pm logo

மா. இராசமாணிக்கனாரின்
பல்லவர் வரலாறு
பாகம் 2 (அத்தியாயம் 10 - 17)


pallavar varalARu, part 2 (chapters 10-17)
by M. rAjamAnikkanAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பல்லவர் வரலாறு
பாகம் 2 (அத்தியாயம் 10 - 17)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்

Source:
பல்லவர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
522, டி.டி.கே. சாலை, சென்னை-18.
----------------

10. நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668)[1]

மகேந்திரவர்மனைப் போன்ற பெருவீரனாகவே அவன் மகனான நரசிம்மவர்மன் விளங்கினான். இவனது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றதாகும். இவன் காலத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை: (1) வாதாபியைக் கைப்பற்றினமை, (2) இலங்கைப் படையெடுப்பு (3) கோவில்களும் கோட்டைகளும் அமைத்தமை. (4) சீனச்செலவினன் காஞ்சிக்கு வந்தமை , (5) தமிழ் நாட்டுச் சைவநிலை முதலியன.

பல்லவர்-சாளுக்கியர் போர்

(1) பட்டயக் கூற்று:- மகேந்திரவர்மனிடம் படுதோல்வியுற்ற இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். முன் போலவே புலிகேசி காஞ்சியை அண்மினான். காஞ்சிக்கு அருகில் உள்ள மணிமங்கலம் முதலிய இடங்களில் கடும்போர் நடந்தது. இப் போரைப் பற்றியும் இதன் பின்விளைவுகளைப் பற்றியும் பல்லவர் பட்டயங்களையே விரிவாகக் கூறுகின்றன. சாளுக்கியர் பட்டயங்களில் இவை ஒருவாறு குறிப்பிடப் பட்டுள்ளனவே அன்றித் தெளிவாக இல்லை.

(2) கூரம் பட்டயங்கள் கூறுவது-கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல இப் பல்லவர் மரபில் வந்தவனும் - வணங்காமுடி மன்னர்தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும் - தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்ற வனும்-நரசிங்கப் பெருமாளே தோன்றினாற்போல வந்தவனும்-சேர. சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவனும்-பல நூறு போர்கள் புரிந்தவனும்-பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களிற் புலிகேசி தோற்று ஓடியபொழுது ‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்.......”[2] என்பது.

(3) உதயசந்திரமங்கலப்பட்டயங்கள் கூறுவது:'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[3] என்பது.

(4) வேலூர் பாளையப் பட்டயங்கள் கூறுவது: “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்”[4] என்பது.

பல போர்கள்

முதல் இரண்டு பட்டயங்களிலும் போர் நடந்த இடங்கள் முறைப்படி குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கப்பால் வேறு இடங்களிலும் போர் நடந்துள்ளது. எனினும், முதல் மூன்றே குறிப்பிடத்தக்கவை. இம்மூன்று இடங்களில் மணிமங்கலம் ஒன்றே இன்னும் அப் பெயருடன் இருக்கிறது.அது காஞ்சிக்கு இருபது கல் தொலைவில் உள்ளது. பிற இடங்கள் இன்னவை எனக்குறிக்கக்கூட வில்லை. வைப்புமுறையை நோக்கின், காஞ்சியிலிருந்து செல்லும் ஒருவன் பரியலம். மணிமங்கலம் சூரமாரம் என்னும் ஊர்களை முறையே கடக்க வேண்டியவன் என்பது புலனாகிறது. புலிகேசி முதல் படையெடுப்பிலும்காஞ்சிவரை எதிர்ப்பின்றி வந்துவிட்டான் என்பதையும் இம் முறையும் எதிர்ப்பின்றிக் காஞ்சிவரை வந்தனன் என்பதையும் நோக்க-எதிரியைத் தம் நாட்டிற்குள் நன்கு இழுத்துப் பிறர் உதவியை அவன் பெறாதுவாறு செய்து, அவனை வளைத்து முறியடித்தலையே மகேந்திரவர்மனும் அவன் மகனான நரசிம்மவர்மனும் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது நன்கு விளங்குகிறது. சாளுக்கியசேனை நெடுந்துரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே.அந்நிலையில் புதிய பல்லவர்சேனை அவர்களை எதிர்த்து வளைத்து அழித்தலும் தோற்றோடச் செய்தலும் எளிதான செயலே ஆகும். இந் நோக்கம் கொண்டே பல்லவர் இச் சூழ்ச்சி முறையைக் கையாண்டனர் போலும் மேலும், பல்லவர் தம் நாட்டு இடங்களை நன்கறிவர். எந்த இடுக்கான இடத்தில் பகைவரை மடக்கி அடிக்கலாம் என்பதைத்தம் நாட்டிற்றான்.அவர்கள் நன்கறிதல் கூடும்.

முதலாம் விக்கிரமாதித்தன் (சாளுக்கியன்) விடுத்த கல்நூல் பட்டயங்களில், ‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப் பட்டான்’ என்பது காணப்படுகிறது. இச் செய்திக்குச் சான்று என்னை? மூவருள் ஒருவன் நரசிம்மவர்மன், மற்ற இருவரும் யாவர்? வேண்டுமாயின் அவருள் ஒருவனாகச் சிம்மவிஷ்ணு இளவலான இரண்யவர்மன் மரபினருள் ஒருவனைக் கொள்ளலாம்; அவர்கள் தெலுங்கு நாட்டில் பல்லவர் மாகாணத் தலைவராக இருந்தனராதலின்[5] என்க. மூன்றாம்.அரசன் யாவன்? இதற்கு விடை இலங்கை வரலாறு இயம்புதல் காண்க; ‘மானவன்மன்’ என்னும் இலங்கை அரசன் பகைவனால் பட்டம் இழந்து நரசிம்மனிடம் அடைக்கலம் புகுந்தான். இருவரும் மனம் ஒத்த நண்பர் ஆயினர். மானவன்மன் காஞ்சியில் இருக்கையில், புலிகேசி காஞ்சிமீது படையெடுத்தான். உடனே நரசிம்மவர்மன் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போர்க்களம் சென்றான் ஆயினும், தன்னைக் காத்துவரும் பேரரசன் தனியே போர்க்களம் சென்று போர்புரிதலைக் காணப்பெறாத மானவன்மன். பெரும்படையுட்ன் சென்று நரசிம்மனோடு சேர்ந்து புலிகேசியைத் தாக்கினாள்; அவனைத் தோற்கடிப்பதில் பல்லவனுக்குப் பேருதவி புரிந்தான்.”[6]

சாளுக்கியன் ஒட்டம்

“புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுதல் கவனிக்கத்தக்கது. “பல்லவர் படைக்கு முன் நிற்க முடியாமல் புலிகேசி முதுகு காட்டி ஓடினான்” என்பதே இதன் பொருள். முதற்போர் பரியலம் என்னும் இடத்தில் நடந்தது. புலிகேசி பின்வாங்கினான்; பிறகு இரண்டாம் போர் மணிமங்கலம் என்னும் இடத்தில் நடந்தது; புலிகேசி மேலும் பின்வாங்கினான் இறுதிப் போர் சூரமாரத்தில் நடந்தது; பின் சாளுக்கியன் ஆற்றானாய் ஒடலானான். பல்லவன் அவனை விடாது துரத்திச் சென்றான். அப்போது வழியில் பல இடங்களில் சிறு போர்கள் நடந்தன: பின்னர்ச் சாளுக்கியன் திரும்பிப்பாராது ஓடியதால் பல்லவர்சேனை அவன் படையைத்துரத்திச்சென்றே, சாளுக்கியவன் தலைநகரமான வாதாபியுள் நுழைந்து விட்டது.

வாதாபி கொண்டது

வாதாபி நகரம் நரசிம்மவர்மன் கைப்பட்டது. வாதாபி என்னும் நகரத்தை அழித்த காரணம் பற்றியே நரசிம்மவர்மன் ‘வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர் போன்றவன்’ என்று கூறப்பட்டான். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன் அவனது தலைநகரை அழித்துத் தீர்த்துக் கொண்டான் என்பது தெரிகிறது. நகரத்தின் பல இடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் வருவாய் இன்றித் தத்தளித்தன; பல அழகிய பழைய கட்டடங்கள் இன்று இருத்தலால், நகரம் முழுவதும் ,ாழாக்கப்படவில்லை என்பது தெளிவு. பல்லவன் வாதாபி கொண்ட காலம் கி.பி. 642 என்பர் ஆராய்ச்சியாளர். அந் நகரம் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பல்லவர்கையில் இருந்ததென்னலாம் (கி.பி. 642-655).[7] வாதாபியில் தக்கிண-ஈரப்பன் கோவிலுக்கருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அது சிதைந்து இருத்தலால், வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்னும் சொல்லுமே படிக்கக் கூடியனவாக உள்ளன. நரசிம்மவர்மன்தன் வெற்றியை அத்துண்மீது பொறித்தனன் போலும்![8]

சேனைத் தலைவர் - பரஞ்சோதியார்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனது உயர் அலுவலாளராக இருந்த சேக்கிழார் பெருமான். இவ்வாதாபி கொண்ட செய்தியைத் தாம் கேட்டு அறிந்தவரை கூறியுள்ளது காண்க:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”[9]

இதனால், (1) நரசிம்மவர்மனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான, சிறுத்தொண்டர் என்ற பரஞ்சோதியார் என்பதும், (2) அவரே வாதாபியுள் நுழைந்து சாளுக்கியருடைய நகரைச் சூறை ஆடி யானைகளைச் செலுத்தி நகரைப் பாழாக்கி, சாளுக்கியருடைய கரிகளையும் பரிகளையும் செல்வத்தையும் கவர்ந்து சென்று நரசிம்மவர்மன் முன் வைத்தார் என்பதும் தெளிவாதல் காண்க. இச் செய்தியால், நரசிம்மவர்மன் மணிமங்கலம் முதலிய இடங்களில் சாளுக்கியனை வென்ற பிறகு காஞ்சிக்குத் திரும்பிவிட்டான் என்பது தெளிவாகிறது.அவன் சென்ற பிறகு, பரஞ்சோதியார் பல்லவ சேனையுடன் புலிகேசியின் படையைத் தொடர்ந்துசென்று, ஆங்காங்கு நடந்த சிறியபோர்களில் தோற்கடித்து, இறுதியில் வாதாபியுள் நுழைந்தார்; பல்லவன் ஆணைப்படி, கற்கம்பத்தில் அவனது பெருவெற்றியைக் குறித்து மீண்டார் என்பனவற்றை நன்குணரலாம்.

சாளுக்கியர் பட்டயச்சான்று

இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனது கர்நூல் பட்டயம், “இரண்டாம் புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான். வாதாபியில் இருந்த கோவில்கள் வருவாயின்றித் தவித்தன.....” என்று கூறுகின்றது. இந்த விக்கிரமாதித்தன் மகனான விநயாதித்தனது சோரப்-பட்டயம், “சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்,”[10] என்று முறையிடு கின்றது. இவ்விரண்டு பட்டயங்களாலும், வாதாபி கொண்ட செயல் பிற்பட்ட சாளுக்கியரை எந்த அளவு வருந்தச்செய்துள்ளது என்பதை நன்குணரலாம். -

வாதாபி கொண்டவன்

புலிகேசி, வாதாபி படையெடுப்புக்குப்பின் என்ன ஆயினன் என்பது தெரியவில்லை. அவனைப்பற்றிய பிற்செய்தி ஒன்றுமே தெரிய வழி இல்லை ஆதலின், அவன் போரில் இறந்தனனோ என்பது நினைக்கவேண்டுவதாக இருக்கிறது. இங்ஙனம் சாளுக்கியர் தலைநகரம் நாசமுற-சாளுக்கியர் பிற்காலத்திலும் தன் செயலை எண்ணி எண்ணி வருந்தச்செய்த தனது வீரச் செயலை நினைத்து, நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டவன்’[11] என்று அழைத்துக் கொண்டான்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ்நாட்டில் தம்மாட்சியோடு இருந்தவர் பாண்டியரே ஆவர்; அவருள் நான்காம் அரசனான அரிகேசரி பரங்குசன் என்ற நெடுமாறன் கி.பி. 640 முதல் 680 வரை ஆண்டுவந்தான். இவன் சோரையும் பிற தென்னாட்டுக் குறுநில மன்னரையும் அடக்கித் தெற்கே பேரரசனாக இருந்தவன். இவன் சோழனிடம் பெண்கொண்டிருந்தான்; கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் இவனுக்கு உட்பட்டிருந்தனர். சுருங்கக் கூறின், இவன் தெற்கே சேர,சோழ, பாண்டியர், களப்பிரர் தலைவன் எனக் கூறலாம்.

பட்டயங்கள்

இவன் ‘சங்கரமங்கை’ என்ற இடத்தில் பல்லவனைப் புறங்கண்டான்’ என்று சின்னமனூர்ப் பட்டயம் கூறுகின்றது. ‘நரசிம்மவர்மன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான்’ என்று கூரம் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டு கூற்றுக்களையும் நோக்க நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர் - பாண்டியர் போர் நடந்ததென்றே கருதுதல் வேண்டும்.

போர் நடத்த காலம்

ஆயின், இப்போர் எப்பொழுது நடைபெற்றது? பல்லவன் இரண்டாம் புலிகேசியைப் போரிட்டுத் துரத்திச் சென்ற காலத்திற் நான் இது நடைபெற்றதாகல் வேண்டும். என்னை? புலிகேசி தனது முதற் படையெடுப்பில், ‘காவிரிக்கரையை அடைந்து தமிழரசர் மன மகிழப் பல்லவனைப் புறங்கண்டான்’ எனச்சாளுக்கியர் பட்டயம் கூறலால் என்க. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டில் நுழைந்த வுடன், அவனை எதிர்த்துத் துரத்தலே பல்லவனது பெருவேலை ஆயிற்று. அவன் தனது முழுவன்மையும் சேர்த்துப் புலிகேசியைத் தாக்கிப் பல இடங்களிற் புறங்கண்டு இறுதியில் வாதாபியையும் அழித்தான் அன்றோ? அந்தச் சமயமே, சேர, சோழ, களப்பிரரைச் சேர்த்துக்கொண்டு பாண்டியன் தெற்கே இருந்து பல்லவநாட்டைத் தாக்க வசதியானது.

முடிவு

இதனை உணர்ந்துதான் போலும், நரசிம்மவர்மன் வாதாபிப் படையெடுப்பைத் தன் தானைத் தலைவரான பரஞ் சோதியாரிடம் ஒப்படைத்துத்தான் தெற்கே நோக்கிச் சென்று, தமிழரசரை வென்று துரத்தினான். முதலில் நரசிம்மவர்மனது எல்லைப்புறப் படை சங்கரமங்கையில்தோல்வியுற்றிருத்தல்வேண்டும்;பிறகுநரசிம்மன் பெரும்படை வந்தவுடன் போர் பல்லவர்க்குச் சாதகமாக மாறியிருத்தல் வேண்டும். இங்ஙனம் விளக்கமாகக் கொள்ளின் பல்லவர்-பாண்டியர் பட்டயக்கூற்றுகள் பொருத்தமாதல் உணரலாம்.

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம் புலிகேசிக்குப்பிறகுகி.பி. 642 முதல் கி.பி. 654 வரை சாளுக்கிய நாடு குழப்பத்தில் இருந்தது. இரண்டாம் புலிகேசியின் மக்கள் மூவர். அவர் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன் என்பவர். சந்திராதித்தன் இறந்தபிறகு, பின் இருவர்க்கும் அரியணை பற்றிய பூசல் உண்டாயிற்று. ஆதித்தவர்மன் நரசிம்மவர்மன் துணையை வேண்டினான். விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப் பாட்டனான துர்விநித கங்கன் துணையை நாடினான். துர்வி நீதற்கு நரசிம்மன்மேல் தீராப் பகைமை உண்டு. என்னை? நரசிம்மன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் துர்விநீதனுடைய ஒன்றுவிட்ட தம்பியை அதற்கு அரசனாக்கி வைத்திருந்தமையால் என்க. துர்விநீதன் தன் படையுடன் விக்கிரமாதித்தற்கு உதவி செய்தான். நரசிம்மன் ஆதித்தவர்மற்குப் படை உதவினன்போலும்! ‘துர்விநீதன், இராவணன் என்று அனைவரும் அஞ்சத்தக்க காஞ்சிநகரக் காடுவெட்டியை வென்ற பிறகு, தன் மகள் மகனைச் சயசிம்ம வல்லபனது நாட்டிற்கு அரசன்

ஆக்கினான் என்று ‘நகர்’ - கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், துர்விநீதன் நரசிம்மவர்மனை வென்று, தன் பெயரனான விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான் என்பது தெரிகிறது.

உண்மை என்ன?

விக்கிரமாதித்தன் தன் பாட்டன் உதவியை நாடினான். அதை அறிந்த ஆதித்தவர்மன் வேறு வழியின்றி நரசிம்மவர்மனது துணையை நாடி இருக்கலாம். நரசிம்மன் சாளுக்கியர் அரசியலில் விசேடக் கவனம் செலுத்தாமல், வந்தவனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி இருக்கலாம். அப்படையைத் துர்விநீதன் முறியடித்து வெற்றிபெற்றிருக்கலாம், நரசிம்மனால் அனுப்பப்பட்ட படையை வென்றமையால், பாவம்! துர்விநீதன் பேரரசனான நரசிம்மவர்மனையே நேரில் வென்றதாகக் கருதி மகிழ்ந்து, தன் மகிழ்ச்சியைக் கல்வெட்டிலும் காட்டிவிட்டான் என்று கோடலே ஈண்டைக்குப் பொருத்தமாகும். ஏனென்றால், நரசிம்மனையே பெரும் போரில் வென்றவனாயின், துர்விநீதன் அதன் பயனாகக் கொங்கு நாட்டைக் கைப்பற்றி இருத்தல் வேண்டும்; அவன் தான் அங்ஙனம் செய்ததாகக் குறிக்கவில்லை. துர்விநீதன் வெற்றியால் பல்லவர்க்கு எந்தவிதமான குறைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; பல்லவர் பட்டயங்களில் இவனைப் பற்றிய பேச்சே இல்லை.

இலங்கைப் போர் 1

நரசிம்மவர்மன் காலத்தில் இலங்கைப் பட்டத்திற்கு உரிய மானவன்மன் என்னும் இளவரசன் காஞ்சிக்கு வந்தான். அவன் அட்டதத்தன் என்பவனால் துரத்தியடிக்கப்பட்டவன். அட்டதத்தன் மானவன்மனது அரசைக் கவர்ந்தவன். செயலற்ற மாணவன்மன் நரசிம்மனை அடைக்கலம் அடைந்தான்; அவனுடன் இருந்து பணிவுடன் எல்லா வேலைகளையும் செய்து பல்லவன் நன்மதிப்பைப் பெற்றான். அதனாற்றான் மாணவன்மனைக் காஞ்சியில் விட்டு நரசிம்மவர்மன் புலிகேசியை எதிர்க்கச் சென்றான். அப் பேரரசனுக்கு இடர்வராமற் காக்க மாணவன்மன், பிறகு பெருஞ் சேனையுடன் சென்று போரிற் கலந்துகொண்டு பல்லவன் வெற்றிக்குத் துணைசெய்தான். இச்செயலால் மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட நரசிம்மவர்மன் மானவன்மனுக்கு மாப்படை, மக்கட்படை, மரக்கலப்படை இவற்றை உதவி இலங்கைக்கு அனுப்பினான். படை உதவி பெற்ற மாணவன்மன், இலங்கையில் இறங்கி முதலில் நடந்தபோரில் வெற்றிபெற்றான்.ஆயினும் அடுத்த போரில் தோல்வியுற்றான். அவன் உடன்சென்ற சேனை அவனைக் கைவிட்டது. அதனால் மானவன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர்-2

அவனது துயரைக்கண்டு மனம் பொறாத பல்லவப்பேரரசன், தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மானவன்மனிடம் ஒப்புவித்துத் தானும் மாமல்லபுரம் என்ற துறைமுகத்திற்குச் சென்றான். பல்லவன்தானும் கப்பலில் ஏறுவதாகத்தன் படைவீரரை நம்புமாறு செய்தான்; அதனால் மகிழ்ந்த வீரர் இலங்கை நோக்கிச் சென்றனர். கடும்போர் செய்தனர். மானவன்மன் வெற்றி பெற்று இலங்கை அரியணை ஏறினான்.[12] இங்ஙனம் இலங்கை இளவலுக்குப் பல்லவப் பேரரசன் செய்ததுணிச்சலான உதவியைப் பாராட்டிப் பேசிய காசக்குடிப் பட்டயம், ‘நரசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி இராமன் இலங்கையில் பெற்ற வெற்றி போன்றது’ என்பதைக் குறிப்பிட்டுள்ளது.[13]

சீன வழிப்போக்கன்

ஹர்ஷனது பேரரசையும் இரண்டாம் புலிகேசியினதுசாளுக்கியப் பேரரசையும் பார்வையிட்டுப் பெளத்த இடங்களைக் கண்டு போகவந்த சீன வழிப்போக்கனான இயூன்சங் என்பவன் காஞ்சிக்கு வந்தான். அவன் ஏறக்குறையை கி.பி. 642இல் வந்தான். அவன்

காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டைத் திராவிடம் என்று குறிப்பிட் டுள்ளான். “நிலம் செழிப்புள்ளது. நல்ல விளைவு தருவது; நாடு வெப்பமானது. மக்கள் அஞ்சா நெஞ்சினர்; உண்மைக்கு உறைவிட மானவர் கற்றவரையும் உயர்ந்த கொள்கைகளையும் மதிப்பவர். இந்நாட்டில் 100 சங்கிராமங்கள்[14] இருக்கின்றன; பதினாயிரம் பெளத்தத் துறவிகள் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணக் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருக்கின்றனர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கியதாக இந்நாட்டில் கூறப்படுகிறது.அசோகன்திராவிட நாட்டில் பல தூபிகளை அமைத்தான். அவற்றுள் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிப்பதியினர் என்னும் செய்தி இங்குக் கூறப்படுகிறது. “நான் பாண்டிய நாட்டையும் சென்று கண்டேன்.[15] அங்குச் சிலரே உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடு பட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பெளத்தம் அழிநிலையில் உள்ளது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக் குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.” என்று அந்த வழிப்போக்கன் தன் குறிப்புப் புத்தகத்தில் வரைந்துள்ளான். மேலும் அவ்வறிஞன், “காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரைநோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் ஆகும். இங்கிருந்து பல கப்பல்கள் இலங்கைக்குப் போகின்றன.” என்று கடல் வாணிபச் சிறப்பையும் விளக்கி யுள்ளான்.[16]

குகைக் கோவில்கள்

நரசிம்மவர்மன் தன் தாதையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். இவன் முதலில் மகேந்திரவர்மனைப் பின்பற்றிக் குகைக் கோவில்களையே அமைத்தான். இவன் அமைத்த கோவில்களைக் கண்டறிதல் எங்ஙனம்? இவன் அமைத்த குகைக் கோவில்களில் இவனுடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஓவிய வேலை மிகுதியாக இருக்கும். குகைக்கோவிலின் முன்மண்டபச் சுவர்களில் மிக்க அழகிய சிலைகளும் அணி அணியாய் அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் வெட்டுவித்திருக்கும். மகேந்திரன் அமைத்த கோவில் தூண்கள் சதுரமாயும் கனமாயும் இருக்கும். ஆனால், நரசிம்மவர்மன் எடுத்த கோவில் தூண்களின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ்த்துணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடியில் ஏறக்குறைய இரண்டு முழ அகலமும் இரண்டு முழு உயரமும் கொண்டு திறந்த வாயுடன் இருக்கும். சிங்கங்கள் தூண்களைத் தம் தலைமீது தாங்கி இருத்தல் போன்ற வேலைப்பாடு காணப்படும். இவற்றைநோக்க, இம் மன்னர் மன்னன் தன் பெயரைக் குறிக்கவே இச் சிங்கத்தூண்களை அமைத்தனனோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது.[17]

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமான் குகைக்கோவில் இம் மன்னன் காலத்தது. அதன் சுவர்களில் புராணக் கதைகள் சிற்ப வேலையில் விளக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக் கோவில் இவன் காலத்தது. இதன் கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும் மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பட்டுள்ளன. இவ்விரண்டு கோவில்களுக்கும் இடையில் உள்ள பெரிய மண்டபச் சுவர் மீது, சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி ஆகியவர் உருவங்கள் செவ்வையாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மரவிட்டங்கள் போலக்கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு இன்புறத்தக்கது. இக் கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட குபேரன் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே உள்ள திருவெள்ளறையில் மலை மீது பழைய பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. அம் மலையினடியில் பெரிய குகைக் கோவில் குடையத் தொடங்கி வேலை முடியாமல் நிறுத்தப்பட்டது. குடைந்த அளவு காணப்படும் வேலைப்பாடு நரசிம்மன் காலத்ததென்று கூறலாம். புதுக்கோட்டை யைச்சார்ந்த குடுமியா மலையில் மகேந்திரனது இசையைக் குறிக்கும் கல்வெட்டிற்கு அண்மையில் உள்ள குகைக்கோவில் நரசிம்மவர்மன் காலத்தது. அதன் அமைப்பு மேற்சொன்ன திருச்சிராப்பள்ளிக்குகைக் கோவில் அமைப்புப் போன்றே இருக்கின்றது. புதுக்கோட்டையைச் சேர்ந்ததிருமய்யத்தில் மகேந்திரவன் அமைத்த சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வைணவக் குகைக் கோவிலும் நரசிம்மன் அமைத்ததே ஆகும்.[18]

மகாபலிபுரமும் நரசிம்மவர்மனும்

மகாபலிபுரத்தில் மகேந்திரவர்மன் தொடங்கிவிட்ட வேலையை சிற்ப ஓவியக் கலைகளை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்திப் பெருவெற்றி பெற்றான். இவனது வெற்றிக்கு, இவன் கி.பி. 642இல் பெற்ற வாதாபி வெற்றியே சிறந்த காரணம் ஆகும். வாதாபியில் இரண்டர்ம் புலிகேசியின் சிற்றப்பன் ஆன மங்களேசன் அழகுற அமைத்த குகைக் கோவில்கள் பல உண்டு. அவை வேலைப்பாடு கொண்டவை. அவ் வேலைப்பாடு கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. அவற்றைக் கூர்ந்து பார்வையிட்ட நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் அவைபோல அமைத்துள்ளான் என்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நன்கு விளங்குகிறது. இப் பேரரசன் சாளுக்கியர் வளர்த்தகலைகளை நன்குஅறிந்து சிலவற்றை மாதிரிக்கு எடுத்துச் சென்றேனும் அல்லது அவற்றை அமைத்த வல்லுநரை அழைத்துச் சென்றேனும் கோவில்களை அமைத்தான் போலும் என்று எண்ணத்தக்க விதமாக ஒருமைப்பாடு காணப்படுகிறது.

நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் மூவகை வேலைப்பாடுகளைக் காட்டியுள்ளான். அவை (1) குகைக் கோவில்கள், (2) தேவர்கள் (3) கற்சிலைகள் என்பன.

(1) குகைக் கோவில்கள்

மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய இம் மூன்றும் நரசிம்மன் அமைத்த குகைக் கோவில்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இம் மண்டபத் தூண்களில் காணப்படும்வேலைப்பாடும் சிறப்பாகவராக மண்டபத்தூண்களில் காணப்படும் சிறந்த வேலைப்பாடும், வாதாபியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாட்டையே ஒத்துள்ளன. இவ் வேலைப்பாடு கி.பி. 642இல் வாதாபியில் இருந்து மகாபலிபுரம் வந்து, பிறகு தென் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. தூண்களின் மேலிருந்து கூரை வரையுள்ள வேலைப்பாடு, பிற்காலச் சோழர் கோவில்களில் காணப்படுதல் காண்க.

(1) குகைக்கோவிற் சிற்பங்கள்:- வாதாபி-குகைக்கோவிற் சுவர்களில் சிற்ப வேலை மிகுதியாக உண்டு. அவ்வேலை நரசிம்மன் அமைத்த குகைக்கோவிற் சுவர்களிலும் காணலாம். இவ் வேலைப்பாடு, சுவர்களை அணி செய்வதோடு. அவையுள்ள இடம் சுவர் என்னும் எண்ணத்தையே மறக்கச் செய்வது கவனிக்கத்தக்கது. வாதாபி-குகைக்கோவில் சுவர்களில் உள்ள புராணச் செய்திகளைக் குறிக்கும் ஓவியங்கள் பல மகாபலிபுரத்திலும் காணப்படல் கவனித்தற்குரியது. வராக அவதாரம, வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்துக் குகைக் கோவில்களிலும் இருத்தல் காண்க. கஜலக்குமி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் ஈரிடத்துக் குகைக்கோவில்களிலும் இருக்கின்றன. மகிடாசுர மண்டபச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பாம்பனைப்பள்ளி (அநந்த சயனம்) உண்டவல்லி குகைக் கோவில் சுவரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. மற்ற உருவங்களும் இரண்டிடத்தும் ஒத்திருக்கின்றன. ஆயின், மகிடாசூரனை வெல்லுதலைக் குறிக்கும் சிற்பவேலை பல்லவர்க்கே உரியது என்னலாம். அஃது எங்கும் அக் காலத்தில் காணப்படாததாகும். துர்க்கை தன் ஊர்தியான சிங்கத்தின் மீது இவர்ந்து எருமைத் தலைகொண்ட அசுருன் மீது அம்புகளைப் பொழிகின்றான். அவளைச்சுற்றிலும் அவள் படைகள் இருக்கின்றன. அசுரனைக் சுற்றிலும் அவன் படைகள் இருக்கின்றன. இப் படைகளைப் பொறித்ததால், இக் காட்சி சிறப்படைந்துள்ளது. இக் காட்சியை அமைத்த சிற்பிகள் சிறந்த அறிஞர் ஆவர் . இத்தகைய சிறந்த காட்சிகாணல் அருமையே ஆகும். இது பல்லவர்க்குரிய தனிச் சிறப்பு என்றே கூறலாம்.[19]

(2) மண்டபங்கள் - கோவில்களே:- மகாபலிபுரத்தில் ‘மண்டபங்கள்’ என்று கூறப்படுபவை மண்டபங்கள் அல்ல. அவை கோவில்களே ஆகும். ஒவ்வொன்றிலும் இறை உள்ளிடம் (மூலத்தானம்) இருக்கின்றது. அந்த இடங்களில் சிவலிங்கம் இருந்ததாம். இப்பொழுது வேலைப்பாடு கொண்டு காணப்படும் மண்டபம், உள்ளிடத்திற்கு ‘வெளி மண்டபம்’ ஆகும். எனவே, மண்டபங்கள் எனப்படுபவை அனைத்தும் கோவில்களே என்பதில் ஐயமில்லை. இதனை அறியாத பாமர மக்கள் ‘மண்டபம்’ என்றும், அங்குள்ள சிற்பங்கள் நோக்கி, இது ‘மகிடாசுர மண்டபம்’, ‘இதுவராக மண்டபம்’, ‘இது திரிமூர்த்தி மண்டபம்’ என்றும் பெயர் இட்டனர். இவற்றையே ஆராய்ச்சியாளரும் குறித்தனர். ஆதலின், இப்பெயர்கள் இன்றளவும் தவறாகவே வழங்குகின்றன.

(2) ஒற்றைக்கல் கோவில்கள்

மகேந்திரன் குகைக் கோவில்களை அமைத்தான். அவனைப் பின்பற்றிய நரசிம்மவர்மன் தன் பெயரை நிலைநாட்ட, ஒரு கல்லையே கோவிலாக அமைக்கும் புதிய வேலையில் இறங்கிப் பெருவெற்றி பெற்றான். இவை கோவில்கள் என்பதை அறியாத பாமர மக்கள், தேர்கள் என்றும். ஐந்து கோவில்கள் ஒரே வரிசையில் இருத்தல் கண்டு. பாண்டவர் தேர்கள் என்றும் பெயரிட்டனர். அவர்கள் இட்ட பெயர்களையே இன்றளவும் அறிஞர் எழுதி வருகின்றனர். எனவே, அம்முறைப்படியே நாமும் குறிப்போம். இந்த ஐந்து தேர்களும் வேறு வேறு அமைப்புடையவை. இவை தமிழகத்தில் மண், செங்கல், மாம் இவற்றில் ஆகி அந்நாள் இருந்த பழைய கோவில்களை நமக்கு நினைப்பூட்ட அமைத்தவை ஆகும். இந்த ஐந்தும் இராவிடில், பழங்காலக் கோவில்களைப் பற்றிய எண்ணமே நமக்கு இராது போயிருக்கும்.[20] மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கோவில்களில் பல் வேலைப்பாடுகள் இருந்தன. அவை இக் கற்கோவில்களில் அப்படியே காணப்படுகின்றன. மரவேலைகள் எல்லாம் கல்லிற் செதுக்கிக் காணப்பட்டன. திருச்சிராப்பள்ளியில் மகேந்திரவர்மன் குகைக் கோவில்கள், மரத்தால் எளிதிற் கட்டும் வேலி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது காண்க. நாமக்கல் கோவிலில் வளைந்த மூங்கில்களை வைத்து இறக்கப்பெற்ற தாழ்வாரம் போன்ற அமைப்பை மலையில் குடைந்துள்ளமை காண்க. திருச்சிராப்பள்ளியில் உள்ள கீழ்க் குகைக்கோவிலில் மரவிட்டம் போலக் கல் நீட்டிக்கொண்டிருத்தல் காணத்தக்கது.[21]

(1) தருமராசன் தேர்:- இது சிவன்கோவில், இது மூன்று தட்டுக்களைக் கொண்ட மேற்பாகத்தை (விமானத்தை) உடையது இரண்டாம் தட்டின் நடுவில் உள்ளிடம் வெட்டப் பட்டுள்ளது. அது மாடப்புரைபோலச் சிறியது. அதன் அடியில் சோமாஸ் கந்தச் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்ப (விமான) வளர்ச்சியே காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பம் ஆகும். அதன் வளர்ச்சியே தஞ்சைப் பெரியகோவில் கும்பமாகும். இம் மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் இவ்வுண்மையை நன்கு உணரலாம்.

(2) பீமசேனன்தேர்:- இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் காஞ்சியில் உள்ள அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே, இக் கோவில் அக்காலத்தில் பெளத்த சமயக் கலைவளர்ச்சி தென்னாட்டில் பரவி இருந்ததை மெய்ப்பிக்கிறது என்னலாம். விமானத்தைச் சுற்றிலும் வழிவிடப் பட்டுள்ளது. மேலிடம் 45 அடி நீளம், 25 அடி அகலம், 26 அடி உயரம் உள்ளது. அஃது அறச்சாலை அல்லது பொது இடம் போல இருக்கிறது. அதன் தூண்கள் அடியிற் சிங்கங்களை உடையன. இக் கோவில் அமைப்பை, மிகப் பிற்பட்ட காலத்ததான சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தின் அமைப்பிற் காணலாம்.

(3) அர்ச்சுனன் தேர்:- இது தருமராசர் தேரைப் போன்றதே இதுவும் சிவன் கோவில் ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பை உடையது. இது 11 சதுர அடி அமைப்புடையது. விமானம் நான்கு நிலைகளை உடையது.

(4) திரெளபதி தேர்:- இது போன்ற கோவில் காணக் கிடைத்தல் அருமை. இது தமிழ்நாட்டில் ஊர்த் தேவதைகட்கு இருக்கும் சிறு கோவில்போல அமைந்துள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி; உயரம் 18 அடி இதில் உள்ள துர்க்கையின் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு பல்லவர் சிற்ப அறிவை நன்கு விளக்குவதாகும். இங்குள்ள கல்யானை, கற்சிங்கம், நந்தி என்பன காணத் தக்கவை. இக்கோவில் தமிழகத்தின் பண்டைச் சிறு கோவிலை நினைப்பூட்டுவதாகும்.[22]

(5) சகாதேவன் தேர்:- இது பண்டைப் பெளத்தர் தைத்தீயத்தை ஒத்துக் காணப்படுகிறது. இதுபோன்ற பெரியதுர்க்கையின் கோவில் ஒன்று சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹோனே’ என்னும் இடத்தில் இருக்கின்றது. அதனைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் கட்டினான். இங்ஙனம் பல்லவர். சாளுக்கிய வேலையைப் பாராட்டிக் கொண்டாற்போலவே, சாளுக்கியரும் பல்லவர் வேலையைப் பாராட்டிக்கொண்டர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் காட்டலாம். சகாதேவன் தேர் போன்ற அமைப்புடைய விமானங்கள் பல தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று திருத்தணிகையில் உள்ளது.[23]

இந்தக் கோவில்களின் முன்புறம், இவற்றில் உறைந்த தெய்வங்கட்குரிய ஊர்திகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன.அவை நந்தி, சிங்கம், யானை என்பன. அவை முறையே சிவபெருமான், துர்க்கை, இந்திரன்[24] இவர்தம் ஊர்திகள் ஆகும்.

(3) கற்சிற்பங்கள்

பாறைகள் மீது புராணக் கதைகளைப் பாடல்கள் வாயிலாக விளங்கும் முறையில் நரசிம்மவர்மன் பெயர் பெற்றவன். இதற்கு மகிடாசுர மண்டபச் சுவரில் உள்ள சிற்பங்களே போதியவை. எனினும், அவற்றை விடப் பெரிய பாறைகள் மீது செதுக்கியுள்ள கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்றல், கங்கைக் காட்சி ஆகிய இரண்டுமே கண்கொண்டு பார்க்கத்தக்கவை.

(1) கோவர்த்தன மலையைப் பிடித்துள்ள கண்ணனும் அவன் அருகில் உள்ள பலராமனும் பெரியவராகத் தெய்வத் தன்மையுடன் காணப்படுகின்றனர். ஏனையோர் சிறியவர்களாகக் காண்கின்றனர். அம்-மக்களது கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவடைந்த மன நிலையும் சிலைகளில் நன்கு உணர்த்தப்ப்ட்டுள்ளன. இவர்கட்கு இடையே இடையர் வாழ்க்கையைக் குறிக்கும் சில காட்சிகளைச் சிற்பிகள் மலையடியில்காட்டியிருத்தல் போற்றத்தக்கது. அக் காலச் சிற்பிகளது கூர்த்த அறிவு வியத்தற்குரியதே ஆகும்.அக்காட்சிகளில் வியக்கத்தக்கது. கறவையின் காட்சி. ஒருவன் பால் கறக்கிறான். பசு தன் கன்றை நக்குகிறது. இந்த வேலைப்பாடு தெளிவானதும் அழகானதுமாகும்.

(2) கங்கைக்கரைக் காட்சி-இதனை ‘அர்ச்சுனன் தவம் எனப் பலர் கூறுவர்.[25] ஆனால், இங்குள்ள காட்சிகள் அதற்கு மாறாகவே இருக் கின்றன. ஆறு - (மலைமீதிருந்த தண்ணி விழுந்து கொண்டிருக்கப் பழைய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இன்னும் காணப்படுகின்றன. அதன் நடுவில் நாகர் மகிழ்ச்சியோடு நீராடல் -பிராமணன் ஒருவன் தண்ணிக் குடத்தைத் தோள் மீது சுமந்துபோதல் - நீர் அருந்த ஆற்றண்டை மான் ஒன்று வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு அன்னப் பறவைகள் ஆற்றில் வீழ்ந்து நீராட் நிற்றல் - கீழ்ப்புறம் ஒரு சிறிய பெருமாள் கோவிலைச் சுற்றிலும் முனிவர்பலர் இருந்து தவம் செய்தல் - இவர்களைப் பார்த்துப் பூனை ஒன்று பின்னங் கால்கள் மீது நின்று முன்னங் கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் இருத்தல்- அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி அன்பு கொண்டு அதனைப் பணிதல்-ஆகிய இக்காட்சிகள் அனைத்தும் இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரைக் காட்சிகளையே ஒத்துள்ளன. இச் செய்திகள் அனைத்தும் மகாபாரதம்உத்தியோக பருவத்துள் கூறப்பட்டுள்ளவையே ஆகும்.[26] இவற்றைச் செலுத்திய சிற்பிகளின் திறனை என்னென்பது பூனை தவம் செய்வதையும் காட்டி நகைச்சுவை ஊட்டும் அப் பேரறிஞர் கலை உணர்வே உணர்வு![27]

(3) மகா மல்லபுரம்: நரசிம்மவர்மன் கொண்ட பல பெயர்களுள் மகா மல்லன் என்பது சிறந்தது. அவன் மகாபலிபுரத்தைச் சிறந்த கடற்கரைப்பட்டினமாக்க முயன்றான்; மலைமீது கோட்டை ஒன்றை அமைக்க முயன்ற அடையாளம் காணப்படுகிறது. அவன் காலத்தில் மகாபலிபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. எனவே, பல கட்டிடங்கள் அங்கு இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அந்நகரத்தைப் பெரிதாக்கிய இப் பேரரசன் அதற்குத் தன் பெயரை இட்டு ‘மகாமல்லபுரம்’ என்று வழங்கினான். ஆனால், நாளடைவில் அப் பெயர் மாறி ‘மகாபலிபுரம்’ என்று வழங்கலாயிற்று. இம் மகாமல்லபுரம், கரிகாற் சோழன், தொண்டைமான் இளந்திரையன் முதலிய சோழ மன்னர் காலத்தில் சிறந்த கடற்றுரைப் பட்டினமாக இருந்தது என்பதைப் பத்துப் பாட்டால் அறியலாம்.

கோட்டைகள் கட்டிய கொற்றவன்

நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான் என்பர் சிலர். ஆனால், அக்கோட்டை இவன் தந்தை காலத்திலே இருந்தது என்பது சாளுக்கியர் பட்டயத்தால் வெளியாவதால், இவன் அப்பழைய கோட்டையைப் புதுப்பித்தான் என்று கோடலே பொருத்தமுடையது. திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பல்லவரம் (பல்லவபுரம்) என்னும் சிற்றுர் உள்ளது. அதனில் நரசிம்மவர்மன் காலத்துக் கோட்டை ஒன்று பாறைமீது அமைந்து இருந்தது. அக் கோட்டை முழுவதும் அழிந்துவிட்டது. ஆயினும் அதன் அடிப்படையை இன்றும் காணலாம். அங்குப் பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்னும் கிடைக்கின்றன. அவ்வூருக்கு அருகில் பல்லவர்க்கும் சாளுக்கியவர்க்கும், பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர்கள் நடந்துள்ளன. ஆதலின், அப் பல்லவபுரம் பழைய காலத்தில் பல்லவர் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரமாக இருந்தது போலும்! அப் பல்லவபுரப் பாறைமீது ஒரு கல்வெட்டு அழிந்து கிடக்கிறது.[28]

பட்டப் பெயர்கள்

நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டு வித்துள்ளான். அவற்றுட் சில ‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,’ என்பன.

அக்கால அரசர்

(1) சாளுக்கியர்: விந்தமலைக்குத் தென்பாற்பட்ட இடத்தில் இரண்டு பேரரசுகளே நிலைபெற்று இருந்தன. ஒன்று சாளுக்கியர் பேரரசு மற்றொன்று பல்லவர் பேரரசு, சாளுக்கியர் வடக்குத் தெற்காக விந்தமலை முதல் துங்கபத்திரை வரை, கிழக்கே கிருஷ்ணை கோதாவரி யாறுகட் கிடைக்கப்பட்ட நிலம் வரை தங்கள் பேரரசை நிலைப்படுத்தி இருந்தனர். இச்சாளுக்கியப் பேரரசை நிலை நாட்டியவன் இரண்டாம் புலிகேசியை ஆவன். அவன் முதலில் மகேந்திர வர்மனாலும் பின்னர் நரசிம்மவர்மனாலும் தோற்கடிக்கப் பட்டுத் தலைநகரையும் இழந்த செய்தி முன்னரே விளக்கமாகக் கூறப்பட்டதன்றோ? அவனுக்குப் பின் அவன் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆண்டான் எனினும், வாதாபி வெற்றிக்குப் பின் பல்லவ அரசன், பகைவர் பயமின்றி நாட்டை அமைதியாக ஆண்டு வந்தான்; தந்தை விட்டுச்சென்ற கோவிற் பணிகளைக் குறைவறச் செய்தான்.

(2) கங்கர் கிருஷ்ணையாறு முதல் காவிரியாறு வரை பல்லவப் பேரரசு நிலைத்திருத்தது. அதற்குமேற்கே முற்சொன்ன பூவிக்கிரமன் கங்க நாட்டை (கி.பி.608-670) ஆண்டு வந்தான்.

(3) சேரர்: கங்க நாட்டுக்குத் தெற்கே சேரர் சிறப்பின்றிப் பாண்டியர்க்கு அடங்கிப் பெயரளவில் அரசராக இருந்து ஆண்டு வந்தனர்.

(4) களப்பிரர் சோழநாட்டின் பெரும் பகுதி (காவிரியாறு வரை) பல்லவப் பேரரசில் கலந்து விட்டமையால், சிம்மவிஷ்ணு காலத்திருந்தே களப்பிரர் வலிகுன்றிச் சிற்றரசர் ஆகிவிட்டனர். அவர்கள் தஞ்சாவூர், கொடும்பாளுர் முதலிய இடங்களில் முறையே பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராகவும் பாண்டியர்க்கு அடங்கிய சிற்றராசராகவும் இருந்து வந்தனர்.

(5) சோழர்: சோழர் சிற்றரசராக இருந்து திருவாரூர், உறையூர் உள்ளிட்ட பகுதியை ஆண்டு வந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்தும் அவரிடமிருந்து பெண் பெற்றும் உறவு கொண்டாடி வந்தனர்.

ஏறத்தாழக் கி.பி. 575இல் கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டுப் பாண்டிய ஆட்சியை நிலைநிறுத்தினான். அப் பாண்டியர் பட்டியலைக் கானின், நரசிம்மவர்மன் காலத்துப் பாண்டியன், நாம் முன்சொன்ன நெடுமாறன் என்பது விளங்கும்.

பாண்டியர் பட்டியல்

1. கடுங்கோன் (கி.பி. 575-500)
2. மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625)
3. சேந்தன் - சயந்தவர்மன் (கி.பி.625-640)
4. அரிகேசரி மாறவர்மன் - பராங்குசன் (நின்ற சீர் நெடுமாற நாயனார்) (கி.பி. 640-680)

நெடுமாறன் தென்பாண்டி நாட்டில் தனக்கு அடங்காதிருந்த பரவரை வென்று அடக்கினான்: செழித்த குறுநாட்டை அழித்தான்; பிறகு பலமுறை சேரனை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் அவனைக் கைப்பிடியாகப் பிடித்தான். அவன் உற்றார் உறவினரையும் படைகளையும் சிறைப்பிடித்தான்; இங்ஙனம் தனது நாட்டை முதலில் பலப்படுத்திப் பிறகு மேற்கில் இருந்த சேரனை வென்று, பேரரசை நிலைநிறுத்தினான். இவன் காலத்திற்றான் பல்லவர் - பாண்டியர் போர் தொடக்கமானது.[29]
--------
References :
[1]. Dr N.Venkataramanyya’s article on “Durvinita and Vikramaditya’ (triveni) p. 116
[2]. S.II. Vol. I p. 152.
[3]. Indian Antiquary, Vol. VIII, p.227.
[4]. S.I.I. Vol.II p.508.
[5]. Indian Antiquary, Vol. X, p.134.
[6]. Mahavamsa, Part II, p.35 (Colombo, 1909)
[7]. Dr. S.K. Aiyangar’s int. to the “Pallavas of Kanchi, p.27.
[8]. Indian Antiquary,Vol IX. p. 100
[9]. சிறுத்தொண்டர் புராணம், செ.6.
[10]. Indian Antiquary, Vol.XIX, pp.151, 152.
[11]. Ibid. Vol. X, P.100.
[12]. Mahavamsa (Toumour’s translation) Ch.7
[13]. S.I.I. Vol. ii p.343.
[14]. சங்கிராமம் - பெளத்த மடங்கள்.
[15]. இவன் பாண்டியநாடு சென்றபோது நெடுமாறன் அரசு கட்டில் ஏறினான் & Vide TVS Pandarathar’s Pandyas p.14.
[16]. Beal, Records Vol.II p.118.
[17]. Archaeological Report for 1918-1919, pp. 16-30. இத்தகைய தூண்கள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலுக்குள் இருக்கின்றன.
[18]. P.T.S Iyengar’s “Pallavas’, Part II, pp. 38-40.
[19]. Heras’s “Studies in Pallava History’ pp.86-87.
[20]. Heras’s “Studies in Pallava History,” p.89 188.
[21]. P.T.S. Iyengar’s “pallavas’ part II, pp.41-43.
[22]. A.V.T. lyer’s “Indian Architecture’. Bk.II p.225.
[23]. Hears’s “Studies in Pallava History’ pp.89-90.
[24]. இந்திரன் கோவிலா, ஐராவதேசுவரர் (சிவனார்) கோவிலா என்பது புரியவில்லை. சிலப்பதிகார காலத்தில் ஐராவதத்திற்குக் கோவில் இருந்தமை தெளிவு. இஃது ஆய்வுக்குரியது.
[25]. A.W.T. Iyer’s S. Indian Architecture Vol.Il-B.p.227.
[26]. Heras’s “Studies in Pallavas History,’ pp.91, 92.
[27]. இஃது அர்ச்சுனன் தவத்தையோ, கங்கைக் கரைக் காட்சியையோ குறிப்பதன்று; இது ‘சமணர் தொடர்புடைய ஒரு காட்சி’ என்பர். திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.
[28]. P.T.S. Iyengar’s Pallavas, Part II pp.43-44.
[29]. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’, pp.51-53
--------------

11. பரமேசுவரவர்மன் (கி.பி. 670-685)[1]

இரண்டாம் மகேந்திரவர்மன் (668-670)

இவன் நரசிம்மவர்மன் மகன். இவன் வரலாறு கூறும் பட்டயம் ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ‘இவன் அவ்வவ் வகுப்பார் நடக்க வேண்டும் முறைகளைக் கூறும் அறநூல்வழி ஆண்டான்’ என்று மட்டுமே வேலூர் பாளையப் பட்டயம் கூறுகிறது. இவன் நெடுங்காலம் ஆண்டனன் என்பது தெரியவில்லை. இவனுக்குப் பின் வந்த பரமேசுவரவர்மன் காலம் கி.பி. 670-685 என்னலாம்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

பரமேசுவரன் காலத்தில் சாளுக்கிய அரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆவான். அவன் சிறந்த போர்வீரன். அவன் தன் தந்தை அடைந்த இழிவையும் தலைநகரம் அடைந்த அழிவையும் போக்கிக்கொள்ள அவாவிப் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். இப் படையெடுப்பைப் பற்றிச் சாளுக்கியர் பட்டயங்களும் பல்லவர் பட்டயங்களும் குறிப்புகள் தருகின்றன. அவ் விரண்டையும் ஆராய்ந்து முடிவு காணலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) முதலாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட ‘கர்நூல்’ பட்டயம் கூறுவது: “விக்கிரமாதித்தன் தன் தந்தையின் பட்டத்தைத் தன் வலிமையால் அடைந்தான்; மூன்று கூட்டரசரை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்; தன் பகைவரைப் பல நாடுகளில் வென்று தன் உரிமையைப் பெற்றான்,” என்பது.

(2) இவனே வெளியிட்ட ‘கத்வல்’ பட்டயம் கூறுவது: “ஸ்ரீ வல்லபனாகிய விக்கிரமாதித்தன் நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான், மகேந்திரன் செல்வாக்கை அழித்தான், ஈசுவர போத்தரசனை (பரமேசுவரவர்மனை) வென்றான். இவன் மகாமல்லன் மரபை அழித்தமையால், இராச மல்லன் என்னும் விருதுப் பெயரைப்பூண்டான். இவன் (பரம) ஈசுவர போத்தரசனைத் தோற்கடித்தான்; தென் நாட்டின் ஒட்டியாணமாக விளங்கும் காஞ்சியைக் கைப் பற்றினான். அதன் பெரிய மதிற்கூவர் ஏற முடியாததும் உடைக்கக் கடினமானதும் ஆகும். அம்மதிலைச் சுற்றித் தாண்ட முடியாத ஆழமான அகழி இருந்தது,” என்பது.

(3) விநாயதித்தன் வெளியிட்ட ‘சோரப்’ பட்டயம் கூறுவது; “பல்லவர் கோவைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான்."[2] என்பது. ‘கேந்தூர்ப்’ பட்டயம். “தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்,” என்று கூறுகிறது.[3]

பல்லவர் பட்டயங்கள்

(1) பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயம் கூறுவது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்கிரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக் கொண்டு ஓடும்படி செய்தான்,”[4] என்பது.

(2) இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘உதயேந்திரப்’ பட்டயம் உரைப்பது; “பரமேசுவரவர்மன் பெருவளநல்லூரில் நடந்த பெரும் போரில் வல்லபன் (விக்கிரமாதித்தன்) படையை முறியடித்தான்,”[5] என்பது.

(3) மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘வேலூர் பாளையப்’ பட்டயம் பகர்வது; பரமேசுவர வர்மன் தன் பகைவர் அகந்தையை அடக்கியவன். அவன் சாளுக்கிய அரசனது பகைமையாகிய இருளை அழிக்கும் பகைவனாக இருந்தான்,”[6] என்பது.

ஆராய்ச்சி

இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி ஒன்றையே குறித்தல் காண முடிவு கூறல் கடினமாக இருக்கின்றது. ஆயினும், இரண்டு சிறப்பு மொழிகளை இங்குக் காணல் வேண்டும்: (1) சாளுக்கியர் காஞ்சியைக் கைப்பற்றியது:

(2) பல்லவர் பெருவள நல்லூரில் சாளுக்கியரைத் தோற்கடித்தது. இரண்டும் உண்மையாகவே இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவை இரண்டும் ஒரே படையெடுப்பில் வெவ்வேறு காலத்தில் உண்டானவை எனக் கொள்ளின் உண்மை புலனாகும்.

விக்கிரமாதித்தன் முதலில் பல்லவனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். பிறகு நேரே (‘கத்வல்’ பட்டயம் கூறுமாறு) சோழ நாட்டில் உள்ள உரகபுரத்தை (உறையூரை)[7] அடைந்து தங்கினான், பல்லவர் பட்டயம் கூறும் பெருவள நல்லூர் திருச்சிராப்பள்ளிக்கு 12 கல்தொலைவில் உள்ளது. எனவே,அஃது உறையூருக்கும் அண்மையதே ஆகும். விக்கிரமாதித்தன் தோல்வியூற்ற இடம் பெருவள நல்லூர் ஆகும். எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறான் அல்லவா? ஆதலின், காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை. பெருவள நல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறவில்லை. இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.

போர் நடந்த முறை

இப் போரைப்பற்றிச் சிறந்த அறிஞரான ஈராஸ் பாதிரியார் பின்வருமாறு கூறுகிறார்: “பல்லவர் படை வழக்கம் போலக் காஞ்சிக்கு அண்மையிலேயே இருந்திருக்கலாம்; சாளுக்கியர் படை முன்னதைத் தோற்கடித்திருக்கலாம். தோற்ற படை கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது. உடனே சாளுக்கியர் படை அரிதின் முயன்று அகழியைக் கடந்தது ஏறமுடியாத மதில் மீது முயன்று வருந்தி ஏறியது; மதிலைத் துளைத்தது; இறுதியிற் காஞ்சியைக் கைப்பற்றியது... பரமேசுவரவர்மன் தப்பி ஒடிவிட்டான். அதனால் எதிர்ப்பவர் இன்றிச் சாளுக்கியன் தன் பெரும்படையுடன் பல்லவநாடு முழுவதும் கற்றுப்போக்குச்செய்து, இறுதியில் காவிரிக் கரையில் உறையூரில் வந்து தங்கினான். அவன் அப்பொழுதுதான் தான் அடைந்த வெற்றிக்கறிகுறியாகக் ‘கத்வல்’ பட்டயம் (25-4-674 இல்) வெளியிட்டான்.

“இதற்கு இடையில் பரமேவரவர்மன் ஆந்திர நாடு சென்று, பெரும்படை திரட்டித் தெற்கே வந்து, தன் வெற்றியில் வெறி கொண்டிருந்த சாளுக்கியனைத் திடீரென எதிர்த்தான்; போர் பெருவள நல்லூரில் கடுமையாக நடந்தது. (இப்போரின் கடுமையைக் கூரம் - பட்டயம் தெளிவாக விளக்குகிறது) போர் பல நாட்கள் நடந்தன. இறுதியில் பல்லவப்பேரரசன் வெற்றிபெற்றான். இருதிறத்தார்க்கும் கடுமையான இழப்பு (நட்டம்) உண்டானது. சாளுக்கிய மன்னன் புறங்காட்டிஓடி ஒளிந்தான்.”[8]

கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று “பரமேச்சுரன் வாதாபியை அழித்தான்’ எனக் கூறலால், ‘இவன் விக்கிரமாதித் தனைத் துரத்திச் சென்று, நரசிம்மனைப் போலவே சாளுக்கியர் தலைநகரையும் அழித்து மீண்டான்’ என்பதை அறியலாம்.[9]

போர் வருணனை

இப் போரைப்பற்றிக் கூரம்-பட்டயம் வருணித்தல் காண்க: “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல அச்சமூட்டியது. உறையில் இருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள்போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தைக் காட்டியது. போரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள் போலத் தோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற் போலச் சேனைக் கடலில் இருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலியன பறந்தன. பகைவர் போரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தபோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேரோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோடொன்று பொருதபொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர், வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் மயிர் பிடித்து இழுத்துச் சண்டை யிட்டனர். ‘கதைகள்’ ஒன்றோடு ஒன்று மோதின. செந்நீரும் கரிகளின் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சள் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய, கரி- பரிகளுடையதலைகளும் கைகளும் கால்களும் தொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இருதிறத்தாரும் முன்னும்பின்னும் அலைந்து, ஒடிச்சண்டையிட்டனர். யாறாக ஓடின் இரத்தத்தின் மேல் பாலமாக அமைந்த யானை உடலங்கள் மீது வாள்வீரர் நின்று போரிட்டனர். அப்பொழுது நெற்றி அணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள்முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர் கண்கள் சிவந்திருந்தன. பெருவீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் பொடியாகிக் கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர் குடித்துமதி மயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத்தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. பல நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட ரமேசுவரவர்மனது போர்ப்பரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம்.’[10]

சாளுக்கியர் - பாண்டியர் போர் (கி.பி. 674-675)

‘விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கிய பிறகு பாண்டிய நாட்டைத் தாக்கினான். பாண்டியன் நெடுமாறன் மகனான கோச்சடையன் அவனை எதிர்த்து மங்கலாபுரத்தில் முறியடித்தான் என்று வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்.[11] இது தவறு. என்னை? கோச்சடையன் மங்கலாபுரத்தில் மகாரதரை[12] வென்றான் என்று பட்டயங்கள் பகர்கின்றனவே அன்றி வேறில்லை ஆதலின் என்க.

விக்கிரமாதித்தனை நெல்வேலியில் வென்றவன் நெடுமாறனே ஆவன் என்பதை, “வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்” எனவரும் வேள்விக்குடிச் செப்பேட்டு அடி, குறிப்பாக உணர்த்துகிறது. ‘வில்வேலி என்பவன் சாளுக்கியன் படைத்தலைவனாக இருக்கலாம். “வில்லவனை நெல்வேலியிற் புறங்கண்ட பராங்குசன் என்பது சின்னமனூர்ச் செப்பேட்டு அடி ‘வில்வேலி, வில்லவன்’ என்பன ‘வல்லபன், வல்லவன்’ என்பவற்றின் திரிபாகலாம். வல்லபன் என்பது சாளுக்கியர்க்கு இருந்த பொதுப் பெயர் ஆகும். தென்னாட்டில் அக்காலத்தில் ‘கடல் போன்ற தானை உடைய பேரரசர் வேறு இல்லை. பல்லவர் படை எனின், பட்டயங்கள் வெளிப்படையாகக் குறித்திருக்கும். விந்த மலைக்குத்தென்பால் அந்நாளில் இருந்த பேரரசுகள்-கடல் போன்ற தானை உடையவை இரண்டே யாகும். ஒன்று பல்லவ அரசு; மற்றொன்று சாளுக்கிய அரசு. அத்தகைய பெரும் படையையுடைய பேரரசனை வென்றமையாற்றான். நெடுமாறனுக்கு இரண்டு நூற்றாண்டுகட்குப்பின் இருந்தவரான சுந்தரர்,

‘நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”209[13]

என்று தமது திருத்தொண்டத் தொகையுட் கூறியுள்ளார். இதனால், நெடுமாறன் பெற்ற வெற்றிகள் அனைத்திலும் நெல்வேலியில் பொருது பெற்ற வெற்றியே பெருஞ் சிறப்புடையது என்ற கருத்துக் கி.பி.9ஆம் நூற்றாண்டு மக்களின்டப் பரவி இருந்தது என்பது நன்கு தெரிகிறது. ஆதலின், நெல்வேலிப் போர் எளிதானதன்று. அங்குப் பாண்டியனை எதிர்த்தவன் பெரு வேந்தனாக இருத்தல் வேண்டும்: போர்கடுமையாக நடந்திருத்தல் வேண்டும்; இறுதியில் நெடுமாறன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல், பிற போர்களை விட்டு நெல்வேலிப் போரைச் சுந்தரர் போன்றார் குறித்திரார்.

இக் கருத்துகளுடன், வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் போன்றோர் கூறும் சாளுக்கியர் பாண்டியர் போர், அவர்கள் கூறும் கோச்சடையன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளாமல் நெடுமாறன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளின், நெல்வேலிப் போர் நெடுமாறன் - விக்கிரமாதித்தன் போராகவே முடிதலைக் காணலாம். சிறிது பொறுமையும் நடுவுநிலைமையும் கொண்டுகேந்தூர்க்கல்வெட்டுக்’ 210[14]கூற்றையும் நோக்கி ஆராயின், இஃது உண்மை என்பது தோற்றும்.

ஈராஸ் பாதிரியார் கூறுமாறு, எதிர்ப்பவர் இன்றி உறையூர்வரை (பல்லவநாட்டின் தென் எல்லை முடிய) வந்த சாளுக்கிய மன்னன் வீணாக அங்குப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்தான் என எண்ணுதலோ-தன்னைத் திடீரெனப் பல்லவன் பெருஞ்சேனை யுடன் தாக்க வரும்வரை உறையூரில் இன்பமாகப் பொழுது போக்கினன் என எண்ணுதலோ தவறாகும் அன்றோ? ஆராய்ச்சி உணர்வுடையார் இங்ஙனம் எண்ணார். மேலும், பரமேசுவரவர்மன் ஆந்திர நாடு சென்று பெருஞ்சேனை திரட்டிக்கொண்டு திடீரென வந்து தாக்கச் சிறிது காலம் ஆகி இருத்தல் வேண்டும். பேரரசனான பல்லவனை எதிர்த்து முறியடித்த பெருவேந்தன், அவனுக்கு அடுத்தபடி இருந்த பாண்டியனை எதிர்த்தல் இயல்பேயாம். இவற்றை எல்லாம் நன்கு எண்ணின், இப்பொழுதுகுறித்துக் காட்டக் கடினமாகவுள்ள - பட்டயங்களில் கூறப்பெற்ற ‘நெல்வேலி’[15] என்னும் இடத்தில், வெற்றியில் ஆழ்ந்து கிடந்த விக்கிரமாதித்தனுக்கும் சிவபத்தியில் ஆழ்ந்து கிடந்த நெடுமாறனுக்கும் போர் நடந்தது; முடிவில் நெடுமாறன் வெற்றி பெற்றான் என்பவற்றை ஒருவாறு ஊகிக்கலாம்.

பெரியபுராணம் பாடியசேக்கிழார்பிற்காலச்சோழருள் ஒருவனான இரண்டாம் குலோத்துங்கன் அரசியல் உயர் அலுவலாளராவர். அவர் பல்லவர் பட்டயங்களை நன்றாகப் படித்து நூல் செய்தவர் என்பது-பூசலார் (இராசசிம்மன் காலத்து நாயனார்) புராணத்தாலும் கழற்சிங்க நாயனார் புராணத்தாலும் சிறுத்தொண்டர் புராணத்தாலும்[16] பிறவாற்றாலும்[17] சிறப்புற உணரலாம். ஆகலின் சேக்கிழார் கி.பி. 12ஆம் நூற்றாண்டினர் ஆயினும், அவர் வரைந்துள்ள நூலில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அந்தந்த அரசர் முதலியோர் காலத்தனவாகவே இருத்தல் காணத்தக்கது. சேக்கிழார் பிறரைப்போல வாயில் வந்ததைப் பாடிச்செல்பவர் அல்லர். இதனை நன்கு உணரின் நெடுமாறன் நெல்வேலியில் யாருடன் சண்டையிட்டான்? - எப்படிச் சண்டையிட்டான்? - எப்பொழுது சண்டையிட்டான்? என்பன நன்கு விளங்கும்; ‘புரியவில்லை புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று வரலாற்று ஆசிரியரால் கைவிடப்பட்ட நெல்வேலிப்போரின் விவரங்கள் அத்துணையும் தம் காலத்துக் கிடைத்த தக்க சான்றுகளைக் கொண்டு சேக்கிழார் பெருமான் விளக்கி இருத்தல் தெளிவுற விளங்கும்.

நெல்வேலிப் போர்

“நெடுமாறன் சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட பிறகு, சேயபுலத் தெவ்வர் (நெடுந் தூரத்திலிருந்து வந்த பகைவர்) தம் கடல்போன்ற கரிகளுடனும் பரிகளுடனும் வீரருடனும் அமர் வேண்டிப் (தாமாகவே) பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் அவர்களை நெல்வேலியில் எதிர்த்தான்,” என்று தொடங்கிய சேக்கிழார், 5 பாக்களில் இருதிறத்தாரும் போரிட்டத்தை அழகாக விளக்கியுள்ளார். அப்போர் இருபெருவேந்தர் போராகவே காண்கின்றது. மேலும் அந்த வருணனையைப் பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயத்தில் காணப்படும் பெருவன நல்லூரில் நடந்த போர் வருணனையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பெருஞ்சுவை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இங்ஙனம் போர் வருணனை செய்த பெரும்புலவர் இறுதியில், “பாண்டியன் படைக்கு ஆற்றாமல், வடபுலத்து முதல் மன்னர் (First rate King of the north) படை சரிந்தது; நெடுமாறன் வாகை புனைந்தான் என்று கூறி முடித்துள்ளார்.[18]

இப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகனான கோச்சடையன் சென்றிருக்கலாம்; அல்லது அவனே தலைமை பூண்டு போரை நடத்தியிருக்கலாம்; ‘ரண ரசிகன்’ எனப்பட்ட விக்கிரமாதித்தனை வென்றமையால் தன்னை ‘ரண தீரன்’ என அழைத்துக் கொண்டிருக்கலாம். இங்ஙனமே விக்கிரமாதித்தனை வென்ற பரமேசுவரவர்மன் தன்னை ரணசயன் என்றும், (அவனுக்கு உதவியாகச் சென்ற) அவன் மகனான இராசசிம்மன் தன்னை ‘ரணசயன்’ என்றும் கூறிக்கொண்டனர் என்பது இங்கு அறியற்பாலது. இங்ஙனம் ஒரே காலத்தில் போரில் சம்பந்தப்பட்ட (பிற்காலச்) சத்யாசிரயனும் அவன் சிற்றரசனான குந்தமரசனும் தம்மைத் ‘திரிவுளமாரி’ (தமிழர்க்குக் கொள்ளைநோய் போன்றவர்) எனக் கூறிக்கொண்டனர் என்பது மேலைச் சாளுக்கியர் கல்வெட்டுகளால் அறியலாகும்.

இங்ஙனம் நெடுமாறனோடு போரிட்டுத்தோற்ற சாளுக்கியனைப் பின்னர்ப் பரமேசுவர்மன் பெருவள நல்லூரில் வன்மையுற எதிர்த்துத் தோல்வியுறச் செய்தானாதல் வேண்டும். ‘தமிழரசர் அனைவரும்கூடி விக்கிரமாத்தித்தனை எதிர்த்தனர்’ என்னும் கேந்தூர்ப்பட்டய மொழியும் இங்குக் கருதற்பாலது. இதுகாறும் கூறிய நெல்வேலிப் போரைப் பற்றிய செய்திகளை நடுவுநிலைவழாத வரலாற்று ஆசிரியம்மார் நன்கு ஆராய வேண்டுகிறோம்.

பல்லவர்-கங்கர் போர்

பரமேசுவரன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் பூவிக்கிரமன் (கி.பி.650-670); அவன்பின் முதலாம் சிவமாறன் (கி.பி.679-726) அரசன் ஆனான். இவருள் பூவிக்கிரமன் ‘விழிந்தம்’ முதலிய பல இடங்களில் பல போர்கள் பல்லவனோடு செய்ததாகக் கூறப் படுகிறது;[19] ஆயின், பல்லவர் பட்டயங்களில் இவை குறிக்கப் பெற்றில்.

கூரம்-கோவில் (முதற் கற்கோவில்)

பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ- பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[20]

இப்பொழுது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவன் காலத்திலும் நடந்து வந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். கோவிலில் பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன், கூரம் பட்டய முதல் இரண்டு சுலோகங்கள் பரமேச்சுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன.

மகாபலிபுரம்

இவன் மகாமல்லபுரத்தில் கணேசர் கோவில் ஒன்றை ஒரு கல்லால் அமைத்தான்; இராமநுசர் மண்டபம் என்பதையும் அமைத்தான்; தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான்; அந்த அடுக்கில், ‘ரணசயன் (ரண ரசிகனானா விக்கிரமாதித்தனை வென்றவன்), ‘அத்யந்த காமப் பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இவற்றால், இவன் ‘ரணசயன்’ ‘அத்யந்தகாமன்’ என்னும் பெயர்களைத் தரித்தவன் என்பது புலனாகிறது. இவன் கணேசர் கோவிலில் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் படித்து இன்புறத்தக்கவை. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும்படி சிலேடையாக அமைந்தவை. அவற்றுட்சில கீழே காண்க:

சிறந்த சிவபத்தன்

(1) காமனை அழித்த சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன், அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக.

(2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம்வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்.)[21]

(3) பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைம்மீது அழகிய நகைபோல நீலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக.

(4) பகைவர் நாட்டை வென்று ரனஜயன் என்றுபெயர் பெற்ற அத்யந்தகாமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக்[22] கட்டுவித்தான்.

(5)-(6) அத்யந்தகாமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீநிதி, காமராகன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான்.[23]

(7) அரசன் சங்கரனை அடைய விரும்பி, இந்தப் பெரிய சிவ மந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப் பெறக் கட்டுவித்தான்.[24]

(8) தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேஸ்வரக்ருஹம்.[25]

இவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச் சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ?) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது!

இவன் காலத்து அரசர்

கங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.
--------
References:
[1]. அடுத்த பகுதியில் கூறப்படும் சீனச் செய்தியைக் கொண்டு பரமேசுவரன் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 685உடன் முடிந்ததாகக் கொள்ளப் பட்டது.
[2]. Heara’s “Studies in Pallava History’ pp.40-41.
[3]. Ep.Ind Vol. IX, p.205 200.
[4]. S.L.I.Vol. I. p.154
[5]. Ibid II p.370
[6]. Ibid II. p.511
[7]. Dubreull’s ‘The Pallavas’ p.43.
[8]. Vide his “Studies in “Pallava History pp.44-47.
[9]. C.S.Srinivasacharl’s “History and Institution of the Pallavas’ p.15.
[10]. S.I.I. Vol.1, pp.153-154.
[11]. PTS. Iyengars “Pallavas part II, pp.57-58.
[12]. K.A.N. Sastry’s “Pandyan Kindom,’ p.55-56.
[13].. இவன் சிறந்த சிவனடியான் என்பதை, .....(1) ‘நறையாற்றகத்து வென்றான் முடிமேல் நின்றான் மணி கண்டம்போல்” (செ.256). (2) ‘விழிளுத்து வென்ற வல்லியல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையன் (செ279) எனப் பாண்டியக் கோவைப் பாக்களாலும் அறியலாம்.
[14].. Ep. Ind. Vol.Dx.p.205.
[15]. ‘நெல்வேலி’ என்பது புதுக்கோட்டைச் சீமையில் உள்ள நெல்வேலி என்னும் ஊராகம். ஆழ்வார்கள் காலநிலை. பக்.101. இவ்வூர் பாண்டிய நாட்டிற்கு வடக்கே பல்லவ நாட்டுத் தென் எல்லையில் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் சிறப்புப்பெற்ற இந்த இடத்தில் பாண்டியர் பலர் போரிட்டனர் என்பதைப் பாண்டியர் பட்டயங்கள் உணர்த்துகின்றன. ‘சோழ மண்டலத்தில் தென்கரைப்பனையூர் நாட்டைச் சேர்ந்த நெல்வேலி நாட்டு நெல்வேலி’ எனவரும் பட்டயத்தொடர் காண்க. 276 ணிஞூ 1916.
[16]. சேக்கிழார் கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் நன்றாகப் படித்தறிந்தே வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறு களைக் குறித்துள்ளார் என்பதை மெய்ப்பிக்க விரிவான நூல் ஒன்று பெரிய புராண ஆராய்ச்சி என்னும் பெயருடன் விரைவில் எம்மால் வெளியிடப் பெறும்.
[17]. Dr. S.K.Aiyangars “Manimekalai in its Historical setting p.46. 214.
[18]. நெடுமாறர் புராணம் செ:3-7
[19]. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.48.
[20]. C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.
[21]. கண்மணியாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்திருந்தான் என்பது பொருள், P.T.S.Aiyangar’s “Pallavas’ Part.II. P.68.
[22]. இப்பொழுதுள்ள கணேசர்கோவில் என்பது சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.
[23]. இதன் பொருள் சென்ற பக்கத்து அடிக்குறிப்பிற் காண்க.
[24]. இதனால் குடிகட்கிருந்த சைவப்பற்றை நன்குணரலாம் அன்றோ? மந்திரம் - கோவில்.
[25]. P.T.S. Aiyangai’s “Pallavas’ Part II.pp.66-68.
----------------

12. இராசசிம்மன் - (கி.பி. 685-705)

போர்கள்: முன்னுரை

இராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி

ஆராயின் - இக்காலத்திற் பல்லவர் - சாளுக்கியர் போர் நடந்தது என்பதை உறுதியாக நம்பலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) சோரப் பட்டயம் : ‘சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்.[1]

(2) வக்கலேப் பட்டயம்: விநயாதித்தன் திரையரச பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்; கவேர அரசர் (சோழர்?) பாரசீக (பாண்டியர்?), சிம்மளர் முதுலியோரிடம் கப்பம் வாங்கினான் (?)[2]

இவற்றை நன்கு ஆராய்ந்தால் விநயாதித்தன், தன் தந்தை கட்டளை (விருப்பப)ப்படி, தெற்கே இருந்த பல்லவ, சோழ, பாண்டிய, சேரநாடுகளை அடக்கிக் களப்பிரர், ஹெய்ஹயர், மாளவர் என்பவர் வன்மையைக் குறைத்து, எங்கும் அமைதியுண்டாகப் படையெடுத்தான் என்பது புலனாகிறது.[3]

பல்லவர் கல்வெட்டுகள்

இராசசிம்மன் கல்வெட்டுகளில் இவன், சிறந்த மற்போர் வீரன், யானை நூல் அறிவில் வத்சராசனையும் பகதத்தனையும் ஒத்தவன்; போரில் விசயனுக்கும் இராமனுக்கும் ஒப்பானவன் உடல் வலியாலும் புகழாலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன்; நாடு பிடிப்பதில் பேரவாவுடையவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; இவனது செல்வாக்கு உயர்கின்றது: அஞ்சத்தக்க பேராண்மை உடையவன்; அடக்கத்தினாலே வெல்லத்தக்கவன், போரிற் சிங்கம் போன்றவன்; வில்லையே துணையாகக் கொண்டவன்; பகைவர்க்குஇடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; போர்வீரரை அழிப்பவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் செல்வத்தை வெல்லுபவன் (பகைவருடைய பொருளைப்போரில் கைப்பற்றுபவன்); வீரத்தில் மகேந்திரனை ஒத்தவன் திடீரென இடிக்கும் இடிபோன்றவன் பல இடங்களை வென்றவன் போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன்...”[4] என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளன. இவனது வீரம், போர்த்திறம் பற்றி மேலும் பல கூறப்பட்டுள்ளன.

போரே செய்யாத ஒருவனைப்பற்றி இத்துணைத் தொடர்கள் வர இடமில்லை அன்றோ? இத் தொடர்களை நோக்க, இவன் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும் பொறுமையையும் காட்டி வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதுதானே போதரும். ஆகவே, இராசசிம்ம பல்லவன். யாருடன் போரிட்டான் என்பதைக் கவனிப்போம்.

போரிட்டவன் விநாயதித்தனே

முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி.674-5இல் பரமேச்சுரவர்மனால் பெருவளநல்லூரில் முற்றிலும் முறியடிக்கப்பட்டான். அவன்தன் காலத்தில் மறுமுறை பல்லவனைத் தாக்கவில்லை. அவன் தான் நடத்திய போரில் தன் மகனை உடன் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின் அவன் தன் இறுதிக் காலத்தில், தனக்குப் பின் பட்டம் பெற இருந்த தன் செல்வ மைந்தனை, தான் பெற்ற பெருந் தோல்விக்குப் பல்லவரைப் பழிவாங்குமாறு கட்டளை யிட்டிருக்கலாம். சிறந்த வீரர் பிறந்த மரபில் வந்த விநயாதித்தன், தந்தை கட்டளையை நிறைவேற்றச் சமயம் பார்த்திருந்தான்; தன் தந்தையைப் படுதோல்வி உறச்செய்த பரமேச்சுவரன் இறக்குந்தனையும் பொறுத்திருந்தான். என்னை? பரமேச்சுரன் காலத்தில் சாளுக்கியரது இரண்டாம் போர் இன்மையின் என்க. பரமேச்சுரன் இறந்து, இராசசிம்மன் கி.பி.690 இல் அரசன் ஆனதும், தன் தந்தை கட்டளைப்படி விநயாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான் என்று கோடலே பொருத்தமாகும்.

இது தனிப்பட்ட போர்

விக்கிரமாதித்தன் முதலில் தன் மகனைப் படையுடன் அனுப்பினான். அவனுக்குப்பின் தானும் ஒரு படையுடன் வந்தான். காஞ்சியை முற்றுகையிட்டு வென்றான் என்று இருவர் செயல்களும், கி.பி. 674 இல் நடந்ததாகக் கோடலே நன்று. ஏனெனின், இராசசிம்மன் காலத்தில் சாளுக்கிய பல்லவர் போர்நடந்ததாகத் தெரியவில்லை ஆதலால் என்க என்று குறித்தனர் ஓர் ஆசிரியர்.[5] இருவர் செயல்களும் ஒரே காலத்தில் நடந்திருக்குமாயின், அவை சாளுக்கியர் பட்டயங்களில் விளக்கமாக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்ஙனம் பெறாமை நன்கு ஆராயத்தக்கது. மேலும், தோற்ற அரசன் தன் மைந்தற்குக் கட்டளையிட்டுத் தம் மரபின் சிரவிழிற்கு ஈடுசெய்யத் தூண்டினான் எனக்கோடலே பொருத்தமானது. மேலும் தன் தந்தையும் பெருவீரனுமான இரண்டாம் புலிகேசியைப் பல இடங்களில் தோற்கடித்த பல்லவர் படையை எதிர்க்க, போர் அனுபவமே இல்லாத தன் மகனை விக்கிரமாதித்தன் முதல் முதல் அனுப்பினான் என்பதே பொருந்துவதாக இல்லை. அவனே பெரும்படைதிரட்டிக் கொண்டு தக்கவாறு வந்தான் என்றெண்ணுதலே நேர்மையானது. இங்ஙனம் தந்தை வந்த பிறகு, தந்தையின் கட்டளைப்படி பல்லவர் முதலியோரை அடக்கி அமைதியை நிலைநாட்ட விநயாதித்தன் வந்தான் என்னல், அவனை முதலில் அனுப்பினான் என்று கூறியதைவிட பொருத்த மற்றதாகும். தன் தந்தையான புலிகேசி பல்லவரால் அவமானம் அடைந்து இறந்தான் நாடு பாழாயிற்று: தானும் முயன்று இறுதியில் அவமதிப்பே பெற்றான். இந்த மனப்புண்ணினால் மடிந்த விக்கிரமாதித்தன் வீர உணர்ச்சித்தும்பப் ‘பல்லவரைப் பழிக்குப்பழிவாங்குவது உனது கடமை எனக் கட்டளையிட்டு இறந்தான் எனக் கொள்வதே பல்லாற்றானும் சிறப்புடையதாகும். இதனாற்றான், விநயாதித்தன், ‘தந் தந்தை கட்டளைப்படி’ பல்லவன் மீது படையெடுத்தான்.

பல்லவர்-சாளுக்கியர் போர்

விநயாதித்தன் கங்கபாடியைத் தாக்கினான். அப்பொழுது கங்கபாடியை ஆண்டவன் முதலாம் சிவமாறன் (கி.பி. 679-726) என்பவன்.[6] விநயாதித்தன் கங்கபாடியைத் தனதாக்கிக் கொண்டு. சிவமாறனைத்தனக்கு அடங்கி இருக்குமாறு செய்தான். அங்கிருந்து நேரே பல்லவ நாட்டைத் தாக்கினனோ. அல்லது முதலில் வடக்கிலிருந்து தாக்கினனோ தெரியவில்லை. போர் எங்கு எப்பொழுது நடந்தது என்பதும் தெரியவில்லை. விநயாதித்தன் ‘தந்தை கட்டளைப்படி’ படையெடுத்திருத்தல் வேண்டும்; இராசசிம்மன் அவன் கல்வெட்டுகள் கூறுமாறு போரில் அஞ்சாது பொறுமையுடன்நின்று போரிட்டு, இறுதியில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும், வேறு சான்றுகள் இன்மையால், இந்த அளவே இப்பொழுது கூறுதல் கூடும். ஆயினும், ஒன்று மட்டும் வற்புறுத்திக் கூறலாம். அஃதாவது இப் போர்மிகவும் கடுமையாக நடந்திருத்தல் வேண்டும் என்பது. என்னை? இராசசிம்மன் கல்வெட்டுகள் அவனைப் போரில் மனவுறுதி உடையவன்; போரில் களைப்படையாதவன் எனப் பலபடக் கூறலானும் (போருக்குப் பின்) கடுமையான பஞ்சம் - இவன் காஞ்சி நகரத்தையே துறக்கும் படியான கொடிய வற்கடம் - மூன்று ஆண்டுகள் இருந்தமையாலும் என்க. வற்கடம் இவனது ஆட்சித்-துவக்கத்திலேயே வந்துவிட்டதால், இப் போரும் இவன் பட்டம்பெற்ற ஆண்டிலேயே நடந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

போரின் பயன்

இப் போரினால் சாளுக்கியனுக்கும் நன்மை இல்லை. என்னை? விநயாதித்தன் எந்த நன்மையும்பெற்றதாகச்சாளுக்கியர் பட்டயங்கள் குறிக்காமையின் என்க. பல்லவனும் பெற்ற நன்மை ஒன்றுமில்லை. இவனுக்குமுன் இருந்த அரசர்கள் ஆற்றிய ஒயாப் போர்களால் துன்புற்ற பல்லவநாடு, இவனது ஆட்சியின் தொடக்கத்திலும் துன்புற நேர்ந்தது. பல துளி பெருவெள்ளமாதல் போல எல்லாப் போர்களின் விளைவும் திரண்டு கொடிய வற்கடமாக மாறியது.

பல்லவர் - கங்கர் போர்

மேற்சொன்ன போருக்கு முன்னோ பின்னோ இராசசிம்மன் கங்கநாட்டின்மீது படையெடுத்தான். இப் படையெடுப்பு பூவிக்கிரம கங்கன் (கி.பி. 650-670) பல்லவர்க்கு இழைத்த இன்னலுக்கேற்ற பரிசாகும் என்று கூறப்படுகிறது. முதலாம் சிவமாறன் பல்லவனை வென்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகின்றது.[7] உண்மை உணரக்கூட வில்லை.

இங்ஙனம் வடக்கிலும் மேற்கிலும் பகைவர் இருந்து இடர் விளைத்துவந்தமையாற் போலும், இராசசிம்மன் கல்வெட்டுகள் எல்லாம் இராசசிம்மன் போர்ச் சிறப்பையும் வீரத்தையும் நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தமையையும் தன் பெருமை குன்றாது பேரரசனாகவே இருந்து வந்ததையும் பலபடப் பாராட்டிக் கூறலாயின.[8]

கொடிய பஞ்சம்

இப் பேரரசன் காலத்திற்குமுன் பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் ஓயாத போர்கள் நடைபெற்றன அல்லவா?

மகேந்திரன்-புலிகேசிப்போர், நரசிம்மவர்மன்-புலிகேசிப்போர் - விக்கிரமாதித்தன் போர் ஆகியவற்றால் பல்லவநாடு என்னபாடு பட்டிருக்கும் போதாக்குறைக்கு இவன் காலத்தில் பல்லவர் சாளுக்கியர் போர், பல்லவர்-கங்கர் போர் நடந்தன. இவற்றால் பல்லவர் மூலபண்டராம் வற்றியது; பொருள்நிலை முட்டுப்பாடு எய்தியது. அதன் பயனாக நாட்டில் பெரிய வற்கடம் தோன்றியது. அது தோன்றியகாலம் இராசசிம்மன் காலமாகும். ‘அரசனே காஞ்சியைத் துறக்க வேண்டியவன் ஆயினான். அவன் அவைப் புலவரான தண்டி எனப்பாரும் கற்றோர் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பம் உழன்றனர் சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன; குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று,’ என்று தண்டி தாம் எழுதியுள்ள ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.

இக்கொடிய பஞ்சம் கி.பி. 686 முதல் 689 வரை (3 வருடகாலம்) இருந்ததாகச் சீன நூல் ஒன்று கூறுகிறது. இந்தக்காலம் இராசசிம்மன் காலமே ஆகும் அன்றோ? அப்பொழுது வச்சிரபோதி என்னும் பெளத்தப் பெரியார் ஒருவர் காஞ்சிக்கு வந்தனர். அவரை இரண்டாம் நரசிம்மவர்மன் (இராசசிம்மன்) வற்கடம் தீர இறைவனை வேண்டுமாறு வேண்டியதாக முற்சொன்ன சீனநூல் கூறுகிறது. அப் பெரியார் வேண்ட மழை வந்ததென்று அந்நூல் கூறுகிறது.[9] (இராசசிம்மன்) வற்கடம் தீர்ந்த பிறகு காஞ்சியில் இருந்த ‘கடிகையைச் செவ்வைப் படுத்தினான்’ என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறலைக் கொண்டும் பஞ்சக் கொடுமையை நன்குணரலாம்.

சிவபத்தன்

இராசசிம்மன் பஞ்சத்திற்குப் பிறகு, தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோவிலைக் காஞ்சியிற்கட்டினான்; பிறகு காஞ்சியில் ஐராவதேச்சுரர் கோவிலையும் கட்டினான்; மகாமல்லபுரத்தில் கடற்கரை ஒரமாக உள்ள கோவிலை அமைத்தான் பனமலைக் கோவிலையும் அமைத்தான்; ஒவ்வொரு கோவிலிலும் தன் விருதுப் பெயர்களை வெட்டு வித்தான். கைலாசநாதர் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 250 விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ‘ரிஷப லாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன், ஸ்ரீ ஆகமப் பிரியன்,[10] சிவசூடாமணி’[11] என்பன போன்றவை இவனது சைவ சமயப் பற்றைக் குன்றின் மீதிட்ட விளக்குப் போல ஒளிரச் செய்கின்றன. இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்னும் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[12] இவன் விருதுகளில் ஸ்ரீவாத்ய வித்யாதரன் என்பது ஒன்று. இதனால், இவன், ‘இசைக் கருவிகள் இசைப்பதில் விஞ்சையனை (வித்யாதரனை) ஒத்தனவன்’ (பெரிய இசைப் புலவன்) என்பதும் நன்கு புலனாகிறது.

“இவன், பரமேசுவரன் உறுப்புகள் யாவும் ஒன்றுகூடிமனிதனாகப் பிறந்தாற் போன்றவன், உடல் வலியிலும் பெரும் புகழிலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன். இந்த கூடித்திரிய சூடாமணி தோவர்க்கும் பிராமணர்க்கும் செல்வம் தந்தவன்; தன் கீழ் உள்ள நிலமகளை நான்மறையாளர் நுகருமாறு செய்தவன்”[13] என்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. மற்றொன்று, ‘பரம மகேசுவரனும் மகேந்திரனை ஒத்தவனுமான இராசசிம்மன் பிராமணர் கல்லூரியைத் திரும்பவும் அமைத்தான் கயிலாயத்தை ஒத்த கயிலாசநாதர் கோவில் என்னும் சந்திரசேகரர் கோவிலைக்கட்டினான்.” என்று கூறுகின்றது. பிறிதொரு கல்வெட்டில் பின்வரும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. “சிவபெருமானுக்குக்குகன் பிறந்தாற்போலப் பல்லவப் பேரரசனான உக்கிரண்டனுக்குச் சுப்பிரமணியன் போன்ற ‘அத்யந்தகாமன்’ என்னும் பல்லவ அரசன் பிறந்தான். இவன் சைவ நெறியில்[14] நடந்து மலத்தை எல்லாம் ஒழித்தவன்; இந்தக் காலத்தில் தேவரைக் கண்டவன் துஷ்யந்தன் முதலானோர் வான் ஒலி கேட்டதில் வியப்பில்லை. நற்குணம் பறந்தோடிப் போன இக்காலத்தில் அவ் வான் ஒலியை ஸ்ரீபரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பே. இவன், ‘கலி’ என்னும் மகரம் குடிகளை விழுங்கியபோது அவர்களைக் காத்தவன். இவன் பரந்து கிடக்கும் இச் சிவன் மந்திரத்தை (கோவிலை)க் கட்டினான். இஃது இவன் புகழைப் போலவும் நகையைப் போலவும் இருக்கின்றது. பாம்பரசனை அணியாகக் கொண்டவனும் தேவ அசுர கணங்கள் போற்றுபவனும் ஆகிய சங்கரன், இந்த இராசசிம்ம, பல்லவேச்சுரத்தில் நெடுங்காலம் குடிகொண்டு இருக்கட்டும். இடபத்தை அடையாளமாக உள்ளவன் இந்தக் கோவிலில் காட்சி கொடுப்பானாக. ரணசயனும், ஸ்ரீபரனும், சித்ரகார்முகனும், சிவ சூடாமணியுமாகிய பேரரசன் நெடுங்காலம் உலகத்தைக் காப்பானாக. இவன் சைவசித்தாந்தப்படி நடப்பவன்; மகாதேவனுக்கு அடியவன்.”[15]

ரணசயன்

இவனுக்கு இப்பெயர் எப்படி வந்தது? இவன் சிற்றரசனாக இருந்தபொழுது நடந்த விக்கிரமாதித்தன் படையெடுப்புப் போரில், தந்தைக்கு உதவியாக இருந்து சில இடங்களில் நடந்த போரில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அந்த உரிமை கொண்டே ரணரசிகனான விக்கிரமாதித்தனை வெற்றி கொண்டதால், தன்னை ‘ரண சயன்’ என்று கூறிக்கொண்டான் போலும்? இங்ஙனமே, நெல்வேலிப் போரில் தன் தந்தையான நெடுமாறனுக்குத் துணையாகச் சென்ற கோச்சடையன் (சடிலவர்மன்), தான் விக்கிரமாதித்தனை வெற்றிகொண்ட சிறப்பு நோக்கித் தன்னை ‘ரணதீரன்’ என்று கூறிக்கொண்டிருக்கலாம். இங்ஙனம் பொருள் கொள்ளின் வரலாற்று முறையில் இடர்ப்பாடின்மை அறிக.

வான் ஒலி கேட்ட வரலாறு

சென்னைக்கும் திருவள்ளூருக்கும்[16] இடையில் உள்ள ‘தின்னூர்’ என்பது இராசசிம்மன் காலத்தில் திருநின்றவூர் எனப்பெயர் பெற்று இருந்தது. அப்பதியில் நான்மறையாளர் மிக்கிருந்தனர். அவருட் பூசலார் என்பவர் ஒருவர். அவர் சிறந்த சிவபக்தி மிகுந்தவர்; தமது பத்தி மேலிட்டால் சிவன் கோவில் ஒன்றைக் கட்ட முற்பட்டார். பொருளுக்குப் பல இடங்களில் அலைந்தார். முன்சொன்ன (கி.பி. 686-689) பஞ்சக் கொடுமையால் பணம் கொடுப்பார் இல்லை. ஆயினும், அவர் அவா மிகுதியினால் இன்னின்னவாறு கோவில் அமைக்கவேண்டும் என்பதை மனத்தில் எண்ணினார்; இறுதியில் தம் உள்ள நினைவில் உருத்தெரியாத கோவிலை அமைத்தார்; சிவனாரை அக்கோவிலில் எழுந்தருளப் பண்ண ஒரு நாளைக் குறித்தார். அந்த நாளே கயிலாசநாதர் கோவிலைக் கட்டி முடித்த இராசசிம்மன் கும்பாபிடேகம் செய்ய எண்ணிய நன்னாள் ஆகும். அதற்கு முன்னாள் இரவில் இறைவன் அரசன் கனவில் தோன்றி, தாம் பூசலார் கட்டிய கோவிலில் அடுத்த நாள் எழுந்தருளப் போவதால், வேறு நாள் குறித்துக்கொள்ளும்படி கூறினார். அது கேட்டு வியந்த அரசன் திருநின்றவூர் சென்று பூசலாரைக்கண்டு, அவர்கட்டிய கோவிலைக் காட்டும்படி வேண்டினான். பூசலார் திடுக்கிட்டுத் தம் வரலாற்றை விளங்க உரைத்தார். அரசன் பெருவியப்பெய்தி அகக் கோவில் கட்டிய அன்பர்க்கு வணக்கம் செலுத்தி மீண்டான். இதுவே பெரிய புராணம் கூறும் பூசலார் புராணச் செய்தி ஆகும். இதில் ‘சிவனார் கனவிற் சென்று கூறினார்’ என்பது, கல்வெட்டில், ‘அரசன் வான் ஒலி கேட்டான்’ என்று கூறப்படுகிறது.[17]

கோவில்கள்

இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவிலைப்பற்றி இப்பகுதியின் இறுதியில் விளக்கமாகக் கூறுவோம். இங்கு இவன் கட்டிய பிற கோவில்களைப் பற்றிக் கவனிப்போம்: மாமல்லபுரத்தில் இப்பொழுதுள்ள கடலோரத்துக்கோவில் இவன் கட்டியதே யாகும். அங்கு இராசராசசோழன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், “கரையோரம் மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவை முறையே “கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரம், இராசசிம்ம பல்லவேச்சுரம், பள்ளிகொண்டருளிய தேவர் கோவில் என்பன” என்பது காணப்படுகிறது. முதல் இரண்டும் கடலுள் ஆழ்ந்து கெட்டன போலும் இவற்றைக்குறிக்க இரண்டு, பலிபீடங்களும் ஒரு கற் கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியபடி சிவலிங்கம் ஒன்று இருக்கின்றது. அது கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இரண்டாம் கோவிலும் சிவன் கோவிலாம். இப்பொழுது பலி பீடந்தான் இருக்கிறது. அதைச்சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படுகின்றன.[18] மூன்றாம் கோவிலே இப்பொழுது இருப்பது. அதுவே திருமங்கையாழ்வாரது பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளிகொண்டுள்ள பெருமான் என்பதுபொருள் ஆகும். இங்ஙனமே தரையில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் தல சயனம் எனப்படும். இக்கோவிலையும் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.[19] இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர மன்னரால் புதுப்பிக்கப்பட்டது.

இராசசிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பார், கடற்கரைக் கோவிலைப் பற்றிக் கூறியிருத்தல் படிக்கத்தக்கது - அது, “மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலிற் பள்ளி கொண்டுள்ள திருமால் படிம (மூர்த்த)த்தின் மணிக்கட்டு ஒன்று பின்னமுற்றது. அதைச் செப்பனிட்டவன் ஒரு சிற்பி. நாண் அவன் விருப்பப்படி அங்குச் சென்று பார்த்தேன். அப் பெருமான் திருவடிகளைக் கடல் அலைகள் மோதி அலம்பிக் கொண்டிருந்த காட்சி அழகியது. திடீரென அலைகளால் திருவடியண்டைத் தள்ளப்பட்ட செந்தாமரை மலர் ஒன்று கண் இமைப்பதற்குள் விஞ்சையை (வித்யாதர) உருப்பெற்றுப் பெருமானை வணங்கி விண்புக்க காட்சியை நான் நேரே கண்டு களித்தேன்”[20] என்பது.

இத் திருமால் கோவிலுக்கு முன்புறமாகச் சிவன்கோவில் ஒன்று இராசசிம்மனால் கட்டப்பட்டது. அதனால் திருமால் பாதங்களில் அலை மோதிய நிலை பிற்காலத்தில் மாறிவிட்டது. அப் பெருமான் படிமத்தின் மணிக்கட்டைச் சிற்பி செப்பனிட்டான் என்று தண்டி கூறுதலாலும், அப் படிமம் பல்லவரால் பிரதிட்டை செய்யப்பட்டது என்று தண்டி கூறாமையாலும், அப் பெருமான் படிமம் மிகப் பழைமையானதே என்று கொள்ளத் தடையில்லை.[21]

கடற்கரையில் இப்பொழுதுள்ள கோவில் ஆறு அடுக்குக் கும்ப (விமான) த்தை உடையது; உள்ளறை ஒன்றையே கொண்டது. அவ்வுள்ளறையைச் சுற்றித் திருச்சுற்று இருக்கிறது. அதில் ஒன்பது சிறிய கோவில்கள் இருக்கின்றன.

கடற்கரை ஓரமாக ஒரு கல் தொலைவில் உள்ள முகுந்த நாயனார் கோவிலும் இராசசிம்மன் கட்டியதே ஆகும். இஃது அருச்சுனன் தேரைப்போலச் சிறியதாக அமைக்கப்பட்டது. இதன் தூண்கள் உருண்டு எவ்வித வேலைப்பாடும் இன்றி இருக்கின்றன. தென் இந்தியக் கோவில்களில் இங்ஙனம் காணப்படல் இதுவே முதன் முறையாகும், வராக மண்டபக் குன்றின் மீதுள்ள ஒலக்கண்ணேசுவரர் கோவிலும் இராசசிம்மன் காலத்ததேயாகும். மாமல்லபுரத்திற்கு வடக்கே மூன்று கல் தொலைவில் சாளுவன் குப்பத்தில் உள்ள (1) புலிகக்குகை[22] (2) அதிரண சண்டன மண்டபம் என்பன இக்காலத்தனவே ஆகும். மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த காலத்தில் இக் குப்பம் அதனைச் சேர்ந்த பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். புலிக்குகையில் ஒன்பது புலிகள் (சிங்கங்கள்?). வாயைத் திறந்தவண்ணம் குகையின் முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தத் தெய்வத்தின் சிலை (துர்க்கை?) வைக்கப்பட்டதென்பது தெரியவில்லை. இதன் தோற்றம் விநோதமாக இருக்கின்றது. இரண்டாம் மண்டபம் சிவனுக்கு அமைந்த குகைக்கோயில் ஆகும். அது பேரளவில் மகேந்திரன் காலத்து அமைப்பைக் கொண்டதாகும். இவை இரண்டும் அண்மையில் இருப்பதால், ஒரே அரசன் காலத்தனவாகக் கொண்டனர் அறிஞர். புலிக் குகையில் கல்வெட்டு இல்லை. மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அதிரண சண்டன் என்னும் அரசன் பெயரைக் குறிக்கின்றன. இப்பெயர் இராசசிம்மன் கொண்டதாதலால். இக் கல்வெட்டுகள் அவன் காலத்தனவே எனக் கொள்ளல் பொருத்தமாகும்.[23]

விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் உள்ள பனமலையில் இராசசிம்மன் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதுதவிரக் காஞ்சிபுரத்தில் முன்னர்க் கூறப்பட்ட ஐராவதேச்சுரர்கோவில் இவனாற் கட்டப்பட்டதே ஆகும். இவன் மனைவியான ரங்கபதாகை என்பவள் கயிலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறுசிறிய கோவில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளார்.

கோவில் இலக்கணம்

இராசசிம்மன் கட்டிய கோவில்கள் தொலைவில் இருந்து நோக்கின், தருமராசர் தேரைப் போலவே தோன்றும் வரவரச் சிறுத்து உயரும் தட்டுகளைக் கொண்டவை. உள் அறை வேறு, கோபுரம் வேறு என்று இராது. நான்கு பக்கங்களிலும் உள்ள-புரைகளில் சிவலிங்கம் இருக்கும். கோவிலுக்குள் எழுந்தருளுவித்த லிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை; சில பக்கங்களில் காடி வெட்டியவை. சிவலிங்கத்திற்குப் பின் சுவர்மீது சோமாஸ்கந்தர் சிலை இருக்கும்.திருவாசிகள் ஒற்றைவளைவு கொண்டவை. இவை அனைத்தையும் விடச் சிறந்த அடையாளம் ஒன்றுண்டு. அஃதாவது, தூண்களுக்கு அடியில் பின் கால்கள்மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் வெட்டப்பட்டு இருப்பதே ஆகும். சில சிங்கங்கள் சுண்ணாம்பினால் அமைக்கப்பட்டிருக்கும்.
-------------

கயிலாசநாதர் கோவில்[24]

கோவில் இடமும் அமைப்பும்

இராசசிம்மன் கட்டிய உலகம் போற்றும் கயிலாச நாதர் கோவில் நகரத்தனி மேற்றிசையில் கழனிகளுக்கு இடையில் இருக்கிறது. இதற்குப் பின்புறம் சிறிது தொலைவில் இன்றைய கச்சி நகரின் மேற்கு எல்லை முடிவு பெறுகிறது. ஆயின் இது கட்டப்பட்ட காலத்தில், இந்தக் கோவில், நகரத் தெருக்களுக்கு இடையிற்றான் இருந்தது என்பது பல கல்வெட்டுகளால் தெரிகின்றது. இக் கோவிலுக்குப் புறமதில் திருமடைவளாகம் முதலியன இருந்தன. ஏராளமான நிலங்கள் இருந்தன. கோவிலைச் சுற்றிலும் மாடவீதிகள் இருந்தன.[25] இராசசிம்மன், மாடெல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வம் வகுத்தல் செய்தான்’ என்று சேக்கிழார் பெருமான் கூறியது முற்றும் உண்மையே ஆகும்.

இதற்கு எதிரில் ஓர்அழகிய குளமும் நந்தியும் இருக்கின்றன. அவை இரண்டும் இன்றுள்ள கோவில் வாயிலுக்கு ஏறத்தாழ 100 அடித்தொலைவில் உள்ளன. நந்தி பெரியது; கல்லால் ஆயது. அஃது உள்ள மேடை மீது இராசசிம்மனுக்குரிய சிங்கத் தூண்கள் குறைந்து நின்ற வண்ணம் இருக்கின்றன. இவற்றை நோக்க, நந்திக்கு மேல் கற்கூரை இருந்திருத்தல் வேண்டும்என்பது புலனாகிறது. இன்றுள்ள வாசலுக்கு எதிரில் கோவிற் கிணறு ஒன்றும் இருக்கின்றது. கோவிலுக்குப் பின்புறத்திலும் ஒரு கிணறு உள்ளது. இவை இரண்டும் பண்டைக் கிணறுகளே. மேலும் வாயிலை அடுத்து. இன்றுள்ள மதிற் சுவருக்கு வெளியே வலப்பக்கம் இரண்டும் இடப்பக்கம் ஆறுமாக எட்டுச் சிறிய கற்கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் லிங்கங்கள் இருக்கின்றன. இவற்றையும் முன் சொன்னவற்றையும் நோக்க, கோவிலின் வெளிச்சுற்று ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பதும், கோவில் மிகப் பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலனாகும்.

இன்றுள்ள கோவிற் பகுதிகள்

கோவில் வாயில் சிறியது. கோவில் நீள் சதுரமாக இருக்கிறது. வாயிலைத் தாண்டியவுடன் எதிரேதனித்துள்ள சிறியகோவில் ஒன்று இருக்கிறது. அதற்கு இருபுறங்களிலும் உட்செல்ல வழிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக உட்செல்லின், நீள நாற்கோண (சதுர)க்கோவில் இருக்கின்றது. அதனைச்சுற்றிலும் ஏறத்தாழ ஆறடி அகலுமுள்ள திருச்சுற்று அமைந்துள்ளது. திருச்சுற்றில் உள்ள உட்புறச் சுவர்கள் பல சிறு கோவில்களாகவே காட்சியளிக்கின்றன. இறையிடம், முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை உடையவை. முன்மண்டபத்தைச் சேர்ந்த முற்பகுதி பொதுமுறையான (சாதாரண) மண்டபமாகவே இருக்கிறது. இறையிடத்து உட்சுவர்களிலும் புறச்சுவர்களிலும் சிற்பங்கள் பலவாக இருக்கின்றன. இறையிடத்தைச் சுற்றியுள்ள வெளிச்சுவரில் சிறு கோவில்கள் பல காணப்படுகின்றன. இறையிடத்துக்கு மேல் கண்ணைக் கவரும் அழகிய கும்பம் இராசசிம்மன் நினைவையும் பல்லவர்காலக் கட்டடக் கலையையும் உணர்த்தி நிற்கின்றது.

முன்கோயில்

வாயிலுக்கு எதிரே உள்ள சிறிய கற்கோவில் பல படிக்கட்டுகளை உடையது.உயர்ந்த இடத்தில் பெரிய லிங்கம் நான்கரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது பதினாறு பட்டைகளைக் கொண்ட லிங்கம். லிங்கம் உள்ள இடத்திற்குப் பின்னுள்ள சுவரில் அம்மையப்பர் அரியணையில் அமைந்துள்ள கோலம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உள்ளறையை அடுத்த வெளி மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று சடையை விரித்த சிவனார் உருவம்; மற்றொன்று சிவனார் எட்டுக் கைகளுடன் ‘லதாவ்ரிசிக’ நடனம் செய்தலைக் குறிப்பது அஃதாவது, இடக்கால் முன்புறம் மடித்து ஊன்றி, வலக்கால் பின்புறம் மடித்துத்துக்கி, இடக்கைகளில் ஒன்றுதலை முடிக்குமேல் தூக்கியவண்ணம் நடிக்கும் பொழுது இடக்கைகள் இரண்டு பந்தை எறிந்து பிடித்தல். இது விந்தையான நடனவகை ஆகும். இந்த நடனவகையையே இக் கோவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. இவ் விந்தையான நடனவகையே இராசசிம்மனைக் களிப்பித்தது போலும் இக் கோவிலின் புறச்சுவரில் அழகிய லிங்கங்கள், யாழ் (வீனை) வாசிக்கும் விஞ்சையர்கள், தக்கிணாமூர்த்தி, எட்டுக் கைகளை உடைய அகோர வீரபத்திரர் முதலியவரின் பல உருவங்கள் பொலிகின்றன. லிங்கத்திற்குப் பின்னுள்ள புறச்சுவரில் அழகிய அம்மை அப்பர் அரியணைமீது அமர்ந்துள்ள கோலம் சால அழகியது; இருவருக்கும் இரண்டு குடைகள் கவிக்கப்பட்டுள்ள இச் சுவருக்கு மேலுள்ள கும்பத்தில் சிவனாரது யானைக்கை நடனம் நேர்த்தியாக ஒவியஞ் செய்யப் பட்டுள்ளது. கும்பத்தின் ஏனைய பக்கங்களிலும் பிறநடன வகைகள் காட்டப்பட்டுள்ளன.

சுற்றுச் சுவர்கள்

முற்கோவிலுக்கு இடப்புறமுள்ள சுற்றுச் சுவரில் பதினொருவர் ஒருபொதுப் பீடத்தில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள சிற்பம் பல்லவ அரசரைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. அதற்கு நேர் எதிரில் வலப்புறச் சுவரில் இங்ஙனமே பன்னிருவர் உருவங்கள் தோன்றுகின்றன. இவை அன்றி நந்தி, அம்மையப்பர் கோலம், முதலியவற்றைக் குறிக்கும் சிற்பங்கள் பலவாகும்.

இறை இடம்

கயிலாசநாதரைக் குறிக்கும் பெரிய லிங்கம் பதினாறு பட்டைகளை உடையது; எட்டடி உயரம் உள்ளது. இதன் பின்சுவரில் சோமாஸ்கந்தப் படிமம் இருக்கின்றது. இறை யிடத்தைச் சுற்றிவரும் திருச்சுற்று ஏறத்தாழ இரண்டடி அகலம் உடையது. இடப்பக்கம் உள்ள புழையில் படுத்து நுழைந்து ஊர்ந்து வலப்பக்கம் தரையை ஒட்டினாற் போல் உள்ள சிறிய வழியே வெளிவருதல் வேண்டும். இறையிடத்தை அடுத்துள்ள வலப்பக்க அறையில் பழுதற்ற மிக்க அழகொழுகும் நடனச் சிற்பம் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. வேறு அம்மை அப்பர் சிற்பங்கள் உள. இடப்புற அறையிலும் நடனச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றுட் சில பழுது பட்டிருக்கின்றன. இந்த இரண்டு அறைகளும் பூட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபம்

இறையிடத்திற்கு எதிரில் உள்ள மண்டபம் அழகர்னது. தூண்கள் வேலைப்பாடு கொண்டவை; பிற்காலச் சோழரின் தூண்கட்கு மூலமாக அமைந்தவை மண்டபத் தரையிலும் கூரைமீதும் கல்வெட்டுகள் இருக்கின்றன.இம்மண்டபப் பகுதியைச் சேர்ந்ததே வெளி மண்டபம் ஆகும். அவ்விடத்தில் பதினாறு தூண்கள் இருக்கின்றன. அவற்றில் பல கெட்டு விட்டன; கல்வெட்டுள்ள தூண்கள் ஐந்து அவற்றில் பழுதுற்றிருப்பவை மூன்று.

உள்ளறை மண்டபப் புறச்சுவர்

இறையிடத்துச் சுற்றிலும் சுவரில் சிறு கோவில் அமைப்பு பல இடங்களில் உள்ளது. ஒருபுறம் சிவனார் நடனம் அல்லது அமர்ந்த கோலம் அல்லது வேறொரு கோலம் காணப் படுகிறது. அதன் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பிரமன் - நாமகள், திருமால் - திருமகள் இவர்கள் சிவனாரை வணங்குதல் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. ஊர்த்துவத் தாண்டவத்தைக் குறிக்கும் சிற்பங்கள் சில உள. நந்தி நடனம், கணங்களின் நடனம், விஞ்சையர் யாழ் வாசித்தல் முதலியன காணலாம்.[26] மண்டபச் சுவரில் நீண்ட வடிகாதுடைய ஆண் உருவம் தலைமீது முடிதாங்கிஉள்ளது. அதற்கு இருபுறத்தும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. கீழே ஓர் ஆண் உருவம் (மகன்?) இருக்கிறது. இச் சிற்பம் இராசசிம்மன் குடும்பத்தைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. இதனை அடுத்துப் பதினாறு கைகளையுடைய காளி சிங்கத்தின்மீதுள்ள கோலம் அழகாகச் செய்யப்பட்டுள்ளது.

சிறு கோவில்கள் 58

திருச்சுற்றுப் பாதையை அடுத்த கோவில் மதிற் சுவர் உட்பக்க முழுவதும் சிறு கோவில்கள் 58 உள்ளன. இரண்டு கோவில்கட்கு இடையில் சுவரில் அம்மனைக்குறிக்கும் பல திறப்பட்ட சிற்பங்களே பலவாகக் காண்கின்றன. சில அம்மை அப்பரைக் குறிப்பன. அம்மன் இடக்கையில் கிளியேந்தி அமர்ந்துள்ள நிலை கீழே இரண்டு யானைகளின் தோற்றம்- தோழிப்பெண் தோற்றம் இவைகண்ணைக் கவர்வனவாக உள்ளன. சிறு கோவில்கள் எனப்படும் மாடங்களில் பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக யமனை உதைத்தவரலாறு, பரமன் - பார்த்திபன் போர், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, நால்வர்க்கும் அறம் உரைத்த காட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழிபெற்ற வரலாறு, இராவணன் வழிபட்ட ஆன்ம லிங்கத்தை அனுமார் வழிபட்டுக் கவர்ந்து செல்லல் முதலிய வரலாறுகளைக் குறிக்கும் சிற்பங்கள் அழகாக அமைந்துள்ளன. அம்மை அப்பர் திருமணம், பிரமன் நாமகள் திருமணம், திருமால் - திருமகள் திருமணம் இவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பராசக்தியின் எழுவகை உருவங்கள் ஓரிடத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு எதிர்புறச் சுவரில் உருத்திரர் பதினொருவர் உருவங்கள் இருக்கின்றன. அம்மை யாழ் வாசிப்பது சில சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது. சிவனார் சடை முடி மிகத் தெளிவாகப் பல சிற்பங்களில் விளக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் எல்லாவற்றிலும் பின் வருபவை பலவாகக் காணப்படுகின்றன. அவை (1) யாழ் வாசித்தல், (2) கையை முடிக்குமேல் உயர்த்திவைத்துச் சிவனார் நடித்தல் (3) பிள்ளையார், (4) கற்றைவார் சடை என்பன.

எல்லாச் சுவர்களிலும் சிங்கத்தூண்கள் இருக்கின்றன. சிங்கங்கள் மீது வீரர்கள் அமர்ந்துள்ளனர். கோவிலின் புறச்சுவர்ப் பக்கத்தும் இக் காட்சியைக் காணலாம். சிங்கங்கள் பின் கால்கள் மீது நிற்பன. சிற்பங்கள் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1250 ஆண்டுகட்கு முன் செய்யப்பட்டனவாக இருந்தும், இன்றும் அவை தம்மைப் பார்ப்பவரைப் புன்முறுவலோடு வரவேற்பன போல இருக்கின்றன நிலை உள்ளத்தை இன்புறுத்துகிறது. சிறப் அழகில் ஈடுபட்டகண்கள், இக்காட்சி இன்பத்தை நன்கு நுகரலாம். இங்குள்ள வாயிற்காவலர் அனைவரும் இரண்டு கைகளை உடையவரே ஆவர்.

கும்பம்

இக் கும்பம் இராசசிம்மன் கட்டிய மாமல்லபுரத்துக் கரையோரக் கோவில் கும்பத்தை ஒத்தது. ஆனால், அளவிற் பெரியது. இதன் வளர்ச்சியே இராசராச சோழன் தஞ்சையிற் கட்டிய பெரிய கோவில் கும்பம். இந்தக்கும்பத்தில் சிங்கத்தலைகளே காணப் படுகின்றன.

கல்வெட்டுகள்

கைலாசநாதர் கோவில் நிறையக் கல்வெட்டுகள் இருகின்றன.[27] அவை கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவர், சோழர் கல்வெட்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் கோவில் கட்டிய இராசசிம்மன் கல்வெட்டுகளும், அவன் மகனான மூன்றாம் மகேந்திரன், அவன் மனைவி ரங்கபதாகை முதலியோர் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரைவென்று தொண்டைநாட்டைஆண்டமுதற் பராந்தகன், இராசராசன். இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் இவர் தம் கல்வெட்டுகள் பலவாகக் காண்கின்றன. சோழர் காலத்தில் இக் கோவில், மாடவீதிகள், வெளிச்சுற்று, மடவளாகம், மாடவீதி, மடங்கள் முதலியவற்றையும் அளவிடற்கரிய செல்வத்தையும் பெற்றிருந்தது என்பது இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திற் காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக் கல்வெட்டும் இருக்கின்றது.அதனில், இராசசிம்மன் கட்டிய கோவிலில் உள் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்த வல்லபன்.அதனைக் கவராது, அப் பெருமானுக்கே விட்டு விட்டான். என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையைச் சாளுக்கியருடைய வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களும் பகர்கின்றன.[28]

சிறப்பு

‘கயிலாசநாதர் கோயில் திருக்கயிலையின் அளவைக் கொண்டே கட்டப்பட்டதாகும்’ என்று விபுலானந்த அடிகள் போன்றார் கூறுகின்றனர். கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு இதற்கு மறைமுகமாகச் சான்று பகர்கின்றது. இராசசிம்மன் தன்னை ‘வாத்ய வித்யாதரன்’ என்பதற்கேற்ப இக் கோவிலில் யாழ் வாசிக்கும் உருவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவன் இசை, நடனம், சிற்பம், ஓவியம் இவற்றிற் பேரறிவு படைத்த பெருவேந்தன் என்பதற்குக் கயிலாசநாதர்கோவில் ஒன்றே போதிய சான்றாக அமைந்துள்ளது. இக் கோவில் ஏறத்தாழ வைகுந்தப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருத்தல் வியத்தற்குரியது. இங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் சுவர்களில் இருத்தல் போலவே அக் கோவிற் சுவர்களிலும் இருத்தல் இங்கு நினைக்கத்தகும். சுருங்கக் கூறின் கயிலாசநாதர் கோவில் பல்லவரது சிற்பக்கலையை உலகத்திற்கு அறிவிக்க எழுந்த சிற்பக்கலைக்கூடம் என்னலாம்.

வடமொழிப் புலவன்

இராசசிம்மன் பேரவையில் தண்டி என்னும் வடமொழிப் புலவர் இருந்தமை முன்னரே கூறப்பட்டதன்றோ? பல்லவர் வடமொழி வாணரை நன்கு போற்றியவர் ஆவர். சிம்மவிஷ்ணு பாரவியைப் போற்றினான்; பாரவியிடம் மகேந்திரவர்மன் படித்துச் சிறந்த வடமொழிப் புலவன் ஆயினான் (?) அவருடைய பெரிய பெயரர் தண்டி என்பதால், பாரவிக்குப் பின் அவர் மகனும், பெயரனும் முறையே பல்லவர் அவைப்புலவராகவும் வடமொழி ஆசிரியராகவும் இருந்திருக்கலாம். தண்டி எழுதிய ‘காவ்யா தர்ஸம்’ என்னம் அணி இலக்கணத்தில் ‘இராசவர்மன்’ என்னும் சைவ அரசனைக் குறிப்பிட்டுள்ளார்: காஞ்சியைப் பற்றியும் பல்லவரைப் பற்றியும் ஆங்காங்குக் குறித்துள்ளார்.[29] இவற்றறோடு அவர் செய்த அவந்தி சுந்தரி கதா என்னும் நூலில் பல்லவன் காலத்து வறுமையை விளக்கியுள்ளார். இவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து

நோக்கின், அவரால் குறிக்கப்பெற்ற ‘இராசவர்மன்’ இராசசிம்மனே என்பதும், அவர் பல்லவனது அவைப்புலவர் என்பதும் பிறவும் நன்குணரலாம். ‘காவ்யாதர்ஸ்த்தின் ஐந்தாம் பகுதி, காஞ்சியில் உள்ள அரச மாணவனுக்குக் கற்பிக்கவே செய்யப்பட்டது’ என்னும் செவிவழிச் செய்தியையும், ‘அப் பகுதியை நன்கு ஆராயின், தண்டியிடம் படித்த அரசமாணவன் இராசசிம்மனே என்பது தெளிவாகிறது’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறுதலையும், இவற்றுடன் கைலாசநாதர்கோவில் கல்வெட்டுகளில் சிலேடைப் பொருள் கொண்ட கல்வெட்டு ஒன்று இராசசிம்மனைப் பற்றியது என்பதையும் நோக்க - இராசசிம்மன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதை நன்குணரலாம். அத்துடன், இவன் நாகரிகக் கலைகளான இசை நடனம், ஓவியம், சிற்பம் இவற்றிலும் வல்லவனாக இருந்தான் என்பதும் நன்கு புலனாகிறது.

நாடக அறிஞன்

வடமொழியில் ‘பாஷர்’ என்பவர் பல நாடகங்களை விரிவாக வரைந்துள்ளார். பிறகு அவை நடிப்பதற்கேற்ற முறையிற் சுருக்கி வரையப்பட்டன. அவற்றின் இறுதியில், ‘பல்லவன் அவையில் நடித்துகாட்ட இங்ஙனம் தாயாரிக்கப் பெற்றவை’ என்பது கண்டுள்ளது. இப் பல்லவன் இராசசிம்மனாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், இராசசிம்மன் நாடகக் கலையிலும் பண்பட்ட அறிவுடையவன் என்பது புலனாகும்.

இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 705–710)

இவன் இராசசிம்மன் மகன். இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, வீரட்டானேச்சுரர் கோவிலில் காணப்படுகிறது. அதற்குப் பிற்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்காமையால், இவன் சிறிது காலமே அரசாண்டான் என்று கொள்ளவேண்டும். காசக்குடிப் பட்டயம் இவன் கலியை வென்றான்; அமைதியான வாழ்க்கையை நடத்தினான்; பிரகஸ்பதி விதித்த வழியில் குடிகளை நடத்தினான்; உலகத்தைக் காத்தான்[30] என்று கூறுகிறது. வேலூர் பாளையப் பட்டயம், இவன் கலியை வென்றவன் மது கூறிய விதிகளின்படி நாட்டை ஆண்டவன் என்று கூறுகிறது.[31] இவன் காஞ்சியில் உள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலைக் கட்டியவன் என்று அறிஞர் அறைகின்றனர்.[32] திருவதிகையில் உள்ள சிவன் கோவிலையும் கற்களால் அமைத்தவன் இவனே என்றும் கருதுகின்றனர்.[33]
--------

[1]. Int.Ant, Vol.XIX. pp.151-152
[2]. Ep.Ind. Vol. IX.p.200.
[3]. Ind Ant. Vol. VI pp.87-88.
[4]. S.I.I vol Nos 24.25, etc.
[5]. Heras’s “Studies in Pallavas History’ pp.48–50.
[6]. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.49.
[7]. MVK Rao’s “Gangas of Talaked,’ pp49-50.
[8]. இதுகாறும் கூறியவற்றை ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து முடிவு காண்பாராக.
[9]. Dr.C.Minakshi’s “Administration and SocialLife underthe Pallavas’ pp.114-118.
[10]. இவனுக்கு முற்பட்ட அப்பர் காலத்திலே ஆகமங்கள் எனப்படும் தந்திர நூல்கள் இருந்தன என்பது அப்பர் பதிகத்தால் அறியக்கிடக்கிறது. 'தக்கன்தந்திரம்' ஆகமநூல் அறியாது மந்திரநூற்படி(வேதவிதிப்படி) வேள்வி செய்து சிவபிரானை அவமதித்ததால் அழிந்தான், என்று அப்பர் கூறல் காணத்தக்கது.
“இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திரம் மறைய தோதி வானவர்வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய்தாரும் சாய்க்காடு மேவி னாரே”
[11]. இவனும் தன் தந்தையைப்போலவே கண்மணியால் செய்யப்பட்ட லிங்கத்தை மகுடமாகத் தாங்கி இருந்தான் போலும்!
[12]. I.S.I.S. Vol.I pp.14-18.
[13]. தந்திரம் & Tantra (Agama)
[14]. Ibid.p.12
[15]. SII vol I p. 20.
[16]. இதன் சரியான பெயர் திரு.எவ்வுள்.
[17]. இந்த நுட்பமான செய்தி கி.பி. 12 ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் பெருமானுக்கு எங்கனம் தெரிந்தது? அவர் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டைப் படித்தே இந் நுட்பமான செய்தியை எழுதியிருத்தல் வேண்டும் என்னல் மிகையாகாது. அவர் அரசரிடம் உயர் அலுவலாளராக இருந்தவர் ஆதலின் கல்வெட்டில் நிரம்பிய புலமையுடைராய் இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே அவர், கல்வெட்டுகளிற் காணப்படும் பல குறிப்புகளைத் தம் நூலுட் பல இடங்களிற் குறித்துச் சொல்லலைக் காணலாம்.
[18]. R .Gopalan’s “Pallavas of Kanchi,” p.110 and Eq-Report No.961 of 1913, pp.88-89.
[19]. ‘சலசயனம், தலசயனம்’ என்பவற்றின் பொருள் தெரியாமல் ஈராஸ் பாதிரியார், ‘மல்லைத்தலசயனம் என்பது மகாபலிபுரத்தின் பழைய பெயர்’ என்று தமது ஆராய்ச்சி மிக்க நூலில் (பக். 70) தவறாக எழுதிவிட்டனர். இதனை மறுத்துத் தமிழ்நாட்டிற் சிறந்த கல்வெட்டறிஞராகவுள்ள திரு. இ.௵.இராமச்சந்திஞ் செட்டியார், ஆ.அ.ஆ.ஃ., அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார் & Q.J.M.S. Vol.27.Nos. land 2.
[20]. A.Rangaswami Saraswathi’s article on “The Age of Baravi and Dandin” in Q.J.M.S.Vol.XIII, pp.674-679.
[21]. M.Raghava “Iyengar’s “Alvargal Kala nilai.’ p. 143.
[22]. இவை சிங்கங்களே ‘சிங்கக் குகை’ என்பதே பொருத்தமுடையது - “Indian Architecture’ by A.V.T.Iyer. Vol.II-B, p.192.
[23]. Rev. Heras’s “Studies in Pallava History,’ pp.97-99.
[24]. நான் இக்கோவிலை (10-1-43) விளக்கமாகக் காண உதவி புரிந்த பெரியார் இக் கோவில் கண்காணிப்பாளராகவுள்ள காஞ்சிபுரம் சி.குமரகாளத்தி முதலியார் ஆவர்.
[25]. S.I.I.Vol. Nos.-86-88: 140 - 150.
[26]. இவை பற்றிய விளக்கத்தை, ‘இசையும் நடனமும்’ என்ற தலைப்பிற் காண்க.
[27]. Vides II. Vol.INos, 24-30, 82-88, 144-150.
[28]. Ep. Ind. Vol.V p.200. Vol.IX p.200
[29]. இம் முறையைப் பின்பற்றியே இராசசிம்மன் சிறப்புகள் வரும் இடங்களில் எல்லாம் இந்நூலைத் தமிழ்ப்படுத்திய புலவர்தம் காலத்தரசனான அனபாய சோழன் சிறப்பைக் குறிக்கும் பாடல்களைத் தாமே கட்டி மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பது அறியத்தகும். சான்றாக ஒன்று காண்க:
‘என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ
பொன்னே அநபாயன்பொன்னெடுந்தோள்! - முன்னே
தனவேயென்றாளும் சயமடந்தை தோளாம்
புளவேய் மிடைந்த பொருப்பு.’
[30]. S.I.I. Vol.II p.357.
[31]. S.II. Vol. II p.510.
[32]. R. Gopinatha Rao’s “History of Sri. Vaishnavas’ p.17.
[33]. C.S. Srinivasachari’s “History and Institutions of the Pallavas’ p.15.
----------

13. புதிய பல்லவர் மரபு

சில செய்திகள்

இரண்டாம் பரமேசுர வர்மனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்து விடுகிறது. இரண்டாம் பரமேசுவர வர்மனுக்குப் பின் புதிய மரபைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மன் என்பவன் பட்டம் பெற்றதாகச் சில பட்டயங்கள் பகர்கின்றன. உதயேந்திரப் பட்டயம், இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச்சித்திரமாயன் என்னும் மைந்தன் இருந்தான்; அவனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டுமென்று தமிழ் அரசர் முயன்றனர் என்று கூறுகிறது. கொற்றங்குடிப் பட்டயம், இரண்டாம் நந்திவர்மனுக்கு முன் இரண்யவர்மன் என்பவன் ஆண்டதாகக் கூறுகிறது. ஆனால், தண்டந் தோட்டப் பட்டயம் இதனைக் கூறாமல், இரண்யவர்மன் உலக நன்மைக்காகப் பிறந்தான் தன் பகைவரைக் காட்டிற்கு விரட்டினான்; குடிகளைச் செம்மையுறப் பாதுகாத்தான் எனக் கூறுகிறது. இந்த இரண்யவர்மன் யாவன்? கீழே உள்ள அரச மரபைக் காண்க:

------------------ scheme 7_1 here -----------

வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள்

காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள வரிசை வரிசையான சிற்பங்கள் இக்கால நிலையைப் பெரிதும் விளக்குகின்றன. அவற்றின் கீழ்ச் சில செய்திகள் செதுக்கப் பட்டுள்ளன. முதற் சிற்பம் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்பைக் குறிக்கிறது. அங்கு அமைச்சர், கடிகையார், மூலப்பிரகிருதி, இரண்யவர்மன் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.நான்காம் சிற்பத்தில் ஸ்ரீமல்லன், இரண்மல்லன், சங்கிராம மல்லன், பல்லவ மல்லன் இந்நால்வரும் இரண்ய வர்மன் பிள்ளைகளாகக்

குறிக்கப்பட்டுள்ளனர். அங்குப் ‘பரமேசுவரன் நான் போவேன் என்று தொழுது நின்ற இடம்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது. பிறகு இரண்யவர்ம ராசனும் தரணி கொண்ட போசரும் நகரத்தாரும் காடக முத்தராயரும் குறிக்கப்பட்டுள்ளர்; பின்னர் இளம் பல்லவ மல்லன் ‘நந்திவர்மன்’ என்னும் பெயரால் அபிடேகம் செய்யப்பெற்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.[1]

இச் சிற்பங்களை ஒன்று முதல் இறுதிவரை நன்கு கவனிப்போமாயின், பல்லவர் மரபை முதலிலிருந்து நன்கு விளக்கிச் செல்லலைக் காணலாம். இவற்றைப் பதிப்பித்த ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளதைக் கீழே காண்க:- “இரண்டாம் பரமேசுவர வர்மன் இறந்த பிறகு கடிகை யாரும் மூலப்பிரகிருதியாரும் அமைச்சரும் இரண்ய வர்ம மகாராசனைக் கண்டனர்; தமக்கோர் அரசனைத் தர வேண்டினர். உடனே இரண்யவர்மன் தன் மைந்தர் நால்வரையும் அழைத்து, ‘யார் அரசராக விரும்புகிறீர்?’ என்று கேட்டான். முதல் மூவரும் மறுத்தனர். பன்னிரண்டு வயதுடைய பல்லவமல்லன்தான் அரசனாக விழைவதை வணக்கத்தோடு கூறினான். தரணிகொண்ட போசர்[2] தனது இசைவைத் தருமாறு இரண்யவர்மனை வற்புறுத்தினார். பிறகு தந்தையும் தரணிகொண்ட போசரும் தந்த கைப்படைகளையும் தாண்டிக் காஞ்சிக்கு வந்தான். அவன் வருதலை அறிந்த பல்லவடி அரையன் பெருஞ்சேனையுடன் எதிர்கொண்டு அவனை யானைமீது அமர்த்திஅழைத்து வந்தான். பல்லவ மல்லனை நகரச் செல்வரும் ‘ காடக முத்தரையர்’ முதலிய சிற்றரசரும் பிறரும் வரவேற்று அபிடேகம் செய்தனர்; நந்திவர்மன் என்னும் பெயரை அபிடேகப் பெயராகச் சூட்டினர். விடேல் விடுகு, கத்வாங்கதான், ரிஷபலாஞ்சினன் என்னும் பட்டத்திற்குரிய விருதுப் பெயர்களை வழங்கினர். நந்திவர்மன் அரசன் ஆனான்.[3]

இரண்யவர்மன்

கொற்றங்குடிப்பட்டயம், இரண்யவர்மன் அரசனாக இருந்தான் என்று கூறலும், தண்டன் தோட்டப் பட்டயம் இரண்யவர்மன் பெருவீரன் - பகைவரை விரட்டியவன் என்று பலபடக் கூறி, அவன் அரசன் எனப் பொருள்படுமாறு கூறலும் ஆராயற்பாலன. ஆனால், பல்லவர் வழிமுறை கூறும் பல பட்டயங்கள் அவன் பெயரை (அரசனாக)க் குறிக்கவில்லை. எனவே, இவ் விருவகைப் பட்டயங்கட்கும் மதிப்பைத் தந்து நோக்குழி, ‘இரண்யவர்மன்’ தன் மகனான (பன்னிரண்டு வயதுடைய) பல்லவ மல்லன் பட்டம் பெற்ற கால முதல் வயது வரும் வரை அவன் சார்பாக நின்று, பல்லவ நாட்டைப் பாதுகாத்தான் எனக் கோடலே பொருத்தமுடையதாகும்.

புதிய மரபு ஏன் வந்தது?

சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மன். பீமவர்மன் மரபில் வந்தவன் இரண்யவர்மன். இரண்யவர்மன் மகன் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன். இம் மரபினரே 8, 9 ஆம் நூற்றாண்டுகள் முடியப் பல்லவ நாட்டை ஆண்டனர். சிம்மவிஷ்ணு மரபினர் ஆட்சி இரண்டாம் பரமேசுவர வர்மனோடு முடிவுற்றுவிட்டது. அவனுக்குச் ‘சித்திரமாயன்’ என்னும் மைந்தன் இருந்தான். ஆயின் அவன் அரசனாகப் பொதுமக்கள் விடவில்லை. ஏன்? பல்லவ நாட்டிற்கு வடமேற்கே பிறவிப்பகைவராக இருந்த சாளுக்கியர் எந்த நிமிடத்திலும் படையெடுக்கலாம் என்னும்பெருங் கவலை இருந்தது. அத்துடன், தெற்கே பெருவீரராக இருந்து நாடு கவரும் வேட்கையில் பாண்டியர் முனைந்திருந்தனர். இங்ஙனம் வடக்கே சாளுக்கியர் அச்சமும் தெற்கே பாண்டியர் அச்சமுமே அமைச்சர் முதலிய பொறுப்புள்ளவர் மனத்தைக் கலக்கிக்கொண்டிருந்தது. இரண்டாம் பரமேசுவர வர்மனே போரில் இறந்தான் என்பது எண்ணவேண்டு வதாக இருக்கிறது.[4] காலஞ் சென்ற அரசனின் மகனான ‘சித்திரமாயன்’ குழந்தையாக அல்லது சிறுவனாக, அல்லது பொறுப்பற்ற வாலிபனாக இருந்திருக்கலாம். மிகப்பெரிய பேரரசிற்கு அவன் தகுதியற்றவன் என்று அரசியல் தலைவர்கள் கருதினர் போலும் மேற்சொன்ன இரு பேரரசரான சாளுக்கியரையும். பாண்டியரையும் எதிர்த்து நிற்கும் மன ஆற்றல் பெற்ற அரசனே தமக்கு வேண்டும் என்று எண்ணிய அத்தலைவர்கள், அரசியல் அறிவும் ஆண்மையும் படைத்த இரண்யவர்மனை அரசனாகுமாறு தூண்டினர். அவன் மறுத்துத் தன் வீரமகனை அரசு கட்டிலில் அமர்த்தினான் போலும்!

பன்னிரண்டு வயதுடைய இளைஞனான பல்லவ மல்லன் நான் அரசனாவேன் என்று தந்தையிடம் கூறினது நோக்கற்பாலது. தனக்கு முன்னோர் மூவரும் மறுத்ததை அருள் நோக்கங் கொண்ட அவன் தன் இளமையும் கருதாமல் ஏற்றது. அவனது பெருந்தன்மையையும் அரசியல் பொறுப்புணர்ச்சியையும் உணர்த்துகிறது. அவன் பிறர்க்கு உரிய பட்டத்தை வலிதிற் கவரவில்லை; தானாக வந்ததைச் சிறுவயதில் ஏற்றுங்கொண்டான். அவன் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாலும் கடமை உணர்ந்த குடிமக்களாலும் பல்கலை விற்பன்னரான கடிகையாராலும் பேரரசைப் பண்பட நடத்திய அமைச்சராலுமே தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இப்புதிய பல்லவ மரபரசர் இவராவர்:
------------------scheme 7_2 here -------------

References :
[1]. S.I.I. Vol. IV pp. 10-12
[2]. மாகாணத்தலைவர்(Governor) Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country. pp.75-77.
[3]. Ep. Indica, Vol. XVIII, p.177
[4]. Dr. N. Venkataramanayya’s article on the Date of Pallava Malla in J.O.R. Madras.
[5]. இவன் கி.பி. 726இல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் கூறுவர். Vide. Dr. N.R. Ramanayya’s article on “The Date of Pallava Malla’.

------------

14. இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 710-775)

வரலாற்று மூலங்கள்

இவனது ஆட்சிக் காலத்தின் 65ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதனால், இவன் ஆட்சிக் காலம் ஏறக்குறையை 65 ஆண்டுகள் என அறிஞர் கொண்டுள்ளனர். இவ்வளவு நீண்ட காலம் ஆண்ட வேறு பல்லவ அரசன் இல்லை. இவன் 12 வயதில் பட்டம் பெற்றது. ஆட்சிக் காலம் நீண்டமைக்கொரு காரணமாகும். இவன் கால வரலாற்றை அறியத்துணைபுரிவன: (1) பல்லவர் பட்டயங்கள், (2) பாண்டியர் பட்டயங்கள், (3) சாளுக்கியர் பட்டயங்கள், (4) வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள - சிற்பங்களும் கல்வெட்டுகளும், (5) கங்கர் கல்வெட்டுகள், (6) இராட்டிர கூடர் பட்டயங்கள், (7) திருமங்கையாழ்வார் பாடல்கள் ஆகும். பல்லவர் பட்யங்களுள் இவன் காலத்தன ஐந்து. அவை (1) இவனது 21ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த உதயேந்திரப் பட்டயம். (2) இவனது 22ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த காசக்குடிப் பட்டயம். இவனது 58ம் ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்ததண்டன்தோட்டப்பட்டயம், (4) இவனது 61ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள கொற்றங்குடிப் பட்டயம், (5) இவனது 65ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள மகாபலிபுரத்துக் கல்வெட்டு என்பன. சாளுக்கியச் சான்றுகள் ஆவன:-(1) கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்கிரமாதித்தனது கல்வெட்டு, (2) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரிப் பட்டயம், (3) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட கேந்தூர்ப் பட்டயம் என்பன. பாண்டியர் பட்டயங்கள்:(1) வேள்விக்குபடி பட்டயம், (2) சின்னமனூர்ப் பட்டயம் என்பன. இங்ஙனமே கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆய்ந்து இப் பல்லவப் பேரரசர்கள் வரலாறு காண்போம்.

பல்லவர்-பாண்டியர் போர்
போருக்குக் காரணம்

(1) பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற் கெல்லாம் சிறந்த காரணம் கொங்குநாட்டு உரிமையாகும். கொங்குநாடு ஒருகாலத்திற் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்திற் பல்லவரிடமும் கைமாறிவந்தன. நந்திவர்மன்கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான். அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான். (2) அடுத்த காரணம் சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணமடைந்திருந்தது. இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியர் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.[1]

போர்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம் பழைய காலத்தில் பகைவர் தென்புறக் கோட்டையாக இருந்தது. அதற்கு நந்திபுரம் என்பது பெயர். அங்குப் பெருமாள் கோவில் உண்டு. அதனைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அந் நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்த சமயம் பார்த்துப் பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் சென்று நந்திபுரத்தை முற்றுகை இட்டான். பாவம்! பாண்டியன் படையெடுப்பை எதிர்பாராத நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக் கொண்டான்.

நல்ல காலம்! வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதய சந்திரன் என்னும் படைத்தலைவன், பெருஞ்சேனையுடன் நந்திபுரத்திற்கு விரைந்தான். அவன் ‘வில்வலம்’ என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவன். அவன் விரைந்து சென்று, அல்லிமலர் இதழ் போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் பிறரையும் கொன்றான்;

பாண்டியருடைய படையை நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்துர்முதலிய இடங்களில் வென்றான்.[2] பாண்டியர் பட்டயங்கள், ‘நெடுவயல், குறுமடை மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் என்னும் இடங்களில் பாண்டியன் வெற்றிபெற்றான். குழும்பூரில் நடந்த போரில் பாண்டியன் பல்லவனுடைய கரிகளையும் பரிகளையும் கைக்கொண்டான்’[3] என்று கூறிகின்றன. இவற்றுள் மன்னிக்குறிச்சி என்பது அறந்தாங்கித் தாலுக்காவில் உள்ள மணக்குடி ஆகலாம்; நிம்பவனம்-வேப்பங்காடு, சூதவனம்-கோவிலூர் (தேவாரகாலத்துத் திருவுசாத்தானம்) சங்கரகிராமம் - சங்கரனார் குடிக்காடு ஆகலாம். இவை யாவும் தஞ்சைக் கோட்டத்திலேயே பெரும்பாலும் இருப்பவை; சில புதுக்கோட்டைச் சீமையில் இருப்பவை.

இந்த இடங்களில் இருதிறத்தாரும் வெற்றி பெற்றதாகக் கூறல் எங்ஙனம் பொருந்தும் எனின், பொருந்தும் என்றே கூறலாம். பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்; இறுதியில் உதயசந்திரன் சில இடங்களில் வெற்றி பெற்றான் எனக் கோடலே நேரிது, உதயசந்திரன் வருவதற்குமுன் சில இடங்களில் போர் நடந்திருக்கும்; முற்றுகைக்குப் பின் பல இடங்களில் சேனை சிதறிப் போர் செய்திருத்தல் இயல்பே. ஆங்காங்கு நடந்த போர்களில் ஆயினும், இறுதியில் பல்லவன் வெற்றிபெற்றான் என்பதில் ஐயமில்லை.[4]

உதய சந்திரன்

இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி செய்ய விழைந்து, குதிரையை வடக்கே அனுப்பினான். அதுவேங்கி நாடு சென்றது. அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன்

பல்லவன் பெருமையை ஒப்புக் கொண்டான். ஆயின், அவனுக்குக் கீழ்ப்பட்ட பிருதிவி- வியாக்கிரன் என்பவன் அக் குதிரையைக் கட்டிவிட்டான். உடனே உதயசந்திரன் அங்குச் சென்று, அச் சிற்றரசனைப் போரில் முறியடித்து நாட்டைவிட்டுத் துரத்தி மீண்டான். தோற்றவனுடைய விலை உயர்ந்த அணிகலன்களைப் பல்லவனுக்குப் பரிசளித்தான்.[5] இச்சந்தர்ப்பத்திற்றான். உதயணன் என்ற சபர அரசனை உதயசந்திரன் ‘நென்மலி’ (நெமிலி) என்ற இடத்தில் போரிட்டு வென்றான். [6]இங்ஙனம் பல்லவ மல்லனது நீண்ட ஆட்சிக்கும் பெற்ற வெற்றிகட்கும் உதயசந்திரன் சிறந்த காரணமானவன் என்பதில் ஐயமில்லை.

பல்லவர்-சாளுக்கியர் போர்கள்
1 . போருக்குக் காரணங்கள்

(1) இரண்டாம் புலிகேசி காலமுதல் பட்டத்திற்கு வந்த சாளுக்கியர் அனைவரும் பல்லவர்க்கு ஆற்றார் ஆயினமை ஒரு காரணமாகும். (2) இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746) சிறந்த போர்வீரன். அவன் தன் நாட்டை முதலிற் கொங்குநாடு-கங்கநாடுவரை விரிவாக்கினான். பல்லவ மல்லன் கொங்குநாட்டு உரிமையைப் பாண்டியனை வென்று கைக்கொள்ள முயன்றான். தனது குடிப் பகைவனான பல்லவன் தன் பேரரசின் தென்பகுதி எல்லைவரை செல்வாக்குப் பெறுதல் தனக்குக் கேடு

பயக்கும் என்பதை விக்கிரமாதித்தன் உணர்ந்தான். இவ்விரு காரணங்களாலும் அவன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்.[7]

பட்டயங்கள்

இப் போரைப் பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்றேனும் கூறுகின்றிலது. இதற்குக் காரணம் இம் முறை வெற்றி பெற்றவர் சாளுக்கியர் ஆதலே ஆகும். இரண்டாம் கீர்த்தி வர்மன் (கி.பி. 746-757) வெளியிட்ட (முன் சொன்ன) வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களே இப் போர் நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன. சாளுக்கியர் மரபில் வந்த அரசரது பெருமையைக்குலைத்த பல்லவர் மரபைப் பழி வாங்க இரண்டாம் விக்கிரமாதித்தன் துணிந்தான்; உடனே பெரும் படையுடன் காஞ்சியை நோக்கி விரைந்தான்; போரில் பல்லவமல்லனைத் தோற்கடித்தான்; பல்லவன் ஓடிவிட்டான். எங்கே? ஒருகோட்டைக்குள் ஓடிவிட்டான். இதனால், காஞ்சி சாளுக்கியன் வசப்பட்டது. சாளுக்கியன். பல்லவனுடைய கடுமுகவாத்தியம், சமுத்திர கோஷம், கத்வாங்கக் கொடி, போர் யானைகள், சிறந்த விலையுயர்ந்த மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றினான். பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சி நகரத்தை அழிக்காமல் உள்நுழைந்தான். இதே சமயத்தில் அவன் மகனான கீர்த்திவர்மன் தந்தை இசைவுபெற்று ஓடிய பல்லவனைத் துரத்திச் சென்று, பல இடங்களில் முறியடித்தான். இதற்கிடையில் விக்கிரமாதித்தன் கயிலாசநாதர் கோவில் செல்வத்தைப் பார்வையிட்டு வியந்து, அதனை (தான் எடுத்துக்கொள்ளாமல் அக் கோவிலுக்கே விட்டுவிட்டான்.) இதனைக்கயிலாசநாதர்கோவிலில் உள்ள அவனது (பழையகன்னடத்தில் எழுதப்பட்ட) கல்வெட்டே கூறுகின்றது.[8] அவன் ஏழைகட்கும் மறையவர்க்கும் பொன்னை வழங்கினான்.[9]

காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன், ‘எப்பொழுது அதனைவிட்டுச் சென்றான்? ஏன் சென்றான்?’ என்பன நல்ல கேள்விகள் அல்லவா? அவற்றுக்கு விடை காணல் வேண்டும். நந்திவர்மன் சாளுக்கியவனை விரட்டினான் என்பது உண்மையாயின், பல்லவர் பட்டயம் அதனைச் சிறப்பாகக் கூறியிருக்கும். அங்ஙனம் கூறாமையின், நந்திவர்மன் விக்கிரமாதித்தனை விரட்டவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது எனக் கொள்ளின், இருவருமே பட்டயங்களில் இதனைக் கூறியிருப்பர். அங்ஙனம் கூறவில்லை. எனவே, சாளுக்கியன் தனக்கு உட்பட்டு இருக்கத்தக்க பல்லவ மரபின்ன ஒருவனைத்தேடி முடிசூட்ட முனைந்திருக்கலாம்; சித்திரமாயன் இறந்தான் ஆதலின், வேறு ஆள் அகப்படவில்லை. அவனே பல்லவநாட்டைப் பிடித்துச் சேய்மையிலிருந்து ஆள்வதும் இயலாததன்றோ? பதுமை போல ஒருவனை அரியணையில் ஏற்றிவிட்டு அவன் வாதாபி சென்றிருந்தால், மறு நிமிடமே பெருவீரனான பல்லவமல்லன் அவனைக் கொன்றிருப்பான். நெடுந் தொலைவில் உள்ள அவன், தொண்டை நாட்டைப் பிடித்து அடக்கி ஆள்வது என்பது எளிதானதன்று. இவை அனைத்தையும் நன்கு எண்ணிப் பார்த்தே அப் பேரறிஞன், காஞ்சியைக் கைப்பற்றிப் பல்லவனை முறியடித்தலிலே மகிழ்ச்சி அடைந்தான்; காஞ்சி நகரத்தாரை மகிழ்வித்தான்; கோவில்கட்கு மதிப்பளித்தான்; உலகம் உள்ளளவும் தன் பெருந்தன்மையை நிலைபெறச் செய்தான். இச் செயல்களில் மகிழ்ச்சியுற்ற அவன், தன் நாடு மீண்டான் எனக் கோடலே பொருத்தமான முடியாகும்.[10]

உண்மை என்ன?

நந்திவர்மன் சேர சோழ பாண்டியருடன் கடுமையான போரில் ஈடுபட்டிருந்த காலத்திற்றான் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான்;[11] அங்கும் பெயரளவில் இருந்த பல்லவப்

படையை வென்று, அமைதியாகக் காஞ்சிக்குள் நுழைந்தான், சிறிது காலம் கடிகையார், கோவிலார் மனமகிழப் பரிசுகள் தந்து தங்கி இருந்தான். இந்த அளவே சாளுக்கியர் பட்டயங்கள் கூறுகின்றன.

நந்திபுரக்கோட்டை முற்றுகை தீர்ந்ததும், உதயசந்திரன் தமிழரசரைக் குழும்பூர், நெடுவயல் முதலிய பல ஊர்களில் போரிட்டுத் துரத்திச் சென்றான். அப்பொழுது நந்திவர்மன் எங்கு இருந்தான்? என்ன செய்தான்? என்பன இது காறும் விளக்கப்பெறவில்லை. இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 723இல் பட்டம் பெற்றவன்: நந்திவர்மன் கி.பி.717இல் பட்டம் பெற்றவன். அவன் பட்டம் பெற்ற போது வயது பன்னிரண்டு ஆதலின், கி.பி 733இல் ஏறத்தாழ 28 வயதுடையவனாக இருந்தான் ஆவன். இப் படையெடுப்பின்போது ஏறத்தாழ 30 வயதெனக் கொண்டாலும் அவன் வீர வயதுடன் விளங்கினான் என்பதில் ஐயமில்லை அவன் தனது 61ஆம் ஆட்சி ஆண்டில் (தனது 72ஆம் வயதில்) வெளியிட்ட கொற்றங்குடி பட்டயத்தில் தான் சிறுவனாக இருந்தபொழுதே சேர. சோழ, பாண்டிய, களப்பிர, வல்லபரை வென்றனன் என்பது பொன்போலக் காணப்படுகிறது.[12] உதயசந்திரன் தென்னாட்டுப் போர் முடிந்தபிறகு வடநாடு சென்று கோதாவரி அருகில் சபர அரசனையும் பிருதுவி- வியாக்கிரன் என்பவனையும் வென்றான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. அஃது அரசனது 21ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 738இல்) பொறிக்கப்பட்டது. 738இல் வடநாடு செல்லத்தக்கவன்மை பல்லவர் படைத்தலைவர்க்கு எப்படி வந்தது? அங்கு அவன் சாளுக்கியனை வென்றதாகவும் இல்லை.

போர் நடந்த காலம்

இவற்றை எல்லாம் நடுவுநிலையாய் ஆராயின், பல்லவர் பாண்டியர் சாளுக்கியர் போர் விக்கிரமாதித்தன் பட்டம் பெற்ற கி.பி. 733க்கும் உதயேந்திரப் பட்டயம் வெளிவந்த கி.பி. 738க்கும் இடையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது விளங்கும். இக்காலத்தில் (தனது 28-33 வயதுக்குள்) நடந்த போர்களையே நந்திவர்மன் கொற்றங்குடிப் பட்டயத்திற் குறிப்பிட்டான். இப் போர் கி.பி. 733ஐ அடுத்து நடந்த தென்றே வக்கலேரிப் பட்டயமும் குறிக்கிறது. ஆதலின், இப் போர் நடந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 733-735 என்னலாம்.

போர் நடந்ததா?

இரண்டாம் விக்கிரமாதித்தன் மகனான இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரி, கேந்தூர்ப்பட்டயங்கள், விக்கிரமாதித்தன் நந்திவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்; தானங்கள் செய்தான் ஒன்றையும் கைக்கொள்ளவில்லை என்றே குறிக்கின்றன. நந்திவர்மன் பட்டயம் ‘அவன் வல்லபனை வென்றான்’ எனக் கூறுகிறது.

இவற்றை நன்கு ஆய்தல் வேண்டும். எதிர்ப்பவர் இன்றிக் காஞ்சியைக் கைப்பற்றிய - அல்லது சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலப் பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன் தானாகப் போனபிறகு பல்லவமல்லன் காஞ்சிக்கு வந்தான் என்பது பல்லவனது வீரத்தை அவமதித்துக் கூறும் கூற்றாகும். வந்து நாட்டைப் பிடித்தவன் அதனை நுகராது போய்விட்டான் என்பதும் பொருத்தமற்ற கூற்றாகும்.

நடந்த முறை

ஆதலின், பல்லவன் நந்திபுரத்திலிருந்து வந்து விக்கிரமாதித்தனைப் போரிட்டுத் துரத்தியிருத்தல் வேண்டும். விக்கிரமாதித்தனுக்குப் பின் புதிய படையுடன் வந்த அவன் மகனான கீர்த்திவர்மன், களைப்புற்ற பல்லவனைத் துரத்திக் காஞ்சிக்குள் நுழைந்திருக்கலாம்; பல்லவன் ஒரு கோட்டைக்குள் ஒளிந்திருக்கலாம்; இந்நிலையில் உதய சந்திரன் துணைக்குப் போந்து, கீர்த்திவர்மனையும் விக்கிரமாதித்தனையும் துரத்திச்சென்று பல்லவ நாட்டுக்கப்பால் விட்டிருத்தல் வேண்டும்; விட்டு, முன்

சொன்னவாறு வேங்கிப் பகுதியில் இருந்த அரசரை வென்று மீண்டனனாதல் வேண்டும்.

முடிவு

இங்ஙனம் கொள்ளின், (1) பல்லவன் பாண்டியரோடு போர் செய்தபொழுது விக்கிரமாதித்தன் காஞ்சியை எளிதிற் பற்றி அங்கு இன்பமாகக் காலம் கழித்தான்; (2) உதய சந்திரன் தமிழரசரைத் துரத்திக்கொண்டு தெற்கே போன பொழுது, பல்லவன் தன்னிடம் இருந்த படையுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்துத் துரத்தினான்: (3) அவ்வமயம் விக்கிரமன் மகனான இளவரசன் கீர்த்திவர்மன் பெரும் படையுடன் வந்து பல்லவனைக் காஞ்சியினின்றும் விரட்டிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். (4) அந் நெருக்கடியான நிலையில் உதயசந்திரன் போந்து கீர்த்திவர்மனைத் துரத்திச் சென்று பல்லவ நாட்டிற்கப்பால் விட்டனன்: (5) உதயசந்திரன் அப்படியே வடக்கே சென்று வேங்கிப் பகுதியில் வெற்றி கண்டு மீண்டனன் என்னும் செய்திகளை முறைப்படி உணரலாம். இதற்கு உதயேந்திரன் கொற்றங்குடி, வக்கலேரிப் பட்டயக் குறிப்புகள் அனைத்தும் செவ்வையாகப் பொருந்தி வருதலையும் காணலாம். அறிஞர் நன்கு ஆராய்வாராக.

படையெடுப்பின் பயன்

விக்கிரமாதித்தன் சிறந்த கலையுணர்வு உடையவன்; அவன் கயிலாசநாதர் கோவிலைக் கண்டு வியந்தான்; அதன் கும்ப அமைப்பை உளங்கொண்டான். காஞ்சியிலிருந்து சிற்பிகளைக் கொண்டு சென்றான் போலும் தன் நாட்டில் கயிலாசநாதர் கோவில் கும்பம் போன்ற கும்பங்களைக் கொண்ட கோவில்களைப் பல்லவர் முறையில் அமைத்தான். அவனுக்குப்பின் அந்நாட்டிற் கட்டப்பட்ட கோவில்களிலும் இப் பல்லவர் முறையைக் கண்டு களிக்கலாம்.[13]

2
இரண்டாம் கீர்த்திவர்மன் கி.பி. 748இல் சாளுக்கிய அரசனானான். அவன் பட்டயத்தில், அவன் இளவரசனாக இருந்தபொழுது நடந்த போரே குறிக்கப்பட்டுள்ளது. அவனது ஆட்சியில் கி.பி.757இல் பல்லவர் - சாளுக்கியர் போர் பலமாக நடந்தது. இம்முறை நந்திவர்மன் கங்கரையும் பாண்டியரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். இப்போர் வெம்பை என்ற இடத்தில் முற்றுப்பெற்றது. கீர்த்திவர்மன் போரில் இறந்தான்; அவனுடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது.[14]

[15]இரட்டர் - பல்லவர் நட்பு

இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியில் இரட்ட மரபினன் ஒருவன் சிற்றரசனாக இருந்தான். அவன் பெயர் தந்திதுர்க்கன் என்பது.அவன் நந்திவர்ம பல்லவன் அன்பைப் பெற்றுச் சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றினான்; அவன் கி.பி.725முதல் 758வரை இருந்த இரட்ட மரபின் முதல் மன்னன் ஆவன்.

தந்தி துர்க்கன் என்பவன் வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன்.[16] அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[17] அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.[18] எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்பது கொள்ளவேண்டுவதாக உள்ளது. ‘நந்திவர்மன் மனைவி ரேவா, அவள் மகன் தந்திவர்மன்’ என்று வேலூர் பாளையப்பட்டயம் பகர்கின்றது. இவற்றை நன்கு ஆராய்ந்த அறிஞர், ‘இரட்ட அரசனான வைரமேகன் காஞ்சியைக் கைப்பற்றியதும் பல்லவ மல்லன் அவனிடம் பெண் பெற்று மணந்திருத்தல் வேண்டும். அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டிருத்தல் வேண்டும் என்று முடிபு கொண்டனர்.[19]

முதலாம் கிருஷ்ணன்

இவன் தந்தி துர்க்கனின் சிற்றப்பன். தந்தி துர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு இறந்தான். அவற்குப் பிள்ளை இன்மையின், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் கி.பி. 758 முதல் 772 வரை அரசனாக இருந்தான் இவன் ‘கன்னர தேவன்’ என்ற பெயரையும் கொண்டிருந்தான். இவன் தனது ‘தலகோன்’ பட்டயத்தில், தன்னைக் ‘காஞ்சிக் குணாலங்கிருதன்.....’ என்று குறித்துள்ளான். இதனால், இவன் காஞ்சி அரசனை வென்றவனாக இருக்கலாம் என்று அல்டேகர் கருதுகிறார்.[20]

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம்நந்திவர்மன் காலமெல்லாம்போர்களிலேயே கழிந்தது என்னலாம். அவன் ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியைக்கங்க அரசனிடமிருந்து கைப்பற்றினான் என்று ஒரு பட்டயம் பகர்கின்றது.[21] பல்லவனுடன் போரிட்ட கங்க அரசன் ஸ்ரீ புருஷன் என்பவன். அவன் கி.பி. 7.26 முதல் 776 வரை ஆண்டான்.[22] இப் போர் பல்லவனது 58ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட தண்டன் தோட்டப் பட்டயத்தில் காணப்படலால், பல்லவ மல்லனது முதுமைப் பருவத்தில் இது நடந்ததாகல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது.

இப் பேரைப்பற்றிக் கங்கர் கல்வெட்டுகள் கீழ்வருமாறு கூறுகின்றன; “ஸ்ரீ புருஷன் மகன் பல்லவனை ‘விளர்த்தி’ என்ற இடத்தில் வென்றான். ஸ்ரீ புருஷன் ‘காடுவெட்டி’ என்பானைக் கொன்று அவனது பட்டத்தைத் தான் பெற்றுப் ‘பெருமான் அடி’ எனப்பட்டான்; ‘பீமகோபன்’ என்றும் பெயர் கொண்டான். இவன் செய்த போரில் வெற்றி மகள், இவன் வாளால் துணிக்கப்பட்ட யானைகளின் குருதியில் நீராடினான்.[23]

பட்டயக் குறிப்புகள்

முதலாம் பரமேச்சுரவர்மன். இராசசிம்மன் இவர் தம் கல்வெட்டுகளிற் போலவே பல்லவ மல்லனது காசக்குடிப் பட்டயத்திலும் சிலேடைப் பொருள் கொண்ட அடிகள் பல வருகின்றன. அவற்றிலிருந்துநாம் சிறப்பாக அறியத்தக்கது-பல்லவர் ஆகமங்கள் படித்தவர் என்பதே ஆகும். பிற்காலப் புலவர் பலர் நாட்டு வர்ணனையில் கூறும் சிறப்புகள் எல்லாம் காசக்குடிப் பட்டயத்தில் காணலாம். உதயேந்திரப் பட்டயத்தால் நாம் அறியத்தக்க புதிய செய்தி ஒன்றுண்டு.அஃதாவது பல்லவ மல்லன்தான் மறையவர்க்கு நிலம் கொடுத்தபோது இரண்டு நீர்யந்திரங்கள் அளித்தான் என்பது. தொண்டை மண்டலம் ஆற்றுப் பாய்ச்சல் குறைந்த நாடாதலின். இயந்திரங்களை நிறுத்தி நீரை இறைத்துப் பயிர்வேலை செய்யப்பட்டது என்பது இதனால் தெரிகிறது. மேலும், காசக்குடிப் பட்டயத்தால் நாம் அறியத்தக்கது மற்றொன்று உண்டு. அஃதாவது பட்டயம் முதலில் வடமொழியில் எழுதப்பட்டது; அம் மொழி மக்களுக்குத் தெரியாது ஆதலின், தமிழில் எழுதப்பட்டது என்பதே. இதனால் பல்லவர் காலத்தில் மக்கள் எல்லோரும் அறிந்திருந்த மொழி தமிழ் ஒன்றே என்பது தேற்றமன்றோ? தண்டன் தோட்டப் பட்டயத்தில், பாரதம் படித்துச் சிற்றுாரார்க்குப் பொருள் விளக்கினவனுக்கு நிலம் விடப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்குமுன் இங்ஙனம் பரமேச்சுரவர்மன் செய்தான் என்பதைப் படித்தோம் அல்லவா? இங்கு இதனைப் பல்லவமல்லன் செய்ததாக அறிகிறோம். இப் பாரதக் கதை சொல்வோர் பல்லவரால் வழிவழி ஆதரிக்கப்பெற்றனர் என்று கோடலில் தவறில்லை. இவற்றால் நம் நாட்டில் பாரதக்கதையைக் கூறும் பழக்கம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் (அப்பர், சம்பந்தர் காலத்திலே) உண்டானது என்பதை அறியலாம். அவன் ‘கலியை ஒழித்தவன் (கலிபல மர்த்தனன்)’ என்று உதயேந்திரப்பட்டயம் கூறியுள்ளதாலும் இவன் ஆட்சியில் போர்களே நிரம்பி இருந்தன ஆதலாலும் நாட்டில் வறுமை தோன்றியிருத்தல் இயல்பே. அதனை இவன் அரும்பாடுபட்டு ஒழித்தான் எனக் கொள்ளலாம்.

சமயப் பணி

இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம் ‘அரி சரணபரன்’ என்றும், தண்டன் தோட்டப் பட்டயம் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை’ என்றும் கூறுகின்றன. இக் குறிப்புகளோடு, திருமங்கையாழ்வார் பாடியருளிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும் பரமேச்சுர விண்ணகரப் (வைகுந்தப் பெருமாள் கோவில்) பதிகத்தையும் கொற்றங்குடிப் பட்டயத்தில் பெருமாள் வணக்கமாகவுள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின், பல்லவ மல்லன் சிறந்த வைணவன் என்பது நன்கு விளங்கும். இவனே வைகுந்தப் பெருமாள் கோவிலை நலமுற அமைத்தவன்; அதற்கு வேண்டும் நலங்கள் பலவாகச் செய்தான். இவன் ஆட்சியிற் பல கோவில்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவற்றுள் (1) கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோவிலும், (2) திருவதிகை வீரட்டானேச்சுரர் கோவிலும், (3) புதுக்கோட்டையில் உள்ள குன்றாண்டார் கோவிலும் சிறந்தன. இவன் பல்வேறு கோவில்கட்குத் தானங்கள் பல செய்துள்ளான். காஞ்சியில் உள்ள முத்தீச்சுரர் கோவில் இவன் காலத்தில் பெருஞ் சிறப்புற்றது.

இவன் காலத்தில் ஆர்க்காடு நகர்க்கு அருகிலுள்ள பஞ்ச பாண்டவர் மலையில் ஒரு குகை சமணர்க்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியார்க்குப் படிமம் எடுக்கப்பட்டடது’ என்பது காணப்படுகின்றது. இதனால் இப் பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். புத்தரும் அக்காலத்தில் இருந்தனர் என்பதைத் திருமங்கை ஆழ்வார் பதிகங்கள் வலியுறுத்துகின்றன.[24]

கல்வி நிலை

பல்லவ மல்லனிடம் கொடை பெற்ற மறையவர் அனைவரும் சிறந்த கலை விற்பன்னராவர்; நான்கு வேதங்கள். ஆறு அங்கங்கள் முதலியவற்றில் துறை போனவர் செய்யுள், கூத்து, இதிகாசம், கதைகள் இவற்றில் வல்லவர்; எல்லாவகைச் சடங்குகளிலும் தேர்ச்சியுற்றவர் நல்ல ஒழுக்கம் உடையவர். இவரை, ‘இருள் அகற்றும் ஒளி அனையர்’ என்று காசக்குடிப் பட்டயம் முதலியன கூறுகின்றன. ‘பல்லவ மல்லனே சிறந்த கல்விமான் படைக்கலப் புலவன்: இசை விருப்பன்: செய்யுட்கள் செய்வதில் வால்மீகி போன்றவன்; வில்வித்தையில் இராமன். அரசியலில் பிரகஸ்பதி’ எனப் பலபடப் பட்டயங்கள் பகர்கின்றன.

பல்லவப் பேரரசு

இரண்டாம் நந்திவர்மன், தன் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் பல போர்கள் செய்தனன் ஆயினும், தன் பெருநாட்டில் ஒரு சிறு பகுதியையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவனது தமிழ் மண்டலம் வட வேங்கடம் முதல் புதுக்கோட்டைவரை பரவி இருந்தது. இவனது பேரரசு முன்னிலும் மிக்க வன்மை பெற்று விளங்கியது. நாட்டில் கல்வி நிலை, சமய நிலை முதலியன நன்றாய்ப் பரவின என்னல் மிகையாகாது.

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசன் சீபுருடன் (கி.பி. 726-788), சாளுக்கியமன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746), இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746-757) ஆவர். இவருடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது. இச் சாளுக்கியரை வென்ற இராட்டிர கூடருள் தந்தி துர்க்கன் (கி.பி. 725-758), முதலாம் கிருட்டினன் (கி.பி. 758-772). இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 772-730) என்போர் இவன் காலத்தவராவர். பாண்டியருள் முதலாம் இராசசிம்மன் என்ற பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765), நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) என்பவர் இக்காலத்தவராவர்.
-----------
References :
[1]. Ep. Ind Vol. DK p.205, M.V.K. Rao’s “Ganges of Talakad’ p.58.
[2]. S.I.I. Vol. II No.14. இச்சங்கிரகிராமம் நெடுமாறன் காலத்துச்சங்கிரமங்கை போலும்!
[3]. A.K.N. Sastry’s “Pandian Kingdom’, p.57.
[4]. பெரிய திருமொழி - பரமேசுவர விண்ணகரப் பதிகம்.
[5]. S.II. Vol. II p.372.
[6]. இப் போரில் தொடர்புகொண்ட உதயனன் வடநாட்டான். அவனை வெல்லப் பல்லவன் முனைந்தது தந்திதுர்க்கன் தூண்டுதலால் ஆகும். இருவரும் சிறந்த நண்பர். தந்திதுர்க்கனுக்குப் பல்லவன் போரில் உதவிசெய்தான் எனக் கொள்வதே பொருத்தமாகும் & Wide Altekar’s “Rashtrakutas and their Times’ p.37.
[7]. M.V.K. Rao’s “Ganga’s of Talakad, p.53.
[8]. Ep, Indica, Vol III, p.360.
[9]. Ep. Indica, Vol. IX, pp.205, 206.
[10]. Rev. Heras’s “Studies in Pallava History'p.59.
[11]. M.V.R. Rao’s “Gangas of Talakad’, p.53.
[12]. Ep. Ind Vol.XVIII, pp. 115-120.
[13]. Heras’s studies in Pallava History p.60
[14]. Ep. Ind Vol.IX p.24; Q.J.M.S. Vol.XIII, pp. 581-88, MVK Rao’s “Gangas of Talakad’.
[15]. இரட்டர்-இரட்டிரகூடர்
[16]. E.I. Vol.IV p334.
[17]. E.I. Vol.IX, p24
[18].. பெரிய திருமொழி, 9, “மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடிமாலை வயிரமேகன்”
[19].. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.127
[20]. Vide his “Rashtrakutas and their Times,’ p.45.
[21]. S.I.I.VII pp.519-20.
[22]. Vide MVK Rao’s “Gangas ofTalakad’ p.54.
[23]. Ibid, p.55.
[24]. பெரிய திருமொழி - 2,6,5:2,1,7; 7,9,2; 9,7,9; 7,45 முதலியன.
------------

15. தந்திவர்மன் (கி.பி. 775-825)

பிறப்பும் ஆட்சிக் காலமும்

தந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் மகன். இவன் இராட்டிரகூடப் பெண்மணியான ரேவா[1]வுக்குப் பிறந்தவன். இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் (வைரமேகன்) மகள் வயிற்றுப் பெயரன் ஆதலின், இவன் தந்திவர்மன் எனப்பட்டான். இவன் அப் பாட்டனைப் போலவே, ‘வைர மேகன் என்னும் பெயரும் பெற்றிருந்தான். இவன் பட்டயங்களும் கல்வெட்டுகளும் திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலிருந்து வடக்கே திருச்சானுர் வரை பரவியுள்ளன; இறுதியிற் கிடைத்த கல்வெட்டு இவனது 51ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பதால், இவன் குறைந்தது 51ஆண்டுகள் அரசாண்டான் என்று ஆராய்ச்சியாளர் கொண்டனர்.

சிறப்பும் மணமும்

இவன் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரமானவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவை. இவன், கதம்பர் மரபுக்கே சிரோமனியாக விளங்கிய அரசனின் மகளான அக்களநிம்மதி என்பவனை மணந்து கொண்டான் என்று பட்டயங்கள் பகர்கின்றன.

இரட்ட அரசர்: கிருஷ்ணன் 1 (கி.பி. 780-794)

தந்திதுர்க்கன் இறந்தபிறகு, அவன் மாமனான கிருஷ்ணன் அரசன் ஆனான். இவன் சாளுக்கியர் மரபை அழித்தான் எலாபுரம் (எல்லோரா) கூற்றத்தில் உள்ள ஒரு மலையில் மிகவும் பாராட்டத்தக்க கயிலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தான். இவன் கி.பி.772இல் இறந்தான்.

துருவன்-கோவிந்தன் போராட்டம்

கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான். இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்; பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான். இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர். துருவன் சிறந்த அரசியல் நிபுணன். அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான். உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்; ஆயின், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.

போர்

உடனே துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு தமையனை வெல்ல முற்பட்டான். கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத்தனக்கு துணையாகக்கொண்டான். நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான். போர் கடுமையாக நடந்தது. துருவனே வெற்றி பெற்றான். அவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.

பல்லவர்-இரட்டர் போர் 1

துருவன் அரசனானவுடன். பெரும் படையொடு புறப்பட்டுத்தன் தமையனுக்கு உதவி புரிந்தோரை வெல்ல விழைந்தான் முதலில் கங்கபாடி அரசனான சிவமாறனை வென்று, தன் முதல் மகனான கம்பரசனைக் கங்கபாடியை ஆளுமாறு விடுத்துக் காஞ்சியை அடைந்தான் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்பொழுது நடந்த போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண்புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயங்கள் குறிக்கின்றன.

துருவன், இங்ஙனம் அடைக்கலம் புக்க தந்திவர்மனைத் தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுமாறு செய்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 2 (கி.பி. 803)

கோவிந்தன் 3: கங்கபாடி, வேங்கி இவற்றைத் தன் பேரரசுடன் சேர்த்த பேரரசனானதுருவன் கி.பி.794இல் இறந்தான். இவன் இறக்கு முன்பே தன் மக்களான கம்பரசன், கர்க்கா சுவர்ணவர்ஷன், கோவிந்தன். இந்திரன்முதலியோருள்கோவிந்தன் என்றதன் மூன்றாம் மகனுக்கே முடிசூட்டினான். அதனால் பெருவெளி படைத்த (மூன்றாம்) கோவிந்தன் கி.பி.794இல் பேரரசன் ஆனான்.[2]

இதனால் முதல் மகனான கம்பரசன் மனம் புழுங்கினான். அவனுடன் சிற்றரசர் பல சேர்ந்தனர். இவர்கள் சூழ்ச்சியை அறிந்த் கோவிந்தன் தன் தமையனாள கம்பரசனையும் அவனுடன் சேர்ந்திருந்த சிற்றரசர் பன்னிருவரையும் போரில் வென்றான். பிறகு குழப்பம் இல்லை.

கோவிந்தன்-தந்திவர்மன் போர்: கோவிந்தன்தன்தமையனுடன் சேர்ந்திருந்த சிற்றரசரைத் தனித்தனியே வென்று, அவர் உரிமைகளைப் பறிமுதல் செய்தான். அங்ஙனம் செய்து கொண்டு வந்தவன். காஞ்சி அரசனான தந்திவர்மனைத் தாக்கினான். தந்திவர்மன் கோவிந்தனுக்குத் திறை கட்டாதிருந்தனனோ-அல்லது அவற்கு மாறகக் கம்பரசனுடன் சேர்ந்திருந்தனனோ - இரண்டும் இன்றி அவன் வெறுக்கத்தக்க வேறு முறைகளில் நடந்து கொண்டனனோ தெரியவில்லை. தந்திவர்மன் ஏறத்தாழக் கி.பி. 803 இல் தோல்வியுற்றான். தோற்ற தந்திவர்மன் அவனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்தான் போலும்! கோவிந்தன் இங்கு நின்றும் இராமேச்சுரம் வரை சென்று, அங்கு கி.பி. 804 இல் பட்டயம் ஒன்றை (பிரிட்டிஷ் காட்சிச்சாலை பட்டயம் EP.Ind Vol.II.P 126) விடுத்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 3 (கி.பி.808-810)

மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அந்தச் சமயத்தில் கங்கபாடி அரசன். தந்திவர்மன், சேர, சோழ, பாண்டியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவோ அல்லது அவனது நாட்டின்மீது படையெடுக்கவோ சூழ்ச்சி செய்தனர் என்று ‘சஞ்சன்’ பட்டயம் செப்புகிறது. பெருவீரனான கோவிந்தன் கடுஞ்சீற்றம் கொண்டு பெரும் படையுடன் புறப்பட்டான். தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ பாண்டியர் நாடுகளை இராட்டிரகூடவீரர் அளந்து திரிந்தனர். இதனை அறிந்த இலங்கை அரசன் அஞ்சிஅவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.290

தந்திவர்மன் இந்தப் போர் முடிவிலும் வழக்கம்போலக் கோவிந்தனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்திருக்கலாம். என்னை? இப் போருக்குப் பின்னரும் தந்திவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்து பல்லவர் நாட்டை அரசாண்டு வந்தமையால் என்க. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் சொல்லும் தகையவோ?

பல்லவர் - பாண்டியர் போர் (கி.பி. 806 - 817)

வரகுண பாண்டியன் மாறன் இராசசிம்மன் மகன். இவன் காலம் ஏறக்குறையக் கி.பி. 800 - 830 என்னலாம். இவன் கடிலன் பராந்தகன், மாறஞ்சடையன். நெடுஞ்சடையன் எனப் பல பெயர்களைக் கொண்டவன். இவன் தகடூர் அதிகனை எதிர்த்தபொழுது, தந்திவர்மன் அதிகனை ஆதரித்தான்; சேரனும் அதிகனை ஆதிரித்தான். வரகுணன் இவர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்தான். வரகுணன் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் காணப்படுகின்றன. இவன் தனது 16ஆம் ஆட்சி ஆண்டில் தொண்டை நாட்டில் பெண்ணை யாற்றங்கரையில் உள்ள அரைசூரில் இருந்தபொழுது (போர்ப் பாசறையில்) அம்பா சமுத்திரம் பட்டயம் அளித்துள்ளான். இதனால் வரகுணபாண்டியன் பல்லவர் பெருநாட்டைச் சேர்ந்த சோழ நாடு முழுவதையும் கைப்பற்றியதோடு நில்லாமல், தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள நாட்டையும் பிடித்துக் கொண்டான் என்பதை நன்குணலாம்.[3] சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மலைக் கோவில், திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்), திருவிசலூர் என்னும் இடங்களில் வரகுணன் பட்டயங்கள் காண்கின்றன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும் தெற்கே பாண்டியர் படையெடுப்பும் உண்டாகிப் பல்லவன் தத்தளித்தான். தான் இராட்டிரகூடர்க்கு அடங்கிவிட்டமையாலும் வெளி அரசர் உதவி இன்மையாலும் தந்திவர்மன் தக்க உணர்ச்சியோடு பாண்டியனை எதிர்க்க முடியவில்லை.

தந்திவர்மன் அரசியல்

தந்திவர்மன், திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் ஆலம்பாக்கம் என்னும் சிற்றூர்க்கு அண்மையில் தனது பட்டப் பெயரான ‘மாற்பிடுகு’ என்பதை வைத்து ‘மாற்பிடுகு ஏரி’ ஒன்றை வெட்டு வித்தான். இவனது 5ஆம் ஆட்சி ஆண்டில் புதுக்கோட்டைச்சீமையில் ‘வாலிஏரி’ ஒன்றை இவனுடைய சிற்றரசானன-வாலிவடுகள்-கலிமூர்க்க ‘இள அரையன்’ என்பவன் வெட்டு வித்தான். திருவெள்ளரை என்னும் சிற்றுாரில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ ஒன்றைக் கம்பன் அரையன் என்பவன் வெட்டுவித்தான்[4] திருச்சிராப்பளிக்கு அடுத்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு, அவ்வூருக்கு அண்மையில் உள்ள வாய்க்காலை ‘வைரமேகன் வாய்க்கால்’ என்கிறது. ‘வைரமேகன்’ என்பது ‘தந்திவர்மன்’ பெயர்களில் ஒன்று அன்றோ? எனவே, அவ் வாய்க்கால் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டதே என்னல் பொருந்தும். இவன் காலத்தில் திருவிப்பிரம்பேட்டு ஏரி முதலிய பல ஏரிகள் தூய்மை செய்யப்பட்டன. தந்திவர்மன் ஆட்சியில் நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் நன்கு புலனாகின்றது. இவனது காலத்தில் தனிப்பட்ட செல்வர் ஆங்காங்குக்கேணியும் குளமும் எடுத்துள்ளனர்; ஏரிகளைத் தூய்மை செய்துள்ளனர். இஃது உண்மையில் பாராட்டத்தக்க சிறந்த அரசியற் பண்பாகும் அன்றோ?

சில பட்டயங்கள்

இவன் காலத்துக் கல்வெட்டுகள். (1) செஞ்சிக் கோட்டைக்கு அருகில் உள்ள தொந்தூர், (2) உத்தரமல்லூர், (3) திருவல்லிக்கேணி. (4) கூரம். (5) மலையடிப்பட்டு, (6) திருவெள்ளரை, (7) ஆலம்பாக்கம் (8) குடிமல்லம் முதலிய ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றுள் திருவல்லிக்கேணிக் கல்வெட்டைக் காண்க. அது ‘குலங்கிழார்’ (கோவில் அதிகாரி) கோவில் நிலத்தில் ஒரு பகுதியை ஒற்றிவைத்து, அதன் வருமானத்தில் 45 காடி நெல் குறைந்து போனதால், அதற்குப் பதிலாக 30 காடி நெல்லும் 5 கழஞ்சு பொன்னும் புகழ்த்துணை விசையரசன் தானம் செய்தான். இதற்கு நாள் ஒன்றுக்கு 5 நாழி நெல் வட்டியாகும். அதை அரிசியாக்கி நாள்தோறும் திருவமுது படைப்பாராக. என்பது. இந்த வட்டிக் கணக்கு என்ன? 45 காடி நெல்லுக்கு ஆண்டொன்றுக்கு 183/4 கலம் நெல் வட்டி ஆயிற்று.[5]

கோவில்கள்

மலையடிப்பட்டியில் உள்ள மலையைத் தனியாகக் குடைந்து அமைத்தவன் முத்தரையனான குவாவன் சாத்தன் என்பவன். இவ் வேலை தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் முற்றுப் பெற்றதாகும். பல்லவ அரசன், திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்குத் ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றைக் கட்டினான். இவன் வைணவன்[6] ஆயினும், சைவ - வைணவக் கோவில்கட்கு நிரம்பப் பொருள் அளித்தான். திருமங்கை ஆழ்வார் இவன் காலத்திலும் இருந்தனர் என்று சிலர் கூறுவர்.[7]

‘தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் குவிலஞ் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன் திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான்’ என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.[8] தந்திவர்மன் காஞ்சிப் பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ளான்.[9]

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசர் இரண்டாம் சிவமாறன் (கி.பி. 788-812) முதலாம் இராசமல்லன் (கி.பி. 817-853) என்போர் ஆவர்; இரட்ட அரசர் இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 722-780). துருவன் (கி.பி. 780-794), மூன்றாம் கோவிந்தன் (கி.பி.794-814) என்பவர்; பாண்டிய மன்னர் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி.765-790), இரண்டாம் இராசசிம்மன் (கி.பி.790-800), வரகுணமகாராசன் (கி.பி. 800-830) என்பவர்.
------------
References :
[1]. ரேவா என்பது நறுமதை யாற்றின் பெயர்.
[2]. Altekar’s Rashtrakutas and their Times, pp.50, 55
[3]. K.A.N. Sastry’s “Pandian Kingdom’ pp.62-63.
[4]. இவை இந்நூலின் பிற்பகுதியில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
[5]. Ep. Indica, Vol.VIII.p.291 & P.T.S. Iyengar’s “pallavas part III, p.46.
[6]. S.I.I. Vol. II, p.515.
[7]. M. Ragava Iyangar’s “Alwargal Kala Nilai’, pp. 109-112.
[8]. “Chronological list of Inscriptions of the Pudukkotta State p.2.
[9]. S.I.I. Vol. VI, No.34.
-------------

16. மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850)

மரபு

இவன் தந்திவர்மன் மகன். தந்திவர்மன் கதம்ப அரசர் மகளை மணந்த செய்தியே சிறப்பாகப் பட்டயத்திற் கூறியுள்ளதால், மூன்றாம் நந்திவர்மன் அவ்வரசிக்குப் பிறந்தவனாதல் வேண்டும் என்று கொள்ளலாம். இதனை வேலூர் பாளையப் பட்டயமும் உறுதிப்படுத்துகிறது.

பட்டயங்கள்

(1) இவன் காலத்துப் பட்டயங்களில் சிறந்தது வேலூர் பாளையப் பட்டயமே ஆகும். இது பொன்னேரிக் கூற்றத்துத் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு சிற்றூரைத் தேவதானமாக விடுத்ததைக் கூறுவது. இப் பட்டயத்தில் பல்லவ அரசர் பட்டியல் முதலிய பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இது நந்திவர்மன் பட்டம் பெற்ற 6ஆம் ஆண்டில் விடப்பட்டதாகும். (2) இவனது பத்தாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு இவனது தெள்ளாற்று வெற்றியைக் குறிக்கிறது. அக் கல்வெட்டு திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) கோவிலில் உள்ளது. (3) இவனது 12ஆம் ஆட்சி ஆண்டில் செந்தலைக் கல்வெட்டொன்று வெளியிடப் பட்டது. (4) இவனது 17ஆம் ஆட்சி ஆண்டில் திருவல்லம் கோவிலில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டது. அதில், மூன்று சிற்றூர்களைச் சேர்த்து ‘விடேல் விடுகு-விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்’ என்னும் பெயரில் தீக்காலிவல்லம் சிவபெருமானுக்குக் கொடுத்ததாகக் கண்டுள்ளது. (5) உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்று. இவனது 18ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. (6) கோவிலடிக் கருகில் திருச்சன்னம்பூண்டியில் உள்ள சடையர் கோவில்கல்வெட்டு இவனது 18ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது. (7)திருப்பராய்த் துறையில் உள்ள ஆதிமூலேச்சுரர் கோவிற் சுவரில் உள்ள கல்வெட்டு இவனது 22ஆம் ஆட்சி ஆண்டைக்குறிக்கிறது. (3) குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் கல்வெட்டு ஒன்று இவனது 23ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. இதற்குப் பிறகு வேறு கல்வெட்டுக் கிடைக்கவில்லை. ஆதலின். இப்பேரரசன்.ஏறத்தாழ 25ஆண்டுகளேஅரசனாக இருந்தான் போலும் என்று அறிஞர்கருதுகின்றனர்.

தெள்ளாறு எறிந்த காலம்

இவனது 10ஆம் ஆட்சி ஆண்டு முதல் வெளியிடப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் இவன் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்றே குறிக்கப்படுகிறான். ஆனால், இவனது 6ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த வேலூர் பாளையப் பட்டயத்தில் இது காணவில்லை. எனவே, இவன் தனது 6ஆம் ஆண்டிற்குப் பின்னும் 10ஆம் ஆண்டிற்கு முன்னும் தெள்ளாற்றுப் போரில் வாகை சூடி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

நந்திக் கலம்பகம்

இஃது இந்த அரசன் மீது பாடப்பட்டது. இதில் பல பாக்கள் இவனது தெள்ளாற்றுப் போரையே குறிக்கின்றன. நாம் இந் நூலால் அறியத்தக்கவை பின் வருவன. அவை - “இவன் சந்திர மரபினன்; சேர சோழ பாண்டியரை வெறியலூர், பழையாறு. வெள்ளாறு, தெள்ளாறு இவற்றில் நடந்த போர்களில் முறியடித்தவன்; மூவேந்தரிடமும் வடபுலத்தரசரிடமும் திறை பெற்றவன்.” என்பன. இவன் பல இடங்களில் ‘அவனி நாரணன், அவனி நாராயணன்’ என்று குறிக்கப் பட்டடுள்ளான். இவன் காலத்தில் காவேரிப்பாக்கம் அவனிநாராயணசதுர்வேதிமங்கலம் எனப்பெயர் பெற்று இருந்தது. எனவே மூன்றாம் நந்திவர்மன் அவனி நாராயணன் எனப்பட்டான். என்பதை நன்குணரலாம். இவன் காலத்தில் தமிழ்ப் பெருவணிகன் ஒருவன் சென்று சையாமில் ஒரு குளம் தொட்டான். அதற்கு ‘அவனி நாரணன் குளம் எனப் பெயரிட்டான்’ என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. இதனால், இவனது காலத்தில் கடல் வாணிபம் சிறந்தமுறையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. இவன் சிறந்த கடற்படை வைத்திருந்ததாக நந்திக் கலம்பகமும் கூறுகின்றது.

இவன் கழற்சிங்கனா?

இவன் நந்திக் கலம்பகத்தில் (செ. 13, 28) ‘கழல் நந்தி’ எனப்படுகிறான்: செ.59இல் ‘பல்லவர் கோள் அரி என்று கூறப்படுகிறான். ‘அரி-சிங்கம்’ என்பதை நாம் அறிவோம். எனவே மூன்றாம் நந்திவர்மன் கழல்சிங்கன்றான் என்பதில் ஐயமின்மை உணர்க. ஆயின்.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சுந்தரர் தொகையிற் சுட்டப்பட்டவன் இவனா? எனின். ஆம் மேற்சொன்ன சையாம் செய்தியை நேர்க்க. இவன் காலத்தில் கடல்கடந்த நாடுகளில் இவன் பெற்றிருந்த செல்வாக்கையும் கடல்வாணிகத்தையம் நன்குணரலாம் அன்றோ? இன்னபிற சான்றுகளால். இம்மூன்றாம்நந்திவர்மனே பெரியபுராண நாயன்மாருள் ஒருவனான கழற்சிங்கன் என்பது நன்கு விளங்குகிறது.[1] விளங்குமேல். இவனது உண்மைவரலாறு அறிய கல்வெட்டுகளோடு நந்திக் கலம்பகம் சுந்தரர் தேவாரம், பெரியபுராணம் முதலியனவும் பெருந்துணை புரியலாம் அல்லவா?

பல்லவர் - இரட்டர் போர்

பல்லவநாட்டை இருமுறை வென்ற மூன்றாம் கோவிந்தன் கி.பி. 814இல் இறந்தான். அவன் மகனான முதலாம் அமோகவர்ஷன் கி.பி. 814இல் தனது ஆறாம் வயதில் அரசன் ஆனான். அவன் கி.பி.880 வரை அரசாண்டான்.

தந்திவர்மன் காலத்தில் இரட்ட அரசனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சியை இருமுறை கைப்பற்றிப் பல்லவனைத் திறை கட்டுமாறு பணித்து மீண்டான் என்பதை முன்னரே கவனித்தோம் அல்லவா? அந்தக் கப்பங்கட்டும் கொடுமையை ஒழிக்க நந்திவர்மன் விரும்பினான் போலும்! அதனால், அவன், தான் பட்டம பெற்றவுடன், பெண்ணை யாற்றங்கரை வரை பாண்டியன் தன் நாட்டைப் பிடித்துக் கொண்டிருந்ததையும் பொருட் படுத்தாமல், வடக்கு நோக்கித்தன் படைகளைத் திருப்பினான். நடந்த போரைப் பற்றிய குறிப்புகள் நந்திக்கலம்பகத்தில் கூறப்பட்டுள்ளன.

“எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி-இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப்பொழுது”.
“.... குருக்கோட்டை குறுகா மன்னர்
போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி....”
“கேளாதார்,
குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்.”[2]

இக் குருக்கோட்டை என்பது பெல்லாரிக் கோட்டத்தில் துங்கபத்திரையாற்றங்கரையில் உள்ள குருகோடு[3] என்பதே ஆகும். அங்குள்ள மலைமீது அழகிய கோட்டையும் சாளுக்கியர் காலத்துக் கோவில்களும் பிறவும் அழிந்த நிலையில் இருக்கக் காணலாம்.[4]

கொடும்பாளுர்க் கல்வெட்டு ஒன்றில் விக்கிரமகேசரி என்பவனுக்குப் பாட்டன், வாதாபி கொண்டவன் என்று கூறப்பட்டுள்ளான். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இப்படி ஒருவன் இருந்திருத்தல் முடியாது என்று பலர் கருதினர். அந்தச் சிற்றரசன் மூன்றாம் நந்திவர்மன் காலத்துச் சிற்றரசன்; ஆதலின், தன் பேரரசனுக்குத்துணையாக வடபுலம்சென்று ‘குருக்கோடு’ என்னும் இடத்தில் இரட்டர்க்கு அடங்கிய சாளுக்கியனை (சிற்றரசனை) வென்றிருக்கலாம்; அவ் வெற்றிக்காகத் தன்னை வாதாபி கொண்டவன் (வாதாபி-இங்குச் ‘சாளுக்கியர் தலைநகர்’ என்ற அளவில் பொருள் கொள்ள வேண்டும்) என்றும் கூறிக்கொண்டிருக்கலாம்; இன்றேல், இராட்டிரகூடர் தோற்ற பிறகு வாதாபி மீதே அவன் படையெடுத்திருக்கலாம். அவன் பரதுர்க்க மர்த்தனன் (பகைவர் கோட்டையை அழித்தவன்) எனப் பெயர் கொண்டவன். இவற்றை எல்லாம் நன்கு ஆர்ாயின் மூன்றாம் நந்திவர்மனான கழற்சிங்கன் முதலில் இராட்டிரகூடரைத் தோற்கடித்துத் தான் பேரசசன் என்பதை நிலைநிறுத்தினான் என்பது தெரியலாம். இவனது வடபுல வெற்றியை வேலூர் பாளையப் பட்டயமும் குறிப்பாக உணர்த்துதல் காண்க.

“படைக்கலப் பயிற்சியிற் பண்பட்ட நந்திவர்மன். பிறரால் பெறுதற்கரிய பல்லவப் பெருநாட்டின் செழிப்பைப் பெற்றான். அவன் அதற்காகப் போர்க்களத்தில் தன் பகைவரைக் கொன்றான். அவனது வாளால் துணிக்கப்பட்ட யானைகள் அணிந்திருந்த முத்து மாலைகள் போர்க்களத்தில் சிதறிக் கிடந்த காட்சி:போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டி நகைப்பது போல இருந்தது.[5]

இப் பட்டயம் நந்திவர்மனது தெள்ளாற்றுப் போருக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது இங்கு நினைக்கத்தக்கது. ஆகவே இங்குக் குறித்த போர்மேற்சொன்ன பல்லவர் - இரட்டர் போரே ஆகும். ‘பகைவர்’ என்று பட்டயமும் நந்திக்கலம்பகமும் பன்மையிற் பகர்ந்தமை. இராட்டிரகூட அரசன். அவனுக்கு உட்பட்டுக் குருக்கோட்டையில் ஆண்டசிற்றரசன் ஆகிய இருவரைக் குறிக்கும் எனக் கோடலில் தன்றில்லை. நாம் முன் பலமுறையும் புகழ்ந்து கூறிய சிறந்த கல்வெட்டுப் புலவரான சேக்கிழாரும் கழற்சிங்க நாயனார் (மூன்றாம் தந்திவர்மன்) புராணத்தில் இந்தப் போரைக் குறிப்பாக உணர்த்தல் கவனிக்கத்தக்கது:-

“ஆடக மேருவில்லார் அருளினால் அமரிற் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”[6]

இப் போர் ஏறக்குறைய கி.பி. 830இல் நடந்ததெனக் கொள்ளலாம். இப் போரில் வெற்றி பெற்றதால், பல்லவன் தனது வடமாகாணத்தைக் காத்துக் கொண்டான் இராட்டிர கூடனுக்குத் தான் அடங்கியவன் ஆகான் என்பதையும் காட்டிக்கொண்டான்: இதனால், தான் பேரரசன் என்பதையும் நிலைநாட்டினான். இதன் பிறகே கழற்சிங்கனாகிய நந்திவர்மன் தனது நாட்டின் தென்பகுதி யைப்பிடித்துக் கொண்டபாண்டியன்மீது திரும்பினான்.

அமோகவர்ஷன் கங்கனோடு சந்து செய்துகொண்டு பேரழியான ‘சந்திரபலப்பை’ என்ற தன் மகளைக் கங்க இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்தக்கங்க இளவரசன் பெயர் பூதுகன் என்பது. அவன் ஆட்சிக்காலம் கி.பி.837-870 ஆகும்.[7] அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான சங்கா என்னும் இலக்குமி போன்றவளை நந்தி வர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான்.[8] இதனால் அவன் கங்கனைப் பெண்கொடுத்து உறவு கொண்டாற் போலப் பல்லவனையும் பெண்கொடுத்து உறவுகொண்டான் என்பது உய்த்துணரப் படுகிறதன்றோ?

இத்தகைய திருமண முறையால், அரசியல் அறிஞனான அமோகவர்ஷன் பல்லவனையும் கங்கனையும் உறவினராக்கிக் கொண்டான்; விந்தமலைக்குத் தென்பால் பகைவர் இன்றி இன்பமாகத் தன் காலத்தைக் கழித்தான்.[9]

பல்லவர்-பாண்டியர் போர்

மூன்றாம் நந்திவர்மன் செய்த போர்களில் தெள்ளாற்றுப் போர் ஒன்றையே சிறப்பாக இவன் காலத்தார் கருதினர் போலும் இவனும் அங்ஙனமே கருதினான்.இஃது உண்மை என்பதை இவனுடைய 10ஆம் ஆட்சி ஆண்டுக்குப் பிற்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் என்றே இவன் அவற்றிற் குறிக்கப்படுகிறான். அங்ஙனம் அது சிறந்தது என்பதைக் கலம்பகமும் கூறுகின்றது. அந்நூலில் தெள்ளாற்றுப் போர் பல பாக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[10] அக்காலத்தில் வாழ்ந்து ‘பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் என்பவர்,

“வன்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாரான் உரிமையா- திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்”

என்று பாடிப் புகழ்ந்துள்ளார். எனவே, பட்டயக் குறிப்புகளாலும் மேற்சொன்ன இலக்கியச் சான்றுகளாலும், “தெள்ளாற்றுப் போர் மிகப் பெரியதும் கொடியதும் இன்றியமையாததும் ஆனது” என்பது நன்கு விளங்குகின்றது. இனி இப் போரில் தொடர்பு கொண்டவர் யாவர் என்பதைக் காண்போம்.

பல்லவன் -தமிழரசர்

தந்திவர்மன் காலத்தில் (கி.பி.775-825) மதுரையை ஆண்ட முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.765-815) பல்லவர்க்கு உட்பட்டிருந்த சோழ நாட்டைக் கைப்பற்றித் தொண்டை நாட்டையும் பெண்ணையாறுவரை கவர்ந்தான் என்பதை முற்பகுதியில் குறித்தோம் அல்லவா? அவன்பெண்ணையாற்றங்கரையில் இருந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 780 ஆகும். அதுமுதல் தெள்ளாற்றுப் போர்வரை சோழ நாடும் தொண்டை நாட்டின் தென்பாதியும் பாண்டியர் வசமே இருந்தது என்னலாம். வரகுணன் இறந்த பிறகு, சீமாறன் சீவல்லபன் என்னும் அவன் மகன் பட்டம்பெற்று (கி.பி. 830-862) ஆண்டான்.[11] அவன் காலத்திற்றான் நந்திவர்மன் ஆகிய கழற்சிங்கன் (கி.பி. 825-850) பல்லவ அரசனாக இருந்தான். இவன் (கி.பி.830 அல்லது 832க்குள்) முன் சொன்ன வட புலப்போரை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள், பாண்டியன் மாறன். தனக்கு அடங்கிய சேர சோழருடனும் பெருஞ் சேனையுடனும் பெண்ணையாற்றைத் தாண்டி வட ஆர்க்காட்டுக் கோட்டத்திற்குள் நுழைந்தனன். உடனே நந்திவர்மன். வடக்கே வெற்றிபெற்ற தன் பெருஞ் சேனையுடன் மீண்டு. பகைவரைத் தெள்ளாற்றில் (வந்தவாசிக் கூற்றத்தில் உள்ளது) எதிர்த்துப் பெரும்போர் நிகழ்த்தி முற்றிலும் முறியடித்தான். இப்போர் ஏறக்குறையக் கி.பி. 832இல் நடந்திருத்தல் வேண்டும். இப்போர் மிகவும் கொடுமையானது.

நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்று ஓடிய பகைவரைவிட்டிலன். இவன் அவர்களைத் துரத்திச் சென்று கட்ம்பூர் (செ.25), வெறியலூர் (27). வெள்ளாறு (19.22, 61), பழையாறு(31) என்னும் இடங்களில் தோற்றகடித்துப் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தவன். பாண்டியன் முதலிய பகைவர், எல்லைப்புறத்தில் இருந்த குறும்பில் (கோட்டைக்குள்) ஒளிந்தனர். பல்லவன் அங்கும் அவரை முறியடித்து மீண்டான் என்று நந்திக் கலம்பகம் (செ. 4) நவில்கின்றது.

இப் போருக்குக் காரணம் என்ன?

(1) இராட்டிரகூடர்க்குப் பல்லவன் திறை கொடுத்த மறுத்து அவன்மீது போர்தொடுத்து வென்றாற்போலச்சோழன் மறுத்திருக்க வேண்டும். அவற்குத்துணையாகப் பாண்டியன் முதலியோர் போரிட வந்திருத்தல் வேண்டும். பல்லவ நாட்டை, நந்திவர்மன் இல்லாத காலத்திற் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும்.

(2) இவனிடம் பொறாமை கொண்டு பட்டம் பெற விழைந்த இவன் தம்பி பகைவருடன் சேர்ந்துகொண்டமை ஒரு காரணமாகும்.

இந்த இரண்டும் உண்மை என்பதைக் கீழ் வருவனவற்றால் அறியலாம்:-

(1) “உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரே மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே”[12]

(2) ‘தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக
வென்ற தலைமான விரதுவசன்
செம்பியர் தென்னார் சேரர் எதிர்வந்து
மாயச் செருவென்ற பாரி முடிமேல்...”[13]
பல்லவன்-காவிரி நாடன்

இங்ஙனம் தமிழ்வேந்தர் முற்றும் முறியடிக்கப்பட்டபின் காவிரி நாடான சோணாடு, பழையபடியே பல்லவர் கைப்பட்டது. இதனை நந்திக் கலம்பகத்தாலும் நந்திவர்மன் கல்வெட்டுக்களாலும் நன்கறியலாம். கலம்பகத்துப் பாக்கள் பல (செ.17,28,57,58,86)

நந்திவர்மனைக் ‘காவிரி நாடன்’ என்றே குறித்துள்ளன; அவை, ‘காவிரி வளநாடா’ (17), ‘காவிரி வளநாடன்’ (28), ‘காவிரி நன்னாடா’ (57), ‘பொன்னி நன்னாட்டு மன்னன்’ (56), ‘காவிரி வளநாடு ஆள்வோனே’ (86) என்பன. தஞ்சைக் கோட்டத்தில் உள்ள திருநெய்த்தானத்தில் இவனது கல்வெட்டு இருக்கின்றது. ஆதலின், இச் சான்றுகளைக் கொண்டு காணின், இவனது ஆட்சி தஞ்சைக் கோட்டத்தில் நிலைத்திருத்தமை நன்கு அறியலாம்.

பேரரசன்

இதுகாறும் கூறிய செய்திகளால், மூன்றாம் நந்திவர்மன் வடக்கிலும் தெற்கிலும் அச்சமின்றி நாட்டையாண்டபெருவீரனாகப் பிற்காலத்தைக் கழித்தான் என்பதை உணரலாம். இவன் பேரரசன் என்பதை நந்திக்கலம்பகம் பலபடக் குறித்துள்ளது. அவை “மூவேந்தரும் வடபுலத்தரசரும் திறைதந்தனர்; (செ.27); “புகாராகிய காவிரிப் பூம்பட்டனம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது’ (செ44):இவனிட்டவழக்கன்றோ வழக்கிந்தவையத்தார்க்கே (53): “அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்” (60): “பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன்” (61): “இவ் வையம் எல்லாம் படக்குடை ஏந்திய பல்லவன்” (65): “தண் செங்கோல் நந்திதனிக் குடையுடையவன்” (72): “தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்” (74) என்பன.

நல்லியல்புகள்

‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (செ.60) தண் செங்கோல் நீந்தி (72) பகை இன்றிப் பார்காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய நந்திக்கலம்பகத் தொடர்களால், மூன்றாம் நந்திவர்மன் செங்கோல் அரசன்: அறம் வளர அரசாண்டபெருமகன்; குடிகளைக் காக்கும் தொழில் பூண்டவன். இவனது ஆட்சி தண்மையாக இருந்தது. என்பன நன்குணரலாம். இதனையே ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், “நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்” என்று சேக்கிழாரும்

கூறிப் பாராட்டினார். இப் பேரரசன் கல்வி கேள்விகளில் வல்லவன்; ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான் (செ.3). ‘நூற்கடற் புலவன்’ (26) என்று கலம்பகம் கூறுதல் காண்க. இவன் சிறந்த வள்ளல் என்பது, ‘நந்தி, வறியோர் சொன்ன பொருள் நல்குவன்’ (24) ‘ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி’ (43) முதலிய தொடர்களால் அறியலாம்.

ஏனைப் பல்லவ அரசர் போலன்றி. இவன் தமிழிற் பெரும் புலவனாக இருந்தான் என்பது ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி'[14] ‘....தமிழ்நந்தி'[15] என வரும் தொடர்களால் அறியலாம்.

நந்திக்கலம்பகம் கூறிய மேற்சொல்லப்பட்ட எல்லா நல்லியல்புகளும் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயத்தில் காணலாம். ‘நந்திவர்மன் ஆட்சியில் (1) வசந்த காலம் சிறப்பளித்ததுபோல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை; (2) நல்லியல்புகள் பொருந்திய பல் பெருமக்கள் பிறந்திருந்தனர்; (3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர். (4) வள்ளல்கள் பலர் இருந்தனர். (5) சான்றோர் அடக்கமாக இருந்தனர். (6) குடிகள் அரசனைச் சார்ந்து நின்றனர்.”

மனைவியர்

இப் பேரரசனுக்கு இருந்த மனைவியருள் இருவரே. பட்டயங்களிற் குறிக்கப்பட்டுளர்; நந்திவர்மனிடம் தோற்ற இராட்டிரகூட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கள் மகளான சங்கள் ஒருத்தி. ‘இவள், இலக்குமியின் அவதாரம்’ என்னலாம்; ஈன்ற தாயைப்போலக் குடிகளைப் பாதுகாத்தான். அரசனது நற்பேறே இவளாகப் பிறப்பெடுத்து வந்தது போலும்! இவள் சிறந்த நுட்ப அறிவுடையவள்; எல்லாக் கலைகளிலும் வல்லவன்,[16] என்று பாகூர்ப் பட்டயம் பகர்கின்றது.[17] மற்றொரு ഥனைவி அடிகள் கத்தன் மாறம்

பாவையார் என்பவள். இவள் தென்னாற்றில் தோற்றோடிய சீமாறன் மகள் என அறிஞர் கருதுகின்றனர். இவள் 75 ஆண்டுகட்குமேல் உயிருடன் இருந்தனள். இவ்வம்மை சிறந்த சிவபக்தி உடையவள்; பல கோவில் திருப்பணிகள் செய்துள்ளவன்.[18]

அரசியல்

நந்திவர்மன் காலத்தில் கடல் வாணிபம் சிறந்து இருந்தது. இவன் பெரிய கடற்படை வைத்திருந்தான். அக்காலத்தில் மல்லை (மாமல்லபுரம்), மயிலை (மைலாப்பூர்) ஆகிய இரண்டும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக இருந்தன என்பது. இவ்விரண்டையும் ஒருசேரப் பல இடங்களில் நந்திக் கலம்பகம் குறித்துப் போதலால் உணரலாம். காஞ்சிபுரம் தலைநகரமாக விளக்க முற்றிருந்தது.

இவன் வடக்கிலும் தெற்கிலும் பெரும்போர் இயற்றினன் ஆதலின். நாட்டில் வறுமை உண்டாயிற்றுப் போலும்/அதனை இவன் நீக்கினான் என்று கலம்பகம் (செ.11) கூறுகின்றது. அதேகாலத்தில் சோணாட்டில் பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில்[19] காண்கிறோம். ‘அவர் போருக்குப் போயிருந்த பொழுது பெரும் பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்கென வைத்திருந்த நெற் குவியலை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர்’ என வரும் செய்தி உண்மையே என்பதைக் கலம்பகத்தால் உய்த்துணலாம்.

திருப்பணிகள்

இப் பெருவேந்தன் சிற்றூர்களைத் தேவதானமாக விடுத்தான். அவற்றுள் ஒன்று திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றுர் விடப்பட்டது. இவன் திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால் ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்றழைத்துத் தானமாக விடுத்தனன்; திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான்.

இவன் திருச்சிராப்பள்ளிக் கடுத்த திருக்கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன்; திருவிடை மருதூரிற்கோவில் திருப்பணி செய்துள்ளான். இவன் காலத்தில் திண்டிவனம் கூற்றத்தில் ‘திகைத்திறலார்’ என்றவர் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டினார், நந்திவர்மன் மனைவி யான் மாறம் பாவையார் தஞ்சையை அடுத்த நியமம் என்னும் சிற்றுாரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர் 5 நாழியும், அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன் அளித்தான். மேலும் இவ்வம்மை செய்துள்ள திருப்பணிகள் பல. இவள் கணவனான கழற்சிங்கன் காவேரிப்பாக்கத்துக்கு ‘அவனி நாராயணசதுர்வேதி மங்கலம்’ என்ற தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக அளித்தான். இங்ஙனம் மூன்றாம் நந்திவர்மன் செய்த தேவதானங்கள் பல; விடுத்த பிரமதேயங்கள் பல; செய்தகோவில் திருப்பணிகளும் பல. இவனுடைய சிற்றரரும் பிறரும் செய்த அறப்பணிகள் பல. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான்.[20] நந்திவர்மன், பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரையே தேவதானமாக விட்டான்[21] ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவில் நந்தா விளக்குக்காகப் பொன் அளித்தான்.[22] ஒருவன் செந்தலை - சுந்தரரேசுவர் கோவிலுக்கு நிலமளித்தான்[23] திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றுார்கள் தேவதானமாகவிடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஒதுவார் உள்ளிட்ட பல பணி செய்வோர்க்கு 2000 காடி நெல்லும், 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன.[24] ஒருவன் திருப்பராய்த்துரையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[25] ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தாவிள்க்குகட்கும் நெய்க்குமாக நிலமளித்தான்.[26]

சிவனடியான்

இவன், “சிவனை முழுதும் மறவாத சிந்தையன்” என்று கலம்பகம் போற்றுகின்றது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து. “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். மேற்சொன்ன இவனுடைய திருப்பணிகளும் இவன் சிவபக்தன் என்பதை மெய்ப்பிக்கின்றன. இவற்றை அரண் செய்வது போல வேலூர் பாளையப் பட்டய வரிகள் காண்கின்றன: அவை, சிவனது திரு அடையாளம் நெற்றியிற் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, ‘எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக’ என்று வேண்டுகின்றான் என்பன.

இவன் காலத்து அரசர் (கி.பி. 825-850)

இக்காலத்துக் கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி (கி.பி.853 - 880) என்பவன்: இராட்டிரகூட அரசன் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814 - 880): பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862) என்பவன் ஆவன்.
-----------------
References :
[1]. Dr. C. Minakshi’s Ad. and S. “Lise under the Pallavas’ p300.
[2]. கலம்பகம், செ.2, 35, 44, 84
[3]. Historical Inscriptions of S. India, p.84.
[4]. Bellary Gazetteer, pp.231-235.
[5]. S.I.I. Vol.II. No.98: போர் இவ்வளவு கடுமையாக நடந்ததாற் போலும் அமோகவர்ஷன், தெற்கே படையெடுத்துச் சென்றதன் சிற்றரசன் பங்கயனை உடனே வருமாறு கட்டளை போக்கினான்.
[6]. செ.2.
[7]. இதனை முதன் முதலில் விளக்கிக் காட்டிய பெருமை டாக்டர் மீனாக்ஷி அம்மையார்க்கே உரியது. vide her “Ad. and S. Life under the Pallavas’ pp.302-304.
இராசசிம்மனைக் கழற்சிங்கன் என்று தவறாகக் கருதிச் சுந்தரர் காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நிறுத்தினோர் பலராவர்.
[8]. MVK Rao’s “Gangas of Talakad.’ p. 79.
[9]. Ibid, pp.84-85.
[10]. நந்திக்கலம்பகம், செய்.28, 29, 33, 38, 42, 49, 52, 53, 63, 71, 75, 77, 79, 80, 85, 86.
[11]. தெள்ளாற்றுப் போர் வரகுணன் காலத்து என்று திரு துப்ராய் அவர்கள் கூறல் பொருந்துவதன்று. wide his “Pallavas’ pp.79-80. ஸ்ரீமாதன் காலத்தில் நடந்ததே எனத் திருநீலகண்ட சாத்திரியார் கூறலேஏற்புடையது. Vide his “Pandian Kingdom’. p.73. Foot-note.
[12]. சுந்தரர் தேவாரம்.
[13]. நந்திக்கலம்பலம் செ.81.
[14]. நந்திக் கலம்பகம் செ25.
[15]. Ibid, p.26,
[16]. SII. Vol. II Part v. p.509.
[17]. Ep, Indica, Vol. XVIII, p. 13.
[18]. Dr. C. Minakshi’s Pallaväs, pp. 161, 162.
[19]. பெரியபுராணம் வரலாற்றுக்கு (History) எந்த அளவு துணை செய்கிறது என்பதை அறிய இஃதொரு சான்றாகும்.
[20]. 347 of 1914.
[21]. S.I.I. Vol.1 p.567.
[22]. 52 of 1895.
[23]. 11 of 1899,
[24]. S.I.I. Vol. III p.93
[25]. 180 of 1907.
[26]. Ep.Ind. Vol.II p.224.
-----------

17. பிற்பட்ட பல்லவர் (கி.பி. 850 – 882)

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கு மகன். இவன் இரட்டிரகூட அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவளுக்கும் மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறந்தவன் ஆதலின். பாட்டன் பெயரைப் பெற்றவன். இவன் சற்றேறக்குறையக் கி.பி. 850 இல் பட்டம் பெற்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆண்டான்.

பல்லவர்-பாண்டியர் போர் 1

நிருபதுங்கவர்மன் காலத்தில் பாண்யராக இருவர் இருந்தனர். முதல் அரசன் சென்ற பகுதியிற் கூறப்பட்ட சீமாறன் சீவல்லபன் (கி.பி.830 - 862) அவனுக்குப் பின் அவன் மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான். எனவே, நிருபதுங்கள் காலத்தின் முற்பகுதியில் சீமாறனும், பிற்பகுதியில் வரகுணனும் பாண்டி மன்னராக இருந்தனர் என்பது நினைவுகூர்தற்குரியது. சீமாறன் தெள்ளாற்றுப்போரில் தோல்வியுற்ற பிறகு பல ஆண்டுகள் கழித்துத்தான் குட மூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரையும் அவருக்குத் துணையாக வந்த வரையும் வென்றதாகக் கூறியுள்ளார்கள். நிருபதுங்க பல்லவன் பாகூர்ப் பட்டயத்தில் ‘பாண்டியனிடம் முன் தோல்வியுற்ற பல்லவர் படை, அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) அவனையும் பிறரையும் அரிசில் ஆற்றங்கரையில் முறியடித்தது’ என்பது காணப்படுகிறது. இவ் விரண்டையும் ஒப்புநோக்கி ஆராயின். (1) பாண்டியன் மூன்றாம் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் அல்லது நிருபதுங்கன் ஆட்சித் தொடக்கத்தில் பல்லவரைக் குடமுக்கில் வென்று இருத்தல் வேண்டும். (2) பிறகு நிருபதுங்கன் பெரும் படையுடன் சென்று அரிசில் ஆற்றங்கரையில் சீமாறனை வென்றிருத்தல் மீண்டும் என்பன நன்கு விளங்கும்.

குடமூக்குப் போர்

மூன்றாம் நந்திவர்மன் பாண்டியநாட்டு எல்லைவரை சென்றதாக முன்பகுதியிற் கூறினோம் அல்லவா? பல ஆண்டுகட்குப்பின் அந்த இழிவை நீக்க, சீமாறன் பெரும் படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்திருத்தல் வேண்டும். அப்போது நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்ற பாண்டியனை எளியனாக எண்ணி, தான் போகாமல், பாண்டியனை எதிர்க்கும்படி தன் சேனைத்தலை வனையே படையுடன் அனுப்பி இருக்கலாம். அப்பொழுது நடந்த குடமூக்குப் போரில் பல்லவர் படைதோற்று மீண்டிருக்கலாம். இந்த

வெற்றியைப் பாண்டியன் பட்டயம் கூறுகிறது போலும்! இப் போரி கங்க அரசனான பூதுகனும் பல்லவன் சார்பில் நின்று தோற்றான்.[1]

பல்லவர்-பாண்டியர் போர் 2

நிருபதுங்கன் பட்டம் பெற்றபிறகு பெரும்படை திரட்டி பாண்டியனை ஒழிக்க முற்பட்டான். அப்பொழுது அரிசிலாற்றங் கரையில் கொடும் போர் நடந்தது. அம் முறை பல்லவன் வெற்றி பெற்றான். அதனாற்றான் பாகூர்ப் பட்சியம். “முன் ஒருமுறை பாண்டியர்க்குத் தோற்ற பல்லவப் படை இப்பொழுது அரசனது அருளால் (நிருபதுங்கவர்மன் செலுத்தியதால்) வெற்றி பெற்றது” என்று கூறுகின்றது.

இச் செய்திகளால், (1) பல்லவர் நாட்டின் தென்பகுதியே குழப்பமான நிலையில் இருந்தது. (2) பாண்டியன் பல்லவரிடம் இருமுஜற தோற்றதால் பாண்டியன் பேரரசு நிலை தளர்ந்தது என்பன நன்குணரலாம்.

ஈழ நாட்டுப் படையெடுப்பு

பாண்டிய நாட்டில் கலாம் விளைத்துச் சீமாறனுக்கு எதிரியாக மாய பாண்டியன் என்பவன் ஒருவன் தோன்றினான். அவனைச் சீமாறன் தோற்கடித்து விரட்டினான். ஒடிய மாய பாண்டியன் ஈழத்து அரசனிடம் சரண் புகுந்தான். ஈழத்தரசன் பெரும் படை திரட்டிப் பாண்டிய நாட்டின்மேல் படையெடுக்க சமயம் பார்த்திருந்தான். அதனை உணர்ந்த சீமாறன், தன் பகைவனாக இருந்து தன்னை அரிசிலாற்றங்கரையில் தோற்கடித்த நிருபதுங்கனிம் நட்புக் கொண்டு அவனது கடற்படைத் துணையால், ஈழத்தின்மேல் படையெடுத்து வென்றான் என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.[2]

திருப்புறம்பியப் போர்[3]

சீமாறன் சீவல்லபன் மகனான இரண்டாம் வரகுணன் (கி.பி. 862. 880) ஏறத்தாழக் கி.பி. 880இல் பல்லவர்மீது படையெடுத்தான். இவன் கி.பி. 868இல் திருவதிகையில் உள்ள கோவிலுக்குத் தானம் செய்தாக நிருபதுங்கனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது .[4] இதனால், இவன் நிருபதுங்களிடம் முதலில் நண்பனாக இருந்தான் என்பதை நன்கறியலாம். இவன் படையெடுத்தபோது நிருபதுங்கன் முதியவன் ஆதலின், இளவரசனான அபராசிதனே போருக்குச் சென்றான். அவனுக்குத் துணையாக அவனின் பாட்டனும் கங்க அரசனுமான முதலாம் பிருதி வீபதி என்பவன் தன் படையுடன் சென்றான். இந்த நிலையில் விசயாலயன் (கி.பி. 850-870) மகனான ஆதித்தசோழன் (கி.பி. 870 - 907) பல்லவருடன் சேர்ந்து கொண்டான். இம் மூவரும் பாண்டியனைத் திருப்புறம்பியம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் எதிர்த்துப் பொருதனர். கடும்போர் நடைபெற்றது. அதில் பிருதிவீபதி இறந்தான்.[5] ஆயினும், பாண்டியன் தோற்று ஓடினான். அபராசிதன் வெற்றி பெற்று மீண்டான். எனினும் அவனுடன் இருந்த ஆதித்த சோழனே நன்மை அடைந்தவன் ஆனான். அவன் சோழநாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டான். பின்னர்க் கி.பி.882இல் நிருபதுங்கன் இறந்தவுடன்,

ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டைநாட்டைக் கவர்ந்துகொண்டான். இங்ஙனம் தொண்டைநாடு சோழர்ஆட்சிக்குத் சென்ற ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 890 என்பர் ஆராய்ச்சியாளர்.[6]

எனவே, அபராசிதவர்மன் ஆட்சி கி.பி. 890 உடன் முடிந்ததால் வேண்டும். ஆனால் அவனது 18 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு நோக்கின், அவன் கி.பி 872 முதல் கி.பி 890 வரை ஆண்டிருத்தல் வேண்டுமென்று கூறவேண்டிவரும். ஆயின் கி.பி.882 வரை நிருபதுங்கன் அரசனாக இருந்தமைக்குச் சான்று இருத்தலால் இந்த முடிவு கொள்ளல் தவறு. ஆதலின், அபராசிதன் தந்தையின் முதுமைப் பருவத்தில் தானே நாட்டை ஆண்டு வந்தான் எனக்கோடலே பொருந்துவதாகும். மேலும், அபராசிதன் காலத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் செங்கற்பட்டு, சித்துர் ஆகிய இரண்டு கோட்டங்களிற்றாம் காணப்படுகின்றன. ஆதலின், நிருபதுங்கர்வமனது ஆட்சி முடிவிலேயே பல்லவப் பேரரசின் பெரும் பகுதி சோழர் கைப்பட்டதென்னலாம்; அபராசிதன் ஆட்சியோடு பல்லவர் பேரரசு முடிவுற்றது என்னலாம்.[7]

பழிக்குப் பழி

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றிக்கி.பி. 890 வரை, அஃதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆயிற்று. என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

கோவில் திருப்பணிகள்

நிருபதுங்ன் காலத்தில் பல கோவில்களில் புதிய கல்வெட்டுகள் தோன்றின. பல திருப்பணிகள் செய்யப்பட்டன. காடவன் மகாதேவியார் 108 கழஞ்சு பொன் திரு ஆலங்காட்டுக் கோவிலுக்கு அளித்தார்.[8] நந்திநிறைமதி என்பார் ஒருவர் கூரம் கைலேசுரவரர்க்குத் திரு அமுதுக்காக 11 கழஞ்சு பொன் கொடுத்தார்.[9] ஒருவர் திருக்கோவிலுர் திருவீரட்டானேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தார்.[10] பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடை முடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம் பூண்டிக் கல்வெட்டுக் கூறுகிறது.[11] ஒருவர் திருக்கண்டியூர்க் கோவிலுக்கு நிலம் அளித்தார்.[12] ஒருவர் திருத்தவத்துறை (லால்குடி)யில் உள்ள சப்தரிஷிசுவரர் கோவிலில் விளக்குக்காகவும் திரு அமுதுக்காகவும் பொன் அளித்தார்.[13] அப் கண்டி பெருமானார் என்பவர் திருமுக்கூடல் வெங்கடேசரி பெருமாள் கோவிலுக்குப் பொன் தானமாக உதவினார். அதனை ஊர் அவையார் ஏற்று நடத்த ஒருப்பட்டனர்.[14] ஒருவர் ‘அவனி நாராணச் சதுர்வேதி மங்கலம்’ எனப்படட் காவேரிப்பாக்கம் வரதராசப் பெருமாள் கோவிலுக்குப் பொன் தந்துள்ளார்.[15] இங்ஙனம் நிருபதுங்கன் ஆட்சியில் நடைபெற்ற கோவில் அறப்பணிகள் பல ஆகும். பழந்தமிழர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கட்கும் பல்லவ வேந்தர் புதிதாக்க கட்டிய கோவில்கட்கும் இவன் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாம்.

இக்குறிப்புகளால், நாயன்மார், ஆழ்வார் இவர்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்திலே இருந்த மதிப்பு நன்கறியலாம்: சிறப்பாக அப்பொழுதிருந்த தமிழ் மக்களின் சமயப் பற்றும் வெள்ளிடை மலைபோல் விளக்கமுறும்.

பிருதிவீ மாணிக்கம்

இது நிருபதுங்கன் மனைவிபெயர். இப்பெயர்கொண்டஅளவை ஒன்று நிருபதுங்கன் ஆட்சியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவள் ‘பிருதிவி கங்க அரையர்’ என்றும் முதலாம் பிருதிவீபதி என்றும் கூறப்பட்ட கங்க அரசன் மகள் என்னலாம். இவள் பெற்ற மைந்தனே அபராசிதவர்மன். அதனாற்றான் திருப்புறம்பியப் போரில், பாட்டானான பிருதி வீபதி பெயரனான அபராசிதனுக்கு உதவியாகச் சென்றான் எனக் கொள்ளலாம். வேறொரு கல்வெட்டில், ‘தேவியார் வீரமகாதேவியார்’ என்பது காணப்படுகிறது. இவள் நிருபதுங்கனுக்கு மற்றொரு மனைவி போலும் ‘பிருதிவீ மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு சிற்றுாரின் பெயரும் கல்வெட்டில் காண்படுகிறது. இது நிருபதுங்கன், தன் மனைவி பெயரை இட்டுக் குறிப்பிட்ட சிற்றுார் ஆகும். இவள் ‘தாயார் பானுமாலி’ என்பவள். இந்தப் பிருதிவீ மாணிக்கமே உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டியவள் என்னலாம்.[16]

மாதேவி அடிகள்

இவள் அபராசிதன் மனைவி, இவன் தமிழ் நாட்டுப் பெண்மணி ஆதல் வேண்டும். இவள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தவள்.[17]

நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில், பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

திருத்தணிகைக் கோவில்

இஃது அபராசிதவர்மன் காலத்தில் ஏறத்தாழக் கி.பி. 890இல் கட்டப்பட்டது. இதில் இவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்தமையால் இக் கணக்குத் தரப்பட்டது. இக் கோவில் இராசசிம்மன் கோவிலுக்கும் பிற்காலச் சோழர் கோவிலுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி உடையது. இதில் கோபுரம் இல்லை. கும்பம் வேறு. கோபுரம் வேறு என்பது இல்லை. கும்பத்துக்குள் உள்ளறையும் முன் மண்டபமுமே உண்டு. கும்பத் தோற்றம் யானையின் பாதியாக இருக்கும். இத்தகைய கும்பம் மாமல்லபுரத்தில் உள்ள சகாதேவன் தேரிலும் கூரம் கோவிலிலும்[18] காணலாம். தூண்கள்மீதுள்ள போதிகை உருண்டது. இந்த அடையாளம் நினைவிற்கொள்ளின், பிற்காலப் பல்லவர் கோவில்கள் இவை எனக் கூறிவிடலாம். பிற்காலச்சோழர்போதிகை கோணங்கள் உள்ளதாக இருக்கும். இந்தத் திருத்தணிகைக் கோவிற் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் தென்முகக் கடவுள், பிரமன், கொற்றவை (துர்க்கை). திருமால் இவர்தம் சிலைகள் இருக்கின்றன. இவ்வழகிய கோவிலைக் கட்டியவன் நம்பி அப்பி என்பவன்.[19] இந்தக் கோவிற் கல்வெட்டிற் காணப்படும். வெண்பா ஒன்று அபராசிதவர்மன் பாடியதாகக் கூறப்படுகிறது.[20]

அபராசிதன் காலத்துத் திருப்பணிகள்

இவன் காலத்திலும் பல திருப்பணிகள் நடைபெற்றன: கச்சிப்பேட்டைச் சேர்ந்த மாங்காட்டு ஈசர்க்கு விளக்கெரிக்கப் பொன் தரப்பட்டது.[21] ‘பெருநங்கை’ மகனான வாண கோவரையர் கூத்தியான ‘அமத்தி’ என்பவள் திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரேச்சுரர் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு ஊர்காற் செம்பொன் (உருகாச் செம்பொன்? செம்பொற் கட்டி?) தந்தனன். அதனை அமிர்த கணத்தார் ஏற்றுக் கொண்டனர்.[22] இவனுடைய வேறொரு கூத்தி ‘பத்திரதானி’ என்பவள் அதே கோவிலில் விளக்குக்காக 30 கழஞ்சு பொன் தந்தாள்.[23]

திருவொற்றியூரில் உள்ள அபராசிதனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு வெற்றிலை, இளநீர், ஆணைந்து (பஞ்ச கவ்யம்). சந்தனம், கற்பூரம் என்பனவாங்க உண்டாகும் செலவிற்காக ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது.[24] குமராண்டி குறும்பர் ஆதித்தன் என்னும் தலைவன் சத்தியவேட்டில் உள்ள மதங்ககேசுவரர் கோவிலுக்குத் துறையூர் என்னும் சிற்றுரையும் அதன் வருவாயையும் விட்டமை தெரிகிறது.[25] காடுபட்டிப் பேரரையன் மனைவியான போற்றி நங்கை என்பவள் திருவொற்றியூர் மகா தேவர்க்கு விளக்கெரிக்க 100 ஆடுகளை அளித்தாள்,[26] மேற்சொன்ன கோவிலிலே இரண்டு விளக்குகள் இட மகேசுவரர் மரபினர் பொன் தந்துள்ளனர்.[27] இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல இடங்களில் குறைவின்றி நடந்தன.

இக்காலத்து அரசர் (கி.பி. 850-890)

இக்காலத்துக் கங்க அரசர் முதலாம் பிருதிவீபதி (கி.பி. 853-880) இரண்டாம் பிருதிவீபதி (கி.பி. 880-925) என்போர்: இராட்டிரகூட அரசர் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814-880), இரண்டாம் கிருட்டினன் (கி.பி. 880-912) என்போர்; பாண்டியமன்னர் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862), வரகுண வர்மன் (கி.பி. 862-880), பராந்தக பாண்டியன்[28] (கி.பி. 880-900) என்பவர்.

பல்லவ மரபினர்

கம்பவர்மன் என்பவனைக் குறிக்கும் கல்வெட்டுகள் வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் இருபதுக்குமேல் கிடைத்துள்ளன. சிலர் இவன் நிருபதுங்கனுடன் பிறந்தவனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இவன் காலத்தில் ஒலக்கூர் என்னும் இடத்தில் போர் ஒன்று நடந்துள்ளது. அங்கு இறந்த வீரன்பொருட்டு வீரக்கல் நடப்பட்டுள்ளது. அஃது, அந்த ஊர் அழிவுற்றபோது போரிட்டு இறந்தவனது வீரக்கல் என்பது தெரிகிறது.கம்பவர்மன் அறங்கள் பல செய்துள்ளான்.

சந்திராதித்தன் விசய நரசிம்மவர்மன், விசய ஈசுவரவர்மன் என்பவர் தம் கல்வெட்டுகள் சிலவும் கிடைத்துள்ளன. இவர் அனைவரும் நிருபதுங்கள் காலத்தில் கோட்டங்கட்குத் தலைவர் களாக இருந்த பல்லவ அரச மரபினர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பிற்காலப் பல்லவர்

பிற்காலத்தில் நுளம்ப-பல்லவர் என்பவர். பல்லாரிக்கோட்டமும் மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்ப பாடியைக் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆதித்த சோழன் வழிவந்த பேரரசர்களுடன் ஓயாது போர் நடத்திவந்தனர்; பலர் சிற்றரசராகியும் அரசாங்க அலுவலாளராகியும் இருந்தனர். அவர்கள் இங்ஙனமே மேலைச் சாளுக்கியரிடமும் வேலை பார்த்தனர். அவர்கள், ‘காஞ்சிப் பல்லவர் மரபினர்’ என்று தம்மைக் கூறிக் கொண்டனர். ஆதலின், காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தவுடன், பல்லவ அரச மரபினர் தமது பழைய இடத்திற்குச் சென்று, குறுகிய நிலப்பகுதியை ஆளலாயினர் என்பது தெரிகிறது.[29] வேறு பலர் சோழப் பேரரசிற் கூடலூர், சேந்த மங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசராகவும் தானைத் தலைவராகவும் வளநாட்டுத் தலைவர்களாகவும் இருந்து வந்தனர்.
------------
References :
[1]. M.A.R. 1907, p.63
[2]. Ep. Indica, Vol XVIII, p.13, Dr. C. Minakshi’s “Ad and S.Life under the Păllavas, pp. 162-163.
[3]. இப்போர் அபராசிதன் ஆட்சியில் நடந்ததாக இதுவரை வரலாற்று ஆசிரியர் வரைந்து வந்தனர். ஆயின் அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நோக்க, இப் போர் நிருபதுங்கள் காலத்திலேயே நடந்தது’ என்பது உறுதிப்படுகிறது. ஆதலின் இஃது இங்குக் குறிக்கப் பெற்றது. 1. “The Chronology of the Latter Pallavas” - Mr. M.S. Sarma’s article on in Ramamurthi Pantulu Commemmoration Vol. p. 142. 2. Mr. M.S. Sarma’s Note on Nirupatunka J.O. O.R. Vol.VIII part 2, p.165.
[4]. No. 360 of 1931.
[5]. இப்போரில் இறந்த முதலாம் பிருதிவீபதியின் கோவில் ஒன்றும் உதிரம் படிந்த தோப்பு ஒன்றும் திருப்புறம்பியத்தில் இன்றும் இருக்கின்றன. TVS Pandarathar’s “Pandyar Varalaru'p.34.
[6]. K.A.N. Sastry’s “Cholar,’ Vol. I. pp.133-136.
[7]. Dr. C. Minakshi’s “Ad. and S. Life under the Pallavas’ p.5.
[8]. 460 of 1905.
[9]. 257 of 1912.
[10]. 277 of 1892
[11]. 300 of 1901.
[12]. 17 of 1895
[13]. 84 of 1902.
[14]. 179 of 1915
[15]. 397 of 1905.
[16]. Dr. Minakshi’s Ad. and S.I. life under the Pallavas p.4. 161
[17]. 162 of 1912.
[18]. சென்னைக்கடுத்த கோவூரிலும் காணலாம்.
[19]. P.T.S. Iyengar’s “Pallavas,’ part III, p.77; 435 of 1005 343.
[20]. inscription No.433 of 1905. இவன் ‘வெண்பாப் பாடினான் என்பதை நோக்க, இவனுக்கு முற்பட்ட ஐயடிகன் காடவர்கோன் நாயனார் என்பவர் ஒருவர் க்ஷேத்திர வெண்பா என்னும் சிறுநூல் பாடினார் என்பது இங்கு நினைக்கத்தக்கது.
[21]. 351 of 1908
[22]. 158 of 1912
[23]. 161 of 1912
[24]. 159 of 1912
[25]. 31 of 1912
[26]. 32 of 1912
[27]. 90 of 1912
[28]. R. Gopalan’s “Pallavas of Kanchi, pp.143,144.
[29]. L. Rice’s “Mysore and Goorg from Inscriptions’ pp.55-59.
----------
continued in part 3
---------------
This file was last updated on 13 Sept 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)