அங்கு சென்று, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர்.

கூட்டு மன்றத்தைக் கூட்டிவிட்டுக் கேவலப்படுத்துவது எத்தகைய அறிவீனம் என்பதை அரசன் உணரவில்லை. அர சனை அண்டிப் பிழைத்துவந்த ஆள் விழுங்கிகள், அரசனுக் குத் தவறான பாதையைக் காட்டினர். 23ம் நாள், மன்னன் மன்றம் வந்தான். மக்களின் உறுப்பினர்களை, பக்கவாட்டத் தில் உள்ள கதவருகே நிறுத்திவைத்தனர். பிரபுக்கள் முன் வாயிற்படி வழியாகச் சென்று அமரும் வரையில்! பிறகு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே விடப்பட்டனர்! அவர்கள் உட்கார இடமே இல்லை. பிரபுக்களும், மதத்தலைவர்களும், இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். தம்மைக் கேவலப் படுத்துகிறார்கள் என்று அறிந்து, வேதனைப்பட்டனர்; இருப்பினும் பொறுத்துக் கொண்டனர்.

மன்னன், அறிவுரை கூறலானான்; 'ஆகாத வழி செல்லாதீர்; அரசாள நானறிவேன்; உரிமை தேடி அலை யாதீர்! வரம்பு அறிந்து வாழுங்கள். மக்களின் நல்வாழ்வை நான் கவனித்துக் கொள்வேன். இனி, மூன்று பிரிவினரும் தனித்தனி இருந்து, அலுவலைக் கவனியுங்கள்." என்ற கருத்துப்பட மன்னன் பேசினான். மக்கள் உறுப்பினருக்குப் பெருத்த ஆச்சரியம். இத்துணை கண்டிப்பு மன்னனுக்கு எங்கிருந்து வந்தது என்ற ஆச்சரியம். மன்னனைப் பிரபுக் கள் ஏவிவிட்டிருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

மன்னன் புறப்பட்டான் அரண்மனைக்கு - பிரபுக்கள் புடைசூழ! மதத்தலைவர்களில் சிலர் சென்றனர்; சிலர் மக்க ளோடு கூடிக் கொண்டனர். மன்றத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர். மன்னனின் ஆணை பெற்ற அதிகாரி, "அரசன் உம்மைக் கலைந்து போகச் சொல்லி உத்தரவிட்ட தைக் கேட்டீர்களல்லவா?" என்று கேட்டான். "மன்னன் கருத்தைக் கூறினார். நாங்கள் மக்கள் கட்டளையை நிறை வேற்றக் கூடினோம். அந்த வேலையை வெற்றிகரமாக முடித்திடாமல் கலையமாட்டோம், என்பதைப் போய் உன் எஜமானனுக்குச் சொல்' என்று முழக்கமிட்டான், மிராபோ! விடுதலைப் போரின், முதல் முரசு ஒலித்துவிட் டது!!

அரண்மனையிலிருந்து உத்தரவுகள் கிளம்பின. மக்கள் மன்றம் அவைகளை ஏற்க மறுத்தது. ஆதிக்கம், ஆள் அடிமை கொள்ளும் முறை யாவும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டம் பற்றி மன்றம் பேசிற்று. நாடு மன்றத்தை வாழ்த் திற்று; மக்களின் போர்க்கோலம் கண்டு, பிரபுக்கள் பதுங் கினர். அரண்மனைக்குள் அச்சம் படை எடுத்தது. அணி அணியாக மக்கள் கிளம்புவர், எதிர்ப்படும் ஆதிக்கக்காரரை அடித்து நொறுக்குவர். விடுதலைக்குப் பாடுபடுவோரின் வேண்டுகோளின்படி, பாதுகாப்புப் படை திரண்டது. பாஸ்ட்டிலி சிறைச்சாலை தூளாக்கப்பட்டது ஜூலை 14ல்! மக்கள் அதனை விழாவாக்கி மகிழ்ந்தனர்.
-----------