pm logo

மா. இராசமாணிக்கனாரின்
பல்லவர் வரலாறு
பாகம் 1 (அத்தியாயம் 1-9)


pallavar varalARu, part 1 (chapters 1-9)
by M. rAjamAnikkanAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பல்லவர் வரலாறு -- பாகம் 1 (அத்தியாயம் 1 -9)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்

Source:
பல்லவர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
522, டி.டி.கே. சாலை, சென்னை-18.
----------------

பொருளடக்கம்

1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 15. நந்திவர்மன் - (கி.பி. 775-825)
2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850)
3. பல்லவர் யாவர்? 17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882)
4. களப்பிரர் யாவர்? 18. பல்லவர் ஆட்சி
5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 19. கலைக் கழகங்கள்
6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575) 20. சமயநிலை
7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) 21. இசையும் நடனமும்
8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) 22. ஒவியமும் சிற்பமும்
9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) 23. பல்லவர் காலத்துக் கோவில்கள்
10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668) 24. இலக்கியம்
11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) 25. பல்லவர் கோநகரம்
12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) 26. அரசர் பட்டியல்
13. புதிய பல்லவர் மரபு மேற்கோள் நூல்கள்
14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775)
---------

அணிந்துரை
இராவ்பகதூர் C.M. இராமசந்திரஞ் செட்டியார், பி.ஏ., பி.எல்.
ஆணையாளர், இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகம்.

பல்லவர் வரலாறு என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. நாளிதுவரை வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து நாட்டின்கண் மறைந்து கிடக்கும் பல சான்றுகளைக் கண்டுபிடித்துப் பல இலக்கியங்களிற் கண்ட குறிப்புகளைத் தெரிந்தெடுத்து அவற்றை ஒழுங்குபடத் தொகுத்துத் தமிழ்நாட்டிற்கு ஒர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவார்போல் அல்லாது, உண்மைச் சான்றுகளை அறியவேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குப்படுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும். இதனைப் போலவே மற்றத் தமிழ் அரசர் பரம்பரைகளுக்கும் தமிழ் நாடுகளுக்கும் வரலாற்று நூல்கள் வெளிவருவது ஒரு சிறந்த முறையாகும். அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் கழகத்தார் அருஞ்செயலும் போற்றத் தக்கதே.

பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள்வரை தமிழ்நாட்டில் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும், அவர்களுடைய பண்டைக்குலம் இன்னவென்று உறுதியாகக் கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த அயலவர்கள் என்றும், ஈழநாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பலவழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலைநின்று கொண்டிருந்தது. அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில், எந்தக்குலம் அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டு போகப் பட்டது. அவ்வரசர்கள் வடமொழியில் அக்கரை எடுத்துக் கொண்டிருந்ததனால் இக்கூற்று வலியுறுத்தலும் செய்யப் பட்டது. ஆனால், ‘அம் மன்னர்கள் ஏன் தமிழ் மன்னர்களாக இருக்கக்கூடாது?’ என்பதுதான் இப்போது கேட்கப்படுகிற கேள்வி. அக் கேள்வியை மறுப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் என்று அறிய வேண்டும்.

இங்கிலாந்தில் ஜார்ஜ் I ஜெர்மானியனாக இருந்த போதிலும் அவனது மரபு ஆங்கிலத்தில் கலந்து ஆங்கிலமாகி விடவில்லையா! அதுபோலவே பல்லவரும், ஒருவேளை, வெளி நாட்டிலிருந்து புகுந்திருந்த போதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன அல்லவா? உண்மையில் அம் மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமே என்பதற்கு எதிரிடை வாதம் யாதுமில்லை என்னலாம். ‘பல்லவர்’ என்ற சொல் தமிழ் அல்லவா? இப்போது பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லன்’, ‘பல்லவன்’ என்று கேலி செய்வதில்லையா அம் மன்னவரில் மூல புருடனுக்குப் பல் நீண்டு இருக்கலாம். அச்சொல் அம் மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக் காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல் கொண்ட ஒரு மன்னனுக்கு அப்பெயர் நிலையத்திருக்கிறது. முடப் பாண்டியன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன. மேலும், பல்லவர்கள் காடவர் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள் (காடு வெட்டி நகரத்தின் பெயர் காண்க. இஃது இப்போது ‘கார்வெட்டி நகரம்’ எனப்படுகிறது) அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. அவை பிற்காலப் பெயர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவற்றையே தமிழ் நூல்கள் ஆதரிக்கின்றன. ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயர். ‘போது’ என்பது மலருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். மலையாளத்தில் கொங்கு அரசன் ‘போது’ என்ற சொல் எருமைக் கடாவில் வந்து போர் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. (கொங்குப் படை வரலாறு காண்க.)

இப்போதும் தொண்டை நாட்டிலும் அதனைச் சுற்றிலும் போத்தராச கோவில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக் கோவில்களை அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் தமிழ் நாட்டினரே என்று கொள்வதே தகுதி என்னலாம்.

பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அக்காலத்தில் வடநாட்டு நாகரிகம் தெற்கே பரவத் தொடங்கியதே. எந்த இயக்கமும் முதலில் அதிகமாகப் பாராட்டப் படுவது இயற்கை; பின்னர், அதன் வேகம் குறைந்து விடுவது வழக்கம். பல்லவ அரசு தொடங்கிய காலத்தில் வடக்கே இருந்த பெளத்தமும் சமணமும் வந்தன. அவற்றின் குரவர்கள் தம்மோடு வட மொழியைக் கொண்டுவந்தார்கள். காஞ்சி அச் சமயங்கட்கு நடுநாயகமாக விளங்கியது. பல்லவ மன்னர்களும் அவற்றை ஆதரித்தனர். ஆகவே, வடமொழிக்கு ஏற்றம் தரப்பட்டது. ஆனால், நாள் ஆக ஆக அவ்வேற்றம் குறைந்தது. தமிழின் மேம்பாடு தொடங்கியது. அம் மேம்பாட்டிற்கு ஆதரவு தந்தவர்கள் சைவ வைணவ சமய ஆசிரியர்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் 5, 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழை ஆதரித்தனர். சமணமும் பெளத்தமும் நிலை குலைந்தன. சைவ வைணவங்கள் மேலிட்டுத் தமிழை ஆதரித்தன. இவ்வியக்கங்களுக்குப் பல்லவர்களே காரணர்களாக இருந்தனர். அவர்களால் ஆயிரக் கணக்கான சமய நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்மக்கள் பெருமையும் விரிந்தது.

பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) பிறகு தனிப் பாறைகளைக் கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச் சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகை வீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் சமைத்தவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும். அவர்கள் காலச் சிற்பங்களை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். தூண்கள் கன சதுரங்களும் இடையில் 8 பட்டைகளும் கொண்டுள்ளன. துவார பாலகர்கள் இரு கைகள் கொண்டுள்ளார்கள். திருமால் எறியும் படை தரித்தவர். இலிங்கத்திற்குப் பின் சோமஸ்கந்தமூர்த்தி உண்டு. இச்சின்னங்கள் இருப்பின் பல்லவர் கோவில் என்றறிக. இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது ‘தூங்கானை மாடம்’ என்ற விமானம் தோன்றியது. (திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் விமானம் காண்க.) மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள். இவர்கட்கு முன் கல்வெட்டுகள் வெகு குறைவு. அவை பிராமி எழுத்தில் இருந்தன. பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்று கூறும் அழகிய எழுத்துக்கள் ஆளப்பட்டன. அவ்வெழுத்துக்களின் அழகு பார்த்தால்தான் தெரியும். (கயிலாசநாதர் கோவிலிற் காண்க.) பிறகு தமிழை அதிகமாகப் போற்றத் தொடங்கியவுடன் பல்லவர்கள் தமிழிலேயே எழுதினார்கள். அன்றுமுதல் இப் புது இயக்கம் வெற்றியடைந்தது. ஆகவே, பல்லவர்களாலே சமயமும் தமிழும் போற்றப்பட்டதை நாம் அறியவேண்டும்.

இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ! அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை. பி.ஓ.எல். அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு, அங்கங்கே சென்று அவற்றைப் பெருமிதத்துடன் நோக்குவார்களாக

நம் மக்கள் இந்த முயற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டுத் தமிழர் நாகரிகம் முழுவதையும், பலவிதங்களிலும் வெளியிட்டும் அறிந்தும் போற்றுவார்களாக.

சென்னை.       கோவைகிழார்,
25-2-44.
-------

முகவுரை

பல்லவர் வரலாறு என்னும் இவ்வாராய்ச்சி நூல் தமிழகத்திற்குப் புதியமுறையில் தரப்படும் தமிழ் விருந்தாகும், பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும், கட்டுரைகள் பலவும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ் வரலாற்று நூற்குப் பிறகு வெளிப்போந்த ஆராய்ச்சி நூல்கள் பல: சிறந்த கட்டுரைகள் பல; கிடைத்தகல்வெட்டுச்செய்திகள் பல. மேலும், அவ்வரலாற்று நூல் இன்று கிடைக்கு மாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப் பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்ப்படுகின்றனர். இக் குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.

பல்லவர் காலத்து இலக்கியங்களும், ஏறத்தாழப் பல்லவர் காலத்தை நன்முறையிற் படம் பிடித்துக் காட்டும் பெரிய புராணமும் தமிழ்க்கருவி நூற்களாகக் கொள்ளப்பெற்றன. இந்நூலின்கண் புதிய வரலாற்று முடிபுகள் பல குறிக்கப் பெற்றுள. அவை ஆராய்ச்சியாளர் நடுவுநிலைமை வழாத ஆராய்ச்சிக்கு உரியவாகும். அவற்றுள், இடைக்காலப் பல்லவர் போர்கள், நெடுமாறன் முதல் விக்கிரமாதித்தன் போர் (நெல்வேலிப் போர்), கந்தசிஷ்யன் மீட்ட ‘கடிகை’, இராசசிம்மன் காலத்துப் போர்கள் என்பன குறிக்கத்தக்கன.

வடமொழிக் கல்வெட்டுகளையும் வடமொழியில் உள்ள மத்த விலாசத்தையும் எனக்குப் படித்துக்காட்டி என்னுடன் இருந்து ஆராய்ந்தவர் - சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சி மாணவராக இருந்தவரும், இன்று பெல்காம்-லிங்காரசுக் கல்லூரி வரலாற்று விரிவுரையாளராக இருக்கின்ற வருமாகிய திருவாளர் வேதம் - வேங்கடராய சாத்திரியார், M.A., ஆவர். இவரது உதவி என்றும் மறக்கற்பாலதன்று. என்னைப் பாகூருக்கு அழைத்துச் சென்றவரும், பாகூரைப்பற்றி விளக்கமான படம் வரைந்து உதவியவருமாகிய திருவாளர் புதுவை ரா. தேசிகப்பிள்ளை, B.A.,B.L., அவர்கள் உதவி பாராட்டற் பாலது. எனக்குக் காஞ்சியில் பல வசதிகள் அளித்து எல்லாக் கோவில்களையும் என் விருப்பம்போற் காண வசதி செய்துதந்த ‘குமரன்’ அச்சக உரிமையாளர் திருவாளர் குப்புசாமி முதலியார் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக. இங்ஙனமே மகாபலிபுரம், வல்லம், மண்டபப்பட்டு, திரிசிரபுரம் முதலிய இடங்களில் எனக்கு வேண்டிய வசதிகள் செய்து பல்லவர் குகைக் கோவில்களைக் காணச்செய்த பெருமக்கட்கு எனது அன்பு உரியதாகும்.
பல்லவர் வரலாற்றை அறிய அரும்பாடுபட்ட பெரியோர் அனைவர்க்கும் பல்லவர் வரலாறு திறம்படஎழுதிய பேரறிஞர்கட்கும் என் வணக்கமும் நன்றியும் உரிய ஆகுக. அப் பெருமக்கள் உழைப்பின் பயனே இந்நூல் வெளிவரச் செய்தது என்றால் மிகையாகாது.

இரண்டு ஆண்டுகளாக என்னை இப்பணியில் ஈடுபடுத்தி இதனை நன்முறையில் வெளிக்கொணர்ந்த சென்னை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், இதற்கு அணிந்துரை எழுதிய திருவாளர் கோவைகிழார் அவர்கட்கும் எனது உளமார்ந்த நன்றி உரித்து.

சேக்கிழார் அகம்       மா.இராசமாணிக்கம்

சென்னை
-------------

Table of contents
1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 1-14
தமிழகம்- பாண்டியநாடு - சோழநாடு சேர நாடு - தொண்டை மண்டலம்-செங்கட்டுவன்காலம் - கரிகாலன் காலம்-புதிய சான்று - வடநாட்டு நிலைமை - கோச்செங்கட் சோழன் - காஞ்சியின் பழைமை - மாமல்லபுரம் - வலியற்ற வடஎல்லை.

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 14–24
இலக்கியச் சான்றுகள் - ஊர்களின் பெயர்கள் - குகைக் கோவில்களும் கற்கோவில்களும் - பட்டயங்களும் கல்வெட்டுகளும் -பிறநாட்டார்குறிப்புகள்-ஆராய்ச்சியாளர் உழைப்பு - நூலாசிரியர் பலர்.

3. பல்லவர் யாவர்? 24-35
பல திறப்பட்ட கூற்றுகள் - பல்லவர் தமிழர் அல்லர் - தொண்டை நாடும் சங்க நூல்களும் - எல்லைப்போர்கள் - சாதவாகனப்பெருநாடு - விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - இக்குவாகர் - பிருகத்பலாயனர் - ஆனந்தர்-சூட்டுநாகர்-பல்லவர்-பல்லவரும் தொண்டைநாடும் - பல்லவர் அரசம்ரபினரே - காடவர் முதலிய பெயர்கள்.

4. களப்பிரர் யாவர்? 36-42
களப்பிரர் - களப்பிரர் பல்லவர்போர்கள் - சோணாட்டில் களப்பிரர் - பாண்டி நாட்டில் களப்பிரர்.

5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 43–49
மூவகைப் பட்டயங்கள் - பிராக்ருதப் பட்டயங்கள் - மயித வோலுப் பட்டயம் - ஹிரஹதகல்லிப் பட்டயம் - குணபதேயப் பட்டயம் - இவற்றால் அறியத் தக்கவை - வடநாட்டு வென்றி - சிவஸ்கர்ந்தவர்மன் காலம்- பிறர் கூற்று-முடிபு - இக்காலப் பல்லவர்.

6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575) 50–73
சுற்றுப்புற நாடுகள் -விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - ஆனந்தர் - சூட்டுநாகர் - கதம்பர் - கங்கர் - தமிழகத்தரசர் - அகச்சான்றுகள் . புறச்சான்றுகள் காலவரையறை - குழப்பமான காலம் - பலவகைப் போர்கள் வாகாடகர் போர் - வாகாடகர் படையெடுப்பு - கடிகா என்பது காஞ்சியன்று கடிகா என்பது யாது? - முடிவு - திருக்கழுக் குன்றம் கல்வெட்டு - பல்லவர் கதம்பர் போர்கள் - முடிவு - பல்லவர் சோழர் போர் - சாளுக்கியர் தோற்றம் - பல்லவர் சாளுக்கியர் போர்கள் - போர்களின் பட்டியல்.

7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) 74–77
இக்காலச் சிறப்பு - இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்.

8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) 78-86
சிம்மவிஷ்ணு காலம் - சிம்மவிஷ்ணு சிறப்பு - போர்ச் செயல்கள் - ஆதிவராகர் கோவில் - சிம்மவிஷ்ணு கலை வல்லவன் - புலவர் புரவலன் - இவன் காலத்து அரசர்.

9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) 87-108
முன்னுரை - இரண்டாம் புலிகேசி - படையெடுப்பு - பல்லவர் கங்கர் போர்- சமணமும் சைவமும் - இவன் காலத்தரசர்- மகேந்திரன் அமைத்த கோவில்கள் - கோவில் அமைப்பு - பல்லாவரம் குகைக் கோவில் - பல்லவபுரம் - வல்லம் - மாமண்டுர் - மகேந்திரவாடி - தளவானுர் - சீய மங்கலம் - மண்டபப்பட்டு - திருச்சி மலைக்கோவில் - நாமக்கல் மலைக்கோவில் - மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும் - இக்கோவில்கட்கு மூலம் - மகேந்திரன் கல்வெட்டுகள் - மகேந்திரன் பட்டப் பெயர்கள் - மகேந்திரன் வளர்த்த கலைகள் - மகேந்திரன் நூலாசிரியன் - இதனால் அறியப்படுவன. நூல் எழுதப்பெற்ற காலம் - சிறந்த குணங்கள். .

10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668) 108-129
பல்லவர் சாளுக்கியர் போர் - பல போர்கள்-சாளுக்கியன் ஓட்டம் - வாதாபி கொண்டது - சேனைத் தலைவர் பரஞ் சோதியார் - சாளுக்கியர் பட்டச்சான்று - வாதாபி கொண்டவன் பல்லவர் பாண்டியர் போர் - பட்டயங்கள் - போர் நடந்த காலம் - முடிவு - பல்லவர் கங்கர் போர் - உண்மை என்ன? - இலங்கைப் போர் 1 - இலங்கைப் போர் 2 - சீனவழிப்போக்கன் - குகைக் கோவில்கள் - மகாபலிபுரமும் நசிரம்மவர்மனும் - குகைக் கோவில்கள் - ஒற்றைக் கல் கோவில்கள் - கற்சிற்பங்கள்- கோட்டைகள் கட்டிய கொற்றவன் - பட்டப் பெயர்கள் - அக்கால அரசர் - பாண்டியர் பட்டியல்.

11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) 130–142
இரண்டாம் மகேந்திரவர்மன் - பல்லவர் சாளுக்கியர் போர் - சாளுக்கியர் பட்டயங்கள்-பல்லவர் பட்டயங்கள்- ஆராய்ச்சி - போர் நடந்த முறை - போர் வருணனை - சாளுக்கியர் பாண்டியர் போர் - நெல்வேலிப் போர் - பல்லவர் கங்கர் போர் - கூரம் கோவில் - மகாபலிபுரம் - சிறந்த சிவபத்தன் - இவன் காலத்து அரசர்.

12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) 142–163
போர்கள் முன்னுரை - சாளுக்கியர் பட்டயங்கள் - பல்லவர் கல்வெட்டுகள் - போரிட்டவன் விநயாதித்தனே - இது தனிப்பட்ட போர்-பல்லவர் சாளுக்கியர் போர்-போரின் பயன்-பல்லவர்கங்கர் போர் - கொடிய பஞ்சம் - சிவபத்தன் ரணசயன் - வான் ஒலிகேட்ட வரலாறு - கோவில்கள் - கோவில் இலக்கணம் - கயிலாசநாதர் கோவில் - கோவில் இடமும் அமைப்பும் - இன்றுள்ள கோவிற் பகுதிகள் - முன்கோவில் - சுற்றுச் சுவர்கள். இறை இடம் - முன் மண்டபம் - உள்ளறை மண்டபப் புறச்சுவர் - சிறு கோவில்கள் 58 - கும்பம் - கல்வெட்டுகள் - சிறப்பு - வடமொழிப் புலவன் - நாடக அறிஞன். இவன் காலத்து அரசர் - இரண்டாம் பரமேசுவரவர்மன்.

13. புதிய பல்லவர் மரபு 164-168
சில செய்திகள் - வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் - இரண்யவர்மன் - புதிய மரபு என் வந்தது? - புதிய மரபரசர்.

14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) 169-183
வரலாற்று மூலங்கள் - பல்லவர் பாண்டியர் போர் - போருக்குக் காரணம் - உதயசந்திரன் - பல்லவர் சாளுக்கியர் போர் 1 - போருக்குக் காரணங்கள் - பட்டயங்கள் - உண்மை என்ன? - போர் நடந்த காலம் - போர் நடந்ததா? - நடந்த முறை - முடிவு படையெடுப்பின் பயன் - பல்லவர் சாளுக்கியர் போர் 2 - இரட்டர் பல்லவர் நட்பு - முதலாம் கிருஷ்ணன் - பல்லவர் கங்கள் போர் - பட்டயக் குறிப்புகள் - சமயப் பணி - கல்வி நிலை - பல்லவப் பேரரசு இவன் காலத்து அரசர்.

15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) 183-190
பிறப்பும் ஆட்சிக்காலமும் - சிறப்பும் மணமும் - இரட்ட அரசர் கிருஷ்ணன் 1 - துருவன் கோவிந்தன் போரட்டம் போர் - பல்லவர் இரட்டர்போர் 1 - பல்லவர் இரட்டர்போர் 11 - பல்லவர் இரட்டர்போர் 111 - பல்லவர் பாண்டியர் போர் - நந்திவர்மன் அரசியல் - சில பட்டயங்கள் - கோவில்கள் இவன் காலத்தரசர்.

16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) 190-203
மரபு - பட்டயங்கள் - தெள்ளாறு எறிந்த காலம் - நந்திக்கலம்பகம் - இவன் கழற்சிங்கனா? - பல்லவர் இரட்டர் போர் பல்லவர் பாண்டியர் போர் - பல்லவர் தமிழரசர் - இப்போருக்குக் காரணம் என்ன? - பல்லவன் - காவிரிநாடன் - பேரரசன் - நல்லியல்புகள் - மனைவியர் - அரசியல் - திருப்பணிகள் - சிவனடியான் - இவன் காலத்து அரசர்.

17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) 203-212
நிருபதுங்கவர்மன் - பல்லவர் பாண்டியர் போர் 1 - குடமூக்குப் போர் - பல்லவர் பாண்டியர் போர் 11 - ஈழநாட்டுப் படையெடுப்பு திருப்புறம்பியப் போர் - பழிக்குப்பழி - கோவில் திருப்பணிகள் - பிருதிவீ மாணிக்கம் - மாதேவி அடிகள் - நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்-திருத்தணிகைக் கோவில் -அபராசிதன் காலத்துத் திருப்பணிகள் - இக்காலத்தரசர் - பல்லவ மரபினர் - பிற்காலப் பல்லவர். .

18. பல்லவர் ஆட்சி 213–246
நாட்டுப்பிரிவு - அரசமுறை - அரசர் - பட்டப்பெயர்கள் - அரசரும் சமயநிலைமையும் - பல்லவர் இலச்சினை - பல்லவரது கத்வாங்கம் - அமைச்சியல் - உள்படு கருமத் தலைவர் - அறங்கூர் அவையம் - அரண்மனை அலுவலாளர் - பல்லவர் படைகள் - பண்பட்ட படைகள்- கடற்படை - நாடும் ஊரும் - ஊர் ஆட்சி - ஊர் அவைப் பிரிவுகள் - இராட்டிர ஆட்சி - சிற்றுள்கள் - பிரம்மதேயச் சிற்றுார்கள் - தேவதானச்சிற்றுர்கள் - சிற்றுார்க்கோவில்கள் - பள்ளிச்சந்தம் -ஏரிப் பட்டி - நிலவகை - பலவகை வரிகள் - தென்னை பனை முதலியன மருந்துச் செடிகள் - மருக்கொழுந்து முதலியன - பிற வரிகள் - பல்லவர் அரசாங்கப்பண்டாரம்-நில அளவை-நீர்ப்பாசன வசதிகள் - எரி வாரியம் - நீட்டல் அளவை - முகத்தல் அளவை - நிறுத்தல் அளவை பல்லவர் காசுகள் - பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்- பஞ்சம் ஒழிப்பு வேலை - அறப்பணிகள் உருவச் சிலைகள் - வீரக் கற்கள் - நீத்தார் நினைவுக் குறிகள்.

19. கலைக் கழகங்கள் 246-262
முன்னுரை - ஓவியசிற்பக்கலைக்கூடங்கள் - காஞ்சிக்கல்லூரிஎத்தகைய கல்வி? - கடிகாசலம் - பாகூர் வட மொழிக் கல்லூரி - மூன்று சிற்றுர்கள்-பாகூர்ப்பழம்பதி-அக்கிரகாரங்கள்-ஊராண்மை - படைக்கலப் பயிற்சி - வேலைகள் - பிரம்மபுரிகள் -பட்டவிருத்திகோவில்கள் - மடங்கள் - சைவமடங்கள் - காளாமுகர் - பாடத்திட்டம் - மடத்து ஆட்சிக் குழுவினர் - மடத்து ஆட்சி - பெளத்தர் கலை இடங்கள் - சமணர் கலை இடங்கள் பாதிரிப் புலியூர் மடம் - திருப்பருத்திக் குன்றம் தமிழ்க்கல்வி.

20. சமயநிலை 262-273
சமண வீழ்ச்சிக்குக் காரணம் - உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது? - சைவசமயம் - பாசுபதர் - காபாலிகர் - காளாமுகர் - வைணவம் - வைணவ வேந்தர் - சமயக் கொடுமை - சமணர் சைவர் கொடுமை - இவை நடந்தனவா? - வைணவர் கொடுமை - பட்டயச் சான்று - சிற்பச் சான்று - உயிர்ப்பலி இடுதல் - முன்னுரை - சிற்பங்கள் - சான்றுகள்.

21. இசையும் நடனமும் 273–284
இசை- மகேந்திரவர்மனும் இசையும் - இராசசிம்மனும் இசையும் - நாயன்மார் இசை - தேவார காலத்து இசைக் கருவிகள் - ஆழ்வார் அருட்பாடல்கள் - மகேந்திரன் கால நடனம் - வைகுந்தப் பெருமாள் கோவில் - அடிகள்மார் - சிவபெருமான் திருக்கூத்து - கயிலாசநாதர் கோவில் - நாதாந்த நடனம் - ‘தூக்கிய திருவடி’ நடனம்.

22. ஒவியமும் சிற்பமும் 284-291
சித்தன்னவாசல் - இடமும் காணத்தக்கனவும் - உருவச்சிலைகள் - நடனமாதர் ஓவியங்கள் - அரசன் அரசி ஓவியங்கள் - கூரையில் உள்ள ஓவியம் - இஃது எதனைக் குறிக்கிறது? உள்ளறை மேற்கூரை - இவற்றை எழுதிய முறை - பல்லவர் சிற்பம்.

23. பல்லவர் காலத்துக் கோவில்கள் 291-305
கோவிலும் கல்வெட்டும் - சங்ககாலத்துக் கோவில்கள்- தேவார காலத்துக்கோவில்கள் - பழைய கோவில்கள் - முதல் இடைக்காலக் கோவில்கள் - பிற்காலத்துக் கோவில்கள்- பழங்கோவில்-அமைப்பு திராவிடக் கலை - முடிவு.

24. இலக்கியம் 305-324
முன்னுரை - வடமொழிப் பட்டயங்கள் - வடமொழி நூல்கள் - அச்சுத விக்கிரந்தன்-அச்சுதன் மதுரை கொண்டது - முத்தரையரும் தமிழும் - இவற்றால் அறியப்படுவன - பல்லவரும் தமிழும் சிவத்தளி வெண்பா - பல்லவரைப் பற்றிய தனிப் பாடல்கள் - யாப்புநூல் பெருக்கம் - மூன்றாம் நந்திவர்மன் - அபராசிதவர்மன் - சத்தி பல்லவன் - இராச பவித்திரப்பல்லவதரையன்-பொதுப்பாடல் - வேறு பல நூல்கள் - சைவத் திருமுறைகள் - நந்திக் கலம்பகம் - பாரத வெண்பா - சேரமான் பாடிய நூல்கள்- முன்னுரை-அந்தாதிமும்மணிக் கோவை - ஞான வுலா - நாலாயிரப் பிரபந்தம் - பல்லவர் அவைப் புலவர்.

25. பல்லவர் கோநகரம் 324–331
நகர அமைப்பு - கெட்டிஸ்துரை கூற்று - பெளத்தர் தெருக்கள் - பிற தெருக்கள்-பல்லவமேடு முடிவுரை.

26. அரசர் பட்டியல் 332–335

(1) பல்லவர் காலத்துக்கங்க அரசர்
(2) பல்லவர் காலத்துக்கதம்ப அரசர்
(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்
(4) பல்லவர் காலத்துப் மேலைச் சாளுக்கியர்
(5) பல்லவர் காலத்துப் இராட்டிரகூட மன்னர்

மேற்கோள் நூல்கள்
------------------

பல்லவர் வரலாறு
1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

தமிழகம்

தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் ‘தமிழை வளர்த்தவர்’, எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது ‘கடைச் சங்கம்’ எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக் காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங்களும், கீழ்க்கோடிக் கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் கோநகரம் மதுரை, காயல், கொற்கை என்பன இதன் துறைமுகங்கள். கொற்கை முத்து எடுப்பதற்குப் பெயர் பெற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் அமைச்சனாக இருந்த சாணக்கியன் தனது பொருள் நூலில் கொற்கையைக் குறிப்பிட்டுள்ளான். கடைச் சங்க காலப் பாண்டியருள் சிறந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவரே ஆவர்.

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் (கி.மு. 60 - கி.பி.200)

சோழ நாடு

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும், கீழ்க் கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இந்த நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தார். இவர் தலைநகரம் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. இந் நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. கரிகாற் சோழன் காலத்தில் இத் துறைமுகம் உயர்ந்த நிலையில் இருந்தது. அயல்நாட்டு வாணிபர் புகார் நகரிற் குடியேறி இருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் இயற்றப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இப் பெருநகரம் சிறந்த வாணிபத்தலமாக விளக்கம் பெற்று இருந்தது. கடைச்சங்ககாலச் சோழ மன்னருள் பீடுமிக்கவன் கரிகாலனே ஆவன். சோழவனநாடு உணவு வகையிற் சிறப்புற்று இருந்தமையின், சோழ வளநாடு சோறுடைத்து, என்று புகழப்பட்டது.

சேர நாடு

சேர நாடு என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மேல் கடற்கரை வெளியும் மலையாளக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சிமாநகரம் என்பது முசிறி. தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டிலிருந்து மிளகு, யானைமருப்பு, தேக்கு, அகில், சந்தனம் முதலிய மரங்கள் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். அவருட் சிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் மகனான செங்குட்டுவனே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெயர் பெற்றபேரரசனாகத் தமிழகத்தில் இருந்தவன்.

தொண்டை மண்டலம்

ஆதொண்ட சக்கரவர்த்தி: இனி, நம் பல்லவர் தொடர்பான தொண்டை நாட்டைப் பற்றிய செய்திகளைக் காண்போம். “நெடுங்காலத்திற்கு முன்தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’, என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்குக் காலம் கழித்தனர்; அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர்; காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக் குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனன்”, என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.[1]

கரிகாலன்: ஆனால், தமிழ்நூல்கள், கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர்த் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் ‘தொண்டை மண்டலம்,’ எனப் பெயர்பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார் பெருமான், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அஃதாவது: ‘கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக்காஞ்சிநகரத்தின் வளமையைக் கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பிப் பலரைக்குடியிருத்தினன்,’ என்பது[2] முதற்குலோத்துங்கன் காலத்து நூலாகிய சமயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும் ஏறக்குறைய இங்ஙனமே கூறுகின்றது. இங்ஙனம் வரும்செய்திகளில் ஒரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னருள் கரிகாலன் ஒருவனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியமும் பட்டயங்களும் கண்ட உண்மை, பிற்காலத்தெலுங்க நாட்டுச்சோழரும் தம்மைக் ‘கரிகாலன் மரபினர்’, என்று கூறிக்கொண்டனர்[3] என்பதிலிருந்து, கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் ‘எங்கள் முன்னவனான கரிகாலன், தான் வென்ற அரசரைக்கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன்,'[4] என்று பட்டயத்திற் கூறி மகிழ்வராயின், கரிகாலன் போர் வன்மையை என்னென்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன்,’ என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

எனவே, இதுகாறும் கூறிய செய்திகளால், கரிகாற் சோழன் காலத்திற்குள் தொண்டைமண்டலம் சோழர்ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுத்ல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்த தென்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்காலமுதல் எத்துணை நூற்றாண்டுகள் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது, என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும்.

வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் கரிகாலன்; ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச் சங்கத்தையும், தொண்டைமண்டலத்தையும் பொதுவாககத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்திய நாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன ஆதலின், முதற்கண் செங்குட்டுவன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்.

செங்குட்டுவன் காலம்

கரிகாலன் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார் தமது நூலில், “தமிழ் வேந்தர் வடநாடு நோக்கிப் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிறபட்ட மோரியர் (கி.மு.232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு. 148 - கி.மு. 27) காலமாகவோ, (3) ஆந்திரர் ஆட்சி குன்றிய கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினார்.

இவர் கூறிய மூன்று காலங்களில் முதல் இரண்டு காலங்களும் பொருத்தமானவையே ஆகும். ஆயின், மூன்றாம் காலம் கி.பி. 163-300[5] வரை அஃதாவது, குப்தர் பேரரசு ஏற்படும் வரை எனக் கொள்ளலே முறை. என்ன? கி.பி. 163இல் இறந்த (கவுதமிபுத்திர சதகர்ணியின் மகனான) புலுமாயிகுப் பின்வந்த ஆந்திர அரசர் வலியற்றவர்[6] எனப்படுதலின் என்க. எனவே,தமிழரசர் வடஇந்தியாமீது படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன:- (1)கி.மு. 232-கி.மு.184, (2) கி.மு.148-கி.மு.27. (3) கி.பி.163-300. இனி இவற்றுள் செங்குட்டுவன் காலம் யாதென ஆராய்வோம்.

செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசருள் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு ஒருவன்’ எனச்சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்போது பிரிட்டிஷ் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கொரு கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என இலங்கைப் பட்டயம் இயம்புகின்றது.[7] (இரண்டாம் கயவாகுவின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பதை ஈண்டு நினைவு கொள்ளல் நலமாகும்). இதுவே செங்குட்டுவன் வாழ்ந்த காலமாகும். இக்காலம் மேற்கூறிய மூன்று காலங்களில் இறுதிக் காலத்துடன் ஒன்றுபடுகிறது. இக்காலத்தே, கி.பி.166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞஸ்ரீ[8] என்பவன். இச் ‘சதகர்ணி’ என்பதன் மொழிபெயர்ப்பே ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு நண்பர்; கங்கையாற்றைக்கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ளுழநீயின் காலமும் ஒன்றுபடுதலால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞரு சதகர்ணியையே (அவன் ஆணைபெற்ற உயர்அலுவலாளரையே) என்பதும் நன்குபுலனாகும். இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர்.[9]

கயவாகுவின் காலம் - கி.பி. 171-193
யக்ஸ்ரீயின் காலம் கி.பி. 166-196
எனவே, கி.பி. 166-193க்கு உட்பட்ட காலத்தேதான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். இக்காலம் முற்கூறிய படையெடுப்புக்கு உகந்த மூன்றாம் காலத்தோடு (கி.பி.163-300) ஒத்துவருதலும் காண்க.

கரிகாலன் காலம்

வடநாட்டுப் படையெடுப்புக்குரிய மூன்று காலங்களில் ஈற்றுக்காலத்தைச் செங்குட்டுவதற்கு உரிமை ஆக்கினமையின், பிற இரண்டு காலங்களில் ஒன்றே கரிகாலனுடையதாகும். கரிகாலன் இலங்கைத் தீவை வென்று ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொணர்ந்தான் என்பது கவனித்தற்குரியது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் “(1) கி.மு. 170 கி.மு.100 வரை இலங்கையைத்தமிழரசர் ஆண்டனர்; (2) கி.மு. 44-கி.மு.17க்கு இடைப்பட்ட காலத்தில் 15 ஆண்டுகள் தமிழர் இலங்கையை ஆண்டனர்; (3) கி.பி. 660-1065க்கு உட்பட்ட இடைக் காலத்தில் தமிழர் இலங்கைமீது படைஎடுத்தனர்.” என்று கூறுகின்றது. இவற்றுள் முதல் இரண்டு காலங்களில் ஒன்று கரிகாலன் தொடர்பு பெற்றதாகல் வேண்டும். இவ்விரண்டும் வடநாட்டுப்படையெடுப்புக்கு ஏற்ற காலங்களோடு பொருந்துகின்றனவா என்பதைக் காண்போம்.

(1) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற முதற்காலம் கி.மு.232 - கி.மு. 184.
இலங்கையைத் தமிழர் ஆண்ட முதற்காலம் கி.மு. 170-கி.மு.10[10]

(2) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற இரண்டாம் காலம் கி.மு.148-கி.மு.27
இலங்கையைத் தமிழர் ஆண்ட காலம் கி.மு.44 கி.மு.17க்கு உட்பட்ட 15 ஆண்டுகள்.

இவற்றுள் முன்னதைவிட இரண்டாம் காலமே மிகவும் பொருந்துவதாகும். இக்காலமே கரிகாலன் காலம் என்பதை இலக்கியம் கொண்டும் நிறுவலாம். இக்காலத்தில் கடல் வாணிபம் உயர்நிலையில் இருந்தது. கி.மு.39 முதல் கி.மு.14 வரை ரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானிடம் பாண்டிய மன்னன் தூதுக் குழு ஒன்றை அனுப்பினான் என்பதும் நோக்கத்தக்கது. கரிகாலன் காலத்தில் புகார் சிறந்த துறைமுகப்பட்டினம் என்பதைப் பட்டினப்பாலையால் உணரலாம். இச்சிறப்புடைக் கடல் வாணிபம் கி.பி.215 வரை, அஃதாவது அலெக்சாண்ட்ரியப் படுகொலை வரை சிறப்புற நடந்து வந்தது.[11]

புதிய சான்று

சோழ மன்னருள் இமயம்வரை சென்று மீண்டவன் கரிகாலன் ஒருவனே என்பது வெளிப்படை அவன் சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதியசான்று ஒன்று கிடைத்துள்ளது. “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையே வரையறுத்து நிற்கும் மலைத் தொடர்புக்குச் சோழ(ர்) மலைத்தொடர் (Sola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங் கணவாய்க்குச் சோழ(ர்) கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ (ழ) என்பதுசிக்கிம்,திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை”[12] என இராவ்சாகிப் மு. இராசுவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ள செய்திக்குத் தமிழகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், கரிகாற் சோழன் வடநாடு சென்று. சிலப்பதிகாரம் கூறுவதுபோல,

“பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

பெயர்ந்தமை உண்மை என்பதும், அக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமே ஆதல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும் செய்திகளாம்.

வடநாட்டு நிலைமை

கரிகாலன் ஆட்சிக் காலம் எனக்கொண்ட கி.மு.60 கி.மு.20க்கு உட்பட்ட காலத்தில் மகதப் பேரரசு சுங்கர் கையினின்றும் கண்வ மரபினர் கைக்குமாறிவிட்டது. கி.பி.73இல் ‘வாசுதேவ கண்வா’, மகத நாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.மு.28 வரை ஆண்டனர். அவருக்குப் பிறகு மகதநாடு ஆந்திரா வசப்பட்டது. எனவே கரிகாலன் படையெடுத்த காலத்தில் கண்வ மரபினரே மகத நாட்டை ஆண்டவராவர். அவர்கள் வலியற்ற அரசர்களே[13] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைக் கோ நகரமாகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், அவந்தி வேந்தன் தோரண வாயிலும் கொடுத்தனர் எனச் சிலப்பதிகாரம் செப்புவதில் பொருள் இராதன்றோ? இந்நாட்டரசர் சந்திரகுப்த மெளரியன் காலத்திலிருந்து சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[14]

கோச்செங்கட் சோழன்

இதுகாறும் கூறிவந்த சான்றுகளால் (1) கரிகாற் சோழன் காலம் ஏறக்குறைய கி.மு.60 கி.மு.20 எனவும், (2) செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் ஏறக்குறைய கி.பி. 166-193 எனவும் கூறலாம். செங்குட்டுவன் 50 ஆண்டுகள் அரசாண்டவன் எனச்சிலப்பதிகாரம் கூறலால், அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 150-200 எனக் கோடலே பொருத்தமுடையதாகும். இச் சேரன் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்ட சோழன் ஒன்பதின்மருள் ஒருவனான சுபதேவன் சிதம்பரத்தில் தலைமறைவாக வாழ்த்து வந்தான். அவனுக்குச் சிவபிரான் அருளாற் பிறந்தவனே சிறந்த சிவபக்தனான கோச்செங்கட் சோழன் என்பவன்.[15] இவன் சோணாட்டைப் பேரரசனாக இருந்து ஆண்டான் சேரனைப் புறங்காட்டச் செய்து கனவழி பாடப் பெற்றான். எனவே, இவன் காலம் ஏறக்குறைய கி.பி. 200-225 எனக் கூறலாம். இவனைப் பாடிய பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை ஆழ்வார்.[16] இக்கோச் செங்கட்சோழன் மணிமேகலையில் கூறப்பட்ட பெருங்கிள்ளிக்குப் பின் சோழ மன்னனாக இருந்திருத்தல் வேண்டும். இவன் சிவபிரான் அருளால் தோன்றியவன் ஆதலின், தான் பிறந்த சிதம்பரத்தைச் சிறந்த சிவப்பதியாக்கினான்; தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டான். அன்று முதல் சோழர்க்கு முடிசூட்டும் பொறுப்புத் தில்லைவாழ் அந்தணரிடம் விடப்பட்டது. இவன் பொய்கை ஆழ்வாரால் பாடப்பட்டமையின், சைவ-வைணவ சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[17] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[18] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3-ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[19]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல தூபிகளை நாட்டிப் பெளத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சுங் காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத்தெரிகிறது. [20]

கி.மு. 150 இல் இருந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.மு.2ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்ததெனலாம். [21]

கி.மு. முதல் நூற்றாண்டில் சோணாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டை மண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக்கரிகாலன் அழகு செய்தான்; மதில்கள் எழுப்பினான். வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான்: வேளாண் குடிகளைக் கொணர்ந்து நாட்டைச் செழிப்பாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது.”[22]

மாமல்லபுரம்

இது சிறந்த கடற்கரைப் பட்டினமாக விளக்கமுற்று இருந்தது. வடக்கேயிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த நாவாய்கள் சூழந்திருந்தன. பரதர் மலிந்த தெருக்களும் காவலர் காத்த பண்டசாலைகளும் இருந்தன. அங்கிருந்த மாடங்களில் பெண்கள் பந்தை அடித்து விளையாடி மணற் பரப்பில் கறங்காடினார்கள். கடற்கரையில் வானளாவிய மாடங்களில் வைத்த விளக்குகள் கடலிற் சென்ற நாவாய்களில் இருந்தவர்க்குத் துறையை அறிவித்தன.[23] தொண்டைமான் காலத்தில், ஏன்? சங்ககாலத்திலேயே காஞ்சிபுரம் கச்சி என்ற பெயர் பெற்று இருந்தது. அந்நகரம் சிறந்த உலக நகரங்களுள் ஒன்று தேரோடும் தெருக்களையும் பழங்குடிகளையும் மதிலையும் உடையது. இளந்திரையன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்: தொண்டையர்குடியிற் பிறந்தவன்: பகைவர் அரண்களை அழித்தவன்: யானைகள் கொணர்ந்த விறகால் வேள்வி செய்தமுனிவர்கள் வாழ்ந்த மலைகட்கு உரியவன்; நான்கு குதிரைகள் பூட்டியதேரை உடையவன்.[24]

ஆனால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் கடைப் பகுதியிலும் அஃதாவது, சிலப்பதிகார மணிமேகலைக் காலத்தில் காஞ்சிபுரம் இளங்கிள்ளி என்பவன் ஆட்சியில் இருந்ததாகத்தெரிகிறது. அவன் புத்தர் கோயில் ஒன்றைக் கட்டியிருந்தான். அங்குச் சென்ற மணிமேகலை புத்த பீடிகையை அமைத்தாள்: தீவதிலகையையும் மணிமேகலா தெயவத்தையும் வழிபடக்கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர் அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டாள்; ‘பவத்திறம் அறுக, என்று அங்குத்தானே தவம் கிடந்தாள்.[25]

வலியற்ற வட எல்லை

இளங்கிள்ளிகாலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க் கோட்டத்தில் உள்ள பாவித்திரி (ரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் ‘கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப் பகுதி தொண்டை மண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில், வடக்கே இருந்த சாதவாகனர் (ஆந்திரர்) க்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் நடந்து வந்தன. எனவே, இப் பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு (காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[26] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.

மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்ட தென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்த பொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.
--------------
References :
[1]. R.Gopalan’s Pallava of Kanchi, pp.26.27
[2]. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செ.85
[3]. K.A.N.Sastry’s Cholas Vol.pp.121, 122.
[4]. ibid.p.44
[5]. Vide his ‘Sangam Agé’, pp.56,57
[6]. C.S. Srinivasacnhari “History of India’ P49
[7]. Archaeological Survey of Cylon, xiil 1896, pp.47,48.
[8]. W.A.Smith’s “Early Histoy of India’, p.22, 34th ed.
[9]. K.G. Sesha Iyer in the “Christian College Magazine’, Sep. Oct. 1917. Dr. S.K. Aiyankar’s “Manimekalai in its Historical Setting’ pp. 105,106
[10]. A short History ofceylon’ pp. 722-725 by Dr. W.Gelgerin “Buddhistic Studies’ edited by Dr. B.C.Law.
[11]. V.A. Smith’s “Early History of India,” p.471
[12]. கலைமகள் (1932) தொகுதி 1, பக். 62, 63
[13]. V.A. Smith’s “Early History of India,’ pp.215,216.
[14]. V.A. Smith’s Early History of India’, p.369
[15]. Dr. S.K.Alyangar’s Ancient India, pp.95-6
[16]. Dr. S.K. Aiyangar’s “Early History of Vaihaavism in S.India’ pp.72-75
[17]. திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.
[18]. R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.
[19]. C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183
[20]. Beal Rec. II. p.230
[21]. D.Sircar’s “Seccessors of the Satavahanas,p. 140
[22]. உலகநாதபிள்ளை, ‘கரிகாற் சோழன், பக். 40
[23]. பெரும்பாணாற்றுப்படை, அடி 320-325
[24]. Ibid II. 410-500
[25]. Ibid II. 28-30
[26]. Dr. S.K. Aiyangar’s “Manimekali-in Historical Setting,’ pp.49-50
-------------

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

சங்க நூல்களில் பல்லவர் என்பரைப் பற்றிய குறிப்பே காணல் இயலாது. ஆனால், சங்க நூல்களின் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூல்களில் பல்லவர் குறிக்கப் பட்டுள்ளனர்; காஞ்சிமாநகரம் பல்லவர் ஆட்சியில் சிறந்த கோநகரமாக விளக்கம் பெற்றிருந்தது என்பது குறிக்கப்பெற்றுள்ளது. அப்பிற்பட்ட நூல்களைக் காலமுறைப்படி ஈண்டுமுறைப்படுத்திக் கூறுவோம்.

(1) லோக விபாகம்: இது திகம்பர சமண நூலாகும். இதில் (1) பாணராட்டிரத்தில் உள்ள ‘பாடலி’[1] என்னும் சிற்றுரில் சர்வநந்தி என்பவர் லோகவிபாகம் என்னும் நூலைத் திருத்தியமைத்தார்; (2) அங்ஙனம் இந்நூல் ஒழுங்காகச் செய்யப்பெற்ற காலம் காஞ்சி அரசன் சிம்மவர்மன் பட்டம் பெற்ற இருபத்திரண்டாம் ஆண்டாகும். அஃதாவது, சாக ஆண்டு 380; கிறித்துவ ஆண்டு கி.பி.458. எனவே, சிம்மவர்மன் என்ற பல்லவன் பட்டம் பெற்றயாண்டு 458-22 கி.பி.436 ஆகும்.[2]

(2) அவந்தி சுந்தரிகதை: இதுவும் வடமொழிநூல். முகவுரையில் பாரவி என்னும் வடமொழிப் புலவர் விஷ்ணு வர்த்தனன், துர்விநீதன், சிம்ம விஷ்ணு பல்லவன் எனக் கண்டு பரிசு பெற்றமை கூறப்பட்டுள்ளது. பாரவி பார்த்த மூவேந்தரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர் என்பதில் ஐயமில்லை துர்வந்தன் கி.பி.604 இல் அரசன் ஆனவன். கி.பி. 614இல் அரசன் ஆனான். ஆதலின், அவனது பல்லவன் காலமும் அதுவேயாகும்.[3]

(3) மத்தவிலாசப் பிரகசனம்: இஃது அப்பர் காலத்வானாகிய மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் வரையப்பெற்ற சிறிய நாடகம். இதனில், அக்காலத்திய புத்தர், கபாலிகர், சமணர் முதலிய பல சமய மக்கள் பழக்க வழக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவன்காலம் கி.பி. 615-630[4] என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

(4) சைவத் திருமுறைகள்:- அப்பர் பாடியருளிய 4,5,6 ஆம் திருமுறைகளில் பல்லவர் சமணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சம்பந்தர் பாடிய பதிகங்களில் சமணரைப் பற்றிய குறிப்புகள், பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இவ்விருவரும் கி.பி.7ஆம் நூற்றாண்டினர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. இவர்கட்குப் பிற்பட்ட கி.பி. 9ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த சுந்தரர் பாடிய தேவாரத்தில்,

“....மண்ணுலகம் காவல் பூண்ட -
உரிமையால் பல்லவற்கு திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்”[5]

என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. இக் குறிப்பால், பல்லவர் பேரரசர் என்பதும். அவரது ஆட்சிக்குள் சிற்றரசர் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்பதும் நன்கு புலனாகின்றன அல்லவா?

(5) நாலாயிரப் பிரபந்தம் :-திருமங்கை ஆழ்வார் கும்பகோணத்தை அடுத்த நந்திபுரம் (நாதன் கோவில் - இன்றைய பெயர்) என்னும் வைணவப் பதியைப்பற்றிச் சில குறிப்புகள் பாடியுள்ளார். அது கோட்டை மதில்களை உடையது. காவல் மிகுந்தது. நந்திவர்ம பல்லவ மல்லன் பெயரால் நடத்தப் பெற்ற போர்களில் ‘நென்மலி’ என்னும் இடத்துப்போர் ஒன்றாகும். அதனைத் திருமங்கை ஆழ்வார்,

“நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப்
பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்”

என்று பாடியுள்ளார்; வயிரமேகன் என்னும் இராட்டிர கூட அரசன் (கி.பி.725-758) காஞ்சியில் பல்லவ மல்லவனோடு இருந்தான் என்று வேறொரு பாட்டில் பாடியுள்ளார்.[6] பல்லவர் சாளுக்கியரோடு செய்த போரில் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக்கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டள்ளார். எனவே, இவர் நந்திவர்ம பல்லவ மல்லன் (கி.பி. 710-775) காலத்தவர். இவர் பாடல்களும் பல்லவர் வரலாற்றுக்கு உதவி செய்வன ஆகும்.

(6) நந்திக்கலம்பகம்:- இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) காலத்தது; இவனைப் பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். இவன்தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் என்று செ. 104, 107 கூறுகின்றன.

(7) பாரதவெண்பா:- இந்நூலின் சிறிதளவே இன்று கிடைத்துள்ளது. அதுவே ‘உத்தியோக பருவம்’ என்பது. அதன் முதற் பகுதியில் மூன்றாம் நந்திவர்மன் ‘தெள்ளாறு’ என்னும் இடத்தில் பகைவர்களை முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

(8) பெரிய புராணம்:- இந்நூல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்னும் பெரும் புலவராற் பாடப்பட்ட தாயினும், இதன்கண் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாயன்மார் காலம் பல்லவர் காலமே ஆகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழனது உயர் அலுவலாளர் ஆதலால், பல்லவர் பரம்பரை, ஆட்சிமுறை முதலிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் கூடும்; மேலும் அவர் பல்லவர் நிலைபெற்று ஆண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்; பல்லவ புரத்தை (பல்லாவரம்) அடுத்த குன்றத்தூரிற் பிறந்து வளர்ந்தவர்; பல்லவர் கோவில் பணிகளையும், கல்வெட்டுச் செய்திகளையும் செவிமரபுச் செய்திகளையும் நன்கு அறிந்தவர். இவ்வசதிகளைப் பெற்ற அப்பெரியார் பாடியுள்ள பெரிய புராணத்தில் பல்லவர் காலத்திய தமிழகம் ஓவியமாக விளக்கப்பட்டுள்ளதை நூலறிவும் நுண்ணறிவும் உடையார் நன்கறிவர். நாயன்மார் அறுபான் மூவருள் காடவர் கோன் கழற்சிங்கர் ஒருவர்; இவர் “கூடலர்முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”, அரசாண்டவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரைத் ‘தொல்லைப்பல்லவர்’ என்றுங் கூறுகிறது. இதனால், சேக்கிழார் பல்லவருடைய பரம்பரைகளை (முன்னைப் பின்னை நடைபெற்ற பல்லவர் பரம்பரைகளை) நன்கறிந்தவர் என்பது தேற்றமன்றோ? சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் வரலாற்றையும் பாடியுள்ளார். இந்த நாயனாரும் பல்லவ மன்னர்:

“மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்ய”

ஆண்ட பேரரசர்; சைவப்பதிகளை வணங்கி வெண்பாக்கள் பாடிப் பேறு பெற்றவர்.

அப்பர் காலத்தில் வாழ்ந்த குணபரன் (கி.பி.615-630) (குணதரன் - முதலாம் மகேந்திரவர்மன்) அப்பர்க்கு இழைத்த இன்னல்களும், அவன் சமணத்தைவிட்டுச் சைவனாக மாறினதும் பெரிய புராணத்துட் காணலாம். அவன் மகனான நரசிம்மவர்மன் (கி.பி.630-668) சேனைத் தலைவரான பரஞ்சசோதியார் (சிறுத்தொண்டர்) சாளுக்கியர் மீது படையெடுத்து வாதாபி வென்றதும், அவர் சம்பந்தர் நண்பரானதும் பெரிய புராணத்தில் காணலாம்.

பூசலார் நாயனார் காலத்துக் காடவர்கோனான இராசசிம்மன் (கி.பி.880-710) எடுத்த கற்றளி (கைலாசநாதர் கோவில்) சிவபெருமான் அரசன் கனவிற் சென்று கூறினமை முதலிய செய்திகளைச் சேக்கிழார் பூசலால் புராணத்தில் விளக்கியுள்ளார். இறைவன் கனவிற் சென்று கூறியதாகக் கூறும் பெரியபுராணச் செய்தியே இராசசிம்மன் அசரீரி கேட்டதாகக் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, சேக்கிழார் பெருமான் கல்வெட்டுகளையும் கருத்திற்கொண்டே புராணம் பாடியுள்ளார் என்பது இங்கு அறியத்தக்கதாகும்.

பல்லவர் காலத்தில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டினரான நரசிங்கமுனை அரையர், மெய்ப்பொருள் நாயனார் (திருக்கோவலூர் அரசர்) முதலியவர் வரலாறுகளும்: சோழநாடு பல்லவர்க்கு உட்பட்டுச் சோழர் தலைமறைத்து முடியிழந்த குறுநில மன்னராகி வாழ்ந்தமையும், அத்தாழ் நிலையிலும் அவர்க்குப்படை வீரரும் படைத்தலைவர் பலரும் இருந்தமையும், பாண்டியர் சிறிதுசிறிதாகக்களப்பிரரையும் பின்னர்ப் பல்லவரையும் வென்று பேரரசை நிலைநிறுத்தின விவரங்களும், பல்லவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த நல்லனவும் தீயனவும் இன்னபிறவும், பெரிய புராணத்தில் மிகத் தெளிவாக அறியலாம். இந்த விவரங்கள் ஆங்காங்கு இந்நூலில் விளக்கம் பெறும்.

இதுகாறும் கூறப்பெற்ற வடமொழி - தென்மொழி நூல்களை நன்கு படிப்பவர், சங்க காலத்திற்குப் பிறகு, வேங்கடத்திற்குத் தெற்கே பல்லவர் என்னும் புதிய மரபினர் ஏறக்குறைய 500 ஆண்டுகள் நிலைபெற்றுத் தமிழகத்தை ஆண்டிருந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.

ஊர்களின் பெயர்கள்

சங்க நூற்களில் காணப்பெறாத ஊர்ப் பெயர்கள் பிற்காலத்தில் காணப்படுகின்றன. அவற்றுள், பல்லாவரம் (பல்லவபுரம்), பல்லவ நத்தம், நந்திபுரம், பரமேசுவர மங்கலம், கேந்திர மங்கலம், மகேந்திரவாடி, மாமல்லபுரம், குமாரமார்த்தாண்ட புரம் என்பன சில. இவற்றால் பல்லவர் அரசர் என்பதும், நந்தி பரமேசுவரன், மகேந்திரன், மகாமல்லன், குமார மார்த்தாண்டன் என்பன பல்லவ அரசர் பெயர்கள் என்பதுவும் அறியக் கிடக்கின்றன.

குகைக்கோவில்களும் கற்கோவில்களும்

சங்க நூல்களில் கற்கோவில்களோ, குகைக்கோவில்களோ குறிக்கப்பெற்றில, ஆனால் பெரிய புராணத்தில் கற்றளிகள் (கற்கோவில்கள்) குறிக்கப்பட்டுள்ளன. அவை பல்லவரலால் கட்டப்பட்டன என்பதும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலறிவுடன், நாமும் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பல்லவபுரம், மகேந்திரவாடி, தாளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சிங்கவரம், கீழ்மாவிலங்கை, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், வல்லம், மண்டப்பட்டு, மேலைச்சேரி, சித்தனவாசல் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் காண்கின்றோம்; ‘பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படும் பல்லவர் அமைத்தவை இவை,’ என்பதை ஒருவாறு உணர்கின்றோம்.

எனவே, இதுகாறும் கூறியவற்றால், (1) சங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்லவர் என்னும் மரபினர் பேரரசர்களாக இருந்தனர் என்பதும், (2)அவர்கள் பல குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்தனர் என்பதும், (3) சில ஊர்கட்குத் தங்கள் பெயர்களை இட்டு வழங்கினர் என்பதும், (4)அவருள் பலர் சைவாக இருந்தனர் என்பதும் ஒருவாறு உணர்தல் கூடுமே அன்றி, அப்பல்லவர் வரலாறுகளை அறிதல் கூடவில்லை.

பட்டயங்களும் கல்வெட்டுகளும்

பழைய அரசர்கள் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்கள் தந்த விவரங்களைச் செப்புப்பட்டயங்களில் எழுதி வந்தனர். அவற்றில் ‘இன்ன அரசன் பட்டமேற்ற இன்ன ஆண்டில்’ என்பது சிறப்பாகக்குறிக்கப்பெற்றது. அத்துடன், சில பட்டயங்களில் அவ்வேந்தன் முன்னோர் பெயர்களும் அவர்தம் விருதுப்பெயர்களும் அவர்கள் செய்த போர்களும் அறச்செயல்களும் குறிக்கப்படலும் உண்டு. இத்தகைய பட்டயங்கள் அரசர் மரபுக்கேற்றபடியும் நாட்டு முறைமைக்கு ஏற்றபடியும் பலமொழிகளில் எழுதப்பெறும். பல்லவர் தமிழகத்திற்கே புதியவர் ஆதலின், அவர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் முதலில் பிராக்ருத மொழியிலும், வடமொழியிலுமே வரையப் பெற்றன. பிற்காலப் பல்லவரே தமிழ் மொழியில் வரையத் தலைப்பட்டனர். இங்ஙனம் மூன்று மொழிகளில் அமைந்த பட்டயங்கள் சில கிடைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஆண்ட பல்லவர் கற்களில் பல செய்திகளைப் பொறித்துள்ளனர். அவற்றை அவர்கள் அமைத்துள்ள குகைக் கோயில்களிலும் கற்கோவில்களிலும் கண்டு மகிழலாம். பல்லவர்கள் அமைத்த பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் போல அவர்கள் காலத்துப் பிறநாட்டு மன்னர்தம் பட்டயங்களைக் கொண்டும், ஓரளவு பல்லவர் வரலாற்றை அறியலாம். அம்முறையில் கதம்பர், இரட்டர், சாளுக்கியர், நாகர், கங்கர், பாண்டியர், முத்தரையர் முதலிய அரச மரபினர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் உதவி புரிகின்றன. இவை அமையம் வாய்ப்புழி ஆங்காங்குக் குறிக்கப்பெறும்.

பிற நாட்டார் குறிப்புகள்

(1) இயூன் - சங் என்னும் சீன வழிப்போக்கினர் (யாத்திகர்) ஹர்ஷனையும் இரண்டாம் புலிகேசியையும் பார்த்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்குச் சில மாதங்கள் தங்கியிருந்தார்; காஞ்சியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் காஞ்சியில் இருந்த சமயங்கள், கோவில்கள் இவற்றைப் பற்றியும் தமது வழிப்போக்கு (பிராயணம்) நூலில் குறித்துள்ளார். அவர் காஞ்சியில் இருந்தகாலம் ஏறக்குறைய கி.பி.640 ஆகும்.

(2) ஏறக்குறைய அதேகாலத்தில் இலங்கையை நோக்கிப் பல்லவர் படையெடுப்பு நடந்தது என்பதை இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகின்றது. ஆதலின், இக் குறிப்பிட்ட இரண்டு நூல்களும் பல்லவர் வரலாற்றை அறிய உதவி புரிவனவே ஆகும்.

ஆராய்ச்சியாளர் உழைப்பு

கி.பி. 19ஆம் நூற்றாண்டில் நமது நாட்டில் மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலர் இருந்தனர். அவருள் சிறந்தவரான சர் வால்டர் எலியட் என்பவரே முதல் முதல் பல்லவரைப் பற்றி எழுதினர். அவர் ‘மகாபலிபுரத்தில் உள்ள குகைக் கோவில்களை அமைத்தவர் பல்லவரே’, என்பதைக் கண்டுபிடித்தார். அதே நேரத்தில் டாக்டர் பர்னெல் என்பவர் அங்கு இருந்த கல்வெட்டுகளை முயன்று படித்துணர்ந்து, ‘அவை பல்லவர் தம் கல்வெட்டுகளே’ என்பதை மெய்ப்பித்தார். பின்னர் ஜேம்ஸ்பெர்கூசன் என்பவர் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டு, ‘அங்குள்ள வேலைப்பாடுகள் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை’ என்று முடிவு கட்டினார். பிறகு, சென்ற நூற்றாண்டின் இறுதியிற்றான் பல்லவரைப் பற்றிய மேற்சொன்ன செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வெளிப்போந்தன. அவற்றைக்கண்ட ஆராய்ச்சியாளர் திகைப்பும் வியப்பும் கொண்டனர்; பல ஆண்டுகள் அவற்றை ஆய்ந்து வெளியிட்டனர்; இம் முயற்சியில் முதல் இடம் பெற்றவர் டாக்டர் ப்ளீட் (Dr. Fleet) என்பவரே. இவரது முயற்சிக்குப் பின்னர்ப் பல கல்வெட்டுகளும் மகாபலிபுரம் ஒழிந்த பிற (பல்லவர் கோயில்கள் கொண்ட) இடங்களும் ஆராய்ந்து அறியப்பட்டன. பட்டயங்களும் கல்வெட்டுகளும் பேரறிஞர் பலரால்[7] பார்வையிடப்பெற்று விளக்கக் குறிப்புகளுடன் அச்சேறி வெளிப்போந்தன. இவற்றின் பின் கிடைத்த புதிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர் வெளியிடும் தென் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் வெளியாகி உள்ளன. இவையன்றி, இன்னும் எண்ணத் தொலையாத பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் இருத்தல் கூடும். அவை நாளடைவில் வெளிவரும். அவை வரவரப் பல்லவர் வரலாறு மேலும் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியர் பலர்

டாக்டர் ப்ளீட் துரை[8]க்குப்பின்னர் வெங்கையா என்பவர் 1907இல் பல்லவர் வரலாற்றை ஓரளவு தமிழ் நூல் உணர்ச்சியுடன் திறம்பட ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.[9] 1917இல் பிரெஞ்சுப் பேரறிஞரான துப்ராய் துறைமகனார் ‘பல்லவர்’ என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். இவர், அதுகாறும் எவரும கண்டறியாத பல புதிய கல்வெட்டுகளையும் பல்லவர் சின்னங்களையும் கண்டு ஆராய்ந்து அரும்பாடு பட்டனர். இவர் ‘பல்லவர் சின்னங்கள்’, ‘பல்லவர் ஓவியம்’ என்னும் பெயர்கொண்ட வெளியீடுகளையும், ‘டெக்கானது பண்டை வரலாறு’ என்றும் ஆராய்ச்சி மிக்க நூலினையும், ‘தென் இந்தியப் படிமக்கலை’[10] என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இப்பெரியார் சிறப்பாகப் பல்லவர் வரலாற்றிற்குப் பெருந்துணை புரிந்தவர். இங்ஙனம் பல்லவர் வரலாற்றை வரைய முனைத்தவர் பலர் உளர். அவருள் நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த டாக்டர் கிருட்டினசாமி ஐயங்கார் சிறந்தவர். இவர் 1923இல் ‘இந்திய வரலாற்று வெளியீடு’ என்னும் வெளியீட்டில் ‘பல்லவர் தோற்றமும் முற்பட்ட வரலாறும்’ என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.’ கோபிநாத ராவ், கே.வி. சுப்பிரமணிய ஐயர், அரங்கசாமி சரசுவதி முதலியோர்[11][12][13] வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில. பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் தமிழில் ‘பல்லவர் சரித்திரம்’ வெளியிட்டுளார். 1928 இல் சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த திரு. ஆர். கோபாலன் என்பவர் பண்பட்ட ஆராய்ச்சி முறையில் பல்லவர் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவருக்குப் பின் பிரெஞ்சுப் பேரறிஞராகவுள்ள ஹீராஸ் பாதிரியார் பல்லவரைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை வரைந்துள்ளார்.[14]

கல்கத்தாப் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளராகவுள்ள தினேஷ் சந்திர சர்க்கார் ‘சாதவாகனர்க்குப் பின் வந்த அரசர்’ என்னும் அரிய நூல் ஒன்றில் பல்லவரைப் பற்றி இயன்ற அளவு ஆய்ந்துள்ளார்.[15] டாக்டர் மீனாட்சி அம்மையார் பல இடங்கட்கும் நேரே சென்று ஆராய்ந்து, ‘பல்லவர் கால ஆட்சியும் வாழ்க்கையும்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை 1938இல் வெளியிட்டுளார். இவ்வம்மையார் பட்டுள்ள பாடுகூறுந்தரத்ததன்று. இவரது நூல் பல்லவர் வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெறத்தக்கது.

இவற்றுடன் ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. ஆராய்ச்சி முடிவுற்றது. எந்த நேரத்திலும் எந்தப் பழைய இடத்தும் புதிய பொருள் கிடைத்தல் கூடும்; புதிய பட்டயமோ, கல்வெட்டோ, வேறு புதை பொருளோ அகப்படல் கூடும். இந்த முறையில் ஆராய்ச்சியாளர் கண்ணும் கருத்துமாக இருந்து, கிடைக்கும் புதியவற்றைத் தம் ஆண்டறிக்கைகளில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ஆராய்ந்து இயன்றவரை ஒருவாறு பல்லவர் வரலாறு கூறலே நமது நோக்கமாகும்.
----------------
References :
[1]. பாடலிக-பாடலிகபுரம், திருப்பாதிரிப்புலியூர்.
[2]. Dr. S.K. Aiyangar’s “Some Contributions of South India to Indian Culture’ pp. 193-194.
[3]. Dr. M. Venkataramanayya’s article on “Durvinita and Simha Vishnu’ in J.O.R.
[4]. Ibid
[5]. சுந்தரர் தேவாரம், ப.90, செய்.
[6]. பெரிய திருமொழி. வி.10:2, 9, 8: 3.9
[7]. Dr. Fleet Hutzsch, Venkayya, Keilhorn, Krishna Sastry and others. They can be found in the Indian Antiquary, Soultes Indian Inscriptions and the Epigraphia Indica.
[8]. Vide his “Dynastiesofthe Kanarese Districts'in the Bombay Gazetteer
[9.] Archaeological Annual Survey Report for 1906-7, pp. 217-243.
[10]. “South India Iconography'
[11]. Dr. Venkataramanayy’s articles on “The Date of Pallava Malla, “Durvinita and Vikramaditya I, “The place of Virakurcha in the Pallava Genealogy,” “Mahendravarman I & Pulikesin II etc.
[12]. Mr. M.S. Sarma’s papers on “Nirupatunga’, The Chronology of the Later Pallavas’ etc
[13]. T.N. Ramachandra’s paper on “The last days of Nirupatunga’ etc.
[14]. Studies in Pallava History, (1934)
[15]. D. Sircar’s “Successors of the “Satavahanas’ (1939)
------------

3. பல்லவர் யாவர்?

பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்திருந்து - ‘அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்?’ என்பன போன்ற கேள்விகட்கு ஏற்ற விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக்கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.

பலதிறப்பட்ட கூற்றுகள்:- இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில், ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ் வொப்புமை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர் என்றும் முடிபு கூறியுள்ளார்.”[1]

சாதவாஹனப் பேரரசும் தமிழகமும்
(கி.மு. 200-முதல் கி.பி.250)

ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிபு செய்தனர்.[2] பேராசிரியர் துப்ராய் என்பவர், ‘கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான சுவிராகன் என்பவன் பஹ்லவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியைத் தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவர் அரசர் அல்லர், ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம்பெற்றவனே முதற்பல்லவன். அவனே வீரகூர்ச்சவர்மன் என்று பல்லவர் பட்டயங்களில் கூறப்படுமவன்’ என்று வரைந்துள்ளார்.[3]

இங்ஙனம் பல்லவர் என்பார் பஹ்லவர் மரபினரே என்று முடிபு கொண்டவர் பலர் உளர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர், ‘இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக்கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு இருந்தமையின் தொண்டைமான் என்றும், திரைகளால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகப் பெயரைத் தாங்கிப் (மணி பல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழப்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்’ என விளக்கியுள்ளார்.[4]

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்’ எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்’ என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் ‘போத்தர்’ என்றும் ‘பல்லவர்’ என்றும் பல்லவ அரசர் கூறிக் கொண்டனர். ‘மணிபல்லவம்’ என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று தம்மைமக் கூறிக் கொண்டமை. இயல்பே அன்றோ?’[5] ‘வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்’ என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டைமண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றிலர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால் - அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.[6]

‘மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்ட மண்டலம் என வழங்கினான்’ என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது.

பல்லவர் தமிழர் அல்லர்

வின்ஸென்ட்ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்த முடையதாகத் தெரிகின்றது. ஏனையோர் கருத்துகட்குக் கடுகளவும் சான்றில்லை. என்னை? பிராத்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவ பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ ‘பல்லவர் பஹ்லவர் மரபினர்’ என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, ‘திரையர் மரபினர் என்றோ, ‘மணி பல்லவத் தீவினர்’ என்றோ குறிக்கவில்லை சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி. இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ் கந்தவர்மன், ‘புத்தவர்மன்’ வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத்தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலான வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின் - இளந்திரையன் வழிவந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?[7] கி.பி 9ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட சோழரோ, பாண்டியரோ வளர்க்காத முறையில் தமிழைப் புறக்கணித்து, வடமொழியைத் தமது ஆட்சியில் வளர்த்திருப்பரோ? பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது என்பது மிகையாகாது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார் என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; குடிவழி அறிந்தவர்கள்; தமிழர்க்கு இருடிகள் கோத்திரம் எது?[8] இன்ன பிற காரணங்களால். பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். ஆயின், பல்லவர் யாவர்?

தொண்டை நாடும் சங்க நூல்களும்

வடபெண்ணை யாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு. 184 முதல் கி.பி. 260 வரை செறிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணைவரை இருந்தநிலப்பரப்பே அக்காலத் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது- முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் ‘தொண்டைமான் மாகணி’ (மாகாணம்) எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு. தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி, திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும். குடகு முதலிய மலை நாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும். அதனைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவா வடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் பாவித்திரி என்பது. அஃது இப்பொழுதையை கூடுர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம், என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்தி நாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப் பகுதியைக் கைக்கொண்டமையின், இதற்குக் காகந்தி நாடு (புகாருக்கு உரிமையான நாடு) என்று பெயரிட்டனர் போலும் ‘கரிகாற் சோழன்’ காடு கெடுத்து நாடாக்கினான். விளை நிலங்கள் ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டுவித்தான்: தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்: நாகரிகத்தைத் தோற்றுவித்தான்.' என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடக்கின்றது. திரையன் அருவா வடதலை நாட்டை ஆண்டபோது, ‘இளந்திரையன்’ அருவா நாட்டை ஆண்டனள் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

தொண்டைமான் இளந்திரையான் காலத்தில் காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் களவர் என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்குத் தலைவனாக இருந்தவன் புல்லி என்பவன். இவன் திரையனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பதை அறியக் கூடவில்லை. இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் நாம் அறியக்கிடக்கும் உண்மை ஆகும்.

எல்லைப் போர்கள்

வடபெண்ணையாற்றுக்கு வடக்கே ஆதோணியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பு சாதவாகனர் (ஆந்திரர்) ஆட்சியின் தென்மேற்குப் பகுதியாக இருந்தது. அந்த இடம் ‘சாதவாகனி இராட்டிரம்’ என்று வழங்கப்பட்டது. சாதவாகனருடைய பெரும் இந்தப் பகுதிக்குத் தலைவனாக இருந்தான். அதே காலத்தில் சாதவாகனரது தென்பகுதியை மேற்பார்த்து வந்த தலைவர்களே பல்லவர் ஆவர். ஆதலின். இந்தப் பகுதி தமிழகத்தின் அருவாவடதலை நாட்டிற்கும் வடக்கின் கண்ணது ஆதலின், எல்லைப் போர்கள் பல நடத்தவண்ணம் இருந்தன. இப் போர்களைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாவிடினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் அரசர்க்கும் ‘ஆரியர்’ என்று கருதப்பட்ட சாதவாகனர்க்கும் எல்லைப்புறச் சண்டைகள் நடைபெற்றன என்பதைச் சங்க நூல்களால் நன்கறியலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்சொழியன் என்னும் பெயரும், திருக்கோவலூரை ஆண்ட மலையமான் ஆரியரை வென்றான் என வருவதும் ‘சோழர் ஆரியரை வென்றனர்'[9] என்னும் குறிப்புகள் தமிழ் நூல்களில் பல இடங்களில் வருதலும் இவ்வெல்லைப் போர்களையே குறித்தனவாதல் வேண்டும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் (சிலப்பதிகார காலத்தில்) தோன்றி வளர்ந்து வந்த இந்த எல்லைப்புறப் போராட்டங்கள், ஆதோணியைச் சேர்ந்த நிலப்பகுதிக்குத் தலைவராக இருந்த சாதவாகன அதிகாரிகட்கும் தென்பகுதித் தலைவர்கட்கும் நாளடைவில் வெற்றியை அளித்தனவாதல் வேண்டும். இன்றேல், அக்கால வழக்கில் இருந்த சாதவாகனர் கையாண்ட ‘கப்பல் நாணயங்கள் வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை காணக் கிடத்தற்குக் தக்க காரணம் வேண்டுமென்றோ?

சாதவாகனப் பெருநாடு

சாதவாகனப் பெருநாடு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றைச் சாதவாகன மரபினரும் உயர்ந்த தானைத் தலைவரும் மண்டலத் தலைவராக இருந்து ஆண்டு வந்தனர்.

விஷ்ணு குண்டர்

கோதாவரிக்கு வடபாற்பட்ட பகுதியை, வாகாடகர் பெண்ணை மணந்த தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மரபினர் விஷ்ணு குண்டர் எனப்பட்டனர். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 450-550 என்னலாம்.[10]

சாலங்காயனர்

கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டைச் சாலங்காயனர் என்பவர் கி.பி. 320 முதல் 500[11] வரை ஆண்டனர். அவர் தலைநகரம் வேங்கி (பெத்த வேங்கி) என்பது. அவர்கள் நந்தி வழிபாட்டினர். (சாலங்காயன நந்தி). அவருள் இரண்டாம் அரசனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசர் பலருள் ஒருவன் ஆவன். இறுதியில் இந்நாடு சாளுக்கியர் கைப்பட்டது.

இக்குவாகர்-பிருகத்பலாயனர்

கிருஷ்ணை, குண்டுர்க்கோட்டங்களை இக்குவாகர் (இக்ஷவாகர்) என்பவர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டனர். இவருள் ஒருவனான சாந்தமூலன் என்பவன் கி.பி. 225இல் தன்ஆட்சி நிறுவி அந்நாட்டைஆண்டான். இவன் மரபினர் சில ஆண்டுகளே அதனை ஆண்டனர். பிறகு அதனைப் பிருகத் பலாயனர் ஆண்டினர்; இறுதியில் அப் பகுதி ஏறத்தாழக் கி.பி. 275இல் பல்லவர் கைப்பட்டதாகலாம். அதன் தலைநகரம் ‘தான்யகடகம்’ என்பது.[12] இந்நகரம் பல்லவர் வடபகுதிக்குத்தலைநகரமாகச் சிவஸ்கந்தவர்மன் பட்டயத்தில் காணப்படுகிறது.[13]

ஆனந்தர்

குண்டுர், கிருஷ்ணைக் கோட்டங்களை இக்குவாகரிடமிருந்து ஆனந்தர் என்பவர் கைப்பற்றிக் கி.பி. 350 முதல் 450 வரை ஆண்டுவந்தனர். அப் பகுதி இறுதியிற் சாலங்காயனர் கைப்பட்டது.[14]

சூட்டு நாகர்

சாதவாகனப் பெருநாட்டின் தென்மேற்குப் பகுதி சூட்டு நாகர் என்பவர் ஆட்சியில் இருந்தது. அதனை ஆண்ட மாகாணத் தலைவருட் சிறந்தவனே கந்தநாதன் என்பவன். இம் மரபினர் சாதவாகனருடன் உறவு கொண்டிருந்தனர். இவர் தலைநகரம் வனவாசி என்பது. இவர் ஆட்சி கி.பி.340 இல் கதம்பரால் பறிக்கப்பட்டு விட்டது.

பல்லவர்

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற் பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவா மரபினர் சாதவாகனர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டு வந்தவர்; தம் பேரரசு வலி குன்றத் தொடங்கிய 225 இல் தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்துகொண்டு விட்டனர்; பின்னர் வலுப் பெற்றதும், தொண்டை நாட்டைக் கைப்பற்ற முனைந்தனர்.

இங்ஙனம் சாதவாகனர் பேரரசில் மாகாணத் தலைவராக இருந்த சாலங்காயனர். விஷ்ணுகுண்டர், இக்குவாகர், பிருகத் பலாயனர், சூட்டுநாகர், பல்லவர் என்பவர். அப்பேரரசு வலிகுன்றத் தொடங்கியதும், தாம்தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்குத்தாமே அரசராகிவிட்டனர்.[15]

இதனாற்றான், (சாதவாகனப் பேரரசு சத்ரபர், வாகாடகர் என்ற புதிய மரபினர் படையெடுப்பால்நிலைதளர்ந்தபோது தம் ஆட்சியை உண்டாக்கிக் கொண்ட) இந்த அரசருள் பலர், கி.பி.340 இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திர குப்தனை எதிர்த்தனர் என்பதை அல்லகாபாத்துண்கல்வெட்டு உணர்த்துகிறது. சாதவாகனப் பேரரசு உடைபட்டுச் சிறிய பல நாடுகள் தோன்றியிராவிடின், சமுத்திர குப்தனை இத்துணை அரசர் (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி, கிருஷ்ணை ஆறுகளண்டை எதிர்த்திருத்தல் இயலாதன்றோ?

பல்லவரும் தொண்டை நாடும்

இந்நிலைமை உண்டாதற்கு முன்னரே, இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத்தலைவர்) தங்கள் தென் எல்லைப்புறம்போர்களிற் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வந்தனர். இறுதியில் சோழர் பிடித்தாண்ட தொண்டை மண்டலத்தில் வலிமையுள்ள அரசன் இல்லாத அக்காலத்தில் பெரும் படையை அனுப்பிப் பகைவரை விரட்டியடிக்க வலியற் சோழன் சோழ மண்டலத்தை ஆண்ட அக்காலத்தில்-(வட எல்லையில் இருந்த) சாதவாகனப் பேரரசின் தென்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் பையப் பைய அருவா வடதலை நாட்டையும், பிறகு அருவா நாட்டையும் கைப்பற்றினர்.

‘தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும்போர் நடந்தது’ என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுராசனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச் செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.

இங்ஙனம் கைப்பற்றிய நாட்டில், மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்பதேவன்[16] என்னும் அரசன் ஓர் இலக்கம் (லட்சம்) கலப்பைகளையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகின்றது. பின் வந்த அரசரும் புதிய நாட்டில் இருந்த கோவில்களுக்கு மானியங்கள் விட்டனர் என்னும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. இச் செப்பேடுகளில் பிராக்ருத மொழியே காணப்படுகிறது. சாதவாகனப்பேரரசர் ஆட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட செப்பேடுகளில் உள்ள பிராக்ருத மொழியிலேயே இப் பட்டயங்களும் காணப்படுகின்றன.[17] எனவே, இதுகாறும் கூறியவற்றால், சாதவாகனர் பேரரசில் தென்மாகாணத் தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவாவடதலை நாட்டைமுதற்கண் கைப்பற்றி, உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைந்தனர்; பிறகு சோழவேந்தர் வலியற்ற நிலையைக் கண்டதும், அருவாநாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்துத் தலைநகரமாக இருந்த - கல்விக்கும் பல சமயங்கட்கும் நிலைக்களமாக இருந்த-காஞ்சியைத் தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு விளங்குதல் கூடும் அன்றோ? இவர்களே தங்களைப் பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர் அரச மரபினரே

இவர்கள் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் ‘பல்லவ சத்திரியா’ என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ் வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி-தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர்.[18]

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப் பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாதல் வேண்டும்.பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது.[19]
------------
References :
[1]. Vide his “Early History of India’ (1st ed,) p. 348. (2nd ed.) p.423, (3rd ed.) p.469
[2].. Vide his “Mysore and Coorg form Inscriptions’. p.53;
[3]. Vide his Ancient “History of the Dekkhan’, pp.47-60
[4]. “Indian Antiquary’, Vol. III. pp.75-80
[5]. Mysore Gazetteer Vol - II part II p. 510-517
[6]. Rea’s “Pallava Architecture’ p.2
[7]. இப் பல்லவரைப் பார்த்தே கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் பாண்யரும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழரும் சில வடமொழிப் பட்டயங்களை வெளியிட்டனர்; பெரும்பாலான தமிழ்ப் பட்டயங்களே ஆகும். சங்ககாலத்தமிழ் அரசர் வடமொழியிலோ பிராக்ருத மொழியிலோ பட்டயங்களை விடுத்தமைக்குச் சான்றில்லை.
[8]. சங்க காலத் தமிழரசர் ‘இன்னவர் மருமானே’ மருமகனே எனப் புலவரால் விளிக்கப்பட்டனரே அன்றிப் ‘பாரத்வாசர்’ போன்ற முனிவர் மரபினராக யாண்டும் குறிக்கப் பெற்றிலர்.
[9]. Vide Dr. S.K. Aiyangar’s Int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan.
[10]. D. Sircar’s Successors of the Satavahanas’ pp.97-140
[11]. Ibid. pp. 73,82,83
[12]. Ibid, pp.163-165
[13]. Dr. K. Gopalacharl’s “Early History of the Andhra country,’ pp.151-159
[14]. D. Sircar’s Successors of the Satavahans,’ pp.56, 52
[15]. Ibid.I at pp.3-4
[16]. ‘பப்ப’ என்பது ‘அப்பன்’ என்னும் பொருளது. இச் சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன்தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide D.Sirear’s Successors of 1he Satavahanas, p. 183-184 and Dr. G.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.6-10.
[17]. Vide Dr. S.K. Aiyangars Valuable Introduction to the “Pallavas of the Kanchi,’ by R.Gopalan.
[18. Dr. C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ pp. 12-13.
[19]. Ibid pp. 17-1
------------

4. களப்பிரர் யாவர்?

களப்பிரர்

சென்ற பகுதியில் பல்லவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் களவர் என்பவர் என்பது குறிப்பிடப்பட்டதன்றோ? இப் பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும்; வடமொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவராகப் பாண்டியர்-பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடப்படாமையின், இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி - சின்னமனூர்ப் பட்டயங்களில் கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்பது காணப்படுகிறது. பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே, வேள்விக்குடிப் பட்டயம் குறிப்பிடும் கலியரசனே பெரிய புராணம் கூறும் வடுகக் கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும்; அஃதாவது அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும் என்பது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும், கடுங்கோன் களப்பிரரை விரட்டிப்பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575[1] எனக் கொள்ளினும், களப்பிரர் பாண்டியநாட்டைஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பதை உறுதியாக உரைக்கலாம். எனவே, இக் களப்பிரர் ஏறக்குறைய கி.பி. 250 இல் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர் என்னலாம்.[2]

Fig. 4.1 here :களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)

புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும் களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[3] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[4] ‘அச்சுதக் களப்பாளன்’[5] என்னும் பெயர் கொண்ட வேந்தன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. கி.பி.11ஆம் நூற்றாண்டினதான யாப்பருங்காலக்காரிகையில் ஒரு பாடல் அவன் சிறப்பைக் கூறுகிறது. அஃது,

“அடுதிறல் ஒருவ/நிற் பரவுதும்: ‘எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டொழில் மார்பில்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப்போர்வேல் அச்சுதன்
தொன்றுமுதிர்கடலுலகம் முழுதுடன்
ஒன்றுபு திகிரி உருட்டுவோன்’ எனவே”

என்பது.

இது விளக்கத்தனார் என்னும் பண்டைப் பாவலர் பாடியதாகும். யாப்பருங்கல விருத்தியில் மற்றொரு செய்யுள் காணப்படுகிறது. அது,

“பொருகுடை வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப்பாளர்க்(கு) ஈந்து மனமகிழ்ந்து
அருள்புரி பெரும்புகழ் அச்சுதக் கோவே/
நந்தி மாமலைச் சிலம்பு
நந்தி நிற் பரவுதல் நாவலர்க்கரிதே”

இச் செய்யுட்கள் பழையன என்பது இவற்றின் நடை கொண்டு கூறலாம். மேலும் முதற்பாட்டின் ஈற்றடி “ஒரு தனி யாழி உருட்டுவோன்” எனவே என வரும் சிலப்பதிகார அடியை ஒற்றிவருதல் இதனை நன்கு வலியுறுத்தும். எனவே, தமிழ் நூல்களில் கூறப்படும்.அச்சுதன் புத்ததத்தர்க்கறிய அச்சுதனே என்பது தெளிவாதல் காண்க. அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவராகிய கூற்றுவ நாயனார் களப்பிரரே ஆவர். இவரைப்பற்றி நம்பியாண்டார் நம்பி,

"ஒதம் தழுவிய ஞாலமெல்லா மொரு கோலில்வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"

என்று கூறுதல்காண்க. ‘இவர் பல அரசர்களைவென்றவர் முடிபுனைய விரும்பித் தில்லைவாழ் அந்தணரை வேண்டினர். அவர்கள், இவர் சோழர் அன்மையின் மறுத்துவிட்டனர். அதனால் இவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டி அருளினார் என்பதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது.[6] இவரும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை மற்றொரு நாயனாரான இடங்கழி நாயனார் என்பவரும் இம் மரபினரே. இருவரும் கொடும்பாளுரை ஆண்ட குறுநில மன்னராவர்.[7]

களப்பிரர்-பல்லவர் போர்கள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முனைகையில், அவர்களால் தாக்குண்ட இக் களப்பிரர் அருவா வடதலை நாட்டை விட்டுத் தொண்டை மண்டலத்திற்குள் நுழைந்தனர். இவர்கள் நுழைவால் சோழர் சிற்றரசு தொண்டை மண்டலத்தில் வீழ்ச்சியுற்றது. பல்லவர் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முனைந்த பொழுது, அவரிடம் போரிட்டுத் தோற்ற களப்பிரர் காஞ்சியை விட்டுப் பாலாற்றுக்குத் தெற்கே சென்று விட்டனர். அதனாற்றான் பப்பதேவன் காலத்தில் பாலாறு பல்லவர் நாட்டின் தென் எல்லையாக இருந்திருந்தால் வேண்டும். பிறகு சிவஸ்கந்தவர்மன் இக் களப்பிரரோடு போரிட்டுத் தென் பெண்ணையாறு வரை பல்லவ நாட்டை விரிவாக்கி இருத்தல் வேண்டும்.[8]

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடைக்காலப் பல்லவருள் ஒருவனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் (களப்பிரர்)[9] சேனையை நடுங்க வைத்தான் என்று ஒரு பட்டயம் கூறலால், தொண்டை-சோழநாடுகளில் இருந்த களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் போர் நடந்த செய்தி அறியலாம்.

இக் களப்பிரர் அடிக்கடி பல்லவரோடு போரிட்டு வந்திருக்க வேண்டும் இவர்களைக் காஞ்சியினின்றும் துரத்தித் தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்ற இடைக்காலப் பல்லவரும் இடருற்றவராதல் வேண்டும்.[10]

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த சிம்ம விஷ்ணு கி.பி. 575-615) களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறுகின்றது. சிம்மவிஷ்ணுவின் பெயரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-660) இக் களப்பிரரோடு போரிட்டான். கி.பி.7ஆம் நூற்றாண்டின் கடையிலும் எட்டாம் நூற்றாண்டின் இடையிலும் சாளுக்கியர் இக் களப்பிரரைக் கண்டுள்ளனர். வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக் களப்பிரர், கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளுரிலும் முத்தரையர் என்னும் பெயருடன் சிற்றரசர்கள் ஆகிப் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்தனர்.[11]

சோணாட்டில் களப்பிரர்

தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருத்தல் வேண்டும். அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் இருக்கும் கல்வெட்டுகளில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம்:


---
இந்த மூன்றாம் அரசன், ‘ஸ்ரீமாறன், ஸ்ரீகள்வர் காவலன், ஸ்ரீசத்ரு, கேசரி, ஸ்ரீகளப்ர காவலன்’ எனப் பலவாறு வழங்கப் பட்டான்.[12] இம் மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர்; ‘முத்து அரையர்’ - முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று தம்மை அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றனராகலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும்.[13]

பாண்டி நாட்டில் களப்பிரர்

பாண்டி நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுது தான் கி.பி. 470 இல் சமண சங்கம் மதுரையிற் கூட்டப் பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும் பழமொழியும் அப்பொழுது பாடப் பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தி உரையால், தமிழ் முத்தரையர் கோவை ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இம் முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற (செ. 200, 243, 296) நூல்களால் நன்குணரலாம்.[14]

கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான திருமங்கை யாழ்வார் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று திவ்யசூரி சரிதம் செப்புகிறது. கள்ளர் சரப மரபினர் என்று வடமொழியில் கூறப்படுவர்.[15] இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீந்தார்களாக இருக்கின்றனர். தெலுங்க நாட்டில் முத்துராசாக்கள் என்னும் சமீந்தார் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலுரில் முத்தரையர் ‘அம்பலகாரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர்.[16]

பல்லவராலும் பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலிகுன்றிச் சிற்றராசராக இருந்தனர். தஞ்சையையாண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்: கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் பாண்டியார்க்கு அடங்கியவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சோழப் பேரரசை நிலைநாட்டிய விசயாலய சோழன் தஞ்சையைக் களப்பிர அரசனிடமிருந்தே மீட்டான்.[17]
-------------
References :
[1]. T.V.S Pandaranar’s “Pandyas,’ pp; 103.
[2]. C.V.N. Iyer’s Saivism. In S. India, pp.411-412.
[3]. K.A.N. Sastry’s Cholas, Vol I p. 121.
[4]. K.C.Law’s Life and Works of Buddagosha,’ p.43.
[5]. கம்மர்-கம்மாளர், அந்தணாளர் என்ப்து போலக் களப்பர் என்பது களப்பாளர் என வருதல் இயல்பு.
[6]. கூற்றுவ நாயனார் புரணாம்.
[7]. K.A.N.Sastry’s Cholas, Vol.I. p.150 foot-note.
[8]. R.Gopalan’s “Pallavas of Kanchi’, pp.36-37
[9]. சோழர் இக் காலத்தில் தனித்துப் படையெடுத்தனர் எனல் பொருந்தாது. என்னை? கொண்டை நாடும் சோணாட்டின் வடபகுதியும் களப்பிரர்கையில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் கூற்றால் உய்த்துணரலாம். அங்ஙனம் இருப்ப, களப்பிரரும் சோழரும் சேர்ந்து பல்லவரை எதிர்த்தனர் எனக்கோடலே பொருத்தமாகும்.
[10]. D.S.K. Aiyaaga’s Int, to the “Pallavas to Kanchi’ 22.
[11]. Ibid p.23.
[12]. R.Gopinatha Rao’s article in “Sen Tamil’ Vol.6
[13]. M.S.R.Iyengar’s “Studies in S.I. Jainism,’ pp.53–55,
[14]. Ibid.
[15]. M.R.Aiyangar’s Alwargal Kalanilai,’ pp. 118-119
[16]. “Studies in S.I.Jainism'pp.56,57 - 75
[17]. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’ p.84-85
------------

5. முதற்காலப் பல்லவர் (கி.பி. 250-340)

மூவகைப் பட்டயங்கள்

பல்லவர் பட்டயங்கள் பிராக்ருதம், வடமொழி, கிரந்த தமிழ் என மூவகை மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, மொழிவல்லுநர் இவற்றை நன்கு ஆய்ந்து, முதலில் வெளிப் பட்டவை பிராக்ருதப் பட்டயங்கள்; பின்னர் வெளிப்பட்டவை வடமொழிப் பட்டயங்கள்; இறுதியில் வெளிப்பட்டவையே கிரந்த-தமிழ்ப பட்டயங்கள் என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். அவர்களே, பிராக்ருத மொழியில் தீட்டப்பட்டுள்ள பட்டயங்கள் கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை; வடமொழிப் பட்டயங்கள் கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடத்தக்கவை. என்றும் முடிவு கூறியுள்ளனர். இம் முறைப்படி ஆராயின், பல்லவர் பட்டயங்கள் மூவகைப்படும். அவற்றுள் முதலன பிராக்ருத மொழியின. அவற்றின் காலம் கி.பி. 3,4ஆம் நூற்றாண்டுகள் ஆகும். மற்றவை மேற்சொன்ன இரண்டு காலங்களைச் சார்ந்தவை ஆகும். ஆகவே, நாம் (1) பிராக்ருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை முற்காலப் பல்லவர் (கி.பி. 250-340) என்றும், (2) வடமொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை இடைக்காலப் பல்லவர். (கி.பி. 340-575) என்றும், (3) கிரந்த தமிழ் மொழியில் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் வெளியிட்ட பல்லவரைப் பிற்காலப் பல்லவர் (கி.பி. 575-900) என்றும் இந்நூலுள் அழைப்போம்.

பிராக்ருத பட்டயங்கள்

முற்காலப் பல்லவர் பட்டயங்களில் சிறந்தவை முன்றே ஆகும். அவை: (1) மயிதவோலு-பட்டயங்கள் , (2) ஹிரஹத கல்லிப் பட்டயங்கள், (3) குணபதேயப் பட்டயங்கள் என்பன. இவை மேனாட்டு அறிஞரால் நன்கு ஆராயப்பட்டுத்தக்க விளக்கவுரைகள் பெற்றவையாகும். இப் பட்டயங்கள் தம்மை விடுத்தவர் பெயர்களைக் குறிப்பிட்டு, தாம் எழுந்த காரணத்தையும் குறிப்பவை ஆகும். ஆதலின், இவற்றைக்கொண்டு முற்காலப் பல்லவர் பரம்பரை, போர், நாகரிகம், அரசியல் முதலிய வரலாற்றுக்குரிய செய்திகளை நன்கு அறியக்கூடவில்லை.


fig 5.1 : முதற்காலப் பல்லவர் நாடு (கி.பி. 250-340)
--------
(1) மயிதவோலு-பட்டயம்.

இது பல்லவர் மரபினனும் பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்தவனும் ஆன இளம் பேரரசன் (யுவமகாராசன்) சிவஸ்கந்த வெளியிட்டது. ஆந்திர பதத்தில் (பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘விரிபரம்’ என்னும் சிற்றுரை இரண்டு பிராமணர்க்கு உரிமையாக் கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுரிமை, இளவரசன் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவனது ஆட்சி 10 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இது காஞ்சியிலிருந்து விடப் பட்டதாகும். இது தான்ய கடகத்தில் இருந்த (பல்லவர்க்குரிய தெலுங்கு நாட்டைத் தலைவனாக இருந்து ஆண்ட) தலைவனுக்கு அனுப்பப் பட்டது.

(2) ஹிரஹதகல்லிப் பட்டயம்

‘ஹிரஹதகல்லி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றுர், இப் பட்டயம் பல்லவ - தர்ம - மகாராசாதிராசன் சிவஸ்கந்தவர்மன் விடுத்ததாகும். இஃது இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்டது. பப்பமகாராசன்[1] விடுத்த தானத்தை உறுதிப் படுத்தவும் விரிவு படுத்தவும் இது விடப்பட்டது. தானம் பெற்ற தோட்டம் உள்ள ஊர் ‘சில்லரேக கொடுங்கா’ என்பது. அது சாதவாகனராட்டிரத்தில் உள்ளது. இதில் அரசியல் அலுவலாளர் பெயர்களும் பிறவும் குறிக்கப்பட்டுள்ளன. சிவஸ்கந்தவர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெரு வேள்விகளைச் செய்தவன் என இப் பட்டயம் குறிக்கிறது.

(3) குணபதேயப் பட்டயம்

இது விசய-ஸ்கந்தவர்ம மகாராசன் ஆட்சிக்காலத்தில், இளவரசன் புத்தவர்மன் மனைவியும் புத்தியங்குரன் தாயுமான சாருதேவி என்பவள் விடுத்தது. தாலூராவில் உள்ள பெருமாள் (நாராயணன்) கோவிலுக்கு அவ்விளவரசி நிலத்தைத் தானமாக விட்ட செய்தி இதில் காணப்படுகிறது. விசய ஸ்கந்தவர்மனுக்கும் இளவரசன் புத்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது இதில் குறிக்கப்படவில்லை.

இவற்றால் அறியத்தக்கவை

சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபொழுது தன்னை ‘இளம்பேரரசன்’ (யுவ மகாராசன்) என்று கூறுவதால், அவன் தந்தை பேரரசனாகத்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.

பேரரசன் (மகாராசன்) என்னும் பட்டம் சாதாரண சிற்றரசரும் சாதாரண தணி அரசரும் வைத்துக்கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆகலின், சிவஸ்கந்தவர்மனின் தந்தை ஒரு சாதாரண அரசனாகவே இருந்தான் என்பது வெளிப்படை. இது, சிவஸ்கந்தவர்மன் பட்டம் பெற்றபின், தன்னை ‘மகா ராசாதிராசன்’ என்று கூறிக்கொள்வதாலும் வலியுறும் சிவஸ்கந்தவர்மன் இங்ஙனம் தன்னைத்தான் பட்டம்பெற்ற 8ஆம் ஆண்டிலே கூறிக்கொள்வதாலும், அவன் இளம் பேரரசனாக இருந்தபொழுதே காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்தததாலும், அவன் தந்தை காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்ததற்குச் சான்று இன்மையாலும். சிவஸ்கந்தவர்மன் பேரரசன் செய்யத் தக்க அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம்[2] என்னும் பெரு வேள்விகள் செய்துள்ளமையாலும்-பல்லவப் பேரரசை ஏற்படுத்திய வனும் அதற்குத் தலைநகரமாகக் காஞ்சியைக் கண்டவனும் இச் சிவஸ்கந்தவர்மனே ஆதல் வேண்டு என்று கூறல் தவறாகாது.[3]

வடநாட்டு வென்றி

சாதவாகனர் வீழ்ச்சிக் காலத்தில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) கிருஷ்ணை- குண்டூர்க் கோட்டங்கள் கொண்ட நிலப்பகுதி இக்குவாகர் ஆட்சியில் இருந்தது அப் பகுதிக்குத் தலைநகரம் தான்யகடகம் அல்லது அமராவதி என்னலாம். அவர் மரபில் மூவர் ஆண்டமைக்குப் பட்டயங்கள் உள்ளன. அவர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் மறைந்தனர்; பிறகு பிருகத் பலாயனர் தோன்றினர். அவர்கள் ஆண்ட பகுதிக்குத் தெற்கே சாதவாகனர் மாகாணத் தலைவர்களாக இருந்த பல்லவர், இருதிறத்தாரையும் வென்று ஆந்திர பதத்தைக் கைக்கொண்டனர். இங்ஙனம் செய்த பல்லவ அரசன் சிவஸ்கந்தவர் மகனாகவே இருத்தல் வேண்டும் என்னை? ஆந்திரபதத்தில் உள்ள தன் பிரதிநிதிக்கு ஆணை விடுத்த முதல் அரசன் இவனே ஆதலின் என்க.[4] மேலும் இவன் தன்னை முதலில் இளம்பேரரசன் என்றும், பிறகு மகா இராசாதிராசன் என்றும் கூறிக் கொண்டதாலும், பேரரசன் செய்ய வேண்டிய பெரு வேள்விகள் செய்தமையாலும், இக்குவாகரும் சாதவாகனரும் வெளியிட்ட பட்டயங்களில் உள்ள பிராக்ருத எழுத்துகட்கு இவனது பட்டய எழுத்துகள் சிறிதே பிற்பட்டவை என்பது நன்கு தெரிதலின், இக்குவாகர்க்குப் பின் ஆந்திர பதத்தை ஆண்ட முதற் பல்லவன் - அங்ஙனமே காஞ்சியைக் கைப்பற்றி ஆண்ட முதற் பல்லவன் இவனே ஆவன் எனத் துணிந்து கூறலாம்.

சிவஸ்கந்த வர்மன் காலம்

இவன் விடுத்த பட்டயங்களின் உள்ளுரை பிராக்ருதத்தில் இருப்பினும், பட்டயம் கொடுக்கப்பட்ட செய்தி வடமொழியிலேயே இருத்தலாலும், குஷானரைப் பின்பற்றிக் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர் தம்மை ‘மகா ராசாதிராசர்’ என்று கூறிக் கொண்டவாறே இவனும் தன்னை மகாராசாதி ராசன் என்று கூறிக் கொள்வதாலும், இவனும் இவனுக்குப் பிற்பட்டவரும் கி.பி350இல் சமுத்திர குப்தனை எதிர்த்த விஷ்ணுகோப பல்லவனுக்கு முற்பட்டவர் என்பது அறிஞர் முடியாதலாலும் இன்ன பிற காரணங்களாலும்,-இவன் காலம் கி.மு. 300-325 எனத் துணிதலில் தவறில்லை.[5]

பிறர் கூற்று

(1) மயிதவோலு, ஹிதஹதவல்லி - பட்டயங்கள் காஞ்சியிலிருந்து விடப்பட்டவை. முதல் பட்டயம் இளவரசனான சிவஸ்கந்தவர்மன் விடுத்தது; இரண்டாம் பட்டயம் சிவஸ்கந்தவர்மன் ‘தர்ம மகா ராசாதிராசன்’ ஆன பிறகு விடுத்தது. இந்த மயிதவோலுப் பட்டயமே பல்லவர் பட்டயங்களில் பழைமை வாய்ந்தது; சயவர்மனது (பிருகத்பலாயன அரசன்) கொண்ட முடிப்ப பட்டயங்கள், கெளதமீ புத்திர சதகர்ணி விடுத்த கார்லே-கல்வெட்டு, வசிஷ்டீபுத்திர புலுமாயி விடுத்த நாசிக் கல்வெட்டு ஆகிய இவற்றை ஏறக்குறைய ஒத்துள்ளது. எனவே, சிவஸ்கந்தவர்மன் மேற்சொன்ன அரசர் காலத்திற்கு மிகுந்த பிற்காலத்தில் இருந்திருத்தல் முடியாது. (2) மேலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணு கோபன் ஆண்டதாகச் சமுத்திர குப்தன் கல்வெட்டுக் கூறுகிறது. குப்தனை எதிர்க்கத்தக்க அளவில் வன்மை பெற்ற பல்லவர், அதற்கு முன்னர்ச் சில தலைமுறையேனும் காஞ்சியில் ஆண்டனர் என்று கொள்ளலே ஏற்புடையதாகும். (3) காஞ்சியைப் ‘பல்லவேந்திரபுரி’ என்று கதம்ப-காகுத்தவர்மன் பட்டயம் கூறலாலும், அது மயூரசன்மனது வாக்கு எனக் கொள்ளின், மயூரசன்மன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று சந்திரவல்லிக் கல்வெட்டுக் கூறலால், பல்லவர் காஞ்சியில் ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழக் கி.பி.250 எனக்கோடல் தவறாகாது. (4) கி.பி. 200 அல்லது 250 உடன் முடிவுற்ற சங்ககால நூல்களிலும் பல்லவர் குறிக்கப்பட்டாமையும், ஒரு சான்றாகும். இன்ன பிற காரணங்களால், பல்லவரது ஆட்சித்தொடக்கம் ஏறக்குறைய கி.பி. 250 எனக்கோடலே பொருத்தமுடையது....... சிவஸ்கந்தவர்மனின் தந்தையே (பெயர் தெரியவில்லை) காஞ்சியைப் பிடித்தாண்ட முதல் அரசனாகக் கூறலாம்.[6]

முடிபு

அறிஞர் கருத்துகள் பலவாக இருத்தலை நோக்க, கீழ் வருமாறு முடிபுகொள்ளல் பொருந்துவதாகும். (1) சிவஸ் கந்தவர்மனே தன் தந்தை ஆந்திர பதத்தை ஆண்டுவந்த போது, தொண்டை நாட்டைக் கைப்பற்றி இருக்கலாம். (2) தான் கஞ்சியிற்றானே தங்கித் தந்தை இறக்குமளவும் இளவரசனாகவே இருந்திருக்கலாம். (தந்தை இருப்ப, மகன் தனி மாகாணத்தை ஆளுதல் பல்லவர் பழக்கம் என்பதைப் பட்டயங்களே காட்டுகின்றன.) (3) தந்தை இறந்த பிறகு பல்லவப் பேரரசுக்குக் காஞ்சியைத் தலைநகரமாக்கிப் பலநாடுகளை வென்று, தர்ம மகா ராசாதிராசனாகி இருக்கலாம். இப் பேரரசன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250-275 எனக் கொள்ளலாம்.

இக்காலப் பல்லவர்

இவனுக்குப்பின் விசய ஸ்கந்தவர்மன் பல்லவ நாட்டை ஆண்டான். ஆயின், அவனுக்கும் சிவஸ்கந்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது விளங்கவில்லை. அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனான புத்தவர்மன் மனைவி சாருதேவி என்பவள் விட்ட பட்டயம் காணின், புத்தவர்மன் விசயஸ்கந்தவர்மனின் மகன் எனக் கோடலில் தவறில்லை. எனினும், உறுதியாகக் கூறுதற்கில்லை. புத்தவர்மனுக்கு புத்யங்குரன் என்றொரு மைந்தன் இருந்தான் என்பதும் குண்பதேயப் பட்டயத்தால் தெரிகிறது.

இம் மூன்று பட்டயங்களைக் காண்கையில், இம் முதற்காலப் பல்லவர் பெயர்களைக் கீழே வருமாறு முறைப் படுத்தலாம்.


---------------scheme 5_1---------
----------------
References :
[1]. பப்ப அப்பன் என்பது பொருள். எனவே ‘பப்பமகாராசன்” என்பது சிவஸ்கந்தவர்மன் தந்தையாதல் வேண்டும். ஆனால், அவனது இயற்பெயர் இன்னதென்று விளங்கவில்லை. Vide D. Sircar’s Successors of the Satvahanas’ p. 183.
[2]. அக்திசுடோமம்:- வசந்தகாலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப் படும் வேள்வி.
வரஜபேயம்:- உயர்ந்த அரச நிலையின் பொருட்டுச் செய்யப்படும் வேள்வி.
அஸ்வமேதம்:- பேரரசன் என்பதை அரசர் பலரும் ஒப்புக் கொண்டமைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வி.
[3]. Vide Hera’s “Studies in Pallava History”, p.11
[4]. Dr. K.G.Palacharl’s “Early History of the Andhra country’, pp.157,158.
[5]. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp. 164-166,247–248.
[6]. Dr.c. Minakshi’s Administration and Social Life under the pallavas pp.12 & 10.
[7]. S.I.I. Vol p506 foot-note by H. Krishna Sastry. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான ‘வீரகூர்ச்சவர்மனே இந்தப் பப்பதேவன்’ என்பது ஒர் ஆராய்ச்சியாளர் கருத்து.
Vide “The place of Virakurcha in the pallava Genealogy, “Madras Christian College Magazine’ April, 1928.
------------

6. இடைக்காலப் பல்லவர் (கி.பி. 340-575)

சுற்றுப்புற நாடுகள்

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களைக் கொண்டு அவர் வரலாறு அறிய முற்படு முன், அவர் காலத்தில் இருந்த சுற்றுப்புற நாடுகளைப் பற்றிய தெளிவு இருத்தல் இன்றியமையாதது ஆதலின், முதற்கண் அந்நாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்துகோடல்நலமாகும்.

விஷ்ணுகுண்டர் (கி.பி. 450-700)

கோதாவரிக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர் விஷ்ணுகுண்டர் ஆவர். இவர்கள் வாகாடகருடன் பெண்வழித் தொடர்புடையவராக இருந்தனர். இவர்கள் நிலப்பகுதி பையப் பையச் சாளுக்கியர் கைப்பட்டது.[1]

சாலங்காயனர் (கி.பி. 320-620)

கோதாவரி, கிருஷ்னை யாறுகளுக்கு இடையில் இருந்து ஆண்டவர் சாலங்காயனர் எனப்பட்டனர். இவர்கள் தலை நகரம் வேங்கி என்பது. இவர்கள் நந்தி வழிபாட்டினர் (சாலங்காயன-நந்தி). இம் மரபரசருள் இரண்டாம் மன்னனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திர குப்தனை எதிர்த்த அரசருள் ஒருவன். இந்நாடு கிருஷ்ணைக்குத் தெற்கே பரவியிருந்தது. அந்தப் பகுதி பல்லவர் கைப்பட்டது. மற்றப் பகுதி சாளுக்கியர் கைப்பட்டு அழிவுற்றது.[2]

ஆனந்தர் (கி.பி. 500-600)

இக்குவாகர் ஆட்சியில் இருந்த குண்டூர்-கிஷ்ணைக் கோட்டங்களைச் சேர்ந்த நிலப்பகுதி பல்லவர் கைக்குமாறியது. பின் அப்பகுதி இடைக்காலப் பல்லவர் 5] கி.பி. 350-450 வரை ஆனந்தம் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்னர் அப் பகுதி பல்லவர் ஆட்சிக்கே திரும்பி விட்டது.[3]

gupta_dynasty

---------------fig 6.1 (gutpa dynasty) ------------

இக்காலப் பல்லவர் வடக்கிலும் வடமேற்கிலும் தெற்கிலும் ஓயாத போர்கள் செய்தன்ர் ஆதலின், முற்காலப் பல்லவர் நாடே இவர் காலத்தும் இருந்ததென்னலாம்
---------------
சூட்டு நாகர் (கி.மு. 250-350)

இவர் ஆந்திர சாதவாகனர்க்கு உறவினர்; இக்குவாகர்க்குப் பெண் கொடுத்தவர் கி.பி. 220இல் தனியாட்சி உண்டாக்கி ஆண்டவர். இவர் நாடு பம்பாய் மாகாணத்தின் தென்கோடிக் கோட்டங்களும் மைசூரின் வடபகுதியும் கடப்பை-அனந்தப்பூர்க் கோட்டங்களும் கொண்ட நிலப்பரப்பாகும். இது கிழக்கே திருப்பருப்பதத்தை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய கி.பி. 350 இல் சமுத்திர குப்தன் படையெடுத்துச் சென்றபின், வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவன் இவர்தம் பெண்ணை மணந்து குந்தள நாட்டையும் பெற்றான் என்று பொருள்படும் முறையில் பல்லவர் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் வைசயந்தி எனப்படும் வனவாசி ஆகும்.

கதம்பர் (கி.பி. 350-600)

ஏறத்தாழக் கி.பி. 350 இல் மயூரசன்மன் என்னும் வீரமறையவன் திருப்பருப்பதத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றிப் பின் சித்தூர், வடஆர்க்காட்டுக் கோட்டங்களை ஆண்ட பாண அரசரை அடிமைப்படுத்திப் பல்லவர் நாட்டு எல்லைப் புறத்தில் குழப்பம் உண்டாக்கிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அரசனாக இருந்த பல்லவன் மயூரசன்மனுடன் சந்து செய்து கொண்டு, அவனைத் தன் படைத் தலைவனாகவும் சிற்றரசனாகவும் ஏற்றுக் கொண்டான்; பின் மயூரசன்மன் நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனி அரசன் ஆனான். இவன் தன் நாட்டைப் பல வழிகளிலும் விரிவாக்கினான். இவன் மரபினர் கீழ்க்கண்டவராவர்.


------------------- scheme 6_1 here ---------

இக்கதம்பருள் உட்பிரிவுகள் சில உண்டு. மேற்பட்டியலிற் கண்ட காகுத்த வர்மனுக்கு மகனும் சாந்தி வர்மனுக்கு இளவலுமான கிருஷ்ணவர்மன் என்பவன் வழியினர் ஒரு பிரிவினர் ஆவர். இக் கிருஷ்ணவர்மன் பல்லவரோடு நடத்திய போரில் இறந்துவிட்டான். இவன் மகனான விஷ்ணுவர்மன் தன் பெரியப்பனான சாந்திவர்மன் அரசாட்சியில் தன்னைத் தர்ம மகாராசன் என்று ஒரு கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். எனவே, கிருஷ்ண வர்மன் மரபினர் குந்தள நாட்டின் ஒரு பகுதியைத் தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்தவராவர். காகுத்தவர்மன் மூன்று நாடுகட்கு அரசன் என்று தன்னைக் கூறிக் கொள்வதால் அவன் காலத்திலேயே குந்தள நாடு மூவகைக் கதம்பர் ஆட்சியில் இருந்ததென்பதை அறியலாம்.[5] ஆயினும் பிற்காலத்தில் இம் மரபினருக்குள் போர் மூண்டது. ‘இரவீவர்மன், கிருஷ்ணவர்மன் மரபைச்சேர்ந்த விஷ்ணுவர்மனைக் கொன்று, பல்லவனை முறியடித்தான்; பலாசிகாவைத் தனதாக்கிக் கொண்டான்’ என்று வரும் பட்டயச் செய்தியால் கிருஷ்ண வர்மன் மரபினர் பலாசிகாவைக் (இப்போதைய ஹல்சி) கோ நகரமாகக் கொண்டு குந்தள நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தவர் என்பது விளங்கும். மகாராசன் குமாரவர்மன், அவன் மகன் மாந்தாத்ரி வர்மன், மாது வர்மன், தாமோதர வர்மன் முதலிய கதம்பர் மரபு ஒன்றும் குந்தள நாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. இவருள் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாந்தி வர்மன் மரபினர்க்கும் இடைக்காலப் பல்லவர்க்குமே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. கதம்பர் மரபினருக்குள் போர்களும் கலகங்களும் நடந்தபோதும்,[6] கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்கரை வெல்ல முயன்றபோதும், இவ் விருதிறத்தாரும் பல்லவர் உதவியை நாடினர். அப்பொழுது பல்லவர் தலையிட்டனர்.[7] மேலும், கதம்பப் பேரரசைத் தமது நாட்டிற்கு மேற்கே வளர விடுதல் பல்லவர் நன்மைக்கு ஏற்றதன்று. ஆதலின், பல்லவர் அடிக்கடி கதம்பருடன் இந்த இடைக்காலத்தில் தொடர்ந்து போரிட வேண்டியவர் ஆயினர்.

கதம்பர் சிங்க இலச்சினை, குரங்குக் கொடி, ‘பெர்மத்தி’ என்னும் வாச்சியம் முதலியவற்றை உடையவர். அவர் அனைவரும் தம்மைத் ‘தர்ம மகாராசாதிராசர்’ என்றே கூறிக்கொண்டனர். அவர் குல தெய்வம் வனவாசியில் உள்ள ‘மதுகேசா’ ஆவர். கதம்ப அரசர் பெரும்பாலும் சமணர்க்கே மிகுதியாகத் தானம் அளித்துள்ளனர்.[8]

கங்கர்

காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டவர் கங்கர் என்பவர். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்கள் சேர நாட்டிற்கு வடக்கே இருந்தனர். பல்லவர் பேரரசின் போது அதற்கு அடங்கி இருந்தனர்; கதம்பர் படை யெடுத்த போதெல்லாம் பல்லவர் துணையைப் பெற்று வாழ்ந்தனர். இவர்களில் முதல்வனான மாதவன் காலம் கி.பி. 350 என்னலாம்.[9]

கங்க அரசர் நாக மரபினர்; நாகமரபைச் சேர்ந்த பெண்களை மணந்தனர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றவர்.[10]

தமிழகத்தரசர்

இந்த இடைக்காலத்தில் பல்லவ நாட்டிற்குத் தெற்கே வன்மை மிகுந்து இருந்தவர் களப்பிரர் ஆவர். அம் மரபினரே சோணாட்டின் பெரும் பகுதியையும் பாண்டிய நாட்டையும் ஏறக்குறையக் கி.பி. 250-550 வரை ஆண்டு வந்தனர். இக் காலத்தில் சோழரும் பாண்டியரும் சிற்றரசராக இருந்து காலம் கழித்தனர்; எனினும், பல்லவரை எதிர்த்த பொழுதெல்லாம் களப்பிரரோடு சேர்ந்தே போரிட்டனர். எனவே, இத் தமிழ் வேந்தர்கள் இடைக்காலப் பல்லவர்க்கு ஓயாத துன்பத்தை விளைத்தே வந்தனர். இவரைப் பற்றிய விரிவு முன்னரே தரப்பட்டுள்ள தன்றோ?

அகச்சான்றுகள்

இடைக்காலப் பல்லவரைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவன வடமொழியில் வரையப்பட்ட செப்பேடுகளும் இரண்டொரு கல்வெட்டுகளுமே ஆகும். வடமொழி வளர்ச்சியில் நுண்ணறிவுடையார் இவற்றை ஆராய்ந்து இவற்றின் காலம் ஏறக்குறைய கி.பி. 340-575 எனக் கூறியுள்ளனர். செப்பேடுகள் பல இடங்களிலிருந்து பல்லவ அரசர்களால் விடப்பட்டுள்ளன. அவற்றில் பல முதற்காலப் பல்லவரைப் போலக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. அவையாவும் தெலுங்க நாட்டில் உள்ள ‘தாம்ராப, பலககட, மேன்மாதுர, தசனபுரம், பிகீரா, ஒங்கோடு, தர்சி. இராய கோட்டம், சந்தலூர், உதயேந்திரம் உருவப்பள்ளி,’ என்னும் இடங்களிலிருந்து வெளியிடப்பட்டவை ஆகும். கல்வெட்டுகள் வாயலூர், அமராவதி என்னும் இடங்களிலிருந்து வெளியிடப் பட்டவை ஆகும். இப்பட்டயங்களும் கல்வெட்டுகளும் பிராக்ருதப் பட்டயங்களைப் போலவே அரசன் பட்டமேற்ற ஆண்டையே குறிக்கின்றன. ஆயின் பல்லவ அரசர் பலர் பெயர்களைக் குறிக்கும் இப் பட்டயங்கள் அவர்கள் முறையைக் கூறுவதில்லை. இதனால், அரசர் முறை வைப்பு உள்ளவாறு அறிதல் கூடவில்லை. இன்ன அரசன் இன்ன காலத்தவன் என்றும் உறுதியாக உரைக்க இயலவில்லை.

புறச்சான்றுகள்

(1) கங்கர் கல்வெட்டு ஆயின், இஃதே இடைக்காலத்தில் பல்லவ நாட்டை அடுத்த வேற்று நாட்டரசர் பட்டயங்கள் சிலவற்றால், இவ்விடைக்காலப் பல்லவர் சிலர் ஆண்ட காலங்களைச் சற்றேறக்குறைய ஒருவாறு அறிய முடிகின்றது. மேலைக்கங்க அரசனான இரண்டாம் மாதவன் வெளியிட்ட பெனுகொண்டா-பட்டயங்களில் ‘கங்க அரசனான தன் தந்தை அரிவர்மனையும் தன்னையும் கங்க நாட்டுப் பட்டயத்தில் ஏற்றிய பெருமை முறையே பல்லவ அரசரான சிம்மவர்மன் கந்தவர்மன் என்பவரையே சாரும்’ என்று குறித்துள்ளான். இதனால் மேற் கூறப்பட்ட கங்க அரசர் காலத்தவர் சிம்மவர்மன், கந்தவர்மன், என்னும் பல்லவ அரசர் என்பது எளிதிற் புலனாகின்றது. இக் கங்கர் பட்டயங்களை நன்கு சோதித்த டாக்டர் ப்ளிட் (Fleet) என்பார், ‘பல்லவர் தயவால் பட்டம் பெற்ற கங்க அரசர் காலம் ஏறக்குறையக் கி.பி. 475 என்னலாம்’ என்று முடிவு கூறியுள்ளார்.[11]

(2) லோகவிபாகம், (3) அவந்தி சுந்தரி சுதா. இவற்றைப் பற்றி இரண்டாம் பிரிவிற் கூறப்பட்டுள்ளது, ஆண்டுக் காண்க.

(4) அல்லகாபாத் கல்வெட்டு: வட இந்தியாவில் பெரும் புகழுடன் வாழ்ந்த சமுத்திர குப்தன் என்னும் பேரரசன் ஏறக் குறையக் கி.பி. 350இல் டெக்கானை நோக்கிப் படையெடுத்து வந்தான். அவனைக் கிருஷ்ணை, கோதாவரி என்னும் யாறுகளைச் சார்ந்த நாடுகளில் இருந்த அரசர் பலர் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். அவன் அவர்களை வென்று முடிவில் காஞ்சி அரசனாக இருந்த விஷ்ணுகோபன் என்பவனையும் வென்றதாக அவனது (அல்லகாபாத்தில் உள்ள) கல்வெட்டுக் கூறுகின்றது.

இதுகாறும் கண்ட வெளி அரசர் பட்டயங்களாலும் வடமொழி நூல்களாலும் கீழ்வரும் செய்திகளை ஒருவாறு அறியலாம்:

(1) விஷ்ணு கோபன் காலம் ஏறக்குறையக் கி.பி. 350

(2) சிம்மவர்மனும் கந்தவர்மனும் கங்கரை அரசராக்கிய காலம், கி.பி 436-475

(3) பிற்காலப் பல்லவருள் முதல்வனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. (575-615)

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களை நன்கு ஆராய்ந்த அறிஞர் கீழ்வருமாறு அரசமுறை வகுத்துளர்.


-------------------scheme 6.2 -----------

(1) களடர்த்திரி என்பவனைக் ‘குடும்பத் தலைமணி’ என்றும், ‘இலக்குமி கணவன்’ என்றும் பட்டயங்கள் குறித்தலால், கிருஷ்ண சாஸ்திரியார் கருத்துப்படி இவனுக்குக் ‘குமாரவிஷ்ணு’ என்னும் பெயர் இருந்தது என்று கோடலில் தவறில்லை. மேலும் இவனே சமுத்திரகுப்தனை எதிர்த்த விஷ்ணுகோபனாக இருக்கலாம்; ‘இருத்தல் இயலாது’ என்று மறுக்கக் காரணம் ஒன்றும் இல்லை. முற்காலப் பல்லவருள் கடைசி அரசன் புத்தியங்குரன். இடைக்காலப் பல்லவருள் தலைமணி போன்றவன் களபர்த்திரி அல்லது குமார விஷ்ணு. இவ்விருவருக்கும் இடையில் வேறு அரசர் ஆள இடமில்லை.[12] இந்தக் குமார விஷ்ணுவின் ஆட்சிக்காலமும் சமுத்திர குப்தன் படையெடுப்பின் காலமும் ஒத்திருத்தலின், குமார விஷ்ணுவும் அல்லகாபாத் கல்வெட்டில் குறிக்கப்பட்ட விஷ்ணுகோபனும் ஒருவனே எனத் துணியலாம். எனவே, முதலாம் குமாரவிஷ்ணு (விஷ்ணுகோபன்) சமுத்திரகுப்தன்காலத்தில் காஞ்சி யரசனாக இருந்தான் என்பது தெளிவு. ஆகவே, அவனது காலம் ஏறக்குறையக் கி.பி. 340-350 எனக் கூறலாம்.

(2) லோகவிபாக நூலின் கணக்குப்படி சிம்மவர்மன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436 ஆகின்றது. அவனையும் (அவன் மகனான) கந்தவர்மன் என்னும் மற்றொரு பல்லவனையும் அரிவர்மனும் இரண்டாம் மாதவனும் பட்டமேறஉதவி புரிந்தவர் எனக் கி.பி. 475இல் போந்த இரண்டாம் மாதவனது பட்டயம் கூறலால், அங்ஙனம் அவர்களைப் பட்டத்தில் ஏற்றியவர் நமது பல்லவர் பட்டியலில் உள்ளபடி முதலாம் சிம்மவர்மனும் அவன் மகனான மூன்றாம் கந்தவர்மனுமே ஆவர். எனவே, கங்கர் பட்டயம் கண்ட அரசனும் அரிவர்மனும் சிம்மவர்மன் பட்டம் பெற்ற கி.பி. 435 முதல் பட்டயத் தோற்றம் வரை (கி.பி. 475 வரை) ஆண்டிருக்கலாம். அஃதாவது, சிம்மவர்மன், அவன் மகன் கந்தவர்மன் ஆகிய இருவரும் கி.பி. 436 முதல் 475 வரை ஆட்சிபுரிந்திருக்கலாம் எனக்கோடலில் தவறில்லை.[13]

கங்கர் வரலாற்றை ஒருவாறு ஆராய்ச்சி செய்த ஆசிரியர் ஒருவர் கங்கர் பட்டயங்களைச் சோதித்து, (1) அரிவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 436-460 என்றும், (2) இரண்டாம் மாதவன் காலம் கி.பி. 460-500 என்றும் குறித்துள்ளார்.[14] இதுபொருந்துவதாயின், பல்லவ வேந்தருள் (1) முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-460 எனவும், (2) மூன்றாம் கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 460-475 எனவும் கொள்ளலாம்.

(3) சிம்மவர்மன் பட்டம் பெற்றது கி.பி. 436 எனின், அவன் தந்தையான கந்தவர்மன் 2 ஆட்சி அதே ஆண்டில் முடிவுற்றதாகும். அவனது 33ஆம் ஆட்சி ஆண்டுப் பட்டயம் இருத்தலை நோக்க[15] அவன் ஏறக்குறைய 36 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். அங்ஙனமாயின், அவனது ஆட்சிக்காலம் கி.பி.400-435 என்றாகிறது.

(4) முதலாம் குமார விஷ்ணுவின் காலம் ஏறக்குறையக் கி.பி. 341-350 எனக் கொண்டதாலும், இரண்டாம் கந்தவர்மன் காலம் கி.பி. 400-436 எனக் கொண்டதாலும், இவ்விருவர்க்கும் இடைப்பட்ட முதலாம் கந்தவர்மன், வீரவர்மன் என்பவர் ஆட்சிக்காலம் 50 ஆண்டுகள் ஆகின்றது. எனவே, வரலாற்றாசிரியர் மதிப்பிடும் 25 வருட ஆட்சி ஒவ்வொருவர்க்கும் கணக்காகிறது. அஃதாவது, முதலாம் கந்தவர்மன் காலம் கி.பி. 350-375 வீரவர்மன் காலம் கி.பி. 375-400

(5) “விஷ்ணுகோபன் ஈறாக அரசர் பலர் காலமான பின்னர்ப் பல்லவர் குடும்பத்தில் நந்திவர்மன் பிறந்தான். அவன் சிவனருளால் நாக அரசனை அடக்கினான்,’ என்று வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் கூறலால், விஷ்ணுகோபன் உள்ளிட்ட அரசர் பலருக்குப் பிற்பட்டவன் நந்திவர்மன் 1 என்பது மட்டுமே தெரிகிறது; காலம் உறுதியாகக் கூறக்கூடவில்லை. நமது பட்டியலில் விஷ்ணுகோபன் மகன் மூன்றாம் சிம்மவர்மன் குறிக்கப்பட்டுள்ளான். அவன் மகனே பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு என்பவன். இவன் காலம் கி.பி. 575-615 என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, நந்திவர்மனும் அவனுக்குப் பிற்பட்ட மூன்றாம் சிம்மவர்மனும் ஏறக்குறையக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்டவர் (கி.பி. 525-575) ஆவர். ஏனையோர் அனைவரும் ஏறத்தாழக் கி.பி. 475க்கும் 525க்கும் இடைப்பட்டவர் ஆகலாம்.

பல்லவர் வரலாற்றில் துன்பம் தரத்தக்க பகுதி இஃதொன்றே ஆகும். இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர்-அவரவர் வழிவந்தவர் பலர்-இவருள் இவருக்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்- அக்காலம் இன்னது என வரையறுத்துக் கூற இயலவில்லை. இதனாற்றான், ஆராய்ச்சியாளர் பல குழப்பமான முடிவுகளை வெளியிட்டுத் தம்மைக் குழப்பிக் கொண்டதோடு படிப்பவரையும் குழம்பி விட்டனர். பல்லவர் பட்டியலை வகுத்தவர் பலர். அவற்றிற்குக் காரணங் கூறியவர் பலர். அவற்றுள் ஒன்றேனும் முற்றத் தெளிவு தாராமையின், ஈண்டு இடம் பெற்றிலது. அவர்கள் ஒருமுறை பற்றி அரசர் முறைவைப்பே முயன்று முடிக்கின்றனர்; பின்னர்ச் சில உண்மைகளைத் தக்க காரணம் கூறி வற்புறுத்த முயல்கையில் அம் முறைவைப்புத்தவறாகின்றது. அத்தவற்றை மறைக்கப்பட்டயத்தில் இந்தத் தொடர் முன்னதாக இருக்க வேண்டும், இவன் அவன் பாட்டனாக இருக்க வேண்டும்..... இவன் 40 ஆண்டுகட்கு மேலும் அரசாண்டிருக்கலாம் அன்றோ? என்றெல்லாம் கூறி இடர்ப்படுகின்றனர். இவ்வளவு குழப்பத்திற்கும் இவ்விடைக்காலப் பல்லவர் பரம்பரை இடம் தருகின்றது.

இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர் பரம்பரையினரும் ஒரே பட்டத்தை அடுத்தடுத்துப் பெற முடியுமா? அங்ஙனம் பெற்றனரா? என்பது தெளிவாகவில்லை. ஆயின், ‘விஷ்ணு கோபனுக்குப் பின் அவன் மகன் பட்டம் பெறாமல் நந்திவர்மன் பட்டம் பெற்றான் என்பதால் பரம்பரை மாறி பங்காளிகள் மாறிமாறித் தேவைக் கேற்றபடி அரசு கட்டில் ஏறினர் எனக்கோடலே பொருந்துவதாகும். நந்தி வர்மனுக்குப் பிறகு சிம்ம விஷ்ணுவின் (கி.பி. 575-615) தந்தையான மூன்றாம் சிம்ம வர்மன் பட்டம் பெற்றான் என்பது தெரிகிறது.

(6) இளவரசன் - விஷ்ணுகோப வர்மன் பல்லவர் மாகாணம் ஒன்றைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டிருக்கலாம். அதன் தலைநகரம் பலக்கடவாக இருக்கலாம். அதிலிருந்து தான் உருவப்பள்ளி - பட்டயம் வெளியிடப்பட்டது.[16]

இதுகாறும் கூறி வந்த காலவரையை (நாம் பார்த்த அளவு) அரசர் பெயருடன் இங்குக் குறித்து மேற்சொல்வோம்:


---------------------scheme 6_3 ------------

குழப்பமான காலம்

இத்தகைய குழப்பங்கட்கெல்லாம் என்ன காரணம்? “இந்தக்காலம் பல்லவர் வரலாற்றில் குழப்பமான காலமாகும். பல்லவர் வடக்கிலும் தெற்கிலும் போரிட வேண்டியவர் ஆயினர். உள் நாட்டிலும் குழப்பம் இருந்திருத்தல் வேண்டும். இந்தக் காலத்திலேதான் கதம்பர் ஆட்சி தோன்றியது. கங்கர் ஒருபுறம் தலையெடுக்கலாயினர். தமிழகத்தில் நிலையாக இருந்த முடியுடைச் சோழ பாண்டியரை விரட்டி நாட்டைக் கைப்பற்றிக் பல்லவரையும் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்த களப்பிரர் குழப்பத்தால் இடைக்காலப் பல்லவர் தென்பகுதியில் அல்லலுற்றனர். மேலும், சமுத்திர குப்தன் படையெடுப்பால் பல்லவர் நாடும் அரசும் குழப்பமுற்றன.[17] அந்த இழிநிலையில் கதம்பர் பல்லவரைத்தாக்கிப்போர் விளைக்கலாயினர்.[18]

பலவகைப் போர்கள்

இந்தக் குழப்பமான இடைக்காலத்தில் (கி.பி. 340-575) நடந்த போர்கள் பல போரிட்ட அரசுகள் பல. இவை ஏறத்தாழக் காலமுறைப் படுத்தி விளகமாக இங்கு (முதன் முறையாக)த் தரப்படுகின்றன.

சமுத்திர குப்தன் படையெடுப்புக்கு ஆளானவருள், காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன். அவன் குப்தனிடம் போரிட்டுத் தோற்றான் என்பதில் ஐயமில்லை. அந்த அமயத்திற்றான் பல்லவனுடன் போரிட்டு மயூரசன்மன் குந்தன அரசை ஏற்படுத்தினான்.[19]

வரகாடகர் போர்

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) வெளியிட்ட வேலூர் பாளையப் பட்டயத்தில், கந்த சிஷ்யன் இருபிறப்பாளர் தம் கடிகாவை (கல்லூரியைச்) சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான்’ என்னும் செய்தி காணப்படுகிறது. அதே பட்டயத்தில் மேற்சொன்னதை அடுத்தே, ‘அவனுக்குப்பின் வந்த குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ என்பது குறிக்கப் பட்டுள்ளது.

இந்த இடைக்காலத்தில் பல்லவரோடு மாறுபட்ட சுற்றுப்புற அரசருள் ‘சத்தியசேனன்’ என்ற பெயருடன் எவனும் இருந்ததில்லை. இதைச் சொன்ன வேலூர் பாளையப் பட்டயமே பின்னர்ச் சோழர் படைகளைப் பெயரிட்டுக் குறிக்கிறது அங்ஙனம் சோழரை அறிந்திருந்த பிற்காலப் பல்லவர் (பட்டயம் வெளியிட்டவர்) சத்தியசேனன் இன்னவன் எனக் கூறாததையும், குமாரவிஷ்ணு காஞ்சியை இன்னவர் கையிலிருந்து மீட்டான். என்பதைத் தெளிவாகக் கூறாமையையும் நோக்க, இச் சத்தியசேனன் என்பவன் ‘முற்றும் புதியவன்-வெளிநாட்டான்’ எனக் கோடலில் தவறில்லை. அங்ஙனமாயின், இவன் யாவன்?

வரகாடகர் படையெடுப்பு(?)

சமுத்திரகுப்தன் படையெடுப்பால் வலியிழந்த ஆந்திர நாட்டு அரசரை வென்று, வாகாடர் என்ற அரசு மரபினர் ஆந்திரப் பெருநாட்டின் வடபகுதியைக் கவர்ந்தனர். அவருள் ஒருவனான முதலாம் பிருதிவிசேனன் (கி.பி. 350-390) என்பவன் தெற்கு நோக்கிப் படையெடுத்தான் கதம்ப அரசனை (கங்கவர்மனை)ப் போரில் முறியடித்தான்.[20] இப் படையெடுப்பு ஏறத்தாழக் கி.பி. 350-360 இல் நடந்திருக்கலாம்.[21] இந்தப் பிருதிவிசேனனே கதம்பரை வென்ற பிறகு, அணித்திருந்த பல்லவரையும் தாக்கிக் காஞ்சியைக் கைப்பற்றி இருக்கலாம்; தன் இளவரசன் அல்லது தானைத்தலைவனான ‘சத்தியசேனன்’ என்பவனைக் காஞ்சிக்கு அரசனாக்கி மீண்டிருக்கலாம்; காஞ்சியும் அதற்கு வடபாற்பட்ட நிலப்பகுதியும் சிறிது காலம் சத்தியசேனன் ஆட்சியில் இருந்திருக்கலாம். அக்காலத்தில் நமது பழைய ஆந்திர பதத்திற்கு ஓடிவிட்ட பல்லவர் வழிவந்த கந்தவர்மன் தக்க படையுடன் வந்து, முதலில் இருபிறப்பாளர் கடிகையை (கல்லூரியை)க்கைப்பற்றி இருக்கலாம்.

‘கடிகா’ என்பது காஞ்சி அன்று

‘கடிகா’ என்பது கல்லூரியையும் அஃது ஊரையுமே குறிக்கும். அது, (காஞ்சியில் கல்லூரி இருப்பினும்) காஞ்சியைக் குறிக்காது. காஞ்சி ‘பல்லவனாம்புரீ’ என்று தெளிவாகக் கதம்பரது தாள குண்டாக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ‘மயூரசர்மன் பல்லவனாமபுரீ (காஞ்சி) அடைந்து கடிகாவில் சேர்ந்தனன்’ என்று தெளிவுற அதே கல்வெட்டுக் குறித்துள்ளது. ஆதலின், ‘கடிகா’ என்று வேலூர் பாளையக் கல்வெட்டில் காணப்படுவதும், இரண்டாம் கந்தவர்மனால் கைப்பற்றப் பட்டதும் காஞ்சி அன்று; மேலும், அவனுக்குப் பின்வந்த அவன் மகனான ‘குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ எனவரும் கல்வெட்டுத் தொடரும் இம்முடிபிற்கு அரண் செய்தல் காண்க.

‘கடிகா’ என்பது யாது?

வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ எனத் தனித்து வந்திருத் தலால், இது வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் பாணபுரத்திற்கு ஏழு கல் தொலைவில் உள்ள கடிகசாலம் எனப்படும் சோழசிங்கபுரமே ஆகும். இதனைக் ‘கடிகை’ என்றே திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். வடமொழிச் சொல்லான ‘சீதா’ என்பது தமிழில் ‘சீதை’ என வருதல் போலக் ‘கடிகா’ என்னும் வடசொல் தமிழில் ‘கடிகை’ எனப்பட்டது. வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள திருவல்லம் கல்வெட்டு ஒன்று (இரண்டாம் நந்திவர்மன் காலத்தது) இந்த இடத்தில் (கடிகாசலத்தில்) இருந்த கடிகையையே குறித்தலைக் காணலாம். இங்குச் சிறந்த பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு வைணவர்கென்று ஒரு கல்லூரி (கடிகா) இருந்திருத்தல் இயல்பே. இக் கடிகாவை இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்தான் என்பது தெரிகிறது.[22] இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ‘கடிகா’ என்றது கடிகாசலத்தைக் குறித்ததெனின், இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் காலத்து வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ என்ற சொல் கடிகாசலத்தையே குறித்ததாதல் வேண்டுமென்றோ?

முடிவு

கி.மு. 350 முதல் 400க்குள் உண்டான இச் செயல்கள் (இரண்டாம் கந்தவர்மன் கடிகாவைக் கைப்பற்றியதும் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பறியதும்) கதம்பர் கல்வெட்டு களிற் காணப்படா மையாலும், வேறு எந்தக் கல்வெட்டுகளிலும் நூல்களிலும் காணப் படாமையாலும், இக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் வாகாடரை விரட்டநடந்தனவாகக் கோடலே பொருத்தமாகும்.

வாகாடகர்பால் நாட்டை இழந்த பல்லவன் (வீரகூர்ச்சவர்மன்?) சூட்டு நாகருடன் உறவு கொண்டான். ‘பெண்ணையும் அரச நிலையையும் அடைந்தான் அவனால் வளர்க்கப்பெற்ற இரண்டாம் கந்தவர்மன் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விழைந்தான்; கடிகாசலம் வரை இருந்த தொண்டைநாட்டுப் பகுதியையே கைப்பற்ற முடிந்தது. அவற்றிற்குப்பின் அவன் மக்கள் மூவருள் ஒருவானன குமாரவிஷ்ணு மேலும் முயன்று காஞ்சியைக் கைப்பற்றி வெற்றிகொண்டான். இங்ஙனம் காஞ்சியில் மீட்டும் பல்லவர் அரசு நிலைபெற்ற பின்னரே, இக் குமார விஷ்ணு மகனான புத்தவர்மன் சோழரையும் வென்றான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது.

வேலூர் பாளையப் பட்டயம் சோழர் என்றும் கதம்பர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, சத்தியசேனன் இன்னவன் என்று குறியாது விடுத்தமையும், குமாரவிஷ்ணு இன்னவரிடமிருந்து காஞ்சியை மீட்டான் என்பதைக் குறியாமையும் நோக்கிச் சிந்திப்பார்க்கு, நாம் மேலே விளக்கிக் கூறிய அனைத்தும் பொருத்தமாகக் காணப்படும்.[23]

திருக்கழுக்குன்றம்-கல்வெட்டு

‘கந்தசிஷ்யன் என்ற இரண்டாம் கந்தவர்மன் திருக்கழுக் குன்றத்துச்சிவன் கோவிலுக்கு நிபந்தம் விட்டிருந்தான்; அது மீட்டும் முதல் நரசிம்மவர்மன்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்று இராசராச சோழன் கல்வெட்டுக் குறித்தலால்,[24] திருக்கழுக்குன்றம் முதல் கடிகாசலம் வரை இருந்த நிலப்பகுதி இவன் கையில் இருந்தது என்பதை அறியலாம். இவன் இங்ஙனம் காஞ்சிக்கு அண்மை (ஏறத்தாழ 56 கி.மீ தொலைவு) வரையுள்ள நாட்டைப் பிடித்தமை யாற்றான், குமார விஷ்ணு எளிதிற் காஞ்சியைக் கைப்பற்ற முடிந்தது போலும்!

இதுகாறும் கூறியவை பொருந்துமாயின், பல்லவர் காஞ்சியை மீட்க வாகாடகருடன் இருமுறை போர் செய்தனர் என்பது கோடல் தகும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டினான நரசிம்மவர்மன் மேலைச் சாளுக்கியரை வென்று, அவர்தம் தலைநகரை அழித்துப் பதின்மூன்று ஆண்டுகள் வசப்படுத்தி இருந்தான்[25] என்பதை நோக்க-அவனுக்குப் பின் வந்தவருள் ஒருவனான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், சாளுக்கிய-இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்தான்[26] என்பதை நோக்க-இரண்டாம் கந்தவர்மனுக்கு முன்னும் இரண்டாம் குமார விஷ்ணுவுக்கு முன்னும் (சில ஆண்டுகளேனும்) காஞ்சிமாநகரம் பல்லவர் வசமின்றிப் பகைவர் ஆட்சியில் இருந்திருநத்தல் வேண்டும் என்பது நன்கு தெளிவாதல் கூடும்.

“ஏறக்குறைய கி.பி. 350 இல் வடக்கே சமுத்திரகுப்தன் படையெடுப்பால் அல்லது கதம்பர் துன்பத்தால் காஞ்சியைச் சுற்றியுள்ள தம் நாட்டைவிட்டுப் பல்லவர் ஆந்திர நாட்டிற்கு விரட்டப்பட்டருக்கலாம். குமார விஷ்ணு என்னும் பல்லவ அரசன் (காஞ்சியை மீட்டவன்) வரை ஒன்பதின்மர் ‘பல்லவப் பேரரசர்’ என்றும் அறப் பேரரசர் என்றும் கூறப்பட்டுள்ளார்.” என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞரான கிருஷ்ன சாத்திரியார் கூறுதல் காண்க.[27]

சாதவாகனப் பேரரசின் தென்மேற்குப் பகுதியை ஆண்டிருந்த ‘சூட்டு நாகர் மகளை முதலாம் கந்தர்வர்மன் மகனான வீரவர்மன் மணந்தான் அம்மணவன்மையால் நாட்டைப் பெற்றான்’[28] என்று பல்லவர் பட்டயம் ஒன்று கூறலாலும், அவன் மகனான இரண்டாம் கந்தர்வர் மனது ஓங்கோட்டுப் பட்டயம், ‘வீரவர்மன் பல போர்களில் வெற்றி கண்டான்’ என்று கூறலாலும், அக் காலத்தில் (கி.பி. 375-400) காஞ்சியும் அதனைச் சார்ந்த நாடும் வாகாடகர் மேற்பார்வையில் இருந்ததாலும் (?) சூட்டுநாகர் துணையைக் கொண்டு வாகாடகரை எதிர்த்து ஓரளவு நிலப்பகுதியைக் கைக்கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. இந்த வீரர்கள் சூட்டுநாகர் மகளை மணந்ததால் அவர் தம் நாட்டைப் (அவர்க்கு ஆண் மகவு இன்மையால்) பெற்றான் எனக் கோடலிலும் தவறில்லை. ஏனெனின், ஏறத்தாழக் கி.பி.350இல் கதம்ப அரசை வனவாசியில் தோற்றுவித்த மயூரசன்மன் பல்லவரிடமிருந்தே சூட்டுநாகர் ஆண்ட நாட்டைப் பெற்றான் என்று கதம்பர் பட்டயம் கூறுதலால் என்க. சிவஸ்கந்தர்வர்மன் (கி.பி. 300-325) வெளியிட்ட மயிதவோலு, ஹிரஹதகல்லிப் பட்டயமொழிக்கும் கதம்பர் முதலில் வெளியிட்ட மாலவல்லிப் பட்டய மொழிக்கும் சிறிதளவே வேறுபாடு. கதம்பரது பட்டயம் பிற்காலத்தது என்பது, உணரக்கிடத் தலால், சிவஸ்கந்தர்வர்மனுக்குப் பிறகு அண்மையிலேயே கதம்பர் அரசு தோன்றியிருத்தல் வேண்டும். வீரவர்மனுக்குப் பின்வந்த இரண்டாம் கந்தவர்மன் வாகாடரிடமிருந்து முன்சொன்ன கடிகாசலமும் அதனைச்சுற்றி இருந்த நிலப்பகுதியையும் கைப் பற்றினான் என்பது பொருத்தமாகக் காணப்படுகிறது.[29]

பல்லவர் - கதம்பர் போர்கள்

(1) ஏறக்குறையக் கி.பி. 350 இல் மயூர சர்மன் பல்லவரைத் துன்புறுத்திச் சமாதானத்திற்கு வரச்செய்து, அவரிடம் குந்தளநாட்டை மேற்பார்க்கும் உரிமை பெற்றான். அவனுக்குப்பின் வந்த கங்க வர்மன், பாகீரத வர்மன், காகுத்த வர்மன் ஆகிய இவர்கட்கு அரசர்க்குரிய பட்டயங்கள் இல்லா திருத்தலை நோக்க - இவர்க்குப் பின் வந்த சாந்தி வர்மன், மிருகேச வர்மன் முதலியோர்க்குத் தரும மகாராசர் முதலிய பட்டங்கள் இருத்தலைக் காண, முன் சொல்லப்பட்டவர் பல்லவர்க்கு அடங்கிய சாமந்தராக இருந்து குந்தள நாட்டைப் பாதுகாத்து வந்தனர் எனக் கொள்ளலாம்.[30] அஃதாவது காகுத்தவர்மன் (கி.பி.425-450) கால முதல் கதம்பர் தம் மாட்சி ஏற்படுத்த முயன்று பல்லவரோடு போரிட்டிருத்தல் வேண்டும்; அத்துடன் கதம்பர் தெற்கே இருந்த கங்க நாட்டையும் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும். என்னை? கங்கரை அடிக்கடி வென்றதாகக் கதம்பர் பட்டயங்கள் குறிக்கின்றமையின் என்க. கங்கர் பல்லவர் துணையை நாடினர். கதம்பரை அடக்கிவைக்கக்கங்கர்க்குப் பல்லவர் உதவ வேண்டியவர் ஆயினர்.

(2) அரிவர்மன் கி.பி. 436 முதல் 460 வரை கங்கநாட்டை ஆண்டான். இவன்காலப் பல்லவ அரசன் முதல் சிம்மவர்மன். அவன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436. அக்காலத்தில் கதம்ப அரசனாக (கி.பி. 425-450) இருந்தவன் காகுந்த வர்மன். அவன் குப்தர்க்கும் வாகாடர்க்கும் பெண் கொடுத்த பெருமையுடையவன்.[31] அவனது தாளகுண்டாப் பட்டயமே மயூர சன்மன் பல்லவர் மீது கொண்ட பகைமையையும் கதம்ப அரசு உண்டான வரலாற்றையும் குறிப்பது. எனவே காகுத்த வர்மன் பல்லவர்மீது வெறுப்புற்றவன் என்பது கல்வெட்டால் நன்கறியலாம். அவன் இளவரசனாக இருந்தபோதே பல போர்கள் செய்தவன்.[32] அவன் அரிவர்மன் பட்டம் பெறத் தடை செய்தனனோ, அல்லது அரசனாக இருந்த அவனைப் போரிட்டு வென்றனனோ தெரியவில்லை. இதனிற் சிம்மவர்மன் தலையிட வேண்டியதாயிற்று. அவன்தன்தலையீட்டில் வெற்றியும் பெற்றான்; அரிவர்மன் கங்க அரசன் ஆனான்.

(3) கங்க அரசனான இரண்டாம் மாதவன்.கி.பி. 450 முதல் 500 வரை அரசாண்டான். அப்பொழுது இருந்த பல்லவன் சிம்மவர்மன் மகனான மூன்றாம் கந்தர்வர்மன் அப்பொழுது ஏறத்தாழப் பட்டம் பெற்ற கதம்ப அரசன் மிருகேசவர்மன் என்பவன். இவன் தன் பாட்டனைப்போலவே கங்க அரசன் மீது படையெடுத்தான் போலும் ‘இவன் கங்கரை வென்று பல்லவரை நடுங்க வைத்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது. ‘பல்லவ அரசனான கந்தர்வர்மனால் நான் அரசு கட்டில் ஏறினேன்’ என்று கங்க அரசனான இரண்டாம் மாதவன் குறித்துள்ளான். இவற்றை நோக்க, உண்மை வெளியா கின்றது. அஃதாவது, அரசனாக இருந்த கங்க அரசனை மிருகேச வர்மன் வென்றான். இதனை அறிந்த பல்லவனான கந்தவர்மன் விரைந்து சென்று போரிட்டுக்கதம்பனை வென்று, தன் நண்பனான இரண்டாம் மாதவனை மீட்டும் அரசன் ஆக்கினான்’ என்பது.

இவன் பங்காளியான விஷ்ணுவர்மன் இவனுக்கு மாறாகக் காஞ்சிப் பல்லவனைச் சரண் அடைந்தான். அதனாற் போர் மூண்டது. இரவிவர்மன்தன் பங்காளியுடனும் பல்லவனுடனும் போரிட்டான்.[33]

(4) திருப்பர்வதத்தை ஆண்ட கதம்ப மரபினருள் முதல்வன் முதலாம் கிருஷ்ணவர்மன். அவன் காகுந்த வர்மன் மகனாவன். அவன் காலம் கி.பி. 475-480 ஆகும். அவன் அக்காலப் பல்லவ அரசனிடம் படுதோல்வி அடைந்தான் என்று கல்வெட்டே கூறுகிறது. அக்காலப் பல்லவன் இரண்டாம் சிம்மவர்மனாக இருக்கலாம்.[34]

(5) கி.பி. 500 முதல் 535 வரை கதம்ப அரசனாக இருந்தவன் மிருகேச வர்மனின் மகனான இரவி வர்மன் என்பவன். இவன், ‘காஞ்சி அரசனான சண்ட தண்டனை அழித்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது.[35] இவன் காலத்தில் ஏறத்தாழக் காஞ்சி அரசனாக இருந்தவன் (முதலாம் நந்தி வர்மனுக்கு முற்பட்ட) விஷ்ணு கோபவர்மன் ஆவன்.

முடிவு

இந்த இரவி வர்மனுக்குப் பிறகு கதம்ப அரசர் எவரும் தாம் பல்லவரை வென்றதாகக் குறிக்கவில்லை. இதற்குக் காரணம், பின் வந்த கதம்பர், தமக்கு வடக்கே சாளுக்கிய அரசை உண்டாக்கி அதனை வலுப்படுத்த முயன்ற சாளுக்கியருடன் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர் என்பதேயாகும்.[36]

பல்லவர் - சோழர் போர்

காஞ்சியைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவின் மகனான புத்த வர்மன் சோழருடைய கடல் போன்ற சேனைகட்கு வடவைத் தீப்போன்றவன் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இதனால், நாம் முன்னர்க் கூறியாங்கு, குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றிய பின், தெற்கே இருந்து தமக்கு இடையறாத துன்பத்தை உண்டாக்கி வந்த களப்பிரரை வெல்லவோ, அல்லது எஞ்சிய தொண்டை நாட்டையும் சோணாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலோ புத்தவர்மன் தன் படையுடன் சென்றான். பல்லவரை எதிர்க்கச்சோழரும்களப்பிரருடன் சேர்ந்திருப்பர். போரின் விளைவு தெரிந்திலது. எனினும் இப் போரில் புத்தவர்மன் வெற்றி பெற்றதாகக் கூறற் கிடமில்லை. ஏன்? கி.பி. 575 இல் அரசனாக வந்த சிம்மவிஷ்ணுவே காவிரி வரையுள்ள நாட்டை வென்றவனாதலின் என்க. எனவே, காஞ்சிமீது படையெடுத்து வந்த களப்பிரரையும் சோழரையும் புத்தவர்மன் விரட்டி இருக்கலாம்; மேற்கொண்டு தெற்கு நோக்கிப் போகவில்லை எனக் கோடலே பொருத்தமாகும்.

சாளுக்கியர் தோற்றம்

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து உயர்நிலைக்கு வந்தவர் சாளுக்கியர். அவருள் முதல்வள் விசயாதித்தன். வாதாபியைத் தலைநகராகக் கொண்டசாளுக்கிய அரசை ஏற்படுத்தினான்.

பல்லவர் சாளுக்கியர் போர்கள்

விசயாதித்தனுக்கும் திரிநயனப் பல்லவற்கும் போர்கள் நடந்தன என்று கதை கூறப்படுகிறது. அது மெய்யென்பார் சிலர்; பொய் என்பார் சிலர். சாளுக்கியர் பேரரசை ஏற்படுத்த முனைகையில், பேரரசராக இருந்த பல்லவர்க்குப்பகைமைதோன்றல் இயல்பன்றோ? ஆதலின், இன்று நாம் அறிய முடியாத வகையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்சொன்ன போர்கள் நிகழ்ந்திருக்கலாம். மேலும், இடைக்காலப் பல்லவர் ஆந்திர பதத்திலும் (சாளுக்கிய நாட்டிற்கு அண்மையில்) இருந்து அரசாண்டனர் என்பதை நினைவிற் கொண்டால், இக்கதை உண்மையாக இருக்கும் என்று நம்பலாம். இது நிற்க.

(1) விசயாதித்தன் மகனான ஜயசிம்மன் சாளுக்கிய அரசனான பொழுது அவனுடன் பல்லவரும் இராட்டிர கூடரும் ஓயாது போரிட்டனர். எனினும், ஜயசிம்மன் தன் அரசை நிலைநிறுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்வந்த அவன் மகனான இரணதீரனும் பல்லவருடன் போரிட்டான்.[37]

இவர்கள் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன்பெரும்பாலும் முதலாம் நந்தி வர்மன் (கி.பி. 525-550) ஆவன். இவன் விஷ்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்; சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இந்த ‘நாக அரசன்’ யாவன்? ‘சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர்’ ஆகிய மூவரும் தம்மை ‘மானவ்ய கோத்திரத்தார்’ என்றும், ‘நாக மரபினர்’ என்றும் கூறிக் கொண்டனர்.[38] இவருள் சூட்டு நாகர் நந்திவர்மன் காலத்தில் வரலாற்றிலிருந்தே மறைந்து விட்டனர்; கதம்பரும் சாளுக்கியரும் போர்களில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், இரவி வர்மனுக்குப்பின்வந்த கதம்பர் பல்லவருடன் போர் செய்த குறிப்புக் கல்வெட்டுகளில் இல்லை. அவர்கள் ஓய்வின்றி வடக்கே சாளுக்கியரிடம் போராடின காலம் அது. ஆதலின் நடுங்கச் செய்த நாக அரசன் சாளுக்கியனாகத் தான் இருத்தல் வேண்டும்; அவன் ஜயசிம்மன் அல்லது இரணதீரன் ஆதல் வேண்டும். இங்ஙனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சாளுக்கியர்-பல்லவர் போர்கள் சாளுக்கியர் பேரரசு ஒழிந்த கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து நடந்தன என்பது இங்கு அறியத்தகும்.

(2) இரணதீரன் மகன் முதலாம் புலிகேசி கி.பி. 550 முதல் 566 வரை அரசனாக இருந்தான். இவன் பல சிற்றரசரை வென்று அடிப்படுத்திக் கி.பி.560இல் ‘பரிவேள்வி’ செய்தவன். இவன் மகன் முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி. 566-598). இவனே கதம்பர் அரசைக் குலைத்துக் கதம்ப நாட்டைச் சாளுக்கியப் பெருநாட்டில் சேர்த்துக் கொண்டவன். இவ்விருவர் காலங்களிலும் சாளுக்கியர் - பல்லவர் போர்கள் நடந்தன.[39] இந்தக் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன் மூன்றாம் சிம்மவர்மன் ஆவன். இக் குறிப்புகளுடன், ‘மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான்’ என வரும் வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை ஒப்பிட்டு உணர்க.

போர்களின் பட்டியல்

இதுகாறும் கூறப்பெற்ற பல போர்களையும் கீழ்வருமாறு முறைப்படுத்திக் கூறலாம்.
-----------------
போர் எண்ஏறத்தாழப் போர்
நடந்த காலம் கி. பி.
போரிட்ட பல்லவர்போரிட்ட இருதிறந்தார்
1 340-350 குமார விஷ்ணு 1 பல்லவர் - குப்தர் போர் 1
2 345-360 குமார விஷ்ணு 1 (அ) கந்தவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர்
3 350-375 வீரகூர்ச்சவர்மன் பல்லவர் - வாகாடகர் போர் 1
4 400-436 கந்தவர்மன் 2 பல்லவர் - வாகாடகர் போர் 2
5 436-460 சிம்மவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர் 2
6 436-460 குமார விஷ்ணு 2 பல்லவர் - வாகாடகர் போர் 3
7460-475 கந்தவர்மன் 3 பல்லவர் - கதம்பர் போர் 3
8 460-475 புத்தவர்மன் பல்லவர் - சோழர் போர்
9 475-480 சிம்மவர்மன் 2 பல்லவர் - கதம்பர் போர் 4
10 500-525 விஷ்ணுகோபவர்மன் பல்லவர் - கதம்பர் போர் 5
11 525-550 நந்திவர்மன் 1 பல்லவர் - சாளுக்கியர் போர் 1
12 550-575 சிம்மவர்மன் 3 பல்லவர் - சாளுக்கியர் போர் 2
-------------------
இங்ஙனம், வடமொழிப் பட்டயங்களை வெளியிட்ட இடைக்காலப் பல்லவருட்பலர், ஏறத்தாழத்தமதுகாலம் முழுவதுமே (கி.பி. 340-575) குப்தர், வாகாடகர், கதம்பர், சாளுக்கியர், சோழர் என்பவரோடு ஓய்வின்றிப் போர் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாலும், அடிக்கடி தமது பேரரசின் சில பகுதிகள் பகைவர் கைப்பட்டமையாலும், தமது தலைநகரமே கைமாறியதாலும், தம் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் காஞ்சியிலிருந்து விடுத்திலர் என்பது நன்கு அறியத்தக்கது. “நெல்லூர், குண்டுர்களை ஆண்ட இடைக்காலப் பல்லவர் (1) வீரகூர்ச்சவர்மன் (2) இரண்டாம் குமாரவிஷ்ணு (3) இரண்டாம் கந்தவர்மன் (4) வீரவர்மன் (5) மூன்றாம் கந்தவர்மன் (6) இரண்டாம் சிம்மவர்மன் (7) அவன் மகன் விஷ்ணுகோபவர்மன் ஆவர்” என்று அறிஞர் அறைதலும் நோக்கத்தக்கது.[40]
------------
References :
[1].D. Sircar’s “Successors of the Satavahanas’, pp.97.140.
[2]. Ibid. pp. 73,82,83.
[3]. Ibid, pp.55, 62, Dr.K. Gopalachari’s “Early History of the Andhra Country’ pp. 186-195.
[4]. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp.232, 238-240.
[5]. D. Sircar’s Successors of “Satavahanas’ pp.258-259
[6]. Ibid pp.281, 283.
[7]. R. Gopalan’s “Pallavas of Kanchi,” pp.66,67.
[8]. Mysore Gazetter. Vol II, Part II, P.505.
[9]. M.V.Krishna Rao’s “Gangas of Talakad” pp.13, 14.
[10]. Ibid p. 180.
[12]. Ep. Carnataka Vol. III, No.142, MER. 1914, p.52
[13]. Prof. Durbrueil’s “Ancient History of the Dekkhan’ p.54.
[14].M.V. Krishna Rao’s “Ganges of Talakad,’ pp.11,12,29,32.
[14]. Ibid,pp.29, 31
[15]. Omgodu plates of Skandavarman II.
[16]. D. Sircar’s “Successors of the Satavahanas’ p.205.
[17]. Dr. S.K. Aiyangar’s int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan. pp. 19-21.
[18]. Morae’s “The Kadambakula,’ p.26.
[18].Ibid, pp.16,17
[19]. Prof. Dubruell’s “Ancient History of Dekkhan,’ pp.98-100.
[20]. R.Gopalan’s “Pallavas of Kanchi’, P71.
[21]. D.C. Minakshi’s “Ad, and S. Life under the Pallavas pp. 197-199.
[22]. எனினும் இது முடிந்த முடிபன்று. மேலும் ஆராய்ச்சிக்குரியது.
[23]. K.A.N. Sastry’s “Cholas,’ Vol.II, Part I, p.486.
[24]. Dr. S.K. Aiyangar’s Int, to the “Pallavas of Kanchi’, p.27.
[25]. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.124.
[26]. Ep. indica, Vol. 15, No.11, p.249. C.V.N. Iyer’s Saivism in S. India, pp. 295, 296.
[27]. D. Sircar’s Successors of the Satavahanas, p.223.
[28]. இது மேலும் ஆராய்ச்சிக்கு உரிய பகுதியாகும். ‘சமுத்திர குப்தன் படையெடுப்புக்குப்பின் காஞ்சி நகரம் சோழர் கையிலிருந்தது. அவரிடமிருந்தே குமார விஷ்ணு மீட்டான்’ என எழுதிய ஆராய்ச்சியாளர் பலர். அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பலர். & Vide R. Gopalan’s “Pallavas of Kanchi.’ pp.63, 65.
[29]. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.27: ‘கங்கவர்மன் அஞ்சத்தக்க போர்கள் புரிந்தவன். பாகீரத வர்மன் பேரரசனாக இருந்தான் சந்திரகுப்தன் காளிதாசனைத் தூது அனுப்பி இவனிடம் பெண் கொள்ள முயன்றான் எனின், இவன் சிறப்பை என்னென்பது & Morae’s Kadamba Kula pp.18-23.
[30]. Ibid pp.21-22, 26.
[31]. Ibid. p.23.
[32. Moraes’s “Kadamba kula,’ pp.39-40.
[33]. Ibid.p.33
[34]. Ind Ant vol VI p.24: முதலாம் பரமேசுவர வர்மன் தன்னை ‘உக்கிரதண்டன்” எனக் கூறிக்கொள்ளல் இங்கு நினைவு கூர்தற்குரியது.
[35]. M.V.K. Rao’s “Ganges of Talakad,’ pp.37-38.
[36]. S.II. vol II p.510.
[37]. Bombay gazatteer - pp.180, 277-280, 286.
[38]. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.38.
[39]. D. Sircar’s “Sucessors of the Satavahanas’ p.391.
-------------

7. பிற்காலப் பல்லவர் (கி.பி. 575-900)

இக்காலச் சிறப்பு

(1) இக்காலத்தில் பெரும்பாலான நாயன்மாரும் ஆழ்வாரும் தமிழகத்தில் வாழ்ந்தனர்; சமணரோடு போரிட்டுச் சைவ வைணவ சமயங்களைப் பரப்பினர்: பேரரசர்களையும் சமயம் மாறும்படி செய்தனர். தமிழ்மக்கள் இக்காலத்தில் சிறந்த முறையில் சமயப்பற்றுடையர் ஆயினர். மக்கள் மனப் போக்கை உணர்ந்த பொறுப்பு வாய்ந்த அரசர், மக்கள் உள்ளம் உவப்பப் பல கோவில்களைக் கட்டினர்; தாமும் மெய்யான பக்தியில் ஈடுபட்டனர். இச் சமயப் போராட்டத்தில் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களும் தேவாரப் பாடல்களும் இக்கால அரசர்நிலை, நாட்டுநிலை, சமயங்கள் நிலை, மக்கள் நிலை முதலியவற்றை நன்கு விளக்குகின்றன.
(2) இக் காலத்திலே தான் புகழ்பெற்ற பெருவீரரான பல்லவர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் தெற்கே காவிரியாறு வரையும் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் மேற்கே. சாளுக்கியநாடு வரையும் தங்கள் பேரரசை விரிவாக்கி ஆண்டனர். இக்காலத்தேதான் வரலாற்றுப் புகழ்பெற்ற சாளுக்கியர்-பல்லவர் போர்களும், பாண்டியர்-பல்லவர் போர்களும், கங்கர்-பல்லவர் போர்களும், இராட்டிரகூடர் - பல்லவர் போர்களும் பிறவும்
(3) இக்காலப் பல்லவர்தாம் குகைக்கோவில்களையும் மலைக்கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர் ஆவர். இவர்க்கு முற்பட்ட காலங்களில் தமிழகத்துக் கோவில்கள் மரத்தாலும் மண்ணாலும் செங்கற்காலுமே கட்டப்பட்டவை. அவை நாளடைவில் அழிந்துவிட்டன.
(4) இக்காலத்திற்றான் பல்லவ நாட்டில் வடமொழி சிறப்பாகப் போற்றி வளர்க்கப்பட்டது. வடமொழி வல்ல மறையவர் பல ஊர்களைத்தானமாகப் பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் தோற்றமெடுத்தன. புகழ்பெற்ற கிராதார்ச்சுனீயம் இயற்றிய பாரவி (தாமோதரர்)யும் காவ்யாதர்சம் செய்த தண்டி என்னும் வடமொழிப் புலவரும் பல்லவரால் பாராட்டப்பெற்றனர்.
(5) இக்காலத்தே தமிழ்மொழியும் ஓரளவு வளர்ந்ததென்றே கூறலாம். தேவாரத் திருமுறைகள், நாலாயிரப் பாடல்கள், நந்திக் கலம்பகம், பாரத வெண்பா முதலியன இக்காலத்த்ேதான் எழுந்தவை. இவற்றை அருளிச்செய்த அடியாரும் ஆழ்வாரும் புலவர்களும் பல்லவர் மதிப்பைப் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை.

இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்

(1) இக்காலப் பல்லவர் செப்புப் பட்டயங்களையும் பெருவாரியான கல்வெட்களையும் வெளியிட்டனர். அவை தமிழ் நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவே இன்று காறும் வெளியாகி இருப்பவை: பல படித்து முடியாமலும் அச்சாகி வெளிவராமலும் இருக்கின்றன. அவை வெளிப்படுமாயின், இக்காலப் பல்லவர் வரலாறு பெரிய மாறுதலைப் பெறலாம்: இதுகாறும் உணரமுடியாத பல உண்மைகளை உணரலாம். கல்வெட்டுகள் பலவும் அரசர் அல்லது பெரு மக்கள் கோவில்களுக்கும் மறையவர்க்கும் சமயக் கல்விக்கும் நிலம் விட்டதை அல்லது பிறவகை அறச்செயல்களைக் குறிப்பிடுவாகும். இவற்றில் சிம்மவிஷ்ணு முதலாக வந்த அரசர் பரம்பரை கூறப்பட்டிருக்கும். செப்புப் பட்டயங்களிலும் அரசர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அது வெளிப்பட்டபோது இருந்த அரசன் பெயரையும் அவனது ஆட்சி ஆண்டையும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளும் பட்ட்யங்களும் அரசர் மரபையும் அவர்தம் பிற செயல்களையும் குறிப்பிடுதல் இல்லை. கல்வெட்டுகளில் பழமையானவை முதல் மகேந்திரவர்மன் வெட்டுவித்தவையே ஆகும்; அவை தென்ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டுக் கோட்டங்களில் உள்ள குகைக் கோவில்களில் உள்ளன. மற்றவை மாமல்லபுரத்தில் உள்ள மலைக்கோவில்களிலும் பிறகோவில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும் பிற இடங்களிலும் இருக்கின்றன. எனினும், இப் பலவகைப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தொகுத்து அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்யின், இக்காலப் பல்லவர் பரம்பரை, அவர் தம் வரலாறு, அவர்கால நாட்டுநிலை முதலியவற்றைப் பேரளவு அறியலாம்.

(2) இவற்றோடு, இக்காலப் பல்லவர் வரலாற்றை அறியப் பெருந்துணை புரியும் புறக்கருவிகளில் முதலிடம் பெறத்தக்கவை. இக்காலத்தே பல்லவர் நாட்டைச் சுற்றிலும் இருந்து அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், கதம்பர், கங்கர், பாண்டியர், முத்தரையர், (களப்பிரர்) பாணர் - இவர் தம் பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆகும்.

(3) சைவசமய குரவர் பாடியருளிய தேவாரத் திருமுறைகளும் வைணவப் பெரியார்கள் பாடியருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாக்களும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் தரத்தக்க இலக்கியங்கள் ஆகும்.

(4) கி.பி. 615-630 இல் மகேந்திரர்வமன் வெளியிட்ட மத்தவிலாசப் பிரகசனம், அவந்திசுந்தரீகதா, பாரதவெண்பா, நந்திக் கலம்பகம், பெரிய புராணம் என்பன சிறந்த வரலாற்றுக் குறிப்புகள் கொண்டவையாகும்.

(5) மகாவம்சம்- இஃது இலங்கை வரலாறு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நரசிம்மர்வர்மன் காலத்தில் இலங்கை நோக்கிப் பல்லவர் படைசென்றமை-இலங்கை அரசனை நீக்கிப்பட்டத்திற்கு உரியவனை அரசனாக்கினமை முதலிய செய்திகள் இதனிற் காணலாம்.

இத்துணைச் சான்றுகளையும் துணையாகக் கொண்டு பிற்காலப் பல்லவர் வரலாற்றை ஒருவாறு காண்போம்.

காசக்குடி, கூரம், வேலூர் பாளையப் பட்டயங்களை ஆராயின், இப் பிற்காலப் பல்லவர் பட்டியல் அடுத்த பக்கத்தில் உள்ளவாறு அமையும். இப் பட்டியல், இடைக்காலப் பல்லவர் பட்டிலைப் போல் குழப்பம் திருவதன்று; இன்னவருக்குப்பின் இன்னவர் பட்டம் பெற்றனர் என்பதை ஏறக்குறையத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பட்டியலைப் பார்ப்பின் சிம்மவிஷ்ணு காலுமுதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஒரே பரம்பரை அரசர் ஆண்டு வந்தமை தெளிவாகும். அந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பீமவர்மன் முதல் இரண்ய வர்மன் ஈறான ஐவரும் எந்நிலையில் இருந்தனர் என்பதை அறியக்கூடவில்லை. அவர்கள் மாகாணத் தலைவர்களாக அல்லது சேனைத் தலைவர்களாக இருந்திருக்கலாம். சிம்மவிஷ்ணுவுக்குத் தம்பியான பீமவர்மன் வழியில் வந்த இரண்டாம் நந்திவர்மன் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பேரரசன் ஆனான். பின்னர் அவன் வழியினரே கி.பி. 900 வரை பல்லவ மன்னவராக இருந்து மறைந்தனர்.


---- scheme 7.1----
-------------

8. சிம்ம விஷ்ணு

சிம்மவிஷ்ணு காலம்

இவனே புகழ்பெற்ற பிற்கால அரசருள் முதல்வன் ஆவன். இவன் இடைக்காலப் பல்லவர் பட்டியலில் உள்ள மூன்றாம் சிம்மவர்மன் மகன்; முதல் நந்திவர்மனுடைய (ஒன்று விட்ட) உடன் பிறந்தான் மகன். (காசக்குடி, வேலூர் பாளையம் ஒப்பு நோக்கிக் காணின், இப் பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு நந்திவர்மனுக்குப் பின்பட்டம் பெற்றவள் ஆவன்.) இவனுக்குப் பீமவர்மன் என்றொரு தம்பி இருந்தான். அவன் இவனது ஆட்சியில் வட பகுதியை ஆண்டுவந்தான் போலும் சிம்மவிஷ்ணு காலத்துப் பட்டயம் எதுவும் கிடைத்திலது. முற்கூறிய அவந்தி சுந்தரி கதையினால் இவன் கால்ம் அறிதல் முடிகிறது. ‘சிம்ம விஷ்ணு கங்க அரசானான துர்விநீதன், சாளுக்கிய விஷ்ணு வர்த்தனன் இவர் தம் காலத்தவன்’ என்று அந்நூல் கூறுகிறது. துர்விநீதன் கி.பி. 605இல் பட்டம் பெற்றவன்.[1] விஷ்ணுவர்த்தனன் கி.பி. 614இல் பட்டம் பெற்றவன்.[2] இவர்கள் அரசராக இருந்தபொழுது சிம்மவிஷ்ணுவும் அரசனாக இருந்தான் என்று மேற்சொன்ன நூல் கூறலால் சிம்மவிஷ்ணு குறைந்தது கி.பி. 615 வரையேனும் அரசானக இருந்திருத்தல் வேண்டும்.

சிம்மவிஷ்ணு சிறப்பு

இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளமை காண்க; “சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன்:செல்வத்தில் குபேரனைஒத்தவன். அவன் அரசர் ஏறு.”[3]

போர்ச்செயல்கள்

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில் சிம்மவிஷ்ணுவைப் பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன; “இவனது புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”[4] இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில், “...பிறகு இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”[5] என்பது காணப்படுகின்றது.

சிம்மவிஷ்ணு வேறு அரசருடன் போர் செய்தமைக்கு உரிய சான்றுகள் கிடைத்தில. ஆதலின், இவன் தென்னாட்டு அரசருடன்றான் பெரும்போர் செய்து வென்று, காவிரியாறு வரையுள்ள தமிழ்நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இவனுக்கு முற்பட்ட நந்திவர்மன் முன்னோரும் இவருடைய முன்னோரும் காஞ்சியில் இருந்தமைக்குரிய சான்று இன்மையாலும், அவர்கள் அனைவரும் ஆந்திர நாட்டிலிருந்தே பட்டயங்களை வெளியிட்டிருத்தலாலும், இரண்டாம் குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினன் எனக் கூறலாலும், அவன் ஒருவனே காஞ்சியி லிருந்து பட்டயம் விடுத்ததாகத் தெரிவதாலும் இடைக்காலப் பல்லவர் ஆட்சியில் காஞ்சிபுரம் வாகாடகரிடமிருந்து மீட்கப்பெற்ற பின்னரும் கைமாறியதோ என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இந்தச் சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்டவர் காஞ்சியில் இருந்திலர் என்பதாலும், சிம்ம விஷ்ணு ஒருவனே சோழர் களப்பிரர் முதலிய தென்னாட்டரசரை வென்று காவிரியாறு வரை பல்லவப் பேரரசை நிறுத்தினான் என்பதனாலும், இவனது ஆட்சித் தொடக்கத்தில் சாளுக்கியப்போர் இன்மையாலும், இவன் காலத்தில் காஞ்சி களப்பிரரிடமிருந்து[6] கைப்பற்றப்பட்டது என்று நினைக்கலாம். காஞ்சியைக் கைப்பற்றாமல் இவன் காவிரி வரையுள்ள நாட்டைப் பிடித்துக் காஞ்சியைத் தலை நகராகக்கொண்டு அரசாளுதல் இயலாதன்றோ? இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்பதை இலக்கியச் சான்றும் உறுதிப்படுத்துகின்றது.[7]

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்” (அவந்தி சுந்தரி கதா சாரம்). இக் குறிப்புக் காசக்குடிப் பட்டயச் செய்தியைப் போன்று இருத்தல் காணத்தக்கது. ‘கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை என்பது கவனிக்கற்பாலது. ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடத்தினின்று (காஞ்சிபுரத்தினின்று) இறுதியாகப் பகைவரை நீக்கினான்’ என்பதே இதன் பொருள். சத்தியசேனன் என்னும் அரசரிடமிருந்து இருபிறப்பாளரது கடிகாவை இரண்டாம் கந்தவர்மன் மீட்டான் என்றபோதும், இருபிறப்பாளரது கடிகா (கல்லூரி) இருந்த காஞ்சீபுரத்தை என்றே பொருள் கொள்ளப்பட்டது.[8] எனவே, இங்குக் ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சிமா நகரைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ‘காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான்’ என்று மேற்கூறிய வடமொழி நூல் கூறுகின்றது.[9]

கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’[10] என்பது காணப்படுகிறது. மேலும், சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்ன வாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.[11]

தமிழ் வேந்தருள் மலவர் (மலையர்) என்பவர் மலாடு என்னும் நாட்டினர். மலாடு தென் ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவலூர் முதலிய இடங்களைக் கொண்ட நடுநாடாகும். இந்நடு நாட்டினர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் சிற்றரசராக இருந்தமை தெளிவு. சிம்ம விஷ்ணுவோடு போர் செய்த தமிழ் வேந்தருள் மலாடரும் சேர்ந்தனர் என்பதில் வியப்பில்லை.

‘சிம்ம விஷ்ணு’ என்னும் பெயரைக் கொண்டே இவன் வைணவன் என்பதை நன்குணரலாம். இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் இவனைப் ‘பக்தி ஆராதித்த விஷ்ணு-சிம்ம விஷ்ணு’[12] என்று குறிப்பிடுதலை நோக்க, இவன் பரம பாகவதனாக இருந்தவன் என்பது தெளிவு. இவன் சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்திருக்கலாம். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.[13]

ஆதிவராகர் கோவில்

மகாபலிபுரத்தில் ஆதிவராகர் கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் இரண்டு உருவச்சிலைகள் உள்ளன. இவற்றைக் கர்னல் மக்கன்ஸி, பெர்கூசன், பர்கஸ் முதலிய அறிஞர் கண்டு தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இவை இன்னாரைக் குறிப்பன என்பதை அவர்கள் கண்டறியக் கூடவில்லை. இச் சிலைகள் 1913இல் கண்ட இராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரிகளும் முதலில் இவையாரைக் குறிப்பன என்பதை உணரவில்லை. பின்னர் 1922இல் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இச் சிலைகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கண்டு பிடித்தனர். பின்னரே, இவை சிம்ம விஷ்ணுவையும் அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் குறிப்பன என்பது வெளிப்பட்டது.[14] பின்னர்க் கிருஷ்ண சாஸ்திரிகள் அக் கல்வெட்டுகளை நன்கு பார்வையிட்டுத் தம் கருத்துக்களை வெளியிட்டனர். கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் கொண்டவை. ஆதிவராகர் குகைக் கோவிலுள்ள வடபுறப் பாறையில் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அதன் அடியில் ஓர் ஆண் உருவம் உட்கார்ந்த நிலையிலுள்ளது. அதன் நிலைமீது உயர்ந்த முடி (கீரீடம்)உள்ளது. மார்பிலும் கழுத்திலும் அணிகள் காணப்படுகின்றன. அவ்வுருவத்திற்கு இருபுறங்களிலும் முடியணிந்த பெண்மணிகளின் உருவங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. அவை சிம்ம விஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிரே தென்புறப் பாறைமீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதிராஜன்’ என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், முடியும் அணிகளும் அணிந்த மகேந்திரன்நின்றிருப்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது. இடக்கை முதல் இராணியின் வலக்கையைப் பற்றியபடிஉள்ளது; அவனுடைய இராணிமார் ஒருவர் உருவங்களும் நின்ற கோலத்தில் காணப் படுகின்றன.

அக் குகைக் கோவிலில் சிம்ம விஷ்ணுவின் உருவம் காணப் படலால், அஃது அவனால் கட்டப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிம்மவிஷ்ணு சிறந்த வைணவர்பக்தன் ஆதலாலும், காஞ்சியையும் சோழநாட்டையும் கைப்பற்றிய பெருவீரன் ஆதலாலும் தன்னைப் பற்றிய நினைப்பும் பக்தியின் சிறப்பும் நிலைத்திருக்க இக் குகைக்கோவிலை அமைத்தான் எனக்கூறுவதில் தவறில்லை; மேலும், அவன் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவன்; ஆதலால் தமிழ் நாட்டிற்கே புதிய குகைக் கோவிலை மாதிரியாக அமைத்து மகிழ்ந்தான் என்பது நம்பத் தக்கதே. இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் என்று கொள்ளுதலும் சாலப் பொருத்தமுடையதே. மேலும், மகேந்திரன் அமைத்த குகைக்கோவில் தூண்களைப் போல இக் குகைக்கோவில் தூண்கள் செம்மையுற்றன அல்ல.[15]

வாகாடகர் அசந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றைக் கண்டு அவருடன் கொள்வனைகொடுப்பனை வைத்திருந்த விஷ்ணு குண்டர் என்னும் மரபினர் கிருஷ்ணையாற்றங்கரையில் பல குகைக் கோவில்களை அமைத்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டிருத்தல் கூடியதே. அந்நினைவு கொண்டே அவர் மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருநத்தல் வேண்டும்.[16]

சிம்மவிஷ்ணு வைணவன் ஆதலால் இவன் உருவச்சிலை ஆதிவராகர் கோவிலில் இருத்தல் வியப்பன்று. ஆனால், முதலில் சமணனாகவும் பிறகு வைவனாகவும் மாறிய மகேந்திரவர்மன் சிலை அங்கு இருத்தலே எண்ணத்தக்கதாகும். அவன் இளவரசானக இருந்தபொழுது தன் தந்தையுடன் வைணவக்கோவிலுக்குப்போதல் மரபாக இருந்திருக்கலாம். அவன் பட்டம் பெற்ற பிறகே சமணனாக மாறி இருக்கலாம். எனவே, இக்கோவில் சிம்மவிஷ்ணு காலத்திற்றான் அமைக்கப்பட்டது எனக் கோடல் பொருத்தமானதே.[17]

சிம்மவிஷ்ணு கலைவல்லவன்

சிம்மவிஷ்ணு அவையிற் சிறந்த புலவராக இருந்தவர் வடமொழி வல்லுநரான தாமோதரர் எனப் பெயர் கொண்ட பாரவி என்பவர். இவர் எங்ஙனம்பல்லவன் அவையை அடைந்தார் என்பதை இவர் மரபில் வந்த தண்டி என்னும் வடமொழிப் புலவர் தமது அவந்தி சுந்தரி கதையில் வரைந்துள்ளார். அது கீழ் வருமாறு:

“தென் நாட்டில் பல்லவப் பேரரசனான சிம்மவிஷ்ணு ஆண்டு கொண்டிருந்தான். அவன் புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் புதியவன் ஒருவன் அவன் அவைக் களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்ற்ை வடமொழியிற் பாடினான். அச் செய்யுளில் இருந்த சொல்லழகும் பொருள் அழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி, ‘இதனைச் செய்தவர் யாவர்?’ என்று ஆவலோடு கேட்டான். பாடகன், ஐயனே, வடமேற்கே ஆரியநாடு என வரும் ஒரு நாடு உண்டு. அதில் அனந்தபுரம் என்பது ஒர் ஊர். அஃது ஆரிய நாட்டின் தலைமணி ஆகும். அப்பதியில் கெளசிக மரபிற் பிறந்த பிராமணர் சிலர் இருந்தனர். அவர்கள் அதனை விட்டு அசலபுரத்திற்[18] குடியேறினர். அப் பிராமணருள் ஒருவர் நாராயணசாமி என்பவர். அவர் மைந்தர் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப்பட்டார். அப் புலவர் (கீழைச் சாளுக்கிய) விஷ்ணுவர்த்தனுக்கு நண்பர் ஆனார். ஒருநாள் அவர் அவ்வரசனைத் தொடர்ந்து காட்டிற்குச் சென்றார். அரசன் வேட்டையாடி விலங்கிறைஞ்சி தின்றான். புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். அப்பாவத்தைத் தொலைக்க அப் புலவர் புறப்பட்டுப் பல இடங்கட்கும் சென்றார். இறுதியில் (கங்க அரசனான) துர்விநீதன் அவையைஅடைந்தார். இப்பொழுது அங்கு இருந்தவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும் புலவர் பாடியதே ஆகும்’ என்றான்.”

புலவர் புரவலன்

உடனே சிம்மவிஷ்ணு ஆட்களைப் போக்கிப் பாரவியைத் தன் அவைக்கு வருமாறு பலமுறை தூண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து சேர்ந்தார். அரசன் அவருக்கு நல்ல விடுதி ஒன்றை அளித்துப் பிற வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தான். பாரவி தம் புலமையால் அரசனை மகிழ்வித்து, ஓய்வு நேரங்களில் பாக்கள் இயற்றிக்கொண்டிருந்தார்.[19]

இவன் காலத்து அரசர்

சாளுக்கியநாட்டில் கி.பி.509இல் அரியணையேறிய இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642 வரை ஆண்டான். கங்க நாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டு வந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். நாசிக்கிலும் வேங்கி நாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.

---------- களப்பிரர் இவரைப்பற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் தொண்டைநாட்டில் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர்.
சோழர் - களப்பிரர் ஆட்சிக்குப்பட்டும் படாமலும் சிறிதளவு நிலப் பாகத்தை ஆண்டவர். இவர்நிலைமை கி.பி.880 வரை இங்ஙனமே இருந்தது. இவர் தலைநகரம் உறையூர்.
மழவர் - இவர்கள் மழ (மலை) நாட்டினர்; ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருக்கோவலூர் முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர். மெய்ப்பொருள் நாயனார் மலாடர் (மழவர்) அரசர் ஆவர்.
பாண்டியருள் கி.பி. 250-550 வரை களப்பிரர்க்கு உட்பட்டுக் கிடந்த பாண்டிய நாட்டை மீட்ட கடுங்கோன் அல்லது அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி சிம்ம விஷ்ணுவை எதிர்த்திருக்கலாம்.
------------- References :
[1]. Dr.V. Venkataramanayya’s article on “Durvinita and Vikaramadiytal’ (Triveni).
[2]. Same Scholar’s article on “Mahendravarman and pullikects II, Miscellany of Paper’s published byGVR Pantulu’s 70th Birthday Celebration Committee.
[3]. Mattavilasam (Sanskrit), P3.
[4]. S.I.I. Vol.II p.510.
[5]. Ibid. p.346.
[6]. 1. ‘கொங்குதேச ராசாக்கள் வரலாற்றைக் கானின், துர்விநீதன் காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான் என்பது காணப்படுகிறது” என (Swell’s List of the antiquarian Remains in the Madras Presidency’ p,177) கூறல், காண்க.
2. “சாளுக்கிய இரணராகன், முதல் புலிகேசி இவர்கள் காலத்திற் சாளுக்கிய பல்லவர் போர்கள் நடந்தன. முதற் புலிகேசி எல்லோரையும் தான் அடக்கியதாகக் கூறிக்கொண்ட கி.பி. 560இல் பரிவேள்வி செய்தான்” என அறிஞர் (Mr. V.K. Rao’s “Ganges of Talakad’, p.38) கூறல் காண்க.

எனவே, குமார விஷ்ணுவுக்குப் பிறகு காஞ்சிகளப்பிரர் கைப்பட்டதோ, கங்கர் கைப்பட்டதோ, சாளுக்கியர் கைப்பட்டதோ தெரியவில்லை. கி.பி. 475 முதல் 515 வரை அரசாண்ட கதம்ப அரசனான இரவிவர்மன், தான்காஞ்சி அரசனை (சண்டதண்டனை) அழித்தான் என்று ஹல்சி பட்டயம் கூறலால், காஞ்சி கதம்பர் கைக்கு மாறியதோ என்பது ஐயமாக இருக்கிறது. இது நன்கு ஆராயவேண்டும் செய்தியாகும். பிற சான்றுகள்கிடைத்தாற்றான்.இஃது ஒரு முடிவுக்கு வருதல் கூடும்.
[7]. R. Gopalan’s Pallavas of Kanchi, p. 13.
[8]. Heras’s Studies in Pallava History, p.20.
[9.] திருவொற்றியூரை அடுத்த மணல் என்னும் கிராமம் அக் காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றே பெயர் பெற்றிருந்தது. 211 ணிஞூ 1912.
[10]. Ibid.p.21.
[11]. S.I.I. Vol., p.74.
[12]. Prof. Dubrell’s “Pallava Antiquities’, vol.Ip.40
[13]. Archaeological Report 1922 - 3, p.94.
[14]. Heras’s “Studies in Pallava History p.75.
[15]. Prof Dubreil’s “The Pallavas’, P35.
[16]. Dr. S.K. Aiyangar’s “The Antiquities of Mahabalipuram, p.31
[17]. அசலபுரம் நாசிக் என்பதற்கருகில் உள்ளது. கி.பி. 614இல் விஷ்ணுவர்த்தனன் அப்பகுதியை இளவரசனாக இருந்து ஆண்டான்.
[18]. Dr. N. Venkataramanaayya’s article on “Mahendravarman I and pulikesin II’ M.E R. 1921, p.48.
----------

9. மகேந்திரவர்மன் (கி.பி. 615 - 630)[1]

முன்னுரை

சிம்மவிஷ்ணு மகனான மகேந்திரவர்மன் கிட்டத்தட்டக் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறினான். (1) இவனது அரசியலின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது; பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. இவனே, சமணத்தினின்று சைவத்திற்கு மாறினான். (2) குகைகளைக் கோவில்களாகக்குடைந்தவன் இவனே: பாறைகளைக் கோவில்களாக மாற்றியவனும் இவனே. (3) இவன் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது.அப்போராட்டம் இவனுக்குப்பின் 150 ஆண்டுகள் வரை ஓய்ந்திலது. (4) சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் இவனது ஆட்சியில் வளர்ச்சியுற்றன. இவன் காலத்தவரே அப்பர் சுவாமிகள்.

இரண்டாம் புலிகேசி

இவன் சாளுக்கியப் பேரரசன்: கி.பி. 610 இல் சாளுக்கிய அரியணை ஏறினான். இவன் கதம்பர். கங்கர், ஆளுயர். மயூரர் முதலிய சிற்றரசரை அடக்கிப் பேரரசை நிலைநாட்டச் சில ஆண்டுகள் ஆயின. இவன் தம்பி விஷ்ணுவர்த்தனன் ‘நாசிக்’ (அசலபுரம்)கைத் தலைநகராக் கொண்டு சாளுக்கிய நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தான்; அப்பொழுது ‘இளவரசன்’ என்ற பெயருடனே இருந்தான். அவன் அங்குக் கி.பி.614 முதல் ஆளத்தொடங்கினான் என்னலாம். புலிகேசி வெளியிட்ட ‘ஆய்ஹொளே’ கல்வெட்டுக் கி.பி. 634-635க்குரியது. அதனில், தான் வேங்கியை வென்று, (பிறகு) பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் குறித்துள்ளான். படையெடுப்பு

புலிகேசி படையெடுப்பைப் பற்றி, மேற்சொன்ன அய்ஹொளே கல்வெட்டு, “அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரும் படைக் கடலைக் கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்”[2] என்று கூறுகிறது. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது.[3]

காசக்குடிப் பட்டயம் சாளுக்கியர் பெயரைக் குறிப்பிடாவிடினும், வரலாற்று ஆசிரியர் அனைவரும் ‘பகைவர்’ என்றது சாளுக்கியரை என்றே கொண்டுள்ளனர். எனவே, காசகுடிப் பட்டயத்தில் கூறியுள்ள செய்தி மகேந்திரன்-புலிகேசி போரேயாகும் என்பதில் ஐயமில்லை.

இப்பட்டயங்களில் ஒவ்வொன்றும் தன் அரசன் வென்றதாகவே கூறுகிறது. ‘இஃது எங்ஙனம் பொருந்துவது’ என்பதே ஆராயத்தக்கது: புலிகேசியினது பட்டயத்தில், ‘பல்லவ அரசன் ஒளிந்துகொண்டான்’ என்பது கூறப்பட்டுள்ளதே அன்றி, அவன் தோற்றது அல்லது காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றியது குறிக்கப்படவில்லை. மேலும், புலிகேசியினது ஆட்சியில் பல்லவநாடு அவன் கைப்பட்டதாகவும் தெரியவில்லை. மேற்கூறிய சாளுக்கியன் கல்வெட்டு, “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” என்று கூறுகிறது. இதனால் மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர்புரிய முடியாமல் ஒளிந்து கொண்ட செய்தி அவன் பகைவராகிய தமிழ் வேந்தரை மகிழச் செய்தது என்பது தெரிகிறதே அன்றி, சாளுக்கியன் பல்லவனைத் தோற்கடித்தான் என்பது தெரியவில்லை. காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினானாதல் வேண்டும்.போர்நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. அது வரை பகைவர் படையை வரவிட்டமையே தனக்கொரு வெற்றியாகப் பல்லவன் நினைத்தான் போலும் தன்நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றி வளைத்துக் கொண்டான் போலும்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருத்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான். இதுவே நடந்த செய்தி என்பதை இரண்டு பட்டயங்களையும் கூர்ந்து கவனிப்பவர் நன்குணரலாம். மேலும் மகேந்திரன் மகனான நரசிம்மவர்மனது ஆட்சியில் இப் புலிகேசியே இரண்டாம் முறைபடையெடுத்து வந்தான் என்பது காணப் படுகிறது. மகேந்திரன் காலத்தில் அவன் வெற்றிபெற்றது உண்மையாயின், நரசிம்மவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்தான் என்பதோ அவன்மீது புலிகேசி படையெடுத்தான் என்பதோ பொருத்தமற்றது அல்லவா?[4]

‘புள்ளலூர்’ என்பது பல்லவர் பட்டயத்தில் வருதல்போலச் சாளுக்கியர் கல்வெட்டில் வருதல் இல்லை. ஆனால், கங்க அரசனான துர்விநீதன்[5] கல்வெட்டில், அவ்ன அந்தரி, ஆலத்தூர், போலுளரே (புள்ளலூர்), பேர்நகர (பெருநகரம்) இவற்றில் நடந்த போர்களில் வென்றான் என்பது கூறப்படுகிறது. எனவே, துர்விநீதனும் புலிகேசியுடன் சேர்ந்து (பகைவர் என்று பல்லவர் பட்டயம் கூறுமாறு) மகேந்திரனுடன் போரிட்டனன் என்பது புலனாகிறது. கங்கன் போரிடக் காரணம் என்ன? இதற்கு விடை கங்கர் கல்வெட்டே கூறுகிறது. ‘துர்விநீதன் காடு வெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுகட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா'வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர் செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”[6] என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பிமகன்; கங்க -துர்விநிதனுக்குமகள்வயிற்றுப்பேரன். ஆதலின்.அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும் அப்பொழுது நடந்தபோர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப் பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சமணமும் சைவமும்

மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவன் ஆனவன் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனையே அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டும் கூறுகின்றது. அது, ‘லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம், உலகத்தில் நீண்டநாள் நிலைநிற்பதாக’[7] எனக் கூறுகின்றது. 146. , 147. இவன் வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோவிலையும் அமைந்துள்ளான். இவை அனைத்தும் இவன் சமனானாக இருந்து செய்திருத்தல் இயலாது. இவ்வேலை நடைபெறச் சில ஆண்டுகள் ஆகி இருக்கலாம். எனவே, இவன்சுமார், கி.பி. 620 இல் சமணத்தை விட்டுச் சைவனாகி இருக்கலாம். இவன் சமணனாக இருந்தபொழுது சமணர் சொற்கேட்டு அப்பர்க்குப் பலகொடுமைகள் இழைத்தான். இறுதியில் இவன்சைவன் ஆனதும், குடிகள் சைவராக மாறியதில் வியப்பில்லை அன்றோ? எனவே, தொண்டை நாட்டில், அதுகாறும் உயர்நிலையில் இருந்த சமணம் இழிநிலை உற்றது: சைவ சமயம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. அரசனே திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து. அக் கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி, அதற்குத்தன் பெயரால் குணபரம் ஈச்சரம்[8] என்று பெயரிட்டு வழங்கினான் எனின். மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டுச் சைவநிலையை என்னென்பது மகேந்திரன் ஆட்சிதொண்டை நாட்டோடு நின்றதில்லை அன்றோ? அது புதுக்கோட்டைவரை பரவி இருந்ததால்,பல்லவ நாடு முழுவதும் சைவ சமய வளர்ச்சி. வெளிப்படையாகத் தோன்றியது.

இவன் காலத்தரசர்

பல்லவர்க்குக்கொடிய பகைவரான மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணையாறு வரை ஆண்டு வந்தனர். சாளுக்கியர் படையெடுப்பால் நாட்டை இழந்த கதம்பர் சிற்றரசராக இருந்தனர். இவர்கட்குத் தெற்கே இற்றை மைசூர்ப் பகுதியைக் கங்கர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகரம் தழைக்காடு என்பது. வடக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணையாற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். தெற்கே பாண்டியர் வன்மையுடன் ஆண்டு வந்தனர். பாண்டிய நாடடிற்கும் பல்லவர் நாட்டிற்கும் இடையே சோழர், களப்பிரர் என்போர் சிற்றரசர்களாக இருந்து சில ஊர்களை ஆண்டு வந்தனர். களப்பிரர் ஒருகால் பல்லவரையும் மற்றொருகால் பாண்டியரையும் தழுவிக் காலத்திற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து வந்தனர். சோழருள் ஒருபிரிவினர் பல்லவர் துணையால் வடக்கே சென்று கடப்பை கர்நூல் தோட்டங்களைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மை ரேநாண்டுச் சோழர்கரிகாலன் மரபினர் என்று கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டனர்.[9]

ஆந்திர அரசர் தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். குண்டுர்க் கோட்டத்தையும் அதற்கு வடக்கே உள்ள கடற்கரை வெளியையும் பீமவர்மன் மரபினர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் சிற்றரசர் பலர் மகேந்திரன் நாடடில் இருந்தனர்.

மகேந்திரன் அமைத்த கோவில்கள்

இம் மன்னன் பல்லாவரம், சீயமங்கலம், திருவல்லம், திருக்கழுக் குன்றம், மண்டபப்பட்டு, மாமண்டூர், தளவானுர், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் முதலிய இடங்களில் உள்ள மலைகளை வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்தான். இவற்றுள்.(1) மாமண்டுர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடையப்பட்டடவை பெருமாள்கோயில்கள்ஆகும்; (2) சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப் பள்ளி என்னும் இடங்களில் குடையப்பட்டவை சிவன் கோயில்கள் ஆகும்; (3) மண்டபப் பட்டில் மும்மூர்த்தி கோவிலும், (4) சித்தன்னவாசலில் சமணர் கோயிலும் குடையப்பட்டன.

கோவில் அமைப்பு

மகேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதில் இவை மகேந்திரன் கட்டியவை எனக் கூறிவிடலாம். இக்கோவில்கள்

அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து தஅமைத்தவை. இவை மலை உச்சியினும் இரா, அடியிலும் இரா, இடையிற்றான் இருக்கும். இத்தகைய இடத்தில் ஒரு கோவிலைக் குடையும் பொழுது, ஆங்குத் துண்களையும் சுவர்களையும் மூர்த்தங்களையும் செய்வதற்காக இடம்விட்டு, மிகுந்த இடமே குடையப்பட்டிருக்கும். தூண் கீழும் மேலும் சதுரமானது; நடுவில் மூலை செதுக்கப்பட்டது.தூணின் முழு உயரம் ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் இரண்டிரண்டு முழம் உயரம் இருக்கும். சதுரத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டிருக்கும். தூண்களின் புறங்களில் மகேந்திரன் பட்டப்பெயர்கள் பல செதுக்கப் பட்டிருக்கும். துணின் போதிகை சதுரக் கற்பலகையால் இயன்றது. கோவிற் சுவர்களின் மீது சித்திர வேலை காணப்படும். கோவில் நடுவில் இறையகம் (கர்ப்பக் கிருகம்) இருக்கும். அதன் இரு புறங்களிலும் வாயிற் காவலர் (துவாரபாலகர்) உருவங்கள் அமைந்திருக்கும். அக்காவலர் பாகை உடையவர். அவர்தம் வலக்கை இடக்கை மீது இருக்கும். இடக்கைஒருதடியைப் பிடித்திருக்கும். அக் காவலர் தடிமீது முன்புறம் சிறிது சாய்ந்த படி பார்பவரை அடிக்க முயல்பவரைப்போலக் காணப்படுவர். கோவிற்கவர்கள் மீது புராணக் கதைகளைக் குறிக்கும் அழகிய சிலைகள் செதுக்கப் பட்டிருக்கும். கோவிற் சுவராகிய பாறையிலேயே (பெருமாள் கோவிலாயின்) விஷ்ணு வடிவம் செதுக்கப்பட்டிருக்கும். இக் கோவில்கள் பலவற்றில் மகேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இருக்கும். அவை வடமொழியிலும் தென்மொழியிலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

(1) பல்லாவரம் குகைக்கோயில்

சென்னைக்கடுத்த பல்லாவரம் என்னும் புகைவண்டி நிலையத்துக்கு எதிரே பல குன்றுகள் லாடம் போன்ற அமைப்பில் இருக்கின்றன. அவற்றின் இடையே பல சிற்றுர்கள் இருக்கின்றன. அவற்றுட்பெரியது ‘ஜமீன் பல்லாவரம்’ என்பது. அந்த ஊரில் உள்ள குன்றில் இன்று முஸ்லீம் தொழுகை இடமாக அமைந்துள்ள மண்டபமே மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோவில் ஆகும். இது

மலைச் சரிவில் குடையப்பட்டுள்ளது. ஏறக்குறைய 24 அடி நீளமும் 12 அடி அகலமும் உள்ளது; 5 கற்றுண்களை உடையது; முன் மண்டபத்திற்குள் 5 சிறிய உள் அறைகள் உள்ளன. அவ்வறைகளில் சிலைகள் வைக்க மேடைகள் இருக்கின்றன. அங்கு ஐந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது நடு அறையுள் முஸ்லிம் ‘பீலி’ வைக்கப் பட்டுள்ளது. இதற்கு அடுத்த இரு பக்க அறைகள் வெறுமையாக இருக்கின்றன. கடைசிப் பக்க அறைகள் இரண்டும் கதவு அமைந்து பூட்டப்பட்டுள்ளன. குகைக்கோயில் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. மேல் விட்டம் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆயின், இன்று அவை படிக்க இயலாத நிலையில் சுண்ணாம்பு படிந்துள்ளன. கற்றுண்கள் மேலே குறிக்கப்பட்ட அளவுள்ளன. இக் குகைக் கோயிலில் உள்ள ஐந்து உள் அறைகளை மகேந்திரன் காலத்துச் சிலைகள் அங்கு இல்லாத பிற்காலத்திற் கண்ட பல்லவபுர மக்கள், உண்மை அறியாது இக் கோவிற்குப் ‘பஞ்ச பாண்டவர் கோவில்’ என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகின்றது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வடமொழயிலும் தெலுங்கிலும் உள்ளன.

(2) பல்லவபுரம்

இக் குகைக் கோவிலுக்கு எதிரே சுற்றிலும் காணப்படும் மலைகளுக்கு இடையில் பழைய பல்லவபுரம் இருந்திருக்க வேண்டும். தெருக்களின் பழையபெயர்களும், சிதைந்த பல கோவில்களின் காட்சியும், பல தெருக்கள் ஆங்காங்கே சிதைந்து இருந்தாலும், தோண்டும் இடங்களில் எல்லாம் உறை கிணறுகளும் மட்டாண்டச் சிதைவுகளும் பழங்காலத் தாழிகளும் இன்ன பிறவும் கிடைத்ததும், மலைகட்கு இடையே அமைந்த இப் பெருவெளி மகேந்திரன் காலத்தில் இயற்கை அரண் கொண்டமுதல்தர நகரமாக இருந்திருத்தல் வேண்டும் - பல்லவனால் அமைந்தமையின் பல்லவபுரம் எனப் பெயர் பெற்றதாதல் வேண்டும் என்னும் செய்திகளைநன்கு உணர்த்தும்.'பல்லவபுரம் என்னும் பெயர் இன்று

‘பல்லாவரம்’ எனவும் லால்குடி தாலுகவில் உள்ள பல்லவபுரம் ‘பல்லவரம்’ எனவும் வழங்குகின்றன.

(3) வல்லம்

வல்லம் என்பது செங்கற்பட்டிற்குக் கிழக்கே திருக்கழுக் குன்றத்திற்குப் போகும் சாலையில் இரண்டு கல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு சிறிய குன்று இருக்கிறது. அக் குன்றில் மூன்று குகைகள் இருக்கின்றன. நடுக்குகை பெரியது. அதன் வாயில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுத் தமிழில் உள்ளது. இது.

“பகாப்பிடுகு லளிதாங்குரன்
சத்துரு மல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரசன் அடியான்
வயந்தப்பிரிஅரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவ குலம்”

என்பது.

அஃதாவது, ‘மகேந்திரனதுசிற்றரசனான வசந்தப்பிரியன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில்’ என்பது பொருள். அதனால், இக் கோவில் ‘வசந்தேசுவரம்’ எனப் பட்டது. இது சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்பக்கத்தில் பிள்ளையார் சிலையும் இருக்கின்றன. உள்ளறையில் லிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கம் வட்ட வடிவினது. உள்ளறையின் இருபக்கங்களிலும் வாயிற் காவலர் நிற்கின்றனர். அவர்கள் நேரே பார்க்கின்றனர். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன. அவர் தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவர் கைகள் தடிமீது பொருந்தி இருக்கின்றன.

(4) மாமண்டூர்

இது கச்சிக்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஒரே சிறிய குன்றில் நான்கு கோவில்கள் உள்ளன.

அவற்றில் மாமண்டூர்ச்சிற்றுரை நோக்கியுள்ள இரண்டு குகைகளில் ஒன்று மகேந்திரன் கல்வெட்டைப் பெற்றுள்ளது. அஃது இவன் புகழைப் பலவாக விரித்துக் கூறுகின்றது. அக்கோவில் தூண்களும், அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மகேந்திரவாடியில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. உள்ளறையில் சிலை இருந்திருத்தல் வேண்டும். இங்கும் ஓர் ஏரி மகேந்திரனால் வெட்டப்பட்டது.

(5) மகேந்திரவாடி

இவ்வூர் அரக்கோணத்திற்கு அணிந்தாயுள்ள சோழ சிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்றுகல் தொலைவில் உள்ளது. ஊருக்குக் கிழக்கே உள்ள வெளியில் ஒரு குன்று இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு சிறிய குகைக்கோவில் இருக்கின்றது. இக் கோவில் வல்லத்துக் கோவிலைப் போன்றே காணப் படுகின்றது. தூண் நடுவில் பட்டயங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களால் அழகு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டில் அரசன் குணபரன் எனப்பட்டுள்ளான். கல்வெட்டுப் பகுதி ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பின் கீழ்க் காண்க. இது பெருமாள் கோவில்: ‘மகேந்திர விஷ்ணு கிரஹம்’ என்னும் பெயருடையது. இங்கிருந்த ஏரி மகேந்திரன் வெட்டியதாகும்.

(6) தளவானூர்

இது தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ளது; ‘பேரணி’ என்னும் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே, ‘பஞ்ச பாண்டவர் மலை’ இருக்கின்றது. அதன் தென் பக்கத்தில் மகேந்திரன் குடைவித்த கோவில் இருக்கிறது. அது “சத்துரு மல்லேஸ்வராலயம்’ என்னும் பெயர் கொண்டது. அக்கோவிலின் உள்ளறை குகைவாயிலை நோக்காது இடப்புறமாக இருக்கின்றது. அஃதாவது குகை தெற்கு முகமாக இருக்கிறது; உள்ளறை கிழக்கு நோக்கி

இருக்கிறது. இடப்புறமுள்ள வாயில் காவலர் வணக்கம் தெரிவிப்பவர் போல ஒரு கையைத் தலைக்குச் சரியாகத் தூக்கி நிற்கின்றனர். வலப்புறக் காவலர் தடிமீது கைவைத்து நிற்கின்றனர். உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது.

துரண்கள் மகேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. தூண்கள்மீது ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அது ‘திருவாசி’ எனப்படும். அஃது இருபக்கங்களிலும் உள்ள மகர மீன்களின் வாய்களிலிருந்து கிளம்பி நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம் மேடைமீது சிறிய இசைவாணர் (கந்தவர்வர்) இருக்கின்றனர்; மகரமீன்கள் கழுத்துமீதும் இசைவாணர் இருக்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. அவற்றால் அஃது ‘இரட்டைத் திருவாசி’ எனப்படும். இங்குள்ள கல்வெட்டில் ஒரு பகுதி தமிழ்ப் பாட்டு; மற்றது வடமொழிப் பாட்டு. கோவில் உள்ள இடம் அக் காலத்தில் ‘வெண்பட்டு’ எனப்பட்டது போலும்!

(7) சீயமங்கலம்

இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் வந்தவாசிக் கூற்றத்தில் தேசூருக்கு ஒரு கல்தெற்கே இருக்கின்றது. இது சிம்ம மங்கலம், அஃதாவது சிம்மவிஷ்ணு ‘சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயர் பெற்றிருந்திருக்க வேண்டும். அது மருவிச் ‘சீயமங்கலம்’ ஆயிற்றென்னலாம். இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் இருக்கிறது. இங்குள்ள தூணில், “அவனிபாஜனப் பல்லவேஸ்வரம் என்னும் இக் கோவில், லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது,” என்னும் கல்வெட்டுக் காணப்படுகிறது. உள்ளறைலிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் இருப்பனபோன்றே அமைந்துள்ளன. இக் குகையின் இரு பக்கங்களிலும் சில சிலைகள் காணப்படுகின்றன. அவை இருக்கும் மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

(8) மண்டபப்பட்டு

இது புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. கல்வெட்டு குகைவாயிலில் பொறிக்கப் பட்டுள்ளது. இதுவே, ‘கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான் என்பதை உணர்த்தும் கல்வெட்டாகும். எனவே, இக் கோவிலே மகேந்திரன் அமைத்த முதல் கோவிலாக இருக்கலாம்.

இக் கோவிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. அவை பிரமன், திருமால், சிவன் என்னும் மூவர்க்கும் உரியன. காவலர் தடிகளில் பாம்புகள் சுற்றிக் கொண்டிருப்பதாகச் செய்துள்ளது கவனித்தற்குரியது.

(9) திருச்சி மலைக்கோவில்

திருச்சிராப்பள்ளிக் குன்றின் நடுவில் குடைந்து அமைத்த சிவன் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டதாகும். இதன் மேல்புறச் சுவரில் ஏழடிச் சதுரமுள்ள இடத்தில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நடுவணது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிற்கும் நிலையும் காணத் தக்கவை. கங்கை அணிந்த சிவபெருமானே எதிரில் நிற்பது போன்ற காட்சியை அச் சிலை அளித்து நிற்றல் வியப்பினும் வியப்பே! அச் சிலை, சிவபிரானது சடையிலிருந்து விழும் கங்கையை வலக்கையில் தாங்கியும் பூணுலாகப் போட்டுள்ள பாம்பின் தலையைப் பிறிதொரு வலக் கையால் பிடித்தும், கண்மணிமாலையை இடக்கை ஒன்றில் பிடித்தும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் நிற்கின்ற காட்சி கண்டுகளிக்கத் தக்கதாகும். இச்சிலையின் வலக்காலின்கீழ் முயலகனைக்குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று இருக்கிறது. சிவனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குதல் போலவும், மேலே யாழோர் (கந்தர்வர்) இருவரும் சிறிய மனிதன் ஒருவனும் மிதத்தல் போலவும் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்றுளி வேலைப்பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சி அறிஞர் இல்லை. “இக் கோவிலை ‘சத்யசந்தன், சத்ருமல்லன், குணபரன்’ என்னும் விருதுகள் பூண்ட அரசன் அமைத்தான்.” என்று இங்குள்ள கல்வெட்டுக் குறிக்கிறது.

(10) நாமக்கல் மலைக்கோவில்

இங்குள்ள அரங்கநாதன் மலைக்கோவில் மகேந்திரன் அமைத்தாகும். இங்குள்ள பள்ளிகொண்டபெருமான் உருவம் சிறந்த செதுக்கு வேலை வாய்ந்தது. இதுபோன்ற வேலைப் பாடு உலகில் எங்குமே இல்லை என்னலாம். கோவிலும் அற்புத அமைப்புப் பெற்றது. முன் மண்டபத்துக்கு வெளியிடம் மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல மலையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகையும் வேலைத்திறத்தையும் நேரிற் காண்பவரே உணர்வர் எழுத்தால் உணர்தலோ - உணர்த்தலோ இயலாது! இயலாது!! கோவிற் சுவர்களில் திருமால் அவதாரக் கதைகள் அழகொழுகும் சிலைகள் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன.[10]

இதுகாறும் கூறிவந்த செய்திகளால் கீழ் வருவனவற்றைச் சுருக்கமாக உணரலாம்:

1. உள்ளறையில் லிங்கம் வைத்த கோவில்கள் பல. அந்த லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டை வடிவின அல்ல.

2. வாயிற்காவலர் நேர்ப்பார்வை உடையவர். அவர் கையை உயர்த்தி வணக்கம் தெரிவிப்பவராக அல்லது தடிமீது கைவைத்தவராக இருப்பர்.

3. தூண்கள் எல்லா இடங்களிலும் சதுரத் தூண்களாகவே இருக்கின்றன. கீழும் மேலும் நான்கு முகங்களையும் இடையில் எட்டு முகங்களையும் உடையன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களைக் கொண்டிருக்கும்.

4. மாடங்களில் மேல் உள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி'யே ஆகும்.

5. பெரும்பாலும் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படும்; அரசன் பட்டப் பெயர்களும் பிற செய்திகளும் பொறிக்கப் பட்டிருக்கும்.

மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும்

மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் பழைமையான அமைப்பு உடையவை ஆதிவராகர் கோவில் ஆகும். அதனைச் சிம்மவிஷ்ணு அமைத்தான் என்று பலர் கூறுவர். அதனை அமைத்தவன் மகேந்திரவர்மனே என்பர் சிலர் அதற்கேற்ற காரணமுங் கூறுவர்.[11] மகாபலிபுரத்தில் உள்ள கோவில்கள் நரசிம்மன் அமைத்தவையே என்பர் பலர். ஆயினும், அவற்றை நன்கு சோதித்துப் பார்ப்பின், தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை நன்குணரலாம். “தருமராசர் மண்டபம் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் மண்டபப் பட்டில் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த கோவிலைப் போன்ற வேலைமுறை கொண்டதாகக் காண்கிறது. முன்னதில், பின்சுவரில் வெட்டப்பட்டுள்ள (பிரமன், விஷ்ணு, சிவன் இவர்க்காக) மூன்று உள்ளிடங்கள் இருத்தல் போலவே, தருமராசர் மண்டபத்திலும் இருத்தல் கவனித்தற்குரியது. கொடிக்கால் மண்டபம் மகேந்திரவாடியில் உள்ள பெருமாள் கோவிலின் அளவு, வேலைப்பாடு முதலியவற்றைக் கொண்டதாகும். வாயிற்காவலர் நிலையிற்றான் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மகேந்திரவாடியில் உள்ள வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; நின்ற நிலையினர்; முன்புறம் நோக்கியவர். கொடிக்கால் மண்டபத்தில் உள்ள வாயிற் காவலர் பெண்கள்; என்னை? அக் கோவில் துர்க்கையின் கோவிலாதலால் என்க. எனினும், அப் பெண்களின் பிற அமைப்புகள் (ஆண்) வாயிற்காவலர் அமைப்புகளையே ஒத்துள்ளன. ஒருவர் கையில் தடியும், மற்றவர் கையில் வில்லும் இருக்கின்றன. ஆனால் இருவரும் முன்புறம் நோக்கியே இருத்தல் கவனித்தற்குரியது. பிற்காலப் பல்லவர் அமைத்த வாயிற்காவலர் உருவங்கள் பக்கங்களில் பார்வையைச் செலுத்தியபடி இருத்தலைக் காணலாம். கொடிக்கால் மண்டபக் கூரையைத் தாங்கியுள்ள கற்றுண்கள் இரண்டும் மகேந்திரவர்மன் காலத்து வேலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இறை உறை உட்கோவிலின் தரை, மண்டபத்தரையை விட இரண்டடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடையது. முதற் படிக்கட்டு மகேந்திரவாடியில் உள்ள கோவிற் படிக்கட்டைப்போல அரைமதி அளவினதாக இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களின் எல்லாக் குறிப்புக்களையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவை இரண்டும் ஒரே அரசன் காலத்தில் குறிப்பிட்ட கல் தச்சரைக் கொண்டே அமைக்கப் பட்டவை என்பது தெளிவாகும்.[12]

“மகாபலிபுரத்தில் மகேந்திரன் காலத்துக் கோவில்களே இல்லை. எல்லாம் அவன் மகனான நரசிம்மவர்மன் என்னும் மகாமல்லன் அமைத்தவையே என்று ஆராய்ச்சியாளர் பலர் நன்கு ஆராயாது கூறிவிட்டனர். பல்லாவரத்திலிருந்து புதுக்கோட்டை வரை பல இடங்களில குகைக் கோவில்களை அமைத்த மகேந்திரவர்மன், காஞ்சிக்கு அண்மையில் உள்ள மகாபலிபுரத்தைக் கவனியாது இருந்திருத்தல் முடியுமா என்பதை அவர்கள் எண்ணிப் பார்த்திலர். இதுகாறும் கூறிய ஒப்புமைச் செய்திகளால், தருமராசர் மண்டபமும் கொடிக்கால் மண்டபமும் மகேந்திரன் காலத்தன என்பதை நன்குணரலாம் அன்றோ?[13]

இக் கோவில்கட்கு மூலம்

கிருஷ்ணையாற்றங் கரையில் விதுகொண்டாவைத் தலை நகரமாகக் கொண்டு கி.பி. 450-620 வரை ஆண்டவிஷ்ணு குண்டர் என்னும் மரபினர் பெசவாடா, மொகல்ராசபுரம், உண்டவல்லி, சித்தநகரம் முதலிய இடங்களில் குகைக்கோவில்களை அமைத்தனர். அவர்கள் நாடு கி.பி. 610க்குப் பிறகு சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டதால், அவர் தம் கோவில்கள் சிலவே ஆயின. அக் கோவில்களை மகேந்திரவர்மன் பார்த்து மகிழ்ந்தவன் ஆதலின், அவற்றைப் போலவே தன் நாட்டிலும் பல குகைக் கோவில்களை அமைத்தான்.[14] திருச்சிராப்பள்ளி, வல்லம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்கள் உண்டவல்லியில் உள்ள குகைக் கோவில்களைப் போலவே அமைக்கப்பட்டவையாகும்.[15] கிருஷ்ணையாற்றங் கரையில் உள்ள குகைக்கோவில்களைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதல் குகைக் கோவில்- சுண்ணாம்பு, செங்கல் முதலியன இல்லாமல் அமைத்ததமிழ் நாட்டு முதற் குகைக் கோவில் - மண்டபப் பட்டில் உள்ள கோவிலே ஆகும். இவனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் கற்கோவில்கள் இல்லை என்பது இவனது மண்டபப்பட்டுக் கல்வெட்டால் நன்கறியலாம். சாருதேவி காலத்துப் பெருமாள் கோவிலும், இரண்டாம் கந்தவர்மன் காலத்துத் திருக்கழுக்குன்றக் கோவிலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. ஆதலால், அவை அழிந்துபோயின. என்றும் அழியாமல் இருக்கத்தக்க நிலையில் கோவில்களைக் கற்களைக் கொண்டு- பாறைகளைக் கொண்டு-மலைகளைக் குடைந்து அமைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும். தமிழ்நாட்டு ஒவிய சிற்பக் கலைகட்குக் கற்கள் வாயிலாகப் புத்துயிர் தந்து நிலைக்கச் செய்தவன் இப்பெருந்தகையே ஆவன்.[16]

மகேந்திரன் கல்வெட்டுகள்

இப்பேரரசன் கல்வெட்டுகளுள் பெரும்பாலன இவன் அமைத்த கோவில்களில் பொறிக்கப் பட்டுள்ளன. அவற்றைக் கொண்டே இவன் வரலாறு, சமயம், திருப்பணி முதலியவைபற்றி அறிய இடம் உண்டாகிறது. ஆதலின் அவற்றுட் சில காட்டாக ஈண்டுத்தருதும்:

(1) திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டுகள்:

(1) யாற்றை விரும்பும் இறைவன்-தோட்டங்களையும் விரும்பத்தக்க குணங்களையும் உடைய காவிரி யாற்றைக் கண்டு, அவள்மீது காதல் கொள்வான் என்று மலையரையன் மகள் ஐயமுற்றுத் தான் பிறந்தகத்தை விட்டு, இம் மலைமீது நின்று கொண்டு. ‘இவயாறு பல்லவனது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

(2) குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன் ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு (இக் கோவிலில் அவன் வைத்துப் பூசித்த) லிங்கத்தால் உலகெலாம் பரவட்டும்.

(2) சீயமங்கலக் கல்வெட்டு: அவனிபாஜன பல்லவேசுரம் என்னும் இக் கோவிலை லளிதாங்குர மன்னன் தன் உள்ளத்தைப் பேழையாகவும் நன்மையை அதனுள் வைக்கும் அணியாகவும் கொண்டு அமைத்தான்.

(3) மகேந்திரவாடிக் கல்வெட்டு: நல்லவர் அனைவரும் மிகப் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதும் ஆகிய அழகிய ‘மகேந்திர விஷ்ணுக்ருகம்’ என்னும் முராரியின் பெருங்கற்கோவிலை மகேந்திரனது பேரூரில் மகேந்திர தடாகத்தின் கரையில் பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்.[17]

மகேந்திரன் பட்டப் பெயர்கள்

இப் பெருந்தகைக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. அவற்றுள் சில வருமாறு: குணபரன், அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்திய சந்தன், விசித்திர சித்தன்,[18] நரேந்திரன், சேத்தகாரி,[19] போத்தரையன், சத்துரு மல்லன், மகாப்பிடுகு[20] நயபரன், விக்ரமன், கலகப் (போர்) பிரியன், மத்தவிலாசன், அநித்தியராகன்[21] சங்கீரண சாதி, நரவாகனன். உதாரசித்தன், பிரகிருதிப் பிரியன், அலுப்தகாமன்.[22] நிரபேக்ஷன் (ஆசையற்றவன்) முதலியன. பல தெலுங்குப் பட்டங்கள் இருத்தலையும் குண்டுர்க் கோட்டத்தில் ‘சேஜர்லா’ என்னும் இடத்தில் இவன் கல்வெட்டுக் காணப்படலையும் நோக்க, இவன் கிருஷ்ணையாறுவரை ஆண்ட பேரரசன் என்பது நன்கு விளங்குகிறது.

மகேந்திரன் வளர்த்த கலைகள்

மகேந்திரவர்மன் நாகரிகக் கலைகளான இசை, நடனம், சிற்பம், ஒவியம், நாடகம் இவற்றை நலமுற வளர்த்தவன், புதுக்கோட்டைச் சீமையில் உள்ள இவன்கல்வெட்டுகளே இவற்றை விளக்கவல்லன. சித்தன்னவாசல் குகைக் கோவில் இவன் காலத்தது. அதில் உள்ள காரைச் சுவர்க்கோலங்கள் (Farcoes) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு ஓவியக் கலையை உலகிற்கு உணர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளன. அவற்றைக்கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை; ஒவியத்திறவோர் (நிபுணர்) இல்லை. அங்கு ஓவியக் கலையில் நடனக்கலையை உணர்த்தலே பின்னும் சிறந்ததாகும். யாழோர் (கந்தருவ) நடனமாதர் இருவர் நடிப்பைக் குறிக்கும் ஓவியங்களே கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். அக் கோவில் சமணர் கோவிலாதலின் தீர்த்தங்கரர் உருவச் சிலைகள் காண்கின்றன. அவற்றால் அக் காலச் சிற்பக்கலை உணர்வை நன்குணரலாம். இங்ஙனம் சித்தன்னவாசல் குகைக்கோவில் ஓவியம், சிற்பம், நடனம் என்னும் மூன்று சிறந்த கலைகளைத் தெளிவாக உணர்த்தும் கலைக்கூடமாக விளங்குகிறது. இதன் விளக்கம் “இசையும் நடனமும்,” “ஒவியமும் சிற்பமும்” என்னும் பகுதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

நடனத்தில் விருப்புடையவர் இசையில் விருப்புடையராகவே இருப்பர் என்பது உறுதி. ஆதலின், மகேந்திரவர்மன் இசைநுட்பம் உணர்ந்தவனாதல் வேண்டும். இதற்குத் தக்க சான்று புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த குடுமியா மலையில் உள்ள கல்வெட்டே ஆகும். ‘இந்தக் கல்வெட்டு இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியார் என்பவர் மாணவனான அரசன் கட்டளைப்படி வெட்டப்பட்டது.’ என்பதே அக் கல்வெட்டின், சாரம், மாமண்டூரில் உள்ள ஒரு கல்வெட்டில் உள்ள புகழ்ச்சி மொழிகளையும் அதில் சுரம் (ஸ்வரம்) வர்ணம் இவற்றை வகுத்த வான்மீகியாரைப் பற்றிக் காணப்படும் குறிப்பையும், மத்தவிலாசப் பிரகசனம் பற்றிய குறிப்பையும், குடுமியாமலைக் கல்வெட்டிற்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள குகைக் கோவில் கல்வெட்டிற்கும் உள்ள ஒருமைப்பாட்டையும் கண்டு வியந்த ஆராய்ச்சியாளர், ‘குடுமியாமலைக் கல்வெட்டு மகேந்திரன் கட்டளையாற்றான் வெட்டப்பட்டது. அவன் இசையில் வல்லவனாக இருத்தல் வேண்டும்’ என்று அழுத்தமாகக்[23] கருதுகின்றனர்.

மகேந்திரன்-நாலாசிரியன்

மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்பட்ட மத்தவிலாசப் பிரகசனம்[24] என்னும் நூல் சில ஆண்டுகட்கு முன்னரே திருவிதாங்கோட்டில்[25] வெளிடப்பட்டது. இந்நூல் வடமொழியில் வரையப்பட்டது. மகேந்திரவர்மன் வடமொழிப் புலவன் என்பதை இந்நூல் மெய்ப்பிக்கிறது. இது, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. காபாலிக சமயத்தவன் ஒருவன் ஒழுக்கம் கெட்ட காபாலினி[26] ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையில் இருந்த காபாலத்தை (பிச்சைப் பாத்திரம்) ஒரு நாய் கவர்ந்து செல்லல், அதனை அறியாத காபாலிகள் அவ்வழியே சென்ற பெளத்த துறவியை மறித்துப் பூசல் இடல், இப் பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபத சமயத்தான் ஒருவனைக் காபாலிகள் அழைத்தல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து காபாலத்தைப் பெறுதல் ஆகிய செய்திகளை விளங்கக் கூறும் சிறுநூலே மத்தவிலாசப் பிரகசனம் என்பது. இந்நூலில் மகேந்திரன் சிறப்பும்-சத்ரு மல்லன், அவநிபாஜனன், குணபரன், மத்த விலாசன் என்னும் விருதுப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் அறியப்படுவன

மகேந்திரவர்மன் காலத்தில் பெளத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்த நிலையை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது. (1) பிராமணனுக்குப் பூணுல் எத்துணைச் சிறந்ததோ அத்துணைச் சிறந்தது காபாலிகனுக்குக் காபாலாம். அவன் அதனை இழந்தால் குறித்த காலத்திற்குள் அதனை அடைந்து தீரவேண்டும் என்பது விதி. அவன் தன் உடம்பெங்கும் சாம்பல் பூசிப் பார்வைக்கு அருவருப்பாக இருப்பான், மண்டை ஒட்டில் மதுவை அருந்துவான். அவன் மாட்டுக் கொம்பொன்றையும் ஏந்தித் திரிவான்; வழிபாட்டின் போது அதனை ஊதுவான். அதனில் நீர் அருந்துவான். காபாலிக ஆடவர் காபாலிகப் பெண்டிருடன் கள்ளங் கவடில்லாமல் பழகி வந்தனர். (2) பெளத்த துறவிகள் ஊன் உண்டுவந்தார்கள்; பல பெளத்தப் பள்ளிகளை (விகாரங்களை) நடத்திக் கொண்டு இன்பமாகக் காலங்கழித்து வந்தனர்; தங்கள் சமயக் கட்டளைகளை மீறி வந்தனர்; தங்கள் குறைகளை மறைக்கவே உடலை மூடித் திரிந்தனர். அவர்கள் தலைவரான புத்தர், வேதங்கள், மகாபாரதம் இவற்றிலிருந்தே தம் சமயக் கொள்கைகளைத் திருடினார் என்பது காபாலிகள் பெளத்தர் மீது கூறும் குறைபாடு ஆகும். இச் செய்தியிலிருந்து மகேந்திரன் காலத்தில் காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன என்பது தெளிவாகிறது. இவனுக்குப் பிறப்பட்ட நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிக்கு வந்த இயூன்-சங்[27] காஞ்சியில் பல பள்ளிகள் இருந்தமைபற்றி எழுதியுள்ள குறிப்பு இத்துடன் ஒன்றுபடுதல் கவனிக்கத்தக்கது.

நால் எழுதப்பெற்ற காலம்

இந்நூலுட் சமணரைப்பற்றியும் ஓரளவு இழித்துக் கூறலால் இது, மகேந்திரன் சைவனாக மாறிய பிறகே செய்யப் பட்டதாக இருக்கலாம். திருச்சிராப்பள்ளியில் லிங்க வழிபாட்டை உயர்த்திக் கூறிய இவன்-சமணத்தை விட்டுச் சைவனாக இவன்-சைவனான பிற்காலத்தில் இதனை எழுதினான் என்பது இதனை ஒருமுறை வாசிப்பின் நன்கு விளங்கும். இவன் சமணத்தை விட்டபொழுதே பல்லவ நாட்டில் சமணம் வீழ்ச்சியுற்றது: சைவம் ஓங்கலாயிற்று. சமண பெளத்தர் பழக்க வழக்கங்கள் இழிந்த நிலைக்கு வரலாயின. அவற்றைக் கண்ட தமிழ்மக்கள் அச் சமயத் துறவிகளை வெறுக்கலாயினர். இவ்வுண்மையை அப்பர், சம்பந்தர் ஆழ்வார்கள் இவர்தம் அருட்பாடல்களில் நன்கு காணலாம். சங்ககாலத்திற் சிறப்புற்று நல்ல உரிமையோடு இருந்த சமண பெளத்த சமயங்கள், பிற்காலத்தில் அவற்றைச் சேர்ந்தவருடைய தீய பழக்க வழக்கங்களால் இழிநிலையை அடையலாயின என்பதே இதன் கருத்தாகும்.

சிறந்த குணங்கள்

மகேந்திரவர்மனைப் பற்றிய கல்வெட்டுகளிலிருந்து, ‘இவன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன், இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன் சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன். போரிற் சிறந்தவன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் செய்த மத்த விலாசத்திலிருந்து, ‘இவன் தந்தை பால் மிக்க மதிப்புடையவன்; தன் நாட்டுப் பல சமயங்களை ஆராய்ந்து அறிந்தவன். கலாவிநோதன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் எச்சமயத்தில் இருப்பினும், அதனைப் பழுதற உணர்ந்தவன் என்பதற்குச் சித்தன்னவாசல் (சமணத்தைப் பற்றிய) சித்திரங்களும் திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் (சைவத்தைப் பற்றிய) கல்வெட்டும் தக்க சான்றாகும்.
-------------
References :
[1]. Vide Dr. N. Venkataramamayya’s article on “Mahendravarmanan Pulikesin II’.
[2]. Epigraphia Indica, VI, p. 11 143.
[3]. S.I.I. II, p.356.
[4]. Heras’s “Studies in Pallava History’, pp.32-33
[5]. Epigraphia Carnataca, Vol.VIII, No.35.
[6]. Mysore Archaeological Report, 1923, p.83.
[7]. S.I.I. Vol. I, p.29.
[8]. குணபரன் - மகேந்திரவர்மன் - திருநாவுக்கரசர் புராணம், செ.146.
[9]. K.A.N. Sastry’s Cholas, Vol.I p. 122.
[10]. P.T. Srinivasa Iyengar’s “Pallavas’ PII,pp.9,10.
[11]. Heras’s “Studies in Pallava History’, pp.71-75.
[12]. Longhurst, “Archaeological Survey of India, Memoir No.33, pp.10-13.
[13]. Heras’s “Studies in Pallava History’,pp.77,78.
[14]. Durbruell’s “The pallavas’, p.35.
[15]. R. Gopalan’s “Pallavas of Kanchi’ p.161.
[16]. Heras’s “Studies in Pallava History’, p:81,82.
[17]. S.I.I. vol.I, pp.29,30,40.
[18]. சிற்ப ஓவியக் கலைஞன்.
[19]. கோவில்கள் அமைத்தவன்.
[20]. பகைவர் மேல் இடிபோலப் பாய்பவன்.
[21]. நடன இசைக் கலைகளின் அறிஞன்.
[22]. 'கலப்புப் பிறவியுடையவன்-தந்தை பல்லவன், தாய்தமிழ்ப் பெண் ஆக இருக்கலாம்’ என்பவர் திரு. பி.டி. சீனிவாசா ஐயங்கார் Vide his"pallavas’ part II, p.13. இது தவறு. ‘சங்கீரணம்’ என்னும் தாளவகைகளைப் புதியனவாகக் கண்டுபிடித்தவன் என்பதே இதன் பொருள்.
[23]. Prof. J. “Durbrueil's, “Pallavas.’ p.23, இசையைப் பற்றிப் பிற்பகுதியிற் காண்க
[24]. இதன்தமிழ் மொழிபெயர்ப்பைச் ‘செந்தமிழ்ச்செல்வி'யிற் காண்க.
[25]. திருவிதாங்கோடு என்பதே பழைய பெயர்.
[26]. சாதவாகனர் காலத்திலும், காபாலினியர் தெலுங்க நாட்டில் இருந்தனர் & Dr. K. Gopalachari’s “Early History of the Andhra Country,’ p.123.
[27]. Beal’s Records, Vol.II p.229
--------------
continued in part 2
Thif file was created/last revised on 19 July 202
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)