pm logo

பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல்,
பாகம் 2, அத்தியாயம் 7-11)
வை. மு. கோதைநாயகி அம்மாள்


parimala kEcavan (part 2, chapters 7-11)
by kOtainAyaki ammAL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Our sincere thanks go to Mr. R. Navaneethakrishnan for his assistance in this task.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல்,
பாகம் 2, அதிகாரம் 7-11)

Source :
பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல்)
வை. மு. கோதைநாயகி அம்மாள் எழுதியது.
பிரசுராலயம்: "ஜகன்மோகினி” ஆபீஸ்
26, தோடித்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை,
காபிரைட், 1931
----------
--------------

7-வது அதிகாரம்
சினிமா நடிப்பு-இனிய சந்திப்பு

கோமதி,பாலா, கங்காதரன் ஆகியோர் “போலீஸ்” என்ற குரலைக் கேட்டு மிக்க கலக்கத்தை யடைந்து தத்தளிக்கின்றார்கள். கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டதும் "ஐயோ! பேராபத்து வந்து விட் டதே! என்ன செய்வது? இவரை எவ்விதம் மறைப்பது?" என்ற கலக்கம் உண்டாகி விட்டது. "கதவைத் திறக்கின்றீர்களா, உடைத்து விடட்டுமா !" என்று வெளியில் குரல் கேட்டதும் பாலா ஒன்றுமே தோன்றாதவளாய் தம்பித்து விட்டாள்; எனினும் எப்படி யாவது தன் தந்தையை இச் சமயம் மறைத்து வைத்துத் தப்பித்துக் கொண்டு பிறகுதான் வேறு மார்க்கம் தேட வேண்டும் என்று தீர்மானித்து, உடனே ஒரு புடவையை எடுத்து கங்காதானுக்கு உடுத்தி, முட்டாக்கு இட்டுத் தன் தாயின் படுக்கையில் அவனைப் படுக்க வைத்து, தாயை எழுந்து தைரியமாய் உட்காரச் செய்து, கங்காதானின் கால் பாகத்தில் கோமதியும், தலைப் பாகத்தில் பாலாவும் உட்கார்ந்து கொண்டார்கள். கங்காதரனை பலமாக "ஐயோ! அப்பா!' என்று கத்தச் செய்ததோடு மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து முக க்ஷவரம் செய்த இடத்தில் அதை மறைக்கும் பொருட்டு நன்றாகத் தடவி விட்டதோடு "தலைவலி இன்னமும் தீர வில்லையா?" என்று கேட்டவாறு நீலாவைக் கதவைத் திறக்கச் செய்தாள்.

--------
சிலர் பார்ப்பதற்கு வெகு முடுக்காகவும், கண்டிப்பாகவு மிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகிய பின் அவர்கள் மிகவும் இளகிய நெஞ்சை யுடையவர்களென்பது நன்றாகத் தெரிகின்றது.
----------

நீலா கதவைத் திறந்த உடனே போலீஸ்காரர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து “எங்கே! எங்கே! அந்த திருட்டுக் கொலைக்காரன் எங்கே!" என்று கூறிக் கொண்டே சுற்று முற்றும் தேடுகையில் "ஐயோ! என்னைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்ற வேண்டும்" என்று கூனிக் கொண்டே இரு பெண்களும், ஒரு ஆண்பிள்ளையும் அவ் வீட்டுப் புறக்கடைப் பக்கத்திலிருந்து ஓட்டமாய் ஓடிவந்து “ஹா! ஹா!" என்று தத்தளித்தார்கள்.

அவ்விதம் நடக்கும் என்று சற்றும் எதிர்பாராத பாலா, கோமதி முதலியோர் நடு நடுங்குகின்றார்கள். வந்த பெண் பிள்ளைகளை அந்த ஆள் இழுத்து பலாத்காரம் செய்கிறான். "ஐயோ! அம்மா!" என்று இருவரும் கத்திக் கதறிக்கொண்டு மூலை மூலையாக ஓடுகிறார்கள். "எனக்கு ஆபத்தில் ஆதரிப்போரில்லையா! கடவுளே!' என்று கத்தியவாறு ஒரு பெண் கீழே மூர்ச்சையாகி விழுந்து விட் டாள்.

இது கண்ட பாலா தட தடவென்று எழுந்து, "ஐயா ! இதென்ன அக்கிரமம்! போலீஸ்காரரின் முன்னிலையில் இத்தகைய அநியாயம் நடக்குமா? ஐயோ! போலீஸ்காரரே! இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதற்கா நீங்கள் வந்தீர்கள்! இந்த பெண்பிள்ளை மூர்ச்சித்து விட்டாளே! இந்த கதிகாலத்தில் இத்தகைய அக்கிரமங்கள் நடப்பது தான் தருமமா?" என்று கூறிக் கொண்டே இருக்கையில் இன்னும் இரண்டு தடியர்கள் வேகமாக வந்து போலீஸ்காரர்களைக் கட்டி உருட்டி விட்டார்கள். கீழே கிடக் கும் பெண்ணைப் பார்த்து, ஒருவன் "ஹா! கமலவல்லீ! பிண மானாயோ! சண்டாளன் கைக்கு இரையானாயோ!" என்று புலம்பிய வாறு தன் மடியிலிருந்த துப்பாக்கியை எடுத்து முன் வந்தவனைச் சுட முயன்றான்.

இந்த விபரீதச் செய்கையைக் கண்ட பாலா முதலிய எல்லோ ரும் நடு நடுங்கி விட்டார்கள்; எனினும் பாலா வெகு தைரியமாய் "ஐயோ! இதென்ன அக்ரமம்! நீங்கள் யார்? இவ்விதம் அன்னியர்களின் வீட்டில் வந்து இத்தகைய விபரீதச் செய்கைகளைச் செய்கின்றீர்களே! துப்பாக்கிப் பிரயோகமென்ன! கொலை செய்வதென்ன! இதென்ன விபரீதம்!" என்று கூறியவாறு துப்பாக்கி பிடித்திருக்கும் மனிதனின் கரத்திலிருந்து வெடுக்கென துப்பாக்கி யைப் பிடுங்கிக் கொண்டாள்.

--------
எப்பொழுதும் தேனொழுகப் பேசி உபசாரஞ் செய்பவர்கள் உண்மையில் அதிக அழுத்தமும், கன்னெஞ்சு முடையவர்களா யிருக்கிறார்கள். "வெளுத்த தெல்லாம் பாலல்ல" என்பதை அது நிரூபிக்கின்றது.
------

அந்த மனிதன் பாலாவின் செய்கைக்கு நகைத்தவாறு, "ஆ! நான் விட்டேனா பாரு. இதோ கத்தி இருக்கிறது." என்று கூறிக் கொண்டே கத்தியை எடுத்துக் குத்த முயன்றான். இதற்குள் கீழே விழுந்து கிடக்கும் பெண்மணி "தாகம் தாகம்" என்று சைகை செய்தாள். இதைக் கண்ட பாலா ஒடோடியும் தண்ணீர் கொணர்ந்து அந்த பெண்பிள்ளையின் வாயில் வார்க்கப் போகையில் பாலா திடுக் கிட்டாள். "ஹா! அம்மா! நாம் ஏமாந்தோம். இதில் ஏதோ மோச மிருக்கிறது. பெண்பிள்ளையாக நடித்தது ஓர் ஆண் பிள்ளையே யாகும்." என்று பாலா கத்திக் கொண்டே விலகிக் கொண்டு மற்றொரு பெண்ணைப் பார்த்தாள். அவனும் ஆண்பிள்ளையாகவே இருப்பது கண்டு நடுக்கலுற்றாள்.

இதைக் கண்ட எல்லோரும் கடகடவென்று நகைத்து, எழுந்து நின்றார்கள். பாலாவுக்கோ ஒன்றுமே அர்த்தம் விளங்க வில்லை; விழிக்கின்றாள். எனினும் தைரியத்தை விடாமல் "ஐயா! இதென்ன நகைப்பு! என்ன செய்கை! ஒன்றும் எனக்கு விளங்க வில்லையே!" என்றாள்.

அதற்கு அங்கு வந்தவர்களில் முதலாளியாகியவன் "அம்மணீ! பயப்படவேண்டாம்! எங்கள் வேலை முடிந்தது; நாங்கள் சென்றுவருகிறோம். எங்கள் வரலாற்றைத் தெரிவிக்காமல் சென்றால் தங்கள் மனம் எவ்விதம் சமாதானமாகும். அம்மணீ! இந்த ஊரில் ஓர் சினிமா படமெடுக்கும் கம்பெனி நாங்கள் வைத்திருக்கிறோம். அதில் முதன்முதல் ஒரு கதையை நடிக்கப் பழக்குகின்றோம். அக்கதையில் இத்தகைய சம்பவம் வருகின்றது. அந்த பாகத்தைத் திறமையாக நடிக்கின்றார்களா! அதனால் பிறருக்கு உண்மையிலேயே அதற்கு வேண்டிய பயம், அச்சம், முதலிய உணர்ச்சிகள் உண்டா கின்றனவா! என்று பார்ப்பதற்கே திடீரென்று ஒரு வீட்டில் புகுந்து இந்த பாகத்தை நடிக்கச் செய்தேன். உங்களுக்கேற்பட்ட உணர்ச்சி களையும், மற்றையோரின் பீதியையும் கண்டு இவர்களின் நடிப்பு நன்றாக விருக்கிறதென்று அறிந்தேன். அம்மணீ! அனுமதி இன்றி உள்ளே வந்ததற்குக் கோபிக்கவேண்டாம். நடிப்புத் திறமையைக் காணவே அங்ஙனம் செய்தோம். இங்கு நடித்ததால் உங்கள் மூலம் இன்னும் சில விஷயங்கள் நடிக்கக் கற்றுக்கொண்டோம். இக்கம்பெனியில் பெண்கள் பாகத்தை பெண்களே நடிப்பதற்கான ஏற் பாடு செய்திருக்கிறது. பிரியமிருப்பின் நீங்கள் யாரேனும் சேரலாம். வித்தியாசம் எண்ணவேண்டாம்" என்றான்.
------
சங்கீதம் தெரிந்தவர்கள் இருவர் ஒரு இடத்தில் சந்தித்தால் "அவர்கள் தான் முதவில் பாடட்டுமே" என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்துவிட்டுக் கடைசியில் ஒருவரும் பாடாமலே இருந்து விடுகிறார்கள்.
---------

இதைக் கேட்ட பாலா முதலிய எல்லோருக்கும் பெரும் ஆச்சரியமுண்டாகி விட்டது. "அடாடா! ஒரு க்ஷண நேரத்தில் ஏமாந்து விட்டோமே! படக்காக்ஷிக்காரர்களா நீங்கள்! என்ன வியப்பு! என்ன சாமர்த்தியம். ஆகா! உண்மையிலேயே ஏதோ பெரிய விபரீதமான கொலை இவ்விடத்தில் நடக்கப்போகிறது. அதனால் எங்களுக்கும் பேராபத்து நோப்போகின்றது என்றல்லவோ நான் எண்ணிவிட் டேன். என்ன பயங்கரம்!" என்றாள்.

வந்தவன்.- அம்மா! அந்த துப்பாக்கியைக் கொடுங்கள். அது வெறும் துப்பாக்கி. தோடா இல்லை. இக்கத்தியும் சாதாரண அட்டையில் செய்த கத்தி. இன்று நடிப்பின் திறமையைக் கண்டு கொண்டு நாளைய தினம் படம் பிடிக்கலாமென்று உத்தேசம். அம் மணீ! நாங்கள் உத்தரவு பெற்றுக்கொள்கிறோம். இன்று நடந்த சம்பவத்திற்கு எங்களை மன்னிக்கவும். இப்படியே ஏதேனும் ஒரு சமயம் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் இவ்விடம் வருவோம். வித்யாசமாக எண்ணவேண்டாம்." என்று கூறி விடைபெற்றுக்கொண்டு எல்லோரும் போய்விட்டார்கள்.
------
நாம் யாரைக் கண்டு பேசுவதற்குப் பயந்தோ சங்கோஜப் பட்டோ பின் வாங்கி நின்றோமோ அவர்களிடத்திலேயே பின்னர் ஒரு காலத்தில் நெருங்கிப் பேசி மிகவும் அக்தரங்கமான விஷயங்களிலும் அவர்களது ஆலோசனைப்படி நடக்க வேண்டி நேருகின்றது.
--------

பிறகு பாலா பெரு நகை புரிந்தவாறு "அம்மா! உலகம் எவ் விதமிருக்கின்றது பார்த்தாயா! உண்மையில் போலீஸ்காரர்கள் தான் வந்துவிட்டதாக எண்ணி அப்பாவுக்கு இத்தகைய மொட்டச்சி வேஷங்கள் போட்டு நாமும் நடித்தோமே! இவ்விதம் திடீரென்று வந்து தடபுடல் செய்தால் என்ன நினைப்பது?" என்றாள்.

கங்காதரன்.--கண்மணி! பாலா! எனக்கு ஓர் தோன்றுகின்றது. எந்தவிதமான சம்பவத்தை உண்டாக்கியபோதி லும் கடவுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மையை வைத்திருப்பார் என்பது பெரியாரின் வாக்கு; இன்று இந்த அதிசயமான சம்பவத்திலும் ஒருவிதமான நன்மை நமக்கு ஏற்படக்கூடுமென்று நான் நினைக்கின்றேன்! என் மனத்தில் கடவுள் அத்தகைய எண்ணத்தை உண்டாக்குகின்றார். அம்மனிதன் கேட்டதுபோல நாம் பிரியப்பட் டவர்கள் இந்தப் படக்காக்ஷியில் நடிக்கலாமல்லவா! என்னை என்னவோ ஒரு பெருங் குற்றம் சூழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் எந்த விடத்திலிருப்பினும் அவ்வாபத்து துடர்ந்து வந்தாலும் வரலாம். அவ்வாறு வந்தால் தப்புவதற்கு முடியாது, நான் இக்கம் பெனியில் சேர்ந்து அவர்களுடனேயே சுற்றிக்கொண்டிருக்கலாமா என்று தோன்றுகின்றது. ஏனெனில் படம் பிடிப்பவர்கள் ஒரே இடத்தில் எடுக்கமாட்டார்கள். பல இடங்கள் சுற்றுவார்கள். அவர்களோடு நான் சென்று சேர்ந்துவிடுகிறேன். அதோடு என்னைப் பார்த்தால் சாதாரணமாக அடையாளம் தெரியாது. நான் என்னோடு நீலாவையும் அழைத்துக் கொண்டு அப்படக் காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன். அவளோ சிறுமி. என்னை யப்படி கண்டு பிடித்துக் கேட்டால் நான் நீலாவுடன் தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகின்றது. ஆதலால் என்ன சொல்கிறீர்கள்?

-------
சில அச்சாபீஸ்களில் ஆரம்ப முதல் வேலையை வெகு ஒழுங்காகவும் திருப்திகரமாகவும் செய்து அது முடிவு பெறுகையில் ஒரு சிறிய விஷபத்தில் தப்பு செய்து முழு வேலையையும் கெடுத்து விடுகிறார்கள். குதிரைப் பந்தயத் தில் வெகு ஜோராக முன்னால் வந்த குதிரை கடைசி நிமிஷத்தில் திடீரென்று நின்றோ,கீழே விழுந்தோ அபஜெயத்தை யுண்டாக்குவது போலிருக்கின்றது
---------

பாலா - இதென்ன திடீரென்று ஏதோ பெரிய யோசனை செய்துவிட்டீர்களே! நீங்கள் குற்றவாளி என்ற பயத்துடனிருப்பவர்கள் ஒளிந்து மறைவிடத்தில் இருப்பின் நலமா! அன்றி பகிரங்கமாகப் படக்காட்சியில் சேருவது நலமா என்பதை யோசித்துப் பாருங்கள். நான் இது விஷயமாக உடனே பதில் கூறமுடியாது. சற்று நிதானித்து யோசித்துச் சொல்கிறேன்.

கோமதி;- பாலா! அப்பா சொல்வது எனக்கும் சரி என் தோன்றுகின்றது. ஏனெனில் அவர் எந்தவிதமாவது தப்பித்துக் கொள்ளும் வழியைச் செய்யவேண்டுவது நமது கடமையாகும். அவர் யாரோ சினிமாவில் நடிப்பவர் என்ற நிலைமையில் இந்த தீவை விட்டுக் கடந்து விட்டால் பிறகு நாமும் எந்தவித மார்க்கத்தைச் செய்தேனும் நமது தாய் நாட்டிற்குச் சென்றுவிடலாம். ஆதலால் அவருடைய விருப்பப்படிக்கு நீலாவையும் உடன்கூட்டி யனுப்பு வோம். நீலா! என்ன சொல்லுகிறாய்! எந்த சமயத்திலும் உன் சகோதரியின் சாமார்த்தியத்திற்கு நிகராக நீயும் நடக்கவேண்டும். நீ உன் பிதாவுடன் தனித்துச் சென்ற பிறகு அவருடைய உயிரைக் காப்பாற்றக்கூடியவள் நீதான். தெரியுமா! என்ன சொல்லுகிறாய்?

நீலா - நான் எல்லாவற்றையும் கவனித்தேன் வாஸ்தவம்தான். அப்பா சற்றுமுன் தெரிவித்ததுபோல எந்த சம்பவத்திலும் கடவுளின் மறைந்த நோக்கமும் நன்மையும் இல்லாமலில்லை. அதாவது இங்கு வந்தவர்களை நீங்களும் கவனித்தீர்கள்: நானும் கவனித்தேன். நீங்கள் ஆட்களின் செய்கையை மட்டும் கவனித்தீர்கள். நான் ஆட்களையே கவனித்தேன். அவர்களில் ஒருவன் அதாவது பிறகு ஓடிவந்தவர்களில் ஒருவன் முகம் அசல் அம்மாவின் முகம்போலவே இருக்கின்றது. அவ்வாறு அவனுக்கு நம்முடைய தாயாரின் முகம் இருக்கவேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன்! அந்த தடபுடலில் அதை வெளியிடலாகுமா! கூடாதே என்று அஞ்சினேன்; பயந்தேன். அம்மா! நீ எங்களுடைய அண்ணன்மார் இருவரை இழந்துவிட்டதாக அடிக்கடி தெரிவிப்பாயே! அவர்களில் ஒருவனாக அம் மனிதனிருக்கக்கூடுமோ என்று என் மனம் அப்போதிலிருந்து சந்தேகப்படுகின் றது. முதலில் அந்த சந்தேகம் நிவர்த்தியான பிறகு நாம் மற்றைய விஷயங்களை யோசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகின்றது" என்றாள்.
--------
ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று ஒருவர் பலதரம் கெஞ்சிக் கேட்டும் அதற்கு ஒத்துக் கொள்ளாதவர், அதே காரியத்தைப் பற்றி வேறொருவர் கேட்கையில் முதல் தடவையிலேயே அதற்குச் சம்மதித்துவிடில், அதனால் முதலில் கேட்டவர் மற்றவரை உயர்த்தித் தன்னை அவமதித்து விட்டதாக நினைக்கவேண்டி சேருகின்றது. ஆனால் உண்மையில் அவ்விதமில்லை; ஏதோ சந்தர்ப்பத்தை உத்தேசித்து அவ்வாறு செய்தது என்பது அவர்கள் அறிவதில்லை.
--------

இது கேட்ட மூவரும் வியப்புற்று "ஆ அப்படியா! ஐயோ! இந்த தடபுடலில் நாங்கள் அவனைக் கவனிக்கவில்லையே! என் கண்மணி கேசவனோ! அன்றி மருதப்பாவோ! இருவரையும் இனி நான் உயிருடன் காண்பேனா! ஆ! நீலா! நீ இச்செய்தியைக் கூற பயப்படலாமா? இதை அப்போதே எங்களில் யாரிடமாவது சொல்லி இருக்கலாகாதா! இனிமேல் நாம் அவர்களை எங்கு காண்பது? ஐயோ! என் செல்வர்களில் ஒருவனாக விருந்து நான் கண்ணால் கண்டால் உடனே என்னுடைய பிணி நீங்கிவிடுமே! கேசவா! மருதப்ப!" என்று கோமதி புலம்பவாரம்பித்தாள்.

பாலா - அம்மா! நீலா என்னை விடப் புத்திசாலி என்பதை இப்போதே நிதர்சனமாகக் காட்டிவிட்டாள். வந்தவர்களை நான் கவனியாது விட்டுவிட்டேன். இப்போதும் மிஞ்சி விடவில்லை. நான் எந்த விதத்திலாவது அவர்களைக் கண்டுபிடித்து அந்த மனிதனை உன் முன்பு கொண்டு நிறுத்துகிறேன். இதுவிஷயத்தில் நானே ஆண் பிள்ளைகளைப் போலத் துணிகரமாக வேலை செய்கிறேன். நீ பயப் படாதே!" என்று தேறுதல் கூறினாள்.
-----------
நாம் ஒருவரோடு பேசியதைப் பற்றி அவர்களைச் சேர்ந்தவரிடத்தில் சொன்னால் ஏதாவது அவர்கள் நினைத்துக் கொள்ளப் போகிறார்களே யென்று நாம் அவரைச் சந்திக்கவே யில்லையென்று மனச் சாக்ஷிக்கு விரோதமாகப் பொய் சொல்ல நேருகின்றது.
----

பிறகு தினந்தோறும் பாலா அந்தப் படக்காரர்களைச் சந்திக்கும் நோக்கத்துடனேயே வேலை செய்ய வாரம்பித்தாள். தன்னுடைய வேலையையும் கவனிப்பதோடு, தினந்தோறும் வீதி வீதி யாக அலைவது ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று பார்ப்பது இவ்விதமே சில நாட்கள் கஷ்டப்பட்டாள். ஒன்றும் புலன் கிடைக்க வில்லை. அதுவே கவலைகொண்டு சில மாதங்களைக் கடத்தினாள்.

கங்காதரன் வீட்டை விட்டு அசையவில்லை. சதா பெண் வேடத்திற்குள்ளேயே மறைந்திருந்தான். ஒரு தினம் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகையில் அன்று வந்த சினிமாவின் முதலாளி எதிரில் சந்தித்தான். உடனே அம்மனிதன் வெகு வணக்கத்தோடு, மரியாதையாய் "அம்மா! வந்தனம். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கிறதா!" என்று கேட்டான்.

உண்மையில் அவனைப் பார்த்துச் சிலகால மாகிவிட்டதால் அவளுக்கு நினைவு முதலில் இல்லை எனினும் உற்றுப் பார்த்தவளவில் நன்றாக ஞாபகம் வந்துவிட்டது. பிறகு "ஒகோ! தாங்களா! எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றதே! தாங்கள் படக்காட்சியின் எஜமானரல்லவா! பேஷ்! அன்றைய தினம் நான் உண்மையில் நடு நடுங்கிவிட்டேன்! பிறகு தங்களைக் காண்பதற்கே இல்லாதுபோய் விட்டது. கம்பெனி எப்படி நடக்கின்றது. எத்தனை நாடகங்கள் நடித்தாயிற்று?" என்று சாதாரணமாக விசாரித்தான்.

எஜமானன்.-பிறகு ஐந்து நாடகங்கள் தயாராகிவிட்டன. சினிமாப் படம் தயாரிக்கையில் உங்களுக்கு டிக்கட்டு அனுப்புகி றேன். நீங்கள் பார்ப்பதற்கு வாருங்கள். நாங்கள் இப்படம் எடுப்பதற்காக காடுமேடுகள் எல்லாம் திரிந்துகொண்டிருக்கிறோம். ஆதலால் தான் தங்களைப் பார்க்க முடியவில்லை.

-------
யாராரிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதே சிலருக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் சுய மதிங்பைக் கெடுத்துக் கொள்வ அடன் தங்களைச் சேர்ந்தவர்களையும் மிதவும் இக்கிட்டான நிலைமையில் வைத்து விடுகிறார்கள்.
----------

பாலா:- ஒ! அப்படியா! நானும் என் சகோதரியும் உங்கள் கம்பெனியின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஆவல்கொண்டோம். ஆனால் எங்கே நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே எங்களுக்குத் தெரியா தாகையினால் சந்திக்கக்கூடவில்லை. மற்றொரு சமயம் பார்ப்பதற்குக் கூடுமானால்,

எஜமானன்;- ஏன் அப்படி கூடுமானால் என்கிறீர்கள். இப்போது ஒரு ரஸமான நாவல் வெகு அழகாக இருக்கின்றது. எங்கள் கம்பெனியில் உள்ள ஒரு நடிகன் தானே எழுதி நடித்து எடுக்கப்படுகிறது. அது நாளை நடிக்கப்படும். அதற்கான இடங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதைத் தாங்கள் பார்ப்பதாயின் நாளைக் காலையில் வரலாம். இதோ விலாசம்.

பாலா.- நாவல் எழுதக்கூடிய திறமையுள்ளவர்களே உங்களுக்கு நடிகராக இருப்பது மிக்க சிலாக்கியமானதல்லவா! அவர் யார்? அவருடைய பெயரென்ன!

எஜமானன்.- அவர் பெயர் சுப்பிரமணியனாம், வெகு நல்லவர். வெகு நல்ல மாதிரி தரிங்கள் நாளை வந்தால் அந்தக் கதையில் அவரே நடிப்பார்; பார்க்கலாம்.- என்றான். "சரி நாங்கள் வருகிறோம்" என்று கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு பாலா வீடு சென்றாள். இங்கு நடந்த விஷயங்களை பாலா தன் பெற்றோருக்குக் கூறினாள்.

இது கேட்ட பெற்றோரும் நீலாவும் சந்தோஷப்பட்டு அன்று காலை நேரத்தை எதிர்பார்த்துக் கொணடிருந்தார்கள். அழகான காலை நேரம் வந்தது. பாலா, நீலா, கோமதி மூவருமட்டும் ஓர் வண்டி யமர்த்திக்கொண்டு கடிதத்தில் கண்ட விலாசத்திற்குச் சென்றார்கள். கோமதியின் தேக நிலைமை வெகு கேவலமாக விருக்கிறதெனினும் இங்கு ஒருகால் தன் புத்திரனைக் காணக் கிடைக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் வாஞ்சையினால் அதைக் கவனியாது புறப்பட்டாள். 'அன்பு செய்யாத காரியம் அவனியில் உண்டா?"

-------
சிலர் செய்யும் தப்பான காரியத்தைப் பற்றிப் பிறர் சொன்னால், சிலர் தங்கள் தப்பை ஒத்துக்கொண்டு தங்களை திருத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர் தாங்கள் செய்ததே சரியென்று விதண்டா வாதம் செய்கிறார்கள், மற்றும் சிலர் அந்த விஷயத்னித மறைத்துவிட்டு ஏதோ விளையாட்டுத்தனமாகச் செய்ததாகச் சொல்லி சிரிக்கின்றர்கள். அவரவர் மனோ பாவத்திற்குத் தக்கபடி நடக்கின்றார்கள்.
-----------

இவர்களைக் கண்டதும் எஜமானர் வெகு மரியாதையாக வரவேற்று உட்காரச் செய்தார். இக்கதையின் முதல் சில பாகங்கள் ஏற்கெனவே நடந்துவிட்டதால், விட்ட இடத்திலிருந்து நடிக்க ஆரம்பமாயிற்று. அன்று ஆரம்பக் கதையில்,- ஒரு வீட்டு வாசலில் அனேகக் கூட்டம் நிறைந்திருக்கின்றது. அப்போது அக்கூட்டத்து மத்தியில் ஒரு பையன் அழுதுகொண்டு நிற்கிறான். போலீஸ்காரன் பையனைப் பிடித்துக் கொண்டு "இப் பையனா திருடினான்?" என்று கேட்கிறான். அங்கிருப்பவன் "ஆமாம். ஆமாம்." என்று பதில் சொல்கிறான். அந்த பையன் எதிரிலிருக்கும் ஒரு குழந்தை "இவன்தான் என் காப்பைக் கழட்டியது" என்று சொல்கிறது.

இந்த சம்பவத்தைக் கண்ட்கோமதிக்கு தன் மகன் ஆதியில் காப்புத் திருடிய சம்பவம் நினைவிற்கு வந்து துக்கம் பொங்கிவிட் டது. அதே சம்பவம் இங்கு நிகழ்வதாகவே தோன்றியது. தன் துயரத்தை அடக்கிக்கொண்டு பின்னும் கவனிக்கையில் ஓர் பெண்மணி மெல்ல நடந்து வருகிறாள். அவள் அந்த சம்பவத்தைக் கண்ட தும் அலறுகிறாள். அந்தப் பையன் "அம்மா! நான் இனிமேல் திருடவில்லை. அம்மா!" என்று அழுகின்றது. ஆனால் போலீஸ் காரன் பையனைப் பிடித்துக்கொண்டு போகிறான். உடனே அந்த வீட்டுக்காரர்கள். சகல தட்டுமுட்டு சாமான்களையும் வீதியில் எடுத்து எறிந்துவிடுகிறார்கள். அந்தப் பையனின் தாயார். புலம்பியபடியே இரு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அழுதுகொண்டே வெளியே போகிறாள்.
----
எப்பொழுதும் பொய் சொல்வதே தங்கள் நியாயமான தொழில் என்று சிலர் நினைக்கின்றனர். ஒரு விஷயத்தைப் பேபரில் தாங்களே நேரில் பார்த்த தாகச் சாதிக்கின்றனர். பிறகு அந்த விஷயம் பேபரில் இல்லாமல் தாங்கள் சொன்னது முழுப் பொய்யென்று நிரூபிக்கப் பட்டுவிடின் தங்கள் மானம் போய் விடுமே என்கிற எண்ணமே அவர்களுக்குண்டாவதில்லை. மானம் என்றால் ஆகாசம் என்கிற ஒரு அர்த்தம்தான் அவர்களுக்குத் தெரியும் போலும்.
-----

இந்த இடத்தைப் பார்த்ததும் கோமதிக்கு இது தன்னுடைய கதைதான் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. அதற்குமேல் அவள் துக்கம் தாங்க முடியவில்லை. இடையில் தான் சென்று ஏதே னும் கேட்டால் தனது உருவமும் அப்புகைப் படத்தில் விழுந்து விடுமாகையினால் இன்னும் என்ன நடக்கின்றது பார்க்கலாம் என்று பொறுமையாக உட்கார்ந்திருந்தாள்.

போலீஸ்காரன் அழைத்துச்சென்ற பையனை நன்றாக உதைக்கின்றார்கள்; ஜெயிலில் போட்டு விடுகின்றார்கள். சில வருடங்கள் கழித்துப் பையன் விடுதலையடைகிறான். விடுதலை யடைந்ததாகக் கதையில் வரும் போது முன் நடித்த பையனின்றி வேறு ஒருவன் நடிக்கின்றான். அவனைப் பார்த்தவுடனே கோமதிக்கு திடுக்கிட்டது. அப்போது நீலா, "அம்மா! இவனைத்தான் நான் சொன்னேன். இவன் முகத்தைப் பாரு. அக்கா! இவன் முகத்தைப் பாரு. இவன் நமது தாயாரின் ஜாடையாகவே இருக்கின்றான் பாரு." என்று காட்டினாள்.

பாலாவும் கோமதியும் உற்று நோக்கி "ஆம்; ஆம். இவன் கேசவனல்ல! இவன் மருதப்பாவைப் போலிருக்கின்றது, "ஹா! மருதப்பன்தான் மருதப்பன் தான் " என்று தம்மை மீறி பேசிக் கொண்டார்கள். இதற்குள் நீலா "அம்மா! இவன் பெரிய அண்ணனா, சிறிய அண்ணனா?" என்றாள். அதற்கு கோமதி "அம்மா! இவன் தான் பெரிய அண்ணன். இவனை நான் சென்று அணைத்துக்கொள் கிறேன்" என்று பறந்தாள். நீலாவும், பாலாவும், " அம்மா! பொருள் நம்முடையது என்று தெரிந்துவிட்டது. இனிமேல் நம்மிடம் சேர்ந்துவிடும் சமயம் கிட்டிவிட்டது. இந்தக் கதையோ நமது சொந்த கதையாக இருக்கிறது. இதை எழுதியவனோ யாரோ சுப்பிரமணியனாம். அவனுக்கு நம்முடைய உளவுகள் எப்படித் தெரிந்தன. எந்த மட்டில் தெரிந்திருக்கிறது என்று இன்னும் சற்று நேரம் கவனிப்போம் இரு. இப்போது இடையில் கலைத்துவிட்டால் அவர்களுக்கும் கலைந்துவிடும். ஒருகால் படத்தில் நாமும் விழுந்து விடுவோம். ஆகையினால் நீ பேசாமலிரு" என்று அடக்கினார்கள்.

---------
சிலருக்குப் பிற ஸ்திரீகளுடன் தாங்கள் தாராளமாகப் பேசவேண்டுமென்கிற ஆசை. ஆனால் தம் வீட்டு ஸ்திரீகள் அவர்களது நெருங்கிய உறவினருடன் பேசினாலும் அது பெருங் குற்றமாம். இது என்ன நியாயமோ?
-------

பிறகு நாடகத்தில் விடுதலையான பையன் வெளியே வந்ததும் நேரே தன் வீட்டிற்குப் போகும்படியாகச் சொல்லியனுப்புகிறார்கள். பையன் வீட்டிற்குச் செல்லாது வேறு எங்கேயோ சுற்றி அலைகின்றான், சில சோதாக்களுடன் சேர்ந்து தத்தாரியாகத் திரிகின்றான். அவர்களோடு வேறு ஒரு வீட்டில் திருடுகிறான். அந்த பணத்தைக் கொண்டு துன்மார்க்கமான பல வழிகளிலும் செலவிடுகிறான். அவன் தன்னுடைய சோதாக்களுடன் பின்னும் ஒரு வீட்டில் திருடி தண்டனை யடைகிறான். அதிலிருந்து மீட்சி யடைந்த பிறகு, ஒரு குழந்தை நிறைய நகைகளோடு ஒரு கோயிலுக்குச் சென்று வழி தப்பிவிடுகிறது. அது அழுதுகொண்டே இருக்கையில் அக் குழந்தையைப் பார்த்த இவன் அதைத் தூக்கிக் கொண்டு ஓரிடத்திற்கு வந்து நகைகளை எல்லாம் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கிணற்றில் தள்ளப்போகிறான்.

அச் சமயம் அவனை யறியாத ஓர் விதமான உணர்ச்சி உண்டா கின்றது. "ஆ! இக் குழந்தை என் சகே தரி பாலாவின் சாயலாகவன்றோ இருக்கின்றது. குழந்தையைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வதற்கா நம் மனந்துணிந்து விட்டது. ஐயோ! திருட் டுப் புத்தியிலிருந்து கொலைக்குமா வந்து விட்டோம். குழந்தை பரிதாபமாக அழுவதைக் கண்டும் இரங்காமல் அதன் நகைகளைக் கழட்டினோம். குழந்தையைக் கிணற்றில் தள்ளப் போகிறோமா! சீச்சீ1 கொலை செய்ய வேண்டாம். அதிலும் பால் மணம் மாறாத குழந்தையைக் கொலை செய்ய வேண்டாம். குழந்தையோ கிருஷ்ண விக்ரகம் போன்ற ஆண் குழந்தையாக விருக்கிறது. ஐயோ! என் தாயார் எனக்குப் பல விதமான புத்திகளைக் கூறி எத்தனை விதத்தில் என்னைத் திருத்த முயன்றும் என் திருட்டு மதி என்னைக் கடைசி வரையில் விடாது பாழாக்கி விட்டதே! ஒருவித பாபமும் செய்யாத, உலகமே அறியாத ந்த பச்சைக் குழந்தையைக் கொலை செய்வதால் அதன் பெற்றோரின் வயிறு எவ்விதம் துடிக்கும்? அதன் ஆத்மா எவ்விதம் தத்தணிக்கும்? அடடா! இந்த யோசளை எனக்கு திடீரென்று உண்டானதற்குக் காரணம் யாதாக இருக் கும்?" என்று வெகு நேரம் யோசிக்கின்றான். திருடிய நகைகளை எல்லாம் ஒரு முறை பார்க்கிறான். திருட்டு ஆசையினால் அவைகள் மிக்க அழகாக விளங்குகின்றன. குழந்தையின் முகத்தைப் பார்க்கிறான். அவனை பறியாத விதமான உணர்ச்சி ஒன்று போராடுகின் றது. அவ் வுணர்ச்சிக்குக் காரணம் அவனுக்கே தெரியவில்லை. இவ் விதமான யோசனையுடன் சற்று நேரம் குழம்பிக் கொண்டே இருக்கையில் அவ் வழியாகச் சென்ற ஒரு பீட் சேவகன் இங்கு இவன் குழந்தையையும், நகையையும் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விடுகிறான்.

-------
ஒரு விஷயத்தைப் பற்றி இருவருக்குள் தர்க்கம் நேர்ந்த பிறகு அதைப் பற்றிப் பிறரிடம் சொல்ல தேருகையில் இருவரும் வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள். இதிலிருந்து எப்படி உண்மையைக் கண்டு பிடிப்பது?
------

அவ்வாறு பார்த்ததும் இவன் பழய கே-டி என்று தெரிந்து விடுகின்றது. உடனே அங்கு ஓடோடி வந்து இவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "அடேய் திருட்டுப் பயலே! நீ இதுபரியந்தம் பலதரம் ஜெயிலிலிருந்தது போதாதென்று இப்போதும் உன் பழக்கத்தை விடாது ஆரம்பித்ததோடு குழந்தையைக் கிணற்றிலுமா போட்டுக் கொலை செய்யப் போகிறாய்!" என்று கூறி அவனை பலமாகப் பட்டார் பட்டார் என்று அடித்து " அடேப் திருட்டு நாயே! உன்னுடைய திருட்டுப் புத்தி உன்னை விட்டுப் போகவில்லையா !" என்று கூறிக் கொண்டு அவனை இழுத்துக் கொண்டு குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறான். அங்கு குழந்தை யாருடையதென்று விசாரித்து அதற்குரித்தான வர்களையும் வரவழைத்து வழக்கு விசாரணை செய்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற குற்றத்தில் அவனுக்குத் தண்டனை விதிக்கிறார்கள்.
---------
ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு நாம் எல்லா வகையிலும் தயாராயிருந்தும் அது நம்மை யறியாமலேயே தாமதப் படுகின்றது. இதனால் தான் ஆன்றோர் "அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா“ என்றனர் போலும்.
---------

அப்போது அவன் எதுவுமே வாய் திறவாது பிரமித்து கிலி பிடித்து விடுகிறான். தான் பெருங் கொலைசெய்ய எண்ணிய தப்பித்தத்தை எண்ணித் திடுக்கிட்டு பெருமூச்செறிகின்றான். அப்போது அவன் தாயை எண்ணிப் புலம்புகிறான். பிறகு அவனை சிறைச் சாலையிலடைத்து விலங்குமிட்டு விடுகிறார்கள். அவ்விதம் சிறைச் சாலையிலிருக்கையில் அவனுக்கு மாவு அரைத்தல், செக்கு இழுத் தல், கவலையில் தண்ணீர் பாய்ச்சல், நெல்லு குத்தல் முதலிய பல வேலைகளைச் செய்யும்படியாக தண்டனை விதிக்கின்றார்கள்.

இதற்கு முன்பு அவன் சிறைச்சாலையிலிருக்கையில் இத் தகைய தண்டனை எதுவும் அனுபவித்தறியவில்லை. ஏதோ சாதாரணமான வேலையைச் செய்து வந்தான். ஆதலால் அவனுக்கு இப் போதுதான் சிறையில் படும் துன்பம் நன்றாகத் தெரியலாயிற்று. இயந்திரக் கல்லைப் பிடித்து ஒரு தினம் மாவு அரைக்கையில் அவ னால் தாங்க முடியாமல் கோவெனக் கதறியழுது "ஹா! கடவுளே! நீ ஒருவன் இருக்கின்றாய் என்பதை இதுகாறும் தெரியாத பாவியாகி விட்டேனே! என் தாயே! குண பூஷணமே! பொறுமையில் சிறந்த புனிதவதியே! உன்னுடைய பொன்னுரையைக் கேளாது மூர்க்கனாய்த் திரிந்து அஷ்ட சகவாசம் செய்து துன்மார்க்கனாகி விட்டேனே! ஆ! என் அன்னையே! என் வினையன்றோ உன்னை மதியாது எதிர்த்துப் போராடும்படியாகச் செய்தது!” என்று கதறுகின்றான்.

இந்த பாகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் கோமதி யின் மனம் துக்கத்தினால் பொங்கி "ஆ! என் கண்ணே! மருதப்பா!" என்று கத்தக் கூடிய நிலைமைக்கு அவள் வந்து விட்டாள். இதையறிந்த பாலா "அம்மா! நாம் இங்கு இதை கவனிப்பதை அவன் அறிந்தால் மனம் முறிந்து வெட்கத்தினாலும் துக்கத்தினாலும் துன்பப்படுவான். ஆதலால் நாம் இருப்பதை இப்போது காட்டிக் கொள்ளக் கூடாது. மேலும் இவ் விஷயத்தை எல்லாம் நாம் அறிய வேண்டியது கடமையல்லவா! அவன் வெறுமனே வாயினால் சொல்லக்கேட்டு அறிவதைவிட இவ்விதம் பார்ப்பது நல்லது. இந்தக் கதையை பகிரங்கமாக நடிக்கையில் இதைப் பார்க்கும் இவனைப் போன்ற ஆசாமிகளும் துன்மார்க்கத்திலிறங்காமலும் ஈடுபடாமலும் இருக்கலாம்; இறங்கியவர்களும் திருந்தலாம். நாம் இப்போது சற்று பொறுமையை வகித்தோமானால் மற்றையோருக்குப் பெரும் உபகாரத்தைச் செய்தவர்களாவோம். மேலும் இப்போது அவன் நடிக்கின்றானே யொழிய உண்மையில் கஷ்டப்படவில்லையம்மா ! இதை முதலில் கவனி. அண்ணா! இப்போது நம்மைப்போல எதேச்சாதிகாரமாகத் தானிருக்கிறான். ஆகையினால் சற்று நிதானி." என்று தேற்றினாள். பிறகு கோமதியும் சற்று பொறுமையோடு அமர்ந்தாள்.

-------
எல்வளவு அன்யோன்ய ஸதி பதிகளாயினும், அண்ணன் தம்பிகளாயினும், தகப்பன் பிள்ளையாயினும் சரி, பண விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்படா திருப்பது மிகவும் அர்லபம். இதற்குக் காரணம் மனிதரிடமுள்ள பாசத்தை விடப் பணத்தினிடம் அதிகமிருப்பது தான்.
-----

பிறகு மாவு அரைக்கும் மனிதன் தன்னால் கேழ்வரகு அரைக்க முடியாமல் தத்தளிக்கின்றான். அதிகாரிகள் கொடுத்த நேரம் கடந்து விடுவதால் அதிகாரி சவுக்கு கொண்டு வந்து "ஏ கொலைகாரப் பாவியே! இன்னும் மாவு அரைக்கவில்லையா! இத்தனை நேரம் என்ன செய்தாய்! ஏன் அரைக்கவில்லை?" என்று கூறிக் கொண்டே சுளீர் சுளீர், என்று அடிக்கின்றான். அவன் அந்த அடியின் வேகத்தைத் தாங்காது "ஆ! கடவுளே! கடவுளே! எனக்கு இன யாவது நல்ல புத்தியைக் கொடுப்பாயா! ஐயோ! அம்மா!" என்று கதறி மூர்ச்சையாகிறான்.
-------
தான் பகலிலுங்கூட ஓயாது தூங்குவது. எவ்வளவு முக்கியமான காரிய மாயினும் பிறர் தன்னை எழுப்பினால் நரஸிம்மாவதாரம் எடுப்பது. ஆனால் தான் யாரிடமாவது ஒரு காரியமாகப் போகையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்தால் அவர்களை உடனே எழுப்பும்படிச் சொல்வது. இதென்ன நியாயமோ?
------

அடுத்த நாள் செக்கு இழுக்கும்போது கண்ணீர் வடிகின்றது. "ஐயோ! கடவுளே! என்னைப் போன்ற துர்ப்புத்தியுள்ளவர்களை இனி உலகத்தில் பிறப்பிக்காதே. அவர்களை நல்வழிப்படச் செய்து விடு. நான் படித்து என்னுடைய அறிவை விருத்தி செய்து கொண்டிருந்தேனேயானால் இவ்விதம் சிறையில் சிறுமைப்பட வேண்டுவதில்லையே! என் போன்ற இளம் வாலிபர்களே! நீங்கள் 'கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆக்குவதும் அழிப்பதும் அவன்தான். அவனால்தான் உலகமிருக்கின்றது' என்று உங்கள் அறிவு உங்களுக்குத் தெரிந்த உடனேயே நம்புங்கள். என் போன்று பாபத்திற்குப் பங்குதாரி யாக வேண்டாம். துஷ்ட சகவாசம் செய்யவேண்டாம். சிறு பிரா யத்தில் கோலியாடித் திரிய வேண்டாம். தாயின் சொல்லை அலக்ஷயம் செய்ய வேண்டாம். என் போன்று செக்கு இழுக்கும் மனிதனாக வேண்டாம்" என்று தன் போக்காகக் கதறுகின்றான்.

இதைக் கண்ட அதிகாரி, "அடேய் திருட்டு நாயே ! உன் வேலைபைக் கவனியாது ஏதேதோ உளறுகின்றாயா! யாருக்கடா இங்கு புத்திமதி கூறுகின்றாய்! உன்னெதிரில் இருப்பவர்கள் உன் போன்ற பழைய-கேடிகள் என்பதை மறந்து உளறுகின்றாயோ? உன் பவிஷுக்குப் பெரிய வேதாந்தம் படிக்கின்றாயே! உன் வேதாந்த மூட்டையைத் தூரே கட்டி வை; அதை அவிழ்க்க செக்கு இழுக்கும் இடம் சரியல்ல! உம், நட!" என்று அதட்டி உதைக்கின்றான்.

அதற்கு அடுத்த நாள் கவலையில் தண்ணீர் பாய்ச்சுகிறான். மேலும், பள்ளத்திலும் ஏறி ஏறி இறங்குவதற்குள் சிரமம் தாங்காது மூர்ச்கையாகி விடுகிறான். பிறகு மறுதினம் வண்டி இழுக்கிறான். இவ்விதமான கஷ்டங்களைச் சிறையில் படுகையில் கொஞ்ச கொஞ்சமாய் புத்தி மாறுதலை யடைந்து தன் குற்றத்தை உணர்ந்து சதா கதறியவாறு தன் காலத்தைக் கடத்துகிறான். "எப்போது நான் விடுதலையடைந்து என் தாயைக் காண்பேன்?" என்கிற ஏக்கம் பிடித்துவிடுகின்றது. தன் சகோதரிகளையும் சகோதானையும் நினைத் துப் புலம்புகிறான். விசனத்தினாலும் கடின வேலையினாலும் உடம்பு எலும்புக் கூடாக ஆய் விடுகின்றது. சிறைச்சாலையிலேயே நடக்கவும் மாட்டாது மிக்க மெலிந்து போய் விடுகிறான்.

------
ஆயிரக் கணக்கான ரூபாய் விலையுள்ள பொருள்களை ஆயிரம் தம்பிடியும் பெறுமானமில்லாத காவற்காரன், தட்டான், வண்ணான் முதலியவர்களிடம் நாம் ஒப்புவித்து ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் செய்கிறோம். ஆனால் அவர்களுக்குக் கூலி கொடுக்கையில் இன்னும் சில தம்பிடிகள் சேர்த்துக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்து அவர்கள் இன்னும் அதிக நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவர்களாயிருக்கச் செய்ய நமக்கு மனம் வருவதில்லை.
-------

சதா! "அம்மா! அம்மா!" என்று வாய்ப்பிதற்றுகிறான். பிறகு விடுதலை தினம் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன என்ற செய்தி தெரிந்ததும் எங்குமில்லாத உற்சாகம் பொங்கிவிடுகின்றது. "என் தாயைக் கண்டு களிக்கும் நாள் சமீபித்துவிட்டது; இனி என்னுயிர் போனாலும் நான் தாயின் வாக்கை மறுப்பதில்லை, நான் இங்கிருந்து விடுதலை யடைந்தவுடனே முதல் முதல் தாயின் அருகில் ஓடி அவள் பாதத்தில் விழுந்து பலகோடி தண்டனிட்டு அவளிடம் நான் செய்த குற்றத்திற்காகக் கன்னத்திலறைந்துகொண்டு மன்னிப்புக் கேட்கப் போகிறேன். என் செல்வச் சோதரிகளை வாரியணைத்து முத்தமிடப் போகிறேன். நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் என் சகோதரனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் கூறி அவர்களுக்கு நற்புத்தி புகட்டப்போகிறேன். என்னுடைய சகல துர்க் குணங்களையும் இச் சிறைச்சாலையிலேயே குழி வெட்டி மூடிவிட்டுப் போய் விடப் போகிறேன். தேவாதி தேவா! ஸ்ரீ பார்த்தஸாரதி! எனக்கு இனிமேல் இத்தகைய மதியை அளிக்காதே!" என்று பல விதமாக எண்ணமிட்ட வண்ணம் அந்த இரண்டு நாட்களையும் ஒரு நிமிடத்தை ஒரு யுகமாகக் கடத்தினான்.

ஆகா! அன்னையின் அன்பிற்கு ஒரு உவமை யுண்டா! அந்த தனிச் சுடரின் இன்ப மனுபவியாதவர்கள் பாபாத்மாக்கள் என்பதற்கு ஐயமே இல்லை. "அன்னையோடு அறுசுவை உண்டியும் போம்; தாயோடு போயிற்று அன்பு; தேரோடு முடிந்தது திருநாள். தாயில்லாப் பிள்ளையோ வாயில்லா ஊமையோ!" என்றெல்லாம் ஆன்றோரால் கூறப் பட்ட பழமொழிகள் பொய்த்து விடுமா! அந்தோ! தாயைப் போன்ற பாசத்தைக் காட்டி, ஊட்டி வளர்த்து விட்ட செவிலித் தாயின் அன்பே பெருத்த மலை போன்றிருக்கையில் தாயின் உண்மையான அன்பு கூறவேண்டுமா? தாயைப் பிரிந்து வருந்திய அந்த மனிதனுக்குத் தாயைப் பார்க்கப் போகின்றோம் என்கிற பெரிய ஆசை உண்டானதும் இழந்த பலமும், நீங்கிய தெம்பும் களைத்தெழுந்தது. அவன் அங்கம் அன்பின் வலுவால் பெருத்தது. விடுதலை செய்யும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண் டிருந்தான்.

--------
சந்தோஷமும் திருப்தியும் இல்லாத புகழும் பணமும் மாத்திரம் இருந் தால் அவை எப்போதும் பரிமளிக்க மாட்டா. மனச் சாந்தி யிருந்தால் தான் சந்தோஷம் ஏற்படும். மனச் சாந்தியானது, சுகம் துக்கம் இரண்டிலும் ஆழ்ந்து அநுபவித்த பிறகே உண்டாகும். அது சில நாட்களிலும் மாதங்களிலும் அடைய முடியாது.
-----

அந்த நேரம் வந்தது. அதினரிகள் அவனை அழைத்து அனேக புத்திமதிகள் கூறி "இனிமேல் இத்தகைய காரியம் செய்தால் தீவாந்திர சிக்ஷை விதிக்கப்படும்" என்று கூறியனுப்புகின்றார்கள். அவனும் "நான் இனி சத்தியமாக இவ்வித காரியத்தைச் செய்வதில்லை. இனி இப் பக்கமே நான் ஜென்மத்திற்கும் வருவ தில்லை." என்று கூறிவிட்டு வெளியே வருகிறான்.

அவன் விடுதலையாகி வெளியே வந்த உடனே தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். "அம்மா! அம்மா!" என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைகிறான். அவன் முதல் தரம் திருடிச் சிறைக்குச் சென்ற அன்றே வீட்டை விட்டு விலக்கப்பட்ட கோமதியின் செய்தி இப்போது அவனுக்கு என்ன தெரியும்? ஆதலால் அங்கு ஓடி அவளை அழைக்கின்றான். இவன் திருட்டு மதி மாறித் திருந்தியவன் என்பதை அறியாத வீட்டுக்காரர்கள் "சீச்சி! கே-டீ! வீட்டிற் குள்ளே வராதே! உன்னுடைய அம்மாளை அன்றே விலக்கி விட் டோம். நீ இங்கு நிற்காதே; ஓடிப்போ! அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளலாம் என்று வருகிறாயோ ஓடு பயலே!" என்று கடிந்து கூறுகிறார்கள்.

---------
அயலாரை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் சிலர், சமூக சேவைகளில் சுய நலம் பாராட்டாது ஈடுபட்டுள்ளவர்களை 'எல்லாம் அவர்கள் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்கிறார்கள்" என்கிறார்கள். அவர்களுக்குள்ள அற்ப குணம் மற்றவர்களுக்கும் இருப்பதாகத் தோன்றும்படிச் செய்கின்றது போலும்.
---------

இது கேட்ட பையன் வெகு தாழ்மையோடு "அம்மா! நான் என் புத்தி பிசகினால் தப்பிதம் செய்து விட்டேன்; திருடி விட் டேன். இப்போது என் புத்தி சரியாகி விட்டது. இனி நான் எந்தப் பொருளைக் கண்டாலும் செத்த பிணத்திற்கு ஒப்பாக நினைப்பேன். இது சத்தியம். என் மேல் சந்தேகப் படவேண்டாம். என் தாயார் எங்கே! என்னருமை கேசவனும் சகோதரிகளும் எங்கே? அவர்களை எங்கே அனுப்பினீர்கள்? அவர்கள் வேறு எந்த வீட்டிலிருக்கி? தயவு செய்து அதைக் கூறுங்கள் " என்று கெஞ்சிக் கேட்கிறான்.

இவன் வார்த்தையைச் சிறிதும் நம்பாத வீட்டுக்காரர்கள் "போடா திருட்டுப் பயலே! உன் அம்மாளை நாங்கள் அனுப்பிய பிறகு பார்க்கவே இல்லை. அவர்கள் எங்கு சென்றார்களோ! எக்கதி யானார்களோ? எங்களுக்குத் தெரியாது, நீ முதலில் வெளியே போ!" என்று தூரத்தி விடுகிறார்கள். அவ்வளவு தான் அவன் மனம் முறிந்து விடுகின்றது. 'அம்மா! அம்மா! உன்னைப் பார்க்க எண்ணிப் பேராவல் கொண்டுவந்த எண்ணமெல்லாம் மண்ணாகி விட்டதே! ஹா! உன்னை நான் இனி எங்கு தேடுவேன்! கேசவனையும், நீலா, பாலாவையும் எங்கு காண்பேன்! என் தாயே! அருமைத் தாயே! ஆருயிர்த் தாயே! என் இன்பத் தாவே! இணையிலா சகோதரிகளே! ஈடில்லாக் கேசவா!' என்று புலம்பிக் கொண்டே அலைந்தான்; திரிந் தான். எங்கெங்கோ விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை. அவன் தெரிந்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் உடனே அவர்கள் வெறுப்பும் பயமும் கொண்டு அவனைத் துரத்துவதிலேயே நாட்ட மாகித் துரத்தியும் விடுகிறார்கள்.

--------
" புஸ்தகம் அஸ்த லக்ஷணம் " என்கிற பழமொழிப்படி சிலர் எப் போதும் மிகவும் உயர்ந்த புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பது. ஆனால் அவற்றைப் படித்து அவற்றிலுள்ள நீதிகளின்படி நடப்பது என்பது கிடை யாது. சிலர் அதோடு நிற்காமல் படிப்பது புராணம்; இடிப்பது சிவன் கோயில் என்கிறபடிச் செய்கின்றார்கள்.
-------

இவ்விதமே சில தினங்கள் அலைந்தும் பலன் கிடைக்காமையியினால் புலம்பிக் கொண்டே வெகு தூரம் போய்விட்டான். நடக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்து "அம்மா! அம்மா!" என்று அலற்றிக் கொண்டே போகிறான். காலையிலும் மாலையிலும் கிராமத் தில் சிறு பிள்ளைகள் கோலி முதலிய ஆட்டங்கள் ஆடிக்கொண்டு திரிவதைக் கண்டதும் இவனுடைய பாலியப் பருவத்து நினைவு வந்து விடுகின்றது. அந்த பிள்ளைகள் விளையாடும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நல்ல புத்திகளைப் புகட்டி தனது சகல விதமான அனுபவங்களையும் எடுத்துக் கூறி அவர்களை வீணாக விளையாடாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலாவது படிக்கும் படிக்குச் சொல்லுகிறான். தானும் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்க எண்ணங்கொண்டு சேர்ந்து படிக்கிறான். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு இவன் தினந்தோறும் அங்கிருக்கும் ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரின் எதிரில் நின்று,

விக்கினம் தீர்த்திட வா வா வா!
ஆனைமுகனே வா வா வா!
ஷண்முகப் பிராதா வா வா வா!
விகாயக மூர்த்தியே வா வா வா!
அம்பிகை பாலா வா வா வா!
சக்தி கணபதி வா வா வா!

என்று பாடலாக வினாயகர் பேரில் சொல்லிக் கொடுப்பதும், பிறகு "திருடக் கூடாது; பெரியாரை உதாசீனம் செய்யலாகாது. தாயின் வாக்கின்படி நடக்க வேண்டும். வீண் பொழுது போக்கலாகாது.' என்று அனேக நற்புத்திகளைப் போதிப்பதோடு தன்னுடைய சரிதையை அவர்களுக்கு ஓர் கதை போலச் சொல்லி ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கச் செய்வான். இவன் பெரிய தடியனாக விருந்து கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பதனால் எல்லாப் பிள்ளைகளும் அவனைப் பரிகஸிப்பார்கள். எனினும் அவன் நல்லவிதமாக புத்தி புகட்டிக் கதை சொல்லுவதால் அவனைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

---------
அன்பு என்பது மனிதரிடத்தும், வளர்க்கும் மிருகங்களிடத்தும் மாத்திரம் இருப்பதில்லை. கடியாரம், பேனா, மோட்டார், குடை, செருப்பு முதலிய வஸ்துக்களின் மீதுள்ள அன்பினால் சிலர் அவற்றின் பிரிவாற்றாமைக்கு மிகவும் வருந்துகின்றார்கள்.
-------
அவன் தினம் சில வீடுகளில் தண்ணீர் தூக்கிக் கொடுப்பது, துணி துவைப்பது, முதலிய வேலைகளைச் செய்து ஒவ்வொரு வேளை ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டுக் காலத்தைத் தள்ளியவாறு நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டான். தன் தாயையும் சகோதர சகோதரிகளையும் எங்கு தேடியும் தகவலே கிடைக்காது வருந்தி மெலிந்து விட்டான். ஒரே இடத்தில் இருந்தால் எவ்விதம் அவர் களைத் தேடுவது என்ற எண்ணம் உதித்ததால் ஊர் ஊராகத் தேடத் தீர்மானித்து அவ்விதமே சுற்றி அலைய வாரம்பித்தான். எங்கு சென்றாலும் ஒருவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

மனம் முறிந்து விரக்தி மேவிட்டு விடுகின்றது. எந்த ஊருக்குச் சென்றாலும் தன்னாலான உதவியைப் பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற தீவிரமான எண்ணம் உண்டாகிவிட்டதால் ஏழைகள் அனேகர் தொழில் செய்வதைக் கண்டு அதில் மிக்க வயதானவர்கள், கர்ப்பிணிகள், அங்கஹீனர்கள் முதலியவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்வதும், அவர்களோடு உண்டு அன்று பொழுதைப் போக்குவதுமாக இவ்விதம் பல ஊர்களில் சுற்றி அலைந்து சில வருடங்களைக் கழித்தான்.

ஒரு தினம் ஒரு மலைப் பிரதேசத்திற்கு வருகிறான். அங்கு மலைமீது பெரிய ஒரு குகையும் அக் குகைக்குள் ஒரு கோயிலும் இருப்பதாகவும் அக் கோயிலுக்குள் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் ஜோஸியம் சொல்கிறார்; யார் அந்த மலையில் தைரியமாக ஏறி குகைக்குள் பயமின்றி சாமர்த்தியசாலியாக வருகிறார்களோ அவர்களுக்குச் சாமியார் பூர்ணமாக அனுக்ரகம் செய்து ஜோஸியமும் சொல்லி யனுப்புகிறாராம்; ஆனால் அவ்விதம் யாரும் நடந்தது கிடையாது. இத்தனை வருஷத்திற்காக இரண்டொருவரே தான் சென்று திரும்பியதாகக் கேள்வி. மற்ற அனேகர் இடையிலேயே மலை ஏற முடியாமலும், ஆகார வசதி இல்லாமலும், மழை, வெய்யில், இரவு, இருட்டு, மிருக பயம் முதலிய அனேக கஷ்டங்களினால் முற்றும் ஏறமாட்டாது திரும்பி விட்டதாயும், சிலர் இறந்து விட்ட தாயும், சிலர் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகி விட்டதாயும் பலர் சொல்லக் கேட்டான்.

------------
தாங்கள் வெகு அன்பாக நினைத்துள்ள பொருள் தங்கள் எதிரில் படுங்கால் அதை ஆவலோடு எடுத்துக் கொள்வதற்கு மனம் தாவுகின்றது. அன்பின் ஆவேசமும் எழுகின்றது. அடுத்த நிமிஷம்" இந்தப் பொருள் அயலாருடையதாயிற்றே" என்கிற நினைவு தோன்றியவுடன் அப்படியே கண்ணீர் வடிய தலை சாய்ந்து விடுகின்றது, அந்தோ! என்ன பரிதாபம்!
----------
அதைக் கேட்டதும் அவன் "எது எப்படியாவது இருக்கட் டும். மலையின் உச்சிக்குச் சென்று சாமியாரைப் பார்க்காமல் வருவதில்லை.” என்ற வைராக்கியங் கொண்டு மலையில் ஏறுகிறான். அப்போது மலைப் பக்கம் போவோர் வருவோர்கள் "ஐயா போகாதே! போகாதே!" என்று தடுத்து பயமுறுத்துகின்றார்கள். அதையும் கவனியாது சிறிது தூரம் ஏறுகையில் சினிமாப் படம் பிடிப் பவர்கள் அம்மலையில் சில முக்கியமான சீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவன் தைரியமாய் ஏறி வருவதைப் பார்த்து, 'நீ யார்! எங்கே மேலே ஏறிப் போகிறாய்?' என்கி றார்கள். அவன் தான் போகும் காரணத்தைக் கூறிவிட்டு மீண்டும் ஏறுகிறான்.

சினிமாக்காரர்கள் அவனைத் தடுத்துக் கூறியும் கேளாது பின் னும் ஏறுகிறான். இரவு சமீபித்து விட்டது. துஷ்ட மிருகங்களின் ஆரவாரம் இவனுக்கு அதிக பயங்கரமாக இருக்கின்றது. எந்த திக்கை நோக்கினும் கர்ஜனையே கேட்கின்றது. நாய், நரி முதலியவைகளின் ஊளை பிடுதலும், குரைப்பதும், இன்னு மற்ற மிருகங்களின் தொனிகளும் கேட்கக் கேட்க மார்பு படபடவென்று துடிக்கின்றது. தலை சுழலுகின்றது. அந்த மிருகங்களெல்லாம் இவனைத் தூரத்திக்கொண்டு வருவதாகவே மனத்தில் பீதி உண்டாகின்றது அப்பீதியினால் கால்கள் நடக்கமாட்டாது தத்தளிக்கின்றன.நடுக்கலுற்று விவிலத்துப் போய்விட்டன. உடனே அவன் அம்மலை மேலிருந்த ஓர் மரத்தடியில் உட்காருகிறான்.

--------
"நாளை முதல் நாம் எல்லாக் காரியங்களையும் வெகு ஒழுங்காகச் (Systematically) செய்ய வேண்டும்" என்று சிலர் முதல் நாள் தீர்மானித் துக் கொள்வது. ஆனால் மறுநாள் உதயமானதும் வழக்கப்படியுள்ள சோம்பேறித் தனமும் தாமத குணமும்தான் முன் வந்து நிற்கின்றன. ஆகையால் எது செய்வதாயினும் இன்றே செய்தல் நன்று, நாளை, நாளை என்பது வீணே.
--------

அவ்வாறு உட்கார்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய சர்ப்ப த்வனி 'புஸ்' என்று கிளம்புகின்றது. அந்தோ! அந்த ஓசை பைக் கேட்டு மிரண்டு எழுந்து விலகி நிற்கிறான். இருளோ கப்பிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்தில் சிறு சிறு நக்ஷத்திரங்களே ஆங்காங்கு காணப் படுகின்றனவே யன்றி வேறு விதமான பிரகாசம் எதுவுமே இல்லை. இத்தகைய பயத்தோடு அவன் "ஏ கருணா நிதே! காருண்ய மூர்த்தே! உன்னையன்றி வேறு துணையில்லை. ஐயனே! ஆபத் ரக்ஷகா ! இந்த சர்ப்பத்தின் சீற்றம் எனக்கு மிக்க பயத்தை உண்டு பண்ணுகிறதே! நீ ஓர் மடுவில் சர்ப்பத்தை கையில் எடுத்து ஆட்டியதாக என் திண்ணைப் பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே! அத்தகைய சர்ப்பத்தை நீ இப்போது புற்றுக்குள்ளனுப்பி விடுவது கஷ்டமா! உன்னால் ஆகாத காரியமும் உலகில் உண்டா!

("ஐயா பழனிமலை வேலா' மெட்டு)

1. ஐயா! ஏழுமலையின் வாலா! எனைக்காத்திடுவாய் சர்வேசா!
உய்யும் வழி உன்னருளன்றோ! இதை உனக்கறிவித்தல் நன்றோ-

2. வையம் அளந்த திருபாதா! பையவே வரலாகாதா!
ஐயனே என்மேல் வாதா! இது அருளோ அறைவாய் நீதா!-

3. பீதாம்பர துளஸி ஹாரா! பேராதரிக்கும் ஒய்யாரா!
சாதக அசுர சம்ஹாரா! ஜெய கல்யாண சேஷகிரி வீரா-ஐ

என்ற பாடலைப் பாடிக்கொண்டே பகவானைத் தோத்திரஞ் செய்து நின்றான்.
--------
ஒருவரைப்பற்றி அவதூறாகப் பேசுவதே சிலருடைய சுபாவம். வேறு சிலர் அதைக் கேட்டு, அது உண்மையா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்ளாமலே மற்றவரிடம் பரவச் செய்வது. மற்றும் சிலர் "அவர்கள் பெரிய மனிதர்களாயிற்றே பணக்காரராயிற்றே) அதனால் உண்மையாகத்தான் -இருக்கும்" என்று நம்பி விடுவது. பிறகு குற்றஞ் சாட்டப்பட்டவரைச் சந்தித்து உண்மையான நிலைமையை அறிந்த பிறகு வருத்தப்பட்டு "ஐயோ! பணக்காரர் (பெரிய மனிதர்கள்) சொன்னாரே என்று நம்பினேன்" என்பது. இக் காலத்தில் பணம் இருப்பவர்களெல்லாம்- குணமில்லாதவர்கள்—பெரிய மனிதர் போலும்.
-------

இரவு ஏற ஏற பயங்கரம் அதிகரித்து விட்டது. மரத்தின் கீழே அனேக புத்துகள் இருப்பதாக அவன் காலுக்குத் தெரிந்ததும் மாத்தின் மேலே ஏறிக்கொண்டான், "ஹா! என் தாயே! உன் வார்த்தையை மதியாததின் பலன் இது. எங்கு அலைந்தும் உன்னைக் காணாமல் கலங்கிய நான் அந்த குகையிலிருக்கும் மகானின் தரிசனத்தினாலும் உத்தம வாக்கின் பலனாலும் உன்னைக் கண்டு களிக்க லாமென்று நான் கிளம்பி விட்டேன்! என்னுயிர் இடை வழியே சென்றாலும் சரி; அன்றி நான் எக்கதியானாலும் சரி. உன்னைக் காணும் வழியை அடைகிறேன். அம்மா! அம்மா!..ஹா! என் தாயை நான் காண்பதற்கு, அந்த மாயவனின் தாளை மறவாது துதித்தாலன்றோ நமக்குத் தாயின் சேவை கிடைக்கும்! இல்லையேல் தாயை எங்ஙனம் அடையக் கூடும். மாதவா! கேசவா! மது சூதனா!

(தன்யாசி ராகம். ஆதி தாளம்)

1. காரிருள் சூழ்ந்தாலும், கடலொன்று சேர்ந்தாலும்,
காருண்ய மூர்த்தியின் கழல் மறவேன்.
பாரெங்கும் புரண்டாலும், வாரிதி வரண்டாலும்,
தாரக நாமனின் தாள் மறவேன்.

2அஞ்சன வண்ணனின் கஞ்ச மலாடியில்
நெஞ்சம் பதித்திடும் நேர் மறவேன்.
கஞ்சனை வென்று, சஞ்சலம் போக்கியே
கண்ணன் அடி மறவேன்.

கருணாகரா! கக வாகனா!" என்று திண்ணைப் பள்ளிகூடத்து வாத்தியார் கற்றுக் கொடுத்த பாடல்களைப் பாடித் துதிக்கின்றான், இரவு பூராவும் தத்தளித்தான்; அவனைத் தாங்காமல் தூக்கம் சுழற்றுகின்றது. விடியற் காலம் வந்து விட்டது. கீழே இறங்கி ஒரு மாத்தடியில் "எதுவரினும் நீயே துணை" என்று நம்பிப் படுத்து விடுகிறான். நன்றாக அயர்ந்து தூங்கி விடுகிறான். பொழுது விடிந்ததே தெரிய வில்லை.

பிறகு கண் விழித்துப் பார்க்கிறான். ஒரு டேராவின் உள்ளே படுத்திருப்பதாகத் தெரிந்து சுற்று முற்றும் பார்க்கிறான். நல்ல நாகரிகமான சிலர் இவன் முன்பு இருக்கக்கண்டு வியப்புற்று "ஐயா! நீங்கள் யார்! என்னை யார் இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது? எனக்கு விவரங் கூற வேண்டும்" என்றான். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். இதுகேட்ட அவர்கள் "ஐயா! உடம்பு இப்போது ஒன்றுமில்லையா! சரியாகி விட்டதா! வலி எப்படி இருக்கின்றது?" என்று கேட்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அவன் ஆச்சரியமுற்று "என்ன! எனக்கு உடம்பா! என்ன உடம்பு! என்ன வலி! ஐயா! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே! நான் விடிவதற்கு முன்னமேயே நன்றாகப் படுத்து நித்திரை போய் விட்டதுதான் எனக்கு நினைவிருக்கின்றது. வேறு ஒன்றும் நினைவில்லை. இப்போது முற்பகலா, பிற்பகலா!" என்று தன் தேகத்தை முற்றும் பார்க்கிறான். காலில் ஒரு கட்டு இருப்பதை அப்போதுதான் காண்கிறான். உடனே "இதென்ன கட்டு?” என்று கேட்கிறான்.

அதற்கு அவர்கள் "அப்பா! நீயோ வயதில் சிறியவனாகவே காணப்படுகின்றாய்! நீ நேற்று மலை ஏறும்போது நாங்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது உனக்கு நினைவிருக்கலாம். எங்களில் சிலர் உன்னை ஏறவேண்டாம் என்றதற்கு நீ மறுத்து எங்களை லக்ஷயம் செய்யாமல் போய் விட்டாய்! நாங்கள் இந்த மலையிலும் மலை அடிவாரத்திலும் முக்கியமான சில சீன்களை சப்தத்தோடு கூடிய படம் பிடிக்க வந்திருக்கிறோம். ஆறுமாத காலமாக நாங்கள் சுற்று கிறோம். இன்று காலையில் மலையின் மேல் பாகத்தில் ஒரு சுனை இருக்கின்றது; அதைப் படம் பிடிக்கச் செல்கையில் நீ மரத்தடியில் படுத்திருந்தாய்! ஒரு பாம்பு உன் காலில் கடித்து விட்டுப் போவதைக் கண்டு, உடனே உன்னை எழுப்பாமல் இருக்க ஒரு பச்சிலையை உன் மூக்கில் முகரச் செய்தோம். அப்படியே மற்றொரு பச்சிலையின் காற்றை உனக்குள் செலுத்தினோம். வேறொரு பச்சிலையைக் கடித்த விடத்தில் கட்டினோம். இம் முறைகள் ஓர் பெரிய மகானின் மூலம் நாங்கள் பெற்றுக் கொண்டுதான் இந்த மலை வாசத்திற்குப் பயமின்றி வந்தோம்.

பிறகு உன்னை இங்கு கொண்டு வந்து விட்டோம். உன்னை யறியாமலேயே இரு முறை வாந்தி எடுத்தாய் ; அதில் நீல மாக விஷம் வெளியே வந்தது. பிறகு ஒரு பச்சிலையைக் கொடுத்தோம். இப்போது நீ தெளிந்து எழுந்தாய். விஷம் இல்லை; இறங்கி விட்டது என்று அர்த்தம், இனிப் பயமில்லை, பிழைத்துக் கொண்டாய் ! நீ இனிமேல் இவ்விதம் தனிமையில் செல்லவேண்டாம். அந்த குகையில் செல்வது சாமானியமன்று. நாங்கள் ஆயிரமாயிரமாய்ச் செலவு செய்து ஏரோப்ளேனில் பறந்து சென்று பார்த்தும் பயனில்லாது போய் விட்டது. ஆகையினால் நீ இந்த பெரிய காரியத்தில் இனி பிரவேசிக்காதே உன்னுடைய வரலாறு என்ன! நீ ஏன் இவ்விதம் கிளம்பினாய்?" என்று கேட்கிறார்கன்.

---------
சிலருக்கு நல்ல கல்வி யறிவு, அநுபவ ஞானம், வாக்கு சாதுர்யம், இளகிய மனம், தயாள குணம், பெருந்தன் மையான போக்கு, பல பேர் மெச்சி புகழக் கூடிய தன்மை எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன. ஆனால் பூர்வ ஜன்மாந்திர வாசனையினாலோ அல்லது இந்த ஜன்ம கர்ம வினையினாலோ அவர்களை யறியாமல் ஒரு பொருளின்மீது உயிர் லயித்து விடுகின்றது. அப் பொருளோ கிட்டாப் பொருள். கிட்டாதாயின் வெட்டென மற என்கிற வாக்கை அறிந்திருந்தும் அப் பொருள்பால் கொண்ட அபார அன்பினால் அதைப் பெறவும் மார்க்கமின்றி, மறக்கவும் கூடாமல் தத்தளித்து வருந்துகின்றார்கள்.
-----

இதுகேட்ட அந்தப் பையன் மிக்க ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து "ஆ! என்னையா பாம்பு கடித்தது!.. நீங்கள் இந்த ஏழைப் பரதேசியின் மீது அன்பு வைத்து இத்தகைய உதவி செய்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ?" என்று கூறித் தனது கதை முழுதும் கூறுகிறான்; இது கேட்ட அவர்கள் இவன் மீது. அனுதாபங் கொண்டு "அப்பா! நீ எங்கள் கம்பெனியிலேயே ஒரு நடிகனாகச் சேர்ந்துவிடு. நாங்கள் ஊரு ஊராக சுற்றக்கூடியவர்கள். அங்கெல்லாம் நீயும் வரலாம். அங்கு உன் தாயாரையும் தேடலாம். ஆகையினால் வருகிறாயா! எங்களாலாகிய உதவியைச் செய்கிறோம்." என்கிறார்கள். அதற்குப் பையன் சம்மதப்பட்டு "ஐயா! நான் உங்களிஷ்டப்படியே நடக்கின்றேன்" என்று உறுதியாய்க் கூறிவிடுகின் றான். பிறகு பையனை அவர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர்களோடு சென்று அவன் நடிக்கக் கற்றுக் கொள்கிறான்...

என்றது வரையில் அன்றைய நடிப்பில் முடிந்தது. இந்தக் கதை மலைப் பிரதேசத்தில் நடப்பதற்காகவே அதற்குத் தகுந்த இடமாக அமர்த்திக் கொண்டார்கள். "இம்மட்டுடன் இன்று நின்று விட்டது. இனிமேல் வெளிச்சம் குறைந்து விட்டது. நாளைய தினம் தான் நடிக்கப்படும். இது பேசும் படமாகத் தயாரிக்கின்றோம்" என்று முதலாளி பாலாவினிடத்தில் வந்து தெரிவித்தான்.

இதுகேட்ட பாலா, "ஐயா! உங்களிடம் நான் ஒரு விஷயம் தனிமையில் பேசவேண்டும். அதற்கு அனுமதிக்கப்படுமா?” என்று வெகு நயமாகக் கேட்டாள். அதற்கு இசைந்த எஜமானனிடம் பாலாவும் கோமதியும் சென்று "ஐயா! இந்த, கதையை இப்போது நடித்தவரே கற்பனையாக எழுதினாறா? அன்றி வேறு யாரேனும் எழுதியதை இவர் நடிக்கின்றாரா! அது உண்மையில் நடந்ததா" என்று கேட்டாள்.

எஜமா:- அம்மா! எனக்குத் தெரிந்த மட்டில் அவரே கற்பனையாக எழுதியதாகத் தெரிகின்றது. அவர் முன்பு வேறு ஒரு படக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார். அக் கம்பெனி இருவரால் சேர்ந்து நடத்தப்பட்டதால் சண்டை வந்து விட்டதாம். அதனால் கம்பெனி கலைந்து விட்டது. அதன் மானேஜர் எனக்குத் தெரிந்தவராதலால் நான் ஒரு கம்பெனி வைக்க ஆசையுற்று, இந்த தீவிலேயே நடத்த உத்தேசித்து நல்ல நடிகர்களை அனுப்ப வேண்டுமென்று எழுதினேன். அவர் சிலரை அனுப்பினார். அவர்களில் இவரும் ஒருவர். "நான் ஒரு கதை வெகு ருசிகரமாக எழுதி இருக்கிறேன்! அதை நடிக்க வேண்டும்" என்று கேட்டார். சரி, என்று இசைந்து இப்போது நடிக்கின்றோம். ஏனம்மா! எதற்காகக் கேட்டீர்கள்?

-----------
எந்தெந்த காலங்களில் எந்தெந்த ராகங்களை வாசிக்க வேண்டுமென்பதை மேளக்காரர்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். காலை நேரத்தில் சுபமாக வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கையில் துக்ககரமான முகாரி ராகத்தைச் சிலர் வாசிக்கின்றார்கள். ஐயோ! இதென்ன அசம்பாவிதம்! இதன். காரணம் இரு திறத்தினரும் காலம், ராகம் முதலியவற்றின் குணங்களை அறியாமையே. இப்படியே ஒவ்வொரு விதத்திலும் நம் நாட்டில் யாவும் சீர் குலைகின்றன.
--------

பாலா:- எதற்கு மில்லை; கதை வெகு ருசியாகவும், ஸ்வாரஸ்ய மாகவும் இருக்கிறதே! இத்தகைய கதையை யார் எழுதினார்கள் என்கிற ஆச்சரியத்தினால் கேட்டேன். நாங்கள் அவரை நேரில் பார்க்கலாமா! இந்த கதைக்கு முடிவு இன்னும் ஏற்பட்டிருக்காதென்று நினைக்கின்றேன்! ஆகையினால் எனக்கு ஓர் அருமையான கற்பனை தோன்றுகின்றது. அதை அவரிடம் தெரிவித்து முடிவு செய்விக்க நினைக்கிறேன். எங்களால்தான் முடிவும் நடக்கவேண்டும்." என்றாள்.

இதைக் கேட்ட மானேஜருக்குச் சிறிது சந்தேகம் உண்டாகி யது. அதை வெளியிடாது "சரி; அதற்கென்ன! தாராளமாய்ப் பார்க்கலாம்" என்றார். உடனே நீலா, பாலா, கோமதி மூவரும் எஜமானரோடு சென்றார்கள். அப்போது மருதப்பா கடவுளின் படத்திற்கு எதிரில் மண்டியிட்டு வணங்கியவாறு, “ஹா! கடவுளே! தேவாதி தேவா! என் அன்னையை நான் காணாமலேதான் உயிர் விடுவேனோ! என்னருமை உடன்பிறந்தோரைப் பார்க்காத பாவியாவேனே! என்னுடைய சரிதையை இன்று நடித்ததும் என்னைத் தாங்காத துக்கம் வந்து விட்டதே! நானாக வேண்டுமென்று இழந்து விட்ட என் வானிதியங்களை எங்கு தேடுவேன்! இனி என்று அடைவேன்?" என்று கண்ணீரை ஆறாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்தான். அது வரையில் பொறுமையாயிருந்த கோமதி அதற்குமேல் இழந்து “ஹா! என் செல்வா! மருதப்பா! மருதப்பா! இதோ நான் வந்து விட்டேனடா! கண்மணி” என்று அவன் கனவிலும் கருதாதவாறு அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். நீலாவும், பாலாவும், 'அண்ணா!' என்று ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். இந்த அற்புதமான காட்சியைக் கண்ட எல்லோரும் வியப்பே வடிவமாக நின்றார்கள்.

---------
"நாம் இந்த காரியத்தைச் சாதித்தோம். நம்மால்தான் இந்த காரியம் நடக்கின்றது" என்கிற அகம்பாவ சிந்தையைப் போக்கி, என்று நாம் இரண்டு கைகளையும் விட்ட திரௌபதியைப் போல 'நம்மாலாவது ஒன்றுமில்லை; எல்லாம் அவனால்தான் நடக்கும்.' என்கிற தீர்மானத்தை அடைந்து அவனை ஸ்மகரிக்கின்றோமோ அன்றுதான் அவன் நம்மைக் காப்பாற்றுவான். இது வீண் கதையல்ல; கண்டறிந்த அநுபவமே.
------

8-வது அதிகாரம் :
உயிரினும் இனியது உண்மைக் காதல்

கடிதத்தைப் படித்துக் கதி கலங்கிய பரிமளவல்லி தனது கண்களையே நம்பாமல் திரும்பத் திரும்ப பலமுறை படித்தாள்; "நண்பரே! இதென்ன விபரீதமான கடிதமாக இருக்கின்றதே! இதை யார் எழுதி இருப்பார்கள்! எனக்கு முன்பு அதிகப் பிரஸங்கியாய் எழுதிய மனிதர்கள் யாரேனும் தங்களையும் மிரட்ட எண்ணி இவ்விதம் செய்திருப்பார்களா! எனக்கும் ஒன்றும் புரியவில்லையே!" என்று பரிதாபமாகச் சொன்னாள். இது கேட்ட கேசவன் "பரிமளா! எது எவ்வித மிருப்பினும் சரி! உனக்கு ஒரு விதமான தீங்கும் நேரா வண்ணம் காப்பாற்றுவதே என் கடமை என நான் நினைக்கிறேன். ஆதலால் அது விஷயத்தில் நான் இங்கு வராது நிற்பதே நலம், கடவுளின் இஷ்டம் போலத்தான் யாவும் நடக்கும். அவன் திருவுள்ளம் நாம் பிரிய வேண்டியதுதான் என்று ஏற்பட்டதால் நாடகத்திலிருந்து நம்மைப் பிரித்து விட்டார். ஆகையினால் இது பற்றி வருத்தப்படாதே! நான் இனி இங்கு அடிக்கடி வராது விலகிக் கொள்கிறேன். வருந்தாதே பரிமளா!" என்றான்.

------
நம் உறவினரோ, சினேகிதரோ, மற்றவர்களோ நம்மை நன்றாக அறிந்திருந்தும் நம்மைப் பற்றி இழிவாகப் பேசி நமது மனத்தைப் புண்படுத்தினாலும் நாம் பொறுமையை இழந்து கோபாவேசத்திற்கு அடிமையாகக் கூடாது.
---------

பரிமளா:-ஐயோ ! வருந்தாது சந்தோஷமாக இருப்பதற்கு இந்தக் கடிதம் வரவில்லையே! இது ஆளைக் கொலை செய்வதற்காக வந்த எமனோலையே யாகும் என்றே என் மனத்தில் படுகின்றது. நான் என்ன விதமாகத் தேறுதலை யடைவேன்? நண்பரே! இக் கடிதத்தையும் நமது எஜமானரிடத்தில் காட்டி விடுதல் நலமென்று எனக்குத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கேசவன் :- நானும் அதைத்தான் தீர்மானித்துள்ளேன். முதலில் உன்னிடம் காட்டிவிட்டுப் போகவே வந்தேன், நீ கவலைப் படாதே! நான் இக் கடிதத்தை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டித் தகவல் தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கவனிக்கலாம். பரிமளா! ஏன் கண்ணீர் பெருக்குகின்றாய்? வேண்டாம்! நாம் நாடக உறவு கொண்டோம்; அந்நடிப்பு முடிவுற்றது என்று மனந்தேறவேண்டும். விசனித்தலால் பயன் உண்டா!" என்று கூறிச் சமாதானம் செய்துவிட்டுக் கடிதத்துடன் கிளம்பி பொன்னுசாமியின் வீட்டை யடைந்தான்.

பொன்னுசாமிக்கு கேசவனின் வருகை எப்போதும் சர்வ சாதாரணமாகையினால் அவன் அதைப்பற்றி வியப்புறவில்லை எனினும் கேசவனின் முகம் மாறுபட்டிருப்பதைக் கண்டு “கேசவா! என்ன ஒருவாறாக இருக்கிறாய்! விஷயமென்ன்?" என்று கேட்டார். கேசவன் பொன்னுசாமியிடம் சகஜமாக இருக்கக் கூடியவனாகையினால் "பெரியவரே! விஷயத்திற்கென்ன குறைவு! இதோ இக் கடிதத்தைப் பாருங்கள்' என்று அதைக் கொடுத்தான்,

பொன்னுசாமி கடிதத்தைப் பார்த்து வியப்புற்று "ஒகோ! எந்தவிதம் செய்தால் பலிக்குமென்று எண்ணி இப்போது இவ்விதம் ஆரம்பித்திருக்கிறார்களா? இருக்கட்டும். கேசவா! இதைப் பரிமளா பார்த்தாளா! அவளிடம் காட்டினாயா?" என்றார்.

-----------
நமக்குள் மறைந்து கிடக்கும் குறைவுகளைத் திருத்தவோ அல்லது அவற்றை ஒழிக்கவோ கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் அவர்கள் என்று நினைத்து பொறுமை வகிக்க வேண்டியது நமது கடமை. அப்படி நாம் முற்றிலும் மனத் தூய்மையுடனிருந்தால் அவர்களின் தீச் செயல்களுக்குத் தக்க பலனை கடவுளே அளிப்பார்.
------

கேசவன்:- ஆம். தந்தையே! காட்டினேன்; கண்டு அவள் மிக்க விசனிக்கின்றாள்.

பொன்னு:-ஐயோ! ஏன் அவசரப்பட்டுவிட்டாய்! இதைக் கண்டு அவள் மனம் கலங்காமலிருக்குமா! இளம் தளிராகிய அவள் மனத்தை வாட்ட விட்டாயே! இதைக் காட்டாதிருந்தால் உனக்கென்ன குறைவு? போடா போ! அசட்டுப் பையா! உனக்குள்ள அன்பு எம்மட்டும் உள்ளதென்று நான் அறிவேன். ஆனால் இதை நீ காட்டியதே பிசகு. என்னிடம் முதலில் காட்டிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாகாதா! கேசவா! பரிமளா இப்போது நாடகத்திலிருந்து நின்றுபோய் சுமார் ஒரு வருடமாகப் போகின்றது. இவ்வொரு வருடகாலமாகவே கம்பெனியில் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. நடிகர்களும் ஏதோ ஒருவிதமான மாறுதலுடன் இருக்கின்றார்கள். இவைகளை நாம் கவனியாமலிருப்பினும் எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. கேசவா! நீ இக் கடிதத்தை சாதாரணமாக நினைத்துக் கொள்வதற்கில்லை. ஏனெனில் வேண்டு மென்றே உங்களிருவருக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை வெகு குரூரமாக எழுதி இருப்பதாய்த் தெரிகிறது. ஆகையினால் எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது துப்பறியும் ராஜாராம் நாயுடுவினிடத்தில் இக் கடிதத்தைக் காட்டி அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடப்போம். இதில் உனக்கென்ன தோன்றுகின் றது?" என்றார்.
-----------
நமது பெற்றோரும். நம்மை வளர்த்தோரும், நமது உயிரினுமினிய நண்பராயிருந்தோரும் யாவரும், ஒரு அருவியானது குதித்துக் கூத்தாடிக் கொண்டு சமுத்திரத்தில் சேருவது போலும், பெரிய பிரவாகமுள்ள ஆற்றில் அகப்பட்டுக்கொண்ட ஒரு பழைய மரக்கலமானது அதன் அலைகளினால் ஆட் டிக் குலுக்கப்பட்டுக் கடைசியில் சமுத்திரத்தில் போய்ச் சேருவது போலும் மாயமாய்ப் போய் விட்டார்கள்- ஹா! ஈசா! நீயாவது அவ்விதம் மாயமாகச் செல்லாது என் மனத்துள் என்றும் இருப்பாயா?
----------

இதுகேட்ட கேசவன் "தந்தையே! உங்களுடைய அபிப்பிராயத்திற்கு மிஞ்சி எதுவும் நான் கூற வல்லவனா! தங்கள் இஷ்டம் எப் படியோ அப்படியே நடக்கட்டும். என்னுடைய மனத்தில் தோன்றுவது ஒன்று தான். அதாவது, என்னால் பிறருக்கு ஒரு விதத்திலும் தீங்கு வரக் கூடாது. கபடமறியாத அக் கன்னிக்கு என் பொருட்டு ஒருவிதமான சங்கடமும் நேராமலிருந்தால் அதுவே எனக்குப் போதும்." என்றான்.

பிறகு பொன்னுசாமி அக் கடிதத்தை வாங்கிக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச் சென்றார். நாயுடு அவரை வரவேற்று விசாரித்தார். நமது பொன்னுசாமியும் யோக க்ஷேமம் விசாரித்த பிறகு தன் காரியத்தை வெளியிட்டுக் கடிதத்தையும் காட்டினார்.

நாயுடு:- (கடிதத்தைப் பார்த்து விட்டு) "இதென்ன சில்லரை விஷயம். இதற்காகக் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். பையன் நடித்து நான் பார்த்திருக்கிறேன். மிக்க யோக்கியமானவனென்று தோன்றுகின்றது.

பொன்னு:- ஆக்ஷேபனை என்ன! மகா யோத்யன். அபார புத்தியுடையவன். ஒழுக்கந் தவறாதவன். தெய்வ பக்தி யுடையவன். என்மீது உயிரையே வைத்திருப்பவன். என்னுடைய வார்த்தையை ஓர் இம்மியளவும் தட்டாதவன்.

நாயுடு:-ரொம்ப சந்தோஷம். நான் இப்போது ஒரு அவசர காரியத்தின் நிமித்தம் வெளியில் செல்கிறேன். பிறகு தங்களைப் பார்க்கிறேன்.- என்று கூறிப் போய் விட்டார். பொன்னுசாமியும் விடை பெற்றுக்கொண்டு பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.
-----------
வெளிச்சமும் உஷ்ணமும் ஒரே சூரியனிடத்து உண்டாயினும் வெளிச்சம் அதிக வேகமாகப் பல இடங்களிலும் பரவுவது போல நமது மனத்திலிருந்து ஒரே காலத்திலுண்டாகும் பலவித உணர்ச்சிகளில் ஒரு சிலவே விரைவில் வெளிப்பட்டு அவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகளை உண்டாக்குகின்றன.
--------

அப்போது பரிமளா ஏக்கம் பிடித்து உட்கார்ந்திருந்தாள். பொன்னுசாமி அவளுக்கு வேண்டிய தைரிய மொழிகளைக் கூறிப் பின் வீடுபோய்ச் சேர்ந்தார். அன்று முதல் கேசவன் இவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. அவன் தன் வேலையைக் கவனித்துக் கொண்டு வெளியிட முடியாத விசனத்தை உள்ளடக்கியவாறு இருக் கிறான். பரிமளவல்லியைப் பார்க்காத துக்கத்தைக் கூறமுடியாது. கேசவனின் மனத்தில் அவன் தாயாரைக் காணாது தவிக்கும் பெரும் விசனத்தோடு இதுவும் சேர்ந்தது. இதனால் உடம்பு இளைத்து உருக வாரம்பித்தது.பரிமளவல்லியினிடம் காதல் கொண்டான்; ஆனால் அதை வெளியிடவும் அஞ்சித் தவிக்கின்றான். இராப்பகலாக அதையே எண்ணி ஏக்கங்கொண்டு தவித்து ஒரு தினம் அதே சிந்தாக்ராந்தனாய் உட்கார்ந்திருக்கையில் திடீரென்று நான்கு பேர் அவ்வறையில் பிரவேசித்து "அடேய் கேசவா! நான் சொல்கிறபடி ஒரு நிமிடத்தில் இக்கடிதத்தை எழுதித் தருகிறாயா! அன்றி உன்னை சுட்டுவிடட்டுமா?" என்று சுற்றிக்கொண்டார்கள்.

இந்த எதிர்பாராத சம்பவத்தினால் கேசவன் நடுநடுங்கிப்போய் அப்படியே அசைவற்று உட்கார்ந்துவிட்டான். அவனது ஆவி துடிக்கின்றது. அங்கம் பதறுகின்றது. செய்வதறியாது விழித் துக்கொண்டே "ஐயா! இதென்ன அக்ரமம், நீங்கள் யார்? இப்படிக் கள்வரைப் போல வந்து கடிபிடி செய்கிறீர்களே! நான் யாருக்கு என்ன கடிதம் எழுதவேண்டும்? அதைத் தெரிவியுங்கள்." என்று வணக்கமாகக் கேட்டான்.

இதற்குள் அந்நால்வரும் "அடேய்! என்ன தைரியம் உனக்கு? உன் முகத்திற்கெதிரில் துப்பாக்கி இருக்கையில் நீ ஏதோ சாவதானமாகக் கேட்கிறாயா! உம். நாங்கள் சொல்வது போலவே எழுது. இல்லையேல் சுட்டுவிடுவோம். உம்;'" என்று அதிகாரமாய் அட்டகாலம் செய்தார்கள். அதற்குள் ஒருவன் கேசவனின் தலை மயிரைப் பிடித்துக்கொண்டான். அப்போது அதிக அகாலமும் ஆய்விட வில்லை.இரவு 8 மணி தானிருக்கலாம். கேசவன் இருக்கும் அறை மூன்றாவது மாடியில் ஓர் தனித்த அறையாதலால் அங்கு பக்கத்தில் எவரும் சகாயத்திற்கில்லை; அப்படியும் அவன் விடாது கோவெனக் கத்தவாரம்பித்தான்.
-----------
எப்பொழுதும் மோட்டாரிலேயே சுற்றும்படியான நிலைமையிலிருந்தாலும் ஒரு சமயம் தான் கேவலமாகக் கருதும் ரிக்ஷா வண்டிக்காரனிடம் சுருட்டு பற்றவைக்க வெற்றிப் பெட்டி கேட்கும்படி நேர்ந்து விடுகின்றது. ஆனால் அப்பொழுதும் அதிகார தோரணையே முன் வந்து நிற்கின்றது.
-----------

உடனே இரு கரங்கள் அவன் குவளையைக் கெட்டியாகப் பிடித் துக் கொண்டன. கேசவனுக்கு மூச்சுத் திணறும்படியாக ஆய்விட்டதால் தத்தளிக்கின்றான்; "உம். எழுது; எழுது." என்று ஒரு பேனாவை அவன் கையில் கொடுத்து வற்புறுத்தினார்கள். அவன் சமிக்ஞைபினால் "விடுங்கள் எழுதுகிறேன்" என்றதும், குவளையை விட்டார்கள். "உம் எழுது” என்று கூறியதும் கேசவன் எழுத வாரம்பித்தான்.

"என் பிரியமுள்ள பரிமளா!

இந்தக் கடிதம் கண்ட தக்ஷணம் இவர்களோடு கிளம்பிச் சென்று விடு. இவர்கள் என் மனிதர்கள். விவரம் பிறகு நான் உன்னை நேரில் கண்டு சொல்கிறேன்.

      இங்ஙனம்
      கேசவன்."

என்று அவர்கள் சொல்லிக்கொண்டு வருகையில் அதைக் கேட்கும் போதே கேசவனின் உள்ளம் துடிதுடித்தது, "ஏதோ பெரிய மோச வலையை விரிப்பதற்கே இவ்விதம் இவர்கள் செய்கிறார்கள்" என்று நன்றாகத் திட்டமாகத் தெரிந்துகொண்ட உடனே, அக்கடிதத்தை முற்றும் எழுதி முடிப்பதற்குள் வெகு துணிகரமாக சடக்கென்று கிழித்து எறிந்துவிட்டு "கிராதகப்பதர்களே! என்னுயிர் போனால் பாதகமில்லை. நான் என்னுயிரைத் திருணமாக மதிப்பவன் என்பதை\ நீங்களறியீர்கள் போலும், என்னுயிரினுமினிய பரிமளவல்லியை கொடிய பாதகர்களாகிய உங்கள் கையில் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். என்னைத் தயாராகச் சுட்டுக் கொல்லலாம்." என்று வெகு முடுக்காக மாரைக் காட்டி நின்றான்.
----------
ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பிரயத்தனப்படுபவர்களுக்குப் பலவித இடையூறுகளும், துன்பங்களும் நேருவது சகஜம். ஆனால் அவை யாவும் அவர்களது மனோதைரியத்தையும், உண்மையான பக்தியையும் சோதிப்பதற் காகக் கடவுளால் உண்டாக்கப் படுகின்றன என்று நிளைத்து, அவற்றால் சற்றும் மனந்தளராமல் ஒரே பிடியாகத் தனது உயிர் போவதாயிருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தினின்றும் பின் வாங்காதிருந்தால் கடவுள் அதை எப்படியும் பூர்த்தி செய்து வைப்பார். இதற்கு உதாரணம் காதால் கேட்கும் துருவன், பிரகலாதன்• கதைகள் வேண்டியதில்லை; நாம் கண்ணால் பிரத்யக்ஷமாக இக் காலத்திலேயே காணலாம்.
----------

எழுத வாரம்பித்ததும் சந்தோஷங்கொண்ட நால்வரும் எதிர்பாராத இச் செய்கையினால் மிக்க வியப்புற்றார்கள். ஒருவன் பேனாக் கத்தியை எடுத்தான். அதற்குள் கேசவன் "அடேய் திருட்டு நாய்களே! நீங்கள் முதலில் சுடாமலிருக்கையிலேயே தோடா இல்லாத் துப்பாக்கி என்பதை நானறிந்து கொண்டேன். பேடிகளே! இப்போது கத்தியை எடுத்துக் குத்தப் போகிறீர்களா! இதற்கு நான் சளைத்தவனன்று. தாராளமாகக் குத்துங்கள்." என்று கூறிக் கொண்டே தன் மேஜைமீதிருந்த பிகிலை எடுத்தான். அதற்குள் கேசவன் கையில் பேனாக் கத்தியால் குத்தப்பட்டது. அதையும் அவன் பொருட்படுத்தாமல் பிகிலை வெகு விசையாக ஊதினான். மீண்டும் பேனாக்கத்தியினால் அவனது தேகத்தில் அனேக இடங்களில் குத்திவிட்டு "பயலே! நீ இம்முறை தப்பினாய்; இனிமேல் தப்ப மாட்டாய் இரு" என்று கூறிக்கொண்டே அவர்கள் ஓட்டமெடுத்தார்கள்.

கேசவனின் மனத்திலுள்ள ஆவேசத்திலும் பரிமளவல்லிக்கு நேரவிருந்த ஆபத்தும் அவன் மனத்தில் பூரணமாகப் பதிந்து வேலை செய்வதால், இந்த கத்திக் குத்தையும் அவன் லக்ஷியம் செய்ய வில்லை. ரத்தம் பலவிடங்களிலும் ஒழுகுகின்றது. அதை அலம்பித் துடைத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தான் எஜமானர் திருப்பதிக்குச் சுவாமிதரிசனார்த்தம் சென்றிருப்பதால் அவர் இல்லை. தான் இனி அரை நாழிகையும் தாமதிக்கலாகாதென்று எண்ணியவனாய் அவன் ஒரு வண்டியமர்த்திக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச் சென்று நடந்த சகலமான விஷயங்களை யும் விடாது கூறினான்.

அதைக் கேட்ட நாயுடு "கேசவா! நீ விசனப்படவேண்டாம். நீ பரிமளாவினிடத்தில் எத்தகைய காதல் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு நன்கு புலப்படுகின்றது. உன்னுயிரையும் திருணமாய் மதித்த உத்தமன் உனக்கு ஒரு குறைவும் வராது. இனிமேல் நான் ஒரு ஆளை உன் வீட்டில் காவல் வைக்கின்றேன்: அவன் உன் வீட்டிலிருப்பதாகப் பிறரறியாவாறு அவன் இருப்பான். ஏதேனும் விசேஷமிருப்பின் எழுதியனுப்பு: முக்கியமாயின் நேரில் வந்து கண்டு பேசு. நீ என்னிடம் சம்மந்தம் வைத்துக்கொண்டிருப்பதே ஒருவருக்கும் தெரியவேண்டாம்: ஜாக்கிரதையாய் நடந்துகொள்.' என்று எச்சரித்து அனுப்பிவிட்டார்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்ட கேசவன் அங்கிருந்து நேரே பரிமளாவின் வீட்டிற்கு வந்தான். அப்போது இராக்கால மாகையினால் எங்கும் நிச்சப்தம் குடிகொண்டுவிட்டது. பரிமளவல்லியின் வீடு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை இடித்தான். உடனே கதவு திறக்கப்பட்டது. கேசவன் கதவைத் திறந்த வேலைக்காரியை நோக்கி "அம்மா! உன் சின்ன எஜமானியம்மாள் இருக்கிறார்களா!" என்று கேட்டான். "இருக்கிறார்கள்" என்ற பதில் வந்த உடனே, அவ்வறைக்குச் சென்று ஓசை செய்யாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே கவனித்தான்.

பரிமளா அப்போது நித்திரை கொள்ளாது புரண்டபடியே "ஓ கடவுளே! எந்த ஊரிலேயோ கிடந்த என்னை இங்கு கொணர்ந்து, உவமையிலா உத்தமனாம் கேசவனோடு நடிக்கச் செய்து, ஆழ்ந்த அன்பையும் உண்டாக்கி, அதை வேரூன்றச் செய்துவிட்டு என்னுடைய விதியின் கொடுமையினால் என் அன்பனைப் பிரித்தும் வைத்துவிட்டாயே! இது தகுமா! அந்தோ! இன்ப வடிவமான கேசவனின் திருமுகத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன! என்னுயிரையே பிரித்திருப்பதாகவன்றோ தோன்றுகின்றது. ஹா! கேசவா! கேசவா! என்ன அழகிய பெயர்! ஒருதரம் நாமத்தை உச்சரித்தாலும் கர்ம வினை நீங்குமே! என் பாபம்தான் அத்தகைய உத்தமனைப் பிரித்துவிட்டது." என்று மனத்திற்குள்ளேயே எண்ணமிட்ட வண்ணம் "ஹா! கேசவா! கேசவா!" என்ற பாகத்தை மட்டும் உரத்துக் கூறிக்கொண்டிருப்பதைக் கண்ட கேசவனுக்கு இன்ன தென்று விவரிக்க இயலாதவிதமான ஆநந்த உணர்ச்சி யொருபுறம் பொங்குகின்றது. மற்றொரு புறமோ, "என்ன ஆகுமோ!" என்கிற ஏக்கம் வதைக்கின்றது. பரிமளவல்லியின் உண்மையான மனோபாவத்தை பகிரங்கமாக இதுபிரியந்தம் அவன் அறியாதிருந்தான். இப்போது அது நன்றாகத் தெரிந்துவிட்டதால் அவனுக்கு அது விஷயத்தில் நிரம்ப சந்தோஷம் உண்டாகிவிட்டது.
---------
சிலர் தெருவில் நடக்கையில்தான் தமது குடும்ப விஷயங்களைப் பற் றியோ அல்லது வேறு விஷயங்களைப் பற்றியோ பற்பல விதமான சிந்தனைகள் செய்வது வழக்கம். அவர்களது மனோ ராஜ்யத்தினால் வழிமாள்வது தெரியாம லிருப்பது ஒரு அநுகூலமாயினும், வழியில் பலவித ஆபுத்துக்களுக்குத் தாங்கள் இலக்காவதுடன் பார்ப்பவர்களுக்குப் பைத்தியக்காரன் போலத் தோன்றுவது அவர்களுக்குத் தெரிவதில்லை.
--------

தேகத்தில் கத்தியினால் பட்ட குத்துக்களும் வலி தெரியா தொழிந்தன. அவன் மெல்ல கட்டிலினருகில் சென்றான். "பரிமளா! நான் அகாலத்தில் உன்னுடைய அனுமதியின்றி அநாகரிகமாய் உள்ளே வந்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும்." என்று மரியாதையாகக் கூறி நின்றான். அதுவரையில் தன் போக்காகப் படுத் திருந்த பரிமளா இந்த குரலைக் கேட்டவுடன் அம்ருத தாரையைப் பருகியது போல மிக்க குதூகலத்துடன் எழுந்து கேசவனைக் கண்ட தும் உண்டாகிய மலர்ந்த முகத்துடனும், அடங்கா நகைப்புடனும் 'வாருங்கள்! வாருங்கள்! நான் மன்னிப்பதா! பேஷ்! பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுவது அழகா!...... என்ன இது தேகத்தில் கட்டுக்கள்! ரத்தக்காயங்கள்........ கரைகள்!.... ஐயோ! யாது ஆபத்து விளைந்துவிட்டது?" என்று அலறியவாறு கேட்டாள்.
---------
சிலர் மற்றவர்களைப்பற்றி "அவர்களுக்கு எல்லாவித சௌகரியங்களு மிருக்கையில் சில காரியங்களைச் சரியாய் செய்வதில்லை" என்று குறை கூறு கின்றார்கள். ஆனால் அவர்களிடம் நெருங்கிப் பழகினால்தான் அவர்களது கஷ்டங்கள் தெரிகின்றன. அப்புறம் அவர்களைப்பற்றி புகார் கூற இடமிருப்ப தில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் யாவும் வெளித் தோற்றம்தான்.
----------

கேசவன்:- (இனிமேல் தைரியமாய் அழைக்கலாம்) கண்ணே! பரிமளா! இந்த அடையாளங்கள் - கட்டு காயங்கள்- ரத்தக் கரை கள் யாவும் என் காதலின் பரிசுகள்! என்றும் மறத்தல் கூடாத முத்திரை மார்க்குகள். பரிமளா! நடந்த விஷயத்தை நீ கேட்டால் மிக்க மனமுருகுவாய்; பயப்படுவாய். என்னுயிரினுமினிய உன்னைக் காத்தல் பொருட்டு இக் குத்துக்களையும் தாங்கிக் கொண்டேன். உயிரை விடவும் துணிந்தேன். என் இன்ப வடிவமாகிய உனக்கு ஒருவித ஆபத்தும் நேராதிருப்பின் அதுவே எனக்குப் போதும்- என்று கூறி நடந்த விஷயத்தை விரிவாக உரைத்தான்.

இதைக் கேட்ட பரிமளா திடுக்கிட்டு, நடு நடுங்கி "ஹா! கத்தி யினால் குத்தியதா இது? ஐயோ! என் பொருட்டாகத் தங்களுக்கு இத்தகைய பெரிய அபாயம் நேர்ந்து விட்டதே! இந்த அபசாரத்திற்கு நான் என்ன செய்வேன்?" என்று வருந்தி வாடி நின்றாள்.

கேசவன்:- கண்மணி ! நீ வருந்துவது சற்றும் அழகல்ல! இப்போது நடந்த சம்பவங்களைத் திருப்பி வைத்துக் கொண்டு பார்ப்போம். என்னைப் பற்றி உன்னிடம் அத்தகைய சம்பவம் ஏற்படின் நீ என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பாயா !உனக்கு மனம் துணியுமா! அதை நன்றாக யோசித்துப் பாரு.

பரிமள:- நான் என்ன பதில் பேசுவேன்? என் உயிரைக் கொடுக்கவும் அஞ்சமாட்டேன்; ஆனால் தங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். இது பரஸ்பர அன்பின் தோற்றங்கள். தாங்கள் சிரமப் படுவதையும், என் பொருட்டுக் கத்திக் குத்து பட்டதையும் காண மனஞ் சகியாமல் இவ்வாறு கூறுகிறேன். நண்பரே! இந்த ரணங்களின் பாதையை எவ்விதம் தாங்குகின்றீர்கள். எந்த சண்டாளர்கள் அவ்விதம் செய்தார்கள் என்பதை யறிய ஆள் அடையாளம் தெரிய வில்லையா! ஐயோ! நாமிருவரும் பாதேசிகள் என்பதை யறிந்து நமக்குத் தீங்கு செய்கின்றார்கள். நம்முடைய எஜமானர் கட இச் சமயம் இங்கில்லையே! என்ன செய்வது?
----------
யாராயினும் சரி,நம் வீடேறி வந்த பிறகு, நமக்கு எவ்வளவு காரியங்கள் இருந்த போதிலும், வந்தவர்களை உபசரித்து, நமக்கு அசௌகரிய மிருப்பின் மற்றொரு சமயம் வரும்படியாகச் சொல்வது நல்லதேயன்றி அவர்களைப் பரா முகமாக நடத்தி அவர்கள் மனத்தைப் புண்படச் செய்வது யுக்தமல்ல.
--------

கேசவன்:- கண்ணே! நான் இவ்வேளையில் இங்கு வந்ததற் குக் காரணம் தெரிந்து கொண்டாய்; இன்று நடந்த சம்பவத்தைப் பார்த்தால் வேண்டுமென்று உனக்குத் தொந்தரவு செய்வதற்காகத் தான் அக் கடிதத்தை என்னை விட்டு எழுதச் செய்தது. அதை உன்னிடம் காட்டினால் நான் அனுப்புவதாக நீ நினைத்து அவர்களோடு வந்து விடுவாய் என்கிற சூழ்ச்சியை எண்ணிச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உனக்கு எந்த சமயம் எத்தகைய தீங்கு விளையுமோ தெரியவில்லை. நமது எஜமானர் வந்த உடனே இவ் விஷயங்களைத் தெரிவிக்கின்றேன். அவர் எவ்விதம் செய்யும்படியாகக் கூறுகிறாரோ அவ்வழியே செய்வோம். எந்த சமயத்தில் யார் வந்து உன்னையழைத்தாலும் நீ சடக்கென்று ஏமாந்து சென்று விடாதே! வந்திருப்பவர்கள் யாரென்பதை முக்கியமாகத் தெரிந்து கொள். உன்னால் கூடுமானால் அவர்களிடம் பேசி விஷயமும் அறிந்து கொள். இன்று செய்தது போல என்னிடம் வந்து மிரட்டினாலும் நான் என்னுடைய உயிரையாவது விடுவேனேயன்றி உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னைப்பற்றி என்னிடம் கேட்டதுபோல உன்னிடம் என்னைப்பற்றி கேட்டால் நீ பயப்படாதே. தைரியமாய் மறுத்துவிடு; அன்றி பயந்துகொண்டு எழுதியனுப்பினாலும் நான் அதைக்கண்டு நம்பிவிடமாட்டேன். அதற்குத் தக்க வகையில் ஏற்பாடு செய்வேன்; கண்மணீ! உனது நித்திரை பங்கமாகின்றது.

பரிமள:-அன்பரே! எனது நித்திரை பங்கமானால் அதனால் பாதகமில்லை. உங்களுக்கு ஒருவிதமான ஆபத்தும் நேராமலிருந்தால் அதுவே போதும்! நான் கோருவது அதுதான். இரவு பகலாகக் கடவுளை வேண்டியவண்ண மிருக்கிறேன். எனது எண்ணத்தில் சதா இக் கவலையே அதிகரித்து விட்டது. இதனால் ஊணுறக்கமும் கொள்வதில்லை. சதா சிந்தித்த வண்ணமே இருக்கிறேன்; என்ன செய்வேன்? கடவுள் நமக்கு ஒருவிதமான ஆபத்துமில்லாமல் காப்பானா!

-----------
நாம் யாரிடத்தும், எக் காலத்திலும் ஒரு அனுகூலத்தை எதிர்பார்ப்பது கூடாது. ஏனெனில் அது கிடைக்காவிடில் அதிக ஏமாற்ற மடைய வேண்டி வருகின்றது. ஆகையால் பலனை அதிக ஆவலுடன் எதிர் பார்க்காமல் நமது கட மையைச் செய்ய வேண்டியது.
-----------

கேசவ:- பரிமளா! இவ்விதம் கவலைப் படுவதெல்லாம் நமது அஞ்ஞானத்தினால்தான். உண்மையான ஞானமும் பக்தியும் இருக்குமாயின் பாரத்தை அவன் சரணத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு நாம் அவனை நம்பி இருந்தால் நமக்குக் கவலை இல்லை, இந்த வேதாந்தம் பிறருக்குப் போதிப்பது எல்லோருக்கும் எளிதுதான்; என் மனம் மட்டும் கவலையற்று, சலனமற்று இருக்கின்றதென்று நினைக்கின்றாயோ! என்னுடைய மனத்திலிருக்கும் வேதனையை வெளியிடவே. முடியாது. என்னருமைத் தாயைக் கண்டு களிக்கும் நாளை என்னுள்ளம் எதிர் பார்ப்பதை - அந்த ஆவலை- சர்வேசன்தான் அறிய வேண்டும். கண்மணீ! உன்னுடைய உண்மையான மனோபாவத்தை இன்று நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு சந்தோஷந்தான் என் இதயத்தில் பொங்குகின்றது. அச் சந்தோஷம் நிலைப்பதற்குக் கடவுளின் கருணை எவ்வித மிருக்கிறதோ! நானோ அனாதைச் சிறுவன்; நீயும் சிறுமி. உன்னுடைய நிலைமை கேவலமாக விருந்ததெனினும் நீ இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய்; என்னுடைய நிலைமையோ, அன்றையதற்குச் சிறிது மாறுபட்டிருப்பதாகத் தோன்றினாலும், மன வருத்தத்திற்கு மாறுதல் எற்படவில்லை என்பதை என்னுள்ளமன்றே அறியும்! பரிமளா! என்னுடைய விசனத்தைச் சிறிது போக்கி எனக்கு உற்சாகத்தை யளித்தது எந்தப் பொருள் எனின், அபார உணர்ச்சிக்கு ஆஸ்பதமாகிய சங்கீதமும் ஆநந்த மிக்க நடிப்பும் ஆகும், அதோடு உன்னுடைய அருமையான சினேகம் விளையாட்டுப் பருவமாகிய களங்கமற்ற நிலைமையில் சேர்ந்ததும் என் மனமடைந்த ஆநந்தம் இன்றும் கூறத் திறமன்று.
-----------
ஒரு புருஷனும் ஸ்திரீயும் தாராளமாகப் பேசினால் சிலர் அவர்கள் ஏதோ கல்மிஷமான எண்ணத்துடன் பேசுவதாக வம்பளக்கின்றார்கள். இதற்குக் காரணம் அச் சிலரது மனத்தின் பரிசுத்த மின்மையேதான்.
----------
ஆனால், கண்ணே! இனிமேல் நான் தாராளமாக மனத்தை விட்டுக் கூறலாம். என்னுடைய மனத்தில் உண்டாகிய ஆழ்ந்த அன்பு பூர்ணமாய் என் இன்ப வடிவமாகிய உன் மேல் காதல் உருவங் கொண்டு கனிந்து விட்டது. இதுநாள் வரையில் நான் அதுபற்றி வெளியிடவும் வெட்கினேன்; அஞ்சினேன்; நீ என்ன நினைப்பாயோ! உன்னுடைய உண்மையான போக்கு எதுவோ! அதை யறியாது நான் எனது காதலைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அதே போல இன்று வரையில் நடந்து வந்தேன்; நான் இன்று இங்கு வந்ததும் நீ யறியாவாறு உன்னை 5 நிமிடம் கவனித்தேன். உன் வாயினின்றும் உன்னை யறியாது வெளியான சிற்சில வார்த்தைகளைச் செவியுற்ற பிறகு உன் மனோபாவத்தை அறிந் தேன். கண்மணி! நான் சென்று வருகிறேன். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தால் உன்னுடைய தேகம் கெட்டு விடும்.

பரிமளா:- அன்பரே! நீங்கள் உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவித்தது போல நானும் வியக்தமாகத் தெரிவிக்க வேண்டியது கடமையல்லவா! நான் சிறு பிராயத்தில் நடித்த அளவிலேயே ஏதோ ஒருவிதமான சினேகம், அன்பு முதலியன உதித்தன. எனக்குக் குருவாகவும் இருந்து தாங்கள் சங்கீதம் முதலியவை கற்றுக் கொடுத்ததும், அன்யோன்ய பாவம் அதிகரித்திருந்ததும் என் தாயாரறிந்த விஷயமே! எனக்கு வயது வந்த பிறகு தங்களையே மணக்க வேண்டுமென்ற வேட்கை யுதித்தது. அதை வெளியிட உங்களைப் போலவே அஞ்சி லஜ்ஜையுற்றேன், என் தாயார் ஒரு தினம் தன் மனப் பூர்வமாக என்னைத் தங்களுக்கே மணம் செய்விக்க விருப்ப மிருப்பதாயும் தாங்கள் சம்மதிப்பீர்களோ, மாட்டீர்களோ என்று சந்தேகம் கொண்டிருப்பதாயும் இவ் விஷயத்தை எஜமானரிடத்திலேயே நேரில் தெரிவித்து காரியத்தை முடிக்க வேண்டுமென்றும் சொல்லி "உனக்கு இது விஷயத்தில் சம்மதந் தானா?" என்று என்னைக் கேட்டாள். என்னை மணப்பதற்குச் சம்மதமில்லையாயின் எனது சகோதரி சகுந்தலாவை மணப்பதற் குப் பிரியப்பட்டால் அவளைக் கொடுத்து விடுவதாகவும், எவ்விதமாவது உங்களுடைய சம்பந்தம் செய்து கொள்ளவேண்டு மென்றும் கூறினாள். இதைக் கேட்ட என் மனம் மெத்த மகிழ்வுற்றது. என்னுடைய சுக துக்கத்திற்குப் பாத்யதையுடைய என் அன்னையின் மனத்தைக் களிப்பிக்கவேண்டியது என் கடமை யாதலால் நான் என் மனத்திலுள்ளதை விவரித்துக் கூறியதோடு "அம்மா! என்னை மணக்கச் சம்மதப்படவில்லையாயின் நானே என் சகோதரியை மணம் செய்விக்கின்றேன்; எனக்கு அதுபற்றி சற்றும் பொறாமை இல்லை." என்று உறுதியாகக் கூறி விட்டேன். என் தாயார் மெத்த சந்தோஷங் கொண்டாள். எஜமானரின் வருகைக்கே காத்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் அவனருள்.

---------
ஒரு நல்ல காரித்தைப் பத்து பேர்கள் சேர்ந்து செய்தால் அது நன்றாக நிறைவேறுவதுடன் மற்றவர்களுக்கும் உற்சாகத்தை உண்டாக்குகின்றது. அஃதில்லாமல் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செய்து, தனிப் புகழ்பெற வேண்டுமென்று விலகி விட்டால் அக் காரியம் கெடுவதுடன் எல்லோருக்கும் கெளரவக் குறைவுதான் ஏற்படுகின்றது. அதனாலேயே பெரியார் " ஒன்று பட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே” என்றார் போலும்.
---------

கேசவன் :- கண்ணே! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அது ஈழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. 'இந்த சந்தோஷகரமான விஷயத்தைக் கேட்டு முழு மனத்துடன் ஆநந்திப்பதற்கு என் தாயார் இல்லையே!' என்கிற துக்கம் தொண்டையை அடைக்கின்றது. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு அன்னைக்கு ஈடாகுமா! என்பார்கள். அது போல என் தாயார் ஒருத்தி இருந்து அனுபவிக் கும் ஆனந்தத்திற்குச் சமானம் எது வரும்? அன்பே! "பசி; பசி" என்று வாடி, வருந்தி, கத்திக் கொண்டிருந்த சகோதரிகளையும் தாயாரையும் பிரிந்த அக் கால நினைவு இப்போதும் என் கண் முன்பு தோன்றுகின்றது. நளனையும் தமயந்தியையும் சனி பகவான் பிரித்தது போல என்னையும் என் தாயார், சகோதரிகள் ஆகியவர் களையும் விதி பிரித்து விட்டதே! நளனுக்கு ஏழரை வருடமானதும் சேரும்படியாகப் பிராப்த மிருந்தது. நான் அக் கதியுமற்று தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது இந்த துயரம் தீர்ந்து விட் டால் நான் முற்றும் கவலையற்றுக் களிப்புறும் மனிதனாவேன்.என் இன்னமுதே! இன்று நமக்கு நற்காலம், தீயகாலம் இரண்டும் சேர்ந்திருந்ததாகவே நினைக்கிறேன். ஏனெனில் இவ்விதமான ஆபத்து எனக்கு சம்பவித்ததனாலேதான் நான் இந்த வேளையில் இங்கு வரவும், அன்பு பரஸ்பரம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆயிற்று. நான் சென்று வருகிறேன்; பயப்படாதே. எந்த நேரத்திலும் கடவுளைத் தொழுது வேண்டு. அவன் காப்பாற்று வான்!" என்று கூறிப் புறப்பட்டான்.
--------
நாம் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்தி பெரியவர்களாக மதிக்கின்றோமோ அவர்களிடம் நமது மனத்தை விட்டுப் பேசவும், தாராளமாக இருக்க வும் முடிவதில்லை. ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு விடுகின்றது.
----------

இது கேட்ட பரிமளா "அன்பரே! சென்று வாருங்கள். நீங்களும் கூடுமான வரையில் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள் ளுங்கள். என்னுயிர் உங்கள் கையீல் தானிருக்கிறது என்பதை மறக்காதீர்கள்; இந்த காயங்களுக்குத் தக்க சிகிச்சை செய்யுங்கள். அடிக்கடி சந்திப்பதை மறந்து விடாதீர்கள்." என்று விடை பகர்ந் தாள். பிறகு கேசவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு வெளியே வந்து தன் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான். அன்றிரவு நித்திரையே கொள்ளவில்லை. அன்று நிகழ்ந்த சம்பவத்தையே எண்ணி எண்ணி இன்பமும் துன்பமும் அடைந்தவாறு இரவைக் கடத்தினான்.

சில தினங்களாயின. எஜமானர் ஊரிலிருந்து வந்தார். வந்த உடனே கேசவன் நடந்த விஷயங்கள் சகலமானவற்றையும் தெரிவித்தான். இது கேட்ட எஜமானர் திடுக்கிட்டு "அப்புறம் எதுவும் நடக்கவில்லையா! பரிமளா சௌக்யமாக இருக்கிறாளா?” என்றார்.

கேசவன்:- சௌக்யமே.தந்தையே! நமது துப்பறியும் நாயுடுகாருவினிடம் நான் சொல்லியதற்கு அவர் தங்களுடன் கலந்து சில விஷயங்களை யோசித்துச் செய்ய வேண்டுமென்று நேற்று தெரிவித்தார். இன்று அவர் தங்களைக் காண வந்தாலும் வருவார்.
------
காண ஆநந்தமாய் நடந்த “பிரஜானுகூலன்" வெள்ளித் திருவிழா வைபவம் தமிழ் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகை யுலகத்திற்கே பெரும் புகழ்ச்சி யைக் கொடுத்தது. எல்லாப் பத்திரிகைகளும் அதனதன் சுவையில் நடை பெறி னும் நீடித்து நடக்கும் பாக்கியம் கிடைப்பதுதான் அரிது.
------

பொன்னு:- நானே அவர் வீட்டிற்குச் செல்ல உத்தேசித் திருக்கிறேன். நேரில் பேசிக் கொள்கிறேன். இந்த காயத்திற்கு என்ன செய்தாய்! இன்னும் சில ரணங்களிருக்கின்றனவே!

கேசவன்:- இனிமேல் அதற்கென்ன பயம், முதலில்தான் மிகவும் பாதை செய்தது. இதற்காகக் காய்ச்சலும் வந்தது. ஜன்னி கண்டு விடுமோ என்றும் பயந்தேன். இதை நான் வெளியிடவில்லை. பரிமளா இதனால் மிக்க விசனிப்பாள் என்று பயந்து பேசாமலிருந்து விட்டேன. ஆனால் நாயுடுகாரு என்னைத் தனிமையில் விட சம்மதிக்காமல் தன்னுடன் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே சிகிச்சை செய்தார். அதன் பிறகு நான் வீட் டிற்கு வந்து விட்டேன். அந்த மகானுபாவனைப் போல உலகத்திலேயே இல்லை எனலாம். வெகு உத்தமர். பரோபகாரத்தையே முதன்மையாகக் கருதுகின்றவர். நன் என்னுடைய தாயார் விஷயத்தையும் அவரிடம் தெரிவித்தேன்; அதற்கும் முயற்சி செய்வதாகச் சொன்னார்." என்றான்.

பிறகு பொன்னுசாமி "நான் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு நாயுடுவின் வீட்டிற்குச் சென்றார். நாயுடு இவரை வர வேற்று உபசரித்து "எப்போது வந்தீர்கள்!" என்று கேட்டார்.

பொன்னு:- நான் இன்றுதான் வந்தேன், விஷயம் இன்னும் ஒன்றும் தகவல் தெரிய வில்லையா! நான் சென்று வருவதற்குள் விபரீத சம்பவங்கள் நடந்து விட்டதாமே! இதிலேதேனும் விளங்கிற்றா! இது எதோ பூடகமாகவே வேலை நடக்கின்றதே! உங்களுக்குக் கூடப் பிடி கிடைக்கவில்லை எனில் விஷயம் எப்படியாகும். எனக்கு இதே கவலையாக இருக்கிறது. பையன் உடம்பில் காயத் தைப் பார்த்தீர்களே! என்ன அனியாயம்,!

நாயுடு:-நண்பரே! இந்த விஷயத்திற்கே தாங்கள் பதறிப் போய் விடுகிறீர்கள். இதைப் போன்று பத்து பங்கு சிக்கலான வழக்கில் நான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதைத் தாங்கள் நேரில் பார்த்திருந்தால் என்ன நினைப்பீர்களோ! இவ்விதமான சிக்கல் எங்களுக்கு மிக்க சகஜமாகி விட்டது. ஏதோ கூடிய வரையில் நான் ஒருவாறு கண்டு பிடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வெளியிட மாட்டேன். எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது, பரிமளாவின் மீது கேசவன் தன்னுயிரையே வைத்துக் காதல் கொண்டிருக்கிறான் என்பதை நான் பல விதத்திலும் தெரிந்து கொண்டேன். அதை அவனுடைய கத்தி காயத்தினால் இன்னும் நன்றாக நிதர்சனமாகத் தெரிந்து கொண்டேன். அந்த பெண்ணும் அப்படியே என்பதை அறிந்தேன். கேசவனின் வாயினாலும் இருவருடைய மனோபாவத்தையும் அறிந்து கொண்டேன். ஆகையினால் அவர்களுடைய விவாகத்தை நாம் சீக்கிரத்தில் முடித்து விட்டால் என்ன! அவளை யபகரிக்கவோ, அன்றி அவனை அபகரிக்கவோ பகைவர்களின் சூழ்ச்சியாக விருக்கின்றது. நாம் விவாகத்தை நடத்தி விட்டால் அவ்வளவு பாதகமில்லை என்று தோன்றுகின்றது. உங்கள் அபிப்பிராயமென்ன!

-------
ஒரு விதமான முகாந்திரத்தைக் கொண்டு பல பத்திராதிபர்களின்' தரிச னம் கிடைக்கின்றது. அவர்களின் அறிமுகமும் உண்டாகின்றது. பிறகு பழகிய சினேகிதர்களாகவும் நேருகின்றது.
---

பொன்னு:--என்னுடைய அபிப்பிராயம் தாங்கள் கேட்க வேண்டுமா? தாங்கள் எப்படிக் கூறுகின்றீர்களோ அதன்படிக்கு நான் நடக்கத் தயாராக இருக்கிறேன். தங்களுடன் நானும் இதைப் பற்றிப் பேசவே வந்தேன்; தாங்களே இவ்விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டீர்கள். எனக்கும் மனம் வெறுத்து சலித்து விட்டது. இது பரியந்தம் செய்த ஸ்தாபனங்கள் போதும். இனி மேல் நான் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று சுவாமி தரிசனம் செய்து கங்கை நீராடி வாவேண்டும்; பிறகு திருப்பதி க்ஷேத்திரத் திலேயே சில காலம் மலைமீதே தங்கி இருக்க மனம் ஆவல் கொண்டிருக்கின்றது. ஆதலால் அவ்விதம் செய்யத் தீர்மானித்து விட் டேன்; இவர்களுடைய விவாகத்தை யொருவாறு முடித்து விட்டு, என்னிடமுள்ள செல்வத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி ஒருவழி செய்து விட்டு, நான் கூடிய சீக்கிரத்திலேயே புறப்பட நினைக்கிறேன். அதற்குள் இந்த விபத்துக்களும் ஒழியும், நான் என்னாலான நன்மைகளைச் செய்து விடுவது என் கடமை.

----------
எத்தனை தீவிரமாக ஓர் சாரியத்தைச் செய்ய நினைக்கின்றோமோ அத்தனை தடைகள் அதற்கு வந்து விடுகின்றன. இதற்குள் வம்பர்களின் வாக்கோ தோன்றியவைகளை எல்லாம் கொட்டி யளக்கின்றன. வம்பு பேசும் மனி தர்களுக்குக் காரியத்தில் கலந்து கொள்ள வருவதற்கு என்னவோ மதி இல்லை. அவர்களில் சிலர் பெரிய படித்த பட்டதாரிகளாம். ஐயோ | புத்தியின் லக்ஷணமே!
----------

நாயுடு:- அப்படியாயின் மெத்த சந்தோஷம்; நாம் இக் காரிய த்தை விரைவில் செய்து முடித்து விடுவோம்: பிறகு மற்றதைக் கவனிப்போம். பொறாமைத் தீ கொண்டு இவ்விதம் கலகம் செய்கின்றார்கள்; நீங்கள் அந்தப் பெண்ணின் தாயாரிடம் கலந்து யோசனை செய்யுங்கள்; அவர்களுடைய சம்மதியைப் பெற்ற பிறகு நாம் மேல் கொண்டு செய்வோம்.

அப்புறம் பொன்னுசாமி விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்; கேசவனை பழைத்து, "அப்பா கேசவா! நானும் நாயுடுவும் ஒரு காரியம் நிச்சயம் செய்தோம். நீயும் பரிமளாவும் கொண்டுள்ள ப்ரேமை எத்தகைய தென்பதை நான் அறிந்துள்ளது போலவே நாயுடுவும் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆதலால் உங்களுடைய திருமணத்தை விரைவில் முடித்து விடுவதென்று நாங்கள் தீர்மா னித்து விட்டோம்; அது விஷயத்தில் உன்னுடைய அபிப் பிராயத்தையும், அவர்களுடைய அபிப்பிராயத்தையும் கலந்து கொண்டு செய்ய எண்ணுகிறேன்; நீ என்ன சொல்லுகிறாய்; உன் சம்மதமெப்படி?" என்றார்.

இவ்விதமாக அவர் கேட்பார் என்பதைக் கனவிலும் நினைக்காத கேசவனுக்கு வியப்பும் சந்தோஷமும் உண்டாயது. எனினும் தன் தாயின் துயரம் ஒருபுறம் குப்பென்று கிளம்பியது. அந்த நிலைமையில் அவன் எஜமானனிடத்தில் லஜ்ஜையோடு "தந்தையே! நான் என்ன சொல்லப் போகிறேன்! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே காரியம் நடக்க வேண்டியதே என் கருத்து. என்னை இதுபரியந்தம் பிதாவைப் போல ரக்ஷித்து வரும் உங்கள் அடிமை யல்லவா நான்!" என்றான்.

----------
அக் காரியம் முடிந்தபின் அந்த வம்பர்களை மற்றவர்கள் "என்ன அப் போது என்னவோ வம்பளந்தீர்களே, இப்பொழுது என்ன ஆயிற்று பார்த் தீர்களா?" என்று கேட்டால் அதற்கு அவர்கள் "ஐயோ, பாவமே! நான் ஒன் றும் சொல்ல வில்லையே! யாரோ சொன்னதைத்தான் சொன்னேன்" என்று தாங்கள் முன் வம்பளந்ததையே மறைக்க முயல்கின்றார்கள்.
--------
பொன்:- என்ன இப்படிப் பேசுகிறாய்? நான் சொல்லியது எல்லாம் உனக்குச் சட்டமாக விருப்பின் நான் பரிமளாவை மணக்க வேண்டாமென்றால் நீ நின்று விடுவாயா?
.
கேசவன் - தந்தையே! என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் கோரும் தாங்கள் என் விஷயமாகச் செய்யும் எந்த காரியமும் எனக்குப் பிரதிகூலமாக இருக்காதென்கிற உறுதியை நான் கொண்டிருக்கிறேன். தங்களுடைய சித்தம் அவ்வாறிருக்குமாயின் அதுவே கடவுளின் சித்த மென்று நினைத்து நான் கிட்டாதாயின் வெட்டென மற என்றதை எண்ணிப் பேசாமலிருப்பேன்.

பொன்னு:-கேசவா! பேஷ்; நன்றாகப் பதிலுரைத்தாய்; உன்னுடைய மனோபாவத்தை நானறிந்தது போல வேறு யாருமறிந்திருக்க மாட்டார்கள். உன்னை நான் எவ்விதத்திலும் களிப்பிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். உன் மனமறிந்தும் நான் வேண்டு மென்றே கேட்டேன்; ஏன் கண்ணீர் வடிக்கின்றாய்? என்ன விசனம்?

கேசவன்:- விசனம் என்ன வென்பது தாங்களறியாததன்றே! என்னுடைய அன்னையைக் காணாது நான் கலங்கியபடியே விவாக சந்தோஷமடைய வேண்டி இருக்கின்றதே. என் தாயார் இருந்தால் எத்தனை ஆனந்தமாக விருக்கும். அதை நினைத்தால் விசனம் பொங்குகின்றது.
-----------
யார் எப்பொழுதும் மற்றவர்க்கு சிரிப்பையும், சந்தோஷத்தையும் உண் டாக்குகின்றார்களோ அவர்கள் தங்கள் மனத்திலும் முழு சந்தோஷத்தை அடைகின்றார்கள். ஆனால் சிடுமூஞ்சிகளோ தங்களுக்கு எல்லாவித சௌகரியங்களிருப்பினும் எப்பொழுதும் சந்தோஷமென்பதே அடைவ தில்லை.
----------

பொன்னு:- வாஸ்தவம்; உன் தாயாரை உயிருடன் பறி கொடுத்தது பற்றி நானும் விசனிக்கின்றேன்; நான் எத்தனையோ விதத்தில் அந்த அம்மாளைப் பற்றித் தேடியலைந்தும் ஒருவிதமான தகவலும் தெரிய வில்லையே என்று கவலையாகத் தானிருக்கிறது. உம். என்ன செய்வது? கடவுளின் கருணை இது. இந்த விசனம் என்றைக்கும் நீங்காதது. உன் தாயாரை நேரில் கண்டால்தான் அத் துயர் தீரும். ஆகையினால் இதையே எண்ணி மேலேயாக வேண்டியதை நிறுத்துவது முடியாது. உன்னுடைய நலனைக் கோரியே நான் இதை சீக்கிரத்தில் முடித்து விட நினைக்கிறேன். நான் இப்போது பரிமளாவின் வீட்டிற்குச்சென்று விஷயத்தை வெளியிட்டு அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பெற்று வருகிறேன்-என்று கூறி விட்டுப் பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.

பரிமளா, அவள் சகோதரி, தாயார் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பொன்னுசாமியைக் கண்டதும் "வாருங்கள் உட்காருங்கள்" என்று அவரை அமரச் செய்தார்கள். "என்ன விசேஷம்? ஏதேனும் தகவல் தெரிந்ததா!" என்று பரிமளாவின் தாயார் கேட்டாள்.

இதைக்கேட்ட பொன்னுசாமி "தற்போது பெருத்த சந்தோஷ சமாசாரத் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் எல்லோருடைய மனத்திற்கும் மிக்க பிடித்தமாயிருக்குமென்று நம்புகிறேன்; அதாவது நான் புண்ணிய க்ஷேத்திர யாத்திரை செய்யச் செல்வதென்று தீர்மானித்துள்ளேன். தற்போது நடக்கும் சச்சரவுகள் யாவும் செல்வத்தையும், செல்வர்களையும் பொருத்தியதாக இருக்கின்றன; ஆதலால் அதற்கு ஒரு வழியைச் செய்து விடுவது உசித மென்று தோன்றுகின்றது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விலங்கு பூட்டி விடலாமென்று நினைக்கின்றேன்; உங்கள் யோசனை என்ன? இஷ்டம் எப்படி? தெரிவித்தால் மெத்த சந்தோஷம்." என்றார். இந்த எதிர் பாராத வார்த்தையைக் கேட்ட பார்வதியம்மாள் மெத்த சந்தோஷமடைந்து "ஐயா! தாங்கள்தான் எங்கள் குலத்தைக் காக்கும் புண்ணியவானாகையினால் தாங்கள் சொல்வதற்கு இரண்டாவது கிடையாது என்பது நான் கூற வேண்டுவதில்லை. பரிமளாவை உங்கள் புதல்வியாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். கேசவனின் சம்மதத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டீர்களா? என் மனப் பூர்வமாய் இந்த விவாகம் என்று நடைபெறும் என்று நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்றே எனக்கு சுதினம்." என்றாள்

---------
இருபத்தைந்து வருஷங்களாக 'ஒருவரின் நிழல் மற்றவர்' என்று சொல்லும்படி இணைபிரியாதிருந்த தம்பதிகளே ஒரு சத்லிஷயத்தை முன்னிட்டுப் பல மாத மாதங்கள் பிரிந்திருக்க பரஸ்பரம் மனமுவந்து, அதற்கு வேண்டிய மனோ திடத்தை அடைகின்றார்கள். காலத்திற்குத் தகுந்த புத்தியை கடவுள் அளிக்கின்றார்.
---------

பொன்:-அம்மா! கடவுளின் கிருபையினால் உங்கள் விருப்பம் ஈடேறி விடும் என்பதே எனது நம்பிக்கை: என்னுடைய கடமையில் இதையும் ஒன்றாக நான் தீர்மானித்திருக்கிறேன்; கேசவனது சம்மதத்தைப் பெற்றே நான் இங்கு வந்தேன்; மணமகளின் சம்மதம்தான் தெரியவில்லை - என்று பரிகாஸமாக நகைத்துக் கொண்டே 'பரிமளா ! கேசவனை மணக்க உனக்குச் சம்மதமில்லை எனில் தெரிவித்துவிடு; பயப்படாதே! வேறு நல்ல வானாசுப் பார்த்து நான் விவாகம் செய்து வைக்கின்றேன்." என்றார்.

பரிமள:- (குனிந்த தலை நிமிராமல் அபாரமான லஜ்ஜையுடன்) கடவுளுக்குத் தமது பக்தர்களின் மனோபாவம் நன்றாகத் தெரியும். அவ்வாறு தெரிந்தாலும் அவர்களைச் சோதியாமல் தன் பொன்னடி தருவதில்லை: அதுபோன்றே உலகத்துச் செயலும் இருக்கின்றது.

பொன்:- செல்வீ! பரிமளா! உன் உதாரணம் வெகு பொருத்த மானது, என் கண்ணே! நீ ச ற்றும் பயப்படாதே. கேசவனையும் உன்னையும் நான் ஒருபோதும் பிரிக்க மாட்டேன்; உங்கள் காதலின் மகிமையை நான் அறிவேன்.
----------
தனது பாதி உயிராக மதித்துள்ளவர்களைப் பிரிந்திருக்க மனோதிடம் ஏற்படுகையில் தன்னுடன் கூடவே இருக்கும் குழந்தைக்குச் சற்று தலைவலி வந்துவிடின் அதைக் கண்டு சகிக்கக் கஷ்டமாயிருக்கின்றது. அவர்களது மனோ திடத்தைச் சோதிப்பதற்கே அவ்வித நிகழ்ச்சி ஏற்படுகின்றது போலும்.
-------

என் வாழ்நாளில் நான் சண்டாளனா யிருந்துவிடினும் அதன் உயர்வு இப்போது எனக்கு நன்கு தெரிகின்றது. என் குணவதியின் உயிர் பறிபோனதே அதற்குச் சான்றாகும். கண்ணால் கண்டும் காணாதவனாய் - குருடனாய் — அவ் வுத்தமியை உயிர்ப் பலி கொடுத்தேன். ஆகையினால் நான் உங்களை அதிக நாள் பிரித்து வைக்கவும் சம்மதிக்காது சீக்கிரமே விலங்கிட்டுச் சிறைச் சாலையிலடைத்துவிட வாரண்டு தயார் செய்வதற்கே வந்தேன். நான் சென்று புரோகிதரை அழைத்து முகூர்த்த நாள் குறிப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு மற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். உங்கள் திருமணத்தை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சன்னிதானத்தில்தான் செய்ய வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகின்றது. அவ்விடத்திலேயே செய்து விடுகிறேன். உங்களுக்கு ஆக்ஷேபனை இல்லையே!" என்றார். அதற்கவர்கள் 'இல்லை' என்றதும் உடனே அவ்விடத்தில் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அன்றே தமது புரோகிதரை அழைத்தார், அவர் வந்து நாள் பார்த்து, தை மாதம் 27-ம் தேதி முகூர்த்தம் வைத்துக் கொடுத்துச் சென்றார். லக்னப் பத்திரிகையும் எழுதித் தயாராகி விட்டது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விவாகம் என்ற விஷயம் ஊர் முற்றும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதே பேச்சாக எல்லோரும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். விவாகத்தை பொன்னுசாமி வெகு விமரிசையாக நடத்தத் தீர்மானித்து நாயுடுவுடனேயே கலந்து யோசித்துப் பலவிதமான ஏற்பாடுகளும் செய்ய லானார்.

கேசவனுக்கு விவாக தினம் குறிப்பிட்ட வுடனே தன் தாயாரின் நினைவும், சகோதரிகளின் நினைவும் அபாரமாக உண்டாகி விட் டன. விவாகத்திற்கு இன்னும் 20 நாட்கள் தானிருக்கின்றன. இன்பமும் துன்பமும் சம இடையாகக் கேசவனின் மனத்தில் பாதிக்கின்றன. தன் தாயைக் கண்டு பிடிக்கும் வரையில் விவாகம் செய்து கொள்ள வேண்டாமென்று ஒத்தி வைக்க எண்ணினாலோ 'இத்தனை வருடங்களாக ஒரு விதத் தகவலும் கிடைக்காததுபோல இன்னும் எத்தனை வருடங்களாகுமோ!' என்று தோன் றியதால், கடவுளின் செயல் எவ்வித மிருக்கிறதோ அவ்விதமே நடக்கட்டும் என்று மனந் தேறினான்.

--------
தலையணை யண்டையில் பேனா, பேபர், விளக்கு யாவும் இருந்தும் மனத்திலுண்டாகும் எண்ணங்களை எழுதுவதற்குச் சோம்பல் தடுத்துவிடுகின்றது. தூங்கி எழுந்தபிறகு போனது போனதுதான்.
--------

ஒரு தினம் கேசவன் தனக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டே இருக்கையில் அதில் கீழ் வருமாறு ஒரு கடிதம் இருந்தது.

"என் ஆருயிர்ச் செல்வனான கேசவனுக்கு அனேக ஆசீர் வாதம். என் கண்ணே! கேசவா! உன்னை ஈன்ற தாய் ஒருத்தி இருக்கிறாள் என்பதே உனக்கு மறந்து விடும்படியாக நமது போதாக்காலக் கொடுமை நம்மைப் பிரித்தது. பாழும் ஏழ்மையே அதற்குக் காரணம். என் கால விதிகளை எல்லாம் நான் பிறகு கேரில் சொல்கிறேன். நீ அங்கிருப்பதாக இன்றுதான் நீ கேள்விப்பட்டு, இக் கடிதம் எழுத ஒரு பைசா காசில்லாமல் தத்தளித்து எப்படியோ பிச்சை எடுத்து இதை எழுதலானேன் நானும் உன் சகோதரிகளும் படும் கஷ்டம் கூறத் திறமன்று. நான் இக் கடிதத்தில் அச்சிட்டுள்ள இலக்கமுடைய வீட்டில் இருக்கிறேன்; அவ் வீட்டுக்காரர் பெண்ணுக்கு விவாகம்; அந்த வீட்டில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்; ஆகையி னால் க் இக் கடிதம் கண்ட தக்ஷணம் இவ்விடம் வரவும். தாமதிக்காதே.

      இங்ஙனம்
      உன் அன்னை கோமதி"

------
ஒரே காரியத்தை சிலர் "எப்படியும் ஜயமடைவோம்" என்ற தன்னம் பிக்கையுடன் ஆரம்பிக்கின்றார்கள்; வேறு சிலர் கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு யாதொரு பலனையும் கருதாது செய்கின்றார்கள்; மற்றும் சிலர் சுய நம்பிக்கையுமில்லாது, கடவுளிடத்தும் நம்பிக்கையில்லாது ஒரு விதமனப் பீதியுடன் செய்கிறார்கள். முதல் கோஷ்டியினருக்குக் கடவுன் உதவுகிறார்; இரண்டாவது கோஷ்டியாருக்கு வெற்றியைத் தாமே அளிக்கின்றார். ஆனால் கடைசி கோஷ்டியினருக்கு அபஜயமே ஏற்படுகின்றது. அவரவர்கள் மனோ பாவத்துக்குத் தகுந்தபடியேதான் யாவும் நடக்கும்.
-----

அக் கடிதத்தைப் படித்த உடனே கேசவனுக்கு அப்படியே ஆநந்தம் பொங்கி விட்டது. "தன் தாயின் தரிசனம் தனக்குக் கிடைக்குமா!" என்று எங்கித் தவித்ததற்கு மாறாக உடனே கடிதத் தைக் கண்டதும் ஆநந்த பாஷ்பம் பெருக அப்படியே மெய் சிலிர்த்து விட்டான்.
---------------

9-வது அதிகாரம் :
விவாக மகிழ்ச்சி- விபரீத நிகழ்ச்சி

பரிமளா தனக்கு விவாகம் சமீபித்து விட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து அந்த நாளை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.விவாகமானதும் தான் முன்னர் நாடகத்தில் நடித்த பாத்திரங்களைப்போல தினசரி வாழ்க்கை நடத்தப் பெரும் ஆர்வங் கொண்டிருந்தாள். அது விஷயமாகவே யோசித்துக் கொண்டிருக்கையில், பொன்னுசாமியும் பார்வதியம்மாளும் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அச் சமயம் கேசவன் வெகு வேகமாகவும் தன்னை மீறிய ஆநந்தத்துடனும் ஓடி வந்து, வெகு வணக்கத்துடன் அக் கடிதத் தைத் தன் எஜமானர் கையில் கொடுத்து "தந்தையே! நமக்குச் சந்தோஷ காலம் பிறந்து விட்டது. இக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்'' என்று கூறினான். உடனே பொன்னுசாமி கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பேராநந்தமடைந்து "கேசவா! உன் பக்கத்தில் கடவுள் எப்படி மறைந்து வேலை செய்கிறார் பார்த்தாயா! பரிமளாவின் அதிருஷ்டம்தான் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்ட தாயார் இவ்விதம் விவாக சமயத்திற்குச் சரியாக வந்து சேருகிறாள். ஆகா! என்ன ஆநந்தம்! கேசவா! உன் மனம் குளிர்ந்ததா ! நீ இப்போதே புறப்பட்டு, வண்டி எப்போது புறப்படுகின்றது என்பதை விசாரித்துப் பிரயாணத்திற்குச் சித்தமாயிரு. நான் இதோ சென்று பணங் கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுத் தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

கேசவன் பரிமளாவிடம் சென்று, "பரிமளா! நான் ஊருக்குச் சென்று வருகிறேன்; என் தாயார் எனக்குக் கடிதமெழுதி இருக்கி றாள். நமது எஜமானர்;சொல்லியது போல உன்னுடைய மகிமை தான் - பாக்யந்தான்-உன் மாமியார் விவாகத்திற்கு வந்து விடுகி றார்கள்; கண்ணே! பரிமளா! நான் சென்று என் தாயார், சகோதரிகள் ஆகியவர்களுடன் உடனே திரும்பி விடுகிறேன். எந்தக் காலத்திலும் நம்மிருவரையும் நிழல் போல ஆபத்துச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. நீ ஜாக்ரதையாக இரு; கவலைப்படாதே. தைரியமாக இரு, 'நமது திருமணத்தைக் கண்டு களிப்பதற்கு என் தாயார் இல்லையே! அனாதையைப் போல நான் மணம் செய்து கொள்ள நேர்ந்ததே!' என்று மிக்க விசனக் கடலில் ஆழ்ந்திருந் தேன். இச்சமயம் கடவுள் என் கவலையைத் தீர்க்கவே இக் கடிதத்தை எனக்கு அனுப்பினார். என்னுள்ளம் மகிழ்கின்றது. எல் லாம் இறைவனருள்" என்றான்.

பரிமள:- என் அன்பரே! எத்தகைய சந்தோஷம் தங்களுக்கு வந்த போதிலும் அதில் நானும் சமபாகம் பெற்றவளன்றா! தாங்கள் அன்று தெரிவித்தபோது என் மனம் என்ன சங்கடத்தை அடைந்தது தெரியுமா! அதைச் சொல்வதற்கே முடியாது. இப்போதுதான் பேராநந்தமாயிற்று. தாங்கள் எனக்குச் சொல்லியதுபோலத் தாங்களும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; சீக்கிரம் வந்து விடுங்கள்.
-------
எவ்வளவு உயரிய பதவியிலிருந்தாலும் தன்னை விடத் தாழ்ந்த ஸ்திதியி லுள்ளவர்களின் வார்த்தைக்குப் பயந்து நடக்கவேண்டிய சந்தர்ப்பம் சில சமயங்களில் நேர்ந்துவிடுகின்றது.
-------

கேசவன்:-நான் எதற்காகத் தாமதிக்க வேண்டும்? அங்கு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு உடனே திரும்ப வேண்டி யதுதான்; கடவுளின் அனுக்ரகம் பூர்ணமாக இருக்கும் பரியந்தம் குறைவென்ன! நான் சென்று வாட்டுமா! கண்மணி!" என்றான்.

அன்பு மீறிய பரவசத்தினால் அவர்களை யறியாமலேயே இருவர் கரங்களும் சந்தித்துக் கொண்டன. அடுத்த நிமிடம் கேசவன் தனிப்பட்டு வெளியே சென்று பிரயாணத்திற்கு ஆயத்தமானான். எஜமானரும் அவன் செலவுக்குப் பணத்தைக் கொடுத்து “அப்பா! சென்று ஜாக்ரதையாகத் திரும்பு. பணம் போதாவிடில் கடிதம் எழுது; நான் மணியார்டர் செய்கிறேன். ஜாக்கிரதை. இந்த தகவலை நாயுடுவிடம் தெரிவித்து விடலாமென்று அங்கு சென்றேன். நாயுடு ஊரிலில்லையாம்; வந்து விட்டேன்! ஜாக்ரதை!" என்று கூறி வண்டி ஏற்றி அனுப்பி விட்டார். பிற்கு கேசவன் அன்னையைப் பார்க்கச் செல்லும் பேராவலினால் தூண்டப்பட்டு “எப்போது தாயி னருகில் செல்வோம்?" "என்று எதிர்பார்த்தபடியே ரயிலில் செல்கிறான்.

சரியாய் இரவு 11 மணிக்கு அவன் செல்ல வேண்டிய ஊரில் ரயில் நின்றதும் இறங்கினான். முன்னே பின்னே சென்றறியாத ஊராகையினால் ரயிலடியிலேயே ஒரு வண்டியமர்த்திக் கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்குக் கொண்டு நிறுத்தச் செய்தான். வண்டியும் அவ்வாறே வந்து நின்றது. அப்போதுதான் கலியாண வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வீதித் திண்ணையில் பேசிக் கொண்டே படுத்திருந்தார்கள்.

கேசவன் வண்டியை விட்டு இறங்கி, விவாக வீட்டிற்குச் சென்றான். எல்லோரும் புதிய மனிதர்களாகையினால் திடீரென்று தன் விவரத்தைக் கூறத்தியங்கினான். அங்குள்ளவர்கள் "நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்? சம்மந்தி வீட்டாரைச் சேர்ந்தவர்களா, அவர்கள் அடுத்த வீதியில் இருக்கிறார்கள்." என்றார்கள்.
------
சிலருக்கு, கடித மெழுதுவதில் வெகு ஆசை. ஆனால் எவ்வித வக்கணை யுடன் எழுதவேண்டு மென்பது தெரியாமலும், இடம், காலம், மனிதர் முதலிய எதையும் கவனியாமலும் தோன்றினவாறெல்லாம் எழுதி விடுகி றார்கள். அதனால் சில சமயம் நிலைமையுண்டாய் விடுகின்ற தென்பதை அவர்கள் அறிவதில்லை.
----

கேசவ:- சம்மந்தி வீட்டுக்கு வரவில்லை. இந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாளைப் பார்க்க வந்தேன். அவர்கள் இங்கிருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து கூப்பிடுங்கள் - என்றான். இதைக் கேட்ட அவர்கள் இங்கு வேலைக்காரி இல்லை; அவள் வீட்டிற்குப் போய் விட்டாள். அவள் விடியற்காலந்தான் வருவாள். ஆகையினால் இங்கு படுத்துத் கொண்டிரும், காலையில் பார்க்கலாம்," என்றார்கள்.

கேசவன் அதற்கிசைந்து வீதித் திண்ணையில் ஒரு புறமாகப் படுத்தான். அவனுக்குத் தூக்கமே கொள்ள வில்லை. ஏதேதோ எண்ண;மிட்டவாறு படுத்திருக்கிறான். "எப்போது விடியற்கால மாகும். எப்போது தன் தாயைக் காணலாம்?" என்கிற பேராவலினால் மிக்கக் களிப்புடன் எதிர் பார்த்தபடியே கண்ணயர்ந்தான்.

நள்ளிரவு ; நடுநிசி. மணி சுமார் இரண்டிருக்கலாம். அச்சமயம் உட்புறத்தில் பெண்கள் படுத்திருக்கும் இடத்தில் அபாரமான கூக்குரல் உண்டாயது. "ஐயோ! ஐயோ! திருடன்! திருடன்! பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று உண்டான சத்தத்தைக் கேட்ட எல்லோரும் கண் விழித்துக் கொண்டு "எங்கே! எங்கே! எங்கே திருடன் !" என்று கூவிக்கொண்டே விளக்குகளைக் கொளுத்திக் கொண்டு நாற்புறமும் தேட வாரம்பித்தார்கள்.

வீடு பூராவும் தேடியலைந்தார்கள்; ஒருவரையும் காணவில்லை. பெண்கள் எல்லோரும் தங்கள் நகைகளைக் கவனித்துக் கொண்டு "ஐயோ என் சங்கிலியைக் காணவில்லை, என் சரடு காணவில்லை. என் ஒட்டியாணம்....என் ஐடைபில்லை.... என் ஜடைபில்லை, என் ராக் கடி.... காசுமாலை.... வைரமாட்டல்... வைரக்கம்மல்.... ஐயோ! குழந்தை யின் கைவளையல்கள், கொலுசு, வெங்கி; ஒன்றும் காண வில்லையே!" என்று பலபேர் பலவிதமாகக் கூக்குரலிட்டுக் கத்தினார்கள்.

---------
பத்து மாதம் சுமந்து பலவித கஷ்டங்களுக்காளாகிப் பெற்று அதிக வாத்ஸல்யத்துடன் வளர்க்கும் குழந்தையாயினும், தான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கையில் அக் குழந்தை ஏதாவது தடை செய்தால் தன்னை யறியாது கோபமும் வெறுப்பும் முதலில் பொங்கி, அப்புறமே சாந்த முண்டாகின்றது போல, சில சமயங்களில் நமது உறவினர்களாலோ, சிநேகி தர்களாலோ ஏதாவது ஒரு காரியத்திற்கு இடைஞ்சல் ஏற்படின் மேற்கண்ட உணர்ச்சிகள் நம்மை யறியாது உண்டாகின்றன.
---------

வீதியில், பெருத்த கலாட்டா நடப்பது போலப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். ரயிலில் வந்த அலுப்பினாலும், மனத்தில் கொண்டிருந்த கவலையினாலும் நமது; கேசவன் தன்னையறியாது தூங்கி விட்டதால் இந்த கலபையில் கூட கண் விழிக்க வில்லை. வீதியிலேயே பலமாகப் பேசிக் கொண்டு தாறுமாறாக ஓடியலைந்த சத்தம் கேட்ட பின்னர் விழித்துக் கொண்டு எழுந்தான்; என்ன விஷயம் இங்கு நடந்த தென்பதே அவனுக்குத் தெரியாதாகையினால் தலையணையாக வைத்திருந்த தன் மேல் துணியை எடுத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

அவ்வாறு துணியை எடுக்கையில் அதனடியில் இருந்த ஒரு சிறிய மூட்டை பொத்தென்று கீழே விழுந்து, முடிச்சு அவிழ்ந்து அதனுள்ளிருந்த நகைகள் பிரகாசமாய்ச் சிதறின. அப்போது அருகிலிருந்தோர் அவைகளைக் கவணித்தது போலவே நமது கேசவனும் "இதென்ன நகைகள்!" என்று திடுக்கிட்டான். நகை களைக் கண்டதுதான் தாமதம், அருகிலிருந்தவர்கள் "ஆ! இதோ! இதோ! நகைகளுடன் கள்ளன் அகப்பட்டுக் கொண்டான்.'' என்று கூச்சலிட்டுக் கொண்டே கேசவனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். உடனே எல்லோரும் அவ்விடத்தில் வந்து சூழ்ந்து கொண்டு, நகைகளையும் எடுத்து வைத்துக் கேசவனைக் கெட்டியாகப் பிடித்து வளைத்துக் கொண்டு "அடேப் திருட்டுப் பயலே! இப்போ தல்லவோ உன்னுடைய மோசம் தெரிகின்றது. "வேலைக்காரி இருக் கிறாளா!' என்று வேஷம் போட்டுக் கொண்டு பெரிய மனிதன் போல வந்து இத்தகைய வேலையைச் செய்ததுமல்லாமல், பரம யோக்யன் போன்று நிம்மதியாக இத்தனை நாழிகை பரியந்தம் படுத்துக் கொண்டிருந்து மெல்ல நழுவிவிட நினைத்தாயோ! அடேய் திருட் டுப் பயலே!" என்று கண்டபடிப் பேச வாரம்பித்தார்கள்.

ஒரு பாபமும் அறியாத நிரபராதியான கேசவன் தீயை மிதித்தவன் போலத் துள்ளினான். "ஹா! கடவுளே! இதென்ன சோதனை! ஒரு குற்றமும் மனத்தினாலும் எண்ணியறியாத எனது தலைமீது இவ்வித பேரிடி போன்ற அபாண்டத்தை இடித்து விட் டாயே!....ஐயா ! ....இதென்ன அக்ரமம்! நான் ஒரு பாபமும் அறிய மாட்டேன். இங்கு நான் உண்மையில் வேலைக்கார அம்மாளைக் காண்பதற்கு வந்தேன்.வந்த விடத்தில் அவர்கள் இல்லாமையினால் இங்கு படுத்துக் கொண்டேன். அதுதான் எனக்குத் தெரியும். மற்றபடி நான் ஒருவித குற்றமும் அறியேன். கடவுள்மீது ஆணை யாக நான் நிரபராதி. வீணே மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகளைக் கூறாதீர்கள். இந்த நகைகளை யாரோ வேண்டுமென்று என் தலைமாட்டில் கொண்டு வைத்திருக்கிறார்கள்" என்று கூறினான்.

அது கேட்ட மற்றையோர், "போடா போக்கிரி நாயே! திருட்டுக் கழுதைகளெல்லாம் தான் தப்பித்துக் கொள்ளும் வழியைக் கூறாமல், நான் திருடினேன் என்று சொல்வார்களா! வேண்டு மென்று உன் தலைமாட்டில் நகையைத் திருடி வைத்தார்கள்!! சீச்சீ! திருட்டு நாயே! பாரும் கவனியாமல் மூட்டையை அமுக்கிக் கொண்டு போகும் எண்ணத்தோடு வெகு சாதுவைப் போல இத்தனை கூக்குரல் அமர்க்களத்திலும் வாய் திறவாது உறங்குகிறவன் போல நடித்ததை உன் மூட்டையே வெளியாக்கிவிட்டது. மூட்டையைக் கவனித்துவிட்டதால் நீ ஆணையும் செய்து தப்பிக்க வழி செய்வாய்; அதற்கு மேலும் பேசுவாய். பாம போக்யன் போல வேலைக்காரியைத் தேடிக் கொண்டு வந்த திருட்டுப் பயலல்லவா நீ! என்று தாறுமாறாகக் கூறுகையில் ஒருவன் ஓடிச் சென்று போலீஸ் சேவகனை அழைத்து வந்து விட்டான்.

---------
சிலர் தங்கள் ஆகாரம், நியமம், நிஷ்டை முதலியவற்றை ஒரு வாம்புக் குட்படுத்த முயன்று அவ்வாறு செய்தும் விடுகின்றார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் என்னும் பேயின் வசப்பட்டுவிடின் எல்லாம் கோணலாய் விடுகின்றன. தூக்கத்திற்கு அடிமையாகாமல் அதைத் தன் வயப்படுத்தினாஅல்லது எந்தக் காரியத்திலும் சித்தி பெற இயலாது.
--------

அங்கு வந்த போலீஸ் சேவகன் கேசவனைப் பிடித்துக் கொண்டு விறைக்கப் பார்த்தான். இதற்குள் கேசவன் தாங்கமாட்டாத துயரத்தோடு 'ஐயோ! அனியாயமே! அக்ரமமே! இவ்விதம் பழி சுமத்துவது தருமமா! பாவிகளே! எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு வேண்டுமென்று என்னை இவ்விதம் பழிக்குப் பாத்திரமாக்குகின்றீர்கள்! நான் ஒரு பாபமும் அறியாதவன். நான் யாரென்பதை யறியாது இவ்விதம் தாறுமாறான வார்த்தையை உபயோகிக்கின்றீர்கள். என்னுடைய பெயரைத் தமிழுலகமே அறி யும், நற்குண நாடக சபையில் நடிக்கும் கேசவன் நான்தான் என்பதை அறியுங்கள்; பொன்னுசாமியினுடைய புகழை, அவர் செய்துள்ள தர்மங்களின் கீர்த்தியை நீங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள். அவருடைய சிஷ்யனாகிய நானா இத்தகைய ஹீனமான வேலை செய்வேன் என்பதை நினைத்துப் பாருங்கள். இதோ இக் கடிதம் எனக்குக் கிடைத்தது. என் தாயாரைக் காணக் கூடிய பேராவலோடு நான் வந்தேன். ஐயா! போலீஸ் உத்யோகஸ்தரே! நீரேனும் இதைச் சரியாகப் படித்துப் பாரும்.'' என்று வெகு வீராவேசத் தோடு கூறி, கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதத்தை வாங்கிப் படித்த சேவகன், கேசவனின் சரிதையை விசாரித்தறிந்து கொண்டான். பிறகு வீட்டுக்காரர்களை நோக்கி "ஐயா! இவ் வீட்டு வேலைக்காரி எங்கே? அவளையும் விசாரித்துப் பிறகு நான் சொல்கிறேன்" என்றான். வீட்டுக்காரன் வேலைக்காரி வீட்டிற்கு ஆளையனுப்பி அவளை அழைத்துவரச் செய்தான். அவளைப் போலீஸார் விசாரித்ததில் கேசவனுக்கும் அவளுக்கும் ஒரு விதமான சம்பந்தமும் கிடையாதென்று விளங்கி விட்டது.
-------
சில பிச்சைக்காரர்களைக் காண்கையில் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று கை தானாக ஜோபிக்குள் செல்கின்றது; ஆனால் அதே க்ஷணத்தில் மனமானது அதைத் தடுத்து கையை விலகச்செய்துவிடுகின்றது. இரண்டும் ஏகோபித்து பணத்தை எடுப்பதற்குள் பிச்சைக்காரர்கள் வேறிடம் சென்று விடுகிறார்கள்.
-------

அவ்வாறு விளங்கியதும் கேசவன் திடுக்கிட்டான். உடனே போலீஸ் சேவகன், "ஓகோ! இப்போது தெரிகின்றது. நீ ஒருக்கால் அகப்பட்டுக் கொண்டால் இக் கடிதத்தைக் காட்டித் தப்பித் துக் கொள்ள வழி செய்யலாம் என்று இதை முன் கூட்டியே எழுதி வைத்திருக்கிறாய். இதில் கண்டபடி ஒரு விஷயமும் நிஜமல்ல என் பதை நன்றாகத் தெரிந்து கொண்டாய் விட்டது. நீ நாடகத்தில் நடிப்பவனாய் இருக்கலாம். பொன்னுசாமியின் சிஷ்யனாயுமிருக்கலாம். எப்படி இருப்பினும் நீ இதோ கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்டிருப்பதிலிருந்து தப்ப முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் ஒரு கிழவி, "ஐயோ! யம்மாடி! யப்பாடா! என் போதாக் காலத்திற்குத்தான் விஷயம் இப்படி என்று தெரியாமல் ஒப்புக் கொண்டேன். அடே பாவி! நீ திருடன் என்று தெரியாமல் போயிற்றே! அடே சண்டாளா! என்னைச் சந்தியிலே இழுக்க வாடா பார்த்தே! நானு தெய்வமேன்னு கிடக்கறேன்....

ஐயா! போலீஸ்கார ஐயா! நான் ஒரு பாபமும் அறியமாட்டேன். நானு இந்த வீட்டில் கல்யாணத்துக்காக வேலை செய்ய வந்திருக்கிறேன். பத்துப் பாத்திரங்கள் தேய்த்து வைத்துவிட்டு வீட்டிற்குப் போய் படுத்துக்கொண்டேன். வேலை செய்த அலுப்பினால் தூங்கி விட்டேன். நடு நிசியில் தூக்கம் விழித்தது. அப்போது இந்தப் பாவி என்னருகில் வந்து "ஆயா! இந்த மூட்டையை வைத்துக் கொண்டிரு; நான் காலையிலே வாங்கிக்கிறேன்" என்றான். எனக்குத் தூக்கக் சலக்கத்திலும், இருட்டிலும் ஒன்றும் தெரிவில்லை; இவன் தோட் டக்காரன் என்று எண்ணி 'பக்ஷண மூட்டையா?' என்றேன். 'ஆமாம். வைத்துக் கொண்டிரு; அவுக்காதே" என்றான். 'சரிதான்' என்று நினைத்து வாங்கி தலைபின் கீழே வைத்துக் கொண்டு படுத் தேன்; இப்போ கண்ணை விழித்துக் கொண்டு பார்த்தால் திருட்டு சமாச்சாரம் கேள்விப் பட்டேன். மூட்டையில் பார்த்தால் நகைகள் காணப் பட்டன. பக்ஷணமில்லை அப்போதே என் வயிற்றில் இடி இடித்தது; ஒடி வந்தேன். இந்த கம்மனாட்டித் தடியன் செய்த வேலை இது," என்று பெரிய ராமாயணம் போலப் பேசிக் கொண்டே வந்து நகை மூட்டையை போலீஸ்காரனிடம் கொடுத்தாள்.

-------
ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து விவரமாகவும் உருக்கமாகவும் எழுதவேண்டுமென்று பல நாட்களாகக் கோடிப்பது; ஆனால் அதைக் கடைசி தினம் வரையில் தாமதப் படுத்திப் பிறகு அதிக அவசரத்தில் அரை குறையாக எழுதி திருப்தியில்லாமல் முடித்துவிடவேண்டி வருகின்றது.
--------
இந்த சம்பவம் சேசவன் மனத்தை ஈட்டி போலக் குத்தியது. கோபம் பொங்கி எழுந்த பார்வையுடன் “அடீ சண்டாளீ! உன் முகத்தையேனும் நான் பார்த்தேனா! பைசாசமே! நீ யாரோ! உன்னை நான் பார்த்தது மில்லையே! நீதான் இத்தனை நகைகளையும் திருடி என் தலைப் பக்கத்தில் பாதி நகைகளை மூட்டையாகக் கட்டிப் போட்டுவிட்டு நீ மிச்ச நகைகளை வைத்துக் கொண்டு வேண்டு மென்று இவ்வித சதி செய்திருக்க வேண்டும்! நான் என் தாயாரைக் காண வேண்டி இவ்விடம் வந்த நிரபராதி என்பதைக் கடவுள்தான் அறிவார்! சீச்சீ! துஷ்டையே! பழி சுமத்தாதே. இத்தனை வயதை விழுங்கிவிட்டு மதியற்ற முண்டமாகப் பேசுகிறாயா!" என்றான்.

இதற்குள் அருகிலுள்ளோர்கள் "ஐயோ பாவம்! கிழவியை ஏன் திட்டுகின்றாய்! அவன் உண்மையில் திருடி இருப்பின் அவளாக நகைகளைக் கொண்டுவந்து தாக்கல் செய்வாளா! மேலும் இக் கிழவி இவ்வூரிலேயே இருக்கிறவள். இவளை வெகு நாட்களாக நாங்களறிவோம். இவள் வெகு நல்லவள். இவள் அத்தகைய வேலை செய்யமாட்டாள்.'' என்று கூறினார்கள்.

கிழவி "அடே படுபாவி ! நீ செய்த வேலை ஜெரிப்பதற்கு என்னையும் துணைக்கு இழுக்கின்றாயா! சீச்சீ! உன் திருட்டுத் தனத்தைச் செருப்பாலடிக்க; நீ பெரிய யோக்யனன்று, ஐயா! போலீஸ்காரரே! நான் இதை உண்மையில் பக்ஷண மூட்டை என்று தான் எண்ணினேன்; அதோடு தூக்கக் கலக்கத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை; இந்த திருடன் சொல்கிறதைக் கேட்காதீர்கள்! இவன் தன் அம்மாளைத் தேடுவதாயும், அக்காளைத் தேடுவதாயும் பொய் சொல்லிக் கொண்டு நகைகளைத் திருடவே வந்திருக்கிறான்." என்றாள்.

---------
ஒரு வேலையை அவசரமாகச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் அதில் அநுபவமும் அக்கரையுமில்லாதவர்களிடம் கொடுத்துவிட்டுப் பிறகு அவர்கள் சரியாகச் செய்யவில்லையே, அதனால் நஷ்டமுண்டாய் விட்டதே!" என்று வருந்துவதில் பயன் யாது? சற்று நிதானமாயினும் நம்பிக்கை யுடையவரிடம் வேலை வாங்குவதுதான் உத்தமம்,
------

இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது. கேசவனை நோக்கி போலீஸா கேசவனை நோக்கி "ஐயா! நீங்கள் தற்போது குற்றவாளி தான்" என்று பலவித சாக்ஷிகளுடன் நகையும் கையுமாகப் பிடிபட்டிருப்ப தால் நாங்கள் உம்மை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம். உங்களுடைய குற்றமற்றத் தன்மையை நீர் நிரூபிக்கும் பரியந்தம் நாங்கள் எங்கள் கடமைப்படிக்கு உம்மை ஜெயிலில்தான் வைத்திருப்போம். இந்த நகைகளின் மொத்த மதிப்பு ஆறாயிரம் ரூபாயிக்கு மேலிருக்கும். ஆகையினால் இது சாமானிய சில்லரைத் திருட்டல்ல! உம்மை நாங்கள் கைதியாக்கி விட்டோம்." என்று கூறி அவனுடைய வார்த்தையைச் சற்றும் எதிர் பார்க்காமல் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தோ! மகா உத்தமனும், பரம சாதுவுமான கேசவனின் மனம் படும் பாட்டை நாம் விவரித்து எழுதுதல் சாத்யமாகுமா! கோபாக்கினி ° ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிகின்றது. "இது வேண்டுமென்றே யாரோ செய்த சதியாலோசனை தான்!'' என்பது நன்றாக விளங்கிவிட்டது. விசனம் தாங்காது அவன் மூர்ச்சையானான்; பின்னர் தெளிந்து எழுந்தான். "ஹா! கடவுளே! உன்னை நம்பிய எனக்கு இந்த தண்டனையையும் படாப்பழியையும் நீ கொடுப்பது தருமமா! ஐயோ! நான் ஒன்று நினைத்தால் நீயொன்று செய்து விட்டாயே! என் அன்னையைக் கண்டு களிக்கும் பேராநந்தத்துடன் என்னை வரச்செய்து தீராத ஆபத்துக்கு இலக்காக்கிவிட்டாயே! திருடன் என்கிற அவமானத்தை எனக்குப் பகுமானமாய்க் கொடுத்துவிட்டாயே! என் செய்வேன் சர்வேசா!" என்று முட்டிக் கொள்கிறான்.

------
வயது முதிர்ந்த சிலர் தங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கக்கூடிய சில காரியங்களைத் தாங்களே செய்வதற்கு அஞ்சியோ சங்கோஜப்பட்டோ சிறியவர் களைச் செய்யச் சொல்லித்தாம் இன்புறுவது. ஆனால் அதன் பலனாக அவர்கள் மிரட்டப்படுகையிலோ தண்டிக்கப்படுகையிலோ தாங்கள் அதில் சம்பந்தப்படா தவர்கள்போல நடந்துகொள்வது; இதுவும் ஒரு கெளரவம்போலும்.
-----

போலீஸ் அதிகாரியை அழைத்து "ஐயா! நான் நிரபராதி, என்னை மோசமாக யாரோ வரவழைத்து இந்த கதிக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். ஆகையினால் இந்த அனியாய தகவலை என்னுடைய எஜமானருக்கு முதலில் தந்தி கொடுத்து வரவழைக்கவேண்டும். நான் நிரபராதி என்பதை நிரூபிக்காமல் தண்ணீரும் குடிப்ப தில்லை என்கிற விருதம் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன். எனக்கு விவாகத்திற்கு நாள் வைத்திருக்கிறது.. இன்னும் 15 நாட்கள்தான் இருக்கின்றன. இத்தருணத்தில் வேண்டுமென்றே என்னை இக்கதிக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே யாரோ செய்திருக்கிறார்கள். ஆகையினால் உடனே அவர் விலாசத்திற்குத் தந்தியடியுங்கள்; இந்த உபகாரமேனும் செய்யுங்கள்." என்று வேண்டினான்.

அந்த அதிகாரி அதற்கிசைந்து பொன்னுசாமிக்கு இவ்விஷயத்தைத் தந்தியடித்தார். பொன்னுசாமி பரிமளாவுக்கு விவாக பூஷணமாய்க் கொடுக்க வைர நெக்லேஸ் செய்வதற்கு வைரங்கள் பொறுக்கிக்கொண்டு இருக்கையில் இந்தத் தந்தி வந்தது, பொன்னுசாமி தந்தியை உடைத்துப் பார்த்ததும் தன்னையறியாது "ஹா! மோசம்!" என்று கத்திக்கொண்டே கல்லாய்ச் சமைந்தான்.

இந்த விபரீதமான செய்தியைக் கேட்ட வைரக்காரன் விசன முற்று வைரத்துடன் வீடு சேர்ந்தான். "ஐயோ! அனியாயமே! இங்குள்ள எதிரிகள் இங்கு வேலை செய்து பலிக்காமையினால் இவ்வித மோசமும் செய்துவிட்டார்களே! கேசவா! ஒண்டியாக அங்கு அகப்பட்டுக்கொண்டாயே! அன்னையைக் காண்பதாக அன்பு வலையை வீசி அதில் சிக்கவைத்து விட்டார்களே! இதைப் பரிமளா அறிந்தால் உயிர்துடிப்பாளே! ஐயோ! அனிபாயமே!" என்று பொன்னுசாமி தனக்குள் முட்டிக்கொண்டான். உடனே எழுந்து நாயுடுவுக்கு டெலிபோன் செய்து அவரை வரவழைத்தான்.

-------
சிலர் தங்கள் சாமானை விலையாக்குவதற்காகக் கும்பலில் கூடியுள்ளவர்களில் யார் யாருக்கு எந்தெந்த பெயரைக்கேட்டால் ஒரு உணர்ச்சி ஏற்படுமோ அந்தப் பெயர்களையெல்லாம் ஒரு பொருளுக்கிட்டு அவர்களை மயக்கி விலையாக்கு- கின்றார்கள். இது ஒரு வியாபாரதந்திரம்
------

நாயுடுவும் வந்து இந்த விபரீதமான விஷயத்தைக் கேட்டு உள்ளம் துடித்தார்........"ஐயா! நான் ஊரிலில்லாத சமயம் பார்த்துத்தான் இந்த காரியத்தை எவனோ வேண்டுமென்று செய்திருக்கிறான். இதில் சற்றும் சந்தேகமே இல்லை. அக்கடிதமும் அவன் கையிலேதான் இருக்கின்றது. சரி; நாம் உடனே புறப்படுவோம். இவ்விஷயத்தை பரிமளாவுக்குத் தெரிவித்தால் மிக்க விசன மடைந்து தானும் வருவதாதத் தொந்தரவு செய்வாள். தெரிவிக்காவிடிலோ பத்திரிகையில் அறிந்து பரம வேதனையடைந்து நம்மையும் காணாமையினால் என்னவித மாறுதலை யடைந்துவிடுவாளோ! ஆகையினால் இதை அவளிடம் கூறித் தைரிய மொழிகள் சொல்லிவிட்டுத்தான் நாம் செல்லவேண்டும். ஆகையினால் வாருங்கள்; பரிமளாவின் வீட்டிற்குச் செல்வோம்" என்றார். உடனே இருவரும் பரிமளவல்லியின் வீட்டை அடைந்தார்கள்.

இந்த விபரீதமான விஷயத்தை யறியாத பரிமளா இருவரையும் சந்தோஷத்துடன் வரவேற்றான். பிறகு பொன்னுசாமியின் மனத்துயரத்தை முக மாறுதலினாலறிந்து கொண்ட பரிமளா "தந்தையே! இதென்ன முகம் ஏதோ ஒருவகையான மாறுதலடைந்திருக்கின்றது! அதோடு சுண்களும் நீரை உதிர்க்கின்றனவே! விஷயமென்ன?" என்று பரபரப்புடன் கேட்டாள்.

நாயுடு:- பரிமளா! நீ நல்ல புத்திசாலி; சாமர்த்தியசாலி. உனக்கு அதிகம் சொல்ல வேண்டியது எதுவுமே இல்லை: கடவுள் ஒரு மனிதரைப் பிறப்பிக்கின்றார்: அவ்வாறு பிறப்பித்தால் அவர்களுக்கு சுகமும் துக்கமும் கலந்து சரிசமமாகப் பங்கு செய்துதான் வைக்கின்றார். சுகம் வரும்போது அதிகமாய்ப் பொங்கிவிடலாகாது; துக்கம் வரும்போது அடியோடு இடிந்துவிடலாகாது. ஆகையினால் இச்சமயம் நீ எங்களைவிட அதிக தைரியசாலியாயும், நம் பிக்கையுடனும் இருக்கவேண்டும். சற்றும் அதைரியமோ, மனத் தாங்கலோ அடைவது கூடாது.
------
நாம் ஒருவரைப் பிரிந்திருக்கையில் அவர்களிடமிருந்து கடிதம் வரவில்லையே என்று மனக்கவலை யடைவதுடன் அவர்களைப்பற்றி குறைகூறுவது. பிறகு நேரில் விசாரிக்கையிலோ அவர்கள் முன்னதாகவே எழுதினதாகவும் அதற்குப் பதில் வரவில்லையேயென்று அவர்கள் கஷ்டப்பட்டதாகவும் அறிகின் றது. நடுவிலுள்ளமனிதர்களால் இரண்டு பேருக்கும் மனக்கஷ்டம் நேருகின்றது.
------

பரிமளா :- நாயுடுகாரு! என்ன இது பெரிய பீடிகை போடுகின் றீர்களே! எனக்கு விஷயம் ஒன்றுமே விளங்கவில்லையே! கடவுளின் சிருஷ்டியும் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் சமத்வம்தானே; விஷயத்தை விளங்கக் கூறுங்கள்.

நாயுடு:-அவசரப்படாதே. இதோ இந்த தந்தியை நீயே படித்துப்பார்; பார்த்ததும் பதறாதே. இதில்தான் உன் மனோ வலிமையின் உறுதியைக் காணவேண்டும். கடவுள் இருக்கிறார். அவர் கிருபையில் யாதொரு குறைவும் வராது என்று கூறித் தந்தியைக் கொடுத்தார்.

பரிமளா தந்தி என்றதுமே திடுக்கிட்டவாறு, அதை வாங்கிப் படித்துப் பார்த்தாள். நாயுடு எத்தனை பீடிகைபோட்டு பேசி யிருந்தும் "ஹா! கேசவனுக்கா இந்த விபத்து! இத்தகைய அபாண்டப் பழி வந்தது! ஐயோ!....நாயுடுகாரு தந்தையே!" என்று ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள் நாயுடு தடுத்து "பரிமளா! என்ன இது! நான் இதுகாறும் சொல்லியதை எல்லாம் மறந்தனை போலும், நாங்களிருவரும் சொல்கிறபடியே நீ நடக்கவேண்டும். வீணாகக் கலங்காதே! அவன் நிரபராதி என்பதைக் கடவுள். அறிவார். அவர் கிருபையினால் அதைக் களைவதற்கு என்னை ஏவியு மிருக்கிறார்; ஆகையினால் நிதானி; பதறாதே. உன்னுடைய அன்பு எவ்வளவு தூரம் வேரூன்றியிருக்கின்றது என்பதை நான் அறிவேன்.இவ்விஷயத்தில் திடீரென்று பத்திரிகையில் பார்த்து என்ன நிலைமையை அடைவாயோ என்று நான் இப்போது உனக்கு முத வில் தெரிவித்தேன். இதோ இப்போதே நாங்கள் அவ்விடம் செல்கிறோம். நீ பயப்படாதே. கேசவன் நிரபராதி என்பதை நான் கட்டாயம் நிரூபிக்கின்றேன்; இது நிச்சயம். நீ எந்த விஷயத்திலும் கவலைப்படாதே. கடவுளையே நம்பு. அவரையே இடைவிடாது பிரார்த்தனை செய்துகொண்டு ஜாக்ரதையாக இரு. எனக்கு ஒருவிதமான ஆபத்துமில்லா திருக்கும்பொருட்டு இங்கு என் ஆட்களைக் காவல் வைத்துச் செல்கிறேன்; இவ்விடத்திலும் ஏதேனும் விஷயம் உனக்குத் தெரிந்தால் ஜாக்ரதையாகக் கவனித்துக்கொள். உன் சாமர்த்தியத்தால் நீ உன்னைக் காத்துக்கொள், கண்ணீர் விடாதே!

-------
நமக்குக்கிடைத்துள்ள நேரத்தைக் கொஞ்சங்கூட வீணாக்காமல் உலக விஷயங்களைப் பற்றிக் கூடியமட்டும் விசாரித்தறிந்துகொள்ளவேண்டும். அஃதில்லா விடில் சில சமயங்களில் ஒரு சிறிய விஷயத்தைப்பற்றி அறியாதிருத்தலால் ஒரு நாள் முழுதும் வீணாகிவிடுவதோடு எல்லாக் காரியங்களும் கெட்டுவிடுகின்றன.
---------
பொன்னு:-கண்ணே! பரிமளா! என் மன நிலைமையில் எனக்குப் பேசவுங் கூடவில்லை. வெண்ணெய் திரளும் சமயம் தாழி உடை வது போல உங்கள் கல்யாண சமயத்தில் இத்தகைய கஷ்டம் வந்து விட்டது. நமக்கு நாயுடு இருக்கையில் யாதொரு குறைவுமில்லை. நீ பயப்படாதே. வருத்தப்படாதே, தைரியமாயிரு. நாங்கள் சென்று வருகிறோம்.

பரிமளா:- என் தந்தையே! நாயுடுகாரு! நீங்கள் சொல்லியது போலவே நான் தைரியமாக இருக்கிறேன். இந்தப் பழி நீங்குமா! கேசவன் விடுதலையடைந்து விடுவாரா!.... தங்களுடன் நானும் வருகி றேனே, அவ்விடம் வந்து அவரைப் பார்த்துவிட்டு உடனே திரும்புகிறேன். என்னையும் அழைத்துச் செல்லலாகாதா!

நாயுடு:-பரிமனா! நீ என்ன விஷயமறியா தவளைப்போலப் பேசுகின்றாய். நீ இச்சமயம் அங்குவருவது கூடாது, நாங்கள் சென்று காரியத்தைக் கவனிக்கவேண்டும், நேரமாகிவிட்டது. உனக் குத் தேறுதல் கூறத்தான் நாங்கள் வந்தோம். ஆகையினால் அகக் கண்ணால் கேசவனைப் பார்த்துவிடு. தடுக்காதே! நாங்கள் சென்று கடிதம் எழுதுகிறோம்.-என்று கூறிவிட்டு இருவரும் விடை பெற் றுச் சென்றார்கள்.

--------
ஒரு காரியத்தில் இறங்கினால் 'அதில் ஐயமுண்டாகுமோ ஆகாதோ என்று ஐயப்பட்டுச் சமயத்தில் பின் வாங்குவதைவிடக் கேவலமானது வேறொன்று மில்லை. அதைவிட முதலிலேயே அதில் ஈடுபடாமலிருப்பது கௌரவமானது.
--------
பரிமளாவோ கூறவியலாத விசனத்துடன் எண்ணாததும் எண்ணி ஏக்கங்கொண்டு "கேசவனை மீண்டும் முன்போலக் காணப் போகின்றோமா!" என்று மனம் உடைந்து விட்டாள். அவளுடைய தாயாரும் சகோதரியும் அவ் விஷயத்தைக் கேட்டு விசனித்தார்கள். "என் மனோராஜ்யமெல்லாம் வீணாகி விட்டதே! குழந்தையைச் சந்தோஷமாக திருமணக் கோலத்துடன் கண்டு களிக்க எண்ணிய எண்ணம் வீணாயிற்றே! ஐயோ! கேசவனா இத்தகைய காரியம் செய் திருப்பான்! அவன் காலில் ஒட்டிய தூசுகூட இவ்விதம் செய்யாதே! உத்தமனென்றால் அவனுக்கன்றோ தகும்!" என்று பார்வதியம்மாள் புலம்புகின்றான்,

பரிமளா இவ் விஷயத்தினால் அன்றே சித்தம் சிதறியவன் போன்று ஆய்விட்டாள். அவள் ஆகந்தத்திற்கு ஏதோ பங்கம் வந்து விட்டதாகவே தோன்றி விட்டது. “ஆ! கடவுளே! என் அன்பனுக்கு ஒரு விதமான விபத்தும் நேராமல் காப்பாற்ற வேண்டும். மகா உத்தமன் குணசீலன் என்பதை யறிந்து நீ இத் தகைய அனியாயப் பழியை அவன் மீது சுமத்துவது தருமமா! இது உன் கருணைக்கு அழகா! அப்பனே! தீன சரண்யா! கேசவனுக்குற்ற மாசை யொழித்துக் காப்பாற்றுவாய்!" என்று வேண்டிக் கொண்டு படுத்து விட்டாள். அவளது மனத்திற்கு எவ்விதம் இருள் மயமான துக்கம் வந்து மூண்டு விட்டதோ அதே போல உலகமே இருள் மூடியவாறு அவளுக்கு ஆய்விட்டது. எந்தவிடத் தில் நோக்கினும் கேசவனின் முகம் சோகத்தினால் வாடி வதங்கிக் கண்ணீர் பெருக நிற்பதாகத் தெரிகின்றது. இத்தகைய கோரமான நிலைமையில் அன்று பொழுது போயிற்று.

எப்போது தனக்குக் கடிதம் வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தாள்: மறுநாள் பிற்பகல் பரிமளாவின் அறையில் விசனமே வடிவமாய் உட்கார்ந்திருக்கையில் வேலைக்காரி வந்து "அம்மா! யாரோ ஒருவர் தங்களுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டுமாம். அதற்காக வந்திருக்கிறார். கேசவன் விஷயம் என்றும் சொல்லச்சொன்னார்" என்றாள்.

--------
அவசியமான சில விஷயங்களைப்பற்றி ஒருவருடன் பேசுவதற்காகச் சென்றும் சமயத்தில் முக்கியமானதை மறந்துவிடநேருகின்றது. மறதியே நமக்குப் பெரும் எமனாகின்றது. அதற்காக எப்பொழுதும் பேசவேண்டிய விஷயங்களைப்பற்றி முன்னதாகவே ஒரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்வது அதியவசியமாகும்.
--------

இது கேட்ட பரிமளா கேசவன் விஷயம் என்றதும் மிக்க களிப்புற்று நாயுடுவின் ஆளாகவிருக்கு மென்று தனக்குள் தீர்மானித்து "உள்ளே வரச்சொல்லு" என்றாள். உடனே வெகு ஆடம்பரத்துடனும் படாடோபமான அலங்காரத்துடனும் ஓர் உல்லாச புருஷன் அவ்வறையில் நுழைந்தான். பரிமளா விசனமே உருவான பதுமையைப்போல தலைவிரிகோலமாக விருந்தாள். இந்த ஆடம்பர அலங்காரத்தையும், ஒய்யார நடையையும் பார்த்த உடனே அவளுக்கு மனம் சப்பென்று சலித்து ஓர்விதமான வெறுப்பு உண்டாகி விட்டது. "உட்காருங்கள்'' என்று ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு கூறி "தாங்கள் யார்? கேசவன் விஷயமாக என்ன பேசவேண்டும்? அதை உடனே தெரிவிக்கலாம்" என்று முடுக்காகக் கேட்டாள்.

அது கேட்ட அந்த மனிதன் நகைத்துக்கொண்டே "பரிமனா! என்ன இது! கேசவன் விஷயமென்று கூறும்போதே இத்தகைய ஆத்திரமும், பரபரப்பும் உண்டாகின்றதே! ஐயோ பாவம்! நீ என்ன செய்வாய்! அவனிடத்தில் நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். இதோ இந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள விஷயத்தைப் படித் துப் பார்.'' என்று கூறித் தினசரி பத்திரிகையைக் கொடுத்தான்.

கேசவன் அபாண்டப் பழி பெற்றுள்ள விஷயந்தான் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் என்பது பரிமளாவிற்கு நன்றாகத் தெரியுமாதலால் அவள் அதைப்பற்றிச் சிறிதும் கலக்கமடைய வில்லை எனினும் அதுவிஷயத்தைப் பற்றி எவ்விதம் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது பார்ப்போம் என்று படிக்கலானாள்.
============= சிறந்த நடிகன் திருடனாக மாறினான் கலியாண வீட்டில் களவு
==========

---------
நாம் ஒரு காரியத்தைச்செய்கையில் அதனால் சில நிர்ப்பந்தங்களையடைய வேண்டி நேருமென்று நினைத்து அவற்றிற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்கிறோம். பிறகு காரியம் ஒரு விக்கினமு மின்றி நிறை வேறினதும் நாம் அனாவசியமாகச் சில ஏற்பாடுகளைச் செய்தோம் என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் அவ்வளவு முன்ஜாக்கிரதையுடன் இல்லாவிடில் என்ன நேர்ந்திருக்குமோ என்பதைக் கவனிப்பதில்லை.
--------

"நேற்று இரவு பசுபதி முதலியார் வீட்டில் சுமார் இரண்டு மணிக்கு ஆறாயிரம் ரூபாய் பெறுமான நகைகள் களவாடப்பட்டன. பசுபதி முதலியாரது குமாரத்தியின் கலியாணத்திற்காக அனேக ஸ்திரீகள் ஆபரணங்களுடன் வந்திருந் தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களில் பலருடை யது களவாடப்பட்டன. கள்ளன் நகைகளைக் கழற்றிய போது ஒருவர் கண்விழித்துக்கொண்டு கூக்குரலிட்டவுடன் எல்லோருமாக எழுந்து பார்த்துப் பெரிய கலபை உண்டாகி விட்டது. அந்த வீட்டுத் திண்ணையின் கோடியில் படுத்திருந்த ஒருவன் எழுந்த உடனே அவன் தலைப்பக்கமுள்ள நகை மூட்டை கீழே விழுந்தது. அப்போதே அவன் தான் கள்ளனென்று அறிந்து அவனைப் பிடித்துப் போலீஸ்காரர் வசம் ஒப்புவித்தார்கள். அவன் திருடிய நகைகளை இரண்டு மூட்டைகளாகக் கட்டி ஒன்றை தன் தலைப்பக்கமும், மற்றொன்றை ஒரு கிழவியிடமும் கொடுத்திருந்தான். கிழவி திருட்டு நகை என்றறிந்ததும் அதைப் போஸீஸாரிடம் தாக்கல் செய்துவிட்டாள். பிறகு விசாரித்ததில் அந்த திருடன் பிரபல நாடகக் கம்பெனியாகிய நற்குண நாடக சபை யின் கீர்த்தி வாய்ந்த நடிகன் கேசவன் என்று தெரிந்தது. அதன்மேல் பின்னும் ஆராய்ச்சி செய்ததில் அவனுடைய ஜீவிய சரிதையும் கிடைத்தது.
-------
நாம் ஒரு ஊருக்குச் சென்றால் அங்கு நமக்குத் தெரிந்துள்ளவர்களை யெல்லாம் ஒரு தடவை பார்க்கவேண்டுமென்ற அவா ஏற்படுகின்றது ஆனால் அவர்கள் நமது ஊருக்கு வருகையிலோ நம்மை எட்டிப்பார்ப்பதே கிடையாது. அன்பு பாஸ்பாம் இருந்தாலன்றோ விருத்தி யடையும்.
-------

அவனுடைய தந்தை வேசிக்கள்ளனாம்; குடிகாரனாம். அவ னுடைய அண்ணன் பக்காத் திருடனாம். அவன் தாயார் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிட்டாளாம். தந்தையைப் போலவும் தமயனைப்போலவும் கெடாதிருக்கும் பொருட்டு நாடகக் கம்பெணிக்காரர் நற்புத்தி புகட்டியும் பலனின்றி தனது அல்ப புத்தியினால் திருடவரம்பித்துவிட்டான். அவனைப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவனுடைய எஜமானருக்குத் தந்தியடித்திருக்கிறது. உன்னதமான கீர்த்தி யுடன் நாடக மேடையில் நடித்த மனிதன் திருடியது மிக்க வியப்பாக இருக்கிறது. மற்ற விவரம் பின்னர் வரும்”

என்று வரைந்திருந்ததைப் படித்த பரிமளா முன்னர் தெரிவித்தது போல எதுவும் பதில் பேசாது பத்திரிகையைக் கொடுத்து விட்டாள். பத்திரிகையை வாங்கிக் கொண்ட மனிதன் பரிமளா, "உன் கேசவன் பவிஷு எப்படியிருக்கிறது பார்த்தாயா! உனக்கு நான் இதற்கு முன் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றுக்கும் பதில் போடாது அலக்ஷ்யம் செய்தாய்! ஆனால் அப்போது திருட னாகத் தோன்றாத கேசவனின் நேசம் உன்னை யவ்வாறு செய்தது. இனிமேல் அந்த எண்ணம் மடியும் காலம் வந்து விட்டது. ஆதலால் தான் நான் நேரில் வந்தேன். பரிமளா! இனியேனும் என் கேள்விக்குப் பதில் சொல்லத் தடை செய்ய மாட்டாயல்லவா! மைனர் ஜமீந்தார் என்று வரைந்த பிரபு நான்தான்." என்று வெகு அட்ட காசமாய்க் கேட்டான்:

இதைக் கேட்ட பரிமளாவுக்கு அளவிட வியலாத வெறுப்பு உண்டாகி விட்டது. அவள் இந்த வார்த்தையை எதிர் பார்த்தாள். ஆகையினால் மன அதிர்ச்சி யடையவில்லை. வெகு உக்ரகத்தோடு பேசத் தொடங்கி "சீச்சி! வெளியே போ! மீசை முளைத்த ஆண் பிள்ளைகளாக உங்களை எல்லாம் ஈசன் பிறப்பித்தானே! அக்ரமப் பதரே! ஒரு பெண்பிள்ளை கடிதமெழுதாது எப்போது உதறித் தள்ளினாளோ, அதிலிருந்து மானமுள்ளவர்களாயின் மறுதரம் பேசுவார்களா! கேசவன் கதி யாதாயினும் உங்களைப் போன்றவர் களுக்கு என்ன வந்தது? இத்தகைய வார்த்தையை என்னிடம் பேச வேண்டாம்." என்று கூறிக் கொண்டே கட்டில் பக்கமாயிருந்த ஒரு பொத்தானை அழுத்தினாள்.

------
தூக்கம், மறதி இவ்விரண்டுக்கும் அடிமையாயுள்ளவர்களின் கதி அநோகதி தான். அவற்றை நமக்கு அடிமையாக்கினால்தான் காம் எந்தக்காரியத்திலும் வெற்றியடைய முடியும்.
-------

உடனே இரு வீரர்கள்'உள்ளே நுழைந்தார்கள். அவர்களிரு வரும் நாயுடுவின் கையாட்கள். உடனே ஒருவன் துப்பாக்கியை, வந்த மனிதனின் முகத்திற்கு நேரே காட்டியபடி நின்றான். மற்றொருவன் சிறிய காமராவினால் ஒரு போட்டோ எடுத்து விட்டான். அதே சமயம் பரிமளா வெகு வீரத்துடன் எதிரில் வந்து "அடேய் திருட்டுப் பயலே! இந்த இடத்தை நீ என்ன வென்று எண்ணிக் கொண்டு வந்தாய்! இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகின்றாயா, அன்றி துப்பாக்கிக்கு இரையாகப் போகின்றாயா! இந்த நிமிடத்தில் உன்னுடைய உயிர் உன் வசமில்லை; என் கையில் இருக்கின்றது. ஜாக்ரதை." என்று கூறி விட்டுப் புகைப் படம் எடுத்த ஆசாமியை நோக்கி "ஐயா! அவனுடைய ஜேபிகளில் உள்ள கடிதங்களை வெளியில் எடும்" என்று ராணிபோல ஆக்ஞாபித்தாள்.

அச்சமயம் பரிமளவல்லியின் முகத்தில் தோன்றிய வீரத் தன்மை பொருந்திய ஜாஜ்வல்யமான களையைக் கண்டு அவ்விரு வீரர்களும் பிரமித்தார்கள். அல்லி ராணியாக அவள் முன்னர் நடித்ததை அப்போது அவளுடைய தோற்றம் நினைப்பூட்டியது. உடனே அந்த மனிதன் வந்த ஜமீந்தாருடைய சட்டையிலுள்ள சகலமான பைகளையும் பார்த்து அதிலுள்ள கடிதங்களை எடுத்துப் பரிமளாவினிடத்தில் கொடுத்தான். பரிமளா அவைளைப் படித்துக் கொண்டே வருகையில் முக்கியமான கடிதங்கள் சில கிடைத்தன. அவைகளில் ஒன்று பின் வருமாறு:-
-------
இந்த காலத்தில் வெளிடம்பம் உள்ளவர்களே சுகமாகக் காலந்தள்ளுகி றார்கள். எவ்வளவு செல்வமும் செல்வாக்குமிருந்தாலும் வெளிப்பகட்டில்லா விடில் அவர்கள் பல விதமான தொல்லைகளுக் குள்ளாகின்றார்கள்.
--------

“கனம் ஐயா! நீங்கள் சொல்லியதுபோல நான் இங்கு கல்யாண வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டேன். இடம் வெகு சௌகர்யமாய் இருக்கிறது. நீங்கள் சொல்லிய படியே. அவன் தாயார் எழுதுவதுபோல எழுதி நேற்றைய தினமே தபாலில் போட்டு விட்டேன். அது போய்ச் சேர்ந்திருக்கும். இனி கவலை வேண்டாம்; என்னுடைய முதல் வேலையைச் செய்து விட்டேன். அதற்காக எனக்குச் சேர வேண்டிய மிச்சம் 500 ரூபாயை உடனே அனுப்பவும்; இல்லையேல் ஆபத்துதான்; ஜாக்ரதை!
      முத்தன்"

அதைப் படித்ததும் பரிமளாவின் ரத்தம் கொதித்தது. வீர கர்ஜனை செய்தவாறு ;"அடே சண்டாளா! நான் நினைத்த வாறே முடிந்திருக்கிறது. மோசக்காரப் படுபாவி! வீனாச காலத் திற்குத் தான் விபரீத புத்தி! சீச்சி! வெட்கங் கெட்ட சோதாப் பயலே" என்று திட்டியபடியே மற்றொரு வீரனையும் துப்பாக்கி யைப் பிடிக்கச் செய்து வேறொரு கடிதத்தைப் படிக்கலானாள்.

"ஜம்புலிங்கம்!

என்னுடைய வார்த்தையை இப்போதாவது கேட்டு நடக் கப் போகிறாயா இல்லையா! ஊரார் வீட்டுப் பெண்ணை உன் : காலில் கட்டி விட்டு நாங்கள் பெருத்த கஷ்டத்தை அடைகின்றோம். இங்கு சாப்பாட்டிற்கு மில்லாது திண்டாடுகையில் உனக்கு தினம் நாடகம் என்ன! கூத்து என்ன! உன் அனியா யத்தைக் காதில் கேட்கக் கூடவில்லை. நீ இவ்விதமே செய்து கொண்டிருந்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடப் போகிறேன். நீ செய்யும் அனியாயம் உனக்கு இப்பொழுது தெரியா விடினும் கடவுளின் முன்பு நீ ஒரு நாளைக்கு ஒப்புக் கொள்ள வேண்டு மென்பதை மறக்காதே! உன்னுடன் பிறந்த சோதரியை வயிறெரியச் செய்யும் பரிபவம் ஒன்றே போதுமானது. ஜாக்ரதை உடனே நீ இங்கே வந்து சேரு.

      இங்ஙனம்
      சோமு"

---------
தினம் பத்திரிகைகளும் புத்தகங்களும் படிப்பதால் உலக ஞானம் விருத்தி யடைவதோடு ஒன்றினின்று வேறொரு விஷயம் மனத்தில் தோன்றுகின்றது. அதோடு பல திறப்பட்ட மனிதர்களுடன் பழகி அவர்களது கடையுடைபாவனை களைக் கவனிப்பதால் உண்டாகும் ஞானம் அபாரமானது. இதை எந்தப் பள்ளி யிலும் கல்லூரியிலும் கற்க முடியாது.
--------

மற்றொன்று.

"உன்னைச் சகோதரன் என்று வாயினால் கூறவும் காத்தினால் எழுதவும் என் மனம் கூசி வெறுக்கின்றது, உடன் பிறந்தவனென்று பெயர்கொண்ட உதவாக் கட்டையே! ஆதியிலும் என்னை அடியோடு கெடுத்தீர்கள். நம்முடைய ஏழ்மை நிலைமையின் கொடுமையினால் என்னை ஒரு தனம் படைத்த கிழவனுக்குக் கொடுத்து என்னைப் பாழ்ப்படுத்தி விட்டீர்கள். கிழவனின் பொருளைக் கொள்ளை யடிக்க எண்ணியே என்னைக் கொள்ளை கொடுத்தீர்கள்! கிழவனின் பணத்தையும் கரைத் தாய்! கிழவனையும் எமனுலகம் அனுப்பினாய் இரண்டு குழந்தைகளுடன் சந்தியில் நின்ற கைம்பெண்ணைக் கலங்கச் செய்கிறாய்!

என்னுடைய சகல வாழ்வையும் பாழ்ப்படுத் தினாய்! என்னிடம் மிச்சமிருந்த சில நகைகளையும் திருடன் போல எடுத்துக் கொண்டு சென்றதுமன்னியில் அது விவ ரத்தைக் கேட்டதற்கு நிர்த்தாக்ஷண்யமாய் நல்லதங்காளைப் போல குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி நீயும் விழு' என்று கையும் மனமும் துணிந்து எழுதினாய்! அடேய் படுபாவி! உன் மனம் துணிந்தது போல உடன் பிறந்த பாசத்தினால் என் மனம் இன்னும் துணிவு கொள்ள மாட்டேனென்கிறது, இதுவே கடைசிக் கடிதம் என் வீட்டையும் அடகு வைத் தாய். அதற்கு வரி கட்ட என்னிடம் ஒரு காசும் இல்லை. வீட் டுக் கடன்காரன் வீட்டை ஏலத்திற்கு விடுவதாக நோட்டீஸ்
கொடுத்து விட்டான்; படு பாவி உன்னால் நான் உயிரிழக்கப் போகிறேன். இனி மேல் நான் தயை தாக்ஷண்யம் பார்க்கப் போவதில்லை. என்னுடைய மனம் முறிந்து விட்டது. நான் கட்டாயம் இனி மேல் உன் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்; அம்மட்டு மின்றி நீ அந்த நாடகக்காரப் பொன்னுசாமி யைக் கொலை செய்ய நினைத்திருக்கும் பாதகருடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதை நான் போலீஸாரிடம் உளவு கூறி உன்னைச் சந்தி சிரிக்கச் செய்வேன்! உன்னுடைய இந்த சதியாலோசனையை இன்றுதான் அறிந்தேன்! நீ இக்ஷணமே அதிலிருந்து விலகிக் கொள். இல்லையேல் அனியாயமாய் மாண்டு விடுவாய் ! உன்னுடைய மோசம் வெளியான விவரத்தை நேரில் தெரிவிக்கின்றேன். உடனே இவ்விடம் வந்து என் பணத்திற்கு ஓர் வழி செய். இல்லையேல் நீ அதோகதி யாவாய்.

      இங்ஙனம்
      உன் சோதரி"

---------
நெருங்கிய உறவினராயிருந்தும் நமக்கு எதிரிடையாகவே பேசி நமது பெயருக்கு இழுக்கைத்தேடி வைத்துவிட்டு, நம்மிடம் அதிக பிரீதியுள்ளவர்கள் போல சிலர் நடிக்கின்றார்கள். அப்படியிருக்தும் அவர்களுக்கு நம்மாலான உதவி ஏதேனும் செய்ய மறுக்க நமது மனம் இடந்தருவதில்லை.
---------

மற்றொரு கடிதம்

"என் ப்ராண நாதா!

இது பரியந்தம் உங்களுக்கு ஒரு கடிதங்கூட எழுதாம லிருந்த நான் இக் கடிதம் எழுதுவது கண்டு நீங்கள் வியப்புறலாம். இன்றுதான் ஒரு முக்கியமான விஷயம் தெரிந்ததால் நான் இதை எழுதலானேன். நீங்கள் அக்ரமமாக ஜெமீந்தார் என்கிற பட்டத்துடன் பரிமளாவை அபகரிக்க எண்ணி இருப்பதாக உங்கள் சினேகிதன் பாலனால் தெரிந்து கொண்டேன். அந்த அக்ரமத்திலிருந்து உங்களை விடுவிக்கும் பொருட்டும், பரிமளா யார் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டும் நான் இக் கடிதம் எழுதலானேன்.
---------
அடிக்கடி தன் வீட்டிற்கு வருபவர் சில காலம் வராவிடில் அவருக்கு என்ன அசௌக்கியமோ என்று காரணத்தைத் தெரிந்துகொள்வோமென்ற எண்ணம் முன்னகருக்குத் தோன்றாது அவரைப்பற்றி தப்பபிப்பிராயங்கொள்கிறார். பிறகு உண்மையான நிலைமையை அறிந்ததும் வருந்த நேரிடுகின்றது.
---------

எனது தாயாருடன் பிறந்த மாமன் சொக்கலிங்கம் என்பவர் மகா பரிசுத்தவானாயும், சீலராயும் இருந்தார். அவருடைய பாரியாளான பார்வதியம்மாளும் வெகு நற்குணவதியாய் இருந்து வந்தாள். அவர் மிலிடரி வேலையிலிருந்தார். கோமளா சிறு குழந்தையாக இருக்கையில், அவரது மனைவி கர்ப்பவதியாயிருந்தாள். அச்சமயம் அவர் ஓர் யுத்தத்திற்குச் சென்று சண்டை செய்யும்படியாக மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்து விட்டது. அதையவர் பார்த்ததும் இடி விழுந்தவர் போலானார். "நான் யுத்தத்திற்குச் சென்றால் இனி திரும்புவதேது! என் காலம் முடிந்து விட்டது. ஐயோ! மனைவியையும் குழந்தையையும் நடுச்சந்தியில் விட்டுவிடுகிறேனே!" என்று மிக்க விசனித்துப் புலம்பினார். அதிகாரிகளின் உத்தரவுப்படி நடக்காவிடில் உடனே கடுந்தண்டனை யடைய நேரும். ஆதலால் தன் முடிவை யறிந்தே சென்றார்; சென்றவிடத்தில் மாண்டார்.

பிறகு என் மாமி கருப்பமாயிருந்தது பெண் குழந்தையாகப் பிறந்தது. இரு குழந்தைகளுடனும் நிற்க நிழலின்றி தத்தளித்து என் தாயாரிடம் அண்டினாள். அக் காலத்தில் என் தாயார் அவள் மாமியார், மாமனாரின் ஆக்கினைப்படி நடக்க வேண்டிய நிலைமையிலிருந்த- மையினால் அவள் பயந்து நடுங்கி நடந்தாள். கொஞ்ச நாளாகியதும் என் பாட்டியும் தந்தையும் அவர்களைத் திட்டி விரட்டி விட்டார்களாம். அன்று மனத் துயரத்துடன் சென்ற என் மாமியும் இரு குழந்தைகளும் சென்றவிடம் தெரியாமல் போய் விட்டது. இன்று விவரம் விசாரித்ததில் கோமளாவென்ற பெயரை பரிமளாவென்று மாற்றிக் கொண்டிருப்பதாயும் அவள் ஏழ்மையின் கொடுமையினால் நாடகத்தில் நடித்ததாயும், அவள் மகா உத்தமி என்றும் தெரிய வந்தது. அதை அறிந்ததும் என் மனம் தத்தளிக்கின்றது. என் தாயார் தள்ளாத கிழவியாகிவிட்ட போதிலும்

-----
ஒருவரைப்பற்றி முதலில் ஒருவித நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுவிடின் அவர்கள் அதற்கு மாறாக நடந்து கொண்டாலும் ஏதோ கால வித்தியாசத்தினால் அவ்வாறு நடந்தார்களென்று சிலர் தேத்தாவு செய்துகொள்கிறர்கள். மற்றும் சிலர் அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு நடந்துகொண்டார்களென்று தங்கள் முதல் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
---------

தன் அண்ணியையும் அண்ணன் குழந்தைகளையும் பார்க்க நாளை புறப்படப் போகிறாள். நீங்கள் அவர்களை ஏதாவது செய்து பெரும் பாபத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம். அவள் சாதாரணமான நாடகக்காரியல்ல வென்பதை இனிமே தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தை நிராகரித்தால் உங்கள் கதி வெகு பயங்கரமாக முடியும். என் தாயார் அங்கு வரும் முன்னர் உங்களுக்கு இச் செய்தி எட்ட வேண்டு மென்கிற எண்ணங்கொண்டு இதை எழுதினேன். உஷார்! உஷார்!!

      இங்ஙனம்
      உங்கள் மனைவி

என்ற கடிதத்தைப் படித்ததுதான் தாமதம் பரிமளாவின் மனம் அப்போதடைந்த மாறுதலுக்கும் உணர்ச்சிக்கும் உவமை கூறவே சாத்தியமன்று! தன் பிதாவின் சரிதை தெரிந்ததனால் இன்ன தென்று கூறவியலாத நிலைமையை அடைந்து, அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். அவள் மனத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கிக்கொண்டு வெகு உக்ரத்தோடு "அடேப் அக்ரமப்பதரே! இக்கடிதங்களையெல்லாம் படித்து விஷயத்தையறிந்தபின்னரா இங்கு துர் எண்ணங் கொண்டு வந்தாய்! சீச்சி! மடையா! இப்போது இந்த முதல் கடிதத்தின் தகவல் என்ன? எனக்குத் தெரியவேண்டும். அதை விவரமாகத் தெரி வக்காவிடின் உன்னுயிர் போய்விடும். என்னைச் சாமான்ய நாடகக் காரி என்ற துர் எண்ணங்கொண்டல்லவா நீ இந்தவிடத்திற்கு வந்தாய்! நான் நாடகவேடந்தாங்கி நடிப்பதுபோலவே உன்னைக் கொன்றுப் போடுகின்றேன். கேசவனை இத்தகைய குற்றத்தில் சிக்க வைத்ததற்கு நீதான் காரணம் என்பது இக்கடிதம் விளக்கிவிட்டது. உண்மையைக் கூறு" என்று ஒரு விழி விழித்தாள்.

------
சிலர் பாடவேண்டுமென்ற ஆசையினால் தங்கள் காதால் கேட்டதை, பதங்களும் உச்சரிப்பும் சரியாக இருக்கின்றனவா என்பதைக் கொஞ்சமும் கவனி யாது, தமக்குத் தோன்றியவாறு இழுக்கிறார்கள். இதனால் அந்த பாட்டிற்கே அகெளரவம் ஏற்படுவதைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை.
-----

முதலில் மிக்க தடதடலான உற்சாகத்துடன் வந்தவன் அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவத்தினால் நடுநடுங்கி விலவிலத்துப் போய்விட்டான். அவன் உயிர் முக்கால் பாகமும் போய்விட்டதென்று கூறலாம்; துப்பாக்கியைப் பார்த்தவுடனே தலை தொங்கி விட்டது. இந்நிலைமையில் பரிமளாவின் மனோ உறுதியையும் வீரதீர பராக்கிரமத்தையும் கண்டு பிரமித்தான். அவளுடைய கேள்விகளும், அதிகார தொனியும் அவனைக் கலக்கிப் பயமாகிய சாகரத்திலாழ்த்தின. ஆகையினால் அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தத்தளித்தான். பிறகு தன்னுயிர் நிலைக்க வேண்டு மென்கிற பயத்தினால் பரிமளாவின் முகத்தைப் பரிதாபகரமாக நோக்கினான். தன்னுடைய கேவலமான நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டான். "சீச்சீ! இந்த அநியய காரியத்திற்கு உடந்தையாகிவிட்டோமே!" என்று வருந்தியவாறு பரிமளாவை நோக்கி "அம்மணி! நான் செய்தது தப்பிதந்தான்; என்னை விட்டுவிட வேண்டும். இது என்னுடைய குற்றம் மட்டுமல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ளவரின் பெயரைக் கூறினால் நீங்களே நம்பமாட் டீர்கள்; அவரால் நாங்கள் கெட்டோம். நான் உண்மையைக் கூறிவிடுகிறேன். தாங்கள்மட்டும் தனித்திருக்கையில் அதை வெளியிடுகிறேன்"

பரிமளா-ஒகோ! இனி உன்னுடைய விஷயத்தில் ரகஸ்யம் வேறு வேண்டுமா!........ சரி; வீரர்களே! இவனை இவ்வறையிலேயே போட்டுப் பூட்டிவிடுங்கள்! என் எஜமானரும் நாயுடுவும் வந்தபிறகு தான் இவனை விடவேண்டும்; ஜாக்கதை.- என்று கூறி அவனை அவ் வறையிலேயே போட்டுப் பூட்டிவிட்டாள்.
-------
ரயில், மோட்டார் முதலியவற்றில் போகும் போது அந்தந்த கட்டணத்திற்கு வேண்டியதைச் சில்லரையாக வைத்துக்கொள்வதே உசிதம். இல்லாவிடில் சில சமயங்களில் சில்லரைக்காக கால தாமதமாவதுடன் அவசரத்தில் அதை வாங்க மறந்துவிடவும் நேருகின்றது. சில புண்ணியவான்கள் அம் மாதிரி சமயத்தில் சில்லரை வைத்துக் கொண்டும் இல்லை யென்று சொல்லி முழுப் பணத்தையும் வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.
------
பிறகு பரிமளா தன் தாயாரிடம் சென்று வெகு சாதாரண மாகப் பேசுவதுபோலப் பேசத்தொடங்கி "அம்மா! நான் நேற்றிரவு ஓர் கனவு கண்டேன், அக்கனவு எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. அதாவது, - ஏதோ ஒரு உருவம் என் முன்பு தோன்றுகின்றது. அதைப் பார்த்து நான் பயப்படுகிறேன்; அந்த உருவம் பயப்படாதே! கண்ணே! கோமளா!. நான் தான் உன் பிதா. நான் அநியாயமாய்ச் சண்டையில் இறந்துவிட்டேன். உன் தாயின் கருப்பத்திலிருந்த குழந்தையும் பெண் சிசுவாகப் பிறந்ததாகக் கேள்வியுற்றேன். உங்களைப் பார்க்க நான் ஓடிவந்தேன். நான் உன்னையொன்றும் செய்யமாட்டேன்; பயப்படாதே" என்று கூறி மறைந்தது."அம்மா! நான் எத்தனை தரம் கேட்டாலும் நீ தந்தை யின் விஷயத்தைக் கூறுவதே இல்லையே! இந்த கனவில் தெரிந்த விஷயம் உண்மையா அம்மா! என் தந்தை சண்டையிலா உயிர் துறந்தார்?" என்று கேட்டாள்.

இதைக் கேட்டதே பார்வதியம்மாளுக்கு மனம் திடுக்கிட் டது. "இது உண்மையில் கனவாகவிருக்குமா! அன்றி இவளுக்கு உண்மை எப்படியாவது தெரிந்துவிட்டதா!" என்ற பெருத்த சந்தேகம் உண்டாய்விட்டது. அவ்வாறு உண்டாகிய சந்தேகத்தை அறிந்த பரிமளா "அம்மா! உன்னுடைய முகமே கனவு உண்மையென்று எடுத்துக் காட்டுகின்றது. இனி இவ்விஷயத்தை ஒளித்து என்ன பயன்? எங்களுக்கு அதை அறிவித்தால் விசனமென்று நீ நினைக்கின்றாய்; அது எந்த காலத்திலாவது தெரியவேண்டாமா! அவரவர் செய்த பாப புண்ணியத்திற் கேற்றவாறு தானம்மா எதுவும் அமையும்: இந்த விஷயம் உண்மையா, அல்லவா?" என்று குழந்தையைப் போலக் கேட்டாள்.
--------
ஏழ்மை நிலைமையிலுள்ளவர்களுக்குத்தான் தம்மை விடக் கேவலமான ஸ்திதியிலுள்ளோருக்குத் தம்மாலான வரையில் உதவ வேண்டு மென்கிற எண்ண முண்டாகின்றது. ஏனெனில் அவர்கள் கஷ்டத்தை அநுபவித்திருப் பதால் மற்றவர்கள் எப்படி கஷ்டப் படுவார்களென்பதை யறிய இடமிருக் கின்றது.
------

பார்வதி- கண்ணே! இந்த விஷயம் நீ கனவிலறிந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இவ்விவரங்கள் உனக்கு யார் மூலமாகவோ தெரிந்திருக்கவேண்டும். கண்மணி! பரிமளா! இனிமேல் நானாகவே விஷயத்தை யறிவிக்கலாமென எண்ணினேன். உன் தந்தையின் கடமை யொன்று உளது. அதை நிறைவேற்றுதற்கு உனக்குத் தக்க தருணம் வரும்போது நான் விஷயத்தை உரைக்க நினைத்தேன். அதற்குள்ளாகவே நீ யறிந்துவிட்டாய்.

பரிமளா:- அம்மா! என் தந்தையின் கட்டளையா! அது யாது! அதை என் எனக்கு இதுகால பரியந்தம். எடுத்துரைக்க வில்லை.உடனே அதைத் தெரிவி.

பார்வதி - பரிமளா! என்னுடைய கதையை நான் சொன்னால் பட்ட மரமும் பால் வடிக்கும்; செத்த பிணமும் உயிர் பெற்று எழுந்து விசனிக்கும். ஆதிமுதல் நான் சிறுமைப்பட்டது கணக்கு வழக்கில்லை. உன் தந்தையினால் பதமடைய நினைத்தேன்; அதுவும் என் துரதிருஷ்டத்தினால் மண்ணாகிவிட்டது. உன் தந்தை எந்த வேலையும் கிடைக்காமல் மிக்க வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அத் தருணம் மிலிடரியில் வேலை கிடைத்தது. அதில் சேர மனமில்லாமலேயே சேர்ந்தார். சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு மிலிடரி கூட்டத்தார் மிருகங்களைக் கொல்வதற்காகவும் மற்றவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் காட்டிற்குச் சென்றார்கள். அதில் உன் தந்தையும் ஒருவராவர். அவர் ஒரு பன்றியைச் சுடுவதற்குத் துப்பாக்கியைப் பிரயோகித்தார்; அந்த துப்பாக்கிக் குண்டு பன்றிமேல் விழாமல் காட்டில் விறகுதலையன் ஒருவன் சென்றான்; அவன்மீது பட்டுவிட்டதாம். உடனே அவன் உயிர் துறந்தானாம். அந்த எதிர்பாராத கோரமான கொலையைத் தன் கையினாலேயே செய்துவிட்ட கலக்கம் அவரைப் பெரும்பாலும் வாட்டிவிட்டது; வேலையை விட்டுவிடவே நினைத்துவிட்டார்.

அத் தருணமே சண்டையும் வந்துவிட்டது. அதற்கு அவர் கட்டாயமாகச் செல்லவேண்டியிருந்தது. இல்லையேல் அவரை அவர்களே சுட்டுக் கொன்றுவிடுவார்களாம். அவர்கள் கையினால் இறப்பதைவிட அங்கு சென்றுதான் சாவது மேல் என நினைத்து "இனி நான் திரும்ப மாட்டேனென்றும், ஒருக்கால் திரும்பினால் பெருத்த புகழும் பதவியும் கிடைக்கும் என்றும் அப்படித் திரும்பாது இறந்துவிட்டால் எனது குடும்பத்திற்கு சர்க்கார் ஏதேனும் பொருள் உதவி தருவர் என்றும் அங்ஙனம் பொருள் கிடைத்தால் என் கையினால் கொல்லப்பட்ட மனிதனின் குடும்பம் என்னால் அதோகதியாகி விட்டதாகையினால் அந்தத் தொகையை அவர்களுக்குக் கொடுத்து விடு என்றும், நீ எவ்விதமாயினும் பிச்சை எடுத்துச் சாப்பிடு என்றும் கூறிச் சென்றார்.

----------
இந்தக் காலத்தில் எந்த காரியமாகச் சென்றாலும் அங்குள்ள பணியாளர்களின் கையில் வெள்ளையப்பனை வைத்தால் தான், அக் காரியம் நிறைவேறுகின்றது. நமது கடமையை சரிவரச் செய்வோமென்கிற எண்ணம் அவர்களில் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை.
-------
அவர் சென்ற சில மாதத்திற்குள்ளேயே உயிர் நீத்தார். அவருடைய வாக்கின்படியே நான் அவருக்காகக் கொடுக்கப்படும் தொகையை அந்த விறகுதலையனுடைய குடும்பத்திற்கே கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தை இதுபரியந்தம் நான் பிறரிடமும் வெளியிடவில்லை; உங்களிடமும் கூறவில்லை. உன்னுடைய விவாகம் வரையில் அல்லது மைனர் நீங்கும் வரையில் தான் அந்தத் தொகை கொடுக்கப்படும் என்றும் பிறகு கொடுக்கப்படாதென்றும் முதலிலேயே சர்க்காரின் அறிக்கையாதலால் அந்தத் தொகை இன்னும் சில நாட்களோடு நின்றுவிடும். அதன் பிறகு அவர்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்யவேண்டிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். பரிமளா! உனக்குக் கடவுள் தன் அனுக்ரகத்தினால் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். சர்க்காரின் தொகை நின்றவுடன் அந்தத் தொகையை நாம் நமது ஆயுள்கால பரியந்தம் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆதரவு அளித்துவிட்டால் உன் தந்தையின் ஆன்மா சாந்தி யடைந்துவிடும். அவருடைய உதிரத் தில் பிறந்ததற்காக நீ இதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய். இதை உன்னிடம் சரியான சமயத்திலேயே சொல்ல வேண்டுமென்பது எனது எண்ணம், இன்று தெரிவித்தேன்" என்றாள்

--------
நாம் யார் முன்பு அவர்கள் வீட்டில் கை கட்டி, வாய் புதைத்து அவர்கள் 'உட்கார்', என்று சொல்கிற வரையில் நின்று கொண்டிருக்க வேண்டி யிருக் கின்றதோ, அவர்களுடனேயே சில சமயங்களில் சமமாக உட்காரவும், மற்றும் சில சமயங்களில் காம் உட்கார்ந்து அவர்கள் நிற்கும் படியாகவும் நேருகின்றது. இடம், காலம் முதலியவை பல வித மாறுதல்கள் உண்டாக்குகின்றன.
---------

இது கேட்ட பரிமளா மிக்க பரபரப்புடன் "அம்மா! இது விஷயத்தில் நீ மிக்க தாமதம் செய்து விட்டாய். இவ் விவரம் எனக்கு முந்தியே தெரியுமாயின் நான் இத்தனை நாளைக்கு என்னால் கூடிய எத்தனையோ உபகாரம் செய்திருப்பேனே! நமது போஷகர் வந்த பிறகு அதற்குத் தக்க வழி நான் செய்கிறேன்; கவலைப்பட வேண்டாம்" என்று தேற்றினாள்.

பிறகு நாயுடுவுக்கு உடனே வரும்படியாக ஒர் தந்தி அனுப்பினாள். கேசவனின் உருவமே அவன் கண் முன்பு தோன்றிக் கொண் டிருந்தது. அதே விசனத்துடன் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கை யில் "பார்வதீ! என் செல்வமே! கோமளா! எத்தனையோ வருடங்களுக்கு முன் பறிகொடுத்துவிட்ட உங்களைப் பார்க்கும்படியாக இன்று நேர்ந்ததே!" என்று பரிமளாவின் அத்தை கூறிக் கொண்டே வந்து பரிமளாவைக் கட்டிக் கொண்டாள். அவளுடன் அவளது மகளும், மகனும் வந்தார்கள். உள்ளே அடைபட்டிருக்கும் மனிதன் அவ்விருவரையும் சாளரத்தின் வழியாகப் பார்த்த உடனேயே அவனது வயிற்றில் இடி இடித்தது. அவன் தன் கதி இதோடு முடிந்து விட்டதாகவே எண்ணிச் சோர்ந்து விட்டான்.

--------
சிலரைக் கண்டதும் காணாதது போலச் சில சமயம் நழுவி விடுபவர்கள் பிறகு ஒரு சமயத்தில் அவர்களோடு நெருங்கிப் பேச நேர்ந்து விட்டதும் தங்களது முந்தின நடத்தைக்காக வருத்தப் படுகின்றார்கள்.
----------

10-வது அதிகாரம்
கிலியே கொல்லும்-புலியே வெல்லும்


நாயுடுவும் பொன்னுசாமியும் அங்கிருந்து நேரே அவ்வூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். அங்கு அடைத்திருக்கும் கேசவன் விசனத்தினால் குன்றிப்போய் தன்னிரை அழிந்து சவம் போலக் கிடந்தான். அவர்கள் அங்கு சென்று கேசவனைத் தட்டி எழுப்பித் தங்கள் வரவைத் தெரிவித்தார்கள். இதை யறிந்த கேசவன் சிறு குழந்தையைப்போல விம்மி விம்மிப் புலம்பியபடியே "நாயுடுகாரு! தந்தையே! என் கதி அதோகதியாகி விட்டதே! நாள் இனி என்னவிதம் மானத்துடன் உயிர் வாழ்வேன்? அனியாபப்பழி என் தலைமீது வந்து விட்டதே! ஐயோ! எந்த சண்டாளர்கள் என்னை வேண்டுமென்றே இவ்விதம் செய்தார்களோ தெரியவில்லையே! நாயுடுகாரு! இந் பெரும் தீயினின்றும் தப்ப முடியுமா! என் பழி நீங்குமா ! இவ் விஷயம் பரிமளாவுக்குத் தெரியுமா! ஆ! அவள் இதைக் கேள்வியுற் றால் என்ன நினைப்பாள்! என் கதியை எண்ணி நான் அழுவதா! என்னை மனப் பூர்வமாக நேசித்த சிறுமியின் முன்பு ஓர் திருட னென்று பட்டம் பெற்ற பரிபவத்தை எண்ணி வருந்துவதா!" என்று ப்ரலாபிக்கத் தொடங்கினான்,

இவனுடைய பரிதாபத்தைக் கண்ட நாயுடுவும் பொன்னு சாமியும் முதலில் கண்ணீர் உதிர்த்தார்கள். பிறகு தாங்களே அதைரியப் படுவதாக கேசவன் நினைத்து விடுவானோ என்று எண்ணி கேசவனின் மனத்தைத் தேற்ற அவனுக்குத் தைரியம் கூறத் தொடங்கினார்கள்.

---------
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சிலர் தாங்கள் தங்களது பெரியோருக்கு அடங்கி ஒடுங்கி நடப்பதாகக் காண்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அனுபத்திலோ நடத்தை வேறு மாதிரிதான்.
-------

நாயுடூ:-கேசவா! நீ இந்த அபாண்டத்திற்கு வருந்துவது சகஜந்தான் எனினும் உன் மனத்தில் கடவுளிடத்து நம்பிக்கையும், தைரியமும் வேண்டும். இம்மாதிரியான குற்றங்களை நான் தீர்த்திருப்பது கணக்கில்லை. இந்த விஷயத்தில் நீ சிறிதும் பயப்படவேண்டாம். இதைவிட வேறு என்ன சொல்லப்போகிறோம், தைரியத்தைக் கைவிடாதே! பரிமளாவுக்கு விஷயம் நன்றாகத் தெரியும் அவளும் தைரியம் கூறும்படித் தான் தெரிவித்தான். "நமக்கு இத்தகைய குற்றப் பழி வந்துவிட்டதே இனிமேல் பரிமளா நம்மை மணம் செய்து கொள்வாளா!" என்று நீ நீனைக்கிறாய். உன் மீது குற்றம் ஒருக்கால் நீங்காமல் தண்டனை அடைந்து விட்டாலும் பரிமளா உன் விடுதலைக்குக் காத்திருந்து உன்னையே மாலையிடுவாளேயன்றி வேறு விதமாக அவள் மனம் மாறாது. இது சத்தியம். என்னிடம் அவள் சொல்லியனுப்பினாள். ஆகையினால் நீ மெலிய வேண்டாம்.

பொன்னு:- கேசவா! என்னுடைய இரு கண்களும் நீங்களிருவரும் என்று நம்பியுள்ள நான் அக்கண்ணில் ஒன்றிற்குப் பழுது வரும்படியாக நான் கண்டு சகிக்கமாட்டேன். உடனே அதைத் தீர்க்கும் முயற்சிதான் செய்வேன். எனக்குள்ள பொருள் எல்லாவற்றையும் இவ்வழக்கில் தோற்றாலும் தோற்பேன்; உன் மீது சார்ந்துள்ள அநியாயப் பழியைத் தீர்த்துவிட நான் பின்வாங்க மாட்டேன். இது விஷயத்தில் நீ கவலையே கொள்ள வேண்டாம். என்றைக் கிருப்பினும் பரிமளா உன்னுடைய பரிமளாதான். அவளைப் பற்றி நீ பயப்பட வேண்டாம். கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்: அவரையே தியானம் செய்து கொண்டிரு.

நாயுடு :- கேசவா! நான் கேட்கும் சில முக்கியமான விஷயங்களுக்குப் பதில் சொல்லு, நீ கல்யாண வீட்டிற்கு வந்த உடனே உன்னோடு யார் யார் எப்படிப் பேசினார்கள் என்ன நிலைமையில் நடந்து கொண்டார்கள்?

---------
செக்குமாடு போலத் தனக்கு உழைத்துத் தனது மிருகாவேசத்திற்குப் பாத்திரமாக இருக்கும் வரையில்தான் வேண்டும் மனைவி. அதன் பலனாக அவள் நோய் வாய்ப்பட்டுத் தனக்கு உதவ அருகதை யில்லாவிடில் அவளை ஒழித்து விட்டு வேறெருத்தியின் கழுத்திற்குக் கயிற்றைத் தேடப் புத்தி போகின்றது சில புண்ணியாத்மாக்களுக்கு. மனைவி ஒரு மெஷினா?
--------

கேசவன்:- பெரியவரே! நான் வந்த உடனே இத்தகைய விபரீதம் நடக்கு மென்று கனவிலும் கருத வில்லையாகையினால் அங்கு எதையுமே கவனிக்கவில்லை, நான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சாதாரணமாக ''வேலைக்காரி எங்கே?" என்று விசாரித்தேன். அவர்களும் சகஜமாகத்தான் பதில் தெரிவித்தார்கள். நான் படுத்துக் கொண்டேன். களைப்பினால் தூங்கி விட்டேன், பிறகு திடீரென்று கூக்குரல் கிளம்பியது. நான் அலறிக் கொண்டு எழுந்தேன். என் துணிகளை உதறியபோது அதிலிருந்து ஒரு துணி மூட்டை பொத்தென்று விழுந்தது. விழுந்த உடனே அங்கிருந்த ஒரு கருத்த மனிதன் "இதோ நகைகள். இதோ திருடன்" என்று கூறிக் கொண்டே என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். நான் அப்படியே ப்ரமித்துப்போய், தம்பித்து விட்டேன். விவரமே எனக்குப் புலப்படவில்லை. பிறகு நடந்த வரலாற்றிலிருந்து இங்கு திருட்டு நடந்ததாகத் தெரிந்தது. உடனே சேவகன் வந்து விட் டான். எனக்கு வந்த கடிதத்தைக் காட்டியும் அவர்கள் நம்ப வில்லை. நான் வேண்டு மென்று தயார் செய்த கடிதமென்று கூறி மறுத்து விட்டார்கள். பிறகு இங்கு அடைத்து விட்டார்கள். இதுதான் எனக்குத் தெரிந்த விவரம்." என்றான்.

அப்புறம் நாயுடு அவனோடு சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தைரியங்கூறிப் பின்னர் இருவரும் போலீஸ் அதிகாரிகளிடம் சென்றார்கள். அதிகாரியைக் கண்டு "ஐயா! இந்த வழக்கில் குற்றவாளியாக நீங்கள் கொண்டுவந்துள்ள மனிதன் உண்மையில் குற்றவாளியேயல்ல வென்பதை நாங்கள் திட்டமாய்க் கூறுவோம். நீங்கள் இந்த விஷயத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்தப் பையனுடைய யோக்கியதையைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அவன் மகா உத்தமன். அவனுடைய தாயாரைத் தேடிக்கொண்டு இங்கு வந்திருக்கிறான் என்பதை நீங்கள் அக்கடிதமூலம் தெரிந்திருப்பீர்கள். அவனுடைய பரிசுத்தத் தன்மையைக் கூடுமானவரையில் விளக்கிக் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகையினால் இது எதோ சாமானியமான திருட்டுக் கேஸ் என்று எண்ணி உடனே விசாரணை செய்துவிட லாகாது.எங்களுக்குச் சில தினங்கள் தவணை கொடுக்கவேண்டும். பிறகு நீங்கள் உங்கள் இஷ்டப்படிக்கு விசாரணை செய்யலாம்." என்று கேட்டார் நாயுடுகாரு,

---------
நாம் நமக்கு மிகவும் ஆப்தமானவர்கள் என்று கருதியும், அவர்கள் நம்மீது உண்மையான அன்புடன் இல்லையே யென்று வருந்தி நமக்கு அவர்கள் மீதுள்ள அன்பைக் குறைக்கக் கூடாது; ஆனால் அதை அதிகப் படுத்தி அவர் களே தங்களது குறையை உணர்ந்து திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அப்படியும் அவர்கள் திருந்தாவிடில் அவ்வளவுதான் பிராப்த மென்று தேத்தரவு கொள்ள வேண்டியதுதான்.
-----

துப்பறியும் ராஜாராம் நாயுடுவை அறியாதார் யாருமில்லை. போலீஸ் இலாகாவிலேயே வெகுகாலமாகத் துப்பறியும் உத்யோகத்திலிருந்து வெகு சிக்கல் முக்கலான விஷயங்களை எல்லாம் விளக்கிக்காட்டி ஜெயம்பெறச் செய்திருக்கும் நாயுடுவை போலீஸாரே அறிவது வியப்பா! எனினும் அந்த அதிகாரி "ஐயா! நாயுடு காரு! இந்த வழக்கு விஷயமோ மகா சிறிது; கேவலமானது. தங்களைப்போன்ற துப்பறியும் புலிகளுக்கு இந்த துக்டா வழக்கில் வேலை என்ன இருக்கின்றது. பெருத்த கொலையா! கொள்ளையா! மோசடியா! நரசோரமா! ஒன்றுமில்லை பாருங்கள்; ஓர் சிறிய எலியை அடிப்பதற்கு - பிடிப்பதற்கு - ஒர் புவியைக் கொண்டு வருவதுபோல இருக்கிறது இது. இந்த வழக்கில் குற்றவாளி கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கையில் இதில் மறைவிடம் என்ன விருக்கிறது. இதற்கு முந்தி அவன் வெகு உத்தமனா இருந்திருக்கலாம். தற்போது ஏதோ போதாக் காலக் கொடுமையினால் இந்த வேலையைச் செய்திருக்கலாம். மேலும் அவன் இதில் ஒரு கிழவி யைக்கூட சம்பந்தப்படுத்த நினைத்தான்.

------
தனக்குத் தெரிந்தவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய யோக க்ஷேமங்களைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டு தனக்கு அவர்களால் ஏதேனும் காரியமாக வேண்டியிருக்கையில் மாத்திரம் அவர்களிடம் அடிக்கடி சென்று வெகு உருக்கத்துடன் விசாரிப்பது! இது என்ன சுய நலமோ!
------

அவள் விவரமறிந்ததும் நேரிலேயே வந்து நடந்ததை ஒப்பித்துவிட்டாள். இந்த வழக்கை நாளையே எடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறது. தாங்கள் கேட்பதால் இன்னும் 5 நாட்கள் தவணை கொடுக்கின்றோம். அதற்குள் உங்களா லாகிய வேலையைச் செய்யலாம்" என்றார்.

நாயுடு :- வெகு சந்தோஷம், எந்த விஷ்யம் மிகவும் அல்பமாக இருக்கின்றதோ அதில்தான் பெருத்த விஷயம் அடங்கி இருக்கும். ஒரு பாம்பு வருகிறது. எல்லோரும் பயந்து அதை அடித்து எறிந்து விடுகிறார்கள். "பாம்புதான் இறந்துவிட்டதே இனி என்ன” என்று நினைக்கின்றோம். அதை அடிக்கையில் அதன் தேகத்திலிருந்து ஒரு துளி விஷம் நாம் உட்கொள்ளும் எந்தப் பொருள் மீதிலாவது தெறித்திருக்கலாம். அதை எவரும் அறியாமல் அந்தப் பொருளைப் புசித்த வளவில் அடியோடு மோசம் வந்துவிடுகின்றது. அதற்காகத்தான், "பாம்பை அடித்தோமே அதன் விஷம் எங்கும் தெறிக்காமலிருந்ததா! அருகில் சாமான் எதுவும் இல்லையா! அதை அடித்தத் தடியை அலம்பி சுத்தம் செய்தோமா! அந்தக் கையோடு வேறு எதையேனும் தொட்டு விட்டோமா!" என்பது போன்ற விஷயங்களைத் தான் நாம் முக்கியமாகக் கண்டு பிடிக்க வேண்டும். அது போலவே கேசவனுக்கு விரோதிகள் இக் காரியத்தைச் செய்திருக்கலாம்; அதை ஆராய்ச்சி செய்யாமல் தீர்ப்பு செய்து விட்டால் அது எத்தனை மனிதர்களின் உயிரை வதைக்கும். எனக்குச் சிறிய விஷய மாயினும் சரியே, பெரிய விஷயமாயினும் சரியே, எல்லாம் சமத்வந் தான். நிரபராதிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்யும் தொழில் என்னுடையது. அதையே இப்போதும் மேற்கொண்டுளேன். இதோ இந்த கடிதங்களைத் தாங்கள் தயவு செய்து படித்துப் பார்த்தால் நான் இந்த வழக்கில் சம்பந்தப்படுவது சரியா, தப்பிதமா என்பது தெரியும்" என்று கூறிக் கேசவனுக்கு வந்த கடிதத்தையும் பரிமளாவுக்கு வந்த கடிதங்களையும் அவரிடம் கொடுத்தார்.
---------
ஒரு கடியாரத்தில் எல்லா சிறிய யந்திரங்களும் சரியாக வேலை செய்யினும். முக்கியமானது (Main spring) கெட்டுவிடில், கடியாரம் நின்று விடுகின்றது; ஆனால் சில குடும்பங்களில் குணங்களில் முக்கியமான அன்பு என்பது பரஸ் பாமாக இல்லா விடினும் சில சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஏதோ ஒருவாறு அக்குடும்ப காரியங்கள் கடை பெறுகின்றன.
-------

அதிகாரி அவைகளைப் படித்துப் பார்த்தார். “நாயுடுகாரு! இதென்ன கடிதங்கள்! இதற்கும் திருட்டுக்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ அந்தப் பெண்ணை மணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில் இது சிறிது சம்பந்தப் பட்டிருக்கின்றது. அதற்கு இவ்வழக்கு எப்படி சான்றாகும்?" என்றார்.

நாயுடு:-ஐயா! தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள். தங்களுக்கு நான் தெரிவிப்பது சரியேயன்று: இந்தக் கடிதங்களைப் படித்த பிறகு, நடந்த விஷயங்களை ஒன்றுகூட்டி ஒத்திட்டுப் பாருங்கள். கேசவன் பரிமளாவை விவாகம் செய்துகொள்ளலாகாது என்பதைத் தடுக்கின்றது. பரிமளாவின் அன்பையும், மனோ பரிபக்குவத்தையும் கண்டு அவள் சாமான்யமாய்த் திரும்பமாட்டாள். கேசவனிடத் தில் ஒரு கசப்பை ஏற்படுத்தி மனத்தை முறியச் செய்துவிட்டால் அவள் தங்களை மணக்கலாம் என்கிற ஓர் யோசனையுடன் இந்த காரி யத்தைச் செய்திருக்கலாகாதா!

அதிகாரி.- நாயுடுகாரு! தாங்கள் சொல்வது ஒருபக்கம் சரி என்றாலும் நகைப்பு உண்டாகின்றது. இக்கடிதங்கள் வருவதும் இவைபற்றிய சம்பவங்கள் நடந்ததும் வேறு ஊர், இந்தவிடத்தில் நடந்த திருட்டுக்கும் அதற்கும் எவ்விதம் பிணைக்க முடியும்! இந்த ஊரும் வேறு; கல்யாண வீட்டாரும் அன்னியர்கள். சம்மந்தி வீட்டாரும் புதியவர்கள். இவர்கள்தான் அந்த விஷயத்தில் சம்மந்தப் பட்டவர்கள் என்பதை நீங்கள் எப்படி எதிர் பார்க்கலாம்?

நாயுடு-ஐயா! மன்னிக்கவேண்டும். நான் என் மனத்தில் தோன்றியதைச் சொன்னேன். இதுவிஷயத்தில் தாங்கள் எனக்குக் கொடுத்த தவணைக்குள் நான் என்னால் கூடியவரையில் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையணிக்கின்றேன்; தயவுசெய்து அந்த நகை மூட்டைகளிரண்டையும் எனக்குக் காட்டவேண்டும்" என்றார்.

---------
கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும், வெளியில் தலை காட்ட முடியாமலும் புருஷன் தத்தளிக்கையில் பெண்ஜாதி 40-50 ரூபாய் களைக் கொட்டி பட்டுப் புடவையில் மினுக்குவது, தனது புருஷனுக்கு ஏற்படும் கஷ்டத்தில் தனக்கும் சம பாகம் உண்டென்கிற எண்ண மிருப்பின் அவ்வாறு செய்வாளா?
------
உடனே அதிகாரி இரண்டு நகை மூட்டைகளையும் கொண்டு வந்து காட்டினார். நாயுடு நகைகளைக் கவனித்ததைவிடத் துணியையும், அத்துணியில் வண்ணான் சலவை செய்கையில் குத்தி இருக் கும் முத்திரையையும் நன்றாகக் கவனித்தார். அந்த துணி கைக் குட்டையினும் பெரிய அளவு உடையது. அதன் ஓரத்தில் பச்சை நூலினால் ஸ்ரீராமஜெயம்- என்ற எழுத்துக்கள் வேலை செய்யப்பட்டிருந்தன. இத்தகைய அடையாளங்களையும் மனத்தில் பதிய வைத்துக்கொண்டார். பிறகு "நான் சென்று வருகிறேன்" என்று அதிகாரியிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு வெளியே இருவரும் சென்றார்கள்.

அவர்கள் எங்கே செல்வது என்பதை யறியாது சற்றுத் தியங்கினார்கள். ஒரு ஒட்டலில் சென்று தங்கள் போஜனத்தை முடித்துக்கொண்டு கேசவனுக்கும் இவர்களே போஜனம் கொண்டு அளித்தார்கள். ஒரு நிமிட நேரத்தையும் வீணாக்கக்கூடாதென்கிற நோக்கத்துடன் நாயுடுகாரு அந்த ஓட்டலிலேயே ஒரு அறையைச் சில தினங்களுக்கு அமர்த்திக்கொண்டார், பொன்னுசாமியை அவ் வறையில் இருக்கச் செய்துவிட்டு நாயுடு மட்டும் கல்யாணவீட்டிற்குச் சென்றார். அன்று கல்யாண வீட்டில் நாட்டியக் கச்சேரியாகையினால் திரள் திரளாக ஜனங்கள் கூடியிருந்தார்கள். நாயுடுதான் இன்னான் என்று ஒருவரும் தெரிந்துகொள்ளா வண்ணமாக மாறு வேடத்துடன், நாட்டியம் பார்க்கச் சென்றவர்போலப் போனார். அவர் மிக வும் ஏழ்மை நிலையில் உள்ள மனிதனாகக் காணப்பட்டார்: நாட்டியம் வெகு திறமையாக நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள சகலமான மனிதர்களையும் கவனிப்பதிலேயே நாயுடு கண்ணுங் கருத்து மாயிருந்தார். ஆண் பெண் அடங்கலும் வெகு அருமையான நாட்டி யத்தைக் கவனித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த சத்திரம் வெகு பிரம்மாண்டமான தாகையினால் அதற்கு நான்கு பக்கங்களிலும் வாசற்படிகள் பங்களாவைப்போல அமைந்திருந்தன.

--------
”நமது சமூகத்தில் ஸ்திரீகளுக்குச் சுதந்தர மில்லை அவர்கள் புருஷரின் அடிமைகளாக இருக்கிறார்கள்” என்று பழிப்பவர்கள் ஆராய்ந்து பார்த்தால், அநேக குடும்பங்களில் தமது சுய மதிப்பை இழந்து, தேக நலத்தையும் கருதாது, நாய் போல உழைத்துக் கிடைக்கும் வருமானத்தைப் பெண்ஜாதி யிடம் கொடுத்து விட்டுத் தாளம் போடும் புருஷர்களின் தொகையே அதிக மென்பதை அறிந்து கொள்வார்கள்.
---------

சிறிது நேரங் கழித்து நாயுடு வெளியே வந்தார். கல்யாண வீட்டிற்கு இரண்டு வண்டிகள் விறகு வந்து, புறக்கடைப் பக்கமரக இறங்கியது. அதைப் பார்த்த நாயுடு சடக்கென்று தன் மேல் துணியைத் தலைக்குக் கட்டிக்கொண்டு வண்டியருகில் சென்று விறகுகளைக் கட்டுகட்டாகத் தோள்மீது தூக்கிக்கொண்டுபோய் சமையல் கட்டில் போடும் வேலையாட்களுடன் சமையல் கட்டிற்குள் நுழைந்து விட்டார். அங்கிருக்கும் மனிதர்களுக்கு விறகுதொட்டிக்காரன் அனுப்பிய ஆள்போல நடித்துவிட்டார். அங்கிருந்த சமையல்காரனை நோக்கி "ஐயா! பசிக்கின்றது; கல்யாண வீட்டில் பலகாரங்கள் ஒன்றுமில்லையா?" என்று வெகு தளுக்காகக் கேட்டார்.

இதுகேட்ட சமையல்காரன் உள்ளே இருந்து சில பலகாரங்களைக் கொடுத்துவிட்டு "எத்தனை ஜனங்கள் நாட்டியம் பார்க்கிறார்கள்! எங்கள் தலையெழுத்து அடுப்பங்கரையில் சாகவேண்டி இருக்கிறது. ஆகா! பாடல் என்ன அருமையாகக் காதில் விழுகின்றது!" என்றான்.

நாயுடு:-ஐயா! நீங்கள் சென்று நாட்டியம் பாருங்கள் : நான் இங்கு சமையலைக் கவனிக்கின்றேன். நானும் தவசுப்பிள்ளையாக இருந்து அடுப்பங்கரை உத்யோகத்தில் மெடல் பெற்றவன் தான். பிறகு அதை வெறுத்துவிட்டு இப்படித் திண்டாடுகிறேன். நான் கட்டைத்தொட்டி எஜமானனுக்குத் தெரிந்தவனாகையினால் அவர் என்னைக்கூட நமோதாக அனுப்பினார், நான் இங்கு பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சற்று நேரம் நாட்டியம் பார்த்துவிட்டு வாருங்கள்; அடுப்பில் என்ன போட்டிருக்கிறீர்கள்?

---------
ஒருவருடைய படிப்பிற்கும், பணத்திற்கும், செல்வாக்கிற்கும் மாத்திரம் கௌரவமும் மரியாதையும் ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும் விட முக்கிய மானது குணம் அதில்லாவிடில் யாவும் அழிந்து விடும். வேத பாராயணஞ் செய்தும் எவ்ளைவோ உயர்ந்த பதவி யிலிருந்தும் நற்குணம் இல்லாததனாலன்றோ ராவணன் அழிந்தான் என்பதைச் சிலர் கவனிப்பதில்லை,
--------

சமையற்:- ஐயோ பாவம்! நாங்கள் பணத்தை வாங்கிக்கொள்வது; நீங்கள் சமையல் செய்வதா! வெகு அழகு. அடுப்பில் உருளைக் கிழங்கு வறுவல் ஆகின்றது. கத்தரிக்காய் சாம்பார் ஒரு அடுப்பில் கொதிக்கின்றது. ராத்திரி பலகாரம் பூரி, அல்வா போட வேண்டுமாம். பூரி செய்துவிட்டோம்; அல்வா செய்யவேண்டும். எங்க ளுக்கு ஏதய்யா சுகம்!

நாயுடு - ஐயா! மனித ஜென்மம் எடுத்த நாம் ஒருவருக்கொருவர் இந்த சில்லரை உதவிகூடச் செய்யாவிடில் என்ன உபயோகம்? எனக்குச் சம்பளமில்லையே என்று நீங்கள் யோசிக்கவேண்டாம். தினம் சாப்பாடு, பலகாரம் கிடைத்தால் போதும். நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன். என்னை யார் என்று வீட்டுக்காரர்கள் கேட் டால் “என் உறவினள் ஊரிலிருந்து வந்திருக்கிறான்: ஒத்தாசைக்கு அழைத்துக் கொண்டுவந்தேன்" என்று கூறிவிடுங்கள். இதனால் எனக்குச் சிரமமில்லை" என்று பின்னும் ஏதேதோ வெகு தந்திரமாகப் பேசி அவர்களை இணங்கச்செய்துவிட்டார்.

பிறகு அவர்கள் சம்மதித்து அவரிடம் கரண்டியைக் கொடுத்தார்கள். நாயுடு வெகு சுருசுருப்பாக வறுவலை வறுக்கவாரம்பித்தார். அல்வா செய்வதற்கும் அடுப்பில் தயார் செய்யத் தொடங்கினார். மற்ற சமையல்காரர்கள் சற்று வெளியில் சென்று நாட்டியம் பார்ப்பதும், உள்ளே வந்து சமையலைக் கவனிப்பதுமாக இப்படியே செய்யலானார்கள். நாயுடு விதியே என்று தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி சமையலை வெகு மும்முரமாகச் செய்தார்.

-------
தற்காலத்தில் நாகரிக மென்றால், நிமிடத்திற்கு நிமிடம் உடைகளை மாற்றி வேஷம் போட்டுக் கொண்டு வெளிப்பகட்டாக நடமாடுவதும், உள்ளொன்றும் புறமொன்றும் பேசுவதும் தான் என்று சிலர் கருது கின்றார்கள். நிரந்தரமான நாகரிகம் யாதெனில் சத்திய நெறி வழுவாது, எளியோரிடத்தில் அன்பு செலுத்தி, எல்லாம் வல்ல இறைவனைத் தொழுது, திரிகரண சுத்தியாகநடப்பதுதான்.
------

அன்று சுச்சேரி முடிந்தது. பிறகு போஜனமும் முடிந்தது. ஒவ்வொருவரும் தாம்பூலம் போட்டுக்கொள்ளும் சமயத்தில்மட்டும் நாயுடு அவர்களறியாதவாறு மறைந்து கவனித்து வந்தார். சிலர் வெற்றிலையைத் தமது வேட்டியிலேயே துடைத்துக் கொண்டார்கள்; சிலர் சவுக்கத்தில் துடைத்தார்கள். சிலர் கைக்குட்டையால் துடைத்தார்கள். இதைக் கவனிப்பதற்கே அவர் மறைந்திருந்தார். சற்று நேரம் கவனித்துப் பின்னர் தன் வேலைக்குச் சென்று விட்டார்.

அந்த விவாகம் மிகவும் பெரிய மனிதர் வீட்டி தாகையினால் இரவில் எல்லோருக்கும் பால் வழங்கப்பட்டது. அந்த வேலையில் நாயுடுவும் பங்கெடுத்துக் கொண்டார். அவர் மெத்தையில் உள்ளவர்களுக்குப் பால் கொண்டுபோகையில் வராண்டாவின் ஒரு பாகத்தில் இருவர் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்று கல்யாண வீட்டில் பேசியது முற்றும் முதல்நாள் திருட்டு நடந்த விஷயமாகவே இருந்தது. "இன்னும் என்ன நடக்குமோ!” என்று பெண்களெல்லாம் பயந்து நடுங்கியே பேசிக்கொண்டார்கள். நாயுடு அவ்விருவர் மட்டும் தனித்துப் பேசுவதால் சற்று சந்தேகங்கொண்டு அவர்களுக்குப் பாலை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்புறத்தில் மெதுவாகச் சென்றார்.

அச்சமயம் அவர்களில் ஒருவர் "என்ன செய்வது? காரியம் வெகு விபரீதமாகி விட்டதே! என் மனைவி திட்டமாகக் கூறுகின்றாள். நான் எப்படி அதை வெளியிடுவேன்?" என்று பேசிக்கொண்டே திரும்புகையில், நாயுடுவைப் பார்த்துவிட்டார். அவர்களுக்குப் பாலைக் கொடுத்துவிட்டு நாயுடு, பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் யார் என்பதை நன்றாகக் கவனித்துக் கொண்டு திரும்பிவிட்டார். அவர்கள் எந்த இடத்தில் படுத்துக்கொள்கிறார்கள் என்பதையே நாயுடு வெகு சூக்ஷ்மமாகக் கவனித்துக் கொண்டார்.

------
ஒரு ஆயிரம் ரூபாய் நஷ்டம் திடீரென்று ஏற்படின் 'இன்னும் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கு முன்னர் விழித்துக் கொண்டோமே;" என்று மனத்தைச் சாந்தி செய்து கொண்டு அதற்கப்புறமாது முன்ஜாக்கிரதையாக நடந்து கொள்வதுதான் உத்தமம், கைதவறின பண்டத்தைக் குறித்துக் கவலை கொள்வதில் பயனென்ன?.
--------

மணி 11 ஆயிற்று. எல்லோரும் படுத்துக்கொண்டார்கள்; பிறகு நாயுடு சமையல் கட்டிற்கும் வீதிக்கும் அலைவதுபோல் நன்றாக மனிதர்களைக் கவனித்துக் கொண்டார். முதல் நாள் திருட்டு நடந்த கலபையினாலுண்டான பயத்தினால் ஒருவருக்கும் நித்திரையே கொள்ளாது எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். மெத்தையில் தனிமையாகப் பேசிக்கொண்ட ஆசாமிகள் மட்டும் படுக்கையில் படுப்பதாகப் படுத்துவிட்டு உடனே எழுந்து போய்விட்டார்கள். அவ்வளவு ஜாக்ரதையாகக் கவனித்தும் அவர்கள் எங்கே போனார்கள் என்பதை யறியா நாயுடு ஏமாந்து விட்டார்:

அவர்களைக் காணாமல் போனதும் நாயுடு "ஐயோ! ஏமாந்து விட்டோமே!" என்று ஏக்கங்கொண்டு அவர்கள் படுத்த அறைக்குச் சென்று பார்த்தார். அவர்களுடைய படுக்கை போட்டபடியே இருந்தது. அவர்களுடைய பெட்டி ஒன்று இருந்தது. நாயுடு அதன் மீது நோக்கங் கொண்டு மெல்ல அவ்வறையில் புகுந்து உள்புறம் தாளிட் டுக்கொண்டு அப் பெட்டியை மாறு சாவியினால் திறந்து பார்த்தார்; அந்த மனிதர்களில் ஒருவர் இஞ்சினீயர் என்பது அதிலிருந்த சில கடி தங்களினால் தெரிந்து கொண்டார்: அதில் மற்றபடி எந்த சந்தேகாஸ்பதமான விஷயமும் கிடைக்கவில்லை. பொன்னுசாமி நாடகக் கம்பெனியின் பாஸ் ஒன்று மட்டும் பொன்னுசாமியின் கையெழுத்துடன் இருந்தது, இந்த பாஸ் இங்கு இருப்பதால் அவருக்கு வேண் டியவர்களாகவோ அன்றி வேறு ஏதேனும் சம்மந்தப் பட்டவர்களாகவோ இருக்கவேண்டும் என்பது மட்டும் தெரிந்துகொண்டு அந்த பாஸை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.
--------
ஒரு வருஷ முழுதும் மிகவும் கஷ்டப்பட்டு வாசித்துப் பள்ளியில் நல்ல பெயரெடுத்தாலும் பரீக்ஷை யன்று எதிற் பாராத தேக அசெனக்கிய மேற்பட்டு விடின் ஒரு வருஷத்துப் படிப்பும் ஒரே வேளையில், வருஷாத்திரப் பயிர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவதுபோலப் போய்விடுகின்றது
--------

பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று அந்த தவசுப்பிள்ளையின் கோலத்தை மாற்றிக் கொண்டு நேரே ஒட்டலுக்கு வந்தார். ஒட் டலில் பொன்னுசாமி நித்திரையே கொள்ளாமல் "நாயுடு எங்கே சென்றாரோ இன்னும் வரவில்லையே!" என்ற யோசனையோடு மிக்க விசனத்தை யடைந்து அவரது வரவை எதிர் பார்த்திருந்தார். அப்போது நாயுடு வந்ததைக் கண்டு பொன்னுசாமி "விஷயமென்ன?" வென்று விசாரித்தார்.

நாயுடு நடந்த சகலமான வரலாற்றையும் கூறி அவர் எடுத்து வந்த பாஸைக் காண்பித்தார், பொன்னுசாமி அந்த பாஸைக் கண்டு ஆச்சரியமடைந்து "ஆகா! இது நாகலிங்கத்துக்கு நான் கொடுத்த பாஸாயிற்றே! அவர் மகா உத்தமர். எஞ்சினீயர் வேலையில் இருப்பவர். அவர்தான் கேசவன் நம்முடைய கம்பெனியில் சேருவதற்கு முன்பு காப்பாற்றியவர். அவனைத் தமது வீட்டில் வேலைக்கு வைத் துக்கொண்டு ஆதரித்தவர். கேசவனிடத்தில் மிக்க அன்புடையவர். அவனுடைய பாடலையும், நடிகத் திறமையையும் கண்டு மெத்த சந் தோஷமடைந்து பல தரம் பரிசுகள் கொடுத்திருக்கிறார். அவருடைய அபிமானத்திற்காக ஓர் பாஸ் கொடுத்தேன்: அவர் இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர் என்று நீங்கள் சந்தேகிப்பது சரியா?" என்றார்.
.
நாயுடு:-நான் சந்தேகிக்கக் காரணம் இருக்கின்றது. நன்மையிலோ தீமையிலோ இவருடைய சம்பந்தம் இருக்கின்றது. அதாவது, நேற்று போலீஸ் அதிகாரி காட்டிய நகைகள் கட்டின கைக் குட்டையைப் பார்த்தீர்களே நினைவிருக்கிறதா! அந்தக் குட்டையில் வரிசைக் கிரமமான நம்பரை நெசவுக்காரனே போட்டிருக்க வேண்டும். ஏனெனில் இரண்டு கைக்குட்டைகளிலும் ஒன்றில் 10 ஒன்றில் 8 என்று இருந்தது, பிறகு அங்கு பெண்கள் கூட்டத்தில் ஒரு அம்மா தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அந்தக் குட்டையில் நம்பர் 7 இருந்தது. அதேமாதிரி அச்சு, அதேமாதிரி பெயர் போட்டது. அதைக் கண்ட மற்றொரு பெண்பிள்ளை "இந்த கைக்குட்டை வெகு அழகாக இருக்கிறதே! இது எங்கே வாங்கினாய்?" என்று கேட்டாள். அதற்கு அந்த அம்மாள், "போதும் வெட்கக்கேடு, நான் எந்த கல்யாணத்திற்குச் சென்றாலும் ஒரு டஜன் கைக்குட்டை வாங்கிக்கொண்டுதான் வருவேன். அதேபோல இந்த விவாகத்திற்கும் வருகையில் இதே மாதிரியாக ஒரு டஜன் கைக் குட்டைகள் ஒரே சதுரமாக நெசவு செய்தது கடையில் பார்த்து மிக்க ஆவலோடு வாங்கிக்கொண்டு வந்தேன். நேற்று கல்யாண தடபுடலில் இரண்டு குட்டைகள் எப்படியோ கெட்டுப் போய்விட்டன. என் எஜமானர் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் மற்றவை என் பெட்டியில் இருக்கின்றன" என்றார்கள்.

அதே மாதிரி கைக்குட்டையினால் தாம்பூலத்தை இந்த பாஸின் சொந்தக்காரர் துடைத்தார். பிறகு அவர் பேசியதும் ஒரு விதமாக இருந்தது. அதனால்தான் நான் சந்தேகிக்கின்றேன். இந்தக் கைக்குட்டைகளினால் அந்த நகைகளை முடிவானேன்? மேலும் திருடவேண்டு மென்று வந்த கள்ளனாயின் ஒரு நகைகளும் விடாது இந்தக் கைக் குட்டையில் மூட்டை கட்டி இவன் படுத்திருக்கும் இடம் தேடியலைந்து வந்து அங்கு வைப்பானேன். இது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் அவ்விருவரும் அங்கு படுக்கையில் காண வில்லையே! எங்கே எழுந்து சென்றிருப்பார்கள்....எதற்கும் நாளைய தினம் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்கிறேன்" என்றார்.

------
ஒரு சிறிய நெருப்புதானே என்று அலக்ஷ்யமாக விட்டு விட்டால் அது ஒரு பெரிய நதியின் வெள்ளத்தினாலும் அணைக்க முடியாதபடிப் பரவி விடுவது போல ஒரு பொய்யான அவதூறுச் சொல்லை முதலிலேயே தடுக்கா விடின் அது ஊர் முழுதும் பரவி உண்மை வெளியாகும் போது கூட சீக்கிரத்தில் மறைவதில்லை.
--------
அன்று மறுநாளும் சமையல்காரனாகவே நடித்து,இரவு மிகுந்த சாப்பாடுகளை எல்லாம் வேலைக்காரர்களுக்குப் போடுகையில் நகை மூட்டையைக் கொடுத்த வேலைக்காரி யாரென்பதை விசாரித்தறிந்து கொண்டு அவளுக்குச் சாப்பாடு போடுகையில், அவளோடு ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார் நாயுடு. அவன் நோம்பிக் கொண்டிருக்கையில் அவனருகிலேயே நின்று வேடிக்கையாக "ஆகா! அந்த நகை மூட்டையை நீயாயிருக்கவே கொடுத்து விட்டாய். இன்னொரு திருட்டு முண்டையா யிருப்பின் அதைக் கொடுப்பாளா ! நீ நல்லவள். உன் கையில் எப்படித்தான் அம் மூட்டை யைத் தைரியமாய்க் கொடுத்தான் பாரேன்! ஆச்சரிய மாயிருக்கின்றது" என்றார்.

--------
சிலர் விநியோக சமயத்திற்குக் கோயிலுக்குப் போலது போல, சிலர் கலியாண வீடுகளுக்கு தேங்காய், தக்ஷிணை கொடுக்கும் போது போகிறார்கள். இரண்டு கோஷ்டியினரும் தங்களுக்கு வேண்டியதைத் தண்டிக் கொள்ளச் செல்கிறார்களே தவிர வேறொரு விதப் பற்றும் அவர்களுக்கு இல்லை.
-------

அது கேட்ட கிழவி "திருட்டுக் கழுதைகளுக்குப் பயம் வேறு இருக்கிறதா?" என்றாள்.

நாயுடு:-ஆயா! அந்த மனிதனை நீ இதற்குமுன் பார்த்திருக்கிறாயா! அவனை உனக்குத் தெரியுமா!

கிழவி:- நான் என்ன சொல்வேன்! எனக்கு நல்ல தூக்கம். இந்த மூட்டை நகையா அன்றி பக்ஷணமா என்று எனக்குச் சத்யமாகத் தெரியாது. தோட்டக்காரன் எப்போதேனும் மூட்டை ஏதேனும் கொடுப்பான். அதுதான் என்று நினைத்தேன். என் கையில் கொடுத்தது தோட்டக்காரன் தான் என்று எண்ணி வழக்கம் போல வாங்கிக் கொண்டேன். இந்த திருட்டு கலபை ஏற்பட்ட பிறகுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்த திருடன் இப்படிச் செய்தானே என்று நான் மிக்க ஆச்சரியப்பட்டுவிட்டேன்.

நாயுடு:- ஆயா! கோபித்துக் கொள்ளாதே. நான் என் காதில் பட்டதைச் சொல்கிறேன். நேற்று இரண்டு போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அதாவது,- அந்தக் கிழவியேதான் நகையைத் திருடிவிட்டு இரண்டு மூட்டைகளாகக் கட்டித் தான் ஒன்று அமுக்கி விடலாம்; மற்றொன்றினால் இன்னொருவன் அகப்பட்டுக் கொள்ளட்டும் என்று செய்து விட்டாள். பிறகு வீட்டுக்காரர்களுக்கோ, யாருக்கோ தன் மீது சந்தேகம் உண்டாகி விட்டதை யறிந்த கிழவி தான் சாது போல தப்பித்துக் கொள்ளும்பொருட்டு இரண்டு மூட்டைகளையும் அவன் தலைமீது போட்டு விட்டாள். அந்தக் கிழவி தான் திருடினவள். அந்த வீட்டில் துணி துவைப்பதும் கிழவி தான். அந்த கல்யாணத்திற்கு வந்திருக்கும் ஒரு பெரிய எஞ்சினீயர் ‘தன் பெண்டாட்டியினுடைய கைக்குட்டைகள் இரண்டு காணப்படவில்லை என்று போலீஸில் எழுதி வைத்திருக்கின்றார்களாம். அதை அந்தக் கிழவிதான் துணி துவைக்கும் போது திருடிக் கொண்டாள். அந்த கைக் குட்டையிலேயே அந்த நகைகளைக் கட்டி இருப்பதால் திருடினவள் கிழவிதான் என்பது வியக்தமாகின்றது. அவளை இன்று கைது செய்து விட வேண்டும்." என்று பேசிக் கொண்டார்கள், ஐயோ;பாவம்!'' என்று நாயுடு மேலே சொல்வதற்குள், கிழவியின் முகம் பிணம் போலாய்விட்டது. "ஐயோ! சாமி! கடவுளே! அடே படு பாவி!" என்று கத்த வாரம்பித்தாள்.

-----------
வயது அதிகமாக ஆக சபல புத்தியை ஒழித்து, மனத்தைப் பரிசுத்தப் படுத்திப் பகவானைத் துதிப்போமென்கிற எண்ண மில்லாமல் சிலர் ''யௌவனம் திரும்பாதா" என்று ஏங்கி மனத்தைத் தீய வழியிலேயே செலுத்திப் பாப மூட்டையைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.
-----

இதைக் கண்ட நாயுடு, "ஏ ஆயா! என்ன இப்படி கத்து கிறாயே! இது கல்யாண வீடல்லவா.... அதோ வீதியில் போலீஸ்காரன் வந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆகையினால் நீ இங்கு சத்தம் செய்யாதே. புறக்கடைத் தோட்டத்திற்கு வா" என்று அவளுக்குச் சரியானபடி பயத்தைக் காட்டி அவளை இழுத்துக் கொண்டு தோட்டத்திற்கு ஓடினார். கிழவிக்கு நடக்கக் கூட மாட்டாமல் கால்கள் தத்தளிக்கின்றன. "ஆயா! நீ தள்ளாத வயதில் ஏன் இப்படிப்பட்ட வேலையைச் செய்தாய்?" என்றார்.

கிழவி:- ஐயோ விதியே! அனியாயமே! நான் என் கைலவச்சி பத்து வெரலாலே எதையும் திருடினவள் அல்ல. எனக்கு அந்த எண்ணமே இல்லை. ஐயோ! இப்படி எல்லாம் இவ்வளவு தூரத்திற்கு வருமுண்ணு நான் பார்க்கவில்லையே. என் விதியேண்ணு நான் இருந்தேன்; ஒரு கம்மனாட்டி வந்தான். அவன் எனக்கு முன்னே பின்னே தெரியாது. என் மகள் “என் புருஷன் அடிக்கிறான், இம்சை செய்கிறான். 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தல்தான் உன்னை வைத்துக் கொள்வேன்; இல்லா விட்டால் ஆத்தா வீட்டிற்குப் போ!" என்று வைகிறான்" என்று என்னிடம் சொல்லி யழுதாள்.

அதை அந்தப் பாவிமகன் பார்த்திருந்தான். அவன் "உன் கையில் 50 ரூபாய் கொடுக்கிறேன்; நான் கொடுக்கும். ஒரு மூட்டையை, நான் எவனைத் திருடனென்று சொல்கிறோனோ, அவன்தான் என்னிடம் கொடுத்ததாயும், தூக்கக் கலக்கத்தில் பக்ஷண மூட்டை தோட்டக்காரன் கொடுத்தான் என்று நினைத்து வாங்கியதாயும் சொல்லி விடு. "அவன் ஏற்கெனவே திருடன். அவ னைப் போலீஸார் பிடிப்பதற்கு இது தான் வழி. அவனை வெறுமனே விட்டு விட்டால் இன்னும் திருட்டு விபரீதமாகும். அந்தத் திருட னைப் பிடித்துக்கொடுப்போருக்கு 500 ரூபாய் இனாம் கொடுப்பதாகப் போலீஸார் சொல்லி இருக்கிறார்கள். ஆகையினால் அதில் ஒரு நூறு ரூபாய் உனக்குத் தருகிறேன். இதில் எந்த விதத்திலும் நீ அகப்பட் டுக் கொள்ள மாட்டாய்; நான் பார்த்துக்கொள்கிறேன். நான்தான் இப்படிச் சொன்னதாக நீ ஒருவரிடமும் சொல்லாதே" என்று கூறினான். 'திருடனைப் பிடிப்பதற்குத்தானே' என்று நான் ஒப்புக் கொண்டேன். ஐயோ! நான் என்ன செய்வேன்? போலீஸ்காரனா வந்து விட்டான்!" என்று கிழவி பெரிய ஒப்பாரி வைத்து அழ வாரம்பித்து விட்டாள்.

----
''உறவினரை விடச் சிநேகிதர்களுக்குத் தான் உதவுவதோ" என்று பழிக்கின்றார்கள் சிலர். அவர்கள் நடந்து கொள்ளும் மாதிரியினால் தான் உதவி புரிய மற்றவர்களுக்கு எண்ண முண்டாகுமேயன்றி உறவு அல்லது சிநேகித முறைக்காக மட்டுமல்ல வென்பதை அவர்கள் அறிவதில்லை.
---------

நாயுடுவுக்கோ, சந்தோஷம் பொங்குகின்றது. அவர் கிழவிக் குச் சமாதானம் செய்தவாறு "ஆயா! நீ பயப்படாதே. நான் உன்னை என் தாயார் போலப் பாவிக்கின்றேன். ஆகையினால் உன்னை நான் காப்பாற்றுகிறேன். நீ எந்த சமயத்திலும் நான் சொல்வதுபோலக் கேட்க வேண்டும் அதாவது உனக்கு ரூபாய் கொடுத்த அந்த மனிதனை நீ அழைத்துக் கொண்டு பகல் 2 மணிக்கு உன் வீட்டிற்குச் சென்று அவனோடு "எனக்கு நூறு ரூபாய் போதாது, இன்னும் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டே இரு. அப்போது இரண்டு போலீஸ்காரர்களுடன் நானும் வருகிறேன்; நீ சற்றும் பயப்படா மல், அவர்களைக் கண்டு பயந்தவள் போல நடித்து "ஐயா! நான் ஒரு பாபமும் அறியேன்; இவர் நூறு ரூபாய் கொடுத்தது போதாது என்றுதான் கேட்டேன்; வேறு ஒன்றுமில்லை." என்று கூறி, நடந்த சகலத்தையும் சொல்லி விடு. உன்னை விட்டு விட்டு அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்; நீ அப்படிச் செய்யாவிட்டால் உன்னையே பிடித்து விடுவார்கள். ஜாக்கிரதை. இதை வெளியிட்டாலும் உன்னைப் பிடித்து விடுவார்கள்" என்று நன்றாகக் கடுக்காய் கொடுத்து விட்டார்.

--------
ஸினிமா, டிராமா முதலியவற்றிற்கு முதல் நாளே போவதை விடச் சில நாட்கள் கழித்துப் பொது ஜன அபிப்பிராயத்தைக் தெரிந்து கொண்ட பிறகு போவதே உசிதமானது. ஏனெனில் இக் காலத்தில் மிகவும் கேவலமானவற்றைப் படாடோபமான விளம்பரங்களினால் பிரசித்தி பெறச் செய்கிறார்கள் சிலர்.
------
தன் வேலை முடிந்து விட்டதால் அவர் நேரே பொன்னுசாமியினிடம் வந்தார். அப்போது நாயுடு எதிர்பாராவிதமாய் அங்கு எஞ்சினீயர் வந்து, பொன்னுசாமியினிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்புற்று அமர்ந்தார். நாயுடுவைப் பார்த்த பொன்னுசாமி "நாயுடுகாரு! உங்களைத்தான் நாள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர் என்னுடைய சினேகிதர். நான் இங்கு வந்திருப்பதறிந்துவிசாரிக்க வந்தாராம். அதோடு இவர் கேசவனிடத்தில் மிக்க பற்றுடையவர். கேசவனுக்கு வந்துற்ற ஆபத்தை அன்று நேரில் கண்ணால் கண்டனராம்; அவர் வேறு என்ன செய்யக் கூடும். போலீ ஸாரிடத்தில் ரகஸியமாக ‘அவன் மகா;யோக்யன். என்னிடத்தில் வேலைக்கு இருந்தான். அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்" என்று எத்தனையோவிதம் எடுத்துக் கூறினாராம். அதற்குப் போலீஸார் “முன்னர் யோக்கியனாய், உத்தமனாய் இருந் திருக்கலாம்; இன்று நடந்த விஷயத்திற்காகவன்றோ நாங்கள் கைது செய்தோம்; ஆகையினால் விட முடியாது” என்று கூறி விட்டார்களாம். அவரும் உங்கள் வருகைக்குத்தான் எதிர் பார்த்திருக்கிறார்; என்ன விஷயம்! ஏதேனும் அனுகூலமாயிற்றா!" என்றார்.

---------
"சிலர் முகத்தில் விழித்தாலும், அன்றி புறப்படுகையில் அவர்கள் எதிரில் வந்தாலும் அன்றைய காரியங்கள் யாவும் பாழ்தான்" என்பது வெறும் மூடக் கொள்கை யல்ல." என்பது ஒரு பட்டறிந்த அநுபவ சாலியின் அபிப்பிராயம்.
--------

நாயுடு வெகு சந்தோஷமடைந்து, எஞ்சினீயரின் கைகளைக் குலுக்கி வந்தனம் செய்து விட்டு, "ஐயா! நான் தங்கள் விஷயத்தில் செய்த காரியத்தை நானே கூறி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; இந்த வழக்கு ஒருவாறு முடிந்து விட்டது. குற்றவாளி பிடிபட்டு விட்டான்" என்று கூறும்போதே எஞ்சினீயர் "என்ன! என்ன! குற்றவாளி பிடிபட்டானா! உண்மையாகவா! உண்மையாகவா! நிரபராதி யான கேசவன் தப்பினானா! ஆ! கடவுளின் கிருபையே கிருபை" என்று பூரித்தார். நாயுடுகாரு! நீங்கள் குற்றவாளியைக் கண்டு பிடித்து விடுவீர்களென்று எனக்கு நம்பிக்கையுண்டு. தாங்கள் குற்றவாளி யார் என்று பகிரங்கமாகக் கூறுவதற்கு முன்பு நானும் அதுவிஷயமாகக் குற்றவாளி இன்னானென்று கூறுகிறேன். இவ்விஷயத்தை உங்களிடம் தெரிவிக்கவே நான் வந்தேன். நான் கண்டுபிடித்த குற்றவாளியும், நீங்கள் பிடித்தவனும் ஒரே ஆசாமியா என்பதைப் பார்க்கவேண்டும். என்னுடைய பந்துவின் வீட்டு விவாகத்திற்கு நாங்கள் வந்தோம். நகைகள் களவாடப்பட்டுக் கண்விழித்தபோது என் மனைவி திருடனை நன்றாகப் பார்த்துவிட்டாளாம், அவனை இன்னாரென்றும் தெரிந்துகொண்டாளாம், அவளுக்குக் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டதாம். அதாவது- அந்த திருடன் என் தந்தையின் இளைய மனைவியின் புதல்வன். எனது தம்பி என்று சொல்வதற்கும் வெட்கமாக இருக்கின்றது. அந்தப் பையன் தாயாரின் உபதேசத்தினால் எங்களுடன் பகைத்துக்கொண்டான். எங்களுக்கும் அவர்களுக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது. அவன் தத்தாரியாயும் சோதா வாயும் திரிகின்றான். அந்த சனியனும் விவாகத்திற்கு வந்தது.
----------
ஒரு மணி நேரத்தை மூடர்களோடு கூட கழிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடின் "என்ன மணி இன்னும் கழிய வில்லையே" என்று ஏங்கிப் பிறகு மிகவும் சந்தோஷமான மனத்துடன் அவர்களைப் பிரிகிறோம், ஆனால் அதே நேரத்தைப் படித்த அறிஞர்களிடம் செலவிடில் "இதற்குள் ஒரு மணி நேரம் பறந்து விட்டதே"! 'என்று கலங்கி அவர்களைப் பிரிய மனமில்லாது வருந்த கேரிடுகின்றது.
---------

இவன் இக்காரியம் செய்வதைப் பார்த்து நடுங்கிய என் மனைவி உடனே என்னை எழுப்பி என்னிடம் விஷயத்தைக் கூறினாள். நான் எப்படி இதை வெளியிடுவதென்று யோசிக்கையில் கேசவனைக் குற்றவாளி என்று கண்டுபிடித்து அழைத்துச் சென்றுவிட்டார்கள்: பிறகு இதுவிஷயமாக நான் என் நண்பரிடம் யோசித்ததில் அவர் "இதை நாயுடுவினிடமே தெரிவித்து. அவரே துப்பறிந்து கண்டு பிடித்ததாகக் காரியம் நடக்கட்டும்; குற்றமற்ற கேசவன் விடுதலை யாகட்டும்" என்று கூறினார். இதுதான் விஷயம்" என்றார்.

அவர் அவ்வாறான விஷயங்களைக் கூறப்போகிறார் என்று கனவிலும் கருதவில்லை- யாகையினால், நாயுடு மெத்த சந்தோஷித்தார். "ஐயா! நான் தங்கள் விஷயத்தில் சந்தேகித்தது ஒருவாறு அனு கூலமாகவே முடிந்தது" என்று தான் சமையல்காரனாகச் சென்றது முதல் இதுவரையில் நடக்கு சகலமான விஷயங்களையும் கூறி "தங்கள் பெட்டியைத் திறந்து பாஸ் எடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட எஞ்சினீயர் "என்ன! என்ன! தாங்களா நேற்று எனக்குப் பால் கொடுத்தது! சாப்பாடு பரிமாறியது! என்ன ஆச்சரியம்! உங்கள் தொழில் முறையில் நீங்கள் செய்தது குற்றமென்ன! இத்தகைய குட்டையை அடையாளங் கண்டுகொண்டு இந்த விஷயத்தைக் கண்டுபிடித்ததுதான் வியப்பு! தங்களைப்போன்ற பெரிய உத்யோகஸ்தர்களுக்கு இந்த வழக்கு ஒரு பிரமாதமா! ஐயா! எப்படியாவது கேசவன் விடுதலையடையப் பெற்றால் போதும் என்று நான் இரவுபகலாக எங்கினேன்: இந்த இரண்டு நாட்களாக எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. சரி; இவ்விஷயத்தைப் போலீஸாரிடம் தெரிவித்து அவர்களையும் உடன் அழைத்துச்சென்று அந்த ஆசாமியைப் பிடித்துவிடுங்கள். நான் ஊருக்குப் போய்விடுகிறேன். எனக்குச் செய்தி பத்திரிகையில் தெரிந்ததாகவே நடிக்கின்றேன். நான் கேசவனைப் பார்த்துவிட்டுப்போகப் பிரியப்படு கின்றேன்" என்றார்.

--------
ஒருவரிடத்து உண்மையான அன்பு ஏற்பட்டுவிடின் அவர்களுக்கு இஷ்டமான பொருளைக் கொடுப்பதற்காகக் கடும் வெயிலையும், கொடும் மழையையும், தெடுந் தூரத்தையும் கவனிக்க மனம் இடந்தருவதில்லை. ஆனால் மனப் பற்று இல்லா விடில் பக்கத்திலுள்ளதை எடுக்கவும் கை நாடுவதில்லை.
------
உடனே நாயுடு கேசவன் இருக்கும் இடத்திற்கு எஞ்சினீயரை அழைத்துச் சென்றார், கேசவன் தன்னுயிரே தன் உடலில் இல்லா தவன்போலத் தத்தளித்தவாறு கடவுளை நோக்கி,

1. எனக்கெனச் செயல்வேறிலை யாவுமிங் கொருநின்
றனக்கெனத் தகுமுடல் பொரு ளாவியுக் தந்தேன்.
மனத்தகத்துள வழுக்கெலா மாற்றி யெம்பிரானீ
நினைத்த தெப்படி யப்படியகுளுத னீதம்.

2. பாராயோ வென்று யாமெல்லா மையா
பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்.
வாராயோ வின்ன மொருகால மானாலும்
மலர்க் காலேன் சென்னிமிசை வைத்திடாயே! -தாயுமானார்.

என்ற பாடல்களைப் பாடித் துதித்துக்கொண்டே கண்ணீரைக் கானாறாய் ஓடவிட்ட வண்ணம் இருக்கிறான். பரிமளாவின் உருவம் அவன் அகக்கண்ணிற்குத் தோன்றி "எதற்கும் பயப்படவேண்டாம்; அஞ்சவேண்டாம்'' என்று தைரியம் கூறுவது போன்றிருந்ததினால் சற்று ஆறுதலையடைகிறான். இந்த சமயத்தில் நாயுடு முதலியவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்களைக்கண்டதும் கேசவன் "என் அன்பர்களே! ஏதேனும் வழி பிறந்ததா ! ஹா ! என்னை ஆதரித்த
ஹ! எஞ்சினீயரல்லவா! வாருங்கள்; என்னுடைO நிலைமையைப் பாருங்கள். அதோகதியாகிவிடக் காலம் வந்துவிட்டது. என் சரிதை எல்லாம் தாங்களறிந்திருப்- பீர்களன்றோ! ஒரு பாபமும் அறியாத என்னை இக்கதிக்கு ஆளாக்கவேண்டுமென்று எந்தச் சண்டாளன் கறம் வைத்திருந்தானோ!" என்று புலம்பினான்.

---------
"என்று நமக்கு விடுமுறை கிடைக்கும்; அன்று படிப்புக்கும் விடுமுறை யளித்துவிட்டு வீட்டில் தண்ட போது போக்கித் துவம்சம் செய்யலாம்" என்று கோருவர் சிறுவர்கள். ஆனால் பெரிவர்களோ இந்த உபத்திரவ மில்லா மலரிப்பதற்காகவாவது விடுமுறை விடாமலிருக்க மாட்டார்களா?" என்று வேண்டுவர்.
-----------

எஞ்சி:-கேசவா! உன்னுடைய காலவித்யாசத்தினால் ஏதோ ஒரு விதமான பழி சார்ந்தது எனினும் மகா பெரும் புவியாகிய நாயுடு இருக்கையில் உனக்கு ஒரு வித குறைவுமில்லை. நாயுடு முகத்தில் சிரித்த களை பொங்குகின்றது. அதுதான் உன் ஜெயத்தை எடுத்துக் காட்டுகின்றது. நீ பயப்பட வேண்டாம். உன்னுடைய பழி நீங்கியது. குற்றவாளியை நாயுடு கண்டு பிடித்து விட்டார்." என்ற வாக்கியத்தைக் கேட்ட உடனே கேசவன் "ஹா! நான் நிரபராதி என்பது நிரூபிக்கப் பட்டதா! என் பழி அகன்றதா! கடவுளே நாயுடு உருவமாக வந்து இக் காரியத்தைச் செய்திருக் கிறார். இது நிச்சயந்தானா! என் அன்பர்களே! பிதாவே! இது உண்மைதானா! அல்லது என் மனம் தேறிக் களிக்கும் பொருட்டு இந்த வார்த்தையைக் கூறுகின்றீர்களா! உடனே உண்மையைக் கூறுங்கள்” என்று தத்தளித்தவாறு கேட்டான்.

கேசவனின் பதைப்பைக் கண்டு வியப்புற்ற நாயுடு "கேசவா! நான் பொய் யுரைப்பதாக நீ எத்தனை விஷயங்களில் கேள்வி யுற்றிருக்கிறாய்?. நான் என் வேலையில் வெற்றி பெற்றாலொழிய பொய்யுரைத்துப் பசப்புகின்றவன் நான் அல்ல வென்பதை நீ அறியாயா! செல்வா! உன் தலை மீது விழுந்த அபாண்ட இடி விலகியது. உண்மைக் குற்றவாளியை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறாய். ஆத்திரப்படாதே! உன் பரிமளா உனக்கே தான் என்பதை இனியேனும் நம்பு, அந்த மாதாசியும் தாமரை யிலை நீர்த்துளி போல் தத்தளித்துக் கொண்டிருப்பாள். நாங்கள் சென்று வருகிறோம். நீ பல நாடகங்கள் நடித்த பிரபல நடிகனல்லவா! ராமதாஸ் வேடத்தில் சிறையில் இருந்தாய்; மாணிக்க வாசகராய்ச் சிறையிலிருந்தாய். இன்னும் எத்தனையோ நாடகங்களில் சிறையி லிருந்ததாக நடித்திருப்பது போல இதுவும் ஒன்று என நினைத்துக் கொள். கேசவா! பயப்படாதே. நாங்கள் சென்று வருகிறோம்" என்று கூறி விட்டு நேரே போலீஸ் ஸ்டேஷ னுக்குச் சென்று 'குற்றவாளி யகப்பட்டு விட்டான்; பிடிப்பதற்குத் தயாராக என்னுடன் வாருங்கள்" என்றார் நாயுடுகாரு.

-----------
பத்திரிகை வரும் நேரத்தை வெகு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில் அது வந்தவுடன் தாக்ஷண்யப்பட்டவர்கள் “இதோ ஒரு நிமிஷத்தில் தருகிறேன்." என்று எடுத்துக் கொண்டு போய் பிறகு கொடுக்காமலே இருந்து விட்டால் எவ்வளவு மனக் கஷ்ட முண்டாகிற தென்பதை அவர்கள் கவனிப்பதேயில்லை.
--------

இதைக் கேட்டதே அதிகாரி வியப்புற்று "குற்றவாளி யகப்பட்டு விட்டானா! குற்றவாளி வேறு யாரையா !... கேசவனை விடுவிக்கும் பொருட்டு யாரையேனும் பிடித்துத் தயார் செய்து விட்டீர்களா!" என்றார்.

நாயுடு:- ஐயா! என்னுடைய உத்தியோகம் அதுவல்ல. பொய்க் கேஸ்கள் பலவும் ஜோடித்து வழக்கை நடத்தி ஜெயமும், அப ஜெயமும் அடைவது வேறு பேர்வழிகள் என்பது உங்கள் மனமறியும். உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குத்தான் நான் தொழில் பூண்டேன். சரியாக பகல் இரண்டு மணிக்கு என் னுடன் வாருங்கள்'” என்று கூறி விட்டு ஓட்டலுக்குச் சென்றார்.

அப்போதுதான் நாயுடுவுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அவர் அந்த தந்தியை வாங்கிப் பார்த்தார்.

"என்னரிய தந்தையே! நாயுகோரு! நீங்களிருவரும் உடனே வர வேண்டியது. விஷயம் வெகு முக்கியமானதும் அவசரமானதுமாகும். என்னுடைய வந்தனத்தையும் தைரியத் தையும் கேசவனுக்குத் தெரிவிக்கவும்.
பரிமளா”

என்றதைப் படித்த இருவரும் "பரிமளாவுக்கு ஆபத்து ஒன்று மில்லை. ஏதோ நல்ல விஷயந்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இவ்விதம் தந்தி படித்திருக்கிறாள்" என்று எண்ணி, உடனே நாயுடுகாரு பரிமளாவுக்குக் கீழ்வருமாறு தந்தி யடித்தார்.

"செல்வீ பரிமளா !
உன் தந்தி கிடைத்தது. அது கிடைப்பதற்கு முன்பே துப்பு விளங்கி விட்டது. கேசவன் நிரபராதி என்பதை நிரூபித்தாய் விட்டது. குற்றவாளி பிடிபட்டான். நாங்கள் சீக்கிரத்தில் வந்து சேருகிறோம். கவலைப்படாதே!
நாயுடு”

-------
தினந்தோறும் பத்திரிகை படிக்காவிடில் நமது ஊரில் நடக்கும் முக்கியமான விஷயங்களை யறிவதற்கில்லாமற் போய் விடுகின்றது. அதனால் சில சமயங்களில் அநாவசியமான கஷ்ட நஷ்டங்கள் உண்டாகின்றன. சிலர் தினம் பத்திரிகை படித்தும் முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதே இல்லை.
-----------

சரியாக மணி இரண்டடித்தது. போலீஸ் ஜெவான்களும் இன்ஸ்பெக்டரும் வந்தார்கள். நாயுடுகாருவும் அவர்களுடன் வேலைக்காரக் கிழவியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிழவியும் அந்த ஆசாமியும் நாயுடுவின் எச்சரிகைப்படிக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாயுடு போலீஸாரிடம் "ஐயா! சற்று இவர்கள் சம்பாஷணையைக் கவனியுங்கள்" என்றார்.

கிழவி:- அடேய் படுபாவி! அந்த ஆசாமியை நீ திருடன் என் றும், வெகு நாளைய கொள்ளைக்காரன் என்றும், அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு 500 ரூபாய் இனாம் போலீஸார் கொடுப்பதாக விளம்பரம் செய்திருப்பதாயும், அதனால் அவன் மீது பழியைச் சாட்டிப் போலீஸாரிடம் ஒப்புவிக்க வேண்டு மென்றும் கூறினாயே! இந்த முழு மோசத்தை நம்பி நானும் விஷய மறியாது இதில் மாட்டிக் கொண்டேனே!

குற்றவாளி:-நீ ஏன் இதற்குப் பயப்படுகிறாய்? அந்தப் பயல் தான் திருடன் என்று பிடித்து விலங்கு போட்டாயிற்று. இனி என்ன கவலை! உனக்கு வேண்டுமானால் நீ கேட்டது போல இன் னும் நூறு ரூபாய் தருகிறேன். இந்த விஷயத்தைப் பற்றிக் கவலையை விட்டு விடு, பயப்படவும் வேண்டாம்- என்றான்.

அப்போதுதான் போலீஸாருக்கு ஒருவித சந்தேகம் உண்டாகியது.

சிலர் ஒருவரிடத்துச் செல்கையில் '" ஒன்றுமில்லை; வெறுமனேதான் வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே யிருந்து விட்டுத் தான் வந்த காரியத் தைப் பற்றிச் சொல்லாமலிருந்து, அவர் வெளியில் போன பிறகு கையைப் பிசைவது:

அவர்கள் உடனே உள்ளே சென்று, "ஐயா! இனி கவலையே கிடையாது, எல்லாம் களிப்பாகவே முடிந்தது. நீர் போலீஸாரின் விளம்பரப்படிக்குக் கள்ளனைப் பிடித்துக் கொடுத்ததற்காக உங்களுக்கு மரியாதை செய்து அரசாங்கத்தினரின் விருந் தினராக அழைத்துச் செல்ல வந்தோம். வாரும். எழுந்திரும். ஏ கிழவி! எழுந்திரு.'" என்று அதட்டியபடி அந்த ஆசாமியைப் பிடித் துக் கொண்டார்கள்.

இவர்களைக் கண்ட கிழவி நடு நடுங்கிப் போய் 'ஐயா! நான் ஒரு பாபமும் அறியேன். நூறு ரூபாய் போதாது. நீ மட்டும் போலீஸாரிடம் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொள்கிறாயே! அதில் இன் னும் நூறு ரூபாய் கொடு. நான் அந்த மூட்டையைக் கொண்டு கொடுத்துக் கூறியதனாலன்றோ அவன் குற்றவாளியாக மதிக்கப் பட்டான்!" என்று தருமமாகக் கேட்டேன். நீங்களே அதை எனக்குக் கொடுத்து விடுங்கள். இவனுக்கு நான் சகாயம் செய்தும் இவன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்." என்றாள்.


அந்த மனிதனுக்கோ உயிர் உடலை விட்டுக் கிளம்பியது போலவே ஆய்விட்டது. நெருப்பை மிதித்தவன் போல தத்தளிக்கின்றான்; எனினும் திடீரென்று வெறி கொண்டவன் போலச் சீறி, அங்கு வந்திருப்பது போலீஸார் என்றதையும் மறந்து, தன் மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சற்றும் எதிர் பாராத விதமாகக் கிழவியின் மீது ஒரு வெடியும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒரு வெடியும் டப் டப் என்று இமைப் பொழுதில் சுட்டான். இந்த அசுர செய்கையைக் கண்டு எல்லோரும் பிரமித்து இமைப் பொழுது கலங்கி விட்டார்கள்.
------
சிலர் "நமஸ்காரம்" என்று வாயாற் சொல்கையில், கைகளை வேறு விதமாகக் காட்டுவது; அவர்களது முகமோ இரண்டுக்கும் சம்பந்தமில்லாத விதம் கோணுகின்றது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு நவக்கிரகங்கள் போன்று வக்கரித்துக் கொண்டால் அவர்கள் மேற்கொண்டுள்ள காரியம் அதற்குத் தகுந்தாற் போலத்தான் நடக்கின்றது.
-------

11-வது அதிகாரம்
பகலவனைக் கண்ட பனி

வெகு காலங்களுக்கு முன்பு விட்டுப் பிரிந்த தன் மகனைக் கண்டதும்,
பெற்ற பாசம் மூடிக் கொண்ட கோமதி மருதப்பனை வாரியணைத்துக் கொண்டு நின்ற காட்சியைக் கண்டு வியந்த மற்றையோர் " ஆ! இவருடைய அன்னை நீங்களா! உங்கள் குமாரரா இவர்! என்ன ஆச்சரியம்! இவர் பெயர் சுப்பிரமணிய யென்றல்லவோ எங்களிடம் தெரிவித்தார்; மருதப்பனா இவர் பெயர். அம்மணி! அன்று உங்கள் வீட்டிற்கு இவரும் வந்து நடித்தனரே! அப்போது ஒருவருமே கவனிக்க வில்லையே! இவர் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருந்தார்; விஷயம் விளங்கவில்லை! எனக்கு விளங்கக் கூறுங்கள்" என்று மானேஜர் கேட்டார்.
இது கேட்ட கோமதி "ஐயா! என் குழந்தையைத் தாங்கள் இது பரியந்தம் காப்பாற்றியதற்கும், எங்கள் வீட்டிலேயே வந்து நடித்து எங்களுக்கு நாங்கள் இழந்த புதையலை எங்களிடம் சேரும் படியாகச் செய்ததற்கும், நான் எவ்விதம் வந்தனம் செய்வதும் கைம்மாறு செய்வது மென்பதே தெரியாமல் தவிக்கின்றேன். தங்களிடம் எங்கள் வரலாற்றைக் கூறாது வேறு யாரிடம் கூறுவேன்!" என்று ஆதி முதல் அன்றைய வரையில் நடந்த சகலமான விஷயங்களை யும் கூறி

கெட்ட பழக்கங்களுடையவர்கள் அஃதில்லாதவர்களைத் தங்கள் நிலைமைக்குக் கொண்டு வந்து சமத்வம் பாராட்ட விரும்புவது போல, தாழ்ந்த ஸ்திதியிலுள்ளவர்கள் தங்களை விட மேலான நிலைமையிலுள்ளோரைத்
தங்களது நிலைமைக்குத் தாழ்த்திவிட வேண்டுமென்று விரும்புகின்றார்களேயன்றி, தாங்கள் தமது ஊழல்களைத் துறந்து விட்டு உன்னதப் பதவியை அடைவோமென்கிற எண்ணம் கொள்வதில்லை.

"ஐயா! இவன் கதை போல வரைந்து நடித்தது முற்றும் இவனுடைய சொந்த சரிதை யாகும். இவன் முதன் முதல் திருடி எங்களை விட்டுச் சென்ற பிறகு இது வரையில் நடந்த விஷயங்களையே இப்போது உங்களுக்கோர் கதையாக நடித்து விட்டான். என் வீட்டில் வந்த போது நாங்கள் கவனிக்கவில்லை எனினும், எனது சிறிய மகள் கவனித்துக் கூறியதன் பேரில்தான் நான் சினிமாப் படம் பிடிக்கையில் பார்க்க வேண்டு மென்று என் மூத்த குமாரத்தி பாலாவை கேட்கச் சொன்னேன். ஐயா! எங்கள் கதை இன்னும் எஞ்சியதையும் கூடச் சேர்த்துக் கொண்டு நடிக்கலாம். எப்படி பிறந்து, எப்படி வளர்ந்து, கடைசியில் எங்கு கூலி வேலைக்குத் திண்டாடி எங்கள் கற்பை காத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் எமனுடன் இருப்பது போலப் பழகுகின்றோம் தெரியுமா ?” என்று வருந்திக் கொண்டே கூறினாள்.

இது கேட்ட மானேஜர் மிக்க ஆச்சரியமும் விசனமும் அடைந்தார். உண்மையில் அந்த மானேஜர் மகா உத்தம குணம் பொருந்தியவர்: யாருக்கும் தீங்கு செய்ய மனத்தினாலும் கருதாதவர் ஆகையினால் இவர்களின் சரிதை, அவர் மனத்தை யுருக்கியது. மருதப்பா தன் தாபைக் கண்ட தக்ஷணமே ஆநந்தத்தினால் மூர்ச்சை யானான். மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடன், இன்னது பேசுவதென்பதையே அறியாது தாயையும் சகோதரிகளையும் மாறிமாறிக் கட்டியணைத்து, ஆநந்தக் கண்ணீர் பெருகவிட்ட வண்ணம் தாயார் சொல்லிய பரிதாபகரமான செய்தியைக் கேட்டுக் கலங்கிப்போய் "ஹா! அம்மா! கேசவன் காணப்படவில்லையா! ஐயோ! என்னைத் தான் பிரிந்துப் பரிதவித்தாய் என்றல்லவோ எண்ணினேன், உத்தமனாகிய கேசவனையுமா பிரிந்துவிட்டாய்! கேசவனின் தகவல்

சில வியாபாரிகள் ஒரு குறிப்பிட்ட விகிதப்படி விளம்பரம் செய்வதாக ஒத்துக் கொண்டு விளம்பரம் வெளியான பிறகு "அவ்வளவு கொடுக்க முடியாது; கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்காமல் இழுக்கடிப்பது. சில பத்திராதிபர்கள் ஒரு குறைந்த விகிதப்படி விளம்பரம் வெளியிடுவதாக வாக்குக் கொடுப்பது; அப்புறம் அதை அதிகப்படுத்தித் தாங்கள் முன்னர் சொன்ன வார்த்தையை மழுப்பி விடுவது. இந்தக் காலத்தில் வார்த்தைக்கு மதிப்பே யில்லை போலும்.

இன்னுமா கிடைக்கவில்லை! என்னருமை கேசவா! உன்னைப் பார்க்கப் பேராவல் கொண்டிருந்தேனே! நீ எப்படி மாயமாய் மறைந்துவிட் டாய்!" என்று மருதப்பா புலம்பினான்.

இவைகளைக் கேட்ட மானேஜர் "அம்மணீ! நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் கேசவன் என்றொரு சிறுவன் நாடகத்தில் நடித்துவருகிறானே, அவனாகவிருக்குமோ! இதோ ஒவ்வொரு வேஷத்திலும் எடுக்கப்பட்டுள்ள அவனுடைய புகைப்படங்கள் என்னிடமிருக்கின்றன. நான் அந்தப் பக்கத்திலிருக்கையில் தினம் நாடகத்திற்குச் சென்றதால் இந்த புகைப் படங்களை வாங்கினேன். பையன் வெகு நன்றாகப் பாடுகின்றான், நடிக்கின்றான். இவனா பாருங்கள்!" என்று புகைப் படங்களைக் காட்டினார்.

இதைப் பார்த்த கோமதி, மருதப்பா முதலிய எல்லோரும் "ஹா! இவன் தான்! எல்லா வேஷல்களையும்விட நந்தனார் வேஷத்திலும், பட்டினத்தடிகள் வேஷத்திலும் கொஞ்சங்கூட மாறுதலின்றி நன்றாகத் தெரிகின்றது. ஆ கேசவா! என்னருமை கேசவா! நான் என்ன புண்ணியம் செய்தேனோ ஒரே சமயத்தில் இரு குமாரர்களையும் காண நேர்ந்தது! ஐயா! இதற்குக் காரணம் தாங்கள் தான்! எங்களுக்கு உயிர் கொடுத்ததே தாங்கள் தான்" என்று தாராளமாய்க் கூறுவோம்" என்று பெரு மகிழ்ச்சியோடு, உடனே அங்கு செல்வதற்கு ஓர் மார்க்கம் தாங்கள் தான் தேடித்தரவேண்டும். எங்களுக்கு வேறு கதி இல்லை. இந்தத் தோட்ட வேலையிலிருந்து விடுதலை படைய ஓர் வழி செய்யவேண்டும்" என்று பரிதாபமாகக் கேட்டார்கள்.

இதுகேட்ட மானேஜர் "ஆகா! இந்த தோட்டத்தில் இத்தகைய அனியாயங்கள் நடக்கின் றனவா! இது பரியந்தம் இவ்விஷயங்கள் வெளியாகாமலன்றோ இருந்தன! அம்மா! நான் எப்போதும் பிறருக்கு உதவி செய்வதிலேயே நோக்கங் கொண்டவன். உங்களை எனக்கு இதுகாறும் தெரியாது. தெரிந்திருக்குமாயின்

சாகர அலைக்காவது ஓய்வு இருக்கலாம். சிலரது மனக் கவலைக்கு ஓய்வே கிடையாது. அவர்களது அக்ஞானம், அநுபவமின்மை, சந்தேகப் பிசாசு முதலியவைகளே அதற்கு முக்கிய காரணமாகும்.

இத்தகைய கஷ்டங்கள் நீங்கள் அடைந்திருக்கமாட்டீர்கள். கடவுள் எல்லாவற் றிற்கும் ஒரு கால தவணை குறிப்பிடவில்லையா! இப்போது தான்
அதற்குக் காலம் வந்தது. அம்மா! இந்த தோட்டத்தின் சொந்தக் காரரும் எனது சிற்றப்பன்தான். என்னை எடுத்து வளர்த்தவரும் அவர்தான். ஆகையினால் நான் அவரிடத்தில் நேரில் சென்று உங்கள் விஷயங்களைக் கூறி நீங்கள் உங்கள் ஜன்மபூமியை அடைவதற்கான உத்தாவை வாங்கிக்கொண்டு வருகிறேன். என்னாலான உதவியைச் செய்ய நான் மறுக்கவில்லை. எங்கள் கம்பெனியின் விஷயத்தில் மருதப்பா காட்டியுள்ள ப்ரேமைக்கு நான் என்றும் அவருக்கும் உங்களுக்கும் உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். உங்களுடைய ஜீவிய சரிதையைக் கேட்க என் மனம் பதறுகின்றது. என் வண்டி தயாராக இருக் கின்றது. அதிலேயே நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். நான் நாளை வந்து சந்திக்கின்றேன்" என்றான்.

அந்த மானேஜருடைய நற்குணத்திற்கும், பச்சாத்தாப சிந்தைக்கும் எல்லோரும் வியப்புற்று அவருக்குப் பிரதி வந்தனம் செய்துவிட்டு, உத்தாவு பெற்றுக்கொண்டார்கள். மானேஜரும் அவர்களுடன் வண்டியில் வீட்டு வரையில் வந்து அவர்களைக் கொண்டு விட்டார். அப்போது பத்திரிகை விற்றது. அதை மானேஜர் வாங்கிப் படித்தார். அதில் அதிசயமான விஷயம் வெளியாயிருந்தது. அதாவது,-பாலாவின் பிதாமீது கொலைக்குற்றம் சாட்டுவதாகப் பயமுறுத்திய மனிதனே கொலையானி என்பது விளங்கிவிட்டதாயும், அவனைத் தண்டித்துவிட்டதாயும் இருந்தது.

இந்த சந்தோஷச் செய்தியைக் கேட்ட எல்லோரும் பேரானந்த மடைந்தார்கள், கங்காதானுக்கு அப்போதுதான் சரியானபடி மூச்சு வந்ததென்று கூறலாம். அந்த சந்தோஷத்துடன் தனது மூத்த குமாரனைக் கண்டதும்,


பூஜா காலத்தில் யாதொரு தடங்கலுமில்லாதிருந்தால்தான் ஒரு வழியில் நிலை நிறுத்த முடியும். அதை உத்தேசித்துப் பூஜை செய்யும் இடத்தை வீட்டின் உட்புறம், எவரும் திடீரென்று பிரவேசித்துத் தொந்தரவு செய்யாமலிருக்கும்படியாக அமைத்தல் உசிதமானது.

கேசவன் விஷய மறிந்ததும் ஆக எல்லா ஆநந்தமும் ஒன்றுகூடி அவரைப் பரவசமுறச் செய்தது. மகனைத் தழுவிக் கொண்டார். மானேஜருக்கு மனப்பூர்வமான வந்தனத்தை யளித்தார்; நன்றி யறிதலைத் தெரிவித்தார். மானேஜரும் உத்தரவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
மறுதினம் மானேஜரின் வருகையை வெகு ஆவலோடு எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அந்தப் புண்ணியவான் தமக்காக எடுத்துக் கொண்ட சிரமத்தைப் பற்றி எல்லோரும் பேசிச் கொண்டு ஆனந்த சாகரத்தில் அக மகிழ்ந்தவாறு அந்த இரவைக் கழித்தார்கள்.

மறுதினம் உதயமானதும் மானேஜரின் வருகையைக் கோரியே எதிர்பார்த்திருக்கையில் அவரும் வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட எல்லோரும் அபாரமான சந்தோஷத்தை யடைந்து வரவேற்றார்கள். பாலா அவரை நோக்கி, "ஐயா! காயா, பழமா!” என்று குயில் போலக் கேட்டாள். மானேஜர் "அம்மா! கடவுளின் கருணை பிறந்த பிறகு காயேது! எல்லாம் பழமே! எல்லாம் ஜெயமே! இதோ இந்த பாஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிற்றப்பாவுக்கு விஷயங்களை விளங்கக் கூறி உங்களுக்கு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்தேன். இவ்வாரக் கப்பலிலேயே தாங்கள் பிரயாணமாகலாம். மருதப்பா! நீ எங்கள் கம்பெனியில் இதுகாறும் நடித்ததற்காகவும், உன்னுடைய ஜீவிய சரிதையையே வெகு அழகாக எழுதித் திறமையாக நடித்ததற்காகவும் நான் பெருந் தொகையை உனக்குக் கொடுக்க வேண்டியது என் கடமையாதலால் நான் கொடுக்கும் இத்தொகையைத் தட்டாது நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்" என்று வெகு வணக்கத்துடன் சொன்னார்.

சிலர் அதிகாலையில் ஸ்நானஞ் செய்து, வித விதமான புஷ்பங்களால் பகவானை அர்ச்சித்து, வருபவர்களைத் தடபுடலாக உபசரிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு "எப்பொழுது, யாரை எப்படிக் கெடுக்கலாம்” என்கிற யோசனை தான். இப்படிப்பட்ட புண்ணியாத்மாக்களின் பூஜையை எப்படி பகவான் ஏற்றுக் கொள்வாரோ!
இதைக் கேட்ட மருதப்பா “எஜமானரே! தங்கள் பெருந் தன்மைக்கும், உதார குணத்திற்கும் நாங்கள் என்றும் 'நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். என்னைப்போன்ற பாப ஜென்மம் இனி யாரும் பூவுலகில் எடுக்க வேண்டாம்; அநியாயமாகக் குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் உரை கேளாது பெரும் சோதாக்களுடன் சேர்ந்து கோலியாடுவது, சிகரெட்டுகள் பிடிப்பது, சினிமா டிராமா முதலிய இடங்களுக்குச் செல்வது, குடிப்பது முதலியவைகளுக்குப் பணம் வேண்டுவதற்காகத் திருடுவதும்,இன்னும் குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு, பணங் கட்டிச் சூதாடுதல், சீட்டாடுதல் முதலிய எத்தனையோ துர்ப் பழக்கங்களை கைக்கொண்டு கெட்டுப் போன பிள்ளைகளைக் கண்ணால் பார்த்திருப்பதோடு அவர்களால் நானும் இன்னிலைமைக்கு வந்தேன். எனக்குக் கடவுள் புத்தி, வரும்படிச் செய்தார். என்னுடைய உண்மையான ஜீவிய சரிதையை நடித்துப் பார்த்த பிறகேனும் பிள்ளைகள் கெட்டு விடாமலும், பெற்றோர்கள் அவர்களைச் சரியான வழியில் திருத்தியும் நடப்பார்களல்லவா! அந்த எண்ணத்தைக் கொண்டுதான் நான் இக்கதையை வரைந்தேன்; நானே நடித்தேன். இதற்காக நான் பணம் பெறுவது சரி இல்லை. எனினும் எங்களுடைய ஏழ்மை நிலைமையை உத்தேசித்தும், உங்கள் அன்பை நோக்கியும் நாங்கள் எங்கள் ஊருக்குச் சென்றும் திண்டாடாமல் புசிப்பதற்காகவும் வேண்டிச் சிறு தொகையை வாங்கிக் கொள்கிறேன். நாங்கள் ஊருக்குச் சென்றதும் ஏதேனும் ஒரு தொழிலில் அமர்ந்து என் குடும்பத்தைக் கடமையோடு காப்பாற்றுவேன், மூட்டை சுமந்தேனும், வண்டி இழுத்தேனும் காப்பாற்றுவேன். அன்றி தாங்கள் சிபார்சு செய்தால் வேறு சினிழாக் கம்பெனியிலேயே நடிக்க இசைவேன். என்னை மன்னித்து இதற்கு இணங்க வேண்டும்." என்றான்.

நமக்கு மிகவும் ஆப்தமானவர்களிடம் பக்ஷத்திற்கொருமுறை அரை மணி நேரம்தான் பேச சந்தர்ப்பம் ஏற்படின் அவர்களோடு அநேக விஷயங்களைப் பற்றிப் பேச நினைக்கிறோம். ஆனால் அவர்களை நேரில் பார்க்கும்போது எதைப் பற்றிப் பேசுவதென்று தெரியாமல் ஏதேதோ விஷயங்களைக் குறித்துப் பேசு கையில் அரை மணி அரை நிமிடமாக ஓடிவிடுவதால், அரை மணி அரை நாளாக வாவது வளரக்கூடாதா என்ற ஏக்கமுண்டாகின்றது.

பிறகு மானேஜர் 500 ரூபாயைக் கோமதியினிடம் கொடுத்து "அம்மா! இந்த தடவை இதை நான் செலுத்துகிறேன் எனினும் எனக்குச் சமயம் கிடைக்கும்போது நான் பார்த்துக் கொள்கிறேன். ஏதோ தோட்டத்து விஷயக் கொடுமைகளோடு எல்லாம் மறந்து விடப் போகின்றது; என் ஞாபகம் இருக்கட்டும். நான் சதா நினைத்துக் கொண்டே இருப்பேன்" என்று அவர்களிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து, பின்னர் விடை பெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் ஊருக்குப் போய்ச் சேர உத்தரவு தங்களுக்கு கிடைத்து விட்டதைப் பற்றி அவர்கள் மிக்க சந்தோஷமடைந்துப் பொங்கினார்கள். தாங்கள் கேசவனைக் காணப் போகும் நாள் என்று வரும் என்று ஏங்கித் தவித்தார்கள்.

மருதப்பா எழுதிய கதையை நடித்து முடிப்பதற்கு அன்றும் மறுநாளும் ஆயிற்று. அதற்குள் பிரயாண சித்தமாகி விட்டார்கள். மறுதினம் கப்பல் புறப்படும் நேரம் வந்தது. கோமதி குடும்பத் துடன் சென்று கப்பலேறினாள்; மானேஜரும் அவர்களை வழியனுப்ப வந்தார், பழ வகைகளும், பலகார வகைகளும் கொடுத்தார்; அவர்கள் வெகு மரியாதையோடு மானேஜருக்குப் பலதரம் வந் தனம் செய்தார்கள். “நீங்கள் செய்த பேருபகாரத்தை என்றும் மறவோம்!" என்று நன்றி கூறினார்கள்.

கப்பலும் நகரத் தொடங்கியது. பிரிவாற்றாத விசனம் எல்லோருடைய இதயத்திலும் உண்டாகிக் கண்ணீர் வடிந்தது; கப்பலும் கண்ணிற்கு மறைந்தது. கோமதி தான் முதலில் கப்பலில் வரும் போது அடைந்த துன்பத்தையும், இப்போது குடும்பத்துடன் சந்தோஷமாகச் செல்லும் இன்பத்தையும் பற்றிக் கூறி ஆநந்தப் பரவசமடைந்தாள்.

நமக்குப் பல தடவைகளில் பண உதவி செய்பவர்களுக்கு அவசியமான போது நாம் உதவுவதற்கில்லா அசந்தர்ப்ப மேற்படின் நாம் அதற்காக வருந்துவதுடன் அவர்கள் நம்மைப்பற்றி வித்தியாசமாக நினைத்துவிடுவார்களோ வென்றும் கவலைப்படவேண்டியிருக்கின்றது.

கப்பல் துறைமுகத்தில் வந்து நின்றது. அவர்கள் எங்லோரும் அந்த இடத்திற்குச் செல்வதென்று யோசித்தார்கள் பொன்னுசாமி நாடகக் கம்பெனிக்குச் சென்று அங்கு கேசலனைப் பார்த்து விட்டுப் பிறகு யோசிக்கலாம்" என்று நினைத்து நாடகக் கொட்டகைக்கு வர்தார்கள். அங்கிருந்த வேலையாளை நோக்கி "ஐயா! இங்கு கேசவன் என்று ஒரு சிறுவன் நடிக்கின்றானே, அவனையும் கம்பெனி யின் சொந்தக்காரரையும் நாங்கள் பார்க்க வேண்டும். எங்கே இருக் கிறார்கள்?" என்று கேட்டான் கோமதி.

வேலையாள்:-அம்மா! நீங்கள் யார்? எதற்காகப் பார்க்க விரும்புகின்றீர்கள்? உங்கள் முகத்தைப் போலவேதான் கேசவனுக் கும் இருக்கிறது. ஆதலால் நீங்கள் அவருடைய தாயாராக இருக்குமோ! ஐயோ பாவம்! கேசவன் இராப் பகலாகப் புலம்புகின்றார். உங்களைப் பார்க்க பாக்கியம் உண்டோ இல்லையோ என்ற
சந்தேகமே அவருக்கு உண்டாகி விட்டது.- என்று அவன் முக ஜாடையில் தெரிந்து கொள்வதைக் கவனித்த கோமதி "அப்பா! நான் தான் கேசவனின் தாயார். என் செல்வன் எங்கே இருக்கிறான்? சீக்கிரம் சொல்லு" என்று பதறியவாறு கேட்டாள். இவளுடைய வாஞ்சையை அறிந்த வேலைக்காரன் மிக்க சந்தோஷமும், ஆச்சரிய மும் அடைந்து "அம்மா! என் தாயே! நீங்கள் செய்த பாக்யமே பாக்கியம்! உங்கள் மகனை நீங்கள் விவாகக் கோலத்துடன் காணும் புண்ணியம் செய்தீர்கள், நாளைய தினம் பரிமளாவுக்கும் கேசவனுக்கும் திருப்பதியில் விவாகம். நிச்சயதார்த்தம் இன்று தான் நடக்கின்றது. வாருங்கள்; நான் அழைத்துக்கொண்டு செல்கிறேன்" என்றான், அன்றே தனி (ஸ்பெஷல்) கார் வைத்துக்கொண்டு எல்லோரும் திருப்பதிக்குச் சென்றார்கள்.
இந்த ஆநந்தமான விஷயத்தைக் கேட்ட எல்லோருக்கும் உண்டான அபார சந்தோஷத்திற்கு எல்லையுண்டா! மனம் கட்டு மீறிப் பொங்கியது.

நாம் முக்கியமான விஷயத்தைப்பற்றி யாருக்குக் கடிதமெழுதினாலும் அதன் நகல் ஒன்று கையில் வைத்திருப்பது அதியவசியமானது. சில சமயங் களில் அசல் கடிதம் அவர்களுக்குச் சேராவிடில் நாம் நகலைக் காட்டி அவர்களுக்கு உண்மையான நிலைமையைத் தெரிவிக்க அநுகூலமாகின்றது.

விவாக வீட்டில் மேளமும், தாளமும் தடபுடல் படுகின்றது. கேசவன் திருமணக் கோலத்துடன் வீற்றிருந்தான் பரிமளா ஜகஜ்ஜோதியுடன் ஐகன்மோகன சிங்காரியாய் விளங்கினாள். கோமதி ஆவேசத்துடன் சென்று “என் கண்ணே! கண் மணியே! கேசவா! என் செல்வா!" என்று கூறிக்கொண்டே கேசவனை இறுகத் தழுவிக்கொண்டாள். நீலா, பாலா, மருதப்பா அவன் தந்தை முதலிய எல்லோரும் ஏக காலத்தில் கேசவனைக் கட்டிக் கொண்டு ஆநந்த மிகுதியால் புலம்பியபடியே “என் கண்மணியே! உன்னைத் திருமணக்கோலத்துடன் காணச்செய்த கடவுளுக்கு அநந்தகோடி வந்தனம்." என்று கூறினார்கள்.
இரவு பகலாக ஏக்கங்கொண்டிருந்த கேசவனுக்கு ஒரே சமயத்தில் தனது மனிதர்கள் எல்லோரையும் பார்த்த சந்தோஷத்திற்கு அளவில்லை. "அம்மா! ஒருவாய்க் கஞ்சிக்குப் பஞ்சையாயலைந்து நான் தேடிச் செல்கையில் உங்களைப் பிரிந்த நாளின் துக்க சம்பவம் என் மனத்தில் இப்போதும் நன்றாகப் பதிந்து கிடக்கின்றது. என் செல்வச் சோதரிகளே! பாலா! நீலா! அண்ணா! என் தந்தையே!" என்று பலவாறு கூறி ஆனந்த நிர்த்தனம் செய்தான்.

பொன்னுசாமி இவ்வானந்தமான காட்சியைக் கண்டு இன்பக் கண்ணீர் சிந்தியவாறு கேசவனுடைய தந்தையையும், அண்ணனையும் விசாரித்து வந்தனம் செய்து, கோமதிக்கும் வந்தனம் செய்தார். பரஸ்பரமான ஆனந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்கே அரைமணியாயிற்று. பார்வதியம்மாள் வந்து சம்மந்தியம்மாளை விசாரித்து முகமன் கூறினாள். பரிமளாவின் இன்பத்திற்கோ எல்லையே இல்லை. கேசவனின் தேகம் இரட்டிப்பாகப் பூரித்தது. அன்று பூராவும். தங்கள் பிரிவைப்பற்றிப் பேசியும், பரிமளாவைக் கண்டு களித்தும் தங்களுக்கு இத்தகைய பாக்கியம் கிடைத்ததே என்கிற அபார சந்தோஷத்துடன் கோமதி

நாம் ஒருவரைப் பார்ப்பதற்காகக் கார்டு (Visiting Card) அனுப்பி அவர்களிடமிருந்து யாதொரு பதிலும் கிடைக்காவிடில், நம்மை அவர்கள் அலக்ஷியஞ் செய்துவிட்டதாக நினைக்க இடமுண்டாகின்றது. ஆனால் உண் மையை ஆராய்கையில் நடுவிலுள்ளவர்கள் தான் தாமதத்திற்குக் காரணமென்று வெளியாகின்றது.

தன் நோயையும் மறந்தான்.. இரவியைக் கண்ட பனி போல ஆனந்தத்தின் முன்பு நோயும் பறந்தது. அவர்கள் எல்லோரும் புதிய ஆடையாபாரங்கள் தரித்துப் புதிய மனிதர்களானார்கள்.

பொன்னுசாமி கட்டு மீறிய களிப்புடன் "அம்மா! உங்கள் வயிறு செய்த பாக்கியந்தான் கேசவனுக்குக் கண்டம் நீங்கியது. அவனுக்கேற்பட்ட மாசு அகன்று 10 தினங்களே ஆயின," என்று அவனுடைய சகலமான விவரங்களையும் கூறி, நாயுடு குற்றவாளியைப் பிடித்துக்கொடுத்துக் கேசவன் நிரபராதி என்று ரூபித்ததையும் விளக்கினார். குற்றம் செய்த மனிதனை விசாரித்ததில் தான் ஒருவனின் தூண்டுதலினால் செய்ததாகக் கூறினான், உங்கள் மருமகள் ஒரு சோதாவை வெரு திறமையோடு ஜெயிலில் அடைப்பது போல அடைத்துவிட்டாள். நாயுடு பிடித்த குற்றவாளி இந்த மனிதனைக் காட்டினான்.

அந்த மனிதனை நாங்கள் வந்து விசாரித்ததில் அவன் பரிமளாவின் அத்தை மருமகன் என்றும் அவன் பணத்திற்காசைப் பட்டுக் கொண்டு என் கம்பெனியில் நடிக்கும் ஒருவனின் தூண்டுத லுக்கு உட்பட்டு அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் ஆடிய தாயும் என்னைக் கொலை செய்யவும்,பரிமளாவை அபகரிக்கவும், என்னு
பணங்களைத் தான் அடையவும், கேசவனை அடியோடு ஒழித்து விடவும் அந்த நடிகள் தீர்மானித்து ஆள்களை ஏவி வேலை செய்வதாயும் அதில் தானும் ஒருவன் என்றும் உண்மையைக் கூறி விட்டான்.

பிறகு நடிகனைப் பிடிக்க யத்தனிக்கையில் தன் விஷயம் வெளியாகி விட்டதை யறிந்து, நான் இனி தப்ப முடியாதென்று தெரிந்து கொண்டு,

நம்மைப்பற்றி இழிவாகப் பேசியவர்களைக் கண்டால் அவர்களோடு பேசுவோ, அல்லது பார்க்கலோ மனம் இடந்தருவதில்லை. அவர்களுக்கும் நம்மோடு பேச முகமில்லை. இந்த நிலைமையிலிருந்து விடுபட. யாராவது. மத்தியஸ்தம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆயினும் முறிந்த மனம் கூடுவது கஷ்டந்தான்.

தற்கொலை செய்து மாண்டதாக அவன் கடிதத்தினாலேயே தெரிந்து கொண்டோம். ஒரு சிறு கைக் குட்டையினால் இந்த விவரங்களை நாயுடு கண்டு பிடித்தார். பரிமளாவின் சாமர்த்தியத் தினால் அந்த மனிதன் கைக்குள் சிக்கினான். இந்த உளவை உரைத்த கிழவியை மட்டும் நாயுடு விடுதலை செய்து விட்டார். எப்படியோ கேசவன் மீதிருந்த குற்றம் நிவர்த்தியானதே எனக்குப் போதும்! என்னைக் கொல்ல நினைத்தபடி கொன்றிருப்பினும் எனக்குச் சம்மதமே! மகா பாவி யொழிந்தான் என்பதாகும். என் கண்மணிகள் சந்தோஷமான வாழ்க்கை நடத்தினால் போதும்; அதுதான் என் கோரிக்கை. குற்றவாளிகளுக்குத் தண்டனை சட்டப்படிக்கு விதித்தாயிற்று. கேசவன் ஜெயம் பெற்றது உங்கள் வயிறு செய்த பாக்யம்தான் என்றார்.

அன்று முற்றும் அது விஷயமாகவே பேச்சு நடந்தது. அடுத்த நாள் யாதொரு விக்கினமுமின்றி, குறையுமின்றி சந்தோஷ மாகவும், ஆடம்பரமாகவும் விவாகம் பரிமளாவுக்கும் கேசவனுக்கும் நடந்தேறியது. பொன்னுசாமி இத் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தினார். ஆயிரக்கணக்கான எழைப் பரதேசிகளுக்குப் பல விதமான தானங்கள் வழங்கப்பட்டன. எல்லோரும் தம்பதிகளை ஆசீர்வதித்து வாழ்த்தினார்கள். விவாக மகோற்சவம் அனேக சங்கீதக் கச்சேரிகளுடன் நடந்தேறியது. எல்லோரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து கொண்டு தம் ஊர் திரும்பினார்கள்.

தம்பதிகளின் இன்பத்தைக் கூற வேண்டுமா! சாக்ஷாத் பார் வதியும் பரம சிவனும் போலும், லக்ஷ்மியும் நாராயணனும் போலும், வாணி விரிஞன் போலும் மனமொத்த தம்பதிகளாய் ஆநந்தக் கட லில் மூழ்கினார்கள். நீலா, பாலா, பரிமளா, சகுந்தலா ஆகிய நால்வரும் தேனும் பாலும் போல நேசிகளாக விளையாடுவதைத் தவிர வேறு வேலை இல்லை; பொன்னுசாமியே எல்லாக் குடும்பங்களையும் நிர்வகிக்கும் தலைவரானார். இந்த ஆனந்தத்தில் நாயுடுவும் பங்கெடுத்துக் கொண்டார்.

இன்று கட்டாயம் கடிதம் எழுதுவதாக ஒருவருக்கு வாக்குக் கொடுத்தால் அவர்கள் மறுதினம் அதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் நம்மை மீறி ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அக்கடிதம் போய்ச்சேரத் தாமத முண்டாயின் அதனால் அவர்கள் நாம் வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறார்கள்.

இரண்டொரு மாதங்களாயின. கேசவலுக்கு ஒரு கடிதம் வந்தது; அது பின் வருமாறு :-
"அன்புள்ள கேசவனுக்கு அனேக ஆசீர்வாதம். க்ஷேமம்.க்ஷேமத்திற்கு எழுதவும், நான் இக் கடிதத்தை வெட்கத்தை விட்டு உனக்கு எழுதுவகில் நீயே வியப்புறலாம். ஆனால் காதலின் கனிந்த தன்மையை பரிமளாவின்பால் அனுபவித்தறிக்க அனுபவசாலியாகையினால் இதை உனக்கே நான் எழுதுகிறேன். என்னைப் பற்றி நீ நேரில் தெரிந்திராவிடி னும் உன் பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். உன் கல்யாண விமரிசையைப் பத்திரிகையில் கண்டு களித்தேன். உன் பெற்றோரை நீ அடைந்த ஆநந்தத்தைப் படித்துப் பூரித்தேன். கேசவா! என்னுடைய மனத்தை உன் சகோதரி பெருங் கொள்ளைக்காரியாய்க் கவர்ந்து விட்டாள். நீயும் உன் பரிமளாவும்தான் அந்தக் கொள்ளைக்காரியை என் வசம் பிடித்துத் தருவதற்குச் சரியான துப்பறியும் வீரர்கள் எனது எண்ணி இதை எழுதுகிறேன்; பாலாவும் சம்மதித்தால்தான் தான் சந்தோஷமடையக் கூடும். இல்லையேல் என் விதிப்படிக்கு ஆகட்டும்; என் மனத்திலுள்ளதை உன்னிடம் தெரிவிக்கத் துணிந்தது போல மற்ற யாரிடமும் துணியவில்லை. இந்த கடி தத்திற்குப் பதில் நான் தந்தியை எதிர் பார்க்கிறேன். நான் எழுதியது குற்றமாயின் மன்னித்து இதை அடியோடு மறந்து விடு.
இன்ஙனம் ஸ்ரீ ராமன்
சினிமா கம்பெனியின் மானேஜர்.

அதைப் படிந்த கேசவன் பரமானந்தமடைந்து, பரிமளா வுக்குக் கடிதத்தைக் காட்டி “கண்ணே! பார்த்தாயா! உன்னால்தான் இக் காரியம் முடிய வேண்டுமாம்” என்று நகைத்தவாறு சொன்னான்.

இது கேட்ட அம் மின்னிடையாள் "நாதா! இந்த விஷயத்தை நான் எதிர் பார்த்தேதான், பாலாவுடன் விவாக விஷயமாய் நாள் விளையாட்டுப் பராக்கில் பேசுகையில் அவளது மனப் போக்கை அறிந்து கொண்டேன். இதைத் தங்கள் தாயிடம் தெரிவிக்க என்ணினேன். கடிதமே வந்து விட்டது, பழம் நழுனிப் பாலில்

நமது மனத்தில் ஒருவித ஆவேசமுண்டாகி வக்கனையாக எழுதிக் கொண்டேயிருக்கையில் யாராவதுவந்து தடை செய்துவிடின் அந்த உணர்ச் சிகள் மாறிவிடுவதுடன், விஷயங்களும் மறந்துவிடுகின்றன. அப்புறம் மூளையை எவ்வளவு உடைத்துச்கொண்டாலும் முன்போன்ற உற்சாக முண்டாவதில்லை. அது மற்றவர்களுக்குத் தெரிகின்றதா?

விழுந்தாக ஆயிற்று. உங்களுடைய சகோதரியும் அன்னையும் அதோ வருகிறார்கள்; நேரில் சொல்லி விடுங்கள்" என்றாள்.

அதே நிமிடத்தில் கோமதியும், பாலாவும் அங்கு வந்தார்கள். கேசவன் பாலாவிடமே கடிதத்தைக் கொடுத்து விட்டுக் கோமதியிடம் விஷயத்தைத் தெரிவித்தான். பாலா கடிதத்தைப் படித்து விட்டு மிக்க திருப் தியும் சந்தோஷமும் அடைந்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். பிறகு எல்லோரும் கூடி யோசித்து விவாகத்திற்கு நிச்சயம் செய்து ஸ்ரீராமனுக்குத் தந்தி யடித்து விட் டார்கள். நீலாவுக்கும் சகுந்தலாவுக்கும் இப்போது விவாகம் வேண்டாம்; இருவரும் நன்றாகப் படித்து டாக்டர் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்று பிரியப்பட்டதால் அவர்களை அதே வழியில் செல்ல விட்டார்கள்.

தந்தியைக் கண்டு உள்ளங் களித்த ஸ்ரீராமன் விவாக சன்னத்டன் வந்து சேர்ந்தான். அந்த விவாகமும் விமரிசையாக பொன்னுசாமியினாலேயே நடத்தப்பட்டது. விவாகத்தையே நாடா மருதப்பா துறவி போலாகி விட்டரன். தம்பதிகள் தேனும் பாலும் போல வெகு அன்யோன்யமாயும், பேரானந்தத்தில் மூழ்கியவர்களாயும் பெரியோர்களை மகிழ்விக்கப் புத்திர செல்வங்களை ஈன்று கொடுத்து, அபாரமான சந்தோஷத்தில் துளைந்து வருகின்றார்கள். பொன்னுசாமி பரிமனவல்லியின் குழந்தையின் மோகத்தில், வாஞ்சையில் கட்டுப்பட்டு அவர் யாத்திரையையும் மறந்து குழந்தையே குல தெய்வமென்று எண்ணி விட் டார். நாடகக் கம்பெனியும் கேசவனின் பார்வையில் நடந்து கொண்டே வருகின்றது. இன்னமும் ஆயிரக் கணக்கான எழைகளுக்கு தருமங்கள் கம்பெனி மூலம் வழங்கப் பட்டு வருகின்றன.

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும் - திருக்குறள்.

சுபம்!
சுபம்!!
சுபம்!!!

“பரிமளகேசவன்” முற்றிற்று
ஓம் தத்சத்

ஒரு விஷயம் அச்சிட்டு வெளியான பிறகு சிலர் பார்த்தால் “நன்றாக இருக்கின்றது" என்கிறார்கள். அதையே எழுதும்போது பார்க்க நேரிட்டால் வேறுவித அபிப்பிராயம் உண்டாகின்றது, இது வீடு கட்டும்போது பார்ப்பதை விடக் கட்டியான பிறகு பார்ப்பதுபோல விருக்கின்றது.


This file was last updated on 3 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)